மொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது!

கொடுமைகளைச்
சொல்வதற்கு
வார்த்தைகளை
தேடுவதை விட
கொடுமையானது
வேறில்லை.

ஒன்றா… இரண்டா
மொத்தக் கொடுமையும்
நாட்டை ஆள்கிறது!

மாட்டுக்கறிக்காக
ஒரு மனிதன் கொல்லப்படுகிறான்
நீட்டு தேர்வுக்காக
ஒரு பெண் சாகடிக்கப்படுகிறாள்
கோவிலில் – கூட்டு வல்லுறவில்
காவிக் கயவர்களால்
சிதைக்கப்படுகிறாள் ஆசிஃபா!

அறியாமைக்கு
காரணமானவர்களை
அடையாளம்
காட்டுவதாலும்,
அநீதியை
அநீதி என்று சொல்வதாலும்
பலர் கொல்லப்படுகிறார்கள்

கொலைகாரர்கள் கையில்
நீதியின் தராசு

ஜனநாயகத்தின் கழுத்தில்
தூக்குக் கயிறு

பிணங்களை நுகர்வதும்
சகஜமாகிப் போகும்
தேசத்தில்
அதைச் சொல்வதும் கூட
தேச விரோதமாகி விடுகிறது

வேடிக்கை பார்ப்பவர்களையும்
விடாது காவி
ஏனெனில்
இது கார்ப்பரேட் ஆவி!

மெல்ல மெல்ல
உனது நிலம், சிறுதொழில்,
உனது கடல், சிறுவணிகம்
உனது கல்வி, விவசாயம்
எங்கும்
கொலையின் விசம்
பரவுகிறது.

போலீசு, ராணுவம்
நீதித்துறை, சட்டம், ஊடகம்
எதற்காக என்று
‘சொல்லப்பட்டதோ’?
அதற்கு
நேர் எதிராக
நமது ரத்தத்தில்
விரைகிறது.

செத்துப்போவதை விடவும்
பிணங்களாய் வாழ்வது
பெரிய கொடுமை!


இந்த கட்டமைப்பே
நெருக்கடி
காவி திரைகளை
கிழித்தெறி!

துரை. சண்முகம்


இதையும் பாருங்க:

நெருங்குவது காவி இருளடா …

ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம்