Friday, May 23, 2025
முகப்புசெய்திஇந்தியாஇழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் – கொரோனா பரிசோதனை கருவிகள் 145% இலாபத்திற்கு விற்பனை...

இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் – கொரோனா பரிசோதனை கருவிகள் 145% இலாபத்திற்கு விற்பனை !

கோவிட்-19 விரைவு பரிசோதனை கருவி விற்பனையில் இரு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான சண்டை நீதிமன்றம் வரை செல்லாமல் மட்டும் இருந்திருந்தால் இலட்சத்தோடு ஒன்றாய் இவ்வூழல் புதைந்திருக்கும்.

-

கொரோனா முடக்கத்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் பரிதவிக்கும் சூழலில் இழவு வீட்டில் பிடுங்கிய வரை இலாபம் பார்த்திருக்கின்றன தனியார் நிறுவனங்கள். கோவிட்-19 விரைவு பரிசோதனை கருவி ஏற்றுமதி – இறக்குமதியில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான கொடுக்கல் வாங்கல் சண்டை நீதிமன்றம் வரை செல்லாமல் மட்டும் இருந்திருந்தால் இலட்சத்தோடு ஒன்றாய் தனியார்மயத்தின் ஊழல் புதைக்கப்பட்டிருக்கும்.

சீனாவின் வோண்ட்ஃபோ (Wondfo) நிறுவனத்திடமிருந்து சார்ஸ் கோவிட்-2 ஆண்டிபாடி பரிசோதனை கருவிகள் 228 ரூபாய் விலைக்கு மேட்ரிக்ஸ் லேப்ஸ் (Matrix Labs) நிறுவனம் இறக்குமதி செய்தது. விமான சரக்கு கட்டணம் (20 ரூபாய்) உள்ளிட்டு ஒரு கருவிக்கு 245 ரூபாய் கொடுத்து அந்நிறுவனம் வாங்கியது. கடந்த மார்ச் மாதம் பொருட்கள் மற்றும் சேவைகள் வரியுடன் சேர்த்து ஒரு பரிசோதனை கருவிக்கு விலையாக 600 ரூபாயை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நிர்ணயம் செய்து 5 இலட்சம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருவி ஒன்றிற்கு 400 ரூபாய் விலையில் இறக்குமதி செய்த கருவிகளை ரேர் மெடபோலிக்ஸ் லைஃப் சைன்ஸஸ் (Rare Metabolics Life Sciences) நிறுவனத்திற்கு மேட்ரிக்ஸ் நிறுவனம் விற்றது. ரேர் மெட்டபாலிக்ஸ் நிறுவனம் பின்னர் இந்திய மருத்துவ ஆராய்சி கழகத்திற்கு (ICMR) கருவிக்கு 600 ரூபாய் வீதம் 2.76 இலட்சம் கருவிகளை விற்பனை செய்தது. 2.24 இலட்சம் கருவிகள் மீதமிருக்கின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு 10 இலட்சம் கருவிகள் விற்பனை செய்ய இந்நிறுவனத்திடம் ஒப்பந்ததம் போடப்பட்டிருக்கிறது. இந்த மேட்ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தான் ஷன் பையோடெக் மற்றும் டையக்னாஸ்டிக்ஸ் (Shan Biotech and Diagnostics) நிறுவனம் மூலம் கருவி ஒன்றிற்கு 600 ரூபாய் விலை நிரணயம் செய்யப்பட்டு 50,000 கருவிகளை வாங்க தமிழ்நாடு அரசு ஆர்டர் கொடுத்தது. இவற்றில் 24,000 கருவிகள் வநதுவிட்ட நிலையில் மீதி 26,000 கருவிகள் வழங்கப்பட இருக்கிறது.

தமிழக அரசு பரிசோதனைக் கருவிகளை 600 ரூபாய்க்கு வாங்கியதன் பின்னணியை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்பி விட்ட நிலையில் எடப்பாடி அரசு மவுனமாக இருந்ததன் பின்னணி இதுதான். இந்த பிரச்சினை இலட்சத்தில் ஒன்றாக ஊற்றி மூடப்படிருக்கும். ஆனால் இறக்குமதி செய்த மேட்ரிக்ஸ் நிறுவனத்திற்கும் இந்தியாவிற்கு விற்பனை செய்த ஷன் பையோடெக் நிறுவனத்திற்கும் இடையேயான பணப்பட்டுவாடா தள்ளுமுள்ளு “ஒய்யார கொண்டையாம் உள்ளூர ஈரும் பேணுமாம்” என்ற பழமொழிக்கேற்ப தனியார்மயத்தின் முறைகேட்டை டெல்லி உயர்நீதிமன்றத்தில் அம்பலமாகியிருக்கின்றன.

படிக்க:
♦ நெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை !
♦ வங்கி மோசடியாளர்களது ரூ.68,607 கோடி மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி !

2.76 இலட்சம் கருவிகளுக்கு மட்டுமே (12.25 கோடி ரூபாய்) பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ஒப்பந்தத்தின்படி பொருள்கள் மற்றும் சேவைகள் வரியுடன் சேர்த்து 21 கோடி ரூபாய் முழுவதும் தனக்கு முன்கூட்டியே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று மேட்ரிக்ஸ் நிறுவனம் நீதிமன்றப்படியை மிதித்திருக்கிறது.

ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் போட்ட ஒப்பந்தத்தின் படி மீதி 2.24 இலட்சம் கருவிகளையும் மேட்ரிக்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் மேட்ரிக்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தின் படி வேறு எந்த நிறுவனமும் அந்த கருவிகளை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாது என்றும் பதில் மனுவை ஷன் பையோடெக் தொடுத்திருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மீதி பணத்தை கொடுத்த பிறகே மேட்ரிக்ஸ் நிறுவனத்திற்கு கணக்கை சரி செய்ய முடியுமென்றும் கூறியிருக்கிறது. மேலும் 5 இலட்சம் கருவிகளுக்கும் விமான சரக்கு கட்டணத்தை முழுவதுமாக செலுத்தியிருப்பதாகவும் அது கூறியிருக்கிறது.

நீதிமன்றம் என்ன சொல்ல முடியும். 400 ரூபாயே நல்ல இலாபம் தான் என்றும் நாடு இருக்கும் இந்த இக்கட்டான நிலையில் தனியார் இலபத்தை விட பொதுமக்களின் நலன் தான் பெரிது என்று கூறி பொருள்கள் மற்ரும் சேவைகள் வரியுடன் சேர்த்து 400 ரூபாய்க்கு மேல் விற்க கூடாது என்று சிறப்பான(!) ஒரு தீர்ப்பையும் கூறிவிட்டது. மத்திய மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்யாதது ஏன் என்ற கேள்வியை ஒரு பேச்சுக்கு கூட கேட்கவில்லை.


சுகுமார்

மூலக்கட்டுரை, நன்றி :  பிசினஸ் டுடே. 

  1. சீன கொம்பனி பல விலைகளில் கருவிகளை முன்வைத்தது.600,1000,1200 ரூபா தோராயமாக.அதிகாரிகள் புத்தி கூர்மை உள்ளவர்களாயின் நடுத்தரம், அல்லது கலந்து வாங்கியிருக்கலாம்.

    மிகவும் விலை குறைந்ததை வாங்கிவிட்டு தூசிப்பது எமது அதிகாரிகள் எவ்வளவு மடையர்கள் என காட்டுகிறது.
    சீனர்கள் மிரட்டியா விற்றார் கள்.
    எமக்கு தேவை என்றுதான் வாங்கினோம்.இன்று இந்தியா பெருமைப்பட்ட ஹைட்ரா க்ளோரோ குயின் எங்கும் அதிருப்தி என்பதை மறக்காதீர்.
    வீணாக சீனாவுடன்..எமது பக்குவமற்ற தன்மையை காட்டுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க