Wednesday, July 2, 2025
முகப்பு பதிவு பக்கம் 419

கேரளா : வரலாறு காணாத இழப்பு ! தேசியப் பேரிடராக அறிவிக்க மறுக்கும் மத்திய அரசு !

கேரளாவின் 39 அணைகளில் 35 அணைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதன் 44 நதிகளில் 41 நதிகள் அபாயக் குறியீட்டிற்கு மேலே நீர் நிரம்பி வழிகின்றன. பெருமளவிலான உயிர்ச்சேதம், நிலச்சரிவு, வாழ்வாதார இழப்பு, இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்ச்சி என சர்வ நிச்சயமாக இது அவர்களின் வாழ்நாள் பேரழிவுதான்

ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவசர உதவி மையத்திற்கு தொடர்ச்சியாக அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

ஒரு தன்னார்வலராக நான் அங்கு தொலைபேசி அழைப்புகளை ஏற்று பதிலளித்துக் கொண்டிருந்தேன். அப்போது பெங்களூருவிலிருந்து ஒரு இளைஞர், தனது மாமா ஒருவர் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள அரண்முலாவிலுள்ள தமது வீட்டில் தனது மனைவியின் இறந்த உடலோடு முதல்மாடியில் நின்று கொண்டிருப்பதாகவும், கற்பனை செய்து பார்க்கமுடியாத அச்சூழலில் இருக்கும் அவரைக் காப்பாற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.

”ஆலப்புழா மாவட்டம், செங்கனூரைச் சேர்ந்த மற்றொரு குடும்பமும் ஒரு இறந்த உடலை தங்களோடு கொண்டுள்ளனர்” என போலீசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த உடல் தண்ணீரில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க அதனை படிக்கட்டின் கைபிடியோடு சேர்த்துக் கட்டியுள்ளனர். பெருமழை துவங்கியதிலிருந்து மக்களின் வாழ்க்கை அசாதாரணமானவையாக மாறிவிட்டது.

”இங்கே, வெள்ளம் சூழ்ந்த ஒரு வீட்டில் பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். விரைவாக உதவி அனுப்பவும்”, கம்பியில்லா தகவல் தொடர்புச்சாதனம் மூலம் தன்னார்வலர் ஒருவர் தகவல் தருகிறார்.

” தரைத்தளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கிய ஒரு மருத்துவமனையில் இன்றோ நாளையோ பிரசவிக்கக் காத்திருக்கும் பெண்கள் 8 பேர் மாட்டியிருக்கிறார்கள்” எனப் பதறுகிறது அவசர உதவி மையத்தின் மற்றுமொரு செய்தி.

நூற்றுக்கணக்கான உள்நோயாளிகளைக் கொண்ட பல மருத்துவமனைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதை எழுதிக் கொண்டிருக்கும் போது நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தால் சூழப்பட்ட தமது வீடுகளில் தங்களது விதிக்காக காத்திருக்கிறார்கள். ஆக்ரோஷமாகப் பாயும் இரு பெரும் நதிகளான பெரியாறு மற்றும் சாலக்குடிக்கு இடையில் வளாகத்தைக் கொண்ட கலாடி, ஸ்ரீ சங்கராச்சார்யா சன்ஸ்கிருதி பல்கலைக்கழகத்தினுள் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளனர். கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும், நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சம் புகும் அகதிகள் முகாம்களாக மாறியிருக்கின்றன. அவற்றில் பலவும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் இருக்கின்றன. இரண்டாம் கட்ட மழைகளில் பத்தனம்திட்டா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

மழை வெள்ளத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள்:

சில வாரங்களுக்கு முன்னால் மழை பொழிய ஆரம்பித்தது. கடந்த வாரத்தில் மழை தீவிரமடையத் தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொழிந்த கனமழை காரணமாக ஆறுகள் கரையைப் பெயர்த்துக் கொண்டோடின. இதன் காரணமாக பெருமளவிலான வெள்ளமும் நிலச்சரிவும் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டது. பெரும்பான்மையான மரணங்களுக்கு நிலச்சரிவுகளே காரணமாக அமைந்தன. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுகளில் உயிருடன் புதைபட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்தன.

நிலச்சரிவு

முதல்கட்ட மழைகள் துவங்கியபோது அரசு இயந்திரம், எச்சரிக்கையாகவும் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. சீரான இயக்கமுள்ள இயந்திரத்தைப் போல நதிக்கரைகளில் உள்ள மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றினர். முக்கிய அணைகளின் மதகுகளும் முறைப்படி திறக்கப்பட்டன. எனினும் எதிர்பாராத நிலச்சரிவுகளிலும் ஓரிரு இடங்களில் நீரில் மூழ்கிய சம்பவங்களிலும் சிலர் பலியாகினர். தண்ணீரின் அளவு 2,401 அடியைத் தொட்டதன் காரணமாக, இடுக்கி அணையின் 5 மதகுகள் முதன்முறையாக திறந்துவிடப்பட்டன. மலைப்பாங்கான பகுதிகளான வயநாடு, நிலம்பூர் மற்றும் கிழக்கு கோழிக்கோடு ஆகியவற்றை உள்ளடக்கிய மலபார் பகுதிதான் இந்த முதல்கட்ட மழைகளில் அதிகமான நிலச்சரிவுகளால் மோசமான பாதிப்புக்குள்ளானது. முதலமைச்சர் பிணராயி விஜயன் பாதிப்படைந்த பகுதிகளை வான்வழியே பார்வையிட தன்னுடன் வருமாறு எதிர்கட்சித் தலைவர் சென்னிதாலாவுக்கு அழைப்பு விடுத்தார். இயற்கையின் உண்மையான ஆட்டம் இன்னும் அரங்கேறத் தொடங்கவில்லை.

பூர்வாங்க மதிப்பீட்டின்படி முதல்கட்ட வெள்ளத்திற்குப் பின்னான மதிப்பிடப்பட்ட இழப்பு ரூ. 8316 கோடி (தற்போது 20,000 கோடிக்கும் மேல்). பிணராயி விஜயன் உடனடி உதவியாக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 820 கோடி உள்ளிட்டு ரூ.1220 கோடியை (தற்போது 2,000 கோடி) மைய அரசிடமிருந்து கோரினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட ராஜ்நாத் சிங் கோரிக்கை வைக்கப்பட்ட ரூ.1220 கோடியில் வெறும் 10%-க்கும் குறைவான தொகையான ரூ.100 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்தார் (பின்னர் மோடி வந்த போது 500 கோடி ஒதுக்கினார்). முதலமைச்சர் பிணராயி விஜயன் மத்திய அரசுக்கு எதிராக பகிரங்கமாக எதுவும் கூறவில்லையெனினும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தரப்பிலிருந்து இச்செயல் கடும் விமர்சனத்தைப் பெற்றது. தொழில்நுட்ப அடிப்படையில் இந்த பெருவெள்ளத்தை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க மறுத்தது பாஜக அல்லாத பிற எல்லா தரப்பினரையும் வெறுப்புறச் செய்தது.

”இந்த பெருவெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவித்திருக்கலாம். விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்து அறிவித்திருக்க வேண்டும். கடந்த ஐம்பதாண்டுகளில் இதுவே மிகப்பெரும் வெள்ளமாகும்” என்றார் கேரள எதிர்கட்சித் தலைவர் சென்னிதாலா. இவையெல்லாம் பிரச்சினைக்குரிய முல்லைப் பெரியாறு அணை அதன் கொள்ளளவை எட்டுவதற்கு அருகாமையில் இருக்கையில் ஏற்பட்ட இரண்டாம் கட்ட வெள்ளப் பெருக்கிற்கு முன்னர் நடந்த விசயங்கள்.

வெள்ளப்பெருக்கு

ஓயாத மழை நிலைமையை இன்னும் மோசமாக்கியது. மாநிலம் முழுவதுமுள்ள அணை மதகுகள் அனைத்தும் உயர்த்தப்பட்டதன் காரணமாக கடந்த திங்கள் கிழமையிலிருந்து (13-08-2018) இதற்குமுன் அம்மாநிலம் கண்டிராத வெள்ளத்தில் சிக்கியது கேரளம். இந்தமுறை அது அரசு இயந்திரத்தின் ஆற்றலுக்கு மீறியதாக இருந்தது. நிலைமை கையைமீறிப் போனது. தெற்கிலிருந்து வடக்கு வரை அனைத்து மாவட்டங்களும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. பெரியாறு, சாலக்குடி, பம்பா, அச்சன்கோவில் மற்றும் பாரதபுழா ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடின. ஆற்றங்கரையோர வீடுகள் அனைத்தும் இரண்டு மாடி உயரத்திற்கு தண்ணீர் உயர்ந்ததன் காரணமாக மூழ்கின.

தமிழக – கேரள அரசுகளின் முரண் போக்கு:

முல்லைப் பெரியாறின் மதகுகளைத் திறந்து விடுவதற்கு தமிழகம் காட்டிய தயக்கம், கவலையை அதிகரிக்கச் செய்வதாக இருந்தது. மேலும் தென்னகத்தின் இரு அண்டை மாநிலங்களுக்கிடையிலான கொஞ்சநஞ்ச உறவுகளையும் அது சிக்கலுக்குள்ளாக்கியது. எனினும், கேரள முதலமைச்சர் தமது மாநிலத்தின் இடர்பாடுகள் குறித்து தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார். அதற்கு அவருக்குக் கிடைத்த பதிலும் திருப்தியடையச் செய்வதாக இல்லை.

கேரள முதல்வர் பிணராயி விஜயன் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ”தமிழகத்தின் களப் பொறியாளர்கள், தண்ணீர் அளவைப் பதியும் மின்னணு சாதனங்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று தகவல் தெரிவித்ததாகவும், அதன் காரணமாக தண்ணீர் மட்டத்தை துல்லியமாக அளக்க முடியாமல், அதை ஆற்றில் நடப்பட்டிருக்கும் சாதாரண அளவீட்டுக் கம்பங்களின் குறியீடுகளின் அடிப்படையிலேயே அளப்பதாகவும் அறியப் பெற்றேன். அணையிருக்குமிடத்தில் தற்போது நிலவும் பருவநிலை மற்றும் காற்றின் நிலையைக் கணக்கில் கொண்டு பார்க்கையில் அளவீட்டுக் கம்பங்களின் மூலம் நீர் மட்டத்தை அளவிடுவதில் தவறுகள் நிகழ்வதற்கான வாய்ப்பிருப்பதால், இந்த நிலைப்பாடு பொருத்தமானதாக இருக்காது” என குறிப்பிட்டிருக்கிறார்.

பிணராயி விஜயன் – எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமது பதில் கடிதத்தில் “நீரியல், நிலவியல் மற்றும் கட்டிடவியல் அடிப்படையில் அணை பாதுகாப்பாகத்தான் உள்ளது” என்ற தமது பழைய நிலைப்பாட்டையே மீண்டும் எழுதினார். இறுதியில் இதில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருந்தது.

”நாங்கள் நிலவும் உச்சபட்ச பருவநிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, தொடக்கம் முதலே வெவ்வேறு கட்டங்களில் எங்கள் அணைகளிலிருந்து நீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் 142 அடியைத் தொட்டபிறகே திறந்துவிடப்பட்டது. அதுவே அதிவேகமாக நீர் வெளியேறியதற்கும் அதன் தாக்கம் அதிகரித்ததற்கும் காரணம்” என்று கூறியிருக்கிறார் பிணராயி விஜயன்.

பெரு வெள்ளத்தின் முதல் கட்டத்தில் தனது கணிசமான ஆதரவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது அண்டை மாநிலத்துக்கு அளித்தது தமிழகம். வெள்ள நிவாரண பணிக்காக ரூ. 5 கோடி உதவித் தொகை வழங்கியது (தற்போது மொத்தம் 1 கோடி). கடிதம் எழுதி, அதற்கு ஆறுதலற்ற பதில் கிடைத்த பிறகும் பிணராயி விஜயன் அமைதி காத்து, இரண்டு மாநிலங்களும் அணைப் பராமரிப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவதாகத் தெரிவித்தார்.

தேசிய ஊடகங்களின் அக்கறையற்ற போக்கு:

தென்னகத்தில் தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக பேரிடர் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கையில், இந்தி மற்றும் ஆங்கில ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் எவையும் இது குறித்து தமது கணிசமான கவிப்பெல்லையை (Coverage) விரிவாக்க ஆர்வத்தோடு இல்லை. சில விதிவிலக்குகளைத் தவிர்த்துப் பார்த்தால் அவர்களது கவிப்பெல்லைகள் உணர்சியற்றனவாகவே இருந்தன. ஊடக சகோதரத்துவத்திலிருந்து செய்யப்படவேண்டிய வலுவான செயல்வினையின் தேவையை இது காட்டியது.

”உங்களுக்கு (தேசிய ஊடகங்கள் என அவர்கள் கூறிக் கொள்ளும்) பெரிய தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரிபவர்கள் யாரேனும் தெரிந்திருந்தால், உங்களுக்கு டில்லியில் அதிகார மட்டத்தில் காரியங்கள் சாதித்துக் கொடுக்கக் கூடியவர் – அவர்களை நாங்கள் அதிகாரிகள் என அழைப்போம் – யாரேனும் தெரிந்திருந்தால், மத்திய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் யாரேனும் உங்களுக்குத் தெரிந்திருந்தால், சர்வதேச சமூகத்தினரை தென்னிந்திய மாநிலமான கேரளாவிற்கு உதவி செய்ய தமது நாட்டு அரசாங்கங்களை வலியுறுத்தச் செய்யக் கூடிய யாரையேனும் உங்களுக்குத் தெரிந்திருந்தால், தயவு செய்து அவர்களிடம் கூறுங்கள், ‘எங்களுக்கு உதவி தேவை’ நெருக்கடியான நேரம் இது” என மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீஜித் திவாகரன் தமது முகநூல் பதிவில் எழுதினார்.

பேரிழப்பை பார்வையிட்ட ராஜ்நாத் சிங் கொடுப்பதாகக் கூறியது வெறும் 100 கோடி

மத்தியிலிருந்து போதுமான உதவி கிடைக்காமலிருப்பதற்கு மோடி அரசாங்கம்தான் காரணம் என்ற பரப்புரை சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சென்று கொண்டிருக்கிறது. கேரளாவைச் சாராத சங்கபரிவாரத்தினரின் சமூக வலைத்தள கணக்குகளின் எதிர்மறை பரப்புரைகளும் எண்ணிலடங்காதவை. சில முகமறியாத சங்கிகளின் சமூக வலைத்தளங்களிலிருந்து, பிணராயி விஜயன் அரசாங்கத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டாம் என ’இந்து சமூகத்தை’ வற்புறுத்தும் விசப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு முரணாக கேரள பாஜகவின் ஒரே எம்.எல்.ஏ-வான ஓ.ராஜகோபாலும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் இந்நாள் மிசோராம் கவர்னருமான கும்மணம் ராஜசேகரும் முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு குறிப்பிடத்தக்க தொகையை வழங்கி அதற்கு நல்லதொரு ஆதரவையும் பெற்றுள்ளனர். இதற்கு இடதுசாரி இணையவாசிகளின் பதில் பரப்புரைக்குதான் நன்றி தெரிவிக்கவேண்டும்.

தற்போது தோராயமான மதிப்பீடு போட்டால்கூட இழப்புத் தொகை சுமார் ரூ.20,000 – 30,000 கோடியைத் தொடும். லட்சக்கணக்கான மக்கள் 6000 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாநிலம் சந்தித்திருக்கும் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகையில், இவ்விவகாரம் வெறுமனே மாநில அரசினால் மட்டும் கையாளத்தக்கது அல்ல என்பது மிகத் தெளிவாக புரியவருகிறது. இது தேசியப் ’பேரிடராக’ எடுத்துக் கொள்ளப்படாவிட்டாலும் தேசியப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஏற்பட்டிருக்கும் பேரிடரின் அளவு கட்டுக்கடங்காத வகையில் இருப்பதால் தேசிய மற்றும் சர்வதேச முகமைகளையும் இந்தப் பணியில் இறக்கிவிட வேண்டும்.

தண்ணீர் வடிந்த பின்னர், இந்த சேறு படிந்த நிலத்திலிருந்து மக்களின் வாழ்க்கையை மறுகட்டமைப்புச் செய்வதுதான் இங்கு நம் அனைவரின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.

  • ராஜீவ் ராமச்சந்திரன் (கொச்சியைச் சேர்ந்த பத்திரிகையாளர்)

தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.

அடுத்த ஆட்சியும் பா.ஜ.க.தான் … தினமணி – தினமலர் தலையங்க ஆவேசம் !

மிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி நடப்பதாக நடிகர் கருணாஸே கூறிவிட்ட பிறகு அதை இல்லை என பவர் ஸ்டாரே மறுக்க முடியாது (பொன்னாரைப் பார்த்து பா.ஜ.க.வில் சேர்ந்தவர் ப.ஸ் சீனிவாசன்). எடப்பாடி, ஓ.பி.எஸ். கட்சியினரைப் பொறுத்த வரை தேர்தல் வரும் வரையிலும் விமான நிலையம் போகும் போது போடப்படும் போலீஸ் பந்தோபஸ்தை பந்தாவாக அனுபவிப்பது, நெடுஞ்சாலை முதல் சத்துணவு வரை ஒப்பந்தப் பணத்தை முடிந்த மட்டும் பாதுகாப்பான வழிகளில் சேர்ப்பது தவிர பா.ஜ.க. இட்ட வேலையை தலையால் செய்வதற்கு கூச்சநாச்சம் பார்ப்பதில்லை. சுதந்திரத்தை என்னவென்றே அறியாத அடிமைகள் அடிமையாட்சி புரிவது இயல்புக்கு மாறான ஒன்றல்ல.

சமூகவலைத்தளங்களில் ஆல் டைம் ஹிட்டாக இருக்கும் இம் மீம் நாயகர்களை அதே போன்று விவாத சந்து பொந்துகளில் கிண்டலோ, சுண்டலோ செய்யும் ஊடகங்களின் நிலை என்ன? மோடியின் தில்லி சந்திப்பிற்கு பிறகு என்றல்ல அதற்கு முன்பேயே தமிழக ஊடகங்களின் பெரும்பான்மை பா.ஜ.க.-விற்கு ஜிஞ்சக்கு ஜிஞ்சா-வை ஆரம்பித்து விட்டன. தற்போது தில்லி விசிட்டுக்கு பிறகு ஜால்ரா சப்தம் காதைக் கிழிக்கிறது. “2019 தேர்தலுக்காக மோடி பிரச்சாரத்தை ஆரம்பித்தது தினத்தந்தி!” என்று ஆகஸ்டு 13 எழுதியிருந்தோம். அதே தலையங்கத்தின் பார்வையை கிட்டத்தட்ட எழுதியிருக்கின்றன தினமணியும், தினமலரும்! இந்த தலையங்க ஒற்றுமையைப் பார்த்தால் சென்னை கமலாலயத்திலிருந்துதான் இப்பத்திரிகைகளுக்கு தலையங்க சப்ளை நடைபெறுகிறது என்பதை அறுதியிட்டு சொல்லலாம்.

ஆகஸ்டு 11 அன்று தினமணி எழுதிய தலையங்கம் “ பலவீனம்தான் பலம்!”. அதன் வரிகளில் சிலவற்றை படியுங்கள்!

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை நடந்து முடிந்திருக்கும் மாநிலங்களவையின் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் வெளிச்சம் போட்டிருக்கிறது

பிகாரில் தனது கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தியது மட்டுமல்லாமல், மாநிலக் கட்சிகளுடன் தொடர்பு கொள்வதிலும் பா.ஜ.க. தலைமை சுறுசுறுப்பாக இயங்கியது. ஒன்பது உறுப்பினர்கள் உள்ள பிஜு ஜனதா தளம், ஆறு உறுப்பினர்கள் உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி, மூன்று உறுப்பினர்கள் உள்ள அகாலிதளம், மூன்று உறுப்பினர்கள் உள்ள சிவசேனா இவையெல்லாம் போதாதென்று தமிழகத்திலிருந்து அ.தி.மு.க.வின் 13 உறுப்பினர்களும் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வந்தனர் என்பதை விட, பா.ஜ.க. தொடர்பு கொண்டு அவர்களது ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டது என்பதுதான் நிஜம்.

எதிர்க்கட்சிகளின் பலவீனம் பா.ஜ.க.வின் பலம். இது 2019 மக்களவைத் தேர்தலுக்கும் பொருந்தலாம்!

அடுத்து “ஓங்கட்டும் அர்த்தமுள்ள விவாதங்கள்….” எனும் தினமலரின் ஆகஸ்டு 14 தலையங்கத்தைப் பார்ப்போம்.

ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல் முடிவானது, 2019 லோக்சபா தேர்தல் முடிவு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக அமையும் என்ற விவாதங்களை குறைத்துவிடும்.

பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா, அ.தி.மு.க., – பிஜு ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு, இத்தேர்தலில் மோடி உத்திகள் வெற்றியைத் தரும் என்பதை உணர்த்தியிருக்கிறது.

“எப்போது யானை ஓடத் துவங்கும்?” இது தினமலரின் ஆகஸ்டு 19 தலையங்கம். பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கான பொழிப்புரையாம் இது! சில வரிகளைப் படியுங்கள்!

இந்த, ஐந்து ஆண்டுகளில் அரசில் இருந்த, ‘சிவப்புநாடா’ முறை குறைந்திருக்கிறது என்பதின் அடையாளம், உலகின், ஆறாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது. இதற்கு மோடி அரசின் சில துணிச்சல் முடிவுகள் காரணமாகும். ஊழல் செய்பவர்கள், லெட்டர் பேடு கம்பெனிகள் மூலம் கருப்புப் பணம் குவிப்பவர்கள் பலர் பிடிபட்ட செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அதிக பயன்களைத் தரும் சீர்திருத்தங்களை மோடி அறிவித்திருப்பது, அடுத்த தேர்தலிலும், பா.ஜ., ஆட்சி வரும் என்பதை குறிப்பால் உணர்த்துவதாகும்.

ஆகஸ்டு 21 அன்று தினமலர் எழுதிய தலையங்கம் “வேலைவாய்ப்புகளும் சமூக பதற்றமும்”. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி குறித்த விவாதங்களில் மோடிக்கு கேடயமாக ஓடி வருகிறது தினமலர்.

நாட்டின் நலன் என்ற, மக்களின் பொருளாதார மேம்பாடு அளவுகோலை வைத்து மட்டும் அளக்கப்படும் விஷயமா வளர்ச்சி என்பதை, ஆராய வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. அதற்கேற்ப சரியான புள்ளி விபரம் மற்றும் தரவுகள், பல ஆண்டுகளாக திரட்டப்படவில்லை. பொருளாதாரம் என்பது, பல அம்சங்களை கொண்டது. அது அதிகமாக பேசப்படும்போது, ‘போர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாகி விடும்.

நடப்பாண்டில், மொத்த வளர்ச்சி போகிற திசையைப் பார்க்கும் போது, அது வீழ்ச்சிக்கு வித்திடவில்லை. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்திருப்பது, தவிர்க்க முடியாதது. இது, உலகளாவிய பொருளாதாரத்துடன் தொடர்பு கொண்ட விஷயம் என்பதால் பிரச்னையாகிறது: ஆனால், மொத்த பணவீக்கம் என்பது அதிகரிக்காமல் இருப்பதால், விலைவாசி விண்ணை முட்டும் என்பதற்கு பின்னணி இல்லை.

எதிர்க்கட்சிகள் இன்னமும், ஜி.எஸ்.டி., வரியை குறை கூறினாலும், அதற்கான காரணங்களை கூறத் தவறுகின்றன.சிறு மற்றும் குறு தொழில்கள், இந்த வரிவிதிப்பில் பாதிக்கப்படாமல் இருக்க, அமைச்சர்கள் குழு ஆராய்ந்து பரிந்துரை செய்ய, முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

நோபல் பரிசு பெற்ற, அமர்தியாசென் போன்றவர்கள், அதிக குறை சொல்லும் முன், பல தகவல்களை திரட்டினரா… என்பதை, யார் கேட்க முடியும்?

கமலாலயத்தின் கனிவுக்காக தலையங்கம் எனும் துதிபாடலை “மோடியை பாடுவேனன்றி, மற்றவர்களையோ மக்களையோ பாடேன்” என்று உடும்பிப்பிடியாக அடிக்கும் தினமலரின் கை என்னவெல்லாம் எழுதுகிறது பாருங்கள்! பொருளியல் அறிஞர் அமர்தியாசென் போன்றோர் குறை சொல்லும் முன் பல தகவல்களை திரட்டவில்லை என்று சொல்கிறார்கள். நோபல் பரிசு அறிஞருக்கே சவால் விடுக்கும் இந்த அறிஞர் புலிகள் ஜி.எஸ்.டி.-யால் சிறு தொழில்கள் பாதிப்படையவில்லை என்கிறார்கள். ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உலகளாவியதாம். அதனால் பணவீக்கம் இல்லை என்பதால் விலைவாசி விண்ணை முட்டவில்லையாம்.

பொய்யோ புரட்டோ சொல்வதென்று துணிந்து விட்டால் செக்கா, சிவனா பார்க்க மாட்டார்கள் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். தினமலரோ சூரியனா, சீரோவாட்ஸ் பல்பா என்று கூட பார்க்கமாட்டோம் என இருட்டறையில் படம் காட்டுகிறது. வேலை வாய்ப்பின்மை தோற்றுவிக்கும் பதற்றம் பொய், அவை எதிர்க்கட்சிகள், அறிஞர்கள் தோற்றுவிக்கும் பிரமை என்று தமிழிசையின் அதிரும் குரலில் எழுதிக் கொண்டு இதுதான் “உண்மையின் உரைகல்” என்று வேறு சொல்கிறார்கள். காசு கொடுத்து வாங்கும் வாசகரை இதற்கு மேல் யாரும் இழிவுபடுத்த முடியாது.

மல்லையா, நீரவ்மோடி என்று வரிசையாக கருப்புப் பண முதலைகள் வெளிநாடு தப்பிச் செல்லும் போது, முதலைகள் வரிசையாக பிடிபடுகிறார்கள் என்று பொய் சொல்வதை திட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை. மோடியின் சுதந்திர தின உரையைப் பார்க்கும் போது அடுத்த ஆட்சியும் அவரே அமைப்பார் என்பதை பகிரங்கமாக எழுதுகிறது தினமலர். முற்றும் துறந்த பார்ப்பன வெறி என்பது இதுதான்.மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி குறித்து தினத்தந்தி என்ன எழுதியதோ அதையே தினமணியும், தினமலரும் எழுதியிருக்கின்றன. மோடி-அமித்ஷாவின் ராஜதந்திரம், எதிர்க்கட்சிகளின் பலவீனம், 2019 தேர்தலிலும் மோடி வெற்றிபெறுவார்………..

ஒரு தேர்தலில் சதி, பேரங்கள், திரைமறைவு மிரட்டல்களால் வெல்வதைப் பாராட்டுபவர்கள், இதே சாமர்த்தியங்களோடு தொழில் புரியும் மாஃபியாக்களை மட்டும் குற்றவாளிகள் என்று பாரபட்சம் காட்டுவது ஏன்?

என்ன, தொழில்முறை திருடர்களுக்கு இப்படி புலவர் மரபில் பொழிப்புரை போட்டு நல்லவர்களாக காட்டும் பத்திரிகைகள் இல்லை! அந்த வகையில் பா.ஜ.க. கொடுத்த வைத்த கட்சிதான்!

  • வினவு செய்திப் பிரிவு

நீ ஒரு கிறித்தவனா? வெள்ளம் வடிந்தாலும் வடியாத ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன வெறி

பல பிராமண இந்துக்கள் தம்மைத் தொடாமல் படகில் ஏற அனுமதித்தால் மட்டுமே படகில் ஏறுவதற்குச் சம்மதித்ததாகக் கூறுகிறார் மீனவர் மரியான் ஜார்ஜ்

ரியான் ஜார்ஜ், 47 வயதான கேரள மீனவர். வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலிருந்து தனது மீன்பிடி படகுடன் கிளம்பி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த சுமார் 150 பேரைக் காப்பாற்றி இருக்கிறார் மரியான். மத்திய அரசிடம் இருந்து கோரிய அளவுக்கு ஹெலிகாப்டர்களோ மீட்புப் படையோ வந்து சேராத நிலையில், மக்களைக் காப்பாற்ற சுமார் 2,800 மீனவர்கள் களமிறங்கி உள்ளனர்.

இம்மீனவர்கள் பெரும்பாலும் தமது சொந்தப் படகுகளையே மீட்புப் பணிக்குப் பயன்படுத்தி வருகின்றனர். மீட்புப் பணியில் ஈடுபடும் மீனவர்கள் காப்பாற்றப்படுபவர்களிடம் இருந்து கூலியையோ வேறு சன்மானங்களையோ எதிர்பார்ப்பதும் இல்லை, அவர்களாகக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வதும் இல்லை. எனினும், கேரள முதல்வர் பிணராயி விஜயன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு அரசு சார்பாக உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மீட்புப் பணியில் எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் ஈடுபடும் தன்னார்வலர்களும் மீனவர்களும்

கேரளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர், மொத்த இந்தியாவையும் திகைப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. மொழி இன பேதமின்றி எல்லாத் தரப்பு மக்களுக்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளனர். மசூதிகளிலும், கிறிஸ்தவ தேவாலயங்களிலும், இந்துக் கோவில்களிலும் மதம் கடந்து எல்லாப் பிரிவு மக்களும் தஞ்சமடைந்துள்ளனர். இது பக்ரீத் நாள். மலப்புரத்தில் உள்ள நிலாம்பூர் பகுதியில் அமைந்திருக்கும் மசூதி ஒன்றில் தஞ்சமடைந்துள்ள இந்துக்கள் இசுலாமிய மக்களோடு சேர்ந்து ஈகைத் திருநாளைக் கொண்டாடுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் கேரள மீனவர்களோடு தமிழக மீனவர்களும் இணைந்துள்ளனர். உதவிகள் பல்வேறு திசைகளில் இருந்தும் குவிந்து வருகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து வரும் கேரள மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தைத் துயரில் இருந்து மீட்க தங்களால் இயன்ற அளவுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். எனினும் இந்தப் பேரவலத்திலும் நெற்றிக் காசைத் திருடித் தின்னும் ஈனத்தனங்கள் நாம் எதிர்பார்த்த திசையில் இருந்து வருவதையும் காண முடிகின்றது.

சுமார் 20 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக கேரள அரசு அறிவித்துள்ள நிலையில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள உதவித் தொகை வெறும் 600 கோடி ரூபாய். இந்நிலையில் ஐக்கிய அரேபிய அமீரக அரசு, கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்க முன்வந்ததுள்ளது. எனினும், பேரிடர் காலங்களில் வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவிகளை ஏற்றுக் கொள்வது மரபில்லை என்பதால் இத்தொகை கேரள அரசுக்குக் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிக வரி செலுத்தும் தென்னிந்திய மாநிலங்களிடம் இருந்து அட்டையாக உறிஞ்சிக் கொள்ளும் இந்திய அரசு, இந்த மாநிலங்களின் துயரைத் துடைக்காமல் இருப்பதோடு  வெளியில் இருந்தும் உதவிகள் கிடைப்பதை சில்லறையான விதிமுறைகளைக் காரணம் காட்டித் தடுக்க முயற்சிக்கின்றன. இது ஒருபுறம் என்றால், ஆர்.எஸ்.எஸ் கும்பல் மீட்புப் பணியில் ஈடுபடும் பொதுமக்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதைச் செய்வது தங்களது தொண்டர்கள்தான் என்று விளம்பரம் செய்து வருகின்றது.

(கேரள விவசாயத்துறை அமைச்சர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தைப் போட்டு ஆர்.எஸ்.எஸ். சேவகர்கள் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டதாக ஒரு சங்கி பரப்பிய செய்தியை அம்பலப்படுத்தியிருக்கிறார் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்)

மேலும், தங்கள் அமைப்பான சேவா பாரதியை தவிர வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தால் அதைக் கொண்டு முசுலீம்களையும் கிறித்தவர்களயுமே பாதுகாப்பார்கள் என்று இன்னொரு பக்கம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்  இந்துத்துவக் காலிகள். இது ஒரு நோய் பீடித்த மனநிலை.  இந்த மனநிலை கேரளத்திற்கு வெளியில் மட்டுமில்லை – உள்ளேயும் இருக்கத்தான் செய்கிறது.

பல பிராமண இந்துக்கள் தம்மைத் தொடாமல் படகில் ஏற அனுமதித்தால் மட்டுமே படகில் ஏறுவதற்குச் சம்மதித்ததாகக் கூறுகிறார் மீனவர் மரியான் ஜார்ஜ்

இந்தச் செய்திக் கட்டுரையின் துவக்கத்தில் அறிமுகமான மரியான் ஜார்ஜ் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது கொல்லத்தை அடுத்துள்ள பகுதி ஒன்றில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பதை அறிந்து அவர்களை மீட்கச் செல்கிறார். மரியானின் படகைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள்,  ”நீ ஒரு கிறித்தவனா?” எனக் கேட்டுள்ளனர். மரியான் ’ஆம்’ என பதிலளித்ததும், ”உனது படகில் நாங்கள் ஏற மாட்டோம்” என மறுத்துள்ளனர்.

மீண்டும், ஐந்து மணி நேரம் கழித்து அதே பகுதிக்குச் சென்றுள்ளார் மரியான். இப்போதும் காப்பாற்ற யாரும் வராததால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த அவர்கள் மரியானை உதவிக்காக அழைத்துள்ளனர். எனினும், தங்கள் வீட்டார் யாரையும் மரியான் தீண்டக் கூடாது என்கிற உத்தரவாதத்தின் பேரிலேயே அவர்கள் படகில் ஏறியுள்ளனர். மரியான் மட்டுமின்றி தன்னுடன் பேசிய வேறு சில மீனவர்களுக்கும் இதே அனுபவம் கிடைத்துள்ளது என்கிறார் சி.என்.என் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர்.

மீட்புப் பணியில் ஈடுபட்ட போது சேதாரமான தனது படகுடன் அருண் மைக்கேல்

அருண் மைக்கேல் என்கிற மற்றொரு மீனவர் சுமார் 1500 பேரை மீட்டுள்ளார். வெள்ள பாதிப்பை அறிந்த உடன், தனக்கு சொந்தமான 32 அடி நீள படகை லாரியில் ஏற்றி பத்தனம்திட்டாவுக்குச் சென்றுள்ளார். அருணின் அனுபவத்தில், மேட்டுக்குடியினர் பலரும் மீட்புப் பணிக்கு வரும் மீனவர்கள் தங்கள் வீட்டிலிருக்கும் பொருட்களைத் திருடிச் சென்று விடுவார்களோ என அஞ்சியுள்ளனர். வேறு சிலர் தங்கள் செல்லப் பிராணிகளை முதலில் படகில் ஏற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர். மற்றும் சிலர் வீட்டிலிருக்கும் விலை உயர்ந்த பொருட்களை விட்டு வர மனமின்றி உணவை மட்டும் கொடுத்து விட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

“எங்களுக்கும் இதே போல் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அவர்களும் எங்களுக்கு உதவி செய்ய வருவார்கள் அல்லவா?” – அருண் மைக்கேல் தனது மகளுடன்

இது போன்ற புறக்கணிப்புகளால் மீனவர்கள் மனம் சோர்ந்து விடவில்லை என்பதுதான் ஆறுதல் அளிக்கும் செய்தி. ”இப்போது என்ன நடந்ததோ, அது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். நாளையே எங்களுக்கும் இதே போல் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அவர்களும் எங்களுக்கு உதவி செய்ய வருவார்கள் அல்லவா?” என்கிறார் அருண் மைக்கேல்.

எளிய மனிதர்களின் எளிய மனங்கள்தான் எத்தனை வெளிப்படையாக இருக்கின்றன… பார்ப்பனிய சூது-வாதுகள் அந்த மனிதர்களை அடைந்து விடாமல் கடல் தடுத்து நிறுத்தும் என்று நம்புவோம்.

மேலும் படிக்க:

Kerala floods: Some fishermen recruited for rescues say survivors insulted them

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் !

புழவாது பகுதியில்...

தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கியது. அம்மழையை மகிழ்ச்சியாக வரவேற்றனர் கேரள மக்கள். ஆனால் ஆகஸ்ட் எட்டாம் தேதி பெய்த கனமழை அந்த மகிழ்ச்சியை காவு வாங்கியது. கேரளாவின் பதினான்கு மாவட்டத்தில் பன்னிரெண்டு மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் மழைநீர் இன்னும் வடியாமல் வீடுகள் அனைத்தும் மூழ்கிக் கிடக்கின்றன.

மழை வெள்ள பாதிப்பிலிருந்து கேரள மக்கள் மீள்கிறார்களா? என்ன சொல்கிறார்கள்? அதிகம் பாதிக்கப்பட்ட ஆலப்புழா மாவட்டத்தின் செங்கனூர் நகருக்கு வினவு செய்தியாளர்கள் நேரில் சென்றனர்.

ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ள செங்கனூர் நகராட்சி, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த திருவல்லா, கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த செங்கனச்சேரி ஆகிய பகுதிகள் கடுமையான சேதாரத்துக்கு ஆட்பட்டுள்ளன. புத்தன்காவு, பாண்டநாடு, குட்டன்நாடு ஆகிய பகுதிகளில் இன்னமும் நீர் வடியாமல் உள்ளது. இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் அருகருகே உள்ள பள்ளி, கல்லூரிகள், பள்ளிவாசல், சர்ச் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய மருத்துவ உதவிகள், டெட்டால் மற்றும் சோப்பு போன்றவை அந்தந்த முகாம்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

முகாமில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர். வீட்டில் உள்ள அத்தனை பொருட்களையும் இழந்த பிறகு, மின்சாரம் இல்லாமல், வாழ்வதற்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் அங்கு சென்று என்ன செய்வது என்று கேட்கிறார்கள். நகரத்தைச் சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் மட்டும் பகல் நேரத்தில் சுத்தம் செய்யும் பொருட்டு வீட்டிற்குச் செல்கிறார்கள். அவர்களும் உணவு மற்றும் இரவு தூங்குவதற்கு முகாமிற்குதான் திரும்புகின்றனர்.

ஒன்றிரண்டு  இடங்களைத் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்து எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள் மட்டுமே சென்று வருகின்றன. மருத்துவ உதவிக்குச் செல்லும் மருத்துவர்கள் குழு, நிவாரணம் வழங்கும் தன்னார்வலர்கள் அனைவரும் லாரிகளில்தான் செல்ல முடிகிறது. கடை வீதியில் ஒரு சில கடைகள் மட்டும் அத்தியாவசிய தேவைக்காக திறக்கப்பட்டுள்ளன. அவ்வாறு திறக்கப்பட்டுள்ள கடைகளில்  பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் சென்று வாங்குவதற்கு தயங்குகின்றனர். மாற்று துணி இல்லாதவர்கள் ஒரு சில இடங்களில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள நிவாரண துணிகளில் தங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த பகுதிகளில் பம்பை, வரட்டாறு, மணிமாலா ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகள் அனைத்திலும் வெள்ளம் கரையை உடைத்துக் கொண்டு செல்கிறது. பெரும்பாலான மக்கள் இந்த வெள்ள பாதிப்புக்கு, வரலாறு காணாத மழையே காரணம் எனக் கூறுகின்றனர். மேலும் பல இடங்களில் ஆற்றின் கரையோரம் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் காரணமாக நீரின் போக்கு  ஊருக்குள் திரும்பியதே காரணம் என்கிறார்கள் கேரள மக்கள். சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டதே இந்த பேரழிவுக்கு காரணம் என்று சிலர் சொல்கிறார்களே என்று கேட்டதற்கு, ”அவை எல்லாம் முட்டாள்தனமான கருத்துகள்” என்றே சொல்லிச் செல்கிறார்கள்.

வெள்ளம் குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் கேரள மக்கள் என்ன கருதுகிறார்கள்?

செங்கனூர் நகராட்சி முகாமில் தங்கியிருக்கும் பினிஷ் – அபிஷ் – சிவன்

எங்கள் பகுதிக்கு வெள்ளம் வராது என்றுதான் நினைத்திருந்தோம். அப்படியே வந்தாலும் இந்த அளவிற்கு வரும்… வீட்டை விட்டு வெளியேறும் அளவிற்கு பாதிக்கப்படுவோம்  என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. பல இடங்களில் ஒரு வாரமாக முகாமில் தங்கியிருக்கிறார்கள். நாங்கள் இந்த முகாமிற்கு வந்து  மூன்று நாள்தான் ஆகிறது. எங்களால் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. வீட்டின் முதல் தளம் வரை மூழ்கி விட்டது. வீட்டின் மாடிக்கு சென்றதால் தப்பித்தோம். வீட்டில் உள்ள அனைத்து சாதனங்களும் மூழ்கிவிட்டது. அங்கிருந்து வெளியேறக்கூட  வழி இல்லாது தவித்தோம், மீனவர்கள் வந்த பின்னர்தான் நாங்கள் பிழைக்க முடிந்தது.

பிரேம்தாஸ் – துணிக்கடை உரிமையாளர்.

எனக்கு இந்த இடத்தில் 3 கடைகள் இருக்கு. இங்கு வெள்ளம் வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. பக்கத்துலதான் பம்பை ஆறு ஓடுது. இது வரைக்கும் அந்த ஆத்து தண்ணி ஊருக்குள்ள வந்து பார்த்ததில்லை. அந்த நம்பிக்கையில இருந்துட்டேன். இடுப்பளவுக்கு தண்ணீ… சுத்தி இருக்குற எல்லா கடைகளிலும் வெள்ளம் புகுந்து நாசம். என் கடையில் இருந்த பொருட்கள் எல்லாம் பாதிக்கு பாதி வீணாகி போயுள்ளது. எனக்கு மட்டும் 25 லட்சத்துக்கும் மேல நஷ்டமாயிடுச்சு. ஓணம் பண்டிகைதான் முக்கியமான சீசன், அதெல்லாம் இப்ப நாசம். அதுக்கு பின்ன சபரிமலை சீசன். ஆனா அதுக்கு பொருள் எடுக்கக்கூட பணம் இல்ல. எல்லாம் நஷ்டம்.

அப்பச்சன்-சிசிலி தம்பதியினர். ஆவணி – செங்கனச்சேரி தாலுக்கா.

முழங்கால் வரைக்கும் தண்ணீர். எங்களை காப்பாத்திக்க நாங்க பட்டபாடு பெரும்பாடு. என்னோட மனைவிக்கு இரண்டு காலும் வராது. சுகர் பேஷன்ட். எனக்கு கால் நடக்க முடியாது. எங்க போனாலும் மூணு சக்கர வண்டியிலதான் போவேன். இப்படி இருக்கும் போது நாங்க என்ன பண்ண முடியும். இந்த ஊர்ல இருக்க எல்லோரும் கேம்ப் போயிட்டாங்க. நாங்க மட்டும் போகல. இந்த நொண்டி காலை வச்சிகிட்டி அவ்ளோ கூட்டத்துல என்ன பண்ண முடியும்? பாத்ரூம் போக கொள்ள என்னால எல்லோருக்கும் சிரமம்தான்.. அதான் முகாமுக்கு போகல. இங்கயே எங்க வார்டு மெம்பர்கிட்ட சொல்லி உணவு பொட்டலம் கொண்டு வந்து தர சொன்னேன்.. அவங்களும் கொண்டு வந்து தராங்க.

ரெமணன்  – சாலைப் பணியாளர். ஆவணி

எனக்கு 42 வயது ஆகிறது. இது வரைக்கும் இப்படி ஒரு வெள்ளத்தப் பாத்ததில்ல. வெள்ளம் வர்றதுக்கு முன்னாடியே எங்க ஊர்ல அறிவிச்சாங்க.. அதனால் புள்ளைகளோட புஸ்தகம், சர்டிபிகேட் எல்லாம் பத்திரமா எடுத்து வச்சிட்டோம். ஆனா டிவி, பிரிட்ஜ் எல்லாம் மூழ்கிடுச்சி. கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்க்கு வீட்டுல பாதிப்பு ஏற்பட்டிருக்கு.  700 ரூபா கூலி வாங்குற நான், அதையெல்லாம் எப்படி மீட்க போறேன்னு தெரியல.  எங்க கவர்மென்ட் முடிஞ்ச வரைக்கும் செய்யுது…. வேற ஆட்களும் செய்யுறாங்க.. ஆனா எவ்ளோ பேருக்கு செய்ய முடியும்?

ஷானு – புழவாது பகுதி

ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு பதினோறு முப்பதுக்கு வெள்ளம்.. இரவோட இரவா எல்லாரும் கேம்புல போயிட்டு தங்கிட்டோம்.  எல்லா வீடும் தண்ணில மூழ்கிடுச்சி…. ராத்திரி நேரத்துல ஒரு பொருளும் எடுக்க முடியல… எல்லோரும் கட்டின துணியோட போயிட்டோம்.  எங்க பகுதி எல்லாம் குட்டநாடு ஏரியாவை சேர்ந்தது… எங்க மழை பெஞ்சாலும் குட்ட நாட்டுக்குதான் தண்ணி வரும். கடல் மட்டத்துல இருந்து 150 அடி கீழே இருக்கு.

இங்க இருக்க மக்கள் எல்லாம் சாதாரண மக்கள்தான். சின்னதா ஒரு வீடு கட்ட பன்னிரண்டு வருசம் கஷ்டபடுறோம். கொஞ்சம் கொஞ்சமா சேர்த்தது எல்லாத்தையும் மொத்தமா இழந்துட்டோம். சர்கார் கொஞ்சம் கொஞ்சம் தருவதா சொல்லியிருக்கு…. கேம்புல தங்கியிருக்கவங்களுக்கு மூவாயிரம் ரூபா…. வீடு தகர்ந்தவங்களுக்கு ஆறு லட்சம், இடத்தையே பயன்படுத்த முடியாதவங்களுக்கு பத்து லட்சம்னு சொல்லுறாங்க… ஆனா அது உறுதியா தெரியல….  எப்படி இருந்தாலும் சர்கார் கொடுத்தே ஆகணும்.

மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களையும், முகாம்களை ஏற்பாடு செய்தவர்களையும் சந்தித்தோம்…

வி.கே. சிந்து – டி.ஆர். சிந்து – விஜயாம்மாள் – நகராட்சி பணியாளர்கள்

நாங்கள் கடந்த ஒருவாரமாக முகாமில் பணி செய்கிறோம். வழக்கமாக எங்கள் பணி காலை 7 மணி தொடங்கி மதியம் 1 மணி வரை செய்வோம். ஆனால் இப்போது நேரம் காலம் எல்லாம் கிடையாது தொடர்ந்து பணி செய்து வருகிறோம். செங்கனூர் பகுதியைச் சுற்றியுள்ள பாண்ட நாடு, பெரிச்சேரி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். கரண்ட் இல்லை, நெட்வொர்க் இல்லை, கடை இல்லை, சாதனங்கள் ஏதுவும் இல்லை. இன்னமும் வீட்டை சுற்றி இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் அவரவர் வீட்டிற்கு செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

“எனது மகளுக்கு பிரசவம் ஆகி 3 நாள் குழந்தை உள்ளது. ஆனால், இன்னமும் போய் பார்க்க முடியவில்லை. மருத்துவமனையில்தான் இருக்கிறார்..” என்று சொல்லிக்கொண்டே கண்கலங்குகிறார் வி.கே.சிந்து.

ராஜேஷ் யவாலே, ஆய்வாளர், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்,  புனே.

ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் இங்கு இருக்கிறேன். என் தலைமையில் 5 குழுக்கள், 5 படகுகள், மற்றும் 25 நபர்கள் உள்ளனர். இதுவரை 800 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். 200 பேரை மீட்டுள்ளோம்.

தாசன், கேரள சாலைப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்.

“என்னோட சொந்த ஊரு கோழிக்கோடு. கடந்த  ஏழு நாட்களாக இங்கதான்  வண்டி ஓட்டிட்டு இருக்கேன். மொத்த KSRTC ஊழியர்களும் இந்த மீட்பு பணிகளில்தான் ஈடுபட்டிருக்கோம். யாரும் வீட்டுக்கு போகல. இப்ப திருவனந்தபுரத்துல இருந்து செங்கனூர் வரைக்கும் வண்டி ஓட்டிட்டிருக்கேன். குறிப்பா நிவாரண பொருட்களை கொண்டு போயி சேர்க்கிறது. மிலிட்டரி, தேசிய பேரிடர் மீட்புப் படை இவங்க எல்லோரையும் எங்க வண்டியிலதான் கூட்டிட்டு போறோம். இந்த வெள்ள மீட்பு பணிகளில் எங்க ஊழியர்களோட வேலை அளப்பறியது”

வர்கீஸ் ஆப்ரகாம் – பொறியாளர், கேரளா குடிநீர் வாரியம். IHRD பொறியியல் கல்லூரி முகாம்.

(வலது ஓரம் இருப்பவர்)

கடந்த ஒரு வாரமா நாங்க இங்க தண்ணீர் விநியோகம் செய்யும் வேலைகள்ல இருக்கோம். தண்ணீர் விநியோகம் பெரும் சவாலாக இருக்கு. இந்த மழையால கேரள மாநிலம் முழுக்க குடி தண்ணீர் கடுமையா பாதிக்கப்பட்டு இருக்கு. நல்ல  தண்ணீர்  கிடைப்பதே சிரமமா உள்ளது. செங்கனூர் தாலுகாவில் மட்டும் ஊழியர்கள், பொறியாளர்கள் என 60-க்கும் மேற்பட்டவர்கள் இந்த  பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலைமைகள் சரி ஆக குறைந்தது 2 வாரம் ஆகும். அதுவும் இதுபோல மழை இல்லாமல் இருந்தால்தான். இல்லையெனில் சிரமம்தான். 1924–க்கு பிறகு இப்பதான் கேரளா இது போன்ற பெரு வெள்ளத்த பாத்து இருக்கு. ஒரு  நூற்றாண்டு காணாத வெள்ள பாதிப்புதான் இது. திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களில் சில பகுதிகளைத் தவிர கேரளாவின் அனைத்து பகுதிகளும் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு.

ஜார்ஜ் வர்கீஸ், சஜிமோன் கே.ஜார்ஜ் ( சி.எஸ்.ஐ – சர்ச் கமிட்டி)

கேரளாவின் பல பகுதிகளும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசு எங்கள் தேவாலயத்தை நிவாரண முகாமாக அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பிருந்தே நாங்கள் நிவாரணப் பணிகளை செய்ய ஆரம்பித்துவிட்டோம். மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் போது நங்கள் தேவாலயத்தை திறந்துவிட்டோம். மதம், கடவுள் என்பதற்கு மேலாக எங்களுக்கு மனிதம்தான் முக்கியம். எந்த மதத்தை சார்ந்தவர்கள் ஆனாலும் செத்தபின் எங்கு செல்வோம் என சொல்ல முடியுமா? அது இந்துவோ, இசுலாமியரோ அல்லது கிருத்தவரோ யாரும் எதையும் கண்டவர் இல்லை.

சலீம் – பி.எம்.ஜே. ஹால். புழவாது பள்ளிவாசல் முகாமின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர்.

இந்த பள்ளிவாசலில் மட்டும் 41 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளன. குழந்தைகள், முதியவர்கள் என மொத்தம் 135 பேர் இங்கு உள்ளனர். அனைவரும் சொல்வதுபோல இது வரலாறு காணாத மழைதான், நுற்றாண்டு காணாத மழை.

இவ்வளவு பேரழிவு ஏற்படக் காரணம் பருவநிலை மாற்றம்தான். இந்தப் பிரச்சினை கேரளாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமான பிரச்சினையாக மாறியுள்ளது. இன்று கேரளா. நாளை இது போன்ற அழிவு கோவாவுக்கு ஏற்படலாம். ஏன் சென்னை பெரு வெள்ளம் சொல்வதும் அதுதான். குறிப்பாக இந்த மழையின் போது அதிக அளவில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரளாவின் நில அமைப்பையே புரட்டி போட்டுள்ளது என சொல்லலாம்.

நிலச்சரிவுக்கு முக்கியமான காரணம் மலைப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் என சொல்கிறார்கள். ஆனால் அந்த கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்தவர்கள் இந்த அரசுகள் தானே. அவர்கள் தானே இவற்றை கண்காணித்து இருக்க வேண்டும். இந்த பேரழிவிற்கு இயற்கையின் கோரத்தாண்டவம் மட்டுமல்ல, மனித தவறுகளும்தான் காரணம்.

தற்போதுவரை மீட்புப் பணிகள் துரிதமாகவும், சரியாகவும் நடந்து வருகின்றன. ஆனால் இதற்குப் பின்னான மறுகுடியேற்றம் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு என்பவைதான் பெரும் சவாலாக உள்ளன. வீடுகளை முழுமையாக இழந்தவர்கள், வீட்டைத் தவிர மற்ற அனைத்தையும் இழந்தவர்கள் என ஒன்றிரண்டு குடும்பங்கள் அல்ல பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்களது வாழ்க்கைக்கு என்ன வழி என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

அனைத்து தரப்புகளில் இருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. UAE அரசு 700 கோடி தருவதாகக் கூறியுள்ளது. கேரளாவில் ஒரு மருத்துவர் 50 கோடி தருவதாக அறிவித்துள்ளார். இந்த நேரத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள 600 கோடி நிதி என்பது போதாது. உண்மையில் தங்களுடைய மதவாத கண்ணோட்டத்தை அவர்கள் இதிலும் காட்டுவதாகத்தான் இதை நான் பார்க்கிறேன். ஆனால் கேரள மக்கள் மதவாதத்தை என்றும் ஏற்காதவர்கள். அவர்கள் இந்த பேரழிவை மட்டுமல்ல மதவாதத்தையும் எதிர்த்துப் போராடி வெல்வார்கள்.

  • வினவு களச் செய்தியார்கள், செங்கனூர், கேரளா (21-08-2018).

சிலுவையில் அறையப்படும் பத்திரிகை சுதந்திரம் ! கேலிச்சித்திரங்கள்

முகம்மது சபானெ, பாலஸ்தீனம்.

விதையொன்று எழுதியதற்காக பா.ஜ.க. கும்பலின் கொலைமிரட்டலுக்கு ஆளாகியிருக்கிறார், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

கல்புர்கி, தபோல்கர் போன்ற உண்மையை துணிச்சலோடு எழுதும் எழுத்தாளர்கள் மற்றும் கௌரி லங்கேஷ் போன்ற பத்திரிகையாளர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்தபின், தங்கள் சித்தாந்தத்துக்கு ஒத்துப் போகாத பத்திரிகையாளர்களை நிறுவனங்களிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழுத்தம் கொடுத்து சம்பந்தபட்ட பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

உண்மையில் ‘பத்திரிகையாளர் சுதந்திரம்’ என்பதன் அர்த்தம்தான் என்ன? பதிலளிக்கிறது, உலகளாவிய ஊடகவியலாளர்கள் தீட்டிய இக்கோட்டோவியங்கள்.

பத்திரிகை சுதந்திர தினம்

டோவா எலாடில் – எகிப்து.

_____________________________________________________________________

இலவச அழுத்தம் (பத்திரிகை சுதந்திரம்)

மோசன் இசாதி, ஈரான்.

_____________________________________________________________________

உலக பத்திரிகை சுதந்திர தினம் – 2017

எமாட் ஹஜ்ஜாஜ்,ஜோர்டான்.

_____________________________________________________________________

ஊடக கட்டுப்பாடு

ஆல்ஃப்ரெடோ கார்சன், அமெரிக்கா.

_____________________________________________________________________

உலக பத்திரிகை சுதந்திர நாள் 2016

அன்னெ டெரென், ஃப்ரான்சு.

_____________________________________________________________________

எகிப்தில் பத்திரிகையாளர்களின் நிலை

காமிர் அலி, மொராக்கோ.

_____________________________________________________________________

எழுத்தாளர்களின் சட்டகம்

முகம்மது சபானெ, பாலஸ்தீனம்.

_____________________________________________________________________

சுதந்திர உலகின் இறுதிச் சடங்கு

சாட் முர்டதா, ஈராக்.

_____________________________________________________________________

உலக பத்திரிகை சுதந்திர தினம்

பெட்ரோ எக்ஸ் மோலினா, நிகரகுவா.

நன்றி: cartoonmovement.com

சென்னை மெட்ரோ : நவீன ரயிலை இயக்கும் தொழிலாளிகளின் அவல நிலை !

மெட்ரோ இரயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர தொழில்நுட்ப தொழிலாளர்கள் அனைவரும் (250 பேர்) கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 15 நாட்களாக தினமும் தமது பணி நேரம் முடிந்த பிறகு சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ இரயில் நிறுவன அலுவலகத்தின் வெளி கதவுக்கு உள்ளே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண் தொழிலாளர்கள்.

கடந்த 2018 ஜூலை மாதம் தங்களது ஊதிய உரிமைகளுக்காகப் போராடிய மெட்ரோ ரெயில் ஊழியர்கள் (கோப்புப் படம்)

மெட்ரோ ரயில் சேவையை இயக்குவதற்கான தொழிலாளர்களை காண்டிராக்டர் மூலம் நியமிப்பதை கண்டித்தும், இதனாலும் நிர்வாகத்தின் பிற செலவு குறைப்பு நடவடிக்கைகளாலும் மெட்ரோ ரயில் போக்குவரத்தின் பாதுகாப்பே அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதையும், நிர்வாகம் நிரந்த தொழிலாளர்களுக்கு முறையான ஊதிய உயர்வு, பராமரிப்பு ஊதியம் மறுத்து வேலையை விட்டு துரத்த முயற்சிப்பதையும் கண்டித்து இந்தத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாகம் தொழில்நுட்ப ஊழியர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டி குறை ஊதியம் கொடுக்கின்றது. அரைகுறையாக முடிக்கப்பட்ட கட்டுமான வேலைகள், அபாயகரமான செயல்பாட்டு நடைமுறைகள் என்று மெட்ரோ ரயில் செயல்பாடே அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

தொழில்நுட்ப ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வேலைப் பளு அதிகமாக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டுப்பாட்டாளர் பொறுப்பில் இருக்கும் ஊழியர்களின் நிலைமை பரிதாபமானது. ஒவ்வொரு ரயிலும் ஒவ்வொரு நிமிடத்திலும் போக வேண்டிய வேகம், சேர வேண்டிய இடம் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட்டு அதை கணினி மூலம் இயக்கி கட்டுப்படுத்துவது, விபத்துகள் நேராமல் திட்டமிடுவது ஆகிய அழுத்தம் நிறைந்த இந்த வேலை இது.

பல ஆயிரம் கோடிகளை தின்று காட்சிப் பொருளாக இருக்கும் சென்னை மெட்ரோ ரயில்.

உதாரணமாக, ஹாங்காங் மெட்ரோவில் இந்த வேலையைச் செய்யும் ஊழியர்களுக்கு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவேளை கொடுக்கப்படுகிறது. அப்போதுதான் மன அழுத்தத்தை தெளிவாக்கிக் கொண்டு வேலையை தொடர முடியும். ஒருவர் எழுந்தவுடன் இன்னொருவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் போதுமான ஊழியர்களை நியமித்து இயக்குகின்றனர்.

ஆனால், சென்னை மெட்ரோவில் 14 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 4 பேரை உட்கார வைக்கின்றனர். செலவு குறைப்பு என்ற பெயரில் போதுமான ஊழியர்களை நியமிக்காமல் தொழிலாளர்களை துன்புறுத்தி, பயணிகளின் பாதுகாப்பையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றனர் மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள்.

மேலும், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இருக்க வேண்டிய நிலைய கட்டுப்பாட்டாளர் பணிக்கு 3 ஷிஃப்ட்-க்கு தலா ஒருவரை நியமிக்காமல், 2 தொழிலாளர்களை தலா 10 மணி நேரம் இரண்டு ஷிஃப்ட் வேலை பார்க்கச் சொல்கின்றனர். மீதி 4 மணி நேரமும், 5 நிலையங்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற விகிதத்தில் கண்காணிக்கச் சொல்கின்றனர்.

பராமரிப்பு பணிகள், சோதனை ஓட்டங்கள் போன்றவை நடைபெறும் இரவு நேரங்களில் இத்தகைய செலவு குறைக்கும் நடவடிக்கையால் விபத்துகள் நடக்கும் சாத்தியங்கள் அதிகமாயிருக்கின்றன. கடந்த ஒரு ஆண்டில் இத்தகைய விபத்தில் 3 தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது போன்ற விபத்து செய்திகளை வெளியில் தெரியாமல் இருட்டடிப்பு செய்கிறது நிர்வாகம். விதிமுறைகளுக்கு ஏற்ப ரயில்வே பாதுகாப்பு கமிஷனுக்குக் கூட தகவல் தெரிவிப்பது இல்லை.

கடந்த ஒரு ஆண்டில் இத்தகைய விபத்தில் 3 தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது போன்ற விபத்து செய்திகளை வெளியில் தெரியாமல் இருட்டடிப்பு செய்கிறது நிர்வாகம்.

மெட்ரோ ரயில் நிர்வாகம் முறையாக பயிற்றுவிக்கப்பட்ட, நிரந்தரத் தொழிலாளர்கள் தேவைப்படும் இடத்தில் காண்டிராக்ட் நிறுவனம் மூலமாக சுமார் 600 தொழிலாளர்களை அமர்த்தியுள்ளது. உதாரணமாக, மெட்ரோ ரயில் ஓட்டும் நிரந்தர தொழிலாளியின் மாதச் சம்பளம் ரூ 35,000 என்றால் அதே இடத்தில் அமர்த்தப்படும் காண்டிராக்ட் தொழிலாளிக்கு வெறும் ரூ 12,000 மட்டுமே ஊதியமாக கொடுக்கப்படுகிறது.

ஆனால், மெட்ரோ ரயில் நிறுவனமோ காண்டிராக்ட் எடுத்திருக்கும் மெம்கோ என்ற நிறுவனத்துக்கு சராசரியாக ஒரு தொழிலாளிக்கு ரூ 28,000 வரை கொடுக்கிறது. வித்தியாசத்தை காண்டிராக்டர் மெம்கோவும் (ஜப்பானிய மிட்சுபிஷியின் கிளை நிறுவனம்), காண்டிராக்ட் விட்ட மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகளும் விழுங்கி விடுகிறார்கள்.

ரயில் பெட்டியை சப்ளை செய்வது அல்ஸ்டோம் நிறுவனம், திட்டப்பணிக்கு கடன் கொடுத்து வட்டியுடன் வசூலிப்பது ஜப்பான் நிதி நிறுவனம், சுரங்கம் குடையும் வேலைக்கான காண்டிராக்ட் ரசிய நிறுவனத்துக்கு, சிக்னலிங் கருவிகளை விற்பது சீமன்ஸ், ரயில் தண்டவாளம் தயாரித்து அளிப்பது சோமா, அல்ஸ்டோம் போன்ற நிறுவனங்கள் என்று திட்டச் செலவான ரூ 20,000 கோடியில் (இத்துடன் வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்ட்ரல் வரையிலான பாதைக்கு கூடுதலாக ரூ 5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது) பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் குளிர குளிர குளித்து விட்டிருக்கின்றனர்.

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பளுதூக்கியில் ஏற்பட்ட மின்விபத்து காரணமாக படுகாயமுற்ற உமாபதி சங்கம் லால்.

ரயில் நிலையங்களையும், சுரங்கங்களையும், உயர்த்தப்பட்ட பாதைகளையும் தமது கைகளால் கட்டி எழுப்புவதற்கு காண்டிராக்டர்கள் மூலம் வட மாநில தொழிலாளர்களை அமர்த்தி குறைந்த பட்ச கூலி கொடுத்து (8 மணி நேரத்துக்கு ரூ 160, 4 மணி நேர ஓவர் டைமுக்கு ரூ 80 = ஒரு நாளைக்கு ரூ 240 சம்பளம்), வேலை வாங்கியது இந்த சர்வதேச தரத்திலான மெட்ரோ ரயில் திட்டம். இப்போதோ, மெட்ரோ ரயிலை இயக்கும் தொழில்நுட்ப ஊழியர்களையும் காண்டிராக்ட் முறையில் அமர்த்தி சொற்ப கூலியில் வேலை வாங்குகிறது நிர்வாகம்.

சென்னை மெட்ரோ ரயிலின் வியர்வை மணம் ! வினவு கட்டுரை இணைப்பு

பன்னாட்டு கார்ப்பரேட் விற்கும் பொருளுக்கு சர்வதேச விலை, தொழிலாளர்களுக்கு இந்தியக் கூலி, தரகு வேலை பார்க்கும் இந்திய முதலாளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பொறுக்கித் தின்ன வாய்ப்பு – இதுதான் சர்வதேச தரத்தின் பொருள்.

ஆனால், இதனால் சென்னையின் உழைக்கும் மக்களுக்கு எந்த பலனும் இல்லை.  சர்வதேச தரம் என்றால் அதில் அழுக்கான உழைக்கும் மக்கள் வரக்கூடாது என்பது இந்த கனவான்களின் விதி. எனவேதான், சென்னை மெட்ரோ ரயிலில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஏர்போர்ட் போக ரூ 50 கட்டணம், பச்சையப்பன் கல்லூரியிலிருந்து போக வேண்டுமானால் ரூ 60 கட்டணம். இவ்வாறு உழைக்கும் மக்களுக்கு எட்டா கனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, ரூ 25,000 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகால், வெள்ளைச் சட்டை கனவான்களின் போலி கவுரவத்துக்கு இரை போடும் அளவில் மட்டும் உள்ளது; மக்கள் பயன்பாடு இல்லாமல் காத்தாடுகிறது. எனவே, தவிர்க்க இயலாமல் வருமானம் குறைவாகவே உள்ளது.

ரூ 25,000 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகால், வெள்ளைச் சட்டை கனவான்களின் போலி கவுரவத்துக்கு இரை போடும் அளவில் மட்டும் உள்ளது; மக்கள் பயன்பாடு இல்லாமல் காத்தாடுகிறது.

இதையே காரணம் காட்டி செலவுக் குறைப்பு என்று தொழிலாளர்களின் வருவாயில் கைவைக்கிறது நிர்வாகம். நிரந்த ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்க வேண்டிய 15% ஊதிய உயர்வை 10% ஆகக் குறைத்து, இதுவரை வழங்கப்பட்டு வந்த பல்வேறு படிகளை முன் தேதியிட்டு ரத்து செய்திருக்கின்றது. மேலும், வருடாந்திர பயண படி, மகப்பேறுக்கான தந்தை விடுப்பு ஆகியவற்றையும் வாய்மொழியாக ரத்து செய்திருக்கிறது நிர்வாகம்.

இதை எதிர்த்து போராடும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் சென்னை குறளகம் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தொழில் தகராறு சட்டம் பிரிவு 2K-ன் கீழ் தொழில் தாவா தாக்கல் செய்துள்ளனர். வேலைக்கு கூட பாதிப்பு வராமல் சொந்த நேரத்தில் போராடி வரும் ஊழியர்களை நடவடிக்கை எடுக்கப் போவதாக அச்சுறுத்துகிறது நிர்வாகம்.

என்ன ஆனாலும் சரி, வேலையே போவதாக மிரட்டினாலும் சரி, போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று உறுதியாக உள்ளனர் தொழிலாளர்கள். அவர்கள், காண்டிராக்ட் தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு, கட்டுமான தொழிலாளர்களுடனும் ஐக்கியப்பட்டு போராடுவதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயில் செலவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் எழுந்து நிற்கும் மெட்ரோ ரயில் கட்டமைப்பை பாதுகாத்து மக்களுக்கு பயன்படும் வகையில் மீட்டெடுக்க முடியும்.

அவ்வாறு மக்கள் நலனுக்கான கட்டமைப்பாக மெட்ரோ ரயிலை மாற்றுவதன் மூலம் அதன் தொழிலாளர்கள்  தங்களது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

  • குமார்

புதிய தொழிலாளி ஜூலை 2018 இதழ்
நன்றி : new-democrats தளத்தில் வெளியான கட்டுரை

பிரசவத்துக்கு ஆஸ்பத்திரி போவக் கூடாதுன்னு எந்த முட்டாள் சொல்றான் ?

ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் கவனிப்பு அறிவுறை, ஆலோசனைகள், மருத்துவருடன் கலந்தாய்வு, மருத்துவப் பரிந்துரைப்படி உணவு, மாத்திரை என்பது வெறுமனே ஆரோக்கியம் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. கர்ப்ப கால பராமரிப்பில் உயரம், எடை, நோய்கள் கண்டறிதல், நோய்கள் தன்மையறிந்து குணப்படுத்துதல், குழந்தைகளின் ஆரோக்கியமான  வளர்ச்சியை உறுதி செய்தல், தாயின் தூய்மை சூழலை பராமரித்தல் என கர்ப்ப காலம் முழுக்க அதன் பிறகும் தாய் சேய் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் நவீன மருத்துவத்தின் பணி.

ஆனால், ஹீலர் பாஸ்கர் போன்றவர்களோ “அனாடமிக் தெரபி”, “செவி வழி தொடு சிகிச்சை” என்ற பெயரில் பேசுவதைக் கேட்டாலே இது பேறு காலத்தின் ஆலோசனையா? மரண கால ஆலோசனையா? என்ற சந்தேகம் எழுகிறது.

வீட்டிலேயே பிரசவம் எனும் ஹீலர் பாஸ்கர்களின் கருத்துக் குறித்து, சென்னையின் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த கோஷா பெண்கள் மருத்துவமனை மற்றும் எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மகளிர் நோயியல் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவனை-யில் பிரசவத்திற்கு வந்திருந்த பெண்கள் பேசுகிறார்கள்.

சல்மா.

ஆஸ்பித்திரிக்கு வரதுதான் சேஃப்டி. ஆயா காலம் என்பது வேற, இப்ப பசங்க காலம் வேற… எங்கம்மா, பாட்டி கை வைத்தியத்துல தான் எங்கள பெத்தாங்க. அந்த பாட்டி கிராமத்துக்கே பிரசவம் பார்த்தவங்க. அவங்க வயசுக்கு நூறுக்கும் மேல பிரசவத்த பார்த்தவங்க. ஏதோ திடீர்னு ஒரு பிரசவம் பார்த்த அனுபவம் இல்ல. பெரியவங்க, பிரசவங்கறது மறு ஜென்மம்னு சும்மா சொல்லல. பிரசவம் என்ன விளையாட்டா..? உயிர் சமாச்சாரம்.  அதே பாட்டிங்க, என்னால முடியாது தலை புரண்டு இருக்குது, குழந்தைக்கு பனிக்குடம் உடஞ்சிருச்சி.. டாக்டர்கிட்ட சீக்கிரம் போங்கன்னு சொல்லியிருக்காங்க. அதுக்கப்புறம் ஆஸ்பித்திரிக்கு போகும்போது வழியிலயே பல உயிர் போயிருக்கு. அந்த உயிர்ப்பலி இப்ப திரும்பவும் தேவையா? டாக்டர்கள் பாக்குற பிரசவமும் சில சாவுல தான் முடியுதுன்னு சில முட்டாளுங்க தான் சொல்லுவாங்க.

செல்வம், டிரைவர்.

என் பொண்டாட்டிய ஆஸ்பித்திரில சேர்த்திருக்கேன். இரண்டாவது பிரசவம். இங்க டாக்டருங்க ஒழுங்காதான் கவனிக்கிறாங்க. தேவைன்னாதான் சிசேரியன் செய்யனும்னு சொல்லுறாங்க. பணம் கட்டி பாக்குற தனியார் ஆஸ்பித்திரியில தான் பல கோல்மால் பன்னுறாங்க. அங்க ஏன் போறீங்க? உப்பு தின்றவன் தண்ணிய குடிக்கிறான். பணம் இருக்கவன் செலவு பன்றான். அதுக்காக ஆஸ்பித்திரிக்கே போக கூடாதுன்னு வீட்டுலயே பிரசவம் பார்க்கனும்னு முட்டாளுங்க தான் சொல்லுவங்க.

சிவசங்கரி, கோஷா மருத்துவமனை முன்னாள் ஊழியர்.

மருமகளை டெலிவரிக்காக ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கேன். எத்தன டெஸ்ட்? எப்படி எல்லாம் கவனிக்கிறாங்க.? தாயிக்கு ரத்தம் கம்மியா இருக்குது, பி.பி. அதிகமா இருக்குது, சக்கரை கூடிடுச்சி இதுக்கு இந்த மாத்திர, இந்த ஊசின்னி சொல்லி சொல்லிக் கொடுக்குறாங்க…. இதை வீட்ல யாரு கொடுப்பாங்க? யாரு பார்ப்பாங்க?

தேவி, கூடுவாஞ்சேரி.

என் ரெண்டாவது பொண்ண இடுப்பு வலின்னு கூட்டி வந்து சேர்த்திருக்கேன். நாலு பொண்ணுங்க எனக்கு. எல்லாரும் கவர்மெண்டு ஆஸ்பித்திரியில தான் குழந்தைகள பெத்தாங்க. அதுங்கள இங்க சேத்த பிறகு தான் நம்மளுக்கு உசுரே வருது. வலி வர நேரத்துல நம்மளுக்கு மடியில நெருப்பு கட்டினு இருக்க மாதிரி இருக்கு. வீட்டுலயே அதுங்க வலிய பார்த்துனு இருக்க முடியுமா? பைத்தியக்காரன் கூட அப்படி பார்த்துனு இருக்க மாட்டாங்க. பதறுவாங்க. எவனுங்க இப்படி வீட்டுலயே பிரசவம் பாக்கனும், வெளில பாக்க கூடாதுன்னு சொன்னானுங்க. அவனுங்கள இட்டுனு வாங்க. இப்ப என் பொண்ணு கதைய கேளுங்க…

”போன அவ உயிரை புடிச்சி என் கையில கொடுத்துட்டாங்க டாக்டருங்க. அவ கர்ப்பமாகி ஏழு மாசம் தான் ஆகுது. திடீர்னு தலை சுத்தி பாத்ரூம்ல விழுந்துட்டா. பதறி நாங்க போயி தூக்குனா, கண்ணு தெரியலமான்னு அழுவுறா. என்னா பன்றதுன்னு எங்களுக்கு மூச்சே நின்னு போச்சி. இங்க ஆஸ்பித்திரிக்கு தூக்கினு ஓடியாந்தேன். டாக்டருங்க எல்லாம் பார்த்துட்டு பி.பி. ஓவர்னு சொன்னாங்க. அதுக்கு மாத்திரை, மருந்து, டெஸ்டுன்னு எடுத்து எடுத்து பெரிய உசுர காப்பாத்திடாங்க. சின்ன உசுரு வயித்துலயே செத்துடுச்சி. பெட்ல சேர்த்து  அஞ்சி நாளாச்சி. இப்ப கண் பார்வையும் திரும்பிடுச்சி. இப்பதான் எங்களுக்கும் மூச்சி வந்தது. எவ்ளோ டெஸ்ட், எவ்ளோ கவனிப்பு. ஒரு நிமிஷம் கூட முக்கியம். உடனே கவனிக்கனும். அதுக்கு தானே ஆஸ்பித்திரி. ஒரு பக்கம் ரத்தம் ஏத்துறாங்க. ஒரு பக்கம் டெஸ்ட் பன்னுராங்க. வீட்டுல இதெல்லாம் நடக்குமா? வீட்ல எல்லாம் சேர்ந்து சாவரத வேடிக்கை தான் பார்க்கலாம். இது வரைக்கும் எனக்கு இரண்டாயிரபா தான் செலவு. அதுவும் எனக்கு பஸ்ஸு செலவு, சாப்பாடு செலவு தான். வெளில தனியாருகிட்ட போயிருந்தா தான் இரண்டு லட்சம் கொடுத்திருக்கனும். கடைசியில அவ உயிரும் வந்திருக்காது.

ஜெயலட்சுமி, கண்ணகி நகர். வீட்டு நோயாளிகளை பராமரிப்பவர்.

நான் இங்க தான் பொறந்தேன். ஆஸ்பித்திரிதான், ஆங்கிலம் மருத்துவம்தான் நவீனமா? அப்பல்லாம் கிணத்து தண்ணிய அப்படியே மொண்டு குடிச்சோம். இப்ப கேன் தண்ணி வந்துடுச்சி. அது நவீனம் இல்லையா?  இதெல்லாம் பாட்டி காலத்துல இருந்ததா?

அப்ப பப்பாளி பழத்த கொடுத்து கர்ப்பத்த கலச்சாங்க. இப்ப ஊசி போட்டுக்குறாங்க. இப்ப குறை பிரசவத்துல பொறந்த சிசுவக் கூட அழகா உயிர் பொழக்க வச்சி டாக்டருங்க கையில கொடுக்கிறாங்க. அவ்ளோ ஏன். தாய் இறந்துபோனா கூட  வயித்துல இருக்க சிசுவ உயிரோட வெளிய எடுக்குறாங்க. இது ஆஸ்பித்திரியில தான் நடக்கும். வீட்ல நடக்குமா?

கற்பகம், தேனாம்பேட்டை.

வீட்டுலயே பிரசவம், நாட்டு வைத்தியம் இதெல்லாம் ஏமாத்து. நவீன் பாலாஜின்னு டி.நகர்ல ஒரு நாட்டு வைத்தியர் இருக்காரு. போஸ்டர் ஒட்டி இருந்ததை பார்த்துட்டு  மூட்டு வலி இருக்குதேன்னு  அவராண்ட போனேன். வந்தவங்க எல்லோரையும் ஒரு ரூம்ல உட்கார வச்சிட்டு நடுவுல டேபிளை போட்டு உட்கார்ந்துக்கினு மைக்குல பேச ஆரம்பிச்சிட்டாரு. உங்க எல்லோருக்கும் உடம்பு சரியாயிடும், குணமாயிடும்னு மொத்தாமா கிளாசு எடுத்தாரு. கொஞ்ச நேரத்துக்கு பிறகு யார், யாரு எல்லாம் மருந்து சாப்பிட்டாங்களோ அவங்க எல்லாம் வந்து பேசுறாங்க. “நான் மருந்து சாப்பிட்டேன். எனக்கு குணமாகிடுச்சி. ஓட்றேன், ஓடியாரேன். இளமையா இருக்கிறேன்”ன்னு பேசுனாங்க. எனக்கு அந்த நேர…ல்லாம் வலின்னா வலி… உயிர் போவுது எனக்கு. இருந்தாலும் எல்லாரும் நல்லாயிடுதேன்னு சொல்றாங்களே. நமக்கும் சரியாயிடும்னு நெனச்சேன். எனக்கு ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட். அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்டுன்னு மொத நாளு அஞ்சாயிரம் ஆயிடுச்சி. மறுநாள் வர சொன்னாருன்னு போனேன். கொஞ்சம் மாத்திரை எல்லாம் எழுதிக் கொடுத்து பத்தாயிரம் வாங்கினாரு. அந்த மருந்து ஒன்னொன்னும் ஆயிரம் ரூபா. தாலி செயினை அடகு வச்சி கொடுத்தேன். அந்த மருந்த சாப்பிட்ட கொஞ்ச நாள்ல வலி இன்னும் அதிகமாயிடுச்சி. நிக்க, கொள்ள முடியல. ஆளு கூட்டிட்டு போற மாதிரி ஆகிடுச்சி. அப்புறம் அவங்களுக்கு போன் பன்னி கேட்டேன். இன்னாங்க, உங்ககிட்ட வரும்போது நல்லாதான் நடந்து வந்தேன். இப்ப வீல் சேர்ல வர மாதிரி ரொம்ப அதிகமாயிடுச்சே’ன்னேன். அதுக்கு அந்த டாக்டர், “இல்லம்மா….. அது வலி குடுத்துதான் அப்பறமா அடங்கும். திருப்பி மூணாயிரம் ரூபா குடு அந்த வலி கம்மியாவரதுக்கு”னு சொன்னாங்க. அப்புறம் மோதரத்த கொண்டுபோயி வச்சிட்டு மருந்து வாங்கிட்டு வந்தேன். அப்பவும் சரியாவல. அப்புறம் “உனக்கு மஜாஜ் பன்னனும்”னு சொன்னாங்க. ஒருறொரு முறையும் எதையாவது வச்சிட்டு போறதா இருக்கு அதனால நான் வர்லனு சொல்லிட்டேன். அவங்க ஒரு மாசத்துக்கு மருந்து கொடுத்தாங்க. அத பதினைந்து நாள்தான் சாப்டேன். அப்படியே வுட்டுட்டு இங்லீஸ் மருந்துக்கு மாறிட்டேன். அப்புறம்தான் சரியாச்சே. அதுல இருந்து எந்த நோய் நொடின்னாலும் ஆஸ்பித்திரிக்கு தான் வரதே. அந்த காலத்துல பாட்டி வைத்தியம் இருந்துச்சி. ஊருக்கு ஒருத்தவங்க இருந்தாங்க.  ஏதோ பச்சிலையை கொண்டு வந்து நோயிக்கு ஏத்த மாதிரி கொடுப்பாங்க. இப்ப எந்த பச்சிலை இருக்கு. பாட்டி இருக்கு. இப்ப இருக்க யாருக்கும் எதுவும் தெரியாது. இப்ப எதுனாலும் ஹாஸ்பிடலுக்கு தான் வரனும். என்னோட பொண்ணு நல்லாதான் படுத்து தூங்கிட்டு இருந்தா. திடீர்னு பனிக்குடம் உடஞ்சி தண்ணியா கொட்டுது. விடியகாத்தால நாளு மணிக்கு இங்க கூட்டிட்டி வந்தேன் பெட்ல சேர்த்திருக்காங்க. இதெல்லாம் அந்த காலத்துல முடியுமா? இல்ல வீட்லதான் முடியுமா?

ரகுமான் பீ, கணவர் காய்லாங்கடை வியாபரம்.

கையில காசு இருக்கவன் வைத்தியன் பாக்குறான், பாக்காத இருக்குறான்,  அது அவன் இஷ்டம். ஆனா எங்கள மாதிரி ஏழைங்க ஆஸ்பித்திரிக்கு போயிதான் உயிரை காப்பாத்திக்கனும். நாங்க உயிரோட இருந்தா தான் குழந்தைங்கள காப்பாத்த முடியும். இல்லனா எங்க குழந்தைங்க நடுத்தெருவுல தான் நிக்கும். அதுக்கு நாங்க சொத்து சுகம் எதுவும் சேர்த்து வக்கல. இதுங்க பேச்சு கேட்டு வீட்டுல பிரசவம் பார்த்தா நாங்க மொத்தமா மோசம் போகனும். ஆண்டவன் துணை இருந்தாலும் ஆஸ்பித்திரி தான் உயிர திருப்பி தரும். வீட்டுல இருந்தா எந்த ஆண்டவனும் வைத்தியம் பாக்க வராது. நா…னறிஞ்சி அஞ்சாரு தலைமுறையா கவர்ன்மெண்ட் ஆஸ்பித்திரி தான்  குழந்தைங்க உயிரை காப்பாத்துது. வீட்டுல யாரும் காப்பாத்தல.

ஆயிஷா.

ஏங்க, இன்னா பேசுறிங்க? பிரசவன்னா, சளி புடிக்குற விஷயமா, சுக்கு கசாயம் குடிச்சி வீட்டுலயே சரி பன்னிக்கிறதுக்கு. இல்லனா கை, கால் குடைச்சலா தவுடு ஒத்தடம் கொடுக்கிறதுக்கு? பிரசவத்துக்கு ஆஸ்பித்திரிக்கு போவக்கூடாது… அல்லோபதி வைத்தியம் பாக்கக் கூடாதுன்னு எந்த முட்டாள் சொல்றான்?

முத்துலட்சுமி, கணவர் மீனவர்.

தாயிக்கு மட்டுமில்ல.. கர்ப்பத்துல இருக்க கருவுக்கு என்ன குறைன்னு கருவுலயே கண்டுபுடிக்கிறாங்க. கேன்சர், டயாபெட்டிசு, சுகர்னு மட்டுமில்ல, மூள வளர்ச்சி இல்ல, முதுகுத் தண்டு நேரா இல்லனு கண்டுபிடிக்குறாங்க.  இந்த கொழந்த வேணாம் கலச்சிடுங்கன்னு சொல்லுராங்க. அது எவ்ளோ பெரிய உதவின்னு எங்கள மாதிரி ஏழைங்களுக்கு தான் தெரியும் புரியும். ஆஸ்பித்திரிக்கு நாங்க வராம வீட்லயே இருந்தா நொண்டி, மொடம், குருடுன்னு கொழந்தைங்கள தான் பெத்துக்கினு காலம் ஃபுல்லா சாவனும். 

ஸ்ரீதேவி, (புகைப்படம் தவிர்த்தார்).

ஆஸ்பித்திரிக்கு வரது பிரசவத்துக்கு மட்டுமில்ல. குழந்தைய காலம் ஃபுல்லா காப்பாத்துறதுக்கு. கரு உண்டாயிடுச்சின்னு சொல்லிட்டு ஆஸ்பித்திரிலயே கூடவே கையோட அட்டை போட்டு குடுப்பாங்க டாக்டருங்க. அதுல மாசாமாசம் கருவுல இருக்கிற குழந்தைங்க நிலமை தாயோட நிலமை குறிக்குறாங்க. நோய் வந்தா எந்த மருந்து எப்ப கொடுக்கனும்னு எழுதுவாங்க. எந்த மருந்து கொடுத்தா குழந்தைக்கு பாதிக்காதுன்னு நமக்கு தெரியுமா?    டாக்டருங்க சொன்னா தானே தெரியும். கரு உண்டாவுர ஆரம்ப நாள்ல… தாயிக்கு ஜுரம்னா கூட மாத்திரய பாத்து தான் கொடுக்கனும். வழக்கமானத கொடுத்தாலும் அது கருவ பாதிக்கும்னு சொல்லுறாங்க டாக்டருங்க. இதெல்லாம் ஆஸ்பித்திரிக்கு வந்தா தானே தெரியும். வீட்டுல யாரு சொல்லுவாங்க?

கலைச்செல்வி.

சும்மா.. பேசாதிங்க.. .பிரசவத்துக்கு ஆஸ்பித்திரிக்கு போகலாமா? போகக்கூடாதான்னு கேக்குறதே தப்பு… பிரசவத்தை வீட்டுலயே பாத்துக்கனும்னு சொல்லுறவங்கள  ரோட்டுலயே இழுத்து போட்டு உதைக்கனும். ஏழைங்க உயிரோட விளையாடுறதுக்கு அவன்… யாரு?

கலையரசி.

எங்க பாட்டிக்கு பொறந்தது பதினோரு பேரு. அதுல எட்டு பொழச்சது… இப்ப இருக்கிறது ஆறுதான். ஆனா, இப்ப இன்னா பன்றோம். கணக்கா பெத்துக்கிறோம் ஒன்னு இல்ல இரண்டு.  அதுங்க உயிரோட இருந்து கடைசி வரைக்கும் நல்லா வாழுதுங்க.. இதுக்கு யாரு காரணம்? நம்ம தாத்தா பாட்டிங்களா? ஆஸ்பித்திரியில இருக்க டாக்டருங்க தானே! நோயி நொடியில்லாம நம்மள காப்பத்துறது யாரு? அவுங்க தானே!  அதையும் மீறி போறது எங்கயோ ஒன்னு ரண்டு தான். அதையே காமிச்சி ஆஸ்பித்திரிக்கு போகக் கூடாதுன்னு சொன்னா இன்னா நடக்கும்? திரும்ப வத வதன்னு பத்து பெத்துக்குனு அதுல கூனு, குருடு நொண்டி பலது. சிலதுதான் நல்லாயிருக்கும். இதெல்லாம் இப்ப தேவையா? போயி வேலையப் பாருங்க.

குழந்தை சித்தார்த்

ஆயா..! சாப்டியா.. என்று கோஷா ஆஸ்பித்திரி வாசலில் கர்ப்பிணிகளுக்கு  கடை விரித்திருக்கும் தன் ஆயாவிடம் வம்பு செய்யும் பேரன்…. ”இந்த ஆஸ்பிட்டல்ல தான் பொறந்தான்’ன்னு சொல்லி சிரித்தார் அவனுடைய பாட்டி.

வசந்தா (இடதுபுறம் அமர்ந்திருப்பவர்)

எம் பொண்ணுக்கு இரண்டாவது பிரசவம். பொண்ணோ, மண்ணோ எது பொறக்குதோ பொறக்கட்டும். ஆஸ்பித்திரிக்கு வந்துட்டோம். இப்ப நிம்மதியா இருக்கிறோம். எம்பொண்ணு பதட்டம் இல்லாம படுத்துனு இருக்கிறா.  இங்க யாரும் எடுத்ததுக்கெல்லாம் ஆபுரேசன் பன்னுறது இல்ல. வெயிட் பன்னி தான் பாக்குறாங்க. எங்களுக்கே தேதி முடிஞ்சி அஞ்சி நாள் ஆகிடுச்சி. நார்மல் டெலிவரி ஆகும். வெயிட் பன்னுங்கன்னு சொல்லுறாங்க. தோ, இங்க கெடக்குறோம். ஒரு பயமும் இல்ல. வீட்டுல இப்படி இருக்க முடியுமா?

வசந்தா (வலதுபுறம் அமர்ந்திருப்பவர்)

மருமகள பிரசவத்துக்கு கூட்டிவந்திருக்கேன். வீட்டுலயே வச்சிருந்தா எது ஒன்னு நடந்தாலும் நம்ம மேலதான் பழி வரும். பக்கத்துல இருக்கவங்க சாதாரணமாவா சொல்லுவாங்க. ஆஸ்பித்திரிக்கு இட்டுனு போயிருந்தா பொழச்சிருக்கும்னு நம்மள கொடையிவாங்க. நல்லதோ கெட்டதோ இங்க வந்தா நிம்மதி.

சம்புராணி

பக்கத்துல உள்ள கிராமத்துல இருந்து வந்திருக்கோம். இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சது கருவுல இருக்க குழந்தை வளர்ச்சி இல்லனு. ஏழு மாசம் ஆவுது. முழுசா ஸ்கேன் எடுத்தாங்க. மூளை வளர்ச்சி இல்ல. கொழந்த நிக்காது’ன்னு சொல்றாங்க. கரு நிக்கும் போது ஜுரத்துல எதாவது ஊசி போட்டிங்களான்னு கேட்டாங்க. ஆமான்னு சொன்னோம். அது தான் இப்படி ஆயிருக்குனு சொல்றாங்க. இங்க வந்ததால நாங்க பொழச்சோம்.. ஆஸ்பித்திரிக்கு வராம இருந்தா என்ன ஆயிருக்கும்?

சாந்தி

அப்ப காலம் வேற. இப்ப பொம்பளங்களுக்கு நாற்பது, ஐம்பது வயசுலயே மூட்டு வலி வந்துடுது. இதுவாது பரவால. இருபது இருபத்தஞ்சி வயசு பசங்க பத்து நோய சொல்லுறாங்க. பூஸ்ட், மால்ட்டா பேரீட்சைபழம்னு அவங்களுக்கு நல்ல உணவு தான் தறோம். படிப்பை தவிர ஒரு வேலையும் விட்றது இல்ல. இருந்தாலும் நோயி மேல நோயி வருது. ஒழுங்கா ஆஸ்பித்திரிக்கு வந்து பார்க்கும் போதே இவ்ளோ கஷ்டம். இந்த லட்சணத்துல ஆஸ்பித்திரிக்கே போகாதிங்கன்னு சொன்னா என்ன ஆகும்?

  • வினவு புகைப்படச் செய்தியாளர்.

கேரளாவுக்கு 700 கோடி நிதியுதவி செய்த ஐக்கிய அரபு அமீரகம் ! கருத்துக் கணிப்பு

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக, முதலமைச்சர் பினரயி விஜயன்  தெரிவித்துள்ளார். உருக்குலைந்த கேரளாவை மீண்டும் கட்டியமைக்க இந்த நிதி உதவி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 20 இலட்சம் இந்தியர்கள் பணியாற்றுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை அந்நாட்டின் மக்கள் தொகையில் 30% ஆகும். இதில் கணிசமானோர் கேரள மக்கள். “ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியில் கேரள மக்கள் எப்போதும் பங்காற்றி வருகின்றனர்” என்றும் கேரளாவுக்கு உதவுவது தங்கள் கடமை என்றும் அமீரகத்தின் துணை அதிபர் டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து டிவிட்டரில் “Rs 700” எனும் ஹேஷ் டேக் பிரபலமாகியுள்ளது. இந்திய மக்கள் பலரும் அமீரக நாட்டிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.-வினர் நிலையோ இஞ்சி தின்ற டி ரெக்ஸ் டயனோசர் கதையாக மாறிவிட்டது.

ஏனெனில் மோடி கடைசியாக கேரளாவில் விமானத்தில் பாதுகாப்பாக பறந்து தரையிறங்கிய போது 500 கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்திருந்தார். பினரயி விஜயன் கேட்டதோ 2,000 கோடி ரூபாய். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னர் அளித்த 100 கோடி ரூபாயைச் சேர்த்தாலும் மொத்தம் 600 கோடி ரூபாய்தான். இதை ஒரு வளைகுடா நாடு அதுவும் முஸ்லீம் பாய் நாடு விஞ்சியதை சங்கி டயோனசர்களால் தாங்க இயலவில்லை. கேரளாவில் தயிர் சாதம் வழங்கும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களின் புகைப்படங்களை பிரதமர் மோடியே விளம்பரப்படுத்தினாலும் இவர்களின் விளம்பர மோசடி செல்ஃப் எடுக்கவில்லை. உலகமும், இந்திய மக்களும் கேரளாவின் துயரத்தில் இயல்பாக பங்கெடுத்து வரும்போது இவர்கள் வாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த ஊர்வலத்தில் சுமார் நான்கு கி.மீட்டரை மோடி நடந்தே வந்தாராம். ஆனால் கேரளாவில் அவர்  கால் பாதத்தில் கூட வெள்ள நீர் படவில்லை.

முசுலீம்களும், கிறித்தவ மக்களும் கணிசமாக வாழும் கேரளாவிற்கு நிதியுதவி செய்யக் கூடாது என ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்கள் விஷம் கக்கியது வேறு இவர்களை அம்மணமாக அம்பலப்படுத்தி விட்டது.

போதாக்குறைக்கு இப்போது ஒரு ‘பாய்’ நாடு 700 கோடியை அளித்து முகத்தில் கரி பூசிவிட்டது!

கேள்வி: கேரள மக்களை நேசிப்பது 600 கோடி ரூபாய் பா.ஜ.க. மோடி அரசா, 700 கோடி ரூபாய் வளைகுடா ‘பாய்’ அரசா?

பா.ஜ.க. மோடி அரசு
வளைகுடா பாய் அரசு

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

சென்னை : தடைகளைத் தகர்த்த தென்கொரிய தூசான் தொழிலாளர் போராட்டம்

சென்னை பூவிருந்தவல்லி செந்நீர்குப்பம் புறவழிச் சாலை அருகே செயல்பட்டு வருகிறது, தென்கொரிய நிறுவனமான தூசான் பவர் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட். இந்நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பூந்தமல்லி போலீசாரால் கடந்த 18-08-18 அன்று கைது செய்யப்பட்டனர். எதற்காக இந்த கைது நடவடிக்கை? தொழிலாளர்கள் இழைத்தக் குற்றமென்ன?

தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரண்டதும், நிர்வாகத்திடம் தமது கோரிக்கைகளை முன்வைத்ததுதான் அவர்கள் இழைத்தத் தவறு. கைது நடவடிக்கைக்கான காரணமும் இதுதான். தொழிலாளர் நல சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு சட்டப்படியே சங்கமாக அணிதிரண்டதைத் தாண்டி எந்தவிதமான சட்டவிரோத, சமூக விரோதச் செயல்களையும் அவர்கள் செய்துவிடவில்லை. சங்கமாக அணிதிரள்வதைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் தமது அடியாளான அரசு நிர்வாகத்தையும் போலீசையும் தொழிலாளர்களுக்கு எதிராக ஏவியிருக்கிறது, தூசான் நிறுவனம்.

தொழிலாளர் துறையில் கோரிக்கை மனு அளித்தும், அதன் மீது பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும், பலனில்லை. தொழிற்சங்கம் கோரிக்கைகளை பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்த்துக்கொள்ளலாம் என முயற்சி செய்தபோது நிர்வாகமோ, தொழிலாளர் விரோத போக்கை கையாண்டு தொழிலாளர்களை அச்சுறுத்தும் வேலையை செய்தது. இந்நிலையில், நிர்வாகத்திடம் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக சட்டப்படி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தனர் தொழிலாளர்கள்.

சம வேலைக்கு சம ஊதியம், பெரும்பான்மை சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான் தூசான் தொழிலாளர்கள் முன்வைத்தக் கோரிக்கைகள். சட்டப்படியான இந்தக் கோரிக்கைகளை முன் வைத்தற்காக, சங்க முன்னணியாளர்கள் 8 பேரை பணியிடை நீக்கம் செய்தது. இந்நிலையில் தம்மோடு பணிபுரிந்துவந்த 8 தொழிலாளர்கள் அநியாயமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டுமென்ற கோரிக்கைகளுடன் கடந்த 03.08.2018 அன்று முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர், தூசான் தொழிலாளர்கள். உள்ளிருப்புப் போராட்டத்தை ஆதரித்து பல்வேறு ஆலைத் தொழிலாளர்களும், தூசான் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

தேன்கூட்டில் கை வைத்த கதையாக எட்டுபேரை பணியிடை நீக்கம் செய்யப் போக, பக்கத்து கம்பெனியில் பணியாற்றும் தொழிலாளர்களும் போராட்டத்தை ஆதரிக்கத் தொடங்கியதையடுத்து தூசான் நிர்வாகத்திற்கு ஆத்திரம் தலைக்கேறியது. சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் நின்றுபோய்விடும் என்பதுபோல, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளான, தண்ணீர் உணவு, கழிப்பறை, மின்சாரம் ஆகியவற்றை துண்டித்தது.

நிர்வாகத்தின் இத்தகைய வக்கிரமான நடவடிக்கைகள் தொழிலாளர்களின் போராட்டத்தை துவண்டு போகச் செய்துவிடவில்லை. மாறாக, வர்க்க ஒற்றுமையுடன் போராட்ட எல்லையை விரிவுபடுத்தினர். அடக்குமுறைக்கு எதிராக தங்கள் ஒற்றுமையை நிலைநாட்டினர். போராட்டக்களத்திலிருக்கும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக பிரச்சினையை தீர்க்க முன்வராமல், தொழிலாளர்துறை நடத்திய பேச்சுவார்த்தைக்கும் உடன்படாமல் புழக்கடைவழியாக நீதிமன்றத்தில் முறையிட்டு, ஆலையிலிருந்து 100 மீட்டருக்குள் போராடக்கூடாது என்ற தீர்ப்பை விலைக்கு வாங்கி வந்தது, தூசான் நிர்வாகம்.

தூசான் நிர்வாகம் தூக்கி வீசிய எலும்புத்துண்டைக் கவ்விக் கொண்டு, கடந்த 18-08-18 அன்று ஆலைக்குள் நுழைந்தது பூந்தமல்லி போலீசு. நீதிமன்ற காகிதத்தைக் காட்டி தொழிலாளர்களை கலைந்துப் போகச்சொன்னது. தொழிலாளர்கள் உறுதியுடன் போராட்டத்தை தொடர்ந்ததையடுத்து, அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்தது போலீசு.

தொழிலாளர்களின் நியாயமானப் போராட்டத்துக்கு ஆதரவாகவும், தூசான் நிர்வாகம் மற்றும் அதன் எடுபிடி போலீசு கும்பலின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த தூசான் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களையும், பு.ஜ.தொ.மு. மாநில பொருளாளர் பா.விஜயகுமார் உள்ளிட்ட சங்க முன்னணியாளர்களையும் சேர்த்தே கைது செய்தது, பூந்தமல்லி போலீசு. கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை தொழிற்சங்கத்தலைவர்கள் கூட சந்திக்க அனுமதி மறுத்தது.

கைது நடவடிக்கையைக் கண்டித்து சுவரொட்டிகள் மூலம் அம்பலப்படுத்தியதோடு, அருகாமை பகுதிகளில் செயல்படும் ஆலைகளிலும், பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் ஆலைவாயில் கூட்டங்களை நடத்தி தூசான் தொழிலாளர்களுக்கு ஆதரவைத் திரட்டும் வேலையில் இறங்கியது, பு.ஜ.தொ.மு.

நிலைமை கைமீறிபோவதை உணர்ந்த தூசான் நிர்வாகம், 3 தொழிலாளர்களது பணியிடை நீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகப் பின்வாங்கியுள்ளது. 27-08-18 அன்று தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்)-2 முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக ஒப்புக் கொண்டுள்ளது, தூசான் நிர்வாகம். இதன்காரணமாக வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ள தொழிலாளர்கள் 21-08-18 முதல் பணிக்குத் திரும்பியுள்ளனர். 27-08-18 அன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் நிர்வாகம் நடந்துகொள்வதைப் பொறுத்து தமது அடுத்தகட்ட போராட்டம் அமையும் என்றும் எச்சரித்துள்ளனர், தொழிலாளர்கள்.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடுபுதுச்சேரி, 9444442374.

மனுஷ்யபுத்திரனை குறி வைக்கும் எச்.ராஜாவை கைது செய் !

கேரளாவில் பொழிந்த கடும் மழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கும், பெரும் நிலச்சரிவும் ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து நிராதரவாக நிற்கின்றனர். பலரும் உறவுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் மீனவர்களும், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் களமிறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமே கேரள மக்கள் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில், தமது வெறுப்பரசியலை கேரளத்தில் நிகழ்த்தியது மோடி அரசு. இரண்டு மாவட்டங்கள் தவிர பிற அனைத்து மாவட்டங்களும் கடுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளத்திற்கு முதலில் நிவாரணத் தொகையாக வெறும் 100 கோடியை மட்டுமே ஒதுக்கியது மோடி அரசு. பின்னர் கடுமையான எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழும்பிய பின்னர் கூடுதலாக ரூ.500 கோடியை மட்டும் ஒதுக்கியிருக்கிறது. ஆனால் கேரளத்தின் தேவையோ மிகவும் அதிகமானது.

இது ஒரு புறமிருக்க, மற்றொருபுறத்தில் சங்கிகளின் விசக்கொடுக்குகள் சும்மாயிருக்கவில்லை. ஹரி பிரபாகரன் என்ற சங்கி ஒருவர் டிவிட்டரில் சபரி மலை ஐயப்பன் கோவிலின் மூழ்கிய படத்தைப் போட்டு, ”சபரிமலை அய்யப்பன் கோவில் – எந்த சட்டமும் கடவுளுக்கு மேல் இல்லை. நீங்கள் அனைவரையும் உள்ளே அனுமதித்தால், அவர் அனைவரையும் புறக்கணிப்பார்” என்று பதிவிட்டார்.

குருமூர்த்தி - மனுஷ்ய புத்திரன் ஊழியின் நடனம்
சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கான வழக்குதான் பெருவெள்ளத்திற்குக் காரணமாம்

அதாவது, சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை முன்வைத்து அதன் கோபத்தால் ஐயப்பன் ஒட்டு மொத்த மக்களையும் புறக்கணித்து மழை வெள்ளத்தை ஏற்படுத்திவிட்டார் எனக் கூறியிருக்கிறார்

இதனை மீள்பதிவிட்டு கூடுதலாக தமது ’பொன்னான’ கருத்துகளையும் தமது டிவிட்டர் பதிவில் பின்வருமாறு உதிர்த்துவிட்டிருந்தார் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், ஆடிட்டர் குருமூர்த்தி.

“சபரிமலையில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கும் இந்த வழக்கிற்கும் (சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவது குறித்த வழக்கு) ஏதேனும் தொடர்பு உண்டா என்பது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்க்க விரும்பலாம். இலட்சத்தில் ஒரு வாய்ப்பாக ஒரு தொடர்பு இருந்தாலும், மக்கள் இந்த வழக்கில் ஐயப்பனுக்கு எதிரான தீர்ப்பு வருவதை விரும்பமாட்டார்கள்”

இந்த மழை வெள்ளத்திற்கும் இந்த வழக்கிற்கும் இருக்கும் ’சம்பந்தத்தை’ உணர்ந்து நீதிபதிகள் பக்குவமாக செயல்படுமாறு எச்சரிக்கை விடுக்கிறாராம் இந்த அரை டவுசர்.

இது சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனத்தைப் பெற்றது. சாதாரண நபர்களும் கூட காவிக் கும்பலை காரி உமிழ்ந்தனர். இந்நிலையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கவிதையை வெளியிட்டார்.

Abdul Hameed Sheik Mohamed

ஊழியின் நடனம்
……………………………………………….
மனுஷ்ய புத்திரன்
…………………………………………………

தேவி
உன் விடாய் குருதி
ஊழிக் காலங்களை
உருவாக்க வல்லதா?

அது
ஊர்களையும்
நகரங்களையும்
அழிக்க வல்லதா?

அது
ஆலயங்களையும்
தெய்வங்களையும்
நீரில் மூழ்கச் செய்ய வல்லதா?

அது
பாதைகளை அழித்து
வழிகளை மறைத்து
தனித் தீவுகளை
உருவாக்க வல்லதா?

தேவி
உன் விடாய் குருதி
நிலத்தைக் கடலாக்கும்
கடலை ஊராக்கும்
மகா சக்தியா?

அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்
எந்த அணையிட்டும் தடுக்கவியலாத
இயற்கையின் ஊழி நடனமெனெ
உனது ஒரு சொட்டு விடாய் குருதியை
அவர்கள் அஞ்சுகிறார்கள்

தேவி
உன் குருதியிலிருந்தே
உயிர்கள் பிறக்கின்றன
உன் குருதியிலேயே
உயிர்கள் தஞ்சம் கொள்கின்றன

உன் விடாய் குருதியை
அசுத்தம் என்றார்கள்
தீட்டு என்றார்கள்
உன் குருதியின் வெள்ளம்
இந்த நிலத்தின் மீதிருக்கும்
அத்தனையையும்
முழுமையாக கழுவிக்கொண்டிருக்கிறது.

இவ்வளவு தூய்மை
எங்களுக்கு வேண்டாம்

தேவி
சற்றே ஓய்வுகொள்
இது கருணைக்கான வேளை

18.8.2018
பகல் 2.15
மனுஷ்ய புத்திரன்

மனிதர்களைப் படைத்தருளும் தாய்மையின் மாத விடாய்க் குருதிதான், இத்தனைப் பேரிடருக்கும் காரணமோ, அந்த தாய்மையை தேவியாக தொழுபவர்கள் தீட்டு, அசுத்தம் என்று களங்கப்படுத்தியவர்கள், அந்தக் களங்கத்தின் அத்தனை அழுக்கையும் இயற்கைத் தாய் கழுவுவதாக உருவகப் படுத்தி கவிதையை எழுதியிருக்கிறார், மனுஷ்யபுத்திரன்.

மக்கள் அனைவரும் கேரளாவின் துயரில் பங்கெடுக்கும் போது காவி பயங்கரவாதிகளுக்கு அது கவலையை ஏற்படுத்துகிறது. முடிந்த மட்டும் கேராளாவைக் கொச்சப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் முயல்கிறார்கள். அதனுடையை வெளிப்பாடே ஐயப்பன் பழிவாங்கினார் எனும் கருத்து. அதற்கு மேல் எச்ச ராஜா களத்திற்கு வருகிறார். மனுஷ்யபுத்திரன் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தியதாக கிளப்பி விடுகிறார்.

குருமூர்த்தி - மனுஷ்ய புத்திரன் ஊழியின் நடனம்
எச். ராஜா

அவரது முகநூல் பக்கத்தில், மனுஷ்யபுத்திரனை முசுலீம் மதவெறியன் என்றும், பெண்ணை தேவி என்று குறிப்பிட்டு மனுஷ்யபுத்திரன் எழுதியதை இந்து பெண் தெய்வங்களைப் பற்றி எழுதியதாகவும் திரித்துக் கூறி, சக சங்கிகளை காவல்நிலையங்களில் புகார் கொடுக்கக் கூறியிருக்கிறார். கூடுதலாக #ArrestManushiyaPutran என்ற ஹேஷ்டேகையும் பதிவிட்டிருக்கிறார்.

H Raja

 தனியார் தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன் இந்துக்களின் பெண் தெய்வங்களை இழிவாக பேசிய போது இந்துக்கள் சரியாக எதிர்வினையாற்றாத காரணத்தால் இன்று திமுக வின் ஊடக முகம் அப்துல் ஹமீது என்கிற முஸ்லிம் மதவெறியன் மனுஷ்யபுத்திரன் என்கிற பெயரில் ஒளிந்து கொண்டு இந்து பெண் தெய்வங்களை இழிவு படுத்தியுள்ளார். இவர் ஏற்கனவே இந்து பெண்கள் அணியும் புனிதமான தாலியை இழிவு படுத்தியவர். இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திய இவருக்கு எதிராக இந்து உணர்வாளர்கள் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் செய்யவும்.

H Raja

#ArrestManushiyaPutran

இதனைத் தொடர்ந்து சங்கிகள் மனுஷ்யபுத்திரனின் முகநூல் பக்கத்திலும் அவரது செல்பேசியிலும் ஆபாசமாகப் பேசியும், கொலை மிரட்டல்களைவிடுத்தும் வந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் குறித்தும் ஆபாச வசவுகள் குறித்தும், ” என்னை அவர்கள் கொல்ல விரும்புகிறார்கள் ” என்ற சிறு பதிவு ஒன்றை தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மனுஷ்ய புத்திரன். மேலும் தமது பாதுகாப்புக்கான பொறுப்பு தமிழ்ச் சமூகத்திற்கானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

 Abdul Hameed Sheik Mohamed

என்னை அவர்கள் கொல்ல விரும்புகிறார்கள்
…………….
எனது கவிதையில் எந்த இந்து தெய்வம் குறித்தும் எந்த நிந்தனையும் கிடையாது. அது பெண்ணின் பேராற்றல் குறித்த கவிதை என்பதை எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரும் அறிவார்கள்.என் வாழ்நாளில் எவருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் எதையும் நான் எழுதியதில்லை.

நேற்று ஹெச்.ராஜா எனக்கு எதிராக அவதூறாக ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தூண்டிய வன்முறை காரணமாக ஏராளமான கொலைமிரட்டல்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேரடியாக குறுஞ்செய்திகளாக ஆபாசச்செய்திகள், கொலை மிரட்டல்கள் அனுப்பப்படுகின்றன. எனது அலைபேசி எண் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இடையறாத தொலைபேசி அழைப்புகள் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.

என் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்து ஹெச்.ராஜா முயன்றிருக்கிறார். அவர் எனக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் இந்த பொய்யான பிரச்சாரத்தின் மூலம் எனக்கு நேரிடக்கூடிய எந்த அபாயத்திற்கும் ஹெச்.ராஜாவே பொறுப்பு.

ஜனநாயகத்திற்காகவும் கருத்துரிமைகாகவும் தொடர்ந்து போராடி வந்திருப்பவன் என்ற முறையில் எனது பாதுகாப்பிற்கான பொறுப்பை தமிழ்சமூகத்திடமே ஒப்படைக்கிறேன். ஜனநாயக சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் மற்றொரு நிகழ்வு இது.

மனுஷ்ய புத்திரன்

 மேலும், இது குறித்து சென்னை காவல்துறை ஆணையரைச் சந்தித்து புகார் மனுவும் கொடுத்துள்ளார்.

Abdul Hameed Sheik Mohamed

இன்று மதியம் காவல்துறை ஆணையரை சந்தித்து எனக்கு எதிராக எச்.ராஜாவின் தூண்டுதலின் பெயரில் சமூக வலைத்தளங்களிலும் தொலைபேசி வாயிலாகவும் நேற்று மதியத்திலிருந்து தூண்டப்படும் வன்முறை மற்றும் கொலைமிரட்டல்கள் குறித்து புகார் அளித்தேன். சமூக வலைதளங்களில் மற்றும் குறுஞ்செய்திகளில் எனது உடல் நிலை குறித்தும் என்னை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் விதமாகவும் எனக்கு அபாயத்தை விளைவிக்கும் வகையிலும் எழுதபட்ட மிரட்டல் பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்கள் மற்றும் நேரடியாக தொலைபேசியில் மிரட்டல் விடுப்பவர்களின் எண்கள் ஆகிய ஆதரங்களுடன் என் புகாரை அளித்தேன். காவல்துறை ஆணையர் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மனுஷ்ய புத்திரன்

இது குறித்து பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பினரும் மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Vijayasankar Ramachandran

மனுஷ்ய புத்திரன் ஒரு கவிதையில் இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி விட்டார், அவர் ஒரு முஸ்லிம் மதவெறியன், அவருக்கு எதிராக எல்லா காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்கவும் என்று சங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். Arrest Manushyaputhiran என்கிற ஹாஷ்டாக் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார் எச். ராஜா. தெய்வத்தின் பெயரைச் சொல்லி பேரிடரில் சிக்கித் தவிக்கும் ஒரு மாநில மக்களை இழிவுபடுத்தும் இந்தக் கூட்டம், மனுஷ்யபுத்திரனுக்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி மிரட்டல்களையும் விடுத்துக் கொண்டிருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#standwithmanushyaputhiran

 Keetru Nandhan

சங்கிகளுக்கு எதிராக சளைக்காமல் கருத்துச் சண்டை நடத்துபவர்… சங்கிகளால் எதிரியாகப் பார்க்கப்படுபவர்…

இந்த ஒரு புள்ளி போதும், நாம் மனுஷ்யபுத்திரன் பக்கம் நிற்க…
கல்புர்கி, கவுரி லங்கேஸ் சம்பவங்களின் தொடர்ச்சியை தமிழகத்தில் எதிர்பார்க்கிறார்கள் ‘எச்சை’கள்.

திராவிடம், தமிழ்த் தேசியம், கம்யூனிசம் என நமக்குள் ஆயிரம் சகோதரச் சண்டைகள் இருக்கலாம். அதற்காக ஒரு நாளும் காவிகளின் கை ஓங்க அனுமதித்துவிட‌க் கூடாது!! #stand_with_manushyaputhiran

 Sugumaran Govindarasu

கேரள மழை, வெள்ளப் பாதிப்புக்குச் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுதான் காரணமென ஆடிட்டர் குருமூர்த்தி எழுதினார். இதற்குப் பலரும் எதிர்வினை ஆற்றினர். அந்த வகையில் எழுத்தாளர் மனுஷ்யப்புத்திரன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அவர் மீது இந்துக் கடவுளை அவமதித்துவிட்டார் என்றுக் கூறி காவல்நிலையங்களில் புகார் கொடுக்கும் செயலில் இறங்கியுள்ளனர் இந்துத்துவவாதிகள். இதன் பின்னணியில் எச்.ராஜா உள்ளார். எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டிப்போம்.

Anush

இந்தியாவின் தேசிய பேரிடர் எச்.ராஜா அவர்கள். I Stand with Manusya Puthiran.

கே. என். சிவராமன்

‘ஊழியின் நடனம்’ கவிதைக்காக கவிஞர் மனுஷ்யபுத்திரனை Abdul Hameed Sheik Mohamed மதவாதிகள் சிறைக்கு அனுப்ப வேண்டும்… கொலை செய்ய வேண்டும்… என குரல் உயர்த்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மனுஷுக்கு ஆதரவாக பலரும் நிலைத்தகவல் பதிந்து வரும் நிலையில் கவிஞர் சுகுமாரன் Sukumaran Narayanan ‘தேவி மகாத்மியம்’ என்ற கவிதையை எழுதி தன் சுவற்றில் பதித்திருக்கிறார்.

இதனையடுத்து பெருமாள்முருகன் பெருமாள்முருகன் ‘கவிஞர்கள் எல்லோரும் ஆளுக்கொரு ‘தேவி’ கவிதை எழுதி ‘ தேவி கவிதை இயக்கம்’ தொடங்கலாமா? நூறு இருநூறு என எழுதி எழுதி மேற்செல்வோமா?’ எனக் கேட்டிருக்கிறார்.

நல்ல யோசனை. கவிஞர்கள் களமிறங்கி மதவாதிகளை இந்த வகையிலும் அலற வைத்தால் என்ன?

Mahendhiran Kilumathur

எந்தப் பெரியாரின் வரலாற்றை ஒழிக்க முயன்றீர்களோ அவரை நாங்கள் தூக்கிச் சுமந்தோம், எந்த அண்ணாவை தேசத்தை பிரிக்க வந்தவர் என்று பிரச்சாரம் செய்தீர்களோ அவரை நாங்கள் எங்கள் அறிஞர் ஆக்கினோம், எந்தக் கலைஞரை அழிக்க முயன்றீர்களோ அவர்களைத்தான் நாங்கள் எங்கள் அரக்கனாக்கினோம், எல்லாம் நீங்கள் கற்றுக் கொடுத்த மனு நீதிப் பாடம். நாங்கள் நீங்கள் இல்லை என்பதற்காகவே நாங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் முகத்தில் உதைத்துச் சொல்வோம்.

இது எங்களின் நிலம்.
புத்தம், இந்து, இஸ்லாம், கிருஸ்த்துவம் எல்லாம் இங்கே இல்லை …மனுசபுத்திரன்கள் மட்டுமே உண்டு.

ஆண்டாள் விவகாரத்திலேயே பொய்களின் மூலம் கலவரத்தை உண்டாக்க முயன்றனர் எச்சை ராஜாவும் அவரது சங்க பரிவாரங்களும். அதில் பலத்த பதிலடி கொடுக்கப்பட்ட பின்னரும் மீண்டும் வாலை நீட்டிக் கொண்டு மீண்டும் களத்தில் இறக்கியிருக்கிறது காவிக் கும்பல். ஒட்ட நறுக்க வேண்டியது நமது பொறுப்பு.

  • வினவு செய்திப் பிரிவு

கேரள வெள்ளம் : மக்களைக் காப்பாற்றும் மீனவர்கள் ! மோடி போற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் !

ல்லாயிரக்கணக்கான கேரள  மக்களின் உயிர்களைக் காப்பாற்றியிருப்பவர்கள் மீனவர்கள். எந்த மீனவர்களை ஒக்கி புயலிலிருந்து மோடி அரசு காப்பாற்றவில்லையோ, எந்த அரபிக்கடல் மீனவர்களை சரக்குப் பெட்டக முனையத்துக்காக மோடி அரசு விரட்ட விரும்புகிறதோ அந்த மீனவர்கள்தான் யாரும் அழைக்காமல் தாங்களே ஓடோடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

படகுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் எர்ணாகுளத்துக்கும் ஆலப்புழை பகுதிக்கும் கேரளத்தின் தென்முனையான திருவனந்தபுரம் பகுதியிலிருந்து வந்திருக்கிறார்கள் இந்த மீனவர்கள். சாலையில் பார்க்கின்ற லாரிகள் அனைத்திலும் படகுகள். கேரளத்தின் தென் பகுதியிலிருந்து எர்ணாகுளம், திருச்சூர், பத்தனம்திட்டா மாவட்டங்களை நோக்கி.“காலை முதல் இரவு 11.30 வரை மீட்புப் பணியில் ஈடுபட்டோம். உதவி கேட்டு அழைப்பார்கள். இன்ன தெரு என்று சொல்வார்கள். எந்த தெரு என்றெல்லாம் உள்ளூர்க்காரர்களுக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு எங்கும் வெள்ளம். எனவே பலமாக குரல் கொடுத்துக் கொண்டே செல்வோம். வீட்டுக்குள் சோறு தண்ணீர் இல்லாமல் நாள் கணக்கில் சிக்கியிருப்பவர்களுக்கு பதில் குரல் கொடுப்பதற்கு கூட தெம்பு இருக்காதே. ஆகையால் வீடுகளுக்கு உள்ளிருந்து பதில் வரவில்லை என்றாலும், ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் நீந்திச் சென்று பார்ப்போம்.

இப்படித்தான், கையில் ஒரு குழந்தையைப் பிடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்த  ஒரு நிறைமாத கர்ப்பிணி மீட்டோம். மூச்சு விடமுடியாமல் ஆக்சிஜன் சிலிண்டருடன் இருந்த இன்னொரவரையும் இப்படித்தான் மீட்டோம். எர்ணாகுளத்தின் ஆலங்காடு பஞ்சாயத்தில் ஒரு வீடு விடாமல் எல்லா வீடுகளுக்குள்ளும் நுழைந்து பார்த்துவிட்டோம்”

-என்கிறார் வலியவெளி என்ற மீனவ கிராமத்திலிருந்து மீட்புப் பணிக்கு வந்த ஜாக் மண்டேலா என்ற மீனவர்.

“கேரள ஆறுகளுடைய நீரோட்டத்தின் வேகம் மிக அதிகம். எல்லோராலும் அதனை சமாளிக்க முடியாது. ஒரு இடத்தில் வெள்ளத்தில் சிக்கிக்  கொண்ட பெண்களை மீட்க முனைந்த பேரிடர் மீட்புப் படையினரால் அவர்களுடைய படகுகளை செலுத்த முடியவில்லை. படகைக் கொடுங்கள். நாங்கள் மீட்டு வருகிறோம் என்றோம். படகை கொடுத்தார்கள். மீட்டு விட்டோம்” என்கிறார் ஜெய்சல் என்ற மீனவர்.

இந்த மீனவர்களெல்லாம் ஒக்கி புயலில் தம் சொந்தங்களைப் பலி கொடுத்தவர்கள். எர்ணாகுளம் மாவட்டத்தில் 18-ம் தேதி சனிக்கிழமையன்று மட்டுமே இவர்கள் 18,000 பேரை மீட்டிருக்கிறார்கள்.

“மீட்புப்பணியின் அவசியம் பற்றி சமூக ஊடகங்கள் வழியாக தெரிவித்தவுடனே ஏராளமான மீனவர்கள் தாமாக முன்வந்து விட்டார்கள்”

என்கிறார் மீன்பிடி தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் டி. பீட்டர்.

“எல்லோரும் மீட்புப் பணிக்கு போகவேண்டும் என்று ஆகஸ்டு 15 ஆம் தேதியன்று எங்கள் ஊர் பங்குத்தந்தை சொன்னார். உடனே நாங்கள் 150 பேர் 60 படகுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு கிளம்பி விட்டோம்” என்கிறார் திருவனந்தபுரம் அருகில் உள்ள மரியபுரம் என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்த லாலு அலெக்ஸ்.

“கடலுக்குப் போக இதுதான் சீசன். இப்போது  கடலுக்குப் போனால் ஒரு டிரிப்புக்கு 5000 ரூபாய் கிடைக்கும். ஆனால் அது பற்றியெல்லாம் நாங்கள் யாரும் கவலைப்படவில்லை” என்கிறார் வர்கீஸ் ஸ்டீபன். “சுவர்களிலும் விளக்கு கம்பங்களிலும் இடித்து படகுகள் சேதமாகிவிட்டன. இதையெல்லாம் பார்த்தால் முடியுமா?” என்கிறார் ஆன்டோ இலியாஸ் என்ற மீனவர்.

செங்கனூரில் மீட்புப்பணியை ஒருங்கிணைத்து வரும் வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் சொல்கிறார், “மீட்புப் பணியில் உள்ள அபாயகரமான வேலைகளையெல்லாம் மீனவர்கள்தான் செய்கிறார்கள். மரங்களும் சுவர்களும் விளக்கு கம்பங்களும் தண்ணீருக்குள் இடிந்து கிடக்கும் சூழ்நிலையில் படகுகளை செலுத்துவது சாதாரண விசயமல்ல. அதுவும் குறுகிய தெருக்கள் சந்துகளுக்குள் படகுகளை செலுத்துவது மிக கடினம்”“மீனவர்கள்தான் தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து, சீறிப்பாயும் வெள்ளத்தை எதிர்த்து வீடுகளுக்குள் நீந்திச் செல்கிறார்கள்.  பேரிடர் மீட்புப் படையினர் பாதுகாப்பு ஜாக்கெட் இல்லாமல் தண்ணீரில் இறங்குவதில்லை. மீனவர்களுக்கு அவர்களுடைய தைரியமும் அனுபவமும்தான் பாதுகாப்பு ஜாக்கெட். பேரிடர் மீட்புப் படையினர் ஒரு படகில் 3,4 பேரை மீட்கிறார்கள் என்றால், மீனவர்கள் 10, 15 பேரை மீட்டு வருவார்கள்”  என்கிறார் அந்த வருவாய்த்துறை அதிகாரி.

ஜாய் செபாஸ்டின் ஒரு ஐ.டி.துறை ஊழியர். ஆலப்புழை மாவட்டத்தின் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்தவர். ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய அவர் மீட்புப் பணியைப் பற்றி விவரிக்கிறார்;

“ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பரவியிருக்கும் கேரளத்தின் குட்டநாடு பகுதி கடல் மட்டத்துக்கு கீழே இருக்கிறது. எனவே வழக்கமாக இங்கு வெள்ளம் வரும். ஆனால் இந்த ஆண்டு வந்த வெள்ளம் அப்படிப்பட்டதல்ல.  7 பஞ்சாயத்துகளிலிருந்து சுமார் 2 இலட்சம் மக்களையும் அவர்களுடைய ஆடுமாடுகளையும் மீட்டிருக்கிறோம் – மூன்றரை நாட்களில்”

“கட்டிடங்களின் மொட்டை மாடியில் நிற்பவர்களை ஹெலிகாப்டரிலிருந்து வானத்தில் தூக்கி மீட்கும் காட்சிகளை நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள். அதெல்லாம் பார்த்து ரசிக்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால் மீட்புப் பணியின் உண்மையான நாயகர்கள் மக்கள்தான். அவர்கள் இராணுவச் சீருடை அணிந்தவர்கள் அல்ல. இடுப்பில் கைலியும் தலையில் முண்டாசும் கட்டிய மனிதர்கள். தங்கள் நாட்டுப்படகுகளின் வலிமை கொண்டு கடலின் அலைகளை அன்றாடம் எதிர்த்து நிற்பவர்கள். எனவே குட்டநாட்டிலும் செங்கனூரிலும் சீறிப்பாய்ந்த தண்ணீரின் வேகம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.”

“மீட்புப்பணி இரவு வரை நடக்கும். இரவு கட்டுப்பாட்டு அறைக்கு வருவார்கள். ஒரு நாள் என் தந்தை வயதுடைய ஒரு மீனவர் இரவு பத்து மணிக்கு வந்தார். என் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்”

“மோனே, அந்த கடவில் 15 பேர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து பத்து கி.மீ தூரம்தான் இருக்கும். போய்விட்டு நாங்கள் மறுபடி வந்து உங்களை காப்பாற்றுகிறோம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறோம். அவர்கள் எங்களை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இரவு நேரத்தில் போகக்கூடாது என்று இந்த அதிகாரிகள் தடுக்கிறார்கள். நீ கொஞ்சம் அவர்களிடம் சொல். நாங்களெல்லாம் இரவு முழுவதும் கடலில் கிடப்பவர்கள். அந்த அதிகாரியை அனுமதிக்கச் சொல்” என்று கெஞ்சினார் அந்த மீனவர்.

“என்னால் நம்ப முடியவில்லை. எப்பேர்ப்பட்ட மனிதர்கள்!  இத்தனை பெரிய சாதனைகளைச் செய்து விட்டு, மண்ணெண்ணெய்க்கும் டீசலுக்கும் அதிகாரிகள் முன்னால் கைகட்டி நிற்கிறார்கள். இவர்களல்லவா உண்மையான நாயகர்கள்! ”

“இந்த ஏழை மீனவர்கள்தான் 60% மக்களை மீட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 40% மக்களை கேரள மாநில நீர்வழிப்போக்குவரத்துத் துறையின் படகுகளும் படகு வீடுகளும் மீட்டிருக்கின்றன. தேசிய பேரழிவு மீட்புப் படையால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கத்தில் அடங்கிவிடும். கடற்படை ஹெலிகாப்டர்கள் 40 பேரை மீட்டிருக்கும்.”

“நான் உறங்கச் செல்கிறேன். ஒரு மீனவனின் மகன் என்ற பெருமையுடன்”- என்று சொல்லி முடிக்கிறார் ஜாய் செபாஸ்டின்.

பெருமைக்குரியவர்களைப் போற்றுகின்ற அதே நேரத்தில் சிறுமையின் சிகரங்களையும் நாம் மறந்து விடக்கூடாது.

தம்மை இந்த தேசத்தின் மீட்பர்களாக கருதிக் கொண்டிருக்கும் அந்தப் பதர்களையும் இந்தப் பெருவெள்ளம் அடையாளம் காட்டியிருக்கிறதே.

ஆம். விளம்பரமோ, விளம்பரத்திற்கு ஆள் அம்பு சேனை போட்டு பரப்பும் சந்தை சதியோ அறியாத அறியவே முடியாத அறிய விரும்பாத இந்த மீனவ மக்களை, எளிய மனிதர்களை இயக்கியது மனித நேயம். ஆனால் இந்த நாட்டின் பிரதமர் மோடியின் இதயமும், நேயமும் காவிக் கறை சார்ந்தது அல்லவா? தற்போது #RSSinKERALA  எனும் ஹேஷ்டேக் போட்டு சில ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் வீட்டின் முற்றங்களில் பிளீச்சிங் பவுடர் போடுவது மற்றும் சாப்பாட்டு பொட்டலங்களை வினியோகிக்கும் படங்களையும் வெளியிட்டு, வெள்ளம் பாதித்த கேரளாவில் ஸ்வயம் சேவகர்கள் சேவை புரிவதை டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார் திருவாளர் மோடி.

Narendra Modi @narendramodi177
RSS Swayamsevaks in service of the needy and in rescue works, at Flood hit zones of Kerala.

கேரளா எனும் முஸ்லீம்கள், கிறித்தவர்கள், வளைகுடா நாடுகளில் இருந்து வருமானம் ஈட்டும் மக்களின் மாநிலத்திற்கு அவசரப்பட்டு நிதி உதவி அளிக்காதீர்கள் என்று இந்துமதவெறியர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் அல்லவா, அதன் மறு பக்கம் இது! ஆர்.எஸ்.எஸ் 20,000 பேரை கேரளாவில் இறக்கியிருக்கிறது, மிஷினரிகள் என்ன செய்கிறார்கள் என்று டவிட்டர் சந்தையே நாறடித்து வருகிறது பா.ஜ.க ட்ரோல் படை.

கேரளாவில் அரசு ஊழியர்கள், பல்வேறு கட்சியினர், பொது மக்கள் குறிப்பாக மீனவர்கள் செய்யும் உழைப்பினை கொச்சைப்படுத்தும் இவர்கள் இருக்கும் போது இயற்கை தரும் பிரளயம் ஒரு பொருட்டே அல்ல!

  • வினவு செய்திப் பிரிவு

தொழிலாளர்களைக் கொல்லும் உரிமையை சத்யபாமா நிர்வாகத்திற்கு வழங்கு

தமிழக அரசே! அண்ணா பல்கலைக்கழகமே!
உரிமை கோரும் தொழிற்சங்க முன்னணியாளர்களை
கொல்லும் உரிமையை சத்யபாமா நிர்வாகத்திற்கு வழங்கு!
 

* வருடாந்திர ஊதிய உயர்வை உயர்த்திக் கேட்டதற்காக முன்னணித் தொழிலாளர்கள் 10 பேருக்கு பணியிட மாற்றம் என்ற பெயரில் வேலைபறிப்பு!

* துப்புறவாளர், உதவியாளர் என கடைநிலைத் தொழிலாளிக்கு வடமாநில அசாம், வாரணாசிக்கு பணிமாற்ற உத்தரவு!

* இதே நடைமுறை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 20 முன்னணியாளர்கள் வேலைபறிப்பு! தீர்வற்ற தொழிலாளர் துறையிடம் 3 வருடங்கள் அலைந்து நொந்ததுதான் மிச்சம்!

* நீதிமன்றத்திடம் வழக்கு நடத்தி நீதியை வாங்கும் பணபலம் எங்களுக்கு இல்லை!

* பொய்க்குற்றச்சாட்டு மூலம் கூட வேலையை பறிக்க முடியாத அடிமைகளைக் கொல்லும் உரிமை சத்யபாமா நிர்வாகத்திற்கு இருந்தால் வேலைபறிப்பால் நாங்கள் நடைபிணமாக அலைய வேண்டியது இல்லை!

புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம்

( இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி )

தொடர்புக்கு: 94871 51165

கேரள மழை வெள்ளம் : சென்னை வாழ் கேரள மக்கள் கருத்து

பெரும் வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரள மக்களின் துன்பம் முடிவே இல்லாமல் நீள்கிறது! வரலாறு காணாத வெள்ளத்தால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5600-க்கும் மேற்பட்ட முகாம்களில் 7,00,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயமும் சுற்றுலாவும் 20 சதவீகிதத்திற்கும் அதிகமாக பங்களிக்கின்றன. எண்ணிப் பார்க்க முடியாத படி உடைமை இழப்பு, விவசாய நிலங்கள் மற்றும் உற்பத்தி இழப்பு அவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் சின்னா பின்னாமாக்கியுள்ளது. அம் மக்களின் துன்பத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் காது கொடுத்து கேட்கின்றனர். பிற மாநில அரசுளும் தோள் கொடுக்கின்றன. இருப்பினும் பா.ஜ.க செல்வாக்குள்ள மாநிலங்கள், நபர்கள் மட்டும் துவேசத்துடன் கேரளாவை பார்க்கின்றனர். பிழைப்புக்காக கேரளத்தைவிட்டு தமிழகம் வந்து சென்னையில் வசிக்கும் கேரள மக்களைச் சந்தித்தோம்.

#KeralaFloods #StandWithKerala

ரமேஷ், பாலக்காடு.

வெள்ளத்த பத்தி தொடர்ந்து டிவியில காட்டுனாங்க. ஆனா, இவ்ளோ தீவிரமா இருக்குமுனு சொல்லல. மழை வந்து வந்து போச்சு. ஒரே நாள்ல பத்துநாள் மழை கொட்டிச்சு. அதான், இவ்ளோ பெரிய பாதிப்பு. டேம் எல்லாம் ஒரே நேரத்துல தொறந்து வுட்டதும் பாதிப்புக்கு காரணம். வேற வழியில்லனு சொல்றாங்க. அது அப்படியில்லை. டேம் வீக்காயிருக்கிறதாலதான் தொறந்துவுட்டுட்டாங்க, ஒடஞ்சிரும்னு. அத சீரமைச்சிருந்தா ஸ்ட்ராங்கா இருந்திருக்கும், பயப்பட வேண்டியதில்லை. இருந்தாலும், இந்த வெள்ளத்தை தாத்தா காலத்துலயே பார்க்கலைங்கிறாரு.

உண்ணிகிருஷ்ணன், பழச்சேரி. (பாலக்காடு பக்கம்)

அண்ணன்தான் வந்தாரு மெட்ராசுக்கு முதல்ல. அப்புறம் நான் வந்தேன். இப்போ வந்து எங்க ஆளுங்க யாரும் அங்க இல்லை. இருந்தாலும் மோசமா பாதிச்சிருக்கு. தெரிஞ்சவங்க சொந்தகாரங்க ரொம்ப கஷ்டபட்றதா சொன்னாங்க. எங்க ஓணரு இப்ப போயிருக்காரு, பார்க்கிறதுக்கு. போக்குவரத்து இல்லைனு போன் பண்ணினாரு. வந்தாதான் தெரியும்.

ராஜன், பாலக்காடு, ஒட்டப்பாளையம்.அங்க எல்லாம் கண்டமாயி போயிருக்கு. ரோடு கண்டம். வீடு கண்டம். விவசாயம் கண்டம். எல்லாம் வெள்ளமாயிருக்கு. நேத்து நைட்டுதான் அங்கிருந்து வந்தேன். வண்டி இல்லை. பல வண்டி மாறி வந்தேன். ஒரு அண்ணன்தான் அங்க இருக்காரு. அவங்களுக்கு  எல்லாம் போச்சி. 45 வருஷ உழைப்பு. இப்ப எதும்இல்ல. ஆனா, கவர்மண்ட குறை சொல்ல முடியாது. நிவாரணம் எல்லாம் ஒத்துழைப்பா செய்றாங்க. நல்லா பன்றாங்க. மோடி வந்து பாத்தாரு. உதவி பன்றமுனு சொல்லியிருக்காரு. அவங்க கணக்கு வழக்கெல்லாம் பாக்கனுமில்லையா. எல்லாம் துண்டு துண்டாயிருக்கு ஒரு வண்டி கூட உள்ள போகமுடியாது. எவ்ளோ நஷ்டம்னு இப்போ தெரியாது. அதான் இப்ப பிரச்சினை அங்க.

மதுசூதணன், மார்த்தாண்டம்.கேரளாவிலிருந்து மார்த்தாண்டம் வந்தேன். மெட்ராசுக்கு வந்து 50 வருஷமாச்சு. நான் வந்து நாலு நாள்ல அண்ணாதுரை செத்தாரு. இங்க நாங்க தமிழ்நாட்டு நாயர் சர்வீஸ் சங்கம் வச்சிருக்கோம். சென்னையில மட்டும் 15 கிளைகள் இருக்கு. அதை நாங்க கரையோகம் சொல்வோம். அதுல வந்து சராசரியாக 500 பேரு, 400 பேருனு இருக்கோம். அதுல வந்து 4000 பேர் இருப்போம். இது மூலமா நாங்க 14 லட்சம் வசூல் பண்ணி, வெள்ள உதவியா கொடுத்திருக்கோம். இதே மாதிரி கேரளத்துக்காரங்க எஸ்.எல்.டி.பி.னு சங்கம் வச்சிருக்காங்க. அவங்கள ஈழத்துக்காரங்கனு சொல்வோம். அவங்களுக்கு கோகுல் கோபாலன் தான் தலைவர். அவுங்களும் வெள்ளத்துக்காக பல உதவிகள் செய்றாங்க.

அங்க வயநாடு, கொட்டநாடு, அடிவாரம் மொத்தமும் ஜனங்க நிர்க்கதியா நிக்கிறாங்க. மலை மேட்டு வாக்குல வசதியாயிருக்கவங்க வாழ்வாங்க. அடிவாரத்துல சாதாரண ஜனங்கதான் இருப்பாங்க. அவங்க வீடும் நிலமும்தான் மண்மூடி போச்சு. ரப்பர், தேக்கு, எல்லாம் மொத்தமா போச்சு. மோடி ஆயிரம் கோடி கேட்டா நூறு கோடி கொடுக்கிறாரு. இருபதாயிரும் கோடி நஷ்டம்னா 500 கோடி தராரு. நம்ம அழுதாலும் பொறண்டாலும், அவங்க பாத்து பாத்துதான் கொடுப்பாங்க. நாம  என்ன செய்யிறது.

பாபு, கண்ணனூர், கரசேரி அருகில்.நா இங்க வந்து நாலுமாசம்தான் ஆகுது. டீக்கடையில் வேலை செய்யிறேன். திரும்ப நைட் 12 மணிக்குதான் வருவேன். அங்க எதுவும் பேச முடியல. போனும் இல்லை. எங்குழந்தைங்கெல்லாம் அங்கதான் இருக்குது. எதுவும் தெரியல. அதான் பேப்பர் பார்த்துட்டு இருக்கேன்.

சுசீலா கோபாலன், மலப்புழா, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சங்க துணைத்தலைவர். கலாக் கைரளி அமைப்பின் உறுப்பினர்.

நாங்க இங்க 52  வருசமா இருக்கிறோம். இந்த மாதிரி வெள்ளத்த எங்க மண்ணுல நாங்க பாத்ததில்லை. பெரும் வெள்ளம், நிலச்சரிவுலதான் மக்கள் பெரிசா பாதிச்சிருக்காங்க. அங்க மலப்புழா இடுக்கி எல்லாம் மண்சார்ந்த மலை அமைப்பு உள்ளது. அதனால அங்க பாதிப்பு நெனச்சி பார்க்க முடியாத மாதிரி இருக்கிது. அதுக்கு மேல கோட்டயம், பத்தனம்திட்டா அந்த மண் அமைப்பு பெரும் பாறை அமைப்பு. அங்கு சரிவு. சேதாரம் கம்மி. இதுல வந்து அரச குறை சொல்ல முடியாது. எல்லா கட்சி காரங்களும் ஒண்ணா சேர்ந்து இப்போ நிவாரணம் பணி செய்றாங்க. மண்சரிவில வர்ற வெள்ளம் புது புது ஆத்துக் கிளைகள உருவாக்குது. புது புது நீர்ப்போக்கு எந்தப் பக்கம் வருதுன்னே தெரியாம எல்லாத்தையும் அரிச்சிகிட்டு போது. அங்கல்லாம், ஆதிவாசி பழங்குடிங்க பாதிக்கப்பட்டிருப்பாங்க. அவங்களுக்கல்லாம் முறையான குடியிருப்பல்லாம் இல்லை.

கோபாலகிருஷ்ணன்.

என் வயசுக்கு இந்த வெள்ளம், இந்த இழப்பு பெரும் கவலையாயிருக்குது. எங்க வீடு எந்த பாதிப்பும் இல்லை. நாங்க பம்பை ஆத்து கரையிலதான் இருக்கிறோம். அது 150 அடி உயரத்துல எங்க வீடு இருக்கு. ஆனா, கீழ எல்லாம் பெரிய பாதிப்பு. ஒரு வாரமா மனசுக்கு கஷ்டமா இருக்கு. அங்க போக முடியல.

முகமது ஷெரீஃப், தலச்சேரி பக்கம் வென்காரா.

அங்க அஞ்சி நாளா கரண்ட் இல்ல. தண்ணி இல்ல. எதுவுமே இல்ல. ஒரே இடத்துல 22,000 பேருக்கு மேல வீடு எழந்திட்டாங்க. 350 கேம்ப்ல அவங்கள தங்க வச்சிருக்கிறதா நியூஸ் வருது. இருக்கிற எடத்துலயும், பாம்பு இருட்டுனு குழந்தைங்கள வச்சிட்டு ரொம்ப கஷ்டபடுறதா சொல்றாங்க. இவ்ளோக்கும் மலப்புரத்துல ஒரு டேம் கூட இல்லை. டேம் இல்லாத மாவட்டத்துலயே இவ்ளோ சேதாரம். அதுக்கு காரணம் பாரத்புழானு பெரிய ஆறு. அதுவந்து வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் புரளுது.

இவ்ளோ பெரிய இழப்புக்கு மோடி அரசு எதுவும் செய்யலை. 20,000 கோடி நட்ட ஈடு அது முடிவில்லை. இதுக்கே 500 கோடிதான் தாரேனு சொல்லிருக்காரு. மத்ததல்லாம் அவரு கொடுக்கும்போது, நிவாரணப் பணி எப்போ முடியும். இதுமாதிரி இருந்தா 15 வருசமாகும், இழந்தத மீட்கறதுக்கு. அவங்க பி.ஜே.பி.காரங்க வேகமா எங்களுக்கு உதவணும். அவங்க எங்களுக்கு உதவமாட்டாங்க. ஏன்னா., நாங்க பி.ஜே.பி.யை ஆதரிக்கல. இனி ஆதரிக்கவும் மாட்டோம். அது அவங்களுக்குத் தெரியும். அதான் காரணம்.

இவ்ளோ பெரிய வெள்ளத்துக்கு காரணம் இயற்கையின் சீற்றம்தான். கல்லுடைக்கிறது, மரம் வெட்டுறது, காட்ட அழிக்கிறது இதல்லாம் முக்கிய காரணுனு சொல்றாங்க. அப்படியில்லை. இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம் இயற்கைதான்.ஆண்டோ, கொல்லம், புணலூர். (புகைப்படம் தவிர்த்தார்)

இந்த மண்சரிவுனு சொல்றீங்க. நாங்க உருள்பொட்டல்னு சொல்வோம். செங்கணூர்லதான் பாதிப்பு அதிகம். அங்க, அம்பது வீடு ஒரே எடத்துல மண்மேடாச்சு. இதுவந்து பி.ஜே.பி. காங்கிரசுனு காரணம் சொல்லிட்டு இருந்தா வேலைக்கு ஆவாது. மழைகாலம் வருசம் வருசம் வரும். இன்னும் எச்சரிக்கையாயிருந்திருந்தா இன்னும் கொஞ்சம் சேதாரம் கொறைஞ்சிருக்க வாய்ப்புண்டு. ஆனா, அப்படி நடந்திருக்க முடியுமானு சொல்ல முடியாது. ஒருநாள்ல பத்துநாள் மழை பேஞ்சதுனு சொல்றாங்க. இது எதிர்காலத்துல இப்படி நடக்காம பார்த்துக்கணும். இந்த வெள்ளத்துக்கு உயிர்ச்சேதாரம் கம்மிதான். அந்தளவுக்கு உள்ளூரிலே நிறைய உதவி செய்றாங்க. சோசியல் மீடியாதான் எங்களுக்கு பலமா இருக்கு. அதுலதான் நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிறோம். ஒதவி செஞ்சிக்கிறோம். தொடர்பு பண்ணிக்கிறோம்.

வாசு, திருச்சூர்.

எனக்கு சரியா காது கேக்காது. மக, மக்க, மருமக-ல்லாம் அங்கதான் இருக்காங்க. ரொம்ப கஷ்டம். என்ன சொல்றது, என்ன செய்றதுனு தெரில. ஒன்னும் புரியல.

பாபு, தலச்சேரி.

மெயின்ரோடுனு இல்ல எந்த ரோடும் அங்க இல்லை, இப்போ. சின்னாபின்னமாயிருச்சி. கிரஷர் பாறை உடைக்கிறது. அப்புறம் காடு அழிக்கிறது அதுதான் காரணம்னு சொல்றாங்க. ஆனா, இந்த வெள்ளத்துக்கு அத காரணமா சொல்ல முடியாது. இந்த வெள்ளத்துக்கு உதவுறது எல்லாரும் ஒத்துமையா செய்றாங்க. குறிப்பா மந்திரிங்க கைலி கட்டிகிட்டு, முழங்கால் தண்ணியிலதான் நாளு பூரா நிவாரண வேலை செய்றாங்க. இங்க அதல்லாம் பார்க்க முடியாது. ஒரு கவுன்சிலர் போனா நூறு பேரு பின்னாடியே போவாங்க. வெள்ள நிவாரணத்துக்கு போனா கூட பத்து காரு பின்னால வரணும். மந்திரி போற கார்ல பத்து பேரு தொங்கிட்டு போவாங்க. இத்த மாதிரி அதிரிபுதிரி காமிக்கிறாங்க. அங்க அதுமாரி இல்ல. அங்க மக்களோட மக்களா வேலை செய்யிறாங்க. எந்த செக்யூரிட்டியும் இல்லை.

ஆலப்புழா மந்திரி நிதி அமைச்சர் ஐசக் நிதிமந்திரி மழையில நனைஞ்சிட்டுதான் கொடையோட அங்க அலையறாரு. நீங்க கூட டி.வியில பார்க்கலாம். இதுவே சனங்களுக்கு வந்து பெரும் உதவியா இருக்கிது. எல்லா கஷ்டமும், எல்லோரும் பகிர்ந்திகிராங்க. இந்த கஷ்டம் சரியாவறதுக்கு பதினைஞ்சு வருசம் ஆவும். ஏதோ வெள்ளம் வடிஞ்சா நிலைமை சரியாகும்னு நினைக்க முடியல. மண்சரிவுல வீடு பொதஞ்சி போச்சி. நிலம் எல்லாம் பாறாங்கல்லாகி போச்சு. ஒவ்வொரு பாறாங்கல்லும் ஒரு லாரி சைசுக்கு இருக்கிது. இந்த காலத்துக்கு அந்த விவசாய நிலத்தையும் சரி பண்ண முடியாது. திரும்பவும் வீடயும் கட்ட முடியாது. வீடும் விவசாயமும் நிரந்தரமா போச்சு. வீடுக்கு இப்போ ரெண்டு லட்சம் கொடுக்கிறதா சொல்றாங்க. அத 5 லட்சம் கொடுத்தாலும் பாதிக்கப்பட்டவுங்களுக்கு காணாது. இதுக்கு எல்லா கவர்மெண்டும் சேர்ந்து ஸ்டெப் எடுத்தாதான் முடியும்.

  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

கருணாநிதி – எனது சென்னை அனுபவம் – சந்தானு சென்குப்தா

கருணாநிதிஎனது சென்னை அனுபவம்

சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்படுவதென்பது ’அந்தமான் செல்லுலர் சிறையில் ஒரு பெரும் விடுமுறையைக் கழிப்பதற்குச் சமம்’ என்று விந்திய மலைகளுக்கு வடக்கே உள்ள எனது நண்பர்களால் எப்போதுமே அறிவுறுத்தப்பட்டுவந்தேன்.

சந்தானு சென்குப்தா

தங்களது மொழியைப் பேசாத – வெறுமனே தமிழ் மட்டுமே பேசக்கூடிய – தங்களது மொழியின் ஒரு வார்த்தையைக் கூட அறியாத, தங்களுக்கு அன்னியமான உணவுகளை எடுத்துக் கொள்கிற, மிகக்குறைவாகவே கலந்து பழகுகின்ற நபர்கள் இருக்கக்கூடிய பகுதி என்பது கண்டிப்பாக அன்னியமானதாகவும், நம்பிக்கையற்றதாகவுமே இருக்கும்.

நல்வாய்ப்பாக, சென்னையில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் செலவழிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்த வட இந்திய நண்பர்கள் கூறியது எவ்வளவு தவறு என்பது அப்போது எனக்குப் புரிந்தது.

சென்னையில் எனக்குக் கிடைத்த புலால் உணவானது வேறு எங்கும் நான் பெற்றதைக் காட்டிலும் சிறப்பானது. அடையாறு கடற்கரையிலிருந்த எனது தங்குமிடத்திலிருந்து தினமும் சென்றுவரும் போது, சப்புகொட்டச் செய்யும் செட்டிநாடு உணவிலிருந்து தெருவோரக் கடைகளில் ஆவி பறக்க வழங்கப்படும் மாட்டுக்கறி பிரியாணி, பொன்னுசாமி ஹோட்டலில் கிடைக்கும் கறி விருந்து மற்றும் சாராவின் ஸ்பானிய உணவுக் கடை (டபாஸ்) வரை சென்னையின் புலால் உணவு என்னைக் கொள்ளை கொண்டது.

உணவு சரி… மக்கள் ? ஆம், இந்தியின் மீது அவர்களுக்கு பெரும் மதிப்பு ஏதும் கிடையாது. அவர்களுக்கு ஏன் மதிப்பு இருக்க வேண்டும்? அது அவர்களுக்கு ஆங்கிலத்தை விட அந்நியமானது. இங்கு அனைத்து இடங்களிலும் ஆங்கிலம் ஈர்க்கக்கூடிய வகையில் செயல்படுகிறது.

ஆட்டோ ஓட்டுனர்கள் வரையிலும் கூட, வாரி இறைக்கப்பட்ட குறிச்சொற்களால் ஆன உடைந்த ஆங்கிலத்தில் பேசினாலும்கூட அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அதனைத் தமது முகக்குறியில் காட்டிவிட்டு புன்னகைக்கின்றனர். அங்கு உண்மையான, நெருங்கிய, இதமான, விருந்தோம்பும் நண்பர்களை பெற்றேன். சென்னையை விட்டு வெளியேறும்போது கனத்த இதயத்துடனேயே விடைபெற்றேன்.

ம்.. இட்லியும், தோசையும் கூட அருமையாக இருந்தன. ஒரு தமிழர் உங்களை நண்பராக ஏற்றுக் கொள்ளும்போது, அவர் எப்போதாவது இந்திப் பிரதேசத்திலும் துணிந்து பிரவேசிப்பார்.

ஒரு சராசரி வட இந்தியனுடைய கிண்டலடிக்கும் குணம் மு.கருணாநிதி அவர்களைப் பகடி செய்வதில் வெளிப்படுவதை விட வேறு எதிலும் வெளிப்படாது. அவனைப் பொறுத்தவரையில் சக்கர நாற்காலியில் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு, இந்தியோ அல்லது ஆங்கிலமோ கூட தெரியாமல் இருக்கும் 80 வயதுக்கும் மேற்பட்ட வயோதிகர் ஒருவர் எவ்வாறு பல பத்தாண்டுகளாக தமிழக மக்களின் உள்ளம் கவர்ந்தவராக இருக்க முடியும் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

இந்த மதராசிகளிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது. (தென் இந்தியர்கள் – மதராசிகள் குறித்த மற்றுமொரு மிகச்சிறந்த வட இந்திய உதாரணம் இது). அவனால் எதைப் புரிந்து கொள்ள முடியவில்லையோ அதனை கிண்டல், பகடி செய்து கொள்கிறான்.

நான் கண்ட வகையில் தமிழக அரசியல் கவனத்தை ஈர்க்கக் கூடியது. எனது சிறு வயது முதல் நான் தேர்தல்களை அக்கறையோடு கவனித்து வருகிறேன். இரண்டு திராவிட கட்சிகளில் (திமுக, அதிமுக) ஏதேனும் ஒரு கட்சி மொத்தமாக ஓட்டுகளை வாரி ஜெயித்துவிடும் என்பது உறுதி. இந்த விசயத்தில் தமிழ்நாடு தனித்துவமானது. இந்தியாவிலேயே முக்கியமான தேசியக் கட்சிகள் ஒரு பொருட்டற்றவைகளாக, கிட்டத்தட்ட அவை இல்லவே இல்லாததான ஒரு மிகப்பெரிய மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்.

நான் வளர்ந்ததும், தமிழகத்தின் மொழி இயக்கத்தைப் பற்றியும் தமிழர்கள் தங்கள் அடையாளம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் மீது கொண்டிருக்கும் ஆழமான காதல் மற்றும் கட்டுக்கடங்கா உணர்வெழுச்சி குறித்தும், எவ்வளவு மூர்க்கமாக அவர்கள் அதனைக் காத்தனர் என்பது குறித்தும் படித்திருக்கிறேன்.

தங்களது மொழியின் மீது ஆழமான பற்று கொண்ட மக்களின் மத்தியிலிருந்து வந்திருக்கக் கூடிய யாராக இருந்தாலும், அவர்களுக்கு தமிழர்களின் இந்த மனநிலையை புரிந்து கொள்வதும், தமிழர்களுக்கு மரியாதை செலுத்துவதும் எளிது.

இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழக மாணவர்களும் இளைஞர்களும் நடத்திய மொழிப் போர். (கோப்புப் படம்)

தமது ஒரே மொழி, தமது சகிப்புத்தன்மையற்ற கலாச்சாரம், தமது ஆழமான முன்முடிவுகள், சாதிய நம்பிக்கைகள் மற்றும் தமது மதவெறி ஆகியவற்றால் ஒட்டுமொத்த நாட்டையே பீடிக்கச் செய்யும் தெளிவான நிகழ்ச்சிநிரலைக் கொண்ட சாதிய வெறிக் கும்பலின் சர்வாதிகாரிக்கும் அதிகாரத்திற்கும் அடிபணிவது அல்ல தேசபக்தி.

உண்மையில் தேசபக்தி கொண்ட ஒரு சுதந்திர நாட்டில், ஒவ்வொரு தனிநபரும் சமமானவர்களே. ஒருவர் எங்கிருந்து வந்தார், எந்த மதத்தை பின்பற்றுகிறார், என்ன மொழி பேசுகிறார் என்பதெல்லாம் ஒரு பொருட்டானவையே அல்ல. குறுகிய நம்பிக்கைகளையும், வழக்கங்களையும் ஒட்டுமொத்த நாட்டின் தொண்டைக் குழிக்குள் திணிப்பது என்பது ”வேற்றுமையில் ஒற்றுமை”, ”ஒவ்வொரு சக இந்தியனுக்கும் மரியாதை” என்ற இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. அச்செயலைக் காட்டிலும் தேச துரோகமான செயல் வேறெதுவும் இல்லை.

மைய தேசிய வெறியர்களை வெகுகாலத்திற்கு முன்பே வெளியேற்றிவிட்டதில், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர் தமிழர்கள். மைய தேசிய வெறியர்களால் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தற்போது ஏற்பட்டிருக்கும் அபாயகரமான சூழலைக் கண்டு இப்போதுதான் பிற மாநிலங்கள் விழித்திருக்கின்றன.

ஒரே உண்மையான கடவுள், ஒரே உண்மையான மொழி, ஒரே உண்மையான கலாச்சாரம் ஆகியவற்றிற்கு ஒத்துவராத மாநிலங்களில் மிகப்பெரும் அளவிலான பணபலமும், அடியாள் பலமும் கொண்டு தமது கருத்தை புகுத்தி பல்வேறு நிறங்களைக் கொண்ட தளமாக விளங்கும் இந்த நாட்டை ஒரே நிறமாக மாற்றும் வேலையில் தேசிய வெறியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மதக் கோட்பாடுகளுக்கு மேலாக, மனித மகிழ்ச்சியையே மதிப்புமிக்கதாகக் கருதிய ஊரறிந்த கடவுள் மறுப்பாளரான கலைஞர், பலதலைப் பாம்பான சாதிய அமைப்பிற்கு எதிராக சமரசமின்றி போராடினார். அவர் வேறெவரையும் விட அதிகமாக தமிழுணர்வை அறிவுறுத்தியவர். இந்தி மேலாதிக்கத்தை எதிர்ப்பதில் முக்கியப் பங்காற்றிய கலைஞர்தான், பிற எல்லா மாநிலங்களையும் விட தமிழகம் மனித வளர்ச்சிக் குறியீட்டில் முன்னிலையிலிருந்து, மாதிரி மாநிலமாகத் (Model Indian State) திகழ்வதற்குக் காரணமானவர்.

தமிழகம் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது. அதே போல் இந்தியாவும்.

உங்களுக்கு எனது மரியாதைகள் ஐயா.

  • சந்தானு சென்குப்தா

ஆகஸ்ட் 8 – இரவு 8:51 மணி

நன்றி : சந்தானு சென்குப்தா அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரை.

– வினவு செய்திப் பிரிவு

ஊழலுக்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரும் மோடி அரசு – காணொளி

மோடி ஆட்சியின் மீது ஒரு ஊழல் புகார் கூற முடியுமா என சவடால் அடிக்கின்றனர் பாஜகவினர். ஆனால் மோடி ஆட்சியின் கீழ்தான் இந்தியாவில் இதுவரை நடக்காத மிகப்பெரிய ஊழல்கள் நடைபெறுகின்றன. இந்திய விமானப்படைக்கு ரஃபேல் விமானம் வாங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் மட்டும் சொல்லவில்லை. ஏற்கனவே பாஜக-வில் முக்கியப் பதவிகளில் இருந்த யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி ஆகியோரே சொல்கின்றனர். இது ஒரு புறமிருக்கட்டும்.

உச்சநீதிமன்றத்தின் சமூக நீதி அமர்வில், இந்தியாவில் பெருகிவரும் பெண்கள் மீதான வன்முறை குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விவாதத்தின் போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத்திடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்.

மோடியின் ஊழல்கள் - மக்கள் அதிகாரம் காளியப்பன் அம்பலப்படுத்துகிறார்
அரசு தலைமை நீதிபதி கே.கே. வேணுகோபால்

இந்தியாவில் கனிம வளங்கள் உள்ளிட்ட தொழில்துறை வளங்களை கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏலமிட்டுக் கொடுக்கும் போது, ஏதேனும் விதிமீறல்கள் இருப்பதாக யாராவது பொதுநல வழக்கு தொடுத்தால், அதனை முன்வைத்து உச்சநீதிமன்றம் மொத்த ஏலத்தையும் ரத்து செய்து விடுகிறது. இதன் காரணமாக தொழில்துறை பின்னடைவும், மத்திய அரசுக்கு வருமான வீழ்ச்சியும் ஏற்படுகிறது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு வரவேண்டிய வருமானம் குறைகிறது. மேலும் நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஏற்படுதன் காரணமாக அவற்றின் விலைவாசி உயர்ந்து சாதாரண மக்களைப் பாதிக்கிறது என்று வாதிடுகிறார் கேகே வேணுகோபால் வாதம். இதன் காரணமாக உச்சநீதிமன்றம் இது போன்ற அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டித்தரும் திட்டங்களில் உச்சநீதிமன்றம் மூக்கை நுழைக்கக் கூடாது என மிரட்டுகிறார், கே.கே.வேணுகோபால்.

நீதித்துறையை மிரட்டுவது பாஜகவிற்குப் புதியதல்ல. தமது ஆதரவாளர்களையே ஆர்.எஸ்.எஸ். கும்பல் நீதித்துறையில் நியமித்துவருகிறது. தமக்கு ஒத்துவராதவரகள் வர நேர்ந்தால் அவர்களை ஓரங்கட்டவும், அவர்களை மூப்புப் பட்டியலில் தாழ்த்தி வைக்கவும் தம்மாலான அனைத்து வேலைகளையும் பகிரங்கமாகச் செய்கிறது.

இதற்கு, இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் உரிமையை நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு என்ன உத்திரவாதம் கொடுக்கும்? என நீதிபதி லோக்கூர் கேட்கும்போது, அது மாநில அரசின் பிரச்சினை. மத்திய அரசு வழிகாட்டுதல்தான் கொடுக்கமுடியும் என்று மத்திய அரசை பொறுப்பில் இருந்து விடுவிக்கிறார் கே.கே.வேணுகோபால்.

தமக்கு வேண்டிய கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி இந்த நாட்டின் இயற்கை வளங்களை வாரிக் கொடுக்க இடையூறு எதுவும் இருக்கக் கூடாது, அப்படி வந்தாலும் அதனை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட வேண்டும் என மறைமுகமாக மிரட்டுகிறார் கே.கே. வேணுகோபால்.

கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காக இவர்கள் நீதித்துறையையே மிரட்டுகிறார்கள் என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? ஜனநாயகத்தின் குரல் வளையை இறுக பற்றி நெறிக்கிறது மோடி அரசு என்பதை இந்தக் காணொளியில் விரிவாக விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன்.