Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 418

பூங்கொடிகள் வலிமையானவர்கள் !

ந்த வருடத்தில் நான் சந்தித்த இரண்டாவது பூங்கொடி இவர். முதல் பூங்கொடி, தோழர் முகிலனின் இணையர். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் வண்டிகளில் பெண்கள் பெட்டியில் இவரை நீங்கள் பார்க்கலாம். ‘கடல..பட்டாணி சுண்டல் பத்து ரூபாஎன விற்றுக் கொண்டிருப்பார். எப்போதாவது அவரிடம் ஒரு பாக்கெட் சுண்டல் வாங்கினால் இனாமாகக் கொஞ்சம் புன்னகையைப் பெறலாம். பல நாள் இடைவெளிவிட்டுச் சந்தித்தால்எப்படி இருக்கிங்க?’ என்று பரஸ்பரம் கேட்டுக் கொள்வோம். எங்களது அதிக பட்ச உரையாடல் அவ்வளவுதான். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு இரவு பயணத்தில் அவருடன் ஆர அமரப்பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

எங்கே?” என்றார்.

புகைப்படம் எடுக்க வெளியூர் பயணம்என்றேன்.

இந்த வேளையில வெளியூருக்கா? வீட்டுல அப்பா அம்மா ஏதும் சொல்லமாட்டாங்களா?” என்று அடுத்த கேள்வி.

இல்ல. அப்பாதான் எனக்கு பக்கபலமே!” என்றேன்.

! எத்தனை வயசு இப்போ?”

“28!”

நீங்க ஒரே பொண்ணா?”

இல்ல. குட்டி தம்பி இருக்கான்!”

ம்ம்ம். உங்க வயசுல எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு பிள்ளைங்க இருந்துச்சு! ரொம்ப சின்ன வயசுலயே கல்யாணம் செய்துட்டாங்க. இப்போ பெரிய பையன் ஏழாவது படிக்கிறான். படிப்ப விட்டது எவ்வளவு தப்புனு இப்ப நினைச்சு பார்க்கறேன்

இரண்டு பிள்ளைங்களா? உங்களப் பாத்தா ரெண்டு பிள்ளைங்களுக்கு அம்மான்னு நம்பவே முடியல! இப்போ என்ன வயசாகுது உங்களுக்கு?”

“33!”

அப்போ நான் உங்கள பூங்கொடி அக்கானே கூப்பிடலாம்!” ( சிரித்தபடி)

! கூப்பிடலாமே” (அவரும் சிரிக்கிறார்)

லவ் மேரேஜ்தானே? அழகா சிரிக்கறிங்க லவ் மேரேஜாதான் இருக்கும்!”

ஏன்டா நீங்க வேற! நானே டைவர்ஸ்க்கு கோர்ட்டுக்கு அலைஞ்சிட்டு இருக்கேன்..”

அத்தனை மகிழ்ச்சியான முகத்தின் வாழ்க்கை எத்தனை உயிர்ப்பானதாக இருக்கும் என்று அவரைப் பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் மகிழ்ந்துகொண்ட எனக்கு அவரது அந்த பதில் எதிர்பார்க்காததாகவே இருந்தது.

ஏன்க்கா..!”

அந்த மனுசன் ஒரே குடிம்மா!. நாந்தான் குடும்பத்த காப்பாத்தியாகனும். இதுல நைட்ல இப்படி சுண்டல் வித்துட்டு வீட்டுக்குப் போனா, ‘எவன பாத்துட்டு வரன்னு சந்தேகப்படுது வேற. நம்மால முடியல! ரெண்டு புள்ள பெத்தாச்சு. இனிமே நா யாரப் பாத்து என்ன செய்யப்போறேன்?”

அப்போ.. பிள்ளைங்கள யாரு பாத்துக்கறாங்க?”

அம்மாதான்!”

அப்போ! உங்க வருமானம் தான் குடும்பத்துக்கா?”

ம்ம்ம். பிள்ளைங்க படிப்பு.. அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, அவங்களப் பாத்துக்கனும். எல்லாத்துக்கும் என் வருமானம்தான்!”

தாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே!நா உங்களுக்கு வேற வேல பாத்துத் தரவா?”

பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். எனக்கு என்ன வேல கெடைக்கப் போவுது?”

பத்தாவது படிச்சிருக்கிங்க!. அதெல்லாம் கெடைக்கும்..! தேடவா? சூப்பரா.. மனசுக்கு பிடிச்ச மாதிரி

(சிரிக்கிறார்..)

எங்கக்கா நீங்க எறங்கனும்?”

மவுண்டுடா…!..ஹ்ம்ம்ம்.உங்ககிட்ட இன்னிக்கு பேசுனது மனசுக்கு தெம்பா இருக்கு

அதெல்லாம் இல்ல. நீங்கதான் தெம்பானவங்க. உங்ககிட்டதான் நான்லாம் கத்துக்கனும்!”

யாரு..என்கிட்டயா?” என்றுவிட்டு சட்டென இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டுவிட்டு தன் சுண்டல் பையைத் தூக்கிக் கொண்டு நகர்ந்தார். மவுண்ட் ரயில் நிலையம் வந்திருந்தது.

நா வரேன்!..” என்று உரக்கக் கூறிக்கொண்டே சென்றது ரயிலின் சத்தத்துக்கிடையே கேட்டது.

படிக்க:
பெண் : வலியும் வலிமையும் – புதிய கலாச்சாரம் மின்னூல் !
பெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை

இங்கு எத்தனையோ போராட்டங்களுக்கு அடித்தளமாக ஒரு பெண்ணாக நாம் செய்ய வேண்டிய முக்கியப் பணி ஒன்று இருக்கிறது. அது நம் அருகிலிருக்கும் மற்றொரு பெண்ணை வலிமையாக்குவது. துரோகங்கள், சண்டைகள், சிக்கல்கள், சச்சரவுகள், புறங்கூறுதல் என சில்லரை விஷயங்களைக் கடந்து எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு பெண்ணாக வலிமையுடன் மற்றொரு பெண்ணுக்காக நாம் அறத்துடன் நிற்பது. அது நீங்கள் அறியாத பல வகைகளில் பூமியை உய்யச் செய்திருக்கும். பூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வாழ்க்கை.

பூங்கொடிகள் வலிமையானவர்கள்!

முகநூலில்: Aishwarya Govindarajan

வெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 30 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
“பாடுங்கள், அம்மா, என் அருமை அம்மா!” என்று கத்தினான் ஹஹோல். “அதுதான் வாழ்க்கை!”

அவன் முதலில் தானே பாடத் தொடங்கினான். அவனது குரல் பிற சப்தங்களையெல்லாம் விழுங்கி விம்மி ஒலித்தது. தாய் அவனைத் தொடர்ந்து சென்றாள். திடீரென அவள் தடுமாறினாள். கால் தவறி ஆழங்காணாத பாதாளக் குழிக்குள் விழுந்தாள். அந்தப் பிலத்தின் சூன்யத்தில் பயங்கரக் குரல்கள் கூச்சலிட்டு அவளை வரவேற்றன …..

மேலெல்லாம் நடுங்கிக் குளிர அவள் திடுக்கிட்டு எழுந்தாள். அவளது இதயத்தை ஒரு கனமான முரட்டுக் கை அழுத்திப் பிடித்து. கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கி முறுக்கிப் பிழிவதில் ஆனந்தம் காண்பதுபோல் தோன்றியது. ஆலைச்சங்கு இடைவிடாது அலறி முனகி, தொழிலாளர்களை அறைகூவி அழைத்துக்கொண்டிருந்தது. அது இரண்டாவது சங்கு என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். அந்த அறை முழுவதிலும் புத்தகங்கள் இறைந்து கிடந்தன; எல்லாம் நிலைகுலைந்து தலைகீழாய்க் கிடந்தன. தரையில் சேறுபடிந்த பூட்ஸ் கால்களின் தடங்கள் காணப்பட்டன.

அவள் எழுந்தாள்; முகங்கை கழுவவோ, பிரார்த்தனையில் ஈடுபடவோ எண்ணாமல், அங்குள்ள பொருள்களை எடுத்து அடுக்கி, அறையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள். சமையலறையில் கிடந்த கம்பின் மீது – கொடியின் சிறு பகுதி இன்னும் ஒட்டிக்கிடந்த அந்தக் கம்பின் மீது – அவள் பார்வை விழுந்தது. அவள் அதைக் குனிந்து எடுத்து, அடுப்பில் வைக்கப் போனாள். ஆனால் திடீரென வேறொரு எண்ணம் தோன்றவும் அவள் பெருமூச்சு விட்டவாறே அதில் தொங்கிய கொடித் துணியை அகற்றி, அதை ஒழுங்காக மடித்து, தனது பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் அந்தக் கம்பை முழங்காலில் கொடுத்து முறித்து அடுப்புக்குள் எறிந்தாள். பிறகு ஜன்னல்களையும் தரையையும் தண்ணீர் விட்டுக் கழுவினாள். தேநீர்ப் பாத்திரத்தைக் கொதிக்க வைத்துவிட்டு உடை உடுத்திக்கொண்டாள். பின்னர் அவள் சமையலறையில் இருந்த ஜன்னல் அருகே அமர்ந்தாள். அவள் மனத்தில் அதே கேள்வி மீண்டும் எழுந்தது.

“இனி என்ன?”

தான் தனது காலைப் பிரார்த்தனையைச் சொல்லவில்லை என்பது ஞாபகம் வந்தவுடன் அவள் அங்கிருந்து எழுந்து விக்ரகங்களை நோக்கி வந்தாள். அவற்றின் முன்னே சில கணங்கள் நின்றாள். பிறகு மீண்டும் உட்கார்ந்தாள். அவள் இதயம் ஒரே சூன்ய வெளியாக வெறிச்சோடிக் கிடந்தது. நேற்றைய தினத்தில் தெருக்களிலே உற்சாக வெறியோடு கத்திச் சென்ற ஜனங்கள், இன்று தங்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே அடைந்து முடங்கிக்கிடந்து, இயற்கைக்கு மீறிய சம்பவங்களைப் பற்றி அமைதியாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதைப்போல, அதிசய மோனம் நிலவிக்கொண்டிருந்தது.

திடீரென அவள் தனது இளமைக் காலத்தில் கண்ட ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தாள்; சவுசாய்லவ் குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணையில் பழம் பூங்காவனம். பூங்காவனத்தில் ஒரு பெரிய தடாகம். தடாகம் முழுவதிலும் நீரல்லிப்பூக்கள் நிறைந்து பூத்திருந்தன. இலையுதிர் காலத்தின் மப்பும் மந்தாரமுமான ஒரு நாளன்று அவள் அந்தக் தடாகக்கரை வழியாக நடந்து சென்றாள். செல்லும்போது அந்தத் தடாகத்தின் மத்தியில் ஒரு படகு நிற்பதைக் கண்டாள். குளம் கருநீலமாக இருண்டு நிச்சலனமாக இருந்தது. அந்தப் படகு அந்தக் கரிய நீர்த்தடத்தின் மீது, பழுப்பிலைகளின் கூட்ட அலங்காரத்தோடு ஒட்டிக் கிடப்பதாகத் தோன்றியது. காய்ந்து கருகிப்போன அந்த இலைகளுக்கு மத்தியில், அசைவற்ற மோன நீர்த்தடாகத்தில், தன்னந்தனியாக, துடுப்புக்களோ மனிதத் துணையோ இன்றி ஸ்தம்பித்துக் கிடந்த அந்தப் படகிலிருந்து ஏதோ ஒரு இனந்தெரியாத துக்கத்தின் சோகம் தோன்றுவதாக அவளுக்குத் தெரிந்தது. வெகுநேரம் வரையிலும் அவள் கரையருகிலேயே நின்றாள்; யார் அந்தப் படகை தடாகத்தின் மத்தியில் தள்ளிவிட்டார்கள். எதற்காகத் தள்ளிவிட்டார்கள் என்பதை எண்ணி எண்ணி அதிசயித்தாள். அன்று மாலையில் அவள் ஒரு விஷயம் கேள்விப்பட்டாள். அந்தப் பண்ணை நிலத்தில் வேலை பார்த்து வந்த ஒருவனின் மனைவி, குடுகுடுவென்று நடையும், சிக்குப் பிடித்த சிகையும் கொண்ட ஒரு சிறு பெண். அந்தக் குளத்தில் மூழ்கி இறந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள்.

தாய் தன் கரத்தால் நெற்றியை வழித்துவிட்டுக் கொண்டாள். அவளது மனத்தில் அன்றைய தினத்துக்கு முந்தின நாளன்று நடந்த சம்பவங்களின் நினைவுகளிடையே எண்ணற்ற சிந்தனைகள். நடுநடுங்கி மிதந்து சென்றன. வெகுநேரம் வரையிலும் அவள் அந்தச் சிந்தனைகளால் திக்பிரமையுற்று அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் குளிர்ந்து போய்விட்ட தேநீர்க் கோப்பையின் மீது நிலைகுத்திப் பதிந்து நின்றன. அதே சமயத்தில் தனது கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கக்கூடிய யாராவது ஒரு படாடோபமற்ற புத்திபடைத்த மனிதனைக் காணவேண்டும்; கண்டு கேட்க வேண்டும் என்ற ஆவல் பெருகிக்கொண்டிருந்தது.

அவளது ஏக்கம் நிறைந்த ஆவலுக்குப் பதிலளிப்பது போல், நிகலாய் இவானவிச் மத்தியானத்துக்கு மேல் வந்து சேர்ந்தான். என்றாலும் அவனைக் கண்டதும் அவளுக்குத் திடீரென ஒரு திகிலுணர்ச்சி ஏற்பட்டது. எனவே அவன் செலுத்திய வணக்கத்துக்குக்கூடப் பதில் கூறாமல், அமைதியாகச் சொன்னாள்;

“நீங்கள் ஏன் வந்துவிட்டீர்கள்! இப்படிச் செய்வது ஒரு பெரிய முட்டாள்தனம். நீங்கள் இங்கிருப்பதைக் கண்டால் அவர்கள் உங்களையும் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்!”

அவன் அவளது கையைப் பற்றி இறுக அழுத்தினான், தனது மூக்குக்கண்ணாடியைச் சரி செய்துகொண்டு, அவள் பக்கமாக நெருங்கிக் குனிந்து விறுவிறுவெனப் பேசினான்: ”பாவெல், அந்திரேய், நான் – எங்கள் மூவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தம். அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டால், மறுநாளே நான் உங்களை இங்கிருந்து நகருக்குக் கொண்டு போய்விடுவது என்பது எங்கள் ஏற்பாடு” என்றான். அவனது குரல் பெருந்தன்மை நிறைந்ததாகவும், அவளது நலத்தில் அக்கறை கொண்டதாகவும் இருந்தது. ”சரி இங்கு ஏதாவது சோதனை நடந்ததா?”

”ஆமாம். அவர்கள் எல்லாவற்றையும் வெட்கமோ மனச்சாட்சியோ இன்றி உலைத்துக் கலைத்து எறிந்துவிட்டுப் போனார்கள்” என்றாள் அவள்.

“அவர்கள் எதற்காக வெட்கப்பட வேண்டும்?” என்று தன் தோளைக் குலுக்கிக்கொண்டு கேட்டான் நிகலாய். பிறகு அவள் என் நகருக்கு வீடு மாற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என்பதை விளக்கிச் சொன்னான்.

அவனது நட்பும் பரிவும் கலந்த நயவுரையை அவள் காது கொடுத்துக் கேட்டாள். லேசாகப் புன்னகை புரிந்து கொண்டான். அவன் கூறும் காரணங்களை அவள் புரிந்துகொள்ளாவிட்டாலும், அவள் மனத்தில் எழும்பிய அன்பு கனிந்த நம்பிக்கையைக் கண்டு அவளே வியந்து கொண்டாள்.

“பாஷாவின் விருப்பம் அதுவானால், உங்களை நான் ஏதும் சிரமத்துக்கு ஆளாக்காது இருந்தால்…..” என்றாள் அவள்.

“அதைப் பற்றி கவலையே வேண்டாம்” என்று குறுக்கிட்டான் அவன். “நான் தன்னந்தனியாகத்தான் வாழ்கிறேன். எப்போதாவது என் சகோதரி மட்டும் என்னைப் பார்க்க வருவாள்.”

”நான் சும்மா வந்து இருந்து கொண்டு உங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது” என்றாள் அவள்.

“விருப்பம் இருந்தால், அங்கு வேலை தேடிக்கொள்ளலாம்” என்றான் நிகலாய்.

வேலை என்ற எண்ணம். தனது மகனும் அந்திரேயும் பிற தோழர்களும் செய்யும் வேலையோடு எப்படியோ பிணைப்புற்றிருப்பதாக அவள் உணர்ந்தாள். அவள் நிகலாய்க்குப் பக்கமாக நெருங்கிச் சென்று அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.

”உண்மையாகவா? உங்களால் தேடித்தர முடியுமா?” என்று கேட்டாள்.

”என் வீட்டில் அதிகமான வேலை ஒன்றும் இருக்காது. நான்தான் பிரம்மச்சாரி ஆயிற்றே…”

‘நான் அதைப் பற்றி நினைக்கவில்லை – வீட்டு வேலையைப் பற்றியல்ல!” என்று மெதுவாகச் சொன்னாள் அவள்.

அவள் பெருமூச்செறிந்தாள்; தான் சொன்னதை அவன் புரிந்து கொள்ளாமல் போனதால் மனம் நொந்தாள். அவனோ அவளருகே குனிந்து பார்த்தவாறு புன்னகை புரிந்தான். சிந்தனை வயப்பட்டவனாகப் பேசினான்.

படிக்க:
நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?
சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்

”நீங்கள் மட்டும் பாவெலைப் பார்ப்பதற்கு அனுமதி பெற்று அவனைச் சந்தித்து தமக்காக ஒரு பத்திரிகை வெளியிட வேண்டும் என்று நம்மைக் கேட்டுக்கொண்ட அந்த விவசாயிகளின் முகவரிகளை அவனிடமிருந்து எப்படியாவது தெரிந்துகொண்டு வரமுடிந்தால்…..”

“எனக்கே அவர்களைத் தெரியும்” என்று உவகையோடு கூறினாள் அவள். ‘நான் அவர்களைக் கண்டுபிடித்து, நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்களோ, அத்தனையும் செய்கிறேன். நான்தான் அவர்களுக்குச் சட்ட விரோதமான புத்தகங்களைக் கொடுத்து உதவுகிறேன் என்று எவரும் என்னைச் சந்தேகப்படமாட்டார்கள். கடவுள் கிருபையால் நான் தொழிற்சாலைக்குள்ளே கூடப் பிரசுரங்களைக் கொண்டு போகவில்லையா?”

தன் முதுகிலே ஒரு மூட்டையும் கையிலே ஒரு தடிக்கம்பும் தாங்கி, கிராமங்களையும், காட்டுப் பிரதேசங்களையும், சாலை வழிகளையும் கடந்து நடந்து திரிய வேண்டும் என்று ஒரு ஆவல் அவள் மனத்தில் திடீரென எழுந்தது.

”இந்த வேலைக்கு என்னை ஏற்பாடு செய்யுங்கள். உங்களை மிகவும் கேட்டுக்கொள்கிறேன். எல்லா பிரதேசத்திலுள்ள சகல ரோட்டு பாதைகளிலும் நான் செல்லுவேன். கோடையிலும் குளிர்காலத்திலும் – நான் சாகிற வரையில் – ஒரு காம யாத்திரிகளைப் போலச் சுற்றித் திரிகிறேன். எனக்கு இது ஒரு மோசமான வேலையென்று நினைக்கிறீர்களா?”

வீடு வாசலற்ற ஒரு தேசாந்திரியாக வீடு வீடாய், கிராமத்துக் குடிசை வாயில்களில் சென்று கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிப் பிச்சையெடுக்கின்ற ஒரு யாத்திரைவாசியாகத் தன்னைக் கற்பனை பண்ணிப் பார்த்ததால் ஏற்பட்ட சோக உணர்ச்சி அவள் இதயத்தில் நிரம்பி நின்றது.

நிகலாய் அவளது கரத்தை லேசாகப் பற்றிப்பிடித்து, தனது கதகதப்பான கையால் அதைத் தட்டிக்கொடுத்தான். பிறகு அவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.

“சரி, அதைப்பற்றி நாம் பின்னர் பேசிக்கொள்ளலாம்.

“நம்முடைய குழந்தைகள், நமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து, சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிதுகூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும்போது நான் ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா?”

நிகலாயின் முகம் வெளுத்தது.

”இந்த மாதிரி வார்த்தைகளை நான் இதற்கு முன்பு கேட்டதேயில்லை” என்று அவளது முகத்தையே பரிவு கலந்த பார்வையோடு நோக்கியவாறே அமைதியாகச் சொன்னான் அவன்.

“நான் வேறு என்னத்தைச் சொல்ல?” என்று தன் தலையைச் சோகத்தோடு அசைத்துக்கொண்டும், கைகளை வெறுமனே ஆட்டிக் கொண்டும் கேட்டாள் அவள். “என் நெஞ்சுக்குள்ளே துடிதுடிக்கும் இந்தத் தாயின் இதயத் துடிப்பை எடுத்துக் கூறுவதற்கு மட்டும் எனக்கு வார்த்தைகள் இருந்தால் …”

அவள் எழுந்தாள். உத்வேகம் நிறைந்த எத்தனையோ சொற்கள் அவளது தலைக்குள்ளே பின்னி முடைந்து குறுகுறுப்பதால் அவளது இதயத்தில் ஏற்பட்ட பெரும் பலத்தினால் அவள் எழுந்து நின்றாள்.

“அந்த வார்த்தைகளைக் கேட்டு ஒவ்வொருவரும் அழுவார்கள். கடை கெட்டவர்கள்கூட, வெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்!”

நிகலாவும் எழுந்தான். மீண்டும் ஒருமுறை கடிகாரத்தைப் பார்த்தான்.

“சரி, அப்படியென்றால் இதற்கு ஒத்துக்கொள்கிறீர்கள். நகருக்கு – என் இடத்துக்கு – வருகிறீர்கள், இல்லையா?

அவள் தலையசைத்தாள்.

“சரி, எப்போ? கூடிய சீக்கிரத்தில், சரிதானே” என்று பரிவோடு கூறினான் அவன். “நீங்கள் வருகிற வரையில் எனக்குக் கவலைதான்.”

அவள் அவனை வியப்புடன் பார்த்தாள். அவள் அவனுக்கு என்ன வேண்டும்? அவள் முன் தலைகுனிந்தவாறு குழப்பமான புன்னகை செய்தவாறு, கரிய கோட்டணிந்து, சமீப நோக்குடன் கூனி நின்று கொண்டிருந்தான் அவன். அவனது தோற்றம் அவனது இயற்கைக்கு முரண்பட்டுத் தோன்றியது.

“உங்களிடம் ஏதாவது பணம் காசு இருக்கிறதா?” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான் அவன்.

”இல்லை.”

உடனே அவன் தன் பைக்குள் கையைவிட்டு, தன் மணிப்பர்சை எடுத்து, அதைத் திறந்து பணத்தை எடுத்து நீட்டினான்.

“இதோ, இதைத் தயைசெய்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்றான்.

தாய்க்குத் தன்னையறியாமலேயே இளஞ்சிரிப்பு வந்தது. அவள் தலையை அசைத்துவிட்டுச் சொன்னாள்;

தன் முதுகிலே ஒரு மூட்டையும் கையிலே ஒரு தடிக்கம்பும் தாங்கி, கிராமங்களையும், காட்டுப் பிரதேசங்களையும், சாலை வழிகளையும் கடந்து நடந்து திரிய வேண்டும் என்று ஒரு ஆவல் அவள் மனத்தில் திடீரென எழுந்தது.

“உங்களிடம் எல்லாமே புதுமாதிரியாகத்தான் தோன்றுகிறது. பணம்கூட உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. சிலர் அந்தப் பணத்துக்காகத் தங்கள் ஆத்மாக்களையே விற்றுவிடுகிறார்கள். ஆனால் உங்களுக்கோ அது ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே நீங்கள் பணத்தை வைத்திருக்க ஒப்புவதுபோலத் தோன்றுகிறது.”

நிகலாய் மெதுவாகச் சிரித்தான்.

“பணமா, அது ஒரு நச்சுப்பிடித்த பொருள். வாங்குவதானாலும் சரி, கொடுப்பதானாலும் சரி. மனத்துக்கே பிடிப்பதில்லை. அவன் அவள் கையைப் பற்றி அதை லேசாகப் பிசைந்தான். பிறகு மீண்டும் சொன்னான்:

“சீக்கிரம் கிளம்பிவிடுங்கள்!”

பிறகு அவன் வழக்கம் போலவே அமைதியாகச் சென்றான். அவன் செல்வதை அவள் வாசல் வரை சென்று பார்த்தாள். அப்போது தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

“எவ்வளவு அன்பான மனம்! ஆனால் அவன் எனக்காகப் பரிதாபப்படவே இல்லை.”

இந்த எண்ணம் அவளுக்குப் பிடிக்கவில்லையா, அல்லது அதிசயத்தைத் தந்ததா என்பதை அவளால் உணரக்கூட முடியவில்லை.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

மின் ஊழியத் தொழிலாளர்களுக்கு மண் நெகிழும் நன்றிகள் ! துரை சண்முகம்

0

வீசும் புயலுக்கும்
நம்
வேதனை தெரிவதில்லை!

ஒரு தென்னை
விழுந்தால்
எத்தனை
கனவுகள் நொறுங்கும்.

ஒரு வாழைத் தோப்பு
குலைந்தால்
எத்தனைப் பேர்
வாழ்க்கை குலையும்

மாந்தோப்பு
கலைந்தால்
எத்தனைக்
காரியங்கள் கலையும்

படகுகள்
உடைந்தால்
எத்தனை குடும்பங்கள்
உடையும்

ஒரு மரம்
வீழ்ந்தால்
எத்தனை நிழல் முறியும்
பல்லூயிர் தவிக்கும்

நெற்களஞ்சியம்
சரிந்தால்
நாகரிகம் அதிரும்.

அதிராம் பட்டினங்கள்
அதிர்கிறது…
உரத்த நாடு
உதிர்ந்து கிடக்கிறது.

பட்டுக் கோட்டையும்
புதுக் கோட்டையும்
பேரா ஊருனியும்
கண்ணீர் சுரக்கிறது

நாகப்பட்டினம்
சோகப் பட்டினமாய்
திருமறைக்காடு
புயலின்
வேட்டைக்காடாய்…

ப‍னிரெண்டு மாவட்டமும்
ஊர் முகம் சிதைந்து
உள் மனம்
ரணமாய் கிடக்கிறது.

எழும்ப
எத்தனை நாள் ஆகுமோ
இதயம்
எத்தனை
பாழாகுமோ?

உதிர்ந்தது
கண்ணீரல்ல
கண்கள்.
மீள முடியாத இருட்டில்
தவிக்கும் மக்களுக்கு
பற்றிக் கொள்ள
ஒரே நம்பிக்கை,

மீட்பு பணியில்
நிவாரணப் பணியில்
அங்கங்கே
துளிர்க்கும்
தொழிலாளர் கரங்கள்.

கடற்கோள் புகாரும்
கடல் கொண்ட தென்னாடும்
உருக்குலைந்த போதும்
உருக்கனைய உறுதியுடன்
உதவிய
அதே… தொழிலாளர் கரங்கள்.

ஆக்கும் சக்தி
தொழிலாளி வர்க்கம்
என்பதை
அறியத் தரும் தருணங்கள்.

புன்னையும்
புலி நகக் கொன்றையும்
தென்னையும்
சரிந்த போது
தாங்கிப் பிடித்த
வரலாற்றின் வர்க்கம்

சரிந்த மின் கம்பங்களை
சரி செய்யும் காட்சிகள்
தன் வர்க்கமே
தனக்கு உதவி
எனும்
தத்துவத்தின் சாட்சிகள்.

மின் ஊழியர்-
ஒப்பந்த தொழிலாளர் போராட்டம்
நமக்கு என்ன சம்மந்தம்
என நினைத்தவர்களே

மேலே பாருங்கள்…
உங்களுக்காக
தன் உயிரில்
மின்சாரத்தை கடத்துகிறான்
மின் ஊழிய தொழிலாளி

சிட்டுக் குருவிகளைப் போல
கட்டுக் கம்பிகளின் மீது
தொங்குகிறான்.

புயல்
இப்போது அவன்
இரத்தத்தில் அடிக்கிறது,

இழுக்கும் கம்பிகளில்
நிமிர்த்தும்
மின்கம்பங்களில்
முறுக்கும் நாடி நரம்புகளில்
நமக்கான பேருழைப்பும்
மனித மாண்பும்
மின்சாரமாய் பாய்கிறது.

உருக்குலைந்ததை
சரிசெய்யவும்,
உலகம் உருப்படவும்
உழைக்கும்
தொழிலாளர்கள் இல்லையேல்
என்ன ஆகும்
என்று நினைத்தாலே
உயிர் சிலிர்க்கிறது!

அடுத்து.. அடுத்து.. என
உங்கள் வீடு ஒளிர
இறங்கி ஏறினால்
இன்னும் தாமதமாகும்
என்று,
உண்ணும் வேலையையும்
மின் கம்ப உச்சியிலேயே
செய்கிறான்.

கைத்தோல் உரிகிறது
கண்கள் தீய்கிறது
இமைகளே குடைகளாகி
பெய்யும் மழை ஒதுக்கி
செய்யும் வேலையிலேயே
அவன்
ஜீவன் கரைகிறது

தன் வாழ்வில்
வெளிச்சமில்லை
தகுந்த ஊதியமில்லை
வேலை நிரந்தரமில்லை
தாழ்வாரம்
சொந்தமில்லை..
ஊருக்கு
வெளிச்சம் தர
உழைக்கும்
‍அந்த தொழிலாளர்க்கு
ஒராயிரம்.. நன்றிகள்!

நன்றியோடு
விடைபெற்றால் போதுமா?
அவர்க்கு ஒன்று எனில்
நம் வர்க்கம் என
நாம்
ஒன்றிணைய வேண்டாமா!


போற்றிப் பாதுகாக்கப்பட
வேண்டியவர்கள்
நமக்காக
புயலை சுமக்கும்
அந்த மனிதர்கள்

நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?

2

நண்பர்களே,
பார்வையாளர்கள் படைப்பாளிகளாக மாறும் வாய்ப்புகளை வழங்குகிறது இன்றைய தொழில் நுட்பம். உங்களிடம் இருக்கும் செல்பேசியை எடுங்கள்! உங்களைச் சுற்றியுள்ள வாழ்வின் பரிமாணங்களை படம் பிடியுங்கள்! வினவு புகைப்படக் கட்டுரைகளில் உங்கள் படங்களும் இடம்பெற வேண்டும். நமது காலத்தின் அழகை, போராட்டத்தை, மாற்றத்தை பதிவு செய்வோம்
அன்புடன் அழைக்கிறோம்
நட்புடன்
வினவு

காட்சியுலகம் கருத்துலகை விஞ்சி நிற்கும் காலமிது! கருத்துலகமே காட்சியுலகை தீர்மானிக்கிறது என்றாலும் காட்சியுலகமே அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது. ஒளிச்சுருள் காலத்தில் காமரா ஒரு தனிவகையான சிறப்புக் கருவி. செல்பேசி காலத்தில் செல்ஃபியாக மாறிய காமரா நம்முடன் எப்போதும் இருப்பது அவசியமாகி விட்டது.

ன்னையும் தம்மையும் சுற்றம் – நட்பையும், வார இறுதி மகிழ்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசியை ஒரு மக்கள் பத்திரிகையளராய் நாம் பயன்படுத்தலாம். கொஞ்சம் பார்வை, ஓரளவு திறன், பயண நாட்டம் இருந்தால் போதும். உங்களைச் சுற்றி இருக்கும் நிகழ்வுகள், மனிதர்கள், தருணங்கள் உங்களது கேமரா படமெடுப்பதற்காக எப்போதும் காத்துக் கொண்டிருக்கின்றன.

க்கள் பத்திரிகையாளர்கள் – இது இணையம் வளர்ந்த பிறகு தோன்றிய முன்னேற்றம். கார்ப்பரேட் ஊடகங்களே இப்படி செய்தி – படங்களை அனுப்புமாறு மக்களைக் கோருகின்றன. அப்படியானால் மக்கள் ஊடகமான வினவு தளத்தில் உங்கள் பங்கேற்பு வேண்டுமல்லவா?

நீங்கள் சென்னையில் இருக்கலாம். கொழும்புவில் இருக்கலாம். இலண்டனில் நடக்கலாம். சிங்கப்பூரில் வாழலாம். அரபுலகில் வசிக்கலாம். அமெரிக்காவில் வேலை செய்யலாம். உங்களைச் சுற்றி எண்ணிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள். வேறுபட்ட பண்பாட்டு சூழல் நிலவுகிறது. மொழி-மதம்-பாலினம்-வேலை என வேறுபட்டிருந்தாலும் மக்களை மனித சமூகமாய் ஒன்றிணைய வைக்கும் இழை ஒன்றிருக்கிறது. அதை கண்டுபிடிக்கலாம்.

ங்கள் செல்பேசியை எடுத்துக் கொள்ளுங்கள். புகைப்பட ஏற்பாடுகளை சரிபாருங்கள். வெளியே செல்லுங்கள். உங்களுக்கே தெரியாத ஒரு விசயம், மற்றவரிடம் தெரிவித்தே ஆகவேண்டிய ஒரு விசயத்தை முடிவு செய்யுங்கள். பிறகு அதை படமெடுங்கள்.

ஏதோ ஒரு நிலையில்தான் மக்கள் அழகாக இருக்கிறார்கள். அல்லது அவர்களது ஆளுமை தெரிய வருகிறது. மக்கள், காட்சிகளை நேருக்கு நேர் மையப்படுத்தி எடுக்காமல் ஏதாவது ஒரு ஓரத்தில் இருந்து எடுங்கள். அவர்கள் – அவற்றின் பக்கவாட்டில் இருந்து எடுங்கள். அதையும் நெருக்கமாக, தூரமாக, மையமாக என்று மூன்று நிலைகளில் எடுங்கள். அவர்களது சூழலை விளக்கும் பின்னணிக் காட்சியோடு எடுங்கள். பிறகு அந்த படத்தில் இருக்கும் காட்சிகள் – மனிதர்கள் பேசுவார்கள். அவ்வளவுதான். இதையே தொடர்ந்து செய்யும் போது நீங்கள் ஒரு புகைப்படச் செய்தியாளர்.

இந்த வாரம் உங்களுக்குரிய தலைப்பு – காத்திருப்பு!

து மக்கள் அன்றாட வாழ்க்கையின் பொருட்டு எங்கோ எதற்கோ காத்திருக்கிறார்கள். நீண்ட நேரமோ, குறுகிய நேரமோ, சலிப்புடனே, உற்சாகத்துடனோ காத்திருக்கிறார்கள். இந்த உலகின் எந்த இடத்திலும் மேன் மக்கள் காத்திருக்க தேவையில்லை. நாம்தான் காத்திருக்க வேண்டியிருக்கிறது. காத்திருத்தல் தவறல்ல. அது ஒரு ஒழுங்கு முறை. ஆனால் அந்த காத்திருத்தல் பல நேரம் மகிழ்வாக இருக்கிறதா? பேருந்து வருமா? ரேசனில் அரிசி கிடைக்குமா? இன்று சித்தாள் வேலை கிடைக்குமா? ரயிலில் அமர இடம் கிடைக்குமா? மருத்துவமனையில் உடன் வேலை முடியுமா? என்று ஏகப்பட்ட காத்திருப்புகள் இருக்கின்றன

வெளிநாட்டிலும் இத்தகைய காத்திருப்புகள் இருக்கலாம். விமான நிலையத்திலோ, பெட்ரோல் பங்கிலோ, உணவக விடுதிகளிலோ, திரையரங்குகளிலோ கூட இருக்கலாம். காத்திருப்பவர் ஒரு கேப் டிரைவர், ஒரு லாரி ஓட்டுநர், ஒரு தொழிலாளி, ஒரு மாணவர், பெற்றோர் யாராக வேண்டுமானால் இருக்கலாம். அங்கே பல்தேசிய மக்கள் இருப்பார்கள். அவர்களிடம் அன்றாட வாழ்க்கைக்காக ஏதாவது ஒரு இடத்தில் காத்து நிற்கும் போது என்ன தோன்றும் எனக் கேளுங்கள்! ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு கவிதை வரும்!

விதையை எழுத்தாக்குங்கள். காட்சியை படமாக்குங்கள்! இந்தக் கருவில் எத்தனை படம் வேண்டுமானாலும் எடுங்கள். எடுக்க எடுக்க உங்கள் பார்வை செதுக்கப்படும். செல்பேசியோடும் பிணைந்துள்ள வாழ்வை உற்சாகத்தோடும், பயனுள்ள முறையிலும் கழிக்கலாம்.

vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது
வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள்.
கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!
தெரிவு செய்யப்படும் படங்கள் வரும் வார இறுதியில் வெளியிடப்படும்.
அடுத்த வாரம் இன்னொரு தலைப்பு!

புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

முறுக்கு போலீசு – மிரட்டும் போலீசு – விபச்சாரப் போலீசு

காவலர்கள் என தமிழில் எழுத நினைத்தாலும் போலீசு என்று சொல்வது போல வராது. தமிழத் திரையுலகில் போலீசின் வீர பராக்கிரமங்களை துதிபாடி படங்கள் பல வந்துள்ளன. இன்னொருபுறம் தூத்துக்குடி மஞ்சள் சட்டை போலீசு சுடுவதும் மக்களிடையே வெறுப்புக்குரிய காட்சியாக பதிந்திருக்கிறது.

கடந்த 24.11.2018 அன்று சென்னை போலீசார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வழக்கமாக ரோந்துப் பணி வண்டி போலீசார் ஏதாவது ஒரு கையேந்தி பவனில் நின்று பொட்டலங்களை வாங்கிச் செல்வர். அது இலவசமா, மாமூலா என்பது இரகசியமல்ல. பிறகு உலா முடிந்த பிறகு அதிகாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட காரில் தூங்குவர். வண்டிக்குள் ஒரு வாட்டர் கேன் இருக்கும். ஆங்காங்கே கிடைத்த பரிசுப் பொதிகளும் இருக்கும். இடையிடையே வாக்கி டாக்கியில் அறிவிப்பு வந்து கொண்டே இருக்கும்.

படிக்க:
♦ அனைத்துமாய் இருந்தது ஆறு : அழித்தது யார் ? | துரை சண்முகம் | காணொளி
♦ முறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

அன்றைய தினம் அறிவிப்போடு ஒரு கவிதை வந்தது. என்ன கல்லுக்குள் ஈரம் என்கிறீர்களா? கவிதை படித்தவர் சென்னை உயர்நீதிமன்ற காவல் ஆய்வாளர் கணேசன். கவிதை என்ன?

முறுக்கு மீசை – கவிஞர் இன்ஸ்பெக்டர் கணேசன்

‘‘குடும்ப வாழ்வில் இனிமையை துறப்பாய்,
குழந்தைகளின் மழலை மொழி மறந்துபோகும்,
மனையாளையும் துறந்து வாடுவாய்,
பாசம் கொண்ட உற்றார் உறவினர்களையும் மறப்பாய்,
பண்பான காவல் பணியின் கடமையை செய்தால்
பலன் தானாக வருமடா.
முறுக்கு மீசையும், மிடுக்கு நடையும்
காவலனுக்கு மட்டுமே சிறப்படா.
நீ உடுக்கும் உடையும், உறவாடும் முறையும்
மக்களிடத்தில் உன் மாண்பை சொல்லும்.
மகராசன் நீ என்று மக்கள் உள்ளம் உன்னை போற்றும்.
செய்வதை திருந்த செய்யடா.
உன் நல்ல செயலால் உன் வாழ்வும் உயரும் என்பது மெய்யடா,
மக்களை காக்கும் காவலா, நீ மட்டுமே கடமை வீரனடா”

இந்தக் கவிதை நேரத்தைக் கேட்ட பலர் பாராட்டி வருகின்றனராம். அவர்களின் போலீசு அதிகாரிகளும் சமூகவலைத்தள அன்பர்களும் உண்டு.

பழைய காலத்து எம்ஜிஆர் பாடல் போல நீதிபோதனைகளை சொல்லும் இந்தப் பாடல் உண்மையில் எந்தக் காலத்திற்குரியதும் அல்ல. இருப்பினும் அந்தக் காலம் என்று வைத்துக் கொண்டாலும் இந்தக் காலத்தின் உணர்ச்சி என்ன?

ஜெயந்தி மற்றும் பார்த்திபன்

கோயம்பேடு காவல் நிலையத்தின் தலைமைக் காவலராக இருப்பவர்  பார்த்திபன். சூளைமேட்டில் இருக்கும் ஜெயந்தி எனும் விலைமாதுவுடன் பார்த்திபனுக்கு தொடர்பு ஏற்பட்டு அது தொழில் கூட்டணியாகவும் வளர்கிறது. கோயம்பேடு வட்டாரங்களில் ஜெயந்திக்கு மற்ற போலீசால் தொல்லை வராமலும், வாடிக்கையாளர்களை பிடிக்கவும், அந்த வாடிக்கையாளர்களை ஜெயந்தி ஏமாற்றி பணம் பறிப்பதற்கு போலீசாக உதவியும் செய்து வந்தார் பார்த்திபன்.

இந்த தொழில் கூட்டணி குறித்த அதிருப்தி கோயம்பேடு போலீசு நிலையத்திலேயே எழுந்திருக்கிறது. என்றாலும் இரு முறை எச்சரிக்கையோடு விட்டுவிட்டார்கள். என்ன இருந்தாலும் முறுக்கு மீசை போலீசை, கடமை குன்றா காவலரை விட்டுக் கொடுக்க முடியாதில்லையா?

கடந்த 25-ம் தேதி அன்று நள்ளிரவில் பெண் ஒருவர், காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தன் வீட்டில் புகுந்து திருட முயன்ற ஒரு மர்மநபரை பிடித்து வைத்திருப்பதாக கூறினார். ரோந்து காவலர்கள் சென்று விசாரித்த போது அந்த பெண் ஜெயந்தி, பிடித்து வைக்கப்பட்டவர் விபச்சாரத்திற்கு வந்தவர். அவரிடம் காவலர் பார்த்திபன் பணம் பறித்துச் சென்றிருக்கிறார். பிறகு வேறு வழியில்லாமல் பார்த்திபன் லீலை வெளியே வந்தது. பிறகு அந்தப் பெண் மற்றும் பார்த்திபன் மேல் வழக்கு போட்டிருக்கிறார்கள். ஆனாலும் தலைமைக் காவலர் என்பதால் பார்த்திபன் தனது கடமை உணர்ச்சியுடன் தலைமறைவாகிவிட்டார். தலையே மறைந்து போனதால் அவர் போலீசு அதிகாரிகளால் இடைநீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்.

படிக்க:
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | போலீசு உருவாக்கிய பொய்க் கதை
♦ கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !

சென்னை என்.எஸ்.கே நகரில் அந்தப் பெண்ணுக்கு வாடகை வீடு எடுத்து வரும் வாடிக்கையாளர்களை மிரட்டி ரெய்டு போர்வையில் பணம் வசூலித்து இந்த தொழில் வெகுகாலம் நடந்திருக்கிறது. அது மட்டுமல்ல வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வரும் அப்பாவி பெண்களையும் மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பார்த்திபன் மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் ஒரு தலைமைக் காவலர் மறைவாக செய்திருப்பார் என நம்ப முடியுமா?

திருவேற்காட்டைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது புகாரை போலீசார் ஒருதலைப்பட்சமாக விசாரித்தார் என தீக்குளித்திருக்கிறார். போதையில் அவர் இருந்ததாக கூறும் போலீசு அவரை சமாதானம் செய்து காப்பாற்றி அனுப்பி வைத்திருக்கிறது. இதே திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ரேணுகா எனும் பெண் தீக்குளித்து தற்கொலை செய்திருக்கிறார். போலீசார் ஒருதலைப்பட்சமாக விசாரிக்கிறார்கள் என்பதற்காகத்தான் இந்தத் தீக்குளிப்பு மரணம்.

துப்புரவு பணியாளர் பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் போலீசு

அதே திருவேற்காடு போலீசு நிலையத்தில் இரு வீட்டுக்காரர்களது பிரச்சினைக்காக ராஜ்குமார் என்பவரை கைது செய்து துணியைக் கழட்டி அடித்திருக்கிறார்கள். அதைக் கண்டித்து அவரது உறவினர்கள் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போராடியிருக்கிறார்கள்.

இப்படி வரும் செய்திகளை எப்படி மடை மாற்றுவது?

பழவந்தாங்கல் போலீசு நிலையத்தின் காவலர்கள் அப்பகுதியில் துப்புரவு பணியாற்றும் அனுசியா எனும் பெண்மணிக்கு கேக் வாங்கி, சேலை பரிசளித்து பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்கள். உடனே உயர் போலீசு அதிகாரிகள் பாராட்டியிருப்பதாக ஊடகங்கள் அனைத்தும் படத்தோடு செய்தி வெளியிட்டிருக்கின்றன.

போலீசு நடத்தும் வன்முறைச் செய்திகள் புதிதல்ல. போலீசு நிலையம் முன்பு தீக்குளித்த அவலங்களும் இதற்கு முன் நிறைய நடந்திருக்கின்றன. இவையெல்லாம் மக்களுக்கு கடந்து செல்லும் செய்திகளாக ஊடகங்களால் தரப்படுகின்றன. ஆனால் கவிதையோ பிறந்தநாள் கேக்கோ ஒரு தலைப்புச் செய்திக்குரிய முக்கியத்துவத்துடன் வலிந்து வெளியிடப்படுகின்றன.

போலீசு செய்யும் குற்றங்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்பதால் அவர்களது குற்றங்கள் அதிகரிக்கின்றன. இல்லையெனில் தலைமறைவான பார்த்திபன் இந்நேரம் பிடிபடாமல் இருந்திருக்க முடியுமா?

இப்போது நள்ளிரவில் அந்தப் போலீசு வாசித்த வாக்கி டாக்கி கவிதை குறித்து என்ன சொல்கிறீர்கள்?

சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்

“அமல்படுத்த முடியாத தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கக் கூடாது” – உச்ச நீதிமன்றத்தின் சபரிமலைத் தீர்ப்பு குறித்து அமித் ஷா தெரிவித்திருக்கும் கருத்து இது.

“இராமன் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இது குறித்து நீதிமன்றம் எப்படித் தீர்ப்பு வழங்க முடியும்?” என்பது அன்று அத்வானி எழுப்பிய கேள்வி. நீதிமன்றத்துக்கு அளித்த வாக்குறுதியை மீறித்தான் அன்று பாபர் மசூதியை இடித்தார்கள். சபரிமலை விசயத்தில் இன்று நடந்து கொண்டிருப்பதும் அதுதான்.

மத உரிமை மற்றும் மத நிறுவனங்களின் உரிமை (அரசமைப்பு பிரிவு 25, 26) தொடர்பாக இதுகாறும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பல தீர்ப்புகளை சபரிமலைத் தீர்ப்பு கேள்விக்குள்ளாக்குகிறது. அந்த வகையில் இத்தீர்ப்பு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.

ஒரு குடிமகனின் வழிபாட்டுச் சுதந்திரம், சமத்துவ உரிமை ஆகியவை மதங்களின் மரபுகள், சாத்திரங்கள், மத நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றோடு முரண்படும்போது, குடிமகனின் உரிமையைப் பின்னுக்குத் தள்ளி, மதம் மற்றும் மத நிறுவனத்தின் உரிமையை உயர்த்திப் பிடிக்கும் வகையிலான தீர்ப்புகளைத்தான் இதுவரை உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதைத் தடுக்கும் சேஷம்மாள் தீர்ப்பாகட்டும், 2015-இல் வழங்கப்பட்ட நீதிபதி கோகோய் தலைமையிலான அமர்வின் தீர்ப்பாகட்டும், சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையிடமிருந்து பிடுங்கி தீட்சிதர்களின் கையில் ஒப்படைத்த தீர்ப்பாக இருக்கட்டும் – மேற்சொன்னவை உள்ளிட்ட பல தீர்ப்புகள் சட்டப்பிரிவு 25, 26-க்கு இதுகாறும் அளித்து வந்த விளக்கத்தை சபரிமலைத் தீர்ப்பு நிராகரித்திருக்கிறது.

ஐந்து நீதிபதிகளில் நால்வர் சபரிமலைமயில் பெண்களின் வழிபாட்டுரிமையைத் தடுக்கும் சட்டம், விதிகள் மற்றும் மரபுகளை அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என்று கூறியிருக்கின்றனர் என்ற போதிலும், நான்கு நீதிபதிகளும் ஒரே கண்ணோட்டத்தில் அந்த முடிவுக்கு வரவில்லை. அவர்களுடைய முடிவில் ஒற்றுமை இருந்த போதிலும், முடிவை வந்தடைந்த அணுகுமுறையில் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.

எனவே, சட்டப்பிரிவு 25, 26 ஆகியவை தொடர்பாக முரணற்ற, முழுமையான ஒரு விளக்கம் இந்தத் தீர்ப்பில் கிடைத்துவிட்டதாகவும் நாம் கருத முடியாது. எனினும், மதச்சார்பின்மை என்ற திசையில் ஒரு அழுத்தமானதொரு அடியெடுத்து வைத்திருக்கிறது இந்தத் தீர்ப்பு என்று கூறுவது மிகையாக இருக்காது.
சபரிமலைத் தீர்ப்பாக இருக்கட்டும், இ.த.ச. 377 (தன்பாலினச் சேர்க்கை) மற்றும் இ.த.ச. 497 (மண உறவுக்கு வெளியிலான பாலுறவு) ஆகியவை குறித்த தீர்ப்புகளாக இருக்கட்டும், இன்றைய அரசியல் சூழலில் இத்தகைய தீர்ப்புகள் வழங்கப்படுவது ஒரு நகைமுரண்.

படிக்க:
♦ உச்சநீதி மன்றம் தீர்ப்பு : சபரிமலை அய்யப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !
♦ மணஉறவுக்கு வெளியே நிகழும் பாலுறவு குற்றமல்ல ! – தீர்ப்பின் சமூக விளைவுகள்

“அரசியலில் ஜனநாயகம், சமூகத்தில் ஜனநாயகமின்மை” என்கிற முரண்பட்ட சூழலில் நுழைகிறோம் என அன்று அரசியல் சட்டத்தை அறிமுகப்படுத்தும்போது கூறினார் அம்பேத்கர். இன்று, அரசியல் அரங்கில் மிச்சமிருந்த ஜனநாயக உரிமைகளைப் புதிய தாராளவாதக் கொள்கைகளும், பார்ப்பன பாசிசமும் ஒவ்வொன்றாக ஒழித்துக் கட்டி வருகின்றன.

ஆதார் முதல் பீமா கோரேகான் கைதுகள் வரையிலான வழக்குகளில் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் நீதிமன்றம், அந்த அணுகுமுறைக்குப் பொருந்தா வண்ணம் சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் நோக்கில்” இப்படியொரு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

விசித்திரம் தான்! இருப்பினும், சமூக அரங்கில் மட்டுமின்றி, அரசியல் அரங்கிலும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை விளங்கிக் கொள்வது அவசியம்.

***

1987-ஆம் ஆண்டில் தன் கணவருடன் சென்று அய்யப்பனைத் தரிசித்ததாகவும், கூட்ட நெரிசலில் தள்ளப்பட்டுச் சிலையைத் தீண்டிவிட்டதாகவும் ஜெயமாலா என்ற கன்னட நடிகை 2006-இல் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கிரிமினல் குற்றவழக்கு பதிவு செய்யப்படவே, இப்பிரச்சனை நாடு தழுவிய விவாதப் பொருளாக மாறியது. “பத்து முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களுக்கு சபரிமலை கோயிலில் அனுமதி இல்லை” என்பது ஒரு மரபாக மட்டுமில்லாமல், அது அதிகாரபூர்வமான விதியாக இருக்கிறது என்பதும், அது அரசமைப்புச் சட்டப்பட்டி செல்லத்தக்கதே என்று அதனைக் கேரள உயர் நீதிமன்றம் அங்கீகரித்திருப்பதும் இப்பிரச்சினையை ஒட்டித்தான் பரவலாகத் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தது. பெண்களைத் தடை செய்கின்ற மேற்கூறிய விதி, அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 14 (சமத்துவத்துக்கான உரிமை), பிரிவு 15 (மதம், இனம், சாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிரான உரிமை), பிரிவு 25 (மனசாட்சி சுதந்திரம் அல்லது மத சுதந்திரம்) பிரிவு 51அ (e) (இந்திய மக்கள் அனைவருக்கும் இடையில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் கடமை) – ஆகியவற்றுக்கு எதிராக இருப்பதால், இதனை அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரியது.

தீபக் மிஸ்ரா, பானுமதி, அசோக் பூசண் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கு, அக்டோபர், 2017 இல் 5 நீதிபதிகள் கொண்ட (தீபக் மிஸ்ரா, கன்வில்கர், ரோகிந்தன் நாரிமன், சந்திரசூட், இந்து மல்கோத்ரா) அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

பெண்களுக்கேயுரிய உடற்கூறியல் ரீதியிலான நிலையைக் காரணம் காட்டிப் பெண்ணினத்தை ஒதுக்கும் நடைமுறை, பிரிவு 14, 15, 17 (தீண்டாமைக்கு எதிரான தடை)-க்கு எதிரானதாகாதா?

இவ்வாறு பெண்களை ஒதுக்குவதைப் பிரிவு 25 கூறுகின்ற இன்றியமையா மத நடவடிக்கை என்றும், ஒரு வகையறாவினர் (religious denomination) தமது மத விவகாரங்களை நிர்வகித்துக்கொள்ளும் உரிமை என்றும் இதனை ஒரு மத நிறுவனம் கோர முடியுமா?

அய்யப்பன் கோயிலை ஒரு மத வகையறாவினருக்கான கோயிலாக வகைப்படுத்த முடியுமா? அவ்வாறே ஆயினும், பெண்களை ஒதுக்கும் நடைமுறை, பிரிவு 14, 15, 39 (a), 51- அ(e) ஆகியவற்றில் பொதிந்துள்ள அரசமைப்புக் கோட்பாடுகள் மற்றும் ஒழுக்கத்தை மீறுவதாகாதா?

கேரள இந்து பொதுவழிபாட்டுத் தலங்களுக்கான விதி-3 பெண்களைத் தடை செய்யும் உரிமையை, மேற்கூறிய வகையறாவினருக்கு வழங்குகிறதா? எனில், அவ்வாறு பாலின அடிப்படையில் தடுப்பது பிரிவு 14 மற்றும் 15(3) க்கு முரணானதாகாதா?
இவை அரசியல் சாசன அமர்வு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட முக்கியமான கேள்விகள். இனி இவை குறித்து இத்தீர்ப்பு என்ன சொல்கிறது என பார்ப்போம்.

பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற மரபே பொய்

1972-இல் தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்துக்கு எதிராக அன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்., ஆகம விதி, மரபு என்ற பெயரில் சில பார்ப்பனப் பண்டிதர்கள் கூறியதை எந்தவிதமான ஆதாரமும் இன்றி அப்படியே அங்கீகரித்தது.

இன்று சபரிமலை வழக்கின் சாதகமான அம்சம் என்னவென்றால், “மரபு என்ற பெயரில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு” என்பது கேரளத்தில் சட்டமாகவே ஆக்கப்பட்டிருந்ததால், இதனை தேவஸ்வம் போர்டும் பார்ப்பன தந்திரிகளும் நிரூபிக்க வேண்டியிருந்தது. அப்படி ஒரு நெடுநாள் மரபே இருந்ததில்லை என்பதும் அம்பலமாகிவிட்டது.

இப்போதும்கூட, பன்னெடுங்காலமாக நிலவி வந்த ஒரு மரபை இந்தத் தீர்ப்பு தலைகீழாக்கி விட்டதைப் போல சங்க பரிவாரம் பிரச்சாரம் செய்கிறது. ஆனால், குழந்தைகளுக்குச் சோறூட்டும் சடங்கிற்கு பெண்கள் மாதம் தோறும் 5 நாட்கள் வருவர் என்று 1991-இல் கேரள உயர் நீதிமன்றத்தில் தேவஸ்வம் போர்டு வாக்குமூலம் அளித்திருக்கிறது. “இளம்பெண்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன்” என்று அய்யப்ப சேவா சங்கத்தின் செயலர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். திருவிதாங்கூர் மன்னரும் மகாராணியும் வழிபட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன.

எனவே, “பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற மரபுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்றும் எதிர்மனுதாரர்கள் யாரும் அவ்வாறு நிரூபிக்கவில்லையென்றும் கூறுகிறது தீர்ப்பு. அப்படி ஒரு மரபே இல்லை எனும்போது, அந்த மரபை, பிரிவு 25-இன் கீழ் இன்றியமையாத மத நடவடிக்கை (essential practice) என்று கோருவதற்கான அடிப்படையும் இல்லாதொழிந்து விடுகிறது.

அய்யப்பன்மார் இந்து மதத்திலேயே ‘தனி ஒரு வகையறாவினர்’ அல்லர்!

ஒரு மதத்துக்குள்ளேயே தாங்கள் தனியொரு வகையறா என்று கூறிக்கொள்வதற்கும், அதன் அடிப்படையில் தங்கள் மதத்தினர் மீது சாதி, மத, பாலின ஆதிக்கம் செலுத்துவதற்கும் சட்டப்பிரிவு 26, ஆதிக்க சக்திகளுக்கு வாய்ப்பு வழங்குகிறது. “இதனை வகையறாவின் தனி உரிமை” என்ற பெயரில் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தே வந்திருக்கிறது.

தில்லைக் கோயிலை தீட்சிதர்கள் தமது சொத்தாக மாற்றிக் கொண்டதும், அர்ச்சகர் பணியைப் பார்ப்பனர்கள் தமது ஏகபோகமாக வைத்திருப்பதும், வகையறாவின் தனியுரிமை” (denominational right) என்ற அடிப்படையில்தான்.

“தாங்கள் ஒரு தனி வகையறா” என்று அதற்குரிய வரையறைகளின் படியேகூட, அர்ச்சகர்களோ தீட்சிதர்களோ தங்களை எந்த சிவில் நீதிமன்றத்திலும் நிரூபித்துக் கொள்ளாத போதிலும், அப்படியொரு தகுதியை உச்ச நீதிமன்றம் இவர்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால், “அய்யப்பன்மார் ஒரு தனி வகையறா” என்ற வாதத்தை இந்து மல்கோத்ரா மட்டுமே ஏற்கிறார். மற்ற நீதிபதிகள் அதனை ஏற்கவியலாது என்று நிராகரித்து விட்டதால், பிரிவு 26 இன் கீழ் அவர்கள் கோரக்கூடிய தனியுரிமையையும் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

மரபு, தனி வகையறா என்பது உண்மையெனக் கொண்டாலும், பெண்ணை ஒதுக்குவது பிரிவு 25(1) இன்படி செல்லத்தக்கதா?

மத நம்பிக்கையை அமல்படுத்துவதற்கு அனைவருக்கும் சமமான உரிமை உண்டு என 25(1) கூறுகிறது. ஐயப்பனை “வழிபடுவதன் மூலம் தனது நம்பிக்கையை அமல்படுத்த” உரிமை கேட்கிறாள் பெண். அவளைத் “தடுப்பதன் மூலம் தனது மத நம்பிக்கையை அமல்படுத்த” உரிமை கேட்கிறார் தந்திரி.

யாருடைய மத உரிமை முதன்மையானது? “எல்லா குடிமக்களுக்கும் சமமான உரிமை உண்டு” என்பதுதான் இந்த பிரிவின் சாரம் என்பதால், இன்னொருவரின் வழிபாட்டுரிமையை பறிக்கும் நடவடிக்கையை மத உரிமையாக அங்கீகரிக்க முடியாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் நாரிமன்.

அது மட்டுமல்ல, “ஒரு குடிமகனின் மத உரிமையைக் (25/1) காட்டிலும், மத நிறுவனத்தின் உரிமையே (26) பெரிது” என்பதுதான் இதுநாள்வரை பெரும்பாலான தீர்ப்புகள் அளித்து வந்த விளக்கம். அதையும் இந்த தீர்ப்பு நிராகரித்திருக்கிறது.
பிரிவு 25 ஒரு குடிமகனுக்கு மனச்சாட்சி சுதந்திரத்தை அளிக்கிறது. அது எந்த ஒரு மதத்தையும் நம்புவதற்கும், நம்பாமல் இருப்பதற்குமான உரிமை. “மனச்சாட்சி என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரியது. ஒரு மத நிறுவனத்துக்கு மனச்சாட்சி இருக்க முடியாது. எனவே, மத நிறுவனங்கள் பிரிவு 25 இன் கீழ் மனச்சாட்சி உரிமை கோரவியலாது” என வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் குறிப்பிடுவது இங்கே கருதிப் பார்க்கத்தக்கது.

சிறுபான்மைத் தீர்ப்பின் மதவாதப் பார்வை

பிரிவு 14 (சமத்துவத்துக்கான உரிமை), பிரிவு 15 (சாதி, பாலின அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிரான உரிமை) ஆகியவற்றோடு மத நிறுவனங்களின் உரிமை முரண்படும் சந்தர்ப்பங்களில் (2015 அர்ச்சகர் தீர்ப்பு உட்பட) மத நிறுவனங்களின் பக்கமே உச்ச நீதிமன்றம் நின்றிருக்கிறது.

இந்த வழக்கிலும் கூட , “பிரிவு 14-இன் கீழ் மனுதாரர்கள் சமத்துவ உரிமை கோர முடியாது” என்று தனது தீர்ப்பில் கூறுகிறார் சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி இந்து மல்கோத்ரா. மனுதாரர்கள் அய்யப்ப பக்தர்கள் அல்ல என்றும், பக்தர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மட்டும்தான் பிரிவு 14-இன் கீழ் சமத்துவ உரிமை கோர முடியும் என்றும், அந்த அடிப்படையில் வெளியாட்களான சில வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருக்கும் இந்த மனுவையே தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இவர் கூறுகிறார்.

ஒரு இந்தியக் குடிமகன் சக குடிமகனுக்காக வாதாட முடியாது என்கிறார் மல்கோத்ரா. ஒரு குடிமகனின் முதன்மை அடையாளம் மதம், அதன் பின்னரே அரசமைப்பு சட்டம் என்பதுதான் இந்தக் கூற்றின் சாரம். இந்து ராஷ்டிரம் அரசியல் ரீதியாக அறிவிக்கப்படும் முன்னர், சட்டரீதியாக நீதித்துறை அறிவிக்கும் இந்து ராஷ்டிரம் என்றும் கொள்ளலாம்.

“அர்ச்சகர் பிரச்சினை, சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவது போன்றவற்றில் நாத்திகர்களான ம.க.இ.க. வினர் தலையிட உரிமை இல்லை” என்று ஆர்.எஸ்.எஸ். கூறுவதைத்தான் இந்து மல்கோத்ராவும் கூறுகிறார். அது மட்டுமல்ல, “பெண்கள் மீதான இந்த அடக்குமுறை என்பது ஒரு மதத்தின் உள்விவகாரம். இதை மதத்துக்கு வெளியில் உள்ளவர்கள் கேள்விக்குள்ளாக்க முடியாது” என்பதும் இந்து மல்கோத்ராவின் கூற்று.

படிக்க:
♦ சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்
♦ அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வீதியில் இறங்கு ! தோழர் மருதையன் உரை

அவருடைய கூற்றுப்படி, ஒரு இந்துப் பெண் வழக்கு தொடுப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்போது பிரிவு 14, 15-இன் கீழ் சமத்துவ உரிமையை அந்தப் பெண்ணுக்கு வழங்குவாரா இந்து மல்கோத்ரா? “மத நம்பிக்கைகள் மீது பகுத்தறிவுப் பார்வையை நீதிமன்றம் திணிக்கவியலாது” என்பதுதான் சபரிமலை பிரச்சினையில் அவரது தீர்ப்பு.

அவரைப் பொருத்தவரை, 14, 15, 25 உள்ளிட்ட எல்லா அரசியல் சட்டப்பிரிவுகளும் மத நிறுவனத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. இதனை மீறி மத நம்பிக்கையின் மீது நீதிமன்றம் தீர்ப்பளிப்பது “பன்மைத்துவத்துக்கு எதிரானது” என்கிறார் மல்கோத்ரா. சாதி என்பது படிநிலை ஆதிக்கமல்ல, பன்மைத்துவம் என்று சங்கபரிவாரம் எந்த கண்ணோட்டத்தில் நியாயப்படுத்துகிறதோ, அதையேதான் மல்கோத்ராவும் பிரதிபலிக்கிறார்.

பெரும்பான்மை – சிறுபான்மை தீர்ப்புகளின் தன்மை குறித்து…

மற்ற நான்கு பேருடைய தீர்ப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்து மல்கோத்ராவின் தீர்ப்பு அதிர்ச்சியூட்டுமளவு பிற்போக்கானதாகத் தெரியலாம். உண்மையைச் சொல்வதென்றால், பிரிவு 25, 26 தொடர்பாக இதுகாறும் உயர், உச்ச நீதிமன்றங்களால் வழங்கப்பட்டுள்ள பிற்போக்கான தீர்ப்புகளின் செறிவான சாரமே மல்கோத்ராவின் தீர்ப்பு.

“இந்திய அரசமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக்கொண்டு, அதனை வியாக்கியானம் செய்வதன் வழியாகவே பார்ப்பன பாசிச அரசியலைச் சட்டபூர்வமானதாக ஆக்கிவிட முடியும்” என்ற சாத்தியத்தைத்தான் மல்கோத்ராவின் தீர்ப்பு புரியவைக்கிறது.

தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள் போன்ற நிறுவனங்களின் தலைமையில் தமது ஆட்களை நியமிப்பதன் மூலம், மதச்சார்பற்றவை என்றும் அரசியல் சித்தாந்த சார்பற்றவை என்றும் சொல்லப்படும் அந்த நிறுவனங்களைப் பார்ப்பன பாசிசத்தின் கூலிப்படையாக மாற்றிவிட முடியும் என்பதை சங்க பரிவாரம் நமக்குப் புரிய வைக்கிறதே, அதைப் போன்றதுதான் இத்தீர்ப்பு.

நான்கு பேருடைய பெரும்பான்மைத் தீர்ப்பில், தீபக் மிஸ்ரா, கன்வில்கர் ஆகியோரது தீர்ப்புகள், வேறு வழியே இல்லாத இடங்களில் மட்டுமே “முன்னோர் விதித்த வரம்புகளை” மீறுகின்றன. நீதிபதி நாரிமன், அரசமைப்பு சட்டத்தின் பிரிவுகளுக்குப் பொருள் கொள்ளும்போது, சட்டம் என்ற சட்டகத்துக்குள் தன்னை மட்டுப்படுத்திக் கொள்கிறார். பிரச்சினையின் அரசியல் – சமூக – பண்பாட்டுப் பரிமாணங்களையும் கணக்கில் கொண்டு தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி சந்திரசூட்.

மத ஒழுக்கக் கேடும் அரசமைப்புச் சட்ட ஒழுக்கமும் !

பெண்களை ஒதுக்கும் விதி அரசமைப்பின் பிரிவு 25(1)-க்கு முரணானது என்ற முடிவுக்கு 4 நீதிபதிகளும் வருகின்றனர். சந்திரசூட் இதனை வேறு விதமாக விளக்குகிறார். “அந்தப் பிரிவில் குறிப்பிடப்படும் ‘ஒழுக்கம்’ என்பது தனிநபர் ஒழுக்கமோ, மத ஒழுக்கமோ அல்ல; அது அரசமைப்புச் சட்ட ஒழுக்கமாகும். ஆகவே, அந்த விதி அரசமைப்புக்கு முரணானது” என்கிறார்.

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவதானிப்பு ஆகும். சந்திரசூடின் தீர்ப்பின்படி, ‘மரபு’ என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படும் மத ரீதியான ஒழுக்கக் கேட்டின்மீது, அரசமைப்புச் சட்டம் ஒழுக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது.

தேவதாசி ஒழிப்பு, பால்ய விவாகம், சதி, தீண்டாமை போன்றவற்றை அரசமைப்பு சட்டம் ‘ஒழித்து விட்டதாக’ப் பலர் புரிந்து கொண்டிருக்கலாம். “இவையெல்லாம் அரசமைப்புக்கு முரணான ஒழுக்கக் கேடுகள்” என்று தற்போது சந்திரசூட் கூறியிருப்பதைப் போலச் சொல்லி, அவை ஒழிக்கப்படவில்லை. மாறாக, இவையெல்லாம் “இந்து மதத்தின் இன்றியமையா நடைமுறைகள் அல்ல” என்ற ஒரு பொய்யைச் சொல்லி, அதன் அடிப்படையில் இவை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுவிட்டன.

அதாவது, திருடனிடமிருந்து நகையைக் காவல்துறை பறிமுதல் செய்வதற்கும், “இது எனக்கு தேவையில்லை” என்று திருடனே வீசியெறிவதற்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றது இது.

தற்போது சந்திரசூடின் தீர்ப்பின்படி, பார்ப்பன மதத்தின் ஒழுக்கக் கேட்டின் மீது, மதச்சார்பற்ற அரசியல் சட்டம் ஒழுக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது. அதாவது மதத்தின் மீது மதச்சார்பின்மையின் மேலாண்மை நிறுவப்பட்டிருக்கிறது.

பகுத்தறிவு இல்லையேல் ஜனநாயக உரிமையும் இல்லை

அது மட்டுமல்ல, “மத நம்பிக்கையை பகுத்தறிவுப் பார்வையில் நீதிமன்றம் ஆராயக்கூடாது” என்ற இந்து மல்கோத்ராவின் கருத்துக்கு நேர் எதிராக, “மூடநம்பிக்கையை மத உரிமை என்று அங்கீகரிக்க இயலாது” என்று கூறுகிறார் சந்திரசூட். அறிவியல் பார்வைக்கும் ஜனநாயக உரிமைக்கும் இடையிலான பிரிக்கவொண்ணா உறவை இது விளக்குகிறது.

அதேபோல, சாதி, பாலின அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிரான உரிமையை வழங்கும் பிரிவு 15, “மத உரிமையை வழங்கும் பிரிவு 25 ஐ விட மேலானது” என்றும் சந்திரசூட் கூறுகிறார். இதுவும் அர்ச்சகர் வழக்கின் தீர்ப்புக்கும் மதம் தொடர்பான வேறு பல தீர்ப்புகளுக்கும் நேரெதிரான பார்வையாகும்.

பிரிவு 25 கூறும் மத உரிமை என்பது ஒரு தனிநபர் தன்னளவில் கொண்டிருக்கும் நம்பிக்கை தொடர்பானது மட்டுமே. பாலின அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுவது என்பது, ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை தொடர்பான விசயமல்ல. அது அடுத்தவர் மீது திணிக்கப்படும் பாரபட்சமாகும். சபரிமலைப் பிரச்சனையில், மத நம்பிக்கை என்ற முகமூடியை விலக்கி, பிரிவு 25-இன் கீழ் அவர்கள் கோரும் நம்பிக்கையின் உண்மையான பொருள் ஆதிக்கமே என்பதை சந்திரசூடின் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.

மதத்தின் இன்றியமையா நடவடிக்கையா, குடிமக்களின் சமத்துவ உரிமையா?

ஒரு நடவடிக்கை அல்லது நம்பிக்கை, குறிப்பிட்ட ஒரு மதத்தின் இன்றியமையா அம்சம் என்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், அது அடிப்படை உரிமைகள் தொடர்பான அரசமைப்பின் மற்ற பிரிவுகளின் மீது (14, 15 )மேலாண்மை செலுத்தலாம் என்றே உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் கூறுகின்றன.

“சமூக ரீதியில் பிறரை ஒதுக்குவதாகவோ, ஒரு குடிமகனின் கவுரவமான வாழ்வுக்குரிய ஆதாரங்களை மறுப்பதாகவோ இருக்கும் பட்சத்தில், அது ஒரு மதத்தின் இன்றியமையா நடவடிக்கை என்று அங்கீகரிக்கப் பட்டிருப்பினும், அதனை அனுமதிக்க முடியாது. அந்த வகையில் மத, தனிநபர் சட்டங்களை, அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு அப்பாற்பட்டவையாக வரையறுக்கின்ற முந்தைய தீர்ப்புகள் (தனிநபர் சட்டம் பற்றிய நரசு அப்பா மாலி தீர்ப்பு) மீளாய்வு செய்யப்படவேண்டும்” என்கிறார் சந்திரசூட்.

மதத்தின் இன்றியமையா நம்பிக்கை என்று கூறப்படுவது எத்தகைய ஆபாசமான முறையில் சமத்துவத்தை நிராகரிக்கிறது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்பது “இந்துக்களின் இன்றியமையா நம்பிக்கை” “மசூதியில்தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது முஸ்லிம் மதத்தின் இன்றியமையா நம்பிக்கையல்ல” என்று சொல்லி பாபர் மசூதியின் இடத்தில் மூன்றில் இரண்டு பங்கை இந்துக்களுக்கு வழங்குகிறது அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு.

“ஆகம விதி என்ற இன்றியமையா நம்பிக்கை” காரணமாகத்தான் பார்ப்பனரல்லாதோருக்கு அர்ச்சகர் பணியில் சமத்துவ உரிமை மறுக்கப்படுகிறது.

மேற்சொன்னவை சில எடுத்துக் காட்டுகள் மட்டுமே. பன்மைத்துவம் என்ற பெயரில் இவற்றை நியாயப்படுத்துகிறார் இந்து மல்கோத்ரா. தனிமனிதனின் சுதந்திரத்தையும் கவுரவத்தையும் பாதுகாப்பதுதான் அரசமைப்பு சட்டத்தின் நோக்கம். அதனைப் பறிக்கின்ற எந்த நடவடிக்கையையும் பன்மைத்துவம் என்ற பெயரில் அனுமதிக்கவியலாது என்று கூறி அதனை மறுக்கிறார் சந்திரசூட்.

தீட்டு என்று பெண்ணை ஒதுக்குவதும் தீண்டாமையின் இன்னொரு வடிவமே!

இது மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கால் முன்வைக்கப்பட்ட வாதம். இதனை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்திருக்கிறார் சந்திரசூட்.

“தூய்மை, தீட்டு என்பவையே படிநிலை சாதி அமைப்பின் இதயமான கருத்தாக்கங்கள். மாதவிடாய் தீட்டு என்ற கருத்திலிருந்துதான் கோயிலில் மட்டுமல்ல, சமூகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் பெண்கள் ஒதுக்கப்படுகிறார்கள். தூய்மை – தீட்டு என்ற அடிப்படையில் எந்தவொரு பிரிவு மக்களை ஒதுக்கி வைத்தாலும், அது தீண்டாமைதான். அரசமைப்பின் பிரிவு 17, தடை செய்ய விழைவது சாதி அடிப்படையிலான தீண்டாமையை அல்ல என்று இதற்குப் பொருள் அல்ல. சாதி அடிப்படையிலான தீண்டாமை என்பது எந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ, அந்த தூய்மை – தீட்டு என்ற கருத்தாக்கத்தின் இன்னொரு வெளிப்பாடுதான் பெண்களை ஒதுக்குகின்ற இந்த நடவடிக்கையும். எனவே, சட்டப்பிரிவு 17, பெண்களையும் தீண்டாமையிலிருந்து பாதுகாக்க வேண்டும்” – என்பதே இது விசயத்தில் அவரது தீர்ப்பின் சாரம்.

அர்ச்சகர் வழக்கில் தீர்ப்பளித்த (டிச, 2015) உச்ச நீதிமன்றம் தீண்டாமைக்கு அளித்த விளக்கம் இங்கே பொருத்திப் பார்க்கத்தக்கது.

“ஆகம விதியின்படி பார்ப்பன அர்ச்சகர்கள் தவிர மற்றவர்கள் சிலையைத் தீண்டினால் கடவுள் சிலை தீட்டுப்பட்டுவிடும் என்று பார்ப்பன சிவாச்சாரியார்கள் கூறுவது பிரிவு 17-இன்படித் தீண்டாமைக் குற்றமே” என்று தற்போது சந்திரசூட் கூறுகின்ற இதே வாதம்தான் அர்ச்சக மாணவர்கள் சார்பாக முன்வைக்கப்பட்டது. இதனை மறுத்து தீண்டாமைக்கு புது விளக்கம் அளித்தது நீதிமன்றம்.

படிக்க:
♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
♦ தெருவில் சூத்திர அர்ச்சகர்கள் : தமிழக அரசின் ” பிராமணாள் ஒன்லி ” பாடசாலை !

ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும்தான் பூசை செய்யவேண்டும் என்றும் அவ்வாறு இல்லையேல் சிலை தீட்டுப்பட்டு விடும் என்றும் கூறுவது தீண்டாமைக் குற்றமாகாது. குறிப்பிட்ட பிரிவினர் வரக்கூடாது என்று குறிப்பாகச் சொல்லாத வரைக்கும் அதனைத் தீண்டாமைக் குற்றமாக கருத இயலாது என்று கூறியது அந்தத் தீர்ப்பு.

பார்ப்பனியத்தையோ மதத்தையோ கேள்விக்குள்ளாக்கும் வழக்குகளில், பிரச்சனையின் சாரத்தையும், அதன் சமூக வரலாற்றுப் பின்புலத்தையும் பரிசீலித்துத் தீர்வு கூறாமல், இத்தகைய அறிவுசார் ஏமாற்றுவாதங்களின் (intellectual sophistry) துணையோடு தப்பித்துக் கொள்வதையே பெரும்பாலான தீர்ப்புகளில் நாம் காண முடிகிறது.

இது பெண்ணின் மீதான சமூக ஒடுக்குமுறையா, மத ஒடுக்குமுறையா?

அப்படியின்றிப் பிரச்சனையை நேர்மையாக எதிர்கொள்கிறார் சந்திரசூட். “மத மரபு என்று சொல்லப்படும் இந்தப் பிரச்சினையை, சமூக வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். சபரிமலை விவகாரம் முதன்மையாக ஒரு மதச்சிக்கல் அன்று. பிரம்மசரியத்தின் சுமையைப் பெண்களின் மீது வைக்கும் இந்தப் பிரச்சினையை முதன்மையாக ஒரு பாலின ஒடுக்குமுறை என்ற கோணத்திலேயே பார்க்க வேண்டும்” என்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் என்பது சமூக ஜனநாயகத்துக்கான போராட்டமேயன்றி, வெறும் மத உரிமைப் போராட்டமன்று. வீதியில் நடக்கக் கூடாது, செருப்பணியக் கூடாது என்பன போன்ற சமூக ஒடுக்குமுறைகளின் நீட்சிதான் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்ற ஆகம விதி. பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகக் கூடாது என்ற தீண்டாமையும் மேற்சொன்ன சமூக ஒடுக்குமுறையின் மத வடிவம்தான். சாதி, பாலின, மொழி, இன ஒடுக்குமுறைகளையும் தீண்டாமையையும் நியாயப்படுத்தி சமூக ஒடுக்குமுறைக்கு மதப்புனிதம் கற்பிக்கும் சித்தாந்தமே பார்ப்பனியம்.

பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு இந்தியக் குடிமகனின் சமூக வாழ்க்கையை மதம் எப்படி கட்டுப்படுத்துகிறது என்பது குறித்து அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் அன்று அம்பேத்கர் கூறியதை இங்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
“மரபு, பழக்க வழக்கம் மற்றும் தனிநபர் சட்டங்கள் போன்றவை ஒரு தனிநபருடைய சமூக வாழ்வின்மீது குறிப்பிடத்தக்க வகையில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த மரபுகள் மதத்துடனும் தொடர்புடையவையாக இருக்கின்ற காரணத்தினாலேயே, இவற்றுக்கு அரசமைப்பு சட்டத்திலிருந்து விலக்கு வழங்குவதென்பது, அரசமைப்பு சட்டத்தின் மேலாண்மையை மறுப்பதாகிவிடும்” என்கிறார் சந்திரசூட்.

நேற்று சன்னி லியோன், இன்று பிரம்மசரியம் – இரண்டிலும் பலிகடா பெண்!

அமல்படுத்த முடியாத தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கக் கூடாது என்று அமித் ஷா கூறியிருப்பது பார்ப்பன பாசிச அதிகாரத்தின் அச்சுறுத்தல் என்பது உண்மைதான். இருப்பினும், பெண்ணினத்தின் சம உரிமைய வலியுறுத்தும் இந்தத் தீர்ப்பை, இந்து மதத்துக்கு எதிரான தாக்குதலாகச் சித்தரித்து, அரசியல் ஆதாயம் பெறுவதற்கு ஏற்ற சமூகச் சூழல் நிலவுவதையும் நாம் மறுக்கவியலாது.

சங்கி அறிவாளிகளின் பத்திரிகையான ஸ்வராஜ்யா இப்படி எழுதுகிறது. சதையின் தூண்டுதலுக்கு ஆளாக விரும்பாத பிரம்மச்சாரிகள் அதிலிருந்து விலகி நிற்கவே விரும்புகிறார்கள். அவ்வளவு ஏன், நோன்பு நேரத்தில் இசுலாமியர்கள் பிரியாணிக் கடைகளை மூடி வைப்பதில்லையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அப்பத்திரிகை யின் ஆசிரியர் ஜெகன்னாதன்.

ஆர்.எஸ்.எஸ்.-க்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-க்கும் இடையிலான சித்தாந்த ஒற்றுமை இதுதான். பெண்களை சதையாகவும், பிரியாணிப் பொட்டலமாகவும் சித்தரிப்பது குறித்து ஜெகன்னாதன் சிறிதும் கூச்சப்படவில்லை என்பது மட்டுமல்ல, சபரிமலையில் சங்கிகள் திரட்டி வந்த பெண்கள் கூட்டமும் நாங்கள் அனைவரும் பிரியாணிப் பொட்டலமே என்று அறிவித்துக் கொள்வதற்கு கூச்சப்படவில்லை.

ஆசிபாவைக் குதறிய மிருகங்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஜம்முவில் பேரணி நடத்தியவர்களும் இவர்கள்தான். பெண்களை அனுமதித்தால் எங்கள் பிரம்மசரியத்துக்கு ஆபத்து என்று சபரிமலையில் போராட்டம் நடத்துவதும் இவர்கள்தான்.

தீர்ப்புக்கு ஆதரவான பெருந்திரள் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை? இதுதான் நாம் அக்கறை செலுத்த வேண்டிய கேள்வி.

ஜனநாயகத்துக்கான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில் மேலிருந்து இயற்றப்படும் சட்டங்களோ தீர்ப்புகளோ ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கும். தீண்டாமைக்கு எதிரான சட்டமானாலும் சரி, போலீசின் மனித உரிமை மீறலுக்கு எதிரான தீர்ப்புகளானாலும் சரி – அவை ஓரளவுக்கேனும் அமலாவதைத் தீர்மானிப்பவை சமூகத்தில் நடைபெறும் போராட்டங்களே.

இதே கேரளத்தில் சில மாதங்களுக்கு முன் கொச்சியில் ஏதோ ஒரு கடையின் திறப்பு விழாவுக்கு வந்த நீலப்பட நடிகை சன்னி லியோனைக் காண்பதற்குப் பல்லாயிரக்கணக்கில் கூட்டம் – போலீஸ் தடியடி. சபரிமலை விவகாரத்திலும் ஆயிரக்கணக்கில் கூட்டம். பெண்களை அனுமதித்தால் ஆண்களின் பிரம்மசரியத்துக்கு ஆபத்து என்று போராட்டம் – இங்கேயும் தடியடி.

ஸ்மார்ட் போனின் ஒரு ஆப்-இல் அய்யப்பன். இன்னொரு ஆப்-இல் சன்னி லியோன். இரண்டு ஆப்புகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கிறது இந்தத் தீர்ப்பு.

– மருதையன்
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

தலைஞாயிறு : சொந்த நாட்டில் அகதிகளாய் தவிக்கும் மக்கள் !

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கு உருக்குலைந்து சின்னாப்பின்னமாகிக் கிடக்கிறது.

லைஞாயிறு அருகில் உள்ள கிராமம் கோவில்பத்து. இங்குதான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தானிய சேமிப்புக் கிடங்கு உள்ளது. இதில் 2 லட்சம் டன் வரை தானியங்களை சேமிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கிடங்கான இதன் கட்டுமானச் செலவு 144 கோடி எனக் கூறப்படுகிறது. இந்த கிடங்கும் கஜாவிற்கு தப்பவில்லை. சின்னாபின்னமாகிக் கிடக்கும் தானியக் கிடங்கைப் பார்க்கும்போது, இந்த அரசின் ஊழல் முறைகேடுகளே விஸ்வரூபமாகத் தெரிகிறது.

வோடோபோன் செல்பேசி டவர் வயலில் விழுந்து நொறுங்கிக் கிடக்கிறது.

மண் தன்மை அறிந்து, இயற்கைச் சூழல் அறிந்து, சிறந்த கட்டுமானத் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு கட்டப்பட்ட அரசின் கட்டிடத்திற்கே இந்த நிலைமையென்றால், சாதாரண கூலி விவசாயிகளின் வீடுகளைப் பற்றி சொல்லவா வேண்டும்!

அதே கோவில்பத்து கிராமத்தின் ஒரு தெருவில் இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலும் மண் சுவற்றினாலான ஓலை வீடுகளும், ஓட்டு வீடுகளும், சில கான்கிரீட் வீடுகளுமே உள்ளன. சில விவசாயிகளே ஒன்றிரண்டு ஏக்கர் நிலபுலங்களை வைத்திருக்கின்றனர். ஏனையோர் அன்றாடக் கூலிகளே. இவர்கள் தலைஞாயிறு, முதலியான்கண்டி, பழையாற்றங்கரை போன்ற ஊர்களுக்குச் (7 / 8 கி.மீ தொலைவில் உள்ளது) சென்று வயல் வேலைகள் செய்து வருகின்றனர். 6 மாதங்கள் மட்டுமே இந்த வேலைகளும் இருக்கும். மற்ற நாட்களில் அருகாமையில் உள்ள மா, முந்திரி, சவுக்கு, தென்னை போன்ற தோப்புகளில் மரம் வெட்டுதல், கீற்று முடைதல், கட்டிட வேலை போன்றவற்றைச் செய்துவருகிறார்கள்.

கஜா புயல் இவர்களது வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. முகாம் அமைத்து சமைத்துக்கொண்டிருக்கும் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, “இந்த வீட்டைப் பாருங்க, அந்த வீட்டைப் பாருங்க” என்று அழைத்துச் சென்றார்கள்.

முத்துக்குமார் :

நாத்து பறிக்க, நடவு நட, களையெடுக்க, வரப்பு வெட்டன்னு போனா சாப்பாடு போட்டு ஆம்பளைங்களுக்கு 500 ரூபாயும் பொம்பளைங்களுக்கு 400 ரூபாயும் சம்பளம் கொடுப்பாங்க. அதுவுங்கூட 6 மாதந்தான் வேலை. மத்த நாள்ல வேல கெடச்சா லக்கு, கெடக்கலன்னா திண்டாட்டந்தான். அந்த மாதிரி சமயங்கள்ல என்னோட குடும்பத்த காப்பாத்துனது இந்த புளிய மரந்தான்.”

வேரோடு சாய்ந்து கிடக்கும் மரத்தை வேதனையோடு காண்பித்து தொடருகிறார்.

“150 வருச மரம். வருசத்துக்கு 20 ஆயிரம் ரூபா வரைக்கும் பழம் எடுப்போம். திடீர்னு கொழம்பு தண்ணிக்கு மொடையா இருந்தா கொஞ்சம் பழத்த உலுக்கி சந்தையில போட்டுட்டு காய்கறி, மளிகைன்னு வாங்கி வருவோம். அந்த ஒத்த மரமும் போயிருச்சு.

இன்னும் மழை தொடருமுன்னு சொல்றாங்க. வீடுங்கள்ல ஓலையுமில்ல, ஏற்கெனவே சேறும் சகதியுமா இருக்கு. இனி எங்கே போறதுன்னே தெரியல. சாப்பாட்டுக்கும் வழியில்ல. 6 நாட்கள்ல ஒரே ஒரு தடவதான் தலைக்கு அரை கிலோன்னு கெவர்ன்மென்ட்டிலேருந்து அரிசி போட்டாங்க, அதோட சரி. அதிகாரிகள், அமைச்சர்கள் யாருமே வரல, ஏன் வி.ஏ.ஓ. கூட எட்டிப் பாக்கல. கவர்னர் மட்டும் வந்தாரு, கடலையும் காட்டையும் சுத்திப் பாத்துட்டுப் போயிட்டாரு. ஊருக்குள்ள வர டைம் இல்லே போல” என்றார்.

முத்துக்குமார் ஒரு வகைமாதிரி. இவருக்கு ஒரு புளிய மரம் என்றால், முனியசாமிக்கு 4 தென்னை, ராமசாமிக்கு 2 மாமரம்.

ஆம், கூலி  வேலை தவிர, இந்த மக்களின் வாழ்வாதாரம் வீட்டைச் சுற்றியுள்ள ஓரிரு தென்னையும், மாவும், புளிய மரங்களுமே. இதுவன்றி, சில ஆடு, மாடுகள், கோழிகள் மட்டுமே.

கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா போன்ற தேவைகளுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெரும்பாலான பெண்கள் கடன் வாங்கியுள்ளனர். “அதை எப்படி அடைக்கிறதுன்னே தெரியல, இந்த அரசு கடன தள்ளுபடி செஞ்சா கொஞ்சம் செரமம் குறையும்” என்று கவலையோடு கூறுகின்றனர்.

கிழக்கு கடற்கரைச் சாலை நெடுகிலும் இரவுநேர வாகன வெளிச்சத்தில் திட்டுத் திட்டாக மக்கள் வெள்ளம். இவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள ஆலங்காடு, பின்னத்தூர், நீர்முளை, சங்கந்தி, ஆட்காட்டிவேலி,  மன்னவன்கோட்டகம், தோலி… இன்னும் பல கிராமங்களைச் சேர்ந்த கூலி ஏழை விவசாயிகள். மழைக்கு ஒதுங்க வீடு இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, கொசுக்கடியையும் குளிரையும் தாங்க முடியவில்லை. தற்போது, ரோட்டுக்கு வந்துவிட்டார்கள். நிவாரணப் பொருட்கள் கொண்டுச் செல்லும் தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள், மனிதாபிமானிகளின் கண்களில் படமாட்டோமா, ஏதேனும் பொருட்கள் கிடைக்காதா என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.

நெடுஞ்சாலைகளில் மட்டுமல்லாது, கிளைச்சாலைகளிலும் பழைய ப்ளெக்ஸ் பேனர்களின் பின்புறம் அல்லது கிழிந்த வேட்டிகளில் “கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமம்” என்று எழுதி வைத்துக்கொண்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல கையேந்தி நிற்கிறார்கள்.

அந்தக் கொடுமையான காட்சியைப் பார்க்கும்போது, அமெரிக்காவில் வேலைபார்த்த நண்பர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தனது அனுபவங்களை சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.

படிக்க:
தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?
அம்பானிக்காக காத்திருந்த திருப்பதி பாலாஜி – ராமேஸ்வரம் ராமநாதன் – குருவாயூர் கிருஷ்ணன் !

“அமெரிக்காவில் கருப்பின மக்கள் மட்டுமே வாழும் புறநகர் பகுதிகள் பல இருக்கின்றன. அங்கு வாழும் பெரும்பாலான மக்களுக்கு வீடு இல்லை, தெருக்களில்தான் படுத்துக்கொள்கிறார்கள். சொல்லிக்கொள்ளும் உறவுகளும் இல்லை, அனாதைகளே அதிகம். அந்த வழியில் செல்லும் கார்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை மடக்கி தங்களுக்குத் தேவையான பணம், உணவு, துணிமணிகளை கேட்டுப் பெறுகிறார்கள். யாரையும் அடித்துத் துன்புறுத்துவது இல்லை. ஆனாலும், அவர்கள் கேட்கும் தோரணையே, “இருப்பதை கொடுத்துவிட்டுத்தான் அந்த இடத்தைவிட்டே நகர முடியும்” என்ற பய உணர்வு ஏற்படும்” – என்றார்.

இரவு நேரங்களில்கூட கடற்கரைச் சாலைகளின் இருபுறங்களிலும் வீடுகள் – உடைமைகளை இழந்த விவசாயிகள், யாரேனும் தண்ணீர் கொடுக்க மாட்டார்களா, ரொட்டி, பிஸ்கெட், பால் கொடுக்க மாட்டார்களா, ஒரு மெழுகுவர்த்தி – கொசுவர்த்தியேனும் கொடுக்கமாட்டார்களா என கையேந்தி நிற்கிறார்கள். இன்னும் சில நாட்கள் இந்த நிலை தொடருமாயின், தஞ்சை டெல்டா மாவட்டங்களும் அமெரிக்காவின் புறநகர் பகுதியாக மாறுவதைத் தடுக்க முடியாது.

தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?

தூத்துக்குடி கணேசம்மாள் – புற்று நோயால் இறந்தவர் சாவதற்கு முன் சென்னை வந்து போராடட்டுமா என்றார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அறிக்கை நேற்றைய (28-11-2018) அமர்வில் வெளிவந்திருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட தருண் அகர்வால் தலைமையிலான குழு தனது ”ஆய்வறிக்கையை” தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது.

இவ்வறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறான நடவடிக்கை என்றும், இந்த ஆலையால் எவ்வித சுற்றுச் சூழல் பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் சில நிபந்தனைகளின் கீழ் மீண்டும் இந்த ஆலை இயங்கலாம் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழு தலைவர்

கடந்த மே 22-ம் தேதியன்று வேதாந்தா அனில் அகர்வாலின் ஆசியோடு தமிழக அரசு நடத்திய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகத்தையே உலுக்கியது. இந்தக் கொடூர செயலுக்கு உலகம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கண்துடைப்பு நடவடிக்கையாக, சட்டப்பூர்வமாக செல்லுபடியாகாத வகையிலான ஒரு மொக்கை அரசாணையை வெளியிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது எடப்பாடி அரசு.

அதனை அப்போதே பல்வேறு ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகள் கண்டித்தன. இத்தகைய கண் துடைப்பு வேலைகளுக்கு நடுவே, ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பை உருத்தெரியாமல் ஒடுக்கும் வேலையை முடுக்கி விட்டது அனில் அகர்வால் – எடப்பாடி – மோடி கூட்டணி.

ஒட்டுமொத்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் குற்றவாளியாக ”மக்கள் அதிகாரம்” அமைப்பைக் காட்டி வழக்கை முடித்து வைக்க முயற்சித்தது. தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், மக்கள் அதிகாரத்திற்கு ஆதரவாகவும் வலுவான குரல்கள் தொடர்ந்து கேட்கவே, அந்த முயற்சியை நீதித்துறை வலுவந்தமாக முறிக்க நேர்ந்தது.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடவேண்டும் என்பதே மக்களது கோரிக்கை (பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு வந்த போது நடந்த ஆர்ப்பாட்டம்)

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசின் கண் துடைப்பு ஆணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது ஸ்டெர்லைட் நிறுவனம். கூடுதலாக ஊடகங்களின் வாயை அடைக்க அவர்களின் முதல் பக்கத்தில் அன்றாடம் விளம்பரங்களைக் கொடுத்தது ஸ்டெர்லைட். அதற்கேற்றாற் போல ஊடகங்களும், ஸ்டெர்லைட்டுக்கு ஊதுகுழல்களாய் செயல்பட்டன.

அதனைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து ஸ்டெர்லைட் ஆலை மற்றும் தூத்துக்குடி மக்கள் மத்தியிலும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

இந்த ஆய்வுக்குழு தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதியை நியமிக்கக்கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் முறையிட்டது ஸ்டெர்லைட் நிர்வாகம். ’எஜமானர்’ காலால் இட்ட உத்தரவை தலையால் ஏற்றுக் கொண்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளி தனக்கு யார் நீதிபதியாக வரவேண்டும் என கருத்துச் சொல்லும் அளவிற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ’ஜனநாயக’த்தில் திளைக்கிறது.

வழக்கறிஞர் அரிராகவன்

அதே போல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் கோயல், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நாளிலேயே தே.ப.தீர்ப்பாயத்தின் தலைவராக மோடியால் நியமிக்கப்பட்டார் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆய்வுக்குழு தலைவராக முதலில் பரிந்துரைக்கப்பட்ட ஓய்வுபெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி, அனில் அகர்வால் – மோடி – கோயல் சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தின் யோக்கியதை என்னவாக இருக்கும் என உணர்ந்தாரோ என்னவோ, அந்தப் பொறுப்பை கை கழுவினார். அவருக்கடுத்தபடியாக மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலைத் தலைவராக நியமித்தார். தருண் அகர்வால் தக்லைமையிலான மூவர் குழுவில், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் விஞ்ஞானி சதீஷ் சி.கார்கோட்டி மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வரலட்சுமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழு விசாரணை என்ற பெயரில் தூத்துக்குடியில் செய்த கண் துடைப்பு வேலைகளும், சென்னையில் விசாரணைக் குழு கருத்துக் கேட்பின் போது பொதுமக்களை சந்திக்கவிடாத வண்ணம், விதவிதமான கண்டிசன்களைப் போட்டு ஸ்டெர்லைட் தரப்பு நபர்களை மட்டும் சந்தித்த கிரிமினல் வேலைகளும் ஏற்கெனவே நாம் அறிந்ததே.

அப்போதே இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை எவ்வாறு வரும் என அனைவராலும் யூகிக்க முடிந்ததை, கடந்த 26-ம் தேதி அறிக்கையாகவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்திருக்கிறது தருண் அகர்வால் குழு.

முன்னதாக கடந்த மாதமே சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த ஆய்வறிக்கை முழுமையாக முடிவடையாத சூழலில் டிசம்பர் 10 வரைக்கும் கால அவகாசம் நீட்டித்து, விசாரணையை டிசம்பர் 10-க்கு தள்ளி வைத்தது, தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

ஆனால் அனில் அகர்வாலுக்கு அவசரமோ அல்லது தருண் அகர்வாலுக்கு அவசரமோ தெரியவில்லை, ஆய்வறிக்கை நவம்பர் 26 அன்றே தே.ப.தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.

நவம்பர் 26-ல் அறிக்கை வந்தாலும் டிசம்பர் 10 அன்றுதான் வழக்கு என்ற நிலையில் தே.ப.தீர்ப்பாயத்துக்கு ’திடீரென’ வந்த ஞானோதயத்தின் பலனாய் நவம்பர் 28-ம் தேதியன்று விசாரணைக்கு திடீரென பட்டியலிடப்பட்டது. தே.ப.தீர்ப்பாயத்துக்கு என்ன ’அவசரமோ’? தெரியவில்லை.

விசாரணையின் போது தருண் அகர்வாலின் அறிக்கையின் கடைசிப் பக்கத்தை வாசித்தார் கோயல். அதில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு நிலைக்கக் கூடியதல்ல என்றும், ஸ்டெர்லைட் ஆலையின் கருத்தைக் கேட்காமலேயே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் தமிழக அரசின் இந்த முடிவு இயற்கை நீதிக்கு முரணானது என்றும் குறிப்பிட்டுள்ளனர் ஆய்வுக் குழுவினர். முதலாளித்துவத்தின் இயற்கை நீதிக்கு முரணானது என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தால் மக்களுக்கும் தெளிவாகப் புரிந்திருக்கும்.

இது போக சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆலை இயங்குவதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை எனக் கூறி துப்பாக்கிச் சூட்டில் உயிர்துறந்த 13 பேரின் உயிர்த் தியாகத்தில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது தருண் அகர்வால் குழு.

தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் முதல் குற்றவாளியான வேதாந்தா தரப்புக்கும், இரண்டாவது குற்றவாளியான தமிழக அரசுக்கும் மட்டுமே தருண் அகர்வால் குழுவின் அறிக்கையின் நகல்களை வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார், கோயல். பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு அறிக்கையின் நகலைத் தர மறுத்துவிட்டார்.

இந்த வழக்கில், இந்த அறிக்கையின் மீது தமது சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை தமிழக அரசு ஒரு வாரத்தில் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்றும் இந்த வழக்கை வரும் டிசம்பர்-7 அன்று ஒத்திவைப்பதாகவும் கூறியுள்ளார் கோயல். எனினும் பின்னர் வழங்கப்படவிருக்கும் தீர்ப்பின் சாரத்தை தருண் அகர்வாலின் ஆய்வுக்குழு அறிக்கை வாயிலாக நமக்கு முன்னரே முன்னறிவித்திருக்கிறார் கோயல்.

காவிரி டெல்டாவில் அனில் அகர்வாலுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு ஹைட்ரோகார்பன் உரிமங்களுக்கும், மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய மோடி அரசு கொடுத்துள்ள அனுமதிக்கும் உள்ள தொடர்புக்கும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும், தற்போது ஸ்டெர்லைட்டைத் திறக்க கோயல் வழங்கவிருக்கும் தீர்ப்புக்கான முன்னறிவிப்பிற்கும் உள்ள தொடர்புக்கும் பெரிய வேறுபாடு எதுவுமில்லை.

இரண்டுமே பாஜகவிற்கு அனில் அகர்வால் நன்கொடையாக அளித்த 36.5 கோடிக்காக மட்டுமே நடைபெறும் நிகழ்வல்ல. இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் மீதான, குறிப்பாக தமிழகத்தின் மீதான பாஜகவின் வன்மத்தின் வெளிப்பாடுகளே இந்நிகழ்வுகள்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்கள், தமிழகத்தை இயற்கையின் சீற்றங்கள் புரட்டிப் போடும் மாதங்களாகவே முடிகிறது. தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணித்து வரும் இந்த அரசு இயந்திரத்தை தமிழகத்தின் சீற்றங்கள் புரட்டிப் போடும் ஆண்டாக அமைந்தால் மட்டுமே இனி உயிர்வாழ முடியும். தமிழகம் சீறுமா ?

புதுக்கோட்டை : பிள்ளைங்க படிப்பு வீட்டுச் செலவை மரம் பாத்துச்சு ! இப்ப யாரு பாப்பா ?

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, நெடுவாசல், வடகாடு ஆகிய ஊர்களில் உள்ள கிராம மக்களை மக்கள் அதிகாரம் சார்பில் சந்திக்க சென்றோம். ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தின் போது, தமிழ்நாட்டில் ஒரு குட்டி கேரளா உள்ளது என வியந்து ரசித்த நெடுவாசல் கிராமம், முட்புதர் காடுகள் போல காட்சியளித்தது அதிர்ச்சியாக இருந்தது.

நெடுவாசல் பசுமை இராமநாதனிடம் பேசினோம். சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மரக்கன்றுகளை தனது பத்து ஏக்கர் தோட்டத்தில் நடும்போது, இதெல்லாம் எங்க இந்த மண்ணில் வளரப் போகிறது என்று கூறியுள்ளனர். ஆனால், தோட்டக்கல்லூரி மாணவர்கள், சினிமாத்துறையினர் என ஏராளமானவர்கள் வந்து ரசித்து செல்லும்படி அதை பாதுகாத்து வைராக்கியமாக வளர்த்துள்ளார். அந்த தோட்டம், இன்று கால் வைக்கக்கூட இடமில்லாமல் அனைத்து மரங்களும் கீழே விழுந்து நாசமாகிக் கிடப்பதை வேதனையுடன் காட்டினார். ஒரு மரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, “நான் சப்பாணி ஆகிட்டேன். உங்கள மாதிரி ஆளுங்க தான் எங்கள தூக்கி விடனும்” என்றார். துப்பாக்கி, கப்பல், இசைக்கருவி தயாரிக்க உதவும் இம்மரங்கள் கீழே விழுந்ததால் தனக்கு இலட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

நெடுவாசலில் பணிபுரியும் மின் ஊழியர்களுக்கான உணவு, தண்ணீர், பராமரிப்பு போன்ற செலவுகளைக்கூட அரசு செய்யாததால், கோயில் பொதுப்பணத்திலிருந்து மக்கள் செலவு செய்துகொண்டிருப்பதாக கூறினார்.

கறம்பக்குடி பஞ்சாயத்து, முள்ளங்குறிச்சி ஊராட்சி, கருப்பக்கோன் தெருவில், முனியாண்டி கோனார் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக கேள்விப்பட்டு நேரில் சென்றோம். அவர், ஒரு கரும்பு விவசாயி. சவுக்கு மரவளர்ப்பு மற்றும் பண்ணை விவசாயம் செய்து வருபவர். புயல் பாதிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தால் வாங்கிய கடனை கட்ட முடியாது என்ற மன உளைச்சலில் இருந்தவர் அதிர்ச்சியில் நெஞ்சு வெடித்து இறந்ததாக கூறினர் அவரது குடும்பத்தினர்.

அப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை சந்தித்து பேசினோம். பூபதி என்பவர், ‘’ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், நூற்றுக்கணக்கான தேக்கு மரங்கள் கீழே விழுந்துவிட்டது. 25 வருசத்துக்கு பின்னாடி போய்விட்டோம். அரசாங்கம் எந்த கணக்கெடுப்பும் நடத்தவில்லை. விழுந்த ஓடு, மரங்கள் அப்படியே கிடக்குது. குழந்தைகள் படிப்பிற்கும், வீட்டு தேவைகளுக்கும் மரம் தான் அடிப்படை. இனி என்ன செய்வோம்?  அரசு உதவுமா?’’ என்றார். மற்றொரு தாழ்த்தப்பட்ட குடியிருப்பில் (15 வீடுகள்) பேசும் போது, “இங்க எல்லாரும் கூலி வேல தான் பாக்குறோம். குடிக்கத் தண்ணியில்ல, சாப்பாடில்ல. இதுவர எந்த அதிகாரியும் வரல. அநாதையா இருக்குறோம்” என்றனர்.

வடகாடு பகுதியில் இளைஞர்களிடம் பேசியபோது, “சென்னை, கடலூர் பகுதிகள் புயலால் பாதிக்கப்படும் போது, நாங்கள் இலட்சக்கணக்கில் பொருட்களை கொண்டு சென்று உதவியுள்ளோம். ஆனால், இன்று ரொட்டித் துண்டுக்காக காத்துக் கிடக்கிறோம். ஒரு மெழுகுவர்த்திக்காக வேனைத் துரத்தி ஓடியதையும், லாரி டிரைவர் சொல்லியும் பிஸ்கட், பிஸ்கட் என மண் லாரியை பார்த்து குழந்தைகள் ஓடியதையும் வாழ்நாளில் மறக்க முடியாது’’ என்றனர்.

“பிள்ளைங்களுக்கு பீஸ் கட்டனும்னா அண்ணாந்து தென்ன மரத்த பார்ப்போம். பொட்டபுள்ள வயசுக்கு வந்திருச்சி, மாப்பிள்ள தேடி வாரான்னா பழா மரம் இருக்குங்ற தைரியம் இருந்துச்சு. இனி என்ன செய்வோம்?” என்றதுடன், இதுவரை இப்படி ஒரு புயலை பார்த்ததில்லை என்றனர் மக்கள். குடிக்கவும், புழங்கவும் தண்ணீரின்றி தவித்த மக்கள், போராட்டம் நடத்திய பின்னரே ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டு தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. 70 கார்களில் பரபரப்பாக வந்த மத்திய ஆய்வுக் குழுவினர், கிராமங்களுக்குள் செல்லாமலேயே தங்கள் ஆய்வை முடித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்ததாக கூறுகின்றனர்.

முள்ளங்குறிச்சி கிராமத்திற்கு வந்த இசுலாமிய அமைப்பினர், பாரபட்சமின்றி அனைவரையும் அழைத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தண்ணீர், அரிசி, பருப்பு, காய்கறி, சேலை, கைலி, துண்டு என அடிப்படைத் தேவைக்கான பொருள்களை விநியோகித்துள்ளனர். இந்து கோஷம் போடும் சங்கிகளைத் தான் களத்தில் எங்குமே காணோம். சங்கிகள் அனைவரும் சபரிமலை டூயூட்டியில் பிசியாக உள்ளதால் கஜா புயலில் பாதிக்கப்பட்ட ‘இந்துக்களுக்கு’ உதவ வர இயலவில்லை போலும்!

கிராமங்களுக்கு செல்லும் வழி நெடுக கீழே விழுந்த மின்கம்பங்கள், மரங்கள்  அனைத்தையும் அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. குடியிருப்புகளின் மீது விழுந்த மரங்களை மக்கள் தங்கள் சொந்த முயற்சியிலும், தன்னார்வலர்களின் உதவியுடனும் தான் அப்புறப்படுத்துகின்றனர். நிலங்களிலிருந்து, மரங்களை அப்புறப்படுத்துவதற்கு ஆகக்கூடிய செலவுக்குக் கூட பணம் இன்றி தவிக்கின்றனர் விவசாயிகள். நெடுவாசலை சுற்றியுள்ள கிராமங்களில் மா, பலா, வாழை, தென்னை ஆகிய மரங்கள் செழித்து வளர நீர் தான் அடிப்படை. தற்போது, நிலத்தடி நீரும் 400 அடிக்குக்கீழ் சென்றுவிட்டதால் இனி மரங்கள் செழித்து வளர பல ஆண்டுகள் பிடிக்கும். விவசாயிகளின் வாழ்க்கைக்கு ஆதராமான மரங்கள் சரிந்தது, கிராமப்புற பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது. தங்கள் வாழ்நாளில் சந்தித்திராத இப்புயலால் தங்கள் வாழ்க்கை நரகமாகிப் போனதாகவும், இதிலிருந்து மீள அரசு தரப்பில் எந்த உதவியும் செய்யவில்லை என ஆத்திரம் கொள்கின்றனர்.

“அரசாங்கம் இனிமேலும் ஒன்னும் செய்யலன்னா ரெண்டுல ஒன்னு பாக்காம விடமாட்டோம்” என்றனர் வடகாடு இளைஞர்கள். கஜாப்புயலால் மட்டுமல்ல, தோற்றுப்போன இந்த அரசமைப்பால் தினம்தினம் செத்து மடியும் மக்களை மீட்க, மக்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவது ஒன்றே தீர்வு!

விவசாயிகளின் கோரிக்கைகள்:

  • 1. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு, உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
  • 2. ஒவ்வொரு கிராமத்திற்கும் 100 மின் இணைப்பு இலவசமாக வழங்க வேண்டும்.
  • 3. விவசாயக் கடன்கள், நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
  • 4. வாகனக் கடன்களை ஆறு மாதத்திற்கு வசூலிக்கக் கூடாது.
  • 5. ஏக்கருக்கு 70 தென்னைக் கன்றுகள் கொடுக்க வேண்டும்.
  • 6. தென்னை நடுவதற்கு ஊருக்கு ஒரு டிராக்டர் வழங்க வேண்டும்.
  • 7. ஒரு கிராமத்திற்கு 10 மரஅறுவை இயந்திரம் வழங்க வேண்டும்.

தகவல்
திருச்சி மண்டலம், 94454 75157.

நிவாரணப் பணியில் மக்கள் அதிகாரம்

ஜா புயல் பாதிப்பிற்குள்ளான மாவட்டங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் தங்கி புனரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டப் பகுதிகளில் நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பி வருகின்றனர்.

டலூர் மக்கள் அதிகாரம் சார்பில் வீடுகளிலும், கடைவீதிகளிலும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன.  இந்த நிவாரண பொருள் சேகரிப்பு பணியில் மாணவர்களும், கட்டுமான தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.  24, 27 ஆகிய தேதிகளில் வீடுகளிலும், கடைகளிலும் முன்கூட்டியே துண்டறிக்கை கொடுத்துவிட்டு ஒரு மணிநேரம் கழித்து வருகிறோம் என்று கூறிவிட்டு பின் ஒரு சிறிய வாகனத்தின் மூலம் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.  வீடுகளில் பெண்கள் தங்கள் உறவினர்களுக்கு வாங்கிய புதிய துணி மற்றும் போர்வைகளையும் கொடுத்ததோடு விலை உயர்ந்த புடவைகளையும் எடுத்து வைத்திருந்து கொடுத்தனர்.  மேலும் கடைகளுக்க சென்று பிஸ்கட், மெழுகுவர்த்தி, சோப்பு போன்றவைகளையும் அளித்தனர்.  கடை வீதிகளில் பெரும்பாலும் நிதி மற்றம் உணவு பொருட்களான பிஸ்கட், போர்வை, பாய், குழந்தைகளுக்கு தேவையான துணிகள் கொடுத்தனர்.

இவை மட்டுமின்றி வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், சுற்றுலா வேன் சங்கத்தை சேர்ந்தவர்கள்  மற்றும் அரசு, ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்தவர்கள்  நிவாரண பொருட்கள் கொடுத்தனர். தச்சு வேலை செய்யும் ஆதரவாளர் ஒருவர் தான் வைத்திருந்த மரம் அறுக்கும் இயந்திரத்தை கொடுத்து உதவி செய்தார்.  ஒரு ஓய்வுபெற்ற காவலர் தான் வைத்திருந்த ரூ 2000/- மதிப்புள்ள 2 ரெயின் கோட்டுகள், ரூ 1000 மதிப்புள்ள 5 பூட்சு மற்றும் நிதி, துணியும் கொடுத்து உதவினார்.

படிக்க:
அம்பானிக்காக காத்திருந்த திருப்பதி பாலாஜி – ராமேஸ்வரம் ராமநாதன் – குருவாயூர் கிருஷ்ணன் !
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி !

தமிழ்நாடு தீயணைப்பு துறையை சேர்ந்த நண்பர்கள் தங்கள் ஊழியர்கள் மத்தியில் நிதி திரட்டி 100 பேருக்கான மளிகை சாமான், அரிசி உள்ளிட்டவைகளை கொடுத்து உதவினர்.

கடலூர்,
செல்; 8110815963.

அனைத்துமாய் இருந்தது ஆறு : அழித்தது யார் ? | துரை சண்முகம் | காணொளி

0

ஆற்றுப்படை

று
எங்களுக்கு
எவ்வளவு பெரிய
ஆதாரம்.

ஆறு
எங்களுக்கு
எவ்வளவு பெரிய
நம்பிக்கை.

அதை இழப்பது
அனைத்தையும்
இழப்பதாகும்.

காண்பவர்
வேண்டுமெனில்
சரி!
ஒரு ஆறு போயிற்று
என ஆறுதலடையலாம்.

அந்த
ஆற்றோடு கலந்தவர்க்கு
அது
ஒரு உணர்வை
ஒரு உறவை
இழந்த சோகம்.

நம்பிக்கை இழந்த
வாசல்
வெறிச்சோடி கிடக்கிறது

இனி
எந்த நம்பிக்கையில்
வாழ்வது?
என நினைக்கையில்
ஆறு
நெஞ்சில் அடைக்கிறது.

அனைத்துமாய்
இருந்தது
ஆறு

விவசாயம்
வெறும் சோறு மட்டுமா?
சுயமரியாதை, தன்னம்பிக்கை
சுற்றம் பேணல்,
நாட்டின்
சுய சார்பு,
கைத்தொழில்
சிறுதொழிலுக்கான
உயிர் தொடர்பு,
பண்பாடு, நாகரிகம்
பல்லுயிர் மாண்பு
அனைத்தும்
அடங்கியது.

ஒரு
நதியை இழக்கும்
சோகம்
பலவாய் இருக்கிறது.

வயல்
காய்கிறது

விவசாயியின்
நெஞ்சு வெடிக்கிறது

குடிக்க நீரின்றி
மேய புல்லின்றி
பராமரிக்க முடியாமல்

மாடு ஒழிகிறது.
பச்சைத் தவளை
முகம் கறுத்து
அழிகிறது.

ஓணாண்களின்
நாவுகள் உலர்ந்து
ஏக்கம் காய்ந்து
உதிர்கிறது.

வாசல் தெளிக்கும்
ஈரம் பார்க்காமல்
காலைத் தும்பி
அதிர்கிறது.

தாய்ப்பால் போறாமல்
உழவன் வீட்டு
மழலை
வீறிட்டு அழுகிறது.

கேட்க முடியாமல்
ஒற்றைக் குருவியும்
பயந்து
உயரே எழுகிறது.

பாதி
படர்ந்த கொடி
மொக்கு விடாமலேயே
ஓலைக் குடிசையின்
உயரே கருகுகிறது.

வெறிச்சோடி
துரத்தும் வெம்மையில்
மாடம் தேடி அலையும்
மணிப்புறாவின்
வண்ணம் உருகுகிறது.

புல்லும்
பூண்டும் கூட
வாழ முடியாதபடிக்கு
நமது
ஆற்றை
அழித்தது யார்?

கையும்
காலும் கூட
தேற முடியாதபடிக்கு
நமது
கைத்தொழிலை, சிறுதொழிலை
சிறு வணிகத்தை
சில்லரை வியாபாரத்தை
கல்லறையாக்கியது யார்?

கேள்விகள் பல…
விடை ஒன்றுதான்!
அது,
ஆள அருகதையற்ற
இந்த அரசு!

விவசாயத்தையும்
விவசாயிகளையும்
செங்கால் நாரைகளையும்
பைங்கால் தாவரங்களையும்
விரட்டிவிட்டு

வேதாந்தாவுக்கும்
அதானிக்கும்
விளைநிலங்களை
இரையாக்கும்
தனியார் மயம்
தாராள கார்ப்பரேட் மயம்தான்
நம் வாழ்வைக் கருக்கும்
வன்மம்.

அடங்கவில்லை!
ஆறு
நம் உதிரத்தில்
கலந்திருக்கிறது


அநீதிக்கு எதிராக
போராடு!
நம்
நதியின் வேகம்
பலவாய் பெருகும்!

படிக்க:
#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் !!

எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 30

மாக்சிம் கார்க்கி
ந்த நாளின் குறைப்பொழுதும் மங்கிய நினைவுகளாலும், தனது உடலையும் உள்ளத்தையும் பற்றியிருந்த களைப்பு மிகுதியாலுமே தாய்க்குக் கழிந்தது. அவள் முன்னால், அந்தக் குட்டி அதிகாரியின் உருவம், பாவெலின் தாமிர நிறமுகம், புன்னகைப் பூக்கும் அந்திரேயின் கண்கள் எல்லாம் நிழலாடின.

அவள் அறைக்குள்ளே அலைந்தாள், ஜன்னலருகே உட்கார்ந்தாள், தெருவை எட்டிப் பார்த்தாள், மீண்டும் எழுந்தாள். புருவத்தை மேலேற்றி வியந்தவாறு, சிறு சப்தம் கேட்டாலும் விழிப்புற்று, எங்கும் பார்த்தவாறு நடந்தாள், அல்லது எதையோ அர்த்தமற்றுத் தேடுவதுபோல் பார்த்தாள். அவள் தண்ணீர் குடித்தாள். தண்ணீர் அவளது தாகத்தையும் தணிக்கவில்லை. அவளது நெஞ்சுக்குள் தவிக்கும் ஏக்கத்தையும் தணிக்கவில்லை; குமைந்து நின்ற துயரத்தையும் அணைக்கவில்லை. அன்றையப் பொழுதே அவளுக்கு இருகூறாகத் தோன்றியது. அதன் முதற் பகுதிக்கு அர்த்தம் இருந்தது; இரண்டாம் பகுதியிலே அந்த அர்த்தமெல்லாம் வற்றிச் சுவறி வறண்டு போய்விட்டது. வேதனை தரும் சூன்ய உணர்ச்சி அவள் மனத்தில் மேலோங்கியது. அவள் தனக்குத்தானே ஒரு கேள்வியை எழுப்பிக்கொண்டாள்.

”இப்போது என்ன?”

மரியா கோர்கனவா அவளைப் பார்க்க வந்தாள். அவள் தன் கரங்களை ஆட்டிக்கொண்டு சத்தமிட்டாள், அழுதாள். உணர்ச்சிப் பரவசமானாள்; காலைத் தரையில் உதைத்தாள்; ஏதேதோ வாய்க்கு வந்தபடி திட்டினாள், சபதம் கூறினாள். யோசனை சொன்னாள். எதுவுமே தாயை அசைக்கவில்லை.

“ஆஹா! ஜனங்கள் எல்லோரும் போராடக் கிளம்பிவிட்டார்கள்! தொழிற்சாலை முழுவதுமே எழுச்சி பெற்றுவிட்டது. ஆமாம், தொழிற்சாலை முழுவதும்தான்!” என்று மரியாவின் கீச்சுக்குரல் கேட்டது.

“ஆமாம்” என்ற அமைதியோடு தலையை ஆட்டிக்கொண்டு சொன்னாள் தாய். ஆனால் அவளது கண்கள் கடந்த காலத்தை, பாவெலோடும் அந்திரேயோடும் மறைந்துபோன சகலவற்றையும் நினைத்து நிலைகுத்தி நின்றன. அவளால் அழ முடியவில்லை. அவளது இதயம் வற்றி மெலிந்து வறண்டு போயிற்று. அவளது உதடுகளும் வறண்டு போயின. அவளது வாயில் ஈரப்பசையே இல்லை. அவளது கரங்கள் நடுங்கின. முதுகெலும்புக் குருத்துக்கள் குளிர் உணர்ச்சி குளிர்ந்து பரவியது.

அன்று மாலை போலீஸ்காரர்கள் வந்தார்கள். அவள் அவர்களை வியப்பின்றிப் பயமின்றிச் சந்தித்தாள். அவர்கள் ஆரவாரமாக உள்ளே நுழைந்தார்கள். ஆத்ம திருப்தியும் ஆனந்தமும் கொண்டவர்களாக அவர்கள் தோன்றினார்கள். அந்த மஞ்சள் முக அதிகாரி தனது பல்லை இளித்துச் சிரித்துக்கொண்டே பேசினான்:

“சௌக்கியமா? நான் இப்போது சந்திப்பது மூன்றாவது முறை, இல்லையா?”

அவள் பேசவில்லை. வெறுமனே தனது வறண்ட நாக்கை உதடுகளின் மீது ஒட்டினான். அந்த அதிகாரி அவளுக்கு ஏதேதோ உபதேச வார்த்தைகளைச் சொன்னான். பேசுவதில் அவன் ஆனந்தம் காண்பதாக அவள் உணர்ந்தாள். ஆனால் அவனது பேச்சு அவளைப் பீதியுறச் செய்யவில்லை. அந்த வார்த்தைகள் அவளைப் பாதிக்கவே இல்லை. ஆனால் அவன், ”கடவுளுக்கும் ஜாருக்கும் உன் மகன் சரியான மரியாதை காட்டாது போனதற்கு, அதை நீ அவனுக்குக் கற்றுக் கொடுக்காமல் போனதற்கு, உன்னைத்தான் குற்றம் சொல்ல வேண்டும், அம்மா” என்று சொன்ன பிறகு மட்டும் அவள் கதவருகே தான் இருந்த இடத்தில் நின்றவாறே கம்மிய குரலில் பதில் சொன்னாள்.

படிக்க:
அம்பானிக்காக காத்திருந்த திருப்பதி பாலாஜி – ராமேஸ்வரம் ராமநாதன் – குருவாயூர் கிருஷ்ணன் !
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி !

”எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள். அவர்கள் அந்தக் கரடுமுரடான மார்க்கத்தில் செல்லும்போது நாங்கள் அவர்களைப் புறக்கணித்ததற்காக, எங்களைச் சரியானபடி அவர்கள் தண்டிப்பார்கள்.”

“என்ன?” என்று கத்தினான் அதிகாரி. “உரக்கப் பேசு.”

“நான் எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள் என்று சொன்னேன்” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய்.

அவன் ஏதேதோ கோபத்தோடும் விறுவிறுப்போடும் முணுமுணுத்துக் கொண்டான். ஆனால் அவனது வார்த்தைகள் அவளுக்குக் கேட்கவில்லை. மரியர் கோர்சுனவா அன்று நடந்த சோதனைக்கு ஒரு காட்சியாக அழைத்து வரப்பட்டாள். அவள் தாய்க்கு அடுத்தாற்போல் நின்றாள், எனினும் அவள் தாயைப் பார்க்கவில்லை. எப்போதாவது அந்த அதிகாரி அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டான். உடனே அவள் தலையைத் தாழ்த்திக்கொண்டு அந்த ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னாள்:

”எனக்குத் தெரியாது. எசமான்! நான் ஒன்றுமே தெரியாதவள். ஏதோ வியாபாரம் செய்து பிழைக்கிறேன். எதைப் பற்றியும் தெரியாத முட்டாள் ஜென்மம் நான்!”

”நாவை அடக்கு!” என்று மீசையைத் திருகிக்கொண்டே உத்தரவிட்டான் அந்த அதிகாரி. மீண்டும் அவள் தலைவணங்கினாள். ஆனால் குனிந்து வணங்கும்போது அவள் தன் மூக்கை மட்டும் அவனுக்கு நேராக நிமிர்த்திக் காட்டி, ”இவனுக்கு வேணும்” என்று அவள் தாயிடம் மெதுவாகச் சொன்னாள்.

பிறகு பெலகேயாவைச் சோதனை போடும்படி அவன் அவளுக்கு உத்தரவிட்டான். அந்த உத்தரவைக் கேட்டு அவள் விழித்தாள்; அதிகாரியை வெறித்துப் பார்த்தாள். பிறகு பயந்துபோன குரலில் சொன்னாள்:

“ஐயோ! எனக்கு இந்த விவகாரமெல்லாம் எப்படியென்று தெரியாதே, எசமான்!”

அவன் தரையை ஓங்கி மிதித்துக் கொண்டு அவளை நோக்கிச் சத்தமிட்டான். மரியா, தன் கண்களைத் தாழ்த்தினாள்; தாயிடம் மெதுவாகக் கூறினாள்,

“சரி அம்மா, நீ உன் பொத்தான்களைக் கழற்று. பெலகேயா நீலவ்னா?”

தாயின் ஆடையணிகளைத் தடவிச் சோதனை போட்டபோது, குருதியேறிச் சிவந்த அவளது முகத்தில் அவமான உணர்ச்சி பிரதிபலித்தது.

“பூ! நாய்ப்பிறவிகள்” என்று அவள் முணுமுணுத்துக் கொண்டாள்.

“நீ என்ன சொல்லுகிறாய்?” என்று அந்த அதிகாரி சோதனை நடந்த இடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கேட்டான்.

“இந்தப் பெண் பிள்ளைகள் விஷயம், எசமான்!” என்று பயந்த குரலில் முனகினாள் மரியா.

கடைசியாக அந்த அதிகாரி தான் காட்டிய தஸ்தாவேஜுகளில் தாயைக் கையெழுத்திடச் சொன்னான். அவளது அனுபவமற்ற கை பெரிய பெரிய மொத்தை எழுத்துக்களில் கையெழுத்திட்டது.

“பெலகேயா விலாசவா, ஒரு தொழிலாளியின் விதவை மனைவி.”

“நீ என்ன எழுதித் தொலைத்திருக்கிறாய்? இதை ஏன் எழுதினாய்?” என்று அந்த அதிகாரி பல்லை இளித்துக் கொண்டு கத்தினான். பிறகு சிறு சிரிப்புடன் சொன்னான்:

“காட்டுமிராண்டி ஜனங்கள்.”

அவர்கள் போய்விட்டார்கள். தாய் ஜன்னலருகேயே நின்றாள்; அவளது கைகள் மார்பின் மீது குறுக்காகப் படிந்து பற்றியிருந்தன. அவள் தன் கண்களை இமை தட்டாமல், எதையுமே காணாமல், வெறுமனே விழித்துக்கொண்டு நின்றாள். அவளது புருவங்கள் உயர்ந்திருந்தன. உதடுகள் இறுகியிருந்தன. கடைவாய்த் தாடைகள் இறுகி ஒன்றோடொன்று அழுத்திக் கடித்துக்கொண்டிருந்தன. அந்தக் கடியின் வேதனையையும் அவள் உணர்ந்தாள். மண்ணெண்ணெய் விளக்கில் எண்ணெய் வற்றி வறண்டது; திரி படபடத்துப் பொரிந்தது; சுடர் துடி துடித்தது. அவள் அதை ஊதியணைத்துவிட்டு, இருளிலேயே இருந்தாள். அவளது இதயத்தில் நிரம்பியிருந்த சூன்யமயமான ஏக்க உணர்ச்சியால், அவளது இருதயத் துடிப்புக் கூடத் தடைப்பட்டது. அப்படியே அவள் வெகுநேரம் நின்று கொண்டிருந்தாள். கண்களும் கால்களும் வலியெடுக்கும் வரை நின்றாள். மரியா ஜன்னலருகே வந்து போதை மிகுந்த குரலில் கூப்பிடுவதை அவள் கேட்டாள்.

”பெலகேயா, தூங்கிவிட்டாயா? பாவம், உனக்கு இப்படித் துன்பம் வரக்கூடாது. சரி, தூங்கு!”

தாய் தன் உடைகளை மாற்றாமலேயே போய்ப் படுத்துக்கொண்டாள். படுத்த மாத்திரத்திலேயே ஆழமான குளத்துக்குள் அமிழ்ந்து போவது போன்ற ஆழ்ந்த தூக்கத்துக்கு ஆளானாள்.

அவள் கனவு கண்டாள். நகருக்குச் செல்லும் ரஸ்தாக்கரையில், சேற்றுப் பிரதேசத்துக்கு அப்பால் தெரியும் ஒரு மஞ்சள் நிறமான மணற் குன்றிற்கருகே அவள் நடந்து சென்று கொண்டிருந்தாள். தொழிலாளர்கள் மண்வெட்டி எடுக்கும் ஒரு செங்குத்தான குன்றின் ஓரத்தில் பாவெல் நின்றுகொண்டிருந்தான். அவன் அந்திரேயின் அமைதியும் இனிமையும் நிறைந்த குரலில் பாடிக்கொண்டிருந்தான்,

துயில் கலைந்து அணியில் சேர
விரைந்து வாரும் தோழர்காள்!

அவள் தன் நெற்றியை அழுத்திப் பிடித்தவாறு, தன் மகனைப் பார்த்துக்கொண்டே அந்தக் குன்றைக் கடந்து சென்றாள். நீலவானின் பகைப்புலத்தில் அவனது உருவம் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் தோன்றியது. அவள் அவனருகே செல்ல நாணிக் கூசினாள். ஏனெனில் அவள் கர்ப்பமுற்றிருந்தாள்; அவளது கைகளில் இன்னொரு குழந்தை இருந்தது. அவள் மேலும் நடந்தாள், நடந்து கொண்டே வந்து, கடைசியில் குழந்தைகள் பந்து விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்துக்கு வந்து சேர்ந்தாள். அங்கு எத்தனையோ குழந்தைகள் இருந்தார்கள். அவர்கள் வைத்து விளையாடிய பந்து சிவப்பு நிறமாயிருந்தது. அவளது கையிலிருந்த சிசு அவள் கையை விட்டுத் தாவிக் குதித்து அந்தப் பந்தைப் பிடிக்க எண்ணியது. அழத் தொடங்கியது. அவள் அதற்குப் பால் கொடுத்தாள். திரும்பிப் பார்த்தாள். இப்போதோ அந்தக் குன்றின் மீது துப்பாக்கிச் சனியன்களை அவளது மார்புக்கு நேராக நீட்டியவாறு சிப்பாய்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவள் உடனே விடுவிடென்று அந்த மைதானத்தின் மத்தியிலிருந்த தேவாலயத்துக்கு ஓடி வந்தாள். அந்தத் தேவாலயம் வெண்மை நிறமாகவும், மேகங்களால் செய்யப்பட்டது போல் அளவிறந்த உயரத்துக்கு மேல் நிமிர்ந்து நிற்பதாகவும் இருந்தது. அங்கு யாரையோ சவ அடக்கம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தச் சவப்பெட்டி நீளமாகவும் கறுப்பாகவும் இறுக மூடியதாகவும் இருந்தது; மதகுருவும், பாதிரியாரும் வெள்ளைநிற அங்கிகளைத் தரித்தவாறு அங்குமிங்கும் உலவினார்கள். பாடினார்கள்:

உயிர்த்தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார்
உயிரிழந்த கிறிஸ்து நாதர்……

பாதிரியார் பரிமள கள்பங்களைத் தூவியபோது, அவளைப் பார்த்துத் தலைவணங்கிப் புன்னகை செய்தார். அவரது தலைமயிர் செக்கச் சிவந்து பிரகாசித்தது. அவரது உற்சாகக் களைபொருந்திய முகம் சமோய்லவின் முகம் போலிருந்தது. அந்தத் தேவாலயத்தின் கோபுரக் கலசங்களிலிருந்து சூரிய கிரணங்கள் விழுந்தன. அந்தக் கிரணங்கள் வெள்ளை வெளேரெனக் கீழ்நோக்கி கம்பளம்போல் விழுந்தன.

தேவாலயத்தின் இருபுறத்துப் பீடங்களிலிருந்தும் பையன்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்:

உயிர்த்தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார்!
உயிரிழந்த கிறிஸ்து நாதர்……

மண்ணெண்ணெய் விளக்கில் எண்ணெய் வற்றி வறண்டது; திரி படபடத்துப் பொரிந்தது; சுடர் துடி துடித்தது. அவள் அதை ஊதியணைத்துவிட்டு, இருளிலேயே இருந்தாள். அவளது இதயத்தில் நிரம்பியிருந்த சூன்யமயமான ஏக்க உணர்ச்சியால், அவளது இருதயத் துடிப்புக் கூடத் தடைப்பட்டது.

தேவாலயத்தின் மத்தியில் வந்து சட்டென்று நின்றவாறு அந்த மதகுரு திடீரெனக் கத்தினார்.

”அவர்களைக் கைது செய்!” மதகுருவின் வெள்ளை நிற அங்கிகள் மறைந்துவிட்டன. அவரது மேலுதட்டில் வெள்ளி நிற மீசை தோன்றியது. எல்லோரும் ஓடத் தொடங்கினார்கள், பாதிரியாரும் கூட பரிமளப் பொடியை ஒரு மூலையிலே எறிந்துவிட்டு, தன் தலையை ஹஹோல் பற்றிப் பிடித்துக் கொள்வது மாதிரி தமது தலையைப் பிடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தார். ஓடிச் செல்லும் ஜனங்களின் காலடியில் தன் கையிலிருந்த குழந்தையை நழுவ விட்டுவிட்டாள் தாய். அவர்களோ அதை மிதித்து நசுக்காது விலகி விலகி ஓடினார்கள். அந்தக் குழந்தையின் திகம்பரக் கோலத்தையே பயபீதி நிறைந்த கண்களோடு அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு முழங்காலிட்டு, அவர்களை நோக்கிக் கத்தினாள்:

“குழந்தையை உதறிச் செல்லாதீர்கள்! இவனையும் உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்!”

உயிர்த்தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார்!
உயிரிழந்த கிறிஸ்து நாதர் …….

என்று சிரித்துக் கொண்டும், கைகளைப் பின்புறமாகக் கோத்தவாறும் பாடத் தொடங்கினான் ஹஹோல்.

அவள் குனிந்து குழந்தையை எடுத்தாள். மரக்கட்டைகளைப் பாரம் ஏற்றிய ஒரு வண்டியில் அந்தக் குழந்தையை வைத்தாள். அந்த வண்டிக்கு அருகே சிரித்துக் கொண்டே மெதுவாக நடந்து வந்தான் நிகலாய்.

“அப்படியானால் அவர்கள் எனக்குக் கொஞ்சம் கடினமான வேலையைத்தான் கொடுத்துவிட்டார்கள்” என்றான் அவன்.

தெருக்கள் எல்லாம் அசுத்தமாயிருந்தன. வீட்டு ஜன்னல்களிலிருந்து ஜனங்கள் எட்டிப்பார்த்தார்கள், கூச்சலிட்டார்கள். சீட்டியடித்தார்கள், கைகளை வீசினார்கள். வானம் நிர்மலமாயிருந்தது. சூரியன் பிரகாசமாகக் காய்ந்தது; எங்குமே நிழலைக் காணோம்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

அம்பானிக்காக காத்திருந்த திருப்பதி பாலாஜி – ராமேஸ்வரம் ராமநாதன் – குருவாயூர் கிருஷ்ணன் !

பாரதத் தாயின் புதல்வர்கள் இருவர் நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ஜண்டினா முதல் அண்டார்டிகா வரை பறந்து பறந்து செல்ஃபி எடுக்கும் கையோடு இந்தியாவின் ‘செல்ஃப் ரெஸ்பெக்டை’ (சுயமரியாதை) விட்டுக் கொடுத்து பன்னாட்டு நிறுவனங்களை வருந்தி அழைக்கும் மோடி முதல் புதல்வர்.

ரிலையன்சின் பங்குச் சந்தை உயரத்திற்காகவும், ஜியோவின் அடுத்தடுத்த ஆஃபர்களுக்காகவும் விண்ணில், மண்ணில், டிஜிட்டலில் சுற்றிக் கொண்டிருக்கும் முகேஷ் அம்பானி இரண்டாம் புதல்வர்!

இந்த பரபரப்புக்கிடையிலும் தன் பசிக்கு களி கொடுத்த தாயை நினைவுகூர்கிறார் மோடி. பில்லியனராக இருந்தாலும் தனது அன்பு மகள் இஷா அம்பானியின் திருமணத்திற்காக ஒரு தந்தை என்ற முறையில் பார்த்து பார்த்துச் செய்கிறார் முகேஷ் அம்பானி.

தனது நீண்ட கால நண்பரும், தொழிலதிபருமான ஆனந்த் பிரமோலை வரும் டிசம்பர் மாதத்தில் மணம் செய்ய இருக்கிறார் இஷா அம்பானி. ஆனந்த் பிரமோலின் தந்தையான அஜய் பிரமோல், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு தரகு முதலாளி. நிதி, மருந்து, ரியல் எஸ்டேட், உடல்நலம், கண்ணாடி என அவர் கால் வைக்காத துறையே இல்லை. அதனால்  4.5 பில்லியன் டாலர் – ஏறக்குறைய 31,500 கோடி ரூபாய்களுக்கு அதிபதி.

பிறகு அம்பானியின் மகள் நட்பு கொள்ளும் தகுதிக்கு இது கூட இல்லையென்றால் எப்படி? மேலும் இருகுடும்பங்களும் நான்கு தலைமுறையாக பழகிய குடும்பங்கள்!

மும்பை சித்தி வினாயக் கோவிலில் அம்பானி குடும்பத்தினர். கையில் இருப்பது இலட்ச ரூபாய் மதிப்புள்ள அழைப்பிதழ்!

அம்பானி மகளின் காதலை மட்டுமல்ல அம்பானியின் இறை வணக்கத்தை பெறும் தகுதியும் ஒரு பில்லியனர் கடவுளுக்குத்தானே இருக்கும்? தனது மகளின் திருமண அழைப்பிதழை மேன்மக்களுக்கு கொடுப்பதற்கு முன், கடவுள்களுக்கு கொடுத்து அழைப்பு விடுவிக்கிறது அம்பானி குடும்பம். முதல் அழைப்பு மும்பையில் இருக்கும் சித்திவினாயக் கோவிலில் இருக்கும் பிள்ளையாருக்கு கிடைத்திருக்கிறது.

படிக்க:
♦ செத்தபின்னும் திருடுவார் திருட்டுபாய் அம்பானி !
♦ சுயமோகி மோடி – கேலிச்சித்திரங்கள் !

இந்த பிள்ளையார் ஏதோ நம்மூரில் இருக்கும் அரசமரத்து அய்யோ பாவம் பிள்ளையார் இல்லை. மும்பையிலேயே பணக்கார கோவில் எனும் பெருமையுடையவர். பாலிவுட் நடிகர்கள், பெரும் அரசியல் தலைவர்களை வாடிக்கையாளராக கொண்டவர் இந்த சித்தி வினாயக். ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகியான டிம் குக் என்பவரே 2016-ம் ஆண்டில் இக்கோவிலின் காலை வழிபாட்டில் கலந்து கொண்டிருக்கிறார் என்றால் பாருங்கள்!

ஐஃபோன் எனும் முன்னணி செல்பேசியின் பின்னே இத்தகைய அர்ப்பணிப்புள்ள ஆன்மீக மார்க்கெட் இருந்தே தீருமல்லவா?

ஆனந்த் பிரமோலின் – இஷா அம்பானி

இத்தாலியில் பேரழகு சொர்க்கமாக கருதப்படும் கோமோ ஏரிக்கரையில்தான் இஷா அம்பானியின் நிச்சயதார்த்தம் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இத்தாலியில் நடந்தாலும் இந்தியா பார்ப்பனிய சடங்கு முறைகள் ஒன்று கூட விடாமல் எல்லாம் கலாச்சாரப் படி நடந்ததாம். ராஜ பரம்பரை என்பதால் ராஜா ராணி காஸ்ட்யூமில், சிம்மாசனத்தில் ஜோடிகள் அமர்ந்து நடந்த அந்த விழா மூன்று நாட்கள் நடந்தது.

தற்போது மும்பை பிள்ளையாரிடம் திருமண அழைப்பு விடுத்த கையோடு அம்பானி இல்லத் திருமண அழைப்பிதழைப் பெறும் பாக்கியம் திருப்பதிக்குச் செல்கிறது. மூவாயிரம் கோடி ரூபாயை 2018-ம் ஆண்டில் வருவாயைப் பெற்றவர் திருப்பதி பாலாஜி! அந்தபடிக்கு இருவரும் மனமொத்த கடவுள் – பக்தர்தான்

கடந்த செவ்வாய் அன்று 27.11.2018 திருமலை தேவஸ்தானத்தில் அழைப்பிதழை வைக்கிறார் அம்பானி. தங்க ஜரிகைகளாள் அலங்கரிக்கப்பட்ட அந்த அழைப்பிதழின் அடக்கச் செலவு ஒரு இலட்சத்திற்கும் மேல்.  கஜாவில் காலியான தென்னை மரத்திற்கு நிவாரணம் ரூபாய் 500 அல்லது 1000 என தள்ளாடுகிறது.

கஜா புயலில் அரசு நிவாரணம் வேகமெடுக்க வேண்டும் என்று டிவிட்டரில் அட்வைசு செய்யும் உலக நாயகன் கமல் வேறு இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறார். காலஞ்சென்ற திருபாய் அம்பானி 15,000 ரூபாய் வாடகைக்கு ஒரு அறை எடுத்து இந்தியா எனும் மாபெரும் நாட்டையே வணிகத்தில் சிறைபடுத்திய வரலாற்றை நினைவுகூர்ந்து தனது மையக் கட்சியும் அப்படி வளருமென்றவர் இந்தக் கமலஹாசன்.

அஜய் பிரமோல் – முகேஷ் அம்பானி குடும்பத்தினர் – இரண்டு பில்லியனர் குடும்பங்களின் சங்கமம்!

திருப்பதி தேவஸ்தானத்தில் இஷா அம்பானியின் திருமண அழைப்பிதழை வைத்த முகேஷ் பிறகு ஹெலிகாப்டரில் பறந்து கேராளவின் குருவாயூருக்குச் செல்கிறார். பதினைந்தே நிமிடத்தில் அழைப்பிதழ் கொடுத்து கிருஷ்ணனிடம் நலம் விசாரித்தவர் பிறகு ராமேஸ்வரத்திற்கு பறக்கிறார். பகவனாகவே இருந்தாலும் அம்பானியின் கால்ஷீட் கால் மணிநேரம்தான்.

அங்கே அம்பானியின் தரிசனத்திற்காக காத்திருப்பவர் ராமநாத சுவாமிகள்! முகேஷ் அம்பானி சுவாமிகள் வந்த பிறகு ராமேஸ்வரம் கோவில் அர்ச்சகர்கள் அவருக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தினார்கள். இன்றைக்கு மேற்படி நான்கு கோவில் பூசாரிகளின் தட்டில் குறைந்தது ஒரு இலட்ச ரூபாய் காணிக்கை விழுந்திருக்கும்.

ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதியில் அழைப்பிதழை வைத்து திருமணத்திற்கு அழைத்தார் அம்பானி. அருகாமையில் அரசு நிவாரணம் வரவில்லையே என டெல்டா மாவட்டங்களில் மக்கள் சாலையில் அமர்ந்திருக்கின்றனர். இருந்தாலும் என்னப்பா ராமநாதா, அம்பானிக்காக அசடு வழிய நிற்கிறாயே அய்யோ பாவம் மக்களுக்காக கொஞ்சம் அருள் பாலிக்க கூடாதா என்று கவிபாடுவதற்கு இன்று தமிழ்ப் புலவர்கள் இல்லை.

ஒரு இலட்ச ரூபாய் அழைப்பிதழை வைத்து மனமுருகி திருமணத்திற்கு அழைத்த கையோடு ராமநாத சுவாமி கோவிலின் இரண்டாம் பிரகாரத்தின் மராமத்துப் பணிச் செலவை முழுமையாக ஏற்றுக் கொள்வதாக கோவில் நிர்வாகிகளிடம் அம்பானி கூறியிருக்கிறார். இதற்கு நன்றி தெரிவித்து தெர்மோகோல் செல்லூர் ராஜு இன்று பலூன் பறக்க விடுவது உறுதி.

இதற்கு மேல் ஒரு விசயம் இருக்கிறது. தினமும் பகல் 1 மணிக்கு சாத்தப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலின் நடை, முகேஷ் அம்பானியின் வருகைக்காக கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்து வைக்கப்பட்டது.

இது தவறு என்கிறீர்களா? பாரதத்தாயின் இரண்டாம் புதல்வர் தனது பிசியான ஒரு நாள் நிகழ்வில் நான்கு கடவுள்களை பார்த்து அழைப்பிதழ் வைத்து அழைப்பது என்பது சாதாரணப்பட்டதா? அதற்கு வேலை வெட்டி இல்லாமல் உண்ட கட்டி சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் ராமநாதன் ஒரு மணி நேரம் கழித்து தூங்கப் போவதால் ஒன்றும் குடிமூழ்கிவிடாது. அதுதான் ஏற்கனவே கஜா புயலில் மூழ்கிவிட்டதே!

ராமேஸ்வரம் ராமநாதனைப் போல வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் எச்ச ராஜாவும், ஆன்மீக கூலிப்படையாக இயங்கி வரும் அர்ஜூன் சம்பத்தும் இந்த ஒரு மணிநேர தாமத நடை சாத்தை காணவில்லையா? ஜனவரி புத்தாண்டில் நள்ளிரவு 12 மணிக்கு இந்து கோவில்கள் திறக்கப்பட்டு பூஜை செய்வதை ஒவ்வொரு ஆண்டும் எதிர்க்கும் இந்த பக்தர்கள் அம்பானிக்காக ராமநாதன் காத்திருந்ததை லேசாக ஏன் எடுத்துக் கொள்கிறார்கள்? இல்லையென்றால் அம்பானி கொல்வார் என பயமா?

அதானியால் ஸ்பான்சர் செய்யப்பட்டு, அம்பானியால் பரமாரிக்கப்படும் மோடி அவர்களே முகேஷ் அம்பானி என்றால் பயபக்தியுடன் அணுகும் போது அர்ஜூன் சம்பத், எச்.ராஜா போன்ற சில்லுண்டிகளுக்குச் சொல்லவா வேண்டும்?

தில்லியில் விவசாயிகளின் நிவாரணத்திற்காக அய்யாக்கண்ணு போராடிக் கொண்டிருந்த போது விதேசி தேசத்தில் பிரியங்கா சோப்ராவோடு உரையாடல் நிகழ்த்தியவர் மோடி. அதில் பிரியங்கா எப்படி குட்டைப் பாவாடையோடு பிரதமர் மோடி அவர்களை சந்திக்கலாம் என சங்கிகள் குட்டைக்கு எதிராக ஒரு நெட்டை இயக்கம் எடுத்தனர்.

தற்போது அதே பிரியங்கா சோப்ரா அம்பானியின் செல்ல மகள் திருமணத்தன்று நாட்டியமாட இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டியத்தை முகேஷ் அம்பானிக்கு அருகில் அமர்ந்து பிரதமர் மோடி பார்க்க இருக்கிறார். ஆதலால் எச்சையும், அச்சையும் கடவுளைக் காக்க வைத்த அம்பானி என்று டிவிட் போடுவதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது!

படிக்க:
♦ அண்ணலும் நோக்கினான் அம்பானியும் நோக்கினான் !
♦ அம்பானி மீம்சை தூக்க வைத்த அம்பானி சென்சார் போர்டு !

திருமணம் முடிந்த கையோடு அம்பானி மகள் குடித்தனம் நடத்துவதற்காக மும்பையில் அரபிக் கடலை பார்த்த வாறு இருக்கும் வோர்லி பகுதியில் ஐந்து மாடி பங்களாவை வாங்கியிருக்கிறார் மாமனார் அஜய் பிரமோல். இந்த மாளிகையை அவர் ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்திடமிருந்து 2012-ம் ஆண்டில் வாங்கியிருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் என்பதால் அவர் ட்ரம்ப் டவர்ஸ் நிறுவனத்திலிருந்து கூட வாங்கலாம். அது என்ன ட்ரம்ப் டவர்ஸ்?

அமெரிக்க அதிபரும் தொழிலதிபருமான டொனால்ட் ட்ரம்பின் ரியல் எஸ்டேட் நிறுவனம்தான் ட்ரம்ப் டவர்ஸ்! அவர் அதிபரான பிறகு பிராண்ட் மதிப்பு கூடியிருப்தால் இந்தியாவில் பூனே, சண்டிகார் நகரங்களில் அந்நிறுவனம் அடுக்ககங்களை கட்டி வருகிறது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்ன தெரிகிறது? இந்தயாவின் முதல் பணக்காரர் இந்தியாவின் முதல் பணக்காரக் கடவுளை சந்தித்தார். இந்தியாவின் முதல் நிலை பணக்காரர்களுக்காக ஓடியாடி வேலை செய்யும் மோடி திருமணத்திற்கு வருவார். முதல் நிலை பணக்காரர்களுக்காக மட்டும் நடனமாடும் முதல் நிலை நடிகரான பிரியங்கா சோப்ரா திருமணத்தன்று ஆடுகிறார். முதல் நிலை பணக்காரர்களுக்கான மும்பை வோர்லி பகுதியில் ஒரு மாளிகை இளம் தம்பதியினருக்கு காத்துக் கொண்டிருக்கிறது. முதல் நிலை பணக்காரர்கள் தமது குடும்ப நிகழ்வுகளை நடத்தும் இத்தாலியில்தான் நிச்சயதார்த்தம் நடத்துகிறது.

ஆகவே இரண்டு மூன்று என்ற எந்த நிலையுமற்ற நீங்கள் இந்த திருமண நிகழ்வு குறித்து ஏன் படிக்கிறீர்கள்?

– இளநம்பி

மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி !

மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டிக் கொள்ள அனுமதியளித்துள்ளது மத்திய அரசு. இதன்மூலம் ஏற்கெனவே கஜாவால் துவண்டு போயுள்ள காவிரி டெல்டா மாவட்டங்களை ஒட்டு மொத்தமாக ஒழிக்கலாமென இறங்கியுள்ளது மோடி அரசு.

மேட்டூர் அணை அருகே பாய்ந்து வரும் காவிரி

கர்நாடகாவில் உள்ள தலைக்காவிரி பகுதியில் உருவாகிறது காவிரி ஆறு. அங்கிருந்து கிளம்பி வரும் காவிரி, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வழியாக ஓடி கடலில் கலக்கிறது. இந்த 4 மாநிலங்களுக்கும் காவிரியின் மீது உரிமை உண்டு. இதனை சர்வதேச நீர் பங்கீட்டு விதிமுறைகளே அங்கீகரித்திருக்கின்றன.

ஆனால், கர்நாடகம் எப்போதுமே, தமிழகத்துக்கு முறைப்படி வழங்க வேண்டிய பங்கை வழங்காமல் மழையைக் காரணம் காட்டி நீர் திறந்து விட மறுத்துவருகிறது .

இந்நிலையில், காவிரி ஆற்றின் வழித்தடத்தில் ஒகேனக்கல்லில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கர்நாடகத்தின் மேக்கேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு அந்த மாநில அரசு 1967-ம் ஆண்டிலிருந்தே அவ்வப்போது முயற்சிகள் செய்து வந்தது.

படிக்க:
♦ அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?
♦ காவிரி : தொடருகிறது வஞ்சனை !

முக்கியமாக, 2011-2013 காலகட்டத்தில் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து மனு செய்து வந்துள்ளது. இதனை மத்திய அரசு அனுமதிக்காததற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருந்தன. முதலாவதாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இத்திட்டத்திற்கு காவிரி தீர்ப்பாயம் அனுமதியளிக்கவில்லை. இரண்டாவதாக, அடர்ந்த காட்டில் 2,500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பை இந்தத் திட்டம் மூழ்கடிக்கும் மற்றும் வனவிலங்குகளைப் பாதிக்கும் என்பது போன்ற பல காரணங்களால் வனத்துறையும் சுற்றுச்சூழல் துறையும் அனுமதியளிக்கவில்லை.

அதன் பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில், நவம்பர் 11-ம் தேதியன்று அன்றைய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், கரும்பு விவசாயத்தை விரிவுபடுத்தவும், பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்கும், மின்சாரத் தேவைக்கும் மேக்கேதாட்டுவில் கர்நாடக வனப்பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் சமநிலை நீர்த்தேக்கம் கட்டவிருப்பதாகத் தெரிவித்தார்.

மொத்தம் 66 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த அணையை அமைக்கும் முயற்சியில் அன்றைய சித்தராமையா அரசு இதனை மிகத்தீவிரமாக செயல்படுத்தத் தொடங்கியது.

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தருமபுரியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

இதற்கு அப்போதே தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தமிழகம் முழுவதும் புரட்சிகர அமைப்புகளும் ஜனநாயக சக்திகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா மாவட்டத்து மக்கள் கடையடைப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அடுத்த சில ஆண்டுகளில் அவ்வப்போது மேக்கேதாட்டு அணை குறித்து பேசி வந்தது கர்நாடக அரசு. உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு நிலுவையில் இருந்ததால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதத்தில் காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கியது உச்சநீதிமன்றம். தமிழகத்தை வஞ்சிக்கும் விதமான தீர்ப்பையே வழங்கியது. அத்தீர்ப்பில் கூடுதலாக, ”காவிரியின் குறுக்கே தமிழகத்தின் அனுமதி இல்லாமல் கர்நாடகா புதிய அணைகள் கட்டக்கூடாது. இந்த தீர்ப்பின்படி அடுத்த 15 ஆண்டுகளுக்கு நீர்பங்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.

காவிரி நதிநீர் தொடர்பாக ஏற்கனவே கொடுக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும், இடைக்கால உத்தரவுகளையும் கழிப்பறைக் காகிதமாக மதித்த கர்நாடக அரசு, இந்தத் தீர்ப்பை மட்டும் மதித்துவிடவா போகிறது? இல்லையேல் தமது தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்காததைக் கண்டுங்காணாமல் நகர்ந்து சென்ற உச்சநீதிமன்றத்திற்கு திடீரென சொரணை வந்துவிடத்தான் போகிறதா ? எதுவும் நடக்கப் போவதில்லை.

படிக்க:
♦ ரிசர்வ் வங்கியா ? ரிலையன்ஸ் வங்கியா ?
♦ டி.சி.எஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு குறைந்த ஊதியத்தில் 28,000 கூடுதல் அடிமைகள் !

அந்த தைரியத்தில்தான், மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளிக்குமாறு, மத்திய அரசின் நீர்வளத்துறை, வனத்துறை ஆகியவற்றிடம் கடந்த 2018, செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் செயல்திட்ட வரைவு அறிக்கை மற்றும் கோரிக்கை மனுவை அளித்தது கர்நாடக அரசு. இதில் மேக்கேதாட்டுவில், ரூ 5,912 கோடியில் அணையும் சுமார் 400 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையமும் அமைப்பதற்கான திட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டது.

மோடியை சந்தித்த குமாரசாமி

இதனைத் தொடர்ந்து 10, செப்டம்பர், 2018 அன்று கர்நாடக முதல்வர் குமாரசாமி டில்லி சென்று மோடியை சந்தித்து மேக்கே தாட்டு அணை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படியும், இத்திட்டத்தை ‘தேவையில்லாமல்’ எதிர்க்கும் தமிழக அரசை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் படியும் கோரிக்கை வைத்துச் சென்றிருக்கிறார். அதாவது டில்லி எஜமானரிடம் அவரது தமிழக அடிமையை தமக்கு ஒத்துழைக்க பணிக்குமாறு கோரிக்கை வைத்துவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் கொடுக்கப்பட்ட மேக்கேதாட்டு அணைக்கான செயல்திட்ட வரைவு அறிக்கையை அங்கீகரித்து கர்நாடக அரசு அணைகட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கான அனுமதி கடிதத்தை நேற்று (27-11-2018) கர்நாடக அரசிற்கு அனுப்பியது மோடி அரசு. மேலும் இது குறித்து விரிவான ஆய்வறிக்கை தயாரிக்குமாறும் பச்சைக் கொடி காட்டியுள்ளது.

தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை கர்நாடக மாநிலம் இந்துத்துவ சக்திகளுக்கு ஒரு முக்கியமான மாநிலம் என்பதாலும் இந்த ஓரவஞ்சனை அரங்கேறுகிறது.

*****

மேக்கேதாட்டு அணைத்திட்டம் பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காகவே கொண்டு வரப்படுவதாக கர்நாடக அரசு கூறுவது முதல் பொய். பெங்களூருவில் ஏற்கனவே குடிநீரைத் தனியார் வசம் ஒப்படைக்கும் வேலைகளைச் செய்து வரும் கர்நாடக அரசுக்கு, குடிநீர் வியாபாரத்தில் தனியார் கல்லா கட்ட தங்குதடையின்றி தண்ணீர் வேண்டும் என்பதற்காகவும், கரும்புப் பாசனத்தை விரிவுபடுத்தவும்தான் அணை கட்டத் துடிக்கிறது.

பெங்களூரு சுற்றி வளர்ந்து வரும் நீர்நிலை பொழுதுபோக்குத் தளங்கள்

பெங்களூரு மாநகர எல்லைக்குள் மட்டும் சிறிதும் பெரிதுமாக ,2789 ஏரிகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் பெங்களூருவில் இருந்த ஏரிகள் பாதியாகச் சுருங்கி உல்லாச, ஆடம்பர விடுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றிற்கு நீர்வரும் வழிகள் அனைத்தும்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 99% ஏரிகள் சாக்கடைகளாகவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கழிவுகள் கொட்டும் இடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

இன்னும் சொல்லப் போனால் இந்தியாவிலேயே குடிநீரை வீணடிக்கும் நகரங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது பெங்களூரு. நாள்தோறும் காவிரியில் இருந்து எடுத்து பெங்களூருக்கு விநியோகம் செய்யப்படும் சுமார் 140 கோடி லிட்டரில், சுமார் 52% அங்கு வீணடிக்கப்படுகிறது.

அங்கு பயன்படுத்தப்படும் குடிநீரிலும் பெருமளவு மால்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, கேளிக்கை விடுதிகளுக்குமே செலவிடப்படுகிறது. ஆனால் இனி அணையைக் கட்டி அதிலிருந்து எடுக்கப்படும் நீர்தான் பெங்களூருவின் தாகத்தைத் தீர்க்கவிருப்பதாகவும், அதனைத் தமிழகம்தான் தடுத்து வருவதாகவும் கர்நாடக மக்களிடையே பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறது.

படிக்க:
♦ மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!
♦ காவிரி டெல்டாவை அழிக்க வரும் மேக்கே தாட்டு அணை

இந்த விவகாரங்கள் எதுவும் மத்திய அரசுக்கோ, உச்சநீதிமன்றத்திற்கோ தெரியாத விசயங்கள் அல்ல. இந்த சூழலின் பின்னணியில்தான் மேக்கேதாட்டு அணைக்கு மோடி அரசு அளித்திருக்கும் ஒப்புதலை உற்றுநோக்க வேண்டும்.

மீத்தேன் திட்டத்தின் மூலம் டெல்டாவை மொட்டையடிக்க முயற்சித்த பா.ஜ.க. அரசு, மக்கள் எதிர்ப்பு தொடர்ச்சியாக இருந்ததை அடுத்து சிறிது நாட்கள் பிரச்சினையை கிடப்பில் போட்டு, மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியது. இதனையடுத்து கதிராமங்கலம், நெடுவாசல் என டெல்டா மக்கள் தொடர்ந்து போராடத் துவங்கினர். இன்றும் போராடி வருகின்றனர்.

தமக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சங்க பரிவாரக் கும்பலுக்கும்  “Go Back ” சொன்ன தமிழகத்தைக் காவு வாங்க காத்துக் கொண்டிருக்கும் மோடி

எப்போதாவது வரும் காவிரியால் அரை உயிருடன் இருந்து வந்த டெல்டா விவசாயம், உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத்தனமான தீர்ப்பால், கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது வீசிய கஜா புயல் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஒட்டு மொத்தமாக பிடுங்கி வீசியெறிந்துவிட்டது. மரணப் படுக்கையில் இருக்கும் டெல்டா விவசாயிகளின் வாழ்க்கை தழைப்பதற்கு இருந்த ஒரே வாய்ப்பு, காவிரியில் நீர் வந்தால் மட்டுமே. அதுவும் கூட ஓரளவு பொருளாதார பின்புலமுள்ள விவசாயிகளுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்தது.

டெல்டா விவசாயத்தின் இறுதிமூச்சை நிறுத்துவதற்காகவே இவ்வளவு நாள் கிடப்பில் கிடந்த இத்திட்டத்திற்கு, உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி ஒப்புதல் கொடுத்துள்ளது மோடி அரசு. தமிழகத்தின் இதயமான டெல்டாவை கருக்கத் துடிக்கும் பாஜக சங்கபரிவாரக் கும்பலை தமிழகமே ஒன்றுதிரண்டு விரட்டியடிக்காமல் இதற்குத் தீர்வில்லை.

கஜா புயலில் கடலோடிகளின் வாழ்க்கை | காணொளி

ஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் கடற்புறத்தை ஒட்டி அமைந்துள்ள மீனவர் கிராமம் ஏரிப்புறக்கரை. நாட்டுப்படகில் கடலுக்குச் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் இவர்கள். கடற்கரைப் பகுதியில் தங்கள் படகுகளை நிறுத்த வாய்ப்பில்லாத நில அமைப்பின் காரணமாக, கடற்கரையையொட்டி வாய்க்கால் அமைத்துக் கொடுத்திருக்கிறது, அரசு.

இந்த வாய்க்காலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் நெடுந்தொலைவுக்கு அப்பால் தலைக்குப்புற தூக்கி வீசியெறியப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான வலைகள் சேற்றில் புதைந்து சிதைந்திருக்கின்றன. படகுகள் உடைந்து சேதாரமாகியிருப்பதோடு, படகில் பொருத்தப்பட்டிருந்த என்ஜின் முழுதும் சேறு அப்பிக்கிடக்கிறது.

மீனவர் குமாரசாமி.

“1952 ல இதேமாதிரி புயல் வந்துச்சி. அதுமாதிரிதான் இப்பவும் அழிவு வந்துருக்கு. கடல் சேறு வீட்டுக்குள்ள கிடக்கு. கட்டுன துணிமணிதான். வேற எதுவுமில்லை. இன்னிக்கு நேத்தா, நான் கடலுக்கு வந்து 50 வருசத்துக்கு மேல ஆகுது. அன்றாடம் கடல் அலையோடதான் வாழ்ந்துட்டுருக்கோம். தெம்பிருந்தா கரை சேரலாம். இல்லையா, மூனுநாளக்கி அப்புறம் எங்கனாச்சும் உடல் உப்பி கரை ஒதுங்க வேண்டிதான்.’’ என்கிறார், 76 வயதான மீனவர் குமாரசாமி.

கஜா புயலால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்குகிறார், இப்பகுதி மீனவர் சங்கர். ‘’மூனாவது நாள்தான் மறியலே பண்ணுனோம். அதுக்கப்புறம்தான் மீடியாவே உள்ள வந்துச்சி. அரசாங்கத்துக்கும் பாதிப்பு தெரிஞ்சிச்சி. அங்க ஒக்காந்துகிட்டு எல்லாம் பாத்துட்டோம் செஞ்சிட்டோம்னு பேசிட்டிருக்காங்க. மீன்வளத்துறை அமைச்சர் எந்த மீனவக் கிராமத்துல போயி பாதிப்பக் கேட்டாரு? சொல்லுங்க பார்ப்போம். எல்லாமே மேலோட்டமா பேசிட்டிருக்காங்க.

மீனவர் சங்கர்.

அதிகம் போனா, இன்னும் ஒருவாரத்துக்கு மத்தவங்க கொடுக்கிறத சாப்டுட்டு இருக்கலாம். அதுக்கு அப்புறம்? இன்னைய நெலமையில எந்த மீனவனும் தொழிலுக்கு போக முடியாது. படகு சேதாரமாயிருக்கு. என்ஜின் பழுதாயிடுத்து. வலை மொத்தமும் அழிஞ்சிருச்சி. இதெல்லாம் சரிபண்ணனும்னா கொறஞ்சது ரெண்டு மாசம் ஆகும். ஒன்னுலேர்ந்து ரெண்டு லெட்சம் செலவு பிடிக்கும். எங்கப் போறது? அரசாங்கம் பார்த்து ஏதாவது செஞ்சாதான் நாங்க மீண்டு வரமுடியும்.

எங்க வாழ்க்கயே கடல்ல அன்னாடம் காய்ச்சியாக மாறி இருக்கு. இதெல்லாம் சரி செஞ்சி தொழிலுக்கு போகறதுக்கு கொறஞ்சது ரெண்டுமாசம் ஆயிடும். இப்ப ஒரு பத்து நாளைக்கு அரசாங்கம் சோறு போடும். ஆனா, அதுக்கப்புறம் நாங்க என்ன செய்யுறது. திரும்பவும் படகு, வலை, குடும்ப செலவு எல்லாத்துக்கும் கடன் தான். இந்த கடன்லயே எங்க ஆயிசு போயிடும் போல இருக்கு.’’

முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

***

ஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுகொள்ளாத அரசுக்கு எதிராக, அம்மாபேட்டை பேரூராட்சி, 8வது வார்டு, புத்தூர் பகுதி மக்கள் கடந்த நவ-23 அன்று தஞ்சை – நீடாமங்கலம் நெடுஞ்சாலையில் நடத்திய சாலைமறியல் போராட்டம்.

‘’நாலு பக்கமும் வீட்ல மரம் வளர்த்தா வீட்ல விழாம எங்க விழும்னு கேட்கிறாரு கிராம உதவியாளர். இதுவரைக்கும் எந்த அதிகாரியும் எங்க கிராமத்துக்குள்ள வந்து என்னன்னு பார்க்கவே இல்லை.’’ கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கொந்தளிக்கின்றனர், கிராம மக்கள்.

முழுமையான காணொளியைக் காண!

பாருங்கள்! பகிருங்கள்!!

படிக்க:
சத்துணவு சமைக்கும் அங்கன்வாடி ஊழியர்களை பட்டினி போடும் மோடி அரசு !
தேர்தல் 2019 : சங்க பரிவாரத்தின் அடுத்த தூண்டில் – ராமர் கோவில் !

பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு விடை கொடுப்பது சாத்தியமா ? மருத்துவர் BRJ கண்ணன்

செங்கல்பட்டை சேர்ந்த திரு ரவி ஒரு பலத்த மாரடைப்போடு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். முந்தின நாள் இரவிலிருந்தே அவருக்கு நெஞ்சு கனத்திருந்தது. எல்லா முயற்சியும் தோல்வியுற்று மரணத்தைத் தழுவினார். அவருக்கு இரு வருடங்கள் முன்பே இதயத் தமனிகளில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்தது தெரியும். இருந்தும் கடந்த ஆறு மாதங்களாக எல்லா மருந்து மாத்திரைகளை நிறுத்தியிருந்தார். ஏன்?

கட்டுக்குள் இல்லாத சர்க்கரை நோயுடன் புகைப்பதுமாக இருந்த அவருக்கு இரு வருடங்கள் முன்பு நடக்கும் போது நெஞ்சு வலி வரவே சென்னையில் காண்பித்துக் கொண்டார். அவருக்குகொரனரி ஆர்டரிஎனப்படும் இதயத் தமனிகளில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகையை நிறுத்தவும், சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் பலூன் ஸ்டன்ட் அல்லது பைபாஸ் சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. அதிலிருந்து தப்ப வேறு வழிகள் உண்டா என்று பார்க்கத் தொடங்கினார். சென்னையில் ஓரிடத்தில்கீலேசன் தெரபிஎன்ற பெயரில் ஊசி மருந்து செலுத்தி அடைப்பை நீக்குவதாகக் கேள்விப்பட்டார். ‘பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பை பைஎன்ற விளம்பரத்தையும் கண்டார்.

அங்கு சென்று முப்பது ஊசிகளை மூன்று மாதங்களில் போட்டுக் கொண்டார். பைபாஸ் சிகிச்சையில் ஆகும் செலவில் முக்கால்வாசி இதில் ஆயிற்று. அடைப்புகள் நீங்கியதாக தெரிவிக்கப் பட்டது. சில மாதங்கள் கழித்து, அவர் மருந்துகளை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி தன்னைத் தானே பரிசோதித்துக் கொண்டார். பெரிதாக ஒன்றும் தனக்கு வித்தியாசம் இல்லாததால் ஆறு மாதங்கள் முன்பு எல்லாவற்றையும் முழுவதுமாக நிறுத்தினார்; மீண்டும் புகைப் பிடிப்பதைத் தொடங்கினார். மதுரைக்கு ஒரு கல்யாணத்திற்கு வந்தவருக்கு மாலையில் நெஞ்சு கனத்தது. விருந்து உண்டதால் ஏற்பட்ட நெஞ்சு எரிச்சல் என நினைத்தார். அடுத்த நாள் காலை அவரை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைமை வந்தது. அவசரமாக ஆஞ்சியோகிராம் செய்து பார்த்ததில் நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில் அடைப்பு இருந்தது. எதுவும் செய்ய அவகாசம் கொடுக்கவில்லை அவர், இறந்தே போனார்.

♥ டாக்டர், நெஞ்சு வலியோ மாரடைப்போ வந்தால் எல்லோரும் இந்த ஆஞ்சியோபிலாஸ்டி இல்லையென்றால் பைபாஸ் சிகிச்சை செய்தே ஆக வேண்டுமா?

இல்லை. வாழும் முறையை மாற்றி, (புகையும் மதுவையும் நிறுத்தி, எடையைக் குறைத்து, மனதை இலேசாக வைத்துக்கொண்டு, உடற் பயிற்சிகள் செய்து), சர்க்கரையையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்துகொண்டு, மற்ற மருந்துகளையும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் பைபாஸ் சிகிச்சை பரிந்துரைக்கிறோம் என்றால், அவர்களை இரு பிரிவுகளில் அடக்கலாம். 1. உயிருக்கு ஆபத்தான அடைப்புகள். அடுத்த சில மாதங்களில் இறக்கும் அபாயம் அதிகம். ஆகையால் பைபாஸ் சிகிச்சை உயிரைக் காக்கும் 2. பலத்த அடைப்புகள் இருந்தாலும், உயிருக்கு ஆபத்தானவை இல்லை. அனால் அவை நோயாளிக்கு மிகுந்த நெஞ்சு வலியைத் தரும், சராசரி வாழ்க்கை சிரமமாக இருக்கும். இவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றால், தங்கள் வாழும் முறையில் தகுந்த மாற்றங்களை செய்து கொண்டு, முறையாக மருந்துகளை உட்கொண்டால் ஓரளவு நன்றாக இருக்க முடியும். வலி இல்லாமல் போய்விட்டதென்றால் அடைப்பு நீங்கி விட்டது என்றில்லை, ரத்தம் குறைவாகப் பாய்ந்தாலும் இதய தசைகள் அதற்கு ஈடாக மாற்றங்கள் செய்து கொண்டு மாத்திரை மருந்துகள் மூலம் நன்கு தேறி விட்டன என்பது தான் அர்த்தம்.

♥ இந்த கீலேசன் தெரபி என்றால் என்ன?

இந்நோயாளிகளின் இதயத் தமனிகளின் அடைப்புகளில் கொழுப்பும் சுண்ணாம்பும் படிந்திருக்கும். இவை எதோ சுவற்றில் ஒட்டி உள்ளது போலவும் அதை நாம் சுரண்டி எடுத்துவிடலாம் போலவும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல. இவை தமனிகளின் செல்களுக்குள் படிந்துள்ளன. இந்த கீலேசன் முறையில் சுண்ணாம்பை உடலிருந்து நீக்குவதற்கு .டி.டி.ஏ. என்ற மருந்தை செலுத்துவார்கள். அது ரத்தத்தில் உள்ள சுண்ணாம்பு (கால்சியம்) அளவைக் குறைக்குமே ஒழிய, தமனிகளில் உள்ள சுண்ணாம்பைத் தொடவே செய்யாது. ஆகையால், ஒரு பலனும் இல்லை.

♥ ஆனால், இது செய்து கொண்டு நிறைய பேர் நன்றாக இருப்பதாக கேள்விப்படுகிறோமே?

அவர்கள் எல்லோரும் நான் மேலே கூறிய பிரிவு 2- சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களை முறையாக மாற்றிக்கொண்டதாலும் மருந்துகள் உட்கொள்வதாலும் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் தவறாக இந்த பயனற்ற கீலேசன் தெரபி மேல் அபிமானம் கொண்டு விடுகிறார்கள், எல்லோரிடமும் சந்தோசமாக இதைப் பாராட்டியும் சொல்கிறார்கள்.

♥ இந்த சிகிச்சையை முயற்சி செய்து பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று தானே தோன்றுகிறது?

இல்லை. இதில் நிறைய ஆபத்தும் உள்ளது. இது ரத்தத்தில் நீரின் அளவைக் கூட்டும். இதயம் வீங்கி உள்ளவர்கள் மூச்சிரைப்புடன் அவசரமாக எங்கள் மருத்துவமனைக்கு வந்தவர்கள் பலருண்டு. சிலர் வீட்டிற்கு சென்று இறக்கவும் செய்திருக்கிறார்கள். மேலும், கால்சியம் மட்டுமல்லாது வேறு பல உடலுக்கு வேண்டிய தாதுப் பொருட்களையும் இந்த மருந்து நீக்கி விடும்.

♥ அப்படியென்றால் இந்த கீலேசன் செய்து கொண்டவர்களின் கதி?

பிரிவு 1 சேர்ந்தவர்கள் சில வாரங்களிலேயே திரும்பி எங்களிடம் வந்து பலூன் அல்லது பைபாஸ் சிகிச்சை செய்துகொள்வார்கள், இல்லையென்றால் இறந்து விடுவார்கள். அவர்களின் உறவினர்கள் யாரும்தெரியாமல் கீலேசனை நம்பி மோசம் போனோம்என்று யாரிடமும் சொல்வதில்லை.

பிரிவு 2- சேர்ந்தவர்கள் நான் மேற்கூறிய காரணங்களினால் நன்றாகத் தான் இருப்பார்கள். தவறாக தங்கள் அடைப்புகள் நீங்கி விட்டதாக நம்பிக் கொண்டிருப்பார்கள். அவர்களில் சிலர், இந்த ரவி போன்று மருந்துகளையும் நிறுத்துவார்கள். அவர்களுக்கு புதிய அடைப்புகள் உண்டாகி, முன்பு அவ்வளவு ஆபத்தில்லை என்றிருந்த நிலை மாறி, பெரிய மாரடைப்பை உண்டாக்கி ஆளையே கொன்றுவிடும். இங்கு ரவியின் மனைவியும் மற்ற உறவினர்களும் மருந்தை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. ஏனெனில் அவர்களும் அடைப்புகள் நீங்கி விட்டதாகவே கருதினார்கள்.

ஆக, யாரெல்லாம் தப்பிப் பிழைக்கிறார்களோ அவர்களைத் தான் மற்ற பொது மக்கள் பார்க்கின்றனர். அவர்களைக் கண்டுஇது ஒரு நல்ல சிகிச்சைஎன்று முடிவு செய்து விடுகின்றனர். இறப்பவர்களை நாங்கள் மட்டும் தானே பார்க்கிறோம்.

♥ அவர்கள் கார்டோகிராபி என்றொரு பரிசோதனை செய்கிறார்களே, அது என்ன?

இதய கார்டோகிராபி என்றொரு பரிசோதனையே இல்லை. இது அவர்களே அவர்களுக்காக உருவாக்கிய ஒன்று. எங்கள் மருத்துவப் புத்தகங்களில் அது இல்லவே இல்லை. உலகில் எந்த இதய மருத்துவருக்கும் இதைப் பற்றித் தெரியாது. கலர் கலராக படங்களைப் போட்டு இத்தனை இத்தனை அடைப்புகள் உள்ளன என்று காட்டுகிறார்கள். எல்லாம் டுபாக்கூர்.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : ஹோமியோபதி – அறிவியலா, நம்பிக்கையா ?
நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? புதிய கலாச்சாரம் மின்னூல்

♥ ஆனால், கீலேசன் சிகிச்சை முடிந்த பின் மறுபடியும் கார்டோகிராபி செய்து அடைப்பு நீங்கியதையும் காண்பிக்கிறார்களே?

கணினியில் ஒரு சில இடங்களில் குறியீடுகளையும் எண்களையும் மாற்ற முடியாதா என்ன? மற்றொரு வண்ணப் படத்தைக் கொடுத்து மக்களை முட்டாளாக்குகிறார்கள்.

♥ உங்களுக்கு கார்டோகிராபி புரியவில்லை என்பதால் அதை புறந்தள்ளுகிறீர்கள் என்று நான் சொல்லலாமா?

சரி. எல்லோருக்கும் புரிகிற ஆஞ்சியோகிராமை வைத்து பேசுவோம். அங்கு சென்று திரும்பிவர்களில் யாருக்கும் ஆஞ்சியோகிராமில் அடைப்பு குறைந்து நான் பார்த்ததே இல்லை. அவர்களும் திரும்பவும் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விடுவார்கள். யாராவது முதலில் ஆஞ்சியோகிராம் செய்து பல அடைப்புகள் உள்ளதை உறுதி செய்து, பின்னர் அந்த கீலேசன் சிகிச்சையை செய்து கொண்டு, மறுபடியும் ஆஞ்சியோகிராம் செய்து அடைப்புகள் நீங்கிவிட்டதை எனக்குக் காண்பித்தால் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். அங்குள்ள டாக்டர்களை கவனியுங்கள். அவர்களுக்கோ அவர்கள் உறவினர்களுக்கோ இந்த மாரடைப்பு நோய் வந்தால், வழக்கமான நவீன மருத்துவத்திற்கு தான் சென்றிருப்பார்கள், கீலேசன் செய்திருக்க மாட்டார்கள்; ஏனென்றால் அவர்களுக்கு அதெல்லாம் பலன் தாராதென்று நன்றாகவே தெரியும்.

♥ உங்கள் போன்ற மருத்துவர்கள் இந்த முறையை மறுப்பதற்கு காரணம், உங்களுக்கு பலூன் மற்றும் பைபாஸ் சிகிச்சை குறைந்துவிடும் என்பதால் என்று சில பேர் பேசி வருகிறார்களே?

முற்றிலும் தவறு. முதலில், அவர்கள் அளவுக்கு மிக அதிகமாகத் தான் வசூலிக்கிறார்கள். அதனால் நோயாளிக்கு பெரிதாக பணத்தில் மிச்சம் இல்லை. மேலும் இந்த மருந்து ஏதோ ஒரு பரம்பரையாக மிகச் சிலருக்கே தெரிந்த மாயம் எல்லாம் ஒன்றுமில்லை. எந்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையும் இதை எளிதாக வாங்கி விட முடியும். எங்கள் மருத்துவமனையை விடுங்கள். இதனால் நல்ல பலன் உண்டெனில், ஏன் மற்ற சிறிய மருத்துவமனைகள் இதை செய்து சம்பாதிக்க முனையவில்லை? எல்லோரும் ஒருகீலேசன் சிகிச்சை நிலையம்என்று ஆரம்பிக்கலாம் தானே, ஏன் செய்யவில்லை?

♥ என் நண்பர் ஒருவர், இது அறிவியல் ரீதியாக அமெரிக்காவில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இம்முறை IIb என்ற அளவில் கொள்ளலாம் என்றும் பரிந்துரைத்துள்ளர்கள் என்று கூறுகிறாரே?

TACT என்றொரு ஆய்வு நடத்தினார்கள். மாரடைப்பு வந்து போனவர்களுக்கு இந்த கீலேசன் சிகிச்சையை அளித்தனர். அதில் ஒரு சில பேருக்கு மறுபடியும் மாரடைப்பு வருவது குறைவதாகத் தெரிய வந்தது. அது எப்படி என்று விளக்க முடியவில்லை. அது உண்மை தானா என்று கண்டறிய, மற்றுமொரு ஆய்வு TACT2 என்ற பெயரில் நடந்துக்கொண்டிருக்கிறது., அதில் பரிசோதிக்கப்பட்ட நோயாளிகள் இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருப்பது போல பல அடைப்புகள் கொண்ட, பைபாஸ் சிகிச்சை பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளே அல்ல. ரத்தக் குழாய் அடைப்பு நீங்கியதாகவோ, இச்சிகிச்சை பைபாசுக்கு மாற்றாகவோ, சொல்லப்படவே இல்லை. அமெரிக்கப் பரிந்துரையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு இதனை முயற்சிக்கலாம், பலனிற்கு உத்திரவாதமில்லை என்ற அளவில் தான் கூறப்பட்டுள்ளது.

முதலில் அவர்கள், இது பைபாஸ் சிகிச்சைக்கு மாற்று என்று கூறுவதை நிறுத்த வேண்டும். இரண்டாவது, இதில் தமனிகளின் அடைப்புகள் நீங்காது என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவது, இதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதென்று விளக்கவேண்டும். இதையெல்லாம் கேட்டுவிட்டு யாரேனும் இந்த சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டால் இந்த மருந்தை ஏற்றிக்கொள்ளட்டும். ஆனால், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த கீலேசன் மருந்தால் பாதிக்கப்பட்ட பலரை நான் பார்த்திருக்கிறேன்.

யாரெல்லாம் தப்பிப் பிழைக்கிறார்களோ அவர்களைத் தான் மற்ற பொது மக்கள் பார்க்கின்றனர். அவர்களைக் கண்டு ‘இது ஒரு நல்ல சிகிச்சை’ என்று முடிவு செய்து விடுகின்றனர். இறப்பவர்களை நாங்கள் மட்டும் தானே பார்க்கிறோம்.

♥ நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட பின்னரும் ஒருவர் இந்த சிகிச்சையை முயற்சித்துப் பார்க்க விரும்புவதாக இருந்தால், அவருக்கு உங்கள் அறிவுரை என்ன?

அந்தப் பணத்தை ஏதேனும் ஒரு அநாதை ஆசிரமத்திற்கோ முதியோர் இல்லத்திற்கோ கொடுத்துவிட்டு, வாழும் முறையை நன்கு மாற்றிக் கொண்டு சரியான மருந்துகளை உட்கொள்வாரானால் பல்லாண்டு நலமாக இருப்பார். (TACT2 முடிவு வரும் வரையில் இது தான் என் நிலை).

முகநூலில்: Dr. B.R.J. Kannan