Thursday, July 31, 2025
முகப்பு பதிவு பக்கம் 816

காங்கிரசு கருமாதிக்கு காலம் வந்தாச்சு! – பாடல்

8

இந்தப்பாடல் வெளிவந்த போது நரசிம்மராவ் பிரதமர். மன்மோகன் சிங் நிதியமைச்சர். இன்று ராவ் இல்லை, சிங்கோ பிரதமர். அன்று நிதியமைச்சராக நின்று நாட்டை வல்லரசு நாடுகளுக்கு கூறு போட்டு விற்றவர் இன்று மொத்தமாக எழுதிக் கொடுக்கிறார். இந்திராவின் அந்திம காலத்தில் ஆரம்பித்த புதிய பொருளாதாரக் கொள்கையின் செயலாக்க அதிகாரிகளாக இருந்த மன்மோகன் சிங், அலுவாலியா கும்பலின் கையில் இன்று நாடே உள்ளது இங்கே குறிப்பிடத் தக்கது. தற்போது இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரசு வென்றிருந்தாலும் இந்த ஏலக்கம்பெனிக்கு கருமாதி செய்யும் அவசியம் அன்று மட்டுமல்ல இன்றுமிருக்கிறது. முன்னுரையுடன் பாடலைக் கேளுங்கள்:

காங்கிரஸ் என்றொரு கட்சி

காங்கிரஸ் என்றொரு கட்சி – அவன்
கருமாதி எழவுக்கு காலம் வந்தாச்சு…

கைராட்டை கதருன்னு சொன்னே
வெள்ளக்காரனின் கொள்ளைக்கு காவலாய் நின்னே
47க்கு பின்னே… நாட்டை ஆக்கிட்டான் – கண்ட
நாய் நக்கும் தொன்னை
(காங்கிரஸ் என்றொரு…)

தொடங்கி வச்சார் காந்தி தாத்தா – உன்
ஊழல் வரலாறு இன்னைக்கு நேத்தா- கொஞ்சம்
உள்ள போய் எட்டிப் பாத்தா – அங்கே
உள்ளவன் எல்லாம் அர்ஷத் மேத்தா
(காங்கிரஸ் என்றொரு…)

ஏற்றுமதி பஞ்சு பேலு – உங்க
அம்பானிகள் மட்டும் அடிக்குது டாலு – இப்ப
நெசவுக்கு இல்லடா நூலு..- நம்ம
நரசிம்மராவுக்கு எருமைத் தோலு..
(காங்கிரஸ் என்றோரு…)

அமெரிக்க ஜப்பான் ஜெர்மனி – அகிலமெல்லாம்
ஆரம்பிக்கிறோம் கம்பெனி
டாடா பிர்லா அம்பானி –மன்மோகன சிங்கும்
கூட்டாளிதாண்டா ராவுஜி…

வரி வட்டி ராயல்டி.. என்ன இது அநீதி
யார் நீ?
ஹா….என்னையா யாரென்று கேட்கின்றாய்?
அண்டரெண்டும் நடுங்கிட ஒடுங்கிட
கண்டபேர்கள் கருகிட குறுகிட
வீரபுஜபல பராக்கிரம சூரன் டங்கல்…ஹா…

வேட்டிய உருவுறான் டங்கல் – அதை
ஃபோட்டா புடிக்கிறான் அமெரிக்க அங்கிள் – உன்
பங்காளி தூக்குறான் செங்கல்..- கடன்
பாரம் சுமப்பதோ பாட்டாளி நாங்கள்..
(காங்கிரஸ் என்றொரு…)

உனக்கு வாச்சானே மன்மோகன் சிங்கு – அவன்
வாயத் தெறந்தாலே அபாய சங்கு – உன்னை
ஆட்டுறான் அமெரிக்கா பாங்கு – ஐயோ
மானம் போகுதடா தூக்குல தொங்கு
(காங்கிரஸ் என்றொரு)

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

அடிமைச் சாசனம்அடிமைச் சாசனம்
விலை ரூ. 30

இந்த ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர், இங்கே அழுத்தவும்


ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு….!!

27

ஈழம்: உயிர் பிழைக்க ஓடு, ஓடிக்கொண்டே இரு….!!

ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation), தமிழில் “விடுதலை நடவடிக்கை” இதுதான் நான் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்த காலங்களில் சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ராணுவசுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை. இந்த விடுதலை நடவடிக்கை என்பதன் அர்த்தம்தான் எனக்கு சரியாக புரிவதில்லை. இவர்கள் யாருடைய விடுதலையைப்பற்றி குறிப்பிடுகிறார்கள்? சிங்கள ராணுவத்திற்கு முகாமிலிருந்து விடுதலையா? அல்லது போராளிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இனவழிப்பு செய்தார்களே, அதுவா? சிங்களராணுவத்தை நாங்க கேட்டமா எங்களை காப்பாற்றுங்கள் என்று. பிறகு யாருடைய விடுதலையைப் பற்றி இவர்கள் பேசினார்கள். எங்கள் மண்ணை விட்டு விலகிப்போங்கள் நாங்கள் குறைந்தபட்சம் உயிர்ப்பயமின்றி நிம்மதியாகவேனும் இருப்போமே. இதைத்தானே கேட்கிறோம். இது புரியாமல் காப்பாற்றுகிறோம், காப்பாற்றுகிறோம்… என்று எங்கள் உயிர்களை எடுத்துக்கொண்டல்லவா இருக்கிறார்கள்.

சரி, யாருடைய விடுதலை என்ற கேள்வியெல்லாம் தாண்டி இறுதியில் கேட்பாரின்றி, நாதியற்றவர்களாக, மிருகங்களை விட மோசமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுபவர்கள் அப்பாவித் தமிழர்கள்தானே. எப்படிப்பார்த்தாலும் ராணுவம் முகாமிலிருந்து வெளியேறினால் எங்களுக்கு சாவு நிச்சயம் என்பது எல்லோருக்கும் தெரியும். கொல்லப் பிறந்தவன் கொல்கிறான். சாகப் பிறந்தவன் சாகிறான். அவலமாய் சாகப்போகிற தமிழனுக்கு எதற்கு இந்த விசாரணையெல்லாம்? அன்று, இந்த விடுதலை நடவடிக்கையின் போது ராணுவத்திடமிருந்து தப்புவதற்காக உயிரை கையில் பிடித்துக்கொண்டல்ல, இந்த உயிர் ஓர் விமானக்குண்டிற்கோ அல்லது துப்பாக்கிகுண்டிற்கோ இரையாவது மேலென்று மனதில் நினைத்துக்கொண்டு ஊரூராக ஓடியிருக்கிறேன்.

ராணுவத்தால் சாவதானால் அது நிச்சயமாக வலிநிறைந்த மரணமாகத்தானிருக்கும். இதுவே ஒரு குண்டடிபட்டு சாவதானால் வலிகுறைவாகத்தானே இருக்கும். எங்கள் வாழ்க்கைதான் நித்தம் நித்தம் வலிகளோடு நகர்கிறது. குறைந்தபட்சம் நாங்கள் வலியில்லாத சாவையாவது சந்திக்கவேண்டும் என்பதுதான் என் பேராசை. ஊரிக்காடு வல்வெட்டித்துறை ராணுவமுகாமிலிருந்து ராணுவம் வடமராட்சியை கைபற்ற எடுத்த முயற்சி ஒரே நாளில் நடந்ததல்ல. மிக நீண்டநாட்களாக ராணுவம் வெளியேறுவதும், பிறகு முகாமிற்கே திருப்பி அனுப்பபடுவதுமாகத்தானிருந்தது. முகாமிற்குள் ராணுவம் முடக்கப்பட்ட காலங்களில் தரை, கடல், ஆகாயம் என்று மும்முனைகளிலும் இருந்து எங்கள் தலைகள் மீது குண்டுமழை பொழிந்துகொண்டுதானிருந்தது.

ஒரு மனித உயிர் உருவாவதிலிருந்து மரணிக்கும்வரை (ஈழத்தில் மரணத்திற்கு வயது எல்லை கிடையாது…….) மனிதவாழ்க்கையில் நடக்கும் அத்தனை விடயங்களும் பெரும்பாலும் குண்டுச்சத்தத்துடன்தான் நடந்தது. அத்தனை வலிகளுக்குமிடையில் வாழ்க்கை என்பதும் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டும், ஓடிக்கொண்டும்தானிருந்தது. அந்நாட்களில் நாங்கள் எப்போதுமே இடம்பெயர்ந்து ஓடுவதற்கு தயாராக ஓர் பையில் மாற்று உடுப்புகளும் இன்னபிற முக்கியமான சில பொருட்களுடனும் எந்த நிமிடமும் தயாராகத்தானிருந்தோம்.

“ஆமி வெளிகிட்டிட்டானாம் ….” என்று யாராவது என் வீடு கடந்து ஓடிக்கொண்டிருந்தால் நாங்களும் எங்கள் பைகளை வாரிக்கொண்டு ஓடத் தொடங்குவோம். அப்படி ஓடியபோதெல்லாம் பைகளை விடவும் எங்கள் உயிர்கள்தான் அதிகசுமையாக இருப்பது போல் தோன்றியதுண்டு. ஓடியோடி கால்களை விடவும் எங்கள் மனம் அதிகமாக வலித்தது. பிறகு, ஓரிடத்தில், யாராவது அடைக்கலம் கொடுப்பவர்கள் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்து விட்டு ராணுவம் மீண்டும் முகாமிற்குள் சென்றுவிட்டது என்று தெரிந்தால் மறுபடியும் வீட்டிற்கு திரும்புவோம். ராணுவம் நெருங்கி வருகிறதென்றால் எங்களுக்கு அடைக்கலம் தருபவர்களும் ஓடத்தான் வேண்டும். ஆனால், இலங்கை ராணுவம் இல்லாத ஊர் ஒன்றை கண்டுபிடித்து ஓடவேண்டும். அதனால் தான் உறவுகளை கடந்து, ஊர் கடந்து, கடல் கடந்து, இன்னும் என்னென்னவெல்லாமோ கடந்து இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறோம்…..

அப்போதெல்லாம் ராணுவ உலங்குவானூர்திகளிலிருந்து (அட, அதாங்க ஹெலிகாப்டர்!) அடிக்கடி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளிலும் வீட்டு முற்றங்களிலும் வீசி எறியப்பட்டதுண்டு. அதை ஊரில் எல்லோருமே ஏதோ நடக்கப்போகிறது என்ற பயப்பிராந்தியுடன்தான் படித்தாலும், அது என்னவென்று அந்த நேரத்தில் யாருக்கும் புரிந்திருக்கவில்லை. அந்த துண்டுப் பிரசுரங்களில் நிறையவே தமிழ் எழுத்துப் பிழைகளுடன் குறிப்பிடப்பட்ட செய்தி, ராணுவம் எங்களை அவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று தங்குமாறு போடப்பட்டிருந்தது. அதாவது கோவில்கள், பாடசாலைகள் போன்ற இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எங்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு தான் இந்த நடவடிக்கையாம். நாங்க கேட்டமா? கைதுகளுக்கும் கூட்டமாக குண்டுபோட்டு கொல்லவும் சிங்கள ராணுவத்துக்கு இதுதானே வசதி. நிற்க, இவர்கள் சொன்ன காலக்கெடுவில் நாங்கள் போய் பாடசாலைகளிலும் கோவில்களிலும் தங்கியிருந்தால் மாதக்கணக்கில் அங்கேயிருந்து நாறியிருப்போம். ஒப்பரேஷன் லிபரேஷன் (விடுதலை நடவடிக்கை) போது எங்களை காப்பாற்ற எந்தவொரு தொண்டர் நிறுவனங்களும் மனிதாபிமான அமைப்புகளும் அந்தநாட்களில் வடமராட்சியில் இருந்ததில்லை.

அதனால் எங்கள் அவலங்களுக்கும் சாவுக்கும் எங்களைத் தவிர சாட்சியும் இல்லை. இப்படியே பயமும் பதுங்குகுழி  வாழ்க்கையுமாக நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. ஒரு நாள் வழக்கம் போல் விமானக் குண்டுவீச்சு சில சுற்றுகள் முடிந்து ஓரளவிற்கு ஓய்ந்து போயிருந்தது. துப்பாக்கி வேட்டுச்சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. கிடைத்த இடைவெளியில் இயற்கை உபாதைக்கு பரிகாரம் தேடி, ஏதோ வெந்ததை தின்றுவிட்டு பதுங்குழிக்கு பக்கத்திலேயே ஒருவர் முகத்தை ஒருவர் வெறுமையோடு பார்த்துக்கொண்டு கிடந்தோம். யார் யாருடன் பேச, என்ன பேச என்றெல்லாம் தெரிந்திருக்கவில்லை.

எப்போது விமானம் குண்டு வீசுவதை நிறுத்தும், குண்டு தங்கள் மீதும் விழுமா என்று கேட்டு, கேட்டு களைத்துபோய் என் சிறிய தாயாரின் பிஞ்சுகள் பதுங்குகுழிக்குள் தூங்கிக்கொண்டிருந்தன. எங்களயெல்லாம் விட ஏதும் அறியாத குழந்தைகளின் மனோநிலைதான் ஈழத்தில் மிகவும் பரிதாபத்திற்குரியது. அவர்களை சுற்றி நடப்பது ஏதும் அவர்களுக்கு புரிவதுமில்லை. அதற்கு அர்த்தம் கற்பிக்க அவர்களுக்கு தெரிவதுமில்லை. விமானம் சுற்றும் சத்தம் கேட்டாலே போதும் என் சிறியதாயாரின் குழந்தைகள் அவர்களாகவே, யாருக்கும் சொல்லாமலே பதுங்குழிக்குள் இறங்கி இருப்பார்கள். குண்டுச்சத்தங்களினால் பயத்தில் நடுங்கி பதுங்குகுழிக்குள் ஒளிவதை தவிர அந்த குழந்தைகளுக்கு வேறெதுவும் தெரிந்திருக்கவில்லை. ஏதாவது கேள்வி கேட்டு எங்களை துளைத்தெடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதென்பது ஓர் சவால்தான்.

என் பாட்டியின் ஓர் ஒன்றுவிட்ட சகோதரியார் ஒருவர் எங்களுடன்தான் தங்கியிருந்தார். அவருக்கு சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் இருந்ததனால் அவர் பதுங்குகுழிக்குள் இறங்குவதில்லை. என்னதான் குண்டுவீசினாலும் இருமிக்கொண்டே மூச்சு விடமுடியாமல் கண்களால் கண்ணீர் வழிய வழிய வெளியிலேயே நின்றிருப்பார். வழக்கம் போல் அவர் பதுங்குகுழிக்கு வெளியில் நின்று இருமி, இருமி மூச்செடுக்க சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். ஒருவாறாக அன்று மாலை வேளையில் சத்தமெல்லாம் அடங்கி ஓர் நிசப்தம் நிலவியது. நான் என் வீட்டு முற்றத்தில் நின்றிருந்தேன். திடீரென ஏதோ இரைச்சல் போல் ஓர் சத்தம் கேட்டது. அது சிறிது சிறிதாக அண்மையில் கேட்கத்தொடங்கியது. இரைச்சல் மிக அண்மையில் தெருவில் கேட்க நான் என்னையும் அறியாமல் தெருக்கதவை திறந்து வெளியில் எட்டிப்பார்த்தேன். ஏறக்குறைய ஆயிரம் பேராவது இருக்கும் பொதுமக்கள் “எல்லாரும் ஓடுங்கோ, ஓடுங்கோ ஆமிக்காரன் கிட்டடிக்கு வந்திட்டான். எல்லாரும் ஓடுங்கோ” என்று குழறிக்கொண்டும், அழுதுகொண்டும், ஓடிக்கொண்டும் இருந்தார்கள்.

எங்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்கள் பைகளை கூட எடுக்க நேரமில்லாமல் பதட்டத்திலும், பயத்திலும் உறைந்து போய் செய்வதறியாது கூட்டத்தோடு நாங்களும் ஓடத்தொடங்கினோம். வழக்கம் போல் என் இதயம் மார்புக்கூட்டிற்குள் இருந்து வெளியே எகிறி விழுந்துவிடும் போலிருந்தது. கை கால்கள் நடுங்க ஓடிக்கொண்டிருந்தேன். ஓர் இடத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டரிலிருந்து வேறு எங்களை துரத்தி துரத்தி சுட்டுக்கொண்டிருந்தார்கள். சிலர், “சுடுறான், சுடுறான் யாராவது வெள்ளை கொடி இருந்தால் காட்டுங்கோ” என்று கூவிக்கொண்டே ஓடினார்கள். இரைச்சலும், ஓலமும் மேலும் மேலும் கூடியது. ஓடிக்கொண்டிருந்த கூட்டத்தில் பலவிதமான சம்பாஷனைகளும் கேட்டுக்கொண்டிருந்தன. கணவனை தவறவிட்ட மனைவி, மனைவியை தவறவிட்ட கணவன், இப்படியே எவ்வளவு தூரம், எங்கே ஓடுவது…… இப்படியெல்லாம் அழுதுபுலம்பிக்கொண்டே ஓடிக்கொண்டிருந்தார்கள்.

இந்த கூட்டத்தில் எங்கள் உறவினர் ஒருவர் எங்களை பார்த்ததும் கதறி அழத்தொடங்கிவிட்டார். “சாமி மாமா ஆமிக்காரன் வர்றது தெரியாமல் கடற்கரை பக்கம் போனவர். அவர் எங்கேயோ தெரியவில்லை” என்றார். எங்களை பார்த்ததும் ஏதோ புதுப்பலம் வந்தவர் போல் கூட்டம் ஓடிய திசைக்கு எதிர் திசையில் ஓடத்தொடங்கினார். தான் அவரைப்போய் தேடப்போவதாக சொன்னார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி சாமி மாமா எப்படியாவது தப்பித்து வந்துவிடுவார் என்று ஆறுதல் கூறி எங்களோடு அழைத்துக்கொண்டு சென்றோம். ஆனால், இறுதியில் சாமி மாமாவின் பிணம் தான் ஏறக்குறைய அழுகிய நிலையில் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. நெற்றியில் பட்டை திருநீறு, சந்தனம், குங்குமம், வாய்நிறைய என்னை மருமகள், மருமகள் என்று கூப்பிடும் சாமிமாமா இப்போது நினைவுகளாகவே மட்டுமே….

இந்த கொடுமைக்கு மத்தியிலும் ஓர் இடத்தில் நாங்கள் பாட்டிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. காரணம், அவரின் ஒன்றுவிட்ட சகோதரியால் ஓடவெல்லாம் முடியாது. அவரை யாராவது சைக்கிளில் வைத்துதான் தள்ளிக்கொண்டு போகவேண்டும். அதனால் அவர் தன் சகோதரியின் மகன் வந்து அவரை அழைத்து சென்ற பின் எப்படியாவது எங்களுடன் வந்து சேர்வதாக சொன்னார். பாட்டி முந்திக்கொள்வாரா அல்லது ராணுவம் முந்திக்கொள்ளுமா என்று உயிர் பதைக்க காத்திருந்தோம். என் பாட்டி அப்படித்தான் தன் உயிர் போனாலும் பரவாயில்லை தன்னால் முடிந்தவரை மற்றவர்கள் உயிர்களை காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பவர். ஒவ்வொரு கணத்தையும் ஒரு யுகமாக்கி எங்கள் உயிரை பதறவைத்து ஒருவாறாக வந்து சேர்ந்தார் பாட்டி.

என் பாட்டியின் சகோதரியும் அவர் மகளும் பின்னர் ஓர் கோவிலில் தங்கியிருந்தபோது குண்டு வீச்சில் காயம் பட்டு அந்த இடத்திலேயே “தண்ணி, தண்ணி…” என்று கேட்டு உயிர்களை விட்டார்கள். ஒப்பரேஷன் லிபரேஷன்/விடுதலை நடவடிக்கையின் போது எங்கள் உறவினர்கள் எத்தனையோ பேரை நாங்கள் இழந்திருக்கிறோம். அதற்கு கணக்கும் இல்லை. அந்த கண்ணீருக்கு பதில் சொல்ல ஆளுமில்லை. நாதியற்ற ஈழத்தமிழன் சாவுக்கு யாராவது கணக்கு காட்டவேண்டுமா? இல்லையென்றால் பதில்தான் சொல்லவேண்டுமா என்ன? எந்த ராணுவம் வேண்டுமானாலும் எங்களை கொல்லலாம். இலங்கை ராணுவம், இந்தியராணுவம்….. யார்வேண்டுமானாலும்…..
இப்படி நீண்டதூரம் ஓடியபிறகு கூட்டம் வெவ்வேறு திசைகளில் பிரிந்து போகத் தொடங்கியது. எங்களுக்கும் எங்கே போவது என்று தெரியவில்லை. ராணுவம் முகாமிலிருந்து வெளியேறி வரும்போது ஆரம்பத்தில் வெறிபிடித்தது போல்தான் நடந்து கொள்வார்கள். அவர்கள் எப்போதுமே அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள். ஒருவாறாக, இறுதியில் ராணுவத்தின் துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுக்கு செல்வதாக முடிவெடுத்து மேலும் நடக்கத்தொடங்கினோம். இப்படி நடந்துகொண்டிருந்த போது ஓர் இடத்தில் ஆண் ஒருவர் நின்றுகொண்டு “அந்தப்பக்கம் திரும்பி பாக்காதேங்கோ, பாக்காதேங்கோ..” என்று கூவிக்கொண்டிருந்தார்.

நான் திடுக்கிட்டுப்போனேன். ஒருவேளை ராணுவம் பதுங்கியிருக்கிறதா என்ன? அப்படி அவர்கள் பதுங்கியிருந்தாலும் எங்களை சுட்டிருப்பார்களே என்று நினைத்துக்கொண்டு மெதுவாக தலையை திருப்பி பார்த்தேன். அங்கே மூன்று ஆண்களின் பிணங்கள் திக்கிற்கொன்றாய் கிடந்தது. ஓர் உடலில் தலை இருக்கவில்லை. கழுத்துப்பகுதியிலிருந்த தசைகளை காகங்கள் கொத்திக்கொண்டிருந்தன. ஆங்காங்கே மனித தசைகள் சிதறிக்கிடந்தது. ஏற்கனவே பயந்துகிடந்த எனக்கு என்னைசுற்றி எல்லாமே உறைந்தது போலிருந்தது. அப்படியே உறைந்து போய் அசையாமல் நின்றிருந்தேன். யாரோ என் தோள்மீது தொட்டு என்னை உலுப்பினார்கள். நல்லவேளை இன்னும் நாய்கள் ஏதும் அவர்கள் உடல்களை குதறவில்லை என்ற ஏதோ ஓர் சிறிய திருப்தியுடன் அந்த காட்சி என் கண்ணிலிருந்து மறையும் வரை திரும்பிப்பார்த்தவாறே நடந்தேன். வாழ்நாளில் என் நினைவுகளிலிருந்து மறைய மறுக்கும் ஓர் அவலக்காட்சி இது.

நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழன் என்ற முத்திரை எங்கள் மீது சிங்கள ஆட்சியாளர்களால் குத்தப்பட்டு இப்படித்தான் ஆண்டாண்டுகாலமாய் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். இப்படியே ஓடி, ஒருவாறாக பருத்தித்துறையில் இருந்த புட்டளை மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் தஞ்சம் கோரினோம். இந்த முகாமில் முட்கம்பி வேலிகள் இருக்கவில்லை, ஆனால், இன்றைய வன்னி வதைமுகாமின் தராதரத்திற்கு குறையாமல் அவலங்கள் நிறைந்ததாகவே இருந்தது.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

ஈழத்தின் நினைவுகள் – பாகம் -1

ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் ! பாகம் –2

ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி ! – பாகம் -3

பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !- பாகம் -4

ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!! பாகம் -5


தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!

62

தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்

தீபாவளி தமிழன் பண்டிகை இல்லை என்று தமிழ் ஓவியா கிட்டத்தட்ட ரவுண்டு கட்டி அடித்தார். தமிழச்சி பெரியாரின் கட்டுரையை பிரசுரித்தார். மதிமாறனும் தனது பதிவில் ராவணண், நரகா அசுரனைக் கொன்ற இராமன் மற்றும் கண்ணனை பழிதீர்க்க உறுதி எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். எனினும் பதிவுலகில் தீபாவளி குறித்த கொண்டாட்டத்தில் பெரிய மாற்றம் இல்லை. இரண்டுக்கும் நடுவில் ஊசாலடும் சில முற்போக்காளர்களின் நிலை? லக்கி லுக் சென்ற ஆண்டு ரோசா வசந்தால் எழுதப்பட்ட கட்டுரையை மீள்பதிவு செய்து இனி குழந்தைகளுக்காக தானும் தீபாவளியைக் கொண்டாடும் மனநிலைக்கு வந்து விட்டதாக சோகமான தொனியில் குறிப்பிடுகிறார். மாதவராஜூம் மகனுக்காக தீபாவளியைக் கொண்டாட வேண்டியிருக்கிறது என்கிறார். வாசகர்கள் இந்தப் பதிவுகளை படித்து விட்டு இந்த பதிவை தொடருங்கள்.

குத்துமதிப்பாக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட தீபாவளி பெரும்பான்மை தமிழ் மக்களின் பண்டிகையாக இல்லை. கிராமங்களும், விவசாயமும் கோலேச்சிய அந்தக் காலத்தில் இயல்பாக பொங்கல்தான் வாழ்க்கையுடன் இணைந்து கொண்டாடப்பட்டு வந்தது. அப்போதும் சரி அதற்கு முன்னரும் சரி தீபாவளி, நவராத்திரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலான பண்டிகைகளை பார்ப்பன – ‘மேல்’சாதியினர்தான் கொண்டாடி வந்தனர். இன்றும் கூட தீபாவளியைக் கழித்து விட்டுப்பார்த்தால் மற்ற பண்டிகைகள் ‘மேல்’ சாதியினர் மட்டுமே கொண்டாடுகின்றனர்.

அகில இந்திய அளவிலும் நிலைமை அன்று இதுதான். இன்றும் கூட கேரளாவில் ஓணத்தையும், வங்கத்தில் துர்கா பூஜையையுமே பிரதானமாக கொண்டாடுகிறார்கள். இப்படி இந்தியா முழுவதும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்று சொல்ல இயலாது.

இந்தியாவில் இருந்த பூர்வ பழங்குடி மக்களை ஆரியர்கள் வென்று ஆக்கிரமித்த தொல்குடி கதைகளே புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் எழுதப்பட்டன. அவ்வகையில் பார்ப்பன இந்து மதப் பண்டிகைகள் அனைத்தும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரான செய்திகளையே கொண்டிருக்கின்றன. வருண, சாதி, பாலின ரீதியாக அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் எவரும் இந்து மதப்பண்டிகைகளை கொண்டாட முடியாது. மனித குலம் தான் கடந்து வந்த பாதையின் வெற்றிப்படிகளை நினைவுகூரும் வண்ணம் கொண்டாடப்பட வேண்டிய பண்டிகைகள் இங்கே இந்தியாவில் எதிர்மறையாகவே இருக்கின்றன.

இந்தக் கருத்தை ஒப்புக்கொண்டாலும் இன்று தீபாவளி என்பது மக்கள் பண்டிகையாக மாறிவிட்டது என்பதையும் ஒப்புக் கொள்ளவேண்டும். தீபாவளிக்கென்று தனி சந்தை உள்ளதைக் கண்டு கொண்ட முதலாளிகள் அதன் வீச்சை கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரிக்க வைத்திருக்கின்றனர். ஊடகங்கள் வாயிலாக தீபாவளியின் மகத்துவம் நுகர்வு கலாச்சாரச் சந்தையை குறி வைத்து உப்ப வைக்கப்பட்டது. சமீப ஆண்டுகளாக புத்தாண்டு மற்றும் காதலர் தினத்தையே இளைஞர்கள் மத்தியில் மாபெரும் கொண்டாட்டமாக மாற்றிய முதலாளிகள் தீபாவளியை மட்டும் விட்டு விடுவார்களா என்ன?

இனிப்பு, புத்தாடை, பட்டாசு என குழந்தைகள் உலகம் தீபாளியை மையமாக வைத்து சுழல்வதும் உண்மைதான். தீபாவளி அன்று உலகமே கொண்டாடுவதான பிரமையிலிருந்து தன் குழந்தைகளுக்கும் ஏதாவது செய்ய வேண்டுமென்பதை ஏழைகளே ஏற்றுக் கொள்ளும் வண்ணம் தீபாவளி உருவெடுத்து விட்டது.

எனினும் தீபாவளி நகரம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தின் பண்டிகையாகத்தான் இன்னமும் இருக்கிறது. தீபாவளியன்று வீட்டில் இட்லி, தோசை சுடுவதையே கொண்டாட்டமாக நினைக்கும் கிராமங்கள், நகரங்கள் போன்று தீபாவளியை கொண்டாட முடிவதில்லை. ஒருபுறம் நிலவுடைமையின் ஆதிக்க சிந்தனைகள், மறுபுறம் முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சார அடிமைத்தனம் இரண்டின் கூட்டு விளைவான தீபாவளியை முற்போக்கு சிந்தனையை ஏற்றுக் கொண்டோர் கொண்டாட வேண்டிய பண்டிகை அல்ல. எனினும் குழந்தைகளுக்காக அதை கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் என்ன, இல்லையென்றால் அறியாத குழந்தைகள் மீது நாம் வன்முறை ஏவ முடியுமா என்பதே அந்த முற்போக்காளர்களின் ஊசலாட்டம்.

சமூக மாற்றத்திற்கான மதிப்பீடுகள் சூழலின் விளைவாக பின்பற்றப்படும் ஒன்றல்ல, மாறாக சூழலின் மீது எதிர்வினையாற்றும் தன்மையுடையவை. உலகமே கொண்டாடுகிறது எனினும் அது தவறென்றால் தவறென்றே கூற வேண்டும். அதில் கொஞ்சம் விட்டுக்கொடுப்பது என்பது நாம் நமது போராட்டத்தை கொஞ்சம் விட்டுக்கொடுப்பதும் ஆகிவிடுகிறது.

வரதட்சணை வாங்குவது தவறு, எனக்கு அதில் ஒப்புதல் இல்லை, ஆனால் உலகமே வாங்குவதால், என் பெற்றோர் என்ன விரும்புகிறார்களோ அதுவே என் விருப்பம் என்பதால் நானும் வாங்குகிறேன் என்று ஒருவன் சொன்னால் உங்கள் பதில் என்ன? சமூகத்தில் நமது நட்பு வட்டாரத்தில் யாரெல்லாம் வரதட்சணை வாங்கவில்லை, அல்லது கொடுக்கவில்லை என்று பாருங்கள் இறுதியில் நீங்களாவது மிஞ்ச வேண்டுமென விரும்புகிறீர்களா இல்லையா? இதை உலக வழக்கு தீர்மானிக்கட்டும் என்று விட்டுக்கொடுத்தால் உங்களிடம் பின்னாட்களில் காரியவாதம் பிழைப்புவாதம் எல்லாம் கொடிகட்டிப் பறக்கும். வரதட்சணை வாங்குபவன் எனது நண்பனாக இருக்க முடியாது என்று சொல்வதற்கு கூட பலர் தயாரில்லை. நட்பு வட்டாரத்திற்கு இத்தகைய மதிப்பீடுகள் இருக்க முடியாது. ஆனால் தோழமைக்கு இருக்கிறது. இன்னும் கூடுதலான மதிப்பீடுகள் இருக்கிறது.

பொதுவுடமை சிந்தனையில் அழுத்தமாக வாழும் எங்களுக்கு சாதி மறுப்புத் திருமணம், தாலி மறுப்பு திருமணம், தீபாவளிக்கு பதிலாய் நவம்பர் புரட்சி தினம், பள்ளியில் சாதியில்லாமல் குழந்தைகளை சேர்ப்பது, பார்ப்பனியத்தின் பண்பாட்டுகெதிராக மாட்டுக்கறி உண்பது முதலானவை சகஜமான விசயங்கள்தான். ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் அதற்கென போரடியதன் பக்கங்கள் நிறைய உண்டு. இதில் உலக வழக்கை அமல்படுத்தினால் இறுதியில் சமூக மாற்றமும் புரட்சியும் கூட கதைக்குதவாதவையாக மாறி விடும். போலிக் கம்யூனிஸ்டுகளின் வாழ்வில் அதைக் காணலாம். தீபாவளிக்கும், திருவண்ணாமலை தீபத்துக்கும் அவர்களின் தினசரியான தீக்கதிர் சிறப்பிதழ் வெளியிடுகிறது. ஆட்டோ தொழிலாளர்கள் ஆயத பூஜையை நேர்த்தியாக கொண்டாடுகிறார்கள். த.மு.எ.க.ச கூட்டத்தில் தாலிகளும், மல்லிகையும் ‘மணம்’ பரப்புகின்றன.

இவற்றையெல்லாம் கேள்வி கேட்டால் மக்கள் எப்படி வாழ்கிறார்களோ அதைத்தான் பின்பற்ற முடியும் இல்லையென்றால் மக்களிடம் இருந்து தனிமைப் பட்டுவிடுவோம் என்ற பதில் ரெடிமேடாய் வரும். அண்டை வீட்டு முசுலீமை எதிரியாகப் பார்க்கும் குஜராத்தின் சராசரி இந்து கூட தன்னை நியாயப்படுத்த அதே பதிலைச் சொல்லலாம். அதனால்தான் இரண்டாயிரம் முசுலீம்கள் கொல்லப்பட்டும் அதன் நாயகனான மோடி மீண்டும் முதல்வராக தெரிவு செய்யப்படுகிறார். எனவே பெரும்பான்மை எப்படி வாழ்கிறதோ அப்படித்தான் நாமும் வாழ முடியும் என்ற வாதமே அடிப்படையில் தவறு.

பெரும்பான்மை மனித குலத்தின் இழுக்குகள் அத்தனையும் சிறுபான்மை மனித இனம் நடத்திய விடாப்பிடியான போராட்டங்கள் மூலமாகவே அகற்றப்பட்டன. இல்லையென்றால் ‘சதி’ எனப்படும் உடன் கட்டை ஏறுவதும், பால்யவிவாகமும், பார்ப்பன விதவைப் பெண்களுக்கு மொட்டை அடிப்பதும் இன்றும் தொடர்ந்திருக்கும். தேவதாசி முறையை தடை செய்வது பெரும்பான்மை இந்துக்களை புண்படுத்தும் செயல் என்று வாதாடினார் சத்யமூர்த்தி அய்யர். மறுத்து போராடினார்கள் ராமாமிருதம் அம்மையாரும்,  பெரியாரும். இறுதியில் வரலாற்றில் வென்றது யார்?

இன்று உடன்கட்டை ஏறுவது சட்டரீதியாகவும், சமூகரீதியாகவும் தடை செய்யப்பட்டிருந்தாலும் ரூப்கன்வரை ராஜஸ்தானத்து இந்துக்கள் இன்றும் போற்றும் நாட்டில் நாம் பார்ப்பன இந்துமதத்தின் பிற்போக்குகளையெல்லாம் வீழ்த்தி விட்டதாக எண்ண முடியாது. பெரியார், அம்பேத்கர் எண்ணியதெல்லாம் செயலுக்கு வந்து விட்டதாகவும் கூற முடியாது. இந்தச் சூழ்நிலையில் நாம் நமது மதிப்பீடுகள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்?

மாட்டுப் பொங்கலுக்கு கூட தனது மாடுகளுக்கு கருப்பு சிவப்பு வர்ணமடித்து, அழகு பார்க்கும் தி.மு.க வின் இலட்சியவாதத் தொண்டன் இன்றில்லை. பார்ப்பன எதிர்ப்பு மரபை கொண்டாடிய அவனது நேற்றைய பெருமையில் சிறு துளி கூட இன்று காணக்கிடைப்பதில்லை. ரஜினி ரசிகர்கள், இந்து முன்னணி தொண்டர்கள், ஆதிக்கசாதி வெறியர்கள் முதலானோருக்கும் ஒரு தி.மு.க தொண்டனுக்கும் இன்று அடிப்படையில் என்ன பெரிய வேறுபாடு உள்ளது? அவ்வப்போது கருணாநிதி விழிப்படைந்து ஆதிசங்கரன் பொட்டு வைத்ததையெல்லாம் கண்டித்தாலும் கோபாலபுரமே தீபாவளியைக் கொண்டாடும்போது, சன் டி.வியும், கலைஞர் டி.வியும் போட்டி போட்டுக்கொண்டு தீபாவளியை கொண்டாடும்போது கலைஞரின் பகுத்தறிவு மரபு யாரைப்பார்த்து அழும்? ‘தீ பரவட்டும்’ பரப்புவதை மறந்த உடன்பிறப்புகள் இன்று பட்டாசைத்தான் பரப்புகிறார்கள்.

முற்போக்கு மதிப்பீடுகளை ஒரு இயக்கமாய் பின்பற்றி வாழும் பலம் ஒரு தனிநபராய் நின்று ஒழுகுவதில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை. பொதுவில் ஒரு கட்சி இயக்கத்தில் சேருவதை சிறுபத்திரிகை மரபு ஏளனமாக பார்க்கும் வியாதி அப்பத்திரிகைகளை படிப்பவர்களையும் தொற்றுவதற்கு தவறுவதில்லை. இதே போல அம்பேத்காரையும், பெரியாரையும் தனியே படித்து வாழ்பவர்கள் கூட இறுதியில் தனிமை காரணமாக இந்துத்வ ‘பெரு’மரபில் சங்கமித்து விடுகிறார்கள். அதற்கு தோதாக அப்பெரியவர்கள் கண்ட இயக்கங்கள் இன்று தோற்றிருக்கின்றன. வீரமணியின் பகுத்தறிவு அவரது மகனை பட்டாபிஷேகம் செய்து பார்ப்பதற்கே சரியாக இருக்கும் போது பெரியாரை பரப்புவதெல்லாம் எங்கனம் சாத்தியமாகும்?

தீபாவளிக்கு புதிய உள்ளடக்கத்தை கொடுக்கலாம் என்கிறார் ரோசா வசந்த். ஏதோ நல்லது வெல்லட்டும், கெட்டது தோற்கட்டும் என்றாவது மக்களின் இந்த பண்டிகை மனோபாவத்தை ஆதரிக்கலாமே என்பதுதான் இந்த வாதம். கூடுதலாக குழந்தைகளின் கொண்டாட்டத்தையாவது அங்கீகரிக்கலாம் என்பது இதன் உட்கிடை. பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஆக்கிரமிப்பையெல்லாம் கட்டுடைத்து உண்மைகளை புதிய உள்ளடக்கத்தில் கொண்டு சேர்க்கும் பணிதான் நமக்குத் தேவையான ஒன்று. பார்ப்பன எதிர்மரபை சாருவாகனர் தொடங்கி, சம்புகன், நந்தன், பெரியார் வரைக்கும் நாம் கண்டுபிடித்து ஒன்று சேர்த்து பெரும் தீயாய் பற்றவைக்கும் கடமை இருக்கும் வேளையில் தீபாவளியை எப்படி அங்கீகரிப்பது? தீபாவளியை மக்களிடம் புரியவைக்கும் முயற்சிக்கு பதிலாக அதற்கு புதிய கதை ஒன்றை கதைக்கும் முயற்சியின் அவசியம் என்ன?

நமது குழந்தைகளுக்கு பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஆக்கிரமிப்பு கதைகளை சொல்லித் தரவேண்டும். அதிலிருந்து விடுபடும் அவசியத்தை தொடர்ந்து கற்பிக்க வேண்டும். மனித குலம் பெருமைப்படும் தினங்களின் முக்கியத்துவத்தை சொல்லித் தரவேண்டும். இதையெல்லாம் செய்யாமல் தீபாவளியின் பட்டாசு, புதுத்துணிகளுக்கு அடிபணியவேண்டுமென்றால் குழந்தைகள் வளர்ந்த பிறகு குஜராத்’இந்துக்கள்’ போலத்தான் இருப்பார்கள், பரவாயில்லையா?

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புக்களின் தோழர்களது குடும்பத்தின் குழந்தைகளை அப்படித்தான் வளர்க்கிறோம். கோடை விடுமுறையில் அவர்களுக்கென்று விசேட முகாம்களை தமிழகம் எங்கும் நடத்துகிறோம். அதில் அவர்கள் பற்றியொழுக வேண்டிய மதிப்பீடுகளை குழந்தைகளுக்கேற்ற வடிவில் கொண்டு செல்கிறோம். எங்கள் குழந்தைகளிடம் தீபாவளி குறித்த ஏக்கம் இருப்பதில்லை. ஏனெனில் அங்கே நவம்பர் புரட்சி தினம் என்ற மாற்று உள்ளது. மாற்று இல்லாதவர்கள்தான் தீபாவளிக்கு புது கதை வசனம் எழுத வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளாகிறார்கள்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் இப்படி சொல்லத் தோன்றுகிறது. மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதால் அஞ்சத் தேவையில்லை. அதை நமது முயற்சியால் இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் மாற்ற முடியும். இந்திய உழைக்கும் மக்கள் பார்ப்பனியத்தை வென்று பெற்ற உரிமைகளே அதற்கு சான்று. சுருங்கக்கூறின் இந்தியாவில் பார்ப்பனியத்தின் இந்து மத மரபு, அதை எதிர்க்கும் புரட்சிகர மரபு என்று இரண்டுதான் இருக்க முடியும். புரட்சிகர மரபைத் தெரிவு செய்தவர்களிடம் ஊசலாட்டம் இருக்க வாய்ப்பில்லை. இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒரு இல்லாத இடத்தை தேடிக்கொண்டிருக்கும் ‘முற்போக்காளர்கள்’தான் இங்கே பரிதாபத்திற்குரியவர்கள். தீபாவளியின் கொண்டாட்ட வெள்ளத்தில் மூழ்கி கரைசேர முடியாமல் தத்தளிப்பவர்கள் இவர்கள்தான்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!

71

முதுகு வலியும், ஆசன (வாய்) அபத்தங்களும்!

முற்பிறவியில் செய்த சில தீவினைகள் காரணமாக எனக்கு முதுகுவலியும் சைனஸ் பிரச்சினையும் இருக்கிறது. எல்லா உடல் உபாதைகளுக்கும் யோகாவில் தீர்வு இருப்பதாக சொல்லும் நண்பர்களும் இருக்கிறார்கள், இதற்கும் முற்பிறவியின் தீவினைகள்தான் காரணமா என்பதை உறுதியாக சொல்ல  முடியவில்லை. தானாகவே சாகப்போன அருணகிரிநாதரை தடுத்தாட்கொண்ட சிவபெருமானைப்போல நாம் சிகிச்சைக்கு போகும்போதெல்லாம் குறுக்கிட்டு யோகாலோசனை வழங்குகிறார்கள். நான் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு போய்வந்ததை அறிந்த “வாழ்க வளமுடன்” நண்பர், இதுக்குப்போயா டாக்டர்கிட்ட போவீங்க?  நம்ம அறிவுத்திருக்கோயிலுக்கு வாங்க, எல்லா வியாதியையும் ஆசனத்தாலயே சரிபண்ணிடலாம் என்றார். அங்க போனதுக்குபிறகு எனக்கு உடம்புக்கு எதுவுமே வர்றது இல்லை என்றார் மூக்கை உறிஞ்சியபடியே.  கேள்விப்பட்டவரையில் இவர்கள்தான் சகாய விலையில் இந்த சேவையை தருகிறார்கள்,

அங்கு நடந்த உபன்யாசங்கள் நமக்கு அநாவசியமானவை. ஒரு ஆசனம் சொல்லித்தருகிறார்கள், அதுதான் இவர்களின் பிரதான ஆசனமாம். இதை தினமும் செய்தால் லாட்டரியில் பணம் விழுவதைத்தவிர்த்த சகல சௌபாக்கியங்களும் கிடைகும் என்றார்கள். இந்த ஆசனத்தை சுலபமானதா அல்லது கடினமானதா என்று வகைபடுத்த முடியவில்லை, அதாவது ஆசனவாயை ஐந்து முறை உள்ளிழுத்து வெளியேவிட வேண்டும் அவ்வளவுதான். இந்த ஆசனத்தை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது இதைவிட அதிர்ச்சிகரமானது, குதிரைகள் மேற்கூறிய செயலை அடிக்கடி செய்வதால்தான் அவை எப்போதும் துடிப்புடன் இருக்கின்றன என்பதுதான் அந்த கண்டுபிடிப்பு. மகரிஷி குதிரைகள் எனும் அளவில் மட்டும் ஆரய்ச்சியை முடித்துக்கொண்டதை நினைத்து ஆனந்தப்பட்ட வேளையில் பக்கத்திலிருப்பவர் சொன்னார், அடுத்தடுத்த நிலைகளை கற்றால் இந்திரியத்தை முதுகுத்தண்டு வழியே மூளைக்கு பை-பாஸ் சாலையில் அனுப்பும் வித்தையை தெரிந்துகொள்ளலாம் என்று. எனக்கு ஏற்கனவே முதுகுப்பிரச்சனை இருப்பதால், முதுகுக்கு கூடுதல் வேலை கொடுக்க விரும்பவிலை. என்வே இந்த அளவோடு என்னுடைய அமர்வை அங்கே முடித்துக்கொண்டேன்.

அடுத்து வேறொரு நண்பரை சந்தித்தேன், அங்கேயெல்லாம் போகும்போது நம்ம ஈஷாவுக்கு ஒருதரம் வரக்கூடாதா என்றார், “இவ்வளவு தூரம் வந்துட்டு நம்ம வீட்டுக்கு வராம போனா எப்படி?” என்று நம் நண்பர்கள் கேட்பார்கள் இல்லையா அப்படிக்கேட்டார். சரி என்று விசாரித்தால், அவர்கள் அறுநூறு ரூபாய் கேட்கிறார்கள். அதுவும் ஒருவார தொடர் வகுப்பு, இரண்டு நாட்கள் முழுநாள் பயிற்சி வேறு, ஜேம்ஸ் பாண்ட் மாதிரி விதவிதமான ஆடை அணிந்து விதவிதமான கார் பைக்குகளில் போஸ் கொடுப்பதால் ஜக்கி ரொம்பவும் மாடர்ன் சாமியாரோ எனும் எண்ணம் வந்தாலும், அடிக்கடி காட்டுக்குப்போய் பாம்பையும் மிருகங்களையும் பார்ப்பவர் என்பதால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது ( வீட்டுப்பிராணி குதிரையை பார்த்த மகரிஷியின் யோகா அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை ). மேலும் அவர் உங்களிடம் உள்ள ‘நான்’ என்கிற ஈகோவை எடுத்துவிடுவார் என்றார்கள் ( நல்லவேளை சிக்மண்ட் பிராய்டு உயிரோடு இல்லை). கடைசியாக ஒரு தகவல் சொன்னார்கள், சாப்பாட்டில் பூண்டு வெங்காயம் சேர்க்கக்கூடாது என்று. தப்பிப்பதற்கு இதைவிட ஒரு நல்ல காரணம் தேவையில்லை என்பதால், இத்தோடு விசாரணையை முடித்துக்கொண்டேன்.

ஆலோசனைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை, இன்னொரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ ( எத்தனை ஸ்ரீ என்று சரியாக தெரியவில்லை. ஒரு குத்து மதிப்பாக எழுதியிருக்கிறேன் ) ரவிஷங்கர் யோகாவை முயற்சி செய்யலாமே என்றார்கள். ஒரு விளம்பரத்தில் கட்டணம் நாலாயிரத்து சொச்சம் என்று குறிப்பிட்டிருந்தது. அயோடெக்ஸ் ஐம்பது ரூபாய்க்கே கிடைக்கும்போது இது கொஞ்சம் அதிகம் என்று விட்டுவிட்டேன்.

இங்குதான் சாமியார், யோகா தொல்லை என்று இணையத்தை திறந்தால், சாருநிவேதிதா என்று ஒருவர் தன் மனைவி ஒரு சாமியாரை வணங்கத்துவங்கிய பிறகு நடக்கப்போவதை முன்கூட்டியே தன் டைரியில் எழுதி வைப்பதாகவும், இரவில் தூங்கும்போது அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவதாகவும் எழுதியிருக்கிறார்(இயல்பில் அவருக்கு அமெரிக்க ஆங்கில உச்சரிப்பு வரவே வராதாம்) . இது தெரியாமல் தெருவுக்கு தெரு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கும் அறிவிலிகளை என்னவென்று சொல்வது? இன்னொரு செய்தி இன்னும் பயங்கரமானது, அதாவது ‘பிரேக்ஷா’ எனும் தியானம் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஆரய்ச்சியை குஜராத் ஜெயின் பல்கலைக்கழகம் செய்திருக்கிறதாம்.

அடுத்த முறை உங்கள் வீட்டு கழிவறை அடைத்துக்கொண்டால், அவசரப்படாதீர்கள். ஒருமுறை உங்கள் ஆசன நண்பர்களிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள். யார் கண்டது அதற்கும் அவர்களிடம் யோகா மூலமான ஒரு தீர்வு இருக்கக்கூடும்.

நன்றி: வில்லவன்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவுகள்

திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? – சி.பி.எம். இன் நில அபகரிப்பு

திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? - சி.பி.எம். இன் நில அபகரிப்பு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு மாலைப் பொழுது அது. மே.வங்க சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி, விவசாயிகளின் போராட்டத்தை வழிநடத்திய கமல் பத்ரா என்பவரின் பிணம் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு கொன்று தொங்கவிடப்பட்ட மற்ற பிணங்களைப் போலத்தான் அதுவும் தொங்கவிடப்பட்டிருந்தது. கமல் பத்ராவின் சகோதரர்களும், மகனும் காணாமல் போகடிக்கப்பட்டிருந்தனர். போலீசு வழக்கம் போலவே, இதையும்  தற்கொலை  என்றுதான் கூறியது.

இக்கோரச் சாவுகள் தொடர்கதையாகிப் போன அந்தக் கிராமத்தையொட்டி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நவீன கேளிக்கை நகரம் உள்ளது. வார இறுதியில் இருள்கவியத் தொடங்கிவிட்டால், அவ்விடத்தின் அமைதியைக் கிழிக்கும் வகையில் காதைப் பிளக்கும் மேற்கத்திய இசையும், கட்டவிழ்த்து விடப்படும் கேளிக்கைகளும், மேல்தட்டு விபச்சாரமும் அங்கே அரங்கேறத் தொடங்கி விடுகின்றன. அருகிலுள்ள பெருநகரத்து மேட்டுக்குடி இளசுகள், கப்பல் போன்ற நவீனரகக் கார்களில் வந்து குவிகிறார்கள். இந்தக் கேளிக்கை நகரம் அந்தக் கிராம மக்களின் நிலங்களைப் பிடுங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து உருவாக்கப்பட்டது.

குடியும் கூத்துமான அத்தகைய முன்னிரவுப் பொழுதில், வெறுப்பின் உச்சத்திலிருந்த அந்தக் கிராம மக்கள்  அங்கே ஊடுருவித் தாக்க ஆரம்பிக்கின்றனர். கேளிக்கை விடுதி குண்டர்படைக்கும், கிராம மக்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடிக்கிறது. கேளிக்கை விடுதியின் ஒரு பகுதி முற்றிலும் உடைத்து நாசம் செய்யப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இருக்கும் ராஜர்காட் எனும் கிராமப் பகுதியில்தான் இவை அனைத்தும் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடந்தன.

மேற்கு வங்கத்தைத் தொழில் வளமிக்க மாநிலமாக மாற்றுவது என்ற பெயரில் சிங்கூர், நந்திகிராம் போன்ற பகுதிகளில் புத்ததேவ் பாணியில், அடித்து உதைத்து நிலங்களைப் பறித்தெடுக்காமல்,  ராஜர்காட் பகுதியில் ‘அமைதியான முறையில்’ நிலம் கையகப்படுத்தப்பட்டதாம். இதுதான்  மூத்த தலைவர் ஜோதிபாசுவின் பாணி!

இந்தப் பகுதியில் “ராஜர்காட் புது நகரம்” என்ற திட்டத்தின் பெயரில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இவற்றுடன் சேர்ந்து கேளிக்கை விடுதிகளும், பூங்காக்களும், மேல்தட்டு விபச்சார விடுதிகளும் பெரிய அளவில் கட்டப்பட்டன. அப்படிப்பட்ட கேளிக்கை பூங்காக்களில் ஒன்றுதான் “வேதிக் வில்லேஜ்’’.

கிராம மக்களும், குண்டர்களும் வேதிக் வில்லேஜ் என்ற கேளிக்கைப் பூங்காவில் மோதிக் கொண்ட பிறகுதான், அம்மக்களிடம் நிலங்களைப் பறித்த அரசுக்கும் மாபியா கும்பலுக்குமிடையிலான வலைப்பின்னல்களும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கைநனைத்த மோசடிகளும், சி.பி.எம். கட்சியினர் இம்மோசடியில் முங்கிக் குளித்ததும் வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கின.

வேதிக் கிராம நிர்வாக அமைப்பின் துணை மேலாளரான பிப்லவ் பிஸ்வாஸ், குண்டர்களை கூலிக்கு அமர்த்திக் கொண்டு கிராம மக்கள் மீது தாக்குதலை ஏவியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரோடு, வேதிக் கிராம ஓய்வு விடுதி கம்பெனி (VRC)யின் நிர்வாக இயக்குனரான ராஜ்மோடி மற்றும் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிமினல் குண்டர்கள் துணையுடன் நிலமோசடிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டுவரும் சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளைப் பெரும்பான்மையாக கொண்ட ராஜர்காட் பகுதி, மேற்கு வங்கத்திலேயே மண்வளமிக்க பகுதிகளில் ஒன்று. வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு போகம் வரை விளையக்கூடிய  அளவுக்கு மண்வளமும், நீர்வளமும் அபரிமிதமாக உள்ளது.  அனைத்து பயிர் வகைகளும், தானியங்களும், காகனிகளும் இங்கு விளைவிக்கப்படுகின்றன. கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தேவையில் 20 முதல் 25% இந்தப் பகுதியில்தான் விளைவிக்கப்படுகிறது. இந்தப் பகுதியின் நீர்பாசனத்திற்கு மட்டும் ஐந்து கால்வாகள்  உள்ளன. இந்த கால்வாகளையும், பிற செயற்கை மீன்பிடிக் குட்டைகளையும் நம்பி மீன்பிடித் தொழிலும் வளமாக உள்ளது.  பால் உற்பத்தியிலும் இந்தப் பகுதி முக்கியப் பங்கு வகிக்கிறது. இவையனைத்தும் வளமிக்க அந்த மண்ணை நம்பித்தான் உள்ளன.

இந்தப் பகுதியில்  புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான வேலைகளும் அது சார்ந்த பிற உள்கட்டுமானங்கள், கேளிக்கை விடுதிகள், வீட்டுவசதிகள் போன்றவற்றை நிர்மாணிப்பது என்ற பெயரில்  ரியல் எஸ்டேட் வியாபாரமும் 1999-க்குப் பிறகு சூடு பிடிக்கத் தொடங்கியது. டி.எல்.எப், கெப்பெல் லாண்ட், யுனிடெக் குரூப், சிங்கப்பூரைச் சேர்ந்த அஸென்டாஸ், வேதிக் ரியால்டி போன்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இங்கு பெரிய அளவில் முதலீடு செய்யத் தொடங்கின. 2005-இல் டி.எல்.எப்.-பின் ஒரு தகவல் தொழில் நுட்பப் பூங்கா கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

இவற்றுக்குத் தேவையான நிலங்களைத்தான் மிகக் கொடூரமான, விரிவான சதித் திட்டத்தின் மூலம், ஊழல் மோசடிகள் செய்து கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகளிடமிருந்து பறித்துள்ளது சி.பி.எம். அரசு. 1995-லேயே இந்தப் பகுதி நிலங்களும், நீர்நிலைகளும் “ராஜர்காட் நகர்ப்புறக் குடியிருப்பு” என்ற திட்டத்தின்கீழ் கையகப்படுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்தது.  இதையொட்டி சுமார் 7000 ஹெக்டேர் அளவிலான நிலமும், நீர்நிலைகளும் கையகப்படுத்தப்படுவது 1999-லிருந்து தொடங்கியது. இத்திட்டம் வரும் முன்னரே, காங்கிரசு கட்சியால் பாதுகாக்கப்பட்ட ரவுடியான ருதஸ் மண்டலை சுவீகரித்துக் கொண்ட சி.பி.எம். கட்சி, 1993-ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் அவனைக் களமிறக்கியது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லுகள் செய்து, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் இவனை வெற்றியடையச் செய்தது சி.பி.எம். இவனைப் போன்ற ஒரு ரவுடியை அதிகாரத்தில் வைப்பதன் மூலம் மக்களை மிரட்டி நிலங்களை அபகரிக்க முடியும் என்ற திட்டத்துடன்தான் சி.பி.எம். அரசு இதனைச் செய்தது.

ஆனால், இவற்றுக்கெல்லாம் முன்னரே மேற்கு வங்கத்தின் மிகப் பெரிய நில விற்பனைத் தரகு மாபியாவும், சி.பி.எம். கட்சியின் நெருங்கிய நண்பனுமான, கமல் காந்தியும் அவனது மார்வாரி நண்பர்களும் இந்தப் பகுதியில் நிலங்களை வாங்கிப் போடத் தொடங்கினர். சி.பி.எம். கட்சியில் தனக்கிருந்த செல்வாக்கின் மூலம் ராஜர்காட் பகுதியில் திட்டப் பணிகள் நடைபெற உள்ளதை முன்கூட்டியே அறிந்து கொண்டிருந்தான், கமல் காந்தி. நிலங்களைக் கொடுக்க மறுத்த விவசாயிகள் இவனால் கடுமையாக மிரட்டப்பட்டனர்.  சில கொலைகளும் விழுந்தன. நிலங்களை கைமாற்றியதில் சி.பி.எம். பிரமுகர்கள் பலரும் நேரடியாக லாபம் அடைந்தனர்.  போலீசு-சி.பி.எம்.கட்சி-ரவுடிகள் கூட்டணியுடன் விவசாயிகளிடமிருந்து நிலங்களை அபகரிக்கத் தொடங்கினான் கமல் காந்தி. வாங்கிய நிலங்களில் ஒரு பெரும் பகுதி சி.பி.எம். கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினரும், கமல் காந்தியின் உறவினருமான சரளா மகேஸ்வரிக்குச் சொந்தமாக்கப்பட்டது. இதன் காரணமாக சி.பி.ஐ. (மார்வாரி) கட்சி என்ற பெயரும் சி.பி.எம்.-முக்குக் கிடைத்தது.

1999-இல் அரசு நிர்ணய விலையே ஒரு காதா (மேற்கு வங்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு நில அளவை)விற்கு ரூபா 40,000 லிருந்து 50,000 வரையாகும். ஆனால் ராஜர்காட் நிலங்களுக்கு அரசு தந்ததோ வெறும் 4000 முதல் 5000 ரூபா வரை மட்டுமே. இதனை ஏற்றுக் கொள்ளச் சொல்லி துப்பாக்கி முனையில் மக்கள் மிரட்டப்பட்டு நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இந்த அநியாயத்துக்குத் துணை போகுமாறு உள்ளூர் சி.பி.எம். கமிட்டிகளே கூட செயலிழக்கச் செய்யப்பட்டன.  இவற்றைத் துணிச்சலோடு எதிர்த்தவர்கள் காணாமல் போயினர்; அல்லது கொடூரமாகக் கொல்லப்பட்டு, தற்கொலை என சோடிக்கும் வகையில் மரங்களில் தொங்கவிடப்பட்டனர். இது போலக் கொல்லப்பட்டவர்கள் 50 பேருக்கும் மேல் இருக்கும்.

சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரேனும் நில அபகரிப்பை எதிர்ப்பதில் ஈடுபாடு காட்டினால், அவர்கள் உடனடியாகத் தண்டிக்கப்பட்டனர். முன்னணியில் நின்று செயல்பட்ட இளைஞர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு நடைபிணமாக்கப்பட்டனர். நந்திகிராம் பாணியில், சிகப்பு நிற நெற்றிப் பட்டையைக் கட்டிக் கொண்டு நூற்றுக்கணக்கான சி.பி.எம். குண்டர்கள் கிராமங்களில் வலம் வந்து மக்களை மிரட்டினர். இந்நிலையில், நில அபகரிப்பை எதிர்த்த விவசாயிகள் ஒரு இயக்கம் கட்டினர். அதே போல, விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டதால் வேலை இழந்தோர் இன்னொரு இயக்கம் கட்டினர். இவ்விரண்டு இயக்கங்களின் தலைவர்களும் தனியே  அழைத்து வரப்பட்டு சி.பி.எம். கட்சியின் எம்.எல்.ஏ.வான ராபின் மண்டல் முன்னிலையில், சி.பி.எம். குண்டர் படையினராலும்  போலீசு குண்டர் படையினராலும்  மிரட்டப்பட்டனர். குனி,  ஜட்ராகச்சி மற்றும் சுலன்குரி போன்ற பகுதிகளில் மக்களின் போராட்டங்கள்  சி.பி.எம். குண்டர் படையாலும், போலீசாலும் ஒடுக்கப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான போலீசு படை, இப்பகுதியில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.

இன்னொரு பக்கம், மக்களின் எதிர்ப்பு நாளுக்குநாள் வலுத்து வந்த நிலையில், ராஜர்காட்டில் சி.பி.எம்.மிலிருந்து வெளியேறிய கமல் பத்ரா என்பவர் தலைமையில் ஒரு இயக்கம் உருவானது. சி.பி.எம். குண்டர் படை இவரைக் கடத்திச் சென்று கொன்று பிணத்தை மரத்திலே தொங்கவிட்டது. இவரது படுகொலை, ராஜர்காட் பகுதியின் எதிர்ப்பியக்கங்களுக்கு பேரிடியாக அமைந்தது. எதிர்ப்பியக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தன.

ராஜர்காட்டில் நடந்த இந்த நிலப்பறிப்பு மோசடிகள் அனைத்திலும் அனைத்துக்  கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும், ரவுடிகளும் நேரடியாக லாபம் அடைந்தனர். எனவேதான், நந்திகிராமிலும் சிங்கூரிலும் விவசாயிகளுக்காகப் போராடுவதாக நாடகமாடிய மம்தாவின் திரிணாமுல் காங்கிரசு, ராஜர்காட் மோசடிக்கெதிராக ஒப்புக்குக் கூட பேசவில்லை. ஒருபடி மேலே சென்று, விவசாயிகளை நம்ப வைத்து அக்கட்சி கழுத்தறுத்தது.  கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நில அபகரிப்பை எதிர்த்து விவசாயிகளின் இயக்கம் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தது. திரிணாமுல் காங்கிரசும் வழக்கு ஒன்றைத் தொடுத்தது. இந்நிலையில், “நாங்களே வழக்கு நடத்துகிறோம், எங்களால்தான் வழக்குக்கான பொருளாதாரச் சுமைகளை சமாளிக்க இயலும்” என்று கூறி விவசாயிகளின் வழக்கை அக்கட்சி வாபஸ் பெற வைத்தது.  அதைத்தொடர்ந்து, உடனே திரிணாமுல் காங்கிரசும் வழக்கைத் திரும்பப் பெற்று கழுத்தறுத்தது.

அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தான்மே மண்டல், ராஜர்காட்டில் எஞ்சியுள்ள நிலங்களைக் குறைந்த விலைக்கு அபகரித்து, அதிக விலைக்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டியுள்ளான். எஞ்சியுள்ள நிலம் குறித்த விவரங்களை சி.பி.எம். கட்சிக்காரர்களின் உதவியுடன் ஹிட்கோ (HIDCO) அரசு அலுவலகத்தில்  இருந்து இவன் பெற்றுள்ளான். இந்த சி.பி.எம்.  திரிணாமுல் காங்கிரசு கூட்டணி ஒரு காதாவிற்கு ரூபா பத்தாயிரம் முதல் 15 ஆயிரம்  வரை மட்டுமே கொடுத்துவிட்டு, அதனை ரூபா 5 முதல் 6 லட்சம் வரை விற்று கோடிக்கணக்கில் சுருட்டியது.

எதிர்ப்புகள் ஒடுக்கப்பட்ட நிலையில், ராஜர்காட்டின் வளமிக்க குளம், குட்டைகள், விவசாய நிலங்கள் அனைத்தும் நிரவப்பட்டு அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. சி.பி.எம்., காங்கிரசு, திரிணாமுல் கட்சியினர் இவற்றில் முதலீடு செய்து கொழுத்த லாபமடைந்தனர்.  மாநகராட்சி விதிமுறைகளில் தில்லுமுல்லுகள் செய்து பல கோடிகள் சுருட்டப்பட்டன. புற்றீசல் போல கேளிக்கை பூங்காக்கள் பெருகின. விபச்சாரமும், குடியும் கூத்தும் தலைவிரித்தாடின. இப்படிப்பட்ட கேளிக்கை விடுதிகளில் ஒன்று, சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டு வீராங்கனையுமான  ஜோயிதிர்மயி சிக்தரின் கணவருக்குச் சொந்தமானதாகும். வேதிக் வில்லேஜ் கேளிக்கை விடுதியே சி.பி.எம்.மின் கூட்டாளியான மார்வாரி கமல் காந்தியின் நிலத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜர்காட்டில் இப்பொழுது மீதமிருக்கும் விவசாய நிலங்களையும் அபகரிப்பதற்காக இன்னொரு திட்டம் அங்கு செயல்படுத்தப்பட உள்ளது. பாங்கோட் ராஜர்காட் பகுதி மேம்பாட்டு நிறுவனம் (BRADA-Bhangot Rajargat Area Development Authority) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் செயலாளராக இருப்பவர் சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினரான ராபின் மண்டல். இந்தத் திட்டத்திற்காக ஒரு காதாவிற்கு ரூபா எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரை கொடுத்து வாங்கியுள்ள ராபின் மண்டல் கும்பல், அதனை ரூபா 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை விற்றுக் கொள்ளை லாபம் அடைந்துள்ளது.

சி.பி.எம்.-மின் நில மோசடி சந்தி சிரிக்கத் தொடங்கியவுடன், அந்தக் கட்சியின் மாநிலக் குழு தலையிட்டு ராஜர்காட் திட்டத்தைக் கைவிடச் சொல்லி அறிவுரை கூறியுள்ளது. சி.பி.எம். அரசோ தேனெடுத்த கையால் புறங்கையை நக்கிப் பழகிவிட்டது. எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிடத் தயங்கியது. சி.பி.எம். கட்சியின்  நிலம் மற்றும் நிலச் சீரமைப்புத் துறை அமைச்சரான அப்துர் ரெசாக் மொல்லா பின்வருமாறு திமிராக கூறினார்: “பொழுதுபோக்கு மையத்திற்கும், கேளிக்கை விடுதிக்கும் நிலம் கொடுப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது?” என்று.  அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் உள்ள சீத்தாரம் யெச்சூரியோ “விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ராஜர்காட்டில் நிலம் ஒதுக்குவதை நிறுத்தக் கூடாது” என்கிறார்.

மம்தா பானர்ஜி ஆரம்பத்திலிருந்தே இந்த பிரச்சினையில் ஆழ்ந்த மௌனம் சாதித்தார். பின்னர் விவசாயிகளின் அதிருப்தியைத் தொடர்ந்து, எதிர்ப்பது போலப் பாசாங்கு செய்தார். இப்பொழுது சி.பி.எம். அரசே இந்தத் திட்டத்தைக் கைவிட்டு பின்வாங்கும் நிலையில், நிலங்களை மீண்டும் கைப்பற்றி விவசாயம் செய்யச் சொல்லி விவசாயிகளிடம் சவடால் அடிக்கிறார். ஆனால், விவசாயிகளால் மீண்டும் விவசாயம் செய்ய இயலாது. ஒருவனைக் குடிபோதையில் தள்ளிவிட்டு மீண்டும் குடிக்காதே என்று சொல்லுவது போல, நவீன நகரத்தை உருவாக்கி விவசாயிகளை உதிரிப் பாட்டாளிகளாக மாற்றிவிட்டு, அத்தகைய கலாச்சாரத்தில் தள்ளிவிட்டு, இப்பொழுது மீண்டும் விவசாயம் செய்யச் சொன்னால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.  பழைய வாழ்க்கைக்கும், புதிய வாழ்க்கைக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் விவசாயிகள் சிக்கியுள்ளனர்.

சி.பி.எம். தலைவர்கள் நேரடியாகவே ராஜர்காட் நில மோசடியில் ஈடுபட்டு அம்பலமாகியுள்ளனர். கட்சியோ இந்த மோசடியில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்குத் தயாராக இல்லை. ஊழல் பெருச்சாளிகளான உள்ளூர் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், மே.வங்கத்தில் சி.பி.எம். கட்சியே காணாமல் போய்விடும். எனவேதான், விசாரணை ஏதுமின்றி திட்டத்தைக் கைவிடச் சொல்லி சாமர்த்தியமாக களவாணித்தனத்தை மறைப்பதற்குக் கற்றுத் தருகிறது. இந்த ஞானோதயம் கூட சி.பி.எம். கட்சிக்கு நேர்மையின் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தோன்றவில்லை. ஏற்கெனவே நகர்ப்புறங்களில் கட்சிக்கு ஆதரவாக இருந்து வந்த நடுத்தர வர்க்கம், அறிவுஜீவிகள், தொழிலாளி வர்க்கம் போன்றவை, நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியைக் கைகழுவி விட்டன. அடுத்து வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் விவசாயி வர்க்கமும் கைகழுவி விட்டதென்றால், மண்ணைக் கவ்வ வேண்டியதுதான் எனும் அச்சத்தின் காரணமாகவே இந்த ஞானோதயமும் வந்துள்ளது.

சி.பி.எம். கட்சி, ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல்களின் கூடாரமாக மாறிவெகுகாலமாகிவிட்டது. அது, மக்களையே ஒடுக்கும் பாசிச கும்பலாக  மாறி விட்டது. இப்படிச் சொன்னால், சி.பி.எம். கட்சியிலுள்ள அணிகளுக்கும் அக்கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள பலருக்கும் சந்தேகமும் வெறுப்பும் ஆத்திரமும் ஏற்படலாம். ஊழலையும் மோசடியையும் எதிர்த்துப் போராட உறுதி கொண்டவர்களும், புரட்சியின் மீது பற்று கொண்டவர்களும்  ராஜர்கட் பகுதிக்குப் போய்ப் பாருங்கள். அல்லது, சி.பி.எம். தலைவர்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது,  உள்ளூர் தலைவர்களின் ஊழல் சந்தி சிரித்த பின்னரும் விசாரணை நடத்தாதது ஏன் என்ற கேள்விகளைக் கட்சித் தலைமையிடம் கேட்டுப் பாருங்கள். எச்சரிக்கை! கமல்பத்ராவுக்கு நேர்ந்த கதி உங்களுக்கும் ஏற்படலாம்.

-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009  மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

கல்லூரி முதல்வரை விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!

சென்னை-கிண்டி அருகே செயல்பட்டு வருகிறது, செல்லம்மாள் மகளிர் கல்லூரி. பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட இக்கல்லூரியில், சுமார் மூவாயிரம் மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதியன்று துவங்கி, வகுப்பு புறக்கணிப்பு, அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து மனு கொடுப்பது, கல்வி இயக்குனரிடம் முறையிடுவது, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது- என பல கட்டங்களை கடந்த பின்னரும் தொடர்ந்து வருகிறது, இக்கல்லூரி மாணவிகளின் போராட்டம்!

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக வேறு கல்லூரிக்கு மாற்றப்பட்டிருந்த  செல்லம்மாள் கல்லூரியின் முன்னாள் முதல்வர், ‘ஊழல்ராணி’ ரமாராணியை மீண்டும் இதே கல்லூரிக்கு முதல்வராக நியமித்திருக்கிறது, பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம்.

நன்கொடை என்ற பெயரில் கட்டில், மெத்தை, பீரோ, மின்விசிறி என்று (தாய்வீட்டு சீதனத்தை!) மாணவிகளிடம் மிரட்டிப் பறித்து, தன் வீட்டிற்கு எடுத்து செல்வது; இவரது இலஞ்ச ஊழலை எதிர்க்கும் மாணவிகளை மிரட்டுவது, பழிவாங்குவது – என கல்லூரிக்குள் காட்டுத் தர்பாரே நடத்தியவர்தான், இந்த ரமாராணி!

தனியாருக்கு நிகராக அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நடக்கும் அட்டூழியங்கள், அடக்குமுறைகள், பகற்கொள்ளை-வழிப்பறிகளுக்கு ஒரு வகைமாதிரிதான் இக்கல்லூரியும் அதன் ஊழல் முதல்வரும்!

ஆக, இத்தகைய ஊழல் பேர்வழி ரமாராணியை தமது கல்லூரியின் முதல்வராக நியமிக்கக் கூடாது; இலஞ்ச ஊழலும் கட்டாய நன்கொடையும் எந்தக் கல்லூரியிலும் தொடரக்கூடாது என்பதுதான் போராடும் மாணவிகளின் கோரிக்கை.

இம்மாணவிகளின் போராட்டத்தின் நியாயத்தையும், இவர்கள் காட்டும் முன்முயற்சியையும் முனைப்பையும் உணர்ந்து, களமிறங்கியது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. கல்லூரி வளாகத்துக்குள்ளே முடங்கிக் கிடந்த இப்பிரச்சினையை வீதிக்கு கொண்டு வந்தது. “ஊழல் பெருச்சாளி ரமாராணியை கல்லூரியை விட்டே விரட்டியடிப்போம்!” என்ற தலைப்பிட்ட சுவரொட்டிகள் நகரெங்கும் பளிச்சிட்டன.

பச்சையப்பன் கல்லூரியில் செயல்படும் பு.மா.இ.மு.வின் கிளை சார்பில், இம்மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக அக்கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி செப்-3 அன்று மறியல் போராட்டத்தை நடத்தினர்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத போலீசு, ஆத்திரமுற்று தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தது. போராட்டத்தை முன்னின்று நடத்திய பு.மா.இ.மு.வின் பச்சையப்பன் கல்லூரி கிளைச் செயலர் ஏழுமலை உள்ளிட்ட இருவரைக் கைது செய்து சிறையிலடைக்க எத்தனித்தது!

இத்தகவல் அறிந்த நூற்றுக்கு மேற்பட்ட செல்லம்மாள் கல்லூரி மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, போலீசு நிலையம் முன்பு குவிந்தனர். “எமக்காகப் போராடிய மாணவர்களை விடுதலை செய்! இல்லையேல் எம்மையும் கைது செய்!” எனக் கோரி போலீசு நிலையத்தை முற்றுகையிட்டனர். வேறுவழியின்றி, அம்மாணவர்களை அன்று மாலையே விடுதலை செய்தது போலீசு!

நகரெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும், இம்மாணவிகளுக்கு ஆதரவாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் மறியல் போராட்டத்தையும் கண்டு அதிர்ச்சியுற்ற மாவட்ட நிர்வாகம், கல்லூரி முன்பு போலீசுப் படையைக் குவித்தது. குற்றவாளிகளைப் போல் மாணவிகளைக் கண்காணித்தது. கல்லூரி நிர்வாகமோ, போராட்டத்தைத் தூண்டும் ‘அன்னிய சக்திகளை’ அடையாளம் காட்டும்படி மாணவிகளை மிரட்டியது!

இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாத முன்னணியாளர்கள், பு.மா.இ.மு.வின் வழிகாட்டலில், அனைத்து மாணவிகளிடமும் தொடர்ந்து சந்தித்து பேசி நம்பிக்கையூட்டினர். அடுத்தகட்டப் போராட்டம் குறித்து விவாதித்தனர்.

இதனைதொடர்ந்து, செப்-8 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை அணிதிரட்டிக் கொண்டு கல்லூரி கல்வி இயக்குனரை சந்தித்து முறையிடச் சென்றனர். பெருந்திரளாக மாணவிகள் திரண்டு வருவதைக் கண்டு அரண்டுபோன கல்லூரி கல்வி இயக்குனர், அலுவலகக் கோப்புகளை அப்படியே போட்டுவிட்டு பின்வாசல் வழியே அப்போதுதான் ஓடியிருந்தார். அவரைச் சந்திக்காமல், இங்கிருந்து செல்வதில்லை என உறுதியாய் நின்றனர் மாணவிகள். வேறுவழியின்றி, அவருக்குப் பதிலாக நிதித்துறை இணை இயக்குனர் மனுவைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக எழுதிக் கொடுத்தார்.

இம்மனு மீதான விசாரணைக்காக ஒருவாரம் காத்திருந்தனர். நடவடிக்கை எதுவுமில்லை. வீதியில் இறங்காமல் இதற்கோர் விடிவுப் பிறக்காது என்பதையுணர்ந்த மாணவிகள், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தத் திட்டமிட்டனர்.

அதன்படி, செப்-16 அன்று மெமோரியல் அரங்கம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாய் நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். இதனைக் கண்டு பீதியடைந்த கல்லூரி நிர்வாகம், செப். 15-ந் தேதி மாலை 5மணியளவில் திடீரென்று நாளை அனைவருக்கும் “செமினார்” என்றும், அதில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியது!

கல்லூரிக்கு முன் முகாமிட்டிருந்த போலீசும் தன்பங்குக்கு  கல்லூரியிலிருந்து ஆர்ப்பாட்டத்துக்குக் கிளம்பிய மாணவிகளைத் தடுத்து நிறுத்த முனைந்தது. மாணவிகளோ “போலீசு கமிசனரிடம் அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதனைத் தடுக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை” என பதிலடி கொடுத்து விட்டு அணி அணியாய் கிளம்பினர், ஆர்ப்பாட்டத்திற்கு!

சென்னை பு.மா.இ.மு. மாவட்டச் செயலர் தோழர் வ.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பு.மா.இ.மு.வின் மாவட்ட இணைச்செயலர் தோழர் த.கணேசன் மற்றும் போராட்டத்தை முன்னின்று நடத்திய முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர். பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டு எண்ணூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அணிதிரண்டு கண்டன முழக்கமிட்டு நகரையே அதிர வைத்தனர்.

‘‘ஊழல்பெருச்சாளி ரமாராணியை கல்லூரியை விட்டு விரட்டும் வரை தமது போராட்டம் தொடரும்” என அறிவித்துள்ள இம்மாணவிகள், அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009  மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

திருப்பதி ஏழுமலையானை கைது செய்!

105

திருப்பதி ஏழுமலையானை கைது செய்!

“சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் எஸ்.ஜீவன் 12.10.2009 அன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் புறக்காவல் நிலையம் அருகே விஷம் அருந்திய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது சட்டைப்பையில் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி எழுதிய கடிதத்தில்..’ வெங்கடாஜலபதி முன்பாக இறக்க வேண்டும் என்று விரும்பி இந்த முடிவை எடுத்தேன். எனது சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. எனது மரணத்தால் பெற்றோரும் உறவினர்களும் அழவேண்டாம். மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை தேடிக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.”

–          இது 13.10.2009 தினத்தந்தியில் வெளிவந்த ஒரு செய்தித் துணுக்கு.

ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு மனிதனுக்கு மட்டுமல்ல மனிதன் உருவாக்கிய கடவுளர்களிடமும் உண்டு என்பதற்கு விசுவரூப சாட்சி திருப்பதி வெங்கடாசலபதி. தஞ்சை மாவட்டத்தின் பிரம்மாண்டமான சிவன் கோவில்களெல்லாம் வௌவால் நாற்றத்தில் ஆளில்லாமல் நாறும் போது திருப்பதி ஏழுமலையான் மட்டும் தங்கத்தில்தான் குளிப்பார். இந்தியாவின் இருபதாம் நூற்றாண்டில் சாதாரண நிலையிலிருந்து பில்லியனர் நிலைக்கு உயர்ந்தவர்கள் இரண்டுபேர். ஒருவர் அம்பானி, மற்றொருவர் வெங்கடாசலபதி. அம்பானி மோசடி செய்து பில்லியனரானார் என்றால் மோசடி செய்த பணக்காரர்களின் கருப்பு நோட்டை வைத்து பில்லியனாரானவர் ஏழுமலையான்.

முனி, இசக்கி, சுடலைமாடன், மதுரைவீரன், முத்தாரம்மன் என நாட்டுப்புறத் தெய்வங்களை வணங்கும் உழைக்கும் மக்கள் தமது காணிக்கையாக அவர்களது வாழ்வில் கிடைக்கும் பொருட்களை படைப்பார்கள். கிடாவை வெட்டினால் அது படைக்கப்பட்டு பலருக்கும் உணவாய் போய்ச்சேரும். எதுவும் வீணாவதில்லை.

நகர்ப்புறத்து நடுத்தரவர்க்கம், மேட்டுக்குடியின் தெய்வமான ஏழுமைலையானுக்கு மட்டும் தங்கமும், புதுமணம் மாறாத கரன்சி நோட்டுக்களும்தான் பிடிக்கும். இப்போது ஒரு உயிரையே காணிக்கையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். மன உளைச்சலால் அவதியுற்ற ஜீவன் என்ற மாணவன் தனக்கு பிடித்த கடவுளின் சன்னதியில் வைத்தே உயிரை துறந்திருக்கிறான். பட்டை நாமம் போட்டு கண்மூடிய நிலையில் இருந்தாலும் முழு உலகையும் விழிப்புடன் ஆளுவதாக நம்பப்படும் வெங்கடாசலபதி இந்த மாணவனின் உயிரைப் போய் ஒரு காணிக்கையாக ஏன் பறித்துக் கொண்டார் என்பது நம் கேள்வி.

முடியைத் துறப்பதிலிருந்து, 24 காரட் சவரன், அமெரிக்க டாலர் என விதவிதமாக காணிக்கைகளை கொட்டும் பக்தர்கள் பதிலுக்கு தங்களுக்கு நடக்கவேண்டிய, அல்லது வேண்டி நடந்த நிகழ்வுகளுக்காக ஏழுமலையானுடன் பிசினஸ் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது வழக்கம். ஆனால் ஜீவன் மட்டும் தனது உயிரைக் காணிக்கையாக அளித்து பதிலுக்கு ஏதும் பெறாமலேயே இறந்து விட்டார். அல்லது அவர் வேண்டியது வெங்கடாசலபதியின் தயவில் நடப்பதாக இருந்தாலும் அதைப் பார்ப்பதற்கு அவரிடம் உயிரில்லை. தனது மகனின் உயிரை காணிக்கையாக பறித்துக் கொண்ட அந்த இறைவனிடம் ஜீவனின் பெற்றோர் என்ன கோரிக்கை வைக்க முடியும்? அவர்களைப் பொறுத்தவரை திருமலை என்பது இனி புண்ணியத் தலமல்ல, மகனைப் பறிகொடுத்த இழவுத் தலம்.

ஜீவன் தனது ஜீவனையே காணிக்கையாக கொடுத்திருந்தாலும் அந்த இறந்த உடல் ஏழுமலையானின் சன்னதிக்கு செல்லப்போவதில்லை. திருப்பதியின் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் அறுத்து பிரதேப் பரிசோதனை செய்யப்படும் அவரது உடல் சென்னையின் ஏதோ ஒரு சுடுகாட்டில் சாம்பலாகப் போகிறது. லவுகீக சமாச்சாரங்களை பேஷாக எடுத்துக் கொள்ளும் திருமலையான், ஜீவனின் உடலையோ அல்லது இறைப்பற்றாளர்கள் நம்பும் அந்த உடலுக்குள் இருக்கும் ஆன்மாவையோ சட்டை செய்யப் போவதில்லை. விஷம் பாய்ந்த அந்த உடலை விட கருப்புப் பணமே இந்த காஸ்ட்லியான கடவுளின் விருப்ப காணிக்கை. கரன்சிக்கும், தங்கத்துக்கும் மத்தியில் அந்த மனித உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

ஜீவனின் மரணத்தை வெளியிட்டிருக்கும் தினத்தந்தியில் மற்றொரு செய்தியும் வந்திருக்கிறது. ஏழுமலையானை தரிசிப்பதற்கு நாடு முழுவதும் தினசரி பல்லாயிரம் பேர் வருகிறார்கள். தர்ம தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு பல மணிநேரம் வரிசையில் நின்றால்தான் சாமி தரிசனம் செய்ய முடியும். அதிகாலை சுப்ரபாத சேவையில் தொடங்கி தோமாலா சேவை, அர்ச்சனா, ஆனந்த தரிசனம் என்று பல்வேறு தரிசனங்களுக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி வழிபடுகிறார்கள். இதற்கான சுதர்சன டோக்கன் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறதாம். 15,000 பேர்கள் தினசரி சுதர்சன டோக்கன் பெற்று வழிபடுகிறார்கள்.

இப்போது இந்தக் கட்டண முறைகளை ஒழித்து விட்டு ‘சீக்கிர தரிசனம்’ என்று 300 ரூபாய்க்கு அறிமுகப்படுத்துகிறார்களாம். திருமலையான் கவலைப்படாத ஏழைகள் தர்மதரிசனத்தில் புழுங்கும் போது பணமுள்ளவர்களுக்கு மட்டும் சீக்கிர தரிசனம். இப்படி வழிபாட்டிலேயே பணமுள்ளவனுக்குத்தான் முன்னுரிமை என்று அப்பட்டமான பேதத்தை கடைபிடிக்கும் ஏழுமலையானின் சன்னிதியில் ஜீவன் ஏன் உயிரை விட்டார்?

தென்னிந்தியாவில் இறைவழிபாட்டை ஒரு நவீன பாணியாக்கிய இரண்டு இடங்களில் திருப்பதிக்கும், சபரிமலைக்கும் முக்கிய இடமுண்டு. சபரிமலையில் கூட சிலமாதங்கள் மட்டும்தான் சீசன் என்றால் திருப்பதியிலோ தினசரி சீசன்தான். இந்தியாவில் தாராளமயம் வளர்ந்து வந்த அதே காலத்தில் திருமலையானும் செழிப்பாக வளர்ந்து வந்தார். ஆந்திராவில் நிலவும் நிலவுடமை பிற்போக்குத்தனத்தின் உரிமையாளர்கள் அத்தனை பேருக்கும் ஏழுமலையான்தான் ஸ்பான்சர். பதவி இழந்த சந்திரபாபு நாயுடுவோ, அவருக்கு வழி ஏற்படுத்திய ராமாராவோ, நேற்று கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவியோ அத்தனை பேரும் தமது அரசியல் வாழ்வில் வெங்கடாசலபதியை தொழுது விட்டே பணிகளை ஆரம்பிப்பார்கள்.

வெள்ளத்தில் மூழ்கித் தவிக்கும் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்து கிராம மக்கள் இன்னும் நிவாரண உதவி கிடைக்காமல் அவதிப்படும் அந்த மக்கள் பார்வையிட வரும் முதல்வர் ரோசய்யாவின் கார்மீது கல்வீசி தமது ஆத்திரத்தை காண்பித்தார்கள். இப்படி புறநிலையான வாழ்வில் அதிகாரம் செலுத்துவோர் மீது வெறுப்புறும் மக்கள் அதே அதிகாரத்தில் உள்ளவர்கள் பிரலப்படுத்திய ஏழுமலையான்மீது மட்டும் வெறுப்பு கொள்வதில்லை. இது ஆந்திராவுக்கு மட்டுமல்ல. தென்னிந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்களின் சர்வரோக நிவாரணியாக வெங்கடாசலபதி மாறிவிட்டார். வாழ்வின் வலிகளை பட்டுத்தெரிந்து கொண்டாலும் அதை விழிப்புணர்வாக மாறும் வளர்ச்சியை அழிக்கும் வேலையை வெங்கடாசலபதி செய்து வருகிறார்.

திருப்பதியில் டன் கணக்கில் குவிக்கபடும் தலைமுடிகள் சவுரியாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பலகோடி அன்னியச்செலவாணியை வழங்குகிறதாம். இந்த ஏற்றுமதிக்காக மொட்டையடிக்கும் மக்கள் தமது முடியோடு மூளையையும் சேர்த்துத்தான் இழக்கிறார்கள். சின்னப் பிரச்சினையோ, பெரிய பிரச்சினையோ எல்லாவற்றுக்கும் திருப்பதியும், அங்கு அடிக்கப்படும் மொட்டையும் நிவராணம் என்றால் அந்த நாடு உருப்படுமா? சில ஆயிரம் கந்து வட்டி கடனை அடைக்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் இருக்கும் ஆந்திராவில் ஒரு பணக்காரத்தெய்வம் மட்டும் பலகோடிகளை தினசரி வருமானமாகப் பெறுகிறது என்றால் தற்கொலை செய்து கொள்ளும் உயிரின் மதிப்பு என்ன?

ஜீவனின் மன உளைச்சலுக்கான காரணங்கள் என்ன? காதலா, படிப்பா, நட்பா, பாலியல் பிரச்சினையா எதுவென்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் தன்னுயிரை துறப்பதற்கு அவர் தெரிவு செய்த இடத்தை வைத்து அவரது ஆளுமையை நாம் யூகிக்க முடியும்.

இந்த உலகில் நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உண்டு என இறைவனை அழுத்தமாக நம்பும் ஆத்திகர்கள் இந்த உலகின் சரி, தவறுகளெல்லாம் கடவுள் மேலுள்ள பயத்தினாலே ஒரு ஒழுங்கைப் பெறுகின்றன, இந்த நம்பிக்கை இல்லையென்றால் மக்கள் தறுதலையாக மாறிவிடுவார்கள் என வாதம் செய்வார்கள். இப்படி இல்லாத ஒன்றினை வைத்துத்தான் இந்த உலகம் ஏதோ ஒரு ஒழுங்கில் இயங்குகிறதா? நாத்திகம் பேசுவோர் எல்லாம் தாறுமாறாக வாழக்கூடியவர்களா என்ன?

ஆத்திகம் ஆழமாக வேர்விட்டிருக்கும் மனிதர்கள் தமது வாழ்வின் பிரச்சினைகளுக்கு இறைவனிடம் சரணடைகிறார்கள். நாத்திகர்களோ அத்தகைய பிரச்சினைகளை தமது அறிவின் துணை கொண்டு தீர்க்க முனைகிறார்கள். பொதுவுடைமைத் தத்துவத்தை நம்பும் நாத்திகர்களோ அந்த பிரச்சனைகளின் சமூகவேரை கண்டறிந்து அகற்ற முனைகிறார்கள்.

இவ்வகையில் ஆத்திகம் ஒரு மனிதனின் முன்முயற்சி, போராட்டம், முனைப்பு, அத்தனையையும் ரத்து செய்கிறது. புறநிலைமையாக வாழ்க்கை உண்மைகளை கற்றுத் தந்தாலும் அவர்கள் அவற்றை ஆத்திகத்தின் வழியேதான் பார்க்கிறார்கள். இத்தகைய நம்பிக்கை எப்போதும் நல்ல செய்திகளை மட்டும் கொண்டு வருவதில்லை. ஜீவனின் பிரச்சினைகளை அவர் உயிர் வாழ்ந்து சந்திக்கும் வல்லமையை அவரது இறைபக்தி வழங்கிடவில்லை. மாறாக அதற்கு புறமுதுகிட்டு ஓடும் கோழமையைத்தான்  கற்றுக் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் ஜீவனது தற்கொலையை தூண்டிய குற்றத்திற்காக வெங்கடாசலபதி கைது செய்யப்படவேண்டும். அவர் மீது கொலை முயற்சிகளின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். இந்த தற்கொலைக்கு தூண்டியவர் என்ற முறையில் திருப்பதி ஏழுமலையான்தான் இதற்குப் பொறுப்பு. இது அவர் செய்த கொலை!

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவுகள்

சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !

கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்!

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கட்டுரைகள்

  • செல்லம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் “ஊழல் பெருச்சாளி ரமாராணியை கல்லூரியை விட்டே விரட்டுவோம்!” -மாணவிகளின் போர்க்கோலம்!
  • பிரிக்கால் தொழிலாளர் போராட்டம்: வன்முறையாளர்கள், பயங்கரவாதிக்கள் யார்?
  • மாவட்ட ஆட்சியரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர் போராட்டம்!
  • “குடியாட்சியின் உயரதிகாரத்தை நிறுவுவதே எமது முக்கிய கடமை” நேபாள் மாவோயிஸ்ட் தோழர் பசந்தாவின் நேர்காணல்
  • போலி மோதல் கொலைகள் அரசு பயங்கரவாதமே!
  • கோபாட் காந்தி கைது: சட்டவிரோதமானது! மனித உரிமைகளுக்கு எதிரானது!
  • “தில்லை கோவில் மக்கள் சொத்து! தீட்சிதர் சொத்தல்ல!!” தீட்சிதர்-சு.சுவாமி கும்பலைக் கலங்கடித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு!
  • சி.பி.எம். இன் நில அபகரிப்பு: திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு?
  • பெரியாரியக்கத்தின் முதுபெரும் தொண்டர் நாத்திகம் இராமசாமி அவர்களுக்கு அஞ்சலி!
  • விடுதலைச்சிறுத்தைகளின் ரவுடித்தனம்-கொலைவெறித் தாக்குதல்
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: கூலித் தொழிலாளர்களைப் பலியிட்டுக் கொண்டாட்டமா?
  • “ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது!” ஈழத்துத் தோழர் சி.சிவசேகரத்தின் நேர்காணல்!
  • “ஆவின் பாலை மலிவு விலையில் வழங்கு” -பால் விலை உயர்வுக்கெதிராக பெ.வி.மு.வின் ஆர்ப்பாட்டம்.
  • முதலாளித்துவ இலாபவெறி: பன்றிக் காய்ச்சலைவிட கொடிய கிருமி!
  • கள்ளச்சாராயத்திற்குக் காவடி! அதை எதிர்த்தவருக்கு குண்டாந்தடி!! -வீராணம் போலீசின் திருவிளையாடல்கள் !!!
  • அணுகுண்டு சோதனைகள் புஸ்வாணமானதா?
  • ஒன்பது ஆண்டுகால இழுத்தடிப்புக்கு முற்றுப்புள்ளி! அடிபணிந்தது அதிகார வர்க்கம்!!
  • காங்கிரசின் ‘சிக்கனம்’ ஊரை ஏய்க்கும் வக்கிரம்!

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 7 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

யார் பத்தினி? ‘மாமா’க்கள் மோதல்!

79

யார் பத்தினி - மாமாக்கள் லடாய்!

ரஜினிகாந்த் கூற்றுப்படி இரண்டு வேளை உணவுக்காக விபச்சாரம் செய்த புவனேஸ்வரியை கைது செய்தது காவல்துறை.இதைன்பிறகு அவர் குறிப்பிட்டதாக கூறி சில நடிகைகளின் விலை விவரங்களையும் அவர்கள் புகைப்படங்களையும் வெளியிட்டது தினமலர். தொடர்ந்து செய்தித்தாள் படிப்பவர்களுக்கு இந்த செய்தி புதியதாக இருக்காது, செய்தியில் உள்ள புதிய தகவல் அவர்தம் கட்டணவிவரம்தான். பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த செய்தி எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தபடிதான் இருக்கிறது. ஸ்ரீபிரியா தன்னை  ஒரு நடிகர் ஏமாற்றியதற்காக தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தபோது பாராமுகமாய் இருந்துவிட்டதைப்போல இன்னொரு வரலாற்றுத் தவறை செய்துவிடக்கூடாது என முடிவு செய்துவிட்ட நடிகர்சங்கம் உடனடியாக உலக நாயகன்.. மன்னிக்கவும் உலக சாதனையாளர், முதல்வர் கலைஞரை சந்தித்தார்கள். திரௌபதிக்கு சேலை கொடுத்த கிருஷ்ண பரமாத்மாவைப்போல நவயுக திரௌபதிகளுக்கு வன்கொடுமை சட்டத்தைத்தந்து அருள்பாலித்தார் கருணாநிதி.

சத்துணவு பணியாளர்கள் மாதக்கணக்கில் போராடியும் பார்க்க முடியாத முதல்வருக்கு நடிகர்களுக்கென ஒதுக்க எப்போதும் நேரமிருக்கிறது. அவர்கள் முறையிட்டவுடன் தினமலர் செய்தியாசிரியர் கைது செய்யப்படுகிறார். நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு ஷகிலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் அவர் தவறவில்லை.

இதனிடையே நடந்த நடிகர்சங்க கூட்டத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டினார்கள் நடிகர்கள். அவர்கள் பேசியதைப்பார்த்தால் மறுநாள் தினமலர் பத்திரிக்கையே இருக்காதோ என சந்தேகம் பலருக்கு வந்திருக்கும். ஒரு விருதுக்காக ஊரையே எழுதித்தரும் பட்டத்துராஜா ஒருவர் கூப்பிடுதூரத்தில் இருக்கும்போது அவர்களுக்கு அப்படிச்செய்ய அவசியமிருக்காது.

ஜூன் மாதம் ஆனந்த விகடனுக்கு தான் அளித்த பேட்டியில் இலங்கைப் பிரச்சினையை பற்றி ‘ஆஃப் த ரெக்கார்ட்’ ஆக தன் கருத்துக்களை கவனமாக பேசிய சத்யராஜ் இந்த முறை அப்படியெல்லாம் பயப்படவில்லை, தினமலர் பொறுப்பாசிரியர் ஒரு வேசிமகன் என யாரெல்லாம் ஒத்துக்கொள்கிறீர்கள் என் கேள்வி எழுப்பினார். வேசிமகனுகான அடையாளங்களை சுலபமாக கண்டறியும் திறன் கொண்ட திரையுலகம் ஒட்டுமொத்தமாக கை உயர்த்தியது.

தான் பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய எந்திரம் செய்யும்படி சொல்லும் காட்சி வைத்ததால்தான் சென்னை மாநகராட்சி அப்படி ஒரு கருவி வாங்கியதாக உளறிய விவேக் எனும் கோமாளி இன்னும் ஒருபடி மேலே போய் பத்திரிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் கேட்டார். சாதாரணமாகவே நடிகைகளை உள்ளடையுடன் ஆடவிடும் துறையில் இருப்பவரின் புத்தி பத்திரிக்கையாளர்களின் குடும்ப பெண்களுக்கு கிராபிக்ஸில் உள்ளாடை அணிவிக்கும் வகையில் சிந்திப்பதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

நடிகர்கள் உணர்ச்சிவயப்பட்டெல்லாம் அப்படிப்பேசவில்லை, அவர்கள் இயல்பே அப்படிதான் இல்லாவிட்டால் சக நடிகனுக்கு தனது படத்து வசனத்தின் மூலம் சவால் விட மாட்டார்கள். நடிகர்களின் யோக்கியதை மக்கள் எல்லோரும் அறிந்ததுதான், தாம் எவ்வளவு தூரம் கேவலமானவர்கள் என மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த கூட்டத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். தனது கட் அவுட்டுக்கு தன் செலவில் ( அல்லது தன் அப்பா செலவில்) பாலாபிசேகம் செய்யும் இவர்கள் நியாயமான முறையில் கோரிக்கை வைக்கமாட்டார்கள். அதன் வெளிப்பாடுதான் முதல்வரை சந்தித்து முறையிடுவது.

நடிகையை அவமானப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக நடிகர்சங்கம் போராடுவதுதான் நமக்கு நெருடலாக இருக்கிறது. தமிழாசிரியர்களை இவர்கள் அவமானப்படுத்திய படங்கள் எத்தனை எத்தனை ?. கேரளப் பெண்களை ஒரு படத்திலேனும் இவர்கள் நாகரீகமாக காட்டியதுண்டா ? நடிகர்களைப்பற்றியோ தயாரிப்பாளர்களைப்பற்றியோ புகார் சொன்ன நடிகைகளின் குற்றச்சாட்டுக்களுக்கு இவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன ? தினமலர் ரமேஷை அக்கா தங்கையோடுதான் பிறந்தாயா என கேட்கும் ஸ்ரீபிரியா, பதின்வயது சிறுமிகளைக்கூட முத்தக்காட்சிகளில்  நடிக்கவைக்கும் தன் சக ‘ கலைஞர்களை’ நோக்கி இந்த கேள்வியை எழுப்பியிருப்பாரா?

பஸ்டாண்டில் விபச்சாரத்திற்கு ஆள் பிடிப்பவன் புரோக்கர் என்றால், நடிகைகளின் அவயங்களை காட்டி படத்தை விற்கும் இவர்களை எப்படி அழைப்பது ? இவர்கள் எடுக்கும் நெருக்கமான காட்சிகள் ஒன்று நடிகையின் ஒப்புதல் பெற்ற பாலியல் அத்துமீறலாக இருக்கும் அல்லது நடிகையை கட்டாயப்படுத்தி செய்யப்படும் பாலியல் அத்துமீறலாக இருக்கும். இதைப்பற்றி கொஞ்சமும் வெட்கப்படாமல் கதைக்கு தேவையான கிளாமர் இருப்பதாக சொல்லும் இந்த மாமா கூட்டம் நடிகைகளின் மான அவமானத்தைப்பற்றி கவலைப்பட தகுதியுடையதுதானா ?. இவர்களுக்கும் புவனேஸ்வரிக்கும் என்ன வேறுபாடு?, இவர்கள் சொல்லும் நியாயத்தை அவரும் சொல்லக்கூடும், ஏனெனில் அவரும் விரும்பி வருவோரைத்தான் தொழிலுக்கு அனுப்புகிறார். அல்லது கஸ்டமர் கேட்பதை தருவதாககூட ஒரு நியாத்தை சொல்லலாம், ரசிகன் விரும்புவதைத்தான் படமாக எடுக்கிறோமென இயக்குனர்கள் சொல்வதைப்போல.

மற்றொருபுறம் பத்திரிகையாளர்கள் தங்களை ஒரு குடும்பம் என கூறிக்கொள்வதை தவறாக புரிந்துகொண்ட கலாநிதி மாறன் தனது தினசரியில்  நடிகர்களின் கூட்டத்தை முழுப்பக்க செய்தியாக போடுகிறார், பின்னே அவர் குடும்ப சண்டையில் இப்படித்தானே நடந்துகொண்டார் ???. பொதுவாக பத்திரிக்கைத்துறையையே நடிகர்கள் திட்டியதால் இவர்கள் ஒன்று கூடினார்கள், நடிகர் சங்கம் தினமலரை மட்டும் திட்டியிருந்தால் இந்த ஒற்றுமையும் இருந்திருக்காது, ஜெயா ஆட்சியில் நக்கீரன் கோபாலை கைவிட்டதுபோல இப்போதும் நடந்துகொண்டிருப்பார்கள்.( கோபால் கைதை எதிர்த்து நடந்த கூட்டத்தின் புகைப்படத்தில் ராமின் படத்தை ஜாக்கிரதையாக தவிர்த்த ஹிண்டுவின் வீரம் அவ்வளவு சீக்கிரம் மறக்கக்கூடியதா என்ன ?? )

இரண்டு தரப்பும் ஒரு விசயத்தில் கவனமாக இருக்கிறார்கள். தங்கள் வசமுள்ள எதிர்தரப்பின் தவறுகள் பற்றிய தகவல்களை இருவருமே வெளியிடவில்லை. அதனால்தான் வெறும் வசவுகளோடும் வாய்சவாடல்களோடும் நிறுத்திக்கொள்கிறார்கள். ஏனெனில் ஆபாசம் இருவருக்குமே பொதுவான ஒரு மூலதனம், அதில் கைவைக்க இரண்டு வியாபாரிகளும் விரும்பமாட்டார்கள்.

நடிகைகள் தங்களை விபச்சாரிகள் என சொன்ன பத்திரிக்கைக்கு எதிராக போராடுவது கிடக்கட்டும்.. தங்களை விபச்சாரிகளை விட கேவலமாக நடத்தும் ( அல்லது திரையில் அப்படிக்காட்டும் ) திரையுலகிற்கு எதிராக முதலில் சிந்திக்கட்டும். இல்லவிட்டால் எப்போது இந்த மாதிரி செய்தி வந்தாலும் அது மக்களுக்கு ஒரு நினைவூட்டலாகவே அமையும்.

-நன்றி வில்லவன்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

குமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’

ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !

ஷகீலா – கவர்ச்சி சுதந்திரமா ? பர்தா கண்ணியமா ??

தாசியின் அவலத்தைத் திரிக்கும் “தனம்”!

நீங்கள் பாலியல் குற்றவாளியா?

கலெக்டரை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த மாணவர்கள்

பாழடைந்து சிதலமடைந்த கட்டிடம், சுற்றிலும் முட்புதர்கள், ஆங்காங்கே துருத்திக் கொண்டு நிற்கும் கம்பிகள், உள்ளே நுழையும் முன்பே குடலைப் புரட்டியெடுக்கும் துர்நாற்றம் – இவை ஏதோ பராமரிப்பின்றிக் கிடக்கும் பேருந்து நிலைய இலவசக் கழிப்பிடங்களின் அவலநிலை அல்ல!

திருச்சி-மன்னார்புரம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதியின் ‘உண்மை’ நிலை இது! ஏறத்தாழ தமிழகம் முழுவதுமுள்ள ஆதிதிராவிட மாணவர் விடுதிகளின் ‘முகவரி’யும் இதுதான்!

பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருக்கும் இவ்விடுதி கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இவ்விடுதியில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் எதிர்பார்க்க முடியாது! இங்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பற்றி ‘வார்த்தைகளில்’ சொல்லிவிடவும் முடியாது!

இவ்விடுதியில் 2005-ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரியும், சுகாதாரமான முறையில் உணவு வழங்கக் கோரியும் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இதன் விளைவாக சமீபத்தில் 26 கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளது. சுகாதாரமான உணவு வழங்குவதையும் உத்திரவாதப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில்தான் கடந்த 23.9.09 அன்று அதிகாலை விடுதியின் அறையொன்றில் தூங்கிக் கொண்டிருந்த 3 மாணவர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்து, ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைக் கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள் தங்கள் உயிருக்குப் பாதுகாப்புக் கோரியும், விடுதிக் கட்டிடத்தை மாற்றக் கோரியும் பு.மா.இ.மு.வின் விடுதி கிளைச் செயலர் தோழர் சங்கத் தமிழன் தலைமையில் அணிதிரண்டு டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

கோரிக்கை என்ன என்பதைக் கூட கேட்காமல், உதவி கமிசனர் ராஜேந்திரன், போலீசு ஆய்வாளர் கோடிலிங்கம் தலைமையிலான போலீசு கும்பல், காட்டுமிராண்டித்தனமாக மாணவர்களை தாக்கியது. தாக்குதல் தொடர்ந்த போதும் ‘மாவட்ட ஆட்சியர்’ உள்ளிட்ட உயரதிகாரிகள் வரும்வரை இங்கிருந்து கலையப் போவதில்லை என மாணவர்கள் உறுதியா நின்றனர். நிலைமை கைமீறிப் போனதையடுத்து, அலறியடித்து ஓடிவந்த மாவட்ட ஆட்சியரை, “நாங்கள் அனுபவிக்கும் அத்தனை கொடுமைகளையும் நீங்கள் நேரில் வந்து அனுபவியுங்கள்” என மாணவர்கள் இழுத்து சென்றனர்.  “இடிந்து விழும் இக்கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான” உத்திரவை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பெற்ற பின்னரே, அவர் விடுவிக்கப்பட்டார்.

மூன்றுநபர் கொண்ட மாணவர் குழுவின் நேரடிப் பார்வையின் கீழ் புதிய விடுதிக்கான கட்டுமானப் பணிகள் தற்போது விரைவாக நடந்து வருகின்றன. பு.மா.இ.மு.வின் முன்முயற்சியால் கிடைக்கப் பெற்ற இத்தொடர் வெற்றிகள், அனைத்து மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும், வழங்கியிருப்பது மாத்திரமல்ல, வீதியிலிறங்கிப் போராடுவதன் வலிமையையும் உணர்த்தியிருக்கிறது!

-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

ஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை! ‘கல்வி வள்ளலின்’ ரவுடித்தனம் !

ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!!

26

ஈழம்: சிங்கள இராணுவத்தின் பயங்கரவாத நினைவுகள்!!

ஈழத்தமிழர்கள் மீதான அடக்குமுறை என்பது அரசியல், கல்வி, பொருளாதாரம், ராணுவம் என்ற வடிவங்களில்தான் காலங்காலமாய் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்வி மற்றும் பொருளாதார அடக்குமுறை பற்றி என் அனுபவங்கள் மூலம் ஓரளவு சொல்லியிருக்கிறேன். எல்லா அடக்குமுறைகளையும் விட ராணுவ அடக்குமுறை தான் எங்களை நேரடியாகவே பாதிக்கிற என்பதை விட பலி எடுக்கிற அடக்குமுறை வடிவம் என்று சொன்னால் அது மிகையில்லை. ராணுவம் என்பதற்கு ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் வெவ்வேறு அர்த்தங்கள் இருக்குமா?

அதாவது மக்களை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றும் ராணுவம், நாட்டிற்காக போரிடும் ராணுவம், அமைதிப்படை…. இப்படியாக. ஆனால், இலங்கையில் மட்டும் தமிழினத்தை அழிக்கவென்றே சிங்கள ராணுவத்தை கட்டியெழுப்பி வைத்திருக்கிறார்கள். இன்று இலங்கையில் நாட்டின் சனத்தொகைக்கும் ராணுவத்தின் விகிதத்திற்கும்  சம்பந்தமில்லாத வகையில் மிக அதிகமாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா கன்வென்ஷனையும் மீறினாலும், அதையெல்லாம் தாண்டி சிங்கள ராணுவம் விமரிசனத்திற்கு கூட அப்பாற்பட்ட புனிதர்கள் என்கிறார் இலங்கை அதிபர். இலங்கை ஓர் ஜனநாயக சோசலிச குடியரசு என்று சொல்கிறார்கள்.

ஏன் இப்படியொரு ராணுவ கட்டமைப்பு? இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது ராணுவ ஆட்சியா என்ற கேள்வி என் மனதில் அடிக்கடி எழுவதுண்டு. இன்று மனித உரிமைகள், தாராண்மை ஜனநாயகம் என்று பேசப்படுகின்ற காலத்திலும் ராணுவ அடக்குமுறையால் வாழ்வுரிமை கூடப்பறிக்கப்படுகிற இனங்களில் ஈழத்தமிழினமும் ஒன்றாகிவிட்டது. ராணுவம், இதன் அர்த்தம் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் சரியாகப் புரியும் என்பது என் அனுபவங்களினூடாக நான் கண்டறிந்த உண்மை.

நான் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் கூட எனக்கு இலங்கை ராணுவம் பற்றிய பயம் என் மனதிலிருந்து இன்னும் போகவில்லை. இந்நாட்களில் ராணுவ சீருடை போன்ற ஆடைகளை யாராவது அணித்திருப்பவர்களை பார்த்தாலும் எனக்கு ஒரு கணம் என் மூச்சு நின்றுவிடும் போலிருக்கும். மறுகணம் நான் இலங்கையில் இல்லை என்பதையும், நான் பார்க்கும் அந்த உருவம் இலங்கை/இந்திய ராணுவம் இல்லை என்பதையும் எனக்கு நானே மனதிற்குள் சொல்லி தேற்றிக்கொள்வேன்.

ஈழத்தில் ராணுவத்தை நான் நேரில் சந்தித்த நேரங்களிலெல்லாம் என் இதயத்துடிப்பே எனக்கு இடி போல கேட்கும். அப்படியொரு பயம் எனக்கு ராணுவத்திடம். தன்னை ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கையில் ராணுவம் பற்றிய என் நினைவுகள் ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation) இற்கு முற்பட்ட காலங்கள் முதற்கொண்டு இந்திய அமைதி காக்கும் படை (மன்னிக்கவும் எங்கள் அமைதியை அழித்த ராணுவம்) வரை அப்பாவி தமிழர்களுக்கு அவர்கள் இழைத்த கொடுமைகளை, செய்த அட்டூழியங்களை மீட்டிப்பார்க்கிறேன்.

ராணுவம் (இலங்கை, இந்திய ராணுவம்) பற்றிய பயத்தினை, கசப்பினை, வெறுப்பினை வெறும் வார்த்தைகளில் வடிக்க முடியுமா தெரியவில்லை. நான் என் வாழ்நாளில் மீட்டிப்பார்க்க விரும்பாத நாட்கள் அவை. மீட்டினாலும், விட்டாலும் அதன் வலி மட்டும் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.

ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணம் வடமராட்சியில் ராணுவம் ஊரிக்காடு வல்வெட்டித்துறை முகாமிலிருந்து வந்துதான் எங்களுக்கு கஷ்டங்களையும் கொடுத்து, கூடவே எங்கள் அப்பாவி சகோதரர்களையும் கொலை செய்து காணாமற்போகச் செய்தும் கொண்டிருந்தார்கள். இந்த முகாம் பற்றி சொல்லவேண்டுமானால், இது ஆரம்பத்தில் காவல் நிலையமாக இருந்ததாகவும், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் அமுலாக்கப்பட்ட பின்னர் ராணுவமுகாமாக மாற்றப்பட்டதாகவும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இது ராணுவ முகாமாக மாற்றப்படக் காரணம் இம்முகாம் கடற்கரையை ஒட்டியதாகவும் ராணுவ தளவாட விநியோகங்களுக்கு ஏற்றதாகவும் இருப்பதுதான் என்றும் சொல்லப்படுகிறது.

இன்றுவரை இந்த ராணுவ முகாம் இன்னும் விஸ்தரிக்கப்பட்டு பாடசாலைகளையும், குடிமனைகளையும் தொழில்வாய்ப்புக்களையும் விழுங்கி ராணுவத்தால் நிரம்பி வழிந்து கொண்டுதானிருக்கிறது. இந்த ராணுவமுகாமில் இருந்து அடிக்கடி அன்றுமுதல் இன்றுவரை ராணுவம் ரோந்து போவது வழக்கம். அண்மையில் வன்னியில் இறுதிப்போர் நடந்துகொண்டிருந்த காலங்களில் நடந்த ஓர் சம்பவம். ஊரில் கோவில் திருவிழா என்றால் காலை, மாலை இருவேளைகளிலும் எல்லா வீடுகளிலும் வாசல் தெளித்து, கோலம் போடத்தெரிந்தவர்கள் கோலம் போடுவார்கள்.

என் உறவினர் ஒருவர் வீட்டில் அவர்களின் உறவுகள் வன்னியில் மாட்டிக்கொண்டதால் இவர்கள் திருவிழாக்கால சம்பிரதாயங்கள் எதையுமே செய்யவில்லை. ரோந்து போய்கொண்டிருந்த ராணுவம் இவர்களின் வீட்டில் புகுந்து நீங்கள் ஏன் எல்லோரையும் போல் வாசலை சுத்தம் செய்யவில்லை? உங்கள் உறவினர்கள் யாராவது வன்னியில் இருக்கிறார்களா என்று எகத்தாளமாக கேட்டிருக்கிறார்கள். இதில் வேதனையான விடயம் என்னவென்றால் வன்னியில் என்ன நடக்கிறது என்பது வடமராட்சித்தமிழனுக்கு தெரியாமலேயே ராணுவ அடக்குமுறை மூலம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் வழக்கமாக புலத்திலுள்ள தங்கள் உறவினர்கள் மூலமாகத்தான் வன்னியில் என்ன நடக்கிறது என்று தொலைபேசி மூலம் தெரிந்து கொண்டிருந்திருக்கிறார்கள். ராணுவம் இப்படி கேட்ட நாள் முதல் இவர்கள் இரண்டு வேளையும் வாசல் தெளித்து விட்டு, வீட்டுக்குள் தங்கள் உறவுகளை எண்ணி துடித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

இது தான் யாழ்ப்பாணத்தில் என் உறவுகளின் இன்றைய அவல வாழ்வு. வெளியுலகுடன் சாதாரண மக்களுக்குள்ள ஊடகத்தொடர்புகள் ராணுவத்தால் திட்டமிடப்பட்ட முறையில் பறிக்கப்பட்டுள்ளன. அநேகமானோர் சொல்வது போல் யாழ்ப்பாணம் ஓர் திறந்த வெளி சிறைச்சாலையாக சிங்கள ராணுவத்தின் அடக்குமுறையில் திணறிக் கொண்டுதானிருக்கிறது.

நான் வடமராட்சியில் இருந்த காலங்களில் ராணுவம் முகாமிற்குள் முடக்கப்படுவதற்கு முற்பட்ட காலங்களில் ஊரடங்கு சட்டம் போட்டு ஊருக்குள் ராணுவத்தின் வெறியாட்டங்கள் கேள்விமுறையின்றி அரங்கேறியதும் உண்டு. அந்த பாதகங்கள் எதுவுமே வெளியுலகிற்கு தெரியாமலே போனதும் உண்டு. நான் சிறுமியாக இருந்த நாட்களில் என் அம்மாச்சி (பாட்டி)தான் சொல்வார் “இண்டைக்கு ஆமிக்காரன் சந்தியில நிண்ட பெடியளை பிடிச்சுக்கொண்டு போறாங்களாம்” என்று. ராணுவம் ட்ரக் வண்டிகளில் தான் வருவார்கள். அப்படி வரும்போது ரோட்டில் நிற்கும் இளைஞர்கள் சிலரை அள்ளி தங்கள் வண்டிகளில் போட்டுக்கொண்டு போய்விடுவார்கள். அவர்களில் சிலர் வீடு திரும்பியிருக்கிறார்கள். சிலர் இன்றுவரை காணாமற் போனவர்கள் தான்.

தமிழர்களை பிடித்துச் செல்லவோ அல்லது தடுத்து வைக்கவோ ராணுவத்திற்கு காரணம் ஏதும் தேவையில்லை. முன்பெல்லாம் பிரதான வீதியால் ரோந்து மட்டுமே சென்ற சிங்கள ராணுவம் பின்னாட்களில் சுற்றிவளைப்புகளில் ஈடுபட்டது. ராணுவ சுற்றிவளைப்பு என்றாலே ஊர் அமைதியாகி விடும். ஓர் மயான அமைதிதான் இருக்கும். அவ்வப்போது ஊரில் காகத்தின் சத்தத்தோடு துப்பாக்கி வேட்டுச்சத்தமும் கேட்கும். என்/எங்களின் உயிர் எங்களுக்கு மிஞ்சுமா என்று விவரிக்க முடியாத பயத்தோடும் வேதனையோடும் ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு யுகமாக கழித்திருக்கிறேன்/கழித்திருக்கிறோம். அது மரண வேதனை. அதை சொல்லில் புரிய வைக்க முடியாது.

சிங்கள ராணுவம் திபுதிபுவென்று வீட்டிற்குள் நுழைவார்கள். நுழைந்த மாத்திரத்திலேயே “கொட்டியா (புலி) இரிக்கா?” என்பார்கள். வீட்டையே கிண்டி, கிளறி துவம்சம் பண்ணுவதோடு மட்டுமில்லாமல் சிலரது வீடுகளை அவர்களின் கண்முன்னாலேயே கொளுத்திவிட்டும் போயிருக்கிறார்கள். சிங்கள ராணுவத்துக்கு இப்படி செய்வதற்கு காரணங்கள் ஏதும் வேண்டியதில்லை. நாங்கள் தமிழர்களாக இருக்கும் ஒரு காரணம் போதாதா? எங்கள் வீட்டில் சிங்கள ராணுவம் நுழைந்த சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் இந்த நாசமாப்போனவங்களின் கேள்விக்கெல்லாம் என் பாட்டிதான் பதில் சொல்லியிருக்கிறார். ராணுவம் வீட்டிற்குள் நுழைந்து சோதனை போடும் சந்தர்ப்பங்களில் யாரையாவது தங்களோடு உள்ளே வரச்சொல்லுவார்கள். காரணம், உள்ளே சோதனை போடச்செல்லும் போது உள்ளேயிருந்து தங்களை யாராவது தாக்கிவிடுவார்கள் என்ற பயம் தான்.

அப்படியான சந்தர்ப்பங்களில் என் பாட்டி யாரையும் விடாமல் தானேதான் போவார். தான் வயதானவர்தானே, தன்னை ஆமிக்காரன் சுட்டாலும் பரவாயில்லை என்பார். தவிரவும் யாராவது பெண்கள் உள்ளே சென்றால் அவர்களை என்ன செய்வார்கள் என்பதை நான் சொல்லத்தேவையில்லை. என் பாட்டி சிங்கள ராணுவத்தை “ஐயா” என்று தான் விழிப்பார். எனக்கென்றால் கோபம் தலைக்கேறும். ராணுவம் போனபின் நான் என் பாட்டியோடு, அவர் ஏன் சிங்கள ராணுவத்தை ஐயா என்று அழைக்க வேண்டும் என்று மல்லுக்கு நின்றதும் உண்டு.

ராணுவ சுற்றிவளைப்பு என்றால் அந்த நாட்களில் நான் என் வீட்டிற்கு முன்னால் இருந்த என் சிறியதாயாரின் வீட்டில்தான் இருப்பது வழக்கம். ராணுவம் வீட்டுக்குள் நுழைகிறது என்றவுடனேயே என் பாட்டி என் சிறியதாயாரின் குழந்தைகளில் ஒருவரை என் கைகளுக்குள் திணிப்பார். குழந்தையை வைத்திருந்தால் ராணுவம் என்னை ஒன்றும் செய்யாது என்பது என் பாட்டியின் அப்பாவித்தனமான கண்டுபிடிப்பு. இப்படித்தான் ஒருமுறை என் சிறிய தாயாரின் மகனை நான் என் கைகளில் வைத்திருக்க அந்த குழந்தை பாட்டுக்கு சிங்கள சிப்பாய் ஒன்றுடன் தன் பாஷையில் ஏதோ பேசத்தொடங்கிவிட்டது. குழந்தை சிப்பாயுடன் பேச சிப்பாய் என்னைப்பார்த்து நக்கலாய் சிரித்துக்கொண்டிருந்தான். எனக்கு பயம் ஒருபுறமும் எரிச்சல் ஒருபுறமுமாய் ஏறக்குறைய அழுகையே வந்துவிட்டது.

இப்படித்தான் ஒவ்வொரு முறை ராணுவம் சுற்றிவளைக்கும் போதும் செத்து செத்து பிழைத்திருக்கிறேன். என் அம்மாச்சி அந்த நாட்களில் நான் வீட்டிலிருக்கும் சந்தர்ப்பங்களில் என்னை, தலைமுடியைப் பின்னல் போடாதே, குடும்பி வைத்துக்கொள், ராணுவத்தின் பார்வையில் உறுத்துகிற மாதிரி நில்லாதே என்றெல்லாம் எனக்கு அறிவுரை செய்து என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பார். இப்போது என் நினைவுகளை மீட்டிப்பார்த்தால்…. இன்றும் எங்கள் பாட்டிகள், தாய்மார்கள் ஈழத்தில் தங்கள் பேத்திகளை, மகள்களை சிங்கள ராணுவம் என்ற வெறிநாய்களிடமிருந்து காப்பாற்ற எப்படி எல்லாமோ போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் இரண்டு அமெரிக்கப் பெண்மணிகள் ஈழத்தமிழ்ப் பெண்கள் பற்றிச் சொன்ன கருத்துகள் ஏனோ இந்த சந்தர்ப்பத்தில் என் மனதில் வலியோடு இடறுகிறது. ஒருவர் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன். அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றியபோது சொன்னது, இலங்கையில் தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறை சிங்கள ராணுவத்தால் ஓர் ஆயுதமாக பாவிக்கப்பட்டிருக்கிறது. இன்னொருவர் மனித உரிமைகளுக்காக போராடுபவர், எலின் ஷாண்டர், சொன்னது இலங்கையில் வதை முகாம்களில் தமிழ்ப்பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கும், வன்முறைக்கும் ஆளாவது மட்டுமல்ல அவர்கள் நிர்வாணமாக அலையவிடப்பட்டிருக்கிறார்கள். எங்கள் சகோதரிகள் அம்மணக் கட்டைகளாக அலைந்தாலென்ன? இல்லை, அவர்கள் கரிக்கட்டைகளாய் எரிந்தால் தான் என்ன? நாங்கள் எங்கள் சுயநல சிந்தனையோடும், சுயமோகத்தோடும் சுரணையற்ற ஜென்மங்களாக உலாவருவோம்…… இதற்கெல்லாம் நாங்கள் வெட்கப்படுவோமா என்ன?
யாழ்ப்பாணம் வடமராட்சியில் ராணுவம் முகாமிற்குள் அடைபடுவதற்கு முன்னைய நாட்களில் சுற்றிவளைப்பின் போது அப்படி அவர்கள் என்னதான் செய்தார்கள் என்று யோசிக்கிறீர்களா? வேறொன்றுமில்லை, கொட்டியாவை (புலி) தேடுகிறோம் என்ற பெயரில் இளைஞர்களை கைது செய்வது, காணாமற்போகச்செய்வது, அங்கங்கே தமிழர்களின் உடமைகளை கொள்ளையடிப்பது, பெண்களை பலாத்காரம் செய்வது, கூட்டமாக வரிசையாக நிற்கவைத்து ஆண்களை சுட்டுக்கொல்வது இவையெல்லாம் தான்.

சுற்றிவளைப்பின் போது ஆண்களை வீடுவீடாக சென்று கைது செய்து மிருகங்கள் போல் கூட்டிச்சென்று தார் ரோட்டில் வெயிலில் உட்காரவைத்து, பிறகு அவர்களில் தரம்பிரித்து சிலரை வீட்டற்கு அனுப்பிவிட்டு மீதம் உள்ளவர்களில் சிலர் காணாமற்போயும், சிலர் படுகொலை செய்யப்பட்டும் பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் அரசபயங்கரவாதம் உலகத்தின் கண்களுக்கு தெரியாமலேயே அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. என் உறவினர் ஒருவர், எனக்கு சிறிய தகப்பனார் முறை, அவருடைய பதிவுப்பெயர் “பகவத் சிங்”. அவர் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எல்லோருக்கும் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களைத்தான் வைத்திருந்தார்கள். இவர் இலங்கை ராணுவத்திடம் மாட்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம் இவரின் பெயருக்காகவே தாக்கப்பட்டிருக்கிறார்.

அடையாள அட்டையில் இவரின் பெயரைப் பார்த்துவிட்டு ராணுவத்தால் பலமுறை தாக்கப்பட்டு முகம் உடம்பெல்லாம் வீங்கிப்போய் வீடு வந்திருக்கிறார். “என்ர பேரைப் பாத்தவுடனேயே என்னை அடிக்கத் தொடங்கி விடுறாங்கள்” என்று அவர் வேதனையோடு சொன்னதை என் காதுகளால் கேட்டிருக்கிறேன். பாடசாலை முடிகிற நேரங்களில் ராணுவம் ரோந்து போகிறதென்றால் எங்களை அழைத்துப்போக பாடசாலைக்கே வந்துவிட்டிருந்தவர். இறுதியில் ஓர் நாள் சிங்கள ராணுவத்தால் வரிசையாக நிற்கவைத்து சுட்டு கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இவர் ராணுவத்தால் சுற்றிவளைப்பின் போது அழைத்துச்செல்லப்பட்டுவிட்டார் என்று தெரிந்தவுடனேயே அவருக்கு என்ன நேரப்போகுதோ என்று பயந்தபடியே இருந்தோம். ராணுவ சுற்றிவளைப்பு முடிந்து இருட்டிய நேரம்தான் சொன்னார்கள் வாசகசாலையில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்று. அவர் முகத்தை இறுதியாக ஒருமுறை பார்க்கலாம் என்று வீட்டிளுள்ளவர்களோடு நானும் தெருவில் ஓட எத்தனித்த போது யாரோ என்னை தடுத்தார்கள். அங்கே ஒரே ரத்த சகதியாய் கிடக்கு. பெண்கள் அதைப்பார்த்தால் தாங்கமாட்டார்கள் என்றார்கள். என் சித்தப்பாவின் உடல் வீட்டிற்கு இறுதிக்கிரியைக்காக கூட கொண்டுவரப்படவில்லை.

இவரின் மற்ற சகோதரர்கள், ஒருவர் கடற்படையாலும் இன்னொருவர் ராணுவத்தாலும் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள். ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சகோதரரின் பெயர் சுகதேவ். இப்படி ராணுவம் வெறியாட்டம் போட்டுவிட்டு போன பின்பும் ஊர் முழுக்க ஒரே மரண ஒலமாகத்தானிருந்தது. பிள்ளைகளை, கணவன்மார்களை இழந்த தாய்களும், மனைவிமார்களும் சிங்கள ராணுவத்தை சாபம் போட்டு திட்டிக்கொண்டிருப்பார்கள். அழுது, அழுது ஓய்ந்து சக்தியற்றவர்களாக நடைப்பிணமாய் செய்வதறியாது திகைத்துப்போய் நின்றிருக்கிறார்கள். இப்படித்தான் ராணுவ சுற்றிவளைப்பு நடக்கப்போகிறது என்றாலே எங்களை மரணபயம் ஆட்டிவைக்கும். அப்போதே எங்களுக்கு ராணுவத்தின் கொடுமைகள் தாங்க முடியவில்லை.

ஆனால் இப்போதோ எங்கள் உறவுகள் ராணுவத்தால் சூழப்பட்டு அடிமைகளை விட மோசமாய், மிருகங்களை விட கேவலமாய் நடத்தப்பட்டு தாங்கொணா வேதனைகளையும், கஷ்டங்களையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம் விவரிக்க அகராதியில் சொற்களே இருக்காது என்றுதான் தோன்றுகிறது.

இப்படி சாட்சியே இன்றி ராணுவ அடக்குமுறைமூலம் அரசபயங்கரவாதம் எங்களை வதைத்துக் கொண்டிருந்தது. இப்போது இருப்பது போல் தொழில்நுட்ப வசதிகள் ஏதும் அந்த நாட்களில் இல்லாத காரணத்தாலோ என்னவோ எங்களுக்கு சிங்கள ராணுவத்தால் இழைக்கப்பட்ட கொடுமைகள் வெளியுலகத்திற்கு தெரியாமலேயே போனது. இப்படிப்பட்ட ராணுவம் முகாமிற்குள் அடைக்கப்பட்டால் நாங்கள் சந்தோசப்படுவோமா, மாட்டோமா? இவ்வாறாக அடைபட்ட ராணுவம் வெளியேற எடுத்த முயற்சி தான் ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation).

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

ஈழத்தின் நினைவுகள் – பாகம் -1

ஈழம்: பதுங்குகுழிகளும் பாடசாலைகளும் ! பாகம் –2

ஈழம்: நீங்கள் அறியாத பெண்ணின் வலி ! – பாகம் -3

பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !- பாகம் -4

காங்கிரசின் ‘சிக்கனம்’ ஊரை ஏய்க்கும் வக்கிரம்!

காங்கிரசின் ‘சிக்கனம்’ ஊரை ஏய்க்கும் வக்கிரம்!

பிர்லா மாளிகையில் தங்கிக் கொண்டு காந்தி எளிமையாகக் காட்சியளித்ததும்; ‘மகாத்மா’வை எளிமையானவராகக் காட்டுவதற்கு காங்கிரசுக்கு ஏற்பட்ட செலவு குறித்து காங்கிரசு கட்சித் தலைவர்களுள் ஒருவரான சரோஜினி நாயுடு அங்கலாய்த்துக் கொண்டதும் நாம் மறந்து போன பழைய வரலாறு.  “காங்கிரசு கட்சி எம்.பி.க்கள் தங்கள் சம்பளத்தில் 20 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வார்கள்” எனக் கட்டளையிட்டிருப்பதன் மூலம், காங்கிரசுக்கே உரித்தான அந்தப் போலித்தனத்தை மீண்டும் நமக்கு நினைவூட்டியிருக்கிறார், சோனியா காந்தி.

இந்தக் கட்டளைக்கு அடிபணிந்து, அதுவரை ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து கொண்டு “மக்கள் சேவை” ஆற்றிவந்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், அத்துறையின் துணை அமைச்சர் சசிதரூரும், தங்களின் ஜாகையை அரசு பங்களாக்களுக்கு மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.  அமைச்சர் வந்து தங்கப் போவது தெரிந்து அரசு பங்களாக்கள் ஐந்து நட்சத்திர விடுதி அறைகளைப் போல பளபளவென அரசு செலவில் மாற்றப்பட்டிருக்கலாம்.  கத்தி போய் வாள் வந்தது டும் டும் என்ற கணக்கில் எப்பேர்பட்ட எளிமை! எப்பேர்பட்ட சிக்கனம்!

  • இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர சம்பளம்  ரூ.16,000.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் தொகுதிப்படி ரூ.20,000.
  • நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொழுது  வழங்கப்படும் தினப்படி ரூ.1,000.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சல் செலவுகளுக்காக  மாதந்தோறும் வழங்கப்படும் அஞ்சல்படி ரூ.5,000.
  • அமைச்சர்களின் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு-வெளி நாட்டுப் பயணங்களுக்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.160.76 கோடி.
  • அமைச்சர்களின் பங்களாக்களைப் பளபளவென மாற்றியமைப்பதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் செலவிடப்பட்ட  தொகை ரூ.93.5 கோடி.
  • சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட  முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பிற்காக  2006-07 ஆம் ஆண்டில் செலவிடப்பட்ட தொகை ரூ.154.32  கோடி.
  • தமிழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் மற்றும் படிகள் ரூ.50,000.

இந்திய மக்களில் 70 சதவீதம் பேர் அன்றாடம் பெறும் தினக்கூலியே வெறும் இருபது ரூபாய்தான்.  அவர்கள் அரைப்பட்டினியாய் முழுப்பட்டினியாய் வாழ்க்கையை ஓட்டும்பொழுது, நமது ‘மக்கள் பிரதிநிதிகள்’ பொதுப் பணத்தில் மகாராஜாக்களைப் போல பவனி வருவதை மேலேயுள்ள பட்டியலைப் பார்த்தே புரிந்து கொள்ளலாம்.

இந்திய மக்கள் இப்படி வறுமையில் உழல்வது இப்பொழுதுதான் தெரிய வந்தது போல மன்மோகன் சிங்கும், சோனியாவும் சிக்கனமாக நடந்து கொள்ளும்படி கட்டளை போடுகிறார்கள்.  அக்கட்டளையை அவரது கட்சியைச் சேர்ந்த அமைச்சரே (சசிதரூர்) நக்கல் செய்கிறார்.  நாய் வாலை நிமிர்த்தினாலும், ஆளும் கும்பலும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும் பொதுப் பணத்தில் மஞ்சள் குளிப்பதை மாற்றிவிட முடியுமா?.

-புதிய ஜனநாயகம், அக்டோபர்’ 2009

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

ஆண்மைக் குறைவும் ஆச்சி மனோரமாவின் கவலையும் !!

49

ஆண்மைக்குறைவும் ஆச்சி மனோரமாவின் கவலையும் !!

குங்குமத்தில் ஆச்சி மனோரமா தான் முப்பது ஆண்டு காலமாக மனதில் அடக்கிவைத்து இருந்த மனக்குமுறலை கொட்டியிருக்கிறார். அதாகப்பட்டது, ஆண்மைக் குறைவுடைய ஆண்கள் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாகவும், எனவே திருமணத்திற்கு முன் பரஸ்பரம் மருத்துவ சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் எனவும், ஆண்மைக் குறைவோடு பெண்களை ( ஏமாற்றி ) திருமணம் செய்யும் ஆண்களை தண்டிக்க தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதற்காக ஒரு தனி அமைப்பை தொடங்கப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

இனியும் இந்த கருத்தை வெளியிடாமல் இருந்தால் தான் பெண்ணாக பிறந்தததே அர்த்தமற்றதாகிவிடும், எனவே இனி தன் வாழ்வில் மீதம் இருக்கும் நாட்களை இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்த பெண்களின் விடிவுக்காக செலவிடப்போவதாக கூறி உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். இதே கருத்தை வலியுறுத்தி அவர் முதல்வரிடமும் ஒரு மனு கொடுத்திருக்கிறார்.

ஆச்சி., வாலிப வயோதிக அன்பர்களே என்ற வார்த்தைகளை பயன்படுத்தாததாலும், அவருக்கு லேகியம் விற்பனை செய்யும் யோசனை ஏதும் இருப்பதற்கான அறிகுறி ஏதும் அந்த பேட்டியில் தெரியாததாலும், நாம் அவரது கருத்துக்களை பரிசீலிகத்தான் வேண்டும்.

ஒரு தனி இயக்கம் ஆரம்பிக்கும் அளவுக்கு ஆண்மைக்குறைவு என்ன சர்வதேச பிரச்சினையா ? ஆச்சி குறிப்பிடுவதைப்போல பெருகிவரும் விவாகரத்திற்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு தான் காரணமா ?

சரி, மனோரமா மீதான தனிப்பட்ட அன்பினால் முதல்வரே இவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவே வைத்துக்கொள்வோம். அதன் விளைவுகளை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், வாலி தலைமையில் ” ஆண்மையை ஆராயச்சொல்லி சட்டம் போட்ட ஆதவனே ” என்கிற தலைப்பில் கவியரங்கம் நடக்கும், டாக்டர் நாராயண ரெட்டி, காமராஜ் ஆகியோர்களின் மருத்துவமனை டோக்கன்களை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அராஜகமான வழிகளில் கைப்பற்றி அதிக விலைக்கு விற்பதாக ஜெயலலிதா அறிக்கை விடுவார், மருத்துவப்பரிசோதனையின் முடிவுகள் திமுக வினருக்கு மட்டும் பாசிடிவ் என்று வரும்படி கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக விஜயகாந்த் குற்றம் சாட்டுவார்.

இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இருக்கும் ?

முதலில் ஆண்மைகுறைவு என்பதற்க்கு ஒரு முழுமையான வரையறை இதுவரை கிடையாது. இனியும் அது முடியாது. ஆச்சி குறிப்பிடும் ‘ ஆண்மை ‘ என்பது ஒரு ஆணின் பண்பியல் தொகுப்பு ( personality ) , வளர்க்கப்பட்ட முறை, இல்லத்துணை மீதான ஈர்ப்பு, அவரது புறச்சூழல் என ஏராளமான காரணிகளை உள்ளடக்கியது. ஒரு மருத்துவர் இதை சோதனை செய்து அறிக்கை அளிப்பது என்பது எந்த காலத்திலும் நடக்காது.

பெரும்பாலான விவாகரத்துக்களுக்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு ஒரு காரணமாக இருப்பது இல்லை. தம்பதிகளிடையேயான புரிதலில் உள்ள முரண்பாடும் தன் இல்லத்துணைக்கான குறைந்தபட்ச அன்பையும் மரியாதையையும் தரத் தவறுவதும்தான் மிகப்பெரும்பாலான விவாகரத்துக்களுக்கு காரணமாக இருக்கிறது.

கள்ளக்காதலின் கதை வேறு, முறையற்ற காதல் என்பது எல்லா காலத்திலும் இருப்பதுதான். பத்திரிக்கைகள் அதற்கு அளிக்கும் அதீத முக்கியத்துவம்தான் இதை ஒரு பெரிய சமூக சிக்கலாக காட்டுகிறது. ( சரியாக கவனியுங்கள்.. சாதாரண மனிதனின் முறையற்ற காதல்தான் கள்ளக்காதல் என குறிப்பிடப்படுகிறது.. பிரபுதேவா & நயன் தாரா உறவை காதல் என்றுதான் எல்லா பத்திரிக்கையும் எழுதுகிறது).

திருமணமாகும் பெண்கள் மட்டும் ஏமாற்றப்படுவதில்லை. காதலிலும் ஏமாற்றப்படுகிறார்கள். காதலித்து ஏமாற்றப்படும் பெண்கள் நல்ல?! ஆண்மையுள்ள ஆண்களால்தான் கைவிடப்படுகிறார்கள்.

ஆண்மை இல்லாமல் திருமணம் செய்து ஏமாற்றுகிறார்கள், எனவே ஆண்மை  உள்ளவன்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றால் (கட்டாய பரிசோதனை என்பதன் பொருள் இதுதான்)., ஆண்மை உள்ளவன் காதலித்து ஏமாற்றுகிறான் (பலர் தன் ஆண்மையை காதலியிடம் பரிசோதித்துவிட்டுத்தான் கைவிடுகிறார்கள்- ஒருவகையில் இவர்கள் ஆச்சியின் யோசனையை 50% கடைபிடிக்கிறார்கள்).

எனவே இதைத்தடுக்க காதலிப்பவனுக்கு ஆண்மையே இருக்கக்கூடாது என ஒரு சட்டம் போடலாமா ? இதற்கு நிகரான மடத்தனம்தான் ஆச்சி வைக்கும் கோரிக்கையும்.

பெண்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவேண்டும் என்கிற மனோரமாவின் நோக்கம் நியாயமானது. அதில் தனிப்பட்ட காரணம் ஏதும் இருக்கமுடியாது. ஆனால் அவர் பிரச்சினைக்கு சொல்லும் காரணமும் அதற்கான தீர்வும் நகைப்புக்குரியவை. தனி இயக்கம் காணவேண்டிய அளவுக்கு கடுமையான பிரச்சினைகள் பெண்களுக்கு ஏராளம் உண்டு. அதற்கு ஆச்சி போராட முன்வந்தால்  பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு… ஆச்சியை பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு.

-நன்றி வில்லவன்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

நீங்கள் பாலியல் குற்றவாளியா?

காதல்: நேசிக்குமா, கொலை செய்யுமா?

ஆணாதிக்கத்தின் அமிலக் காதல் !

இது காதலா, கள்ளக்காதலா?

கன்னித்தன்மை பரிசோதனை: இந்து மதவெறிக் கும்பலின் ஆணாதிக்க வக்கிரப்புத்தி

வாழத்துடிக்கும் பெண்ணினம்! வாழ்க்கை மறுக்கும் சமூகம்!!

பா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம் = புதுப்படம் ரிலீஸ்!!

38

பா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம் = புதுப்படம் ரிலீஸ்!!

சூழ்நிலைமைகளுக்கேற்ப தனது வண்ணத்தை பச்சோந்தி மாற்றிக்கொள்ளும். சுயநலத்திற்காக தனது அரசியல் கூட்டணி வண்ணத்தை இராமதாஸ் அடிக்கடி மாற்றுவார். இராமதாஸின் இந்த சாதனைச் செயலை கின்னஸ் உலக சாதனைக்கு இன்னும் ஏன் அனுப்பாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு சீட்டுக்காக தி.மு.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க கூட்டணிக்கு மாறிய பா.ம.க ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியது. மத்திய அமைச்சரவையில் கடைசி நிமிடம் வரை பொறுக்கித் தின்றுவிட்டு பின்பு ஈழப்பிரச்சினைக்காக நடுவண், மாநில அரசுகள் ஒன்றுமே செய்யவில்லை என்று அதற்கு துணை போயிருந்த பா.ம.க கூச்சமில்லாமல் கூச்சலிட்டது. தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும் ஈழத்தின் பிணங்களைக் காட்டி வாக்குகளை அள்ளிவிடலாமென்று குரூரமாக முயன்றது.

பாசிச ஜெயாவை ஈழத்தாயாக சித்தரிக்கும் வரலாற்று கொடுமைக்கு துணை போனது. ஆனாலும் இந்த நாடகத்தை மக்கள் நிராகரித்து விட்டார்கள். இந்தத் தோல்விக்கு தி.மு.க அரசின் பணபலமும், வாக்கு எந்திரங்களின் முறைகேடும்தான் காரணங்களென இராமாதாஸ் புகார் வாசித்தார்.

வெற்றிபெரும் கூட்டணிகளில் இடம்பெற்று மத்திய அமைச்சரவையில் சேர்ந்து பா.ம.க இதுவரை சம்பாதித்ததற்கு என்ன கணக்கு என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இவர்களும் வாக்களார்களுக்கு பணம் வழங்கினார்கள் என்பதும், அதில் தி.மு.கவோடு போட்டிபோட முடியவில்ல என்பதை விட எப்படியும் ஈழப்பிரச்சினைக்காக மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்று அலட்சியமாக பச்சோந்தி தலைவர் சிந்தித்தார். எப்படியும் வர இருக்கும் வெற்றிக்காக ஏன் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டுமென்பதே அவரது எண்ணம்.

ஏழு தொகுதிகளிலும் தோற்றபிறகு ஒப்பந்தப்படி பா.ம.கவிற்கு அளிக்கப்பட விருந்த ராஜ்ஜிய சபா தொகுதியும் இப்போது கேள்விக்கிடமானது. அதை ஜெயாவிடம் வலியுறுத்தும் அளவிற்கு பா.ம.கவிற்கு தைரியமில்லை. தோல்விக்குப் பிறகு இடதுசாரிகள் மற்றும் வைகோவை சந்தித்த ஜெயா பா.ம.க தலைவர்களை மட்டும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை.

இந்நிலையில் சென்ற சட்டமன்ற தேர்தலின் போது திண்டிவனத்தில் உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டின் முன்நடந்த கொலைவழக்கில் இராமதாசு குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல பா.ம.கவினர் மீது வழக்கு தொடரப்பட்டது. கீழ் கோர்ட்டில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சி.வி. சண்முகம் அவர்கள் வழக்கில் சேர்க்கக்கூறி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதை தடுக்க வேண்டுமென்பதற்காக பா.ம.கவின் கோ.க.மணியும், தன்ராஜும் கொடநாட்டில் அம்மையாரை சந்தித்து பேசினர்.

அப்போது அம்மா என்ன பேசினார் என்பது தெரியாவிட்டாலும் வழக்கின் மீது தலையிட அவர் விரும்பவில்லை என்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. சரி ஜனநாயக நாட்டில் இத்தகைய வழக்குகளை சட்டபூர்வமாக எதிர்கொள்வதுதானே சரியாக இருக்கும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை நிறுத்துவதற்காக மத்திய ஆட்சியையே கவிழ்த்த ஜெயா அதே அளவுகோலின்படி தனது கூட்டணி கட்சிக்காகவும் வழக்கை விட்டுக்கொடுக்க சண்முகத்திற்கு கட்டளையிடுவார் என்பதே பா.ம.க கணக்கு. இந்த கணக்குதான் தற்போது பிழையாகியிருக்கிறது.

பாசிஸ்டுகள் எப்போதும் தமக்கு ஒரு வழிமுறையைக் கையாண்டால் அதை மற்றவர்கள் பின்பற்றுவதை விரும்பமாட்டார்கள். அவ்வகையில் சட்டம், வழக்கு, நீதிமன்ற விவகாரங்களில் பா.ம.கவிற்காக தலையிட அன்னையார் விரும்பவில்லை. இப்படித்தான் ‘ஜனநாயக’ நெறிமுறை பா.ம.க விவகாரத்தில் பாசிச ஜெயாவால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.

எப்படியும் கொடநாட்டிலுருந்து நல்ல சேதி வருமென்று காத்திருந்த பா.ம.க இராமதாஸ் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்திருந்தார். அப்படியும் அம்மா அருள்பாலிக்கவில்லை. எனவே அவசரமாக கூட்டப்பட்ட பா.ம.கவின் நிர்வாகக்குழு கூட்ட முடிவின்படி அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக இரமாதாஸ் அறிவித்து விட்டார். இராமதாஸின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் எனபதற்காகவே கட்சி கூட்டணி மாறுகிறது என்றால் கட்சியின் நிர்வாகக் குழுவும் இராமதாஸின் குடும்ப நலனுக்காகத்தான் செயல்படுகிறது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வழக்கு குறித்த பிரச்சினயை சட்டப்பூர்வமாக சந்திக்கமாட்டோமென்ற ஜனநாயக விரோதத் தன்மையும் இங்கே குடும்ப அரசியலுக்காக வெளிப்பட்டிருக்கிறது.

அடுத்த சட்டமன்றத்தேர்தலுக்காக இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது, இப்போது விரட்டப்பட்ட பா.ம.க மீண்டும் வாலை ஆட்டியவாறு தன்னிடம்தான் வரும், அப்போது பார்த்துக்கொள்ளலாமென்பது ஜெயாவின் எண்ணம்.

இதில் தி.மு.க நிலை என்ன என்பதை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், “பா.ம.விற்கு இந்த ஞானோதயம் வர காரணம் கொள்கை ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ கிடையாது. தனிப்பட்ட சொந்தக் காரணங்களுக்காக அவர்கள் கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறார்கள்” என்று  தெரிவித்திருக்கிறார். இதை வைத்துப்பார்த்தால் முந்தைய பா.ம.க கூட்டணிகளெல்லாம் அரசியல் ரீதியிலானது என்று பொருளாகிவிடுகிறது.  இதுவரை பா.ம.க இடம்பெற்ற எல்லாக்கூட்டணிகளிலும் எத்தனை சீட்டு என்பதே இராமதாஸின் கொள்கையாக இருந்தது. எது எப்படியோ தி.மு.கவும் இப்போது அய்யா கட்சியை தமது கூட்டணியில் சேர்க்கத் தயாரில்லை என்பதை மறைமுகமாக அறிவித்திருக்கிறது. கருணாநிதியும் ஜெயா போல இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அய்யா வாலை ஆட்டிக்கொண்டு வருவார் என்று அலட்சியமாக சிந்திக்கலாம்.

இதற்கு ஆதரமாக பா.ம.கவின் கடந்த கால வரலாறு கட்டியம் கூறுகிறது. 1991, 1996 சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப்போட்டியிட்ட பா.ம.க 1998 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் வென்றது. 1999 மக்களவைத் தேர்தலில் தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து 5 இடங்களை வென்றது. 2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 20 தொகுதிகளில் வென்றது. 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க கூட்டணிக்குத் திரும்பிய பா.ம.க., 6 தொகுதிகளில் வென்றது.

2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் நீடித்து 18 தொகுதிகளில் வென்றது. 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

இப்போது அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. 2011 சட்ட மன்றத்தேர்தலில் இந்த பச்சோந்தி யாரிடம் சேருவார் என்ற முடிவு போயஸ் தோட்டத்திடமும், கோபாலபுரத்திடமும் உள்ளது.

ஆனால் அந்த தேர்தலில் மட்டும் இருவரும் பா.ம.கவிற்கு இடமில்லை என்று அறிவித்து விட்டால் ஒரு வரலாற்றுப் புகழ்பெற்ற பச்சோந்தியை நாம் தமிழக அரசியலிலிருந்து ஒழிக்கப்படுவதை காணலாம். பச்சோந்தியை வளர்த்து விட்ட இருகழகங்களும் அதை ஒழிப்பதையும் செய்து விட்டால் தைலாபுரத்தின் அரசியல் அனாதையாக மாறிவிடும். ஆனால் அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள். எனினும் இனியும் பேரம்பேசும் வலிமையை இழந்து அடிமை போல நடப்பதே இரமாதாஸின் விதி.

ஏனெனில் தற்போது வன்னிய சாதி நலன் என்ற பெயரில் வெறியை மீண்டும் வளர்த்து தனது சாதிய ஓட்டுவங்கி செல்வாக்கை கைப்பற்ற பா.ம.க முயல்கிறது. ஆனால் இக்காலம் 80கள் அல்ல என்பதை அவர்கள் உணரவில்லை. பெரும்பாலான வன்னியர்களே பா.ம.கவை  இராமதாஸின் குடும்பச் சொத்து என்று புரிந்துகொண்டு புறக்கணித்து வரும் வேளையில் இந்த சாதிய அரசியல் எடுபடாது.

இப்பேற்பட்ட பச்சோந்திதான் ஈழத்திற்காக குரல் கொடுத்தது என்று இன்னமும் அப்பாவித்தனமாய் நம்பி வரும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் இனியாவது புரிந்து கொள்வார்களா என்பதே நமது கேள்வி.

இறுதியாக ஒரிரு மாதங்களுக்கு முன்னர் இராமதாஸின் பச்சோந்தி கார்ட்டூனை நண்பர் ராஜா அனுப்பியிருந்தார். அதை எப்போது வெளியிடலாம் என்று காத்துக்கொண்டிருந்த நேரத்தில் இப்போது வெளியிடுவதற்கு வாய்ப்பளித்த இராமதாஸுக்கும் அதற்கு வழியமைத்துக் கொடுத்த பாசிச ஜெயாவிற்கும் எமது ‘நன்றி’யைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

எங்கே தமிழன்? எங்கே எட்டாவது சீட்டு? ராமதாசு சீற்றம் !

ஈழத்தின் இரத்தத்தை வியாபாரம் செய்யும் பா.ம.க ராமதாஸ் !

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

359

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து.

பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே “விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின் இலக்கு. அதாவது அதுதான் சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகம்.

தான் சொல்ல விரும்பிய இக் கருத்தை கமலஹாசன் நேரடியாக, நேர்மையாகச் சொல்லவில்லை. டாக்டர் ராஜசேகர் நடித்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படம் இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் கம்பீரமாகவும் வெளியிட்டது. “கைதிகளை சித்திரவதை செய்துதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியுமேயன்றி சட்டபூர்வமான வழிகளில் விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது” என்று அந்தப்படம் ‘நேர்மையாக’ பிரகடனம் செய்தது. அப்படிப்பட்ட ‘நேர்மையான’ படங்கள் பல வந்துவிட்டன.

அப்பேர்ப்பட்ட ஒரு நேர்மை கமலஹாசனிடம் இல்லை என்று சொல்லலாம். அல்லது சொல்ல விழையும் செய்தியை உரத்துக் கூறாமல் ஒளித்துச் சொல்வதுதான் கலைக்கு அழகு என்ற காரணத்தினாலும், இந்த கலை ஞானித்தனத்தை (அல்லது களவாணித்தனத்தை) கமல் கைக்கொண்டிருக்கலாம்.

காரணம் எதுவாக இருப்பினும் படத்தின் வில்லன் ‘ஜனநாயகம்’. ஜனநாயகம் என்ற இந்தக் கருதுகோள் திரைப்படத்தில் என்ன கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறது?

பப்பட் ஷோவில் முசாரப்பின் பயங்கரவாதத்தை கையாளத் தெரியாத கோழிமாக்கான் புஷ், குண்டு வெடிப்பு பயங்கரவாதம் ஆகியவற்றால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் ஆட்சியைப் பற்றி மட்டுமே கவலைப்படும் முதலமைச்சர் (கருணாநிதி), ஜனநாயகத்தின் அதிகாரத்திற்க்கு கீழ்ப்படியுமாறு மோகன்லாலிடம் கூறும் முதுகெலும்பில்லாத தலைமைச் செயலாளர், எதிர்கால முதல்வராக விரும்பும் விஜயகாந்தைப் போன்ற மட்டமான ஒரு நடிகன்… இவர்கள்தான் ஜனநாயகத்தின் பௌதிக வடிவங்களாக படத்தில் சித்தரிக்கப்படுபவர்கள்.

இவர்கள் மட்டுமல்ல. லஞ்சம் வாங்கும் டிராபிக் கான்ஸ்டபிள், தூங்கி வழியும் எஸ்.ஐ முதலான கீழ் வர்க்கத்தினரும் (சாதியும்தான்) எள்ளி நகையாடப்படும் ஜனநாயகத்தின் அங்கங்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.

இவர்கள் எள்ளி நகையாடத் தக்கவர்களா இல்லையா என்பதல்ல கேள்வி. இவர்களை எள்ளி நகையாடும் கதாநாயகன் யார் என்பதுதான் விசயம்.

அதிகாரத்தின் இந்தக் கீழ்த்தரமான ஜனநாயகத்தின் கீழ் பணியாற்றுமாறு சபிக்கப்பட்டிருக்கும் மோகன்லால், மனைவியை மறந்து மரணத்தை தழுவத் தயாராக இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி, நடமாடும் உருட்டுக் கட்டையான முஸ்லீம் அதிகாரி….அப்புறம் நம்முடைய காமன்மேன் ஆன கிருஷ்ண பரமாத்மா. இவர்கள்தான் கதாநாயகர்கள்.

இவர்களுடைய கோரிக்கை? அதை மோகன்லால் சொல்கிறார், “எந்தவித குறுக்கீடுகளும் இல்லாத அதிகாரம்”. அந்த அதிகாரத்தை தங்களுக்கு வழங்கும் பட்சத்தில் பயங்கரவாதத்திலிருந்து மக்களை அவர்கள் பாதுகாப்பார்களாம்.

அரசியல் குறுக்கீடுகள் அற்ற அதிகாரம்! இந்த சொற்றொடரை அநேகமாக எல்லா  துக்ளக் இதழ்களிலும் நீங்கள் படித்திருக்க்கலாம். இத்தகைய அதிகாரத்தை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு வழங்காததனால்தான் இந்தியாவின் பொருளாதாரம் முதல் போக்குவரத்து வரை அனைத்துமே புழுத்து நாறுகிறது என்பதுதான் ‘சோ’ வர்க்கத்தின் கருத்து. இவர்களை இன்னும் கொஞ்சம் சுரண்டினால் ‘தகுதியான’ ஐ.ஏ.எஸ் ஆக இருக்க வேண்டும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காண்பிப்பார்கள்.

அர்சத் மேத்தா முதல் அமெரிக்காவின் சப்-பிரைம் மோசடிக்கான சூத்திரத்தை உருவாக்கிய எம்.ஐ.டி கோல்டு மெடலிஸ்டுகள் வரையிலான எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும் இவர்கள் தங்கள் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்த மாட்டார்கள். ஆகவே இவர்களைப் பொருத்தவரை சில்லறை அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள்தான் பயங்கரவாதம் தலையெடுக்கவும், தலைவிரித்தாடவும் காரணம். ஆகவே அதிகார வர்க்கத்திற்க்கு முழு அதிகாரம் வழங்கினால் அடுத்த கணமே பயங்கரவாதத்தை அவர்கள் ஒழித்து விடுவார்கள்.

அத்வானி முதல் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வரையிலான பலராலும் பல்லாயிரம் முறை கூறப்பட்டு மக்களுடைய பொதுப்புத்தியில் இந்தப் பொய் உறைய வைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அசாதாரமான ரவுத்திரம் கொண்டு நான்கு பேரை குண்டு வைத்து கொலை செய்யும் இந்தப் படத்தில் குற்றவாளிகளின் ‘கொடுரமான’ குற்றங்களையோ, அல்லது அதனால் பாதிக்கப்பட்ட காமன்மேனின் துயரத்தையோ கோடம்பாக்கத்திற்கே உரிய சென்டிமெண்ட் காட்சிகளின் மூலம் நியாயப்படுத்த இந்தத் திரைப்படம் முயற்சிக்கவில்லை. ‘நியாயம்’ மக்களுடைய மூளைகளில் ஏற்கனவே உறைந்திருப்பதால் தீர்ப்பு மட்டுமே தேவையாய் இருக்கிறது.

சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாத போதிலும் இப்படம் ரசிகர்களை ஈர்ப்பதற்குக் காரணம் மோகன்லாலுக்கும் கமலஹாசனுக்கும் இடையில் நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டம் ஒரு திரில்லரைப் போல விறுவிறுப்பாக கொண்டு செல்லப்படுகிறது. ப்ரூஸ் வில்லீஸ் நடித்த “டை ஹார்டு” வரிசைப்படங்களில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் ஆட்டம் இங்கே ஹீரோக்களுக்கிடையே நடக்கிறது. ஆட்டத்தின் காய் நகர்த்தல்களில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் வெட்டப்படும் காய்கள் மனிதர்கள் என்பதையும் கூட மறந்து விடுகிறார்கள். ஒரு குத்தாட்டப் பாடலின் அருவெறுப்பான பாடல் வரிகளை கவனிக்காமல் தாளக்கட்டு வழியாக தன்னைப் பறிகொடுக்கும் இரசிகன் போல படத்தின் வடிவம், இரசிகனை கொக்கி போட்டு இழுத்துச் செல்கிறது. விறுவிறுப்பான கதை, நேர்த்தியான எடிட்டிங், என்று இந்தப் படத்தை விதந்து எழுதுபவர்கள் வழுக்கி விழுந்த இடம் இதுதான்.

யங்கரவாதிகளை கொடிய மிருகங்களுக்கு ஒப்பிட்டு கமலஹாசன் சாடவில்லை. அவர்களை கரப்பான் பூச்சிகளுக்கு ஒப்பிடுகிறார். இந்தக் கொலை கரப்பான் பூச்சிகளை நசுக்குவதைப் போல முக்கியத்துவம் அற்றது. அந்த உயிர்கள் வெறும் பூச்சிகள். இந்தப் பூச்சிகளைக் கொலை செய்த கையோடு தக்காளி பையுடன் வீட்டிற்குப் போய் மணக்க மணக்க சாப்பிட முடியும் – லாக்கப்பில் ரத்தம் சொட்டச் சொட்ட கைதியை அடித்துக் கூழாக்கிவிட்டு இரவில் மனைவியைத் தழுவும் அதிகாரியைப் போல. கரப்பான் பூச்சிகள்! சாதரண மனிதர்களையும் சிறு குற்றவாளிகளையும் ஏன் மொத்தக் குடிமக்களைப் பற்றியும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி கொண்டிருக்கும் கருத்து இதுதான்.

அதை கமலஹாசன் சொல்கிறார். ” இந்த பயங்கரவாதிகள் என் அளவுக்கு புத்திசாலிகள் அல்ல” என்கிறார். புத்திசாலித்தனம் என்ற சொல் இங்கே பயன்படுத்தப்படுவது எவ்வளவு விகாரமாக இருக்கிறது? பிக்பாக்கட் – ஒரு கரப்பான் பூச்சி, முட்டாள். ஹர்ஷத் மேத்தா – புத்திசாலி. பயங்கரவாதிகளை படுபயங்கரமாக சித்தரிப்பதற்காக அல்கைதா சர்வதேசத் தொடர்பு என்றெல்லாம் அடுக்கி பீதியூட்டும் அதே வர்க்கம் அவர்களை நசுக்கப்பட வேண்டிய அற்ப ஜந்துக்களாகவே கருதுகிறது. இந்தக் கருத்தில் மோகன் லாலுக்கும் மற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் காமன்மேனுக்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை. காமன்மேன் என்பவன் போலீஸ் மேன் மோகன்லாலின் ஆல்டர் ஈகோ. அதனால்தான் இறுதிக் காட்சியில் கிட்டத்தட்ட கமலின் காலில் விழுகிறார் மோகன்லால்.

கதையின் முதன்மையான கரு பாசிசம். வெளிப்படையாகவும் அருவெறுக்கத்தக்க முறையில் துருத்திக் கொண்டும் இந்துத்வக் கருத்தும் முசுலீம் வெறுப்பும் படத்தில் திணிக்கப்பட்டிருந்த போதும், அவை இல்லாமலேயே கூட இத்திரைப்படம் இந்துத்வ பாசிசத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறது.

ஹேராம் படத்தில் முசுலீம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதனால்தான் இந்து தீவிரவாதியாக தான் மாற நேர்ந்ததாக மிகவும் விலாவாரியாக சித்தரிக்கும் கமல் அந்த நியாயத்தை முசுலீம் தீவிரவாதத்திற்கு வழங்கவில்லை. கோவை குண்டு வெடிப்பிற்காக கைது செய்யப்பட்ட தீவிரவாதி அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி சம்பவம் என்று காலத்தால் பிந்தைய ஒன்றை கூறுகிறார். கமல் சினிமாவிற்காகவே வாழ்பவர். பெர்ஃபெக்ஷனிஸ்ட். நாற்பதுகளின் கொல்கத்தாவை கண் முன்னால் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து செட் போட்டவர். அப்பேற்பட்ட கமலின் படத்தில் இவ்வளவு அலட்சியமான பிழை எப்படி நேர்ந்தது, ஏன் நேர்ந்தது?

போலீசு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகைகளில் ஏன் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன? ஏனென்றால் குற்றவாளிகளை லாக்கப்பில் அவர்கள் ஏற்கனவே தண்டித்து விடுகிறார்கள். அப்புறம் இரண்டு மாதம் ரிமாண்டு. போலீசைப் பொறுத்தவரை தீர்ப்பு தண்டனை எல்லாம் முடிந்து விட்டது. நீதிமன்றம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத அசவுகரியம். அதனால்தான் அலட்சியம்.

ஒரு முசுலீமை தீவிரவாதி என்று காட்டுவதற்கு “அவன் தாடி வைத்திருந்தால் போதாதா, அதற்கு மேல் என்ன சாட்சியங்கள், பின்புலங்கள், நியாயங்கள் வேண்டும்” என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் பார்வை.

1947க்கு முந்தைய இந்து முசுலீம் கலவரங்களில் இருதரப்பிலும் பல அட்டூழியங்கள் நடந்தன. அதன்பின் இந்தியாவில் சிறுபான்மையாகிவிட்டதால் திருப்பியடிக்கும் சமூக வலிமையை இசுலாமிய சமூகம் இழந்திருந்தது. 90 களுக்குப்பிறகு இந்து மதவெறியர்களுக்கு பதிலடி என்ற பெயரில் குண்டு வெடிப்புக்கள் நடக்க ஆரம்பித்தன். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற போதிலும் இந்து மதவெறியர்களைப் போல கற்பழிப்பு, உயிரோடு எரிப்பு முதலான சமூகமே நடத்தும் கலவரங்களில் இசுலாமிய தீவிரவாதிகள் ஈடுபடவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.

கடைசிக் காட்சியில் காமன்மேன் கமல் மிக உருக்கமாக வருணிக்கும் கருவறுத்த கதையே ஒரு முசுலீம் பெண்ணுக்கு இந்து வெறியர்கள் இழைத்த கொடுமைதான். 2002 குஜராத் முசுலீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் கவுசர்பானு என்ற பெண்ணின் மேற்சொன்ன கதையைப் போல பலநூறு கதைகள் உள்ளன. கவுசர்பானுவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருக்குழந்தையை எடுத்து அந்தப் பெண்ணை கொல்லுமளவு இந்து மதவெறி தலைவிரித்தாடியது. இதை செய்தவர்கள் இந்து மதவெறியர்கள் என்ற உண்மையை மறைப்பதோடு “இந்த சம்பவம் ஒரு இந்துவுக்கு நடந்திருந்தால் என்ன, ஒரு முசுலீமுக்கு நடந்திருந்தால் என்ன” என்று மத நல்லிணக்கம் பேசி இரண்டு சொட்டு கண்ணீர் விடுகிறார் கமல். இதுதான் பார்ப்பன நரித்தந்திரம். இசுலாமியர்களுக்கு நடந்த அநீதியையே இசுலாமிய தீவிரவாதிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தும் இந்த மோசடிக்கு பார்வையாளர்களை சுலபமாக வென்றெடுக்கலாம் என்பது கமலின் துணிபு. அதை இந்தப் படத்தை பார்ப்பவர்கள், பாராட்டியவர்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மேலவளவு சம்பவத்தில் தேவர் சாதி பஞ்சாயத்து தலைவரை தலித் மக்கள் கொலை செய்து விட்டதாக காட்டினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் உன்னைப் போல ஒருவனும் இசுலாமிய பயங்கரவாதம் பற்றி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறது. ஆனால் பார்வையாளர்கள், பதிவுலகில் விமரிசனம் எழுதிய பலரும் இது குறித்தெல்லாம் அக்கறைப்படவில்லை என்பது இந்த படம் தோற்றுவித்திருக்கும் அபாயகரமான பிரச்சினையாகும். இவர்களின் அக்கறையின்மை என்பது இசுலாமிய பயங்கரவாதம் குறித்த ஊடகங்களின் பொய்யான புனைவுகளில் நிலைகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

கவுசர்பானுபோல கீதாபென் என்ற இந்துப்பெண் தனது முசுலீம் கணவனை காப்பாற்றப்போய் இந்து மதவெறியர்களால் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதுவும் குஜராத் இனப்படுகொலையில் நடந்த உண்மைதான். ஒரு முசலீமின் விந்து கரு ஒரு இந்துப்பெண்ணின் கருப்பையில் நுழைவதா என்ற அளவுக்கு இந்து மதவெறி குஜராத்தில் தலைவிரித்தாடியது. இன்றைக்கும் முசுலீம் ஆண்களை திருமணம் செய்யும் இந்துப்பெண்களுக்கு எதிராக இந்துப்பெண்களின் ‘கவுரவத்தை’ காப்பாற்றுவதற்காக ஒரு இயக்கத்தையே இந்துமதவெறியர்கள் வட இந்தியாவில் நடத்துகிறார்கள். இந்த சமீபத்திய வரலாற்றின் துயரங்களை தெரிந்து கொண்டால்தான் கமலின் ‘இந்துவுக்கு நடந்தால் என்ன, முசுலீமுக்கு நடந்தால் என்ன’ என்று பேசும் ‘தத்துவ அயோக்கியத்தனத்தை’ புரிந்து கொள்ளமுடியும்.

கவுசர்பானுவின் கதையை கேட்டு உருகி பழிவாங்க நினைத்தால் குஜராத்தின் மோடியையோ, அதற்கு உதவியாக இருந்த போலீசு, அதிகார வர்கக்த்தையோ பழிவாங்கியிருக்க வேண்டும். மாறாக இந்த அநீதிகளை இந்த நாட்டின் சட்ட அரசியல் அமைப்பு தண்டிக்கவில்லை என்று பொறுமி இசுலாமிய தீவிரவாதம் குண்டுவெடிப்பின் மூலம் எதிர்வினையாற்றுகிறது. கமலோ, கவுசர்பானுவின் துயரத்தையே திருடி இசுலாமிய தீவிரவாதிகளுக்கு குண்டு வைக்கிறார். அதற்காக மொட்டை மாடியிலிருந்து ஆவேசப்படுகிறார். தனது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்.

னால் உண்மையான குஜராத்தின் யதார்த்தம் வேறுமாதிரி. 2000த்திற்கும் குறைவில்லாத முசுலீம்களை படுகொலை செய்த கும்பலுக்கு தலைமை வகித்த மோடி மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுகிறார். இந்நிலைமையில் ஒரு சராசரி முசுலீமின் மனநிலை எப்படியிருக்கும்?

ராகேஷ் ஷர்மாவால் எடுக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலையை விவரிக்கும் பைனல் சொலியூஷன் (FINAL SOLUTION) என்ற ஆவணப்படத்தின் இறுதியில் ஒரு ஐந்து வயது முசுலீம் சிறுவன் பேசுகிறான். தனது உறவினர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தவனிடம் எதிர்காலத்தில் நீ என்னவாக வர விரும்புகிறாய் என்று சர்மா கேட்கிறார். அதற்கு அவன் தான் ஒரு போலீசாக வர விரும்புவதாக கூறுகிறான். ஏன் என்று கேட்கிறார் சர்மா. இந்துக்களை கொல்ல வேண்டும் என்று மழலை மொழியில் கூறுகிறது அந்தக் குழந்தை.

கலவரங்களை கண்ணால் கண்டு மனதில் தேக்கி வைத்திருக்கும் ஒரு குழந்தையே இப்படி பேசுகிறது என்றால் இசுலாமிய பயங்கரவாதம் ஏன் குண்டு வைக்காது? இந்த யதார்த்தத்தை கமல் கேலிசெய்கிறார் அல்லது நிராகரிக்கிறார்.

முசுலீம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். இதுதான் கமல் பிராண்ட் களவாணித்தனம். ஆர்.எஸ்.எஸ் கூட முசுலீம்களுக்கெதிராக இந்துக்களுக்குத்தான் கோபம் வரவேண்டும் என்று சொல்கிறது. கமலோ இந்தக் கோபம் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற அனைவருக்கும் வரவேண்டும் என்கிறார். காமன்மேன் ஆர்.எஸ்.எஸ்-ஐ விஞ்சுகிறார்.

இரா.முருகனின் அசட்டுத்தனம் காரணமாகவும் கமலின் திமிர்த்தனம் காரணமாகவும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்கிற இத்தகைய சில வசனங்களும் காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒருவேளை இவை இல்லை என்றாலும் இது ஒரு இந்துத்வ பாசிஸ்ட் திரைப்படம்தான். இந்திய அரசும் அதிகார வர்க்கமும் தன்னியல்பாக இந்துத்வத்தை வரித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அதிகார வர்க்கத்திற்கு அதிகாரம் கொடு என்ற கோரிக்கையே நடைமுறையில் ஒரு இந்துத்வ கோரிக்கைதான். தங்களுடைய சொத்து சுகங்களை பாதுகாக்க வேண்டும் என்று பச்சையாக முதலாளிகள் எந்தக் காலத்தில் கோரியிருக்கிறார்கள்? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றுதான் அவர்கள் கோருவார்கள், கூறுவார்கள். அதுதான் இது, இதுதான் அது. காஷ்மீர் முதல் கோவை வரை முசுலீமாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் கதை வெறும் கதையல்ல. நீதிமன்றங்களில் நீருபிக்கப்பட்ட உண்மை.

காஷ்மீர், குஜராத், கோவை, புலிகள் அனைத்திலும் அதன் அரசியல் காரணங்கள் கழுவி நீக்கப்பட்டு வெறும் பயங்கரவாதம் என்று பேசப்படும் வக்கிரத்தை கமலும் செய்கிறார். இந்த பயங்கரவாத விளக்கத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் போராடும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இசுலாம் பெயர் கொண்ட அனைத்து இயக்கங்களும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றன. இந்த வகையில் இந்தப்படம் ஒடுக்கப்படும் மக்களுக்கெதிராகவும் தன்னை காட்டிக் கொள்கிறது.

மீனம்பாக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜிவ் காந்தியின் கொலை எல்லாம் மறக்கப்பட்டதாக கமல் கவலைப்படுகிறார். மாறாக இதைச் சொல்வதன்மூலம் ஈழமக்களின் உரிமைப் போராட்டத்தையும் மறக்கச் சொல்கிறார். அதன்மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒரே வரியில் பயங்கரவாதமாக மாற்றப்படுகிறது. குண்டு வெடிப்புகள் குறித்து மக்கள் மறக்கிறார்கள் என்று கவலைப்படும் கமல் கோவை காவலர் செல்வராசு கொலைக்குப்பின் நடந்த முசுலீம் எதிர்ப்பு கலவரத்தையோ, குஜராத் இனப்படுகொலையையோ மக்கள் மறந்து விட்டதாக கவலைப்படவில்லை. ஏனெனில் இந்துமதவெறியர்கள் எதைக் கவலைப்படவேண்டுமென நினைக்கிறார்களோ அவைதான் கமலின் கவலையும் கூட.

எல்லாவற்றிலும் அரசியல் காரணங்களை கழுவிவிட்டு பயங்கரவாதமாக சித்தரிப்புது ஒன்று. இரண்டாவதாக இந்த பயங்கரவாதங்களை ஜனநாயக முறையில் எதிர்கொள்ளமுடியாது, எதிர்பயங்கரவாதத்தினால்தான் முறியடிக்க முடியும் என்பது. மூன்றாவது இந்த பாசிச முறையை பெருமைப்படுத்துவது. இது ஏதோ முசுலீம், ஈழம் பற்றி மட்டுமல்ல, நேபாளில் மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதம், இந்தியாவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதம், இப்படி எல்லாவற்றையும் பயங்கரவாதமுத்திரை குத்துவது யாருக்கு சேவையளிக்கிறது?

லகமெங்கும் பிரச்சினையாக கருதப்படும் இசுலாமிய பயங்கரவாதம் படத்தின் தீவிரவாதி சொல்வது போல காஃபீர்களை அழிக்க வேண்டும் என்ற இசுலாமிய மதவெறியிலிருந்து உருவாகவில்லை. ஒவ்வொரு நாட்டிற்கும், பகுதிக்கும் தனித்தனியான வரலாற்றுக்காரணங்கள் உள்ளன. ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை அகற்றுவதற்காக தாலிபான்களையும், பின்லாடனையும் வளர்த்து விட்டது அமெரிக்கா. காஷ்மீர் மக்களின் போராட்டத்தை, ஆரம்பத்தில் மதச்சார்பற்றதாக இருந்த இயக்கங்களை மதவாதத்தில் மூழ்கவைத்து சிதைக்கும் வேலையை இந்திய அரசு செய்தது. பின்னர் பாக்கிஸ்தான் அதை நன்கு பயன்படுத்திக்கொண்டது. இந்தியாவின் பல இடங்களில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இந்துமதவெறியர்களின் கலவரங்கள் காரணமாக இருக்கின்றன. கோவை  குண்டுவெடிப்பெல்லாம் பாக்கின் மேற்பார்வையில் நடக்கவில்லை. நியாயம் கிடைக்காத முசுலீம் இளைஞனின் கோபமே அதை சாத்தியமாக்குவதற்கு போதுமானதெனும்போது ஐ.எஸ்.ஐக்கு என்ன தேவை இருக்கிறது?

பாலஸ்தீனின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஈராக்கின் போராளிகள் எல்லாரும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக போராடுகிறார்கள். இவர்கள் எல்லோரையும் முசுலீம் பயங்கரவாதம் என சித்தரிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

அமெரிக்காவையும், இந்துமதவெறியர்களையும் எதிர்ப்பதற்கு இசுலாமியத் தீவிரவாதத்தின் செயல்கள், வழிமுறைகள் தவறு என்பது வேறு. அதன் வரலாற்றுக்காரணத்தை புரிந்து கொள்ளாமல் மொத்தமாக பயங்கரவாதிகள் என்று காட்டுவது நாட்டில் எந்த அமைதியையும் கொண்டுவந்து விடாது. கமல் முன்வைக்கும் பாசிச அரசு வந்தாலும் இந்த எதிர்வினைகளை அடக்கிவிடமுடியாது. மாறாக இந்தப் பிரச்சினைகள் மட்டுமல்ல எல்லாப் பிரச்சினைகளுக்கும் போராடும் ஜனநாயக, புரட்சிகர சக்திகளை ஒடுக்குவதற்கே அந்த பாசிசம் பயன்படும்.

90களின் ஆரம்பத்தில் நடந்த பம்பாய் கலவரத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்களை கொலை செய்த சிவசேனாவின் பங்கை மறுக்கும் விதமாக இந்து, முஸ்லீம் இருதரப்பினரும் கலவரம் செய்ததாக மணிரத்தினத்தின் பம்பாய் படம் சித்தரித்திருந்தது. இதைக்கண்டித்து ம.க.இ.கவும் சில இசுலாமிய அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. அதன் பிறகு இந்தப் பணியை தொடர முடியாத அளவுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் முசுலீம் தீவிரவாதத்தை வைத்து வெளிவந்துவிட்டன. இந்தப் படங்களின் நாயகர்கள் காஷ்மீருக்கும், பாக்கிற்கும் சென்று முசுலீம் பயங்கரவாதிகளை அழித்து வந்தார்கள். அப்படித்தான் பொதுப்புத்தியிலும் “முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முசுலீம்கள்தான்” என்று அழுத்தமாக பதிய வைக்கப்பட்டது.

து இசுலாமிய பயங்கரவாதம் குறித்த பிரச்சினை மட்டுமல்ல இன்று தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் காலத்தில் வாழ்க்கைப்பிரச்சினைகள் , தற்கொலைகள், வேலையிழப்பு அதிகரித்து வரும் நிலையில் எல்லா அரசுகளும் அதற்கு மாற்றாக பயங்கரவாதங்களை எதிரிகளாக வைத்து மக்களைக் காப்பாற்றுவதாக சித்தரிக்கின்றன. அமெரிக்காவில் வீடுகளை ஜப்தியில் இழப்பதை விட ஆப்கானில் பின்லேடனைத் தேடுவது முக்கியமானது; விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்வதை விட காஷ்மீரில் இராணுவத்தை குவித்து மக்களை ஒடுக்குவது முக்கியமானது; இலங்கையில் பொருளாதாரம் போரினால் ஆட்டம் கண்டாலும் புலி ஆதரவாளர்களை முற்றிலும் ஒழிப்பது என்பதற்காக இராணுவத்தை இரண்டுமடங்காக பெரிதுபடுத்துவது முக்கியமானது, தொழிலாளிகள் இழந்து வரும் தொழிற்சங்க உரிமைகளைவிட தடா, பொடா போன்ற சட்டங்களைக் கொண்டு வருவது முக்கியமானது…

இப்படித்தான் உலகெங்கும் அரசுகள் மெல்ல மெல்ல பாசிசமயமாகி வருவதை நியாயப்படுத்திக் கொள்கின்றன. முதலாளித்துவத்தால் ஊழல்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து போன தங்களது வளர்ப்பு பிள்ளைகளான அரசியல்வாதிகளை அப்புறப்படுத்துவது என்ற பெயரில் பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஆளும் வர்க்கங்கள் அப்புறப்படுத்திவருகின்றன. கரப்பான் பூச்சிகளான மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் காட்டிலும், புத்திசாலிகளான தொழில்முறை அதிகாரவர்க்கத்தின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதும் அதிகரித்து வருகிறது.

நம்நாட்டிற்கு ஓட்டுப்போடும் உரிமை வந்த காலத்தில் ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கரை பரம்பரை சொத்தாக வைத்திருக்கும் மூப்பனார்கள், வாண்டையார்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக முடியும் என்றும், அவர்களுக்கு ஏழுதலைமுறைக்கு சொத்து இருப்பதால் பொதுப்பணத்தில் கைவைக்க மாட்டார்கள் என்றும் ஒரு பிரச்சாரம் அடிமை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தது. சலூன் கடைக்காரனும், டீக்கடைக்காரனும் அரசியலுக்கு வந்தால் லஞ்சம் வாங்காமல் என்ன செய்வான் என்று காங்கிரசுகாரர்களும் சோ முதலானோரும் அன்றும் இன்றும் பேசிவருகிறார்கள்.

இன்று அதே பாட்டுக்கு புது மெட்டு போடப்படுகிறது. மன்மோகன் சிங்கும், மான்டெக் சிங் அலுவாலியாவும், நந்தன் நீலகேணியும் அரசியல்வாதிகள் இல்லை என்பதே அவர்களுக்குரிய விசேட தகுதியாகிவிட்டது. கமலும் கூட மோகன்லால்களிடம் அதிகாரத்தை கொடுப்பதே சரியானது என இந்தப்படத்தில் வலியுறுத்துகிறார்.

அதனால்தான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம். இந்தப்படம் முசுலீம் எதிர்ப்பு என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. அடிப்படையில் இது பாசிச மனோபாவத்தை ஆதரிக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனி முசுலீம் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கும், ஜனநாயகத்தை வேட்டையாடுவதற்கும் நாயகர்கள் தேவையில்லை, காமன்மேனே போதும் என்கிறது உன்னைப் போல் ஒருவன். முசுலீம் தீவிரவாதத்தை ஒழிக்க நினைக்கும் (இந்து) நடுத்தரவர்க்கம் கூடவே பாசிசத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கும் கொண்டுவரப்பட்டிருப்பதால் திரையரங்கில் அத்தகைய வசனங்களுக்கு இரசிகர்கள் கைதட்டுகிறார்கள். வெளியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழையும் இந்தக் காமன்மேன்கள் இருட்டில் கைதட்டுவது குறித்து கூச்சப்படுவதில்லை. பிளாக் டிக்கெட் விற்பதை ஒழிக்கவேண்டும் என்ற சத்திய ஆவேசம் காமன்மேனுக்கு வரும்போது அவர் டிக்கெட் விற்கும் கரப்பான் பூச்சிகளை சுட்டுத்தள்ளுவார். ஜெய் ஹிந்த்!

__________________________________________________

பின்குறிப்பு:

குஜராத் கலவரத்திற்கு நீங்கள் ஏன் கவிதை எழுதவில்லை” என்று ஒரு ம.க.இ.க தோழர் கேட்டதற்கு அப்படியெல்லாம் கட்டளை போட்டு கவிதை வராது என்று கூறிய மனுஷ்ய புத்திரன் அது பற்றி தனி கட்டுரையே எழுதியிருக்கிறார். படத்தில் இரக்கமற்ற போலீசு அதிகாரியாய் வரும் ஆரிப் எனும் இளைஞன் தனது உருட்டுக்கட்டையால் குற்றவாளிகளை விசாரிப்பதற்கு உதவி செய்வான். இறுதிக் காட்சியில் விடுபட்ட தீவிரவாதியையும் சுட்டுக்கொல்வான். ஆரிஃப்பின் உருட்டுக்கட்டை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எவ்வளவு பயன்பட்டதோ அதே அளவு மனுஷ்யபுத்திரனது பாடலும் பயன்பட்டிருக்கிறது. அந்தப்பாடல் கவிஞர் மனுஷ்ய புத்திரனின் உள்ளத்திலிருந்து பீறிட்டெழுந்த்து என்று அவரே குறிப்பிட்டுள்ளதால் அது கூலிக்கு மாரடிக்கும் குண்டாந்தடி அல்ல உணர்வுப்பூர்வமான குண்டாந்தடி என்று பாகுபடுத்திப் பார்ப்பதே நியாயமானது.

மல் என்ற படைப்பாளியையும், அவரது படைப்பையும் தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டுமென்ற வழக்கமான குரல் போலி முற்போக்கு முகாமிலிருந்து ஒலிக்கிறது. ஹேராமில் மதநல்லிணக்கம், அன்பே சிவத்தில் சோசலிசம், இந்தப் படத்தில் பாசிசம். இப்படி பல பரிமாணங்கள் கொண்ட ஒரு படைப்பாளியை ஒரே ஒரு படைப்போடு அடையாளப்படுத்தி முத்திரை குத்துவது நியாயமல்ல என்பதுதான் ‘மார்க்சிஸ்டுகளின்’ வருத்தம்.

அதுவும் நியாயம்தான். ரதயாத்திரை அத்வானியின் ஒரு படைப்பு. ஜின்னாவை மதசார்பற்றவர் என்று அழைத்த்து அவரது இன்னொரு படைப்பு. ஒரு படைப்பை மட்டும் வைத்துக் கொண்டு அத்வானியை இந்துமதவெறியன் என்று முத்திரை குத்துவது நியாயமில்லைதானே?

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள் – அவசியம் படிக்க வேண்டியவை