privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்சமகால அரசியலில் கருப்புப் பணம்!

சமகால அரசியலில் கருப்புப் பணம்!

-

து 2009-ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா நேரம்; அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட்டு நாட்டை அடகு வைக்கும் துரோகத்தனத்துக்கு ஆதரவாக அமர்சிங் போன்ற அதிகாரத் தரகர்கள் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டுகளை வினியோகித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிக் கொண்ட மன்மோகன்சிங் – சோனியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசாங்கம் மத்தியிலும். ஈழத்தில் பச்சைத் துரோகம் இழைத்து லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரை காவு கொண்ட  சோனியா-சிதம்பரம் + கருணாநிதி-மாறன்கள்-ஸ்டாலின்கள் கூட்டணி தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இருந்தன.

‘மக்கள் மத்தியில் இவ்வளவு குமுறலும் கொந்தளிப்பும் இருப்பதால் ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை நிலவும், கொள்ளை அடிப்பதற்கான நமது முறை அடுத்து வரும்’ என்று மனப்பால் குடித்தபடி அகில இந்தியா அளவில் ‘ஊழல் எதிர்ப்பு போராளிகளாக’ பாரதீய ஜனதா கட்சியும், தமிழ்நாட்டில் ‘திடீர் ஈழத்தாயாக’ ஜெயலலிதாவும் நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டு களத்தில் குதித்திருந்தார்கள்.

ஆனால், இவர்கள் எதிர்பாராத புரிந்து கொள்ள முடியாத, இன்னொரு உள்நீரோட்டம் மக்கள் மத்தியில் ஓடிக் கொண்டிருந்தது. இது வரை நாடு கண்டிராத புரட்சிப் புனலாகிய கரன்சி பாய்ச்சல்தான் அது.

அழகிரி பார்முலா என்று திமுக கச்சிதப்படுத்திக் கொண்ட ‘வோட்டுக்கு நோட்டு’ நடைமுறை நிறுவனமயமாக்கப்பட்டிருந்தது. கரன்சி நோட்டு வெள்ளத்தின் தாக்கத்தைக் கண்ட அத்வானிக்கு வயிற்றைக் கலக்கியது. எங்கிருந்து இந்த பணம் வருகிறது என்று மோப்பம் பிடிக்கும் போதுதான் சிக்கியது வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருந்த பல லட்சம் கோடி ரூபாய்கள் விபரம். ‘அந்த பணம்தான் தேர்தல் ஜனநாயகத் திருவிழாவில் மக்களுக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிக் கொடுக்க வந்து குதித்திருக்கிறது’ என்பதை பழம் தின்று கொட்டை போட்ட பழம் பெருச்சாளியான அவர் உணர்ந்து கொண்டார்.

அதிலிருந்து உதித்ததுதான் ‘வெளிநாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம், இந்தியாவை வளப்படுத்துவோம்’ என்ற அவரது முழக்கம். முழக்கங்களை விட கையில் உரசும் பச்சை நோட்டுக்கு என்றுமே மதிப்பு அதிகம். தமிழ்நாட்டில் உளவுத் துறை புலி ஜாபர் சேட்டைத் தவிர, மற்ற எல்லோருமே ஆச்சரியப்படும் வகையில் திமுக+காங்கிரசு கூட்டாளிகள் பல இடங்களில் கரை சேர்ந்தார்கள். மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கடைசி நேரத்தில் சிறப்பு ஆபரேசன் மூலம் கரை ஏற்றி விடப்பட்டார். அந்த நன்றிக் கடன் அவருக்கு இன்றும் இருப்பதை அரசியலை கூர்மையாக அவதானிப்பவர்கள் உணர்ந்து கொள்ளலாம்.

வெற்றிகரமாக ஐக்கிய முன்னணி – 2 அரசு அமைந்தது. வலது/இடது போலிகளின் முனுமுனுப்பு கூட இல்லாமல், அமர்சிங் போன்ற அதிகாரத் தரகர்களின் முற்போக்கு ஆதரவுடன், தன்னை விஞ்ச ஆளில்லை என்று காங்கிரஸ் ஆளும் கட்சியாக இறுமாந்து அரசாங்கத்தை அமைத்தது.

ஆனால் பூதங்களை வெகுநாட்களுக்கு மூட்டைக்குள் கட்டி வைத்திருப்பது நடைமுறையில் சிரமமாகவே இருக்கிறது. வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் பத்திரிகைகளிலும், நீதிமன்றங்களிலும்,  மக்கள் மத்தியிலும் பேசப்பட ஆரம்பிக்க மத்திய அரசின் அதிகார மையங்களுக்கும் பேச்சளவிலாவது அதில் ஆர்வம் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ஜெர்மனி லிச்டன்ஸ்டெயின் நாட்டு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் விவரங்களை விலை கொடுத்து வாங்கி தொடர்புடைய நாடுகளுடன் பகிர்ந்து கொண்டதில் இந்தியர்களின் பட்டியல் இந்திய அரசு விரும்பாமலேயே அதனிடம் வந்து சேர்ந்தது. ‘விவரங்களை பொதுவில் வெளியிட்டால், உலக அரங்கில் நமது பெயர் கெட்டு போகும்’ என்று இல்லாத நல்ல பேருக்கு சோனியாவின் வழிகாட்டலில் நடக்கும் காங்கிரசு அரசு வக்காலத்து வாங்கியது.

பொருளாதார நெருக்கடியால் திணறிக் கொண்டிருந்த அமெரிக்க அரசு சுவிஸ் வங்கிகளின் கைகளை முறுக்கி அந்நாட்டு சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி அங்கு கணக்கு வைத்திருக்கும் அமெரிக்கர்களின் பட்டியலை பெற்றுக் கொண்டது. அதே போன்று சுவிஸ் வங்கியில் இருக்கும் கணக்கு விவரங்களை கேட்டு வாங்குவதற்கான தைரியத்தையாவது கடன் வாங்கவும் மனம் வரவில்லை மன்மோகன் சிங் என்ற ‘நல்லவரின்’ தலைமையில் இயங்கும் அரசுக்கு.  இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு, நீதிபதிகளின் கிடுக்குப்பிடி கேள்விகள் என்று அரசாங்கமும், பணமுதலைகளும் வயிறு கலங்கி கொண்டிருந்த நேரம்.

இரண்டாவது இடி இன்னொரு திசையிலிருந்து வந்தது. ‘எந்த துறையில் யார் அறுவடை செய்வது’ என்ற திமுக உள்கட்சி போட்டியில் தயாநிதி மாறனுக்கு தொலைதொடர்பு துறை என்ற கறவைப் பசுவின் மடி மறுக்கப்பட்டு ஆ ராசா பால் கறக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அதனாலோ, அல்லது 1.7 லட்சம் கோடி ரூபாய் வளத்தை கொள்ளை அடித்துக் கொண்ட நிறுவனங்களிடையே இருந்த காய்ச்சலினாலோ, நீரா ராடியா என்ற கார்ப்பரேட்  தரகர் அரசியல் தலைவர்களுடனும், கார்ப்பரேட் நிறுவனங்களுடனும், கார்ப்பரேட் பத்திரிகையாளர்களுடனும் நடத்திய தொலைபேசி உரையாடல்களின் ஒட்டுக் கேட்பு பதிவுகளில் சில வெளியாயின. திமுக தொடர்பான மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்ப்பரேட் தொடர்புள்ள உரையாடல்கள் மட்டும் கசிய விடப்பட்டன. (இது எப்படி கசிந்தது என்று இன்று வரை யாருக்கும் தெரியாது). நீரா ராடியா தொலைபேசி பதிவுகளில் மற்ற உரையாடல்களில் என்னென்ன ‘போர்த் தந்திரங்கள்’ வகுக்கப்பட்டன என்பதெல்லாம் தில்லியின் ஏதோ ஒரு நீதிமன்றத்தின் பாதுகாப்பான கோப்பு அறைகளுக்குள் அடக்கம் செய்யப்பட்டு விட்டது.

இதற்கிடையில் மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை மூலம் 2G ஊழல் விவகாரம் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணைக்கு உள்ளானது. 2010-ன் இறுதியில் ஆ ராசா அமைச்சர் பதவி இழந்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஒரு சில அரசு அதிகாரிகளும், கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளும், கனிமொழியும் கைது செய்யப்படுகிறார்கள். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் திடீரென்று மாயத்தினால் கடமையை உணர்ந்து  செயல்பட்டதில், நோட்டு வெள்ள ஓட்டத்துக்கு தடுப்பணைகள் போடப்பட்டு கருணாநிதியும் அழகிரியும் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டு 5 ஆண்டுகள் கொடநாட்டில் ஓய்வெடுத்து வந்த ஊழல் ராணி ஜெயலலிதா அதிகாரத்துக்கு வருவதற்கான பாதை வகுக்கப்பட்டது.

இப்படி பாரத தேசத்தில் தருமம் கெட்டு அதர்மம் தலை விரித்து ஆடிக் கொண்டிருந்த நேரத்தில் தேசிய வானில் தோன்றியது ஒரு நம்பிக்கை நட்சத்திரம். மகாராஷ்டிராவின் ராலேகான் சித்தி என்ற கிராமத்தில் புரட்சி நடத்தி பூலோக சொர்க்கத்தை நிறுவி விட்டு அதே முறைகளைக் கையாண்டு பாரத தேசம் முழுவதும் காந்தியின் ராமராஜ்யம் நிறுவ முன் வந்தார் அண்ணா ஹசாரே.

2011 ஏப்ரல் மாதம் அவர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகச் சொல்லி தில்லி வந்ததுமே உயர்நிலைக் குழுவில் இருக்கும் மத்திய அமைச்சர்கள் அவருடன் பேச்சு வார்த்தைகள் நடத்த அணி வகுத்தனர். (10 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் சர்மிளாவுக்கு அத்தகைய கௌரவம் கிடைக்கவில்லை, என்ன இருந்தாலும் அண்ணா நம்ம ஆள் இல்லையா!) பேச்சு வார்த்தை பரபரப்புகளுக்கிடையே இடி முழக்கமென அண்ணா வெளியிட்ட அச்சுறுத்தல்களில் நாடே அதிர்ந்தது. ‘நான் சொன்னபடி கேட்கவில்லைன்னா அழுதுருவேன், ஆமா! ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டம் நிறைவேத்தலைன்னா சாப்பிடாம இருந்துருவேன்!’ போன்ற அவரது தர்ம ஆவேசங்களில் மக்கள் நெக்குருகிப் போனார்கள்.

அண்ணா உண்ணாவிரதம் – சீசன் 1 வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, சீசன் 2-வுக்கு ஆகஸ்டு 15 என்று நாள் குறிக்கப்பட்டது. சீசன் 1-ன் வெற்றியின் மூலம் ஊழலை ஒழிக்க லோக்பால் சட்டம் கொண்டு வருவதற்காக அண்ணா குழுவினரும் அரசாங்க குழுவினருமான ஒரு கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. (அப்படி ஒரு சட்டம் இல்லாமலேயே நடந்து கொண்டிருந்த 2G வழக்கும், கறுப்புப் பண வழக்குகளும் இந்த உண்ணாவிரத பரபரப்புகளில் மறக்கடிக்கப்பட்டன). 2G ஊழலில் பெரும் பணம் சம்பாதித்த பன்னாட்டுக் கம்பெனிகள் பற்றியோ, உள்நாட்டுத் தரகு முதலாளிகள் பற்றியோ, இதன் மூலம் அடித்த தேட்டையை வெளிநாட்டில் கறுப்புப் பணமாக பதுக்கிய முதலைகள் பற்றியோ அண்ணாவுக்கோ அவரது குழுவினருக்கோ கவலையே இல்லை போல் தோன்றியது. அதைப்பற்றி அவர்கள் பேசவே இல்லை.

இதற்கிடையே அண்ணாவின் மேடையில் போதிய அளவுக்கு ‘போகஸ்’ கிடைக்காத காரணத்தால் கறுப்புப் பண ஒழிப்பு போராட்டத்தை ஆரம்பித்த ‘கறுப்புப் பண திலகம்’ பாபா ராம்தேவ் கூட பிரச்சினையைப் பற்றி குறிப்பாக பேசாமால் பொதுவாக பேசி கிச்சு கிச்சு மூட்டினார். கடைசியில் சில போலீசுகாரர்களை ராம்லீலா மைதானம் பக்கமாக காங்கிரசு அனுப்பியதும் ராம்தேவ் சுடிதார் அணிந்து ‘சீதாதேவாக’ உருமாறி க்ரேட் எஸ்காப்பானவர் தான் – இப்போது வரை போன இடமும் தெரியவில்லை மறைந்த தடமும் தெரியவில்லை.

மக்களின் கவனம் அண்ணா அண்ட் கோவின் குணச்சித்திர நடிப்பில் இருந்த இந்த நேரத்தில் இன்னொரு தளத்தில் அதிசயப்படும் இன்னொரு சாதனை நடந்து கொண்டிருந்தது.

1.)     2010-11-ல் எஞ்சினியரிங் பொருட்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 79% அதிகரித்தது ($30 பில்லியன் – 1,35,000 ரூபாய்கள்). ஆனால் BSE-500 நிறுவனங்களின் எஞ்சினியரிங் பொருட்கள் ஏற்றுமதி 11% மட்டும்தான் அதிகரித்திருந்தது ($1.38 பில்லியன் – 6,100 கோடி ரூபாய்கள்).

அதாவது சுமார் 1,29,000 கோடி ரூபாய்க்கான ஏற்றுமதி அதிகரிப்பு சிறு-நடுத்தர நிறுவனங்களின் சாதனையால் நடந்து அதற்கான அன்னிய செலாவணியும் நாட்டுக்குள் பாய்ந்து வந்திருந்தது.

2.)     2010-11-ல் வெளிநாட்டு நேரடி முதலீடு $22 பில்லியன் (99,000 கோடி ரூபாய்) என்று அரசாங்க புள்ளி விவரங்கள் சொல்ல, உலகளாவிய நிதி பாய்ச்சல் தொடர்பான புள்ளிவிவரங்கள் $4.5 பில்லியன் (18,000 கோடி ரூபாய்) மட்டுமே இந்தியாவுக்குள் வந்ததாக சொல்லின.

அதாவது சுமார் 81,000 கோடி ரூபாய் அளவுக்கான ஓட்டை கணக்குகளில் தெரிகின்றது அல்லது புள்ளிவிவரங்கள் பொய் சொல்கின்றன.

3.)  2010-11ல் உலோகங்கள் மற்றும் உலோகப் பொருட்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் $13 பில்லியனிலிருந்து (71,000 கோடி ரூபாய்) $29 பில்லியன் (1,36,000 கோடி ரூபாய்) ஆக அதிகரித்தது. இதிலும் BSE 500ல் வரும் 11 நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரிப்பு $1 பில்லியனுக்கும் குறைவு (3,700 கோடி) என்று தெரிய வருகிறது. மீதி $15 பில்லியன் (68,000 கோடி அதிகரிப்பு எங்கிருந்து வந்தது?)

4.)  2010-11-ல் தாமிர உபகரணங்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் 8,500 கோடி ரூபாய்களிலிருந்து 36,700 கோடி ரூபாய்களாக அதிகரித்திருந்தது. இது இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியை விட பல மடங்கு அதிகம்.

உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு தடுமாறிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், 2011-12-க்கான ஏற்றுமதியில்  ஏற்பட்ட இந்த வீக்கத்தைக் காட்டி மன்மோகன் கும்பல் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தனர். 2011 ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரை ஏற்றுமதி 53% அதிகரித்தது, ஜூலை மாதம் மட்டும் 81% அதிகரித்திருந்தது (அன்னா சீசன் 1க்கும் அன்னா சீசன் 2க்கும் இடைப்பட்ட காலம் இது).

வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகளால் இந்த பண மழையை நம்ப முடியவில்லை. ‘ஏற்றுமதி எந்த நேரத்தில் குறைந்து விடும். ஆண்டு முழுவதுக்குமான வளர்ச்சி 20%ஐ தாண்டாது’ என்று வர்த்தக அமைச்சக செயலர் ராஜீவ் குல்லார் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் ஏற்றுமதி மாதா மாதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியா ஏற்றுமதி செய்யும் நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகள் – ஏறக்குறைய புதைமணலில் சிக்குண்டு கிடக்கும் நிலையில் ஆளே இல்லாத டீக்கடையில் இந்திய தரகு முதலாளிகள் மிகப் பொறுப்புடன் டீ ஆற்றியுள்ள சாதனையைக் கண்டு வர்த்தகத் துறை அமைச்சகமே அடிவயிறு கலங்கிப் போய் நிற்கிறது.

இப்படி கடந்த 18 மாதங்களாக இந்திய பொருட்களை வாங்குவதிலும், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் வெளிநாட்டு மக்களுக்கு எப்படி திடீர் ஆர்வம் ஏற்பட்டு விட்டது? இதற்கும் தில்லியில் நடக்கும் அண்ணா-ராம்தேவ் சர்க்கஸூக்கும் என்ன தொடர்பு? கொஞ்சம் அலசிப் பார்க்கலாம்.

2G ஊழல், ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், எஸ்பேண்ட் ஊழல், கோதாவரி படுகையில் ரிலையன்ஸ் அடிக்கும் கொள்ளை என்று பல்வேறு வகைகளில் சுருட்டப்பட்டு கைமாறிய பணம் வெளிநாட்டு வங்கிகளில் சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பதுங்கிக் கிடப்பதாக  மதிப்பிடப்படுகிறது.

வெளிநாடுகளுக்குக் கடத்தப்படும் கருப்புப் பணம் எப்படி உருவாகிறது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதைப் பற்றி நமது வலையுலக பொருளாதார புலிகள் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள்?

சதுர அடி 1000 ரூபாய் வீதம் 2,400 சதுர அடி நிலம் வாங்கும் போது, மொத்த தொகையான 24 லட்சம் ரூபாய்களில் 10 லட்சம் காசோலையாக, வெள்ளைப் பணமாக கொடுக்கப்பட்டு, அதற்கேற்ற முத்திரைத்தாள் வரி, வருமான வரியும் செலுத்தி விட்டு, மீதி 14 லட்சம் ரூபாயைக் கணக்கில் காட்டாமல் கைமாற்றிக் கொள்கிறார்கள். சட்ட விரோதமான இந்தப் 14 லட்சத்தை 1000 ரூபாய் கட்டுகளாக ஒரு மஞ்சப் பைக்குள் போட்டு கக்கத்தில் அடக்கிக் கொண்டு சென்று விடுவார்கள். இது தான் கருப்புப் பணம்.

மேலே உள்ளதைப் போல் மிக எளிமையாகவும் மொக்கையாகவும் – சரியாகச் சொல்வதானால் ஷங்கர் பட திரைக்கதை பாணியிலும் – தான் ஐடி துறையில் வேலை செய்யும், பேஸ்புக்கில் இயங்கும், அண்ணா ஷோக்குகள் புரிந்து கொள்கிறார்கள். இது தான் மெழுகுவர்த்தி பிடிக்கும் நடுத்தர வர்க்கத்தின் டக்கு.

ஆனால் இது எதார்த்தத்தில் சிக்கலான பல முடிச்சுகள் கொண்டது. ஒரு எளிமையான உதாரணத்தைப் பார்ப்போம்,

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு 33,000 ஏக்கர் நிலத்தை சதுர அடிக்கு 5 காசு என்ற சலுகை  விலையில் ஒரு கார்ப்பரேட்டுக்கு ஒதுக்குகிறது அம்பிகளின் உள்ளங்கவர் கள்வனான மோடியின் குஜராத் அரசு. ஒரு சில மாதங்களுக்குள் அந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிலத்தை சதுர அடிக்கு 120 ரூபாய் என்ற வீதத்தில் “சட்டப்பூர்வமாகவே” விற்று வளத்தைப் பெருக்குகிறது அந்த நிறுவனம். இதற்குப் பெயர் என்னவென்று கேட்டாள் துக்ளக் சோ ‘வளர்ச்சி’ என்பார். நாம் கொள்ளை என்கிறோம். போகட்டும். பல லட்சம் சதுர அடிகள் நிலம் கைமாறும் போது ஒரு சதுர அடிக்கு 100 ரூபாய் கருப்பில் வாங்கப்பட்டாலும் பணம் பல நூறு கோடி ரூபாய்கள் வரும். இவ்வளவு பணத்தை ரொக்கமாக மஞ்சப் பைக்குள் வைத்தா கையாள்கிறார்கள்? இல்லை.

இங்குதான் வருகின்றன வெளிநாட்டு கருப்புப் பண வங்கிகளின் சேவை. விரல் நுனியில் அழுக்கு படாமல், வாங்குபவரின் ஸ்விஸ் கணக்கு எண்ணிலிருந்து விற்பவரின் ஸ்விஸ் கணக்கு எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டு விடும்.

இப்படி வெளிநாட்டில், கணக்கில் காட்டாமல், நாட்டு அரசுக்கு தெரியாமல் பணம் வைத்துக் கொள்பவர்கள் அடுத்தடுத்த கார்ப்பரேட் வளர்ச்சிக்கு அந்த பணத்தை சுழற்சியில் விட்டுக் கொள்வார்கள்.

இந்தியாவிலிருந்து உப்பு ஏற்றுமதியை அதிகரிக்க அரசு உப்பு ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஏற்றுமதி மதிப்பில் 20% ஊக்கம் என்று ஒரு திட்டம் அறிவிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நம்ம கருப்புப் பணக்காரர் உப்பு நிறுவனம் ஒன்றில் பங்காளியாக சேர்ந்து கொள்வார்.

வெளிநாட்டில் உப்பு வாங்குபவருக்கு ஒரு டன் உப்பு $100க்குப் பதிலாக $500 என்று இன்வாய்ஸ் செய்து 1000 டன் ஏற்றுமதி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். வெளிநாட்டுக்காரருக்கு கூடுதல் தொகையான $4,00,000ஐ தனது சுவிஸ் வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பி விடுவார். $5,00,000 அன்னிய செலவாணி ஏற்றுமதி வருமானமாக நாட்டுக்குள் வருகிறது.

அதற்கான $1,00,000 ஊக்கத் தொகையை வாங்கிக் கொள்வார். ஏற்றுமதி வருமானம் என்பதால் வருமான வரியும் கட்ட வேண்டாம். உப்பு நிறுவனத்துக்கு மற்ற செலவுகள் ஏதும் இல்லாததால் பெரும்பாலும் லாபமாக இந்திய வங்கிக் கணக்கில் சேர்ந்து வெள்ளை ஆகி விடும். அந்தப் பணத்தை தேர்தல் செலவுகளுக்கு, நிலம் வாங்குவதற்கு என்று நிறுவன வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டுடன் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்தால் 10 ஆண்டுகளுக்கு வரி விடுப்பு, நிலம் இலவசமாக வழங்கப்படும் என்று ஒரு திட்டம் வந்ததும், அந்த திட்டத்திற்கு தனது சுவிஸ் பணத்தை மொரீசியசில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் மூலம் வெளிநாட்டு முதலீடாக கொண்டு வருவார். ஒரே கல்லில் பல மாங்காய்கள்.

கொஞ்சம் திரைப்பட பாணியில் உதாரணம் சொல்லப் போனால், தனது எதிரியைத் தீர்த்துக் கட்ட வாடகைக்குக் கொலையாளியை அமர்த்தி அவருக்கு பணமாக சுவிஸ் வங்கி கணக்கில் செலுத்தி தன் மீது சுட்டும் தடயங்களை மறைத்துக் கொள்ளலாம்.

இப்படி சட்ட விரோதமாக நாட்டை ஏய்ப்பதற்கு நூற்றுக் கணக்கான கதவுகளை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கும் பணம் திறந்து விடுகிறது. இந்த பணம் அனைத்தும் சுவிஸ் வங்கிகளின் பாதுகாப்பு பெட்டகங்களில் கரன்சியாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று பொருள் இல்லை. இந்த பணம் சுழன்று கொண்டே இருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய்கள் மதிப்பிலான இணை பொருளாதார நடவடிக்கைகளை செலுத்துகிறது.

இந்தியாவின் இணைப் பொருளாதாரத்தின் அளவு மட்டுமே அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% அளவுக்கு இருக்குமென்றும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35 – 40 லட்சம் கோடிகள் இதில் புரள்வதாகவும் தில்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அருண் குமார் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். இதெல்லாம் அப்படியே ஒரு இரகசிய நிலவறைக்குள் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்ட பச்சை நோட்டுகள் என்று புரிந்து கொள்ளக் கூடாது. இதுவொரு இணைப் பொருளாதாரம். நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருப்பது.

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் ஆப்சைட்டில், ஆண்டுக்கு சில மாதங்கள் ஆன் சைட், மனதை உழப்பும் அலுவலக அரசியல் என்றெல்லாம் போராடி ஒரு ஐடி துறை ஊழியர் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதை  சிறுத்துப் போகச் செய்து விடும் சித்து விளையாட்டு இந்த இணை (parallel) நிதி பாய்ச்சல். 40 லட்ச ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்கலாம் என்று திட்டம் போட்டால் மேற்படி கருப்புப் பணத்தில் மிதக்கும் ஸ்கார்பியோவில் பறக்கும் அழகிரி பார்முலா அரசியல் வாதிகள் அந்த பிளாட்டின் விலையை 80 லட்சத்துக்கு ஏற்றி விடும் பணப் பாய்ச்சலைக் கொண்டு வந்திருப்பார்கள்.

ஐடி துறையினருக்கே இந்த கதி என்றால் மாதம் முழுவதும் போராடி 6,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் இந்த கடலில் எப்படி நீந்தி கௌரவத்துடன் வாழ முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

கடந்த 18 மாதங்களில் ஸ்விஸ் பாதுகாப்பு ஆட்டம் காண ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்த கணக்குகள் இடம் மாற்றப்படும் பேரலைகளின் தெறிப்புகள்தான் நாம் பார்த்த ஏற்றுமதி அதிகரிப்புகளும், முதலீட்டு அதிகரிப்புகளும். அந்த பெரு வெள்ளத்தின் சில துளிகள் கடந்த 18 மாதங்களில் போர்வைகள் போர்த்துக் கொண்டு சுவிஸ் வங்கிகளிலிருந்தும், மற்ற வரி ஏய்ப்பு மையங்களிலிருந்தும் விடுபட்டு வந்திருக்கின்றன.

அதற்கு ஒரு புகை மூட்ட மறைப்புதான் அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் நடத்தி வரும் நாடு தழுவிய ஊழலுக்கு எதிரான போராட்டங்கள். அவற்றில் பெரும்பகுதி இடம் மாற்றப்பட்டு விடுவது வரை அண்ணா சீசன் -2, சீசன் – 3 என்று தொலைக்காட்சி மகிழ்வூட்டல்கள் தொடரும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

ஆக, இந்த முகமூடிகளின் பின்னே கைகட்டி வாய் பொத்தி மெழுகுவர்த்தி ஏந்திச் செல்வதல்ல தீர்வு. மொத்த அமைப்பு முறையையும் மாற்றி அமைக்க உளிகளை கையில் ஏந்துவதே தேவை. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே! உலகமும் அந்த திசையில்தான் செல்கிறது. ரோம், கிரீஸ், அமெரிக்காவென்று உலகெங்கும் இழப்பதற்கேதுமில்லாத மக்கள் தெருவில் இறங்கியிருக்கிருக்கிறார்கள். நாம் எப்போது இறங்கப் போகிறோம்?

______________________________________________________

–              அப்துல்
______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]