privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஇந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!

இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 26

”வெளிநாட்டுப் பண உதவியுடன் கிறித்தவ மிஷனரிகள் தொடர்ந்து மதமாற்றத்தில் ஈடுபடுகின்றன. கல்வி, சேவை என்ற பெயரிலும் ஆசைகாட்டியும், அச்சுறுத்தியும், அரிஜன பழங்குடி மக்களை மதம் மாற்றுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தை கன்னிமேரி மாவட்டமாக மாற்றவும், வடகிழக்கு மாநிலங்களில் ஒரு கிறித்தவ இராஜ்ஜியத்தையே உருவாக்கும் வண்ணம் பிரிவினை – பயங்கரவாதக் குழுக்களுக்கு உதவியும் செய்கின்றன. இந்த தேசத்துரோக நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும்.”

 ஆர்.எஸ்.எஸ்.இன் இறந்து போன கோல்வால்கர் முதல் உயிரோடு உலவும் இந்து முன்னணி இராம.கோபாலன் வரை பேசி வரும் நிரந்தர அவதூறு.

மதமாற்றம் இந்து மதவெறியர்களை மதங்கொள்ள வைக்கும் ஒரு எரிச்சல். அதிலும் டி.வி.எஸ். ஐயங்கார் நிறுவனங்களைப் போல நிர்வாக முறையில் சுருதி சுத்தமாகச் செயல்படும் கிறித்தவ மதமும், அதன் மதமாற்ற முயற்சிகளும், ஆர்.எஸ்.எஸ். கும்பலின் வயிற்றைக் கலக்குகிறது. வயிறெரிந்து என்ன பயன்? பெரும்பான்மை மக்களுக்கு சமூக உரிமைகள் தர மறுக்கும் பார்ப்பனியம், மதம் மாறுபவர்களைத் தண்டிக்க வேண்டும் என்கிறது. மறுபுறம் தனது சாதிப் பிரிவினைகளால் வெளி மதங்களிலிருந்து வருபவரைச் சேர முடியாதபடி தடுத்து நிறுத்தவும் செய்கிறது. இப்படி இந்து மதம் எண்ணிக்கையில் குறைவதற்கான வாய்ப்பை அதன் (மனித விரோத) தர்ம சாத்திரங்களே வழங்குவதற்கு நாம் என்ன செய்ய முடியும்? தன் மதத்திலிருந்து வெளியேறுபவர்களை ‘மதத் துரோகிகள்’ என்று கூறட்டும்.  ‘தேசத் துரோகி’ என்று ஏன் அழைக்க வேண்டும்? கடவுளர்களும், புனித நூல்களும் மாற்றப்படும்போது தேசபக்தி எப்படி திடீரென்று மாறிவிடும்? இப்பிரச்சனையில் நமது மையமான கேள்வி இதுதான்.

இனி இந்தியாவில் கிறித்தவ மதம் வளர்ந்த வரலாற்றையும், மதமாற்றம் நடந்த சில பகுதிகளைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஏசுநாதரின் நேரடிச் சீடரான புனித தாமஸ் முதல் நூற்றாண்டிலேயே இந்தியா வந்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அப்போதைய கிறித்தவம் ஒரு மத நிறுவனமாக மாறியிருக்கவில்லை. எனவே வெறும் சமயக் கொள்கையைப் பரப்புதல் என்பதோடு அது நின்று விட்டது. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகே கிறித்தவ மதமாற்றம், ‘மிஷனரிகள்’ எனும் சமயநெறி பரப்பும் நிறுவனங்கள் மூலமாக உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்திய ஏசு நாதர்கிறித்தவ மிஷனரிகள்’ என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245 ஆம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.

அதன்பின் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் துவங்கியது. முதலாளித்துவப் புரட்சி நடப்பதற்கான சூழ்நிலைகள் அரும்ப ஆரம்பித்தன. ஐபீரிய தீபகற்ப நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் வணிகம் செய்யவும், காலனிகளை உருவாக்குவதற்கும், இந்தியாவைப் போன்ற பழைய உலகைச் சேர்ந்த நாடுகளுக்குப் புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் போட்டியிட்டன. அப்படி வழி கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளைப் போட்டித் தகராறின்றி ஸ்பெயினுக்கும், போர்ச்சுகலுக்கும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுக்கும் ‘புனிதப் பணியினை’ போப் செய்து வந்தார். கூடவே கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் கடமையையும் அறிவுறுத்தினார்.

அப்போது ஐரோப்பாவில் அழிந்து வந்த இசுலாமியப் பேரரசும், மத்தியக் கிழக்கின் புனித நகரமான ஜெருசலேத்தைக் கைப்பற்ற ஐரோப்பிய கத்தோலிக்க நாடுகள் துருக்கியுடன் நடத்திய சிலுவைப் போர்களும் மத உணர்வை அரசியல் விவகாரங்களோடு இறுக்கமாகப் பிணைத்தன. மேலும் மறுமலர்ச்சிக் கால எழுச்சியின் ஒரு விளைவாக ஜெர்மனியின் மார்டின் லூதர் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்து ‘புராட்டஸ்டண்ட்’ எனும் லூதரனிசத்தைத் தோற்றுவித்தார். இது கிறித்தவ மதத்தின் கடுங்கோட்பாடு மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அம்மத வரலாற்றில் நிகழ்ந்த முதல் பிளவாகும். இவை அனைத்தும் வாத்திகனின் திருச்சபைக்கு, இழந்து போன கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கினை மீட்கும் அவசியத்தையும், விரிவாகப் பிரச்சாரம் செய்யும் தேவையையம் உணர்த்தின. சில மேற்கு ஐரோப்பிய நாடுகள் ‘புராட்டஸ்டண்ட்’ பிரிவிற்கு மாறினாலும் பல நாடுகள் மாறாமல் தடுத்து நிறுத்தப்பட்டன. சிற்றரசர்களும், பேரரசர்களும் கிறித்தவ மதப் பணிக்காக ஆள் பலமும், பண பலமும் ஒதுக்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.

1534இல் இக்னேஷியஸ் லயோலா ஆரம்பித்த ‘ஜெசூட்ஸ்’ என்ற ஏசு சங்கம் இத்தகைய மிஷனரி மற்றும் பாதிரி – துறவியர்களுக்கு முன்னோடியாக விளங்கியது. இதன்பின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிஷனரி அமைப்புகள் தோன்றின. இவற்றில் போப்புக்கும் திருச்சபைக்கும் கட்டுப்பட்டவை ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தும், ஏனையவை புராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்தும் இருந்தன. இருப்பினும் இரு பிரிவைச் சேர்ந்த மிஷனரிகளும் மதத் தொண்டுப் பணிகளோடு தத்தமது நாட்டு ஆட்சியாளர்களின் காலனியாதிக்க நலன்களுக்குச் சேவையாற்றுவதையும் முக்கியமாகக் கொண்டிருந்தனர். இனி இந்தியாவுக்குத் திரும்புவோம்.

போர்ச்சுக்கல் நாட்டின் கடலோடி நாயகனான வாஸ்கோடகாமா தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி, மடகாஸ்கர்தீவு வழியாக இந்திய மாலுமிகளின் உதவியோடு கேரளத்தின் கோழிக்கோடு கடற்கரையில் 1498, மே மாதம் 27 ஆம் தேதி கரை இறங்கினார். ஆரம்பித்தில் போர்ச்சுக்கீசியர்களின் நோக்கம் வியாபாரம் செய்வதும் கிறித்தவ மதப் பிரச்சாரம் செய்வதும் என்பதாக இருந்தது. வலிமை வாய்ந்த இசுலாமியப் பேரரசினைப் போல கிறித்தவமும் அப்படி உருவாக வேண்டும் என்று திருச்சபையினால் ஊக்கங் கொடுக்கப்பட்ட போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவில் குறிப்பாக கோவா மற்றும் கேரளாவில் சுவிசேசப் பணியைத் துவங்கினர். முதலில் இந்தியாவும் கிறிஸ்தவ நாடுதான் என்று நம்பிய போர்ச்சுக்கீசியர்கள் பின்னர் அப்படி இல்லை எனப் புரிந்து கொண்டனர். எனினும் கேரளாவில் ஏற்கனவே சிரியன் கிறித்தவப் பிரிவு மக்கள் அரைகுறை கிறித்தவ மரபோடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களெல்லாம் முறையான கிறித்தவ மரபிற்கு உட்படுத்தப்பட்டு திருச்சபையின் வலைப் பின்னலில் சேர்க்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் அடாவடி வழிகள் மூலமாக மறை பரப்பிய போர்ச்சுக்கல் மிஷனரிகள் பின்னர் தமது வழிமுறைகளை மாற்றிக் கொண்டனர். இந்தியக் கிறித்தவ வரலாற்றில்  கோவாவில் மட்டுமே வன்முறைப் பாதையினை மேற்கொண்ட முதலும் – கடைசியுமான மிஷனரிகள் இவர்கள் மட்டுமே. அதேசமயம் தொண்டுப் பணியியைத் துவக்கி வைத்தவர்களும் இவர்கள்தான். 1541 இல் பிரான்சிஸ் சேவியர் என்ற புகழ்பெற்ற பாதிரியார்  கோவாவில் வந்திறங்கினார். இயேசு சங்க (ஜெசூட்ஸ்) நிறுவனரான இக்னோஷியஸ் லயோலாவின் சீடரான இவர், கப்பலை விட்டிறங்கி  முதலில் தொழுநோயாளிகளின் மருத்துவமனைக்குத் சென்றுவிட்டு பின்னரே ஆர்ச் பிஷப் அரண்மனைக்குச் சென்றார்.  அடுத்த வருடமே கோவாவில் புனித – பால் கல்லூரி நிறுவப்பட்டது. இது ஆசிய மற்றும் ஐரோப்பியப் பாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனமாக விளங்கியது. சேவியரின் முயற்சியினால் கோவாவிலும், கேரளத்தில் மலபார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கிறித்தவத்தைத் தழுவினர். இந்தியாவில் பெருந்திரளான மக்கள் கத்தோலிக்கத்தில் இணைக்கப்பட்டது இதுவே முதன்முறை.

அதன்பின் ஏனைய ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் செழிப்பான பொருளாதாரத்தைச் சுரண்டும் நோக்குடன் வணிகம் செய்ய வந்தன. போர்ச்சுக்கீசியர்கள் கோவா, டாமன், டையூவிலும், டச்சுக்காரர்கள் (ஹாலந்து) கொச்சியிலும், பிரெஞ்சுக்காரர்கள் காரைக்கால், பாண்டிச்சேரி, மாஹேயிலும், ஆங்கிலேயர்கள் சென்னை, மசூலிப்பட்டினம், சூரத், கொல்கத்தா என ஏனைய இந்தியப் பகுதிகளிலும் காலூன்றினர். இவர்களில் போர்ச்சுக்கீசியர்கள் கத்தோலிக்கப் பிரிவையும், ஏனைய நாடுகள்  புராட்டஸ்டண்ட் பிரிவையும் சார்ந்திருந்தன. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் நிலைகொண்ட ‘புராட்டஸ்டண்ட்’ நாடுகள் முதலில முக்கியமாக வணிகத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தன. பின்னர்தான் ஆசியாவில் தமது அரசியல் ஆதிக்கத்திற்கு மதமாற்றம் உதவுமென்பதைப் புரிந்து கொண்டனர். 17ஆம் நூற்றாண்டில் முடிவுற்ற போர்ச்சுக்கீசியர்களின் மதமாற்றம் பெருமளவு மக்களைச் சேர்ப்பதில் தோல்வியுற்றது.

அதன் பின்னரே 18, 19, 20 ஆம் நூற்றண்டுகளில் பெருமளவு மக்கள் பல்வேறு மிஷனரிகளால் கிறித்தவர்களாய் மாறினர். இன்று இந்திய கிறித்தவ மக்களின் எண்ணிக்கை நார்வே, டென்மார்க், பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம். மொத்த கிறித்தவர்களில் 70 சதவீதம் பேர் தென்னிந்தியாவிலும், 30 சதவீதம் பேர் வடக்கிலும் வாழ்கின்றனர். அந்தந்த மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாடு 5%, கேரளா 26%, ஆந்திரா 4%, கோவா 36%, நாகலாந்து 53%, மணிப்பூர் 19% என கிறித்தவ மக்களின் விகிதம் இருக்கிறது. இப்படிப் பெருந்திரளான மக்கள் மாறுவதற்குக் காரணம் என்ன?

இந்து மதவெறியர்கள் கூறுவதுபோல் கிறித்தவ மிஷனரிகள் ஆசைகாட்டியோ, அச்சுறுத்தியோ இதைச் செய்யவில்லை. பார்ப்பனியத்தின் கொடூரமான சாதிய சமூக அடக்குமுறையின் காரணமாக, தாழ்த்தப்பட்ட – பழங்குடியின மக்களிடம் தோன்றிய விடுதலை ஆர்வமே முதன்மையான காரணம்.

10-ஆம் நூற்றாண்டில் இருந்து தீவிரமான பார்ப்பனமயமாக்கத்திற்கு உள்ளாகிய மாநிலம் கேரளம். வடக்கிலிருந்து வந்த நம்பூதிரிகள் சில பத்தாண்டுகளுக்குள்ளாகவே கேரளத்தின் சமூக பொருளாதார ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். நம்பூதிரி, நாயர், கம்மாளர், ஈழவர் மற்றும் புலையர் என்ற இறுக்கமான சாதிய அமைப்பு கொடூரமான விதிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்டது. அதற்கென்றே ‘சங்கர ஸ்மிருதி’ எனும் ‘பார்ப்பனக் குற்றவியல்’ சட்டத் தொகுப்பும் இயற்றப்பட்டது. மனுஸ்மிருதியின் கேரளப் பதிப்பான இந்நூலின் விதிமுறைப்படி தொலைவில் வரும் புலையரை ஒரு நம்பூதிரியின் கண்கள் பார்த்து விட்டாலே நம்பூதிரியைத் தீட்டுப்படுத்திய குற்றத்திற்காக அந்தப் புலையரைக் கொலை செய்யலாம். நாயர்களின் மணப் பெண்கள் தமது முதலிரவை நம்பூதிரிகளின் படுக்கையில் கழிக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகள் இந்நூற்றாண்டின் ஆரம்பம் வரை அமலில் இருந்துள்ளன. கேரள சாதியக் கொடுமைகளைக் கண்ட விவேகானந்தர் கேரளாவை ‘பைத்தியக்காரர்களின் நாடு’ என்றழைத்தார். கேரளாவில் இலட்சக்கணக்கான மக்கள் மதம் மாறுவதற்கு இவையே காரணங்கள். பார்ப்பனியத்தின் சமூக அடக்குமுறைக்கு எதிராக ஈழவ மக்களுக்குத் தன்மானமளித்த நாராயண குரு தோன்றுவதற்கான காரணமும் இதுதான்.

காலனிய ஆட்சியின்போது கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கி தென்கேரளத்தை ஆண்டு வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் ஆயிரக்கணக்கான மீனவர்களும், நாடார் சாதி மக்களும் கிறித்தவத்தைத் தழுவினர். ‘பள்ளு, பறை, சாணான், சக்கிலியன்’ என்ற தாழ்த்தப்பட்டவர்களின் படியமைப்பில் மூன்றாம் நிலையிலிருந்த சாணான் என்றழைக்கப்பட்டவர்கள் நாடார் சாதி மக்களாகும். ‘நாடார் பெண்கள் மாராப்பு போடக்கூடாது’ என்ற பார்ப்பன அடக்குமுறை அங்கே சட்டமாகவே இருந்தது. தமது போராட்டத்தின் மூலம் திருவிதாங்கூர் அரசை மாராப்பு போடக்கூடாது என்ற சட்டத்தை இரத்து செய்ய வைத்தார்கள் நாடார் சாதிப் பெண்களும், ஆண்களும். நாடார்கள் கோவில்களுக்குள் நுழையக்கூடாது என்பதை எதிர்த்துத் தனிக்கோவில்  – வழிபாட்டு முறையை உருவாக்கினார்  ஐயா வைகுண்ட நாதர். நாராயண குருவைப் போல குமரி மாவட்டத்தில் தோன்றிய இச்சீர்த்திருத்தப் பெரியவரின் கொள்கையை ஏற்றவர்கள் ‘ஐயா வழி’ மக்கள் என இன்றும் வாழ்கிறார்கள்.  எனவே குமரி மாவட்டத்தில் மதமாற்றம் எளிதில் நடந்தேறியதில் வியப்பில்லை.

ஒரிஸ்ஸாவின் சோட்டா நாக்பூர் பகுதியில் முந்த்தா ஆரோன், காரியா போன்ற பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். பார்ப்பன மேல் சாதி நிலப்பிரபுக்களிடம் நிலமிழந்து, வாழ்விழந்து அடிமையில்  உழன்று கொண்டிருந்த இம்மக்களுக்கு பொருளாதார, கல்வி உதவிகளைச் செய்த மிஷனரிகள் வெகு விரைவிலேயே அவர்களுடைய நம்பிக்கை நட்சத்திரமாய் மாறினார்கள். 19 ஆம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்திற்கு மாறிய இம்மக்கள், அதன் மூலமே ஓரளவிற்கேனும் தமது சுயமரியாதையையும், வாழ்க்கையையும் மீட்க முடிந்தது.

பெண் குழந்தைத் திருமணம், வல்லுறவில் இறந்து போகும் சிறுமிகளான மணப்பெண்கள், குலின் எனப்படும் பார்ப்பனப் பிரிவில் விதவைகள் விபச்சாரிகளாக மாற்றப்பட்டது, விதவைகளுக்கும் – விபச்சாரிகளுக்கும் பிறக்கும் கள்ளக் குழந்தைகள் ஒரு மாதத்தில் சராசரியாக 1000 வரை கொல்லப்படுவது – இவையெல்லாம் வங்காள மாநிலத்தில் பார்ப்பன இந்து மதம் ஏற்றி வைத்த மணி மகுடங்கள்.

இத்தகைய பார்ப்பன ஒடுக்கு முறைகளை ஒழிக்க முகலாயப் பேரரசர்களும், முசுலீம் குறுநில மன்னர்களும் பெரிதும் முயன்றாலும் வெற்றி பெறவில்லை. பின்னர் மிஷனரிகளின் முயற்சியாலும், கிறித்தவக் கல்லூரிகளில் பயின்ற இராஜாராம் மோகன்ராய் போன்ற இந்து அறிவாளிகளின் போராட்டத்தினாலும் ஆங்கிலேய அரசு தடைச் சட்டங்களைக் கொண்டு வந்தது.

இனி, இந்து மதவெறியர்கள் அபாயச் சங்கு ஊதும் வடகிழக்கு மாநிலங்களைப் பார்ப்போம். அஸ்ஸாமும் அதைச் சுற்றியுள்ள 6 மாநிலங்களும் அடங்கிய வடகிழக்குப் பகுதி ஏனைய இந்தியாவிலிருந்து இயற்கை, இனம், மொழி, பண்பாடு என பலவற்றிலும் வரலாற்று ரீதியாகப் பிரிந்தே காணப்படுகிறது. பிரம்மபுத்திரா, பாரக் நதிகளின் இரு பள்ளத்தாக்குகளும் இவற்றினைச் சுற்றி நெருக்கமான மலைகளும் இருக்கின்றன. மலைப் பகுதியில் மங்கோலிய இனப்பிரிவைச் சேர்ந்த பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இம்மக்கள் சீனா, திபெத் வழியாகப் பல நூற்றாண்டுகளுககு முன்பேயே குடியேறியவர்கள். பள்ளத்தாக்குப் பகுதியில் கலப்பின மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

காமரூபம் என்று வரலாற்றில் அழைக்கப்படும் (ஆரியர்களை எதிர்த்து நின்ற) இப்பகுதியை வேதங்கள் ‘கிராதர்கள், மிலேச்சர்கள் வாழும் நாடு’ எனக் குறிப்பிடுகின்றன. 13ஆம் நூற்றாண்டில் பர்மிய மன்னரான அஹோமி இப்பகுதியைக் கைப்பற்றிய பின்னர், அவனது வம்சத்தின் ஆட்சி ஏறக்குறைய 6 நூற்றாண்டுகள் நீடித்தது. அஹோமி என்பதே பின்னர் அஸ்ஸாம என்பதாக மாறிற்று. கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஆரியர்கள் அஸ்ஸாமில் குடியேற ஆரம்பித்தனர். பழங்குடி மக்கள் மலைப்பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். பார்ப்பனியத்தின் வர்ண – சாதிச் சமூகமும், அதை நடைமுறைப்படுத்தும் சட்ட திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டன. அஹோமி வமிச மன்னர்களும் வைணவ இந்து மதத்தைத் தழுவிய பின்னர் ஆரியமயமாக்கம் முழு வேகத்தில் நடந்தேறியது. தாந்திரீகம் எனப்படும் மந்திர வழிபாடும், நரபலி, நிர்வாண பூஜை, சக்தி வழிபாடு எனக் கொடூரமான சடங்குகள் வெறியாடும் பிரதேசமாக அஸ்ஸாம் மாறியது.

இதை எதிர்த்து வந்த புத்த மதம் நெடுங்காலம் செல்வாக்குடன் நீடித்தது. வடகிழக்கில்  வர்ண சமூகம் குலைக்கப்பட்டு, புத்த மதம் வந்தது பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் வருத்தப்பட்டார். அதனால்தான் வங்கத்தில் இசுலாமும், வடகிழக்கு மாநிலங்களில் கிறித்தவமும் எளிதில் பரவமுடிந்தது என்று குமுறுகிறார் கோல்வால்கர். இன்றும் வடகிழக்கு மாநில இந்துக்களிடம், ஏனைய இந்திய இந்துக்கள் மத்தியில் காணப்படும் அசமத்துவச் சடங்குகள், இறைச்சி உண்பதில் பேதங்கள், கீழ் சாதியிடம் உணவு பெறுவதைத் தீட்டாகக் கருதுவது போன்ற பார்ப்பனப் பண்புகள் பெருமளவில் கிடையாது. காரணம் இம்மக்களிடம் மரபுரீதியாக இருந்து வந்த பழங்குடியினப் பண்பாடுதான்.

1825ஆம் ஆண்டு பர்மியர்களை ஆங்கிலேயர்கள் வென்ற பிறகு வடகிழக்கு மாநிலங்களில் காலனி ஆதிக்கம் தொடங்கியது. அப்போதிருந்து கிறித்தவ மிஷனரிகளின் தொண்டுப் பணியும் தொடங்கியது.  பல்வேறு பழங்குடியின மொழிகளுக்குக் கிறித்தவப் பாதிரிகள் ரோமானிய வரி வடிவம் கொடுத்தனர். தாய்மொழிக் கல்விக்கும், ஏனைய மருத்துவ பொருளாதார முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்கு முக்கியமானதாகும். இதனாலேயே கேரளாவிற்கு அடுத்து இலட்சக்கணக்கான மக்கள் இங்கே மதம் மாறினர்.

காலனிய ஆட்சியில் ஒன்றுபட்ட அஸ்ஸாமாக இருந்த வட கிழக்குப் பிரதேசம் வெள்ளையர்கள் வெளியேறிய பிறகு அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர், மேகாலயா என ஏழு மாநிலங்களாக இந்திய அரசால் பிரிக்கப்பட்டன. இவற்றில் 3 மாநிலங்கள் கிறித்தவப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கின்றன. ஏராளமான பழங்குடியினப் பிரிவுகளையும், மொழிகளையும், வளர்ச்சி பெறாத தேசிய இனங்களையும் கொண்டிருக்கும் இம்மாநிலங்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கி இருப்பதற்குக் காரணம் இந்திய அரசுதான்.

வரலாற்று ரீதியாக இந்தியாவிலிருந்து பிரிந்திருந்த இம்மக்கள் இன்று  தமது வாழ்வுரிமைக்காக இந்திய அரசை எதிர்த்துப் போரிடுகிறார்கள். இந்தப் போராட்டத்தைச் சீர்குலைக்கும் வண்ணம் அஸ்ஸாம் – போடோ, குக்கி – நாகா என ஒன்றுக்கெதிராக மற்றொரு இன மக்களை நிறுத்தி மோதவிட்டது இந்திய அரசின் சதி வேலையாகும்.  தற்போது அசாம் விடுதலைக்காகப் போராடி வரும் ‘உல்ஃபா’ இயக்கம் பெரும்பான்மையாக இந்துக்கள் அடங்கிய ஒரு குழுதான். அதனால் இவ்வமைப்பை இந்து மதவெறியர்கள் அங்கீகரிக்கிறார்களா என்ன? அவர்களை அடக்க கூடுதல் இராணுவத்தைத்தானே அனுப்புகின்றார்கள். எனவே வடகிழக்குப் பிரச்சினைகளுக்குக் கிறித்தவ மத மாற்றம் காரணமல்ல.

இந்தியாவில் மதமாற்றம் செய்ய வந்த மிஷனரிகளுக்கும் அவர்தம் நாடுகளுக்கும் ஆதிக்கம் செய்யும் நோக்கம் இருந்தது உண்மையே. ஆனால், மக்களோ, பார்ப்பனிய சாதிக் கொடுமைகளிலிருந்து விடுபடவே மதம் மாறினார்கள். பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியம் மறுத்த கல்வியைக் கிறித்தவம் கொண்டு செல்ல முயன்றது. அசாமி, வங்க மொழி, தமிழ், ஒரியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தேசிய மொழிகளில் முதன் முறையாகப் பள்ளிகளும், கல்லூரிகளும் நிறுவப்பட்டன. 18அம் நூற்றாண்டிலேயே பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்காக கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. அச்சகங்களும், வட்டார மொழி நூல்களும்  –  பைபிளும் வெளியிடப்பட்டன. நவீன வங்க இலக்கியம் தோன்றுவதற்கு மிஷனரிகளே காரணமாயின. வீரமாமுனிவரும், பெர்க்லி பாதிரியாரும் தமிழுக்குச் செய்த தொண்டு அளவிடற்கரியது. ஆங்கில – வட்டார மொழி அகராதிகள் வெளியிடப்பட்டன. இன்றும் இந்திய அளவில் 15 சதவீத பள்ளி மாணவர்களும், 10 சதவீத கல்லூரி மாணவர்களும் கிறித்தவ நிறுவனங்களில்தான் படிக்கின்றனர். 15% மருத்துவச் சேவையும் கிறிததவ மருத்துவமனைகளால்தான் இப்போதும் அளிக்கப்படுகின்றது.

இப்படி கல்வி, வட்டார மொழி வளர்ச்சி, சுகாதாரம், மருத்துவம், சிறு தொழில்கள் எனப் பல்வேறு சேவைகள் மூலம் கிறித்தவம் மக்களைக் கவர்ந்தது. சூத்திரரும், பஞ்சமரும் தங்களை முதன் முதலில் மனிதர்களாக மதித்தவர்களைக் கண்டனர்.

இருப்பினும் இந்திய மக்களைப் பெருமளவில் மதம் மாற்றுவதில் கிறித்தவம் தோல்வியுற்றது. பார்ப்பனியத்தின் சகல நோய்களையும் தீர்க்கும் வீரிய மருந்து பைபிளிடம் இல்லை. அதாவது பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை மிஷனரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனாலேயே இந்தியக் கிறித்தவ மதம் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டு சாதிய அமைப்பையும் ஏற்றுக்கொண்டது.

1606-ஆம் ஆண்டு, மதுரையில் திருமலை நாயக்கன் ஆண்ட காலத்தில் மதப்பிரச்சாரம் செய்ய வந்தார் நொபிலி என்ற பாதிரியார். அவர் தன்னை பிரம்மா அனுப்பிய பார்ப்பனனென்றும், தன்னுடன் 5-வது வேதத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் கூறிக்கொண்டார். அதன் மூலமே பார்ப்பன மேல் சாதியினர் உள்ளிட்டு ஒரு சிலரை மதம் மாற வைத்தார். மதப்பிரச்சாரம் செய்ய அனுமதியும் பெற்றார். தமது சாதியச் சமூகச் சுரண்டலுக்கும் – ஆதிக்கத்திற்கும்  கிறித்துவ மதம் தடையில்லை என உணர்ந்த பிறகே பார்ப்பன மேல் சாதியினர் இந்தியாவெங்கும் கிறித்தவ மதமாற்றத்தை ஓரளவிற்கு அனுமதித்தனர்.

மேலும் மிஷனரிகளின் கல்வி – ஏனைய தொண்டுப் பணிகள் மூலமாக இந்து மதத்தின் ஆதிக்க சாதிப் பிரிவே கணிசமான ஆதாயங்களைப் பெற்றது. இவ்வாறு காலனியாதிக்கத்தின் சலுகைகளைப் பெற்று பிழைப்புவாதிகளாக மாறியதும் இவர்களே. இன்றும் நாடெங்கும் உள்ள செயின்ட் ஜோசப் – பீட்டர்ஸ் – ஜான்ஸ் – லயோலா போன்ற மிகப் பிரபலமான கிறித்தவக் கல்லூரிகளில் படித்துப் பயனடைபவர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பன ‘மேல்சாதி’ மேட்டுக்குடியினர்தான். அவ்வளவு ஏன், இன்று இந்து மதவெறியர்களின் பிரபலமான தலைவர்கள் பலரும் கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர்களே!

இவையெல்லாம் கிறித்தவ மதமாற்றத்தின் இன்னொரு பக்கம். பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக கிறித்தவ மதத்தைத் தழுவிய கேரளம் கூட இன்று தலைகீழாக மாறிவிட்டது. கேரளத்தில ‘புதுக் கிறிஸ்தியானி’ என்ற பெயர் மிகவும் பிரபலம். அதன் பொருள் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்கள் என்பதே. மேலும் இவர்கள் சமீபத்தில் மதம் மாறியவர்கள், பரம்பரைக் கிறித்தவர்கள் அல்ல என்றும் ஒதுக்கப்படுகிறார்கள். அதேபோல ‘சிரியன் கிறித்தவர்’ என்ற ‘பரம்பரைக் கிறித்தப் பிரிவு’ இந்துக்களின் நம்பூதிரி – நாயரைப் போன்ற ‘மேல்சாதி’ கிறித்தவர்களைக் குறிக்கும். இவர்களைத் ‘தம்புரானே, பணிக்கரே’ என்றுதான் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்கள் விளிக்க வேண்டும். மேலும் தீண்டாமையும் வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் உண்டு. தேவாலயங்களில் கூட சாதிகளுக்குக்கேற்பத்தனி வழிபாடுகள், அல்லது தனித் தேவாலயங்கள் என்பதெல்லாம் சகஜமாகி விட்டன. தமிழ்நாட்டின் பல கிறித்தவ இடுகாடுகளில் தாழ்த்தப்பட்ட கிறித்தவப் பிணங்கள் நுழைய முடியாது.

எனவே, இந்தியாவில் எந்த மதமானாலும், எத்தகைய உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவை பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பால் செரிக்கப்படும் என்பது கிறித்தவத்தின் வரலாற்றில் உண்மையாகிவிட்டது.

அதேசமயம் இத்தகைய பார்ப்பன இந்து மதத்தின் சாதிய – தீண்டாமைக் கொடுமைகளே இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் இசுலாம் – கிறித்தவ மதங்களுக்கு மாறுவதற்குக் காரணமாகிறது. இவை இந்து மதவெறியர்களுக்குத் தெரியும். அதனால்தான் ”சாதி – தீண்டாமையை ஒழிக்கிறோம், யாரும் மதம் மாறாதீர்கள்” என்று கூறுவதற்குப் பதில், மதமாற்றத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்.  அதனாலேயே கிறித்தவப் பாதிரிகள் எரிக்கப்படுவதும், தேவாலயங்கள் இடிக்கப்படுவதும் தொடர்கின்றது.  பார்ப்பனச் சாதிய அமைப்பு என்பது வெறும் சாதிய உணர்வு என்ற கௌரவம் சார்ந்த கருத்து மட்டுமல்ல; ஒரு சமூகப் பொருளாதாரச் சுரண்டல் நிறுவனமாக இருக்கிறது என்பதுதான் அதன் பலம். மதமாற்றத்திற்கெதிரான இந்து மதவெறியர்களின் வெறுப்பும் – திமிரும் அதிலிருந்துதான் பிறக்கிறது.

– தொடரும்

__________இதுவரை____________

  1. நல்ல கட்டுரை. என் சொந்த அனுபவம்: நான் 11, 12 வகுப்புகளை ஒரு கிறித்தவ பள்ளியில் பயின்றேன். அம்மத கோட்பாடுகள் என் மீது எந்த விதத்திலும் திணிக்கப்படவில்லை. பள்ளியின் இறைவணக்க கிறித்தவ பாடலைக் கூட நான் பாட வேண்டும் என வற்புறுத்தவில்லை. பள்ளிக்கு தினமும் திருமண் அணிந்து செல்லும் வழக்கம் கொண்டிருந்தேன். இதற்கும் எதிரிப்பில்லை. கேலி, கிண்டல் கூட கிடையாது. இந்த பள்ளிக்கும், அதை நிர்வகிக்கும் கிறித்தவ பாதிரியார் குழுவுக்கும் எனது நன்றிகள்.

    // 1606-ஆம் ஆண்டு, மதுரையில் திருமலை நாயக்கன் ஆண்ட காலத்தில் மதப்பிரச்சாரம் செய்ய வந்தார் நொபிலி என்ற பாதிரியார். அவர் தன்னை பிரம்மா அனுப்பிய பார்ப்பனனென்றும், தன்னுடன் 5-வது வேதத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் கூறிக்கொண்டார்.//

    இதென்ன கூத்து! Very funny!

    // *இன்றும்* நாடெங்கும் உள்ள செயின்ட் ஜோசப் – பீட்டர்ஸ் – ஜான்ஸ் – லயோலா போன்ற மிகப் பிரபலமான கிறித்தவக் கல்லூரிகளில் படித்துப் பயனடைபவர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பன ‘மேல்சாதி’ மேட்டுக்குடியினர்தான்.//

    90 சதவீதத்தில் யாரை எல்லாம் குறிக்கிறீர்கள் என புரியவில்லை. இந்த கூற்றுக்கு ஏதேனும் ஆதாரம் தர இயலுமா? ஏதாவது சர்வே எடுத்திருக்கிறார்களா?

  2. ற்ஸ்ஸ் சொல்வது முற்றிலும் உண்மை தான். இந்தியாவில் பல பகுதிகளை கிறிஸ்துவர்கள் மட்டும் வாழும் மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இன்று பல கிறிஸ்துவ வெறியர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஏன் இவர்களுக்கு இந்த கேவலமான எண்ணம் என்று தான் புரியவில்லை. உண்மையான தெய்வம் என்றால் மக்கள் தானாகவே புரிந்து கொண்டு மதம் மாறுவார்கள். நல்ல தரமான பொருளுக்கு விளம்பரம் எதற்கு. உங்களிடம் ஒன்றும் இல்லையென்பதற்காக தான் ஏசுவே கடவுள். எங்களிடம் வாருங்க என்று பிதற்றி கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் எப்போது தான் திருந்துவீர்கள் என்பது தெரியவில்லை. உண்மையில் எத்தனை ஏழைகளை பணம் கொடுத்து நீங்கள் மதம் மாற்றியிருக்கிறீர்கள்?

    • Hi Anjali
      Just want to record my opinion. Even if it a superhit movie, when we see we tell our friends about it. We dont do marketing or get any money for the film producer but still we do talk about the film to our friends. Practically speaking.
      Similarly, if a person is blessed by Jesus, he tells or else not

      Note: nobody should force christianity and even bible tells the same.

      • Good point Amar. I second your opinion. No harm in sharing our faith or introduce someone to our faith. It is upto them to chose or not. But forcing or cheating people is against Bible and Jesus’ teaching. Bible don’t even give authority to husband to force his wife 🙂

    • //ற்ஸ்ஸ் சொல்வது முற்றிலும் உண்மை தான். இந்தியாவில் பல பகுதிகளை கிறிஸ்துவர்கள் மட்டும் வாழும் மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இன்று பல கிறிஸ்துவ வெறியர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். ஏன் இவர்களுக்கு இந்த கேவலமான எண்ணம் என்று தான் புரியவில்லை//

      இந்தியாவில் பாதிக்குப்பாதி கல்வி நிறுவனங்கள் ஏதாவது கிறிஸ்தவ நிறுவனங்களை சார்தந்வை. 100 வருடங்களுக்கு மேல் கல்வி கற்றுக்கொடுத்து வருகின்றன. இவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் ஏனில் இன்றைக்கு இந்தியாவில் 60 கோடி பேர் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும்.

      • அதைப்போலவே ,இந்தியாவில் முஸ்லிம்கள் 800 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் .அவர்கள் மதமாற்றம் செய்து இருந்தால் இந்தியாவில் இப்போது 90 % முஸ்லிம்களாக இருப்பார்கள் .ஆனால் ஹிந்துதுவாக்கள் அரசியல் நடத்த ,மதமாற்ற பொய்களை கூறிவருகிறார்கள்.
        முன்னர் தாங்கள் உயர்ந்த சாதி என்ற அந்தஸ்தில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.அப்புறம் ஒதுக்கிய சாதிகள் விழிப்புணர்வு அடைந்து ஆதிக்க செலுத்த முயற்சிக்கையில் ,ஐயோ நாமெல்லாம் ஹிந்துக்கள் ,அவர்கள் முஸ்லிம்கள் கிறித்தவர்கள் உங்களை மதமாற்ற முயற்சிக்கிறார்கள் ,நாங்கள உங்களை அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறோம் என்று கூறி மீண்டும் அமுக்கி ஆதிக்கம் பண்ணி வருகிறார்கள்

        • இப்ராஹிம் பாய்,

          இஸ்லாமிய மதமாற்றத்துக்கு பெரும் சவாலாக இருந்தவர்கள் வடக்கில் ராஜபுத்திரர்கள்,சீக்கியர்கள், தெற்கில் விஜயநகர, நாயக்கர் அரசுகள், அதன்பின் மராட்டியர்கள்.. இவர்கள் கொடுத்த தலைவலியில் முகலாயர்களும், சுல்தான்களும் தங்கள் அரசைக் காப்பாற்றவே நேரத்தை செலவிட வேண்டியிருந்ததால் மதமாற்றத்தை முக்கியக் கடமையாக எடுக்க இயலவில்லை.. இருந்தும் பஞ்சாப், சிந்து, காசுமீரில் மதமாற்றங்கள் பெருமளவில் ‘உயர்சாதி’ இந்துகளிடையே திணிக்கப்பட்டதும் உண்மை.. சூஃபி ஞானிகள், இந்து-முஸ்லீம் மதவேறுபாடுகள் முக்கியப் பிரச்சனையாகாமல் மத நல்லிணக்கத்துக்கு ஆற்றிய தொண்டும் அளப்பரியது..

        • As usual Ibrahim lying from his teeth,

          which 800 years did people rule India?

          Mohammad Ghauri fought Prithviraj Chauhan in 1206 & Aurangazeb died in 1707.That makes it a mere 500 years and in south India i remember Hyer Ali/Tipu Sultan for sometime and Nizam Of Hyderabad.

          Thats all there is to it.

          Moreover most of the kshatriya kings died including the rajputs and people who were called shudras like the Reddys,Rajus,Kamma,Velallar/Naicker/Maravar,everyone fought against the muslims.

          In the north the Jatt/Jat/Ahir/Gujjar etc also were land owning/cattle herding shudras who fought against the muslims always.

          Only greedy,opportunistic,lazy people who dont respect their forefathers and their land converted and this includes all castes of India including the brahmins.

          Muslims tried very very hard to convert other people and they try today also,but Hindus ll always survive,whatever it takes.

          try to learn some history before opening your mouth.

      • I deny your opinion. I am an Hindu but follow Christ because I found lot of good guidance in the Bible. No religion or so called sacred books teach about loving our enemies and praying for them.Once if you experince the blessings from God it is our duty to tell to others to get the same blessing otherwise we become selfish. That is why many Christians tell the truth to the people who do not know the truth. No Christians will force to follow Christ. Even if forced it is the decision taken by the individual to follow or not to follow. It is the time for all to Change their mind to the right path and not to Change one relegion to other. Bible teaches the same. Many people in this world are in the closed circle. Once they come out of the circle then only they can find out reality. I know about Hinduism, Islamism, jainism, Chrsitianity etc so I can declare boldly which is true and provve sceintifically with eveidences. May God bless you all

  3. Lot of people dont care about god today,nor do they care.This includes all religions and all cults.

    We live in a materialistic world where Apple,Microsoft,McDonalds,Johnny Walker,some film star,some actress etc etc are the gods and heroes people look to emulate.

    so true religions are all dead,today more than anything it is all random stuff.

    Nobody has true devotion or dedication towards anything,everything happens for a profit,thats all.

    I do this because i gain this,thats it.

    Nothing more,nothing less.

    • If you have lost your faith, you can’t say there is no faith. We are still here. Every day trying to improve our life and others’ life in Christ. No harsh feelings on people of other faiths. Love for God not because of fear of hell or for a heaven or for some blessing in this life. We love God as we love fellow humans (may be a bit more than that). Christian teachings are somewhat distorted. I accept. But I find it relevant even today and spreading the non-aggressive version of Christianity is a boon to the country.

      • i have not lost faith and neither have you but the issue here is about how popular life goes and how people get influenced.

        The notions that run the world dont care about all that world and regardless of one’e religious ness,it doesnt matter.

        Honestly,i have no opinions about christianity but i dont find anything so interesting or different in it,i just see it as the real political identity it is as anywhere else.

    • கரி.. உன்போன்ற ஆட்களின் மனநிலையை இப்போது தான் படம் பிடித்து காட்டியிருக்கிரீர்.

      //Lot of people dont care about god today,nor do they care.// இதற்கு காரணம் கடவுள் என்றால் யார் என்று உன் போன்றவர்களுக்கு ஒரு புரிதலே கிடையாது.

      உன்னை பொருத்தவரை நித்தியானந்தனும் கடவுள் தான்… சங்கராச்சாரியும் கடவுள் தான்… Film actor / actress ம் கடவுள் தான்..

      உனது மத நம்பிக்கை என்பது இஸ்லாமிய / கிறிஸ்தவ எதிர்ப்பு. உனது வழிபாடு என்பது அவர்களுக்கு செய்யும் கெடுதல். உனது பண்டிகை என்பது அவர்களின் மரணம். நயவஞ்சகம் என்பது உனது தேசப்பற்று. முடிவில் உன் பெயர்…..?

      • Odu,

        vetti mokkai podadheenga.I dont sit at home and make judgements like you,you have no idea about who belief is what and what depth is what?

        I understand what is god more than enough,regardless of my understanding or not,i find that people liek you dont have any intellectual honesty when confronted with truth.

        You decide when you want to see the truth in front of you.

        • அய்யய்யையோ… ரொம்ப பெரிய புத்திசாலி நீ…

          //I dont sit at home and make judgements like you// நான் ஜட்ஜ் பண்ணும்போது நின்னிட்டு இருந்தேன்.. நான் வீட்ல உட்கார்ந்து ஜட்ஜ் பண்றேன்னு எப்பவும்போல உளறுற..

          நான் வெட்டி மொக்கை போடவில்லை… \\ Apple,Microsoft,McDonalds,Johnny Walker,some film star,some actress etc etc are the gods and heroes people look to emulate.// இந்த உன் உளறலைத்தான் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். அதற்கு பதில் சொல்லாமல் நீதான் பெரிய புத்திசாலி போல உளறி கொட்டியிருக்கிறாய் .. ஆனால் ஒன்று உனக்கு இது புதிதல்ல..

          • athu olaral illa,unakku puriyalanna freeya vidu.

            edhukku veena aazham theriyama kaala vuttukittu.

            Those people are the real people who are dominating human thought and actions today and people like you fail and get defeated.

            People like Nammazhvar,Sri sri Ravishankar,Ilayaraja,MG Ramachandran-these are the people to look upto.

            And according to you guys,everyone who disagrees with you is arrogant/stupid.

  4. நான் ஒருமுறை எனது சொந்த ஊரிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்து கொண்டிருந்தேன். எனது முன்பதிவு முன் நகராமல் நின்றதால் பொதுப் பெட்டியில் பயணம் செய்தேன். நான் அமர்ந்திருந்த பெஞ்சில் என்னோடு நான்கு பேர்.இருந்தார்கள். ரயில், கோவில்பட்டியில் நின்ற போது ஏறிய ஒருவர் மிகவும் மூர்க்கமாக எங்களனைவரையும் தள்ளி விட்டு ஐந்தாவது நபராக அமர்ந்து கொண்டார். தனது மனைவிக்கு எதிர் வரிசையில் இடம் பெற்று கொடுத்தார். கணவனும் மனைவியும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தங்கள் குழந்தைக்கு ஊஞ்சல் அமைத்து தூங்க விட்டார்கள். சற்று நேரம் ஆன பின்னர் என்னை திரும்பி பார்த்து புன்னகைத்தார். பிறகு பைபிள் ஒன்றை எடுத்து லேசாக புரட்டினார். அவர் தீவிரமாக எதுவும் படிக்க மனமின்றி பைபிளை புரட்டுவதும் மற்றவர்களை பார்ப்பதுமாக இருந்தார். எனது கையிலும் ஒரு புத்தகம் இருந்ததை திடீரென பார்த்தார். பிறகு எனது ஊர், பெயர், வேலை எல்லாம் விசாரிக்க ஆரம்பித்தார். அவரின் மொழி நடையில் சட்டென ஒரு மாற்றம் தெரிந்தது. தன்னை ஒரு பென்தேகொஸ்து பாதிரி என்று அறிமுகப்படுத்தினார். பென்தேகொஸ்து பாதிரி ஆக முறையான பயிற்சி எதுவும் தேவையில்லை. தனக்கு ஏதோ வல்லமை உள்ளது என்று வெகு சிலரையேனும் நம்ப வைக்கும் திறன் முதலாவது வேண்டும்.

    அவர் மூர்க்கத்துடன் பெஞ்சில் இடம் பிடித்தது குறித்து லேசாக இப்போது நாணினார். பிறகு சுதாரித்துக் கொண்டு இயேசு கூட ஒரு முறை சற்று பலப்பிரயோகம் ஒன்றை, தேவாலயத்தை தவறான நோக்கத்துக்காக பயன்படுத்தியவர்களிடம் காட்டியதாக விளக்கமளித்தார். தன்னால் பல இந்து குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக கூறினார். எனக்கு அது வேறு ஒன்றை நினைவு படுத்தியது. அப்படி ஆசீர்வதிக்கப்படும் இந்துக்கள் மத மாற்றம் சுமூகமாக நடக்கின்றனவா? அவருக்கு தொல்லைகள் எதுவும் நேர்ந்ததுண்டா என்று வினவினேன்.

    உடனே அவர் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். ஒரு முறை ஒருவரின் துன்ப நிலையைப் பார்த்து அவருக்கு விடுதலையளிக்கும் தேவ செய்தியை வழங்கியுள்ளார். அப்போது துண்டு பிரசுரத்தை வாங்கிக் கொண்ட அந்த மனிதர் காணிக்கை செலுத்த பணம் இன்றி இருந்துள்ளார். அவர் இந்த பாதிரியிடம் மிகவும் நெருக்கமாகி உள்ளார். பிறகு ஒரு நாள் கர்த்தர் தம்மை ஆசீர்வதிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் வரையிலும் தான் உயிரோடிருப்பது கடினம் என்றும் உடனே ஒரு ஐந்தாயிரம் ரூபாய் வேண்டும் எனவும் கூறியுள்ளார். நிறைய யோசித்து அப்பணத்தை திருப்பி செலுத்த வேண்டிய நாளை நினைவு படுத்தி கொடுத்துள்ளார். [வாங்கியே பழக்கப்பட்ட கைகள் அல்லவா?] கடன் வாங்கிய பிறகு அம்மனிதர் இந்த பாதிரியை தவிர்த்து வந்துள்ளார். பிறகு முதல் மட்டுமாவது மிஞ்சட்டும் என்று முடிவெடுத்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இது ஒரு கட்டத்தில் நச்சரிப்பாக மாற அந்த மனிதர் பகுதி இந்து முன்னணி நிர்வாகியிடம் முறையிட்டுள்ளார். தன்னை மதம் மாற்றும் பொருட்டு இந்த பாதிரி தனது விருப்பத்தையும் மீறி வீட்டுக்கு வந்து தொல்லை கொடுப்பதாக கூறியுள்ளார். வெறும் வாயை மென்று கொண்டிருந்த இந்து மத வெறி கூட்டத்துக்கு அவல் கிடைக்க, பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

    கதைக்கு லேசாக ஒரு pause விட்டவர் தன் மூலம் இரட்சிப்பை பெற்ற ஒருவர் அமெரிக்காவில் நல்ல நிலையில் இருப்பதாக கூறினார். பிறகு உரையாடலை முடித்து விடாமல் என் மீது அர்த்தப் பார்வை ஒன்றை வீசி நான் சென்னை.யில் தங்கியிருக்கும் முகவரியை கேட்டார். நான் அவரிடமிருந்த பிரசுரம் ஒன்றை கேட்டு வாங்கினேன்.ஏனோ! எனக்கு தர அவர் மறந்து விட்டார். பிறகு புத்தர் புன்னகை ஒன்றை சிந்திவிட்டு எழும்பூரில் அவரிடம் விடை பெற்று நடந்தேன்.

    • nellai express,idhu palaperukku nadanthathu thaan.

      oru vaati enga amma kooda kanyakuamri expressla ponappo,same pentecostal same blood.

      chennai to nagercoil,full story karthar idhu karthar adhunnu,enga ammavum poruthu poruthu paarthaanga,kadaseela karthar yaaru? appadinnu oru kelvi,

      avungalum romba enthusiastic aagi,karthar kadavulin puthalvannanga,adhukku enga mummy sonnanga,kadavul yaaru theriyuma? Vishnu.

      semma kalaai,pentecostal groupuu gab chip.

  5. I can’t acknowledge this article entirely. One side, I can’t deny the castism in Church. There is caste in CSI/RC Churches without doubt. But as a personal experience, I have not encountered the same in my life. I am adult convert and nobody till date (I have been moving to various places and hence various Churches) had asked my caste. They don’t care. But they really move friendly without knowing caste. I got married. Arragned by my non-Christian parents with a Christian girl. So life is fine with tolerance and love. 🙂

  6. வினவின் நல்ல கட்டுரை. எந்த மதமும் இந்த பூமியில் கடவுளால் கொடுக்கப்பட்டது அல்ல? இந்து மதத்தை போன்றே ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்தியாவில் கிறிஸ்தவம் வரவேண்டிய சூழ் நிலை வந்தது இந்த சமயத்தில் சில பேர் கிறிஸ்தவ மதத்தை போதித்து பரப்பி இருக்கலாம்? ஆனால் அது புத்த மதம்,இந்து மதம் , இஸ்லாம் மதத்தில் நடந்த நிகழ்வு போன்றதுதான்? கிறிஸ்தவ மதத்தை யாரும் திட்டமிட்டு பரப்பவில்லை? நாட்டையே அடக்கி ஆண்ட வெள்ளையர்களுக்கு தங்கள் மதத்தை பரப்ப தெரியாதா?ஆனால் அவர்கள் பெரிய அளவில் மத மாற்றத்தில் ஈடு படவில்லை? எல்லா மதத்தையும் போன்றே ஒரு சிலரே மத மாற்றத்தில் ஈடுபட்டனர்? இதற்கு ஆதாரம் இந்தியாவில் இன்றளவும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.5% தான். இன்றளவும் நாம் ஆங்காங்கே கிறிஸ்தவம் மதம் பற்றிய துண்டு பிரசுரத்தை சில பேர் கொடுப்பதை பார்க்கிறோம்? இது மத மாற்றத்தின் ஒருவகைதான் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள்? கிறிஸ்தவத்தின் முதன்மை பணியே இறை வார்த்தைகளை மற்றவர்களுக்கு அறிவிப்பதுதான்? இறை வார்த்தைகள் என்றால் அன்பு, பாவம் செய்யாமல் இருப்பது, கடவுளை அறிந்து கொள்ளுதல் போன்றவைகள் ஆகும்? கிறிஸ்தவ மக்கள் கூட இதை சரியாக புரிந்து கொள்ளமல் பெயரளவிற்கு இதை செய்து விட்டு அவரவர் வேலைகளை பார்க்க போய்விடுகிறார்கள்? இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது? மற்றவர்களின் பார்வையில் இது மத மாற்றமாக தெரிகிறது? (ஒரு சில இடங்களில் கிறிஸ்தவர்கள் யாரவது சுய நலத்திற்காக மத மாற்றத்தில் ஈடு பட்டிருக்கலாம். விளம்பரங்களை விரும்பும் வெளிநாட்டு கிறிஸ்தவர்களை நம் இந்து மதத்தினர் இந்துவாக மாற்றி கோவிலில் திருமணம் செய்து வைக்கிறார்களே அது மாதிரிதான்)
    மற்றபடி யாரையும் யாரும் ஆசை காட்டி மதம் மாற்ற முடியாது? இன்னும் சொல்லப்போனால் படிக்காத, கிராம ஏழை மக்களே தங்களது மதத்தில் மிகவும் நம்பிக்கையாக இருப்பார்கள்? இவர்களது நம்பிக்கை மிகவும் வலுவானது இதை அவ்வளவு எளிதாக உடைக்கமுடியாது? அதனால்தான் ஜாதி பாகுபாடு பார்க்கப்படும் இந்து மதத்தில் இன்னும் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள்? ஆங்கிலேயர் காலத்தில் கூட சலுகைகளுக்காக தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறினார்கள் என்று பொய்யான வாதம் செய்யப்படுகிறது? சலுக்கைகளுக்காக தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறியிருக்கலாம் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் சலுகைகளுக்காக மட்டும் மாறவில்லை? சாதி கொடுமைகளில் இருந்து விடுபட, கிறிஸ்தவம் பற்றிய அவர்களின் நம்பிக்கை, உணர்வு என்று பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளது? சலுகைகளுக்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டார்கள் என்று குற்றம் சொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களின் நிலைமை இன்று என்ன தெரியுமா? இவர்கள் பள்ளர் ஜாதியை சார்ந்தவர்கள் , பறையர் சாதியை சார்ந்தவர்கள் என்று சமுகத்தால் அடையாளாம் காணப்பட்ட பின்னரும், ஜாதி சான்றிதழில் கிறிஸ்தவ -பள்ளன், கிறிஸ்தவர் -பறையர் என்று சான்றிதழில் குறிப்பிட்டுவிட்டு இவர்கள் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் (BC) என்று பிற்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து எந்த சலுகையும் கொடுக்காமல் இரண்டும் கேட்டான் நிலையில் அவர்களை வைத்து ஒரு முரண் பாடான நிலையை வெகு நாட்களாக நமது ஆட்சியாளர்கள் கையாண்டு கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் பள்ளர் ஜாதியை சார்ந்தவர்கள் , பறையர் சாதியை சார்ந்தவர்கள் என்று சமுகத்தால் அடையாளாம் காணப்பட்ட பின் கிறிஸ்தவன் என்பதற்காக ஒருவனை உயர் ஜாதியில் ஜாதி இந்துக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லை அந்த கண்ணோட்டத்தில்தான் பார்ப்பார்களா? அன்று கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லையென்றுதானே மதம் மாறினீர்கள் இப்போது ஏன் சலுகை கேட்கிறீர்கள் என்று ஆதாரம் இல்லாத ஒரு விஷயத்தை சொல்கிறார்கள்? (இந்து மதத்திலிருந்து புத்த, சீக்கிய மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகள் (SC) கொடுக்கப்படுகிறது) கிறிஸ்தவம் மதம் யாருக்கும் எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை? யாரவது தனி மனிதர்கள் சொல்லியிருந்தார்கள் என்றால் அதை எப்படி கிறிஸ்தவ மதத்தின் வார்த்தையாக எடுத்துக்கொள்ளமுடியும்? கிறிஸ்தவ மதம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் மதம்? இது அந்தந்த நாடுகளில் அந்தந்த இனம், மொழி, காலச்சாரத்திற்கு உட்பட்டே தழுவப்படுகிறது? கிறிஸ்தவத்திற்கு என்று தனி மொழி கிடையாது? இந்தியாவில் கூட கிறிஸ்தவர்கள் திருமண சட்டம் முதற்கொண்டு இந்துக்களின் சட்டத்தின் கீழ்தான் வருகிறார்கள்? கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஜாதி இந்துக்கள் கூட கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்களிடம் இங்கே இந்து மதத்தில் இருந்தது போன்ற கொடுமைகள் இருக்காது, எங்களோடு நீ அமரலாம், வழிபடலாம் ஆனால் திருமணம் போன்ற உறவுகள் அவரவர் ஜாதியினுல்தான் நடைபெறும் என்று சொல்லாமல் சொல்லி ஜாதியின் தன்மை கிறிஸ்தவத்தில் கூட அழியாமல் பார்த்துகொண்டார்கள் (கிறிஸ்தவத்தில் இருக்கும் பெந்தய கோஸ்த் என்ற பிரிவு நீங்கலாக)? ஜாதிக்கு முன் மதமாவது, மனிதனாவது?

  7. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளவர்கள் கிறிசுத்தவசமயத்தில் அதிகம்.இவர்கள்தன் பொருளாதாரவளர்ச்சிக்காகவோ? அல்லது சமூகத்தில் உயர் மதிப்பு வேண்டியோ? மாறவில்லை உண்மை.ஆனால் இப்படித்தான் என்று இல்லாமல் எப்படியும் வாழலாம் என்ற எண்ணமுள்ளவர்கள்,பொது நலனில் அக்கறையில்லாமல் கேடுவிளைவிப்பவர்கள்.நம்மை ஆண்டு கொண்டும்,படிப்பாளிகளாக காட்டிக்கொண்டும்,நிர்வாகத்திறன்னுள்ளவர் போன்றுகாட்டிக்கொண்டு திருடுதல்,கையூட்டு,தரகு,நாட்டைமறுகாலணி ஆதிக்கப்படுத்துதல் போன்றன செய்ய எல்லா மதங்கள்,கட்சிகள்,இன்னும் பிற அமைப்புகளில் சேர்ந்து கெடுத்து நாசம் செய்கிறார்கள்.அவர்களில் முதலில் இந்துக்களே. காரணம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது,மதிப்பீடு செய்யும் போதுதெரியும்…

  8. லும் தீண்டாமையும் வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் உண்டு. தேவாலயங்களில் கூட சாதிகளுக்குக்கேற்பத்தனி வழிபாடுகள், அல்லது தனித் தேவாலயங்கள் என்பதெல்லாம் சகஜமாகி விட்டன. தமிழ்நாட்டின் பல கிறித்தவ இடுகாடுகளில் தாழ்த்தப்பட்ட கிறித்தவப் பிணங்கள் நுழைய முடியாது. These things are not available in other Christian Countries? or only in India? Tell me.

  9. Ganesh
    That is because untouchability or casteism is a social evil and not due to Hinduism. Till the society changes its attitude, Casteism will prevail in some form or other in the society, be it hindu or christian. I know so many of my christian friends (Nadar / Pillai / Vanniyar) are extreme casteists.

  10. Well. The so called upper caste Nadars do not want to have Holy communion with the so called lower caste christians (parayars) and hence have their own church. Christchurch , coimbatore is the best example. Even the tombstone in the graveyard have the caste tag Nadar.

    • Who told sir? Many SC pastors are serving Churches in nadar majority areas. I know there are some high caste stupids who do this in Church. But don’t blame this on Christianity. Caste is not enforced by Christianity. It is part of Hindu religion.

  11. இந்து மதம் என்பது அகில உலகத்திலேயே இந்தியா, நேப்பாளம் ஆகிய இரண்டு நாடுகளில் (மட்டும் தான்) பெரும்பாண்மை மதம். இந்த இரண்டு நாடுகளும் உலக நிலப்பரப்பில் வெறும் 2.5% மட்டுமே. உலகில் உள்ள பெரும்பாண்மை நாடுகள் கிறிஸ்த்தவ அல்லது முஸ்லீம் பெரும்பாண்மை நாடுகளே. சுருங்க சொன்னால் இவ்வுலகின் மிகப்பெரிய மத அடையாளம் ஆபிரகாமிய மத அடையாளம் தான். ஒருவர் இந்தியாவை விட்டு வெளியே போனால் கிறிஸ்த்தவ அல்லது இஸ்லாமிய பெரும்பாண்மை நாட்டில் தான் கால் வைக்க வேண்டி வரும். விதி விலக்காக சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் புத்த மத அடையாளத்தை கொண்டவையாக இருந்தாலும் இதனால் எந்த அரசியல் ரீதியான ஆதரவினையும் இந்து மதம் (ஏன் இந்தியாவே கூட) எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் புத்த மதம் இந்தியாவில் தோன்றியிருந்தாலும் மேற்கண்ட நாடுகளில் அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப மாறிய வடிவம் தான் பின்பற்றப்படுகிறது (உதாரணமாக ஜப்பானில் அம்மண்ணுக்கு உரித்தான ஜென் வடிவ புத்தமே பின்பற்றப்படுகிறது. அதற்கும் இந்து மதத்துக்கும் அல்லது இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). மேலும் இந்துக்கள் எனப்படுவோர் சிறுபாண்மையினராக வாழும் பாக்கிஸ்தான், அப்கானிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, மலேசியா ஆகியவற்றில் அவர்களுக்கு என்ன விதமான மரியாதை கிடைக்கிறது என்பது விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். பாரசீக மொழி அகராதியில் இந்து என்றால் திருடன் என்றே பொருள் கூறப்பட்டுள்ளது. மேற்கத்திய உலகில் தியானம், யோகாசனம், ஆயுர்வேதம் ஆகியவற்றை இந்து மதத்தில் இருந்து பெறுவதை விட புத்த மதத்தில் இருந்து பெறுவதையே வெள்ளை இனத்தவர் விரும்புகிறார்கள். ஆக இந்து மதம் மட்டுமல்லாது அதை பின்பற்றுபவர்களும் இந்த ஆபிரகாமிய உலகில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே!. இதையெல்லாம் மறைக்கும் விதமாகத்தான் இந்து மதம் உலக மதங்களுக்கு எல்லாம் தாய் என்று இந்த இந்து மதவெறி அரை டவுசர் கா(லி)வி கும்பல் வாய் கூசாமல் கப்சா விட்டு வருகிறது. மேற்காசியாவில் தோன்றிய ஆபிரகாமிய மதங்களுக்கும் அப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் எல்லையில் தோன்றிய இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? சுருக்கமாக சொன்னால், அரசியல் ரீதியாக பார்க்கும் போது இந்து மதமானது இந்த உலகில் இரண்டே இரண்டு நாடுகளில் மட்டுமே இருக்கிறது. கிறிஸ்த்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்தியாவில் வேண்டுமானால் சிறுபாண்மையினராக இருக்கலாம். உலகளவில் அவர்கள் தான் பெரும்பாண்மையினர். ஆகையால் இந்தியாவில் இந்து மனுதர்ம வெறி கும்பல் ஒரு கிறிஸ்த்தவனை தாக்கும் போது அது இவ்வுலகின் 126 கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகளில் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஒரு இஸ்லாமியனை தாக்கும் போது அது 50 இஸ்லாமிய பெரும்பாண்மை நாடுகளில் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகள் கல்வி, பொருளாதாரம், சமூக வளர்ச்சி, தொழில்நுட்பம், இராணுவ வலிமை ஆகியவற்றில் மிகவும் முன்னேற்றம் அடைந்து உலகையே கட்டுப்படுத்துபவை. இந்தியா பயன்படுத்தும் பெட்ரோலியத்தில் கணிசமான அளவு அரபு நாடுகளில் இருந்து வருபவை. இஸ்லாமிய மத அடையாளம் கொண்ட இந்த அரபு நாடுகளில் பல லட்சம் இந்தியர்கள் நாலாவித தொழில்களிலும் இருந்து கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த இந்தியர்கள் அனுப்பும் அன்னிய செலாவணியை நம்பி இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன (குறிப்பாக கேரளம்). பல கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகள் (குறிப்பாக மேற்கத்திய நாடுகள்) மத சார்பற்றதன்மை (Secular) தன்மை கொண்டவைகளாக உள்ளன. சில இஸ்லாமிய பெரும்பாண்மை நாடுகளும் பிற மத விவகாரங்களில் நீக்குப்போக்கு தன்மை கொண்டவைகளாக உள்ளன. ஆகையால் தான் இவ்வுலகில் இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகள் இந்து பெரும்பாண்மை நாடுகளாக சொல்லிக்கொண்டு காலம் தள்ள முடிகிறது. இந்தியாவை சேர்ந்த பல லட்சம் பேர் உலகின் ஏனைய பகுதிகளில் பணி புரியவோ (குறைந்த கூலிக்காவது) அல்லது குடியிருக்கவோ முடிகிறது. இந்தியாவில் இருக்கும் இந்து மத வெறிக்கும்பல் பின்பற்றும் அரசியலையும் அவர்களின் மத சிறுபாண்மையினரை தாக்கும் பாணியையும் அனைத்து ஆபிரகாமிய நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்தால் இவ்வுலகில் இந்துக்களும் இந்து மதமும் சுத்தமாக துடைத்தெறியப்படுவது மட்டுமன்றி இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகளும் பேரழிவுக்கு ஆட்படும். மேலும் இந்து மதவெறி கும்பலின் ஆபிரகாமிய மதங்களுக்கு எதிரான துவேஷத்தால் கிறிஸ்த்தவர்களையும் இஸ்லாமியர்களையும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் ஆபிரகாமிய மதங்கள் உலகளவிலானவை. இந்தியாவில் பெரும்பாண்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் தங்கள் பங்கு குறித்து தற்போது தான் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள். இந்த மக்களின் உரிமைக்கான உணர்வினை திசைதிருப்ப தான் இந்துத்துவ அரசியல் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது.

  12. so what periyaswamy sir.

    We still survive and OBC & SC/ST people are not doing bad by any means,hindutva never opposes their development.

    Every country has a culture.Religious/Atheistic,many countries have an abrahamic background but are atheistic in nature.

    and like you said the many variant forms of buddhism even though indigenous are still forms of buddhism alone.

    Numbers alone dont make the difference,it is also the quality of thoughts.

    • நண்பர் பெரியசாமியின் கருத்துக்களை கட்டுரையோடு இணைத்து ஹரி குமார் போன்றோர் சிந்திக்க வேண்டும். இந்தியவியல் என்ற துறையை அறிமுகப்படுத்தி வேதங்கள், உபநிடதங்கள், வேதாந்த தத்துவம் போன்றவற்றை மீள் அறிமுகம் செய்தவர்கள் ஆங்கிலேய அறிஞர்களே. ஜியு போப், கால்டுவெல், மாக்ஸ்முல்லர் போன்றோர் இல்லை என்றால் இந்து மதவாத கூட்டம் முகவரி இல்லாமல் போயிருக்கும். இந்து என்ற பெயரே அவர்கள் வழங்கியது தான். இப்படி இந்து மத-வாத-வெறி கூட்டத்துக்கு முகமும், முகவரியும் வழங்கியவர்கள் வெள்ளையர்களே. ஆனால் சங்கர வேதாந்திகள் செய்தது என்ன? இந்தியாவின் பொருள்முதல்வாத தத்துவமான சான்கியத்தையும், அது தொடர்பான நூல்களையும் அழித்தொழித்தார்கள். ஆதி இயற்கையை படைத்தவன் எவனுமில்லை என்றும் பருப்பொருளின் குணாதிசயம் கொஞ்சமும் இல்லாத ஓன்று [ஆன்மிகம்] பருப்பொருளின் உருவாக்கத்திற்கு காரணமாக முடியாது என்றும் மிகச்சிறந்த உதாரணங்கள் மூலம் விளக்கியது சாங்கியம். நண்பர் ஹரி குமார் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் பிரிவுக்கு ஒரு பாரம்பரியம் இருப்பது போன்று எங்களுக்கும் ஒரு பாரம்பரியம் உள்ளது. சாங்கியம், சார்வாகம், அசீவகம், பவுத்தம், சித்தர் மரபு, பெரியார் இயக்கம், மார்க்சியம் என்று.

  13. Nobody is denying your traditions and philosophy,but the last two that you mentioned namely peiryar & marxism are destructive things and disrespect the others in the list by adding these two.

    And all those people you mentioned were oppurtunistic people who did not give anyone their name,they did analysis which would divide the public and suited their conversion agenda.

    If the samkhya wa sburnt,then how do you know about all this,most of the tamil sangam literature was jain/buddhist ones and u.v,swaminatha iyer went and retrieved it.

    we have our differences with samkhyam but we can handle it in a debate whereas periyarists/marxists never tried to do that and just tried to help the conversion agenda.

  14. நன்மை தீமை எனபது எல்லாவற்றிலும் உள்ளது .. அன்ன பறவை பால் குடிப்பதை போல கிருத்துவ மதமாற்றத்தை பற்றி எழுதி இருகிறார்கள் .
    இன்றைய தேவை மன மாற்றமே ஒழிய மத மாற்றம் கிடையாது . கிருத்துவம் அரசியலில்,விஞ்ஞானம் என்று தலை இட்டு , குட்டு பட்டு அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது . இசுலாம் இன்னமும் அரசியலில் இருக்கிறது . இதில் இந்து மதம் மட்டும்தான் ஆரம்பம் முதலே , மதத்தை எதிர்த்து பபேசும் உரிமை , மதம் மாறும் உரிமை என்று பல கருது சுதந்திரங்களை பெரும்பான்மையானவர்களுக்கு ( தலித்கள் தவிர ) கொடுத்து இருந்தது .

    தலித்களை போல அமெரிக்காவில் கருப்பர்கள் கொடுமைபடுதபட்டார்கள் . இன்றைக்கும் அவரவர்க்கு தனி தனி சர்ச் வைத்து கொண்டுள்ளார்கள்
    இசுலாதிலோ பெண்கள் தலித்களை போல உள்ளார்கள் . கோவிலில் தனியாக ஒரு மூலையில் வணங்கி செல்ல வேண்டும் .முகம் காட்டும் உரிமை கூட அவர்களுக்கு இல்லை .

    யார் மதம் மாறுவதாலும் பிரச்சினை தீரபோவது இல்லை . மன மாற்றமே தீர்வு
    மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்

  15. //ஏசுநாதரின் நேரடிச் சீடரான புனித தாமஸ் முதல் நூற்றாண்டிலேயே இந்தியா வந்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது// இதை விட பெரிய பொய் வேறு எதுவும் இருக்க முடியாது. தாமஸ் இந்தியா வந்தற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று வாடிகனில் 2006ம் வருடம் போப் அறிவித்து இருக்கிறார். தாமஸ் சென்றது சிரியா பெர்சியா போன்ற நாடுகளுக்கு தான்… ஆனால் வினவு, மோகன் லாசரஸ் போன்ற வெளிநாட்டு கைக்கூலிகள் தொடர்ந்து இந்த பொய்யை (கோயபெல்ஸ் போல்) பரப்பி கொண்டு இருக்கிறார்கள். எப்படி இஸ்லாமிய படையெடுப்பு இந்தியாவில் பெரும் அழிவை உண்டாக்கியதோ அதே போல் கிறிஸ்துவமும் இந்தியாவில் அழிவை கொண்டு வந்தது அதற்கு கோவா ஒரு உதாரணம்…

    கிறிஸ்துவம் செய்வதை தான் வினவு போன்ற கம்யூனிஸ்ட்களும் செய்கிறார்கள்… ஹிந்து மதத்திற்கு எதிராக தொடர்ந்து அவதூறுகளை பரப்பி ஹிந்து என்றாலே வெட்கப்பட வேண்டும் என்பது போல் ஒரு சிந்தனையை உருவாக்குகிறார்கள்… இது இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதுமே கிறிஸ்துவம் இதை செய்து இருக்கிறது, இப்படி ஒரு சிந்தனையை வளர்த்து உலகின் பல நாடுகளில் இருந்த கலாச்சார பண்பாட்டை அழித்து இருக்கிறார்கள்.

    அதே அழிவு செயலை தான் இந்தியாவிலும் வினவு போன்ற கம்யூனிஸ்ட்கள் மூளும் செய்கிறார்கள்.

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க