privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்டாஸ்மாக்கை மூடவைத்த வேதாரண்யம் மக்கள் போராட்டம் !

டாஸ்மாக்கை மூடவைத்த வேதாரண்யம் மக்கள் போராட்டம் !

-

வேதாரண்யம் – கீழ் ஆறுமுகக் கட்டளை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற கோரி 13.6.2013 அன்று விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு டாஸ்மாக் சாராய கடையை அப்புறப்படுத்த கோரி  முற்றுகை-சாலை மறியல்  நடைபெற்றது. அப்போது “இருபது நாட்களில் கடையை அப்புறப்படுத்துவதாக” எழுதிக் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத வேதாரண்யம் வட்டாட்சியரை கண்டித்து “வட்டாட்சியர் அலுவலக” முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் கடை அமைந்துள்ள கீழ் ஆறுமுகக் கட்டளை பகுதி குடிகாரர்களின் கூடாரமாக மாறி மக்கள் குடியிருக்க வக்கற்ற பகுதியாக மாறி விட்டதால், மேற்கண்ட டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தும் வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் “குடியேறுவோம் – முற்றுகையிடுவோம்” என்ற முழக்கத்தின் அடிப்படையில் விவசாயிகள் விடுதலை முன்னணி தலைமையில், புரட்சிகர  இளைஞர் மாணவர் முன்னணி மற்றும் பகுதி பொது மக்கள் சார்பாக 8.8.2013 அன்று போராட்டம் நடத்தப்பட்டது.

இதனை ஒட்டி 200 போஸ்டர்கள் வேதாரண்யம் நகரப் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டன. காலை 10 மணிக்கு. மேலவீதி பெரியார் சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் கைகளில் முழக்க தட்டி, செங்கொடிகளுடன், பானை, சட்டி, அடுப்பு, விறகு கட்டு, விளக்குமாறு, பாய், தலையணை என குடியேற தேவையான பொருட்களோடு சென்றர். மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கும் அதிகாரிகளை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கோரியும் முழக்கங்கள் எழுப்பிய படியே, மக்களின் கவனத்தை ஈர்த்து பேரணி சென்றது. வட்டாட்சியர் அலுவலகத்தை நெருங்கிய போது “என்னா, பெர்மிஷன் வாங்காம போராட்டம் நடத்துறீங்களா? எல்லோரையும் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டிடுவோம்” என்று வாசலை இடை மறித்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காவல் துறையினர் அச்சுறுத்தியதை கண்டு கொஞ்சமும் பயப்படாத, பொருட்படுத்தாத மக்கள் கொளுத்தும் வெயிலில் கைக்குழந்தைகளுடன் வாயிலை மறித்து முற்றுகையிட்டு அமர்ந்து முழக்கம் எழுப்பினர்.

சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பொறுப்பாளர்களை உள்ளே அழைத்த போது உறுதியாக மறுத்த பெண்கள், “ஏற்கனவே எழுதிக் கொடுத்து” ஏமாற்றியதை நினைவு படுத்தி, “வட்டாட்சியரிடம் சொல்லி அவரை வெளியில் வந்து எங்களிடம் பேச சொல்லுங்கள்” என்று கூறினர். நொந்து கொண்டே உள்ளே சென்ற அதிகாரிகள் மேலதிகாரிகளிடம் பேசி விட்டு “இன்று கடையை மூடி நாளை அகற்றி விடுகிறோம் என்று வாய் மொழியாக கூறினர். அதை ஏற்க மறுத்த பெண்கள், “கடையை காலி செய்வதற்கு” குறைவான எதையும் ஏற்க மறுத்தனர்.

காவல் துறையினரிடம் வாயிலை திறக்கச் சொல்லி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, “இங்க எங்கள உள்ளே போக விடாம தடுக்கிற காவல் துறை, அங்க குடிச்சிட்டு துணி இல்லாம நிக்கிறவனையும், பொம்பள புள்ளைங்கள கேலி கிண்டல், பண்றவனையும் தடுக்கிறதுக்கு வர்றது கிடையாது” என்று கூறினர். அதனால் கோபமடைந்த இன்ஸ்பெக்டர், “ஏய், யார்டி அது, எங்கள பத்தி பேசுறதுக்கு உனக்கு ரைட்ஸ் கிடையாது என்றார். பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சூழ்ந்து கொண்டு, “ஏய், யாரப் பார்த்து அவ, இவங்கிற, மரியாதை கெட்டுட்டும். ஒழுங்கு மரியாதையா பேசு” என்று ஒரு பெண் கண்டித்தார். மற்றொரு பெண்ணோ, “லஞ்சம் வாங்கியே திங்கிற இவங்களுக்கு எங்கே இருக்க போவுது மானம், மரியாதை? என்று கேட்டார். அவமானப்பட்ட இன்ஸ்பெக்டர், போராட்டம் முடியும் வரை முகத்தைக் காட்ட வெட்கப்பட்டு திரும்பியபடியே நின்றார்.

மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அடுப்பை பற்றி வைத்து டீ போட தயாராயினர். டிவிஷனல் மேனேஜரிடம் பேசிய வட்டாட்சியர் கைபேசி இணைப்பை பொறுப்பாளரிடம் கொடுத்து டிவிஷனல் மேனேஜரிடம் பேசுமாறு தந்தார். அவர் இன்றே கடையை அப்புறப்படுத்துவதாக உத்தரவாதம் அளித்தார். அதற்கு பெண்கள், “மேல் அதிகாரியை நேரில் வரச் சொல்லுங்க, அது வரைக்கும் நாங்க இந்த வெயில்லயே கெடக்கிறோம்” என்றபடியே மதிய உணவும் அங்கேயே சமைக்க ஆயத்தமாக, போராட்டம் மற்ற அமைப்புகள் நடத்துவது போன்ற சடங்குத் தனமான போராட்டம் இல்லை என்பதை உணர்ந்த வட்டாட்சியர் டிவிஷனல் மேனேஜரை நேரில் வரவழைத்தார். நேரில் வந்து போராட்டத்தின் தன்மையை பார்த்த அவர் வட்டாட்சியரிடம் பேசி விட்டு, போராட்டத்தில் பங்கேற்று இருந்த பெண்கள், இளைஞர்கள், தோழர்களை கலந்து பேசி பின்பு “இன்றே கடையை அப்புறப்படுத்துவதாக” உறுதி அளித்தார். கடையை அப்புறப்படுத்துவதற்கான வேலையை தொடங்கிய பிறகு மக்கள்  போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய மக்கள் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டு “சரக்குகள்” வெளியேற்றப்படுவதை கண்காணித்து போராட்டம் வெற்றி அடைந்ததை வெடிவெடித்து கொண்டாடினர்.

300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நடைபெற்ற இப்போரட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணி வேதாரண்யம் வட்டார பொறுப்பாளர் தோழர் தனியரசு தலைமை தாங்கினார். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த மாணவர்களும், இளைஞர்களும், பகுதி வாழ் மக்களும் கலந்து கொண்ட இந்த போராட்டம்  பதவிக்கு ஆசைப்படும் மற்ற கட்சிகளைப் போலன்றி, மக்களுடைய பிரச்சனைகளுக்காக உண்மையாக போராடும் புரட்சிகர அமைப்புகள்தான் போராட்டத்தை  எப்படி நடத்த வேண்டும் என்று மக்களுடன் கற்றுக் கொடுத்து அவர்களுடன் சேர்ந்து போராடுகின்றன என்பதை உணர்த்தியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புஜ செய்தியாளர்,
விவிமு, புமாஇமு
வேதாரண்யம்.