privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்2.5 கோடியை சுருட்டியது சரி - 20 இலட்சத்தில் புரண்டது தவறா ?

2.5 கோடியை சுருட்டியது சரி – 20 இலட்சத்தில் புரண்டது தவறா ?

-

திரிபுரா மாநில சி.பி.எம் கட்சியின் ஜோகேந்தர் நகர் கமிட்டி உறுப்பினர் சமர் ஆச்சார்ஜி (வயது 42). கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து கடந்த அக்டோபர் 19 அன்று நீக்கியுள்ளது மாநிலக் கட்சி கமிட்டி.

tripura-samirஅரசுப் பணிகளுக்கான அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரராக தொழில் செய்து வந்த அவர் கடந்த 10-ம் தேதி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20 லட்சம் பணத்தை எடுத்து வந்து மெத்தையில் விரித்து, அதன் மீது படுத்துக் கொண்டு, சில கட்டுகளைப் தன் மீதும் பரப்பிக் கொண்டு அக்காட்சியை தன் செல்பேசி கேமரா மூலம் பதிவு செய்துள்ளார். இது தனது வாழ்நாள் கனவு என்றும், இப்போதுதான் அது நிறைவேறியுள்ளது என்றும் அந்த வீடியோவில் சமர் ஆச்சார்ஜி கூறியுள்ளார்.

தனது நண்பர்களுக்கும் செல்பேசியிலிருந்து இக்காட்சியை அனுப்பி வைத்த சமர் ஆச்சார்ஜி “எனது கட்சியின் பிற தலைவர்களைப் போல பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவன் என்று கூறிக்கொண்டு, சம்பாதித்த சொத்துக்களை மறைத்து ஏழையைப் போல நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை” என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோவை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவரது நண்பர் ஒருவர் அனுப்பி வைக்கவே, கடந்த வாரம் இக்காட்சி ஒளிபரப்பானது.

இதனால் மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள மாணிக் சர்க்கார் தலைமையிலான சிபிஎம் அரசு மற்றும் அமைச்சர்கள் மீது மாநிலம் முழுக்க கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிபிஎம் மாநிலக்குழுவிற்கும் காட்சிப் பிரதியொன்றை அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி சமர் ஆச்சார்ஜியிடம் சிபிஎம் கட்சியின் திரிபுரா மாநிலக் குழு விளக்கம் கேட்டிருந்தது. மாநில செயலாளர் பிஜன் தார் தலைமையில் கூடிய மாநிலக் குழு, சதார் கோட்டக் குழுவினை இதுபற்றி விசாரித்து அறிக்கை தரக் கோரியது. அவரது செயல்பாடுகள் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை கேலி செய்யும்விதமாக இருப்பதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறும் வகையில் அவர் நடந்துகொண்டதாலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்குவதாக மாநிலக் குழு அறிவித்துள்ளது. மாநிலக் குழு கூட்டத்திற்கு மத்திய பொலிட்பீரோவில் இருந்து ககன்தாஸ் வந்து கலந்து கொண்டார்.

மாநில காங்கிரசு தலைவர் ரத்தன்லால் நாத், “பொதுச்சொத்தை மார்க்சிஸ்டு கட்சியினர் சூறையாடுவதற்கு நல்ல உதாரணம் சமர் ஆச்சார்ஜியின் வாக்குமூலம். எனவே அக்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் அனைவரும் இதுவரை முறைகேடாக சேர்த்துள்ள சொத்துக்கள் பற்றி விசாரிக்க பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்க ஒன்றை வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.  இவ்வளவு நாளும் காங்கிரசு மற்றும் பாஜக கட்சியினர், இன்னபிற சமூக நீதிக் கட்சிகளோடு போட்டி போட்டுக் கொண்டு சிபிஎம் கட்சியினரும் சொத்து சேர்க்க கிளம்பியிருப்பது பரம்பரை பணக்காரர்களுக்கு கோபத்தை வரவழைத்திருப்பது நியாயம்தான்.

சிபிஎம் தலைவர் ஒருவர் “இந்தப் பிரச்சினைக்கு பிறகு கட்சிக்குள் ஒரு விசாரணையை மேற்கொண்டோம். எனினும் முறைகேடாக சொத்து சேர்த்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக எல்லாம் இல்லை” என்று பத்திரிகையாளர்களிடமே ஒத்துக்கொண்டுள்ளார். இதன் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதாக ஒரு சிலராவது சொத்து சேர்த்திருப்பதை கட்சியே ஒப்புக் கொள்கிறது. அது அதிகம் இல்லை என்பதில் பெருமை வேறு.

குறிப்பாக அப்படி சொத்து சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை இருக்குமா ? மக்கள் மத்தியில் அவர்களை அம்பலப்படுத்துவார்களா ? என்பது பற்றியெல்லாம் இதுவரை சிபிஎம் கட்சியின் சார்பில் யாரும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாணிக் சர்க்கார்
மாணிக் சர்க்கார்

தலைநகர் அகர்தலா உள்ளிட்ட மூன்று நகராட்சிகளில் ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட 2,400 கழிவறைகளை கட்டித் தர சமர் ஆச்சார்ஜி தனது நண்பர்களுடன் இணைந்து அரசிடமிருந்து ஒப்பந்தப் பணிகளை எடுத்துள்ளார். இதன் மூலம் 2.5 கோடி ரூபாய் வரை தான் சம்பாதித்துள்ளதாகவும் அந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருந்தார். இதனை கட்சி ஒரு பிரச்சினையாகவே பார்க்கவில்லை. பணத்தில் புரண்டது தான் அவர்களுக்கு அவமானமாக இருக்கிறது. திரிணாமூல் காங்கிரசு கட்சியின் மாநில துணைத்தலைவர் சுபாஸ் சாகா “ஒரு டாய்லெட்டின் மொத்த மதிப்பே ரூ.7000 முதல் 9 ஆயிரம் வரைதான். எப்படி 2400 டாய்லெட்டுகள் கட்டியதில் ஒருவர் ரூ.2.5 கோடி சம்பாதித்திருக்க முடியும். எனவே முறையான விசாரணை தேவை” என்றும் தனது சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். ஊழலுக்கு பேர்போன காங்கிரசுக்காரனெல்லாம் பார்த்த காறித் துப்புமளவுக்கு சிபிஎம் கட்சியின் யோக்கியதை திரிபுராவில் சந்தி சிரிக்கிறது.

நந்திகிராமிலும், சிங்கூரிலும் டாடாவுக்காக விளைநிலங்களை பறித்து, மக்களை லத்தியின் கீழ் அடக்கி, பெண்களை சீரழித்து, டாடாவுக்கான சம்பளம் வாங்காத குண்டர் படையாகவே செயல்பட்ட சிபிஎம் கட்சியின் சித்தாந்த கோட்பாட்டைத்தான் சமர் ஆச்சார்ஜியும் பின்பற்றியிருக்கிறார். அதனால் தான் நான் மற்றவர்களைப் போல ஏமாற்ற விரும்பவில்லை என்று தைரியமாக வெளியே வந்து சொல்லி விட்டார்.

சாதிவெறி பிடித்த திடீர் பணக்கார அரசியல் ரவுடியான தளி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக சிபிஐ-ன் தா.பாண்டியன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். 2006 தேர்தலுக்கு பிறகு சிபிஎம் கட்சியின் தமிழக சட்டமன்ற தலைவராக திருப்பூர் கோவிந்தசாமியை தெரிவு செய்கிறது கட்சி. அந்தக் கட்சியில் எளிமைக்கு பேர் போன பாலபாரதி, நன்மாறன், மகேந்திரன் எனப் பலரும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பதாக கூறிக்கொள்ளும் கட்சியில்தான் வீட்டையே 3 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டிய கோவிந்தசாமியும் தொழில் நடத்தினார்.

பின்னலாடை தொழிலாளிகளின் வேலை நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து பத்து மணி நேரமாக உயர்த்தி உத்திரவிட வேண்டும் என்ற முதலாளிகளது கோரிக்கைக்காக தமிழக முதல்வரை சந்தித்தார் அந்த கோவிந்தசாமி. எட்டு மணி நேர உழைப்புக்காக போராடிய செங்கொடியின் கீழ் நின்று கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் ஓய்வு நேரத்தை திருடும் முதலாளிகளுக்கு காவடி தூக்கிய அவர் மீது அப்போதெல்லாம் தெரிந்தும் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசியில் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுக்கும்போது தான் கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக கோவிந்தசாமி மீது நடவடிக்கை எடுத்தார்கள்.

அப்போதுதான் உ.ரா. வரதராசன் போரூர் ஏரியில் விழுந்து தற்கொலை செய்திருந்தார். அவர் மீது மண உறவுக்கு வெளியே ஒரு பெண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி பாலியல் தொந்திரவு செய்தார் என்பதற்காக கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட இருந்தது. தனது கடைசி கடிதம் ஒன்றில் உ.ரா.வ இப்படி கேட்டிருப்பார் “கட்சியில் பாலியல் ஒழுக்ககேட்டில் ஈடுபட்ட பலர் இன்னமும் மத்திய அரசியல் குழுவிலும், மாநிலக் குழுக்களிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நீடித்துக்கொண்டு இருக்கையில் என் மீது மட்டு ஏன் ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுக்கிறீர்கள்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கோவிந்தசாமி இதனை சுட்டிக்காட்டி, தனக்கும் உ.ரா.வ-க்கு நடந்ததுதான் ஏற்பட்டிருக்கும், நல்ல வேலையாக தப்பித்து விட்டேன் என்று கூறி விட்டு தன்னுடன் 20 ஆயிரம் சிபிஎம் தொண்டர்களை கூப்பிட்டுக் கொண்டு தி.மு.க-ல் ஐக்கியமானார்.

கோவிந்தசாமி சுட்டிக்காட்டியது சீத்தாராம் எச்சூரியை. அப்போது கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட அவரது கலைஞர் மீதான புகழ்மாலை உடன்பிறப்புக்களால் கூட தோற்கடிக்கப்பட முடியாத அளவில் இருந்தது. உ.ரா.வ அல்லது கோவிந்தசாமி போன்றோர் சுட்டிக்காட்டும் குற்றங்களை கட்சி மறைப்பதும், சம்பந்தப்பட்ட வாதிகள் தாங்கள் செய்த ஒரு குற்றத்துக்கு எதிராக பிறர் செய்த குற்றத்தை நிறுத்தி வைத்து தங்களை யோக்கியனாக காட்டுவது என்பதே ஜெயலலதா-கருணாநிதி லாவணி போல மக்களிடம் நராசமாக தெரிவது அத்தகைய ‘கலகக்காரர்களுக்கு’ தெரிவதில்லை.

காரணம் கட்சியே அப்படித்தான் செயல்படுகிறது. ”கட்சி ஏன் சிங்கூரில் மக்களிடம் இப்படி நடந்து கொண்டது?” எனக் கேட்டால், ”மாவோயிஸ்டு-மம்தா கூட்டுச்சதியால் மக்கள் மயங்கி விட்டார்கள்” என்று பதில் கூறுகிறது கட்சி. அந்த கட்சியின் உறுப்பினர் மட்டும் வேறு எப்படி சிந்தித்து தனியாக யோக்கியமான முறையில் பேச முடியும்? இதனைத்தான் இப்போது திரிபுராவின் சமர் ஆச்சர்ஜியும் கூறியுள்ளார்.

நிரூபன் சக்கரவர்த்தி
நிரூபன் சக்கரவர்த்தி

என்று ஒருவர் இருந்தார். எழுபதுகளில் இந்திய மாணவர் சங்கத்தின் இந்திய துணைத்தலைவர்களில் ஒருவராக இருந்தவர். எளிமைக்கு பெயர் போனவர். 1978-ல் முதன்முதலாக சிபிஎம் திரிபுராவில் ஆட்சியை பிடித்தது முதல் 88 வரை அவர்தான் முதல்வராக இருந்தார். பதவி முடிந்து போகும்போது முதல்வர் இல்லத்திலிருந்து இரண்டு சூட்கேஸ்களை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றார். ஒன்றில் துணிமணிகள். இன்னொன்றில் புத்தகங்கள். “எங்கே போகிறீர்கள்” எனக் கேட்டதற்கு, “கட்சி அலுவலகத்திற்கு” என்றார். ஏனென்றால் அவருக்கு சொந்தமாக வீடு கூட கிடையாது. இவரையே எளிமைக்கு பிராண்ட் அம்பாசிடராக நியமித்த போலிக் கம்யூனிஸ்டு கட்சி பின்னர் அவரை கட்சியை விட்டு நீக்கியது.

தமிழகத்தின் சிபிஐ, சிபிஎம்-இல் கூட அப்படி தலைவர்கள் இன்றும் ஆங்காங்கு ஒன்றிரண்டு பேர் எஞ்சி உள்ளனர். மற்றபடி அனைவருமே ரியல் எஸ்டேட், பஞ்சாயத்து செய்வது போன்ற தொழில்களில் கட்சி உறுப்பினர் ஈடுபடுவதை தவறாகவே கருதுவதில்லை.

நான்காவது முறையாக திரிபுராவில் முதல்வராக இருக்கும் மாணிக் சர்க்கார். கடந்த பிப்ரவரி தேர்தலுக்கு முன் தனது சொத்து மதிப்பை வெளியிட்டார். மொத்த சொத்தின் மதிப்பு 2.5 லட்சம் ரூபாயைக் கூட தாண்டவில்லை. மாதம் கட்சி தரும் ரூ.5000 வைத்துதான் இவரும், தமிழகத்தின் பல எம்.எல்.ஏ-க்களும் தங்களை பராமரித்துக் கொள்வதாகக் கூறுகிறார்கள்.

ஆனால் இக்கட்சியின் தலைவர்களது எளிமையை பல பத்திரிகைகள் தோலுரித்து காட்டி உள்ளன. மே.வங்கம் லால்கரில் நிலப்பறிப்புக்கெதிரான போராட்டத்தை பழங்குடியினருடன் மாவோயிஸ்டுகள் இணைந்து நடத்திக் கொண்டிருந்தபோது சிபிஎம் கட்சியின் பின்பூர் பிராந்திய குழுவின் செயலர் அனூஜ் பாண்டே-வின் ஆடம்பர வீட்டை 2009-ல் மாவோயிஸ்டுகள் வெடிவைத்து தகர்த்தனர்.

ஜோதிபாசுவின் மகனும், நம்பூதிரிபாடின் மகனும் கட்சி அரசியலுக்கு வரவில்லை. தனியாக தொழில் துவங்கினார்கள். ஜோதிபாசுவின் மகனுக்கு பல சலுகைகளையும் வாரி வழங்கியது மேற்கு வங்க அரசு.

திரிபுராவில் வங்க மக்களையும், மூன்றில் ஒரு பங்கு உள்ள பழங்குடியின மக்களையும் மோத விட்டுத்தான் ஓட்டுச்சீட்டு அரசியல் தொடர்ந்து நடந்து வருகிறது. பழங்குடியினரின் ஓட்டை பெற்றுத்தான் 1978 தேர்தலில் சிபிஎம் கட்சி வென்றது. அதற்கு முன் திரிபுரா உபஜாதி சமிதி என்ற பழங்குடியின மக்களுக்கான அமைப்பின் செயல்பாடுகள் தேர்தல் அரசியலுக்கு வெளியே செயல்பட்டுக் கொண்டிருந்த்து.

சிபிஎம் அரசு மத்திய துணை ராணுவப்படையை அனுப்பி பழங்குடியினரிடையே சீர்திருத்த வேலைகளையும் சம காலத்தில் முன்னெடுத்தது. அப்படையினரின் அட்டூழியம் தாங்காமல் மீண்டும் பழங்குடியின மக்கள் கிழர்ந்தெழுந்தனர். எண்பதுகளில் பெரியளவில் படுகொலைகள் நடந்தபோது எளிமைக்கு பேர் போன நிருபண் சக்ரவர்த்தி இதனை காங்கிரசின் சதி என்றுதான் கூறினார். அடிப்படை வசதிகளைக் கூட செய்வதற்கு முன் அங்கு துணை ராணுவத்தை அனுப்பி மக்களை பீதிக்குள்ளாக்கியது சிபிஎம் அரசு.

‘முன்னேற்றம், வளர்ச்சி’ என்பதே அப்போதைய திரிபுரா சிபிஎம் அரசின் முழக்கமாக இருந்தது. அத்தகைய முன்னேற்ற சீர்திருத்தங்களில் ஒன்றுதான் அவர்களுக்கு கழிப்பறைகளை உலகவங்கி உதவியுடன் மாநகராட்சி சார்பில் கட்டித் தருவது. அதில் உள்ள முன்னேற்றம் என்பதை தனக்கு என சமர் ஆச்சார்ஜி தவறாக எல்லாம் புரிந்து கொள்ளவில்லை. கட்சி எப்படி புரிந்துள்ளதோ அப்படித்தான் புரிந்துள்ளார். ஊடகங்கள் சொல்வது போல சமர் ஆச்சார்ஜி பணக்கட்டில் புரண்டது தான் முதன்மையான ஆபாசம் என்று யாரும் இனியும் புரிந்துகொள்ள மாட்டீர்கள்தானே!

மக்கள் பணத்தில் கைவைப்பது சரியா? என்ற அறம் சார்ந்த கேள்வி சமருக்கு இல்லை. கட்சியிலும் அது தவறாக கருதப்படவில்லை. ‘ஏன் தவறை வெளிச்சம் போட்டு காட்டி கட்சிக்கு கெட்ட பெயரை சம்பாதித்து விட்டாய்’ என்பது தான் கட்சியின் கேள்வி. ஒரு கட்சி என்ற முறையில் அவர் பிற உறுப்பினர்கள் மீது வைத்த விமர்சனத்துக்கு பதிலும் சொல்ல கட்சி சார்பாக யாரும் முன்வரவில்லை. அப்படியானால் சிபிஎம் கட்சியின் ஊழல் எதிர்ப்பு என்பதே காங்கிரசுக்காரனின் மற்றும் அ.தி.முக, திமுக காரனின் ஊழலை அவரால் மறைக்க இயலாமல் இருப்பதில்தான் பொதிந்துள்ளது என்பது தான் உண்மை.

அரசு வேலைகளை ஒப்பந்தமாக எடுத்து தொழில் செய்யும் ஒருவரை கட்சி உறுப்பினராக்கலாமா என்ற நிலைப்பாட்டில் கட்சிக்கு பாட்டாளி வர்க்க நிலைப்பாடு இல்லை. அதனால்தான் பின்னலாடை முதலாளி கோவிந்தசாமி சட்டமன்ற கொறடா ஆகவும், சாதாரண நிலையில் உள்ள பாலபாரதியால் துணை கொறடா வாக மட்டுமே ஆகவும் தொடர முடிந்தது. அதனால்தான் சிங்கூரில் போராடும் மக்கள் ஆளும்வர்க்க கைக்கூலிகளாகவும், தரகு முதலாளி டாடா ஒரு தோழராகவும் மாற்றப்பட முடிகிறது.

2012 ஏப்ரலில் கோழிக்கோட்டில் நடந்த சிபிஎம் கட்சியின் 20-வது காங்கிரசில் மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால ஆட்சி தோற்றதற்கான காரணத்தை பரிசீலித்த கட்சி, மாநில அளவில் அதிகாரம் குறைவாக இருப்பதாக இப்போது கண்டுபிடித்ததுடன், எனவே தான் தங்களால் முழுமையாக செயல்பட முடியவில்லை என்றும் கூறியது. அதாவது ‘போலீசுக்கு பதிலாக ராணுவத்தை அனுப்பி சிங்கூரை சின்னாபின்னமாக்கியிருப்போம், தொழிலை வளர்த்து மாநிலத்தை முன்னேற்றி இருப்போம்’ என்றார்கள்.

பிறகு மனித முகத்துடன் உலகமயத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கொள்கையை ’21-ம் நூற்றாண்டின் சோசலிசம்’ என்று அந்த மாநாட்டில் பெயர் சூட்டினார்கள். தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்துப் போராடி தண்ணீர் விற்பனைக்கானதல்ல என நிலைநாட்டுவதை விட பாட்டில் தண்ணீரை முதலாளிகளை விட மலிவாக ரூ.10-க்கு தரும் அம்மாவின் ஆட்சிதான் காரத்-இன் மொழியில் 21ம் நூற்றாண்டின் சோசலிசம். அதற்காகத்தான் அவரது போயஸ் தோட்டத்து ‘புரட்சித்’தலைவிக்கான காத்திருப்புகள்.

20 இலட்சம் ரூபாய் பணத்தில் படுத்து புரண்டது குற்றமா, இல்லை முறைகேடாக கழிப்பறை கட்டி 2.5 கோடி ரூபாய் சுருட்டியது குற்றமா என்று கேட்டால் போலிக் கம்யூனிஸ்டுகள் முன்னது மட்டும் குற்றம் என்கிறார்கள். ஆம். ஊழல் செய்யலாம். ஆனால் அந்த ஊழலை வெளியே ஆடம்பரமாக காட்டிக் கொள்ளக் கூடாது. இதுதான் சிபிஎம்மின் போலிக் கம்யூனிசம்.

– வசந்தன்.