08-05-2015 அன்று காலை 9.30 மணி அளவில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து
- “அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்போம்”
- “தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம்”
- “அரசுப் பள்ளி நமது பள்ளி”
என்றும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
பேரணி விருத்தாசலம் புதுக்குப்பம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. பேரணியை விருத்தாசலம் உதவி தொடக்க கல்வி அலுவலர் தமிழ்மணி தொடக்கி வைத்தார். மன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வீரபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்க தலைவர் வை.வெங்கடேசன், ம.உ.பா.மை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு, பொருளாளர் செந்தாமரைகந்தன், மாவட்ட தலைவர் கடலூர் வழக்கறிஞர் செந்தில், மாவட்ட செயலாளர் புஷ்பதேவன், செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், செல்வம், குமார், வேலுமணி, பெற்றோர் சங்கம் மற்றும் PRPC உறுப்பினர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த இளைஞர்கள், திருவள்ளுவர் அறக்கட்டளை அசோக், பவழங்குடி சிறுதொண்ட நாயனார், பவழங்குடி மாணவர்கள் மற்றும் விருத்தாசலம் பகுதி மாணவர்கள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணி காலை 9.30 மணிக்கு தொடங்கி புதுக்குப்பம் பகுதி ரயில்வே காலனி, ரயில்வே சந்திப்பு, நாச்சியார்பேட்டை, செராமிக் தொழிற்பேட்டை, எம்.ஆர்.கே. நகர், பெரிய கண்டியங்குப்பம், ஆலடி ரோடு, மாரியம்மன் கோயில் தெரு வழியாக சென்று புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளிகளை சென்றடைந்தது. வழியில் நாச்சியார்பேட்டை பகுதியில் PUSER தலைவர் வை.வெங்கடேசன் அவரது இல்லத்தில் அனைவருக்கும் மோர் வழங்கப் பட்டது. ஆலடிரோடு பகுதியில் சங்க பொருளாளர் செந்தாமரைக்கந்தன் குடும்பத்தினர் அனைவருக்கும் எலுமிச்சை பழச்சாறு வழங்கினர். புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் பேரணி சென்றவர்களை பள்ளிக்குள் அழைத்து சென்று லெமன் ஜுஸ், மோர், பிஸ்கட் வழங்கி வாழ்த்தினர்.
சைக்கிள் பேரணி அங்கிருந்து புறப்பட்டு லூகாஸ் தெரு, வீரபாண்டியன் தெரு வழியாக திரு.வி.க.நகர் அரசு நடுநிலைப்பள்ளியை சென்றடைந்தது. அப்பள்ளி தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்று வாழ்த்தி பேசினார்.
பேரணி அங்கிருந்து புறப்பட்டு செல்வராஜ் நகர் கடலூர் ரோடு வழியாக மதியம் 1 மணி அளவில் பூதாமூர் அரசு நடுநிலைப்பள்ளியை சென்றடைந்தது. தயிர்சாதம், ஊறுகாய் மதிய உணவாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பின் 30 நிமிட ஓய்விற்குபின் பேரணி புறப்பட்டு பூதாமூர் கிராமம், சிதம்பரம் ரோடு, கடைவீதி, பெண்ணாடம் ரோடு, காந்தி நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாவடிக்குப்பம் சென்று திரும்பி, சாத்துக்குடல் ரோடு, ஜெயில் தெரு, தென்கோட்டை வீதி, நகராட்சி நடுநிலைப்பள்ளி வழியாக ஜங்சன் ரோடு சென்று PRPC சங்க அலுவலகத்தில் மாலை 3 மணிக்கு நிறைவு பெற்றது.
சைக்கிள் பேரணியின் முன்புறம் டாடா ஏஸ் வாகனத்தின் முன்புறம் இருபக்கங்களிலும் விழிப்புணர்வு பேனர் மற்றும் பறை இசை முழங்க பின்னால் சைக்கிள் பேரணி ஊர்வலம் சென்றது அனைவரையும் ஈர்த்தது.
ஊர்வலத்தில்
- “ஆகா.. ஓகோ.. அரசுப்பள்ளி!”
- “ஐயோ? தனியார்பள்ளி?”
- “தாலி அறுக்கும் தனியார் பள்ளி, அனைத்தும் வழங்கும் அரசுப் பள்ளி!”
- “அரசுப் பள்ளி நமது பள்ளி, அரசுப் பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்போம்”
- “அரசு வேலை இனிக்குது, அரசுப் பள்ளி கசக்குதா”
என்று எழுப்பப்பட்ட முழக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
கடுமையான சுட்டெரிக்கும் அக்னி வெயிலிலும் மாணவர்கள் சோர்வடையாமல் ஆர்வத்துடன் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர். 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து வயது மாணவர்களும் பேரணியில் சைக்கிள் ஓட்டி சென்றது அனைவரையும் கவர்ந்தது.
பத்திரிகையில் வெளியான செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
கடலூர் மாவட்டம்
LKG க்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் செலவழித்து, தனியார் கொள்ளையர்களிடம் சேர்ப்பதை என் மனசாட்சி விரும்பவில்லை.என் பிள்ளைகளை அரசு பள்ளியில்தான் சேர்க்க விரும்புகிறேன். ஆனால், சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள், நான் ஏதோ பாவகாரியம் செய்வதாகவும், என் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கெடுப்பதாகவும் பேசி வருகின்றனர். இதனால் குற்ற உணர்வில் தவித்து வருகிறேன்.
என் பையனுக்கு மூன்று வயது ஆகிறது. தாய்மொழி அரசு பள்ளியா, கொள்ளைக்கூட்ட தனியார் பள்ளியா என்ற குழப்பத்தில் சிக்கியுள்ளதால், இன்னும் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கவில்லை.
கல்வி தொடற்பான வினவின் கட்டுரைகளை படிக்கவும்.நிச்சயம் தெளிவு பிறக்கும்.