ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்துவது என்ற பொய்யான காரணத்தைக் கூறி, கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்காவும் அதன் பிராந்திய அடியாளான இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது மாபெரும் இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கின. சரிந்து வரும் தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், ஈரானின் எண்ணெய் வளங்களைக் கொள்ளையடிக்கவுமே அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த அநீதியான போரைத் தொடுத்திருக்கிறது. இந்த அடாவடியான போரால், உலக எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பெரும் உடைப்பு ஏற்பட்டு, பல நாடுகள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இப்போரின் தொடக்கத்திலேயே, ஈரானின் அதியுயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனியும், பல மூத்த தலைவர்களும் அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டனர். இரத்தத்தை உறையவைக்கும் இந்த அரச பயங்கரவாதத்தின் உச்சமாக, மினாப் பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட கொடூரமான குண்டுவீச்சில் குறைந்தது 168 பெண் குழந்தைகள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்தச் சட்டவிரோதமான, அறமற்ற தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் தனது எதிர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது. இதன் ஓர் அங்கமாக, உலக எரிசக்தி வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முடக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது.
பாரசீக வளைகுடாவிற்கும், ஓமன் வளைகுடாவிற்கும் இடையே உள்ள 33 கி.மீ. அகலம் கொண்ட மிகக் குறுகலான கடல்பரப்புதான் இந்த ஹார்முஸ் நீரிணை. இதுதான் எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பிற நாடுகளுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகத் திகழ்கிறது. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவிகிதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) வர்த்தகத்தில் 20 சதவிகிதமும், கடல்வழி உர வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கும் இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. குறிப்பாக, இந்தியாவிற்குத் தேவையான 40 சதவிகித கச்சா எண்ணெயும், 50 சதவிகித இயற்கை எரிவாயுவும் இப்பாதை வழியாகவே வரவேண்டும்.

மார்ச் மாதத் தொடக்கத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் இப்பாதையைக் கடக்க ஈரான் தடை விதித்ததோடு, பல வணிகக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனால் 97 சதவிகித அளவிலான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான சரக்குக் கப்பல்கள் ஓமன் வளைகுடா பகுதியிலேயே தேங்கின. இதன் விளைவாக, சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude oil) விலை பீப்பாய் ஒன்றுக்கு 119 முதல் 120 டாலர்கள் வரை உயர்ந்து, பல ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது.
ஈரானைப் பணிய வைக்க வேண்டும் என்பதற்காக, அதன் ஆற்றல் வளங்களான மின் நிலையங்கள், எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகின்றன. அந்த வகையில், கடந்த மார்ச் 18 அன்று ஈரானின் இயற்கை எரிவாயு நிலையமான “தெற்கு பார்ஸ்” (South Pars) மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க பன்னாட்டு ஏகபோகங்களின் முதலீடுகளையும் நலன்களையும் கொண்டுள்ள சவுதி அரேபியா, குவைத் மற்றும் கத்தார் நாடுகளின் எண்ணெய்-எரிவாயு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்கா-இஸ்ரேலின் இப்போர்வெறி ஒரு மாபெரும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.
இந்த உற்பத்தி நிலையங்களை மறுகட்டமைப்பு செய்து உற்பத்தியை மீட்க 3 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. எரிசக்தி உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தும் இந்த நிலை நீடித்தால், கொரோனா பேரிடர் காலத்தைவிட தீவிரமான விவசாய-தொழிற்துறை முடக்கம், வாழ்வாதார-வேலையிழப்பு என ஒரு மிகப்பெரும் சமூக நெருக்கடியை உலகம் சந்திக்கும் அபாயம் தலைமேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
சமையல் எரிவாயுத் தட்டுப்பாடும்
விறகடுப்பிற்குத் திரும்பும் மக்களும்
மத்திய கிழக்கில் நடக்கும் போர், இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களில் உள்ள அடுப்பங்கரைகளையும் பாதிக்கும் என்று சாதாரண மக்கள் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஏகாதிபத்தியமும் அதன் உலகமயக் கொள்கையும் உலக நாடுகளை ஒற்றைச் சங்கிலியில் இணைத்துள்ளன; இதில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என்பதைத்தான் இந்த மத்திய கிழக்குப் போர் எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்தச் சமையல் எரிவாயுத் தேவையில் சுமார் 50 சதவிகிதத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது. எனவே, இப்பகுதியில் நிலவும் விநியோக முடக்கம் இந்தியாவில் கடுமையான எரிவாயுத் தட்டுப்பாட்டை உண்டாக்கியுள்ளது.
ஈரானில் போர் தொடங்கிய சில நாட்களிலேயே, இந்தியாவில் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு பூதாகரமாகியது. சமையல் எரிவாயு உடனுக்குடன் கிடைக்கும் என்ற நிலை மாறி, முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி நகர்ப்புறங்களுக்கு 25 நாட்களாகவும் கிராமப்புறங்களுக்கு 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டது. முன்பதிவு செய்வதற்கான தொலைத்தொடர்பு சேவைகளும் முடங்கியதால் மக்கள் நிலைகுலைந்துப் போயினர். டெல்லி, உத்தரப்பிரதேசம் எனப் பல மாநிலங்களில் மக்கள் காலி சிலிண்டர்களுடன் விநியோக நிறுவனங்களின் முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் அவலம் அரங்கேறியது.

இந்த அவலத்தின் உச்சமாக சிலிண்டர் வாங்குவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த சங்கர்ராவ் சிர்சாத், பஞ்சாப்பைச் சேர்ந்த பூஷன் குமார் மிட்டல், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் ஆகிய மூன்று பேர் மயங்கி விழுந்தும் மாரடைப்பாலும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள், கேன்டீன்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், வாழ்வாதாரம் முடங்கியதாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மீண்டுமொரு கொரோனா ஊரடங்கை எதிர்கொள்ளப் போகிறோமா என்ற அச்சம் அவர்களை சூழ்ந்துள்ளது.
மறுபுறம், இந்த சிலிண்டர் தட்டுப்பாட்டால் பதுக்கலும் கள்ளச்சந்தையும் பெருகியுள்ளது. குறிப்பாக, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் தட்டுப்பாட்டால், சிறு உணவகங்கள், தேநீர்க் கடைகளை நடத்துவோர் தங்களது தொழிலைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வேறுவழியின்றி வீட்டு உபயோக சிலிண்டர்களைக் கள்ளச்சந்தையில் தேடிச் செல்கின்றனர். இவ்வாறு வணிகத் தேவைக்காக வீட்டு உபயோக சிலிண்டர்கள் சட்டவிரோதமாகத் திசைதிருப்பப்படுவதால், அதன் கள்ளச்சந்தை விலை ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை எட்டியுள்ளது. திருப்பூரில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காகப் பதுக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றால், இந்தியா முழுவதும் எந்த அளவுக்கு மாஃபியாக்கள் செயல்படுகின்றன என்பதைக் கற்பனை செய்தால் நெஞ்சம் பதறுகிறது.
சாதாரண உழைக்கும் மக்களோ, இத்தகைய கள்ளச்சந்தை விலையைக் கொடுத்து வாங்க முடியாமல் விறகடுப்பிற்கு மாற வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நகர்ப்புறங்களில் விறகடுப்பைப் பயன்படுத்த வாய்ப்பில்லாத நிர்பந்தத்தில் இருக்கும் மக்கள், பசியிலும் பட்டினியிலும் வாடும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு, போர் தீவிரமடைந்து மக்கள் தவிக்கும் வேளையில், ஒன்றிய மோடி அரசோ “தட்டுப்பாடு இல்லை” எனப் பொய்களை ஓயாமல் பரப்பிக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் நின்றுகொண்டு, “இந்தியாவில் எரிவாயுத் தட்டுப்பாடே இல்லை; உற்பத்தியை 25 சதவிகிதம் அதிகரித்துத் தடையின்றி விநியோகிக்கிறோம்” என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்னொருபுறம், தமிழ்நாட்டு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனோ, “சிலிண்டர் தட்டுப்பாடெல்லாம் இல்லை; நானே சிலிண்டர் ஏஜென்சி நடத்துகிறேன், எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்” என்று மக்களின் துயரத்தை எள்ளி நகையாடுகிறார்.
சமூக வலைதளங்களில் பா.ஜ.க. ஆதரவாளர்கள், மின்சார அடுப்புகளுக்கு மாறுங்கள் என்று ‘அறிவுரை’ சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், கோடிக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் மின்சார அடுப்புகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற மின்கட்டமைப்பு வசதி இந்தியாவில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இந்தியாவின் மின்சாரக் கட்டமைப்புகள் ஒரு சில மின்விளக்குகள் எரிவதற்கான தேவைக்காகவே வடிவமைக்கப்பட்டவை என்று துறை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். மொத்தத்தில், எவ்வித உண்மையான மாற்று வழியுமின்றி, உழைக்கும் மக்களைக் கையறு நிலையில் நிறுத்தியிருக்கிறது பாசிச மோடி அரசு.
வணிக எரிவாயுத் தட்டுப்பாடும்
முடங்கிய சிறு உணவகங்களும்
சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டின் அடுத்தகட்டப் பாதிப்பு, வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு உருளை விநியோகத்தில் எதிரொலித்தது. எந்தவித முன்னறிவிப்புமின்றி உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான வணிக சிலிண்டர்களின் விநியோகம் முடக்கப்பட்டதால், தெருவோரக் கடைகள் முதல் பெரிய உணவகங்கள் வரை சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகியுள்ளன. அன்னபூர்ணா, அடையாறு ஆனந்தபவன், சரவணபவன் போன்ற பெரிய உணவகங்களிலும் கூடத் தட்டுப்பாடு நிலவுவதால், இத்தகைய பெரிய நிறுவனங்கள் தங்களது வருவாயில் 40 முதல் 45 சதவிகிதம் வரை இழப்பைச் சந்தித்து வருகின்றன; பல உணவு வகைகளைத் தவிர்த்து வருகின்றன. பெரிய உணவகங்களுக்கே இந்த நிலைமை என்றால், பல தெருவோரக் கடைகளோ எரிவாயுத் தட்டுப்பாட்டால் தொழில் நடத்த முடியாமல், வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றன.
இந்த நெருக்கடியின் கோரமுகத்தை நொய்டாவில் உள்ள ஒரு உணவகம் அப்பட்டமாகக் காட்டுகிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களால் நடத்தப்படும் “சான்வ் ஃபவுண்டேஷன்” (Chhanv Foundation) உணவகம், எரிவாயு இல்லாததால் தனது சமையல் பணிகளை முழுமையாக நிறுத்தியுள்ளது. “எரிவாயு இல்லை என்றால் வருமானம் இல்லை; வருமானம் இல்லை என்றால் நாங்கள் எங்கே போவது?” என்ற அந்தப் பெண்களின் கேள்வி, மாற்று வழியின்றித் தவிக்கும் உழைக்கும் மக்களின் கையறு நிலையைக் காட்டுகிறது.
தங்களது வாழ்வாதாரத்தைத் தக்கவைக்கப் போராடும் சிறு உணவகங்கள், அதிக எரிவாயு தேவைப்படுகிற சப்பாத்தி, வறுவல், பூரி மற்றும் “சாட்” வகைகளைத் தங்களது உணவுப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளன. ஏழைத் தொழிலாளர்களின் பசியாற்றும் மலிவு விலைத் தேநீர் கூட இன்று பல இடங்களில் கிடைக்காத அரிய பொருளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு வேலையில்லா இளைஞர்களைப் “பக்கோடா” போட்டுப் பிழைக்கச் சொன்ன ஒன்றிய மோடி அரசு, இன்று அந்தப் பிழைப்பிற்கும் உலை வைக்கும் விதமாக எரிசக்தி நெருக்கடியை மோசமாகக் கையாண்டு, உழைக்கும் மக்களின் வயிற்றில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது.
எரிவாயுத் தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட உற்பத்திச் செலவு உயர்வு, நேரடியாக உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. சாதாரண கடைகளில் தேநீர், போண்டா, பஜ்ஜி போன்றவற்றின் விலையும் கணிசமான அளவு கூடியிருக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் எனப் பசியைத் தேநீரிலும் மலிவு விலை உணவிலும் போக்கிக் கொள்ளும் உழைக்கும் வர்க்கத்தையே இந்த விலையேற்றம் மிகக் கடுமையாக வாட்டுகிறது.
இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி, சில பெரிய உணவகங்கள் “எரிவாயு நெருக்கடிக் கட்டணம்” அல்லது “எரிபொருள் மீட்புக் கட்டணம்” என்ற பெயரில் நுகர்வோர் மீது கூடுதல் கட்டணங்களைச் சட்டவிரோதமாக விதிக்கின்றன. இது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எனவும், வழிகாட்டுதல்களுக்கு முரணானது எனவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவித்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, சென்னையில் 30 சதவிகித உணவகங்களும், மும்பை மற்றும் பெங்களூருவில் 20 சதவிகித உணவகங்களும் மூடப்பட்டிருக்கின்றன. உணவகங்களின் மின்சாரப் பயன்பாட்டிற்கு ரூ.2 மானியம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு, வேலையிழந்த பல லட்சம் தொழிலாளர்களுக்கு எந்தவித நிவாரணத்தையும் அறிவிக்கவில்லை. எரிவாயுத் தட்டுப்பாடு குறித்துக் கணக்கெடுக்கிற ஒன்றிய அரசும், தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையையும் காட்டவில்லை. இது அரசுகளின் வர்க்கச் சார்பு என்னவாக உள்ளது என்பதை பளிச்சென அம்பலப்படுத்துகிறது.
தொழிற்துறை டீசல் விலை உயர்வும்
முடங்கும் சிறு தொழில்களும்
கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் காரணமாகக் காட்டி, சில்லறை விலையை உயர்த்தினால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்ற அச்சத்தில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒரு தந்திரத்தைக் கையாண்டுள்ளன. பொதுமக்களுக்கான சில்லறை விலையைத் தொடாமல், தொழிற்சாலைகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்குத் தேவையான மொத்தக் கொள்முதல் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.22 வரை ஒரே நாளில் உயர்த்தியுள்ளன. இந்த 25 சதவிகித விலை உயர்வானது, உற்பத்தி மற்றும் சரக்குப் போக்குவரத்துச் செலவைப் பன்மடங்காக்கி, மக்கள் மீது மறைமுகமாகப் பணவீக்கத்தைச் சுமத்துகிறது. மேலும், ஏற்கெனவே ஜி.எஸ்.டி., மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டால் தத்தளித்து வரும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மீது இந்த டீசல் விலையேற்றம் பேரிடியாக இறங்கியுள்ளது.
குறிப்பாக, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மிதிவண்டி மற்றும் கனரக இயந்திர உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். இதுகுறித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் சங்கத்தின் தலைவர் பங்கஜ் சர்மா கூறுகையில், “கடந்த 20 நாட்களில் லேசான டீசல் எண்ணெய் (Light diesel oil), பர்னஸ் ஆயில் (Furnace oil) மற்றும் பெட்கோக் (Petroleum coke) விலைகள் 25 சதவிகிதம் உயர்ந்துள்ளன. இது உலோக வடித்தல் (Forging) துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது” என வேதனை தெரிவித்துள்ளார். பஞ்சாபில் ஜெனரேட்டர்களையும், ஃபர்னஸ்களையும் இயக்க முடியாமல் 30 முதல் 35 சதவிகித தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதே அவலநிலைதான் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் குஜராத்தின் தொழில் மண்டலங்களிலும் நிலவுகிறது.
இந்தப் போரின் மற்றுமொரு நேரடிப் பாதிப்பாக, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பல லட்சம் பெண்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தீப்பெட்டித் தொழில் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தீப்பெட்டித் தயாரிப்பிற்கு மிக முக்கியமான மூலப்பொருளான பாரஃபின் மெழுகு (Paraffin wax), ஈரானிலிருந்துதான் பெருமளவில் (ஆண்டுக்கு 1 முதல் 1.5 லட்சம் மெட்ரிக் டன்கள்) இறக்குமதி செய்யப்படுகிறது. போர் காரணமாக இறக்குமதி தடைப்பட்டுள்ளதால், அதன் விலை ஒரு கிலோ ரூ.80-லிருந்து ரூ.130-ஆக எகிறியுள்ளது. ஏற்கெனவே ஜி.எஸ்.டி. மற்றும் பிளாஸ்டிக் லைட்டர்களின் ஆதிக்கத்தால் நலிந்து வரும் இத்தொழில், இப்போது மூலப்பொருள் தட்டுப்பாட்டால் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் பெண் தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்திக்கும் பேராபத்து உருவாகியுள்ளது.
இது தவிர, சேலத்தின் கொலுசுப் பட்டறைகள், கோயம்புத்தூரின் வார்ப்படத் தொழில்கள் (Foundry industry), குஜராத்தின் செராமிக் நிறுவனங்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் கண்ணாடித் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை எரிசக்தி நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கின்றன.
நெருக்கடியில் இந்திய விவசாயமும்
உரத் தட்டுப்பாடும்
ஏற்கெனவே ஏகாதிபத்தியப் போரின் விளைவாக உலகளாவிய உரப் பற்றாக்குறை மற்றும் விலையேற்றத்தால் தத்தளித்து வரும் இந்திய விவசாயத்திற்கு, இந்தப் போர் மற்றுமொரு பேரிடியாக விழுந்துள்ளது. உலகின் மிகப்பெரிய யூரியா ஏற்றுமதி நாடான கத்தார், தனது ஆலைகள் முடங்கியதால் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் யூரியா விலை ஒரே மாதத்தில் 50 சதவிகிதம் உயர்ந்து, ஒரு மெட்ரிக் டன் 700 டாலரைத் தாண்டியுள்ளது.
உரத் தயாரிப்புக்குத் தேவையான இயற்கை எரிவாயு இறக்குமதி முற்றிலுமாகத் தடைப்பட்டதால், இந்தியாவில் உள்ள 3 உர ஆலைகளும், வங்கதேசத்தில் உள்ள 4 ஆலைகளும் உற்பத்தியை முழுமையாக நிறுத்தியுள்ளன. மார்ச் 19-ஆம் தேதியிட்ட புள்ளிவிவரப்படி, இந்திய அரசிடம் வெறும் 6.2 மில்லியன் டன் உரம் மட்டுமே கையிருப்பாக உள்ளது. இந்த மாபெரும் நெருக்கடியான சூழலில் இந்தக் கையிருப்பு சிறிதும் போதாது.
ஜூன் மாதம் தொடங்கும் “காரீஃப்” (Kharif) எனப்படும் மழைக்காலச் சாகுபடி பருவம் மற்றும் அக்டோபரில் தொடங்கும் “ரபி” (Rabi) எனப்படும் குளிர்காலச் சாகுபடி பருவம் ஆகிய இரண்டிலும் பயிர் விளைச்சலுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ் மற்றும் டி.ஏ.பி. போன்ற உரங்கள் கிடைக்காமல் போனால் மகசூல் பாதியாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனாவும் தனது உள்நாட்டுத் தேவைக்காக உர ஏற்றுமதியைத் தடை செய்துள்ள நிலையில், உலகளாவிய உரப் பற்றாக்குறை இந்தியாவில் மாபெரும் உணவுப் பஞ்சத்திற்கு வழிவகுக்கும். ஏற்கெனவே இடுபொருட்களின் விலை உயர்வால் கடனாளியாகி நிற்கும் இந்திய விவசாயிகள், இப்போது உரத் தட்டுப்பாட்டினால் விவசாயத்தையே கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் போர்வெறிக்காக, இந்திய உழைக்கும் மக்களின் உணவுப் பாதுகாப்பையும் அடகு வைத்திருக்கிறது மோடி அரசு. இந்தத் தட்டுப்பாடானது உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை உண்டாக்கி, கோடிக்கணக்கான ஏழை மக்களைப் பசிக்கும் பட்டினிக்கும் இட்டுச் செல்லும் ஒரு பேராபத்து நம் கண்முன்னே தெரிகிறது.
ஏகாதிபத்தியச் சரணாகதி
எரிசக்தி மற்றும் மூலப்பொருள் தட்டுப்பாட்டால் இந்தக் குறுகிய காலத்தில் மட்டும் இந்தியாவில் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு மோடி அரசின் மறுகாலனியாக்கக் கொள்கைகளின் அடிப்படையிலான வெளியுறவுக் கொள்கையும், அமெரிக்க ஏகாதிபத்திய அடிமைத்தனமுமே மூலகாரணமாகும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பயந்து, ஈரானிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை முன்கூட்டியே நிறுத்திய இந்தியாவின் சரணாகதிக் கொள்கையே இன்று பெரும் நெருக்கடியில் நம்மைச் சிக்க வைத்துள்ளது.
இந்த நெருக்கடியான சூழலிலும்கூட, மாற்று வழியான ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு ஒரு இறையாண்மையுள்ள நாடாகத் தன்னிச்சையாக முடிவெடுக்க மோடி அரசுக்குத் துப்பில்லை. மாறாக, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தனது சுத்திகரிப்பு ஆலைகளின் லாபத்திற்காக அமெரிக்காவிடம் 30 நாட்களுக்கு தற்காலிக விலக்கு பெற்றுத் தரும்வரை மோடி அரசு கைகட்டிக் காத்திருந்தது.
பெட்ரோலியத் துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி அளித்த தகவலின்படி, இந்தியாவின் கச்சா எண்ணெய் மூலோபாய இருப்பு தற்போது 64 சதவிகிதம் மட்டுமே உள்ளது; முடக்கம் தொடர்ந்தால் இது 5 முதல் 9.5 நாட்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும். இவ்வளவு பெரிய ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது முதல் ஆளாகக் கண்டித்த ‘விஸ்வகுரு’ மோடி அரசு, ஈரானின் அதியுயர் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கோ அல்லது மினாப் பள்ளியில் 168 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கோ ஒரு சிறு கண்டனத்தைக் கூடத் தெரிவிக்கவில்லை. மாறாக, ஐ.நா. சபையில் ஈரானுக்கு எதிரான தீர்மானத்திற்கு ‘இணை ஸ்பான்சராகவும்’ (Co-sponsor) நின்றது.
இந்தியக் கடற்படையுடன் பயிற்சியில் பங்கேற்க விருந்தினராக வந்த ஈரான் கப்பலை நயவஞ்சகமாக தாக்கிய அமெரிக்காவை கண்டிக்க வக்கற்று போனது பாசிச மோடி அரசு. மேலும், பிப்ரவரி மாதத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சென்ற ஈரான் கப்பல்களை அமெரிக்க அடியாளாகச் செயல்பட்டு இடைமறித்துக் கைது செய்தது பச்சையான அடிமைத்தனமாகும். இவ்வளவையும் செய்துவிட்டு, இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயுக் கப்பல்களை அனுமதிக்கும்படி ஈரானிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டிருப்பதையே இராஜதந்திரம் என பீற்றிக்கொள்வதை விடக் கேவலம் வேறு இருக்க முடியுமா?
தலைபோகும் நெருக்கடியிலும்
அம்பானி-அதானிக்குச் சேவகம்
இந்த நெருக்கடிக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் பின்பற்றப்படும் தனியார்மய-தாராளமய-உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கையே முக்கியக் காரணமாகும். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவிகிதம் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. எரிசக்தித் துறையில் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டமைப்பு சிதைக்கப்பட்டு, அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட் கும்பலின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு வருகிறது.
அதேபோல், உள்நாட்டில் எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் தவிக்கும் இந்த இக்கட்டான சூழலிலும், அம்பானி-அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபத்தைப் பாதுகாப்பதிலேயே பாசிச மோடி அரசு குறியாக உள்ளது. உள்நாட்டில் மக்கள் தவிக்கும்போது, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஐரோப்பாவிற்கு எரிபொருளை ஏற்றுமதி செய்து பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொள்ளையடிக்க மோடி அரசு அனுமதிக்கிறது. மற்றொருபுறம், சிலிண்டர் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, 2034-ஆம் ஆண்டிற்குள் ஒரு கோடி குழாய் இணைப்புகளைக் கொடுத்து ஒட்டுமொத்த சமையல் எரிவாயு சந்தையையும் அதானிக்குத் தாரைவார்க்கும் வேலை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
நாட்டில் எவ்வளவு நெருக்கடி நிலவினாலும் கார்ப்பரேட்டுகளின் லாபத்தை உத்தரவாதப்படுத்துவது மட்டுமே பாசிஸ்டுகளின் உத்தியாகும். ஜெர்மனியில் தேசியவெறி மற்றும் யூத இனவெறியை ஊட்டிய ஹிட்லரும் கார்ப்பரேட்டுகளின் லாபத்தைத்தான் உத்தரவாதப்படுத்தினான்; இந்தியாவிலும் பாசிஸ்டுகளின் நோக்கம் கார்ப்பரேட் சேவையே என்பதை இந்த எரிசக்தி நெருக்கடி உணர்த்துகிறது. எனவே, ஏகாதிபத்திய அடிமையாகவும், அம்பானி – அதானிகளின் சேவகனாகவும் உள்ள மோடி அரசைத் தூக்கியெறியும் வீரியமிக்க வர்க்கப் போராட்டத்தைக் கட்டியெழுப்புவது ஒன்றே உழைக்கும் மக்களுக்கான ஒரே மாற்று வழியாகும்!
![]()
அப்பு
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads










