Wednesday, July 23, 2025
முகப்பு பதிவு பக்கம் 27

நூல் அறிமுகம் : தென்னிந்தியாவைக் கண்டேன் | மீள்பதிவு

ன்று தோழர் அமீர் ஐதர் கான் அவர்களின் நினைவு தினம். இந்தியத் துணைக்கண்டத்தின் துவக்க காலப் பொதுவுடைமை இயக்கத்திற்கு அவர் ஆற்றிய போர்க்குணமிக்க பங்கினை நினைவுகூரும் வகையில் புதிய கலாச்சாரம் நவம்பர் 1997 இதழில் வெளிவந்த இக்கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

(இக்கட்டுரை நவம்பர் 25, 2013 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது)

***

னது சொந்த வாழ்க்கையின் சொகுசுகளை ஒரு துளிகூட காய்ந்துவிடாமல் ருசிப்பவர்களும், தனது எதிர் காலத்திற்கும் தனது பெண்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் கான்கிரீட் அடித்தளம் அமைத்து உறுதி செய்து கொண்டவர்களும் “என்ன செய்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள்?” என்ற கேள்வியை ரொம்பவும் ஆக்ரோசமாகக் கேட்கிறார்கள்.

தாதா அமீர் ஐதர் கான்
தாதா அமீர் ஐதர் கான்

ஆனால் தாங்கள் கொண்டிருந்த லட்சியத்திற்காக, மக்கள் விடுதலைக்காகத் தனது சொந்த வாழ்வையும், உயிரையும் இழக்கத் தயாராகவிருந்த தொண்டர்கள் எந்த இயக்கத்தில் நிறைந்திருந்தார்கள் என்ற கேள்வியுடன் நவீன கால வரலாற்றைப் புரட்டினால், உலகெங்கும் அது கம்யூனிஸ்டுகளின் தியாக வரலாறாக, போராட்ட வரலாறாகவே இருக்கக் காணலாம். இந்தியாவிலும் இது அப்படித்தான்.

ஆரம்பகால இந்தியப் பொதுவுடைமை இயக்கம் பின்னாளில் நாடாளுமன்ற இயக்கமாகச் சீரழிந்து விட்டாலும், துவக்க காலப் பொதுவுடைமை இயக்கப் போராளிகளின் வரலாறு, தியாகத்திற்கும் போர்க்குணத்திற்கும் சான்று பகர்கிறது.

தோழர் அமீர் ஐதர் கானின் ‘’தென்னிந்தியாவைக் கண்டேன்’’ எனும் தன் வரலாற்று நூல் அத்தகையதோர் வரலாற்றுச் சான்று.

தாதா அமீர் ஐதர் கான்
பஞ்சாபில் முஸ்லீம் மதக் குடும்பத்தில் பிறந்து, தென்னிந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் கட்சி கட்டிய தாதா அமீர் ஐதர் கான்.

எளிய பஞ்சாபி முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவரான கான், சர்வதேச கம்யூனிஸ்டு அகிலத்தின் பிரதிநிதியாக ரசியாவில் சில காலம் செயல்பட்ட பின் இந்தியா திரும்பினார். தென்னிந்தியாவில் கட்சியை உருவாக்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னைக்குக் கிளம்பினார் கான்.

மீரட் சதி வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்ததால் தமிழகத்திலும் தலைமறைவாகத்தான் இவர் வாழ வேண்டியிருந்தது. புனை பெயரோ சங்கர். தமிழோ அறவே தெரியாது.

பஞ்சாபி முஸ்லீமாகப் பிறந்து புனைபெயரை இந்துப் பெயராக வைத்துக் கொண்டு, தமிழகத்தில் இந்து சாதிய சம்பிராதயங்களைப் பற்றி ஏதும் தெரியாமல் மொழியும் தெரியாமல் சென்னையில் வந்து இறங்கினார். அறிமுகத்திற்காக சொல்லப்பட்ட ஒரேயொரு நபரும் எதுவும் செய்ய இயலாதெனக் கைவிரித்து விட்டார். சென்னை இப்படித்தான் அவரை வரவேற்றது.

அறிமுகத்துக்கு நண்பர்கள், கைச்செலவுக்கு போதிய பணம், அவசரத் தொடர்புக்குத் தொலைபேசி வசதி, இன்னும் பல முன்னேற்பாடுகளுடன் வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்களின் கணக்கின்படி அடுத்த நாளே கான் பஞ்சாபிற்கு மீண்டும் ரயிலேறியிருக்க வேண்டும்.

ஆனால் தன்னந் தனியானாய் விடப்பட்ட போதும், இந்த முகம் தெரியாத ஊரில், மாத்யூஸ் என்ற ரயில்வேத் தொழிலாளியிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு தனது பணியைத் தொடங்குகிறார் கான்.

இத்தகையதோர் நிலைமையில், தான் பட்ட துன்பங்கள் சந்தித்த இடர்ப்பாடுகள் ஆகியவை குறித்தும், தான் வாழ நேர்ந்த சூழல் குறித்தும் விலாவாரியாக சுவைபட எழுதுவார் என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாறத்தான் செய்வோம். வாழ்ந்த போது மட்டுமல்ல, பின்னாளில் வரலாறு எழுதும்போதும் தனது சொந்த சூழ்நிலைகளைக் காட்டிலும், அன்று நிலவிய அரசியல் சூழ்நிலைகளே அவருக்கு முக்கியத்துவம் நிறைந்ததாகத் தோன்றுகின்றது. எனவே அதை விவரிக்கிறார்.

‘’காந்தி – இர்வின் ஒப்பந்த காலம் அது. ஒப்பந்தம் என்னுள்ளத்தில் கசப்புணர்ச்சியை ஏற்படுத்திற்று. காந்திஜியை விமரிசிப்பதில் நான் தயவு தாட்சண்யம் காட்டவில்லை. காந்திஜி உப்பு சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். கடல் நீரைக் காய்ச்சிய மக்கள் நாளடைவில் சலிப்படைந்தார்கள். சிலர் கள் இறக்கும் பனை, தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்கள். சிலர் சட்டத்தை மீறி நடக்கலானார்கள். பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. ஷோலாப்பூரில் மக்கள் நகரை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். காந்தி – இர்வின் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை மக்கள் இயக்கம் ஏற்படுத்தியது.’’

‘’கல்லூரிகளையும், பள்ளிகளையும் விட்டு வெளியேறிய மாணவ – மாணவியரும் போராட்டக் காலத்தில் கைது செய்யப்பட்டு ஒப்பந்தத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் சிலருக்கு இனி என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வில்லை. இந்த ஒப்பந்தம் தேசீய விடுதலைப் போராட்டத்துக்குத் துரோகம் செய்வதாகும் என்று பேசியவர், எழுதியவர் சிலரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள் நம் தோழர்கள்…

ஒப்பந்தத்தின் சாரத்துக்கு நான் தந்த விளக்கமும், விளக்க முறையும் அரசியல் அறிந்த தென்னிந்தியர் பலருக்குப் புதியவையாகத் தோன்றின. நம் இளம் தோழர்களை ஊக்குவித்தன.

ஆங்கில சுயசரிதை
அமீர் ஐதர் கானின் ஆங்கில சுயசரிதை (செயின்ஸ் டு லூஸ்).

1930-32 மாணவர்களிடம் கம்யூனிச அரசியல் தீப்போல பற்றிக் கொண்டகாலம். கான் இதற்கு முக்கியக் காரணகர்த்தா. அவர்களை நகருக்கு வெளியே இருந்த பி அண்டு சி பஞ்சாலைக்கு அழைத்துப் போனார் கான். தொழிலாளர்களுடன் அவர்கள் மொழியில் அவர்கள் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவது எவ்வாறு என்று சொல்லிக் கொடுத்தேன். இத்தகைய செயல்முறைப் பயிற்சியால் அவர்கள் மார்க்சியக் கொள்கையை அறியலானார்கள்.

மத்திய தர வர்க்கத்துக்குள் கீழ்த்தட்டைச் சார்ந்த மாணவர்களுக்கு அந்த நாள்களில் நாள்தோறும் சிற்றுண்டிக்காக ஆறணா தரப்படுவது வழக்கம். இளம் தோழிலாளர் சங்கத்துக்கு அந்தத் தொகையை வழங்கி விடுவார்கள். இந்த உதவியினால் சிறு வெளியீடுகளையும் பத்திரிக்கையும் கொண்டு வர முடிந்தது…’’

சென்னை தீவுத்திடல் மைதானத்தில் தற்செயலாக ராஜவடிவேலு(முதலியார்)வைச் சந்தித்தார் கான். ‘’அவர் நீதிக்கட்சியின் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர். நீதிக் கட்சி சென்னை மாகாண அமைச்சரவை அமைந்த பிறகு அவர் எதிர் பார்த்தது போல் சாதி அமைப்பு, ஏற்றத் தாழ்வுகள், சமூகத்திமை இழிவுகள் அறவே ஒழிய வில்லை; மாறாக, பிரிட்டிஷாரோடு செர்ந்து கொண்டு அவர்கள் சுரண்டல் வர்க்க நலன்களுக்கு ஆதரவாக மாறி விட்டார்கள்.

இதனால் அவர் நீதிக் கட்சி நபர்களுக்கு எதிராக எழுதத் துவங்கினார்; நீதிக்கட்சி ஆசிரியர் பதவியிலிருந்து அவரை விலக்கியது. அவரும் ‘ஜனமித்திரன்’ என்றொரு ஏடு தொடங்கி தானே அச்சிட்டு பறையர், துப்புரவு செய்வோர் சேரிக்கு எடுத்துச் சென்று விற்றார்.’’

“ராஜ வடிவேலுவை மூன்று நாட்களாகப் பல மணி நேரம் வாழ்க்கை, நாட்டு அரசியல் நிலைமை ஆகியவை பற்றிக் கேள்விகள் கேட்டுக் குடைந்தெடுத்தேன். தென்னிந்தியச் சாதி அமைப்பு, குறிப்பாகப் பார்ப்பன ஆதிக்கம் உள்ளிட்ட எல்லா அநீதிகளையும் எதிர்த்து எழும் அஞ்சாநெஞ்சம் படைத்த போராளி – ஆனால் ஒரு பிரச்சனையைப் பற்றியோ, அல்லது அநீதி என்று அவருக்குத் தோன்றியதை எதிர்த்துப் போராடும் வழிமுறை பற்றியோ காரண காரணிகளைக் கண்டறிந்து செயல்படுவது என்பது அவருடைய இயல்பில்லை என்பதைக் கண்டேன்.

தம் திறமையை பற்றி உணர்வு இல்லாது அமைப்பில் திரளாமல் இருக்கும் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு வாடும் மக்களை அமைப்பு முறையில் திரட்டுவது வர்க்க உணர்வு பெற்றோர் அனைவரது கடமை…’’

ராஜவடிவேலு கானின் தர்க்கத்தை ஒப்புக் கொண்ட கணத்திலேயே ‘ஜனமித்திரன்’ ‘முன்னேற்றம்’ என்ற பெயரோடு இரு வார ஏடாகப் புதிய வடிவெடுத்தது. அவரே ஆசிரியர், அச்சிடுபவர், வெளியீட்டாளர் எல்லாம். கானோடு ராஜவடிவேலு, கம்மம்பாடி சத்திய நாராயணா இருவர் முழுநேர ஊழியர்களாக இருந்து 30 பேர் கொண்ட ‘இளைய தொழிலாளர் சங்கம்’ அமைத்தார்கள். இது கம்யூனிஸ்ட் கட்சி சட்ட விரோதமாக்கப்பட்டதால் செய்து கொள்ளப்பட்ட புது ஏற்பாடு. ‘முன்னேற்றம்’ பத்திரிக்கை கைகளால் 500 படிகள் அச்சிடப்பட்டது. பணவசதி இல்லை; அனைத்துமே தொழிலாளர் – மாணவர் உழைப்பில் தான் நிறைவேறியது.

‘’நரம்புகளைக் கொடுமையான சோதனைக்குள்ளாக்கும் இக்கடும் பணியில் எப்பொழுதாவது நான் தோழர் இராஜவடிவேலுக்கு உதவி செய்வேன்! வேலை முடிந்து இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம். இன்முகத்துடன் அவர் மனைவி உணவு பிரமாறுவார்.

இவ்வாறு கடும் உழைப்பின் பின் வெளிவரும் இதழ்களை விநியோகிக்க ‘இளைய தொழிலாளர் சங்க’ உறுப்பினர் ஒவ்வருவரும் முயன்று உழைக்க வேண்டி இருந்தது. ஒவ்வொருவரும் விற்பனைக்காகப் பங்கு பிரித்துக் கொள்வோம். தொழிலாளர்களை அவரவர் இல்லங்களில் சந்திப்போம்; ஒவ்வொரு கட்டுரையும் சொல்வதென்ன, கொண்ட கருத்தென்ன என்பது பற்றித் தெளிவாக விளக்குவோம். விவாதிப்போம். சுருக்கமாக ’31-32 ஆம் ஆண்டுகளில் போர்க்குணம் மிக்க தொழிலாளி வர்க்கத்துக்குள் பிரச்சார ஏடாக ‘முன்னேற்றம்’ செயல்பட்டது’’என்று கம்மம்பாடி சத்தியநாராயணா கூறும் குறிப்பு அவர்களது கடுமையான உழைப்பை விளக்குகிறது.

அமீர்கான் சென்னை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட சம்பவம் அவரது அளவற்ற துணிச்சலைக் காட்டுகிறது. ‘’சென்னை மாகாண மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்டிரேட்டுக்கு மட்டும் இருபுறமும் மின்விசிறிகள்.. அது கோடை. உள்ளே புழுங்கிற்று. நாங்கள் இருந்த பக்கம் விசிறிகள் ஓடவில்லை. ‘எங்களைத் துன்புறுத்திப் பொருளாதாரச் சிக்கனம் செய்வது தவறு, விசிறி வேண்டும்’ என்று உரக்கக் கத்தினேன்.

அச்சமயத்தில் அரசு தரப்பில் எவரோ ஒருவர் ‘உமது வழக்குரைஞர்தான் உமக்கு விசிறி வைக்க வேண்டும்’ என்றார். உடனே கோபாவேசத்தில் அவர்கள் மேல் எறிய நாற்காலியைத் தூக்கினேன்… அரசுக் குற்றச் சாட்டைக் கண்டு நான் அஞ்சவும் இல்லை, நீதி மன்றத்தின் கண்ணியம் பற்றிக் கவலைப்படவுமில்லை என்று காட்டவே இவ்வாறு செய்தேன்…’’

சிறைவாசம் 2 ஆண்டுகள். சென்னை, சேலம், கோவை, ராஜமகேந்திரபுரம் என்று 4 இடங்களில் மாற்றி மாற்றி அடைக்கப்பட்டார் கான். சிறையிலும் அவரது போராட்டம் நிற்கவில்லை.

இராஜமகேந்திரபுரம் சிறை மேலாளர் இச்சென்(HICHEN)கானைப் பணியவைக்க தந்திரம் ஒன்று தீட்டினார். இயக்கத்துக்குத் தலைமுழுகி விட்டுச் சென்னை மாகாணத்தை விட்டு வெளியேறி விடுவதாக உறுதிமொழி அளித்தால் விடுதலை செய்து விடுவதாக ஆசை காட்டினார்.

‘’வாழ்க்கை வெளியில் வாழ்வதற்காகவே. சிறையிலன்று. சிறைவாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?’’ என்றார். நான் அவரை வெளியே போய்விடச் சொன்னேன். ஒரு நாளில் இவ்வாறு எழுதினேன்: ‘’பல்லாயிரம் மைல்கள் கடந்து இங்கு வந்து ஆளுவதற்குப் பிரிட்டிஷ்காரர்களுக்கு உரிமை உள்ளதென்றால் எனக்கு இந்த நாட்டில் வாழ்வதற்காகவாவது உரிமை உண்டு… ஆகவே, என் உயிருள்ள வரை சிறையில் வைத்திருக்கலாம். எந்த நிபந்தனையையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்…’’

47-க்குப்பின் அவரது சொந்த ஊரான ராவல்பிண்டி (பாகிஸ்தான்) சென்றார் கான்; தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட்ட கானுக்கு ‘சுதந்திர’ பாகிஸ்தான் கொடுத்த பரிசு 14 ஆண்டு சிறைவாசம்.

கட்சி கட்டுவதைப் பற்றி கான் சொன்ன வார்த்தைகள். ஆழமான பொருள் உள்ளவை:

‘’இதயங்களைக் கனிவித்தலும் கனிவித்த இதயங்களைக் காத்தலும் மனிதத் திறமையில் பயன் மிகுந்தவை’’.

– புதூர். இராசவேல்
_______________________________________
புதிய கலாச்சாரம் நவம்பர் 1997
_______________________________________

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா? | மீள்பதிவு

(இக்கட்டுரை அக்டோபர் 29, 2010 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது)

***

ட்டினியோடு போராடி வரும் ஏழைகளுக்கு அரசின் தானியக் கிடங்குகளில் கெட்டுப்   போகக்கூடிய நிலையிலுள்ள உணவு தானியங்களை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ மைய அரசு வழங்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவைக் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் கொதித்துப் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.  உணவு மானியம் உள்ளிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும்  அனைத்து மானியங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழித்துக்கட்டி வரும் மன்மோகன் சிங்கிற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது ஏற்பட்ட வெறுப்பு புரிந்துகொள்ளத்தக்கதுதான்.  “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” எனக் கூறி, நீதிபதிகளின் அத்துமீறலை இடித்துக் காட்டினார் மன்மோகன் சிங்.

‘‘நாயும் பன்றியும் தெருவில் சுற்றலாம்; ஆனால், பஞ்சமன் தெருவில் நுழையக் கூடாது” என்ற பார்ப்பன நீதியைப் போல, ஒரு உணவுக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறார், மன்மோகன் சிங்.  “உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழியும் தானியங்களை இந்திய எலிகளும் ஐரோப்பிய மாடுகளும் தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமாட்டோம்” என்பதுதான் அவரது கொள்கை.

மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா?மன்மோகன் சிங் சொல்லாமல் விட்டுவிட்ட இந்தக் கொள்கையை அவரது உணவு அமைச்சர் சரத் பவார் வெளிப்படையாகக் கூறினார்.  “அரசு ஏற்கெனவே உணவு மானியமாக 66,000 கோடி ரூபாயைக் கொடுத்து வருகிறது.  இதற்கு மேல் எப்படி இலவசமாகத் தரமுடியும்?”  இந்த உணவு மானியத்தை இந்திய எலிகளும் கடத்தல்காரப் பெருச்சாளிகளும் பங்கு போட்டுக் கொள்ளும் கதையைப் பிறகு பார்ப்போம்.  ஆனால், மன்மோகன் சிங் கும்பலைப் பொருத்தவரை தற்பொழுது கொடுக்கப்படும் உணவு மானியமே அதிகம் என்பதும், இதை வெட்ட வேண்டும் என்பதும்தான் கொள்கை.

மைய அரசிடம் தற்பொழுது 6 கோடி டன்னுக்கும் அதிகமாக அரிசியும், கோதுமையும் கையிருப்பில் இருக்கிறது.  “இது வழக்கமாக அரசிடம் இருக்க வேண்டிய கையிருப்பைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றும், இதில் 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப்போய்க் கிடப்பதாகவும்” சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  இந்திய உணவுக் கழகத்திடம் போதிய கிடங்குகள் இல்லாததால்தான்,  வெறும் 55,000 டன் உணவு தானியங்கள் மட்டுமே கெட்டுப் போயிருப்பதாக அரசு உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருக்கிறது.

எவ்வளவு டன் உணவு கெட்டுப் போயிருக்கக்கூடும் என்ற வாதப்பிரதிவாதம் ஒருபுறமிருக்கட்டும்.  யானையை வாங்கியவன் அதனை அடக்க அங்குசத்தை வாங்க மறந்துவிட்ட கதையாக, 6   கோடி டன் அளவிற்குக் கொள்முதலை நடத்தியிருக்கும் அரசு, அதனைச் சேமித்து வைக்க இந்திய உணவுக் கழகத்திடம் கிடங்குகள் இல்லை எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.  இப்பொழுது இதற்குத் தீர்வாக, இந்த அபரிதமான கையிருப்பைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கத் தனியார் கிடங்குகளை வாடகைக்கு எடுக்கப் போவதாக மைய அரசு கூறியிருக்கிறது.

உணவு மானியத்தைக் குறைப்பதற்காக, தானியக் கொள்முதல் செய்வதிலிருந்தும் கிடங்குகளைக் கட்டுவதிலிருந்தும் அரசு விலகிக் கொள்வது; அரசுக்குப் பதிலாக இந்நடவடிக்கைகளில் தனியாரை அனுமதிப்பது என உலக வங்கி இந்தியாவில் தனியார்மயம் புகுத்தப்பட்ட காலத்தில் இருந்தே கட்டளையிட்டு வருகிறது.  ஓட்டுப் பொறுக்கும் அரசியல் காரணங்களுக்காகத் தானியக் கொள்முதலை முழுவதும் கைவிடாத அரசு, சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தானிய சேமிப்புக் கிடங்குகளைக் கட்டுவதைக் கைவிட்டதோடு, அதனைத் தனியாரிடமும் ஒப்படைத்தது.  இன்று 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப் போய்விட்டதாகக் கூறப்படுதவற்கு இந்த உலக வங்கியின் கட்டளையும், அதனைச் சிரமேற்கொண்டு செயல்படுத்திய ஆளும் கும்பலும்தான் காரணம்.

திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தைப் பசியோடு போராடும் ஏழைகளுக்கு ரேசன் கடைகளின் மூலம் வழங்குவது வீண் செலவாம்; அதே சமயம், ஏழை மக்களுக்குப் பயன்படாத இந்தக் கையிருப்பைத் தனியார் கிடங்குகளில் சேமித்து வைக்க – பதுக்கி வைக்க என்றும் சொல்லலாம் – வாடகையைக் கொட்டி அழுவது ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கையாம்!

இப்படிப்பட்ட நிலைமை வரக்கூடும் என முன்னறிந்துதான் என்னவோ, மன்மோகன் சிங் அரசு மார்ச் மாதம் போட்ட பட்ஜெட்டிலேயே, தனியார் கிடங்கு களுக்கான குத்தகை கால வரம்பை உயர்த்தும் கொள்கை முடிவைத் தீர்க்க தரிசனத்துடன் எடுத்திருக்கிறது.

இந்த அபரிமிதமான கையிருப்பை, நாயிடம் சிக்கிய தேங்காயைப் போல மன்மோகன் சிங்    தனியார் கிடங்குகளில் வைத்து ஏன் பாதுகாக்க வேண்டும்?  இந்தக் கையிருப்பை முன்னரே விநியோகித்திருந்தால், அதைப் பாதுகாப்பதற்குச் செலவான பணமும் அரசுக்கு மிச்சமாகியிருக்கும்; தானியங்களும் கெட்டுப் போயிருக்காது என்ற சாதாரண உண்மை பொருளாதார அறிஞரான மன்மோகனுக்குத் தெரியாமலா போய்விட்டது?

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக உயர்ந்துகொண்டே செல்லும் இத்தருணத்தில், மன்மோகன் சிங் தன்னிடம் உள்ள கையிருப்பை ரேசன் கடைகளின் மூலமோ அல்லது வெளிச் சந்தையின் மூலமோ புழக்கத்துக்குக் கொண்டு வந்திருந்தால், விலைவாசி உயர்வு ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கும்.  ஆனால், அரசு இப்படி சந்தையில் தலையிட்டு விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதை மன்மோகன் சிங் விரும்புவதில்லை.  தமக்கு ஓட்டுப் போட்ட ஏழை மக்கள் இவ்விலையேற்றத்தால் பாதிக்கப்படுவார்களே என்பது பற்றியெல்லாம் அக்கறையில்லாமல், விலைவாசி உயர்வு அவசியமானது என்றுதான் திமிர்த்தனமாக அறிக்கை விட்டுவருகிறார், அவர்.

அரசு சந்தையில் தலையிட்டால், மளிகைப் பொருட்கள் வியாபாரத்தில் நுழைந்துள்ள ரிலையன்ஸ், பிர்லா போன்ற தரகு முதலாளிகளின் நிறுவனங்கள் விலைவாசி உயர்வைப் பயன்படுத்திக் கொண்டு அடித்துவரும் கொள்ளை இலாபம் படுத்துவிடும் என்பதாலேயே, அவரது அரசு சந்தையில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.  உச்ச நீதிமன்றம் உத்தரவை அவர் புறக்கணிப்பதற்கும் இதுதான் காரணம்.  விலைவாசியை உயர்த்துவதற்காக வியாபாரிகள் சட்டவிரோதமான பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால், மன்மோகன் சிங் அரசோ உணவுக் கொள்முதல்/சேமிப்பு என்ற பெயரில் சட்டபூர்வமாகப் பதுக்கலை நடத்தி, வர்த்தகச் சூதாடிகளுக்கு உதவி வருகிறது.

உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள உத்தரவில், “வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர் என முத்திரை குத்தப்பட்டுள்ள குடும்ப அட்டைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்; அல்லது அவற்றின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் வண்ணம் வருமான வரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.  வெளித் தோற்றத்தில் பட்டினி கிடக்கும் ஏழைகளுக்கு ஆதரவாகப் பேசுவது போலத் தெரியும் இந்த உத்தரவு, உண்மையில் உணவு வழங்கல் கொள்கையில் உலக வங்கியின் கட்டளைகளை விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்த ஆலோசனையே சாட்சி.  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிலுள்ள இந்த ஆலோசனையை டாக்டர் மன்மோகன் சிங் புறக்கணிக்க மாட்டார் என்று அடித்துக் கூறலாம்.

வறுமைக் கோட்டுக்கு மேலே என்ற முத்திரை குத்தப்பட்ட குடும்ப அட்டைகள் டாடா, அம்பானி குடும்பங்களுக்கா கொடுக்கப்பட்டுள்ளது?  இந்தியாவிலேயே மிகப் பெரிய நகர்ப்புறச் சேரியான மும்பையில் உள்ள தாராவியில்  விரல்விட்டு எண்ணக்கூடிய குடும்பங்கள் தவிர, அங்கே வசித்து வரும் பிற பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழுவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.  குடும்ப அட்டைகளை இப்படிப் பிரிப்பது ஏழைகளைக் காவு கொள்ளும் திட்டம் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?

திட்ட கமிசனும் தேசிய ஆலோசனை கவுன்சிலும் இணைந்து சமீபத்தில் நடத்திய கூட்டத்தில், “வறுமைக் கோட்டுக்குக் கீழே/மேலே என்ற பிரிவினையின்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அரசுக்கு ஆண்டுதோறும் 1,40,000 கோடி ரூபாய் உணவு மானியமாகச் செலவாகும்; அதனால், அது நடைமுறை சாத்தியமற்றது.  மேலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்குக்கூட மாதமொன்றுக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமையைத் தவிர, வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எதையும் வழங்க முடியாது” எனத் திட்ட கமிசன் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

அதாவது, அரசு தனது கையிருப்பிலுள்ள தேவைக்கும் அதிகமான உணவு தானியத்தை மானிய விலையில் ஏழைகளுக்கு வழங்காது என்பது உறுதியாகிவிட்டது.   பூதம் புதையலைக் காத்த கதையாக மன்மோகன் சிங் இந்தக் கையிருப்பைப் பாதுகாத்துக் கொண்டிருக்கப் போகிறாரா அல்லது முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, அவரது ஆட்சியில் மக்கள் பட்டினி கிடந்த போதும் 2.8 கோடி டன் உணவுப் பொருட்களை ஐரோப்பிய மாடுகள் தின்பதற்காக ஏற்றமதி செய்தாரே, அதைப் போலச் செய்வாரா என்ற கேள்விக்கு எதிர்காலம் பதில் சொல்லக்கூடும்.

ஏழைகள் பட்டினி கிடக்கும்பொழுது அரசு அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்ற அறநெறியெல்லாம் மன்மோகன் சிங்கிடம் கிஞ்சித்தும் கிடையாது.  இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையே அலட்சியப்படுத்தி வரும் அவர், ஏழைகள் பட்டினி கிடப்பதையா ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வார்?

2010-11 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உணவு மானியத்தில் 450 கோடி ரூபாயை வெட்டிய அவரது அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் 5,00,000 கோடி ரூபாயை வரிச் சலுகையாக வாரி வழங்கியது.  இது பாமரனுக்கு ஓரவஞ்சனையாகத் தெரியலாம்.  ஆனால், மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் அலுவாலியா – ப.சிதம்பரம் கும்பலைப் பொருத்தவரை, இந்தப் பாதையில் சென்றால்தான் இந்தியா உலகத் தரத்தை அடைய முடியும் என்று கருதுகிறார்கள்.

அவர்கள் தமக்கு வாக்களித்த கோடிக்கணக்கான ஏழை – எளிய மற்றும் நடுத்தர மக்களின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்தவில்லை.  பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், புதுப் பணக்கார மேட்டுக்குடிக் கும்பலின் பிரதிநிதியாகத்தான் மன்மோகன் சிங் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.

சொல்லிக் கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இந்தக் கும்பலின் நலனை முன்னிறுத்தித்தான் போடப்படுகின்றன.  அவ்‘வளர்ச்சி’த் திட்டங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வை மேலும் மேலும் நாசப்படுத்தி வருவதை யாரேனும் கண்டித்தால், எதிர்த்துப் போராடினால், அவர்கள் அனைவரையும் “வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’’, “மாவோயிசத் தீவிரவாதிகள்” என முத்திரை குத்தி ஒடுக்கி வருகிறார், மன்மோகன் சிங்.  இப்படிப்பட்ட கும்பலிடம் உணவு மானியத்தை வெட்டக்கூடாது, ஏழை மக்களுக்கு கூடுதலாக உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என ஆலோசனை கூறுவதெல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும்!

(புதிய ஜனநாயகம், அக்டோபர், 2010)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி, புரட்சியாளர் உத்தம்சிங்! | மீள்பதிவு

(இக்கட்டுரை அக்டோபர் 27, 2021 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது)

***

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது பஞ்சாபின் துணை நிலை ஆளுநர் ஆக இருந்த மைக்கேல் ஓ டயரை சுட்டுக் கொன்றதன் மூலம் உத்தம்சிங் நீண்ட காலம் காத்திருந்து பழி வாங்கியவர் என்று பரவலாக அனைவராலும் அறியப்பட்டவர் ஆவார்.

ஒரு கொலையை செய்வதற்கு பல ஆண்டுகள் காத்திருந்தார் என்பது மட்டுமல்ல இன்னும் பல சிறப்புகள் அவரை அறிவதற்கு உள்ளன.

ஒவ்வொரு முறையும் அவரது பிறந்த நாள் மற்றும் இறந்த நாளின் போது அவரை பற்றி பல பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுகின்றன. ஜெனரல் டயரை அவர் சுட்டுக் கொன்றது பற்றிய நடவடிக்கையை ஹீரோத்தனமானதாகக் காட்டி பரவசமாக பதிவு செய்கின்றன. 2017-ம் ஆண்டு வெளியான ஒரு கட்டுரையில் டயரை அவனது வீட்டிலேயே வைத்து சுட்டுக் கொன்ற சம்பவத்தை, பாகிஸ்தானில் இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்திய சம்பவத்தோடு ஒப்பிட்டு எழுதப்பட்டிருந்தது.

பலரும் உத்தம் சிங்கை தனிப்பட்டமுறையில் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்குப் பழி வாங்குவதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் என்ற அடிப்படையில் மட்டுமே அவரை பற்றி எழுதுகிறார்கள் .

உத்தம் சிங்கின் வெறுப்பு தனிபட்டதல்ல; ஏகாதிபத்திய சாம்ராஜ்யத்தின் மீதுதான் என்பதையும் வண்ணமயமான அவரது எண்ணங்களையும் நோக்கங்களையும் லண்டனை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் என்ற எழுத்தாளர் தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

மற்ற இந்திய புரட்சியாளர்களை போலவே உத்தம்சிங் தனது நடவடிக்கைகளால் மக்கள் மனதில் நிறைந்து இருப்பவர். அவரின் முற்போக்கு புரட்சிகர சிந்தனையின் படி சாம்ராஜ்யத்தை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் இந்துத்துவ சக்திகள் உத்தம் சிங்கை தங்களுடைய முன்னோடியாக சித்தரிக்கின்றனர்.

தற்போது பல்வேறு சமூகங்களின் அடையாளமாக உத்தம்சிங் திகழ்கிறார். அவர் தலித் சமூகத்தின், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மிகச்சிறந்த வெற்றியாளராக சமீபகாலமாக புகழப்படுகிறார். லண்டனில் புலம்பெயர்ந்துள்ள சீக்கியர்களின் பாரம்பரியத்தில் தவிர்க்கமுடியாத அங்கமாக அவர் திகழ்கிறார்.

கெதர் கட்சி மற்றும் லண்டனை அடித்தளமாகக் கொண்டு செயல்பட்ட இந்திய தொழிலாளர் கழகம் ஆகிய இரு அமைப்புகளை வளர்ப்பதிலும் ஈடுபட்டு முன்னணியாக செயல்பட்டவர் ஆவார். அவருடைய நடவடிக்கைகளை வெறும் ஹீரோத்தனமான நடவடிக்கையாக மட்டுமே பார்க்காமல், சித்தாந்த ரீதியாக அரசியல் வாழ்விலிருந்து அவருடைய நடவடிக்கைகளை நாம் காணத் தொடங்குவோம் .

1899-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பஞ்சாபில் சங்ரூரரில் மிகவும் ஏழ்மையான ஒரு தலித் குடும்பத்தில் உத்தம்சிங் பிறந்தார். அவரின் இயற்பெயர் ஷேர் சிங். அவரது தாயாரான ஹன்ரம் கவுர் மிக இளம் வயதிலேயே இறந்ததை அடுத்து தந்தையான தேகல் சிங் அமிர்தசரசுக்கு புலம் பெயர முடிவு செய்கிறார். அவரின் புலம்பெயர்தலுக்கான அடிப்படையான நோக்கமே குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதுதான் .

அமிர்தசரஸ் சென்று அடைவதற்கு முன்னரே தேகல்சிங் மரணமடைகிறார். உத்தம் சிங்கும் அவரது சகோதரரும் புட்லிகரிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார்கள். அடுத்த சோகமாக அவரது சகோதரரும் விரைவில் இறந்து போகிறார். இப்படிப்பட்ட தொடர் பேரிழப்புகளுக்கிடையே தனது வாழ்வைத் தொடங்கினார் உத்தம் சிங்.

1940 மார்ச் 13ல், கேஸ்டன் வளாகத்தில் உத்தம் சிங் ஜெனரல் டயரை சுட்டுக்கொன்ற பிறகு கைது செய்யப்படுகிறார்.

முதலாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் தொழிலாளியாக (manual laborer) வேலைக்கு செல்கிறார். முதலாம் உலகப் போரின் நிறைவுக்கு பிறகு அவர் இந்தியாவுக்கு வந்தடைகிறார். அதற்குப் பின்னரே அவரின் புரட்சிகர வாழ்வு தொடங்குகிறது.

அவருடைய செயல்பாடுகள் நான்கு கண்டங்களில் 20 நாடுகளில் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் பரவியிருக்கின்றன. உடே சிங், ப்ரன்க் பிரெசில் ஆகிய பெயர்களில் செயல்பட்டிருக்கிறார்.

இறுதியாக தமக்கு முகமது சிங் ஆசாத் என்று பெயரிட்டு கொண்டார். மதவாத மற்றும் காலனிய எதிர்ப்பினை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்பெயரை இட்டுக்கொண்டார் .

அவர் புலம்பெயர் தொழிலாளியாக இருந்ததைத் தவிர 1937-ல் வெளியான Elephant என்ற திரைப்படத்திலும் the four feathers என்ற திரைப்படத்திலும் பணியாற்றியிருக்கிறார்.

புரட்சிகர வாழ்க்கை தொடங்குகிறது

முதலாம் உலகப்போரில் பணியாற்றிவிட்டு 1919-ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பிய உத்தம்சிங் தன் வாழ்நாள் இறுதி வரை கெதார் கட்சியுடனும் தொழிலாளி வர்க்க அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்தார்.

முதலாம் உலகப் போரில் இராணுவத்தில் இணைந்து வேலை செய்த அனைவருக்கும் நிலமும் பணமுடிப்பும் தருவதாக உறுதி அளித்த அரசு அதை நிறைவேற்றவில்லை .பிரிட்டிஷ் அரசு தனக்கு துரோகம் செய்ததை உணர்ந்திருந்தார் சிங். அவர் இரண்டு ஆண்டுகள் கடுமையாக வேலை செய்த போதும் அவரிடம் வெறும் 200 ரூபாய் மட்டுமே கையில் இருந்தது.

ஏற்கனவே பிரிட்டிஷ் அரசு தனக்கு செய்த துரோகத்தால் மனம் வெதும்பிக் கொண்டிருந்த உத்தம்சிங் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டு மனம் குமுறினார். இந்த உணர்வே அவரை புரட்சியாளர்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அக்காலகட்டத்தில் கெதர் கட்சியினர் புரட்சிகர இலக்கியங்களை பஞ்சாபியில் விநியோகித்து வந்தனர். அந்த இலக்கியங்கள் மூலமாகவே கெதார் கட்சிக்கு அவர் அறிமுகமானார்.

பின்னாளில் புரட்சிகர இலக்கியங்களை பஞ்சாப் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் சைபுதீன்கிட்ச்லே, மாஸ்டர் மோடாசிங் ஆகியோரை உகாண்டாவில் ரயில் இருப்புப் பாதை போடும் பணிக்கு செல்வதற்கு முன்பு சந்திக்கிறார்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள அனுபவமிக்க கெதார் தோழர்களை சந்தித்ததன் மூலம் மேலும் உறுதி அடைகிறார். 1921-ல் இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி வந்து அமிர்தசரசில் ஒரு கடையை நடத்துகிறார். பெயரளவுக்கு அது ஒரு கடையாக இருந்தாலும் பிற்காலத்தில் பஞ்சாபின் புரட்சிகர நடவடிக்கைக்கு தவிர்க்கமுடியாத ஒரு மையமாக மாறுகிறது. அதே காலகட்டத்தில் பப்பர காளி என்ற போராளி அமைப்போடும் தொடர்பில் இருந்தார்.

அமெரிக்காவில் உத்தம்சிங் வேலை செய்த காலத்தில் தான் இயக்கத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்படுகிறது. 1924-ம் ஆண்டு மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகிறார். இறுதியில் சான்ஸ் பிரான்சிஸ்கோவில் வேலை செய்தார். அப்போது அவர் அமெரிக்காவில் செயல்படும் கெதார் கட்சியின் உறுப்பினராக இருந்தார். புரட்சிகர இலக்கியங்களோடு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கெதார் கட்சிக்கு நபர்களையும் நிதியையும் திரட்டுவதிலும் முன்னணியாக இருந்தார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை காலகட்டத்தின் போது கெதார் கட்சிக்கு நிதி உதவி அளிக்க தொடங்கிய உத்தம் சிங், பின்நாட்களில் அமெரிக்காவின் பல நகரங்களில் கட்சியின் கிளைகளையும் நிதி ஆதாரங்களையும் உருவாக்கினார் என்று நவ்ஜோத் சிங் என்ற ஆய்வாளர் தெரிவிக்கிறார் .

டெட்ராய்ட், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ, நியூயார்க் போன்ற நகரங்களில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். கெதார் கட்சியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த போதும் அவர் ஆசாத் கட்சி என்ற ஒரு அமைப்பை தொடங்கினார். அது கெதார் கட்சியின் கிளை அமைப்பாகவே செயல்பட்டது .

ஆசாத் கட்சியின் நோக்கங்களாக, இந்திய விடுதலைக்கான பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல் மற்றும் இந்தியப் புரட்சிக்கு நிதி ஆதாரங்களை ஏற்படுத்துதல் ஆகியவையாகும்.

கார்பென்டர் ஆகவும் அமெரிக்க கப்பலில் மாலுமியாகவும் வேலை செய்தபோது ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு பயணம் செய்தார். இத்தாலி, ஜெர்மனி, போலந்து, ஈரான், ஹாங்காங், ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கெதார் கட்சிக் கிளைகளை நிறுவினார். 1927-ம் ஆண்டு அவர் இந்தியா திரும்புகையில் உலக அளவில் கெதர் கட்சி புரட்சியாளர்களின் வலைப்பின்னலை ஏற்படுத்தி இருந்த அதேசமயம் கம்யூனிச அகிலத்துடனும் தொடர்பு கொண்டிருந்தார்.

இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆயுதங்களுடன் அவர் இந்தியா வந்தடைந்தார். 1927-ம் ஆண்டு, ஆகஸ்ட் 30-ம் தேதி ஆயுத சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து இரண்டு ரிவால்வர், ஒரு பிஸ்டல், வெடிமருந்து மற்றும் தடை செய்யப்பட்ட புத்தகங்களான poison of slavery, lives of martyres ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டு தண்டனை கிடைத்தது. வழக்கு விசாரணையில் “பிரிட்டிஷாரிடம் இருந்து இந்த நாட்டை போல்ஷ்விக்மயத்தின் மூலமே விடுதலை செய்ய முடியும். அதற்காகவே நான் அமெரிக்காவிலிருந்து இங்கு வந்தேன்.” என்று தெரிவித்தார் உத்தம் சிங்.

சிறையிலும் சக கைதிகளிடம் தொடர்ந்து புரட்சிகர சிந்தனைகளையும் நடவடிக்கைகளையும் முன்னிறுத்தி செயல்பட்டதால் பிரிட்டிஷ் அரசு அவருக்கு கசையடிகளை பரிசளித்தது. இவரை கையாள்வதே சிறை நிர்வாகத்திற்கு மிகப் பெரிய பிரச்சினையானதால் அடிக்கடி சிறையை மாற்றினர். அப்படி ஒரு சிறை மாற்றத்தின் போதுதான் பகத்சிங்கை அவர் சந்தித்தார்.

ஜேபி சாண்டர்ஸ் கொலை வழக்கு மற்றும் மத்திய சட்டசபையில் குண்டுவீசி வழக்கிற்காக HSRA-ன் பகத்சிங் மற்றும் மற்ற புரட்சியாளர்களும்
மியான்வலி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். பகத்சிங் மற்றும் மற்ற புரட்சியாளர்களுடன் விரைவில் ஐக்கியமானதுடன் பகத்சிங்கின் ஆளுமையில் அதிகம் கவரப்பட்டார். அதனால்தான் பகத்சிங்கை தன்னுடைய குரு மற்றும் நண்பன் என்று அழைத்தார். அதனால் பகத்சிங் போட்டோவை எப்பொழுதும் தனது மணிபர்சில் வைத்திருந்திருக்கிறார்.

“என்னுடைய நண்பனை பிரிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய இறப்பிற்குப் பிறகு அவரை நான் கட்டாயமாக சந்திப்பேன், அவர் எனக்காக காத்திருப்பார். 23-ம் தேதி அவர் தூக்கிலடப்பட்ட அதே தேதியில் என்னை இவர்கள் தூக்கி விடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று 1940-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதியன்று எழுதிய கடிதத்தில் பகத்சிங்கின் தாக்கம் தன்னுள் ஏற்பட்டது குறித்து  மேற்கண்டவாறு எழுதுகிறார், உத்தம்சிங்

HSRA புரட்சியாளர்களின் சிந்தனையைப் பின்பற்றிய அதே சமயம் அவர்களைப் போலவே 44 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் பகத்சிங்கை சந்தித்த பின்னர் நாத்திகத்தை முழுமையாக ஏற்றதுடன் சீக்கியர்களின் நம்பிக்கையான முக்கிய அடையாளமான முடியையும் தாடியையும் அகற்றிருக்கிறார்.

1931 சிறையிலிருந்து விடுதலையான பின்னர் இரு ஆண்டுகள் கழித்து இங்கிலாந்துக்கு சென்றார். 7 ஆண்டுகள் அவர் அங்கேயே தங்கி இருந்த போதுதான் இத்தாலி, போலந்து, ஹங்கேரி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்தார். ஜெர்மனி சென்று அங்கிருந்து சோவியத் யூனியனுக்குச் சென்றார். ஜெர்மனி மற்றும் மாஸ்கோ துறைமுகங்களில் வேலை செய்யக்கூடிய முற்போக்காளர்கள் மத்தியில் இந்திய விடுதலைக்கான ஆதரவைப் பெற்றார்.

அவர் கட்சியின் ஆதரவாளராக மட்டுமல்ல சிறந்த அமைப்பாளராகவும் சிறந்த அளவில் சித்தாந்த மற்றும் செயல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய நபராகவும் இருந்தார்.

கெதார் கட்சியானது 1913-ம் ஆண்டு தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசின் அநீதிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய வன்முறையின் மூலமே தீர்வு காண முடியும் என்பதின் மீது நம்பிக்கை கொண்டிருந்தது. அதனால் பல முறை இந்தியாவில் ஆயுதம் தாங்கிய எழுச்சியை மேற்கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது.

1917-ம் ஆண்டு சோவியத் புரட்சிக்குப் பிறகு சோசலிசத்தின் பக்கம் அக்கட்சிக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. வர்க்கமற்ற சமுதாயத்தை படைக்க வேண்டுமென்றால் அதற்கான செயல் திட்டத்தை அடித்தட்டு வர்க்கத்தின் மத்தியில்தான் வேலை செய்ய வேண்டியதையும் உணர்ந்தது. அதற்குப் பிறகு சோசலிச கோட்பாடுகளையும் புரட்சிகர பயிற்சிகளையும் மேற்கொள்வதற்காக பல தோழர்களை சோசலிச ரஷியாவுக்கு அனுப்பி வைத்தது.

கெதார் கட்சியானது சர்வதேச கம்யூனிசத்தின் மீது ஈர்ப்பை கொண்டிருந்தது. அதனால்தான் உழைப்பாளர்கள் மற்றும் விவசாயிகளின் மத்தியில் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு பலரைச் சோவியத் யூனியனுக்கு அனுப்பியது. உத்தம் சிங் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சர்வதேச கம்யூனிச ஆதரவு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவருடைய கொள்கையோ கெதார் கட்சி, கம்யூனிச அகிலம், HSRA ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

அவர் தன் வாழ்நாள் முழுவதும் புரட்சியாளராக மட்டுமல்ல; புலம்பெயர் தொழிலாளியாகவும் வாழ்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு கடுமையாக போராடிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் தான் பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறையின் கீழ்தான் நான்கு கண்டங்களுக்கு பயணம்செய்து புரட்சிகர வேலையை மேற்கொண்டிருக்கிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த உத்தம்சிங் எவ்வித சமூக, குடும்ப, பொருளாதார ஆதரவும் இல்லாதவர். அதனாலேயே அவர் அந்த இல்லத்தில் இருந்து சிறுவயதிலேயே வெளியேறினார்.


படிக்க: சர்தார் உத்தம்சிங் திரைப்படம் : பயங்கரவாதியா ? புரட்சியாளரா ?


பிரிட்டிஷ் இந்திய இராணுவம், கிழக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்கா என பல இடங்களில் அவர் வேலை செய்திருக்கிறார். அமெரிக்காவில் அவர் ஹட்சன் மோட்டார்ஸ் கேரேஜ், ஹார்பர் போர்ட் பில்டிங் கம்பெனி, ஃபோர்டு அசம்பெளி லைன், டக்லஸ் ஏர்கிராப்ட் கம்பெனி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.

பல்வேறு உழைக்கும் வர்க்கத்தின் மத்தியில் வேலை செய்த உத்தம்சிங், 1934-ம் ஆண்டு இலையுதிர் காலத்தில்தான் லண்டனுக்கு வருகிறார்.

வியாபாரியாக, கார்பன்டரராக, எலக்ட்ரீசியனாக என பல தரப்பு வேலைகளை மேற்கொண்டு செயல்பட்டிருக்கிறார். சூரத் அலியால் லண்டனில் தோற்றுவிக்கப்பட்ட இந்தியன் ஒர்க்கர்ஸ் அசோசியேசனில் இணைகிறார். அந்த அமைப்பானது பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தொழிற்சங்கத்தின் இணைப்புச் சங்கமாகும்.

IWA ஆனது பிரிட்டனில் உள்ள புலம்பெயர் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, இந்திய விடுதலைக்கான பரப்புரையை மேற்கொள்வது ஆகியவை நோக்கங்களாகும்.

IWAல் இணைவதற்கு முன்பே உத்தம்சிங் பிரிட்டன் தொழிலாளர் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். எலக்ட்ரீசியன் தொழிற்சங்க யூனியனின் பிரதிநிதியாக அவர் தெரிவு செய்யப்பட்டு உள்ளூர் டிரேடு கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இருபது ஆண்டுகள், நான்கு கண்டங்களில் பயணம் செய்திருந்தாலும் அவர் ஒருபோதும் நிரந்தரமான வேலையை தேடிக் கொள்ளவில்லை. பலமடங்கு ஆபத்தான புலம்பெயர்ந்த வேலை மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளையே அவர் பெரிதும் விரும்பினார்.

உழைக்கும் வர்க்கத்துக்கான அரசியல் மற்றும் உழைக்கும் மக்களுக்கான சர்வதேசம் ஆகியவற்றுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டது என்பது, புலம்பெயர் தொழிலாளியாக தன் சொந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களின் மூலமாகவும் தான் நடைபெறுகிறது. தனது சொந்த வாழ்க்கை அனுபவத்தின் மூலம் சர்வதேச உழைக்கும் வர்க்க இயக்கமே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவத்தை எதிர்கொள்ளும் ஆற்றல்மிக்கது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.

நாம் ஏற்கெனவே கூறியது போல உத்தம் சிங், லண்டன் வந்ததன் நோக்கமே ஜாலியன் வாலாபாக் குற்றவாளியை கொல்வதற்காகத்தான் என்ற கூற்றின் மீது நவ்ஜீட் சிங் என்ற ஆய்வாளர் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறார்.

1. ஜெனரல் டயர் மீதான பழிவாங்கும் வெறி மட்டுமே அவருக்கு இருப்பின் ஏன் அவர் லார்டு ஜெட் லேண்ட், லமிங்டன், லூயிஸ்டேன் ஆகியோரை சுட்டுக்கொன்றார் ?

2. காக்ஸ்டன் ஹாலில் அவரை கைது செய்யும் பொழுது அவருடைய 1940 மற்றும் 1939 ஆம் ஆண்டு டைரிகள் கைப்பற்றப்பட்டன. அதில் லார்டு ஜெட் லேண்ட், லமிங்டன் ஆகியோர் முகவரிகள் இருந்தன, அது ஏன்?

3. 1933-ம் ஆண்டிலேயே இங்கிலாந்துக்கு வந்த உத்தம்சிங் ஏன் ஓ டயரை கொல்ல அவ்வளவு நீண்ட நாள் காலம் எடுத்துக் கொண்டார்?

4. 1927-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அப்பொழுது வெடிகுண்டுகள் மற்றும் ரிவால்வர் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அப்போது ஜெனரல் டயரை கொல்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டாரா?

ஜெனரல் டயரை தவிர அந்த காக்ஸ்டன் ஹாலில் முன்னாள் பெங்கால் கவர்னர், பஞ்சாபின் முன்னாள் துணை நிலை ஆளுநர், மும்பையின் முன்னாள் ஆளுநர் ஆகியோரும் இருந்தனர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இருந்ததாக அவருடைய வாக்குமூலம் தெரிவிக்கிறது.


படிக்க: ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !


மேலும் வெறும் பழிவாங்கும் நடவடிக்கையாக அல்லாமல் இந்த நடவடிக்கையானது, சோசலிசத்தால் ஈர்க்கப்பட்டு காலனித்துவ எதிர்ப்பு என்ற புரட்சிகர அரசியலின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும் என்பதையும் அவரது வாக்குமூலம் தெரிவிக்கிறது.

“நாங்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். சாம்ராஜ்ஜியத்தின் எந்திரத் துப்பாக்கிகள் எங்களது இந்திய மாணவர்கள் மீது எவ்வித தயக்கமுமின்றி பிரயோகம் செய்யப்படுகின்றன. இந்தியாவிலுள்ள என்னுடைய நண்பர்களை காட்டிலும் இங்கிலாந்தில் எனக்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள். நான் பொதுமக்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இங்கிலாந்திலுள்ள தொழிலாளிகள் மீது எனக்கு அதிகமான அக்கறை உள்ளது. ஆனாலும் இந்த அரசுக்கு எதிராகத்தான் நான் செயல்படுகிறேன். உங்கள் மக்கள் இந்த அரசால் பாதிக்கப்படுவது போலவே நாங்களும் பாதிக்கப்படுகிறோம்.” இது உத்தம்சிங் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் ஒரு பகுதியாகும்.

உத்தம்சிங், தன்னுடைய நண்பர் பகத்சிங்கை போலவே தன்னுடைய வாதங்களை முன்வைத்து பிறகு புரட்சிக்கு ஆதரவாகவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பி இருக்கிறார். 80 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 30, 1940-ம் ஆண்டு உத்தம்சிங் தூக்கிலிடப்பட்டார்.

பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய மோசமான படுகொலைக்கு அவர் பழி வாங்கினார். ஜாலியன் வாலாபாக்கில் ரத்தம் கலந்த மண்ணை எடுத்து அவர் உறுதி பூண்டதாக பலர் தெரிவிக்கிறார்கள்.

ஒரு பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டார் என்று மட்டும் சுருக்காமல் ,
நீண்டகாலமாக புரட்சிகர அரசியல், கெதார்கட்சி சர்வதேச அகிலம் ஆகியவற்றோடு கொண்டிருந்த தொடர்பு, சோசலிசத்தின் மூலமே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியும் என்ற காலனித்துவ எதிர்ப்புணர்வு ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே அவர் மேற்கொண்ட நடவடிக்கையையும் காண வேண்டும். அதற்காகவே அவரை நாம் கண்டிப்பாக நினைவு கூர்தல் வேண்டும்.

கட்டுரையாளர்கள்: ப்ரபல் சரண்,  ஹர்ஷ்வர்தன்
தமிழாக்கம்: மருது , மக்கள் அதிகாரம்
நன்றி : தி வயர்

(அக்டோபர் 27, 2021 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தோழர் மாவோ 131-வது பிறந்தநாள்: மாசேதுங் சிந்தனையை உயர்த்தி பிடிப்போம்

லகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான, தோழர் மாவோவின் 131-வது பிறந்தநாள்.

மாபெரும் தலைவர் ஸ்டாலினுக்குப் பிறகு மார்க்சிய-லெனினியப் பதாகையை உயர்த்திப் பிடித்து, அதன் புரட்சிகர உள்ளடக்கத்தை காத்து வளர்த்து, 60-களிலும், 70-களிலும் உலகமெங்கும் புதிய, புரட்சிகர உற்சாகத்தை ஊட்டிய மாபெரும் சித்தாந்தவாதியாக திகழ்ந்தவர்தான் தோழர் மாவோ.

ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் தூக்கியெறிந்த மாபெரும் சீன ஜனநாயகப் புரட்சியின் ஒளி விளக்காகவும், பிற பின்தங்கிய விவசாய நாட்டு புரட்சிகர இயக்கங்களுக்கு புதிய பாதையைக் காட்டிய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தவர்தான் தோழர் மாவோ.

காலனிய, அரைக்காலனிய, நவீன காலனிய அரை நிலப்பிரபுத்துவ விவசாய நாடுகளுடைய புரட்சியின் தன்மை புதிய ஜனநாயகம் என்ற வரையறுப்பை முதன்முதலில் முன்வைத்தவர் மாவோ. பாட்டாளி வர்க்கத் தலைமையிலான விவசாயப் புரட்சியை அச்சாணியாகக் கொண்டதே புதிய ஜனநாயகப் புரட்சி என்று அவர் வரையறுத்து வழிகாட்டினார். இந்நாடுகளில் உள்ள பெருமுதலாளித்துவப் பிரிவினர் தரகு முதலாளிகள் என்று விளக்கமளித்த மாவோ, தேசிய முதலாளிகளுடன் புதிய ஜனநாயகப் புரட்சி கட்டத்தில் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நடைமுறைப்படுத்திக் காட்டினார். இந்த நாடுகளில் விடுதலைக்கான பாதையாக மக்கள் யுத்தப் பாதை எனும் இராணுவ யுத்த தந்திரத்தை வகுத்து வழிகாட்டி, மார்க்சிய-லெனினியத்தை வளப்படுத்தினார்.

“முரண்பாடு பற்றி”, “நடைமுறை பற்றி”, “முரண்பாடுகளைச் சரியாகக் கையாளுவது பற்றி” – ஆகிய கட்டுரைகள் மூலம் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைச் செழுமைப்படுத்தி, சித்தாந்தத் துறையில் மார்க்சிய-லெனினியத்தை உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்தார். மக்கள்திரளைச் சார்ந்திருத்தல், அதிகார வர்க்கப் பாணியையும் மேட்டுக் குடித்தனத்தையும் ஒழித்தல், வர்க்கப் போராட்டத்தை கேந்திரக் கண்ணியாகக் கொள்ளுதல், உற்பத்தியைப் பெருக்குதல், விஞ்ஞானத்தை வளர்த்தல் என்ற கொள்கைகளை பொருளாதாரத் துறையில் செயல்படுத்தி மார்க்சிய-லெனினியத்திற்கு மேலும் உரமூட்டினார்.

சர்வதேச அளவில் எழுந்த குருச்சேவ் பாணி நவீன திரிபுவாதத்தை எதிர்த்து மாபெரும் விவாதம் நடத்தி மார்க்சிய-லெனினியத்தைப் பாதுகாத்து வளர்த்தார்.

எப்போதும், எதற்கும் மக்களைச் சார்ந்திருப்பது என்ற நடைமுறையினால் வெற்றியும், மக்கள் திரளின் ஆதரவையும் தொடர்ந்து பெற்றார். கட்சிக்குள் தோன்றிய வலது, இடது விலகல்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடனிருந்து விட்டுக் கொடுக்காமல் சளையாது போராடி வந்தார்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்வது; அடுத்தடுத்து கலாச்சாரப் புரட்சிகள் என்ற பாதையில்தான் முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சிகளை முறியடித்து, கம்யூனிசத்தை நோக்கி முன்னேற முடியும் என்ற மாசேதுங்கின் கோட்பாட்டையும் நடைமுறையையும் முன்னாள் சோசலிச நாடுகளின் அனுபவங்கள் எதிர்மறையில் நிரூபித்துக் காட்டிவிட்டன. ஏழை நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களையும், தேசிய விடுதலை யுத்தங்களையும் உற்சாகப்படுத்தி ஐக்கியப்படுத்தி வளர்த்த மாவோவின் மேல்நிலை வல்லரசுகள் பற்றிய ஆய்வுரைகள் இன்று சரியானதென நிரூபித்துக்காட்டியுள்ளன.

எஃகுறுதி, எளிமையான வாழ்வு, கடின உழைப்பு என்பதையே பண்புகளாகக் கொண்ட அம்மாபெரும் தலைவரை, பாலியல் வக்கிரம் பிடித்தவராக இன்று ஏகாதிபத்தியவாதிகள் கீழ்தரமாக அவதூறு செய்து வருகிறார்கள்.

போலிக் கம்யூனிஸ்டுகளோ அவரை, இடது தீவிரவாத தவறிழைத்து, சர்வதேச கம்யூனிச இயக்கத்தைப் பிளவுபடுத்திய குற்றவாளி என சாடி வருகிறார்கள். மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்பதன் மூலம், ஏகாதிபத்தியவாதிகள்- திருத்தல்வாதிகளின் அவதூறுகளையும் புரட்டல்களையும் முறியடிக்க தோழர் மாவோவின் நூறாவது பிறந்தநாளில் சூளுரைப்போம்! பருண்மையான நிலைமைக்கேற்ப மார்க்சியத்தைப் பருண்மையாகப் பிரயோகித்து வெற்றி கண்ட தோழர் மாவோவின் வழியில், இந்திய புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல இந்நாளில் உறுதியேற்போம்!

தோழர் மாவோவின் புகழ் நீடூழி வாழ்க!
மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனை தழைத்தோங்குக!

(டிசம்பர் 26, 1993 தோழர் மாவோவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தோழரே வா | “சிவப்பு அலை” புதிய பாடல் | டீசர்

தோழரே வா
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் “சிவப்பு அலை” கலைக் குழுவின்
புதிய பாடல் | டீசர்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



வாஜ்பாய் (1924 – 2018): நரி பரியான கதை! | மீள்பதிவு

1990-ல் நிலவிய அரசியல் சூழல்தான், வாஜ்பாயிக்கு மிதவாத முகமூடியை மாட்டி விடவேண்டிய கட்டாயத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியது.

‘‘எங்கெல்லாம் முசுலீம்கள் வசித்து வருகிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ விரும்புவதில்லை; அவர்கள் மற்றவர்களுடன் ஒன்று கலக்க விரும்புவதில்லை; தமது கருத்துக்களை அமைதியான முறையில், வழியில் பிரச்சாரம் செய்வதில்லை; மாறாக, தமது கருத்துக்களை அச்சுறுத்தல் மற்றும் தீவிரவாத வழியில்தான் பரப்புகிறார்கள்.”

இந்த வரிகளைப் படித்த மாத்திரத்திலேயே, ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட முத்துக்களை உதிர்த்திருக்கவே முடியாது என்பதைப் பாமரன்கூடப் புரிந்துகொண்டு விடுவான்.

யார் இதனைச் சொல்லியிருப்பார்கள்?

எச்ச ராஜா..? பொன்னார், அர்ஜுன் சம்பத், பிரவீன் தொகாடியா, யோகி ஆதித்யநாத்?

விடை எதிர்பாராதது. பண்பட்ட மனிதர் என்றும், எல்லோருக்கும் நல்லவர் என்றும் அஞ்சலி செலுத்தப்பட்ட வாஜ்பாயிதான் இந்த முத்தை உதிர்த்தவர். வாஜ்பாயி இந்துத்துவா நஞ்சைக் கவிதை வடிவில் சொல்லக்கூடிய தந்திரப் பேர்வழி. ஆனால், வாஜ்பாயிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதலாளித்துவப் பத்திரிகைகளும், மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளும் அவருக்கு மாட்டிவிடப்பட்ட மிதவாத முகமூடியைத்தான் உண்மை முகமாகக் காட்டின.

****

வாஜ்பாயி மூன்று முறை இந்தியாவின் பிரதமராக இருந்தார். 1996 நாடாளுமன்றத் தேர்தலில், தனிப்பெரும் கட்சி என்ற தகுதியில், வாஜ்பாயி பிரதமரானார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், வெறும் 13 நாட்களில் வாஜ்பாயி அரசு பதவி விலகியது.

13 நாட்களே அப்பதவியில் இருந்தாலும், தனது ஆட்சி யாருக்கு சேவை செய்யும் என்பதைக் காட்டிவிட்டுத்தான் பதவி விலகினார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இருந்த வாஜ்பாயி அரசிற்கு, எந்தவொரு கொள்கை முடிவை எடுக்கவும், புதிய திட்டங்கள்  ஒப்பந்தங்களுக்கு அனுமதி கொடுக்கவும் தார்மீக அடிப்படையும் கிடையாது. எனினும், தனது முதலீட்டிற்கு இலாப உத்திரவாதம் கோரிய அமெரிக்க என்ரான் நிறுவனத்துக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்து விட்டு பதவி விலகிய நேர்மையாளர்தான் வாஜ்பாயி.

ஊழல், பொதுச் சொத்தைக் கொள்ளையடித்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளை ஜெயாவும், அவரது கட்சியும் எதிர்கொண்டுவந்த கட்டத்தில்தான், ஆர்.எஸ்.எஸ். அவரது ஆதரவைப் பெற்று வாஜ்பாயியை இரண்டாம் முறையாக பிரதமராக்கியது. இந்த ஆதரவுக்கு ஜெயா கேட்ட விலையை  தன் மீதான வழக்குகளை  நீர்த்துப் போகச் செய்வது, தி.மு.க. ஆட்சியைக் கலைப்பது ஆகியவற்றைச் செய்து கொடுக்க வாஜ்பாயி அரசு கொஞ்சம்கூடத் தயங்கவேயில்லை.


படிக்க: வாஜ்பாயி புகழஞ்சலி செலுத்தும் தோழர்களுக்கு சில யோசனைகள் !


ஜெயா கும்பல் மீது நடந்துவந்த கிரிமனல் வழக்குகள் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்வதற்கு ஏற்றவாறு சட்டத்துறை அமைச்சர் பதவி அ.தி.மு.க.விற்கு வழங்கப்பட்டது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தின் மைய அரசின் வழக்குரைஞர்களாக யார்யாரை நியமிக்க வேண்டும் என்பதை போயசு தோட்டத்தில் வைத்து முடிவு செய்து, அவர்களுக்கான நியமன உத்தரவுகளையும் போயசு தோட்டத்தில் வைத்தே வழங்கினார், ஜெயா.

ஜெயா மீது வருமான வரித்துறை போட்டிருந்த வழக்குகளைக் கவனித்து வந்த அதிகாரிகள் அனைவரையும் ஜெயாவின் விருப்பப்படித் தூக்கியடித்து, அந்த வழக்குகளை ஆட்டங்காண வைத்தது, வாஜ்பாயி அரசு.

இவை அனைத்திற்கு மேலாக, ஜெயா, சசி கும்பல் மீது தமிழக அரசு தொடுத்திருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்குத் தமிழக அரசிற்கு உரிமை கிடையாதென்றும், மைய அரசு மட்டுமே அத்தகைய நீதிமன்றங்களை அமைக்க முடியும் என வாதிட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது, வாஜ்பாயி அரசு.

இந்த வழக்கில் தீர்ப்பு தமக்குச் சாதகமாக வராது எனப் புரிந்துகொண்டிருந்த பார்ப்பன பாசிஸ்டுகள், தீர்ப்பிற்கு முன்பே தன்னிச்சையாக அச்சிறப்பு நீதிமன்றங்கள் அனைத்தையும் கலைத்து, ஜெயா மீது போடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தையும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றினார்கள். மைய அரசின் இந்த அறிவிக்கை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைத்து பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டது. எனினும், இந்த அதிகார அத்துமீறலை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, சிறப்பு நீதிமன்றங்களுக்கு அனுமதி அளித்தது.

தமிழகத்தில் சட்டம் கெட்டுவிட்டது என்ற முகாந்திரத்தின் அடிப்படையில் தி.மு.க. ஆட்சியைக் கலைப்பது எனத் திட்டமிட்டிருந்த பார்ப்பன பாசிஸ்டுகள், அதற்கு அத்வானியின் கீழிருந்த உள்துறை அமைச்சகத்தைப் பயன்படுத்தினர். தி.மு.க. அரசை வேவு பார்ப்பதற்காகவே சிறப்பு அதிகாரிகள் பட்டாளத்தைத் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார், அத்வானி.

எனினும், தி.மு.க. ஆட்சியைக் கலைக்கும் சதித் திட்டம் ஜெயலலிதா எதிர்பார்த்த வேகத்தில் நிறைவேறாமல் இழுத்துக்கொண்டே போனதால், போயசு தோட்டத்து மகாராணி வாஜ்பாயிக்குக் கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெற்றார். அதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாயி அரசு தோற்றுப் போய், பதவி விலக நேர்ந்தது.

வாஜ்பாயியின் இரண்டாவது தவணை ஆட்சி ஊழல் மகாராணிக்கு ஜெ போட்டதென்றால், அவரது மூன்றாவது தவணை ஆட்சியில், இராணுவத் தளவாட பேர ஊழல், கார்கில் போரில் மரணமடைந்த சிப்பாய்களுக்குச் சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்கள் ஒதுக்கீடு ஊழல், பால்கோ, வீ.எஸ்.என்.எல்., ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான ஐந்து நட்சத்திர விடுதி ஆகியவற்றை அடிமாட்டு விலைக்கு விற்ற முறைகேடுகள் ஆகியவை அம்பலமாகி, அவை அனைத்தும் முறையான விசாரணையின்றிச் சட்டப்படியே அமுக்கப்பட்டன.

அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்த நிறுவனங்கள் கட்டண நிர்ணய முறைக்குப் பதிலாக வருவாய்ப் பகிர்வு முறைக்கு மாறிக் கொள்ள அனுமதி கொடுத்து, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய 8,000 கோடி ரூபாயை, அவர்களுக்கே மொய் விருந்தாகவும் படைத்தார் வாஜ்பாயி.

வாஜ்பாயியை பொக்ரான் நாயகனாகவும், கார்கில் போர் நாயகனாகவும் துதிபாடும் பத்திரிகைகள், அவரது ஆட்சியில் ஒரிசா, ம.பி., ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பட்டினியோடு போரிட்டுத் தோற்றுச் சாக நேர்ந்த அவலத்தை மூடிமறைக்கின்றன. மைய அரசிடம் 6 கோடி டன் அளவிற்கு அரிசியும் கோதுமையும் கையிருப்பில் இருந்தபோதுதான் ஒரிசா பகுதியில் பழங்குடியின மக்கள் ஒருவேளை கஞ்சிக்கு வழியின்றி மாண்டு போனார்கள்.

மாண்டு போன பழங்குடியின மக்களின் வயிற்றுக்குள் மாங்கொட்டைகள் இருந்ததைக் காட்டி, அவர்கள் பட்டினி கிடந்து இறக்கவில்லை, மாங்கொட்டை நஞ்சாகிப் போனதால்தான் இறந்துபோனதாக வக்கிரமாக வாதாடியது, வாஜ்பாயி அரசு.


படிக்க: வாரார் வாரார் நம்ம வாஜ்பாயி | ம.க.இ.க பாடல்


உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளின்படி விவசாய விளைபொருட்களின் தாராள இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், ரப்பர், தேயிலை, மக்காச் சோளம் பயிரிட்டு வந்த இந்திய சிறு விவசாயிகள் போண்டியாகித் தற்கொலை சாவிற்குத் தள்ளப்பட்டனர்.

பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை ‘‘வெற்றியை பா.ஜ.க. வினர் அவரது சாதனையாக சித்தரிக்கின்றனர்.  அது உண்மையல்ல. இனி அணுகுண்டு சோதனைகளை நடத்த மாட்டோம் என ஐ.நா. மன்றத்தில் வாக்குறுதி அளித்ததோடு, அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வாஜ்பாயி அரசு ஒத்துக் கொண்டது.

இதன் காரணமாக, இந்தியாவின் அணுஉலைகளைச் சோதனையிடும் உரிமை சர்வதேச அணுசக்தி கழகத்திற்கு அளிக்கப்பட்டது. மேலும், அணுகுண்டு சோதனைகளையடுத்து அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட இரகசியப் பேச்சுவார்த்தைகள், அடுத்துவந்த மன்மோகன் சிங் ஆட்சியில் முடிவடைந்து, இந்தியா மீது 123 ஒப்பந்தம் திணிக்கப்பட்டது.

400 கோடி ரூபாய் செலவில் இந்தியா ஒளிர்கிறது என்ற டாம்பீகப் பிரச்சாரத்தை முன்னெடுத்து, வாஜ்பாயி ஆட்சியைப் பொற்கால ஆட்சியாகக் காட்ட முயன்றது, பார்ப்பன  பாசிசக் கும்பல். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை மண்ணைக் கவ்வ வைத்து, அந்தப் பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்தனர் சாமானிய இந்திய மக்கள்.

*****

ந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் விஷத்தை வாஜ்பாயி எப்பொழுது கக்கினார் தெரியுமா? குஜராத்தில் முசுலீம் இனப் படுகொலை நடந்து முடிந்த அடுத்த மாதமே, ஏப்ரல் 2002 அந்த ரணத்தின் மீது உப்புத் தாளைத் தேய்ப்பது போல, பாதிக்கப்பட்ட முசுலீம்களின் மீதே அபாண்டமான பழியைச் சுமத்தினார், வாஜ்பாயி. இதற்காக அவரது கவிதை உள்ளம் வெட்கப்படவில்லை.

குஜராத் முசுலீம் படுகொலையை நாம் தனித்துப் பார்த்துவிட முடியாது. வாஜ்பாயி ஆட்சியின்போது நடந்த ஒரிசா கிறித்தவ பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல், அம்மாநிலத்தில் கிறித்தவ பாதிரியாரும் அவரது மகன்களும் இந்து மதவெறிக் கும்பலால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது, குஜராத்திலும், ம.பி.யிலும், டெல்லியிலும் கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு, கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டது ஆகிய சம்பவங்களின் தொடர்ச்சிதான் நரேந்திர மோடி தலைமையில் நடத்தப்பட்ட முசுலீம் இனப்படுகொலை.

ஒரிசாவில் கிறித்தவப் பழங்குடியினர் தாக்கப்பட்டு, கிறித்தவ மத போதகர் கிரஹாம் ஸ்டேயின்ஸும், அவரது இரு மகன்களும் பஜ்ரங் தள் குண்டர்களால் எரித்துக் கொல்லப்பட்டபோது, வாஜ்பாயி அந்தக் குற்றத்தைச் செய்த இந்துத்துவா கிரிமினல்களைக் கடுமையாகத் தண்டிக்கக் கோரவில்லை. மாறாக, மத மாற்றம் தொடர்பாக தேசிய விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி, எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்த்தார்.

குஜராத் முசுலீம் படுகொலைக்கு முன்பாக நடந்த இந்த ஒவ்வொரு சம்பவமும், நடப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியல்ல, ஆர்.எஸ்.எஸ். ஆட்சிதான் என்பதை உணர்த்தின. இந்தப் பக்கபலத்தோடுதான் நரேந்திர மோடி குஜராத்தில் முசுலீம் இனப்படுகொலையை நடத்தி முடித்தார்.

ஒருபுறம், ‘‘இனி நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அயல்நாடுகளுக்குச் செல்வேன்?”, ‘‘மோடி ராஜ தர்மத்தை மதித்து நடக்க வேண்டும்” என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடித்த அவர், இன்னொருபுறமோ முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மோடிக்கு இணையாகவே நியாயப்படுத்தவும் செய்தார்.

‘‘ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினையுண்டு” எனக் கூறி, குஜராத் படுகொலையை மோடி பச்சையாக நியாயப்படுத்தினார் என்றால், வாஜ்பாயி, ‘‘இதனைத் தொடங்கி வைத்தது யார்?”, ‘‘கோத்ரா சம்பவத்தை சிறுபான்மை சமூகத்தினர் ஏன் கண்டிக்கவில்லை?” என்றெல்லாம் நரித்தந்திரத்தோடு கேள்விகளை எழுப்பி, மொத்தப் பழியையும் முசுலீம்கள் மீதே தூக்கிப் போட்டார்.

குஜராத் படுகொலைகளையடுத்து மோடியைப் பதவி விலக வாஜ்பாயி கோரவில்லையா என அவரது துதிபாடிகள் வினவலாம். வாஜ்பாயி வெளிப்படையாக மோடியைப் பதவி விலகக் கோரவில்லை. எனினும், மோடியை நீக்குவதற்கு திரைமறைவில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பா.ஜ.க.வின் கோவா மாநாட்டில் முறியடிக்கப்பட்டது. மேலும், வாஜ்பாயியின் இந்த முயற்சியும்கூட அத்வானிக்கு எதிரான கோஷ்டிப் பூசலின் ஒரு பகுதியே தவிர, முசுலீம்களுக்கு நீதி கிடைப்பதற்காக வாஜ்பாயி இந்த முயற்சியில் இறங்கவில்லை.

பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய வழக்கில் சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகிய மூவரையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தபோது, அதனை முற்றிலுமாக நிராகரித்து, அக்குற்றவாளிகளை ஆதரித்து நாடாளுமன்றத்திலேயே உரையாற்றினார், வாஜ்பாயி. கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருந்த மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளும் வாஜ்பாயிக்கு ஒத்து ஊதியதால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இதனைவிடக் கேடாக, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட ஏழு பேர் மீது சுமத்தப்பட்டிருந்த சதிக் குற்றச்சாட்டிலிருந்து அவர்களை விடுவித்தது வாஜ்பாயி அரசு.

ஒட்டகத்தைக் கூடாரத்திற்குள் நுழைத்துவிடும் முயற்சியைப் போல, பாபர் மசூதி வளாகத்தை ஒட்டியிருந்த காலி மனையை விசுவ இந்து பரிசத்திடம் ஒப்படைக்கும் சதி வேலைகளைச் செய்துவந்த வாஜ்பாயி அரசு, இதற்காக சங்கராச்சாரி ஜெயேந்திரனை சமாதானத் தூதுவராகப் பயன்படுத்தி மூக்கறுபட்டது. எனினும், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவதற்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த தூண்களுக்குப் பூசை நடத்துவதற்கு அனுமதித்து, அந்தப் பிரச்சினை அணையாமலேயே பார்த்துக் கொண்டது.

பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவிலைக் கட்டுவது என்ற இந்துத்துவா திட்டத்தை வாஜ்பாயி என்றுமே கைகழுவியதில்லை. அத்வானி ரத யாத்திரை நடத்திய சமயத்திலும், அதற்கு முன்பாகவும் ‘‘இந்துக்கள்தான் அயோத்தியின் உண்மையான வாரிசுதாரர்கள் எனப் பேசி வந்த வாஜ்பாயி, பிரதமர் ஆன பிறகு, ‘‘முசுலீம்கள் பாபர் மசூதி வளாகத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நடுநிலையாளர் போலவும், ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது நிறைவேறாத தேசிய அபிலாஷை என்று இந்து மதவெறியோடும் பேசி வந்தார்.

*****

தி.மு.க. தலைவர் கருணாநிதி வாஜ்பாயியை, ‘‘தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர் எனக் குறிப்பிட்டபொழுது, அதற்கு வாஜ்பாயி, ‘‘வேப்பமரம் ஒருபோதும் மாம்பழத்தைத் தராது” எனப் பதில் அளித்து, தான் என்றுமே ஆர்.எஸ்.எஸ். சுயம்சேவக்தான் என்பதைச் சொல்லாமல் சொன்னார்.

மேலும், 1996 -ம் ஆண்டு அளித்த நேர்காணலில், ‘‘தான் மிதவாதி, தனது கட்சி அப்படிப்பட்டதல்ல; தான் மதச்சார்பற்றவன், தனது கட்சி அப்படிப்பட்டதல்ல எனக் கூறப்படுவதெல்லாம், இடதுசாரிகளின் கோயபல்சு பாணி பிரச்சாரமாகும்” என விமர்சித்து, பச்சையாகவே தான் இந்துத்துவவாதிதான் எனப் பிரகடனப்படுத்தினார்.

ஆனாலும், வாஜ்பாயி மிதவாதியாகக் கட்டமைக்கப்பட்டதன் காரணமென்ன? இதற்கான பதில் வாஜ்பாயின் தனிப்பட்ட ஆளுமையில் அல்ல, 1990 நிலவிய அரசியல்  சூழ்நிலையில்தான் பொதிந்திருக்கிறது.

1980 பிற்பகுதியில் இருந்தே இந்திய அரசியல் அரங்கில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஒரு வலுவான சக்தியாக எழத் தொடங்கியது. மண்டல் கமிசன் அமலாக்கத்திற்கு எதிராக ராமன் கோவில் விவகாரத்தைக் கையில் எடுத்து ஆதிக்க சாதி இந்துக்களை அணிதிரட்டியதன் மூலம் பா.ஜ.க.வின் வளர்ச்சி சாத்தியமானது. 1989 -இல் 85, 1991 -இல் 120, 1996 -இல் 161, 1998 -இல் 180 எனக் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றினாலும், தனித்து ஆட்சியமைக்கும் அளவிற்கு பா.ஜ.க.வால் செல்வாக்குப் பெற முடியவில்லை.

இன்னொருபுறத்திலோ 1991-இல் உ.பி.யில் தனித்து ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நடந்த 1993 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை. 1996 சட்டமன்றத் தேர்தலில் தனது சித்தாந்தத்துக்கு நேர் எதிரான பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்துதான் ஆட்சியமைக்க முடிந்தது. இந்த நிகழ்வுகள் இராமர் கோவில், முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி பிரச்சாரத்தை மட்டுமே நடத்தி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை பா.ஜ.க.வுக்கு உணர்த்தின. எனவே, ஒரு பரந்த கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ்., 1996 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மும்பையில் நடந்த பா.ஜ.க. பேரணியில் அத்வானியைக் கொண்டே, வாஜ்பாய்தான் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது.

ரத யாத்திரையைத் தலைமை தாங்கி நடத்திய அத்வானி இந்துத் தீவிரவாதி என அறியப்பட்ட நிலையில், வாஜ்பாயியை முன்னிறுத்துவதைத் தவிர ஆர்.எஸ்.எஸ். -க்கு வேறு வாய்ப்பில்லை. மேலும், வாஜ்பாயி நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததும் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததும் அவரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்குச் சாதகமாக இருந்தன.

இதன் பிறகுதான் வாஜ்பாயிக்கு மிதவாத மூகமூடி மாட்டிவிடும் வேலைகள் தொடங்கின. வாஜ்பாயியை மிதவாதியாக முன்னிறுத்தும் தேவை ஆர்.எஸ்.எஸ். -க்கு  மட்டுமல்ல, காங்கிரசோடு கூட்டணி சேர முடியாத தெலுங்கு தேசம், திரிணாமூல் காங்கிரசு போன்ற மாநில கட்சிகளுக்கும் அவசியமாக இருந்தது. 1999 -இல் பா.ஜ.க.வின் கூட்டணியை முறித்துக்கொண்ட அ.தி.மு.க. காங்கிரசு பக்கம் சாய, தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி அல்ல என அறிவித்தது.

இப்படி பித்தளையைத் தங்கமாக மாற்றும் ரசவாதத்தை ஆர்.எஸ்.எஸ். அதனை ஆதரிக்கும் பார்ப்பனக் கும்பலும் வாஜ்பாயியோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அத்வானி கருப்புப் பணத்திற்கு எதிரான ரத யாத்திரையை நடத்தினாரேயொழிய, ராமர் கோவிலைப் பற்றிப் பேசவில்லை. அதற்கு முன்னதாகவே, பாகிஸ்தானின் தந்தை என அறியப்படும் ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்றும், இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்டவர் என்றும் அஞ்சலி செலுத்தி, தன்னை மிதவாதியாகக் காட்டிக்கொண்டார்.

அத்வானி கருப்புப் பணத்திற்கு எதிரான போராளி என்ற முகமூடியை மாட்டிக் கொண்டபோது, நரேந்திர மோடி இந்து சாம்ராட்டாக முன்னிறுத்தப்பட்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடி மாட்டப்பட்டவுடன், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்துக்களின் காவலன் ஆனார்.

வாஜ்பாயிக்கு மாட்டப்பட்ட முகமூடியை ஆர்.எஸ்.எஸ். சேர்ந்த கோவிந்தாச்சார்யாவே கிழித்தெறிந்தார். அத்வானிக்கு மாட்டப்பட்ட முகமூடி சாமானிய மக்களிடம் எடுபடாமலே கிழிந்து போய், ஓய்வெடுக்கப் போய்விட்டது. மோடி தனது முகமூடியை, தானே கிழித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னும் முகமூடிகளும், அதற்கு ஏற்ற முகங்களும் ஆர்.எஸ்.எஸ். கைவசம் இருப்பதை நாம் மறந்துவிடலாகாது.


செல்வம்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2018 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தீர்க்கப்படவேண்டிய வழக்கு! | டிசம்பர் 25 வெண்மணி நினைவு தின கவிதை | மீள்பதிவு

தீர்க்கப்படவேண்டிய வழக்கு!

விளகாத இருளை கிழிக்க
வீடுதோறும் ஊடுருவும் சிமிளி விளக்கின் ஒளி
இருள்படிந்த வாழ்வை அகற்றுவதில்லை

கிழக்கே தோன்றும் கதிரவனாய்
கிராமம்தோறும் தோன்றி
விடியலை மீட்டியது
விவசாயிகளின் குழந்தையாய்

கீழத்தஞ்சையில் தவழ்ந்த செங்கொடி!

தன் துடிப்பை நிறுத்தி
துக்கத்தினை வெளிப்படுத்தி
தொலைதூரம் வரை துவண்டே கிடந்தது

தோழர்களே,
அந்த துயர நாள் உங்களுக்குத் தெரியுமா?
கைப்பேசியில் கதைப்பேசி
ஊர்கடக்கும் காரியமல்ல
சொல்லில் சுருக்கிட முடியாத

வரலாற்று சுவடு அது

தன்மீது தினிக்கும்
ஆண்டையின் உத்தரவை முடிக்க
கண் சொருகும் நாளிகை நெருங்கிடும்
உறை நெல் குத்தி
உமியை நீக்கி
ஒருபிடி சோறு உண்டு உறங்கிட
இரண்டொரு மணிகள் தான் கிடைக்கும்
மணையில் அசதியைப் போக்க
அசந்திட முடியாது

புலரும் முன்னே கேட்கும்
கொம்போலியின் சத்தம்
தூக்கத்தைக் கலைத்து

புஞ்சைக்கும் நஞ்சைக்கும் விரட்டும்

நீரா தண்ணி வாயிலிட்டு
வாய்க்கால் தண்ணியை முகத்தில் வாரியிறைத்து
ஊதும் குளிரில் நடுங்கும் தேகத்தைக் காக்க
நைந்துபோன சனல்சாக்கை உடலில் தைக்க
நிலவொளியில் அடியெடுத்து வைக்கும் கால்கள்
வளங்கொழிக்க வயல்வெளியில் விதை தெளிக்கும்
நாற்றுப் பறிக்கும் கதிர் அறுக்கும்
நெல் அடிக்கும் நெடுக்க மூட்டை அடுக்கும்

பகல் போயும் நிமிராமல் உழைக்கும்திண்ணை சுகம் தெரியாத பண்ணையடிமைகள்!

பெண்ணாளோ பால் கறக்கும் முன்பே
தெருவாசல் கூட்டி
பசுசானம் தெளித்து கொள்ளை வாசல் கூட்டி
கொட்டிலை வழித்து
குதிர் மெழுகி
குனிந்து கூப்பிட்டால்
குண்டு கலயத்தில் இரும்பு பித்தளை மரக்காலில்
உண்டு கஞ்சி இல்லாமல் போனாலும்

சிண்டு பண்ணையாரின் சீண்டும் பார்வைக்கு
இணங்க வேண்டும்
முழங்கால் தெரிய முந்தானை சொருக வேண்டும்

நல்லது கெட்டதுக்கு நகர முடியாது
நாற்று நட்டாலும் களையெடுத்தாலும்
கறுக்காய் புடைத்தாலும்

கரி இருள் சூளும் போது தான்
கரையேற வேண்டும்

செம்பட்டை தலை சிறுசுகளோ
அம்மனத்தோடு அலைந்து திரியும்
பண்ணையின் ஆடு, மாடு பொழுதும் மேய்க்கும்
புல்லறுத்து போடும்
பூரான், பாம்பு புழங்கும்
வைக்கோல் போரில் ஓடிக் களைந்து உறங்கும்

இரவானால் ஏராளம் குழந்தையோடு விளையாடும்
குட்டி நிலாக்களின் கொஞ்சுதல்
கொஞ்ச நேரம் தான்
குடிசையில் கூரை கிடையாது
வெயில், பனியைத் தடுக்க
சுரையோ, பூசனி கொடியோ குறுக்க நெடுக்க படர்ந்திருக்கும்

காயோ கனியோ பூத்தால்
கரிச்சட்டிக்கு வராது
பண்ணையின் வாசலுக்குத் தான் போக வேண்டும்
நண்டோ நத்தையோ தான் நாவுக்குக் கிடைக்கும்

விடலை பருவம் அடைந்தால்
வீட்டைவிட்டுச் செல்லக் கூடாது
தீட்டுப்பட்டு விடும் என தெருவார்கள் ஏசுவதுண்டு

ஏதோ பண்ணையிலிருந்து
வீசும் துணிதான் உடுத்த வேண்டும்
சடங்கு முடிக்க வேண்டும்
மணம் முடிந்தாலோ பண்ணையாரிடம் ஆசி வாங்க வேண்டும்
குடிசையில் நல்லது கூடாது
ஆண்டையின் ஆணை இல்லாமல் எதுவும் அசையாது

உடல் விரும்பாமல் உழவுக்கு மறுத்தாலோ
சவுக்கடியில் தப்ப முடியாது
சாணிப்பாலைத் துப்ப முடியாது
வரிவிழ அடிவிழும்
வயிறு நிறைய சாணிக்கரைசல் குடிக்க வேண்டும்
கப்பிகல்லில் மண்டியிட்டுச் செல்ல வேண்டும்
அப்பிய நெருஞ்சி முள்ளில் உருண்டு புரள வேண்டும்
ஐயோ என்று சொல்லக் கூடாது
ஐயா என்று தான் சொல்ல வேண்டும்

முதலியார், மண்றாடியார், தேசிகர்,
வாண்டையார், நாயக்கர் எனக் கொடிய மிருகங்கள்
ஏவிய கொடிய செயல்கள் ஏராளம்
அத்தனை மிருகமும் நிரள செய்தது
43-ல் நெடுங்காடியில் அடியெடுத்து வைத்த
செங்கொடி இயக்கம்!
தென்கரை மடாதிபதிகளின் எச்சரிக்கை எடுத்தெறிந்து
விவசாயிகளிடம் சேர்த்தது
அரை லிட்டர் கூலி உயர்வோடு
அறுவடை செய்து செந்நெல்லை

குருதி குடிக்கவே வாழும் ஓநாய்கள்
உயிரையும் உடைமையும் காக்க
நெல் உற்பத்தியாளர் சங்கமென்று
தஞ்சையில் உருவெடுத்தது

நாகை தலைமை
இரிஞ்சூர் கோபாலகிருஷணன் நாயக்கருக்கு வரவே
தாழ்த்தப்பட்டோரைத் தாக்குவதும்
சேரிகளைச் சூறையாடுவதும்
குடிசைகளைக் கொளுத்துவதுமாய் இருந்தது

25.12.1968 அன்றும் அப்படிதான்
கோழை நரியின் சாதிவெறியும் சாதிவெறியும்
ஈட்டி எரியெண்ணெய்

அரிவாள், கத்தி, சுளுக்கி, என
ஆட்களுடன் கீழ் வெண்மணியைச் சூழ்ந்தது

காலைப் பொழுதுக்காக கண் அயர்ந்தவர்களின் தூக்கமும்
துடித்து அழுதது

நடுராத்திரியில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல்
நாலாபுறமும் ஓடிய கூலி விவசாயிகளை
வெட்டி கொழுத்துங்கடா என்றது
ஆண்டையின் ஆணை
குத்தி குதறச் செய்த கூலிப்படை கொடூர தாக்குதலில்
விட்டுவிடென கெஞ்சியவர்களின்
கையறு நிலையின் கவசத்தையும்
சுட்டு வீழ்த்தியது காலி கூட்டம்

ஒருசொட்டு சுவாசத்திற்காக
ராமையாவின் குடிசைக்குள் புகுந்த
44 உயிரை தாழிட்டு தீமூட்டியது

தேகம் தீயில் சுடச்சுட
விளைச்சலில் தூக்கியெறிந்த
கைக்குழந்தையும் விடவில்லை
சாதி தீ திங்கதிங்க
உரிமைக் குரல் ஒவ்வொன்றும்
ஊமை குரலாய் ஓய்ந்தது

தோழர்களே
வெந்துதனிந்த கீழ் வெண்மணி
நம்மிடம் கேட்பது ஒன்றை மட்டும்தான்
அன்று ஆண்டையால் ஒரு கிராமம்
இன்று காவி – கார்ப்பரேட் பாசிசத்தால்
பல கிராம மக்கள்
மண் காய்ந்து அதன் மனம் காய்ந்து
மரணமடைவதைக் காண முடியும்

ஆண்டை சாதிகளோ
அதே ரத்த வெறியோடு அலைகிறது
பிறர் சாதியினர் மீது
அன்றாடம் தாக்குதல்
கொலை, கொள்ளை, பறிமுதல் செய்கிறது

வீர மண்ணில்
செங்கொடி பறக்குமா?
சிவப்பதிகாரம் பற்றி படருமா?
அந்த தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம்
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை நிலைகுலைய வைப்போம்!
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவோம்!


தோழர் அன்பு

(டிசம்பர் 25, 2023 அன்று வினவு தளத்தில் வெளியானது)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கீழ்வெண்மணியின் நெருப்பு நம் நெஞ்சில் | மீள்பதிவு

“அய்யோ எரியுதே! யாராவது காப்பாத்துங்களேன்! அம்மா-அப்பா” என்ற அலறல்கள் செவிப்பறையைக் கிழிக்கின்றன. எரியும் குடிசைக்குள்ளிருந்து நீயாவது பொழைச்சுக்கோ என்று தன் குழந்தையை வெளியில் தூக்கிப் போடுகிறாள் அந்தத் தாய் எரிந்து கொண்டே. அதை மீண்டும் தூக்கி நெருப்பில் போடுகிறான் கோபாலகிருஷ்ணநாயுடு எனும் பண்ணையாரின் கூலிப்படைத் தலைவன் . “கூலியாடா வேண்டும்? செவப்புக் கொடியாத் தூக்குறீங்க? செத்துத் தொலைங்கடா!” என்கிறான். கீழ்வெண்மணியில் நடந்த இந்த படுகொலை 1968 டிசம்பர் 25 அன்று நடந்தது.

சூரியன் எழுவதற்கு முன் எழுந்து மறைந்த பின்னரும்கூட வேலை ஓயாது விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும். நிலமெல்லாம் பண்ணையாருக்குச் சொந்தம். ஓய்வெடுக்க நேரமில்லை. கூலி கேட்கத் துணிவில்லை, மீறிக் கேட்டால் சாணிப்பாலும், சவுக்கடியும்தான் மிஞ்சும். சவுக்கடியால் தெறித்த ரத்தம்பட்டுக் களிமண்ணும் செம்மண்ணாகும்.


படிக்க : வெண்மணி தியாகிகள் நினைவு நாள்


இந்த அநியாயத்துக்கு எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டுகிறார்கள் கம்யூனிஸ்டுகள். இருள் நிறைந்த தங்களின் வாழ்வை மீட்க வந்த கம்யூனிச இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் மக்கள். தம் குருதி தோய்ந்த செங்கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். “உழுபவனுக்கே நிலம்; உழைப்பவனுக்கே அதிகாரம்” என்ற முழக்கம் பண்ணையார்களை நடுங்கச் செய்கிறது.

அரை லிட்டர் நெல்கூலி உயர்வு கேட்டு கீழ்வெண்மணியில் தொடங்கியது போராட்டம். வெளியூர்காரர்களை வைத்து அறுவடை செய்யலாம் என்ற ஆண்டைகளின் கனவில் மண்ணள்ளி போட்டார்கள் மக்கள். வெளியூர் ஆட்கள் வந்த வண்டிகளை மறித்து அவர்களைத் திருப்பி அனுப்பினார்கள். பண்ணையாரின் அடியாட்கள் மக்களைத் தாக்க, செங்கொடிகள் மக்களைக் காக்கின்றன. அடியாட்களை விரட்டுகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் செங்கொடிகள் ஆண்டைகளை அச்சுறுத்துகின்றன.

பண்ணையாளர்களின் சங்கமான நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவனான இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ணநாயுடு சிவப்புக் கொடியை இறக்கிவிட்டுத் தங்களின் மஞ்சள் கொடியை ஏற்றினால் கேட்ட கூலியைத் தருவதாகக் கூறி, இல்லையேல் கீழ்வெண்மணி எரிக்கப்படும் என்று மேடைகளிக் கொக்கரித்தான். போலீசும், அரசும் அமைதியாக வேடிக்கைப் பார்த்தன. இனியும் இந்த அரசை நம்பிப் பயனில்லை. கீழ்வெண்மணியை செங்கொடிகள் பாதுகாத்தன. அதுவரை அடி வாங்கிய உழைக்கும் மக்கள் திருப்பியடிக்க ஆரம்பித்தார்கள்.

டிசம்பர் 25 இரவு 8 மணிக்கு திடீரெனப் புகுந்தது கோபாலகிருஷ்ண நாயுடுவின் வெறிநாய்ப்படை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளியது. தப்பி ஓடிய மக்கள் கூலித்தொழிலாளி ராமையாவின் குடிசையில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 48 பேர் எல்லாம் கரிக்கட்டைகளாக அடுத்த நாள் காலையில்.

விவசாயத் தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டார்கள் – இது நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்.

இரு கிராம மக்களிடையே நடந்த சண்டை – இது தமிழக அரசு. ஒரு நிலக்கிழார் தானே எரித்துக் கொலை செய்திருக்க மாட்டார் – கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுதலை செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு.

“உயிரை விட்டாலும் செங்கொடியை விடேன்” என்று உரிமைகளுக்காகப் போராடிய கீழ்வெண்மணியின் மரபுதான் நம் மரபு. வர்க்கமும், சாதியும் பின்னிப் பிணைந்து இருக்கிற இந்த சமூகத்தில் உழைக்கும் வர்க்கமாக ஒன்றுபடாமல் ஆதிக்க சாதிவெறிக்கு, பண்ணை கொடுமைக்குக் கல்லறை கட்டமுடியாது என்பதைக் கீழ்வெண்மணி நமக்குக் கற்றுத் தருகிறது.


படிக்க : நூல் அறிமுகம் : தென்பறை முதல் வெண்மணி வரை


1980 அதிகாலையில் ஒரு நாள்…

கீழ்வெண்மணியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவுத்தூணுக்கு அருகே 48 துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது கோபாலகிருஷ்ண நாயுடுவின் உடல். இது கீழ்வெண்மணி மக்களின்-நக்சல்பாரிகளின் தீர்ப்பு.

வர்க்க-சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் அரசு எந்திரமானது உழைக்கும் மக்களுக்கானது இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

பண்ணைக்கு உழைத்துக் கொடுத்த மக்களை நெருப்பிலிட்டுப் பொசுக்கிய, ஆதிக்க சாதிவெறி பிடித்த பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடுவைப் போன்றவர்கள் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும், ஆதிக்க சாதிக் கட்சிகளிலும், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற மதவெறி அமைப்புகளிலும் நிரம்பி வழிகிறார்கள். நம்மிடமோ கீழ்வெண்மணியின் நெருப்பு தகித்துக் கொண்டிருக்கிறது.

– மருது
புதிய மாணவன், டிசம்பர் 2015

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு (1925-2024): தியாகங்கள் உரமாகின்றன

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு (1925-2024)
தியாகங்கள் உரமாகின்றன, சமுதாய மாற்றத்திற்கு வித்திடுகின்றன!

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திலிருந்து நமது நாட்டை விடுதலை செய்ய விரும்பிய விடுதலைப் போராட்ட வீரர்களில் பலர், 1917 ரசிய சோசலிசப் புரட்சியின் மூலம் உந்துதல் பெற்று கம்யூனிசத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு செயல்படத் தொடங்கியதன் தொடர்ச்சியாக 1925 டிசம்பர் 25-ஆம் நாளில் கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரையிலான இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறானது பல்லாயிரக்கணக்கான தோழர்கள், கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்களின் அளப்பரிய தியாகமும் அவர்கள் சிந்திய செங்குருதியும் நிறைந்ததாகும்.

அன்றைக்கு, கம்யூனிசக் கொள்கையின் ஈர்ப்பினால் உந்தப்பட்ட தோழர்கள் தலைமையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் ஏராளம். வங்காளத்தில் தெபாகா விவசாயிகள் எழுச்சி; மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் வார்லி பழங்குடி மக்களின் எழுச்சி; கேரளத்தில் வயலாறு-புன்னப்புரா தொழிலாளர் போராட்டம்; தமிழ்நாட்டில் கீழத்தஞ்சை கூலி விவசாயிகளின் செங்கொடி இயக்கம்; தபால் தந்தி ஊழியர் போராட்டம்; மும்பை துறைமுகத் தொழிலாளர் போராட்டம்; மும்பை கப்பற்படை எழுச்சி என்று எண்ணற்ற மக்கள் போராட்டங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பங்காற்றின.

கம்யூனிஸ்டுகள் தலைமையில் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்துப் போராடுவதைக் கண்டு அஞ்சிய ஆர்.எஸ்.எஸ்-இன் மூதாதையர்கள், இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தினர்; பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்தனர். காங்கிரசு கட்சியோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை ‘அகிம்சை வழிப் போராட்டம்’ என்ற பெயரில் மழுங்கடித்தது. எனினும், இவற்றையெல்லாம் மீறி கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் மக்கள் போராட்டங்கள் வளர்வதைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், அதன் கொள்ளைக்குத் துணை போன இந்திய தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் கூட்டுச் சதியின் விளைவாக, 1947-இல் ‘சுதந்திரம்’ என்ற பெயரில் இந்தியாவில் அதிகார மாற்றம் அரங்கேற்றப்பட்டது.

தெலுங்கானா விவசாயிகளின் வீரஞ்செறிந்த எழுச்சி

இன்னொரு பக்கம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையோ புரட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைக்கத் தவறியது; இந்திய விடுதலைக்கு தலைமை தாங்க மறுத்தது; பொருளாதாரப் போராட்டங்களை முன் தள்ளியது; சந்தர்ப்பவாதத்தில் மூழ்கியது. இவற்றையெல்லாம் மீறி, 1942-இல் மூண்டெழுந்த கப்பற்படை எழுச்சி, 1946-இல் முன்னேறிய தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம் போன்ற போராட்டங்களைக் காட்டிக் கொடுக்கவும் செய்தது. ஓட்டுச்சீட்டு நாடாளுமன்றப் பாதையில் வீழ்ந்தது.

எனினும், ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதன் பின்னர் உருவான ‘மார்க்சிஸ்ட்’ கட்சியிலும் இருந்த புரட்சியாளர்கள் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வந்தனர். இதன் விளைவாக, 1967-இல் நடந்த நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சியும் அதனைத் தொடர்ந்து 1969-இல் உருவாக்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-யும் இந்திய மக்களுக்கு புரட்சியின் மீது மாபெரும் நம்பிக்கையூட்டின. இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது புரட்சிகரப் போராட்டங்கள் நடந்த இடங்களிலெல்லாம், மார்க்சிய-லெனினியக் கட்சியின் கீழ் மக்கள் அணிதிரண்டனர். பண்ணையாதிக்கம், சாதி ஆதிக்கம், நிலப்பிரபுத்துவ ஆதிக்கம், அரசின் ஒடுக்குமுறைகள் போன்றவற்றிற்கெதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டி போராட்டியது நக்சல்பாரி இயக்கம்.

நக்சல்பாரி இயக்கத்தில் செல்வாக்கு செலுத்திய தனிநபர் அழித்தொழிப்பு – இடது தீவிரவாதப் பாதையானது அவ்வியக்கம் பல்வேறு குழுக்களாக சிதைவுறவும் மக்களிடம் இருந்து தனிமைப்படவும் வழிவகுத்தது.

எனினும், மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக்கொண்ட பல குழுக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்கள் திரள் வழியில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தத் தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்தகாலத் தவறுகளில் இருந்து அனுபவங்கள், படிப்பினைகளை எடுத்துக் கொண்டு முன்னேறி வருகின்றன. அந்தவகையில், இன்று கம்யூனிச இயக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் வலது சந்தர்ப்பவாதம், நவீன கலைப்புவாதம், நவீன அராஜகவாதம் போன்ற குட்டிமுதலாளிய, முதலாளிய சித்தாந்தங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றன.

பல குழுக்களாகப் பிரிந்திருந்தாலும் புரட்சிகர அமைப்புகள்தான் மக்களின் உரிமைகளுக்காக களத்தில் நிற்கின்றன; இந்திய கம்யூனிச இயக்கத்தின் தியாகப் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கின்றன; கம்யூனிசத் தத்துவத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி உண்மையான சமுதாய மாற்றத்திற்காக தொடர்ந்து போராடி வருகின்றன.

மேலும், ஓட்டுச் சீட்டு அரசியலில் சென்று சீரழிந்த சி.பி.எம்., சி.பி.ஐ. போன்ற கட்சிகளின் அணிகளில் பலரும், தனிநபர்களாகவும் கம்யூனிசத்தை நேசிக்கின்ற சக்திகள் மட்டுமே மக்களுக்காகப் போராடி வருகின்றனர்.

ஆனால், ஆளும் வர்க்கங்களின் கட்சிகளும் கார்ப்பரேட், பார்ப்பனிய ஊடகங்களும் மார்க்சிய-லெனினிய இயக்கங்களுக்கு எதிராக பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகின்றன; அவர்களது பங்களிப்பை இருட்டடிப்பு செய்கின்றன. 1952-களிலேயே போலி சோசலிச நாடாக மாறிய சமூக ஏகாதிபத்தியமான ரசியா, 1992-இல் சிதைந்ததை ‘கம்யூனிசத்தின் தோல்வி’ என்று பிரச்சாரம் செய்தன. நாடாளுமன்ற ஓட்டுச் சீட்டு அரசியலில் சென்று சீரழிந்துவரும் சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற கட்சிகளின் தொடர்ச்சியான தேர்தல் சரிவுகளைக் காட்டியும் மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் பிளவுற்றிருப்பதைக் காட்டியும் இந்தியாவில் கம்யூனிசம் மறைந்து வருவதாகப் பிரச்சாரம் செய்கின்றன.

ஆனால், உண்மையில் இந்த கார்ப்பரேட் கட்சிகளும் அவை இதுநாள் வரையில் பின்பற்றிய கொள்கைகளும்தான் இந்தியாவில் நிலவும் அனைத்துவித கேடுகளுக்கும் காரணம். கிராமங்களிலிருந்து விவசாயிகள் வெளியேற்றம், காடுகளில் இருந்து பழங்குடி மக்கள் விரட்டியடிப்பு, கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுகள், அன்றாடம் அரங்கேறும் பாலியல் வன்முறைகள், அதிகரித்துவரும் குற்றங்கள், வேலையின்மை, கொள்ளை நோய்கள், சுகாதாரக் கேடுகள் போன்ற அனைத்திற்கும் இவர்கள் பின்பற்றும் கார்ப்பரேட் ஆதரவு முதலாளித்துவக் கொள்கைகள்தான் காரணம். இவர்கள் முன்வைத்த நாடாளுமன்றப் பாதையில் சென்றுதான் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளும் சீரழிந்தன.

நக்சல்பாரி எழுச்சியை ஆதரித்து கொல்கத்தாவில் நடந்த மாணவர்களின் போராட்டம்

அதுமட்டுமல்ல, “இந்தியா ஒரு சுதந்திர நாடு”, “இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மதச்சார்பற்றது, ஜனநாயகமானது” என்று இந்தக் கட்சிகளும் அதன் ஊடகங்களும் பிரச்சாரம் செய்தன. ஆனால், இந்த அரசியல் சட்டத்தைப் பயன்படுத்திதான், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது; இவர்கள் போற்றிய நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கிறது; இந்தக் கட்சிகளையும் அடக்கி ஒடுக்குகிறது; சிறுபான்மை மத மக்களையும் தலித்துகளையும் படுகொலை செய்கிறது.

மொத்தத்தில், இந்த கார்ப்பரேட் கட்சிகள் முன்வைத்த நாடாளுமன்ற ஜனநாயகமும் தோற்றுவிட்டது.  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு, திராவிடக் கட்சிகள், ஜனதா கட்சி போன்றவை முன்வைத்த சித்தாந்தங்களை அவையே கைவிட்டுவிட்டன. ஆனால், இன்றளவிலும் கம்யூனிசம் மட்டுமே உழைக்கும் மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறது.

இந்த உண்மைகளை மறைப்பதற்காகவும் நமது நாட்டில் புரட்சிகர மாற்றம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும்தான், இந்த கார்ப்பரேட் கட்சிகளும் பார்ப்பனிய ஊடகங்களும் கம்யூனிச இயக்கங்கள், மார்க்சிய-லெனினிய அமைப்புகள் மீது தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகின்றன.

கம்யூனிசம் ஓர் அறிவியல் தத்துவம்; அதனை யாராலும் அழிக்க முடியாது. வர்க்க ஏற்றத்தாழ்வுகளை அகற்றி பூவுலகில் சொர்க்கத்தைப் படைப்பதற்காக மார்க்சிய-லெனினிய புரட்சிகர அமைப்புகள் போராடி வருகின்றன.

இந்த இயக்கங்களின் முயற்சியில் புரட்சிகரக் கட்சி கட்டியமைக்கப்படும்; அதன் மூலமாக மட்டுமே இந்திய மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்; நாடு சோசலிசத்தை நோக்கி முன்னேறும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை!


ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கீழ்வெண்மணி: செங்கொடியின் மண் | ஆவணப்படம்

கீழ்வெண்மணி: செங்கொடியின் மண் | ஆவணப்படம்

மாலை 6:30 மணிக்கு ஆவணப்படம் வெளியாகவுள்ளது..

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நக்சல்பாரி எழுச்சிக்குப் பின்னான கடும் ஒடுக்குமுறை || அபிஜித் மஜும்தார் | மீள்பதிவு

டிசம்பர் 25, 2024 அன்று இந்திய கம்யூனிச இயக்கம் 100ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆயிரக்கணக்கான தோழர்களின் தியாகங்களும் உழைக்கும் மக்களின் குருதியும் சமத்துவத்திற்கான வேட்கையும் நிறைந்ததே இந்திய கம்யூனிச இயக்க வரலாறு.

இந்த நூறாண்டுகளில் இந்தியாவில் புரட்சியை சாதிப்பதற்கு பல்வேறு தருணங்கள் அமைந்தாலும் இந்திய கம்யூனிச இயக்கத்தில் பீடித்துள்ள திரிபுவாதம், சந்தர்ப்பதாவதம், இடது, வலது திசைவிலகல்கள் காரணமாக அவை கைநழுவி போயின. இடதுசாரி அமைப்புகள் சிதறி போயின.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் இந்தியாவில் அரங்கேறிவரும் இன்றைய சூழலில், பாசிச சக்திகளுக்கு எதிராக இந்தியாவில் உள்ள புரட்சிகர சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மார்க்சிய சித்தாந்தத்தின் கீழ் மாற்று கட்டமைப்பை முன்வைத்து போராட வேண்டியுள்ளது.

இத்தருணத்தில், இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றை தெரிந்துகொள்வதற்கும் அதுகுறித்த விவாதத்தை துவங்குவதற்கும் இந்திய கம்யூனிச இயக்க வரலாறு தொடர்பான கட்டுரைகளை மீள்பதிவு செய்கிறோம்.

இக்கட்டுரை அக்டோபர் 20, 2021 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது.

***

நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி… நிகழ்காலத்தைத் தாண்டி எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் இந்திய கம்யூனிச இயக்கம்
பாகம் – 2
முந்தையை பாகம் : நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல்
கேள்வி : ஆக, உங்கள் தந்தையும் தாயும் ஜெய்பெல்குரியில் முதலில் சந்தித்துக்கொண்டனர்?
பதில் : ஆமாம். 1940களில் சந்தித்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் தோழர்கள். அவர்கள் இருவரும் கட்சியின் துடிப்பான ஊழியர்கள். அவர்கள் சேர்ந்தே வேலை செய்தார்கள். ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டனர். வாழ்க்கைத் துணைவர்களாக இருக்கலாம் என்று முடிவு செய்தனர். அவர்களின் திருமணம் 1952-ல் நடைபெற்றது. அதன்பின் அவர்கள் இருவரும் சிலிகுரி வந்துவிட்டனர். அதுதான் என் தந்தையின் ஊர். அவர்கள் இருவரும் டார்ஜிலிங் சிபிஐ கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர்.
1964-ல் கட்சி பிளவுபட்டபோது இருவரும் சிபிஐ எம் கட்சிக்கு வந்தனர். எனது தந்தை மேற்கொண்ட புரட்சிகரமான நிலைப்பாடுகளை சிபிஐ எம் கட்சியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர். அவரும், சிபிஐ எம்மில் தொடர தனக்கு விருப்பமில்லை என்ற நிலையெடுத்துவிட்டார். அவரும் அவரைப் போன்ற தலைவர்களும் சிபிஐ எம்மை விட்டு வெளியே வந்தனர். தாங்கள் செய்துவந்த புரட்சிகர வேலைகளைத் தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் செய்து வந்தனர். நக்சல்பாரிக்குப் பின்பு 1969-ல் அவர்கள் சிபிஐ எம்எல் கட்சியை நிறுவினர்.
கேள்வி: உங்கள் தாயின் நிலை என்ன? அவர் இந்த அரசியல் மாற்றத்தை ஏற்றுக்கொண்டாரா?
பதில் : சிபிஐ எம்மில் தொடர விரும்பவில்லை என்று அம்மா ஒருபோதும் சொன்னதில்லை. அதேசமயம் அவர் கட்சி உறுப்பினர் தகுதியைப் புதுப்பித்துக்கொள்ளவும் இல்லை. அவர் கட்சியில் துடிப்பாக வேலை செய்வதை நிறுத்திக்கொண்டார். அதற்கு மாறாக, அப்பாவிற்கு அவர் கட்சி வேலைகளில் துணையாக நின்றார். கணவருக்கான ஒரு பெண் தனது அரசியல் பாத்திரத்தை விட்டுத்தருவது சரியானதுதானா என்ற கேள்வி எழும்புகிறது. ஆனால், என்ன செய்வது… அதுதான் நிகழ்ந்திருந்தது.
1960-களின் நடுப்பகுதியில் அப்பாவின் உடல் நலம் சீர்கெட ஆரம்பித்தது. 1965-ல் அவருக்கு இதய தாக்குதல் ஏற்பட்டது. அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுவது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. அவருக்கு ஆஸ்துமாவும் இருந்தது. எனவே, அம்மாவின் கைநிறைய வேலை வந்துவிட்டது. அப்பாவின் அரசியல் வேலை, அவரின் உடல் நலப் பிரச்சனைகள், தினமும் வீட்டுக்கு வரும் தோழர்கள், குடும்பத்தை ஓட்டுவது, எங்களின் கல்வி, அப்பாவின் தலைமறைவு வாழ்க்கை, போலீஸ் ரைடு.. ஆனால், இவை எவற்றாலும் அம்மாவை உடைக்க முடியவில்லை. அவர் மிகவும் வலுவான மனதுள்ள பெண். துணிச்சலான பெண்.

படிக்க: இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு! | மீள்பதிவு


கேள்வி: ஆனால், நக்சல்பாரியால் உருவான சூழல்… அது எப்படி உங்கள் வீட்டைப் பாதித்தது?
பதில்: அரசியல் காரணங்களுக்காக போலீஸ் சோதனை நடப்பது வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் போலீஸ் சோதனை இரவில்தான் நடக்கும். கதவைத் தட்டினார்கள் என்றால், அப்பாவை அழைத்துப்போக போலீஸ் வந்துவிட்டது என்று எங்களுக்குப் புரிந்துவிடும். எங்கள் வீட்டில் ஒரே ஒரு பெரிய படுக்கைதான் இருந்தது. நாங்கள் ஐந்துபேரும் அந்தப் படுக்கையில்தான் படுத்து உறங்குவோம். மின்சாரம் கிடையாது. ஒரு மண்ணெண்ணெய் விளக்குதான் எரிந்துகொண்டிருக்கும். போலீஸ் வரும்போது அம்மா தான் முதலில் எழுந்திருப்பார். பிடியாணை இருக்கிறதா என்று கேட்பார். இல்லையென்றால் அவர்களை உள்ளே விட மாட்டார். அப்போது மழையாக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும், குளிராக இருந்தாலும் போலீஸ் வெளியேதான் காத்திருக்க வேண்டிவரும்.
அதுமட்டுமல்ல.. போலீஸ் கொண்டுவந்த துப்பாக்கிகளையும், துப்பாக்கிக் குண்டுகளையும் அம்மா பட்டியலிட்டுக்கொள்வார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த பட்டியலில் கையெழுத்து இட வைப்பார். அது ஓர் ஆவணம் ஆகிவிடும். போலீஸ் பொய் சொல்லி ஏமாற்றிவிடக் கூடாது என்று இந்த ஏற்பாடு. பொய்யான குற்றச்சாட்டைத் தடுப்பதற்காக, அனைத்துவிதமான முன்தயாரிப்பையும் அம்மா செய்வார். இந்த முன் தயாரிப்பு எல்லாவற்றையும் முடித்த பின்னர்தான் அவர்களை அம்மா உள்ளே விடுவார். குறிப்பிட வேண்டிய முக்கியமான மற்றொரு விசயம் அம்மாவின் குரல். அது கணீர் என்று உரத்ததாக, ஆழமான ஒன்றாக இருக்கும். அதனைக் கேட்கும் எவரும் அதிர்ந்து போவார்.
கேள்வி: போலீஸ் உள்ளே வருவதற்கு பலப்பிரயோகம் செய்ய மாட்டார்களா?
பதில்: இல்லை. அவர்கள் ஒருபோதும் அதற்குத் துணியவில்லை. நாங்கள் இங்கே உள்ள அனைவருக்கும் தெரிந்தவர்கள். அப்பாவின் மீதும், அம்மாவின் மீதும் இங்குள்ளவர்களுக்கு அளப்பரிய மரியாதை. அப்பா சிலிகுரியில் பிறந்து வளர்ந்தவர். அவர் பண்பாட்டுத் தளத்திலும் வேலை செய்து வந்தார். இந்த காரணங்களால் போலீஸ் மரியாதையாக நடந்துகொண்டார்கள் என்று நினைக்கிறேன்.
கேள்வி: நக்சல்பாரிக்குப் பின் உங்கள் அப்பா தலைமறைவாக சென்றுவிட்ட பின்பு இங்கே நிலைமை எப்படியிருந்தது?
பதில்: எங்கள் வீட்டைச் சுற்றி எப்போதும் ஆயுத போலீஸ் நின்றுகொண்டிருக்கும். வங்க போலீஸ், சிஆர்பிஎப் எல்லோரும் இருப்பார்கள். எங்களுக்கு அது போகப்போக பழகிவிட்டது.
கேள்வி: நக்சல்பாரிகள் என்றால் பயங்கரவாதிகள், கொலைகாரர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட காலம் அது. அரசு, அரசியல் கட்சிகள், ஊடகம் என்று அனைவரும் இயக்கத்துக்கு எதிராக நின்றனர். உங்களுக்கு அருகாமையில் வாழ்ந்தவர்கள் உங்களை எப்படி பார்த்தனர்? அவர்கள் உங்களை விட்டு விலகவில்லையா?
பதில் : ஒருபோதும் இல்லை. அவர்கள் எப்போதும் எங்களின் பெற்றோர்களை மதித்தனர். எங்களுக்கு ஆதரவு அளித்தனர். நக்சல் என்ற வார்த்தையை உருவாக்கியதே ஊடகங்கள்தான். துவக்கத்தில் சிபிஐ எம்மை விட்டு விலகியவர்களை தூற்றவும், அவமானப்படுத்தவும் நக்சல் என்ற வார்த்தையை அவர்கள் உருவாக்கினார்கள். இயக்கத்தை சிதைப்பதுதான் அவர்களின் நோக்கம். ‘இங்கே பயங்கரவாதிகள் இருக்கின்றனர். ஆயுதங்களைச் சேகரிக்கின்றனர்’ என்று அவர்கள் தினமும் கதை கட்டினார்கள்.
வழக்கமான போக்கிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறியவர்களை அசிங்கப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வார்த்தைதான் நக்சல் என்பது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அந்த வார்த்தைக்கு மரியாதை கிடைக்க ஆரம்பித்தது. நக்சல் என்ற அடைமொழியைச் சேர்த்தால் அது மரியாதைக்குரியது என்ற காலமும் வந்தது. எப்படியிருந்தாலும் உள்ளூர் மக்கள் அரசின், போலீசின் துஷ்பிரச்சாரங்களை நம்பவில்லை. மக்கள், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, எங்களுக்கு எப்போதும் உதவியாக இருந்தனர். உண்மையிலேயே அதனை அங்கீகரித்து பாராட்ட வேண்டும்.
கேள்வி: உங்கள் தந்தையை நீங்கள் கடைசியாகச் சந்தித்து எப்போது ?
பதில்: கடைசியாக என் தந்தை 1969 நவம்பரில் தலைமறைவானார். 1972 ஜூலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை கொல்கத்தாவின் லால்பஜார் போலீஸ் லாக் அப்பில் வைத்திருந்தனர் 12 நாட்கள் கடந்த பின்னர், ஜூலை 28 அன்று அவர் இறந்துபோனார். அவர் போலீஸ் காவலிலிருந்தபோது நானும் எனது சகோதரிகளும் அம்மாவும் அவரை இரண்டு முறை சந்தித்தோம். கடைசியாக அப்பாவை 25 அன்று சந்தித்தோம். அந்த சமயத்தில் என் மூத்த அக்கா மருத்துவ முன் படிப்புக்காக கொல்கத்தாவில் தங்கியிருந்தார்.

படிக்க: நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு! | மீள்பதிவு


கேள்வி: கைதுக்குப் பின்பு அவரை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றார்களா?
பதில்: இல்லை. நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லாமல் இருப்பது சட்ட விரோதம் என்றபோதும், ஒருமுறைகூட அழைத்துச் செல்லவில்லை. அவர் போலீஸ் காவலிலேயே செத்துப் போனார். அவர் உடல் நலமின்றி இருந்தார்.
கேள்வி: அவர் காவலிலிருந்தபோது உடல் ரீதியாக அவரைத் துன்புறுத்தினார்களா?
பதில்: தெரியாது. எனக்குத் தெரியாது. அவரை நான் பார்த்தபோது அவர் நிலைகுலைந்திருந்தார். எப்போதும்போல, போலீசின் முன்னிலையில்தான் சந்திப்பு நடந்தது. டெபி ராய், விபூதி சக்கரவர்த்தி போன்ற, நக்சலைட்டுகளைக் கொன்றதால் புகழ்பெற்ற காவல் அதிகாரிகள் அப்போது இருந்தார்கள். அவர்கள் எப்போதும் அங்கேயே இருப்பார்கள். இருந்தாலும், ‘நீங்கள் பலவீனமாகி விட்டீர்களே?’, ‘போலீஸ் அதிகாரிகள் உங்களை என்ன செய்தார்கள்?’ என்ற கேள்விகளை அம்மா கேட்டார். ‘உங்களைச் சித்திரவதை செய்தார்களா?’ என்பதுதான் அம்மா கேட்டதற்கான பொருள்.
‘அவர்கள் எப்போதும் வருகிறார்கள். காலை, மதியம், மாலை, இரவு என்று எல்லா நேரமும் வருகிறார்கள்.அவர்கள் என்னைத் தூங்க விடுவதில்லை ‘ என்று அப்பா சொன்னார். அப்படியென்றால், விசாரணை இடைவெளியின்றி தொடர்ந்து பல மணி நேரம் நடந்தது என்று பொருள். மேலும், அவரின் உயிரைக் காப்பதற்கான மருந்துகள் அவருக்கு லாக்கப்பில் கொடுக்கப்படவில்லை.
அவருக்கு இதயப் பிரச்சனை இருந்தது என்பதால், சில மருந்துகளை அவர் ஒருவேளை கூட தவறாது சாப்பிட வேண்டும். வீட்டில் இருக்கும்போது அவருக்கு ஒருசமயம் நெஞ்சுவலி ஏற்பட்டது. பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவரை அழைப்போம். மருத்துவர் ஒரு கம்யூனிஸ்ட். அவர் வந்து அப்பாவின் அருகிலிருந்து பார்த்துக்கொள்வார். ஆனால், இந்த வசதிகளெல்லாம் லாக்கப்பில் இல்லை. அவரை ஓய்வெடுக்க விடவில்லை. மருந்து கொடுக்கவில்லை. உயிர் காக்கும் வசதி எதுவும் அங்கிருக்கவில்லை. இது ஒவ்வொன்றுமே சித்திரவதைதானே? இலையா? இவை அனைத்துமே ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்கள்.
கேள்வி: அவரின் இறப்பு பற்றி எப்படி உங்களுக்குத் தெரிய வந்தது?
பதில்: என் சகோதரிக்குத்தான் முதலில் தகவல் வந்தது. பெரிய அக்கா தங்கியிருந்த மருத்துவக் கல்லூரி விடுதிக்கு போலீஸ் வந்து, அவசரமாக எங்கள் தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அக்காவை தன்னோடு வரும்படி போலீஸ் அழைத்திருக்கிறார். ஆனால், இதெல்லாம் நாடகம் என்று என் அக்காவின் உள் மனது சொல்லியிருக்கிறது.
என் அப்பா போலீசிடம் அதுபோன்ற உதவிகளை ஒருபோதும் கேட்க மாட்டார் என்று அக்காவுக்குத் தெரியும். இறந்த உடலை ஒரு வெள்ளை துணியால் போர்த்தியிருந்த காட்சிதான் என் அக்காவிற்குக் காட்டப்பட்டது. சிலிகுரியில் இருந்த எங்களுக்கும் போலீஸ் தகவல் வந்தது. எங்களின் அண்டை அயலார் விமான டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்து கொல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தனர்.
நாங்கள் மாலையில் மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்தோம். அந்த சமயத்தில் உடலைப் பிணவறைக்குக் கொண்டு சென்றிருந்தனர். இறந்தவரை அடையாளம் காணவும், உறுதி செய்யவும் போலீஸ் எங்களை அழைத்துச் சென்றது. அந்த இடம் முழுவதும் போலீஸ்காரர்கள்தான் இருந்தார்கள். என் அப்பா பாதங்களின் பின்புறம் கருப்பாக இருந்தது. அட்டைக் கரி போலக் கருப்பாக இருந்தது. அப்படி இருப்பது இயற்கையா என்ன? அந்த கருப்புப் பாதங்கள் இப்போதும் கண் முன்னே இருக்கின்றன. அவை ஒருபோதும் மறையாது.
கேள்வி: உடலை சிலிகுரி கொண்டுவந்தீர்களா?
பதில்: இல்லை. உடலை எங்களிடம் கொடுங்கள் என்று அம்மா கேட்டார். உடலை சிலிகுரியிலிருந்து கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர்கள் முற்றிலுமாக மறுத்துவிட்டார்கள்.
கேள்வி: உடலை எங்கே எரித்தார்கள்?
பதில்: கொல்கத்தா சுடுகாட்டில். வங்கத்தின் ஆயுதப் போலீசும், சிஆர்பிஎப்-பும் சுடுகாட்டில் நிறைக்கப்பட்டிருந்தனர். நகரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது போன்ற நிலை இருந்தது. ஆனால், எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. சுடுகாட்டிற்கு அப்பா உடலை எடுத்துச்சென்றபோது, சின்ன சந்து போன்ற தெருக்களிலிருந்து 4 அல்லது 5 பேர் கொண்ட குழுக்களாக, சட்டென்று தோன்றி அப்பாவுக்கும், இயக்கத்துக்கும் செவ்வஞ்சலி செலுத்தி, புரட்சிகர முழக்கங்களை எழுப்பி்விட்டு சட்டென்று மறைந்தனர். மூலை முடுக்கெல்லாம் போலீஸ் நிறைந்திருக்க இப்படிச் செய்வதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும். அந்த ஒருமைப்பாடு நிகழ்வை நான் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
அப்போது கட்சிக்காரர்கள் தலைமறைவாக இருந்தார்கள். அவர்கள் வெளியே வந்தால் பிடிக்கப்படுவார்கள், சித்திரவதைக்கு ஆளாவார்கள், கொலை செய்யப்படுவார்கள். இதற்கெல்லாம் துணிந்து அஞ்சலி செலுத்த வந்தவர்களை நினைத்து நாங்கள் பெருமைகொண்டோம். அதுமட்டுமல்ல, எங்களுக்கு அது ஆறுதல் தருவதாக இருந்தது. அந்த மிகப்பெரும் இழப்பின் நடுவே, துயரின் நடுவே, நாங்கள் தனியே இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
சாரு மஜும்தாரின் இணையர் லீலா சென்குப்தா
கேள்வி: உங்கள் அப்பாவின் மரணத்தை உங்கள் தாய் எப்படி எதிர்கொண்டார்?
பதில்: அவர் நொறுங்கிப்போனார். அவர் அழுததை அந்த நாள் நாள் நாங்கள் யாரும் பார்த்ததில்லை. அதன்பின் அம்மா எவரோடும் அரசியல் பேசவில்லை. அவர் ஊடகங்களிடமும் பேசவில்லை. போனில் கூட ஊடகங்களுக்கு பதில் சொல்வதில்லை. அது மிக ஆழமான மெளனம். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் கூட பலரும் அழைப்பார்கள். ஆனால், அந்த அழைப்புகளுக்கு அம்மா பதில் கொடுப்பதில்லை. அந்த முழுமையான அரசியல் மௌனம் அவர் இறப்பது வரை நீடித்தது.
கேள்வி: அம்மா எப்போது இறந்தார்?
பதில்: ஜூன் 25, 1995.
கேள்வி: உங்கள் தாய் ஓர் அரசியல்வாதி என்று சொன்னீர்கள்? அவர் ஏன், ஏறக்குறைய 20 ஆண்டுகள், மௌனம் சாதித்தார்?
பதில்: உண்மையிலேயே எனக்குத் தெரியாது. ஆனால், அது அப்படித்தான் நடந்தது. ஒருவேளை, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அவர் மௌனம் சாதித்திருக்கலாம். எங்களைப் பாதுகாப்பாக, பத்திரமாக வளர்க்க வேண்டும் என்று அவர் கருதியிருக்கலாம். அரசியல் ஈடுபாடு உள்ள ஒருவரின் சிந்தனையும் செயல்பாடும் எப்படி இப்படி மாற முடியும் என்று நாங்களும் ஆச்சரியப்பட்டிருக்கிறோம். அவர் மௌனத்திற்கு மற்றொரு காரணமும் இருக்கலாம்.
1972 வாக்கில் இயக்கம், அரசின் ஒடுக்குமுறை காரணமாக, கணிசமாக பலவீனப்பட்டுவிட்டது. மேலும் கருத்து வேறுபாடுகளும் இருந்தன. சாரு மஜூம்தாரின் அரசியல் வழிக்கு எதிராகவும், செயல் தந்திரங்களுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் வந்தன. கட்சி பிளவுபட்டுப் போனது. அவர் இறந்த பின்னர் மோதல்கள் கடுமையாக மாறின. எங்கள் தந்தையோடும், குடும்பத்தோடும் நெருக்கமாக இருந்த பலர் தங்களுக்குள் முரண்பட்டு பிரிந்து நின்றனர். இயக்கத்தில் பல சின்னஞ்சிறு குழுக்கள் உருவாகின.
குடும்ப உறுப்பினர்கள் என்கிற அளவுக்கு கருதப்பட்ட சிலர் பிரிந்து நின்றதும், விலகி நின்றதும் அம்மாவை மிகவும் காயப்படுத்தியது. ஏதோ ஒரு பக்கத்தில் சேர்ந்து நிற்பது சரியானது அல்ல என்று அவர் கருதினார். உண்மையில் அது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. இதுபோன்ற சூழலில் மௌனமாக இருப்பது நல்லது என்று அம்மா யோசித்திருக்கலாம்.
கேள்வி: அவர் இந்த சமயத்திலும் உழைத்துக்கொண்டிருந்தாரா?
பதில்: ஆமாம். அவர் ஓய்ந்தது இல்லை. அவரின் உழைப்புதான் வருமானத்திற்கான ஒரே வழி. அம்மாவுக்கு ஓய்வாக இருப்பது என்பதே தெரியாது. அவர் எல்ஐசி முகவர் வேலையைத் தொடர்ந்தார். ஊரெங்கும் சுற்றி பலரையும் பாலிசி எடுத்துக்கொள்ள வைத்தார். எனது மூத்த சகோதரி அம்மாவைப் பற்றி வங்க மொழியில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். என் அப்பா எதிரிகளைக் கொன்றொழித்தார், கொலை செய்தார் என்று கதைகள் பரப்பப்படும் சூழலில், பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக லைப் இன்சூரன்சை எங்கள் அம்மா விற்பதில் உள்ள முரண்பாட்டை அந்த நூலில் என் சகோதரி பேசுவார்.
கேள்வி: உங்கள் அப்பாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரவில்லையா?
பதில்: அந்த சமயத்தில் நாங்கள் கேட்கவில்லை. உலகத்தைப் பார்க்காமல் அம்மா முகத்தைத் திருப்பிக்கொண்டுவிட்டார் என்று நாங்கள் உங்களுக்குச் சொன்னேன் அல்லவா? அப்போது நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம். எங்களில் தோழர்கள் பலரும் ஒன்று தலைமறைவாக இருந்தார்கள் அல்லது சிறையிலிருந்தார்கள். அந்த சமயத்தில் எங்களோடு யாரும் இல்லை. அப்புறம், 1997ல் நான் அரசியலில் இறங்கிய பின்னர், நீதி விசாரணை வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை அணுகினோம். எங்கள் அப்பா, வங்கத்தின் கட்சி மாநில செயலாளராக இருந்த சரோஜ் தத்தா மரணம், அந்த சமயத்தில் நடத்தப்பட்ட பிற கொலைகள் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கோரினோம். அந்த மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன்பின் உச்சநீதிமன்றம் சென்றோம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
கேள்வி: நீங்கள் மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டீர்களா?
பதில்: இல்லை. நாங்கள் மாணவர் அரசியலில் ஈடுபடவில்லை.எங்களின் படிப்பிலேயே கவனமாக இருந்தோம். ஆனாலும் நாங்கள் சமூக சேவை செய்தோம். தந்தையின் மரணம். அவரைப் பற்றிய பாரதூரமான குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள்…. இவையெல்லாம் எங்களை மிகவும் ஆழமாக பாதித்தன. படிப்பை விட்டு வெளியேறுங்கள், கிராமங்களுக்கு சென்று புரட்சிகர பணியாற்றுங்கள் என்று மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ‘சாரு மஜூம்தாரின் பிள்ளைகள் பூர்ஷ்வாக்களின் படிப்பைப் படிக்கிறார்கள்’ என்று எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சாரு மஜூம்தாரின் பிள்ளைகள் என்பதால் நாங்கள் எப்போதும் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தோம். தெருவில் நடக்கும் போது கூட எங்களைக் கவனிக்கிறார்கள் என்ற உணர்வு எங்களுக்கிருந்தது. கடைகளில் நிற்பவர்கள் எங்களைப் பார்க்கிறார்கள், நல்லதாகவோ, வேறு மாதிரியோ பேசுகிறார்கள் என்று நாங்கள் என்பதைக் கவனித்தோம். எப்போதுமே கவனத்துடன் இருந்தபடி வளர்வது சிறார்களுக்கு நல்லதல்ல. எங்கள் தாய் நாங்கள் நாங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தார். அதே சமயம், ‘நீங்கள் எந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும் மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்’ என்று எங்களிடம் சொன்னார்.
ஆங்கிலம் மூலக் கட்டுரை : The Wire
முகநூலில் – ஆங்கிலம் வழி தமிழாக்கம் : சி. மதிவாணன்
(சி.மதிவாணன் – சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர்)
குறிப்பு :
நக்சல்பாரி எழுச்சியின் அடிப்படை மற்றும் அந்த எழுச்சியில் உழைக்கும் மக்களின் பங்கு குறித்து வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நேர்காணலின் தமிழாக்கத்தை மூன்று பாகமாக வெளியிடுகிறோம்  – வினவு
disclaimer

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி … || சாரு மஜும்தாரின் மகன் நேர்காணல் | மீள்பதிவு

டிசம்பர் 25, 2024 அன்று இந்திய கம்யூனிச இயக்கம் 100ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆயிரக்கணக்கான தோழர்களின் தியாகங்களும் உழைக்கும் மக்களின் குருதியும் சமத்துவத்திற்கான வேட்கையும் நிறைந்ததே இந்திய கம்யூனிச இயக்க வரலாறு.

இந்த நூறாண்டுகளில் இந்தியாவில் புரட்சியை சாதிப்பதற்கு பல்வேறு தருணங்கள் அமைந்தாலும் இந்திய கம்யூனிச இயக்கத்தில் பீடித்துள்ள திரிபுவாதம், சந்தர்ப்பதாவதம், இடது, வலது திசைவிலகல்கள் காரணமாக அவை கைநழுவி போயின. இடதுசாரி அமைப்புகள் சிதறி போயின.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் இந்தியாவில் அரங்கேறிவரும் இன்றைய சூழலில், பாசிச சக்திகளுக்கு எதிராக இந்தியாவில் உள்ள புரட்சிகர சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மார்க்சிய சித்தாந்தத்தின் கீழ் மாற்று கட்டமைப்பை முன்வைத்து போராட வேண்டியுள்ளது.

இத்தருணத்தில், இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றை தெரிந்துகொள்வதற்கும் அதுகுறித்த விவாதத்தை துவங்குவதற்கும் இந்திய கம்யூனிச இயக்க வரலாறு தொடர்பான கட்டுரைகளை மீள்பதிவு செய்கிறோம்.

இக்கட்டுரை அக்டோபர் 19, 2021 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது.

***

நக்சல்பாரிக்கு முன்பிருந்து துவங்கி… நிகழ்காலத்தைத் தாண்டி எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் இந்திய கம்யூனிச இயக்கம்
பாகம் – 1
(“நக்சல்பாரி ஐம்பதாவது ஆண்டு தினத்தில் புரட்சிகர தந்தை அளித்துச் சென்ற மரபுரிமை செல்வம் என்னவென்று பரிசீலிப்போம்” என்ற தலைப்பிடப்பட்டு வெளிவந்த கட்டுரை. 1972ல் மரணிக்கும் வரையிலும் இந்திய அரசோடு வன்முறை மோதலை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்டை வழி நடத்திச் சென்ற சாரு மஜூம்தாரின் மகன் அபிஜித் மஜூம்தாருடன் நேர்காணல்) நேர்காணல் : M. சுசித்ரா
(பேட்டியாளர் எம். சுசித்ரா கேரளாவின் கொச்சினைச் சேர்ந்த சுதந்திரமான பத்திரிகையாளர் ஆவார். இந்த பேட்டி, முதலில் மே 21-27, 2019 மாத்ருபூமி இதழில் மலையாளத்தில் வெளிவந்தது.)
புரட்சியாளர் சாரு மஜூம்தார் குறித்த நினைவுகளை அவரின் மகன் அபிஜித் மஜூம்தார் பகிர்ந்துகொள்கிறார்.
ஜூலை 28, 1972
அது மாலை நேரம். கல்கத்தாவின் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவக் கல்லூரியிலிருந்து இறந்தவரின் உடலை கல்கத்தாவின் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அது முழு இரகசியமாக செய்யப்பட்டது. ஆயுதம் தாங்கிய காவலர்கள் சாலைகளில் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்தனர். நகரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது போல தோன்றியது. சாலையிலிருந்த அனைவரையும் வீட்டுக்குப் போகச் சொன்னார்கள். சாலையின் இரண்டு பக்கமும் போலீஸ் அணி வகுத்திருந்தது. வெகு நேரம் கழித்த பின்னர் அந்த உடல் சுடுகாட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கேயும் கூட துணை ராணுவப்படைகள் எல்லா இடத்திலும் நிறுத்தப்பட்டிருந்தனர். சிறுவன் ஒருவனிடம் ஒரு போலீஸ்காரர் தீப்பந்தத்தை அளித்தார். அந்தப் பையனின் தந்தைதான் அங்கு சடலமாக கிடந்தார். சடலத்திற்கு தீ வை என்று அந்த பையனுக்குச் சொல்லப்பட்டது.
இப்படியாக, புரட்சிகரமான தலைவரான சாரு மஜூம்தாரின் உடல், நள்ளிரவில் தீக்கு இரையாக்கப்பட்டது. அவர்தான் நக்சல்பாரியின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ)-யின் கருத்தியலைக் கட்டமைத்தவர். மக்கள் மத்தியில் அளப்பரிய மரியாதைப் பெற்ற அந்த மனிதர் அரசின் கண்களுக்கு, மிகப் பயங்கரமான எதிரியாக தெரிந்தார். அழித்தொழிப்பையும், வன்முறை அரசியலையும் முன்னெடுத்துச் சென்றவர் என்று அவரைப் பற்றி சொல்லப்பட்டது.
சாரு மஜூம்தார்
இந்த சம்பவம் 45 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால், தந்தையின் சிதையிலிருந்து எழுந்த தீ, 57 வயதான அபிஜித் மஜூம்தாரின் மனதில் இன்னமும் கனன்றுகொண்டிருக்கிறது. அதுபோன்ற ஒரு மனிதருக்கு மகனாக இருப்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை. எப்போதும், பிள்ளையைத் தந்தையோடு ஒப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். அவன் தன் தந்தையின் பாதையைப் பின்பற்றுகிறானா என்று பார்ப்பார்கள். சொந்த தந்தையின் அரசியல் இலக்குகள்தான் மகனின் அரசியல் இலக்குகளா என்று யோசிப்பார்கள். விடாது எழும் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஊடகங்கள் உள்ளிட்டு, பல தரப்பாரும் எப்போதும் கேள்வி கேட்பார்கள்.
அபிஜித் சாக் பீஸ் கொண்டு கல்கத்தாவின் தெருக்களில் “துப்பாக்கி முனையிலிருந்துதான் அதிகாரம் பிறக்கிறது” என்று எழுதித் திரிந்த சிறு பையனாக ஒரு காலத்தில் இருந்தபோதும், பல ஆண்டுகள் அவர் அரசியல் செயல்பாடுகளை விட்டுவிட்டார். அவரின் தந்தை இறந்து 25 ஆண்டுகள் கழித்த பின்னர்தான் அவர் மறுபடியும் அரசியலில் கால் எடுத்து வைத்தார். தற்போது அவர் CPI ML (Liberation) கட்சியின் டார்ஜிலிங் மாவட்ட செயலாளராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினருமாகவும் இருக்கிறார். சிலிகுரியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக இருக்கிறார்.
அவரின் தந்தை வழி நடத்திய கட்சியைப் போலல்லாமல் சிபிஐ எம்எல் சட்ட ரீதியாக, வெளிப்படையாக இயங்கும் ஒரு கட்சியாக இருக்கிறது. தேர்தலில் பங்கெடுக்கிறது. ‘ஆயுதப் போராட்டத்தில்’ ஈடுபடுவதில்லை.
இந்த நேர்காணலில் அபிஜித் நக்சல்பாரியைப் பற்றி பேசுகிறார். அவரது பெற்றோர்களைப் பற்றி, இப்போதைய புதிய யதார்த்தம் குறித்து விரிவாக பேசுகிறார். பேட்டியின் போது, ஒரே ஒரு சமயம் மட்டும் அபிஜித் கண் கலங்கினார். அது அவர் தன் தாய் லைலா பற்றி பேசிய நேரம்.
கேள்வி: நக்சல்பாரிக்குப் பின்பு அரை நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இன்னதும் அந்த நாட்களை நினைவில் வைத்துள்ளீர்களா?
பதில்: நக்சல்பாரி எழுச்சி நடக்கும்போது எனக்கு ஏழு வயதுதான். எனவே, என் அனுபவத்தின் ஒரு பகுதியாக அதனைப் பற்றி நான் பேச முடியாது. ஆனால், நான் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். மே 25, 1967 அன்று போலீஸ் துப்பாக்கியால் சுட்டது அமைதியாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு பெண்கள் குழு ஒன்றின் மீது! எட்டு பெண்கள், இரண்டு குழந்தைகள், ஒரு ஆண் அன்று இறந்துபோனார்கள். அதுபோன்ற நிகழ்வுகள் இன்றும் நடக்கின்றன. நந்திகிராம், சிங்கூர், பாங்கார்… இப்படி மேற்கு வங்கத்திலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
நக்சல்பாரி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதனைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள். அனைவருக்கும் நக்சல்பாரியின் கதை தெரியும். ஆனால், அப்போதிருந்த (ஒன்றுபட்ட) கம்யூனிஸ்ட் கட்சிக்குள் என்ன நடந்துகொண்டிருந்தது என்று வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு நாள் காலையில் எல்லாமும் துவங்கின என்று பலரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. பல்வேறு தொடர் நிகழ்வுகளின் உச்ச கட்டம்தான் நக்சல்பாரி. பற்பல ஆண்டுகளாக, கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஆற்றிய கடும் பணி அதன் பின்னே உள்ளது.

படிக்க: இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம் | கருத்தரங்கம்


கேள்வி: நக்சல்பாரியில் என்ன நடந்தது? அது ஓர் ஆயுதப் போராட்டம்தானே?
பதில்: ஆமாம். அது ஓர் ஆயுதப் போராட்டம்தான். நக்சல்பாரியும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பழங்குடிகள் அதிக அளவு வாழும் பகுதிகள். அங்கே உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும், விவசாயத் தொழிலாளர்களும் நிலமற்றவர்கள். அவர்கள் நிலப்பிரபுக்களின் கடும் சுரண்டலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் தங்களின் பாரம்பரிய ஆயுதங்களைத் தாங்கிக்கொண்டு கலகம் செய்தனர். விவசாயிகளிடம் துப்பாக்கிகளும் இல்லை. துப்பாக்கி குண்டுகளும் இல்லை. வெடி குண்டுகளும் இல்லை. அரசிடம்தான் அதுபோன்ற ஆயுதங்கள் இருந்தன. போலீசிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றுங்கள் என்று தெளிவான அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.
உண்மை என்னவென்றால், தெபகா இயக்கத்தின் தொடர்ச்சிதான் நச்கல்பாரி இயக்கம். தெபகா இயக்கம், வடக்கு வங்கத்திலும், தற்போது வங்கதேசமாக இருக்கும் சில பகுதிகளிலும் 1940களில் நடைபெற்றது.இங்கே தெபகா இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, தெலுங்கானாவிலும் விவசாயிகள் தொழிலாளர்களின் ஆயுதப் போராட்டம் நடந்துகொண்டிருந்தது. தெபகா இயக்கத்தின் படிப்பினைகளைப் பெற்ற சாரு மஜூம்தார், கனு சன்யால், ஜங்கல் சந்தல், சரண் கோஷ் மற்றும் தெபகா இயக்கத்தின் தலைவர்கள் பலரும் நக்சல்பாரியில் தோட்டத் தொழிலாளர்களையும், விவசாயத் தொழிலாளர்களையும் அமைப்பாக்கத் துவங்கினர். நான் முன்னமேயே சொன்னது போல அது பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.
கேள்வி: தெபகா இயக்கம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
பதில்: 1946 -47 ஆண்டுகளில் தெபகா இயக்கம் நடைபெற்றது. தெபகா என்றால் மூன்றில் (2/3) இரண்டு பங்கு என்று பொருள். நேரடியாக விவசாயத்தில் ஈடுபட்ட குத்தகையாளர்கள், நில உடமையாளர்களுக்கு விளைச்சலில் சரி பாதியைக் கொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் அதியார்கள் என்று அழைப்பார்கள். அதாவது அதா என்றால் பாதி என்று பொருள். பாதி விளைச்சலை வரியாக கொடுத்துவிட வேண்டும் என்பதால் அவர்கள் அதியார்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் பண்ணை அடிமைகள் போல இருந்தனர். அவர்களுக்கு உரிய பாதி கூட அவர்களுக்கு கிடைக்காது.
1939-களின் இறுதியின்போது, கம்யூனிஸ்ட் கட்சி இப்பிரச்சனையைக் கையில் எடுத்தது. வாரக் குத்தகையாளர்களை அருகாமையில் உள்ள ஜெல்பெய்குரி மாவட்டத்திலும் அமைப்பாக்கியது. இந்த சமயத்தில்தான் என் தந்தை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அவர் 1939ல் அவருக்கு 20 வயது ஆனபோது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். வாரக் குத்தகைதாரர்கள் அறுவடையில் மூன்றில் ஒரு பகுதியைத்தான் குத்தகையாக கொடுப்போம் என்று உறுதியாக சொன்னார்கள். அவர்கள் அமைப்பான பின்பு அவர்கள் தங்களுக்குத் தேவையானதை தங்களுக்கு என்று வைத்துக்கொண்டார்கள். இயக்கம் மெதுவாக வலுப்பெற ஆரம்பித்தது. அத்துடன் சேர்ந்து அரசு ஒடுக்குமுறையும் வலுப்பெற ஆரம்பித்தது. 1942ல் கட்சியின் வேலைகள் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மத்தியிலும் விரிவடைந்தது. ரயில் வே தொழிலாளர்கள் மத்தியிலும் அமைப்பு உருவானது.
அடுத்த ஆண்டு மாபெரும் பஞ்சம் ஏற்பட்டது. தொழிலாளர்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்தனர். மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று சாரு மஜூம்தாரும் மற்ற தலைவர்களும் வலியுறுத்தினர். நிலப்பிரபுக்களின் தானிய களஞ்சியங்களைக் கைப்பற்றுங்கள், தானியங்களை பறிமுதல் செய்யுங்கள் என்று வழிகாட்டினர். “நாங்கள் துப்பாக்கி குண்டுகளால் சாவோம்… பட்டினியால் சாக மாட்டோம்” என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. விரைவில் போராட்டம் வேகம் பிடித்தது. தொழிலாளர்களும் விவசாயிகளும் பேரணிகளை நடத்தினர். தொழிலாளர்கள் பயிரை அறுவடை செய்தனர், தானியக் களஞ்சியங்களைத் தாக்கி, பதுக்கப்பட்ட தானியத்தை மக்களுக்கு வினியோகம் செய்தனர். மக்களை ஒடுக்குவதற்கான அரசின் தாக்குதல் மேலும் மேலும் காட்டுமிராண்டித்தனமானது. அதுபோன்ற பேரணியொன்றில் விவசாயிகள் போலீசிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்க முயன்றனர். இதன் காரணமாக போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. 11 விவசாயத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்கள்.
கேள்வி: போராட்டம் தொடர்ந்ததா?
பதில்: தலைவர்கள் தொடர்ந்து விவசாயிகளை அமைப்பாக்கினர். 1953ல், மத்தியில் இருந்த நேரு அரசாங்கம் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், அது நடைமுறைக்குக் கொண்டுவருவது நேரு அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. மக்களை ஏமாற்றி திசை திருப்புவதற்காகத்தான் அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சி அதனைப் பற்றியும் கேள்வி எழுப்பியது. 1959-ல், உச்சவரம்புக்கு அதிகமாக நிலப்பிரபுக்களிடம் இருக்கும் நிலத்தை பறித்தெடுங்கள் என்று கட்சி அழைப்பு விடுத்தது. இயக்கம் மேலும் மேலும் வலுப்பெற ஆரம்பித்தது. கட்சியின் மாநில தலைமை போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது.
என் தந்தை தனது ஊருக்கு, அதாவது சிலிகுரிக்கு 1952-ல் திரும்பியிருந்தார். டார்ஜிலிங் மாவட்டத்தில் விவசாயிகளை அமைப்பாக்குவதில் முழுமையும் ஈடுபட்டிருந்தார். அவர் கட்சியின் போராட்ட வாபஸ் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்தார். அவர் மட்டுமல்ல, மாவட்டத்தின் பிற தலைவர்களும் ஏமாற்றம் அடைந்தார்கள். கட்சியின் கருத்துரையை ஏற்காமல் மாவட்டத்தில் வேலையைத் தொடர்ந்தனர். விவசாயிகளையும், தேயிலை தொழிலாளர்களையும் அமைப்பாக்கினர். உபரி நிலத்தைக் கைப்பற்றுங்கள் என்று சொன்னார்கள். நிலப்பிரபுக்களின் சுரண்டலுக்கு எதிராக கலகம் செய்யுங்கள் என்றனர். அதன் உச்சமாக நக்சல்பாரி நடந்தது.
கேள்வி: சாரு மஜூம்தார் மிகவும் கண்டிப்பான தந்தையாக இருந்தாரா?
பதில்: ஒரு நாளும் அவர் அப்படி இருந்ததில்லை. அவர் மிகவும் அன்பான, பரிவுணர்ச்சியுள்ள தந்தை. இரக்கமேயில்லாத புரட்சியாளன், தொழிலாளர்களின் வர்க்க எதிரிகளைக் கொன்றொழிக்கச் சொன்னவர் என்பதெல்லாம் ஊடகங்களும், அரசாங்கமும் வேண்டுமென்றே பரப்பிய கட்டுக்கதை. அவர் ஒரு நாளும் அப்படிப்பட்டவர் இல்லை. அவருக்கு எங்களோடு செலவு செய்ய நேரமிருக்கவில்லை. இருந்தாலும் அவர் வீட்டிலிருக்கும்போதெல்லாம் எங்களோடு அன்போடு பழகுவார். அவருக்கு அரசியல் மட்டுமே பிடித்திருந்தது என்பது இல்லை. அவருக்கு இலக்கியம் பிடிக்கும். சாஸ்திரிய சங்கீதம் பிடிக்கும்.
எனக்கும் என் அக்காவுக்கும் அவர் இலக்கியங்களையும் சங்கீதத்தையும் கற்றுக்கொடுத்தார். (எனது பெரிய அக்கா ஒரு மருத்துவர். இரண்டாவது அக்கா மதுமிதா ஓர் ஆசிரியர்). அவர் எங்களுக்கு ரவீந்திரநாத் தாகூரை அறிமுகம் செய்தார். பக்கிம் சந்திர சட்டர்ஜியையும் பிறரையும் அறிமுகம் செய்தார். வங்க இலக்கியத்தை மட்டும் அவர் எங்களுக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆங்கில நாவல்களையும் படிக்க கொடுத்தார். இலக்கணம் படித்தால் மட்டும் ஆங்கிலம் வசப்படாது. நல்ல புத்தகங்களைப் படிப்பதன் மூலமே ஆங்கிலத்தில் புலமை பெற முடியும் என்று சொல்வார். எனது ஹீரோ எனது தந்தைதான்.
கேள்வி: நக்சல்பாரி எழுச்சியின் போது உங்களுக்கு ஏழு வயது என்று சொன்னீர்கள். உங்கள் குழந்தைப் பிராயம் எப்படி இருந்தது?
பதில்: எனது குழந்தைப் பருவம் மற்றவர்கள் போல இருக்கவில்லை. எனது நண்பர்கள் வளர்ந்தது போல நாங்கள் வளரவில்லை. கட்சித் தலைவர்களும், ஊழியர்களும், மாணவர்களும் என் தந்தையைப் பார்க்க வருவார்கள். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல… ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளாவிலிருந்தெல்லாம் வருவார்கள். என் தந்தையைப் பார்த்துவிட்டு இங்கிருந்து புறப்பட்ட, ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த, பஞ்சடி கிருஷ்ணமூர்த்தி, பலசாவில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இயக்கத்தின் தலைவர்கள் பலரையும் பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
நாங்கள் வளர்ந்தபோது புரட்சி என்பது எங்களுக்கு மிகவும் பழக்கமான சொல் ஆகிவிட்டது. ஆனால், இயற்கையாகவே, சிறார்களான எங்களுக்கு அரசியல் புரியவில்லை. ஆனால், எங்களுக்கும் ஒரு பாத்திரம் இருக்கிறது என்று நாங்கள் கருதினோம்.
எங்களுக்குப் புரட்சியைப் பற்றி எதுவும் தெரியாது என்றாலும் பெரிய புரட்சியாளர்கள் போல நடந்துகொண்டோம். அது மிகவும் துணிச்சல்கரமான காரியம் என்று நாங்கள் புரிந்து வைத்திருந்தோம். அந்த நேரத்தில் இயக்கத்தின் முழக்கங்கள் எல்லாம் மிகவும் பிரபலமாகிவிட்டன. அந்த முழக்கங்களை எழுப்பியபடி நாங்கள் ஊரைச் சுற்றி வருவோம். எங்கள் வீட்டில் மர சுவர்களால் ஆன சிறு அறை ஒன்று இருந்தது. அதனை வாடகைக்கு விட்டு வைத்திருந்தோம். ஆனால், நக்சல்பாரி நிகழ்ந்தபோது அந்த அறை காலியாக இருந்தது. சிறுவர்கள் எல்லாம் அந்த அறையில் கூடுவோம். அந்த மரச் சுவர்களில் உடைந்த கையெழுத்தில், “துப்பாக்கிக் குழாயில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது”, “சீனத் தலைவர் எம் தலைவர்” என்றெல்லாம் எழுதி வைப்போம். (சிரிக்கிறார்). புரட்சியென்பது மிகவும் துணிவுகரமான வேலை என்று நாங்கள் நினைத்தோம்.
கேள்வி: வீட்டில் நிதி நிலைமை எப்படியிருந்தது? வீட்டு செலவுகளை எப்படி சரிக்கட்டினீர்கள்?
பதில்: எங்கள் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பம். ஆமாம். நாங்கள் வாழ்வதற்குப் போராட வேண்டியிருந்தது. எங்கள் தாய் (லைலா மஜூம்தார்) எல்ஐசி முகவராக செயல்பட்டு வந்தார். அதுதான் எங்களின் ஒரே வருமானம். எங்களின் உறவினர்கள் சிலரும் எங்களோடு வாழ்ந்து வந்தனர். அம்மாதான் எல்லோரையும் பார்த்துக்கொண்டார். அவர் மிகவும் கடினப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. பல வீடுகளுக்கும் சென்று எல்ஐசி பாலிசி எடுத்துக்கொள்ளுங்கள் என்று பேசுவார். அப்படித்தான் அவர்கள் எங்களைப் பார்த்துக்கொண்டார். நாங்கள் எங்கள் தாயிற்கு மிகவும் கடன்பட்டுள்ளோம். நாங்கள் வாழ்க்கையில் என்ன பெற்றிருக்கிறோமோ அதெல்லாம் அம்மா கொடுத்தது. நல்ல கல்வி உட்பட அனைத்தையும் அவர் கொடுத்தார். அதற்காக அரும்பாடுபட்டார்.
கேள்வி: அவருக்கு அரசியலில் எப்போதாவது ஆர்வம் இருந்ததா?
பதில்: அம்மாவைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எல்லோருக்கும் என் அப்பாவைப் பற்றி தெரியும். அவரைப் பற்றி நிறைய எழுதப்பட்டாகிவிட்டது. ஆனால், வெகு சிலருக்கே அம்மாவைப் பற்றி தெரியும். நான் சந்தித்ததிலேயே மிகவும் தைரியமான பெண் என் அம்மாதான். அவரின் உள்ளும் புறமும் அரசியல்தான் இருந்தது. அவர் கேட்டதெல்லாம் அரசியல்தான். பேசியதெல்லாம் அரசியல்தான். 13 அல்லது 14 வயது முதல் அவர் மூச்செல்லாம் அரசியல்தான்.
கேள்வி: அவருடைய பின்னணி என்ன?
பதில்: அம்மாவின் தந்தை ஒரு மருத்துவர். ஹரேந்திர குப்தா என்பது அவரின் பெயர். அவர் அரசு மருத்துவராக இருந்தார். அவர் கடைசியாக ஜெய்பல்குரி மாவட்டத்தில் ராஜ்கன்ஞ் மருத்துவமனையில் பணியாற்றினார். அப்போது அம்மாவுக்கு 13 அல்லது 14 வயது. அவரின் வீட்டுக்கு அந்த நாட்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலர் வருவார்கள். அவர்களில் பலர் மீது வழக்கு இருந்ததால் அவர்கள் மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல முடியாது. படித்த மருத்துவரின் பார்வையாளர் கூடத்தில் பல்வேறு பத்திரிகைகள் இருக்கும். அவர்கள் அங்கே வந்து பேப்பர் படிப்பார்கள். அரசியல் பேசுவார்கள். அம்மா அவர்களுக்கு தேனீர் அளிப்பார். அவர்களுடன் உட்கார்ந்து அம்மாவும் அரசியல் பேசுவார். அதனால், அவர் மனதில் ஏகாதிபத்திய எதிர்ப்பு கருத்துகள் ஆழமாகப் பதிந்தன. பின்னர், அவர் ஒரு கம்யூனிஸ்ட் ஆனார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் பிரிவில் அவர் துடிப்போடு பணியாற்றினார். அதுபோல தெபகா விவசாய போராட்டத்திலும் பங்காற்றினார். அதன் பின்பு அவர் ஜெய்பெல்குரி மாவட்டத்தின் தலைவர்களில் ஒருவராக ஆனார். 1948-ல் கட்சி தடை செய்யப்பட்ட போதும், 1950-ல் கட்சி தடை செய்யப்பட்டபோதும் அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
கேள்வி: அவர் முழு நேர கட்சி ஊழியரா? அல்லது வேறு ஏதாவது வேலை பார்த்தாரா?
பதில்: அவர் எப்போதுமே உழைக்கும் பெண்தான். அம்மா பாலர் வகுப்புப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுப்பார். அவர் மிகப் பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர். அதனால், அவர் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.
(தொடரும்)

பாகம் -2

ஆங்கிலம் மூலக் கட்டுரை : The Wire
முகநூலில் – ஆங்கிலம் வழி தமிழாக்கம் : சி. மதிவாணன்
(சி.மதிவாணன் – சிபிஐ(எம்.எல்) லிபரேசன் கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர்)
குறிப்பு :
நக்சல்பாரி எழுச்சியின் அடிப்படை மற்றும் அந்த எழுச்சியில் உழைக்கும் மக்களின் பங்கு குறித்து வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த நேர்காணலின் தமிழாக்கத்தை மூன்று பாகமாக வெளியிடுகிறோம்  – வினவு
disclaimer

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு! | மீள்பதிவு

டிசம்பர் 25, 2024 அன்று இந்திய கம்யூனிச இயக்கம் 100ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆயிரக்கணக்கான தோழர்களின் தியாகங்களும் உழைக்கும் மக்களின் குருதியும் சமத்துவத்திற்கான வேட்கையும் நிறைந்ததே இந்திய கம்யூனிச இயக்க வரலாறு.

இந்த நூறாண்டுகளில் இந்தியாவில் புரட்சியை சாதிப்பதற்கு பல்வேறு தருணங்கள் அமைந்தாலும் இந்திய கம்யூனிச இயக்கத்தில் பீடித்துள்ள திரிபுவாதம், சந்தர்ப்பதாவதம், இடது, வலது திசைவிலகல்கள் காரணமாக அவை கைநழுவி போயின. இடதுசாரி அமைப்புகள் சிதறி போயின.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் இந்தியாவில் அரங்கேறிவரும் இன்றைய சூழலில், பாசிச சக்திகளுக்கு எதிராக இந்தியாவில் உள்ள புரட்சிகர சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மார்க்சிய சித்தாந்தத்தின் கீழ் மாற்று கட்டமைப்பை முன்வைத்து போராட வேண்டியுள்ளது.

இத்தருணத்தில், இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றை தெரிந்துகொள்வதற்கும் அதுகுறித்த விவாதத்தை துவங்குவதற்கும் இந்திய கம்யூனிச இயக்க வரலாறு தொடர்பான கட்டுரைகளை மீள்பதிவு செய்கிறோம்.

இக்கட்டுரை ஆகஸ்ட் 16, 2018 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது.

***

ன்று வரை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நமது தொலைக்காட்சி நெறியாளர்கள் எப்படி சொல்கிறார்கள்? “மே 22 ஏற்பட்ட கலவரத்தை அடுத்து…” இதுதான் அவர்கள் சூட்டியிருக்கும் காரணப் பெயர். பா.ஜ.க.வினரோ ரஜினியோ, மற்றவர்களோ கலவரம், சமூகவிரோதிகள், விஷமிகள், பயங்கரவாதிகள் என்று போராடும் மக்களை கொச்சைப் படுத்துவது, மிரட்டுவது, போலீசாரின் வன்முறையை நியாயப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவை அனைத்தும் இன்று நேற்று நடக்கும் ஒன்றல்ல.

ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள், ஊடகங்கள், பொதுப்புத்தி அனைத்திலும் இந்த மதிப்பீட்டிற்கு ஒரு  தொடர்ச்சி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் தொட்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியம், காங்கிரசுக் கட்சியினரால் தலைமை வகிக்கப்பட்ட இந்திய அரசியல் வெளியிலேயே இந்த அடிமைக் கருத்து மனோபாவம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டது.

உண்மையில் 1947 ஆகஸ்டு 15-ம் நாளில் நாம் பெற்றது அரசியல் சுதந்திரமல்ல! அது ஆங்கிலேயர்கள் தமது இந்திய வாரிசுகளிடம் அதிகாரத்தை கைமாற்றிக் கொடுத்த நிகழ்வு மட்டுமே! நமது கல்வி முறை போதிக்கின்றபடி காந்தியும், காங்கிரசும் நாட்டுக்காக போராடி சுதந்திரத்தைப் பெற்று தந்துவிடவில்லை. சொல்லப்போனால் ஆங்கிலேயர்கள் மனங்கோணாமல் அவர்களுக்குரிய அனைத்து நலன்களையும் பாதுகாப்பதாக உறுதி ஏற்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்ட ஒரு அடிமை நிகழ்வுதான் ஆகஸ்டு 15 அதிகார மாற்றம்.

இந்திய அரசியல் வானில் வசந்தத்தின் இடிமுழக்கமாக வந்த நக்சல்பாரி இயக்கதோடு உருவான, இந்திய பொதுவுடமைக் கட்சி (மா.லெ)யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய காலஞ்சென்ற தோழர் சுனிதி  குமார் கோஷ் (Suniti Kumar Ghosh, 1918-2014) அவர்களின் ஆய்விலிருந்து இந்த நிகழ்வைப் பார்ப்போம். அவர் எழுதிய “நக்சல்பாரி முன்பும் பின்பும்” என்ற வரலாற்று நூலில் இதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

ஒரு காலனியாதிக்க நாட்டின் சுதந்திரம் என்பது காலனியவாதிகள் கட்டியமைத்த அரசியல், பொருளாதார அமைப்பை முற்றிலும் மாற்றியமைத்து அரசியல் அதிகாரத்தை கட்டியமைப்பது. இதுதான் விடுதலை அடையும் ஒரு நாட்டின் தேசியப் புரட்சி என்றழைக்கப்படுகிறது.

(கருப்பு வண்ணத்தில் இருக்கும் பத்திகள் சுனிதிகுமார் கோஷின் நூலில் இருந்து எடுத்தாளப்பட்டவை)

”1947-ம் ஆண்டில் நடந்த “காலனியமுறை ஒழிப்பு உண்மையானதா அல்லது ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப் பட்ட சூழ்ச்சிகரமான ஏய்ப்பு நடவடிக்கையா என்பதும், அது தனது நேரடி ஆட்சியைத் தொடரவியலாமல் இருந்த காரணத்தால் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முனையை மழுங்கச் செய்வதற்காகப் போலியாக பின்வாங்கியதா…”

தோழர் சுனிதி குமார் கோஷ்

என்று கேட்கும் கோஷ்,

”ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்திய மக்கள் ஆகியோருக்கு இடையில் நிலவிய ஒப்பீட்டளவிலான பலத்தையும், இவ்விரு சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தின் வெற்றி, தோல்வியையும் சார்ந்திருந்தது”

என்கிறார். ஐரோப்பாவில் இருந்து உலகெங்கும் காலனிகளை உருவாக்கிய ஐரோப்பிய அரசுகள் அந்தந்த நாடுகளின் உள்ளூர் அதிகார வர்க்கத்தினரைக் கொண்டே ஆட்சி அமைப்பைக் கட்டி அமைத்தனர். உள்ளூர் மக்களின் எதிர்ப்பை தவிர்ப்தற்கு இந்த உள்ளூர் பிரமுகர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.

ரொனால்டு ராபின்சன் சரியாகவே கூறினார்: ”…. தொடக்கம் முதலே அந்த ஆட்சியானது தொடர்ச்சியாக எதிர்க்கப்பட்டது. அதுபோலவே எதிர்ப்பைத் தவிர்ப்பதற்கும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் தொடர்ச்சியாக உள்ளூர் ஒத்துழைப்புத் தேவையாக இருந்தது ஏகாதிபத்தியத்தின் பொருளாதார பலமும், இராணுவ மற்றும் ஆட்சி முறைக் கட்டமைப்பும் கைப்பற்றப்பட்ட நாடுகளில் உள்ள உள்ளூர் அதிகார வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடுதான் கட்டியமைக்கப்பட்டது.1

காலனிய நாடுகளில் மக்களில் யார் ஏகாதிபத்தியங்களை எதிர்க்கிறார்கள்? யார் ஆதரிக்கிறார்கள்? இது வர்க்க ரீதியாக பிரிந்திருக்கிறது. காங்கிரசு உள்ளிட்ட கட்சிகளை நாம் அப்படி ஆய்வு செய்து பார்த்தால் அவர்களின் உண்மை நிலை புரியும். தோழர் மாவோ அதை சரியாக குறிப்பிடுகிறார்.

”மேற்கத்திய முதலாளித்துவ வர்க்கம் கிழக்குலகில் இருவகைப்பட்ட மக்கள் பிரிவினரை உருவாக்கியது. ஒன்று, குறுகிய சிறுபான்மையினரான ஏகாதிபத்தியத்தின் அடிமைச் சேவகர்கள். மற்றொன்று ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பெரும்பான்மையினரை உள்ளடக்கிய உழைக்கும் வர்க்கம், உழவர்கள், நகர்ப்புறக் குட்டி முதலாளித்துவ வர்க்கம், தேசிய முதலாளிகள் மற்றும் இவ்வர்க்கங்களின் பின்னணி கொண்ட அறிவுஜீவிகள்.”

இந்நிலையில் இந்தியாவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை ஆதரித்த சமூகப்பிரிவினர் யார்?

1947, ஆக-14 நள்ளிரவில் சுதந்திர அறிவிப்பு… கிடைத்தது சுதந்திரமா?

அந்தக் குறுகிய சிறுபான்மையானது மன்னர்கள், நிலப்பிரபுக்கள் உள்ளிட்ட நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினரையும், தேசிய முதலாளிகளுக்கு எதிர்மறையான பெரும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தினரையும், அன்னிய ஆட்சியாளர்களின் விழுமியங்களை முற்றிலுமாக உள்வாங்கியிருந்தவர்களும், அவர்களது ஆட்சியின் நற்பயன்கள் மீதும் முற்போக்குத் தன்மையின் மீதும் முழு நம்பிக்கை வைத்திருந்தவர்களும், ஒடுக்கப்பட்ட வேறு நாதியற்ற மக்களாக விளங்கிய இந்நாட்டின் உழைக்கும் மக்கள் மீது முழுமையான அவமதிப்பைக் கொண்டிருந்தவர்களுமான பெரும் அதிகார வர்க்கத்தினர் உள்ளிட்ட வசதி படைத்த சமூகப் பின்னணியைக் கொண்ட அறிவுஜீவிகளையும் கொண்டிருந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு ஆங்கில ஏகாதிபத்தியம் போரில் வெற்றி பெற்றாலும் பின்னடைவுக்குள்ளானது. பழையபடி தனது காலனிய நாடுகளை கட்டி ஆளமுடியவில்லை. காரணம் புதிதாக முன் அரங்கிற்கு வந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், சர்வதேச கம்யூனிச இயக்கம் – சோசலிச நாடுகள், காலனிய நாடுகளில் தீவிரமாக நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள், தனது சொந்த ஆயுதப்படைகளின் பிடிமானம் உடைபடுதல் ஆகியவை காரணமாக சிக்கலை சந்தித்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முதன்மையான பிரச்சினையாக இந்திய மக்கள் இருந்தனர்.

அந்தச் சிக்கலை முடிந்த முட்டும் குறைப்பதற்கு அவர்களுக்கு உதவியது யார்?

போரின் முடிவில் ஆங்கிலேயர் ஆட்சி அல்லாத இரு சக்திகள் இந்தியாவில் வினையாற்றின. ஐரோப்பாவில் போர் முடிவுற்ற பிறகு வைசிராய் வேவெல் காங்கிரசு கட்சியின் செயற்குழு உறுப்பினர்களைச் சிறையிலிருந்து விடுவித்து ஜூன் – ஜூலை வாக்கில் சிம்லாவில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். வி.பி.மேனன்  எழுதியது போல காங்கிரசு கட்சி எவ்வித நிபந்தனை ஒத்துழைப்புக் கொடுக்க முன்வந்தது.2 ”ஜப்பானுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நிறைவேற்றவும், ஆதரிக்கவும் தாங்கள் முழுமனதுடன் ஒத்துழைப்பதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், காங்கிரசு தலைவர்கள் வைசிராயின் ஆட்சி மன்ற குழுவில் (இந்திய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சிமன்றக் குழுவை மாற்றியமைப்பதற்கு வைசிராய் எண்ணியிருந்தார்), இடம் பெறுவதற்கு ஆவலாய் இருந்தனர். (காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் அகிம்சைக் கோட்பாடு குறிப்பிடத்தக்க வகையில் இலகுவாக இருந்தது.) பெருமகிழ்ச்சியடைந்த நேரு கூறியதாவது, “நாங்கள் சிம்லாவில் வெற்றி பெறவேண்டும் என்று விரும்புகிறோம் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” ஆனால் மறுசீரமைக்கப்பட்ட ஆட்சிமன்றக் குழுவிற்கு அனைத்து முசுலீம் உறுப்பினர்களையும் நியமிக்கும் உரிமையைத் தனக்கு வழங்கவேண்டும் என்று லீக் (முசுலீம் லீக்) கோரியதால் சிம்லா மாநாடு தோல்வியுற்றது.

காந்தியுடன் முகமது அலி ஜின்னா.

”நாட்டில் அமைதியான சூழலைப் பேணிக் காக்கக் காங்கிரசு தலைவர்கள் பணியாற்றவேண்டும்” என்று வேவெல் கேட்டுக் கொண்டார். நாட்டில் போருக்குப் பிந்தைய எழுச்சியைக் கண்டு வேவெல் அஞ்சினார். அது போலவே காந்தியும் அஞ்சினார்.3 காங்கிரசு கட்சியின் தலைவர் அப்துல் கலாம் ஆசாத் வைசிராய்க்கு எழுதியதாவது:

”காங்கிரசுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட தொடர்புகள் கடந்த கால கசப்பான சம்பவங்களை பெரிதும் மறக்கடித்து நம்பிக்கை, நல்லெண்ணம் கொண்ட ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது.4

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அரசியலமைப்பு பிரச்சனைகள், எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பு, இராணுவ மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் இன்ன பிற விஷயங்களான கல்வி, தொழில்துறைத் திட்டம் ஆகியவற்றைக் குறித்த விவாதங்களில் கலந்து கொள்ளுமாறு காங்கிரசு தலைவர்களை அழைக்கத் தவறிய தில்லை . ஜூன் 1944-ல் டாடா இயக்குனரும், பம்பாய் திட்டம் ஆசிரியரும், நேருவால் போற்றப்பட்டவரான சர் ஆர்தேசிர் தலால் என்பவரைத் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையில் பொறுப்பேற்கும் வகையில் வைசிராயின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

காங்கிரசு இப்படி காலனியவாதிகளோடு நெருக்கமாக இருந்த போதும் இந்திய மக்கள் ஆங்கிலேய ஆட்சி மீது கடுங்கோபத்தில் இருந்தனர். கலகம் செய்தனர்.

நிலவிய புரட்சிகர சூழ்நிலையைச் சரியாகவே புரிந்து கொண்ட நேரு ஆங்கிலேய ஏகாதிபத்திய வாதிகளோடு கைகோர்த்து அச்சூழ்நிலையை நீர்த்துப் போகச் செய்வதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இந்தியா ‘எரிமலையின் விளிம்பில் இருப்பதாகவும் ”நாம் எரிமலையின் உச்சியில் வீற்றிருப்பதாகவும்” நேரு கூறினார். மத்திய சட்ட அவையில் உள்ள ஐரோப்பியக் குழுவின் தலைவரான பி. ஜே. கிரிபித்ஸ் என்பவரும் கூட “பலரின் கருத்துப்படி இந்தியா புரட்சியின் விளிம்பில் இருக்கிறது” என்று கூறினார்.5

ஜூன் 2, 1947 அன்று மவுண்ட் பேட்டன் உடன் விவாதிக்கும் நேரு உள்ளிட்ட இந்திய தலைவர்கள்.

இவர்கள் அஞ்சியது போல இந்தியா வெடித்தெழும் நிலையில் எரிமலையின் விளிம்பில் நின்றது. இந்த பெருங்கோபத்திற்கு காரணம் ஆங்கிலேயர்களின் ஆட்சி மற்றும் சுரண்டல் ஒருபுறம் என்றால், மறுபுறம் போருக்காக இங்கிலாந்து இந்திய மக்களை கசக்கி பிழிந்ததால ஏற்பட்ட கடுங்கோபம். இது முதன்முதலில் கொல்கத்தாவில் வெடிக்கிறது. நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய ஐ.என்.ஏ அதிகாரிகளை விடுவிக்க கோரி கொல்கத்தா மக்கள் கலகத்தை துவங்கினர்.

வழக்கு விசாரணையை சந்தித்துக் கொண்டிருந்த இந்தியத் தேசிய இராணுவத்தினர் (ஐ.என்.ஏ) அதிகாரிகளை விடுவிக்க வலியுறுத்தி நடைபெற்ற மாணவர் பேரணி மீதான போலீசு துப்பாக்கிச்சூடு தான் அதற்கு உடனடிக் காரணமாக இருந்தது. ஒரு மாணவரும், ஒரு இளைஞரும் துப்பாக்கி சூட்டிற்கு இரையாகினர். பலர் காயமுற்றனர். இந்நிகழ்வு கல்கத்தாவையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தீப்பிழம்பாக மாற்றியது. நகர வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. இரயில்கள் நிறுத்தப்பட்டன. தடுப்பரண்கள் அமைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வீதியோரப் போர்கள் நடந்தேறின. அனைத்துச் சமூக பாகுபாடுகளும் மறைந்து போயின.

… ஏறத்தாழ 150 போலீசு மற்றம் இராணுவ வாகனங்கள் தீக்கிரையாக்கப் பட்டன. அதிகாரபூர்வக் கணக்கீட்டின்படி ஒரு அமெரிக்கர் உள்ளிட்ட 33 பேர்கள் கொல்லப்பட்டனர். 200 பொது மக்கள், பல போலீசுக் காரர்கள், 70 ஆங்கிலேயப் படை வீரர்கள் மற்றும் 37 அமெரிக்கப் படை வீரர்கள் காயமுற்றனர்.6 ஒட்டு மொத்த வங்காளத்திலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளின் அதிர்வலைகள் பரவின.

அப்போது வங்க மக்களின் உணர்ச்சிக்கு சான்று தெரியவேண்டுமா? அல்லது போலீசு தடியடிக்கு பின்வாங்காத தூத்துக்குடி மக்களின் உணர்ச்சியை வங்கத்தில் காண வேண்டுமா?

மக்களின் உணர்வுகளைக் குறித்து விவரித்த வங்காள ஆளுநர் கேஸி எழுதியதாவது: ”வடக்கு மற்றும் தெற்குக் கல்கத்தா ஆகிய இவ்விரு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் சிறப்புக் கூறு யாதெனில் மக்கள் தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போது, கலையாது நின்றனர் அல்லது சிறிது தூரம் பின்வாங்கி மீண்டும் தாக்குவதற்கு முன்னேறினர்…

நவம்பர் 24 – அன்று ஆங்கிலேய அரசு படைகள் தலைவர் (Commander -in-Chief) ஆச்சின்லெக் இந்தியாவிற்குள் நிலவிய உள்நாட்டுச் சூழலைக் குறித்து ஆய்வு மேற்கொண்டார். வைசிராய் அவ்வறிக்கையைப் பொதுவாக ஒப்புக் கொள்வதாக தெரிவித்தார்.

இந்த எழுச்சியின் அனல் ஆங்கிலேயர்களை மட்டுமல்ல, காங்கிரசு, கம்யூனிஸ்டு கட்சியையும் தொட்டது. இரு கட்சி பிரமுகர்களும் போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களிடம்  பிரச்சாரம் மேற்கொண்டனர்.  ஆனால் ஆங்கிலேயர்களின் மதிப்பீடோ நிலைமையை சமாளிக்க முடியாது என்கிறது.

ஆச்சின் லெக் எழுதியதாவது: ‘இந்தியப் படைகள் முற்றிலுமாக நம்பவியலாதவையாக மாறும்பட்சத்தில் இப்போது கைவசம் உள்ள ஆங்கிலேய ஆயுதப் படைகளால் உள்நாட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவோ அல்லது அத்தியாவசியத் தகவல் தொடர்பு சாதனங்களைப் பாதுகாக்கவோ இயலாது. இப்படைகளைச் சிறிது சிறிதாகப் பெருக்கிப் பயன்படுத்துவதும் பலனளிக்காது. உள்நாட்டுச் சூழலை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் அத்தியாவசியத் தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்துவதற்கும் இந்தியாவை மீண்டும் வென்றெடுப்பதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரத்தை மேற்கொள்வது தவிர வேறு வழியில்லை.7

இந்திய தேசிய இராணுவ அணிவகுப்பை பார்வையிடும் நேதாஜி.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தினரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு போட்டு தண்டிக்கும் செயல் இந்தியா முழுவதும் பெருங்கோபத்தைக் கிளப்பியது. காந்தி – காங்கிரசு உருவாக்கியிருந்த அஹிம்சைப் போராட்டம் மக்களிடையே ஆதரவு பெறவில்லை என்பதே ஐ.என்.ஏ வீரர்களை விடுவிக்குமாறு மக்கள் நடத்திய போராட்டத்திற்கு காரணம்.

ஆர்.பி. தத் கூறியது போல, ஐ.என்.ஏ. குறித்த முன்னுதாரணமும், ‘தொடர்ச்சியாக நடைபெற்ற ஐ.என்.ஏ. தலைவர்கள் மீதான வழக்கு விசாரணைகளும் போர்க்குணம் மிக்க தேசபக்தியின் மீதும், பழைய அகிம்சாவாதப் போராட்டத்திற்குப் பதிலாக ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியின் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்த கருத்தியல் மீதும் நம்பிக்கைத் தீயை மூட்டின.8

படைகளின் முதன்மைத் தலைவர் ஆச்சின் லெக்கிற்கு நேரு பின்வருமாறு எழுதினார்: ”சில வாரங்களுக்குள்ளாகவே ஐ.என்.ஏ. குறித்த செய்திகள் இந்தியாவிலுள்ள கிராமங்களின் மூலை முடுக்குகள் வரை பரவிவிட்டது. எங்கெங்கும் அவர்கள் மீதான நன்மதிப்புப் பெருகியதோடு அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமும் தோன்றி விட்டது. மக்களிடையே பரவலாக எழுந்துள்ள ஆர்வக்கிளர்ச்சி வியப்பளிக்கக்கூடியதுதான். இருப்பினும் அதைவிட வியப்பளிக்கக் கூடியது யாதெனில் பெரும் எண்ணிக்கையிலான நிரந்தர இந்திய இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மத்தியில் இதே போன்ற ஆர்வக்கிளர்ச்சி தோன்றியுள்ளது என்பதே. ஏதோ ஒரு உணர்வு அவர்களது ஆழ்மனதைத் தொட்டுவிட்டது. 9

ஐ.என்.ஏ மீதான இந்திய மக்களின் ஆதரவோடு பிரச்சினை முடிந்துவிடவில்லை. அன்றைக்கிருந்த பிரிட்டீஷ் இந்தியப் படை வீரர்களிடம் அது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. வர இருக்கின்ற நாட்களில் பல நகரங்களில் படை வீரர்கள் செய்யப் போகும் கலகத்திற்கு இது ஒரு துவக்கமாக இருந்தது.

ஐ.என்.ஏ. க்கு ஆதரவு (பிரிட்டிஷ் இந்திய ஆயுதப் படைகள் மத்தியில்) பெருகி வருவதாக நவம்பர் 26, 1946 அன்று ஆச்சின் அத்தின்லென் வேவெலுக்கு எழுதினார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் எழுந்த போராட்டத் தீயை தணிப்பதற்கு காங்கிரசும், காந்தியும் பெரிதும் முயன்றனர்.

காங்கிரசு செயற்குழு கல்கத்தாவில் கூடி ”சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வழிகாட்டும் நெறியாக” அகிம்சைவாதத்தின் மீது தனது நம்பிக்கையை வலியுறுத்தி, ”பொதுச் சொத்தை தீயிட்டுக் கொளுத்துவது என்பது போன்ற செயல்கள் அகிம்சை வாதத்திற்குள் அடங்காது எனத் தெளிவு படுத்தியது.

“அமைதியான சூழலைக் காப்பதன் அவசியத்தை” நேரு வலியுறுத்திக்கொண்டே இருந்தார்…. “நாட்டை ஆளுகின்ற பணியினை உடனடி யாகத் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்றும் “தலைமையேற்கத் தகுதிவாய்ந்த அரசியல் தலைவர்களிடம் அப்பணியினை விட்டுவிட வேண்டும்” என்றும் அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.10 ‘தன்னால் இயன்றவரை மோதலைத் தவிர்ப்பதற்கும், தீவிர எண்ணம் கொண்டோரைக் கட்டுப்படுத்துவதற்கும்” முயன்று கொண்டிருப்பதாக நேரு பிரிட்டிஷ் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரான சர் ஸ்டாபோர்ட் கிரிப்ஸ்சிடம் (அவர் மூலமாக பிரிட்டிஷ் அமைச்சரவை முழுமைக்கும்) டிசம்பர் 3, 1945 அன்று உறுதி அளித்தார்.11

”பயனற்ற தகராறுகளில் தங்களுடைய ஆற்றலை விரயம் செய்ய வேண்டாம்” என்று சர்தார் பட்டேல் இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார்.

நேதாஜி , காந்தியுடன் படேல்.

ஆனால் மக்கள் காங்கிரசு தலைவர்களின் வேண்டுகோள்களையும், காட்டிக் கொடுப்புகளையும் புறக்கணித்தனர்.

சட்டம் ஒழுங்கையும், அகிம்சை வழியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற காங்கிரசு தலைவர்களின் போதனைகளை புறக்கணித்த கொல்கத்தா…. பிப்ரவரி 11-18 1946 ஆகிய நாட்களில் கிளர்ந்தெழுந்தது. ஐ.என்.ஏ வின் அப்துல் ரஷீத்திற்கு விதிக்கப்பட்ட ஏழாண்டு கடுங்காவல் தண்டனைக்கு எதிராக மாணவர்களால் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் இக்கிளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. போராட்டத்தின் காரணமாக நகர வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப் போனது. இரண்டு நாட்களுக்கு கொல்கத்தாவை ஒட்டியிருந்த பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன. இரயில்கள் ஓடவில்லை . ஆயுதந்தாங்கிய போலீசாருடனும் கவச வாகனங்களில் அணிவகுத்த இராணுவ படைகளுடனும் மக்கள் கடுமையான தெருமுனைப் போர்களில் ஈடுபட்டார்கள்… இந்துக்கள் மற்றும் முசுலீம்கள் இடையே நிலவிய உறுதியான ஒற்றுமை முக்கியக் கூறாக விளங்கியது…. அதிகாரபூர்வ புள்ளி விபரங்களின்படி 84 பேர் பேர் கொல்லப்பட்டனர்; 300 பேர் காயமுற்றனர். நவம்பர் மாதத்தில் ஏற்பட்டவாறே இப்போதும் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் தோன்றிய ஏகாதிபத்திய எதிர்ப்பு அலை வங்காளம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வங்கக் கடலோரம் துவங்கிய எழுச்சி விரைவிலேயே அரபுக் கடலோரம் மும்பையை தொட்டது. பின்னர் அதுதான் புகழ்பெற்ற கடற்படை வீரர்களின் எழுச்சியாக பரிணமித்தது. அதன் பிறகு நாடெங்கும் உள்ள படை வீரர்களின் அணிகள் கலகம் புரிய ஆரம்பித்தனர். தனது சொந்தப் படையே தனக்கு எதிராக திரும்புவதுதான் ஒரு ஆளும் வர்க்கத்திற்கு முற்றிலும் தோல்வியடையும் தருணம்!

பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான மும்பை எழுச்சியை வன்முறையாகச் சித்தரிக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு.

பிப்ரவரி 18, 1946 அன்று துவங்கிய மும்பை கிளர்ச்சிதான் அவற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அனைவரையும் ஈர்ப்பதாகவும் இருந்தது. ராயல் இந்தியன் கடற்படையின் (Royal Indian Navy) வீரர்கள் முதலில் மும்பையிலும் பின்னர் கராச்சி, கல்கத்தா (கொல்கத்தா), மதராஸ் (சென்னை) ஆகிய நகரங்களிலும் கலகம் புரியத் துவங்கினர். மோசமான உணவு, நிறவெறிக் கொள்கை, ஆங்கிலேய அதிகாரிகளால் சுமத்தப்பட்ட அவமானங்கள் போன்ற பல்வேறு குறைகளைக் கொண்டிருந்த கலகக்காரக் கடற்படையினர் சுபாஷ்போசின் வீரதீரச் செயல்களாலும், ஐ.என்.ஏ.வின் முன்னுதாரணத்தாலும் உந்தப்பட்டனர்.12

பிப்ரவரி 22, 1946 நாளுக்குள்ளாக கலகக்காரக் கடற்படையினர் ஆங்கிலேய கடற்படையினுடைய துணைத்தலைவரின் (Vice – Admiral) முன்னணி கப்பல் உள்ளிட்ட மும்பையில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மொத்தமாக ராயல் இந்தியன் கடற்படையை சார்ந்த 78 கப்பல்கள், 20 கடற்கரையோர படை அமைப்புகள், 20,000 கடற்படை வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் உள்ள ராயல் இந்தியன் விமானப் படை முகாம்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் குதித்தனர். கட்டளை பிறப்பிக்கப்பட்ட பிறகும் கூட இந்திய இராணுவப் படைவீரர்கள் மும்பை மற்றும் கராச்சியிலுள்ள ராயல் இந்தியன் கடற்படை வீரர்களைச் சுட மறுத்தனர்.

இராணுவத்தை அனுப்பி கடற்படை வீரர்களின் கலகத்தை ஒடுக்கிவிடலாம் என்று மனப்பால் குடித்தது பிரிட்டீஷ் இந்திய அரசு. ஆனால் இராணுவம் சுடவில்லை என்பதோடு இராணுவத்தில் இருந்த வெள்ளையின வீரர்களுக்கும் கடற்படை வீரர்களுக்குமான மோதலாக அது மாறியது.

மும்பை வீதிகளில் பிரிட்டிஷ் படைகள். மக்கள் எழுச்சியை நசுக்க இராணுவத்தின் கனரக வாகனங்கள் வந்தன!

பிப்ரவரி 21 அன்று கடற்படை வீரர்களின் போராட்டமானது அவர்களுக்கும், இந்திய இராணுவப்படை வீரர்கள் சுட மறுத்ததால் வரவழைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயப் படைகளுக்கும் இடையிலான மோதலாக வெடித்தது.13

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த எழுச்சிக்கு மும்பை தொழிலாளிகள் கடற்படை வீரர்களுக்கு முக்கிய அரணாக திகழ்ந்தனர். முழு மும்பையுமே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றது.

தாங்கள் சார்ந்திருந்த சமூகங்களைப் பாராமல் மும்பையில் தொழிலாளர்களும், இளைஞர்களும் கடற்படையின் வீரதீரர்கள் பக்கம் நின்று, அவர்களுக்கு உணவு கொண்டு சென்று, தடுப்பரண்கள் நிறுவி, ஆயுதந்தாங்கிய போலீசாருடனும், கவச வாகனங்கள், கனரக கவச வாகனங்கள் ஆகியவற்றுடன் வந்திருந்த பல ஆங்கிலேய இராணுவப் படைகளுடனும் கடுமையாக மோதினர்.

ஏற்கனவே பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுடன் இந்தப் போராட்டத்தை எப்படி தணிப்பது என்று பேசிக் கொண்டிருந்த காங்கிரசும், முசுலீம் லீக்கும் மும்பை எழுச்சியை குலைப்பதற்கு புயலாய் வேலை செய்தன. ஆனால் மும்பை அதனை சட்டை செய்யவில்லை.

தற்போது தூத்துக்குடியை நினைவுபடுத்தும் அப்போதைய மும்பை வீதியில் மக்களைச் சுடும் பிரிட்டிஷ் படைவீரர்கள்.

பிப்ரவரி 22 அன்று மிகப் பெரிய காங்கிரசு மற்றும் முசுலீம் லீக் தலைவர்களின் எதிர்ப்புக்கு இடையில் மும்பை பொது வேலைநிறுத்தத்தை மேற்கொண்டது.

காங்கிரசு மற்றும் முசுலீம் லீக் தலைவர்களைப் புறக்கணித்த மும்பையின் ஒட்டுமொத்தப் பாட்டாளி வர்க்கமும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியால் (சி.பி.ஐ) ஆதரிக்கப்பட்ட, கடற்படை மையப் போராட்டக் குழுவால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, இணங்கப் போராட்டத்தில் குதித்தது. இரண்டு நாட்களாக நகரின் வீதிகளில் மோதல்கள் நிகழ்ந்தன. அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்களின்படி ஏறக்குறைய 1,500 பேர் மோதல்களில் பலத்த காயமுற்றனர் . அவர்களில் 200 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

”ஆயிரக்கணக்கானோரைச் சுட்டுக் கொன்றபிறகுதான் ஆங்கிலேயக் கனரக கவச ஊர்திகள் தெருக்களைக் கைப்பற்ற முடிந்தது” என எழுதினார் கிளர்ச்சியின் தலைவர்களுள் ஒருவரான பி.சி.தத். ”இந்திய விடுதலை இயக்கத்தின் கொந்தளிப்பான வரலாற்றில் நிராயுதபாணிகளாகத் தலைமையின்றித் தவித்த மக்களுடனான மோதலில் ஆட்சியாளர்கள் கனரக கவச ஊர்திகளை பயன்படுத்தியது இதுவே முதல்முறையாக இருந்தது. பிப்ரவரி 21 கடற்படை வீரர்களின் நாளாக இருந்தது. பிப்ரவரி 22 மும்பைத் தொழிலாளர்களின் நாளாக இருந்தது.”14

மும்பை மட்டுமல்ல, இன்றைய பாகிஸ்தானில் இருந்த கராச்சியிலும் கடற்படை வீர்கள் மோதலைத் துவங்கினர். அவர்களை சுடுவதற்கு கூர்கா படை வீரர்கள் மறுத்தனர். இந்தியாவின் தேசிய இனங்கள் அனைத்தும் மத வேறுபாடுகள் இன்றி ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து ஒன்றிணைந்து போர் புரிந்த நாட்கள் அவை.

பிரிட்டிஷ் படைகளை பிடறிதெறிக்க தெருக்களில் ஓடவிட்ட மும்பை மக்கள்.

மும்பைக்கு அடுத்தபடியாகக் கராச்சிதான் கடற்படை வீரர்களுக்கும், ஆங்கிலேயப் படைவீரர்களுக்கு இடையில் நடைபெற்ற உண்மையான மோதல் களமாக விளங்கியது. துணிவாகப் போரிட்ட இந்துஸ்தான் என்ற பழைய போர்க்கப்பலில் இருந்த கடற் படையினரைச் சுட பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளுக்கு கீழ்ப்பணிய குர்கா படைவீரர்கள் மறுத்தனர். பின்னர் குர்கா படை வீரர்கள் மாற்றப்பட்டு ஆங்கிலேயப் படைவீரர்கள் கொண்டு வரப்பட்டனர்.

கடல், தரை இராணுவப் பிரிவுகளோடு விமானப் படையும் போராட்டத்தில் இணைகிறது.

……..பல்வேறு இடங்களில் கலகக்காரக் கடற்படை வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டனர். பம்பாயில் நடைபெற்ற ஆதரவு தெரிவிக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அது போலவே பூனே, கல்கத்தா, மதராசு மற்றும் அம்பாலாவில் நடைபெற்ற போராட்டங்களிலும் விமானப்படை வீரர்கள் பங்கேற்றனர். தத்தாவை மேற்கோள் காட்டுவோமானால், ”பம்பாய்க்குச் செல்ல உத்தரவிடப்பட்டிருந்த ராயல் இந்திய விமானப்படையின் ஒரு படையணி ஜோத்பூரில் முடங்கிவிட்டது. ஒவ்வொரு விமானமும் மர்மமான முறையில் இயந்திரக் கோளாரைச் சந்தித்தது.”15

இதோ உ.பி நகரங்களில் நிலை கொண்டிருந்த விமானப்படை வீரர்கள் ஐ.என்.ஏ பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை அனுப்புகின்றனர்.

உத்தரபிரதேசத்தின் அப்போதைய ஆளுநராக இருந்த ஹாலட் அலகாபாத், பாம்ராலி, கான்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப் பட்டிருந்த விமானப்படை வீரர்கள் ஐ.என்.ஏ. பாதுகாப்பு நிதிக்குத் தங்களுடைய பங்களிப்புகளை அனுப்பியிருந்தனர் என்று நவம்பர் 19, 1945 என்று வேவெலுக்குத் தெரிவித்தார். 16 ஐ.என்.ஏ. வீரர்கள் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவதைக் கல்கத்தாவில் இருந்த இந்திய விமானப்படை முகாம் எதிர்த்தது. ஐ.என்.ஏ. பாதுகாப்பு நிதிக்கு அனுப்பப்பட்ட குறிப்பில் அது வீரம் செறிந்த தேசபக்தி மிகுந்த மைந்தர்களின் பாதுகாப்பிற்காக ” எனக் குறிப்பிட்டிருந்தது.17

அடுத்ததாக போலீசாரும் களத்தில் குதிக்கின்றனர்.

மும்பை எழுச்சியில் களப்பலியான மக்கள்.

சில இடங்களில் காவல் துறையினரும் கலகம் விளைவித்தனர். மார்ச் 1946-ல் காவல் துறையினர் அலகாபாத் மற்றும் டில்லியில் பட்டினிப் போர் நடத்தினர். ஏப்ரல் மாதத்தில் 10,000 காவல்துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் மாதத்தில், பாட்னா மற்றும் பெகுசாரையில் இராணுவக் காவல்துறையினர் வேலை நிறுத்தம் செய்தனர்…….

….வீரஞ்செறிந்த கடற்படை வீரர்கள் எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிபணியவில்லை . குண்டுவீசும் விமானங்களை அனுப்பிக் கடற்படையை அழிப்போம் என்ற அட்மிரல் கோட்ப்ரீயின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை. அவர்கள் தங்களை வழிநடத்த வருமாறு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துத் தங்களால் இந்திய தேசிய கடற்படை என்று மறு பெயர் இடப்பட்டிருந்த கடற்படையை அவர்களிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்தனர். ஆனால் சி.பி.ஐ. உள்ளிட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் கலகக்காரக் கடற்படை வீரர்களுடன் தொடர்பு வைத்திருந்தும் அவர்களுக்கு செவி மடுக்கவில்லை .

இதுதான் அன்றைய அவலநிலை. காங்கிரசு, முசுலீம் லீக் போன்ற கட்சிகள் ஆங்கிலேயரின் தாளத்திற்கு வாத்தியம் இசைத்த போதும், உழைக்கும் மக்களிடம் வேர் விட்டிருந்த கம்யூனிஸ்டுக் கட்சியும் இந்த போராட்டத்திற்கு தலைமையேற்க மறுத்துவிட்டது. இந்நிலையில் தனது இன்னுயிரை பணயம் வைத்து போராடிய வீரர்கள் என்ன செய்வார்கள்? நாடெங்கும் எழுச்சி ஏற்பட்டிருந்தாலும் ஒரு புரட்சிகரக் கட்சி வழிநடத்துவதற்கு இல்லை எனும் போது அவர்கள் என்ன செய்ய முடியும்?

மும்பையில் இந்திய கடற்படை வீரர்கள், பிரிட்டிஷ் படைகளை 6 மணிநேரம் எதிர்த்து போரிட்டதை பதிவு செய்துள்ள, ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்டு பத்திரிக்கை.

தத் எழுதியதாவது “அறுதிப் பெரும்பான்மையினர் மரணம் வரை போரிடவே விரும்பினரே தவிர சரணயடைவதற்காக அல்ல.”18 இறுதியாகக் கடற்படை மைய போராட்டக் குழுவானது காங்கிரசு மற்றும் லீக்கிடம் சரணடைகிறோமே தவிர ஆங்கிலேய ஆட்சியிடம் அல்லவென கூறிச் சரணடைய முடிவெடுத்தது. மக்களுக்கு விடுத்த கடைசி அறிக்கையில் அவர்கள் கூறியதாவது: ”முதன்முறையாக படைவீரர்களின் குருதியும் மக்களின் குருதியும் ஒரே நோக்கத்திற்காக இரண்டறக் கலந்து ஆறாக ஓடியது. படைகளில் அங்கம் வசிக்கும் நாங்கள் இதை மறக்கவே இயலாது. எங்களுடைய சகோதரர்களும், சகோதரிகளுமாகிய நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நமது மாபெரும் மக்கள் வாழ்க. ஜெய்ஹிந்த்.”19

சரணடைந்த வீரர்களை பிரிட்டிஷ் இந்திய அரசு என்ன செய்தது?

சரணடைந்ததற்கு பின்பு மனிதவேட்டை தொடங்கிற்று. 2000க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் தளைப்படுத்தப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஏறக்குறைய 500 பேருக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டு சாதாரணக் குற்றவாளிகளாக நடத்தப்பட்டனர். “எவ்விதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது” என உறுதியளித்திருந்த மூத்த காங்கிரசு தலைவர்கள் அவ்வாக்குறுதியை காப்பாற்ற ஒன்றுமே செய்யவில்லை.20

கடற்படைக் கலகத்தின் போது துரோகவேலை பார்த்த காங்கிரசு தலைவர்களின் பங்கை சுனிதி குமார் கோஷ் ஆணவப்படுத்துகிறார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கடற்படைக் கலகத்தின் போது காங்கிரசு தலைவர்கள் ஆற்றிய பங்கு என்ன ? சர்தார் பட்டேல், அபுல் கலாம் ஆசாத், எஸ். கே. பாட்டீல் (பம்பாய் மாகாணக் காங்கிரசு  கமிட்டிச் செயலாளராகவும் பின்னர் மைய அரசின் அமைச்சராகவும் இருந்தவர்) போன்ற காங்கிரசு தலைவர்களும், முஸ்லீம் லீக்கைச் சார்ந்த ஜின்னா மற்றும் சுந்தரிகரும் கடற்படை மையப் போராட்டக் குழு விடுத்திருந்த பிப்ரவரி 22 வேலைநிறுத்தத்தை வெளிப்படையாக எதிர்த்துக் கடற்படை வீரர்களை ஆங்கிலேயரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தினர்.

பம்பாய் ஆளுநருடன் பாட்டீல் இரகசிய ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்தார். காங்கிரசும், லீக்கும் மக்களை எதிர்த்துப் போரிடும் பொருட்டு காவல்துறைக்கும், ஆங்கிலேய இராணுவப் படைகளுக்கும் உதவுவதற்காக ஆங்கிலேய அரசுக்கு “தன்னார்வத் தொண்டர்களை” அனுப்பின.21

பிப்ரவரி 22 அன்று வேவெலுக்கு எழுதிய கடிதத்தில் கோல்வில்லே கூறும்போது, தான் “பல தன்னார்வத் தொண்டர்களைக் கண்டதாகவும் அவர்களுடைய பணி குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டவாறு இருந்தது எனினும்… பயனுள்ளதாக இருந்தது” என்று எழுதினார்.”

மும்பை கடற்படை வீரர்களின் வீரஞ்செறிந்த எழுச்சியை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, காங்கிரசும் காந்தியும் இதர தலைவர்களும்தான் சேர்ந்து கருவறுத்தார்கள்.

காங்கிரசு மற்றும் லீக் தலைவர்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையில் பம்பாய் பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியது. தொழிலாளர்களும், மாணவர்களும் காங்கிரசு மற்றும் லீக் தன்னார்வத் தொண்டர்களின் துணைகொண்டு ஒடுக்க முனைந்த ஆங்கிலேய இராணுவப் படைகளுடனும், ஆயுதந்தாங்கிய காவல் துறையினருடனும் தெருமுனைப் போர்களில் இறங்கினர்.

பம்பாய் அரசாங்கத்தின் அனுமதி பெற்று பிப்ரவரி 26 அன்று பம்பாயில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் நேருவும், பட்டேலும் ‘பம்பாயில் பரவலாக நடைபெற்ற மக்கள் போரை’ அதாவது ‘ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலகப் பதாகையை உயர்த்திப் பிடிக்கத் துணிந்த கடற்படை வீரர்கள், தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தை’ வன்மையாகக் கண்டித்தனர். அடுத்த நாள் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நேரு ”இது போன்ற வேண்டுகோளை (வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தருமாறு பம்பாய் நகருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு) விடுப்பதற்கு ராயல் இந்தியன் கடற்படையின் மையப் போராட்டக்குழுவுக்கு எவ்வித உரிமையும் இல்லை. நான் இது போன்ற செயல்களை அனுமதிக்க மாட்டேன்.22 நேருக்களுக்கு மட்டுமே வேலை நிறுத்தங்களுக்கு அழைப்புகள் விடுக்கும் உரிமை இருந்தது போலும்!

அகிம்சையின் தூதுவர் காந்தி கண்மூடித்தனமான வன்முறைக் கோரதாண்டவத்தைக் கட்டவிழ்த்துவிட்டதற்காகக் கலகக்காரர்களைக் கண்டித்தார். மக்களை உண்மையில் பலி வாங்கிய ஆங்கிலேய ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த உண்மையான வன்முறைக் கோரதாண்டவத்தை அவர் கண்டிக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, “வன்முறை நடவடிக்கைக்காக இந்துக்களும் முசுலீம்களும் பிறரும் ஒன்று சேர்வது பாவகரமான செயல்..” இந்தியாவிற்கு  விடுதலை வழங்குவோம் என்ற ஆங்கிலேயரின் கூற்றுக்களை நம்ப மறுத்தவர்களையும் அவர் தொடர்ந்து கண்டித்தார். ஒன்றுபட்ட மக்களின் வன்முறைப் போராட்டம் பாவகரமானது எனினும், அகிம்சையின் இறைத்தூதர் இந்தியாவின் பிரச்சனைகளுக்கு தீர்வாகச் சில இலட்சம் மக்கள் கொல்லப்படக்கூடிய நிகழ்வுகளான இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் இடையிலான வகுப்புக் கலவரங்களையும் ”சகோதர யுத்தத்தையும்” எதிர்நோக்கி இருந்தார்.

மும்பை கடற்படை வீரர்களின் வீரஞ்செறிந்த எழுச்சியை ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, காங்கிரசும் காந்தியும் இதர தலைவர்களும்தான் சேர்ந்து கருவறுத்தார்கள். முசுலீம் லீக் அதற்கு ஒத்தூதியது. கம்யூனிஸ்ட் கட்சியோ வீரர்களைக் கைவிட்டது. இந்தியா முழுவதும் இப்படி படையணிகளில் ஏற்பட்ட கலகம்தான் ஆங்கிலேயரை ஆட்சி மாற்றம் குறித்து உடன் முடிவெடுக்குமாறு நிர்பந்தித்தது. சுடுவதற்கு படை இல்லாதபோது ஒரு ஏகாதிபத்தியம் எப்படி ஆள முடியும்? ஆனாலும் காங்கிரசு என்ற துரோகப் படை இருந்த படியால் ஆங்கிலேயர்கள் தனது நலன்களை பாதுகாத்துக் கொண்டே ஆட்சியை தனது காங்கிரசு அடிமைகளுக்கு கைமாற்றிக் கொடுத்தனர்.

சுனிதி குமார் கோஷின் ”நக்சல்பாரி முன்பும் பின்பும்” நூலில் அவரால் எடுத்தாளப்பட்ட ஆதார நூல்களின் பட்டியல்:

  • 1 – Ronald Robinson, ‘Non-European Foundations of European Imperialism’, in R Owen and B Sutcliffe (Eds), Studies in the Theory of imperialism, p. 120
  • 2 – Transfer of Power , XII, pp. 790-1; Selected Works of Jawaharlal Nehru, XIV, p.47.
  • 3 – Transfer of Power, IV, pp.333-8; 340-4,365-9; V, pp. 1-2,127,424,431; Collected Works of Mahatma Gandhi (CWMG), LXXX, pp.444- 5; HM Seerbhai, Partition of India, p.32 and fn 15.
  • 4 – Transfer of Power, VI, p.455; S Gopal (Ed.), Selected Works of Jawaharlal Nehru, XIV, p.497 – emphasis added.
  • 5 – Cited in RP Dutt, Freedom for India, front cover page.
  • 6 – Transfer of Power, VI, p.713.
  • 7 – Ibid, pp.543, 582.
  • 8 – RP Dutt, Freedom for India, London, 1946.
  • 9 – Selected Works of Jawaharlal Nehru (SWJN), XV, p.92-emphasis added.
  • 10 – See SWJN, XIV, pp. 195, 207, 229, 231, 241, 252, 254, 491, 493, passim. Emphasis added.
  • 11 – Cited in RJ Moore, Escape from Empire, p. 76.
  • 12 – BC Dutt, Mutiny of the Innocents, p.61; Hindusthan Standard (a daily now extinct), 21.1.1947
  • 13 – See SWJN, XV, p. 1, note 2.
  • 14 – BC Dutt, op cit, pp. 174,175.
  • 15 – BC Dutt, op cit, pp. 174,175
  • 16 – Transfer of Power VI, pp. 507-8.
  • 17 – SWJN,XIV,p.543,fn.4.
  • 18 – Dutt, op cit, p.181
  • 19 – Ibid, p. 185.
  • 20 – Ibid, pp.185-6
  • 21 – See Bombay governor John Colville’s report to Viceroy Wavell, February 27,1946, Transfer of Power, VI, pp.1079-84; See especially p.1082
  • 22 – SWJN, XV, pp. 4,13; Transfer of Power, VI, p. 1083-emphasis added.

நூல்: நக்சல்பாரி முன்பும் பின்பும்
ஆசிரியர்: சுனிதிகுமார் கோஷ்
தமிழாக்கம்: கோவேந்தன்

பக்கங்கள்: 560
விலை: 350

வெளியீடு: விடியல் பதிப்பகம்
23/5, ஏ.கே.ஜி. நகர், 3வது தெரு,
உப்பிலிபாளையம் அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641015
தொலைபேசி: 0422 – 2576772, 6789 457941

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு! | மீள்பதிவு

டிசம்பர் 25, 2024 அன்று இந்திய கம்யூனிச இயக்கம் 100ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆயிரக்கணக்கான தோழர்களின் தியாகங்களும் உழைக்கும் மக்களின் குருதியும் சமத்துவத்திற்கான வேட்கையும் நிறைந்ததே இந்திய கம்யூனிச இயக்க வரலாறு.

இந்த நூறாண்டுகளில் இந்தியாவில் புரட்சியை சாதிப்பதற்கு பல்வேறு தருணங்கள் அமைந்தாலும் இந்திய கம்யூனிச இயக்கத்தில் பீடித்துள்ள திரிபுவாதம், சந்தர்ப்பதாவதம், இடது, வலது திசைவிலகல்கள் காரணமாக அவை கைநழுவி போயின. இடதுசாரி அமைப்புகள் சிதறி போயின.

ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் இந்தியாவில் அரங்கேறிவரும் இன்றைய சூழலில், பாசிச சக்திகளுக்கு எதிராக இந்தியாவில் உள்ள புரட்சிகர சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மார்க்சிய சித்தாந்தத்தின் கீழ் மாற்று கட்டமைப்பை முன்வைத்து போராட வேண்டியுள்ளது.

இத்தருணத்தில், இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றை தெரிந்துகொள்வதற்கும் அதுகுறித்த விவாதத்தை துவங்குவதற்கும் இந்திய கம்யூனிச இயக்க வரலாறு தொடர்பான கட்டுரைகளை மீள்பதிவு செய்கிறோம்.

இக்கட்டுரை டிசம்பர் 30, 2015 அன்று வினவு தளத்தில் வெளியிடப்பட்டது.

***

நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம்

ந்தச் சொல்லை ஏதாவது ஒரு வகையில் நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது.

நாளேடுகளில், வானொலியில், தொலைக்காட்சியில் அன்றாடம் அடிபட்டுக் கொண்டுதானே இருக்கிறது. ஆனால் அந்தச் சொல்லுக்கு நல்லவிதமான கருத்தைத் தரும்வகையில் அவை ஒரு போதும் செய்திகள் கொடுத்ததே இல்லை.

“நிலப்பிரப்புகள், அரசியல்பிரமுகர்கள் நக்சல்பாரிகளால் சுட்டுக்கொலை”, “நக்சல்பாரிகள் போலீசு நிலையங்களை தாக்கி துப்பாக்கிகள் பறிமுதல்”, “நக்சல்பாரிகள் வைத்த நிலக்கண்ணி வெடித்து போலீசார் பலி”, “ரயில்நிலையவங்கள், பாலங்களைத் தீவிரவாதிகள் தகர்த்தனர்”, “வெடிகுண்டுகள் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் கைது”, “போலிசுடன் நடந்த மோதலில் நக்சல் பாரிகள் கொல்லப்பட்டனர்”.

– இப்படியான செய்திகளைக் கொண்டு நக்சல்பாரிகள் என்றாலே நோக்கமற்ற, சமூக விரோத பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்ற எண்ணம் பரப்பப்படுகிறது.

“தனிநபர் அநீதிக்கு இலக்கானவர்கள், வேலை வாயப்பற்ற இளைஞர்கள் நக்சல்பாரிகளாக மாறி தவறாக வழிநடத்தப்பட்டு அப்பாவி மக்களையும் சமூகத்தையும் பழிவாங்கத் துடிப்பவர்கள்” என்று கோமல் சுவாமிநாதன், கமலஹாசன் போன்ற சினிமாக்காரர்களால் கொச்சைப்படுத்தப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள்.

“சமூக விரோதிகள்”, “தீவிரவாதிகள்”, “பயங்கரவாதிகள்”, “நக்சலைட்டுகள்”, நக்சல்பாரிகள்”, “தீ கம்யூனிஸ்டுகள்”, இப்படிப் பலவாறு எதிரிகளால் குறிப்பிடப்படும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் எவரும் இதனாலெல்லாம் வருந்தவோ, வெட்கப்படவோ கிடையாது.

ஏனென்றால் சாவுக்கு அஞ்சாதவர்கள்தாம் நக்சல்பாரிகள். “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்படுவதில் இருந்து பிழைத்தவர்களைப் பிடித்து வந்து குற்றுயிரும் குலையுயிருமாக வழக்குமன்றத்தில் நிறுத்தப்பட்டபோதும் நக்சல்பாரிகள் சொன்னார்கள் “ஆம்! நாங்கள்தான் பண்ணையார்களைக் கொன்றோம்; மக்கள் எதிரிகளை அழித்தொழிப்பது குற்றமில்லை! தூக்குத் தண்டனையா, கொடு! தீர்ப்பை முடிவு செய்துவிட்டு விசாரணை என்று ஏன் நாடகமாடுகிறாய்?” என்று கலகக் குரல் எழுப்பினார்கள்.

ஆகவே, எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்.

ஆனால் இதற்குப் பெயர் ஏன் நக்சல்பாரி என்று வந்தது?

நக்சல்பாரி –-

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறுகிராம்ம். மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில் உள்ளது அந்த கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள் மிட்டா மிராசுகள், கந்துவட்டி லேவாதேவிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல், ஒடுக்கு முறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டுள்ள இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.

அன்று, அரசாங்கக் குறிப்பேடுகளில் மட்டுமே அறியப்பட்ட இருள்கப்பிய கிராமமாகத்தான் இருந்தது, அந்த நக்சல்பாரி.

ஆனால் இன்றோ, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. உலகின் எல்லா மொழி அகராதியிலும் அதற்குத் தனி விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இனிமேலும் நக்சல்பாரி என்ற சொல் அந்தச் சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை.

நக்சல்பாரி என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் அச்சம் கொள்ள வைக்கிறது.

பண்ணை நிலப்பிரபுக்களையும், கந்து வட்டி லேவாதேவிக்காரர்களையும், கொள்ளை வியாபாரிகளையும், அதிகார வர்க்கத்தினர்களையும் குலைநடுங்கச் செய்கிறது.

ஏனென்றால் நக்சல்பாரி என்பது இப்போது,

– ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது.

– ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியைக் குறிக்கிறது.

– நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் மையமாக விளங்குகிறது.

– நாடாளுமன்றத் தொழுவத்தில் விழுந்து புரளும் பன்றிகளாகிய அரசியல் கட்சிகளை எள்ளி நகையாடும் அரங்கமாகத் திகழ்கிறது.

– எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரவர்க்க – இராணுவ அரசு அமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது.

– உழைக்கும் மக்கள் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாகத் தெரிகிறது.

நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றி உலகம் முழுவதும் அறிந்திருந்தாலும் அதற்கு இந்தப் பெயர் எப்படி வந்தது என்பது பலருக்கும் தெரியாது.

அது இப்படித்தான் நிகழ்ந்தது.

1871-ம் ஆண்டு பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் முதலாளிகளின் அரசு அமைப்பைத் தகர்த்து பாரிசு கம்யூன் என்னும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவினார்கள். அது இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு தோல்வியுற்றாலும் அதன் மூலம் உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நிறுவிக் கொள்வதற்கான முன் மாதிரி ஒன்றை உலகுக்கு எடுத்து காட்டினார்கள்.

அதைப் போலத்தான் “உழுபவனுக்கே நிலம்,உழைப்பவனுக்கே அதிகாரம்” என்கிற முழக்கத்தை முன் வைத்து, 1967-ம் ஆண்டு மே மாதம் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நக்சல்பாரி, விவசாயிகள் இந்தியப் புரட்ச்க்கான போர்ப் பிரகடனம் செய்தார்கள்.

அன்று, நக்சல்பாரி உழவர்கள் மூட்டிய சிறு பொறி பெருங்காட்டுத் தீயாக மாறி நாடு முழுவதும் பற்றிப் படர்ந்ததைக் குறிப்பதுதான் நக்சல்பாரி இயக்கம்.

மேற்கு வங்கம், டார்ஜிலிங் மாவட்டத்தில் சுமார் முன்னூறு சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கிய மூன்று கிராமங்கள் நக்சல்பாரி, கரிபாரி, பன்சிதேவா ஆகியவை. வடக்கே நேபாளம், கிழக்கே சிக்கிம், பூடான், தெற்கே வங்கதேசம் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) இவற்றுக்கு இடையே வடகிழக்கிந்தியாவை இணைக்கும் மெல்லிய கழுத்துப் பகுதியில் ஓடும் ‘மெச்சி’ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, நக்சல்பாரி கிராமம்.

நக்சல்பாரி விவசாயிகளில் பெரும்பாலும் சந்தால், ராஜபான்ஷி, ஒரேயன் ஆகிய பழங்குடி இனத்தவர்கள். விதை, ஏர், மாடு ஆகிய அனைத்தையும் கொடுத்து, விளைச்சலில் பெரும் பங்கை குத்தகையாக விழுங்கிக் கொண்டிருந்த “ஜோத்திதார்” எனப்படும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்தது அக்கிராமம் முழுவதும்.

ஜோத்திதார்களின் ஆதிக்கம் கண்டஞ்சி எப்போதும் சும்மா அடங்கிக் கிடந்தவர்கள் அல்ல நக்சல்பாரி கிராம மக்கள். 1951- 54 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு போராட்டங்கள் மூலம் வலுவான விவசாயிகள் சங்கமாகவும், கம்யூனிசக் கட்சி அமைப்பாகவும் அணி திரண்டனர். 1955 – 57 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் நக்சல்பாரி விவசாயிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். தேயிலைத் தோட்ட முதலாளிகளின் அடியாட்களாகக் கொண்டு வரப்பட்ட போலீசுப் படையைப் பின்வாங்கும்படி விரட்டியடித்தவர்கள்.

அங்கே தொழிலாளர்கள் தலைமையில் விவசாயிகள் திரண்டதும், தொழிலாளர்- விவசாயிகள் கூட்டணி உருவானதும் இயல்பாகவும் அவசியமாகவும், தவிக்கவியலாத்தாகவும் அமைந்தது.

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை வைத்திருந்த முதலாளிகள், தோட்டத் தொழிலாளர்களையே தங்களது விவசாய விளைநிலங்களில் குத்தகைதார்ர்களாகப் பயன்படுத்தினர். நில உச்சவரம்புச் சட்டம் வந்தபோது விவசாய நிலங்களையும் தேயிலைத் தோட்டம் என்று கணக்குக் காட்டி ஏய்த்தனர். ஒருபுறம் தாங்கள் நினைத்த போதெல்லாம் தோட்டத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தனர். மறுபுறம் ஜோத்திதார்கள் பெருமளவு விவசாயிகளை தமது குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்றினர்.

1958 – 62 ஆகிய ஆண்டுகளில் நக்சல்பாரியில் விவசாயிகளின் இயக்கம் மேலும் போர்க்குணமடைந்தது. நில வெளியேற்றத்துக்கு எதிராக “குத்தகைதார விவசாயிகளே அறுவடையைக் கைப்பற்றுவது, பயிர்களைக் காப்பதற்காக ஆயுதமேந்துவது, போலீசின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தயாராயிருப்பது” என்று நக்சல்பாரி விவசாயிகளுக்குத் தலைமையேற்றிருந்த கம்யூனிஸ்டுக் குழு வழிகாட்டியது.

1966–ல் சிலிகுரி பகுதியில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 16 நாள் வேலை நிறுத்தம், அடுத்த ஆண்டு வெடிக்கக் காத்திருந்த நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியில் முன்னணிப் பாத்திரமாற்றத் தொழிலாளர்களைத் தயார் செய்தது.

1967-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற அரசியலில் கூட முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ஏகபோகமாக இந்தியாவை ஆண்டுவந்த காங்கிரசு எட்டு மாநிலங்களில் வீழ்த்தப் பட்டு, எதிர்க்கட்சி அணிகள் ஆட்சிக்கு வந்தன. அவற்றில் ஒன்று மேற்கு வங்கம். அங்கே 14 கட்சி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. வங்காளக் காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சர், போலி மார்க்சிஸ்டு கட்சித் தலைவர் ஜோதிபாசு போலீசு அமைச்சர் ஆனார்கள்.

நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்புச் சட்டம் தீவிரமாக அமுலாக்கப்பட்டு உபரி நிலங்களைக் கைப்பற்றி உடனடியாகவே கூலி, ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று தேர்தலுக்கு முனனும் பின்னும் வாக்குறுதிகிகளை வாரி வழங்கினர், போலிக் கம்யூனிஸ்டுகள். அவர்களது நிலம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த அரே கிருஷ்ண கோனார் அதையே உறுதிசெய்ததோடு, நில விநியாகம் வெற்றியடைய வேண்டுமானால் அமைப்பாகத் திரண்ட விவசாயிகள் கீழ் இருந்து “முன் முயற்சி” எடுக்க வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தார்.

கீழிருந்து கட்டவிழ்ந்து கிளம்பும் விவசாயிகளின் “முன் முயற்சி” போலி மார்க்சிஸ்டுகளின் முகத்திரையைக் கிழித்துவிடும், அவர்களுடைய பதவி நாற்காலியையே பறித்து விடும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்பு வந்தது. ஆனால் ஒரு துண்டு நிலம் கூட நிலப்பிரபுக்களிடம் இருந்து கைப்பற்றப்படவில்லை. வழக்கம்போல நிலங்கள் எல்லாம் பினாமி பெயர்களுக்கு மாற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான வழக்குகளும், வழக்கு மன்றத் தடையுத்தரவுகளும் இரண்டு இலட்சம் ஏக்கர் நிலங்கள் மீது போடப்பட்டன. அதிகாரவர்க்கம் நிலப்பிரபுக்களுக்குத் துணை நின்றது.

“பினாமி பெயரால் நடந்துள்ள மோசடியான மாற்றங்களைப் பற்றி அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசியல் சட்டத்தாலும் நீதிமன்றங்களாலும் காகிதக் கட்டுக்களாலும் ஆவணங்களாலும் போடப்படுகின்ற தடங்கல்கள் ஏராளம், ஏராளம்” என்று புலம்பினார் அரே கிருஷ்ண கோனார்.

மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவும், வர்க்கப் போராட்டத்தின் கருவியாக அரசாங்கத்தைப் பயமன்படுத்துவதற்காகவுமே பதவியேற்பதாகக் கூறிக் கொண்ட அந்தப் போலி இடது சாரிகளால் எதையுமே செய்ய முடியவில்லை.

இன்னொருபுறம், ஏராளமான குத்தகை விவசாயிகளை நில வெளியேற்றம் செய்வது அதிகரித்தது. அவற்றைத் தடுக்கவோ, பண்ணை நிலப்பிரபுக்களிடமிருந்து சட்டப்படியான உபரி நிலங்களைக் கைப்பற்றி வாக்களித்தபடி கூலி, ஏழை விவசாயிகளுக்கு வழங்கவோ இல்லை. அப்படிச் செய்தால் தரகு அதிகார முதலாளிகள் – நிலப்பிரபுக்களின் கருவியான மத்திய அரசு இவர்களின் மாநில அரசை பதவி நீக்கம் செய்துவிடும் என்று அஞ்சினர். பேசாமல் மனுக்களை சமர்ப்பித்து விட்டு பொறுமையாகக் காத்திருக்கும்படி விவசாயிகளுக்கு உபதேசம் செய்தார்கள், போலி மார்க்சிஸ்டு அமைச்சர்கள். மேற்கு வங்க ஐக்கிய முன்னணிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி பதவி பறிபோகும் சூழ்நிலை உருவாகாமல் தடுப்பதே விவசாயிகள் உட்பட எல்லா இயக்கங்களின் கடமையாக இருக்கவேண்டுமென அறிவுறுத்திவந்தனர்.

அரசியல் நிர்ணயச் சட்டம், வழக்குமன்றம், அதிகார வர்க்கம் ஆகியவற்றிக்குக் கட்டுப்பட்டு பதவியைத் தக்க வைத்துக் கொள்வதா, அல்லது இவற்றை மீறி உபரி, குத்தகை நிலங்களைப் பறிமுதல் செய்து விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதா? தங்களது பதவியா, விவசாயிகளுக்கு நிலமா? இரண்டிலொன்றை தெரிந்தெடுத்துக் கொள்ளும்படி போலி இடதுசாரிகள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் தமது வர்க்க பாசத்தை, வர்க்க குணத்தை, துரோகத்தனத்தைக் காட்டிவிட்டார்கள். அரசாங்கப் பதவிதான் தமக்கு அவசியமானது, அதைக் காப்பதற்காக உழைக்கும் மக்களின் நலனைப் பலியிடவும், தாங்களே அவர்களை ஒடுக்கவும் துணிந்து விட்டார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள், குறிப்பாக இடதுசாரிக் கட்சிகள் முழங்கி வரும் முற்போக்கு, சீர்திருத்தம் எல்லாம் வெறும் மோசடிகள் தாம் என்பதற்குச் சாட்சியமாக அமைந்தது நக்சல்பாரி உழவர்களின் எழுச்சி.

மார்ச் – 18, 1967 சிலிகுரி வட்ட ‘மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு’ கட்சியின் தலைமையிலான விவசாயிகள் சங்க மாநாடு வெற்றிகரமாகக் கூடியது. அன்று அங்கே போலி மார்க்சிஸ்டுகளின் ஐக்கிய முன்னணிக்கு, நாற்காலிப் புரட்சிக்கு எதிராகக் கலகக் கொடி ஏற்றப்பட்டது.

“நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும். பறிமுதலும் விநியோகமும் செய்யும் அதிகாரம் விவசாயிகள் கமிட்டிகளுடையதுதான். இதைச் செய்ய வேண்டுமெனில் நிலப்பிரபுக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க நாம் ஆயுதம் ஏந்த வேண்டும். நிலப்பிரப்புத்துவ எதிர்ப்புப் போராட்டம் என்பது நிலப்பிரபுக்களை எதிர்ப்பதுடன் முடிந்துவிடாது; அவர்களுக்கு ஆதரவாக வருகின்ற மத்திய, மாநில அரசுகளையும் நாம் எதிர்த்து நின்றாக வேண்டும். எனவே ஒரு நீண்டகாலப் போருக்கு நாம் தயாராக வேண்டும்” என்று விவசாயிகளின் சங்கத்தின் சிலிகுரி தாலுகா செயலர் ஜங்கல் சந்தாலும், ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கனு சன்யாலும் விடுத்த அழைப்பை பெரும் எழுச்சி ஆரவாரத்தோடு வரவேற்று விவசாயிகள் அனைவரும் அங்கீகரித்தனர்.

ஏற்கனவே போர்க்குணமிக்க போராட்டங்களால் விழிப்புணர்வும், அமைப்புப் பலமும் கொண்டிருந்த சிலிகுரி வட்ட, குறிப்பாக நக்சல்பாரிப் பகுதி விவசாயிகள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். மழையிலும், வெயிலிலும் ஜோத்திதார்களின் நிலங்களில் உழைத்துக் களைத்தும் கருகியும் போயிருந்த உழவர்களின் முகங்களில் நம்பிக்கை சுடர்விடத் தொடங்கியது.

நக்சல்பாரி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த விவசாயிகளின் நெஞ்சில் கனலை மீட்டியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு பிகுல் கிஷனுக்கு சாதகமாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை அடித்து விரட்டினர். வழக்கு மன்றமோ, அரசாங்கமோ தங்களைப் பாதுகாக்காது என்பதை இச்சம்பவம் விவசாயிகளுக்குப் புரியவைத்தது. சிலிகுரி வட்ட விவசாயிகள் மாநாட்டு அழைப்பை உடனடியாக அமலாக்குவதே சரியானது என்று அவர்கள் முடிவு செய்தனர்.

ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. 15,000 முதல் 20,000 விவசாயிகள் தங்களை முழுநேர ஊழியர்களாகப் பதிவு செய்து கொண்டனர். எல்லா கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய செங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

உடனே துவங்கின நடவடிக்கைகள்; பட்டாக்கள், கடன் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்களும், துப்பாகிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கொடும் நிலப்பிரபுக்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. வில்லும் அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். இந்தப் பிராந்தியத்தின் காவல் நிலையங்கள் செயலிழந்தன. விவசாயிகளின் அனுமதியின்றி யாரும் அப்பிராந்தியத்தினுள் நுழையக் கூட முடியாது என்ற நிலைமை மே மாதத்தில் உருவானது.

நிலைமை கட்டுக்கு மீறிச் செல்வதைக் கண்டு அஞ்சிய வருவாய்த்துறை அமைச்சர் அரே கிருஷ்ண கோனார் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த சிலிகுரிக்கு விரைந்தார். “நக்சல்பாரியில் நடக்கும் சட்டவிரோதமான நிலப் பறிமுதல்கள் எல்லாம் உடனே நிறுத்தப்படும்” என்றும், “கனு சன்யால், ஜங்கல் சந்தால் போன்ற போலீசால் தேடப்படும் நபர்கள் சரண்டையவும் ஒப்புக் கொண்டுவிட்ட”தாகவும் அறிவித்தார். “இது கடைந்தெடுத்த பொய்” என்று மறுத்தனர்,புரட்சியாளர்கள்.

மே-23, 1967 நக்சல்பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது. தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித் தாக்கினர். ஒரு காவலர் கொல்லப்பட்டவுடன் பின் வாங்கிய போலீசு 25-ம் தேதி பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரு குழந்தைகள் உள்ளிட்ட 9 பேரை கொன்றது, விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர், தலைவர்களைக் காட்டிக் கொடுக்குமாறு போலீசு செய்த சித்திரவதைகளால் இம்மியும் பயனில்லை.”போலீசை ஏன் தாக்கினர்கள்?” என்ற கேள்விக்கு விவசாயிகள் பதிலளித்தார்கள்; “நாங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினோம்”.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொந்தளிப்பை தேற்றுவித்தது. கட்சித் தலைமை இறந்து போனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் ‘மார்க்சிஸ்டு’ கட்சி இரு கூறாகப் பிளவுபடுவதை நீலிக்கண்ணீரால் தடுக்க இயலவில்லை.

“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்” என்ற முழக்கங்களால் கல்கத்தா நகரச் சுவர்களை அதிரவைத்தனர். கல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள்.

போலிகள், மக்கள் விரோதிகளுக்கு மரண அடி
உழைக்கும் மக்களின் அரசியல் மூச்சாய் நக்சல்பாரி!

க்சல்பாரியோ தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தது. ஜூன் 8 முதல் 10 தேதிகளுக்குள் 80 நிலபறிமுதல்கள், 13 நிலப்பிரபுக்களின் வீடுகளில் கொள்ளை, இரண்டு கொலைகள், ஒரு கடத்தல், ஆயுதம் தாங்கிய குழுக்களின் வரிவசூல் நடவடிக்கைகள், விவசாயிகளின் மக்கள் நீதிமன்றம்…. என புள்ளி விவரங்களைக் காட்டி அலறியது போலீசு.

நக்சல்பாரியில் ‘தீவிரவாதி’களின் நடவடிக்கை காரணமாக சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி. சவாண் (இவ்வறிவிப்பின் மூலம் மார்க்சிஸ்டு கட்சிக்கு உள்ளேயே இருக்கும் தீவிரவாதிகளைத் தனியே பிரித்து அடையாளம் காட்டினார் சவாண்). அரே கிருஷ்ண கோனார், வலது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பாசனத்துறை அமைச்சர் விஸ்வநாத் முகர்ஜி மற்றும் சிலர் அடங்கிய அமைச்சர்கள் குழு ‘தீவிரவாதி’ களை நல்வழிப்படுத்த நக்சல்பாரிக்கு விரைந்தது; சென்ற வேகத்தில் தோல்வி கண்டு திரும்பியது.

ஜூன் இறுதியில் மார்க்சிஸ்டு கட்சித் தலைமை நக்சல்பாரி புரட்சியாளர்களை வெளிப்படையாகத் தாக்கத் தொடங்கியது மார்க்சிஸ்டு கட்சியிலிருந்த புரட்சிகர அணிகளும் கல்லூரி மாணவர்களும் “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” ஒன்றைக் கட்டி ஜூன் 27-ம் தேதி சட்டசபையின் முன் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். மார்க்சிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சுசிதல் ராய் சவுத்ரி உள்ளிட்ட 19 பேர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

“சீறிவரும் இந்தியப் புரட்சிச் சிறுத்தையின் முன் பாதம்” என்று நக்சல்பாரி எழுச்சியை தனது ஜூன் 28-ம் தேதி ஒலிபரப்பில் வருனித்த பீகிங் வானொலி, மார்க்சிஸ்டுக்களின் ஜக்கிய முன்னணி சர்க்காரை “மக்களை ஏய்க்கும் எதிர்ப்புரட்சியாளர்களின் கருவி” எனச் சாடியது.

ஜூலை 12-ம் தேதி மிருக பலத்துடன் மீண்டும் நக்சல்பாரிகள் மீது படையெடுத்தது போலீசு. ஜங்கள் சந்தாலும் முன்னணிபோராட்ட போராட்ட வீர்ர்கள் பலரும் கைது செய்ய்பட்டனர்.

மார்க்சிஸ்டு கட்சியின் வங்காளி வார இதழான தேஷ் – ஹிதாஷியின் ஆசிரியராக இருந்த சுசிதல்ராய் சவுத்ரி கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பிருந்தே நக்சல்பாரி எழுச்சியை ஆதரித்து அதில் எழுதி வந்தார். வெளியேற்றப்பட்ட பின் பத்திரிகை அலுவலகத்தை கைப்பற்ற மார்க்சிஸ்ட் குண்டர்கள் முயன்ற போது மோதல் வெடித்தது.

சுசிதல்ராய் சவுத்ரி ‘தேசப்ரதி’ என்ற வங்காள நாளேட்டையும் பின்னர் ‘லிபரேசன்’ ஆங்கில இதழையும் தொடங்கினார். இரண்டு இதழ்களும் ‘மார்க்சிஸ்டு’களைச் சித்தாந்தாந்த ரீதியாகத் தோலுரிக்கத் தொடங்கின. சீனத்தின் மக்கள் தினசரியும், பீகிங் வானொலியும் தொடர்ச்சியாக ‘மார்க்சிஸ்டு’களின் திருத்தல் வாதத்தை அம்பலப்படுத்தினர். வங்காளத்தின் வடமுனையில் பற்றிய தீ நாடெங்கும் ‘மார்கசிஸ்டு’கட்சியைச் சுட்டெரிக்க தொடங்கியது.

மார்க்சிஸ்டு கட்சித் தலைமையும் நாற்காலிப் புரட்சிக்கு எதிராக நக்சல்பாரியில் கலக்க் கொடி உயர்ந்தது ஏதோ தற்செயலாக நடந்து விட்ட சம்பவமல்ல. மார்க்சிஸ்டு கட்சிக்குள் இருந்த முன்னணியாளர்கள் சாரு மஜும்தார், கனு சண்யால், சசிதல் ராய் போன்ற தோழர்களின் தலைமையின் திருத்தல்வாதத்தை எதிர்த்து போராடி, புரட்சிகர நிலைப்பாடுகளை முன்வைத்து, அணிகளில் பலரை வளர்த்தெடுத்ததுதான் காரணம். மார்க்சிஸ்டு தலைமையின் நாடாளுமன்ற சமரச சரண்டைவுப் பாதையைக் கைவிட்டு புரட்சிப் பாதையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் 1965-ம் ஆண்டு முதலே வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் சிறு சிறு அமைப்பு இயக்கங்களையும் கட்டி அமைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிபாசு, பிரமோத் தாஸ் குப்தா ஆகிய திருத்தல் வாத துரோகிகள் புரட்சியாளர்களை வெளியேற்றியும், குறிப்பாக தோழர் சாரு மஜும்தாரை பைத்தியக்காரன், போலீசு உளவாளி என்றும் வசைபாடினர். ஆனால் இந்த அவதூறுகளால் நக்சல்பாரி எழுச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

நக்சல்பாரி எழுச்சியும் ஆதரவாளர்களை குறுங்குழுவாதிகள், வறட்சிவாதிகள், சாகசவாதிகள் என்பதாக மட்டுமல்ல, சி.ஐ.ஏ. உளவாளிகள் என்றெல்லாம் இடதுசாரி கட்சிகள் அவதூறு செய்தன. ஆனால் அக்கட்சிகளுக்குள் வெடிக்கத் துவங்கிய கலகத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1967-ம் ஆண்டு “மார்க்சிஸ்டு” கட்சி தலைமை மதுரையில் மத்தியக் கமிட்டியைக் கூட்டி நக்சல்பாரி எழுச்சியை கொச்சைப்படுத்தி, முழுக்க முழுக்க திருத்தல்வாதிகள் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டது.

இதைத் தொடர்ந்து காசுமீர், உத்திரப்பிரதேசம், ஆந்திரா ஆகியவற்றில் பெரும்பான்மையான மாநில கமிட்டிகளை வெளியேறின. “கட்சித் தலைமைக்கெதிராக கலகக் கொடி உயர்த்துங்கள்” என்ற அறைகூவல் எதிரொலித்தது. பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, பீகார், ஓரிசா எனப் பல மாநிலங்களிலும் புரட்சியாளர்கள் கலகம் செய்து போலி மார்க்கசிஸ்டு கட்சியை விட்டு வெளியேறினர்.

ஜூன் மாதத்தில் தோற்றுவிக்கப்பட்ட “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” பல்வேறு மாவோயிசக் குழுக்களின் பாலமாகச் செயல்பட்டது. நவம்பர் மாதத்தில் அக்குழு கூட்டிய அனைத்திந்திய மாநாட்டில் “அனைத்திந்திய புரட்சியாளர் ஒருங்கிணைப்புக் கமிட்டி” என்றொரு அமைப்பை ஏற்படுத்துவது என முடிவு செய்தது; கீழ்க்கண்ட அறைகூவலையும் விடுத்தது.

“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெழுவதை தோழர்கள் அவதானித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடுப்பதும், தலைமை தாங்கி வழி நடத்துவதும் நம் கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்று படவேண்டும். மார்க்சியம்-லெனினியம் – மா சே துங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும். மதுரையில் வெளிப்பட்ட இறுதியான, தீர்மானகரமான துரோகத்திற்குப் பின் இனியும் தாமதிக்கவியலாது.”

தனது முதல் பிரகடனத்தில் ஒருங்கிணைப்புக் கமிட்டி நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்திருந்த விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் ‘லிபரேஷன்’ என்ற ஆங்கில பத்திரிகை கொண்டு வரப்பட்டது. இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்தியப் புரட்சி, விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி; புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலை புரட்சிக் காலம் முழுவதும் புறக்கணிப்பது போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது.

நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று பிறப்பெடுத்தது.

நக்சல்பாரி பகுதியைப் பொருத்தவரை, அங்கு எழுந்த அந்தப் பேரெழுச்சியை போலி மார்க்சிஸ்டுகளின் தலைமையிலான ஜக்கிய முன்னணி ஏவிய போலீசுத் தாக்குதலால் அப்போதைக்கு ஒடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய நாடு பழைய இந்திய நாடாக ஒருபோதும் நீடிக்க முடியவில்லை.

அதைத் தொடர்ந்து வந்த சங்கிலித் தொடரான விளைவுகளும் எதிர்விளைவுகளும் அடங்கிய நிகழ்வுகள் அரசியல்களத்தை மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் சமூக, பண்பாட்டு சூழலையே குலுக்கி எடுத்துவிட்டது. ஆண்டாண்டு காலமாய் அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும் இலக்காகி இருக்கும் கூலி ஏழை உழவர்களின் உலகை – அதாவது இந்திய நாட்டின் இருள் சூழ்ந்த மூலைமுடுக்குகளுக்கெல்லாம் வெவ்வேறு பகுதிகளில் நாட்டுப்புற ஏழை எளிய மக்கள் நடத்திய அடுத்தடுத்த ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் ஒளிபெறச் செய்தன.

சிறீகாகுளம், தெலுங்கானா, பஞ்சாப், உ.பி., பீகார், கேரளா, தமிழ்நாடு,அசாம், காசுமீர் என்று குறுக்கு நெடுக்காக நாடெங்கிலும் விவசாயிகளின் வர்க்கப் போர் காட்டுத் தீயாய்ப் பற்றிப் படர்ந்தது. வெட்டியெறியப்பட்ட நிலப்பிரபுக்களின் தலைகள் மட்டுமே கிராமங்களில் தங்கின. வெட்டப்படாத தலைகளோ நகரங்களை நோக்கி ஓடின.

‘வேலை நிறுத்தம் என்றால் கதவடைப்பு’ என்று மிரட்டிய ஆலை முதலாளிகளை முற்றுகையிடும் தொழிலாளர்களைக் கண்டு நிர்வாகம் அஞ்சி நடுநடுங்கியது. நக்சல்பாரித் தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க “கெரோ” போராட்டங்கள் பரவின.

நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.

1970-களின் துவக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் _ லெனினிஸ்ட்), மற்றும் சிறு குழுக்களின் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் உச்சநிலையை எட்டியது. ஆந்திராவின் 15 மாவட்டங்களில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்ட உழவர்கள், குறிப்பாக ஆதிவாசிகிரிஜனங்கள் 300-க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களை அழித்தொழித்தனர் அல்லது கிராமங்களை விட்டுத் துரத்தியடித்தனர். அதன்மூலம் கிராம்ப் புறங்களில் மாற்று அரசியல் அதிகாரமாகத் தங்களை நிறுவிக் கொள்ளமுயன்றனர். இதே முறையில் இரகசிய கொரில்லா குழுக்களைக் கட்டி நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப் ஒரிசா, தமிழ்நாடு, கேரளாவில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர். இதுகண்டு எழுச்சியுற்ற வங்காள இளைஞர்கள் கல்கத்தா நகரில் கல்வி நிறுவனங்களையும், பிற்போக்குப் பண்பாட்டு சின்னங்களாக கருதி சீர்திருத்தவாதிகளின் சிலைகளையும் தாக்கினர். போலீசு நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதும், சிறைகளைத் தகர்த்துக் கொண்டு வெளியேறுவதும்கூட நிகழ்ந்தன.

ஆனால் போதிய ஆயுதங்களும், பயிற்சியும் இல்லாத உழவர் படைக் குழுக்களுக்கு எதிராக துணை இராணுவமும் போலீசுப் படையும் ஏவி விடப்பட்டபோது, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டபோது, நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. தலைமையின் செயல்முறை தவறுகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் போலீசின் சந்தேகத்துக்கு இலக்கான அப்பாவி இளைஞர்களும் “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திராவின் காடு-வயல்வெளிகளிலும், கல்கத்தா நகரத் தெருக்களிலும் குண்டுதுளைத்த நக்சல்பாரிகளின் பிணங்களை விசிறியடித்து பயபீதி திட்டமிட்டு பரப்பப்பட்டது.

1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர்மீது கொலை, கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் ஒருவழக்கமாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது 20 துப்பாக்கிச் சூடுகள் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை ஆட்சிக் காலத்திலும் இதே நிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்தரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன.

ஆனால், இவை எதுவும் நக்சல்பாரி இயக்கத்தை இந்த மண்ணில் இருந்து முற்றாகத் துடைத்தெறிந்து விடவில்லை. தெலுங்கானா – தண்டகாரண்யாவிலும், பீகாரிலும் ஆயுதப்போராட்டமாகவும், தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கத்தில் போர்க்குணமிக்க மக்கள் திரள் போராட்டமாகவும் நக்சல்பாரி இயக்கம் தொடர்ந்து வளர்ந்து பரவுகிறது. அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகள் நக்சல்பாரி இயக்கத்தால் துண்டிவிடப்படும் மக்களின் எழுச்சிக் குரலையோ, அதுகாட்டிய ஆயதப் போராட்டப் பாதையையோ ஒருபோதும் அடக்கி விடமுடியாது. எங்கெல்லாம் நக்சல்பாரியின் குரல் ஒலிக்கும். அது வெட்ட வெட்டத் துளிர்க்கும்,வளரும். அது நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம், அடர்ந்த காடுகளில் எல்லாம் எதிரோலித்துக் கொண்டே இருக்கும்.

மடியாது… மறையாது நக்சல்பாரி!

நக்சல்பாரி உழவர் பேரழுச்சியும், அதைத் தொடர்ந்து நக்சல் பாரி இயக்கமும் தோன்றி முப்பதாண்டுகளாகின்றன. இருந்தபோதும் அதை ஒரு வரலாற்று நினைவாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது.

இன்றைய இந்திய அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளில் நக்சல்பாரி முன்னிலும் பன்மடங்கு முக்கியத்துவமும் அவசியமும் பெறுகிறது.

நக்சல்பாரி இயக்கம் தோன்றிய ஒரு 15 ஆண்டுகளுக்கு முற்போக்கு நாடகமாடி ஓட்டுப் பொறுக்குவதை பிற்போக்கு இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ்.-ன் அரசியல் அவதாரங்கள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு செய்தன. அநேகமாக எல்லா மாநிலங்களிலும், நில உச்சவரம்பு, நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

அன்றைய சோவியத் சமூக ஏகாதிபத்திய ருசியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு பல அரசு ஏகபோகத் தொழில்களைத் துவங்கி, அவை பொதுத்துறைத் தொழில்கள், ஜனநாயக சோசலிசத்தின் சின்னங்கள் என மோசடி நாடகத்தை நடத்தினார், பாசிச இந்திரா. மேலும் பல தனியார் தொழில்கள் அரசுடமையாக்கப்பட்டன. நிலக்கரிச் சுரங்கங்கள் முதல் உணவு தானிய மொத்த வியாபாரம் வரை பல துறைகளும் அரசு ஏகபோகமாக்கப்பட்டன.

முதலில் 14, பிறகு 6 என்று 20 பெரிய தனியார் வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டன. இதோடு மன்னர் மானிய ஒழிப்பு போன்ற பல நடவடிக்கைகளுக்கும் முற்போக்கு, சோசலிச முத்திரை குத்திக் கொண்டார்கள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உரம்-உணவு தானியத்திற்கு மானியம் போன்ற சலுகைகளைக் காட்டி ஏய்த்தும், பாகிஸ்தானுடன் போரில் வெற்றி என்கிற தேசிய கௌரவத்தைத் தூண்டியும் அதிகப் பெரும்பான்மையுடன் இந்திரா ஆட்சிக்கு வந்தார். “சோசலிசத்தலைவி” என்று இந்திராவை தி.மு.க. முதல் போலிக் கம்யூனிஸ்டுகள் வரை புகழ்ந்தனர்.

ஆனால் அவர் “பாசிச காளி” தான் என்பது விரைவிலேயே தெரிந்தது. நக்சல்பாரி இயக்கத்தின் மீது மட்டுமல்ல, தொழிற்சங்கக் கோரிக்கைக்காக போராடிய இரயில்வே உட்பட பல பொதுத்துறைத் தொழிலாளர்களையும், அவரது இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய குஜராத், பீகார் மாணவர் இயக்கத்தையும் கொடூரமாக ஒடுக்கினார். தேர்தல் தில்லுமுல்லுகள் அம்பலமாகி பதவி பறிபோகும் நிலை உருவானதும் “தேசத்துக்கே ஆபத்து”, “சி.ஐ.ஏ.சதி”, “இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா” எனக் கூச்சலிட்டு அவசரநிலை பாசிச ஆட்சியைப் பிரகடனம் செய்தார். புரட்சியாளர்களை ம்ட்டுமல்ல, பிற்போக்குக் கட்சிகள் உட்பட போலிக் கம்யூனிஸ்டுகள் தவிர – எல்லா எதிர்த் தரப்பினரையும் கொடிய சிறையில் தள்ளினார். பலரை சித்திரவதைக்குள்ளாக்கிக் கொன்றார்.

இந்திராவின் முற்போக்கு முகத்திரை கிழிந்து பாசிச முகத்தை அடையாளம் கண்டு கொண்ட மக்கள், காங்கிரசு ஆட்சியை வீழ்த்தினர். நிலையான மாற்று தலைமையைத் தர முடியாத ஜனதாக் கட்சி கூட்டணி ஆட்சியும் சிறுது காலத்திலேயே நொறுங்கியது. மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா முற்போக்கு நாடகங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, ஏற்றுமதி அடிப்படையிலான உற்பத்தி, இராணுவமயமான பொருளாதாரம், உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்குமுறை என்கிற கொள்கையைத் தீவிரமாக்கினார்.

பஞ்சாப், அசாம், காசுமீர் என்று அரசு பயங்கரவாத அடக்குமுறையை விரிவுபடுத்தி, தீராப் பகையை வளர்த்து தானே அதற்குப் பலியானார். இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகள் என்னும் நோய்பிடித்த, பயங்கரவாத ஒடுக்குமுறை வெறிபிடித்த அரசு எந்திரத்தை வரித்துக்கொண்ட இந்திராவின் வாரிசு ராஜீவ், ஆயிரக்கணக்கான சீக்கியர்களைப் படுகொலை செய்து இரத்த வெள்ளத்தில் நீந்தி ஆட்சிக் கட்டில் ஏறினார்.

“எனக்கு இடது – வலது, முற்போக்கு – பிற்போக்கு சித்தாந்தம், கொள்கைகள் எதுவும் கிடையாது. எல்லாம் தாராளமயம், உலகமயம், நவீனமயமாக்கி இருபத்தோராம் நூற்றாண்டுக்கு நாட்டை அழைத்துச்செல்வதுதான் குறி” என்று பிரகடனம் செய்தார், ராஜீவ்

தாயைப் போலவே பாசிசப் பாதையில் நடைபோட்டு, ஈழத்தின்மீது ஆக்கிரமிப்புப் போர்த்தொடுத்து தானே உருவாக்கிய பகைமைக்குப் பலியானார். உள்நாட்டில் மட்டுமல்ல; இராணுவத்தை நவீனமயமாக்குவதாக சவடாலடித்துக் கொண்டே போபர்ஸ் பீரங்கி பேரம், ஜெர்மனி நீர்முழ்கிக் கப்பல் பேரம், பிரிட்டனின் எலிகாப்டர் பேரம் ஆகியவற்றில் கோடிகோடியாக இலஞ்ச – ஊழல் செய்து அம்பலப்பட்டுப் போனார்.

காங்கிரசுக்கு மாற்று என்று வந்த இரண்டாவது ஜனதாதள தேசிய முன்னணியும் சிறிது காலத்தில் வீழ்ந்தது. மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரசு, நரசிம்மராவின் தலைமையில் வரலாறு காணாத ஊழல் சேற்றில் மூழ்கிப் போனது. அதைவிட முக்கியமாக எதிலும் எங்கும் “தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” நாட்டை ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளுக்கு மறுஅடகு வைத்தது. அதனால் நாடு எண்ணிலடங்காத கேடுகளுக்கு இலக்கானாது.

பன்னாட்டு, தேசங்கடந்த தொழில் கழகங்களுக்கும், ஏகாதிபத்திய நிறுவனங்களான உலகவங்கி, சர்வதேச நிறுவனத்திற்கும் நேரடி ஆளுகையின்கீழ் இந்திய அரசு அமைப்புகள் கொண்டு வரப்பட்டன. அவற்றின் ஆணைகளை ஏற்று மின் உற்பத்தி, தொலைபேசித் துறை உட்பட அத்தியாவசியப் பணித்துறை, சேவைத் துறைகள் கூட அந்நியருக்குத் தாரைவார்க்கப்பட்டன. நல்ல இலாபமீட்டும் அரசுத்துறைத் தொழிற்சாலைகள்கூட தனியார் மயமாக்கப்பட்டன. இதனால் கோடிகோடியாக இலஞ்சம் பெற்றதோடு மக்கள் நலனும், நாட்டு நலனும் பறிபோனது. ஆலைகள் மூடப்பட்டு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்.

கல்வித்துறை, மருத்துவத்துறை தனியார்மயமாக்கப்பட்டு, அவற்றுக்கான மானியங்களை வெட்டி, அவை வியாபார கொள்ளைக்கான களங்களாகி விட்டன.

பண்ணை நிலப்பிரபுக்களோ, தமது விவசாயத்தை நவீனமயப்படுத்திக் கொள்ளும் அதேசமயம், சாதி – மத வகைப்பட்ட ஆதிக்கங்களைத் தொடரவும் விவசாயிகளை ஈவிரக்கமின்றிச் சுரண்டவும், பரந்துபட்ட மக்களைப் பட்டினிச் சாவில் தள்ளவும் வழிசெய்யப்பட்டது. உரம் உணவு மானியங்களை குறைத்து, நியாய விலைக் கடை விநியோகங்களையும் வெட்டி ஏழை விவசாயிகளின் வயிற்றலடித்தனர்.

ஏகாதிபத்திய ஐந்து நட்சத்திர கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. ஆபாச வானொலி, திரைப்படங்கள், பாலியல் சுற்றுலா விடுதிகள் என அரசே விபச்சாரத்தையும், களிவெறியாட்டத்தையும் உரமிட்டு வளர்க்கிறது. தேசிய இன உரிமை, மொழிபண்பாட்டு உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

நாடாளுமன்ற போலி ஜனநாயகமே அழுகி நாறுகிறது. இன்று கொடிகளும் சின்னங்களும் மட்டுமே வேறுவேறு. “தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” என்கிற கொள்கையில் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் கிடையாது. சாதி – மத வெறியைத் தூண்டி அரசியல் ஆதாயத்துக்காக மக்களைப் பலியிடுவது அதிகரித்துவிட்டது. சிற்றூர் – பேரூர்களில் எல்லாம் கிரிமினல் குற்றக் கும்பல்கள் தோன்றி அரசியல் கிரிமினல்மயமாகிவிட்டது.

அதேசமயம் அவர்களுள் யார், யார், எந்தப் பிரிவினர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு ஆதாயமடைவது என்பதில் நாய்ச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இலஞ்ச – ஊழல் அதிகார முறைகேடுகளாலும், சமூக விரோத கிரிமினல் குற்றங்களாலும் அரசியல் அமைப்பு முழுவதும் புழுத்து நாறுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே, மக்கள் அணி திரள்வதற்கும், தங்கள் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் தீர்வு காண்பதற்கான ஒரே மையமாக நக்சல்பாரி இயக்கமொன்றுதான் உள்ளது. அதுமட்டுமே நாடாளுமன்றப் பாதைக்கு வெளியே, அதற்குப் புறம்பாகவும் எதிராகவும், ஆக்கபூர்வமான அரசியல், பொருளாதாரத் தீர்வு காணவும் மக்களை வழிநடத்தும் துணிவும் தெளிவும் கொண்டது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



சென்னை: புத்தகக் கண்காட்சியில் புதிய ஜனநாயகம்

சென்னை: 48-வது புத்தகக் கண்காட்சியில் புதிய ஜனநாயகம்

அன்பார்ந்த வாசகர்களே,

புதிய ஜனநாயகம் பதிப்பகம் தொடங்கப்பட்ட செய்தியை நேற்று அறிவித்ததில் இருந்து பலரும் எம்மைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் பதிப்பகம் தொடங்குவதற்கு ஜனநாயக சக்திகள் பலரும் உதவ முன்வந்துள்ளனர். தங்களது உற்ற ஆதரவின் மூலமாகவே புதிய ஜனநாயகம் பதிப்பகத்தைத் தொடங்கியுள்ளோம்.

இதற்கான தொடக்க நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால், இந்த ஆண்டு சென்னை புத்தக விழா, டிசம்பர் 27-ஆம் தேதியே துவங்க இருப்பதாக அறிவித்தனர். ஜனநாயக சக்திகள், நண்பர்கள் பலரும் புத்தக விழாவில் எம்மையும் பங்கேற்கக் கோரினர். மிகக் குறுகிய காலம், இவ்வளவு பெரிய பணியை எடுத்து நடத்துவது குறித்து முதலில் தயங்கினோம். இருப்பினும், பலரும் தொடர்ந்து கொடுத்த ஆதரவினால், புத்தக விழாவில் பங்கேற்கிறோம் என்பதை மற்றொரு மகிழ்ச்சிகரமான செய்தியாக தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்த வகையில், இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில், “புதிய ஜனநாயகம்” இடம்பெறுகிறது. கடை எண் 246; ஏழாவது வரிசையில் முதல் கடை (வ.உ.சி பாதை)… அனைவரும் கட்டாயம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் பதிப்பகம் தொடங்கும் நிகழ்ச்சியை, சிற்றரங்கத்தில் நடத்த இருக்கிறோம். அதற்கான நிகழ்ச்சி நிரலையும் விரைவில் அறிவிக்கிறோம்.

இந்த ஆண்டு புத்தக விழாவையொட்டி, புதிய ஜனநாயகம் பதிப்பகம் சார்பாக, பல நூல்களைக் கொண்டுவர இருக்கிறோம். அவற்றிற்கான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிடுகிறோம்.

தொடர்புக்கு:

தொடர்பு எண்: 9791559223
மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

சமூக வலைத்தளப் பக்கங்கள்:

முகநூல்: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
எக்ஸ் (டிவிட்டர்): புதிய ஜனநாயகம் பதிப்பகம்
இன்ஸ்டாகிராம்: புதிய ஜனநாயகம் பதிப்பகம்

தோழமையுடன்,
தோழர் ஆகாஷ்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்,
9791559223.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram