Monday, July 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 67

பெர்லின் நகரை ஸ்தம்பிக்க வைத்த ஜெர்மன் விவசாயிகள்!

 

ஜெர்மனியில் விவசாய மானிய வெட்டுகளைக் கண்டித்து ஒரு வார காலமாக (ஜனவரி 8 – 15) தலைநகர் பெர்லினை தங்களது போராட்டங்களின் மூலம் ஸ்தம்பிக்க வைத்தனர் ஜெர்மன் விவசாயிகள். டிராக்டர்களைக் கொண்டு நாடு முழுவதிலும் நெடுஞ்சாலைகள் அடைக்கப்பட்டன.

டிசம்பரில் நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, விவசாய வாகனங்களுக்கான வரிச்சலுகையை நீக்குவது குறித்த முடிவை அரசு மாற்றியது. டீசல் மானியம் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு பதிலாக மூன்று ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சலுகைகள் போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ராமர் கோவில் திறப்பு: ’இந்து விரோதி’யாக மாறிய மோடி!

0

யோத்தியில் ஜனவரி 22 அன்று முஸ்லீம்களுக்கு சொந்தமான பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. குழந்தை ராமா் சிலை ’பிராண பிரதிஷ்டை’ செய்யப்பட உள்ளது. சிலை ’பிரதிஷ்டை’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா். சங்கி ரஜினி உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ’பிரபலங்களுக்கு’ இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்கும் முக்கிய பிரபலங்களுக்கு கோவில் அஸ்திவாரம் அமைக்கும்போது தோண்டப்பட்ட மண்ணில் சிறிதளவு பரிசாக வழங்கப்பட உள்ளதாக உத்தர பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், ராமர் கோவில் கட்டுவதற்காக படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் மக்களின் இரத்தம் மண்ணில் சிறிதளவு பரிசாக வழங்கப்படவுள்ளது.

2024 நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில்கொண்டு கோவில் முழுமையாகக் கட்டிமுடிக்கப்படாத நிலையில் அது திறக்கப்படவுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால், ஏப்ரல் மாதம் வரவிருக்கும் ’ராம நவமி’ வரை சங்கப் பரிவார கும்பலால் காத்திருக்க முடியவில்லை.

ராமர் கோவில் குடமுழுக்கு அறிவிப்பு வெளியான மறுகணமே அதில் கலந்துகொள்பவர்கள் யார் புறக்கணிப்பவர்கள் யார் என்பது விவாதப் பொருளாக மாற்றப்பட்டது. அதில் கலந்து கொள்ளாதவர்களை, குறிப்பாக எதிர்க் கட்சியினரை, “இந்து விரோதிகள், தேச விரோதிகள்” என்று முத்திரை குத்த காவிக் கும்பல் தயாராகிக்கொண்டு இருந்தது. சி.பி.ஐ (எம்), திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இந்நிகழ்வைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியையும் “இந்தியா” கூட்டணியையும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி தனிமைப்படுத்த எத்தனித்திருந்தது காவிக் கும்பல்.


படிக்க: இராமர் கோயில் திறப்பை பாசிஸ்டுகள் எந்தளவிற்கு கொண்டுப்போவார்கள்?


ஆனால், ஆர்த்தடாக்ஸ் சங்கி ஜோம்பிகளோ மோடிக்கு எதிராகத் திரும்பி மோடியைக் கடித்துக் குதறத் தொடங்கிவிட்டனர். இதை மோடி – அமித் ஷா கும்பலே எதிர்பார்க்கவில்லை.

பார்ப்பனர் அல்லாதவரான மோடி பூஜை செய்வதைச் சகித்துக்கொள்ள முடியாததால் ராமர் கோவிலுக்குச் செல்லப்போவதில்லை என்று ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கூறிவிட்டார். மற்ற மூன்று சங்கராச்சாரிகளும் பங்கேற்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

முழுமையாகக் கட்டி முடிக்காமல் கோவிலைத் திறப்பதென்பதும், பார்ப்பனர் அல்லாத மோடி அதைத் திறந்து வைப்பதும் சனாதனத்தையும் வேத மரபையும் மீறுவதாகும் என்று சங்கராச்சாரிகள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பூரி கோவர்தன் மடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் நிச்சலானந்த சுவாமி, “சிலையை யார் தொட வேண்டும், யார் தொடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மோடி சிலையைத் தொட்டு அதைத் திறந்து வைப்பார். நான் கைதட்டி ஆரவாரம் செய்ய வேண்டுமா?” என்று கூறியுள்ளார்.

மோடி ராமர் சிலையைத் தொட்டால் தீட்டுக் கழிக்க வேண்டும் என்றுகூட இவர்கள் சொல்லக்கூடும்.

நன்றி: சதிஸ் ஆச்சாரியா

இதற்கிடையே, ”ராமர் கோவில் அனைத்து இந்துக்களுக்கும் சொந்தமில்லை. ராமானந்தர் பிரிவினருக்கு மட்டுமே சொந்தம்” என்று ஒரு குழுவினர் உரிமை கோர, ”ராமானந்தர் பிரிவினருக்கு மட்டுமே சொந்தம் என்றால் மற்றவர்களிடம் ஏன் பணம் வாங்கப்பட்டது?” என்று மற்றொரு பிரிவினர் அதற்கு எதிர்வினையாற்றி வருவது போன்ற கேலிக்கூத்துகளும் அரங்கேறி வருகின்றன.

இவற்றையெல்லாம் எதிர்பார்க்காத ஆர்.எஸ்.எஸ் அமைதி காத்து வருகிறது. இந்து ராஷ்டிரத்தின் சத்ரபதி சிவாஜியாக முடிசூட்டிக்கொள்ளத் திட்டமிட்டிருந்த பாசிஸ்ட் மோடிக்கு இதுவொரு நெருக்கடியை ஏற்படுதியுள்ளது.

இருப்பினும் திட்டமிடப்பட்டவாறு மோடி தலைமையில் ராமா் சிலை ’பிரதிஷ்டை’நடைபெறவுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு பிரதான இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. ”ராமர் கோவில் திறப்பு விழாவின்போது கோத்ரா ரயில் எரிப்புபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற வாய்ப்பு உள்ளது” என்று உத்தவ் தாக்கரே கூறியிருந்தது நினைவு கொள்ளத்தக்கது.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இந்தியாவில் வேகமாக வேளாண் நிலப்பரப்பு குறைந்திருப்பதற்கான காரணம் என்ன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: கடந்த 10 ஆண்டுகளில் 16 சதவிகித வேளாண்பரப்பு குறைந்திருக்கிறது என்ற செய்தி தினகரனில் வெளிவந்துள்ளது. இந்தியா விவசாய நாடு என்று சொல்லப்படுகின்றபோது இவ்வளவு வேகமாக வேளாண் நிலப்பரப்பு குறைந்திருப்பதற்கான காரணம் என்ன? இது எப்பேர்ப்பட்ட அபாயம்?

குறிப்பாக, தனியார்மய–தாராளமயம்-உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கைகளை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பிறகு, திட்டமிட்டு விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. விவசாயத்தை அழிப்பது என்று சொல்வதைவிட விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்காக, சிறுவிவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

அந்நடவடிக்கைகளின் விளைவாக மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் பத்து ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அது முதல் கட்டம் என்றால், தற்போது மோடி ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை இரண்டாம் கட்டம் என்று சொல்லலாம். இந்த இரண்டாவது கட்டத்தில் நிலம், கனிமவள சுரண்டலுக்காக உழைக்கும் மக்கள், விவசாயிகள், பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் மீது பயங்கரமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. மோடியின் இந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா ஒரு விவசாய நாடு என்று சொல்வதற்கான எல்லா அடிப்படைகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதை மோடி கும்பல் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் பா.ஜ.க. எதிர்ப்பு பேசுகின்ற எதிர்க்கட்சிகள் ஆளும் எல்லா மாநிலங்களிலும் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகளை நிலங்களிலிருந்து வெளியேற்றுகின்ற அயோக்கியத்தனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆளுகின்ற மாநிலங்களிலும் இந்த நிலப்பறிப்புகள் நடக்கின்றன. இதனை மோடி கும்பலும் மாநிலத்தை ஆளும் எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செய்துவருகிறார்கள் என்பதுதான் முக்கியமான விசயம். இவர்களும் உள்ளடங்கிய மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் விளைவாகத்தான் 16 சதவிகித வேளான்பரப்பு குறைந்துள்ளது. எனவே இதில் மோடி அரசை மட்டும் தனித்து பேச முடியாது. மோடி இவர்கள் எல்லோருக்கும் உகந்த சட்டங்களை கொண்டுவந்துள்ளார்; பிற மாநில கட்சிகளுக்கு முன்மாதிரியாக உள்ளார் என்றுதான் பேச முடியும்.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



146 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்க்கட்சிகள் எப்படிக் கையாண்டன?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: 146 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது என்பது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய அடக்குமுறை நடவடிக்கை. எதிர்க்கட்சிகள் மீதுமட்டுமல்ல கோடிக்கணக்கான மக்களின் பிரதிநிதிகளுக்கு நேர்ந்த அடக்குமுறை. ஆனால் எதிர்க்கட்சிகள் அந்த கோணத்தில் இந்த விவகாரத்தை கையாளவில்லை, அதற்கான காரணம் என்ன?

து சரியான கேள்வி. 146 எம்.பி-க்கள் என்பவர்கள் 30 கோடி மக்களுக்கான பிரதிநிதிகள். அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது 30 கோடி மக்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல, 140 கோடி மக்களுக்கான பிரச்சினை. இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சினையை ஏன் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லவில்லை என்பதுதான் முக்கியமான கேள்வி.

“எதிர்க்கட்சிகளே, ஏன் நாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? ஏன் பந்த் அறிவிக்கவில்லை?” என்ற கேள்விகளை மணிப்பூர் விசயத்திலேயே நாம் முன்வைத்தோம். இப்போதும், “ஏன் நாடாளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? சாலையை மறியுங்கள், எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களில் பந்த் அறிவியுங்கள். இதுவரை இல்லாத வகையிலான அடக்குமுறை நடவடிக்கை நடந்திருக்கிறது. ஏன் நீங்கள் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கவில்லை?” என்பதே எதிர்க்கட்சிகளை நோக்கிய நமது கேள்வி.

ஆனால் அதனை செய்யாமல், பா.ஜ.க. எதிர்ப்பு பேசுகின்ற எல்லோரும் பா.ஜ.க-வின் பாசிச அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு காலில் விழுந்து கெஞ்சி தங்களது உரிமையை நிலைநாட்டிக்கொள்கின்ற ஒரு வழிமுறைக்கு நாட்டு மக்களை இந்த எதிர்க்கட்சிகள் பழக்கப்படுத்துகின்றன. பட்டவர்த்தனமாக ஒட்டுமொத்த நாட்டையும் இந்துராஷ்டிரக் கட்டமைப்பிற்கு அடிபணிய வைக்கின்ற அயோக்கியத்தனத்தை எதிர்க்கட்சியினர் செய்கிறார்கள்.

அப்படியானால், பாசிச அடக்குமுறைகளைப் பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சப்படுகிறார்கள் என்பதில்லை. இதனை ஒரே நோக்கம் கொண்ட, ஒரே நலன் கொண்ட இரண்டு நடவடிக்கைகள் என்றே புரிந்துகொள்ள வேண்டும். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதில்தான் ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது. ஆகையால் அந்த எல்லையைத்தாண்டி எதிர்க்கட்சியினர் வெளியே வரமாட்டார்கள். அவ்வாறு வந்தால் அது மக்கள் கோரிக்கையாக மாறிவிடும். எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது என்பதே உண்மை.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அழிவின் விளிம்பில் வடசென்னை! | தோழர் மருது

காற்றில் அமோனியா கசிவு – மழை வெள்ளத்தில் எண்ணெய் கழிவு
| அழிவின் விளிம்பில் வடசென்னை! | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தென்மாவட்டங்களின் வெள்ளப் பாதிப்பு: தோழர்களின் கள அனுபவம்

மிக்ஜாம் புயல் சென்னையை தாக்கிய ஒரு வாரத்திற்குள்ளாக தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழைபெய்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெருவெள்ளத்தால் புரட்டிபோடப்பட்டன.

அதிகபட்சம் 95 செ.மீ. வரை மழை கொட்டி தீர்த்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆறு, குளம், வாய்க்கால்கள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக, தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டப் பகுதிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின. தூத்துக்குடியில் ஏரல், சம்படி, இடையற்காடு, தலையாபுரம், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளும் திருநெல்வேலியில் வண்ணாரப்பேட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், சமாதானபுரம், பாளையங்கோட்டை மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டன.

தி.மு.க. அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தால், மூன்று நாட்களுக்கும் மேலாக உணவு, குடிநீரின்றி மக்கள் தவிக்கவிடப்பட்டனர். பல வீடுகளில் சீலிங் ஃபேன் அடித்துக்கொண்டு செல்லும் அளவிற்கு வீடு முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது. பல இடங்களில் பயணிகளுடன் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. வெள்ளத்திற்கு நடுவே நிறுத்தப்பட்ட ரயில்களுக்குள்ளிருந்த மக்கள் உயிரை கையில் பிடித்துகொண்டு ஒவ்வொரு நொடியையும் கடந்தனர். இந்த மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 55 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மொத்தமாக இழந்து நிற்கின்றனர். ஆற்றங்கரையிலிருந்து அரை கி.மீ. தூரம்வரை தண்ணீர்வந்து ஒட்டுமொத்தமாக வீடுகளில் இருக்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும் அடித்து சென்றுள்ளது. வெள்ளத்திலிருந்து தப்பிச்சென்ற மக்கள் திரும்பவந்து கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு பொருள் கூட கிடையாது. “வீட்டுக்கு வந்து பாத்தப்ப வீட்டுல ஒன்னுமே இல்ல. கொஞ்ச தூரம் தள்ளிப்போயி பாத்தேன். என்னோட ஒரே ஒரு தவள கிடச்சது. அத வெச்சுதான் வீட்ட கழுவிவிட்டுட்டு இருக்கன்” என்றார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

தங்கள் வாழ்நாளில் இவ்வளவு அதிக கனமழையை பார்த்திடாத தென்மாவட்ட மக்கள், “நாங்கள் எல்லாம் பிழைப்போமா, திருப்பி இருப்போமா என்று கடைசி நேரத்தில் நினைச்சுக்கிட்டோம், உயிர் பயத்தை பார்த்து இருக்கோம்” என்றனர்.


படிக்க: மழைவெள்ள பாதிப்பில் தூத்துக்குடி! | களத்தில் தோழர்கள்


இம்மக்கள் வாழ்க்கை நடத்துவதற்கு ஆதாரமாக இருந்த ஏராளமான ஆடு, மாடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் மரங்களின் மீதும் இறந்துக் கிடந்தன. தங்களது பிள்ளைகளைப் போல வளர்த்த ஆடு மாடுகள், தங்கள் கண்முன்னே அடித்துசெல்லப்படும்போதும் அதனைக் காப்பாற்ற முடியாமல் மக்கள் கதறி அழுதனர். “ஆத்துல அடிச்சுட்டுப்போன ஆடுகள் கத்துவது எங்கள காப்பாதுங்கனு சொல்றது போலவே இருந்துச்சு” என்று புலம்புகின்றனர் மக்கள். களத்தில் சென்று பார்த்ததன் அடிப்படையில் ஏறக்குறைய 1000 மாடுகளாவது இறந்திருக்கும்.

தென்மாவட்டங்களில் பெய்த இந்த பெருமழை மக்களின் துயரங்களுக்கு காரணம் என்றாலும் முறையாக கால்வாய்கள், குளங்கள், ஆறுகள் ஆகியவை தூர்வாரப்பட்டு சீரமைக்காமல் இருந்தது; ஆற்றங்கரையோரம் இருந்த மக்களை முன்கூட்டியே வெளியேற்றாமல் இருந்தது; நீர் மேலாண்மை வசதி நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாதது; போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்தது உள்ளிட்ட அரசின் அலட்சிய நடவடிக்கைகளே மக்களை நிற்கதியாக்கியது.

தென்மாவட்ட வெள்ளப் பாதிப்புகளை பொறுத்தவரை, தி.மு.க. அரசால் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வெள்ளம் வருவதற்கு முன்பு ஊருக்குள் வந்து மக்களுக்கு முறையாக எச்சரிக்கை விடுக்கப்படவுமில்லை. இதனால் பலரும் ஆறு, குளங்கள் உடையும்வரை ஆபத்தை அறியாமல் மழையைக் கண்டு ரசித்துகொண்டிருந்த பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சொல்லப்போனால், அரசுக்கே எவ்வளவு வெள்ளம் வரும், எந்தெந்த இடங்கள் பாதிக்கப்படும் என்பது குறித்த புரிதல் இல்லை. முறையான ஒரு குழு அமைத்து கணக்கெடுப்பு நடத்தி மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தி.மு.க. ஈடுபடவேயில்லை.  பல இடங்களில் அரசு முகாம் அமைத்திருந்த மண்டபங்களிலேயே வெள்ளம் வந்தது. இதனால், மக்கள் முகாம்களின் மாடிகளில் தஞ்சம்புகும் அவலநிலை ஏற்பட்டது. முகாம்களில் அரசின் சார்பாக முறையாக உணவும் ஏற்பாடு செய்யவில்லை.

சில இடங்களில் அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள் போன்றவற்றை கொடுத்ததே ஒழிய அதனை சமைத்து சாப்பிடக்கூட மக்களிடம் அடுப்பு, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் இல்லை என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. மக்கள் பொது சமையல்முறையில் சமைத்து சாப்பிட்டனர். ஆனால், அதனை அரசு செய்திருக்க வேண்டும்.


படிக்க: நெல்லை மழை வெள்ள பாதிப்பு | பாதிப்பில் மக்கள்


மீட்புப்பணியை பொறுத்தவரை, மீட்புப்படை, போலீசு, கிராம நிர்வாகம், கலெக்டர், தாசில்தார் என அரசு நிறுவனங்களுக்குள்ளேயே ஒருங்கிணைப்பு இல்லை. ஆனால், இதே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது மக்களை ஒடுக்குவதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்தன. மக்களை மீட்கும் விடயத்தில் எந்தவித அக்கறையும் இன்றி நடந்துகொண்டன.

தூத்துக்குடி மாவட்டம் சம்படியில் தோழர்கள் மீட்புப்பணிக்கு சென்றபோது, கர்ப்பிணியாக இருந்த ஒரு பெண்ணை மீட்பதற்கு தகவல் சொல்ல போலீசு நிலையத்திற்கு சென்றிருந்தோம். அப்போது அங்கிருந்த போலீசு அதிகாரி, கிராம நிர்வாக அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, “அந்த ஊரையே நாங்கள் மறந்துவிட்டோம்” என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.

மேலும், மக்களை மீட்பதற்காக அமைக்கப்பட்ட மீட்புப்படையும் பயிற்சி எடுத்துக்கொண்ட வீரர்களால் அமைக்கப்பட்டதல்ல. இதனால் தண்ணீரில் தத்தளித்த மக்களை மீட்கமுடியாமல் போனது. மழை நின்று இரண்டு நாட்களுக்கு மேலாகியும் போலீசும் அரசு அதிகாரிகளும் எம்.பி., எம்.எல்.ஏ-க்களும் பகுதிகளுக்குள் செல்லவில்லை. படகுகள், வாகனங்கள் என ஊருக்குள் செல்வதற்கான எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும் மக்களைச் சென்று சந்திக்காமல் வஞ்சித்தனர். பல இடங்களில் மக்கள் போராட்டம் செய்த பின்னரே அரசு அவர்களை எட்டிப்பார்த்தது.

மக்களால் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. அப்படி சென்ற ஒரு சில இடங்களிலும், அந்தந்த ஊர்களின் பாதிப்புகளை பற்றி அறிந்த ஊராட்சி தலைவர்கள், இளைஞர்கள் போன்றவர்களை பயன்படுத்தி மக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்காமல் பார்வையாளர்களாக ஊரை வலம் வந்துகொண்டிருந்தனர்.

தன்னார்வலர்களும் இளைஞர்களும் சிறு சிறு அமைப்பை சேர்ந்தவர்களும்தான் ஊருக்குள் இறங்கி மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளம் வடியும் வரையில் எந்தக் கட்சியை சேர்ந்தவர்களும் ஊருக்குள் வந்து மக்களைப் பார்க்கவில்லை. பல ஊர்களுக்கு மக்கள் அதிகாரம் தோழர்கள்தான் முதலில் சென்றனர் என்பதனை மக்களே கூறினர்.

மேலும், தற்போதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொற்பப் பணத்தை நிவாரணமாக வழங்கி அவர்களின் வாயை அடைப்பதில் மட்டும் தான் அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்ததில் மட்டும் 600 முதல் 700 வீடுகள் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. 150 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகி இருக்கின்றன. வீடுகள், கோழிகள், ஆடு மாடுகள், விவசாய நிலங்கள் என மக்களின் வாழ்வாதாரமாக இருந்த அனைத்தும் பறிபோயுள்ளது. எனவே, வீடு கட்டி தர வேண்டும், நெல் பயிர்களுக்குரிய இழப்பீடு தர வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.


களச்செய்தியாளர்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : நாம் எப்படி பார்ப்பது? | தோழர் மருது

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : நாம் எப்படி பார்ப்பது?
| தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



காவிகளின் கூடாரங்களாகும் பல்கலைக்கழகங்கள்

மோடியின் ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியில் போலீசு, இராணுவம், நீதிமன்றம், கல்வி, மருத்துவம் போன்ற எல்லாத் துறைகளிலும் நிறுவனங்களிலும் காவி பாசிஸ்டுகள் ஊடுருவி வருகிறார்கள். அதில் முக்கியமாக நாட்டிற்கான தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும், அதிகாரிகளையும், பேராசிரியர்களையும் உருவாக்கும் பல்கலைக்கழகங்களை பாசிஸ்டுகள் கைப்பற்றும் அபாயகரமான போக்கு உருவாகியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்டவர்களை துணைவேந்தர்களாக, பேராசிரியர்களாக, சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினர்களாக நியமிப்பதன் மூலமும் ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. குண்டர் படையை வளர்த்துவிடுவதன் மூலமும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை பாசிஸ்டுகள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துக்கொண்டிருக்கிறார்கள்.

அண்மைக்காலமாக, புகழ்பெற்ற டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (ஜே.என்.யு), தமிழ்நாட்டில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்திலும் நடந்துவரும் நிகழ்வுகள் பல்கலைக்கழகங்கள் எப்படி காவிகளின் கூடாரங்களாகியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

ஜே.என்.யு. மீதான பாசிஸ்டுகளின் தாக்குதல்!

கடந்த டிசம்பர் மாதத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் “மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் முறையான நடத்தை விதிகள்” (Rules of discipline and proper conduct of students) என்ற தலைப்பில் புதிய கையேடு ஒன்றை வெளியிட்டது. அதில் பல்கலைக்கழகத்தின் வளாகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் தர்ணா, உண்ணாவிரதம் மற்றும் குழுவாக சேர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவது, வளாகங்களின் நுழைவாயில்களை முற்றுகையிடுவது போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் விடுதி அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து ஓராண்டுக்கு வெளியேற்றப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. ‘தேசத்திற்கு எதிரான கருத்துகள்’ மற்றும் சாதி, மத வன்முறைகளைத் தூண்டும் கருத்துகளைக் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தாலும் சுவரொட்டிகளை ஒட்டினாலும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகம் செயல்படுவதற்கு இடையூறு அளிக்கும் விதமான எந்த செயலும் தண்டனைக்குறியதாகவும், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை தண்டனைகள் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே தண்டனை குறித்த இறுதி முடிவுகளை எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


படிக்க: அசோகா பல்கலைக்கழகம்: கருத்து சுதந்திரத்தின் மீதான காவி பயங்கரவாத தாக்குதல்


போராடுகின்ற மாணவர்களை அச்சுறுத்துவதற்காக, அபராதம் செலுத்தாத வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தண்டனைகளின் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் வலைதளப்பக்கத்தில் பதிவேற்றப்படுவதோடு, பெற்றோருக்கும் தெரிவிக்கப்படும் எனவும் புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. மேலும், புதிதாக சேரும் மாணவர்கள் அரசியல் பேசும் மாணவர்களிடம் அறிமுகமாகிவிடக்கூடாது என்பதற்காகவே அனுமதி இல்லாமல் வரவேற்பு நிகழ்ச்சி (Fresher’s party) நடத்த தடை விதித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்.

பல்கலைக்கழக நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய விதிகள் ஏதோ மாணவர்களை நன்னெறிப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டதல்ல. அப்படியிருந்தால் ராமநவமி போன்ற இந்து பண்டிகைகளில் விடுதிகளில் புகுந்து மாணவர்களை தாக்குவது; பெரியார், காரல் மார்க்ஸ் படங்களை உடைத்து நாசம் செய்வது, அதனை தடுக்கச்சென்ற மாணவர்களின் மண்டையைப் பிளப்பது; கூட்டங்கள் விவாதங்களை நடத்தவிடாமல் தடுப்பது; போராடும் மாணவர்கள் மீது கல்லெறிந்து தாக்குவது; கல்வி வளாகங்களில் சாதி-மத மோதல்களை ஏற்படுத்துவது போன்ற அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடும் ஏ.பி.வி.பி. குண்டர்களைதான் முதலில் வெளியேற்ற வேண்டும். மாறாக, ஏ.பி.வி.பி-யுடன் கூட்டுசேர்ந்துள்ள ஜே.என்.யு. பல்கலைக்கழக நிர்வாகம் இவ்விதிகளை கொண்டுவந்திருப்பது, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் மாணவர்களையும் மாணவர் அமைப்புகளையும் ஒடுக்குவதற்காகவே.

பல்கலைக்கழகத்தின் இந்நடவடிக்கையை கடுமையாக எதிர்த்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம்(JNUSU), “கையேட்டில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகள், பல ஆண்டுகளாக ஜே.என்.யு-வில் நிலவிவரும் துடிப்பான கலாச்சாரத்தை முடக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. எங்கள் பல்கலைக்கழகத்தின் ஆன்மாவிற்கு அடிப்படையாக உள்ள வெளிப்படையான விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் அறிவுசார் ஆய்வுகளை ஊக்கமிழக்க வைக்கும் வகையில் உள்ளன” என்று விமர்சித்துள்ளது.

உண்மையில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஜே.என்.யு-விற்கென்று தனி அடையாளம் உள்ளது. அங்கு நடக்கும் ஊக்கமான விவாதங்களிலும் போராட்டங்களிலும் கலந்துகொள்வதற்காகவே இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அப்பல்கலைக்கழகத்தில் சென்று சேருவார்கள். உலகில் எந்த மூலையில் மக்கள் மீது ஒடுக்குமுறை செலுத்தப்பட்டாலும் அதனை கண்டித்து போராட்டம் நடத்தும் ஜனநாயக சிந்தனையை தன்னகத்தே கொண்டதுதான் ஜே.என்.யு. பல்கலைக்கழகம். ஆனால், கடந்த ஒன்பதரை ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்த கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகிறது.

பெயரில் மட்டும் பெரியார், பல்கலைக்கழகமோ காவிகளின் பிடியில்

“பெரியார் மண்” என திராவிட அமைப்புகள் பெருமையாகப் பேசும் தமிழ்நாட்டிலும் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் காவிகளின் பிடியில்தான் உள்ளன. பெரியாரின் பெயரில் உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழகமே சங்கப் பரிவாரங்களின் கூடாரமாகவே உள்ளது என்பது வேதனைக்குரியதாகும்.

கடந்த நவம்பர் மாதம் 17-ஆம் தேதி, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் பெரியார் குறித்து நூல் எழுதி வெளியிட்டதாகக்கூறி இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் பணிபுரியும் இரா.சுப்ரமணி என்ற இணைப்பேராசிரியருக்கு “தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது” என விளக்கம் கேட்டு குறிப்பாணை (மெமோ) வழங்கியுள்ளது, பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்.

பேரா.சுப்ரமணி கடந்த 2022-ஆம் ஆண்டு பெரியாரின் போராட்டங்களைத் தொகுத்து “பெரியாரின் போர்க்களங்கள்” என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார். மேலும் 2007-ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட “மெக்காலே” என்ற நூலின் மறுபதிப்பு “மெக்காலே: பழைமைவாதக் கல்வியின் பகைவன்” என்ற பெயரில் இவ்வாண்டு வெளியானது. எப்போதோ எழுதி வெளியிட்ட இந்நூல்களுக்குதான் இப்போது காரணம் கேட்டு குறிப்பாணை வழங்கியிருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

இந்த குறிப்பாணை அனுப்பியதற்கான உண்மையான காரணம், பேரா.சுப்ரமணி கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு அரசால் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் என்பதுதான். பெரியார் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்குவதில் காவி பாசிஸ்டுகள் தீவிரமாக ஈடுப்பட்டுவரும் சூழலில், முற்போக்காளராகவும் பெரியாரிய சிந்தனையாளராகவும் இருக்கும் இப்பேராசிரியர் பல்கலைக்கழகத்தின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பான சிண்டிகேட் குழுவில் வந்து அமர்ந்திருப்பதை சங்கப் பரிவாரக் கும்பலால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, பிற வழிகளில் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது காவி கும்பல்.


படிக்க: காவிகளின் பிடியில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்! தமிழக அரசே வேடிக்கை பார்க்காதே!


இப்போது மட்டுமல்ல, பெரியார் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கும் நடவடிக்கையை பல ஆண்டுகளாகவே காவி பாசிஸ்டுகள் மேற்கொண்டு வருகின்றனர். உடற்கல்வி இயக்குனர், நூலகர் ஆகிய பணிகளுக்கான தேர்வில் பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை பொதுப்போட்டி பிரிவுக்கு ஒதுக்கியது; பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்புகள் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை, விவாதங்களை நடத்த தடை உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பியது; ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக வரவிருந்த பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற உடை அணிந்துவரக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியது; முதுநிலை கல்விக்கான வினாத்தாளில் “எது தாழ்ந்த சாதி?” என்று கேள்வி கேட்டது ஆகியவை அதற்கான சான்றுகளாகும்.

தமிழ்நாட்டிற்குள் ஒருஇந்து பனாரஸ் பல்கலைக்கழகம்‘!

தமிழ்நாட்டில் உள்ள ஒரேயொரு மத்தியப் பல்கலைக்கழகமான தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் அருகே நீலக்குடி பகுதியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் 17-ஆம் தேதி “தீபோத்சவ்-2023” என்ற பெயரில் தீபாவளிப் பண்டிகையையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியின் மேடையில் ஆக்கிரோசமாக வில்லேந்திய காவி நிற இராமன் உருவப்படமும்  ஆங்காங்கே  “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர்களும் இடம்பெற்றிருந்தது. காவி நிறத்தில் போடப்பட்ட கோலங்களில் அயோத்தி இராமர் கோவிலும் “ஜெய் ஸ்ரீ ராம்” வாசகங்களும் வரையப்பட்டிருந்தன. பார்ப்பனிய முறைப்படி யாகம் வளர்த்து பூஜை நடத்தியுள்ளனர். இந்நிகழ்வில், பல்கலைக்கழக துணைவேந்தரும் கலந்துக்கொண்டுள்ளார். இந்நிகழ்வானது மாணவர்கள் மத்தியில் மதத்தை புகுத்துகிறது என்று பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை கண்டித்து நவம்பர் 23 அன்று பல்கலைக்கழக வாயிலில் திராவிட மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தில் செயல்பட்டுவரும் இந்திய மாணவர் சங்கமும் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு எதிர்வினையாக பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தந்தைப் பெரியாரை, “காலனிய முதலாளிகளின் காலணிகளை நக்கிய பெரியார் ராமசாமி நாயக்கர்” எனவும் “இந்த மண்ணின் இருண்ட இருள்” எனவும் மிகவும் இழிவாகக் குறிப்பிட்டிருந்தது.

தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி அறிக்கை வெளியிடுவதற்கு ஏ.பி.வி.பி.-க்கு துணிச்சல் கொடுத்தது அப்பல்கலைக்கழக நிர்வாகம்தான். பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆசியுடன் ஏ.பி.வி.பி. குண்டர்படை ‘குடியரசுத் தினம்’, ‘சுதந்திரத் தினம்’ ஆகிய நாட்களில் காவிக் கொடியை ஏந்திக்கொண்டு “பாரத் மாதா கி ஜெய்” என்று ஊர்வலத்தில் முழக்கமிட்டு தைரியமாக உலாவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்திய மாணவர் சங்கத்தை சார்ந்த மாணவர்கள் அன்றாடம் பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் போலீசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

மாணவர் அமைப்புகளை கட்டியமைக்க வேண்டும்

மேற்கூறிய மூன்று பல்கலைக்கழங்களைத் தவிர, இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் காவிகளின் பிடியிலேயே உள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களே மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் நேரடியாக இந்துமதவெறி கருத்துகளை பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதத்தில் அப்பல்கலைக்கழகத்தில் இந்து ஆய்வு மையத்தின் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆர்.எஸ்.எஸ்.-யின் செயலாளர் பாரத் பூஷன் அழைக்கப்பட்டிருந்தததை பல்கலைக்கழகத்தின் கல்வி கவுன்சில் உறுப்பினர்கள் அம்பலப்படுத்தி விமர்சித்திருந்தனர்.

கேரள பல்கலைக்கழகத்தில் அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை மீறி நான்கு ஏ.பி.வி.பி. மாணவர்களை செனட் சபைக்கு பரிந்துரைத்தது தற்போது அம்பலப்பட்டு போயுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் வழக்கு தொடர்ந்ததையடுத்து, ஆளுநரின் பரிந்துரைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது, கேரள உயர்நீதிமன்றம்.

சென்னை பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதி செய்துதரக்கோரி போராடிய மாணவர்களை, மிரட்டி இனி போராட்டங்களில் ஈடுபட மாட்டோம் என கையெழுத்து வாங்க முயற்சித்தது பல்கலைக்கழக நிர்வாகம். இது பொதுவெளியில் அம்பலமாகி எதிர்ப்புகள் கிளம்பவே அம்முயற்சியை கைவிட்டது.

இவ்வாறு நிர்வாகத்திலும் மாணவர்கள் மத்தியிலும் ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகளை ஊடுருவவிடுவதன் மூலம் புராணக் குப்பைகளை கல்வியில் புகுத்துவது, பாடப்புத்தகங்களில் உண்மையான வரலாற்றை திரிப்பது, புதிய கல்வி கொள்கை போன்ற கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் கொள்கைகளை அமல்படுத்துவது, முற்போக்கு சிந்தனை கொண்ட மாணவர் அமைப்புகளை ஒழித்துக்கட்டுவது, பாசிச மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒழித்துக்கட்டுவது போன்ற வேலைகளை நரித்தனமாக செய்துவருகிறார்கள், காவி பாசிஸ்டுகள்.

இந்த அபாயகரமான போக்கை உடனடியாக அம்பலப்படுத்தி பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அமைப்பாக திரட்டி ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டுகள் நியமிக்கப்படுவதற்கு எதிராகவும் ஏ.பி.வி.பி. குண்டர் படையை கல்வி நிறுவனங்களில் தடை செய்யக்கோரியும் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். முற்போக்கான பேராசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து காவிக் கும்பலின் பிடியிலிருந்து பல்கலைக்கழகங்களை மீட்க போராட வேண்டும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ரவுடிசம் செய்த அண்ணாமலை | தோழர் மருது

ரவுடிசம் செய்த அண்ணாமலை | தோழர் மருது

https://youtu.be/Gmuwsq1wfI0

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



செங்கடல்: ஹவுதியின் கடல்வழி தாக்குதல்களை எப்படிப் பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: காசா மீதான இஸ்ரேலின் போரில், இஸ்ரேலின் பொருளாதாரத்தை முடக்குகின்ற வகையில் தற்போது ஹவுதி அமைப்பினரால் நடத்தப்படும் கடல்வழி தாக்குதல்களை எப்படிப் பார்ப்பது? சர்வதேச நிலைமைகளில் இதனை எவ்வாறு புரிந்துகொள்வது?

காசா மீதான இனப்படுகொலையை இஸ்ரேல் அக்டோபர் 7 அன்று தொடங்கியது முதலே, யேமனின் 80 சதவிகித பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹவுதி அமைப்பு இஸ்ரேலைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. செங்கடல் பகுதியிலிருந்து இஸ்ரேலை நோக்கி வான்வெளித் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதல் இஸ்ரேலால் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வந்தது.

இதன் நீட்சியாக, யேமன் எல்லைக்கு அருகில் உள்ள குறுகலான செங்கடல் பகுதியின் பாப் அல்-மண்டப் ஜலசந்தி வழியாக இஸ்ரேலுக்கு சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பல்களை (அமெரிக்க கப்பல்கள் உட்பட) ட்ரோன்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் ஹவுதி அமைப்பு தாக்கி வருகிறது. இஸ்ரேல் தொழிலதிபருக்கு சொந்தமான வர்த்தக கப்பல் ஒன்றை ஹவுதி அமைப்பு கைப்பற்றவும் செய்தது. உலக வர்த்தகத்தில் 12 சதவிகித வர்த்தகம் செங்கடல் வழியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஹவுதிகளின் தாக்குதல் காரணமாக பல்வேறு நாடுகளின் வர்த்தகக் கப்பல்கள் அப்பிரிக்காவைச் சுற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செலவீனம் அதிகரிக்கிறது என்று கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் புலம்பித் தவிக்கின்றன. சமீபத்தில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த உலகின் முகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுள் ஒன்றான மேர்ஸ்க் (Maersk) செங்கடல் வழியான தனது சரக்குப் போக்குவரத்தை 48 மணிநேரத்திற்கு நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் பாலஸ்தீனத்தை ஆதரித்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருவது அமெரிக்கா – இஸ்ரேலுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. இந்நிலையில் ஹவுதி அமைப்பும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இவர்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும். இவ்விரு அமைப்புகளையும் ஈரான் ஆதரித்து ஆயுதங்களை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

பாலஸ்தீனம் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தும்வரை தங்களது தாக்குதல் தொடரும் என்று இவ்வமைப்புகள் கூறியுள்ளன.

ஹவுதி அமைப்பினரை எதிர்கொள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் “ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன்” (Operation Prosperity Guardian) என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. செங்கடல் வழியாகச் செல்லும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே இந்நடவடிக்கையின் குறிக்கோள் என்று அமெரிக்கா கூறுகிறது. இருபதிற்கும் மேற்பட்ட நாடுகள் இதில் இணைந்துள்ளன என்று அமெரிக்கா கூறிக்கொண்டாலும் பிரிட்டனைத் தவிர வேறு எந்த நாடும் நேரடி உதவி வழங்கவில்லை. அரபு நாடுகளில் பஹ்ரைன் மட்டுமே இதில் இணைவதாகக் கூறியுள்ளது. கிட்டத்தட்ட அமெரிக்கா மட்டும் தனியாக ஹவுதிகளைக் கையாளும் நிலைதான் தற்போது உள்ளது.

அமெரிக்காவின் நேட்டோ கூட்டணி நாடுகள் பெயரளவிற்கு மட்டுமே ஆதரிப்பதற்கும், சவுதி அரேபியா பெயரளவிற்குக் கூட ஆதரிக்காததற்கும் காரணம் அந்நாட்டு மக்கள் மத்தியிலுள்ள பாலஸ்தீன ஆதரவு மனநிலையும் இஸ்ரேலிய எதிப்புணர்வும்தான். அமெரிக்காவிலும் கூட ஜோ பைடன் தனது இஸ்ரேலிய ஆதரவு காரணமாக மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருகிறார்.

மக்கள் போராட்டங்கள்தான் அமெரிக்காவின் கூட்டணி நாடுகளை ஹவுதி அமைப்பினருக்கு ஏதிரான நடவடிக்கையில் பங்கேற்காமல் பின்வாங்க வைத்திருக்கிறது. இன்னும் வீரியமான மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே காசாவில் இனப்படுகொலை நடத்திவரும் இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டணியை பின்வாங்க வைக்க முடியும்.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



என்ன செய்ய? நான்! என்ன செய்ய? | கவிதை

(சாதியக் கொடூரங்களால் பாதிப்புக்குள்ளான ஒரு மாணவனுக்கும் – ஒரு கம்யூனிஸ்ட் தோழருக்குமான உரையாடலே, இந்தக் கவிதை)

ன்ன செய்ய? நான்! என்ன செய்ய?
என்ன செய்ய? நான்! என்ன செய்ய?

குடிக்கிற தண்ணித் தொட்டியில,
மலத்தக் கலக்குறான் – என்ன செய்ய?
படிக்கிற மாணவன் மூஞ்சியிலே,
மூத்திரத்த அடிக்குறான்–என்ன செய்ய?
சாதிப்பெருமையை பேசிக்கிட்டு மகளோட,
கழுத்தையே அறுக்கிறான் – என்ன செய்ய?
காட்டுசுள்ளிப் பொருக்கபோனா கம்பியில,
கரண்ட வைக்கிறான் – என்ன செய்ய?

என்ன செய்ய? நான்! என்ன செய்ய?
சொல்லுங்க, தோழரே! என்ன செய்ய?

படிக்கிற சகமாணவனின் ரத்தத்த,
படியில தெறிக்கவுடுறான் – என்ன செய்ய?
பட்டம் படிச்சு மேலபோனா!
கோட்டாவுல வந்தவங்குறான் – என்ன செய்ய?
பசிக்கொடுமையில வேலைக்கு அக்காபோனா!
படுக்கைக்கு அழைக்குறான் – என்ன செய்ய?
பெண்கள் மீது தினந்தோறும்,
பாலியல்வன்முறைய நடத்துறான் – என்ன செய்ய?

என்ன செய்ய? நான்! என்ன செய்ய? சொல்லுங்க, தோழரே! என்ன செய்ய?

குடிக்கிற டீ கிளாசுக்குள்ள!
பிரிவினைய பண்ணுறான் – என்ன செய்ய?
பொதுக்கிணத்துல குளிக்க நான்போனா!
பொரடியில்கல்லாள அடிக்கிறான் – என்ன செய்ய?
விசேஷத்துக்கு நாங்கபோனா தரையில, தனிபந்திப் போடுறான் – என்ன செய்ய?
கும்பிட கோயிலுக்கு நானும்போனா!
நுழைவாயில்லே நிறுத்துறான் – என்ன செய்ய?

என்ன செய்ய? நான்! என்ன செய்ய? சொல்லுங்க, தோழரே! என்ன செய்ய?

சாக்கடையத் தூர்வாரும் எங்கப்பனையும்,
சாக்கடையாப் பாக்குறான் – என்ன செய்ய?
ஊருக்குள்ள வாழ எங்களோட,
உரிமையப் பறிக்குறான் – என்ன செய்ய?
அடக்கம் பண்ண சுடுகாட்டுல,
நிலம்தர மறுக்குறான் – என்ன செய்ய?

இந்த வலியெல்லாம் மாறனும் – என்ன செய்ய?
எங்க கவலைகள் தீரனும் – என்ன செய்ய?
சொல்லுங்க, தோழரே! கேட்டுக்குறன்! பொதுச்சொத்தா எல்லாத்தையும் மாத்திக்கிறேன்!

கேளு தோழனே! நீ கேளு!
கேட்பத நல்லா உரக்கக்கேளு!
நம்முடைய ஆசான்கள் சொல்லி வச்ச! பொதுவுடமை சித்தாந்தக் கருத்துக் கேளு!

வறுமை ஒழியனும்!
வர்க்கம் அழியனும்!
சகோதரத்துவம் பிறக்கனும்!
சமத்துவம் வளரனும்!
பகையெல்லாம் மறையனும்!
பஞ்சம் தீரனும்!
பசியும் நிறையனும்!
எல்லோருக்கும் எல்லாம்,
பொதுவாய் இங்கே கிடைக்கனும்!
எப்போதுமே நமக்குப்
பொன்னுலகாய் அது அமையனும்!

ஒன்றே தான் தீர்வு உள்ளபடி – அது மார்க்சியம் தந்த கம்யூனிச வழி!

லட்சியம் நோக்கி செல்வோம்,
நாம் முன்னோடு!
லட்சம் பேர்கள் வருவார்கள்,
நாளை நம்மோடு!!


தென்றல்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வரி பகிர்வு – தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தை முன்னெடுக்கலாம்தானே?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த டிசம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: தென்மாநிலங்களுக்கான வரி பகிர்வு தொகையை குறைந்த சதவிகிதத்திலேயே விடுவித்தது ஒன்றிய அரசு. அதேசமயம் பசுவளைய மாநிலங்களுக்கும் பா.ஜ.க. செல்வாக்குள்ள மாநிலங்களுக்கும் அதிக அளவில் நிதியைத் திருப்பி கொடுக்கிறது. இதை எதிர்த்து தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்து தங்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்கலாம்தானே?

ந்த எதிர்பார்ப்பே எதார்த்தத்தை மீறியதாக உள்ளது. இங்கு தென்மாநிலங்களுக்கிடையே ஒரு சமநிலை கிடையாது. வடகிழக்கு மாநிலங்களில் கூட சில பொதுக்கோரிக்கைகள் இருக்கின்றன. தென்மாநிலங்களில் அவ்வாறான பொதுக்கோரிக்கைகள் எதுவும் கிடையாது. பூகோள ரீதியான ஒற்றுமையும் கிடையாது. திராவிட மொழிகள் பேசும் மாநிலங்கள் என்ற அடிப்படையிலும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தாலும் தமிழ்நாடு, கேரளா என்ற வகையிலான ஒருங்கிணைப்பெல்லாம் கிடையாது. இவர்களுக்கிடையில் அப்படிப்பட்ட திட்டமும் இல்லை. இது ஒரு பின்தங்கிய நிலையாகும்.

அதேபோல், தென்மாநிலங்களை பா.ஜ.க. புறக்கணிப்பதற்கு, அவை எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்கள் என்பதையும் கடந்து மற்றொரு காரணமும் உள்ளது. இது பார்ப்பன வர்ணாசிரம அடிப்படையில், உரிமைகளோ ஜனநாயகமோ கேட்பதற்கு இடமற்ற குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள இந்துத்துவ-கார்ப்பரேட் அரசு அதிகார அமைப்பு போன்றதொரு சர்வாதிகார அமைப்பை நாடு முழுவதும் கொண்டுவரும் நோக்கத்துடன் இணைந்தது.

பார்ப்பன பாசிசக் கும்பலின் இயல்பான எதிர்ப்பு என்பது கல்வி கற்றவர்களின் அறிவாற்றல் மீது எப்போதும் இருக்கும். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களின் மீது அந்த எரிச்சல் அதிகமாகவே இருக்கும். “இவர்களெல்லாம் மேற்கத்திய கல்வி கற்றவர்கள்” என்பது பார்ப்பன பாசிசக் கும்பலின் கண்ணோட்டம்.

மேலும், பார்ப்பன பாசிசக் கும்பல் ஜனநாயகத்தையும் கல்வி, பொருளாதாரத்தில் மாநிலங்கள் முன்னேறுவதையும் விரும்புவதில்லை. மார்வாடி – சிந்தி – பனியா கார்ப்பரேட் கும்பலின் வளர்ச்சிக்கு தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சி தேவையற்றது என்பது பார்ப்பன பாசிசக் கும்பலின் கருத்து. இவையெல்லாம்தான் தென்மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பதற்கு காரணம்.

அதேசமயம், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை அதானி, அம்பானியின் இலாப நோக்கத்திற்கு உட்பட்டு தங்களுடைய பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு இழிவான நிலையில்தான் உள்ளன. எனவே, மக்களிடம் எழும் எதிர்ப்பை எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொள்கிறார்களே ஒழிய, இவ்விவகாரத்தில் பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்று எதிர்கட்சிகளிடம் சொந்தமுறையில் திட்டமில்லை. இதுதான் வரலாற்றில் திரும்ப திரும்ப நிரூபிக்கப்படுகின்ற விசயமாக உள்ளது.

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பில்கிஸ் பானோ வழக்கு: குற்றவாளிகள் விடுதலை ரத்து

பில்கிஸ் பானோ வழக்கு: குற்றவாளிகள் விடுதலை ரத்து

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஹிண்டன்பர்க் அறிக்கையும் உச்ச நீதிமன்ற  தீர்ப்பும்

னவரி 3 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் அதானி குழுமம் மீதான விசாரணையை செபி (SEBI) மட்டுமே செய்தால் போதுமானது வேறு எந்த விசாரணையும் தேவை இல்லை என்று கூறியது. இந்த விசாரணையை 3 மாதத்திற்குள் செபி முடிக்க வேண்டும் என்றும் செபியின் அதிகார வரம்பிற்குள் ஓரளவிற்கு மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும் என்றும் கருத்து கூறியது.

வழக்கின் சுருக்கம்

ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023-ஆம் ஆண்டு ஜனவரியில் 106 பக்கங்கள் 32,000 சொற்கள், 720-க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளைக் கொண்ட ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் அதானி குழுமம் மீதான பலவிதமான குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்தியது. “அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை. இந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது 88 கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மிகக் குறிப்பாக மொரிஷியஸ், கரிபியன் தீவுகள் போன்ற வரி ஏய்ப்புக்கு உகந்த இடங்களில் இருந்து அதானி குழுமத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளது ஹிண்டன்பர்க் அறிக்கை.

ஆனால் இவை அனைத்தையுமே அதானி குழுமம் நிராகரித்தது மட்டுமில்லாமல் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை முற்றிலுமே ஆதாரமற்றது என்றும் கூறி மறுத்தது. உச்ச நீதிமன்றம் மார்ச் 2, 2023 அன்று ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை அறிய முன்னாள் நீதிபதி அபேய் எம்.சாப்ரே தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. 2 மாதங்களில் இந்த குழு விசாரித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் என்று கூறப்பட்டது.

மேலும் செபி–யும் 2 மாதங்களில் இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் இதன்மூலம் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதன் காரணத்தால் தான் ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புகார்கள் அடிப்படையில் அதானி குழுமம் மீதான விசாரணையை விரைவு படுத்தும் நோக்கில் பல தரப்பினர்கள் தாங்களாகவே முன் வந்து ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அதிலும் குறிப்பாக செபி (SEBI) அமைப்பு இதை விசாரிக்காமல் காலம் கடத்துவது என்பதே சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது. ஆகவே சிறப்பு குழு அமைத்து இதை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர்.  இதை இப்பொழுது விசாரித்த உச்ச நீதிமன்றம் தான் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

யாருக்கான தீர்ப்பு?

இத்தீர்ப்பு வந்த உடனேயே ”ஹிண்டன்பர்க் அறிக்கை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை வென்றுவிட்டது. இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களது பணிவான பங்களிப்பு தொடரும். எங்களுக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி” என கௌதம் அதானி எக்ஸ் (X) தளத்தில் பதிவிடுகிறார்.

முதலாளிகளின் நலனைக் காக்க அமைக்கப்பட்ட SEBI அமைப்பினால் ஒரு போதும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. SEBI-யின் கையிலே மீண்டும் அதிகாரத்தை வழங்குவது என்பது திருடன் கையிலேயே சாவியை கொடுப்பது போன்றது. அதுமட்டுமல்ல, SEBI-யின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர் அதானியின்  மகனின் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலர் உச்ச நீதிமன்றம் எப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கப்போகிறது என்று நம்பிக்கை வைத்துக் காத்திருந்தனர். அதானியே அத்தீர்ப்பை வரவேற்றதானது அது யாருக்கான தீர்ப்பு என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.

தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிவரும் முக்கியமான பல வழக்குகளின் தீர்ப்புகளில் வழக்கு போட்டவரையே குற்றவாளியாக்குவதும், உண்மையான குற்றவாளியை பாதுகாப்பதும்  வழக்கமாகி வருகிறது. நீதிமன்றமும், அரசும் எப்பொழுதும் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை மட்டுமே பாதுகாக்கும் என இந்தத் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.


கலைமதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் சதியை முறியடிப்போம்!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் சதியை முறியடிப்போம்!

மிழ்நாட்டில் ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 27,000 காலிப்பணியிடங்களை நிரப்புவது, நிறுத்தப்பட்ட 5000 பேருந்துகளை மீண்டும் இயக்குவது, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 8 அன்று அரசுடன் நடந்த மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையிலேயே இப்போராட்டத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ”அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு” சார்பில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். நெருக்கடியான நிலையில் தவிர்க்கவே முடியாமல் ஏன் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தோம் என்பதை அதில் கூறியுள்ளனர். இது வினவு தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இது குறித்த கூடுதலான செய்திகளையும், அரசியல் ரீதியான அம்சங்களையும் குறிப்பிட விரும்புகிறோம்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைகளை பட்டியலிட்டு, அதற்கு தீர்வு காண வேண்டும் என்று அன்றைய அதிமுக அரசிடம் 324 பக்கங்களில் கோரிக்கை வைத்தது. அதில் குறிப்பிடப்பட்ட கோரிக்கைகளைத்தான் தொழிலாளர்கள் இன்று எழுப்புகின்றனர். ஆனால் திமுக அமைச்சரோ அரசியல் உள்நோக்கங்களுக்காக தொழிலாளர்கள் போராடுவதாக இழிவுபடுத்துகிறார்.

தொழிலாளர்களின் பிரச்சனைகளோ மிகத் தீவிரமாக இருக்கின்றன. கடந்த 108 மாதங்களாக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு காப்பீடு திட்டம் கிடையாது. ஒரு தொழிலாளி பணியின்போது இறந்து விட்டால் அதற்கான பென்சனும் மனைவிக்கு உடனடியாக கிடைப்பதில்லை.

அதேபோல் ஓய்வு பெற்றால் கிடைக்க வேண்டிய பணபலன்கள் உடனடியாக கொடுக்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. மூன்று தவணைகளாக ஓய்வூதியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வலியுறுத்தியும் இதுவரை கொடுக்கப்படாமல் உள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்க வேண்டிய பணபலன்களில் இருந்து, போக்குவரத்துக் கழகங்களின் நட்டத்தைக் காரணம் காட்டியும் ஏறக்குறைய 2000 கோடி எடுத்து  நிர்வாகச் செலவிடப்பட்டுள்ளது. தற்போது பணிசெய்யும் தொழிலாளர்களின் ஓய்வூதியப் பிடித்தம் தொடர்பான நிதியை எடுத்து போக்குவரத்து கழகங்கள் அதையும் நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்தி வருகின்றன. இதன் மதிப்பு 13,000 கோடி ஆகும். இவையெல்லாம் தொழிலாளிகளின் கவனத்திற்கு வராமலேயே அதிகாரத்திமிரோடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல வரவு – செலவு அடிப்படையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியுதவி செய்யும் என்றும், கூடுதலாக 24% நிதியும் கொடுக்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் திமுக கூறியிருந்தது. அந்த வாக்குறுதியும் செயல்படுத்தப்படவில்லை.

ஏறக்குறைய 27000 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அதைப் பூர்த்தி செய்வதற்கு எந்த முயற்சியும் இல்லை. இதில் வாரிசுதாரர் பணியிடங்கள் 8000 என்ற அளவில் நிரப்பப்படாமல் உள்ளது.

இதன் காரணமாகவே 5000 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் மாநகரப் பேருந்துகள் மட்டும் 900 ஆகும். குறிப்பாக, தனியார், ஆம்னி பேருந்துகள் கொள்ளையடிப்பதற்கேற்ப நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளின் வழித்தடங்கள் உள்ளன என்பது தற்செயலானதல்ல. இதற்கு எவ்வளவு தொகை அதிகாரிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் கைமாறி இருக்கும் என்பது புரிந்து கொள்ளத்தக்கதே.

சுருங்கக் கூறின் வசூலும், லாபமும் தனியாருக்கு! வருவாய் இழப்பும் நட்டமும் அரசுப் பேருந்துகளுக்கு!

பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ள இத்தகைய சூழலானது போக்குவரத்துத் தொழிலாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் போக்கு உருவாவதற்கு அடிப்படையாக உள்ளது.

ஊதிய ஒப்பந்தம் குறித்து 3 ஆண்டுகளுக்கொருமுறை பேசப்பட்டு வந்த நிலையில் அந்தக் காலவரையறையானது தற்போது 4 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. அது குறித்து கடந்த 2023 செப்.1 அன்று பேசப்பட வேண்டிய நிலையில் இன்றுவரை இழுத்தடித்து வந்துள்ளனர். தொழிலாளர்கள் போராட்டம் அறிவித்த காரணத்தாலேயே நிர்ப்பந்தம் காரணமாகவே தற்போதைய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

தொழிலாளிகளின் வேலைநிலை கொடுமையானதாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பணியில் உள்ள தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். தொடர்ச்சியாக பணிநேரத்தைத் தாண்டி 3 Duty பார்க்க வைப்பது, 3 Attendence என்ற நிலையை மாற்றி 2 Attendence என்ற நிலையைக் கொண்டு வந்துள்ளனர். இதனால் 24 மணிநேரம் தொடர்ச்சியாக வண்டி ஓட்டும் சூழலுக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுகின்றனர். இதனால் ஏற்படும் அயற்சி, மன உளைச்சல் காரணமாக விபத்துக்கள் தொடர்ந்து நடக்கின்றன. உயிர் இழப்பு, உடல் பாகங்கள் இழப்பு ஆகியவற்றிற்கு தொழிலாளிகள் ஆளாகின்றனர். ஆனால் விபத்து ஏற்பட்டால் தொழிலாளிகள் மீது அதிகாரிகள் பழியைப்போட்டு அவர்களுக்கு பணிகொடுக்காமல் இழுத்தடிக்கும் நிலை உள்ளது. போக்குவரத்துத் தொழிலாளிகள் மீதான அதிகாரிகளின் அடக்குமுறையும் மிக மோசமானதாக உள்ளது.

இத்தகைய காரணங்களால் பெரும்பாலான போக்குவரத்துத் தொழிலாளிகளுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு ஆட்பட்டு பெரும்பாதிப்புக்கு ஆளாகும் சூழலும் ஏற்பட்டு வருகின்றது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் துயரங்கள் வார்த்தைகளால் அளவிட முடியாத அளவிற்கு மோசமாக இருக்கின்றது.

இன்னொரு பக்கம் தனியார்மயத்திற்கு ஆதரவான நடவடிக்கைகள் போக்குவரத்துத் துறையில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இதுவரை பெர்மிட் கிடையாது. டூரிஸ்ட் பெர்மிட் வைத்துதான் ஓட்டுகிறார்கள். RTO, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் யாரும் இந்த சட்டவிரோத நடவடிக்கையை கண்டுகொள்வதில்லை. பல அமைச்சர்களின் பேருந்துகள் இப்படி இயங்கிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

அதேபோல் முக்கியமான பயண நேரங்களை தனியார் பேருந்துகளுக்கு அதிகாரிகள் கொடுக்கின்றனர். இதனால் அரசுப்பேருந்துகளுக்கு பெருமளவு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பேருந்துகளின் பயண தூரம் 50 கி.மீக்கு மேலாக அனுமதிக்கப்பட்டது. இன்றும் இது தொடர்கிறது. இதனால் தொலைதூர வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு கொள்ளை லாபம் அடிப்பதால் அரசுப்பேருந்துகளுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது.

உதிரிபாகங்களைப் பொறுத்தவரை, முன்பு கூண்டு கட்டுவது (பாடி) என்பது அரசின் சார்பாகவே செய்யப்பட்டு வந்தது. தற்போது அது தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

SETC ல் ஏற்கனவே ஒப்பந்தப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வந்த நிலையில், ASTC உள்ளிட்ட மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் ஒப்பந்தப் பணியாளர்களை பணியமர்த்துவதற்கான தயாரிப்புகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் தொழில்நுட்ப – பராமரிப்புப் பணிகள் தொடர்பான விசயத்தில் அதனை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்கள் அரசுக்கு உள்ளதாக தெரிகிறது. ஆனால் தொழிலாளர்களின் எதிர்ப்புகள் வரும் என்பதால் அமல்படுத்தப்படவில்லை என்று தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் தனியார் பேருந்துகளை பெருமளவில் அனுமதித்து அதில் ஓட்டுநர் தனியார் நிறுவனத்தின் ஆளாகவும், நடத்துநர் அரசு ஊழியராகவும் வைத்துக் கொண்டு இயக்குவது, ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு நிர்ணயித்து அதை தனியார் பேருந்து உரிமையாளர்கள் வசூலித்துக் கொள்வது, அவ்வாறு  வசூல் ஆகவில்லை என்றால் அந்த நட்டத்தை அரசு ஈடுகட்டும் என்ற வகையில் ஒரு திட்டத்தை அரசு வைத்துள்ளதாகவும், அதை அமல்படுத்த தயார் நிலையில் உள்ளதாகவும் போக்குவரத்துக் கழகங்களைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இன்னொரு பக்கம் அதிகாரிகளின் ஊழலும் கொடிகட்டிப் பறக்கிறது. வண்டி கூண்டு (பாடி) கட்டுவது, டயர் கொள்முதல், உதிரி பாகங்கள், பேப்பர் வாங்குவது, ஆயில் வாங்குவது, தொழிலாளிகளுக்கு மெமோ கொடுத்து அதை ரத்து செய்வதற்கு லஞ்சம் வாங்குவது என எல்லாவற்றிலும் அதிகாரிகள் வரைமுறையின்றி கொள்ளையடிக்கின்றனர். காலிப் பேருந்து இயக்கப்பட்டால் கூட அதிகாரிகளுக்கு இன்சென்டிவ் போன்ற அயோக்கியத்தனமான நடைமுறைகள் அமலில் உள்ளது. இவை ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.

இவ்வளவு மோசமான சூழ்நிலையில் போக்குவரத்துக் கழகங்கள் நெருக்கடியில் இருப்பதன் பின்னே போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கைதான் முக்கியக் காரணமாகும்.

ஆனால், போக்குவரத்துக் கழகங்களின் நெருக்கடியைக் காரணம் காட்டி அந்தத் துறையை முழுவதுமாக தனியார் – கார்ப்பரேட்  முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு இட்டுச் செல்லும் வேலையை திமுக தலைமையிலான அரசும் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 288(A) அரசுப் பேருந்தை தனியார் எடுத்து ஓட்டிக் கொள்ளலாம் என்கிற வகையில் அனுமதிக்கிறது. இந்தச் சட்டத்திருத்தத்தை திமுக அரசும் ஆதரிக்கிறது.

இன்னொரு பக்கம்  தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன சட்டத்தின் 115, 119, 132, 159 மற்றும் 308 – 316 ஆகிய சட்டப் பிரிவுகளில்  திருத்தம் கொண்டு வந்துள்ளது, இதன் மூலம் நிரந்தரப் பணியாளர்களை இனி நியமிக்க வேண்டியது இல்லை. அதேபோல் தற்போதைய பணியாளர்களின் பாதுகாப்பையும் இந்தச் சட்டத் திருத்தங்கள் இரத்து செய்கின்றன என்று கூறுகின்றனர் போக்குவரத்துத் தொழிலாளர்கள். தற்போது பணிசெய்து வரும் நிரந்தரத் தொழிலாளர்கள் வெளியே போனால் மொத்தமாக ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து வேலைகளை செய்து கொள்ளலாம் என இந்தச் சட்டத் திருத்தங்கள் அனுமதிக்கின்றன. தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கே இவை வேட்டு வைக்கின்றன.

இதற்கெல்லாம் மூலக்காரணமாக, கடந்த 2015 ம் ஆண்டு பாசிச மோடியின் ஆட்சியில் நிதின் கட்கரி தலைமையில் சாலைப் பாதுகாப்புச் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. அதாவது பொதுப் போக்குவரத்தில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டை முழுவதும் நீக்கி, கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்கு விடுவதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம். மக்கள் குறைந்தபட்சம் சாலையில் நடமாடுவதற்கான உரிமையையும், போக்குவரத்து உரிமையையும் பறிக்கும் நோக்கத்தோடு இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் முக்கியமான அம்சங்களில் ஒன்று என்னவெனில், அரசின் போக்குவரத்தை ஒழித்துக் கட்டி அதனை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைப்பது என்பதாகும். போக்குவரத்துக் கட்டணங்களையும் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் தீர்மானிக்கும் என்பதாகும்.

மேலும் இச்சட்டப்படி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நடத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவது, வாகனங்களுக்கு எப்.சி பார்ப்பது, வாகனங்களுக்கான சர்வீஸ் – உதிரி பாகங்கள் விற்பனை – இன்சூரன்ஸ் போன்ற அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே சொந்தம் என்ற நிலைமை உருவாகும். மேலும் ஆட்டோ, டெம்போ, லாரி, பேருந்து ஓட்டுனர்கள், உதிரி பாகங்கள் விற்கும் கடைகள், ஒர்க் சாப்கள், சிறு வாகன உரிமையாளர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் சூறையாடப்படும் என்பது முக்கியமானது.  இதனோடு இணைத்துதான் போக்குவரத்துக் கழகங்களின் நெருக்கடியையும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி ஜியோ போன்ற கார்ப்பரேட் தொலைத்தொடர்பு நிறுவனங்களை வளர்ப்பதற்காக உலகிலேயே அதிகமான நெட்வொர்க் வசதி கொண்ட BSNL-ஐ திட்டமிட்டு அழித்தார்களோ அதுபோல் போக்குவரத்துக் கழகங்களை அழித்து, அத்துறையை கார்ப்பரேட்மயமாக்குவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

மோடி அரசின் பாசிசத்தை எதிர்க்கிறோம் என்று கூறிக் கொண்டே இன்னொரு பக்கம் திமுக அரசு கார்ப்பரேட் திட்டங்களையும், சட்டங்களையும் பாசிச மோடி அரசோடு இணைந்து நிறைவேற்றியும், நடைமுறைப்படுத்தியும் வருகிறது. பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை ஆகிய சமூக நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டே, இன்னொரு பக்கம் மொத்தமாக மக்களின் அடிப்படை உரிமைகளையே காவு கொடுக்கும் கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது திராவிட மாடல் அரசு. ஒரு நியாயத்தை மறுத்துவிட்டு இன்னொரு பக்கம் நியாயம் வழங்குவதாக கூறுவது சமூகநீதி அல்ல.

  • மொத்தமாக, தனியார்மயத்தை அமல்படுத்திக் கொண்டே போக்குவரத்துக்கழகங்களின் பிரச்சினையை ஒருக்காலும் தீர்க்க முடியாது. அது சந்தித்து வரும் பிரச்சினைகளை தீவிரப்படுத்தவே செய்யும்.
  • போக்குவரத்துக் கழகம் என்பது தமிழ்நாட்டு உழைக்கும் மக்களுடைய சொத்து. அதை தனியார் – கார்ப்பரேட்மயமாக்குவது என்பது பச்சையான அயோக்கியத்தனம்.
  • மக்களுடைய சொத்தான போக்குவரத்துக் கழகத்தை நட்டமாக்கி கார்ப்பரேட் கையில் தள்ளிவிடும் சதிகாரர்களான அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மக்கள் போராட்டங்கள் எழ வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர முடியும்!
  • போக்குவரத்துக் கழகங்களின் உண்மையான உரிமையாளர்களான மக்களைத் திரட்டி போராடுவதன் மூலமே, தொழிலாளர்களின் உரிமைகளையும், மக்களின் பயண உரிமையையும் பாதுகாக்க முடியும்!
  • நாட்டையே கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்காடாக மாற்றி வரும் தனியார்மயத்தை முறியடிப்போம்!


தோழர். பரசுராமன்,
பொதுச் செயலாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தர்மபுரி – சேலம் மாவட்டங்கள்,
பதிவு எண் – 24/KRI,
தொடர்புக்கு – 97880 11784

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube