Monday, August 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 805

பெரும் தொழிற்கழகங்களின் திருவிளையாடல்கள் – பி. சாய்நாத்

20

டுபயங்கரமான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை போபால் குறித்துக் காட்டியது.  தொழிற்கழகங்களின் மிருக பலத்தைத் தடுக்கும் சக்திகள் நொறுங்கிச் சுக்கலாகிப் போனதை வெளிச்சமிட்டது இந்த நிகழ்வு.

இருபதாயிரத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டனர்.  ஐந்து லட்சத்துக்கும் மேலானோர் முடமாக்கப்பட்டனர் மற்றும் பல வகைகளில் பாதிக்கப்பட்டனர்.  1989-ம் ஆண்டின் ரூபாய் மதிப்பில் இழப்பீடாக தலைக்கு வெறும் 12,414 ரூபாய்கள் மட்டுமே. (470 மில்லியன் டாலர் அல்லது ரூ.713 கோடிகள். இது பாதிக்கப்பட்ட 5,74,367 பேருக்குப் பங்கு வைக்கப்படுகிறது).  கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாகக் காத்திருப்பு.  இதெல்லாம் யூனியன் கார்பைடின் இந்தியத் துணை நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள் ஏழு பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதைப் பார்ப்பதற்குத்தானோ?  ஆகப்பெரும் பொறுப்பாளியான அமெரிக்கத் தலைமை நிறுவனத்தின் ஒரு அதிகாரி கூட தண்டிக்கப்படவில்லை.

இருப்பினும் குற்றவாளி என்ற முறையில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை அமெரிக்காவில் இருந்து இந்தியா கொண்டுவரத் தவறிய செயல் போபாலில் வீழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி என்ற கருத்துரை சற்றே கேலிக்குறியதாக இருக்கிறது. 1984 போபால் விஷவாயுப் பேரழிவு பகாசுரத் தொழிற்கழகங்களின் கொடுங்கோன்மையை அப்பட்டமாய் வெளிக்காட்டியது.  இதிலிருந்து படிப்பினை பெறுவதைத் தவிற்கும் முயற்சி முழுமையாய் நடந்தேறுகிறது. இந்நிறுவனத்தின் மித்தேன் ஐசோசயனைடு வாயு 20000 மக்களை (பெரும்பாலும் பரம ஏழைகள்) படுகொலை செய்து 20 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடிவிட்டன.  இருந்தும் இந்த கார்பைடு நிறுவனத்தின் கொலை பாதகச் செயலுக்கான விலையை போபால் இன்னமும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.  (விஷ வாயுவால் தாக்கப்பட்டோரின் நீண்டகால உடல் பாதிப்புகளும் மற்றும் மூடப்பட்ட கர்பைட் ஆலையைச் சுற்றியுள்ள நஞ்சாக்கப்பட்ட நிலமும், நிலத்தடி நீரும் இதற்கு சான்று பகர்கின்றன).  இந்த நிலையில், அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசின் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா, நிறைவேற்றப்படுமானால், அது நாடெங்கிலும் இவ்வாறான குற்ற நடவடிக்கைகளுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதாக அமையும்.

படுபயங்கரமான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை போபால் குறித்துக் காட்டியது.  தொழிற்கழகங்களின் மிருக பலத்தைத் தடுக்கும் சக்திகள் நொறுங்கிச் சுக்கலாகிப் போனதை வெளிச்சமிட்டது இந்த நிகழ்வு. மெக்சிகோ வளைகுடாவில் நடைபெறும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் துரப்பணப் பணியில் ஏராளமான எண்ணைக் கசிவு ஏற்பட்டுவருகிறது – ஒரு நாளைக்கு 30,000 முதல் 80,000 பேரல்கள் அளவுக்கு எண்ணை கடலில் கசிவதாக மதிப்பிடப்படுகிறது. கடந்த கால் நூற்றாண்டாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எத்தனை உயிர்களைப் பலிகொடுத்தும் லாபம் ஈட்டலாம் என்று வெறிகொண்டு அலைந்து வரும் தொழிற்கழகங்களின் நடவடிக்கைகளிலேயே உச்சம் இது. பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் மீதான பாரக் ஒபாமாவின் ‘கடுஞ்சொற்கள்’ எல்லாம் பெரிதும் நவம்பருக்கு முந்திய வெற்றுத் தேர்தல் அமளியே தவிர வேறல்ல.  கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகளில் படுத்துப் புரண்டு பிரிட்டிஷ் பெட்ரோலியம் இளைப்பாறுதல் பெறலாம்.

இத் தீர்ப்புகளில் முதலாவது 2008-ல் வழங்கப்பட்டது.  எக்சான் வேலிஸ் எண்ணை நிறுவனம் தொடர்பான அதுவரையிலான வரலாறு காணாத (அல்லது ஒப்புக்கொள்ளப்படாத) எண்ணைக் கசிவு பற்றிய வழக்கில் வந்த தீர்ப்பு அது. எளிமையாகச் சொன்னால், பிரிட்டிஷ் பெட்ரோலியம் எக்சான் வேலிஸின் எண்ணைக் கசிவுக்கு நிகரான கசிவை சுமார் எட்டு நாட்களுக்கு ஒரு முறை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிகழ்த்திக் காட்டுகிறது. எக்சான் வழக்கில் அந்த நிறுவனத்தின் மீது 5 பில்லியன் டாலர்கள் அபராதத் தொகை விதித்து 1994-ல் ஜூரிகள் தீர்ப்பு வழங்கினர்.  ”மேல் முறையீட்டு நீதிமன்றம் 2006-ம் ஆண்டில் அந்த அபராதத் தொகையை 2.5 பில்லியன் டாலர்கள் என்று பாதிக்குப் பாதியாகக் குறைத்தது” எனவும்  ஜூன் 2008-ல், “உச்ச நீதிமன்றமோ அபராதத் தொகையை வெறும் 500 மில்லியன் டாலர்களாக மேலும் 80% குறைத்தது – பாதிக்கப்பட்ட வாதிகளுக்குக் கிடைக்கப்போவது தலா 15000 டாலர்கள் மட்டுமே” என்று கவுண்டர்பஞ்ச்.ஆர்க் –ல் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஷரோன் ஸ்மித். இந்த அபராத வழக்கை விடாப்பிடியாக நடத்திய எக்சான் நிறுவனத் தலைமை இயக்குனர் லீ ரேமாண்ட் மொத்தமாக 400 மில்லியன் டாலர்களைத் தனக்காக மட்டும் பெற்றுக்கொண்டு பணிஓய்வு பெற்றார்.

நாங்கள் 33000 பேர் பகிர்ந்துகொள்ளும் தொகையை ஸ்மித் மட்டுமே சுருட்டிக்கொண்டு போய்விட்டார் என அவர் பற்றி எக்சான் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகிறார்கள். இத்தொகை முதல் தீர்ப்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டில் சுமார் 10 சதவீதத்துக்கும், பாதிக்கப்பட்ட அனைவரும் பெறப்போகும் சுமார் 15000 டாலர்களுக்கும் சமமானது.

அதே ஆண்டு செப்டம்பர் மாதம் வால் ஸ்டிரீட் மூலதனச் சந்தை சூதாடிகள் [kleptocrats] புகழார்ந்த வகையில் உலகப் பொருளாதாரத்தையே நிலைகுத்தச் செய்தனர்.  அவர்களது செயல் அமெரிக்கர்களும் ஏனைய உலக மக்களுமான பல பத்து லட்சம் பேர்களின் வேலைக்கும், வாழ்வாதாரத்துக்கும் உலை வைத்தது.  எனினும், அதே ஆண்டிலேயே அமெரிக்கத் தலைமை இயக்குனர்கள் பலர் போனசாகப் பல நூறு கோடி டாலர்களை அள்ளிச் சென்றனர்.  தி நியூ யார்க் டைம்ஸ் நாளேடு கூட, “அமெரிக்கக் கருவூலத் துறை என்றும் காணாத பேரழிவில் இருந்து தேசத்தின் மாபெரும் வங்கிகளில் ஒன்பதைக் காப்பாற்ற மக்களின் வரிப்பணத்தில் இருந்து 125 பில்லியன் [12500 கோடி] டாலர்களைக் கொடுத்த சில வாரங்களிலேயே, அத்தொகையின் பெரும் பகுதியை வங்கி இயக்குனர்கள் தங்களது செயல்பாட்டுக்கான ஊக்கப்பரிசு என்ற பெயரில் பல பில்லியன் டாலர்களை சுருட்டிச் செல்கின்றனர்”  என்று தனது சிறப்புத் தலையங்கத்தில் எழுதியது. (அதே தேர்தல் ஆண்டில் தான், ஆழ்கடல் எண்ணைத் துரப்பண நடவடிக்கையை ‘தோண்டு கண்ணு, தோண்டு’ என்ற குத்தாட்ட முழக்கத்துடன் குதியாட்டம் போட்டு வரவேற்றன பகாசுர எண்ணைக் குழுமங்கள். [Big Oil] இப்போது என்ன சொல்வது? ‘கசியட்டும் கண்ணு கசியட்டும்… கடலே கூவமாகட்டும்’ என்பதா?)

இவ்வாண்டு, பிரிட்டிஷ் பெட்ரோலியம் மெக்சிகோ வளைகுடாவையே குழம்பிய குட்டையாக்குவதற்கு மூன்றே மாதங்களுக்கு முன்னர்தான் அமெரிக்க உச்ச நீதிமன்றம் சிடிசன்ஸ் யுனைடட்-க்கும்  தேசிய தேர்தல் ஆணையத்துக்கும்  இடையிலான வழக்கில் அளித்த தீர்ப்பின் மூலமாக தொழிற்கழகங்களின் பலத்துக்கு மேலும் வலு சேர்த்தது.  “ஏற்கனவே வெள்ளமெனப் பாயும் [கார்ப்பரேட்] பணத்தில் மிதந்துகொண்டிருக்கும் தேர்தல் களத்தில் இப்போது இந்தத் தீர்ப்பின் மூலமாக தொழிற்கழகங்கள் நேரடியாகவே ஏராளமான பணத்தைக் கொட்ட முடியும் … பிராந்திய, மாநில, தேசிய அளவுகளிலான பதவி நாற்காலிகளைப் பிடிக்க எத்தனிக்கும் எந்த நபரையும் இனி இவர்கள் விலைக்கு வாங்கவோ, மிரட்டிப் பணிய வைக்கவோ முடியும்” என்கிறார் ரால்ப் நதிர்.   “இத்தீர்ப்பின் பின்னால் இருக்கும் கருத்து என்னவெனில், தொழிற்கழகம் என்பது மனிதனுக்கு உள்ள எல்லா உரிமைகளுடனும் [கடமைகள் என்று ஏதும் இல்லையாயினும்]  கூடிய ஒரு ‘சட்டவகை மனிதன்’; இவ்வாறாக, அது பேச்சுரிமையைப் பெற்றுள்ளது; மேலும், பணக் கொடை என்பது பேச்சின் ஒரு வடிவமே” என்று கவுண்டர்பஞ்ச் செய்திக் கடிதத்தில் மேசன் ஜாஃப்னி விளக்குகிறார். எனவே துவளாதே பிரிட்டிஷ் பெட்ரோலியமே, துடித்தெழு.. வாய்ப்புகள் இன்னும் கைநழுவி விடவில்லை.  காங்கிரஸ் மற்றும் செனட் நாற்காலிகளை அலங்கரித்திருப்பவர்களில் பெரும் எண்ணைக் குழுமங்களின் பணமூட்டைகளைப் பெற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா, எண்ணிப்பார்.

பிரிட்டிஷ் பெட்ரோலியம் தொடர்பான எண்ணைக் கசிவுப் பிரச்சினையில் கவனம் செலுத்தும் இந்த தருணத்தில், இவ்வாறான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களும் வெள்ளைத் தோலர்களும் அல்லாத பிற மக்களைப் பற்றியும் சிறிது சிந்தித்துப் பார்க்கலாமே. ’அயலுறவுக் கொள்கை பற்றிய பார்வை’ [Foreign Policy in Focus ]யின் கட்டுரையாளர் கான் ஹல்லினன் குறிப்பிடுவது போல, “நைஜீரிய அரசின் புள்ளிவிவரப்படி 1970-ம் ஆண்டுக்கும்  2000-ம் ஆண்டுக்கும்  இடைப்பட்ட காலத்தில் 9000 –க்கும் மேலான எண்ணைக் கசிவுகள் அங்கு நிகழ்ந்துள்ளன.  நடப்பில் உள்ள அதிகாரபூர்வமான எண்ணைக் கசிவுப் பகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே 2000”.  அப்படியெனில் ஆப்பிரிக்க மக்களின் உயிருக்கு மதிப்பே இல்லையா?

போபால் பேரழிவு நிகழ்ந்து ஏழாண்டுகளுக்குப் பின்னர் உலக வங்கியின் தலைமைப் பொருளியலாளர் லாரி சம்மர்ஸ் கொடூரமானதொரு குறிப்பை எழுதினார். அக்குறிப்பில், பிற விசயங்களுக்கு மத்தியில், “நமக்குள்ள வச்சுக்குவோம், இந்த அசிங்கம் பிடிச்ச தொழிற்துறைகளை எல்லாம் பெருமளவில் வளர்ச்சி குன்றிய நாடுகள் தலையில் தள்ளிவிட உலக வங்கி உந்துதல் அளிக்கக் கூடாதா?” என்ற இக்கருத்தையும் எழுதியிருந்தார்.  “அபாயகரமான நச்சுக் கழிவுகளை வருமானமில்லாத ஏழை நாடுகளில் கொண்டு கொட்டுவதற்கான பொருளியல் காரணங்கள் முற்றிலும் சரியானவையே. அதற்கு நாம் சம்மதித்துத்தான் ஆகவேண்டும்” என்றும் சம்மர்ஸ் பரிந்துரை செய்தார்.

கேலியாகவும், கிண்டலாகவும், இன்ன பிறவாகவும் தான் எழுதிவிட்டதாக சம்மர்ஸ் பின்னர் சமாளிக்க வேண்டியிருந்தது. அப்படியும் அவரது அந்த இரைஞ்சல்களைக் கொள்வார் இல்லை.  ஆயினும், பின்னாளில் அவர் ஹார்வர்ட் தலைவர் ஆனார், இன்னாள் அதிபர் ஒபாமாவின் தலைமை பொருளியல் ஆலோசகராகவும் இருக்கிறார்.  அவரது அன்றைய குறிப்பின் சாரமே உலக எதார்த்தமாக இருக்கிறது. போபால் நிகழ்வில் தொடங்கி துல்லியமாக இதுதான் நடந்திருக்கிறது.

அரசின் ஒழுக்கம் 1984-ல் இருந்த அதன் கேடுகெட்ட நிலையில் இருந்து சற்றும் மாறுபட்டிருக்கவில்லை என்பதையே போபால் தீர்ப்புக்கான ஐ.மு. கூட்டணி அரசின் எதிர்வினை காட்டுகிறது.  போபாலுக்கு அழுவதும் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதாவை சட்டமாக்கத் துடிப்பதும் ஒத்துப்போக முடியாத இரட்டை வேடம்.  போபால் பேரழிவில் பாதிக்கப்பட்டோரின் நியாயம் நடந்துவிட்டதற்குப் பின் செய்யப்பட்ட விற்பனை. அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா விசயத்திலோ இது அரசு செய்யும் முன்பேர விற்பனை.  1984 போபால் பேரழிவு தொடர்பாக மறைப்பதற்கு ஏதோ வைத்திருப்பது இந்த அரசுகள் மட்டும்தானா?  விபத்து நடந்த அந்த சமயத்தில் கூட, “கார்பைட் ஊழியர்களின் சதிவேலையால்”  இப்பேரழிவு நிகழ்ந்து விட்டது என்ற திட்டமிட்ட வதந்திகளை மகிழ்ச்சியாய்ப் பரப்பின செய்தித்தாள்கள்.  நான்கு ஆண்டுகள் கழித்து, யூனியன் கார்பைடு நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்ட ஒரு ’ஆய்வு’, ஆலையில் வேலைசெய்த அதிருப்தியுற்ற ஒரு தொழிலாளியால் நிகழ்ந்துவிட்ட போரழிவே இது என்று கண்டுபிடித்துவிட்டதாக கூறிக்கொண்டது. அமெரிக்க நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாதபடி கார்பைடு நிறுவனம் உத்தரவாதப்படுத்திக் கொண்டது.  இந்த வழக்கை நடத்துவதற்கு சரியான இடம் இந்திய நீதிமன்றங்களே என்று நானி பல்கிவாலா உள்ளிட்ட இந்தியாவின் சட்டத்துறை ஒளிவட்டங்கள் சிலர் அமெரிக்க நீதிமன்றங்களை ஏற்கச் செய்தனர். (அதன் விளைவுகளை நாம் இன்று சந்திக்கிறோம்) அமெரிக்க நீதிமன்றங்கள் விதித்திருக்கக் கூடிய ஒப்பீட்டளவில் கூடுதலான இழப்பீட்டுத் தொகையில் இருந்து இச்செயல்கள் கார்பைட் நிறுவனத்தை விடுவித்தன.

அடுத்த பத்தாண்டுகளிலேயே, தாராளமயம் என்ற புதிய சகாப்தத்தின் குறியீடாக என்ரான் பரிணமித்தது.  இந்த என்ரான் கும்பல் எவ்வளவு பரிசுத்தவான்கள் என்பதை நமக்கு எடுத்துச் சொல்ல மெத்தப் படித்த மேதாவிகளும், ‘வல்லுனர்களும்’, கட்டுரையாளர்களும் கடுமையாக உழைத்தனர். இவை எல்லாம், என்ரான் ஒப்பந்தம் பற்றி ஆரம்பத்தில் கிளம்பிய பெருத்த விமர்சனங்களுக்குப் பின்னர்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தியாவில் மக்களிடையே கருத்துருவாக்கம் செய்வோர், சட்டம் இயற்றுவோர் போன்றவர்களுக்குக் “கற்பிப்பதற்கு” என்ரான் நிறுவனம் இறக்கிவிட்ட பல பத்து மில்லியன் டாலர்கள் நிதி செய்த மாயத்தால் இந்த திடீர் மன மாற்றம் சாத்தியமானது போலும். விளம்பரங்களும் தாராளமாக அள்ளி வழங்கப்பட்டன. ஆதரவு ஆரவாரம் செய்வோரில் ஒருவராக மாறிக்கொள்ள வேண்டியே என்ரான் பற்றிய கடுமையான விமர்சகராகத் தொடக்கத்தில் களம் இறங்கியது ஒரு பிரபலமான பத்திரிகை.  மேலும் பலரும் கூட அவ்வாறே செய்தனர். இப்படிப்பட்ட நிதிகளும் கூட பல பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது என்று நான் ஊகிக்கிறேன். மகாராட்டிரத்துக்கும் இந்தியாவுக்கும் அது பேரழிவைக் கொண்டுவந்தது. முன்பு லாபகரமாக இயங்கிய அம் மாநில மின்சார வாரியம் – என்ரான் வருகைக்குப் பின் – நட்டக் கணக்கை மலையெனக் குவிந்தது. அதன் விளைவாக, மாநில அரசு சேவை மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதியைத் தாருமாறாகக் குறைத்தது. என்ரான் நிறுவனம் தனது ஊழல் நடவடிக்கையால் அமெரிக்காவில் வீழ்ச்சியுற்றது. அதன் தலைமையில் இருந்த சிலர் சட்டத்தின் முன் நில்லாது தப்பி ஓட்டம் பிடித்தனர்.  ஆனால் அந்த நிறுவனம் ஏற்படுத்திய குளறுபடிகள் மட்டும் இன்றளவும் நம்மை வதைக்கின்றன.  சி.ஐ.டி.யூ வும் அபய் மேதாவும் கொணர்ந்த என்ரான் ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தூக்கி வெளியே வீசிய போதே இந்தப் பேரழிவில் இருந்து தப்ப இருந்த ஒரே வாய்ப்பும் தொலைந்துவிட்டது.

நிற்க, ஒபாமாவின் வாய்ச் சவடால்கள் பிரிட்டிஷ்  சகபாடிகளின் மனங்களைப் புண்படுத்திவிட்டது போல் தோன்றுகிறது.  கடந்த காலங்களில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு நிதியும், ஆதரவும் நல்கி பேருதவி புரிந்திருக்கிறது அமெரிக்கா என்பதே உண்மை.  அலெக்சாண்டர் காக்பர்ன், “வரலாற்றில் மாபெரும் கைதூக்கிவிடல்” எனச் சித்தரிக்கும் நிகழ்வில், 1953ம் ஆண்டு ஈரானின் முகமது மொசாதிக் அரசின் தொல்லைகளில் இருந்து விடுபட கேவலமான ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது அமெரிக்க சி.ஐ.ஏ.  ஈரானிய பாராளுமன்றம் தனது ஒருமித்த வாக்களிப்பின் மூலம் கடுமையாகச் சுரண்டி வந்த ஆங்கிலோ-ஈரானியன் ஆயில் கம்பெனியை தேசவுடைமை ஆக்கியிருந்தது.  எனவே மொசாதிக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.  அவரது இடத்தில் மேலை நாட்டு எண்ணைக் கம்பெனிகளின் வளர்ப்புப் பிராணியான ஷா ரிசா பஹல்வி சர்வாதிகாரியாக அமர்த்தப்பட்டார். ஆங்கிலோ-ஈரானியன் ஆயில் கம்பெனி தனது பழைய சலுகைகளில் நாற்பது சதவீதத்தை மீளப் பெற்றது.  பிரிட்டிஷ் பெட்ரோலியம் என்ற பெயர் மாற்றத்துடன் சர்வதேசக் குழுமம் ஆனது. பெரும் தொழிற்கழகங்களால் ஆதரவளிக்கப்பட்டு மூன்றாம் உலக நாடுகளில் நிகழ்த்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புகளின் பட்டியலோ பெரிதாய் நீண்டு கிடக்கிறது.

போபாலில் யூனியன் கார்பைடின் செயலும், அது பழுதின்றித் தப்பியதும் அதிர்ச்சி அளிக்கத்தான் செய்கிறது.  ஆனால், நிச்சயமாக வியப்பளிக்கவில்லை.  அதற்குப் பிந்திய கால் நூற்றாண்டு காலத்திலும் தொழிற்கழகங்களின் பலம் கணிசமாக உயர்ந்தே வந்திருக்கிறது.  தொழிற்கழகங்களை சமுதாயத்திற்கு மேலானதாகவும், தனிநபர் ஆதாயத்தை பொது நலனுக்கு மேலானதாகவும் மதிக்கும், அனுமதிக்கும் சமூகப் பார்வை நீடிக்கும் வரை போபால்கள் பல தொடரத்தான் செய்யும்.  இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ, வேறெங்குமோ.. எங்கும் தொழிற்கழகங்களின் அதிகாரத்தை வெட்டிச் சுருக்குங்கள். இல்லையேல் அவர்கள் உங்களை உரித்துத் தொங்க விட்டுவிடுவார்கள்.

போபாலில் பாதிக்கப்பட்டோர் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் ஒரு முக்கியமான விசயத்தையும் நினைவில் நிறுத்துங்கள்.  “மீண்டும் இவ்வாறான கொடுமை நிகழ முடியாதவாறு உறுதிசெய்வோம்” என்பதே அது.  எனினும், அதற்கு நேர் எதிரானதையே நாம் உறுதிப்படுத்தி வருவதாகத் தோன்றுகிறது. எதிர்காலத்தில் இந்திய மண்ணில் அணுசக்தி விபத்து நிகழக் காரணமாக இருக்கப்போகும் எந்த ஒரு அமெரிக்க நிறுவனமும் தற்போதைய உருவில் இருக்கும் அணுசக்தி விபத்து இழப்பீட்டு மசோதா மூலமாக அற்ப இழப்பீட்டுடன் தப்பிச் செல்லும்.  தற்போது போபால் பேரழிவில் ஒரு குற்றமாக அணுகப்படும் இழப்பீடு பற்றிய புரிதல் எதிர்காலத்தில் வெறும் சட்ட வழிமுறையாக மட்டுமே எளிமைப்படுத்தப்படும்.  லாரி சம்மர்ஸ் அவர்களே, மீண்டும் வருக.
__________________________________________________
–    பி.சாய்நாத், நன்றி தி ஹிந்து, 15.6.2010
–    தமிழில்: அனாமதேயன்

__________________________________________________

செம்மொழி மாநாடு: கலைஞர் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?

58

vote-012முதல்வர் கருணாநிதி நடத்தியிருக்கும் செம்மொழி மாநாடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் நடத்திய வளர்ப்புமகன் திருமணத்தை அப்படியே நினைவுபடுத்தியது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அமைச்சர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளை கவனித்ததாக இருக்கட்டும், போலீசு அதிகாரிகள் குவிக்கப்பட்டதாக இருக்கட்டும், பட்டுப் புடவைகள் சரசரக்க மன்னர் குடும்பத்தினர் முன் வரிசை சோபாக்களில் கொலுவிருந்ததாகட்டும்..  எல்லாம் அதே காட்சிகள்தான். எனினும் இரண்டுக்கும் இடையில் சிறியதொரு வேறுபாடு இருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. சுதாகரனின் திருமணத்தை  தமிழக அரசு நடத்தவில்லை. செம்மொழி மாநாட்டை தமிழக அரசுதான் நடத்தியிருக்கிறது.

அரசு எந்திரம் முழுவதையும் அடித்து வேலை வாங்கி, ஐ.ஜி முதலான அதிகாரிகளை சாம்பார் வாளி தூக்கவைத்த போதிலும், குடும்ப விழாவை அரசு விழா என்று அறிவிக்கத் தயங்கிய புரட்சித்தலைவியின் நேர்மையுள்ளத்தை வியப்பதா, அன்றி, அரசு விழா என்ற அறிவிப்பின் கீழ் குடும்ப விழாவை நடத்திக் காட்டிய  கலைஞரின் ராஜதந்திரத்தை வியப்பதா தெரியவில்லை. என்ன பெயரிட்டு அழைத்தாலென்ன, ரோஜா ரோஜாதான்!

இது சுயவிளம்பர மாநாடு அல்ல என்று ஜெயலலிதாவுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் கருணாநிதி. “சூரியக் குடும்பம் அழைக்கிறது” என்று சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள். அவர்கள் பிரச்சினை அவர்களுக்கு. கலைஞர் அழைக்கிறார், தளபதி அழைக்கிறார், அழகிரி அழைக்கிறார் என்று தனித்தனியாக போஸ்டர் அடித்து எதிர்கோஷ்டியின் பொல்லாப்பை சம்பாதிப்பதை விட குடும்பம் என்று குறிப்பிடுவது பாதுகாப்பானதல்லவா?

செம்மொழி மாநாட்டின்  இனியவை நாற்பது பேரணியைப் பார்வையிடுவதற்குப் போடப்பட்டிருந்த மேடையில் நாற்காலிகள் அனைத்தையும் சூரியக் குடும்பத்தின் கோள்கள் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டதால், வ.மு.சேதுராமன் உள்ளிட்ட தமிழறிஞர் பெருமக்கள் நாற்காலிகளுக்குப் பின்னால் நின்றபடி பேரணியை எக்கி எக்கிப் பார்த்தனர் என்று எழுதி அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தது ஜூனியர் விகடன். சாலையில் “இனியவை நாற்பது”. மேடையில் “இன்னா நாற்பது” என்று எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்

லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புரூமேர்” என்ற தனது நூலில், பிரான்சில் திடீர்புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய லும்பன் கூட்டத்தைப் பற்றி கார்ல் மார்க்ஸ் எழுதியது நினைவுக்கு வருகிறது.

“அதிகமான கூச்சல் போட்டுக் கொண்டு கவுரவம் என்பதே சிறிதுமில்லாமல் பிடுங்கித் தின்பதைப் பிழைப்பாகக் கொண்ட கூட்டம்… கோமாளித்தனமான கம்பீரத்தோடு, விலையுயர்ந்த கோட்டுகளுக்குள் உடலைத் திணித்துக் கொண்டு.. அரசவைக்குள், மந்திரிசபைக்குள், நிர்வாகத்தின் தலைமையான இடத்துக்குள்.. முண்டியடித்துக் கொண்டு நுழைகிறது… இந்தக் கூட்டத்திலேயே மிக நல்லவர்களைக் கூட அவர் எங்கே இருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?” என்கிறது மார்க்ஸின் வருணனை.

மன்னார்குடி குடும்பத்துக்குப் பொருந்தக் கூடிய இந்த வருணனை கோபாலபுரம் குடும்பத்துக்குப் பொருந்தாதா என்ன? நீ மந்திரியா நானும் மந்திரி; நீ கவிதாயினியா, நானும் கவிதாயினி; உன் மகன் சினிமா தயாரிப்பாளனா, என் மகனும் சினிமா தயாரிப்பாளன்; நீ கேபிள் டிவியா, நானும் கேபிள் டிவி; உனக்கு வி.ஐ.பி நாற்காலியா, எனக்கும் வி.ஐ.பி நாற்காலி; உனக்கு வலப்புறமா, எனக்கு இடப்புறம்; உனக்குத் தலைமாடா, எனக்கு கால்மாடு… என்ற இந்த அடிதடியில் தமிழறிஞர்களுக்கு நாற்காலி கிடைக்காததா பிரச்சினை?  மிதிபட்டுச் சாகாமல் தப்பினார்களே, அதுவே தமிழ்த்தாய் செய்த தவப்பயன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்தம் பதினைந்து இருபது நிமிடம் செம்மொழி மாநாட்டுக் கவியரங்கத்தை மட்டும் தொலைக்காட்சியில் பார்த்திருப்பேன். “இப்படியொரு கூட்டத்தை யார் கூட்டமுடியும், கலைஞரே நீர் கூட்டமுடியும்” – இது அப்துல் ரகுமான். “மேகங்களே நீங்கள் அங்கிருந்தே கைதட்டுங்கள், கீழே தமிழர்கள் இருக்கிறார்கள் கைதட்டுவதற்கு”- இது வைரமுத்து. “நீங்கள் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்ததனால்தான் தண்டவாளமும் தமிழ் கற்றுக் கொண்டது” – இது ந.முத்துக்குமார். இவர்களையெல்லாம் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்ளும் தமிழ் கூறும் நல்லுலகம், அழகிரியின் மகள் கயல்விழியை மட்டும் கவிஞர் இல்லை நிராகரித்துவிடுமா?

தமிழ் சினிமாவின் கிளைமாக்ஸ் காட்சியில், ஹீரோவின் பாட்டையும் அய்யனார் சிலையின் குளோசப்பையும் மாற்றி மாற்றிக் காட்டுவது போல, கலைஞரைப் புகழ்ந்து பாடப்படும் ஒவ்வொரு வரிக்கும், முன்வரிசையில் அமர்ந்திருக்கும் கலைஞரின் முகத்தை நோக்கி காமெரா திரும்பியது. பெரும்பாலும் கலைஞரின் முகத்தில் சலனம் இல்லை.

“ஒன்று இரண்டு என்று வகைப்படுத்தி என்னைப் பாடு” என்று சிவபெருமான் சொன்னவுடனே கே.பி.சுந்தராம்பாள் “ ஒன்றானவன் உருவில் இரண்டானவன்..” என்று பாடுவதையும், அதற்கு சிவபெருமான் ரியாக்சன் கொடுப்பதையும் பார்த்திருக்கிறோம். ஒரு அவ்வையார் பாடினால் ரியாக்சன் கொடுக்கலாம். இருபது முப்பது அவ்வையார்களை மேடையேற்றி விட்டு, அடுத்தடுத்துப் பாடவிட்டால் எப்பேர்ப்பட்ட சிவாஜி கணேசனாக இருந்தாலும் முகபாவம் காட்டுவது கஷ்டம்தானே?  “முடியலடா சாமி” என்று கலைஞர் எழுந்து போய்விடுவார் என்றுதான் நினைத்தேன். இல்லையே.

ரியாக்சன் காட்டவில்லை என்ற காரணத்தினால், இத்தகைய “முகத்துதிக் கவிதைகளை  கலைஞர் விரும்பவில்லை போலும்” என்று அவசரப்பட்டு முடிவுக்கு வருபவர்கள் வரலாறு தெரியாதவர்கள். அல்லது மாநாட்டில் கலைஞர் ஆற்றிய துவக்கவுரையைக் கேட்காதவர்கள். அஞ்சுகம் முத்துவேலருக்கு மகனாகப் பிறந்து, அரை டவுசர் போட்ட காலத்திலேயே தமிழ்த்தொண்டாற்றி.. என்று தனது உரையைத் தொடங்கினார் கலைஞர். இந்தக் கதையை எத்தனை ஆயிரம் முறை கூறிய பின்னரும் “போதும்” என்று அவருக்குத் தோன்றவில்லை. இது தெரிந்திருப்பதனால்தான் ரத்தம் வரும் வரை சொறிகிறார்கள் கவிஞர்கள்.

இருப்பினும் எந்தப் புகழுரையைக் கேட்டாலும், நினைவாற்றல் மிக்க கலைஞருக்கு அது ஏற்கனவே எங்கேயோ கேட்டது போலப் பொறி தட்டுகிறது. 460 கோடியை வாரி இரைத்தும் கலைஞரை முகம் மலரச் செய்யும் ஒரு கவிதை வரியைக் கூட கவிஞர்களால் துப்பமுடியவில்லை. கலைஞர் முகம் மலர்வது இருக்கட்டும். கூட்டத்திடமிருந்து கூட கைதட்டல் வாங்கமுடியவில்லை. முகத்துதியில் ஒருவரை ஒருவர் முந்த முயன்று மூச்சிரைத்த கவிஞர்களுக்கும் கூட “முடியலடா சாமி” என்ற நிலைதான்.

அன்றாடம் புதிது புதிதாக மன்னனைப் புகழ்ந்து பாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த அரசவைக் கவிஞர்கள் எனப்படுவோர், தம் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள அந்தக் காலத்தில் என்னபாடு பட்டிருப்பார்கள், தமிழ் என்னபாடு பட்டிருக்கும் என்ற கோணத்தில், தமிழின் வரலாற்றையும், தமிழனின் வரலாற்றையும் புரிந்து கொள்வதற்க்கு ஏற்ற மிகச்சிறந்த காட்சி விளக்கமாக அமைந்திருந்தது கவியரங்கம்.

“கலைஞருக்குக் கொஞ்சம் கூடக் கூச்சமாக இருந்திருக்காதா?” என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். கூச்சமா?  வசனத்துக்கு வாயசைக்கும் நடிகன் தனக்கு ரசிகர் மன்றம் வைத்துக் கொள்ளக் கூச்சப்படுகிறானா? தெருமுனைக்குத் தெருமுனை தனது திருமுகத்தையே டிஜிட்டல் பானரில் பார்த்துக் கொள்ள தலைவர்கள் கூச்சப்படுகிறார்களா? லஞ்சம் கேட்க போலீசார் கூச்சப்படுகிறார்களா?  பேராசிரியப் பெருமக்கள் வட்டிக்கு விடக் கூச்சப்படுகிறார்களா? ஐந்திலக்க சம்பளம் வாங்கும் ஐ.டி ஊழியர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்ய கூச்சப்படுகிறார்களா? அதிகாரிகளும் அறிஞர் பெருமக்களும் அழகிரிக்கு கூழைக்கும்பிடு போடக் கூச்சப்படுகிறார்களா? கலைஞர் மட்டும் எதற்காகக் கூச்சப்படவேண்டும்?

அப்படியெல்லாம் கூச்சப்படுவதென்றால் அதற்கு ஒரு பண்பாடு வேண்டும். அந்தப் பண்பாட்டுக்கு ஒரு அறமும் சில விழுமியங்களும் அடிப்படையாக இருக்கவேண்டும். அவ்வாறு கூச்சப்படாதவர்களைக் கண்டு காறி உமிழும் மனோபாவம் அந்தச் சமூகத்தின் உளவியலில் கொஞ்சமாவது எஞ்சியிருக்க வேண்டும். இருக்கிறதா?

இந்தக் கூத்தில் பங்கேற்ற ஆன்றோர்கள், சான்றோர்கள். அறிஞர்களில் எத்தனை பேர் அடிக்கு பயந்து வந்தவர்கள். எத்தனை பேர் அப்படி சொல்லிக் கொள்கின்ற காரியவாதிகள்?  யாராவது கண்டுபிடிக்க முடியுமா?

ஈழத்தமிழனுகாகக் குரல்கொடுத்த தமிழர்களையெல்லாம் தடாவில் தூக்கி உள்ளே போட்ட காலத்தில்தான் தஞ்சையில் உலகத்தமிழ் மாநாடு நடத்தினார் ஜெயலலிதா. சிவத்தம்பி அதற்கும் வர விழைந்தார். எனினும் விரட்டப்பட்டார். இன்று ஈழத்தின் கல்லறை மீது நடக்கும் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தந்து “அரசியல் வேறு – தமிழ் வேறு” என்று  தத்துவம் கூறுகிறார். இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் ஒரு முத்தமிழ் மாநாட்டை நடத்தினால் அதற்கும் அவரே தலைவர். ஒருவேளை தனி ஈழம் கண்டு அங்கே ஒரு உலகத்தமிழ் மாநாட்டை தம்பி நடத்தியிருக்கக் கூடுமானால், அதற்கும் அவரே தலைமை தாங்கியிருக்க கூடும்.

கலைஞர் மட்டும் எதற்காகக் கூச்சப்பட வேண்டும்?

தான் ஆற்றியிருக்கும் தமிழ்த் தொண்டுக்கு உரிய மரியாதையை வழங்கத் தெரியாத தமிழனுக்கு, அவன் வரிப்பணத்திலிருந்தே தமிழ்ப் பண்பாட்டைக் கற்றுக் கொடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் கலைஞரும், நியாயமான முறையில் பாகம் பிரிக்கப்படாத தங்களது பிதுரார்ஜித சொத்தாக தமிழகத்தைக் கருதும் அவரது குடும்பத்தினரும் எப்படிக் கூச்சப்பட முடியும்?  கனிமொழிதான் பாவம், ரொம்பவும் கஷ்டப்பட்டு கூச்சப்படுகிறார்.

இலக்கியவாதிகள் முகத்தில்தான் என்ன கம்பீரம்! வார்த்தைகளால் நக்கிய புலவர் பெருமக்களின் மீசையில்தான் எத்தனை முறுக்கு? மேடையை அலங்கரித்த நாற்காலிகளுக்குத்தான் எத்தனை மிடுக்கு!

யாரும், எதுவும் கடுகளவும் கூச்சப்பட்ட மாதிரி தெரியவில்லை. நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும் – அவை தமிழனுக்கு எதற்கு? திராவிட இயக்கத்தின் நிழலில் தழைத்த புலவர் பெருமக்களின் பாரம்பரியம் மிக்க பிழைப்புவாதம் ஒருபுறம். தாராளமயக் கொள்கைகளால் அதிகாரபூர்வப் பண்பாடாக ஞானஸ்நானம் பெற்றிருக்கும் புதிய பிழைப்புவாதம் ஒருபுறம். செம்மொழி மாநாடு முன்னைப் பழைமையும் பின்னைப் புதுமையும் இணைந்த புதியதொரு வீரிய ஒட்டு ரகத் தமிழ்ப் பண்பாட்டை நம் கண்முன்னே விரித்துக் காட்டியது.

இதுதான் தமிழகம்.

“ஈழப்படுகொலைக்குப் பின்னரும் திமுகவும் காங்கிரசும் தமிழகத்தில் வெற்றி பெற முடிந்தது எப்படி?” என அன்று வியந்தோர் உண்டு. “தமிழர்களின் வாக்குகளைப் பணம் கொடுத்து வாங்கிவிட்டார்கள்” என்பது பாதி உண்மைதான். “விற்றுக் கொள்ள முன்வந்தது” மீதி உண்மை. அன்று ஈழப்படுகொலைக்கு எதிராகப் பாமரத் தமிழர்கள் சிலர் தீக்குளித்தார்கள், பலர் சிறை சென்றார்கள். இன்று படித்த அறிஞர்கள் யாரும் “குற்றம் குற்றமே” என்று முழங்கிச செம்மொழி மாநாட்டை எதிர்த்துச் சிறை சென்றதாகத் தகவல் இல்லை.

பாலைவனச் சோலை போல மதுரை வழக்குரைஞர்கள், உயர்நீதிமன்றத்தில் தமிழ் கோரி உண்ணாவிரதத்தைத் துவக்கினார்கள். சென்னை வழக்குரைஞர்கள் தொடர்ந்தார்கள். “நீதிமன்ற வளாகத்துக்குள் நீதியின் குரலையும் காக்கையின் குரலையும் தவிர வேறு எந்தக் குரல் ஒலித்தாலும் அது சட்டவிரோதம்” என்று நீதியரசர்கள் கூறிவிட்டார்கள். “வளாகத்துக்கு வெளியே காக்கையின் குரலைத் தவிர வேறு எந்தக் குரல் ஒலித்தாலும் அது செம்மொழிக்கு விரோதம்” என்று காவல்துறை கூறிவிட்டது. எனவே, உலக மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ், தற்கொலை செய்து கொள்ள முயன்ற குற்றத்துக்காக ரிமாண்டில் வைக்கப்பட்டு மாநாடு முடியும் வரை பாதுகாக்கப்பட்டது.

“சூரியக் குடும்பம் அழைக்கிறது” என்று உடன்பிறப்புகள் கூறியிருந்த உண்மையை மொழிபெயர்த்து, “இது கருணாநிதியின் குடும்பவிழா”என்று சுவரொட்டி ஒட்டினார்கள் ம.க.இ.க தோழர்கள். “அதை நாங்க சொல்ல்லாம். நீ சொல்லக்கூடாது” என்று சிறை வைக்கப்பட்டார்கள்.

தமிழகமெங்கும் தேடுதல் வேட்டை, கியூ பிரிவின் கண்காணிப்பு. ஒரு பகுதியில் ஓட்டைப் பிரித்து வீட்டுக்குள் குதித்து தமிழ் விரோதிகளான ம.க.இ.க தோழர்களைத் தேடியது போலீசு. திருச்சியில் ரயில்வே பிளாட்பார்மில் சுமை இறக்கிக் கொண்டிருந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தொழிலாளர்கள் 15 பேரை, அங்கேயே போலீசு வளைத்துப் பிடித்தது. சென்னையில் சுவரொட்டி ஒட்டியதற்காக கைது செய்யப்பட்ட பெண்கள் விடுதலை முன்னணியின் செயலர், ஊடகங்களைத் தொலைபேசியில் அழைத்து செய்தி சொன்னபோது, “அம்மா நாங்கள் செம்மொழி மாநாட்டுக்கு எதிராக எந்தச் செய்தியும் கவர் பண்ணுவதில்லை” என்று பதிலளித்திருக்கின்றனர் பத்திரிகையாளர்கள். ஊடகங்கள் செம்மொழியால் எப்படி கவர் பண்ணப்பட்டிருக்கின்றன என்பது தினமணி தலையங்கத்தைப் பார்த்த மாத்திரத்தில் தெரிந்ததே! தினமலர் பரவாயில்லை, “செம்மொழி மாநாட்டை எதிர்த்த நக்சலைட்டுகள் கைது” என்று செய்தி போட்டு, தமிழின விரோதிகளைத் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியது.

வழக்குரைஞர் போராட்டத்தைச் சிக்கெனப் பற்றிக் கொண்ட ஜெயலலிதா, உடனே ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவித்து அதில் தோழமைக் கட்சிகளும் கலந்து கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டார். வலது, இடது கம்யூனிஸ்டு தொண்டர்கள் தலா 4 கொடியுடன் கலந்து கொண்டனர் . ராஜாவும் எச்சூரியும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டனர். கூட்டணியால் வேறுபட்டாலும் தமிழால் ஒன்றுபடுவது என்பது இதுதான் போலும்!

“தமிழர்களே, கலைஞர் அழைக்கிறார். சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து  செம்மொழி மாநாட்டில் ஒன்றுபடுவோம் வாரீர்!” என்று திமுகவினர் சென்னையில் ஒரு விளம்பரத் தட்டி வைத்திருந்தனர். மொழி வேறுபாட்டைக் கடந்த மொழி உணர்வு! அடடா, எப்பேர்ப்பட்ட கவிதை! “சூடு, சொரணை, சுயமரியாதை கடந்து” என்பதையும் சேர்த்து எழுதியிருக்கலாம். விசேடமாகக் குறிப்பிட வேண்டிய அளவுக்கு அவை முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல என்று உடன்பிறப்புகள் எண்ணியிருக்கக் கூடும்.

ஐந்து நாள் மாநாடு, கவியரங்கம், ஆய்வரங்குகள், 998.4 ஆய்வுக் கட்டுரைகள், ரகுமானின் யாதும் ஊரே யாவரும் கேளீர்.. ஆகிய அனைத்தின் சாரப்பொருளையும் ஒரே வரியில் கூறிவிட்டது, உடன்பிறப்புகளின் விளம்பரத்தட்டி உதிர்த்திருந்த அந்தக் கவிதை.

அம்மா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுக்கும் அய்யா நடத்திய செம்மொழி மாநாட்டுக்கும் என்ன வேறுபாடு? அம்மா நடத்திய குடும்ப விழாவுக்கும் அய்யா நடத்தியிருக்கும் அரசு விழாவுக்கும் என்ன வேறுபாடு? அம்மா ஆட்சிக்கும் அய்யா ஆட்சிக்கும் என்ன வேறுபாடு?

“கோலெடுத்தால் குரங்காடும்” என்பது அம்மாவின் அரசாட்சித் தத்துவம். “கோல் முனையில் வாழைப்பழத்தை தொங்கவிட்டால் எப்பேர்ப்பட்ட குரங்கும் கரணம் போடும்” என்பது அய்யாவின் ஆட்சித் தத்துவம்.

மாநாட்டின் இறுதியில் தமிழுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் கலைஞர். அப்படியானால் ஏற்கெனவே செம்மொழி மாநாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 460 கோடி?

அதுதான் கோலின் முனையில் கட்டப்பட்ட வாழைப்பழம்.

அப்போ இந்த வாழைப்பழம்? அதாண்ணே  இது.

______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

முள்ளிவாய்க்கால் – போபால்

vote-0121983 ஜூலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும்  நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும் இவ்விரு பிரச்சினைகளிலும் இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் கடைப்பிடித்த அணுகுமுறைகளில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது.

போபால் நச்சுவாயுவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும், ஊனமடைந்த மக்களும் நிவாரணம் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாமல் அவசரமாக தலையிட்டு சட்டம் இயற்றித் தடுத்த இந்திய அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொள்வதாக வாக்கும் கொடுத்தது. தற்போது போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சியுற்றதைப் போல நடிப்பவர்கள் அனைவரும் இப்படியொரு தீர்ப்பை வரவழைப்பதற்காகத்தான் எல்லா முனைகளிலிருந்தும் காய் நகர்த்தினார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. மத்திய, மாநில அரசுகள், சி.பி.ஐ, உச்சநீதி மன்றம் ஆகிய அனைவரும் இணைந்து நடத்திய நாடகத்தின் முடிவுதான் 26 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்திருக்கும் இந்தத் தீர்ப்பு.

1983 ஜூலையில் சிங்கள இனவெறி அரசு நடத்திய ஈழத்தமிழினப் படுகொலைக்கு எதிராக தமிழகம் கொந்தளித்தபோது, பல போராளிக் குழுக்கள் ஈழ மண்ணில் தோன்றியபோது. போபாலைப் போலவே இதிலும் தலையிட்ட இந்திய அரசு, ஈழத்தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை பெற்றுத்தரும் பொறுப்பைத் தானே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தது. போராளிக் குழுக்களை இந்திய உளவுத்துறையின் கைப்பாவைகளாகச் சீரழித்து, பின்னர் ஈழத்தை ஆக்கிரமித்து, முடிவில் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்துக்கு களத்தில் உடன் நின்று வழிநடத்தியது இந்திய அரசு. ஜூலை படுகொலை நடந்த 26 ஆண்டுகளுக்குப் பின், அம்மக்களின் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலையும், முட்கம்பி வேலிக்குப் பின்னால் 3 இலட்சம் ஈழத்தமிழ் அகதிகளும் என்று போபாலைப் போலவே ஒரு துயரமாக முடிந்தது

ஆண்டர்சனை அன்று சிறப்பு விமானத்தில் வழியனுப்பி வைத்தது முதல் வழக்கைச் சீர்குலைத்தது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பின்புலமாக இருந்த காரணமும், இன்று கிரிமினல் வழக்குகளில் கைது செய்யப்பட வேண்டிய டக்ளஸ் தேவானந்தாவுடனும், இனப்படுகொலையாளன் ராஜபக்சேயுடனும் மன்மோகன்சிங் கை குலுக்குவதற்கான காரணமும் வேறு வேறல்ல. அமெரிக்க மேலாதிக்கத்தின் அடியாளாகவும், தெற்காசியப் பிராந்திய வல்லரசாகவும் நிலைபெறத் துடிக்கும் இந்தியத் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவத்தினுடைய வெறியின் வெளிப்பாடுதான் இந்த நடவடிக்கைகள். 1983 இலிருந்து தில்லியில் 9 அரசுகள் மாறிமாறி வந்திருந்த போதும், ஒன்றுபட்ட இலங்கை என்ற கொள்கைதான் எல்லா அரசுகளையும் வழிநடத்தி வருகிறதென்று ப.சிதம்பரம் சமீபத்தில் கூறியிருப்பதை, போபால் படுகொலைக்கும் பொருத்தலாம். யூனியன் கார்பைடு நிறுவனத்தை விடுவிப்பதிலும் கூட 9 அரசுகளும் ஒத்த கருத்துடன்தான் செயல்பட்டிருக்கின்றன. இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட இந்திய இராணுவ அதிகாரிகளின் பிணங்கள் இந்திய அரசின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியது போலவே, யூனியன் கார்பைடுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் முடித்துக் கொள்வதன் மூலம் அமெரிக்க முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கலாமென்று ஆலோசனை அளித்த ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோரின் குற்றமும் இப்போது அம்பலமாகியிருக்கின்றது.

தமது சுரண்டல் ஆதிக்க நலனுக்காக சொந்த நாட்டு மக்களில் சுமார் 25,000 பேரின் உயிரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பலிபீடத்தில் காணிக்கையாகச் செலுத்துவதற்கும் தயங்காத இந்திய ஆளும் வர்க்கத்தின் இரக்கமின்மைக்கும்,  இலங்கையின் மீது தனது விரிவாதிக்கக் கால்களைப் பதிப்பதற்காக முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்நின்று நடத்திய அதன் கொலைவெறிக்கும் நேரடித் தொடர்பு இல்லையா என்ன? போபால் வேறு, முள்ளிவாய்க்கால் வேறுதான்; ஆண்டர்சன் வேறு, ராஜபக்சே வேறுதான்; விமானமும், சிவப்புக் கம்பளமும் கூட வெவ்வேறு பொருட்கள் என்பது உண்மைதான். எனினும் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான்.

– புதிய கலாச்சாரம், ஜூலை – 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

செம்மொழி மாநாட்டை எதிர்த்த தோழர்கள் தமிழகமெங்கும் கைது ! போஸ்டர் கிழிக்கிறது போலீஸ் !!

25

vote-012செம்மொழி மாநாடு என்ற பெயரில் 500 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் கருணாநிதி நடத்தும் ஜால்ரா மாநாட்டின் காட்சிகளை பார்த்து தமிழகமே காறித் துப்பி வருகிறது. செம்மொழி மாநாட்டினை அம்பலப்படுத்தியும், கருணாநிதி தமிழுக்கு செய்திருக்கும் துரோகத்தை விளக்கியும் எமது தோழர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் மூலம் நகரங்கள், கிராமங்கள், பேருந்துகள், ரயில்கள் என்று எல்லா இடமும் இந்த பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இந்த ஜனநாயக உரிமை கூட நமக்கு இல்லை எனும் விதமாக கருணாநிதி அரசு பாசிச வெறியுடன் பல இடங்களில் தோழர்களை கைது செய்து சிறையலடைத்திருக்கிறது. இது பற்றி எந்த ஊடகமும், செய்தித்தாட்களும் மூச்சு விடவில்லை. தோழர்கள் அது பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தாலும் அவற்றை படிப்பதற்கே பத்திரிகை முதலாளிகள் அச்சப்படுகின்றனர்.

சென்னை குரோம் பேட்டையை சுவரொட்டிகளால் நிறைத்து தோழர்கள் செய்த பிரச்சாரத்தைக் கண்டு உறுமிய போலீசு, பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை அமைப்பாளர் தோழர் உஷாவையும், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் இரு தோழர்களையும் வீடு தேடிக் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருக்கிறது. பல தோழர்களது வீடுகளுக்கு சென்று அவர்கள் இல்லாத காரணத்தினால் அச்சுறுத்தியும் ஆட்டம் போட்டிருக்கிறது.

விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் நீதிமன்றத்தில் தமிழுக்காக போராடும் வழக்குறைஞர்களை ஆதரித்து சுவரொட்டி ஒட்டியிருக்கின்றனர். அதனால் ஆத்திரமடைந்த போலீசு இரு தோழர்களை கைது செய்து சிறையலடைத்திருக்கிறது. கடலூரில் இதே காரணத்திற்காக பு.மா.இ.மு அமைப்பாளரான தோழர் பாலு உட்பட இரு தோழர்கள் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

செம்மொழி மாநாடு நடக்கும் கோவையில் போலீசு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் வீரமுடன் பகுதி மக்களிடம் துண்டறிக்கை விநியோகித்த மக்கள் கலை இலக்கிய கழக கோவை அமைப்பாளர் தோழர் மணிவண்ண்ணையும் வேறு இரு தோழர்களையும் கோவை போலீசு கைது செய்து சிறையிலடைத்திருக்கிறது. காங்கேயத்தில் போபால் பிரச்சினைக்காக சுவரொட்டி ஒட்டிய இரு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மாநாடு நடக்கும் போது எந்த சுவரொட்டியும் அரசை எதிர்த்து ஒட்டக்கூடாது என்று காங்கேயம் போலீசு அதற்கு ‘ஜனநாயக’ முறையில் விளக்கம் கொடுத்திருக்கிறது.

திருச்சியில் சுமை பணி பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த நான்கு தோழர்கள் ரயில் நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருவெறும்பூரிலும் தோழர்கள் கைது. திருச்சி நகரமெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மெனக்கெட்டு கிழித்து வருகிறது திருச்சி நகர போலீசு. கோவில்பட்டியில் நான்கு தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். விளாத்திகுளத்தில் ஒரு தோழரைக் கைது செய்ய முடியாத போலீசு அவரது ஆட்டோவை கொண்டு சென்று வீட்டாரை அச்சுறுத்தியிருக்கிறது. மதுரையில் இந்த முழக்கங்களை அச்சிடுவதற்கு எந்த அச்சகமும் தயாராக இல்லை.

இது போக இன்னும் பல இடங்களிலும் தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்த விவரங்கள் எமக்கு கிடைக்கவில்லை. செம்மொழி மாநாட்டை எதிர்த்து ஒரு சிறு எதிர்ப்பு கூட வரக்கூடாது என்பதற்காக கருணாநிதியின் காட்டு தர்பார் தொடர்கிறது.

செம்மொழி மாநாட்டில் கருணாநிதியின் பாதத்தை நக்கி தமிழத் தொண்டு புரியும் அறிஞர்களுக்கு போட்டியாக வெளியே கருணாநிதியின் நிழலுக்கு கூட ஆபத்து வரக்கூடாது என்று தமிழக போலீசு லத்தித் தொண்டு புரிகிறது.ஆனாலும் செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடக்கும் இந்த மக்கள் விரோத ஆடம்பர கேளிக்கையை எமது தோழர்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவார்கள். அடக்குமுறைக்கும், கைது, சிறையடைப்புக்கும் அஞ்சமாட்டார்கள்.

______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

______________________________________________

கருணாநிதி அரசை அம்பலப்படுத்திய எமது முழக்கங்கள் கீழே:

தமிழால் ஏய்த்து தமிழினத் துரோகத்தால் கொழுத்த கருணாநிதி குடும்பத்தாரின் இல்லத் திருவிழாவே செம்மொழி மாநாடு!!

கலைஞர் என்பது பெயரல்ல… அது தமிழினத் துரோகத்தின் வரலாறு!
கலைஞரின் துரோகத்தால் ஈழமே சுடுகாடு
துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு!…

பள்ளிகளில் தமிழ் இல்லை
கல்லூரிகளில் தமிழ் இல்லை
நீதிமன்றத்தில் தமிழ் இல்லை
தமிழில் படித்தால் வேலை இல்லை
தமிழ் கற்ற தமிழனுக்கு திருவோடு –
உயர் தனிச் செம்மொழிக்கு மாநாடு!
***
அமெரிக்கா பறக்கிறான் ஐ.டி. தமிழன்
சிங்கப்பூர் குருவியாய் தஞ்சைத் தமிழன்
துபாயில் துவள்கிறான் துறையூர்த் தமிழன்
அகதியாய் அலைகிறான் ஈழத்தமிழன்
உள்ளூர்த் தமிழா … ஊர் ஊராய் ஓடு!..
உலகத் தமிழா …! கோவையில் கூடு!..
***
விவசாயித் தமிழனுக்குத் தண்ணியில்ல…
நெசவாளித் தமிழனுக்கு நூல் இல்ல…
தொழிலாளித் தமிழனுக்கு உரிமையில்ல..
பட்டதாரித் தமிழனுக்கு வேலையில்ல…
மாணவத் தமிழனுக்கு கல்வியில்ல…
மீனவத் தமிழனுக்கு கடல் இல்ல…
தமிழன் வாழாமல் தமிழ் வாழுமா?
தண்ணியே இல்லாமல் மீன் வாழுமா?
***
மழலையர் வாயிலிருந்து
அம்மா அப்பாவை பிடுங்கிவிட்டு
மம்மி டாடியை ஊட்டியவர் யார்?
தமிழைப் படிப்பது தரக்குறைவு என்று
தமிழனையே சிந்திக்கத் தூண்டிய
தலைமகன் யார்?
கொள்ளையர் மனம் குளிர
கோவிந்தராசன் கமிட்டி அமைத்த
கொற்றவன் யார்?

’’தண்ணி’’யையே பிளேடாக்கி
தமிழச்சிகளின் தாலியறுத்த
தவப் புதல்வன் யார்?
உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காட
உண்ணாவிரதமிருந்த வழக்குரைஞர்களை
உள்ளே தள்ளி அழகு பார்த்த
காவல் தெய்வம் யார்?
அவர் தான் கலைஞர்…
அவ்ர் தா………ன் கலைஞர்!.
***
ஃபோர்டுக்கு சேர நாடு
சோனிக்கு சோழ நாடு
கோக்குக்கு பாண்டிய நாடு
ஹூண்டாய்க்கு தொண்டை நாடு
நாதியற்ற தமிழனுக்கு
நாலுநாள் மாநாடு!
வள்ளலுக்கு வள்ளலாம்
கலைஞருக்கு ஓ போடு!
***
மம்மி டாடி படிக்கும் நர்சரிகளே!
மெட்ரிக் படிக்கும் ஸ்டூடண்டுகளே!
கான்வெண்டில் தமிழ் கற்ற கனிமொழி
அழைக்கிறார்!
“கோவைக்கு வெல்கம்!”
***
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
விவசாயிகள் விடுதலை முன்னணி.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

______________________________________________

மேலும் தொடர்புடைய பதிவுகள்

செம மொழி செம்மொழி ! கேலிச்சித்திரங்கள் !!

35


______________________________________________
• ரவி, அன்பு
______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

செம்மொழி மாநாடு – கருணாநிதி தமிழுக்கு செலுத்தும் இறுதி மரியாதை !!

vote-012கோவையில் நடக்க இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டின் இப்போதைய முக்கியமான செய்திகளில் ஒன்று. துணை முதல்வரும் ஏனைய அமைச்சர்களும் தொடர்ந்து கோவையை பார்வையிட்டு வருகிறார்கள். இது கருணாநிதியின் வாழ்நாள் கனவு என்பது போன்ற ஒரு கருத்து எல்லா அச்சு ஊடகங்களாலும் உமிழப்படுகிறது. கோவை மக்கள் அகலமாக்கப்படும் சாலைகளைப் பற்றியும் புதைந்துபோன வீடுகளைப் பற்றியும் பேசுகிறார்கள். அமைச்சர்கள் கோவைக்கு வரப்போகும் உள்கட்டமைப்பு வசதிகளைப்பற்றி பெருமை பேசுகிறார்கள். பொதுவாக கவனிக்கவேண்டிய செய்தி யாதெனில் ஒருவரும் தமிழைப் பற்றி மறந்தும்கூட பேசுவதில்லை.

தொன்னூற்று மூன்றாம் வருடம் தஞ்சாவூரில் நடந்த எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டின்போது நான் எட்டாம் வகுப்பு மாணவன். அப்போது எனக்கிருந்த அறிவுக்கு மாநாடு என்றால் அதில் என்ன செய்வார்கள் என்பது பற்றி எந்த ஆர்வமும் எழவில்லை. ஊரைச் சுற்றி போடப்பட்ட சாலைகளும் ஒரு மிதவைப்பாலமும் ஒரு ரூபாய்க்கு போடப்பட்ட பொன்னி அரிசி சாதமும் மட்டுமே நான் விவாதிக்கப் போதுமானதாக இருந்தது. இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதே மனோநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. அன்றைய தமிழ் மாநாட்டின்போது ஜெயலலிதாவின் கட் அவுட்டுக்கள் தஞ்சை நகரெங்கும் பயமுறுத்தின இப்போது அதே நிலைதான் நீடிக்கிறது. கருணாநிதி ஸ்டாலினின் மண்டைகளைப் பார்க்காமல் நீங்கள் இங்கு கால் கிலோமீட்டர்கூட பிரயாணம் செய்ய முடியாது, அத்தனை பேனர்கள் வீதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன.

ஈழத்துப் பேரழிவுக்குப் பிறகு மக்கள் அந்த சோகத்திலிருந்து மீளாத தருணத்தில் கருணாநிதியால் இந்த மாநாட்டின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலில்லாமலே உலகத்தமிழ் மாநாடு என்ற அறிவிப்பு வெளியானது.அந்த நிறுவனத்தின் தலைவர் நெபுரு கராஷிமா ஒரு மானம் மரியாதை உள்ள ஒரு ஆள் போலிருக்கிறது அதனால் கருணாநிதியின் ’தேவையை’ அவரால் ஏற்க இயலவில்லை. நீண்டகாலமாக தி.மு.க வின் தலைவராக இருப்பதால் உலகில் சில மானஸ்தர்களும் இருப்பார்கள் என்ற தகவல் அவருக்கு நினைவுக்கு வராமல் போய்விட்டது. நெபுரு கராஷிமாவால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு உலகத்தமிழ் செம்மொழி மாநாடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்மாநாடு கருணாவின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இந்த புள்ளியிலிருந்தே கிடைக்கத் துவங்குகின்றன.

அதன் பிறகு சட்டமன்றத்தில் பேராசிரியர் அன்பழகன் உலகத் தமிழ் ஆய்வு மன்றம் செத்துவிட்டது என்று அறிவித்தார். ஈழத்து படுகொலைகளின் சோகம் அகலாத சூழலில் இந்த மாநாடு தேவையா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது கனிமொழி சொன்னார் ‘ மாநாட்டில் நமது ஒற்றுமையை உலகுக்கு காட்டுவதன் மூலம் நாம் ஈழத்தமிழருக்காக இன்னும் அழுத்தமாக குரல் கொடுக்கலாம்‘. ஒன்று மட்டும் உறுதி, இன்றைய ஊடக ஆதரவுச் சூழலில் கருணாநிதி முகச்சவரம் செய்துகொள்வதுகூட ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் என்று கனிமொழியால் கூசாமல் சொல்லிவிட முடியும். சட்டமன்றத் தேர்தலை விரைவாக நடத்தும் எண்ணத்திலிருந்த கருணா இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டின் துவக்கத்தில் இம்மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார். ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க இவ்வளவு குறுகிய காலம் போதாது என்று அறிஞர்கள் கோரியதன் பிறகு மாநாடு ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. முத்தமிழ் செக்யூரிட்டிக்கு ( காவலருங்க) ஆய்வுக்கட்டுரை என்பது ஜெகத்திரட்சகனுடைய சொறிந்துவிடும் வாழ்த்துரையையைப் போல எளிமையானதான தோன்றியதை என்னவென்று சொல்வது?

தமிழை ஒழித்துக்கட்டும் முயற்சி ஏதோ ஜெயலலிதா காலத்தில் துவங்கி கருணாநிதி காலத்தில் நிலை பெற்றதாக பலர் கருதுகிறார்கள், சில தமிழறிஞர்கள் உட்பட. தமிழ் மொழி காமராஜர் அண்ணாதுரை காலம்தொட்டே அரசினால் கைவிடப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் அண்ணாதுரையை அரியாசனத்தில் அமர்த்தியது. தமிழின் வளர்ச்சிக்கு அவர் செய்தது என்ன ? இன்னும் சொல்லப்போனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் மாணவர்ளை காட்டிக்கொடுக்கும் வேலையைத்தான் செய்தார். லட்சக்கணக்கிலான தமிழ் மக்களை மட்டுமே கொண்டிருக்கிற இலங்கையில் பொறியியலும் மருத்துவமும் தமிழில் கற்றுத்தரப்படும்போது இதற்கான முதல் முயற்சிகூட அண்ணா காலத்தில் செய்யப்படாதது ஏன்? 1968ல் அண்ணதுரையால் நடத்தப்பட்ட இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் ஏராளமான சிலைகள் சென்னையில் திறக்கப்பட்டன அலங்கார ஊர்திகள் மாநாட்டில் ஊர்வலம் சென்றன, வேறென்ன நடந்ததென்றால் யாருக்கும் தெரியாது. நாடகத்துறையில் இருந்தவர் என்பதால் அரங்கம் அமைபதைத் தவிர வேறெதையும் அவரும் செய்யவில்லை.

அதன் நீட்சியாக கருணாநிதியும் மொழிக்கு அவர் செய்யப்போகும் சிறப்பு பற்றி ஒரு எழவும் பேசியதாகக் காணோம் எப்போதும் மாநாட்டுப் பூங்காவில் தொடங்கி அரசுக் கழிப்பிடம் கட்டுவது வரையிலான கட்டுமான விவகாரங்களைப் பற்றித்தான் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். மாநாட்டுப் பாடலை கருணாநிதி எழுத ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க கவுதம் மேனன் இயக்கியிருக்கிறார். நல்லவேளையாக நமீதா நடனமாடாத காரணத்தால் தமிழினம் தப்பிப்பிழைத்தது. அண்ணாதுரை காலத்தில் துவங்கிய ஜனரஞ்சகமான மாநாடு எனும் பழக்கம் இப்போது கருணாநிதியின் கதை வசனம் எழுதப்பட்ட படங்களைப் போல சகிக்க முடியாததாக வளர்ந்திருக்கிறது. மொழியைக் காப்பதற்கு ஏதாவது செய்பவர்தானே அதை வளர்ப்பதற்கும் தகுதியுடையவராவார் ? கருணா தமிழைக் காப்பதற்கு என்ன முயற்சியை இதுவரை எடுத்திருக்கிறார்? தமிழில் கலைச்சொற்களை உருவாக்குவது, மற்ற மொழி அறிவியல் புத்தகங்களை தமிழாக்கம் செய்வது ( இவை இப்போதும் சீனா ஜப்பான் நாடுகளில் மின்னல் வேகத்தில் செய்யப்படுகின்றன ) ஆகியவற்றுக்கான முன்முயற்சிகள் மயிரளவுகூட தமிழக அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. தமிழின் தொன்மையில் நான்கில் ஒரு பங்குகூட இல்லாத கன்னட மொழியின் இலக்கியங்கள் மலிவுப்பதிப்பாக கர்நாடக அரசால் மக்களுக்குத் தரப்பட்டன. இங்கு அதுபோன்ற முயற்சிகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா?

தாய்மொழிக் கல்வியை அரசுப் பள்ளிகள் மட்டுமே நடத்த முடியும். பொதுவாகப் பார்க்கையில் அரசுப்பள்ளிகளது தரம் குறைவது என்பது எதேச்சையானது அல்ல. இது பல ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் அரசின் கல்விச் செலவினத்தை குறைக்கவும் இன்னொருபுறம் தனியார் வசம் கல்வியை ஒப்படைக்கவுமே அரசு விரும்புகிறது. இப்போது அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணத்தை ஏற்க மறுத்து பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று அரசை மிரட்டும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சொல்வது என்ன ? நாங்கள் இல்லாவிட்டால் பின்னாளில் தரமான கல்வி பெற்றவர்களே தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்கிறது. ஆயிரக்கணக்கான பள்ளிகளை நடத்தும் அரசுக்கு இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியுமா ? ஓராண்டுக்கு முன்பு கல்வியாளர் வசந்திதேவியால் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மிக மோசமானதாக இருக்கிறது என்று முடிவு வந்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு பூர்த்தி செய்த அரசுப் பள்ளி மாணாக்கர்கள் எளிமையான வாக்கியங்களை அமைக்கவே அல்லது புரிந்துகொள்ளவோ தெரியாதிருக்கிறார்கள் என்கிறது அவ்வறிக்கை.

பெரும்பாலான கிராமப்புற பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகள். நிர்வாகப்பணியையே செய்யத் திணறும் ஆசிரியரால் எப்படி ஐந்து வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும் ? இப்படியான சூழலில் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கு வரும் மாணவர்கள் அந்தப் பாடச்சுமையை எப்படி எதிர்கொள்வார்கள்? பெரும் சதவிகிதமான மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடிவதற்குள் படிப்பிலிருந்து விலகுகிறார்கள். அரசும் அதையே விரும்புகிறது. ஏழைகள் எல்லோரும் படிக்கத்துவங்கினால் பிற்பாடு அவர்கள் உயர்கல்வி கேட்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே அரசுப்பள்ளிகளை தரமில்லாமல் வைத்திருப்பது அரசுக்கு மிக அவசியம். இந்த ஆண்டு +2 தேர்வில் மிக அதிக தேர்ச்சி விழுக்காடு காட்டிய விருதுநகர் மாவட்டத்தில் ஒரு அரசுக் கல்லூரிகூடக் கிடையாது. கேட்டால் சிறிய மாவட்டம் அதனால் அரசுக் கல்லூரி அமைக்க முடியாது என்கிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. ஆனால் அங்கு ஏறத்தாழ இருபது தனியார் கல்லூரிகள் இருக்கின்றன. இப்படி வறிய மக்கள் போகக்கூடிய ஒரே இடமான அரசுக் கல்லூரிகள் இல்லாத பட்சத்தில் ஏழைப் பெற்றோர்கள் எந்த நம்பிக்கையில் பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்புவார்கள் ?

மற்றொரு வாதம் தமிழ்வழிக் கல்வியை மக்கள் விரும்புவதில்லை என்பது. இது ஏறத்தாழ உண்மையே. ஆயினும் மக்களை அந்த சூழலுக்கு தள்ளியவர்கள்தான் தமிழ்நாட்டை நாற்பதாண்டுகளாக ஆள்கிறார்கள். இவர்கள்தான் ஆளுக்கொருமுறை தமிழ் மாநாட்டை நடத்தினார்கள் மற்றும் நடத்துகிறார்கள். மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட எந்த ஒரு உயர்கல்வியும் தமிழில் இல்லாததால் மக்கள் எல்லோரும் இயல்பாகவே ஆங்கிலவழிக் கல்விதான் சிறந்தது என்று முடிவெடுக்கவே செய்வார்கள். ஒருவேளை தமிழ் வழியிலேயே தமது பிள்ளைகளை படிக்கவைக்க விரும்புபவர்களுக்கு இங்கு போதுமான பள்ளிகளும் கிடையாது. ஆக ஏழை மக்களாக இருந்தாலும் சரி தமிழ்வழியில் தம் பிள்ளைகளை படிக்கவைக்க விரும்பும் நடுத்தரவர்க மக்களாக இருந்தாலும் சரி அவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாவது உறுதி. இப்படி சிறுகச்சிறுக மக்கள் தமிழ் வழிக் கல்வி மீது அலட்சியத்தை உருவாக்கிய அரசுதான் இப்போது செம்மொழி மாநாட்டை நடத்துகிறது.

இப்போதும் ஆயிரக்கணக்கிலான ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்றன. அதில் மற்ற பாடங்களுக்கு நிரப்பப்படும் அளவுக்கு தமிழாசிரியர்கள் நிரப்பப்படுவதில்லை அல்லது நிரப்பப்படுவதே இல்லை. தமிழை முதன்மைப்பாடமாக இல்லாமல் ஒரு பாடமாக படித்தவர்கள் மட்டுமே தமிழாசிரியர்களாக தற்போது பணியாற்றுகிறார்கள். தமிழ் மொழியை உயர்கல்வியாக படித்த மாணவர்கள் மாநாட்டு அறிவிப்பின்போது மேற்கூறிய காரணத்தைச் சொல்லி தமிழ் மாநாட்டின்போது தற்கொலை செய்துகொள்ளப்போவதாக!! ஒரு போராட்டத்தை அறிவித்தார்கள். அரசும் இதை கண்டுகொள்ளவில்லை, கருணாவின் தமிழுக்கான வாரிசு கனிமொழியும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது ஃபேஷியல் செய்துகொள்ளப் போய்விட்டாரா என்று தெரியவில்லை ஆக தமிழ் வழியில் படிக்கவும் வாய்ப்பு கிடையாது படித்தவனுக்கும் வாய்ப்பு கிடையாது.

இந்தப் பின்புலத்திலிருந்துதான் நாம் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளை அணுகவேண்டும். தமிழ் மொழியை இந்தத் தலைமுறையோடு தலைமுழுக வைக்கும் காரியங்கள் முழுவீச்சில் நடக்கின்றன. பிரந்தியமொழியில் ஒரு வார்த்தைகூட கற்காமல் பட்ட மேற்படிப்புவரை கற்க முடியும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பள்ளிகளில் தமிழ் கட்டாயம் எனும் முந்தைய திமுக அரசின் சட்டம் என்னவானது என்றே தெரியவில்லை. மருத்துவப் பட்ட மேற்படிப்புத் தேர்வை தமிழில் எழுதி படாதபாடுபட்டார் மருத்துவர் ஜெயசேகர், அது எப்படி முடியும் என எள்ளி நகையாடியவர் திமுகவின் அப்போதைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன். இப்போதும் தமிழ் மாநாட்டுப் பணிகள் தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் அறிவிப்புக்களில் பல ஆங்கிலத்தில் இருப்பதாக தினமலரே சொல்கிறது. மாநாடுக்காக துவங்கப்பட்ட வலைதளம் பல மாதங்களாக முன்னேற்றமில்லாமல் இருக்கிறது. இம்மாநாடு ஒரு சதவிகிதம்கூட தமிழுக்காக நடத்தப்படவில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.

எத்தனை சான்றுகளை கொட்டினாலும் இக்கட்டுரை முடியாது. இது கருணாநிதி தனது ஓய்வுக்கு முன்பு சர்வதேச அளவில் நடத்திக்கொள்ள விரும்பும் ஒரு பாராட்டுவிழா முயற்சி. தான் விரும்பியது யாவையும் உடனே கிடைக்கவேண்டும் என்று விரும்பும் பணக்கார இளைஞர்களைப் போல கருணாவும் தன் வாழ்நாள் கனவுகளை தனது ஆட்சிக்குள் அல்லது ஆயுளுக்குள் செய்துகொள்ள விரும்புகிறார். கட்சிக்கு கிடைக்கும் கட்டுமான கமிஷனையும் கோவை வட்டாரத்தில் திமுகவை வலுப்படுத்தும் நோக்கத்தையும் இதில் இணைத்ததில்தான் கருணாநிதியின் சாணக்கியத்தனம் இருக்கிறது. மற்றபடி இது தமிழுக்காக செய்யப்படும் முயற்சி என்றால் அதை திமுககாரன்கூட நம்பமாட்டன். ஆறு மாதத்தில் வீணாகப்போகிற சாலைகளும் ஜுலை மாதத்திலிருந்து கவனிப்பாரில்லாதுபோகும் பூங்காக்களுமே கோவை மக்களுக்கு மிச்சமாகப் போகிறது.

சரி நம் மொழியைக் காக்க என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா ? அது ஒன்றும் அவ்வளவு சிரமமானதில்லை. மொழி எப்போதும் பாமர மக்களால்தான் காப்பாற்றப்படுகிறது. இன்று உலகை ஆள்வதாக சொல்லப்படும் ஆங்கிலம் பேசுவது ஒரு காலத்தில் இங்கிலாந்திலேயே கவுரவக்குறைவாக கருதப்பட்டது. இங்கிலாந்தின் அன்றைய பிரபுக்கள் குடும்பங்களிலும் ஏன் பாராளுமன்றத்திலும்கூட பிரென்சு மொழிதான் பயன்படுத்தப்பட்டது (தேவாலயங்களில் லத்தீன்). நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்ட பிறகுதான் ஆங்கிலமே அங்கு தலையெடுத்தது. கோடிக்கணக்கிலான மக்களுக்கு அன்றாட உணவையே நிச்சயமற்றதாகிவிட்ட சூழ்நிலையில் நாம் நம் மொழி குறித்துமட்டும் கவலைப்பட்டால் அது ஒரு சதவிகிதம்கூட பலன்தராது. இனத்தைப் பற்றி கவலைப்படாமல் மொழியை மட்டும் நேசிப்பது அயோக்கியத்தனம். மொழியை கண்டுகொள்ளாமல் இனத்தைப் பற்றி கவலைப்படுவதாகச் சொல்வது அவ்வாறானதே.

ஏழ்மை, சுரண்டல், சாதிவெறி மற்றும் மொழிப்புறக்கணிப்பு யாவும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதில் ஒன்றை விடுத்து மற்றொன்றை நம்மால் சரி செய்யவே முடியாது. தமிழ் சினிமாவுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு தரும் இழிநிலைக்கு நாட்டை தள்ளிய கருணாநிதியால்தான் மொழியைக் காப்பாற்ற முடியும் என்று இனியும் சுப.வீரபாண்டியன் வகையறாக்கள் சொன்னால், அழுத்தமாக பதில் சொல்லுங்கள் ‘ என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது‘.

______________________________________________
வில்லவன்
புதிய கலாச்சாரம் ஜூலை 2010
______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!!

vote-012“தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய
கருணாநிதி ஸ்ரீமச்சாசனம்
ஊர்வச சிரோபபிஷசேகரி…”

இச்செப்பேடு
செப்புவது யாதெனில்,

“காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!”
என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே
பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு
விடாது கடிதமெழுதியதோடு,

அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து
காலை உணவுக்கும், மதிய உணவுக்கும்
இடைப்பட்ட மணித்துளியில்
அன்ன ஆகாரம் உண்ண மறுத்து,

ஈழத்தமிழர் செத்த பின்பு
போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன்
கருணாநிதிச் சோழனின்
மற்ற கைங்கர்யங்களாவன:

சோழநாடு சோறுடைத்ததைப்
பின்னுக்குத் தள்ளி
ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்!
பகை முடித்தார்!

வண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு,
மனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி,
மகப்பேறு உதவித்தொகை…
எனக் குடிதானம் ஏராளம்.
மக்களைத் தானாக வாழவிடாமல்
தடுத்தாண்ட சிறப்பிவைகள்.
மற்றபடி,
இடைத்தேர்தல் எதிர்ப்பட்டால்
வாக்காள பெருங்குடிக்கு
பொன்முடிப்பு தாராளம்!

காணியுடையோராய் இருந்த
தொல்குடிகள் நீக்கி,
காடு, மலை, நதியென
அந்நியப் பன்னாட்டுக் கம்பெனி
வேண்டுவன தட்டாமல் வழங்கும்
தகைமையில் விஞ்சுவாரின்றி
கருணையும், நிதியும் ஒன்றாய் ஆனார்!

யாதும் ஊரே; யாவரும் கேளிர்
ஹூண்டாயும், ஃபோர்டும் நம் உடன்பிறப்பே,
எனப் பன்னாட்டு உறவில் புது எல்லை கண்டான்!
அண்ணலும் ‘நோக்கியா’ அவளும் ‘நோக்கியா’
என கம்பநாட்டாழ்வரையே கற்பனையில் விஞ்சி
திருப்பெரம்புதூரில் தென்கொரியாவையே கொண்டான்!

அறக்கொடைகள் அம்மட்டோ!

வேளாண்வகை ஏரிகள் மாற்றி
பெப்சி, கோக்குக்கு சதுர்வேதி மங்களங்கள்!

திருவண்ணாமலை வேடியப்பன் மலையை எடுத்து
‘ஜிண்டால்’ கம்பெனிக்கு தேவதானம்!

சிறுவணிகத்தை மடைமாற்றி
ரிலையன்சு டாட்டாவுக்கு இறையிலி.

பாலியல் கொலைகாரன் காஞ்சி சங்கரனுக்கு
சட்டமும் போலீசும் பிரம்மதேயம்…
அண்டி நிற்கும் வீரமணிக்கும்
அவ்வப்போது அறச்சாலாபோகம்!

இத்தனை ஆட்சிக்குப் பிறகும்
எஞ்சியிருக்கும் தமிழ்க்குடிக்கு
தனது வீட்டையே தானம் கொடுத்தார்!
இன்னும் கொடுப்பதற்காய்
தமிழ்நாட்டையே எடுத்துக் கொண்டார்!

சாதனைகள் சொல்ல
செப்பேடு போதாது…!

காவிரிக்கு குறுக்கேதான்
கல்லணை அமைத்தான் கரிகாலன்..
காவிர, முல்லைப்பெரியாறு இரண்டிலுமே
நீதிமன்றத்திலேயே அணையைக்கட்டி
பிரச்சினை நிரம்பி வழியாமல்
பார்த்துக் கொண்டவர் கருணாநிதி!

பாடிச் சொரிந்த புலவர்க்கு மட்டும்
மதுவை ஊற்றிக் கொடுத்தனர்
பழைய வேந்தர்கள்,
வாடிக்கிடக்கும் தமிழரையே
டாஸ்மாக்கால் ஈரப்படுத்தி
‘குடி’மகன்களை பாடவைத்துத்
தமிழ் வளர்த்தவர் தானைத் தலைவர்!

ஊனாடும்
ரோமாபுரி அடிமைப் பெண்களை
அந்தப்புரத்தில் ஆடவைத்து
தான்மட்டும் கண்டுகளித்தனர்
பழைய மன்னர்கள்

‘மானாட மயிலாட’ என
மற்றவரையும் பார்க்க வைக்கும்
தமிழினத் தலைவரின் பரந்த உள்ளத்தை
கலைஞர் தொலைக்காட்சி பறைசாற்றும்!
மழலையர் உதடுகளில் ஆங்கிலம் வளர்த்து
பெயர்ப்பலகையில் மட்டும் தமிழ் வளர்க்கும்
தந்திரம் முன்
பராந்தகச் சோழனே பயந்து போவான்!

‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ எனப் புலம்பி
ஊரறிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போட்டுவிட்டு
சத்தம் போடாமல் உச்சநீதிமன்றத்தில்
பார்ப்பன மனுநீதிக்கு பங்கம் வராமல் பாதுகாக்க
அந்த முள்ளை எடுத்தே வேலிகட்டும்
இரண்டகத் திறமையில்
பார்ப்பன குலமே மயக்கமுறும்!

இயற்றமிழ் அழகிரி
இசைத்தமிழ் கனிமொழி
நாடகத்தமிழ் தளபதி
என முத்தமிழையும் வளர்த்து
தமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்க
முயலும் திறமை முடியுமோ யாராலும்?

பிறப்பொக்கும் இவர் பேரன், பேத்தி
வாரிசு வரைக்கும்
மதுரை தினகரன் அலுவலகத்தில்
கொலையான ஊழியர்கள்
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகள்!
இருப்பினும் வாழும் வள்ளுவர்…

திருவள்ளுவர் அதிகாரங்களுக்கு மட்டுமல்ல,
அழகிரியின் அதிகாரத்திற்கும்
உரையெழுதும் திறமுடையார்!

இலக்கியக் கவர்ச்சிக்கு கண்ணகி
அரசியல் கவர்ச்சிக்கு குஷ்பு
அகமும், புறமும், மணிமேகலை,
சிலப்பதிகாரம், குண்டலகேசியுடன்
‘சின்னத்தம்பி படத்தையும்’ சேர்த்து
தமிழ்ப்பெருமை உருவாக்க தயங்காதார்!

வழிபாட்டுக் கருவறையில்
தமிழன் நுழைய முடியவில்லை..
வழக்காடு மன்றத்தில்
தமிழ் நுழைய முடியவில்லை..
என்னடா இது வீண் இரைச்சல்
என்று சாலையைப் பார்த்தால்…

கூஜாக்கள் குலுங்க…
ஜால்ராக்கள் சிணுங்க…
கோடம்பாக்கத்து காக்கைகள்
குறிபார்த்துக் கரைய…
பல்கலை நரிகள் பாசாங்கு முழங்க…
கரைவேட்டி முதலைகள்
மத்தளம் கொட்ட
வயிற்றெரிச்சலோடு
கொடநாட்டு மதயானை பிளிற…
களைகட்டுகிறது கருணாநிதிச் சோழரின்
கோவையலங்காரம்…

பேச்சு மறுக்கப்பட்ட
கோவை சிறுதொழில் உதடுகளில்
அறுந்து கிடக்கும்
ஓசையற்ற கைத்தறியில்
இறந்து கிடக்குது நம் தாய்மொழி…

தமிழகத்தை உய்ப்பிக்க
உழைக்கும் மக்களிடமிருந்து
உருவாக வேண்டும் ஒரு செம்மொழி…

______________________________________________
– துரை. சண்முகம்
______________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

கனடாவில் “ஈழத்தின் நினைவுகள்” – இறுதிப்பாகம் – ரதி

41

vote-012வசதி படைத்தவர்கள் போராடினால் அது போராட்டம். ஏழைகளின் போராட்டம் பயங்கரவாதம். இப்படித்தான் கனடிய பத்திரிகை ஒன்று கடந்தவருடம் ஈழப்போர் வேரறுக்கப்பட்ட காலத்தில் ஒரு தடவை எழுதியது. ஏழை ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் பயங்கரவாதமாக்கப்பட்டு, ஐம்பதாயிரம் உயிர்கள் காவு வாங்கப்பட்டு  ஓராண்டு உருண்டோடிவிட்டது. எங்கள் விடயத்தில் உலகத்தின் அறம் பிறழ்ந்து, எங்களுக்கு மட்டும் நீதி பிழைக்கவில்லை. இன்னும் இலங்கையில் எங்களுக்கு உயிர்வாழும் உரிமையும் கிடைக்கவில்லை.

மழை நின்றும் விடாத தூவானமாய் அரசபயங்கரவாதத்திற்கும் எந்த குறையும் இல்லை. ஈழத்தின் மண், பெண், பொருள் எல்லாம் சிங்களப் பேரினவாதத்தின் சொத்தாகிப்போனது. அவன் நினைத்தபடி சூறையாடலாம். கேள்வி கேட்க யாருமில்லா பூமியாகிப்போனது இன்று ஈழம். எங்கள் மண் இப்போது சிங்களர்களுக்கு சுற்றுலா மையம். எங்களின் அவலங்கள் அருங்காட்சிப்பொருள். ஈழத்தின், தமிழனின் பூர்வீக அடையாளங்கள் சிதைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, எங்களின் வளங்களைச் சுரண்ட முதலீட்டாளர்களுக்கு வியாபாரத்தின் வாசல் கதவுகள் அகலத் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.

இப்போதும் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் செய்தி பதின்மவயதுப்பெண் காணாமற்போனார், இளைஞர் சடலமாக மீட்பு, கேள்விமுறையற்ற சமூக சீர்கேடுகள். காணவும், கேட்கவும் சகிக்காத இந்த அவலங்கள் தான் இந்த பூலோகத்தின் பிதாமகர்களாக தங்களை பிரச்சாரப்படுத்தியவர்கள் ஈழத்தில் “பயங்கரவாதத்தை” அழித்த கதையின் விளைவு மற்றும் கிளைக்கதை. இந்த கிளைக்கதைகளின் முடிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்துதானே உலகத்து வீதிகளிலெல்லாம் இறங்கி ஈழத்தமிழன் போராடினான்.

ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை தடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், கனடா சர்வதேச சமூகமாக அதிலிருந்து தவறிவிட்டது என்று காலம் கடந்து மன்னிப்பு கேட்கிறது. ஐ. நாவும் அதை ஆஹா, ஓஹோ என்று பாராட்டுகிறது. ஈழத்தமிழனின் அழிவை சர்வதேசம் “இன அழிப்பு” என்று ஒத்துக்கொள்ளுமா என்பது ஒருபுறமிருக்கட்டும். இவ்வாறு, காலம் கடந்து எங்களிடம் மன்னிப்பு கேட்காதீர்கள் என்றுதான் கடந்தவருடம் இந்தப் பிதாமகர்களின் மனட்சாட்சியின் கதவுகளைத் தட்டினோம், திறக்கவில்லை. மனிதாபிமானத்தின் வாசலாவது திறக்கும் என்று வீதி, வீதியாய் விழுந்து கிடந்து அழுது புரண்டோம். மனிதம் செத்து சவமாகிவிட்டது, ஆதலால் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தங்கள் செய்கைகளில் காட்டினார்கள்.

நாங்களும் விடாப்பிடியாக எங்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை ஓயப்போவதில்லை என்று இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறோம். புலத்தில் தமிழன் அடங்கவே மாட்டான் என்று பலருடைய குடைச்சலுக்கும் எரிச்சலுக்கும் வேறு காரணமாக இருக்கிறோம். உலகம் முழுக்க சிதறிக்கிடந்த தமிழர்களை ஈழம் என்ற ஒற்றைச் சொல் இன்று ஒன்றாய் இணைத்திருக்கிறது. ஈழத்தமிழர்கள் தங்களுக்குள் ஒருகாலத்தில் ஏதேதோ காரணங்களினால் பிளவுபட்டிருந்தாலும் இன்று இனம் என்ற ரீதியில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். நாங்கள் எப்படி ஒன்று பட்டோம் என்பதை என் பார்வையில் திரும்பிப் பார்க்கிறேன்.

ஈழத்திலிருந்து தமிழர்கள் தங்கள் சாதிய விழுமியங்களையும் கொஞ்சம் கட்டிக், காவிக்கொண்டுதான் கனடா வந்தார்கள். புலம்பெயர் தேசங்களிலும் ஈழத்தமிழர்கள் சாதிய வேற்றுமைகளோடும் முரண்பாடுகளோடும் மல்லுக்கட்டியவர்கள் தான். இப்படிப்பட்டவர்கள் கனடாவில் எப்படி ஒற்றுமையாய் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு வந்தார்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். தம் இனம் அழிக்கப்படுவது கண்டும் கூட ஒன்று சேரவில்லை என்றால் எப்படி?

கனடாவில் சாதிய வேற்றுமைகள் தனிமனித முரண்பாட்டுக் கோலங்களாய் சிதறிக்கிடந்தது என்னவோ உண்மை தான். ஆனால் அது சமூக பண்பாட்டு உறவுகளில் விரிசல்களை கடந்தகாலத்தில் உண்டாக்கியது  என்று சொல்லுமளவிற்கு இல்லை என்பது தான் யதார்த்தம். ஆனாலும் ஈழத்தில் ஆரம்ப காலத்திலிருந்ததைப் போல் புலம் பெயர் தேசங்களில் சாதியின் பெயரால் யாருடைய முன்னேற்றமும் தடைப்பட்டதை நான் அறியவில்லை.

ஈழத்தின் பால் அக்கறை கொண்டவர்கள் இந்த வேற்றுமைகளை கடந்துதான் தங்கள் அர்ப்பணிப்புகளை இன்றுவரை செய்துகொண்டிருக்கிறார்கள். முந்தைய தலைமுறையைச் சேர்ந்த கொஞ்சம் அழுகிப்போன ஆப்பிள்கள் எப்போதும் போல் இன்னமும் அழுகிக்கொண்டுதானிருக்கின்றன. இவ்வளவு அழிவுகளுக்குப் பிறகும் நாம் சாதியால் பிளவுண்டு கிடந்தால், இந்த இனம் எப்போது தான் மீள்வது!! பிரிவுக்கு வேண்டுமானால் பிறர் காரணமாகலாம். ஈழத்தமிழர்களின் ஒற்றுமை என்பது அடுத்தவர் அறிவுரை கூற வருவதாய் கேலிப்பொருளாய்  இருக்கக்கூடாது என்பதுதான் என் கருத்து. அதை ஈழத்தமிழர்கள் எப்போதோ உணர்ந்தும் விட்டார்கள்.

எங்கள் புதிய தலைமுறை சாதிபேதம் அற்ற ஓர் சமுதாயத்தின் முன்னோடியாய் இருக்கிறது என்பதில் ஓர் ஈழத்தமிழாய் நான் பெருமைப்படுகிறேன். ஆம், எங்களிடம் சாதிபேதம் என்ற வேற்றுமைகள், முரண்பாடுகள் இருந்தது என்பதை ஒத்துக்கொள்கிறோம். ஆனால் கடந்தகால முரண்பாட்டு மூட்டைகளை அவிழ்த்துப்போட்டு ஆராய்ச்சி செய்வதில் இனிமேல் பயன் ஒன்றும் இல்லை. தயவு செய்து யாராவது பழங்கதை பேசி எங்கள் நிகழ்கால ஒற்றுமையை குலைக்காதீர்கள்.

ஆரம்பகாலங்களில் தமிழர் அமைப்புகள் என்பது பெரும்பாலும் ஊர்ச்சங்கங்கள் மற்றும் ஒன்றிரண்டு சமூக அமைப்புகள் (Social Movements) இப்படித்தான் இருந்தன. “பொங்குதமிழ்” என்ற நிகழ்வுதான் ஆரம்பத்தில் தமிழர்களை புலத்தில் ஒற்றுமையாய் சேரவைத்தது. எங்கள் உரிமைப்போரை வேரறுக்கும் முஸ்தீபு நடவடிக்கைகள் புலத்தில் இலங்கை அரசால் முடுக்கி விடப்பட்டபோது தமிழர்களால் தங்கள் ஒருமைப்பாட்டையும், ஈழவிடுதலையையும் வலியுறுத்தி எத்தனையோ தடைகளையும், ஒடுக்குமுறைகளையும் கடந்து நடத்தப்பட்ட நிகழ்வுதான் அது.

நாங்கள் என்ன தான் ஆயிரமாயிரமாய் கூடி எங்கள் அபிலாஷைகளை இவர்களுக்கு சொல்ல முயன்றாலும் எங்களின் செய்திகளுக்கு எந்தவொரு கனேடிய ஊடகமும் முக்கியத்துவம்  கொடுப்பதில்லை.  பயங்கரவாதத்திற்கு எதிரான என்ற போர்வையில் நாங்கள் ஈழத்தில் இறந்தர்வர்க்காய் வருடம் ஒருமுறை கூடியழக்கூட ஓர் மண்டபமேனும் கனடாவில் தரமறுத்தபோது ஜனநாயகம் இங்கேயும் ஏன் எங்களை மட்டும் புறக்கணிக்கிறது என்று வேதனையும், அயர்ச்சியுமே மிஞ்சியது.

அதன் பிறகு சின்ன, சின்னதாய் அறவழிப்போராட்டங்கள், சில அரசியல் முன்னெடுப்புகள் என்பன புலத்தில் நடந்தேறின. ஆனால், புலத்தில் Mainstream Media என்று சொல்லப்படுகிற தேசிய ஊடங்கங்களில் எங்கள் சமூக அமைப்புகளின் செயற்பாடுகள் செய்திகளில் புறக்கணிக்கப்பட்ட அரசியல் அப்போது ஏனோ புரியாமல் போனது. மாற்றங்கள் குறித்த எந்தவொரு சமூக அமைப்பின் முயற்சிகளும், போராட்டங்களும் பிரபல ஊடகங்களின் மூலம் தெரியவந்தால் அன்றி அந்த அமைப்புகளின் குறிக்கோள்கள் பொதுமக்களை அல்லது அதற்குரிய அரசியல் களங்களை சென்றடையாது என்பது தான் யதார்த்தமான உண்மை.

சிங்கள அரசு திரைமறைவில் அரசியல் ராஜதந்திர முயற்சிகளில் எங்களை முடக்கும் முயற்சிகளில் முனைப்பாய் இருக்க புலத்தில் எங்களின் அரசியல் வெளி முற்றுமுழுதாய் அடைக்கப்பட்டது. இலங்கையின் தலைநகரில் குண்டுவெடித்தால் பலகோணங்களில் படம்பிடித்து காட்டிய ஊடகங்கள், வடக்கு, கிழக்கில் தசாப்தங்களாய் அரச படைகள் நடத்தும் படுகொலைகளை அறியாமல் இருந்தார்களா என்று என் மனதில் கேள்வி எழாமல் இல்லை.

இப்படியே தமிழ் இணையத்தில், தமிழ் ஊடகங்கள் மூலம் மட்டுமே தாயக செய்திகளை அறியமுடிந்தது. ஈழத்திலிருந்து யாராவது தொலை பேசினால் எதைத் தான் பேசமுடியும். எல்லாம் உங்களுக்கு தெரியும் தானே என்று தங்கள் சொல்லமுடியாத அவலத்தை ஒற்றைவரியில் அடக்குவார்கள். ஈழத்தில் நிலைமைகள் மேசமடைந்து வன்னியில் அது உக்கிரமடையும் போது தான் ஈழத்தமிழர்கள் தாங்களாகவே வீதியில் இறங்கி போராடத்தொடங்கினார்கள். இந்தப் போராட்டங்களில் ஊர்ச்சங்கங்கள், சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் எல்லோரும் காலத்தின் தேவை கருதி ஒன்றாய் நின்றார்கள்.

ஆனாலும், இவர்களையெல்லாம் முன்னின்று ஒன்றிணைத்து தமிழ் சமூகத்தை மட்டுமல்ல கனடிய சமூகத்தையே வியப்பில் ஆழ்த்தியவர்கள் எங்கள் இளையவர்கள். எங்கே, எதை, எப்படி செய்யவேண்டும் என்று அரசியல் கலந்து விளக்கமாய் சொல்லிகொடுத்தார்கள். இவர்களுக்கு பக்கபலமாய் போருக்கெதிரான அமைப்புகள், கல்விமான்கள், இங்குள்ள தொழிற்சங்கங்கள் , பல்கலைக்கழக மாணவர், இவர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்த தமிழ் ஊடகங்கள் மற்றும் பொருளாதார ரீதியில் உதவியளித்த தனியார் வியாபார நிறுவனங்கள் என்று எல்லோரும் உறுதுணையாய் நின்றார்கள்.

ஏற்கனவே தமிழன் மீது திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட தடைகளால் பயந்து கிடந்தவர்களுக்கு கனடாவின் உரிமைகள், சுதந்திரத்துக்கான சாசனத்தின் படி, “சிந்தனை, நம்பிக்கை, கருத்துரை, பத்திரிக்கை சுதந்திரம், பேச்சு சுதந்திரம், அமைதி நிலையில் ஒன்று கூடுதலுக்கான சுதந்திரம்” என்பதன் அடிப்படையில் வீதியில் இறங்கி போராடும் உரிமை உண்டு என்று புரிய வைத்தார்கள். இது எங்கள் சொந்த மண்ணல்ல. இங்கே எப்படி போராட முடியும் என்று தயங்கிய தமிழ் சமூகத்தை மிக குறுகிய காலத்தில் அரசியல் மயப்படுத்தினார்கள் எம் இளைய தலைமுறையினர்.

ஊர்வலங்கள், அமெரிக்க, இலங்கை, இந்திய, சீன தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல், மனிதச்சங்கிலி இப்படித்தான் போராட்ட வடிவங்கள் இருந்தன. Acting Crowd என்ற கருத்தியல் காட்சியாய் கண் முன்  விரிவதை தமிழ் சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். அதன் உண்மையான வடிவத்தை சில பல்கலைக்கழக மாணவர்கள் கனடாவிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு சென்று ஈழத்தமிழர்களை கொல்வதை நிறுத்தும்படி வேண்டுகோள்  விடுத்தபோதுதான் நேரடியாக கண்டுகொண்டேன். “நீங்கள் தானே கனடாவில் எங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்கிறீர்கள். அதனால் உங்களிடம் ஓர் வேண்டுகோளை முன்வைக்க வந்திருக்கிறோம்” என்று சொன்ன சில பல்கலைக்கழக மாணவர்களை அவர்கள் தமிழர்கள் என்பதால் “பயங்கரவாதிகள்” என்று முத்திரை குத்தி இலங்கை தூதரக அதிகாரிகள் கனடிய காவல் துறையை வேறு துணைக்கழைத்தார்கள்.

எப்போதுமே பரபரப்பு செய்திகளுக்கு அலையும் கனடிய ஊடகங்கள் பரிவாரங்களோடு வந்து அதை வானலையில் எடுத்துவந்து உதவினார்கள். மாணவர்கள் வரம்பு மீறுவார்கள்; அதை அப்படியே நேரலையில் ஒளிபரப்பி ஓர் பரபரப்பு செய்தி காட்டலாம் என்று காத்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது வேறுவிடயம். அது அப்படியே தமிழ் ஊடகங்கள் மூலமாக தமிழ் பொதுமக்களையும் சென்றடைந்தது. யாருடைய தூண்டுதலோ அல்லது வழிநடத்தலோ இல்லாமலே அங்கிருந்த மாணவர்களுக்கு ஏதாவது நடக்கக்கூடாது என்ற பதைப்புடனும், அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்துடனும் தமிழர்கள் Toronto விலுள்ள இலங்கை தூதரகம் முன் ஒன்றாய் கூடி கோசங்களை எழுப்பத்தொடங்கினர்.

இந்த நிகழ்வு மேலும் புலத்தில் தமிழர்களுக்கு வீதியில் இறங்கி போராடும் தைரியத்தை கொடுத்தது. முக்கியமான ஊர்வலம் என்றால் தமிழர்கள் அதிகம் வாழும் Ontario மாகாணத்தில் இதயப்பகுதி என்றழைக்கப்படுகிற Toronto வின் முக்கியமான தெருக்களில் நடந்ததை தான் குறிப்பிடவேண்டும். ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள். அடுத்து அமெரிக்க துணை தூதரகத்தின் முன் இரவு பகலாய், பனியையும் மழையையும், குளிரையும் கொஞ்சமேனும் பொருட்படுத்தாமல் மாதக்கணக்கில் நடந்த ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல். இவையெல்லாம் கனடிய ஊடகங்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பியது.

அதுவரை ஈழத்தமிழர் பிரச்சனையைப் பற்றி பேசாத கனடிய ஊடகங்கள், ஈழப்பிரச்சனையில் இலங்கை அரசு சொல்வதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான தமிழர்களுக்கென்று ஓர் கருத்து உண்டு என்பதை புரிந்து கொள்ளத்தொடங்கினார்கள். Live, நேரடி, ஒளி, ஒலிபரப்பில் எம்மவர்களையும், சமூக அமைப்பை சேர்ந்த தலைவர்களையும் பேசவைத்து எங்கள் கருத்துகளை கனடிய சமூகத்தினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் எட்டச் செய்தார்கள். ஈழத்தமிழர்கள் பிரச்சனை ஓரளவிற்கு கனடிய அரசுக்கு தெரிந்தாலும் Mainstream Media மூலம் அது வெளியே சொல்லப்படவில்லை என்றால் அரசியல்வாதிகளும், அரசுகளும் வாழாதிருப்பார்கள்.

கனடிய ஊடகங்கள் எங்கள் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தொடங்க எம்மவர்களும் இன்னும் அதிகமாக போராட்டங்களில் கலந்துகொள்ளத்தொடங்கினார்கள். சமூக அமைப்புகளோடு சேர்ந்து ஒட்டுமொத்த சமூகமாய் ஒன்றாய் நின்று முயற்சி செய்தபோது அதற்குரிய பலம், அங்கீகாரம் இரண்டுமே கிட்டியது.

ஈழத்தில் போர்நிறுத்தம் வரும்வரையில் ஓய்வதில்லை என்ற உறுதியுடன் ஊர்வலங்கள் போனோம், உண்ணாவிரதமிருந்தோம், ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்தோம். தமிழர்கள் வாழ்ந்த ஒவ்வோர் மாகாணத்திலும் (Quebec-Montreal, British Columbia-Vancouver, Ontario-Metro Toronto) நகர்களிலும் தங்கள் முதுமை, மூட்டுவலி என்று எதையும் பொருட்படுத்தாது முதியோரும், மகளிர் அமைப்புகளும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்தினோம். கனடிய அரசைப்பொறுத்தவரை எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்காய் ஆனது.

இனிமேல் பொறுப்பதற்கு காலம் இல்லை என்று சில மாணவர்கள் கனடிய பாராளுமன்றத்தின் முன் வாரங்களாய் தாங்கள் வாக்களித்து, தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய ஒருவராவது வந்து எங்கள் மனிதாபிமானக் கோரிக்கைகளை செவிமடுப்பார்கள் என்று இரவு பகலாய் எலும்பையும் துளைக்கும் குளிரில் விறைத்து கொண்டே காத்துக்கிடந்தார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். நாங்களும் எங்களால் முடிந்தவரை முப்பதாயிரம் பேர் வரை நாடாளுமன்றத்தின் முன் கூடி, கோஷமிட்டு, அழுது மண்டியிட்டு எங்கள் உறவுகளுக்காய் உயிர் பிச்சை கேட்டோம்.

பாராளுமன்றத்தை விடுமுறைக்காய் மூடும் கடைசி நாளில் நாங்கள் மழையிலும் குளிரிலும் வெளியே நம்பிக்கையின் கடைசி இழையும் அறுந்து போகும் தறுவாயில் உயிர் பதைத்துக் காத்துக்கிடந்தோம். எங்கள் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துங்கள் என்று நாங்கள் பாராளுமன்ற வாசலில் நின்ற அதேநேரம், சில அரசியல் வாதிகள்  Holocaust Survivors என்றழைக்கப்படும் யூத இன முதியோர்களை கைப்பிடித்து அழைத்து வந்து மேடையேற்றி யூத இனத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை, அதிலிருந்து தப்பிழைத்தவர்களின் கதைகளை உணர்வுபூர்வமாக, உருக்கமாக கேட்டுக்கொண்டிருந்ததை பிறகு தொலைக்காட்சியில் பார்க்க நேரிட்ட போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே பயந்து (அழுதுவிடுவோம் என்ற பயம் தான்) கல்லாய் சமைந்தோம்.

இவற்றையெல்லாம் விட எரிச்சலான விடயம் கனடிய பாரளுமன்றத்தில் எங்களுக்காய் ஓர் சிறப்பு விவாதமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர்கள் (Visible Minority களுக்கான சிறப்பு விவாதம். வழக்கம் போல் எங்கள் கனடிய பிரதமர் கலந்துகொள்ளவில்லை என்பதை வருத்தம் ஏதுமின்றி பதிந்துகொள்கிறேன்) மூச்சைப்பிடித்து, இரவை நீட்டித்து   எங்களுக்காய்  விவாதம் செய்து “இலங்கை” அரசுக்கு ஒரு மில்லியன் டாலர்களை கொடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதில் ஒற்றை காசாவது தமிழனுக்கு போய் சேருமா என்பது ஒருபுறமிருக்கட்டும். ஈழத்தில் வன்னி காடுகளில் செத்துக்கொண்டிருக்கும் தமிழனுக்காய், அவன் பெற்ற குழந்தைகளுக்காய் நாங்கள் போர் நிறுத்தம் வேண்டி நிற்க தமிழகத்திலிருந்து சட்டி பானையும், புடவை துணியும் அனுப்பிய கதைக்கும் இதற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?

பூமிப்பந்தின் எந்தவொரு நாடாயினும் அரசியலின் இயங்குவிதி எப்போதுமே ஒன்றுதான் போலும். நாடாளுமன்றத்தின் கதவுகள் மூடப்பட, அடித்துப்பிடித்து, முண்டியடித்து மாகாண சபை மன்றத்தின் முன் கூடினோம் (Ontario, Queen’s Park). அங்கேயும் அழுதோம், ஒப்பாரி வைத்தோம், கோஷமிட்டோம், எங்கள் முன் தோன்றி ஓரிரு வார்த்தைகள் பேசிய குட்டி அரசியல் வாதிகளுக்கு வானைப்பிளக்கும் அளவிற்கு கை தட்டினோம். அவர்களும் இந்த அப்பாவிகள் எப்படியும் அடுத்த தேர்தலில் எனக்கே வாக்களிக்கும் அளவிற்கு பேசியிருக்கிறேன் என்ற திருப்தியோடு எங்களிடம் தமிழில் “நன்றி, வணக்கம்” சொல்லி விடை பெற்றார்கள்.

இவை தவிர ஒருமுறை Ontario, Toronto வில் அமெரிக்க துணைத்தூதரகத்திற்கு முன் கூடி நின்ற தமிழர்கள் ஊர்வலம் போகிறோம் என்று ஓர் இரவு அகால வேளையில் பெருந்தெரு (Gardner Express Way) ஒன்றை உயிரை கூட துச்சமாக மதித்து வழிமறித்தார்கள். உற்பத்திக்கான பொருட்களை சேவைகளை காவிச் செல்வதில் Ontario வில் இந்த பெருந்தெருக்கள் (Highway) மிக முக்கியமானவை. கனடிய சட்ட திட்டங்களின் படி பார்த்தால் பெருந்தெருவை வழிமறிப்பது என்பது எல்லை மீறும் செயல் தான். பொது மக்களுக்கு அசெளகர்யங்களை உண்டாக்கும் செயல் தான். என்னதான் ஈழத்தின் உறவுகள் படும் துன்பம் எங்களை வதைத்தாலும் யாருமே இங்கு வன்முறையில் ஈடுபடவில்லை என்பதும் மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. அவர்கள் செய்ததது சரியா, பிழையா என்று இன்றுவரை என்னால் ஓர் முடிவுக்கு வர முடியவில்லை.

அன்றிரவு வேலைத்தளத்தில் இருந்ததனால் நான் பங்குபற்றவில்லை. ஆனால் அன்றிருந்த மனோ நிலையில் ஊர்வலத்தில் நானும் இருந்திருந்தால் நிச்சயம் அவர்களில் ஒருவாராகியிருப்பேன் என்று தான் தோன்றுகிறது. அன்று அரசு இயந்திரம் நினைத்திருந்தால் எம்மவர்களை அற்ப பதர்களாய் காவல் துறையை கொண்டு எத்தனையோ வழிகளில் அங்கிருந்து துரத்தியடித்திருக்க முடியும். ஏன், கைது செய்து சட்டப்படி நடவடிக்கை கூட எடுத்திருக்கலாம். அப்படி ஏன் செய்யவில்லை என்பதற்கு எனக்கு தெரிந்த ஒரே காரணம் அந்த நேரங் கெட்ட நேரத்தில் சின்னஞ்சிறு குழந்தைகளுடன் பல பெண்களும் அங்கு நின்றதது தான்.

அதை தொலைக்காட்சியில் பார்த்த போது உண்மையில் கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். எங்கள் குடும்ப நண்பர்களில் ஒரு பெண் தனது ஆறே, ஆறு மாத குழந்தையுடன் அங்கு சென்று வந்த அனுபவத்தை பின்னர் எனக்கு சொன்னார். அன்று எங்களைப் பற்றி அநேகமான கனேடியர்கள் வாயிலிருந்து உதித்த வார்த்தைள், “They are crazy” என்பது தான். நிச்சயமாக யாரும் சட்டத்தை மதிக்காமல் இதை செய்யவில்லை என்பது தான் எனது கருத்து. இதையெல்லாம் Collective Behavior, Moral Panic என்று யாராவது விமர்சிக்கலாம். ஆனால், எங்கள் மீதான இந்த கருத்தியல் விமர்சனங்களைத் தாண்டி நாங்கள்  வேண்டியதெல்லாம் ஈழத்தில் இனப்படுகொலை தடுத்து நிறுத்தப்படவேண்டும், நிரந்தர போர்நிறுத்தம் செய்ய கனடா முயல வேண்டும் என்பது தான்.

இந்த ஒரு விடயத்தில் அன்று எங்கள் மனோநிலையை புரிந்து கொண்டு எங்கள் மீது கடும் நடவடிக்கை ஏதும் எடுக்காத கனடாவுக்கு என் நன்றிகள். அடுத்து, எந்தவொரு விடயத்திலும் சமூகத்தில் ஓர் பிரக்ஞையை, விழிப்புணர்வை உருவாக்க வேண்டுமானால் சில பிரபலங்களின் புகழும் திறமையும் கூட பயன்படுத்தப்படுவதுண்டு. எங்கள் புலம் பெயர் ஈழத் தமிழ் சமூகத்தில் சர்வதேச ரீதியில் புகழ் பெற்றவர்கள் என்று யாரும் எங்களுக்காய் குரல் கொடுக்குமளவிற்கு பிரபல்யம் அடைந்திருக்கவில்லை. ஆனால் ஓரளவிற்கேனும் இசை மூலம் அறியப்பட்டவர் என்ற ரீதியில் M.I.A, என்றழைக்கப்படுகிற மாயா அருட்பிரகாசம் என்பவர் தான் பிரித்தானிய, அமெரிக்க, கனேடிய தொலைக்காட்சிகள் மூலம் மறுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உரிமைகள் பற்றி பேசினார். இதற்காக அவர் தேவைக்கதிகமாகவே விமர்சனங்களுக்குள்ளானது வேறு விடயம்.

சோமாலியாவுக்கு ஓர் K’naan என்றால், ஈழத்திற்கு ஓர் M.I.A, மாயா. இசையில் புயலாய், சூறாவளியாய், தென்றலாய் என்றெல்லாம் அடைமொழி கொண்டவர்கள் அல்ல இவர்கள். ஆனால், தாம் சார்ந்த மக்களின் வலிகளை இசைமூலம் யாதார்த்தமாய் உலகிற்கு உணர்த்த முயலும் சாதாரணர்கள். இன்னும் புலத்தில் அவர்களின் திறமைகள் இனங்காணப்படாமல் எத்தனையோ இளைய தலைமுறையினர் எங்களின் வலிகளை பாடல்களாய் இசை மூலம் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இறுதியாக புலம்பெயர் மண்ணில் இந்த போராட்டங்கள் அதன் விளைவுகள் பற்றிய இங்குள்ள மக்களின் கருத்துகள், நிலைப்பாடுகள் பற்றி சுருக்கமாக பதிந்து கொள்கிறேன். கனடியர்களில் ஒரு சாராரின் நிலைப்பாடு, உங்களுக்கு இந்த மண்ணில் அடைக்கலம் தந்திருக்கிறோம். உங்கள் பிரச்சனைகளை இங்கே கொண்டுவராதீர்கள் என்பதாகத்தான் இருந்தது. அவர்களின் கருத்தை முற்றுமுழுதாக மறுதலிக்க முடியாது தான். இங்குள்ள பெருந்தெருவை மறித்த போது இருவர் சொன்ன கருத்துக்களை இங்குள்ள ஊடகம் ஒன்று திருப்பி, திருப்பி ஒளிபரப்பியது. ஒருவர் சொன்னது, நான் மேலே சொன்னது தான். உங்கள் பிரச்சனைகளை இங்கே கொண்டு வராதீர்கள். அமைதியாய் இருக்கும் கனடாவில் பிரச்சனைகளை உண்டு பண்ணாதீர்கள்.

அமெரிக்காவின் வாலைப்பிடித்துக்கொண்டு இவர்கள் எந்தப்பிரச்சனையையும் கனடாவுக்குள் கொண்டுவருவதில்லை. எல்லாத்தையும் நாங்கள் தான் கொண்டுவருகிறோமா? என்னவோ போங்கள்!! இரண்டாமவர் சொன்னது அவர்களின் பிரச்சனையும், மனோ நிலையும் புரிந்துகொள்ளப்படவேண்டியவை. ஒரு முறை ஓர் ஊர்வலத்தின் போது நான்கு பாலஸ்தீனிய மாணவர்கள் எங்களிடம் வந்து சொன்னது, “We support you guys”. ஊர்வலங்கள், ஒன்றுகூடல்களின் போது நான் பொதுவாக கவனித்தது கறுப்பின மக்கள் தங்கள் ஆதரவை எங்களுக்கு தெரிவித்துப் போனது தான். “இப்போது வீதிகளில் நீங்கள் இவர்களுக்கு ஓர் இடைஞ்சலாய் இருக்கலாம். ஆனால், வரலாறு நிச்சயம் உங்களை ஓர் நாள் திரும்பிப்பார்க்கும்” என்று எங்களை கடந்து போன ஓர் கறுப்பின மூதாட்டி சொல்லிப்போனார்.

இவர்களுக்கு நாங்கள் அதிகமாய் உண்டு பண்ணிய இடைஞ்சல் என்னவென்பதை ஒரு ஆங்கில தொலைக்காட்சி நிருபர் அழகாகவும், சற்றே நக்கல் கலந்த தொனியுடனும் சொன்னார். இந்த ஊர்வலங்கள், ஒன்று கூடல்கள் கனடியர்களுக்கு “Ball Games” இற்கு நேரத்திற்கு போகமுடியாமல் போக்குவத்து நெரிசல்களை உண்டாக்கியது தான். கூடவே பத்திரிகைகளில், ஊடக கருத்து கணிப்புகளில் எங்கள் மீது விஷத்தை கக்கும், எங்களுக்கு ஆதரவளிக்கும் கருத்துகளும் பதியப்பட்டன. இனவழிப்பில் இருந்து தப்பிவந்த ருவாண்டாவை சேர்ந்தவர்கள் எங்களுக்காய் நகரின் மையப்பகுதியில் ஓர் இசைநிகழ்ச்சியோடு கூடிய ஓர் கவனயீர்ப்பு நிகழ்வை நடத்தினார்கள். நன்றிகள்.

ஆம், எங்கள் ஊர்வலங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் இங்குள்ள பொதுமக்களுக்கு சில அசெளகர்யங்களை உண்டுபண்ணியது என்பதை நான் மறுக்கவில்லை. பொதுமக்களுக்கு அசெளகர்யங்களை உண்டாக்குவது எங்கள் நோக்கமல்ல. எம் இனவழிப்பை தடுத்து நிறுத்த எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை. காவல் துறையினருடன் தள்ளு, முள்ளுப்பட்டதும் உண்டு. ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எங்களுக்கு ஆதரவளித்தார்கள் என்பதை விட தங்கள் கடமையை அவர்கள் செய்தார்கள் அவ்வளவே. இருந்தாலும் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

ஒரு முறை Queen’s Park முன் கூடி நின்ற போது எங்களுக்கு எதிராக சில விஷமிகள் “எங்களை பயங்கரவாதிகள்” என்று எழுதி ஓர் சிறிய விமானத்தில் கட்டியிழுத்துக்கொண்டு Toronto வை சுற்றிப்பறந்தார்கள். காவல் துறை தலையிட்டு அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்க வைத்தது மறக்க முடியாதது. எங்களைப் பொறுத்துக் கொண்டதற்கு கனேடிய காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் மீண்டும் நன்றிகள். நாம் கனடாவில் மறக்காமல் நன்றி சொல்லவேண்டிய மற்றவர்கள், தமிழக தமிழர்கள். கனடாவில் ஒப்பீடு ரீதியில் வட இந்தியர்களே அதிகம் வாழுகிறார்கள். தமிழ்நாட்டு தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவாய் தானிருக்கிறார்கள். அவர்கள் குறைந்த எண்ணிக்கையானோர் ஆயினும் எங்களோடு வீதிகளில் இறங்கி போராடத்தவறவில்லை. இது தங்களின் கடமை. தன் இனம் அழிக்கப்படுகிறது. அதனால் நான் இங்கே அவர்களுக்காய் குரல் கொடுக்கிறேன் என்று கண்கலங்கியபடியே சொன்னவர்களையும் பார்த்திருக்கிறேன். நன்றிகள் உறவுகளே.

இந்த போராட்டங்களின் மூலம் நாங்கள் முற்றுமுழுதாக எதையும் சாதிக்கவில்லை என்று சொல்லமுடியாது. என்னைப் பொறுத்தவரை இலங்கை அரசின் முகமூடியை ஓரளவிற்கு கிழிக்க முடிந்தது. எங்களின் மறுக்கப்பட்ட உரிமைகள், அபிலாஷைகளை உலகிற்கு சொல்ல முடிந்தது. இலங்கை அரசை, அவர்களின் பிரதிநிதிகளை கடந்து எங்கள் கருத்துகளையும் ஊடகங்கள் கேட்கவும், அவற்றை மக்களிடம் எடுத்து செல்லவும் முடிந்தது. தவிர கனேடியர்களே ஈழத்தமிழர்கள் விடயத்தில் கனடாவின் செயலற்ற தன்மைகளை சுட்டிக்காட்ட வைத்தது. கனடாவுக்கு இது தேவையற்ற சோலி. கனடா தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டும் என்றும் சிலர் சொன்னார்கள். மிக முக்கியமாக நாங்கள் கவனிக்க வேண்டியது, நாங்கள் கனேடிய சமூகத்தால் அடையாளம் காணப்பட்டதும் தான். முதலில் பத்தோடு பதினொன்று நிலைதான்.

ஆனால், இந்த போராட்டங்களுக்கு பிறகு நாங்கள் ஓர் கட்டுக்கோப்பான, ஒற்றுமையான (ஒருபோதும் மறக்காதீர்கள் ஈழத்தமிழர்களே) சமூகம் என்று அடையாளம் காணப்பட்டோம். நாங்கள் ஊர்வலம் நடத்தினால் வீதிகள் கூட சுத்தமாகும். அவ்வளவு பொறுப்போடு எம் இளையோர் குப்பைகளை கூட பொறுக்கிப் போட்டார்கள். கனேடிய ஊடகங்கள், கவனயீர்ப்பு நிகழ்வில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டாலும் அதை நேர்த்தியாக, கட்டுக்கோப்பாக நடத்துவதை வெளிப்படையாகவே பாராட்டின. இவ்வளவையும் சாதித்துக்காட்டியவர்கள் எம் இளையோர்.

எமக்குரிய தீர்வை நோக்கிய சில வெளிச்சப்புள்ளிகள் சற்றே வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. Channel 4 என்கிற பிரித்தானிய ஊடகம் முதல் சர்வதேச மன்னிப்புசபை (Amnesty International), சர்வதேச நெருக்கடிகள் குழு (International Crisis Group), மனித உரிமைகள் காப்பகம் (Human Rights Watch) போன்றவை இலங்கையில் போர்க்குற்றம் இழைக்கப்பட்டிருக்கிறது என்றும் இலங்கை அரசு போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகத்திற்கு ஆதாரங்களோடு அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிருக்கிறார்கள். இலங்கையின் போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் எங்களுக்குரிய நீதி தானாகவே கிடைக்கும் என்று பல தரப்பினரும் சொல்கிறார்கள்.

ஆனால் அது ஒரு நீண்ட நெடுந்தூரப்பயணம். நாங்கள் வெட்டியாய் வாழாதிருந்தால் மேற்கொண்டு எதுவுமே நடக்காது. தொடர்ந்து எங்களின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் மூலம் அவர்களின் முயற்சிகளுக்கு ஈழத்தமிழர்களாக துணை புரிவோம். சர்வதேச சமூகத்திற்கு நாங்கள் கொடுக்கும் அழுத்தங்கள் தான் அவர்களையும் எங்கள் விடயத்தில் எதையாவது செய்யத்தூண்டும். தமிழக தமிழர்களே ஓர் அந்நிய தேசத்து ஊடகத்திற்கு எங்கள் இனப்படுகொலையை நிரூபிக்க வேண்டும் என்ற தேவை எந்தளவிற்கு இருக்கிறது என்று எனக்கு சொல்லத்தெரியவில்லை.

ஈழத்தின் இனப்படுகொலையை மிக அண்மையிலிருந்தும் இந்திய, தமிழக ஊடகங்கள் வெளியே கொண்டுவராமல் வாழாதிருக்கிறார்கள். அதை வெளியே தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் அறியும் படி செய்யுங்கள். ஓர் வரலாற்றுப்பிழையை அரசியல் வேண்டுமானால் இழைக்கட்டும். நீங்கள் வரலாற்றுக்கடமையிலிருந்து விலகாதீர்கள். ஈழப்போரின் விளைவாக கொதிநிலையில் இருக்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள் மத்தியில் மாற்றங்கள் உருவாகுவதை அவதானிக்கிறேன். ஆரோக்கியமான, நம்பிக்கை தரும் மாற்றம். ஈழத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுங்கள்.

காலங்காலமாய் அடுத்தவர் மீதும், அடுத்த தலைமுறைகளிடமும் குற்றச்சாட்டுக்களை மட்டுமே கடத்திவிட்டு எமக்குரிய பொறுப்புகளிலிருந்து சுலபமாய் தப்பித்து வந்திருக்கிறோம். அந்தக்குற்ற உணர்விலிருந்து விடுபடவாவது எதையாவது சாதித்துவிட்டு அடுத்தவரை, அவர் தம் செயல்களை விமர்சிக்கலாம் என்பதே என் கருத்து. ஈழத்தின் உண்மை நிலையை, தேவையை தமிழகம் முழுக்க அறியச்செய்யுங்கள். இந்தியாவின், தமிழகத்தின் ஊடகங்களும், அரசியலும் செய்யத்தவறியதை நீங்கள் செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடனும், ஈழத்தின் விடிவை என் வாழ்நாளில் காணுவேன் என்ற நம்பிக்கையுடனும்…..!

———————————————————————————————–

நான் ஏன் வினவு தளத்தில் எழுத ஆரம்பித்தேன்! ஈழப்போர் கொஞ்சம் மோசமடையத்தொடங்க  என்னுள் ஓர் அமைதியின்மையும், பதட்டமும் பரவத்தொடங்கியது. எங்கள் மறுக்கப்பட்ட உரிமைகளுக்கான போராட்டம்  நசுக்கப்படுவது என்னை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்சமூகத்தையே நம்பிக்கையற்றவர்களாக மாற்றிவிடுமோ என்ற பயம் தலைதூக்கியது. புதினம், Tamilnet, யாழ் களம் என்பதுதான் ஆரம்பத்தில் என் இணையத்தின் எல்லைகோடாய் இருந்தது. ஈழப்போர் உக்கிரமடையத்தொடங்க அதன் எல்லைக்கோடும் நீண்டது.

ஈழத்தின் வீழ்ச்சியில் மகிழ்ச்சி கொள்ளும் சில ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை என்னை சுடத்தொடங்கியது. எங்கள் பக்க நியாயங்களை சொல்ல கொஞ்சம் இணையத்தில் அதிக நேரம் செலவிடத் தொடங்கினேன். அப்போது யாழ் களத்தில் அறிமுகமானது தான் வினவு தளம். நாங்கள் புலத்தில் வீதியில் நின்று போராடியபோது அவர்களும் சில போராட்டங்களை ஈழத்தமிழர்களுக்காக செய்ததை வினவு தளத்தில் பார்க்கநேரிட்டது. தமிழக ஊடகங்கள் செய்யவேண்டியதை இவர்கள் செய்துகொண்டிருப்பதாக தோன்றியது.

வினவு நண்பர்களுக்கு நன்றி சொல்ல வந்து, சிறிது சிறிதாய், அவசர அவசரமாய் பின்னூட்டமிட்டு விட்டு ஓடிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் என்னை மின்னஞ்சலில் இழுத்துப்பிடித்துக் கேட்டார்கள், ஈழம் பற்றிய உங்கள் அனுபவத்தை ஏன் வினவு தளத்தில் எழுதக்கூடாது என்று. முதலில் நிறையவே தயக்கம் தான் என்னிடமிருந்தது. இதற்கு முன் பதிவெழுதிய முன் அனுபவம் கூட எனக்கில்லை. எந்த நம்பிக்கையில் இவர்கள் என்னை எழுதச் சொல்கிறார்கள் என்று ஏதேதோ யோசித்தேன். இழுத்தடித்து வாரக்கணக்காய் யோசித்து சரி சொன்னேன். அவர்களின் நோக்கம் நல்லதாய் பட்டது. உண்மையில், என்னால் முடியும் என்று நிறையவே நம்பிக்கை கொடுத்தார்கள்.

ஒவ்வொரு பதிவையும் எழுதி முடித்துவிட்டு பரீட்சை எழுதிய ஓர் மாணவி போல் வினவின் பதிலுக்காய் காத்திருப்பேன். “இந்த பதிவும் நன்றாக வந்திருக்கிறது. உங்கள் எழுத்தின் முன்னேற்றத்தில் ஓர் தாயைப்போல் பூரிப்படைகிறோம்” என்று நிறையவே தட்டிக்கொடுத்தார்கள். சந்தோசப்பட்டேன். என்னை எழுதச்சொன்னவர்களின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் என்ற கவனத்துடன் முடிந்தவரை எழுத முயற்சித்தேன். ஏதாவது விடுபட்டுப்போனால் அதைரியப்படுத்தாமல் சுட்டிக்காடினார்கள். நன்றிகள்.

பதிவுலகின் ஓர் சாபக்கேடான தனிநபர் தாக்குதலுக்கு நானும் ஆளானேன். எடுத்த எடுப்பிலேயே என்னை ஒருவர் “Facist” என்று முத்திரை குத்த நிறையவே அதிர்ந்துதான் போனேன். அது இன்றுவரை கசப்பாய் என் மனதில் படிந்து போனது தவிர்க்கவியலாதது. இன்னொருவர் நான் அறியவே அறியாத ஓர் இணையத்தளத்தில் வேறு யாரோ பதிந்த கருத்தை நான் பதிந்ததாக என் மீது சகட்டு மேனிக்கு சேறு வாரி வீசியது எல்லாமே என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இது அத்தனையும் நான் புலி அபிமானி என்பதால் தான்.

புலி பற்றி எழுது என்றார்கள், எழுதாதே என்றார்கள். ஈழத்தில் புலிகள் இல்லாத தமிழன் நிலை என்ன என்பதை இணையத்தில் எனக்கு உணர்த்தினார்கள். இதில் நான் ஈழ வரலாற்றை எழுதுவதாய் சிலரின் எதிர்ப்பு வேறு. ஏன் அந்த மண்ணில் பிறந்து வளர்ந்த, அந்த காற்றை சுவாசித்த, போரின் வலிகளை சுமக்கும் எனக்கு எந்த தகுதி இல்லை ஈழவரலாற்றை எழுதுவதற்கு என்று யோசிக்க வைத்தார்கள். நான் வினவு தளத்தில் அதை எழுதக்கூடாது என்று என்னை எதிருங்கள் எனக்கு ஆட்சேபனை இல்லை. எத்தனையோ பேர் எழுதி விடியாத ஈழத்தமிழன் விதி நான் எழுதியா விடியப்போகிறது என்று நினைத்து ஏன் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டுமென்று எழுதமாட்டேன் என்று சொன்னேன்.

ஆனால், எனக்கு வினவு மற்றும் வினவு நண்பர்கள் உறுதுணையாய் இருந்தார்கள். ஆறுதலாய் இருந்தது. அப்போது நான் எழுதுவதை நிறுத்தக்கூடாது என்று மிகவும் அக்கறையோடு எனக்கு ஆதரவாக பேசியவர் நான் மதிக்கும் இணையத்தள நண்பர் R.V. மற்றும் பல நண்பர்கள். அவர்கள் அனைவருக்கும்  என் மனம் நிறைந்த நன்றிகள். நண்பர் R.V சொன்னது போல் நான் இணையத்தில் எழுதவந்து சில நல்ல நண்பர்களை சம்பாதித்தது சந்தோசமாக இருக்கிறது.

அது தவிர நான் ஈழத்தின் அவலத்தை என் அனுபவம் மூலம் சொன்னேன் என்பதை போலவே வினவுக்கு நான் ஈழம் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன் என்ற வாக்கை காப்பாற்றிவிட்டேன் என்பது கூட நிறைவை தருகிறது. ஈழம் பற்றி, ஈழத்தமிழனின் வலிகள் பற்றிப்பேச  உங்கள் தளத்தில் களம் அமைத்துக்கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள், வினவு.

ரதி

___________________________________________________

ரதியின் “ஈழத்தின் நினைவுகள்” இத்துடன் நிறைவுபெறுகிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று கிட்டத்தட்ட ஒரு வருட காலமாய் இந்த தொடரின் மூலம் தனது நினைவுகளை உணர்ச்சிக் குவியலாய் பகிர்ந்து கொண்ட ரதிக்கு நன்றி. இந்த தொடர் ஆரம்பித்தபோது முள்ளிவாய்க்காலில் இன அழிப்பு போர் முடிவுக்கு வந்திருந்தது. எல்லா நம்பிக்கைகளும் சோர்வுற்றிருந்த நேரத்தில் ஈழத்தின் நினைவுகளை மீண்டும் மீண்டும் மீட்டி கொண்டிவரும் அவசியமிருக்கிறது என்பதற்காகவே ரதியை எழுதுமாறு கோரினோம்.

இது அவரது தனிப்பட்ட அனுபவங்கள் மட்டுமல்ல, அகதிகளாய் விரட்டப்பட்ட ஈழத் தமிழினத்தின் வரலாற்றில் ஒர் அத்தியாயமும் கூட. இத்தகைய அனுபவங்கள் பதிவு செய்யப்படுவது எதிர்கால சந்ததியினருக்கு அவசியம். தனது அரசியல் தவறுகளை மீளாய்வு செய்து எதிர்காலத்தில் ஈழத்தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பார்கள். அந்த நம்பிக்கையுடன் ரதி இந்தத் தொடரை முடித்திருக்கிறார். போராடுவோம், இறுதிவரை!

–          வினவு

vote-012

ஈழத்து நினைவுகள் – அனைத்து பாகங்களும்….

UNTHINKABLE திரை விமரிசனம்: அமெரிக்க மனிதாபிமானத்தின் அழுகுணி ஆட்டம்!!

23

Unthinkable

Directed by
Gregor Jordan

Produced by
Marco Weber, Caldecot Chubb

Written by
Oren Moverman, Peter Woodward

Starring
Michael Sheen,
Samuel L. Jackson,
Brandon Routh,
Carrie-Anne Moss,
Stephen Root,
Martin Donovan,
Gil Bellows,
Benito Martinez,

Cinematography
Oliver Stapleton

vote-012UNTHINKABLE – என்றால் என்ன? நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. வழமையான முறைகளை கைவிட்டுவிட்டு எப்படியாவது தீர்வை கண்டறிவது. வழமையான முறைகள் ஏன் அப்படி தோல்வியடைகின்றன? இந்த வழமையான முறைகள், வழமையற்ற முறைகள் என்பதை யார் தீர்மானிப்பது?

தற்செயலாக இந்த ஹாலிவுட் படத்தை பார்த்த போது ஆரம்பத்தில் வழக்கமான விஜயகாந்த் மசாலா என்றுதான் நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை என்பது கொஞ்ச நேரத்தில் தெரிய வந்தது. பார்வையாளனது பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் அரசியல், நீதி, நேர்மைகளை வைத்து உணர்ச்சியைக் கிள்ளி விடுவதில் அல்லது மடை மாற்றுவதில் இந்த படமும் இதன் இயக்குநரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

__________________________________________________

அமெரிக்க குடிமகனான யூசுப், மூன்று நகரங்களில் அணுகுண்டை தயார் செய்து வைத்து விட்டு, அவை மூன்று நாட்களில் வெடிக்கும் என்பதை வீடியோவில் தெரிவித்து விட்டு, போலீசிடம் தானாகவே பிடிபடுகிறான். எல்லா சேனல்களிலும் யூசுப்பின் பிரகடனம் வெளியிடப்படுகிறது. இதை எஃப்.பி.ஐ(FBI), இராணுவம், முதலான எல்லா அரசு பாதுகாப்பு நிறுவனங்களும் சேர்ந்து விசாரிக்கின்றன.

எஃப்.பி.ஐயின் பயங்கரவாத எதிர்ப்பு அணியின் தலைவியான ஹெலன் ப்ராடி ஒரு கண்டிப்பான, நேர்மையான, அதே சமயம் பெண் என்பதாலோ என்னமோ மென்மையான அல்லது மனிதாபிமான அதிகாரி. அவளது அணி உறுப்பினர்கள் அணுகுண்டு எப்படி சாத்தியமானது என்பதை விசாரிக்கிறார்கள். யூசூப்பிடமிருந்து அந்த மூன்று இடங்களை விசாரித்து தெரிந்து கொள்வதற்கு ராணுவம், ப்ராடி, அப்புறம் ஹெச் எனப்படும் நடிகர் சாமுவேல் ஜாக்சன் எல்லோரும் கூட்டாக முயல்கிறார்கள்.

கருப்பரான ஹெச் இந்த சிறப்பு நடவடிக்கைக்காக கொண்டு வரப்பட்ட வெளியாள். அவன் பொதுவில் அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும், மொன்னைத்தனத்தையும் கிண்டலித்து விட்டு இவையெல்லாம் வேலைக்காகாது என்ற கலக மனப்பான்மை உடையவன். ராணுவ தலைமை கமாண்டரிடமிருந்து விசாரிக்கும் பொறுப்பை வம்படியாக வாங்கிக் கொள்கிறான். அவனது நடத்தைக்கு நேரெதிர் துருவமாக ப்ராடி வாதிடுகிறாள். இவர்களுக்கிடையில் எப்படியாவது குண்டு இருக்கும் இடங்களை கண்டுபிடித்தால் சரி என்று ராணுவ கமாண்டர் காரியவாதமாக இருக்கிறான்.

முழுப் படமும் யூசுப்பை வைத்திருக்கும் சித்திரவதைக் கூடம் மற்றும் விசாரணை அரங்கிலேயே நடைபெறுகிறது. ஆரம்பத்தில் எல்லாரும் ப்ராடி உட்பட யூசுப்பிடம் விசாரிக்கிறார்கள். அவன் அசைந்து கொடுக்கவில்லை. நேரம் ஆக ஆக அழுத்தம் கூடுகிறது. என்ன செய்வது? அணுகுண்டுகள் வெடித்தால் குறைந்தது ஒருகோடி மக்கள் கொல்லப்படுவார்கள். எப்படி தடுக்க முடியும்?

வழக்கமான விசாரணைகளின் போதாமையை எள்ளி நகையாடும் ஹெச் ஒரு சுத்தியலால் யூசுப்பின் சுண்டுவிரலை அடித்து நசுக்குகிறான். அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். யூசுப் ஒரு அமெரிக்க குடிமகன் என்றும் அவனை இப்படி சித்திரவதை செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் ப்ராடி வாதிடுகிறாள். குண்டு வைப்பது மட்டும் சட்டத்திற்கு உடன்பாடானதா என்று ஹெச் மடக்குகிறான்.

சித்திரவதை செய்தது போக அவன் ஓய்வு எடுக்கும் நேரத்தில் ப்ராடி அன்பாக யூசுப்பிடம் விசாரிக்கிறாள். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நியாயம்தானா என்று கேட்கிறாள். யூசுப் ஒரு எக்காளமான புன்முறுவலுடன் அதை புறந்தள்ளுகிறான். ஒரு கட்டத்தில் தான் அமெரிக்க அதிபருக்கு ஒரு வேண்டுகோள் விடுவதாகவும் அது ஏற்கப்பட்டால் குண்டுகள் இருக்குமிடத்தை தெரிவிப்பதாகவும் கூறுகிறான். அது ஏற்கப்படுகிறது.

அவனது சித்திரவதை காயங்களை மறைத்து ஒரு போர்வை போர்த்தப்படுகிறது. காமராவைப் பார்த்து யூசுப் தெளிவான குரலில் பேசுகிறான். “உலகெங்கும் உள்ள இசுலாமிய நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் அமெரிக்க இராணுவம் தனது தாக்குதலை நிறுத்தி விட்டு வாபஸ் வாங்க வேண்டும்.” இதுதான் அவனது கோரிக்கை.

ஒரு அரை லூசு பயங்கரவாதிக்காக அமெரிக்கா வாபஸ் வாங்குவதா என்று ராணுவ கமாண்டர் தலையில் அடித்துக் கொள்கிறான். நிறைவேற சாத்தியமே இல்லாத இந்த கோரிக்கைதான் அவனது குண்டுகளை கண்டுபிடிக்கும் என்றால் வேறு வழியில்லை, விசாரணை சூடுபிடிக்கிறது. இல்லை சித்திரவதை அனல் பறக்கிறது.

நிதானமாக ஒரு லேத் பட்டறை தொழிலாளியின் லாகவத்தோடு எந்த உணர்ச்சியுமின்றி இயல்பாகவே ஹெச் சித்திரவதைக் கருவிகளோடு யூசுப்பை வதைக்கிறான். அவனது நகங்கள் பிடுங்கப்படுகின்றன. விரல்கள் நசுக்கப்படுகின்றன. அந்தரத்தில் கட்டி தொங்க விடப்படுகிறான். உடலெங்கும் கத்திக் குத்து காயங்கள். அவனது அலறல் அவ்வப்போது சித்திரவதைக் கூடத்தின் மரண இசையாக ஒலிக்கிறது. ஆனாலும் அவன் பேசமறுக்கிறான்.

ப்ராடி அவனிடம் அவனது அன்பான மனைவி, குழந்தை, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை எல்லாவற்றையும் சென்டிமெண்டாக விவரித்து கெஞ்சுகிறாள். அவன் ஒரு ஹீரோ எனவும், சும்மா பயமுறுத்துவதற்காகத்தான் இந்த வெடிகுண்டு விளையாட்டை அவன் நடத்துகிறான் என்றெல்லாம் பேசுகிறாள். யூசுப் ஒரு இடத்தின் முகவரியைக் கூறி அங்கு குண்டு இருப்பதாக தெரிவிக்கிறான்.

கமாண்டோ படை அங்குசென்று சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் அவனது புகைப்படத்தை எடுக்கும் போது அதிலிருந்த பொத்தான் அழுத்தப்பட்டு அருகாமை வணிக அங்காடியில் குண்டு வெடிக்கிறது. 53 பேர்கள் கொல்லப்படுகின்றனர். தான் விளையாடவில்லை என்பதை தெரிவிக்கவே இந்த குண்டு வெடிப்பு என்கிறான் யூசுப்.

அதுவரை நிதானமாக இருந்த ப்ராடி இப்போது சினங்கொண்டு அவனது நெஞ்சை கத்தியால் கிழித்தவாறே கொல்லப்பட்டவர்களுக்காக வாதிடுகிறாள். ஈராக்கிலும் இதே போல தினமும் 53 அப்பாவிகள் அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்படுகிறார்களே, அது தெரியாதா என்று வினவுகிறான் யூசுப். தன்னை அறியாமலே தானும் இப்போது சித்திரவதையைக் கைக்கொள்ள ஆரம்பித்த அதிர்ச்சியில் ப்ராடி செய்வதறியாது திகைக்கிறாள். அவளுக்குள் அந்த போராட்டம் தீவிரமடைகிறது.

எல்லா சித்திரவதைகளையும் கையாண்ட பிறகும் யூசுப்பை பேசவைப்பதில் தோல்வியடையும் ஹெச் சோர்வுறுகிறான். இருப்பினும் அவனது UNTHINKABLE முறைகள் இன்னும் தீரவில்லை. இசுலாமிய அடையாளத்துடன் இருக்கும் யூசுப்பின் மனைவியை அழைத்து வரச்சொல்கிறான். ஆரம்பத்தில் தனது கணவன் அப்பாவி என்று வாதிடும் அவளை பயங்கரவாதிக்கு உதவிய குற்றத்திற்காக உள்ளே தள்ள முடியும் என்று ப்ராடி மிரட்டுகிறாள்.

கணவனது எதிரே அமரவைக்கப்படும் அவள் அழுதவாறே ஹெச் எழுப்பும் கேள்விகளை கேட்கிறாள். யூசுப் அழுதாலும் உறுதியாக இருக்கிறான். இனி அவனது மனைவியையும் அவன் முன்னே சித்திரவதை செய்யப்போவதாக ஹெச் கூறுகிறான். அனைவரும் அவனை தடுக்கிறார்கள். அந்த தள்ளுமுள்ளுவையும் மீறி அவன் யூசுப் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுக்கிறான். அவளும் இரத்தம் வடிய கொல்லப்டுகிறாள்.

இந்த அதிர்ச்சியிலேயே எல்லாரும் நீடிக்க முடியவில்லை. குண்டுகள் வெடிப்பதற்கான நேரம் நெருங்கி வருகிறது. ஹெச் இப்போது யூசுப்பின் சிறு வயது குழந்தைகளை கேட்கிறான். ப்ராடி கடுமையாக எதிர்க்கிறாள். மற்றவர்கள் ஆதரிக்கிறார்கள். இசுலாமிய அடையாளத்துடன் வரும் அந்த பிஞ்சுகள் சித்திரவதைக் கூடத்தினுள் கொண்டு செல்லப்படுகின்றனர். யூசுப் வெளியே கொண்டு வரப்பட்டு சேம்பரின் கண்ணாடிக்கு முன்னே அமரவைக்கப்படுகிறான். அவனது முகமூடி கழட்டப்படுகிறது. உள்ள குழந்தைகளுடன் சித்திரவதைக்கு தயாரகும் ஹெச். இதற்கு மேலும் தாளமாட்டாமல் அழுது வெடிக்கும் யூசுப் கடகடவென்று குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் மூன்று இடங்களையும் கூறுகிறான். ஒரு வழியாக பிரச்சினை முடிவது போல தெரிகிறது.

இல்லை, யூசுப் பயன்படுத்திய அணுகுண்டு மூலப்பொருளில் மூன்று குண்டுகளில் வைத்தது போக மிச்சம் இருக்கிறது, அது நாலாவது குண்டு என்கிறான் ஹெச். அதைக் கண்டுபிடிக்க யூசுப்பின் குழந்தைகள் மீண்டும் தேவைப்படுவார்கள் என்கிறான். ப்ராடியைத் தவிர அனைவரும் ஆதரிக்கிறார்கள். குண்டு வெடித்தாலும் பரவாயில்லை, அந்த குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்கிறாள் ப்ராடி. யூசுப்பின் கட்டுக்களை அவிழ்த்து விடும் ஹெச் இனி அவன் சுதந்திரமனிதன் என்கிறான். ராணுவ கமாண்டரின் துப்பாக்கியைப் பறிக்கும் யூசுப் தற்கொலை செய்கிறான். வெடிக்கக் காத்திருக்கும் நாலாவது வெடிகுண்டின் நேரக்கருவியின் கவுண்டவுணோடு கேமரா நம்மிடமிருந்து விடைபெறுகிறது.

__________________________________________________

அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளை சிவில் உரிமைகளோடு விசாரிப்பதா இல்லை சித்திரவதை செய்து உண்மையை வரவழைப்பதா என்பதின் அறவியல் கேள்விகளை படம் எழுப்புகிறது. ஆனால் முகத்தில் அறையும் அமெரிக்க யதார்த்தம் இந்த புனைவின் மீது காறி உமிழ்கிறது.

உலகெங்கும் சி.ஐ.ஏ நடத்தியிருக்கும் சதிகள், கொலைகள், ஆட்சிக் கவிழ்ப்புகள் எண்ணிலடங்கா. உலகின் எல்லா வகை சித்திரவதை முறைகளுக்கும் ஊற்று மூலம் சி.ஐ.ஏதான். குவாண்டமானோ பேயில் அமெரிக்க சட்டம் செல்லாத இடத்தில் அப்பாவிகளை வைத்து சித்திரவதை செய்தவற்கென்றே ஒரு முகாமை நடத்தும் அமெரிக்காவின் உண்மை முகத்தை இந்த படம் திறமையாக மறைக்கிறது.

ஈராக்கிலும், ஆப்கானிலும் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் அப்பாவி மக்கள் என்பதையோ, அதில் சில இலட்சம் குழந்தைகளும் உண்டு என்பதையோ இந்த படம் சுலபமாக கடந்து செல்கிறது. யூசுப்பின் குண்டு கொல்லப்போகும் அமெரிக்க உயிர்களின் மதிப்பு மற்ற நாடுகளின் மனிதர்களுக்கு இல்லை போலும். படத்தில் இதையே யூசுப் கேட்டாலும் அவனது கேள்வியின் நியாயத்தை படம் பலவீனமாக்குகிறது.

யூசுப்பின் குழந்தைகளை ஹெச்சிடமிருந்து காப்பாற்றுவதற்காக கதவை உடைத்து உள்ளை நுழையும் அமெரிக்க வீரர்களின் உண்மை முகத்தை பாக்தாத் மண்ணில்தான் பார்க்க முடியும். பாரசீக மண்ணில் ரத்தம் குடிக்கும் அமெரிக்க  கழுகு இரண்டு குழந்தைகளுக்காக கண்ணீர் விடுவதை நம்மால் சகிக்க முடியவில்லை. ஆனால் பார்வையாளர்கள் விடும் கண்ணீர் இங்கே தந்திரமாக வரவழைக்கப்படுகிறது.

குண்டு வெடித்தாலும் வெடிக்கட்டும் அந்த குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்று ப்ராடி அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்லும் காட்சி அமெரிக்க மனிதாபிமானத்தின் குறியீடாக இதயத்தை அழுத்துகிறது. ஆனால் மருந்து தடைக்காகவே பல்லாயிரம் ஈராக் குழந்தைகள் கொல்லப்பட்டது அமெரிக்க மனசாட்சியை உலுக்கவே இல்லையே?

விசாரிப்பவர்கள் எல்லாரும் யூசுப்பை அரசியல் ரீதியாக கன்வின்ஸ் செய்து பேசவில்லை. அப்படி பேசவும் முடியாது என்பது வேறு விசயம். ப்ராடி கூட அவனது மனைவி, குழந்தைகள், அன்பான குடும்ப வாழ்க்கை என்றுதான் விளக்குகிறாள். ஆனால் ஒரு போராளி தனது ஆன்ம பலத்தை சமூக அரசியல் காரணிங்களிலிருந்துதான் பெறுகிறான் என்பதை இந்த படம் சிறுமைப்படுத்துகிறது. தனது சொந்த பந்தங்களின் மகிழ்ச்சியை விடவும் தனது சமூகத்தின், நாட்டின் துன்பத்தை களைய நினைக்கும் போராளியின் வழிமுறைகள் தவறாக இருக்கலாம். ஆனால் அவனது சாரம் என்ன?

யூசுப்பின் குழந்தைகளை சித்திரவதை செய்தால் உண்மை வெளியே வரும், குண்டுகள் வெடிக்காது என்றால் அப்பாவி அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டால்தான் அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு நிற்கும் என்று ஒரு போராளி ஏன் நினைக்கக் கூடாது? அல்லது அமெரிக்க அரசைப் போன்று ஆயுத, இராணுவ வல்லமை இருந்திருந்தால் ஒரு பயங்கரவாதி ஏன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறான்?. வலியோரை எளியோர் எதிர்கொள்ளும் முறையாகத்தானே பயங்கரவாதம் வேர்விடுகிறது? அந்த வலியோரின் கொடூரம் நிறுத்தப்படாத போது எளியோரின் செயல் மட்டும் ஏன் பயங்கரவாதமாக பொதுப்புத்தியில் நுழைக்கப்படுகிறது?

ஆக பயங்கரவாத்தின் இந்த பரிமாணங்களை இயக்குநர் கவனமாக தவிர்த்திருக்கிறார். அது வெறும் சட்டம், சிவில் உரிமை, சென்டிமெண்டாக மட்டும் அவரால் சித்தரிக்கப்படுகிறது. ஒரு தீவிரவாதிக்கு மனித உரிமை சட்டங்கள் செல்லுபடியாகுமா என்பதல்ல பிரச்சினை. அமெரிக்க அரசு தானே வைத்திருக்கும் சட்டங்களும், புதிதாக உருவாக்கும் சட்டங்களும் எந்த மனித உரிமையை வைத்து உருவாக்குகிறது? அமெரிக்க நலன் என்ற வார்த்தைகளுக்குள்ளே மறைந்திருப்பது அமெரிக்க முதலாளிகளின் நலன் என்பதுதான் அவர்களது மனித உரிமை அளவுகோல். அதனால்தான் அமெரிக்காவின் அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் அவர்களது சட்டப்படியே நியாயப்படுத்தப்படுகின்றன.

இன்னொரு புறம் பயங்கரவாதிகள் தமது வலுவான எதிரிகளை வீழ்த்த முடியாமல் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கனவே உள்ள அரசு பயங்கரவாதத்தை நியாயப்படுத்துகின்றன. அப்படி ஒரு நியாயப்படுத்துதலின் ஒரு சரடைத்தான் இந்த படம் சித்தரிக்கிறது.

பயங்கரவாதிகளை வழமையான முறைகளில் சட்டப்படி எதிர்கொள்ள முடியாது என்பதுதான் ஹெச்சின் கருத்து. அமெரிக்க அரசையும் அப்படி வழமையான முறைகளில், சட்டப்படி எதிர்கொள்ள முடியாது என்பதுதான் பயங்கரவாதிகளின் கருத்து. எனினும் இரண்டு பயங்கரவாதங்களையும் சமப்படுத்தி பார்ப்பதால் அது இறுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கே உதவி செய்யும். அமெரிக்காவை வீழ்த்தும் சக்தியை உலக மக்கள் என்றைக்கு பெறுகிறார்களோ அது வரை இந்த ஆட்டம் நடக்கத்தான் செய்யும்.

அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அமெரிக்க உளவியலை அதன் முகப்பூச்சை கலைத்து விட்டு பார்க்கும் அரசியல் வலிமை இல்லையென்றால் உங்களை இந்தப் படம் வென்று விடும். பரிசோதித்துப் பாருங்கள்! பரிசோதிப்பதற்காகவே பாருங்கள்!!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

நீதிமன்றத்திற்குள் செல்லாத தமிழுக்கு செம்மொழி மாநாடு ஒரு கேடா?

86

vote-012சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆறு வழக்குரைஞர்கள் 9.6.10 முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருந்து போராடி வருகின்றனர். இளம் வழக்குரைஞர்களின் முன்முயற்சியினால் உந்தித் தள்ளப்பட்டிருக்கம் இப்போராட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின்(ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) வழக்குரைஞர்கள் முக்கியப் பாத்திரம் ஆற்றி வருகின்றனர்.

செம்மொழி மாநாடு என்ற நல்ல காரியம் நடக்கும்போது, அபசகுனமாக இப்படிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த திமுக அரசு, முடிந்த வரை இப்பிரச்சினையை இருட்டடிப்பு செய்யும் பொருட்டு புறக்கணித்து. அதிகாரபூர்வ வழக்குரைஞர் சங்கங்களும் இதனைப் புறக்கணித்தன.

மதுரையில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் அதாரிட்டியான தென்மாநில முதல்வர் அழகிரி, இப்பிரச்சினையை 15 நாளில் முடித்துத் தருவதாகவும், போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படியும் நேற்று வழக்குரைஞர்களிடம் கூறியிருக்கிறார். தன் பேச்சைத் தட்டுவதற்கு மதுரையில் ஆள் கிடையாது என்ற நம்பிக்கையில் பழரசத்தை எடுத்துக் கொண்டு உண்ணாவிரதப் பந்தலை நோக்கி காரில் கிளம்பியும் விட்டார். ஆனால் வக்கீல்கள் மசிவதாக இல்லை. “அண்ணன் 15 நாளில் முடிப்பதற்கு இது ரியல் எஸ்டேட் பிரச்சினை இல்லை. இதற்கு பதில் சொல்லும் அதிகாரம் கொண்டவர்கள் பதில் சொல்லவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” என்று முடிவெடுத்து விட்டனர்.

வேலை மெனக்கெட்டு கிளம்பி வந்த அண்ணன் பந்தலுக்கு வந்து ஒரு வாழ்த்துரை வழங்கிவிட்டுப் போயிருக்கலாம். ஆங்கிலம் தெரியாத அண்ணன் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச முடியவில்லை. நீதிமன்றத்தில் தமிழ் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட அண்ணனின் பிரச்சினையுடன் நேரடியாகத் தொடர்புள்ளதுதான். அதற்காகவாவது வாழ்த்திவிட்டுப்  போயிருக்கலாம். ஆனால், அண்ணன் தலையிட்டால் பிரச்சினை செட்டில் ஆகவேண்டுமே. அதனால்தான் திரும்பிப் போய்விட்டார்.

இன்றைக்கு ஜெ களத்தில் குதித்துவிட்டார். செம்மொழி மாநாடு எனும் பிரம்மாண்ட கேளிக்கையை வைத்து கருணாநிதி ஆதாயம் அடைவதை விரும்பாத ஜெயலலிதா, வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரித்து இவர் ஏதோ தமிழுக்கு ஆட்சி மொழி தகுதியை எதிர்காலத்தில் வாங்கித் தருவது போல காட்டிக் கொண்டிருக்கிறார். இத்தனை காலமும் கருணாநிதியின் நிழலில் இளைப்பாறி தமிழின் உணர்ச்சியை மட்டும் விற்பனை செய்து வந்த வைகோவும் நிச்சயமாய் இந்தப் போராட்டத்தை ஆதரிக்கிறார்.

கோவை மாநாட்டில் இந்த வழக்கறிஞர் போராட்டம் ஒரு கரும்புள்ளியாய் விழுந்துவிடக்கூடாது என்று துடிக்கும் கருணாநிதி வழக்கம் போல ஜெயலலிதாவின் அறிக்கைக்கு லாவணியாக ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதிலிருந்து உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வராமல் இருப்பதற்கு தி.மு.க அரசு என்னென்ன முயற்சிகளை கிடப்பில் போட்டது என்ற உண்மை நமக்கு கிடைக்கிறது. சொந்த செலவில் சூன்யம்.

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழும் இருக்கவேண்டுமென்பது தி.மு.கவின் திட்டவட்டமான கொள்கையாம். இதற்காக பலமுறை கழக பொது குழுக்களிலும், செயற்குழுவிலும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்களாம். நீதிமன்றங்களிலும் தமிழ் இடம்பெற வேண்டுமென்று வாதாடி வந்திருக்கிறார்களாம். இந்த ‘வீர’ வரலாற்றின் தொகுப்பை சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் அறிக்கையாகவே வெளியிட்டிருக்கிறாராம்.

தமிழுக்காக கழகம் போராடியிருக்கும் அந்த ‘வீர’ வரலாற்றின் காலம் தி.மு.க ஆட்சியைப் கைப்பற்றியதிலிருந்தோ, இல்லை கருணாநிதி பொதுவாழ்க்கைக்கு வந்ததிலிருந்தோ தொடங்கியிருக்குமென்று நீங்கள் நினைத்தால் தவறு. அது வெறும் 21ஆம் நூற்றாண்டுச் சமாச்சாரம்தான்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் தமிழ்மன்றம் சார்பாக 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு ரிட் மனு தமிழுக்காக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அரசியலைமைப்புச் சட்டம், பிரிவு 348(2)இன் கீழ் தலையிட முடியாது என்று தீர்ப்பளிக்கின்றனர். அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு இதை கிடப்பில் போட்டது என்று சரியாகவே சொல்லும் கருணாநிதி அவர் ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தார்?

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் வேண்டுமென்று 6.12.2006 அன்று சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கருணாநிதி அரசால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பிறகு இந்த தீர்மானத்திற்கு கவர்னரின் பரிந்துரையையும், சென்னை உயர்நீதிமன்றத்தின் கொள்கை ரீதியிலான ஒப்புதலையும் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்களாம். ஏற்கனவே அரசியலைமைப்புச் சட்டத்தின் கீழ் இதைச் செய்யமுடியாது என்று கைவிரித்த நீதிபதிகள் இப்போது எந்த கொள்கையளவில் இதை ஆதரித்தார்கள் என்பது மேலிடத்து இரகசியமா இல்லை நடைமுறைக்கு வராத வெத்து வேட்டு என்ற மெத்தனமா தெரியவில்லை.

தி.மு.க அரசுக்கு கடிதம் மூலம் பதில் அளித்த மத்திய அரசு “தமிழக அரசின் முன் மொழிவுகள் உச்சநீதிமன்றத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் வட்டார மொழியை அறிமுகம் செய்வது தற்போதைக்கு இயலாத ஒன்று என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கருதுவதாகவும்” தெரிவித்துள்ளது.

2006க்குப் பின் 2 ஆண்டுகள் திமுக அமைச்சர் வெங்கடபதி மத்திய சட்டத்துறை இணை அமைச்சராக இருந்திருக்கிறார். அவர் என்ன செய்தார்? பீகார், உ.பி முதலான மாநிலங்களில் மட்டும் இந்தி நீதிமன்ற மொழியாக இருப்பதெப்படி என்ற கேள்வியை அவர் எழுப்பினாரா? தமிழக சட்ட மேலவைக்கு 4 நாளில் மத்திய அரசின் ஒப்புதல் பெற முடிந்த ராஜதந்திரி கருணாநிதி, அந்த ராஜதந்திரத்தை உயர்நீதி மன்றத்தில் தமிழைக் கொண்டுவருவதற்கு காட்டாதது ஏன்? மாவட்ட நீதிமன்றம் வரையில் அனுமதிக்கப்படும் தமிழ் மாநில நீதிமன்றமான உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படாத்து ஏன்? மாவட்டம் எல்லாம் சேர்ந்த்துதானே மாநிலம்? பொது அறிவுக்குப் புரியும் இந்தக் கேள்விகள் கூட திமுக அரசின் மண்டையில் உரைக்காத்து ஏன்?

தமிழ் மற்றும் மற்றைய தேசிய மொழிகளை சூத்திர பாஷை என்று எக்காளமிட்டு அடிமைப்படுத்திய பார்ப்பனியத்தின் அன்றைய வரலாற்றுக்கும், உச்சநீதிமன்றத்தின் இன்றைய வரலாற்றுக்கும் என்ன வேறுபாடு? ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான் முதலான நாடுகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் தாய்மொழி பேசும் மக்களைக் கொண்ட நாட்டில் அந்த மொழிகளை வெறும் வட்டார மொழி என்றும், சாத்தியமில்லை என்றும் கருதுவது வெறும் மேட்டிமைத்தனம் மட்டுமல்ல அது பார்ப்பனிய இந்திய தேசியத்தின் அடக்குமுறையும் ஆகும்.

இதெல்லாம் தெரியாத அளவுக்கு கருணாநிதி ஒன்றும் மக்கு இல்லை. எல்லாம் அறிந்தவர். வாரிசுகளுக்காக வளமான அமைச்சர் பதவிகளை கூசாமல் நேரில் சென்று கேட்டுப் பெற்றவர் தமிழுக்காக வெறும் கடித விளையாட்டுக்களை நடத்தியதையே சாதனையாக அறிவிக்க வேண்டுமென்றால் தமிழன் இளித்தவாயன் என்பதன்றி வேறென்ன? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாத்தியமில்லை என்று மத்திய அரசும் கழண்டு கொள்ள, விட்டது தொல்லை என்று கருணாநிதியும் விட்டுவிட்டார்.

சுவரே இல்லாத வீட்டுக்க்கு கூரையை தங்கத்தில் வேயலாமா, வெள்ளியில் வேயலாமா என்ற கதையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை கொண்டு வருவதற்கான உள்கட்டுமான பணிகளுக்காக தமிழக அரசு ஒதுக்க விரும்பியது 32 கோடியா, 22 கோடியா என்று ஜெயலலிதாவுடன் அறிக்கைப் போர் நடத்துகின்றார் கருணாநிதி. தமிழை கொண்டுவரமுடியாது என்று ஆனபிறகு அதற்கு எத்தனை கோடி ஒதுக்கித்தான் என்ன பயன்?

பிரச்சினை நடக்கும் நிகழ்காலத்தில் நீங்கள் சண்டையே போடவில்லை என்றால் 65இல் தமிழுக்காக பாளையங்கோட்டை தனிமைச்சிறையில் பல்லி, கரப்புகளுடன் அவதிப்பட்டேன் என்று இறந்த காலத்திற்கு பயணிக்கிறார் கருணாநிதி. சிறையை விடுங்கள், பல்லி, கரப்பு, கொசுக்களுடன்தான் இன்றும் பெரும்பான்மையான மக்கள் வீடுகளில் சாதாரணமாக வாழ்கிறார்கள். பாம்புக்கடிக்கும், நாய்க்கடிக்கும் மருந்தின்றி அரசு மருத்துவமனைகளில் அவதிப்படுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் தியாகமாக சித்தரிப்பதற்கு அவர்களெல்லாம் கோபாலபுரத்தில் பிறக்கவில்லை, என்ன செய்வது?

உயர்நீதிமன்றத்தில் கூட தமிழை கொண்டுவருவதற்கு இயலவில்லை எனும் போது 500 கோடி ரூபாய்களை இறைத்து செம்மொழி மாநாடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? கடந்த ஏழு, எட்டுமாதங்களாக முழு அரசு எந்திரமும் இந்த மாநாட்டுப் பணிக்காக மும்முரமாக பணியாற்றி வருகிறது.

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் ஏற்வில்லை. மேட்டூரில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. போலி மருந்து பிரச்சினை முடியவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்காக அளிக்கப்படும் தடையற்ற மின்சாரத்தினால் தமிழகம் மின்தட்டுப்பாட்டினால் தத்தளிக்கிறது. விலைவாசி உயர்வு விஷம் போல ஏறிவருகிறது.

இதையெல்லாம் ஏறெடுத்துப் பார்க்காத அமைச்சர்களும் அதிகாரிகளும் கோவை மாநாட்டின் சிலைகளும், அலங்கார ஊர்திகளும், அரங்கங்களும் சரியாக இருக்கிறதா என்று அணு அணுவாக சோதிப்பது ஆபாசமாக இல்லையா? யாரை ஏமாற்ற இந்த நாடகம்? இன்னும் எத்தனை நாள் தொடரும் இந்த கேலிக்கூத்து?

இது போக சில படித்த மேதாவிகள் அவர்களது வாழ்வுக்கு எந்த வகையிலும் தேவைப்படாத தமிழை நீதிமன்றங்களில் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என்று நமக்கு வகுப்பு எடுப்பார்கள். அவர்களெல்லாம் நீதிமன்றங்களுக்கு வரும் மக்களைக் கொஞ்சம் சந்தித்து பார்த்தால் உண்மை அறியலாம்.

நீதிமன்றங்களில் தமிழ் என்பது மிகவும் அடிப்படையான ஜனநாயக கோரிக்கை. பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமை. ஆங்கிலம் கோலோச்சும் நீதிமன்ற நடைமுறைகளைப் பற்றி ஏதும் அறியமால் அதிகம் அல்லல்படும் அந்த மக்களுக்கு தமிழ் என்பது அங்கே வெறும் மொழியாக அல்ல அவர்களது சிவில் உரிமையாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் வந்துவிடுவதாலேயே அவர்களுக்கு நீதி கிடைத்துவிடுவதில்லை என்றாலும் தங்களுக்கு மறுக்கப்பட்ட நீதியின் யோக்கியதையையாவது புரிந்து கொள்ளலாம் அல்லவா?

வக்கீல்கள், போலீசுக்காரர்கள், நீதிபதிகள் சேர்ந்து சட்ட மொழியில் மக்களை ஏமாற்றும் நடைமுறைகளை தமிழ் வந்தால் அத்தனை எளிதாக செய்ய முடியாது. தங்களது பிரச்சினையின் நியாயத்தை புரிந்து கொள்ளும் மக்கள் அதையே சட்டமொழியாக தமிழ் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளினூடாகவும் புரிந்து கொள்வார்கள். தமிழ் நீதிமன்ற மொழி என்பது பெரும்பான்மை மக்கள் ஜனநாயக உரிமையாகும். அதை மறுப்பது பாசிசமே அன்றி வேறல்ல.

மதுரை வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்! தமிழுக்காக வேடம்போடும் கபட வேடதாரிகளின் பொய்முகத்தை தோலுரிப்போம்!!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

காதலர்கள் அடித்துக் கொலை ! இரத்தம் குடிக்கும் பார்ப்பனியம் !!

78

vote-01219 வயது ஆஷா, சைனி (saini) எனும் சாதியைச் சேர்ந்தவர். இந்த சாதியை விட படிக்கட்டில் கீழே இருக்கும் ஜாதவ் சாதியைச் சேர்ந்தவர் யோகேஷ். பெற்றோரை இழந்த இந்த 21 வயது இளைஞர் தனது அக்கா வீட்டில் தங்கி ஒரு பழைய மாருதி காரை வைத்து வாடகை ஓட்டியாக காலத்தை கழித்து வந்தார். டெல்லியின் புறநகர் ஒன்றில் வசிக்கும் இருவரும் பழகி பின்னர் காதலித்து வந்தனர். இது அரசல் புரசலாக ஆஷா வீட்டில் தெரிய வந்ததும் வழக்கம் போல பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது.

ஆஷா வீட்டினர் அவளைக் கண்டித்ததோடு, யோகேஷையும் அவனது அக்கா வீட்டிற்கு சென்று எச்சரித்திருக்கின்றனர். சாதி வெறியோடு, ஒரு வாடகை கார் ஓட்டுனரோடு காதலா என்ற வர்க்க வெறுப்பும் சேர்ந்து அந்த பெண் வீட்டினரது நடவடிக்கைகளை தீர்மானித்திருக்கிறது. ஆனாலும் ஆதிக்க சாதியின் கௌரவத்திற்கு அந்த இளையோரின் காதல் கட்டுப்படவில்லை.

அவர்கள் தொடர்ந்து சந்திப்பதும், தொலை பேசியில் உரையாடுவதும் தொடர்கிறது. இடையில் ஆஷாவுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கின்றனர். இருந்தும் ஆஷா தனது காதலை துறக்கத் தயாரில்லை. இனி அவளை பணிய வைப்பது எப்படி?

கடந்த ஞாயிறு இரவு யோகேஷைத் தொடர்பு கொண்ட ஆஷாவின் தாய் அவனை நேரில் வருமாறும், பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளலாமென்றும் கூறுகிறார். இரவு சாப்பாட்டை முழுவதும் சாப்பிடாமல் ஆஷா தங்கியிருந்த அவளது தாய்மாமன் ஓம் பிரகாஷ் வீட்டிற்கு அவன் செல்கிறான். அங்கே ஆஷாவின் உறவினரான ஆண்கள் இருந்திருக்கின்றனர்.

காதலர்கள் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்படுகின்றனர். அலறல் சத்தம் கேட்டு அருகாமை வீட்டிலிருந்தோர் விசாரிக்க ” இது எங்கள் குடும்ப விவகாரம், யாரும் தலையிட வேண்டாம்” என்ற பதில் வந்திருக்கிறது.

விடிந்து பார்த்தால் வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு யோகேஷின் கார் வெளியே அனாதையாக நின்றிருக்கிறது. பின்னர் போலீஸ் வந்து கதவை உடைத்து பார்த்தால் காதலர்களின் பிணங்கள்!

____________________________________________

இதே டெல்லியில் பிசினஸ் ஸ்டாண்டர்ட் தினசரியில் வேலை பார்த்து வந்த பத்திரிகையாளரான நிருபமா மே மாத ஆரம்பத்தில் இதே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டதை உங்களில் சிலர் படித்திருக்கலாம்.

பார்ப்பன சாதியைச் சேர்ந்த நிருபமா ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவள். தந்தை வங்கி மேலாளர். சகோதரர்கள் இருவர் வருமான வரித்துறை அதிகாரியாகவும், முனைவர் ஆய்வு படிப்பு படிப்பவராவும் இருக்கிறார்கள். டெல்லியைச் சேர்ந்த பிரபலமான ஊடக கல்லூரியில் படித்த நிருபமா தனது வகுப்புத் தோழனான ரஞ்சனை காதலிக்கிறாள். ரஞ்சன் பீகாரைச் சேர்ந்தவர், கேஷ்த்தியா சாதியைச் சேர்ந்தவர். இந்த சாதியும் ஆதிக்க சாதிதான் என்றாலும் பார்ப்பனர்களை விட கீழ்தான் என்பதை விளக்கத் தேவையில்லை.

விடுமுறைக்காக பெற்றோர் வீடு வந்த நிருபமா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக போலீசுக்கு தகவல் வருகிறது. பின்னர் சவப்பரிசோதனை அறிக்கையின் படி அவள் தலையணையால் மூச்சுத்திணற கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கூடவே அவள் மூன்று மாத கர்ப்பிணி என்ற விசயமும் தெரிய வருகிறது. ஒருவேளை அவள் கர்ப்பமில்லாமல் இருந்திருந்தால் இந்தக் கொலை கொஞ்சம் தள்ளிப் போயிருக்கலாம்.

பார்ப்பனப் பெண்ணின் வயிற்றில் தரமற்ற சாதியின்  கரு உருவாயிருப்பதை அந்த பார்ப்பன வெறியர்கள் விரும்பவில்லை. கொல்லப்படுவதற்கு முன்னர் அவள் தனது காதலனுடன் தொலைபேசியில் அழுது அரற்றியிருக்கிறாள். செய்வதறியாத ரஞ்சனும் கதறி அழுதிருக்கிறான். பின்னர் சகோதரர்களும் அவர்களது நண்பர்களும் நிருபமாவை கொன்றிருக்கலாம். தற்போது நிருபமாவின் தாயார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

___________________________________________

வட இந்தியாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே சாதியின் ‘கௌரவத்திற்காக’ இப்படி இளம் காதலர்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். இந்தி பேசும் மாநிலங்களில் இந்த சாதிவெறிக் கௌரவத்தின் வீச்சு அதிகம். ஆண்டு தோறும் ஹானர் கில்லிங் எனப்படும் இந்த கௌரவக் கொலைகள் அதிகரித்தே வருகின்றன. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள், நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லை.

வேலை வாய்ப்பும், நகரமயமாக்கமும், படிப்பும் எல்லாம் சேர்ந்து ஆணும், பெண்ணும் பழகுவதற்கு நிறைய வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறது. அவ்வகையில் பார்ப்பன இந்து மதம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை இந்த புதிய தலைமுறையினர் காதலின் மூலம் மீறுகின்றனர். அந்த மீறலின் அளவுக்கேற்ப காதலர்கள் தண்டிக்கப்படுகின்றனர்.

முக்கியமாக பெண் ‘உயர்ந்த’ சாதியாகவும், ஆண் ‘தாழ்ந்த’ சாதியாகவும் இருந்தால் இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் கண்டிப்பாக வன்முறையை மேற்கொள்கின்றன. பண்டைய இனக்குழுக்களின் கௌரவமாக பெண்ணைக் கருதுவதும், அவளது இரத்தத்தில் வேற்று இனம் கலந்து விடக்கூடாது என்ற ஆதிகாலக் காட்டுமிராண்டித்தனமும் இன்றும் தொடர்கிறது.

நிருபமா பேஸ்புக்கில் தனது அரசியல் கருத்துக்களையும், தனிப்பட்ட விசயங்களையும் பகிர்ந்து வந்தாள். ஊடக படிப்பு படிக்கும் போதே வேலைக்கு தெரிவு செய்யப்பட்டாள். குடும்பத்திலும் படித்தவர்கள்தான் இருக்கிறார்கள். அதில் ஒரு சகோதரர் உயிரியில் தொடர்பான முனைவர் ஆய்வு செய்து வந்தார். எனினும் இந்த படிப்பும், நவீன தொழில்நுட்பங்களும் என்ன மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது?

இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள இந்த ஆதிக்கசாதியினரின் அணிவகுப்பில்தான் பாரதிய ஜனதா தனது வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறது. காதலர் தினத்திற்கு இந்துமதவெறியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், காதலித்த ‘குற்றத்திற்காக’ காதலர்கள் கொலை செய்யப்படுவதும் வேறு வேறல்ல.

நிருபமா கொலை செய்யப்பட்டாலும் அவளது தந்தை வங்கி மேலாளராக பணியாற்றுபவர், தொலைக்காட்சி நேர்காணலில் சாதி மாறி காதலிப்பது தவறு என்று பச்சையாக பேசுகிறார். இத்தகைய பார்ப்பன ‘மேல்சாதி’ வெறியர்கள்தான் அதிகார வலைப்பின்னலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால் அன்றாட அரசியல் நடவடிக்கைகளில் இவர்கள் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை எப்படி நடத்துவார்கள்?

இளைய சமூகம் இணையம், செல்பேசி, ஷாப்பிங்மால் என்பதை மட்டும் நாகரிகத்தின் அளவுகோலாக வைத்து சாரமற்ற ஜடங்களாக உலாவருகிறது. அதனாலேயே காதலிப்பதில் இருக்கும் கவர்ச்சி அதற்கு தடையாக இருக்கும் பார்ப்பனிய சாதியமைப்பின் இழிவை எதிர்ப்பதில் இருப்பதில்லை. நிருபமாவிற்கும், ஆஷாவுக்கும் அத்தகைய பார்வை கொண்ட நட்பு வட்டம் இருந்திருந்தால் இந்தப் பாதக கொலைகளை தடுத்தி நிறுத்தியிருக்கலாம். ஆனால் இல்லையே?

பதிவுலகில் சாதியை வலிந்து எழுதுவதாக வினவின் மேல் சினம் கொள்ளும் கனவான்களின் கவனத்திற்கு இந்த செய்திகளை காணிக்கையாக்குகிறோம்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் !

41

vote-012சென்னைக் கேளம்பாக்கம் அருகிலுள்ள தையூர் எஸ்.எம்.கே. போம்ரா கல்லூரி மாணவி அனித்ரா விடுதியறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இம்மாணவியை சக மாணவர் ஒருவருடன் பேசியதற்காக அபராதம் விதித்தும் மிக இழிவான வசைமொழிகளால் திட்டியும் தற்கொலைக்குத் தூண்டியது கல்லூரி நிர்வாகமே. மாணவர்களின் புகாரை அடுத்து கல்லூரி சேர்மன் தலைமறைவாகியிருக்கிறார். இதற்கு மேல் அனித்ராவின் மரணத்தைக் குறித்து விரிவாக எழுத நான் புலனாய்வுப் பத்திரிகையாளனும் இல்லை, சம்பவம் நடந்த தமிழகத்திலும் வசிக்கவில்லை. இது குறித்த எனது சிந்தனைகளை மட்டும் இப்பதிவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மாணவர்களும் மாணவிகளும் பேசிக் கொள்ளக் கூடாது என்கிற தலிபானியச் சட்டம் இந்த ஒரு கல்லூரியில் மட்டும் இருப்பதில்லை. சுயநிதி இருபாலர் கல்லூரிகள் அனைத்திலும் இது எழுதப்படாத விதியாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொடூரத்தின் உச்சமாக அனித்ரா படித்த கல்லூரி சிசி டிவி கேமெராக்களை நிறுவி மாணவர்களைக் கண்காணித்திருக்கிறது. எதற்காக இப்படி ஒரு விதி என்று கேட்டால் “பெற்றவர்கள் பிள்ளைகளைப் படிக்கத்தான் அனுப்புகிறார்கள். அவர்களுடைய கல்வி சிறப்பாக அமைய நாங்கள் சில விஷயங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம்தான்” என்று பெற்றோர்கள் மீது மிகுந்த அக்கறையுள்ளது போலப் பேசுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.

புரையோடிப் போன சாதியக் கண்ணோட்டம் இன்னமும் பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது. இதைக் கொண்டே இவர்களது கல்லூரிகளைப் பெற்றோரிடையெ சந்தைப் படுத்துவதுதான் சுயநிதி இருபாலர் கல்லூரிகளின் நோக்கம். இந்தக் கல்லூரியில் சேர்ந்தாலே உங்கள் மகன் அல்லது மகள் அதிக மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றுவிடுவார்கள் என்பதான மாயையையும் இவர்கள் உருவாக்கத் தவறுவதில்லை. இது ஒன்றும் இவர்கள் உழைத்து உருவாக்குகிற நற்பெயர் அல்ல.

தத்தமது கல்லூரிகளில் நூறு சதவிகிதத் தேர்ச்சியைக் காட்டுவதற்காக தேர்வில் தோல்வியடையும் சாத்தியமுள்ள மாணவர்களைத் தேர்வு எழுத விடாமல் செய்கிற அக்கிரமமும் இது போன்ற பல சுயநிதிக் கல்லூரிகளில் நடைபெறுகிறது. தோல்வியடைய வாய்ப்பில்லாத அல்லது தோல்வியடையும் சாத்தியம் குறைவாக உள்ள மாணவர்களை மட்டும் தேர்வெழுத அனுமதிப்பதன் வாயிலாக நூறு விழுக்காடுகளோ அல்லது இவர்கள் எதிர்பார்க்கிற தேர்ச்சி விழுக்காடுகளோ எவ்வித முயற்சியுமில்லாமல் தானாகவே வந்துவிடும். இதனால் ஆசிரியர்கள் செய்கிற முயற்சிகளை நான் குறை சொல்லுகிறேன் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஆசிரியர்கள் அளிக்கிற மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் நிர்வாகம் செய்கிற இழிவான செயல் இது.

சுயநிதிக் கல்லூரிகள் பலவற்றிலும் ஒரு அம்சம் தவாறாமல் இடம்பெற்றிருக்கும். வாராந்திரத் தேர்வுகள். மாணவர் சேர்க்கையின் போது மாணவர்கள் பல்கலைக்கழகத் தேர்வில் சிரமப் படாமல் இருப்பதற்காக ஒரு பயிற்சிக்காக நடத்தப்படும் தேர்வுகளே இவை என்று சொல்லப்பட்டாலும், இத்தேர்வுகளுக்கான அசல் நோக்கம் என்பது வேறு. மாணவர்களில் தேர்ச்சியடையக் கூடிய மாணவன் யார் தோல்வியடையும் சாத்தியமுள்ள மாணவன் யார் என்பதைக் கண்டறியவே இந்த வாராந்திரத் தேர்வுகள்.

பல்கலைக்கழகத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகளைப் (ஹால் டிக்கெட்) பிணையாக வைத்துக் கொண்டு பணம் பறிக்கிற கயமையையும் பல சுயநிதிக் கல்லூரிகள் செய்து வருகின்றன. ப்ரேக்கேஜ் கட்டணம் என்று ஒரு வசூலிப்பார்கள். ஆய்வகங்களைப் பயன்படுத்துகிற வேதியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பாடப் பிரிவு மாணவர்களிடம் இக்கட்டணத்தை வசூலிப்பதிலாவது ஓரளவு நியாயம் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆய்வகங்களை எட்டிக் கூடப் பார்க்காத வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் மாணவர்களிடமும் இதே கட்டணத்தை அடாவடியாக வசூலித்தது நான் படித்த கல்லூரி (பொன்னையா ராமஜெயம் கல்லூரி. இப்போது PRIST (நிகர்நிலை) பல்கலைக் கழகமாக இருந்து தனது நிகர்நிலைத் தகுதிப்பாட்டை இழந்திருக்கிறது).

இவையல்லாமல் மாணவர் சேர்க்கையின் போதே பெற்றோர்களிடம் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகிறார்கள். என் மகனோ மகளோ அரசியல் செயல்பாடுகல் எதிலும் பங்கெடுக்க மாட்டார்கள், கல்லூரியைக் குறித்து ஊடகங்களுக்கு எவ்விதத் தகவல்களையும் கொடுக்க மாட்டார்கள் என்பவை உள்ளிட்ட கூறுகளைக் கொண்ட ஒப்பந்தம் அது. இது போன்ற ஒப்பந்தங்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்து தெரியாவில்லை. ஆனால் உளவியல் ரீதியாக மாணவர்களை, நம் பெற்றோரின் குடுமியை அவர்கள் கையில் கொடுத்திருக்கிறோம் என்ற அச்சுறுத்தலிலேயே வைத்திருக்கும் ஏற்பாடுதான் இது.

சுயநிதிக் கல்லூரிகள் எதிலும் மாணவர் தலைவர்களுக்கான தேர்தல்கள் எதுவும் நடைபெறுவதில்லை. எப்படித் தனியார் தொழிற்சாலைகள் தொழிற் சங்கம் அமைப்பதை எதிர்க்கின்றனவோ அவ்வாறே சுயநிதிக் கல்லூரிகளும் மாணவர் பேரவை அமைப்பதை அனுமதிப்பதில்லை. பேருக்கு ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண்கள் வாங்கக் கூடிய மாணவர்களாகப் பார்த்து வகுப்புத் தலைவராகவும் துணைத் தலைவராகவும் நியமனம் செய்து கல்லூரி மாணவர் பிரதிநிதிகளாக அறிவித்துக் கொள்வார்கள். நானும் அப்படி ஒரு செமஸ்டருக்குத் தலைவனாக இருந்து தொலைத்திருக்கிறேன். அந்தப் பதவியிலிருப்பவர்கள் நிர்வாகத்திற்குக் கங்காணிகளாக இருக்க வேண்டும் என்பது வாய்மொழியாகக் கூடச் சொல்லப் படாத விதி. படித்த காலத்தில் பாவம் புண்ணியம் என்பன போன்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கி இருந்ததால் சக மாணவர்கள் எவரையும் நான் காட்டிக் கொடுத்ததில்லை.

என்ன விதிமீறல் நடக்கும் எதைக் கொண்டு அபராதம் விதிக்கலாம் என்று காத்திருந்து அபராதம் விதிப்பார்களோ என்ற அச்சத்துடனேயே மாணவர்கள் இருக்க வேண்டியிருக்கும். கல்லூரி விதிகளை ஒரு புத்தகமாக அச்சடித்துத் தருவார்கள். அதில் இருப்பவை அனைத்தும் எல்லா கல்லூரிகளிலும் பின்பற்றப் படுகிற பொதுவான மற்றும் பார்வைக்கு நியாயமாகப் படுகிற விதிகள்தான். ஆனால் அபராதம் போடுவது, பெற்றோரை வரவழைப்பது போன்ற விஷயங்கள் பெரும்பாலான சமயங்களில் அந்தப் புத்தகத்தில் சொல்லப் படாத ஒரு செயலுக்காகவே நடைபெறும். இந்த புத்தகத்தில் இல்லாத சட்ட விதிகளைக் காட்டித்தான் மாணவர்களின் நியாயமான தேவைகள் அல்லது விருப்பங்கள் கூட மறுக்கப்படும். உதாரணமாக நான் படித்த கல்லூரியில் நடந்த இரு சம்பவங்களையும் அதை எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையாக எப்படி முறியடித்தோம் என்பதைக் குறித்து சொல்லுகிறேன்.

மூண்றாம் ஆண்டு இறுதியில் கடைசி வகுப்பு நாளில் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக என் நண்பன் தனது கேமெராவை எடுத்து வந்திருந்தான். வகுப்பறையில் நுழைந்து அடாவடியாகக் கேமெராவைப் பறித்துச் சென்றார் நிர்வாகப் பணியாளர் ஒருவர். கேமெரா எடுத்து வரக் கூடாது என்பது கல்லூரி விதிகளில் இருப்பதாகச் சொல்லிவிட்டு கேமெராவுடன் வகுப்பிலிருந்து வெளியேறிவிட்டார். ஹால் டிக்கெட் கைக்கு வராத நிலையிலும் அத்தனை மாணவர்களும் ஒற்றுமையாகக் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்டோம். கல்லூரி விதிகளடங்கிய நூலில் கேமெரா கருவி குறித்த எந்த விதியும் இல்லாததைச் சுட்டிக்காட்டிய பிறகு எங்கள் தரப்பு நியாயத்தை முதல்வர் ஏற்றுக் கொண்டு கேமெரா திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்தார். முதல்வர் அறையிலேயே கொடுக்க முற்பட்ட அந்த சிப்பந்தியிடம் எங்கே இருந்து பறிமுதல் செய்தீர்களோ அங்கேயே வந்து கொடுங்கள் என்று கூறிவிட்டு வகுப்பிற்கு வந்துவிட்டோம். எங்கள் நிபந்தனை நிறைவேறியது.

சக மாணவன் ஒருவனின் தந்தை மறைந்த போது துக்கம் கேட்பதற்காகவும் உதவி செய்யவும் வகுப்பு மாணவர்கள் அனைவரும் செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டோம். வருகைப் பதிவு குறைந்து விடக் கூடாதே என்பதற்காகவே அவர்களிடம் அனுமதி கோரினோம். சூழ்நிலையின் தீவிரத்தை உணராமல் அனுமதி மறுத்தது நிர்வாகம். மாணவர்கள் அத்தனை பேரும் ஒரு நாள் வருகைப் பதிவைக் குறித்து கவலைப் படாமல் அந்த மாணவனுக்கு உதவி செய்யச் சென்றோம். மறுநாள் “எந்த சினிமாவுக்குப் போனிங்க” என்ற துறைத் தலைவரின் கேலியையும் எதிர்கொள்ள நேர்ந்த்து. மனிதாபிமானமுள்ள மற்ற பேராசிரியர்கள் அவர்களது வகுப்புகளுக்கு வருகைப் பதிவளித்தனர். இவை ஏதோ நான் தலைமை ஏற்று நடத்தியவை என்ற பெருமைக்காகச் சொல்லவில்லை. சுயநிதிக் கல்லூரியில் படிக்கிற மாணவர்கள் நியாயமான தேவைகளுக்குக் கூட எத்தனை போராட வேண்டியிருக்கும் என்பதை விளக்கவே இவற்றைச் சொன்னேன்.

பிள்ளைகளைச் சுயநிதிக் கல்லூரிகளில் சேர்க்கப் போகும் பெற்றோர்கள் முதலில் அடகு வைப்பது தங்களினதும், பிள்ளைகளினதுமான சுயமரியாதையைத்தான். ரிட்டையர்மெண்ட்டில் வரப் போகிற பிராவிடண்ட் ஃபண்டு போல கல்வியையும் ஒரு முதலீடாகப் பார்க்கத் தொடங்கிய அல்லது பிரச்சாரம் செய்யத் தொடங்கிய காரணத்தால் தான் சுயமரியாதையை சில ஆண்டுகளுக்குத் தள்ளிவைத்தால் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர் பெற்றோரும் மாணவர்களும். தயை கூர்ந்து பெற்றோர்களோ, மாணவப் பருவத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு சுயமரியாதையோடும் சமத்துவத்தோடும் வாழ்வதற்கான சுதந்திரத்தையாவது விட்டு வையுங்கள்.

_______________________________________________

விஜய் கோபால்சாமி

நண்பர் விஜய் கோபால்சாமி இரண்டு ஆண்டுகளாய் பதிவு எழுதி வருகிறார் இவரது வலைப்பூக்கள் http://vijaygopalswamihyd.blogspot.com மற்றும் http://vijaygopalswami.wordpress.com

________________________________________________

[பின்னூட்டமிடும் நண்பர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் படித்தவர்களாய் இருந்தால் உங்கள் கல்லூரிகளில் இருந்த இருக்கிற இது போன்ற தலிபானிய விதிகளைக் குறித்துத் தெரிவியுங்கள். நன்றி]

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மங்களூர் விபத்தும் ஏர்இந்தியாவின் சர்வாதிகாரமும் !!


vote-012இந்த பதிவை எழுதும் முன்பாக பின்னூட்டம் எழுதப் போகும் வாசகர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவெனில் சிலபல ஆயிரங்கள்  சம்பளம் பெறும் விமானப்பணியாளர்களைப் பற்றி எழுதுவதற்கு பதிலாக பஞ்சாலைத் தொழிலாளி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள தொழிற்சாலை தொழிலாளி, முறைசாராத் தொழிலாளிகளின் சிரமங்களைப்பற்றி எழுதலாமே என நீங்கள் கேட்கலாம்.

84 ஆண்டுகளுக்கு முன்பாக தொழிலாளி வர்க்கம் பல போராட்டங்களை நடத்தி, இழப்புகளை சந்தித்து, இரத்தம் சிந்தி பெற்ற “தொழிலாளர் நலச்சட்டங்கள்” என்பதும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, சங்கம் அமைத்து உரிமைகளை கோரும் உரிமை ஆகியவையும் இன்று ஏர்இந்தியா விசயத்தில் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது. இது இந்தியா முழுவதும் பரவும் அபாயம் உள்ளது என்பதால்தான் இந்த கட்டுரை எழுதப்படுகிறது என்பதை அறிந்து கொண்டு பின்னர் பின்னூட்டத்திற்கு தயாராகுங்கள்

இந்த ஏர் இந்தியா வேலைநிறுத்தம் குறித்த செய்திகள் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பத்தரிகையின் இணைய தளத்தில் படிக்கும் போது  பின்னூட்டங்களில் பலர் இந்த வேலை நிறுத்தம் தேவையற்றது என எழுதியிருந்தனர். அதன் நடுவில் ஒருவர் எழுதியிருந்த பின்னூட்டத்தில் “எனது தந்தை விமானியாக பணியாற்றுகிறார் – பிரச்சனையான நாணயத்தின் ஒரு பக்கத்தினை மட்டும் பார்க்காமல் அதன் மறு பக்கத்தையும் வாசகர்கள் பார்க்க வேண்டும் – எனது தந்தை எனக்கு நினைவு தெரிந்து 12 லிருந்து 14 மணி நேர பணிபுரிந்துவிட்டு திரும்பி வருவார்.  அவர்களுக்கும் யாரேனும் விடுப்பு எடுத்தால் பணிச்சுமை அதிகமாகி ஓவர்டியூட்டி என்பது வரும்- தொழில் ரீதியாக பல சிரமங்களை அடக்குமுறைகளை வீட்டில் எங்களுடன் பகிர்ந்து கொள்வார்” என எழுதப்பட்டிருந்தது.

பல வருடங்களுக்கு முன்னால் வெள்ளித்திரையில் ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற படத்தில் இளவரசியாக வரும் கொடுங்கோலாட்சி நாயகி ஆயிரம் பேர் தலையைச் சீவுவதாக பார்த்திருக்கிறோம்.  கடந்த 2001ம் ஆண்டு பாசிச ஜெயலலிதா முதல்வராக இருந்த போது லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களை ‘டிஸ்மிஸ்’ என்று கொத்துக் கொத்தாக கோட்டையிலிருந்து வெளியே வீசியது நினைவிருக்கலாம்.  அதில் தலையிட்ட உச்சநீதிமன்றம் (டி.கே.ரங்கராஜன் -எதிர்- தமிழ்நாடு அரசு என்ற வழக்கில்) அரசு ஊழியர்களுக்கு “வேலை நிறுத்த உரிமை இல்லை” என்றது.  அது ஒரு வகை நீதிமன்ற பாசிசம். (ம.க.இ.க. வின் வெளியீடாக நீதிமன்ற பாசிசம் குறித்து விரிவாக பல ஆண்டுகளுக்கு முன்னரே புத்தகமாக வெளிவந்திருக்கிறது.)

இருப்பினும் இன்றைய நிலையில் குஷ்பு வழக்கு, ரிலையன்ஸ் சகோதரர்களின் வழக்கு போன்ற ‘அரசியலமைப்புச் சட்டச் சிக்கலெழும்’ (Is it constitutionally important one?!..) வழக்குகளில் விரைவு தீர்ப்பு தவிர மற்றவற்றில் இல்லை என்பது உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஒரு இடுகை எழுத ஆவல் – அதை அடுத்த பதிவில் எழுதுகிறேன் – தற்போது ஏர் இந்தியா பிரச்சனைக்கு வருவோம்

அந்த நீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டி இன்று வரை தொழிற்சங்க சம்மேளனங்கள் எதுவும் மனுச்செய்யவில்லை. வேலை நிறுத்த உரிமை இல்லை என்று ஜெ உத்திரவிட்டவுடன் எதிர்ப்பு குரல் கொடுத்த தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (திமுக), அரசு ஊழியர்களுக்காக வாதாடிய ப.சிதம்பரம் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் இரண்டும் தற்போது ஆட்சியில் இருக்கின்றன. எனினும் தொழிற்தாவாச் சட்ட சரத்திற்கு (மத்திய சட்டம்) எதிராக மாநில அரசு சட்டம் கொண்டு வர முடியாது – ஜெ கொண்டுவந்தது செல்லாது என சட்டத்திருத்தம் (தேர்தல் வாக்குறுதி கொடுத்தவர்கள்) கொண்டுவர இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  விளைவு இன்று ஏர் இந்தியா சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் அரவிந்த ஜாதவ் பேனாவையே வாளாக்கி தொழிலாளர்களின் தலையை சீவிக்கொண்டிருக்கிறார்.

நடந்தது என்ன?

ஒருபுறம் இந்த விபத்து குறித்து உயிரிழப்பு குறித்து நாடே வருத்தத்தில் இருக்கும் போது மற்றொரு தடத்தில் செல்ல வேண்டிய விமானத்தை சான்றளிக்க ஏர் இந்தியா பொறியாளருக்கு பதிலாக தனியார் நிறுவன பொறியாளரை பயன்படுத்தியதை ஏர் இந்தியா ஊழியர்கள் எதிர்த்தனர்.

ஆதாரம் ( http://livestreamingx.com/air-india-strike-2010-story-behind-air-india-strike-05252583.html ).

இதை உடனடியாக பொறியாளர்கள் சங்கம் நிர்வாகத்தின் கவனத்திற்கு புகார் மனுவாக அளிக்கிறது.  ஆனால் நிர்வாகம் “எங்களிடம் தெரிவிப்பதற்கு முன்பாக செய்தி ஊடகங்களில் இந்த தகவல் எவ்வாறு வந்தது?” என கொதிக்கின்றனர்.  அதற்கு தொழிற்சங்க தரப்பிலிருந்து தொழிற்சங்க நிர்வாகி என்ற அடிப்படையில் நடந்த விபரத்தை மக்கள் அறியச் செய்ய செய்தி ஊடகங்களுக்கு தெரிவிப்பதில் தவறொன்றுமில்லை என தெரிவிக்கிறார்.  அன்று இரவே தொழிலாளர் எவரும் எந்த செய்தி ஊடகத்திற்கும் எதையும் சொல்லக்கூடாது என்ற தடை சுற்றறிக்கை போடப் படுவதுடன் தொழிற்சங்கத்தின் தலைவர்கள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

ஒருபுறம் பல்லாண்டு அனுபவம் வாய்ந்த விமான ஓட்டி, பணிப்பெண்கள் உள்ளிட்ட தனது சக ஊழியர்களுடன் பல உயிர்கள் மாய்க்கப்பட்டிருக்கிறது என்கிற உணர்வில் வேதனையுற்றிருந்த தொழிலாளர்களிடையே இந்த தற்காலிக வேலை நீக்க நடவடிக்கை கோபத்தை தூண்ட உடனடி வேலைநிறுத்தத்தில் சுமார் 20000 பேர் ஈடுபடுகின்றனர் (மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 32000).   ஏர் இந்தியா இரண்டு மூன்று கம்பெனிகளாக கம்பெனி சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிற மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.  தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு கட்டுப்பட்டது என்பதுடன்- மத்திய பொதுத்துறை என்ற அடிப்படையில் முன்மாதிரி நிர்வாகியாக (model employer) செயல்பட வேண்டிய பொறுப்பும் உள்ள நிறுவனம்.

இவைகளை ஒன்றுபடுத்தி செயல்படுகிற நாசில் (நேஷ‌னல் ஏவியேஷ‌ன் கம்பெனி ஆப் இந்தியா) என்கிற நிறுவனம் சார்பில் மறுநாள் காலை மும்பாய்- மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களில் இந்த வேலை நிறுத்தம் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.  அதே சமயம் தொழிற்தாவாச் சட்டப்படி முன்னறிவிப்பு கொடுக்கப்படாத வேலைநிறுத்தம் என்ற போதிலும் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பங்கெடுத்திருப்பதால் சமரச நடவடிக்கையில் ஈடுபட மத்திய தொழிலாளர் நல ஆணையாளர் திரு முகோபாத்யாயா உடனடியாக இதை ஒரு தாவாவாக விசாரணைக்கு எடுக்கிறார்.  நீதிமன்றம் அன்றே விசாரித்து “நடைபெறும் வேலைநிறுத்தம் சட்ட விரோத வேலை நிறுத்தம், எனவே சமரச அலுவலர் முன்னிலையில் தாவாவை தீர்த்துக் கொள்ள வேண்டும்- அனைவரும் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும்” என்கிறது.

தொழிலாளர் ஆணையரும் அனைவரும் வேலைக்குச் செல்லுங்கள் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என அறிவுரை கூறியதை ஏற்று தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்கிறது.  இந்நிலையில் இரண்டு தினங்கள் அம்பானிகள், டாட்டாக்கள், அமைச்சர் பெருமக்கள், மேட்டுக் குடியினர் தவித்துப் போனதால் வேலை நிறுத்தத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் பேட்டி கொடுக்கிறார்.  உடனே ஏர் இந்தியா நிர்வாக இயக்குனர் அரவிந் ஜாதவ் தன்னுடைய பேனாவையே கூர்வாளாக மாற்றி 17 பேர்கள் பணிநீக்கம், 24 பேர்கள் தற்காலிக பணிநீக்கம் என்கிறார்.

தொழிலாளர் ஆணையர் திரு முகோபாத்யாயா வியந்து போய் “நான் சமரச நடவடிக்கை துவக்கியிருக்கும் போது ஏன் இப்படி செய்கிறார்கள்” என செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக 29 மே இந்து நாளிதழில் செய்தி வந்துள்ளது.  மறு தினத்திற்குள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் மேலும் பலர் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.  இரண்டு தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.  தொழிற்சங்க அலுவலகம் இரண்டிற்கும் சீல் வைக்கப்படுகிறது.   இங்குதான் நாம் சோனியா சாவி கொடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் மன்மோகன் அரசில் இருக்கிறோமா? அல்லது திடீரென ஹிட்லர் போன்ற சர்வாதிகார நாடாக மாறிவிட்டதா என்ற வியப்பு மேலிடுகிறது.

ஏற்கனவே தொழிலாளர் ஆணையர் தாவா நடவடிக்கை தொடங்கி விட்டதால் பழிவாங்கும் நடவடிக்கை எது மேற்கொண்டாலும் அது தொழிலாளர் விரோத நடவடிக்கை என தொழிற்தாவாச் சட்டம் வகைப்படுத்துகிறது.  மேலதிகமாக தொழிற்சங்கங்களிலிருந்து முறையாக மீண்டும் ஒரு 14 நாட்கள் முன்னறிவிப்பாக வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்கப்படுகிறது.  அந்த அறிவிப்பு தொழிலாளர் ஆணையரை சென்று சேர்ந்த நிமிடம் முதல் சமரச நடவடிக்கை துவங்கியதாகவே கொள்ள வேண்டும் என்பது சட்டத்தி்ன் நிலைப்பாடு.

தொழிலாளர் நலச்சட்டங்கள் அமுலில் இருக்கிற நிறுவனங்களில் வேலைநீக்கம் செய்வதென்றால் குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்க வேண்டும். பதில் தர சந்தர்ப்பம் தர வேண்டும். பதில் திருப்தியளிக்காவிட்டால் உள்துறை விசாரணை நடத்த வேண்டும். விசாரித்தபின் விசாரணை அலுவலர் தரும் முடிவின் மீது குற்றம் சாட்டப்பட்ட தொழிலாளி கருத்து தெரிவிக்க உரிமை அளிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் வேலை நீக்கம் என்ற தண்டனை தர உத்தேசித்தால் அந்த உத்தேச தண்டனை குறித்து காரணம் காட்டக் கோரும் அறிவிப்பு கொடுக்கப் பட வேண்டும். அதற்கு பதில் பெற்றபின் அதுவும் திருப்தியளிக்கவில்லை என்றால்தான் வேலை நீக்கம் செய்ய வேண்டும்.

அதுவும் பல தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தாவா நிலுவையிலிருக்கிறபோது வேலை நீக்கம் போன்ற நடவடிக்கை மேற்கொண்டால் தொழிலாளர் ஆணையரின் ஒப்புதல் பெறவேண்டும்.  இவையெல்லாம் நான் சொல்லவில்லை பல ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்ட வரலாற்றிற்கு பின்னர் இயற்றப்பட்ட 1947ம் ஆண்டு தொழிற்தாவாச்சட்டம் சொல்கிறது.  (இந்த சட்டங்கள் எவையும் எமக்கு பொருந்தக் கூடாது என இரண்டு தினங்களுக்கு ஒருமுறை கலைஞருடனும், துணை முதல்வர் ஸ்டாலினுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடும் SEZ புதிய பொருளாதார மண்டலத்தில் தொழிற்சாலைகள் துவங்கும் பன்னாட்டு கம்பெனிகள் கூறி வருகின்றது என்பது நிதர்சனமான உண்மை)

இது ஒருபுறமிருக்க வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கக் கூடாது என “சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும்” என எண்ணுவதைப் போன்று தொழிற்சங்க அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்துவிட்டால் தொழிலாளர்கள் அடங்கிவிடுவார்கள் என சர்வாதிகாரி அரவிந் ஜாதவ் எண்ணுவது எங்கணம் என்பது நமக்கு புரியவில்லை.  இந்திய தொழிற்சங்க சட்டத்தில் அங்கீகாரம் என்பதற்கு தொழிலாளர் ஆணையர் தலையிட்டு தொழிற்சங்கங்களுக்கிடையே ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை தொழிலாளர்கள் தேர்வு செய்யும் தொழிற்சங்கத்திற்கு நிர்வாக அங்கீகாரம் வழங்கலாம் என்றுள்ளது.

ஒரு தொழிற்சங்கத்திற்கு பதிவு செய்யும் அதிகாரம் படைத்த தொழிலாளர் துணை ஆணையர் அந்த பதிவை ரத்து செய்ய முழு உரிமை உள்ளது என்ற போதிலும் இரண்டு மாத முன்னறிவிப்பு கொடுத்து அதன் மீது பதில் பெற்றபின்னர்தான் காரண காரியங்களை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும் என தொழிற்சங்க சட்டம் கூறுகிறது.  அதேபோல் அளிக்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமெனில் முன்னறிவிப்பு கொடுத்து சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளாமல் இது போன்ற சர்வாதிகாரப் போக்கினை அனுமதித்தால் நாளை எந்த தொழிற்சாலையிலும் தொழிற்சங்கங்களே இருக்காது.  தொழிற்சங்கங்களே இருக்கக் கூடாது, அரசுத் துறையே இருக்கக் கூடாது, எல்லாம் தனியார் மயமாக வேண்டும், தனது குறையை முறையிடும் வாய்ப்பு தொழிலாளிக்கு இருக்கக் கூடாது என்ற மறு காலனியாதிக்க நடவடிக்கைகளின் மறுபதிப்புத்தான் அரசுத்துறையான ஏர் இந்தியாவில் இன்று அரங்கேறியிருக்கிறது.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் சுமார் 32000 பேர் பணிபுரியும் ஏர் இந்தியாவில் 14 தொழிற்சங்கங்கள் இருக்கிறதாம்.  இது போல் ஆலைகள் தோறும் பணிப்பிரிவு, அரசியல் சார்பு வாரியாக தொழிலாளர்கள் பிளவுபட்டு நிற்பதுதான் இது போன்ற சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு துணைபோகும் விதமாக அமைந்துவிடுகிறது.  இந்த செய்தியின்மீது தொழிற்சங்க தலைவர்களின் கண்டன அறிக்கைகள் கூட இல்லையென்பது வேதனையான ஒன்று.  இந்திய தொழிலாளி வர்க்கம் ஓட்டுக் கட்சி அரசியல் சார்புத்தன்மையை விட்டு வெளியேறி புரட்சிகர இயக்கங்களின் தலைமையில் ஒரு ஆலைக்கு ஒரு தொழிற்சங்கம் என்று ஒன்றுபடுவதே இன்றைய காலத்தின் கட்டாயம்.

ஏர்இந்தியா போன்ற மேல்தட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கே கதி இதுதானென்றால் மற்ற சாதாரண நிறுவனங்களின் நிலைமை பற்றி விரித்துரைக்கத் தேவையில்லை. மங்களூர் விபத்தின் உண்மையை உலகுக்கு சொன்னார்கள் என்ற காரணத்திற்காகவே இந்த சர்வாதிகார பணிநீக்கம் நடக்கிறது. இதை எதிர்த்து ஏர் இந்தியா ஊழியர்கள் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. நாட்டிலுள்ள தொழிலாளர்கள் அனைவரும் மறுகாலனியாக்க கொடுமையை முறியடிக்க ஒன்றிணைந்து போராடினால்தான் இந்த போக்கை முறியடிக்க முடியும். அந்த அரசியலை இந்திய தொழிலாளி வர்க்கம் என்று கையிலெடுக்கப் போகிறது?

___________________________________________

– சித்திரகுப்தன்.

___________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பாலாவின் ‘ஈழம் ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு – அறிமுகம்

12

vote-012இனப்படுகொலை வரலாற்றில் தமிழன் பெயரும் இடம்பெறும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சம உரிமையும், சக வாழ்வும் கேட்டுப் போராடிய ஈழத் தமிழினத்துக்கு ஆயுதவழிப் போராட்டம் என்பது வேறு வழியற்ற இறுதித் தேர்வு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் காரணம் அல்ல, அவர்கள் விளைவுகள். ஒடுக்குமுறைக்கு எதிரான விளைவுகள். அந்த உரிமைச் சமரின் பின்னுள்ள நியாயங்களை உலகம் புரிந்துகொள்ளும் முன்னரே நந்திக்கடலோரம் போராட்டம் முடித்து வைக்கப்பட்டுவிட்டது. பொருளாதார அதிகாரத்தை மைய அச்சாகக் கொண்டு கட்டமைக்கப்படும் நவீன பொருளாதாரத்தில் அனைத்துமே சந்தையாகத்தான் பார்க்கப்படுகின்றது. சந்தை வியாபாரத்துக்கு எப்போதுமே கூச்சல்கள் பிடிப்பது இல்லை. எதிர்ப்பியக்கங்களின் போராட்டங்கள் அற்ற சந்தைதான் நிறுவனங்களுக்குத் தேவை. தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டப் பின்னரான இலங்கை இப்போது எதிர்ப்புகளும், கூச்சல்களும் அற்ற அமைதியான சந்தையாக இருக்கிறது. அதனால்தான் இந்திய பெரு முதலாளிகள் இலங்கையை நோக்கி படை எடுக்கின்றனர்.

ஈழ யுத்தத்தை நடத்தியதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்தது என்றால், அதை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய சாத்தியம் தமிழ்நாட்டுக்கே இருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய அரசியல் மற்றும் மக்கள் செல்வாக்கு இருந்தது. ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே ஈழத்தின் இன அழிப்பை தங்களின் சுய லாபங்களுக்கு மடைமாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். இத்தகைய கையாலாகத்தனத்தை அம்பலப்படுத்துவதில் தொடங்குகின்றன பாலாவின் கார்ட்டூன்கள். தமிழக அரசியல்வாதிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் இருந்த பச்சை சந்தர்ப்பவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் இந்த கார்ட்டூன் கோடுகள் தோலுரிக்கின்றன.

‘ஈழம் என்னும் ஆன்மாவை மரணமடைய வைத்தது இவர்தான்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த மக்கள் படுகொலையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள், எழுத்தாளர்கள்  எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கை நனைத்துள்ளனர். மக்களின் மறதியால் யாவற்றையும் கடந்து சென்றுவிடலாம் என நினைக்கும் இந்த நேர்மையற்றவர்களை மக்களின் முன்பு அம்பலப்படுத்த இத்தைய தொகுப்புகள் உதவக் கூடியவை. எழுத்துக்களால் அல்லாது கோடுகளால் ஒரு குறிப்பான பிரச்னையை அணுகும் முதல் தமிழ் தொகுப்பு என்ற அடிப்படையில் இது கூடுதல் கவனம் பெறக் கூடியது. பாலாவின் ‘ஈழம்: ஆன்மாவின் மரணம்’ என்ற இந்த தொகுப்பின் அறிமுக மற்றும் விமர்சனக் கூட்டம் வெள்ளி 11 -6-10 அன்று மாலை 6 மணிக்கு இக்ஸா மையத்தில் (கன்னிமரா நூலகம் எதிரே, 107 பாந்தியன் சாலை, சென்னை-8) நடைபெறவிருக்கிறது. அனைவரும் பங்கேற்கும்படி அன்போடு அழைக்கிறோம்!

வரவேற்புரை – வெங்கட பிரகாஷ்
கருத்துரை – தமிழருவி மணியன், பாமரன், வீர சந்தானம், இயக்குனர் ராம்
நன்றியுரை – ப்ரியா, கீற்று.காம்

(மின்னஞ்சலில் செய்தி/படங்கள் அனுப்பிய நண்பருக்கு நன்றி)

vote-012

தொடர்புடைய பதிவுகள்

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!


vote-012அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை – நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவையும் உடனே தூக்கில் போடச்சொல்லி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திலிருந்து அத்வானி, ஜோஷி முதலான சங்கப்பரிவாரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு – தன்னுடைய தங்கையை காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞனையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக் கொன்ற தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு உச்சநீதி மன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து. இத்தீர்ப்புகளுக்கிடையில் இழையோடும் ஒற்றுமை, இந்நாட்டின் நீதித்துறை, அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பொதுக்கருத்து ஆகியவையனைத்தையும் ஆளுகின்ற பொது உளவியலை, பளிச்சென்று காட்டுகிறது.

மும்பைத் தாக்குதல் வழக்கில், கசாபுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்துக்குரியதல்ல. “தானே முன்வந்து முஜாகிதீன் படையில் இணைந்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டது, சதித் திட்டம் தீட்டியது, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தது, அப்பாவிகளைக் கொலை செய்தது ஆகிய குற்றங்களை கசாப் இழைத்திருப்பதாகவும், அவன் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதால், தூக்கு தண்டனை விதிப்பதாகவும்” அத்தீர்ப்பு கூறுகிறது.

அஜ்மல் கசாப் செய்த கொலைகளுக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் மறுக்க முடியாத வீடியோ ஆதாரங்கள் இருப்பதைப் போலவே, கசாப் போன்ற கருவிகள் உருவாகக் காரணமாக இருக்கும் புறவயமான அரசியல் சூழ்நிலைகளுக்கும் மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 80-களில் பாகிஸ்தானில் அமெரிக்கா உருவாக்கிய இசுலாமியத் தீவிரவாதம், அதே காலகட்டத்தில் இந்தியாவில் தலைவிரித்தாடிய பார்ப்பன பாசிசம், இந்திய அரசு காஷ்மீரில் நடத்தும் இராணுவ ஒடுக்குமுறை, தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக இளைஞர்களை இசுலாமியத் தீவிரவாதத்துக்கு ஆட்படுத்தி இந்தியாவின் மீது ஏவிவிடும் பாகிஸ்தான் உளவுத்துறையின் நடவடிக்கைகள் – என்ற இந்த அரசியல் பின்புலத்தில் அகப்பட்டுக்கொண்ட பாகிஸ்தானின் ஏதோ ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் – அஜ்மல் கசாப். அவன் இசுலாமியத் தீவிரவாதத்தின் கையில் அகப்பட்ட இன்னொரு கருவி.

எந்தக் குற்றங்களுக்காக கசாப்பைத் தூக்குமேடைக்கு அனுப்பவேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறதோ, அந்தக் குற்றத்தின் மூலவர்களான பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்துடன் பிரதமர் மன்மோகன் சிங்கும், தாஜ் பாலஸ் மீதான தாக்குதலைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்த இந்தியத் தரகு முதலாளிகளும் கைகுலுக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானையும் உள்ளடக்கிய தெற்காசிய சுதந்திர வர்த்தக வலையம்தான் இந்திய ஆளும் வர்க்கங்களின் கனவு என்பதால், பாகிஸ்தான் அரசு மனம் திருந்திவிடும் என்று மன்மோகன் சிங் நம்புகிறார். கசாப் மனம் திருந்த வாய்ப்பே இல்லை என்று மரணதண்டனை விதிக்கிறது நீதிமன்றம்.

கசாபுக்குத் தூக்கு என்று தீர்ப்பு வந்தவுடனேயே, “அப்சல் குருவையும் உடனே தூக்கிலிடு” என்று பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியது. இந்து தேசவெறிப் பொதுக்கருத்தை அரவணைத்துக் கொள்வதற்காக, உடனே அதனை வழிமொழிந்தார், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த திக்விஜய் சிங். மன்மோகன் சிங்கோ ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று வழுக்கினார். அப்சல் குரு வழக்கில் சட்டம் தன் கடமையை எப்படிச் செய்தது?

ஆகஸ்டு, 2005-இல் அப்சல் குருவின் மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதி மன்றம், போலீசு சமர்ப்பித்த அப்சல் குருவின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஒரு சாட்சியமாகவே ஏற்க முடியாது என்பதையும், குற்றவாளிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டது. எனினும், “மரண தண்டனை விதிக்கப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடையும்” என்று கூறி அப்சல் குருவின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

எந்த வாக்குமூலத்தை டெல்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் நிராகரித்தனவோ, (பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில்தான் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் தொடுத்தோம் என்று அப்சல் குரு ஒப்புக் கொண்டதாக போலீசு தாக்கல் செய்த வாக்குமூலம்) அதையே அசைக்கமுடியாத ஆதாரமாகக் காட்டி, 5 இலட்சம் துருப்புகளை எல்லையில் கொண்டு போ நிறுத்தி, டிசம்பர் 2001-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போர் ஆயத்தங்களைச் செய்தது பாரதிய ஜனதா அரசு. நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்ற பெயரில் சங்கப்பரிவாரம் நடத்திய இந்தக் கபட நாடகத்தில், நாடாளுமன்றத்துக்குக் காவல் நின்ற பாதுகாப்புப் படையினர் பலர் கொல்லப்பட்டது மட்டுமின்றி, உறைபனிக் குளிரில் நோக்கமின்றி நிறுத்தப்பட்ட பல இராணுவச் சிப்பாய்கள் மன அழுத்தத்தால் தற்கொலையும் செய்து கொண்டனர். நூறு கோடி மக்களை ஏமாற்றி, துணைக்கண்டத்தையே ஒரு அணு ஆயுதப்போரின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்திய ‘நாடாளுமன்றத் தாக்குதல்’ என்ற மோசடி நாடகத்தை அம்பலப்படுத்துவதற்கு காங்கிரசு முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான ஓட்டுக்கட்சிகள் யாரும் இன்று வரை தயாராக இல்லை. இதனை அம்பலப்படுத்தக்கூடிய ஒரே நேரடி சாட்சியை ஒழித்துக் கட்டுவதற்காக, “அப்சல் குருவை உடனே தூக்கிலிட வேண்டும்” என்று இந்து தேசத்தின் ‘மனச்சாட்சி’யின் பெயரால் மிரட்டு கிறது, பாரதிய ஜனதா.

பாபர் மசூதியை இடிப்பதற்கு சதித்திட்டம் தீட்டியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து அத்வானி, ஜோஷி, வினய் கட்யார் போன்ற சதிகாரர்கள் அனைவரையும் விடுவித்து, 2003-இல் பைசாபாத் அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தற்போது ஆமோதித்திருக்கிறது அலகாபாத் உயர்நீதி மன்றம். 1992 முதலே மசூதி இடிப்பு தொடர்பான வழக்குகள் திட்டமிட்டே ஒரு நீதிமன்றத்திலிருந்து இன்னொரு நீதிமன்றத்துக்குப் பந்தாடப்பட்டன. வழக்கை விசாரிக்கும் புலனாவுத் துறைகள் மாற்றப்பட்டன. அத்வானி வகையறாவை தப்ப வைக்கும் நோக்கத்துடன், தொழில்நுட்பத் தவறுகள் திட்டமிட்டே இழைக்கப்பட்டன.

இந்த 17 ஆண்டுகளில் டில்லியிலும் உ.பி.யிலும் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., காங்., ஐ.முன்னணி, முலாயம், மாயாவதி ஆகிய அனைவரும் அத்வானி உள்ளிட்ட சங்கப்பரிவாரத் தலைவர்களை விடுவிப்பதற்கு உதவியிருக்கின்றனர். இவை அனைத்தின் இறுதி விளைவுதான் தற்போதைய தீர்ப்பு.

பாபர் மசூதி இடிப்பு என்பது, மும்பை தாஜ் பேலஸ் மீதான தாக்குதலைப் போல இரகசியச் சதித்திட்டம் தீட்டி, திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.  வரலாற்றுப் புரட்டுகளையும் பொய்களையும் அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன பாசிசக் கும்பல் நாடு முழுவதும் திட்டமிட்டே அரங்கேற்றிய ஒரு அரசியல் சதியின் இறுதிக் காட்சிதான் பாபர் மசூதி இடிப்பு. அது இறுதிக் காட்சியும் அல்ல என்பதை அதனைத் தொடர்ந்து வந்த மும்பை, குஜராத் படுகொலைகள் நிரூபித்தன. ரைஷ்டாக் தீவைப்பில் தொடங்கி, ஆக்கிரமிப்புகள், யூதப் படுகொலைகள் போன்ற பல சதிகளுக்கும் குற்றங்களுக்கும் அடிப்படையாக இருந்தது ஹிட்லரின் நாஜிசம். அந்த அரசியலை விட்டுவிட்டு, யூதப் படுகொலையை மட்டும் சதித்திட்டமாக யாரும் சித்தரிப்பதில்லை. ஆனால், இந்து தேசியம் எனும் பாசிச கிரிமினல் அரசியலைச் சட்டபூர்வமானதாக அங்கீகரித்துக்கொண்டு, மசூதி இடிப்பை மட்டும் தனியொரு சதித் திட்டமாகக் காட்டும் பித்தலாட்டம்தான் அயோத்தி வழக்கு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. ஓட்டுக்கட்சிகள், ஊடகங்கள், அதிகார வர்க்கம், நீதித்துறை போன்ற இந்திய ஜனநாயகத்தின் எல்லாத் தூண்களாலும் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் இந்தப் பித்தலாட்டம், அதன் தர்க்க ரீதியான முடிவை எட்டியிருக்கிறது.

1983 வரை உள்ளூரிலேயே விலைபோகாமலிருந்த ஒரு பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கி, ரத யாத்திரை நடத்தி நாடு முழுவதையும் ரத்தக் களறியாக்கி, பின்னர் 1992-இல் மசூதியை இடிப்பை முன் நின்று நடத்திய அத்வானி உள்ளிட்ட படுகொலை நாயகர்கள் சதி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். இந்து மதவெறியின் காலாட்படையாக செயல்பட்ட ஊர்பேர் தெரியாத சில ‘அஜ்மல் கசாப்’கள்தான், மசூதி இடிப்புக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றவாளிகளாக தற்போது வழக்கில் எஞ்சியிருக்கின்றனர். மசூதி இடிப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் நேரடிப் பாத்திரம் பற்றியும், உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் மறைமுகப் பாத்திரம் பற்றியும் சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட லிபரான் கமிசன் அறிக்கை ஆதாரங்களுடன் விவரித்த போதிலும், அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாகச் செயல்பட்ட அஞ்சு குப்தா சாட்சியமளித்த போதிலும், காங்கிரசு அரசு அசைந்து கொடுக்கவில்லை. அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தற்போதைய தீர்ப்பின் மீதும் மேற்கூறிய உண்மைகள் எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை. ஏனென்றால், இந்திய ஜனநாயகத்தைத் தாங்கி நிற்கும் இந்த ‘பேலூர் தூண்களுக்கு’ அடியில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு இடைவெளி இருக்கிறது. அதனுள் ஒரு காகிதத்தைப் போல நுழைந்து வெளியே வருகிறது இந்து மனச்சாட்சி.

தன்னுடைய தங்கையைக் காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞன் பிரபு, அவனது தந்தை மற்றும் வீட்டிலிருந்த இரு குழந்தைகளை வெட்டிக் கொலை செய்த தீபக் என்ற பார்ப்பன சாதிவெறியனுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் (டிசம்பர் 2009), “தவறானதாக இருந்தபோதிலும், இயல்பான சாதி உணர்வுக்குத்தான் தீபக் பலியாகியிருக்கிறான் எனும்போது, அவனைத் தூக்கிலிடுவது நியாயம் ஆகாது. சாதி, மத மறுப்பு திருமணம் போன்ற சமூகப் பிரச்சினைகள் தொடர்பான குற்றங்கள் இழைக்கப்படும்போது, அவை எவ்வளவுதான் நியாயமற்றவையாக இருந்தபோதிலும், குற்றவாளியின் உளவியலைக் கணக்கில் கொள்ளவேண்டியிருக்கிறது” என்று கூறியிருக்கிறது.

சாட்சியங்களே இல்லாதபோதும், அப்சல் குருவின் மரணதண்டனையை நியாயப்படுத்த, பாதிக்கப்பட்ட தேசத்தின் மனோநிலையைத் துணைக்கழைத்த உச்சநீதிமன்றம், பார்ப்பன சாதி வெறியனைக் காப்பாற்ற விழையும்போது, குற்றவாளியின் மனோநிலையைப் பரிசீலிக்கச் சொல்கிறது. இதே அளவுகோலின் படி அஜ்மல் கசாபின் உளவியலைப் பரிசீலித்தால், குஜராத் முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவதைக் கண்டு இசுலாமியத் தீவிரவாதத்துக்கு பலியான அந்த இளைஞனின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்யவேண்டியிருக்கும். எனினும் நீதிமன்றம் அப்படிச் சிந்திக்கவில்லை. சிந்திப்பதில்லை.

வெவ்வேறு வழக்குகள்.. வெவ்வேறு நீதிமன்றங்கள்… ஆனாலும் அவற்றின் தீர்ப்புகளை ஆளுகின்ற உளவியல், ஆதிக்க சாதி இந்து மனத்திலிருந்தே பிறக்கிறது. இந்திய அரசியல் சட்டம், இந்தியக் குற்றவியில் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம்… எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன – காகிதத்தில்.

இந்திய நீதித்துறையின் இதயத்தை இந்து மனச்சாட்சி தான் வழி நடத்துகிறது.

**********************************************************************************

புதிய ஜனநாயகம் ஜூன் 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்