ஆதிக்க சாதி வெறி அடால்ப் ஹிட்லர் ராமதாசு!

34

தமிழ்நாட்டு ராஜபக்சே

டால்ப் ஹிட்லர் ஆரிய இன வெறியைத் தூண்டி ஒரு பேரழிவை தோற்றுவித்தது போல மருத்துவர் ராமதாசு வன்னிய சாதிவெறியைத் தூண்டி முயற்சி செய்கிறார். 25.04.13 இரவு மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா அதை முன்னுரைக்கிறது.

சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கி முத்தெடுக்க முயன்று அதில் தோற்றுப் போன ராமதாசு இப்போது அப்பட்டமான சாதி வெறி அரசியலைக் கையிலெடுத்து அதில் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். அதற்காக ஆண்ட பரம்பரை என்று தங்களைத் தாங்களே பீற்றிக்கொள்ளும் ஆதிக்க சாதி வெறியர்கள் அனைவரையும் திரட்டி வருகிறார்.

எண்பதுகளில் ராமதாசு வன்னியர் சங்கத்தைத் தொடங்கி மார்க்ஸ் முதல் அம்பேத்கர், பெரியார் வரை இணைத்துக் கொண்டு முற்போக்கு வேடமிட்டபோது தமிழகத்தின் பல்வேறு “முற்போக்குகள்” சிலிர்த்துப் போனார்கள். ஆனால் ‘ராமதாசு அப்படிப்பட்டவர் அல்ல. அவர் ஆதிக்க சாதிவெறியால் ஓட்டுப் பொறுக்கி பிழைக்கும் ரகம்தான்’ என்பதை அன்றிலிருந்தே மகஇக உள்ளிட்ட புரட்சிகர இயக்கங்கள் சொல்லி வருகின்றன. அதனை இன்று உண்மையென்று உணர்த்தியிருக்கிறார் ராமதாசு.

ஆர்.எஸ்.எஸ்.பரிவாரங்கள், முசுலீம் எதிர்ப்பு இந்துமத வெறி பாசிசத்தை முன்னிறுத்தி  அட்டூழியங்களை எப்படிச் செய்து வருகின்றனவோ அப்படியே தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை நிறுத்தி மோடியைப் போல ரத்தச் சேற்றில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் துணிந்து விட்டார் ராமதாசு.

அதனை எடுத்துரைக்கவே இந்தச் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் கலாச்சார மாநாடு”.

தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை, சம நீதிப் பேரவை என்ற பெயர்களிலே ஆதிக்க சாதிச் சங்கங்களையெல்லாம் ஒன்றிணைத்திருக்கிறார். அவரே சொல்வதைப் போல பிராமணர்கள் முதல் நரிக்குறவர் வரை இதில் இணைத்திருக்கிறார்களாம். இவர்களெல்லாம் தாழ்த்தப்பட்ட குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் (பறையர்) சேர்ந்தவர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களாம். சொத்து பத்துக்கள் பெண்டு பிள்ளைகளைப் பாதுகாக்க முடியாமல் ராமதாசை அடைக்கலம் தேடி வந்துள்ளார்களாம். இதை மேடையில் அறிவிக்கிறார், ராமதாசு.

தேவர் சாதியின் பெயரால் தென்மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது கட்ட விழ்த்து விடப்படும் வன்கொடுமைக்குத் தலைமை தாங்கும் சாதிவெறியன் பி.டி.அரச குமார், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செங்குட்டுவன் வாண்டையார், மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் கொங்குவேளாளர் சங்கத் தலைவர் நாகராஜ், நாடார் பேரவை, செட்டியார், ரெட்டியார், முதலியார், நாயுடு, பிராமணர் சங்கங்களின் தலைவர்கள் எல்லாம் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அவர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக முழங்கிய சங்கநாதம் இதுதான்;

வன்கொடுமை தடுப்புச் சட்டம் (PCR ACT) நீக்கப்பட வேண்டும்; (ராமதாசுக்கு மட்டும் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.) தாழ்த்தப்பட்டவர்கள் நடத்துகிற காதல் நாடகம் ஒழிக்கப்பட வேண்டும்; ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மீண்டும் நாடாள வேண்டும்; எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 10 இடங்களைக் கைப்பற்ற வேண்டும்; 2016- சட்டமன்றத் தேர்தலில் சின்ன அய்யா அன்புமணி ராமதாசு முதலமைச்சராக அமர வேண்டும்; அப்போது தான் வன்னியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது அமைச்சரவையிலேயே சிறந்த அமைச்சர் என்று ஐநா சபையே புகழ்ந்ததாம். பொது இடத்தில் புகைக்கக் கூடாது. 108 ஆம்புலன்ஸ் திட்டம் இவர் கொண்டு வந்த உலகிலேயே முன்னோடித் திட்டமாம். தமிழ்நாட்டுக்கு அவரை விட சிறந்த முதலமைச்சர் கிடைக்க மாட்டார் என்று புகழாதவர்கள் பாக்கி இல்லை. மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் பலகோடி சுருட்டியதாக அன்புமணி மீது வழக்கு உள்ளதை அக்கினி சட்டி பரம்பரையினர் யாருக்கும் நினைவில்லை போலும். பசுமைத்தாயகம் திட்டத்திற்காக ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து பெறப்படும் நிதி எங்கே போகிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை. வன்னிய சங்கமும், பா.ம.கவும் ஊழலுக்கு அப்பாற்பட்ட ஒப்பற்ற இயக்கங்கள் என்பதைப் போலவே பேசப்பட்டது.

தேவர் சாதி வெறியன் பி.டி.அரச குமார் பேசும்போது “கடந்த அக்டோபர் 30-ல் தேவர் குருபூசை விழாவுக்கு வந்த அப்பாவி இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதையும், மதுரை சிந்தாமணியில் தேவர் பூசைக்கு செல்பவர் போல் நடித்து ஏமாற்றி வேனுக்குத் தீ வைத்து பலர் கொலை செய்யப்பட்டதையும் எவனாவது கேட்டானா? தாழ்த்தப்பட்டவன் ஒருவன் தாக்கப்பட்டால் அவனுக்காக எல்லோரும் குரல் கொடுக்கின்றான். நான் கண் அசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? ஒரு பயல் வெளியே நடமாடமுடியாது, வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது. அய்யா (ராமதாசு) என்னைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். காலம் கனியட்டும் அதுவரை காத்திரு என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்” என்று வன்கொடுமையாக கொப்பளித்தார்.

“ஈழத் தமிழர் நலனுக்காகவும் அன்னைத் தமிழுக்காகவும், மதுவை ஒழிக்கவும் வாழ்கின்ற ஐயாவின் பின்னால் நாமெல்லாம் அணிவகுத்துள்ளோம். இத்தனை லட்சோப லட்சம் இளைஞர்கள் திரண்டிருக்கிற இந்தக் கூட்டத்தில் ஒரு சதவீதமாவது சாராய வாடை இருக்குமா? சொல்ல முடியுமா” என்று கேட்டார் அரசகுமார். தமிழ்நாட்டு அரசியல் வாதிகளிலே குடிக்காத ஒரே தலைவர் மருத்துவர் ஐயா தான் என்று சான்றிதழும் வழங்கினார் அந்தக் குடிகார அரச குமார்.

ஆனால் சித்திரை முழுநிலவு நிகழ்ச்சி நடந்த அன்று பகலில் புதுச்சேரியிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம் வந்தவர்கள் மரக்காணம் வழியாக வரக்கூடாது என்று போலீஸ் தடுத்தும் கூட கேட்காமல் அதே வழி வந்தவர்கள் வேன் கூரைமேல் அமர்ந்து குடித்து விட்டு பீர் பாட்டிலை (அது ஏவுகணையைப் போல இருக்கும்) சாலையில் நின்ற இளைஞர்கள் மீது எரிந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் கத்தி, அரிவாள் உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களுடன் மரக்காணம் காலனிக்குள் சென்று வீட்டிலிருந்தவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். கடைகளுக்குள் புகுந்து சூறையாடியதுடன் சாப்பிட்டதற்கு பணம் கேட்டவர்களை அடித்து உதைத்ததாகத் பல்வேறு தினசரிகளின் செய்திகள் கூறுகின்றது. அதுமட்டுமல்லாமல் தாக்குதலில் 17 வயது இளைஞர் ஒருவர் இறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரனின் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவே இருந்த காவலர்களால் சமாளிக்க முடியாமல் கூடுதல் காவல்படை வரவழைக்கப்பட்டு தடியடியும், வானத்தை நோக்கி துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் பி.டி.அரச குமாருக்கு சாராய வாடையே இல்லையாம். குடித்திருப்பவனுக்கு வாசனை தெரியாது என்பது உண்மைதான்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)

ராமதாசு ஹிட்லரின் வாரிசு என்றால் காடுவெட்டி ஜெ.குரு கோயபல்சு என்று சொல்லலாம். ஆனால் காடுவெட்டி, கோயபல்சையும் விஞ்சியவர் என்பது தெரிந்தது. குரு பேசியவுடன் கூட்டம் குத்தாட்டம் போட்டது.

காடுவெட்டியின் தலைமையில் தான் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வன்னிய சாதிவெறி மாநாடு நடைபெற்றது. அவர் சிந்திய மாணிக்கப் பரல்களில் சில:-

“வன்னியன் ஆண்ட பரம்பரை. ஆனால் இன்று பன்னி மேய்க்கிற நிலையில் உள்ளான். சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்களின் பரம்பரை. சத்திரிய குலம். சிவபெருமான் பார்வதி முன்னிலையில் பித்ரு முனிவர் நடத்திய யாகத்தின் போது நெருப்பில் போடப்பட்ட வன்னிக்குச்சியிலிருந்து உருவெடுத்தவன் தான் வன்னியன். முருகன், விநாயகன் நமது சகோதரர்கள். சீதை அக்கினிப் பிரவேசம் செய்தவள், பாஞ்சாலி அக்கினி பிரவேசம் செய்தவள். வன்னியன் அக்கினியிலிருந்து பிறந்தவன். அவனை யாராலும் அழிக்க முடியாது.”

“80 களில் ஐயா வன்னியர் சங்கத்தை தொடங்கி இருக்காவிட்டால் ஆந்திராவைப் போல் நாங்கள் எல்லாம் நக்சலைட்டுகளாக மாறியிருப்போம். ஐயா தான் இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதாகக் கூறி எங்களை கட்டுப்படுத்தினார். ”

“தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தியவர் மருத்துவர் ஐயா தான். நம்மிடமே அவர்கள் வேலையைக் காட்டுகின்றனர். ‘வாய்யா என்று கையைக் கொடுத்தால் உம் பொண்ணக் குடுன்றான்’ என்ன திமிர். நீ காதலி, உன் மாமன் பொண்ணக் காதலி, அக்கா பொண்ணக் காதலி, யாரு வேணாம்னு சொல்றா? அத விட்டுப்புட்டு எங்க பொண்ணக் கிட்ட வந்து காதல் நாடகம் ஆடுறியே விடுவமா? தருமபுரி கலவரத்துக்கு நாங்க காரணம்னு எல்லா கச்சிக்காரணும் சொல்றான். ஊடகங்களும் சொல்லுது. ஆனா நாங்களா காரணம், நியாயத்தை சொல்லணும்.”

‘வன்னியன் பொண்டாட்டி எனக்கு வப்பாட்டி’ என்கிறான். நான் கண்ணசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? நான் காவல்துறைக்கு, சிறைக்கு அஞ்சாதவன். நான் பார்க்காத சிறையா? நான் எதற்கும் தயார். நான் என்ன மோளம் வாசிக்கிறவனா?”

“வன்னியன் படிப்பறிவில்லாத முட்டாள். தலித்களுக்கு இன்னைக்கு அரசாங்கம் எல்லா வசதியும் கொடுக்குது. 20% இட ஒதுக்கீடு ஐயா கேட்டார். கொடுத்திருந்தா இப்படில்லாம் நடக்குமா?”

“மாநாட்டுக்கு வர்றீங்க, கூட்டமெல்லாம் கூடுறீங்க ஆனா ஓட்டுமட்டும் போட மாட்டேன்றீங்க. இலவசத்தக் கொடுத்து இந்த திராவிடக் கட்சிக்காரங்க. நம்மள பிச்சைக் காரனா ஆக்கிட்டாங்க. யாருக்கு வேணும் உங்க இலவசம். எங்களுக்கு அதிகாரம் வேணும். ஆனா நம்ம வன்னியன் தேர்தல் வரைக்கும் நல்லா இருப்பான். தேர்தல் வரும் போது ஓட்டுக்கு 3000, 2000 வாங்குவான். ஒரு வீட்டுல 6 ஓட்டு இருந்தா 3 ஓட்டு 3000 தந்தவனுக்கு. 2 ஓட்டு 2000 தந்தவனுக்கு. ஒரு ஓட்டு மட்டும் வன்னியனுக்கு. ஒரு ஓட்டு வாங்கி வன்னியன் எப்படி ஜெயிப்பான். எனவே ஓட்டுக்கு காசு வாங்குறது கேவலம். வரப்போற தேர்தல்ல வன்னியர்கள் கட்சியா பிரியக் கூடாது வன்னியனா ஒண்ணு சேரணும். நம்ம பின்னாடி அனைத்து சமுதாய மக்களும் இருக்கறாங்க. நாம ஒண்ணு சேர்ந்தால் ஆட்சி அதிகாரம் நம்ம கையில தான். அடுத்த முதல்வர் நம்ம சின்ன அய்யாதான் (காடுவெட்டி குரு தலித் ஒழிப்புத்துறை அமைச்சராவாரோ?) வன்னியர்கள் சத்திரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் நாம் எல்லோரும் ஆண்ட பரம்பரையைச் சேர்ந்தவர்கள். மீண்டும் நாம் ஆள வேண்டும். அதற்கு வன்னியர்கள் ஒன்றாகத் திரள வேண்டும்.”

கடைசியில் வன்னியன் ஆண்ட பரம்பரை என்பதற்கு காடுவெட்டி தரும் ஆதாரம் என்ன? பித்ரு முனிவர் யாகத்தில் பிறந்தவனாம். சிவன்- பார்வதி வழித்தோன்றல்களாம். இத்தகைய புளுகு பார்ப்பனப் புரட்டுக்கள்தான் வன்னியர் வரலாறு என்றால் பெரியார் மட்டும் இருந்திருந்தால் குருவை வெறித்துப் பார்த்தே விரட்டியிருப்பார். இதில் பெரியார் உயிரோடு இருந்த போது அவரை அதிகம் வன்னியர்கள் பின்பற்றினார்கள் என்று வேறு பெருமை பேசினார் குரு. உண்மைதான். இன்றும்  பெரும்பான்மை வன்னியர்கள் பெரியாரை மதிப்பவர்கள் என்பதால்தான் பாமக, வன்னியர் சங்க சாதி வெறியை அவர்கள் ஏற்கவில்லை. அதுதானே ராமதாஸ் மற்றும் குருவுக்கு எரிச்சலைத் தருகிறது. இதில் வன்னிய மக்கள் நக்சலைட்டுகளாக மாறுவதை ராமதாஸ் தடுத்து நிறுத்தினார்; வன்னியர் சங்கத்தை ஆரம்பித்தவுடன் வன்னிய இளைஞர்கள் நக்சல் கட்சிகளுக்கு போகவில்லை என்று பெருமை பேசினார். அதென்னவோ உண்மைதான்.இந்த ஆளும் வர்க்க எடுபிடித்தனத்துக்காக உருவாக்கப்பட்டதுதானே பாமக?

தலித்துகளைப் பற்றி குரு பேசியது வெளிப்படையான சாதித்தமிர். ஏதோ இவர்களது தயவில்தான் தலித்துகளுக்கு கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது போலவும் அதை கெடுத்துக் கொண்டால் நடப்பது வேறு என்பதாக பச்சையாக மிரட்டி பேசினார். இதை தமிழ்த்திரைப்படங்களில் நம்பியார், பொன்னம்பலம் போன்றோர் கிராமத்து ஏழைகளைப் பார்த்து பேசுவது போலவே அச்சு அசலாக இருந்தது.

கடைசியாக மருத்துவர் ராமதாசு பேசினார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பலர் அவரிடம் புகார் மனுக்கள் கொடுத்திருக்கிறார்களாம். கழுகுமலை அருகில் ஒரு கிராமம். 400 குடும்பங்கள் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 40 குடும்பங்கள் தலித் குடும்பங்கள் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடிய வில்லை. விடலைப் பையன்கள் பள்ளிக்குப் போகிற பெண்களைச் சீண்டி, சைக்கிள் பின்னால் உட்காரு, உனக்கு வேறு பாடம் சொல்லிக் கொடுக்கிறோம் என்று சொல் கிறார்கள். காவல் துறையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை இல்லை. புகார்கொடுத்தவர்கள் மீதே நடவடிக்கை என்கிறது காவல்துறை.

காவல்துறை உள்ளிட்ட பல துறைகளில் அவர்கள் (தலித்துகள்) தான் அதிகாரியாக இருக்கிறார்கள். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. எல்லாச் சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. எல்லாமே அவர்களுக்கு இலவசம். நமக்கு எல்லாமே கட்டணம். எல்லா தவறுகளையும் செய்து விட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நம்மீது புகார் கொடுக்கிறார்கள். என்னையே ஒரு முறை கொலை செய்வதற்கு முயற்சி செய்தார்கள். நான் 32 மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்ற போது குண்டாந் தடிகளோடு வந்து தடுக்கிறார்கள். அரை நிர்வாணமாக போராட்டம் நடத்துகிறார்கள். எங்களுக்கு போராட்டம் நடத்தத் தெரியாதா? தாக்கத் தெரியாதா? காடுவெட்டி குழு கண்ணசைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? தமிழ்நாட்டில் 80 சதவீதம் நாம் இருக்கிறோம். 18 சதவீதம் தான் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நாம் பயந்து வாழ வேண்டியதிருக்கிறது.

நம் வீட்டுப் பெண் பிள்ளைகளை 14 வயது பெண் குழந்தைகளை காதல் நாடகமாடி கடத்திச் சென்று கர்ப்பமாக்கி கை விட்டு விடுகிறார்கள். தருமபுரியில் நடந்தது அது தான். தருமபுரி கலவரத்தில் ஒரு உயிருக்கு சேதம் ஏற்பட்டதா? ஒரு பன்றிக் குட்டியைக் கூட கொல்லவில்லை. ஆனால் அந்தப் பெண்ணோட அப்பன் செத்துப் போனான். இழப்பு எங்களுக்குத்தான். காதல்-கலப்புத் திருமணம் இதையெல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முசுலீம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் பிரச்சனையில் பெற்றோர்கள் தலையிடக் கூடாது. உரிமை இல்லை என்று சொல்றான். பெற்றோர் தலையிடாமல் பின் யார் தலையிடுவது? காதலுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. எங்கள் சாதி பெண்களிடம் அதை வைத்துக் கொள்ளக் கூடாது

தலித்துகளை வளர்த்துவிட்டது நான்தான். அவர்களுடைய பிரச்சனைகளுக்காக என்னை விட அதிகமாகப் போராடியவன் எவன் உண்டு. அப்படி இல்லாமலா அம்பேத்கார் விருது, தமிழ்குடி தாங்கி விருதெல்லாம் எனக்கு கொடுத்தார்கள். இப்போது பலர் என்னைப் பார்த்துக் கேட்கிறார்கள். “நீங்கள் தானே அவர்களை வளர்த்து விட்டீர்கள்” என்று.

தமிழ்நாட்டில் 2 ½ கோடி வன்னியர்கள் இருக்கிறோம். அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் நமது பின்னணியில் இருக்கிறார்கள். ஆனால் அதிகாரம் நம் கையில் இல்லை. அதிகாரம் நம் கையில் வேண்டும். தமிழ்நாட்டில் நாம் தான் பெரும்பான்மை சமூகம். ஆனால் சிதறுண்டு கிடக்கிறோம். திராவிடக் கட்சிகளின் பின்னால் சென்று அவர்களை வாழவைத்து விட்டோம். நம்பி ஏமாந்து விட்டோம். இனி ஒரு போதும் நாம் யாரோடும் கூட்டணி சேரப்போவதில்லை. ஆனால் யார் வேண்டுமானாலும் நம்மோடு கூட்டணி சேரலாம்.

என்னை சாதிவெறியன் என்று சொல்கிறார்கள். ஊடகங்கள் உண்மையைச் சொல்ல மறுக்கின்றன. நான் சாதிவெறியன் இல்லை. ஒரு சிறுபான்மை பிரிவினருக்கு அதிக சலுகை இருக்கிறது. சட்டம் அவர்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது. காவல்துறை அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது. அவர்கள் நாடகக் காதல் செய்கின்றனர். நாங்கள் பாதிக்கப்படுகிறோம். அப்படியானால் நல்லிணக்கம் எப்படி வரும்? வராது. அதனால் தான் கருத்து ஒற்றுமை உடையவர்கள் ஒன்றாக இணைந்து உள்ளோம். இந்தக் கூட்டணி பலமான கூட்டணி 82% பெரும்பான்மை கூட்டணி.

இவ்வாறு ராமதாஸ் பேசினார். அவர் பேசியது அனைத்தும் காவல் துறைக்குத்தான் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டார்.

தமிழ்நாட்டு ராஜபக்சே

ராமதாஸின் காதல் குறித்த விளக்கம் என்ன? அதாவது தைலாபுரம் தோட்டத்து வன்னிய பண்ணைகள் காங்கிரசிலிருக்கும் கிருஷ்ணசாமி போன்ற பண்ணைகளோடு காதல் வைத்துக் கொள்ளலாம். இதைத் தாண்டி ஒரு ஏழை வன்னிய இளைஞன் கூட ஒரு பணக்கார பாமக வன்னியர் பெண்ணை காதலிக்கக் கூடாது. இதைத் தவிர மற்ற காதல்களையெல்லாம் நாடகம் என்று எதிர்க்கிறார் ராமதாஸ். இதற்கு ஆதரவாக முசுலீம் மற்ற பிற ஆதிக்கசாதிகளை அணி சேர்க்கிறார். முசுலீம் இளைய தலைமுறை மாற்று மத, சாதியினரோடு காதலிக்க கூடாது என்பதற்கு தமுமுக மற்றும் தவ்கீத் ஜமாத் உட்பட பல்வேறு இசுலாமிய அமைப்புகள் ஆதரவு தரும். அந்த வகையில் இசுலாமிய அமைப்புகள் ஆதிக்க சாதிவெறியர்களின் அணியில்தான் இருக்கின்றனர் என்பதை முசுலீம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு உலகமயமாக்க ஏகாதிபத்திய பண்பாட்டுச் சூழலில் மண முறிவு என்பது அதிகரித்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டுமே குற்றம் சுமத்துவது நவீன மனுவாதம் அன்றி வேறென்ன? சாதியை வைத்துப் பிழைப்பு நடத்த துணிந்து விட்ட ராமதாசுக்கு தன் சாதியக் கூட்டமைப்பு தகர்வதைக் கண்டு பொறுக்க முடியவில்லை. எனவே தான் மோடியைப் போல திட்டமிடுகிறார்.

தமிழ், தமிழ்ப் பண்பாடு என்று கூறி பட்டம் வாங்கும் ராமதாசு காதலும் வீரமும் தமிழர் தம் பண்பாடு என்பதிலிருந்து வன்னியப் பெண்களுக்கு விலக்கு அளிக்க விரும்புகிறார்.

அடுத்து ஆதிக்கசாதி வெறியின் பெரும்பான்மையை வைத்து தலித் மக்களை அவர் எச்சரிக்கிறார். இதே பெரும்பான்மையை வைத்துத்தான் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் இசுலாமிய மற்றும் கிறித்தவ மக்களை எச்சரிக்கிறது. அந்த வகையில் சாதிவெறியும், மதவெறியும் ஓரிழையில் ஒன்றிணைகின்றன. சாதி மாறி காதலித்தால் பண்பாடு கெட்டு விடும் என்ற வாதத்தை இந்துமதவெறியர்களும் மனம்குளிர ஆதரிப்பார்கள்.

காதலுக்கு எதிரி இல்லை. சாதிவெறியன் இல்லை. சமூக நீதிக்காகத்தான் பாடுபடு கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் ராமதாசு வன்னியன், தேவர், நாயுடு, கவுண்டர், நாடார் என்பவை எல்லாம் எதைக் குறிக்கிறது என்று கருதுகிறார்? ஆண்ட பரம்பரை தான் அது தான் மீண்டும் ஆளவேண்டும் என்றால் மன்னராட்சி முறையல்லவா வரவேண்டும். அதனால் தான் வாரிசுரிமை என்ற அடிப்படையில் அன்புமணி (சின்ன அய்யா) யைக் கொண்டு வந்திருக்கிறார். அதையும் அவருடைய அனைத்து சாதி ஜால்ராக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

வன்னிய இளைஞர்களை நல்வழிப் படுத்துவதற்காக அவர்களுக்கு பல்வேறு பயிற்சிப் பட்டறை நடத்துவதாகச் சொல்கிறார். அதன் லட்சணம் மரக்காணத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. வீரம் என்பது காலம் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ‘சேரி’ (ராமதாசு சொன்ன வார்த்தை) மக்களை மேலும் மேலேறித் தாக்குவது, குடி போதையில் ரவுடித் தனத்தைக் கட்டவிழ்த்து விடுவது, சேரிப் பெண்களைப் பெண்டாள்வது இது தான் இவர்களுக்கு கற்றுத்தரும் பண்பாட்டின் பின்னணி. 82 % பெரும்பான்மை சமூகம் 18% சிறுபான்மை சமூகத்தைக் கண்டு அஞ்சுகிறது என்று ராமதாசு சொல்வது வடிவேலுவே பொறுத்துக் கொள்ள முடியாத காமெடி. சட்டம் அப்படி PCR விஷயத்தில் துல்லியமாக வேலை செய்கிறதாம். என்ன கூத்து இது.

ஆனால் உண்மை நிலவரம் என்ன? வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் கொடுத்தால் காவல்துறை அந்தப் புகாரைப் பதிவு செய்வதே இல்லை. புகார் பதிவு செய்யப்படுவதற்கே-ஏன் பெற்றுக் கொள்வதற்கே- மிகப் பெரிய அழுத்தம் தரவேண்டும் என்பதே உண்மை. பெரும்பாலான வழக்குகளில் காவல்துறை சமரசம் செய்வதற்கே முயற்சி செய்கிறது.

இரண்டாவதாக அப்படியே வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்து எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புள்ளி விவரத்தைத் தேடினால் பதிவு செய்யப்படும் வழக்குகள்-மற்றும் தீர்ப்புகளின் நிலை மிகப் பரிதாப நிலையிலேயே உள்ளது.

எப்படி, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு என்று அரசாங்கம் முன்வைக்கும் தண்டனைகள் ஒரு …யும் புடுங்கவில்லையோ, அது போலவே தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதாரமான சட்டங்களின் நிலையும் அதற்கு காரணம் பார்பனீயம் ஏற்படுத்திய சாதிய அடுக்குமுறையும் அதைப் பேணிப் பாதுகாக்கும் ஆதிக்க சாதி வெறியர்களின் அரசியல் அதிகாரமும் தான்.

இந்தச் சூழ்நிலையில் அப்பட்டமான பிழைப்பு வாத சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி மதிப்பிழந்து போன ராமதாசு கேடு கட்ட சாதி அரசியலைக் கையிலெடுத்து மறுபடியும் முதல் பரோட்டாவிலிருந்து தொடங்கியிருக்கிறார். இந்தக் கழுதைக்குப் பெயர் முத்துமாலையாம்.

மாநாட்டுக்கு அழைப்பு விடும் மன்னர் பரம்பரை

வன்னியர் புராணப் புளுகு

-செவத்தி வீரன்.