சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளியின் கட்டண எதிராக மனித உரிமை பாதுகாப்பு மையமும், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல போராட்டங்கள் நடத்தி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே செலுத்தி வருகிறோம். இந்நிலையில் கடந்த டிசம்பர் 2013 அன்று, “நீதியரசர் சிங்காரவேலு கமிட்டி தங்கள் பள்ளிக்கு புதிதாக கட்டணம் நிர்ணயித்துள்ளது. பெற்றோர்கள் உடனே அந்த கட்டணத்தை செலுத்தா விட்டால் மாணவர்களின் பெயர் வருகை பதிவேட்டில் இருந்து நீக்கப்படும்” என காமராஜ் பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இந்த கட்டணம் முன்பு இந்த ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை போல் பலமடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது.
உயர்த்தப்பட்ட கட்டண விபரம் பின்வருமாறு :
வகுப்பு | 2013-2014-க்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ |
மீண்டும் 21-11-2013-ல் பலமடங்கு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ. | கூடுதலாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ | |
K.G. | 6500/- | 11,250/- | 4750/- | |
I – V | 8500/- | 15,600/- | 7100/- | |
VI-VIII | 10,000/- | 18,300/- | 8300/- | |
IX-X | 12,000/- | 19,800/- | 7800/- | |
XI-XII |
15,000/- | 22,000/- | 7000/- |
அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிதம்பரத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி இந்த கல்வி ஆண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தப்பட்டு விட்ட நிலையில், “மீண்டும் 90 சதவீதம் வரை கூடுதலாக கட்டணம் செலுத்த சொல்லும் கமிட்டியின் உத்தரவு முறைகேடானது. இந்த உத்தரவின் மீது அரசு விசாரணை நடத்தி முடிவு தெரிவிக்கும் வரை கூடுதல் கட்டணம் செலுத்தமாட்டோம். அதுவரை மாணவர்களையும் பெற்றோர்களையும் துன்புறுத்தக் கூடாது” என அனைத்து கல்வித்துறை அதிகாரிகளுக்கும் 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கையெழுத்திட்டு மனு அனுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு பள்ளியின் கூடுதல் கட்டண கொள்ளைக்கு எதிராக பெற்றோர்கள் ஆதாரங்களுடன் சிங்காரவேலு கமிட்டியிடம் முறையிட்ட போதே கூடுதல் கட்டணத்தை திருப்பி தர எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் சமரசமாக செல்லுங்கள் என்று மட்டும் கூறி அனுப்பியது. இப்பொழுது கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பது பெற்றோர்கள் மத்தியில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள இந்நிலையில் சிதம்பரம் வடக்கு வீதி போஸ்ட் ஆபிஸ் அருகில் சிங்காரவேலு கமிட்டியின் பல மடங்கு கட்டண உத்தரவை ஏற்கமுடியாது கமிட்டியின் கட்டண நிர்ணயம் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் 24-1-2014 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் பகுதி மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் வை.வெங்கடேசன், நிர்வாகிகள்முஜிபுர், பெரியண்ணன் சீனுவாசன், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் இணை செயலாளர் வழக்கறிஞர் செந்தில், கதிர், மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் கமிட்டிகள், விசாரணை, நீதிமன்றங்கள் அரசியல் கட்சிகள் அனைத்தும் தனியார் முதலாளிகளுக்கு சாதகமாகவே செயல்படுகின்றன. மக்கள் தங்கள் உரிமைகளுக்கான வீதியில் இறங்கி போராடாமல் வெற்றி பெறமுடியாது என்று கருத்தை முன்வைத்தனர்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீதியரசர் சிங்காரவேலுவின் உருவ பொம்மையை எரிக்க பெற்றோர்கள் முயன்றனர் ஆனால் காவல் துறையினர் அதனை தடுத்துவிட்டனர்
முஜிபுர்
3 ஆண்டுக்கு ஒருமுறை கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்போம் என்று கூறி அமைக்கப்பட்ட கட்டண நிர்ணய கமிட்டி ஆண்டுக்கு மூன்று முறை கட்டணத்தை உயர்த்துகின்றனர்.
ஜெயச்சந்திரன் பெற்றோர்
கோவிந்தராஜன் கமிட்டி முதல் ஒவ்வொரு கமிட்டியும் நிர்ணயிக்கும் கட்டணத்தை 15 சதவீதம் என படிப்படியாக உயர்த்தி தற்போது 90 சதவீதம் வரை சிங்காரவேலு கமிட்டி உயர்த்தி நிர்ணயித்திருப்பது முறைகேடானது இதனை ஏற்க முடியாது.
செல்வக்குமார்
கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணத்தை எந்த அதிகாரியும் கண்காணிப்பதில்லை, உத்தரவு பிறப்பிப்பதில்லை. ஆனால் தனியார் பள்ளி முதலாளி கேட்டவுடன் பலமடங்கு கட்டணம் உயர்த்தி கொடுக்கிறார்கள். இந்த உத்தரவை திரும்பபெறவில்லை யெனில் கமிட்டியின் தலைமை அலுவலகத்தை சென்னையில் முற்றுகையிட்டும் போராட்டம் நடத்துவோம்.
கதிர்
தனியார் மய சூழலில் அரசு நிர்ணயிக்கும் எந்த அமைப்பும் மக்களுக்கு சாதகமாக செயல்படாது, தனியாருக்கு சாதகமாகவே செயல்படும். தனியார் மையத்தை எதிர்த்து போராடி வெற்றி பெறாமல் இதனை முறியடிக்க முடியாது.
வை.வெங்கடேசன்
தனியார் பள்ளிகளின் மின்சார செலவு ஆசிரியர் சம்பளம் போன்ற செலவினங்களை கணக்கிட்டு கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக சொல்கின்றனர். ஒரே வருடத்தில் செலவு 90 சதவீதம் உயர்ந்து விட்டதா? இந்த கட்டண உயர்வு மிகவும் மோசடியானது. இதனை விசாரணை செய்து அறிக்கை வரும்வரை கட்டணம் செலுத்த மாட்டோம்.
காமராஜ் பள்ளி நிர்வாகம் சொல்வது போல் குழந்தைகளை துன்புறுத்தி, பரீட்சை எழுத அனுமதி மறுப்பது சட்டப்படி குற்றம் என நீதிமன்றங்கள் பல வழக்குகளில் அறிவத்துள்ளன.
செந்தில் வழக்கறிஞர்
இந்த கமிட்டியின் உத்தரவு மட்டும் நிறுத்தி விட்டால் இந்த பிரச்சனை தீராது. எங்கள் மனித உரிமை பாதுகாப்பு மையம், “கல்வியை அரசே வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும்” என்றும் அந்த நிலை வரும் பொழுதுதான் இதுபோன்ற முறைகேடுகளும், தனியார் பள்ளி பிள்ளைகளை பணய கைதிகளாக வைத்து பணம் பறிப்பதும், பணம் செலுத்தாத பெற்றோரை பள்ளி வளாகத்திலேயே அடிப்பதும், பிள்ளைகளை உணவியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற ரௌடித்தனமான செயல்கள் நிற்கும். கமிட்டிகளும் நீதிமன்றங்களும் மக்களுக்கு சேவை செய்யாது.
சிதம்பரம் கோயில் தீட்சிதருக்கு சொந்தம் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகின்றது, இங்கே கமிட்டி 100 சதவீதம் கட்டணம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடுகிறது. மத்திய அரசு ஆதார் அட்டை என்ற பெயரிலேயே தன் நாட்டு குடிமக்களின் கருவிழி முதல் கைரேகை வரை குற்றவாளிகளை போல் பதிவு செய்து நிலை மானியத்திற்காக என நாடகமாடுகிறது.
இந்த நிலைமாறும் என மக்கள் நினைத்தால் அது நடக்காது. மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே நமக்கு உரிமைகள் கிடைக்கும். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் பெற்றோர் 5,000 பேராக மாறும் போது அனைத்து சட்டங்களையும் மக்கள் தீர்மானிக்கலாம்” என கூறினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்:
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சிதம்பரம்