Sunday, August 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 568

சட்டீஸ்கர்: பா.ஜ.க – இந்திய அரசின் தேசபக்த பயங்கரவாதம் !

0

காட்டு வேட்டை என்ற பெயரில்  இந்திய அரசு பழங்குடியினருக்கு எதிராக நடத்திவரும் போரை மேலும் மூர்க்கமாகியிருக்கிறது சத்தீஸ்கர் அரசு. மைய அரசும், மாநில அரசும் பா.ஜ.க-வின் கைகளில் இருப்பது ஒடுக்குமுறையில் கொடூர வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

சமஜிக் ஏக்தா மஞ்ச் என்ற போலீஸ் அடியாள் அமைப்பை ஆரம்பித்துள்ள அரசு அதைக்கொண்டு காட்டுவேட்டையின் கொடூரங்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களையும் ஜனநாயக சக்திகளையும் முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பின்னணியில் தான் சோனி சோரி என்ற பழங்குடி செயற்பாட்டாளர் தாக்கப்பட்டுள்ளார்.

Soni-Sori-1
சோனி சோரி

காட்டுவேட்டை என்ற பெயரில் தங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அடக்குமுறைகளை தொடர்ந்து அம்பலப்படுத்திவருபவர் பழங்குடிப் பெண்ணான சோனி சோரி. கடந்த 2010-ம் ஆண்டு மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக இவர் மீது பொய் வழக்கு சோடித்து கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது சத்தீஸ்கர் அரசு. 2014-ம் ஆண்டு ஜாமீனில் வெளிவந்த இவர் தொடர்ந்து அரசின் காட்டுவேட்டை அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இம்மாதம் 3-ம் தேதி பஸ்தாரின் மதுரம் காவல்நிலையத்திற்குட்பட்ட மலைபகுதியில்  மாவோயிஸ்டுகளுடன் நடந்த கடுமையான துப்பாக்கி சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டதாகவும், அவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தப்பியோடிய மாவோயிஸ்டுகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் அறிவித்திருந்தார் பஸ்தார் காவல்துறை ஐ.ஜி கலூரி. ஆனால் நடந்தது ஒரு போலி மோதல் கொலை என்பதை அம்பலப்படுத்தினார் சோனி சோரி.

அதாவது ‘தேசபக்த’ காவல்துறையினர் உயிரை பணயம்வைத்து சுட்டுக்கொண்டதாக கூறியது ஹத்மா கஷ்யப் என்ற பழங்குடி என்பதும்; வீட்டில் மனைவி குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தரை எழுப்பி காட்டில் வழிதெரியவில்லை வழிகாட்டுங்கள் என்று காவல்துறையினர் அழைத்து சென்றதையும்; அவரது மனைவி உறவினர்களை பத்திரிகைகள் முன்னிலையில் பேசவைத்து அம்பலப்படுத்தினார் சோனி சோரி. பாதுகாப்பு படையினரால் அழைத்து செல்லப்பட்ட கணவன் வீடு திரும்பாததை கண்டு 4-ம் தேதி காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார் அவரது மனைவி கலோ கஷ்யப். அப்போது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று மறுத்த காவல்துறையினர் பின்னர் 10,000 ரூபாய் கொடுத்து இறுதி சடங்கு செலவுக்கு வைத்துகொள்ள கூறிய கொடூரத்தையும் அம்பலப்படுத்தினார் சோனி சோரி.

பாதுகாப்பு படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்காக வருகிற மார்ச் 8 பெண்கள் தினத்தன்று பேரணி நடத்தும் ஏற்பாட்டிலும் இருந்திருக்கிறர் சோனி சோரி.

soni-sori-attack
சனிக்கிழமை(20-02-2016) அன்று இரவு இவர் முகத்தில் அமிலம் போன்றொதொரு பொருளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் சனிக்கிழமை(20-02-2016) அன்று இரவு இவர் முகத்தில் அமிலம் போன்றதொரு பொருளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது கண் திறக்க முடியாத நிலையிலிருக்கும் சோனி சோரி தன்னை தாகியவர்கள் போலீஸ் ஆதரவாளர்கள் என்பதை தெரிவித்துள்ளார். தனனை தாக்கியவர்கள் மதுரம் போலி என்கவுண்டர் விசயத்தை இனி பேசக்கூடாது என்றும், ஐ.ஜி கலூரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் முயற்சிக்ககூடாது எனவும் மீறினால் சோனி சோரியின் குழந்தையையும் இதே கதிக்கு உள்ளாக நேரிடும் என்று மிரட்டியதை பதிவு செய்துள்ளார் சோனி சோரி.

இது ஏதோ தனித்த சம்பவமல்ல. இம்மாதத்தில் பஸ்தார் பகுதியில் செயல்படும் பத்திரிகையாளர் மாலினி சுப்பிரமணியமும் , ஜகதால்பூர் சட்ட உதவி மைய வழக்கறிஞர்களும் போலீஸ் மற்றும் சமஜிக் ஏக்தா மஞ்ச் போலீசு அடியாள் இயக்கத்தின் அடக்குமுறைகளை தொடர்ந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அரசின் போலி மோதல் கொலைகள், பாலியல் வன்முறைகள், போலி சரணடைவு சம்பவங்களை அம்பலப்படுத்தியவர் பத்திரிகையாளர் மாலினி சுப்பிரமணியம். கடந்த ஜனவரி 10-ம் தேதி மாலினி சுப்பிரமணியத்தின் வீட்டிற்கு வந்த சமஜிக் ஏக்தா மஞ்ச் அடியாள் அமைப்பினர் ” பஸ்தார் மற்றும் போலீசாரின் இமேஜை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டால் தங்களின் கோபத்தை சந்திக்க நேரிடும்” என்று மிரட்டி சென்றனர். பழங்குடி பெண்கள் மீதான் பாதுகாப்பு படையினரின் பாலியல் வன்முறைகள் குறித்த செய்தியை சில மாதங்களுக்கு முன்னர் வெளிக் கொணர்ந்திருந்தார் மாலினி சுப்பிரமணியம். தன்னை மிரட்டி சென்றவர்களில் மனிஷ் பரக் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்சா பிரிவின் செயலாளர் என்பதும், சம்பத் ஜா என்பவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் என்பதும் பின்னர் தெரியவந்தது என்று கூறுகிறார் மாலினி. இந்த நபர்கள் பஸ்தார் சரக ஜி.ஜி. கலூரியுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதை அம்பலப்படுத்தியுள்ளது கேரவன் பத்திரிகை.

தொடர்ந்து இரவு நேரங்களில் விசாரணை என்ற பெயரில் ஜக்தால்பூர் போலீசார் இப்பத்திரிகையாளரை தொந்தரவு செய்திருக்கின்றார். ஆயினும் அப்பகுதியிலிருந்து வெளியேறாமல் தொடந்து செயல்படவே கடந்த 8-ம் தேதி சம்ஜித் ஏக்தா மஞ்ச் அடியாட்கள் இவர் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்த பின்னரும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதாக வழக்கு பதிவு செய்தது காவல்துறை.

kaluri-with-samajik-ekta-manch
பஸ்தார் சரக ஜி.ஜி கலூரி கொடுத்த விருந்தில் சம்ஜிக் ஏக்தா மஞ்ச் அமைப்பின் மனிஷ் பிரகா, சம்பத் ஜா. படம் : caravanmagazine

இந்நிலையில் கேரவன் பத்திரிகை சமஜிக் ஏக்தா மஞ்ச் அமைப்பு குறித்தும், ஜி.ஜி கலூரி குறித்து பல உண்மைகளை கடந்த சில தினங்களுக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தது. இந்த அடியாள் அமைப்பை இயக்கிவருவதே பஸ்தார் பகுதி ஜி.ஜி கலூரி தான் என்பதும், இந்த அதிகாரி மனிதத்தன்மையற்ற பேர்வழி என்பதையும், காவல் நிலைய பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளானவர், இப்பகுதியில் பதவி ஏற்றதும் மக்கள் மீது உச்சகட்ட வன்முறையை ஏவி வருவதையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது அக்கட்டுரை.

சல்வாஜூடும் காலப்பகுதியில் பழங்குடியினரை கொத்து கொத்தாக கொன்றபாதுகாப்பு படையினர் சடலங்களை அப்படியே விட்டு சென்றதையும், தற்போது கலூரி பொறுப்பேற்ற பிறகு அக்கொலைகளை என்கவுண்டர் என்றூ கூறி வெற்றி செய்தியாக வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி பத்திரிகைகளுக்கு அறிவிப்பதையும் அம்பலப்படுத்தியது.

பஸ்தார் பற்றிய உண்மைச்செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்த சூழலில் தான் மாலினி சுப்பிரணியத்தின் வீடு தாக்கப்பட்டதோடில்லாமல் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி மாலினி வீட்டு வேலை செய்யும் பெண்ணை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று விடுவிக்கவில்லை. இந்நிலையில் மாலினி வசிக்கும் வீட்டு உரிமையாளரை மிரட்டி மாலினியை வெளியேற்ற நிர்பந்தித்து வெளியேற்றியிருக்கிறது போலீஸ்.

JagdalpurLegalAidGroup_Guneet_Isha_Shalini_Parijatha
ஜகதால்பூர் சட்ட உதவி மையத்தினர். படம் :thewire

இதே போல பழங்குடியினரில் வழக்குகளை நடத்தி வரும் ஜகதால்பூர் சட்ட உதவி மையம் என்ற அமைப்பை சேர்ந்தவர்களையும் முடக்கும் நோக்கில் பகுதி பார் கவுன்சில் மூலம் அழுத்தம் கொடுப்பது , மிரட்டுவது என பல ஆயுதங்களை பிரயோகித்த பிறகு சில தினங்களுக்கு முன்னர் இவ்வமைப்பில் செயல்படுவர்கள் வசிக்கும் வீட்டு உரிமையாளர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து துன்புறுத்தியிருக்கிறது காவல்துறை. ஆக இவர்களையும் தற்போது வெளியேற்றிவிட்டது.

அதானிக்காக அமல்படுத்தப்படும் சட்டப்படியான அடக்குமுறை

ஒரு புறம் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் அரசு தனக்கு தடையாக இருக்கும் பெயரளவிற்கான சட்டங்களையும் மதிப்பதில்லை.

சர்குஜா மாவட்டத்தின் கட்பாரா கிராமத்தில் சுரங்க வேலைகளை செய்ய அதானி குழுமம் மற்றும் ராஜஸ்தான் அரசு நிறுவனங்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு அனுமதியளித்திருந்தது சத்தீஸ்கர் அரசு. இதை எதிர்த்து கிராம மக்கள் போராடி வருகின்றனர். இங்கு மட்டுமல்ல சத்திஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மத்திய இந்தியாவின் காடுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் சுரங்க வேலைகளுக்காக பழங்குடியினர் விரட்டப்படுவதை எதிர்த்து தீரத்துடன் போராடிவருகிறார்கள். இவர்களுக்கு எதிராகத்தான் பசுமை வேட்டை என்ற பெயரில் துணை ராணுவப்படை களமிறக்கப்பட்டு மக்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

வன உரிமை பாதுகாப்பு சட்டப்படி பழங்குடியினரின் பாரம்பரியமான பகுதிகளில் பழங்குடியினரின் ஒப்புதலோடு மட்டுமே இந்நிலங்களை அரசு பயனபடுத்திக்கொள்ள முடியும். அப்படி அரசு அறிவித்த பாரம்பரிய வாழ்விடங்களுள் ஒன்றாக இக்கிராமம் வருகிறது. ஆனால் இக்கிராமத்தினரோ தங்கள் நிலத்தை தரகு முதலாளிகளுக்காக விட்டுத்தர தயாரில்லை.

கிராம சபையின் மூலம் அதானிக்கு நிலத்தைவிட்டுத்தர முடியாது என்று சட்டபூர்வமான வழியை கையாண்டார்கள் இக்கிராம மக்கள்.

இந்நிலையில் தான் சத்தீஸ்கர் அரசு கடந்த ஜனவரி அன்று ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில் அப்பட்டமாகவே ” கிரமத்தினர் தங்களுக்கு அளிக்கப்ப்பட்ட உரிமையை சுரங்கம் அமைவதிற்கு எதிராக பயன்படுத்துவதாக” ‘குற்றம்’ சாட்டி அவ்வுரிமைமை பறித்திருக்கிறது. “நிர்வாகம் சுரங்க வேலைகளுக்காக காடுகளை மாற்ற முயன்றபோது ஆட்சியரால் தங்களுக்கு அளிக்கப்பட்ட நில உரிமையை பயன்படுத்தி பழங்குடியினர் இவ்வேலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர், போராடினர். அதை பரிசீலித்தபோது இந்நிலம் பழங்குடிகளின் உரிமையாக அறிவிக்கப்படும் முன்னரே அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டுவிட்டது தெரிய வந்ததை அடுத்து பழங்குடியினருக்கு இந்நிலத்தில் மீதான உரிமை நீக்கப்படுகிறது” என்று அவ்வரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக அறிவித்து செய்திருக்கிறது அரசு. அரசு தான் சொல்லிக்கொள்ளும் குறைந்தபட்ச அறநெறிகளுக்குக்கூட எதிரான மக்கள் விரோத சக்தியாக மாறியிருப்பதையே இது குறிக்கிறது. பெயரளவிற்கான சட்டங்களும் செல்லாக்காசிவிட்ட நிலையில் இந்த அரசை நம்பி பிரயோஜனமில்லை.

தேசதுரோகி என்று சொந்த நாட்டு மக்களை விளிக்கும் பா.ஜ.க மற்றும் இந்திய அரசு இங்கே நடத்தி வரும் பயங்கரவாதத்தை என்னவென்று அழைப்பது? இராணுவம், போலிசு ஒடுக்குமுறை குறித்து எவரும் வாய் திறக்க கூடாது என்பதோடு, அதானிகளை பாதுகாக்க இவர்கள் எவ்வளவு கொடூரத்திற்கும் தயாராகிறார்கள் பாருங்கள்!

பத்திரிகையாளர்கள்,ஜனநாயக சக்திகளை விரட்டியடிக்கபடுவதும்,சல்வாஜுடும் போன்று புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதும்,போலி மோதல்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதும் பழங்குடியினருக்கு எதிராக ஒரு மூர்க்கத்தனமான இறுதி படுகொலைகளுக்கு அரசு தயாராகிவருவதையே காட்டுகிறது. இந்த அரச பயங்கரவாதத்தை அனைவரும் கண்டிக்க வேண்டும். பழங்குடிகளுக்கு ஆதரவாக அணிதிரள வேண்டும்.

– ரவி

மேலும் படிக்க:

மூடு டாஸ்மாக்கை மாநாடு – தோழர் மருதையன், தோழர் ராஜு உரை

0
தோழர் மருதையன்

மூடு டாஸ்மாக்கை – தோழர் மருதையன் உரை

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலர் தோழர் மருதையன் ஆற்றிய உரை! பாருங்கள், பகிருங்கள்!!

மூடு டாஸ்மாக்கை – தோழர் ராஜு உரை

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆற்றிய உரை! பாருங்கள், பகிருங்கள்!!

எனக்கு புரியலேன்னா அது தேசத்துரோகம்தான் – கார்ட்டூன்கள்

0
jnu-student-sedition-cartoon-1
ஸ்மிருதி ஈரானி: பல்கலைக்கழக மானியக் குழு முற்றுகை, ரோகித் வெமுலா…பிறகு இந்த ஜே.என்.யு மாணவர்கள் எல்லாம் தலைவலியாப் போச்சு. மோடி: ஆமாம். நம்ம ஏபிபிவி பசங்க பயந்து போயிட்டாங்க! நம்ம பாஸ்ஸுகிட்ட எப்படி டீல் பண்ணலாமுன்னு கேப்போம். ஹிட்லர்: உன்னோட கூட்டத்தை பாக். வாழ்க!ன்னு கோஷம் போட செட்டப் பண்ணு, பிறகு ஜே.என்.யு மாணவர்கள தேசத்துரோகின்னு முத்திரை குத்து! அப்பால தேசத்துரோக வழக்குல விலங்க போடு. (படம்: https://rebelpolitikblog.wordpress.com)
jnu-student-sedition-cartoon-2
கல்வி நிலையங்களை பி.ஜே.பி அணுகும் விதம்: இங்கு வண்ணப்புத்தகம் இருக்கிறது. இங்கு உனக்கு ஒரே ஒரு நிறம் (காவி) தான் தேவைப்படும் (படம்: sanitarypanels.com)
jnu-student-sedition-cartoon-9

சார்! மாணவர்கள் எல்லாம் மீண்டும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்! நாம் என்ன செய்ய வேண்டும்? அமைதியாய் இரு! நாம் மீண்டும் இந்த சக்கரத்தைச் சுற்றுவோம். (சக்கரத்தில் – தேசத்துரோகி என அழைக்கலாம். பாகிஸ்தானுக்கு அனுப்பலாம், பல்கலைக்கழகத்திலிருந்து மிரட்டி வெளியேற்றலாம், தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தலாம், சிறை வைக்கலாம், காவல் துறை அடக்குமுறையை ஏவிவிடலாம், மாணவர்களது குடும்பத்தை மிரட்டலாம் அல்லது சக்கரத்தை மீண்டும் சுற்றலாம். (படம்: sanitarypanels.com)

jnu-student-sedition-cartoon-3

நபர் 1:ஜனநாயகத்தில் மாற்றுகருத்துகளுக்கு இடமளிக்க வேண்டும்; நபர் 2: அப்படி என்றால் நீ தேசதுரோகி; நபர் 1:மம். அடக்குமுறையின் மூலம் மக்களை அமைதிப்படுத்துவது ஜனநாயகமல்ல; நபர் 2: நீ தீவிரவாதி. போலி மதச்சார்பின்மைவாதி; நபர்1: நான் பேசுவவதை நீ கவனிக்ககூட மறுக்கிறாய் ;நபர் 2 : நீ இந்திய எதிரி

jnu-student-sedition-cartoon-4

நமக்கு புரியாத விசயமுன்னா அதுங்க (ஜனநாயகம், மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை, இலக்கியம், அறிவியல், சமூகவியல், நுண்கலை) எல்லாம் தேசத்துரோகம் தான்!

jnu-student-sedition-cartoon-5

பாஷி-ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைச்சிறந்த போலீசு! (படம்: https://rebelpolitikblog.wordpress.com)

jnu-student-sedition-cartoon-6
ஆர்.எஸ்.எஸ்: அடுத்து எந்த சீட்டை வைத்து விளையாடுவது? மோடி அலையா? தேசத்துரோகமா? இந்து ராஷ்ட்ரமா? கலவரமா? ஐ.ஐ.டி, ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஜே.என்.யு, புனே திரைப்படக் கல்லூரிகளை அழிப்பதா? ஏபிவிபி: தேசத்துரோகி, ஜே.என்.யுவை மூடு (என்பதை எடுங்கள்). (படம்: https://rebelpolitikblog.wordpress.com).
jnu-student-sedition-cartoon-7
தேசியவாத தணிக்கை வாரியம்: இங்கு எதுவெல்லாம் தேசபக்தி என்பது நிர்ணயம் செய்யப்படும். (நன்றி. தி இந்து ஆங்கில நாளேடு)
jnu-student-sedition-cartoon-8
அரசாங்கத்தை நடத்தும் ஆர்.எஸ்.எஸ் டவுசர்கள் (Chaddi என்றால் டவுசர்) ராஜ்நாத் சிங், மோடி, டெல்லி காவல்துறை ஆணையர் பாஷி எல்லோரும் அரச பாசிசத்தை ஜே.என்.யு நோக்கி திருப்பிக் கொன்டிருக்கின்றனர் (படம்: https://rebelpolitikblog.wordpress.com).

வெமுலாவின் நெஞ்சுரத்தை நொறுக்கியது யார் ?

1

ரோகித் வெமுலா – ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவன். அம்பேத்கர் மாணவர் சங்கம் என்ற அமைப்பின் முன்னோடி. சனவரி 17-ஆம் தேதியன்று சக மாணவன் ஒருவனது அறையில் வெமுலா தற்கொலை செய்து கொண்டான். சக மாணவர்கள் யாரும் அவனது முகத்தைக் கூடக் காண விடாமல், வெமுலாவின் உடலை ஒரு அநாதைப் பிணம் போல அப்புறப்படுத்தியது பல்கலைக்கழக நிர்வாகம். வெமுலாவின் தாயை மட்டும் அழைத்து வந்த போலீசு, அவர்களுடைய குடும்ப வழக்கத்தின்படி உடலைப் புதைப்பதற்குப் பதிலாக, அவசர அவசரமாக எரியூட்டியது.

இது தற்கொலைதானா என்று சந்தேகிப்பதற்கான எல்லா முகாந்திரங்களும் இந்த நடவடிக்கைகளில் உள்ளன. இது தற்கொலைதான் என்று நம்புவதற்கான ஆதாரம் ஒன்று உண்டெனில், அது வெமுலாவின் கடிதம். அக்கடிதம் வெளிப்படுத்தும் உணர்ச்சி உண்மையானது. போலிகளைத் தயாரிக்கும் கிரிமினல்தனத்தில் பெரும் திறமை பெற்றவர்கள்தான் என்ற போதிலும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலின் சூழ்ச்சித்திறனுக்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டது அக்கடிதத்தில் வெமுலா வெளிப்படுத்தும் உணர்ச்சி.

ரோகித் வெமுலா
பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிரான போராளி ரோகித் வெமுலா

வெமுலா, கல்லுடைக்கும் சாதியைச் சேர்ந்த தந்தைக்கும், தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கும் பிறந்து, தந்தை கைவிட்டு ஓடியதால், ஏழைத்தாயால் வளர்க்கப்பட்ட பிள்ளை. மார்க்சின் மீதும், அம்பேத்கரின் மீதும் பற்றும், பார்ப்பன இந்துவெறியின் மீது கடும் வெறுப்பும் கொண்ட ஒரு மாணவன். அம்பேத்கர் மாணவர் சங்கம், யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்ததும், முசாபர்நகர் கலவரம் குறித்த ஆர்.எஸ்.எஸ். வெறியர்களை அம்பலப்படுத்தும் ஆவணப்படத்தைத் திரையிட்டதும் ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழக்தில் இயங்கி வரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினருக்கும், பார்ப்பன வெறி பிடித்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் விடுத்த சவாலாக அமைந்தன.

இதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர்களுக்கான கலாச்சார விழாவின் போது மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வெமுலா தலைமையிலான மாணவர்கள் எழுப்பியதன் காரணமாக ஏ.பி.வி.பி.யின் தூண்டுதலின் பேரில் கலாச்சார விழாவையே ரத்து செய்தார் துணை வேந்தர். பெரும்பான்மை இந்து மாணவர்கள் மாட்டுக்கறிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அனைத்து மாணவர்களின் பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுப்போம் என்றது பல்கலைக்கழக நிர்வாகம். பொதுக்குழுவில் பெரும்பான்மை மாணவர்கள் மாட்டுக்கறி உணவை ஆதரித்தால், அன்றாடம் உணவு விடுதியிலேயே மாட்டுக்கறி வழங்க நீங்கள் தயார் என்றால் பொதுக்குழுவைக் கூட்டுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் வெமுலா உள்ளிட்ட மாணவர்கள். பீதியடைந்த நிர்வாகம் பொதுக்குழு யோசனையையே தலை முழுகியது.

அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் குறி வைக்கப்படுவதற்கு காரணமான சில சம்பவங்கள் இவை. நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் நவீன அக்கிரகாரங்கள், முற்று முழுதாக காவிக்கொடியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும் இன்றைய சூழலில், ஒரு தலித் மாணவன் இந்துத்துவத்தை எதிர்த்து சவால் விடுவதை பார்ப்பன பாசிஸ்டுகள் சகித்துக் கொள்வார்களா?

ரோகித் வெமுலா தற்கொலை - போராட்டம்
ரோகித் வெமுலாவின் தற்கொலையைக் கண்டித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்கள்.

வெமுலாவின் மாதாந்திர கல்வி உதவித்தொகை, ஜுலை மாதம் முதற்கொண்டே நிறுத்தப்பட்டது. தனது பராமரிப்புக்கும் தனது தாயின் பராமரிப்புக்கும் இந்த உதவித்தொகையை மட்டுமே சார்ந்திருந்த வெமுலா பட்டினிக்கும் கடனுக்கும் தள்ளப்பட்டான். பின்னர் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் தன்னைத் தாக்கிக் காயப்படுத்தியதாகவும், அதன் காரணமாக, தான் குடல் வால் அறுவை சிகிச்சை செய்து கொள்ள நேர்ந்தது என்றும் ஒரு ஏ.பி.வி.பி. பொய்யன் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தான். அவனுடைய உடலில் அடிபட்ட கொடுங்காயம் எதுவும் இல்லையென்றும், அடிபடுவதற்கும் குடல்வாலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் மருத்துவர் சான்றளித்தார்.

இருப்பினும், டிசம்பர் 16-ஆம் தேதி வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காரணம், “ஐதராபாத் பல்கலைக்கழகம் தேசத்துரோக, சாதிய பயங்கரவாதிகளின் கூடாரமாகிவிட்டது” என்று மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு எழுதிய கடிதங்கள். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் (மனு)ஸ்மிருதி இரானியின் நடவடிக்கை.

“அவர்கள் விடுதியில் தங்கக்கூடாது, சாப்பிடக்கூடாது, வகுப்புக்கு வருவதைத் தவிர பல்கலைக்கழகத்தின் வேறு எந்த இடத்திலும் புழங்கக்கூடாது” என்று வெமுலா உள்ளிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது ஊர் விலக்கம் செய்வது என்ற தீண்டாமை நடவடிக்கையை அப்படியே ஒத்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார் பேராசிரியர் கோபால் குரு. உதவித்தொகை நிறுத்தப்பட்டு, ஒண்டுவதற்கு இடமும் இல்லாமல் வெளியேற்றப்பட்ட வெமுலாவும் நண்பர்களும் பல்கலைக் கழக வளாகத்தின் வெட்டவெளியில் உறங்கினார்கள். அந்த மாணவர்கள் இரண்டு வாரங்களாகத் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய போதிலும், அவர்களை ஒரு ஆசிரியர் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. “நாம் நாய்களைப் போல வீதியில் கிடக்கிறோம். யாரும் நம்மை லட்சியம் செய்யவில்லை என்று ரோகித் வருந்துவான்” என்று நினைவு கூர்கிறார்கள் நண்பர்கள்.

செந்தில்குமார்
ஆதிக்க சாதிவெறி பிடித்த பேராசிரியர்களின் புறக்கணிப்பாலும் அவமதிப்பாலும் தற்கொலை செய்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சித் துறை மாணவர் செந்தில்குமார். (கோப்புப் படம்)

எதிரிகளின் தாக்குதலைக் காட்டிலும் கொடியது இந்த ஆதரவற்ற நிலை. ஆறு மாதங்களாக சோற்றுக்கு வழியில்லாமல் தவித்து, பிறகு தங்குவதற்கு இடமின்றி வீதியில் வீசியெறியப்பட்ட பின்னரும் விடாப்பிடியாகப் போராடிய வெமுலாவால் இந்தப் புறக்கணிப்பை சகித்துக் கொள்ள இயலவில்லை. தாங்கள் பல ஆண்டுகாலம் வளைய வந்த பல்கலைக்கழகத்தில், அநாதைகளைப் போல தெருவோரமாக தாங்கள் படுத்துக் கிடக்கையில், அந்தக் காட்சியால் எந்தவித சலனத்திற்கும் ஆளாகாமல், பேசிச் சிரித்தபடிக் கடந்து செல்லும் சக மாணவர்களைப் பார்த்த வெமுலாவின் மனம் நிலைகுலைந்ததில் வியப்பென்ன? வெமுலாவின் நெஞ்சுரத்தை நொறுக்கியவர்கள் எதிரிகள் அல்லர்.

இதே ஐதராபாத் பல்கலைக் கழகத்தில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ரெட்டி சாதி மாணவனால் காதலித்து ஏமாற்றப்பட்டு கருத்தரித்த ஒரு தலித் பெண் தற்கொலை செய்து கொண்டாள். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அந்த மாணவியின் உடல் விடுதியின் வாயிலில் கிடத்தப்பட்டிருந்த அதே நேரத்தில், விடுதிக்கு உள்ளே வேறொரு மாணவியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்திருக்கின்றன.

தற்போது வெமுலா மீது நடவடிக்கை எடுத்த துணை வேந்தர் அப்பாராவின் இடத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீவத்சவா, 2008-இல் செந்தில் குமார் என்ற தமிழக தலித் மாணவனின் தற்கொலைக்குக் காரணமான குற்றவாளி. பன்றி மேய்க்கும் சாதியில் பிறந்தவரான செந்தில் குமார் கணிதத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர். குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி. சாதிவெறி பிடித்த பேராசிரியர்களின் புறக்கணிப்பும், அவமதிப்பும் அவரைத் தற்கொலைக்குத் தள்ளின. அன்றும் செந்தில் குமாரின் உடலைப் பார்ப்பதற்குக்கூட ஒரு பேராசிரியரும் வரவில்லை, மனித உரிமை செயற்பாட்டாளர் பாலகோபால், தலித் தலைவர் போஜா தாரகம் ஆகிய இருவர் மட்டுமே வந்தனர் என்று நினைவு கூர்கிறார்கள் மாணவர்கள்.

rohit_4பல்கலைக்கழக ஆசிரியர் குடியிருப்பின் குழாய்த் தண்ணீரை எல்லா சாதியினரும் பயன்படுத்துவதால், அது தீட்டான தண்ணீர் என்று கூறி தனது வீட்டில் தனியே கிணறு தோண்டிக்கொள்ள ஒரு பேராசிரியப் பார்ப்பனருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதியளித்திருக்கிறது என்று சொன்னால் அந்தப் பல்கலைக் கழகத்தின் யோக்கியதை வேறெப்படி இருக்க முடியும்?

டில்லி பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியரும், “ஒதுக்கீட்டின் குழந்தைகள்” என்ற நூலின் ஆசிரியருமான என்.சுகுமாரன், ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு தலித் மாணவன் அனுபவிக்கும் கொடுமையை ஒரு சித்திரமாகத் தருகிறார். “பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்து விடுதியில் இடம் கிடைக்காத தலித் மாணவர்கள் ஏராளம். வெளியில் அறை எடுத்து தங்க அவர்களுக்கு வசதி இருக்காது. சட்டவிரோதமாக விடுதி அறைகளில் அவர்கள் தம் நண்பர்களுடன் தங்கியிருப்பார்கள். அறையில் சோறு மட்டும் வைத்துக் கொள்வார்கள். உணவு விடுதியில் எல்லா மாணவர்களும் சாப்பிட்டு விட்டு கிளம்பும்வரை காத்திருப்பார்கள். சமையல் பாத்திரங்களில் குழம்பு, பொறியல் ஏதேனும் மிச்சமிருக்கிறதா என்று அவர்கள் துழாவும் அதே நேரத்தில், நாய்களும் பூனைகளும் எச்சில் தட்டுகளை நக்கிக் கொண்டிருப்பதை நான் என் கண்ணால் கண்டிருக்கிறேன்” என்கிறார் பேரா. சுகுமாரன்.

2008 முதல் இன்று வரை அந்தப் பல்கலைக்கழகத்தில் மட்டும் 11 தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சாதி ஆதிக்கமும் தலித் மாணவர்களின் தற்கொலையும் ஐதராபாத் பல்கலைக் கழகத்தின் பழகிப்போன எதார்த்தங்களாகி யிருக்கின்றன. “ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தலித் மாணவர்களைப் புறக்கணிக்கிறார்கள். அதேநேரத்தில், ஆதிக்க சாதி மாணவர்களோ தாங்கள்தான் பல்கலைக்கழகத்தின் உரிமையாளர்கள் என்று கருதுகிறார்கள் என்கிறார் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஹரகோபால். டில்லி எய்ம்ஸ் முதல் சென்னை ஐ.ஐ.டி. வரையில் எல்லா உயர் கல்வி நிறுவனங்களின் நிலையும் இதுதான்.

சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்துக்கு எதிராக ஸ்மிருதி இரானி தாக்குதல் தொடுத்த போதும், அம்மாணவர்களுக்கு ஆதரவான குரல் எதுவும் உள்ளேயிருந்து எழுந்துவிடவில்லை. வெளியிலிருந்து எழுந்த எதிர்ப்புக் குரல்களும் போராட்டமும் வலுப்பெற வலுப்பெறத்தான் ஐ.ஐ.டி. பார்ப்பனக் கும்பல் அஞ்சியது, பின் வாங்கியது. போராட்டம் நாடு முழுவதும் பரவியதன் விளைவாக, மோடி அரசு பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பார்ப்பன ஆதிக்கம், அந்த ஆதிக்கத்துக்கு எதிரான குரல்களை நசுக்குவதன் மூலம் அவற்றை இந்துத்துவக் கூடாரங்களாக்கும் மோடி அரசின் நடவடிக்கைகள், தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களை உயர்கல்வியிலிருந்து முற்று முழுதாகவே வெளியேற்றவிருக்கும் காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தனியார் உயர்கல்விக் கொள்ளையின் அமலாக்கம் – இவை தனித்தனிப் பிரச்சினைகளுமில்லை, இவற்றுக்குத் தனித்தனி தீர்வுகளும் இல்லை.

ஆனால் இவை ஒவ்வொன்றும் எண்ணற்ற வெமுலாக்களை மரணத்துக்குத் தள்ள வல்லவை. எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகளின் தற்கொலை இதனை உணர்த்த வில்லையா என்ன?

– அஜித்

_______________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2016
_______________________________

மூடு டாஸ்மாக்கை மாநாடு – நாடகம் , தப்பாட்டம்

0

parai aattam

மூடு டாஸ்மாக்கை – திருச்சி மாநாட்டில் தப்பாட்டம்

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் தஞ்சை ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஜான் பீட்டர் – கலா குழுவினரின் தப்பாட்டம். பாருங்கள், பகிருங்கள்!

மூடு டாஸ்மாக்கை – திருச்சி மாநாட்டில் நாடகம்

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் மதுரை மையம் வீதி நாடக இயக்கத்தின் நாடகம். பாருங்கள், பகிருங்கள்!

போதையும் தமிழனும் – சிறுமிகள் உரை

0
சிறுமிகள்

போதையும் தமிழனும் – சிறுமி பாரதி உரை.

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் கோத்தகிரியைச் சேர்ந்த சிறுமி பாரதியின் உரை. தமிழனது சிறப்பான குணம் சாராயம் அருந்துவதாக மாறிவிட்டதை எள்ளி நகையாடுகிறாள், முதலாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுமி. பாருங்கள், பகிருங்கள்!

கல்யாணத்திலும் குடி கருமாதியிலும் குடி – சிறுமி காவ்யாஸ்ரீ

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் நீலகிரி மாவட்டத்தின் அவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி காவ்யாஸ்ரீயின் உரை. டாஸ்மாக் கடையிலேயே குடியிருக்கும் தமிழனை வெளியே வருமாறு அழைக்கிறாள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்தச் சிறுமி. பாருங்கள், பகிருங்கள்!

கோவன் பாடல் – டாஸ்மாக் கொடூரங்கள் மக்கள் நேருரை

0

கோவன் பாடல்: குடி …… சிந்திக்காதே குடி ……..!

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், ம.க.இ.க பாடகர் தோழர் கோவன் பாடிய புதிய பாடல்! சாராய போதையில் சுயமரியாதை அற்றும், தமிழக வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் பாரமுகத்தையும் கேலி செய்கிறது இந்தப் பாடல்! பாருங்கள், பகிருங்கள்!

மூடு டாஸ்மாக்கை : சான்றிதழைக் கிழித்த டேவிட்ராஜ்

திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய “மூடு டாஸ்மாக்கை” – சிறப்பு மாநாட்டில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட்ராஜின் உரை இது.

அவர் விளையாட்டில் சாதிக்க வேண்டும், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற தனது பழைய லட்சியங்களை தூக்கிப் போட்டு விட்டு மக்களை விடுவிக்க வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தை வரித்துக் கொண்டார். அதற்கு அடையாளமாக அவர் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் வாள் வீச்சில் பெற்ற சான்றிதழ்களை மேடையின் மீதே தூள் தூளாக கிழித்தெறிந்தார். மதவெறிக்கு எதிராக மத்திய அரசு வழங்கிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்த ஆளும் வர்க்கங்களின் மனசாட்சியை உலுக்கிய சொரணை மிக்க அறிஞர்களின் வரிசையில் துணைக்கண்டத்தின் தென் கோடியிலிருந்து இன்னுமொரு இளைஞன். சான்றிதழ்களைக் கிழித்துப் போடு இவன் அந்த வரிசையில் சேர்ந்திருப்பதோடு செயலில் இறங்கியதன் மூலம் முன்னுதாரணமாகவும் திகழ்கிறான்.

டாஸ்மாக்கிற்கு மனைவியை பலி கொடுத்த நாகராஜ்

திருப்பூரைச் சேர்ந்த நாகராஜின் கதை கொடூரமானது. குடிமைக்கு அடிமையாக இருந்த காலத்தில் அவரது மனைவி தீ வைத்து எரித்துக் கொண்டார். அந்த துயரத்தை முன்வைத்து டாஸ்மாக்கை மூடுமாறு மன்றாடுகிறார் இந்த ஏழை! பாருங்கள், பகிருங்கள்!

குடியால் அழிக்கும் அரசை கேள்வி கேட்கிறார் தெய்வக்கண்ணு!

டலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தெய்வக்கண்ணு தனது ஊரில் டாஸ்மாக் ஏற்படுத்திய பேரழிவை விவரிக்கிறார். கூடவே ஊற்றிக் கொடுக்கும் அரசை தூக்கி எறிய வேண்டாமா என்று மக்களிடம் கேட்கிறார். பாருங்கள், பகிருங்கள்!

எங்களை விதவைகளாக்கியது யார்? மந்திரகுமாரி

டலூர் மாவட்டத்தின் கச்சிராயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மந்திரகுமாரி தனது கிராமத்தில் டாஸ்மாக் நடத்திய பேரழிவினால் தோற்றுவிக்கப்பட்ட விதவைகளில் ஒருவர். தற்போது அரசை எதிர்த்து போராடும் வீராங்கனை! பாருங்கள், பகிருங்கள்!

ஜே.என்.யு மாணவர்கள் மீது மோடி கும்பலின் பாசிசத் தாக்குதல் !

0

காவிக்கும்பலுக்கு கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட குறிப்பிட்ட காரணங்கள் ஏதும் தேவைப்படாது என்பது தான் வரலாறு. சான்றாக இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சில் நீங்கள் பாகிஸ்தானுக்கு கைதட்டினால் தேசத்துரோகி ஆகிவிடுவீர்கள் என்பது நிச்சயம். இதே கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஆதரித்தால் நீங்கள் துரோகி அல்ல! அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகிற்கு அடிமைத்தனத்தை காட்டும் காவிக் கும்பல், பாக்கிடம் மட்டும் ஆண்டைத்தனம் காட்டும். காரணம், பாக்கை வைத்து இந்தியாவில் முசுலீம்களை அடிமைகளாக்குவது அவர்களின் இலட்சியம். முசுலீம் அல்லாதவர்கள் யாரெல்லாம் இந்த இலட்சியத்தை எதிர்க்கிறார்களோ அவர்களே ஆர்.எஸ்.எஸ்-ன் ஜன்ம பகைவர்கள்.

ஏ.பி.வி.பி காலிகள்
ஏ.பி.வி.பி காலிகள்

கிரிக்கெட் மேட்ச் மட்டுமல்ல, நீங்கள் மாட்டுக்கறி தின்றாலோ, முசபார்நகர் குஜராத் கலவரத்தை அம்பலப்படுத்தி பேசினாலோ, பார்ப்பனிய வேதக் கலாச்சாரத்தை எதிர்த்தாலோ, சமஸ்கிருத எதிர்ப்பு பேசினாலோ, கலப்பு மணம் புரிந்தாலோ, சாதி வர்ண ஒழிப்பு பேசினாலோ, காதலித்தாலோ, நாத்திகராக கம்யுனிஸ்டாக இருந்தாலோ, பெரியார் கொள்கையைப் பரப்பினாலோ, அம்பேத்கரை பார்ப்பனியத்தை எதிர்க்கும் ஆயுதமாக காட்டினாலோ, சிறுபான்மை மதத்தவரைச் சேர்ந்தவராக இருந்தாலோ, இந்துத்துவத்தை எதிர்க்கும் தலித்தாக இருந்தாலோ, அல்லது பஸ்தார் சட்டிஸ்கர் பழங்குடியினராக இருந்தாலோ, அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பைப் பேசினாலோ, இந்துப் பார்ப்பனியத்தில் பெண்களுக்கு வழிபடும் உரிமை குறித்து பெண்களே போராடினாலோ, ஏன் அறிவாளியாக பத்திரிக்கையாளனாக விருதைத் திருப்பி அளிப்பவனாக இருந்தாலோ அவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் காலிகளின் வரையறைப்படி தேசத்துரோகிகள்.

afzal-guru-protest
காஷ்மீர் மக்களின் விடுதலை போராட்டத்துக்கு ஆதரவான நிகழ்ச்சி பற்றிய போஸ்டர்

ஆக இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் காவி வானரங்களைத் தவிர தேசபக்தனாக திகழ்வதற்குண்டான வாய்ப்புகள் யாருக்குமே கிடையாது. இதுதான் இன்றைய நிலைமை.

ஆகையால் தான் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டது; புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்; ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா தொங்கவிடப்பட்டார்; இப்பொழுது ஒட்டுமொத்த டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் பாசிச பயங்கரவாதத்திற்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது.

12-02-2015 அன்று (இந்தியாவின் கூட்டு மனசாட்சியை நிறைவேற்றுவதற்காக) தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மூன்றுமாண்டு நினைவுக் கூட்டத்தை ஜே.என்.யு பல்கலைக் கழகத்தின் சில மாணவர் அமைப்புகள் நடத்தியிருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க! இந்தியா ஒழிக!’ என்று மாணவர்கள் கோசமிட்டதாக ஏ.பி.வி.பி குண்டாந்தடிகள் வழக்கம் போல பா.ஜ.க எம்.பி.க்கு தெரிவிக்க, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி போன்றோரின் நேரடி தலையீட்டின் கீழ், டில்லி காவல்துறை தேசத்துரோகம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் போன்ற வழக்குகளை குற்றம் சாட்டப்படுவர் யார் என்று பெயரைச் சொல்லாமலேயே ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக தொடுத்திருக்கின்றனர்.

கன்னையா குமார்
டெல்லி காவல்துறை மப்டி உடையில் ஜே.என்.யு. பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரை தேசத்துரோக குற்றச்சாட்டில் கடத்திச் சென்றிருக்கிறது.

இப்படிச் செய்வதன் மூலம் யார் மீது வேண்டுமானாலும் தேசத்துரோக குற்றச்சாட்டை சுமத்தலாம் என்பதற்கு நிருபணமாக டெல்லி காவல்துறை மப்டி உடையில் ஜே.என்.யு. பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரை தேசத்துரோக குற்றச்சாட்டில் கடத்திச் சென்றிருக்கிறது.

மேலும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் ஏ.பி.வி.பி காலிகளின் துணையோடு, டெல்லி காவல் துறை பல்கலைக் கழக மாணவர்களை சூறையாட வெறிகொண்டு அலைந்து வருகிறது. நள்ளிரவில் பெண்கள் விடுதியைச் சோதனையிடுவது, அடையாள அட்டை வைத்திருக்காத மாணவர்களை சித்ரவதை செய்து பொய் கேசு போட முயல்வது, காஷ்மீரிலிருந்து வரும் ஒட்டு மொத்த மாணவர்களையும் கைது செய்ய முனைவது, இதுவரை மோடி அரசின் பாசிசக் கொள்கைகள் மற்றும் இந்துத்துவ கும்பலின் அரசியலையும் அம்பலப்படுத்திய மாணவர்களையும் குறி வைத்து வேட்டையாடுவது என ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பல் பல்வேறு மாணவர் பிரச்சனையில் அம்பலப்பட்ட பிறகும் கூட அடிபட்ட நரியாக ஊளையிட்டுக் கொண்டிருக்கிறது.

காவிக் கும்பலின் பாசிச பக்தி
காவிக்கும்பல் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புரளிகளைக் கிளப்பி மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசின் தோல்வியை மூடிமறைத்து அகண்ட பாரதக் கனவை நிறைவேற்ற முயன்று வருகிறது.

கடந்த ஐந்து நாட்களாக நாட்டில் நடைபெற்று வரும் பிரச்சாரம் என்ன? ஏதோ பாகிஸ்தான் ஆதரவு மற்றும் இந்தியாவிற்கு எதிரான முழக்கங்களுக்கத்தான் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் மாணவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதாக இந்துத்துவ பாசிச கும்பல் சமூகத்தின் பொதுப்புத்தியில் தன்னை இருத்த தவியாய் தவிக்கிறது. ஆனால் நிதர்சனத்தில் காவிக்கும்பல் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புரளிகளைக் கிளப்பி மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசின் தோல்வியை மூடிமறைத்து அகண்ட பாரதக் கனவை நிறைவேற்ற முயன்று வருகிறது.

சான்றாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அப்சல் குரு நினைவுக் கூட்டம் நடத்திய உமர் எனும் மாணவர் லஷ்கர்-ஈ-தொய்பாவுடன் நேரடித் தொடர்புடையவர் என்று ஒரே போடாக போட்டார். ராஜ்நாத்சிங்கின் இந்த புரளி, அரசின் புலனாய்வுத்துறையாலேயே நிராகரிக்கப்பட்டு இருப்பது ராஜ்நாத்சிங்கின் களவாணித்தனத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

இரண்டாவதாக, பாகிஸ்தானில் இருக்கும் ஹபீஸ் செய்யது நேரடியாக ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவு தருவதாக கட்டியமைக்கப்பட்ட செய்தியும் ஹபீஸின் பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் டிவிட்டர் கணக்கும் போலியானது என்பதையும் வெளிச்சத்திற்கு வந்தபிறகு ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நோக்கமும் அம்பலப்பட்டுவிட்டது. அதே போல பல்கலையில் “பாக் வாழ்க” கோஷம் போட்டவர்கள் ஏ.பி.வி.பியினரே என்று ஆம் ஆத்மி வீடியோ மூலம் அம்பலப்பட்ட பிறகும் அவாள் கூட்டம் ஊளையிடுவதை நிறுத்தவில்லை.

bjp-thug-mla-op-sharma-thrashing-students
மாணவரை தாக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏ குண்டன் ஓ.பி.சர்மா

இந்துத்துவ கும்பல் இச்சந்தர்ப்பத்தை கணிசமாக தன்பக்கம் அறுவடை செய்யவும் தவறவில்லை. டில்லியில் தற்பொழுதைய நிலையில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்திற்கு வெளியே இரயில் நிலையங்கள் உட்பட சங்கர்பரிவாரங்கள் ஜே.என்.யு மாணவர்களை தேசத்துரோகி எனக் குற்றம் சாட்டி தாக்கி வருகின்றனர்.

பாட்டியாலா உயர்நீதி மன்றவளாகத்தில் வக்கீல்கள் என்ற போர்வையில் நுழைந்த இந்துத்துவ வானரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டி.என்.ஏ நாளிதழ், எகனாமிக்ஸ் டைம்ஸ், கைரலி தொலைக்காட்சி, ஐ.பி.என் குழும நிருபர்களைத் தாக்கியிருக்கின்றனர். ஜே.என்.யு மாணவர் தலைவர் கண்ணையா குமாருக்கு ஆதரவாக கோர்ட் வளாகத்திற்கு வந்த மாணவர்களையும் தேசத்துரோகிகள் என்று இந்துத்துவக் கும்பல் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதையும் காவல்துறை வேடிக்கை பார்த்ததையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் அலோக் சிங் வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்.

hitler-modi
வெள்ளைக் காரனின் காலை நக்கிப் பிழைக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பாசிச அரசியல்

பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் மீதான வன்முறைத்தாக்குதல் தனி வழக்காக பதியப்பட்டிருக்கும் நிலையில் பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் இந்துத்துவ வானரங்கள், மாணவர் தலைவர் கண்ணையா குமாரைத் தாக்கியிருக்கிறது. உச்சநீதி மன்ற கெடுபிடி உத்தரவுகள்! எல்லாம் மோடியின் பாசிச பயங்கரவாதத்திற்கு முன்னால் கழிவறைக்காகிதமாக நிற்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

வெள்ளைக்காரனின் காலை நக்கிப் பிழைத்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் இன்றைக்கு மிகவும் ஆபாசமாக தேசபக்தி கூச்சல் போட்டுவருகிறது என்பதை எவர் ஒருவரும் அறிவர். கடந்த வாரத்திற்கு முன்புதான் அமெரிக்க இந்தியாவிற்கு டேவிட் ஹெட்லி வாக்குமூலத்தை பரிசாக வழங்கிவிட்டு பாகிஸ்தானிற்கு எப்-1 ரக ஹெலிகாப்டர்களை வழங்கியது.

ஹெட்லியின் வாக்குமூலத்திற்கு பின் பாகிஸ்தான்-ஐ.எஸ்.ஐ உளவுப்பிரிவின் சதி வெளியில் வந்துவிட்டதாக பிரச்சாரம் செய்த மோடி கும்பல், அமெரிக்கா அதே ஐ.எஸ்.ஐ பாகிஸ்தானுக்கு ஹெலிகாப்டர் வழங்கும் என்று தெரிந்தவுடன் தேசபக்தி கூச்சலை நவதுவராங்களிலும் இருந்தும் கசியவிடாமல் அடக்கி வாசித்தது.

ராஜ்நாத்சிங்
அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பதால் பாகிஸ்தான், பாரதமாதாவின் பாவாடையைக் கூட உருவுவதை வேடிக்கை பார்த்த பாரதிய ஜனதாக் கூட்டம்தான் இன்றைக்கு வந்தே மாதரம், தேசத் துரோகம் என்று உறுப்பறுந்த விலங்காக ஜே.என்.யு பல்கலைக் கழக விவகாரத்தில் கத்திக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா சம்பந்தப்பட்டிருப்பதால் பாகிஸ்தான், பாரதமாதாவின் பாவாடையைக் கூட உருவுவதை வேடிக்கை பார்த்த பாரதிய ஜனதாக் கூட்டம்தான் இன்றைக்கு வந்தே மாதரம், தேசத் துரோகம் என்று உறுப்பறுந்த விலங்காக ஜே.என்.யு பல்கலைக் கழக விவகாரத்தில் கத்திக்கொண்டிருக்கிறது.

இந்துத்துவக்கும்பலின் இந்தக் கூச்சலுக்கு இசுலாமிய மதஅடிப்படைவாதமும் ஓரளவு தீனிபோட்டு வளர்த்திருக்கிறது. இந்துமதவெறியர்களை எதிர்க்கும் இடதுசாரி, ஜனநாயக சக்திகளை பலவீனப்படுத்தும் வேலையினை இசுலாமிய அடிப்படைவாதிகள் செய்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் நுகத்தடியை சாதி இந்துக்களும் சூத்திர தலித்துகளும் ஒவ்வொரு நாளும் சுமந்துகொண்டிருக்கும் பொழுது மதச்சிறுபான்மையினர்கள் இரட்டை நுகத்தடியை சுமந்து கொண்டிருக்கின்றனர் என்பதுதான் இந்திய வாழ்நிலை.

இந்திரா-மோடி
அறிவிக்கப்படாத அவசரநிலை

சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற ஓட்டுப்பொறுக்கி போலி கம்யுனிஸ்டுகளின் ஓட்டாண்டித்தனம் ஜே.என்.யு விசயத்தில் இந்து-இந்தி-இந்தியா எனும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரதக் கனவையே உயர்த்திப்பிடிக்கிறது. இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பதை மறைக்கும் இந்த ஓட்டாண்டிகள் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவாக நிற்பதாக காட்டிக்கொள்வது கடைந்தெடுத்த அரசியல் பிழைப்புவாதமாகும். மேலும் இவர்கள் தமது சந்தர்ப்பவாதத்தைக் கொண்டு இந்துமதவெறியர்களை எதிர்ப்பது உண்மையில் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு பலத்தையே கொண்டு சேர்க்கிறது.

மறுகாலனியாதிக்க கொள்கைகளை விரைந்து தீவிரப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பார்ப்பனிய இந்துத்துவத்தையும் இசுலாமிய மதவெறி அமைப்புகளின் அடிப்படைவாதத்தையும் முறியடிப்பதற்கு இவர்கள் முன்வைக்கும் தீர்வு என்ன? பாராளுமன்றத்தில் ஜே.என்.யு விவகாரத்தைக் கிளப்பி “மோடியே பதில் சொல்! மவுனத்தைக் கலை!” “அமித் ஷா பதில் சொல்! ஸ்மிருதி இராணி பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேள்” என்று கேள்வி எழுப்புவார்களாம்.

பா.ஜ.க எம்.எல்.ஏ ஓ.பி சர்மா சி.பி.எம் கட்சித் தொண்டரை பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் நேரடியாக தாக்கி இதுதாண்டா பாசிசம் என்று எடுத்துக்காட்டுகிற பொழுது பாராளுமன்றத்தில் பாசிஸ்டுகளிடமே சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகள் நியாயம் கேட்பார்கள் என்ற நிலைப்பாடு புழுத்து நாறும் புண்ணுக்கு புணுகு போடுவதைப்போன்றது.

சங்கப் பரிவாரங்களின் தேசபக்தி கூச்சல் பாராளுமன்றத்தில் தீர்க்கப்படவேண்டியதல்ல. ஏனெனில் தேசபக்தி, “அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமா”கத்தான் இருக்கிறது. பாசிஸ்டுகளின் செயல் எந்திரம் இது. இது தான் இன்றைக்கு ஜே.என்.யு விவகாரத்தில் துலக்கமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஜே.என்.யு ஆசிரியர்கள், மாணவர்களின் கண்டன போராட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆக இந்த மதவாத அமைப்புகளின் அடித்தளத்தையே அடித்து நொறுக்காதவரை ஜே.என்.யு மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் மீதும் தேசத் துரோக வழக்கு பாயத்தான் செய்யும். இதை நாட்டின் உண்மையான தேசபக்தர்களான உழைக்கும் மக்கள் உணர வேண்டிய தருணம் இது.

– இளங்கோ

அப்பாவ கெடுத்துட்டியே அம்மா – பாடல்

3

appaava keduthittiye amma jpg 700“மூடு டாஸ்மாக்கை” – திருச்சியில் பிப்.14, 2016 அன்று மக்கள் அதிகாரம் நடத்திய சிறப்பு மாநாட்டின் கலை நிகழ்ச்சியில், இளம் தோழர் ஒருவர் பாடிய பாடல்! ‘அம்மா’ என்றழைக்கப்படும் ஸ்டிக்கர் மாஃபியாவின் தலைவி குடியால் தமிழகத்தை கெடுத்ததை ஒரு சிறுமியின் பார்வையில் விவரிக்கும் பாடல்! பாருங்கள், பகிருங்கள்!

 

டொனால்ட் ட்ரம்ப் – அமெரிக்காவின் ஐ.எஸ்.ஐ.எஸ் வேட்பாளர் !

14

”நான் சீனாவை வைத்து அந்த ஆளை ஏதோ ஒரு வகையில் சீக்கிரத்தில் ஒழித்து விடுவேன்”
”அப்படியென்றால் அது அரசியல் படுகொலையாக இருக்குமா?”
”அதை விட மோசமான முறைகள் கூட இருக்கிறது. இவன் ரொம்ப மோசமான ஆள் தெரியுமில்லையா?”

து அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி. நெறியாளர் பேட்டியெடுப்பது யாராவது மாபியா கும்பலின் தலைவனாக இருக்குமோ என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா? குழப்பமே வேண்டாம், பேசியது மிக பயங்கரமான கார்ப்பரேட் மாஃபியா தான் . ஆனால், கெடுவாய்ப்பாக மேற்படி கார்ப்பரேட் மாஃபியா தான் எதிர்வரும் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக இருக்கும் வாய்ப்பு பெற்றவர். படுகொலையை விட மோசமாக ஏதோ செய்யப் போவதாக முழங்கியுள்ளார், டொனால்ட் ட்ரம்ப். இந்த ’நல்லவரின்’ வாயால் கெட்டவர் என்ற பட்டத்தைப் பெற்றிருப்பவர் கிம் ஜோங் உன், வட கொரிய அதிபர்.

உலக வரலாற்றிலேயே ஆக முட்டாள்தனமான தலைவர் என்கிற இழிபுகழ் பெற்ற ஜார்ஜ் புஷ்க்கு போட்டியாக அதே குடியரசுக் கட்சியில் இருந்து உதித்திருப்பவர் தான் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்கர்கள் எதிர் கொண்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிக எளிமையான தீர்வுகளை கைவசம் தயாராக வைத்துள்ளார் ட்ரம்ப்.

donald-trump-3ட்ரம்ப்பின் தேர்தல் முழக்கம் அமெரிக்காவை ‘மீண்டும் உயர்ந்த தேசமாக்குவது’! அதற்காக அவர் வைத்திருக்கும் தீர்வுகள் என்ன?

அமெரிக்காவில் குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? அதற்கு மெக்சிகன் குடியேறிகளும், இசுலாமியர்களுமே காரணம். அதற்கு என்ன தீர்வு? மெக்சிகன்கள் எல்லை தாண்டி வருவதை தடுக்க அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே பெரிய மதில் சுவர் ஒன்றைக் கட்டினால் போயிற்று. சரி, அதற்கு அதிகமாக செலவாகுமே? அந்த செலவை மெக்சிக்கன் அரசாங்கத்திடம் இருந்து வசூலித்தால் முடிந்தது வேலை. சரி முசுலீம்களை என்ன செய்யலாம்? அவர்கள் மொத்தமாக நாட்டுக்குள் நுழைவதையே தடுத்து விட வேண்டியது தான். அப்போது போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தஞ்சம் கேட்டு வருபவர்களை என்ன தான் செய்வது? வெளியே போடா என்று கழுத்தைப் பிடித்து தள்ளி விட வேண்டியது தான்.

அமெரிக்காவின் மிகப் பெரிய பிரச்சினையே முசுலீம்கள் தான். அதற்கு என்ன ஆதாரம்? இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்ட போது ஆயிரக்கணக்கான முசுலீம்கள் நியூ ஜெர்சி மாநிலத்தில் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அதற்கு என்ன ஆதாரம்? அதைdonald-trump-1 நானே பார்த்தேன். அதற்கு என்ன ஆதாரம்? நான் பார்த்தது தான் ஆதாரம். வெளிநாட்டு முசுலீம்கள் உள்ளே வராமல் தடுப்பீர்கள், உள்நாட்டு முசுலீம்களை என்ன செய்வது? அவர்களின் மசூதிகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். சந்தேகம் வருபவர்களைப் பிடித்து அவர்களின் முகத்தை தண்ணீரில் முக்கியெடுத்து கடுமையான முறையி விசாரிக்க வேண்டும். கேட்கவே கொடுமையாக இருக்கிறதே? இது ஐ.எஸ்.ஐ.எஸ் பின்பற்றும் வழிமுறையை விட நாகரீகமானது தானே.

ஒபாமா அறிவித்துள்ள மருத்துவ காப்பீடு திட்டம் சரியில்லை. சரி என்ன செய்யலாம்? அதை மொத்தமாக தூக்கி கடாசி விட வேண்டும். அதற்கு பதில் வேறு என்ன திட்டம் உள்ளது? ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுக்கு பதில் அட்டகாசமாக ஏதாவது செய்து விட வேண்டியது தான் ( Something Terrific ). வெளியுறவுக் கொள்கை? எனக்கு ரசியாவின் புடினை டீலிங் செய்வது ரொம்ப சுலபம்.. வெளியுறவுகளையெல்லாம் ஒரு கை பார்த்துடலாம்.

மேலே இருக்கும் உளறல் வன்முறைகள் எல்லாம் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மூன்று மாதங்களாக வாய் வழியே கழிந்து வைத்தவைகளில் ஒரு சிறு துளி. இவை தவிர எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கும் ஹிலாரி கிளிண்டனை பாலியல் ரீதியில் விமர்சித்தது, தனது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் சக போட்டியாளரை “பீப்” வார்த்தையில் விளித்தது என்று டொனால்ட் ட்ரம்பின் வாய்க் கொழுப்பிற்கு நீண்ட பட்டியலே உண்டு.

இவை தவர பொருளாதாரம் குறித்தும், வரி விதிப்பு முறைகள் குறித்தும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி நிலை குறித்தும், அமெரிக்காவின் தேங்கிய பொருளாதாரம் குறித்தும் டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த முத்துக்களைக் கோர்த்தால் அந்த மாலையை வைத்து இமயமலையை நாலைந்து சுற்று சுற்றிக் கட்டியே விடலாம்.

சுருக்கமாகச் சொன்னால் நரேந்திர மோடியின் பாசிச மூர்க்கத்தனமும் ஜார்ஜ் புஷ்சின் ஏகாதிபத்திய எகத்தாளமும் சேர்ந்து செய்த கலவை தான் டொனால்ட் ட்ரம்ப். மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட வலைப்பதிவர்கள் தற்போது டொனால்ட் ட்ரம்பின் முட்டாள்தனமான உளறல்களுக்கு அதிக முக்கியத்துவம் செய்து கேலியும் கிண்டலுமாக எழுதி வருகின்றனர்.

donald-trump-8எனினும், ஊடகங்களின் கேலி கிண்டல்களைத் தாண்டி ட்ரம்ப் தொடர்ந்து வேட்பாளருக்கான போட்டியில் முன்னணி பெற்று வருகிறார். குடியரசுக் கட்சியினரிடையே எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்து முதலிடமும் பெற்று வருகிறார். படிப்பறிவில்லாத அமெரிக்கர்களிடமும் குறிப்பாக வெள்ளை நிறவெறியர்களிடமும் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. வெளிப்படையாக செயல்பட முடியாத கூ க்ளஸ் க்ளான் என்கிற நிறவெறி அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் நோக்கங்களை குடியரசுக் கட்சி முக்காடுடன் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அந்தக் கட்சியில் சேர்வது வழக்கமான ஒரு போக்கு – தற்போது குடியரசுக் கட்சியிலேயே இருக்கும் ஆகப் பிற்போக்கான வலதுசாரிகளும், நிறவெறியர்களும் டொனால்ட் ட்ரம்பின் வருகையைத் தொடர்ந்து சுறுசுறுப்படைந்துள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப்பை விமர்சிக்கும் ஜனநாயக கட்சி சார்புடைய ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் அவரது பேச்சுக்களும் செயல்பாடுகளும் அமெரிக்கத்தனையுடையது அல்ல (Un American) என்று எழுதுகின்றனர். எனினும், அதிகரித்து வரும் டொனால்ட் ட்ரம்ப்பின் செல்வாக்கு வேறொன்றை உணர்த்துகின்றது – அவர் இந்தக் காலகட்டத்தின் தேவை. யாருடைய தேவை? கார்ப்பரேட் முதலாளிகள் தேசங்கடந்த தொழிற்கழகங்கள் மற்றும் நிதி மூலதன சூதாடிகளின் இன்றைய தேவையாக டொனால்ட் ட்ரம்ப் இருக்கிறார்.

கடந்த பத்தாண்டுகளாக நீடிக்கும் உலகப் பொருளாதாரக் கட்டமைப்பு நெருக்கடி இன்னும் தீர்ந்தபாடில்லை. வால்வீதி சூதாடிகளின் சூதாட்ட வெறியில் புதைகுழிக்குள் வீழ்ந்த பொருளாதாரத்தை நிமிர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அந்தப் புதைகுழியை மேலும் ஆழமாக்கியே உள்ளன. அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அனைத்தையும் குறைந்த உழைப்பில் நிறைந்த லாபத்தையும் அதிக சுரண்டல் வாய்ப்புகளையும் வழங்கும் கிழக்கத்திய நாடுகளுக்கு பெயர்த்தெடுத்துச் சென்று விட்டனர், முதலாளிகள்.

இந்தச் சூழலில் அமெரிக்க நடுத்தர வர்க்கம் மேலும் மேலும் கடனில் வீழ்ந்துள்ளது. கல்லூரிப் படிப்பை முடிக்கும் போதே மிகப் donald-trump-7பெரிய கடன் சுமையோடு வெளியேறும் மாணவர்களை வேலையின்மை வரவேற்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே நேரம் வாங்க ஆளில்லாமல் பூட்டிக் கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வறுமையும் பசி பட்டினியும் அதிகரித்து வரும் அதே நிலையில் அமெரிக்க சமூகத்தில் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளிகளோ தங்கள் செல்வங்களை பன்மடங்கு உயர்த்திக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஏழை அமரிக்கர்களிடையே வன்முறைப் போக்கு ஒரு புறம் அதிகரித்து வருகிறதென்றால் இன்னொரு புறம் போதைப் பழக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மார்ஃபின் என்ற வழக்கமான போதைப் பொருளை விட 100 மடங்கு வீரியம் கொண்ட – ஹெரோய்னை விட 40 மடங்கு வீரியம் கொண்ட – ஃபெண்டனில் (Fentenyl) என்கிற சிந்தடிக் ஓபியத்தின் பயன்பாடு அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் அதிகரித்துள்ளது. இந்தப் போதை மருந்தால் இறப்பவர்களின் சதவீதமும் திடீரென உயர்ந்துள்ளது. இது தவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் அதன் காரணமாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க பொருளாதாராத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர்கள் பெருமுதலாளிகளும் நிதி மூலதன சூதாடிகளும், பங்குச் சந்தை ஓநாய்களும் தான் என்பதை வால் வீதி முற்றுகை இயக்கம் மிகச் சரியாக முன்வைத்தாலும் ஒரு அரசியல் இயக்கமாக அது உருப்பெறவில்லை. என்.ஜி.ஓக்கள் மற்றும் அடையாள அரசியல் குழுக்களின் சங்கமமாக மாறி கடைசியில் பிசுபிசுத்துப் போனது. மக்களிடையே அரசியல் ரீதியில் நம்பிக்கையான மாற்று ஏதும் தோன்றாத நிலையில் “மீட்பரின்” வருகைக்கான களம் தயாராக இருக்கிறது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எதிர்கொண்ட அதே நிலை தான். பொதுவாக “மீட்பர்கள்” எனப்படுபவர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறும் சவடால் பேச்சுக்கள் போதும்.

”எங்காளு ஆட்சிக்கு வந்தால் சீனாவின் தொடையில் நறுக்கென்று கிள்ளுவார், பாகிஸ்தானின் பொடனியில் பொட்டென்று போடுவார், ஒரு லிட்டர் பெட்ரோல் பத்து பைசாவுக்கு தருவோம், வெளிநாடுகளில் உள்ள பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு பத்து லட்சமாக பிரித்துக் கொடுப்போம், மொத்த நாட்டையும் சிங்கப்பூராக மாற்றுவோம்….”

”மீட்பர்களின்” உளறல்களுக்கெல்லாம் எந்த அறிவியல், தத்துவ, சித்தாந்த அடிப்படைகளும் தேவையில்லை. நோக்கம் ஒன்றே ஒன்று தான் – மக்களின் இன்பக் கிளுகிளுப்பைத் தூண்டுவது போல் பேச வேண்டும். தேர்ந்த எத்தனைப் போல் பேசி மக்களின் ஓட்டுக்களை கவர்வது முதல் கட்டம் – அதற்கு அடுத்தது, இந்த வெற்றியின் பலன்களை அறுவடை செய்யப் போகும் அதானிகளின், அம்பானிகளின் கட்டம்.

தற்ப்போது டொனால்ட் ட்ரம்ப் முதல் கட்டத்தில் இருக்கிறார். அனேகமாக குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ட்ரம்ப் தெரிவு செய்யப் படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அமெரிக்கர்களின் வெள்ளை இன தேசிய வெறியை எவ்வளவு திறமையாக தூண்டுகிறார், மீண்டும் சிறந்த தேசமாக அமெரிக்கா உருவாவதற்கு யாரையெல்லாம் பயங்கரமான எதிரிகளாக அமெரிக்கர்களிடம் கட்டமைக்கப் போகிறார், அதற்கு அமெரிக்கர்கள் எந்தளவுக்குப் பலியாகப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து தேர்தலில் வெல்வும் கூடும்.

donald-trump-4அதன் பின் மீட்பர் கிடைத்த நிம்மதியில் அமெரிக்கர்கள் இன்பக் கனவில் மூழ்கியிருக்கும் நேரம் பார்த்து நிதிமூலதனச் சூதாடிகளும், ரியல் எஸ்டேட் முதலைகளும் களமிறங்குவார்கள். டொனால்ட் ட்ரம்ப் தன்னளவிலேயே ஒரு ரியல் எஸ்டேட் முதலை என்பதோடு பல்வேறு நிதிமூலதனச் சூதாடிகளின் நெருக்கமான கூட்டாளியுமாவார். அவரது தேர்தல் பிரச்சார செலவுகளை நிதிமூலதனக் கும்பலே பின்னின்று கவனித்துக் கொள்ளும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வருகின்றன.

ஜார்ஜ் புஷ்சுக்கு சற்றும் குறையாத போர் வெறியனாக தன்னை காட்டிக் கொள்வதில் ட்ரம்ப் எந்தக் கூச்சமும் அடைவதில்லை. ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இருக்கும் இந்த நிலையிலேயே தனது எதிர்காலப் போர் இலக்குகளாக வட கொரியாவையும், ஈரானையும், சிரியாவையும் அடையாளம் காட்டியுள்ள நிலையில், ஒருவேளை தேர்தலில் வென்று அதிபரானால் போர்த்தளவாட கார்ப்பரேட்டுகளின் காட்டில் டாலர் மழை தான் என்பதில் சந்தேகமில்லை.

உலகின் பொருளாதார இயக்கம் மொத்தமும் அமெரிக்க பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் விளைவுகள் ஒவ்வொன்றும் நம்மையும் பாதிக்கப் போவது உறுதி.

டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் முழக்கம் ”மீண்டும் அமெரிக்காவை சிறந்த தேசமாக்குவோம்” என்பதாகும். ஒரு ஆச்சரியமான ஒற்றுமை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தினசரி பஜனையின் கடைசிவரி – பரம் வைபன்யே துமே தத் ஸ்வராஷ்ட்ரம் (உலகில் சிறந்த தேசமாக்குவேன்) – பாசிஸ்டுகளின் மிக முக்கியமான ஆயுதம் தேசிய வெறியும், தேசம் குறித்த பழைய பெருமிதங்களுமே.

பாரசீக வளைகுடாவில் தோன்றி உலகை அச்சுறுத்துவதாக குறிப்பிடப்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகளே வெட்கப்படுமளவு இந்த டொனால்ட் பேசுகிறாரே என்று சில அப்பாவி அமெரிக்கர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம். எதற்கய்யா வருத்தம்? ஐ.எஸ்-க்கு குர் ஆனிலிருந்து, கில்லட்டின் வரை பயிற்சி கொடுத்தவர்களே அமெரிக்க ஆண்டவன்தான் எனும் போது இது பெருமைக்குரியதல்லவா!

– தமிழரசன்

மேலும் படிக்க

கண்ணீர், கதறல், கோபம் – “மூடு டாஸ்மாக்கை” திருச்சியில் மக்கள் வெள்ளம்

3
திருப்பூர் நாகராஜ்
trichy shut down the tasmac conferance - part 4 (9)
திருச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்

“ஏதென்று தெரியாத இடத்தில்..
ஏதென்று தெரியாத நேரத்தில்..
என் தந்தை பெயரென்னவென்பதே அறியாமல்..
என் தாயின் பெயரென்னவென்பதையும் அறியாமல்..
மதுவருந்தி மயங்கிக் கிடந்தேன்…  ”

கரநாதன் நாவேர் நாட்டுக்களறி கலைக்குழுவின் பாடல் வரிகளில் இருந்து..

போராடும் மக்கள் திரளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மொழியும், கலாச்சாரமும், பூகோள இடைவெளியும் தடைகளே அல்லவென்பதை, கேரளத்தின் ஆலப்புழாவில் இருந்து வந்த அந்தக் கலைக்குழு பாடிய பாடல்கள் உணர்த்தின. பார்வையாளர்களின் மொழி பாடகனுக்குத் தெரியாது; பாடகனின் மொழி பார்வையாளர்களுக்குத் தெரியாது. எனினும் எவரும் எழுந்து செல்லவில்லை; கூட்டம் சலசலக்கவில்லை… ஆழ்ந்த அமைதியில் ஏறி இறங்கும் பாடலின் தாள லயத்தில் மக்கள் கட்டுண்டு கிடந்தனர். அங்கே உணர்வுகளின் பரிமாற்றம் ஒரு உயர்ந்த தளத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

திருச்சியில் 2016 பிப்ரவரி 14-ம் தேதியன்று நடந்த “ஊருக்கு ஊரு சாராயம்! கதறுது தமிழகம்! – மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு” இதைப் போன்ற எண்ணிறந்த தருணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஓட்டுக் கட்சிகளின் அலங்கார அலப்பறைகளோ, குவாட்டர்-கோழி பிரியாணி கும்பலையோ இங்கு நீங்கள் காண மாட்டீர்கள் என்ற எல்லோரும் அறிந்த உண்மைக்குள் மீண்டும் ஒருமுறை புகுந்து புறப்பட விரும்பவில்லை. மாநாட்டின் சில உணர்வார்ந்த தருணங்களை பரிமாறிக் கொள்வதே எமது விருப்பம்.

தஞ்சை ரெட்டிபாளையத்திலிருந்து வந்திருந்த ஜான் பீட்டர் – கலா தப்பாட்டக் குழுவினரின் நிகழ்ச்சியோடு 14ம் தேதி மாலை மாநாடு துவங்கியது. அவர்களின் ஆக்ரோஷமான அடவுகளும் நரம்புகளைப் பிடித்து மீட்டும் பறையோசையும் மாநாட்டுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களை சுமார் அரை மணி நேரம் கட்டிப் போட்டது. மாநாட்டில் தொடர்ந்து வரப்போகும் நிகழ்ச்சிகளுக்கும், உரைகளுக்கும் மக்களின் மனங்களை அந்தப் பறையோசை தயார்ப்படுத்தியது.

க்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் மாநாட்டைத் தலைமை வகித்து நடத்தினார். சென்னையைச் சேர்ந்த உதவும் கைகள் என்கிற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஆனந்தி அம்மாள் முதல் உரையை நிகழ்த்தினார். அவர் தெருவோரங்களில் கிடக்கும் அடையாளம் தெரியாத அநாதைப் பிணங்களை அடக்கம் செய்வதற்கே தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் அடக்கம் செய்தவர்களில் சுமார் 70 சதவீதம் மதுவால் இறந்தவர்கள். அவற்றில் பல பிணங்களை பல இடங்களில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைகளின் வாசலில் வைத்தே கைப்பற்றியுள்ளார்.

trichy shut down the tasmac conferance - part 5 (2)
தோழர் காளியப்பன் – தலைமை உரை
trichy shut down the tasmac conferance - part 5 (3)
ஆனந்தி அம்மாள்

 அநாதைப் பிணங்களை உற்பத்தி செய்யும் நதிமூலங்களில் பிரதானமானது என்பதை உணர்ந்த பின் தனது சேவையை மாற்றிக் கொண்டு மது ஒழிப்பிற்காக போராடி வருகிறார். சமீபத்தில் மது விலக்கை வலியுறுத்தி நீண்ட நடைபயணம் ஒன்றை நடத்தி முடித்த அவர், அதன் அனுபவங்களைப் பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். மதுக் கொடுமையால் இளம் வயதிலேயே கணவனை இழந்த பெண்கள், பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் மதுவின் தாக்கத்தால் இழக்கப்படும் குற்றங்கள் குறித்து விவரித்தவர், இந்த மாநாடு வரை தமது அணுகுமுறை அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக இருந்தது என்றும் இதற்கு மேலும் மதுவிலக்கை அமல்படுத்தவில்லை என்றால் இந்த மாநாட்டிற்குப் பிறகு தமது அணுகுமுறையே மாறும் என்றும் அரசுக்கு எச்சரிகை விடுத்தார்.

மாநாட்டின் அடுத்த உரை மொத்தக் கூட்டத்தையும் உறைய வைத்தது.. திருப்பூர் நாகராஜின் வாழ்க்கையின் வலி மிகுந்த பக்கங்களை உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறோம்.

நாகராஜ் திருப்பூரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, முன்னாள் குடி அடிமை, பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகள் உண்டு. “குடி அடிமை” என்கிற இரண்டே இரண்டு வார்த்தைகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் எவ்வளவு தெரியுமா? தான் சம்பாதித்த கூலி அத்தனையையும் குடித்தே தீர்ப்பது நாகராஜின் வழக்கம். இதன் காரணமாக மனைவியோடு தொடர்ந்து சண்டை.

நாகராஜின் குடிப்பழக்கத்தை எத்தனை போராடியும் மனைவியால் நிறுத்த முடியவில்லை. ஒரு நாள் வழக்கம் போல கையிலிருந்த கூலிக் காசு மொத்தத்திற்கும் குடித்து விட்டு வந்து வீட்டுக்குள் நினைவிழந்து விழுந்துள்ளார். வெறுத்துப் போன மனைவி  மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தன்னையே கொளுத்திக் கொள்கிறார். நெருப்பின் ஆங்காரம் அலறலாக பீறிட்ட போது தட்டுத் தடுமாறி விழித்துப் பார்த்த நாகராஜுக்கு என்ன செய்வதென்று தெரியாத அளவுக்குப் போதை தலையிக்கேறியிருந்தது.

மனைவி நெருப்பில் உருகிக் கொண்டிருப்பதைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அருகே சென்று நெருப்பை அணைக்க முற்பட்டுள்ளார்… தீச் சூவாலைகளின் தீவிரத்தில் தன்னைத் தொட்ட ஏதோவொன்றை இறுக்கியணைத்துள்ளார் அந்தப் பெண். அது நாகராஜின் உடல் தான். அடுத்து என்ன நடந்ததென்று நாகராஜுக்குத் தெரியவில்லை. கண் விழித்துப் பார்த்த போது அவர் அரசு மருத்துவமனையின் படுக்கையில். நெருப்பு அவரையும் உருக்குலைத்துப் போட்டிருந்தது; அவரது விரல்கள் மெழுகைப் போல் உருகிப் போயிருந்தன. ஐந்து விரல்கள் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் இரண்டு விரல்கள்.. கூட்டத்தைப் பார்த்து அந்தக் கையை உயர்த்திக் காட்டினார். அத்தனை பேர்களின் கண்களிலும் கண்ணீர்.. மூன்று மாதங்கள் கழித்தே அவரது மனைவி இறந்து விட்டதை அறிகிறார். இந்த செய்தியைக் கேட்பதற்காகவே அந்த மூன்று மாதங்களாக அவர் மனப்பிறழ்வுக்கு ஆளாகிய நிலையில் நெருப்பால் வெந்த உயிரை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார்.

திருப்பூர் நாகராஜ்
திருப்பூர் நாகராஜ்

“ஒரு காலத்திலே கையில இருந்த காசு தீர்ற வரைக்கும் குடிச்சவனுங்க. எம்பட கிட்ட வாங்கிக் குடிச்சவன் எத்தனையோ பேரு.. இன்னிக்கு என்னோட கை இப்படியாகிப் போச்சு.. என்னால வேலை செஞ்சி சம்பாரிக்க முடியாது.. என்ற புள்ளங்க, ‘அப்பா… பசிக்குதுன்னு’ கேட்டு அழுவுதுங்க.. பால் வாங்கிக் குடுக்க காசில்ல.. பிச்சையெடுக்க மனசில்ல..”

நிறுத்தி விட்டுத் தேம்பினார். சரியாக அந்த நேரத்தில்.. கூட்டத்திலிருந்த மக்கள் பொன்மனச் செல்வியாம் புரட்சித் தலைவின் பொற்கால ஆட்சியைக் குறித்து ஆவேசக் குரலில் சொன்ன சங்கதிகளுக்கு  ஏழெட்டு தேச துரோக வழக்குகள் உறுதி. நாகராஜ் தொடர்ந்தார்.

“என்னோட புள்ளைக்கு ஒடம்பு சரியில்லெ.. ஆசுபத்திரிக்கி கூட்டிட்டுப் போக வர அஞ்சு ரூபா ஆகும்… அதுக்கு காசில்லாதனா போயிட்டேன்” மீண்டும் உடைந்தார் நாகராஜ்.. ஒரு சிறிய மௌனத்திற்குப் பின் டாஸ்மாக்கை எப்படியாவது மூடி விடுங்களென்று மக்களிடம் கேட்டு விட்டு அமர்ந்தார்.

இனி எவனுக்காகவும் காத்திருக்கப் போவதில்லை.. இது எங்கள் ஊர்; எங்கள் வாழ்க்கை; எங்கள் தீர்மானம்; டாஸ்மாக்கை மூடியே தீர்வதென்கிற உறுதியை மக்கள் அடைந்திருந்தனர். எனினும் அது போராட்டமின்றிச் சாத்தியமில்லை.. ஆனால் போராட்டங்களோ மாலை நேரத் தேனீர் போல அத்தனை ரசமான அனுபவங்களாய் இருக்கப் போவதில்லை. தோழர்களுக்கு இது பழகியது தானென்றாலும் மக்களுக்கு இது புதிது. நரகத்தின் மத்தியில் நிற்பவர்களுக்கு கடினமான பாதை ஒன்றைக் கடந்தால் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பது தெரிந்து விட்டது.. அந்தப் பாதையைக் கடப்பதெப்படி? தனது அனுபவத்தின் மூலம் அதை விளக்கினார் மது ஒழிப்புப் போராளி டேவிட் ராஜ்.

டேவிட் ராஜ்
டேவிட் ராஜ்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் ராஜ் ஒரு முன்னாள் இராணுவ வீரர் மட்டுமின்றி வாள் வீச்சில் தேசிய சேம்பியன். இந்த தேசத்திற்காக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்பது அவரது லட்சியம். இராணுவத்தில் இருந்து கொண்டே அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தான் அவரது தந்தை குடிக்கு அடிமையான தகவல் அவரை அடைகிறது. உடனடியாக ஊருக்கு வந்தவர் தந்தையின் நிலை கண்டு மனம் பதைக்கிறார். இது அவரது பிரச்சினை மட்டுமில்லை என்பதையும் இங்கே ஒரு சமூகமே குடி நோயின் பிடியில் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்ட ரீதியில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்கிறார்.

குடி உடல் நலனை மட்டுமில்லாமல் மன நலனையும் அழித்து ஒரு மனிதனை சிந்திக்க முடியாத வாழும் பிணங்களாக்குகிறது என்ற உண்மையை டேவிட் ராஜ் உணர்ந்து கொண்டு தனது இராணுவ வேலையை இராஜினாமா செய்து விட்டு ஊரிலேயே ஒரு விளையாட்டு மையம் ஒன்றைத் துவங்குகிறார் – அதோடு மது ஒழிப்புப் போராட்டங்களிலும் கலந்து கொள்கிறார். சசி பெருமாளைப் பின்பற்றி மது ஒழிப்புப் போராட்டக் களத்திற்கு வருகிறார்.

அபினியால் தங்களை அடிமைப்படுத்தியுள்ளனர் என்பதை உணர்ந்த சீன மக்கள் தமது ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரை அபினி யுத்தத்திலிருந்து துவங்கினர். வெள்ளை ஏகாதிபத்தியும் அதன் அடிவருடிகளான சீன ஆளும் வர்க்கமும் அதை வெறும் போதைப் பழக்கத்திற்கு எதிரான சமூக சீர்திருத்த நடவடிக்கையாகப் பார்க்கவில்லை. மக்கள் போதையிலிருந்து விடுதலை அடைவதை தங்கள் அதிகாரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகவே எடுத்துக் கொண்டு, கொடூரமான முறைகளில் அந்தப் போராட்டங்களை எதிர்கொண்டது சீன ஆளும் வர்க்கம். ஆளும் வர்க்கங்களின் சிந்தனைப் போக்கு மக்களைக் கிள்ளுக் கீரைகளாகப் பார்ப்பது எனபது உலகம் தழுவிய அளவிலும் நூற்றாண்டைக் கடந்த பின்னும் ஒன்றே போல் தான் உள்ளது என்பதைத் தமிழக போலீசு உணர்த்தியது.

மது ஒழிப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட டேவிட் ராஜை சட்டவிரோதமாக கைது செய்த போலீசு, அவரை வேனில் வைத்தே கொலை வெறியோடு தாக்கியுள்ளது. கைது செய்யப் பட்டு ஆறு மணிநேரம் கழித்து நீதிமன்றத்தில் டேவிட் ராஜை ஆஜர் படுத்திய போலீசு, இந்த இடைவெளிக்குள் அவரது இடுப்பு எலும்பை அடித்தே உடைத்திருந்தது. சில மாதங்கள் எந்த அசைவுமின்றி படுக்கையிலேயே கிடப்பது என்பது எவ்வளவு நரக வேதனையை அளிக்கும் என்பதை வேறு எவரையும் விட விளையாட்டு வீரர்களே உணர முடியும். உடலின் ஆற்றல் அத்தனையும் வடிந்து போய் சொந்த பராமரிப்புக்குக் கூட இன்னொருவரின் தயவை நாடி நிற்கும் அவல நிலை அது.

டேவிட் ராஜ் அதைக் கடந்து வந்தார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரித்த டேவிட் ராஜ், தன்னை இயக்கிய உணர்ச்சி ஒன்றே ஒன்று தானென்றார். அது தமிழக இளைஞர் சமுதாயத்தை போதையின் பிடியிலிருந்து விடுவித்தே தீர்வது என்கிற வெறி. போலீசு மிருகங்களின் அடியும் உதையும் லட்சிய உறுதி கொண்ட ஒருவருக்கு வலியைக் கொடுப்பதில்லை – மாறாக போராளியின் எஃகு போன்ற உறுதியைக் கொடுக்கிறது.

டேவிட் ராஜ் விளையாட்டில் சாதிக்க வேண்டும், ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற தனது பழைய லட்சியங்களை தூக்கிப் போட்டு விட்டு மக்களை விடுவிக்க வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தை வரித்துக் கொண்டார். அதற்கு அடையாளமாக அவர் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் வாள் வீச்சில் பெற்ற சான்றிதழ்களை மேடையின் மீதே தூள் தூளாக கிழித்தெறிந்தார். மதவெறிக்கு எதிராக மத்திய அரசு வழங்கிய விருதுகளைத் திருப்பிக் கொடுத்த ஆளும் வர்க்கங்களின் மனசாட்சியை உலுக்கிய சொரணை மிக்க அறிஞர்களின் வரிசையில் துணைக்கண்டத்தின் தென் கோடியிலிருந்து இன்னுமொரு இளைஞன். சான்றிதழ்களைக் கிழித்துப் போடு இவன் அந்த வரிசையில் சேர்ந்திருப்பதோடு செயலில் இறங்கியதன் மூலம் முன்னுதாரணமாகவும் திகழ்கிறான்.

டேவிட் ராஜ் கிழித்தெறிந்த சான்றிதழ்கள் காற்றில் அலைந்து தரையைத் தொட்ட போது மேடைக்குப் பக்கத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் சிலரின் கண்களின் கண்ணீர் வழிந்ததைக் காண முடிந்தது. ஒருவேளை அவர்களும் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் சீருடைப் பணியாளர்களாக வேலைக்குச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.. அங்கீகாரம் பெற்ற மாநில, தேசிய சான்றிதழ் ஒன்றைப் பெறுவதன் வலி என்னவென்பதை உணர்ந்த அவர்களுக்கு டேவிட் ராஜின் லட்சிய உறுதியின் அடர்த்தி உறைத்திருக்கும்.

பாதையில்லாத பாதையில் முதலில் நடப்பவரே அத்தனை முட்களையும் தாங்கிக் கொள்கிறார். அவரைப் பின் தொடர்பவர்களும் அந்த வலியில் கொஞ்சம் பங்கு பெற்றுக் கொள்கிறார்கள்.. காலங்கள் கழித்து அங்கே பாதை உருவான பின் வருபவர்களின் கால்கள் முதலில் நடந்தவர்களின் வலியைப் புரிந்து கொள்ளுமா? நமது எதிர்கால சந்ததியினருக்கான முள்ளில்லாத பாதை சமைக்க நம்மில் எத்தனை பேர் தயாராக உள்ளோம்?

இதோ நமக்கு முன்னோடிகளாக டேவிட் ராஜ் மட்டுமில்லை.. குமரிக்கு வடக்கே இருக்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தெய்வக் கண்ணும் இருக்கிறார். மேலப்பாளையூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பொய்வழக்கை சந்தித்து முப்பது நாட்கள் சிறையில் கழித்த பதினைந்து பேரில் ஒருவரான் அவருக்குஅதற்கு முன் அவ்வமைப்போடு எந்த தொடர்பும் கிடையாது.

இப்படியான உறுதியான போராளிகள் பலரை எமது அமைப்புக்கு அறிமுகம் செய்து வைக்கும் பொன்மனச் செம்மல், குடி வியாபாரி புரட்சித்தலைவிக்கு இந்த இடத்தில் ஒரு நன்றி.

தெய்வக்கண்ணுவோடு சேர்ந்து மொத்தம் நான்கு சகோதரர்கள். அரசாங்கத்தின் ஆலோசனையை நம்பி ஒவ்வொருவரும் ஒற்றைப் பிள்ளைகளாக பெற்று வைத்துள்ளனர். அந்தச் சகோதரர்களில் ஒருவருக்குப் பிள்ளையில்லை. தெயவக் கண்ணுவின் தம்பி மகன் டாஸ்மாக் அடிமை. குடிவெறியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் அந்த இளைஞனை பறிகொடுத்த அந்தக் குடும்பம் வாரிசின்றி நிற்கதியாய் நிற்கிறது. தனது குடும்பத்திற்கு இந்த அரசு வழங்கிய அநீதிக்கு எதிராக குமுறிக் கொண்டிருந்த தெய்வக்கண்ணு மக்கள் அதிகாரம் நடத்தும் போராட்டம் குறித்து கேள்விப்பட்டு பங்கெடுத்துக் கொள்கிறார்.

மேலப்பாளையூர் டாஸ்மாக் மக்களின் கோபக் கனலில் இழுத்து மூடப்படுகிறது. ஆத்திரம் கொண்ட அதிகாரிகள், பொய்வழக்கில் போராட்டத்தில் முன்நின்றவர்களைக் சிறையில் தள்ளுகிறார்கள். தனது சிறை அனுபவம் நிறைய புதிய விசயங்களைக் கற்றுக் கொடுத்தது என்று தெரிவித்த தெய்வக்கண்ணு, குடியால் தனது கிராமத்தினர் அடைந்த துன்பங்களைப் பட்டியலிட்டார். பெண்களுக்கு குடிப்பழக்கமில்லாத மாப்பிள்ளைகள் கிடைப்பதில் உள்ள சிரமங்களைச் சொன்னவர்.. பல பெண்களுக்கு ஆண்களுக்கும் இதன் காரணமாகவே திருமணம் நடப்பது தடைபட்டுள்ளதை விவரித்தார்.

தெய்வக்கண்ணு
தெய்வக்கண்ணு

தானே 23 மாப்பிள்ளைகளைப் பார்த்துக் கொடுத்துள்ளதாகவும், அதில் 17 பேர் குடிகாரர்கள் என்றும் மீதியுள்ள 5 பேரும் எப்போது குடிக்கத் துவங்குவார்களென்று தெரியாது என்றும் வேதனைப்பட்டார். இது எங்கள் ஊர்.. .இங்கே சாராயக் கடை வேண்டாம் என்றும் நாங்கள் சொல்கிறோம் – திறப்பேன் என்று சொல்ல கலெக்டர் யார்? மக்களின் தாலியறுக்கும் இந்தப் பொம்பளை சொந்தக் கட்சிக்காரனுக்கு தாலியெடுத்துக் கொடுக்கிறதே.. அந்தக் குடும்பங்கள் விளங்குமா என்று ஒரு விவசாயிக்கே உரிய எளிய தர்க்கத்தை முன்வைத்த போது காவலுக்கு நின்று கொண்டிருந்த ஆய்வாளர் தனது தொப்பியைக் கழட்டி தலையைக் கவிழ்த்தார்.

ஐம்பதுகளில் இருக்கும் அந்த போலீசுக்கு  குடிக்கும் ஒரு பொறுக்கி மகனோ அல்லது குடிகாரக் கணவனால் துன்புறுத்தப்படும் பெண்ணோ இருந்திருக்கலாம்.. அந்த வேதனையை ஒரு தகப்பனாக அவர் அந்த சந்தர்ப்பத்தில் உணர்ந்திருக்கலாம்.. அவரிடம் மட்டுமின்றி காவல் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற கீழ்நிலைக் காவலர்கள் முகங்களிலும் ஒரு வித குற்ற உணர்ச்சியைக் காண முடிந்தது.. அது ஒருவேளை டாஸ்மாக் வாசலில் குடிகாரர்களுக்கும் சரக்குக்கும் சால்னாவிற்கும் காவலாக நின்றதன் காரணமாக ஏற்பட்ட உறுத்தலாக இருக்கலாம் – அல்லது சமூகம் சமூகம் என்று சொல்லப்படுவதில் தாங்களும் ஒரு அங்கம் என்று துளியாக உணர்ந்த தருணமாகவும் இருக்கலாம்.

சரக்குப் பார்ட்டிகளின் முன் கவிழ்ந்த அந்த விரைத்த தொப்பிகளின் உணர்ச்சிகள் எப்படி இருந்திருக்கும்? அதை மையம் கலைக்குழு நடத்திய நாடகம் காட்சி வடிவிலேயே நம் கண்முன் நிறுத்திக் காட்டியது. போலீசின் தொப்பி மட்டுமா, நமது அமைச்சர்களின் முதுகுத் தண்டுவடங்கள் அனுபவிக்கும் துன்பத்தையும் விவரித்த அந்த நாடகத்தைக் காணாதவர்கள் வரப்போகும் மாநாட்டு சி.டியை வாங்கிப் பார்த்து இரசிக்கலாம்.

சிறப்புரை நிகழ்த்திய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையனும் தனது உரையில் ”போலீசே உணர்ந்து விட்டதால் இனி மற்றவர்களுக்கு உணர்த்துவது அத்தனை சிரமமில்லை” என்று குறிப்பிட்டார். மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மக்கள் அதிகாரத்தின் அரசியலையும் அதன் தேவையையும் ஏற்கனவே பேசி விட்டதையும் அதன் காரணமாக நேரம் குறைவு என்பதையும் பத்து மணிக்கு மேல் பேசுவது ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதையும் குறிப்பிட்டு தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார் தோழர் மருதையன்.

தோழர் மருதையன்
தோழர் மருதையன்

மாநாட்டின் மற்றொரு சிறப்புரையாளரான மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, இது இன்னுமொரு வழமையான மாநாடு இல்லை என்பதால் இங்கே மாநாட்டுத் தீர்மானங்கள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டார். மதுவிலக்குக் கொள்கையில் ஓட்டுக் கட்சிகளின் பித்தலாட்டங்களை குறிப்பிட்டவர், தமிழக மக்கள் தேர்தலுக்காக காத்திருக்காமல் உடனடியாக களத்தில் இறங்கி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதே இம்மாநாடு விடுக்கும் அறைகூவல் என்றார்.

எங்கெல்லாம் மக்கள் தங்கள் பகுதியிலிருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைத் தொடர்பு கொண்டால் தலைமையேற்று வழிநடத்த தயாராக இருக்கிறோம் என்பதையும் குறிப்பிட்டார். மேலும், ஒரு அமைப்பு என்கிற முறையில் தோற்றுப் போன இந்த அரசு நிர்வாகம் நமது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து டாஸ்மாக்கை மூடும் என்று நம்பத் தேவையில்லை என்றார் ராஜு. மேலும், ஜெயலலிதா காட்டும் இரட்டை இலை சின்னத்தில் ஒரு இலை போலீசு என்றால் இன்னொரு இலை போதை என்பதைக் குறிப்பிட்டவர், போதைக்கு அடிமையாக்கி மக்களை மூடத்தனத்தில் ஆழ்த்து மறுப்பவர்களைப் போலீசைக் கொண்டு வீழ்த்து என்பதே இந்த அரசின் கொள்கை என்பதை குறிப்பிட்டார்.

தோழர் ராஜு
தோழர் ராஜு

நமது ஊரில் நமது விருப்பத்திற்கு மாறான ஒன்றை ஏன் அனுமதிக்க வேண்டும்? குடி கெடுக்கும் டாஸ்மாக்கை மக்கள் திரளாக நின்று எதிர்த்தால் அரசின் குண்டாந்தடியான போலீசால் என்ன செய்து விட முடியும் என்று கேள்வி எழுப்பியவர், ஐந்து மாவட்ட போலீசை இறக்கினால் மக்கள் பீதியடைவார்கள் என்பது அரசின் நம்பிக்கையாக இருக்கலாம் ஆனால், ஐந்து மாவட்ட மக்களும் களத்தில் நின்றால் சில ஆயிரம் போலிசால் என்ன செய்து விட முடியும் என்கிற எதார்த்தத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றார். மக்கள் திரள் போராட்டங்களின் வெற்றியை ஏற்கனவே சந்தித்துள்ள மேலப்பாளையூர் டாஸ்மாக் மூடியது, பாலாற்றில் மணல் கொள்ளையைத் தடுத்தது போன்ற போராட்ட அனுபவங்களையும் விளக்கினார்.

கடலூர் கச்சிராயநத்தம் கிராமத்திலிருந்து வந்த மந்திரகுமாரி தனது ஊரை டாஸ்மாக் எப்படி விதவைகளின் கிராமமாக மாற்றியது என்பதை விளக்கினார்.”அம்மாவின் மரண தேசம்” ஆவணப்படத்தின் கதையை அவரது உரை நிகழ்த்தியது. டாஸ்மாக்கை மட்டுமல்ல பல்வேறு அநீதிகளுக்கும் காவலாய் நிற்கும் நீதித்துறையை அம்பலப்படுத்திப் பேசிய தோழர் வாஞ்சி நாதன்,மழலை மொழியில் குடியின் கேடுகளை விளக்கிய சிறுமிகள், கேரளாவிலிருந்து வந்து கலை நிகழ்ச்சி நடத்திச் சென்ற கரநாதன் நாவேர் நாட்டுக்களறி கலைக்குழு என்று மாநாட்டின் நிகழ்ச்சிகள் உணர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தன. மேடையில் டாஸ்மாக்கின் வேதனை  சோகமான பாடலாக மலையாளத்தில் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது தமிழர் கண்ணோட்டம் இதழை விநியோகித்துக் கொண்டிருந்தார் ஒருவர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்குவோம், அதிகாரத்தைக் கையிலெடுப்போம் என்று தெய்வக் கண்ணு பேசிக் கொண்டிருந்த போது,  மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட நடைமுறை சாத்தியமான வழி குர் ஆனில் இருப்பதாக  துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துக் கொண்டிருந்தார் ஒரு அப்பாவி!

இறுதி நிகழ்ச்சியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடந்தது. டாஸ்மாக் தொடர்பான புதிய பாடல்களோடு நடந்த அந்தக் கலைநிகழ்ச்சியின் விரிவான பதிவு பின்னர் வெளியிடப்படும் என்றாலும், பள்ளி மாணவி பாடிய பாடல் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்..

“அப்பாவைக் கெடுத்திட்டியே ’அம்மா’..
எங்க.. அப்பாவைக் கெடுத்திட்டியே ’அம்மா’… ”

என்கிற பல்லவியோடு துவங்கிய அந்தப் பாடலின் வரிகள் ஒரு பெண் குழந்தையின் பார்வையில் குடிகாரத் தந்தையால் விளையும் துன்பங்களை பட்டியலிட்டது. ஆசையோடு தின் பண்டங்கள் வாங்கிக் கொண்டு நேரத்தோடு வீட்டுக்கு வந்த தன் தந்தையை ஏன் டாஸ்மாக்கைத் திறந்து கெடுத்தீர்கள் என்ற தேம்பும் குரலின் அந்தக் கேள்வி இதயம் கொண்டோரை உலுக்கும். மற்ற பிள்ளைகளின் தாய் தந்தையரெல்லாம் பள்ளிக்கு வருகிறார்களே.. நான் பாடல் போட்டியில் வென்று பரிசு பெறப் போகும் நிகழ்வுக்கு நீ வருவாயா அப்பா? இருட்டி விட்டதே… எனக்கு அச்சமாக இருக்கிறது.. நீ எங்கே விழுந்து கிடக்கிறாயோ அப்பா..?

நிகழ்ச்சி முடிந்து திரும்பும் வழியெல்லாம் அந்தப் பெண் தோழரின் ஏக்கமான குரல் மனதின் ஆழத்தில் குடைந்து கொண்டே இருந்தது…

ஆனால்.. இந்த பரிதவிப்பெல்லாம் மிடாஸ் முதலாளிகள் உணரமாட்டார்கள்..

உணர்ந்தவர்கள் முன் வாருங்கள்.. நாம் உணர்த்துவோம் என்பதே இந்த மாநாட்டின் செய்தி!

– வினவு செய்தியாளர்கள்

விசாரணையை முன் வைத்து ஒரு குறுக்கு விசாரணை

10

“யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பலியாக்கப்படலாம் என்பதுதான் இங்குள்ள யதார்த்தம். இதை அப்பட்டமாக அம்பலப்படுத்தும் இந்தப் படம், மக்களின் கவனத்தை மட்டுமின்றி அதிகார வர்க்கத்தினரின் கவனத்தையும் கோரி நிற்கிறது. இந்தியச் சட்டங்கள் அவற்றின் உயரிய நோக்கங்களுக்கேற்பப் பயன்படுத்தப்பட வேண்டுமென்றால், அதைச் செய்யக்கூடியவர்கள் அதிகார வர்க்கத்தினர்தான். தங்கள் மனசாட்சியை நோக்கி ஒரு கலைஞன் விடுக்கும் செய்திக்கு அவர்கள் காதுகளும் மனங்களும் திறக்குமா?”

Visarana– விசாரணை திரைப்படம் குறித்து, தி இந்து தமிழ் நாளிதழில் அதன் ஆசிரியர்களில் ஒருவரான அரவிந்தன் எழுதிய கட்டுரையின் இறுதி வரிகள்.

ஒரு அமைப்பு முறையின் குறைகளை தீர்க்கும் சூட்சுமம் அந்த அமைப்பின் தளகர்த்தகர்களான அதிகார வர்க்கத்தின் மனசாட்சியில் மறைந்திருக்கிறது என்பதன் பொருள் என்ன?

ஒரு அமைப்பு முறையின் நோய் அந்த அமைப்பு முறையின் சட்ட திட்டங்களால் அல்ல, அமல்படுத்தும் நபர்களாலேயே தீவிரமடைகிறது என்ற வாதம் இரு உண்மைகளை பகிரங்கப்படுத்துகிறது. அமைப்பில் எந்த பிரச்சினையுமில்லை, நபர்களை சீர்திருத்தினால் போதும் – எதிர்த்து வரும் புதிய முறையை ஆதரிக்கத் தேவையில்லை. இறுதியில் இப்போது இருக்கும் அமைப்பு முறையை கை விடக் கூடாது, தேவையானல் கொஞ்சம் கண்ணீர் சிந்தலாம்! மாற்றச் சொல்லி இரத்தம் சிந்த வேண்டாம்!

படிப்பவர்க்கேற்ப பிரதியின் பொருள் மாறுபடும் எனும் பின் நவீனத்துவ ‘பொன்மொழி’க்கேற்ப விசாரணை திரைப்படத்தை விளக்குதல் ஆளாளுக்கு மாறுபடுமோ? இல்லை பிரதி எடுத்துக் கொண்டிருக்கும் பொருளின் அல்லது துறையின் பொது இயக்கத்தை எந்த அளவுக்கு புரிந்து கொண்டிருக்கிறோமோ அந்த அளவுக்கு வேறுபடுமா?

ஆட்டோக்காரர், லாரி ஓட்டுநர், உதிரி இளைஞர்கள், ஏழைகள், பாதையோர வியாபாரிகளின் பிழைப்புத் தருணங்களில், தமது பத்திருபது ரூபாய் கூலியை – வருமானத்தை பறிக்க வரும் வழிப்பறிக்காரராகவே ஒரு போலிஸ்காரரைச் சந்திக்கிறார்கள். போராடும் தொழிலாளிகள், மாணவர்கள் இன்னபிற ஊழியர்களுக்கு அரசின் அடியாட்களாய் தோன்றும் காவல் துறையினர் புரட்சிகர அமைப்புகளைப் பொறுத்த வரை ஆளும் வர்க்கத்தின் வேட்டை நாயாக தென்படுவர். எனினும் இதில் சேர விரும்பாத படித்த நடுத்தர வர்க்கத்திற்கு மேற்கண்ட படிதான் தோன்ற வேண்டும் என்பதில்லை. அதிக பட்சம் ஏதாவது சொத்து தகராறு, குடும்பப் பிரச்சினைகள், கடவுச்சீட்டு விசாரணை போன்றவற்றுக்கு வேறு வழியின்றி காவல் நிலையம் போவது தவிர இவர்கள் உலகில் போலிசுக்காரர்கள் காத்திரமான பாத்திரத்தில் இல்லை. அதே நேரம் போலிசு குறித்த பயம் இவர்களிடத்தில் இல்லை என்பதல்ல.

விசாரணை திரைப்படம் குறித்து கருத்துரைக்கும் பலரும் இந்த வர்க்க்கத்தின் அளவு கோலின்படி, எளியோரை வதைக்கும் போலிசை கலைநயத்தோடும், பதட்டத்தோடும் சித்தரிக்கும் திரைப்படம் என்கிறார்கள்.

chandra-kumar-lock-up-novel
லாக்கப் நாவலை எழுதிய சந்திரகுமார்

தள்ளிப் போன தனுஷ் படத்தினால் தற்செயலாக அமைந்த இந்தத் திரைப்பட உருவாக்கம், பின்பு இத்தகைய கவனம் பெறுமென்பதை வெற்றி மாறன் ஊகித்திருக்க மாட்டார். அதே நேரம் ஒரு கலை அதன் உருவாக்கத்தில் படைத்தவனையும் உள்ளிழுத்துக் கொண்டு புதிய தரிசனங்களை உணர்த்தும் என்பதால் இந்த “தற்செயல்” பிரச்சினையல்ல. சந்திரகுமார் எனும் ஆட்டோ தொழிலாளியின் சுய அனுபவத்தை தழுவிய இந்தத் திரைப்படம் எந்த அவசியத்தினால் பலரையும் ஈர்த்திருக்கிறது? போலீசின் மீதான பயமா? போலிசுத் துறையை இயக்கும் இந்த ‘அமைப்பு’ குறித்த விமரிசனமா?

நாவலின் நேரடி கதையாக்கம் என்றாலும் முதல் பாதியில் சந்திரகுமாரின் அனுபவங்களையும், பின்பகுதியில் தான் உருவாக்கிய கதையையும் சேர்த்தே இப்படத்தை ஆக்கியிருப்பதாக இயக்குநர் கூறியிருக்கிறார். நாவல் படித்தோருக்கு இந்த படம் வேறு ஒரு புதிய அனுபவத்தை தரும் என்று அவர் கூறுவதும் இதன் பொருட்டே. சொல்லப் போனால் இது இயக்குநரின் படம் – சந்திரகுமாருக்கு பணிவாக நன்றி தெரிவிக்கப்பட்ட போதிலும்.

ஆந்திராவிற்கு பிழைக்கச் சென்ற தமிழகத் தொழிலாளிகளின் காவல் நிலையக் கொட்டடி வதைகளோடு படம் முடிந்திருந்தால் அதை ஆவணப்படம், பிரச்சாரப் படம் என்று குறைத்திருப்பார்களோ தெரியவில்லை. எளியோருக்கு இழைக்கப்படும் வன்முறையும், கொலையும், கைதுகளும், சிறையும், தண்டனையும் வலியோரின் உலகிலிருப்பது போல ஒரு காவியத் துயரமாக இருப்பதில்லை. மூப்பனார் சைக்கிள் ஓட்டினால்தான அது எளிமை. மூப்பனார் நிலத்தில் பாடுபடும் விவசாயக் கூலிக்கு சைக்கிளே இல்லாமல் இருப்பது பிரச்சினையல்ல. ஆட்டோவில் விட்ட பணத்தை அப்படியே கொடுத்தால் ஒரு ஆட்டோக்காரர் நல் குடிமகனாக செய்தியில் இருப்பார். வரி ஏய்ப்பில் காலம் தள்ளும் ஒரு முதலாளி, தகவல் என்ற முறையில் கூட ஒரு செய்தியில் இடம் பெறமாட்டார்.

visaranai-review-2
ஆந்திர போலீசு, தமிழக போலீசு என்ற பேதங்களுக்கு அப்பால் அடிப்பதில் ஒரே போலிசு என்று உணரவைத்த விசாரணை திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

ஆந்திரத்து குண்டூரின் ஒரு வைகைறைப் பொழுதில் மர்மங்களுக்கு பொருத்தமான மஞ்சள் வெளிச்சத்தின் கீழ் துயிலெழுந்து நீராடி பணிக்குச் செல்லும் பாண்டியோடு நாமும் பயணிக்கிறோம். பிறகு உள்ளூர் நீதிமன்றத்தால் பாண்டியும் நண்பர்களும் விடுவிக்கப்படும் வரை அவர்களின் கையறு காவல் நிலைய கொடுமைகளை பதட்டத்துடனே பின்தொடர்கிறோம். ஆடியோ பாடியோ அடித்தோ ஆசைகாட்டியோ சதி செய்தோ அந்த இளைஞர்களை பணிய வைக்கும் போலிசின் தந்திரங்கள், அடாவடிகள் உண்மையிலேயே பார்ப்போருக்கு ஆத்திரத்தையும் அச்சத்தையும் வரவழைக்கின்றன. போலிசு எனும் வேட்டை நாய்களின் வெறியை இயல்பாக காட்டியதற்காக இயக்குநருக்கும், படப்படிப்பு குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!

அந்தப் பகுதியில் கீழமை நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பும், தமிழக போலிசு தனியாக சுற்றுவது மட்டும் யதார்த்தத்தின் படியே பொருத்தமாக இல்லை. சந்திரகுமாரின் நாவலில் அது எப்படி இருப்பினும் போலிசின் அத்து மீறல்களுக்கு முதன்மையான பாதுகாவலர்களே நீதிமன்றங்கள்தான். இரத்தம் சொட்டச் சொட்ட அடிபட்ட நிலையிலும் அதை ஏன் என்னவென்று பார்க்காமல் சிறைக்கனுப்பும் நீதிபதிகள்தான் போலிசு எனப்படும் உருட்டுக் கட்டையின் சட்டபூர்வ அங்கீகாரம்.

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட பச்சையப்பா மாணவர்கள் பின்னர் சிறையிலும் வதைக்கப்பட்டார்கள். அவர்களை சிறை வைத்ததோடு பின்னர் சில இலட்ச ரூபாய் பிணையில் விடுவதாகச் சொன்னார் கீழமை நீதிமன்ற நீதிபதி. சொல்லப் போனால் நேரடியாக அடிக்கும் போலிசை விட சட்டத்தால் கடிக்கும் இவர்களே வில்லத்தனத்தில் முதன்மையானவர்கள்.

அடுத்து எந்த மாநிலப் போலிசும் இன்னொரு மாநிலத்திற்குச் செல்லும் போது அந்த மாநில போலிசின் ஆதரவோடுதான் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் – மேற்கொள்ள முடியும். அவர்களுக்கிடையே வேறு முரண்பாடுகள் எது இருந்தாலும் போலிசு எனும் துறையின் கட்டுக்கோப்பை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இருந்திருந்தால் ஆந்திர போலிசின் செம்மரக்கட்டை கொலைகளுக்குப் பிறகு அவர்கள் அடிக்கடி தமிழகம் வந்து பலரையும் கைது விசாரணை என்று பணியாற்ற முடியுமா? இல்லை அட்டாக் பாண்டியைத்தான் மும்பை சென்று தமிழக போலிசு கைது செய்ய முடியுமா?

நீதிமன்றத்தில் ஆந்திர போலிசிடம் முரண்பட்டு தமிழக இளைஞர்களை காப்பாற்றும் தமிழக போலிசான சமுத்திரக் கனியை நிஜத்தில் பார்க்கவே முடியாது அல்லது அரிதினும் அரிது. அதே சமுத்திரக் கனி பிறகு அதே ஆந்திரத்து போலிசின் உதவியோடு ஆடிட்டரை கடத்துகிறார். இந்தக் கடத்தல் சாத்தியம் எனும் பட்சத்தில் அந்த விடுதலை சரியல்ல. இவையெல்லாம் வழக்கமான லாஜிக் மீறல்களாக சுட்டவில்லை. இந்த படம் அமைப்பு முறையை விமரிசிப்பதாக இருந்தால் இவை முக்கியம் என்கிறோம். எனில் “விசாரணை” எதை விமரிசிக்கிறது?

இந்தக் கேள்விக்கு இரண்டாம் பகுதி விடையளிக்கிறது. எதிர்க்கட்சி பிரமுகர்களின் சார்பான தணிக்கையாளரை பேச வைத்தால் POLICEஆளும் கட்சி மீண்டும் வெற்றி பெறலாம் என்று சில போலிசு அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள். பிறகு அவரை காப்பாற்ற வேண்டியவர்களே இவன் பேசினால் கதை கந்தல் என்று போலீசு மூலம் கொல்வதற்கும் ஏற்பாடு செய்கிறார்கள். ஆடிட்டருக்கு ஆதரவாக எதிராக என்று போலிசின் சதுரங்க நடவடிக்கைகளில் இன்ஸ்பெக்டர் முத்துவேலின் ஊசலாட்டமும், பாண்டி மற்றும் நண்பர்கள் சிக்கிக் கொள்வதும் காட்டப்படுகிறது. இறுதியில் இவர்கள் அனைவரும் கொல்லப்படுவதோடு போலிசின் மற்றொமொரு நாள் முடிகிறது.

பாண்டி குழுவினர் மேல் நிகழ்த்தப்படும் போலிஸ் வன்முறையை விட தணிக்கையாளர் மேல் நிகழ்த்தப்படும் வன்முறை, பார்க்கும் நடுத்தர வர்க்கத்திற்கு கொஞ்சம் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காரணம் என்ன இருந்தாலும் அவர் மேல்மட்டத்தோடு தொடர்புடையவர், படித்தவர், இங்கிதமானவர், தவறான முறையில் சொத்து சேர்த்திருந்தாலும் பெட்டி கிரிமினல் அல்ல. ஜட்டியோடு கிஷோர் அடிக்கப்படுவதிலிருந்து அவர் கொடூரமாக கட்டித் தொங்க விடப்பட்டு தொள்பட்டை, முதுகெலும்பு முறிந்து மரணமடையும் காட்சிகள் வரை பார்ப்போரின் அனுபவத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்கின்றன. அது இன்னதென்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அச்சம். தான் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் போலிசு எனும் இரக்கமற்ற எந்திரத்தின் உண்மை முகத்தை பார்ப்பதால் வரும் பயம்.

ஆனால் முழுப்படம் முடிவடையும் போது இக்கதையினை படைத்தோரும், பார்த்தோரும் வந்தடையும் உணர்விற்கும் தி இந்து அரவிந்தன் வந்தடைந்த ‘அறத்திற்கும்’ பெரிய வேறுபாடு இருக்காது. அதாவது இத்தனை கொடூரமாக இருக்கும் போலிசை கொஞ்சமல்ல நிறையவே சுத்திகரிக்க வேண்டும். இதுதான் ‘அமைப்பு’ முறை மீதான விமரிசனமா?

உலகநாடுகளில் போலிஸ் வன்முறை

police-brutalityந்தி டி.வி விவாதத்தின் போது சந்திரகுமாருக்கு ஏற்பட்ட லாக்கப் அனுபவம் தனியான ஒன்றல்ல, உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அனுபவமும் கூட என்று சொன்னார் இயக்குநர். இது உண்மையென்றால் வெனிசில் இப்படம் பார்த்தோருக்கு அது பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காதே?

மேற்கத்திய நாடுகளைப் பொறுத்த வரை கொட்டடிக் கொலை, சித்திரவதை என்பது நம் நாடுகளைப் போல இருக்க வேண்டியதில்லை. அமெரிக்காவில் ஒரு கருப்பின இளைஞன், காவல் நிலையத்தில் அல்ல களத்திலேயே சுட்டுக் கொல்லப்படுகிறான். அவன் ஆயுதம் வைத்திருந்தான், போலீசு அதிகாரியை தாக்க முயன்றான் என்ற சித்தரிப்பே கொல்வதற்கு போதுமானது.

முசுலீம் மதம் சார்ந்து தண்டிக்கும் அரபு நாடுகளில் ஒரு பொறுக்கி ஷேக் காப்பாற்றப்படுவதும், ஒரு அப்பாவி இலங்கைப் பெண் தலையறுக்கப்படுவதும் வெறும் போலிசு குறித்த வன்முறையா?

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் “மக்களின் நூற்றாண்டு” என்றொரு தொடர் ஆவணப்படத்தை பி.பி.சி ஒளிபரப்பியது. அதில் இருபதாம் நூற்றாண்டின் சாதனைகள் மக்களை முன் வைத்து விவரிக்கப்பட்டன. முதிய வயதில் உள்ள ஒரு சீனத்து பெண், அவளது இளமை நாட்களில் (1949- சீனப் புரட்சிக்கு முந்தைய காலம்) கம்யூனிஸ்டுகளின் இராணுவமான சீன செஞ்சேனை வந்து தங்கியதை பகிர்ந்து கொள்கிறார். வந்தவர்கள் அனுமதி பெற்று கிராமத்து வீடுகளில் தங்கியது, பொருட்களை காசு கொடுத்து வாங்கியது, பெண்களை கண்ணியமாக நடத்தியது அனைத்தையும் வெள்ளேந்தியாக அதாவது மேற்குலகின் கம்யூனிச எதிர்ப்பு கற்பனை புரூடாக்களை அறியாமல் உண்மையாகச் சொல்கிறார்.

ஒரு நாட்டின் ஜனநாயகப் போராட்ட வரலாற்றுக்கேற்பவும், அம்மக்களின் ஜனநாயக விழிப்புணர்வுக்கேற்பவும் போலீசின் வன்முறைகள், சட்டத்தின் அமலாக்கம் மாறுபடுகின்றன. இன்றும் பிரான்சில் தொழிலாளிகளோ, விவசாயிகளோ போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்த முடியும். அரசோ, போலிசோ ஒன்றும் செய்ய இயலாது. இங்கோ மாருதி தொழிற்சாலையில் போராடிய தொழிலாளிகள் நூற்றுக்கணக்கில் இன்றும் (சில வருடங்களாக) சிறையில் இருக்கின்றனர்.

ஆகவே உலகமெங்கும் எல்லா ‘அமைப்பு’க்களிலும் போலிசு வன்முறை ஒரே மாதிரியானது என்ற புரிதல் மேற்குல என்.ஜி.ஓக்களால் பிரச்சாரம் செய்ப்படும் ஒரு கருத்து. அதன் நோக்கம் மேற்குலகின் ஆசி பெற்ற அரசுகளின் பாவத்தை மறைப்பதற்கு, போலிசை சீர்திருத்த வேண்டும் என்று முன் வைப்பதே. சட்டென்று சுட்டுக் கொல்லும் மேற்குலகில் இத்தகைய அணு அணுவாக வதைக்கும் பழையை முறை தற்போது காணக் கிடைக்காது என்பதாலும் வெனிசில் “விசாரணைக்கு” வரவேற்பு கிடைத்திருக்கலாம்.

விசாரணை திரைப்படம் குறிப்பிடும் “SYSTEM – அமைப்பு” எது?

visaranai-review-5
விசாரணை திரைப்படத்தில் ஒரு காட்சி! சாப்பாடு போட்டு பேரம் பேசும் போலிசு!

விசாரணை திரைப்படம் போலிசு எனும் துறையினை அரசு அல்லது State-ன் அங்கமாக வைத்து பார்க்கவில்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளுக்கிடையே பந்தாடப்படும் ஆடிட்டர் பாத்திரம் அரசின் பாத்திரத்தை குறிக்கவில்லையா என்று கேட்கலாம். இல்லை. இது அரசாங்கம் அல்லது Government எனப்படும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிகளின் ஆட்சி எந்திரத்தை சுட்டும் சொல். படத்தில் ஒருவேளை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறுவதாக இருந்தால் போலிசு வன்முறையற்று இருந்திருக்குமா என்ன? ஒருவேளை ஆடிட்டர் மட்டும் பிழைத்திருப்பார்.

அரசுக்கு அரசாங்கம், போலிசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம் என்ற உறுப்புகள் உண்டு. எளிமையான புரிதலுக்காக ஊடகங்கள் (வினவு உட்பட) அரசு என்றாலே அரசாங்கம் என்று எழுதுவது, தி.மு.க – அ.தி.மு.க அரசு, மோடி-மன்மோகன் அரசு என்றே நிலைபெற்றிருக்கிறது. இவர்கள் இல்லை என்றாலும் ஆட்சி கலைக்கப்பட்டாலும் இங்கே அரசு தனது ஆட்சியைத் தொடரும். தெரிவு செய்யப்படும் ஐந்தாண்டு பிரதிநிதிகளை விட நியமிக்கப்படும் அதிகார வர்க்கமே இதன் அடிப்படை. அந்த அடிப்படையை முதலாளிகள், பணக்காரர்கள், பெரும் நிலவுடமையாளர்கள், மேட்டுக்குடி வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியம் அடங்கிய ஆளும் வர்க்கம் அளிக்கிறது – அரசியல சாசனத்தின் பேரில்.

விசாரணை திரைப்படம் அரசியல் திரைப்படமல்ல என்பதற்கு ஆடிட்டர் கதை ஒரு சான்று. அரசின் கொள்கைகளை, சட்டங்களை அமல்படுத்தும் போது பாதுகாக்கும் பொறுப்பை அதாவது ஒடுக்கும் வன்முறையை ஏற்றிருக்கும் போலிசாரை வரம்பிற்குட்பட்டு அரசாங்கங்களும் அதாவது ஆட்சியில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளும் தமது நலனுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஜாபர் சேட்டை கருணாநிதியும், மோகன்தாசை எம்.ஜி.ஆரும் தமது கட்சிகளின் உளவாளிகளாக பயன்படுத்தலாம். அலெக்சாண்டர் தரும் உளவுத் துறை தகவலை வைத்து ஜெயலலிதா வேட்பாளர்களை தெரிவு செய்யலாம். சசிகலா சொத்து வாங்கலாம். பதிலுக்கு ஆர். நட்ராஜோ, அலெக்சாண்டரோ அ.தி.மு.கவில் சேர்ந்து அமைச்சராகலாம்.

படத்தில் காண்பிக்கப்படுவது போல ஒரு கட்சியின் மேல் மட்ட தணிக்கையாளரை கொல்வது வரம்பை மீறியது, சாத்தியமற்றது. ஆளும் கட்சியாகவோ, எதிர்க்கட்சியாகவோ இருக்கும் ஓட்டுக் கட்சிகள் எந்த அளவுக்கு போலிசுத் துறையை பயன்படுத்தலாம்?

சசிகலா கும்பலை அடக்குவதற்கு செரினா மீது கஞ்சா வழக்கு, சுதாகரன் மீது வழக்கு, நடராஜன் மீது ஏதோ ஒரு போண்டா வழக்கு போடலாம். கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்யலாம். ஜெயா மீது சொத்து குவிப்பு வழக்கு போடலாம். அதைத் தாண்டி ஜெயாவைத் தண்டிப்பது சாத்தியமில்லை.

ஆனால் செம்மரக் கட்டைகளின் பெயரில் தமிழக தொழிலாளிகளை சுட்டுக்கொன்ற ஆந்திரப் போலிசாரையோ, வீரப்பன் வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்களை நரபலி வேட்டையாடிய தமிழக போலிசரையோ தண்டிக்க முடியாது. இவை இந்த அரசு தீர்மானித்திருக்கும் பணிகளில் வருபவை. மாஞ்சோலை போராட்டமோ, மாருதி தொழிலாளர் வேலை நிறுத்தமோ இங்கெல்லாம் போலிசு சுடலாம், கொல்லலாம், பிரச்சினையில்லை. அப்பாவி இர்ஷத் ஜஹானை சுட்டுக் கொன்று விட்டு ஹெட்லியை வைத்து தீவிரவாதி என்று கதையளக்கலாம். இவையெல்லாம் ‘அமைப்பு’ ஏற்றுக் கொண்டிருக்கும் வன்முறைகள். ஆக அரசு வன்முறைகளை ஓட்டுக்கட்சி வன்முறைகளாக சித்தரிப்பதும் புரிந்து கொள்வதும் பாரிய பிழை.

எது அரசு பயங்கரவாதம்?

ந்த அமைப்பு முறையில் போலிசு சீர்திருத்தப்படவேண்டும் என்பதே இப்படத்தை பார்த்தோர் அதிகபட்சம் கோர முடியும். சான்றாக இயக்குநர் ராம் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருக்கும் கருத்தைப் பார்ப்போம்.

“நீங்களும் நானும் வாழும் இந்த நாடு,இதன் விதிகள், இதன் சட்டம் என எல்லாவற்றையும் விசாரணை செய்ய வருகிறது…

திரைக்கலையின் முழுமையோடு
சுவாரசிய நேர்த்தியோடு
அரச பயங்கரவாதத்திற்கு எதிராய்
முதல் தமிழ்ப் படம்…”

download
இந்திய இராணுவத்தின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் மணிப்பூர் பெண் போராளிகள்!

ராம் சொல்வது போல இந்தப் படம் அரச பயங்கரவாதத்தைப் பற்றியதல்ல. போலிசு வன்முறை அல்லது போலீசின் பயங்கரவாதம் என்று கூடச் சொல்லலாம். படத்தின் முதல் கதையில் மேலதிகாரியின் வீட்டில் திருட்டுப் போன வழக்கை முடிக்க, அப்பாவிகளை குற்றவாளிகளாக்க முயல்கிறார்கள். இரண்டாவது கதையில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சிக்கு ஆதரவாக ஒரு ஆடிட்டரை கொல்கிறார்கள். இரண்டுமே சட்டத்திற்குட்படாமல் செய்யப்படும் குற்றங்கள்.

அரச பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டின் அரசு அதாவது இராணுவம், போலீசு, நீதித்துறை, அதிகார வர்க்கம், அரசாங்கம் அனைத்தும் வெளிப்படையாக தன் சொந்த நாட்டு மக்கள் மீதோ அல்லது வேறு நாட்டு மக்களின் மீதோ நிகழ்த்தும் சட்டப்பூர்வமான படுகொலை அல்லது வன்முறையைக் குறிக்கும். சொந்த நாட்டில் செய்வது உள்நாட்டு பயங்கரவாதம், வெளிநாடுகளில் செய்வது ஆக்கிரமிப்பு பயங்கரவாதம்.

அமெரிக்கா ஈராக்கிலும், ஆப்கானிலும், அபுகிரைப்பிலும் செய்யும் படுகொலைகள் ஆக்கிரமிப்பு பயங்கரவாத்தில் வரும். இந்தியாவில் குஜராத் இனப் படுகொலை, காஷ்மீரில் இந்திய அரசின் அடக்குமுறை, வட கிழக்கில் இந்திய இராணுவத்தின் அட்டூழியங்கள், மத்திய இந்தியாவின் காட்டு வேட்டையில் துணை இராணுவங்களின் படுகொலைகள அனைத்தும் இந்திய அரசின் பயங்கரவாதம் எனப்படும். ஈழப் படுகொலைகள் கூட இலங்கை அரசு பயங்கரவாதம் நடத்திய இனப்படுகொலைதான்.

ஒருவேளை விசாரணை திரைப்படம் பினாயக் சென், காட்டு வேட்டை, காஷ்மீர், தீஸ்தா சேதல்வாத் போன்ற கதைகளில் தோய்ந்திருந்தால் சென்சாரிலேயே கொலை செய்யப்பட்டிருக்கும். இதெல்லாம் அறியாதவர்கள் அல்ல நமது படைப்பாளிகள்.

போலிசின் அன்றாட வன்முறைகளை ஏதாவது மேலோட்டமாக வேணும் நாம் சட்ட பூர்வமாக எதிர்க்கலாம், வழக்காடலாம் – அதனால் பயனில்லை என்றாலும். ஆனால் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் சுட்டு விரலைக் கூட நீட்ட முடியாது. அது அங்கீகரிக்கப்பட்ட வன்முறை.

அதனால் விசராணை திரைப்படத்தை – போலிசின் வன்முறையை தத்ரூபமாக காட்டியிருந்தாலும் – அரசியலற்ற திரைப்படம் என்று அழைப்பதில் பிழையில்லை. திரைக்கதையில் சில அப்பாவிகளின் மீது சில போலிஸ்காரர்களின் நலன் காரணமாக சட்டத்தை ‘ஏமாற்றி’ நிகழ்த்தப்படும் வன்முறையையும் காஷ்மீரிலும், வடகிழக்கிலும் சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தின் மூலம் பகிரங்கமாக நிகழ்த்தப்படும் சட்டப்பூர்வ பயங்கரவாதத்தையும் ஒன்று என்று புரிந்து கொள்வது அபாயகரமானது.

ஐ.பி.எஸ்-ஐ அரசோ ஐ.ஏ.எஸ்-ஸோ திருத்த முடியுமா?

இந்த திரைப்படம் போலிசு எனும் அடியாட்படையை இந்த அரசமைப்பு எப்படி கையாள்கிறது என்பதைப் பேசவில்லை. மாறாக இந்த அரசமைப்பு அளித்த அதிகாரத்தை காவல் துறை எவ்வளவு கேடாக பயன்படுத்துகிறது என்பதைப் பற்றி மட்டும் காட்டுகிறது.

sagayam-ias
போலீசை திருத்த வேண்டுமென்று சொல்லும் சகாயம் அவர்களின் ஐ.ஏ.எஸ் துறையை யார் திருத்துவது?

அதனால்தான் அதிகாரி சகாயம், போலிசின் அதிகாரத்தை குறைத்து சீர்திருத்தும் சட்டம் வேண்டும் என்கிறார். பத்திரிகையாளர் அரவிந்தனோ சரியான சட்டத்தை நேர்மையாக அமல்படுத்தும் மனசாட்சி வேண்டும் என்கிறார்.

இந்தக் காவல் துறையே மக்களை சட்டபூர்வமாகவும் சில நேரங்களில் சட்ட விரோதமாகவும் ஒடுக்குவதற்காகவே, எலும்புத் துண்டு போட்டு வளர்க்கப்படும் வெறி பிடித்த மிருகம் என்கிறோம். இந்த அமைப்பின் சட்ட திட்டங்களே அதுதான் என்பதை மறந்து விட்டு வெறுமனே மனசாட்சி போன்ற ‘ஒழுக்க’ உணர்ச்சிகளில் மிதந்து கொண்டு பேசுவது, மிருகத்தை கட்டி வைத்து வளர்க்கும் பெரு மிருகமான அரசு அமைப்பை தாலாட்டுவதாகும்.

தந்தி டி.வி விவாதத்தில் தனக்கு சட்டதிட்டமெல்லாம் தெரியாது, ஆனால் சகாயம் அவர்கள் தார்மீக ரீதியாக இந்த அமைப்பில் இருந்து கொண்டே அதை விமரிசிப்பது தவறல்ல என்று வெற்றி மாறன் கூறியிருந்தார். இந்தக் கூற்றே தார்மீக ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் தவறு. முதலில் சகாயம் போன்ற ஐ.ஏ.எஸ்-களின் வேலை என்ன? போலிசு எனும் தடியை கையில் வைத்துக் கொண்டு மாவட்டம் தோறும் அல்லது துறை தோறும் கேட்பார் கேள்வியின்றி ஆட்சி நடத்தும் குறுநில மன்னர்களே கலெக்டர்கள் அல்லது துறைச் செயலாளர்கள்.

போலிசு அடித்தால், கொலை செய்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்து நீதி கேட்கலாம் என்பது திருப்பதிக்கு மொட்டை அடிப்பதை விட கேலிக்கூத்தானது. இந்திய அரசு, மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்களின் சட்டங்கள், கொள்கைகளை அமல்படுத்தும் நிர்வாக குவி மையங்களே ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை கொண்டு வருவதோ, திருவண்ணாமலையில் ஜின்டாலை நிர்மாணிப்பதோ, கோவை வட்டாரத்தில் கெயில் குழாய் பதிக்க பாதுகாப்பு கொடுப்பதோ இவர்கள்தான். இவை மட்டுமே இவர்களின் கடமைகள்.

ஒருக்கால் சகாயம் இவற்றை எதிர்த்து தனது மாவட்டத்தில் மக்களது கோரிக்கையை ஏற்று இந்திய அரசை மறுக்க முடியுமா? அப்படி நிகழ்ந்தால் உடனே அவர் பதவிப் பிரமாணத்திற்கு எதிராக, இந்திய அரசுக்கு எதிராக சதி என்று கைது செய்யப்பட்டு மீள வழியின்றி சிறையில் அடைக்கப்படுவார். ஆனால் அதே சகாயம் விசாரணை திரைப்படத்தைப் பார்த்து போலிசை சீர்திருத்தம் செய்யக் கோருவது அரசால் அனுமதிக்கப்பட்ட கருத்துதான். தான் வளர்த்த மிருகம் வெறியேறி அலையும் போது அது வெறியை தணிக்கிறோம் என்று நரித்தனமாக காட்டுவதற்கான ஏற்பாடே போலிசை சீர்திருத்துகிறோம் என்பது.

காவல் நிலையங்களில் சி.சி.டி.விக்கள், கைது செய்யும் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள், பெண்களை கைது செய்யும் போது நிபந்தனைகள், பதவி ஏற்றம் பெற்று வரும் காட்டுமிராண்டி ஐ.பி.எஸ்-ஐ விட மேட்டுக்குடியிலிருந்து நேரடியாக பயிற்சி பெற்று வரும் நாகரீக ஐ.பி.எஸ் எல்லாம் மேற்படி நாடகத்தின் காட்சிகள்தான். அதைத்தான் சகாயம் கோருகிறார். இது கூட தெரியாமல் தந்தி.டி.வியில் பாண்டேக்களும் மாலன்களும் ஆத்திரப்படுகிறார்கள்.

முத்துவேல் நல்ல போலீசு என்றால் கெட்ட போலீசு யார்?

Visaranai“எந்த அமைப்பும் ஒரு தனிநபரை விட சக்தி வாய்ந்தவை, தனிநபரை அழுத்துபவை, திரைப்படத்தில் அப்படி முத்துவேல் எனும் இன்ஸ்பெக்டரின் நெருக்கடியை அனைவரும் உணர முடியும், இந்த கதையிலும் நல்ல போலிசுக்காரர்களை காட்டியிருக்கிறேன்” என்று விவாதத்தில் இயக்குநர் கூறியதை பார்க்கலாம்.

முத்துவேலாக வரும் சமுத்திரக் கனி ஒரு நல்ல அதிகாரி என்று பார்வையாளர்கள் இரண்டு முறை உணர்கிறார்கள். முதல் கதையில் தமிழ் இளைஞர்களை நீதிமன்றத்தில் காப்பாற்றுகிறார். இரண்டாம் கதையில் அவர்களை கொல்லாமல் எச்சரித்து விரட்டி விடலாம் என்று மேலதிகாரிகளிடம் பேசுகிறார். இறுதிக் காட்சியில் அவர் சக போலிசுக்காரர்களால் கொல்லப்படுவது காட்டப்படவில்லை என்றாலும் தியாகியாகவே மறைகிறார்.

இதைத் தவிர முதல் கதையில் அடிபட்ட இளைஞர்களுக்கு செல்பேசி கொடுத்து பேசச் சொல்லும் இளம் பெண் போலிசு வருகிறார். இவைதான் வெற்றிமாறன் சொன்ன நல்ல போலிசுக்காரர்கள் அல்லது அமைப்பு அழுத்தம் கொடுத்த நல்ல உள்ளங்கள்.

முதலில் சமுத்திரக்கனி ஆந்திரத்துக்கு அதிகாரப்பூர்வமாக செல்லவில்லை. தனது போலீசு படையோடு சட்ட விரோதமாக ஆடிட்டரை கடத்த வருகிறார். ஒரு வாய்ப்பில் அது நடக்கவில்லை என்றாலும் தனது எஸ்.பியோடு பேசி குண்டூர் மாவட்ட எஸ்.பி அவரது ஐ.பி.எஸ் பயிற்சி தோழன் என்பதால் இன்னமும் கடத்த வாய்ப்பிருக்கிறது என்கிறார். பிறகு தமிழ் இளைஞர்களை கேடாக பயன்படுத்தி கடத்துகிறார். கடத்தலுக்கு உதவியவர்களை விடுவிக்காமல் காவல் நிலையத்தை சுத்தம் செய்யச் சொல்லி ‘ஜனநாயக’ முறையில் கேட்கிறார். ஆடிட்டரை அடித்து விசாரிக்குமாறு எஸ்.பி கேட்கும் போது தட்டாமல் தட்டவும் செய்கிறார். இத்தனைக்குப் பிறகும் இவர் நல்லவர் என்றால் யார்தான் கெட்டவர்?

ஆளும் வர்க்கம் உருவாக்கியிருக்கும் பொதுப்புத்தியின் இலக்கணப்படி பல்வேறு துறைகளில் நல்லவர்கள் எனப்படுபவர்கள் இப்படித்தான் அறியப்படுகிறார்கள். அண்ணன் கொலை, கொள்ளைன்னு போனாலும் தண்ணி – பொண்ணுங்களை தொடமாட்டார், அய்யா காசு வாங்குனாலும் கண்டிப்பாக செய்வாரு – ஏமாத்த மாட்டாரு, இந்த தலைவரு நிறைய சம்பாதிச்சாலும் கேட்டு வந்தா மனசு நிறைய அள்ளிக் கொடுப்பாரு, ராமாவரம் தோட்டத்துக்கு போனா யாரும் சாப்பிடாம திரும்ப முடியாது என்று இந்த இலக்கணங்கள் தோற்றுவித்திருக்கும் விதிப்படி சமுத்திரக்கனியையாவது நல்லவராக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

முத்துவேல் எனும் காரியவாதி போலிசை நல்லவராக ஏற்பதற்கு காரணம் பார்வையாளர்களிடத்திலும் இத்தகைய காரியவாதமே இலட்சியவாதமாக நிலைபெற்றிருக்கிறது.

ஆகவேதான் மீண்டும் சொல்கிறோம். ஒரு அமைப்பு முறையை அடிப்படையில் ஏற்றுக் கொண்டு மீறாமல் சிந்திக்கும் போது மட்டுமே இத்தகைய கொஞ்சமாவது நல்லவர்களல்லாம் முழு நல்லவர்களாக திரிக்க முடியும். உண்மையில் ஒரு அமைப்பு முறையின் கேடுகளை அறிபவன் முடிந்தால் அதை பகிரங்கமாக எதிர்த்து வெளியேறுவான். எதிர்க்க முடியவில்லை என்றால் மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாமல் தற்கொலை செய்வான். மோடிதான் இனப்படுகொலையின் சூத்திரதாரி என்று குற்றம் சாட்டிய குஜராத்தின் சஞ்சீவ் பட் காவல் துறையில் இருந்து வெளியேறினார். வியட்நாமிலும், ஈராக்கிலும் பணியாற்றிய அமெரிக்க வீரர்கள் பலர் தற்கொலை செய்திருக்கின்றனர்.

பத்திரிகையாளர் அரவிந்தன் மட்டுமல்ல,ஆனந்த விகடனும் “காவல் துறையின் மனசாட்சியை குறுக்கு ‘விசாரணை’ செய்யும் தமிழ்visaranai-review-1 சினிமாவின் பெருமிதப் படைப்பு” என்கிறது. எனில் நமது காவல் அதிகாரிகள் அனைவரும் கூண்டோடு தற்கொலை செய்ய வேண்டும் இல்லையேல் ராஜினாமா செய்து விட்டு போராட வேண்டும். அப்படி போராடியவர்களையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவருக்காக மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், நக்சல்பாரிகளை ஒடுக்கிய போலிசைக் கூட ‘பொன்மனச் செம்மல்’ விட்டு வைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் சங்கம் உருவானதைத் தொடர்ந்து தமிழக போலிசாரும் (கீழ்நிலை போலிசு) நைனார்தாஸ், ஜான் பிரிட்டோ தலைமையில் சங்கம் அமைத்தனர். அதை தடை செய்து, மத்திய ரிசர்வ் படையை வைத்து வேட்டையாடி இறுதியில் சங்கத் தலைவர்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு மனநோயாளிகளாக மாற்றப்பட்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்ற பதிவு கூட இங்கே கிடையாது. அரசு எந்திரத்தின் போலீசு, அதில் தமிழக போலீசு, கீழ் நிலை போலிசு என்று ஒரு பிரிவினர் சங்கம் அமைத்து போராடினாலும் மத்திய போலீசு ஒடுக்குவதற்கு வரும். இராணுவத்தில் கலகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். அதிகபட்சம் அவர்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தாண்டி வேறு எதிர்ப்புகள் இங்கே சாத்தியமில்லை.

அவர்களது சுயமரியாதைக் கூட கோர முடியாத நிலையில் வைத்திருப்பதனால்தான் போலிசுத் துறையை மிருகங்களைப் போல பராமரிக்க முடிகிறது. அரச வன்முறை – பயங்கரவாதத்திற்குகாக எலும்பு போட்டு வளர்க்கப்படும் அந்த மிருகத்தின் குற்றங்கள் மிருகங்களுடையது மட்டுமல்ல, முதன்மையாக வளர்ப்பவர்களுடையவை.

கோட்டா போலிசு கொல்ல மாட்டாரா?

pachayappa-students-rsyf-1
பு.மா.இ.மு டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்திற்காக பச்சையப்பா மாணவர்களை அடித்து நொறுக்கும் போலிசு!

ரு திரைப்படத்தில் வரும் சில குறியீடுகள், வசனங்களை வைத்து மட்டும் சினிமாக்களில் காண வாய்ப்பில்லாத அரசியல் முற்போக்கு கருத்துக்களை தேடுவதை என்ன சொல்ல? “படத்துக்கு எந்த விதத்திலும் பொருந்தாமல் விட்டெறியப்படும் இதுபோன்ற முற்போக்கு மிட்டாய்களைத்தான் பலரும் சப்பிக் கொண்டிருக்கிறார்கள்.” என்று விசாரணை குறித்த விமரிசனத்தில் அழகாக எழுதுகிறார் பாபு ஜான்ராஜ். அப்படி ஒரு மிட்டாய்தான் “அட..சும்மா இருங்க சார், கோட்டாவுல உள்ள வந்துட்டு… சிஸ்டம் தெரியாம பேசிட்டு…”

பார்ப்பன மேல் நிலை ஆதிக்க சாதிகளிடமிருந்து வரும் நேரடி ஐ.பி.எஸ்-கள் மற்ற இடைநிலைச் சாதிகள் மற்றும் தாழ்த்தப்பட்டோரை அறிவற்றவர்கள் என்று திட்டுவது, கேலி செய்வது இந்தியா முழுவுதும் உள்ள நிலை. இங்கு அவர்களின் வில்லத்தனத்தை சுட்டும் வகையில் நேர்மறையாக பேசப்படுகிறது. வருணாசிரம அமைப்பின் விதிகளை அறிந்தவர்கள் சமூகத்தில் நிகழ்த்தும் அநீதிகளை கடமை என்று புரிந்து கொள்வது போல இங்கும் போலீசு அமைப்பின் விதிகளை புரிந்து கொள்பவர்களுக்கு தயக்கமோ தாமதமோ இருக்காதாம். எதார்த்தத்திலோ நாங்களும் அறிவானவர்கள்தான் என்றே ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து வருபவர்கள் தங்களை பார்ப்பனமயமாக்கி கொள்கிறார்கள். மறுபுறம் இதுவே போலிசு துறை எனும் போது இடை நிலை ஆதிக்கசாதிகளைச் சேர்ந்தோரே கயர்லாஞ்சியிலோ இல்லை பரமக்குடியிலோ தாழ்த்தப்பட்டோரை கொல்வதற்கும் சுடுவதற்கும் காரணமாகிறார்கள். இளவரசன் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு இடைநிலை ஆதிக்க சாதி வெறி அதிகார, போலிஸ் மட்டத்திலும் இருப்பது முக்கியமான காரணமில்லையா? யுவராஜின தெனாவெட்டிற்கும் அது அடிப்படையில்லையா?

ஒடுக்கப்படும் சாதியிலிருந்து வரும் ஒரு போலிசுக்காரர் ஒடுக்கப்படும் மக்களுக்காக பணியாற்றுவார் என்பது வடிகட்டிய பொய்! மக்களை ஒடுக்குவதற்காக பராமரிக்கப்படும் போலிஸ் துறையில் தலித்துக்களோ, இடைநிலைச்சாதிகளோ போதிய பிரதிநிதித்தவும் பெற்று விட்டால் அந்த துறை சமூகநீதியுடன் செயல்படும் என்பது தோற்றுப்போன சமூகநீதி அரசியல் மற்றும் தலித் அரசியல் வைத்திருக்கும் காரியவாதமே! இதன் மூலம் இந்த அமைப்பு முறையின் வன்முறையை மறைப்பதற்கே இந்த அடையாள அரசியல் பயன்படுகிறது.

நவீனமயமாகும் போலிசு வன்முறை!

டிதடி பஞ்சாயத்து ரவுடிகளெல்லாம இன்று கோட் சூட்டு போட்ட கல்வி வள்ளல்களாகவும், ரியல் எஸ்டேட் அதிபர்களாகவும் கோடிகளை சுருட்டும் காலத்தில், போலிசும் பழைய பாணியிலான அடிதடிகளை நம்பி தனது வன்முறைகளை செய்வதில்லை. ஆம் அவர்களது வன்முறைகள் முன்னிலும் அதிகமானாலும் நவீனமயமாகி வருகின்றன.

kisanji-3
மாவோயிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்தோழர் கிஷன்ஜி போலீஸ் மிருகங்களால் கொடூரமாக கொல்லப்பட்டு கிடக்கும் காட்சி!

இன்றைய தெலுங்கானா பிராந்தியத்தில் அன்று செல்வாக்குடன் இருந்த மாவோயிஸ்ட் கட்சியினரை ஆந்திர போலிசு எப்படி முடக்கியது? முதலில் மாவோயிஸ்ட்டுகளுக்கு உணவு கொடுத்தோர், இடம் கொடுத்தோர் என்று மக்களை வகை தொகையில்லாமல் அடித்து நொறுக்கியதோடு கொன்று குவித்தது. பிறகு மக்கள் மீதான வன்முறைகளை நிறுத்தி அவர்களுக்கு நலத்திட்டங்கள் என்ற பெயரில் சில பம்மாத்துக்களை செய்து, கிராமம் தோறும் ஆள்காட்டிகளை உருவாக்கி மாவோயிஸ்ட்டுகளின் கொரில்லாக் குழுக்களை அவர்கள் இருக்குமிடத்திலேயே தேடிச் சென்று அழித்தது. இப்படித்தான் போலிசு வன்முறை நவீனமயமாகி வருகிறது. அதே நேரம் அதிகரித்து வரும் உலகளாவிய பொருளாதார மற்றும் ஆளும் வர்க்க நெருக்கடிகள் போலிசுக்கு மேலும் மேலும் அதிக அதிகாரத்தையும், அடக்குமுறைக் கருவிகளையும் கோருகின்றன.

‘விசாரணை’யின் தாக்கம் என்ன?

போலிசின் உருவாக்கம், பயிற்சி, வன்முறை, நடத்தை அனைத்தும் இந்த அமைப்பே திட்டமிட்டு உருவாக்குகிறது. அதனாலேயே அவர்களது வன்முறையை சட்டத்திலிருந்தும், தண்டனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது. அதனால்தான் போலிசார் லஞ்சம் வாங்குவதிலிருந்து, தலைகளை கொய்வது வரை அச்சமின்றி செய்கின்றனர்.

அந்த அச்சத்தைத்தான் தி இந்து அரவிந்தன் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“அமைப்பின் இந்தக் குரூரமான விளையாட்டில் யார் வேண்டுமானாலும் பலியாகலாம் என்பதையும் காட்டுகிறார் (இயக்குநர்). உதிரிகளுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மற்றவர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு இருக்கிறது என்பதுதான். ஆனால், முழுமையான பாதுகாப்பு யாருக்குமே இல்லை என்பதைப் பார்வையாளர்களின் முதுகுத் தண்டு சில்லிடும் விதத்தில் காட்டிவிடுகிறார்.”

விசாரணை திரைப்படம் உருவாக்கும் மிகத் தவறான கருத்து இதுவே. இந்த அமைப்பில் ஏழைகள், தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு
visaranai-review-7இல்லை, பணக்காரர்கள், முதலாளிகளுக்கு முழுமையான பாதுகாப்பு இல்லை என்று போலிசு வன்முறையை சமப்படுத்தும் இந்த சிந்தனைதான் அபாயகரமானது. கீதையில் கண்ணன் படிமங்களாக கூறும் காலையும் நானே, மாலையும் நானே, கடமையும் நானே, குற்றமும் நானே, தண்டனையும் நானே, தீர்ப்பும் நானே, எல்லாம் நானே என்று பேசுவது வெறும் பம்மாத்து மட்டும அல்ல.

டி.வி.எஸ் ஆலை பேருந்து நிறுத்தத்தில் “கடமையைச் செய், பலனை எதிர்பாரதே” என்று கீதைக்கு விளம்பரம் கொடுக்கும் நோக்கில் தொழிலாளிகளின் போனஸ் உரிமையை ஆன்மீகத்தின் பெயரில் ஆசை என்பதாக விட்டொழிக்குமாறு அடக்குகிறாரே ஐயங்கார் அதுதான் கீதை இந்த நாட்டில் இன்றும் நீடித்திருப்பதற்கான காரணம். இலாபம் சரியானதாகவும், போனஸ் தவறானதாகவும் கருதுகிற முதலாளி, கீதையை எல்லோருக்குமான நீதியாக பரிந்துரைக்கலாம். ஆனால் ஒரு தொழிலாளிக்கு அது எல்லா விதத்திலும் அநிதீயாகவே இருக்கும்.

போலிசு ராஜ்ஜியத்தில் ஜனநாயகம் இருக்குமா?

ரசு என்பது எப்படி பொதுவானது அல்லவோ அது போலவே அது ஊட்டி வளர்க்கும் போலிசும் பொதுவானது அல்ல. இன்றைய அரசு முதலாளிகளுக்கானது என்றால் போலிசும் அவர்களுக்கானதே. தேர்தலில் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் வைக்கும் உரிமை இருப்பதை வைத்து இது எல்லாருக்குமான ஜனநாயகம்தானே என்று கேட்கலாம். இந்த ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்துகின்ற வேறு ஒரு முக்கியமான உரிமை ஒன்று உண்டு. அதுதான் சொத்துக்களை சேர்க்கும், அதிகரிக்கும், சம்பாதிக்கும் உரிமை. இந்த உரிமை இருக்கும் போது மற்ற உரிமைகள் கேலிக்கூத்தாகவே இருக்கும். ஏனெனில் மனிதர்களுக்கிடையில் சொத்துரிமை வைத்து உருவாகும் ஏற்றத்தாழ்வு கண்டிப்பாக சமத்துவ உரிமைக்கு எதிராகவே இருக்க முடியும்.

இப்படி இல்லாதவர்களும், இருப்பவர்களும் வர்க்கங்களாக பிரிந்திருப்பதாலேயே வரலாற்றில் அவர்களுக்கென்று ஒரு நடுநிலை நாட்டாமையாக காட்டிக் கொள்ள அரசு தோற்றுவிக்கப்படுகிறது. அதற்கான அதிகாரத்தையும் ஆயுதப் படைகளையும் கொண்டிருப்பதை விதிமுறைப்படி நியாயப்படுத்துகிறது. இப்படித்தான் இந்த நாட்டின் ஆயுதப் படைகளும் அதன் அங்கமான போலிசும் அம்பானி, அதானி, டாடாக்களின் 24 X 7 செக்யூரிட்டி சர்வீஸ் என்கிறோம்.

பெண்-தோழர்-சிறை-அனுபவம்-4
பு.மா.இ.மு தோழர்கள் போலீசால் தாக்கப்படுகின்றனர்.

நேர்மாறாக போலிசை ஏதோ அனைவருக்குமான வில்லன்களாக சித்தரிப்பதோ, உள்வாங்குவதோ படத்தில் வரும் பாண்டி நண்பர் குழாமிற்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி. ஒருக்கால் போலிஸ் அவர்களை நையப்புடைப்பதற்கான பலமே போலிஸ் என்பது அனைவருக்கும் சமமான ஒன்று என்ற அங்கீகாரமே. அந்த அங்கீகாரத்தை இந்த அமைப்பும் அரசியல் சட்டமும் கொடுக்கலாம், நாம் கொடுக்கலாமா?

கொல்லப்படும் தணிக்கையளார் தன்னை அடிக்கும் போலிசிடம் கூறுவதாக ஒரு வசனம் வரும். “என்ன தூக்க உன்ன அனுப்புன மாறி நாளைக்கு உன்ன தூக்க வேறு ஒருத்தன் வருவான்”. இது போலிசின் வன்முறையை கொஞ்சம் ‘தத்துவ’ நிலைக்கு கொண்டு செல்லும் அபத்தம். அதாவது கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் போல.

இந்தப் பழுதுப் பார்வையே இந்தப் படத்தை போலீசு மீதான அர்த்தமற்ற காரணமே இல்லாத பயமாக பார்ப்போரிடம் இறங்குகிறது. அதற்காக போலிசை வெட்டி வீழ்த்தும் நாயகத்தனம் படத்தில் இல்லை என்பதல்ல நமது விமரிசனம்.

சில வருடங்களுக்கு முன்னர் போராட்டம் ஒன்றிற்காக சுவரொட்டி ஒட்டிய மூன்று தோழர்களை கைது செய்து காவல் நிலையத்தில் ஓரிரவு தங்க வைத்தது சென்னை வடபழனி போலிசு. சுவரொட்டி ஒட்டுவதற்கு கூட சுதந்திரம் கிடையாதா என்று ஒரு தோழர் கேட்டதால் போலிசிடம் அடிபட்டார். அடிபட்டாலும் மீண்டும் முழங்கியதால் அடி கூடியது. அடுத்த நாள் காலையில் காலஞ் சென்ற தோழர் சீனிவாசன் அவர்களை மீட்டு வந்தார். அடி பட்ட புதிய தோழர் அடித்த போலிசை எதாவது பழிவாங்க வேண்டும் – சட்டப்படியே வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும் – என்று ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார்.

புரட்சிகர அமைப்புகளில் சேருவோருக்கு கைது நடவடிக்கைகள் புதிதல்ல. ஆனால் அடிக்கும் ஒரு போலிசை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்ற அந்த உணர்ச்சி, பிறகு இது ஒரு போலிசால் நடப்பதல்ல, போலிஜனநாயகத்தின் விளைவு என்று ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக முதிர்ந்து தனது பழிவாங்கலை அரசியல் ரீதியில் மக்களை திரட்டுவதாக கனிகிறது.

ஆகவே எங்கள் அரசியல் செயல்பாடுகளில் நாங்களும் போலிசை வீழ்த்தும் நாயகர்கள் அல்ல. அது சாத்தியமும் அல்ல. ஆனால் இந்த போலீசும் போலி ஜனநாயகமும் ஏன் வீழ்த்தப்பட வேண்டும், அதற்காக எப்படி மக்கள் திரட்டப்பட வேண்டும் என்பதறிவோம்.

விசாரணைத் திரைப்படமோ போலிசு எனப்படுவர்கள் இந்த உலகில் எந்த சக்தியாலும் கட்டுப்படுத்தப்பட முடியாதவர்கள், கொடூரமானவர்கள் என்று சித்தரித்து விட்டு இந்த காக்கி கிரிமினல்களை வைத்து இயக்கும் போலி ஜனநாயக அமைப்பின் கொடூரத்தை மறைக்கிறது. அல்லது பேச மறுக்கிறது.

William-Booth-c1900
இரட்சணிய சேனையை ஆரம்பித்த வில்லியம் பூத்!

அமைப்பின் நெருக்கடிக்கு தீர்வு புரட்சியா, சீர்திருத்தமா?

கவேதான் தி இந்து அரவிந்தன், காவல் துறை அதிகாரிகளின் மனசாட்சியை, இந்தத் திரைப்படம் தொட்டு எழுப்புமா என்று ஏங்குகிறார். இந்த ஏங்குதலும் பிரார்த்தனையும் வரலாறு நெடுகிலும் ஏராளமாய் தினுசு தினுசாய் இறைந்து கிடக்கின்றன.

Salvation Army எனப்படும் இரட்சனிய சேனை(கிறித்தவ மதத்தின் தொண்டு நிறுவனம்)-யின் நிறுவனர் வில்லியம் பூத்தும், கம்யூனிசத்தின் பேராசானாகிய காரல் மார்க்ஸும் 1849-ம் ஆண்டு வாக்கில்தான் இலண்டனுக்கு வந்தனர். ஒரு வட்டிக் கடையில் உதவியாளராக பணிபுரிந்த பூத், கடைக்கு வரும் ஏழைகளின் துயரக் கதைகளை தினசரி பார்க்கிறார். காரல் மார்க்ஸோ தனது குழந்தைகளின் துணிகளைக் கூட அடகு வைத்து ரொட்டியும், உருளைக் கிழங்குகளை வாங்கி குடும்பத்தின் பசி போக்கியவர். அந்த வகையில் ஏழ்மையை வாழ்ந்து அனுபவித்தவர்.

இந்த ஏழ்மைக்கு காரணம் மனிதனின் சித்தமல்ல, மதமும் அல்ல, அவன் கூட்டமாய் வாழும் சமூகத்தின் அமைப்பு முறையே, அந்த முதலாளித்துவ முறைதான் ஏழ்மையை சுரண்டல் மூலம் தவிர்க்கவியலாமல் தோற்றுவிக்கிறது என்று மார்க்சியத்தின் தேவையை கண்டு சொன்னார் மார்க்ஸ். பிறகு மார்க்ஸ் மற்றும்

காரல் மார்க்ஸ்
காரல் மார்க்ஸ்

ஏங்கெல்ஸ்சின் தத்துவம் தொழிலாளி வர்க்கத்தைப் பற்றிக் கொண்டு இந்த உலகில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்தது. ஏழ்மைக்கு காரணம் மனிதனின் சித்தமே, தயாள குணம் குன்றிப் போனதே, அதை மதத்தின் மூலம் மீட்டெடுக்க ஏழைகளுக்கு நேரடியாக உதவேண்டும் என்று இரட்சணிய சேனையை ஆரம்பித்தார் பூத்.

ஒருவர் போராடக் கூறினார். மற்றொருவர் இரக்கத்தைக் கோரினார். ஒருவர் பகத் சிங், மற்றொருவர் காந்தி. அவர் நக்சலைட், இவர் வினோபாவே.

இன்று இலண்டன் கார்ப்பரேட் அலுவலகங்களுக்கு மத்தியில் அல்ட்ரா மாடர்னாக இருக்கும் இரட்சணிய சேனை அலுவலகமும், தொழிலாளிகளின் குடியிருப்பில் மார்க்சிய லெனினியக் குழுக்களின் அலுவலகங்களும் அந்தந்த பாரம்பரியங்களை பின் தொடர்கின்றன.

அமைப்பு முறையை சீர்திருத்தும் முயற்சிகளும், தூக்கி எறியும் முயற்சிகளும் இன்றும் தொடர்கின்றன. நாம் காவல் துறையின் மனசாட்சியை நோக்கி இரக்கத்தை கேட்க போகிறோமா, அதை இன்னமும் தூக்கி எறியாமல் சகித்துக் கொண்டிருக்கம் மக்களின் மனசாட்சியை உலுக்கப் போகிறோமா?

இதுதான் சரியான விசாரணை.

_______________________

மேலும் படிக்க:

அமைப்புக்கு எதிராக ஒரு குறுக்கு விசாரணை – தி இந்துவில் அரவிந்தன் கட்டுரை

விசாரணை – கருணையில் உறையும் வன்முறை – ஃபேஸ்புக்கில் ஜான் பாபு ராஜ்

விசாரணை : பாண்டேவுக்கு போட்டியாக புதிய தலைமுறை மாலன்

4
visaranai debate haiharan
பாண்டேவின் தம்பி ஹரிகரன் போலிசு இமேஜுக்காக போராட்டம்

து ஒரு விவாதம். மாவோயிஸ்ட்டுகளின் ‘வன்முறை’-யை வளர்ச்சியின் பெயரால் கிண்டிய பாண்டேயின் வழக்கமான விவாதம். தலைப்புக்கு பொழிப்புரையால் வலு சேர்க்க அழைக்கப்பட்டிருந்தார் அந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி. முதல் சுற்றிலேயே மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதிகள் இல்லை, கொள்கை, அரசியல் சார்ந்து செயல்படுபவர்கள், அவர்களது செயலில் வன்முறைகள் இருந்தாலும் பயங்கரவாதிகள் இல்லை என்று அவர் சொன்னதும் பாண்டேவுக்கு தாங்கவொண்ணா ஆத்திரம்!

இதற்காகவா இவரை அழைத்தோம் என மாவோயிஸ்ட்டுகளின் ‘வன்முறைகளை’ பட்டியலிட்டு இவை பயங்கரவாதமில்லையா, அவர்களை ஆதரிக்கிறீர்களா என்றதோடு, விட்டால் உடன் போலிஸ் கமிஷ்னருக்கு போன் போட்டு கைது செய்யட்டுமா என்ற ரேஞ்சில் பிபி எகிற காட்டுரைத்தார் திருவாளர் பாண்டே அவர்கள்.

அந்த போலிஸ் அதிகாரியோ மாவோவியஸ்ட்டுகளின் வன்முறையை பயங்கரவாதமாக பார்க்க கூடாது, மக்களின் ஏற்றத் தாழ்வு சம்பந்தமான பொருளாதார பிரச்சினையாக பார்க்க வேண்டும், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவதற்கு ஃபோர்ஸ் மட்டும் போதாது, ஃபாலிசியும் வேண்டும் என இறுதியில் மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்பது குறித்தே பேசுகிறார். எனினும் நேரடி பயங்கரவாதிகளாக அழைக்காமல் சுற்றிவளைத்து கொல்லும் இந்த முறை பாண்டேவுக்கு உண்மையில் தெரியாது. அதனால் அரசுக்கு ஆதரவாக கூட்டி வந்தவரையே மாவோயிஸ்ட்டுகளின் ‘ஆதரவாளராக’ மாற்றி இதயம் படபடத்தார். அன்று இரவு அவர் கூடுதலாக ஒன்றிரண்டு சப்பாத்திகளையும், பச்சை மிளகாயையும் கடித்திருக்க வேண்டும்.

எதிராளியை சுற்றி வளைத்து விசாரிக்காமல் சட்டென்று சுட்டுக் கொல்ல வேண்டும் எனும் ஒரு உண்மையான என்கவுண்டர் போலிசுதான் திருவாளர் பாண்டே அவர்கள். அவர் தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கியதால்தான் மற்றவர்களுக்கு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பெயர் கிடைத்திருக்கிறது.

பிப்ரவரி 2015, நான்காம் தேதி “விசாரணை” படம் வெளியான போது பாண்டே கொதி நிலையிலேயே இருந்திருப்பார். மொத்த காவல்துறையும் ஒரு திரைப்படத்தால் வில்லனாக மாற்றப்படுவது மட்டுமல்ல, சகாயம் போன்ற நடப்பு அதிகாரிகளே இந்த படத்தைப் பார்த்து போலிசின் அத்துமீறலை விமரிசித்திருக்கும் போது அவர் குறுமிளகாய் கடித்த வெறி பைரவராக அவஸ்தைபட்டிருப்பதில் அதிசயமில்லை.

உடனே அன்று மாலையே சுடச்சுட “விசாரணை (திரைப்படம்) பற்றி சகாயாத்தின் கருத்து நிதர்சனமா? மிகைப்படுத்தலா?” என்று தந்தி டி.வி விவாதத்தை தலைமை செய்தியாசிரியராக முடிவு செய்து விட்டார். இருப்பினும் நெறியாளராக தானே இல்லாமல் தம்பி ஹரிகரனை நடத்தச் சொல்லி விட்டார். ஒருவேளை அவர் கலை ஆர்வம் இல்லாத ஔரங்கசீப்பா, கற்பூரத்தின் மணமறியாத காளவாயோ தெரியாது. ஆனாலும் இந்த உலகில் தன் மனதின் துடுக்கறிந்த மிடுக்கன் மூத்த பத்திரிகையாளர் மாலன் அவர்களை அந்த விவாதத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்கிறாரே அங்கு நிற்கிறார் பாண்டே. இந்த விவாதத்தை பார்த்த பிறகு முதலுக்கே மோசமோ என்று அவர் ஆனந்தக் கண்ணீரில் தத்தளித்திருக்க வேண்டும்.

அந்நிகழ்ச்சியில் பாண்டேவால் ஆதிர்வதிக்கப்பட்ட ஹரிகரன் உரையை ஆரம்பிக்கிறார். அண்ணன் ஆத்திரம் கொண்ட அக்ரஹாரத்து லா பாயிண்ட் பாரிஸ்டரென்றால், தம்பி அதே லா பாயிண்டை கொஞ்சம் பெந்தகோஸ்தே பாஸ்டராக சற்று அன்னிய பாஷையுடன் முன்வைப்பவர்.

விசாரணை படத்திற்கு வெனிஸ் விருது, ரஜினி, கமல் பாராட்டு கிடைத்திருப்பதெல்லாம் பிரச்சினை இல்லை என்று சுளி போடும் ஹரிகரன், சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள், “காவல்துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரம்பற்ற அதிகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது. காவல் விசாரணையில் அத்துமீறல்களை கட்டுப்படுத்தும் சீர்திருத்த சட்டங்கள் தேவை” என்று படத்தைப் பற்றி கூறியதை முன்வைக்கிறார்.

அரசாங்கத்தின் அங்கமாக இருக்க கூடிய சகாயம் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவியதாம். ஆகவே வரம்பற்ற அதிகாரத்தை காவல்துறை பெற்றிருக்கிறதா, மனித உரிமை மீறல் காவல்துறையால் அதிகரித்து வருகின்றனவா, காலத்தால் தேவையா சகாயம் கூறும் சீர்திருத்தம் என்று மூன்று கேள்விகளை முன்வைத்து உரையாடலை துவக்குகிறார். இருப்பினும் இவற்றை விட முக்கியமான கேள்வி அரசின் அங்கமாய் இருக்கும் ஒரு அதிகாரி இப்படி கருத்து கூறலாமா? அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் காவல் துறை அத்துமீறல்கள் மிகைப்படுத்தப்படுகின்றனவா, என்பதை பட்டவர்த்தனமாக தெரிவிக்கிறார். இதுதானே அண்ணன் தீர்மானித்திருக்கும் கேள்வி என்பதால் நமக்கு வியப்பில்லை.

malan
மனு நீதியை கரைத்து குடித்த சாணக்கியருக்கு படம் பார்க்க வேண்டிய அவசியமில்லை!

குற்றவாளிகள் மட்டுமல்ல காவல்துறைக்கு ஆதரவாக ஏவல் வேலை செய்யும் கனவான்களும் தமது தடயத்தை விட்டுவிட்டே செல்கிறார்கள். ஓய்வுபெற்ற மூத்த காவல் துறை அதிகாரி – சித்தண்ணன், மூத்த பத்திரிகையாளர் மாலன், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் என மூன்று விருந்தினர்களை அறிமுகம் செய்த ஹரிகரன், கடைசியாக சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வந்த சிவ இளங்கோவை சொல்லிவிட்டு அவர் மட்டும் சகாயத்தின் கருத்தோடு ஒத்து போவதாக தெரிவிக்கிறார். இளங்கோவை தவிர மற்றவர் அனைவரும் ஹரிகரனையும் உள்ளிட்டு சகாயம் கருத்தை எதிர்ப்போர் என்பதோடு, முன்கூட்டியே இளங்கோவை பதம் பார்க்க இதமாக போட்டும் கொடுக்கிறாராம். இந்த பட்டியலில் வெற்றிமாறன் வரமாட்டார், எனெனில் அவர் வெனிஸ் வென்ற வீரன் என்பதால் மரியாதையுடனே நடத்த வேண்டியிருக்கிறது.

மற்றவர் கருத்து என்ன என்று தெரிவிக்காத போது சிவ இளங்கோவை மட்டும் அப்படி முன்கூட்டி ஏன் கூண்டில் நிறுத்துவது போல தெரிவிக்க வேண்டும்? ஆக விருந்தினர்களில் நெறியாளரையும் சேர்த்து மூவர் ஒரு கருத்திற்கும், ஒருவர் மறு கருத்திற்கும், வெற்றி மாறன் இயக்குநர் என்ற முறையிலும் என்றால் இது என்ன ஜனநாயகம்? அதிலும் மாலன், சித்தண்ணன், பாண்டே, ஹரிகரன் போன்ற அறிஞர்களை ஈடுகொடுக்க ஒரு அப்பாவியை திட்டமிட்டே தேர்வு செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்கு ‘விசாரணை’ என்கவுண்டர் பரவாயில்லையோ? ஏனெனில் செத்தவர்களுக்காக குரல் கொடுக்க கூட இங்கே இத்தனை தடை என்றால் போலிஸ் துறை ஏன் சுடாது?

பாண்டே இல்லாத குறையை போக்க வந்த மாலனிடமே முதலில் கேட்கிறார் நெறியாளர். சகாயத்தின் கருத்தை பொதுவாக பலரும் சொல்லுகிறார்கள், நீதிமன்றமும் தெரிவித்திருக்கிறது, மக்களின் கருத்தும் கூட, இதை சகாயம் என்ற மூத்த அதிகாரி சொல்லியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

தான் படத்தை பார்க்க வில்லை என்று பணிவாக மாலன் ஆரம்பிக்கும் போதே, போலிஸ் அத்துமீறல் குறித்த விவாதத்தின் நாயகனான படத்தைப் பார்க்காமலேயே கருத்து சொல்ல அவர் ஏன் அழைத்து வரப்பட்டார் என்று கேள்வி எழுகிறது. மனு நீதியை விளக்கியோ வெறுத்தோ கொலையோ இல்லை கலையோ எது நடந்தாலும் சாணக்கியருக்கு தீர்ப்பு சொல்ல படம் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை. மனுநீதியின் விதிகள் சுலோகமாய் ஒப்பிப்பதே தகுதி.

படம் குறித்து தெரிவித்த சகாயத்தின் கருத்திலும் படத்தை பற்றி இல்லை என்று பணிவை நியாயப்படுத்தும் மாலன் அடுத்த அடியிலேயே துணிந்து அந்தக் கருத்தில் Factual தவறு இருக்கிறது என்று எச்சரிக்கிறார். சொல் குற்றமல்ல, பொருள் குற்றமாம்.

மட்டற்ற அதிகாரம் போலிசிடம் இருப்பது உண்மையல்ல. தான் வழக்கறிஞர் இல்லையென்றாலும் பத்திரிகையாளன் என்ற முறையில் சட்டம் ஓரளவு தெரியும் என்று உரைக்கும் போதே வெற்றிமாறன் கொஞ்சம் கவலைப் பட்டிருக்க வேண்டும். போலிசின் அதிகாரங்கள் சட்டத்தால் வரையறுக்கப்பட்டிருக்கின்றன ஐ.பி.சி 330, 331-லிருந்து அவர்களுக்கு விலக்கு கிடையாது. இந்தியன் போலிஸ் சட்டப்படி அவர்கள் என்ன செய்யலாம் – செய்யக்கூடாது என்று வரையறுக்கபட்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன. டி.கே பாசு எதிர் மேற்கு வங்க அரசு வழக்கில் என்ன செய்ய வேண்டும் என்பது போல வரையறைகள் இருக்கின்றன. சட்டத்தில் குறைபாடு இல்லை. நடைமுறையில் நமது அதிகாரிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தே சட்டம் எப்படி செயல்படுகிறது…. எனும் போது லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்த ஹரிகரன் –

“இவ்வளவு ஃசேப்கார்டு இருந்தாலும், உச்சநீதிமன்றம், மனித உரிமை கமிஷன், மகளிர் கமிஷன், மைனாரிட்டி கமிஷன் அனைத்தும் சகாயம் கூறியதைத்தானே சொல்கிறார்கள் இன்னும் இது மேம்பட வேண்டுமென கூறியதில் என்ன தவறு என்கிறார்.

போலிசுக்கு போகவேண்டாம், சேலம் கலெக்டர் இறுதிச் சுற்று படம் பார்த்து விட்டு ஃபோட்டோ எடுத்த நிருபரை அடித்ததாக புகார் வந்திருக்கிறது. இந்நிலையில் இன்னொரு சட்டம் தேவையில்லை, சீர்திருத்தப்படவேண்டியது போலிசுதான். சட்டமல்ல. என்கிறார் மாலன்.

சட்டம் சரி, அதிகாரிகள் தவறு, மதம் சரி, பின்பற்றுபவர்கள் தவறு என்ற அரதப் பழசான வாதத்தையே மாலனும் முன் வைக்கக் காரணம் இன்னும் மதத்திலோ சட்டத்திலோ யாரும் இதுவரை காணாத புனிதம் இருப்பதாக பல அப்பாவிகள் நம்புகிறார்கள். குடியரசுத் தலைவர் மாளிகையில் மாநில ஆளுநர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரணாப் முகர்ஜி, அரசியல் சட்ட புனிதத்தை ஆளுநர்கள் காப்பாற்ற வேண்டும் எனும் போது அந்த புனிதம் அருணாச்சல் பிரதேசத்தில் பல்லிளித்துக் கொண்டிருப்பதும், அந்த இளிப்புக்கு காரணமான கவர்னர் அங்கே புன்னகைத்துக் கொண்டிருப்பதுமான நிலையில் புனிதத்திற்கு என்ன பொருள்?

அதிகாரம் அளிக்கும் மமதை என்பதே ஏன் உருவாகிறது? அந்த மமதையை சட்டம் ஏன் கறாரான முறையில் கட்டுப்படுத்தவில்லை, தண்டிக்கவில்லை? நல்லதொரு சட்டத்தை கெட்டதொரு அதிகாரி கேடாக பயன்படுத்த முடியுமென்றால் அதன் காரணம் அந்த கெட்டதொரு அதிகாரி அதே நல்லதொரு சட்டத்தை வைத்து தனது கெட்டதை நியாயப்படுத்த முடியும். எனில் அந்த நல்லொதொரு சட்டத்தை கீறிப்பார்த்து அதில் என்ன நல்லது, புனிதம், புண் என்று பார்க்க வேண்டியதில்லையா? எல்லோருக்கும் பொதுவான சட்டத்தை ஒரு அதிகாரி தனது அல்லது தனது வர்க்கத்திற்கு ஆதரவாக பயன்படுத்துகிறார் எனில், அவரது பணி குறித்த சட்டங்கள் அவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்பதே உண்மை. சுருங்கச் சொன்னால் மக்களைப் பார்த்து பயமோ பொறுப்போ வராத வரைக்கும், அதை குறைந்த பட்சம் சட்டபூர்வமாகக் கூட நிலைநிறுத்தாத வரைக்கும், எந்த ஒரு அதிகாரியும் மக்களை வதைப்பதற்கு சட்டத்தினையே ஆயுதமாக ஏந்துவார்.

சகாயம் சொன்னதில் வேறு சில கேள்விகள் என்று மாலன் ஆரம்பிக்கும் போது – வாட் ஆர் தே? என்று அன்னிய பாஷையில் ஹரிகரன் ஊக்குவிக்கிறார்.

visaranai debate sithannan
என்கவுண்டர் கொலைகளை நிரூபிக்க முடியாத படியால் போலிசுக்கார்கள் நியாயவான்களே – சித்தண்ணன்

சகாயத்துக்கு சட்டம், அமைப்பு, அரசு, நடைமுறை தெரிந்தாலும் அவர் ஏன் இப்படி பேசினார் என்று ஆச்சரியமாக கேட்கிறார் மாலன். அதில் என்ன தவறு என்று ஹரிகரன் குறுக்கீடும் போது, அரசின் அங்கமாக இருந்து கொண்டு, அரசை விமரிசிப்பது தவறு என்கிறார். அரசு பதவி பிராமணத்தின் படி ஜெயா அரசு, மோடி அரசு கொள்கைகளைத்தான் விமரிசிக்க கூடாது. போலிசை பொதுவாக திருத்த வேண்டும் என்று சொல்வதில் என்ன பிரச்சினை? ஹரிகரன் கேட்கும் போது,

“ நீங்கள் ஒரு அமைப்பின் அங்கத்தினராக இருக்கும் போது அந்த அமைப்பே விமரிசக்க கூடாது, விமரிசிப்பதாக இருந்தால்அந்த சிஸ்டத்திலிருந்து வெளிவரவேண்டும்.” என்கிறார் மாலன். சகாயம் கூறியது விமரிசனமே இல்லை பொதுவான சீர்திருத்தம் என ஹரிகரன் மாலனுக்கு ஆதரவாகவே கேட்டாலும் அவர் மறுத்துரைப்பது போலவாம் இது.

போலிசுத் துறையின் அத்து மீறல்களை ஊகத்தின் அடிப்படையில் சொல்லக்கூடாது என மாலன் சொல்லும் போது, இந்தியா முழுவதும் சித்திரவதைகள், கொட்ட்டிக் கொலைகள் என்று ஹரிகரன் மெல்ல மறுக்கும் போது, WWE திரைக்கதையின் படி மாலன் இறுதியாக ஒரு அஸ்திரத்தை ஏவுகிறார்.

“சிலப்பதிகார காலத்தில் இருந்தே கொட்டடிக் கொலை – கஸ்டோடியல் டெத் நடக்கிறது” என்று அவர் எகத்தாளமாக போட்ட போது போலீசு சித்தண்ணன் வெற்றிச் சிரிப்பு சிரிக்க, ஹரிகரன் பின்னீட்டிங்க என்று தொடுப்பு சிரிப்பு சிரிக்க, கோவலன்தான் கொட்டடிக் கொலையின் முதல் பலி என்று மாலன் முடித்து வைக்க ஹரிகரன் அமைதியாகிறார்.

அமைதிக்கு பிறகு மாலன் வகுப்பு எடுக்கிறார்.

சட்டம் சரி அதிகாரி சரியில்லை என்றால் அதிகாரியை மாற்று, கார் ஓட்டுநர் சரியில்லை என்று காரை மாற்றச் சொன்னால் எப்படி? மாலன் முடிக்கும் போது, காரை மேம்படுத்தணுமுன்னு நீதிமன்றமே சொல்லவில்லையா என ஹரிகரன் பணிவான தொனியில் கேட்கிறார். ஏனெனில் நீதிமன்றம் சொல்லும் போது சகாயமும் சொல்லலாமே என்று பாயிண்ட் இன்னும் விளக்கப்படவில்லையல்லவா?

நீதிமன்றம் சொல்வதற்கு சூபர்வைசிங் அத்தாரிட்டி இருக்கிறது. நீதிமன்றம் அரசின் அங்கமல்ல, தனி துறை என்று மாலன் சொன்னதும் ஹரிகரனும் ஐ அன்டர்சேண்ட் – உங்களை எனக்கு தெரியாதா இதெல்லாம் ஒரு பாலன்சுக்காக கேட்பது – என்று ஒப்புதல் கொடுத்து விட்டு இளங்கோவிடம் வருகிறார்.

அப்பாவிகளும், அரசியல் இயக்கத்தினரும் காவல் நிலைய கொலைக்கூடங்களில் அன்றாடம் கொல்லப்படும் நிலையை இதெல்லாம் ஒரு பிரச்சினையா? கோவலன் காலத்திலிருந்தே இருக்கும் சாதா மேட்டர்தானே என்று பேசுவதற்கு நாக்கு மட்டுமல்ல, இதயமும் வெடிகளால் தடித்திருக்க வேண்டும். காஷ்மீரிலோ, வடகிழக்கிலோ இந்திய இராணுவம் கொலையாட்டம் போடும் ஒவ்வொரு தருணத்திலும் இதற்காக இராணுவத்தை குறை சொல்வது தவறு என்று துக்ளக்கில் சோ எழுதுவதை, ஆர்.எஸ்.எஸ் சமூக சேவகர்கள் சானல்களில் பேசுவதை மாலன் இன்னும் கொஞ்சம் இழுத்துச் சென்று ஆதி காலம் முதலே அப்படித்தான் என்று நியாயப்படுத்துகிறார்.

கோவலன் கொலையை மாலன், சோ, பாண்டே போன்ற அரசனை அண்டிப் பிழைக்கும் அறிவடியாட்களை வைத்து நாம் அறியவில்லை. அரசனையும் அவனது அரசாட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் தலைநகரத்தையும் எரிக்க வேண்டும் என்ற கலை கோபத்துடன் எழுதிய இளங்கோ அடிகள் மூலமே அறிகிறோம். அதே நேரம் இளங்கோவடிகளைப் போலல்லாமல் அரசனை அண்டிப் பிழைக்கும் புலவர் மரபும் தமிழ் மரபுதான். அதனால்தான் சுயநிதிக் கொள்ளை புகழ் பாரிவேந்தருக்கு புலவர் பணி செய்து பிழைப்பை ஓட்டும் புதிய தலைமுறை அறிஞர்களும் இங்கே நீதிமான்களாக அறியப்படுகிறார்கள்.

சிலப்பதிகார இளங்கோவிடமிருந்து சட்ட பஞ்சாயத்து இளங்கோவிற்கு வருவோம். “மாலன் எழுப்பியிருப்பது ஒரு வேலிடான பாயிண்ட், நியாமான கருத்தில்லையா? ரஜினி, கமல் போன்றோர் விசாரணை படத்தை சிலாகித்திருப்பது பிர்ச்சினையல்ல, ஆனால் சகாயம் அரசின் அங்கமாக இருந்து கொண்டே போலிசை குறை கூறியிருப்பது நியாயமா? என்று இளங்கோவிடம் கேட்கிறார் ஹரிகரன்.

விசாரணை படத்தை கமல், ரஜினி, மணிரத்தினம் போன்று மொக்கைத்தனமாக ஆதரிப்பது பிரச்சினையல்ல என்பது உண்மையே. ஏனெனில் அவர்கள் எவரும் சந்திரகுமார் எனும் தொழிலாளியின் காவல் நிலைய சித்திரவதைகளாக விசாரணையை பார்க்க வில்லை. பார்க்காததால்தான் வெற்றிமாறனின் திரை மொழியை சிலாகிக்கிறார்கள். சந்திரகுமாரை பார்த்தவர்கள் போலிசை திட்டுவார்கள். அதையே கொஞ்சம் நாசுக்காக சொன்னதற்காக சகாயத்தை ரவுண்டு கட்டுகிறார்கள். ஆக ஒரு படத்தை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி கருத்துரைக்க வேண்டும் என்பதை சட்ட விதிகளாக இங்கே விளக்குகிறார்கள்.

படம் பற்றி ஒவ்வருத்தரும் ஒரு மாதிரி பேசலாம். ஒரே மாதிரி பேசணுமுன்னு எதிர்பார்க்கூடாது. அரசின் கொள்கையை பேசுவதுதான் தவறு, ஆனா அது கூட பேசலாம். சான்றாக ஊழல் குறித்து பேசலாமே என்று இளங்கோ மெல்ல ஆரம்பிக்க, ஹரிகரன் குறுக்கிடுகிறார்.

இங்கே ஒன்றைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். விவாதத்தில் மற்றவரிடம் நாசுக்காய், ஜென்டில்மேன் கனவானாக பேசும் ஹரிகரன் இளங்கோவிடம் மட்டும் முரட்டுத்தனமாய் குறுக்கிடுகிறார்.

ஊழலைப் பற்றி நீங்க பேசலாம், நான் பேசலாம், அரசின் அங்கம் பேசலாமா என்று முழு அதட்டலுடன் கேடகிறார். அப்போது அவர் ஒலியும் மைக்கைத் தாண்டி அலறுகிறது. தே ஆர் பவுண்ட் பை சர்வீஸ் ரூல் சார்…என்று அன்னிய பாஷை மிரட்டல் வேறு.

கொள்கையை அமல்படுத்தும் இடத்தில் இருக்கும் சகாயம், வெளியே வந்து பேசாமல் உள்ளே இருந்து பேசுவது தவறு, கொட்டடிக் கொலை, சித்திரவதை செய்யும் அதிகாரத்தை சட்டம் தரவில்லை, ஆனால் அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கும் அத்துமீறல்களை வைத்து சட்டத்தை மாற்றச் சொல்வது தவறு என்று கிடுக்கிப் பிடி போடுகிறார் ஹரிகரன். பரவாயில்லையே பாண்டே தம்பிக்கு சீண்ட சொல்லிக் கொடுக்கணுமா என்று பாண்டே சிலாகித்திருப்பார்.

இந்த குறுக்கிடலில் மாலனும் சேர்ந்து கொள்ள சோர்ந்து போன இளங்கோவும், சகாயம் புது சட்டத்தை போட சொல்லவில்லை, சீர்திருத்தம்தான் கோருகிறார் என்று சொல்ல அத்தகைய தெளிவான நடையில் சகாயம் சொல்லவில்லை என்று ஹரிகரன் செல்லமாய் கோவித்துக் கொள்கிறார்.

சிவ இளங்கோவை உரையாடலில் ‘என்கவுண்டர்’ செய்த பிறகு வெற்றி மாறனுக்கு வருகிறார்கள். உலக அளவில் பாராட்டு பெற்றிருக்கிறார் என்பதால் நிறைய கனவான்-தனத்துடனயே வெற்றிமாறனுடன் பேசுகிறார்கள்.

உங்களைப் போன்று படைப்பாளிகளால் மதிக்கப்படும் இயக்குநர் காவல் துறை குறித்து பொதுப்புத்தியில் தவறான கருத்து ஏற்படுத்துவது சரியா? என்று நெறியாளர் கெட்கிறார். இந்தபடம்தான் அந்த கருத்த ஏற்படுத்துகிறது என்பது தவறு. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருக்கும் போது இந்த படம் ஒரு பக்கத்தை பற்றி மட்டும் பேசுகிறது. இது என் கற்பனையல்ல, சந்திரகுமார் எழுதிய வாழ்க்கை கதை. இந்த அனுபவம் பலருக்கும் நடக்கிறது, அதன்படி இது விதிவிலக்கானதும் அல்ல என்கிறார் வெற்றி மாறன்.

படத்தில் ஒரு பக்கத்தை மட்டும் காட்டுவதாலும், வெற்றிமாறன், தனுஷ் போன்றோர் சம்பந்தப்பட்டிருப்பதாலும் காவல் துறையே அத்து மீறல் என்று பொதுமைப்படுத்துவதாலும், வெனிசில் பார்க்கும் வெளிநாட்டவர் தமிழ்நாட்டு காவல்துறையை பற்றி என்ன நினைப்பார் என்று ஒரு ‘தேசபக்தராக’ கேட்கிறார் ஹரிகரன்.

ஏற்கனவே ஜெயாவின் வளர்ப்பு மகன் திருமணத்தில் பந்தக் கால் போட்டு, பந்தி பரிமாறி, கோலாட்டம், புலியாட்டம் ஆடிய இந்த போலிசை பற்றி புதிதாக என்ன நினைக்க முடியும்? சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி பழங்குடி பெண்கள், விழுப்புரம் ரீட்டா மேரி, அதிரடிப்படை அட்டூழியங்கள் என்று ரேப்பிலும், கொலையிலும் போட்டி போடும் இந்த காவல் துறையின் பெயர் குறித்து இவர்களுக்குத்தான் எவ்வளவு கவலை? என்ன இருந்தாலும் இவர்களையும் அதே காவல்துறைதானே பாதுகாக்கிறது அந்த நன்றி விசுவாசம்.

“நம்ம அக்கறை வெளிநாட்டுக்காரங்க என்ன நினைக்கிறாங்க என்பதா? இல்லை இந்த குறைகளை மாற்ற வேண்டும் என்று முயல்வதா என்னுடைய கருத்து இரண்டாவது” என்கிறார் வெற்றி மாறன்

visaranai debate“பல இலட்சம் கேஸ் காவல் துறைக்கு வருகிறது. உங்களுக்கும் தெரியும். எதெல்லாம் செய்யப்பட்டதா நீங்க்ள காட்டியிருக்கிறீர்களோ அவையெல்லாம் சட்டப்படியே தவறு. அத மீறி நடந்ததாக காட்றீங்க, காவல் துறையின் எல்லா அங்கத்தினரையும் அப்படி வில்லனாக காட்டினால் போலிசே இப்படித்தான் என்று சாமாயனியனுக்கு எழாதா சாமானியனை விடுங்கள், சகாயத்துக்கே எழுந்திருக்கிறதே?” கொஞ்சம் பாத்து அடிக்கப்பிடாதோ பாணியில் ஹரிகரன் மன்றாடுகிறார்.

அந்த மன்றாடுதலை கணக்கில் கொண்ட வெற்றி மாறனும் தனது படத்தில் நல்ல போலிசையும் காட்டியிருப்பதாகவும், எந்த கலையும் சமூகத்தைத்தான் பிரதிபலிக்கிறது, சினிமாவின் தாக்கத்தை விட சமூகத்தின் தாக்கமே மக்களிடம் இருக்கிறது என்கிறார். இங்கு கூட அவர் தனது படத்தின் கலை விதிகளை முன்வைத்து பேசுகிறார்.

போலிசு யார் என்பதை இந்த படம்தான் புரிய வைக்க முடியும் என்று பாண்டேவின் பத்திரிகைத்துறை தம்பி ஹரிகரன் சொல்வதால் பாண்டே ஸ்கூலின் பொது அறிவு தரம் என்னவென்பதை அறியலாம். மற்றும் சாமானியனை விடுங்கள், சகாயத்துக்கே தோன்றிவிட்டதே என்று அலறும் ஹரிகரன், அதே சகாயம் போலிசுக்கு பயந்து சுடுகாட்டில் படுத்துறங்கிய போதே என்ன நினைத்திருப்பார் என்று பார்க்க முடியாத அளவுக்கு பாண்டே பைத்தியத்தில் முற்றியிருப்பது உறுதி.

நீங்க முக்கியமான படைப்பாளி, சினிமா என்பது பாதிப்பு ஏற்படுத்தும் பாத்திரத்தையும் ஆற்றுகிறது, வ.வு.சி, கர்ணன்னா யார் நினைவுக்கு வராங்க, சிவாஜிதானே என்று மீண்டும் மன்றாடுகிறார். வெற்றி மாறனோ சிரிக்கிறார்.

இந்த இடத்தில் பாண்டே பள்ளியின் பெருமையினை நிலைநாட்ட மாலன் உதவுகிறார்.

“உங்க கருத்தில் சிலவற்றோடு மாறுபடுகிறேன். பதேர் பாஞ்சாலி திரைப்படம் வந்த போது வறுமையை வெளிநாட்டில் விற்று பணம் சம்பாதிப்பதாக சத்ய ஜித்ரேவை விமரிசித்தார்கள், இது குறித்து படைப்பாளி கவலைப்பட தேவையில்லை. ஒரு படம் எதார்த்தத்தை பிரதிபலிப்பது தவறில்லை, ஒரே பக்கத்தை காட்டினாலும் தவறில்லை” என்று போலிசின் காட்டுமிராண்டித்தனத்தை காப்பாற்ற வேண்டி கலைஞனின் சுதந்திரத்தை கையிலெடுக்கிறார்.

“ஸ்லம்டாக் மில்லியனர் படம் இந்தியாவை வெளிநாட்டில் தவறாக சித்தரிப்பதாக கூறினார்கள். அதை எழுதியவர்தான் இன்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்” என்று அவருக்கு கொடுக்கப்பட்ட விக்கிபீடியா தகவலை சொல்லுகிறார் ஹரிகரன். வெளிநாட்டிலேயே குடி கொண்டு விமானத்திலேயே பறந்து கொண்டு இந்தியாவையே வெளிநாடுகளில் விற்பவரே இங்கு பிரதமர் என்பது இன்னும் விக்கிபீடியாவில் ஏறவில்லை போலும்.

“உள்நாடு, வெளிநாடு ஆடியன்சை வைத்து ஒரு படைப்பாளி படம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. படைப்பு உந்துதலை வைத்துத்தான் பண்ண வேண்டும். நான் 50 வருடமா சினிமா பார்க்கிறேன். அதில் வரும் போலிஸ் ஆபிசர் போல நேரில் பார்த்தது இல்லை. சினிமாவுக்கு மிகைப்படுத்தல்கள் இருக்கிறது, அது சினிமாவுக்கு அளிக்கப்பட்ட சலுகையும் கூட. தங்கப்பதக்கம், சிங்கம் சூரியா போன்றோரின் வீர தீர பராக்கிரமங்கள், அதே போன்று போலிசு வில்லன்கள், எவரையும் தான் நேரில் பார்த்ததில்லை என்று ‘விசாரணை’ திரைப்படத்தை ஓரே அடியாக தூக்கி எறிகிறார் மாலன். படைப்பு உந்துதல் என்று பில்டப் கொடுத்து விட்டு, சினிமான்னா மிகைப்படுத்தல் என்று ஏறிமிதிப்பது இதெல்லாம் சாதாரண அறிஞர்களுக்கு சாத்தியமே இல்லை.

மாலன் கூறிய கருத்துக்களையே முன்னாள் போலிசு அதிகாரி சித்தண்ணன் கொஞ்சம் அதிகார தோரணையோடு கூறினார். அதிலும் சகாயம் கூறியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எச்சரித்தார். ஆனாலும் மாலனைப் போல ஒரு நளினமான நரித்தனம் இவரின் உறுமலில் இல்லை. ஒருவேளை மீசை, கிராப் தோரணைக்காக கூட்டி வந்திருப்பார்களோ தெரியவில்லை. இருப்பினும் சகாயம் கூறியதை கமர்சியலாக படக்குழுவினர் விளம்பரத்திற்கு பயன்படுத்தியது தவறு என்று சித்தண்ணன் ஆணித்தரமாக கூறுகிறார்.

அதை வைத்து வெற்றிமாறனிடம் வருகிறார் ஹரிகரன்.

ஒரு திரைப்படம் பார்த்து பிரபலங்கள் சொல்வதை விளம்பரமாக பயன்படுத்துகிறார்கள். அப்படி சகாயம் கூறியது விசாரணை விளம்பரத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதெல்லாம் ஒப்புதல் பெற்று வெளியிட்டீர்களா என்றெல்லாம் படுத்தி எடுக்கிறார்.

அப்படிப் பார்த்தால் ரஜனி மொட்டை அடித்த தருணங்களையெல்லாம் நியூசாக போட்டு பக்கத்தில் விளம்பரத்தையும் காட்டுவதற்கு தந்தி பேப்பர் மட்டும் அனுமதி பெற்றிருக்கிறதா என்ன? எனினும் ஒரு அரசு அதிகாரியின் கருத்தைப் போட்டு மற்றுமொரு அரசு துறையை விமரிசிப்பது தவறில்லையா என்று சித்தண்ணன் மடக்குவதாக ஹரி கட்டியமைப்பதுதான் அயோக்கியத்தனம். சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்து ஜெயா ராஜினாமா செய்த பிறகும் குடியரசு நாளில் அவர் படந்தாங்கியே அணிவகுப்புகளெல்லாம் வந்தன. ஒரு ஊழல் குற்றவாளியை அரசு ஊர்வலத்தில் படம் காட்டுவது என்ன விதிகளின் கீழ் வருகிறது?

தனக்கு சட்டமெல்லாம் தெரியாது, ஒரு அமைப்பிற்குள் இருந்து கொண்டு அதன் தவறுகளை சொல்வதில் மாறலா என்ன தவறு என்று வெற்றிமாறன் சொன்னதும்,

சித்தண்ணன், ஹரிகரன் இருவரும் ரூல்ஸ் படி அது தவறு என்று மீண்டும் விளக்க இளங்கோ குறுக்கிடுகிறார், சொன்னால் என்ன தவறு என்று. திருமங்கலம் முறைகடுகளைப் பற்றி சகாயம் பேசும் போது போலிஸ் அத்துமீறல்களை ஏன் பேசக்கூடாது என்கிறார் அவர். உடனே சித்தண்ணன், ஊழலைக்கு கூட உரிய மேலதிகாரிகளிடத்தில்தான் பேச வேண்டும், பொது வெளியில் பேசக்கூடாது என்று அதட்டுகிறார்.

நல்ல போலிசுக்காரர்களையும் படத்தில் காட்டியிருக்கீங்க, நானும் மறுக்கலை, அந்த அதிகாரிகளும் கையறு நிலையில் இருப்பதாக காட்டுவது, மொத்த போலிசு துறையும், கெட்டுப் போனதாக காட்டுவது அதீத மிகைப்படுத்தலல்லவா? என்று ஏதோ ஒரு செட்டில்மென்டுக்கு வர நெறியாளர் முயல்கிறார். நடப்பது டிபேட்டா, கட்டப் பஞ்சாயத்தா என்று நமக்கு குழப்பம்.

இந்த படத்தோட உள்ளடக்கத்துக்கு நாங்க சரியாகத்தான் செய்திருக்கிறம், முத்துவேல் இன்ஸ்பெக்டரோட நெருக்கடி எல்லாத்துக்கும் தெரியும், எல்லா சிஸ்டத்துலயும் உள்ளவங்களுக்கும் தெரியும். சிஸ்டம் என்பது தனிநபரை விட பெரிதானது என்று எங்களையும் புரிஞ்சுக்கோங்கோ என்று வெற்றிமாறன் பதிலளிக்கிறார். இது குறித்து வேறு ஒரு தருணத்தில் பார்க்கலாம்.

விளம்பரத்தை பத்தி பேசுற போது, ஒரு விசயத்தை நேரடியாக கொடுக்காமல் ஆழ்மனதில் கொடுக்கும் போது வேறு விதமா அதை பதிய வைக்க முடியும். (இது ஹரிகரனுக்கும், வெற்றிமாறனுக்கும் தெரியுமாம்) விசாரணை என்ற சொல் சகாயத்தோட பிணைக்கப்பட்டிருக்கு, கூகிளில் போய் விசாரணை என்று போட்டால் சகாயம் விசாரணைகள் நிறைய வரும் இதை பயன்படுத்தவே அந்த விளம்பரம் போடப்பட்டதா என்றொரு கேள்வி இருப்பதாக மாலன் பயங்கரமான ஒரு ஆய்வு கண்டுபிடிப்பை போடுகிறார்.

இந்த இடத்துல மாலன் எங்களுக்கு அதிகமா கிரெடிட் கொடுக்கிறார், அந்த அளவு எங்களுக்கு அறிவில்லை என்று வெற்றி மாறன் சொன்னதும் மாலன் சொன்னது ஆய்தான் ஆய்வல்ல என்பது எத்தனை பேருக்குத் புரியும்?

இதுவரை நடந்த என்கவுண்டர் வழக்குகளில் எத்தனை போலிசு தண்டிக்கப்பட்டார்கள் என்பதை போலிசுக்காரர்களின் நியாயமாக சித்தண்ணன் எடுத்துப் போடுகிறார். இன்னொரு இடத்தில் செம்மர என்கவுண்டரை தான் கண்டித்திருப்பதாகவும் கூறினார். அவரது கருத்துப்படி பார்த்தால் செம்மரக் கடத்தல் போலி மோதல் வழக்கில் எந்த போலிசும் தண்டிக்கப்படப் போவதில்லை. அதனால் போலிசுக்காரர்கள் நியாயமானவர்கள் என்றாகும். எனில் சித்தண்ணன் பேசும் விசயம் நிச்சயம் ஒரு சேம் சைடு கோலே அன்றி வேறல்ல.

இறுதியாக மாலன் தினமணியில் தான் எழுதிய ஒரு கட்டுரைக்கு விளம்பரத்தை போட்டுவிட்டு சகாயம் செய்வது விதிப்படியும் மரபுப்படியும் தவறு என்கிறார். அப்படிப்பட்ட சகாயம் மேல் அரசு ஏன் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை எனபதற்கு பல காரணங்கள் – இவரை ஹீரோவாக்க வேண்டாம், பெருந்தன்மை – இருக்கும் என்கிறார்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் சகாயம் சொன்ன பொத்தாம் பொதுவான ஒரு கருத்தைக் கூட இவர்கள் சகித்துக் கொள்ளத் தயாரில்லை. அதை கச்சிதமாக தயாரித்துக் கொண்டு விதித்தவறு, மரபுத்தவறு, நடவடிக்கை, பெருந்தன்மை என்று சட்டபூர்வமாக பேசுவதாக காட்டிக் கொண்டே போலிசுத் துறையை நியாயப்படுத்துகிறார்கள். போலிசு பொறுக்கிதான் என்று சொன்னால் போலிசுக்கு வரும் கோபத்தை விட போலிசை அடியாட்களாக தீனி போட்டு வளர்க்கும் ஆளும் வர்க்கத்திற்குத்தான் கோபம் வரும். அதுதான் மாலன். அதை காட்டத்தான் தந்தி டி.வி விவாதம்.

பரவாயில்லை பாண்டேவுக்கு ஒரு நல்ல ஜோடி கிடைத்திருக்கிறது.

மயிலே என்றால் கடை மூடாது ! மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது !

1

அவசியம் வருக! அரசியல் பெறுக!

விளம்பரக் காயங்கள்…
தேர்தல் தேமல்கள்…
வெட்டி அலம்பல்கள்…
பட்டப் பெயர்கள் பட்டுப் பட்டு
பட்டுப் போன தமிழகச் சுவர்கள்
ஒற்றைச் சொல்லில்
உயிர்த்தெழுந்தன
“மூடு டாஸ்மாக்கை!”

azhividaithangi-tasmac-siege-09
மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது (கோப்புப் படம் : அழிவிடை தாங்கி டாஸ்மாக் உடைப்புப் போராட்டம்)

கிடந்த கோலத்தில் கிடப்பது
திருவரங்கப் பெருமான் மட்டுமா?
கூடவே,
ஆடை அவிழ்ந்த கோலத்திலும்
அங்கங்கே தெருவரங்க
டாஸ்மாக் குடிமகன்களும்தான்.

ஆல்கஹால் ஊற்றி
அழிக்கப்படும் தமிழகம் மீட்க
அழைகிறது திருச்சிக்கு
மக்கள் அதிகாரம்

உண்மையின் உரைகல்லாக
சுவரில் தெரிபவை
வெறும் சொற்களா?
இல்லை!
மது அடிமைத்தனத்திலிருந்து
மீளத்துடிக்கும்
மானமுள்ள தமிழகத்தின்
உணர்ச்சிகள்!

தேர்தல் வேட்கையைத் தாண்டி
மக்களின்
வாழ்க்கை இலக்கை
எதிரொலிப்பதால்
மக்கள் அதிகாரம்
மக்களின் குரலாய் ஒலிக்கிறது!

வள்ளுவர் படைத்தார்
குறள் அதிகாரம்
இளங்கோ வடித்தார்
சிலப்பதிகாரம்
வாழ்வை மீட்க
இயற்கையை காக்க
எண்திசை எங்கும்
இனி மக்கள் அதிகாரம்
என,
உவகை பொங்க
ஒளியின் குரல்கள்
இருளைக் கிழிக்கிறது!

அனைத்து அதிகாரமும்
மக்களுக்கு வேண்டும்
என்ற எளிய நியாயத்தின் முன்
“நாங்கள் ஆட்சிக்கு வந்தால்”
என்ற
எல்லா பாவனைகளும்
கலைந்து போகின்றன

நாடும் மக்களும்
நலம் பெற
வீடும் சுற்றமும்
மறந்து வேலை செய்யும்
தோழர்களைப் பார்த்து
காடும், மலையும்
கவின்மிகு அருவியும்
ஆனந்தக் கண்ணீரில்
நனைகின்றன,
காண்பவர் நெஞ்சம்
புதிய உறவில் மகிழ்கின்றன

மக்களின் துயரம்
துடைக்கப் புகுந்தால்
தனக்கென தனியே
துயரம் கிடையாது
மக்களின் மகிழ்ச்சிக்கு
வேலை செய்தால்
தனக்கென மகிழ்ச்சிக்கு அளவேது!

அதனால்தான்
உங்களையும் அழைக்கிறது
மக்கள் அதிகாரம்!

வளரும் தலைமுறை
வாழ்வின் இலக்கை
டாஸ்மாக் இலக்கு
அழிக்கிறது.
கணவனை இழந்து
அலறும் கைம்பெண் ஓலம்
ஒவ்வொரு ஊரிலும் ஒலிக்கிறது

தெருவெங்கும் சாராயம்
ஆறாக ஓடினால் – இனி
கருவிலேயே குழந்தை தள்ளாடும்
அயந்திணை அர்த்தங்கள் இழந்து
“குடியும் குடி சார்ந்ந நிலமுமாய்”
அருமைத் தமிழகம் அடையாளமாகும்

செம்பரம்பாக்கத்தில்
திறந்து விடப்பட்ட கன அடி
எத்தனை என்பது தெரியும்
அன்றாடம்
டாஸ்மாக்கில் திறந்து விடப்படும்
கன அடி எத்தனை?
அபாயம் அறிவீரா?

மயிலே மயிலே என்றால்
கடைகள் மூடாது
மக்கள் திரண்டால்
டாஸ்மாக் கிடையாது

சிக்கலை எப்படி தீர்ப்பது?
சிந்திக்க அழைக்கிறது
மக்கள் அதிகாரம்!
தங்கள் வரவு
தாரணிக்கே அரசியலின் நல்வரவாகுக!

– துரை சண்முகம்