Tuesday, May 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 819

புஷ்ஷுக்கு செருப்படி – தமிழகத்தில் கொண்டாட்டம் – புகைப்படங்கள் !

Digital Camera

கொண்டாடுவோம்! இது வீரத்தின் திருநாள்.
ஒரு வெடிகுண்டுத் தாக்குதலை விடவும்
தற்கொலைப்படைத் தாக்குதலை விடவும்
வலிமையானது இந்தத்தாக்குதல்.
வீரம் செறிந்தது இந்த நடவடிக்கை.
மாவீரன் ஸய்தி !
முன்தாதர் அல் ஸய்தி  – உண்மையிலேயே ஒரு மாவீரன்தான்.

அமெரிக்க வல்லரசின் இராணுவம்,
அதன் உளவுத்துறைகள்,
அதிபரின் சிறப்புப் பாதுகாப்புப் படைகள்..‏

இவர்களெல்லாம் மூடர்கள் என்றோ முன்யோசனை அற்றவர்கள் என்றோ நாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்க சிப்பாய்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் பொருட்டு, சமீபத்தில் இராக்கில் குழந்தைகளுக்கான பொம்மைத் துப்பாக்கிகளின் விற்பனையைக் கூடத் தடை செய்திருக்கிறது அமெரிக்க இராணுவம்.

நான்கு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இராக்கை சலித்து விட்டது. கொத்துக் குண்டுகள் முதல் அபு கிரைப் வரையிலான எல்லா வழிமுறைகள் மூலமும் இராக்கைக் குதறிவிட்டது. ஷியா, சன்னி, குர்து.. என எல்லா விதமான பிரிவினைகளையும் பயன்படுத்தி இராக் மக்களைத் துண்டாடி விட்டது. பொம்மை ஆட்சியை அமைத்து துரோக பரம்பரையையும் தோற்றுவித்து விட்டது..

‏‏இருப்பினும் “பலான தேதியில் பலான இடத்துக்கு அமெரிக்க அதிபர் வருகிறார்” என்று முன்கூட்டியே அறிவிக்கும் துணிவு அமெரிக்க அரசுக்கு இல்லை. ஊரடங்கிய பின்னிரவு நேரத்தில், வைப்பாட்டி வீட்டுக்கு விஜயம் செய்யும் நாட்டாமையைப் போல பாக்தாத் நகரில் புஷ்ஷை இறக்கியது அமெரிக்க உளவுத்துறை.

அவர் இராக் மக்களிடம் விடை பெறுவதற்கு வந்தாராம்!

2004 ஆம் ஆண்டு இராக்கில் புஷ்ஷின் படைகள் ஆரவாரமாக நுழைந்த அந்த நாளை உலகமே அறிந்திருந்தது. விடை பெறும் நாளோ, இராக் மக்களுக்கே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.‏‏
இரகசியமான இந்த விடையாற்றி வைபவத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு பலமாக இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு கூழாங்கல், ஒரு அழுகிய முட்டை, ஒரு தக்காளி எதையும் அந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தின் அரங்கினுள் ஸய்தி எடுத்துச் சென்றிருக்க முடியாது. இப்படியொரு ஆயுதத்தை ஒரு மனிதன் அணிந்து வரமுடியும் என்று அமெரிக்க உளவுத்துறை எதிர்பார்த்திருக்கவும் முடியாது.

எப்பேர்ப்பட்ட கவித்துவம் பொருந்திய தாக்குதல்! புஷ் கொல்லப்படவில்லை. காயம்படவுமில்லை. செருப்படிக்குத் தப்பி ஒதுங்கி சமாளித்து அந்த மானக்கேடான சூழ்நிலையிலும் மீசையில் மண் ஒட்டியது தெரியாத மாதிரி, அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அமெரிக்கப் பெருமிதம் அடி வாங்காத மாதிரி, கம்பீரமான அசட்டுச் சிரிப்பின் பல வகைகளை நமக்குக் காட்டுகிறார் புஷ்.

சொற்களே தேவைப்படாத படிமங்களாக நம் கண் முன் விரிந்த அந்தக் காட்சி 4 ஆண்டுகளாக இராக்கில் அமெரிக்கா வாங்கி வரும் செருப்படிகள், அதன் அவமானங்கள், அதன் சமாளிப்புகள்.. அனைத்துக்கும் பொழிப்புரை வழங்குகிறது.

நான்காண்டு செருப்படிகளை உள்ளடக்கிய ஒரு செருப்படி. நான்காண்டு விடுதலைப்போருக்குப் பொருத்தமான ஒரு விடையாற்றி. எப்பேர்ப்பட்ட கவித்துவமிக்க காட்சி!

சதாம் தூக்கிலேற்றப்பட்ட காட்சியுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். அதுவரை தன்னை ஆதரித்திராத உலக மக்கள் பலரின் அனுதாபத்தையும் மரியாதையையும் அன்று சதாம் பெறமுடிந்தது. அநீதியான அந்தத் தண்டனைக்கு எதிராக அன்று உலகமே ஆர்த்தெழுந்தது.

ஆனால் அதிபர் புஷ்ஷுக்கு விழும் இந்தச் செருப்படி சொந்த நாட்டு மக்களின் அனுதாபத்தைக்கூட அவருக்குப் பெற்றுத்தரவில்லை. அமெரிக்காவின் அதிகாரத் துப்பாக்கியின் நிழலிலேயே அதன் அதிபர் அம்மணமாக நிற்பதைக் கண்டு அமெரிக்க மக்களே விலா நோகச் சிரிக்கிறார்கள்.

“இந்திய மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்” என்று சில மாதங்கள் முன் புஷ்ஷிடம் வாலைக்குழைத்தாரே மன்மோகன் சிங், அந்த புஷ்ஷுக்கு விழுந்த செருப்படியை அதே இந்திய மக்கள் ரசிக்கிறார்கள். செய்தி கேளவிப்பட்ட மறுகணமே பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள். நாமும் கொண்டாடுவோம்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலை விடவும் கம்பீரமானது இந்த இரட்டைச் செருப்புத் தாக்குதல். சுதந்திரம் என்ற சொல்லை மனித குலத்துக்கு வழங்கிய மெசபடோமிய நாகரீகம், அந்தச் சுதந்திரத்தின் சின்னமாக மாவீரன் ஸெய்தியை உலக மக்களுக்கும், ஒரு ஜோடி செருப்புகளை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் வழங்கியிருக்கிறது.

ஒரு வகையில் இந்தக் காலணிகள் புனிதமானவை.

தசரத் மான்ஜி : மலையை அகற்றிய வீரக்கிழவன் !

bihar1

முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து அகற்றுகிறேன் என்று கோடரியை வைத்துக் கொண்டு உடைக்கத் தொடங்கினானாம் அந்தக் கிழவன். “அட முட்டாளே ஒண்டி ஆளாய் மலையை யாராவது உடைக்க முடியுமா?” என்று அவனைக் கேலி செய்தானாம் அந்த ஊரிலிருந்த ஒரு புத்திசாலிக் கிழவன்.

முட்டாள் கிழவன் சொன்னானாம், “நான் உடைப்பேன், நான் செத்த பிறகு என் பிள்ளைகள் உடைப்பார்கள், பிறகு பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன்கள் என்று உடைத்துக் கொண்டே இருப்போம். என் சந்ததி வளரும், ஆனால் இந்த மலை வளராது. எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறி உடைக்கத் தொடங்கினானாம். அவனுடைய விடாமுயற்சியைக் கண்டு மனமிரங்கிய இரண்டு தேவதைகள் வானத்திலிருந்து இறங்கி வந்து அந்த மலைகளைத் தம் முதுகில் தூக்கிக் கொண்டு பறந்து விட்டார்களாம்.

இந்த நீதிக்கதையை சீனக் கம்யூனிஸ்டுகளுக்குக் கூறிய மாவோ, “ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமும்தான் நம் நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் மலைகள். சீன மக்கள்தான் நம் தேவதைகள். கம்யூனிஸ்டுகளாகிய நாம் விடாப்பிடியாக உழைத்தால் மக்கள் எனும் தேவதைகளின் மனதைத் தொடுவோம். மக்கள் நம்முடன் இணைந்தால் அடுத்த கணமே இந்த மலைகளை நாம் தூக்கி எறிந்துவிட முடியும்”  என்றார்.

அந்தச் சீனத்துப் புனைகதையை நிஜமாக்கியிருக்கிறான் ஒரு வீரக்கிழவன். 22 ஆண்டுகள்  ஒற்றை மனிதனாக நின்று ஒரு மலைக்குன்றையே உடைத்து 60 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த தசரத் மான்ஜி என்ற மாவீரர் சென்ற ஆகஸ்டு மாதம் மறைந்து விட்டார். வாழ்ந்த காலம் வரை அந்த 74 வயதுக் கிழவனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திருக்கிறது.

இது ஒரு மாமனிதனின் கதை. ஒரு மலையையும், அதனைக் கண்டு மலைத்து நின்ற மக்களின் மனத்தையும் தன்னந்தனியனாக நின்று வென்று காட்டிய ஒரு மாவீரனின் கதை.

பீகாரின் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாயக் கூலி. தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஆகக் கடைநிலைச் சாதியான முசாகர் சாதியில் பிறந்தவர். அறுவடைக்குப் பின் நிலத்தில் உள்ள எலி வளைகளைத் தோண்டி அதில் மிச்சமிருக்கும் தானியங்களைத் துழாவி எடுத்து வயிறு கழுவுவது அந்தச் சாதிக்கு விதிக்கப்பட்ட தொழில். அந்தத் தானியமும் கிடைக்காத காலங்களில் எலியும் பெருச்சாளியும்தான் அவர்களுடைய உணவு.

1959ஆம் ஆண்டில் ஒரு நாள். அப்போது தசரத்திற்கு வயது 24. கூலி வேலை செய்து கொண்டிருந்த அவருக்கு  மலையின் மறுபுறத்திலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்த அவர் மனைவி பாகுனி தேவி மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தாள். மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்குள் உயிர் பிரிந்தாள். ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால்….?

கோடிக்கணக்கான இந்தியக் கிராம மக்கள் நாள்தோறும் அனுபவித்து வரும் இந்தத் துயரம் தசரத் மான்ஜியின் நெஞ்சில் ஒரு தீக்கனலாய் உருமாறியது. அந்த மலைக்குன்றைப் பிளந்து, 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் வரை அந்தக் கனல் அவியவில்லை.

தனி ஒருவனாக நின்று இத்தகைய சாதனையை நிகழ்த்திய வீரனை மனித குல வரலாறு இதுவரை கண்டதில்லை. “மலையை உடைக்கப் போகிறேன்” என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை ‘வரலாறு படைக்க வந்த மாவீரன்’ என்று மக்கள் கொண்டாடவில்லை. ‘பைத்தியம்’ என்று அவரை அலட்சியப்படுத்தினார்கள் கிராமத்து மக்கள். கேலி செய்தார்கள் விடலைகள்.

அந்த மக்களுடைய கண்களைப் பாறை மறைத்தது. தசரத்தின் கண்ணிலோ பாறை தெரியவில்லை. அவர் உருவாக்க விரும்பிய பாதை மட்டும்தான் தெரிந்திருக்கிறது. மலை கரையத் தொடங்குவதைப் பார்க்கப் பார்க்க மக்களின் மனமும் மெல்லக் கரையத் தொடங்கியது. மக்கள் சோறு கொடுத்தார்கள், உளியும் சுத்தியலும் செய்து கொடுத்தார்கள். அந்தக் கிராமத்தின் பெண்களோ, மனைவி மீது கொண்ட காதலுக்காக மலையுடன் மோதத்துணிந்த இந்த ஆண்மகன் மீது மரியாதை கொண்டார்கள்.

22 ஆண்டுகள் தவமிருந்து செதுக்கி, அந்தப் பாறைக்குள் இருந்து பாதையை வடித்தான் தசரத் என்ற அந்த மாபெரும் சிற்பி. இது ஒரு மன்னன் தன் காதலுக்காக ஆள் வைத்துக் கட்டி எழுப்பிய தாஜ்மகால் அல்ல. ஒரு அடிமை தன் சொந்தக் கரத்தால் வடித்த காதல் சின்னம்.

ஆனால் “இது என் மனைவிக்கான காதல் சின்னமில்லை” என்று மறுக்கிறார் மான்ஜி.  “அன்று அவள் மீது கொண்ட காதல்தான் இந்தப் பணியில் என்னை இறக்கியது. இருப்பினும், ஆயிரக்கணக்கான என் மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைக் காணவேண்டும் என்ற ஆசை தான் அந்த 22 ஆண்டு காலமும் என்னை இயக்கியது” என்கிறார் மான்ஜி.

அன்று 50 கி.மீ தூரம் சுற்றிக் கொண்டு நகரத்துக்குச் சென்று கொண்டிருந்த 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று பத்தே கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் மூன்றே கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள்.

தேவதைகளின் கருணையையோ அரசின் தயவையோ எதிர்பார்க்காத அந்த மூடக்கிழவன் 1981 இலேயே மலையைக் குடைந்து பாதையை அமைத்துவிட்டான். எனினும் இப்படி ஒரு அதிசயத்தை அறிந்த பின்னரும், அந்தப் பாதை அமைக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதன்மீது ஒரு சாலை போடுவதற்கு இந்த அரசால் முடியவில்லை.

தங்களிடம் அனுமதி பெறாமல் மலையைப் பிளந்திருப்பதால் அதில் சாலை அமைக்கக் கூடாதென்று அனுமதி மறுத்திருக்கிறது வனத்துறை. தசரத் மான்ஜியின் பெயர் பத்ம பூஷண் விருதுக்குச் சிபாரிசு செய்யப்பட்ட போது, “அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை” என்று கூறி முட்டுக்கட்டை போட்டிருக்கிறது பீகாரின் அதிகார வர்க்கம்.

1981இல் இத்தகையதொரு மாபெரும் சாதனையை நிகழ்த்திய பின்னரும் கடந்த 26 ஆண்டுகளாகக் கூலி வேலை செய்துதான் வயிற்றைக் கழுவியிருக்கிறார் மான்ஜி. “இரவு பகலாக சாமி வந்தவரைப் போல அவர் இந்த மலையைக் கொத்திக் கொண்டிருப்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். 22 ஆண்டுகளாக எங்கே போயிருந்தது இந்த வனத்துறை?” என்று குமுறி வெடிக்கிறார்கள் கிராமத்து இளைஞர்கள்.

தசரத் மான்ஜியோ இவையெதையும் பொருட்படுத்தவில்லை. “நான் என்ன செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும்.. இந்த அரசாங்கம் என்னை தண்டிக்க நினைத்தால் அதற்கு நான் அஞ்சவும் இல்லை. அவர்கள் விருது கொடுப்பார்கள் என்று நான் ஏங்கவும் இல்லை. என் உயிர் இருக்கும் வரை இந்தக் கிராமத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவேன். அவ்வளவுதான்” அவரது உளியில் பட்டுத்தெறித்த பாறைத் துகள்களைப் போலவே, மிகவும் அலட்சியமாகத் தெறித்து விழுகின்றன சொற்கள்.

மான்ஜியின் உளி பட்டுத் தெறித்துப் பிளந்து கிடக்கும் அந்தக் கற்பாறை ஒரு நினைவுச்சின்னம். மரணத்துக்குப் பின்னும் அந்த மாவீரனை மதிக்கத் தவறிய இந்த அரசின் இரக்கமற்ற இதயத்துக்கு இது நினைவுச்சின்னம்  அதில் எந்த ஐயமும் இல்லை.

அதே நேரத்தில்  22 ஆண்டுகள் ஒரு  மலையோடு தன்னந்தனியனாக ஒரு மனிதன் மோதிக்கொண்டிருக்க, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  இந்தச் சமூகத்தின் பாறையை விஞ்சும் ‘மன உறுதி’க்கும் இதுதான் நினைவுச்சின்னம்.

உணவும் தண்ணீரும், உளியும் சுத்தியலும் வழங்கினார்கள் மக்கள். உண்மைதான். ஆனால் அவற்றைத் தவிர வேறு எதையும் அந்தப் பாதையால் பயனடையப்போகும் மக்கள் அவருக்கு வழங்கியிருக்க முடியாதா? தசரத் மான்ஜியுடன் கைகோர்த்திருக்க முடியாதா? மலையைப் பிளந்து பாதையைத் திறந்து காட்டிய அந்தத் தருணம் வரை  “இவன் மூடனல்ல  வீரன்” என்னும் உண்மையை அந்த மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண எண்ணும்போது  நெஞ்சம் நடுங்குகிறது.

நூற்றாண்டுகளாய்ப் புதுப்பிக்கப்படும் அடிமைப் புத்தியும், சாதுரியமான விதிவாதமும், கபடம் கலந்த கருணையும் செயலின்மையில் பிறந்த இரக்கமும், அம்மணமான காரியவாதமும் சேர்ந்த கலவையால் உருவாக்கப்பட்டிருக்கிறது மக்களின் ‘புறக்கணிப்பு’ என்னும் பாறை. இந்தப் பாறையை உளியும் சுத்தியலும் கொண்டு பிளக்க முடியாது. கரைக்க மட்டுமே முடியும் என்ற உண்மையை உணர்ந்து வைத்திருந்த அந்த எளிய மனிதனின் அறிவை எண்ணும் போது வெட்கம் வருகிறது.

மக்களின் புறக்கணிப்பு எனும் அந்தப் பாறையை நெஞ்சில் சுமந்தபடி, தன்னுடைய உளிச் சத்தத்திற்கு அந்த மலைத்தொடர் வழங்கிய எதிரொலியை மட்டுமே  தன் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாய்ப் பருகி, உத்வேகம் பெற்று,  22 ஆண்டுகள் இயங்கியிருக்கிறார் தசரத் மான்ஜி. இந்த வீரத்தின் பரிமாணம் நம்மைப் பிரமிக்கச் செய்கிறது. சேர்ந்து ஒரு கை கொடுக்க தன் மக்கள் வரவில்லையே என்ற ஏக்கமின்றி, கசப்பு உணர்ச்சியின் சாயல் கடுகளவுமின்றி, நிபந்தனைகள் ஏதுமின்றி சாகும்வரை தன் மக்களை நேசித்திருக்கிறானே, அந்தக் காதல் நம்மைக் கண் கலங்கச் செய்கிறது.

சீனத்துக் கிழவனைப் போல ‘என்றோ ஒரு நாள் இந்த மலை அகன்றே தீரும்’ என்று தன் நம்பிக்கையைக் கனவில் பிணைத்து வைக்கவில்லை தசரத் மான்ஜி. தான் வாழும் காலத்திலேயே கனவை நனவாக்கும் உறுதியோடுதான் உளியைப் பற்றியிருக்கிறது அவனுடைய கரம். உளியின் மீது இறங்கிய சுத்தியலின் ஒவ்வொரு அடியும் ‘இன்றே.. இன்றே’ என்று அந்த மலையின் மரணத்திற்கு நாள் குறித்திருக்கிறது.

உணவுக்கும் ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் நேரம் ஒதுக்கி,  ‘இத்தனை ஆண்டில் இந்தப் பணி முடிப்போம்’ என்று திட்டம் போட்டுச் செயலாற்றும் ‘திறமை’யெல்லாம் எலி பிடிக்கும் சாதியில் பிறந்த அந்த ஏழை மனிதனுக்கு இல்லை.

“என்று வருமோ புரட்சி … இன்று எதற்கு இழக்கவேண்டும், இயன்றதைச் செய்வோம்” என்று சிந்திக்கும் படித்த வர்க்கத்தின்  புத்திசாலித்தனத்தை எள்ளி நகையாடுகிறது எழுத்தறிவற்ற அந்தக் கிழவனின் மடமை. ‘இயலாததை’ச் செய்யத் துணிந்த அந்தக் கிழவனின் வீரம், இயன்றதைச் செய்ய எண்ணும் நம் சிந்தனைக்குள் பாசியாய்ப்  படர்ந்திருக்கும் கோழைத்தனத்தைப் பிதுக்கி வெளிக்காட்டுகிறது.

விவரக்கணைகளால் துளைக்க முடியாமல் நம்மில் இறுகியிருக்கும் எதிரிகளின் வலிமை குறித்த மலைப்பை,  அந்தக் கிழவனின் கை உளி எழுப்பிய இசை, அநாயாசமாகத் துளைத்துச் செல்கிறது.

மக்கள் மீது கொண்ட காதலில் தோய்ந்து தன் இளமையைக் கொண்டாடிய அந்தக் கிழவனின் வாழ்க்கை, நம் இளைஞர்களுக்குக் காதலைப் புதிதாய்க் கற்றுக் கொடுக்கிறது.

ஒரு பாறை, ஒரு உளி, ஒரு சுத்தியல், ஒரு கிழவன்  ஒரு வாழ்க்கை. பீகாரின் சுட்டெரிக்கும் வெயில், எலும்பைத் துளைக்கும் நள்ளிரவின் குளிர். அந்த உளியின் ஓசை, தொலைவில் ஒலிக்கும் அவலக் குரலாய் நம்மை ஈர்க்கிறது. நெருங்க நெருங்க கனத்துக் கவியும் சோக இசையாய் அழுத்துகிறது. அந்தக் கணமே  ஒரு அறைகூவலாய் மாறி நம்மைச் செயலுக்கு  இழுக்கிறது.  தேவதைகளின் இதயத்தை இளக்கி,  கருணையைப் பிழிந்தெடுத்த அந்தக் கிழவனின் ஆவி மெல்ல நம்மை ஆட்கொள்ளத் தொடங்குகிறது.

– புதிய கலாச்சாரம், செப்டம்பர் – 2007

செத்தபின்னும் திருடுவார் திருட்டுபாய் அம்பானி !

mani rathinam
ஃபிராடு அம்பானியை உழைத்து முன்னேறியவராக காட்டும் மணிரத்தினம்!

90களில் பயங்கரவாதத்தினால் பரிதாபமாக்கப்பட்ட காதலர்களைப் படமாக்கிய மணிரத்தினம் 2000ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தை முன்னேற்றிய முதலாளித்துவ நாயகர்களை நாடிச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ற மாற்றம்தான். 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் இளைஞர்களிடம் விற்கப்படும் காலத்தில், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும், விப்ரோவின் பிரேம்ஜியும் பொன்முட்டையிடும் வாத்துக்கள் எனப் போற்றப்படும் நேரத்தில் இவர்களுக்கு முன்னோடியான அம்பானியை வெள்ளித்திரையில் நினைவு கூர்கிறார் மணிரத்தினம்.

எனினும் குரு திரைப்படத்தில் அவரது வழக்கமான காதல் சங்கதிகள் இல்லை. பணம் சம்பாதித்து முன்னேறவேண்டும் என்று போதிப்பதற்கு காதல் முதலான சென்டிமென்ட் பீடிகைகள் தேவையில்லையே?

இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் நீங்கள் மட்டும் முன்னேறலாம் என்று தூண்டில் போடும் சுயமுன்னேற்ற வெறியைக் கலைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார் மணிரத்தினம். ஆனாலும் சமூகத்தில் கோலோச்சும் இந்த உணர்ச்சி கலையில் வெற்றி பெறவில்லை.

ஒரு வண்டிச்சக்கரத்தில் காலம் சுழன்று விஜயகாந்தோ, ரஜினிகாந்தோ மாபெரும் முதலாளிகளாவதை இரசித்துச் சலித்திருக்கும் இரசிகர்கள் அதையே இராஜீவ் மேனனின் லிரில் சோப் ஒளிப்பதிவிலும், ரஹ்மானின் கீ போர்டு அலறல் இசையிலும், மென்று முழுங்கும் மணிரத்தினத்தின் வசனத்திலும் லயிப்பதற்குத் தயாரில்லை. படத்தைப் பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதாலும், பார்க்க வேண்டாம் என்பதாலும் கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.

குஜராத்தின் கிராமமொன்றில் பள்ளிக்கூட ஆசிரியரின் மகன் குரு (நிஜத்தில் அம்பானி), தந்தையின் விருப்பத்தை மீறி துருக்கி (ஏடன்) நாட்டிற்குச் செல்கிறான். பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் சாதாரணப் பணியாளாய் வேலை செய்கிறான். ஓய்வு நேரத்தில் மல்லிகா ஷெராவத்தின் முக்கால் நிர்வாண நடனத்தை இரசிக்கிறான். கூடவே மூன்று சீட்டு விளையாட்டில் விடாமல் வெல்கிறான். காரணத்தைக் கேட்டால் கவனம் என்கிறான். அடுத்து சூபர்வைசர் பதவிக்கு உயருகிறான். அவனுக்கு டை கூடக் கட்டத் தெரியவில்லை என்று சுட்டிக் காட்டும் வெள்ளையனது பதவி உயர்வுக் கடிதத்தைக் கடாசிவிட்டு இனிமேல் வெள்ளைக்காரனுக்கு உழைப்பதில்லை எனவும் சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெறுவேன் எனவும் கூறி நாடு திரும்புகிறான்.

வியாபாரத்தில் தோற்றுப் போவாய் என்று எச்சரிக்கும் தந்தையின் சாபத்தைப் புன்னகையால் மறுக்கிறான். வியாபாரத்துக்குத் தேவையான 15000 ரூபாயை வரதட்சிணையாக வாங்குவதற்காக, தன்னைவிட ஒரு வயது அதிகமென்ற போதிலும் நண்பனின் அக்காவை (கோகிலா பென்) திருமணம் செய்து கொள்கிறான். மச்சான் மற்றும் மனைவியுடன் வியாபாரம் செய்ய நெரிசல் மிகுந்த பம்பாய்க்கு இடம் பெயர்கிறான்.

நூல் மார்க்கெட் தரகனாக வணிகம் செய்யத் தொடங்கி மின்னல் வேகத்தில் வளருகிறான். ஜவுளி வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் கான்ட்ராக்டர் (பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியா) எனும் முதலாளியின் தடைகளை மீறி தனது சக்தி (ரிலையன்ஸ்) நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறான். இலட்சிய வேட்கை கொண்ட இந்த கிராமத்து இளைஞன் மீது காந்தியவாதியான ஒரு பத்திரிகை அதிபருக்கு (இந்தியன் எக்ஸ்பிரஸ் இராம்நாத் கோயங்கா) அனுதாபம் ஏற்படுகிறது. அதன் பிறகு அவனது தொழில் பிரம்மாண்டமாக வளருகிறது. ஜவுளி தொழிற்சாலை, பாலியஸ்டர் ஆலை, பங்குகள் வெளியீடு, மைதானத்தில் பங்குதாரர் கூட்டம் என்று உச்சத்திற்குப் போகிறான். இடையிடையே மணிரத்தினத்தின் திருப்திக்காக மனைவியைக் கொஞ்சி நடனம் ஆடுகிறான். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறான்.

இவனது அசுர வளர்ச்சி குறித்து பத்திரிகை அதிபருக்குச் சந்தேகம் வருகிறது. அவனது முறைகேடுகளை அம்பலப்படுத்தி நிர்வாணப்படுத்தப் போவதாக அவர் எச்சரிக்கிறார். “என்னை நிர்வாணப்படுத்துவதற்கு எல்லோரையும் நிர்வாணப்படுத்த வேண்டும்” என்று பதிலளிக்கிறான் குரு. பத்திரிக்கை அதிபரின் நிருபர் (அருண்ஷோரி) குருவின் வணிக மோசடிகளை அம்பலப்படுத்துகிறார். குருவோ எல்லா பத்திரிக்கைகளுக்கும் விளம்பரத்தைக் கொடுத்து வாயடைக்க முயல்கிறான். இருப்பினும் இதனால் அவனுக்கு தொழிலில் நெருக்கடி ஏற்படுகிறது. அத்துடன் பக்கவாதத்தில் வேறு விழுகிறான். பத்திரிக்கை அதிபர் வருத்தப்படுகிறார். இறுதியில் அரசாங்கம் சக்தி நிறுவனத்தின் மோசடிகளை ஆராய விசாரணைக் கமிஷன் அமைக்கிறது.

“எதுவும் தெரியாத கிராமத்து இளைஞன் தொழில் துவங்க நினைத்தது தவறா, தன்னை முடக்க நினைத்த பரம்பரை முதலாளிகளை வென்று காட்டியது குற்றமா, பல இலட்சம் பங்குதாரர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் தனது தொழில் சாம்ராச்சியத்தைக் கட்டியமைத்தது முறைகேடா” என்று நீதி விசாரணையில் இறுதிக் காட்சியில் விஜயகாந்த் ஸ்டைலில் பொரிந்து தள்ளுகிறான். இவன் தொழிற்துறையின் தாதாவா அல்லது அறிவுஜீவியா என்று வியக்கும் நீதிபதிகள் அவன் மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவற்றைத் தள்ளுபடி செய்து அபராதம் மட்டும் விதிக்கின்றனர். கடைசிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்கள் ஆரவாரம் செய்ய, சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவேன் என்று மைதானத்தில் நின்று சூளுரைக்கி றான் நடுத்தர வயதைக் கடந்துவிட்ட குரு. இத்துடன் படம் முடிகிறது.

அம்பானியின் வாழ்க்கையை அட்சரம் பிசகாமல் எடுத்திருக்கும் மணிரத்தினம் இந்தப் படத்தின் மூலம் கூறுவது என்ன? வணிகம் செய்து முன்னேற வேண்டும் என்பதை இரத்தத்தில் வரித்திருக்கும் ஒரு கிராமத்து இளைஞன் ஒரு இலட்சியவாதியைப் போலப் போராடுகிறான். அந்த இலட்சியமே வாழ்க்கை குறித்த அவனது அணுகுமுறை அனைத்தையும் நியாயப்படுத்துகிறது. தடையரண்களாய் வரும் அரசு, சட்டம், ஏனைய முதலாளிகள், அதிகாரவர்க்கம் முதலானவற்றை அவன் தகர்த்துச் செல்கிறான். தொழிற்துறையில் அவன் செய்யும் முறைகேடுகளைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மணிரத்தினம்.

குருவை அம்பலப்படுத்தும் பத்திரிக்கை அதிபரும், நிருபரும் ஏதோ பகவத்கீதையின் கர்மவீரர்களைப் போலத்தான் செயல்படுகிறார்கள். குருவுக்கு எதிரான அவர்களது அறப்போராட்டம் மக்கள் நலன் குறித்த அக்கறையிலிருந்து எழவில்லை. பக்கவாதம் வந்து விழுந்தவுடனே குருவின் மீது அவர்கள் பரிதாபம் கொள்கிறார்கள். “நீ மட்டும் எப்படி ஒரு பெரிய முதலாளியானாய்” என்பது மட்டுமே அவர்களது கேள்வி. இந்தக் கேள்விக்கான விடைதான் இந்தியத் தொழிற்துறையின் முன்னோடி எனப் போற்றப்படும் அம்பானியின் கதை.

1980களில் இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியராக இருந்து அம்பானியை அம்பலப்படுத்திய அருண்ஷோரி, 2002இல் அம்பானி மரணமடைந்த போது பின்வருமாறு கூறினார்: “அம்பானி தகர்க்க வேண்டிய சட்டங்களைத்தான் தகர்த்தெறிந்தார். இன்று அந்த சட்டங்களெல்லாம் காலாவதியாகி தாராளமயம் அமலில் உள்ளது. இதற்காக இந்தியத் தொழிற்துறையே அம்பானிக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளது.” அருண்ஷோரி சுயவிமர்சனம் மட்டும் செய்து கொள்ளவில்லை. பா.ஜ.க. அமைச்சராக இருந்தபோது ஐ.பி.சி.எல். எனப்படும் அரசின் எண்ணெய்க் கம்பெனியை அம்பானியின் ரிலையன்சு நிறுவனத்துக்குச் சொந்தமாக்கி பிராயச்சித்தமும் செய்து கொண்டார்.

அருண்ஷோரி, மணிரத்தினம் மட்டுமல்ல ஆளும் வர்க்கங்களும், ஊடகங்களும் கூட இப்படித்தான் அம்பானியைக் கொண்டாடுகின்றன. சுமார் 35 இலட்சம் பங்குதாரர்கள் அம்பானியால் வசதியுடன் வாழ்கிறார்கள், “அம்பானியைப் போல ஒரு பத்து தொழிலதிபர்கள் இருந்தால் இந்தியா ஒரு பணக்கார நாடாகிவிடும்” என்று சுயமுன்னேற்ற மதத்தின் குருவாகவே அம்பானி சித்தரிக்கப்படுகிறார். இந்த குருவின் உண்மையான கதை என்ன?

தொழில் முனைவோர்களை வளரவிடாமல் நசுக்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தின் லைசன்ஸ் பெர்மிட் கோட்டா ராச்சியத்தைத் தகர்த்தார், பழம்பெருச்சாளிகளின் கோட்டையாக மோன நிலையில் தேங்கி இருந்த இந்தியத் தொழில்துறையை உடைத்து உள்ளே புகுந்து அதை விறுவிறுப்பானதாக்கினார் என்பதுதான் அம்பானிக்கு மணிரத்தினம் சூட்டும் புகழாரம்.

அன்று நேருவின் சோசலிசம் என்று புகழப்பட்டதும், தற்போது லைசன்ஸ், பெர்மிட், கோட்டா ராச்சியம் என்று இகழப்படுவதுமான அந்த கொள்கை, உண்மையில் தேசிய முதலாளிகளைத் தான் நசுக்கியதேயன்றி, டாடா பிர்லா போன்ற தரகு முதலாளிகளையல்ல. அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கொள்கையின் ஆதாயங்களை சட்டபூர்வமாகவும் சந்து பொந்துகளில் புகுந்து லஞ்ச ஊழல்களின் மூலமும் அனுபவித்துக் கொண்டே, அவ்வப்போது தம் அதிருப்தியையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர் அன்றைய தரகு முதலாளிகள்.

பாரம்பரியத் தரகு முதலாளிகளைவிடத் திறமையாகவும், துணிச்சலாகவும் லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு எந்திரத்தையும் சட்டங்களையும் தனக்கு ஏற்றபடியெல்லாம் வளைத்து, ஊடகங்களை விலைக்கு வாங்கி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டினார் என்பதுதான் அம்பானியின் சாதனை. ரிலையன்சின் வளர்ச்சிக்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டன. ஏற்றுமதி செய்யும் மதிப்புக்கேற்ப இறக்குமதி செய்யலாம் என்ற விதிமுறையின் கீழ் மண்ணையும், மசாலாப் பொருட்களையும், படத்தில் வருவது போல் காலி அட்டைப் பெட்டிகளையும் ஏற்றுமதி செய்து உள்நாட்டில் கிராக்கியாக இருந்த ரேயான், நைலான், பாலியஸ்டர் செயற்கை இழைகளை இறக்குமதி செய்து பல மடங்கு இலாபம் ஈட்டினார். அம்பானியின் சாரத்துக்கு இந்த ஒரு சோறு முழுப்பதமாகும்.

அம்பானியின் ஆலைகளுக்கான இயந்திரங்கள் இறக்குமதி வரி செலுத்தாமல் மோசடி முறையில் கொண்டு வரப்பட்டதை கோயங்கா அம்பலப்படுத்தியதற்குக் காரணம் மணிரத்தினம் சித்தரிப்பது போல சில தனிமனிதர்களுக்கிடையே நடந்த ஈகோ பிரச்சினையோ, கோயங்காவின் அறவுணர்வோ அல்ல. புதிய தரகு முதலாளிகளின் பிரதிநிதியாக வந்த அம்பானியை பழையவர்களின் பிரதிநிதியான நுஸ்லிவாடியா எதிர்த்தார். தரகு முதலாளிகளுக்கிடையான இந்த முரண்பாட்டில் நாட்டு நலனும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை.

அவர்களின் இந்த முரண்பாடு அரசியலிலும் பிரதிபலித்தது. அம்பானியை இந்திராவும் ராஜீவும் காங்கிரசும் ஆதரித்தன; வாடியாவை ஜனதா ஆதரித்தது. 1980 தேர்தலை இவ்விரண்டு முதலாளித்துவப் பிரிவினரும்தான் ஸ்பான்சர் செய்தனர். அந்தத் தேர்தலில் இந்திரா வென்றதற்காக அம்பானி விருந்து வைத்துக் கொண்டாடினார். அதன் பிறகு ரிலையன்சின் மோசடிகள் கொடிகட்டிப் பறந்தன. ராஜீவும், பிரணாப் முகர்ஜியும், முரளி தியோராவும் அம்பானியின் தூதர்களாக அரசாங்கத்தில் செயல்பட்டனர். பல சட்டங்கள் ரிலையன்சின் வளர்ச்சிக்காக இயற்றப்பட்டன, மாற்றப்பட்டன, ஒத்தி வைக்கப்பட்டன. “நாட்டின் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் ரிலையன்சின் அனுமதியைப் பெறும்” என்று ஒரு பழமொழியே டெல்லிப் பத்திரிக்கையாளர்களிடம் உருவாகியிருந்தது. மேல்மட்டத்து அதிகாரவர்க்கத்தின் பணிநியமன உத்தரவுகள் அரசாங்கத்திடமிருந்து வருவதற்குள் ரிலையன்ஸ் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றன.

வி.பி.சிங் பிரதமரானதும் அம்பானியின் மீது விசாரணைக் கமிஷன் நடந்து பல மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அதிலொன்று அமெரிக்காவிற்கு அருகிலிருக்கும் ஒரு தீவிலிருந்து அம்பானியின் பினாமி ஒருவர் முதலீடு செய்து வரிஏய்ப்பு செய்தது. ஃபேர்பாக்ஸ் எனும் அமெரிக்கத் துப்பறியும் நிறுவனம் ரிலையன்சின் அந்நியச் செலாவணி மோசடி குறித்து புலனாய்வு செய்ய நியமிக்கப்பட்டது. ஆயினும் இவற்றினாலெல்லாம் அம்பானியைத் தண்டிக்க முடியவில்லை. ஏனென்றால் இத்தகைய மோசடிகளை எல்லா தரகு முதலாளிகளும்தான் செய்து வந்தனர். அம்பானியோ அதில் பழம் தின்று கொட்டை போட்டார்.

எனவே, ஒரு கட்டத்துக்கு மேல் அம்பானி குறித்த விசாரணை செல்ல முடியவில்லை. கிணறு வெட்ட பூதம் கிளம்பும் என்பதால் மேலோட்டமாகத் தோண்டப்பட்ட கிணறு அவசர அவசரமாக மூடப்பட்டது. அம்பானியின் மீதான விசாரணைகள் நியாயமானவைதான் என்று விசாரிப்பதற்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய விசாரணைக் கமிஷனொன்று நியமிக்கப்பட்டது. இந்த நீதிபதிகளும் அம்பானியின் மீதான புலனாய்வு, நாட்டு நலனுக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவை என்று தீர்ப்பளித்தனர்.

இரண்டு தரகு முதலாளித்துவக் கும்பல்களிடையேயான மோதல், தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டு மொத்த நலன் கருதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதுவே நாட்டுநலன் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகென்ன, நாட்டுப் பற்றுக்கு புதிய இலக்கணம் கண்ட அம்பானி இதன்பிறகு மாபெரும் ஏகபோக முதலாளியாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அம்பானியின் பிரதிநிதிகள் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும் இருந்தனர். முலாயம் சிங் யாதவ், அமர்சிங், பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, பிரணாப் முகர்ஜி, முரளிதியோரா, முரளி மனோகர் ஜோஷி, அருண்ஜெட்லி, சந்திரபாபு நாயுடு, மோடி, கடைசியாக தயாநிதி மாறன் வரை இந்தப் பட்டியலில் பலர் உள்ளனர்.

நூல், ஜவுளி விற்பனையிலிருந்து ஜவுளி ஆலை, பாலியஸ்டரில் ஏகபோக ஆலை, அதன் மூலப்பொருள் ஆலை. அதன் மூலப்பொருளான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, தற்போது செல்பேசி சேவை, தகவல் தொழில்நுட்பத் துறை, நிதிக் காப்பீடு நிறுவனங்கள் என ஆக்டோபஸ் போல நாட்டையே கவ்வியிருக்கிறது அம்பானியின் சாம்ராச்சியம். எல்லாவற்றிலும் கால் பதித்திருக்கும் அம்பானி தான் முதலாளியாக உருவெடுத்த பின்னராவது தனது மோசடி முறைகளை மாற்றிக் கொண்டாரா? இல்லை முன்பை விட அதிகமாகவே செய்தார். முன்னர் பல தடையரண்களுடன் செய்ததை இப்போது சுதந்திரமாகச் செய்தார்.

guru 1
இலட்சணக்கான சூதாடிகளை உருவாக்கிய அம்பானி!

தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் பத்தாம்பசலிச் சட்டங்கள் என்ற கூட்டை உடைத்துப் பிறந்த இலட்சிய வேட்கை கொண்ட சுதந்திரப் பறவையாக அம்பானியை மணிரத்தினம் சித்தரித்திருப்பது அப்பட்டமான பித்தலாட்டமாகும். முதலாளித்துவத்துக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டால், அது சட்டபூர்வமான வழிகளிலும், நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டும் தனது சுரண்டலை நடத்தும் என்ற கருத்தே மோசடியானது. அத்தகைய சுதந்திரம் வழங்கப்படாததால்தான் அம்பானி சட்டத்தை மீற நேர்ந்தது என்று இந்தக் கிரிமினலுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் மணிரத்தினம்.

90களில் தாராளமயக் கொள்கைகள் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய பின்னரும் என்ன நடந்தது? வில்போன் சேவைக்கு மட்டும் லைசன்சு பெற்ற ரிலையன்சு செல்போன் சேவையை முறைகேடாக அளித்து பல கோடி ரூபாய் கட்டண மோசடி செய்தது. இது அம்பலமானதும் அம்பானிக்குத் தகுந்தபடி சட்டத்தை மாற்றியது பா.ஜ.க. அரசு. அடுத்து வெளிநாடு அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி சுமார் 1300 கோடி ரூபாய் பகற்கொள்ளை அடித்தது ரிலையன்ஸ். தேசத்துரோகம், மோசடி போன்ற கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டன. சில கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதித்து வழக்கை முடித்துக் கொண்டது காங்கிரஸ் அரசாங்கம். ரிலையன்சின் நிறுவனங்கள் அனைத்தும் கொள்ளையில் பழுத்த புழுக்கள். இந்தக் கொள்ளையனைத்தான் இந்தியத் தொழில்துறையின் குரு என்கிறார் மணிரத்தினம்.

திரைப்படத்தில் ரிலையன்சின் பங்குதாரர்கள் ஏதோ ஒரு மக்கள் திரள் இயக்கம் போல சித்தரிக்கப்படுகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் நடந்து கொண்டிருந்த பங்குதாரர்கள் கூட்டத்தை திறந்தவெளி மைதானத்தில் நடத்தியவர், இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரைப் பங்குச்சந்தையை நோக்கிக் கவர்ந்திழுத்தவர் என்பவை நிஜத்திலும் அம்பானிக்குச் செலுத்தப்படும் புகழாரங்கள்.

இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை நாட்டின் தொழில் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தவர் அம்பானி என்பது போன்ற தோற்றம் இதன்மூலம் உருவாக்கப்படுகிறது. இலட்சக்கணக்கான சூதாடிகளை அம்பானி உருவாக்கினார் என்பதே உண்மை. பங்குச் சந்தையைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவரை இந்த உண்மையையும் புரிந்து கொள்ள இயலாது.

பங்குச் சந்தை வர்த்தகம் என்பதற்கும் நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதன் இலக்கணமே சூதாட்டம்தான். புளூ சிப் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் 10, 15 பெரிய நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படும் மதிப்பை வைத்துத்தான் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் தீர்மானிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பிற நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தில் பலர் ஏமாறுவார்கள், சிலர் இலாபம் சம்பாதிப்பார்கள். பங்குகளின் முகமதிப்பு 10 ரூபாய் என்றால், அதன் சந்தை மதிப்பு 500 அல்லது 1000 ரூபாயாகக் கூட இருக்கும். இந்த விலை உயர்வை பன்னாட்டு நிதி நிறுவனங்களும், பங்குச் சந்தைத் தரகர்களும் செயற்கையான முறையில் உருவாக்குகின்றனர். பங்குகளுக்கான டிவிடெண்ட் எனப்படும் லாப ஈவுத் தொகை பங்கின் முகமதிப்பை வைத்தே வழங்கப்படுமேயன்றி அதன் சந்தை மதிப்பை வைத்து அல்ல.

இந்நிலையில், சிறுமுதலீட்டாளர் எனப்படும் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அதில் கிடைக்கும் வருடாந்திர ஈவுத் தொகையால் ஒரு போதும் இலாபம் சம்பாதிக்க முடியாது. மாறாக, அந்த பங்கின் சந்தை மதிப்பு பலமடங்கு உயரும் போது அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதுதான் பங்குச் சந்தையின் கவர்ச்சி. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்குக் கிடைக்கக்கூடிய இந்த இலாபம் என்பது இன்னொரு பிரிவினரின் நட்டம். திரைப்படத்தில் மூன்று மகள்களின் திருமணத்தை ரிலையன்சின் பங்குகளை விற்றுத்தான் நடத்தினேன் என்று கூறி ஒருவர் அம்பானிக்காக உருகுகிறார். தோற்றுப்போன வேறொரு சூதாடியின் 3 மகள்கள் முதிர்கன்னிகளாக மறுகிக் கொண்டிருப்பார்கள் என்பதே இதன் பொருள்.

பங்குகளின் மதிப்பு ஏன் உயர்கிறது, ஏன் சரிகிறது என்று தெரியாமல் நடுத்தர வர்க்கம் தத்தளித்துக் கொண்டிருக்க, இந்த உயர்வையும் சரிவையும் திரைமறைவில் இருந்து ஆட்டிவைக்கும் அம்பானிகளும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் ஒவ்வொரு உயர்விலும் ஒவ்வொரு சரிவிலும் கோடிக்கணக்கில் சுருட்டிக் கொள்வார்கள். இந்த நரவேட்டையில் இவர்களோடு சேர்ந்து சில எலும்புகளைக் கடிக்கும் வாய்ப்புப் பெற்ற நபர்கள்தான் “ஐயா உங்கள் அருளால்தான் 3 பெண்களுக்குக் கல்யாணம் செய்தேன்” என்று அம்பானியிடம் உருகுவார்கள்.

70, 80களில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குகளை வெளியிட்டபோது அது அவரது மாநிலமான குஜராத்தில் பெரு வெற்றி பெற்றது. இன்றைக்கும் ரிலையன்சின் பங்குதாரர்களில் பெரும்பான்மையினர் குஜராத்தைச் சார்ந்த பனியாக்களே. இந்தச் சூதாடி வர்க்கம்தான் இந்துத்துவ வெறி எனும் அரசியல் ஒழுக்கக் கேட்டிலும் முன்னணியிலிருக்கிறது என்பதையும் வாசகர்கள் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

நாடா குத்துபவன் போல தனது பினாமி கம்பெனிகள் மூலம் ரிலையன்ஸ் பங்குகளைத் தானே வாங்கினார் அம்பானி. பங்குகளின் விலையை செயற்கையாக உயரச் செய்தார். விலை குறையும்போது தானே தனது பங்குகளை வாங்கி விலை சரியாமல் இருத்தவும் செய்தார். பணம் தேவைப்பட்ட போது, கடன் பத்திரங்களை வெளியிட்டார். கடன் பத்திரங்களுக்கு சட்டப்படி வட்டி கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் பங்குகளுக்கு ஈவுத்தொகை கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அரசியல் செல்வாக்கால் கடன் பத்திரங்களையே பங்குகளாக மாற்றிக் கொண்டார். ஆண்டுதோறும் வட்டி கிடைக்கும் என்று நம்பி கடன் பத்திரங்களை வாங்கிய நடுத்தரவர்க்கத்திற்குப் பட்டை நாமம் போட்டார்.

இத்தனையும் செய்து விட்டு, சாவதற்கு முன்பு ஒரு தத்துவத்தையும் சொன்னார் அம்பானி: “ரிலையன்சை நான் உருவாக்கினேன் என்பது உண்மைதான். அம்பானிகள் வரலாம், போகலாம். ஆனால் ரிலையன்சின் பங்குதாரர்கள் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்” என்றார். ஆனால் அம்பானி செத்த இரண்டே வருடங்களுக்குள் அவரது மகன்கள் அம்பானியின் இந்த மரண வாக்குமூலமும் பொய்யே என்பதை நிரூபித்து விட்டார்கள்.

ரிலையன்சின் 52% பங்குகள் பொதுமக்கள் வசம் இருப்பதாகவும், 43% பங்குகளை பன்னாட்டு, உள்நாட்டு நிதி நிறுவனங்கள் வைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள 5 சதவீத பங்குகள்தான் தங்கள் வசம் இருப்பதாகவும் அம்பானி குடும்பத்தினர் புளுகி வந்தனர். புத்திரர்களின் சொத்துச் சண்டையில் இந்தப் புளுகுணியாட்டமும் வெட்டவெளிச்சமானது. பொதுமக்களது கையில் இருக்கும் பங்குகள் உண்மையில் 13 சதவீதம் மட்டுமே. மீத 39 சதவீதம் அம்பானியின் பினாமி நிறுவனங்களிடம் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 500ஐத் தாண்டும்.

மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தில் பிரம்மாண்டமான கணினியொன்று செயற்கையான காட்சி உலகை உருவாக்கி எது மெய் எது பொய் என்று அறிய முடியாத குழப்பத்தை உருவாக்குவது போல, அடியையும் நுனியையும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் இந்த பினாமி கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார் அம்பானி. முதலீட்டாளர்களையும் அரசாங்கத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த கிரிமினல் குற்றம், வாரிசுச் சண்டையில் அம்பலமாகி நாறியது.

எனினும், ரிலையன்ஸ் குடும்ப பிரச்சினையில் அரசு தலையிடாது என ப.சிதம்பரமும், ஏனைய மத்திய அமைச்சர்களும் அறிவித்தனர். இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள், அம்பானி வளர்த்த சாம்ராஜ்ஜியம் இப்படி அழியலாமா என்று சோக கீதம் இசைத்தனரேயொழிய யாரும் அம்பானி குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதவில்லை, அவர்களால் சூறையாடப்பட்ட சிறுமுதலீட்டாளர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தக் கூட இல்லை.

guru 4
பச்சன்களுடன் மணிரத்தினம்! அம்பானியின் வாழ்த்துப்பா கலைஞர்கள்!

“நாம் இந்தியாவிலேயே முதல் கம்பெனியானால் போதுமா, உலகத்திலேயே முதல் கம்பெனி ஆகவேண்டாமா” என்று பங்குதாரர்கள் கூட்டத்தில் குரு முழங்கும் காட்சியுடன் படம் முடிகிறது. அன்று குருவின் மோசடிகள் என்று கூறப்பட்டவை அனைத்தும் இன்று சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. நடுத்தரவர்க்கத்துக்குப் பேராசை காட்டி பங்குச் சந்தைச் சூதாட்டத்தை நோக்கி அன்று அம்பானி கவர்ந்திழுத்தார் என்றால் இன்று ப.சிதம்பரம், நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புகளைப் பங்குச் சந்தையை நோக்கி நெட்டித் தள்ளுகிறார்.

வங்கிகளின் வைப்புநிதி, தபால் சேமிப்பு, அரசின் கடன் பத்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்து, நடுத்தரவர்க்கம் தனது சேமிப்பை பங்குச் சந்தையில்தான் போடவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார் சிதம்பரம். இதுவும் போதாதென்று தற்போது தொழிலாளர்களின் சேமநல நிதி மூன்று இலட்சம் கோடி ரூபாயையும், பென்சன் நிதியையும் பங்குச் சந்தையில் வைத்துச் சூதாடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இப்படி போதும் போதுமென்னும் அளவுக்கு முதலீட்டுக்கான பணம் தளும்பி வழிந்தும் பங்குதாரர்களைக் கொள்ளையடிக்கும் அம்பானியிசம் முடிவுக்கு வந்துவிடவில்லை. அதனைப் புதிய எல்லைக்கு வளர்த்திருக்கிறார்கள் அவரது புத்திரர்கள்.

“ஒரு தபால் கார்டு விலையில் ஃபோன் பேசலாம்  திருபாய் அம்பானி கனவுத் திட்டம்” என்ற பெயரில் பங்குச் சந்தையில் குதித்த ரிலையன்ஸ் இன்போகாம், ஒரு பங்கின் முகமதிப்பு ரூபாய் ஒன்று எனவும் பிரீமியம் மதிப்பு 49 ரூபாய் என 50 ரூபாயில் பங்குகளை வெளியிட்டது. இதற்கு 10 வருடங்களுக்கு ஈவுத் தொகையோ வட்டியோ கிடையாது என்ற நிபந்தனையும் உண்டு. பிரீமியம் எனப்படுவது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் போலி மதிப்பு ஆகும். இந்தப் பங்குகள் வெளியீட்டில் முகேஷ் அம்பானியும், ரிலையன்சின் மேல்மட்ட அதிகார வர்க்கக் கும்பலும் தொழில் முனைவோர் என்ற பெயரில் பெருமளவு பங்குகளை தம் வசம் வைத்துக் கொண்டு 1 ரூபாய் விலையில் வாங்கிய பங்குகளை 50 ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டினர். வாரிசுரிமைச் சண்டையின்போது அனில் அம்பானி கும்பல் இதை அம்பலப்படுத்தியது. அவலையும் உமியையும் கலந்து விற்கும் இந்தக் கலவையைத் திறமை என்று போற்றுவதா, மோசடி என்று குற்றம் சாட்டுவதா?

‘அம்பானி ஒரு வெற்றிக் கதை’ என்ற புத்தகத்தை எழுதிய என்.சொக்கனது கண்ணோட்டப்படி  “இது நடுத்தர வர்க்கப் பங்குதாரர்க ளின் அசட்டுத்தனத்துக்குக் கிடைத்த தண்டனை.” கிழக்குப் பதிப்பகம் பெருமையுடன் வழங்கியுள்ள இந்தப் புத்தகம் பல்லாயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறதாம்.

அதில் அம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன? ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை உருக்கிப் பாளம் பாளமாகத் தயாரித்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாராம். அதில் அவருக்கு மிகப் பெரிய இலாபமாம்.

இந்தச் சம்பவம் குறித்து உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை. அவர் சொல்கிறார், “ஏமன் அரசாங்கத்தின் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தியதன் மூலம் அந்த அரசாங்கத்திற்குச் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்” என்று மெச்சுகிறார். மணிரத்தினத்தின் கருத்தும் இதுதான்.

குரு திரைப்படம் தமிழகத்தில் வெற்றி பெறவில்லையென்றாலும் அது கூறவரும் செய்தி சமூகத்தில் செல்வாக்கு பெற்று வருகிறது. சுயநலன் என்பது ஒரு இழிந்த குணமாக கருத்தளவிலாவது பார்க்கப்படுவது, பொதுநலன் என்பது உயர்ந்த பண்பாக வாயளவிலாவது போற்றப்படுவது என்ற நிலை மாறி, பொதுநலன் பேசுவோர் ஏமாளிகளாகவும், சுயநலவெறி முன்னுதாரணமாகவும் சித்தரிக்கப்படும் காலத்தில் அத்தகையதொரு கயவனை நாயகனாகச் சித்தரிக்கிறது குரு. ரவுடிகள் நாயகர்களாக்கப்படுவதைக் காட்டிலும் இது அபாயகரமானது.

ஏமாற்றுவதையும், சக மனிதர்களை மோசடி செய்வதையும், சமூகத்தை ஊழல்படுத்துவதையும் எவ்விதக் கூச்சமும் இன்றிச் செய்த ஒரு மனிதனை இலட்சியவாதியாகக் காட்டுகிறார் மணிரத்தினம். அம்பானியின் குற்றங்களை திரையில் அடக்கி வாசித்துக் காட்டுவதன் மூலம் அவன் கூறும் விழுமியங்களுக்கு வலுச்சேர்க்கிறார். அம்பானியின் கிரிமினல் குற்றங்கள் கூட தெரிந்து செய்தவையோ, வேண்டுமென்றே செய்தவையோ அல்ல என்பது போலவும், ஒரு இலட்சியத்தைத் துரத்திச் செல்லும் மனிதனை ஒரு கட்டத்துக்கு மேல் அந்த இலட்சியமே இழுத்துச் செல்வது போலவும், அதற்கு அந்த மனிதனைக் குற்றம் சாட்ட முடியாது என்பதாகவும் சித்தரிக்கிறார் மணிரத்தினம்.

guru 2
அம்பானியின் குற்றங்களை மறைக்கும் மணிரத்தினத்தின் குரு திரைப்படம்!

சினிமாவில் மணிரத்தினம் சித்தரிக்கும் சென்டிமென்டுகள் உள்ளிட்ட குணாதிசயங்கள் அம்பானியைப் போன்ற முதலாளிகளிடம் அறவே இருப்பதில்லை. ஊனமுற்ற பெண்ணிடம் பாசம் வைக்கும் அம்பானி, கோயங்காவின் காரை உடைத்ததற்காக தன் மானேஜரைக் கண்டிக்கும் அம்பானி போன்ற காட்சிகள் ஒரு கிரிமினலுக்கு மனித முகம் தருவதற்காகவே உருவாக்கப்பட்ட காட்சிகள். சினிமா ரவுடிகளைப் பார்த்து ஸ்டைல்களைக் கற்றுக் கொண்ட நிஜ ரவுடிகள் போல சினிமா அம்பானிகளைப் பார்த்து நிஜ அம்பானிகளும் இனி வேடம் போடக்கூடும்.

குரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அம்பானியின் மனைவியும், மகன்களும் பாராட்டு தெரிவித்தார்களாம். பின்னே, இறுதிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்களின் மத்தியில் குரு “நமது சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவோம்” என்று சூளுரைப்பானே, அம்பானிகளை அந்தக் காட்சி வானத்தில் பறப்பது போலப் பரவசமடைய வைத்திருக்கும். பால்தாக்கரே பாராட்டிய பம்பாய்! அம்பானிகள் பாராட்டிய குரு! த.மு.எ.ச. விருதுதான் பாக்கி. அவர்களை முந்திக் கொண்டு சுஜாதா மிகப் பெரிய விருது கொடுத்துவிட்டார். குரு திரைப்படம் இந்தியத் திரையுலகை ஹாலிவுட் தரத்திற்குக் கொண்டு சென்று விட்டதாம். அப்புறம் என்ன? புஷ், என்ரான் போன்ற அமெரிக்க வில்லன்களை நாயகர்களாகச் சித்தரிக்கும் திரைக்கதைகளை சுஜாதா எழுதிக் கொடுக்க மணி   இயக்கலாமே!

ஒரு கொசுறுச் செய்தி: குரு திரைப்படத்தின் தயாரிப்பில் அனில் அம்பானியின் அட்லாப் என்ற நிறுவனமும் இருக்கிறது. அதாவது இது (குரு) அம்பானி கம்பெனியின் விளம்பரப்படம். விளம்பரப் படத்தைப் போட்டுக் காட்டுவதற்கு இரசிகர்களிடம் காசு வசூலிக்கப்பட்டதாக எங்கேயாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் அம்பானி. செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!

அம்பானியின் குரு : மோசடியின் கரு,
குரு திரைப்பட விமரிசனம், புதிய கலாச்சாரம் பிப்ரவரி  – 2007

சிறுகதை: ஒரு மல்டிலெவல் மார்க்கெட்டிங்கின் மனக்கோணங்கள்!

19

mlm1தன்னைத் தவிர முழு உலகமும் சுறுசுறுப்புடன் இயங்குவதாக காட்சியளிக்கும் மாநகரத்தின் ஞாயிற்றுக் கிழமையை செய்தித்தாள் போடும் சிறுவர்கள் தூக்கம் கலைந்த வேகத்துடன் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

படுக்கையில் இருந்த வெங்கட்ராமன் விழித்தபோது மணி சரியாக ஆறு. அலாரமில்லாமல் டாணென்று எழுந்து விடுவதாக சிலர் பீற்றிக் கொள்வதைப் போல அவர் பெருமையடிக்கமாட்டார் என்றாலும் அப்படித்தன் கச்சிதமாக எழுந்திருப்பார். சில நாட்களில் பேப்பர் பொத்தென்று விழும் சப்தமும் வெங்கட்ராமன் துயிலெழும் மூகூர்த்தமும் சொல்லி வைத்தாற் போல பொருந்தி வரும். இன்றும் பொருந்தித்தான் வந்தது.

பல் துலக்கியவாறே ஓய்வுநாள் தரும் துவக்கக் களிப்புடன் தலைப்புச் செய்திகளை மேய ஆரம்பித்தார். வாரநாட்களில் சில மணித்துளிகளில் வாசிப்பை முடித்துவிடுபவர் விடுமுறை நாளில் மட்டும் சற்று அதிக நேரம் படிப்பார். காலை உணவு முடிந்ததும் இணைப்பில் உள்ள துணுக்குமூட்டையை கிரகிப்பதும், குறுக்கெழுத்துப் போட்டியை பக்கத்துவீட்டு ராமானுஜம் முடிப்பதற்குள் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு செய்து விடுவதும், தெரியாத ஒன்றிரண்டு கேள்விகளுக்காக வரும் ராமானுஜத்திடம் பரவசத்துடன் பதிலை விவரிப்பதும் …எப்படியோ நாற்பத்தைந்து வயதைக் கடந்து விட்டார் வெங்கட்ராமன். ஆனால் இன்றைக்கு மட்டும் ஏதோ இந்த நாள் ஒரு நல்ல நாள் என்பதுபோல ஒரு மனக்குறிப்பு குதூகலத்துடன், சிந்தனையில் அவர் அறியாமலேயே ஓடிக்கொண்டிருந்தது. வழக்கமான வீட்டுக் காட்சிகளையும், குடும்பத்தினரையும் ஒரு விசேசமான பாசத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார்.

பற்பசையின் காரம் ஏறியதால் தும்மியவர் தினசரியையும் ஒரு உலுக்கு உலுக்க அதிலிருந்து  ஆர்ட் பேப்பரில் ஒன்றுக்கு நான்கு சைசில் அழகாக அச்சிடப்பட்ட ஒரு விளம்பரப் பிரசுரம் கீழே விழுந்தது. விற்பனை, வாடகை, காப்பீடு, கடன் போன்றவற்றின் போக்கை அறிந்து வைத்திருக்க வேண்டியதை அவசியமாகக் கருதும் எல்லா நடுத்தரவயதுக்காரர்களைப் போல அவரும்  நாளிதழின் விளம்பரங்களையும், வரி விளம்பரங்களையும் இரவு நேரத்தில் இம்மியளவு விடாமல் படிப்பவர்தான் என்றாலும் விழுந்த துண்டுக் காகிதம் ஏதோ ஒரு நல்ல செய்தியை தூதேந்தி கொண்டுவந்திருப்பதாக ஒரு நம்பிக்கை.

வழக்கத்துக்கு மாறாக கணவனது முகத்தில் ஒரு துளி மலர்ச்சி பூத்திருப்பதை, அது விடுமுறைக்கானதல்ல, வேறொன்றோடு தொடர்புடையதென அவதானித்த மாலதி குறுஞ்சிரிப்புடன் காபியைக் கொடுத்தாள். என்ன இருந்தாலும் நாளைக்கு இந்த முகம் எப்படியிருக்கும் என்பதையும் நினைத்துப் பார்த்ததால் வந்த சிரிப்பு அது. தனக்கு ஓய்வின்றி பணிவிடை செய்யும் அந்த ஜீவனுக்கு பார்வையிலேயே கணிசமான அளவில்  நேசத்தைத் தெரிவித்தவர் நாற்காலியில் அமர்ந்து பருகியவாறு அந்த விளம்பரத்தை படிக்க ஆரம்பித்தார். எப்போதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமையில் காப்பியை ருசித்தவாறே விருப்பமான விளம்பரங்களை படிப்பது அமையும். காப்பியின் மணமும் விளம்பரத்தின் நம்பிக்கையூட்டும் செய்தியும் ஒன்றிணையும் போது கிடைக்கும் அந்த சுகமே அலாதியானதுதான். அதுவும் அனுபவித்தவர்கள் மட்டுமே உணரக்கூடிய அற்புத சுகம்.

” நீங்கள் ஒரு பெர்ஃபக்க்ஷனிஸ்ட்டா? அப்படியெனில் உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.”

“வரவுக்கும் செலவுக்கும் வழிதெரியாமல்  புழுங்கிக்கொண்டிருக்கும் தோல்வியடைந்த மத்தியதர வர்கக்த்தினரின் கூட்டத்தில் செலவையும் சேமிப்பையும் புத்தாக்க உணர்ச்சியுடன், புதுமை தாகத்துடன், யாருமறியா விவேகத்துடன் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், ஆம் நண்பரே உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.”

“ஒரு வருடத்தில் கார், இரண்டு வருடத்தில் வீடு, ஐந்து வருடத்தில் நீங்கள் ஒரு முதலாளி, பத்து வருடத்தில் பல இலட்சங்களுக்கு சொந்தமான மில்லியனர்….இவையெல்லாம் மற்றவர்களுக்கு வேண்டுமானால் கனவாக இருக்கலாம். உங்களைப் போன்ற இலட்சியவாதிகளுக்கு இவை நிறைவேறப் போகும் நனவு, அதற்குத் தேவையான ஆற்றலும், திறமையும், துடிப்பும், வேகமும், நிதானமும், துணிச்சலும் உங்களிடம் ஏராளமிருப்பது குறித்து எங்களுக்குத் தெரியும்,”

காப்பியை மணத்துடன் பருகத் துவங்கிய வெங்கட்ராமனுக்கு திடீரென மூளை பிரகாசமாக எரிவது போல ஒரு உணர்வு. சிந்தனை ஒருமையடைந்து ஒரு தூயவெளிச்சத்தில் நினைத்தது பலித்ததால் வரும் பரவச உணர்வு. இப்பொது அவருக்கு காப்பி தேவைப்படவில்லை. மேலே படிக்க ஆரம்பித்தார்.

” வெள்ளமெனப் பாயும் உங்கள் முனைப்புக்கு ஒரு அணைகட்டி, தேக்கி நிறுத்தி, புதிய வேகத்தில் திறந்து விட்டு பெரும் சக்தியை உருவாக்குவதுதான் எங்கள் வேலை. நாடெங்கும் உள்ள எங்கள் கிளைகள் மூலம் பல மில்லியனர்களை இப்படித்தான் உருவாக்கியிருக்கிறோம். இது விளம்பரத்திற்காகச் சொல்லப்படும் பீடிகையல்ல. அந்த சாதனையாளர்களில் சிலரை நாளைய சாதனையாளரான நீங்களும் இன்றே சந்திக்கலாம். எங்கள் மின்னல் வேக சங்கிலித் தொடர் திட்டத்தின் மகிமையை நேரடியாக உணர, பங்கேற்க, சாதிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம். இடம்: கமலா திருமண மண்டபம். நேரம்: காலை 10.30 மணி. ” ….அப்புறம் செல், லேண்ட்லைன், மெயில், ஃபேக்ஸ், கிளைகளின் முகவரிகள், இணைய தளம் அத்தனையும் நேர்த்தியாக இடம்பெற்றிருப்பதை கவனித்த வெங்கட்ராமனிடம் ஏதோ ஒருபெரிய நல்லது நடக்கப்போவது போல உள்ளுக்குள் பட்சி கூவிக்கொண்டிருந்தது.

விளம்பரப் பிரசுரத்தை நேர்த்தியாக மடித்தவர் கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தார். ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் காசளராக இருபதாயிரம் சம்பளத்தில் பதினைந்து ஆண்டுகளாக பணி, பள்ளியிறுதி ஆண்டில் படிக்கும் பையன், ஆறாவதில் படிக்கும் மகள், இன்னும் பத்தாண்டுகளில் இவர்களுக்கு ஆகப்போகுப் கல்விச் செலவு, திருமணச் செலவு, புறநகரில் வாங்கிப்போட்ட இடத்தில் வீடு கட்டவேண்டிய திட்டம், அவ்வளவாக வசதியில்லாத மனைவியின் வீட்டார், எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் சேமிக்க முடியாத அவதி, காப்பீடு, வாகனக்கடன், என்று மாதம் விழுங்கக் காத்திருக்கும் தவணைகள், ஏதோ வாங்கிவைத்த சில பங்குகளின் பெயருக்கு வரும் கழிவுத் தொகை….. இந்த எல்லையை எப்படித் தாண்டுவது? அதிகாலையில் ஆரம்பித்த உற்சாகம் சுருதி குறைவது போல இருந்தது.

இல்லை, இந்தக் கூட்டத்திற்கு போய்த்தான் பார்ப்போமே…ஏதாவது நல்லது நடக்கலாமே…

mlmமீண்டும் உற்சாகத்தை  வரவழைத்தவர்  குளித்து ரெடியானார். நிதானமாக சுவைத்து உண்ணக்கூடிய அடைத் தோசையை அந்தக் கூட்டத்தின் காட்சியை நினைத்தவாறு வேகமாக உள்ளே தள்ளினார். கணவன் ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை உணர்ந்து கொண்ட மாலதி அடுத்த அடையை வைத்து வற்புறுத்தவில்லை.

பத்து மணி ஆனதும் பதட்டமடைந்தார். மண்டபம் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரம்தான் என்றாலும் நேரத்திற்கு இருக்கவேண்டுமே, இல்லையென்றால் நடக்கப்போகும் நல்லவற்றில் ஏதேனும் இழந்து விட்டால்? பீரோவில் இருந்த உடைகளில் சிறப்பானவற்றை எடுத்து அணிந்து கொண்டார். வழக்கமாக எதையாவது உடுத்திக் கொண்டு செல்பவரிடம் அந்த விளம்பரப் பிரசுரம் ஏற்படுத்தியிருந்த மாற்றத்தை அறிந்திராத மாலதி குழப்பமடைந்தாள்.

இப்போது எதுவும் சொல்லக்கூடாது எல்லாம் நல்லது நடந்த பிறகுதான் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற உறுதியுடன்,” ஒரு வேலையா வெளிய போறேன், மதியம் சாப்பாட்டுக்கு வந்துருவேன்”, காலணி போட்டுக்கொண்டிருந்தவரை ராமானுஜம் மறித்தார்.

சட்டென்று ஒரு சந்தேகம்…ராமானுஜமும் அந்த விளம்பரத்தைப் பார்த்திருப்பாரோ…என்ன இருந்தாலும் அவர் கூடப் போவதில் சம்மதமில்லை…இல்லையில்ல…கையில் இருக்கும் வாரமலரைப் பார்க்கும்போது சமாதானமடைந்தவர் பிறகு பேசலாமென்று நடையைக் கட்டினார். முதல் அபசகுனத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டவர் இன்றுதான் புதிதாய்ப் பிறந்தோமென்ற நம்பிக்கையுடன் உறுதியாக அடிகளை பதித்தவாறு நடந்தார். கண் தொலைவில் தெரிந்த மண்டபத்தில் பெரும் கூட்டம் காத்திருந்தது. அவர் அவசரமாக சென்றுவிட்டதால் அவரது வாரிசுகளை இங்கே அறிமுகம் செய்ய முடியவில்லை.

கல்யாணம் போல கூட்டம் களை கட்டியிருந்தாலும் உணர்ச்சி மங்களத்தில் ஒரு தொழிற்திறம் தூக்கலாக இருந்தது. வரவேற்புக்காக நின்றிருந்த பட்டாடை உடுத்திய மங்கைகள் வந்தோரை உற்றார் உறவினராய் பாவித்து செயற்கையாக இல்லாமல் அன்யோன்யமாக அழைத்தார்கள். ஆனால் வந்தவர்களெல்லாம் உண்மையில் அப்படி பழகியவர்கள் இல்லையென்பதால் செயற்கையாக சிரித்துவிட்டு சற்று தயக்கத்துடன் நுழைந்தார்கள். நிச்சயமாக வெங்கட்ராமன் அப்படி இருமனதாக நுழையவில்லை. தீர்மானகரமான நம்பிக்கையுடன் நேர்த்தியாக சென்று அமர்ந்தார். வந்தவர்களில் பலரகம் இருந்தார்கள். தன்னைப் போல மாத சம்பளக்காரர்கள், சில வியாபாரிகள், ஏன் சில பெண்களும் கூட கூட்டத்தில் இருந்தார்கள். தனக்கு தெரிந்தவர் யாரும் இருக்கக்கூடாது என்ற பதட்டத்துடன் நோட்டமிட்டவர் தனது நோக்கத்தில் வெற்றிபெற்றதும் இருமடங்கு அமைதியுடன் மேடையை நோக்கினார்.

அரங்கைச் சுற்றிலும் விழியை இழுக்கும் பிளக்ஸ் பேனர்களில் மின்னல் வேக சங்கிலித் தொடர் திட்டத்தின் செயல் முறைகள், வென்றவர்களின் கதைகள், சாதனைகள், சில ஆண்டுகளிலேயே இலட்சாதிபதியானவர்களின் வாக்குமூலங்கள்…… சற்று முன்னால் வந்து எல்லாவற்றையும் நிதானமாக பார்த்திருக்காலாமோ …. சரி கூட்டம் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம், பணவிவகாரத்தில் கிடைக்கும் எதனையும் அறிந்து ஆயத்தமாவதில் சுணக்கம் கூடாது …

அவரது விழிப்பு நிலையை மேடையிலிருந்து வந்த ஒரு இனிய குரல் வழிமறித்தது.

அந்தப் பெண்ணுக்கு  25 வயது இருக்கலாம். ஒரு நம்பிக்கையும், நிதானத்தையும் கலந்து வரும் ஆளுமைக்கேற்ற அழகு உடையுடன் தோற்றமளித்தவள் எல்லோரையும் சிரித்தவாறு வணங்கிவிட்டு பேச ஆரம்பித்தாள். ” உங்கள் எல்லோருக்கும் ஒரு பரிசை இப்பொதுதான் வழங்கியிருக்கிறேன். பதிலுக்கு நீங்கள் யாரும் எதுவும் தரவில்லையே” கூட்டம் என்னவென்று தெரியாமல் விழித்தது. ” என் புன்னகையை அளவில்லாமல் உங்களுக்கு வழங்கியிருக்கிறேன், பதிலுக்கு நீங்களும் தரலாமே”….இந்த அமர்க்களமான ஓப்பனிங்கில் மனதை இழந்த கூட்டம் வெகுநேரம் கைதட்டியது.

மற்றவர்கள் போல உணர்ச்சிவசப்படாத வெங்கட்ராமன் கைதட்டாமல் அமைதியாக ஆனால் உற்சாகமாக இருந்தார்.

மேடையில் கோட்டு சூட்டு போட்ட ஒரு முன் வழுக்கைக்காரரை நிறுவனத்தின் எம்.டி என்று ஆரம்பித்து பலரையும் அறிமுகம் செய்தவள், மின்னலின் வரலாற்றை  அருவியாய் மனதில் பதியும் வண்ணம் தெரிவித்தாள். அடுத்து எம்.டி, மின்னலின் செயல்முறைகளை பாதி புரிந்தது போலவும், மீதி இனிமேல் புரியும் என்று நம்பும்படியும் விளக்கினார். பத்தாயிரம் வைப்புத் தொகையுடன் உறுப்பினராக சேரும் ஒருவர் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலமென மூவரை புதிய உறுப்பினராக சேர்க்கவேண்டும்; இதில் முறையே 20,30,40 சதவீதம் கழிவாகத் தரப்படும்; இந்த மூவரும் அடுத்த ஜோடிகளை சேர்த்தால் இந்தக் கழிவில் பாதி கிடைக்கும்; ஒருவர் ஆரம்பித்து வைத்த சங்கிலி 100 நபர்களை இணைத்தால் போனசாக ஒரு லட்சம் கிடைக்கும். ஆயிரமாகப்பெருகினால் பத்து இலட்சம்.

இப்படி ஒரு வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? எண்களுக்கு ஏது முடிவு….கூட்டம் கணக்கில் மனதை பறிகொடுக்க வெங்கட்ராமன் மட்டும் தனக்கு தெரிந்தவர்களின் பட்டியலை நம்பிக்கையுடன் திட்டத்தில் போட்டு யோசிக்க ஆரம்பித்தார்

… தொழிலின் கட்டமைப்பு நன்றாகத்தான் இருக்கிறது…எனினும் இவர்கள் எப்படி நம்புவது?

pyramidநம்பிக்கையை ஊட்டிவிடும் வகையில் அந்த தொகுப்பாளினி விதவிதமான தோற்றத்தில் சிலரை அறிமுகம் செய்து வைத்தாள். அதில் கோட்டு சூட்டு போட்டவர், வேட்டி சட்டைக்காரர், நடுத்தரவயதில் ஒரு பெண்மணி என்று ஆளுக்கொரு விதத்தில், பெயருக்கொரு மதத்தில் கோவை, நெல்லை, மதுரை, தஞ்சை என எல்லா வகைத் தமிழிலிலும் தாங்கள் வெற்றி பெற்ற கதையை சுவாரசியம் கலந்த புள்ளிவிவரத்துடன் சொன்னார்கள். அதிலும் கோட்டு சூட்டு போட்டவர் உறுப்பினராகி இரண்டு வருடத்தில் 40 இலட்சம் சம்பாதித்திருப்பதாக கோவைத் தமிழில் சொன்னது எல்லோரையும் ஆச்சிரியப்படவைத்ததோடு நம்பிக்கையின் பிரஷரை நன்கு ஏற்றவும் தவறவில்லை.

ஒரு மண்ணின் மொழியில் ஒருவர் ஏமாற்றும் விதத்தில் பேச முடியாதே? ஏமாற்ற வேண்டும் என்று வந்து  விட்டாலே மொழி செயற்கைத் தன்மை அடைந்து காட்டிக் கொடுத்து விடாதா என்று நாம் தான் கதையில் எழுதுகிறோமே அன்றி கூட்டம் அப்படி ஏதும் ஆராய்ச்சி செய்யவில்லை என்பதோடு அந்த தேவ சாட்சியங்களை ஆச்சரியத்துடன் பார்த்தது.

வெங்கட்ராமனின் மனதில் இன்னமும் சந்தேகம் இருக்கிறதா, இல்லையா என்று ஊகித்தறிய முடியவில்லை.  சாட்சியங்கள் அரங்கேறிய சமயத்தில் சரவணபவனில் இருந்து வரவழைக்கப்பட்ட உளுந்த வடையும், டிகாஷன் காபியும் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. இது ஏதோ கடமைக்கு கொடுக்கப்பட்டதைப் போல இல்லாமல் அந்த வரவேற்பு அழகிகள் மனதார ஒருவர் விடாமல் கொடுத்து உபசரித்தார்கள். இந்த இனிய உபசரிப்புக்காகவே பலரும் மறுக்காமல் வாங்கிக் குடித்தார்கள். அதில் வெங்கட்ராமனும் உண்டு என்பதை ஈண்டு விளக்கத் தேவையில்லை. ஆனாலும் அப்போதும அவர் ஒரு நிதானத்துடனே யோசித்தவாறு இருந்ததால் மற்றவர்களைப்போல அவரை யாரும் ஏமாற்றி விட முடியாது என்பது போலவும் காட்சியளித்தார்.

அடுத்து, வந்திருந்த மக்கள் கேள்வி கேட்கலாம் என்று அறிவித்தார்கள். பலர் பலமாதிரி, யதார்த்தமாகவும், ஊகத்தின் அடிப்படையிலும் தினுசு தினுசாகக் கேட்டார்கள். இதற்கு எம்.டி சளைக்காமல் பல கோணங்களில் பதிலளித்தார். இறுதியாக “இன்னமும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையென்றால் வீட்டிற்கு சென்று நிதானமாக யோசித்து விட்டு முடிவெடுக்கலாம். உங்களுக்காக நாங்கள் எப்போதும் காத்திருப்போம், வாய்ப்புக்களை தவற விடாதீர்கள்” என்று அந்த வழுக்கை மனிதர் பேசியது மட்டும் வெங்கட்ராமனுக்கு பிடித்திருந்தது.

வந்தவர்கள் உறுப்பினர் விண்ணப்பத்தை ரூ.1000 கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லுமாறும், பின்பு அவர்கள் சேரும்போது வைப்புத்தொகையில் இந்தக் கட்டணம் கழித்துக் கொள்ளப்படும் என்றும் அந்த புன்னகை அழகி சொல்லி முடிப்பதற்குள் விண்ணப்பங்களை வைத்திருந்த கரங்கள் இருக்கைகளைத் தேடி வந்தன. பலரும் ஆயிரம் ரூபாய்தானே என்று வாங்க ஆரம்பித்தார்கள். வெங்கட்ராமன் இன்னமும் முடிவு செய்யவில்லை, விண்ணப்பத்தை வாங்குவதா, இல்லையா என்று.

டை கட்டிய சீருடை இளைஞர்கள் ஒவ்வொரு வரிசையாக சென்று வழங்குவதைப்போல திணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த தோரணையைப் பார்த்தால் அவர்கள் யாரிடமும் கேட்கவில்லை, சற்றே நாசுக்கான அதிகாரத்துடன் பேப்பரை நீட்டினார்கள் என்றும் சொல்லலாம். அவர் முறை வரும்போது வெங்கட்ராமன் குழம்பியவாறு ஏதோ வேண்டாமென திடீரென்று எழுந்து விட்டார். அதுவும் அவர்கள் கொடுத்த காபி, வடையை அருந்தியிருக்கிறோமே என்ற தர்மசங்கடத்தால் வந்த குழப்பம். இதுவும் திட்டமிட்டு நடக்கவில்லை, ரொம்ப தற்செயலாக நடந்தது . எழுந்தவரிடன் ஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டோமோ என்ற எண்ணம் ஓடாமல் இல்லை. இருந்தாலும் வேறு ஒரு சக்தியால் இயக்கப்படுபவர் போல வாசலை நோக்கி விரக்தியுடன் நடந்தார். இறுதியடியில் வெற்றி வாய்ப்பை தவறவிடுபவன் போலவும் அவரின் தோற்றம் இருந்தது. இதுவா, அதுவா என்று பிரித்தறியமுடியாத இருமை கலந்த ஓர்மையில் யந்திரமாய் இயங்கினார். இப்போது வாயிலில் அழகிகள் இல்லை, சபாரி அணிந்த மூன்று குண்டர்கள் வாட்டசாட்டமாய் கையில் லாக்கப் வளையம் போல விண்ணப்பங்களின் கத்தை ஆட்டிக் கொண்டிருந்தார்கள்.

” என்ன சார், கூட்டம் இன்னம் முடியலையே, முடிச்சுட்டு போகலாமே”  அதட்டலாக கேட்டவன் அவர் கையில் ஒன்றைத் திணித்தான். வயிற்றில் பதட்டமும், பயமும் மேலெழும்ப …”இல்ல வேணாம்.. இருக்கட்டும் ‘என்றெல்லாம் முயன்றவர் வேறு யாராவது தன்னைப் போல வருவார்களா அவர்களை அணிசேர்த்து வெளியேறிவிடலாம் என்று திரும்பிப்பார்த்தவரை ஒரு சபாரி கனைத்தவாறு புருவத்தை சுளித்தான். மறுபேச்சு இல்லாமல் பர்ஸை எடுத்தவர் இரண்டு 500 ரூபாய்த் தாளைக் கொடுத்து விட்டு பிழைக்கத் தெரியாத ஒரு பிள்ளையப் போல தேங்கித் தேங்கித் நடக்க ஆரம்பித்தார்.

பலரும்தான் விண்ணப்பத்தை வாங்கியிருக்கிறார்கள்…ஏன் எதிர்மறையாக சிந்திக்க வேண்டும்….இருக்கையிலேயே தெளிவாக வாங்கியிருக்கலாமே… இல்லையில்லை…சிலர் வாங்காமலும் சென்றார்கள்…அதுதான் சரியானதா…திரும்பிச் சென்று பணத்தை திருப்பிக் கேட்கலாமா…ஆயிரம் ரூபாய்க்காக விதவிதமான வீட்டுச் செலவுகள் காத்திருக்குமே…மண்டபத்தில் நம்மைத் தவிர மற்றவர்கள் இன்னமும் நம்பிக்கையை அறிவிக்கும் வண்ணம் சப்தமாய் பேசிக் கொண்டிருக்கிறார்களே….ஒருவேளை சேர்ந்துதான் பார்ப்போமே…நம்பிக்கையில்லாதவன் பணத்தை எந்தக் காலத்திலும் சம்பாதித்ததே இல்லை…

அந்த குறுகிய தருணத்தில் இருதரப்பு வாதங்களும் அவரை அமைதியடையச் செய்யவில்லை. எல்லாவற்றையும் விட ஆயிரம்ரூபாயை கொடுத்துவிட்டோம் என்ற உண்மை வழியை மறிக்கும் எமன் போல நினைவூட்டிக் கொண்டே இருந்தது. கடைசியில் இழந்ததுதான் மிச்சமென குற்ற உணர்வு மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. மண்டபத்தின் வெளியே வந்தவர் யாரும் தெரிந்தவர்கள் நம்மை  பார்த்துவிட்டார்களா என்று அலசத் தொடங்கினார்.

ஒருக்கால் தெரிந்தவர்களுடன் வந்திருந்தால் பேசிவிட்டு ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கலாமோ…விண்ணப்பத்தின் கட்டணத்தை 500 ரூபாயாக வைத்திருக்கலாம்..ஒரேயடியாக ஆயிரம் என்பதுதான் இவ்வளவு யோசிக்கவைக்கிறது….

அந்த ஞாயிற்றுக் கிழமையின் இனிய ஆரம்பம் மின்னல் போல சட்டென முடிவுக்கு வந்தது. இனித்த போது வேகமாகச் செல்லும் பொழுதுகள் வெறுக்கும் போது அணுஅணுவாய் நகர்ந்து சித்திரவதை செய்கிறது. இனி அவரது வாழ்வில் கமலா திருமண மண்டபத்தை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை, அதற்கு துணிவில்லை என்பதுபோல அவரது முகம் வாடிவிட்டது. காலையில் இருந்த தெளிவான மனநிலையின் மேல் இப்பொது வகைதொகையில்லாமல் கோபம் பீறிட்டு வந்தது. அது அநேகமாக மாலதியிடம் மட்டும் வெடித்து விட்டு அடங்கும் வல்லமை கொண்டது. எதையும் கோர்வையாக சிந்திக்கும் ஆற்றலை இந்த துயரமான தருணத்தில் இழந்தவர் ஏதோ ஒரு சுவரொட்டியில் ஒரு எண்ணைப் பார்த்ததும் கனவில் விழித்தவனைப் போல தலையை உலுக்கி விட்டு யோசிக்க ஆரம்பித்தார்.

வேறொன்றுமில்லை, இருபது வருடங்களாக எண்களோடு புழங்குவதையே வேலையாகக் கொண்டவர் ஆயிற்றே….கணக்குப் போட்டுப்பார்த்தார். 500 தலைகளை ஆயிரம் ரூபாயினால் பெருக்கினால் மொத்தம்  5,00,000 ரூபாய். மண்டபத்துக்கு 30,000, சரவணபவனுக்கு அதிகபட்சம் ரூ.20 வைத்தால் கூட 10,000, அப்புறம் அழகிகள், சபாரிகள், விளம்பரங்கள் எல்லாவற்றையும் கழித்துப் பார்த்தால் ஒரு இரண்டு அல்லது மூன்று இலட்சம் தேறுமே. அதில் அவரது ஆயிரமும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது தொண்டை துக்கத்தை அடக்க முடியாமல் கனக்க ஆரம்பித்தது. சரவணபவன் காப்பியின் சுவை அடிநாக்கில் மறக்க முடியாத கசப்பாய் கசியத் தொடங்கியது. கண் தொலைவில் இருந்தாலும் வீடு தெரியாமல் மங்கலாக வழிந்து நின்றது.

 

காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் !

37

மும்பை 26/11 : அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! ( பாகம் – 5 )

மும்பைத் தாக்குதலை யார் செய்திருப்பார்கள் என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் லஷ்கர் இ தொய்பா என்று மட்டும் பதிலளித்துவிட முடியாது. அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்தான், அரபு நாடுகள், இந்தியா போன்ற நாடுகளும், இசுலாத்தின் பெயரால் புனிதப்போர் நடத்தும் அல்கய்தாவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தப் பயங்கரவாதத்தின் காரணகர்த்தாக்களாக இருக்கின்றன. இன்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் அமெரிக்காதான் மும்பைத் தாக்குதலை நடத்திய இசுலாமிய பயங்கரவாதத்தை பெற்றெடுத்து வளர்த்தது என்று அறுதியிடலாம்.

முதலில் இந்தியாவின் பங்கைப் பார்ப்போம். தீவிரவாதம்தான் முசுலீம்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்பதான சூழ்நிலையை இந்து மதவெறியர்களும், இந்திய அரசு நிறுவனங்களும் எவ்வாறு ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை இத்தொடர் கட்டுரையின் முந்தைய பாகங்களில் பார்த்தோம். இங்கு காஷ்மீர் பிரச்சினையின் மூலம் இந்தியாவின் பாத்திரத்தைப் பார்க்கலாம்.

இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டதை எதிர்த்து காஷ்மீர் மக்கள் அறுபதாண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்தப்போராட்டத்தில் மதம் இருக்கவில்லை, தேசிய இன உணர்வுதான் இருந்தது. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்த இந்தியா, அரச பயங்கரவாதத்தின் மூலம் அந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி வந்தது. முதலில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற மதச்சார்பற்ற இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் முன்னிலை வகித்தன. பின்னர் இந்தியா, பாக்கிஸ்தான் இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் காஷ்மீர் பிரச்சினையை வைத்து தத்தமது நாட்டு மக்களிடம் தேசிய வெறியைக் கிளறிவிட்டு ஆதாயம் அடையப் பார்த்தன.

இப்படித்தான் பாக் ஆதரவு இசுலாமியத் தீவிரவாகக் குழுக்கள் பிறந்தன. இந்தியாவும் தனது பங்கிற்கு ஜே.கே.எல்.எப் போன்ற அமைப்புக்களை பிரித்தும் கைக்கூலிக் குழுக்களை உருவாக்குவதையும் செய்தது. இந்தியாவிலிருந்து காஷ்மீர் விடுதலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தை பாக் ஆதரவுக் குழுக்கள் பாக்கிஸ்தானுடன் இணையவேண்டுமென மாற்ற முயற்சித்தன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியத் துருப்புக்கள் செய்ய அட்டூழியத்தை வைத்து பாக்கிஸ்தான் ஆதாயம் தேடப் பார்த்தது. உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்கு காஷ்மீர் போராட்டம் பாக்கிஸ்தானுக்கு அளப்பரிய வாய்ப்பை அளித்தது. இப்படி இருநாடுகளும் காஷ்மீரை சூடு தணியாமல் பார்த்துக் கொண்டன. இருப்பினும் இந்த அநீதியில் இந்தியாவின் பாத்திரமே முதன்மையானது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஐந்து காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியப் படைவீரர் என்ற கணக்கில் சுமார் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவம் எல்லாவகை அடக்குமுறை அதிகாரங்களையும் கொண்டு ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இயற்கை அழகு கொஞ்சும் காஷ்மீரில் இன்று எங்கும் இராணுவ முகாம்கள்தான் முளைத்திருக்கின்றன. கடந்த 18 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சம் காஷ்மீர் முசுலீம்கள் இந்தியப் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 80,000 குழந்தைகள் அனாதை இல்லங்களில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 3000 இளைஞர்கள் அரசின் கணக்குப்படியே காணாமல் போகின்றனர். விதவைகளின் தேசமாக மாறிவருகிறது காஷ்மீர். இதுதான் நிலைமை என்றால் காஷ்மீரில் அரச பயங்கரவாதத்தின் எதிர்விளைவாக தீவிரவாதிகளின் பயங்கரவாதம் ஏன் தோன்றாது?

இந்தச் சூழ்நிலையில்தான் தனது உயிரைத் துச்சமென மதித்து வரும் பிதாயின் தாக்குதல்கள் காஷ்மீரிலும், இப்போது மும்பையிலும் நடக்கின்றன. இவர்கள் பொதுமக்களை இரக்கமின்றி கொல்லும் வெறித்தனத்தை இந்திய அரசிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர். அதுதான் இந்தியாவிற்கு புரியுமென நம்புகின்றனர். இப்போது போலீசின் பிடியிலிருக்கும் அஜ்மல் சிறு திருடனென்றும், ஏழையென்றும், தனது குடும்பத்திற்கு ஒன்றரை இலட்ச ரூபாய் கிடைக்கும் என்பதற்காக இந்தத் தற்கொலைத் தாக்குதலில் கலந்துகொண்டிருப்பதாக ஊடகங்கள் கட்டியமைத்திருக்கும் கதையிலிருந்து உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. காசு அல்ல, தனது உயிரைப் பணயம் வைக்கும் உணர்ச்சிதான் காஷ்மீரிலிருந்து கிடைக்கிறது என்பது முக்கியம். அந்த உணர்ச்சியை இந்திய அரசின் அதிகார்வப்பூர்வ பயங்கரவாதம் வரம்பில்லாமல் அளிக்கிறது.

காஷ்மீரிலிருப்பது பிரிவினைவாதமும், பயங்கரவாதமும்தான் என ஏனைய இந்தியாவை நம்பவைக்கும் இந்திய அரசின் முகமூடியைக் கிழித்தெரியும் வரை இந்தியாவிற்கும் இப்பிரச்சினையிலிருந்து விடுதலை இல்லை. நாளொன்றுக்கு 500 கோடி ரூபாயைக் காஷ்மீரிலிருக்கும் இராணுவத்திற்கு இந்திய அரசு செலவழிக்கிறது என்பதிலிருந்து கூட இந்த சீழ் பிடித்த புண்ணின் நாற்றத்தை முகரலாம். காஷ்மீர் மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் இந்த அரச பயங்கரவாதத்தையே தேசபக்தி என்பதாக சிலர் திமிருடன் பேசித் திரிகின்றனர்.

மும்பைத் தாக்குதலுக்கு மோடி போன்ற தேசபக்த சர்வாதிகாரிகளின் ஆட்சிதான் தீர்வு என்று எழுதும் டோண்டு ராகவனுக்கோ, டெல்லியிலிருந்து கொண்டு இந்துமதவெறியர்களின் இணையத் தளபதியாக கோட்சில்லா, பெரியார் கிரிட்டிக் என்ற பெயர்களில் பின்னூட்டமிடும் ரவி ஸ்ரீனிவாசுக்கோ, குமரி முனையிலிருந்து தனது நடுத்தர வர்கக்க அற்ப வாழ்க்கையையே மாபெரும் ரசனையாக வாசகருக்குக் கற்றுத் தரும் தேசபக்தர் ஜெயமோகனுக்கோ, மற்றும் பாரத மாதவுக்கு போட்டோவில் பூஜை செய்யும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கோ தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்து பாக் வசமிருக்கும் காஷ்மீரில் இருக்கும் போராளிக் குழுக்களைத் தாக்கி அழிப்பதற்கு தற்கொலைப் படையாக அனுப்பினால் ஒத்துக் கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள். அனுதினமும் எல்லா க்ஷேமங்களையும் அனுபவித்து வாழும் அவர்கள், வாழ்க்கையில் எதையும் இழக்கவில்லை. சொந்த வாழ்க்கையையும், நிம்மதியான குடும்பத்தையும், உற்றார் உறவினரையும் அப்படி இழந்தவன்தான் தன்னை அழிப்பதற்கும் தயாராய் வருவான். மூன்று வேளையும் மூச்சுத்திணற தின்று வாழும் ஜன்மங்களுக்கு இந்த இழப்பின் வலி தெரியாது.

இந்த ஜென்மங்கள்தான் மும்பைத் தாக்குதலை ஒட்டி டெல்லி சிறையிலிருக்கும் அப்சல் குருவை உடனே தூக்கில் போடவேண்டுமெனத் துடிக்கின்றன. அதிலும் அத்வானி அன்கோ இதில் இன்னும் அவசரமாகப் பதறுவதற்குக் காரணமுண்டு.

90களின் பிற்பகுதியில் ஒரு போராளிக் குழுவில் சேர்ந்து பாக் வசமிருக்கும் காஷ்மீருக்குச் சென்று ஆயுதப் பயிற்சியெல்லாம் எடுத்த அப்சல் குரு பின்னர் அதில் நம்பிக்கையிழந்து போலீசில் சரணடைந்து நிம்மதியாக வாழ நினைக்கிறார். ஆனால் திருமணம் முடிந்து குழந்தை குடும்பமென வாழும் அவரை போலீசார் நிம்மதியாக வாழ விடவில்லை. அன்றாட வாழ்விற்கே அல்லல்படும் அவரிடமிருந்து அவ்வப்போது பணம் பறித்துக் கொண்டும் அவரை ஆள்காட்டியாக பணியாற்றுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இதை மறுத்தால் அவரை ஒரு என்கவுண்டரில் போட்டுத்தள்ளிவிட்டு ஒரு பயங்கவராதியைக் கொன்றாதக அறிவிப்போமென மிரட்டுகின்றனர். இதற்கு பயந்து கொண்டே ஜம்மு காஷ்மீர் சிறப்பு போலீசார் சொல்லும் எல்லா வேலைகளையும் அவர் மறுக்காமல் செய்கின்றார்.

அப்படித்தான் 2001 ஆம் ஆண்டு ஒரு போலீசு அதிகாரி அவரிடம் ஒரு நபரை அறிமுகம் செய்து டெல்லியில் விட்டுவிட்டு தேவையான உதவிகள் செய்யுமாறு உத்தரவிடுகிறார். அதை மறுக்காமல் செய்யும் அப்சல்குரு அதை முடித்துவிட்டு தனது ஊருக்குத் திரும்பும் போது பேருந்து நிலையத்தில் கைது செய்யப்படுகிறார். அவர் அழைத்துச் சென்ற நபர் பாரளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டு இறந்து போகும் குழுவில் உள்ளவர். அந்தப் போராளி அப்சல் குருவின் செல்பேசியில் இரண்டுதடவைகள் பேசினார் என்பதுதான் போலீசார் முன்வைத்து நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட ஒரே ஆதாரம். இதற்காகத்தான் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இனி அடுத்த முறை தாக்குதலுக்கு வரும் தீவிரவாதிகள் அவர்கள் செல்பேசியிலிருந்து அத்வானிக்கும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் மிஸ்டு கால் கொடுப்பதாக வைத்துக்கொண்டால் அவர்களுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்படுமா?

அப்சல் குருவின் இந்த உண்மையான வாக்குமூலத்தை மறைத்த போலீசார் அவரை சித்திரவதை  செய்து தங்களுக்கேற்ற வாக்குமூலத்தை வாங்கிக் கொள்கின்றனர். முறையான நீதிமன்ற விசாரணையும், சட்ட உதவியும் அவருக்கு மறுக்கப்படுகிறது. இதைத்தான் அருந்ததிராயும், சிவில் குடியுரிமை அமைப்புக்களும் இந்த வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு போராடினர். அப்படி மறுவிசாரணை செய்தால் 2001 பாரளுமன்றத் தாக்குதலில் போலீசாரும் அவ்வகையில் பா.ஜ.க கூட்டணி அரசும் ஈடுபட்டிருப்பது தெரியவரும். இது மத்திய அரசுக்கு தெரிந்தே நடந்த பயங்கரவாதம் என்பதையும் அதை வைத்தது பாக்குடன் போரில் ஈடுபட்டு அரசியல் ஆதாயம் அடைய முயன்ற கதையும் அம்பலத்திற்கு வரும் என்பதால்தான் அத்வானி அன்கோ அப்சல் குருவை உடனே தூக்கில் போட வேண்டுமென இப்போதும் வற்புறுத்துகின்றனர். ஒருவேளை அவர்கள் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இதை முதல் வேலையாகச் செய்வதற்கு வாய்ப்புண்டு.

அப்சல் குருவின் கதையிலேயே காஷ்மீர் தீவிரவாதம்பற்றிய இந்திய அரசின் சதிகளும், சூழ்ச்சிகளும் இருக்கும் பட்சத்தில் நாம் எல்லா பயங்கரவாதங்களையும் இப்படித்தான் சந்தேகிக்க முடியும். மும்பை பயங்கரவாதமும் பல பெரிய கைகளுக்கு தெரிந்தே நடந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. அந்தப் பெரிய கை அமெரிக்காதான் என்பதோடு அந்தக் கைக்குள்தான் பாக், ஐ.எஸ்.ஐ போன்ற சிறிய கைகள் வருகின்றன என்பது உண்மை. முதலில் இன்றைக்கு ஏகாதிபத்தியங்கள், சர்வதேசம் பேசும் இசுலாமியத் தீவிரவாதம் குறித்து உலகை பயமுறுத்தும் கதையைப் பார்க்கலாம். இந்த ஜிகாதி பயங்கரவாதமே அமெரிக்கா பெற்றெடுத்து வளர்த்த செல்லப்பிள்ளை என்பதை வரும் பாகத்தில் ஆராய்வோம்.

-தொடரும்

 

போலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா ?

19

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 4 )

மும்பையில் உயிரிழந்தர்கள் குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்களுக்காக தமிழ் சினிமா நடிகர்கள் நடிகர் சங்க கட்டிடத்தில் மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினார்கள். சர்வதேசத் தீவிரவாதிகளை தனியொரு போலீசு அதிகாரியாக எதிர்த்து நின்று வீழ்த்தியதாக பல திரைப்படங்களைக் கொடுத்தவர்கள் நன்றிக் கடனாக இதைக்கூட செய்யவில்லையென்றால் எப்படி? அல்லது யாராவது ஒருவர் ஒருநாள் உண்ணாவிரதமென்று கொளுத்திப் போட்டால் ஒரு நாள் பிழைப்பு போய்விடுமென்பதாலும் அவசரமாக இந்தச் சடங்கை செய்து முடித்தார்கள்.

பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட பின்னர் பாதுகாப்பான ஞாயிற்றுக் கிழமையன்று மராட்டிய (முன்னாள்) முதல்வர் விலாஜிராவ் தேஷ்முக், தாஜ் ஓட்டலைப் பார்வையிடச் சென்றார். அவருடன் நடிகரும் மகனுமான ரித்தீஷ் தேஷ்முக்கும், இந்தித் திரைப்பட பிரபலம் ராம் கோபால் வர்மாவும் சென்றார்கள். தெறித்து விழுந்த இரத்தக்கறை இன்னமும் காயாத நிலையில் அதை சினிமாவாக்க லொகேஷன் பார்ப்பதற்கு ஒரு இயக்குநரை மாநில முதல்வர் அழைத்துச் செல்கிறார். அந்தப் படத்தில் அவர் மகன்தான் நாயகனென்றும் தகவல். சிவாஜ டெர்மினசில் கொல்லப்பட்ட மக்களின் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கூட மும்பையின் அவலத்தை சினிமாவாக்கி காசாக்க முனைகிறார்கள் என்றால் என்னவென்று சொல்ல?

இதில் சினிமாக்காரர்களை குற்றம் சொல்லுவதை விட நாளை அந்த சினிமா வந்தால் அதை பரபரப்பாக வெற்றிபெறச் செய்யும் இரசிகர்கள்தான் நம் விமரிசினத்திற்குறியவர்கள். அந்த இரசனைதான் மும்பை தாக்குதலில் உயிரிழந்த கமாண்டோக்களை சினிமா ஹீரோக்களைப் போல புகழ்கிறது. நாடு முழுக்க பாராட்டும், வாழ்த்தும் குவிகிறது. கொல்லப்பட்ட மக்களுக்கு ஓரிரு இலட்சங்களை வழங்கும் அரசுகள் வீரர்களுக்கு மட்டும் பல இலட்சங்களை அள்ளி வழங்குகின்றன. பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியாராவோ அவர்களது குடும்பத்தாருக்கு கேஸ் உரிமம் அல்லது பெட்ரோல் ஏஜென்சி வழங்கப்படும் என்கிறார். உயிரிழக்கும் அபாயமுள்ள போர்த்தொழிலில் ஈடுபடுவதற்குத்தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள் கடமையைச் செய்வதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்?

மும்பையில் உடன் பணியாற்றும் வீரரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மேஜர் சந்தீப் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார். பெங்களூரிலிருக்கும் அவரது இல்லத்தில் நடந்த இறுதிச் சடங்கில் உள்ளூர் அரசியல்வாதிகள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த மேஜர் ஒரு மலையாளி என்பதால் கேரளப்பத்திரிகைகள் அம்மாநில முதல்வர் கலந்து கொள்ளாதது குறித்து தேசபக்தி சென்டிமெண்டைக் கிளறி விடுகின்றன. பொதுவாகவே மலையாளிகளுக்கு ‘இந்திய உணர்வும், தேசபக்தியும்’ கொஞ்சம் அதிகம்தான். இதனால் தேசபக்த நெருக்கடிக்காளான முதல்வர் அச்சுதானந்தன் பெங்களுரு செல்கிறார். ஆனால் மேஜர் சந்தீப்பின் தந்தை உன்னி கிருஷ்ணணோ வீட்டிற்கு வந்த முதல்வரை அவமரியாதை செய்து அனுப்புகிறார். தன் மகன் ஒருமலையாளி இல்லை, அவன் ஒரு இந்தியன் என்பதாகவும், பத்திரிகைகளின் நிர்ப்பந்தத்தால் வந்த முதல்வரின் ஆறுதல் தேவையில்லையென திமிராகப் பேசுகிறார்.

நாடு முழுக்க எழுப்பிவிடப்பட்ட ஹீரோயிச உணர்வின் மேட்டிமைத்தனத்தில் உன்னி கிருஷ்ணன் தன் மகன் மாபெரும் சாதனை செய்த மிகப்பெரிய தியாகி என்றெல்லாம் கற்பித்துக் கொள்கிறார். இந்த மேஜர் மட்டும் இங்கு பிறக்கவில்லையென்றால் ஒரு நாய் கூட இந்த வீட்டிற்கு செல்லாது என பொருத்தமாக பேசிய அச்சுதானந்தன் பின்னர் எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள் தந்த நெருக்குதலால் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அரசியல்வாதிகளின் மீது மக்களுக்குள்ள வெறுப்பு அதிகாரவர்கக்த்தின் ஒரு பிரிவாக இருக்கும் இராணுவத்தை தேசபக்தியின் சின்னமாக போற்றவைக்கிறது. உண்மையில் காவல் துறைக்கும், இராணுவத்திற்கும் உள்ள முக்கியமான வேலை என்ன?

போலீசும், இராணுவமும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளைக் காப்பாற்றுகிறது என்பதால்தான் அவர்கள் செல்லப்பிள்ளைகள் போல சீராட்டி வளர்க்கப்படுகிறார்கள். மும்பையில் கொல்லப்பட்ட கமாண்டோக்களின் பிரதான பணியைப் பார்த்தாலே இது விளங்கும்.

உள்நாட்டில் தீவிரவாதிகளின் கடத்தல், தீடீர் தாக்குதலை முறியடிப்பதற்காக 1984 ஆம் ஆண்டு என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை உருவாக்கப்படுகிறது. இதில் எஸ்.ஏ.ஜி, எஸ்.ஆர்.ஜி என இரண்டு பிரிவுகள் முறையே இராணுவம் மற்றும் துணை இராணுவப்படையினரிடமிருந்து தெரிவுசெய்யப்பட்டு கமாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது. எஸ்.ஆர்.ஜி பிரிவில் பாதிப்பேர் முக்கியப் பிரமுகர் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளனர். இது போக எஸ்.பி.ஜி எனப்படும் விசேட பிரிவு இந்திரா காந்தி குடும்பத்தினர், பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் ஈடுபடுகிறது. சோனியா காந்தி குடும்பம், பிரதமர்கள் என விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கான பாதுகாப்பில் ஈடுபடும் இந்த எஸ்.பி.ஜியின் இவ்வாண்டு செலவு பட்ஜட் மட்டும் 180 கோடி. ஆனால் 100 கோடி மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து  காக்கும் என்.எஸ்.ஜியின் இவ்வாண்டு செலவு பட்ஜட் 117 கோடி மட்டுமே.

பிரமுகர் பாதுகாப்பில் இசட் பிளஸ், இசட், ஒய், எக்ஸ், என பல பிரிவுகள் உள்ளன. இசட் பிளஸ் வகையில்தான் அத்வானி, மோடி, ஜெயலிலிதா, அமர்சிங், முரளி மனோகர் ஜோஷி போன்ற பாசிஸ்ட்டுகள் உள்ளனர். இவர்களை என்.எஸ்.ஜியின் கறுப்பு பூனைகள் பாதுகாக்கின்றனர். இசட் பிரிவில் 68 பிரமுகர்களும், ஒய் பிரிவில் 243 பேரும், எக்ஸ் பிரிவில் 81 அரசியல்வாதிகளும் இத்தகைய விசேடப் படைப் பிரிவுகளால் பாதுகாக்கப்படுகின்றனர். இது போக டெல்லயில் மட்டும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கதின் பாதுகாப்பிற்காக 14,200 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநிலங்களில் கொடுக்கப்படும் பாதுகாப்பு தனி. மத்திய அரசில் மட்டும் பிரமுகர் பாதுகாப்பிற்காக தோராயமாக ஆண்டுதோறும் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இந்த டெல்லித் தலைவர்கள் விஜயம் செய்யும் போது பாதுகாப்பிற்காக மாநில அரசுகள் செலவழிக்கும் தொகை இக்கணக்கில் வராது என்றால் இதன் மொத்தத் தொகை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். இந்த வி.ஐ.பி பாதுகாப்பில் டெல்லி சீக்கியர்களைக் கொன்ற வழக்கிலிருக்கும் காங்கிரசின் சஜ்ஜன் குமார், கார்ப்பரேட் முதலாளிகளின் புரோக்கர் அமர் சிங், சந்தர்ப்பவாதத்திற்கு இலக்கணம் படைத்திருக்கும் தேவகவுடா போன்றவர்களும் அடக்கம்.

டெல்லி கமாண்டோப் படையைப் பார்த்து உள்ளுரில் அதேபோல ஆரம்பித்தார் அல்லி ராணி ஜெயலலிதா. 1992ஆம் ஆண்டு கிராக் கமாண்டோ படை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப்பிரிவில் இன்று 292 பேர்கள் உள்ளனர். இந்த பதினாறு ஆண்டில் 1996ஆம் ஆண்டு ரவுடி கபிலனை என்கவுண்டர் செய்தில் இந்தப் படையைச் சேர்ந்த பதினைந்து பேர்கள் கலந்து கொண்டனர். இதைத்தவிர இவர்களுக்கு வேறெந்த வேலையும் இல்லை. ஜெயலலிதாவின் தமிழக விஜயத்தில் பந்தாவுக்காக நிற்பதுதான் இப்படையின் சாதனை.

தற்போது தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயத்தில் சென்னை உள்ளதால் இப்படைக்கு நவீன ஆயுதங்களை வாங்க போலீசு அதிகாரிகள் அமெரிக்கா, ஜெர்மனி, இசுரேல் நாடுகளுக்குச் செல்லப் போகிறார்களாம். இப்படித்தான் நாடு முழுவதும் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசு அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு மட்டும் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. டெல்லியிலிருந்து ஒரு தலைவர் விஜயம் செய்தால் தனிவிமானம், புல்லட்புரூப் கார், நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சோதித்தல், எல்லாம் புயல் வேகத்தில் நடக்கும். ஆனால் மும்பைத் தாக்குதலில் இப்படையினரின் செயல்பாட்டைப் பார்த்தால் இப்படை யாருக்கானது என்பது புரியவரும்.

புதன்கிழமை இரவு சிவாஜி டெர்மினசுக்குள் தீவிரவாதிகள் நுழையும் போது மணி 9.25. அப்போது கேரளாவிலிருந்த முதல்வர் தேஷ்முக்கிடம் இத்தகவல் தெரிவிக்கப்படும்போது நேரம் 11.00. அவர் உடனே டெல்லியிலிருக்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் என்.எஸ்.ஜி படையினர் வேண்டுமெனக் கேட்டபோது நேரம் 11.30. அவர் எத்தனை வீரர்கள் வேண்டுமெனக் கேட்க முதல்வர் 200 எனப் பதிலளிக்கிறார். அடுத்து உள்துறை அமைச்சர் என்.எஸ்.ஜியின் தலைவர் ஜே.ஆர்.தத்தாவிடம் தொலைபேசியில் 200 வீரர்களை மும்பைக்கு அனுப்புமாறு உத்தரவிடுகிறார். தூக்கத்திலிருந்த கமாண்டோக்கள் எழுப்பப்பட்டு ஆயுதம், உடை தரித்து டெல்லி விமான நிலையம் செல்லும்போது நேரம் 1.00மணி. 200பேர்களை தாங்கிச் செல்லும் விமானம் அப்போது டெல்லியிலில்லை, சண்டீகரில் இருக்கிறது. அந்த நள்ளிரவில் ஐ.எல்.76 எனும் அந்த விமானத்தின் பைலட் எழுப்பப்பட்டு விமானத்தில் பெட்ரோல் நிரப்பி டெல்லி வந்து சேரும் போது நேரம் 2.00 மணி.

ஏர்பஸ், போயிங் போன்று இந்த விமானம் வேகமாக செல்லாதாம். டெல்லியிலிருந்து புறப்ப்பட்ட அந்த விமானம் மூன்று மணிநேரம் கழித்து அதிகாலை ஐந்து மணிக்கு மும்பை இறங்குகிறது. தூக்கக் கலக்கத்திலிருந்த கமாண்டோக்களை காத்திருந்த பேருந்துகள் ஏற்றிக் கொண்டு ஒரு இடத்திற்கு சென்று இறக்கியது. அங்கு ஆப்பரேஷன் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டு தீவிரவாதிகள் இருந்த இடத்திற்கு வீர்கள் செல்லும்போது மணி 7.30. அங்கு சாவகாசமாக உடைமைகளை இறக்கிய வீரர்கள் துப்பாக்கியை தூக்கியபடி நிலைகளுக்குச் செல்கின்றனர். ஹாலிவுட் ஆக்ஷன் படங்களைப் பார்க்கும் அறிவுஜீவிகளின் வாதப்படி தீவிரவாதிகள் தாக்கத் துவங்கிய அரை மணிநேரத்திற்குள் எதிர்த்தாக்குதலை ஆரம்பிக்க வேண்டுமாம். இல்லையேல் அவர்கள் தங்களது நிலையை பலப்படுத்திக் கொள்வார்களாம். இங்கு கிட்டத்தட்ட பதினொரு மணிநேரம் தரப்பட்டிருக்கிறது.

தீவிரவாதிகள் இருந்த கட்டிடங்கள் குறித்து வீரர்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாததால் ஆரம்பத்தில ஒரே குழப்பம். ஆனால் கராச்சியிலிருந்து முதன்முறையாக மும்பை வந்திருக்கும் தீவிரவாதிகள் அந்த ஓட்டல்களின் புவியியலை மனப்பாடம் செய்திருந்தனர். காடு, கிராமம், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் மட்டும் போரிட பயிற்சி பெற்றிருக்கும் வீரர்களுக்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் எப்படி சண்டையிடுவது என்று தெரியவில்லையாம். இதுவும் தீவிரவாதிகளுக்கு மட்டும் எப்படி தெரிந்திருந்தது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். எல்லா இடங்களையும் சுற்றி வளைத்து, தாக்குதல் தொடுக்கும் ஒன்பது தீவிரவாதிகளைக் கொல்லுவதற்கு மொத்தம் 60 மணிநேரத்தை, சிலநூறு வீரர்கள் எடுத்துக் கொண்டனர். அதிலும் இவர்களால் பணயக்கைதிகள் கொல்லப்பட்டது பற்றி கணக்கில்லை. நாரிமன் இல்லத்தில் கொல்லப்பட்ட 6 யூதர்களில் ஒரு சிலர் கமாண்டோக்களால் கொல்லப்பட்டதாக சில இசுரேலியர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் ராஜ்ஜிய உறவு பாதிக்கூடாது என்பதற்காக இசுரேல் அரசு இதை மறுத்திருக்கிறது.

அடுத்து மும்பையில் தீவிரவாதிகள் தாக்கப்போவதாக வந்த தகவலை ‘ரா’வும், ஐ.பியும் கடற்படைக்கும், மராட்டிய காவல் துறைக்கும் அனுப்பியதாகச் சாதிக்கின்றன. ஆனால் கடற்படை அட்மிரலும், மராட்டிய முதல்வரும் அப்படி ஒரு எச்சரிக்கை வரவேயில்லையென அடித்துக் கூறுகின்றனர். இதுதான் இவர்கள் செயல்படும் லட்சணமென்றால் புதிதாக வரப்போகும் தேசிய பெடரல் புலனாய்வு நிறுவனம் எதைச் சாதிக்கப்போகிறது? மாநில உரிமைகளுக்கு அப்பாற்பட்டு இந்தியா முழுவதும் நேரடியாக தலையீடு செய்யவும், கைது செய்யவும் அதிகாரம் கொண்ட இப்புதிய அமைப்பு மத்திய அரசின் சர்வாதிகார பணிகளுக்கே உதவி செய்யும். அதுவும் பா.ஜ.க ஆட்சியில் வந்தால் இந்துத்வத்தை எதிர்ப்பவர் அனைவரும் இப்பிரிவால் அடக்குமுறைக்குள்ளாவது நிச்சயம்.

பாக்கிற்கு ஐ.எஸ்.ஐ போல இந்தியாவிற்கு இருக்கும் ரா வின் ஒராண்டு பட்ஜட் ஆயிரம் கோடி ரூபாயாம். அதிலும் இந்தப்பணம் எப்படி ஏன் செலவழிக்கப்படுகிறது என்பது தேவரகசியம். பல ரா அதிகாரிகள் பிரம்மாண்டமாக வீடுகளை கட்டிக்கொண்டு ரா விற்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்களாம். மேலும் ரா வின் செயல்பாடுகள் என்பது ஐ.எஸ்.ஐயை விட சதித்தனமும் நரித்தனமும் நிறைந்தவை.

ஈழத்தில் போராளிக் குழுக்களை ஒன்றுக்கொன்று மோதவிட்டு அழித்தது, அதேபோல வடகிழக்கில் பல்வேறு தேசிய இனங்களுக்கான குழுக்களின் முரண்பாடுகளை வளர்த்து மோதவிட்டது, காஷ்மீரில் மதச்சார்பற்று இருந்த விடுதலைப் போராளிகளை மதச்சார்பாக மாற்றியது, கைக்கூலிக் குழுக்களை உருவாக்கியது, பாக்கிஸ்தானில் சன்னி பிரிவுக்கெதிரான ஷியா பிரிவுக்கு உதவி செய்தல், ஆப்கானில் வடக்குக்கூட்டணிக்கு ஆதராவாக வேலை செய்வது என அதன் கைங்கரியங்கள் பல. இதைத் தவிர மத்திய மாநில உளவுத் துறைகள் அனைத்தும் ஆளும் கட்சிக்கான அரசியல் உளவுப்பணிகளில் ஈடுபடுவதுதான் முக்கியமான பணி.

இந்திய ஆளும்வர்க்கங்களின் நலனுக்காக மட்டும் உருவாக்கப்படட இந்தப்படைப் பிரிவுகளும், புலனாய்வு அமைப்புக்களும் எந்தக் காலத்திலும் இந்திய மக்களைக் காப்பாற்ற முடியாது.

எவ்வித நியாயமுமின்றி அரசின் அலட்சியத்தால், அதிகார வர்க்கத்தின் திமிரால், ஏழையென்று ஒதுக்கும் இந்தச் சமூக அமைப்பால், நிஷா புயல் தாக்கப்போகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும் 130க்கும் மேற்பட்ட மக்கள் தமிழகத்தில் இறந்துள்ளனர். இவர்களைக் காப்பாற்ற வக்கில்லாத அரசு இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்பதில்லை. ஆனால் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களை தடியடி மூலம் கலைக்கும் போலீசுக்கு ஒரு ஆபத்தென்றால் அரசின் அடி முதல் தலை வரை துடிக்கும். மும்பைக்கு வந்த பயங்கரவாதிகளைக் கொன்று பல மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த போலீசு, இராணுவ வீரர்களை இவ்வளவு அலட்சியமாகப் பார்க்கலாமா என சில ‘ தேச பக்தர்கள் ‘ கொதிக்கலாம். சினிமாவின் செல்வாக்கில் இராணுவ வீரர்களை ஹீரோக்களாக பாவிப்பவர்கள் எவரும் போலீசு, இராணுவத்தின் உண்மை முகத்தை தரிசித்திருக்க வாய்ப்பில்லை.

அமைதிப் படை என்ற பெயரில் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவம் கொன்ற கணக்கையும், கற்பழித்த கணக்கையும் ஈழத்தமிழர்களிடம் கேட்கவேண்டும். மனோரமா என்ற பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் பாலியல் பலாத்காரப்படுத்திச் சுட்டுக் கொன்ற அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவினரைக் கண்டித்து “இந்திய இராணுவமே எங்களையும் பாலியல் பலாத்காரம் செய்” என்ற பதாகையை ஏந்திக்கொண்டு நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் நடத்திய மணிப்பூர் தாய்மார்களிடம் கேட்டுப் பார்க்க வேண்டும். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம்” என்ற சட்டத்தின் பாதுகாப்பில் வடகிழக்கு மாநிலங்கள் முழுக்க அட்டூழியம் செய்யும் இந்திய ராணுவத்தைப் பற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டால் உண்மை தெரியும். ஐந்து லட்சம் துருப்புக்களை குவித்து எல்லாவகை ஒடுக்குமுறைகளையும் செய்யும் இந்திய ராணுவம் மற்றும் துணை இராணுவத்தைப் பற்றி காஷ்மீர் மக்களிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.

போலீசுக்காரர்களைப் பற்றி அதிகம் விளக்கத்தேவையில்லை. ஒரு காவல் நிலையத்தின் அருகிலேயே மக்களைக் கேட்டால் காததூரம் ஓடுவார்கள். இந்தியா முழுவதும் போராடும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரையும் தடியடி, துப்பாக்கிச்சூடு செய்து கொல்லுவதுதான் இத்துறையின் முதன்மைப்பணி. தாமிரபரணிப்படுகொலை முதல் நந்தி கிராம்  படுகொலை வரை பல எடுத்துக்காட்டுகளை சமீப ஆண்டுகளில் பார்த்திருக்கிறோம்.

எனவே ஆட்சியாளர்களின் நலன்களைக் காப்பாற்றுவதற்காக இயங்கும் இந்தப் படைகள் புதிது புதிதாக பல பெயர்களில் பல நூறு கோடி மூலதனத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. இந்திய அரசின் பெரும்பான்மைச் செலவே பாதுகாப்புத் துறைக்குத்தான் என்றாகிவிட்டது. அரசியல்வாதிகள் மோசம் அதிகாரவர்க்கம் அதாவது ஐ.பி.எஸ், மற்றும் இராணுவ அதிகாரிகளின் கைகள் கட்டப்படவில்லை என்றால்  அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்களென தற்போது பலரும் பேசுகிறார்கள். தெகல்கா நடத்திய முதல் ஆபரேஷனே இராணுவ அதிகாரிகளின் ஊழலை அம்பலப்படுத்தியது நினைவிருக்கலாம். இதுபோக கார்கில் போருக்கு ஆயுதம் வாங்கியதில் மட்டுமல்ல விருது வாங்கியதிலும் ஊழல் சந்தி சிரித்தது இங்கே நினைவு கொள்ளவேண்டும். வீரப்பனைப் பிடிக்கிறேன் என்ற பெயரில் தேவாரத்தின் அதிரடைப்படை நடத்திய அட்டூழியங்களை சதாசிவம் கமிஷனே அம்பலப்படுத்தியிருக்கிறது. இயல்பாகவே மக்களுக்கெதிரான வெறியைக் கொண்டிருக்கும் போலீசு, இராணுவத்தைப் போற்றுவது தற்கொலைக்கு ஒப்பானது.

இறுதியாக மும்பைத் தாக்குதலினால் கண்ட பலன் என்ன? இதுவரை அத்வானி, மன்மோகன் சிங், சோனியா காந்தி, ஜெயலலிதா போன்ற அரசியல் வாதிகளுக்கு கிடைத்த அதி உயர் பாதுகாப்பு இனி அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ராகுல் பஜாஜ், முத்தையா செட்டியார் போன்ற முதலாளிகளுக்கும் கிடைக்கும்.  மக்களைப் பொறுத்தவரை தீவிரவாதிகள் மற்றும் இராணுவம் இரண்டு பிரிவினரிடமிருந்தும் பாதுகாப்பில்லை என்பதுதான் யதார்த்தம்.

அடுத்ததாக நாம் அலசவேண்டிய கேள்வி மும்பைத் தாக்குதலை யார் செய்திருப்பார்கள்?

-தொடரும்

 

பொடா முதலிய அடக்குமுறை சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவா? (பாகம்- 3 )

26

குண்டு வெடிக்கும் ஒவ்வொரு முறையும் தெற்கே ஜெயலலிதா தொடங்கி வடக்கே அத்வானி வரை பொடா சட்டம் திரும்ப வேண்டுமென பல்லவி பாடுவது வாடிக்கை. ஜெயலலிதா இதற்கென ரெடிமேடாக ஒரு அறிக்கை தயாராக வைத்திருக்கிறார். துக்ளக் சோவோ பொடாவை விட கடுமையான பிரிவுகள் கொண்ட அடக்குமுறைச் சட்டம் தேவையென வாதிடுகிறார்.

அன்புச் சகோதரி அவரது கூட்டணியிலிருக்கும் அன்புச் சகோதரர் புரட்சிப் புயல் வைகோவை உள்ளே தள்ளியது, நக்கீரன் கோபாலை எந்தக் காரணமுமின்றி சிறை வைத்தது, ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த குற்றத்திற்காக பழநெடுமாறன், சுப.வீரபாண்டியனை கைது செய்தது போன்றவையெல்லாம் பொடாவின் யோக்கியதைக்கு சான்று பகரும். தமிழகம் மட்டுமல் நாடு முழுவதும் அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கென்றே பொடா சட்டம் பயன்பட்டதென்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

2001இல் நடந்த பாரளுமன்றத் தாக்குதலுக்காக குற்றம் சுமத்தப்பட்ட ஜவகர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிலானி கூட பொடாவில்தான் கைது செய்யப்பட்டார். அவசர அவசரமாக பொடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கிலானிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதி மன்றத்தில் அவர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார். இனி பொடா நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது என்று சட்டத்தை மாற்றினால் இவரைப்போன்ற அப்பாவிகளைத் தூக்கில் போட வசதியாக இருக்கும்.

இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 3 சதவீதம் கூட குற்றமென நிரூபிக்கப்படவில்லை. குஜராத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முசுலீம்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. பா.ஜ.க அரசுகள் இந்துமதவெறியைத் தக்கவைக்கும் முகமாக முசுலீம்களை அடக்கிவிட்டதாக காண்பிப்பதற்கு இச்சட்டம் பயன்பட்டபோது மற்ற மாநிலங்களில் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், போலீசு அதிகாரிகள் தங்களது எதிரிகளைத் தண்டிப்பதற்கு பயன்படுத்தினார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இச்சட்டம் அமுலிலிருந்த காலத்தில் தீவிரவாதிகளின் குண்டுகள் வெடிக்காமலில்லை. தீவிரவாதமும் வளராமலில்லை. குண்டு வெடிப்பினாலும், அதற்கென அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்களினாலும் என இருவிதத்திலும் இசுலாமிய மக்கள்தான் பாதிக்கப்பட்டார்கள். எல்லா குண்டுகளும் முசுலீம்களுக்கு மட்டும் விலக்கு கொடுக்கிறதா என்ன? மும்பைத் தாக்குதலின் முதல் இடமான சிவாஜி டெர்மினசில் கொல்லப்பட்ட 58 பேரில் 22 பேர் முசுலீம்கள் என்றும் காயம் பட்டவர்களில் இதைவிட அதிகமானோர் உள்ளதாகவும் தினசரிகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்பிற்காக அப்பாவி இசுலாமிய மக்கள் பலரும் கைது செய்யப்பட்டுத்தான் வருகின்றனர். தீவிரவாதிகளும், தீவிரவாதிகளல்லாதாரும்  என்கவுண்டரில் கொல்லப்படுவதும் குறையவில்லை. மோடியின் குஜராத் போலீசார் சோராபுதீன் என்ற அப்பாவியையும் அவரது மனைவியையும் தீவிரவாதிகளென்று சுட்டுக் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்திய சில விதிவிலக்குகளைத் தவிர யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறதா என்ன? இமாம் அலி குழுவில் உள்ள பெண்தீவிரவாதி ஆயிஷா தமிழகத்தையே கலக்கி வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகைகள் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டன. உண்மையில் அந்தப் பெண்ணுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென நீரூபணம் ஆகியும் சமூக அங்கீகாரமில்லாமல் அந்தப் பெண் இன்றும் வாழ்வதற்கே சிரமப்படுகிறார். பொடா சட்டம் அமுலில்லை என்பதால் இவையெல்லாம் நடைபெறாமல் போய்விட்டதா என்ன? ற்போது கூட 9 தீவிரவாதிகள் சுட்டுத்தானே கொல்லப்பட்டனர்? ஆக சுடுவதற்கே இவ்வளவு அதிகாரம் இருக்கும் போது பொடா சட்டமோ அதை விட கடுமையான சட்டமோ தேவைப்படுவதன் காரணமென்ன?

இந்தச் சட்டங்கள் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமல்படுத்தப்படுவதில்லை. உண்மையான மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர, சிறுபான்மை இன அமைப்புக்களை ஒடுக்குவதற்குத்தான் பொடா சட்டம் பயன்பட்டது. பல்வேறு மதங்களும், மொழிகளும், தேசிய இனங்களும் வாழும் இந்தியாவில் தனது உரிமைகள் மறுக்கப்படுவதாக குரலெழுப்பும் ஒரு பிரிவை நசுக்குவதற்குத்தான் அடக்குமுறைச் சட்டங்கள் தேவைப்படுகின்றன.

ஜெர்மனியில் யூதர்களுக்கெதிரான எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், நடவடிக்கைகளும் ஹிட்லரின் நாஸிக் கட்சியால் செயல்படுத்தப்பட்டதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இன்றும் ஆஸ்திரேலியா, பிரான்சு, ரசியா, இங்கிலாந்து முதலான நாடுகளில் இனவெறியை அடிப்படையாகக் கொண்ட பாசிசக் கட்சிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கோடுதான் இயங்கி வருகின்றன. மற்ற இனத்தவர்களை தமது நாட்டிலிருந்தே விரட்டவேண்டுமென இக்கட்சிகள் கோரும் சட்டங்களுக்கும், சங்க பரிவாரங்கள் விரும்பும் சட்டங்களுக்கும், அங்கே இனவெறி, இங்கே மதவெறி என்பதைத் தவிர எந்த வேறுபாடுமில்லை. இலங்கையில் கூட சிங்கள இனவெறி அரசு இந்தச்சட்டங்களை வைத்து புலிகளை ஒடுக்குகிறேன் என கொழும்பிலிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை கேள்வி முறையின்றி கைது செய்து வதைக்கவில்லையா? தீடீரென்று ஒருநாள் காலையில் எல்லா தமிழ் மக்களையும் பிடித்து நகருக்கு வெளியே தள்ளி வெளியேறுங்கள் என்று ஆணையிடவில்லையா?

இந்த இனவெறிக்கட்சிகளின் ஆட்சியில்லாமலே 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் நம்மூர் ஜார்ஜ் பெர்னாண்டசு தொட்டு ஆசிய இனத்தவர் பலரும் அவர்கள் டாக்டர்களாகவோ, பணக்காரர்களாகவோ இருந்தாலும் அவமதிக்கப்படுவதும், பலர் சிலநாட்கள் சிறைபடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆகவேதான் அடக்குமுறைச் சட்டங்கள் குறிப்பிட்ட பிரிவு மக்களை ஒடுக்குவதற்கான பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் ஈழம் என்று பேசினால் பொடா, காஷ்மீரில் சுதந்திரம் என்று உச்சரித்தால் பொடா, வடகிழக்கில் இந்தியா ஒடுக்குகிறது என உண்மையை உரைத்தால் பொடா, மோடியின் குஜராத்தில் முசுலீம் என்று சொன்னாலே பொடா…இவைதானே நடந்தது, நடக்கவும் போகிறது? இப்போது குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை எதிர்த்து சட்டரீதியான போராட்டத்தை நடத்தும் சமூக ஆர்வலர் தீஸ்தா சேதல்வாத், காஷ்மீருக்கு விடுதலை தரவேண்டுமென வலியுறுத்தும் அருந்ததி ராய் போன்ற நடுநிலைமைக் குரல்களைக் கூட ஒடுக்கவேண்டும் என்பதுதான் இந்து மதவெறியர்களின் நோக்கம். பொடா சட்டமிருந்தால் அருந்ததிராயை உள்ளே தள்ளலாம். அவரையே ஒடுக்கிவிட்டால் அப்புறம் எந்த அறிவுஜீவி குரல் கொடுக்க முடியும்?

அடக்குமுறைச் சட்டங்கள் எல்லா ஜனநாயகக் குரல்களையும் நெரித்து பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதற்கு மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாண்டு செப்டம்பரில் மராட்டியத்தின் மலேகான் நகரில் இசுலாமிய மக்கள் வாழும் பகுதியில் மசூதிக்கு அருகில் இரு குண்டுகள் வெடித்து ஏழுபேர் கொல்லப்பட்டனர். வழக்கம் போல இசுலாமியத் தீவிரவாதம், ஜிகாத், ஐ.எஸ்.ஐ என பா.ஜ.க பரிவாரங்கள் லாவணி பாடின. இறுதியில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மூலம் இந்த பயங்கரத்தை நடத்தியவர்கள் இந்து பயங்கரவாதிகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதை மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசின் அதிகாரி ஹேமந்த் கார்கரே புலனாய்வு செய்து வெளியே கொண்டுவந்தார். துரதிர்ஷடவசமாக தற்போதைய மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளால் இவர் கொல்லப்பட்டது சங்க பரிவாரங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளித்திருக்கும். இசுலாமியத் தீவிரவாதம் இந்துமதவெறியர்களுக்கு அளித்திருக்கும் பரிசு! இதைக் கொண்டாடும் விதமாக கார்கரே குடும்பத்திற்கு நிதியுதவி என்ற பெயரில் பிச்சையிட முன்வந்த மோடியின் செயலை கார்கரேயின் மனைவி மறுத்திருக்கிறார்.

பிரக்யா சிங் தாக்கூர் என்ற 37 வயது பெண் சாமியார், சில முன்னாள் இன்னாள் இராணுவ அதிகாரிகள் என ஏழுபேர் மலேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த பெண் சாமியார் அனல் கக்கும் பேச்சிற்கு அதாவது இசுலாமியர்கள் மீது துவேசத்தைக் கிளப்பிவிடுவதில் வட மாநிலங்களில் பிரபலமானவர். ஆரம்பத்தில் இவர் யார் என்றே தெரியாது என்றவர்கள் ம.பி முதல்வர் சவுகான், பா.ஜ.க தலைவர் ராஜநாத் சிங்குடன் இருக்கும் புகைப்படம் வெளியானதும் தலைவர்களை பலர் பார்ப்பார்கள் எனறு சமாளித்தார்கள். அடுத்து உமாபாரதியும், பால்தாக்கரேயும் இந்தப் பெண்சாமியாரை இந்துக்களின் தியாகி என்று போற்றத் துவங்கியதும் இப்போது அத்வானியே இவருக்காக குரல் கொடுக்கிறார். இவரது வழக்கிற்காக இந்துமதவெறியர்கள் வெளிப்படையாக வசூல் செய்வதும் வழக்கறிஞரை நியமிப்பதும் அவ்வளவு ஏன் ம.பி சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட தொகுதி தருவதாக உமாபாரதி அறிவித்திருக்கிறார்.

ஆக தங்களுக்காக குண்டுவெடிக்கச் செய்து முசுலீம்கள் பலரை கொன்ற ஒரு பயங்கரவாதிக்கு மட்டும் இந்துமதவெறியர்கள் பட்டுக் கம்பளம் விரிப்பார்கள். இந்த வழக்கில் மட்டும் பொடா சட்டம் வேண்டுமென அவர்கள் தந்திரமாக கோரவில்லை. இந்த அழுகுணி ஆட்டத்தில் துக்ளக் சோவும் உண்டு என்பது முக்கியம். தற்போது இந்த குண்டுவெடிப்புக்கு பணம் தந்தவர் தொகாடியா என்பதும், ராஜநாத் சிங்கின் தம்பி குற்றவாளிகளோடு தொடர்புள்ளவர் என்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கூடுதலாக சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் வண்டியில் குண்டு வெடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கிலும் மலேகான் குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில் கார்கரே கொல்லப்பட்டிருப்பது நமக்கு வேறொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இராணுவத்திடம் உள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கூட இந்துமதவெறியர்களின் கைகளுக்கு கிடைத்திருப்பது அதிர்ச்சிக்குறிய ஒன்றாகும். இதை வெளிப்படையாக விசாரிப்பதற்கு காங்கிரசு அரசே மறைமுகமாக தடை செய்திருப்பதாகவும் தெரிகிறது. என்ன இருந்தாலும் இராணுவத்தின் பெயர் பழுதடையக்கூடாது அல்லவா!

சாராம்சத்தில் மலேகான் வழக்கிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், போலீசு, இராணுவமும் பாதிக்கப்படும் சிறுபான்மையினரை அடக்குவதற்குத்தான் பயன்படுமே தவிர அதை கொண்டுவரும் பாசிச சக்திகளுக்கு அந்த சட்டம் செல்லுபடியாகது என்பதுதான். அகமதாபாத் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட தன்மகன் அந்தக் கொடூரச் செயலை செய்திருக்கும பட்சத்தில் அவனைத் தூக்கில் போடவேண்டுமென்றார் ஒரு இசுலாமியத் தாய். ஆனால் இந்தப் பெண்சாமியாரின் தந்தை, ஆர்.எஸ்.எஸ் இல் உறுப்பினராக இருப்பவர் தனது மகளின் செயலுக்காக பெருமைப்படுவதாக பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இதையே அந்த இசுலாமியத் தாய் கூறியிருந்தால் ஒரு என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருப்பார்கள். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு கடுமையான சட்டம் வேண்டும், அவர்களை என்கவுண்டரில் கொல்லும்போது மனித உரிமை என்று கூக்குரலிடுபவர்களைச் சட்டை செய்யவேண்டியதில்லை என முழங்கும் துக்ளக் சோ, பயங்கரவாதியான இந்தப் பெண் சாமியாரை என்கவுண்டரில் கொன்றால் என்ன சொல்வார்?

புதன்கிழமை இரவில் மும்பை வந்த பயங்கரவாதிகள் கராச்சியிலிருந்து வந்ததாகக் கூறும் இந்திய அரசின் வாக்குமூலத்தை உண்மையென்றே வைத்துக் கொள்வோம். படகில் ஏறுவதற்கு முன்னரே வாய்க்கரிசி பொட்டுக் கொண்டு வந்திறங்கி வெறியுடன் மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு தாங்களும் மரித்துக் கொண்டவர்கள் ஒரு வேளை இங்கு பொடா சட்டம் இருந்தால் வரமாட்டார்கள் என்று கருதுவது முட்டாள்தனமில்லையா? இந்தியாவில் போடப்படும் பொடாச் சட்டம் பாக்கிஸ்தானிலும் செல்லுபடியாக வேண்டுமென எப்படி எதிர்பார்க்க முடியும்? அமெரிக்காவின் சட்டத்திற்கு அஞ்சியா அல்கய்தாவும், பின்லேடனும் செயல்படுகிறார்கள்? இந்த சர்வதேச பயங்கரவாதத்தை தோற்றுவித்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை வர இருக்கும் தொடர்களில் பார்க்கலாம். இங்கே நாம் வலியுறுத்துவது பொடா சட்டம் உண்மையில் யாரை பதம் பார்க்கும் என்பதுதான்.

இதுவரை சாதாரண மக்களை குறிவைத்த பயங்கரவாதம் முதன்முறையாக முதலாளிகளைக் குறிவைத்திருப்பதால் பொடா மட்டுமல்ல அதற்கு மேல் உள்ள சட்டங்களும் வரத்தான் போகிறது. அதன் மூலம் போராடும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கங்கள் அடக்குமுறையைச் சந்திக்கத்தான் போகிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் நடக்கப்போகும் விளைவு இதுதான். நடுநிலமையையும் கூட பலவீனமாக்குவதுதான் தீவிரவாதத்தால் நாடு கண்ட பலன். இந்துமதவெறியால் பாதிக்கப்படும் சிறுபாண்மை மக்களோ, சிங்கள இனவெறியால் நசுக்கப்படும் ஈழத் தமிழர்களோ தங்களுக்கென குரல் கொடுக்கும் ஆதரவு சக்திகளை இழக்க வேண்டிவரலாம். ஆக பயங்கரவாதிகளை முகாந்திரமாக வைத்து ஆளும் வர்க்கங்கள் மக்களுக்கு எந்த உரிமையையும் இல்லாமல் செய்யும் நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம் பயங்கரவாதங்களும் இதனால் அழிவதற்குப் பதில் புதிது புதிதாய் பிறந்து கொண்டுதான் இருக்கும்.

அதனால்தான் போலீசுத் துறையை நவீனப் படுத்துவதோடு, புதிய படைப் பிரிவுகளையும், தேசிய அளவிலான உளவுத் துறையையும் உருவாக்க வேண்டுமென கோருகிறார்கள். நவீனமயமாக்கப்பட்ட இந்த ஆயுத பலம் பயங்கரவாதத்தை தடுக்குமா? இந்த அல்ட்ரா மாடர்ன் போலீசு யாரைக் காப்பாற்றும்?

– தொடரும்

 

 

இந்துமதவெறியால் பிளவுண்ட மும்பை ! (பாகம் – 2)

42

மும்பைத் தாக்குதலுக்காக ஆங்கில ஊடகங்கள் சாமியாடுவது இதுவரை நிற்கவில்லை. வருமானவரி கட்டும் பணக்கார இந்தியர்களுக்கே பாதுகாப்பில்லை, என்ன அநீதி என்று கொதிக்கிறார் பணக்கார இந்தியர்களின் விருந்து வைபவங்களை பத்தியாக எழுதும் ஷோபா டே. உடைந்து கிடக்கும் கண்ணாடித் துண்டுகளின் மத்தியில் நின்றவாறு ஆவேசமாக ஆடுகிறார் என்.டி.டி.வியின் பர்கா தத். வருமானவரி கட்டும் முதலாளிகள் அந்த வரியை பாமர மக்களின் மேல் மறைமுக வரியாய் சுமத்துகிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அந்த அம்மணிக்கு எவ்வளவு ஆணவம்? ஏன், வருமான வரி கட்டாத இந்தியர்களின் உயிர் என்றால் அவ்வளவு இளப்பமா? அவர்களுக்குப் பரிச்சயமான மேட்டுக்குடி மும்பையில் விழுந்த சிறு கீறலைக்கூட அவர்கள் தாங்குவதற்குத் தயாராக இல்லை.

தாஜ், ஓபராய் விடுதிகளில் உயிரிழந்து, அடிபட்ட முதலாளிகளுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் சிவராஜ் பாட்டீல் உள்துறை பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ப. சிதம்பரம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இதில் நிதியமைச்சகத்தை பிரதமரே வைத்துக் கொண்டிருப்பது அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியதோடு, மும்பைத் தாக்குதலால் சீர்குலைந்த பங்குச் சந்தை மீண்டும் எழுந்திருக்கிறதாம். அவர்களது பாதுகாப்புக்காகக் கவலைப்பட்டுச் செய்யப்படும் மாற்றங்கள் கூட அவர்களது பங்குச் சந்தை பாதிக்காதவாறு செய்ய வேண்டுமாம்.

மும்பை போன்ற நகரங்களில் இது போன்ற சிறிய தாக்குதல்கள் சகஜம் என்று கருத்துரைத்து ஊடகங்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட மராட்டியத்தின் துணை முதல்வர் ஆர். ஆர். பாட்டீல் வேறு வழியின்றி ராஜினாமா செய்திருக்கிறார். விலாஜிராவ் தேஷ்முக்கும் ராஜினாமா கடிதத்தை காங்கிரசு மேலிடத்திற்கு அனுப்பிவிட்டதாகவும் முடிவு அவர்கள் கையில் எனத் தெரிவித்திருக்கிறார். தற்போது இவரது விலகலையும் காங்கிரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதுபோக காங்கிரசுக் காரிய கமிட்டியில் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு விவாதித்தார்களாம். அவர்களுக்கு புரவலராக இருக்கும் முதலாளிகளுக்கு ஒரு ஆபத்து என்றதும் காங்கிரசின் மனசாட்டி துடிக்கிறது. ஏ.கே.அந்தோணி, பிரணாப் முகர்ஜி, இறுதியில் மன்மோகன் சிங்கும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாகக் கூறினார்களாம். இறுதியில் சிவராஜ் பாட்டீலை மட்டும் இப்போதைக்கு விடுவித்து ஊடகங்களின் வாயை அடைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தார்மீகப் பொறுப்பு இப்போது மட்டும் நினைவுக்கு வரவேண்டிய அவசியமென்ன? காங்கிரசு கூட்டணி அரசு பதவிக்கு வந்த 2004 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்த 25,000ம் குண்டுவெடிப்புக்களில் 7000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு முந்தைய பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த போது நடந்த 36,259 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 11,714 பேர் கொல்லப்பட்டனர். அப்போது எங்கே போனது இந்த தார்மீகப் பொறுப்பு?

2001 குஜராத் இனப்படுகொலையில் 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் கொடூரமாக சங்க பரிவார குண்டர்களால் கொல்லப்பட்டனரே அப்போது மோடியோ, அத்வானியோ, வாஜ்பாயியோ ஏன் ராஜினாமா செய்யவில்லை? மோடியின் தலைமையில் இந்துமதவெறிக் கும்பல் நடத்திய இந்த இனப்படுகொலையை கொலைகாரர்களின் வாக்குமூலத்திலிருந்தே தெகல்கா ஏடு அம்பலப்படுத்திய போதும் இவர்களை யாரும் ஒன்றும் புடுங்க முடியவில்லையே?

முதலாளிகளின் உயிருக்குள்ள மதிப்பு இசுலாமிய மக்களுக்கில்லையா? அவர்கள் என்ன ஆடுமாடுகளா? இன்றைய இந்தியாவின் குண்டுவெடிப்புகளுக்கு அச்சாரம் போட்ட 93 மும்பைக் கலவரத்தை எடுத்துக் கொள்வோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களைக் கொன்று குவித்த இந்த கலவரத்தை தனது 300 ஆண்டு வரலாற்றில் மும்பை கண்டதில்லை. பிரிவினைக்குப் பிறகு இவ்வளவு பெரிய கலவரத்தை நாடும் சந்தித்ததில்லை. உண்மையில் மும்பையில் நடந்த பயங்கரவாதம் இதுதான். இன்றைய பயங்கரவாதங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பதும் இதுதான்.

92 டிசம்பர் ஆறாம் தேதியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு மும்பையில் அதைக் கொண்டாடும் முகமாக சிவசேனா மகா ஆரத்தி என்ற புதிய பண்டிகையை அறிமுகப்படுத்தியது. தெருவில் கும்பலாக நின்று கொண்டு முசுலீம் துவேச முழக்கங்களை முழங்கிக் கொண்டு ஆரத்தி எடுத்தவாறு இந்து மதவெறி மும்பை முழுவதும் தீயாய் பரப்பப்பட்டது. இதை அறுவடை செய்ய இந்துமதவெறியர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தயாரிப்புடன் காத்திருந்தனர். மும்பைப் புறநகர் ஒன்றில் தொழிற்சங்க மோதலுக்காக இரு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டவுடன் சிவசேனா அதற்கு மதச்சாயம் பூசி கலவரத்தை துவக்கியது.

மூன்று இலட்சம் பிரதிகள் விற்கும் சிவசேனாவின் சாம்னா நாளிதழில் பால் தாக்கரே இசுலாமியர்களைக் கொல்லுமாறும் இனிவரும நாட்கள் நம்முடையவை எனவும் பகிரங்கமாகக் கலவரத்தைத் துவக்குமாறு ஆணையிட்டார். ஜனவரி 7 முதல் 20 வரை இரண்டு வார காலம் மும்பை சிவசேனா பிணந்தின்னிகளின் நகரமாகியது. உ.பியிலிருந்து ரொட்டித் தயாரிப்புத் தொழிலுக்காக வந்த முசுலீம் தொழிலாளிகள், மரவியாபாரம் செய்து வந்த கேரளாவின் மாப்ளா முசுலீம்கள், உ.பி, பீகாரின் சுமைதூக்கும் முசுலீம் தொழிலாளிகள் யாரும் தப்பவில்லை. அன்றைய மும்பையின் மக்கள் தொகை ஒருகோடியே 26 இலட்சமென்றால்  அதில் முசுலீம்களின் தொகை 14 இலட்சம். இதில் நான்கு லட்சம் முசுலீம் மக்கள் மும்பையை விட்டு வெளியேறினர். 40,000 பேர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தனர்.

ஹிட்லரின் நாசிக் கட்சியின் பாணியில் முசுலீம் வீடுகளுக்கு பெயிண்டால் அடையாளமிட்டு ஆள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக ஏரியா மாறி சிவசேனா குண்டர்கள் இராணுவம் போல தாக்கினர். தாடிவைத்தவர்கள், சுன்னத் செய்திருக்கிறார்களா என்று திறந்து பார்த்து அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முசுலீம்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டனர். அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளைக் கூட முசுலீம் குழந்தைகளா என்று பெயர் கேட்டு அடித்திருக்கின்றனர். சிவசேனாவை எதிர்த்து எழுதிய ஒருசில மும்பைப் பத்திரிகைகளும் பால்தாக்கரேவின் குண்டர்களால் தாக்கப்பட்டன. தாராவியிலிருந்த முசுலீம்களோடு தமிழ் மக்களும் கூட இந்தக்கலவரத்திற்காக நகரை விட்டு வெளியேறி தமிழகம் வந்தனர்.

மும்பைப் போலீசு சிவசேனாவின் பாதுகாப்புப் படையாக பணிபுரிந்தது. இன்றைக்கு தீவிரவாதிகளுடன் சமர்புரிந்தவர்கள் அன்று இந்து போலீசாக மட்டும் செயல்பட்டனர். அன்று முதலமைச்சராக இருந்த நாயக்கோ, பிரதமராக இருந்த நரசிம்ம ராவோ யாரும் ராஜினாமா செய்யவில்லை என்பதோடு சிவசேனாவின் அட்டூழியங்களுக்கு ஒத்தூதிக் கொண்டிருந்தனர். அரசுக் கணக்குப்படி 500 முசுலீம்களும், பத்திரிகைகளின் கணக்குப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டனர். எல்லோருக்கும் வாழ்வளித்து மாநகரக் கலாச்சாரத்திற்கு முன்னோடியாக இருந்த மும்பை இந்துமதவெறியால் அப்போதுதான் பிளவுண்டது. முதன்முறையாக பணக்கார முசுலீம்களும் கலவரத்தில்  தாக்கப்பட்டனர். இப்போது தாஜ் ஓட்டலுக்காக கண்ணீரைத் தாரைவார்க்கும் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் எதுவம் அன்று இரத்தக் கறைபடிந்த  மும்பை தனது அழகை இழந்துவிட்டதென வருத்தப்படவில்லை. வருத்தப்பட்டுப் பாரமும் சுமக்கவில்லை. அப்படிடச் சுமந்திருந்தால் அவர்களது புண்ணியத் தலமான தாஜ் ஓட்டலுக்கு நேர்நத களங்கத்தை தவிர்த்திருக்கலாமே?

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் வற்புறுத்தலால் பின்னாளில் காங்கிரசு அரசு 93 மும்பைக் கலவரம் குறித்து விசாரிக்க ஸ்ரீகிருஷ்ணா கமிழஷனை நியமித்தது. சிவசேனாவின் மிரட்டலான சூழ்நிலையையும் மீறி நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குற்றமிழைத்த தாக்கரேக் கட்சியனரையும், போலீசு அதிகாரிகளையும் அடையாளம் காட்டினார். ஆனாலும் இந்தக்கமிஷனின் அறிக்கை இன்றுவரை குப்பைக் கூடையில் தூங்குவதுதான் கண்ட பலன். கலவரத்தைத்தான் தடுக்கவில்லை, கலவரத்தின் குற்றவாளியைக்கூட கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு யார் தார்மீகப் பொறுப்பேற்பது?

நாரிமன் இல்லத்தில் இசுரேலியர்களைத் தீவிரவாதிகள் தாக்குகிறார்கள் என்றதுமே இசுரேலிய அரசின் வற்புறுத்தலுக்கேற்ப அமெரிக்க அரசு கமாண்டோ படை அனுப்பட்டுமா என்று இந்திய அரசைக் கேட்டது. உடனே பிரனாப் முகர்ஜி இந்த நாட்டை 61 ஆண்டுகளாக ஆண்டு வருகிறோம், எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ளும் வல்லமையை பெற்றிருக்கிறோம், அமெரிக்க உதவி தேவையில்லை என்று ரோஷத்துடன் பேட்டியளித்தார். இந்த மானம் குஜராத், மும்பைக் கலவரங்கள் நடக்கும் போது எங்கே போயிற்று? பத்தாண்டு காலத்தில் இந்தியா முழுவதும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது காங், பா.ஜ.க அரசின் வேளாண் துறை அமைச்சர்கள் எவரும் ராஜினாமா செய்வது இருக்கட்டும், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லையே? இவ்வளவுபேர் இறந்து போனதால் வராத ரோஷம் தாஜ் ஓட்டலின் பாரைக் காலி செய்த உடன் பொத்துக்  கொண்டு வருகிறதே?

இன்றைக்கு ஒன்றுக்கு மூன்று தாக்கரேக்கள் மராட்டியத்தில் வலம் வருகிறார்கள். மருமகன் ராஜ் தாக்கரே  தனி சமஸ்தானத்தை உருவாக்குவதற்கு அப்பாவி பீகாரி தொழிலாளிகளையும், மாணவர்களையும் தனது வானரப்படையால் தாக்கி வருகிறார். அப்போது கூட அவர் மீது நடவடிக்கை எடுக்க எவ்வளவு பயம்? 2008 இல் இதுதான் நிலைமை என்றால் 93 இல் எப்படி இருந்திருக்கும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அன்றைக்கு அப்பாவி முசுலீம்களை வேட்டையாடிய தாக்கரேக்கள் இப்போது துப்பாக்கியுடன் வந்தவர்களைப் பார்த்து வெலவெலத்துப் போயிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். மும்பைத் தாக்குதல் குறித்து பெரிய தாக்கரே தனது சாம்னா பத்திரிக்கையில் ஒன்றும் சீறக் காணோம். இதை பார்க்கும் போது இந்து மதவெறியர்களால் உற்றார் உறவினரைப் பறிகொடுத்த ஒரு முசுலீம் இளைஞன் தீவிரவாதம்தான் தீர்வு என்று யோசிக்கமாட்டானா என்ன?

இந்து மதவெறியர்களின் கலவரங்கள்தான் தீவிரவாதத்தின் தோற்றுவாய். இந்தத் தோற்றுவாயை வேரறுக்காமல் புதிய சட்டம் – புலனாய்வுப் பிரிவு – போலீசுப் படை தீவிரவாதத்தின் அபாயத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிவிடுமா?

– தொடரும்

 

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 1)

22

” வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர்கவே ” எனும் ரகுமானின் பாட்டு 27.11.08 அன்று சென்னை எப். எம் அலைவரிசைகளில் குத்தாட்டப் பாடல்களுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பப்பட்டது. வழக்கமாக சமூகப் பிரச்சினைகளின் பால் நாட்டமற்று சினிமாவை மட்டும் மட்டற்று பரப்பும் தொகுப்பாளினிகள் அதிசயமாய் மும்பைத் தாக்குதல் குறித்து தமிங்கலத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள்.  எந்த அளவு அதிகமாய் பேசினார்களோ அந்த அளவு பிரச்சினையைப் பற்றி மருந்துக்குக் கூட தொடவில்லை. அரசியல் மற்றும் செய்தி அறிக்கைகளை பண்பலை வரிசையில் ஒலிபரப்பக் கூடாது என்றொரு விதியிருக்கிறது. ஒருவேளை அந்த விதியில்லையென்றாலும் அவர்களால் இதைத் தாண்டி பேசியிருக்க முடியாது. அன்றாடம் அரட்டையடிப்பதற்கென தொலைபேசியில் வரும் நேயர்களும் அதையே பின்தொடர்ந்தார்கள். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் ஒரு சம்பவத்தை அரட்டைக் கலாச்சாரமும் தன்னளவில் வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்தார்கள்.

குட் மார்னிங் கூட சொல்ல முடியவில்லையென்றார் ஒருவர், பேப்பரைப் பிரித்தால் தினசரி குண்டு வெடிப்புதான் சலிப்பாயிருக்கிறது என்றார் மற்றொருவர், மனது கஷ்டமாயிருக்கிறது, பிரார்த்தனை செய்வோம், நம்பிக்கையுடன் இருப்போம், சென்னைக்கு பிரச்சினையில்லை இப்படியே நாள்முழுக்க பேசினார்கள். மும்பைத் தாக்குதலை சமூகம் எப்படிப் பார்க்க வேண்டுமென்பதையே எப். எம்மின் பேச்சுக்கள் பிரதிபலித்தன. பிரச்சினை என்னவென்று புரியக்கூடாது என்று உறுதி செய்துவிட்டு எல்லாம் நல்லபடி நடக்குமென்று எதிர்பார்க்கும் ஆபத்தில்லாத மனிதாபிமானம்.

அந்த மூன்று நாட்களும் தொலைக்காட்சி முன் அமர்ந்து விட்டு தனது பிரியத்திற்குறிய மும்பை நகரத்தின் சோகம் குறித்து லதா மங்கேஷ்கார் 300 முறை அழுதாராம். நட்சத்திர ஓட்டல்களில் விருந்து வைபவங்களுக்கு செல்பவர்கள் தங்களது போற்றுதலுக்குறிய நினைவுச் சின்னங்கள் தகர்க்கப்படுவதை நினைத்து ஆங்கிலப் பத்திரிகைகளில் கண்ணீர் வடித்தார்கள். நாடெங்கிலும் ஆங்கிலப்பள்ளிக் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்தினார்கள். தீவிரவாதிகளை சாகசத்துடன் வீழ்த்தும் கமாண்டோக்களை ஆங்கிலத் திரைப்படத்தில் மட்டும் பார்த்தவர்கள் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு என்.எஸ்.ஜி வீரர்களுக்குப் பாராட்டு மழை பொழிந்தார்கள். பாதுகாப்புப்படை வீரர்கள் சிலர் உயிர்த்தியாகம் செய்திருப்பதை வைத்து கவிதைப் போட்டி நடத்துகிறது தினமலர். கொல்லப்பட்ட போலீசு, இராணுவ அதிகாரிகளின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டமும், பாரத மாதாவைப் போற்றிய முழக்கமும் அலைமோதின.

இப்படி எல்லோரையும் ஒருவாரம் ஈர்த்திருக்கும் வலிமையை மும்பைத் தாக்குதல் கொண்டிருந்தது.

பத்து தீவிரவாதிகள் அறுபது மணிநேரம் தேசத்தின் கவனிப்பை தமது பக்கம் திருப்பி விடுவதில் வெற்றி பெற்றார்கள். இதுவரை நடந்த தீவிரவாதத் தாக்குதலையெல்லாம் ஒன்றுமில்லையென ஆக்கிவிட்டது மும்பைத் தாக்குததல். விஜயகாந்த், அர்ஜூன் மற்றும் தெலுங்குப் படங்களில் வரும் மலிவான தீவிரவாதிகளையெல்லாம் விஞ்சிவிட்டனர் இந்த உண்மையான தீவிரவாதிகள். முன்பதிவு செய்ய ரயில் நிலையத்தில் காத்திருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள், திரைப்படம் பார்க்க வந்தவர்கள், மருத்துவமனையில் நுழைந்தவர்கள் எவரையும் இரக்கம் பார்க்கமல் இயன்ற அளவு சுட்டுக் கொன்றனர். இதற்கு முன் ஆளில்லாமல் குண்டுகள் மட்டும் வெடித்து வரும் அழிவை சில மனிதர்களே நேரிட்டுக் கொண்டு வந்ததால் பீதியும், பயங்கரமும் புயல் வேகத்தில் மும்பையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பரவின. இத்துடன் முடிந்திருந்தால் கூட இது மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலென்று செய்திகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடி பின்னர் மறக்கப்பட்டிருக்கும்.

ஆனால் தாஜ் ஓட்டல், ஒபராய் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் மூன்றிலும் அவர்கள் நுழைந்ததும்தான் இந்திய ஆளும் வர்க்கங்கள் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளும் கூட கடும் அதிர்ச்சியடைந்தன. வெளி நாட்டவர்கள் அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, இசுரேல் நாட்டினர், இந்திய முதலாளிகள், மேல்மட்ட அதிகார வர்க்கத்தினர், தனியார் நிறுவன உயர் நிர்வாகத்தினர் அனைவரும் தீவிரவாதிகளால் துரிதமாக தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். இதுவரை பயங்கரவாதம் அவர்களால் ஆளப்படும் மக்களை மட்டும் தாக்கியதை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொது முதல்முறையாக அதன் சூட்டை அனுபவிக்க வேண்டி வந்தது நினைத்துப் பார்த்திராத ஒன்று. இதுவே ஊடகங்கள் வழி நாட்டையும் மக்களையும் அதிர்ச்சியடைய வேண்டியதை ஒரு கடமையாகச் செய்தது.

குண்டு வெடிப்புக்களில் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை பரபரப்பாக செய்தி வெளியிடும் ஊடகங்கள் இங்கே பரபரப்பிற்காக மட்டுமல்ல தங்களுக்கு நிகழ்ந்த துயரமாகவே கருதி செய்திகளையும்  இந்தியஅரசு செய்யவேண்டிய எதிர்காலத் தயாரிப்புக்களையும் கட்டளை போல வெளியிட்டன. ஒரு வர்க்கமென்ற முறையில் ஊடகங்களுக்கு விளம்பரங்களின் மூலம் வருமானம் தரும் வெளிநாட்டினர், தனியார் நிறுவன முதலாளிகள், நிர்வாகிகளுக்கு நிகழ்ந்த அவலங்கள் ஊடக முதலாளிகளுக்கு கடும் கோபத்தை வரவழைத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தக் கோபம் அல்கய்தா அமெரிக்காவில் நடத்திய செப் -11 உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க ஊடகங்களுக்கு வந்த கோபத்திற்கு நிகரானது. வால் ஸ்டீரீட்டின் இதயம் தகர்க்கப்பட்டதால் அமெரிக்க முதலாளிகளுக்கு வந்த ஆத்திரம் ஆப்கான், ஈராக் மீது போர் தொடுப்பது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்கள் என்று ஊடக முதலாளிகளால் தொடர்ந்து ஒரு கச்சேரியாக அங்கே நடத்தப்பட்டது.

அமெரிக்க எஜமானர்களை பிழைப்பு கருதி வியந்தோதும் இந்தியா டுடே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நீயு இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற தினசரிகள், அவை போன்ற ஆங்கிலத் தொலைக்காட்சி சேனல்கள் அத்தனையும் அதே கச்சேரியை வன்மத்துடன் செய்து வருகின்றன. இனி இதையே சன். டி.வி போன்ற பிராந்திய நாட்டாமைகள் மொழிபெயர்த்துப் பிரச்சாரம் செய்வார்கள். இந்தக் கச்சேரியை தமது வாழ்நாள் பணியாகச் செய்துவரும் குருமூர்த்தி, துக்ளக் சோ, அருண்ஷோரி, ஸ்வபன்தாஸ் குப்தா போன்ற சித்தாந்திகள் இப்போது முழுவீச்சுடன் இயங்கி வருகிறார்கள்.   விட்டால் இவர்களே கூட பாக்கிஸ்தானுக்கு படையெடுத்து போனாலும் போவார்கள். நாடு முழுக்க நிகழ் காலத்திலும் வருங்காலத்திலும் போர்வெறியும், பொடா,  புதிய போலீசுப் படை என்ற சர்வாதிகார வெறியும் நீக்கமற நிரைவிக்கப் போகிறது.

ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைத்து சென்னை சென்ட்ரல் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை. ஆனால் சென்னை நட்சித்திர முதலாளிகளின் கூட்டத்தைக் கூட்டி முன்னெச்செரிக்கை ஏற்பாடுகள் பற்றிய பாடம் நடத்தப்பட்டு விடுதிகளுக்கு போலீசு பாதுகாப்பும் போடப்பட்டது. அஸ்ஸாமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது தேசிய பாதுகாப்புப் படையின் பிரிவு எல்லா நகரங்களிலும் நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை வரவில்லை. இப்போது தாஜ் ஓட்டல் தாக்கப்பட்டதும் வந்திருக்கிறது. விருந்தினர்களே எப்பொதும் சரியானவர்கள் என்ற கடமை முழக்கத்தை சிரமேற்கொண்டு தமது உயிரை ஈந்து பல முதலாளிகளையும், வெளிநாட்டினரையும் காப்பாற்றிய நட்சத்திர விடுதியின் ஊழியர்களைப் பற்றிய கதைகளை விட தாக்குதலில் சில மணிநேரங்கள் அல்லல்பட்டு தப்பித்த மேன்மக்களின் துன்பக்கதைகள் காவியமாய் பத்திரிகைகளை நிரப்புகின்றன.

அவ்வளவு ஏன் தாஜ்மஹால் பேலஸ் என்ற கல்லும் மண்ணும் கொண்டு கட்டப்பட்ட அந்த அஃறிணைப் பொருளுக்காக எத்தனைபேர் கண்ணீர் விட்டனர்! உருக்குலைந்து நிற்கும் அந்த விடுதியின் மதுவறையை முன்பக்கச் செய்தியில் படத்தோடு வெளியிட்டு துக்கப்படுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு. நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்குமேல் வாடகை வாங்கப்படும் அதன் கோபுர உச்சியில் இருக்கும் பிரசிடன்சியல் சூட் அறை,  பல உலகத் தலைவர்களெல்லாம் தங்கிய அந்தப்பெருமை மிகு அறை இன்று வெடிகுண்டு வீசப்பட்டு நிர்மூலமாயிருப்பது குறித்து வருந்துகிறது இன்னொரு நாளேடு! தாஜ் ஓட்டல் உயிர்ப்புள்ள கட்டிடம், பல இன்பங்கள், மகிழ்ச்சிகள், திருமணங்கள், நினைவுகளைக் கொண்டு வாழும் கட்டிடம் என்கிறார் ஒரு திரைப்பட இயக்குநர். இன்னும் நூறாண்டு பாரம்பரியம் மிக்க அந்த விடுதியின் பெருமை, இந்தியனுக்கு ஓட்டலில் இடமில்லை என்ற கோபத்தில் ஓட்டலைக் காட்டிய அந்தக் கால டாடாவின் கர்ண பரம்பரைத் தேசபக்திக் கதைகள், ஒரு வருடத்தில் 500 கோடி செலவழித்து விடுதியின் பொலிவை மீட்டுக் கொண்டு வருவதாக சபதமெடுக்கும் இந்தக் கால ரத்தன் டாடாவின் உறுதி மொழிகள் எல்லாம் பயங்கரவாதத்திற்கெதிரான போராய் அணிவகுக்கின்றன.

சிங்கூரில் நானா கார் தொழிற்சாலை வெளியேறி குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, தற்போதைய ஓட்டல் தாக்குதல் எல்லாம் ரத்தன் டாடாவின் கிரகநிலைமை சரியில்லையாம். இதையே பிரபலமான ஜோசியக்காரர்களிடம் செய்தியாக வாங்கி வெட்கமில்லாமல் வெளியிட்டிருக்கின்றன ஆங்கில நாளேடுகள்! உண்øமையில் டாடாவின் நில ஆக்கிரமிப்பால் மேற்கு வங்க விவசாயிகளின் கிரகம்தான் சரியில்லை என்று சொல்லலாம். தற்போது குஜராத்தின் விவசாயிகளுக்கும் கிரகநிலைமை சரியில்லை. ஒரு மாநில அரசின் ஆதரவோடு அந்த மக்களின் எல்லா வளங்களையும் சுரண்டி தொழில் செய்ய நினைக்கும் ஒரு முதலாளிக்கு வரும் பிரச்சினைகள் குறித்து என்ன ஒரு கவலை!

கேட் வே ஆஃப் இந்தியாவுக்கு அருகில் கடலைப் பார்த்து பணக்காரர்களின் சின்னமாய் இருக்கும் தாஜ் மஹால் பேலஸ் ஓட்டல் மும்பையின் கவுரவச் சின்னமாம். இதற்கு ஏற்பட்ட அநீதி குறித்து கொதித்தெழுகிறார் ஷோபா டே என்ற சீமாட்டி எழுத்தாளர். மும்பைக்கு அருகில் விதர்பாவில் இதே சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதை செய்தியாகக்கூட படித்திராத, நட்சத்திர விடுதிகளில் கூடி குடி கூத்துக்களை நடத்தும மேன்மக்களின் அருமை பெருமைகளை கூலிக்கு எழுதும் பத்தி எழுத்தாளருக்கு வயிறு பற்றி எரிகிறது! இனம் இனத்தோடுதான் சேருமென்றாலும் அதற்காக இப்படியா?

சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் ஏறெடுத்தும் பார்க்க முடியாத தாஜ் ஓட்டல் எப்படி மும்பையின் கவுரவச் சின்னமாகும்? மும்பை நகரம் 24 மணிநேரமும் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு உழைத்து ஓடாய்த் தேயும் ஆசியாவின் பெரிய சேரியான தாரவியைக் கூட மும்பையின் சின்னமாக வரையறுத்தால்  ஒரு அர்த்தம் உண்டு. நாளொன்றுக்கு பல்லாயிரம் ரூபாயை வாடகையாகக் கொண்டிருக்கும் ஒரு நட்சத்திர விடுதி யாருக்கு அவசியம்? ஊழலில் புழுத்த அதிகாரவர்க்கம், நிதி மோசடிகள் செய்யும் முதலாளிகள், சந்தர்ப்பவாதங்களைக் கூடிப்பேசும் அரசியல் தலைவர்கள், உல்லசத்தில் திளைக்க விரும்பும் நடிகர்கள், இந்திய அடிமைகளை மேற்பார்வையிட வரும் மேற்குலகின் மேல்மட்டத்தினர் இவர்களுக்கெல்லாம்தானே நட்சத்திர விடுதி தேவைப்படுகிறது? ஆர்டர் செய்த ஷாம்பெய்னைக் குடிப்பதற்குள் தீவிரவாதிகள் வந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் இருக்கின்றன.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய இதே காலத்தில் துபாயில் எட்டாயிரம் கோடி செலவில் ஒரு தனித்தீவு உருவாக்கப்பட்டு அட்லாண்டிஸ் பாம்ஜூமைரா ரிசார்ட் என்ற மாபெரும் விடுதி திறக்கப்பட்டிருக்கிறது. இதில் விடுதிகள், ஓய்வில்லங்கள், தனி பங்களாக்கள் எல்லாம் இருக்கின்றன. இதில் ஒரு நாள் தங்குவதற்கு எட்டு முதல் இருபது இலட்சம் வரை வாடகையாம். இதில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்களாக்களை வாங்கியிருக்கிறார்களாம். இந்தி மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இதன் திறப்பு விழாவின் செலவு 160 கோடியாம். வாணவேடிக்கை மட்டும் 56 கோடி. உலக முதலாளிகளுக்காக இந்த தனித் தீவை   கெர்ஸனர் இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. பக்கத்தில் ஈராக் என்றொரு நாட்டில் அன்றாடம் இழவு வீட்டு ஒப்பாரி நடக்கும் நேரத்தில் திறக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத்தின் இந்தியப் பதிப்புதான் தாஜ் ஓட்டல். முதலாளிகளின் உல்லாசபுரி தாக்கப்பட்டதையே தேசத்தின் மீதான தாக்குதலாக சித்தரிக்கின்றன ஊடகங்கள். மக்கள் அடிபட்டால் கண்டும் காணாமலும் இருப்பவர்கள் முதலாளிகள் தாக்கப்பட்டதும் கதறி அழுகிறார்கள்.

புதன் கிழமை தீவிரவாதிகள் மும்பையில் புகுந்ததால் வியாழக்கிழமை பங்குச் சந்தை மூடப்பட்டது கடந்த 20 வருடத்திற்குள் இரண்டாவது முறையாம். இரண்டு நாள் வர்த்தகம் மூடப்பட்டதால் 50,000 கோடி இழப்பாம். மேலும் திரையரங்குகள், ஓட்டல்கள் எல்லாம் ஆளின்றி கலெக்ஷன் குறைந்தது பற்றியெல்லாம் பத்திரிகைகள் அருவருப்பின்றி கவலைப்படுகின்றன. இவர்களோடு ஒப்பிடும்போது நீரோக்கள் பிடில் வாசித்த கதையெல்லாம் வெறும் தூசு!

ஐந்து பந்தயங்கள் முடிந்து இரண்டு பந்தயங்களை ரத்து செய்து விட்டு நாடு திரும்பியிருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. கிரிக்கெட் போட்டிகள் ரத்தானதையும் பத்திரிகைகள் கவலைப்படத் தவறவில்லை. அதிலும் அந்த அணியின் உடமைகள் இன்னமும் தாஜ் ஓட்டலில் இருக்கிறதாம். அவற்றுக்கு என்ன கதி ஏற்பட்டதோ என்று கூட செய்திகளை வெளியிடுகிறார்கள். மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்ற விவாதம், 20 ஓவர் போட்டிகளைக் கொண்ட சாம்பியன்ஸ் லீக் போட்டி தள்ளி வைக்கப்பட்டது, 2011 இல் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடக்குமா என்ற ஐயம், இந்திய அணியின் பாக் சுற்றுப்பயணம் ரத்தானது எல்லாம் மும்பைத் தாக்குதலின் இரத்தம் உலர்வதற்குள் விவாதத்திற்கு வந்துவிட்டன.

கிரிக்கெட்டின் பிரபலத்தை வைத்து தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் சர்வாதிகாரத்தை உசுப்பி விடுவதில் ஊடகங்கள் முனைந்திருக்கின்றன. ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் போது ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்தன. அப்போது ஒரு கோடியை நிவாரணமாகக் கொடுத்து விட்டு போட்டி நடப்பதற்கு முன் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செய்து விட்டு ஆட்டத்தை தொடர்ந்ததைப் போல இப்போது முடியவில்லை. அவ்வகையில் தமது வசூல் பறிபோனது குறித்து கிரிக்கெட் முதலாளிகள் வெறுப்பில் இருக்க, இங்கிலாந்து வீரர்கள் பயபீதியில் உறைய, ரசிகர்களோ தங்களது பொழுதுபோக்கு ரத்தானது குறித்து கடுப்பில் இருக்க தீவிரவாதத்தின் குறி சரியாகத்தான் அடித்திருக்கிறது. மும்பைத் தாக்குதலில் வர்த்தக உலகம் தனது வருவாயை இழந்திருப்பதும் தாஜ் ஓட்டலின் கவலைக்கு ஈடான இடத்தைப்  பிடித்திருக்கிறது.

இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமென்று புகழப்படும் மும்பை இப்போதுதான் தாக்கப்பட்டிருக்கிறதா?
இதற்கு முன்பும் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறதே?
அப்போது இல்லாத ஆர்ப்பாட்டங்கள் இப்போது ஏன்?

– தொடரும்

 

வெள்ளத்தில் தமிழகம்: நகரமயமாக்கத்தின் பயங்கரவாதம் !

19

நவம்பர் 25 இல் “ ஆனந்த விகடனின் சாதி வெறி ” கட்டுரையை வலையேற்றம் செய்தோம். அடுத்த இரண்டு நாட்கள் ஏராளமானவர்கள் பார்வையிட்டதோடு ஆதரித்தும், எதிர்த்தும் நிறைய மறுமொழிகள் வந்திருந்தன. இந்த விவாதத்தைத் தொடரலாமென்றும், இல்லை ஒரு இடைவெளி விட்டு வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாமென்றும் இருமனதாய் இருந்த போது  பிடித்தது மழை.

நிஷா என்று பெயர் சூட்டப்பட்ட புயல் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தபோது, தொடர்ச்சியாகப் பெய்த மழையால் வடக்கு, வடமேற்கு, மத்திய தமிழகம் மற்றும் சென்னையும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை விரித்த வலையில் நாங்களும் சிக்கிக் கொண்டோம்.புயல் தாக்கிய நேரத்தில் மும்பையில் புகுந்த தீவிரவாதிகளும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். இருப்பினும் இதை தெரிந்து கொள்ளும் சூழ்நிலைமை இல்லை. தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி என எல்லாச் சேவைகளும் எங்கள் இடத்தில் துண்டிக்கப்பட்டிருந்தன. அவ்வப்போது அதிர்ஷடவசமாக செயல்பட்ட செல்பேசி மூலம் மும்பைச்செய்திகளை அறிந்தோம். தினசரிகளும் நான்கு நாட்களாக வரவில்லை. வந்திருந்தாலும் அவற்றை வினியோகம் செய்ய முடியாதவாறு எங்கும் வெள்ளம். தெருவில் காலளவில் இருந்த நீர் பின்பு முழங்காலளவும், இறுதியில் இடுப்புக்கு மேலும் சென்றுவிட்டது. வீட்டிற்குள்ளும் நீர் புகத்துவங்கிவிட்டது.

கழிப்பறைக் குழாய் வலைப்பின்னலை வெள்ளம் முழுங்கியிருந்ததால் கழிப்பறையில் அசுத்தநீர் ஏறத் தொடங்கியது. மூன்று நாட்களாக இயற்கை உபாதைகளை அளவாக கழித்து ஓட்டினோம். மின்சாரம் முற்றிலும் தடைபட்டுவிட்டது. இருக்கும் சொற்ப குடிநீர், மளிகைகளை வைத்து ஒரளவுக்கு உணவுத் தேவைகளை சமாளித்தோம். இனியும் அங்கே இருந்து பயனில்லை, நிலமைகள் உடனடியாக சீரடைய வாய்ப்பில்லை என்று முடிவெடுத்து விட்டு சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு வெள்ளம் இல்லாத பகுதிகளில் இருக்கும் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு குளித்துக் ,கழித்து கையடக்க கணினியில் இதை அடித்துக் கொண்டிருக்கிறோம். வேறு சில நண்பர்களின் உதவியோடு இதை வலையேற்றம் செய்யவேண்டும். செய்து விடுவோம். எல்லாம் “எதிர்பார்ப்புடன்” இருக்கும் வினவின் நண்பர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக.

இதற்குள் மும்பையில் நிறைய விசயங்கள் நடந்துவிட்டன. அவற்றை இன்றுதான் தினசரிகள் மூலம் முழுமையாக அறிய முடிந்தது. மற்றபடி இது குறித்து தொலைக்காட்சியில் பார்க்கவில்லை என்பதால் எதையும் இழக்கவில்லை என்று பார்த்த நண்பர்கள் கூறினார்கள். விறுவிறுப்பான சண்டைக்காட்சியை பரபரப்பாக காட்டுவதற்காக 24 மணிநேரமும் செய்தி அலைவரிசைகள் இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்தன. இதைப் பார்க்கும் போது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் டிரான்ஸ்சிஸ்டரில் கேட்ட ஆல் இந்தியா ரேடியோவின் செய்தி ஒலிபரப்பு தரமாக இருந்தது. பயனுள்ள விசயங்களை  அறிய வாய்ப்பளித்தது. மழையில்லை என்றால் வானொலி பக்கம் ஒதுங்கியிருக்கமாட்டோம் என்பதையும் இங்கே சுயவிமரிசனத்துடன் பதிவு செய்கிறோம்.

டிசம்பர் 1 அல்லது 2 தேதியில் மும்பை குறித்த எமது கருத்துக்களை வலையேற்றம் செய்ய முடியும் என நம்புகிறோம். அதற்குள் அது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று பின்னூட்டமிட்டால் விவாதிப்பதற்கு உதவியாக இருக்கும். நடப்பு விசயங்கள் குறித்து வினவு என்ன கூறுகிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில் பல நண்பர்கள் இருப்பார்கள். இந்தக் குறுகிய காலத்தில் நீங்கள் காட்டியிருக்கும் உற்சாகமான ஆதரவும், எதிர்வினையும் எங்களுக்கு புதிய கடமையையும், பொறுப்பையும் கற்றுக் கொடுத்திருக்கிறது. நிற்க, இங்கே வெள்ளம் குறித்த சில கருத்துக்களை மட்டும் பதிவு செய்ய விருப்பம்.

வன்னிக் காடுகளில் போரின் துயரத்தால் பிறந்த மண்ணிலேயே அகதிகளாக சுற்றிக் கொண்டிருக்கும் ஈழத்து மக்களின் அவலத்தை குறைந்தது ஒரு மாதமாவாவது அனுபவிக்குமாறு தமிழத்து மக்களை இயற்கை பணித்திருக்கிறது. இந்த ஒரு வாரத்தில் நாங்கள் அடைந்த துன்பமெல்லாம் மிகச்சாதாரணம் எனுமளவுக்கு ஏனைய மக்களின் வாழ்க்கை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கடலூர், புதுச்சேரி, சிதம்பரம், டெல்டா மாவட்டங்கள், சென்னையின் புறநகர்ப் பகுதிகள் அனைத்தும் மழை நீரில் தவிக்கின்றன. சில பகுதிகள் எல்லா வழிகளிலும் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாக மாறியிருக்கின்றன. பல இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர். உறவினர், நண்பர் வீடுகளுக்கு செல்லும் வாய்ப்பை நகரம் வழங்கியிருக்கிறது என்றாலும் கிராமங்களில் அந்த நிலைமை இல்லை. அவர்களின் வாழ்க்கை எல்லா விதத்திலும் அங்கேயே சிக்குண்டிருக்கிறது என்பதால் எதையும் விட்டுவிட்டு நினைத்த மாத்திரத்தில் வெளியேறுவது சாத்தியமில்லை.

பல்லாயிரக்கணக்கான  ஏக்கரில் பயிரிடப்படட சம்பாப் பயிர் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. சில இடங்களில் கால்நடைகளையும் கூட மழை நீர் அடித்துச் சென்றுவிட்டது. வீடுகளையும், தெருக்களையும், முழுக் கிராமத்தையும் வெள்ளநீர் சூழ்ந்து எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த மக்கள் குறிப்பாக பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அழுகிறார்கள். இத்தகைய காட்சிகளை நீங்களும் தொலைக்காட்சியில் பார்த்திருக்கக் கூடும்.

சாலைகள் வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டதால் பல இடங்களுக்கு அத்தியாவசப் பொருட்கள் சப்ளை இல்லை. உணவில்லாமல் பெரியவர்கள் வேண்டுமானால் சில நாட்கள் சமாளித்துக் கொள்ளலாம். பாலின்றி அழும் குழந்தைக்கு என்ன செய்வது? சுற்றிலும் மழைநீர் கடல்போல தேங்கியிருந்தாலும் குடிநீர் இல்லை, எங்கே சேகரிப்பது? கையில் பணமிருந்தாலும் வாங்குவதற்கு கடைகள் இல்லை என்றால் யாரிடம் முறையிடுவது? வீட்டில் எல்லா வசதிகளையும் அளிக்கும் எந்திரங்களும் இருந்தாலும் அவற்றை எப்படிக் காப்பாற்றுவது? இவ்வளவு இன்னல் இருந்தாலும் வேலைக்குச் செல்லவில்லையென்றால் சம்பளத்திலிருந்து பல தனியார் நிறுவனங்கள் பிடித்துக் கொள்கின்றன. வேலைக்குச் செல்லவேண்டுமென்றாலும் பேருந்துகள் இல்லை. ஆம், மழை தோற்றுவித்திருக்கும் பிரச்சினைகள் அளவில்லாதவை.

இதுவரை மழையினால் மட்டும் 130க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கின்றனர். மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்தவர்களைப் போலன்றி இங்கே இயற்கையான மழையின் தாக்குதலுக்காகப் பலி கொடுத்திருக்கிறோம். மேலை நாடுகளில் இந்த எண்ணிக்கையில் மக்கள் இறந்திருந்தால் அது உலக முக்கியத்துவம் வாய்ந்த செய்தி! ஏழை நாடு என்பதால் இங்கே பலியாகும் கணக்கிற்கு மதிப்பில்லை.

சாதாரண நாட்களிலேயே முடங்கிக்கிடக்கும் அரசு நிர்வாகம் இந்த பேரிடர் காலத்தில் மட்டும் தீவிரமாக செயல்பட்டு பிரச்சினைகளை தீர்த்துவிடாது என்பதை மக்களும் அறிந்திருக்கிறார்கள். அதனால் இந்தச் சோகங்களுடன் பல்லைக் கடித்துக்கொண்டு மழைக்காலத்தை தள்ளிவிடவேண்டும் என்று அவர்கள் இயல்பாகவே பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இவ்வளவு துயரத்திற்கும் காரணம் புயலையும், பேய்மழையையும் பொதிந்து வைத்திருக்கும் இயற்கைதான் என்று சுலபத்தில் தீர்மானித்து விடலாம்தான். ஆனால் இந்த துயரத்திற்கு இயற்கை காரணமல்ல. வருடா வருடம் பெய்யவேண்டிய மழை சற்றுக்கூடியோ, குறைந்தோ காலத்திற்கேற்றபடி பெய்துகொண்டுதான் இருக்கிறது. புவி வெப்பமாகும் பிரச்சினையால் இந்த அளவில் சில குளறுபடிகள் நடக்கலாம். பல நூற்றாண்டுகளாக தமிழக விவசாயிகள்  அந்த மழை நீரை தேக்கிவைத்து, நீர் இல்லாத பகுதிகளுக்கு கொண்டுசெல்வதற்காக உருவாக்கிய வலைப்பின்னல்கள் கடந்த முப்பதாண்டுகளாக நகரமயமாக்கம் என்ற பெயரில் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டிருக்கின்றன.

இயல்பாகப் பெய்யும் மழை மண்ணில் நிரம்பி, தேவையான இடத்திற்கு செல்ல முடியாமல், கடலிலும் சேர வழியின்றி தாழ்வான மக்கள் குடியிருப்புக்களை வேறுவழியின்றி சூழ்ந்து கொள்கின்றது. தற்போது தமிழகத்தின் நகரமயமாக்கம் ஏறக்குறைய 50 சதவீதத்தை எட்டிவிட்டது. இந்த தீடீர் வளர்ச்சி விவசாயம் மற்றும் அதன் நீர்ப்பாசன வசதியைப் பலிகொடுத்து உருவாக்கப்பட்ட செயற்கையான வளர்ச்சி. விவசாயத்தை அழித்து உப்பவைக்கப்பட்ட அடிப்படையற்ற அலங்காரமான வளர்ச்சி.

மேலை நாடுகளில் தொழிற்துறையின் தேவைகாரணமாக நகரங்கள் தோன்றி வளர்ந்தன. அதனால் அவை ஒரவளவிற்கு திட்டமிடப்பட்ட வகையில் மாநகரங்களாக வளர்நதன. விவசாயமும் நவீன முறை உற்பத்தியாக மாற்றப்பட்டு வளர்ச்சியடைந்ததால் அங்கே இந்தப் பிரச்சினை இந்தியாவின் அளவுக்கு இல்லை. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகமான இருபது ஆண்டுகளில் விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. அதனால் வாழவழியின்றி கோடிக்கணக்கான மக்கள் நகரங்களை பிழைப்பிற்காக தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டது. அதே சமயம் நகரங்களும் தொழிற்துறை உற்பத்தியால் வளரவில்லை. சொல்லப்போனால் உலகமயமாக்கம் அரங்கேறிய இந்த ஆண்டுகளில் பல சிறு நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவிற்கு எது தேவையோ அதை செய்து முடிப்பது என்ற அளவில் பொருளாதாரம் வடிவமைகக்ப்பட்டது. இதனால் இந்தியாவின் தேசிய பொருளாதாரம் திட்டமிட்ட வகையில் நசுக்கப்பட்டு கிராமங்களிலிருந்து வரும் மக்களை குறைந்த ஊதியத்தில் தமது தேவைக்கேற்ற வேலைகளுக்காக முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தமிழகத்தில் அப்படி ஒன்றும் தொழில் வளர்ச்சி சமீபத்திய ஆண்டுகளில் இல்லை. சென்னை, கோவை என இரண்டு மண்டலங்களை நீக்கிவிட்டால் இங்கே பெரிய தொழிற்துறை வளர்ச்சி கிடையாதென அறுதியிடலாம். இந்த இரண்டு மண்டலங்களிலும் உற்பத்தி துறை நசிந்து, தகவல் தொழில் நுட்பத் துறை மட்டும் வளர்ந்திருப்பதுதான் யதார்த்த நிலவரம். ஆண்டுக்கு 7000 கோடிக்கு ஏற்றுமதி செய்யும் திருப்பூரை எடுத்துக் கொள்வோம். அமெரிக்காவின் பிரபலமான தொடர் கடைகளுக்காக ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் இந்நகரம் வாழ வழியற்ற தென்மாவட்ட மக்களுக்கு குறைந்த பட்ச வாழ்க்கையை உத்திரவாதம் செய்கிறது. 12 மணிநேர வேலை, தீப்பெட்டி குடியிருப்பு, ஆஸ்மா பிரச்சினை, குடிநீருக்கான நள்ளிரவு யுத்தம், நொய்யல் ஆறு ரசாயன கழிவால் நிரம்பியது, சுற்று வட்டார கிராமங்களில் விவசாயமும், குடிநீரும் மாசுபட்டது, என பல பிரச்சினைகள் திருப்பூரை கவ்வியிருக்கின்றன.

ஆக வால்மார்ட் அமெரிக்காவில் சம்பாதிப்பதற்காக இங்கே நமது மண்ணையும், நீரையும், விவசாயத்தையும் பாழ்படுத்தி நமது தொழிலாளிகளையும் கசக்கி பிழிகிறார்கள் என்றால் இதுதான் ஏகாதிபத்தியங்கள் தமது சுரண்டலுக்காக இந்தியாவில் உருவாக்கியிருக்கும் நகரமயமாக்கம். இத்தனைக்கும் திருப்பூரில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்தாலும் இவர்களில் 90 சதவீதத்தினர் தினசரிக் கூலிகளாகத்தன் நடத்தப்படுகின்றனர். இவர்கள் திருப்பூரில் கழிக்கும் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது மழை தரும் துன்பமெல்லாம் சாதாரணம். ஏதோ சில கோவை கவுண்டர்கள் சில கோடிகள் சம்பாதிப்பதற்கும், அமெரிக்க முதலாளிகள் பல நூறு கோடிகள் சம்பாதிப்பதற்கும் உருவாக்கப்பட்ட மாபெரும் நரகம்தான் திருப்பூர் நகரம். இதை தற்போது தமிழக அரசு மாநகரமாக அறிவித்திருக்கிறது. இந்தப் பெருமையை அறிந்து கொள்ள திருப்பூரில் ஒரு வருடம் தங்கினால் போதும், அதன் பிறகு உலகின் எவ்வளவு மோசமான நகர்ப்புறச் சேரிகளிலும் தங்குவதற்கான பயிற்சியை பெற்றுக் கொள்ளலாம். இதைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறோம்.

சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் தகவல் தொழில் நுட்பத்துறையில் வளர்ச்சியால் மாநகரம் மா….நகரமாக பெருத்து வருகிறது. இதற்குத் தேவைப்படும் கட்டிடங்கள், அதைக் கட்டுவதற்கு இந்தியாவெங்கிலிருந்தும் வரும் தொழிலாளர்கள், மேட்டுக் குடியனருக்கு தேவைப்படும் கேளிக்கை வசதிகள், இப்படி சில பிரிவனருக்காக சேவை செய்கின்ற அளவில் பெரும்பான்மை மக்கள் தங்கள் வாழ்க்கையை அர்பபணிக்கும் வகையில் நகரம் பெருத்து வருகிறது. சென்னையில் மாதம் சில பல ஆயிரங்களை வருமானமாக ஈட்டும் பிரிவினர் சில இலட்சமென்றால் இவர்களுக்காக ஆட்டோ ஓட்டுநராக, கட்டடம் கட்டும் தொழிலாளியாக, சத்யம் திரையரங்கு செக்யூரிட்டியாக, பேருந்து ஒட்டுநராக, கடைச் சிப்பந்தியாக வாழும் மக்கள் பல இலட்சம்பேர் இருக்கிறார்கள். ஐ.டி துறை புண்யவான்களின் தயாவால் ஏற்றிவிடப்ட்ட வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட் விலைகள் காரணமாக இந்த மக்கள் புறநகரங்களுக்கு செல்வதும், முன்னாள் ஏரிகள் இந்நாள் குடியிருப்புக்களாக மாற்றப்படுவதும் ராக்கெட் வேகத்தில் நடக்கிறது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் சென்னையில் பெய்த பேய் மழை இப்போதைய அளவை விட அதிகமென்றாலும் அப்போதைய பாதிப்பைவிட இப்போதைய பாதிப்பு அதிகம். காரணம் இடைக்காலத்தில் பல தாழ்வுப் பிரதேசங்கள் பெருங் குடியிருப்புக்களாக மாறிவிட்டதுதான். ஏரிகளின் மாவட்டம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தை வானில் விமானத்திலிருந்து பார்த்தால் மாபெரும் பூசணிக்காய் தோட்டம் போல தோன்றுமாம். ஏரிகள் பூசணிக்காய் போலவும் அவற்றை இணைக்கும் கால்வாய்கள் கொடிபோலவும் தெரியுமாம். இப்போது காயையும் காணவில்லை, கொடிகள் அழிந்த தடயமும் தெரியவில்லை, எல்லாம் காங்கீரீட் காடுகளாக மாற்றப்பட்டுவிட்டன.

தற்போது சென்னைக்கு குடிநீர் அளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி நீர்த்தேக்கம், மற்றும் அம்பத்தூர் ஏரி, போரூர் ஏரி, மதுரவாயல் ஏரி என பல ஏரிகளுக்கும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து மழையால் வரும் வெள்ளத்தை தேக்கிவைக்க முடியாமல் திறந்துவிடுகிறார்கள். முன்பு இந்த ஏரிகள் நிறைந்தால் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு ஏல்லா நீரையும் வீணாக்காமல் பகிர்நது கொள்ளும். இப்போது அந்த தொடர்பு சிங்காரச் சென்னையால் அறுக்கப்பட்டிருப்பதால் கடலிலும் சேர முடியால் வெள்ளம் தாழ்வான குடியிருப்புக்களை குறிவைத்துத் தாக்குகிறது.

இந்த மழையால் மட்டும் தமிழகத்தில் 130க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைபட்டிருக்கின்றன. சென்னைக்கு நடந்ததுதான் ஏனைய மாவட்டங்களுக்கும் பரவியிருக்கின்றது. நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புக்களையும், மேம்பாலங்களையும், வழுக்கிச் செல்லும் அகலமான சாலைகளையும் பல ஆயிரம் கோடி செலவில் உருவாக்கும் அரசு விவசாய நீர்ப்பாசன வசதிகளுக்காக சில கோடிகளைக்கூட ஒதுக்கவில்லை. பன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் தேவையான நகரத்தை உருவாக்குவதில் முனைந்திருக்கும் அரசு கிரமாப்புறங்களையும், விவசாயத்தையும், நகரத்து சேரிகளையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. எனவேதான் மீண்டும் வலியுறுத்துகிறோம், விவசாயத்தை அழித்து உருவாக்கப்படும் இந்த நகரங்கள் போர்களைவிட பேரழிவுகளைத்தான் கொண்டுவரும். இதற்கான முன்னோட்டம்தான் சமீக ஆண்டுகளாக வரும் மழைக்காலத் துயரங்கள். இன்னமும் கிராமங்களின் வாழ்க்கையால் பெரும்பான்மை மக்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது அந்த கிராமங்களின் பாதுகாப்புதான் இந்தியாவிற்கு உண்மையான வளர்ச்சியைக் கொண்டு வரும். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சில இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்திருப்பது இந்த அரசு ஏகாதிபத்திய சேவைக்காக மட்டும் இருக்கிறது என்பதை உரக்க அறிவிக்கிறது.

இந்தியாவின் மாநகரங்கள் அனைத்தும் கிராமங்களை அழித்துத்தான் மிளிர்கின்றன. அப்படி மிளிரும் நகரங்களிலும் ஏழைகள் ஒதுக்குப்புறமான சேரிகளில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்திற்காக சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர். டெல்லயில் காமன்வெல்த் விளையாட்டிற்காக சில ஆயிரம் கோடிகளை செலவழித்து வரும் அரசு பல சேரிகளை கொத்துக் கொத்தாக நகரைவிட்டு வெளியே தூக்கி எறிந்திருக்கிறது. மும்பையில்தான் நகரமயமாக்கம் நிகழ்த்தியிருக்கும் அநீதி உச்சத்தில் இருக்கிறது. அங்கே பெருமழை பெய்தால் தற்போதைய தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்திருப்பவர்களைவிட அதிகமானபேர் பலியாவார்கள். போதிய இடமின்றி குவித்துவைக்கப்பட்ட தீப்பட்டிகளைப் போல இருக்கும் சேரிகளில் மழை பெய்தால் அது தோற்றுவிக்கும் அலத்தை இலக்கியம் கூடப் படம் பிடிக்க முடியாது. பம்பாயின் சேரிகளில் வாழ்வதற்கு மிகுந்த மனத்திடம் வேண்டும். இத்தகைய சேரிகளில்தான் மாநகரங்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் உழைக்கும் மக்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவின் சுய பொருளாதாரத்திற்கும் அதன் வளர்ச்சிக்குமெதிராக செயற்கையான முறையில் முதலாளிகளின் நலனுக்காக மட்டும் உருவாக்கப்படும் இந்த நகர்ப்புற வளர்ச்சி பெரும்பான்மை மக்களை அன்றாடம் வதைக்கும் மாபெரும் காங்கீரிட் எந்திரமாக மட்டுமே இயங்குகிறது.

இந்த அநீதியை அரசியல் அரங்கில் நாம் எதிர்த்துப் போராடுவதில்தான் தீர்வு மறைந்திருக்கிறது. நகர்ப்புற பயங்கரவாதம் நகரத்து ஏழைகளையும், நடுத்தர மக்களையும், கிராமப்புற மக்களையும் மொத்தமாக சித்திரவதை செய்து கொல்லும் கிருமிநாசினி. இதை இயற்கைப் பிரச்சினையாக எளிமைப்படுத்தி சுருக்கித் திரிக்காமல், அரசியல் பிரச்சினையாக உணர்ந்து கொள்வதுதான் தற்போதைய தேவை. அப்போதுதான் மழையின் துயரத்தை மனித சமூகம் வெற்றி கொள்ளும் நிலையை நாம் அடைய முடியும்.

__________________

ஆனந்த விகடனின் சாதி வெறி !

86

”பாசிசம் முதலில் கைப்பற்றுவது ஊடகங்களை. அதனூடாக உருவாக்கப்படும் பொதுக்கருத்தே மக்களை பாசிச நடவடிக்கையில் ஈடுபடச் செய்யும்”

விகடன்-லோகோ”நீங்க எந்த ஊரு தம்பி?”

மதுர…..

மதுரையில….

எதைச் சொல்ல. சொன்னால் தெரிந்து விடுவோ..என்கிற அச்சம்.

மதுர டவுணு சார்.

டவுணேதானா? இல்ல பக்கத்துல கிராமமா? நீங்க கும்புடுற சாமி என்ன சாமி? டவுணல எங்க இருக்கீங்க?

சட்டைக்குள் நெளியும் பூணூல் என்னையும் சேர்த்து வளைக்கிறது நான் நெளிகிறேன் கூச்சமாக இருக்கிறது. ஒருவர் சாதியை இன்னொருவர் கேட்பது அநாகரிகம் என்பதனால் கூச்சம் ஏற்படுவதுண்டு. என் உண்மையான சாதி உனக்குத் தெரிந்தால் இந்த உறவு இத்தோடு முறிந்து விடும் என்ற அச்சத்தினால் ஏற்படும் கூச்சமே நடப்பில் அதிகம்.

………………………

சட்டக் கல்லூரிக்காக ஊடகங்களில் எழுதுகிற, பேசுகிற ஒவ்வொருவனின் சாதியையும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கிறோம். நட்பு முறிந்தாலும் பரவாயில்லை “தலித்துக்களின் காட்டுமிராண்டித்தனம்” பற்றி பேசுகிறவனின் யோக்கியதையை அம்பலப்படுத்துவதற்கு ‘அவர்களின்’ன சாதியை தெரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தக் கட்டாயம் கூட சாதி வெறியர்கள் எங்கள் மீது திணித்ததுதான்.

கடந்த 12 -ஆம் தேதி சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த ‘தாக்குதலின் இரண்டாவது பாகத்தை’ மட்டும் ஒளிபரப்பிய, எழுதிய தமிழக ஊடகங்கள் பொதுப் புத்தியில் தலித்துக்கள் பற்றி உருவாக்கி  வைத்திருக்கும் எண்ண ஓட்டங்கள்தான் தலித் விரோத அரசு வன்முறையாக மாறி போலீஸ் ஒட்டுக்குமுறையாக பரிணாமம் பெற்றிருக்கிறது. இச்சூழலில் ஊடகங்களில் சாதி குறித்து எப்படி பேசாமல் இருக்க முடியும்?

ஒருவனை பத்து பேர் சேர்ந்து புரட்டி எடுப்பதையும்.அதை வேடிக்கை பார்த்த போலீசையும் நோக்கி இன்று வீசப்படும் கேள்விகள், இதுவரை தமிழக ஊடகங்களால் கேட்கப்படாதவை. இதுவரை தலித் மக்கள் தாக்கப்பட்ட  எல்லா இடங்களிலும் வேடிக்கை மட்டுமே பார்த்தது போலீஸ். சில இடங்களில் சாதி வெறியர்கள் செய்ய வேண்டிய வேலையை போலீசே செய்தது. அடிப்பவன் ஆதிக்க சாதிக்காரனாகவும் அடிபடுபவன் தாழ்த்தப்பட்டவனாகவும் இருந்த எல்லா தாக்குதல்களிலும் போலிஸ் வேடிக்கை மட்டுமே பார்த்தது. வெண்மணியில் தொடங்கி மேலவளவு,கொடியங்குளம்,தாமிரபரணி படுகொலைகள்,உத்தபுரம்,என வரலாற்றின் நீண்ட பக்கங்கள் அனைத்திலும் போலீசு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.

இன்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த நீண்ட வன்முறைப் பட்டியலில், சட்டக் கல்லூரியில் மட்டும் ஒரு வித்தியாசம் இது வரை எவன் அடித்தானோ அவன் இங்கே அடிவாங்குகிறான். இது வரை எவன் இங்கே அடிவாங்கினானோ அவன் அடிக்கிறான்.

சரி, ஆதிக்க சாதிக்காரன் அடிவாங்கும் போது போலீஸ் ஏன் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும்?

நண்பர்களே, உண்மையில் போலீசும் சரி ஊடகங்களும் சரி பொது மக்களும் சரி முதலில் என்ன நினைத்தார்கள் என்றால் “வழக்கம் போல தலித் அடிவாங்குகிறான் ஆதிக்க சாதிக்காரன் அடிக்கிறான்” என்றுதான் நினைத்தார்கள்.அதனால்தான் நீண்ட நேரம் லத்தியைச் சுருட்டி கமுக்கட்டுக்குள்ளாற வெச்சிக்கிட்டிருந்தது போலீஸ். ஊடகங்களும் முதலில் குழம்பித்தான் போயின. அடிவாங்கியவர்கள் பற்றி சரியான தகவல் இல்லாத சூழலில், நடப்பது சாதிக்கலவரம் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு அடித்ததும் அடிவாங்கியதும் எந்த சாதிக்காரன் என்று தெரியாத சூழலில் பிரபல ஊடகவியலாளர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு போன் செய்து.” சார் தேவர் சாதி பசங்க ரெண்டு தலித் பசங்க போட்டு அடிச்சிட்டாங்களாமே சார். பொழைக்கிறதே கஷ்டமாமே?” என்று கேள்வியாக கேட்டு பதிலை தெரிந்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவுக்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில், அவசர அவசரமாக கிடைத்த வன்முறைக் காட்சிகளை வைத்து ‘சட்டக் கல்லூரியில் வன்முறை’ என்றுதான் முதலில் ஆரம்பித்தது சன் டிவியும் ஜெயா டிவியும். கிடைத்த க்ளிப்பிங்ஸை வைத்து அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும் நோக்கம் மட்டுமே அப்போது அவர்களுக்கு. அரை மணிநேரத்திற்கு அப்பறம்தான் தெரிந்தது – இங்கே அடிவாங்கியது நம்பியார் அல்ல எம்.ஜி.ஆர் என்று. ரத்தம் சொட்ட சொட்ட எம்.ஜி.ஆர் விழுந்து கிடந்ததை பொதுப்புத்தியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இடைவேளை. இதற்குப் பின் வன்முறைகளைப் பற்றி எழுதிய பத்திரிகைகள் இதன் மூன்றாவது பாகத்தை துவங்கி வைத்தன. அது ஒட்டு மொத்தமாக தலித் சமூகத்தையே அச்சுறுத்தும் அளவுக்கு பிரச்சாரம் செய்து, பொது நீரோட்டத்திலிருந்து அவர்களை அப்புறம் படுத்தும் படியான பிரச்சாரம்.

”கொடூரமான காட்டுமிராண்டிகள்”

”இவங்கெல்லாம் ஜட்ஜ் ஆனா என்ன நடக்கும்”

”சட்டம் படிச்சு இவங்க என்ன செய்யப் போறாங்க ”

‘இவங்க தங்கியிருக்கிற ஹாஸ்டல்ல இருந்து அடிச்சு துரத்தணும்”

இம்மாதிரியான தலித் விரோத வசவுகளை தொடந்து பரப்பி வந்தன ஊடகங்கள். இன்று வரை இந்த பிரச்சாரம் ஓய்ந்த பாடில்லை.

இந்தப் பிரச்சாரங்கள் இவளவு கொடூரமாக அப்பட்டமான சாதி வெறியாக இதற்கு முன்னரும் தமிழக அச்சு, காட்சி ஊடகங்களால் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தாலும், “இந்த அளவுக்கு மோசமாக இதற்கு முன் இருந்ததே இல்லை” என்று சிலர் சொல்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்,

உண்மையில் தலித் விரோத ஊடக பிரச்சாரத்திற்கு என்ன காரணம்? காட்சி,அச்சு ஊடகங்கள் என அனைத்திலும் நூற்றுக்கு நூறு சதம் இருப்பது ஆதிக்க சாதி ஆட்கள்தான்.சாதி இந்து வெறியின் வன்மம்தான் தலித் விரோத போக்காக ஊடகங்களில் வளர்ந்திருக்கிறது. அனைத்து ஊடகங்களுமே இவ்விதமான விஷத் தனமான பிரச்சாரத்தில் ஈடு பட்டிருந்த சூழ்நிலையில், முற்போக்கு முகமூடியைக் கொண்ட ஆனந்த விகடனின் 26-11-08  இதழில் ”சட்டம் சதி சாதி” என்ற தலைப்பில் சட்டக் கல்லூரி நிகழ்வு பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

எல்லா ஊடகங்களுமே ஆதிக்க சாதிக் கருத்தியல்களை வாந்தியெடுத்துக் கொண்டிருப்பவைதான். “நாம் ஆனந்த விகடனை மட்டும் எடுத்து குறை கூறுவது ஏன்?” என நண்பர்கள் சிலர் கேட்கக் கூடும். ஆனந்த விகடனுக்கும் குமுதத்திற்கும் என்ன வித்தியாசம்? என்றால் இது முற்போக்கு அது பிற்போக்கு என்பார்கள் (முன்னால போறது முற்போக்கு பின்னால போறது பிற்போக்கு) அதில் ஆனந்த விகடன் முற்போக்கு நாளிதழ் என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் ஏமாளி வாசகர்களுக்காக மட்டுமே நாம் ஆனந்த விகடனை அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

சங்கர்ராமன் கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட ஜெயேந்திரனுக்காக வரிந்து கட்டிய ஆனந்த விகடனின் பூணூலை நாமெல்லாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதே பார்ப்பனத் திமிரை கையிலெடுத்து தலித்துக்களை செருப்பால் அடிக்கிற ஆனந்த விகடனை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறவர்கள்  26-11-08 தேதியிட்ட ஆனந்த விகடனைப் பார்க்கவும்.

”சட்டம்….சதி…சாதி” என்கிற தலைப்பில் சட்டக் கல்லூரி கலவரத்தையொட்டி எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இப்படி துவங்குகிறது…

”அதிகாரத்துடன் அதட்டித் தடுக்க வேண்டியவர்கள் ஒதுங்கி நிற்க, பட்டப்பகலில், தலைநகரத்தில், உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்டடத்தில் அரங்கேறி முடிந்தது அந்த அட்டூழியம்!

உருட்டிப் புரட்டியதில் உணர்ச்சியற்றுக்கிடக்கும் ஓர் இளைஞனை இன்னமும் ஆத்திரம் தீராமல் அடித்து எலும்புகளைச் சில்லு சில்லாக்குகிறது அடாவடிக் கும்பல். அருகில் நிற்கும் மாணவர் கூட்டம் உற்சாகப்படுத்துகிறது. வளாகத்துக்குள் என்ன நடந்தாலும், பொறுப்பேற்க வேண்டிய கல்லூரி முதல்வரோ, தன் அறைக் கதவைப் பூட்டிக்கொள்கிறார். கொடுமையிலும் கொடுமையாக, போலீஸ்காரர்களோ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.”(ஆனந்த விகடன் 26-11 –08)

வார்த்தைகளை உருட்டி வசன மெருகேற்றி இப்படி துவங்குகிற அந்தக் கட்டுரை கிலோ கணக்கில் மலத்தை எடுத்து தலித்துக்களின் வாயில் திணிக்கிற வக்கிரத்துடன் துவங்குகிறது.ஒரு வேளை வழக்கம் போல அடிவாங்கியது தலித்தாக இருந்திருந்தால் வழக்கம் போலீஸ் வேடிக்கை பார்த்திருந்தால் அது கொடுமையிலும் கொடுமையாக ஆனந்தவிகடனுக்கு தெரிந்திருக்காது.காட்சி மாறியதுதான் இந்தக் கொதிப்புகளுக்குக் காரணம்.

அந்தக் கட்டுரையின் அடுத்தடுத்த வரிகளைப் படியுங்கள்..

“மாணவர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் அனைவரின் முகத்திரைகளையும் கிழித்துக் கடாசியிருக்கிறது ஒரே ஒரு வெறிச்செயல்!”

”இப்படி நடுரோட்டுல நாயா அடிபடுறதுக்கா புள்ளையைப் பெத்து தங்கமா வளர்த்து பட்டணத்துக்குப் படிக்க அனுப்புனேன். யய்யா, பட்டணத்து மவராசனுங்களா, கண்ணு முன்னாடி ஒருத்தனை உசுர் போக அடிக்கிறப்போ, ‘என்ன ஏது?’ன்னுகூடக் கேக்க மாட்டீங்களா? மனுசனாயா நீங்க?” – சுளீரெனக் கேள்வி கேட்கிறார் ஆறுமுகத்தின் தாயார். கட்டை, கம்பி, மண்வெட்டி கொண்டு கால்கள் இரண்டும் உடைக்கப்பட்ட பிறகும் மரக் கிளையைப் பற்றி எழுந்து, தப்பித்து ஓடத் தடுமாறினானே அவன்தான்… ஆறுமுகம். மூன்றாவது அடியிலேயே நினைவிழந்து, நிலைகுலைந்து சாவைத் தொட்டு நிற்பவனை விடாமல் மொத்தி எடுக்க, வெறும் சதைப் பிண்டமாகக் குப்புறப் படுத்திருந்த இளைஞன்… பாரதி கண்ணன்.”

படித்ததுமே பற்றிக் கொண்டு பாரதிகண்ணன் மீது பரிதாபம் வருகிற மாதிரியான இந்த வார்த்தை உருட்டல்களில் ‘கத்தியோடு பாய்ந்து வந்த பாரதி கண்ணன்’
குறித்து ஒப்புக்கான ஒரு வரி கூட இல்லை.ஆனால் அடுத்தடுத்து வருகிற வார்த்தைகளும் வரிகளும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் சின் அதிகாரபூர்வ ஏட்டுக்கு குறையாத விஷ வரிகள்.பாரதிகண்ணன் மேல் பரிதாபத்தை வரவழைக்கும் ஆனந்த விகடன் பாரதி கண்ணனால் காது அறுக்கப்பட்ட சித்திரைச் செல்வனின் பதில் தாக்குதலை பயங்கர பழிவாங்கல் வன்முறையாக சித்தரிக்கிறது.

“சட்டக் கல்லூரி மாணவர்களிடையே அனலைக் கிளப்பியதில் இவர்கள் இருவருக்கும் பங்கு உண்டு என்றாலும், அதற்கான தண்டனையை அளிக்கும் அதிகாரத்தை மாணவர்கள் கையில் யார் கொடுத்தது? ‘எவன் பார்த்தால் என்ன? நாங்கள் மாணவர்கள், அதுவும் சட்டக் கல்லூரி மாணவர்கள். எங்களுக்கு எந்தச் சட்டமும் இல்லை!’ என்ற மமதையைத்தான் வெளிப்படுத்தியது அந்த ஒவ்வொரு அடியும்!”

“சமீபத்தில் முடிந்த தேவர் ஜெயந்திதான் இதற்கான பிள்ளையார் சுழி. ஒரு தரப்பு மாணவர்கள் அடித்த போஸ்டரில், ‘டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி’ என்ற கல்லூரியின் பெயரில், டாக்டர் அம்பேத்கர் பெயர் மிஸ்ஸிங். ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று மற்றொரு தரப்பு கேள்வி கேட்க, கேட்டவர்களுக்கு அடி விழுந்தது. பாலநாதன், ஜெகதீஸ் ஆகிய இருவருக்கும் பலத்த அடி…”

அந்த பலத்த அடியை வழங்கிய மாணவர்கள் யார்? அவர்கள் மீது ஏன் வழக்கு போடப்படவில்லை? இந்தக் கேள்விகளை ஆ.வி எழுப்பவில்லை. ‘இந்த’ ஸ்டோரிக்கு ‘அந்த கதை’ தேவையில்லை!

…. “பழி வாங்கக் குறிக்கப்பட்ட நாள்தான் நவம்பர், 12. பொதுவாக, நவம்பர் மாதம் சட்டக் கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுகள் நடக்கும். கொஞ்சம் சேட்டைகளைக் குறைத்துவிட்டு படிக்கத் துவங்குவார்கள். தேர்வு நேரமென்பதால், கூட்டம் குறைவாக இருக்கும். தேவை யானவர்களைப் பொளந்து கட்டிவிடலாம் என்பது பிளான். கத்தி, உருட்டுக்கட்டைகள், இரும்பு ராடுகள், கூர்மையான கற்கள், மண்வெட்டி போன்ற ‘பொருள்கள்’ விடைத் தாள், வினாத்தாள்களுக்கு முன்னரே வந்து இறங்கிவிட்டனவாம்.” (ஆனந்த விகடன் 26-11 –08)

கத்தியோடு பாய்ந்த பாரதி கண்ணனின் சாதிவெறியை மறைத்த ஆனந்த விகடன், அனலைக் கிளப்பிய பாரதிக்கண்னுக்கும் ஆறுமுகத்துக்கும் தண்டனை வழங்கும் அதிகாரம் யார் கொடுத்தது என கேள்வி எழுப்புகிறது. ஏண்டா, உங்க சட்டபடிதானே ஒரு தலித் மேலவளவில் பஞ்சாயத்து தலைவராக வந்தார். ஆனால் வந்தவர் தலித்துங்கறதாலதானே சட்டத்தை நீங்களே கையெலெடுத்து வெட்டிக் கொன்னீங்க?

“என்ன தோழர் நீங்க, ஏதோ மேலவளவு முருகேசனை ஆனந்த விகடன் ஆட்கள் கொன்னுட்ட மாதிரி நீங்க என்று ஆனந்த விகடனை கைகாட்டுறீங்களே?” என்று உங்களுக்கு கேள்வி வருகிறதா? அதற்கும் பதில் இருக்கிறது.

மிகவும் ஒரு தலைபட்சமாக தலித் மாணவர்களையும் ஆம்ஸ்ட்ராங்கையும் குற்றம் சாட்டும் கட்டுரையின் எந்த இடத்திலும் கள்ளரின மாணவர்களை அடியாட்களாக உருவாக்கும் ஸ்ரீதர் வாண்டையார் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

அடுத்து கட்டுரை வரவேண்டிய இடத்துக்கு வருகிறது. அது பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இன்றும் உறைவிடமாக இருக்கின்ற, ஹாஸ்டல்கள் என்ற பெயரிலான திறந்தவெளிக் கழிப்பிடங்கள்தான். கள்ளர் சாதி வெறியர்களின் பிரதானமான இரண்டு கோரிக்கைகளில் ஒன்று – ‘ஹாஸ்டல்களை மூட வேண்டும்’ என்பது.

ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தபப்டும் ஹாஸ்டல்களை ‘அனைவருக்கும் பொதுவான ஹாஸ்டல்’ என கரடி விடும் ஆனந்த விகடன், “பொது ஹாஸ்டலை தலித்துக்கள் ஆக்ரமித்துக் கொண்டார்களாம்” என்று திரி கொளுத்துகிறது. தாங்கள் வாழும் சேரிகளை விடக் கேவலமாக இருக்கும் ஹாஸ்டலுக்குள் உணவு கழிப்பறை வசதி கேட்டும் போராடும் மாணவர்களின் குரலை இப்படிப் பதிவு செய்கிறது ஆனந்தவிக்டன். “அப்பளம் போடவில்லை, ஆப்பம் வேகவில்லை!” என்று தொடங்கி, நித்தமும் அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டம்தான்!

”மோதல்கள் வெடிக்கின்றன என்றால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து களைய வேண்டும். அதை விட்டுவிட்டு, சட்டக் கல்லூரியையே மூட வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்? நிச்சயமாக இந்த வன்முறை கண்டிக்கத்தக்கது என்பதில் சந்தேகம் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்கள் இந்த மாணவர்களை அரசியல்மயப்படுத்த முன்வர வேண்டும். வெறுமனே வன்முறையைக் கற்றுக்கொடுக்காமல், சமூகப் பிரச்னைகளின் அடிப்படைகளையும் கற்றுத்தர முன்வர வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் அஜிதா. (ஆனந்த விகடன் &26&11&08)

மோதலுக்கான காரணங்களை கண்டெடுத்து தீர்க்க வேண்டும் என்று சொல்கிற அஜிதா அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் இந்த சாதி இந்து சாக்கடைக்குள் தான் இருக்கிறது என்கிற உண்மையை பேச மறுத்து விட்டதன் பின்னணி என்ன? குறைந்த பட்சம் தாக்குதலுக்கான காரணங்களைக் கூட கேள்வி கேடகத் தோன்றாதது ஏன் என்றும் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது.

அடுத்து நம்ம கம்யூனிஸ்ட் கனகராஜாவது உண்மையைப் பேசுவாருண்ணு பார்த்தா…

”பொதுமக்களில் பல தரப்பினரும் இயக்கங்களும் ஜனநாயகரீதியாகப் போராடும்போது, இதே போலீஸ் எந்தப் புகாரும் இல்லாமல் தடியடி தொடங்கி துப்பாக்கிச்சூடு வரை நடத்துவதில்லையா? கல்லூரி வளாகத்துக்குள் நுழைய முதல்வரின் அனுமதி வேண்டுமென்றால், வளாகத்துக்கு வெளியே மோதலில் ஈடுபட்ட மாணவர்களைத் தடுத்திருக்கலாமே. இந்த மாதிரியான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானது” என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கனகராஜ்.(ஆனந்த விகடன் 26&11&08)

எப்பா, எவ்ளோ பெரிய உண்மையைச் சொல்லிட்டாரு பாருங்க. கள்ளனும், தலித்தும் ஒண்ணாச் சேந்து விலைவாசிக்கு எதிரா போராடினாதான் போலீஸ் உதைக்கும். அதுவே தலித்தை கள்ளர் தாக்கினால் போலீஸ் அடிக்காது குண்டாந்தடியைக் கொடுத்து அடிக்கச் சொல்லும். சட்டக் கல்லூரியில் ஏமாந்தது ஆதிக்க சாதிக்காரங்க மட்டுமல்ல.சாதி இந்துப் போலீசும்தான்.அதானலதான் ஒரு கள்ளர் சமூக இளைஞன் அடிவாங்கினதும் உங்களுக்கெல்லாம் உதறுது.இத்தனை காலமும் தலித் அடிவாங்கும் போதெல்லாம் மௌனமாக இருந்த போலீசைப் பார்த்து கேள்வி கேட்காத இவர்கள் இப்போது கேட்கிறார்கள்.

அடுத்து வந்தார் நம்ம கொம்யூனிஸ்டு நல்லக்கண்ணு…

”ஏற்கெனவே சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்களை விசாரிக்க போடப்பட்ட கார்த்திகேயன் கமிஷன், பக்தவச்சலம் கமிஷன் ஆகியவை ‘பிரச்னைக்குரிய சூழலில் காவல் துறை, கல்லூரி முதல்வரின் அனுமதி இல்லாமலே கல்லூரிக்குள் நுழையலாம்’ என்று சொல்லியிருக்கிறது. எனவே, காவல் துறையின் வாதங்கள் எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல. மேலும், இப்படி மாணவர்கள் இரு தரப்பினர் மோதலில் ஈடுபடுவதை போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பதைப் பொதுமக்களும் பார்த்தனர். இந்த போலீஸ், நாளை பொதுமக்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறது என்கிற நியாயமான அச்சம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது” என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.(ஆனந்தவிகடன் 26&11&08)

அதாவது அடிபட்ட கள்ளரைப் பாதுகாக்காத போலீஸ் எப்படி ஏனைய சாதி இந்துக்களை பாதுகாக்கப் போகிறது என்று கேட்டிருக்கிறார், இந்த மூத்த கொம்யூனிஸ்ட் தலைவர். அஜிதாவோ,கனகராஜோ,நல்லகண்ணுவோ யாருமே கள்ளர் சாதி வெறியைப் பற்றிப் பேசவில்லை. குறைந்த பட்சம் ஜனநாயக ரீதியில் எழுப்பியாக வேண்டிய கேள்விகளைக் கூட எழுப்பவில்லை. என்பதோடு ஆதிக்க சாதி தடித்தனத்துக்கு ஒத்து ஊதியிருக்கிறார்கள்.

கட்டுரைக்கு தோதாக பாரதிகண்ணன் அடிவாங்குகிற மூன்று படங்களை வெளியிட்டிருக்கிறது ஆனந்த விகடன் அதன் லேஅவுட் கூட மிக தந்திரமாக உசுப்பேற்றும் வகையில் உள்ளது.ஒரு படத்தில் காது அறுந்து தொங்குகிற சித்திரைச் செல்வன் பாரதிக்கண்ணனை அடிப்பதை போட்ட லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் பாரதிகண்ணன் கத்தியோடு கொலைவெறியோடு ஓடிவரும் படத்தை மட்டும் போடவில்லை.

அப்படி ஓடி வந்து சித்திரைச் செல்வனின் காதையும் கழுத்தையும் அறுத்த பிறகுதான் சித்திரைச் செல்வன் கொல்லப்படுவார் என்ற சூழலில் தலித் மாணவர்கள் சேர்ந்து பாரதிகண்ணனை புடைத்து எடுத்தார்கள்.இந்த உண்மைகளை உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

பத்திரிகைத் தொழிலில் மூன்று வகையான ஜர்னலிசம் உள்ளதாக அடிக்கடி பீற்றிக் கொள்வோர் உண்டு.ஒன்று ”ரியல் ஜர்னலிசம்”. இன்னொன்று ”கவர் ஜர்னலிசம்”.  மூன்றாவது ”டெஸ்க் ஜர்னலிசம்”

இதில் ரியல் ஜர்னலிஸ்ட் உண்மைக்காக எழுதுவான்.ஆனந்த விகடன் சட்டக் கல்லூரி பிரச்சனை பற்றி எழுதிய மாதிரி.

கவர் ஜர்னலிஸ்ட் கவர் கொடுக்கிறவனை புகழ்ந்து எழுதுவான் வாராவாரம் ஆனந்த விகடன் விஜயாகாந்தை சொறிகிற மாதிரி. இப்படி சொறிவதுதான் கவர் ஜர்னலிசம்.

மூன்றாவது வருகிற டெஸ்க் ஜர்னலிசம் எந்நேரமும் வாந்திதான். இந்த வாந்தி எடுக்கிற பேர்வழிகள் அரைகுறையாக இன்டர்நெட்டை திறந்து எதையாவது படித்து விட்டு அப்படியே உவ்வே… பண்ணி வைப்பார்கள்.

இதை எழுதும் போது விகடன் பாணி ஜோக் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது…

ஒருவன்:  ”விக்டன் ஏன் உப்பு சப்பில்லாம இருக்கு”

விகடன் ஓனர்: ” நீ ஏண்டா அதை நக்கிப் பாக்கிறே?”.

இந்த நக்கலுக்கும் வாந்திக்கும் இடையில் ஆனந்த தாண்டவம் ஆடுவதுதான் விகடனின் பவர் ஜர்னலிசம்.

இதே பிரச்சனை குறித்து ஜுனியர் விகடனும் கடந்த இருவாரங்களாக கட்டுரை வெளியிட்டபடி இருக்கிறது. முதல்வாரத்தில் வெறித்தனமான கட்டுரையை வெளியிட்ட ஜூவி, இந்த வாரம் ‘தனது நடு நிலையை நிலைநாட்டுவதற்காக’ ரஜினிகாந்த் என்கிற வழக்கறிஞரின் நேர்காணலை வெளியிட்டது அதில் தேவர் ஜாதி அரசியல் சட்டக் கல்லூரிக்குள் வளர்ந்த கதை, பாரதிகண்ணனின் வன்முறை வரலாறு, முக்குலத்தோர் பேரவை சட்டக் கல்லூரிக்குள் துவங்கப்பட்டமை என பல விஷயங்களையும் வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால் அந்தக் கட்டுரையின் முடிவில் ரஜினிகாந்த் தலித் சமூகத்தை சார்ந்தவர் என்று போகிற போக்கில் போட்டு விட்டுப் போகிறது. அதாவது ‘தலித் சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் இப்படித்தான் பேசுவார் அதனால் கண்டு கொள்ளாதீர்கள்’ என்று சொல்லாமல் சொல்லியிருந்தது.

ஆனால் இதே ஜுவி அதற்கு முந்தைய வாரம் எழுதிய சட்டக் கல்லூரி கட்டுரையில் ராஜாசெந்தூர்பாண்டி என்ற ஒரு வழக்கறிஞரிடம் பேட்டி எடுத்திருந்தது. அவரும் வெறுப்பில் தலித் விரோத விஷத்தைக் கக்கியிருந்தார். ஆனால் அவர் எந்த சாதி என்று போட வில்லை.

எப்பா ரியல் ஜர்னலிஸ்டுகளே. ரஜினிகாந்தை ஒரு தலித் வழக்கறிஞர் என்று போடத் தெரிந்த உங்களுக்கு ராஜாசெந்தூர்பாண்டியை நாடார் என்று போடத் தெரியாதா….குறைந்த பட்சம் சாதி இந்து என்றாவது போட்டிருக்காலமே…

சரி அதெல்லாம் கிடக்கட்டும்..

தமிழ மக்களின் மனசாட்சி என்று சொல்லப்படும் ஆனந்த விகடன் வார இதழில் எப்படி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான இவளவு மோசமான கட்டுரைகள் வெளிவரும் என்று ஆராய்ந்தால்.தோழர்களே….

விசாரித்த பின் தான் தெரிந்தது.ஆனந்த விகடனில் தலைமை இணை ஆசிரியரில் தொடங்கி முக்கிய பொறுப்புகளில் இருக்கும்  பெரும்பாலானவர்கள் அனைவரும் தேவரினத்தைச் சேர்ந்தவர்கள் என்று.

குறிப்பிட்ட ஒரு சாதி ஒரு ஊடகத்தை ஆக்ரமிப்பது என்பதை மிகவும் நுட்பமான விஷயம். இந்த ஆதிக்க சாதி ஆக்ரமிப்பை மறைக்கத்தான் ஆனந்த விகடன் முற்போக்கு முகமூடி போட்டிருக்கிறது.அது அம்பேத்கர் பற்றியும் எழுதும் அம்பேத்கரின் மக்களை காட்டிக் கொடுக்கவும் செய்யும்.

ஜுனியர்விகடனில் உள்ள அனைத்து ஆதிக்க சாதிக் கூட்டு உணர்வுதான் வழக்கறிஞர் ரஜினிகாந்தை தலித் என்று அடிக்குறிப்போடு கட்டுரையை வெளியிடத்தூண்டுகிறது. ராஜாசெந்தூர்பாண்டி என்னும் நாடார் இன வழக்கறிஞரின் ஜாதியைக் குறிப்பிடாமல் அவரைப் பொதுவாக வைப்பதும் அதே சாதி இந்து உண்ர்வுதான்.

அது போல ஆனந்த விகடனைக் கைப்பற்றியிருக்கும் தேவர் சாதி உணர்வுதான் சட்டக் கல்லூரி நிகழ்வில் தலித்துக்கள் மேல் இவ்வளவு வன்மத்தைப் பாய்ச்சுகிறது.

இது தொடர்பாக விசாரித்த போது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆனந்த விகடனில் இருந்து தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்டம் கட்டப்பட்டு ஓரம் கட்டப்பட்டு வந்தது தெரிகிறது. ஒரு தலித் பத்திரிகையாளர் தன் ப்ளாக்கில் தன் கிராமத்தின் மீது படர்ந்துள்ள சாதி வெறி பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அந்தக் கட்டுரை ஆனந்தவிகடனுக்குள் கடும் சர்ச்சைகளை உருவாக்க அன்றிலிருந்து கட்டம் கட்டப்பட்ட அவர் கடைசியில் ராஜிநாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

உத்தபுரத்தில் கொடிக்கால் பிள்ளைமார் தலித் மக்களை தனித்துப் பிரித்துக் கட்டிய சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதை  ஒட்டி எழுந்த பதட்டத்தின் போது அனைத்து ஆதிக்க சாதிகளும் பிள்ளைமாரை ஆதரிக்க, அதைத் தொடர்ந்து எழுந்த விவகாரங்கள் பற்றி அனைத்து பத்திரிகைகளுமே செய்திகளைப் பதிவு செய்திருந்தன.

அதே செய்தியை மதுரையில் இருந்து ஒரு விகடன் நிருபர் ரிப்போர்ட் பண்ணியிருக்கிறார். ஆனால் அந்தச் செய்தி ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது என்று கூறி இந்த தேவர் சாதிக் கும்பல் அதனை ஒரு துண்டுச் செய்தியாகக் கூட வெளியிடவில்லை என்ற குமுறல் அப்போதே அங்குள்ள நிருபர்கள் சிலரிடம் எழுந்ததாம்.

மீண்டும் சொல்கிறோம். சட்டக் கல்லூரி விவாகரத்தில் மிக மிக ஒருதலைப்பட்சமான கட்டுரையை ஆனந்த விகடன் வெளியிட்டிருப்பதோடு, ‘முக்குலத்தோர் பேரவை’க்காக அடியாள் வேலை பார்த்திருக்கிறது. மற்றெல்லா ஊடகங்களும்  அனைத்து சாதி ஆதிக்க சக்திகளிடம் சிக்கியிருக்கின்றன என்றால்,  ஆனந்த விகடனை குறிப்பிட்ட ஒரு சாதி கைப்பற்றியிருக்கிறது.

பார்ப்பன-தேவர் சாதிக் கூட்டு ஆனந்த விகடனில் இருந்து கொண்டு பொது மக்களிடம் தலித்துக்கள் பற்றிய பொய்யான சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறது என்பதாலேயே இதை நாம் எழுதுகிறோம்.

________________

தொம்பன்
__________________

கவிஞர் சுகுமாரன் நினைவில் கா….ர…ல் மார்க்ஸ் !

6

marx_1“இன்னொரு பிறவி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு சொல்லுங்கள், அடுத்த பிறவியில் என்னவாக இருக்க விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு, மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன் என்று மார்க்ஸ் பதிலளித்தார்” என்று உயிரோசை இணைய இதழில் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்கவிஞர் சுகுமாரன்.

“மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன்!” வாழ்க்கையின் துன்பங்களால் நைந்து போன ஒரு மனிதன், களைத்துத் துவண்ட ஒரு தருணத்தில் சொல்லியிருக்கக் கூடிய வார்த்தைகள்! எனினும் மார்க்ஸ் இங்ஙனம் சொல்லியிருக்கக் கூடுமா?

“இதுநாள் வரை தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தார்கள். நமது பணி அதனை மாற்றியமைப்பதுதான்” என்று பிரகடனம் செய்த ஒரு மேதை,

“இயற்கையின் நடத்தையை ஆளும் இயக்க விதிகளை மனிதன் கண்டு பிடித்துவிடலாம், ஆனால் தன்னுடைய (மனித குலத்துடைய) இயக்கத்தை ஆளும் விதிகளை மட்டும் கண்டுணரவே முடியாது” என்று தனக்கு முன் தானே பிரமித்து நின்ற மனிதகுலத்தை, அந்தப் பிரமிப்பிலிருந்து விடுவித்த ஒரு தத்துவஞானி,

தாங்களே உருவாக்கும் வரலாறு, தங்களை எப்படி வனைந்து உருவாக்குகிறது என்ற சூட்சுமத்தை அவிழ்த்துக் காட்டியதன் மூலம், தாம் விரும்பும் விதத்தில் தம்மை உருவாக்கிக் கொள்வதற்கான வழிமுறையை மனிதகுலத்துக்குக் கற்றுக் கொடுத்த ஒரு மாபெரும் அறிவியலாளன்,

“நான் மனிதனாகப் பிறக்க விரும்பமாட்டேன்” என்று சொல்லியிருக்கக் கூடுமா?

மார்க்சியத்தைத் தமது வாழ்க்கை நடைமுறைக்கான வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, ஒரு தத்துவ ஞானம் என்ற முறையில் மார்க்சியத்தைப் புரிந்து கொண்ட யாருக்கும் எழும்பியிருக்க வேண்டிய கேள்வி இது. ஆனால் சுகுமாரனுக்கு அது எழும்பவில்லை.

அவரைப் பொருத்தவரை, ‘எப்பவோ எதிலேயோ படித்தது’ என்று சர்வசாதாரணமாக பழைய நினைவிலிருந்து போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகிற அளவுக்கு, மிகச்சாதாரண விசயமாக அது இருந்திருக்கிறது.

ஒருவேளை மார்க்ஸ் அவ்வாறு கூறியிருந்தால்?

அவ்வாறு கூறுவதற்குத் தேவையான கசப்புகளை சகிக்கவொண்ணாத அளவில் அவர்மீது திணித்திருந்தது வாழ்க்கை. அருமைக் குழந்தைகளின் பட்டினிச்சாவு, அதனைக் கண்டு துடித்த காதல் மனைவியின் கண்ணீர், கற்பூரவாசம் அறியாத கழுதைகளான கடன்காரர்களின் தரம் தாழ்ந்த ஏச்சு, தொழிலாளி வர்க்கத்தின் துயரத்துக்காகக் கண்ணீர் சிந்துவதை நிறுத்திவிட்டு, தன் குடும்பத்தின் துயர்தீர்க்க ஒரு குமாஸ்தா வேலையின் மீது தன்னை அறைந்து கொள்ளலாம் என்று எண்ணத் தூண்டிய இதயம், அதனை அனுமதிக்க மறுத்த சிந்தனை, நண்பர்களின் கொள்கைரீதியான பிரிவு, அவரை நிலைகுலையச் செய்த ஜென்னியின் மரணம்…ஒரு முறை அல்ல, ஒரு நூறு முறை அவரை இவ்வாறு சொல்லத்தூண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு.

ஒரு வேளை சொல்லியிருந்தால்?

சொல்லியிருந்தால் அது அந்த மாமனிதனின் ஒரு துயரப் பெருமூச்சு.

பீத்தோவனின் பேனாவிலிருந்து தெறித்து விழுந்து, அவரே அறியாமல் அவரது சிம்பனியின் அழகைத் துலங்கச் செய்த ஒரு அபசுரம்.

ஒரு மாவீரனின் கண்ணில் கசிந்த கவிதைத் துளி.

தீஞ்சுவை இனிப்பில் கலந்த ஒரு கல் உப்பு.

மார்க்ஸ் அவ்வாறு கூறியிருந்தால், அது இரக்கமற்ற இதயத்திலிருந்தும் ஒரு துளி கண்ணீரை வரவழைக்க வேண்டும். தனது அந்தக் கூற்றின் சுவடு கூடப் படாமல் வாழ்ந்து காட்டிய அந்த வீரனின் மன உறுதி நமக்கு வியப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த மாமனிதன் சொற்களால் சிந்திய கண்ணீர் மனித குலத்தின் இதயத்தைப் பிழிய வேண்டும்.

என்ன சொல்ல வருகிறார் சுகுமாரன்? எதற்காக இதனைச் சொல்ல வருகிறார் சுகுமாரன்?

இத்தகையதொரு சர்ச்சைக்குரிய மேற்கோளைத் தனது நினைவிலிருந்து அகழ்ந்தெடுத்து வாசகர்களுக்கு அவர் வழங்கியிருப்பதன் நோக்கம் என்ன?

நம்பிக்கை என்ற சொல்லின் அடித்தளத்திலிருந்து புனிதங்களை அகற்றி விட்டு, அறிவியல் பீடத்தின் மேல் அதனை அமர்த்திய ‘உலகின் மாபெரும் நம்பிக்கைவாதி’ என்று கொண்டாடப்படும் மார்க்ஸ் “இன்னொரு அவநம்பிக்கை வாதிதான்” என்று பணிவுடன் சுட்டிக் காட்டுகிறாரா?

அல்லது “கடவுள் செத்துவிட்டார். அதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்” என்று கம்யூனிஸ்டுகளை கலாய்க்கிறாரா?

அல்லது உலகம் போற்றும் கம்யூனிஸ்டு ‘திரு உரு’வின் பின்புறத்தில் நம் கண்ணில் இதுவரை படாத ஒரு சொட்டை இருக்கிறது என்று கவனத்தை ஈர்க்கிறாரா?

இவற்றில் முதல் இரண்டும் அவரது நோக்கம் என்றால் அதனை அசட்டுத்தனம் என்றோ, தனது அசட்டுத்தனம் குறித்த பிரக்ஞை இல்லாத ஒரு “அதிமேதாவி’யின் அபத்தமான உளறல் என்றோ விட்டுவிடலாம்.

திரு உருவின் ஊனத்தைச் சுட்டிக் காட்டுவது சுகுமாறனின் நோக்கமென்றால், இலக்கியவாதி என்ற அந்தஸ்தையே அவர் இழக்க நேரிடும்.

“குறையில்லாத மனிதன் இருக்க முடியாது; நல்லது-கெட்டது, கறுப்பு-வெள்ளை என்று உலகத்தை இரட்டைப் பரிமாணத்தில் பார்ப்பது தவறு” என்பன போன்ற வேத வசனங்களைத் தமது இலக்கியக் கொள்கையாகவும், கொள்கைப் பற்று என்பதையே கூடா ஒழுக்கமாக கொண்டு வாழும் தங்களது வாழ்க்கையை நிறுத்துப் பார்த்து நியாயப்படுத்திக் கொள்வதற்கான எடைக்கற்களாகவும் வைத்திருக்கும் இலக்கியவாதிகள் மனிதர்களின் “ஊனம்” குறித்து அதிர்ச்சி கொள்ள முடியாது.

மார்க்ஸ் வெறுப்பு கொள்ளக்கூடாதா? லெனின் கோபம் கொள்ளக கூடாதா? பகத்சிங் கண்ணீர் விடக் கூடாதா? அவை மனிதர்களுக்கு உரியவை இல்லையா? அந்த வெறுப்பும் கோபமும் கண்ணீரும்தான் அவர்களது ஆளுமையை நிர்ணயிக்கும் அளவுகோல்களா?

அவற்றின்பால் வாசகர்களின் கவனத்தை வேலை மெனக்கெட்டு ஈர்க்கிறாரே சுகுமாரன், அது எதற்காக? ஊனத்தைச் சுட்டிக் காட்டும் பொருட்டு அவர் இதனைச் செய்திருந்தால், புனித திருஉருவைத் தொழுகின்ற ஒரு எம்ஜியார் ரசிகனின் தரத்தில் அவர் இருக்கிறார் என்பதை அவரே புரிந்து கொள்ளட்டும். அறிவு பூர்வமாக இதனைச் செய்திருப்பாரானால் தனது நோக்கத்துக்கு அவர் விளக்கம் கூறட்டும்.

ஒரு இலக்கியவாதியின் வாயிலிருந்து எந்த நோக்கமும் இல்லாமல் தற்செயலாக வெளிப்படுவதற்கு ‘சொற்கள்’ எனப்படுபவை, பின்புறத்திலிருந்து வெளிப்படும் வாயு அல்லவே!

0000

“மார்க்ஸ் இவ்வாறு பதிலளித்திருப்பது உண்மைதானா?” என்று தெருக்கூத்தாடி எங்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். confessions என்ற தலைப்பில் தன்னுடைய மகளின் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் மார்க்ஸ். இதே போன்ற பதில்களை மார்க்ஸின் மனைவி ஜென்னியும், எங்கெலஸும் கூட அளித்திருக்கின்றனர். பொருட்செறிவும் வேடிக்கையும் கலந்த அந்தப் பதில்கள், அவர் எழுதிக் குவித்த ஆயிரம் பக்கங்களில் அரைப்பக்கத்துக்குக் கூடக் காணாது. அவற்றை ஒரு வரிப் பிரகடனமாகவோ, மார்க்சியத்தின் சாரமாகவோ, மார்க்சுடைய ஆளுமையின் வெளிப்பாடாகவோ புரிந்து கொண்டு மேற்கோள் காட்டுவதை, மிகவும் மரியாதையான சொற்களில் சொல்லுவதென்றாலும் முட்டாள்தனம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

எனினும் வாசகர்களுக்கு என்ன விதமான தெளிவை ஏற்படுத்தும் பொருட்டு இந்த மேற்கோளை சுகுமாரன் கையாண்டிருக்கிறார் என்று தெரிந்து கொள்ளாமல், முட்டாள்தனம் என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துவது நியாயமல்ல என்பதால், உயிரோசைக்குச் சென்று அவருடைய கட்டுரையைப் படித்தோம்.

கம்யூனிஸ்டு அறிக்கையை இலக்கிய நோக்கில் வாசித்து அதன் நடையைப் பற்றி உம்பர்ட்டோ ஈகோ என்ற இத்தாலிய சிந்தனையாளர் எழுதியுள்ள ஆழமான கட்டுரையொன்றை சுகுமாரன் படித்தாராம்.

அதன்உட்பொருள் என்னவாக இருந்தாலும் அது கொண்டிருக்கும் இலக்கியக் குணமே அந்தவெளியீட்டை இந்த அளவு வலிமையுள்ள பிரதியாக ஆக்கியது” என்கிறாராம் ஈகோ.

உலகமயமாக்கல்என்ற சொல்லைப் பயன்படுத்தாமலேயே நூற்றியறுபது ஆண்டுகளுக்கு முன்பு அதன்விளைவுகளைப் பற்றி கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்கிறாராம் உம்பர்ட்டோ ஈகோ.

“உலகமயமாக்கலை எதிர்க்கும் எல்லா சக்திகளும் முதலில் பிளவுபடுத்தப்படும். பின்னர் குழப்பப்படும். அதன் பின்னர் அந்தச் சக்திகளே உலகமயமாக்கலை ஆதரித்துப் போராடத் தொடங்கும்” என்ற உண்மையை மார்க்சின் பிரகடனத்திலிருந்து ஈகோ வாசித்துக் கண்டு பிடித்திருக்கிறாராம். “இந்த உண்மை இன்றைய நிஜம்

என்று கூறும் சுகுமாரன் கீழ்க்கண்டவாறு தொடர்கிறார்.

“மார்க்சின் நூல்கள் மீண்டும் அவரது தாய்மொழியான ஜெர்மனியில் மறுபதிப்புப் பெறுகின்றன. .. உலகப் பொருளாதாரச் சிக்கல் தங்களுடைய வாழ்க்கையை அவலமாக்கியிருக்கிறது; மார்க்ஸ்கனவு கண்ட சமுதாயத்தில் மனிதமிருக்கிறது என்று அவர்கள் நம்புவதாகவும்மர்டோக்கின் நாளிதழ் கட்டுரை வெளியிட நேர்ந்திருக்கிறது.

இது காரல் மார்க்சின் நான்காம் பிறவி” என்று பெர்லின் பல்கலைக்கழகப் பேராசிரியர் வோல்ப் காங்க் விப்பர்மான் வியக்கிறார்.முந்தைய மூன்று ஜென்மங்களிலும் மார்க்ஸ் வரவேற்கப்பட்டார். விவாதிக்கப்பட்டார்.அவருடைய கருத்துகள் திரிக்கப்பட்டன. கடைசியில் வீசியெறியப்பட்டன.

நான்காவது ஜென்மத்தில் மார்க்ஸ் என்ன ஆவார்?

“மார்க்ஸ் உயிரோடிருந்தபோது அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று.மறுபிறவி ஒன்று இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு சொல்லுங்கள். நீங்கள் என்னவாக இருக்க விரும்புவீர்கள்?’

மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன்என்பது மார்க்ஸின் பதில்.

இத்துடன் சுகுமாரனின் கட்டுரை முடிவடைகிறது.

0000

1.கம்யூனிஸ்டு அறிக்கை அதன் இலக்கியத் தரம் காரணமாகத்தான் 160 ஆண்டுகளான பின்னரும் உயிரோடு இருக்கிறது.

2.உலகமயமாக்கலை எதிர்க்கும் சக்திகளே அதனை ஆதரித்துப் போராடத் தொடங்குவார்கள் என்ற உண்மையை மார்க்சின் எழுத்திலிருந்து ஈகோ கண்டுபிடித்திருக்கிறார். அது இன்று நிஜமாகிவிட்டது.

3.மார்க்சின் நூல்கள் இன்று பெருமளவில் விற்பனையாகின்றன. மார்க்சுக்கு இது நாலாவது பிறவி என்கிறார் ஒரு ஜெர்மன் பேராசிரியர்.

4.ஆனால் மார்க்சோ “எனக்கு மீண்டும் மனிதனாகப் பிறப்பதிலேயே விருப்பமில்லை” என்று கூறியிருக்கிறார்.

சுகுமாரனின் கட்டுரையில் கண்டுள்ள மேற்கூறிய நான்கு பாயிண்டுகளில் முதல் இரண்டும் உம்பர்ட்டோ ஈகோவால் முன்மொழியப்பட்டு சுகுமாரனால் வழிமோழியப்பட்டவை. மூன்றாவது பாயிண்டு ஜெர்மன் பேராசிரியருடையது. நான்காவது பாயிண்டு சுகுமாரனின் சொந்த எழுத்து.

கம்யூனிஸ்டு அறிக்கை அதன் இலக்கியத்தரம் காரணமாகத்தான் இத்தனை காலம் உயிரோடு இருக்கிறதாம். இந்த மதிப்பீட்டை தரம் தாழ்ந்த நகைச்சுவை என்பதா, சின்னத்தனமான தந்திரம் என்பதா?

முதலில் கேள்வி பதில் வடிவத்தில் எங்கெல்ஸால் எழுதப்பட்ட அறிக்கை, பொருத்தமானதாக இல்லை என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருமே முடிவு செய்து, அதன் பின்னர் எழுதப்பட்டதுதான் தற்போது நாம் படிக்கும் கம்யூனிஸ்டு அறிக்கை.

மார்க்சினுள் கருக்கொண்டிருந்த பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் வீரியமிக்க கவித்துவ வெளிப்பாடாக, (பீத்தோவனின் இசை?)

இனி வரவிருக்கும் அவரது ஆய்வுகளின் கம்பீரமான துவக்கவுரையாக, (ஷேக்ஸ்பியர்?)

ஒரு முன்வரைவுக்கேயுரிய தயக்கத்தின் நிழலும் படியா வண்ணம் முதலாளித்துவத்தின் தலைவிதியை அறுதியிட்டுக் கூறிய இறுதித்தீர்ப்பாக (விவிலியத்தின் தீர்க்கம்?),

படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நமது உள்ளத்தில் புதுப்புனலாகப் பொங்குகிறது கம்யூனிஸ்டு அறிக்கை.

இதுதான் கம்யூனிஸ்டு அறிக்கை வழங்கும் அனுபவம். இந்த அனுபவம் அதன் உட்பொருளுடன் இணைந்த அனுபவம். ஷேக்ஸ்பியரையும் பீத்தோவனையும் அறியாத கம்யூனிஸ்டு அறிக்கையின் 99% வாசகர்களுக்கு ஏற்படும் அனுபவம். அவர்களது மனதை அது இன்னமும் ஆட்சி செய்வதற்கான முதற்காரணம் அதன் உட்பொருள்தான்.

“அதன் உட்பொருள் என்னவாக இருந்தாலும்” ரசனை இன்பத்தை வழங்குவதற்கு கம்யூனிஸ்டு அறிக்கை, மியூசிக் அகாதமி கச்சேரி இல்லை. எனினும் சுகுமாரன் கூற்றுப்படி பார்த்தால், உம்பர்ட்டோ ஈகோ அந்த அறிக்கையைப் படிக்கும்போது அவரது செவி பீத்தோவனையும், சிந்தனை ஷேக்ஸ்பியரையும், இதயம் விவிலியத்தையும் தன்னுணர்வற்று ஒப்பு நோக்கிக் கொண்டிருந்திருக்கின்றன என்று தெரிகிறது.

“கம்யூனிஸ்டு அறிக்கையையும், மூலதனம் நூலையும் இலக்கியம் என்ற முறையில் ரசியுங்கள், கட்சி இலக்கியம் என்ற முறையில் கற்காதீர்கள்” என்றுதானே நம்மூர் இலக்கியவாதிகளும் இளைஞர்களை ஆற்றுப்படுத்துகிறார்கள்! இதற்கு இத்தாலியிலிருந்து உம்பர்ட்டோ ஈகோவின் தேவ சாட்சியம் தேவையா என்ன?

ஐநூறும் அறுநூறும் கொடுத்து உம்பர்ட்டோ ஈகோவை வாங்கி அவர் வழியாக கம்யூனிஸ்டு அறிக்கையைப் சுகுமாரன் புரிந்து கொள்வது பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் நாலணாவுக்கு என்.சி.பி.எச்சில் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து தன் சொந்தக் கருத்து என்ன என்பதையும் சுகுமாறன் சொல்லியிருக்கலாம்.

அப்படிப் படிக்காததன் விளைவைப் பாருங்கள்!

உலகமயமாக்கத்தின் எதிர்ப்பாளர்கள் கூட அதனை ஆதரித்துப் போராடுவார்கள் என்று மார்க்ஸ் கூறியதாக உம்பர்ட்டோ ஈகோ கூறியிருப்பதாகவும், அது இன்று நிஜமென்று நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்கிறார் சுகுமாரன்.

கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்ஸ் எங்கே அவ்வாறு கூறியிருக்கிறார் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுவாரா சுகுமாரன்?

உலகமயமாகி வரும் முதலாளிவர்க்கத்தை ஒழிக்க, தொழிலாளிகளையும் உலகமயமாகச் சொன்னார் மார்க்ஸ். “உலகத தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்ற புகழ்பெற்ற அறைகூவலின் பொருள் இதுதான்.

முதலாளித்துவம் தான் உயிரோடு இருப்பதற்காகவே உலகமயமாக்கலைத் திணிக்கிறது என்று மார்க்ஸ், அறிக்கையில் விளக்குகிறார். முதலாளித்துவம் தோற்றுவிக்கும் நெருக்கடிகளும் பேரழிவும் அதன் அழிவை எப்படி தவிர்க்கவியலாத அவசியமாக்குகின்றன என்று நிறுவுகிறார். நிஜம் என இன்று மீண்டும் நிரூபிக்கப் பட்டிருப்பது இதுதான்.

இன்றைய உலகமயமாக்கல் என்பது முதலாளித்து உலகமயமாக்கல். இதனால் பாதிக்கப்பட்டவர்கள்தான் மார்க்ஸின் நூல்களை வாங்குவதற்கு வரிசையில் நிற்கிறார்கள். உலகமயமாக்கத்தின் தீவிர விசுவாசியான மன்மோகன் சிங் சுவிசேச சபையினர் கூட “அல்லேலுயா” என்று உரக்கச் சத்தமிடப் பயந்து அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிஜம்.

அமெரிக்காவிடம் பட்ட செருப்படி தினமணி வைத்தியநாதனையே புரட்சிக்காரனாக்கியிருக்கிறது. நாலு நாட்களுக்கு முன் தினமணி தலையங்கம் எழுப்பியிருக்கும் புரட்சி முழக்கத்தையாவது சுகுமாரன் படித்துப் பார்க்க வேண்டும். சலிப்பூட்டும் அன்றாட உலக நடப்புகளில் இலக்கிய மனம் ஈடுபாடு கொள்வது கடினம் என்பது புரிகிறது. எனினும் இந்த உலகத்தில் வாழ நேர்ந்த துரதிருஷ்டத்துக்காகவாவது நிஜம் என்ன என்பதைத் புரிந்து கொள்ள பேப்பரைப் புரட்டிப் பார்த்துக் கொள்வது அவசியமாக இருக்கிறதே!

sugumaranமார்க்சுக்கு இது நாலாவது பிறவி என்பது அடுத்த பாயிண்டு. அவர் மனிதனாகப் பிறப்பதையே விரும்பவில்லை என்பது சுகுமாறன் சுட்டிக் காட்டும் கடைசி பாயிண்டு.

மார்க்ஸ் கனவு கண்ட சமுதாயத்தில்தான் மனிதம் இருக்கிறது என்று உலகமே அவர் நூலை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிப் படிக்கிறதாம். கோடீசுவரன் முர்டோக்கின் ப்த்திரிகையே இந்த உண்மையை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாம். நாலாவது பிறவி என்று ஜெர்மன் பேராசிரியர் சொல்கிறாராம்.

ஆயினும் சுகுமாரன் என்ன சொல்கிறார்?

“மீண்டும் ஒரு முறை பிறப்பதில் தனக்கே விருப்பமில்லை” என்று மார்க்சே கூறியிருப்பதாக சுகுமாரன் சொல்கிறார். இது போகிற போக்கில் எடுத்தாளப்பட்ட ஒரு மேற்கோளல்ல. அவர் எழுதியிருக்கும் கட்டுரையின் முத்தாய்ப்பு.

“தத்துவத்தைப் படைத்தவரே அதன் மீது நம்பிக்கை இழந்து விட்ட சூழலில், அந்த மனிதனின் எழுத்தைப் படிப்பதற்கு புதிதாக ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறதே, என்ன உலகமடா!” என்று சுகுமாரன் மனதிற்குள் விரியும் இகழ்ச்சிப் புன்னகையா?

மார்க்சியம் எனும் மடமையில் மூழ்காமல் மக்களைத் தடுக்க, மார்க்சின் மேற்கோளாலேயே எழுப்ப விரும்பிய தடுப்புச் சுவரா?

அவநம்பிக்கைவாத மார்க்சியம் எனும் புதியதொரு சிந்தனைப்பள்ளியைத் தோற்றுவிக்க விழையும் துவக்கப்புள்ளியா?

அல்லது “ஆ” என்று வாசகர்களை அதிசயிக்க வைக்கும் அற்ப நோக்கத்துக்காக முத்தாய்ப்பு வரியில் தன்னிச்சையாக முகிழ்த்த வார்த்தைக் கழைக்கூத்தா?

இல்லை, சுகுமாரன் தான் எழுத விரும்பிய கவிதையை, மார்க்சின் கையைக் கொண்டு எழுத வைத்திருக்கும் கீழ்த்தரமான தந்திரமா?

மார்க்சின் அந்த மேற்கோளை எந்தப் புத்தகத்தில் படித்தோம் என்று அலமாரியைத் துழாவுவதை விட, அப்படியொரு மேற்கோள் இருப்பதாகவே கொண்டாலும், “அது தன் நினைவில் ஆழப் பதிந்தது ஏன், அந்தக் கட்டுரையின் இறுதி வாக்கியமாக வந்து விழுந்தது ஏன்?” என்ற கேள்விகளுக்கு விடை காண சுகுமாரன் தன்னைத் துழாவவேண்டும்.

____________________________________

 

 

அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள் !

சட்டக் கல்லூரி கலவரத்தை வைத்து ஜெயா, சன் தொலக்காட்சிகளால் இடையறாது ஊட்டிவிடப்பட்ட காட்சிகளினால் பொதுவில் ஏற்பட்டிருக்கும் காரண காரணியங்கள் அறியாத சென்டிமெண்ட்டை தணிப்பதற்காக தமிழக அரசு உத்தரவின் பெயரில் பல தனிக் காவல் படைகள் ஊர் ஊராக தலித் மாணவர்களை கைது  செய்ய அலைந்து கொண்டிருக்கின்றன. அப்படிப் பலர் கைது செய்யப்பட்டும் இருக்கின்றனர்.  இனி அந்த மாணவர்களின் வாழ்க்கை அவ்வளவுதான்.  உண்மையில் இந்தக் கலவரத்தின் சூத்திரதாரிகளான ஆதிக்க சாதிவெறி மாணவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. என்ன இருந்தாலும் இது மேல் சாதிக்காரர்களின் நாடாயிற்றே!

நம்நாட்டில் சாதிவெறி; அமெரிக்காவில் நிறவெறி. ஒபாமா வெற்றி பெற்றிருக்கும் இந்தத் தருணத்தில் அமெரிக்காவின் நிறவெறி வரலாறு எந்த காரணங்களுமின்றி பலராலும் மன்னிக்கப்படுகிறது. மன்னிக்கப்படுவது இருக்கட்டும், இது நிறவெறி வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமென பலரும் நம்புகின்றனர்.

ஆனால் ஒபாமாவைத் தெரிவு செய்த ஜனநாயகக் கட்டிசியின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்கள், ஒபாமாவுக்கு இதுவரை எந்த அதிபருக்கும் இல்லாத அளவில் நிதியுதவியைக் கொட்டிக் கொடுத்த நிறுவனங்களின் முதலாளிகள், ஒபமாவை ஊடகங்களின் டார்லிங்காக கொண்டாடிய ஊடகங்களின் முதலாளிகள் எவரும் கருப்பர்களல்ல. ஒபாமாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இந்த கட்சி மற்றும் நிறுவனங்களின் முதலாளிகளில் பெரும்பாலோனோர் வெள்ளையர்கள்தான்.

வெள்ளையர்கள் ஒபாமாவை தெரிவு செய்தது ஏன்? உலகைச் சுரண்டும் அமெரிக்காவிற்கு உலக ஏழை நாடுகளின் மனதில் பதியும் ஒரு நெருக்கமான முகம் அமெரிக்க அதிபராக இருந்தால் முதலாளிகளுக்கு ஆதாயம்தானே! தென் ஆப்ரிக்காவில் 90 சதவீத சொத்துக்களை வைத்திருக்கும் வெள்ளையர்கள் ஏதுமில்லாத கருப்பர்களை திருப்தி செய்ய நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்து கருப்பர்கள் கையில் ஆட்சியைக் கொடுக்கவில்லையா? இன்றைக்கு கருப்பர்கள் ‘ ஆண்டுகொண்டிருக்கிறார்கள்’. வெள்ளையர்கள் சொத்துக்களை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தென்ஆப்ரிக்க உண்மை அமெரிக்காவிற்கும் பொருந்தும். இதையெல்லாம் விட ஒபாமாவின் தெரிவு அமெரிக்காவில் நிறவெறியை இல்லாமல் ஆக்கிவிடுமா? ஆகாது என்பதற்கு அமெரிக்காவின் சமீபத்திய வரலாறே சாட்சி. கடந்த இரு பத்தாண்டுகளில் நிறவெறியின் பால் கருப்பின மக்கள் அனுபவித்த கொடுமைகளை பட்டியிலிடும் இந்தக் கட்டுரை நிறவெறி என்பது அமெரிக்காவின் இரத்தத்தோடு உறைந்திருக்கும் விசயம் என்பதை நிரூபிக்கிறது.

இந்தியாவில் அக்கிரகாரம், ஊர், சேரி என்று பிரிந்திருக்கும் உண்மையை அறிந்து கொண்ட, ஏற்றுக் கொண்ட நண்பர்கள் அமெரிக்காவிலும் இருப்பார்கள். அவர்கள் ஒபாமா, நிறவெறி குறித்து என்ன நினைக்கிறார்கள்? அவர்களின் அனுபவத்தை அறிய ஆவலாக இருக்கிறோம். மேலும் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு இந்தியர்கள் என்றால பிடிக்காது என்றும் சிலர் கூறுகிறார்களே அது ஏன்?

இந்தக் கட்டுரை ஒபாமா  ஜனநாயகக் கட்சியினரால் அதிபர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட நேரத்தில் எழுதப்பட்டது. உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாயிருக்கிறோம்.

நாற்பத்து நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காகக் களை கட்டியிருக்கும் அமெரிக்காவில் இந்த முறை சுவாரசியம் தருபவர் பாரக் ஒபாமா. குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாதான் வேட்பாளர் என்ற முடிவு தற்போது வந்துவிட்டது. கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற வகையில் ஒபாமா வென்றால் வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கூறுகிறார்கள்.

சற்றே முன்னிலையில் இருப்பதாக மதிப்பிடப்படும் ஒபாமாவை வெள்ளை நிறவெறி அமைப்புகள் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஹவானாத் தீவைப் பின்புலமாகக் கொண்ட அவர் அமெரிக்கரே இல்லை என்றும், அவரது உறவினர்களில் சிலர் முசுலீம்களாக இருப்பதால் அவரும் முசுலீம் என்றும் பிரச்சாரங்கள் நடக்கின்றன.

மற்றொருபுறம் ஒபாமா நிறுத்தப்பட்டிருப்பதை வைத்து அமெரிக்கா நிறவெறியைக் கடந்து வந்துவிட்டதெனவும், கருப்பின மக்களின் விடுதலையில் மற்றுமொரு மைல்கல் இது எனவும்  சிலர் பேசுகிறார்கள். இங்கேயும் முதல் தலித் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், முதல் தலித் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் முதலானவர்கள் நியமிக்கப்பட்டபோது குறிப்பாக தலித் அறிவுத்துறையினர் அப்படித்தான் கொண்டாடினார்கள். ஆனால் நடைமுறை உண்மை என்னவோ தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் ஆண்டுதோறும் அதிகரிப்பதையே காட்டுகின்றது.

ஒரு சில கருப்பினத்தவரோ, தலித் மக்களோ வர்க்கரீதியாக மேனிலை அடைந்துவிட்டதாலே அம்மக்களும் விடுதலை அடைந்து விட்டதாக எண்ணுவது அறிவீனம். சொல்லப்போனால் அடிமைகளை ஆசுவாசப்படுத்துவதற்கே இந்த நியமனங்கள் பயன்படுகின்றன. நடப்பில் நிறவெறியும், சாதிவெறியும் வர்க்கப்பிரிவினை என்ற பொருளாதாரக் கட்டுமானங்களால் பாதுகாக்கப் படுகின்றன.

அமெரிக்காவிலும் அப்படித்தான். ஒபாமா, கிளிண்டன், மெக்கைன் எவரும் தங்களது பிரச்சார உரைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பை நெருடும் வண்ணம் பேசுவதில்லை. ஈராக் போரோ, பாலஸ்தீனப் பிரச்சினையோ, உள்நாட்டில் வரிவிலக்கோ  எதையும் அந்த ஆடுகளத்தின் விதிகளுக்கு உள்பட்டுதான் பேசமுடியும். ஒருவேளை ஒபாமா வென்றுவிடுவதாக வைத்துக் கொண்டாலும், அமெரிக்காவின் வெள்ளை நிறவெறி வீழ்ந்து விட்டதாகப் பொருளில்லை.

அமெரிக்கச் சமூகத்தின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் நிறவெறியானது தோலின் நிறம் பற்றிய பிரச்சினையல்ல. அது சமூகக் கட்டுமானம் குறித்த பிரச்சினை. உலகமயத்தின் விளைவால் அமெரிக்க முதலாளிகள் பெரும் பணத்தைக் குவித்துவரும் வேளையில் அங்கு ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள். ஏழைகளில் பெரும்பான்மையினர் “இயல்பாகவே’ கருப்பின மக்கள்தான் என்பதால் அங்கே நிறவெறியும் இயல்பாகத்தான் இருக்கிறது.

வர்க்கக் கொடுங்கோன்மையின் உருத்திரிந்த வெளிப்பாடாகவும், அதனை நியாயப்படுத்தும் முகாந்திரமாகவும், அதனைப் பாதுகாக்கும் கவசமாகவும் அங்கே நிலவுகிறது நிறவெறி.

கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்கச் சமூகத்தின் பல்வேறு துறைகளில் நடந்த நிறவெறிக் கொடுமைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம். இக்கட்டுரை எழுத உதவிய நூல் ரோலெட்ஜ் பதிப்பகத்தின் ஒயிட் ரேசிசம், ஆசிரியர்கள் ஜோ ஆர். பேகின், ஹெர்னன் வெரா மற்றும் பினார் பாதர்.

சமகால அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு எந்த அளவுக்கு வெள்ளையர்களிடம் ஊறியிருக்கிறது என்பதை விரிவான ஆய்வின் மூலம் நிறுவுகிறது இந்நூல். உலக மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் அமெரிக்க ஜனநாயகத்தின் உண்மை முகத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

···

உலக மேலாதிக்கத்தையே ஜனநாயகத்தின் பெருமையாக பீற்றித்திரியும் இடமான வாஷிங்டனிலிருக்கும் அமெரிக்கப் பாராளுமன்றமான கேப்பிட்டல் கட்டிடத்தையும், காலனிகளை உருவாக்கும் அமெரிக்கத் தாகத்தை சுதந்திர வேட்கையாக மாற்றி அதனை நினைவுகூறும் வண்ணம் மான்ஹாட்டனில் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருக்கும் சுதந்திரதேவி  சிலையையும் கட்டி எழுப்புவதற்கு வேலை செய்தவர்கள் கருப்பின அடிமை மக்கள். இதற்கான கூலிகூட அம்மக்களுக்குத் தரப்படாமல், அவர்களை வேலை வாங்கிய வெள்ளை முதலாளிகளுக்குத்தான் தரப்பட்டது.

அமெரிக்கப் பெருமிதத்தின் சின்னங்கள் அனைத்தும் கருப்பின மக்களின் இரத்தம்  கலந்து கட்டப்பட்டவைதான். வெள்ளை நிறவெறியினுடைய மூலம் ஐரோப்பாவென்றாலும், அதை வைத்தே ஒரு நாடு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது என்றால் அது அமெரிக்காதான்.

கி.பி 1600களின் மத்தியில் ஆப்பிரிக்காவிலிருந்து மந்தைகளைப்போல பிடித்து வரப்பட்டார்கள் ஆப்பிரிக்க மக்கள். இதே காலத்தில்தான் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டு நாடு முழுவதும் அவர்களது நிலம் அபகரிக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாறே நிறவெறியால் எழுதப்பட்டதுதான். கருப்பர்கள், செவ்விந்தியர்கள் மட்டுமல்ல பின்னர் வந்த லத்தீன் அமெரிக்கர்களும், ஆசியர்களும் கூட அடிமைகளாகத்தான் நடத்தப்பட்டனர். 1778இன் சுதந்திரப் பிரகடனமும், 1860இல் நடந்த உள்நாட்டுப் போரும் நிறவெறியின் மீதுதான் நின்றுகொண்டிருந்தன.

இருபதாம் நூற்றாண்டில் கருப்பின மக்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகு குறிப்பாக மார்ட்டின் லூதர் கிங் காலத்தில் 195060களில் நடந்த சிவில் உரிமை இயக்கத்தின் விளைவாக அதிபர் லிண்டன் ஜான்சன் காலத்தில் நிறவெறிக் கொடுமைகள் சட்டத்தால் தடைசெய்யப்பட்டன. இதற்கு முன்னர் இவையனைத்தும் சட்டபூர்வமாகவே பாதுகாக்கப்பட்டன.

சட்டம் மாறினாலும் நடைமுறை மாறிவிடுமா என்ன! புதிய சட்டங்களின் கீழ் வெள்ளை நீதிபதிகள் வெள்ளை நிறவெறிக்கு ஆதரவான பொழிப்புரையுடன் “நீதி’ வழங்குகின்றனர். நமது நாட்டில் வன்கொடுமைச் சட்டம் எப்படி தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறையைத் தண்டிப்பதில்லையோ அப்படித்தான் அங்கும்.

வெள்ளைப் பெருமிதத்தின் சின்னமாகக் கருதப்படும் “தேசியக் கூட்டமைப்பு போர்க்கொடி’ இன்றும் தெற்கு கரோலினாவில் பறந்து கொண்டிருக்கிறது.  மார்ட்டின் லூதர் கிங்கின் பறந்த தினத்திற்கு மற்ற மாநிலங்கள் விடுமுறை அளித்தாலும் இம்மாநிலம் மட்டும் அதை அங்கீகரிக்கவில்லை. இவற்றை எதிர்த்து கருப்பின மக்கள் இன்றும் அங்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் நடைபெறும் குற்றங்களில் கணிசமானவை நிறவெறிக் குற்றங்களே. குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களில் கருப்பின மக்களே அதிகம். இதுபோக வறுமை, வேலையின்மை, தகுதியற்ற வேலைகள் முதலியவற்றில் வெள்ளையர்களைவிட கருப்பின மக்களே அதிகம் இருக்கிறார்கள்.

ஊரும் சேரியும் தனித்தனியே பிரிந்திருக்கும் அநாகரிகம் இந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானதல்ல. அமெரிக்காவின் பெருநகரங்களில் வேண்டுமானால் குடியிருப்புகள் கலந்திருப்பது ஓரளவுக்கு இருக்கலாம். அங்கும்கூட, வர்க்கரீதியான பிளவுக்குள் மறைந்துகொண்டு உயிர்வாழ்கிறது நிறவெறி. நமது மாநகரப் பகுதிகளின் குடிசைவாழ் ஏழைகளில் ஒடுக்கப்பட்ட சாதியினர்தான் அதிகம் என்பது போல அமெரிக்க நகர்ப்புறச்சேரிகளில் கருப்பின மக்களே அதிகம்.

மற்றபடி உண்மையான அமெரிக்காவோ சிறு நகரங்களில்தான் கட்டுண்டு கிடக்கிறது. இங்கு வெள்ளையர்களும் கருப்பர்களும் சேர்ந்துவாழ்வது என்பதை இன்றும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

பல நூறு வெள்ளையர்கள் வாழும் “டுபுக்கீயு’ நகரின் வளர்ச்சித்திட்டத்தை அமல்படுத்த தொழிலாளிகள் தேவைப்பட்டதால், சில நூறு கருப்பர்களை குடியமர்த்தலாம் என்று அந்நகர நிர்வாகம் 90களின் ஆரம்பத்தில் தீர்மானித்தது. நகரம் விரிவடைவதற்கேற்ப அதன் பராமரிப்பு மற்றும் கீழ்மட்ட வேலைகளுக்கு கருப்பினத் தொழிலாளிகள் தேவைப்படுவதால் பல அமெரிக்க நகரங்களில் இப்படித்தான் திட்டமிடுகிறார்கள்.

ஆயினும் அந்நகரத்தின் வெள்ளையர்களோ இதனை ஏற்காமல் கலவரம் செய்தார்கள். “கருப்பர்கள் வந்தால் குற்றங்கள் அதிகரிக்கும், நகரின் சமூகநலத் திட்ட ஒதுக்கீட்டை கருப்பர்களே அபகரிப்பார்கள், அதிகப் பிள்ளைகளை அவர்கள் பெற்றுக் கொள்வதால் நாம் சிறுபான்மையாகி விடுவோம்’ என்ற பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வெள்ளையர்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் இக்கருத்துக்கள் உடனே செயல்வடிவம் பெற்றன.  வெள்ளை நிறவெறி அமைப்பான “கூகிளக்ஸ்கிளான்’ கருப்பர்களைத் தாக்குவதற்கு முன்பு செய்யும் சிலுவை எரிப்புச் சடங்கை நடத்தியது. கொடியங்குளத்தில் நடந்தது போலவே கருப்பின மக்களின் இல்லங்கள் சூறையாடப்பட்டன.

“கழிப்பறை கழுவுவதற்கும், விவசாய வேலைகளுக்கும் கருப்பர்கள் இல்லாமல் முடியுமா’ என்று இந்நகரின் வெள்ளையர்களுக்குப் “புரிய வைத்து’, அவர்களைச் சமாதானப்படுத்தி கருப்பர்களைக் குடியமர்த்துவதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் தேவைப்பட்டது. அமெரிக்காவின் எல்லாச் சிறுநகரங்களும் இப்படி இரத்தக் கறையோடுதான் உருவாகின்றன. இப்போதும் இரண்டாகத்தான் பிரிந்து கிடக்கின்றன நகரங்கள்.

அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலம், தொழிற்சாலைகள் நிறைந்த நவீனமான மாநிலம். அங்கே ஒரு பிரபலமான நகரம் ஆலிவட்.  1992ஆம் ஆண்டு கணக்கின்படி 1600 வெள்ளையர்களும், ஒரு சில கருப்பின மக்களும் இங்கு வாழ்கின்றனர்.  இங்கிருக்கும் ஆலிவட் கல்லூரியில் பிடிக்கும் மொத்தமுள்ள 700 மாணவர்களில் 55 பேர் மட்டுமே கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள். ஆசிரியர்களில் எவரும் கருப்பரில்லை என்பதோடு 130 ஊழியர்களில் ஒருவர் மட்டுமே கருப்பர்.

அந்த ஆண்டு மாணவர்களிடம் மோதல் வெடிக்கிறது. கருப்பின மாணவன் ஒரு வெள்ளை மாணவியிடம் நெருங்கிப் பேசினான் என்று வெள்ளையின மாணவர்கள் சண்டை போடுகிறார்கள். அவர்களுக்காக “கிளான்’ நிறவெறி அமைப்பு பிரச்சாரம் செய்கின்றது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் முற்றிலும் வெள்ளையினப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அதாவது “இயல்பாகவே’ நிறவெறியர்கள். இவர்களுக்கு கருப்பின மாணவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டுமென்றோ, கருப்பின மக்களின் சிவில் உரிமைப் போராட்டங்களைப் பற்றியோ எதுவும் தெரியாது.

கலவரத்தின் முடிவில் 55 கருப்பின மாணவர்களில் நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். தேசிய அளவில் இது பிரச்சினையான பிறகு, கருப்பின மக்களும் நாடு முழுவதும் போராடிய பிறகு, கல்லூரி நிர்வாகம் தனது மரியாதையைத் திரும்பப் பெறுவதற்கு மெல்ல மெல்ல முயன்றது. அதன் பின்னர்தான் கணிசமான அளவிற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் கருப்பின மக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இது நடந்தேறுவதற்கும் பத்தாண்டுகளுக்கு மேல் ஆனது.

அமெரிக்கக் கல்வி நிறுவனங்களின் சூழ்நிலை பொதுவில் இப்படித்தான் இருக்கிறது. கருப்பின மக்களின் மீதான வெறுப்பை வெள்ளையின மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடமிருந்தும், சமூகச் சூழ்நிலைகளிலிருந்தும் இயல்பாகக் கற்றுக் கொள்கிறார்கள். வெள்ளை நிறவெறி இயக்கங்களுக்கான ஆளெடுப்பு பெரும்பாலும் மாணவர்களிடமிருந்துதான் துவங்குகிறது. அமெரிக்கப் பள்ளி மாணவர் வன்முறையிலும், சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதிலும் வெள்ளையின மாணவர்கள்தான் ஈடுபடுகிறார்கள். இத்தகைய கொலைகார மாணவர்களில் பலர் வெள்ளை நிறவெறி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பதும் பல வழக்குகளிலிருந்து அம்பலமாகி இருக்கிறது.

ஏழ்மையினாலும், இந்த நிறவெறிக் கொடுமைகளினாலும் கருப்பின மாணவர்கள் பலர் தமது படிப்பை முடிக்காமலேயே வெளியேறுகிறார்கள். புள்ளி விவரங்களின்படி இந்த விலகல் போக்கு வெள்ளையினத்தில் இல்லை என்பதோடு, நிறவெறி அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் உயர்கல்வியை முடித்தவர்கள் என்பதையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

உணவகங்கள், விடுதிகளில் கடைபிடிக்கப்படும் நிறவெறித் தீண்டாமையை எதிர்த்து 1950களிலேயே கருப்பின மக்கள் போராடினார்கள். அதன்படி இந்தத் தீண்டாமையைத் தடைசெய்து 1964ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இன்றும் அமெரிக்க உணவகங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறவெறி இருக்கின்றது. பதிவு செய்யப்படும் பல்லாயிரம் புகார்கள் இதனை வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

நமது கிராமங்களில் இரட்டைக் குவளை இருக்கிறது. ஆனால் இந்த வடிவத்திலான பச்சையான தீண்டாமை நகரங்களில் இல்லை என்று பொதுவில் கூறலாம். ஆனால் அமெரிக்காவிலோ எல்லா நகரங்களின் உணவகங்களிலும் நிறவெறித் தீண்டாமை பல்வேறு வழிகளில் கடைபிடிக்கப்படுகிறது.

பல்வேறு புள்ளி விவரங்களின்படி, உணவகங்களின் சமையல் மற்றும் கோப்பை கழுவும் வேலைகளில் மட்டுமே கருப்பினத் தொழிலாளர்கள் அதிகம் இருக்கின்றனர். உணவு, மது விநியோகிக்கும் வேலைகளில் கருப்பர்கள் மிகக்குறைவு. கருப்பர்கள் நேரடியாக விநியோகித்தால் வெள்ளையின வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள் என்பதுதான் காரணம்.

சாப்பிட வருபவர்களில் கருப்பின வாடிக்கையாளர்கள் இருந்தால் என்ன செய்வார்கள்? அதைத் தவிர்ப்பதற்காகவே கருப்பினத்தவர்களுக்கு மட்டும் “மேசைக் கட்டணம், சேவைக் கட்டணம், முன்பதிவுக் கட்டணம்’ என்று தீட்டி விடுகிறார்கள்.  கருப்பின மக்கள் விரும்பிச் சாப்பிடும் உணவுவகைகளை விற்க மாட்டார்கள். அல்லது விலையை அதிகம் வைத்து விற்பார்கள்.

வீட்டிலிருந்தபடியே உணவை ஆர்டர் செய்வது அங்கே சகஜம். ஆனால் கருப்பினக் குடியிருப்புகளுக்கு மாத்திரம் இந்தச் சேவை கிடையாது. “பூவுலகின் சொர்க்கமான அமெரிக்காவிலா இப்படி’ என்று நீங்கள் வியப்படைந்தாலும் அங்கே இவையெல்லாம் இயல்பான விசயங்களாகவே  இருந்து வருகின்றன.

அமெரிக்காவெங்கும் 1800 கிளைகளைக் கொண்டிருக்கும் ஷோனி என்ற பிரபலமான உணவக நிறுவனத்துக்கு எதிராக, 1993 முதல் 2000ஆம் ஆண்டு வரை கறுப்பின மக்கள் தொடுத்த வழக்குகளில், அதன் நிறவெறிக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, நட்டஈடாக மாத்திரமே 105 மில்லியன் டாலரைச் செலுத்தியிருக்கிறது அந்த நிறுவனம். அதேபோல 1500 கிளைகளைக் கொண்டிருக்கும் டென்னி என்ற நிறுவனம் இதேகாலத்தில் 55 மில்லியன் டாலரை நட்டஈடாகச் செலுத்தியிருக்கிறது.

இன்றைக்கு இந்த நிறுவனங்கள் தமது பிராண்ட் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சற்றே அடக்கி வாசிக்கின்றன. என்றாலும் நிறவெறியோ புதிய வடிவங்களை எடுத்திருக்கிறது. இப்போது கருப்பர்களுக்கென்றே தனிக் கிளைகள் நடத்தப்படுகின்றன. மேலும் கருப்பின மக்கள் நெருங்கமுடியாத உயர்கட்டணங்களைக் கொண்டிருக்கும் நட்சத்திர விடுதிகள் வர்க்கரீதியாக வெள்ளை நிறவெறியை நிலைநாட்டுகின்றன. இது பிரபலமான உணவகங்களின் கதை.

உள்ளூர் அளவில் செயல்படும் உணவகங்களிலோ இன்றும் நிறவெறி கேட்பாரின்றிக் கோலோச்சுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தேசிய ஊடகங்கள் செய்தியாகக் கருதி வெளியிடுவதேயில்லை. கருப்பின ஊழியர்கள் பணியாற்றும் பல கடைகளில் பொருள் வாங்கிவிட்டுப்  மீதிச்சில்லறை வாங்கும் வெள்ளையர்கள் கருப்புக் கைகளைத் தொடுவதில்லை என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. வெள்ளைத் திமிரின் வீரியம் பார்ப்பனத் திமிருக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல என்பதைத்தான் இச்செய்திகள் காட்டுகின்றன.

“தாங்கள் நிறவெறியர்கள் அல்ல’ என்று கூறிக்கொள்ளும் வெள்ளையர்கள் கூட கருப்பின மக்களுக்கு எதிரான “வெள்ளைக் கருத்தை’ மனதில் தாங்கியபடிதான் வாழ்கின்றனர். “”கருப்பர்களில்தான் கிரிமினல்கள் அதிகம், கருப்பினக் குடியிருப்புகளில் நடந்து சென்றால் வழிப்பறி செய்வார்கள், வெள்ளையினப் பெண் ஒரு கருப்பனிடம் மாட்டிக் கொண்டால் நிச்சயமாக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவாள்”  இவ்வாறெல்லாம் நீள்கிறது அந்தச் சித்திரம்.

ஒரு வகையில் முசுலீம்களைப் பற்றி இந்துக்களிடம் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கும் சித்திரத்திற்கு ஒப்பானது இது. வெள்ளையின மக்களிடம் மட்டுமல்ல, அவர்கள் கையிலிருக்கும் ஊடகங்கள், அரசியல், போலீசு, நீதித்துறை ஆகிய அனைத்து நிறுவனங்களின் செயல்பாட்டிலும் இந்தப் பொதுக்கருத்து பெரும் செல்வாக்கைச் செலுத்துகிறது.

1989ஆம் ஆண்டு அமெரிக்காவில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு கிரிமினல் குற்றம் குறித்த கதையே இதற்குச் சான்று.

“”நானும் ஏழு மாத கர்ப்பிணியான என் மனைவி கரோலும் காரில் சென்று கொண்டிருந்த போது ஒரு கருப்பின இளைஞன் எங்களை வழிமறித்து, என் மனைவியைக் கொன்றுவிட்டு, என்னையும் சுட்டுக் காயப்படுத்தி, வழிப்பறி செய்து விட்டான்” என்று போலீசில் புகார் கொடுத்தான் சார்லஸ் என்ற வெள்ளை இளைஞன்.

உடனே நாடே குமுறத் தொடங்கியது. எங்கும் எதிலும் கருப்பின மக்களின் மீதான துவேசம் பொங்கி வழிந்தது. போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சார்லஸ் சொன்ன அடையாளங்களுடன் கூடிய கருப்பின இளைஞன் தேடப்பட்டான். பின்னர் பென்னட் என்ற கருப்பின இளைஞன் கைது செய்யப்பட்டான். அமெரிக்காவே கண்ணீர் விடும்படி சென்டிமெண்ட் கதைகளைக் கட்டவிழ்த்து விட்டன ஊடகங்கள். கருப்பின மக்கள் அனைவருமே குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டனர்.

இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்தது.  சார்லஸின் தம்பி மாத்திவ் உண்மையை ஒப்புக்கொண்டான். மனைவியை சார்லஸே கொன்று விட்டு தன்னையும் சுட்டுக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவள் பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் காப்பீட்டிலிருந்து பெரும் பணம் கிடைக்கும் என்பதுதான் கொலைக்கான காரணம். “அண்ணனுக்கு துப்பாக்கி வழங்கியது நான்தான்’ என்று தம்பி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.

1987 முதல் 1996 ஆம் ஆண்டு வரை மட்டும் இதுபோன்று 67 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒவ்வொன்றிலும் கருப்பின மக்கள் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் வெள்ளைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இருந்தும் இன்று வரை அமெரிக்க “மனசாட்சி’ ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை.

“”அமெரிக்காவில் கொலைசெய்யப்படும் வெள்ளையர்களில் 90% பேரைக் கொல்பவர்களும் வெள்ளையர்கள்தான்” என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை இப்படி அறைந்து கூறினாலும் வெள்ளையன் ஒருவன் கொல்லப்பட்டவுடனே, ஒரு சராசரி வெள்ளையனின் சந்தேகப் பார்வை முதலில் கருப்பின மக்களை நோக்கியே திரும்புகிறது.

இந்த வெள்ளையினக் கருத்தின் பலத்தில்தான் அமெரிக்காவில் வெள்ளை நிறவெறி அமைப்புகள் இன்றும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மூத்தது கூகிளாக்ஸ்கிளான். 1920 ஆம் ஆண்டு மட்டும் இவ்வமைப்பில் 50 இலட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.

வெள்ளை அங்கிகளைப் அணிந்து கொண்டு ஊரின் ஒதுக்குப்புறத்தில் சிலுவையை எரித்து சடங்கு நடத்தி “வெள்ளை அதிகாரம்’ என்று கூக்குரலிட்டுக் கொண்டே கருப்பர்களைத் தாக்கிக் கொலை செய்வார்கள். இவர்கள் கொலை செய்யும் முறைகளோ வலிமையான மனதைக் கொண்டவர்களையே பதைபதைக்கச் செய்யும். இன்றைக்கு கிளான் வலுவிழந்து பல்வேறு குழுக்களாகச் செயல்பட்டு வந்தாலும் தனது வேரை மாத்திரம் விட்டுவிடவில்லை.

இது போக ஒயிட் ஆரியன் ரெசிஸ்டன்ஸ், வோர்ல்டு சர்ச் ஆஃப் தி கிரியேட்டர், யூத் ஆஃப் ஹிட்லர், பிலிட்ஸ்கிரிக், கிரேசி ஃபிக்கிங் ஸ்கின்ஸ், ரோமான்டிக் வயலன்ஸ், தி ஆர்டர் என்று பல்வேறு பெயர்களில் வெள்ளை நிறவெறி அமைப்புகள் செயல்படுகின்றன.

தற்போது அமெரிக்காவில் இதுபோல 300 குழுக்களும், இவற்றில் 50,000 உறுப்பினர்களும், 1,80,000 ஆதரவாளர்களும் இருப்பதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. இவற்றின் இணையத் தளங்களைப் பல இலட்சம்பேர் பார்ப்பதாகவும் தெரிகிறது. இந்த வெள்ளை நிறவெறிக் குழுக்களுக்கு இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியிலிருக்கும் புதிய நாஜி இயக்கங்களோடும் தொடர்புண்டு. இவர்களுக்கு உள்ளூர் அளவில் அரசியல்வாதிகள் மற்றும் முதலாளிகள் ஆதரவளிக்கின்றனர்.

இவர்களுக்கென்றே பத்திரிக்கைகளும், இணையத் தளங்களும், கேபிள் டி.வி.க்களும் உண்டு. இவர்கள் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள கார்ட்டூனில் எரிந்து கொண்டிருக்கும் கருப்பின இளைஞனின் படத்தைப் போட்டு “இக்காட்சி பேஸ்பால் விளையாட்டை விட இனிமையானது’ என்று எழுதியுள்ளனர். இவர்கள் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.  அதில் கருப்பின மக்களைத் தாக்குவது, கொடூரமாகக் கொலை செய்வது, கருப்பினத் தேவாலயங்களைக் குண்டு வீசித் தாக்குவது, மற்றும் பல்வேறு வேற்றினத்தவரைத் தாக்குவதையும் தொடர்ந்து செய்கின்றனர்.

இவற்றில் பல தாக்குதல்கள் புகார்களாகவே பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்டதிலும் பெரிய தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. 1850க்குப் பிறகு கருப்பரைக் கொன்ற குற்றத்திற்காக இதுவரை ஒரு வெள்ளை நிறவெறியனுக்கு மட்டுமே மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம்.

இத்தகையதொரு அங்கீகாரம் நிறவெறிக்கு இருப்பதனால்தான் வெள்ளை நிறவெறி அமைப்புகளின் தலைவர்கள் பலர் அங்கே தேர்தல்களிலும் போட்டியிடுகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலிலும் யாரை ஆதரிக்க வேண்டுமென பகிரங்கமாகவே பிரச்சாரம் செய்கின்றனர். சென்ற தேர்தலில் புஷ்ஷை ஆதரிக்குமாறு

கூகிளாக்ஸ்கிளான் தனியாக ஒரு வீடியோவையே வெளியிட்டது. அதற்கு முந்தைய தேர்தலில் அல்கோரைத் தோற்கடிப்பதற்கு புஷ் புளோரிடா மாநிலத்தில் கருப்பின மக்களை வாக்களிக்க முடியாமல் செய்ததை இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.

ரீகன் மற்றும் தந்தை புஷ் காலத்தில் நியமிக்கப்பட்ட பல வெள்ளையின நீதிபதிகள் நிறவெறிக்கு ஆதரவாகவே பல தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். எனவே வெள்ளை நிறவெறி அமைப்புகள் தீவிர மனநோய் முற்றிய ஒரு சிறு கூட்டமல்ல. அமெரிக்கச் சமூகத்தின்  உருத்திரட்டப்பட்ட வெளிப்பாடுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கருப்பின மக்கள் எதிர்கொள்ளும் நிறவெறிக் கொடுமைகளில் போலீசின் அட்டூழியங்கள் முக்கியமானவை. 82 முதல் 92 வரை போலீசை எதிர்த்து கருப்பின மக்கள் தொடுத்த 3000 வழக்குகளை எஃப்.பி.ஐ. எனப்படும் அமெரிக்க புலனாய்வுத்துறை விசாரித்திருக்கிறதெனில் பதிவு செய்யப்படாத புகார்களை ஊகித்துக் கொள்ளலாம். போலீசை எதிர்த்து யாரும் எளிதில் புகார் தெரிவிக்க முடியாது என்ற நிலை நம் நாட்டைப் போலவே அமெரிக்காவிற்கும் பொருந்தும்.

போலீசின் நிறவெறிக்கு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் பிரபலமானது. இங்கு வசிக்கும் 35 இலட்சம் மக்களில் 2,80,000 பேர் மட்டுமே கருப்பினத்தவர். ஆனால் போலீசை எதிர்த்த புகார்களில் 50% கருப்பின மக்களுடையது. இங்கிருக்கும் 8,300 போலீசுக்காரர்களில் வெறும் ஏழு பேர்தான் கருப்பினத்தவர். ஏழு பேர் லத்தீன் அமெரிக்கர்கள். மற்றவர்கள் அனைவரும் வெள்ளையர்கள். 1992ஆம் ஆண்டு நடந்த ரோட்னி கிங் வழக்கு தொடர்பான கலவரத்தை இந்தப் பின்னணியில் பார்த்தால் போலீசின் நிறவெறியைப் புரிந்து கொள்ள முடியும்.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 30.4.92 அன்று ரோட்னி கிங் எனும் கருப்பின இளைஞர் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது வாகனத்தை ஒரு போலீஸ் வாகனம் பின்தொடர்ந்து சென்று மறித்து நிறுத்தியது. உடனே மேலும் சில போலீஸ் வாகனங்கள் சுற்றி வளைத்துக் கொண்டன. “காரை ஏன் உடனே நிறுத்தவில்லை’ என்று சீறிய இரு போலீசு அதிகாரிகள் ரோட்னி கிங்கைக் கொடூரமாகத் தாக்கினர். எந்தத்  தவறும் செய்யாத ரோட்னி கிங்கை மற்ற போலீசாரும் சேர்ந்து தாக்கத் தொடங்குகின்றனர்.

அருகில் இருக்கும் கடை ஒன்றின் மேலாளரான ஜார்ஜ் ஹாலிடே என்ற வெள்ளையர் இக்காட்சியினைத் தனது வீடியோவில் பதிவு செய்கிறார். 81 விநாடிகள் ஓடுகிறது அந்த வீடியோபதிவு. அதற்குள் ரோட்னி கிங் மீது விழுந்த அடிகள் 56. பல இடங்களில் எலும்பு முறிந்த நிலையில் ரோட்னி கிங் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஊடகங்களில் வெளியான இந்த வீடியோக்காட்சி உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ஆனால் வெள்ளை அதிகாரவர்க்கம் இதனைப் பத்தோடு பதினொன்றாகக் கருதியது. சிமி வேலியில் நடந்த இவ்வழக்கிற்கான ஜூரிகளில் ஒருவர் கூட கருப்பர் இல்லை. வீடியோ ஆதாரம் இருந்தபோதும் “குற்றவாளிகளில்லை’ என்று கூறி போலீசு அதிகாரிகளை விடுவித்தது அந்நீதிமன்றம்.

தீர்ப்பைக் கண்ட கருப்பின மக்கள் குமுறி வெடித்தனர். வெள்ளை நிறிவெறிக்கு எதிராக நவீன அமெரிக்கா அத்தகைய ஒரு கலவரத்தை ஒருபோதும் கண்டதில்லை. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் பற்றி எரிந்தது. ஏனைய நகரங்களிலும் வன்முறை வெடித்தது.  கருப்பின மக்களுடன்  லத்தீனியர்களும் சேர்ந்து கொண்டனர். கலவரத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர், 2400 பேர் காயமடைந்தனர்.

கருப்பின மக்களின் போர்க்குணத்தைக் கண்டு அஞ்சிய அரசு. இரண்டாவது விசாரணைக்கு உத்தரவிட்டது. இம்முறை நடுவர்களில் இரண்டு கருப்பர்களும் ஒரு லத்தீனியரும் இடம் பெற்றனர். இறுதித் தீர்ப்பில் வீடியோ காட்சியில் அடிக்கும் இரண்டு போலீசு அதிகாரிகளுக்கும் இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. வீடியோ பதிவில் சிக்கிக் கொள்ளாமல் அடித்த போலீசு அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தத் தண்டனை ஒரு கண்துடைப்பு என கருப்பின மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனினும் வெள்ளை நிறவெறியினால் கட்டமைக்கப்பட்ட போலீசு எந்திரத்தை அதற்கு மேல் தண்டிப்பதை அங்கே எண்ணிப்பார்க்கவே முடியாது.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் போலீசு தலைமையகத்தில் இருக்கும் கணினித் திரைகளில் “ஒரு நீக்ரோவை எதிர்கொண்டால் முதலில் சுடு! பின்பு கேள்வி கேள்!’ என்ற முத்திரை வாக்கியமே ஒளிர்ந்து கொண்டிருக்குமாம். இப்படிப் போலீசுத்துறை முழுவதும் புரையோடியிருக்கும்  நிறவெறியைச் சகிக்க முடியாமல், அமெரிக்காவின் போலீசுத் துறைகளில் மிக அரிதாகவே இருக்கும் கருப்பின அதிகாரிகள் பலரும் ராஜினாமா செய்திருக்கின்றனர்.

1999ஆம் ஆண்டு நியூயார்க் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் நின்று கொண்டிருந்த அப்பாவிக் கருப்பின இளைஞர் அமடோ தியாலோ, போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தது தூரத்திலிருந்த போலீசுக்கு துப்பாக்கி போல தெரிந்ததாம்! இதை எதிர்த்தும் கருப்பின மக்கள் போராடினர். ஆனால் நீதி கிடைக்கவில்லை.

கருத்துக் கணிப்பு ஓன்றின்படி, போலீசுக்கு அஞ்சி தெருவில் தனியாக நடமாடவே பயப்படுவதாகப் பெரும்பான்மையான கருப்பின மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி பயப்படுவதாக வெள்ளையின மக்கள் யாரும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசின் நிறவெறி மட்டுமல்ல, அது தோற்றுவிக்கும் அலட்சியம் கூட பல கருப்பின மக்களைக் காவு வாங்குகிறது.

டெக்சாகோ, அமெரிக்காவிலிருக்கும் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்று. 1996 ஆம் ஆண்டு இதன் வெள்ளையின மேலதிகாரிகள் கருப்பினப் பணியாளர்களைக் கேவலமாகப் பேசியது டேப்பில் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியானது. இதனைக் கண்டித்து 1348 கருப்பினத் தொழிலாளிகள் வழக்கு தொடுத்து, 176 மில்லியன் டாலரை நட்டஈடாகப் பெற்றனர். இதன் சேர்மன் வேறு வழியின்றி தொழிலாளிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க மக்கள் தொகையில் கருப்பின மக்கள் 12 சதவீதம் இருந்தாலும் பன்னாட்டு நிறுவனங்களில் அவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளனர். முக்கியமாக மேலாண்மை நிர்வாகிகளில் கறுப்பினத்தவர் அறவே இல்லை என்று சொல்லலாம். ஒரு வெள்ளையருக்கு 5 ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைக்குமெனில், அதே உயர்வுக்காக ஒரு கருப்பினத்தவர் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஷெல் ஆயில், கொக்கோ கோலா போன்ற நிறுவனங்களின் நிறவெறிப் பாகுபாட்டை எதிர்த்தும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்தியாவில் கால் பதித்திருக்கும் இவ்விரண்டு நிறுவனங்களும் பார்ப்பனியத்தின் இயல்பான கூட்டாளிகள் என்பதை அவர்களது அமெரிக்க வரலாறே எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்க அரசின் உயர்பதவிகளில் இருக்கும் பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிறவெறியைக் கக்கியிருக்கிறார்களை. விரிவஞ்சி அவற்றை இங்கே எடுத்துரைக்க முடியவில்லை. அரசு செயல்படுத்தும் பல நடவடிக்கைகளிலும் நிறவெறி அன்றாட விசயமாகத்தான் இருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் என்று அறிவித்தால், அதனைக் கருப்பின விவசாயிகள் பெற முடியாது. நிறவெறியின் காரணமாகவே பல கருப்பின விவசாயிகள் திவலாகியிருக்கிறார்கள்.

குடியரசுக் கட்சியின் அதிபர்களாக இருந்த ரீகன் மற்றும் தந்தை புஷ் காலத்தில் வெள்ளை மாளிகையை அப்பட்டமான நிறவெறி ஆட்டிப் படைத்தது. 1988 தேர்தலில் தந்தை புஷ் தனது பிரச்சாரத்தில் வெளிப்படையான நிறவெறி துவேசத்தைக் கக்கினார்.

நேரடி சாட்சியங்கள் இல்லாத ஒரு கொலையில் குற்றம் சாட்டப்பட்ட வில்லியம் ஹார்ட்டன் எனும் கருப்பின இளைஞனின் புகைப்படத்தைக் காட்டி அத்தேர்தலில் நிறவெறியைப் பல்வேறு வகைகளில் தூண்டிவிட்டது குடியரசுக் கட்சி. “இத்தகைய கிரிமினல்களின் கையில் நாடு போகவேண்டுமா?’ என்பதே தேர்தலின் முத்திரை முழக்கமாக இருந்தது. பின்லேடன், சதாம் ஹூசைன் போன்ற வெளிநாட்டு வில்லன்கள் இல்லாத போது கருப்பின மக்கள்தான் அமைதிக்கும் ஒழுங்குக்கும் எதிரான குறியீடாக அமெரிக்காவில் சித்தரிக்கப் படுகின்றனர்.

இப்படி எல்லாத் துறைகளிலும் வேர் கொண்டிருக்கும் நிறவெறிதான் அமெரிக்காவின் இயக்கத்திலேயே கலந்திருக்கிறது. ஒருசில கருப்பினத்தவர் மேல் நிலைக்கு வந்து விடுவதனால் மட்டுமே நிறவெறி எந்த விதத்திலும் அங்கே முடிந்துவிடப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கழுத்து வெட்டப்படும்போதுதான், ஆப்பிரிக்க  அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படும் கருப்பின மக்களின் விடுதலையும் சாத்தியம்.

அதுவரை கன்டலீசா ரைஸ், காலின் பாவெல், பாரக் ஓபாமா, மைக்கேல் ஜாக்சன், மைக்கேல் ஜோர்டான், மாஜிக் ஜான்சன், டைகர் வுட்ஸ், டென்சில் வாஷிங்டன் முதலிய கருப்பின மேன்மக்கள் துரோகிகளாகவோ, ஒத்தூதிகளாகவோ, அல்லது கோமாளிகளாகவோ அமெரிக்க மக்களின் பொழுதைச் சுவாரசியமாக்குவதை மட்டும்தான் செய்யமுடியும்.

_________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜூலை’ 08

_________________________________________________

 

பண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் !

சட்டக் கல்லூரிப் பிரச்சினையை ஒட்டி சில ‘பழைய’ கதைகளைப் பதிவு செய்கிறோம் – ஏனென்றால் அவை வெறும் பழங்கதைகள் அல்ல. தீண்டாமை என்பது இந்த நாடு முழுவதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்கதை.

மீண்டும் மீண்டும் சாதிப்பிரச்சினை குறித்து எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. இப்படியொரு பிரச்சினை வெடிக்கும்போது மட்டும்தான் ஆதிக்க சாதியில் பிறந்த ‘நல்லவர்களின்’ கவனம் கூட இதன்பால் திரும்புகிறது. சில பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் இது கொஞ்சம் அலுப்பாகக் கூட இருக்கலாம். நமக்கு மெகா சீரியல் அலுப்பதில்லை, கிரிக்கெட் அலுப்பதில்லை, அரைத்த மாவையே அரைக்கும் மசாலா சினிமாக்கள் அலுப்பதில்லை, உண்மை மட்டும்தான் சீக்கிரம் அலுத்துவிடுகிறது.

சட்டக்கல்லூரி தலித் மாணவர்களைப் பிடிக்க 20 தனிப்படைகள் அமைத்திருக்கிறார்களாம். அப்பன், ஆயி, மாமன், மச்சான் எனக் கையில் கிடைத்தவர்களையெல்லாம் பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்துக் கொண்டு ‘குற்றவாளிகளை’ பொறி வைத்துப் பிடிக்கிறது காவல்துறை.

“வீடியோ காமெராவின் முன் பப்ளிக்காக உலகமே பார்க்கும்படி ஒரு ‘குற்றத்தை’ செய்த குற்றவாளிகளை போலீசு பிடிக்கத்தானே செய்யும்?” என்று சிலர் மனதிற்குள் முணுமுணுத்துக் கொள்ளலாம்.

தனிக்குவளை, தனிச்சுடுகாடு என்பவையெல்லாம் கூட சட்டப்படி குற்றம்தான். இந்தக் குற்றங்களும் பப்ளிக்காக நாடறியத்தான் செய்யப்படுகின்றன. ஆனால் இந்தக் குற்றங்களுக்காக எந்தக் காலத்திலாவது தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறதா, அத்தகைய குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருக்கிறார்களா என்பதை “வன்முறையைக் கண்டு மனம் வெதும்பியிருக்கும்” பதிவர்கள் கூறவேண்டும்.

மாறாக, தீண்டாமைக் குற்றத்தை எதிர்ப்பவர்கள்தான் பொய் வழக்குகளின் கீழ் சிறை வைக்கப்படுகிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன் பண்ணைப்புரத்தில் ‘தனிக்குவளைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்’ குறித்த செய்தியை கீழே தந்திருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் மீது ராஜத்துரோக வழக்கு (124-A) உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

ராஜத்துரோக குற்றம் என்றால் என்ன தெரியுமா? சட்டபூர்மாக அமைந்த இந்திய அரசை, சட்டவிரோதமாக வன்முறையின் மூலம் தூக்கியெறிய முயற்சிப்பதுதான் ராஜத்துரோகம் என்கிறது இந்திய தண்டனைச் சட்டம்.

“தனிக்குவளையைத் தூக்கியெறிவது எப்படி இந்திய அரசைத் தூக்கியெறிவதாக ஆக முடியும்? அப்படியானால் இந்திய அரசு = தனிக்குவளை என்று ஆகிறதே!” என்று கேட்காதீர்கள்.

அது அப்படித்தான்!

தனிக்குவளை = தனிப்படை

பண்ணைப்புரம் = சட்டக்கல்லூரி

 

 

 

பண்ணைப்புரம் என்ற கிராமத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. இளையராஜா வாழ்ந்த பண்ணைப்புரத்தை வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அவருடைய உறவினர்களும், இளமைக்கால நண்பர்களும் இன்னமும் வாழ்கின்ற பண்ணைப்புரத்தை வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பண்ணைப்புரம் கிராமத்தில் பண்ணையாரும் உண்டு; பண்ணையடிமைகளும் உண்டு. செத்துப் போன வடிவேல் கவுண்டர் எனும் கொடுங்கோல் நிலப்பிரபுவின் மகன் பிரசாத் என்பவர்தான் இப்போது பண்ணைப்புரத்தின் பண்ணை.

ஒக்கலிக கவுண்டர்கள் — 400 குடும்பங்கள், பறையர் சமூகத்தினர் – 400 குடும்பங்கள்,  சக்கிலியர் சமூகத்தினர் – 150 குடும்பங்கள், செட்டியார், கள்ளர் போன்ற பிற ‘மேல் சாதி’யினர் சில குடும்பங்கள்- என்பதுதான் பண்ணைப்புரம் மக்கள் தொகையின் சாதிவாரியான சேர்க்கை.

நிலங்கள் மற்றும் சிறிய, நடுத்தர எஸ்டேட்டுகளும் வைத்திருப்போர் பெரும்பாலும் ஒக்கலிக கவுண்டர்கள். தாழ்த்தப்பட்டோரில் ஆகப்பெரும்பான்மையினர் நிலமற்ற கூலி விவசாயிகள் அல்லது எஸ்டேட் தொழிலாளிகள். பெரும் பண்ணையாரான பிரசாத்தின் பண்ணையில் சக்கிலியர், பறையர் சமூகத்தைச் சேர்ந்த பலர் பண்ணையடிமைகள். பறையர் சமூகத்தில் கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் விவசாயம் தவிர சாதி ரீதியான அடிமைத் தொழில்களெதுவும் செய்வதில்லை. மேலும் பறையர் சமூகத்தில் ஓரளவு படித்தவர்களும் உள்ளனர்.

இருப்பினும் பண்ணைப்புரம் தேநீர்க் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு தனித் தேநீர்க் குவளைதான்; சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ கடைக்ககு வெளியே ஒதுங்கி உட்கார்ந்துதான் தேநீர் குடிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளூர் சலூனில் முடி திருத்த முடியாது; துணியும் சலவைக்குப் போட முடியாது. பண்ணைப்புரத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இதுதான் நிலைமை.

இந்த இழிவைச் சகிக்க முடியாத தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பலர் தேநீர்க் கடைக்குள் போவதில்லை; அல்லது தேவைப்படும்போது யாரையேனும் அனுப்பி வாங்கிவரச் செய்து குடித்துக் கொள்வார்கள்.

உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமல்ல; சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்டவர் வீட்டுத் திருமணத்துக்கு வந்த உறவுக்கார இளைஞர்கள் தேநீர் குடிக்கச் சென்றபோது அவர்களுக்கும் தனிக்குவளை தரப்பட்டது. டாக்டர் படிப்பு போன்ற உயர்கல்வி கற்ற அந்த இளைஞர்கள் மனம் குமுறி தங்கள் எதிர்ப்பைக் காட்டுமுகமாகக் காசைக் கொடுத்து விட்டு தேநீர் குடிக்காமல் சென்றிருக்கின்றனர்.

உள்ளூர் தாழ்த்தப்பட்ட மக்களை இப்படி ஒடுக்கும் சாதி வெறியர்களுக்கு அருகாமையிலுள்ள மீனாட்சிபுரத்து இளைஞர்கள் என்றால் மட்டும் நடுக்கம். சுமார் 8 மாதங்களுக்கு முன் தங்களுக்குத் தனிக்குவளை என்று புரிந்து கொண்ட மீனாட்சிபுரத்து தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கூட்டமாகத் திரண்டு வந்து கடையை அடித்து நொறுக்கினர். மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சீரங்கன் என்பவர் தனிக்குவளை தந்தால் உடனே வேல்கம்பால் பாய்லரை ஓட்டை போட்டுவிட்டுப் போய்விடுவார் என்றும் பழைய சம்பவங்களை மக்கள் நினைவு கூர்கின்றனர்.

1956, 57 வாக்கில் இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராசன், சாமுவேல், கருப்பண்ணன், சின்னையா போன்ற ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து  ” ராயல் உணவு விடுதி ” என்ற கடையில் சாதி ஒதுக்கலும் தீண்டாமையும் கடைப்பிடிக்கப்படுவதை எதிர்த்துப் போராடியுள்ளனர். அது பாவலர் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்த காலம். அதன்பின் 1972 வாக்கில் நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளராக மாறிய பாவலர், தனது இறுதிக் காலத்தில் தி.மு.க.வில் இணைந்தார்; பின் 1976-இல் மரணமடைந்தார்.

தனித் தேநீர்க் குவளைக்கெதிராக யாராவது குரல் கொடுத்தால் பிரச்சினை பெரிதாகும் எனத் தெரிந்தால் உடனே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கண்ணாடி கிளாஸ் வைப்பது, ஆனால் அதில் லேசாக ஆணியால் கீறி அடையாளம் செய்து கொள்வது – பிறகு சிறிது நாளில் பழைய வடிவத்துக்கே திரும்பி விடுவது என்பதுதான் பண்ணைப்புரத்தில் நடந்து வருகிறது.

சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தையொட்டி பண்ணைப்புரத்தில் தனி தேநீர்க் குவளை ஒழிப்புப் போராட்டத்தை அறிவித்தது விவசாயிகள் விடுதலை முன்னணி ( மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பு ). தனித் தேநீர்க் குவளை வைப்பது சட்டப்படி குற்றம் என்பதைச் சுட்டிக்காட்டி அரசு அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

பண்ணைப்புரத்தில் கடை வைத்திருப்பவர்கள் கவுண்டர், கள்ளர் சாதிகளைச் சேர்ந்தவர்கள். ” 31.10.97 அன்று போராட்டம் ” என்று அறிவிக்கும் தட்டியைப் பார்த்தவுடன் சாதி வெறியர்களிடையே சூடு பரவத் தொடங்கியது. பண்ணையார் பிரசாத் வீட்டில் சாதிவெறியர்களின் சதியாலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. இரவோடிரவாகத் தட்டிகள் எரிக்கப்பட்டன.

தட்டி எரிக்கப்ட்டது பற்றி புகார் கொடுக்கப் போன பண்ணைப்புரம் வி.வி.மு தோழர் ( கள்ளர் சாதியில் பிறந்தவர் ) காவல் நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

அதே நேரத்தில் கோம்பை நகரில் குத்தகை விவசாயியை வெளியேற்றிய டி.இ.எல்.சி பாதிரியாருக்கு எதிராக வி.வி.மு போராடிக்கொண்டிருந்தது. சமரசப் பேச்சுவார்த்தை நடத்தலாமென்று தோழர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து சுமார் 11 பேர் மீது பாதிரியாரைக் கொல்ல முயன்றதாக வழக்கு போட்டு சிறையில் அடைத்தது காவல்துறை.

இதுவன்றி கம்பம் வட்டாரம் முழுவதும் வி.வி.மு. தோழர்கள் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். முன்னணியாளர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு விட்டதால் போராட்டம் நடைபெறாது என்று பிரச்சாரத்தையும் போலீசே கட்டவிழ்த்துவிட்டது.

இருப்பினும் 31.10.97 காலை பண்ணைப்புரம் நேநீர்க்கடை வாயிலில் போலீசு இறக்கப்பட்டுவிட்டது. சாதிவெறியர்கள் சுமார் 300 பேர் கையில் கட்டைகளுடனும், கற்களுடனும் தயாராக நின்று கொண்டிருந்தனர். வரமாட்டார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் வந்தார்கள்; கையில் கொடியுடன் தீண்டாமைக்கெதிராக முழக்கமிட்டபடியே வந்தார்கள்; முன்னணியாளர்கள் சிறை பிடிக்கப்பட்டாலும் சோர்ந்து முடங்கிவிடாத தோழர்கள் வந்தார்கள்; எதிரில் கொலை வெறியுடன் நின்று கொண்டிருந்த சாதி வெறியர்களையும், கோபத்தால் துடித்துக் கொண்டிருந்த போலீசாரையும் சட்டை செய்யாமல் நேநீர்க் கடையை நோக்கி வந்தார்கள்; சாதி வெறியர்கள் வீசிய கற்கள் தலையில் பட்டுத் தெரித்த போதும் பார்வை சிதறாமல் தேநீர்க்கடை நோக்கி வந்தார்கள்.

தனிக்குவளையைப் பாதுகாப்பதற்காகவே தருவிக்கப்பட்டிருந்த போலீசு அவர்களைப் பாய்ந்து மறித்துப் பிடித்தது. போராட வந்த வி.வி.மு. தோழர்களில் பாதிப்பேர் தேவர் சாதிக்காரர்கள் என்பதை அங்கே கூடிநின்ற தாழ்த்தப்பட்ட மக்களை கொஞ்சம் ஆச்சரியத்துடன் கவனித்தார்கள்; அதுவும் அவர்கள் சாதிவெறிக்கும், வெட்டு குத்துக்கும் பேர் போன கூடலூரிலிருந்து வந்தவர்கள் என்பதை உள்ளூர் மறவர்களும், கவுண்டர்களும் அதிர்ச்சியுடன் கவனித்தார்கள்.

கைது செய்து கொண்டு போன தோழர்களை கோம்பை நகரத் தெருவில் வைத்து மிருகத்தனமாகத் தாக்கிக் குதறின காவல் நாய்கள். ” திமிரெடுத்த பள்ளன் – பறயனையும், அவனுடன் கூடப்போகும் மானங்கெட்ட கள்ளனையும்” வாய்க்கு வந்தபடி ஏசவும் செய்தார்கள்.

போராட்டத்தில் பங்கு கொண்ட பண்ணைப்புரத்தைச் சேர்ந்த தேவர் சாதியிற் பிறந்த தோழர்களின் குடும்பங்களைச் சார்ந்த சாதிவெறி கொண்ட பெண்கள் சாடை பேசினார்கள். ” கொண்டு போய் மகளைப் பள்ளனுக்குக் கட்டிக் கொடு ” என்று வைதார்கள். கட்டிக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களை இந்த ‘வசவு’ ஆத்திரப்படுத்தாது என்பது கூட சாதிவெறி கொண்ட அந்த மண்டைகளுக்கு உரைக்கவில்லை.

போலீசாரின் சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து கூடலூரில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசினார் ஆண்டிப்பட்டி வி.வி.மு. தோழர் செல்வராசு. ” சூத்திரன் என்றால் பாப்பானின் வைப்பாட்டி மகன் என்ற மனுதர்ம ரகசியத்தை பெரியார் அம்பலப்படுத்தினார். தமிழக போலீசில் எத்தனை பேர் ‘தேவடியா மக்கள் ‘ என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஊரில் இன்னின்னார் இருக்கிறார்கள் ” என்று பேசினார் செல்வராசு.

ஆத்திரம் கொண்ட போலீசு அதிகாரிகள் நள்ளிரவில் வீடு புகுந்து அவரது குடும்பத்தினரை மிரட்டினர். ராஜத்துரோக (124-ஏ) குற்றத்தில் அவர்மீது வழக்குப் போட்டனர்.

வசவுகள், தாக்குதல்கள், வழக்குகள் …. அனைத்தும் ஒருபுறமிருக்க பண்ணைப்புரத்தில் தனிக்குவளை எடுக்கப்பட்டு விட்டது. பண்ணைப்புரத்தில் பண்ணையாருக்கும் சாதி வெறியர்களுக்கும் அடங்கி மவுனமாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். “இந்த ஊரில் தீண்டாமை இல்லை ” என்று ஊர்க் கூட்டம் போட்டு எழுதிக் கையெழுத்து வாங்க பிரசாத் முயன்றபோது “முடியாது ” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள் தாழ்த்தப்ட்ட மக்கள்.

தனிக்குவளை எடுக்கப்பட்டதைக் காட்டிலும் முக்கியமான வெற்றி இதுதான்.

– புதிய கலாச்சாரம், மார்ச் – 1998 இதழிலிருந்து.

பின்னுரை

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புக்களும் பத்தாண்டுகளுக்கு முன்னர் கொடியங்குளம் கலவரம் முடிந்து தென்மாவட்டங்களில் நிர்ப்பந்தமாக அமைதி வந்த நேரத்தில் சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தினை தமழிகம் முழுவதும் நடத்தினர். அந்தச் சமயத்தில் கிராமப்புறங்களில் ஆதிக்க சாதி வெறியைக் கண்டித்து இயக்கம் நடத்துவது என்பது எவ்வளவு சிரமமானது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சிறுபான்மை என்பதாலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரும்பான்மை என்பதாலும் தீண்டாமை இயக்கத்திற்கெதிராக இரு பிரிவிலிருந்தும்  உழைக்கும் மக்களை திரட்டுவது அவசியம். மேல்சாதியனரை ஜனநாயகப்படுத்துவது, நடைமுறையில் அவ்வளவு சுலபமானதல்ல. இந்த முள் நிறைந்த பாதையில் இன்றும் வி.வி.மு போராடிக் கொண்டிருக்கிறது. பண்ணைப்புரம் போராட்டம் இதற்கோர் எடுத்துக்காட்டு.

பத்தாண்டுகளுக்கு பின்னரும் பண்ணைப்புரத்தின் வழக்குகளுக்காக  தோழர்கள் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்த தேநீர்க்கடை உரிமையாளரும் இறந்து விட்டார். இன்று இவ்வட்டாரத்தில் அனைவருக்கும் யூஸ் ஓன் த்ரோ பிளாஸ்டிக் குவளை கொடுக்கப்படுகின்றது.

இதன் மூலம் சமத்துவம் வந்து விட்டது என்பதல்ல. தீண்டாமையை பாதுகாப்பதற்கு தொழில் நுட்பம் கை கொடுக்கிறது என்பதுதான். பண்ணைப்புரத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் ஆதிக்கசாதியினர் கேட்டுக் கொண்டால்  கண்ணாடி குவளையும், தலித் மக்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் பிளாஸ்டிக் குவளைகளும் கொடுக்கப்படுவதாக தோழர்கள் கூறுகின்றனர். வி.வி. மு இன்னமும் போராடி வருகிறது.

__________________________________________________

 

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

109

151

‘முடிந்து விட்டது’ என்று நினைத்தோம். ‘முடியவிடக்கூடாது’ என்பதில் பெரும் முனைப்பு காட்டுகிறது சன் டிவி. சட்டக்கல்லூரி கலவரத்துக்கு பின்னணி இசையும் சேர்த்து எப்படியாவது தமிழகத்தைப் பற்றவைத்து விட வேண்டும் என்ற வெறியுடன் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறது.

ஜெயா டிவியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், சேதுராமன் எல்லோரும் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குமுறுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.

அடித்தவர்கள் என்ன சாதி, அடிபட்டவர்கள் என்ன சாதி என்பதை டிவிக்கள் சொல்வதில்லை. அது பத்திரிகை தருமமில்லை என்பதனால் மட்டுமல்ல, அது தேவைப்படவில்லை. மனித உரிமைக்காக வாண்டையார் குரல் கொடுப்பதைப் பார்த்த பிறகு கூட, பாதிக்கப்பட்ட மனிதர்கள் எந்த ‘இனத்தை’ச் சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மாங்காய் மடையர்களா என்ன தமிழர்கள்?

பிதுங்கி வழியும் சென்னை மாநகரின் மின்சார ரயிலில், சுற்றியிருப்பவர்களில் யார் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளமுடியாத அந்தச் சூழலில் ஐகோர்ட் விவகாரத்தை இப்படி அலசுகிறார்கள் பயணிகள்.

“பாக்கவே குலை நடுங்குது சார். அந்தப் பையனோட அம்மா அழுவுறதப் பாக்க பாக்கமுடியலன்னு என் வொய்ப் டிவியையே ஆஃப் பண்ணிட்டா.”

“இவாள்ளாம் ஜட்ஜா வந்தா நாடு உருப்பட்ட மாதிரிதான்.”

“செத்த நாயக்கூட இப்படி அடிக்க மனசு வராது சார். எந்த ஜாதியா இருந்தா என்ன சார்? அதுக்காக இப்படியா? இப்போ நீங்க என்ன ஜாதின்னு எனக்குத் தெரியுமா,  நான் என்ன ஜாதின்னு உங்களுக்குத் தெரியுமா?”

“டிரான்ஸ்போர்ட்டுக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க – கலவரம். மாவட்டத்துக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க – அதுக்கும் கலவரம். அதையெல்லாம் எடுத்தாச்சுல்ல, அதே மாதிரி காலேஜுக்கும் எடுத்துர வேண்டியதுதானே.”

சாதியின் பெயரைச் சொல்லாமலேயே, சாதிச் சார்பை நிலைநாட்டிக் கொள்ளும் இந்த உரையாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு செல் உயிரினங்களும், தாவரங்களும்  தமக்குள் பரிமாறிக் கொள்ளும் சங்கேத மொழியை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், காதலைப் போலவே கண்ஜாடையையும் மவுனத்தையும்கூட ஒரு மொழியாக மாற்றி தன் இனத்தை அடையாளம் காணும் வித்தையைக் கண்டுபிடித்திருக்கிறது சாதி. புத்தன் முதல் பெரியார் வரை எத்தனை பேர் வந்தால் என்ன, பாஷாணத்தில் புழுத்த புழுவல்லவோ சாதி?

ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறை, தாக்குகின்ற மாணவர்களுக்கும், வேடிக்கை பார்த்து நின்ற போலீசக்கும் எதிராக வலுவான ‘பொதுக்கருத்தை’ உருவாக்கியிருக்கிறது. பொதுவாக எல்லா வன்முறையையும் எதிர்ப்பது போலவும், சாதியை வெறுப்பது போலவும், சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பதைப் போலவும் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தப் பொதுக்கருத்தின் ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் சாந்து ‘ஆதிக்க சாதி சிந்தனை’. அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘இந்து மனோபாவம்’.

“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” இந்த மெசேஜ் கடைசித் ‘தமிழனின்’ மண்டை வரை இறக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாம் அஞ்சியது போல இதுவரை தமிழகம் பற்றி எரியவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருக்கிறது. ஆயினும் இதை நினைத்து மனப்பூர்வமாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை. இந்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

கணிதத்தில்கூட ‘சமன் செய்யும் பிழை’ (compensating error) என்று ஒன்று உண்டு. வரவுக்கணக்கில் 900 ரூபாய் கூட்டல் பிழையால் அதிகமாகி, செலவுக் கணக்கில் 100 ரூபாயை 1000 என்று தவறாக எழுதியிருந்தாலும் கடைசியில் கணக்கு டாலி (tally)ஆகிவிடும். அதுபோல இந்த அமைதியைத் தோற்றுவித்த காரணிகள் பலவாக இருக்கலாம். இதைவைத்தே தமிழகம் சாதிவெறியற்ற சமத்துவப் பூங்காவாகி விட்டது என்று அமைதி கொள்வதற்கு இடமில்லை.

எம்முடைய முந்தைய பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட சில பதிவர்களின் கருத்துகள் கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:

“வன்முறை எந்த வடிவத்தில் யாரிடமிருந்து வந்தாலும் கண்டிக்க வேண்டும். வினவு நடுநிலை தவறி தலித் தரப்பை ஆதரிக்கிறது. இதன் மூலம் வன்முறையை மேலும் தூண்டி விடுகிறது.”

“தேவர் சாதியினரின் நியாயத்தைப் பேச யாருமில்லை. இது வரை சாதி பார்க்காத நான், இனி தேவர் சாதிக்காக நிற்கப் போகிறேன்.”

“பார்ப்பனியம் என்ற சொல்லை எதற்கு நுழைக்கிறீர்கள். பிராமணர்களுக்கும் இந்த வன்முறைக்கும் என்ன சம்மந்தம்?”

“நான் தனிப்பட்ட முறையில் சாதி பார்ப்பதில்லை. எனக்குப் பல தலித் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிலரின் தவறுக்காக அந்தச் சாதியையே குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியாது”…

இந்தப் பதிவர்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் தனித்தனியே பதில் எழுதுவது கடினம். அதைக்காட்டிலும் இத்தகைய பின்னூட்டங்களை ஆளுகின்ற மனோபாவத்திற்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

சட்டக்கல்லூரி வன்முறை என்பது ஒரு ஒளிபரப்பப்பட்ட வன்முறை. நியாயங்களும், அறிவும், காட்சிப் படிமங்களால் தோற்கடிக்கப்படும் காலம் இது. ஒரு சாதிவெறியனின் அனல் கக்கும் பேச்சு ஏற்படுத்தக் கூடிய மனப்பதிவைக் காட்டிலும் அழுத்தமான மனப்பதிவை இந்தக் காட்சிப் படிமங்கள் ஏற்படுத்தியுள்ளன.

“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” என்ற “இந்த ஸ்டோரியின் ஒன்லைனில்” நம்மாளு என்ற சொல் தேவர் சாதியை மட்டும் குறிப்பதல்ல. அது ஆதிக்க சாதியினர் அனைவரையும் தழுவி நிற்பது. இன்று அடங்கியிருப்பது போலத் தோன்றினாலும் நாளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (நிச்சயமாக வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்) லேசாகத் தண்ணீர் தெளித்து விட்டால் கூட, குப்பென்று சிலிர்த்து எழக்கூடியது. எனவே, இதனுடைய வேரைக் கெல்லி எடுத்துப் பார்ப்பது அவசியம்.

ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறைக் காட்சி மிகவும் கொடூரமாக இருக்கிறது என்பதிலோ, பிள்ளை அடிபடுவதைப் பார்த்துப் பதறும் அந்தத் தாயின் கண்ணீர் நெஞ்சை உருக்குகிறது என்பதிலோ ஐயமில்லை. அடிபட்ட மகனுக்காகத் துடிக்கும் அந்தத் தாயோ, அல்லது தந்தையோ சாதிவெறியர்களாக இருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்கவும் இல்லை.

எனினும், இந்த வன்முறை அரிதானது. அதாவது தலித்துகள் ஆதிக்க சாதியினரைத் திருப்பித் தாக்கும் இந்த வன்முறை மிகவும் அரிதானது. தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் செலுத்தி வரும் வன்முறை அரிதானதல்ல. அது மிகவும் பொதுவானது. ஆதிக்க சாதி மனோபாவத்தைப் பொருத்தவரை அது ‘இயல்பானது’.

தலித் மக்கள் மீது திணிக்கப்படும் அடிமைத் தொழில்கள், தனிக்குவளை, தனிச்சுடுகாடு, தனிக் குடியிருப்பு, போன்ற ‘வழக்கங்கள்’ இன்றளவும் எல்லா கிராமங்களிலும் நீக்கமற நின்று நிலவுவதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.

இந்த வழக்கங்கள் அல்லது மரபுகள் கடந்து போன காலத்தின் எச்சங்கள் என்றும் இன்று காலம் ரொம்பவும் மாறிப்போச்சு என்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கல்லூரி மாணவர் விடுதிகள்கூட ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

மாணவர் விடுதிகளும், மாணவியர் விடுதிகளும் ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். இப்படிப்பட்ட ‘கேனத்தனமான’ கேள்வி அவர்களுக்கு ஆச்சரியமூட்டும். “பஞ்சையும் நெருப்பையும் யாராவது பக்கத்தில் வைப்பார்களா? ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அன்றுமுதல் இன்றுவரை தனி விடுதிதானே” என்று பதிலளிப்பார்கள்.

ஆணாதிக்கத்தின் அபாயத்திலிருந்து பெண்களைப் பாதுகாக்க வேறு வழியில்லாத காரணத்தினால்தான் பெண்களைத் தனியாகப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்ற சாதாரணமான உண்மைகூட ஆண் மனதுக்கு உரைப்பதில்லை.

அது போலவே, “எஸ்.சி – பி.சி ஹாஸ்டல்கள் தனித்தனியே அமைக்கப் பட்டிருப்பதும்” சாதி ஆதிக்கத்தின் விளைவுதான் என்பது ஆதிக்க சாதியினருக்கு உரைப்பதில்லை. இது நூற்றாண்டு காலமாக நின்று நிலவும் வழக்கமோ மரபோ அல்ல. ஆதிக்க சாதியினரின் மன உணர்வைப் புரிந்து கொண்டு அரசாங்கம் செய்திருக்கும் ஏற்பாடு. சட்டக்கல்லூரி விடுதி ஒன்றாக இருந்ததும் பிரச்சினை ‘வெடிப்பதற்கு’ ஒரு காரணம்.

வெடிக்கும்போது மட்டும்தான் இத்தகையதொரு சாதிப் பிரச்சினை சமூகத்தில் நிலவுவதே தங்களுக்குத் தெரியவருவது போல நடிப்பதற்கு ஆதிக்க சாதியினரின் மூளை நன்றாகப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது.

உலகப்புகழ் பெற்ற இசைஞானி இளையராஜாவின் ஊரும், தமிழ் சினிமாவின் பாடல் பெற்ற தலமுமான பண்ணைப்புரத்தில், மாஸ்ட்ரோ ராஜாவின் மாமன் மச்சான்களுக்கு தனிக்குவளைதான். எமது அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் அதை எதிர்த்துப் போராடிய பிறகுதான் ‘அப்படியா?’ என்று புருவம் உயர்த்தியது தமிழ்நாடு. இன்னமும் இந்தச் சேதி பலருக்குத் தெரியாமல் இருக்கக் கூடும்.

ஒருவேளை தெரிந்தாலும், “ஒரு தலித்தின் இசை என்பதற்காகப் புறக்கணிக்காமல், அதனைக் கொண்டாடிய தமிழர்தம் தகைமை குறித்த பெருமிதத்தை ஒப்பிடுகையில் தனி கிளாஸ் பிரச்சினை ஒரு சில்லறை விவகாரமே” என்று கூட ஆதிக்க மனோபாவம் அமைதி கொள்ளக் கூடும்.

பண்ணைப்புரம் மட்டுமா? கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம்.. இன்னும் எத்தனை எடுத்துக் காட்டுகள் வேண்டும்? எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதனாலேயே இவை சகஜமாகி விடுகின்றனவோ?

திண்ணியம் கிராமத்தில் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட குற்றத்துக்காக, தலித்துக்கு சூடு வைத்து, வாயில் மலம் திணிக்கப்பட்ட வன்முறை சட்டக் கல்லூரி வன்முறையைக் காட்டிலும் மென்மையானதா? அந்தக் குற்றவாளிகளை நீதிமன்றம் தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கவில்லை என்பதை பதிவர்கள் அறிவார்களா?

தேவர் சாதியினர் சூழ்ந்து நின்று கொண்டு வார்த்தை வார்த்தையாக சொல்லிக் கொடுக்க, “யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. நானாகத்தான் பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து தலைவர் டி.வி காமெராவின் முன் சொல்லவைக்கப் பட்டாரே, அந்த வன்முறையைக் கண்டு கோடிக்கணக்கான தலித் மக்களின் சுயமரியாதை உணர்வு புழுவாய்த் துடித்திருக்குமே, அதை யாராலாவது உணரமுடிகிறதா?

அனைத்திந்தியப் புகழ் பெற்ற ‘கயர்லாஞ்சி படுகொலை’யில் போட்மாங்கே என்ற தலித்தின் நிலத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கெதிராக போலீசில் அவர் புகார் கொடுத்த குற்றத்துக்காக, அவரது மனைவியையும் கல்லூரியில் படிக்கும் மகளையும் கற்பழித்துக் கொலை செய்து, மகன்கள் இருவரையும் கொலைசெய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கப்படவில்லை என்பதை அறிவீர்களா? மேல் முறையீட்டில் விடுதலையாவதற்குத் தோதான ஓட்டைகளை வைத்துத்தான் அவர்களில் சிலருக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலவளவு படுகொலையை விசாரித்த செசன்ஸ் நீதிபதி தேவர் சாதியைச் சேர்ந்தவர்  என்பதும், கொலைகாரர்களின் சாதிவெறியை விட நீதிமன்றத்தின் சாதிவெறி கொடியதாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? “உண்மையான கொலைகாரர்கள் பலர் தண்டிக்கப்படவில்லை” என்று சென்னை உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருந்தும், தமிழகத்தின் கழக அரசுகள் அதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பதை அறிவீர்களா?

எத்தனை கொலைகள், எத்தனை வல்லுறவுகள்.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் பதிவு மீட்டர் கணக்கில் நீளும்.

ஒளிபரப்பப் பட்ட ஒரு வன்முறை – ஒளிபரப்பப்படாத ஆயிரம் வன்முறைகள்!

மேலவளவும், திண்ணியமும் ‘லைவ்’ ஆக ஒளிபரப்பப்படாத காரணத்தினால்தான்  தமிழகம் குமுறிக் கொந்தளிக்கவில்லையோ? இந்தக் காட்சிகள் எல்லாம் ‘லைவ்’ ஆகக் காமெராவில் கிடைக்காத துர்ப்பாக்கியத்தினால்தான் சன் டிவியும், ஜெயா டிவியும் அவற்றை ஒளிபரப்பவில்லையோ? சட்டக்கல்லூரியில் அடிபட்ட தமிழர்களுக்காகவும்,  ஈழத்தில் அடிபடும் தமிழர்களுக்காகவும் பதறித் துடிக்கும் வைகோவின் வரையப்பட்ட மீசை, மேற்கூறிய தமிழர்களுக்காக என்றுமே இப்படித் துடித்ததில்லையே, ஏன்? கருணாநிதியை ஒழித்துக் கட்ட அன்றாடம் கிடைக்கின்ற இத்தகைய பொன்னான வாய்ப்புகளை இவர்களெல்லாம் தெரிந்தே கைநழுவ விடுவது ஏன்?

“ஏனென்றால் இவை ஒளிபரப்பப் படவில்லை” என்று சொல்லி  சமாதானமடைந்து கொள்வோமா?  மேன்மை தங்கிய ஆதிக்க சாதி மனோபாவத்தின் கருணை உணர்ச்சியை உசுப்பி விடும் வகையில் அவர்களுடைய மனச்சாட்சியின் சந்நிதியில் இவை சமர்ப்பிக்கப்படவில்லை என்று நியாயம் கற்பித்துக் கொள்வோமா?

அத்தகைய ‘நியாயம்’ ஷகீலா படத்தை விடவும் அம்மணமாகவும், ஆபாசமாகவும் இருப்பதை உங்களால் உணர முடியவில்லையா?

இவையெல்லாம் ஒளிபரப்பப் படவில்லை என்பது வேறு கதை. ஒருவேளை ஒளிபரப்பப் பட்டாலும் நாம் பார்க்க விரும்பும் காட்சிகளை மட்டுமே பார்ப்பதற்கு கண்கள் பயிற்றுவிக்கப் பட்டிருக்கின்றன. கேட்க விரும்பும் செய்திகளைக் கேட்பதற்கு மட்டுமே செவிகள் பக்குவப் படுத்தப் பட்டிருக்கின்றன. உணர்ச்சிவயப்பட விரும்பும் சம்பவங்களுக்கு மட்டுமே உணர்ச்சி வயப்படுமாறு இதயம் தடிமனாக்கப் பட்டிருக்கிறது.

ஏனென்றால் இது பல நூற்றாண்டுகளாய் சவாரி செய்து சவாரி செய்து காய்த்துப் போன புட்டம். “பல நூற்றாண்டுகளாய் சுமந்து சுமந்து குதிரையின் முதுகும் காய்த்துப் போயிருக்கவேண்டுமல்லவா? அதுதானே இயற்கையின் நியதி?” என்று ஆதிக்க சாதியினரின் புட்டம் சிந்திக்கிறது.

தங்களது புட்டத்தின் இந்த சிந்தனையை அனுதாபத்துடன் பரிசீலிக்குமாறு தலித் மக்களுக்கும் சாதி ஒழிப்பாளர்களுக்கும் ஆதிக்க சாதி மனோபாவம் வேண்டுகோள் விடுக்கிறது.

அம்பேத்கரிடம் காந்தி விடுத்த வேண்டுகோளும் இதுதான். “ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ள ஒரு தலித்தை சங்கராச்சாரி ஆக்கி, அவர் காலில் பார்ப்பனர்கள் விழுந்து வணங்கத் தயாரா? தீண்டாமையைக் கடைப்பிடிப்பவன் காங்கிரசில் உறுப்பினராக இருக்க முடியாது என்று விதி செய்யத் தயாரா?” என்ற கேள்விகளை அம்பேத்கர் எழுப்பியபோது காந்தி அளித்த பதிலின் சாரம் என்ன?

“தலித் மக்களுக்கு சாதி இந்துக்கள் இழைத்த கொடுமைக்கு பரிகாரம் தேடிக்கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” – – இதுதான் காந்தியின் பதில்.

எப்போது பரிகாரம் தேடுவார்கள்? அதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படும்? அவர்களுக்கு விருப்பப்பட்ட போது, அவர்களுக்கு விருப்பப்பட்ட முறையில் பரிகாரம் தேடுவார்கள். அதுவரை ‘குதிரை’ காத்திருக்கவேண்டும். சுமக்கவும் வேண்டும்.

காந்தியின் பதிலில் இருந்த ‘நேர்மை’ கூடத் தமிழகத்தின் ஆதிக்க சாதியினரிடம் இல்லை. ராஜினாமா செய்வதையே முதல் நிபந்தனையாகக் கொண்டு பாப்பாபட்டி தேவர்சாதியினரால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ தலித் பஞ்சாயத்து தலைவர், டிவி காமெராவின் முன் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறார்.

அடுத்த கணமே, “நாங்களெல்லாம் அண்ணன் தம்பி போல வித்தியாசமில்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். வெளி ஆட்கள்தான் எங்களிடம் பிரிவினையை உருவாக்குகிறார்கள்” என்று தேவர் சாதியினர் பேட்டி கொடுக்கிறார்கள்.

இப்படியொரு பச்சைப் பொய்யைச் சொல்வதற்காக அவர்கள் கடுகளவும் கூச்சப்படவில்லை. ஏனென்றால்    “இதுதான் இயற்கை நியதி, இதுதான் மரபு” என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த மரபு இந்து மதத்தால் புனிதப்படுத்தப்பட்ட மரபு. “பார்ப்பனர்களை ஏன் இழுக்கிறீர்கள்?” என்று  சில பதிவர்கள் கொதிக்கிறார்களே, அந்தப் பார்ப்பனர்களால், இன்றளவும் அவர்கள் போற்றி வரும் பார்ப்பனியத்தால், சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்களால் நியாயப்படுத்தப்படும் மரபு. சங்கராச்சாரிகளால் நிலைநாட்டப்பட்டு வரும் மரபு. அரியானாவில் மாட்டைக் கொன்றதாக 5 தலித்துகளை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டு, ‘அதுதான் எங்கள் தருமம்’ என்று பாரதிய ஜனதா எம்.பி வேதாந்தியால் பிரகடனப் படுத்தப்பட்ட மரபு. இதன் காரணமாகத்தான் “இந்து மதம் என்பது அறவுணர்ச்சியே இல்லாத மதம்” என்றார் அம்பேத்கர்.

தேவர் ஜெயந்தி பற்றிய எமது பதிவுக்குப் பின்னூட்டம் போட்ட ஒரு பதிவர், “என்னைப் பொறுத்தவரை நான் சாதி பார்ப்பதில்லை. யாரோ ஒரு சிலர் செய்யும் குற்றத்துக்காக ஒரு சாதியையே பழிதூற்றுவது என்ன நியாயம்?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அந்தப் பதிவரின் நேர்மையை நாம் சந்தேகிக்கவில்லை.

ஆனால், “என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.

அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால்,  திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” என்ற கேள்விக்கும் அந்தப் பதிவரைப் போன்றோர் பதில் தேட வேண்டும்.

இந்த மவுனத்துக்கு ஆயிரம் விளக்கங்கள் சொல்லி நியாயப்படுத்தலாம். ஆனால் மவுனத்தின் விளைவு சம்மதம்தான். வாங்கிய சம்பளத்துக்கு உரிய கடமையை ஆற்றாமல், “அந்த அநீதியான வன்முறையை”ப் பார்த்துக் கொண்டு நின்ற குற்றத்துக்காக சட்டக்கல்லூரியின் வாயிலில் நின்ற போலீசாரை தமிழகமே சபிக்கிறது. தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது அரசாங்கம்.

போலீசாரின் மவுனம், சட்டப்படி கடமை தவறிய குற்றமாகிவிட்டது. சொந்தக்காரனும் சாதிக்காரனும் இழைக்கும் அநீதிகளைப் பார்த்துக் கொண்டு நிற்கும் ‘நல்லவர்களின் மவுனத்திற்கு’ யார் தண்டனை வழங்குவது? அவர்களை எதிலிருந்து சஸ்பெண்டு செய்வது?

“என்னை தேவர் என்றோ, படையாச்சி என்றோ, பிராமணன் என்றோ நான் கருதிக்கொள்வது இல்லை” என்பது உண்மையானால், தேவர் சாதியையும் பார்ப்பன சாதியையும் இடித்துரைக்கும்போது, அந்தச் சாதியினரின் வரலாற்றுக் குற்றங்களையும், நிகழ்காலக் குற்றங்களையும் சாடும்போது, எனக்கு ஏன் தசையாட வேண்டும்? சாதி அடையாளம் இழிவானது என்று புரிந்து அதனைத் துறந்தவனுக்கு அந்த அடையாளத்தின் பால் ஏன் அனுதாபம் பிறக்க வேண்டும்?

நல்லெண்ணம் கொண்டோராகவும், சாதி உணர்வு இல்லாதவர்களாகவும் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் இதனைப் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். “எம்பேரு கோபாலகிருஷ்ணன்” என்று நீங்கள் சொல்லி, ஊர்க்கார பயக ஒத்துக் கொள்ளாமல் “சப்பாணி” என்று சொன்னால் கோபப்படுவதற்கு, இது ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயர் சம்மந்தப்பட்ட விவகாரம் இல்லையே. அவனுடைய சமூக நடத்தை தொடர்பான பிரச்சினையாயிற்றே!

“சட்டக் கல்லூரி பிரச்சினை வெடிப்பதற்கான பொறி, தேவர் ஜெயந்தி போஸ்டர்தான்” என்கிறார்கள். தேவர் நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பல பின்னூட்டங்கள் வந்தன. இப்போது அதற்குள் நாம் போகவில்லை.

இன்று தேவர் குருபூஜை எதற்காக நடத்தப்படுகிறது? அவர் நேதாஜியுடன் இணைந்து சுதந்திரப் போரில் ஈடுபட்டார் என்பதற்காகவா, அல்லது சில பதிவர்கள் கூறுவது போல அவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காகவா? இன்று காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக முதல் கம்யூனிஸ்டு கட்சிகள் வரை குருபூஜைக்குப் போய் சாமி கும்பிடுகிறார்களே, அங்கே உலக வர்த்தகக் கழகத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்களா, அல்லது தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்கிறார்களா?

இன்னும் புரியும்படி சொல்வதென்றால், காந்தி நினைவு நாளுக்கு பனியா குருபூஜை என்றோ, கட்டபொம்மன் பிறந்த நாளுக்கு நாயக்கர் குருபூஜை என்றோ, மருதுவின் நினைவுநாளுக்கு சேர்வை குருபூஜை என்றோ, வ.உ.சி பிறந்த நாளுக்கு பிள்ளைவாள் குருபூஜை என்றோ காமராசர் பிறந்த நாளுக்கு நாடார் குருபூஜை என்றோ  பெயரிடப் படாததது ஏன்? அந்தந்த சாதிக்காரர்களுக்கு அப்படியொரு சாதி அபிமானம் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும்  தேவருக்கு மட்டும்தான் ‘குருபூஜை’.

அங்கே மட்டும்தான் மொட்டை போட்டு சாமி கும்பிடுவது போன்ற வழிபாட்டு முறைகள். பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதல் மேலவளவு வரை தேவர் சாதிவெறியர்களால் ரணமாக்கப்பட்டிருக்கும் தலித் இளைஞர்களின் மன உணர்வுகள் “இந்த சாதி வழிபாட்டை சகித்துக் கொள்ள வேண்டும். இதற்கு போஸ்டரும் பானரும் வைத்தால் முகம் சுளிக்கக் கூடாது” என்பது சாதி வெறியர்களின் எதிர்பார்ப்பு.

சட்டக் கல்லூரி தலித் மாணவர்கள் இதையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலவளவில் தலித் ஊராட்சித் தலைவரை வெட்டியெறிந்ததைப் போலவே, சட்டக்கல்லூரியின் முன்னால் இருந்த ‘அம்பேத்கர்’ பெயரையும் வெட்டியிருக்கிறார்கள் சாதிவெறியர்கள்.

தாங்கள் அடிமை நிலையிலிருந்து விடுபடவும், கல்வி கற்கவும் ஆதாரமாக இருந்த தலைவரின் பெயரை வெட்டியெறிந்ததையும் தலித் மாணவர்கள் மவுனமாகச் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது சாதிவெறியர்களின் எதிர்பார்ப்பு.

சாதித் தலைவரான தேவரை தேசியத்தலைவராகவும், தேசியத் தலைவரான அம்பேத்கரை சாதித்தலைவராகவும் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யும் இந்த வன்முறையை எதிர்த்து நியாயமாக அனைத்து மாணவர்களும் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும். அது ஏன் நடக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலாக, தலித் மாணவர்களின் வன்முறை இன்று விவாதப் பொருளாகியிருக்கிறது.

மிகத் தந்திரமாக உருவாக்கப் பட்டிருக்கும் இந்தப் பொதுக்கருத்தால் தலித் மக்கள் அச்சுறுத்தப் படுகிறார்கள். தலித் மாணவர்களைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

“என்னதான் இருந்தாலும் ஒரு மாணவனை பத்து பேர் சேர்ந்து கொண்டு நாயை அடிப்பது போல அடிக்கிறார்களே இது என்ன நியாயம்?” என்ற உருக்கமான முறையீடும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப் படும் அந்தக் காட்சிகளும், கடையக் கடையத் திரண்டு வரும் நஞ்சைப் போல, தலித்துகளுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறையாகத் திரண்டு எழுந்து வருகின்றன.

ஒரு மாணவனைப் பத்து பேர் சேர்ந்து அடிப்பது!

எப்பேர்ப்பட்ட அநீதி! இதே போன்றதொரு கொடுமையை நானும் கண்டிருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் பெரியார் (ஈரோடு) மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் என் தலித் நண்பனொருவனுடைய வீட்டுக்குப் போயிருந்தேன். கவுண்டர்களும், படையாச்சிகளும் அந்த கிராமத்தின் பெரும்பான்மை சமூகம். வழக்கம்போல ஊருக்கு வெளியிலிருந்தது காலனி. ஒரு பத்து இருபது வீடு இருக்கும். அவ்வளவுதான்.

டவுனிலிருந்து வந்திருக்கும் பாண்ட் சட்டை போட்ட (மேல் சாதி) பையன் என்பதால் எனக்கு காலனி மக்களின் உபசரிப்பு ரொம்ப அதிகம். இதை விளக்கத் தேவையில்லை. முக்கியமாக என் நண்பனின் தாத்தா. கடலைக் கொட்டை அவித்துக் கொடுப்பது என்ன, இளநி வெட்டிக் கொடுப்பது என்ன, அவருடைய முகத்தில் அப்படியொரு ஆனந்தம். பெருமை.

காலை உணவெல்லாம் முடித்த பின், கறி எடுப்பதற்காக நண்பன் பக்கத்திலுள்ள சிறு நகரத்துக்குப் போய்விட்டான். கிராமத்தின் அலுப்பூட்டும் மதிய வேளை. ‘ஒரு டீ குடித்து விட்டு வரலாம்’ என்று வெளியில் வந்தேன். டீயை சொல்லி விட்டு ஒரு சிகரெட்டையும் பற்றவைத்து ரெண்டு இழுப்பு இழுத்த பிறகுதான் பார்த்தேன் – டீக்கடை தடுப்புக்கு அந்தப் புறத்தில் குத்துக் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் தாத்தா.

கூச்சப்பட்டு அவசரம் அவசரமாக சிகரெட்டடை மறைத்து அணைத்தேன். “சும்மா பிடிங்க சார், அதிலென்ன இருக்கு. ஊர்ப்பயலுவளே மூஞ்சியில ஊதுறானுங்க” என்றார் கடைக்காரர்.

“பரவாயில்லீங்க. தாத்தாவுக்கும் ஒரு டீ சேத்துப் போடுங்க” என்றேன். முதலில் எனக்குத் தயாரான டீயைக் கையில் கொடுத்தார் கடைக்காரர். அதை தாத்தாவிடம் கொடுத்தேன். அவர் அதைக் கையில் வாங்காமல், “நீ சாப்பிடு கண்ணு” என்றார்.

“நீங்க சாப்பிடுங்க சார், அவருக்கு நான் போடறேன்” என்றார் கடைக்காரர்.

கடையின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு அலுமினியக் குவளையைக் கழுவி நீட்டினார் தாத்தா. அப்போதுதான் எனக்கு விசயம் மண்டையில் உறைத்தது. பதட்டமானது. குப்பென்று வியர்க்கத் தொடங்கியது.

“ஏன் அவருக்கும் கிளாஸிலயே கொடுங்களேன்” என்றேன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

கடையில் ஒரு பத்து பேர் ஆங்காங்கே நின்று பேசிக்  கொண்டிருந்தார்கள். திடீரென்று பேச்சு நின்றது. ஒரு அசாதாரணமான மவுனம்.

“நீ சாப்பிடு கண்ணு” என்றார் தாத்தா. அவர் முகம் வெளிறியிருந்தது.

“நீங்க சாப்பிடுங்க சார்” என்றார் கடைக்காரர்.

“சார் வெளியூர் போல…  நீங்க சாப்பிடுங்க” என்றார் கூட்டத்திலிருந்த இன்னொருவர்.

என்னுடைய கேவலமான நிலைமையை எண்ணி கைகால்கள் நடுங்கின. சண்டை போடுவதா? இப்போது சண்டை போட்டு விட்டு ராத்திரி பஸ் ஏறி நான் போய்விடுவேன். தாத்தாவின் கதி என்ன? பிறகு காலனி மக்களின் கதி என்ன?

தாத்தாவின் குவளையில் இன்னும் டீ ஊற்றப்படவில்லை. என்னுடைய டீயையும் இன்னும் நான் குடிக்கவில்லை.

அவர்கள் பத்து பேர் – நானும் தாத்தாவும் மட்டும். கோபம், பயம்.. கண்ணீர் முட்டியது.

“எனக்கும் டீ வேண்டாங்க” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு காலனிக்கே போய்விட்டேன். மாலை கிளம்பிவிட்டேன்.  நடந்தது என்ன என்பது எனக்கும் தாத்தாவுக்கும் மட்டும்தான் தெரியும். புறப்படுவதற்கு முன் அவருடைய கையை ஒரு முறை அழுந்தப் பற்றியதைத் தவிர வேறு எதையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. சொல்ல முடியவுமில்லை.

இது முன்னொரு நாள் நான் நேரில் அனுபவித்த வன்முறை. தாத்தாவுக்கு அது அனுபவித்துப் பழகிய வன்முறை. குஜராத் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் வன்முறை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் இந்த நாட்டின் தலித் மக்கள் அனுபவித்து வரும் வன்முறை.

பார்ப்பனர் முதல் வேளாளர், முதலியார், செட்டியார், தேவர், வன்னியர், கவுண்டர் போன்றோரடங்கிய “பெரும்பான்மை இந்துக்கள்” பல்லாயிரம் ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மிகவும் இயல்பாகச் செலுத்தி வரும் வன்முறை.

ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தச் சம்பவத்தை டீக்கடைக்காரர் மறுநாளே மறந்திருப்பார். தாத்தாவும் கூட மறந்திருக்கக் கூடும்.

ஆனால் இந்த வன்முறையின் தழும்பை என்னுடைய நினைவுகள் தீண்டும் ஒவ்வொரு முறையும், குத்துக்காலிட்டபடி கையில் குவளையுடன் அமர்ந்திருக்கும் தாத்தாவின் முகம் சுரீரென்று நெஞ்சைக் குத்துகிறது.

பேச வந்த விசயத்திலிருந்து நான் வெகுதூரம் விலகிப் போய்விட்டேனோ? நாம் சட்டக்கல்லூரி மாணவர் வன்முறையைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தோம்.

பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை அடிக்கும் வன்முறை – அடேயப்பா, அது எவ்வளவு காட்டுமிராண்டித் தனமானது!

____________________________________