Sunday, November 2, 2025
முகப்பு பதிவு பக்கம் 819

மக்கள் மீதான போருக்கு எதிராக… சிறப்புரைகள், கலைநிகழ்ச்சிகள் – வீடியோ!

vote-012சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடந்த ம.க.இ.க பொதுக்கூட்டத்தின் காணொளியை இங்கே வெளியிடுகிறோம். உடனடியாக வெளியிடவேண்டும் என்ற எண்ணத்தில் படத்தொகுப்பு முடிந்தவுடன் இதை வலையேற்றியிருக்கிறோம், நல்ல தரமுள்ள காணொளியை குறைவான  அளவுடனான கோப்புகளாக மாற்றும் தொழில்நுட்பத்தை இதுவரை நாங்கள் அறிந்திருக்கவில்லை எனவே இந்த காணொளி கோப்புகள் தரவிரக்கமாக மிகுந்த நேரமாகும். சிரமத்துக்கு வருந்துகிறோம், அடுத்த சில நாட்களில் இதை சரி செய்து மறுபதிப்பு செய்துவிடுவோம். பிராட்பான்ட அல்லாத பயனாளர்களுக்கு காண்பதில் தடங்கல் ஏற்படும், ஒரு ஆலோசனை, ‘பிளே’ பட்டனை அழுத்தி படம் தரவிரக்கம் துவங்கியவுடன் ‘பாஸ்’ பட்டனை அழுத்திவிடவும்… இருபது நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ‘பிளே’ வை அழுத்தினால் தடையிலாமல் காணொளியை காணமுடியும்.

சிறப்புரை – தோழர் பாலன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

முதலில் பேசிய தோழர் பாலன், , ஒரிசா, ஜார்கண்டு மாநிலங்களில் புதைந்திருக்கும் அரிய கனிமவளங்களைப் பட்டியலிட்டுக் கூறினார். மனித குலத்துக்கு என்றென்றைக்கும் தேவைப்படுகின்ற கனிம வளங்களை, அடுத்த 50 ஆண்டுகளுக்குள் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டி எடுத்துவிட்டால், எதிர்காலத்தில் நம் தேவைக்கு அவர்களிடம் கையேந்தி நிற்க நேரிடும் என்ற  அபாயத்தை சுட்டிக் காட்டினார். ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட கவுந்தி வேடியப்பன் மலையில் இருக்கும் கனிவளங்களை ஜின்டால் நிறுவனத்துக்குத் தாரை வார்த்துவிட்டு, விற்பனைத்தொகையில் 0.02% மட்டுமே தமிழக அரசு ராயல்டியாகப் பெற இருக்கிறது என்பதைக் கூறி, இந்த மறுகாலனியாக்க கொள்ளை என்பது எங்கோ ஒரிசா மாநிலத்தில் மட்டும் நடப்பது அல்ல என்பதையும் விளங்கச் செய்தார்.

சிறப்புரை – தோழர் வரவரராவ், புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரா

சிறப்புரையாற்றிய தோழர் வரவரராவ் தோழர் வரவரராவ், மாவோயிஸ்டு அமைப்புக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் போரின் பின்புலத்தில் இருக்கும் ஏகாதிபத்திய நலனை அம்பலப்படுத்தினார். பிர்சா முண்டா முதல் அல்லூரி சீதாராமராஜு வரையில் பல பழங்குடித் தலைவர்கள் காலனியாதிக்கத்தை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். ஆனால், நக்சல்பாரி இயக்கம் தோன்றிய பின்னர், பழங்குடி மக்கள் மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தால் வழிநடத்தப்படுவதால், அவர்கள் இப்போது தாங்கள் கொள்ளையிடப்படுவதைத் தடுப்பதற்காக மட்டும் போராடவில்லை, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவும் போராடுகிறார்கள் என்று விளக்கினார்.

ஏகாதிபத்திய உலகமயமாக்கல் காலத்தில் அரசு நிறுவனத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், உலகவங்கித் அதிகாரியாக இருந்த மன்மோகன்சிங்கும், பன்னாட்டு நிறுவனங்களின் வழக்குரைஞரான ப.சிதம்பரமும், முன்னாள் சி.ஐ.ஏ தலைவரான ஜார்ஜ் புஷ்ஷும் அரசியலில் ஈடுபடாமலேயே அதிபர், அமைச்சர் பதவிகளைக் கைப்பற்றிக் கொள்வது உலகு தழுவிய போக்காக எழுந்துள்ளதையும், அனைத்திந்தியக் கட்சிகளான பா.ஜ.க, காங்கிரசு, மார்க்சிஸ்டு கட்சி போன்றவை மட்டுமின்றி, பிராந்தியக்கட்சிகளான திமுக முதல் அகாலி தளம், அசாம் கனபரிசத் முதலான கட்சிகளும் கூட ஏகாதிபத்திய உலகமயமாக்கத்துக்கு ஆதரவான கட்சிகளாக மாறியிருப்பதையும் குறிப்பிட்டார். மாவோயிஸ்டு செயலர் கணபதி, பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சமீபத்திய பேட்டியொன்றில் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய தோழர் வரவரராவ், பேச்சு வார்த்தை குறித்து இரண்டு நாக்குகளால் பேசுபவர் சிதம்பரம்தான் என்பதை அம்பலப்படுத்தியதுடன், எத்தனை இரத்தம் சிந்தினாலும்,எத்தனை உயிர்களைப்பலியிட்டாலும் இந்தப்போராட்டம் தொடரும் என்பதையும் பெருத்த கரவொலிக்கு இடையே கூறி முடித்தார்.

சிறப்புரை தோழர் மருதையன், பொதுச்செயலர், ம.க.இ.க, தமிழ்நாடு

இறுதியில் சிறப்புரையாற்றிய தோழர் மருதையன் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதை நோக்கத்துக்காக இராக்கின்மீது போர் தொடுத்த அமெரிக்கா, அதற்கு சதாமின் சர்வாதிகாரத்தை ஒழிப்பது என்று ஒரு போலி முகாந்திரத்தைக் கூறியது போலவே, காடுகளையும் கனிவளங்களையும் கைப்பற்றும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு மாவோயிஸ்டுகளை முகாந்திரமாக்கியிருக்கிறது மத்திய அரசு என்றார். வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடி மக்களிடமிருந்து காடுகளைக் கைப்பற்றும் அரசு, அவற்றில் பொதுத்துறை சுரங்க நிறுவனங்களை உருவாக்கவில்லை; மாறாக பன்னாட்டு நிறுவனங்களுக்குததான் காடுகளைத் தாரை வார்க்கிறது. இது பழங்குடி மக்களுக்கு மட்டும் நடக்கவில்லை. காடுகளையும், கடல்வளத்தையும், பொதுத்துறைகளையும், சிறுவணிகத்தையும், விவசாயத்தையும் மக்களிடமிருந்து கைப்பற்றி ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரின் பெயர்தான் மறுகாலனியாக்கம் என்றார்.  இந்தியத் தரகு முதலாளி வர்க்கத்துக்கு நம்முடைய வரிப்பணத்திலிருந்து, நாளொன்றுக்கு 700 கோடி ரூபாய் வரிச்சலுகை வழங்கப்படுவது, குஜராத்தில் டாடாவின் கார் கம்பெனிக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், அனில் அம்பானி விமானநிலையம் அமைக்க மகாரராட்டிர அரசு வழங்கியுள்ள நிலம் என்பன போன்ற எடுத்துக்காட்டுகளைக் கூறி, மக்களுடைய சொத்துக்களைப் பறித்து முதலாளிகளிடம் ஒப்படைக்கும் இந்த அரசு, மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதைப் போல நடிப்பதையும் அம்பலப்படுத்தினார். மஞ்சள் பையில் தனது முகத்தை அச்சிட்டு மக்களுக்கு இலவச அரிசியை வழங்கும் கருணாநிதி, ஃபோர்டுக்கும், ஹூண்டாய்க்கும், நோக்கியாவுக்கும் வழங்கிய சலுகைகளையும் மஞ்சள் பையில் போட்டுத்தான் வழங்கினாரா, என்று எள்ளி நகையாடினார். பயங்கரவாதத்துக்கு கூறப்படும் இலக்கணத்தின்படி, மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும்தான் முதலாளித்துவப் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதிகளுடன் நாம் பேசுவதற்கு எதுவுமில்லை என்றும் கூறி முடித்தார்.

காட்டுவேட்டை – இசைச்சித்திரம், ம.க.இ.க மையக்கலைக்குழு

இசைச்சித்திரம் என்பது ம.க.இ.க தோழர்கள் புதிய கலைவடிம். இதில் தனிச்சிறப்பாக பதிவு செய்யப்பட்ட இசையும், இணைப்புரையும் மேடையில் ஒலிக்க, அதற்கேற்றபடி கலைஞர்கள் நடிப்பது, ஆடுவது, கருப்பொருளுக்கேற்றபடி மேடையொளி ஒளிர மொத்தத்தில் ஒரு எழுச்சியூட்டும் கலையை பார்வையாளர்கள் உணர்வார்கள். இங்கே பழங்குடி மக்களின் வாழ்க்கையும், போராட்டமும், பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலும் இசைச் சித்திரமாய் விரிகின்றது.

கலைநிகழ்ச்சிகள் – ம.க.இ.க மையக்கலைக்குழு

தமிழகத்தில் ம.க.இ.க கலைக்குழு மிகவும் பிரபலம் என்றால் அது மிகையில்லை. எமது அரசியல் போராட்டத்தின் பிரச்சாரத்தை கலையால் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இந்த கலைக்குழு தோழர்கள் பாடிவருகின்றனர். இவர்களது பாடல்கள் இதுவரை பதினொரு குறுந்தகடுகளாக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான படிகள் விற்பனையாகியிருக்கின்றன. இங்கு ஆளும்வர்க்கங்களும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும்தான் இந்த நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நாய்களென்பதையும், நாட்டைக் காக்கும் நாயகர்கள் நக்சல்பாரிகளே என்பதையும் கலைக்குழுவின் பாடல்கள் வெவ்வேறு கோணங்களில் விளக்குகின்றன.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மக்கள் மீதான போருக்கு எதிராக ம.க.இ.க பொதுக்கூட்டம் – புகைப்படங்கள்!

vote-012காட்டு வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீதான போரைத் தொடுத்திருக்கும் இந்திய அரசை எதிர்த்து சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். பதிவுலகைச் சேர்ந்த பதிவர்களும், வாசகர்களும் கூட நிறையப் பேர் வந்திருந்தனர்.

முதலில் இந்தக் கூட்டத்திற்கு போலீசு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தது. பிறகு உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்த பிறகே கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு ஆட்சேபணையில்லை என்று நீதிமன்றத்தில் கூறி அனுமதி வழங்கியது. தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு தோள் கொடுக்கும் பழங்குடி மக்களுக்கு ஆதரவாகவும் திட்டமிட்ட முறையில் மாநிலமெங்கும் வீச்சாக பிரச்சாரம் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் இயக்கம் இதுதான். இந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த மக்களிடம் வசூல் செய்த தொகை ரூ.17,000 என்று தோழர்கள் மேடையில் அறிவித்தனர். இதுவே இந்தக்கூட்டத்தின் உணர்வுப்பூர்வமான எழுச்சிக்கு சான்று. இங்கே கூட்டத்தின் நிகழ்வுகளைக் குறிக்கும் சில புகைப்படங்களை வெளியிடுகிறோம்.

சிறப்புரைகள்

தலைமை தாங்கிய தோழர் முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு.


சிறப்புரை ஆற்றிய தோழர் பாலன், உயர்நீதிமன்ற வழக்குறைஞர், பெங்களூரு.

சிறப்புரை ஆற்றிய தோழர் வரவரராவ், புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரா.

தோழர் வரவரராவின் ஆங்கில உரையை தமிழில் மொழிபெயர்க்கும் தோழர் மருதையன்

சிறப்புரை ஆற்றிய தோழர் மருதையன், ம.க.இ.க, தமிழ்நாடு.


கலை நிகழ்ச்சிகள்


மக்கள் திரள்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வெங்காயமும் !!

16

vote-012அண்மை காலமாக ஒரு வித்தியாசமான காட்சியை நாம் காண்கிறோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் பல தரப்பினரால் பரவலாக நடத்தப்படுகின்றன. அறிவுத்தள செயற்பாட்டாளர்கள், தன்னார்வக் குழுக்கள், இயற்கை வேளாண் விசுவாசிகள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள், பத்தி எழுத்தாளர்கள், நடிகர்கள் என யூகிக்கவே முடியாத பல தரப்பினரும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

போராட்டம், எதிர்ப்பு என்பதை எல்லாம் வாழ்வில் அறிந்தே இராத உயர் மேல்தட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் கூட இதற்காக பேசுகின்றனர். இப்போராட்டங்கள் தொடர்பாக நாள்தோறும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் ‘திருந்திட்டாய்ங்களோ’ என்றே எண்ணத் தோன்றுகிறது.

நம்மாழ்வார் உள்ளிட்ட இயற்கை விவசாயத்தை வலியுறுத்துபவர்கள் இதற்காகப் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பா.ஜ.க.வின் இல.கணேசன், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக மாய்ந்து, மாய்ந்து குரல் கொடுக்கிறார். ஆர்.எஸ்.எஸ். கூட இதை கண்டிக்கிறது. இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றன. குறிப்பாக இந்துத்துவ, பார்ப்பன ஊடகங்கள் என்றுமில்லாதக் கூத்தாக மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பிரசாரமே செய்கின்றன.

பொதுவாக இத்தகைய தனது ஏகாதிபத்திய தரகு வேலைகளுக்கு எதிர்ப்புகள் வரும்போது அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்து செல்வது அல்லது போலீஸ் லத்தி மூலம் பதில் சொல்லி அடக்கி ஒடுக்குவது என்பதுதான் ஆளும்வர்க்கத்தின் காலம் காலமான வழிமுறை. ஆனால் அந்த அரசு கூட மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு அஞ்சுவது போல நடிக்கிறது. ‘பி.டி. கத்தரிக்காயை சந்தையில் விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்’ என பெயரளவுக்கேனும் மத்திய அரசு சொல்ல வேண்டியிருக்கிறது. புறத்தோற்றத்தில் இப்போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதைப் போன்று ஒரு சித்திரத்தை உருவாக்க இவ்வரசு முனைகிறது. உள்ளடக்கத்தில் அது தீவிர முனைப்போடு இருக்கிறது என்பது வேறு விசயம்.

சரி, என்னவாயிற்று இவர்களுக்கு எல்லாம்? பா.ஜ.க.வும், அதிகார வர்க்கமும் திடீரென உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக மாறிவிட்டார்களா? இந்தியாவின் உணவு இறையாண்மையை காலில் போட்டு நசுக்கும் மரபணு மாற்ற விதைகளின் பின்னுள்ள முதலாளித்துவ நச்சு அரசியலை புரிந்துகொண்டுவிட்டார்களா? ‘மாண்சாண்டோவில்தான் கொஞ்சம் கவனப்பிசகாக இருந்துவிட்டோம். இப்போதேனும் விழித்துக்கொள்வோம் அல்லது பி.டி.காட்டன் என்ற கொலைகார விதையின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளை சாகக் கொடுத்தது போதும். இன்னொரு பி.டி. கத்தரிக்காயைக் கொண்டு வந்து பல ஆயிரம் விவசாயிகளை காவு கொடுக்க வேண்டாம்’ என்பது அவர்களின் எண்ணமா?

ஒரு வெங்காயமும் கிடையாது. மரபணு மாற்ற விதைகளுக்கு கிளர்ந்து வரும் எதிர்ப்பின் பேர்பாதி எங்கிருந்து வருகிறது என்ற திசையைப் பார்த்தால் தெரியும், அவர்கள் அத்தனை பேரும் எப்போதும், எதன் பொருட்டும் மரபுகளை மாற்ற விரும்பாதவர்கள். கோயிலாக இருந்தாலும், கத்தரிக்காயாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய மரபு காக்கப்பட வேண்டும். ராமன் என்றொருவன் வரலாற்றில் இருந்தானா, இல்லையா என்பதே தெரியாது. ஆனால் கடலின் மணல் திட்டை ராமர் பாலம் என்பார்கள். கேட்டால் இந்து மரபு என்பார்கள். கருவறைக்குள் என்னைத் தவிர வேறு எவனும் நுழையக்கூடாது என்பது இந்திய மரபு. அதை மாற்றினால் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. தமிழ் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற தமிழ் மரபின் குணங்களுடன் வாழ வேண்டும். மீறினால் ‘தமிழனுக்கு சொரணையே இல்லைங்க’ என்று தங்கர்பச்சான் ரப்பர் ஸ்டாம்புடன் கிளம்பிவிடுவார் ‘யார் தமிழன்?’ என சீல் குத்த.

ஆண்களின் உடலுக்கு வெளியே இருக்கும் உபரி உறுப்பாகவே பெண்கள் நடத்தப்படுவதும், ஆதிக்கச்சாதிக்காரன் தலித் மக்களை அடிமைச் சேவகம் செய்ய வலியுறுத்துவதும், ஆண்டைகளுக்கு பணிந்து நடக்க ஏழைகள் பணிக்கப்படுவதும், மத, மொழி, இன மற்றும் பாலியல் சிறுபான்மையினரை விளிம்பில் தள்ளி அவர்களின் தினவாழ்வை அச்சத்துக்கு உள்ளாக்குவதும் இந்திய மண்ணின் மரபுகள்தான். அவை மீறப்படும்போதும் பதற்றமான குரல்கள் மேலெழும்பும். தற்போதைய மரபணு மாற்ற விதைகளுக்கு எதிரான குரல்களின் சரிபாதி அத்தகையவே.

“உங்களுக்கு இதே பொழப்புடா. எவனையும் ஒண்ணு சேர விட மாட்டீங்களே. அவன் மத்த விசயத்துல எப்படியாவது இருந்துட்டுப் போறான். பி.டி. கத்தரிக்காயை எதிர்க்கிறது நல்ல விசயம்தானே… அதுக்குள்ளேயும் எதுக்குப் பூணூலை தேடுறீங்க?” என்பது உங்களில் சிலரது உடனடி எண்ணமாகவும், எதிர்வினையாகவும் இருக்கக்கூடும். சரி, ஒரு வாதத்துக்காக பி.டி.கத்தரிக்காயை எதிர்க்கும் எல்லோரும் போராளிகள், சமூக நலனின் அக்கறைக் கொண்டவர்கள் என வைத்துக்கொள்வோம். இவர்களுக்கு இந்த நாட்டின் கத்தரிக்காய் வளம் பறிக்கப்படுவது பற்றி மட்டும்தான் கவலையா? அதற்கு முன்னும், பின்னும் இம்மண்ணின் வளங்கள் சூறையாடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

இதோ… சமகாலத்தில் சட்டீஸ்கர், ஜார்கண்ட் காடுகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிட துடிக்கின்றன. மரபுரிமை அடிப்படையில் தண்டகாரன்யா காட்டின் ஆதிவாசிகளுக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் இருந்து அவர்கள் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். இதை பன்னாட்டு நிறுவனங்களின் புரோக்கர்களாக இருந்து பிரதமரும், உள்துறை அமைச்சருமேதான் செய்கின்றனர்.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் நீர்வளம் முழுவதையும் ரத்தம் உறிஞ்சுவதைப் போல கோக்கோகோலா நிறுவனம் இன்னமும் உறிஞ்சிகொண்டேதான் இருக்கிறது. அருகாமை மாநிலங்கள் சொந்தம் கொண்டாட முடியாத, தமிழ்நாட்டில் உற்பத்தியாகி, இங்கேயே கடலில் கலக்கும் ஒரே நதியான தாமிரபரணியின் வளம் மரபு ரீதியாக கோககோலாவுக்கு சொந்தமா, தமிழ் மக்களுக்கு சொந்தமா? தண்டகாரண்யாவிலும், தாமிரபரணியிலும் நமது பூர்வீக மரபுரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக இந்த மரபின் மைந்தர்கள் என்ன செய்து கிழித்தார்கள்? ஒரு கண்டனம், ஒரு அறிக்கை, ஒரு போராட்டம்… எதுவுமில்லை.

1987-ல் அமெரிக்காவில் முதன் முதலில் மரபணு மாற்ற உயிரினம் உருவாக்கப்பட்டது. நாம் கண்ணாடித் தொட்டிகளில் பார்க்கிற வண்ண மீன்கள்தான் இந்த உலகின் முதல் மரபணு மாற்ற உயிரினம். அவை வெறுமனே அழகுக்கானவை என்பதால் உடனடியாக ஆபத்துத் தெரியவில்லை. கொத்த வரும் சர்ப்பம் கூட அழகுதான். இந்த மரபணு மாற்றம் என்ற சர்ப்பம் முதலாளிகளின் கண்களுக்கு மிகப்பெரிய கர்ப்பகத்தருவாக தெரிந்தது. அதன் பிறகு அவர்கள் உருவாக்கியதுதான் பிராய்லர் கோழிகள். கோழியின் சதைப்பகுதி மட்டும் அதிகமாக வரும்படி அதன் மரபணுவை மாற்றியமைத்து பிராய்லர் கோழிகளை உருவாக்கினார்கள். எது விற்பனையாகிறதோ அதன் உற்பத்தியை பெருக்குவது இயல்பான உற்பத்தியாளர் உத்தி. ஒரு வருடம் உளுந்து அதிகம் விலைபோனால் அடுத்த வருடம் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து பயிரிடுவது வழக்கம்தான். ஆனால் ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பையே விற்பனைக்கேற்ப மாற்றுவதன் பின்னால் இருக்கும் லாபவெறியின் கொடூர முகத்தைப் பாருங்கள்.

இன்றைய நுகர்வு கலாசாரத்தில் மனித உடம்புக்கும், பிராய்லர் கோழிக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட கிடையாது. பிராய்லர் கோழிக்கு சதை அதிகமாக வரும்படி மரபணு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்றால் கண்டதையும் வாங்கிக்கொண்டே இருக்கும்படி மனிதனின் மூளை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. நிறுவனங்கள் தங்களின் பொருட்களுக்கு ஏற்றதுபோல வாழ்வதற்கு மக்களை பழக்கியிருக்கிறார்கள்.

கிராமங்களில் மாடு மேய்ப்பதில் இரண்டு வகை உண்டு. மாட்டை புல் உள்ள இடத்தில் மேயவிட்டு ஓட்டி வருவது ஒரு வகை. வெள்ளாமை வயல்களின் வரப்புகளுக்கு நடுவே பசும்புல்லை மாட்டை கையில் பிடித்தபடி மேயவிடுவது இன்னொரு வகை. ‘பிடி மாடு மேய்ப்பது’ என்றிதைச் சொல்வார்கள். இன்றைய சந்தை உலகில் நிறுவனங்கள் மேய்க்கும் பிடிமாடுகளாகத்தான் இருக்கின்றனர் மனிதர்கள். ஆகவே பிராய்லர் கோழியை தின்பதால் நீங்கள் அதை விட பெரிய ஆள் என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம். நீங்களும் ஒரு பிராய்லர் கோழியே.

சரி, இப்படி கோழியின் மரபணுவை மாற்றினார்களே… அப்போது இந்த so called எதிர்ப்பாளர்கள் எங்கேப் போனார்கள்? ‘கோழிக்கறியை மாத்தினா எங்களுக்கு என்ன? அதெல்லாம் அவா ஃபுட். கத்தரிக்காய்தான் எங்க ஃபுட்’ என்பதாக இதைப் புரிந்துகொள்ளலாமா? உண்மையில் பி.டி. கத்தரிக்காய் என்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை நாம் முழு வீச்சோடு எதிர்க்க வேண்டும். இன்று பரவலாக பி.டி.கத்தரிக்காய் என்ற வார்த்தையே அறியப்படுகிறது.

Bacillus Thuringiensis  என்ற பாக்டீரியாவின் சுருக்கம்தான் பி.டி. இந்த வைரஸை கத்தரிக்காயின் மரபணுவில் செலுத்தி அதன் தன்மையை மாற்றுகின்றனர். ஏன்? இந்திய கத்தரிக்காயில் தண்டு துளைப்பான் புழு அதிகமாக இருக்கிறதாம். ’ஆகவே அந்தப் புழுவை எதிர்க்கும் விதமாக கத்தரிக்காயின் மரபணுவை மாற்றி அமைத்திருக்கிறோம்’ என இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் நடைமுறை யதார்த்தம் வேறாக இருக்கிறது. இதே போன்றதொரு ’பூச்சி தாக்காது’ காரணத்தை சொல்லிதான் முன்பு பி.டி.பருத்தியை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அந்த பருத்தி முன்னெப்போதும் இல்லாததைவிட மிகப்பெரிய நஷ்டத்தை பரிசளிக்கவே ஆந்திராவிலும், மஹாராஷ்டிராவிலும் பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுபோனார்கள்.

விசயம் என்னவெனில் எந்தவொரு பூச்சியினமும் மருந்தின் தன்மைக்கு மிக விரைவில் பழகிவிடும். பின் அதைவிட வீரியமான மருந்தைதான் தெளிக்க வேண்டும். இவர்கள் மரபணுவை மாற்றி உருவாக்கிய விதைக்கும் இது பொருந்தும் என்பதால் அவ்விதைகள் மிகக் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தன. எளிதாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின. பி.டி.பருத்திக்கு நேற்று இதுதான் நடந்தது. நாளை பி.டி.கத்தரிக்காய்க்கும் இதுதான் நடக்கும்.

மரபணு மாற்ற விதைகளை ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி தன் நிலத்தில் பயிரிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அருகாமை வயல்களில் வேறு எந்த தாவரம் பயிரிட்டிருந்தாலும் அதன் மரபணுவிலும் தானாகவே மாற்றம் நிகழும். தொற்றுநோய் மாதிரி. ஆக, ஒரு ஊரில் ஒரே ஒரு விவசாயி இதைப் பயிரிட்டாலும் மெல்ல, மெல்ல அப்பிராந்தியத்தின் தாவர மரபணு சூழல் மாறுதலுக்குள்ளாகும். வேறு வழியே இல்லாமல் மரபணு மாற்ற விதைகளை விற்கும் நிறுவனங்களிடம் போய் நிற்க வேண்டும். அவன் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய விவசாய நிலங்களையும் மோனோபோலியாக ஆட்சி செலுத்துவார்கள். மரபணு மாற்ற தாவரங்களுக்கான விதைகளுக்கும் அந்த நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டும்.

விளைந்ததை விதையாகப் பயன்படுத்த முடியாது. ’பயன்படுத்தவும் கூடாது’ என்கிறது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான India-US knowledge initiative on Agriculture என்ற ஒப்பந்தம். 1,2,3 அணு ஒப்பந்தம் சமயத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்ற அமெரிக்கா தொழில்நுட்ப உதவி செய்யுமாம். இந்தியா இதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்கித் தருமாம். வருடத்துக்கு 350 கோடி ரூபாய். இந்திய மரபை காப்பாற்ற அமெரிக்காவுக்குக் காசு தரும் இந்த அறிவாளிகளை என்ன செய்வது? இந்த ஒப்பந்தம் இம்மியளவும் மாற்றமில்லாமல் அப்படியேதான் இன்னமும் அமுலில் இருக்கிறது. மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சும்மாவேனும் எதிர்ப்புகளை மட்டுப்படுத்தும் தந்திரமாக ‘தற்காலிகத் தடை’ என்கிறார். மரபா, லாபமா என்றால் அவர்கள் லாபத்தின் பக்கமே சாய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேற்சொன்ன இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தில் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் எதிரான மிக மோசமான அம்சங்களும் அடக்கம். பொதுவில் அனைத்துலக சட்டங்களின்படி தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட எந்த ஒரு உயிரினத்துக்கும் தனி சொத்துரிமை கோர முடியாது. இவர்கள் மரபணு மாற்றத்தின் மூலம் சிற்சில மாற்றங்களை விதைகளில் ஏற்படுத்தி அவற்றை தங்களின் அறிவுசார் சொத்துரிமையாக மாற்ற முனைகின்றனர். இதன்மூலம் உயிரினங்களுக்கும் காப்புரிமை பெறத் துடிக்கின்றனர்.

ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் லாபத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முயலும் இந்த லாபவெறிக்கு எதிராக நாம் அனைவரும் எதிர்குரல் எழுப்ப வேண்டும். நமது எதிர்ப்புகளை உழைக்கும் விவசாயிகளுடன் பொருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, மரபின் மைந்தர்களுடன் அல்ல!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் சென்னையில் ம.க.இ.க பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி !!

52


vote-012மத்திய இந்தியாவில் ஆபரேஷன் கிரீன் ஹண்ட் என்ற பெயரில் மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்! – என்பதை தமிழக மக்களிடையே ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் கடந்த இரு மாதங்களாக பிரச்சாரம் செய்து வந்தன. முதற்கட்டமாக பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்கங்கள் நடைபெற்றன. அடுத்து பேருந்துகள், தொடர் வண்டிகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகளில் மக்களிடம் நேரடியாக பிரச்சாரம் செய்யப்பட்டன. மக்களுக்கு இந்தப்பிரச்சினை தெரியவில்லை என்றாலும் தெரிந்த பின்னர் உணர்வுப்பூர்வமாக ஆதரித்தனர். நிதி தந்தனர்.

இந்த பிரச்சார இயக்கத்தின் முத்தாய்ப்பாக கடந்த சனிக்கிழமையன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக சென்னை நகரம் முழுவதும் மக்களிடையே பிரச்சாரம் வீச்சாக நடைபெற்றது. பிரபல எழுத்தாளரும் சமூக சேவகியுமான அருந்ததி ராய் எழுதிய ‘இந்தியாவின் இதயத்தின் மீதான போர்’ என்ற கட்டுரையின் தமிழாக்கம் சிறு வெளியீடாய் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டன. கீரீன் ஹண்ட் தொடர்பான ஆங்கிலக் கட்டுரைகளும் ஒரு நூலாக வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

காட்டு வேட்டையின் அரசியல் விவரங்களை எளிமையாகவும் போர்க்குணத்துடனும் அறிமுகம் செய்யும் துண்டுப் பிரசுரம் இலட்சக் கணக்கில் அச்சிடப்பட்டு மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டன. மேலும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இந்த துண்டுப் பிரசுரம் மொழிமாற்றம் செய்யப்பட்டு மற்ற மொழி மக்களிடத்தில் விநியோகிக்கப்பட்டன. இவையனைத்தும் வினவிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆர் நகர் பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலுமிருந்தும் தோழர்கள், பெண்கள் குழந்தைகள் முதியவர்களை உள்ளிட்டு வந்திருந்தனர். சென்னை நகரம் முழுவதிலுமிருந்தும் அரசியல் ஆர்வலர்களும் பகுதிவாழ் மக்களும் கூட பெருந்திரளாக வந்திருந்தனர். எம்.ஜி.ஆர் நகரின் சந்தைத் தெருவின் கோடியில் போடப்பட்டிருந்த மேடையிலிருந்து முக்கிய சாலையின் சந்திப்பு வரைக்கும் மக்கள் வெள்ளம்தான். தெரு முனையிலிருந்த மதுரை தேவர் ஹோட்டலின் உரிமையாளர் இதைப் பார்த்துவிட்டு இது மதுரை சித்திரைத் திருவிழாதான் என்று ஆச்சரியப்பட்டார். தியாகிகளுக்கு வீரவணக்கம் தெரிவித்து கூட்டம் துவங்கியது. தமிழக பு.ஜ.தொ.மு தலைவர் தோழர் முகுந்தன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

முதலில் பேசிய பெங்களூருவின் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பாலன் கீரின் ஹண்டிற்கு பின்னே உள்ள பல இலட்சம் கோடி பொருளாதாரக் கொள்ளையினை விரிவான ஆதாரங்கள்,புள்ளிவிவரங்களுடன் விளக்கிப் பேசினார். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக எப்படி பழங்குடி மக்களின் வாழ்விடங்கள் பறிபோகின்றன என்பதை உணர்ச்சியுடன் விவரித்தார்.

அடுத்து ஆந்திர புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் தோழர் வரவரராவ் ஆங்கிலத்தில் உரையாற்ற அதை தோழர் மருதையன் மொழிபெயர்த்தார். தோழர் வரவரராவ் தனது உரையில் நக்சல்பரி எழுச்சி, குறிப்பாக அந்த எழுச்சி பழங்குடி மக்களின் பகுதியில் பெற்ற வெற்றிகள், பின்னர் மா.லெ அமைப்பினர் அந்த மக்களிடம் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக ஆற்றிவரும் களப்பணியினை வரலாறாக விவரித்தார். மன்மோகன் சிங், ப.சிதம்பரம் முதலான பன்னாட்டு நிறுவன அடியாட்களின் உதவியோடு மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களுக்கெதிரான போர் நடைபெறுவதையும் விளக்கினார். பழங்குடி மக்கள் மாவோயிஸ்ட்டுகளின் தலைமையில் இந்தப் போரை எதிர்த்து போராடி வருவதையும் புரியவைத்தார்.

இறுதியில் பேசிய ம.க.இ.க பொதுச்செயலர் தோழர் மருதையன் இந்தப்போர் என்பது மறுகாலனியாதிக்கத்தின் அங்கமாக நடைபெறுவதையும் இதை அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் சேர்ந்து எதிர்க்க வேண்டுமெனவும் அறைகூவி முடித்தார். அதன் பின்னர் எழுச்சியூட்டும் கலைநிகழ்ச்சி ம.க.இ.க மையக் கலைக்குழுத் தோழர்களால் நடத்தப்பட்டது. காட்டுவேட்டையை கண்முன்னிறுத்தும் இசைச்சித்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மாலை 6 மணிக்கு துவங்கிய பொதுக்கூட்டம் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் இரவு 10.30மணிக்கு முடிவுற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தின் வீடியோப் பதிவு வினவில் வெளியிடப்படும்.

பொதுக்கூட்டம் முடிவுற்றாலும் இந்தப்பிரச்சார இயக்கம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. காட்டு வேட்டை நிறுத்தப்படும் வரை நமது வேலைகளும் ஓயப்போவதில்லை.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சென்னைவாழ் பதிவர்களே, வாசகர்களே…!!

சொந்த மண்ணில் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் இராணுவ நடவடிக்கை அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஒரு வீச்சான விவாதத்தைக் கிளப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால், மயான அமைதிக்கு இடையில், தனது பலத்தைத் திரட்டிக்கொண்டிருக்கிறது.

– ஷோமா சவுத்ரி, எழுத்தாளர்

உண்மையில், அரசு ஏன் இந்தப் படைகளை ஆதிவாசிகள் மேல் ஏவுகிறது? கனிவளம் நிறைந்த அந்தக் காடுகளைக் காலிசெய்து கொழுத்த தொழிலதிபர்களிடம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே.  அதற்காகத்தான் இந்த ஆயுதப் படைகள் அங்கே ஏராளமாய் குவிக்கப்படுகின்றன.

ஹிமான்சு குமார்,  காந்தியவாதி

இதுவரை அம் மக்களுக்கு (பழங்குடியினர்)  புறக்கணிப்பையும், வன்முறையையும் தவிர வெறெதையும் வழங்காத அரசாங்கம், இப்போது அவர்களிடம் கடைசியாக எஞ்சியிருக்கும் அவர்களது பூமியையும் பிடுங்க விரும்புகின்றது. பழங்குடி மக்கள் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இதுதான்.

– அருந்ததி ராய், சமூக ஆர்வலர்

‘ஆபரேசன் கிரீன் ஹன்ட்’   காடுகளை வேட்டையாடுவது, அவற்றுக்குக் காவலிருக்கும் பழங்குடிகளை வேட்டையாடுவது, அதற்குத் தடையாக இருக்கும் நக்சல்பாரிகளை வேட்டையாடுவது என்ற மூன்று நோக்கங்களையும் உள்ளடக்கியது. இதுவரை ஒரு இலட்சம் பழங்குடி மக்கள் சட்டிஸ்காரிலிருந்து ஆந்திரத்துக்கு விரட்டப்பட்டிருக்கிறார்கள். ஈழத்தின் தமிழின அழிப்புப் போரில்
இலங்கை இராணுவம் கையாண்ட அதே உத்திகளை பழங்குடி மக்களுக்கு எதிராக கையாண்டு வருகிறது மத்திய அரசு. ஆம் நண்பர்களே, மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்பு போர்

இன்று மாலை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் (அசோக் பில்லர் அருகில்) நடக்கவிருக்கும் எமது கூட்டத்திற்கு கண்டிப்பாக வாருங்கள்! போராடும் மக்களுக்கு துணையாய் நில்லுங்கள்!!

தலைமை: அ. முகுந்தன்
தலைவர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு

உரையாற்றுவோர்:

தோழர் எஸ். பாலன்
உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

தோழர் மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

தோழர் வரவரராவ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரப் பிரதேசம்.

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்  புரட்சிகர கலைநிகழ்ச்சி

விவரங்களுக்கு: வினவு – 97100 82506,

vote-012

தொடர்புடைய பதிவுகள்

நாளை – நாட்டைக் காக்கும் நக்சல்பாரிகளின் பொதுக்கூட்டம்! வந்து பாருங்க!!

vote-012

மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்!

சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

பிப்.20 சனிக்கிழமை மாலை 6 மணி
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் (அசோக் பில்லர் அருகில்), சென்னை.

தலைமை: அ. முகுந்தன்
தலைவர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு

உரையாற்றுவோர்:

தோழர் எஸ். பாலன்
உயர்நீதிமன்ற வழக்குரைஞர், பெங்களூரு.

தோழர் மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க., தமிழ்நாடு

தோழர் வரவரராவ்
புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரப் பிரதேசம்.

ம.க.இ.க மையக் கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி

__________________________________________

சென்னை வாழ் பதிவர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் வருக!

விவரங்களுக்கு: வினவு – 97100 82506

__________________________________________

காடு மலைகளின் அடிமடி ஆழத்தில்,
தங்கம்-வைரம்-பாக்சைட்-
செம்பு-இரும்பு-குவார்ட்சைட்டு
நிலக்கரி-பளிங்கு-சுண்ணாம்பு
கனிவளம்-நீர் வளம்-காட்டுவளம் !

எல்லா வளமும் அள்ளி எடுக்குது
டாட்டா, பிர்லா, மிட்டல், ஜிண்டால்
தரகு முதலாளிக் கும்பல்களும்
போஸ்கோ, லபார்க், வேதாந்தா
அன்னிய முதலாளிகளும் !

ஒரு டன் இரும்பு
உலகச் சந்தையில் 10,000 ரூபாய் !
முதலாளிகளுக்கு
அரசு விற்பதோ 27 ரூபாய் !

சின்னஞ் சிறிய ஜார்கண்ட் மாநிலம்
உலகச் சந்தையில் ஏலம் போகுது !
பத்து, நூறு, ஆயிரம் அல்ல,
லட்சம் ஏக்கர் பறிபோகுது !
கார்ப்பரேட் கம்பெனிகள் கொத்தி எடுக்குது !

இந்தியாவின் மானம் காக்க மண் காக்க
போராடும் உழைக்கும் மக்களை,
நக்சல்பாரி புரட்சியாளர்களை
அடக்கி ஒடுக்கவே ‘காட்டுவேட்டை’ !

பழங்குடிக்கெதிராய் ‘காட்டுவேட்டை’
மீனவர்க்கெதிராய் ‘காட்டுவேட்டை’
வேட்டைகள் தொடர அனுமதியோம் !

கிழித்தெறிவோம் ! கிழித்தெறிவோம் !
பன்னாட்டு கம்பெனிகள்,
தரகு முதலாளிகளுடன் போடப்பட்டுள்ள
தேசத்துரோக ஒப்பந்தங்களை
கிழித்தெறிவோம் ! கிழித்தெறிவோம் !

உண்மை என்ன, உண்மை என்ன ?
மண்ணைப்பறிக்கும்
மறுகாலனியத்திற்கு எதிராய்
மாபெரும் போரை மக்கள் நடத்துகிறார்கள் !

மக்களை அடக்கி ஒடுக்கி
மண்ணை விற்குது இந்திய அரசு !
இதுவே ரகசியம் ! இதுவே ரகசியம் !
‘சிதம்பர’ ரகசியம் ! ‘சிதம்பர’ ரகசியம் !

ஒரு லட்சம் இராணுவத்தை
சட்டீஸ்கர்-ஒரிசா-ஜார்கண்டிலும்
தண்டகாரண்யா காடுகளிலும் குவித்து வைத்து
இந்த மண்ணின் பூர்வக் குடிகள் மீதே
இந்திய அரசு போரை நடத்துது !

பழங்குடிகளுக்குத் துணை நிற்போம் !
மறுகாலனியாக்க எதிர்ப்புப் போரில்
நக்சல்பாரிகள் தலைமையில்
அணிவகுப்போம் ! அணிவகுப்போம் !

பகத்சிங் பெயரால், திப்புவின் பெயரால்
மீண்டும் ஒரு சுதந்திரப் போரை
உடனே தொடங்குவோம் ! உடனே தொடங்குவோம் !

நேற்று வரை ‘சல்வாஜீடும்’
இன்று முதல் ‘காட்டுவேட்டை’
700 கிராமங்கள் எரிப்பு,
3 லட்சம் பழங்குடி மக்கள் விரட்டியடிப்பு,
50,000 மக்கள் முகாம் சிறைகளில்.

இனியும் பொறுக்கப் போகிறோ‌மா ?
சும்மா இருக்கப் போகிறோ‌மா ?

vote-012

தொடர்புடைய பதிவுகள்

காதலர் தினக் கொலைகள் !!

14


1. குமரியில் ஒரு கொலை!

vote-012குமரி மாவட்டம் மார்த்தாண்டம், அருமனை அருகேயுள்ள சிதறால் சந்திப்பு பகுதியைச் சேர்ந்த தாஸ், கனகம் தம்பதியினரின் மகள் ஷர்மின்(24வயது) எம்.இ முடித்துவிட்டு நாகர்கோவில் அருகேயுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிகிறார். அதே பகுதியைச்சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஷாஜினை (25) ஷர்மின் காதலித்து வந்தார்.

முதலில் ஷாஜின் எம்.ஃபில். ஆராய்ச்சிப் படிப்பு படித்து வருவதாக கூறியுள்ளார். இதை உண்மையென தனது தோழிகளிடம் ஷர்மின் பகிர்ந்திருக்கிறார். ஆனால் தோழிகளோ ஷாஜின் இப்படித்தான் பலரிடம் பொய் கூறி வருவதாக எச்சரித்தனர். எச்சரிக்கையடைந்த ஷர்மின் படிப்பு சான்றிதழ்களை கொண்டு வருமாறு ஷாஜினைக் கேட்டார். குட்டுடைந்த ஷாஜின் பட்டப்படிப்பு மட்டும் படித்துவிட்டு வேலையின்றி இருப்பதாக கூறினான்.

காதலின் தொடக்கமே பொய்யாக இருப்பதை எண்ணிய ஷர்மின் காதலைத் துண்டித்துவிட்டு ஷாஜினை சந்திப்பதை நிறுத்தினார். தனது தாயிடமும் காதலைக் குறித்தும் அதை முறித்துக் கொண்டது பற்றியும் தெரிவித்துவிட்டு தனக்கு வேறு மாப்பிள்ளை பார்க்குமாறு கேட்டிருக்கிறார். இடையில் ஷாஜின் பெண் கேட்டுச் சென்றிருக்கிறான். ஷர்மினின் தாயார் அது சாத்தியமில்லையென்று மறுத்திருக்கிறார்.

ஆத்திரமடைந்த ஷாஜின் 16.2.10 அன்று காலை ஷர்மின் வீட்டிற்கு அவரது தாயார் இல்லாத நேரத்தில் சென்றிருக்கிறான். சமையலறைக்குள்ளிருந்த அந்தப் பெண்ணை ஆத்திரம் தீரும்வரை அரிவாளால் வெட்டிக் கொன்றான். பின்னர் ரயில் முன் பாய்ந்து சாக முயன்றிருக்கிறான். அந்த முயற்சி நிறைவேறாமல் தலையில் அடிபட்டு இப்போது போலீசின் பாதுகாப்பில் மருத்துவமனையில் உள்ளான். இந்தக் கொலை குறித்த அவனது வாக்குமூலத்தை வைத்து போலீசார் அவனைக் கைது செய்தனர்.

2. சென்னையில் ஒரு தற்கொலை!

சென்னை வில்லிவாக்கம் திருநகரைச் சேர்ந்த சண்முகவர்தினி (வயது 24) கே.கே.நகரிலுள்ள மீனாட்சி பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர். காலையில் பாடம் நடத்திவிட்டு மாலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ மேற்படிப்புக்கும் சென்று வந்தார். இவரது தந்தை செல்லதம்பி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்.

16.2.10 காலையில் கல்லூரிக்கு பேருந்தில் சென்ற போது யாருடனோ செல்பேசியில் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார். கல்லூரி சென்ற பிறகு தனது அறையில் அழுது கொண்டிருந்தவர் காலை 10.30மணிக்கு ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். படுகாயமடைந்த அவரை கல்லூரி ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் இறந்து போனார்.

போலீசின் விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு: சண்முகவர்தினி பி.இ படிக்கும்போது சக மாணவனான ஜெகனை காதலித்துள்ளார். படிப்பு முடிந்த பிறகும் அவர்களது காதல் தொடர்ந்தது. ஆனால் சண்முகவர்தினியின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு வேறு மாப்பிள்ளையும் தேடத்துவங்கினர்.

இது தொடர்பாகத்தான் அவருக்கும் அவரது தந்தைக்கும் செல்பேசியில் கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. பின்னர் தனது காதலன் ஜெகனோடு பேசினார். ஜெகனோ,”பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்யும்படியும், தன்னை மறந்துவிடும்படியும்” கூறியிருக்கிறார். ஒரே நேரத்தில் தந்தையும், காதலனும் பேசிய கருத்துக்களால் மனமுடைந்த சண்முகவர்தினி தனது முடிவை தேடிக்கொண்டார்.

_________________________________________________

இருபத்தி நான்கு வயதில் பூத்துக்குலங்க வேண்டிய இரண்டு மொட்டுக்கள் கருகிவிட்டன – இல்லை கருக்கப்பட்டன. காதலை மறுத்ததற்காக ஷர்மின் கொல்லப்பட்டார். காதல் நிறைவேறாததற்காக சண்முகவர்தினி இறந்து போனார். காதலிக்கவும் உரிமையில்லை, காதலை மறுக்கவும் உரிமையில்லை.

சோர்ந்து போகும் நடுத்தர வயது போலல்லாமல் வாழ்வை தேனியின் சுறுசுறுப்போடு உறிஞ்சும் இருபதுகளின் வயதில் அந்தப் பெண்கள் என்னவெல்லாம் கனவு கண்டிருந்திருப்பார்கள்? அநேக பெண்களுக்கு கிடைக்காத பொறியியல் கல்வி, அதிலும் முதுகலைக் கல்வியைத் தொட்டுவிட்ட அவர்களது மனதில் எதிர்காலம் குறித்த விருப்பம் எப்படியெல்லாம் கருக்கொண்டிருந்திருக்கும்? மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் இளம் ஆசிரியைகளாக கற்பிப்பதின் உற்சாகத்தை கண்டிருப்பவர்கள் ஏன் மரணத்திற்கு பயணித்தார்கள்?

அந்தப்பெண்களைப் பெற்ற தாய்மார்கள், தாங்கள் பாராட்டி சீராட்டி அரும்பாடுபட்டு படிக்கவைத்து ஆளாக்கியவர்கள், இன்று ஆற்றாமை தீராது நினைத்து நினைத்து அழுதுகொண்டிருப்பார்கள். தினசரிகளின் பரபரப்பு சம்பவங்களான அவர்களது மகள்களின் கதைகள் மற்றவர்களுக்கு வேண்டுமானால் பத்தோடு ஒன்றாக இருக்கலாம். படித்து விட்டு சற்றே அனுதாபத்துடன் நினைத்துவிட்டு மறந்து போகும் வழமையாக இருக்கலாம். பெற்ற மனதிற்கோ அது இனி வாழ்நாள் முழுதும் பின்தொடரப்போகும் துயரத்தின் குறியீடாக செதுக்கப் பட்டிருக்கும். அவர்களை என்ன சொல்லி தேற்றுவது?

ஒருவேளை அந்த இரண்டு பேராசிரியைகளும் பெண்ணாகப் பிறந்ததுதான் பெருங்குற்றமா? இல்லை இளம்வயதில் இயல்பாக துளிர்க்கும் காதலை வரித்துக்கொண்டதுதான் குற்றமா? குரோமோசோம்களின் கலப்பையும், ஹார்மோன்களின் விளைவையும் அறிவியலின் விதியென்று புரிந்து கொள்வதா? இல்லை சமூகவியலின் சதியென்று சம்மதிப்பதா? கேவலம் ஒரு பெண்ணுயிர் காதலிப்பதும், காதலிக்க வேண்டாமென்று மறுப்பதும் உயிரைப் பறிக்கக் கூடிய கொலை குற்றங்களா?

நேசத்தை உணர்த்தவேண்டிய காதல் வெறுப்போடு மரணத்தை தழுவவைத்தது என்ன முரண்?

பிப்ரவரி 14 காதலர் தினம். பிப்ரவரி 16 அந்தப் பெண்களின் மரண தினம். இரண்டு நாள் வேறுபட்டாலும் இரண்டையும் காதல்தான் இணைக்கிறது. காதலர் தினம் வருடா வருடம் தனது கொண்டாட்டத்தை அதிகரித்தபடிதான் செல்கிறது. ஆனால் அந்த அதிகரிப்பு காதலின் தன்மையில் ஒரு முதிர்ச்சியையோ, அறிவையோ சார்ந்திருக்கவில்லை. ‘ஜோடி’ ஆஃபர்க்ளில் நவீன பொருட்கள்,  காதலர்கள் சந்திக்கும் பொது இடங்கள், ஊடகங்களின் காதல் நினைவுக் கதைகள், காதல் சினிமா வசனங்கள், காதல் கவிதைகள் என்று காதலின் உலர்ந்து உதிரும் அலங்காரங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளப்படுகிறது.

எங்கு பார்த்தாலும் ஆர்ட்டின் பலூன்கள் அங்காடிகளையும், அலுவலகங்களையும் அழகுபடுத்துகின்றன. அன்பைக் காட்டும் அந்த இதயம் காதலுக்கென்று பரவசம் கொள்ள மட்டுமே நினைவுபடுத்தப்படுகிறது. ஆனால் அந்த அன்பை அடைவதற்கு பல தடைகளைக் கடக்கவேண்டும், போராடவேண்டுமென்ற நடைமுறை அந்த இதயத்தின் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இந்திய சமூகத்தில் காதலிப்பதற்கு என்னென்ன தடைகள், அந்த தடைகளை எப்படிக் கடக்கவேண்டும், கடந்தவர்களின் வீரக்கதைகள் என்றல்லவா இங்கு காதலர்தினம் கடைபிடிக்கப்படவேண்டும்? மாறாக தள்ளுபடி விலையில் விற்கப்படும் புத்தம் புதிய செல்பேசியில் காதல் எஸ்.எம்.எஸ் அனுப்புவதைத்தான் ஊடகங்கள் கற்றுக் கொடுக்கின்றன.

ஷாஜின் அந்தப் பெண் ஷர்மினோடு கொண்டது காதலா இல்லை வன்மமா? தனது கல்வித்தகுதியை ஊதிப்பெருக்கி பொய் சொல்லி காதலித்திருக்கிறான். பொய்யை அறிந்ததும் காதலை இரத்து செய்கிறாள் ஷர்மின். இது இயல்பானதுதானே? தன்னைப் பற்றிய உண்மைகளை மறைக்கும் ஒருவனை அதுவும் காதலுக்காக செய்யும் ஒருவனை எந்தப்பெண் காதலிப்பாள்? தனது உயர்கல்வியின் தகுதிக்கு நிகராக அவனது கல்வியில்லை என்பதற்காகக்கூட ஷர்மின் காதலை துண்டித்திருக்கட்டும். அப்போது கூட அது தவறென்று சொல்ல முடியாதே?

ஷாஜின் போன்ற ஆண்கள் பொய் சொல்லுவது கூடப்பிரச்சினையில்லை. காதல் என்று வரும் போது இருபாலாரும் தனது நல்லெண்ணங்களை மட்டும் வெளிப்படுத்த முயல்வார்கள். தத்தமது குறைகளை, பலவீனங்களை ஆனமட்டும் மறைக்க முனைவார்கள். போகட்டும். ஆனால் ஷாஜின் தன்னை சுதந்திரமான ஆணாகக் கருதிக்கொண்டது போல ஷர்மினை சுதந்திரமான பெண்ணாக அங்கீகரிக்கவில்லை. அவனைப் பொறுத்தவரை அவள் அவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய ஒரு காதல் அடிமை. அவன் அவளைக் காதலிக்கத்தொடங்கியதுமே அவளது சுதந்திரவாழ்க்கை முடிவுக்கு வந்தேயாகவேண்டும். அதைத் தாண்டி அவளுக்கு வாழ்க்கையில்லை.

எப்படி காதலிக்க உரிமையிருக்கிறதோ அப்படி காதலை இரத்து செய்யவும் உரிமையிருக்கிறது என்பது ஆண்களைப் பொறுத்தவரை செல்லுபடியாகாது. அப்படித்தான் அவர்கள் சினிமாவால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். பதறி ஓடும் வெள்ளாட்டை விடாது துரத்தி வீழ்த்தும் வேட்டை நாயின் தந்திரங்கள்தான் தமிழ் சினிமாவின் காதல் பற்றிய பாடங்கள். இதனால் ஒரு பெண்ணிடம் ஜென்டிலாக காதலைத் தெரிவிப்பது நமது இளைஞர்கள் அறியாதது. மாறாக அந்தப்பெண் தன்னைக்காதலித்தே ஆகவேண்டும் என்று குறியாய் அலைவார்கள். இந்தத் தொந்தரவு தாங்காமலே அல்லது தன்னை இவன் இவ்வளவு வெறியாய் காதலிக்கிறானே என்றெண்ணி அந்தப்பெண்களும் அந்த ஆதிக்கக் காதலை அடிபணிந்து ஏற்றுக் கொள்வார்கள். எனில் இது எந்தவகைக் காதல்?

காமம் என்ற உணர்ச்சி மனிதனை உள்ளிட்டு எல்லாவகை விலங்குகளுக்கும் பொதுவானதுதான். காமத்திலிருந்து காதல் என்ற பண்பாடுதான் மனிதனை விலங்குகளிடமிருந்து பிரிக்கிறது. ஒத்த தகுதியுடைய மனிதர்களில் இன்னாரைத் தெரிவு செய்து காதலிப்பது என்பது மனிதன் உருவாக்கிய பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடு. அதே சமயம் தனிப்பட்ட இருவரது காதல் எப்போதும் தனிப்பட்ட விசயமாக மட்டும் இருப்பதில்லை. அது சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளைக் கணக்கில் கொண்டே காரியசாத்தியமாகிறது. ஆனால் இன்னமும் தனிப்பட்ட வாழ்வில் அடிமைத்தனத்தின் பிடிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அவள் தெரிவு செய்வதற்கும் மறுப்பதற்கும் உரிமை பெற்றவளாக இருப்பதில்லை.

பெண்களின் இந்த சமூக அடிமைத்தனத்தைத்தான் ஷாஜின் போன்ற ஆண்கள் கேடாகப் பயன்படுத்துகிறார்கள். தமது வாழ்க்கைத் துணைக்கு சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ அவர்கள் கிஞ்சித்தும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் இத்தகைய ஆண்கள் கூட ஜனநாயகத்தின் வாசனையை தமது சமூக வாழ்க்கையில் நுகர்ந்திருப்பதில்லை. தந்தை மகன் உறவு, ஆசிரயர் மாணவன் உறவு, உற்றார் சாதியினரோடு தனிநபர் உறவு, முதலாளி தொழிலாளி உறவு, மேலதிகாரி ஊழியர் உறவு என எல்லா உறவுகளிலும் அடிமைத்தனத்தை ஒழுகிவாழும் ஒரு ஆண் தனது பெண்ணிடம் மட்டும் சரிசமமாக நடந்து கொள்வானா என்ன?

இப்படி சமூக வாழ்க்கையில் அடிமைத்தனம் ஊடுறுவியிருக்கிறது என்றால் அதை எதிர்த்த போராட்டங்களில்தான் ஒரு மனிதனிடம் ஜனநாயகம் என்பது முகிழ்ந்து வரும். சாதி, மத, வர்க்க ரீதியான இழிவுகளுக்கெதிரான போராட்டங்களில் புடம்போடப்படும் ஒரு மனிதன்தான் தன்னிடம் இருக்கும் கேவலமான ஆணாதிக்கம் என்ற வைரஸை வேரறுக்க முடியும். அதன்றி அவன் சொக்கத்தங்கமாக இருக்கவேண்டுமென்றால் அது கற்பனையில் கூட சாத்தியமில்லை. இந்த விசயத்தை குறிப்பாக பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஷாஜின் தனது முன்னாள் காதலியை ஒரு பண்டமாக, பொருளாக தனக்கு கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய அடிமையாக, தான் மட்டுமே துய்த்துணரவேண்டிய காமச்சதைப் பிண்டமாக கற்பித்துக் கொண்டான். தனது காமவெறியை அல்லது காதலை மட்டும் தரிசிக்கவேண்டிய அந்த உடல் வேறு ஒரு ஆணுக்கு சொந்தமென்று ஆகப்போவதை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை. அந்த அஜீரணம்தான் அவனிடம் வன்மம் கொண்டு வெறியாய் கொலையில் முடிந்திருக்கிறது. ஷர்மினை அடிமையாக கருதிக்கொண்டு காதலித்ததால்தான் அவளை துடிக்க துடிக்க அரிவாளால் வெட்டி அவள் செத்ததை உறுதி செய்யும் நிதானம் அவனிடம் இருந்தது.

ஆனால் மனிதகுலத்தில் சரிபாதியான பெண்கள் அடிமையாக இருக்கும் போது ஆண்கள் மட்டும் சுதந்திரத்தின் வெளியை அனுபவிக்கமுடியாது. அதனால்தான் ஷாஜின் கொலை செய்த கையுடன் தற்கொலைக்கும் முயன்று தோற்றுவிட்டான். இனி ஆயுள்முழுவதும் கழுத்தறுப்பட்ட அந்தப் பேதைப்பெண்ணின் முகம் அவனை அணுஅணுவாய்ச் சித்திரவதை செய்யும். காதல் கற்றுக்கொடுக்காத ஜனநாயகத்தின் வாசனையை அவனது கோரக்கொலை சிறிதாவது கற்றுக்கொடுக்கும். இப்படி தன்னுயிரை பலிகொடுத்துத்தான் பெண்கள் ஆண்களுக்கு சமத்துவத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய அவலமான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம்.

காதலை மறுக்க சுதந்திரமின்றி ஷர்மின் கொல்லப்பட்டார் என்றால் காதலிக்க உரிமையின்றி சண்முகவர்தினி கொல்லப்பட்டார். ஷாஜின் தனது முன்னாள் காதலிக்கு காதலை மறுப்பதற்கு அனுமதி மறுத்தானென்றால் ஜெகன் தனது காதலிக்கு காதலைத் தொடர்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஷாஜின் என்ற நாணயத்தின் இன்னொரு பக்கம்தான் ஜெகன்.

இத்தகைய ஆண்கள் காரியவாதத்தில் மூழ்கி பிரச்சினையற்ற முறையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயல்வார்கள். சண்முகவர்தினியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்றால் அந்த எதிர்ப்பை மீறி மணம் செய்து வாழலாம் என்ற உறுதி இத்தகைய கோழைகளுக்கு இல்லை. காதல் என்றால் குடும்பம், உற்றார், உறவினர், சாதியினரின் எதிர்ப்பை மீறித்தான் நிறைவேற முடியும் என்பது இந்தியாவின் விதி. இதற்கு முகங்கொடுக்காமல் பெற்றோர் அனுமதியுடன்தான் காதலிக்க முடியுமென்றால் இங்கே காதலுக்கு இடமில்லை.

ஜெகன் அந்தப் போராட்டத்திற்கு ஏன் தயாராக இல்லை? அதன் விடை இந்தக்காலத்து படித்த இளைஞர்களின் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் சிக்குண்டிருக்கிறது. பணம் கொடுத்து சுயநிதிக் கல்லூரிகளில் படிப்பதோ, பணமும், சிபாரிசும் கொடுத்து வேலை தேடுவதோ, பணமும், பொன்னும் வாங்கி திருமணம் புரிவதோ, பங்குசந்தையில் சூதாடி சம்பாதிக்கலாம் என முனைவதோ, சுயமுன்னேற்ற நூல்களைப்படித்து ‘அறிவை’ வளர்ப்பதோ, கார்ப்பரேட் சாமியார்களின் துணை கொண்டு உடல்நலத்தையும், தொழிலையும் குறுக்குவழியில் முன்னேற்ற நினைப்பதோ எல்லாம் ஊழலிலும், சுயநலத்திலும் மூழ்கித்தான் இந்தத் தலைமுறை வாழ்க்கையில் கால்பதிக்கிறது.

இந்தக் கால்தடத்தின் வலிமை கொண்டு காதலிக்கும் போது காதலும் அங்கே ஊழல்படுத்தப்படுகிறது. இயல்பான காதல் தடைகளைக்கூட இவர்கள் பொறுப்பதில்லை. இவ்வளவிற்கும் சண்முகவர்தினி பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் நல்ல நிலையில்தான் இருந்தார். ஜெகன் நினைத்திருந்தால் அந்த மணவாழ்க்கை பொருளாதாரச்சிக்கல் இல்லாமலேயே கூட ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அவன் மனதில் என்ன இருந்திருக்கும்? பெற்றோர்கள் தடையால் வரும் சமூக விலக்கத்தின் இழப்பை லாப நட்ட கணக்கு போட்டிருப்பானோ? இல்லை சண்முகவர்தினியை விட அழகான, வசதிபடைத்த பெண்ணை அடையலாம் என்று யோசித்திருப்பானோ? இல்லை தேவையற்ற பிரச்சினைக்குள் சிக்கி மாட்டிக்கொள்ளக்கூடாது என்று பாதுகாப்பாக யோசித்திருப்பானோ? நமக்குத் தெரியவில்லை.

நமக்கு தெரிந்தது ஒன்றுதான். அவன் காதலியின் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய விரும்பவில்லை. அதனால் தன்னை மறந்து விடும்படி சண்முகவர்தினியிடம் முடித்துக் கொண்டான். இத்தகைய வீராதி வீரன் இதுதான் தன்னுடைய நிபந்தனை என்று காதலிப்பதற்கு முன்னரே சொல்லித் தொலைத்திருக்கலாமே? தான் பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாகத்தான் இருப்பேன் என்பதை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக உடைத்திருக்கலாமே? கல்லூரிப்படிப்பின் போது பில்லியனில் உட்கார்வதற்கும், சினிமா பார்ப்பதற்கும், ஒரே கோக்கை இருவரும் குடிப்பதற்கும், கடற்கரையில் கைபிடித்து காலாற நடப்பதற்கு மட்டும்தான் அவனுக்கு சண்முகவர்தினி தேவைப்பட்டிருப்பாள் போலும்.

காதலிப்பது ஜாலிக்காக, கல்யாணம் செட்டிலாவதற்காக என்பதுதானே இன்றைய இளைஞோரின் வாழ்க்கைச் சூத்திரம். ஆனால் சண்முகவர்தினி போன்ற அப்பாவிப் பெண்கள் சிலர் காதலை உண்மையாக பற்றி நடக்கும்போதுதான் பிரச்சினை வருகிறது. அதனால்தான் அவள் இறப்பதற்கு முந்தைய விநாடி வரை தனது தந்தையிடம் விவாதித்திருக்கிறாள். அவளது தந்தை செல்லத்தம்பி எல்லா நடுத்தர வர்க்க தந்தையும் போல ஒரு தந்தை. மகளை உயர்கல்வி படிக்கவைத்து அழகு பார்த்தவர் அவளது காதலை மட்டும் அழகாக பார்க்கவில்லை. அங்கே என்னுடைய உடமை ஒன்று என்னை மீறி வெளியே செல்ல நினைப்பதா என்று அவர் இயல்பாக யோசித்திருக்கலாம்.

எம்.இ படிக்கும் தனது மகளுக்கு அறிவியலின் சிக்கலான சூட்சுமங்களை கற்றறிந்தவளுக்கு வாழ்க்கை குறித்தும் ஒரு சுயேச்சையான கண்ணோட்டம் இருக்கும் என்பதை இந்தத் தந்தைகள் உணர்வதில்லை. அறிவில், கல்வியில் தன்னைக் கடந்து செல்லும் மகளை வாழ்க்கையில்மட்டும் கடந்து செல்வதற்கு அனுமதிப்பதில்லை. ஒருவேளை இப்போது செல்லதம்பி தனது மகளின் தேர்வை அங்கீகரிக்காததன் துயரத்தை விளங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த விளக்கத்தையும் புரிதலையும் அருகே நின்று பார்க்க மகளில்லையே? தனது தந்தைக்கு ஒரு பெண்ணின் வலியை இப்படி ஐந்தாம் மாடியில் குதித்துத்தான் ஒரு மகள் உணர்த்த வேண்டியிருக்கிறது.

தந்தையின் கண்டிப்பான நிராகரிப்பை அடுத்து தனக்கு உள்ள ஒரே ஆதரவான காதலனிடம் பேசிய சண்முவர்தினி அவனும் கைவிட்டு விட்டதைக் கேட்டு மனமுடைந்திருக்கலாம். ஆனால் அவனது காதலின் யோக்கியதையை அவள் புரிந்து கொள்ளவில்லையே? இத்தகைய கோழையை ஏன்தான் காதலித்தோம் என்ற வெறுப்பு அல்லவா அவளிடம் வந்திருக்கவேண்டும். ஒருக்கால் அவள் கண்ட ஆண்களில் அவனே ஆகச்சிறந்தவனாக இருக்கட்டும். ஆனால் அந்த ஆகச்சிறந்தவனிடம் இருக்கவேண்டிய குறைந்தபட்ச உறுதி, காதல் மீதான நம்பிக்கை அவனிடம் இல்லையே?

இங்குதான் பெண்களும் தங்களது உண்மையான சுதந்திரமான காதல் தெரிவை கொண்டிருப்பதில்லை. அவர்களும் கூட அடிமை நிலையிலிருந்துதான் காதலையும் காதல் குறித்த பிரச்சினைகளையும் பார்க்கிறார்கள். அடிமை மனதிலிருந்து உதிக்கும் காதல், அது சாத்தியமில்லை என்றாகும் போது தனது வாழ்க்கையையும் முடித்துக் கொள்கிறது. இதனால் சண்முகவர்தினியின் மனப்போராட்டத்தை நாம் கொச்சைப்படுத்தவில்லை. தந்தையும், காதலனும் ஒருசேர கைவிரித்ததும், அதை எந்தப் பெண்ணும் எதிர்கொள்ள இயலாது என்ற உண்மையும் புரியாமல் இல்லை.

ஆனால் தனது காதலின் தகுதி இதுதான் என்று புரிந்து கொள்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பில்லையா? இவனையா இத்தனை நாள் உயிருக்குயிராய் காதலித்தோம் என்று ஒரு குற்ற உணர்வும், அந்தக் குற்ற உணர்விலிருந்து தான் உருவாக்கிய காதல் நினைவுகளிலிருந்து மெல்ல மெல்ல குறிப்பிட்ட காலம் கடந்து மீண்டிருக்கலாமே? வாழ்வின் இக்கட்டான தருணங்களில்தான் நாம் கொண்டிருக்கும் உறவுகளின் உண்மை முகத்தை அறிய நேரிடுகிறது. சமாதானக் காலங்களில் இனிய இசையாக நெஞ்சை வருடும் அதன் ராகங்களில் நாம் மனதை பறிகொடுத்திருக்கலாம். அதனால் போர்க்காலங்களில் அதே இசையை எதிர்பார்த்து கிட்டாத போது கடும் ஏமாற்றமாகத்தான் இருக்கும். என்றாலும் அந்த ஏமாற்றம் நமக்கு மனிதர்களின் உண்மை நிலையை நேருக்குநேர் காட்டிவிடுகிறது.

அது எந்த உறவாக இருந்தாலும் அதன் தராதரம் எத்தகையதாக இருந்தாலும் அதன்பால் நாம் கொண்டிருக்கும் அன்பு என்பது அத்தனை சீக்கிரம் மறைந்து விடாதுதான். ஆனால் பொது நலன், சமூக அக்கறை, சுயநலமின்மை முதலான அளவுகோல்களை குறைந்த பட்சமாகவேனும் நாம் நமது உறவுகளை மதிப்பிடுவதற்கு முயலவேண்டாமா? ஒருவனது சுயநலத்தின் எல்லை எது என்பது பொதுநலனோடு அவன் முரண்படுவதில்தான் வெளிப்படும். சராசரி வாழ்க்கையில் உள்ளோருக்கு இந்த ஆய்வுமுறைகள் எதற்கு என்று உங்களில் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் வாழ்க்கை எப்போதும் அதுபாட்டுக்கு சராசரியாகவே போய்விடாது. மேடுகளும், பள்ளங்களும், திடுக்கிடும் திருப்பங்களும் கொண்டதுதான் வாழ்க்கை. அதில் சுமூகமாக பயணிக்கவேண்டுமென்றால் அடிப்படையில் நாம் ஒரு போராட்டக்காரராகத்தான் இருந்தாக வேண்டும்.

பொறியியலில் உயர்கல்வியெல்லாம் படித்து வந்த சண்முகவர்தினி வாழ்க்கை கல்வியில் படிப்பறிவற்ற பெண்களுக்கு இருக்கும் போராட்ட மனதினைக் கொண்டிருக்கவில்லை. ஏழை எளிய பெண்களைப் பொறுத்தவரை வாழ்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்காக சமூகத்துடன் கொண்டிருக்கும் அவர்களது உறவு அந்த குணத்தை பெற்றுத்தருகிறது. நடுத்தவர்க்க பெண்களுக்கு அது அமைவதில்லை. அதனாலேயே அவர்கள் தங்களுக்குள் புழுங்கிச் சாகிறார்கள். அந்த புழுக்கம் அளவை மீறும்போது வெடிக்கிறது. சிலசமயம் முடித்துக் கொள்ளவும் செய்கிறது.

காதலர் தினத்தின் கொண்டாட்டங்களில் மற்றவர்கள் ஈடுபட்டிருக்கும்போது சண்முகவர்தினி மட்டும் நிறைவேற முடியாத தனது காதலை நினைத்து மனம் வெம்பியிருக்கலாம். இறுதி வரை தனது காதலை சாத்தியமாக்குவதற்கு அவள் தன்னளவில் தீவிரமாகத்தான் போராடியிருக்கிறாள். ஆனால் அந்தப் போராட்டத்திற்கு அவளோடு இருந்து உதவுதற்கு யாரும் இல்லை. நிர்க்கதியான நேரத்தில் அனாதையாக்கப்பட்ட அவளது மனம் என்னவெல்லாம் கொந்தளித்திருக்கும் என்பது வார்த்தையால் விவரிக்க முடியாதது.

அவளது மரணம் திட்டமிடப்பட்டதல்ல. அப்படி இருந்திருந்தால் தற்கொலை செய்வோர் வழக்கமாக செய்யும் முறைகளில் அவள் போயிருக்கக் கூடும். ஐந்தாவது மாடியில் இருந்து கபாலம் வெடித்துச் சிதறும் கொடூரமான முறையை நாம் கற்பனையில் கூட தாங்கிக் கொள்ளமுடியாது. அவள் கணநேரத்தில் அதை முடிவு செய்து துணிச்சலாகக் குதித்துவிட்டு முடித்துவிட்டாள்.

நான் வசிக்கும் சமூகத்தில், நாட்டில் இரண்டு பெண்கள் அநியாயமாக இறந்து போனதை இந்த இரண்டு நாட்களில் பலவிதங்களிலும் யோசித்துப் பார்த்து விட்டேன். மரணத்தை அவர்கள் எதிர்கொண்ட அந்த கடைசித் தருணங்களை நான் அசைபோட்டபோது என்னிடம் அதை எதிர்கொள்வதற்கு எந்த ஆயுதங்களும் இல்லை. அரிவாளால் அறுக்கப்பட்ட கழுத்து, தரையில் மோதித் தெறித்த தலை இரண்டும் என்னை மங்கலான தோற்றத்தில் தொடர்ந்து சித்திரவதை செய்கின்றன. அந்த தோற்றத்தில் இரண்டு ஜோடிக் கண்களின் வலிமையான பார்வை குத்தீட்டியாக துளைப்பதை கண்ணீருடன் ஏற்றுக் கொள்கிறேன். அந்த எளிய, புத்துணர்ச்சியூட்டும் கண்களை காப்பற்ற வக்கில்லாத இந்த சமூகத்தின் உறுப்பினர் என்ற முறையில் நாணிக் குறுகுகிறேன்.

_________________________________________________

வினவில் விமரிசனம் மட்டுமே எழுதுகிறீர்கள், தீர்வு குறித்து எதுவும் சொல்வதில்லை என பல நண்பர்கள் கருதுகிறார்கள். இந்தப்பிரச்சினைக்கு என்ன தீர்வு சொல்லமுடியும்?

வினவை படிக்கும் நண்பர்கள் இத்தகைய காதல்பிரச்சினைகளில் சிக்குண்டிருந்தால் விபரீதமான முடிவை தேடாதீர்கள். எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் காதலை போராடி நிறைவேற்றுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம். இது எங்களுக்கு சுமையல்ல. வேறு என்ன சொல்ல?

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பயங்கரவாதி: மன்மோகனிஸ்ட்டா? மாவோயிஸ்ட்டா!

10

vote-012“பாக்சைட்டுக்காக”
பழங்குடி மக்களின் கழுத்தை அறுக்கும்
ப.சிதம்பரம் சொல்கிறார்,
நக்சலைட்டுகளால் நாட்டுக்கு ஆபத்தாம்!

தாதுக்கிழங்கைச் சூறையாட
வெறிகொண்டு பாயும் ஓநாய் கம்பெனி “வேதாந்தாவோடு”
சூதுசெய்யும் காங்கிரசு பன்றிகளைப் பார்த்து
நடுங்குகிறது நியாம்கிரி மலை…
பசுந்தளிர்களின் குரல்வளையை மிதிக்கும்
இந்திய இராணுவ பூட்சுகளின்
பன்னாட்டுக் கம்பெனி பற்களைப் பார்த்து
அலறுகிறது தண்டகாரண்யா…

எப்படிப் பிறந்தான்
எனும் சிக்கலே இன்னும் தீராத
செப்படி ராமனுக்கு நம்பிக்கை அடிப்படையில்
பிறப்பிடம் அயோத்தியென
உரிமை வழங்கி அதற்கு ஊறு நேராதவாறு
உத்திரவு வழங்கும் நீதிமன்றம்,
நிறைந்துள்ள நாட்டில்,
கானகத்து அரும்பிலும்
காட்டுமர நரம்பிலும்
காட்டுப்பூச்சிகள் தீண்டிய தழும்பிலும்
மலைப்பொருட்களின் தாதிலும்
வரலாறாய் கலந்திருக்கும்
பழங்குடி மக்களுக்கு காடு சொந்தமில்லையாம்!

இப்படி பேசுபவனுக்கு
இனி நாடு சொந்தமில்லையென
எழுந்துவிட்டது டோங்கிரி!
மண்ணை விட்டால் தன்னை விட்டதாய்
கருதும் அந்த பழங்குடி
காடும் மலையும் கூட இனி
இந்திய  ஆளும் வர்க்கத்திற்கு பதிலடி!

பழங்குடி மக்களின் கண்களில்
பத்திரமாக இருக்கிறது மலை..
அவர்களின் தாலாட்டில்
வேரோடியிருக்கிறது காடு…

பறக்கும் வண்-ணத்துப்பூச்சிகளின் சிறகிலும்
துளிர்க்கும் பச்சிலைகளின் நுனி நாக்கிலும்
படிந்திருக்கிறது அவர்கள் மொழி….

கடும் பாறைகள் அவர் மார்புகள்..
கரும் மரக்கிளைகள் தலைமுறைக் கைகள்…
அடர்ந்த காடும், நிமிர்ந்த மலைகளும்
பழங்குடி மக்களின் பரம்பரை உணர்ச்சிகள்.
அவர்கள்,
பேசும் காடுகள், நகரும் மலைகள்
உதடுகள் கொடுத்து
காட்டு மூங்கிலை பேச வைத்தவர்கள்…
உணர்ச்சிகள் கொடுத்து
மலை, நீர்ச்சுனைகளை வாழ வைத்தவர்கள்…

பால்வடியும் தம் பிள்ளைகளோடு
பனிவடியும் செடி, கொடிகளுக்கும்
பெயர் வைத்து அழைத்தவர்கள்…
தயங்கும் ஓடைகளை அழைத்துவந்து
தாவரங்களோடு பழக வைத்தவர்கள்…
கிழங்கு, கனிகள், பச்சிலைகள் என
காடு, மலைகளின் இயற்கை பெருமிதத்தை
தங்கள் இரத்தத்தில் அறிந்தவர்கள்….

இயற்கை உரிமையுள்ள
இந்த எண்ணிறந்த மக்களை
ஒரு அந்நியக் கம்பெனியின் இலாபவெறிக்காக
அவர்கள் பெற்றெடுத்த மண்ணை விட்டே
அவர்களை அடித்து துரத்தும்
ஆபத்தான பயங்கரவாதி யார்?

மன்மோகனிஸ்ட்டா?
மாவோயிஸ்ட்டா!

ஒன்பது டஜன் சோடாபாட்டிலை
சைக்கிளில் கட்டிக் கொண்டு,
எதிர்காற்றை முறித்து
மிதிவண்டி அழுத்துகையில்
பாட்டிலில் கலந்த காற்று
நெஞ்சக் கூட்டில் வந்து வெடிக்கும்
கமறும் இரத்தத்தை
எச்சிலாய் காறித்துப்பி மேட்டினில் ஏறி
ஒற்றை மனிதர்களாய்
உள்ளூர் சந்தையை உருவாக்கிய தொழிலாளர் தலையில்
ஒரே நாளில்
கோக் பெப்சியை
டன் கணக்கில் இறக்கவிட்டு
சிறுதொழில் முகத்தையே சிதைத்த
படுபயங்கரவாதி யார்?

இந்த நாடுமாறி அரசா?
இல்லை நக்சலைட்டா!

நீங்கள் கஞ்சிச் சட்டை போட
தன் நெஞ்சுக் கட்டை தேய
கைத்தறியை இழுத்து, இழுத்து அடிக்கும் கைகள்,
தலைமுறையாய் தறியாடி
இடுப்பெலும்பு கழலும்
தறிநூலாய் தொண்டை நரம்புகள்
அசைந்து அசைந்து வெறும்வயிற்றில்
உயிர் உழலும்
நசுங்கிய சொம்புத் தண்ணி
அவ்வப்போது நாவுக்கு பசைபோடும்…

பசியின் நெசவு வெறுங்குடல் பின்னும்
படாதபாடுபட்டு கைத்தறியை நூலாக்கி
சுயதொழில், சுயமரியாதையுணர்வோடு வாழ்ந்த நெசவாளர்களின்
கைத்தறி ரகங்களை பிடுங்கி விசைத்தறிக்குக் கொடுத்து
அன்னிய மூலதனத்தால் தறிக்கட்டைகளை உடைத்து
கைத்தறிக்கான பஞ்சை கட்டாய ஏற்றுமதி செய்து
மானங்காத்த நெசவாளிகள் கடனை அடைக்க
தன் உடலை விற்கும்படி
உருத்தெறியாமல் சிதைத்த இரக்கமற்ற  பயங்கரவாதி யார்?

இந்த நாடாளுமன்ற சாடிஸ்ட்டுகளா?
நக்சலைட்டுகளா!

கண்தோல் காய்ந்தாலும்
மண்தோல் காயாமல்
மடைபார்ப்பான் விவசாயி.

பிள்ளை முகத்தில் கட்டிவந்தாலும்
பெரிதாக அலட்டாமல்
சுண்ணாம்பை தடவிவிட்டு…
நெல்லின் முகத்தில் ஒரு கீறல் எனில்
வட்டிக்கு கடன் வாங்கி
வைப்பான் அடி உரம்

வரப்பின் சேற்றில் பல் துலக்கி
மடையின் நீரில் முகம் கழுவி
வயல் நண்டில் உடல் வலி போக்கி
கதிரின் வாசத்தில் உயிர்வலி போக்கி
களத்து மேட்டில் நெல்லைத் தூற்றும்
உழைப்பின் வேகத்தில் தூரப் போய்விழும் சூரியன்.

அவரை, மொச்சை, துவரை
ஊடுபயிரோடு
அத்தை, மாமன், தமக்கை உறவும்
வளர்ந்து நிற்கும்.

பால்மாடு, வண்டிமாடு
பசுந்தழை மேயும் ஆடு,
அறுவடைக்காலத்தில் தன்பங்கையும் சேமித்து
மாட்டுக் கொட்டகைக்குள் மகிழ்ந்திருக்கும் குருவிக்கூடு

இப்படி ஒட்டுமொத்த உயிர்ப்பு பொருளாதாரமாய் விளங்கிய
வளங்களை நீரின்றி, விலையின்றி திட்டமிட்டு அழித்து
சிறப்பு பொருளாதாரமண்டலமென சீரழித்து வளைத்து
ஏர்முனை ஒடித்து, கால்நடை அழித்து
நாடோடிகளாக விவசாயிகளை துரத்தி;
நகரத்து உழைப்பில் இரத்தம் குடிக்கும்
பச்சை பயங்கரவாதி யார்?

இந்த தேசத்துரோக ஆட்சியாளர்களா?
தேசப்பற்றுள்ள நக்சலைட்டுகளா!

கடும்பனிக்கு அஞ்சி
சூரியனே தலைமறைவாய் கிடக்கும்
கம்பளிப் பூச்சியும் நகர்ந்து இலை மறைவாய்ப் படுக்கும்.

சிறுகடை வியாபாரி கைகளோ போய் வேகமாய்
பஜாஜ் எம்.எய்.டியை எடுக்கும்…
கோயம்பேடு சரக்கை குந்த இடமின்றி அடுக்கும்
வந்த காய்கறியை குடும்பமே வகை பிரிக்கும்

நடுத்தர வர்க்கத்தின் நாக்கு விழிக்கும் முன்னே
பால் கவர் போட்டு,
அடுத்த வேலையாய் தண்ணீர் கேன் போட்டு
அடுத்தடுத்த குரலுக்கு அளந்து போட்டு
திரிந்த பாலுக்கும் குழைந்த அரிசிக்கும்
எரிந்து விழும் பார்வையை ஆற்றுப்படுத்தி, மாற்றிக் கொடுத்து
மெல்ல மெல்ல சில்லறை வணிகச் சந்தையை
தன் கையால் காலால் கட்டி எழுப்பிய வியாபாரிகளை
ஒரே போடில் தலைவேறு, முண்டம் வேறாய்,
சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தையும்
ரிலையன்ஸ் டாடா வணிக மிருகங்களையும்
உலவவிட்டு
சிறுகடை வியாபாரிகளை கடை கடையாய் வேட்டையாடிய
கண்மூடித்தனமான பயங்கரவாதி யார்?

இந்தக் கயவாளி அரசா?
மக்களை காக்கத் துடிக்கும் நக்சலைட்டா!

ஹூண்டாய் கார் போகும் சாலையில்
குடிசைகளின் நிழல் விழுந்தால் கறையாகுதாம்,
மேட்டுக் குடிகள் மிதக்கவிட்ட கூவம்
ஒட்டுக் குடிகளின் மூச்சுபட்டு அழுக்காகுதாம்
சிங்காரச் சென்னையின் அழகுக்காக
அடிக்கடி தீக்குளிக்கின்றன குடிசைகள்.

பற்றவைக்கும் பயங்கரவாதி யார்?

உள்நாட்டு தொழிலாளர்க்கோ
உயிர் வாழும் உரிமையில்லை
அன்னிய பன்னாட்டு கம்பெனிகளுக்கோ
உன்னை சாகடிக்கவும் சலுகைகள்..

போர்டுக்கு, ஹூண்டாய்க்கு முன்னே போராடினால்
அடித்துத் துவைக்க அதிரடிப்படையை அனுப்பிடும்
அந்த பயங்கரவாதி யார்?

வெள்ளைக்காரன், வெளிநாட்டு கம்பெனியை
விரட்டத்தானே சுதந்திரபோராட்டம் நடத்தியதாய்
சொல்கிறீர்கள்?
பின்னே ஏன் இத்தனை வெளிநாட்டுக் கம்பெனிகளை
இழுத்து வருகிறீர்கள் இப்போது
சுரண்டும் வர்க்கத்தை அழைத்து வருவதற்கு
சுதந்திர போராட்டம் நடத்தியது எதற்கு?
கேட்டுப் பாருங்கள்..
பயங்கரவாதிகளுக்கு பதில் சொல்லிப் பழக்கமில்லை…
படையோடு வருகிறார்கள்.
சத்தீஸ்கர், ஒரிசாவிற்கு ஒரு லட்சம் ராணுவம்…
சற்றே காத்திருங்கள் நாடு முழுக்க முப்படையும்…

பல்லைக் கடித்துக் கொண்டு, பழஞ்சட்டை போட்டுக் கொண்டு
பயங்கர முகபாவத்துடன், கொலைவெறிப் பார்வையுடன்
பயங்கரவாதி இருப்பானென்று கற்பனை செய்தால்
நீங்கள் ஏமாந்து போவீர்கள்

அதோ பாருங்கள்…
பளிச்சென வெண்ணிற உடை…
பார்த்ததும் புன்முறுவல்..
கொலைக்குறிப்புகள் தெரியாத
குளிரூட்டும் பார்வை…
கண்ணக் கதுப்பில் வழியும்
காதிகிராப்ட் காந்திய வெண்ணெய்
தளுக்கான பேச்சில் வழுக்கும் உதடுகள்….
தாய்நாட்டுப் பற்றுக்காகவே வாழ்வது போல
தயங்காமல் பேசும் தோரணை…

இவைகள்தான்… இவைகள்தான்…
உண்மையான பயங்கரவாதியின்
மென்மையான அடையாளங்கள்

இன்னும் குழப்பமா
எதற்கு இத்தனை அடையாளம்
பழுத்த, கனிந்த, தேசவிரோத பயங்கரவாதியை
நீங்கள் பார்க்க வேண்டுமா?

அதோ.. ப.சிதம்பரத்தைப் பாருங்கள்!

தாயின் மார்பை அறுத்து
பிஞ்சுக் குழந்தையின் விரலை ஒடித்து
பழங்குடிப் பெண்களின் உடலைக் குதறி

அந்நிய பன்னாட்டுக் கம்பெனிகள் காசு பார்க்க
தன் அடிமைப் பிழைப்பில் ருசி பார்க்க
தாய்மண்ணின் தாதுக்களையே வெட்டிக் கொடுக்கும்
கேடுகெட்ட, கீழ்த்தரமான, தேசத்துரோக பயங்கரவாதி
ப.சிதம்பரத்தை அதோ பாருங்கள்..

– துரை.சண்முகம்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

காடுகளைக் காப்பாற்ற நிலம் அதிராதோ.. உறக்கம் கலையாதோ?

68

vote-012அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஒரு தேநீர்க் கடை. தொண்டையை நனைக்கவும், பேசியும் ஊதியும் உலர்த்தவும் விரும்பும் நண்பர்கள் கேண்டீனை விட்டு அங்கு செல்வது வழக்கம்.  அன்று தேநீர்க்கடையில் சில நண்பர்கள் வேலை நிலைமைகள், ஊதியக் குழு, வருமானவரி என்ற அவர்களின் உலகப் பிரச்சினைகளை அலசிக்கொண்டிருந்தனர்.  ”அம்மாவப் பொட்டியால அடிச்சிட்டு மேலப் போயிட்டான்..யா சிதம்பரம், நல்லவேள அவனை நிதியமைச்சராக்குல, உள்துறை அமைச்சருன்னு உக்கார வச்சுட்டாங்க, நாம பொழச்சோம் ..” என்ற அவர்கள் பேச்சின் இடையில் ஒரு சந்து கிடைத்தது, நானும் சற்று உள் நுழைந்தேன்.

என்னங்க அப்படி சொல்லிட்டீங்க.. என்று நான் ஆரம்பிப்பதற்குள், ”அதுக்கில்லீங்க, பிரணாப் முகர்ஜி பெங்கால்காரன்; காங்கிரஸ்காரனா இருந்தாலும், பெங்கால் ரத்தமில்ல, அவங்கள்ளாம் ஒரு டைப்பு, ஏதாச்சும் நாலு நல்லது செய்யிலன்னாலும் கெடுக்க மாட்டாங்கள்ள”, என்று தன் அபிப்ராயத்தைச் சொன்னார் நண்பர்.  அபிப்பிராயங்களுக்கு எல்லாம் அடிப்படை தேவையா என்ன? சிறு மாற்றமும், அதைத் தொடர்ந்து வழக்கமான ஒரு எதிர்பார்ப்பும் போதாது?  பேச விரும்பும் விசயத்தில் இருந்து விலக வேண்டாம் என்று ஒரு புன்னகையில் அந்த அபிப்பிராயத்தைப் புதைத்தேன்.  “ நான் அதுக்கு சொல்ல வரலீங்க, சிதம்பரம் என்ன சாதாரண ஆளா, இல்ல, உள்துறைன்னா என்ன சும்மாவா?…” எனக் கேட்டு முடிப்பதற்குள் “நரி வலம் போனா என்ன, இடம் போனா என்னங்க, நம்பள விழுந்து புடுங்காம இருந்தா சரி”  என்றார் நண்பர். மற்றவர்களும் புன்னகைத்தனர். தொடர்ந்து.. ”போனாலும் போனான், நல்லா செருப்படி பட்டான். நம்மளாலதான் அடிக்க முடியல, சர்தார்ஜீல்ல.. சந்தோசமா இருந்தீச்சு” என்றார் அவர்.

நாங்கள் எல்லோரும் நகைக்க, சிறு மௌனத்திற்குப் பின் விசயத்துக்கு வரலாம் என்று, ”சரி, இந்த காட்டு வேட்டை பற்றி என்ன நினைக்கிறீங்க”, என்று கேட்டேன்.  அது என்னது காட்டுவேடை என்றார் ஒருவர். மற்றவர்களுக்கும் பிடிபடவில்லை என்று அவர்கள் முகம் காட்டியது.  சற்று புரியும்படி சொல்லுவோமே என்று நினைத்து, அதாங்க, ”ஆப்பரேஷன் க்ரீன் ஹண்ட்”  என்றேன்.  ஒருவருக்குப் பொரிதட்டிவிட்டது. பக்கத்தில் இருந்த சுடக்குடிக்கி நண்பர், ”என்ன, சினிமாவா, இல்ல டிஸ்கவரி சானல்ல வர்ர விசயமா?” என்றார்.   விசயம் விட்டு விசயம் தாவுவதும், ஜாலியாகப் பேசுவதும் இத்தகையவர்களிடம் சகஜம்தான்.  ஆனாலும் நல்ல நண்பர்கள், இந்த நாட்டின் பரந்துபட்ட படித்தவர்கள்.

”இல்லைங்க, நம்ப அரசாங்கத்துல புதுசா டிஸ்கவர் பண்ணியிருக்காங்க. அதுக்குப் பொருத்தமான டைரக்டர் தேவையா இருந்துச்சு. அதுக்காகத்தான் சிதம்பரத்தை அங்க போட்டிருக்காங்க”  என்று நகைச்சுவையாகச் சொன்னேன்.  ஆனால், அவர்களுக்குப் புரியவில்லை.  ஏண்டா இந்த ஆளு வர்த்தகம், நிதியை எல்லாம் விட்டுட்டு உள்துறைக்குப் போனார்ன்னு எனக்கும்கூடத்தான் ஆரம்பத்தில் புரியவில்லை.  பின்னர்தான், கலைஞரின் ஆத்ம நண்பர், பாராளுமன்றத்திலேயே குரளோவியம் தீட்டியவர், அதன் எஜமானர்களான வேதாந்தா, டாடாக்களின் காதில் “இதனை இதனால் இவன்முடிப்பன் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்”  என்ற தந்திரோபாயத்தை கிசுகிசுத்திருக்க மாட்டாரா? அவர்கள் அதைப் புரிந்துகொண்டு சிங்கு சோனியாக்களுக்கு ஆணையிட்டிருக்க மாட்டார்களா? அக்கணமே அந்த அமைச்சர் பதவிக்கான தேர்தலே முடிந்திருக்காதா என்றெல்லாம் ரிஷிமூலம் தொட்டு புரிய ஆரம்பிப்பதுபோல் இருந்தது.

”எல்லாம் காரணம் கருதித்தாங்க அவர அங்க உக்கார வச்சிருக்காங்க; ஏதோ ஒதுக்கி வச்சிடல…. ஆதிவாசி மக்களை மிருகத்தனமாகவும், ஜனநாயக வாதிகளை இண்டலெக்சுவலாகவும், மீடியா மழுமட்டைகளை பாமர லாஜிக்கிலும் சந்திக்கப் பொருத்தமான ஆள் அந்த நாற்காலிக்குத் தேவையாய் இருந்தது.. அவர்தான் அந்த சிதம்பரம்,  அதுதான் அந்த காட்டு வேட்டைங்கிற ஆப்பரேஷன் க்ரீன் ஹண்ட்”  என்ற விசயத்தை சொன்னேன். அப்போது, அதுபற்றி சற்று புரிந்து வைத்திருந்த நண்பர், “அது நக்சலைட்டு தீவிரவாதிகளை ஒழிக்கிறதுக்குன்னுல்ல சொல்றாங்க. நீங்க என்ன வித்தியாசமா சொல்றீங்க” என்று கேட்டார்.

அவர்கள் அகராதியில், அல்லது அவர்களுக்குக் கற்பிக்கப்பட்ட அகராதியில், நக்சலைட், தீவிரவாதி என்ற சொற்களுக்குத் தனித்தனியே பொருள் ஏதும் கிடையாது.  அது, அந்த சொற்களைத் தாங்கியவர்கள், தாங்கியவர்களாய் சொல்லப்படுபவர்கள் மீது எழுதப்பட்ட தீர்ப்பு மாதிரி.  தீர்ப்பை விமர்சிப்பதும், எதிர்ப்பதும் கண்டெம்ட் ஆஃப் கோர்ட் இல்லையா, அதைக் கற்பனையும் செய்யலாமா?  அவர்களிடம் என்ன சொல்வது.. “ஆமாங்க அப்படித்தான் சொல்லிக்கிறாங்க.  ஆனால் அது அவங்க மாதிரியே, அவங்க பேசுற அரை உண்மை, பொய்யை விட அபாயகரமானது” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில், ”அப்ப நக்சலைட் எல்லாம் நல்லவங்கன்னு சொல்றீங்களா?” என்று மறித்தார் நண்பர்.  இந்த ஆப்ஜெக்டிவ் டைப் கேள்வியை எல்லாம் ஈசியாக டிக் அடித்துவிடலாம்.  ஆனால், அது சப்ஜெக்டிவாக அவர்களுக்குள் பதிந்து இருக்கும் ஒரு கருத்தை அசைக்க வேண்டுமே, சொல்லுவது அவர்கள் சிந்தைக்குத் தடையின்றிப் போய்ச் சேரவேண்டுமே.  “ஆமாம். நல்லவங்க தான்.. இருந்தாலும் நீங்க உடனே ஒரு கருத்துக்கு வரவேண்டியதில்லை, நடப்புகளை நிதானமாக ஆலோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தா நல்லது”  என்று மேலே சொல்லத் தொடர்ந்தேன்.

சரி, அவர்களிடம் எதைச் சொல்ல, எப்படிச் சொல்ல?

பசுமையாய் அடர்ந்து நிற்கும் காடுகளான அந்த கற்பக தருக்களை வேரறுத்து;
தாம் உள்ளளவும் தம் உயிர்களின் மூச்சாய், உயிர் நீராய், வளம்பலவாய் வாரி வழங்கிவரும்
மக்களின் உண்மையான அந்த காமதேனுவின் மடியறுத்துப் பால் குடிக்க
வெறிகொண்டு அலைகிறார்கள் நவயுக மைதாஸ்களான
பல பன்னாட்டு, இன்னாட்டு தொழில் முதலைகள்.
அவர்கள் தொடுவதெல்லாம் பணமாக வேண்டும், அதற்காக மனிதம் பிணமாக வேண்டும்.
ஆமாம், அய்யா சொன்னா சரிதான்.  அதுதான் வளர்ச்சி.

சீன நாகம் தோற்க வேண்டும், சிங்கநாதம் கேட்கவேண்டும்.  மூலதனத்தை ஈர்த்தாக வேண்டும். அன்னியச் செலாவணியை மலையாய்க் குவித்தாக வேண்டும்.
அதற்குப் பத்து சதவீத வளர்ச்சியை நாம் எட்டிப் பிடித்தாகவேண்டும்.
எனவே, அப்பசுவின் மடியை அறுத்தாக வேண்டும்.  இந்தா பிடி அரிவாளை
என்று தூக்கிக் கொடுக்கிறார்கள், பி.ஜே.பி., காங்கிரஸ் என பேதமில்லாது
எல்லா ‘அரசியல்’ கட்சிகளும்..

ஐந்தாண்டுகளாய் இந்த அமைதிப்படை – சல்வா ஜுடூம் (peace march) –  என்ன ஆமைவேகத்தில் நடைபோடுகிறது? வெறும் 700 ஆதிவாசி கிராமங்களைத்தான் சுட்டுப் பொசுக்கி சுடுகாடாக்கி இருக்கிறார்கள்.

வளர்ச்சியின் வேகம் போதாது.  விழுந்து பிடுங்க வேண்டாமா .. இதோ, வேட்டை நாய்கள், கருநாகங்கள் என இந்திய இராணுவத்திற்கு உரிய பெயர் சூட்டி இறக்கிவிட்டிருக்கிறார்கள், காட்டு வேட்டைக்கு.  இயற்கை அன்னையின் மடியில் தவழும் குழந்தைகளையும், அவள் கருவையும் சேர்த்து அறுத்தெரிவதற்கு.
அவள் மடியறுக்கத் துணிந்தவர்களின் ஏவல் நாய்கள்,
அந்த முதிய அன்னையின் மார்பகங்களை அறுத்து ஊன் குடித்தார்கள்.
வளர்ச்சிப் பார்வை கொண்டவர்களின் அடியாட்கள்,

பார்வை மங்கிய எழுபது வயது முதியவரை அவர் படுக்கையிலேயே குத்திக் கிடத்தினார்கள்.
அந்த மரங்களை விட்டகல மறுத்த மரவர்களை மரத்தில் கட்டி வைத்து சுட்டு,
பின் தலையை வெட்டி வீழ்த்தினார்கள்.  அவர்தம் இறுதி விருப்பத்தை நிறைவேற்றினார்கள்.
அவரை, அவர் மனைவியை, மக்களை, பேரன் பேத்திகள் என்று தொடரும் விழுதுகளை
வீட்டிலேயே வைத்து என்கவுண்டர் செய்து சாதனை படைத்தார்கள்.

அம்மா என்ற ஒரே முழக்கத்தை மட்டுமே எழுப்பத் தெரிந்திருந்த அந்த சிசுவின் நாவை அறுத்தார்கள், அதன் எதிர்காலத் தீண்டுதலைக் கண்டு அஞ்சியோ என்னவோ
துப்பாக்கியின் அடிக்கட்டையால் அதன் பற்களை இடித்து உடைத்தார்கள்,
பிஞ்சு விரல்களை வெட்டி எரிந்தார்கள்.

தன் துண்டு நிலத்தை உழுதுகொண்டிருந்த அறுபது வயது முதியவரை,
கோவணத்துக்கும் உனக்கு அருகதையில்லை, நிலமொரு கேடா என
நிர்வாணமாக்கி வெட்டிக் கொன்றார்கள்.

ஆநிரையையும் அடித்து மேய்த்தறியாத அந்த முதியவரை அடித்து இழுத்துவந்து
கை கால்களைக் கட்டி கிராமத்து நடுவே ஒரு மரத்திலிருந்து தலைகீழாய்த் தொங்கவிட்டனர்.
அவர் தலைக்கடியில் எரியூட்டப்பட்ட எண்ணைக் கொப்பரையில்
ஒரு முக்கு முக்கி எடுத்தனர். பின் அவர்மேல் தண்ணீர் ஊற்றித் தூர எரிந்து சென்றனர்.
இன்று அவர் உடலில் புழுவாய் புழுத்து நெளிந்து அவரைத் தின்பவர்களும் அவர்கள்தான். இக்கொடுமையை மறுக்க முடியாத அந்த தன் கையறு நிலையை நொந்துகொண்டு
வெந்து வெதும்பி நிற்கிறது அந்த மரம், ஒரு சாட்சியாக.

இவ்வளவுதானா, சிறை, சித்திரவதை, கற்பழிப்புகள், தானியங்களையும், ஆடு, கோழிகளையும் அவர்களின் பண்ட பாத்திரங்களையும், பத்தம்பது ரூபாய் சொத்துக்களையும் திருடிச் செல்வது எனப் பாதுகாப்புப் படையினரின் வீரசாகசங்கள் ஏராளம்.

இதில் எதைச் சொல்ல, எப்படிச் சொல்ல?  ஏதேதோ சொன்னேன்.

”என்னங்க, இவ்வளவு கொடுமையா இருக்குது, இதெல்லாம் நெசமான்னே பயமா இருக்குதேங்க.
இதை ஏன் எந்த பத்திரிகைக் காரனும், டி.வி. யும் கவர் பண்ணல?”
“இலங்கையில தான் தமிழர்களுக்கு எதிரா இப்படி அட்டூழியங்கள் நடந்துக்கிட்டு இருந்துச்சு..
அதப்பத்தி நிறைய வந்துச்சு, இப்ப இங்கயுமா?”

என்ற கேள்விகளுக்கும் சிறு மௌனத்துக்கும் இடையில் இடைவேளை முடிந்தது.
அலுவல் அகம் நோக்கி கால்கள் நடந்தன.

பரவலாய் இந்த விசயம் தெரிந்திருக்கவில்லை என்பது உண்மைதான். உண்மை மீளா உறக்கத்தில் இருப்பதற்காக பரந்துபட்ட மக்களை ஜனநாயக ஊடகங்கள் ஜாலியாய்த் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பதும் உண்மைதான். அவர்கள் அவர்களது வேலையைச் செய்கிறார்கள்…  நாம்?

எதார்த்தம் நெருப்பாய் சுட்டெரிக்க, அந்தக் காடு மலைகளையும் அதன் மக்களையும் காக்க  இந்த நிலம் அதிராதோ, உறக்கம் கலையாதோ என மனம் ஏங்குகியது.

……………………………………………………………………………………………………………………………………….

எரி எண்ணையில் அமிழ்த்தப்பட்ட உண்மைகள்:

செப்டம்பர்- அக்டோபர், 2009ல் தண்டிவாடாவில் நிகழ்த்தப்பட்ட  காட்டு  வேட்டை அல்லது பச்சைப் படுகொலை நடவடிக்கை பற்றிய உண்மை அறியும் குழுவின் அறிக்கை-  ஷர்மிளா புர்கயச்தா, ஆஷிஷ் குப்தா, ஹிமான்ஷு குமார் ஆகியோரால் உண்மையறியும் குழுவின் சார்பாகக் கையொப்பம் இடப்பட்டது – அக்.21, 2009.

[பி.யு.சி.எல்; பி.யு.டி.ஆர், வன்வாசி சேத்னா ஆஸ்ரம்; மனித உரிமை சட்டக் குழு; ஆக்‌ஷன் எய்ட்; மன்னா அதிகார்; மற்றும் மாவட்ட ஆதிவாசிகள் ஒருமைப்பாட்டு சங்கம் ஆகிய அமைப்புகள் அக்டோபர் 10 – 12 தேதிகளில் பல தடைகளையும் குறுக்கீடுகளையும் கடந்து தண்டிவாடா சென்று சேகரித்த தகவல்களின் சுருக்கம்].

செப்டம்பர் 17ம் நாள்

கசன்பள்ளி கிராமத்தில் பாதுகாப்புப் படை நடத்திய கொலைவெறியாட்டம்

நடக்கக்கூட முடியாத துகி முயீ என்ற 70 வயது மூதாட்டி மார்பகங்கள் அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இரத்தவெள்ளத்தில் கிடந்தாள்.

அதுபோலவே கண்பார்வை மங்கிய கவாசி கங்கா என்ற 70 வயது முதியவர் அவரது படுக்கையிலேயே குத்திக் கொல்லப்பட்டுக் கிடந்தார்.

வீட்டு வேலையாக வெளியே சென்று திரும்பிய மாத்வி தேவா என்ற 25 வயது இளைஞர் மரத்தில் கட்டப்பட்டு மும்முறை சுடப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்டார் என்கிறார் அவருடன் கிராமம் திரும்பிய அவரது பாட்டனார்.  அவரது உடலைத் தேடி அலைந்த குடும்பத்தாரிடம் அவரது உடல் சிண்டகுஃபா காவல் நிலைய காம்பவுண்ட் சுவர் அருகே புதைக்கப்பட்டதாக அவ்வேலையை மேற்பார்வையிடப் பணிக்கப்பட்ட படேல் என்பவர் இரண்டு தினங்களுக்குப் பிறகு தெரிவித்திருக்கிறார்.

தனது துண்டு நிலத்தை உழுதுகொண்டிருந்த மாத்வி ஜோகா என்ற 60 வயது முதியவரைப் பிடித்து இழுத்து வந்து ஆடையை உருவி நிர்வாணமாக்கி வெட்டிக் கொன்றிருக்கிறார்கள் பாதுகாப்புப் படையினர்.

மாத்வி ஹத்மா [35 வயது] மற்றும் மத்கம் சுல்லா ஆகியோர் சுல்லாவின் மனைவியின் கண்முன்னாலேயே கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டனர்.

அன்று காலை மாடுமேய்த்துக் கொண்டிருந்த ஆந்தர்பராவை சேர்ந்த முசகி தேவா என்ற 60 வயது முதியவரைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து அடித்து கிராமத்துக்குள் இழுத்துச் சென்றனர்.  கைகாலைக் கட்டி ஒரு மரத்திலிருந்து அவரைத் தலைகீழாகத் தொங்கவிட்டனர்.  அவரது தலைக்குக்கீழ் ஒரு எண்ணைக் கொப்பரை எரியூட்டப்பட்டது.  கொதிக்கும் எண்ணைக்குள் அவரை ஒரு முக்கு முக்கி எடுத்தனர் பாதுகாப்புப் படையினர்.  பின்னர் அவர்மீது தண்ணீர் உற்றினர். பிறகு அவிழ்த்துப் போட்டுவிட்டு சென்றனர். அவரது இரணம் இன்று புழுபுழுத்து நெளிகிறது. மருத்துவ வசதியின்றி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.

கிராமத்தின் அனைத்து வீடுகளும், அடித்து உடைக்கப்பட்டு தீயிடப்பட்டன. பாதுகாப்புப் படை வருவது அறிந்து ஒட்டுத் துணியோடு ஓடமுடிந்தவர்கள் உயிர்தப்பினர். காடுகளில் கூடாரமிட்டும், உறவினர்களின் அடைக்கலம் புகுந்தும் காலம் தள்ளுகின்றனர். பாதுகாப்புப் படையினரின் செயல்களால் கிராமமே பீதியில் உறைந்து கிடக்கிறது.

அக்டோபர் 1 ம் நாள்

கோம்பட் கிராமத்தில் பாதுகாப்புப் படை நடத்திய கொலைவெறியாட்டம்

மாத்வி பாஜார், அவரது மனைவி மாத்வி சுபி, அவர்களது மணமான மூத்தமகள் கர்தம் கன்னி மற்றும் இளைய மகள் மாத்வி முட்டி ஆகியோர் அவர்களது வீட்டுக்குள்ளேயே குத்திக் கொலை செய்யப்பட்டனர்.  அவர்கள் வீட்டில் தங்கியிருந்த மந்தர்பதார் கிராமத்தை சேர்ந்த முச்சகி ஹண்டாவும் மத்கம் தேவாவும் அதுபோலவே குத்திக் கொல்லப்பட்டிருந்தனர்.

மாத்வி பாஜாரின் இரண்டே வயதான பேரப் பிள்ளையையும் பாதுகாப்புப் படை விட்டுவைக்கவில்லை. அக்குழந்தையை அடித்து, அதன் நான்கு விரல்களை அறுத்து, கதறும் குழந்தையில் பல்லை உடைத்து, நாக்கையும் அறுத்திருக்கிறது இத்தேசப் பாதுகாப்புப் படை.       [அதன் தாய் வெட்டிக் கொலை செய்யப்படும்போது அவள் அணைத்திருந்த குழந்தையின் விரல்கள் துண்டிக்கப்பட்டதாக வேறொரு செய்தி கூறுகிறது]

சோயம் சுபாவும் அவரது மனைவி சோயம் ஜோகியும் அவர்களது வீட்டுக்குள்ளேயே குத்திக் கொல்லப்பட்டிருந்தனர்.

மாத்வி என்கா என்பவரது வீட்டில் புகுந்து அவரைக் கத்தியால் குத்தி வெளியே தள்ளி கிராமம் நெடுகத் தறதறவென இழுத்துச் சென்றனர்.  இறுதியில் அவரை சுட்டு வீழ்த்திவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறினர் பாதுகாப்புப் படையினர்.

கோம்பட் கிராமத்தில் பாதுகாப்புப் படையுடன் நடந்த ”சண்டையில்”  ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.  பாதுகாப்புப் படையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. கொல்லப்பட்டவர்களை மாவோயிஸ்டுகள் இழுத்துச் சென்றுவிட்டனர் என்கிறார் தண்டிவாடா காவல் கண்காணிப்பாளர்.

சிண்டகுஃபா கிராமத்தில் பாதுகாப்புப் படை நுழைவதைப் பார்த்த தோமர் முட்டா தன் வீட்டு மக்களைக் காக்க விரைந்தோடும்போது சுடப்பட்டு பின்னர் வீட்டில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். அக்கிராமத்தில் 10 போர் கொலை செய்யப்பட்டதை மட்டுமே உண்மையறியும் குழுவால் உறுதி செய்ய முடிந்தது.  ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. கோப்ராக்களும் போலீசாரும் இரண்டு அணியாய் அன்று செயலில் இறங்கியதை எஸ்.பி. உறுதி செய்கிறார்.  எத்தனை கிராமங்களில் எத்தனை கொலைகள் விழுந்தது என அறிய முடியவில்லை.

முகுட்டோங்க் மற்றும் ஜினிடொங்க் கிராமங்களில் இருந்து 18 முதல் 32 வயது வரையான பத்து இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் அடித்து இழுத்துச் சென்றனர்.  அக்டோபர் 1 ம் தேதி இழுத்துச் சென்ற இவர்களில் எட்டு பேர் மீது 3ம் தேதி இ.கு.சட்ட்த்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது கோண்டா காவல் நிலையம். இருவரைப் பற்றிய விவரமில்லை.  அவர்களைத் தேடிச்சென்ற அவர்களது உறவுக்காரப் பெண்கள் கோண்டா காவல் நிலையத்தில் கொடுமைப்படுத்தப்பட்டு வெற்றுத் தாளில் கைநாட்டு பதித்துக்கொண்டு விரட்டப்பட்டனர்.  இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பெண்கள்  விசாரிக்கச் சென்றபோது அவர்கள் கேவலமாக ஏசப்பட்டு, அவர்கள் இருவரையும் கண்காணாத இட்த்துக்கு அனுப்பிவிட்டோம் இனி ஒருமுறை தேடிக்கொண்டு வரக்கூடாது என மிரட்டி அனுப்பிவிட்டனர்.

செப்டம்பர் 17 அன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலின்போது, கிராமத்தாரைக் கொலை செய்வதிலும், அதைத் தொடர்ந்து அவர்கள் வீடுகளை தாக்கி அழிப்பதிலும் தீயிடுவதிலும் ஈடுபட்டனர்.  அக்டோபர் 1 அன்று நட்ததிய தாக்குதலின்போது விசயம் சற்று வித்தியாசமாக இருந்தது.  அவர்கள் கிராமத்தார் வீடுகளில் புகுந்து தானியங்கள், பருப்புகள், பணம், பண்டபாத்திரங்கள் எல்லாவற்றையும் அள்ளிச் சென்றதோடு, கால்நடைகளையும் ஓட்டிச் சென்றனர். சூரையாடலுக்குப் பிறகு ஆங்காங்கே வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தினர்.  மக்கள் 300 ரூபாயிலிருந்து 10000 ரூபாய் வரையிலான தொகையைப் பாதுகாப்புப் படையிடம் திருட்டு கொடுத்திருந்தனர்.

அடித்து சித்திரவதை செய்து விசாரிப்பது, பின்னர் காலில் சுட்டு ஓடவிடுவது; நாள் முழுவதும் அடித்து சித்திரவதை செய்வது, ஆங்காங்கே கத்தியால் குத்துவது பின் விடுவிப்பது போன்ற பயங்கர ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படை கையாள்கிறது.

பாதுகாப்புப் படை மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின்போது கூலிப்படைகளான சல்வா ஜுடூம், எஸ்.பி.ஓ வைச் சேர்ந்த ஆட்கள் உடன் வந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.  சல்வா ஜுடூம் தலைவன் பொட்டு ராஜா, பாண்டேகுடா கிராமத்தை சேர்ந்த பாண்டே சோமா, அசர்குடா கிராமத்தை சேர்ந்த கங்கா, தங்கள் கோம்பட் கிராமத்தை சேர்ந்த மாத்வி புச்சா ஆகிய எஸ்.பி.ஓ கூலிப்படை ஆட்களை மக்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி

15

vote-012நக்சல்பாரிகளுக்கு எதிரான காட்டு வேட்டை நடவடிக்கையால் நம் கன்னம் பழுக்கக் கூடும்… சிக்கலானதும், அபாயகரமானதுமான இவ்விரிந்த தளத்தை ஆய்வுசெய்கிறார் ஷோமா சவுத்ரி.
……………………………………………………………….

செப்டம்பர் 22, 2009 அன்று வெளியான “நக்சலைட்டுகளின் அரசியல் தலைவர் கோபட் காந்தி தில்லி போலீசிடம் பிடிபட்டார்” என்ற செய்தியால் பரபரப்பானது இந்தியா.  அவருக்கு வயது 58.  தென் மும்பையைச் சேர்ந்த பார்சி இனத்தவர்.  வொர்லியில் கடற்கரையில் அமைந்திருந்த மாளிகையில் பிறந்து வளர்ந்தவர்.  டூன் ஸ்கூலிலும், பிறகு லண்டனில் சார்டர்ட் அகவுண்டண்ட் படிப்பும் படித்தவர்.  நாடு திரும்பியதும், இந்தியக் குடிமக்களில் ஆகக் கொடிய வறுமையில் இருந்த மகாராட்டிர மக்கள் மத்தியில் வேலை செய்யத்தொடங்கினார். பின்னர் 1970களில் தலைமறைவு அரசியல் வாழ்வை மேற்கொண்டார். சமூகவியலாளரான அவரது மனைவி அனுராதாவும் அவருடன் இணைந்த வாழ்வை மேற்கொண்டார்; சென்ற ஆண்டு மூளையைத் தாக்கும் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.  [மத்திய இந்தியாவின் வெறுத்தொதுக்கப்பட்ட இந்த மையநிலப்பகுதியில், இறப்பை ஏற்படுத்தும் இவ்வகைக் கொடூரமான மலேரியா, நமக்கு தலைவலி, காய்ச்சல் போல சகஜமான நோய்].  காந்தி பிடிபட்டதை “அரசின் முக்கியமான நக்சல் வேட்டை”  என்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்.

செப்,22 அன்று இரவு ’டைம்ஸ் நௌ’ தொலைக்காட்சி, கோபட் காந்தி கைது செய்யப்பட்டதன் முக்கியத்துவம் பற்றிய ஒரு ‘ப்ரைம் டைம் விவாதம்’ நடத்தியது.  வெறிக்கூச்சலிடும் பகட்டு ஆரவார நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி, நகர்ப்புற மேட்டுக்குடிகளின் நக்சல் பிரச்சினை பற்றிய வழமையான கண்ணோட்டத்தின் சாரத்தைத் தனது பேச்சில் வெளிப்படுத்தினார். அவர் நடத்தும் நிகழ்ச்சியை நீங்கள் காண நேர்ந்தால், பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவரும்.  உள்துறை அமைச்சர் கடந்த ஒர் ஆண்டாகவே நக்சல்களுக்கு எதிரான, குறிப்பாக சடீஷ்கரில், ஒரு பெரும் படையெடுப்புக்குத் திட்டமிட்டுவருகிறார். கிடைக்கின்ற செய்திகளின் படி,  மத்திய சேமக்காவல் படையின்[CRPF] அதிரடிப்படையினர், இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர்[ITBP] மற்றும்  எல்லைப் பாதுகாப்புப் படையினர்[BSF] அடங்கிய 75000 துருப்புக்களை இந்தியாவின் மையநிலத்தில் நிரந்தரமாய் நிறுத்துவது என்பதையும் உள்ளடக்கியது அவரது இந்தத் திட்டம். பல செய்தித்தாட்களில் வரும் விவரங்களின்படி ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து படைகள் தருவிக்கப்படுகின்றன;  ஒத்துவராத அண்டைநாடுகளின் மீதான ஊடுருவல் நடவடிக்கைக்காகவே உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரீய ரைஃபில்ஸ் படையும் கொண்டுவரப்படுகிறது; பீரங்கி வண்டிகள், குண்டு விரிப்புகள், கொத்துக் குண்டுகள், மற்றும் அதிநவீன ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. அவசியம் ஏற்படுமானால் இராணுவத்தின் சிறப்புப் படைகளையும் கூடக் கொண்டுவருவேன் என்கிறார் சிதம்பரம்.

சொந்த மண்ணில் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் இராணுவ நடவடிக்கை [வரும் நவம்பரில் தொடங்கும்படியாக]  திட்டமிடப்பட்டிருப்பது அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஒரு வீச்சான விவாதத்தைக் கிளப்பியிருந்திருக்க வேண்டும். ஆனால், காட்டு வேட்டை என அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, நிலவும் மயான அமைதிக்கு இடையில், தனது பலத்தைத் திரட்டிக்கொண்டிருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரமும் நக்சலைட்டுகளை அல்லது மாவோயிஸ்டுகளை “உள்நாட்டுப் பாதுகாப்புக்கான மாபெரும் அபாயம்”  என்ற வகையில் குறிப்பிடுகிறார்கள்.  அவர்கள் மீதான இராணுவ நடவடிக்கை ஒரு தீர்வாக இருக்கலாம்.  ஆனால், அதுதான் ஒரே தீர்வா? அதுதான் தீர்வுகளுள் சிறந்த தீர்வா? இத் தீர்வால் உண்மையில் தீர்வு கிடைக்குமா? இந்தத் தாக்குதல் நடவடிக்கையால் பாதிப்பு அடையப்போகிறவர்கள் யார்? இந்த நடவடிக்கையின் எதிர்விளைவுகள் என்னவாய் இருக்கும்? உண்மையில் நாம் யார் மீது போர்ப் பிரகடனம் செய்திருக்கிறோம்? போர் என்ற பெயரில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? கண்ணைத் திறந்துகொண்டுதான் இந்தக் கிணற்றில் குதிக்கிறோமா? காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இவ்வாறான நடவடிக்கை தோற்றுவித்திருக்கும், வெளிப்படையாகத் தெரியும், சரிசெய்ய முடியாத உளவியல் குழப்பங்களில் இருந்து கற்றறிய வேண்டியது ஏதாவது இருக்கிறதா?  ஒரு ஜனநாயக உணர்வுள்ள சமூகம் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்பிப் பதில் தேட முனைந்திருக்க வேண்டும்.  வசதிமிக்க மேட்டுக்குடிகள் இப்படிப்பட்ட சங்கடமான கேள்விகளுக்குத் தன் புட்டத்தைக் காட்டுவதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும்.  நாட்டைக் கவிந்திருக்கும் இத்தகையதொரு பயங்கரமான நடவடிக்கையின் பால் விவாதமின்றி ஊமையாய் நிற்கின்றனவே தேசியக் கட்சிகள், அதற்கு என்ன நியாயமிருக்கிறது?

ஒருக்கால், மௌனம் கவலையைக் குறைக்கும் போலும்.  இந்த அரசு சில தினங்கள் முன் தன் உளவியல் ஆயுதமாக ஒரு விளம்பரத்தை வெடித்தது. ”ஈவிரக்கமற்ற கொலைகாரர்களே நக்சல்பாரிகள்” என நாட்டின் அனைத்துப் பெரும் தினசரிகளிலும் உரக்க அலறியது அந்த விளம்பரம். நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்ட ஆண், பெண், குழந்தைகளின் பிரேத வரிசையை அதன் காட்சிப்பதிவு கொண்டிருந்தது.

செப்டம்பர் 22, இரவு கோபட் காந்தியைப் பற்றிய விவாதத்தில், நாட்டின் உட்பகுதி எதற்கும் சென்றறியாத நகர்ப்புறத்து கிணற்றுத் தவளையின் ஒழுக்க நெறி நின்று திருவாய் மலர்ந்தார் அர்னாப் கோஸ்வாமி… இவர் “பயங்கரவாதியா, கொள்கைவாதியா?”  என எக்காளமிட்டார். “ மிஸ்டர் காந்தியின் மேற்பார்வையில் ஆறாயிரம் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” (கோபட் காந்தி ஏதோ வாழைப்பழ குடியரசைத் தலைமைதாங்கும்  இடியமின் போன்ற நபர் போல) ”இருந்தும், மனித உரிமை அமைப்புகளும், சில அரசு சாரா அமைப்புகளும் அவர் விடுதலையைக் கோருகின்றன”  என்கிறார் கோஸ்வாமி. (திரு கோஸ்வாமி அவர்களிடம் மனித உரிமைக் காரர்கள் மீது எப்போதுமே ஒரு எகத்தாளம் உண்டு. அவரைப் பொருத்தவரை இவர்கள், பல்வேறுபட்ட சுய சிந்தனை உள்ள மக்கள் அல்ல, பயங்கரவாத சக்திகளின் வளர்ப்புப் பிராணிகள்).  “ஜார்க்கண்டில் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்ட 12 வயது சிறுமியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?” “அவர்கள் கொன்ற 15 சி.பி.எம். அணிகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?”  என அவர் முழங்குகிறார்.  குற்றம்சாட்டப்படுபவர், நக்சலிசத்தின் பின்னால் இருக்கும் விரிந்த அரசியல் சூழலை விவரிக்க அல்லது மிகச் சிக்கலான விவாத்ததுக்குள் இறங்க முற்படும் ஒவ்வொரு தருணத்திலும் அவரால் மடையடைக்கப்படுகிறார். எப்படி? “நாங்கள் கேட்கும் கேள்வி மிகச் சாதாரணமானது; அவர் பயங்கரவாதியா அல்லது கொள்கைவாதியா? அவர் இந்த வன்முறைக்குப் பொறுப்பானவரா, இல்லையா? 6000 பேர் சாவுக்கு அவரைக் குற்றம்சாட்ட முடியுமா? முடியாதா?”..  ஒத்தையா , இரட்டையா?

இந்த நிகழ்ச்சியைப் பார்த்தது, திருடன் போலீஸ் விளையாட்டில் திருடனைச் சுட்டுக்கொல்லும் சிறுவர்களின் செயலை சற்று வேடிக்கைபார்த்து வந்தது போலிருந்தது. தனிப்பட்ட முறையில், இதில் ஒரு சரக்கும் இல்லை. ஆனால், தற்போது மிகப் பிரபலமான ஆங்கில டி.வி. சேனலான ’டைம்ஸ் நௌ’ ன் குரலாக ஒலிக்கும் திரு கோஸ்வாமி அவர்களின் மூளையற்ற வெட்டுப் பேச்சுகள், விரிந்த, நகர்ப்புற, ஆங்கிலம் பேசும் மக்களின் சிந்தனைப்போக்கை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது. அரசாங்க விளம்பரங்களுடன் இணைந்து, கவலையளிக்கத் தக்கதொரு கண்ணோட்டத்தை பொதுவிவாதம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தொகுத்தளிக்கிறது. இது அரசாங்கப் பிரச்சாரம் எனத் தெளிவாய்க் குறிப்பிடத்தக்க வகையிலும்,  மறுபுறம், அறியாமை மற்றும் சிறுபிள்ளைத்தனமானதாகவும் உள்ளது. இரண்டையுமே ஏற்க முடியாது.

இந்த நக்சல்பாரிப் புதிருக்குள், மூன்று அடிப்படைக் கேள்விகள் அடங்கியுள்ளன: நக்சலைட் என்பது யார்? போராட்டத்தின் ஒரு கருவியாக வன்முறையைக் கொள்வது பற்றிய ஒருவரது நிலைப்பாடு என்ன? நாடெங்கிலும் நக்சலிசம் ஏன் வளர்ந்துகொண்டிருக்கிறது?  முதலாவது கேள்வியை அறிந்துகொள்ள ஒரு உவமையை எடுத்துக்கொள்ளுங்கள், நீரில் இருக்கும் மீனைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். நக்சல் தலைவர்கள் மீன்கள், இன்னார் என்று சுட்டத்தக்கவர்கள் (சுடத்தக்கவர்களும்- தண்டிக்கப்படக்கூடியவர்களும் கூட); நீர் என்பது விரிந்த எண்ணற்ற மக்கள் கூட்டம், அவர்கள் பிரதிபலிக்கும், அவர்கள் நீந்தித் திளைக்கும் மக்கள் வெள்ளம்.

கோபட் காந்தியைப் போல, ஒரு நக்சல் கொள்கையாளர், போர்த் தலைவர் அல்லது பொலிட் பீரோ தலைவர் எந்த சமூகத் தட்டிலிருந்தும் வரமுடியும்.  ஒடுக்கப்பட்ட ஆந்திரத்து தலித்துகளில் இருந்தும், சட்டீஷ்கரின் புறக்கணிக்கப்பட்ட ஆதிவாசியிலிருந்தும், வங்காளத்து நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளிலிருந்தும், வசதிவாய்ப்பு மிக்க மும்பைப் பணக்கார வர்க்கத்திலிருந்தும்கூட வரமுடியும். இந்த “புரிந்த புரட்சியாளர்கள்”  இரண்டு நிலைகளில் செயல்புரிகிறார்கள். அரசியல் நிலையில், அவர்களுக்குப் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. (இதில் அதிகாரம் இன்னமும் நிலப்பிரபுத்துவ மேல்தட்டு வர்க்கத்தின் கைகளிலேயே குவிந்து இருப்பதாகப் பார்க்கிறார்கள்) அவர்களது நீண்டகால குறிக்கோள், ஆயுதப்போராட்டத்தின் மூலம் மக்களுக்கான அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதே.  இவ்விசயத்தில், அவர்கள் இந்திய அரசின் இறையாண்மையை அச்சுறுத்துகிறார்கள்.  2004ல் ஆந்திர அரசுக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே நடந்து முறிந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த கே. பாலகோபால் உள்ளிட்ட பலரும், இவ்விசயத்தில் அவர்களை எதிர்த்துப் போராட அரசு தன்னளவில் உரிமை பெற்றிருப்பதாகவே கருதுகிறார்கள். “மாவோயிஸ்டுகளே அதிகாரத்துக்கு வந்துவிட்டால்,  அவர்களும் இவ்வாறான சாவால்களை சகித்துக்கொள்ள மாட்டார்கள்” என்கிறார் பாலகோபால். நக்சலைட்டு தலைவர்கள், இந்திய அரசு செயல்பட முடியாத வகையில் “விடுதலைப் பிரதேசங்களை”  உருவாக்குவது பற்றியும் பாலகோபால் விமர்சனக் கண்ணோட்டம் கொண்டிருந்தார். “தாங்கள் மக்களின் பிரதிநிதிகளே என்று அவர்கள் உரிமை கொண்டாடும்போது, மக்களைப் பாதிக்கும்படியான ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலை – தனது செயல்கள் மூலமாகவோ அல்லது அதனால் தருவித்துக்கொள்ளும் விளைவுகள் மூலமாகவோ- அவர்கள் முன்னெடுக்க முடியுமா?  ஒருக்கால், அடையப்பட முடியாத எதிர்காலக் கற்பனா உலகத்திற்காக தற்போதைய சடீஷ்கர் ஆதிவாசித் தலைமுறை தம்மைத் தியாகம் செய்துகொள்ள விரும்புகிறதா?” என்று கேள்வி எழுப்புகிறார் பாலகோபால்.

இந்த நீடித்த தத்துவார்த்தச் சண்டையில், இரண்டாண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட பயங்கரமான ராணிபோட்லி போலீஸ் நிலையத் தாக்குதல் முதல் சமீபத்திய ராஜ்நந்த்கான் தாக்குதல் ஈராக பல நக்சல் தாக்குதல்களும் அவ்வியக்கம் மூர்க்கமான தாக்குதல்களையும், வன்முறை மீதான மூட வழிபாட்டையுமே தழுவி நிற்கிறது என்பதையே காட்டுகிறது. அடக்குமுறையும், ஊழலும் நிறைந்த போலீசுக்கு எதிராகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்ற போதிலும், யாருமே இதைக் கண்டிக்கவும், இவ்வாறான வன்முறைகளை எதிர்க்கவுமே செய்வர். அல்லது இதைத் தூண்டியவர் தண்டிக்கப்படவேண்டும் என்பர். ஆனால் டஜன்கணக்கான அறிவுஜீவிகளைப்போல, பாலகோபால் அவர்களும் குறிப்பிடுவது என்னவென்றால், இந்த தத்துவார்த்தப் போராட்டத்தை நோக்கி மட்டும் கவனத்தைக் குவிப்பதோ அல்லது சட்டவிரோதமான வழிகளில் மட்டுமே இதை ஒழிக்கமுடியும் என்பதோ தற்கொலைக்கு ஒப்பானது என்பதே.  மூர்க்கமான எதிர்த் தாக்குதல்களால் நக்சலிசத்தை ஒழிக்க முடியுமா?  அது சாத்தியமென்றால், 70களில், மேற்கு வங்கத்தின் சித்தார்த்த சங்கர் ரேயின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகள் அதை என்றென்றைக்குமாய் பிடுங்கியெறிந்திருக்க வேண்டும். ஆனால், உண்மையில், நக்சல் வன்முறை பற்றிய கதைகளில் உண்மை இருப்பினும், நக்சல் தலைவர்கள் விரிந்த மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறார்கள்.   ஏனெனில், அவர்கள் சமூகப் பொருளாதாரக் காரணங்களை வெளிப்படுத்துகிறார்கள், இந்திய அரசால் 60 ஆண்டுகளாய் அயோக்கியத்தனமாகப் புறக்கணிக்கப்பட்ட மக்களை சக்திமிக்கவர்களாக்குகிறார்கள், ஆயுதபாணியாக்குகிறார்கள்.  ஆக, பெரும்பாலான நக்சல் அணிகள் தனது இயக்கக் குறிக்கோளுக்காக நிற்கும் [”Informed revolutionaries”] “புரிந்த புரட்சியாளர்கள்” அல்ல. அவர்கள் தங்களது வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் தமது வாழ்விடத்தில் போராடும் பழங்குடியினரும், தலித்துகளும் ஆவர்.  “நீங்கள் என்னை நக்சல் என்றோ, வேறு மாதிரியோ உங்கள் விருப்பம்போல் அழைத்துக்கொள்ளுங்கள்.  எனது 3 கிலோ அன்னாசிப் பழத்துக்காவே நான் துப்பாக்கி எடுத்திருக்கிறேன்”  என்று தான் சந்தித்த பீகார் தொழிலாளியும் நக்சல் கேடருமான ஒருவர் கூறியதாக பெலா பாட்டியா என்ற மனித உரிமை செயல்வீரர் கூறுகிறார்.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில்,  இந்திய அரசு தன் மிகவும் பரிதாபத்திற்குறிய மக்கள் மீது இந்த ஆயுதப் போரை நடத்தித்தான் தீரவேண்டுமா? அவர்களையும் உரிமையுள்ள மக்களாக்கி, துப்பாக்கிகளின் அரவணைப்பில் இருந்தும் ”புரிந்த புரட்சியாளர்களின்” குற்றப் பிடியில் இருந்தும் விடுவிக்க வேறு வழி ஏதுமில்லையா?  என்பதே. அர்நாப் கோஸ்வாமி சென்ற வாரம் மேற்கு வங்கத்தில் இறந்த அந்த 15 சி.பி.எம். உறுப்பினர்களை நினைவுபடுத்தியபோது வசதியாய் சொல்ல மறந்த விசயம், பத்திரிகைகளில் வெளிவந்த விசயம் ( எந்த டி.வி. சேனலும் குழு அனுப்பி விசாரிக்க நினைகாத விசயம்) என்னவென்றால், பத்தாயிரம் போர் கொண்ட உறுதியான மலைவாழ் மக்கள் கூட்டம் ஆயுதக் கிடங்காக ஆக்கப்பட்டிருக்கும், லால்கர் அருகில் உள்ள இனாயத்பூரில் இருக்கும் சி.பி.எம். அலுவலகத்தை சுற்றிவளைத்துத் தாக்கியது. அவரால் குற்றம் சாட்டப்படுபவர்கள் இவ்விசயத்திற்கு அவரது கவனத்தை இழுக்க முயன்றபோது அவர் மிகவும் கேலிக்குரிய வகையில், அந்த பத்தாயிரம் பழங்குடியினருக்கு  நொடிப்பொழுதில் மாவோயிஸ்ட் முத்திரை குத்திவிட்டார்.  ஆக, ”காட்டு வேட்டை”  இந்த பத்தாயிரம் பேரையும் வேட்டையாடவேண்டும், இல்லையா? ஒருக்கால், பத்தாயிரம் மாவோயிஸ்டுகள் ஒரு அலுவலகத்தைத் தாக்கியிருந்தால் வெறும் 15 பேர்தான் செத்திருப்பார்களா?  சி.பி.எம். அலுவலகத்தின் மீது சென்ற வாரம் நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிய உண்மைதான் என்ன?  மறுநாள் அங்கு சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் சடலங்கள் எதையும் காண முடியவில்லையே, ஏன்?  அங்கு முகாமிட்டிருந்த மத்திய துணைராணுவத் துருப்புகள் சம்பவங்கள் எதையும் தடுக்க முடியாமல் போனதேன்? நக்சல் புதிர் பற்றிய விசயத்தில் லால்கர் சம்பவம் கற்றறியப்பட வேண்டிய ஒன்று. கடந்த ஆறு மாதமாகவே மையநீரோட்ட ஊடகங்கள் லால்கரில் “மாவோயிஸ்ட் அபாயம்” பற்றி அதீத ஆர்வம் காட்டிவந்தன. ஆனால், அவர்களில் யாருக்குமே, லால்கரில் இந்த மாவோயிஸ்ட் வீச்சு மே மாதம் தொட்டு திடீர் என்று ஏற்பட்ட ஒன்றா எனக் கேட்கத் தோன்றவில்லை.(sui generis) ஒரே நாளில் மொத்த சமூகமும் மாவோயிஸ்டாக மாறிவிடுமா? இந்த ஆண்டுத் தொடக்கத்தில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவைக் கொல்ல மாவோயிஸ்டுகள் முயன்றதைத் தொடர்ந்தே லால்கர் பிரச்சினை தொடங்கியது என மிகச் சிலரே கூறினர். அதற்குப் பழிவாங்கும் முகமாக பெங்கால் போலீசு லால்கரைச் சுற்றிவளைத்து அந்தச் சுற்றுவட்டாரத்தில், இக் கொலைமுயற்சிக்கு சிறிதும் சம்பந்தமற்ற அப்பாவி ஆதிவாசி இளைஞர்கள் ஏராளமானோரைக் கொடூரமாகத் தாக்கியது. இப்படிப் பல மாதங்களாக, இலக்கற்ற போலீசு ஒடுக்குமுறைக்கு இலக்காகி, ஆத்திரமும் வெறுப்புமுற்ற ஆதிவாசிமக்கள் தன்னெழுச்சியாய்த் தங்களை ஒரு எதிர்ப்பு சக்தியாக அமைப்பாக்கிக்கொண்டு, கைக்கோடாரி, வில், அம்பு போன்ற தங்களது வழமையான ஆயுதங்களை ஏந்தி, இந்திய அரசின் வல்லமையை எதிர்த்து மோதினர். சில வாரங்களுக்குப் பின், துப்பாக்கி மற்றும் ஆலோசனைகளோடு இழையோடும் ஒற்றுமை பற்றிய தந்திர உபாயங்களைப் போதிக்கவும், எதிர்ப்பு அலையை வீச்சாய் எழுப்பவும் கிஷன் ஜீ என்ற மாவோயிஸ்ட் தலைவர் ஆந்திரத்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது. காட்டு வேட்டைக்கு ஒரு முன்னோட்டம் போல, பதிலுக்கு அரசு, தனது துருப்புக்களை அதிகரித்ததுடன் துணைராணுவப்படையையும் இறக்கியது. பலநாட்கள் கடும் துப்பாக்கி சூடு நடத்திய பிறகு அரசு, மாவோயிஸ்ட் கூவலையே கேலியாகப் பயன்படுத்தி, லால்கரைப் பிற பகுதிகளிலிருந்து துண்டித்து “விடுதலைப் பிரதேசம்” என அறிவித்தது.  ஆனால், உண்மையில் அன்றிலிருந்து லால்கர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.  சி.பி.எம் அலுவலகத்தின் மீதான தாக்குதல் அப்பகுதியில் கனன்றுகொண்டிருக்கும் கோபத் தீயின் சமீபத்திய வெளிப்பாடு மட்டுமே.

காட்டு வேட்டை நடவடிக்கை தொடங்க இருக்கும் வெகுதொலைவில் உள்ள தண்டிவாடாவில், நிகழ்ச்சிக் களத்தில் இருக்கும் காந்தியவாதியும், ஒரே மனித உரிமை செயல்வீரருமான ஹிமான்ஷு குமார் சொல்கிறார், “நக்சலிசம் ஒரு பிரச்சினை என்ற கருத்தில் நாம் ஒத்துப்போகலாம். ஆனால், இந்த ஏழை மக்கள் தன் சாவை வரவழைத்துக்கொள்ளத் தக்க ஒரு அரசியலின்பால் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள்?  வெறுத்து ஒதுக்குதலையும், இழிவுபடுத்துதலையும் விட சாவே கவர்ச்சிகரமானதாக உள்ள அவ்வளவு பயங்கரமான ஒரு சமூக அமைப்பை நாம் உருவாக்கி இருக்கிறோமா? அப்படியானால், நான் இந்த சமூக அமைப்பை ஏன் பாதுகாக்கவேண்டும்? உணவு, உடை, சுகாதாரம், கல்வி, தன் நிலத்தின் மீது தனக்குள்ள நியாயமான உரிமை இவையே இந்த மக்களுக்கு வேண்டியவை. இருந்தும், நமது ஜனநாயக வழிமுறைகளை வலுப்படுத்தி அவர்களை வென்றெடுப்பதற்கு பதிலாக, நாம் நமது ஜனநாயகத்தைத் துப்பாக்கி முனையில் நடத்திச் செல்லப் போகிறோம் என்றால், நாம் பயங்கரமான மீளமுடியாத நிலைமையை நோக்கி நகர்கிறோம் என அஞ்சுகிறேன். நாம் ஒரு உள்நாட்டுப் போரை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறோம்”.  ஹிமான்ஷு குமார் போன்றோர் நன்கறிவர்.  காயமுற்ற சமூகத்தின் விளிம்பில் ஒரு அவசர சிகிச்சை முகாம் [ICU] போல கடந்த 17 ஆண்டுகளாய் செயல்பட்டிருக்கிறார். கல்வி, மருத்துவ உதவிகள் செய்துகொண்டு பொருமையோடு அவர்களை தேர்தல் மற்றும் சட்டபூர்வமான வழிமுறைகளுக்குக் கொண்டுவர உழைத்திருக்கிறார். இக் கஷ்டங்களைப் புரிந்துகொள்ள மறுக்கும் அரசு, சவுகரியமாகத் தன் பணிகளை இவருக்கு ஒப்பந்த வேலை [out sourcing ] அளிப்பதுபோல் அளித்திருந்தது.  இருப்பினும், இப்போது இவரது அறிவார்ந்த கருத்துக்குக் காதுகொடுக்க மறுக்கிறது. இவரைக் கலந்து ஆலோசிக்கவும் அது தயாராய் இல்லை.

நக்சல் பற்றிய உவமானத்தில் எது நம்மை நீர் எனும் பொருளை நெருங்கச் செய்கிறது.  மனித உரிமையாளர்களையும் அவர்களது கேள்விகளையும் தேச விரோத முத்திரை குத்துவோர், பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இந்த நக்சல் பிரச்சினை பற்றி முன்னர் என்ன சொல்லிவந்தனர் என்பதை அறிந்தால் வியப்புக்குள்ளாவர். பார்வையாளர் இருக்கையில் இருக்கும் நீதிபதிகளையும் இவ்வரசியல் அமைப்பின் ஆதரவாளர்களையும் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

2006 ம் ஆண்டு திட்டக் கமிஷன், “தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்” முன்னேற்றப் பணிகளுக்கான சவால்கள் பற்றி ஒரு அறிக்கை தருமாறு வல்லுனர் குழுவைப் பணித்தது.  முன்னாள் உ.பி. காவல்துறைத் தலைவர் பிரகாஷ் சிங், முன்னாள் உளவுத்துறைத் தலைவர் அஜித் தோவல், பி. பந்தோபாத்யாய், ஈ.ஏ.எஸ். சர்மா, எஸ்.ஆர். சங்கரன், பி.டி. ஷர்மா போன்ற மூத்த அதிகாரிகள், பெலா பாட்டியா, கே. பாலகோபால் போன்ற மனித உரிமையாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வல்லுனர் குழு அது. அவர்கள் 2008ல் சமர்ப்பித்த அறிக்கை எதிர்கால நோக்கில் நல்ல ஆய்வையும்,  ஆலோசனைகளையும் கொண்டிருந்தது.

”நக்சலைட் இயக்கத்துக்கான ஆதரவு பிரதானமாக தலித்துகளிடம் இருந்தும், ஆதிவாசிகளிடமிருந்தும் கிடைக்கிறது” என்கிறது அந்த அறிக்கை. இதுதான் நமது உவமையில், நீர் எனும் நக்சல் தலைவர்கள் நீந்தித் திளைக்கும் எல்லையில்லா மக்கள் கடல்.  இந்தியாவின் மாபெரும் மக்கள் தொகையில் தலித்துகளும், ஆதிவாசிகளும் நான்கில் ஒரு பங்கினர். இருப்பினும் அவர்கள் விகிதாச்சாரத்துக்கு சம்பந்தமில்லாத அளவில் பரம ஏழைகளாய், மனித மேம்பாட்டு  அளவுகோலின் அடிமட்டத்தில் கிடப்பவர்களாய் இருக்கிறார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அப்பட்டமான மனிதத்தன்மை அற்ற இழிநிலையில் நடத்தப்படுகிறார்கள்.  கிராமப்புறத்தில் காணப்படும் விரக்திக்கும் வன்முறைக்கும் காரணமானவை பற்றிய, கவனமாகத் தொகுக்கப்பட்ட விவரங்களும், கள ஆய்வுகளும் அடங்கிய விரிவான திரட்டு இந்த அறிக்கை.  ஆனால், இந்த விவாதத்தின் மையப்பொருளாக, “ நமது சமூக-பொருளாதாரக் கட்டமைவின் உட்கிடையான வன்முறை” தான் நக்சல் வன்முறைக்கான அடிப்படைக் காரணம் என்பதை வெளிப்படுத்துகிறது. அரசாங்கத்தின் கொள்கைகள் புதிய தாராளவாதம் நோக்கித் திருப்பப்பட்டிருப்பதை இடித்துரைத்துவிட்டு, நக்சல் பிரச்சினைக்கான தீர்வாக, பாதுகாப்பை மையப்படுத்திய அணுகுமுறைக்கு மாறாக, முன்னேற்றத்தை மையப்படுத்திய அணுகுமுறையை இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.

1982ம் ஆண்டில் திட்டக்குழு உறுப்பினராய் இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் சொந்த அறிக்கையையும், 2002ல் பிரணாப் முகர்ஜி எழுதியதையும் நினைவூட்டி, மனித உரிமை வழக்கறிஞர் கண்ணபிரான் அவர்கள் 2005 ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார்.  அவையும் மேற்சொன்ன அறிக்கையின் சாரப்பொருளையே கொண்டிருந்தன. ”ஏற்கனவே இந்தப் பார்வையும் புரிதலும் அவர்களுக்கு இருந்தும் ஏன் அவர்கள் தங்களது சொந்த புரிதலுக்கும், பரிந்துரைக்கும் எதிராய் பாதுகாப்பை மையப்படுத்திய வழியைக் கையாள்கிறார்கள் என்பது பெருத்த புதிராய் இருக்கிறது” என்ற பெலா பாட்டியா தொடர்ந்து, ”உண்மையில் இது புதிரான விசயமல்ல.  இச் செயல் இந்திய அரசின் பண்பை (character ) மிகத் தெளிவாகக் காட்டுகிறது” என்கிறார்.

பிரதமர் இந்திரா காந்தியின் முன்னாள் பொருளாதார ஆலோசகராய் இருந்த அர்ஜுன் சென்குப்தா அவர்களும் சென்ற இரு வாரங்களுக்கு முன்பு, செப்டம்பர் 15 அன்று, ”நக்சலிசம் என்பது காதுகொடுக்கப்படவேண்டிய ஒரு அவலக் குரலே” என எழுதியிருக்கிறர். ”நக்சல் பயங்கரத்தை” க் கட்டுக்குள் வைக்க அரசு மேற்கொண்ட அதிகபட்ச முயற்சிக்குப் பின்னும் வன்முறை அதிகரித்திருக்கிறது என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலுக்குப் பதிலளிக்கும் வகையில் சென்குப்தா மேலும் கடுமையாக எழுதினார், “இது ஏன் என்பதையும், மேலும், எவ்வகையில் நக்சல் வன்முறை பிற வன்முறை வெளிப்பாடுகளில் இருந்து வேறுபடுகிறது என்பதையும் புரிந்துகொள்வது அவசியம்.  அது எப்போதுமே வன்முறை, கொலை, பயங்கரமான குற்றச் செயல்கள் மூலம் சட்டம் ஒழுங்கை மீறுவதாகவுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பு இயக்கத்தை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்ப்பதும், காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைக் கையாள்வதும் புத்திசாலித்தனமான செயல் அல்ல. இவ்வகைத் தீவிரவாதம் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை அல்ல. அதற்கு அப்பால், சமூகத்தில் வேறோடியிருக்கும் அநீதிகளின்  வெளிப்பாடே.  நாம் முதலில் அப்பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்.  இல்லையேல், வன்முறை என்றும் கடக்க முடியாததாகவே தொடரும்”. இக் கருத்தைக் கேட்டபின் அரசின் ’பண்பு’  மேலும் வெறுக்கத்தக்கதாகிறது.

(1996ம் ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி எம். என். ரோ தனது தீர்ப்பு ஒன்றில், “இடதுசாரித் தீவிரவாதம் நிர்வாகத்தால் ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படும் அதே வேளையில், அது தங்களது பிரச்சினைகளுக்கான ஒரே தீர்வாக வஞ்சிக்கப்பட்ட மக்களால் பெரிதும் நம்பப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.  இது ஏன் இப்படி? என்று, இன்று எகிறிக்குதிக்கும் தேசியாவாதி ஒவ்வொருவனும் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.)

சென்குப்தா பிரதமரை எச்சரித்த போது, நக்சல் வன்முறை மீண்டும் மீண்டும் தலைதூக்கும் என அவர் அஞ்சியது சரியே.  ஏனெனில், அதன் உயிர்நாடி இந்த சமூக அமைப்பில் புரையோடிப்போயிருக்கும் உள்ளார்ந்த வன்முறையே; நாட்டின் 5 சதவீத மக்கள் சுகபோகத்தில் திளைக்கையில்,  77 சதவீத இந்திய மக்களை நாளொன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான தொகையில் காலம் தள்ளும்படி நிர்ப்பந்திக்கும் வன்முறையே; நமது ஜனநாயகக் குடியரசு முகங்கொடுக்க மறுக்கும் இந்த வன்முறையே.

கட்டமைவு வன்முறை: அது நயத்துடன் நன்கு உருவாக்கப்பட்டிருக்கும் சூனியம். பெரும்பாலான நகர்ப்புற இந்தியர்களைப் பொருத்தவரை, பழங்குடியினர், தலித்துகளின் வாழ்க்கை அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.  நமது புத்தகங்கள் இது பற்றி எழுதுவதில்லை,  நமது சினிமாக்கள் இது பற்றிய நினைவை எழுப்புவதில்லை, நமது பத்திரிகையாளர்களோ இவ்விசயத்தின் பக்கம் திரும்புவதுமில்லை.  இது வெறும் வறுமையாக நொடித்துவிடவில்லை; இப்போது இது, நீங்கள் இதுநாள் வரை பார்க்கத் தவறிய இந்திய அரசின் முகத்தில் ஓங்கி அறைகிறது.  மிருகத்தனமான, சட்டவிரோதமான, விழுந்து  புடுங்குகின்ற, இப்படி ஒரு சிலரின் விருப்பத்துக்கு  மாமா வேலை பார்க்கின்ற இந்திய அரசின் முகத்தில் ஓங்கி அறைகிறது. சட்டீஷ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் ஆந்திரத்து தொலைத்தூரக் காடுகள், பீகார், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசத்தின் அனாதையாக்கப்பட்ட மூலைமுடுக்குகள் இப்படி இந்தியத் தாயின் புகைந்துகொண்டிருக்கும் இதயத்தில் ஒருவர் பயணித்து வராத வரையில் அவருக்கு இப்பிரச்சினையின் பயங்கரம் புரியாது.  இப்பிரச்சினையை காட்டு வேட்டை நடவடிக்கை எப்படித் தீர்க்கும்? நீங்கள் உங்கள் கருநாகக் கமேண்டோப் படையை இந்த சூனியப் பிரதேசத்தில் சீறிப் பாயச் செய்யலாம். ஆனால், அது  நமது தேசம் உருவாக்கியிருக்கும் மலையும் மடுவுமான ”இருவகைப்பட்ட மனிதர்களை”  எப்படி ஒன்றாய்ச் சேர்த்து உருக்கும்?  இந்தக் காட்டு வேட்டை பல நூறு “புரிந்த புரட்சியாளர்களையும்”   அவர்களுடன் ஆயுதம் எடுத்திருக்கும் பரிதாபத்திற்குறிய பல்லாயிரக்கணக்கான ஏழைமக்களையும் கொன்றொழிக்கலாம்.  ஆனால், வீசிய குண்டுகளால் புதைக்கப்பட்ட கோபத்தில் இருந்து உயிர்த்தெழும் புதிய கோபங்களுக்கு அது என்ன பதில் சொல்லும்?

மனித குல ஆய்வாளரும், வரலாற்றாளருமான ராம் குகா, “வீட்டில் இருந்த மூன்று அறைகளில் ஒன்று தீப்பிடித்திருந்தது.  அதை அணைப்பதற்கு பதில் மற்றொரு அறைக்கு நீங்களே தீ வைக்கிறீர்கள். பிறகு மொத்த வீட்டையும் இடித்துத் தள்ளிவிடுகிறீர்கள்.  இது எப்படியோ, அப்படித்தான் இருக்கிறது நடப்பு” என்கிறார்.

இந்த காட்டு வேட்டை நடவடிக்கையை வடிவமைத்தவர்களுள் ஒருவரான உள்துறைச் செயலர் கோபால் பிள்ளை அதிகாரம் கோலோச்சும் ‘நார்த் பிளாக்’ கட்டிடத்தில் அமர்ந்திருக்கிறார்.  சராசரி சிடுமூஞ்சி இந்திய அதிகாரிபோல் எமது முதல் சந்திப்பில் அவர் இல்லை. நட்புணர்வும், சிந்தனையும் உடைய மனிதராகத் தோன்றுகிறார்.  தாம் பல ஆண்டுகள் வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றி இருப்பதாகவும், பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறை மக்களுக்கு என்ன செய்யும் என்பது பற்றி அறிந்திருப்பதாகவும் கூறுகிறார்.  இது எப்படி பெருத்த குளறுபடிகளைத் தூண்டி, எதையுமே உள்ளது உள்ளபடிப் பார்க்க முடியாத நிலையைத் தோற்றுவிக்கும்; எங்கும் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் விதைக்கும் என்பது பற்றியெல்லாம் தாம் அறிந்திருப்பதாகவும் கூறுகிறார். வெளிப்படையானவராகவும், எதற்கும் காது கொடுக்கத் தயாராய் இருப்பவராகவும் தோன்றினார்.  ஆச்சரியப்படத் தக்க வகையில் நேர்மையான ஒப்புதல்களை அவரிடம் காண முடிந்தது.  மணிப்பூரின் மொத்த சமூகமும் விரக்தியுற்றிருக்கிறது; மனித உரிமையாளர்கள் பெருத்த கூச்சல் போடும் பிரச்சினையான, சட்டீஷ்கரில், சல்வா ஜுடூம் அமைப்பை வளர்த்துவிட்டது தவறுதான்; அரசு முன்னெடுக்கத் தவறிய மக்கள் பிரச்சினைகளை பலமுறை நக்சலைட்டுகள் கையிலெடுத்து நிறைய செய்திருக்கிறார்கள் என்பது உண்மையே .. ஆனால், அவர்களது வன்முறை வழிப்பட்ட குறுக்கீடுகள் அரசின் செயல்பாடுகளுக்கு உண்மையான இடர்பாடுகளாய் இருக்கின்றன. என்று அவர் சொல்லும்போது அதற்கு என்ன பதில் சொல்வது?

அவரைப் பொருத்தவரையில் இந்த காட்டு வேட்டை நடவடிக்கை, அந்தப் பகுதிகளை அரசின் ஆளுமைக்கு உட்படுத்தும்படியாகத் திட்டமிடப்படும் ஒன்றே.  “நாங்கள் அந்த நிலத்தின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெற விரும்புகிறோம்; ஆனால், நாங்கள் சுடப்பட்டால் மட்டுமே திரும்பச் சுடுவோம்” என்கிறார் இவர்.  ”லால்கர் ஒரு முன்மாதிரி; நாங்கள் அம்மக்களுக்கு சேதம் விளைவிக்க விரும்பவில்லை; அந்தப் பகுதியில், பொது வினியோகம், நகரும் மருத்துவ ஊர்திகள், உறுதியான போலீசு நிலையம், பள்ளிகள்.. இப்படி அரசின் சமூக நிர்வாகத்தைத் மீளக் கொணர்வதே எமது உண்மையான வெற்றியாக இருக்கும்,  இவையே எமது இலக்குகள்” என்கிறார் இவர்.  உங்களுக்கு இவர் சொல்வது நடக்காதா என்று ஏங்கத் தோன்றும்.

சட்டீஷ்கர் மாநிலக் காடுகளில் உள்ள கிராமங்களை நிர்வாகம் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன.  அக்கிராமங்கள் வெகு தொலைவில் தனித்தனித் தீவுகளாக உள்ளன.  மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையில் இருக்கும் யாருக்கும் அம்மக்களது மொழி தெரியாது.  காட்டு வேட்டை நடவடிக்கை வெகுநாட்கள் முன்பிருந்தே திட்டமிடப்பட்டு வருகிறது.  நாடெங்கிலும் உள்ள மத்திய சேமக்காவல் படையினர் மற்றும் துணைராணுவத் துருப்புகளுக்கு தொடங்கவிருக்கும் இந்த நடவடிக்கைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.  காட்டுப் போர்ப் பயிற்சிக்கான 20 புதிய பள்ளிகள் தொடங்க அரசு அனுமதியளித்துள்ளது.  கோடிக்கணக்கான ரூபாய்கள் பெருமானமுள்ள இராணுவத் தளவாடங்களை வாங்குவதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் வரவேற்கப்பட்டுள்ளன.  இந்நிலையில், அதுபோல் சிவில் நிர்வாகத்தை ஊக்குவிக்கவும், நிலைமையை உணரச்செய்யவும் அதிவேகப் பயிற்சித் திட்டங்கள் ஏதும் உண்டா என்கிறீர்களா? இவர், இப்பிராந்தியத்தில் உள்ள சமூக ஆர்வலர்களை தங்களது பங்களிப்பை செய்வதற்காக அழைத்திருக்கிறாரா, என்கிறீர்களா? திரு. பிள்ளை, ஆ.. மறந்துவிட்டோமே என்பது போன்ற அதிர்ச்சிக்கு உள்ளாகி.. இல்லை என்ற ஒப்புதலுடன் “பயிற்சி”,  “பேச்சுவார்த்தை” என தனது மஞ்சள் குறிப்பேட்டில் எழுதிக்கொள்கிறார்.

காட்டு வேட்டை தொடங்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.  சொல்லப்பட்ட நோக்கத்துக்கும் செயலுக்கும் இடையே தொடர்பில்லை; அனுமார் வால் போல் நீண்டு சென்ற ஆய்வறிக்கைகளும், நல்ல பல ஆலோசனைகளும் திட்டக் கமிஷன் அலுவலகப் புழுதியில் புதைகின்றன. நன்கறிந்த விரக்தி மீண்டும் துளிர்விடத் தொடங்குகிறது.

நியாயமானதும் சமத்துவமானதுமான உலகத்தைக் காண விரும்பும் எவருக்கும் அரசியல் போராட்டத்தில் வன்முறை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை அங்கீகரிப்பதா இல்லையா என்பதே இன்றைய பெரும் பிரச்சினையாக உள்ளது. அரசு தனது அக்கறையின்மையை வெளிப்படுத்தும்போது, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டோர் போன்ற மக்களது அமைதிவழி இயக்கங்களுக்கும், பாக்சைட் சுரங்கப் பணியை எதிர்த்து நிற்கும் பழங்குடியினருக்கும், நர்மதா அணை எதிர்ப்புப் போராட்டத்துக்கும் அரசு செவிசாய்க்காதபோது, தனது சுகவாழ்வைத் துரந்து சக குடிமக்களான அந்த கையறுநிலையில் உள்ள மக்களோடு இணைந்து நிற்க முன்வராத ஒருவர் அம்மக்களின் ஒரே தற்காப்பான ஆயுதங்களைக் கைவிடக் கோருவதில் என்ன நியாயம் இருக்கிறது?

நக்சல் வன்முறையையும் தன்னெழுச்சியான மக்கள் வன்முறையையும் ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க வேண்டுமா?  இருந்தும், ஒரு ஜனநாயக சமூகத்தில், வன்முறை, அது எத்தன்மையதாயினும் அதை மன்னிக்க முடியுமா?  அது எங்குதான் ஜனநாயக வழிமுறையை விட்டுவைத்திருக்கிறது?

இவ்வகையிலான உள்போராட்டங்களுக்கு இடையிலும், அர்னாப் கோஸ்வாமி அடித்துக் கூறியதற்கு மாறாக, கிட்டத்தட்ட, மனித உரிமை சமூகம் முழுவதும், நக்சல் வன்முறை கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, அடக்கப்பட வேண்டியதே என்ற கருத்தை ஏற்றது. ஆயுதங்கள் அதிகரித்திருப்பதும், அன்னிய நாடுகளில் இருந்து தருவிக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதும் வன்முறையை வளர்த்திருக்கிறது.  பலரும் மதிக்கும் முன்னாள் காவல்துறைத் தலைவர் பிரகாஷ் சிங் சொல்வது போல, “நக்சல்கள், வழக்கமாக 20 போரைக் கொண்ட ’தளம்’ என்ற குழுவாக இயங்குவார்கள். இப்போது, தளம் 100 போர் அளவுக்கு அதிகரித்த எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. அவர்கள் அதிநவீன ஆயுதங்களை வைத்துள்ளனர். அவர்களது தாக்குதல்கள் மிகக் கொடூரமாக நடத்தப்படுகிறது.  இப்படிப்பட்ட ஆயுதக் கிளர்ச்சிகள் சகித்துக்கொள்ளத்தக்கவை அல்ல என்பதை நாம் அவர்களுக்குக் காட்டவேண்டும்”.

இந்த செயல்தந்திரம் பற்றியும் அதன் வல்லமை பற்றியும் மாற்றுக் கருத்து எழுகிறது.  உதாரணத்துக்கு, பெயர் சொல்ல விரும்பாத, பொதுவாய் தாக்குதல் குணம் கொண்டவர் எனக் கருதப்படும் ஒரு இராணுவத்துறை வல்லுனர் இந்த காட்டு வேட்டை நடவடிக்கை தொடர்பாக சில பாரதூரமான சந்தேகங்களை எழுப்புகிறார். பெரும்பாலான மனித உரிமைச் செயல்வீரர்கள் கொண்டிருக்கும் கவலையையே இவரும் பிரதிபலிக்கிறார்.  ”உங்கள் நிலத்தில், உங்கள் மக்களையே எதிர்த்த இப்படி ஒரு போலீசு நடவடிக்கை ஒரு பயங்கரமான படுகுழியில் விழுவதற்கு ஒப்பானது.  இந்த நடவடிக்கை ஒத்துவராத அண்டை நாடுகள் மேல் கையாளப்படும் ஒன்று. போலீசு ஒரு குற்றவாளியை, உதாரணத்திற்கு, ராம் லாலைப் பிடிப்பதற்கு அலையவேண்டிய ஒன்று. ஆனால், இப்படிப்பட்ட நடவடிக்கையில்  ராம்லால் யாரென்றும் தெரியாது, அவனைப் பற்றிய, அவனது செயல்பாடு பற்றிய தெளிவான துப்பும் கிடைக்காது.  நீங்கள் ராம்லாலின் சொந்தங்களையோ, அவனது மொத்த கிராமத்தையுமோ கொன்றழிப்பதில் போய் நிற்பீர்கள்.  மேலும், நீங்கள் அதை விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்றால், நீங்கள் யாரைக் கொன்றிருக்கிறீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியாது” என்கிறார் அவர்.

துணைராணுவத் துருப்போ அல்லது இராணுவமோ நுழைக்கப்பட்டுவிட்டால் அதைத் திரும்பப் பெருவது என்பது நடவாத செயல். அதிகார வர்க்கமோ, இராணுவத் தந்திரியோ, வல்லமைபெற்ற மந்திரியோ யாராய் இருந்தாலும், இந்நடவடிக்கை  ஏற்படுத்தும் திகில் உணர்வையோ, வீண் கொலைகளையோ, நியாயமான தவறுகளையோ, இவை ஏற்படுத்தும் பழிவாங்கும் உணர்ச்சியையோ தடுத்து நிறுத்த முடியாது. நண்பனும், குடும்பத்தாருமே உளவு சொல்பவரானால், பிறகு பார்ப்பவரெல்லாம் எதிரிகளே. இதற்கெல்லாம், காஷ்மீரும், வடகிழக்கு மாநிலங்களும் வேதனை மிக்க இரத்த சாட்சியங்களாய் நிற்கின்றன.

ஏற்கனவே இந்தப் பயனற்ற ஓட்டம் சடீஷ்கரில் தொடங்கிவிட்டது. தாக்குதலின் முதல் நடவடிக்கையாக, சென்ற வாரம், சிண்டகுஹா என்ற இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலையை அழிப்பதற்கு 100 கோப்ரா அதிரடிப்படையினர் கொண்ட குழு விரைந்தது.  அவர்கள் நக்சல் தீயால் சூழப்பட்டனர். ஏழு கோப்ராக்கள் கொல்லப்பட்டனர்.  பதிலுக்கு, 9 நக்சல்கள் தங்களால் கொல்லப்பட்டனர். (அவர்களது சடலம் தங்கள் வசம் உள்ளது) தாக்குண்ட மேலும் பலரை நக்சல்கள் இழுத்துச் சென்றுவிட்டனர் என்று அறிவிக்கின்றனர்.  இதை மாபெரும் வெற்றி என அறிவிக்க முயன்றது அரசு.  ஆனால், பயங்கரமான சூனியக்காரியின் சித்து வேலை (smoke and mirror) ஏற்கனவே அரங்கேறத் தொடங்கிவிட்டது. உள்ளது உள்ளபடி எதையும் இனி பார்க்கமுடியாது. கோப்ராக்கள் யாரையும் கொல்லவில்லை; சிலரைப் பிடித்துச் செல்வதற்காக ஏதுமறியா மக்களைக் கிராமத்தில் இருந்து வெளியே இழுத்துவந்தனர்;  அவர்களுள் ஒரு கிழவரும், ஒரு கிழவியும் இருந்தனர், என்கின்றனர் கிராம மக்கள்.  சட்டீஷ்கர் டி.ஜி.பி விஷ்வராஜன் ”என்னிடம் விவரம் ஏதுமில்லை” எனக் கூறி மேற்கொண்டு பதிலளிக்க மறுத்துவிட்டார்.  முதல் நடவடிக்கையிலேயே 6 கோப்ராக்களைப் பலிகொடுத்த வலி அவரிடம் வெளிப்பட்டது.

காட்டு வேட்டை தீவிரமடையும்போது இப்பிரச்சினைகள் எல்லாம் பூதாகாரமாய் பெருத்து நிற்கும்.  கணப்போழ்தில் மறையும் தீவிரவாதிகள், அடிபட்ட நாகங்களின் கோபத்திற்கு இலக்காக அவர்கள் விட்டுச் செல்லும் கிராமத்தினர், உள்ளும் புறமும் சூழும் பீதி, சந்தேகம், பழிவாங்கும் உணர்ச்சி, சல்வார் ஜுடூம் நடவடிக்கையின் போது நடந்ததைப்போல், நக்சல்களின் கோபத்துக்கும் அரசின்  கோபத்துக்கும் இடையே சிக்கும் அப்பாவிப் பழங்குடியினர், எனக் கண்ணில் விரிகிறது கட்டுக்கடங்காது காட்டின் மருட்சி.

ஒரு அழுத்தம் அதற்கு சமமானதும் எதிரானதுமான பதில் அழுத்தத்தை உருவாக்கும்.  பிரதமர் மன்மோகன் சிங்கால் இந்த எளிய வேதியியல் சமன்பாட்டைப் புரிந்துகொள்ள முடியவில்லை.  சல்வா ஜுடூம் செயல்பாட்டின் விளைவு ஏராளமான பழங்குடியினரை நக்சல்கள் பக்கம் துரத்திவிட்டது.  காட்டு வேட்டை நடவடிக்கை அவ்விடத்தைத் தீயிட்டுக் கொளுத்த உறுதியேற்கிறது. சல்வா ஜுடூமை எதிர்த்துப் பேசியதால் பினாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிகையால் வரவிருக்கும் உள்நாட்டுக் கலகத்தைப் பற்றி ஹிமான்ஷு குமார் எச்சரிக்கும்போது, அவர் சொல்லைக் கேட்பாரில்லை.

“கமாண்டோக்களை அல்ல, சுகாதார ஊழியர்களை, பள்ளி ஆசிரியர்களை சி.ஆர்.பி.எப் பாதுகாப்புடன் அனுப்புங்கள்” ;  “ஆதிவாசிகளுக்கு வாய்ப்புகளைத் திறந்து காட்டுங்கள், அவர்கள் சாவுக்கு பதில் வாழ்வைத் தெரிவு செய்வர்” என அவர் இரைஞ்சுகிறார்.  ஆனால் அவர் குரலின் வீச்சு உள்துறை அமைச்சகத்தின் வாயிலில் படிந்திருக்கும் தூசியைக்கூட அசைக்கவில்லை.

வளர்ந்து வரும் நக்சல்பாரி வன்முறை தொடர்பாக, பலமாய் நாட்டைக் கவ்வியிருப்பதும், அடக்கிவாசிக்கப் படுவதுமான இறுதி அம்சம் ஒன்று உள்ளது. அதுதான் புதிய தாராளவாத –பொருளாதார- நில ஆக்கிரமிப்பும் அந்த நிலத்தின் மீதான பழங்குடியினரின் உரிமையும் என்ற அம்சம்.  இன்றைய, பெரும்பாலான நக்சல் தலைவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விசயம் ஏதோ தற்செயல் நிகழ்வு அல்ல.   பத்திரிகையாளர் என். வேணுகோபல் கூறுவதுபோல, கம்யூனிஸ்ட் கட்சியால் அப்பட்டமாகக் கைவிடப்பட்ட 1946-51 ம் ஆண்டுகளின் தெலங்கானா இயக்கத்தில் வேர்கொண்டிருப்பதுதான் இந்த நக்சல்பாரி இயக்கம்.  இரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (1956), ஆந்திராவில் 60 லட்சம் ஏக்கர் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது.  ஆனால், நில உச்சவரம்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 1973ம் ஆண்டில், பணக்கார நிலவுடைமையாளர்களுக்குத் தாராளமான சலுகைகள் அளிக்கப்பட்ட பின் வெறும் 17 லட்சம் ஏக்கர் உபரி நிலம் மட்டுமே இருப்பதாக அரசு அறிவித்தது.  இறுதியில் 4 லட்சம் ஏக்கரே வினியோகிக்கப்பட்ட்து.  நிலம், வேலை, விடுதலை என்பதே அன்றைய அறைகூவலாய் இருந்தது.  இன்றும் நிறைவேறாத அந்த வேட்கையால் உந்தப்பட்டு, 46-51 தெலங்கானா போராட்டத்தில் முன்னின்ற குடும்பங்களில் இருந்து வந்தவர்களே இன்றைய நக்சல் இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள்.

முன்னாள் பழங்குடியினர் நல ஆணையரும், செலவீனங்கள் மற்றும் பொருளியல் விவகாரத் துறையின் (Dept. of Expenditure & Economic Affairs) முன்னாள் செயலருமான ஈ.ஏ.எஸ். சர்மா இப் பிரச்சினையின் மையமான விசயத்தை வெளிப்படுத்துகிறார்.  “நான் எந்த வகையான வன்முறையையும் முற்றாக எதிப்பவன், ஜனநாயக வழிமுறையில் உறுதியான நம்பிக்கை உள்ளவன்… ஆனால், இப்பிரச்சினையில் இடது தீவிரவாதம் என்பது ஒரு இரண்டாம்பட்சமான அம்சமே.  அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறது என்பது எத்தனை பழங்குடியினருக்குத் தெரியும்?  அரசு என்றால், அவர்களைப் பொருத்தவரை போலீசு, ஒப்பந்தக்காரர்கள், நில வர்த்தகக் கொள்ளைக்காரர்கள்.. அவ்வளவுதான்.  மேலும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை, பாரம்பரியமாய் பழங்குடியினர் அனுபவிக்கும் நிலத்தின் மீதும் காடுகளின் மீதும் அவர்களுக்கு முற்றுரிமையை வழங்கியுள்ளது.  தனியார் நிறுவனங்கள் அவர்களது நிலத்தில் சுரங்கம் தோண்டுவதைத் தடை செய்திருக்கிறது.  உச்சநீதிமன்றத்தில் 1997ம் ஆண்டு நீதிபதி சமந்தா அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பில் இந்த அரசியல் அமைப்பு அட்டவணைப்படியான உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.  அடுத்தடுத்து வரும் அரசுகள், அரசமைவுச் சட்டம் மற்றும் மேற்சொன்ன தீர்ப்புகளின் உண்மைப் பொருளை [சொல்லைத் திரிக்கலாம்] உணர்ந்து பின்பற்றுவாராயின் பழங்குடியினரின் வெறுப்புணர்ச்சி தானாகவே வடிந்துவிடும்” என்கிறார் இவர்.

திரு சர்மா கிட்டத்தட்ட சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.  பழங்குடியினரின் நிலங்களை அபகரித்து, அதில் நிரம்பி வழியும் கனிவளத்துக்காக, அந்நிலத்தைத் தனியார் நிருவனங்களுக்குத் தாரைவார்ப்பதே சட்டீஷ்கரில் சல்வா ஜுடூம் நடவடிக்கையின் உண்மையான நோக்கம், என்று மனித உரிமையாளர்கள் வெகுவாய் விவாதித்திருகின்றனர்.  கடந்த சில ஆண்டுகளிலேயே 600 பழங்குடியினர் கிராமங்கள் காலிசெய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மை இக்கருத்துக்கு வலுசேர்க்கிறது.  பழங்குடியினர் அந்த நிலத்தில் வாழவில்லை என்றால், அரசியல் நிர்ணயச் சட்ட்த்தின் வலுவற்ற இந்த ஐந்தாவது அட்டவணை பயனற்றுப்போகும்.

சல்வா ஜுடூம் கலைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், காட்டு வேட்டை நடவடிக்கை ஒருக்கால் அதன் இரண்டாவது சுற்றாக இருக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது.  எது எவ்வாறாயினும், அதன் கெடு நோக்கத்திற்காகவோ, மோசமான செயல்பாட்டுக்காகவோ அல்லது திட்டமிடப்படாத சகமனிதர்களின் பெருத்த அழிவுக்காகவோ இப்படிப் பலவற்றுக்காக, தொடங்க இருக்கும் இந்தக் காட்டுவேட்டை நடவடிக்கை பற்றிப் பயப்பட வேண்டியிருக்கிறது.

இடைப்பட்ட வேளையில், நாம் அனைவரும் அரசியல் நிர்ணய சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையை சற்று ஊன்றிப் படிப்போம்.

ஆங்கில மூலம் தெகல்கா, vol 6, இதழ் 39, 3.10.2009 ,  தமிழாக்கம்: அனாமதேயன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

– தமிழாக்கம்: அனாமதேயன்

தெலுங்கானா : புதைந்துள்ள உண்மைகள்

vote-012இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9-ஆம் தேதியன்று, தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க கொள்கையளவில் ஒப்புக் கொண்டது, ஆளும் காங்கிரசு கூட்டணி அரசு. இதை எதிர்த்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், அதைத் தொடர்ந்து, ஒருமித்த கருத்து உருவாகும்வரை உடனடியாகத் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கப் போவதில்லை என்று காங்கிரசு ஆட்சியாளர்கள் அடித்த பல்டி, அதை எதிர்த்து தெலுங்கானாவில் மீண்டும் போராட்டம் – என ஆந்திர மாநிலம் தொடர் போராட்டங்களால் நிலைகுலைந்து போயுள்ளது.

+++

கடலோர மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா ஒப்பீட்டளவில் பெரியது. வாரங்கல், அதிலாபாத், கம்மம், மெஹ்பூப் நகர், ரங்கா ரெட்டி, கரீம் நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் தெலுங்கானா என்றழைக்கப்படுகிறது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக இருந்த காரணத்தால், தெலுங்கானாவில் பேசப்படும் தெலுங்கில் உருது கலப்பு அதிகமாக உள்ளது. கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மாபெரும் தெலுங்கானா பேரெழுச்சியைத் தொடர்ந்து, போலி சுதந்திரத்துக்குப் பின்னர் கடுமையான அடக்குமுறைக்குப் பிறகு, தெலுங்கானா சமஸ்தானம் இந்தியாவுடன் கட்டாயமாக இணைக்கப்பட்டது.

காந்தியவாதியான பொட்டி சிறீராமுலு, தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாநிலம் கோரி உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் விளைவாக, அன்று சென்னை ராஜதானியில் இருந்த ஆந்திரப் பிரதேசம், மொழிவழி மாநிலமாக 1953-இல் பிரிக்கப்பட்டது. அப்போது கர்நூல்தான் அதன் தலைநகர். பின்னர், மொழிவாரி மாநிலம் என்ற அடிப்படையில் தெலுங்கு மொழி பேசும் மக்களைக் கொண்ட தெலுங்கானாவையும் உள்ளடக்கிய ஆந்திரப் பிரதேசமாக 1956-இல் ஒருங்கிணைக்கப்பட்டது. தெலுங்கானா பிராந்தியத்தைக் கொண்ட நிஜாம் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த ஐதராபாத், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரானது. ஒட்டுமொத்த ஆந்திராவின் மக்கள்தொகையில் நான்கு சதவீதம் மட்டுமே உள்ள ரெட்டிகளும் சவுத்திரிகளும் தெலுங்கானா பகுதியில் அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்டனர். நிலப்பிரபுக்களான இவர்களின் ஆதிக்கம், அரசாங்கப் பதவிகளில் இவர்கள் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டதன் காரணமாக, தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் ஆந்திராவுடன் இணைய மறுத்து, தனி மாநிலமாக்கக் கோரினர்.

அதன் பின்னர், 1961 தேர்தலுக்குப் பிறகு உருவாகும் அம்மாநில சட்டசபை, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆந்திரப் பிரதேசத்தில் இணைவதாகத் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும், தெலுங்கானா பிராந்தியத்தை ஆந்திரப் பிரதேசத்துடன் இணைப்பது; இல்லையேல், தனிமாநிலமாக நீடிக்க அனுமதிப்பது என்று அன்றைய மாநில மறுசீரமைப்புக் கமிஷன் பரிந்துரை செய்தது. அப்பரிந்துரையையும் இதர எழுதப்படாத ஒப்பந்தங்களையும் மைய அரசு கைகழுவியது. இதனால் தெலுங்கானா பிராந்திய நடுத்தர வர்க்கத்தினர் அதிருப்தியடைந்தனர். தனி மாநிலக் கோரிக்கை அவ்வப்போது குமுறலாக வெளிப்பட்டு வந்தது.

ஆந்திராவின் பிற பகுதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள்-முதலாளிகளின் ஆதிக்கம், கல்வி – வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளில் தெலுங்கானா நடுத்தர வர்க்கத்துக்கு உரிய பங்கு கிடைக்காமை ஆகியவற்றினால் ஏற்பட்ட குமுறல்களின் காரணமாக 1969-இல், தெலுங்கானா பகுதியில் மாணவர்கள்-இளைஞர்கள் தனித் தெலுங்கானா மாநிலம் கோரிப் போராட்டங்களை நடத்தினர். ஏறத்தாழ 360 பேர் அப்போராட்டத்தில் உயிரிழந்தனர். கடும் அடக்குமுறைக்குப் பிறகு, அந்தப் போராட்டம் படிப்படியாக நீர்த்துப் போனது.

தனியார்மய-தாராளமயமாக்கலைத் தொடர்ந்து கல் குவாரி, நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், வீட்டுமனைத் தொழில், தகவல் தொழில்நுட்பத்துறை, சேவைத் துறை, சினிமாத் துறை, காடுகள் முதலானவற்றில் தெலுங்கானாவுக்கு வெளியேயுள்ள பிற மாவட்டங்களின் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கமும் சூறையாடலும் தெலுங்கானா பிராந்தியத்தில் தீவிரமடைந்தன. ஆடம்பர, உல்லாச, களிவெறியாட்டங்களில் இக்கும்பல் கொட்டமடித்தது. இப்புதுப் பணக்கார கும்பலின் வாரிசுகள் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகளைப் பெருமளவில் கைப்பற்றிக் கொண்டனர். தெலுங்கானா நடுத்தர வர்க்கம் அவர்களோடு போட்டியிட இயலாமல் குமுறியது.

அதன் எதிரொலியாக, தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகிய சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சி 2001-இல் உருவாகியது. தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் மையமான கோரிக்கை.

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவைத் தொடர்ந்து, காங்கிரசில் நிலவும் கோஷ்டிச் சண்டையைச் சாதகமாக்கிக் கொண்டு, தோல்வியடைந்து கிட்டத்தட்ட முடமாகிவிட்ட தமது கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன், தனித் தெலுங்கானா கோரி கடந்த நவம்பர் இறுதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், சந்திரசேகர ராவ். அதை ஆதரித்து மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். மாணவர்கள் மீதான போலீசின் கண்மூடித்தனமான தடியடித் தாக்குதலைத் தொடர்ந்து ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்குரைஞர்கள், அறிவுத்துறையினர் – என அம்மாநிலமெங்கும் போராட்டத்தை ஆதரித்து நடுத்தர வர்க்கத்தினர் அணிதிரண்டனர். தனித் தெலுங்கானா மாநிலம் கோரி சிலர் தற்கொலை செய்து கொண்டதும், உணர்ச்சிமிகு போராட்டமாக அது மாறத் தொடங்கியது.

இதற்கு மேலும் தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கையைத் தட்டிக் கழித்தால், தெலுங்கானா பிராந்தியத்தில் காங்கிரசு செல்லாக்காசாகிவிடும் என்பதாலும், இதேபோல நாட்டின் இதர பகுதிகளிலும் தனி மாநிலம் கோரி போராட்டங்கள் பெருகத் தொடங்கிவிடும் என்ற அச்சத்தாலும், போராட்டத்தைச் சாந்தப்படுத்தி நீர்த்துப் போக வைக்கும் உத்தியுடனும் காங்கிரசு ஆட்சியாளர்கள் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை கொள்கையளவில் ஏற்பதாக அறிவித்தனர். தனி மாநில அறிவிப்பைத் தொடர்ந்து சந்திரசேகர ராவ், உண்ணாவிரதத்தைக் கைவிட்டதோடு, போராட்டங்களை நிறுத்திக் கொள்வதாக அறிவித்து, 2014-க்குள் தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கித் தருமாறு மைய அரசிடம் கோரினார்.

ஆனால்,தெலுங்கானா மாநிலம் உருவானால், அது இன்றைய ஆந்திரப் பிரதேசத்துக்கு இழப்பாக இருக்கும், தலைநகரான ஐதராபாத் தெலுங்கானாவுக்குப் போய்விடும் என்றெல்லாம் வாதங்களை வைத்து, தெலுங்கானா கோரிக்கையை ஆந்திராவின் பிற பகுதிகளில் உள்ள பெருமுதலாளிகளும், புதுப் பணக்கார நில மாஃபியா-சுரங்க மாஃபியாக்களும் எதிர்க்கின்றனர். தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள்தான். ஐதராபாத் மற்றும் தெலுங்கானா பிராந்தியத்திலுள்ள பெரு நகரங்களில் சினிமாத் துறை, வீட்டுமனைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை முதலானவற்றில் கோடிகோடியாய் முதலீடு செய்து சூறையாடுவதும் இந்தக் கும்பல்கள்தான். இவர்கள்தான் இப்போது தெலுங்கானா எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியிலிருந்து இயக்குகிறார்கள்.

அரசியல் சட்டப்படி, புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு, அரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று, கருத்தறிவதற்காக அம்மாநிலச் சட்டமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும். சட்டமன்றத்தின் கருத்தை நாடாளுமன்றம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் காங்கிரசு ஆட்சியாளர்களோ, இத்தீர்மானம் ஆந்திர சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஒருமித்த கருத்தின்படி முடிவு செய்யப்படும் என்று கூறுகின்றனர். காங்கிரசின் நிதியாதாரமாக உள்ள புதுப் பணக்கார மாஃபியா கும்பலைச் சாந்தப்படுத்தவும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று காரணம் காட்டி,மீண்டும் இழுத்தடிக்கவுமே காங்கிரசு கயவாளிகள் முயற்சிக்கின்றனர். இதனாலேயே, தனித் தெலுங்கானாவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைக் காரணம் காட்டி, தீர்மானம் நிறைவேறாத வகையில் ஆந்திர சட்டமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க மைய அரசு கொள்கை அளவில் இசைவு தெரிவித்துள்ளதன் எதிரொலியாக, பல்வேறு பெரிய மாநிலங்களிலும் இத்தகைய கோரிக்கை எழுந்துள்ளது. வன்னியர் நாடு என்ற கோரிக்கையுடன் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று முன்பு கோரி வந்த பா.ம.க.வின் ராமதாசு, இப்போது மீண்டும் சென்னையைத் தலைநகராகக் கொண்ட வட தமிழ்நாடு என்றும், மதுரையைத் தலைநகராகக் கொண்ட தென் தமிழ்நாடு என்றும் பிரிக்க விரும்புவதாக சாதிய அடிப்படையில் அறிவித்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் கடந்த 50 ஆண்டுகளில் 12 புதிய மாநிலங்கள் உருவாகியுள்ளதைக் காட்டி, உ.பி. மாநிலத்தை மூன்றாகப் பிரிக்கக் கோருகிறார், மாயாவதி. உ.பி.-பீகாரிலிருந்து போஜ்பூர், அசாமிலிருந்து போடோலாந்து, உ.பி.-ம.பி.யிலிருந்து பண்டேல்கண்ட், மகாராஷ்டிராவிலிருந்து மரத்வாடா மற்றும் விதர்பா, ஒரிசாவிலிருந்து மகா கவுசல், பீகாரிலிருந்து மிதிலாஞ்சல், ராஜஸ்தானிலிருந்து முரு பிரதேஷ், உ.பி.யிலிருந்து பூர்வாஞ்சல், குஜராத்திலிருந்து சௌராஷ்டிரா – எனத் தேசிய இன அடிப்படையில் அல்லாமல், ஒரே இனம் – ஒரே மொழி பேசும் மாநிலத்திலேயே, பிராந்திய அடிப்படையில்-சாதிய அடிப்படையில், மொழிச் சிறுபான்மையினர் அடிப்படையில் தனி மாநிலக் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கட்டுமானத்தில், நிர்வாகத்தைத் துறை வாரியாகப் பிரிப்பதும், அது போல மாநிலங்களையும், மாவட்டங்களைப் பிரிப்பதும் நடக்கக்கூடியதுதான். அவ்வாறு மாவட்டங்களைப் பிரிக்கக் கோரி மக்கள் போராடுவதை ஜனநாயகக் கோரிக்கையாகக் கருத முடியாது. பெரம்பலூர் மாவட்டத்துடன் அரியலூரைச் சேர்க்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டமும், செங்கல்பட்டில் இருந்து மாவட்ட நீதிமன்றங்களை காஞ்சிபுரத்துக்கு மாற்ற வேண்டும், மாற்றக் கூடாது என்று அந்தந்த பகுதிவாழ் மக்கள் நடத்திய போராட்டமும், அரசுத் திட்டங்கள்-சலுகைகளைப் பெறுவதற்கான பொருளாதாரப் போராட்டம்தானே தவிர, அது முற்போக்கான – ஜனநாயகக் கோரிக்கையுடன் நடத்தப்படும் போராட்டமல்ல.

இப்படித்தான் தெலுங்கானா தனி மாநிலப் போராட்டத்தையும் பார்க்க முடியும். பிராந்திய உணர்விலிருந்து எழும் பொருளாதாரவாதக் கோரிக்கைதான் இது. ராயலசீமா மற்றும் கடற்கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம்-சூறையாடலைக் கண்டு குமுறி, அவர்கள் இடத்தை தாங்கள் பிடிக்க வேண்டும் என்ற ஏக்கத்திலிருந்துதான் தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டம் நடக்கிறது. தெலுங்கானா பிராந்தியத்தில் வீட்டுமனை, கல் குவாரிகள், கனிமச் சுரங்கங்கள், காட்டுவளம் முதலானவற்றைச் சூறையாடி ஆதிக்கம் செலுத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்களுக்கு எதிராக தெலுங்கானா பிராந்திய மக்கள் இதுவரை எந்தவொரு போராட்டத்தையும் கட்டியமைக்கவில்லை. மாறாக, தாங்கள் வளர்ச்சித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக, பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே நடுத்தர வர்க்கம் குமுறுகிறது. உயர்கல்வி,-வேலைவாய்ப்பு, அரசாங்கப் பதவிகள் முதலானவற்றில் தாங்களும் அமர வேண்டும் என்ற வேட்கையே தனி மாநிலக் கோரிக்கையாக எழுந்துள்ளது.

ஆனால் மாவோயிஸ்டுகளோ, அரசுக்கு எதிரான எந்தப் போராட்டத்தையும் நாம் ஆதரிக்க வேண்டும், அது முற்போக்கான போராட்டம் என்று கருதுகின்றனர். போராட்டத்தின் கோரிக்கையைப் பற்றிப் பரிசீலிக்காமல், அப்போராட்டத்தைப் போர்க்குணமிக்கதாக மாற்றுவதன் மூலம், அதை புரட்சிகரப் போராட்டமாக வளர்த்தெடுக்க முடியும் என்றும் குருட்டுத்தனமாக நம்புகிறார்கள். ஏற்கெனவே, காலிஸ்தான் போராட்டத்தை இந்த நோக்கத்தில்தான் ஆதரித்தனர். பின்னர், ’80-களில் தனித் தெலுங்கானா போராட்டத்தை முன்னெடுப்பது என்ற பெயரில் தெலுங்கானா பகுதியில் சில சாகசவாத நடவடிக்கைகளிலும் இறங்கினர். இப்போது நடந்த தனித் தெலுங்கானா போராட்டத்தையும் இந்த அடிப்படையிலேயே ஆதரித்துப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கின்றனர்.

ஓட்டுக்காக, சந்தர்ப்பவாதமாக பல கட்சிகள் தனி மாநிலக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்கான போராட்டத்தை இந்துவெறி பா.ஜ.க.வும் ஆதரிக்கிறது. அது, ஒரே மொழி பேசும் ஒரு தேசிய இனத்தைக் கொண்ட மாநிலத்தை, நிர்வாக வசதிக்காகப் பிரிப்பதில் தவறில்லை என்று வாதிடுகிறது. இதன்மூலம் நிர்வாகம் எளிமையானதாகவும் சிறப்பாகவும் அமையும் என்கிறது. ஆனால் பா.ஜ.க.வின் நோக்கம் வேறானது. ஒரே மொழி பேசும் ஒரே இனத்தைச் சேர்ந்த மாநிலம் என்றால், அங்கு தமிழ்நாடு போல தேசிய இனப் போராட்டங்கள் எழும்; தேசிய ஒருமைப்பாடு கந்தலாகிப் போகும்; ஒரே இனத்தை பல மாநிலங்களாகக் கூறு போட்டால், அத்தகைய போராட்டங்கள் எழுவது நீர்த்துப்போகும். எனவே, தேசிய இன-மொழி அடையாளங்களுக்கு அப்பால், இந்துத்துவ அடிப்படையில் “தேசிய’ ஒருமைப்பாட்டை நிறுவவே அது விழைகிறது. காங்கிரசும் இதே நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது.

மேலும், பெரிய மாநிலம் என்றால் பிராந்திய கட்சிகள் செல்வாக்கு செலுத்தி மைய அரசை ஆட்டிப் படைக்கின்றன. எனவே, மாநில அளவில் செல்வாக்கு பெற்றுள்ள பிராந்திய கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் கூடுதல் பங்கு கேட்டு நிர்ப்பந்திப்பதைத் தடுக்க, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்பதே ராகுல் காந்தியின் பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டம். இதனால்தான் வெள்ளோட்டமாக இப்போது தெலுங்கானாவைப் பிரிப்பதாக அறிவித்து, விளைவுகளைப் பரிசீலித்து, அடுத்த கட்டமாக பிற மாநிலங்களையும் பிரிக்க மைய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்போல, மொழி-இன அடிப்படையில் அல்லாமல், நிர்வாக அடிப்படையிலான பிரிவினை கொண்டதாக, பெரிய மாநிலங்களை மாற்றியமைக்கும் நோக்கத்துடன்தான், தற்போது மாநில மறுசீரமைப்புக் கமிசன் உருவாக்கப்படுகிறது.

மறுபுறம், ஒரே தேசிய இனத்தைக் கொண்ட பெரிய மாநிலம் என்றால், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மறுகாலனியாக்கச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களைப் போடுவதில் பல சிக்கல்கள் எழுகின்றன. பிராந்திய நலன்களை முன்வைத்து, அரசியல் ஆதாயத்துக்காக எதிர்க்கட்சிகள் இத்தகைய ஒப்பந்தங்களை எதிர்த்து நிறைவேற்ற முடியாமல் இழுத்தடிக்கின்றன. சிறிய மாநிலங்கள் என்றால், பின்தங்கிய மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் எதிர்க்கட்சிகளை வாயடைக்கச் செய்து, இத்தகைய மறுகாலனியச் சூறையாடலுக்கான ஒப்பந்தங்களை அதிக சிக்கல் இல்லாமல் நிறைவேற்ற முடிகிறது. இதற்கு, சிறிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட ஜார்கண்டும், சட்டிஸ்கரும் சான்றுகளாக உள்ளன. ஏகாதிபத்தியவாதிகள் இந்த நோக்கத்தோடுதான் நிர்வாக வசதிக்காக சிறிய மாநிலங்களாகப் பிரிப்பதை ஆதரிக்கின்றனர். ஏகாதிபத்தியவாதிகளின் விருப்பத்தையே தேசியக் கட்சிகளும்எதிரொலிக்கின்றன. இந்த உண்மைகளைக் காண மறுத்து, தனி மாநிலக் கோரிக்கையை குருட்டுத்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அடிப்படையிலேயே தவறானதாகும்.

எனவே தற்போது தனி தெலுங்கானா கோரி நடக்கும் போராட்டம், பொருளாதாரவாதக் கோரிக்கைதானே தவிர, அது தேசிய இன உரிமைக்கான போராட்டமே அல்ல. அரசுக்கு எதிரான போராட்டம், மக்களின் நீண்டகால விருப்பம் என்பதை வைத்து அதை முற்போக்கான-ஜனநாயகக் கோரிக்கையுடன் நடக்கும் போராட்டமாகவும் கருத முடியாது. அதேசமயம், தெலுங்கானா பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி சூறையாடிவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்கள், தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து, ஒரே ஐக்கியப்பட்ட ஆந்திரா என்ற கோரிக்கையுடன் நடத்தும் எதிர்ப்போராட்டமும் நியாயமானதல்ல. அரசாங்கப் பதவிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்குமான போட்டாபோட்டியில், பாட்டாளி வர்க்கம் இதில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.

– புதிய ஜனநாயகம், ஜனவரி, 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

வரதட்சணைக்காக நிர்வாணப்படத்தை வைத்து மிரட்டிய வக்கிரக் கணவன்!!

211

vote-012ஞாயிற்றுக் கிழமை (14.02.10) டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் புரட்டிக் கொண்டிருந்த போது அந்தச் செய்தி கண்ணில் தென்பட்டது.

செல்பேசி செக்ஸ் முறைகேடுகள் மலிந்து விட்ட நாட்டில் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக சொந்த மனைவியை நிர்வாணப் படமெடுத்து வரதட்சணைக்காக மிரட்டியிருக்கிறான் ஒரு சென்னைக் கணவன்.

26வயது சதீஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) டிசம்பர் 2008இல் திருமணம் செய்து கொண்டான். பொன்னும், பொருளும், பணமுமாய் 20 இலட்சம் வரை வரதட்சணையாக பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகும் வரதட்சணை வெறியடங்காத சதீஷ் வீட்டார் அந்தப் பெண்ணை மேலும் கொண்டு வருமாறு வற்புறுத்தியிருக்கின்றனர். இதற்காகவே அந்தப்பெண்ணுடன் தாம்பத்ய உறவு கூட வைக்காமல் இருந்திருக்கிறான் அந்தக் கணவன்.

பொறுமையிழந்த அந்தப்பெண் தனது பெற்றோரிடம் இந்தக் கொடுமைகளை சொல்லி அழுதிருக்கிறாள். அவர்களும் இது குறித்து சதீஷ் வீட்டில் நியாயம் கேட்டிருக்கின்றனர். இதற்குப் பிறகு கொடுமை அதிகரித்ததே தவிர குறையவில்லை. சதீஷும் அவனது சகோதரர்களும் அந்தப் பெண்ணை சித்திரவதை செய்திருக்கின்றனர். சதீஷின் அப்பா மருமகளிடம் எல்லை மீறி நடக்க முயற்சித்திருக்கிறார். இதை கணவனிடம் புகாராகச் சொல்லியும் அவன் அதை சட்டை செய்யவில்லை.

இறுதியாக அந்தப் பெண்ணை தனியறையில் அடைத்து சன்னல் வழியாக உணவு மட்டும் கொடுத்து, அவளது நிர்வாணப் படங்களை நண்பர்கள் மூலம் வெளியிட்டு நாசப்படுத்துவேன் என்று சதீஷ் மிரட்டியிருக்கிறான். இதற்கு மேலும் பொறுமை காப்பதில் பலனில்லை என்று அந்தப் பெண் அந்தச் சிறையிலிருந்து எப்படியோ தப்பிவிட்டு தனது வீட்டுக்குக் கூட போகாமல் நேராக போலீசிடம் போய் புகார் செய்திருக்கிறாள். போலீசும் வரதட்சணை பிரிவு, பெண்ணை அடித்து துன்புறுத்துதல் முதலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சதீஷையும் அவனது உறவினர்களையும் தேடிவருகிறார்கள்.

இதுவரை இந்தச்செய்தியை படித்துவிட்டு செல்லும் ஆண்கள் சதீஷின் வக்கிரத்தை எல்லோரையும் போல் கண்டித்துவிட்டு மறந்துவிடக் கூடும். ஆனால் தம்முள்ளும் சதீஷ் அளவுக்கு வக்கிரமாயில்லையென்றாலும் சற்று மென்மையான ஒரு சதீஷ் இருப்பான் என்பதை எத்தனை பேர் மறுக்க முடியும்?

ஊடகங்களில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை மூலம் காதலர் தினம் தனது பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்தி விட்டுச் சென்று விட்டது. இந்து மதவெறியர்கள் வழக்கம் போல தாலிகளை வைத்து காதல் என்றால் ஆபாசம், மேலைநாட்டு வக்கிரமென்ற உதார்களும் நம்மில் பலர் பார்த்திருக்கக் கூடும். சாதிக்குள்ளே மணம் முடித்து இந்து மதத்தின் மேன்மையை காப்பாற்றுவது அவர்களது நோக்கம். ஆனால் அவர்களது நோக்கத்திற்குப் பங்கம் வராமல் பெற்றோர் பார்த்து முடிக்கும் சம்பிரதாய திருமணங்கள்தான் நாட்டில் அதிகம்.

காதலும் கூட சாதி மறுப்பு என்பதை விட சம தரத்திலான சாதி, வர்க்கம், அந்தஸ்து, பணம், வேலை எல்லாம் பார்த்துத்தான் நடக்கிறது என்பது வேறு விசயம். இதையே சாதிக்குள் நடத்தினால் அது நிச்சயிக்கப்பட்ட திருமணம். இந்த எழவுகளை பொருத்தம் பார்த்து எப்படியோ திருமணம் செய்து கொண்டு ஒழியட்டும். ஆனால் எனக்கு வரதட்சணை வேண்டாமென்று இத்தகைய திருமணங்களில் கூட செய்து காட்டலாமே?

தன்னை முற்போக்காளன், நல்லவன், புரட்சிக்காரனென்று அற்ப விசயங்களுக்காக சித்தரித்துக் கொள்ளும் இளைஞர்கள் கூட இந்த வரதட்சணையை வேண்டாமென்று மறுப்பதில்லை. அல்லது நாசுக்காக மொக்கையான காரணங்களைச் சொல்லி சமாளிக்கிறார்கள்.

மணம் முடிக்கும் பெண்களை ஆண்கள் ஆயுசு வரைக்கும் காப்பாற்றுவதற்காகத்தான் இந்த வரதட்சணையை பெண்ணின் தந்தை தரவேண்டுமென்று பாரம்பரிய விளக்கத்தை முதலில் சொல்வார்கள். இதன்படி பெண்ணென்பவள் சுமை. அல்லது மாடு. அந்த மாட்டிற்கு தீனியும், தண்ணீரும் கொடுத்து தொழுவத்தில் கட்டிவைப்பதற்குத்தான் அந்த தட்சணை. பதிலுக்கு அந்த மாட்டுப்பெண் சமையல், துவையல், இல்லப் பராமரிப்பு, விருந்தினர் உபசரிப்பு, குழந்தைகள் வளர்ப்பு, செவிலியர் வேலை, இரவில் தாசி வேலை எல்லாம் நேரத்திற்கு செய்யவேண்டும்.

இப்படி எல்லாவகையிலும் பெண்ணின் இரத்தத்தை அட்டைகள் போல உறிஞ்சிக்கொள்ளும் ஆணிணத்து புண்ணியவான்கள் என்றைக்காவது இந்த வேலைகளை செய்வதற்கு முன்வந்தது உண்டா? கிடையாது. போகட்டும். செய்யாத, செய்ய முடியாத, விரும்பாதா இந்த வேலைக்கு ஊதியம் கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு கணவனும் முழு ஆயுளில் பல இலட்சங்களை செலவிட வேண்டியிருக்கும்.  குடும்பத்து வேலையை எல்லாம் பணத்தால் மதிப்பிட முடியாது என்று நொள்ளை பேசும் வீட்டின் பெருசுகள் திருமண நேரத்தில் வாங்கும் வரதட்சிணையின் மதிப்பை வைத்தே அந்தப் பெண்ணை அளவிடுவார்கள். கூடவே இந்த மதிப்பிட முடியாத வேலை செய்வதற்கு ஒரு பெண்ணோடு வரதட்சணையாக பெரும் சொத்தையும் பிடுங்குகிறோமே என்று எள்ளளவும் குற்ற உணர்வு கிடையாது.

அடுத்து இந்த வரதட்சணையை அந்த பெண்ணின் நன்மைக்காகத்தானே வாங்குகிறோம் என்று அளப்பார்கள். விசேசங்களுக்கு குடும்பத்தின் அந்தஸ்தை நிலைநாட்டும் அலங்காரக்கடை பொம்மையாக மருமகள் அவதரிக்க உதவும் நகைகள் மற்ற நேரத்தில் பீரோவில் தூங்கும். பெரும் செலவுகள் வரும்போது கணவனுக்கு கைகொடுப்பது அந்த நகைகள்தான். பின்னர் பெண் குழந்தை ஆளாகி மணமகளாக செல்லும்போது அந்த நகைகளும் புதிய தட்சணையாக செல்ல நேரிடும். இதைத் தவிர அந்த நகைகள் அந்தப் பெண்ணுக்கு ஒரு மயிரும் பலனளிப்பதில்லை.

“பையனை செலவு செய்து படிக்க வைத்திருக்கிறோம், அதனால் கை நிறைய சம்பளம் வாங்குகிறான், அப்படி உயர்ந்த இடத்திற்கு வாக்கப்பட வேண்டுமென்றால் வரதட்சணை கொடுப்பதுதானே முறை” என்று வியாபாரக் கணக்கு பேசுவார்கள். இல்லையென்றால் ஏழை பாழைகளைக் கல்யாணம் செய்யலாம் என்றும் உபதேசிப்பார்கள். காசுக்கேற்ற தோசை மாதிரி ஏழைகளும் ஏதாவது செலவழித்துத்தானே திருமணங்கள் செய்யவேண்டியிருக்கிறது. சமூகத்தில் வரதட்சணை என்பது அழிக்க முடியாத விதி என்று ஆகிவிட்டபோது ஏழை மட்டும் அதை மீறுவது எப்படி சாத்தியம்?

ஏற்கனவே கை நிறைய சம்பளம் வாங்கும் கபோதிகள் அத்தோடு திருப்தி அடையவேண்டியதுதானே? நியாயமான உழைப்பில் கல்விச் செலவை செய்திருந்தால் இந்த அநியாயமான தட்சணையை எதிர்பார்க்கத் தோன்றாது. ஊரைக் கொள்ளையடித்தோ, லஞ்சம் வாங்கியோ, முறைகேடுகள் செய்தோ செலவழித்திருந்தால் கண்டிப்பாக தட்சணை மூலம் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்றுதான் தோன்றும். சுயநிதிக் கல்லூரிகளில் சில பல இலட்சங்கள் கொடுத்து சீட்டு வாங்கி டாக்டராகவோ, இன்ஜினியராகவோ குதிப்பவர்கள் திருமண வியாபாரம் மூலமே அதை சரிக்கட்டுகிறார்கள்.

இத்தகைய உயர் குடி ஆண் குதிரைகள் அதிகம் விலைபோகும் என்பது பெண்கள் விற்கபடும் சந்தையை வைத்தே உருவாக்கப்படுகிறது. மணமகளின் தந்தையும் ஊரைக் கொள்ளையடித்து வந்திருந்தால் தட்சணையை கணக்கு பார்க்காமல் கொடுப்பான். நேர்மையானவானாக இருந்தால் இருக்கும் சொத்துபத்துக்களை விற்றுவிட்டோ இல்லை கந்து வட்டிக்கு கடன்வாங்கியோ வரதட்சணை கொடுப்பதற்கு தயாராக இருப்பான். இதன் மூலம் அந்த தந்தை தனது எஞ்சிய வாழ்நாட்களை ஆயுள்கைதி போல கழிப்பதற்கு தயாராவார்.

இதில் 100பவுனுக்கு ஒரு பவுன் குறைந்தால் கூட போதும், பையன் வீட்டார் அந்தப் பெண்ணை ஏமாற்றுக்காரியாகவே நடத்துவார்கள். தமிழகத்தின் ஏழை மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை என்பது இந்த வரதட்சணை அநீதியின் காரணமாகத்தான் நடக்கிறது என்பது உண்மை. அந்த வகையில் வரதட்சணை வாங்கும் ஒவ்வொருவரும் தருமபுரியிலோ, உசிலம்பட்டியிலோ கொல்லப்படும் பெண் சிசுக் கொலைக்கு காரணமாகத்தான் இருக்கிறார்கள்.

சமீபத்திய வரவான ஐ.டிதுறை மற்றும் அமெரிக்க மாப்பிள்ளைகள் என்பது மேட்டுக்குடியின் வரதட்சணையை ராக்கெட் வேகத்தில் எகிற வைத்திருக்கிறது. தனது பெண் அமெரிக்காவில் சீரும் சிறப்புமாக வாழ்வாள் என்று நம்பி மொத்த வாழ்க்கை சம்பாத்தியத்தையும் மகளுடன் அனுப்பி வைக்கும் தந்தைமார்கள் அதன்பிறகாவது நிம்மதியாக வாழ்கிறார்களா? இல்லை காரில் இருந்து தள்ளப்பட்டு குற்றுயிரும் கொலையுயிருமாக வரும் மகளுக்காக விமான நிலையத்தில் காத்திருக்கிறார்களா?

வாரிசுகளில் இருபாலாரும் இருந்தால் வரதட்சணை கொடுப்பதற்காக வரதட்சணை வாங்குவதாக நியாயம் பேசுவார்கள். ஏன் வரதட்சணை வாங்காதவனுக்குத்தான் எனது மகள் என்று முடிவெடுக்க வேண்டியதுதானே? அப்படி முடிவெடுத்து விட்டு திருமணம் செய்ய நினைக்கும் இளைஞர்களை சமூகம் பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்று வைத்திருக்கிறது என்பதால் எந்தத் தந்தையும் தனது மகளின் வாழ்வில் ரிஸ்க் அல்லது நல்ல முடிவு எடுப்பதில்லை.

இன்னும் விதவையாக இருந்தால் மனிதாபிமானம் அதிகம் இருக்கும் என்று எண்ணாதீர்கள். விதவையைக் கல்யாணம் செய்யும் ‘தியாக’ உள்ளங்களுக்கு பிரதிபலனாக லஞ்சம் அதிகம் கொடுக்க வேண்டும். அதுவும் குழந்தை உள்ள பெண்ணாக இருந்தால் ரேட் இன்னும் அதிகம். இரண்டாம் மணம் என்றாலும் அங்கே முதல் மணம் ஏன் தோல்வியுற்றது என்று பாடம் கற்காமால் அதே போல தட்சணை கொடுத்துத்தான் அடுத்த மணமும் நிறைவேறும்.

இறுதியாக “வரதட்சணையை நாங்களாக ஏதும் கேட்கவில்லை, நீங்களாக பார்த்து செய்தால் போதும்” என்று நல்லவர்கள் போல பேசுவார்கள். உறவினர்களை விட்டு குடும்பத்தின் மேன்மை, சமீபத்தில் நடந்த திருமணங்களில் கொடுக்கப்பட்ட வரதட்சணையின் அளவு எல்லாம் சொல்லி மறைமுகமாக ரேட்டை நிர்ணயம் செய்வார்கள். நேரடியாக கேட்பதை விட இரகசியமாக கேட்பது மகா கேவலமானது. இதன்மூலம்தான் பெண் வீட்டார் தங்கள் தகுதிக்கும் மேல் சீர்வரிசை செய்வது நடக்கிறது. வரதட்சணையில் நல்லது கெட்டது என்று ஏதும் இருக்க முடியுமா என்ன?

இப்படி எல்லா வழிகளிலும், வகைகளிலும் கண்கொத்திப் பாம்பாக பெண்களை குதறக் காத்திருக்கிறது வரதட்சணை.

இந்தக் கயமைத்தனத்தை ஜீன்ஸ் பேண்டிலும், செல்பேசியிலும் நவீனத்தை தேடும் இளைஞர்கள் நேரடியாகவும், நாசுக்காகவும், மறைமுகமாகவும் செய்தே வருகிறார்கள். ரொம்ப இறுக்கிப் பிடித்துக் கேட்டால் “நான் வாங்க மாட்டேன், என் பெற்றோர் விரும்பினால் என்ன செய்வது” என்று வாகாய் நழுவுவார்கள். சாதி பார்த்து, ஜாதகம் பார்த்து, அந்தஸ்து பார்த்து எல்லா எழவும் பார்த்துக்கூட தொலையட்டும். குறைந்த பட்சம் வரதட்சணையாவது வாங்க மாட்டேன் என்று முடிவெடுப்பதற்குக்கூட நேர்மையற்ற இந்த இளைஞர்களை வைத்துத்தான் அப்துல் கலாம் 2020இல் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறாராம்.

குழந்தைகள் உழைப்பை எதிர்ப்பார்கள், சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுப்பார்கள், சுயமுன்னேற்ற நூலென்றால் விழுந்து விழுந்து படிப்பார்கள், ரோட்டோரத்துப் பிச்சைக்காரனுக்காக சில்லறைகளையும் கொடுப்பார்கள்…இப்படியெல்லாம் நல்லது செய்வதாக கற்பித்துக் கொண்டிருக்கும் இந்த இளைய சமூகம்தான் இந்த வரதட்சணைப் பேயை இன்னும் வீரியமாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது. குறுக்கு வழியில் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதன் சமூக அங்கீகாரத்தில்தான் வரதட்சணையும் சாகாவரம் பெற்று ஜம்மென்று உயிர் வாழ்கிறது.

வட இந்தியாவில் கேஸ் அடுப்பு வெடித்து கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. தென்னிந்தியாவில் படித்தவர்கள் அதிகம் என்பதால் இந்த வரதட்சணை கொடுமைகள் சதீஷ் போல நாகரீக கனவான்களின் நவீன தொழில்நுட்ப சித்திரவதையாக பரிணாமம் பெற்றிருக்கிறது. சதீஷைப் பொறுத்தவரை அவனது மனைவி என்பவள் வெறும் உடம்பு மட்டும்தான். அந்த உடம்பிற்கு மானமிருக்கிறது என்பதனால்தான் அவன் அவளது நிர்வாண படங்களை வெளியில் விடுவேன் என்று பயமுறுத்த முடிகிறது. உடல் மானம் மட்டுமல்ல குடும்ப மானமும் போனால் கூடப் பரவாயில்லை என்று துணிந்து அந்தப் பெண் போலீசுக்கு வரவேண்டுமென்றால் அவள் எவ்வளவு துன்பம் அடைந்திருக்க வேண்டும்?

வரதட்சணைக் கொடுமைகளை நிறுத்துவது பெண்களிடம் இருந்துதான் துவங்க வேண்டும். இப்படி பொன்னும், பொருளும் வாங்கிக் கொண்டு திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்களை காறித்துப்புவதற்கு பெண்கள் முன்வரவேண்டும். வரதட்சணை மறுப்பதுதான் ஆண்மையின் தகுதி, விரைக்கும் ஆண் குறியில் அல்ல எனுமளவுக்கு அந்தப் போர் நடைபெற வேண்டும். காதலோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ வரதட்சணை மறுப்புத்தான் முதல் தகுதி என்றாக்கப்படவேண்டும். ஊழலால் சூழ வாழும் இந்த சமூக அமைப்பில் வரதட்சணைக்கெதிரான போராட்டம் துவங்கினால் அது ஏனைய பிணிகளை எதிர்த்து விரியும் போராட்டமாகக்கூட மாறும்.

எதெல்லாம் வரதட்சணை?

  1. பவுன் கணக்கில் கொட்டப்படும் நகையோடு பெண் திருமணமாவது – தங்க தட்சணை!
  2. பணம் வாங்குவது, திருமணச்செலவு முழுமையும் பெண் வீட்டார் செய்வது – ரொக்க தட்சணை!
  3. வரதட்சணைப் பணத்தை வைத்து வேலை வாங்குவது, அமெரிக்கா செல்வது – வேலை தட்சணை!
  4. வீடு, வாகனங்கள், இதர சொத்துக்கள் பெறுவது – சொத்து தட்சணை!
  5. தீபாவளி, பொங்கள் இதர நாட்களை வைத்து பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – பண்டிகை தட்சிணை!
  6. முக்கியமாக பிரசவ செலவை மாமனார் வீட்டிற்குத் தள்ளிவிடுவது – பிரசவ தட்சணை!
  7. குழந்தை பிறந்தால் அதற்கும் காது  குத்து, மொட்டையடிப்பது என்ற பெயரில் பெண் வீட்டாருக்கு செலவு வைப்பது – குழந்தை தட்சணை!
  8. மனைவியை வீட்டுவேலைகளுக்கு மட்டும் பயன்படுத்துவது, அதில் பங்கேற்காமல் இருப்பது – வேலைக்காரி தட்சணை!
  9. மனைவியை இருட்டுக்கு மட்டும் இலவசமாய் பயன்படும் பொருளாய் பார்ப்பது – தாசி தட்சணை
  10. எந்த முக்கியமான விசயங்களிலும் மனைவியோடு கலந்தாலோசிக்காமல் இருப்பது – அடிமை தட்சணை!
  11. மனைவியை அடிப்பது, சித்திரவதை செய்தவது – டார்ச்சர் தட்சணை!

……… மொத்தத்தில் முடிவு பெறாது இந்த வரதட்சணை!

இப்போது சொல்லுங்கள் உங்களில் யார் சதீஷை கண்டிக்கிறீர்கள்?

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி.

28

vote-012ஹிமான்ஷு குமார், இவர் ஒரு காந்தியவாதி. ஒரு சுதந்திரப் போராளியின் மகன். சட்டீஷ்கர் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய தண்டிவாடா மாவட்டத்தில் ஆதிவாசி மக்களிடையே பணியாற்றிவருபவர். 17 ஆண்டுகளாக அயராத உழைப்பால் கட்டப்பட்டுவந்த வனவாசி சேத்னா ஆசிரம் என்ற அவரது அறநிலையம் ஜனநாயகக் கடமையின் [தேர்தல்] முடிவுகள் வெளியான மறுநாள் முடிவுக்கு வந்தது.  17.5.2009 அன்று 500 போலீசார் அரைமணி நேரத்தில் அதை இடித்துத் தரைமட்டமாக்கினர்.  இந்தப் பயங்கரப் புழுதிகளை எல்லாம் அலட்சியமாய் உதரிவிட்டு, தங்களுக்காகப் பேச வக்கில்லாத அந்த ஆதிவாசி மக்களுக்காகப் பேசுகிறார் ஹிமான்ஷு குமார்.

அந்த ஆதிவாசிகளின் கல்வி அறிவின்மைக்கும், அவர்களுக்கு உள்ள உரிமை பற்றிய அவர்களின் அறியாமைக்கும் எதிராக இதுநாள்வரை சலியாது போராடிய அவர், இன்று அரசு தம் மக்கள் மீதே தொடுத்திருக்கும் இன அழிப்புப் போருக்கு எதிராகக் களத்தில் நிற்கிறார். அக்டோபர் 31 அன்று மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் ஆற்றிய உரை இதோ… ..  ..

இன்றைய சடீஷ்கர் மாநிலத்தின் அடர்ந்த அந்த காடுகளில், மலைகளில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள் அந்த ஆதிவாசிகள். அவர்கள் சமூகத்தில் குற்றம் என்று ஏதுமில்லை. எனவே அவர்களுக்கு போலீசின் துணை என்றும் தேவைப்பட்டதில்லை.  ஆனால் இன்று அவர்களைக் காப்பதற்காக என்று அரசு ஆயுதம் தாங்கிய படைகளை ஆயிரக்கணக்கில் அனுப்புகிறது.  யாரிடமிருந்து காப்பதற்கு?  தனது சொந்த பூமியிலேயே இராணுவத்தையும் வான்படையையும் அணிவகுக்கச் செய்யவேண்டியதன் அவசியம் அப்படி என்ன வந்தது?

ஆனால் இது ஒன்றும் புதிய கதையல்ல. ஏற்கனவே [டாடா ஸ்டீல் கம்பெனியுடன் பஸ்தாரில் பத்தாயிரம் கோடி ரூபாய் சுரங்க நிறுவனம் அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள் – ஜூன் 2005ல்] அந்த ஆதிவாசிகளை ஒழித்துக்கட்ட அரசு சல்வா ஜுடூம் என்ற கூலிப்படையை களமிறக்கியது. அவர்கள் அதற்கு ஒரு வழி கண்டார்கள்.  ஆதிவாசிகளை அவர்கள் கிராமங்களில் இருந்து அப்புறப்படுத்தி தெருவோரங்களில் காவல் நிலையத்தின் அருகே குடியமர்த்தினார்கள். காடுகளில் இருந்தால் இவர்கள் நக்சலைட்டுகளை ஆதரிப்பார்கள், அதனால்தான் காவல் நிலையத்தின் அருகே இந்த குடியமர்த்தம் என்று அதற்கொரு விளக்கமும் அளித்தார்கள்.  இந்த நடவடிக்கையைக் கண்டு ஆதிவாசிகள் அஞ்சினார்கள்.  தமது காடுகளையும், நிலங்களையும், ஆறுகளையும் விட்டுவிட்டு இந்தக் காவல் நிலையத்தின் அருகே ஏன் வரவேண்டும் என விழித்தார்கள்.  அதனால் மறுத்தார்கள்.

ஆதிவாசியினர் தம் கிராமங்களை விட்டு ஓடச் செய்வதற்காக மத்திய சேமக்காவல் படை, துணைராணுவத் துருப்புகள், போலீசு இவற்றுடன் சில தீய சக்திகளும் சேர்ந்துகொண்டு எல்லோருமாக அக்கிராமங்களைத் தாக்கினார்கள்.  பிடிபட்டவர்களை முகாமுக்கு ஓட்டிவந்தார்கள்.  குப்பைமேட்டை ஒத்த பகுதியில் அமைந்த முகாம்களில் 50000 ஆதிவாசிகளை பலாத்காரமாய்த் திணித்தார்கள்.  அங்கொன்றும் இங்கொன்றுமாய் இயற்கைச் சூழலில் குடிலமைத்து வாழ்ந்த ஆதிவாசிகளை அரசு தகரக் கொட்டகையில் கறிக்கோழிகளைப்போல் அடைத்தது.

இக்கொடுமையை விடாப்பிடியாக எதிர்த்து நின்ற ஆதிவாசிகளோ சுட்டுக் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர், சிறுபிள்ளைகளும் கொலை செய்யப்பட்டனர்.  இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.  நக்சலிசம் பரவாமல் தடுப்பது என்ற பெயரில் பலர் ஒட்டுமொத்தமாகக் கொன்றொழிக்கப்பட்டனர்.  அடைக்கப்பட்ட 50000 ஆதிவாசிகளும் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமை சகியாது அண்டை மாநிலங்களான ஆந்திரா, ஒரிசா, மகாராட்டிரத்துக்குத் தப்பி ஓடினர். அரசுக்கு ஆதரவாய் இருப்பவர்கள் சல்வா ஜுடூம் முகாம்களில் உள்ளனர்;  ஏனையோர் எல்லாம் நக்சலைட்டுகளின் பக்கமிருப்பவர்கள்; அவர்கள் காடுகளில் ஒளிந்திருக்கிறார்கள் என தொலைக்காட்சி, வானொலி மூலம் அறிவித்தார் அம் மாநில முதல்வர்.  ஒரு மாநில முதல்வர், காடுகளில் தங்கள் சொந்த நிலத்தில் வாழ்பவர்களை எல்லாம் நக்சலைட்டுகள் என முத்திரை குத்துவது வியப்பாக இருக்கிறது.  அவர்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய்க் கொன்றொழிக்கும் முடிவையும் அறிவித்துவிடுவீரோ என்று அவரைக் கேட்டேன்.  அஞ்சியபடி அவர் அவ்வாறே செய்துவிட்டார்.

சிந்திக்க முடியாத அட்டூழியங்கள் எல்லாம் அரங்கேறின.  ஒரே கிராமம் 20 முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.  வேட்டை முடிந்தது என்று கருதி காடுகளில் பதுங்கிய மக்கள் கிராமம் திரும்புவர், வீடுகளை சீர்செய்து நிலங்களைப் பண்படுத்தி பயிர் செய்யத் தொடங்குவர்.  மீண்டும் பாதுகாப்புப் படை வரும், பயிர்நிலங்களை எரிக்கும். இப்படி இது ஒரு முடிவிலா சுழற்சியாகிவிட்டது. தொடரும் இந்த கொள்ளை, கற்பழிப்பு, கொலைகளால் வெருப்புற்ற ஆதிவாசிகள் தங்கள் பிள்ளைகளைக் காவலிருக்கப் பணித்தனர். அப்பிள்ளைகளும் தங்கள் தடிக்கம்பு, வில், அம்புகளுடன் கிராமத்தைக் காவல் காத்தனர்.  படைகள் தாக்க வருவதை முன்னறிந்து பெண்கள், முதியோரைப் பாதுகாப்பாய்க் காட்டுக்குள் பதுங்க வழிசெய்வதே அவர்களின் நோக்கமாய் இருந்தது.  அவர்கள் தங்கள் தானியங்களை காடுகளில், பாறைகளுக்கு அடியில் பத்திரப்படுத்த வேண்டியிருந்தது.  ஏனெனில் படைகள் வந்தால் அவற்றை எரித்து அழித்துவிடுவது வழக்கம்.

தங்கள் குக்கிராமங்களைக் காவல்காக்கும் இந்த சிறுவர் சிறுமியரைத்தான் அரசுக்கு எதிராய் ஆயுதம் தாங்கியிருக்கும் மாவோயிஸ்டுகள் என்கிறார் சிதம்பரம்.  ஆகவே, இந்த மாவோயிஸ்டுகளைக் கொன்றொழிக்கத்தான் இந்திய ராணுவத்தை ஏவுகிறார்கள் அவர்கள்.  உங்களோடு சண்டையிட இந்த ’நக்சலைட்டுகள்’ உங்கள் தில்லிக்கு வரவில்லை, உங்களைப்பற்றி அவர்களுக்கு ஒரு பொருட்டும் இல்லை என்று இந்த அரசியல்வாதிகளுக்கு நாங்கள் சொல்கிறோம்.  அவர்கள் ஆதிவாசிகள், காடுகளில் வாழ்பவர்கள்.  நக்சலைட்டுகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றச் சொல்லி அவர்கள் உங்களை என்றைக்குமே கேட்டதில்லை. ஆக, நீங்கள் அனுப்பும் இந்தப் படைகள் யாரைப் பாதுகாப்பதற்காக?

உண்மையில், அரசு ஏன் இந்தப் படைகளை ஆதிவாசிகள் மேல் ஏவுகிறது? கனிவளம் நிறைந்த அந்தக் காடுகளைக் காலிசெய்து கொழுத்த தொழிலதிபர்களிடம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே.  அதற்காகத்தான் இந்த ஆயுதப் படைகள் அங்கே ஏராளமாய் குவிக்கப்படுகின்றன.  இப்போது இந்த அரசாங்கம் சொல்கிறது, அதற்கு அமைதி வேண்டுமாம்.  நித்தமும் அந்த ஆதிவாசிகளை உங்கள் படை வதைக்கிறது, நீங்கள் அமைதியைப் பற்றிப் பேசுகிறீர்கள்.  நீங்கள் அமைதி வேண்டுவது உண்மையானால், உங்கள் படைகளை ஏன் திரும்பப் பெறக் கூடாது?

அரசாங்கம் பேசத் தயாராய் இருக்கிறதாம், இன்று காலை அறிவிப்பு வருகிறது.  நக்சலைட்டுகளிடம் எனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வன்முறையைக் கைவிடும்படி நான் அவர்களைக் கோரவேண்டுமாம். ஆனால் நீங்கள் அல்லவா அம்மக்களின் வாழ்விடங்களைத் தொடர்ச்சியாய்த் தாக்குகிறீர்கள்.  நீங்கள் அல்லவா வன்முறையைக் கையாள்கிறீர்கள்.  எனவே உங்கள் வன்முறைப் பாதையைக் கைவிடுங்கள் என்று நான் உங்களை வலியுறுத்துகிறேன்.  நீங்கள் அங்கு பிரயோகிக்கும் படைக்கு தினமும் மதுவும் மாமிசமும் பெண்களும் தேவைப்படுகிறது.  அதற்காக அவர்கள் தினந்தோறும் அந்தக் கிராமங்களைத் தாக்குகிறார்கள்.  மக்கள் அதைத் தடுத்தால் அவர்களை நக்சலைட்டுகள் என்கிறீர்கள்.  வன்முறையிலிருந்து அந்த ஆதிவாசிகளைக் காப்பாற்றுங்கள் என்று என்னிடமும் கூறுகிறீர்கள்.   ஆனால், இந்த அரசுதான் வன்முறையாளனாய் இருக்கிறது.

700 கிராமங்கள் தாக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டன.  ஆதிவாசிகளை மீள்குடியமர்த்தவும், எரிக்கப்பட்ட வீடுகளின் உடைமையாளருக்கு நட்டஈடு தரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  ஆனால் அரசு அவர்களை மீள் குடியமர்த்தவோ, ஒரு நபருக்குக் கூட நட்டஈடு தரவோ இல்லை.  ஆகவே, நாங்கள் ஒரு சிறு முயற்சியில் இறங்கினோம்.  நாங்கள் அவர்களை மீள் குடியமர்த்தம் செய்கிறோம் என்று சொன்னோம், செய்தோம்.  ஆதிவாசிகள் திரும்ப வந்தனர், வாழ்வை, விவசாயத்தைத் தொடங்கினர்.  அங்கே வன்முறை இல்லை.  போலீசு அந்த கிராமங்களை வளைய வந்தது, இருந்தும் அசம்பாவிதம் ஏதுமில்லை.  ஆனால் இன்றோ, அந்த அமைதியான கிராமங்களை போலீசு மீண்டும் தாக்கத் தொடங்கியிருக்கிறது.  உண்மை என்னவென்றால் அந்த ஆதிவாசிகள் அவர்கள் கிராமங்களில் நிலைகொள்வதை அரசு விரும்பவில்லை.  அவர்களை அங்கிருந்து பிடுங்கி எரிய விரும்புகிறது.   மக்கள் தங்கள் இடத்தையும் இல்லத்தையும் விட்டுத் தலைதெரிக்க ஓடச்செய்ய விரும்புகிறது.  காலிசெய்த நிலத்தைத் தொழிலதிபர்களுக்குக் கையளிக்க விரும்புகிறது.  உண்மையில் நீங்கள் அமைதியை விரும்புகிறீர்களா? அப்படி என்றால் அது ஒரே ஒருவாரத்திய முயற்சியில் அடையக் கூடியதே.

வன்முறையை நம்பும் நக்சலைட்டுகளுடன் எப்படிப் பேசுவது என்று அவர்கள் கேட்டார்கள்.  நக்சலைட்டுகளுடன் பேசவேண்டாம், உங்கள் மக்களுடன் பேசுங்கள்.  தண்டிவாடாவுக்கு வாருங்கள். அவர்கள் மேல் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி அவர்களிடம் கேளுங்கள் என்று நாங்கள் பதிலளித்தோம்.  நீங்கள் சல்வா ஜுடூம் நடவடிக்கையைத் தொடங்கியது முதல் 700 கிராமங்கள் சுடுகாடாக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் நீங்கள் ஒருவரும் வந்து அதுபற்றி விசாரித்து அறியவில்லை. குழந்தைகள் தாக்கப்பட்டார்கள், இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் .. கேட்க நாதியில்லை.  நீங்கள் அங்கு போக வேண்டியதுதானே, உங்களை யார் தடுத்தது?  இந்த நாட்டின் பிரதமர் அங்கு போகட்டும்.  நக்சலைட்டுகளுடன் அவர் பேசவேண்டாம்.  அவரது சொந்த குடிமக்களிடம் பேசட்டுமே.. முடியாதா?  ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை?  ஏனென்றால் இந்த பிரச்சினை தீர்க்கப்படுவதை அரசு விரும்பவில்லை.  ஏனென்றால், அவர்கள் அம்மக்களின் நிலங்களைத் திருட விரும்புகிறார்கள்.  மேலும், தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கும் அளவுக்குத் தலைக்கனம் ஏறியிருக்கிறது அவர்களுக்கு.  கற்பழிப்பா.. கொலையா, எதையும் ஒப்புக்கொள்ள அவர்கள் தயாரில்லை.  ஆனால், அவர்கள் அங்கு செல்ல நேர்ந்தால், அவர்கள் செயல் இன்னதென்று மக்கள் சொல்லுவார்கள்.  அவர்கள் படைகளல்லவா இதைச் செய்திருக்கிறார்கள்.. ஏற்க மனம் வராது, அவர்களுக்கு.

கொலைகள், கற்பழிப்புகள், எரிப்புகள், ஆள் கடத்தல்கள் என ஆயிரம் புகார்களுக்கு மேல் நாங்கள் அளித்திருக்கிறோம்.  ஆனால் ஒற்றை முதல் தகவல் அறிக்கைகூடப் பதியப்படவில்லை.  கிராம மக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் புளுகுமூட்டைகளாக இருப்பதால் மு.த.அ பதியவில்லை என போலீசு உச்ச நீதிமன்றத்துக்கு எழுதுகிறது.  மு.த.அ. சரியா, தவறா என்று போலீசு முடிவு செய்ய முடியாது, பதிவதும், ஆய்வதும் அவர்கள் கடமை என்கிறது இந்த நாட்டின் சட்டம்.  ஆனாலும் சட்டத்தின் காவலர்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதியவும் மறுக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் நடந்த சம்பவத்தில் 19 ஆதிவாசிகள் சுற்றிவளைக்கப்பட்டனர்.  அவர்களில் நான்கு பெண்களும் அடங்குவர்.  அப்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.  ஏனையோர் சுட்டுத் தள்ளப்பட்டனர்.  நாங்கள் அவ்வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றோம்.  விசாரிக்க அவர்களுக்குத் தேதி கிடைக்கவில்லை. வாய்தா மேல் வாய்தா, அடுத்தடுத்து நீதிபதிகள் மாற்றம்.  அந்த ஏழை மக்கள் நியாயம் பெறுவதற்கான வழிகள் அனைத்தையும் அடைத்துவிட்டீர்கள்.  நீதிமன்றத்துக்குப் போனால் உங்கள் நீதி அவர்களை ஏரெடுத்தும் பாராது; போலீசிடம் போனால் அவர்கள் மீது குண்டாந்தடிகள் பேசும்.  கங்கிரஸ், பி.ஜே.பி. என்ற பேதமில்லாது எல்லா அரசியல் கட்சித் தலைமைகளும் போக்கிடமற்ற அம்மக்கள் மீது அமைதிப் படையை – சல்வா ஜுடூம்- ஏற்றிச் செல்கிறார்கள்.  நக்சலைட்டுகளிடம் செல்வது தவிர்த்த வேறு எந்த வழியை அவர்களுக்கு விட்டுவைத்திருக்கிறீர்கள்?  இன்றைய தண்டிவாடாவின் நிலை என்ன? போலீசு அம்மக்களைத் தாக்குகிறது, நக்சலைட்டுகள் காப்பாற்றுகிறார்கள்.  இந்நிலையில், நீங்கள் அரசாங்கம் அல்லவா, மக்களைக் காப்பது உங்கள் வேலையல்லவா, தயவுசெய்து இவ்வாறு செய்யாதீர்கள், மக்களைத் தாக்காதீர்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.  நக்சலைட்டுகள் மோசமானவர்கள் என்று, நீங்கள் சொல்கிறீர்கள். இருக்கட்டுமே, அவர்களல்லவா ஆதிவாசிகளைக் காப்பாற்றுகிறார்கள்.

மூன்று தினங்களுக்கு முன் நான் ஒரு பெரிய அரசியல்வாதியை சந்தித்தேன். நக்சலைட்டுகள் என்றால் அவருக்கு பயம்.  ஏன் பயப்படுகிறீர்கள், நீங்கள் ஒரு ஜனநாயக நாட்டின் தலைவர் அல்லவா, என்று கேட்டேன்.  ஒரு ஜனநாயக நாட்டின் அரிச்சுவடியே நீங்கள் மக்களை நேசியுங்கள், அவர்கள் உங்கள் மீது நேசமாய் இருப்பர் என்பதுதானே.  ஏன் பயப்படுகிறீர்கள்.  ஏனென்றால் மக்கள் இனியும் உங்களை நேசிக்கப் போவதில்லை, மாறாக, அவர்கள் நக்சலைட்டுகளை நேசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஏனிந்த தலைகீழ் மாற்றம்? உங்கள் மீதான அவர்களது வெறுப்பின் காரணத்தைக் களையுங்கள், அவர்களிடம் செல்லுங்கள், அவர்களை நேசியுங்கள்.  அவர்களும் உங்களை நேசிப்பர்.  ஆனால், நீங்களோ படைகளை அனுப்புகிறீர்கள்.

வர்க்கப் போராட்டம் பற்றி நெடுநாட்களாகவே நக்சலைட்டுகள் மக்களிடம் கூறிவருகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  ஒருநாள், ஒரு கிராமத்தைக் கடந்து நான் சென்றுகொண்டிருந்தேன். அப்போது மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ஒரு முதியவர் என்னை அழைத்தார். ”ஒரு பெரிய சண்டை நடக்கப்போகுதுல்ல.., நடக்கும்தானே?” என்று கேட்டார்.  அவர் அந்தப் போருக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறார்.

எனவேதான் இந்த அரசாங்கத்திடம் போர்தொடுக்காதீர்கள் என்று சொன்னேன்.  ஒரு போர் தொடங்கப்படுவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.  நீங்கள் ஒரு போரில் இறங்கினீர்களாயின், ஒரு 50 ஆண்டுகளுக்கு நீங்கள் அதிலிருந்து மீள முடியாது.  அவர்கள் ஆதிவாசிகள். நாங்கள் அவர்களை அறிவோம்.  பார்ப்பதற்கு அவர்கள் சாமானியர்கள் தான். ஆனால், ஆயுதங்களை இறுகப்பற்றி மாமலையாய் வெகுண்டெழுந்து நிற்பார்கள். இந்த ஆதிவாசிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, அவர்கள் [என்னைப்போல] உ.பி. காரர்கள் அல்ல. வேட்டைக்காரர்கள், கட்டிவைத்து உரித்துவிடுவார்கள்.  படுகுழியில் சிக்கிவிடுவீர்கள், உங்கள் படைகள் பெருத்த இழப்பை சந்திக்க நேரும்.  கடந்த ஐந்தாண்டுகளில் சட்டீஷ்கரில் உங்கள் ஆயுதப்படைகளின் இழப்பு பாரதூரமானது.  எனவே இந்த ராணுவத் தலையீட்டை செய்யாதீர்கள் என்று சொல்கிறேன்.  காட்டு வேட்டைக்கு சென்ற உங்கள் கோப்ராக்கள் ஒரு நக்சலைட்டைக்கூட வேட்டையாட முடியவில்லை. கணப்பொழுதில் ஆறு கோப்ராக்களை இழந்ததுதான் மிச்சம்.  இரண்டு நாட்களுக்கு அவர்களது பிரேதங்களைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், வெருப்புற்றுத் திரும்பியவர்கள் வெறித்தனமாய்க் கொன்றதோ, கிழவர், கிழவிகளையும், குழந்தைகளையும் தான்.

நாம் ஒரு சமூக அமைப்பின் அங்கம் என்ற முறையில் அதனையும் அதன் உட்கிடையான வன்முறையையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். உலகெங்கும் காணப்படும் வளங்கள் அனைத்தும் யாருக்குச் சொந்தம்?  நல்லது, இது நம் அனைவருக்கும் பொதுவானது.  உண்மையில் ஈ, எறும்பென இப்புவியில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் கூட அது சொந்தமானது.  அவற்றுக்கும் இதில் உரிமை இருக்கிறது, இல்லையா?  ஆனால், மனிதர்களாய் இருக்கும் நாமோ, நாம் தான் தலைசிறந்தவர்கள் எனக் கருதுகிறோம்.    நமக்கே இப்புவியில் வளங்கள் அனைத்தும் சொந்தமென நினைக்கிறோம்.  இது எல்லோருக்கும் பொது என்கிறது இயற்கையின் விதி.  ஆனால் நடப்பில் அது அவ்வாறு இல்லை.  யாருக்கு எந்த அளவுக்கு இது உடைமை என்பதை எவ்வாறு தீர்மானிப்பது?   ஆனால், நாம் தீர்மானித்துவிட்டோம்.. நாம் வாழும் இந்த சமூகம் ஏற்கனவே இதைத் தீர்மானித்துவிட்டது.  அதற்கான முன்னுரிமைச் சட்டங்களும் எழுதப்பட்டுவிட்டன.  நாங்கள் படித்தவர்கள் அதனால் எங்களுக்குக் கூடுதல் பங்கு; நீ கைநாட்டு அதனால் உனக்குக் குறைவான பங்கு. நான் மேல் சாதிக் காரன். எனவே எனக்குக் கூடுதல் பங்கு; கீழ்சாதிப் பயல்களுக்குக் குறைவான பங்கு. நான் நகரவாசி. எனவே எனக்குக் கூடுதல் பங்கு, நீ ஒரு கிராமத்தான், உனக்குக் குறைவான பங்கு.

இப்படி இந்த அசமத்துவம் நமது அங்கீகாரத்தைப் பெற்று நமது சமூக மதிப்பீடுகளிலும் இடம்பிடித்துவிட்டது.  இவ்வாறு ஆனபின், அரசியல் அமைப்பும் கூட இதைச் சார்ந்தே செயல்படத் தொடங்கியது.  இந்த அசமத்துவத்தைக் கெட்டிக்க வேண்டியே சட்டங்களும் இயற்றப்பட்டன.  இவ்வாறாக, முதலில் சமூக அமைப்பு, தொடர்ந்து அதற்கான அரசியல் அமைப்பு, பின் அதற்குத் துணைசெய்ய ஒரு பொருளியல் அமைப்பு.  இம்மூன்றும் சேர்ந்து ஒரு சமூகக் கட்டமைவாய் உருப்பெற, பணக்காரனை பணக்காரனாகவும், ஏழையை என்றும் ஏழையாகவும் பராமரிக்கும் இந்த சமூக அமைப்பில் நாமும் ஓர் அங்கமானோம்.  நமக்கு இந்த சமூக அமைப்பில் பிரச்சினை ஏதுமில்லை. ஏனென்றால் நமக்கு வயிறுமுட்ட உணவும், உடைகளும், வீடும், வண்டி வாகனங்களும்,   நம் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பும் தடையின்றிக் கிடைக்கிறது.  எனவே நாம் இந்த சமூக அமைப்பில் நிறைவுகொள்கிறோம்.  இதை உடைக்கவோ, மாற்றவோ நமக்கு மனமில்லை.  ஆனால், இந்த சமூகக் கட்டமைவால் ஒடுக்கப்பட்ட மக்கள், நமது கொழுத்த வாழ்க்கையால் அழுத்தப்பட்ட மக்கள், அன்றாடம் தாக்கப்படும் ஆதிவாசிகள், நித்தம் பட்டினியால் செத்துப் பிழைப்பவர்கள்.. இவர்கள் இந்த சமூகக் கட்டமைவை எதிர்க்கிறார்கள்.  இதைத் தகர்த்தெறிய விரும்புகிறார்கள்.  அதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஆகவே, நினைவில் கொள்ளுங்கள், இது மாவோயிஸ்டு புரட்சியல்ல, இவ்வமைப்பால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைகளின், ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சி.  சற்று யோசியுங்கள், ஒருக்கால் நீங்கள் அந்தக் கடைகோடி மக்களில் ஒருவராய் இருந்தீர்களானால், கொலை, கற்பழிப்பு, ஒடுக்குமுறைகள் உங்கள் மீது ஏவப்பட்ட வண்ணம் இருக்குமானால் நீங்களும் இத்தகையதொரு புரட்சியை செய்யமாட்டீர்களா?  இச்சூழலில் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள் எனப்படுவோரின் இருத்தல் ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே.  நக்சலைட் என்ற பெயரில் இல்லையானால் அவன் இன்னொரு பெயரின் கீழ்ப் போராடியிருப்பான்.  இவ்வுலகில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்வரை போராட்டம் தவிர்க்க முடியாதது.  திரு. மாவோ அவர்கள் ஒருக்கால் பிறக்கவில்லை என்றால் அந்த ஏழை மக்கள் தமது ஏழ்மை நிலைக்கு எதிராகப் போராடியிருக்க மாட்டார்களா? தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்க மாட்டார்களா?  அதுபோல் காந்தி இல்லையென்றால் அவர்கள் போராடியிருக்க மாட்டார்களா?  இல்லை, போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.  அந்த ஏழைகளுக்கு ஒரு தலைமையோ, ஒரு அமைப்போ, அல்லது வேறு எதுவோ, எதுவும் முக்கியமில்லை.  அவன் போராடுவான், போராடிக்கொண்டிருக்கிறான்.  சில நேரங்களில் அவனை ஆதரிப்பவர் காந்தியாக இருக்கிறார், சில நேரங்களில் வினோபாவாக சில நேரங்களில் மாவோயிஸ்டுகளாக இருக்கிறார்கள்.  தன்னை ஆதரிப்பவர்களை அந்த ஏழை ஏற்றுக்கொள்கிறான்.  இதுகாரும் வீழ்த்தப்பட்டதுபோலவே, சிலநேரங்களில் அவன் வீழ்த்தப்படுகிறான். ஆனால், இந்த மூர்க்கமான சமூகக் கட்டமைவை எதிர்த்த அவனது போராட்டம் மட்டும் ஓய்வதில்லை.

இந்த ஏழைகளின் போராட்டத்தை போலீசையும் இராணுவத்தையும் வைத்து ஒடுக்கிவிடலாம் எனத் தவறாக நினைக்கிறார் திரு. சிதம்பரம்.  மாறாக, ஒடுக்குமுறை போராடுவோரின் உளத் திண்மையை வலுப்படுத்தவும், போராட்டத்தை நீட்டிக்கவும் மட்டுமே செய்யும். எனவே பலாத்காரத்தால் இதை ஒழித்துவிடலாம் என நீங்கள் நினைப்பது மாபெரும் தவறு.  அங்கு அமைதி நிலவவேண்டும் என நீங்கள் விரும்பினால், இந்த போர் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என நீங்கள் விரும்பினால், அங்கே செல்லுங்கள், அந்த பழங்குடியினரின் மகிழ்ச்சியைக் கூட்ட ஏதாவது செய்யுங்கள்.  அவர்களது பள்ளியை இழுத்து மூடினீர்கள், அங்கன்வாடியை, சுகாதார நிலையத்தை, ரேஷன் கடையை, இன்னும் அவர்கள் சந்தைகளை எல்லாம் தடைசெய்தீர்கள்.. போய் எல்லாவற்றையும் திறவுங்கள்.  போர் சற்று ஓயும், என்று நாங்கள் அவர்களிடம் கூறினோம்.  இதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.  அம்மக்களை வதைப்போம், கொலை செய்வோம். அதன்மூலம் இந்தப் போரை முடிப்போம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  தீயைக் கம்பளத்தால் மூடினால், கம்பளம்தான் எரிந்து பாழாகும்.

காட்டுவேட்டை என்ற பெயரில், பாதுகாப்புப்படை ஒரு வீட்டில் நுழைந்து ஒரு முதியவரையும் அவர் மனைவியையும், மகனையும், 15 வயது மகளையும் குத்திக் கொன்றது.  அங்கு ஒரு சண்டை இல்லை, யாரும் ஓடவும் இல்லை.  ஆனாலும் போலீசும், கோப்ராக்களும் அவர்களைக் கொன்றனர்.  இரண்டு வயது குழந்தையைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.  துப்பாக்கியின் அடிக்கட்டையால் இடித்து அதன் பல்லை உடைத்தார்கள், நாக்கை அறுத்தார்கள், பின் அதன் பிஞ்சு விரல்களை வெட்டி எரிந்தார்கள்.  கொல்லப்படுவதற்கு முன் அந்த மூதாட்டியின் மார்பகங்கள் அவர்களால் அறுத்தெரியப்பட்டன.  அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறார்களாம், அரசு சொல்கிறது.  உங்களுக்கு வெறி தலைக்கேறிவிட்டதா? இதைத்தான் மாவோயிஸ்டுகள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.  நீங்கள் இதை எந்த அளவுக்கு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அவர்கள் பலம் பெருகும்.  நீங்கள் இங்கு இருப்பது அவர்கள் பலத்தை அதிகரிக்கவா?

அரசு மிருகத்தனமாக நடப்பதாக அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். நீங்கள் அவர்களை நேசியுங்கள், அவர்கள் உங்கள் பக்கம் வருவார்கள்.  ஆனால், நீங்கள் செயல்படும் விதம் அவர்களை மாவோயிஸ்டுகள் பக்கம் செல்ல வைக்கிறது.  அவர்கள் பலத்தை நீங்கள் கூட்டுகிறீர்கள்.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நிலத்தை காலிசெய்து கொடுக்கும் நடவடிக்கை இங்கு, சட்டீஷ்கரில் மட்டும் நடக்கவில்லை, உலகெங்கும் இதே கதைதான் என்று உணர்கிறேன்.  இந்த பூமியின் வளங்கள் எல்லாம் வேண்டாத இந்த ஏழை மக்களால் விரயமாகிறது; எனவே பொருளாதாரத்துக்கு சுமையாய் இருக்கும் இவர்களை ஒழிக்க வேண்டியதுதான் என்று உலகத்து பணக்காரர்கள் முடிவு செய்துவிட்டதாய்த் தெரிகிறது. ஆகவே, ஆகப்பலவீனமான ஆதிவாசிகள் முதலில் துடைத்தெறியவேண்டியவர்கள் ஆகியிருக்கிறார்கள்.  இது ஒரு இனப்படுகொலை.  மொத்த சமூகமும் கொன்றொழிக்கப்பட இருக்கிறது.  அடுத்த இடி தலித்துகளின் தலையில் விழும், அடுத்தது சிறுபான்மையினர் மீது.  இந்த நவநாகரீக உலகம் பலகீனமானவர்களை அழித்தொழிக்கும், சக்திவாய்ந்த சிலரே இறுதியில் எஞ்சுவார்கள், அவர்கள் மொத்த உலகையும் தின்று தீர்ப்பார்கள். இந்த இலக்கை நோக்கித்தான் அவர்கள் பயணப்பட்டிருக்கிறார்கள். வலுத்தவன் எளியோரைக் கொன்றொழிக்கும் இச்செயலை, இதுதான் “சமூக டார்வினிசம்” என்று அவர்கள் இயல்பாய்க் கூறக்கூடும்.

இதுதான் நாம் வாழுகின்ற உலகம், நாம் காண்கின்ற கொடுமை.  இப்போது சொல்லுங்கள் இச்செயலை நீங்கள் ஆதரிக்கப் போகிறீர்களா?  இந்த மிருகத்தனமான முயற்சியைத்தான் இவர்கள் பஸ்தாரில் தொடங்கியிருக்கிறார்கள்.  நீங்கள் இதைத் தடுக்க விரும்பினால், வாருங்கள் என்னுடன். கண்ணெடுத்துப் பாருங்கள் பஸ்தாரின் கொடுமையை. எழுப்புங்கள் உங்கள் எதிர்ப்புக் குரலை.  நீங்கள் அந்த ஆதிவாசிகளின் பக்கம் நில்லுங்கள்.  இங்கும் சரி, வேறு எங்கும் சரி, அந்த ஏழை மக்களைக் கொல்ல விடமாட்டோம் என்று அரசை நோக்கி முழங்குங்கள்.

வெளியார் அனைவரையுமே ஆதிவாசிகள் தங்கள் எதிரியாய்க் கருதும் அளவுக்கு பஸ்தாரின் நிலை இன்று படுமோசமாகி இருக்கிறது.  சொந்த நாட்டின் சக மனிதனையே பகையாய்க் காணும் அளவுக்கு என்ன பயங்கரமான நிலைமை இது.  இந்த நிலை நமது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் அபாயமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?  அந்த லட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்துவிட முடியும் என இந்த அரசு நினைகிறதே .. முடியுமா? நீங்கள் அவர்களைக் கொல்ல முயற்சிப்பீர்கள். பின்னர் அவர்கள் உங்களுக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்குவார்கள்.

இவ்வுலகில் மூன்று வகையான ஏழைமக்கள் இருப்பது பற்றி முன்னர் நான் பேசிக்கொண்டிருந்தேன்.  சிறு வர்த்தகர்கள், தெருக்கூட்டுபவர்கள், உங்கள் வீட்டு வேலைக்காரர்கள் போன்று உங்களுக்கு சேவை செய்பவர்கள் ஒரு வகை.  இவர்கள் உங்கள் தாராள மனத்தால் சற்று ஆதாயம் அடைபவர்கள்.  உங்களின் முன் கைகட்டி வாழ்கிறார்கள்.  ஏனெனில், பணக்காரர்கள் கிள்ளி இறைக்கும் தர்மங்களில் தாங்களும் காலம் தள்ளிவிட முடியும் என நினைக்கிறார்கள்.  எனவே, இவர்கள் உங்களுடன் சண்டை செய்வதில்லை.

தாங்கள் பணக்காரர்கள் ஆகத் தகுதியற்றவர்கள் என்று நம்புகிறவர்கள் இரண்டாவது வகையினர்.  இவர்கள் படிப்பறிவற்றவர்கள், விவசாயிகள்.  தமது ஏழ்மையோடு சமரசம் செய்துகொண்டு வாழப் பழகிவிட்டதால் இவர்கள் உங்களைத் தீண்டமாட்டார்கள்.

மூன்றாவது வகையினர் காடுகளில் வாழும் ஏழை ஆதிவாசி மக்கள்.  உங்களிடம் அவர்கள் எதையும் எதிர்பார்த்ததில்லை, உங்களைப் பொருட்படுத்தியதும் இல்லை.  இருப்பினும் பணத்தாசையால் உந்தப்பட்டு வலிந்து சென்று அவர்களைத் தாக்குகிறீர்கள்.  அதனால், சில இளைஞர்கள் அவர்களுடன் இணைந்து உங்களைத் திருப்பித் தாக்குகிறார்கள்.  இன்று அவர்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்துப் பீடுநடை போட்டு வருகிறார்கள்.  ஏனைய இருவகை ஏழைகளும் அவர்களோடு இணைந்தார்களாயின் இந்த சமூக அமைப்பையே அவர்கள் புரட்டிப் போடுவார்கள்.  எனவே, இந்த சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால், உங்கள் இராணுவம்தான் பஸ்தாரில் வன்முறை வித்துக்களை விதைக்கிறார்கள் என்பதை முதலில் உணருங்கள்.

அவர்கள் சல்வா ஜுடூமைத் தொடங்குகையில் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை ஐயாயிரமாக இருந்ததாகப் போலீசுப் புள்ளிவிவரம் கூறுகிறது.  அது தொடங்கப்பட்ட பின்னால், அதன் கொடுஞ் செயல்கள் தொடர்ந்த பின்னால், மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 22 மடங்கு உயர்ந்து 1,10,000 பேராக அதிகரித்து இருக்கிறது.  நீங்கள் செய்துகொண்டிருப்பது என்னவென்று தெரிகிறதா என்று இந்த அரசைக் கேட்கிறோம்.  நீங்கள் மீண்டும் தாக்குதலில் இறங்குவீர்களானால், மிச்சம் இருப்போரும் மாவோயிஸ்டுகள் ஆவார்கள்.  முழுநேரப் போராளிகள் ஆவார்கள்.  அவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் செயல்பரப்பும் விரிவடையும்.  அதன் தொடர்ச்சியான விரிவு மும்பையையும், தில்லியையும் தொடக்கூடும்.  அவர்களை அழித்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறீர்கள்.  ஆனால் அவர்களை விரிந்து பரவச் செய்வீர்கள், அவ்வளவே.

************

ஆங்கில மூலம் www.nowpublic.com/satyen – தமிழாக்கம்: அனாமதேயன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தமிழ்நாட்டில் கரையேறினேன்… அகதியாய்…!

29

vote-012அகதி. இது வெறும் ஒற்றைச் சொல்லா அல்லது மனமும் சதையும் சேர்ந்த சொந்தமண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட மனிதர்களின் ஏதுமற்றவர்கள் அல்லது யாருமற்றவர்கள் என்கிற உணர்வா? அது உணர்வுகள் மட்டுமல்ல. இதையெல்லாம் தாண்டி எங்களின் அடையாளங்களை தொலைத்து புதிய தேசத்தில் புதிதாய் எதையெதையோ தேடி ஓடும் ஓர் வாழ்வியல் போராட்டம்.

அகராதியின் அகதிக்கான பொருள் விளக்கம் அதன் வலிகளைப் பேசுவதில்லை, உணர்வுகளை விளக்குவதில்லை. அது முடியவும் முடியாது. அனுபவங்களை சொன்னால்  மட்டுமே அதன் வலிகளை புரியவைக்க முடியும். அகதி அனுபவத்தை சொல்ல  எங்கிருந்து எப்படி தொடங்குவது என்று யோசித்தால் நான் எப்படி அகதி ஆக்கப்பட்டேன் என்ற கேள்விக்குள் மீண்டும் தள்ளப்படுகிறேன். ஏன் இப்படி என்று காரணகாரியங்களை எல்லாம் ஆராய்வதில்லை என் பதிவின் நோக்கம்.

ஆனால், என் பதிவை தொடர்ந்து படித்தவர்களுக்கு நானும் என் போன்றவர்களும் புலம் பெயர்ந்ததின் காரணம் புரியாமல் இருக்காது. போலி ஜனநாயகத்தில் மறுக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள், பேரினவாதம் தத்து எடுத்ததில் தறிகெட்டு போய் உயிர் கொல்லும் ராணுவம், சொந்த குடிகளையே ஏய்த்துப் பிழைக்கும் அரசியல்வாதிகளால் சீரழிந்த பொருளாதாரம், ஊழல், நிர்வாக சீர்கேடு, இயற்கை அனர்த்தம் என எனக்குத்தெரிந்து இவையெல்லாம்தான் அகதிகளை உருவாக்கும் காரணிகள்.

ஏதோவொரு காரணத்திற்காய் எத்தனையோ தேசங்களிலிருந்து அகதிகளாய் ஆக்கப்பட்ட மனிதர்கள் இந்த பூமிப்பந்தில் ஆங்காங்கே இறைந்து கிடந்தாலும், பேரினவாதம் என்ற சுனாமியில் சிக்கி சின்னாபின்னப்பட்டு உலகத்து வீதிகளிலெல்லாம் தூக்கி எறியப்பட்ட ஈழத்து அகதிகள் என்ற குப்பைகளில் நானும் ஒருத்தி.

ஈழத்தில் என் பாடசாலை நாட்களில் தமிழ் ஆசிரியர் ஒருமுறை சொன்னார் உங்கள் கற்பனையில் ஓர் சடப்பொருள் பேசினால் எப்படியிருக்கும் என்று ஓர் கட்டுரை எழுதுங்கள் என்று. நானும் ஓர் கடிதாசியின் வாழ்க்கை வரலாறு என்று கட்டுரை எழுதி என் ஆசிரியரின் “கெட்டிக்காரி” என்ற பாராட்டு வாங்கியது ஏனோ இப்போது நினைவில் வருகிறது. இதுவும் அகதி என்ற ஓர் ஜடத்தின் வரலாறு தான். ஆனால், இது பாராட்டுக்காய் எழுதப்படும் கதையோ கற்பனையோ அல்ல.

இன்னும் ஈழத்தமிழன் முட்கம்பிக்குப் பின்னாலும், கடல் நீரால் சூழப்பட்டும் அகதியாய் முடக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.  இந்த பதிவை எழுதும் பொது ஏனோ என்னால் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் Oceanic Viking என்ற ஓர் உடையும் தருவாயிலுள்ள கப்பலில் ஈழத்தமிழர்கள் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பற்றி நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

காடுகளில் மாதக்கணக்கில் ஒழிந்து கிடந்து, கடல் மேல் நூறு நாட்களையும் தாண்டி குறைந்த பட்சம் மனிதர்கள் என்ற அங்கீகாரமேனும் கொடுத்து இலங்கைக்கு எங்களை திருப்பி அனுப்பாதீர்கள் என்று சர்வதேசத்திடம் கெஞ்சுகிறார்கள். ஈழத்தமிழர்கள் என்பதால் அவர்களின் மனிதாபிமான கோரிக்கைகள் கூட அலட்சியத்தோடு புறந்தள்ளப்படுகிறது. சாவிலிருந்து மீண்டு வந்தவர்களை  மீண்டும் வாழ்வா, சாவா என்ற அவலத்திற்குள் தள்ளிவிட்டிருப்பதுதான் சர்வதேசம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் செய்து முடித்த இன்னோர் சாதனை.

இந்த கப்பலில் வந்தவர்களில் இருவர் உரிய மருத்துவ வசதி சரியான நேரத்தில் கிடைக்காததால் இறந்தார்கள் என்பது செய்தி. இறந்தவர்களில் ஒருவர் 29 வயது உடையவர். இரண்டுநாட்களாக இரத்தவாந்தி எடுத்தே உயிரை விட்டார். மீதமுள்ளவர்கள் கடல் என்ற தண்ணீர் தேசத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அப்பாவிகள் ஈழத்தமிழர்களாய் பிறந்ததை தவிர வேறெந்த தவறையும் செய்யவில்லை.

அவர்கள் வேண்டுவதெல்லாம் எங்கள் மீது “அகதி” என்றதொரு முத்திரையை குத்திவிடுங்கள் நாங்கள் உயிராவது  பிழைத்துக்கொள்கிறோம் என்பதுதான். சர்வதேசத்தின் திரைமறைவு நாடகங்களுக்கும், வாழ்வா சாவா போராட்டத்திற்கும் இடையே இப்படி அவலப்படுவர்களின் வாழ்வும் விடிய வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளீராம். உலகமயமாக்கலில் இந்த பூமி ஓர் “Global Village”. ஆமாம். ஆனால், ஈழத்தமிழன் மரண பூமியிலிருந்து தப்பிப் பிழைத்து ஒதுங்க இடம் கேட்டால் சர்வதேசத்தின் சகல சட்ட விதிகளும் ஈவிரக்கமில்லாமல் அவன் மீது பாய்கின்றன. இந்த கூற்றுகளுக்கும், கூத்துகளுக்கும் நான் சிரிக்கவா, அழவா தெரியவில்லை? சரி விடுங்கள். ஈழத்திலிருந்து நான் கிளம்பிய கதையைச் சொல்கிறேன்.

போரின் வலிகளை எத்தனை நாளைக்குத்தான் தாங்கவும், சுமக்கவும் முடியும்? நாங்களும் மனிதர்கள்தானே.எல்லோருக்கும்  அப்போதெல்லாம் குண்டுச்சத்தங்கள் இல்லாமல் இருந்தாலே நிம்மதியாய் இருக்கும் என்று தோன்றியது. கூடவே, உணவு கூட பேரினவாதத்தின் போராயுதமாய் மாறிய பின் தப்பித்தல் என்பது ஒன்றும் தந்திரோபாயம் என்று தோன்றவில்லை. துன்பங்களிலிருந்து தப்பிக்க நினைப்பது மனித இயல்பு இல்லையா?

வீட்டில் எல்லோருக்கும் எப்படி தப்பிப்பது என்ற கேள்வி பூதாகரமாய் இருக்க எனக்கு மட்டும் “ஏன்” என்ற கேள்வி பதில் தெரிந்திருந்தும் மீண்டும், மீண்டும் என் சிந்தனைகளில் அறைந்து கொண்டே இருந்தது. சினத்தை கிளப்பியது. யாருடனும் பேசக்கூடப் பிடிக்கவில்லை. எல்லாக்காலங்களிலும், எல்லா விடயங்களிலும் என் வீடு என்ன முடிவெடுக்கிறதோ அதுவே என் முடிவல்ல. ஆனாலும், என் வீட்டை எதிர்த்துக்கொண்டு எதையும் செய்யத்துணியும் அளவிற்கு வயதோ அல்லது சமூக, பொருளாதார அங்கீகாரமோ இல்லாத சூழலில் எனக்கும் சேர்த்து என் உறவுகள் முடிவெடுக்க அதற்கு வேண்டா வெறுப்பாக கட்டுப்பட்டேன்.

நிச்சயமாக கொழும்பு சென்று அங்கிருந்து உயிர் தப்பி எங்காவது செல்வது என்பது அந்நாட்களில் குதிரைக்கொம்பாக இருந்தது. அது ஆபத்துகள் நிறைந்த பயணமும் கூட. எங்களுக்கு இருந்த ஒரேயொரு தெரிவு தமிழ்நாடு தான். எப்படி போவது? வேறெப்படி, படகில் தான் (ஈழத்தில் வள்ளம் என்ற சொல் தான் வழக்கம்). படகு பயணம் ஒன்றும் ஆபத்து இல்லாதது அல்ல. எனக்கு மருந்துக்கும் நீச்சல் தெரியாது. படகு நடுக்கடலில் கவிழ்ந்தால் பரலோகம்தான்.

அப்போதெல்லாம், ஊரில் பேசிக்கொள்வார்கள், இன்னார் இந்தியாவுக்கு தப்பி போயிட்டினமாம் என்று. இன்னார் தமிழ்நாட்டுக்கு சென்று சேரவில்லையாம். ஆகவே, படகு நடுக்கடலில் கவிழ்திருக்க வேண்டும் அல்லது சிங்களப்படைகளிடம் மாட்டியிருக்க வேண்டும். நீச்சல் தெரிந்தவர் யாராவது நீந்தி வந்தால்தான் உண்மை கரையேறும். உயிர் பிழைத்தால் தமிழ்நாடு இல்லையென்றால் நடுக்கடலில் படகு கவிழ்ந்து சுவாசப்பையின் காற்றை கடல் நீருக்கு கொடுத்து, காற்றுக்குப் பதில் கடல் நீரை சுவாசப்பை முழுக்க நிரப்பி மூச்சுக்காற்றுக்கு திணறி, மூச்சடைத்து கைகால்களை உதறி, உதறி செத்துப்போவோம். பிறகு, எங்கள்  உடல் மீனுக்கு இரையாகும். இதெல்லாம், தெரிந்தே சமுத்திரத்தை தாண்டிக் கடக்கும் முயற்சியில் இறங்கினோம். சாகத்துணிந்தவனுக்கு சமுத்திரமும் வாய்க்கால் என்பது இதைத்தானோ?

கடற்படையின் கண்களில் இருந்து தப்பிப்பது என்பது ஒன்றும் எளிதான காரியம் அல்ல. அதனால், படகில் ஏறி தப்பிக்க மாதக்கணக்கில் கரையோரத்தில் ஒவ்வொரு ஊராக அலைந்தோம். அப்படி அலைந்தபோதுதான் எங்கள் மீது வீசப்பட்ட ஓர் விமானக்குண்டில் என் மைத்துனரின் கால் பறிபோனது. குண்டு போட விமானம் செங்குத்தாய் விரைந்து வர எங்கள் மீது தான் குண்டு விழப்போகிறது என்று சுதாகரித்து ஓட, எங்களின் பிடரிக்குப் பின்னால் குண்டுகள் விழுந்து வெடித்துக்கொண்டே இருந்தன. கொதிக்கும் இரும்புத்துண்டுகள் எங்களை சுற்றி நெருப்பு மழைபோல் சிதறிக்கொண்டிருந்தது.

அப்படி சிதறிய ஓர் துண்டுதான் எனக்கு முன்னால் தன் சின்னக்கால்களால் ஓடிக்கொண்டிருந்த என் மைத்துனரின் பின் முழங்காலுக்கு கீழே கிழித்து உள்ளே சென்றது. காலிலிருந்து இரத்தம் வழிகிறது என்று நான் நிலைமையை உணருமுன்பே அந்த குழந்தை கால்கள் குத்தி நிலத்தில் விழுந்தது. அருகிலுள்ள சீமெந்து கூரையுள்ள ஓர் மலசல கூடத்தின் உள்ளே காயம் பட்டவரை கிடத்தி கிடைத்த ஏதோ ஒரு அழுக்கு துணியால் காயத்தை இறுக்கி கட்டிவிட்டு, மீண்டும் அவரை தூக்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தோம்.

அதன் பிறகு இந்தியா, தமிழ்நாடு செல்லும் முயற்சியை கைவிட்டு செத்தாலும் ஈழத்திலேயே சாகலாம் என முடிவெடுத்து ஊரில் தங்கிவிட்டோம். ஆனால், நிலைமைகள் மிக மோசமான பின் இனிமேல் ஒன்று வாழவேண்டும் அல்லது செத்தே ஆக வேண்டும் என்பது விதியானது. எங்களுக்கு தெரிந்த ஒருவரின் படகில் பருத்தித்துறை முனை கடற்கரையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிளம்பினோம். படகு கிளம்பிவிட்டது. படகு புறப்படத் தொடங்கியதிலிருந்து கடற்கரையும் அங்கேயிருந்த மீதமுள்ள என் இனம், சனம் எல்லோரையும் மிக விரைவில் திரும்பி வந்து பார்ப்பேன் என்று ஏதோ ஓர் நம்பிக்கையுடனும், அவர்கள் நிச்சயமாய் உயிரோடிருப்பார்கள் என்றும் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

எனக்கும் என் மண்ணுக்கும் இடையேயுள்ள தூரம் என்னை பிரிக்க, என் உயிரும், மனமும் இன்னும், இன்னும் ஆழமாக அதை நேசிக்க, காதலிக்க தொடங்கியது. என் மண்ணோடு எனக்குள்ள பந்தம் எப்படி விடுபட்டுப்போகும்? நினைவுகள் என் தேசத்தின் மண்ணோடு, காற்றுவெளியோடு, கடை, தெரு, உறவு, நட்பு என்று மூழ்கியிருக்க உடல் மட்டும் அலைமேல் படகில் கிடந்தது. என் மண்ணின் எல்லை தாண்டி, கடல் கடந்து  தமிழ்நாட்டு கடற்கரையில் கால்வைத்தவுடன் அந்த மண்ணோடு சேர்ந்து அகதி என்ற பெயர் என்மீது ஒட்டவில்லை. அது முத்திரையாய் குத்தப்பட்டது. இந்த அகதிகளை சிலர் தரம் தாழ்த்தி அற்ப சந்தோசப்பட நினைத்தால் “கள்ளத்தோணிகள்” என்றும் அழைப்பதுண்டு.

பொதுவாக தமிழ்நாட்டு தமிழர்கள் எங்களுக்கு வைத்த பெயர், “சிலோன் அகதிகள்”. நாங்கள் தமிழ்நாட்டில் கால் வைத்த போது ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் போல்தான் வரவேற்கப்பட்டோம். என் வாழ்நாளில் மறக்க முடியாதவைகளில் அதுவும் ஒன்றாய்ப்போனது. எங்களை விழிகள் விரியுமளவிற்கு பார்க்கும்படி வேடிக்கைப்பொருள் ஆனோம். எங்களின் பசி, தாகம் பற்றி அக்கறையாய் விசாரிக்கப்படாதது ஏனோ மனதை காயப்படுத்தியது.

அனிச்சை செயலாய் அப்போது தமிழ்நாட்டில் இருந்த எங்கள் ஊர்க்காரர் ஒருவரின் கண்களில் இடறினோம். “வள்ளம் வந்திருக்கு எண்டு சொன்னாங்கள். அதான் ஆராவது எங்கட ஊராக்கள் இருக்கினமோ எண்டு பாக்க வந்தனான்” என்றார். ஏதோ திக்கு தெரியாத காட்டில் திசைகாட்டி போல் இருந்தது அவரின் ஊர்ப்பாசம். படகில் வந்ததில் ஏறக்குறைய அவரவர் வாந்தியில் அவரவரே நனைந்து, ராட்சத அலைகளில் குளித்து, அதையே குடலை பிடுங்குமளவிற்கு விழுங்கி குற்றுயிராய் தமிழகத்தில் நாங்கள் கரை ஒதுங்கியத்தின் அவலத்தை அவரின் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருப்பார் போலும்.

அவர் முதலில் கேட்ட கேள்வி உண்மையிலேயே என்னை அந்த சந்தர்ப்பத்தில் கண் கலங்க வைத்தது. “களைச்சுப்போய் இருக்கிறியள். ஏதாவது சாப்பிட்டீங்களோ?”. ஓர் அகதியின் வலி இன்னோர் அகதிக்குத்தான் புரியுமோ? பசி வயிற்றை பிடுங்கினாலும், அதை வெளியே சொல்லமுடியாதவாறு தன்மான உணர்வு தடுக்க, இல்லை பசிக்கவில்லை என்று சொல்லிவைத்தோம். அவசரமாய், சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னோம். தன் வீட்டுக்கு வாருங்கள் என்று எங்களை அனுமதி கேட்காமலேயே கூட்டிச்சென்றார்.

அவரது வீட்டைப் பார்த்தபோது உண்மையிலேயே அதிர்ந்துதான் போனேன். ஊரில் எவ்வளவு வசதியாய் வாழ்ந்த மனிதர் இப்போது எலிவளையில் ஒண்டிக் கொண்டிருந்தார். ஒருவாறு, சிரம பரிகாரம் செய்து, உடைமாற்றி மீண்டும் வந்த இடத்திற்கே போகிறோம் என்றவர்களை வற்புறுத்தி ஓர் ரெஸ்டாரண்டில் சாப்பிடவைத்து சந்தோசப்பட்டார். பிறகு, இனிமேல் எங்களுக்கு என்ன நடக்கும் என்பதை அவரின் அனுபவத்தை கொண்டு விளக்கினார்.

மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி, அதிகாரிகளின் வருகைக்காய் காத்திருந்தோம். நீண்ட நேரத்திற்குப்பின், அதிகாரிகள், காவல்துறை இன்னும் யார் யாரோ வந்தார்கள். அவர்களின் சம்பிரதாய அகதி விசாரணையை செய்து முடித்தார்கள். பிறகு, எங்களையும் எங்களோடு வந்த சிலரையும் ஓர் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு இரவிரவாய் எங்கெங்கோ அடித்துப் பெய்யும் மழையில் கொண்டு திரிந்தார்கள். இடையிடையே நிறுத்தி காவல் துறையினர் குளிரைப் போக்க தாங்கள் மட்டும் தேநீரும் குடித்து, சிகரெட்டும் பற்றவைத்துக் கொண்டார்கள். அவர்களும் மனிதர்கள் தானே என்று நினைத்துக்கொண்டேன்.

ஏறக்குறைய ஒரு நாள் முழுப் பொழுது தாண்டியபின்னும் கூட எங்கள் பசி, தாகம் பற்றி ஒற்றைவார்த்தையேனும் கேட்கப்படாதது நெஞ்சை அறுத்தது. ஆனால், ஒவ்வொரு முறை அவர்கள் இறங்கி ஏறும்போதும் எங்கள் தலைகளை பொறுப்புணர்வுடன் எண்ணி, எண்ணிப்பார்த்து தங்கள் கடமையுணர்வால் வேறு எங்களை கண் கலங்க வைத்தார்கள். ஒருவாறு, விடிந்தபின் ஓர் அகதிமுகாமில் வண்டி நின்றது. எனக்கு அதிகம் பிடிக்கும், நான் ரசிக்கும் சூரிய வெளிச்சம் சுள்ளென்று முகத்தில் அடித்தது. நீண்டநாட்களுக்கு பிறகு அதை உயிர்ப்பயமின்றி, வெடிச்சத்தமின்றி நான் ரசித்த அந்த கணம் இன்றுவரை என் மனதில் பசுமையாய் இருக்கிறது.

வண்டியிலிருந்து இறங்கி நின்று என் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் பரவட்டும் என்று வெடிமருந்தின் மணமில்லாத அந்த காற்றை சுகமாய் என் சுவாசப்பைகளில் நிரப்பிக்கொண்டேன். ஆனாலும், அடுத்த கணமே என் அவலநிலை என்னை யதார்த்த உலகிற்கு இழுத்து வந்தது. அந்த அற்ப கணநேர சந்தோசமும் எனக்குள் உறைந்து போனது. மறுபடியும் உணர்வுகள் மரத்துப்போக, பார்வையை சுழல விட்டபோது ஈழத்தமிழர்களும், ஈழத்தமிழுமாய் கண்களையும், காதுகளையும் வலியாகவும், மகிழ்ச்சியாகவும் இனம்புரியாத ஓர் உணர்வு தீண்டியது.

பொட்டல் வெளியில் என் பார்வை தீண்டிய தூரம் வரையில் நிறைய ஓலைக்குடிசைகள் (கிடுகுகளால் வேயப்பட்டது), அவற்றுக்கிடையே உள்ள இடைவெளியில் நிறையவே மனித தலைகள். இனிமேல் இழப்பதற்கு ஏதுமில்லாத மனிதர்கள். அந்த ஒற்றை குடிசையை தவிர ஒதுங்க கூட இடமில்லாதவர்கள். சொந்தமண்ணில் எது, எதுக்கெல்லாமோ சொந்தக்காரர்கள், கெளரவ மனிதர்கள். தஞ்சமடைந்த பூமியில் ஏதுமற்ற ஏதிலிகள். இவர்களின் பெயர் அகதிகள். இவர்கள் ஒதுங்கிய இடத்தின் பெயர் தான் அகதி முகாம்.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள் !

24

சாதி

பொதுவில் பயண அனுபவங்களை எழுதி வைக்க வேண்டும் எனும் எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுப் போட்டு மொத்த விஷயமும் நமுத்துப் போய்விடும்.

பயண அனுபவம் என நான் கருதுவது செல்லும் ஊர்களின் அழகியல் அம்சங்களை பட்டியலிட்டுக் காட்டுவது எனும் அம்சத்தில் அல்ல. மாறாக மாறுபட்ட கலாச்சாரம், மற்றும் அந்தக் கலாச்சாரத்தில் அடித்தளமாய் இருக்கும் பொருளாதாரம், அந்தப் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படும் அங்குள்ள மனிதர்களிடையே நிலவும் உறவுகள், அந்த உறவுகளினிடையே ஏற்படும் முரண்பாடுகள் போன்றவற்றைக் கண்டு பதிந்து வைப்பதைத்தான். வடநாட்டுப் பயணம் என்பது என்னளவில் ஒரு முக்கியமான திருப்புமுனை.

ஒரு நாலைந்து ஆண்டுகள் முன்பு இந்தியா எனும் மாய நினைவுகளோடே தில்லியில் வந்திறங்கியவனை ஒரு உலுக்கு உலுக்கி நாம் உண்மையில் ஒரு எல்லைக்குள் இருக்கும் பல தேசத்தவர் என்பதை உணர வைத்தது.

இப்போது மீண்டும் தில்லி. இந்தப் பயணம் ஒருமாத அளவுக்குக் குறுகியவொன்றாயிருந்தாலும் முந்தைய அனுபவங்களின் நினைவுகள் மீண்டும் அவ்வப்போது உரசிச் செல்வதை உணர முடிந்தது.

தில்லி என்பது ஒரு அடையாளம். ஆளும் வர்க்க / மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆணவத்தினுடைய அடையாளம். தனது வளர்ச்சிக்கு உரமாய் இருந்தவர்களையெல்லாம் சீரணித்துச் சக்கையாகத் துப்பி விடும் துரோகத்தின் அடையாளம். புறக்கணிப்பைப் புறக்கணித்து இந்நகரின் மேன்மைக்காய் உழைத்து உழைத்து நடைபாதைகளில் கண்களில் வெறுமை தெறிக்கத் தங்கியிருக்கும் அந்த உழைக்கும் மக்களுடைய தியாகத்தின் அடையாளமும் இதே தில்லிதான்.

இப்போது காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை தில்லியில் நடத்தப் போகிறார்கள். அதற்காக நகரத்துக்கு மேக்கப்போடும் வேலை வெகு வேகமாக நடந்து வருகிறது. முகத்திலிருக்கும் கரும்புள்ளிகளை அசிங்கமாகப் பார்ப்பதைப் போல பாதையோரங்களை அடைத்துக் கிடக்கும் உழைக்கும் மக்களையும் அசிங்கமாகப் பார்க்கிறது அரசு. தில்லி மெட்ரோவின் பாதைகளை அமைக்க உயரமான கான்க்ரீட் தூண்களை அமைக்கும் தொழிலாளிகள், அம்மாநகரத்தின் அழகிய வானுயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் தொழிலாளிகள், இன்னும் பூங்காக்கள், பாலங்கள்.. என்று அந்நகரத்தின் அழகை மெருகூட்டும் உழைக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. அழகுபடுத்தல் முடிந்ததும், அதன் ஒரு அங்கமாய் அதற்காக வேர்வை சிந்தியவர்களையும் கூட தூக்கியெறியப் போகிறார்கள்.

குர்காவ்ன், நோய்டா போன்ற சாடிலைட் நகரங்களில் வானை எட்டிப் பிடிக்க நிற்கும் பளபளப்பான ஒவ்வொரு கட்டிடமும் நம்மிடம் சொல்ல ஓராயிரம் கதைகளுண்டு. நான் வந்து சேர்ந்த இரண்டாவது நாளில் நோய்டாவில் நடைபாதையில் தங்கியிருந்த ஒரு கூலித் தொழிலாளி – ஒரு முதியவர் – நடுக்கும் குளிரில் செத்துப் போயிருந்தார். அவர் கட்டிடத் தொழிலாளியாய் பணிபுரிந்த கட்டடத்திற்கு மிக அருகாமையிலேயே ஒரு நடைபாதையோரம் வாழ்ந்து வந்தார். ஒருவேளை அந்தக் கட்டிடத்துக்கு மட்டும் உயிரும், இதயமும், கண்களும் இருந்திருந்தால் தன்னை பார்த்துப் பார்த்து வளர்த்த அம்முதியவரின் மரணத்துக்காக அழுதிருக்குமோ என்னவோ. ஆனால் அந்தக் கட்டிடத்திலியங்கும் அலுவகங்களில் வேலை பார்க்கும் எவரும் சும்மா வேடிக்கை பார்க்கக் கூட அருகில் வரவில்லை. இங்கே ஏழ்மையையும் வறுமையையும் தொற்று நோயைப் போல பார்த்து ஒதுக்குகிறார்கள்.

இங்கே மூன்று உலகங்கள் இருக்கிறது – ஒன்று உலகத்து இன்பங்களையெல்லாம் சாத்தியப்பட்ட எல்லா வழிவகைகளிலும் துய்க்கும் நுகர்வு வெறியோடு அலைபவர்களின் உலகம்.. அடுத்த உலகம் அருகிலேயே இருக்கிறது – அது வெயிலென்றும் குளிரென்றும் பாராமல் ஓயாமல் உழைத்து எங்கோ பீகாரிலோ உத்திர பிரதேசத்திலோ மத்தியபிரதேசத்திலோ ஒரிசாவிலோ இருக்கும் வயதான பெற்றோர்களுக்கு மாதம் நூறு ரூபாய்களாவது அனுப்ப வேண்டுமே எனும் தவிப்பில் உழலும் இடம்பெயர்ந்த உழைப்பாளிகளின் உலகம். மூன்றாவது உலகம் இவை இரண்டுக்கும் இடையிலிருந்து கொண்டு தமக்கு மேலே உள்ள உலகத்தவர்களின் ஆடம்பரக் கார்களைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே கடன்பட்டாவது ஒரு மாருதி 800 வாங்கி ஓட்டுவதை பெருமையாக நினைக்கும் நடுத்தர வர்க்க மக்களின் உலகம்.

வடக்கில் பிகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உ.பி ஆகிய மாநிலங்களை BIMARU என்கிறார்கள். இம்மாநிலங்களில் விவசாயம் பொய்த்துப் போனதாலும் அந்தந்த வட்டாரங்களில் பிழைக்க வேறு வழியில்லாததாலும் வீசியெறியப்படும் மக்கள் தில்லியில்தான் வந்து குவிகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள். இவர்கள் பெரும்பாலும் வசிப்பது நடைபாதைகளில்தான். லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்படி பிள்ளை குட்டிகளோடு இடம் பெயர்ந்து வந்துள்ளதைக் காண முடிகிறது. குர்காவ்ன், நோய்டா மற்றும் தில்லியின் பல பகுதிகளில் நடைபாதைகளில் இவர்கள் வசிக்கிறார்கள். மொத்த குடும்பமே ஏதோவொரு கூலி வேலைக்குச் சென்றால்தான் ஜீவனத்தை ஓட்ட முடியும். இவர்களுக்கான சுகாதார
வசதிகளோ, இந்தக் குடும்பங்களின் பிள்ளைகள் படிக்க ஏற்பாடோ  எதுவும் கிடையாது. இவர்கள் இத்தனை சிரமத்துக்குள்ளும் ஒரு பெருநகரத்துக்கு இடம் பெயர்ந்து வர வெறுமே பொருளாதாரக் காரணங்கள் மட்டும்தான் இருக்கும் என்று நான் நம்பவில்லை.

இங்கே வந்த சில நாட்களில் வேலை தள்ளிப் போய்க்கொண்டு இருந்ததால் கூட ஒரு பீகாரி நண்பனையும் கூட்டு சேர்த்துக் கொண்டு லும்பினி செல்லக் கிளம்பிவிட்டேன். பேருந்தில் அயோத்தி வரை செல்வது, அங்கே எனது கல்லூரி நண்பன் சரவணரகுபதியும் அவனது நண்பனும் எங்களோடு சேர்ந்து கொள்வார்கள் என்பதும், தொடர்ந்து லும்பினிக்கு இரண்டு புல்லட்டுகளில் சென்றுவிட்டு மீண்டும் அயோத்தியிருந்து தில்லிக்கு பேருந்தில் பயணம் என்பது திட்டம். இந்தப் பயணத்தின் இடையில் ஒரு நாள் ஏதாவது ஒரு சிறிய டவுனில் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் மீண்டும் பயணிப்பது என்றும் முடிந்தவரையில் தேசிய நெடுஞ்சாலையை விட்டு விலகியே பயணிப்பது என்றும் தீர்மானித்துக் கொண்டே கிளம்பினோம்.

திட்டமிட்டபடி வழியில் அயோத்தியில் என் நண்பன் சரவணனும் அவன் நண்பன் வைபவ் த்ரிபாத்தியும் எங்களோடு இணைந்து கொண்டனர். அங்கிருந்து இரண்டு புல்லட்களில் கோரக்பூர் கிளம்பினோம் – கிளம்பும் போதே மதியம் 3 ஆகிவிட்டது. பஸ்ட்டி எனும் நகரத்தைத் தாண்டியதும் ஒரு கிராமத்தில் வைபவ்வின் உறவினர் வீட்டில் தங்கினோம்.

அடுத்த நாள் விடியகாலை சீக்கிரம் எழுந்து திறந்த வெளிப் புல்கலைக்கழகத்தைத் தேடி நடந்த போது ஒரு தலித் குடியிருப்பைக் கடந்தோம் – காலை ஒரு மூன்று மணியிருக்கும். குடிசைகளில் அந்த நேரத்துக்கே சமையல் வேலை நடப்பதைக் காண முடிந்தது. வைபவ்விடம் விசாரித்தேன் – பொதுவாக இங்கே மொத்த குடும்பமும் பண்ணைகளின் நிலத்தில் வேலைக்குச் சென்று விடவேண்டும் என்பதால், காலையிலேயே மொத்த நாளுக்கும் சேர்த்து சப்பாத்தி சுட்டு வைத்துக்கொள்கிறார்கள். சப்ஜி என்று எதுவும் கிடையாது; ஒரு பச்சைமிளகாயை எடுத்து சப்பாத்தியை அதில் சுருட்டி அப்படியே சாப்பிட வேண்டியது தான். இதுவேதான் மதியத்துக்கும் இதுவேதான் இரவுக்கும். கோதுமையை பண்ணையாரே கொடுத்துவிடுவார் – கூலியில் பெரும்பாலும் கழித்து வடுவார். கூலியென்று பார்த்தாலும் ஆணுக்கு இருபது ரூபாயும் பெண்ணுக்கு பத்து ரூபாய்களும்தான்; சிறுவர்களின் வேலைக்கெல்லாம் கூலி கிடையாது. பெரும்பாலும் கூலிக்கு பதிலாய் தானியங்கள் கொடுத்து விடுவார்களாம்.

இதில் வேலை முடிந்ததா வீட்டுக்கு வந்தோமா என்றெல்லம் கிடையாது; பண்ணையார் எப்போது கூப்பிடுகிறாரோ அப்போதெல்லாம் போய் நிற்க வேண்டும். இவர்களெல்லாம் பரம்பரை பரம்பரையாக தொண்டூழியம் செய்பவர்களாம்; இப்போது பண்ணையாருக்கு முடிவெட்டுபவரின் தந்தை பண்ணையாரின் தந்தைக்கு வெட்டியிருப்பார் – இவர் மகன் பண்ணையாரின் மகனுக்கு எதிர்காலத்தில் முடிவெட்டுவார் – இப்படி! இங்கே பெரும் பண்ணைகளிடம்தான் நிலங்கள் மொத்தமும் குவிந்துள்ளன. தலித்துகள் பெரும்பாலும் நிலமற்றவர்களே (தமிழ்நாட்டைப் போலத்தான்). மொத்த குடும்பமும் – குஞ்சு குளுவான்கள் முதற்கொண்டு கூலி வேலைக்குச் சென்றாக வேண்டும். பிள்ளைகளுக்குக் கல்வியென்பதே கிடையாது.

பெரும்பாலும் அங்கே நான் கவனித்தது நமது மாநிலத்துக்கும் அங்கேயுள்ள நிலைமைகளுக்கு மலையளவு இருந்த வித்தியாசத்தை.  உத்திர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் உயர்சாதியினருக்கு சட்டமே கிடையாது என்பது போல்தான் தெரிகிறது. சர்வசாதாரணமாக அங்கே நாட்டுத் துப்பாக்கிகள் தூக்கிய குண்டர்களுடன் உயர்சாதிப் பண்ணைகள் நடமாடுவதைக் கவனித்து இருக்கிறேன். பேருந்துகளில் அவர்கள் ஏறினால் டிக்கெட் எடுப்பதில்லை. பேருந்துகளில் ஏறும் தலித்துகள் இருக்கைகள் காலியாய் இருந்தாலும் உட்காருவதில்லை – குறிப்பாக இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒரு உயர் சாதிக்காரர் உட்கார்ந்து இருந்தால் அருகில் ஒரு தலித் உட்கார முடியாது.

நிலப்பிரபுத்துவம் தனது உச்சகட்ட கொடுமைகளை அங்கே கட்டவிழ்த்து விட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. முசாகர் எனும் ஒரு சாதியினரைப் பற்றி எனது பீகாரி நண்பன் சொன்னான் –  தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் எனக்கு (இங்கே இரட்டைக் குவளையை முறையைக் கண்டிருந்தாலும் கூட) அவர்களைப் பற்றி கேள்வியுற்றதெல்லாம் கடுமையான வியப்பை உண்டாக்கியது. அங்கே வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது. தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க  வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும். கதவுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், முசாகர்களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வளைக்குள் நுழைவது போலத்தானிருக்குமாம்.

குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டுமாம். அதாவது தலித்துகளின் குடியிருப்பைக் கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று செல்லக் கூடாதாம். இந்த மாதத்தில் ஓலைக் குடிசையாய் இருந்த தனது வீட்டை ஒரு முசாகர் காரை வீடாக கட்டிவிட்டதற்காக அதை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள் மேல்சாதி இந்துக்கள். எனக்குத் தமிழகமும் பெரியாரும்  நினைவுக்கு வந்தார் – உண்மையில் அந்த தாடிக்காரக் கிழவனுக்கு நாம் நிறையவே கடன்பட்டிருக்கிறோம்.

இது போன்ற சமூகக் காரணிகள், பொருளாதாரக் காரணிகளோடு இணைந்துதான் அவர்களை தில்லிக்கு விரட்டுகிறது – இங்கே தில்லியின் கருணையற்ற இதயத்தை சகித்துக் கொண்டு தொடர்ந்து வாழ நிர்பந்திக்கிறது. BIMARU மாநிலங்களின் பலபகுதிகளின் பொருளாதார நிலையும் சமூக ஒடுக்குமுறையும் நமது கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.

நாங்கள் பஸ்ட்டியிலிருந்து காலையில் சீக்கிரமாகவே கிளம்பி விட்டோம் – வழியில் வைபவ்வின் புல்லட் இஞ்சின் சீஸ் ஆகி விட்டது. மிதமான வேகத்தில் கோரக்பூர் சென்றபோது மாலை நான்கு. ஒரு மெக்கானிக்கைப் பிடித்து ரீபோரிங் செய்யச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் தங்க இடம் பார்க்கவும், ஊரைச் சுற்றிப்பார்க்கவும் கால்நடையாகக் கிளம்பிவிட்டோம்.

இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம் – நான் அங்குள்ள சாதி ஒடுக்குமுறைகள் விவசாயம் மற்றும் பிற தொழில்கள் பற்றியும் அவர்களிடமிருந்து கேட்டறிய முடிந்தது. அவர்களிடம் நம் மாநிலம் பற்றி நிறைய சொன்னேன். பிரதானமாக அவர்களுக்கு இருந்த ஆச்சர்யங்கள் இரண்டு – 1) அது ஏன் தமிழ் நாட்டில் இந்தியை எதிர்க்கிறீர்கள்? 2) அது எப்படி கருணாநிதி ராமரைப் பற்றி இழிவாகப் பேசியும் தமிழ் நாட்டு மக்கள் கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள்.. நீண்ட நேரமாக அவர்களுக்கு பெரியார், அவருக்கு முன் இருந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபுகள் போன்றவற்றை விளக்கினேன். மற்றபடி அங்குள்ள நிலைமைகளை அவர்களிடம் கேட்டறிந்ததனூடாகவும் இந்தப் பயணத்தில் இடையிடையே நிறுத்தி நேரில் கண்டவற்றினூடாகவும் எனக்கு பளிச்சென்று தெரிந்தவொன்று – தமிழ்நாட்டுக்கும் வட நாட்டிற்கும் இருந்த மலையளவிலான சமூகப் பொருளாதார வேறுபாடுகள்.

தமிழ்நாட்டில் சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து தலித்துகள் போராடுகிறார்கள் – இரட்டைக்குவளை முறையை இன்னும் ஒழிக்க முடியாத திராவிட ஆட்சி என்று உண்மைத்தமிழன் வினவு தளத்தில் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்.. இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போராடும் செய்திகள் வருவதாலேயே அது நடப்பில் இருப்பது இவருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், வடக்கிலோ ஒடுக்குமுறையை எதிர்த்து தலித்துகள் போராடுவது சாத்தியமில்லை. அதற்குக் காரணம் அவர்கள் ஆண்டைகள் தம்மேல் ஏவிவிடும் ஒடுக்குமுறையை கேள்வி வரைமுறையில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதல்ல; அங்குள்ள பொருளாதாரச் சூழல் அவர்களை போராடும் ஒரு நிலைக்கு அனுமதிப்பதில்லை என்பதே காரணம்.

தமிழ்நாட்டில் ஒதுகுபுற கிராமங்களில் இருந்து அதிகபட்சம் மூன்று மணிநேர பேருந்துப் பயண தூரத்தில் ஏதேனும் ஒரு சிறு நகரமாவது இருக்கும். பேருந்துக் கட்டணமும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைவு – பேருந்து இணைப்பின் அடர்த்தியும் வடக்கை ஒப்பிடும் போது அதிகம். கிராமப்புறங்களில் நிலத்தின் மேல் தலித்துகளுக்கு பொதுவாக இந்தியா முழுவதிலும் உரிமை கிடையாது. சாதி இந்துக்கள்தான் நிலங்களை வைத்திருக்கிறார்கள். இயல்பாகவே கிராமப்புறத்தில் தலித்துகள் கூலிவேலை பார்ப்பவராயும், சாதி இந்துக்களுக்கு தொண்டூழியம் செய்பவராயும் இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டைப் பொருத்தளவில் ( குறிப்பான சில விதிவிலக்குகள் இருக்கலாம்) தலித்துகள் முற்று முழுக்க தமது சோற்றுக்கு கிராமப்புற பண்ணையை நம்பித்தானிருக்க வேண்டும் எனும் கட்டாயம் கிடையாது. அருகிலிருக்கும் நகரங்களுக்கு கூலி வேலையாக வரும் தலித்துகள் இயல்பாகவே தமது கிராமங்களுக்குத் திரும்பும் போது அங்கு நிலவும் ஒடுக்குமுறையை சகித்துக் கொள்ள முடியாமல் போராட எத்தனிக்கிறார்கள்.

உதாரணமாக நான் திருப்பூரில் சில ஆண்டுகள் தங்கியிருந்த போது பக்கத்தில் ஒரு ஷெட்டில் கோவையின் ஏதோ ஒரு ஒதுக்குப்புற கிராமத்திலிருந்து இங்குள்ள பனியன் பட்டரையில் வேலைக்காக வந்திருந்தவர்கள் சேர்ந்து தங்கியிருந்தனர். அவர்களிடம் பேசிப்பார்த்த போது, அங்கே அவர்கள் கிராமத்தில் கவுண்டர்கள் இவர்களை மோசமான முறையில் ஒடுக்கிவந்ததும், இவர்கள் அதை எதிர்த்து போராட ஆரம்பித்தவுடன், அந்த வட்டாரத்திலிருக்கும் கவுண்டர்களெல்லாம் சேர்ந்து இவர்களுக்கு தமது நிலத்தில் வேலை தரக்கூடாது என்று முடிவு செய்து விட்டதாகவும், எனவே இவர்கள் வீட்டுக்கொருவராகக் கிளம்பி திருப்பூருக்கு வேலைக்கு வந்துவிட்டதாகவும் தெரியவந்தது.

இதில், இங்கும் அவர்கள் வேலைசெய்யும் கம்பெனி முதலாளி ஏதாவதொரு ஆதிக்க சாதிக்காரனாகத்தானிருப்பான், ஆனால் – அவர்கள் கிராமத்தில் சந்தித்த ஒடுக்குமுறை பிரதானமாக சாதி ரீதியிலானதும் அதற்கு சற்றும் குறையாத பொருளாதாரச் சுரண்டலும் – இங்கே பொருளாதார ஒடுக்குமுறையே பிரதானமானது; சாதி ரீதியிலான ஒடுக்குமுறையின் கணம் லேசாகக் குறைந்து அது தன் வடிவத்திலிருந்து மாறுபட்டு பொருளார அம்சங்களை தன்னோடு சேர்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் தமிழ்நாடு திராவிட ஆட்சிகளால் சொர்க்க புரியாகிவிட்டது எனும் அர்த்தத்தில் சொல்லவதாக புரிந்து கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டில் ஒடுக்குமுறையின் பரிமாணம் வேறு தளத்துக்கு நகர்ந்து விட்டது. இங்கே மக்கள் தமது பாரம்பரிய வாழிடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு தொழில்நிறுவனங்களில் குறைகூலிக்குச் செல்ல நிலபிரபுத்துவம் நிர்பந்திக்கிறது. மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கைகளும் நிலபிரபுத்துவமும் கைகோர்த்துக் கொள்வது இந்த அம்சத்தில்தான். அமெரிக்கனுக்கு குறைந்த விலையில் டீசர்ட் கிடைக்க ஆலாந்துரையைச் சேர்ந்த கவுண்டனும் ஒரு மறைமுகக் காரணமாகிறான். ஒடுக்குமுறையானது அதன் வடிவத்தில் மாறுபட்டு வருகிறது – ஆனால் ஒடுக்குமுறைக்கான பிரதான காரணமான வளங்களின் மேல் அதிகாரமற்று இருப்பது அப்படியேதான் தொடர்கிறது.

ஆனால் இங்கே வடக்கில் நிலைமை சற்று வேறு விதமானது – சமூக ரீதியாக இன்னமும் மூன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமை தான் பெரும்பாலான பகுதிகளில் நிலவுகிறது. இங்கே எளிதில் இடம்பெயர நகரங்கள் கைக்கெட்டும் தொலைவில் இல்லை. நாங்கள் பயணம் செய்த போது, காலையில் ஒரு நகரத்தைக் கண்டோமென்றால், மாலையில் தான் அடுத்த நகரத்தைப் பார்க்க முடியும். அங்கும் இடம்பெயர்ந்து வருபவருக்கெல்லாம் வேலை கொடுக்குமளவிற்கு தொழிற்சாலைகள் ஏதும் இருக்காது. கிராமத்தில் ஆண்டைகளின் ஒடுக்குமுறையைச் சகித்துக் கொண்டு அடிபணிந்து கிடப்பதைத் தாண்டி வேறு வாய்ப்புகள் குறைவு.

இப்போது இதன் பின்னணியில் வடக்கிலும் மத்தியிலும் சிலபகுதிகளில் மாவோயிஸ்டுகள் செலுத்திவரும் செல்வாக்கைப் புரிந்து கொள்ள முடியும். இங்கே சாதி ரீதியில் / சமூக ரீதியில் / பொருளாதார ரீதியில் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களுக்கு மாவொயிஸ்டுத் தோழர்கள் கம்யூனிஸ்டுகளாய் அல்ல; ஒரு மீட்பராகவோ, ஒரு தேவதூதராகவோதான் தெரிவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் துப்பாக்கிக் குழாயிலிருந்து அதிகாரம் மட்டுமல்ல, ஆண்டாண்டு காலமாய் நிலபிரபுத்துவ ஒடுக்குமுறையின் கீழ் புழுங்கிச் சாகும் மக்களின் விடுதலையும் கூட அந்தக் குழாயிலிருந்து நெருப்புப் பிழம்பாய்ப் புறப்படும் ஈயக்குண்டுகளின் உள்ளே தான் சூல் கொண்டு இருக்கிறது. மாவொயிஸ்டுகள் தமது கட்டுப்பாட்டுப் பிராந்தியத்திலிருக்கும் மக்களின் மனங்களில் அசைக்கமுடியாத மாவீர்களாய் (invincible heros) வீற்றிருப்பார்கள் என்பதை மற்ற பகுதிகளில் நான் கண்ட நிலைமை எனக்கு உணர்த்தியது.

அந்த மக்கள் காக்கிச் சீருடையுடனும், கையில் கட்டிய சிவப்புப் பட்டையுடனும், போலீசிடம் இருந்து பறித்த ஹைதர் காலத்துக் கட்டைத் துப்பாக்கிகளோடும், பாதவுரை அணியாத வெறும் கால்களோடும், பசியில் உள்ளடங்கிய கண்களோடும், மலேரியா காய்ச்சல் மருந்துகளோடும் என்றைக்காவது வந்து சேரப்போகும் மக்கள் விடுதலைப் படையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இல்லாவிட்டால், தில்லியின் நடைபாதையில் தமக்கான இடத்தைத் தேடிக் கிளம்பிவிட வேண்டியது தான் – அங்கே இரத்தத்தை உறையவைக்கும் டிசம்பரின் கருணையற்ற குளிரும் – இரத்தத்தை ஆவியாக்கக் காத்திருக்கும் ஏப்ரல் வெயிலும் இவர்களுக்காகக் காத்திருக்கிறது.

கோரக்பூரின் ஒதுக்குப்புற சந்துகளில் நான் சில தாக்கூர்கள் துப்பாக்கி ஏந்திய காவலாளியோடும் கண்களில் மரண பீதியோடும் வலம் வருவதைக் காண நேர்ந்தது. கிராமப்புறங்களின் அரசு இயந்திரமே இல்லை எனும் நிலையென்றால்; சிறு நகரங்களில் அந்த இயந்திரத்தின் அச்சாக ஆதிக்க சாதியினரே இருக்கிறார்கள். பெரும்பாலும் உழைக்கும் தலித் மக்களுக்காகவென்று பேச பிரதான ஓட்டுக் கட்சிகள் எவையும் கிடையாது. தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்திலாவது ஓட்டுப்பொறுக்கிகள் ஏழைக் கிழவிகளைக் கட்டிப்பிடிப்பது போல போஸ் கொடுப்பதும், தலித் காலனிக்குள் வருவதும் என்று ஓட்டுப் பொருக்கவாவது ஸ்டண்ட் அடிப்பார்கள். வடக்கின் நிலைவேறு – நிலபிரபு எந்தக் கட்சியை நோக்கி கைகாட்டுகிறானோ அதற்கு ஓட்டுப் போட்டு விட வேண்டும். இந்த நிலபிரபுக்கள் வெவ்வேறு ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள் – இந்த நிலபிரபுக்கள் மட்டத்தில்தான் சாதி அரசியலே நடக்கிறது.

அடுத்தநாள் கோரக்பூரிலிருந்து காலை கிளம்பினோம் – அந்த மெக்கானிக் விடியவிடிய வேலை பார்த்திருக்கிறார். நிதானமான வேகத்தில் சென்று மகராஜ்கன்ச் எனும் இடத்தில் இந்திய நேபாள எல்லையைக் கடந்து லும்பினி சென்றடைந்தோம். புத்தர் பிறந்த இடம் இது தான். எனக்கு அதில் பெரிய அளவு ஆர்வம் இல்லை – போனது ஊரைச் சுற்ற – ஒரே இடத்தில் தேங்கி நிற்பதில் அர்த்தமில்லை என்பதால் மீண்டும் அயோத்தி நோக்கி கிளம்பினோம். எனக்கு அயோத்தியில் ஒரு நாள் கழிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தது. அங்கே இடிக்கப்பட்ட மசூதியையும், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இராமன் கோயிலையும் காணவேண்டும் – முடிந்தால் சில போட்டோ க்கள் எடுக்க வேண்டும் என்றும் ஆவல்.

இதை நான் சரவணனிடம் சொல்லப்போக, அவன் பதறிவிட்டான்.  அது அங்கே கூட்டம் அதிகம் வரும் நாளென்றும், குறிப்பாக பண்டாரங்கள் அதிகமாக வருவார்கள் என்றும், வடநாட்டுச் சாமியார்கள் பொதுவில் காட்டான்களென்றும் சொல்லி பயமுறுத்தவே அந்த திட்டத்தை உடைப்பில் போட்டுவிட்டு நானும் எனது நண்பனும் பேருந்தில் தில்லிக்குக் கிளம்பிவிட்டோம்.
_______________________________

இன்று டிசம்பர் 31. அறைக்கு வெளியே குளிரில் நடுங்கிக் கொண்டே தெருவில் நடக்கும் கும்மாளங்களை வேடிக்கை பார்த்து நிற்கிறேன். சிகரெட்டின் காரமான புகை நுரையீரலெங்கும் பரவி குளிரை விரட்டப் போராடிக் கொண்டிருக்கிறது.. நாளை திரும்பவும் ஊருக்குக் கிளம்ப வேண்டும். மீண்டும் மீண்டும் நோய்டாவில் குளிரில் பற்கள் கிட்டித்து செத்துக் கிடந்த அந்தக் முதியவர் நினைவுக்கு வருகிறர். இன்னும் இன்னும் இப்படி தில்லிக்கு வந்து குளிரிலும் வெயிலிலும் வதைபட்டுச் சாக எத்தனையோ முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உத்திரபிரதேசத்தின் ஏதோவொரு கிராமத்திலிருந்து நாளும் நாளும் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.. மாயாவதியின் தங்க நிறச் சிலைகள் சிரித்துக் கொண்டிருந்ததை வரும் வழியில் பல இடங்களில் காண நேர்ந்தது.

அந்தச் சிலைகள் யாரைப் பார்த்து சிரிக்கிறது?