privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்கிரிக்கெட் : பாகிஸ்தானுக்குக் கைதட்டுபவன் பயங்கரவாதியா ?

கிரிக்கெட் : பாகிஸ்தானுக்குக் கைதட்டுபவன் பயங்கரவாதியா ?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 28

“கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியுறுவதையும், பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதையும் இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள். அவர்களது தேசபக்தி யோக்கியதைக்கு இதுவே சான்று”

இந்து முன்னணியின் பிரபலமான அவதூறுகளில் ஒன்று.

கபில்தேவ் - இம்ரான்கான்20-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பயணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வந்தபோது தில்லி ஆடுகளத்தை சிவசேனா கொத்தியது; சென்னை அரங்கத்தில் பன்றித் தலைகளை வீசியது; மும்பை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தினுள் புகுந்து பரிசுக் கோப்பைகளை அடித்து நொறுக்கியது.

அணுகுண்டு வெடிப்பு, தேவாலய இடிப்புகளால் உலக அரங்கில் தனிமைப்பட்டிருக்கும் பா.ஜ.க. அரசுக்கு எப்படியாவது ஆட்டத்தை நடத்திவிட வேண்டும் என்ற கவலை; போட்டி ரத்தானால் பலகோடி ரூபாய் பறிபோகுமே என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவலை; பணம் வாங்கிக்கொண்டு தோற்றதாக இந்திய, பாகிஸ்தான் வீரர்கள்மீது குற்றச்சாட்டுகள் இருப்பதால், அந்தக் களங்கத்தைத் துடைப்பதற்காகவாவது போட்டியில் வெல்ல வேண்டும் என்பது  இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் கவலை; தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு விளம்பரம் உருவாக்கித் தரும் வியாபாரம் குறித்த கவலை; எதைப் பற்றியும் கவலைப்படாத ரசிகர்களுக்கு மட்டும்தான் ஆட்டத்தை ரசிக்க வேண்டுமே என்ற கவலை.

இவை பின்னரங்கத்தில் பேசப்படும் பல்வேறு கவலைகள். ஆனால், மக்கள் அரங்கில் பேசப்படும் ஒரே கவலை, ‘விளையாட்டு வேறு, அரசியல் வேறு, இரண்டையும் கலக்காதீர்கள்’ என்பதுதான். என்றால் யுத்தத்தை தாக்கரே மைதானத்திற்கு கொண்டு வந்ததில் உண்மையில்லையா? ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியில்லையா? சிவசேனா செயற்கையாகத்தான் இப்பிரச்சினையை எழுப்பியதா? எழுப்பப்படும் ஒரு பிரச்சினையால், ‘அரசியலைக் கலக்காதே’ என்பது, அப்பிரச்சினையைச் சந்திப்பதற்கு பதில், தப்பித்து ஓடுவதையே கோருகிறது. தானும், தன் வீடும் மட்டுமே உலகம் என்று வாழும் நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்கம், ஒளிந்திருக்கும் பாதுகாப்பான இடமே, ‘அரசியலைக் கலக்காதே’ என்பதில்தான். இதுதான் நேர்மையற்ற அரசியல். இதனால்தான் சிவசேனாக்கள் வளருகின்றன.

உண்மையில் விளையாட்டிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லையா? பண்டைய கிரேக்க வீரனுக்குத் தரப்பட்ட விருது வெறும் ஆலிவ் இலைக் கிரீடம்தான். இன்றைய ஒலிம்பிக் வீரனுக்கு விருது, விளம்பரத்திற்காக பன்னாட்டு நிறுவனம் தரும் சில மில்லியன் டாலர்கள். டாலரும், இலையும் ஒன்றுதானா? பிரான்சில் நடந்த உலகக் கால்பந்து போட்டியினால் பிரபலமான வீரர்களை வாங்குவதற்கு ஐரோப்பிய கிளப்புகள் போட்டியிட்டன. யார் திறமையான கால்பந்து வீரர் என்பது, யார் விலை அதிகம் என்பதிலிருந்தே தீர்மானிக்கப்படுகிறது. திறமையைப் பணம் ஆதிக்கம் செய்வதன் காரணம் என்ன?

முன்பு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா ஆடுவதையே காணமுடியாத நீங்கள், இன்று எந்த நாடு ஆடினாலும் காண முடியும். உலக மயமாக்கமும், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சியும் அதைச் சாத்தியமாக்கியது. விளையாட்டில் மட்டும் புழங்கும் மூலதனம், பல மூன்றாம் உலக நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகம். சர்வதேசக் கால்பந்துக் கழகம்தான் உலகின் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனம், பில்கேட்சின் நிறுவனம் அல்ல. விளையாட்டின் இத்தகைய மாபெரும் வருமானம் ஆப்பிரிக்கப் பஞ்சத்தைப் போக்குவதற்கும், ஆசியாவின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் தான் பயன்படுகிறதா? அல்லது ஏழை நாடுகளைக் கொள்ளையிடவும், ஆதிக்கம் செய்யவும் பயன்படுகிறதா? மூலதனம், சந்தை, விளம்பரம், பணம் இவற்றை உருவிவிட்டு எந்த விளையாட்டைக் காட்ட முடியும்? அல்லது ஆட முடியும்? முடியாதென்றால் அதன் காரணம் அரசியல்; ஆம். அரசியல் கலப்பற்ற தூய விளையாட்டு எதுவும் இன்று கிடையாது. சாத்தியமும் இல்லை.

ஒரு போராகவும், போர் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் கருவியாகவும், இன – நிற வெறிச் சண்டையாகவும் விளையாட்டு மாற்றப்பட்டுவிட்டது. ஏகாதிபதிய உலகின் ஆதிக்க மனோபாவமும், அதை எதிர்க்கும் விடுதலை உணர்வும் விளையாட்டிலும் வெளிப்பட்டே தீரும். 1932-இல் மியூனிச்சில் நடந்த ஒலிம்பிக் ஓட்டத்தில் ஜெஸ்ஸி ஓவன்ஸ் எனும் அமெரிக்கக் கருப்பர் வெல்கிறார். வெள்ளையர்களே பலசாலிகள் என்று கருதிய ஹிட்லரால் அதைத் தாங்க முடியவில்லை. முந்தைய சோவியத் யூனியன் பல தலைமுறைகளாக, ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பெற்றது. கம்யூனிச அரக்கனின் அதிகாரத்தின் கீழ் தரப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பயிற்சிதான் வெற்றிக்குக் காரணம் என அமெரிக்க மக்கள் இன்றும் கருதுகின்றனர்.

பிரான்சில் நடந்த உலகக் கால்பந்துப் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்திய ஈரானை, அரபு மக்கள் விடிய விடியக் கொண்டாடியதற்குக் காரணம், ஏகாதிபத்திய வெறுப்பு. இந்தியாவின் தெற்காசிய ஆதிக்கத்தில் சிக்கியிருக்கும் இலங்கை, கிரிக்கெட்டில் இந்தியாவை வெல்லும்போது ஈழத் தமிழர்களும் மகிழ்வார்கள். காரணம் அமைதிப்படையின் அழியாத வடுக்கள்தான். இதுபோக, ஏழை நாடுகளுக்கிடையே நடக்கும் போட்டிகளும் தேசிய வெறியால் கவ்வப்பட்டிருக்கின்றன. அவை பொய்யான உணர்ச்சியில் மக்களை மூழ்கடிக்க ஆள்பவருக்குப் பயன்படுகின்றன. இருப்பினும் விளையாட்டில் நாம் கண்ட சமூக நிலைமைகள் அனைத்தும், பரபரப்பை ஏற்படுத்தி, சந்தையை அதிகரித்து, பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடவே முக்கியமாகப் பயன்படுகிறது. கிரிக்கெட்டின் விதிகள் தெரியாத ஒரு நபர்கூட, ‘ஸ்கோர் என்னாச்சு, நம்மாளு ஜெயிப்பானா?’ என்று கேட்பதன் காரணம் அதுதான்.

விளையாட்டின் சர்வதேச அரசியல் நிலைமைகள் இந்தியக் கிரிக்கெட்டிற்கும் பொருந்தும். ஆள்பவர்களுக்குத் தேசிய வெறியூட்டும் கருவியாகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் வர்த்தமாகவும்தான் கிரிக்கெட் பயன்படுகிறது. அதனாலேயே அது பிரபலமாக்கப்பட்டது. இனிமேலும் அது வெறும் விளையாட்டு மட்டுமல்ல.

‘பாகிஸ்தானுடன் போரோ, கிரிக்கெட்டோ இரண்டிலும் இந்தியாதான் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்’, என்கிறார் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன். ‘போரில் யாரிடம் நியாயம் உள்ளதோ அவன் வெல்லட்டும், விளையாட்டில் யாரிடம் திறமை உள்ளதோ அவன் வெல்லட்டும்’ என்பதுதானே சரி. தாக்கரேயின் அரசியல் கலப்பைக் கண்டித்தவர்கள், மகாஜனின் கூற்றில் அரசியலைக் காணவில்லையா? இல்லை என்பதன் காரணம் இது புதிதல்ல. இருநாட்டு அணிகளுக்கிடையேயான போட்டியின் போது கிளம்பும் தேசிய வெறியில்  இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் குளிர் காய்கின்றன. காசுமீர் பிரச்சினையிலும், கிரிக்கெட் போட்டியிலும் அவர்களது அணுகுமுறை ஒன்றுதான். இன்று சிவசேனாவை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் இதில் அடக்கம்.

கபில்தேவ் தலைமையிலான அணி, பாகிஸ்தான் அணியுடன் ஷார்ஜாவில் மோதிய ஒரு போட்டியின் இறுதிக் காட்சி.  கடைசிப் பந்தில் 4 ரன் அடித்தால் வெற்றி, என்ற நிலையில் சேதன் சர்மாவின் பந்தை சிக்சர் அடிக்கிறார், பாகிஸ்தான் வீரர் மியான்தத். இருநாட்டு இரசிகர்களையும் பல நாட்கள் தூங்கவிடாமல் செய்த இப்போட்டியைப் போன்று, பலவற்றில் பாகிஸ்தான் அணி வென்றிருக்கிறது. அரசியல் கலக்காத கிரிக்கெட்டை விரும்பியவர்கள் அனைவரும் திறமை – இரசனை அடிப்படையில் பாகிஸ்தான் அணிவெற்றியைப் பாராட்டியிருக்க வேண்டும். இரசிகர்களை ஏற்கச் செய்திருக்க வேண்டும். செய்தார்களா? அன்று இந்தியப் பத்திரிகைகள் எழுதியவை என்ன? ”இறைச்சி விழுங்கும் பாகிஸ்தான் வீரர்களின் ரத்தத்தில் ஒரு வெல்லும் வெறி (Killer instinct) இருக்கும். இந்தியாவுடன் மோதும்போது அவ்வெறி விசுவரூபமெடுக்கும். சைவ பட்சிணிகளான இந்திய வீரர்கள் சாந்த சொரூபியாக, இக்கட்டான தருணங்களில் கோழைகளாக விளையாடுகின்றனர்.”

தாக்கரேயுடன் தோளோடு தோள் நின்று தேசிய வெறியை ஊட்டியவர்கள், அரசியலற்ற விளையாட்டைப் பற்றி நமக்கு நீதி உபதேசம் செய்கிறார்கள். தேசிய வெறியின் தர்க்க நீட்சியாக முன் செல்லும் சிவசேனாவை ‘ஒரு எல்லைக்குள் மேல் போகாதே’ என அன்பாய்க் கடிந்து கொள்கிறார்கள்.

எப்போதோ அரசியலாக்கப்பட்ட கிரிக்கெட்டின் செல்வாக்கை அறுவடை செய்ய, சிவசேனைக்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ் முயன்று வந்தது. ‘இந்தியாவை வெல்லும் பாகிஸ்தான் அணியை, இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடுகின்றனர்’ என்று தமது முசுலீம் எதிர்ப்பு அரசியலை கிரிக்கெட்டிலும் புகுத்தினர். ஒரு விளையாட்டு என்ற முறையில் யாரும் எவரையும் ஆதரிக்கலாம் என்று, கிரிக்கெட்டின் ஜனநாயகக் காவலர்கள் இதுவரை உங்களிடம் ஏன் விளக்கவில்லை? இல்லையென்றால், இந்திய கிரிக்கெட்டில் இந்து தேசிய அரசியல் நுழைவை இவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றுதானே பொருள்?

வருடந்தோறும் வளைகுடா ஷார்ஜாவில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அங்கே இந்திய அணியை ஆதரிப்பவர்களில் அதிகம் பேர் இங்கிருந்து பிழைக்கச் சென்ற இசுலாமிய மக்கள்தான் என்பது உங்களுக்குத் தெரியும். ‘முசுலீம்கள் தேச பக்தர்கள்தான்’ என்று ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் சான்றிதழ் பெறுவதற்காக இதைக் கூறவில்லை. உண்மையை எப்படித் திரிக்கிறார்கள் என்பதைத்தான் கூறுகிறோம். இருப்பினும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இசுலாமிய இளைஞனின் மனநிலை – பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக இருக்க முடியுமா என்பதையும் நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.

பிரான்சில், உலகக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில்தான் வெல்ல வேண்டும் என்ற நமது விருப்பம், ஏகாதிபத்திய வெறுப்பினாலும், மூன்றாம் உலக நாட்டின் மீதான நட்பினாலும் வருகிறது. இங்கிலாந்தை எதிர்த்து மேற்கிந்தியக் கிரிக்கெட் அணி வெற்றி கொள்ள விரும்பும் நமது ஆவல், வெள்ளை நிற வெறியின் மீதுள்ள வெறுப்பினால் வருகிறது; யார் திறமையாக ஆடுகிறார்கள் என்பதல்ல. எனில், இந்தியச் சமூக நிலைமைகளில் ஒரு முசுலீமின் மனநிலை கிரிக்கெட்டில் யாரை ஆதரிக்கும்? 20 ஆண்டுகளில் அவர்களை எதிர்த்து நூற்றுக்கணக்கில் கலவரங்கள், ஆயிரக்கணக்கில் படுகொலைகள், அகதிகளாக வெளியேற்றம், பாபர் மசூதி இடிப்பு, ஐ.எஸ்.ஐ. பீதியூட்டி சிறை, மொத்தத்தில் முசுலீம்கள் சொந்த மண்ணில் இரண்டாந்தரக் குடிமக்கள்.

தாக்கரே-வாஜ்பாயிஆனால், தண்டிக்கப்பட வேண்டிய இந்துமத வெறியர்கள் ஆட்சியில்; ‘முசுலீம்களின் புட்டத்தை எட்டி உதைப்பேன், மசூதியை இடித்தது நாங்கள்தான், ஸ்ரீகிருஷ்ணா கமிசனைக் குப்பையில் போடு’ என்னும் தாக்கரே; கடவுளின் பெயரால் கலவரம் வேண்டாம் என்று ஏனைய கட்சிகளின் மழுப்பலான உபதேசம். இந்தச் சூழ்நிலையில் காயம்பட்ட இசுலாமிய இதயங்களை வருடிக்கொடுத்தது யார்?

தாக்கரேவைக் கைது செய்யுங்கள் என்று இந்திய அணி ஊர்வலம் போனதா? மசூதி இடிப்பு தவறு என ஒரு வீரராவது அறிக்கை விட்டாரா? இல்லை. எதுவும் இல்லை. டெண்டுல்கரின் திருமணத்திற்கு வந்த 50 பேரில் பாதிக்கும் மேல் தாக்கரேவின் குடும்பத்தினர்தான். கீர்த்தி ஆசாத், சௌகான் போன்ற முன்னாள் வீரர்கள் பா.ஜ.க.வில் குவிகின்றனர். பாகிஸ்தானுடன் மோதும் இந்திய அணி, முசுலீம்களை எதிர்த்துப் போராடும் இந்து மதச் சேனையாக உங்களுக்குக் காட்டப்படுகிறது. இப்போது முசுலீம்களுக்கு நீங்கள் தரும் யோசனை என்ன?

பம்பாய், மீரட், பிவந்தி, பகல்பூர், கோவைக் கலவரங்களில் சொந்தபந்தத்தையும், வாழ்க்கையையும் இழந்து, விதியை நொந்து உழலும் இசுலாமிய இளைஞர்களின் மனநிலை எப்படி இருக்கும்? ஒரு சிலர் குண்டு வைக்கலாம். முடியாதவர்கள் மைதானத்தில் கை தட்டலாம். இந்தியாவில் எவரும் தண்டிக்க முடியாத இந்து மத வெறியர்களை, ஒரு கிரிக்கெட் போட்டியிலாவது வெறுப்பேற்றலாம் என்ற அந்த இளைஞர்களது மனநிலை, இசுலாமிய மக்களுக்கல்ல, இந்தியாவின் மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்குத்தான் அவமானம். அதில் ரசிகர்களாகிய உங்களுக்கும் பங்கு உண்டா, இல்லையா?

‘ஒரு இந்து ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தின் வீரனை ரசிக்கலாம்; ஒரு பாகிஸ்தான் வீரனை மட்டும் ரசிக்கக்கூடாது’ என்பதற்கு என்ன பதில்? பிராட்மேனுக்குப் பிறகு டெண்டுல்கர்தான் சிறந்த மட்டையாளர் என பல நாட்டு இரசிகர்களும், வீரர்களும் கூறுகின்றனர். அவர்களெல்லாம் அந்நாடுகளின் தேசத் துரோகிகளா? ராம் பிரகாஷ், சந்தர்பால், முரளிதரன், தீபக்பட்டேல், நாசர் ஹூசைன் போன்ற இந்திய வம்சாவழியினர் பல நாடுகளுக்காக இந்தியாவை எதிர்த்து ஆடுகிறார்கள். எனில் இவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று இந்து முன்னணி கோருமா?

– முற்றும்.

_________________________

வாசக நண்பர்களே! இத்துடன் கண்ணைப் பறிக்கும் காவிப்புழுதி எனும் இந்நூலின் கட்டுரைகள் வரிசை முடிவு பெறுகிறது. ஆனால் இந்துமதவெறியர்களின் அவதூறுகள் இன்றும் தொடர்கின்றன. இவை வெறுமனே கருத்து ரீதியான அவதூறுகள் மட்டுமல்ல. ஆர்.எஸ்.எஸ் எனும் பார்ப்பன பாசிசக் கூட்டம் இத்தகைய அவதூறுகளை மூலதனமாக வைத்துத்தான் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முனைகிறது. எனவே இந்த அவதூறுகளும், வெறுப்பும் கருத்து என்பதைத்தாண்டி நாட்டு மக்களை ஒடுக்கும் வன்முறைக்கு அச்சாரமாகவும் இருக்கின்றன. சிறுபான்மை மக்களை குறிவைத்து குறிப்பாக முசுலீம் மக்களை வில்லன்களாக்கி ‘இந்துக்களை’ அணிதிரட்டும் வேலைக்காகவே இந்த அவதூறுகள் சுமார் 80 ஆண்டுகளாக இந்துமதவெறியர்களால் பரப்பப்படுகின்றன. பார்ப்பன பாசிசம் என்பது முசுலீம்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மையான ‘இந்துக்களுக்கும்’ எதிரான ஒரு நிறுவனமாகும். உழைக்கும் மக்கள் என்ற முறையில் மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்துமதவெறியர்களை வீழ்த்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அத்தகைய பணிக்கு இங்கே வெளியிடப்பட்டிருக்கும் 28 கட்டுரைகளும் உங்களுக்கு ஒரு ஆயுதமாக பயன்படும் என்று நம்புகிறோம்.

மேலும், இந்த நூல் இதுவரை மூன்று பதிப்புகள் வெளியிடப்பட்டு விற்பனையாகியிருக்கின்றது. தற்போது கீழைக்காற்று வெளியீட்டகத்தில் இந்த நூல் விற்பனைக்கு கிடைக்கும். இந்த நூலை நீங்கள் வாங்குவதோடு உங்கள் நண்பர்களிடமும் விநியோகிக்குமாறும் அன்புடன் கோருகிறோம்.

– வினவு

கண்ணை மறைக்கும் காவிப்புழுதி

நூல் விற்பனை விவரங்கள்:
பெயர்: கண்ணை மறைக்கும் காவிப்புழுதி – சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்-ன் பொய்யும் புரட்டும் !

கிடைக்கும் இடம் :
கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
தொலைபேசி – 044-2841 2367

பக்கங்கள் : 160 விலை : ரூ 80/-
தபால் செலவு : 
உள்நாடு ரூ 50/-, வெளிநாடு ரூ 500/-
கிடைக்கும் இடம்
:
கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
தொலைபேசி – 044-2841 2367

__________முந்தைய பகுதிகள்____________

 

  1. வெள்ளிக்கிழமை ஸ்பெசல்….ஆனால் டேஸ்ட்லெஸ்…புதுசா எதாவது ட்ரை பண்ணெளப்பா..

    • இனவெறி:

      //‘பாகிஸ்தானுடன் போரோ, கிரிக்கெட்டோ இரண்டிலும் இந்தியாதான் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்’, என்கிறார் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன். //

      தேசபக்தி:

      //‘போரில் யாரிடம் நியாயம் உள்ளதோ அவன் வெல்லட்டும், விளையா-ட்டில் யாரிடம் திறமை உள்ளதோ அவன் வெல்லட்டும்’ என்பதுதானே சரி. //

      • இனவெறிக்கும் பங்காளி பகைக்கும் வித்தியாசம் தெறிந்துகொள்ளவும் இனவெறி என்றால் பங்களாதேஷ்கூட முஸ்லிம்நாடுதானே அதன்மீது வெறி ஏற்ப்படவேண்டும் அல்லவா?.

        • இந்தியன் இந்தியா ஜெயிக்க விரும்புவதும், பாகிஸ்தானி பாகிஸ்தான் வெற்றி பெற விரும்புவதும் தேசபக்திதான்… இந்தியாவை சேர்ந்த நடுவர், இந்தியா வெற்றி பெற விரும்பினால் (திறமையிருந்தாலும் எதிரணி வெல்லக்கூடாது என எண்ணுவது), இனவெறிதானே சகோதரா…

          நீதிக்கு குரல் கொடுப்பவர்களை நடுவர்களாக கருத்தில் கொள்ளலாமே…

          இரண்டாவது கருத்தோடு ஒப்பிட்டு முதல் கருத்தை பார்த்தால், தவறாக விளங்காது என்றே கருதுகிறேன்…

        • அரசியலில் பிழைப்பு நடத்துபவர்களுக்கு என்றுமே ஓர் எதிரி வேண்டும்… பாகிஸ்தான் எதிரியாக இல்லாதிருந்தால் பங்களாதேஷ் எதிரியாக காட்டப்பட்டிருக்கும்…

    • வெற்று புலம்பல். புலம்பறதை விட்டுட்டு ஏதாவது மறுப்பு எழுதலாமேப்பா ! !

  2. தோழர்களே..!

    தலைப்பு மொட்டத்தலையை பற்றியும்
    கட்டுரை முழங்காலை பற்றியும் இருக்கிறது..?

    பாக்கிஸ்தானுக்கு வக்காலத்து வாக்கினால்
    இங்குள்ள முஸ்லீம்களை ஆதாரித்த மாதிரி என கட்டுரை காட்டிக்கொடுக்கிறது…

    பெரியவங்கள ஆதரிச்சா பெருமாளயே ஆதரிச்ச மாதிரி…

    நல்ல கொட்டாவி வருது…போங்க…

  3. பையா ,
    உமக்கு நாக்கில் நரம்பு அந்து விட்டது பொல் உள்ளது .நல்ல மருத்துவரை போய் பாரும்….

  4. உங்களால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறது பால்மறவாத குழந்தைக்குகூட தெறியும் என் குடும்பம் என்னுடைய ஊர் என்னுடைய மொழி என்னுடையநாடு வெற்றி பெறவேண்டும் அதனை கொண்டாடவேண்டும் ஆதரிக்கவேண்டும் என்று.நீங்கள் சொல்வதில் எதாவது லாஜிக் இருக்கிறதா?.

  5. //எதைப் பற்றியும் கவலைப்படாத ரசிகர்களுக்கு மட்டும்தான் ஆட்டத்தை ரசிக்க வேண்டுமே என்ற கவலை.//
    எது உண்மையோ இலையோ இது உண்மை.

  6. வினவு சொல்வதில் எதில் தவறு உள்ளது என்பதை கட்டுரையை விமர்சிக்கும் நபர்கள் கூறவேண்டும் . சும்மா பொத்தாம் பொதுவாக கருத்து கூற கூடாது . பாகிஸ்தான் நமக்கு எதிரியாகவும் , பாகிஸ்தானியர்களுக்கு இந்திய எதிரியாகவும் காட்டப்படுகிறது . பாகிஸ்தான் நமக்கு தொல்லை தரும் ஒரு நாடக பார்க்காமல் அதை ஒரு மத விரோதத்துடன் பார்ப்பதில் தான் பிரச்னை வருகிறது. மதத்தை விளையாட்டில் காணாமல் இருந்தால் அதுவே பிரச்சனையை ஓரளவு க்கு தணிக்கும்.

    • Pakistan was formed on the basis of incompatibility of religion,otherwise they are the same people as most North Indians.

      So the religion angle ll always be there as it is Islamic Republic of Pakistan.

  7. காசுக்கு (கொள்ளைக்கு?) கிரிகெட் விளையாட அழைத்து விட்டு, எவனுக்கும் புரியாத தேசபக்தி, வெண்டைகாய்,வெங்காயம் என்று புலம்புவது ஏன்? உண்மையில் ஆடுபவனுக்கும் , கள்ளச்சந்தையில் கசுகொடுத்தும், ஓசியிலும் டிக்கெட் வாஙகி பார்ப்பவன், ஒழுஙகாக வரி செலுத்துகிறானா? இந்தநாட்டு ஏழைமக்கள் மீது அக்கரை இல்லாதவனுக்கு ஏது தேசபக்தி?

Leave a Reply to Ajaathasathru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க