ண்பர்களே….

பொ. வேல்சாமி
  தமிழில் பெயர்பெற்ற ஆளுமைகளான மறைமலையடிகள், திரு.வி.க. போன்றவர்கள் முதல்முதலாக எழுதிய நூல்களான “வேதாந்த மதவிசாரம்”, ”கதிரைவேற்பிள்ளை சரித்திரம்” என்ற நூல்களை மறுபதிப்பு எதுவும் செய்யாமல் தமிழகம் மறக்கும்படி விட்டனர். அதற்கான முக்கியமான காரணம் பின்னர் வந்த காலத்தில் அவர்கள் கொண்டிருந்த கருத்துகளை பெருமளவில் மாற்றிக் கொண்டதுதான். இந்த மாற்றத்திற்கு இடையூறு வரும் என்று கருதி தங்கள் நூல்களை தாங்களே மறக்கும்படி விட்டனர்.

இன்றைய கணிணி யுகம் எல்லா வகையான நூல்களையும் நம்முடைய கைகளில் தவழ விடும் பண்பு கொண்டதாக மாறி விட்டது. எனவே, அந்த மறைக்கப்பட்ட நூல்களை நாம் இன்று தரவிறக்கம் செய்து படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நண்பர்கள் படிப்பதற்காக மேற்குறிப்பிட்ட இரண்டு நூல்களின் இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

குறிப்பு 1

சமஸ்கிருதமும் தமிழும் பிரிக்கமுடியாத உறவுகொண்ட மொழிகள் என்ற கருத்தினைக் கொண்டிருந்த பெரும்பான்மையான தமிழ்ப் புலவர்களைப் போலவே தானும் சிந்தித்த காலத்தில் மறைமலையடிகள் ”வேதாந்த மதவிசாரம்” என்ற நூலை எழுதுகின்றார். இந்நூலில் வடமொழி நூல்களின் கருத்துக்களை முற்றிலும் ஏற்றுக்கொண்டு சைவம் பற்றிய தனது கருத்தினை அடிகளார் கூறுகின்றார். பின்வந்த காலங்களில் தான் முன்னர் கொண்டிருந்த கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களைக் கொண்டவராக மாற்றம் அடைகின்றார். இதனால் வேதாசலம் என்ற தன்னுடைய பெற்றோர் வைத்த பெயரை மறைமலை என்று மாற்றிக் கொள்கின்றார். இந்த மாற்றத்திற்கு பிறகு தன்னுடைய முந்தைய நூல்களைப் பற்றி அடிகள் எதுவும் குறிப்பிடவில்லை.

நூலை தரவிறக்க : வேதாந்த மதவிசாரம்

குறிப்பு 2

திரு.வி.க. வின் ஆசிரியர் கதிரைவேற்பிள்ளை. இவர் இலங்கையைச் சேர்ந்தவர். இவர் வெளியி்ட்ட மிகப் பெரிய “தமிழ் அகராதி”யில் வேளாளர் என்ற சொல்லுக்கு “சூத்திரர்“ என்ற பொருளையும் எழுதி விட்டார். இது ஒரு பெரும் பிரச்சனையாக மாறியது “பிரபஞ்சமித்திரன்” “பூலோக நண்பன்” இரண்டு பத்திரிகைகளில் கடுமையான கொடுமையான விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தின் முடிவில் கதிரைவேற்பிள்ளையை கொலை செய்துவிடும் அளவிற்கு எதிராளிகள் துணிந்து விட்டதாக மறைமலையடிகள் திரு.வி.க.விடம் கூறியிருக்கிறார். அடுத்தக்கட்டமாக கதிரைவேற்பிள்ளையை போன்று உருவத்தைச் செய்து அதனை சுடுகாட்டில் எரித்து அவர் இறந்துவிட்டதாகவும் துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தார்கள். இது அவதூறு வழக்காக மாறியது. அந்த வழக்கில் திரு.வி.க.வும் சாட்சி சொல்கிறார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் போது ஒரு பகுதியாக அருட்பா மருட்பா பிரச்சனையும் வருகின்றது. தனியாக அதுபோன்று எந்தவொரு பிரச்சனையும் நடைபெறவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் தன்னுடைய ஆசிரியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிடுகின்றார்.

நூலை தரவிறக்க : கதிரைவேற்பிள்ளை – சரித்திரம்

கதிரைவேற்பிள்ளையின் மறைவிற்கு பிறகு அவருடைய எதிராளிகளாக இருந்தவர்கள் திரு.வி.க.வின் நண்பர்களாக மாறிவிட்டனர். இதனால் பழைய நினைவுகளைத் தூண்டுகின்ற அந்த நூலை திரு.வி.க. தன் வாழ்நாளில் மறுபதிப்பு செய்யவில்லை. 1968 இல் இலங்கையில் இருந்து இந்நூல் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க