ஃபாத்திமாவைப் பற்றி படித்து விளங்கிக் கொண்டதை எழுதியிருக்கிறேன். ஃபாத்திமாவிற்கு ஒரு இரட்டைச் சகோதரி இருக்கிறார். தாய், தந்தை, சகோதரி, தம்பி என அனைவரிடமும் அன்பாக இருந்த பெண். இந்தக் குடும்பம் சவுதியில் இருந்திருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் குடும்பம் கேரளா திரும்பியிருக்கிறது.
சிவில் சர்வீஸ் படிக்கும் ஆசையில் பத்தாம் வகுப்பிற்குப் பின் ஸ்டேட் போர்டிற்கு மாறியிருக்கிறார். இவருடைய இரட்டைச் சகோதரி ஆயிஷா சட்டம் படிக்கிறார்.
ஃபாத்திமா இறந்தது 9 நவம்பர் அன்று. நவம்பர் 8-ம் தேதி சவுதியில் இருந்த தந்தையோடு வீடியோ காலில் பேசியிருக்கிறார். பேசும்போது நிறைய அழுதிருக்கிறார். அப்போது மூக்குத்தி அணிந்த ஒரு பெண் ஃபாத்திமாவை சமாதானப் படுத்தியிருக்கிறார். அந்தப் பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கிறார் ஃபாத்திமாவின் தந்தை. அந்தப் பேச்சின் சாரம் என்னவென்று தெரியவில்லை.
ஃபாத்திமா படித்துக் கொண்டிருந்தது இண்டிக்ரேட்டட் எம்.ஏ. பிறர் குறிப்பிட்டுள்ள படி வீட்டைப் பிரிந்த மனச் சோர்வால் அவர் இறந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது அவர் குடும்பம். ஏனெனில் நவம்பர் 15 செமஸ்டர் தேர்வு; 27 -ம் தேதி அவர் விடுமுறைக்கு வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
ஃபாத்திமாவின் மரணத்தை ஒரு நிகழ்வாகவே அவர் துறையும், நிர்வாகமும், சக மாணவர்களும் கண்டு கொள்ளவில்லை என்கிறது அவர் குடும்பம்.
அவர் மரணத்திற்கு முன் போனை ஒரு நாள் அணைத்து வைத்திருக்கிறார். எது அவரை பயமுறுத்தியது என்ற கேள்வி இருக்கிறது.
படிக்க:
♦ வாரனாசி முதல் சென்னை வரை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பிடியில் உயர்கல்வி நிறுவனங்கள் !
♦ பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் !
லாஜிக் பாடத்தில் இண்டர்னல் தேர்வு நடந்திருக்கிறது. அதில் இருபதுக்கு 13 மதிப்பெண்கள் வாங்கினார் ஃபாத்திமா. அப்படியும் அவர்தான் வகுப்பில் முதல். தனக்கு 18 மதிப்பெண்கள் வரவேண்டியது என துறைத் தலைவரிடம் அப்பீல் செய்திருக்கிறார். துறைத் தலைவர் அதை ஏற்று வழிமொழிந்திருக்கிறார். சம்பந்தப் பட்ட பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் இது குறித்து தன்னை நவம்பர் 11 -ம் தேதி சந்திக்கும்படி மெயில் அனுப்பியிருக்கிறார். ஆனால் அந்த சந்திப்பு நடக்கும் முன்பே ஃபாத்திமா மரணமடைந்து விட்டார். சுதர்சனிடம் பயம் கொண்டிருந்தார் ஃபாத்திமா. அதைத் தன் பெற்றோரிடம் சொல்லியிருந்திருக்கிறார்.
ஃபாத்திமாவின் செல்பேசி காவல் நிலையத்து மேசையில் சார்ஜ் இல்லாமல் கிடந்திருக்கிறது. அங்கு சென்ற குடும்பம் அதைப் பார்த்திருக்கிறது. ஆயிசாவும் அதே போல் ஒரு செல்பேசியைப் பயன்படுத்தியதால் தன் சார்ஜரை வைத்து சார்ஜ் செய்திருக்கிறார். அப்போது போன் லாக் செய்யப்படாமல் இருந்திருக்கிறது. அதில்தான் தன் மரணத்திற்குக் காரணம் சுதர்சன் பதமனாபன் என்ற செய்தி இருந்தது.

ஃபாத்திமா எழுதியதாகச் சொல்லப்படும் இன்னொரு குறிப்பு பொய்யானது. அந்த அலங்கார ஆங்கிலம் ஃபாத்திமாவின் மொழியுமல்ல. அந்த மற்ற இரு பேராசிரியர்களையும் அவர் குற்றம் சாட்டவில்லை. இதில் யாருக்கு, என்ன நோக்கம் என யோசிக்க வேண்டி இருக்கிறது.
ஃபாத்திமாவின் தந்தை சுதர்சன் தவிர இன்னும் சிலருக்கு இந்த மரணத்தில் தொடர்பு இருக்கிறது எனச் சொல்கிறார்.
என் பெயரே எனக்குப் பிரச்சினை என்ற வாக்கியத்தைத் தன் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார் ஃபாத்திமா.
ஐ.ஐ.டி.யின் பழைய மாணவர்கள் இங்கு தற்கொலை என்பது எப்போதும் நடக்கக் கூடியது.இத்தனை நாட்கள் அதன் மேல் ஊடக வெளிச்சம் விழுந்ததில்லை என்கிறார்கள்.
இங்கு உயர்த்திக் கொண்ட சமூகம்தான் பெரும்பான்மை. எனவே ஆசிரியர்களுக்கு அந்தப் பக்கச்சார்பு உண்டு என்கிறார்கள் பழைய மாண்வர்கள். சுதர்சன் ஈகோ பிடித்த மனிதர் எனச் சொன்ன பழைய மாணவர்களும் உண்டு. அவர் ஜெர்மனி சென்ற போது ஹிட்லரின் கேஸ் சேம்பரின் முன் விக்டரி சைகை காட்டி ஒளிப்படம் எடுத்திருந்தார் எனச் சொல்கிறார்கள் பழைய மாண்வர்கள்.
ஃபாத்திமாவின் தாய்க்கு தூக்க மருந்து கொடுத்து அமைதிப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இனி ஒரு ஆயிஷா தன்னில் ஒரு பாதியான ஃபாத்திமாவை இழக்கக் கூடாது என்கிறார் அவர் சகோதரி. அவர் தந்தை என் பொன்மோளுக்கு நியாயம் கிடைக்கும்வரை நான் சென்னையை விடப் போவதில்லை என்கிறார்.
எல்லாவற்றையும் நோட்ஸ் எடுக்கும் வழக்கம் உள்ள ஃபாத்திமா இறப்பதற்கு முன் 28 நாட்களின் நிகழ்வையும் நோட்ஸ் எடுத்திருக்கிறார். அது அப்படியே விசாரணைக்குப் பயன்படட்டும் என நம்பிக்கை கொள்வோம்.
தொடர்புடைய சுட்டியை இங்கே அளிக்கிறேன்.
பல வருடங்களுக்கு முன் எனக்குத் தெரிந்தவர் ஐ.ஐ.டி.யின் மன நல ஆலோசகராக இருந்தார். அவர் சொன்னவற்றில் இருந்து அந்த வளாகத்தின் சிக்கல்கள் எனக்கு விளங்கியது.

என் முதுகலை ஆய்வின்போது ஐ.ஐ.டி.யின் humanities துறையின் பேராசிரியர்கள் எனக்கு உதவியிருக்கிறார்கள். அதன் பிறகும் அத்துறையின் செமினார்களுக்குப் போய் வந்திருக்கிறேன். ஆனால் பின்னாளில் ஐ.ஐ.டி.யின் பொறியியல் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த போது சமூக பொறுப்பும், sensitivity இல்லாத அறிவும் எதற்கு எனவும் யோசித்திருக்கிறேன்.
ஐ.ஐ.டி. மட்டுமல்ல மாணவத் தற்கொலை எங்கு நடந்தாலும் அது அநியாயம். ஆனால் கல்வியை வெறும் வியாபாரம் ஆக்கியது , ரசீது இல்லாமல் அநியாயக் கட்டணம் வசூலிப்பது, சாராய முதலாளி, மணற் கொள்ளைக்காரர்கள், முன்னாள் அடியாட்கள் கல்விக்கூடம் நடத்துவது , மதிப்பீடு இல்லாத சில ஆசிரியர்கள், சில மாணவர்கள் என இருக்கும் சூழலில் என்ன எதிர்பார்க்க முடியும்?
ஆனால், ஐ.ஐ.டி. அரசுப் பணத்தில் நடக்கிறது. எனவே அச்சூழலின் அரசியல் பற்றிப் பேச மக்களுக்கு உரிமை உண்டு.

ஐ.ஐ.டி.யில் இருக்கும் மாணவர்களிடம் விரிவாக விசாரணை செய்யுங்கள். Objectively approach the issue of discrimination and violence!
எங்கு மாணவத் தற்கொலை நடந்தாலும் அந்த வளாகத்தின் சூழல் குறித்து விரிவான ஆய்வு வேண்டும்.
இன்னொன்று நானும், நாராயணனும் பல மாணவர்களுக்கு mentor ஆக இருந்திருக்கிறோம். சின்னஞ்சிறு ஊரிலிருந்து ஆங்கிலம் தெரியாமல்,முதல் தலைமுறையாய் படிக்க வரும் மாணவர்களுக்கு வழிகாட்டும் செயல் அது. அப்படி வரும் மாணவர்களின் மன நிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து சொல்கிறேன். ஒரு கல்வி நிறுவனம் மாணவர்களை ஆற்றுப்படுத்த ஆலோசனை மையங்களை நடத்த வேண்டும். இது அந்த திருச்சி மாணவிக்காக! It is the duty of our education ministry to invest on it.
நன்றி : முகநூலில் கீதா நாராயணன்