ஆப்கானில் தாலிபான்களுக்கும் ஆப்கன் அரசு படையினருக்கும் இடையே நடந்து வரும் போர் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் போர்க்களத்தில் உயிரிழந்தார்.
கொரோனா போரிடர் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த அவலம், கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆக்சிஜன் இல்லாமலும் படுக்கை வசதிகள் இல்லாமலும் அரசு மருத்துவமனைகளில் அவதிப்பட்டதும், எரிக்கக் கூட இடமில்லாமல் குவிந்து கிடந்த கொரோனா பிணங்கள் என கொரோனா பேரிடரில் மோடி அரசின் கையாலாகாத் தனத்தை தமது புகைப்படங்களின் மூலம் உலகறியச் செய்தவர் டேனிஷ் சித்திக்.
சி.ஏ.ஏ.-வுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் மீது இந்துத்துவ வெறியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு, மற்றும் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் நாள் துவங்கி டெல்லியில் அரங்கேற்றப்பட்ட கலவரங்கள் வரை அனைத்தையும் துணிச்சலாக அம்பலப்படுத்தியிருந்தார் சித்திக்.
ஒரு முசுலீம் இளைஞரைச் சூழ்ந்து கொண்டு இந்துத்துவக் கும்பல் கடுமையாகத் தாக்குவதை சித்திக் எடுத்த புகைப்படம், இந்தியாவில் மோடியின் மதவெறியை உலகறியச் செய்தது.
புகைப்படக் கலையில் கலையின் அழகியலைத் தாண்டி, சமூகத்துக்கான தேவை உள்ளடக்கப்படும் போதுதான் அந்தப் புகைப்படம் உயிர்பெறுகிறது. அத்தகைய தன்மையை வெளிப்படுத்துவதற்கு பரந்துபட்ட மக்களின் மீதான பேரன்பும், ஒடுக்குமுறையையும் மிரட்டல்களையும் எதிர்த்து நிற்கும் பெரும் துணிச்சலும் தேவை. அதைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு போராளிதான் டேனிஷ் சித்திக்
அவரது மறைவு, இந்தியா எதிர்கொண்டுள்ள பாசிசத்தை எதிர்த்து ஜனநாயக – புரட்சிகர சக்திகள் நடத்தும் போராட்டத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்பதை அவரது மறைவை ஒட்டி, பாஜக உள்ளிட்ட சங்க பரிவாரக் கும்பல், சமூக வலைத்தளங்களில் குதூகலமாக வெளியிட்ட பதிவுகள் நிரூபிக்கின்றன.
ஆளும் வர்க்கக் கொடூரங்களின் துயரப் பதிவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
புகைப்பட ஓவியன் டேனிஷ் சித்திக்
கருத்துப்படம் : மு.துரை