கேரளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த சி.பி.எம். தலைமையிலான “இடது ஜனநாயக முன்னணி” (LDF) நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பினராயி விஜயனின் ஆட்சியை “நவகேரளம்” என்று வானளாவப் புகழ்ந்த இ.ஜ.மு-யினர், இந்தத் தோல்வியால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
140 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 102 இடங்களிலும் சி.பி.எம். தலைமையிலான இ.ஜ.மு. 35 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சியில் இருந்த 21 அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர்.
“1970-களின் பிற்பகுதியில் மூன்று மாநிலங்களில் சி.பி.ஐ., சி.பி.எம்-இன் ஆட்சி” என்கிற நிலைமையில் இருந்து சரிந்து, தற்போது கையில் இருந்த ஒரேயொரு மாநில ஆட்சியும் பறிபோயிருப்பதை, இடதுசாரிக் கட்சிகளின் தேர்தல் அரசியலின் “அந்திமக் காலம்” என்று ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.
மேற்குவங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களின் அரசியல் சூழல் கேரளத்தில் இல்லை; நீண்ட காலமாகவே சி.பி.எம். மற்றும் காங்கிரசு தலைமையிலான கூட்டணிகள் அங்கு மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன; ஆகையால், இ.ஜ.மு-யின் இத்தோல்வி நிரந்தரமானதல்ல, “மீண்டும் வருவோம்” என சி.பி.எம். கட்சியினர் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் கூறிக் கொள்கின்றனர்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது இது உண்மையாகத் தெரிந்தாலும், 2014-இல் பாசிச பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு பிந்தைய தற்போதைய அரசியல் சூழலுக்கு இந்த வாதம் பொருந்தாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்னொருபுறம், நீண்ட காலம் ஆட்சி செய்த மேற்குவங்கம், திரிபுராவிலேயே ஆட்சியை இழந்த பிறகு மீண்டும் அதைக் கைப்பற்ற முடியாமல் சி.பி.எம். மென்மேலும் பின்னடைந்து வருகிறது. இச்சூழலில், கேரளத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என சி.பி.எம். கூறுவது, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகாதா?
மேலும், சி.பி.எம். கூட்டணியின் தேர்தல் தோல்வி என்பது, முதலாளித்துவக் கட்சிகளின் மோசடி, பா.ஜ.க-வின் சதி போன்றவற்றால் ஏற்பட்டுவிட்டது என்று கூறுகின்றனர்.
அப்படியெனில், கடந்த 10 ஆண்டுகளில் கேரளத்தில் சி.பி.எம். மேற்கொண்ட “நவகேரள” ஆட்சி என்பது என்ன? அது கார்ப்பரேட் திட்டங்கள் அற்ற, மக்கள் நலனை முன்னிறுத்திய ஆட்சியா, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பலின் மதவாதத்தை உறுதியாக எதிர்த்த ஆட்சியா போன்ற கேள்விகளை எழுப்பினால், “இல்லை” என்பதே விடையாகக் கிடைக்கிறது.
சி.பி.எம்-இன் “நவகேரளம்” என்பதே, கார்ப்பரேட் கும்பலின் கொள்ளைக்கான, இந்துத்துவத்துடன் சமரசம் செய்துகொண்ட, பிழைப்புவாதக் கட்சிகளை ஒத்தக் கவர்ச்சிவாத ஆட்சிதான். அதனால்தான், சி.பி.எம்-இன் 10 ஆண்டுகால, நவகேரள ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
மக்களுக்கு எதிரான
கார்ப்பரேட் சேவை
2022-2023-ஆம் ஆண்டுக்கான, “காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்”படி (PLFS), கேரளத்தில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பின்மை 42.3 சதவிகிதமாக உள்ளது. இதன் விளைவாக, கேரள பட்டதாரிகள் வேலை தேடி நாட்டின் பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்கின்றனர்.
ஏறக்குறைய 30 இலட்சம் மலையாளிகள், “வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்” (GCC) நாடுகளில் வசித்து, பணியாற்றி வருகின்றனர். அங்கு உயிருக்கு உத்தரவாதமற்ற, பாதுகாப்பற்ற வேலைச்சூழல், கொடிய உழைப்புச் சுரண்டலின் கீழ் வேலை செய்து வருகின்றனர். இதனால் கேரளத்திலேயே போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது அம்மாநில மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். எனினும், சி.பி.எம். ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் இந்தக் கோரிக்கையில் சிறு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை. மாறாக, அடக்குமுறைகளை ஏவி, கொஞ்சநஞ்ச வேலைவாய்ப்புகளையும் பறிக்கும் கார்ப்பரேட் திட்டங்களை நிறைவேற்றுவதில்தான் முனைப்பாக இருந்தது.
கேரளத்தில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடித் தொழிலைச் சார்ந்துள்ளனர். “வளர்ச்சி” என்ற பெயரில் அதானிக்கான மேற்கொள்ளப்படும் விழிஞ்சம் துறைமுகப் பணிகளையும் அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது சி.பி.எம். அரசு ஏவிய அடக்குமுறைகளையும் நாம் அறிவோம். இதுபோன்ற கார்ப்பரேட் கட்டமைப்புத் திட்டங்களால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை இரப்பரில் 90 சதவிகிதம் கேரள விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்துறை 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளையும் ஐந்து இலட்சம் தொழிலாளர்களையும் சார்ந்துள்ளது. விவசாயிகளிடமிருந்து இயற்கை இரப்பரை கொள்முதல் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டாக சேர்ந்து சதிசெய்து இரப்பர் கொள்முதலை நிறுத்தி அதன் விலையை குறைக்கின்றன. இதனால், விவசாயிகள் பெரியளவில் நட்டமடைகின்றனர். பலர் இரப்பர் விவசாயத்தை விட்டே வெளியேறுகின்றனர். இந்த ”நவகேரள” மாடல் ஆட்சி இந்த சுரண்டலைத் தடுக்கவில்லை.
கடந்த செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் “இரு கரைகள், ஒரே தொலைநோக்கு” என்ற கருப்பொருளின் கீழ், “நீல அலைகள் கேரளா – ஐரோப்பிய ஒன்றிய மாநாடு” என்று தலைப்பிட்ட நீலப் பொருளாதார மாநாட்டை சி.பி.எம். அரசு நடத்தியது. இதில் 18 ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் முதலீட்டாளர்களும் கலந்துகொண்டனர். ரூ.7,288 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. கேரளக் கடற்கரையை கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்துவிடும் இந்நடவடிக்கை, மோடி அரசின் “சாகர்மாலா” திட்டத்தின் நீட்சியே ஆகும்.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலைகளைச் சிதைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதன் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்துவிடும் பணியில் சி.பி.எம். அரசு ஈடுபட்டது. கேரளத்தில் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டிலேயே கேரள சிறு கனிமச் சலுகை விதிகள், 2015-யில் திருத்தங்களை மேற்கொண்டது. வெடிபொருட்களை பயன்படுத்தி இயங்கும் கல்குவாரிகளுக்கும் வெடிபொருள் பயன்படுத்தாமல் இயங்கும் கல்குவாரிகளுக்கும் உள்ள வேறுபாட்டை இரத்து செய்தது. குடியிருப்புகள், ஆறுகள், குளங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து குவாரிகள் இயங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தூர வரம்பை 100 மீட்டரிலிருந்து 50 மீட்டர் ஆக குறைத்தது. இதன்விளைவாக, மேற்கு தொடர்ச்சி மலைகள் கிராணைட், கருங்கல் குவாரிகளால் சிதைக்கப்படுவது புதிய உச்சத்தை அடைந்தது.
2018-ஆம் ஆண்டில் கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் டி.ஜே.அலெக்ஸ் மற்றும் சஜீவ் மேற்கொண்ட ஆய்வு, கேரளத்தில் மொத்தம் 5,924 குவாரிகள் உள்ளதையும், அவற்றில் 3,332 குவாரிகள் சூழலியல் உணர்திறன்மிக்க மண்டலங்களில் அமைந்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் களநிலவரத்தையும் கண்டறிந்தது. இந்த பத்தாண்டுகளில் சூழலியல் உணர்திறன்மிக்க பகுதிகளில் செயல்படும் குவாரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.
வயநாட்டில் மிகப்பெரும் நிலச்சரிவைச் சந்தித்தப் பின்னரும் இயற்கையை அழிக்கும் மேற்கண்ட திட்டங்களையும் சுற்றுலாப் பொருளாதாரம் என்கிற சீரழிவையும் சி.பி.எம். ஆட்சியானது தீவிரமாக மேற்கொண்டது. எந்தவகையிலும் மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் கொள்கைகளைக் கைவிடாமல், ஆளும் வர்க்கத்திற்கு தனது விசுவாசத்தைக் காட்டியது.
குறிப்பாக, அதானி துறைமுகத்திற்காகக் கடலுக்குள் 3 கி.மீ. தூரத்திற்கு அலைத் தடுப்பரண்கள் அமைக்கத் தேவையான கற்களும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்தே வெட்டி எடுக்கப்படுகின்றன. பத்தினம்திட்டா மாவட்டத்தின் களஞ்சூர் மலைத்தொடர்களில் ஐந்து குவாரிகள் அமைத்து, 30 லட்சம் டன் கற்களை வெட்டியெடுக்க அதானி குழுமத்திற்கு 2023-2027 காலக்கட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்குள்ள 18 குவாரிகளால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், மக்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து அதானிக்கு கார்ப்பரேட் சேவை புரிவதில் சி.பி.எம். அரசு மும்முரமாக செயல்பட்டு வந்தது.
“நவகேரள” ஆட்சியில்
தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்கள்
“நவகேரள” ஆட்சி, பெண்களுக்கான உரிமைகளைப் பறிப்பதும் அவர்களுக்கான பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தத் தவறியதுமான ஓர் ஆட்சியாக விளங்கியது.
வரதட்சணைக் கொடுமைகளினால் அதிக எண்ணிக்கையில் பெண் படுகொலைகள் நிகழும் மாநிலங்களில் கேரளமும் ஒன்றாகும். 2016 முதலான ஐந்து ஆண்டுகளில் 66 படுகொலைகளும் 15,143 துன்புறுத்தல் வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆனால், உண்மை நிலவரங்கள் இதை விட அதிகமாகவே உள்ளன. இக்கொடுமைகளைக் கட்டுப்படுத்த உதவி எண்களை அறிமுகப்படுத்துவது போன்ற பெயரளவிலான நடவடிக்கைகளுடன் சி.பி.எம். அரசு தனது கடமையை முடித்துக்கொண்டது.
மேலும், 2024-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “ஹேமா கமிட்டி அறிக்கை”, கேரளத் திரைத்துறையில் பெண் கலைஞர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகளை அம்பலப்படுத்தியது. இதற்கு திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும், குற்றஞ்சாட்டப்பட்ட பாலியல் பொறுக்கிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் சி.பி.எம். அரசு அவர்களைப் பாதுகாத்தது.
குறிப்பாக, தனது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முகேஷ் மீது பாலியல் புகார்கள் எழுந்த போதிலும், அவரைப் பதவியிலிருந்தோ அல்லது கட்சியிலிருந்தோ நீக்காமல் காப்பாற்றியது. சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக்கொண்டு, வழக்கை இழுத்தடித்துப் பிரச்சினையை நீர்த்துப்போகச் செய்யும் வேலையையே அரசு பார்த்தது. கடந்த ஜூன் 2025-இல் கூட, “உரிய ஆதாரங்கள் இல்லை, பாதிக்கப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை” எனக் கூறி 35 வழக்குகளைக் கைவிட சி.பி.எம். அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

அதுமட்டுமின்றி, சி.பி.எம். ஆட்சியில் அரசுத் துறைகளில் கார்ப்பரேட்-காண்ட்ராக்ட்-டிஜிட்டல்மயக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. சான்றாக, குறைந்தபட்ச தினக்கூலியை ரூ.700 ஆக உயர்த்துதல், பணியை நிரந்தரப்படுத்துதல், ஓய்வூதியத் தொகையாக ரூ.5 இலட்சத்தை ஒரே தவணையில் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆஷா (ASHA) பெண் சுகாதாரப் பணியாளர்கள் 250 நாட்களுக்கும் மேலாகப் போராடினர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் போராட்டத்தை ஒடுக்குவதிலேயே அரசு குறியாக இருந்தது. “இடதுசாரிகளின் ஆட்சி” என்று கூறிக்கொண்டு, அப்பட்டமான கார்ப்பரேட் ஆட்சியையே கேரள சி.பி.எம். நடந்தி வந்தது.
மறுபுறம், கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மீதான சாதியத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட கண்ணூர் பல் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் நிதின் ராஜ், சாதிவெறி பிடித்த பேராசிரியர்களின் வன்கொடுமைகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது கேரளத்தையே உலுக்கியது. இத்தகைய சாதிய வன்கொடுமைகளுக்குக் கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல் அதிகரிப்பதே முக்கியக் காரணமாகும். அப்படியிருந்த போதிலும், ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலைத் தடுப்பதற்கான எந்தவொரு உரிய நடவடிக்கையையும் சி.பி.எம். அரசு எடுக்கவில்லை.
இந்துத்துவத்துடனான சமரசம்
காங்கிரசுக்கே சாதகம்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் சி.பி.எம். தலைமையிலான இ.ஜ.மு. கேரளத்தில் உள்ள 20 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. தமது இஸ்லாமிய மற்றும் கிறித்தவ சிறுபான்மை மக்களின் வாக்குகள் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், ஈழவ மக்களின் வாக்குவங்கி பா.ஜ.க-வை நோக்கியும் நகர்ந்திருந்ததை அப்போதே சி.பி.எம். உணர்ந்திருந்தது.
குறிப்பாக, ஈழவ சமுதாய மக்கள் பாரம்பரியமாகச் சி.பி.எம். கட்சியின் அடித்தளமாக இருந்து வந்துள்ளனர். நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டங்களில் அவர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். சி.பி.எம். தலைவர்களான வி.எஸ்.அச்சுதானந்தன், பினராயி விஜயன் போன்றோரும் இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களே. ஆனால், சி.பி.எம். அரசின் மக்கள் விரோதத் திட்டங்களாலும் ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துத்துவ அரசியலாலும் சி.பி.எம். கட்சிக்கு இருந்து வந்த ஈழவ சமுதாய அடித்தளம் சரிந்து வருகிறது.
அடித்தளத்தைச் சீரமைக்க மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இந்துத்துவத்துடன் சமரசம் செய்துகொண்டு சாதி அடையாள அரசியல் மூலம் அம்மக்களைக் கவர இடது முன்னணி முயன்றது.
ஈழவ மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் “எஸ்.என்.டி.பி. யோகம்” (SNDP Yogam) அமைப்பின் பொதுச்செயலாளர் வெள்ளப்பள்ளி நடேசன், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்; வெளிப்படையாக இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்களை முன்னெடுப்பவர். கடந்த ஆண்டு ஏப்ரலில் மலப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “மலப்புரம் ஒரு தனிநாடு; இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் சுதந்திரத்தின் பலன்களை அனுபவிக்க இயலவில்லை” என்று வெறுப்பைக் கக்கினார்.
நடேசனின் இத்தகைய வெறுப்புப் பேச்சைக் கண்டிக்க வேண்டிய பினராயி விஜயன், அதற்கு மாறாக ஆலப்புழாவில் நடந்த ஒரு நிகழ்வில், “வெள்ளப்பள்ளி நடேசனை உண்மையாக அறிந்தவர்கள், அவர் எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரானவர் அல்ல என்பதை அறிவார்கள்” என்று அவருக்கு நற்சான்றிதழ் வழங்கினார். மேலும், அவரை ஸ்ரீ நாராயண குருவின் போதனைகளில் வேரூன்றிய ஒரு மதச்சார்பற்ற ஆளுமையாக முன்னிறுத்தினார்.
2015-ஆம் ஆண்டில் இதே நடேசனை இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சிற்காக “கேரளாவின் தொகாடியா” என்று விமர்சித்த பினராயி விஜயன், தற்போது ஈழவ மக்களின் வாக்குகளை கவர்வதற்காக நடேசனை மதச்சார்பற்ற ஆளுமை என்று புகழும் நிலைக்கு இறங்கினார்.
இதன் உச்சமாக, சி.பி.எம். இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என்ற பிம்பத்தைக் கட்டமைக்க, செப்டம்பர் 20, 2025 அன்று, உலகளாவிய “ஐயப்ப சங்கமம்” என்ற ஐயப்ப பக்தர்களுக்கான ஒரு நாள் மாநாட்டை கேரள அரசு நடத்தியது. பினராயி விஜயன், வெள்ளப்பள்ளி நடேசனுடன் ஒரே காரில் வந்து இம்மாநாட்டில் கலந்துகொண்டதுடன், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுப்பி வைத்த வாழ்த்துக் கடிதம் மாநாட்டில் வாசிக்கப்பட்டதும் பெரும் விமர்சனத்திற்குள்ளானது.
இந்துத்துவத்துடன் சமரசம் செய்துகொள்ளும் சி.பி.எம். கட்சியின் இந்நடவடிக்கைகள் அக்கட்சி எதிர்பார்த்தபடி, ஈழவ, நாயர் போன்ற இந்து மக்களின் வாக்குகளை அதனை நோக்கி திரட்டவில்லை. மாறாக, மிதவாத இந்துத்துவக் கட்சியான காங்கிரசுக்கு ஆதரவாக திரளவே வழிவகுத்தன.
அத்துடன், சி.பி.எம். கட்சியில் உள்ள தலைவர்களே இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரங்களில் ஈடுபடும் போதும், அவற்றிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்து வெறுப்புப் பிரச்சாரங்களை அக்கட்சி கட்டுப்படுத்த தவறியதும் இஸ்லாமிய மக்களின் வாக்குகள் காங்கிரசை நோக்கி அணிதிரண்டதற்கு முக்கிய காரணமாகும். இதன் விளைவாக, டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சி.பி.எம். கட்சி படுதோல்வியடைந்தது.
மேலும், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்ற முந்தைய தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் ஆய்வு செய்யத் தொடங்கிய போது, கேரள அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அனைத்து வயதுப் பெண்களும் நுழைய வேண்டும் என்ற தனது முந்தைய முற்போக்கு நிலைப்பாட்டைக் கைவிட்டு, கோயிலின் “மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் பாதுகாப்பதாக” நீதிமன்றத்தில் தெரிவித்தது. உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்குப் பின்னரும், சி.பி.எம். தனது இந்துத்துவச் சமரசக் கொள்கையைக் கைவிடத் தயாராக இல்லை என்பதையே இந்நடவடிக்கை உணர்த்தியது. இத்தகைய போக்குதான் சட்டமன்றத் தேர்தலிலும் அக்கூட்டணியின் வீழ்ச்சிக்கு அடிகோலியது.
கவர்ச்சிவாத அரசியலில் மூழ்கிய “நவகேரளம்”
படுபாதாளத்தில் வீழ்ந்தது
சாதி மற்றும் மத அடையாள அரசியலுக்கு அடுத்தபடியாக, மக்களின் வாக்குகளைக் கவர கவர்ச்சிவாதத் திட்டங்களையே சி.பி.எம். பெரிதும் நம்பியது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, 18-35 வயதுடைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஓர் ஆண்டிற்கு மாதம் ரூ.1,000 வழங்கும் “கனெக்ட் டு வொர்க்” (Connect to work) திட்டத்தை ஜனவரி 19-ஆம் தேதியிலிருந்து செயல்படுத்தியது.
அதேபோல், 35 முதல் 60 வயது வரை உள்ள வேலைவாய்ப்பற்ற பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் “ஸ்திரீ சுரக்ஷா திட்டம்” (Sthree Suraksha Scheme) பிப்ரவரி 11-ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டது.
மேலும், 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் தொகை ரூ.1,600-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்பட்டது. மீண்டும் வெற்றி பெற்றால் இத்தொகை ரூ.3,000 ஆக அதிகரிக்கப்படும் என சி.பி.எம். தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும், இத்தகைய பணப்பலன் வழங்கும் கவர்ச்சித் திட்டங்கள் மக்கள் மத்தியில் எந்த ஆதரவையும் பெறவில்லை.
மேலும், கடந்த மார்ச் 1-ஆம் தேதி, வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள அரசின் சார்பில் 178 வீடுகள் வழங்கப்பட்டன. இதைத் தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு சாதனையாகச் சி.பி.எம். அரசு விளம்பரப்படுத்தியது.
வயநாடு நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் மீண்டும் நிகழாமல் இருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்காமல், நிலச்சரிவுகளுக்குக் காரணமான மேற்குத் தொடர்ச்சி மலைகளைக் கல்குவாரிகள் மற்றும் கட்டுமானங்கள் மூலம் சிதைப்பதையே கொள்கையாகக் கொண்டிருந்தது சி.பி.எம். அரசு. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சில வீடுகளை வழங்கிவிட்டு அதையே பெரிய சாதனையாகப் பரப்புரை செய்தது அதன் கவர்ச்சிவாத அரசியலின் அருவருப்பின் உச்சமாகும்.
அதேபோல், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, இந்தியாவில் “தீவிர வறுமை”யை ஒழித்த முதல் மாநிலம் கேரளம் என்று சி.பி.எம். அரசும் அக்கட்சியினரும் விளம்பரப்படுத்திக் கொண்டனர். ஆனால், இவர்களது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட கார்ப்பரேட் திட்டங்களாலும் இயற்கைப் பேரிடர்களாலும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதே எதார்த்த நிலை. ஆனால், அதைப் பற்றி கவலையின்றி, எந்தவித கூச்சமுமின்றி தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாகப் பொய்யுரைத்த மோசடியை, ஆஷா தொழிலாளர்கள் திரைக்கிழித்தனர்.
மொத்தத்தில், சி.பி.எம். கட்சியின் 10 ஆண்டுகால “நவகேரள” ஆட்சியானது கார்ப்பரேட் சேவை, மக்கள் மீதான அடக்குமுறை, வேலைவாய்ப்புப் பறிப்பு, வாழ்வாதாரப் பறிப்பு மற்றும் இந்துத்துவத்துடனான சமரசம் ஆகியவற்றின் கலவையாகவே இருந்தது. இந்த மக்கள் விரோதத் தன்மையே இடது ஜனநாயக முன்னணியின் படுதோல்விக்கு அடிப்படையாக அமைந்தது.
இத்துடன், மக்கள் விரோதத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால், மக்கள் அடித்தளத்தை உருவாக்கும் முயற்சிகள் காலங்கடந்துவிட்டன; கட்சிக் கட்டமைப்பும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டது. இதனால், பிழைப்புவாதக் கட்சிகளைப் போல, கவர்ச்சித் திட்டங்கள் என்ற சீரழிவு அரசியலை சி.பி.எம். கூட்டணி தேர்வு செய்தது. விளைவு, “நவகேரளம்” எனும் இடதுசாரி போர்வையிலான இந்துத்துவ சமரசம் – கார்ப்பரேட் சேவை – கவர்ச்சிவாத ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர்.
***
பெட்டிச் செய்தி:
கேரளத்தில் பாசிச கும்பலின் ஊடுருவல்
பா.ஜ.க. பெற்ற வாக்குச் சதவிகிதத்தில் பெரிய முன்னேற்றம் இல்லையென்றாலும், அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று கேரள அரசியலில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ளதை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் பெற்ற வெற்றி, 2025 உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது ஆகியவற்றின் தொடர்ச்சியாக, தற்போதைய சட்டமன்றத் தேர்தலிலும் மூன்று இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
சாதிய மற்றும் மத முனைவாக்க அரசியல், தேர்தல் ஆணையத்தின் துணையுடன் செய்யப்படும் முறைகேடுகள், குண்டர்களைக் கொண்டு கலவரங்களை அரங்கேற்றுவது போன்ற வன்முறை சார்ந்த அரசியல் வழிமுறைகளையே பா.ஜ.க. முன்னெடுத்து வருகிறது. இத்தகைய முறைகேடுகளால் பெற்ற வெற்றியை நாம் தார்மீக ரீதியாக நிராகரித்தாலும், பாசிச அரசியல் வழிமுறைகள் அங்கு நிலைநாட்டப்பட்டு வருவதையே இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.
மேலும், இந்த பத்தாண்டுகால சி.பி.எம். ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலின் அங்கமான அதானிக்காக கேரளத்தில் பல்வேறு கார்ப்பரேட் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாசிச சட்டமான நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பை சி.பி.எம். அரசு ஏற்றுக்கொண்டது. தேசிய கல்வி கொள்கையை பள்ளிக்கல்வித்துறையில் திணிக்கின்ற “பி.எம்.ஸ்ரீ” (PM SHRI) திட்டத்தை ஏற்றுக்கொண்டு, எதிர்ப்பு கிளம்பியதால் நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைத்தது. ஆர்.எஸ்.எஸ். கும்பல் அம்மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வருவதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தது. இவ்வாறு சி.பி.எம். அரசு பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே, பாசிச சக்திகளுடன் சமரசம் செய்துகொண்டு அதன் சட்டத்திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு துரோகம் இழைத்ததன் விளைவையே இன்று நாம் காண்கிறோம்.
இந்நிலையில், தற்போது கேரளாவில் பதவியேற்க உள்ள காங்கிரசு தலைமையிலான ஆட்சியில் பாசிச சக்திகளின் வளர்ச்சி அதிகரிப்பதற்கான வாய்ப்பே உள்ளது. கேரளாவின் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் இதனை அனுமதிக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கில் புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் செயல்பட வேண்டியுள்ளது.
![]()
சிவராமன்
(புதிய ஜனநாயகம் – மே 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











