Friday, November 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 52

78 வது ‘சுதந்திர’ தினம்: இந்தியா சுதந்திரத்திற்காக அழுகிறது!

78 வது ‘சுதந்திர’ தினம்: இந்தியா சுதந்திரத்திற்காக அழுகிறது!

ந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் கட்டமைப்பு தொடர்ந்து சிதைக்கப்பட்டு வருகிறது. சுவிடன் நாட்டின் கோதன்பர்க் பல்கலைக்கழகத்தின் “ஜனநாயக அறிக்கை – 2024”, கடந்த சில ஆண்டுகளில் படுமோசமான எதேச்சதிகார நாடாக இந்தியா மாறிவருகிறது என்று தெரிவிக்கிறது. எதேச்சதிகாரப் போக்கு என்பது திட்டமிடப்பட்டுள்ளதாக உள்ளது.

கருத்து சுதந்திரம் படிப்படியாக சரிந்து வருகிறது. ஊடக சுதந்திரத்தில் சமரசம் செய்து கொள்வதும் சமூக ஊடகங்களை ஒடுக்குவதும் அதிகரித்து வருகிறது. அரசை விமர்சிக்கும் ஊடகவியலாளர்களை துன்புறுத்துவது, அதேபோல் சமூக செயற்பாட்டாளர்களை தாக்குவதும் நடைபெறுகிறது. ஊடக சுதந்திரமற்ற இந்தியாவிற்காக, இந்தியா அழுகிறது!

பன்மைத்துவத்திற்கு எதிரான பா.ஜ.க. அரசு, தேசத்துரோக, அவதூறு, பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை கொண்டு தங்கள் மீதான விமர்சனங்களை ஒடுக்குகிறது. அதனுடனே மத சுதந்திரத்துக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துகிறது. எதிர்க்கட்சிகள் மற்றும் அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்களை நசுக்குவதும் பரவலாக உள்ளது. எதேச்சதிகார நாடுகளில் முதல் பத்து இடங்களில் இந்தியா உள்ளது. தாராளவாத ஜனநாயக குறியீட்டில் 104-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் உள்ள பல லட்ச மக்கள் பட்டினியில் உழல்கின்றனர். வறுமை சார்ந்த புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் அரசிடம் இல்லை. 2014-லிருந்து 2022 வரை வெவ்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில், இந்திய மக்கள்தொகையில் 2.5 முதல் 29.5 சதவிகிதம் வரையிலான மக்கள் வறுமையில் உள்ளனர். 2023-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகப் பட்டினி குறியீட்டில் 125 நாடுகளில் இந்தியா 111-வது இடத்தில் இருப்பது கவலைக்குறியது. வறுமையற்ற இந்தியாவிற்காக, இந்தியா ஏங்குகிறது!

படிக்க : சிதைவுறும் சொர்க்கம் | பிஜின் ஜோஸ்

பெரும்பாலான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் ஆட்சியாளர்களின் மடியில் கிடக்கிறது. 2024-ஆம் ஆண்டுக்கான உலகப் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான குறியீட்டில் 180 இடங்களில் 159-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கு உள்ள சுதந்திரத்தின் அடிப்படையில், எல்லையற்ற நிரூபர்கள் அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி ஊடகத்திற்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா உள்ளது. உண்மையின் பக்கம் நிற்கும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், சிறையில் அடைக்கப்படுகிறார்கள், கொல்லவும் படுகிறார்கள். நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் அனைவரும் பார்க்கிறோம். மக்களின் உரிமைக்காக பேசும்போது அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு எதிர்க்கட்சியினர் தடுக்கப் பார்க்கிறார்கள், அவர்களது மைக் அனைக்கப்படுகிறது. இந்தியாவில் காலாவதியாகிப் போன கருத்துரிமை, பேச்சுரிமைக்காக இந்தியா அழுகிறது!

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், நீதிக்காக போராடியவர்களை ஒடுக்குவதற்காக இந்தியா அழுகிறது! சமூக செயல்பாட்டாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர், மிரட்டப்படுகின்றனர், சிறையில் அடைக்கப்படுகின்றனர், ஏன் கொல்லவும் படுகின்றனர். பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஸ்டான் சாமி பீமா கோரேகான் சதி வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் அக்டோபர் 08, 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நடுக்குவாத நோயினால் பாதிக்கப்பட்ட அவருக்கு உறிஞ்சு குழாய் தராமல் கொன்றனர். அவரது மரணம் என்பது ஒரு நிறுவனக் கொலை. சமூக செயற்பாட்டாளர்களான தீஸ்தா சேதல்வாட், அருந்ததி ராய், போரா. சாய் பாபா, உமர் காலித், மேதா பட்கர் போன்றோர்கள் பா.ஜ.க-வால் பழிவாங்கப்படுகின்றனர்.

இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் இழிவுப்படுத்தப்படுவது, பாகுபாடு காட்டப்படுவது, தாக்கப்படுவதற்காக இந்தியா அழுகிறது! இஸ்லாமியர்கள், கிறுத்துவர்கள், சீக்கியர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் பா.ஜ.க-வின் வகுப்புவாத அரசியலால் பிரிக்கப்பட்ட சமூகத்தில் உள்ளனர். ஜூன் 26-ஆம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் வெளியிட்ட சர்வதேச மத சுதந்திர ஆண்டறிக்கையில், இந்தியாவில் மத சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், அவர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டம், அவர்களது வழிபாட்டு தளங்கள் மற்றும் வீடுகள் இடிக்கப்படுவது என்பது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.

சுற்றுச்சூழல் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக, சுற்றுச்சூழல் சுதந்திரத்திற்காக இந்தியா அழுகிறது! வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, டெல்லியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நாடு முழுக்க ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் எல்லாம் நமக்கு உணர்த்துவது சுற்றுச்சுழல் பாதுகாப்பில் நாம் அதீத அக்கறை எடுத்துகொள்ள வேண்டும் என்பதைத்தான். ஆனால், அரசு திட்டங்கள் அனைத்தும் அவர்களின் முதலாளித்துவ நண்பர்களுக்கு சாதகமாக உள்ளது. இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கும் சுரண்டுவதற்கும் உரிமம் வழங்குகிறது. சுற்றுச்சூழல் சிதைந்து வருகிறது! 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் 180 நாடுகளில் 176-வது இடத்தில் இந்தியா உள்ளது. வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் பல்லுயிர் காடுகள் அழிக்கப்படுகிறது. இதனை 2023-ஆம் கொண்டுவந்த வனப்பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா உறுதி செய்கிறது. நம் நாட்டில் உள்ள பல ஆறுகள் மாசடைந்துள்ளது. மேலும், நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலங்கள் அரசின் முதலாளித்துவ நண்பர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தங்களது லாப நோக்கத்தை தவிர இயற்கையின் மீது அக்கறை கிடையாது.

படிக்க : உத்தரப்பிரதேசம்: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக கூறி முஸ்லீம்களைத் தாக்கும் காவிக் கும்பல்

நாடாளுமன்றங்களில் விவாதங்களின்றி கொண்டுவரப்பட்ட மக்களுக்கெதிரான கருப்பு சட்டங்களுக்காக இந்தியா அழுகிறது! குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370 மற்றும் 37A-ஐ நீக்கியது, விவசாயிகளுக்கெதிரான மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவர முயற்சித்தது, தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத்தொகுப்புகளை கொண்டு வந்தது, மதமாற்ற தடைச்சட்டம், உத்தராகண்ட்டில் நடைமுறையிலுள்ள பொதுசிவில் சட்டம், “ஒரே நாடு; ஒரே தேர்தல்” அறிக்கை, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் என்று சொல்லிக்கொண்டு போகலாம்.

ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கான தரமான கல்விக்காக இந்தியா அழுகிறது! இப்பிரிவில் இருந்து வருபவர்களுக்கு கல்வி பயில்வதற்கான, உத்திரவாதமான வேலைக்கான வாய்ப்புகள் இல்லை. புதிய கல்விக்கொள்கையின் மூலம் இவர்கள் தடுமாறுகின்றனர். மாணவர்களும் இளைஞர்களும் அவர்களுக்கு இக்கட்டமைப்பால் ஏற்பட்ட ஏமாற்றங்களால் தற்கொலை செய்துகொள்கின்றனர். மேலும், இந்தியாவில் கல்வி என்பது சமூகத்திற்கானதாக அல்லாமல் உள்ளது.

வேலைவாய்ப்பற்ற இந்தியாவிலிருந்து விடுபட இந்தியா அழுகிறது. நாட்டின் இளைஞர்கள் வேலையின்மைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் மனித வளர்ச்சி நிறுவனம் இணைந்து வெளியிட்ட இந்திய வேலைவாப்பு அறிக்கை 2024-இல், மக்கள்தொகையில் ஏறக்குறைய 83 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருப்பதாக தெரிவிக்கிறது. 2000-ஆம் ஆண்டில் 35.2 சதவிகிதமிருந்த இடைநிலை படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 2022-ஆம் ஆண்டு 65.7 சதவிகிதமாக இருமடங்காக உயர்ந்துள்ளது.

ஊழலற்ற இந்தியாவிற்காக இந்தியா அழுகிறது. நம் நாட்டில் ஊழல் என்பது இயல்புநிலையாக உள்ளது. அரசு நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்காமல் எதுவும் செய்ய முடியாத நிலைமைதான் இருக்கிறது. ஆட்சியில் உள்ள பா.ஜ.க. பணமதிப்பிழிப்பு நடவடிக்கைகளிலும் தேர்தல் நிதிப்பத்திரத்தின் மூலமும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பணம் பெற்றுள்ளது. நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் 70 தொகுதிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. செபியின் தலைவர் மாதவி பூரி புஞ் ஒழுங்குமுறையை மீறி அதானி குழுமத்தில் பங்குகள் வைத்துள்ளார் என்று அண்மையில் வெளிவந்த ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்தியது. ஊழல் புலனாய்வு குறியீட்டில் சர்வதேசிய அளவில் 180 நாடுகளில் 93-வது இடத்தில் இந்தியா உள்ளது. தற்போதுள்ள உலக நாடுகளில் மோடி ஆட்சிதான் மிகவும் ஊழல் உள்ள ஆட்சி.

அரசமைப்பு நிறுவனங்களின் சுதந்திரத்திற்காக இந்தியா அழுகிறது. இந்திய தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., தேசிய புலனாய்வு முகமை, வருமான வரித்துறை, தேசிய மனித உரிமை ஆணையம், போலீசு மற்றும் நீதித்துறை என இன்றைய நிலையில் இந்நிறுவனங்கள் அனைத்தும் தங்களது மதிப்பை இழந்து, ஒருபக்க சார்பாகவும் ஊழல் மலிந்தும் சமரசமாகவும் ஆட்சியாளர்கள் ஆட்டிவைக்கும் பொம்மையாகவும் செயல்படுகின்றன.

இந்தியா வினேஷ் போகத்திற்காக அழுகிறது. வினேஷ் போகத், இந்தியாவின் அனைத்து பெண்களின் துணிச்சலையும் தைரியத்தையும் வலிமையையும் வெளிப்படுத்தினார். இந்தியாவின் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாலியல் பொறுக்கி பிரஜ் பூசன் சரன் சிங்கை தனது சக மல்யுத்த வீரர்களுடன் இணைந்து எதிர்கொண்டார். அனைத்து சக்திவாய்ந்த டான் அவரது தவறான செயல்களுக்காக அவர் எடுத்துக் கொண்டார். வினேஷ் தனித்து விடப்பட்டார்; அவருக்கு திறமை இருந்தபோதிலும், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட மறுக்கப்பட்டது. பல தடைகளை மீறி ஒலிம்பிக்கில் தனது திறமையைக் காட்டினார். உலகின் சிறந்த தோல்வியை கண்டிராத வீரர்களை தனது மனவுறுதியால் வென்றார். ஆனால், இறுதிச்சுற்றுக்கு முன் அவர் ‘தகுதி நீக்கம்’ செய்யப்பட்டார். இந்த தகுதி நீக்கத்திற்கு பின் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் உள்ளது.

படிக்க : கல்லூரி பாடத்தில் ஆர்.எஸ்.எஸ். புத்தகங்களைக் கட்டாயமாக்கிய ம.பி. அரசு!

மணிப்பூர் குக்கி பழங்குடியின மக்களின் விடுதலைக்காக இந்தியா அழுகிறது! 2023 மே முதல், மணிப்பூரில் உள்ள குக்கி-சோ பழங்குடியின மக்கள், உணர்ச்சியற்ற, பிளவுப்படுத்தும் மற்றும் இரக்கமற்ற ஆட்சிக்கு பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மணிப்பூரை விட்டு வெளியேறியுள்ளனர் அல்லது அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வீடுகளும் உடைமைகளும் அழிக்கப்பட்டன; அவர்களுடைய நிலங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன; அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் கூட தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க. வன்முறையின் குற்றவாளிகளுக்கு வெளிப்படையாக பக்கபலமாக உள்ளது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு அரசியல் விருப்பம் இல்லை என்பதுதான் வெளிப்படையாக தெரிகிறது.

அனைவரும் கண்ணியத்துடனும் சமத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் அமைதியுடனும் உண்மையுடனும் நீதியுடனும் பன்மைத்துவத்தைக் கொண்டாடும் வகையில் சுதந்திரம் வேண்டி இந்தியா அழுகிறது; தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகள், அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பற்ற கட்டமைப்பை மேம்படுத்தும் உண்மையான சுதந்திரத்திற்காக மக்கள் ஏங்குகிறார்கள். வெறுப்பு மற்றும் வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, திருட்டு மற்றும் ஊழலில் இருந்து உண்மையான சுதந்திரத்திற்காக மக்கள் ஏங்குகிறார்கள்.

சர்வாதிகாரம் அடிபணிவிலிருந்து அனைவருக்கும் சுதந்திரம் கிடைப்பதற்கு இந்தியா அழுகிறது; ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கட்டப்பட்டவர்கள், பெண்கள், சிறு விவசாயிகள், சாதாரண தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,  ஒதுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்டவர்கள் அனைவரும் அச்சமற்ற மற்றும் வெளிப்படையான குடிமக்களாக இருக்க சுதந்திரம் கோருகின்றனர்!

நன்றி : countercurrents.org
மொழிபெயர்ப்பு : ஹைதர்

சிதைவுறும் சொர்க்கம் | பிஜின் ஜோஸ்

சிதைவுறும் சொர்க்கம் | பிஜின் ஜோஸ்
(இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆன்லைன் உதவி ஆசிரியர்)

2024-இல் தகவல் தொழில்நுட்பத் துறையில் இதுவரை 360 நிறுவனங்களால் 1,04,410 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

000

தொழில்நுட்பத் துறையில் தொடரும் தற்காலிகப் பணிநீக்கங்கள் (லே-ஆஃப்) உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்களைத் தொடர்ந்து பாதித்து வருகிறது. இது, 2024 ஜூலை 5-ஆம் தேதியில் உள்ள நிலைமை மட்டுமே. வேலை செய்யும் ஆயிரக்கணக்கான வல்லுநர்கள் ஏற்கெனவே பணிநீக்க அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பகாசுரத் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்-இன் தலைமையகம் அமைந்துள்ள ரெட்மாண்ட் (Redmond) நகரமும் இந்த நீரோட்டத்தில் இப்போது இணைந்துள்ளது. இந்த நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை ஒரு புதிய சுற்று பணிநீக்கத்தின் அடிப்படையில் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்பகாசுரத் தொழில்நுட்ப நிறுவனம், அதிகாரப் பூர்வமாக எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட பல ஊழியர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த, தங்களது லிங்க்ட்இன் (LinkedIn) என்ற வர்த்தகம் மற்றும் வேலை வாய்ப்புக்கான சமூக ஊடக மேடையைப் பயன்படுத்தினர்.


படிக்க : தென்கொரியா: சாம்சங் நிறுவனத்தில் வெடித்தது தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்ட ம்


கீக் வயர் (Geek Wire) என்ற இணைய தளத்தின் அறிக்கையின்படி, தயாரிப்பு மற்றும் நிரல் (program) நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிறுவன அமைப்புமுறை மற்றும் பணியாளர்களைச் சீரமைத்தல் ஆகியன ஒரு தொழில் நிறுவனத்தை நிர்வகிப்பதில் அவசியமானதும் வழமையானதுமாகும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதை, “எங்கள் எதிர்காலத்திற்கான மூலோபாய வளர்ச்சிக்கும், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு ஆதரவாகவும் நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து முதலீடு செய்வோம்” என்று மேற்கோளிட்டு அதே அறிக்கையானது தெரிவித்துள்ளது.

ஒன்பது ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சோன்ஜா டெலாஃபோஸ், பணிநீக்கம் செய்யப்பட்ட பலரில் ஒருவர். மைக்ரோசாப்ட்-இன் செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்முறை மேம்பாட்டு மூலோபாயத்தை மேற்பார்வையிடும் இயக்குநராக பணியாற்றிய டெலாஃபோஸ், லிங்க்ட்இன் (LinkedIn) எனும் சமூக ஊடகத்தில், தான் வேலைக்காக ஒரு புதிய தொழிற்கூறைத் தேடுவதாக அறிவித்தார்.

“அனைவருக்கும் வணக்கம்! மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய பணி நீக்கங்களால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். மேலும், வேலைக்காக புதியதொரு தொழிற்கூறைத் தேடத் தொடங்குகிறேன். உங்கள் ஆதரவைப் பாராட்டுகிறேன்; நீங்கள் வழங்கக்கூடிய இணைப்புகள், ஆலோசனைகள் அல்லது வாய்ப்புகளுக்கு முன்கூட்டியே எனது நன்றி!” – என்று டெலாஃபோஸ் எழுதினார்.

மைக்ரோசாப்ட்-இன் நிதியாண்டானது 2024 ஜூன் 30-ஆம் தேதியன்று முடிவடைந்துள்ளது. மேலும் அந்நிறுவனம், புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் அதன் தொழிலை மறுசீரமைக்கும் என்று அறியப்படுகிறது. ஜூன் மாதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களைக் குறைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஹோலோலென்ஸ் 2-இல் (HoloLens 2 – மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள தலையில் மாட்டிக்கொண்டு பணியாற்றும் கலப்பு நிகரமை காட்சிப் பலகை) பணிபுரியும் கலப்பு மெய்நிகர் பிரிவின் ஊழியர்கள் மற்றும் விண்வெளி பொறியியல் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியவற்றோடு, அசூர் துறையையும் (Azure – மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட மேகக் கணினி மேடை) இப்பணி நீக்கங்கள் பாதித்தன.

மைக்ரோசாப்ட் நிறுவனமானது, இப்படி இன்னொரு சுற்று பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ள நிலையில், மற்றொரு தொழில்நுட்ப நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு வேலைநீக்க உத்தரவை (pink slip) வழங்கியுள்ளது. ஜூலை 3-ஆம் தேதியன்று, அமெரிக்காவை தளமாகக் கொண்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான யுகேஜி (UKG), அதன் ஊழியர்களில் சுமார் 2,000 பேரைக் குறைத்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கிறிஸ் டோட், இம்மென்பொருள் நிறுவனம் தனது பணியாளர்களை 14 சதவிகிதம் வரை குறைத்துள்ளதாக ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

யுகேஜி நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக இருந்த வில்லியம் மேடன், பணிநீக்கங்களால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக லிங்க்ட்இன் ஊடக மேடையில் பகிர்ந்து கொண்டார்.

“அனைவருக்கும் வணக்கம்! அனைவரும் அறிந்ததைப்போல யுகேஜி நிறுவனமானது இன்னொரு சுற்று பணிநீக்கங்களைச் செய்துள்ளது. இந்த முறை நானும் எனது பணியாளர் குழுவும் பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஒரு புதிய வேலையைத் தேடுகிறேன். உங்கள் ஆதரவைப் பாராட்டுகிறேன். எந்தவொரு வேலை வாய்ப்புகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டாலும், அது எனக்கோ அல்லது மென்பொருள் தயாரிப்பு உரிமையாளர்களான எனது பணியாளர்களின் குழுவுக்கோ பொருத்தமானதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால், எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்புங்கள்; அல்லது எனது கருத்துக்குக் கீழே உள்ள பகுதியில் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். நான் உங்களுடன் கலந்துரையாடத் தயாராக இருக்கிறேன்!” – என்று அவர் எழுதினார்.

முக்கியத்துவம் வாய்ந்த மென்பொருள் உருவாக்கம் மற்றும் மேம்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றான யுகேஜி நிறுவனமானது, ஜூன் 2024 நிலவரப்படி 15,882 பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தது.

பல ஆண்டுகளாக யுகேஜி நிறுவனத்தில் பணிபுரிந்த காமெனி மேண்டர்சன், சாத்தியமான வேலை வாய்ப்புகளைப் பற்றி லிங்க்ட்இன் கணக்கில் அவருக்குத் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.


படிக்க : மோடி ஆட்சியில் வேலை இழப்பு – சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது !


“அனைவருக்கும் வணக்கம்! இன்று, யுகேஜி நிறுவனத்தில் நடந்துள்ள குறிப்பிடத்தக்க பணிநீக்கத்தின் ஒரு அங்கமாக நான் இருந்தேன். யுகேஜி-யுடன் பின்னர் இணைக்கப்பட்ட அல்டிமேட் மென்பொருளுடன் (Ultimate Software) 10 வருட உழைப்புப் பயணத்தின் நேர்பயனாக, நான் இப்போது புதிய வேலைவாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். அல்டிமேட் மென்பொருளின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான உதவிப் பலகை மற்றும் யுகேஜி-யின் எண்டர்பிரைஸ் எண்ட்பாயிண்ட் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் எனது உழைப்பானது தொழில்முறை ரீதியாக நான் வளரவும், பலருக்கு வழிகாட்டவும் உதவியது” – என்று அவர் எழுதினார்.

கனடா நாட்டின் ஓபன் டெக்ஸ்ட் கார்ப் (Open Text Corp) எனும் வர்த்தக மென்பொருள் நிறுவனமானது, ஜூலை 3-ஆம் தேதியன்று, ஆண்டுக்கு சுமார் 20 கோடி டாலர் அளவுக்குச் சேமிப்பதை நோக்கமாகக் கொண்ட வணிக மேம்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக, 1,200 பேரின் வேலைகளை குறைப்பதாக அறிவித்தது.

தற்காலிகப் பணி நீக்கங்களால் இந்நிறுவனத்திற்கு சுமார் 6 கோடி கனடிய டாலர் அளவுக்குச் செலவாகும். இது, 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் அங்கீகரிக்கப்படும். இருப்பினும், நிறுவனம் 2025-இல் அதன் செலவினங்களை 15 கோடி கனடிய டாலர் அளவுக்குக் குறைக்கலாம் என்று நம்புவதாகக் கருதப்படுகிறது.

ஒன்டாரியோ நகரைத் தளமாகக் கொண்ட இந்நிறுவனம், அதன் வளர்ச்சி மற்றும் புதுமைத் திட்டங்களுக்கு ஆதரவாக, விற்பனை மற்றும் பொறியியல் துறையில் 800 புதிய தொழிற்கூறுகளில் ஆண்டுதோறும் 5 கோடி கனடிய டாலர் அளவுக்கு மீண்டும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதை அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

ஆற்று வெள்ளம் போலப் பெருகியோடும் தொடர்ச்சியான இப்பணிநீக்கங்கள், இந்திய நிறுவனங்களையும் பாதித்துள்ளன. ஜூலை 2-ஆம் தேதி, எட்டெக் (edtech) நிறுவனத்தின் அன்அகாடமி (Unacademy) சுமார் 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. 2021-ஆம் ஆண்டில் இது 340 கோடி டாலர் நிதி முதலீட்டைக் கொண்டுள்ள நிறுவனமாக மதிப்பிடப்பட்டது.

கொரோனா தொற்றுநோய் தடுப்பு ஊரடங்குகளைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து இந்நிறுவனமானது வேலைகளைக் குறைத்து வருகிறது. சந்தைப்படுத்தல், வணிகம் மற்றும் தயாரிப்புத் துறைகளில் 100 பேரும், விற்பனைத் துறையில் 150 பேரும் இந்நிறுவனத்தின் அண்மைக்கால பணிநீக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2022 முதல் இந்நிறுவனம் சுமார் 2,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் திறமையாக வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான முறைப்படுத்தல்களுமே இப்பணிநீக்கங்களுக்குக் காரணம் என்று அன்அகாடமி-யின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.


படிக்க : கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!


“நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான இலக்குகள் மற்றும் தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இப்பணிநீக்கங்கள் அவசியமானது. ஏனெனில், நிலையான வளர்ச்சி மற்றும் லாபத்தில் நாங்கள் கவனம் செலுத்தி எங்களது அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். இதன் விளைவாக, சில தொழிற்கூறுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் எளிதானது அல்ல என்றாலும், இந்த மாற்றத்தின்போது பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் நாங்கள் ஆதரவளிப்போம்” என்று இந்நிறுவனத்தினர் கூறினர்.

தொழில்நுட்ப பணிநீக்கங்களைக் கண்காணித்து புள்ளிவிவரங்களை வெளியிடும் layoffs.fyi என்ற இணையதளத்தின் கூற்றுப்படி, 2024-இல் இதுவரை 360 நிறுவனங்களால் 1,04,410 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மே மாதத்தில் 49 நிறுவனங்கள் 10,989 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில், ஜூன் மாதத்தில் 46 நிறுவனங்கள் 10,083 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன.

மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற பகாசுர நிறுவனங்கள் பெருமளவிலான வேலை வெட்டுக்களை அறிவித்தன. பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், செயல்திறன், சிக்கனச் சீரமைப்பு, கையகப்படுத்துதல் மற்றும் நிறுவனத்தின் மூடல் போன்றவற்றுக்குப் பிறகு மறுசீரமைப்பு செய்தல் முதலானவற்றில் அதிக கவனம் செலுத்துமாறு நிறுவனங்கள் தள்ளப்படும் சூழலே இவற்றுக்குக் காரணங்கள் என்று மேற்கோள் காட்டப்படுகின்றன.

(நன்றி: ஃபிராண்டியர் வார இதழ், Frontier weekly, தொகுதி:57, எண்:5, ஜூலை 28 – ஆகஸ்ட் 3, 2024)

மொழியாக்கம்: கரிஷ்மா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அதானி: உலகப் பணக்காரன் அல்ல; உலகப் பாட்டாளி வர்க்க எதிரி! | மீள்பதிவு

அதானி குழுமத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் தற்போது இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) தலைவர் மாதபி புச் மற்றும் அவருடைய கணவர் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதாக  ஹிண்டன்பர்க் தனிநபர் ஆவணங்களை சுட்டிக்காட்டியுள்ளது.

பாசிச மோடி அரசின் துணையுடன்  அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி அதானி குழுமம் மேற்கொண்டுவரும் முறைகேடுகள் மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. எனவே, தற்போதைய அரசியல் சூழலின் பொருத்தப்பாடு கருதி இக்கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

***

டந்த இரு ஆண்டுகளும் வரலாற்றில் மிகக்கொடிய ஆண்டுகள். கொரோனா எனும் கொடிய வைரஸினால் உலகமே நிலைகுலைந்து, கொத்துக்கொத்தாய் மக்கள் மாண்டு போயினர். உலகமே தம் உயிரைக் காக்க போராடிக் கொண்டிருந்த போது, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடிக்க போட்டியிட்டுக் கொண்டிருந்த சிறுகும்பலும் இருக்கவே செய்தது. அதில் முதன்மையான நபர் அதானி. அப்போது அவருடைய ஒருநாள் வருமானம் 1,002 கோடி.

ஒரு சாதாரண ஜவுளித்தொழில் செய்யும் வணிகக் குடும்பத்தில் பிறந்த இவரால் எப்படி இவ்வளவு வருமானம் ஈட்ட முடிந்தது? எப்படி உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடிக்க முடிந்தது? ஒரே காரணம், மோடி – அதானி கூட்டணி. 2001 இல் மோடி குஜராத்தின் முதல்வரான பின்பே அதானியின் தொழில்களும் சொத்தும் வளரத் தொடங்கின. அதானியின் பல வணிக விரிவாக்கங்கள் மற்றும் தொழில் வளர்ச்சிகளே மோடியின் குஜராத் மாடலாகக் காட்டப்பட்டன என்றால் அது மிகையாகாது.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலையின் போது, மோடியை ஆதரித்துப் பேசி பாதுகாத்தவர் அதானி. இப்படுகொலைகளுக்காக இந்தியத் தொழில் முனைவோர் கூட்டமைப்பு மோடியைக் கண்டித்தது. அப்போது கூட்டமைப்பின் உள்ளிருந்தே அதை எதிர்த்த அதானி, மோடிக்காக கூட்டமைப்பை விட்டு விலகப்போவதாகவும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். அந்தளவுக்கு மோடி-அதானி கூட்டணி அப்போதே வலுவாக இருந்தது.

மோடிக்கு மட்டுமல்ல, அவரது சிந்தாந்தத் தலைமையான ஆர்.எஸ்.எஸ்.க்குமே நெருக்கமானவர் அதானி. ஆர்.எஸ்.எஸ்-ன் தலைமையகமான நாக்பூர் அலுவலகத்தில் நடந்த ஷாகாக்கள், முக்கியக் கூட்டங்களில் அதானி கலந்து கொண்டிருப்பதை “நரக மாளிகை” என்னும் நூலின் ஆசிரியர் சுதீஷ் மின்னி அம்பலப்படுத்தியுள்ளது, அதானி – காவி உறவுக்கு ஓர் சான்று.


படிக்க: மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியின் கைப்பாவையாக செபியின் தலைவர்


2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குஜராத் வைப்ரண்ட் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 15,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்தார் அதானி. அதானி பராமரித்து வந்த முந்த்ரா துறைமுகம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட இருந்த சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டத்திற்காக 15,946 ஏக்கர் நிலத்தை ஒரு சதுரமீட்டர் 1 முதல் 32 ரூபாய் வரை என அடிமாட்டு விலைக்குத் தூக்கிக் கொடுத்தார் மோடி. அந்நிலத்தையே அரசுப் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு, 1 சதுரமீட்டர் 600 ரூபாய் என உள்குத்தகைக்கு விட்டார் அதானி.

குஜராத் அரசே இயற்கை எரிவாயுவை வெளிச்சந்தையில் வாங்கி, குறைவான விலைக்கு அதானி நிறுவனத்துக்கு விற்றது; அதானி நிறுவனம், குஜராத் மின் வாரியத்திற்கு ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய மின்சாரத்தை வழங்காத போது, குறைவான தண்டத்தொகையையே அரசு வசூலித்தது; முந்தரா துறைமுகத்தின் பங்குகளை அடிமாட்டு விலைக்கு அதானிக்கு விற்றது என இக்கூட்டணி செய்த முறைகேடுகள் கணக்கில் அடங்காதவை. இம்முறைகேடுகளின் மூலம் கோடிகோடியாய் மக்கள் பணத்தைக் கொள்ளையிட்ட அதானி, அடுத்தடுத்த தொழில்களில் கால்பதித்து பெரும்பணக்காரர் பட்டியலில் இணைந்து கொண்டார்.

2009 ஆம் ஆண்டு தன்னுடைய தனித்தனி தொழில்களுக்காக 11 நிறுவனங்களைத் தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு முதல் சூரிய மின் உற்பத்தியில் கால் பதித்தார். 2012 -2013 நிதியாண்டில் அதானி குழுமத்தின் ஆண்டு வருமானம் 47,352 கோடியாக அதிகரித்தது. ஆனால், 2000 ஆம் ஆண்டில் அதானி குழுமத்தின் மொத்த வரவு செலவு 3,300 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2013 வரை குஜராத்தை மையமாகக் கொண்டு தன்னுடைய கொள்ளையை நடத்திக் கொண்டிருந்த அதானி, 2014 இல் மோடி பிரதமரானதும் இந்தியா முழுக்க விரிவுபடுத்த ஆரம்பித்தார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அதானியின் சொந்த விமானத்திலேயே பறந்து சென்றார் மோடி. அதானியின் விமானத்தில் மோடி பறக்கப் பறக்க, அதானி நிறுவனங்களின் பங்குகள் மேலேமேலே ஏறின. அதானியின் 3 நிறுவனங்களின் பங்குகள் கிட்டதட்ட 85.35% வளர்ச்சி கண்டன.

தேர்தலில் வென்று மோடி பிரதமரான பிறகு, அதானி குழுமமானது மின்னல் வேகத்தில் வளரத் தொடங்கியது. பிறரது தொழில் நிறுவனங்களை மொத்தமாக விலைக்கு வாங்குவதன் மூலம் தன் தொழிலை மேலும் விரிவுப்படுத்தியது. 2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், தாம்ரா துறைமுகத்தை 5,500 கோடிக்கு எல்&டி மற்றும் டாடா ஸ்டீலிடம் இருந்து வாங்கியது. அடுத்து மூன்று மாதங்களில் 1200 மெகாவாட் அனல்மின் நிலையத்தையும், அதற்கடுத்த மூன்று மாதங்களில் 600 மெகாவாட் அனல்மின் நிலையத்தையும் விலைக்கு வாங்கியது.


படிக்க: ஹிண்டன்பர்க் அறிக்கையும் உச்ச நீதிமன்ற  தீர்ப்பும்


பிறரது தொழில் நிறுவனங்களை வாங்குவது ஒரு வழிமுறை என்றால், தனக்கு முன் அனுபவம் இல்லாத துறைகளில் எல்லாம் தன் தொழிலை விரிவுபடுத்துவது மற்றொரு வழிமுறை. வானூர்தி நிலையத் தொழிலுக்குத் துளியும் சம்மந்தம் இல்லாத அதானி குழுமத்திற்கு 6 விமான நிலையங்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் 2019 பிப்ரவரியில் தரப்பட்டது. இதற்காக அதானி ஏர்போர்ட் ஹோல்டிங் என்ற தனி நிறுவனத்தையே புதியதாக உருவாக்கியது அதானி குழுமம். அதே போல் 5ஜி அலைக்கற்றையை வாங்கியதன் மூலம் தொலைத்தொடர்பு துறையிலும் நுழைந்திருக்கிறது.

இதன் விளைவாக அதானி குழுமம், நிலக்கரி துரப்பனம் மற்றும் வணிகம், துறைமுகங்கள், மின்சாரம், எரிவாயு உற்பத்தி மற்றும் பகிர்மானம் போன்ற துறைகளில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக வளர்ந்துள்ளது. பிற துறைகளிலும் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. இதனூடாகவே பிற நாடுகளிலும் தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது.

மோடி இந்தியப் பிரதமரான உடனேயே, அதானியின் சர்வதேசக் கொள்ளைக்கு அடிக்கோல் நாட்ட ஆரம்பித்தார். அதானிக்காக, மோடியே ஆஸ்திரேலியாவிற்கு நேரடியாகச் சென்று நிலக்கரிச் சுரங்கத்தை பேரம்பேசி வாங்கிக் கொடுத்தார். அதற்காக 6500 கோடியையும் எஸ்பிஐ வங்கியில் இருந்து தூக்கிக் கொடுத்தார். இத்திட்டம் மட்டுமின்றி, அதானி குழுமத்தின் மொத்த வளர்ச்சிக்கும் அடிநாதமாக இருந்து வருவது வங்கிக்கடன்களே. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டு தள்ளுபடி செய்யப்படும் பல்லாயிரம் கோடிகளே, அதானி – அம்பானி உள்ளிட்ட பெரும்பணக்காரர்களை உருவாக்கி வருகின்றன. கோடானுகோடி உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை, வங்கிச் சேமிப்பைச் சூறையாடிக் கொடுத்து, அதானிகளை உருவாக்குவதை அரசு தனது முதன்மைப்பணியாக செய்து வருவதே இதற்கு அடிப்படை. இப்பகல் கொள்ளைக்கு அவர்கள் சூட்டியிருக்கும் பெயர் ‘தேசத்தின் வளர்ச்சி’.

ஆஸ்திரேலியா சுரங்க ஒப்பந்தத்தைப் போல, இலங்கை மின்சார ஒப்பந்தத்தையும் மோடியே பேரம்பேசி முடித்துக் கொடுத்தார். “இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்தால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்க தன்னைப் பணித்தார்” என அப்போது இலங்கையின் மின் வாரியத் தலைவராக இருந்த ஃபெர்டினாண்டோவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஒரு நாட்டில் மின்சார உற்பத்தி நிலையங்களைத் தொடங்கி மின் உற்பத்தி செய்து, அந்நாட்டு அரசிற்கே மின் விநியோகம் செய்வது ஒரு வழிமுறை என்றால், ஒரு நாட்டில் மின் உற்பத்தி செய்து, வேறொரு நாட்டிற்கு மின் விநியோகம் செய்வது அதானி குழுமத்தின் மற்றொரு வழிமுறை. வங்கதேசம் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மின்சாரத்தை விநியோகம் செய்ய இரண்டாவது வழிமுறையே பின்பற்றி வருகிறது  அதானி குழுமம்.

டிசம்பர் 2022 முதல் வங்கதேசத்திற்கு அனுப்பவிருக்கும் 1,600 மெகாவாட் மின்சாரத்தை ஜார்கண்டில் உள்ள கோட்டா அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் பங்களாதேஷ் பவர் டெவெலப்மண்ட் போர்ட் (BPDB) உடன் 2017 ஆண்டே போடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் இந்தியா வந்த வங்கதேசப் பிரதமர், அதானியுடன் நடத்திய சந்திப்பின் மூலம் இவ்வொப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிருக்கும் அரசுகளைப் போலவே, வங்கதேச அரசும் அதானியிடம் இருந்து அதிகப்படியான விலைக்கே மின்சாரத்தை வாங்குகிறது. அதானியிடம் இருந்து 1 கிலோ வாட் மின்சாரத்தை 3.26 டாக்காவுக்கு வாங்குகிறது. இந்த விலையானது அந்நாட்டு மின்சார நிறுவனங்கள் இதே அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவை விட அதிகமாகும்.


படிக்க: ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! மாநாட்டுத் தீர்மானங்கள்


இதேபோல் மொராக்கோவில் மின்சாரம் மற்றும் உமிழ்வு இல்லாத எரிபொருளை (பசுமை ஹைட்ரஜன்) உற்பத்தி செய்து ஐரோப்பிய யூனியனுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக அதானி குழுமம் கூறியுள்ளது. 10 ஜிகாவாட் மின்சாரத்தை விநியோகம் செய்யும் இத்திட்டமானது, இந்தியாவிற்கு வெளியே மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மின் உற்பத்தி திட்டமாகும்.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் 50 பில்லியன் டாலரை முதலீடு செய்வதன் மூலம், உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக மாறுவதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது அதானி குழுமம். இதற்காக பிரான்ஸ் நாட்டு டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

நிலக்கரிச் சுரங்கம், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் மட்டுமில்லாமல், சில நாடுகளில் சரக்குப் போக்குவரத்துத் துறைமுகங்களையும் அதானி துறைமுகம் கைப்பற்றிவருகிறது. 2017-ஆம் ஆண்டு மலேசியாவில் போர்ட் கிளாங் துறைமுகத்தின் விரிவாக்கமாக கேரி தீவில் ஒரு மெகா கொள்கலன் துறைமுகத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் அதானி குழுமம் ஈடுபட்டது.

அதே போல் 2022 ஜூலையில் இஸ்ரேலின் மத்தியத் தரைக்கடல் கடற்கரையில் உள்ள ஒரு முக்கிய வர்த்தக மையமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் கைப்பற்றியது. உள்ளூர் இரசாயன மற்றும் தளவாடக் குழுமமான கடோட் உடன் கூட்டணி அமைத்துக்கொண்டு இத்துறைமுகத்தைக் கைப்பற்றியது. இஸ்ரேல் தங்கள் நாட்டிற்கான பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய பெரும்பாலும் கடல்வழியையே நம்பி உள்ளது. ஹைஃபா துறைமுகமே இஸ்ரேலுக்கான கண்டெய்னர் சரக்குகளில் கிட்டதட்ட பாதியைக் கையாளுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அடிப்படையில் அதானி குழுமம் இத்துறைமுகத்தைக் கைப்பற்றியது முக்கியமானது என்றாலும், அதை விட முக்கியமாக அதானி குழுமமானது இத்துறைமுகம் மூலம் இந்தியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போக்குவரத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. அதைவிட, மலேசியாவில் உள்ள கேரி, இஸ்ரேலில் உள்ள ஹைஃபா மற்றும் இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் மூலம் அதானி குழுமமானது ஒரு ஒருங்கிணைந்த உலகப் போக்குவரத்தை உருவாக்கும் நோக்கத்தை மையமாகக் கொண்டே இயங்கிவருகிறது.

இப்படி அதானி குழுமமானது 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய கொள்ளையை விரிவுபடுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளில் அதானியின் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இதே சமயத்தில் அதானி குழுமத்தின் கொள்ளைக்கெதிராக – சுற்றுச்சூழல் அழிப்பிற்கெதிராக குஜராத், கேரளா, தமிழ்நாடு என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. கேரளாவில் அதானியின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக, அங்குள்ள  மக்கள் தற்போது தீவிரமாக போராடிவருகிறார்கள்.

கார்ப்பரேட் கொள்ளையர்களின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றுவதையே வளர்ச்சி – முன்னேற்றம் என புளுகி மக்களை ஏமாற்றி வரும் மோடியின் துணைகொண்டு, இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் தன் நாசகாரக் கொள்ளையை விரிவுபடுத்தி வருகிறார் அதானி. இந்த வகையில், அதானி இந்தியப் பாட்டாளி வர்க்கத்திற்கான எதிரி மட்டுமல்ல, சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் எதிரியும்கூட. எனவே, அதானியை வீழ்த்தும் போராட்டத்தில் இந்தியப் பாட்டாளி வர்க்கம், சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துடன் ஒன்றிணைவது அவசியம். மோடி-அதானி கூட்டணியை முறியடிக்கவும் இது அவசியம்.

(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 இதழ்)


சிவராமன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஜம்முவில் தீவிரமடையும் பயங்கரவாதம்: காவிக் கும்பலே ஊற்றுக்கண்!

டந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமையை ரத்துசெய்து தனது நீண்டகால இலக்கை நிறைவேற்றிக் கொண்டது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பல். மேலும் அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியது. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை ரத்து செய்ததன் மூலம் காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது; காஷ்மீர் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்று மோடி-அமித்ஷா கும்பல் கொக்கரித்தது.

ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு காஷ்மீரில், “லஷ்கர்-இ-தொய்பா” (Lashkar-e-Taiba) பயங்கரவாதக் குழுவின் பின்னணியில் இயங்கக்கூடிய “எதிர்ப்பு முன்னணி” (TRF-The Resistance Front) என்ற புதிய பயங்கரவாதிகள் குழு, சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளடங்கிய அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றது. காஷ்மீரிகள் அல்லாதவர்கள் காஷ்மீர் பகுதியில் குடியேறினால் அவர்களையும் நாங்கள் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகளாகத்தான் கருதுவோம் என்று அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்றதற்கு நியாயம் கற்பித்தது. இத்தாக்குதல்கள் காஷ்மீரில் அமைதி நிலைநாட்டப்பட்டுவிட்டதாக மோடி-அமித்ஷா கும்பல் பேசியதெல்லாம் அப்பட்டமான பொய் என்பதை எடுத்துக்காட்டின.

இந்நிலையில், காஷ்மீர் பகுதியில் தாக்குதல்களை அரங்கேற்றிய பயங்கரவாதக் குழுக்கள், அண்மைகாலமாக ரஜோரி, பூஞ்ச், ரியாசி, தோடா, கதுவா, உதம்பூர் உள்ளிட்ட ஜம்மு பகுதிகளை நோக்கி தங்களது தாக்குதல்களை விரிவுப்படுத்தியிருப்பது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஜம்முவில் புதிய உச்சநிலையில் பயங்கரவாதம்

கடந்த ஜூன் 8 அன்று, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆன்மீகப் பயணமாக ஜம்முவின் ரியாசி மாவட்டத்திலுள்ள சிவகோத்ரியிலிருந்து கத்ராவில் உள்ள வைஷ்ணவி கோவிலுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர், 33 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலானது, காவி பாசிசக் கும்பலுக்கு சவால்விடும் வகையில், மூன்றாவது முறையாக மோடி ஒன்றிய பிரதமராக பதவியேற்ற நாளான ஜூன் 8 அன்று நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், இத்தாக்குதலுக்கு “எதிர்ப்பு முன்னணி” பொறுப்பேற்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.

இதற்கு அடுத்து ஜூன் 11 மற்றும் 12 அன்று ஜம்முவின் கதுவாவின் சத்தர்கலா மற்றும் தோடா மாவட்டத்தின் கண்டோ சோதனைச்சாவடிகளில் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதலில் ஆறு இராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். ஜூன் 26 அன்று தோடா மாவட்டத்தில் உள்ள கண்டோ பகுதியில் நடைபெற்ற மோதல் கொலையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜூலை 7, ரஜௌரியில் உள்ள சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.

ஏப்ரல் இறுதி முதல் ஜூலை வரையிலான மூன்று மாதக் காலத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் ஜம்முவில் நடத்தப்பட்டுள்ளன.

ஜூலை 8 அன்று கதுவா மாவட்டத்தில் உள்ள பத்னோடா கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்டத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்திருக்கின்றனர். அதே நாளில் காஷ்மீரின் குல்காம் பகுதியிலும் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. அதே மாதம் 15-ஆம் தேதி, தோடா மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள், ஒரு அதிகாரி என 5 பேர் உயிரிழந்திருக்கின்றனர். “ஜெய்-இ-முகம்மது” (JeM-Jaish-e-Mohammad) என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் பின்னணிக் கொண்ட “காஷ்மீர் புலிகள்” (The Kashmir Tiger) என்ற பயங்கரவாதிகள் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. எதிர்ப்பு முன்னணியைப் போலவே காஷ்மீர் புலிகளும் காஷ்மீரின் சிறப்புரிமை பறிக்கப்பட்ட பிறகு உருவான பயங்கரவாதக் குழு என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் இறுதி முதல் ஜூலை வரையிலான மூன்று மாதக் காலத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் ஜம்முவில் நடத்தப்பட்டுள்ளன. 2002-க்கு பிறகு ஜம்முவில் இத்துணை அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அரங்கேறுவது இதுவே முதன்முறையாகும். இவை 1990 மற்றும் 2000-த்தின் தொடக்கக் காலங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை நினைவுப்படுத்துபவையாக அமைந்துள்ளது.

இதனை மூடிமறைக்க முயலும் சங்கிகளும் பா.ஜ.க. சார்பு ஊடகங்களும் தற்போதைய பயங்கரவாதத் தாக்குதல்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில் நடத்தப்படுவதாக நயவஞ்சகமாகக் குறிப்பிடுகின்றன. ஆனால், சங்கிக் கூட்டத்தால் மூடிமறைக்க முடியாத அளவிற்கு அடுத்தடுத்த தாக்குதல்கள் அரங்கேறி, காஷ்மீரை காட்டிலும் ஒப்பீட்டளவில் குறைந்த வன்முறைகள் அரங்கேறும் ஜம்முவும் பயங்கரவாதத்தின் குவிமையமாக மாறியுள்ளது என்ற உண்மை பொதுவெளியில் அம்பலமாகி நாறியுள்ளது.

இதன் மூலம், பாசிச மோடி-அமித்ஷா கும்பல் காஷ்மீரின் சிறப்புரிமையைப் பறித்ததே ஜம்மு-காஷ்மீரில் புதிய இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதக் குழுக்கள் உருவாகி பயங்கரவாதத் தாக்குதல்களை புதிய உச்சநிலைக்கு கொண்டுசென்றுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது. இது, இந்தியாவில் நடைபெறும் இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அடிப்படையாக இருப்பது இந்துமதவெறிதான் என்ற வரலாற்று உண்மையை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் ஜம்மு

ஜம்முவில் அதிகரித்துவரும் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பயங்கரவாத ஒழிப்பு விவகாரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டத் திட்டங்களை ஜம்மு பிராந்தியத்திலும் நிறைவேற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறார். இதன் பிறகு, 500 துணை கமாண்டோக்களை ஜம்மு பகுதியில் குவித்திருக்கிறது, இந்திய ராணுவம். இராணுவ வீரர்கள் ரோந்து செல்வதற்காக 200 கவச பாதுகாப்பு வாகனங்களும் இந்திய ராணுவத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.

கிராம பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் இந்திய இராணுவம்

மேலும், தன் கைவிரலைக் கொண்டு தன் கண்களையே குத்துவது போல, ஜம்மு மக்களைக் கொண்டே கிராம பாதுகாப்புக் குழுக்கள் என்ற பெயரில் குண்டர் படைகளை உருவாக்கி ஜம்மு மக்களை வேவு பார்க்கிறது, இந்திய ராணுவம். பிகார், சத்தீஸ்கர் மாநிலங்களில் நக்சல் ஒழிப்பு, மாவோயிஸ்ட் ஒழிப்பு என்ற பெயரில், தங்கள் தாயான மலைகளைக் காக்கப் போராடுகிற பழங்குடி மக்கள் மீது தாக்குதல் நடத்த பழங்குடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட “சல்வா ஜூடும்” (Salwa Judum) என்ற குண்டர் படையை ஒத்தவையே இக்குழுக்கள்.

இதுமட்டுமின்றி, ஏற்கெனவே தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிற பல இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்திருக்கிறது ஜம்மு போலீசுத்துறை. ரியாசி மாவட்டத்தில் நடைபெற்ற பேருந்து தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் 150 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் பல நேரங்களில் தீவிரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் இதர உதவிகள் வழங்கியிருக்கிறார் என்று ரஜௌரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹகம் தின் என்ற 45 வயதுடைய நபர் போலீசுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூன் 19 அன்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது, “இக்கைது ஒரு சாதனை” என்று ரியாசி மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் மொஹிதா சர்மா கூறியிருக்கிறார். மேலும், ஹகம் தனது வீட்டில் பயங்கரவாதிகளைத் தங்கவைத்து, அவர்களுக்கு உணவளித்து, அடர் வனப்பகுதிக்குள் அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்; அதற்காக ரூ.6,000 பணம் பெற்றிருக்கிறார் என்று அள்ளிவிட்டிருக்கிறார், மொஹிதா. ஆனால் ஹகம்தான் பயங்கரவாதிகளுக்கு உணவளித்தார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதேபோல், ரியாசி பேருந்து தாக்குதலுக்குப் பிறகு, ஆயுதச்சட்டம், ஊபா போன்ற கருப்புச் சட்டங்களில் சில இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜம்முவில் உள்ள உள்ளூர் மக்களில் சிலர் பயங்கரவாதிகளை ஆதரிப்பது உண்மைதான். ஜம்மு-காஷ்மீரின் தேசிய இன உரிமையை மறுத்து இந்திய அரசு செலுத்தும் இராணுவ ஒடுக்குமுறை மற்றும் காவி பாசிசக் கும்பல் தங்களுடைய இந்துராஷ்டிரக் கனவிற்காக காஷ்மீரின் சிறப்புரிமையைப் பறித்தது என அனைத்தும் சேர்ந்துதான் அம்மக்களை பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. ஆனால், இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டு பயங்கரவாத வலைப்பின்னல் ஒழிப்பு, தேடுதல் வேட்டை என்ற பெயரில் அப்பாவி இஸ்லாமிய மக்களை போலீசுத்துறையாலும் இராணுவத்தாலும் வேட்டையாடி பொய் வழக்குகளில் சிறையில் அடைக்கிறது, பாசிச மோடி அரசு.

மேலும், ஜம்முவின் பூஞ்ச், ரஜௌரி மாவட்டங்களில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிப்பவர்களை இந்திய இராணுவம் கைது செய்து சித்திரவதைகள் செய்வதோடு கொலை செய்வதாகவும் மோடி இராணுவத்தின் முகத்திரையைக் கிழித்திருந்தது, “மோடி ஆட்சியில் இராணுவம்” என்ற தலைப்பிடப்பட்ட பிப்ரவரி 2024 “தி கேரவன்” இதழில் வெளியான “இராணுவ நிலையத்திலிருந்து அலறல்கள்” என்ற கட்டுரை. பின்னர், ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் நெருக்கடியால் இக்கட்டுரை இணையத்திலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு மக்களைக் கொண்டே கிராம பாதுகாப்புக் குழுக்கள் என்ற பெயரில் குண்டர் படைகளை உருவாக்கி ஜம்மு மக்களை வேவு பார்க்கிறது, இந்திய ராணுவம். இக்குழுக்கள் “சல்வா ஜூடும்” (Salwa Judum) என்ற குண்டர் படையை ஒத்தவையே.

இதன் மூலம், காஷ்மீரிகளின் தேசிய விடுதலை உணர்வை ஒடுக்குவதற்காக பல ஆண்டுகளாகக் கையாண்ட இந்த வழிமுறையையே, பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் தற்போது ஜம்முவிற்கும் விரிவுப்படுத்த எத்தணிக்கிறது காவி பாசிச மோடி-ஷா கும்பல். ஆனால், ஜம்முவில் பயங்கரவாதம் தலைவிரித்தாட ஊற்றுக்கண்ணாக இருந்த ராணுவ ஒடுக்குமுறைகளும் பாசிச அடக்குமுறைகளும் பயங்கரவாதத்தை மூர்க்கப்படுத்துமே ஒழிய முடிவுக்கு கொண்டுவராது என்பதே எதார்த்தம்.

கானல் நீரான மாநில அந்தஸ்தும் கைக்கெட்டாத தேர்தலும்

ஜம்முவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவதையடுத்து, காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயகம் வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனநாயக சக்திகள் வலியுறுத்தி வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. மோடி கும்பலை துரத்துவதற்காகவும், கைது செய்யப்பட்டு சிறைகளில் வாடுகிற நூற்றுக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்களின் விடுதலைக்காகவும் காஷ்மீர் மக்கள் பா.ஜ.க-விற்கு எதிராக வாக்களித்திருந்தனர். இதன் காரணமாக, இத்தேர்தலில் காஷ்மீரின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், 2021-ஆம் ஆண்டிலிருந்து ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தாமல் அம்மக்கள் மீது சர்வாதிகார ஆட்சி செலுத்திவந்த பாசிச பா.ஜ.க. கும்பல், வருகிற ஆகஸ்ட் மாதத்தில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது; தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்ட தேர்தலுக்கான ஏற்பாடு வேலைகளையும் செய்து வருகிறது; ஆனால், காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதுவெறும் கண்துடைப்பிற்கானது மட்டுமே என்பதை பாசிசக் கும்பலின் நடவடிக்கைகளே தெளிவுப்படுத்துகிறது.

2021-ஆம் ஆண்டிலிருந்து ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தாமல் அம்மக்கள் மீது சர்வாதிகார ஆட்சியை செலுத்தி வருகிறது பாசிச பா.ஜ.க. கும்பல்

ஏனெனில், ஜம்முவில் அதிகரித்துவரும் பயங்கரவாதத் தாக்குதல்களை முகாந்திரமாகக் கொண்டு, அண்மையில் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கயிருக்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம். இச்சட்டத் திருத்தத்தின்படி, போலீசு, பொது நிர்வாகம், அகில இந்திய குடிமைப் பணிகள் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் தொடா்பாக நிதித்துறையின் முன்அனுமதி பெற வேண்டிய முன்மொழிவுகள் தலைமைச் செயலர் மூலமாக துணைநிலை ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்படாமல் அந்த முன்மொழிவுகள் மீது முடிவுகள் எடுக்கப்படக் கூடாது. அதேபோல், மாநில அரசு வழக்குரைஞா் மற்றும் பிற வழக்குரைஞர்களை நியமனம் செய்வதற்கான பரிந்துரைகளை, சட்டம், நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்துறை தலைமைச் செயலர் மூலம் துணைநிலை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சிறைகள், தடயவியல் ஆய்வக விவகாரங்கள் தொடா்பான பரிந்துரைகளையும் துணைநிலை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சட்டத் திருத்தத்தின் மூலம், காவல், பொது நிர்வாகம், குடிமைப் பணிகள் என அனைத்து அதிகார வர்க்க மட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ்-காரர்களை அதிகாரிகளாக நியமித்துக்கொள்ள முடியும். ஏற்கெனவே இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மக்களை மேலும் இந்துத்துவப் பிடிக்குள் நெருக்குவதாகவே இது அமையும்.

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரைக் கொண்டு இணையாட்சி நடத்துகிறது பாசிசக் கும்பல். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடந்தாலும், தற்போது துணைநிலை ஆளுநரின் கண்காணிப்பில் காலனியாக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர், தேர்ந்தெடுக்கப்பட்ட பொம்மை அரசின் கட்டுப்பாட்டில் காலனியாக நீடிக்கும் என்பதைத் தவிர வேறு எந்த மாற்றமும் நிகழாது.

மேலும், அதிகரித்துவரும் பயங்கரவாதத் தாக்குதல்களை காரணம் காட்டி பாசிசக் கும்பல் தேர்தலை நடத்தவிடாமல் செய்தவதற்கும் வாய்ப்புள்ளது. சான்றாக, இதுவரை நடந்த பத்துக்கும் மேற்பட்டத் தாக்குதலில் ரியாசி மற்றும் கதுவாவில் இராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதல்களுக்கு மட்டுமே பயங்கரவாத அமைப்புகள் பொறுப்பேற்றுள்ள நிலையில், மீதமுள்ள தாக்குதல்களை மோடி இராணுவமே திட்டமிட்டு நடத்தியிருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் நம்பப்படுகிறது. நாடு முழுவதும் முற்போக்காளர்கள் படுகொலை, ரயில் எரிப்பு, புல்வாமா தாக்குதல் என பயங்கரவாதத் தாக்குதல்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க திட்டமிட்டு அரங்கேற்றியிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

எனவே, ஜம்மு-காஷ்மீரில் இராணுவத்தை குவிப்பதும்; ஒடுக்குமுறைகளை தீவிரப்படுத்துவதும்; கண்துடைப்பிற்காக தேர்தல் நடத்துவதும் பயங்கரவாதம் மேலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்பையே வழங்கும். காஷ்மீரி மக்களுக்கான தேசிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டி அம்மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்குவது மட்டுமே ஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டும்.


அப்பு

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உலகெங்கிலும் ஐ.டி துறையில் ஆட்குறைப்பு: அம்பலப்படுத்தும் அமெரிக்க இணையதளம்

1990 களின் பிற்பகுதியிலிருந்து இருந்து உலகமயம், தாராளமயம், தனியார்மயம் எனும் கொள்கைகளின் விளைவாக இந்தியாவில் தொழில் வளர்ந்த மாநிலங்களில் உள்ள பெரு நகரங்களான பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை, பூனே, ஹைதராபாத் ஆகியவற்றில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகள் அதுவரையில் யாரும் எதிர்பார்த்திருக்காத அளவில் பெருகின.

குறிப்பாக படித்த இளைஞர்களுக்கு படிப்பை முடிக்கும் முன்னரே வேலைகள் உறுதி செய்யப்படும் நிலை இருந்தது. பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு, கலை அறிவியல் கல்லூரிகளில் கணினி அறிவியல் சார்ந்த எம்சிஏ(MCA), விஸ்காம்(VISCOM) போன்ற பல வகைப் படிப்புகளுக்கு படித்து முடித்தவுடன் வேலை என்பதற்கு ஓரளவுக்கு உத்தரவாதம் இருந்தது.

ஆனால், அந்த நிலை நீங்கி ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது நம் கவனத்தைக் கோருகிறது. அன்றைக்கு தேடித்தேடி வேலைக்கு ஆள் எடுத்த, இந்தியாவின் பெரும் அடையாளங்களாக கருதப்பட்ட டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா, விப்ரோ போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் இன்று இருக்கின்ற ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வெளியேற்றி வருகின்றன.

இந்தியப் பெரு நிறுவனங்கள் மட்டுமல்ல இந்தத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் சார்ந்த உலகளாவிய மாபெரும் (Giant) நிறுவனங்கள் என்று அறியப்படும் அமெரிக்க ஐரோப்பிய ஜப்பானிய நிறுவனங்களிலும் நிலைமை இதுவே. அதாவது மைக்ரோசாப்ட், கூகுள், முகநூல், அமேசான், ஆப்பிள், மெட்டா (Meta) இன்டெல், ஐபிஎம், எஸ்ஏபி (SAP), சோனி, தோஷிபா போன்ற உலகறிந்த நிறுவனங்கள் அனைத்திலும் நிலைமை இதுவே.


படிக்க: கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!


வளர்ந்த நாடுகளில் உள்ளதைப் போலவே இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்து பல ஆயிரம் சிறு குறு தகவல் நிறுவனங்கள் தோன்றின. அவை படித்த தகுதி பெற்ற பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தன. ஆனால் தனியார்மயம் உலகமயம் என்ற ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக்க கொள்கைகளின் அடிப்படையில் அந்த சிறு குறு நிறுவனங்களையெல்லாம் விழுங்கிவிட்டுத்தான் பெரும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலை நிறுத்தப்பட்டன. கார்ப்பரேட் நிறுவனம் ஒவ்வொன்றிலும் பல லட்சம் ஊழியர்களுக்கு வேலை என்ற நிலைமையை தோற்றுவித்தன.

ஆனால் இன்று புதிய இளைஞர்களுக்கு வேலை இல்லை என்பது மட்டுமல்ல திரும்பிய பக்கம் எல்லாம் வேலை பறிப்பு, ஆட்குறைப்பு, வெளியேற்றம் (lay offs) என்பதே நிலைமை என்றாகி இருக்கிறது.

உலக அளவில் வேலை வாய்ப்பு நிலைமைகளை பற்றிய புள்ளி விவரங்களை சேகரித்து வெளியிடுகின்ற லே ஆப்ஸ் ( layoffs.fyi ) என்கிற இணையதளம் இந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிர்ச்சியூட்டும் விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அந்த இணையத்தின் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நம் நாட்டின் பிசினஸ் ஸ்டாண்டர்ட், ஹிந்துஸ்தான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிகைகளும் தங்கள் கட்டுரைகளில் இந்த விபரங்களை வெளியிட்டிருக்கின்றன.

2024 ஆம் ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரையிலான 6 மாதத்தில் மட்டும், உலக அளவில் ஐ.டி துறையில் முக்கிய நிறுவனங்களாக பேசப்படுகின்ற 333 நிறுவனங்களில் மட்டும் 98,834 ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். ஆறு மாதத்தில் ஒரு லட்சம் பேர் வேலை நீக்கம் என்கிற இந்த எண்ணிக்கை தான் எவருக்கும் அச்சமூட்டுவதாக இருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம், இன்டெல், அமேசான், முகநூல் போன்ற முக்கிய அமெரிக்க நிறுவனங்களாகும்.

அதேபோல் இந்திய நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, டெக் மகிந்திரா போன்ற பிரபலமாக அறியப்பட்ட 39 நிறுவனங்களிலிருந்து கடந்த மே மாதத்தில் மட்டும் 9742 பேர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். அதேபோல் கடந்த ஆண்டு 2023 சற்றேறக்குறைய 20,000 பேஃப்ர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர் என்பதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இந்த எண்ணிக்கைகள் இன்னும் கூடுதலாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தையும் முன் வைத்திருக்கின்றது. இந்த விவரங்களுடன் இதே சந்தேகத்தையே முன் வைத்திருக்கிறது ஐ.டி. ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் (All India IT & ITeS Employees’ Union).


படிக்க: கர்நாடகா: 14 மணிநேர வேலை சட்டத்துக்கு எதிராக ஐ.டி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 1900 ஊழியர்கள் மற்றும் கூகுள் நிறுவனத்தில் முக்கியமானவர்கள் என்ற தகுதியில் உள்ள (core group) 200 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டிருப்பதை முக்கிய தகவலாக கோடிட்டு காட்டுகின்றது சிஎன்பிசி (CNBC) செய்தி ஊடகத்தின் அறிக்கை.

கூகுள், ஆப்பிள், அமேசான், மைக்ரோசாப்ட், முகநூல், இன்டெல், ஐபிஎம், எஸ்ஏபி, போன்ற பல பிரபல நிறுவனங்களும் கடந்த 12 முதல் 18 மாதங்களாகவே தொடர்ந்து ஊழியர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டில் ஆட்குறைப்பு செய்யாத ட்விட்டர், நெட் பிளிக்ஸ், டெஸ்லா போன்றவையும் 2024 ஆம் ஆண்டில் எண்ணிக்கை வெளியிடாமல் ஆட்குறைப்பு செய்திருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இவ்வகையில் இன்டெல் நிறுவனத்தில் 15 சதவிகிதம் பேரும், ஜப்பானின் சோனி நிறுவனத்தில் 8 சதவிகிதம் பேரும், ஆல்பாபெட் (Alphabet) நிறுவனத்தில் 6 சதவிகிதம் பேரும், வேலை தேடித் தரும் இணையதளமான இன்டீட் (Indeed) நிறுவனத்தில் 8 சதவிகிதம் பேரும் இவ்வாறு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். மேலும் ஈ பே (eBay) நிறுவனம் 1000 பேரையும் ஸ்பாட்டிஃபை (Spotify) நிறுவனம் 1500 பேரையும் வெளியேற்றியுள்ளன. அதேபோல் பின்லாந்தின் நோக்கியா நிறுவனம் சில உற்பத்தி பிரிவுகளையே மூடிவிட்டதன் மூலம் 14,000 பேரை வெளியேற்றியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்த அளவில் பெரும்பான்மையான ஐடி நிறுவனங்கள் பெங்களூருவில் இயங்கி வருகின்றன. அவற்றில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் எதில் எத்தனை ஊழியர்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர் என்பதை இந்த இணையதளம் தனது அறிக்கையில் பெயர் பட்டியலுடன் வெளியிட்டிருக்கிறது. சென்னையிலுள்ள சில நிறுவனங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஃப்லிப்கார்ட்  மற்றும் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி (swiggy), கல்வித்துறை சார்ந்த பைஜூஸ் ஆகியவையும், ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களும் பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்திருக்கின்றன.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு எந்த நிறுவனமும் காரணம் எதையும் சொல்வதில்லை. பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவுவதால் அவ்வாறு செய்ய நேரிடுகிறது என்று பொதுவில் கூறுகின்றன. மேலும் ஊழியர் எண்ணிக்கையை உற்பத்தியின் தேவைக்கேற்ப கச்சிதப்படுத்தி வைத்துக் கொள்வதாகவும் அதன் மூலம் நிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்திக் கொள்வதாகவும் கூறுகின்றன.

இவ்வெளியேற்றங்கள் உயர்நிலை நிர்வாகத்திலும் அறிவுத்துறை சார்ந்த ஆய்வு மற்றும் மேம்பாட்டு துறைகளிலும் (Research and Development) நடக்கின்றன. இவை அந்நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி குறித்த அவற்றின் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகின்றன. மேலும் அனைத்து துறைகளிலும் உள்ள கீழ்நிலை ஊழியர்கள் பெரிய எண்ணிக்கையில் வெளியேற்றப்படுகின்றனர்.

கர்நாடக அரசு ஐடி துறை ஊழியர்களுக்கு 14 மணி நேர வேலை நேர சட்டத்தை கொண்டுவர இருப்பதை இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும். ‘தேவையற்ற’ ஊழியர்களை வெளியேற்றிவிட்டு இருப்பவர்களை இறுக்கிப்பிழிவது தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கம் என்பது தெளிவாக தெரிகிறது.

மொத்தத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையின் காரணமாக தற்காப்பு நிலையிலிருந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இவையாவும் பொருளாதார மேம்பாட்டுக்கும் உற்பத்திப் பெருக்கத்திற்கும் முக்கிய சேவை துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மட்டுமே ஆகும்.

ஆட்குறைப்பு நடவடிக்கைகள் என்பது எப்போதுமே சேவை துறையில் மட்டும் தனித்து நடப்பதில்லை. எனவே உற்பத்தி துறையிலும் இத்தகைய ஆட்குறைப்புகள் நடந்து வருவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

எனில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உலகமய தனியார்மய தாராளமய ஏகாதிபத்திய உற்பத்தி முறை, பாதாளத்தை நோக்கி சரிந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை நமக்கு உணர்த்துகிறது. இளைஞர்களின் எதிர்காலம் தான் என்ன என்கிற கேள்வி பூதாகரமானதாக எழுகின்றது. இக்கேள்வி இளைஞர்களின் சிந்தனையைப் பற்றிக் கொண்டால் அதுவே மாற்றங்களுக்கு வழிவகுக்கக் கூடும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஹத்ராஸ் படுகொலை: போலே பாபாவும்! இந்துத்துவத்திற்கான அணித்திரட்டலும்!

போலே பாபாவின் மத சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் திரளின் ஒரு பகுதியினர்

த்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் ஜூலை 2 அன்று மத சொற்பொழிவு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 121 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்தது.

போலே பாபா என அழைக்கப்படும் சூரஜ்பால் சிங் என்ற சாமியாரின் மத சொற்பொழிவு நிகழ்ச்சி ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 80,000 பேர் கலந்துகொள்வர் என்றுக்கூறி அரசு நிர்வாகத்தில் அனுமதி வாங்கப்பட்டிருந்த நிலையில் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திரட்டியிருந்தனர். மக்கள் வெளியேறுவதற்கு போதிய நுழைவாயில்களும்; எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமல் பாதுகாப்பற்ற வகையில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சி முடிந்தபிறகு, “பாபாவின் பாதம்பட்ட மண்ணை சேகரித்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்” என திட்டமிட்டு பரப்பபட்ட பொய்யை நம்பி மண்ணை சேகரிக்கவும், பாபாவின் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கவும் போட்டிபோட்ட மக்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பாபாவின் பாதுகாவலர்கள் என்ற பெயரிலான குண்டர்கள் போலே பாபாவை நெருங்கிவந்த மக்களை தடியால் தாக்கியதிலும் தள்ளி விட்டதிலும் பலர் கீழே விழுந்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவர்களால் எழ முடியவில்லை. பகலில் பெய்த மழையால் மண் ஈரமாகவும் வழுக்கும் தன்மையுடனும் இருந்தது நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் பலியானதோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் டெம்போ மற்றும் பஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் நடந்த புல்ராய் கிராமத்தில் ஒரு சிறிய அரசு மருத்துவமனை மட்டுமே இருந்தது. அங்கு ஒரே ஒரு மருத்துவரால், காயமுற்றவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியவில்லை. எனவே,  காயமடைந்தவர்கள் ஹத்ராஸில் உள்ள சிக்கந்தராவ் அவசர சிகிச்சை மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதிக நபர்களைக் கையாள முடியாமல் அம்மருத்துவமனையும் திணறியது. இதனால், பலரும் உயிரிழந்து, பலி எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. சிகிச்சையளிப்பதற்கு படுக்கை வசதி கூட இல்லாததால் மருத்துவமனை வாசலில் உடல்கள் குவிக்கப்பட்டிருந்த அவலம் அரங்கேறியது.

காயமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி இறந்தவர்களுக்கு உடற்கூராய்வு  கூட செய்ய முடியாமல் உறவினர்கள் தவித்தனர். இறந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள எட்டா, காஸ்கஞ்ச், ஆக்ரா, அலிகார் உள்ளிட்ட மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மருத்துவமனைகளில் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்ட உடல்களை பெற உறவினர்கள் நீண்ட வரிசையில் நின்ற காட்சியும் தங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் செத்தார்களா? பிழைத்தார்களா? எனத் தெரியாமல் பிணக்குவியலுக்குள் தங்களது குடும்பத்தினரை தேடிய காட்சியும் இணையத்தில் பரவி காண்போரின் மனதை உலுக்கியது. சொல்லபோனால், கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் ஒருபகுதி எனில் உத்தரப்பிரதேச மருத்துவக் கட்டமைப்பு சீர்கேடு கணிசமானோரை கொன்றொழித்தது

இக்கொடூரச் சம்பவத்தில் இறந்தவர்களில் பெரும்பகுதியினர் பெண்களும் குழந்தைகளும்தான். சில குடும்பங்கள் தாய், மகள், மனைவி என மூவரையும் இழந்து பரிதவித்தன. மதம் என்ற போதையில் மக்களை ஆழ்த்துவதன் கோர விளைவை இச்சம்பவம் துலக்கமாக எடுத்துக் காட்டுகிறது.

பாலியல் பொறுக்கிபாபாவான கதை

வெண்ணிற ஆடையை அணிந்துகொண்டு தன்னை பாபா என்று சொல்லிக்கொள்ளும் சூரஜ்பால் சிங் ஆரம்பக்காலத்தில், உத்தரப்பிரதேசத்தில் போலீசில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தான். போலீசாக இருக்கும்போதே ஆக்ரா, எட்டாவா, கஸ்கஞ்ச், ஃபரூகாபாத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூரஜ் பால் சிங் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பிற குற்ற வழக்குகளும் பதியப்பட்டிருந்தன. இதனால் பலமுறை இடைநீக்கம் செய்யப்பட்ட சூரஜ்பால் 1997-ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டான். சிறையிலிருந்து வெளியே வந்தவன் தனது போலீஸ் வேலையை ‘துறந்து’ போலே பாபாவாக அவதாரம் எடுத்தான்.

2000-ஆம் ஆண்டு ஆக்ராவில் இறந்த இளம்பெண் ஒருவரை உயிர்த்தெழுப்பப் போவதாக சர்ச்சையைக் கிளப்பியதால், மீண்டும் போலீசால் கைது செய்யப்பட்டான். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டு, சிறையிலிருந்து வெளியே வந்தபிறகு தலைமுடியை நீளமாக வளர்த்துக்கொண்டு நீண்ட வெள்ளி நிற ஆடைகளை அணிந்துக்கொண்டு ‘முழு பாபாவாக’ மாறினான். “கருப்பு கமாண்டோக்கள்” என்று அழைப்படும் கருட் யோதா, ஹரி வாஹக், நாராயணி சேனா என மூன்றடுக்கு மெய்காப்பாளர்கள் என்ற பெயரிலான குண்டர் படையையும் வைத்துள்ளான். தனித்தனி ஆடையும் பணியும் ஒதுக்கப்பட்டுள்ள இக்குண்டர்களைக் கொண்டு மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.

போலே பாபாவின் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியானவர்களின் உடல்கள்

குறிப்பாக, சூரஜ்பால் சிங் உத்தரப்பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்திற்கு அதிகமாக உள்ள தலித் உட்பிரிவான ஜாதவ் சாதியை சார்ந்தவன் என்பதால் உத்திரப்பிரதேசத்தின் எட்டா, ஹத்ராஸ், புலந்த்ஷாஹர், அலிகார், குர்ஜா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஜாதவ் மற்றும் வால்மீகி தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வருகிறான். உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் உள்ள மக்களிடமும் இவனுக்கு ஆதரவு உள்ளதால் சூரஜ்பாலின் சொற்பொழிவிற்கு எளிதாக லட்சக்கணக்கான மக்கள் கூடிவிடுவர். அதிலும் பெண்களை தனது அடித்தளமாக கொண்டுள்ள சூரஜ்பால் சிங், அதற்காகவே தனது மனைவியை ஒவ்வொரு சொற்பொழிவிற்கும் திட்டமிட்டு அழைத்து செல்கிறான்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், பார்ப்பனிய ஆகம விதிகளுக்கு மாறாக அனைவரும் கருவறைக்கு சென்று கடவுளை வழிபடலாம், மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோவிலுக்குள் வரலாம் என்றெல்லாம் அறிவித்தன் மூலம் ஆதிபராசக்தி கோவிலுக்கு பெண்களை சாரை சாரையாக வரவைத்து கொள்ளையடித்தது போலவே சூரஜ்பால் சிங்கும் தலித் மக்களையும் பெண்களையும் குறிவைத்து பல உத்திகளை மேற்கொண்டான். பார்ப்பனிய சமூக கட்டமைப்பால், மோசமான வாழ்க்கைச் சூழலையும் தீண்டாமையையும் அனுபவித்துவரும் தலித் மக்கள் மத்தியில் சாதியையும், சாதி பாகுபட்டையும் எதிர்த்து பேசினான். சமத்துவம், சகோதரத்துவம் மலர வேண்டும்; வேற்றுமையில் ஒற்றுமை வேண்டும்; மனிதநேயம்தான் உண்மையான மதம்; அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்றெல்லாம் பேசி தலித் மக்களை அணித்திரட்டினான். இதனால், தங்களிடமிருந்த பாதுகாப்பின்மை உணர்வை உடைத்து பாபா நம்பிக்கையளித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், மதுவிற்கு அடிமையான ஆண்களாலும், குடும்ப வன்முறைகளாலும் பெண்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து பேசுவதன் மூலம் கடுமையான அடக்குமுறைகளை சந்திக்கும் பெண்களை இவனை பின்தொடர்கின்றனர். இவையன்றி சிலருக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை செய்வது; தனது சொற்பொழிவு கூட்டங்களை இலவசமாக நடத்துவது அடித்தட்டு ஏழை மக்களை மேலும் ஈர்க்கிறது. இதன் காரணமாகவே, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழிந்துள்ள போதிலும் பலருக்கும் சூரஜ் மீது கோவம் வரவில்லை, “விபத்து ஏற்படுவதற்கு முன்பே பாபா சென்றுவிட்டார்.  விபத்துக்கு காரணம் அரசாங்கமும் மருத்துவ கட்டமைப்பு சீரழிவும் தான்” என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே பேசுகின்றனர்.

மேலும்,  அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள் மத்தியில் சூரஜ்பால் சிங்கிற்கு பெரும் செல்வாக்கு உள்ளது. கட்சி வேறுபாடின்றி சூரஜ் அணித்திரட்டி வைத்துள்ள தலித் மக்களை வாக்குவங்கியாக மாற்றிக்கொள்ளும் நோக்கத்துடன் சூரஜுடன் நெருக்கமாக இருப்பதோடு, அவனது கூட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளனர். சாமியார்களின் சொர்க்கபுரியாக விளங்கும் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மட்டுமின்றி, தலித் மக்கள் தலைவராக சொல்லிக்கொள்ளப்படும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் ஆட்சியிலும் இவனுக்கு மட்டற்ற மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாயாவதியும் ஜாதவ் சாதியைச் சார்ந்தவர் என்பது முக்கிய காரணம். அதேபோல் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் இவனோடு நெருக்கமாக இருந்ததற்கு ஆதாரமாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் இவனின் மடங்களில் நடக்கும் பெரிய அதிகாரிகளின் குடும்ப திருமணங்கள், அதிகாரவர்க்கம் மத்தியில் உள்ள போலே பாபாவின் செல்வாக்கிற்கான சாட்சி.

இதன் காரணமாகவே,  121 பேர் உயிரிழந்துள்ள போதிலும், முதல் தகவல் அறிக்கையில் கூட போலே பாபா பெயர் இடம்பெறவில்லை. ஆனால், பாபா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை, தேடிக்கொண்டிருக்கிறோம் என்று போலீசு கதையளந்துக் கொண்டிருக்கும்போதே, “அனைவரும் ஒரு நாள் மரணத்தை சந்திக்கத்தான் வேண்டும். மரணத்தை யாராலும் தடுக்க முடியாது” என்று திமிர்த்தனமாகவும் “இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூட்டத்தில் விஷம் தெளிக்கப்பட்டதாக எங்களிடம் கூறினர். சதிகாரர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று இப்படுகொலையை சதியாக மாற்ற முயற்சிக்கும் வகையில் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-க்கு நேர்க்காணல் கொடுத்திருந்தான். இவனது குண்டர் படையினரும் துளியும் அச்சமின்றி இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே அடுத்த நிகழ்ச்சிக்கான நிதி சேகரிப்பு வேலையில் ஈடுபடுகின்றனர்.

இவையெல்லாம், உத்தரப்பிரதேசத்தை ஆளும் ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசியின் முழு துணையோடுதான் நடக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. அதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் சூரஜ் என்ற பெயரை கூட உச்சரிக்காமல் உத்தரப்பிரதேச அரசின் நிர்வாக சீர்கேடே இப்படுகொலைகளுக்கு காரணம் என பேசி வருகின்றனர். சுரஜ்பால் சிங்கை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள எந்த கட்சியும் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. இடைத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என உத்தரப்பிரதேசம் அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள சூழலில் எந்த கட்சியும் சூரஜ்பால் சிங்கை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக மக்களுக்கு துரோகமிழைக்கின்றன.

முற்போக்கு போர்வையில் இந்துத்துவத்திற்கான அணித்திரட்டல்

பார்ப்பனிய மேலாதிக்கமும் சாதிய கொடுமைகளும் தாண்டவமாடும் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக தலித் மக்கள் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இதே ஹதராஸ் மாவட்டத்தில் ஆதிக்கச்சாதி வெறியர்கள், தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயதான இளம்பெண்ணை நாக்கறுத்து, முதுகெலும்பை உடைத்து மிக கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கினர். உ.பி. பா.ஜ.க. அரசு அப்பெண்ணின் உடலை பெற்றொருக்கு கூட காட்டாமல் இரவோடு இரவாக எரித்தது. பாசிச பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஆட்சிக்கு வந்தபிறகு இஸ்லாமியர்கள் போலவே தலித் மக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதற்கு இந்த கோர சம்பவமே போதுமான சாட்சி. அதிலும் பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பசு வளைய மாநிலங்களில் இந்த நிலை மிகவும் மூர்க்கமாக அரங்கேறி வருகிறது.

ஆனால், எந்த பார்ப்பனியத்தால் மக்கள் துரத்தியடிக்கப்படுகின்றனரோ அதே பார்ப்பனியத்தை வேறு வடிவில் வைத்து தலித் மக்களை அணித்திரட்டி, அவர்களை இந்துத்துவத்திற்கு பலியிடும் வேலையைத்தான் சூரஜ் பால் சிங் செய்து வருகிறான்.

தன்னை கிருஷ்ணனின் அவதாரமாகவும், சிவனின் அவதாரமாகவும் கூறிக்கொள்ளும் சூரஜ்பால் சிங், தனது மனைவியை லக்ஷ்மியின் அவதாரமாக முன்னிறுத்துகிறான். மேலும், மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வாக பார்ப்பனிய சடங்குகள் மற்றும் மரபுகளையும், நடைமுறைகளையும் முன்வைப்பது; தனது குண்டர் படையின் மூலம் நேரடியாக மக்கள் மத்தியில் இந்துத்துவ கருத்துகளையும் அடையாளங்களையும் பரப்புவது என அப்பட்டமாக இந்துத்துவத்திற்கான அணித்திரட்டலை செய்துக் கொண்டிருக்கிறான். இதன்மூலம் தலித் மக்கள் மத்தியில் உள்ள பொருள்முதல்வாத முற்போக்கு கருத்துகளும், அம்பேத்கரின் சாதி எதிர்ப்பு கருத்துகளும் நீர்த்தப்போவதோடு, பார்ப்பனிய எதிர்ப்பு அழிக்கத்தொழிக்கப்பட்டு இந்துத்துவத்திற்கான அடித்தளம் உருவாக்கப்படுகிறது. இதன்மூலம், தலித் மக்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஊடுருவலுக்கான கதவு திறந்துவிடப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் சூரஜ்பால் சிங் மட்டுமின்றி, குஜராத், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இத்தகைய சாமியார்கள் ஏழை-எளிய தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களை அணித்திரட்டுகின்றனர். இவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வுடன் நேரடி தொடர்பில் இருப்பது பல சமயங்களில் அம்பலமாகியுள்ளது. மேலும், பா.ஜ.க. சார்பு ஊடகங்கள் இக்கும்பலை விளம்பரப்படுத்தி மேலும் பிரபலமடையச் செய்கின்றன.

1990-களில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலானியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டப் பிறகு கடவுள், பக்தி, ஆன்மீகம் முதலியவற்றை சரக்காக்கி கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் பல கார்ப்பரேட் சாமியர்கள் உருவெடுத்தனர். ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ், பங்காரு அடிகளார் என இந்த கார்ப்பரேட் சாமியர்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. கருப்புப்பணம் மோசடி, இயற்கை வளங்களை ஆக்கிரமிப்பது; கல்வி-அழகுப்பொருட்கள் விற்பனை வரை அனைத்திலும் இந்த கார்ப்பரேட் சாமியர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். கார்ப்பரேட் கொள்ளையில் ஈடுபடுவதுடன் இந்துவத்தின் புரோக்கர்களாகவும் இக்கார்ப்பரேட் சாமியர்கள் செயல்படுவதால் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பலால் திட்டமிட்டே ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அடுத்தடுத்த தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள சூழலில் எந்த கட்சியும் சூரஜ்பால் சிங்கை பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக மக்களுக்கு துரோகமிழைக்கின்றன.

ஆனால், பிற கார்ப்பரேட் சாமியார்களைக் காட்டிலும் போலே பாபா-வின் வளர்ச்சி இன்னும் அபாயமிக்கது. ஏனெனில், எந்த பார்ப்பனிய மேலாதிக்கத்திற்காக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தலித் மக்களை அடக்கி ஒடுக்கி ஓரங்கட்டுகிறதோ, அதே பார்ப்பனிய சித்தாந்தத்தின் கீழ் தலித் மக்கள் அணித்திரட்டப்படும் பேரவலமும் ஆபத்தும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தலித் மக்கள் இத்தகைய சாமியர்களுக்கு கீழ் அணிதிரளும் போக்கை “மாற்று மதத்தை கோரும் ஆர்வம்” என்று குறிப்பிடும் டெல்லியின் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யோகேஷ் ஸ்நேஹி, இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்படும் சனாதனத்தால் பிரதான மதத்திலிருந்து அந்நியப்பட்டுள்ள தலித் மக்களில் கணிசமானோர் மாற்று நம்பிக்கையை தேட தொடங்குகின்றனர்; இந்நிலையில், சூரஜ்பால் சிங் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்திருப்பதாலும் மத மற்றும் ஆன்மீக ஆதரவை வழங்குவதாலும் மக்கள் எளிமையாக அவனுக்கு கீழ் அணிதிரள்கின்றனர் என்று குறிப்பிடுகிறார்.

தலித்துகளின் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்ட உத்தரபிரதேசத்திலிருந்த அம்பேத்கரிய அமைப்புகளின் சந்தர்ப்பவாதமே இந்த அணித்திரட்டலுக்கான அடிப்படையாக அமைந்துள்ளது.

சாதி அரசியல் செல்வாக்கு செலுத்தும் உத்தரபிரதேசத்தில், கன்ஷிராம் 80-களின் இறுதியில், தலித்துகள் மட்டுமின்றி பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், இதர வகுப்பினர், மதச் சிறுபான்மையினர் என பார்ப்பனர்கள் தவிர்த்து பிற மக்களை உள்ளடக்கிய “பகுஜன்” என்ற குறியீட்டை கொண்ட இயக்கத்தை உருவாக்கினார். இது பின்னர் “பகுஜன் சமாஜ் கட்சி”யாக பரிணமித்து உத்தரப்பிரதேச தேர்தல் அரசியலில் செல்வாக்கு செலுத்தியது. உத்தரப்பிரதேசத்தில் தலித்திய அரசியல் தாக்கம் செலுத்தவும் காரணமாக அமைந்தது. ஆனால், கொள்கையற்று அரசியல் அதிகாரத்திற்கு செல்வதை மட்டுமே ஒற்றை நோக்கமாக கொண்டிருந்ததோடு அதுவே அம்பேத்கரிய அரசியல் என திரித்து சந்தர்ப்பவாதத்திலும் பிழைப்புவாதத்திலும் வீழ்ந்தது.

“தலித்துகளே, பிற கட்சிகளில் சேராதீர்கள்; ஆதிக்கச் சாதியினரை எமது கட்சியிலும் சேர்க்க மாட்டோம்” என்றுச் சவடால் அடித்துவந்த இக்கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ், அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் அரசியல் கூட்டு வைத்துக்கொண்டு பார்ப்பனர்களின் பாதந்தாங்கி கட்சியாகவும் மாறியது. இதன் உச்சமாக, தலித்துகளின் 23 சதவிகித ஓட்டுகளுடன் 13 சதவிகிதம் வரையுள்ள பார்ப்பனர்களின் ஓட்டுகளையும் பெற்றால் சுலபமாக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என கணக்கு போட்ட மாயாவதி, ‘தலித்-பார்ப்பனக் கூட்டணி’ வைத்தது கட்சியை பிழைப்புவாதத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றதோடு, தற்போது பா.ஜ.க-விற்கான பி-டீம் ஆக செயல்பட்டுவருகிறது.

மொத்தத்தில், தலித்துகள் மத்தியில் பார்ப்பனிய-இந்துத்துவ கருத்துகளும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவதற்கான காரணமாக மாறியுள்ளது. சித்தாந்த ரீதியாக தலித் மக்களை அணித்திரட்டாமல்; பிழைப்புவாதத்திற்காக வர்க்க விடுதலையையும் வர்க்க அரசியலையும் முன்வைக்காமல் அடையாள அரசியலை முன்வைத்ததன் விளைவே போலே பாபா போன்ற கருங்காலிகள் தலித் மக்களை இந்துத்துவ சித்தாந்ததின் கீழ் அணித்திரட்ட வழிகோலியுள்ளது.

“சாதி ஒழிப்பும் அடையாள அரசியலும்” என்ற நூலில் தலித்துகளை அணித்திரட்டுவது குறித்து குறிப்பிடும் ஆனந்த் டெல்டும்டே, “தலித், பகுஜன், முல்நிவாசி ஏன் பௌத்தம் போல சாதி ஒழிப்பு என்ற பெயரில் கட்டமைக்கப்பட்ட எந்த ஒரு அரசியல் அடையாளமாக இருந்தாலும் அது தன்னை சாதி ஒழிப்பிற்கானது என நிறுவ முற்பட்டாலும் அது சாதியை வலுப்படுத்தும் அங்கமாகவே மாறியது. சாதி என்னும் அரக்கனை ஒழிக்க அதற்கு மாற்றான வர்க்க அடிப்படையிலான அரசியலால் மட்டுமே சாத்தியம். இவற்றைக் கேட்க கடினமாகருந்தாலும் வரலாற்று இன்னல்களை மாற்றி குறுக்கு வழிகள் எதுவும் இல்லை” என்கிறார். எனவே, பாசிச பேயாட்சியால் சொல்லொனா துயரங்களை அனுபவித்துவரும் தலித் மக்களை வர்க்கமாக அணித்திரட்டி பாசிச எதிர்ப்பு அரசியலின்கீழ் அவர்களை போராட வைப்பதே தலித் மக்களின் விடுதலைக்கான தீர்வாக இருக்கும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கென்யாவில் புதிய அமைச்சரவை: அதிபரின் நாடகத்தை நிராகரித்த மக்கள்

கென்யாவில் புதிய அமைச்சரவை தற்போது பதவியேற்றுள்ள நிலையில், அதிபர் பதவி விலகக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 8 அன்று தலைநகர் நைரோபியில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் போராடும் மக்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

அதிபர் வில்லியம் ரூடோ தனது அனைத்து அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கொண்டு “பரந்த அடிப்படையிலான” அரசாங்கம் என்ற ஒன்றை அவர் அமைத்தார். ஆனால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

நகரத்தில் வணிகங்கள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன மற்றும் பொது போக்குவரத்தும் முடங்கியிருந்தது. நகரத்திற்கு செல்லும் பாதைகளிலும் போலீசார் சாலைத் தடைகளை ஏற்படுத்தினர். ஆகஸ்ட் 8 காலை புதிய அமைச்சர்கள் பதவியேற்ற அதிபர் அலுவலகமும் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

சிவில் சமூக குழுக்கள், கென்யாவின் சட்ட சங்கத்துடன் சேர்ந்து, ஆர்ப்பாட்டங்களின் போது மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. மேலும் சீருடை அணியாத போலீசாரை நிறுத்துவதையும், அடையாளமிடப்படாத வாகனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு போலீசை வலியுறுத்தின.

கென்யாவில் ஜூன் 18 அன்று ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின. வரிகளை உயர்த்தியிருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய நிதி மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து ஆரம்பத்தில் போராட்டங்கள் தொடங்கின.

ஜூன் 25 அன்று, நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கென்ய மனித உரிமைகளுக்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.

போராட்டம் வீரியமாக நடைபெற்றதால், கென்ய மக்களின் உணர்வை மதித்து இந்த மசோதாவில் கையெழுத்திடப் போவதில்லை என்று அதிபர் ரூடோ கூறி மீண்டும் அந்த மசோதாவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினார்.

ஆனால், அதிபர் ரூடோவின் நாடகத்தை நம்ப மக்கள் தயாராக இல்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். ஒரு அமைச்சரைத் தவிர மற்ற அனைவரையும் பதவி நீக்கம் செய்தார் ரூடோ. ஆனால் போராட்டங்கள் புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னரும் தொடர்ந்து வருகிறது.


ராஜேஷ்

நன்றி: அல் ஜசீரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024: இந்துராஷ்டிர பொருளாதாரத்திற்கான செயல்திட்டம்

பாசிச மோடி கும்பல் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்திவருகிறது. ஏற்கெனவே, காவி-போலீசு கும்பலாட்சியை நிறுவுவதற்கான மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்  நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இந்துராஷ்டிரத்திற்கான நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்திருக்கிறது பாசிசக்கும்பல். நாட்டின் பெரும்பான்மை மக்களான அடித்தட்டு – நடுத்தர வர்க்க பிரிவினரையும் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்கான சலுகைகளையும் திட்டங்களையும் மட்டும் வாரி வழங்கும், நிதிநிலை அறிக்கையை கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி  ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதில் பின்பற்றப்பட்டுவந்த பெயரளவிலான வழிமுறைகளையும் மரபுகளையும் தூர வீசிவிட்டு, அரசியல் நோக்கத்திலிருந்து ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்து பிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது பாசிசக் கும்பல்.

நிதிநிலை அறிக்கையில், தங்கள் மீது வரிக் கொள்ளை கட்டவிழ்த்துவிடப்பட்டிருப்பதை கண்டு ஆத்திரமடைந்த நடுத்தர வர்க்கத்தை சார்ந்த பா.ஜ.க. ஆதரவாளர்களே மோடி-நிர்மலா கும்பலுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 77 ஆண்டுகால இந்திய வரலாற்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏறக்குறைய 80 நிதிநிலை அறிக்கைகளில் இத்தகையதொரு நிதிநிலை அறிக்கையை இதுவரை கண்டதில்லை என முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களே பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காலனிகளாகும் மாநிலங்கள்

பீகார் மற்றும் ஆந்திராவிற்கு பல சிறப்பு நிதி திட்டங்களை அறிவித்துள்ள மோடி அரசானது, தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி திட்டங்களை அறிவிக்கவில்லை. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்கள் கூட இடம்பெறவில்லை.

அதேப்போல், பீகார், அசாம், உத்தராகண்ட், இமாச்சல் பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் வெள்ள துயர் நீக்க நடவடிக்கைகளுக்காக ரூ.11,500 கோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது, பாசிச மோடி  அரசு.

அதேசமயம், ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு பல சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டாலும் அம்மாநில மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையிலான எந்த திட்டங்களும் நிதியும் ஒதுக்கப்படாமல் கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கும் இரு மாநிலங்களை சேர்ந்த கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதற்குமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், கடந்த பத்தாண்டுகாலமாகவே மக்களுக்கு செய்ய வேண்டிய ஒன்றிய அரசின் செலவினங்களை வெட்டி சுருக்கி அரசின் அளவை (Size of the government) குறைத்துக் கொண்டிருக்கும் பாசிச மோடி அரசு, மாநில அரசுகளுக்கும் நிதி ஒதுக்காமல் மாநில அரசுகளின் அளவையும் சுருக்கி தனக்கு கப்பங்கட்டும் காலனிகளாக மாற்றிவருகிறது பாசிசக்கும்பல்.

கல்வி, விவசாயம் என அனைத்தும் கார்ப்பரேட்மயமாக்கம்

நீட் தேர்வு மோசடி, யூ.ஜி.சி-நெட் தேர்வு மோசடி என அடுத்தடுத்து உயர்கல்வித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளும் மோசடிகளும் அம்பலமாகி, ஒட்டுமொத்த கல்விக்கட்டமைப்பும் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், அதை மேலும் சீரழிக்கும் விதமாக பல்கலைக்கழக மானியக் குழுவுக்கான நிதி ஒதுக்கீடு சுமார் 60 சதவிகிதம் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே, அடித்தட்டு மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் கல்வித்திட்டங்கள் ஒழித்துக்கட்டப்பட்டு வரும் போக்கை மேலும் தீவிரமாக்கும். நிதி நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் பல்கலைக்கழகங்கள் நிலையை மேலும் மோசமாக்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கான வழியை ஏற்படுத்தும். இதனால், பல லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி கேள்விகுறியாகும் அபாயம் உள்ளது.

அதேபோல், விவசாயத்துறையிலும் கார்ப்பரேட்மயமாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையிலேயே நிதி நிலை அறிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயிகளின் உயிராதார கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதாரவிலை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டதோடு, பயிர் வளர்ப்பு, உர மானியம் முதலியவற்றிற்கான நிதியும் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டிஜிட்டல்முறை, புதிய ஹைபிரிட் ரக விதைகள், பயோ மையங்கள் என விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை நிறுவும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் திட்டங்களுக்கான நிதி வாரி வழங்கப்பட்டுள்ளது.


படிக்க: நிதிநிலை அறிக்கை 2023-2024: அம்பானி – அதானிகளுக்கு அமிர்தகாலம், உழைக்கும் மக்களுக்கு ஆலகாலம்!


மோடி அரசின் பணமதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகிய பாசிசத் தாக்குதல்களால் நொடிந்து போயுள்ள சிறு, குறு நிறுவனங்களின் முக்கிய கோரிக்கைகளான வங்கி வட்டியை ஐந்து சதவிகிதமாக குறைப்பது; வேறு நிறுவனங்களுக்கு செய்துதரும் பணிகளுக்கான ஜி.எஸ்.டி-யை 5 சதவிகிதமாக குறைப்பது; இயந்திரங்கள் கொள்முதலுக்கு 15 சதவிகிதம் மானியம் ஆகியவற்றை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், அந்நிறுவனங்களை கடன் வலையில் சிக்கவைத்து அவற்றை படிப்படியாக மூடும் விதமாகவே நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

அதே போல அங்கன்வாடிகளுக்கான நிதி ரூ.21,543 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவிற்கான மானியம் 2.57 சதவிகிதம் வெட்டப்பட்டிருக்கிறது. சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு பொறுத்தவரை மொத்த பட்ஜெட்டில் 1.8 சதவிகிதம் மட்டுமே; மொத்த நிதிநிலை அறிக்கையில் பட்டியலின மக்களுக்கு 3.43 சதவிதமும், பழங்குடியின மக்களுக்கு 2.74 சதவிகிதமும் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; உணவு மானியத்திற்கான பட்ஜெட் 3.3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கும் விரோதமாகவே இந்த நிதிநிலை அறிக்கையை பாசிசக்கும்பல் கொண்டுவந்துள்ளது.

அம்பானி-அதானி-அகர்வால் வகையறா கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டற்ற கொள்ளைக்காக உழைக்கும் மக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள பாசிசக் கும்பல்,  கார்ப்பரேட் கும்பலுக்கான சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

2024 ஜூன் நிலவரப்படி வேலையின்மை 9.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நாட்டில் தலைவிரித்தாடும் வேலையின்மைக்கு வடமாநிலங்களில் நடக்கும் இளைஞர்களின் போராட்டங்களும், இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய அவலத்திலிருக்கும் இளைஞர்களுமே சாட்சி. நடந்தமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட வேலையின்மை பிரச்சினை பெரியளவில் பேசுபொருளானது. ஆனால், பாசிச மோடிக் கும்பல்  இவ்வேலையின்மை நெருக்கடியை தீர்ப்பதற்கு பதிலாக, அற்பக்கூலிக்கு இளைஞர்களின் உழைப்புச் சுரண்டுவதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான பெயிட் இண்டர்ன்ஷிப் திட்டத்தை  (Paid Internship Scheme) அறிவித்திருக்கிறது.

இத்திட்டத்தின்படி, திறன் பயிற்சி என்ற பெயரில் ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு 12 மாதங்களுக்கு 500 நிறுவனங்களில் பயிற்சி வழங்குவது; அந்நிறுவனங்கள் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.5000 தங்களுடைய சி.எஸ்.ஆர் நிதியில் இருந்து வழங்குவது என்றும், புதியதாக வேலையில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000 மானியமாக வழங்குவதுடன் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 “ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி”  கணக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு செலுத்துவது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பை அதிகளவு உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

அதாவது, இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது என்ற பெயரில் சமூக பாதுகாப்பின்றி மிகச் சொற்ப கூலிக்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களை உருவாக்கவது; அதற்காக மக்கள் வரிப்பணத்தையே கார்ப்பரேட்டுகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்குவதையே இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும், வரலாற்றில் முதல்முறையாக மொத்த நேரடி வரி வசூல்களில் 29.2 சதவிகிதமாக உள்ள தனிநபர் வருமான வரியை விட கார்ப்பரேட் வரி 27.2 சதவிகிதமாக குறைந்துள்ள நிலையிலும், இந்த நிதிநிலை அறிக்கையில் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 40 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பரம்பரை சொத்துவரி விதிக்க வேண்டும் என பல நாடுகளில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மோடி அரசோ கார்ப்பரேட்களுக்கு வரியைக் குறைத்து தன் வர்க்க பாசத்தை நிரூபிக்கிறது.

மாற்று அரசுக் கட்டமைப்புக்காக போராடுவோம்!

பா.ஜ.க-வின் இந்த நிதிநிலை அறிக்கையை விமர்சிக்கும் பலரும் இதனை மரபு மீறல், எதிர்க்கட்சிகள் மற்றும் பா.ஜ.க-வை எதிர்க்கும் மாநிலங்கள் மீதான காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை என்றுதான் பார்க்கின்றனர். ஆனால், கல்வி, விவசாயத்துறை, சுகாதாரத்துறை, மருத்துவம், ரயில்வே போன்ற மக்கள் செலவினங்களை வெட்டி சுருக்கிவிட்டு கார்ப்பரேட் கும்பலுக்கு நாட்டை தாரை வார்ப்பதற்கான செயல்திட்டமாகவே கடந்த பத்தாண்டுகால பாசிச பா.ஜ.க. ஆட்சியில் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம் இந்துராஷ்டிரத்திற்கான பொருளாதார அடித்தளத்தை கட்டமைத்து வருகிறது. அந்தவகையில், பாசிச பா.ஜ.க. கும்பல் மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாசிச சட்டத்திட்டங்களை மூர்க்கமாக அமல்படுத்திவரும் சூழலில் இந்துராஷ்டிரத்திற்கான பொருளாதார கட்டமைப்பை தீவிரப்படுத்துவன் அங்கமாகவே இந்தாண்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு பெயரளவில் இருந்த அதிகாரங்களை, ஆணையங்கள், முகமைகள், தீர்ப்பாயங்களை  போன்ற தன்னாட்சி அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் மோடிக் கும்பல் பறித்து வருகிறது. இதுபோன்ற அமைப்புகளுக்கு தலைவராக பிரதமரை நியமிப்பதன் மூலம், பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகத்தை சுற்றியுள்ள சிறு கும்பல் மட்டுமே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாக நிர்வாக முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பாசிசக் கும்பல் ஆட்சிக்கு வந்தப் பிறகு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதில் நாடாளுமன்றத்திற்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டு “நிதி ஆயோக்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதனால், நாட்டிற்கான வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்து அவற்றை நடைமுறைப்படுத்துகின்ற ‘நாடாளுமன்ற ஜனநாயகமுறை’ ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.

அதனால்தான், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிதி அயோக்கை கலைத்துவிட்டு, பழையபடி “திட்டக் கமிஷனை” கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆனால், திட்டக் கமிஷன் முறையை மீண்டும் கொண்டுவருவதால் மட்டும், இப்பிரச்சினையைத் தீர்த்துவிட முடியுமா? பத்தாண்டுகால பாசிச ஆட்சியில் மோடிக் கும்பல் இந்துராஷ்டிரத்திற்கான பல்வேறு அடிக்கட்டுமானங்களை உருவாக்கி வைத்துள்ளது. நாட்டின் மிக உயர்ந்த சட்டமியற்றும் அமைப்பான நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே பல முக்கியமான கொள்கை முடிவுகளும், சட்டங்களும் அமலாகிக் கொண்டிருக்கின்றன. மோடி அமித்ஷா கும்பலால், பெயரளவிலான நாடாளுமன்ற ஜனநாயகமும் கேலிக்கூத்தாக்கப்பட்ட நிலையில், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது, நாடாளுமன்ற ஜனநாயகம் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது என்ற மாய பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்கான பாசிஸ்டுகளின் நாடகமாகவே உள்ளது.

அதேபோல், ஜி.எஸ்.டி. மூலம் மாநில அரசுகளை கப்பம் கட்டும் நிர்வாக அமைப்புகளாக மாற்றிவருகிறது. எனவே,பாசிசமயமாகிப் போயுள்ள அரசுக் கட்டமைப்பை பொருளாதார கட்டுமானத்தை இனியும் மீட்டுருவாக்கம் செய்ய முடியாது. இந்துராஷ்டிரத்திற்காக சிதைத்து மறுவார்ப்பு செய்யப்பட்டுவரும் பொருளாதாரத்திற்கு மாற்றாக பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலனை உள்ளடக்கிய-கார்ப்பரேட் ஆதிக்கத்தை புறக்கணிக்கிற மாற்று பொருளாதாரத்தை முன்வைக்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைப்பதே இதற்கான தீர்வாக இருக்கும்.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!

ருப்பு உடை, தலையில் தொழிற்சங்கப் பெயர் பொறிக்கப்பட்ட சிவப்புத் துணி, ஒழுங்கமைக்கப்பட்ட வரிசையில் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்து நின்றுகொண்டு ஒரே சீராக கைகளை உயர்த்தியவாறு முழக்கமிடும் காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும். தென் கொரியாவில் நடந்துவரும் சாம்சங் தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டக் காட்சிதான் இது.

உலகளவில், மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று தென் கொரிய நாட்டின் சாம்சங் நிறுவனம். இந்நிறுவனத்தில், குறைக்கடத்தி சாதனங்களான நினைவக சில்லுகள் (Memory Chips), திறன் பேசிகள் (Smart Phones) உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் சாம்சங்கின் சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டுள்ளது. ஜூலை 8-இல் தொடங்கிய இப்போராட்டம் பல்வேறு அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு தொழிலாளி வர்க்க நெஞ்சுரத்தோடு நடைபெற்று வருகிறது. சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம், அமேசான் தொழிலாளர்கள் போராட்டம், ஜெர்மனி விவசாயிகள் போராட்டம் என அடுத்தடுத்து கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராக நடைபெறும் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள் உலக கார்ப்பரேட் முதலாளித்துவ சுரண்டல் கும்பலைப் பீதியடைச் செய்துள்ளது என்றே சொல்லலாம்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தங்களது கோரிக்கைகளுக்காக முன்னேறி செல்லும் சாம்சங் தொழிலாளர்கள்

சாம்சங் தொழிற்சங்கம் நடத்திய போராட்டம், உலகம் முழுவதும் சுரண்டலுக்குள்ளாகியிருக்கும் தொழிலாளர் வர்க்கத்தைக் கிளர்ச்சியடைய செய்திருக்கிறது.

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டப் பின்னணி

உலகம் முழுவதும் சுரண்டலுக்கு உள்ளாகியிருக்கும் தொழிலாளர் வர்க்கத்தைக் கிளர்ச்சியடைய செய்திருக்கும் இப்போராட்டத்தை சாம்சங் தொழிலாளர்கள் ஜூலை 8-ஆம் தேதி தொடங்கினர். உயர்நிலை கடைநிலை ஊழியர்களுக்கு ஊதிய வேறுபாட்டை நீக்க வேண்டும், ஊதிய உயர்வு, லாபத்தில் வழங்கப்படும் ஊக்கத் தொகையில் வேறுபாடு காட்டக் கூடாது, ஊழியர்கள் அனைவருக்கும் அவரவர் உழைப்பிற்கு ஏற்ற சமமான மற்றும் வெளிப்படையான விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டும், ஆண்டுக்கு ஒருநாள் கூடுதல் விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.

6,500 தொழிலாளர்களுடன் தொடங்கிய போராட்டம், தற்போது 28,000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை ஈர்த்திருக்கிறது. அதாவது, தென் கொரிய சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களில் ஐந்தில் ஒரு பங்கு தொழிலாளர்கள் இப்போராட்டத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு தங்களை இப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர். சாம்சங் மின்னணுத் தொழில் தேசிய தொழிற்சங்கம்தான் (NSEU) இப்போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி வருகிறது. தென் கொரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புடன் இணைக்கப்பட்ட இத்தொழிற்சங்கமானது, சாம்சங் நிறுவனத்தில் உள்ள ஐந்து தொழிற்சங்கங்களில் மிகப்பெரிய சங்கமாகும்.

இந்தாண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் இருந்தே தொழிற்சங்கம், தங்களது கோரிக்கைகளை முன்வைத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. எனவேதான், சாம்சங் தொழிலாளர்கள் தங்களுக்கு ஆண்டுக்கு ஒரு நாள் வழங்கப்படும் விடுப்பை அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்றாக சேர்ந்து எடுத்து, ஜூன் 7-ஆம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்; கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நிர்வாகத்திற்கு ஒரு மாத காலம் அவகாசமும் கொடுத்தனர்.

நிர்வாகமோ பணியவில்லை. நிர்வாகத்தின் கேளாத செவிகளுக்கு கேட்க வைக்க முடிவு செய்த தொழிற்சங்கம், ஜூலை 8, 9, 10 ஆகிய தேதிகளில் குறைக்கடத்தி சில்லு (Semiconductor) உற்பத்தி பிரிவில் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியது. மூன்று நாட்கள் நடந்த இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் 6,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகம் என்கிறது தொழிற்சங்கத் தரப்பு.

இப்பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை கடந்த ஆண்டு வெட்டப்பட்டதுதான் இப்பிரிவு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் முன்னிலை வகித்ததற்கான காரணமாகும். தங்களது உரிமையை மீட்கும் பொருட்டு இப்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் திரள் திரளாக தொழிற்சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.

ஜூலை 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்திலும் நிர்வாகம் பணியாததால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தது சாம்சங் மின்னணுத் தொழில் தேசிய தொழிற்சங்கம். 15 நாட்களாக வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது.

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் முதல்நாள் போரட்டக் காட்சி நாம் முன்னே விவரித்திருப்பது. கொட்டும் மழையிலும், மழை கோட்டு அணிந்துக் கொண்டு தங்களது கோரிக்கைகளில் தொழிலாளர்கள் உறுதியாக நின்றனர். போராட்டத்தில் நடைபெற்ற பேரணியில் போராட்டத்திற்காக இயற்றப்பட்டப் பாடலைப் பாடியவாறும், “உரிமைகளைப் பாதுகாப்போம்; சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைவோம்” போன்ற முழக்கங்கள் முழங்கியவாறும் தொழிலாளர்கள் வீறுநடை போட்டனர். இராணுவ ரீதியாக ஒழுங்கான முறையில் அணிவகுத்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடந்த அப்பேரணியானது, தொழிலாளி வர்க்கத்தின் இராணுவ ஒழுங்கமைப்பையும், நெஞ்சுரத்தையும் பறைசாற்றியது. “ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களின் மாபெரும் நடவடிக்கை இது” என்று முதலாளித்துவ ஊடகங்களே தொழிலாளர்களின் இப்பேரணியைக் கண்டு மெய்சிலிர்க்கின்றன.

தொழிலாளர்களின் இம்மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டமானது சாம்சங் நிறுவனத்தின் அரை நூற்றாண்டுகால வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத ஒன்றாகும். இப்போராட்டத்தை சாதாரண அடையாளப் போராட்டமாக சுருக்கிப் பார்க்கக் கூடாது. இது, முதலாளித்துவ லாபவெறியின் உயிர்நாடியை அறுத்தெரியவல்ல தொழிலாளி வர்க்கத்தின் மாபெரும் எழுச்சியாகும்.

காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்து 14-ஆம் நாளில் நிர்வாகம் தொழிற்சங்கத்திடம் பேச்சுவார்த்தைக்கு வந்தது. இப்பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் முன்வைத்த 5.6 சதவிகித ஊதியத்தை வழங்க நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாததால், காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடர முடிவு செய்தது தொழிற்சங்கம்.

இரு தரப்புக்கும் இடையேயான இடைவெளி எந்த உடன்பாட்டையும் எட்ட முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்கிறார், சாம்சங் மின்னணுத் தொழில் தேசிய தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் லீ ஹியூன்-குக். ஜூலை 29-ஆம் தேதிக்குள் புதிய சலுகைகளுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், ஜூலை 31-ஆம் தேதி வரை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தொழிற்சங்கம் அறிவித்திருக்கிறது. மேலும், பழைய கோரிக்கைகளுடன் தற்போது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் நியாயமான நிதி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தொழிற்சங்கம் கோரியிருக்கிறது.

சாம்சங்கின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளும்
அதற்கெதிரான மாபெரும் போராட்டங்களும்

உலகம் முழுக்கவே தொழிலாளர்களின் உதிரத்தை உழைப்பாய் ஒட்டச் சுரண்டுவதற்கும், கொள்ளை லாபத்திற்கும் தொழிற்சங்கம் தடையாய் இருக்கும், தொழிலாளர்கள் அமைப்பாய் திரளக் கூடாது என்பதற்காகவே ஏகாதிபத்திய நிறுவனங்கள் தொழிற்சங்கத்தை அனுமதிப்பதில்லை. சாம்சங் நிறுவனமும் இதற்கு விதிவிலக்கல்ல.

நாம் வெடிக்கும் பட்டாசு சிவகாசி சுற்றுவட்டார குழந்தைத் தொழிலாளர்களின் உதிரம் என்றால், நாம் உபயோகப்படுத்தும் சாம்சங் நிறுவனப் பொருட்கள் யாவும் கொரிய இளம் தொழிலாளர்களின் உதிரமே.

சாம்சங் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தொழிற்சங்கம் என்ற ஒன்றே இல்லை. தொழிற்சங்கம் உருவாகாமல் தடுக்கும் பொருட்டு தொழிலாளர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருந்தது சாம்சங் நிறுவனம். தொழிற்சங்கம் உருவானாலும் அதனை உடைக்கும் சதி வேலையிலும் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டது. இதற்கெனவே “ஏஞ்சல் ஏஜெண்டு” என்ற பெயரில் கங்காணிகளை நியமித்திருக்கிறது சாம்சங் நிறுவனம்.

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹேவுக்கும் அவரது நெருங்கியவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து சாம்சங் குழுமத்தின் தலைவராக பதவிக்கு வந்த “லீ ஜே யோங்க்” என்பவரின் இந்த சதிவேலைகளை எதிர்த்து “மெழுகுவர்த்தி புரட்சி” எனப்படும் மாபெரும் போராட்டத்தை சாம்சங் தொழிளார்கள் நடத்தினர். இதன் விளைவாக லீக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

எனவே, ஏஞ்சல் ஏஜெண்டுகள் போன்ற கங்காணிகளையும் மீறித்தான் தொழிலாளர்கள் சங்கமாய்த் திரண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். குறிப்பாக, 20 வயதிற்குட்பட்ட இளம் தொழிலாளர்களின் உயிரைப் பறித்திருக்கிறது சாம்சங் நிறுவனம். நாம் வெடிக்கும் பட்டாசு சிவகாசி சுற்றுவட்டார குழந்தைத் தொழிலாளர்களின் உதிரம் என்றால், நாம் உபயோகப்படுத்தும் சாம்சங் நிறுவனப் பொருட்கள் யாவும் கொரிய இளம் தொழிலாளர்களின் உதிரமே.

1990-களின் பிற்பகுதியில் சாம்சங் நிறுவனமானது நினைவக சில்லுகள் தயாரிப்பில் ஈடுபட்டது. இந்நிறுவனமானது தனது லாப வெறிக்காக பொருளாதாரத்தில் பின்தங்கிய இளம் பெண்களை குறிவைத்து தனது நிறுவனத்திற்கு பணியமர்த்துகிறது. குறிப்பாக, கொரியாவின் சிறிய நகரங்கள் அல்லது கிராமப்புறங்களில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்கல்வி முடித்த இளம் பெண்கள்தான் இந்நிறுவனத்தின் இலக்கு. இவர்களை உற்பத்திக்கு மட்டுமல்ல, தன்னுடைய பொருளை விற்பதற்கான சந்தையாகவுமே பயன்படுத்தியது சாம்சங் நிறுவனம். இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தியதன் மூலம் கிராமப்புறங்களில் சாம்சங் அலைபேசிகள் பயன்பாடும் அதிகரித்தது.

ஆரம்ப காலத்தில், புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தில் பணி கிடைப்பதைப் பலரும் பெருமையாகக் கருதினர். பிறகுதான், சாம்சங்கின் கோரமுகம் உலகிற்கு அம்பலமானது. சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களோ, முறையான பயிற்சி எதுவுமின்றி நினைவக சில்லு உற்பத்தியிலும், எல்.சி.டி. பேனல் தயாரிப்பிலும் ஈடுபடுத்தப்பட்டனர். அதாவது, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் எந்த பாதுகாப்பு வசதியுமின்றி நோக்கியா நிறுவனம் இயங்கியதைப் போன்றுதான். இதனால், இந்நிறுவனத்தில் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியவுடன், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நோய்கள் தாக்குவதும், தொழிலாளர்கள் இறப்பும் அதிகரித்தது.

கொரியாவின் சிறிய நகரம் ஒன்றில் டாக்சி டிரைவராக இருந்த ஹவாங்கின் 23 வயது மகள் யுமி என்பவர் சாம்சங் நினைவக சில்லு உற்பத்திப் பிரிவில் பணிபுரிந்து வந்தார். 2007-ஆம் ஆண்டு, உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சாம்சங் நிறுவனத்தில் இருபது மாதங்கள் பணியாற்றிய நிலையில், இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் படுத்த படுகையாக கிடந்த அவர் இறுதியில் உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் யுமி இறப்பில் சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால், யுமி உடன் பணிபுரிந்த இரண்டு பெண்களும் இதே நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததைக் கண்டு அதிர்ந்து போனார் அவரது தந்தை ஹாவங்க். தனது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டும், நிறுவனத்தின் பாதுகாப்பற்ற சூழலுக்கு எதிராவும் சில தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து ஷார்ப்ஸ் என்ற வழக்கறிஞர் குழுவை உருவாக்கி போராட்டத்தில் இறங்கினார். ஹவாங் மற்றும் அவரது குழுவினர் சாம்சங் நிறுவனத்தின் தலைமையகத்தில் 1,000 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தியதன் விளைவாக சாம்சங்கின் கோரமுகம் உலகிற்கு அம்பலமானது.

பல்வேறு புறக்கணிப்புகள், மிரட்டல்கள், பேரங்கள், துரோகங்களுக்குப் பிறகு, 2011-ஆம் ஆண்டில் அதாவது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சாம்சங் நிறுவனத்தின் பாதுகாப்பற்ற பணிசூழல்தான் தொழிலாளர்கள் இறப்பிற்கு காரணம் என்று தீர்ப்பு வந்தது. இந்த போராட்டத்திற்கு பிறகுதான் சாம்சங் நிறுவனம் பணிந்து, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஏற்றுக்கொண்டது. அதுவரை நோய் பாதிக்கப்பட்டத் தொழிலாளர்களுக்கோ அல்லது இறந்தவர்களுக்கோ எந்த இழப்பீட்டையும் சாம்சங் நிறுவனம் வழங்கியதில்லை; நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களையும் தனது பணபலத்தால் ஒன்றுமில்லாமல் ஆக்கியது சாம்சங்.

2012 முதல் 2020 வரை சாம்சங் நிறுவனத்தின் பாதுகாப்பற்ற பணி சூழல் காரணமாக சுமார் 100 தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர். உண்மை எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கொரியாவைப் போலவே, சாம்சங் நிறுவனம் வியட்நாமிலும் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை அசெம்பிள் செய்வதற்காக இதேபோல் வெகுஜன ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

000

தொழிற்சங்கம் உருவாவதற்கு முன்பும் பின்பும் நடந்தேறிய பல போராட்டங்கள் சாம்சங் தொழிலாளர்களுக்கு போராட்ட உணர்வை விதைத்திருக்கிறது. போராட்டம் ஒன்றே முதலாளித்துவத்தின் குரல்வளையை நெறிக்கும் என்று நன்கு உணர்ந்துள்ளனர்.

தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுக்குப் பயன்படுத்தப்படும் குறை கடத்திகள் தயாரிப்புப் போட்டியில் சிரமத்திற்குள்ளாகியிருக்கும் சாம்சங் நிறுவனத்திற்கு தொழிற்சங்கம் அறிவித்திருக்கும் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தமானது நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.

குறிப்பாக, சில்லு உற்பத்தி துறையில் பணியாற்றும் தொழிலாளர்களில் 90 சதவிகிதத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் சாம்சங் நிறுவனத்தின் நெருக்கடி மேலும் அதிகரிக்கும். சில்லு உற்பத்தித் துறையைத் தொடர்ந்து, டிராம்(DRAM) மற்றும் நாண்ட் (NAND) எனப்படும் சிப் உற்பத்தியையும் நிறுத்தியிருக்கிறார்கள், தொழிற்சங்கத்தினர். இனியும் நிர்வாகம் தங்களது கோரிக்கையை கேட்கவில்லை என்றால் சாம்சங் நிறுவனம் அதிகளவில் முதலீடு செய்து வரும் செயற்கை நுண்ணறிவுக்கு தேவையான உயர் அலைவரிசை நினைவக சில்லு உற்பத்தியை நிறுத்துவதுதான் தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறார்கள், தொழிலாளர்கள். இது சாம்சங் நிறுவனத்தின் உயிர்நாடியில் கைவைப்பதாகும்.

தென்கொரியாவில் சாம்சங் நிறுவனத்தில் தொடங்கிய போராட்டம் உலகின் பல நாடுகளில் இருக்கும் சாம்சங் நிறுவனங்களுக்கோ, இதர நிறுவனங்களுக்கோ பற்றிவிடக்கூடாது என்பதற்காக முதலாளித்துவ ஊடகங்கள் இப்போராட்டத்தைத் திட்டமிட்டு மூடிமறைக்கின்றன. தென் கொரிய சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு, உலகத் தொழிலாளர் வர்க்கம் தனது ஆதரவை அளிக்க வேண்டும். குறிப்பாக, வியட்நாமில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் தங்கள் நாட்டிலும் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். கார்ப்பரேட் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான எதிர் நடவடிக்கை அமைப்பாய் திரட்டப்பட்ட தொழிலாளி வர்க்கப் போராட்டம் மட்டுமே என்பதை மீண்டும் நிறுவுகிறது தென் கொரிய சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்.


வெண்பா

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டம் (திருத்தம்)!

இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டம் (திருத்தம்)!
பாசிச மோடி கும்பலை வீழ்த்தாமல் வாழ்வு இல்லை!

08.08.2024

கண்டன அறிக்கை

ஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்குவதுடன், வக்ஃபு சொத்துகளை அபகரித்து பறிக்கும் நோக்கத்துடன் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் வக்ஃபு சட்டம் 1995 (திருத்தம்) என்ற பெயரிலான மசோதாவை தாக்கல் செய்துள்ளது பாசிச மோடி அரசு.

பொதுவாக ஏற்கெனவே உள்ள சட்டத்தில் திருத்தங்கள் என்றால் ஒன்று, இரண்டு முதல் 10 திருத்தங்கள் வரை மேற்கொள்வார்கள். ஆனால் 40 திருத்தங்களை மேற்கொள்ளப் போகிறோம் என்று அறிவித்து அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள மத உரிமைகளை ஒழித்துக் கட்டியுள்ளது பாசிச மோடி அரசு.

மேலும் இத்திருத்தங்கள் மூலம் நாடு முழுவதிலும் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமான 7,85,934 சொத்துக்களும் பெரும் அபாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

வக்ஃபு வாரிய சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமையை இஸ்லாமியர் அல்லாதவருக்கு வழங்கியுள்ளது இந்த சட்டத் திருத்தம்.

வக்ஃபு வாரிய சொத்துகள் மீதான முடிவுகள் எடுக்கும் உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியதன் மூலம் வக்ஃபு சொத்துக்களை இஸ்லாமியர்களிடமிருந்து பறிக்கும் சதியும் அரங்கேறி உள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25-ஐ எடுத்துக்காட்டி, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான கோடி சொத்துகளை தீட்சிதர்கள் அனுபவித்து வருகிறார்கள். அது மட்டும் இன்றி அந்த சொத்துக்களின் மீது தமிழ்நாடு அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்று வாதிடுகிறார்கள். ஆனால் அரசியல் அமைப்புச் சட்டம் 25, இஸ்லாமியர்களுக்கு மட்டும் பொருந்தாது என்பது போல இந்த சட்டம் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


படிக்க: சர்வாதிகாரி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்! வங்கதேச மாணவர் – மக்கள் போராட்டம் வெல்க!


சிதம்பரம் நடராஜர் கோயிலின் மீது தமிழ்நாடு அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆனால் வக்ஃபு வாரிய சொத்துகளின் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க உரிமை பெற்றவர் என்பது எவ்வளவு பெரிய முரண்?

வக்ஃபு வாரியத்திற்கும் அரசுக்கும் அல்லது தனி நபர்களுக்கும் இடையிலான சொத்து விவகாரத்தில் முடிவினை கூறக்கூடிய உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு அளித்ததில் இருந்து வக்ஃபு வாரிய சொத்துக்கள் இனி இஸ்லாமியரிடமிருந்து பறிக்கப்படுவதற்கான சட்டப்பூர்வமான வேலையை பாசிச மோடி அரசு தொடங்கி விட்டது என்றே கூறலாம். அரசு எந்திரத்தை காவிமயமாக்கி உள்ள ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல், நடுநிலைமையான, சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரையா வக்ஃபு வாரிய சொத்துக்கள் விவகாரத்தில் நியமிக்கும்?

இந்து அறநிலையத்துறையில் இந்துக்களைத் தவிர வேறு யாரும் எவ்வித பணியிலும் ஈடுபட முடியாது என்ற நிலை இருக்கும் பொழுது, வக்ஃபு வாரிய சொத்துகள் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் (அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும்) எந்த ஒரு முடிவையும் எடுக்கவும் அறிவிக்கவும் உரிமை பெற்றவர் ஆகிறார் என்பது இஸ்லாமிய மக்களின் மீதான வெறுப்புணர்வும் பாகுபாடும் ஆகும்.

ஆகவே சிறுபான்மை மக்களுக்கு எதிரான இந்த வக்ஃபு சட்டம் 1995 திருத்த மசோதாவை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

மோடி அரசுக்கு தனிப் பெரும்பான்மை இல்லை என்ற போதிலும் இந்து ராஷ்டிரத்தை அமைக்கும் பயணத்தில் துளியும் பின்வாங்கவில்லை என்பதையே புதிய முப்பெரும் சட்டங்கள், ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்வதற்கு இருந்த தடை விலக்கம், தற்பொழுது வக்ஃபு சட்டம் 1995 இல் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் ஆகியவை உணர்த்துகின்றன.

அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை ஒழித்துக் கட்டும் வக்ஃபு சட்டம் 1995 திருத்த மசோதாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தான், மோடி – அமித்ஷா பாசிச கும்பலை பின்வாங்க வைக்கும்.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியம்

டந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே கூலிப்படை கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சில மணிநேரங்களிலேயே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக எட்டுப் பேர் போலீசில் சரணடைந்தனர். ஆனால், சரணடைந்தவர்கள் உண்மை குற்றவாளிகள் கிடையாது; இதற்குப் பின்னால் இருப்பவர்களை கண்டறிய வேண்டும்; இது திட்டமிட்ட அரசியல் கொலை; தலித் தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை என ஜனநாயக சக்திகள் உட்பட பலரும் கருத்து தெரிவித்தனர்.

மற்றொருபுறம் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி முதல் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே, அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என அனைவரும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ஒரே குரலாக முழங்கினர். ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்டான தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று தனது உயிருக்கும் சீமான், கிருஷ்ணசாமி, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என்று பேட்டிக்கொடுத்தார்.

ஒருபுறம் ஆம்ஸ்ட்ராங்கை சமூகப்போராளியாக முன்னிறுத்தி ஆதாயம் தேடும் முயற்சியில் ஒரு கும்பல் இறங்கியிருக்கிறது; மற்றொருபுறம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூவிவரும் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டுகள் இப்படுகொலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விழைகின்றன.

தமிழ்நாட்டில் எத்தனையோ மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், ஊடகங்களோ அவற்றையெல்லாம் இருட்டடிப்பு செய்யும் வகையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை செய்தியாக்கின. நொடிக்கு நொடி ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியை வெளியிடுவது; “வட சென்னை”, “விக்ரம் வேதா” போன்ற திரைப்படங்களின் கதைகளை ஒப்பிட்டு யூடியூப் சேனல்களில் விவாதிப்பது; ஆம்ஸ்டிராங் படுகொலையில் கைதாகும் ரவுடிகளை கதாநாயகர்கள் போல சித்தரிப்பது என தரம் தாழ்ந்த வகையில் செயல்பட்டன.

ஆனால், தேசிய அளவில் விவாதப்பொருளாக மாற்றப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் அடுத்தடுத்து வெளிவரும் தகவல்களின் மூலம் அரசியல்வாதிகள், போலீசு, வக்கீல்கள், அதிகாரிகளின் துணையோடு கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் சாம்ராஜ்ஜியம் உருவாகியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பதை நாம் அனைவரும் கவனிக்க வேண்டி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள குற்றவாளிகள்

அரசியல் கொலையா?

90-களில் குத்துச்சண்டை வீரராக திகழ்ந்த ஆம்ஸ்ட்ராங் பூவை மூர்த்தியின் சிஷ்யனாக அரசியலில் களமிறங்குகிறார். ஆரம்ப காலகட்டத்தில் சட்டப்படிப்பு படித்திருந்த இவர் அடிதடி, மோதல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்குகிறார்; அவர் மீது ஏழு குற்ற வழக்குகள் போடப்பட்டுள்ளது. பூவை மூர்த்தி மறைவிற்குப் பிறகு 2006-இல் “டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன்” என்ற அமைப்பை உருவாக்கி, அதே ஆண்டு சென்னை மாநகராட்சியின் 99-ஆவது வார்டில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராகிறார், ஆம்ஸ்ட்ராங்.

பிறகு 2007-இல் அப்போதைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைகிறார். பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த பிறகு தன் மீதிருந்த வழக்குகளிலிருந்து நீதிமன்றம் மூலம் விடுதலை பெறுகிறார். அவர் மீதிருந்த சரித்திரப் பதிவேடும் (History sheeter) நீக்கப்படுகிறது. ஆனால், அதன்பிறகும் பல குற்றச் சம்பவங்களில் ஆம்ஸ்ட்ராங்கின் பெயர் அடிப்பட்டே வந்துள்ளது.

17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை மீறி சென்னை நகரில் எந்த பெரிய கட்டடத்தையும் இடிக்கவோ கட்டவோ முடியாது என்று கூறுகிறார்கள். அந்தளவிற்கு ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய நபராக இருந்துள்ளார். அரசியல்வாதி என்பதைத்தாண்டி கட்டப்பஞ்சாயத்து மூலம் கூலிப்படை கும்பல்களின் ராஜ்ஜியத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு நபராக ஆம்ஸ்ட்ராங் இருந்துள்ளார் என்பதை அவரது வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலமே மெய்பிக்கிறது.

ஆனால், சில ஜனநாயக சக்திகள் ஆம்ஸ்ட்ராங் கொலையை ஓர் அரசியல் கொலை என்றே குறிப்பிட்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதன் தொடர்ச்சிதான் இப்படுகொலை என்று பேசி வருகின்றனர்.

தமிழ்நாட்டில், தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. அவ்வாறு அதிகரித்துவரும் சாதி தாக்குதல்களுக்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் உள்ளது என்பதை “புதிய ஜனநாயகம்” இதழ் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதை ஆம்ஸ்ட்ராங் கொலையுடன் தொடர்புப்படுத்துவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கதையாக உள்ளது.

“இல்லை…இல்லை… அவர் தலித் மக்களுக்காக பாடுபட்டுள்ளார். நிறைய மாணவர்களை வக்கீல் படிப்பு படிக்க வைத்துள்ளார்” என்றெல்லாம் சிலர் முன்வைக்கலாம்.

அப்படியெனில், கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் தலித் மக்கள் மீதான தாக்குதல்களில் எத்தனை சாதி வன்முறைகளுக்கு எதிராக ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் குரல் கொடுத்துள்ளார்; எத்தனை போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். உண்மையில், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படுவதற்கு முன்னர்வரை சென்னையின் ஒரு சில வாட்டாரங்களைத் தாண்டி ஆம்ஸ்ட்ராங்கை ஓர் அரசியல்வாதியாக மக்களுக்கு தெரியாது என்பதே உண்மை. அதுவும், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்ற பிழைப்புவாதிகள் கூட தங்களுடைய ஆளும் வர்க்க சேவையால் அரசியல் தளத்தில் அறியப்பட்ட நபர்களாக உள்ளனர். ஆனால், அரசியல் தளத்தில் ஆம்ஸ்ட்ராங் தன்னை அப்படி எந்தவிதத்திலும் முன்னிறுத்திக் கொண்டதில்லை என்பதே உண்மை.

மேலும், அவர் அங்கம் வகிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அரசியல் அதிகாரத்திற்கு செல்வது மட்டுமே நோக்கம். அதிகாரத்தை பிடிப்பதற்காக பார்ப்பன-ஆதிக்கச்சாதிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு தலித் மக்களுக்கு துரோகமிழைத்த தேர்ந்தெடுத்த பிழைப்புவாதிதான் அக்கட்சியின் தலைவர் மாயாவதி. இன்றும் பா.ஜ.க-விற்கு மறைமுகமாக சேவை செய்துக்கொண்டிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் பழைய வரலாற்றை தூசித் தட்டிப்பார்த்தால், தமிழ்நாட்டிலும் அக்கட்சி கிரிமினல்கள், சாதிவெறியர்கள், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள், அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் அடங்கிய கும்பலாகத்தான் களமிறங்கியுள்ளது என்பது தெரியவரும்.

அதேபோல், ஏழை மக்களுக்கு உதவுவது, மாணவர்களைப் படிக்க வைப்பது போன்றவையெல்லாம் ஆம்ஸ்ட்ராங் மட்டுமின்றி தனக்கு செல்வாக்கை உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதிகள், கார்ப்பரேட் முதலாளிகள், சாமியர்கள், ரவுடிகள் என அனைவரும் பின்பற்றும் வழிமுறைகள்தான். இப்படித்தான் இவர்கள் தமக்கான சமூக அடித்தளத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். ஆம்ஸ்ட்ராங் சில உள்ளூர் மற்றும் தலித் மாணவர்களை சட்டக்கல்வி படிப்பதற்கு ஏற்பாடு செய்து வழக்கறிஞராக உதவியதும் அந்தவகையில் சேர்ந்ததே. இத்துடன் சினிமாக்காரர்களுடன் கருப்புப் பணம் தொடர்பான உறவுகளை பராமரித்ததன் மூலம் சில பிரபலங்களின் ஆதரவும் இவருக்குள்ளது. புத்தருக்கு கோயில் கட்டுவது போன்ற நடவடிக்கைகளையும் ஆம்ஸ்ட்ராங் மேற்கொண்டு வந்துள்ளார்.

எனவே, இப்படுகொலையை அரசியல் கொலை என்றுக் கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் கிடையாது. அரசியல் கட்சியில் உள்ள ஒருவர் படுகொலை செய்யப்படுவதாலேயே அது அரசியல் கொலையாகாது, அரசியல் நோக்கத்திற்காக, அரசியல் நிலைப்பாட்டிற்காக செய்யப்படும் கொலைகள்தான் அரசியல் கொலை. ஆனால், ஆம்ஸ்ட்ராங் யாருக்காக குரல் கொடுத்தார்; யாரை எதிர்த்து அரசியல் செய்ததால் வெட்டிக் கொல்லப்பட்டார் என்பதை அவரை சமூகப்போராளியாக முன்னிறுத்துபவர்கள்தான் விளக்க வேண்டும்.

அம்பலமாகும், கூலிப்படை+ அரசியல்வாதிகள் + வக்கீல்கள் + போலீசின் சிலந்தி வலைப்பின்னல்

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, அருள், ரவுடிகள் திருவேங்கடம், திருமலை, கூலிப்படையைச் சேர்ந்த செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோர் கூலிப்படைத் தலைவனான ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு பழித்தீர்க்கவே இப்படுகொலையை நிகழ்த்தியதாகக் கூறினர். கைது செய்யப்பட்ட பொன்னை பாலு ஆற்காடு சுரேஷின் தம்பி, அதேபோல் அருள் என்பவன் பொன்னை பாலுவின் மைத்துனன்; இவன் தி.மு.க. கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அருள் அளித்த தகவலின் அடிப்படையில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ரவுடி தோட்டம் சேகரின் மனைவியும் வழக்கறிஞருமான மலர்கொடி, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிகரன், தி.மு.க-வைச் சேர்ந்த சதீஷ் என மேலும் மூவர் போலீசால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அ.தி.மு.க-வைச் சேர்ந்த மலர்கொடி மீது கொலை வழக்கு உட்பட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மலர்கொடி இந்த கொலைக்கு பண உதவியும் நாட்டு வெடி குண்டுகளையும் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக, மலர்கொடியை விசாரிக்கும்போது, அவர் ‘கஞ்சா அஞ்சலை’ எனும் மற்றொரு பெண் தாதாவை கைக்காட்டுகிறார். கூலிப்படை தலைவனான ஆற்காடு சுரேஷின் பெயரை பயன்படுத்தி கஞ்சா, கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வந்த அஞ்சலை மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. `பி’ பிரிவு ரௌடிகள் பட்டியிலிலுள்ள அஞ்சலை, சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்து மாவட்ட மகளிரணி பதவிபெற்றுள்ளார்.

பொன்னை பாலு, அருள், மலர்கொடி, அஞ்சலை, ஹரிகரன் என அனைவரும் ஒன்றுக்கூடி ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்வதற்காக மூன்று மாதங்களுக்கும் மேலாக திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது. அதோடு மலர்கொடிக்குப் பின்னணியில் சம்போ (அ) சம்பவம் செந்தில் எனும் தாதா இருப்பதாக சமீபத்திய தகவலில் வெளிவந்துள்ளது. இவனுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் இடையே ரியல் எஸ்டேட் பஞ்சாயத்து மற்றும் ஸ்கிராப் தொழிலில் முன்விரோதமும் இருந்து வந்திருக்கிறது.

இப்படியாக, ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கூலிப்படை கும்பல்களின் வலைப்பின்னல் விரிவடைந்து கொண்டே செல்கிறது. ஆரம்பத்தில் கூலிப்படை தலைவனான ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்குவதற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்ப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் கூறினர். ஆனால், அதன்பிறகு விசாரணையில் பல கூலிப்படை கும்பல்களும் தாதாக்களும் வக்கீல்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கான பழிவாங்கல்; ரியல் எஸ்டேட் போட்டி; ஆருத்ரா பண மோசடி; ஸ்கிராப் தொழில் போட்டி; பார் கவுன்சில் தேர்தல் என ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பல்வேறு காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

அதுவும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக தமிழ்நாடு முழுவதுமிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒருங்கிணைந்ததாக கூறப்படுகிறது. 4-5 கூலிப்படைக் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளது என்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.க. என கட்சி பேதமின்றி அரசியல் கட்சிகளிலிருந்து கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை, ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது என்று கூச்சலிட்ட அ.தி.மு.க-பா.ஜ.க. மட்டுமல்ல, சட்டம்-ஒழுங்கு சிறப்பாகத்தான் இருக்கிறது முட்டுக்கொடுத்த ஆளும் தி.மு.க-வின் முகத்திரையும் கிழிந்து தொங்குகிறது.

அதேப்போல், இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் வக்கீல்கள் என்பதும் பல சட்டவிரோத நடவடிக்கைகளில் தொடர்புடைய ஆம்ஸ்ட்ராங்க் மீது எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இதன்மூல, இக்கூலிப்படைகளுடன் போலீசுக்கு இருக்கும் கள்ள உறவு எவ்வளவு நெருக்கமானது என்பது வெளிச்சத்திற்கு வருகிறது. எனவே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது கார்ப்பரேட் கூலிப்படை கும்பல், போலீசு, அதிகாரவர்க்கத்தின் ஒரு பிரிவினர், அரசியல்வாதிகள் ஆகியோர் உள்ளடங்கிய சிலந்தி வலையை அம்பலப்படுத்திக் காட்டுகிறது. சம்போ செந்தில், சீசிங் ராஜா, அஞ்சலை, மலர்கொடி போன்றோர் இந்த கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியத்தின் அங்கம்.

கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியம்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டுவரும் சம்பவ செந்தில் என்பவன் ஸ்கிராப் தொழிலின் முக்கிய புள்ளியாக உள்ளான். ஸ்கிராப் தொழில் என்பது சென்னையின் புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூவர் மாவட்டங்களில் உள்ள கார்ப்பரேட் தொழிற்சாலைகளிடமிருந்து இரும்பு முதலிய கழிவுகளை வாங்கி விற்கும் தொழிலாகும். அரசியல்வாதிகள்-கூலிப்படை கும்பல் கார்ப்பரேட்டுகளுடன் கூட்டுவைத்துக் கொண்டு நடத்தும் இத்தொழிலில் நாளொன்றுக்கு பலநூறு கோடி ரூபாய் வரை புழங்குகிறது.

இந்தக்கூட்டுக் கொள்ளைக்கான டீலிங்கில், போட்டாப்போட்டி காரணமாக அவ்வப்போது கொலைகளும் அரங்கேறும். ஸ்கிராப் தொழிலில் ஈடுபடும் இக்கும்பல்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கூலிப்படையாக செயல்பட்டுவருகிறது என்பது முக்கியமானது. இக்கூலிப்படைகளை கொண்டுதான் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது கம்பெனிகளின் கழிவுகளை மக்கள் வாழும் பகுதிகளில் சட்டவிரோதமாக குவிக்கின்றன, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்குகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால், அவர்களை ஒடுக்குவதற்கும் தனிப்பட்ட ரீதியில் மிரட்டுவதற்கும் இந்த கூலிப்படைக் கும்பல்தான் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் வணிக ரீதியான போட்டப்போட்டிகளையும் தொழிலை கைப்பற்றுவதில் எழும் பிரச்சினைகளையும் மிரட்டல், ஆட்கடத்தல். கொலை மூலம் சட்டவிரோதமாக தீர்த்துக்கொள்ள இத்தகைய கூலிப்படைகளைதான் கார்ப்பரேட் நிறுவனங்கள் களமிறக்குகின்றன.

1990-களில் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்படும்போது, திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் உருவாகி அரசியலில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். கிராணைட் கொள்ளை, மணற்கொள்ளை போன்றவற்றின் மூலம் இந்த தீடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் வளர்ச்சியடைந்ததுடன் இக்கொள்ளைகளை தங்குதடையின்றி செய்வதற்கான கூலிப்படையையும் சேர்த்தே வளர்த்தெடுத்தனர். தற்போது, கார்ப்பரேட் நிறுவனங்களில் காண்ட்ராக்ட்மயமாக்கம் என்பதன் இன்னொரு அங்கமாக காண்டாக்ட்மயத்துடன் இணைந்த கார்ப்பரேட் கூலிப்படை கும்பல் உருவாகி இருக்கிறது. இந்த கார்ப்பரேட் கூலிப்படை கும்பல் பரந்தவிரிந்த அளவிலான வலைப்பின்னலை கொண்டிருக்கின்றன. இத்தகைய கார்ப்பரேட் கூலிப்படைகள் உருவாகியிருப்பதும் அந்த கூலிப்படைகளுக்குள் போட்டியும் கொலைகளும் நடப்பதும் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களில் காண்ட்ராக்ட்மயமாக்கம் என்பதன் இன்னொரு அங்கமாக காண்டாக்ட்மயத்துடன் இணைந்த கார்ப்பரேட் கூலிப்படை கும்பல் உருவாகி இருக்கிறது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆருத்ரா மோசடியும் அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பா.ஜ.க-வின் பெயரும் அடிப்பட்டுவருவது சாதாரணமாக கடந்துசெல்லக் கூடிய செய்தியல்ல. குற்ற கும்பல்களின் கூடாரமாக உள்ள பா.ஜ.க. தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதற்கு இணையாக கார்ப்பரேட் கூலிப்படை கும்பல்களும் கிரிமினல் கும்பல்களும் வளர்ச்சியடைகின்றன என்ற மிகப்பெரிய ஆபத்தை இச்செய்தி உணர்த்துகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை உட்பட பலரும் ஆம்ஸ்ட்ராங்-ஆருத்ரா வழக்கை தொடர்புப்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே கோரிக்கை வைத்து வருகின்றனர். அதிலும், பா.ஜ.க. சி.பி.ஐ. விசாரணை கேட்பதே ஆருத்ரா விவகாரத்தை மூடிமறைப்பதற்காகத்தான் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.

ஏனெனில், சென்னை, அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஐந்து கோடி மக்களிடமிருந்து சுமார் ரூ.2,438 கோடியை கொள்ளையடித்தது. இதற்காக இந்நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கரன், மோகன்பாபு, உஷா, ஹரீஷ், ராஜசேகர், பட்டாபிராமன், ரூசோ, மைக்கேல்ராஜ், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் மீது வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் இக்கும்பல் கூட்டு வைத்துக்கொண்டது என நக்கீரன் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. ஆருத்ரா நிறுவனத்தின் ராஜசேகர், ரூசோ, ஹரீஷ் ஆகியோருடன் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையிலான வினோஜ் பி.செல்வம், அமர்பிரசாத் ரெட்டி, ஆர்.கே.சுரேஷ் அடங்கிய கும்பல் கூட்டணி அமைத்து கொள்ளையடித்த பணத்தை பங்குபோட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதற்காகத்தான், பல்லாயிரக்கணக்கான மக்களிடம் மோசடி செய்து கைது செய்யப்பட்ட ஹரீஷை பா.ஜ.க. விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக நியமித்துள்ளார் அண்ணாமலை, பா.ஜ.க-வில் பதவிபெறுவதற்காக பல கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக பின்னர் ஹரீஷ் வாக்குமூலம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், ரவுடிகள் மற்றும் கூலிப்படையை வைத்தும், பா.ஜ.க-விடம் சரணடைந்தும் மோசடி பணத்தை தக்கவைத்துக்கொள்ள அந்நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் முயற்சித்தாலும் தமிழ்நாட்டில் பிற ரவுடிகளின் மிரட்டல்கள் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆம்ஸ்டிராங் தலையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, பிரபல ரவுடியான மோகன்ராம், பாயாசம் என்கிற பரமசிவம், நெட்டூர் கண்ணன், சீசிங் ராஜா, சைதை குரு, நாகேந்திரன் என தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய ரவுடிகள் அனைவரும் இந்த ஆருத்ரா விவகாரத்தில் ஒன்று சேர்ந்ததாக தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு இதுவும் முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

இதன்மூலம், தமிழ்நாட்டில் கார்ப்பரேட் கூலிப்படை கும்பலின் ராஜ்ஜியம் வளர்ந்துவருவதும் அண்ணாமலை பா.ஜ.க. மாநிலத் தலைவரான பிறகு அதை கட்டிப் பாதுகாக்கும் கிரிமனல் கூடாரமாக பா.ஜ.க. விளங்குவதும் அம்பலமாகிறது. எனவே, அடுத்தடுத்து நடக்கும் கொலை, போதைப் பொருள் கடத்தல், மோசடி உள்ளிட்ட குற்ற செயல்களை தடுக்க வேண்டுமெனில், பா.ஜ.க. கும்பலை தடை செய்ய வேண்டும் என்பதும் முன்நிபந்தனையாக உள்ளது.


மதி

(புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பரந்தூர் பறக்கிறது! | கவிதை

பரந்தூர் பறக்கிறது!

விமான நிலையம்
வருவதற்கு முன்பே
பரந்தூர் பறக்கிறது..
ஆந்திராவை நோக்கி!

தடுப்பதற்கு தமிழ்நாடு
முன் வரவில்லை!

இரண்டு வருட
போராட்டத்திற்கு பிறகு
இரக்கமில்லாமல் அகதியைப்
போல அகற்றப்படுகிறார்கள்!
இல்லையில்லை..
திராவிட மாடல் அரசால்
அழிக்கப்படுகிறார்கள்!

ஊடகங்கள் ஊடுருவி
கேள்வி கேட்பதற்கு பதில்
தாலாட்டு பாடுகிறது திராவிட மாடலுக்கு!

பன்னாட்டு விமான நிலையத்திற்கு
அடிக்கல் நாட்டும்
திராவிட மாடலுக்கு தெரியவில்லையா
அவர்கள் அனாதையாக்குவது
தன் நாட்டு மக்களை என்று!

விளைநிலங்கள்
விமானங்களின்
ஓடுபாதையாக
மாறுகின்றன..

திராவிட மாடல்
சேவை செய்கிறது..
கார்ப்பரேட் மாடலுக்கு!

அடிக்கொள்ளி விவசாயிக்கு..
வளர்ச்சி கார்ப்பரேட்டுக்கு..
வர்க்கப் போராட்டத்தில் மட்டுமே தீர்வு இருக்கு!


ரசியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கென்யாவை உலுக்கும் “ஜென் சி” போராட்டம்

கென்ய நாட்டை உலுக்கும் இளைஞர்களின் மாபெரும் போராட்டம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், வரியை பல மடங்கு உயர்த்தக் கூடிய “நிதி மசோதா 2024” என்ற மக்கள் விரோத சட்டம், கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்தது; மசோதா நிறைவேற்றப்படுவதற்கு எதிராக #நாடாளுமன்றத்தை_கைப்பற்று (#OccupyParliament) என்ற ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்ட அன்று, நாடாளுமன்றம் முற்றுகையிடப்பட்டு தீ வைக்கப்பட்டது.

ஏற்கெனவே, 2022-ஆம் ஆண்டு அதிபர் வில்லியம் ரூட்டோ பதவிக்கு வந்தது முதல் பலமுறை வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இம்மசோதா நடைமுறைக்கு வந்தால் ரொட்டிக்கு 16 சதவிகிதம், சமையல் எண்ணெய்க்கு 25 சதவிகிதம் என நாப்கின் முதற்கொண்டு அத்தியாவசிய பொருட்களின் வரி பல மடங்கு உயரும்.

எனவே, இம்மசோதாவிற்கு எதிராக லட்சக்கணக்கான கென்ய மக்களும் குறிப்பாக இளைஞர்களும் தெருக்களில் இறங்கிப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினர். ஆனால், அதிபர் வில்லியம் ரூட்டோ தலைமையிலான கென்ய அரசு போராடும் மக்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளையும், அரசு ஆதரவாளர்கள் என்ற பெயரில் குண்டர் படையை இறக்கிவிட்டு வன்முறையையும் கட்டவிழ்த்துவிட்டது. தடியடி நடத்துவது, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என போராடும் மக்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டனர்.

இதனை அம்பலப்படுத்தும் விதமாக, போராடுபவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடும் போலீஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், தொலைபேசி எண்கள், அடையாள எண்கள், குடும்ப விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை போராடும் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனையடுத்து, கென்ய மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் போலீசின் வன்முறைக்கு எதிராகவும் உலகம் முழுவதிலுமிருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தன.

கென்யா நாட்டில் நிறைவேற்றப்பட்ட “நிதி மசோதா 2024”-ஐ எதிர்த்து நடத்தப்படும் “ஜென் சி” போராட்டம்

மேலும், “ஜென் சி தலைமுறை” என்று அழைக்கப்படுகிற 1990-களின் பிற்பகுதியிலிருந்து 2010-களின் முற்பகுதி வரை பிறந்த இளைஞர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துவருவதால் இதை “ஜென் சி போராட்டம்” (Gen Z protests) என்று குறிப்பிட்டு பத்திரிகைகள் கட்டுரைகள் எழுதத் தொடங்கின. இணைய உலகில் வாழும் இந்த இளைஞர்கள் எக்ஸ் (X), டிக் டாக் (TikTok), இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் மே – ஜூன் மாதங்களில் ஆயிரக்கணக்கானோரை இம்மசோதாவிற்கு எதிராக ஒன்றிணைத்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு(AI) கருவியான சாட் ஜி.பி.டி-யைப் (ChatGPT) பயன்படுத்தி “நிதி மசோதாவை” பல உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்து இணையத்தில் பரப்பி பிரச்சாரம் செய்துள்ளனர். அதேபோல், ‘செல்லோ’ (zello) என்ற செயலியை போராட்டக் களத்தில் பயன்படுத்தியுள்ளனர். போலீஸ் எங்கு உள்ளனர் என்பது குறித்து முன்னெச்சரிக்கை தகவல்களை பரிமாறிக் கொள்ள வாக்கி டாக்கி (Walkie-Talkie)போல் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஒடுக்குமுறைகளால், இளைஞர்களின் போராட்டத்தை தடுக்க முடியாத கென்ய அரசு அமைச்சரவையை கலைப்பதாக அறிவித்தது. மேலும், ஜூன் 28 அன்று “மக்களின் உரத்த குரலை ஒப்புக்கொள்கிறேன்” என்றுக் கூறி அதிபர் ரூட்டோ சட்டத்தைத் திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தார்.

ஆனால், இவற்றையெல்லாம் கண்டு ஏமாற மக்கள் துளியும் தயாராக இல்லை என்பதையே ஒரு மாதத்திற்கும் மேலாக கென்யாவில் தீவிரமாக நடத்துவரும் மக்கள் போராட்டங்கள் காட்டுகிறது. அமைச்சரவையைக் கலைப்பதாக நாடகமாடிவிட்டு, சரிபாதி அமைச்சர்களுக்கு மீண்டும் பதவி வழங்கிய அதிபர் ரூட்டோவின் நடவடிக்கை அம்மக்களுக்கு மேலும் ஆத்திரமூட்டும் விதமாக அமைந்தது. இதன் காரணமாக, அதிபர் ரூட்டோ பதவி விலகும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்று கென்ய மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். தற்போதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 350-க்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். பலர் போலீசால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் வர்க்கத்தின் எந்த தகிடுதத்தத்திற்கும் பணியாமல், அடுத்தடுத்த கோரிக்கைகளை முன்வைத்து கென்ய மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருவதானது, “நிதி மசோதா 2024”-க்கு எதிராக தொடங்கிய போராட்டம் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பிற்கு எதிரான போராட்டமாக வளர்ச்சியடைந்துள்ளது என்பதையேக் காட்டுகிறது. அதே சமயம், போராடும் மக்கள் மத்தியில் சரியான மாற்றை முன்வைத்து அவர்களை அமைப்பாக்குவது முன் நிபந்தனையாக உள்ளது. இலங்கை மக்களின் பேரெழுச்சியை தொடர்ந்து, மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிராகவும் மக்கள் போராட்டம்  தீவிரமடைந்து வருவது ஆளும் வர்க்கத்தை நடுங்க வைக்கிறது.


பானு

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பொட்டலூரணி: கழிவு மீன் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்!

பொட்டலூரணி: கழிவு மீன் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்!

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



சர்வாதிகாரி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்! வங்கதேச மாணவர் – மக்கள் போராட்டம் வெல்க!

சர்வாதிகாரி ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்!
வங்கதேச மாணவர் – மக்கள் போராட்டம் வெல்க!

05.08.2024

பத்திரிகை செய்தி

மாபெரும் வங்கதேச மாணவர் போராட்டம் மக்கள் எழுச்சியாக பரிணமித்து சர்வாதிகாரி ஷேக் ஹசீனாவை வங்கதேசத்தை விட்டே விரட்டி அடித்து இருக்கிறது. இந்த எழுச்சி பாசிஸ்டுகள் மக்களால் மட்டுமே ஒழித்துக் கட்டப்படுவார்கள் என்ற நம்பிக்கையை நமக்கு கொடுக்கிறது.

ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டார், நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்று ராணுவ தளபதி அறிவிக்கிறார். ஆனாலும் லட்சக்கணக்கான மக்கள் பிரதமர் மாளிகையினுள் நுழைகிறார்கள்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தினருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை கண்டித்து தொடங்கிய போராட்டம், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தால் இட ஒதுக்கீட்டின் அளவு 5 சதவீதமாக குறைத்த பிறகும் கூட நிற்கவில்லை. ஏனெனில் சர்வாதிகாரி ஷேக் ஹசீனாவின் ஆட்சியில், வரலாறு காணாத விலைவாசி உயர்வு, பசி, பஞ்சம், பட்டினி, வேலை வாய்ப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு என பாதிக்கப்படாத மக்களே வங்கதேசத்தில் இல்லை என்ற நிலை தான் உண்மை. இவை எல்லாவற்றையும் மூடி மறைத்து நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் அனைவரின் மீதும் கடுமையான அடக்குமுறையை ஏவி, ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையும் ஷேக் ஹசீனாவின் சர்வாதிகார கும்பலே அடக்கி ஆண்டது. இதனால் முதன்மையான எதிர்க்கட்சி கடந்த தேர்தலில் போட்டியிடவே இல்லை. அதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்த சர்வாதிகாரி ஷேக் ஹசீனா, மக்களை மீண்டும் வாட்டி வதைக்கும் அனைத்து திட்டங்களையும் முன்னெடுத்து வந்தார்.

இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து சர்வாதிகாரி ஷேக் ஹசினாவுக்கு எதிரான இயக்கங்களை முன்னெடுத்தனர். சர்வாதிகார கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள நீதிமன்றம் உள்ளிட்ட எந்த ஒரு அரசு கட்டமைப்பின் பசப்புகளுக்கும் மயங்காமல் ஷேக் ஹசீனாவை விரட்டியடிப்பது தான் ஒரே தீர்வு என்ற குறிக்கோளினை மக்கள் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய தினம் எதிர்க்கட்சிகள் அறிவித்த மாபெரும் பேரணியை (LONG MARCH)-ஐ கண்டு பயந்த ஷேக் ஹசீனா உயிர் பிழைக்க தப்பி ஓடுகிறார். தப்பி ஓடியவருக்கு பாசிச மோடி இந்தியாவில் அடைக்கலம் கொடுத்திருப்பது மிகவும் வெட்கக்கேடானது.


படிக்க: வங்கதேச மாணவர் எழுச்சி! சர்வாதிகார ஷேக் ஹசினா விரட்டியடிப்பு!


கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பேரெழுச்சி ராஜபக்சே பாசிச கும்பலை நாட்டை விட்டு விரட்டிய போதும் ஒரு புரட்சிகர கட்சி இல்லாத காரணத்தால் மீண்டும் அந்த கும்பல் இலங்கைக்குள் வந்திருக்கிறது. அதன் காரணத்தினாலேயே இலங்கையில் உள்ள ஆளும்வர்க்கத்தின் இன்னொரு பிரிவு அதிகாரத்தை கைப்பற்றி ராஜபக்சே மேற்கொண்ட அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

நடைபெற உள்ள இலங்கை பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட உள்ளது. மாற்றுத்திட்டத்தை முன்வைத்து போராட வேண்டியதன் அவசியத்தையும் அப்போராட்டம் நமக்கு உணர்த்தியது.

ஷேக் ஹசீனாவை விரட்டியடித்த வங்கதேச மாணவர் – மக்கள் போராட்டத்தை மக்கள் அதிகாரம் வாழ்த்துகிறது. வங்கதேச மக்களின் இந்த மாபெரும் எழுச்சி இந்தியாவில் உள்ள மக்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விரட்டியடிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது.

மேலும் இலங்கை பேரழுச்சியின் அனுபவங்களிலிருந்து, வங்கதேச மாணவர் – மக்கள் போராட்டம் மாற்றுத்திட்டத்தை முன்வைத்து மக்களைத் திரட்டி போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube