இந்தியாவில் எங்கும் இல்லாத கருப்புச் சட்டம் தமிழகத்தில் மட்டும் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை (அ)நீதிபதியாக பணியாற்றிவரும் எஸ்.கே கவுல் என்பவர் வழக்கறிஞர்கள் சட்டம் 1961 பிரிவு 34(1)-ல் வழக்கறிஞர்களுக்கு எதிராக புதிய சட்டத்திருத்தத்தை இயற்றியுள்ளார்.
வழக்கறிஞர்கள் கோரிக்கைக்காக நீதிமன்ற வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினால், நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சித்தால், நீதிமன்றத்திற்குள் உரத்த குரலில் வாதிட்டால், கையை நீட்டி நீதிபதிகளிடம் பேசினால் இந்த புதிய விதிகளின்படி எவ்வித கேள்வியும் இன்றி, வழக்கறிஞர்கள் தொழில் செய்ய நீதிபதிகளே நேரடியாக தடை விதிக்கலாம் என்பது இச்சட்டமாகும்.
இச்சட்டம் வருவதற்கு முன்பு, வழக்கறிஞர்கள் நீதிமன்ற அவமதிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அம்மாநிலத்தில் உள்ள பார் கவுன்சிலே அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்கும். ஆனால் தற்பொழுது, பார் கவுன்சிலிடம் அதிகாரத்தை பறித்து, வழக்கறிஞர்களை நீதிபதிகளின் கொத்தடிமைகளாக மாற்றுவதற்கே இந்த புதிய சட்ட விதிகளை எஸ்.கே கவுல் இயற்றிள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, உயர்நீதிமன்ற ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டு, அம்பலப்படுத்தி போராடியதற்காக வழக்கறிஞர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போராடிய மக்கள் மீது வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராடிய வழக்கறிஞர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் பெண் வழக்கறிஞரை வீடியோ எடுத்ததை கண்டித்து போராடிய வழக்கறிஞர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற பல போராட்டங்களை நடத்தியதன் காரணமாக இதுநாள் வரையிலும் தமிழகத்தில் 43 வழக்கறிஞர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், கர்நாடகாவிலும் நடந்து வருகின்றன.
இவ்வாறு நீதித்துறையையும், அதிகார வர்க்கத்தையும் கேள்விக்குள்ளாக்கும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே இந்த கருப்புச் சட்டத்தை எஸ்.கே கவுல் இயற்றியுள்ளார்.
இந்த கருப்புச் சட்டத்தை எதிர்த்து, இச்சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழக வழக்கறிஞர்கள் அனைவரும் கடந்த ஒரு மாத காலமாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், இரயில் மறியல் போராட்டம், நகல் எரிப்புப் போராட்டம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 12-07-2016 அன்று காலை 11 மணி அளவில் திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம் ஆகிய புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
மேலும் இச்சட்டம் எதிர்கால வழக்கறிஞர்களான சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாலும், வழக்கறிஞர்களின் இப்போராட்டத்தை ஆதரித்து திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் பேரணியாக வந்து இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். பு.மா.இ.மு சட்டக்கல்லூரி கிளை தோழர்களும், சக மாணவர்களும் ஒவ்வொரு வகுப்பாக சென்று இச்சட்டத்தின் பாதிப்பை விளக்கி வகுப்புகளை புறக்கணித்து இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறைகூவினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
பருவத் தேர்வு முடிந்து கல்லூரியை திறந்த இரண்டாவது நாளில் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் வெளியில் வந்தனர். வெளியில் வந்த மாணவர்களிடம், “இந்த கருப்புச் சட்டம் அமலுக்கு வந்தால் வழக்கறிஞர் தொழிலை நாம் சுதந்திரமாக செய்ய முடியாது. நமது கருத்துரிமை பறிபோகும். வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் நிரந்தர கொத்தடிமைகளாக மாற்றப்படுவார்கள். மேலும் இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது. இது நமது பிரச்சனை. நமது வாழ்வாதார பிரச்சனை. ஆகையால் இதற்கு நாம் தான் போராட வேண்டும்” என்று பு.மா.இ.மு சட்டக் கல்லூரி கிளை அமைப்பாளர் வசந்த் மாணவர்களிடம் விளக்கிப் பேசி இப்பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
பின்னர் வழக்கம் போல் காவல் துறையினர் கல்லூரியை சூழ்ந்து கொண்டு பேரணியாக சென்ற மாணவர்களிடம், “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு மாணவர்கள், “வழக்கறிஞர்களின் மனித சங்கிலி போராட்டத்திற்கு செல்கிறோம்” என்று கூறினர். “கல்லூரியில் இருந்து அவ்வளவு தூரம் நடந்து செல்ல வேண்டாம், உங்களுக்கு நாங்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து தருகிறோம். அதில் சென்று மனித சங்கிலி போராட்டத்திற்கு கலந்து கொள்ளுங்கள்” என்று மாணவர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல் நைச்சியமாக பேசி, மாணவர்களின் பேரணியை மக்கள் மத்தியில் பிரச்சாரம் ஆகிவிடாமல் தடுக்க முயற்ச்சித்தனர்.
அதற்கு ஒரு மாணவர் “பேரணியாக சென்றால் தான் எங்களது போராட்டம் மக்களுக்கு தெரியும்” என்று கூறி காவல்துறையின் நரித்தனத்தை அம்பலப்படுத்தும் வகையில் பதில் கூறினார். பின்னர் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள், விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணியாக சென்று, வழக்கறிஞர்களின் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டும், நீதிமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
என்று மாணவர்கள் கோசங்களை எழுப்பியது, பொது மக்களை வியந்து பார்க்க செய்தது. பின்னர் பேரணியாக வரும் வழியில் பொது மக்கள் அனைவரிடத்திலும் பிரசுரங்களை விநியோகித்தும், இப்போராட்டத்திற்கு பொது மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கூறினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மாணவர்களின் பேரணி நீதிமன்றத்திற்கு வந்த பிறகு நீதிமன்ற வாசலில்
வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு!
கருப்புச் சட்டத்தை வாபஸ் வாங்கு!
வெளியேறு வெளியேறு!,
நீதிபதி கவுலே,
தமிழகத்தை விட்டு வெளியேறு!
வெல்லட்டும்… வெல்லட்டும்!
வழக்கறிஞர் போராட்டம்
வெல்லட்டும்… வெல்லட்டும்!
துணை நிற்போம்… துணை நிற்போம்!
வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக
தோளோடு… தோளாக..
துணை நிற்போம்… துணை நிற்போம்!
என்ற விண்ணதிரும் முழக்கங்களுடன் 15 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் பு.மா.இ.மு சட்டக் கல்லூரி கிளை அமைப்பாளர் வசந்த், “இந்த கருப்புச் சட்டத்தை வாபஸ் வாங்கும் வரை சட்டக் கல்லூரி மாணவர்கள் இறுதி வரை வழக்கறிஞர்களுக்கு துணை நிற்போம்” என்றும், “தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரி மாணவர்களும் இப்போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பேரணியாக வந்த மாணவர்களுக்கு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக தண்ணீர் பாக்கெட்டுகளும், மதிய உணவும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. இறுதி நிகழ்ச்சியாக, மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தந்து கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, திருச்சி. 99431-76246.
சட்டமன்றத் தேர்தல்களில்போலி கம்யூனிஸ்டுகளின் தோல்வி: கட்டெறும்பானது கழுதை!
தமிழகத்தில் மூன்றாவதுஅணி என்ற பெயரில் அழைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி மற்றும் விஜயகாந்த் கட்சி, வாசன் கட்சி ஆகியன இணைந்த கூட்டணியானது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவமானகரமான முறையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போலி கம்யூனிஸ்டுகள் இத்தேர்தலில் வெறும் 0.8 சதவீத வாக்குகளைப் பெற்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டார்கள். வாழ்ந்து கெட்ட குடும்பத்தைப் பார்த்து அனுதாபப்படுவதைப் போல போலி கம்யூனிஸ்டுகளின் இந்தக் கேவலமான தேர்தல் தோல்வியையும் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து போயுள்ளதையும் கண்டு முதலாளித்துவ பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு பலரும் பரிதாபப்பட்டு அங்கலாய்ப்பதோடு, ஆலோசனைகளையும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் போலி கம்யூனிஸ்டுகளோ, தே.மு.தி.க.- மக்கள்நலக் கூட்டணியின் செயல்திட்டங்களை மக்களிடையே கொண்டுசெல்ல போதுமான அவகாசம் இல்லாததால்தான், தமிழக சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்குத் தோல்வி ஏற்பட்டது என்று நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்று சாடுவதைத் தவிர, தமிழக மக்கள் தமக்கும் தமது கூட்டணிக்கும் ஏன் வாக்களிக்க வேண்டுமென்பதற்கான மாற்றுத் திட்டத்தை இப்போலி கம்யூனிஸ்டுகளால் முன்வைக்க முடியவில்லை. எங்களது கூட்டணித் தலைவர்கள் மீது எவ்வித ஊழல் குற்றச் சாட்டுகளும் இல்லை என்று கூறுவதுதான் மாற்று அணிக்கான தகுதியா? இது ஒரு தகுதி என்றால் ஆட்சிக்கு வராதவர்கள் எல்லோருமே ஊழலற்றவர்கள்தான்.
தேர்தல் ஆணையம் என்பது ஜெ. கும்பலின் எடுபிடி என்று நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இதர எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தபோது, ஜெ.யின் நிரந்தர விசுவாசியான தா.பாண்டியனின் வலது கம்யூனிஸ்டு கட்சி, ஜனநாயகத்தைக் காப்பது என்ற பெயரால் அங்கே போட்டியிட்டது. இப்போது நாங்கள்தான் உண்மையான மாற்று என்றால், அதை மக்கள் நம்புவார்களா? இத்தனை காலமும் தி.மு.க.- அ.தி.மு.க. என்று மாறிமாறி கூட்டணி வைத்துவிட்டு, இரண்டு பேருமே ஊழல் கட்சிகள் என்று இப்போதுதான் கண்டுபிடித்ததைப் போல போலி கம்யூனிஸ்டுகள் சொன்னால், அதைப் பார்த்து மக்கள் சிரிக்க மாட்டார்களா? எல்லாவற்றுக்கும் மேலாக, வலது கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தளி ராமச்சந்திரனை வேட்பாளராக நிறுத்திவிட்டு ஊழலை ஒழிக்கப் போகிறோம் என்றால், அதை மக்கள் நம்புவார்களா?
தமிழகத் தேர்தலில் கண்டெய்னர் விவகாரம் சந்தி சிரித்தபோது சி.பி.எம். கட்சி வாயே திறக்கவில்லை. கோடிக்கணக்கான ரொக்கப் பணத்துடன் ஒரு கண்டெய்னர் வெளியில் போகும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பற்றிய விவரங்களைக்கூட சி.பி.எம். கட்சியின் வங்கி ஊழியர் சங்கம் மக்களிடம் முன்வைக்கவில்லை. அதற்கு முன்னதாக சிறுதாவூர் கண்டெய்னர் விவகாரம் அம்பலமானபோது, “சிறுதாவூர் பங்களாவில் ஜெயலலிதா பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறுபவர்கள், அதைப் பறிமுதல் செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வேண்டியதுதானே! அப்படி அவர்கள் 5 கோடி பிடித்தார்கள் என்றால், அதில் ஒரு கோடியை கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நன்கொடையாகக் கொடுத்துவிட்டு ரசீது பெற்றுச் செல்லட்டும்” என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அளவுக்கு வலது கம்யூனிஸ்டுத் தலைவர் தா.பாண்டியனின் ஜெ. விசுவாசம் கரைபுரண்டது. அதனால்தான் தனது பதவியேற்பு விழாவில் அவருக்கு முன்வரிசையில் அம்மா இடம் ஒதுக்கினார். இப்படிப்பட்ட பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட போலி கம்யூனிஸ்டுகள் தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் எதைச் சாதிக்கப் போகிறார்கள்?
தமிழகம் மட்டுமல்ல, 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ‘இடதுசாரி’களின் கோட்டையாகச் சித்தரிக்கப்பட்ட மே.வங்கத்தில் 2011-இல் 62 இடங்களைப் பெற்ற போலி கம்யூனிஸ்டு கூட்டணி, இம்முறை 32 இடங்களை மட்டுமே பெற்று மீளமுடியாத தோல்வியைச் சந்தித்துள்ளது. இக்கூட்டணியின் வாக்கு சதவீதம் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் 24 சதவீதமாகத் தேய்ந்து விட்டது. இன்று மே.வங்கத்தில் 44 இடங்களைப் பெற்று பிரதான எதிர்கட்சியாக காங்கிரசு மாறிவிட்டது. போலி கம்யூனிஸ்டுகளோ மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
மே.வங்கத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக திரிணாமுல் காங்கிரசு குண்டர்கள் 200-க்கும் மேற்பட்ட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்களைப் படுகொலை செய்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள் சி.பி.எம். தலைவர்கள். எனில், இத்தனை ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதைக் கண்டு மக்கள் அனுதாபப்பட்டு வாக்களித்திருக்க வேண்டுமே! ஆனால், முந்தைய தேர்தலைவிட இடதுசாரி கூட்டணிக்கு மேலும் வாக்குகள் சரிந்துகொண்டே போகிறதே! எந்தப் பெரிய கட்சியும் தேர்தல் கூட்டணி கட்ட முன்வராமல், தமிழகத்தில் ஒரு உதிரிக்கட்சி நிலைக்குத் தரம் தாழ்ந்து போய்விட்டதே! கேரளா, மே.வங்கம், திரிபுரா தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் தேர்தலில் தனித்து நின்று சொந்த செல்வாக்கில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத நிலைக்கு அக்கட்சி வீழ்ச்சியடையக் காரணம் என்ன?
இந்தியாவில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த சொந்தக் காலில் நின்று மக்களைத் திரட்டி ஒரு புரட்சியைச் சாதிக்கும் நோக்கத்தில் இப்போலி கம்யூனிஸ்டுகள் ஒருக்காலும் கட்சியைக் கட்டவேயில்லை. கம்யூனிசத்தின் அடிப்படைகளை முற்றாகக் கைகழுவிவிட்டு, நிலவுகின்ற அரசியலமைப்பு முறையைக் கட்டிக்காத்து, இன்னுமொரு ஓட்டுக் கட்சியாக செயல்படும் வகையில்தான் போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் திட்டமும் நடைமுறையும் இருந்து வருகிறது. எங்களது பாதை ரஷ்யப் பாதையுமல்ல, சீனப் பாதையுமல்ல; இது இந்தியப் பாதை என்றும், நமது மண்ணுக்கேற்ப மார்க்சியத்தை வளர்த்தெடுத்து படிப்படியாகத்தான் புரட்சியைச் சாதிக்க வேண்டும் என்றும் கூறிக் கொண்டு கம்யூனிசத்தின் அடிப்படைகளை முற்றாகக் கைகழுவியதோடு, சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் வழிகாட்டுதல்களையும் இப்போலி கம்யூனிஸ்டுகள் அறவே புறக்கணித்தனர்.
காந்தி – காங்கிரசுக்குள் முற்போக்குகளைத் தேடி ஆதரவளித்த இவர்கள், போலி சுதந்திரத்துக்குப் பிறகு நேருவை சோசலிஸ்டாகத் துதிபாடி ஆதரித்தனர். அதன் பிறகு அன்றைய சோவியத் ஒன்றியத்தின் அணியிலிருந்த இந்திரா காந்தியின் வெளிநாட்டுக் கொள்கை முற்போக்கானது, உள்நாட்டுக் கொள்கைதான் பிற்போக்கானது என்று விமர்சனத்துடன் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து, முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவக் கட்சிகளுடன் சேர்ந்து ஒரு ஐக்கிய முன்னணி, அதனுடன் எல்லா இடதுசாரி சக்திகளையும் இணைத்து இடதுசாரி ஜனநாயக முன்னணி; பிறகு அதையே புரட்சிகர மக்கள் ஜனநாயக முன்னணியாக மாற்றி புரட்சியைச் சாதிப்பது என்ற திட்டத்துடன் எல்லா ஓட்டுக் கட்சிகளிலும் முற்போக்கைத் தேடிக் கூட்டணி கட்டி சட்டமன்ற – நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டனர்.
நக்சல்பாரி இயக்கம் தீவிரவாதப் பாதையில் செல்கிறது; இது இந்திய மண்ணின் யதார்த்த நிலைமைக்குப் பொருந்தாத பாதை; நாடாளுமன்றத்தின் மீது மக்களுக்குப் பிரமை உள்ளது; எனவே தற்போதைக்கு நடைமுறைக்குச் சாத்தியமான நாடாளுமன்றப் பாதையில் சென்று, படிப்படியாக அதை அம்பலப்படுத்தி புரட்சியைச் சாதிக்கப் போவதாகக் கூறினார்கள். ஆனால் இந்தப் ‘புரட்சிப் பாதை’யில் இக்கட்சிகள் பயணப்பட்டு சாதித்தது என்ன? நாடாளுமன்றப் பாதையில் சென்று எதையும் சாதிக்க முடியாது என்பதற்கு அவர்களே சாட்சியமாகிப் போனார்கள். சட்டமன்ற – நாடாளுமன்றப் பாதை எனும் சட்டகத்தில் சிக்கிக் கொண்டுவிட்ட பிறகு, நாயினும் தரம் தாழ்ந்து போவதைத் தவிர வேறு வழியுமில்லாமல் போய் அக்கட்சிகளும் செல்லாக்காசாகிவிட்டன.
இதே நாடாளுமன்றப் பாதையில் செல்லும் பிற ஓட்டுக் கட்சிகள்கூட தமது சமூக ஆதரவை ஏதாவதொரு வகையில் தக்கவைத்துக் கொள்ளும்போது, இக்கட்சிகளால் தமது சமூக ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளக்கூட முடிவதில்லை. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் ஆளும் வர்க்கங்களின் மறுகாலனியாதிக்கக் கொள்கைக்கு எதிரான மாற்றுக் கொள்கையோ, திட்டங்களோ இப்போலி கம்யூனிஸ்டு கட்சிகளிடம் இல்லை. இதே கொள்கைகளை ‘மனிதமுகம்’ கொண்டதாக, மக்களைக் கடுமையாகப் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டுமென்பதுதான் போலி கம்யூனிஸ்டுகள் கூறும் மாற்றுக் கொள்கை. இந்த ‘மனிதமுகம்’ என்பது, மே.வங்கத்தின் சிங்கூர் – நந்திகிராமத்தில் போராடிய மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவி ஒடுக்குவதுதான் என்று சந்திசிரித்துப் போய்விட்டது.
போலி கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கங்கள் தோற்றத்தில் பெரியதாக இருந்தாலும், பொருளாதாரவாத அடிப்படையில் கட்டப்பட்ட அச்சங்கங்களின் பலம் தேர்தலில் ஓட்டுக்களாக மாறுவதில்லை. அரசியல் பிரச்சினைகளில் தலையிட்டு அரசியல் போராட்டங்களை நடத்த முன்வராத இப்பொருளாதாரவாத செக்குமாட்டுத்தனமும் சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணியும் அவர்களது கடந்தகால செல்வாக்கையும் அரித்துத் தின்றுவிட்டது. அவர்களது வர்க்கப் போராட்ட அமைப்புகளும் செயலற்று முடங்கிப்போய்விட்டன.
சட்டமன்ற – நாடாளுமன்றத்தில் ஒரு சில சீட்டுக்களைப் பெற்று அரசு சன்மானங்களையும் சலுகைகளையும் பொறுக்கித் தின்பது, தமது பதவிகளைக் காட்டி அரசு அலுவலகம், போலீசு நிலையம், தொழிற்சங்கங்களில் புரோக்கர் வேலை செய்து தொழில் அமைதியைக் காத்து ஆதாயமடைவது என்பதுதான் அவர்களின் அன்றாட நடைமுறையாகிப் போய்விட்டது. இதுவும் போதாதென்று இதர ஆளும் வர்க்கக் கட்சிகளைப் போலவே இப்போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் ஊழல் – மோசடிகளில் ஈடுபட்டு பிழைப்புவாதிகளையும் புரோக்கர்களையும் கொண்ட கோடீசுவரக் கட்சிகளாக மாறிவிட்டன.
தமது சுய அழிவுப்பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் போலி கம்யூனிஸ்டு கட்சிகள் தொலைக்காட்சி ஸ்டுடியோக்களில்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதை வைத்துதான் தாங்களும் ஒரு கட்சி என்று இவர்களால் விளம்பரப்படுத்திக் கொள்ள முடிகிறது. இதுவும் எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்பதுதான் நமக்குத் தெரியவில்லை.
கொசுறு:
அண்மையில் தே.மு.தி.க.வின் 14 மாவட்டச் செயலாளர்கள், விஜயகாந்துக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அக்கடிதம், தே.மு.தி.க.வின் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. “2005 முதல் 2016 வரை கட்சி நிதி, நன்கொடை, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் – என 500 கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்த பணம் என்னவானது? கட்சிக்கு வரும் நன்கொடைகளை டிரஸ்ட் பெயரில் வாங்கினீர்கள். அந்த டிரஸ்டில் இருப்பது விஜயகாந்த், பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகிய மூன்று பேர் மட்டும்தான்” என்று அம்பலப்படுத்தும் இந்தக் கடிதம் இப்போது ஊடகங்களில் பரபரப்பாகியுள்ளது.
இப்பேர்ப்பட்ட விஜயகாந்தைத்தான் கறைபடியாத கரம் என்று விளம்பரப்படுத்தி, இவரை முதலமைச்சராக்கி ஊழலற்ற ஆட்சி நடத்தப்போவதாகப் போலி கம்யூனிஸ்டுகள் கதையளந்தார்கள். இதை நம்பி தமிழக மக்கள் வாக்களித்து, தப்பித் தவறி விஜயகாந்த் வெற்றி பெற்று முதலமைச்சராகியிருந்தால், விஜயகாந்தும் பிரேமலதாவும் மச்சான் சுதீஷும் தமிழ்நாட்டையே தமது குடும்ப டிரஸ்டுக்குப் பட்டா போட்டுக் கொண்டிருப்பார்கள். முத்தரசனும் ராமகிருஷ்ணனும் அதற்கு சாட்சி கையெழுத்து போட்டிருப்பார்கள். நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.
வீர் சிங்கின் படத்துடன் அவரது மகன்கள். இனி இவர்களின் எதிர்காலம் கேள்விக் குறி என்கிறார், வீர் சிங்கின் தந்தை.
காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரரின் உடலை பொது இடத்தில் வைத்து எரியூட்ட ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உத்திரபிரதேசம் பரிசாபாத் மாவட்டத்தின் நக்லா கேவல் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் வீர் சிங். இவர் துணை இராணுவப் படையான மத்திய ரிசர்வ் போலிசு படை சி.ஆர்.பி.எஃப் வீரர் .காஷ்மீரில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் இந்திய ஆக்கிரமிப்பு படையினரை குறிவைத்து காஷ்மீர் போராளிகள் நடத்திய தாக்குதலில் இவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் சொந்த கிராமத்திற்கு எடுத்துவரப்பட்ட இவரது உடலை பொது இடத்தில் வைத்து எரியூட்டவும் அங்கு ஒரு நினைவு சின்னம் எழுப்பவும் அக்கிராம ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இச்செய்தி ஊடகங்களில் வெளிவந்தால் தலைகுனிவு ஏற்படும் என்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இறுதி சடங்கு செய்ய ஆதிக்க சாதியினரிடம் அனுமதி பெற்றுள்ளது. பொது இடத்தில் 10 X 10 என்ற அளவில் இடத்தை பயன்படுத்திகொள்ள ‘கருணையுடன்’ அனுமதி வழங்கியுள்ளனர் ஆதிக்க சாதியினர்.
“என் மகன் நாட்டை பாதுகாக்க உயிரிழந்துள்ளான். ஆனால் அவனுக்கு இறுதி சடங்கு செய்ய நம் மக்களே இடம் தர மறுக்கிறார்கள்.” என வேதனையுடன் குறிப்பிடுகிறார் வீர் சிங்கின் தந்தை. இவர் ரிக்சா இழுக்கும் தொழிலாளி.
காஷ்மீர் விவகாரத்தில் தேசிய வெறி கிளப்பும் 24 மணி நேர ஊடகங்களும், தேசபக்தர்களும் இச்செய்தியை எளிதாக கடந்து சென்றுவிட்டார்கள். உள்ளூர் ஆதிக்க சாதிவெறி பயங்கரவாதிகளின் மறைமுக கூட்டாளிகள் இவர்கள். முகநூல்களில் தேசவெறி கிளப்பிவிடும் மேட்டுகுடிகளோ அல்லது நாட்டு வளத்தை அனுபவிக்கும் அம்பானி அதானிகளின் பிள்ளைகளோ ராணுவத்தின் சிப்பாய் வேலைக்கு செல்வதில்லை. அப்படி சென்றாலும் அதிகாரிகளாக பசையுள்ள பதவிகளுக்கு தான் விண்ணப்பிக்கவே செய்கிறார்கள். புதிய பொருளாதார கொள்கைகளின் விளைவாக கிராமப்புறங்களில் விவசாயம் நலிந்து வருவதும், நகர்ப்புறத்து கூலி வேலையின் மீதான வெறுப்பு காரணமாக வேறு வழியின்றி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இராணுவ ஆள் சேர்ப்புக்கு செல்கின்றனர். மற்றபடி பாரதமாதாவின் மீது கொண்ட பற்று கராணமல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. கிராமத்தில் 500 சதுர அடி கொண்ட ஒரு அறை வீட்டில் தான் வீர் சிங்கின் குடும்பம் வசித்துவருதாகவும், அவரது வீர் சிங்கின் சம்பளத்தை நம்பி தான் இவர்களது குடும்பம் இருப்பதாகவும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படி தேர்வு செய்யப்பட்டவர்களை பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து போராடும் சத்தீஸ்கர், தண்டகாரண்யா பகுதி பழங்குடிகளை ஒடுக்கவும், காஷ்மீர், மணிப்பூர், ஈழம் என தனது ஆக்கிரமிப்பு பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்கிறது இந்திய ஆளும் வர்க்கம். இதைத்தான் ஏழைகளுக்கு எதிராக ஏழைகளை ஏவிவிடும் போர் என வர்ணிக்கிறார் எழுத்தாளர் அருந்ததிராய். பொருளாதார நோக்குடன் வேலைக்கு சேரும் இளைஞர்கள் ராணுவத்தின் அறமற்ற செயலுக்கு பழகிப் போகிறார்கள், கூடவே மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். தன் தந்தை ஊரில் வயலில் வேலை செய்துகொண்டிருக்க தண்டகாரண்ய பழங்குடியின் நிலத்தை ஜிண்டாலுக்காக பிடுங்கிக்கொண்டிருப்பார் துணை இராணுவப் படையில் பணியாற்றும் ஒரு இளைஞர். இதுவே அவ்விளைஞர் ஒரு அதிகாரியாக இருக்கும் போது இக்குறைந்தபட்ச மன உறுத்தல் கூட இருக்காது என்பதற்கு அலெக்ஸ் பால் மேனன் உள்ளிட்டு பல அதிகாரிகள் சான்றாக இருக்கிறார்கள். கண்முன்னால் சக ஒடுக்கப்பட்ட மக்கள் அரச படைகளால் சிதைக்கப்பட்டாலும் மவுனமாக அரசின் பக்கம் நின்று தங்கள் பணியை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் தேசபக்தியைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ஓநாய் அர்னாப் கோஸ்வாமி காஷ்மீர் போராட்டம் குறித்த கலந்துரையாடலில் கொல்லப்பட் இந்த தலித் வீரரைக் குறிப்பிடுகிறார் – தலித்தாக இல்ல, தேசபக்தராக. அந்த விவாதத்தில் பங்கேற்ற காஷ்மீர் அறிஞர்கள், பத்திரிகையாளர்களைப் பார்த்த “இந்த வீரனை கொன்று விட்டீர்களே” என்று கொலை வெறியில் கத்தினார். ஆனால் அந்த வீரனை அடக்கம் செய்யக் கூட இந்த நாட்டில் நாதியில்லை என்பது அர்னாப்புக்கு தெரியாத ஒன்றல்ல. ஏனெனில் இவர்களைப் போன்ற தேசபக்தி உதார் உள்ளவர்கள் ஒருக்காலும் தேசத்திற்காக சாகமாட்டார்கள். அதற்குத்தான் இராணுவம் என்ற பெயரில் இத்தகைய ஏழைகளை கூலிப் படைகளாக இராணுவத்தில் அமர்த்திக் கொள்கிறார்கள். ஏழைகள் – தலித்துக்களைப் பொறுத்தவரை எல்லையில் மட்டுமல்ல, நாட்டிற்குள்ளேயேயும் மரணம்தான்.
இந்த உண்மை புரியும் போது இராணுவத்தின் ஏழை வீரர்கள் இந்திய அரசு பக்கம் நிற்கமாட்டார்கள், இந்திய மக்கள் பக்கம் நிற்பார்கள். அப்போதுதான் உண்மையான தேசபக்தியை இந்த தேசம் உணரும்.
கல்வியை பறித்துக் கொண்டே அவர்கள் "கல்வி கற்பது உரிமை" என்று முழங்கவும் செய்கிறார்கள்!
கார்கள்: மாயையும் உண்மையும்!
கார்கள்: மாயையும் உண்மையும்!
கார்ட்டூன் நன்றி: Andy Singer
———————————————————-
காருக்காக வேலையா, வேலைக்காக காரா?
காருக்காக வேலையா, வேலைக்காக காரா?
காரில் ஒரு உரையாடல்: காரோட்டுவதை நான் வெறுக்கிறேன். ஆனாலும் வேலைக்கு செல்வதற்கு அது தேவைப்படுகிறது!
அலுவலகத்தில் ஒரு உரையாடல்: இந்த வேலையை நான் வெறுக்கிறேன். ஆனாலும் கார் வாங்கிய கடன் தவணையை கட்டுவதற்கு இந்த வேலை தேவைப்படுகிறது.!
கார்ட்டூன் நன்றி: Andy Singer
————————————————————–
கல்வியை பறித்துக் கொண்டே அவர்கள் “கல்வி கற்பது உரிமை” என்று முழங்கவும் செய்கிறார்கள் !
கல்வியை பறித்துக் கொண்டே அவர்கள் “கல்வி கற்பது உரிமை” என்று முழங்கவும் செய்கிறார்கள்!
நன்றி: Right to Education by Khalid Cherradi
—————————————————————
பயங்கரத்தின் செல்ஃபி
பயங்கரத்தின் செல்ஃபி
ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 800க்கும் மேற்பட்ட மக்களை உலகெங்கும் கொன்றிருக்கின்றனர்.
கார்ட்டூன்: மெக்சிகோவைச் சேர்ந்த Antonio Rodríguez நன்றி: Cartoon Movement
———————————————————————-
எகிப்தில் பத்திரிகையாளர்களின் நிலை!
எகிப்தில் பத்திரிகையாளர்களின் நிலை!
எகிப்தைப் பொறுத்தவரை ஒரு பத்திரிகையாளராக பணிபுரிவது மிகவும் அபாயகரமானது. சமீபத்தில் அல் ஜசீரா தொலைக்காட்சியின் இரு பத்திரிகையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்றொரு தொலைக்காட்சி நடத்துநர் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டார்.
கார்ட்டூன்: மொராக்கோவின் Ghamir Ali நன்றி: Cartoon Movement
வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், “தான் பதவி நீட்டிப்பு கோரப் போவதில்லை; செப்டம்பரில் தனது பதவிக் காலம் முடிந்த பிறகு, ஆசிரியப் பணிக்குத் திரும்பச் செல்லவிருக்கிறேன்” என அறிவித்ததையடுத்து, இந்தப் பிரச்சினைக்கு மங்களம் பாடிவிட்டன, ஊடகங்கள். ஆனால், இப்பிரச்சினையின் பின்னே புதைந்து கிடக்கும் அபாயங்கள் இனிதான், அதன் முழு பரிமாணத்தோடு வெடிக்கவிருக்கின்றன.
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி அவற்றுக்கு நாமம் போடும் விசயத்தில் இந்தியத் தரகு முதலாளிகள் மல்லையாவை விஞ்சியவர்கள். கடன்களை மறுசீரமைப்பது என்ற பெயரில் கடனைத் திரும்பக் கட்டாமலேயே தந்திரமாக இழுத்தடித்து வந்த தரகு முதலாளிகளுக்கும், அதற்குத் துணை நின்ற வங்கி நிர்வாகம் மற்றும் நிதியமைச்சகம் ஆகியவற்றுக்கும் கிடுக்கிப்பிடி போட்டு, சொத்தை விற்று கடனைக் கட்டுமாறு செய்தார் ரகுராம் ராஜன். இதன் விளைவாகத்தான் ஊரறிந்த சி.ஐ.ஏ. ஏஜெண்டும், ஆளும் வர்க்கத்தின் பங்களா நாயுமான சுப்பிரமணியசாமி, ரகுராம் ராஜன் அமெரிக்க குடியுரிமை வைத்திருப்பவர் என்றும் இந்தியா மீது விசுவாசமில்லாதவர் என்றும் ஏசினார்.
அம்பானி, அதானி, நிதின் கட்கரி ஆகிய தரகு முதலாளிகளின் அறிவிக்கப்படாத கணக்குப் பிள்ளையான ஆர்.எஸ்.எஸ்.-இன் குருமூர்த்தி, சு.சாமி போல பச்சையாகவும் கொச்சையாகவும் தாக்காமல், ரொம்பவும் ஆதாரபூர்வமாக விமரிசிக்கும் தோரணையில், ரகுராம்ராஜனின் அணுகுமுறை காரணமாக உள்நாட்டுத் தொழில்கள் நசிந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
முஸ்லிம்களைக் காட்டிலும் அதிகமாக ரகுராம் ராஜன் மீது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெறுப்பைக் கக்குவதைப் பார்த்து, அவர் ஒரு இடதுசாரி சார்பு பொருளாதாரக் கொள்கையாளரோ என்று யாரும் சந்தேகப்படவேண்டாம். அவர் புதிய தாராளவாதக் கொள்கையின் தீவிர ஆதரவாளர்தான். எனினும், பொதுத்துறை வங்கிகளை உங்கள் விருப்பம் போலக் கொள்ளையடிப்பதை அனுமதிக்க இயலாது என்று இந்தியப் பெரு முதலாளிகளிடம் சொன்னார் ரகுராம் ராஜன். ஒரு வரியில் சொன்னால், இதுதான் அவர் செய்த மாபெரும் தேச விரோதக் குற்றம்.
வட்டி வீதத்தை யார் தீர்மானிப்பது?
“வங்கி வட்டி வீதத்தைக் குறைக்க மறுத்ததன் மூலம் ராஜன் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துவிட்டதாகவும்; இதனால் வேலை வாய்ப்புகள் உருவாவது தடைபட்டுப் போனதாகவும்; சிறுதொழில்களுக்குக் கடன் கொடுப்பதற்காக மோடி அரசு கொண்டு வந்த முத்ரா வங்கித் திட்டம் முடங்கிப் போனதாகவும்” ரகுராம் ராஜன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் குருமூர்த்தி. சுவாமியால் தேசத் துரோகியாகக் காட்டப்பட்ட ராஜனை வளர்ச்சியின் எதிரியாக்கி நிறுத்துகிறார், குருமூர்த்தி.
இந்தியத் தரகு முதலாளிகளின் கைக்கூலிகள்: சுப்பிரமணிய சுவாமி (இடது) மற்றும் எஸ்.குருமூர்த்தி.
மோடி அரசு கொண்டு வந்திருக்கும் முத்ரா வங்கித் திட்டம் என்பது, சிறு தொழில்களுக்கு நேரடியாகக் கடன் கொடுக்கும் திட்டமல்ல. மாறாக, சிறு தொழில் நிறுவனங்களுக்குக் கடன் கொடுக்கின்ற நிதி நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம்தான் அது. கந்து வட்டிக் கும்பலுக்கு கடன் கொடுக்க முட்டுக்கட்டை போடுகிறாரே என்பதுதான் மார்வாடிக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியினரின் குமுறல்.
வங்கி வட்டி வீதத்தை ராஜன் குறைக்க மறுத்துவிட்டார் எனச் சொல்லப்படும் குற்றச்சாட்டும்கூட, உண்மைக்குப் புறம்பானது. கடனுக்கு வட்டி எவ்வளவு என்பதைக் கடன் கொடுக்கும் வங்கி தீர்மானிப்பதா, கடன் வாங்கும் தரகு முதலாளிகள் தீர்மானிப்பதா? கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1.50 சதவீதம் அளவிற்கு வட்டியைக் குறைத்து, தற்பொழுது அதனை 6.50 சதவீதமாக நிர்ணயித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. ஆனால், மோடி அரசும் தரகு முதலாளிகளும் அதனை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனக் கோரியதற்குத்தான் ராஜன் உடன்பட மறுத்துவிட்டார்.
“உங்களின் சேமிப்பை இந்தியாவிலுள்ள ஏதாவதொரு பாதுகாப்பான வங்கியில் 4 சதவீத வட்டியில் டெபாசிட் பண்ண முன் வருவீர்களா?” எனக் கேட்டுத் தரகு முதலாளிகளின் கோரிக்கையை ஒதுக்கித் தள்ளிய ராஜன், வங்கி சேமிப்புகளிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் பொதுமக்களையும் ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
தொழிலாளர்களின் பி.எஃப். வட்டியைக் குறைத்து, அவர்கள் வயிற்றிலடிக்கும் மோடி தேசபக்தராம். முதலாளிகள் வாங்கும் கடனுக்கு வட்டியைக் குறைத்தால், சேமிப்புகள் மூலம் கிடைக்கும் வட்டியில் வாழ்க்கை நடத்தும் முதியவர்களின் நலன் பாதிக்கப்படும் என்று சொல்லும் ராஜன் தேசவிரோதியாம்! இந்தியாவைப் பற்றித் தெரியாதவராம்!
பொருளாதாரத் தேக்கம் நிலவும் காலத்தில் வங்கி வட்டியைக் குறைப்பதன் மூலம் பணப் புழக்கத்தை ஏற்படுத்தி, அதன் வழியாக வளர்ச்சியைக் கொண்டுவர முடியும் என்று நம்பச்சொல்கிறது மோடி கும்பல். ஆனால், இந்த வழியானது ஒட்டுமொத்த நாட்டையும் புதைகுழிக்குள் இழுத்துச் செல்லும் வழி என்பதை அமெரிக்காவில் 2008-இல் வெடித்த சப்-பிரைம் கடன் நெருக்கடி உணர்த்தியிருக்கிறது. சப்-பிரைம் நெருக்கடி வெடிப்பதற்கு முன்பாக அமெரிக்காவில் வங்கி கடனுக்கான வட்டி 0% சதவீதமாகக் குறைக்கப்பட்டிருந்தையும், அவ்வட்டி குறைப்பால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருளாதார ஏற்றம், 2008-இல் உடைந்து உலக நாடுகள் அனைத்தையுமே புதைசேற்றுக்குள் தள்ளியதையும், கணிசமான அமெரிக்க மக்கள் ஓட்டாண்டிகளாகித் தெருவிற்கு வந்ததையும், அதிலிருந்து மீண்டு வர முடியாமல் உலகமே தத்தளிப்பதையும் நாம் அனுபவித்து வருகிறோம்.
அந்தப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இந்தியப் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் திவாலாகிவிடாமல் தப்பித்துக் கொண்டதற்கு, பணக் கொள்கை மீது ரிசர்வ் வங்கிக்கு இருந்த கட்டுப்பாடுகள்தான் காரணம். ரிசர்வ் வங்கியின் கையில் உள்ள இந்த அதிகாரத்தைப் பறித்துவிட வேண்டும் என்பதுதான் மோடி அரசின் விருப்பம்.
வாராக் கடன் என்ற புற்றுநோய்
வங்கிகள் கொடுத்திருக்கும் கடனுக்கான வட்டி 60 நாட்களுக்கு மேல் செலுத்தப்படாமல் இருந்தால், அவற்றை வாராக் கடனாக வரையறுக்க வேண்டும் என்கிறது, வங்கிகளின் நிர்வாக விதி. இந்திய வங்கிகளில், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் இப்படிபட்ட வாராக் கடன் எவ்வளவு இருக்கிறது என்பது நீண்ட காலமாகவே மர்மமாக இருந்துவந்த நிலையில், அந்த இரகசியத்தை வங்கிகளின் சொத்து குறித்த நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் உடைத்து வெளிக்கொண்டு வந்தார், ரகுராம் ராஜன்.
கடந்த அக்டோபர் 2015 தொடங்கி டிசம்பர் 2015 முடியவுள்ள காலாண்டு அறிக்கையில், வங்கிகள் தங்களிடம் நான்கு இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வாராக் கடன் இருப்பதாகக் கணக்குக் காட்டின. ஆனால், ராஜன் எடுத்த நடவடிக்கையின் விளைவாக வங்கிகளின் அடுத்த காலாண்டு அறிக்கையில் (ஜன.2016 – மார்ச் 2016) வாராக்கடன் ஏறத்தாழ 6 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இருப்பது தெரியவந்தது. வெறும் மூன்று மாத இடைவெளியில் வங்கிகளின் வாராக் கடன் 50 சதவீதம் அதிகரித்து ஆறு இலட்சம் கோடி ரூபாயைத் தொட்டிருப்பது அசாதாரணமானது மட்டுமல்ல, குற்றப் புலனாய்வு விசாரணைக்கும் உரியது.
தமது நிறுவனங்களின் சொத்துக்களை விற்றாவது கடனை அடைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் தரகு முதலாளிகள் (இடமிருந்து) அனில் அம்பானி, கௌதம் அதானி மற்றும் சசி ரூயா.
இந்த வாராக் கடன்களில் பெரும்பகுதி இந்தியத் தரகு முதலாளிகளுக்குத் தரப்பட்டு நிலுவையில் இருப்பவை என்பது ஏற்கெனவே அம்பலமான உண்மை. இந்தியாவின் முதல் பத்து பெரு நிறுவனங்கள் வங்கிகளுக்குத் திருப்பித் தர வேண்டிய கடன் தொகை 7.5 இலட்சம் கோடி என்றும், இதில் சரிபாதி வாராக் கடனாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறது, “கிரெடிட் சுயிஸ் இந்தியா” என்ற அமைப்பு. இந்த வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்படாமல், மோசமான கடன்கள் என வகைப்படுத்தப்பட்ட கடன்களின் நிலுவையையும் சேர்த்தால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுத்த கடன்களின் விளைவாக பொதுத்துறை வங்கிகள் திவால் நிலையின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருப்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும்.
வங்கிகளிடமிருந்து 1,21,000 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், அதற்கு ஆண்டு வட்டியாக 8,299 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், அந்தக் குழுமத்தின் வரி விதிப்புக்கு முந்தைய ஆண்டு விற்று முதல் வரவே 9,848 கோடி ரூபாய்தான். இது போல ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் இன்ஃபராஸ்டர்க்சர், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனங்களும் வட்டி கட்டக்கூடிய அளவிற்கு வருமானம் ஈட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, எஸ்ஸார், அதானி, ஜே.பி. எனப் பல குழுமங்களின் நிலையும் இதுதான்.
வங்கியில் வீட்டுக் கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களோ, விவசாயக் கடன் வாங்கிய குடியானவனோ, கல்விக் கடன் வாங்கிய பெற்றோரோ கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அவர்கள் வீட்டுக்குக் குண்டர்களை, போலீசை அனுப்பி, சொத்துக்களை ஜப்தி செய்யும் வங்கி நிர்வாகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அசலை, வட்டியைக் கட்டாமல் திட்டமிட்டே ஏய்ப்பது தெரிந்தும், அவர்கள் வாங்கிய கடன்களுக்கான தவணையை, கெடுவைத் தள்ளிவைத்து தில்லுமுல்லு செய்து வருகின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடனைக் கொடுப்பதிலும், அதனை வசூலிக்காமல் கெடு காலத்தைத் தள்ளிவைத்து கடனை மறுசீரமைப்பதிலும், கடன்களைத் தள்ளுபடி செய்வதிலும் வங்கி நிர்வாகத்திற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே இருந்துவரும் கிரிமினல் தொடர்பைத்தான் ரகுராம் ராஜன் தனது நடவடிக்கைகள் மூலம் துண்டித்துவிட முயற்சித்தார்.
வங்கிகள் தமது கடன்கள் அனைத்தையும் மார்ச் 2017-க்குள் ஒழுங்கமைப்பு செய்து, அவற்றை வசூலிக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும்; நிலுவையில் உள்ள கடன்களின் கெடு தேதிகளைத் தள்ளிவைத்து மறுசீரமைப்பு செய்யக் கூடாதென்றும் உத்தரவிட்ட ராஜன், கடனைக் கட்டாமல் ஏய்த்துவந்த கார்ப்பரேட் நிறுவனங்களைத் தமது சொத்துக்களை விற்றுக் கடனை அடைக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கினார்.
இதன் காரணமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும்; எஸ்ஸார் குழுமம் 50,000 கோடி ரூபாய் சொத்துக்களையும்;கௌதம் அதானி குழுமம் 6,000 கோடி ரூபாய் சொத்துக்களையும்; டாடா நிறுவனம் இங்கிலாந்திலுள்ள 17,400 கோடி ரூபாய் சொத்துக்களையும்; ஜே.பி. குழுமம் 24,000 கோடி ரூபாய் சொத்துக்களையும்; லான்கோ குழுமம் 25,000 கோடி ரூபாய் சொத்துக்களையும்; வீடியோகான் குழுமம் 9,000 கோடி ரூபாய் பெறுமான சொத்துக்களையும் விற்றுக் கடனைக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.
தரகு முதலாளிகள்: அரசின் செல்லப்பிள்ளைகள்
இந்தியத் தரகு முதலாளிகள் இப்படிபட்ட நெருக்கடிகளை இதற்கு முன் சந்தித்ததேயில்லை. அக்கும்பல், தனது பிறப்பிலிருந்தே, குறிப்பாக நாடு ‘சுதந்திர’மடைந்த பிறகு, அரசின் செல்லப்பிள்ளைகளாகவே வளர்க்கப்பட்டனர். மூலதனம் தொடங்கி இயற்கை வளங்கள் வரையில், மானியம் தொடங்கி வரிச் சலுகை வரையில் அனைத்தும் அவர்கள் விரும்பியபடியே அரசாலும், ஆளும் வர்க்க கட்சிகளாலும் செய்து கொடுக்கப்பட்டன.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு முறைகேடான சலுகைகளை வழங்கி ஊட்டி வளர்க்கக் கூடாது. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, சந்தையில் போட்டியிட்டு தொழிலை நடத்த வேண்டும்; இல்லையென்றால் மூடிவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்கிறார் ராஜன். மேலும், இந்திய தரகு முதலாளிகளுக்கும் இந்திய அரசிற்கும் இடையேயான இந்த நெருக்கமான உறவுதான் இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரும் அபாயம் என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார். இந்த அணுகுமுறைதான் இந்தியத் தரகு முதலாளிகளையும், அவர்களது பாதுகாவலர்களான ஆளும் வர்க்கக் கட்சிகளையும் ஆத்திரம் கொள்ளச் செய்திருக்கிறது.
கிராமப்புறங்களில் இரட்டை டம்ளர் உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை, சாதிய பழக்கவழக்கங்களைக் கேள்விக்குள்ளாக்குபவர்களைப் பார்த்து, “தம்பி ஊருக்குப் புதுசா?” என ஆதிக்க சாதிவெறியர்கள் கேட்பது வழக்கம். அதுதான் ராஜன் விவகாரத்திலும் நடக்கிறது. ராஜன் இந்திய அரசிற்கும் தரகு முதலாளிகளுக்கும் இடையேயான கள்ளக்கூட்டை, செல்லப்பிள்ளைத்தனத்தைக் கேள்விக்குள்ளாக்கியவுடன், “ராஜன் இந்தியாவைப் புரிந்து கொள்ளவில்லை; அவர் திறமையான பொருளாதார நிபுணராக இருக்கலாம். ஆனால், இந்தியப் பொருளாதார நிபுணர் அல்ல” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் தரகு முதலாளிகளைக் காப்பாற்றும் விசுவாசத்தோடு ராஜனை வசைபாடியது.
அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பொதுத்துறை நிறுவனங்களை விடுவித்து, அரசின் ஆதரவின்றி சுயேச்சையாக சந்தையில் போட்டியிடச் செய்ய வேண்டும் என நியாயவாதம் பேசிய தரகு முதலாளித்துவக் கும்பல், தனக்கென்று வரும்பொழுது தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறது. ஒருபுறம் தங்களின் தொழிலுக்கும், இலாபத்திற்கும் அரசின் பாதுகாப்பு, நிதியுதவிகளைக் கோரும் இவர்கள், இன்னொருபுறமோ எந்தவொரு சட்டமும், அரசு நிறுவனமும் தங்களைக் கட்டுப்படுத்தக் கூடாதென்றும் கோருகிறார்கள்.
மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.), மைய தணிக்கைத் துறை (சி.ஏ.ஜி.), மைய ஊழல் ஒழிப்புத் துறை (சி.வி.சி.) ஆகிய மூன்று “சி”க்களும் இந்தியாவை நிர்வகிக்க அனுமதிக்கக்கூடாது என்றார், வங்கிக் கடனை ஏப்பம் விட்டிருக்கும் அனில் அம்பானி. இதனை அப்படியே வழிமொழிந்தார் மைய அமைச்சரும் தரகு முதலாளியுமான நிதின் கட்கரி. கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரி விதிப்பைக் கைவிட வேண்டும் என்கிறார், சு.சாமி. காங்கிரசு அரசு கொண்டு வந்த முன் தேதியிட்டு வருமான வரி வசூலிக்கும் விதியை ஆட்சிக்கு வந்தவுடனேயே ஊறுகாய் பாட்டிலுக்குள் போட்டு அடைத்தது, மோடி அரசு.
வாங்கிய கடனுக்கு வட்டியைக் கட்டச் சொன்னால், பொருளாதாரத் தேக்கம் நிலவுகிறது என நிதியமைச்சரே தரகு முதலாளிகளுக்காக வக்காலத்து வாங்குகிறார். இந்தப் பொருளாதார தேக்கம் நிலவும் நேரத்தில்தான், டிராக்டர் கடன் வாங்கிய தஞ்சை விவசாயி பாலனிடமிருந்து கடனை வசூலிக்க போலீசை ஏவியது வங்கி நிர்வாகம். கல்விக் கடனைக் கட்டாத மாணவர்கள் வங்கி வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளில் போட்டியிட முடியாது என உத்தரவிட்டது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. ஆனால், பல்லாயிரம் கோடிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்டு வரும் தரகு முதலாளிகளோ, அரசால் சலுகை அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றனர். இந்தக் கூட்டுக் களவாணித்தோடு ஒத்துப்போக மறுத்த ராஜனைத்தான் தேசத் துரோகி என முத்திரை குத்துகிறது, ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
மோடியின் ‘சாதனைகளை’ப் புட்டுவைத்த ராஜன்
“மேக் இன் இந்தியா” திட்டத்தை அறிவித்துள்ள மோடி, இந்தத் திட்டம் இந்தியாவை உலகின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்றக் கூடிய மந்திரக்கோல் எனக் காட்டி வருகிறார். அதாவது, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கும் கதையாக, இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்களைத் தொடங்க போட்டி போடுமென்றும்; அப்படித் தொடங்கப்படும் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்து, சர்வதேச சந்தையில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்கும் என்றும் ஒரு மல்டி கலர் கனவை இறக்கிவிட்டார், மோடி.
தமது பி.எஃப் பணத்தை முடக்கத் திட்டமிட்ட மோடி அரசின் சதியை எதிர்த்து போர்க்குணமிக்கப் போராட்டம் நடத்திய பெங்களூரு ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள்.(கோப்புப்படம்)
கார்ப்பரேட் ஊடகங்களும், முதலாளிகளும் இதை வைத்து ஆதாயம் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மோடியின் இந்தத் திட்டத்தை வாராது வந்த மாமணி போல புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்த சமயத்தில், ரகுராம் ராஜன் இந்த திட்டத்தின் ஓட்டைகளைப் புட்டு வைத்தார். சப்-பிரைம் கடன் நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்திலிருந்து உலக நாடுகள் இன்னமும் மீண்டுவர இயலாத நிலையில், இந்தியாவை உலகின் ஏற்றுமதி மையமாக மாற்றுவது சாத்தியமே இல்லாத ஒன்று எனக் கூறிய ராஜன், உலகச் சந்தைக்காக உற்பத்தி செய்வதற்கு மாறாக, உள்நாட்டு சந்தைக்காக உற்பத்தி செய்யும் “இந்தியாவிற்காகத் தயாரிப்போம்” (மேக் ஃபார் இந்தியா) திட்டத்தைத் தொடங்குமாறு கூறி, இது ஒன்றுதான் பொருளாதாரத்தை முன்னேற்ற சாத்தியமான வழி என்றும் விளக்கி, இந்து தேசியவாதக் கும்பலின் மூக்கை உடைத்தார் ‘அந்நியர்’ ராஜன்.
2015-16 ஆம் ஆண்டு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் ( ஜி.டி.பி.) 7.2 சதவீதம் வளர்ச்சியடைந்திருப்பதாகவும், இதுவொரு உலக சாதனை என்றும் மோடி கும்பல் தம்பட்டம் அடித்தபொழுது, ரகுராம் ராஜன், “குருடர்கள் தேசத்தில் ஒற்றைக் கண் உள்ளவன்தான் அரசன்” என நக்கலடித்து, மோடி கும்பலின் ஓட்டாண்டித்தனத்தை அம்பலப்படுத்தினார்.
இதுவொரு பொருளாதரப் புள்ளிவிவர மோசடி எனப் பல பொருளாதார நிபுணர்கள் மோடி அரசின் பித்தலாட்டத்தனத்தை அம்பலப்படுத்தியபொழுது, ரகுராம் ராஜன், “தனியொரு மனிதனின் வருமானத்தை எடுத்துக் கொண்டால், இந்தியா இன்னமும் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இருப்பதை உணர வேண்டும்” என்றார்.
சாட்டையடி போல விழுந்த ரகுராம் ராஜனின் நக்கலால் ஆத்திரப்பட்ட அருண் ஜெட்லியும், நிர்மலா சீதாராமனும், அவர் எல்லை மீறிப் பேசுவதாக எச்சரித்தபொழுது, ராஜன், “எனது வார்த்தைகளால் பார்வையற்றவர்கள் மனது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறி, பார்ப்பன பாசிச திமிர் பிடித்த ஆர்.எஸ்.எஸ். கும்பலை நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளினார்.
மோடியை வலிமையான தலைவர் என்றும், அவரது அரசு வலிமையான அரசு என்றும் பார்ப்பனக் கும்பல் கொண்டாடியபொழுது, “வலிமையான அரசுகள் மக்களுக்கு வளமையைத் தருவதில்லை” எனப் பதிலடி கொடுத்த ராஜன், அதற்கு இட்லரை உதாரணமாகக் காட்டி, “வலிமையான தலைவரான இட்லர் ஜெர்மனியைத் திறமையாகவும் உறுதியோடும் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றதோடு, சட்டத்தின் ஆட்சிக்கும் தேர்தலுக்கும் முடிவு கட்டியதை” நினைவூட்டினார்.
ஸ்டார்ட்-அப் இந்தியா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சகிப்புத்தன்மையும், கருத்து முரண்பாடுகளும் அவசியம் எனக் குறிப்பிட்ட ராஜன், “கருத்துக்களின் மோதலுக்கு இடம் இல்லையென்றால், பொருளாதாரம்கூடத் தேக்கம் அடைந்துவிடும்” எனக் கூறி, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து மதவெறித்தனத்தை இலைமறை காயாகக் குத்திக் காட்டினார்.
தரகு முதலாளிகள் வட்டியைக் குறைக்க வேண்டும் என விடாப்பிடியாக நிர்பந்தம் கொடுத்தபொழுது, “நாங்கள் யாருக்கும் தீபாவளி போனசு வழங்குவதில்லை” என அவர்களை வாரிய ராஜன், “இந்திய முதலாளிகள் சவால்களை எதிர்கொள்வதில்லை. நல்ல காலங்களில் இலாபத்தை அறுவடை செய்து கொள்ளும் அவர்கள், மோசமான தருணங்களில் வங்கிகளால் தூக்கிவிடப்படுகிறார்கள்” என உண்மையை உடைத்து, அவர்களின் ஒட்டுண்ணித்தனத்தை நாறடித்தார்.
பார்ப்பனக் கும்பலின் இரட்டை வேடம்
“அதிகார வர்க்கத்தை அரசியல் தலையீடின்றி, சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். திராவிடக் கட்சிகள் அப்படி அனுமதிக்காததால்தான் தமிழகம் குட்டிச் சுவராகிவிட்டதாக” அங்கலாய்த்துக் கொள்வதும் புலம்புவதும் பார்ப்பனக் கும்பலின் வழக்கம். அவர்களின் அளவுகோலின்படி ராஜன் அரசியல் தலையீட்டுக்கு அடிபணிய மறுத்தார்; சுதந்திரமாக முடிவுகளை எடுத்தார். ஆனால், பார்ப்பனக் கும்பலோ அப்படிச் செயல்பட்டவரை அநாகரிகமாகவும் பொறுக்கித்தனமாகவும் தாக்குகிறது. ராஜன் மட்டுமல்ல, தேர்தல் கமிசன், நீதிமன்றங்கள் போல அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கியும்கூட, மோடி அரசின் கைப்பாவையாக, இந்தியத் தரகு முதலாளிகளின் எடுபிடியாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் அக்கும்பலின் உள்நோக்கம்.
சப்-பிரைம் நெருக்கடியையடுத்து, தமது வங்கிச் சேமிப்புகளைத் திரும்பப் பெறுவதற்காக இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரிலுள்ள வங்கி வாசலில் காத்து நிற்கும் பொதுமக்கள். (கோப்புப்படம்)
குறிப்பாக, மைய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த ஏழு அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக் கமிட்டிதான் நாட்டின் பணக் கொள்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டதாக இயங்கி வருகிறது. எனினும், இக்கமிட்டி எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ராஜனைத் தனது வழிக்குக் கொண்டு வருவதில் மண்ணைக் கவ்விய மோடி கும்பல், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த ரத்து அதிகாரத்தையே ரத்து செய்ய முயன்றது.
ராஜன் தனியார்மயத்தை ஆதரிக்கும் பொருளாதார நிபுணர்தான். அவர் விதிகளின்படி விளையாடச் சொன்னார். அவ்வளவே. பாசிஸ்டுகளின் அதிகாரத்திற்கு எதிராக நின்று, உண்மையைத் துணிந்து கூறினார். மிக முக்கியமாக பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்புகளைக் காப்பதற்காக அவர் மோடி அரசை எதிர்த்து நின்றார். இவ்வாறு உண்மையைப் பேசுபவர்களையும், தம்மை எதிர்த்து நிற்பவர்களையும் பார்ப்பன பாசிசக் கும்பல் நேர்மையாகவோ, நாகரிகமாகவோ எதிர் கொண்டதில்லை என்பதற்கு நிகழ்கால வரலாற்றிலும், கடந்த கால வரலாற்றிலும் பல உதாரணங்கள் உண்டு.
ராஜன் ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் தோற்றுப் போய் வெளியேறவில்லை. தரகு முதலாளிகளின் கொள்ளைக்கு ஏதுவாக வங்கிப் பெட்டகத்தைத் திறந்து வைப்பதே அந்தக் கும்பலின் நோக்கம் என்ற உண்மையை பொதுவெளியில் அம்பலமாக்கி, எச்சரித்துவிட்டு பிறகுதான் முடிவை அறிவித்திருக்கிறார்.
“ராஜனைவிட வேறு திறமையான இந்தியர்கள் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பி, அவரைவிடத் திறமையான, நாணயமான நிபுணரை ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப் போவது போல சீன் போட்டு வருகிறது, ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஆனால், மோடி ஆட்சியில் மத்தியப் பல்கலைக்கழகங்கள், கல்வி, கலாச்சார, வரலாற்று ஆய்வு நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் பேர்வழிகளின் யோக்கியதையைப் பாரக்கும்போது, ரிசர்வ் வங்கியும், பொதுத்துறை வங்கிகளும் எத்தகைய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
சென்னை-வடபழனியிலுள்ள கமலா திரையரங்குக்குப் போனால், காலஞ்சென்ற அத்திரையரங்கின் உரிமையாளர் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், நடிகர் -நடிகையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை சுவரெங்கும் தொங்கவிட்டு, தன்னை அதிமுக்கியப் பிரமுகராக விளம்பரப்படுத்திக் கொண்டதை யாரும் பார்க்கலாம். அவருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, ஏதோ சர்வதேசத் தலைவராகிவிட்டதைப் போல காட்டிக் கொள்ளும் பிரதமர் மோடிக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.
அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் இணைய சீனா முட்டுக்கட்டை போடுவதாகவும், எனவே சீனப்பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டுமென்றும் டெல்லி – ஜந்தர்மந்தரில் இந்துசேனா நடத்தும் ஆர்ப்பாட்டம்.
ராவ் பகதூர், திவான் பகதூர் – என தனது விசுவாசக் கைக்கூலிகளுக்கு அன்று வெள்ளைக்காரன் பட்டம் கொடுத்ததைப் போல, மோடி கும்பலின் சுயவிளம்பர அற்பத்தனத்தைப் புரிந்து கொண்ட அமெரிக்க வல்லரசும், மோடியை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இணைந்த கூட்டத்தில் உரையாற்ற வைத்து, அதற்குப் பலத்த கைதட்டல் கொடுத்து வரவேற்று, மோடிக்குப் பிடித்த செல்பியை பல அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் நின்று எடுத்துக் கொள்ள வைத்துவிட்டு, காயலாங்கடைக்கு அனுப்ப வேண்டிய தனது 6 அணு உலைகளை ரூ.2.8 லட்சம் கோடிக்கு இந்தியாவின் தலையில் கட்டியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரலில் அமெரிக்க இராணுவத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர் இந்தியாவுக்கு வந்தபோது, இந்தியத் துறைமுகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்திக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (LEMOA) போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் போதெல்லாம், பதவி முடிவடையும் சமயத்தில் அதிபராக உள்ளவர் சர்வதேச அளவில் சில ஒப்பந்தங்களைப் போட்டு சாதனை புரிந்துவிட்டதாகக் காட்டிக் கொள்வதென்பது வாடிக்கை. இதன்படியே ஒபாமாவும், “அமெரிக்காவின் முக்கியமான இராணுவக் கூட்டாளி” என்ற தகுதியை இந்தியாவுக்கு அளித்து, “21-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள உலகக் கூட்டாளிகள் -1” எனும் தலைப்பிட்ட இந்திய – அமெரிக்கக் கூட்டறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளார். ஒபாமாவின் இந்த அறிக்கை இன்னும் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக, ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டுக் கூட்டமைப்பில் (MTCR) இந்தியா உறுப்பு நாடாக இணையவும், அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NSG) இந்தியா இணைவதற்கும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
இவற்றைக் காட்டி, மோடியின் ஆட்சியில் இந்தியா, அமெரிக்காவின் முதன்மை ராணுவக் கூட்டாளியாகிவிட்டதைப் போலவும், அமெரிக்க வல்லரசு தனது அரசியல்-ராணுவக் கூட்டாளியான பாகிஸ்தானை முற்றாக ஓரங்கட்டிவிட்டதைப் போலவும், இனி பாகிஸ்தானும் சீனாவும் வாலாட்ட முயற்சித்தால், அவற்றை நசுக்கத் தயாராக உள்ளதைப் போலவும் உதார்விட்டு மோடி கம்பெனி கூத்தாடியது. தன்னை துணிச்சலான பிரதமராகக் காட்டிக் கொள்ளும் நோக்கத்துடன் கடந்த ஏப்ரலில் இந்தியாவின் தர்மசாலாவில் சீன எதிர்ப்பாளர்கள் நடத்திய ஒரு கருத்தரங்கில் பங்கேற்க, சீனாவிலிருந்து பிரிவினை கோரும் உய்குர் பிராந்தியத்தின் தலைவர்களுள் ஒருவருக்கு மோடி அரசு விசா வழங்கி, சீனாவுக்குப் பதிலடி கொடுக்கத் துணிந்துவிட்டதாக மோடி கம்பெனி தண்டோரா போட்டது. பின்னர், விசா வழங்கிய மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா எச்சரிக்கை விடுத்ததும், நகரம் திரைப்படத்தில் உதார் விட்டு காலில் விழும் வடிவேலு காமெடியைப் போல, உடனே மோடி அந்தர் பல்டி அடித்து விசாவை ரத்து செய்துவிட்டார்.
சீன அதிபரை நேரில்சந்தித்து, அணுசக்தி விநிகிப்பாளர் குழுவில் இந்தியாவை இணைக்க ஆதரவு தருமாறு கோரும் மோடி.
அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NSG) இந்தியா இணைவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தாலும், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடுட்டுள்ள நாடுகள் மட்டுமே அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NSG)உறுப்பினராக முடியும். ஆனால், இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மேலும், அனைத்து நாடுகளும் ஒருமித்து ஆதரவளித்தால் மட்டுமே இக்குழுவில் ஒரு நாடு உறுப்பினராக முடியும். இதனால், இக்குழுவில் இந்தியா உறுப்பினராக வாய்ப்பே இல்லாதபோதிலும், அமெரிக்கா ஆதரவளித்து விட்டதால் இனி யாரும் தடுக்கவே முடியாது போலவும், இக்குழுவில் இணைவதன் மூலம் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக அமெரிக்கா அங்கீகரித்துவிட்டதைப் போலவும், இது மோடியினுடைய வெளியுறவுக் கொள்கையின் வெற்றியாகவும் மோடி கும்பல் கூசாமல் புளுகியது. அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NSG) இந்தியாவை இணைக்க சாத்தியமேயில்லை என்று தெரிந்திருந்தபோதிலும், கோயபல்சு ஊடகங்களைக் கையில் போட்டுக் கொண்டு ஏதோ மகத்தான சாதனை புரிந்துவிட்டதைப் போல இந்த நாடகத்தைத் திறமையாக நடத்தியது.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NPT) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததைக் காட்டி, 48 நாடுகள் கொண்ட இந்தக் குழுவில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதற்கு சீனா, நியூசிலாந்து, அயர்லாந்து உள்ளிட்டட சில நாடுகள் ஆட்சேபம் தெரிவித்தன. மேலும், இந்தியாவைச் சேர்ப்பதாக இருந்தால், இதேபோல விண்ணப்பித்துள்ள பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டுமென சீனா உள்ளிட்ட சில நாடுகள் கோருகின்றன. அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NPT) இந்தியா இணைவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதேயன்றி, இந்தியாவை அதில் உறுப்பினராக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக, மோடி அரசுதான் இக்குழுவிலுள்ள நாடுகளிடம் தன்னையும் உறுப்பினராக்கக் கெஞ்சிக் கொண்டிருந்தது. ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு கொடுத்தது என்பதைப் போலத்தான் இந்தக் காமெடியும் நடந்தது.
இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் சீனாவுக்குப் பறந்தார். ஆனால் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. உடனே தாஷ்கண்ட் நகரில் நடந்த ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபரை நேரில் சந்தித்து சலாம் போட்டு, ஜூன் 23 அன்று தென்கொரியத் தலைநகர் சியோலில் நடக்கும் அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவின் கூட்டத்தில் இந்தியாவை இணைக்க ஆதரவு தருமாறு மோடி கெஞ்சினார்.
ஆனால் அக்கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராக்கும் நிகழ்ச்சிநிரலே இல்லை. மேலும், சீனா உள்ளிட்ட 7நாடுகள் இந்தியாவை இணைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தன. இந்தியாவுடன் “பிரிக்” கூட்டமைப்பில் உள்ள பிரேசில்கூட இந்தியாவை ஆதரிக்கவில்லை. வாய்வழியாக ஆதரவு தெரிவித்த நாடுகளும் கூட்டத்தில் கைவிரித்துவிட்டன. ஆனாலும் குப்புற விழுந்தாலும்இன்னும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, இக்குழுவில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்த இக்குழுவின் உயர்நிலைக் கூட்டம் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கப் போகிறது என்று மீண்டும் இந்தக் கோமாளிக் கூத்தை மோடி கும்பலும் கோயபல்சு ஊடகங்களும் நடத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த குழுவில் சேர மோடி அரசு முட்டிமோதிய கூத்தை காங்கிரசு, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கேலி செய்து, இது மோடி அரசின் வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய தோல்வி என்று பரிகசிக்கின்றன. இதுவரை இந்தியா கண்டிராத அற்பத்தனமான சுயதம்பட்டக் கோமாளி என்று மோடிக்கு சிறப்பு விருது கொடுக்க வேண்டியதுதான் இனி பாக்கியிருக்கிறது.
இந்த அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் தோல்வியடைந்து விட்டன என்பதை முரசறைந்து கூறும் அளவுக்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன என்ற போதிலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிதான் இதற்குத் தலையாய சான்று. சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் “மூடு டாஸ்மாக்கை!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் கடைகளை மூடுவதற்கான போராட்டங்களை நடத்தியபோது, தேர்தல் நேரத்தில் அப்போராட்டங்கள் தேவையற்றவை என்று சிலர் எண்ணினர்.
படிப்படியாக கடையை மூடுவதாக வாக்குறுதியளித்த ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்தார். கடை திறந்திருக்கும் நேரத்தை இரண்டு மணி நேரத்தைக் குறைப்பதாக அறிவித்தார். அது பொய் என்பது அன்றைய தினமே அம்பலமானது. “தற்போது 500 கடைகளை மூடியிருப்பதாகச் சொல்வதும் பொய். மக்கள் கடுமையாகப் போராடிய இடங்களிலும், விற்பனையாகாத இடங்களிலும் சேர்த்து சுமார் 81 கடைகள் மட்டுமே மூடப்பட்டிருக்கின்றன” தினமலர் நாளேடு கூறுகிறது. டாஸ்மாக் கடைகள் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் வசூலிக்கும் அதிகார வர்க்கமும் போலீசும், தத்தம் வட்டாரத்தில் உள்ள கடைகள் மூடப்படுவதை எதிர்க்கிறார்கள் என்ற உண்மையையும் இந்தச் செய்தி அம்பலமாக்கியிருக்கிறது.
இனி மதுவிலக்கு கோரும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த தேர்தலுக்காக 5 ஆண்டுகள் காத்திருந்து, இன்னும் சில லட்சம் இளைஞர்கள் போதை அடிமைகளாக மாறுவதை வேடிக்கை பார்க்க வேண்டுமா? அல்லது சசி பெருமாளைப் போல நீதிமன்றத்தை நம்பி உயிர் துறக்க வேண்டுமா? மக்கள் நேரடியாக களத்தில் இறங்கி கடைகளை மூடுவது ஒன்றுதான் தீர்வு என்பதையே ஜெயலலிதாவின் ஒரு மாத கால ஆட்சி நமக்கு மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறது.
மாறாக, இது புதிய ஆட்சி போலவும், புதிய துவக்கம் போலவும், கடந்த 5 ஆண்டு அசிங்கங்கள் மற்றும் அராஜகங்களின் தொடர்ச்சி அல்ல என்பது போலவுமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த ஜெயலலிதாவின் ஊடக அடிமைகள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சிகளை கேலிக்குரியதாக்கும் வகையிலான நிகழ்வுகளை அ.தி.மு.க. அரசே அன்றாடம் அரங்கேற்றுகிறது.
தன்னுடைய ஊழல் நோக்கத்துக்காக தமிழகத்தின் மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கினை தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து, மின்வாரியத்தை மீளாக்கடனில் தள்ளியிருக்கும் ஜெ. அரசு, “தமிழ்நாடு மின் மிகை மாநிலமாகிவிட்டது” என்று பச்சையாகப் புளுகுகிறது. கூலிப்படை கொலைகளும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், கொள்ளைகளும் தமிழகமெங்கும் தலைவிரித்தாடுகின்றன. வினுப்பிரியா என்ற பெண்ணுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் கொடுக்கப்போன அவரது தந்தையிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு நடவடிக்கையும் எடுக்காத போலீசின் குற்ற நடத்தை காரணமாக அந்தப் பெண் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள். ஆனால், தனது தலைமையில் காவல்துறையின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்வதாக கூச்சமேயில்லாமல் பேசுகிறார் ஜெயலலிதா.
படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு மட்டுமல்ல, இந்த அரசு வாய்திறந்து பேசுவது அனைத்துமே பொய் என்று தெளிவாகத்தெரிகிறது. ஜெ. கும்பல் பொதுச்சொத்துகளையும் அரசுக் கருவூலத்தையும் கொள்ளையிட்டு, தமிழகத்தை நிதி நெருக்கடியிலும் கடனிலும் தள்ளியிருப்பதால், வரவிருக்கும் நாட்கள் இன்னும் கொடிதாக இருக்கும். இந்த அரசமைப்பில் நம்பிக்கை வைத்து முறையிட்டோ, அன்றி ஆட்சி மாற்றத்துக்காக காத்திருந்தோ, நீதி பெறுவது சாத்தியமில்லை என்ற உண்மையை, அ.தி.மு.க. ஆட்சி என்று அழைக்கப்படும் இந்தக் குற்றக்கும்பல், தனது சொந்த நடவடிக்கைகளின் மூலம் வெகு விரைவில் மக்களுக்குப் புரிய வைக்கும்.
_______________________________ புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________
பட்டினப்பாக்கம்-சீனிவாசபுரம் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் போராட்டம்
டாஸ்மாக் – தமிழக மக்களின் வாழ்வில் பற்றியெரியும் பிரச்சனை. அம்மாவின் ஐந்நூறு கடைகள் மூடும் நிகழ்வு இதன் சீற்றத்தை சிறிதளவும் குறைக்கவில்லை என்பதையே பெருகி வரும் குற்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டி வருகின்றன. அதற்கோர் எடுப்பான உதாரணம்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஆசிரியை நந்தினியின் மரணம் அல்லது அம்மா டாஸ்மாக்கின் மற்றுமோர் சாதனை.
அந்தி மறைந்து இருள் மெல்ல சூழத்துவங்கியிருந்தது, ஆசிரியை நந்தினி தன் சம்பள பணத்தை எடுத்து வர ஏடிஎம் சென்றிருந்தார் தன் சொந்த இருசக்கர வாகனத்தில்; துணைக்கு தோழி ஒருவரை அழைத்துக்கொண்டு. ஏ.டி.எம் செல்ல எதற்கு துணை? தமிழகத்தில் ஏ.டி.எம் மட்டுமல்ல பணமும், பள்ளி கல்லூரியும், குடி போதைக்கு அடிமையான ஆண்களும் அடங்கிய அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் இருப்பது விதி. அதுவும் கடல் சென்று மீன் பிடித்து கரை திரும்பும் உழைக்கும் மீனவர்கள் உழைப்பையும், அலுப்பையும், அவர்தம் இல்லக் களிப்பையும் அள்ளிச்செல்ல அமைந்திருந்தது அந்த டாஸ்மாக் கடை. இடம் பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம்.
பணம் எடுத்து திரும்புகையில் குடிவெறியால் கொள்ளையர்களாக்கப் பட்டவர்களின் கைகளில் பணமும், கால்களில் துரத்தி சென்ற ஆசிரியையின் வாகனமும் சிக்க ஆசிரியை நிலைகுலைந்து விழுந்ததில் அந்த இடத்திலேயே மரணமடைந்தார்; தோழி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பணத்துடன் தப்பியவர்கள் வழியில், குடிபோதை ஏறி இழந்துப்போன மதியில் முதியவர் ஒருவரையும் இடித்து உயிரைப் பறித்தனர்.
இந்த சம்பவங்களை கண்டும் காணாமல் கண்களை மூடிக்கொள்ள உழைக்கும் மக்கள் ஒன்றும் காக்கி உடை அணிந்திருக்கும் காவலர்கள் அல்ல. விரட்டி சென்று ஒரு திருடனைப் பிடித்து உடனடியாக தண்டனையும் கொடுக்கத்துவங்கினர். ஆனால் சட்டம்தான் தன் கடமையை செய்யவேண்டுமென்று காக்கி உடை அணிந்தவர்கள் அந்த திருடனை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். தப்பியவனை இன்னமும் தேடி வருகின்றனர்.
இம்மாதிரி குற்றங்கள் நடப்பது இது முதல் முறையுமல்ல; இந்த குற்றங்களுக்கு மூலகாரணம் ஓடிப்போனவனையொத்த திருடர்களும் அல்ல. கடந்த 2008-ம் ஆண்டு முதலே அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டாஸ்மாக்தான் என்கின்றனர் பகுதியை சார்ந்தவர்கள்.
21 வயதிலே டாஸ்மாக்கால் கணவனை பறிகொடுத்து, அடுத்தடுத்து அக்காமார்களின் கணவர்களையும் டாஸ்மாக்கிற்கு காவு கொடுத்து ஏராளமான இன்னல்களை அனுபவித்திருக்கும் ஆக்னஸ் என்ற பெண்மணிதான் 2008-லிருந்தே இந்த போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.
முதலில் அரசு பள்ளிக்கூடத்திற்கு மிக அருகாமையில் இருந்தது இந்த டாஸ்மாக் கடை. பொதுமக்கள் இந்தக்காரணத்தைக் அதிகமாக போராடி வரவே பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிட்டு டாஸ்மாக்கை அங்கேயே நடத்தி வருகிறது அரசு. மாணவர்களின் கல்வியை விட முக்கியமானது டாஸ்மாக் என்ற போதிலே மக்கள் உணர்ந்துக் கொண்டனர் இந்த அரசு யாருக்கானது என்று. அதே போதில் மக்களின் போராட்டம் முன்னைவிட பன்மடங்கு பெருக போலீசை நிரந்தரமாக டாஸ்மாக் வாசலில் குடியமர்த்தியது.
தினமும் காலையில் வேலைக்கு கிளம்பி வரும் போலீசு குடிகாரர்களை ஒழுங்குபடுத்தி கூட்டத்தை முறைப்படுத்தி அனைவருக்கும் சண்டை சச்சரவு இல்லாமல் சரக்கு கிடைப்பதையே தனது முழுநேரத்தொழிலாக கொண்டிருந்ததை பகுதி மக்கள் வெறுப்புடன் நம்மிடம் பகிர்ந்துக்கொண்டனர். நாள் ஆக, ஆக போலீசின் முறைப்படுத்துதலில் டாஸ்மாக் விற்பனையில் சென்னைப்பகுதியில் முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது அந்த டாஸ்மாக்.
அதன் வீறுநடையின் வேகத்தில் கொல்லப்பட்ட ஆசிரியை நந்தினியின் மரணம் பொதுமக்களை கிளர்ந்தெழ செய்துவிட்டது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு இன்னபிற குற்றங்களுக்கு காரணமான இந்த டாஸ்மாக் கடையை உடனே இழுத்து மூடவேண்டுமென களத்தில் குதித்து விட்டனர் பகுதிவாழ் உழைக்கும் மக்கள்.
நேற்றைய முன்தினம் (07-07-2016) இருவர் தீக்குளிக்கவும் முயன்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 08-08-2016 அன்று டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போராடியுள்ளனர். இம்முறை இவர்களுடன் களத்தில் மக்கள் அதிகாரமும், பெண்கள் விடுதலை முன்னணியும் கரம் கோர்த்துள்ளன. ஆசிரியை நந்தினியின் மறைவுக்கு மறுநாளிலிருந்து பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இன்று வரை கடை திறக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் நேற்றைய தினம் கடைக்கு பத்தடி தொலைவிலே நாற்காலி போட்டு அமர்ந்துக் கொண்டு, “முடிந்தால் கடையை திறந்து பார்” என கூறி பொதுமக்களுடன் ஆக்னஸ் அம்மா போராடியுள்ளார்.
அதே நேரத்தில் நான்கு அடுக்கு போலீசு பாதுகாப்பும், நான்கு அடுக்கு பேரிகாடு பாதுகாப்பும் கொடுத்து பொதுமக்களிடமிருந்து தன் பொக்கிசத்தை காத்துக்கொண்டுள்ளது ஜெயா அரசு. “கண்ணுக்கெதிரே கொலை நடந்திருப்பினும் கடையை மூடமாட்டோம் கடையை மூடவும் விடமாட்டோம்” என போலீசு மல்லுக் கட்டிக்கொண்டு நிற்க அவர்களை வீழ்த்தி எப்படியும் கடையை மூடியேக் காட்டுவோம் என்றவாறு மக்கள் எதிர்த்து நின்றுக் கொண்டுள்ளனர்.
எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆதரவளிக்காத நிலையில் மக்கள் அதிகாரமும், பெண்கள் விடுதலை முன்னணியும் இவர்களுடன் கரம் கோர்த்திருப்பதில் பெரிதும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளனர் இப்பகுதி மக்கள். ஆனால் மக்கள் அதிகாரம் இணைந்ததன் விளைவாக கூடுதலாக நான்கு பேருந்து போலீசை கொண்டு வந்து நிரப்பியுள்ளது போலீசு. அதோடு மக்கள் அதிகாரத்தின் போராட்ட பாணியை பற்றி போராடுவர்களிடையே கூறி பயமுறுத்த முனைந்துள்ளது. ஆனால் அதில் பயப்படாமல் உற்சாகமாகிப் போன உழைக்கும் மக்களோ மக்கள் அதிகாரத்துடன் இறுக பிணைந்துக்கொண்டுள்ளனர். இம்முறை எப்படியேனும் மூடியேத்தீருவோம் என்பதோடு மட்டுமல்லாமல் இல்லை என்றால் மூடியேக்காட்டுவோம் என்று அதிகாரத்தை கையிலெடுக்கவும் ஆயத்தமாகி வருகின்றனர்.
டாஸ்மாக் கடைக்குப் பக்கத்தில் பத்தடி தள்ளி வட்டமாக நாற்காலிகளை போட்டு மக்கள் அதிகாரம் மருது, பகுதி போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக்னஸ் அம்மா இன்னும் சில மக்கள் அதிகார, பகுதி வாழ் மக்கள் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். ஐந்தாம் நாளாக தொடரும் பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம் பகுதி உழைக்கும் மக்களின் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் காலை நேரக்காட்சி இது.
அதே வேளையில் கருவாடு விற்க சென்றுக் கொண்டிருப்பவர்களையும் கறாராக சோதித்து, டாஸ்மாக் கடையை சுற்றி ஐந்தடுக்கு பேரிகார்டு பாதுகாப்பு போட்டு, அதிரடிப்படையின் அணிவகுப்பை ஒழுங்குப்படுத்தி பொதுமக்களுக்கு எதிராக போர் தொடுக்க தொந்தி வயிற்றுக்கு தொடர்பில்லாத வேலைகளை செய்து கொண்டிருந்தது போலீசு.
மணி 9 ஐ கடந்தது. அறிவித்திருந்தபடி போராட்டம் துவங்கியது. சாவகாசமாக எழுந்து தங்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு அப்படியே போஸ்டர், முழக்கம் சகிதமாக டாஸ்மாக்கை நோக்கி நகர்ந்தனர் போராட்டக்குழுவினர். ஊரில் உள்ள ஒட்டுமொத்த பெண்களும் அவர்கள் பின் அணிதிரள மிரண்டு போன போலீசு தங்கள் கைகளையே சங்கிலியாக்கி போராடுபவர்களை தடுத்தி நிறுத்தியது.
இருப்பினும் தங்கள் கோரிக்கைகளை முழக்கமாக்கி அதை காற்றிலும், பல ஊடக நேரலை காணொளியிலும் பரப்பியவாறு இருந்தனர் போராடிய பொதுமக்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆக்னஸ் அம்மா, “இரண்டு உயிர் போன பிறகும், நான்கு நாட்களாக போராட்டம் நடத்திய போதும்கூட கடையைமூட அரசு தயாராக இல்லை. எத்தனை உயிர் போனாலும் அதைப் பற்றி துளி கூட கவலைப்படவில்லை. கடையை மூடும் வரை நாங்களும் விடப்போவதில்லை, மக்களுக்காக இருப்பதாகச் சொன்ன எந்த கட்சியும் எங்களுக்காக வரவில்லை. பெண்கள் நாங்கள் தொடர்ந்து உயிரைக் கொடுத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். துணிச்சல் இருந்தால் இங்கு வந்து போராட்டம் நடத்தி கடையை மூடுங்கள்” என்றார்.
மேலும், “மக்கள் உயிருக்கு, இந்த ஊரில் எந்த பாதுகாப்பும் இல்லை, ஆனால் ஊரை அழிக்கிற மதுக்கடைக்கு இத்தனை பாதுகாப்பு, நாங்கள் போராட்டம் நடத்தும் போது எங்களை கைது செய்தாலும் கூட நாங்கள் போராட்டத்தைக் கைவிடத் தயாராக இல்லை. இந்த தொடர்போராட்டம் தொடரும்” என்று முழங்கினார்.
ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க அனுமதித்ததையே தான் வழங்கும் அதிகபட்ச ஜனநாயகம் என்பதை உணர்த்தும் வகையில் காவல்துறை தன் கைவரிசையை காட்டத்துவங்கியது. போராடுபவர்களின் மன உறுதியை உரமாக்கி உறுதி படுத்தும் வண்ணம் தரதர வென இழுத்துச் சென்று கைது செய்யத் துவங்கியது போலீசு. ஓயமாட்டோம், அஞ்சமாட்டோம், இழுத்து மூடு டாஸ்மாக்கை போன்ற முழக்கங்கள் போராட்டக்காரர்களின் குரல்வளையிலிருந்து இடைவிடாது வெளிப்பட உடலோ கொடூரமாக தாக்கும் போலீசின் பிடிக்கெதிராக போராடி கொண்டிருந்தது. அடிதடி, தள்ளுமுள்ளு என்ற போலீசின் தாக்குதலின் முடிவில் ஆக்னஸ் அம்மாவை தவிர மற்ற அனைவரும் கைதாக்கப் பட்டனர்.
தாங்கள் எந்த தவறும் செய்யாதபோதும், தாங்கள் எந்த பொதுச்சொத்தையும் சேதப்படுத்தாதபோதும், தாங்கள் எந்த வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக நடந்துக் கொள்ளாதபோதும் போலீசு தங்களை கைது செய்வதை வன்மையாக கண்டித்து வண்டியில் ஏற மறுத்து சாலையிலே அமர்ந்து விட்டார். “எத்தன உசிரு போனாலும் அந்த அம்மாவுக்கு டாஸ்மாக் வருமானம்தான் முக்கியமா?” என்று கேள்வி எழுப்பி தன் எதிர்ப்பை தொடர்ந்து காட்டியவாறு சாலையில் அமர்ந்துவிட்டார்.
நெற்றியில் வியர்வையை வழித்துக்கொண்டு சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட போலீசு இம்முறை மூர்க்கத்தனமாக ஆக்னஸ் அம்மாவை அப்புறப்படுத்த முயன்றனர். பத்து பெண் போலீசார் பிடித்து இழுத்து தூக்கியதில் அந்த அம்மா அங்கேயே மயங்கி விழுந்தார். மயங்கியதை வெளியில் காட்டாமல் வாகனத்தில் கிடத்தி போராட்டக்களத்தை விட்டு விரைந்து வெளியேறி வெற்றிக்கொடி நாட்டிவிட்டோம் என நினைத்துக் கொண்டது போலீசு.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஆனால் ஆக்னஸ் அம்மா கைதான செய்தியறிந்த பொதுமக்களோ போராட்ட இடத்தை விட்டு வெளியேறாமல் நீண்ட நேரம் ஊடகங்கள் முன்னிலையில் போலீசாரின் இல்லாத தன்மானத்தை தட்டியெழுப்பி வெளிக்கொண்டு வரும் வகையில் அர்ச்சித்துக் கொண்டிருந்தனர். ஆக்னஸ் அம்மாவை விடுதலை செய்யவேண்டுமென்ற வேட்கை இருந்தாலும் முறையான ஒருங்கிணைப்போ, முறைப்படுத்தும் தலைமையோ இல்லாத காரணத்தால் அங்கேயே நீண்ட நேரம் நின்றுக் கொண்டிருந்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் வந்தது செல்ஃபி கூட்டம். கடைக்கு பத்தடி தூரத்திலேயே நின்று கொண்டு ஊடகங்களையும், போலீசையும் ஆள்விட்டு அழைத்தனர் பா.ஜ.கவினர். போராட்டத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத உடைகளை அணிந்துக்கொண்டு செயற்கை கொண்டை, முகப்பூச்சு, அலங்காரங்களுடன் அவாள்கள் சிலரும் அடுத்தடுத்த வர்ணங்களை சார்ந்த சிலரும் நின்றுக் கொண்டிருந்தனர்.
பா.ஜ.க-வின் செல்ஃபி போராட்டம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
கூடவே அழைத்து வந்திருப்பர் போல தினமலர் போன்ற பத்திரிகைகள் புதிதாக மைக்குடன் வந்து தள்ளுமுள்ளுவை ஏற்படுத்தியது. நமக்காக போராட வந்துள்ளனர் என நம்பி பகுதி மக்கள் அவர்களிடம் செல்ல சனாதன தர்மத்தினர் சத்தம் போட்டனர். “எதுவும் பேசக்கூடாது, பின்னாடி நில்லு, போய் உங்க ஆளுங்களை கூட்டிட்டு வந்து எங்க பின்னாடி நில்லுங்க” என அதட்ட துவங்கினர்.
தங்களுக்கே புரியாத வண்ணம் ‘போராட்டம் இது போராட்டம், பா.ஜ.கவின் போராட்டம்’ என முழக்கம் போட்டனர். வாய்தான் இதை சொல்லிக்கொண்டிருந்ததே தவிர உடலும், உள்ளமும் சுற்றி வளைத்து படம் பிடிக்கும் கேமிராவில் தங்கள் முகம் பதியவேண்டுமென்பதற்காக முன்னோக்கி, பின்னோக்கி, எட்டிப்பார்த்து, வளைந்து நெளிந்துக் கொண்டிருந்தது. பின்னர் போலீசு செல்லமாக கண்டிக்க அடுத்த ஓர் அடி கூட எடுத்து வைக்காமல் யூ டர்ன் அடித்து நிழலுக்கு ஒதுங்கினர்.
போராட்டம் நடத்தப்பட வேண்டிய டாஸ்மாக் பின்புறம் இருக்க புகைப்படம் எடுக்கும் ஊடகங்களை முன்புறம் வைத்துக்கொண்டு யாரும் எதிர்க்காமலேயே புறமுதுகிட்டு ஓடத்துவங்கினர். இப்போதுதான் பகுதி மக்களுக்கு புரிந்தது இவர்கள் போட்டோ எடுக்க வந்த குரூப் என்று. சற்றும் தாமதியாமல் இவர்களுடன் இருக்கையிலே சாலையில் அமர்ந்துவிட்டனர்.
இது ஏதடா வம்பாகிவிட்டது என சாலையில் அமர்ந்தவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களை எழுப்பி – போலீசு கத்துவதற்கு முன்பாகவே – சமாதானம் செய்து கடையை விட்டு ஐம்பதடி தள்ளி சென்று அடுத்தகட்ட அறிவிப்பான சாகும் வரை உண்ணாவிரதத்தை அறிவித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர் அரைக்காக்கியின் காவி வேட்டி பிரிவினர்.
அதற்கு பிறகும் அவர்களின் அட்டகாசம் தொடர்ந்தது மகளிர் அணியினருடன் செல்ஃபி, போராடும் மக்களுடன் செல்ஃபி என மோடியின் மானத்தை காப்பாற்றிவிட்டனர் காவிகள். அப்போது பரிதாபமாக, “அந்த அம்மாவ (ஆக்னஸ் அம்மா) விடச்சொல்லி சொல்லுங்கமா” என கேட்ட பகுதி மக்களிடம், “அதெல்லாம் சொல்லிட்டோம், சாயந்திரம் ஆறு மணிக்கு வந்துருவாங்க” என ஏறெடுத்தும் பார்க்காமல் எகத்தாளமாக சொல்லிவிட்டு தங்கள் கட்சிப்பணியில் கையில் ஆண்ட்ராய்டு கேமராவுடன் மூழ்கினர் பகுதி பா.ஜ.கவினர்.
ஆனால் உணமையில் ஆக்னஸ் அம்மாவை தவிர மற்றவர்களை மயிலாப்பூர் சமூக நலக்கூடத்திலும், ஆக்னஸ் அம்மாவை தனியாக E1 காவல் நிலையத்திலும் வைத்துள்ளது போலீசு. மக்கள் அதிகாரத்தை சார்ந்த ஒரு தோழருக்கு கைமூட்டு விலகிவிட்டிருந்தது. அவருக்கு மருத்துவம் பார்க்க கூட அனுமதி மறுத்துக்கொண்டிருந்தது போலீசு. ஆக்னஸ் அம்மாவை ரிமாண்ட் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.
வெட்ட வெட்ட வீரியமாக வளர்வதில் பொதுமக்களின் போர்க்குணமும், போராட்டத்தன்மையும் முதன்மையானது. அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு அணிதிரள்கிறது பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம் பகுதி. அவர்களின் குரல் சொல்வது இதையே, மீண்டும் தொடருவோம், மூடப்பட்ட கடை திறக்கப்பட்டால்! மீளாமல் தொடருவோம் பாதுகாப்பு அளிக்கப்பட்ட கடை நிரந்தரமாக மூடும் வரை!
நன்கொடை, கட்டணக் கொள்ளை வழியாகக் கிடைத்த கருப்புப் பணத்தைக் கொண்டு வளர்ந்து நிற்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.
தம் வாரிசுகளை மருத்துவர்களாக்கிப் பார்த்து விடுவதென்கிற லட்சியவெறியோடு வாழ்ந்துவரும் திடீர்ப் பணக்காரர்களும், அரசு உயரதிகாரிகளும் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எஸ்.ஆர்.எம். முதலாளி ‘பாரிவேந்தர்’ பச்சமுத்து தனக்கும் வேந்தர் மூவீஸ் மதனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்திருப்பதால், அடுத்த ஆண்டு தம் பிள்ளைக்கு மெடிக்கல் சீட் வாங்க யாரிடம் இலட்சங்களைக் கொடுப்பது என்பதே அவர்களுடைய கவலை.
இந்த ஆண்டு மதனிடம் துண்டு சீட்டு வாங்கியவர்களின் கதை கந்தலாகிவிட்டது. 102 பேரிடம் வாங்கிய பணத்தை வேந்தரிடம் ஒப்படைத்து விட்டதாகக் கடிதத்தில் எழுதியிருக்கிறார் மதன். பணம் கொடுத்தவர்கள் பச்சமுத்துவின் வீட்டு வாசலில் நின்று சத்தம் போடவே, அவர்களிடமிருந்து பாரி வேந்தரைக் காப்பாற்ற அவருடைய வீட்டுக்கு மட்டுமின்றி, தெருவுக்கே காவல் நிற்கிறது புரட்சித் தலைவியின் காவல்துறை. பாவத்தைத் தொலைப்பதற்கு காசிக்கு போவது என்பதற்குப் பதிலாகப் பணத்தைத் தொலைத்தவர்களெல்லாம் மதனைத் தேடி காசிக்குக் கிளம்பி விட்டார்கள்.
நன்கொடை, கட்டணக் கொள்ளை வழியாகக் கிடைத்த கருப்புப் பணத்தைக் கொண்டு வளர்ந்து நிற்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.
தனக்கும் வேந்தருக்குமிடையிலான கூட்டை விளக்கமாக விவரித்துள்ள மதன், கடந்த 8 ஆண்டுகளாகத் தன்னால்தான் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் இருக்கைகள் நிரம்பியது என்பதாகவும், அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர் பட்டியலை வேந்தருக்கு அனுப்பியிருப்பதாகவும் தனது ‘தலைமறைவு’க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய ஜனநாயகக் கட்சி பிகாரில் போட்டியிடுவதற்கும், தமிழகத்தில் பா.ஜ.க. மாநாட்டை பாரி வேந்தர் நடத்திக் கொடுத்ததற்கும் எங்கிருந்து பணம் வந்தது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார். வேந்தரின் பல்வேறு ’தொழில்’களுக்கு வலக்கரமும் இடக்கரமும் மதன் தான் என்பதை அவரது கடிதம் தெளிவாக்குகிறது.
“மதன் தற்போது எழுதியிருக்கும் கடிதத்தை நம்ப வேண்டாம்” என்றும், “வேந்தர் மூவீஸுக்கும் பாரி வேந்தருக்கும் தொடர்பில்லை” என்று சிறிது காலத்துக்கு முன்னர் மதனே வெளியிட்டிருக்கும் அறிக்கையை நம்புமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் பாரி வேந்தர் என்று கூறப்படும் பச்சமுத்து.
பச்சமுத்துவுக்கும் மதனுக்கும் இடையிலான உறவு என்ன என்பது புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் அளவுக்குக் கடினமானதல்ல. இந்த தொழிலின் நெளிவு சுளிவுகளை அறிந்தவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் தந்தையுமான பா.ம.க. ராமதாஸ், வேந்தரை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
“எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 2005-ஆம் ஆண்டு முதல் எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது? இதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளின் விடைத்தாட்கள், சேர்க்கப்பட்ட மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை வெளியிட பச்சமுத்து தயாரா?”
கல்விக் கொள்ளையன் பச்சமுத்துவின் ‘உண்மையை’ உடனுக்குடன் தரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி.
இந்த எளிய கேள்விக்கு ஒருக்காலும் பச்சமுத்துவால் பதிலளிக்க முடியாது. கல்வித் தகுதியோ திறமையோ இல்லாத ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல்வேறு முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்த திடீர் பணக்காரர்கள் போன்றோரின் குலக்கொழுந்துகளுக்கு எஞ்சினீயர் என்றும் டாக்டர் என்றும் பட்டம் கட்டி சமூகத்தில் இறக்கி விடுவதுதான் பச்சமுத்து போன்றோர் ஆற்றிவரும் சமூகத்தொண்டு. ஆம்னி பேருந்துகளுக்கு டிக்கெட் ஏற்றும் புரோக்கர்களைப் போல, சுயநிதிக் கல்லூரிகளுகளுக்கு மாணவர்களைச் சேர்த்து விடுவதையும் புரோக்கர்கள்தான் செய்கிறார்கள்.
மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி வழங்கும் தனியார் நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இவ்வாறான ஏஜெண்டுகள் தாம் முக்கிய பங்காற்றுகின்றனர் என்பது யாரும் அறியாத இரகசியம் அல்ல. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் வடநாட்டில் இருந்து ஆள் பிடிக்கும் ஏஜெண்டுகளிடையே நடந்த மோதல், கொலை வரை சென்ற விவகாரம் ஊடகங்களில் அம்பலமாகியுள்ளது.
தமது பிள்ளைகளுக்கு இடம் பிடிக்க பெற்றோர்கள் மதனைப் போன்ற ஏஜெண்டுகளிடம் இலட்சங்களையும், கோடிகளையும் கொட்டித் துண்டுச் சீட்டு வாங்குவதும், அந்தத் துண்டுச் சீட்டின் அடிப்படையில் கல்லூரியில் இடங்களைப் பிடிப்பதும் எல்லோரும் அறிந்த உண்மைகள் தாம். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரியல் எஸ்டேட் தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டிருந்த மதன், தனது ‘தொழிலின்’ இன்னொரு பகுதியாக கல்லூரிகளுக்கு மாணவர்களைப் பிடித்துக் கொடுக்கும் ஏஜெண்டாக செயல்பட்டு வந்திருக்கிறார். சீட்டுகளை நிரப்பும் கலையில் மதன் கைதேர்ந்தவராக இருந்த காரணத்தினால்தான் பச்சமுத்து தன் இதயத்திலேயே அவருக்கு சீட்டு போட்டுக் கொடுத்திருக்கிறார்.
ஜூன் 2013-இல் மருத்துவ மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பச்சமுத்துவின் வீடு, மகன்கள், மருமகன்களின் வீடு, கல்லூரிகள், வேந்தர் மூவிஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ‘’அது கல்லூரியே அல்ல, மீன் மார்க்கெட். ஒவ்வொரு கோர்ஸையும் கூவிக்கூவி விற்கிறார்கள்” என்று அன்றைய நாளேடுகளில் பெற்றோர்கள் பலர் காறி உமிழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் திருவாளர் பச்சமுத்துவோ, “எங்கள் கட்டணங்கள் வங்கி மூலம் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன. பணமாக எந்தத் தொகையும் வசூலிக்கப்படுவதில்லை. எஸ்.ஆர்.எம். கல்லூரி பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, என்னைப்போல் கையெழுத்திட்டு மதன் மோசடி செய்துள்ளார். இந்த மோசடியில் இருந்து தப்பிக்கவே மதன் தற்போது தற்கொலை நாடகம் ஆடுகிறார்” என்று ஒரு அறிக்கை விட்டு, அதை உலகம் நம்பிவிடும் என்று எதிர்பார்க்கிறார்.
தமிழகத்தின் மூ…த்த பத்திரிகையாளரான மாலன்தான் கருப்புப்பண கிரிமினல் பேர்வழியான பச்சமுத்து நடத்தும் புதிய தலைமுறை வாராந்திர பத்திரிகையின் ஆசிரியர்.
“எங்கள் கல்வி நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி, முறைகேடான முறையில் அப்பாவி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களையும் ஏமாற்றி சுமார் பல கோடி ரூபாய் பெற்றுள்ளார். அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், கட்சியிலிருந்து கடந்த 25.2.2016 அன்றிலிருந்து விலக்கப்பட்டு விட்டார்” என்கிறார் பச்சமுத்து.
மதனுக்கும், எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறும் பச்சமுத்து, எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பணம் ரூ.200 கோடியை மதன் மோசடி செய்துவிட்டதாக புகார் செய்திருக்கிறாரே, அந்த ரூ.200 கோடி பணம் எங்கிருந்து வந்தது? பிப்ரவரி 25-ஆம் தேதிக்குப் பின்னர்தான் அத்தனை பணமும் மதனால் வசூலிக்கப்பட்டதா? இப்படியொரு மோசடியில் ஈடுபட்ட காரணத்துக்காகத்தான் மதன் நீக்கப்பட்டார் என்றால், அதனை அன்றைக்கே பகிரங்கமாக அறிவிக்காதது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கு பச்சமுத்துவால் ஒருபோதும் பதிலளிக்க முடியாது.
***
மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட 22 கல்வி நிறுவனங்கள் கொண்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காட்டாங்கொளத்தூரில் ஏரிகளையும், புறம்போக்கையும் வளைத்து 250 ஏக்கர் பரப்பளவில் வளைக்கப்பட்டிருக்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகம், டில்லி, அரியானா, சிக்கிம், இலங்கை என விரிந்திருக்கும் கிளைகள், 500-க்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம். ஆம்னி பேருந்துகள், கருப்புப் பணத்தைப் புரட்டுவதற்குத் தோதாக வேந்தர் மூவீஸ் – என விரிந்துள்ளது பச்சமுத்துவின் சாம்ராச்சியம். பா.ம.க. ராமதாசின் கணக்குப்படி, இந்த சாம்ராச்சியத்தின் மதிப்பு ரூ.20,000 கோடி. இந்த சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி, விரிவுபடுத்திக் கொள்ள இந்திய ஜனநாயகக் கட்சி.
பாரி வேந்தர் என்ற பச்சமுத்துவின் வலது, இடது கரமாக இருந்த மதன்.
கடந்த இருபது ஆண்டுகளில் தனியார்மயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதற்குப் பின்னால் தங்களது கள்ளப்பணம் அல்லது கருப்புப் பணத்தை முடக்குவதற்கும் பெருக்குவதற்கும், யாரும் நெருங்கி விட முடியாத சில சுவிஸ் வங்கிகளை இந்த திடீர்ப் பண முதலைகள் உள்நாட்டிலேயே உருவாக்கியிருக்கிறார்கள். மடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஆகியவைதான் அத்தகைய சுவிஸ் வங்கிகள்.
பிறக்கும்போதே வாயில் சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர் வேந்தர். அதாவது, கல்விக் கொள்ளையைத் தொடங்கும்போதே அதனை எதிர்த்து யாரும் குரல் எழுப்பத் தயங்கும் வண்ணம் புதிய தலைமுறை தொலைக்காட்சியையும் களத்தில் இறக்கியவர். மதன் பச்சமுத்துவின் வணிகத்துக்கு அடியாள் என்றால், புதிய தலைமுறை என்பது கருத்துலகின் அடியாள். அந்தத் தொலைக்காட்சி ஊழலில் ஈடுபட்டுக்கொண்டே நல்லொழுக்கம் பேசுவதை, ஒரு நுண்கலையாகவே வளர்த்து, அதற்கு நடுத்தர வர்க்கத்தை ரசிகர்களாகவும் ஆக்கியிருக்கிறது.
மதன் விவகாரம் வெடித்தவுடன், நல்லொழுக்கத்தின் உறைவிடமாக நடுத்தர வர்க்கத்தினரால் நம்பப்படுகின்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதலாளி பச்சமுத்துவா இப்படி என்று அதிர்ச்சியுற்றவர்கள் எத்தனை பேர்? தரமான கல்வி நிறுவனமாகத் தன்னைக் காட்டிக்கொண்ட எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியிலா 62 இலட்சம் ரூபாய்க்கு மெடிக்கல் சீட் விற்கப்பட்டது என்று கொதித்து எழுந்தவர்கள் எத்தனை பேர்?
2013-இல் பச்சமுத்துவின் வீடு, கல்லூரிகள், வேந்தர் மூவிஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. அச்சமயத்தில், ‘’அது கல்லூரியே அல்ல, மீன் மார்க்கெட். ஒவ்வொரு கோர்ஸையும் கூவிக்கூவி விற்கிறார்கள்” என்று அன்றைய நாளேடுகளில் பெற்றோர்கள் பலர் காறி உமிழ்ந்தார்கள்.
மதன் வழியாக வேந்தருக்குப் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள்தான் கொதித்து எழுந்தார்களேயன்றி, மருத்துவக் கல்வியின் தரம் வீழ்ந்துபட்டதே என்று யாரும் கொதித்தெழவில்லை. கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தை வாங்கிக் கொண்டு டாக்டர் பட்டத்தை விற்பனை செய்த பச்சமுத்துவை எந்தக் கட்சியும் (பா.ம.க. தனது சொந்த நோக்கத்துக்காகக் குற்றம் சாட்டியதைத் தவிர) குற்றம் சாட்டவில்லை. இட ஒதுக்கீட்டினால் மருத்துவக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைவது குறித்து அங்கலாய்க்கும் அவாள்கள் யாரும் இவாளைப் பற்றி மூச்சு விடவில்லை. ஊடக உலகில் புதிய தலைமுறையின் போட்டி தொலைக்காட்சிகளும் கூட, பச்சமுத்துவைத் தீண்டவில்லை. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மட்டும்தான் குமுறினர். அவர்கள் யாரும் மதன் வீட்டைத் தேடிப் போகவில்லை, பச்சமுத்து வீட்டு வாசலில்தான் குவிந்தனர்; என்ற போதிலும் பச்சமுத்துவின் மீது போலீசு வழக்கு பதிவு செய்யவில்லை, கைது செய்யவுமில்லை.
இதற்கெல்லாம் என்ன பொருள்? நடுத்தர வர்க்கம் அதிர்ச்சியடையும்படி எதுவும் நடந்துவிடவில்லை என்பதுதான் பொருள். மருத்துவப் படிப்பு விற்கப்படுவது நடுத்தர வர்க்கத்துக்குத் தெரியும். அது அவர்களுக்குப் பிரச்சினையில்லை. கல்வியோ, மருத்துவமோ, குடி தண்ணீரோ காசு கொடுத்து வாங்குவதில் தவறில்லை; ஆனால், அது தரமாக இருக்கவேண்டும், தங்களுக்குக் கட்டுப்படியாகிற விலையில் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கவலை. ஏழைகளுக்கு அது கட்டுப்படியாகாதே என்பது குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை. உயர்நிலைப் பள்ளி முதல் மெடிக்கல் சீட் வரை இட ஒதுக்கீடு காரணமாகத் தரம் வீழ்ச்சியடைவது மட்டும்தான் பார்ப்பன ‘உயர்’சாதியினரின் கவலையேயன்றி, பணத்தினால் தரம் வீழ்ச்சியடைவது பற்றியோ, அறம் வீழ்ச்சியடைவது பற்றியோ அவர்களுக்குக் கவலை இல்லை.
பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி பாரதிய ஜனதாவின் உறுதியான கூட்டாளியாகையால், வியாபம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் என்ன நடந்து வருகிறதோ, அதுதான் மதனுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது
கட்சிகள் இந்த விவகாரத்தைப் பேசாமலிருக்க காரணம், கல்வி வள்ளல்கள் எல்லா கட்சிகளிலும் நிறைந்திருக்கிறார்கள் என்பதுதான். வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகளைப் போன்றோர், தொலைக்காட்சி ஸ்டுடியோ விளக்கொளியில்தான் உயிர் தரித்திருக்கின்றனர் என்பதால், அவர்கள் பச்சமுத்துவை விமரிசிப்பது என்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதில்லை.
மற்றபடி, அ.தி.மு.க. அரசு பச்சமுத்துவைப் பாதுகாப்பது குறித்து நாம் வியப்படைய ஏதுமில்லை. அமைச்சர்களும், அல்லக்கை அதிகாரிகளுமே யோசிக்க முடியாத கோணத்திலிருந்தெல்லாம் ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுப்பது, ஜெயலலிதாவுக்கு எதிரான குறிப்பான குற்றச்சாட்டுகள் வரும்போதெல்லாம் அவற்றைப் பொதுவான தத்துவஞான பிரச்சினையாக மாற்றி, நடுநிலையில் நின்று அம்மாவுக்குச் சொம்படிப்பது, தமிழகத்தின் பொதுவெளியில் வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்த பார்ப்பனிய சிந்தனையையும் நபர்களையும் குளிப்பாட்டி நடுவீட்டில் அமரவைத்து, அவர்களை மதிக்கத்தக்கவர்களாக மாற்றுவது போன்ற நயமான நடவடிக்கைகள் காரணமாகவும், உரியவர்களுக்கு உரிய முறையில் சீட் ஒதுக்கித் தரும் பச்சையான நடவடிக்கைகள் காரணமாகவும் பச்சமுத்து ஜெயா அரசால் பாதுகாக்கப்படுகிறார்.
அச்சு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளோ இப்படி ஒரு பிரச்சினை நடந்தது போலவே காட்டிக் கொள்ளாமல் தொழில் தருமம் காத்து வருகின்றன. சாதிக்கட்டுப்பாட்டை விட உறுதியான கட்டுப்பாடு இது. போலியான ஆவேசம் காட்டிய ஊடகங்களும், “மதனின் கள்ளக்காதல் தொடர்புகள், நடிகைகளுடனான கிசுகிசுக்கள்” என்று பிரச்சினையைக் கிளுகிளுப்பான திசைக்கு மாற்றிவிட்டன.
மதன் தலைமறைவு என்ற செய்தியே பொய்யானது என்றும், அவர் கொல்லப்பட்டிருக்க கூடும் என்றும் ஒரு செய்தி உலவுகிறது. பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, பாரதிய ஜனதாவின் உறுதியான கூட்டாளியாகையால், வியாபம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் என்ன நடந்து வருகிறதோ அதுதான் மதனுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது.
ரவுடிகள் வள்ளல்கள் ஆவதைப் போல, பச்சமுத்து கருப்புப் பணம் சேர்ந்தவுடன் பாரி வேந்தர் ஆனால்.
மதன், கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு பாரி வேந்தருக்குப் பயன்பட்ட ஒரு அடியாள். தொழில் முறையில் பார்த்தால் வேண்டியபடி காரியத்தை முடித்துக் கொடுக்கும் ஒரு தரகன். இதே வேலையைக் கருத்துலகில் செய்வதற்கு, அதாவது ஒழுக்கக்கேட்டை ஒழுக்கமாகச் சித்தரிப்பது, திருட்டைத் திறமையாக காட்டுவது, விவாதத்தில் உள்ள பிரச்சினையின் மையப்பொருளைத் திசை திருப்புவது போன்ற கருப்பை வெள்ளையாகக் காட்டும் வேலைகளைச் செய்வதற்குத்தான் கொழுத்த ஊதியத்தில் அறிவுத்துறை அடியாட்களைத் தமது ஊடகங்களில் நியமித்திருக்கிறார் வேந்தர்.
இந்த ஊடக அடியாட்கள் கழுத்தில் தாம்புக்கயிறு சங்கிலியும் பிரேஸ்லெட்டும் அணிந்து, மதனைப் போல ஆபாசமாகத் தோன்றுவதில்லை. மதனிடம் பணம் கொடுத்து துண்டு சீட்டில் ரசீது வாங்கி வந்த அறவுணர்ச்சிமிக்க, யோக்கிய நடுத்தர வர்க்கத்தினரைப் போலத் தோற்றம் தருகிறார்கள். அந்த வர்க்கத்தின் அசட்டுத்தனமான அறச்சீற்றத்தையும், சாமர்த்தியமான இரட்டை வேடத்தையும் அறிவுபூர்வமான மொழிக்கு மாற்றி விவாதம் நடத்துகிறார்கள்.
இந்த நெறியாளர்கள் தங்களுடைய வாய் சாமர்த்தியத்தின் மூலம் ஜெயலலிதாவின் கண்டெயினரையே மறைக்கும் மாஜிக் நிபுணர்கள். தரகனின் முதல் தகுதியே வாய் சாமர்த்தியம்தானே ! மதனும்கூட சாமர்த்தியசாலிதான். ஆந்திராக்காரனையும், அசாம்காரனையும் ஒரு துண்டு சீட்டை நம்பி 62 இலட்சத்தை கொடுக்க வைத்திருக்கிறாரே! அப்படிப்பார்த்தால் அவரை விடத் திறமைசாலிகள் ஊடக அடியாட்கள். 62 இலட்சத்துக்கு மெடிக்கல் சீட்டை விற்பனை செய்யும் ஒரு நபரை யோக்கியன் என்றும், அவருக்கு யோக்கியப் பட்டம் கொடுக்கும் தங்களை நடுநிலையாளர்கள் என்றும் மக்களை நம்ப வைத்திருக்கிறார்களே!
***
குறிப்பு:
இக்கட்டுரை அச்சுக்குப் போகும்போது மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, சத்யசாயி மருத்துவக் கல்லூரி போன்ற நிறுவனங்களில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறையினர், சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் கைப்பற்றியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் “நீட்” தேர்வு உத்தரவு காரணமாக மெடிக்கல் சீட் கிடைக்காத மாணவனின் தந்தை ஒருவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு நிர்வாகத்திடம் கேட்டு, பணம் கிடைக்காத காரணத்தினால் புகார் செய்ததைத் தொடர்ந்துதான் இந்த ரெய்டு நடந்திருப்பதாகச் செய்தி கூறுகிறது.
எஸ்.ஆர்.எம். மெடிக்கல் சீட்டுக்குப் பணம் கொடுத்து ஏமாந்ததாக அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதன்படி பச்சமுத்துவின் வீட்டில் தொடங்கி கல்லூரி, தொலைக்காட்சி உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ரெய்டு நடந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதிலிருந்தே தெரியவில்லையா, வேந்தர் ரொம்ம்ம்ப நல்லவர் என்று!
“நீதிமன்ற பாசிசத்துக்கு எதிரான வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரிப்போம். கருப்புச் சட்டங்களை வீழ்த்துவோம்!” என்கிற தலைப்பின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களின் சார்பாக, பூந்தமல்லி அருகிலுள்ள குமணன் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில்.,
“தமிழகத்தில் நடைபெற்றுவரும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்திருக்ககூடும். இருந்தபோதிலும், வழக்கறிஞர்கள் போராடுவது சரியா? தவறா? என்பன போன்ற பல கருத்துக்கள் மக்கள் மனதில் நிலவிவருகிறது. அவற்றிற்கு விடை அளிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமையும்.
தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராடுகிறார்களே! அவர்களுடைய கோரிக்கைதான் என்ன? உயர்நீதிமன்றம் கொண்டு வந்திருக்கும் வழக்கறிஞர் சட்டப்பிரிவு 34(1)-ல் சட்டத்திருத்தத்தை திரும்பபெற வேண்டும் என்பதுதான் வழக்கறிஞர்களுடைய போராட்டத்துக்கான காரணம். உயர்நீதிமன்றம் கொண்டுவந்துள்ள சட்டதிருத்தம் என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் வழக்கறிஞர்களுடைய போராட்டம் சரியா? தவறா? என்பதை கண்டறிய முடியும்.
சட்டத் திருத்தத்தின் வாயிலாக சொல்லக்கூடிய விஷயங்கள் என்ன என்று பார்த்தால்…
நீதிபதிகள் பெயரை பயன்படுத்தி வழக்கு தொடுப்பவரிடம் பணம் வசூலிக்க கூடாது!
நீதிபதிகளை தரக்குறைவாக பேசக்கூடாது!
ஆதாரமில்லாமல் நீதிபதிகள் குறித்து அவர்களது உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பக்கூடாது!
நீதிமன்ற ஆவணங்களை திருத்தக் கூடாது!
நீதிபதிகளை கெரோ செய்யக்கூடாது!
நீதிமன்ற வளாகத்திற்குள் முழக்க அட்டை பிடிக்கவோ, ஊர்வலமாக செல்வதோ கூடாது!
குடித்துவிட்டு நீதிமன்றத்திற்குள் வரக்கூடாது!
மேற்கண்ட செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் வழக்காடும் உரிமையை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பறிக்கின்ற அதிகாரம் நீதிபதிகளிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஜனநாயக உரிமைகளுக்காக போராடுபவர்களையும், குடிகாரர்களையும் ஒன்றுசேர்த்து பார்க்கமுடியுமா? வழக்கறிஞர்களின் போராட்ட குணம் என்பது புதிதல்ல. மிகப் மிகப் பாரம்பரியமானது. காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழ இனப்படுகொலை, என பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக 2009-ல் இந்திய அரசின் துணையோடு சிங்கள இராணுவம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்தபோது தமிழகமே கொந்தளித்தது. அப்போது இந்திய அரசை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியவர்கள் தமிழக வழக்கறிஞர்கள். அந்தப் போராட்டத்தை முறியடிக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையையும் நாம் மறந்து விட முடியாது. வழக்கறிஞர் போராட்டம் வலுவடைவதைக் கண்டு, போலிசை ஏவி ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது தமிழக அரசு. அந்த காலகட்டத்திலும் வழக்கறிஞர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். அதே அடிப்படையில் தான் இப்போதும் வழக்கறிஞர்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறோம்” என ஆர்ப்பாட்டத்தின் பின்னணியை விளக்கினார்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தனது உரையில்,
மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் ஆர்ப்பாட்ட உரை
“வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு 34(1)-ல் திருத்தம் செய்துள்ளதன் மூலம் வழக்கறிஞர்களின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளது. 18 பட்டி நாட்டாமைகளைப்போல நடந்து கொள்கின்றனர் நீதிபதிகள். இதுதான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படுகிற நீதிமன்றத்தின் நடவடிக்கை. வழக்கறிஞர் தவறு செய்தால் பார் கவுன்சில் தான் முன்னர் நடவடிக்கை எடுக்கும். பார் கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து தற்போது நீதிபதிகளே இதைக் கையிலெடுத்துள்ளனர். புகார் கொடுப்பது நீதிபதி விசாரிப்பது நீதிபதி. தண்டனையளிப்பதும் நீதிபதி. இது தான் அவர்களின் ஜனநாயகம்! என்ன ஜனநாயகம் இது? இது ஜனநாயக நாடா?
மன்னராட்சி போல உள்ளது. கேள்விக்குறி போல் முதுகு வளைந்து கிடக்கும் ஜெயா அமைச்சர்களைப் வழக்கறிஞர்கள் இருக்க வேண்டுமென நீதிபதிகள் கருகிறார்கள்.
ரயில் மறியல், உண்ணாவிரதம், நீதிமன்ற புறக்கணிப்பு என தொடர்ந்து வழக்கறிஞர் போராட்டம் நடத்திய பின்னர், இப்போது வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கிறார்கள் நீதிபதிகள். சட்டத்திருத்தத்தின்படி நடவடிக்கை எடுக்க மாட்டார்களாம். 05 நீதிபதிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு நடத்துவார்களாம். முதலில் சட்டத்திருத்ததை திரும்பப் பெறு பின்னர் பேசலாம் என்கிறார்கள், வழக்கறிஞர்கள். அரசாணை வெளியிடப்பட்டபின் நடவடிக்கை எடுக்க மாட்டோம் எனக் கூறுவது ஏமாற்று வேலை. இது ஒரு ஜனநாயகப் படுகொலை.
நீதிபதிகள் யோக்கியமானவர்களா?
குடித்துவிட்டு வழக்காடக்கூடாது என்கிறார்களே, இப்படிச் செய்பவர்கள் யாரென்று தெரியாதா? அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா?
நீதிபதிகள் என்ன உத்தமர்களா? கடவுள் தான் பெரிய சக்தி என்கிறார்களே அதுக்கும் மேலேயா?
அயோக்கியத்தனத்தில் ஈடுபடுபவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், நீதிபதிகள் என் ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டுகள் இருந்தும் அதன் மீதான நடவடிக்கை இல்லை. தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் நீதிபதியே புகார் கொடுத்துள்ளார்.
நிதி கொடுத்தால் நீதி கிடைக்கும் என்பது தமிழகத்தில் பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்படவில்லையா? வரலாற்றுப் புகழ் பெற்ற ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் “ தனி நபர் சொத்து சேர்ப்பது தவறா?” என கேட்கவில்லையா? “மாருதி தொழிலாளர் போராட்டம், இந்தியாவுக்கு அவமானம்” என ஒரு நீதிபதி கூறவில்லையா? உச்சநீதிமன்ற நீதிபதிகள் 14 பேர் லஞ்சம் வாங்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் சாந்திபூஷன் வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்தாரே? இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதா? வைகுண்டராஜன், பிஆர்பி போன்றோர், தமிழக கணிம வளங்களை கொள்ளையடிக்க துணை போனவர்கள் அல்லவா இந்த நீதிபதிகள்?
ஜே.என்.யு மாணவர் தலைவர் கன்னையா குமார் பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாலும், ஆர்.எஸ்.எஸ் குண்டர்களாலும் தாக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்தவர்களல்லவா இவர்கள். இவர்கள் தான் கோர்ட்டுக்குள் கொடி பிடிக்கக்கூடாது, கோஷம் போடக்கூடாது என உத்தரவிடுகிறார்கள். 10 பெண்களை அரைகுறை ஆடையுடன் நடனமாட வைத்து பார்த்து ரசிக்கிறார்கள் நீதிபதிகள் என பெண் வழக்கறிஞர்கள் புகார் கொடுத்தார்களே? அதன் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்களா? இந்த அயோக்கியர்கள் தான் தன்னை பற்றி பேசக்கூடாது என்கிறார்கள்.
தமிழக வழக்கறிஞர்கள் மீதான வன்மம் என்ன?
மறுகாலனியாக்க நடவடிக்கைகள மிகத் தீவிரமாக செய்து வருகிறார் மோடி. 8 துறைகளில் 100% அந்நிய மூலதனத்துக்கு அனுமதியளித்துள்ளது மோடி அரசு. இதை எதிர்த்துமக்கள் போராடக்கூடாது என்பதற்காக இந்து மதவெறியை தூண்டுகிறது. சமஸ்கிருதமயமாக்கத்துக்கெதிரான போராட்டம், தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென்ற போராட்டம், ஈழ இனப்படுக்கொலைக்கெதிரான போராட்டம், சர்வதேச சமூகம் தலையிட வேண்டும், ஐ.நா தலையிட வேண்டுமென்றெல்லாம் தமிழக கட்சிகள் / அமைப்புகள் பேசிக்கொண்டிருந்த போது ராஜபக்சேவை தண்டிக்க நூரம்பர்க் போன்ற விசாரணை நடத்த வேண்டுமென குரல் கொடுத்தவர்கள் தமிழக வழக்கறிஞர்கள். அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்காகவும் போராடியவர்கள் தமிழக வழக்கறிஞர்கள். இது அரசியல் ரீதியானப் போராட்டம். தமிழகக் காவல்துறையின் ஒடுக்குமுறைக்கெதிராக முன்வரிசையில் நிற்பவர்கள் வழக்கறிஞர்கள்.
மிகச் சமீபத்தில் ஆந்திராவில் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் இணைந்து தான் போராடினார்கள். இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் தமிழக வழக்கறிஞர்கள் நடத்துவதைப்போல அரசியல் ரீதியான போராட்டங்கள் வழக்கறிஞர்கள் நடத்துவதில்லை. மற்ற மாநிலங்களில் நீதிபதிகள் – காவல்துறை – வழக்கறிஞர்கள் இந்த முக்கூட்டணியில் தான் தீர்ப்புகள் எழுதப்படுகிறது.
பு.ஜ.தொ.மு ஏன் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறது?
எங்களுக்கும் நீதிபதிகளுக்கும் தனிப்பட்ட முரண்பாடா? அல்லது எங்களது தொழிற்சங்க ரீதியான வழக்குகளில் நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டர்கள் என்பதற்காகவா?
இல்லை.
எந்த வர்க்கம் ஒடுக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பது எங்களது கடமை. இந்த பாசிசத்தாக்குதலுக்கு எதிராக மட்டுமல்ல, இந்துமயமாக்கலுக்கு எதிராகவும், தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகளினால் உழைக்கும் மக்கள் சுரண்டப்படும் போதும் அதற்கெதிராக குரல் கொடுப்பதும், களத்தில் நின்று போராடி வீழ்த்துவதும் ஒரு புரட்சிகர அமைப்பின் பணி என்ற வகையிலே தான் வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.
காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா நன்றியுரை
இந்த அரசுக் கட்டமைப்பு ஆளத்தகுதியிழந்து தோற்றுபோய் விட்டது. இனிமேலும் இந்த அரசமைப்புக்குள்ளேயே நின்று இதற்கு தீர்வு தேட முடியாது. மக்கள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது தான் தீர்வு. தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்கவும் அதிகாரமுள்ள மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அப்படி ஒரு அமைப்பை நிறுவும்போது நீதிமன்ற சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்ட முடியும். அதற்காக உழைக்கும் மக்கள் ஓரணியில் திரள வேண்டும்” என்று அறைகூவினார்.
இறுதியாக, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், ஆர்ப்பாட்டத்தையொட்டி பிரச்சாரம் செய்த தோழர்களுக்கும், ஒளி, ஒலி அமைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நிறைவு செய்தார்.
ஆர்ப்பாட்ட முழக்கம்
ஆதரிப்போம் ஆதரிப்போம்!
நீதிமன்ற பாசிசத்துக்கெதிரான
வழக்கறிஞர் போராட்டத்தை
ஆதரிப்போம் ஆதரிப்போம்!
நீதிபதிகளை ஆண்டைகளாகவும்
வழக்கறிஞர்களை அடிமைகளாகவும்
மாற்றத் துடிக்குது நீதிமன்றம்
தமிழ் மொழியில் வழக்காட
இந்தித் திணிப்புக்கெதிராக
ஈழப்படுகொலைக்கெதிராக
காவிரி – பெரியாறு உரிமை மீட்க
இயற்கை வளங்களைப் பாதுகாக்க
ஊழல் நீதிபதிகளுக்கு எதிராக
போராடியவர்கள் வழக்கறிஞர்கள்
போராடும் வழக்கறிஞர்களுக்கு
வாய்ப்பூட்டு போடவே
அடிமைகளாக நடத்தவே
வழக்கறிஞர் சட்டத்திருத்தம்
துணை நிற்போம்! துணை நிற்போம்
சட்டத்திருத்ததுக்கு எதிராக
வழக்கறிஞர்கள் நடத்துகின்ற
போராட்டத்தில் துணை நிற்போம்!
உத்தமர்களா உத்தமர்களா
ஆற்றுமணல் தாதுமணல்
நிலக்கரி, கிராணைட் உள்ளிட்ட
இயற்கை வளங்களை சூறையாடும்
தேசத்துரோகிகளை பாதுகாக்கும்
நீதிபதிகள் உத்தமர்களா?
உரிமைக்காக போராடிய
மாருதி தொழிலாளிகளுக்கும்
கோவை பிரிக்கால் தொழிலாளிகளுக்கும்
லார்டுகள் கொடுத்த தீர்ப்பு என்ன?
அழுகி நாறுது அழுகி நாறுது
ஜனநாயகத்தின் கடைசி புகலிடம்
நீதிமன்றமே அழுகி நாறுது
முறியடிப்போம்! முறியடிப்போம்!
ஜனநாயகத்துக்கெதிரான
நீதிமன்ற கருப்புச் சட்டங்களை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
தீர்வு இல்லை! தீர்வு இல்லை!
நிலவுகின்ற கட்டமைப்புக்குள்
தீர்வு இல்லை தீர்வு இல்லை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்கவும்
மக்களுக்கு அதிகாரமுள்ள
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம், திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), வேலூர் மாவட்டங்கள் தொடர்புக்கு: 8807532859, 9444461480, 9445368009, 9994386941
இந்த இதழில் வெளியான கட்டுரைகள்
1. மோடியின் மிஷன் – 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம்!
2. எச்சரிக்கை : வரவிருக்கும் நாட்கள் மிகக் கொடியவை!
3. ஆர்.எஸ்.எஸ்-ன் தேசபக்தியைத் தோலுரித்த ரகுராம் ராஜன்!
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகளைக் காப்பாற்றவே, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ரகுராம் ராஜனை வெளியேற்றத் துடியாய்த் துடித்தது ஆர்.எஸ்.எஸ்
4. நரேந்திர மோடியின் சவடால்களும் சவால்களும்
அணுசக்தி விநியோகக் குழுமத்தில் இந்தியா சேர்க்கப்படுவதை இனி உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது எனச் சவடால் அடித்த மோடி அரசு, அதற்காக சீனாவின் காலில் விழுந்த காமெடியைக் கண்டு உலகமே சிரித்தது.
5. பத்திரிகை செய்தி : நீதித்துறையின் அடாவடித்தனம்! வழக்கறிஞர்களின் போராட்டம்!
தான் மதிப்பிழந்து போவதைத் தடுக்க முடியாத நீதித்துறை அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாக, அதற்கான பழியை வழக்கறிஞர்கள் மீது போட்டுத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
6. அரசியல் கட்டமைப்பில் அதிகரித்துவரும் அராஜகம்! மக்கள் அதிகாரமே மாற்று!!
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் நடைபெறும் தில்லுமுல்லுகள் அரசியல் கட்டமைப்பு நெருக்கடி தீவிரமடைவதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. இதற்கான மாற்று, தேர்தல் சீர்திருத்தங்கள் அல்ல; மக்கள் தமது பிரச்சனைகளைத் தாமே தீர்வு காண்பதற்கான மக்கள் அதிகாரமே!
7. சட்டமன்றத் தேர்தல்களில் போலி கம்யூனிஸ்டுகளின் தோல்வி : கட்டெறும்பானது கழுதை!
நாடாளுமன்றத்தைப் புரட்சிக்குப் பயன்படுத்தப் போவதாகச் சவடால் அடித்த போலி கம்யூனிஸ்டு கட்சிகள், இன்று மற்ற ஓட்டுக் கட்சிகளாலும், மக்களாலும் சீந்துவாரன்றி ஓரங்ககட்டப்பட்டு விட்டன.
8. குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்…
குல்பர்க் சொசைட்டி படுகொலையில் நரேந்திர மோடிக்குப் பங்கில்லை என நீதிமன்றம் ஒத்துக் கொண்டது முதல் அநீதி என்றால், தற்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இரண்டாவது அநீதியாகும்.
9. ஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை!
சாதி என்பது தன் இயல்பிலேயே ஒழுக்கமோ, நெறிகளோ இல்லாத ஒரு சமூக விரோத நிறுவனம் என்பதை அரியானாவில் பிற சாதியினர் மீது ஜாட் சாதிவெறியர்கள் நடத்திய தாக்குதல் காட்டியிருக்கிறது.
10. மதன் ‘காணாமல்’ போய் விட்டார்! பச்சமுத்து அரசால் பாதுகாக்கப்படுகிறார்!!
கருப்புப் பணத்தைக் கொண்டு கல்வி, பத்திரிகை, தொலைக்காட்சி, போக்குவரத்து எனப் பெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியமைத்திருக்கும் எஸ்.ஆர்.எம் பச்சமுத்து போன்ற திடீர்ப் பணக்காரர்களைத்தான் தனியார்மயம் உருவாக்கி வருகிறது.
11. இந்தியாவில் மரண தண்டனை: இன்னுமொரு மனுநீதி!
இந்தியாவில் மரண தண்டனைக் கைதிகளின் சமூகப் பின்னணியை ஆராய்ந்த டில்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகம், அக்கைதிகள் பெரும்பாலும் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் இருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.
12. ஐ.டி துறையில் தொழிற்சங்க உரிமை! பு.ஜ.தொ.மு.வின் வெற்றி!
தொடர்ச்சியாக மதசார்பற்றவர்களையும், நாத்திகர்களையும் படுகொலை செய்வது பங்களாதேஷில் அதிகரித்து வருகிறது
“என்ன மாதிரியான முசுலீம்கள் இவர்கள்? இவர்கள் எந்த மதமும் கிடையாது… பயங்கரவாதமே இவர்களின் மதம்” – வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா.
தலைநகர் டாக்காவின் மையத்தில் அமைந்துள்ள குல்ஷான் தானா பணக்காரர்களின் பகுதி. பல வெளி நாடுகளின் தூதரகங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. மால்கள், ஐந்து நட்சத்திர விடுதிகள், வெவ்வேறு நாடுகளின் உணவுகளுக்கென்று அமைக்கப்பட்ட சிறப்பு உணவு விடுதிகள் இங்கே இருக்கின்றன. தூதரகங்களில் பணிபுரியும் ஐரோப்பியர்கள் உள்ளிட்ட மேலை நாட்டினருக்கு அறிமுகமான பங்களாதேஷின் பரப்பரளவும், குல்ஷான் தானாவின் பரப்பளவும் ஏறக்குறைய ஒன்று தான்.
தூதரக அதிகாரிகள் சகஜமாக புழங்குவதால் இப்பகுதி இருபத்தி நான்கு மணி நேரமும் உயர் பாதுகாப்பு வளையத்திலேயே இருக்கும். கடந்த ஜூலை 2016 ஒன்றாம் தேதி இரவு 9:20 மணியளவில் குல்ஷான் பகுதியில் அமைந்துள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரியினுள்ளே ஆறு இளைஞர்கள் துப்பாக்கி, அறிவாள், நாட்டு வெடிகுண்டுகள் சகிதமாக நுழைகிறார்கள். நுழையும் போதே நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சராமாரியாக சுட்டும் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றனர்.
பிறகு அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாக பிடிக்கின்றனர். மறுநாள் அதிகாலை 3 மணி வரை ஆர்டிசன் பேக்கரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பயங்கரவாதிகள், ஒன்பது இத்தாலியர்கள், ஏழு ஜப்பானியர்கள் உள்ளிட்ட பதினெட்டு வெளிநாட்டவர்கள், இரண்டு வங்கதேசத்தவர்கள் மற்றும் இரண்டு போலீசு அதிகாரிகளைக் கொன்று குவித்தனர். அந்த பயங்கரவாதிகள், தாம் ஐ.எஸ் (Islamic State) அமைப்பின் சார்பில் இத்தாக்குதலை நடத்துவதாக அறிவித்ததோடு, அந்த அமைப்பின் தலைமைக்கு தமது கீழ்ப்படிதலை உணர்த்தும் அறிவிப்பு ஒன்றையும் வாசித்துள்ளனர். பின்னர் தமது கட்டுப்பாட்டில் இருந்தவர்களில் முசுலீம்களை மட்டும் விடுவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய இஸ்லாமிய இளைஞர்கள் இடமிருந்து வலமாக கெய்ரூல் இஸ்லாம் பாயல், ஷஃபிகுல் இஸ்லாம் உஸ்ஸல், ரோஹன் இமிதாஸ், மீர் சமக் முபாஷிர், நிப்ராஸ் இஸ்லாம்,
முசுலீம்களை அடையாளம் காண ஒவ்வொருவரிடமும் குரான் ஒன்றைக் கொடுத்து வாசிக்குமாறு கேட்டுள்ளனர். அதிகாலை வங்கதேச இராணுவத்தின் ”அதிரடி நடவடிக்கை படையணியை” (Rapid action battalion) சேர்ந்த வீரர்கள் பேக்கரியினுள் திடீர் தாக்குதலை நடத்தி ஐந்து பயங்கரவாதிகளைக் கொன்றனர். ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடந்ததற்கு மறுநாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் ஷேக் ஹசீனா பேசிவற்றில் ஒரு வரியைத்தான் கட்டுரை ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.
”அவர்கள் இசுலாமியர்கள் அல்ல” ”அவர்கள் பின்பற்றுவது இசுலாம் அல்ல” ”அவர்கள் இசுலாத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர்’ “இசுலாம் உண்மையில் அமைதி மார்க்கம்” என்கிற வாதங்கள் நமக்குப் புதிதல்ல – குறிப்பாக இசுலாமின் பெயரால் பெரிய தாக்குதல்கள் நிகழும் சமயங்களில். தமிழ்நாட்டு தவ்ஹீது ஜமாஅத் இயக்கம் இன்னும் ஒரு படி மேலே போய் ஐ.எஸ்.ஐ.எஸ் இசுலாமியர்களே இல்லையென்று சுவரொட்டி கூட ஒட்டியது.
எனினும், எது சரியான இசுலாம், எது தவறான இசுலாம், குரானை எப்படிப் படிக்க வேண்டும் – படிக்க கூடாது, எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் – புரிந்து கொள்ளக் கூடாது, தொழுகையின் போது விரலை ஆட்டுவதா – கூடாதா என்பதைப் போன்ற ’அறிவியல் ஆராய்ச்சிகளை’ இசுலாமிய மதவாதிகளிடமிருந்து பறித்துக் கொள்வது கட்டுரையின் நோக்கமல்ல. நாம் மீண்டும் வங்கதேசத்திற்கே செல்வோம். முசுலீம் பயங்கரவாதம் வங்கதேசத்தைப் பீடித்த வரலாறை புரிந்து கொள்வோம். அதன் போக்கில் இசுலாம் ஒரு மதம் என்கிற நிலையிலிருந்து மனிதர்களைக் கொள்ளும் பயங்கரவாத தத்துவமாக எப்போது மாறுகிறது என்பதைப் புரிந்து கொள்வோம் – ஏனெனில், இது இசுலாத்திற்கு மட்டுமின்றி கிறிஸ்தவ, இந்து மதங்களுக்கும் – ஏன், அமைதியின் மதமாக சொல்லப்படும் பௌத்தத்திற்கும் கூட பொருந்தக் கூடியதே. சமூக பொருளாதார அரசியல் போக்கிலிருந்து துண்டிக்கப்பட்ட மதம் என்று எதுவும் கிடையாது. அதனாலேயே ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு சேவை செய்வதே மதங்களின் தலையாயக் கடமையாக இருக்கின்றன. இது இசுலாமிற்கும் பொருந்தும்.
***
”நீ யாரென்று கேட்டால், நான் வங்காளி என்று சொல்” – 2013-ம் ஆண்டு நடந்த ஷாபாக் சதுக்க எழுச்சியின் போது கேட்ட முழக்கங்களில் ஒன்று.
1971-ம் ஆண்டு பிறந்த வங்கதேசம் இன்றைக்கு உலக முசுலீம் மக்கள் தொகையின் அடிப்படையில் நான்காவது பெரிய இசுலாமிய நாடு. ஆனால், அரசியல் சாசனமோ வங்கதேசத்தை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கிறது. வங்க தேசிய உணர்வின் குழந்தையே இன்றைய வங்கதேசம். அறுபதுகளில் எழுந்த வங்காள தேசிய உணர்ச்சியை நசுக்கியழிக்க ஒன்றுபட்ட பாகிஸ்தானின் இராணுவம் களமிறங்கிய போது அவர்களுக்கு மத ரீதியிலான காலாட்படையாக இருக்க முன்வந்தனர் ரஜாக்கர்கள். பாகிஸ்தான் இராணுவம் முறியடிக்கப்பட்டு தேசம் பிறந்த பின் ரஜாக்கர்கள் ஜமாத்-ஏ-இஸ்லாமி என்கிற கட்சியில் அடைக்கலமாயினர்.
2013 ல் ஷாபாக் சதுக்கத்தில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்
தேச விடுதலைப் போரின் சமயத்தில் எதிரிகளோடு கைகோர்த்துக் கொண்டு கொலை கொள்ளை வண்புணர்ச்சிகளில் ஈடுபட்ட ரஜாக்கர்களால் மதச்சார்பற்ற வங்கதேசத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஜமாத்-ஏ-இஸ்லாமி தொடர்ந்து மத ரீதியிலான அரசியலில் ஈடுபட்டு வந்தது. விடுதலைப் போரின் சமயத்தில் பெரியளவிற்கு வங்காளிகளைக் கொன்று தீர்த்து மீர்பூரின் கசாப்புக்காரன் எனப் பெயரெடுத்திருந்த அப்துல் காதர் மொல்லா, ஜமாத் கட்சியின் தலைவராகியிருந்தார். படுகொலைகள் தொடர்பாக விசாரணைகளின் முடிவில் 2013 பிப்ரவரி 5-ம் தேதி அப்துல் காதர் மொல்லாவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை துச்சமாக மதித்து தனது கட்சியின் குண்டர் படையினர் புடைசூழ வெற்றிப் புன்னகையோடு கையசைத்துக் கொண்டே நீதிமன்றத்திலிருந்து அப்துல் காதர் வெளியேறும் காட்சி ஊடகங்களில் வெளியானது.
விடுதலைப் போராட்டத்தின் போது நடந்த கொலைகள் வங்க தேச மக்களின் மனதில் ஆறாத வடுவாக இருந்து வந்த நிலையில் மொல்லாவின் தெனாவெட்டு அந்தப் புண்ணைக் கீறி விடுவதைப் போல் அமைந்தது. அதைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் லட்சக்கணக்கான மக்கள் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள ஷாபாக் சதுக்கத்தில் கூடி கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி போராடினர். இசுலாமிய மதவெறியின் முகத்தில் ஒட்டுமொத்த வங்கதேசமும் ஒன்றுகூடிக் காறி உமிழ்ந்த நிகழ்வு இது.
மீர்பூரின் கசாப்புக்காரன் எனப் பெயரெடுத்திருந்த அப்துல் காதர் மொல்லா
ஷாபாக் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் ஜமாத்-ஏ-இஸ்லாமியும் கொலையாளிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தியது. தண்டனை கோரி போராடும் மக்களின் மேல் ஜமாத்-ஏ-இஸ்லாமி குண்டர்கள் ஆங்காங்கே தாக்குதல் நடத்தினர். மொத்த விவகாரத்திற்கு மதச்சாயம் பூச வேண்டுமென்கிற வெறியில் அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது ஜமாத்-ஏ-இஸ்லாமி.
பரந்துபட்ட மக்களின் தேசியப் பெருமிதத்தினால் செலுத்தப்படும் அரசியலுக்கு எதிராக இசுலாமிய மத வெறியை நிறுத்தும் அளவுக்கு ஜமாத்-ஏ-இஸ்லாமி எப்படி வளர்ந்தது? முன்னொரு காலத்தில் வங்கதேசத்தில் இழிவாக மதிக்கப்பட்ட மதவெறி செல்வாக்காக எவ்வாறு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது?
***
”சோவியத் நாத்திக கம்யூனிஸ்டுகளை ஆப்கானிலிருந்து விரட்ட அல்லாவின் குழந்தைகளே வாரீர்” – 80-களில் அப்கான் முஜாஹித்தீன் படைகளில் சேர உலக முசுலீம்களுக்கு விடப்பட்ட அழைப்பு.
எண்பதுகளில் பணிப் போரின் இறுதிக் காலத்தில் ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கும் சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்திருந்த ரசியாவுக்குமான கடைசி யுத்த முனையாக விளங்கியது ஆப்கானிஸ்தான். சோவியத் படைகளை ரசியாவிலிருந்து விரட்ட நேரடியாக தனது இராணுவத்தை களமிறக்க விரும்பாத அமெரிக்கா, அந்தப் போரையே சாத்தானுக்கு எதிராக இசுலாமியர்கள் நடத்தும் ஜிஹாத் எனும் புனிதப் போராக சித்தரித்தது. சவூதியின் பெட்ரோல் டாலரையும் பாகிஸ்தானின் ராஜதந்திர உதவியையும் பெற்றுக் கொண்ட அப்போதைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ப்ரெஸென்ஸ்கி ஜிஹாதுக்குப் புதிய விளக்கங்களை எழுதிக் கொண்டிருந்தார்.
அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் ஆப்கன் முஜாஹித்தீன் தலைவர்களை 1985ல் வெள்ளை மாளிகையில் சந்திக்கும் காட்சி
‘கிறிஸ்தவ’ அமெரிக்காவின் ஆதரவு பெற்ற இசுலாமிய ஜிஹாத் இந்தப் போருக்காக பல நாடுகளில் இருந்து இசுலாமிய இளைஞர்ளை ஆப்கான் நோக்கிக் கிளப்பியது. அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களே கூட தமது குடிமக்கள் இன்னொரு நாட்டில் ஆயுதப் போருக்காக கிளம்பிச் செல்வதைக் கண்டு கொள்ளவில்லை – ஏனெனில், அமெரிக்காவின் ஆதரவும் ஊக்குவிப்பும் அதை அங்கீகரிக்க வைத்தது. வங்கதேசத்திற்கு மேலும் ஒரு காரணம் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய வங்கதேசத்தில் பதவிக்கு வந்த அவாமி லீக், மதச்சாரபற்ற கட்சியாக இருந்தாலும் அடிப்படையில் ஏகாதிபத்தியங்களுக்குத் தரகு வேலை பார்க்கும் முதலாளிகளின் நலன்களையே பிரதிபலித்தது.
எழுபதுகளின் துவக்கத்தில் இந்திய எல்லையில் அமைந்திருக்கும் மேற்கு வங்கமாநிலத்தில் செல்வாக்காக எழுந்த நக்சல்பாரி புரட்சியின் தாக்கம் வங்கதேச கம்யூனிஸ்டு கட்சியிடமும் எதிரொலித்தது. வங்கதேச கம்யூனிஸ்டு கட்சி செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அவாமி லீக், அரசியலில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மத உணர்வு கலப்பது எதிர்காலத்தில் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என கணித்தது. எனவே, தமது தேசத்தின் இளைஞர்கள் எல்லை தாண்டி ஆப்கானுக்குச் செல்வதை கண்டும் காணாமலும் விட்டது அவாமி லீக்.
1984-ம் ஆண்டு துவங்கி தொடர்ந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 3000 வங்க இளைஞர்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட போதும் சரி, பின்னர் சுமார் 10 உலோமாக்கள் ஆப்கான் சென்ற போதும் சரி, பின்னர் 1992-ல் காபூலை முஜாஹித்தீன்கள் கைபற்றிய போது அவர்களின் வங்கதேசத்து பங்காளிகள் வெளிப்படையாக வெற்றி விழாக்கள் கொண்டாடிய போதும் சரி – வங்கதேச ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் அனுமதித்தது. ஆப்கான் சென்ற வங்காளி முஜாஹிதீன்கள் நாடு திரும்பினர். அவர்கள் தங்களோடு சேர்த்து அமெரிக்கா அருளிய வகாபியத்தையும் அழைத்து வந்தனர்.
தொண்ணூறுகளின் மத்தியில் துவங்கி அடுத்த பத்தாண்டுகளுக்கு ஜமாத்-ஏ-இஸ்லாமி, வகாபிய இசுலாமியத்தை தீவிரமாக முன்னெடுத்தது. ஜமாத் கட்சி தனக்கென ஒரு வர்த்தக அமைப்பாக இஸ்லாமி வங்கிகளைத் துவங்கி நிதி வசூல் நடவடிக்கைகளில் வெளிப்படையாகவே ஈடுபட்டது. டிகந்தா தொலைக்காட்சி, நயா டிகந்தா தினசரி, அமர்தேஷ், சங்க்ராம் நாளேடு, உள்ளிட்ட ஊடகங்களைத் துவக்கி கடுங்கோட்பாட்டு இசுலாமியத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய ஜமாத்-ஏ-இஸ்லாமி, பல்வேறு பெயர்களில் கலாச்சார நிறுவனங்களையும் ஆயிரக்கணக்கான மதரசாக்களையும் திறந்தது.
தொடர்ச்சியாக மதசார்பற்றவர்களையும், நாத்திகர்களையும் படுகொலை செய்வது பங்களாதேஷில் அதிகரித்து வருகிறது
ஷாபாக் சதுக்கத்தில் நடந்த பேரெழுச்சியைத் தொடர்ந்து, மதச்சார்பற்றவர்களையும் நாத்திகர்களையும் கொன்றொழிப்பதற்கென்றே எண்ணற்ற முன்னணி அமைப்புகளையும் துவங்கியது ஜமாத் கட்சி. ஹெபாஜாட்-ஏ-இஸ்லாம், ஜமாத்-அல்-முஜாஹித்தீன் பங்களாதேஷ், ஹர்க்கத்துல் ஜிஹாத், ஜூந்த்-அல்-தவ்ஹீத் வல் கலீபாஹ் என கணக்கற்ற அமைப்புகள் முளைவிடத் துவங்கின. இதில் சில அமைப்புகள் இந்திய துணைக்கண்டத்திற்கான அல்குவைதா (AQIS) உடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ள நிலையில், சில அமைப்புகள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்போடு தொடர்புகளைப் பேணி வருகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித் தனி அமைப்புகளைப் போல் வெளிக் காட்டிக் கொண்டாலும் தமக்குள் பரஸ்பர தொடர்புகளைப் பேணி வருகின்றன. போலீசு மற்றும் உளவுத் துறை நடவடிக்கைகள் ஒரு அமைப்பின் மீது எடுக்கப்படும் போது பெயரை மாற்றிக் கொள்வது அல்லது இன்னொரு அமைப்புடன் இணைந்து கொண்டு புதிய பெயரில் வேறு ஒரு அவதாரத்தில் திரும்பி வருவது போன்ற உத்திகளைக் கையாளுகின்றனர்.
இரண்டாயிரங்களுக்குப் பின் அதிகாரத்திற்கு வந்த வங்க தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட ஜமாத்-ஏ-இஸ்லாமி, அதிகாரத்தில் இருப்பதன் சாதகங்களைத் தனது பயங்கரவாத வலைப்பின்னலை உறுதிப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொண்டது. 2001-ம் ஆண்டு துவங்கி ஜமாத் கட்சியின் இரகசிய முன்னணி அமைப்புகள் முன்னெடுத்த பயங்கவாத நடவடிக்கைகள் அலையலையாக வங்கதேசத்தை தாக்கி வருகின்றன. 2001-ம் ஆண்டு வங்க புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களில் குண்டு வீசி பத்து பேரைக் கொன்றதில் துவங்கி, அவாமி லீக் கட்சி கூட்டத்தில் 2004-ம் ஆண்டு நடந்த குண்டு வீச்சில் 24 பேர் பலியானதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நாடெங்கும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல்களாக வளர்ந்த போது தான் வங்கதேச அரசு கொஞ்சம் விழித்துக் கொண்டது.
முஸ்லீம் மதவெறியால் கொல்லப்பட்ட மதசார்பற்றவர்கள் மற்றும் bloggers நசிமுதீன் சமத், நிலொய் நீல், பேராசிரியர் சித்திக்
இரண்டாயிரமாவது ஆண்டுகளின் மத்தியில் துவங்கி 2010 வரையிலான காலகட்டத்தில் தீவிரவாத அமைப்புகளின் தலைமைகள் கைது செய்யப்பட்டது மற்றும் கடுமையான இராணுவ மற்றும் போலீசு நடவடிக்கைகளின் விளைவாக பல அமைப்புகள் செயலிழந்து போயின. எனினும், எஞ்சியவர்கள் புதிய புதிய பெயர்களில் அமைப்புகளைத் துவங்கி இசுலாமிய அடிப்படைவாத அரசியலை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். இசுலாமிய தீவிரவாதம் மக்களிடையே ஒரு பிரிவினரிடம் செல்வாக்கோடு விளங்கியதற்கு மதரசாக்களும், இசுலாமிய கலாச்சார நிறுவனங்களும் ஒரு காரணம் என்றாலும், வேறு முக்கிய காரணம் ஒன்றும் உண்டு.
2008-ல் துவங்கிய உலகப் பொருளாதார பெருமந்தம் ஆடை ஏற்றுமதிப் பொருளாதாரத்தையே நம்பியிருந்த வங்கதேசத்தை மிகக் கடுமையாக தாக்கியது. வேலை இழப்புகளால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நடுத்தர வர்க்கத்தின் அதிருப்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலால் ஒருமுனைப்படுத்தப்படவில்லை. வங்க தேசத்தில் செயல்பட்ட தொழிற்சங்கங்களும், கம்யூனிஸ்டு கட்சிகளும் மக்களின் அதிருப்தியை அமைப்பாக்கும் கடமையிலிருந்து பின்தங்கிய போது இசுலாமிய மதவெறி அந்த இடத்தில்தன்னை பதிலீடு செய்து கொண்டது.
பரவி வந்த வகாபிய இசுலாமிய மதவெறிக்கு எதிராக நின்ற ஜனநாயக சக்திகளும், ”இது இசுலாத்தை தவறாக புரிந்து கொண்டதன் விளைவு” என்றும் “குரானுக்கு தவறான விளக்கம் கொடுக்கிறார்கள்” என்றுமே சூழலை எதிர்கொண்டனர். அதாவது, குரானை செம்மையான முறையில் (அதாவது அமைதி மார்க்கமாக) வாசிக்க முடியும் என்கிற இந்த சில்லறை தொழில்நுட்ப பிரச்சினையை வகாபிய கடுங்கோட்பாட்டுவாதிகள் மிக எளிதாக முறியடித்து தமது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டனர்.
டாக்கா பல்கலைகழக வளாகத்தில் அவிஜித் ராய் கொல்லப்பட்டதற்காக மாணவர்கள் மற்றும் முற்போக்காளர்கள் நடத்திய போராட்டம்
இந்நிலையில் 2013-ம் ஆண்டு நடந்த ஷாபாக் சதுக்க எழுச்சி, வகாபிய கடுங்கோட்பாட்டுவாதிகளே எதிர்பாராத வண்ணம் பெருந்திரளான வங்காளிகளை மதச்சார்பற்ற அரசியலின் பின்னே அணிவகுக்கச் செய்தது. மக்களின் நினைவுகளில் இருந்து தாம் அழிக்க விரும்பிய வங்க தேசிய அடையாளம் வெடித்துக் கிளம்பியதை வகாபிகள் “அல்லாவுக்கு எதிரான” தாக்குதலாகவே எடுத்துக் கொண்டனர். ஷாபாக் சதுக்க எழுச்சிக்காக பிரச்சாரம் செய்த மதச்சார்பற்ற எழுத்தாளர்களின் பெயர்களையும் மறக்காமல் குறித்து வைத்துக் கொண்டனர். மக்கள் போராட்டங்கள் ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக ஆளும் வர்க்கம் மீண்டும் ஒரு சுற்று வகாபிய பயங்கரவாத அமைப்புகளின் மேல் நடவடிக்கைகளைத் துவங்கியது.
2013 துவங்கி கடந்த மூன்றாண்டுகளில் அரசின் கைது நடவடிக்கைகள் ஒருபக்கமும், வகாபிய தீவிரவாதிகளின் அறிவாள் வெட்டுக் கொலைகள் மறுபக்கமுமாக வங்கதேசத்தின் நாளேடுகளை நிறைத்தன. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் சிறுபான்மையினர் மற்றும் நாத்திகர்களின் மேல் சுமார் 50க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடந்திருப்பதாக சுயேச்சையான சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொலைகளை ஒருபக்கம் முன்னெடுத்துக் கொண்டே கைதுகளுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாகும் பயங்கரவாதிகளின் மேல் அனுதாபம் வரவழைக்கும் வகையிலான பிரச்சாரங்களையும் செய்து வந்தனர் வகாபிகள்.
இந்த சூழலில் ஏற்கனவே அல்குவைதாவின் செயல்பரப்பில் இடம் பெற்றுள்ள வங்கதேசத்திற்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் நுழைகிறது. இந்த அமைப்புகள் மூளைச்சலவை செய்யும் விதம் மிக எளிமையானது. முதலில் ஒரு நல்ல இசுலாமியனாக இருக்க வேண்டும். எப்படி நல்ல முசுலீமாக இருப்பது? அல்லாவுக்காகவும் இசுலாமிய மதத்திற்காகவும் உயிரைத் தியாகம் செய்ய தயங்காமல் முன்வருகிறவன் எவனோ அவனே நல்ல முசுலீம். அதற்காக ஒருவன் ஜிஹாது செய்ய வேண்டும். ஜிஹாதில் உயிரைத் தியாகம் செய்கிறவன் சொர்க்கம் செல்வான்.
இவ்வாறாக தூய மதவாத மூளைச் சலவைக்குள்ளான இளைஞர்களே குல்ஷான் தானாவில் தாக்குதல் நடத்தியவர்கள். தாக்குதல் நடத்திய ஆறுபேர் கொண்ட கும்பலில் ஒருவர் தவிற மற்றவர்கள் எல்லோரும் செல்வாக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு புதிய போக்கு. மதவாத / தீவிரவாத கருத்துக்கள் ஏழைகளையே பற்றிக் கொள்ளும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி விட்டால் தீவிரவாத கருத்துக்கள் இளைஞர்களைப் பற்றிக் கொள்ளாமல் தடுத்து விட முடியும் என்பது போன்ற என்.ஜி.ஓ கருத்தாக்கங்கள் குல்ஷானில் வெடித்த குண்டுகளால் தகர்ந்து போயிருக்கின்றன.
இளைஞர்களின் அரசியல் கண்ணோட்டம் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதாகவும் ஜனநாயகப்பூர்வமானதாகவும் இருக்கும் போது தான் மதவெறி உலக கண்ணோட்டத்தை இளைஞர்களின் மூளைகளில் இருந்து துடைத்தெறிய முடியும்.
உலகமயக் கொள்கைகள் மக்களின் பொருளாதாய வாழ்க்கையை மட்டுமின்றி அவர்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் ஆன்மீக வாழ்வின் சகல பகுதிகளையும் குலைத்துப் போட்டுள்ளது. அதிகரித்து வரும் தனிநபர்வாதம் ஏழைகளை விட உயர் நடுத்தரவர்க்க மற்றும் மேல் தட்டு வர்க்கங்களின் இளைஞர்களே பாதிக்கிறது. தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் நுகர்வுக் கலாச்சாரத்தையும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியையும் சமூகத்தில் அக்கம் பக்கமாக பரப்பி விட்டுள்ளன. இதன் விளைவாக சமூகத்தின் அங்கங்கள் ஒவ்வொன்றும் பரஸ்பரம் துண்டித்து விடப்பட்டுள்ளது. ஏறக்குறைய காற்று வெளி முழுக்க பெட்ரோலின் ஆவி பரவியுள்ளதற்கு ஒப்பான நிலையில் மதவெறித் தீக்குச்சியின் சிறு உரசல் கூட மொத்த சமூகத்தையும் எரித்து சாம்பலாக்கப் போதுமானதாகும்.
ஆக, மதவெறி எதிர்ப்பும் ஏகாதிபத்திய பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டமும் கைகோர்த்துக் கொள்வது மட்டுமே நமது இளைஞர்களை கடுங்கோட்பாட்டுவாதிகளிடமிருந்து காப்பாற்றும் ஒரே வழி. நமது இளைஞர்களின் அரசியல் கண்ணோட்டம் புரட்சிகரமானதாகவும் முற்போக்கானதாகவும் ஜனநாயகப்பூர்வமானதாகவும் இருக்கும் போது தான் மதவெறி உலக கண்ணோட்டத்தை இளைஞர்களின் மூளைகளில் இருந்து துடைத்தெறிய முடியும். மாறாக, குரான் போன்ற மத இலக்கியங்களை சிறப்பாக படித்து சிறந்த முறையில் புரிந்து கொண்டு சரியான முறையில் அமல்படுத்துவது எப்படி என போதிக்கக் கிளம்பி பீ.ஜே, ராம கோபாலன், ஜாஹீர் நாயக், பிரவீன் டொகாடியா போன்றவர்களிடம் போட்டிக்குச் சென்றால் நாம் தோற்பது உறுதி.
இறுதியாக… நல்ல இசுலாம் என ஒன்று இருக்க முடியுமா?
எப்படி நல்ல இந்து மதமோ, நல்ல கிறிஸ்தவமோ இருக்க முடியாதோ அப்படியே நல்ல இசுலாமும் இருக்க முடியாது. தனிப்பட்ட ஒருவரின் மத நம்பிக்கைகள் “தனிப்பட்டதாய்” மட்டும் இருக்கும் வரை பிரச்சினையில்லை. மாறாக அவரின் சமூக கண்ணோட்டத்தையும் உலக கண்ணோட்டத்தையும் மதமே தீர்மானிக்கும் என்றால் ஆன்மீகம் பின்னுக்குப் போய் பயங்கரவாதம் முன்னுக்கு வருவதை தவிர்க்க முடியாது. மதம் தான் அரசியல் கண்ணோட்டத்தைத் தீர்மானிக்கும் என்றால் இசுலாமியர்கள் மட்டுமின்றி, இந்துக்களும், கிறிஸ்தவர்களும் – ஏன், அமைதி மதத்தைப் பின்பற்றும பௌத்தர்களும் – கூட தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதியாகி விடுவர்.