Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 701

புதிய கலாச்சாரம் – ஆகஸ்ட் 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

3

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2013

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்

  1. உத்தர்காண்ட்: பக்தி சுற்றுலாவிற்கு பக்தர்கள் பலி!
  2. தருமபுரியிலிருந்து பீகார் வரை : சாதிவெறியர்களை பாதுகாக்கும் ‘தடயங்கள்‘!
  3. அரசு பள்ளிகளின் வீழ்ச்சி : யார் குற்றவாளி!
  4. கவரப்பட்டு அரசுப் பள்ளி : அவலத்தின் நடுவே ஓர் அதிசயம்!
  5. ஆங்கில வழிக் கல்வி : சொர்க்கத்துக்குக் குறுக்கு வழி?
  6. ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா?
  7. சத்தான கீரை! அவலமான வாழ்க்கை!!
  8. ஆம்வே: சோம்பேறிகள் முதலாளிகளாவது எப்படி?
  9. சிறுகதை : ஜில்லெட்டின் விலை!
  10. பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு!
  11. பாகிஸ்தானில் கௌரவக் கொலைகள்!
  12. வார்னர் மியூசிக்கின் வியாபாரம்! கலாஷ்னிகோவின் சமூக உணர்வு!
  13. கல்விக் கண் – துரை.சண்முகம்

புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2.5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்சன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

வெரிக்கோஸ் வெயின்ஸ் பட்டாணி சுண்டல் !

5

வார விடுமுறையை மனதில் இருத்தி
கழித்துக் கொண்டிருந்த
ஒரு வெள்ளிக்கிழமை மாலை.
“அலுவலக வேலை, அவசரம்,
வள்ளுவர் கோட்டம் வரை போகவேண்டும்”
தயங்கி பார்த்தவாறு மேலாளர் கேட்டார்.

pattaniஎதிர்ப்பில்லாத என் சுபாவம்
அவருக்குத் தெரியும்தானே,
ஒப்புக் கொண்டேன்.
தூங்கி, துவைத்துக் கழியும்
சனி, ஞாயிறில் இழப்பதற்கு ஏது,
தேற்றிக் கொண்டேன்.

வள்ளுவர் கோட்டத்திலிருந்து தி.நகர்
செல்லும் பாதையில் எனக்கு வேலை.
சென்று பார்த்தால்
வேண்டியவர் இல்லை.
அழைத்துக் கேட்டால்
காத்திருக்கச் சொன்னார்.
அந்தச் சாலையில்
காத்திருப்போருக்கென்று இடமில்லை,
ஒரு பேருந்து நிறுத்தம் தவிர.

ஒரு தேநீர் அருந்தலாம் என்றால்
கடைகள் ஏதுமில்லை.
கோட்டத்திற்கு அருகில் சென்றால் இருக்கும்;
நெரிசலில் நீந்திக் கரையேற ஆயாசம்
சற்று தூரம் நடக்கலாமென
இறங்கினேன்.

‘டேஸ்ட் தி திரில் ஆஃப் கிரில்’
என்று
ஒரு உணவகத்தின் விளம்பரம்
கீழே கண்ணாடி தடுப்பினுள்
கம்பிகளில் எண்ணையின்றி
பொறிந்து கொண்டிருந்த கோழித் துண்டுகள்
மெல்லிய வெளிச்சத்தில்
கொறித்துக் கொண்டிருந்த மனித தலைகள்
வரவிலும், நாவிலும்
டயட்டில் இருப்பதால்
சப்புக் கொட்டிவிட்டு அகன்றேன்.

ஹபிபுல்லா சாலையின் திருப்பத்தில்
அந்தச் சுண்டல் கடை தட்டுப்பட்டது.
தேநீருக்கு மாற்றாகவும்
சிறு பசியாறவும் சரியான வழி!

வழுக்கைத் தலையுடனும்
சற்று கனத்த உடல்வாகுடனும்
நடுத்தர வயதில் இருந்தார் கடைக்காரர்
பாதிச் சுண்டல் (பட்டாணி) கரைந்து மாவாகியும்
மீதிச் சுண்டல்
மேகங்கள் சூழ்ந்த
மங்கிய நட்சத்திரங்களாகவும் சிமிட்டின.

மேன்மக்கள் உணவகங்களில்
வழியும் மெல்லிய வெளிச்சம்
இங்கே தெரு விளக்குகளின்
துணையோடு இலவசமாய் கிடைத்தன.

தொட்டடுத்த சாலையின் புழுதி
பட்டாணியில் கலக்காமல் போகாது.
என்றாலும் வயிறு கலங்கும்
என்ற எச்சரிக்கை
எனக்குள் முழுதாய் இறங்காத
அளவில்
நானொரு சுமாரான நடுத்தர வர்க்கம்.

சுண்டல் ஆர்டர் செய்து
நமக்கு மட்டும் ஒரு தேக்கரண்டி
அதிகம் விழுமோவென
பார்த்துக் கொண்டிருந்தேன்.
இந்த பார்வையின் உளவியல்
அவருக்கு பழக்கமானதாலோ என்னவோ
எல்லோருக்கும் ஒரு கொசுறு கரண்டி உண்டு.
எதிரில் ஒரு வடகிழக்கு இளைஞனுக்கு
அவர் போடுவதைப் பார்த்தேன்.
இருந்தாலும் அவருக்கு நாம் மட்டும் ஸ்பெஷல்
என்பதை ஏன் மாற்ற வேண்டும்?

“ஐயா, வடை, பஜ்ஜி ஏதும் போடவா?”
கடைக்காரர் கேட்டார்.
சாருக்கு பதில் ஐயா என்று விளித்ததால்
நாம் வயதான தோற்றமா,
இல்லை அவரது கிராமப் பின்புலமா,
சென்னையில் இன்னும் கலந்து விடாத
தமிழ் பழக்கமா?

சூம்பிக் கிடந்த பஜ்ஜியும்
விரைத்துக் கிடந்த வடையும்
எண்ணெய் ஆகாது என்பதை
நினைவூட்டினாலும்
வடை போடுங்கள் என்றேன்.
வடையில்லாத பட்டாணி
லெக் பீஸ் அற்ற
பிரியாணி போலல்லவா?

சுண்டலைச் சுவைத்துக் கொண்டிருந்தேன்.
கீழே வண்டியோரம்
கடைக்காரரின் மனைவி அமர்ந்திருந்தார்.
கடைக்காரர் ஏதோ பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தார்.
அந்த அம்மா
“இப்ப தேச்சு விடவா” என்றார்.
“பஜ்ஜியை எடுத்து வைச்சுட்டு வாரேன்”
அவர் சொல்லும் போது
அந்த அம்மாள்
ஏதோ களிம்புருளையை எடுத்து
பிதுக்கி கையில் தேக்கி வைத்தார்.

அருகில் கடைக்காரர் வந்ததும்
அவரது முழங்கால் பின்புறத்தில் இருந்து
பாதம் வரை
தேய்த்து விட்டார்.
முழங்கால் பின்புறம்
நரம்புகள் இப்போதுதான்
சிறிய அளவில்
முறுக ஆரம்பித்திருந்தன.

varicose-veinsசட்டென்று பொட்டில் அடித்தது நினைவு
இது வெரிக்கோஸ் வெயின்ஸ்
தொழில் நிமித்தம்
நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கும்
தொழிலாளிகளுக்கு ஏற்படும் நோய்!

நிற்பதில் வருடங்கள் கழிந்து
கால் நரம்புகள் முறுக்கிக் கொள்ள
பிறகு
நின்றாலே வலிக்கும்.
முற்றிய நிலையில் அறுவை சிகிச்சை
பிறகு நிற்பதை தவிர்க்க வேண்டும்.
இல்லையேல் மீண்டும் வரும்.
வலியா, வருமானமா
தீர்மானிப்பதற்குள்
வாழ்க்கை முடிந்து விடும்

வாடிக்கையான ஒரு
தேநீர்க் கடை மாஸ்டருக்கு
இந்த நோய் வந்த போதுதான்
வெரிக்கோஸ் வெயின்சையே கேள்விப்பட்டேன்.

உட்கார்ந்து கொண்டு
இளைப்பாற விரும்பும் உலகிற்காக
நின்று கொண்டிருப்போர் தரும் சேவை
வெரிக்கோஸ் வெயின்ஸ் இன்றி
சாத்தியமில்லை.

நான்
சுண்டல் விழுங்கிய நேரம்
அவரது மனைவி
களிம்பு தேய்ப்பதை
இன்னும் நிறுத்தவில்லை.

எனக்கோ வயிறு கலங்க ஆரம்பித்திருந்தது.

– காளமேகம் அண்ணாச்சி

எகிப்து : கேலிக்கூத்தானது அரபு வசந்தம் !

2

“உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ள மாபெரும் சம்பவங்கள் அனைத்தும் இரண்டு தடவை தோன்றுகின்றன. மாபெரும் தலைவர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் தோன்றுகிறார்கள்” என்று ஹெகல் எழுதியுள்ளார். “அவர்களுடைய தோற்றம் முதல் சந்தர்ப்பத்தில் சோகக் கதையாகவும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் கேலிக்கூத்தாகவும் இருக்கிறது என்பதை எழுதுவதற்கு அவர் மறந்துவிட்டார்” என பிரான்சில் நடந்த திடீர் புரட்சி குறித்து எழுதும்போது குறிப்பிட்டார் பேராசான் காரல் மார்க்ஸ். எகிப்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்துள்ள அரசியல் மாற்றங்கள், குறிப்பாக கடந்த ஜூலை மாத முதல் வாரத்தில் அந்நாட்டின் இராணுவம் ஒரேயொரு ஆணையின் மூலமாக ஆட்சியதிகாரத்தை மீண்டும் நேரடியாகத் தனது கையில் எடுத்துக் கொண்டிருப்பது காலத்தால் அழியாத மார்க்ஸின் இந்த விமர்சனத்தை நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது.

மோர்ஸி ஆதரவாளர்கள்
இராணுவ ஆட்சியைக் கண்டித்தும், மோர்ஸியை மீண்டும் அதிபராகப் பதவியில் அமர்த்தக் கோரியும் முசுலீம் சகோதரத்துவக் கட்சிய தலைநகர் கெய்ரோவில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லும் மோர்ஸியின் ஆதரவாளர்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு பாசிச சர்வாதிகார அதிபர் ஹோஸ்னி முபாரக்கை அதிகாரத்திலிருந்து துரத்தியடித்த எகிப்து மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தைப் பின்நவீனத்துவவாதிகள் அரபுலகின் புரட்சியென்றும் இணையதளப் புரட்சியென்றும் மட்டும் சுட்டவில்லை. அதனை, கம்யூனிசப் புரட்சியாளர்கள் முன்வைக்கும் அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட, ஆயுதந்தாங்கிய புரட்சிக்கு மாற்றாகவும் முன்வைத்தார்கள். அரபு வசந்தம் என அவர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடிய அம்முதல் புரட்சி, முசுலீம் மத அடிப்படைவாதக் கட்சியான முசுலீம் சகோதரத்துவக் கட்சியை அதிகாரத்தில் உட்கார வைப்பதாக முடிந்துபோனது.

எகிப்தில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முசுலீம் சகோதரத்துவக் கட்சியைச் சேர்ந்த முகம்மது மோர்ஸி 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவர் பதவியேற்ற ஓரிரு மாதங்களிலேயே, முதலாளித்துவ தாராளவாதக் கட்சிகளும், கிறித்தவ சிறுபான்மை அமைப்புகளும், முபாரக்கின் ஆதரவாளர்களும் இணைந்து மோர்ஸி அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தொடங்கினார்கள். இப்போராட்டங்கள் கடந்த ஜூன் மாத இறுதியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற அரசியல் ஆர்ப்பாட்டமாக மாறியது. எதிர்த்தரப்பால் இரண்டாம் புரட்சி என அழைக்கப்படும் இப்போராட்டங்கள், மோர்ஸியின் இடத்தில், இழிபுகழ் படைத்த, ஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சியைத் தாங்கிப் பிடித்து வந்த எகிப்திய இராணுவம் ஆட்சியில் அமர்ந்து கொள்ளுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

எகிப்திய இராணுவம் மோர்ஸியை அதிபர் பதவியிலிருந்து விலக்கிய கையோடு அவரையும் முசுலீம் சகோதரத்துவக் கட்சியின் முக்கியத் தலைவர்களையும் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்தது; நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கலைத்ததோடு, மோர்ஸி அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட புதிய அரசியல் சாசனத்தையும் ரத்து செய்தது. முபாரக் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த உயர்ந்த அதிகார அமைப்பான அரசியல் சாசன நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான அட்லி மஹ்மூத் மன்சூரை அதிபராக அமர்த்தி, அவருக்கு வரம்பற்ற அதிகாரங்களை அளிக்கும் தற்காலிக அரசியல் சாசனச் சட்டங்களை இயற்றி வெளியிட்டுள்ளது. அதேபொழுதில் தன்னை சைவப் புலியாகக் காட்டிக்கொள்ளும் நோக்கில் அடுத்த ஆறேழு மாதங்களுக்குள் புதிய தேர்தலை நடத்தவிருப்பதாகவும் இராணுவம் அறிவித்திருக்கிறது.

இராணுவ ஆதரவாளர்கள்
இராணுவம் மோர்ஸியின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ஜூலை 26 அன்று இராணுவத்தை ஆதரித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருக்கும் மக்கள்.

மோர்ஸியின் எதிர்ப்பாளர்கள் அனைவரும் – இடதுசாரிகள், தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ தாராளவாதிகள், முபாரக்கின் ஆதரவாளர்கள், கிறித்தவ சிறுபான்மை அமைப்புகள், இணையதள செயல்பாட்டாளர்கள் எனப் பல பட்டறைகளும் இணைந்துள்ள வானவில் கூட்டணி இது – தேசிய மீட்பு முன்னணி என்ற கூட்டணியை அமைத்து இராணுவத்திற்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஏப்ரல் 6 இயக்கம், புரட்சிகர சோசலிசவாதிகள் உள்ளிட்ட சில நகர்ப்புற குட்டி முதலாளித்துவ அமைப்புகள் ஒருபுறம் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இன்னொருபுறம் தேசிய மீட்பு முன்னணியோடும் இணைந்து நிற்கின்றன. முசுலீம் சகோதரத்துவக் கட்சிதான் தற்பொழுது இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராகத் தெருப் போராட்டங்களை நடத்தி வருகிறது; இராணுவத்தின் துப்பாக்கித் தோட்டாக்களையும் எதிர்கொள்கிறது. ஆனால், ஜனநாயகத்துக்காகப் போராடியதாகப் பீற்றிக்கொள்ளும் தேசிய மீட்பு முன்னணியின் தலைமையோ, இந்த ஆட்சி மாற்றத்தை இராணுவப் புரட்சி என விமர்சிப்பவர்களை, எகிப்து மக்களின் எதிரிகள் என முத்திரை குத்துவதோடு, இராணுவம் கட்டவிழ்த்துவிட்டு வரும் அரச வன்முறைகளுக்கும் ஒத்தூதி வருகிறது.

****

ஹோஸ்னி முபாரக்கின் பாசிச ஆட்சிக்கு எதிராகத் திரண்ட எகிப்திய மக்களுள் ஒரு பெரும் பிரிவு இன்று வெளிப்படையாக இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது விந்தையாகத் தோன்றினாலும், அந்த எழுச்சி இப்படி பரிகாசத்துக்குரிய வகையில் முடிந்து போவது தவிர்க்க இயலாத ஒன்றாகும். ஆயுதப் போராட்டம், இறுக்கமான ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு, ஒற்றைக் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் அமையாததுதான் இந்த எழுச்சிகளின் பலம் எனப் பின்நவீனத்துவவாதிகள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதினார்கள். அவர்கள் எதனைப் பலம் எனச் சுட்டிக் காட்டினார்களோ, அதுதான் இந்த எழுச்சியின் மிகப்பெரும் பலவீனமாக அமைந்ததோடு, அதனின் சீரழிவுக்கும் காரணமாக அமைந்தது.

முகம்மது மோர்ஸி
எகிப்து இராணுவத்தால் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ள முகம்மது மோர்ஸி.

ஒரு பாசிச சர்வாதிகாரிக்கு எதிராக வெடித்த மக்கள் பேரெழுச்சியின் பயனை ஒரு மத அடிப்படைவாதக் கட்சி அனுபவிக்க நேர்வது துன்பகரமானதுதான். ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராகப் போராடிய கட்சிகள், அமைப்புகளிலேயே முசுலீம் சகோதரத்துவக் கட்சி மட்டும்தான் எகிப்தின் கிராமப்புறங்கள் வரை அமைப்புரீதியாகத் திரட்டப்பட்ட கட்சியாக இருந்தது. இந்த அமைப்பு பலம்தான் ஹோஸ்னி முபாரக் பதவியை விட்டு விலகிய பின் நடத்தப்பட்ட புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள், அதிபர் தேர்தல் ஆகியவற்றில் முசுலீம் சகோதரத்துவக் கட்சி வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது.

இந்த எழுச்சியின் தலைவர்கள், “ஒரு புரட்சிகரமான அரசியல் திட்டத்தின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டக் கூடாது” என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தனர். மேலும் இந்த எழுச்சி, அரசைப் பற்றிய கண்ணோட்டத்தில் முதலாளித்துவ வரம்பையும் தாண்டவில்லை. எகிப்தைப் பொருத்தவரை, அந்நாட்டு இராணுவம் ஹோஸ்னி முபாரக்கின் பாசிச ஆட்சியைத் தாங்கிப் பிடித்த அடக்குமுறை இயந்திரமாக மட்டும் இயங்கவில்லை. எகிப்து பொருளாதாரத்தில் ஏறத்தாழ 10 சதவீதம் முதல் 35 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் அளவிற்குப் பல்வேறு தொழில்களையும் நடத்தி வருகிறது. அதனின் அதிகாரத்தை மட்டுமல்ல, அதனின் வரவு-செலவுகளைக்கூட நாடாளுமன்றம் உள்ளிட்டு யாரும் கேள்விகேட்க முடியாதபடி தன்னிச்சையாகச் செயல்பட்டு வருகிறது. எனவே, இப்படிபட்ட இராணுவத்தை ஒழிக்காதவரை எகிப்தில் எந்தவிதமான அரசியல் மாற்றங்களுக்கும் இடமே இருக்கப் போவதில்லை.

ஆனால், 2011 மார்ச்சில் நடந்த எழுச்சியின்பொழுது ஹோஸ்னி முபாரக் வேறு, எகிப்திய இராணுவம் உள்ளிட்ட அதிகார வர்க்கம் வேறு எனப் பாமரத்தனமான கருத்துக்கள் பரப்பப்பட்டு, எகிப்து இராணுவம் முபாரக்கிற்கு எதிரான மக்கள் எழுச்சியை ஆதரிப்பதாக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டு, மக்கள் நம்பவைக்கப்பட்டனர். இதன் மூலம் முபாரக்கை வெளியேற்றியதே எழுச்சியின் வெற்றியாகக் காட்டப்பட்டது. “ரொம்பவும் புரட்சிகரமான கோரிக்கைகள் என்பதாக அல்லாமல், அரசு மாற்றம், ஜனநாயகம், மனித உரிமைகள், ஊழல் ஒழிப்பு என்கிற அடிப்படையில் சகல தரப்பினரும் ஒன்றாக்கப்பட்டனர்” எனக் குறிப்பிட்டு இப்போலித்தனமான வெற்றிக்கு வக்காலத்து வாங்கிய அ.மார்க்ஸ் போன்ற பின்நவீனத்துவவாதிகள், “இதுவொரு பன்மைத்துவ அரசியல் செயல்பாடென்றும், இதற்கு மாறாக, புரட்சிகரமான கோரிக்கைகளை முன்வைப்பது பிளவுவாதத்திற்கு இட்டுச் செல்வதாகும்” எனப் பீதியூட்டினர். ஆனால், அக்கும்பல் தூக்கிப் பிடித்த இந்தப் பன்மைத்துவம்தான் ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து துரத்தப்பட்டவுடன் இராணுவ கவுன்சில் அரசு பொறுப்பை எடுத்துக் கொள்வதற்குக் காரணமாக இருந்தது.

அப்துல் அல் ஸிஸி
எகிப்தில் நடந்துள்ள இராணுவப் புரட்சியின் சூத்திரதாரியான இராணுவ அமைச்சர் ஜெனரல் அப்துல் ஃபதா அல் ஸிஸி.

எகிப்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசியல் சாசனத்திற்கான தேர்தல், அதிபர் தேர்தல், நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தாலும், இராணுவம் ஆட்சியதிகாரத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்க விரும்பாமல் பல்வேறு சதிகளை நடத்தியது. அதிபர் தேர்தலில் முபாரக் ஆட்சியின்பொழுது பிரதம மந்திரியாக இருந்த அகமது ஷாஃபிக் மோர்ஸிக்கு எதிராக இராணுவக் கும்பலால் நிறுத்தப்பட்டார். அகமது ஷாஃபிக் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு விதிக்கப்பட்டிருந்த தடையை எகிப்தின் உச்ச நீதிமன்றம் வலிய வந்து நீக்கி, இராணுவத்துக்கு உதவியது.

அதிபர் தேர்தலில் போட்டியிட்ட தாராளவாத, மதச்சார்பற்ற முதலாளித்துவ கட்சிகள், இடதுசாரி அமைப்புகள் ஆகியவை போதிய வாக்குகளைப் பெற முடியாமல் முதல் சுற்றிலேயே தோற்றுப் போய்விட, அதிபர் தேர்தலின் இறுதிச் சுற்றில் எகிப்து மக்களின் முன் இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று, அவர்கள் மத அடிப்படைவாதக் கட்சியைச் சேர்ந்த மோர்ஸியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அல்லது, இராணுவத்தின் கையாளான அகமது ஷாஃபிக்கிற்கு ஓட்டுப் போட வேண்டும். இந்நிலைமைக்கு எதிராகப் பல்வேறு கட்சிகள், அமைப்புகளால் தேர்தல் புறக்கணிப்பு ஓர் உத்தியாகக் கையாளப்பட்டாலும், அது தேர்தலை ரத்து செய்யும்படி இராணுவக் கும்பலை நிர்ப்பந்திக்கும் அளவிற்குப் பலம் வாய்ந்ததாக அமையவில்லை.

அதிபர் தேர்தலில் மோர்ஸி வெற்றி பெறும் சூழ்நிலை இருந்ததைப் புரிந்துகொண்ட இராணுவம், ஆட்சி அதிகாரத்தை ஏந்திச் சுழற்றுவதில் தனது பங்கை உறுதி செய்துகொள்ளும் விதமாகப் பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்தது. இவற்றின்படி, நாட்டின் அதிபர் இராணுவத்தின் தலைவராக (Commander-in-Chief) இருப்பது ரத்து செய்யப்பட்டு, அந்த அதிகாரம் இராணுவ கவுன்சிலின் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது; இராணுவ அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கும் அதிகாரம் மற்றும் அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆகியவையும், உள்நாட்டில் இராணுவத்தை நிறுத்துவது அல்லது அயல்நாட்டின் மீது படையெடுக்க உத்தரவிடுவது ஆகிய அதிகாரங்களும் அதிபரிடமிருந்து பறிக்கப்பட்டு, இராணுவ கவுன்சிலிடமே ஒப்படைக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் மேலாக, புதிய நாடாளுமன்றத்தை அரசியல் சாசன நீதிமன்றத்தின் உதவியோடு இராணுவம் கலைத்தது. சுருக்கமாகச் சொன்னால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஒரு பொம்மை அதிபராக்கப்பட்டார். எகிப்தின் உண்மையான ஆட்சியாளர்களாக அரசுப் படைகளின் உயர் மன்றம் (Supreme Councile for Armed Forces) முடிசூட்டிக் கொண்டது.

இராணுவத்தின் இந்தச் சதிகளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தாலும், அது இராணுவத்துக்கு எதிரான வலிமை வாய்ந்த அரசியல் ஆர்ப்பாட்டங்களாக மாற்றப்படவில்லை என்பது தற்செயலானதல்ல. எதிர்த்தரப்பின் முக்கியத் தலைவர்களான முகம்மது எல்-பராதேய், அகமது ஷாஃபிக், தரகுப் பெருமுதலாளியான மம்தௌஹ் ஹம்ஸாஹ், பாசீம் யூசுப் உள்ளிட்டோருக்கும் எகிப்து இராணுவத்துக்கும் இடையே உள்ள உறவு; இக்கும்பலுக்கும் அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவிற்கும் இடையே உள்ள உறவிலிருந்துதான் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இராணுவ விசுவாசிகள்
இராணுவத்தால் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முபாரக்கின் விசுவாசியும் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான அட்லி மஹ்மூத் மன்சூர் (இடது) மற்றும் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க விசுவாசி முகம்மது எல்-பரதோய்.

அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட முகம்மது மோர்ஸி இராணுவத்தோடு அதிகாரப் போட்டியில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இராணுவத்தால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அவர் இட்ட கட்டளையை எகிப்தின் அரசியல் சாசன நீதிமன்றம் ரத்து செய்தது. மார்ச் 2011-இல் நடந்த மக்கள் போராட்டத்தின் மீது பல்வேறு அத்துமீறல்களை நடத்திய போலீசார் மற்றும் இராணுவத்தினர் மீது விசாரணை நடத்துவதற்கு அமைக்கப்பட்ட கமிசன், ஒருவர் பின் ஒருவராக குற்றவாளிகளை விடுதலை செய்து வந்த நிலையில், அக்கமிசனின் ஆயுட்காலத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த அப்துல் மெகுயித் மகம்மதுவை (இவர் ஹோஸ்னி முபாரக்கின் அடிவருடிகளுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது) மாற்ற மோர்ஸி எடுத்த முயற்சிகளும் தோற்கடிக்கப்பட்டன. இன்னொருபுறம், புதிய அரசியல் சாசனத்தை எழுதுவதில் முசுலீம் சகோதரத்துவக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் மற்ற கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே முரண்பாடு முற்றி வந்தது.

இந்நிலையில் அதிபர் மோர்ஸி தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆட்சியதிகாரத்தில் முசுலீம் சகோதரத்துவக் கட்சியின் பங்கை உறுதிப்படுத்தும் பல்வேறு உத்தரவுகளை அடுத்தடுத்து பிறப்பித்தார். குறிப்பாக, அரசியல்சாசன சபையையும் அதன் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்ய நீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரத்தை ரத்து செய்ததோடு, தனது இந்த உத்தரவுகளை நீதிமன்றம் ஆய்வுக்கு உட்படுத்துவதையும் தடை செய்தார்.

மோர்ஸி தான் பதவி வகித்த குறுகிய காலத்தில் முபாரக்கின் முப்பது ஆண்டு கால ஆட்சியைவிட ஒரு கொடிய அடக்குமுறையைத் தொழிற்சங்கங்களின் மீது ஏவிவிட்டார். காசா முனை மீது இசுரேல் நடத்திய தாக்குதலின்பொழுது இசுரேல்-அமெரிக்க கூட்டணிக்கு ஆதரவாக நடந்துகொண்டார். ஐ.எம்.எஃப்.-இடமிருந்து 480 கோடி அமெரிக்க டாலர்களைக் கடன் பெறுவதற்காக அது இட்ட நிபந்தனைகளையெல்லாம் ஏற்றுக் கொண்டார். இவையெதுவும் தீவிரமாக எதிர்க்கப்படாத அதேசமயம், மோர்ஸி தனது உத்தரவுகளின் மூலம் முசுலீம் சகோதரத்துவக் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு ஏற்றபடி புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி நிறைவேற்ற முயல்கிறார்; ஒரு மதவாத ஆட்சியை நிறுவ முயலுகிறார் என்பது மட்டுமே மையப்படுத்தப்பட்டு எதிர்க்கப்பட்டது.

அதிகாரப் போட்டியில் இறங்கியுள்ள இராணுவமும் முசுலீம் சகோதரத்துவக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று பார்க்கப்படாமல், தாக்குதல் இலக்கில் மோர்ஸியும் முசுலீம் சகோதரத்துவக் கட்சியும் நிறுத்தப்பட்டன. கலகம் எனப் பொருள்படும் Kதாமோரோட்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, மோர்ஸிக்கு எதிரான பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டது. இவை அனைத்தின் பின்னணியில் கார்ப்பரேட் பத்திரிகைகளும், முபராக்கின் ஆதரவாளர்களான பெருமுதலாளிகளும், சவூதி அரேபியாவும் ஒளிந்திருந்தனர்.

“முபாரக்கால் ஊட்டி வளர்க்கப்பட்ட இராணுவம், முபாரக்கால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள், போலீசு மற்றும் அதிகார வர்க்கம் – இக்கும்பல்தான் இப்பொழுது எகிப்தை ஆள்கிறது. இது முபராக் இல்லாத முபராக்யிசம்” என்கிறார், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நவீன அரபு அரசியல் புலப் பேராசிரியர் ஜோஸப் மஸாத். “இதற்காகவா இலட்சக்கணக்கான மக்கள் போராடத் துணிந்தார்கள்? பல நூறு பேர் தங்களின் உயிரைத் தியாகம் செய்தார்கள்?” எனக் கேட்டால், “இதுவும் ஒரு மாற்றம்தான்” எனப் பின்நவீனத்துவவாதிகள் உறுமுகிறார்கள். மேலும், இன்று இராணுவத்துக்கு ஆதரவாக நிற்கும் அமைப்புகள் நாளை இராணுவத்துக்கு எதிராகவும் திரும்பும் என்று அருள்வாக்கு சோல்லுகிறார்கள்.

தேர்தல்கள், நாடாளுமன்றம் என எத்தனை முக்காடுகளைப் போட்டுக் கொண்டாலும் இராணுவ ஆட்சி என்பது ஒரு கொடுங்கோலாட்சிதான் என்பதற்கு உலகெங்கிலும் அநேக உதாரணங்களும் அனுபவங்களும் இருக்கும் நிலையில், அதனை நேரடியாகப் பட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய அவலத்திற்குள் எகிப்து மக்கள் தள்ளப்பட்டிருப்பதை எப்படி ஆதரிக்க முடியும்? எதிரும்புதிருமாக நின்று மோதிக்கொள்ளும் முசுலீம் சகோதரத்துவக் கட்சி, இராணுவம் இவை இரண்டுக்கும் அப்பாற்பட்ட, முரணற்ற ஜனநாயகமும், புரட்சிகரமான சமூக மாற்றத்தையும் உள்ளடக்கிய மூன்றாவது தீர்வு என்று எதுவுமே இல்லை எனப் பித்தலாட்டம் செய்து, இராணுவ ஆட்சியை மட்டுமே உடனடி மாற்றாக முன்நிறுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். மோதிக் கொள்ளும் இரண்டு தரப்பில், அந்தச் சமயத்தில் குறைவான தீங்கு நிறைந்த சக்தியை (lesser evil) ஆதரிப்பது என்ற தந்திரத்தோடு, முபாரக்கிற்குப் பதிலாக மோர்ஸி, மோர்ஸிக்குப் பதிலாக இராணுவம் எனப் பின் நவீனத்துவவாதிகள் முன்நிறுத்தும் ஆட்சி மாற்றங்கள், மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்து அவர்களை வெகுவிரைவில் விரக்தியும் களைப்பும் அடையச் செய்யும் அபாயம் நிறைந்தவையாகும்.

– திப்பு
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

பால் பாக்கெட் !

14

ந்த வருச கோடைக்கு எங்க கிராமத்துக்குப் போயிருந்தேன். வீட்டுல புளிக்கொழம்பு வச்சுருந்தாங்க. வெய்யுலு வேற எரிஞ்சுக் கெடக்கு புளிக்கொழம்ப நெனச்சாலே வயிரு பகபகன்னுச்சு. சாப்புட புடிக்காம ஒக்காந்திருந்தேன். அதப்பாத்த எங்கப்பா இரு வாரேன்னு சொல்லிட்டு போனவரு, கையில லோட்டாவோட வந்தாரு “வாம்மா, பசுமாட்டு தயிரு வாங்கிட்டு வந்துருக்கேன் சாப்புடு” அப்புடின்னாரு.

“பசும்பால் தயிரா? சாப்புட்டு எவ்வளவு நாளாயிடுச்சு, பசும்பால் தயிருல இருக்குற மணமே ஒரு புடி அதிகமா சாப்புட வைக்குமே. எங்கப்பா கெடச்சுச்சு தயிரு ஒங்களுக்கு” அப்டின்னேன்.

பசுவின் பால்’பெரியப்பா வீட்டுல சீமமாடு கண்ணுப் போட்டுருக்கு, பெரியம்மா குடுத்துச்சு, வாங்கிட்டு வந்தேன். மாடே அவங்கள்தான்னு இருந்தாலும் தொடந்து சாப்புட முடியாது. ஆசைக்கி நாளுநாளைக்கி கறந்து குடிச்சுக்க வேண்டியதுதான். டிப்போவுக்குக் பாலு குடுக்க ஆரம்பிச்சுட்டா, அப்பறம் அவங்களும் பாலுக்கு டிப்போக்காரங்கிட்ட பாத்தரத்த ஏந்திகிட்டு நிக்க வேண்டியதுதான்.’’ அப்டின்னார்.

உண்மைதாங்க, பசுமாட்டு தயிருன்னு குறிச்சு சொல்லிக்கிற அளவுக்கு அபூர்வமானதா இருக்குங்றதுதான் நெசம். கிராமத்துல பசும்பாலு, தயிரு, கெடைக்கிறதுங்கறதே அதிசயமாவும், ஆச்சர்யமாவும் சொல்லிக்கிற நெலம இருக்குங்கறத நெனச்சா வருத்தமாதான் இருக்கு.

நம்ம வீட்டுல பால் இல்லன்னா பக்கத்து வீட்டுலதான் பால் வாங்குவாங்க. ஆனா இப்ப பால் வேணுன்னாலே மளிகைக் கடைக்குதான் போக வேண்டியிருக்கு. கோமாதா, ஆரோக்கியா, கவின், திருமலான்னு பாக்கெட் பால்தான் விக்கிறாங்க அதுவும் நூத்தி இருபது நாள் கெடாத பாலுன்னு சொல்லி, அழுத்தமான சீட்டுல அடச்சுருக்குற பாலக் குடுக்குறாங்க.

பரம்பர பரம்பரையா வீட்டுல மாடு வளத்தவங்க, மண்ணு பாணையில பாலக் காச்சனும். ராட்டி (வறட்டி) எரியப் போட்டுதான் பால காச்சனுமுன்னு பக்குவத்தோட பசும்பாலக் காச்சி, பாலுன்னு, மோருன்னு குடிச்ச வெவசாய கிராமத்த, பால்னாலே நூத்தி இருவது நாள் பாக்கெட்ப் பால்தாங்கறக் கட்டாயத்துக்குக் கொண்டு வந்துட்டாங்க.

கிராமத்துல வீட்டுக்கு வீடு நாட்டு பசு இருக்குமுங்க, அதுக்குன்னு தனியா எந்த வேலையும் பாக்க தேவையில்ல. நம்ம வயவேலைக்கிப் போறப்ப மாட்டையும் ஓட்டிக்கிட்டு போயி தரிசு காட்டுல விட்டுட்டு, வயவரப்புல புல்லருக்கலாம், களையெடுக்கலாம், மருந்தடிக்கலாம், வரும் போது ஒரு கட்டு புல்லும் கொண்டுட்டு வந்துரலாம். வேலைக்கு வேலையும் ஆச்சு மாடும் மேச்சா மாதிரி ஆச்சு.

பால் பாக்கெட்
தனியாரு பால் கம்பனிக்காரன் கிராமத்துல டிப்போ தொறக்க ஆரம்பிச்சான்

வய்க்கெ(வைக்கோல்), பயிறு, கடல, சோளம், கம்பு, வரகு இதோட கொலறு(கழிவு), தவுடு, புண்ணாக்கு, கழனி, கஞ்சின்னு வெவசாயம் பண்ணுனதுல, நல்லது மனுசனுக்கு, கழுச்சுக் கட்டுனது மாட்டுக்குன்னு மிச்சமீதிய போட்டாலே போதும். சாணமும் வயலுக்கு உரமாச்சு. இதுக்குன்னு பராமரிக்கத் தனியா இதுக்குன்னுச் செலவு செய்யத் தேவயுமில்ல.

மாடு கன்னு போட்டா பசுங்கன்னாயிருந்தா வளத்து வீட்டுத் தேவைக்கி வச்சுக்குவாங்க, இல்ல அவசர தேவைக்கி வித்துக்குவாங்க, காள கன்னாயிருந்தா ஒழவுக்கு, வண்டி மாட்டுக்குப் பழக்கிக்குவாங்க, பொண்ண கல்யாணம் செஞ்சுகுடுத்தா பாலுக்காக ஒரு பசுவும் கன்னும் சீரா கொடுப்பாங்க.

நாட்டுப் பசுமாடு கொறச்சலா ஒரு நேரத்துக்கு ரெண்டு லிட்டரும், அதிகமா மூனு லிட்டரும் ஒரு நாளைக்கி ரெண்டு வேளை கறக்கும். வீட்டுக்கு தேவையான பாலு போக மிச்சத்த அக்கம் பக்கத்துல விப்பாங்க. இல்லன்னா டீக்கடைக்குக் குடுப்பாங்க. கொழம்பு காச்ச, வெத்தலப் பாக்கு வாங்கன்னு அன்னன்னய தேவையை சரி செஞ்சுடும். கிராமத்துல மாடு வளப்புங்கறது வாழ்க்கைக்கும், பொழப்புக்கும் உதவுறமாதிரி ஒன்னுக்கொன்னு தொடர்புடையதா இருக்கும்.

நாட்டு மாடு வளப்ப துண்டிச்சா மாதிரி சீமப்பசு வந்துச்சு. கூட்டுறவு சொசைட்டி மூலமாக் கவருமெண்ட்டே லோனுக் குடுத்து சீம மாடு வாங்க ஏற்பாடு செஞ்சுச்சு. மாடு பேர்ல கடன் கொடுத்ததால, மாட்ட விக்கவும், வாங்கவும், முடியாத அளவுக்கு கவுருமென்ட்டே அடயாளத்துக்குக் காதுல கடுக்கன் போட்டுதான் குடுக்கும். அப்பரம் ஊரு பூராவும் கடுக்கன் போட்ட மாடுதான் வர ஆரம்பிச்சுச்சு.

கடன் தீர்ர வரைக்கும் நம்ம தேவைக்கி பால் எடுத்துக்க முடியாது. பேருக்கு கொஞ்சோண்டு குடுப்பாங்க. மாசம் முடிச்சா மொத்தமா காசு கொடுப்பாங்க. வீட்டுச் செலவு, மாட்டுக்கு தீவனமுன்னு மொத்த காசும் சரியா போயிடும். மாட்டுக் கடன எப்புடி அடைக்கிறது. தண்ணில போட்ட கல்லுக் கணக்கா கடன் பாட்டுக்கும் இருக்கும்.

நாட்டு மாடு மாதிரி சீம மாட்ட பராமரிக்க முடியாது. மாட்டுத் தீவனம், புண்ணாக்கு, தவுடு, பருத்திக்கொட்ட, அரிசிக் கஞ்சி, சீமப் புல்லுன்னு மெத்து மெத்துன்னு சாப்பாடு குடுக்கனும். மரத்து நெழலுல கட்ட முடியாது. அதுக்குன்னு கொட்டகை போடனும். மழையில நெனஞ்சா நடக்க சொரம் வந்துரும், வெய்யில்ல போனா இழுப்பு வந்துரும். மேக்கெயும் ஓட்டிட்டு போக முடியாது வீட்டுலயே பக்குவமா பாத்துக்கனும். நம்மாளு கருப்பா இருப்பான் வெயிலுக்கும், மழைக்கும் நின்னு நல்லா வேலைப்பாப்பான், ஒன்னும் பன்னாது, ஆனா செவப்பா தொரமாரு மாதிரி ஐயருக்கணக்கா மெலுக்கா இருக்குறவன் ஊளச் சதையாதான் இருப்பான். புல்லு தடிக்கி விட்டாலே விளுந்துருவான். அதுபோலத்தான் இந்த சீம பசுமாட்டு ஒடம்பும்.

டெட்ரா பேக் பால்
பாக்கெட்டு பால் கெட்டுப் போறதால, இப்ப நூத்தி இருவது நாள் கெடாத பாலுன்னு விக்கிறாங்க.

ஒன்னு ஒன்ரை கறக்குற மாட்ட வச்சுகிட்டு என்னத்த செய்ய என்ற நெனப்ப உண்டு பண்ணிட்டாங்க. சனங்களும் நாட்டு மாட்ட வித்துட்டு சீம மாடு வாங்குனாங்க, நாட்டு மாட்டை அடிமாடா பயன்படுத்தி அழிச்சுட்டாங்க. நாளா வேலையும் பாக்குற சாதாரண குடும்பத்த சேந்தவங்களால இப்டியெல்லாம் மாட்ட பராமரிக்க முடியாம, நெரையா மாடுங்க செத்துப்போயி கடனாளி ஆனதுதான் மிச்சம்.

கொஞ்ச வருசங்கழிச்சு படிப்படியா கூட்டுறவு சொசைட்டி மூலமா கெவுருமெண்டு லோனுக் குடுக்குறத நிப்பாட்டிருச்சு. சீம பசுவும் கொறஞ்சுப் போச்சு. கிராமத்துல பாலுக்கு திண்டாட்டமா போச்சு. டீக்கடைக்குக் கூட பால் தட்டுப்பாடு வந்துட்டு. கோமாதா, திருமலான்னு, மாட்டுப்பேர வச்சுகிட்டு பாக்கெட் பால் ஊருக்குள்ள வர ஆரம்பிச்சுச்சு. கிராமத்து கடைகள்ல ப்ரிஜ் வசதியெல்லாம் இல்லாமெ பாக்கெட்டு பால் கெட்டுப் போறதால, இப்ப நூத்தி இருவது நாள் கெடாத பாலுன்னு விக்கிறாங்க.

கெவுருமென்ட்டு பால் கூட்டுறவு சொசைட்டிய மூடிட்டுது. தனியாரு பால் கம்பனிக்காரன் கிராமத்துல டிப்போ தொறக்க ஆரம்பிச்சான். அவனே லோனும் தாரான், பாலையும் வாங்கிக்குறான். அவங்க தேவைக்கிக் கூட பால் தரமாட்டேங்கறான். பணம் அவனுது, மாடு அவனுது, பால் அவனுது, மாடு மேய்க்கிற பண்ணக்காரன் போலதான், மாட்டுச் சொந்தக்காரன் இருக்கான்.

எந்த திட்டமும் மொதல்ல கெவுருமெண்டு ஆரம்பிச்சு பின்னாடி தனியாருக்கு தாரவாக்குற சூச்சமந்தான் இதுலயும் நடந்துச்சு. திட்டம் போட்டாப் போலவே இருவத்தஞ்சு வருசத்துக்குள்ள நாட்டு மாடுங்குறதே இல்லாமப் பண்ணி, பாலுக்கு திண்டாட விட்டுட்டாய்ங்கெ. கிராமத்துல வெவசாயம் செஞ்சு பொழைக்கிற சனங்க அவங்க பொழைப்போட சேந்து மாடு வளத்தாங்க, தெம்பா தைரியமா வேலைப்பாக்க பாலு, மோரு குடிச்சாங்க. இப்ப ஒருவா காப்பித்தன்னிக்கி ஏங்கிப் போயி நிக்கிறாங்க.

கடையில வாங்றது பாலு தோசைமாவுப் போல இருக்கு, மோரு கஞ்சித்தண்ணி போல இருக்கு, மருந்து மாதிரி குடிக்க வேண்டியதா இருக்கு. வளமா வெவசாயம் பண்ணி, சத்தா சாப்புட்டு, ஆரோக்கியமா இருந்தவங்கள, அவங்களுக்கெ தெரியாம கலப்பின பசு, கலப்பின விதை, ரசாயன உரம்ன்னு, எல்லாத்துலயும் கலப்படம் பண்ணி கிராமத்து வாழ்க்கைய, சக்கையா ஆக்குறாங்க. நகரத்து மொதலாளி பெரியாளா வரதுக்கு கிராமத்து மக்கள கண்ணக் கட்டி கையத் திருகி புடுங்குற கணக்கா அவங்க பொழப்ப அழிக்கிறாய்ங்க.

நடக்குறது எல்லாமே திட்டம் போட்டுதான் நடக்குதுங்கறத புரிஞ்சுகிட்டு மக்கள் ஒன்னு சேந்து போராடினாதான் இருக்குறதையாவது தக்க வச்சுக்க முடியும், என்ன சொல்றீங்க?

– சரசம்மா

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் பயங்கரவாதம் !

5

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் 1-8-2013 அன்று சிதம்பரம் மேல வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. சிதம்பரம் நகர தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்டத்தலைவர் வெங்கடேசன், செயலாளர் கலையரசன், பாதிக்கப்பட்ட பெற்றோர் செல்வக்குமார், மனித உரிமை பாதுகாப்பு மைய செயலாளர்கள் வழக்றிஞர்கள் செந்தில், கடலூர் செந்தில் குமார் ஆகியோர் உரையாற்றினர்.

வழக்கறிஞர் செந்தில்
வழக்கறிஞர் செந்தில் உரை.

கடந்த மாதம் பள்ளி துவக்கத்தில் அரசு கட்டணம் செலுத்த முயன்ற பெற்றோர்களை பள்ளி முதலாளி அடியாட்களை வைத்து மிரட்டினார். அதில் அனைத்துக் கட்சியினரும் இருந்தனர். காவல்துறையினர் தலையீட்டால் சுமுக நிலை ஏற்பட்டது. அவ்வாறு அரசு கட்டணம் கட்டிய மாணவர்களுக்கு பாடப் புத்தகம் தராமல் இழுத்தடித்தது, பிள்ளைகளை தனி வகுப்பறையாக அமர வைத்து பாகு பாடு காட்டியது என அத்து மீறல் தொடர்ந்தது. பெற்றோர்களை தனித்தனியாக தெரிந்தவர்களை வைத்து நயமாக பேசுவது, தேவைப்பட்டால் மிரட்டுவது, கட்டணத்தை பார்த்தால் உங்கள் பிள்ளைகளின் கல்வி அவ்வளவுதான், அரசு கட்டணம் எல்லாம் நான் வாங்க முடியாது. அப்புறம் அதற்கேற்றாற் போல்தான் வகுப்பு நடக்கும், அதாவது அனைத்து பாடத்திற்கும் ஒரே ஆசிரியர்தான் என மன உளச்சல் தொடர்ந்தது. இது குறித்து கல்விதுறை காவல் துறை, கலெக்டர், இயக்குனர் என அனைவருக்கும் புகார் மனு அனுப்பினோம். இது வரை எந்த அதிகாரியும் என்ன என்று விசாரிக்கவரவில்லை.

பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாநிலை போராட்டம் நடத்த இரு முறை விண்ணப்பித்தோம். அனுமதி மறுத்ததுடன், சிதம்பரம் காவல்துறை நாங்கள் பள்ளி நிர்வாகத்துடன் பேசி செட்டில் செய்கிறோம் என பல முறை முயன்று தோற்றுப் போனது. ஆய்வாளர் இருமுறை பள்ளிக்கே சென்றார். பலன் இல்லை. நாம் மாணவர்களை நேரடியாக டி.எஸ்பியிடம் அழைத்து சென்று புத்தகம் தர மறுப்பது, தனி வகுப்பறை என்பதை ஆதாரங்களுடன் நிருபித்தோம். இம்முறை பள்ளி தாளாளரையும் முதல்வரையும் காவல் நிலையம் வரவழைத்து பேசினர். “நான் அப்படி எதுவும் செய்யவில்லை, பெற்றோர் சங்கத்தினர் வேண்டு மென்றே எனக்கு எதிராக பேசுகின்றனர்” என விளக்கமளித்தார். சிதம்பரம் டி.எஸ்பி ”இவ்வளவு நாணயமற்று, மாணவர்கள் மீது அக்கறையில்லாத உன்னிடம் என் பிள்ளை படிக்க வேண்டிய அவசியம் இல்லை” என வீனஸ் முதலாளியிடம் கூறி அவர் பிள்ளையை டி.சி. வாங்கி வேறு பள்ளியில் சேர்த்து விட்டார். பெற்றோர் சங்கப் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்து விடுமோ என கருதி கடைசி வரை அனுமதி தரவில்லை. நாம் உயர் நீதிமன்றம் சென்று உத்திரவு பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

வெங்கடேசன்
தலைவர் வெங்கடேசன் பேச்சு.

தலைவர் வெங்கடேசன் பேசும்போது ”பணம் சம்பாதிக்க பிச்சை எடுக்கலாம், கள்ள நோட்டு அடிக்கலாம், சாராயம் காய்ச்சி விக்கலாம், மாணவர்களை பணயக் கைதிகளாக்கி பணம் பறிப்பது தேவையா? அரசு கட்டணம் செலுத்தியதற்காக பிள்ளைகளுக்கு புத்தகம் தர மறுப்பது, தனியே அமர வைப்பது இவையெல்லாம் கல்வியாளர் செய்யக்கூடிய செயலா? பெற்றோர்களே நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும், கண்டிப்பாக கட்டணக் கொள்ளையர்களை வீழ்த்த முடியும்” என பேசினார்.

சிதம்பரம் தலைவர் ராமகிருஷ்ணன் “சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அனைத்து பெற்றோர்களும் ஓரணியில் பள்ளி முன்பு பல முறை முற்றுகை, உள்ளிருப்பு போராட்டம் என நடத்தி அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தியிருக்கிறோம். சில நூறு மாணவர்கள் அடைந்த அரசு கட்டணம், இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு கட்டணத்தை மட்டுமே செலுத்துகின்றனர். நம்முடைய போராட்டத்தால் பல பள்ளிகள் அவர்களாகவே அரசு கட்டணம் மட்டும் வசூலிக்கிறோம் என அறிவிப்பு பலகையில் ஒட்டியுள்ளனர். வீனஸ் பள்ளி பெற்றோர்கள் அச்சமில்லாமல் ஒன்று திரண்டு போராட்டத்திற்கு நேரடியாக களத்திற்கு வராததே இரு மாதங்களாக இந்த கட்டண பிரச்சினை இழுத்து வருகிறது. அதிகக் கட்டணம் செலுத்தியவர்கள் புகார் மனுவாக எங்களிடம் கொடுத்தால் நாங்கள் பள்ளி நிர்வாத்திடமிருந்து திருப்பிவாங்கி தருகிறோம். அச்சப்படாதீர்கள்” என பேசினார்.

செயலாளர் கலையரசன் ”சிதம்பரம் வீனஸ் பள்ளி அரசு கட்டணம் மட்டுமே வசூலிக்கும் வரை நாங்கள் விடமாட்டோம். மாணவர்களை துன்புறுத்துவது என்ன மனித செயலா? கல்வித்துறை அதிகாரிகள் மௌனம் காப்பது தான் பள்ளி முதலாளியின் அத்து மீறலுக்கு காரணம். நாம் இன்னும் அதிக எண்ணிக்கையில் சங்கமாக திரண்டு போராடுவதுதான் தீர்வுக்கு வழியாகும்.” என்று பேசினார்.

வீனஸ் பள்ளி பெற்றோர் செல்வக்குமார் ”என் குழந்தைகள் இருவர் 1 மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கின்றனர். அரசுக்கட்டணம் கட்டியதற்காகவும், சங்கத்தில் அதிகம் ஈடுபடுவதால் எனது பிள்ளைகளுக்கு இன்று வரை புத்தகம் தரவில்லை. புத்தகத்திற்கான பணம் வாங்க மறுத்தார்கள். டி.எஸ்.பியிடம் சொன்னேன், பணம் வாங்கினார்கள்.புத்தகம் இருப்பு இல்லை என பொய் சொன்னார்கள். அதே நாளில் பள்ளி சொன்ன பணத்தை செலுத்திய பிற மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி யுள்ளனர். வகுப்பில் என்பிள்ளை மட்டும் புத்தகம் நோட்டு இல்லாமல் இருப்பது அவர்கள் மனது பாதிக்காதா? இதனால் குடும்பத்தில் பிரச்சினை உருவாகும் நிலை ஏற்படுகிறது. நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் நெருக்குதல் கொடுத்து காலி பண்ணச்சொல்லியுள்ளார்கள். கல்வியாளர் செய்யும் கூடிய செயலா? சங்கத்தோடு சேர்ந்து இறுதி வரை போராடுவேன். நான் பின்வாங்க மாட்டேன்.” என உருக்கமாக பேசினார் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் நின்று கவனித்தனர்.

முழக்கம்
முழக்கம்.

இறுதியாக பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜுவின் உரை

”சிதம்பரம் வீனஸ் பள்ளி 10-ம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடம் பெற்றது. அது போல் அரசுக் கட்டணம் செலுத்த சென்ற பெற்றோர்களை அடியாட்களை வைத்து மிரட்டியதிலும் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் எங்கும் நடக்காதது. கட்டணக் கொள்ளைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் பள்ளிகளை முற்றுகையிட்டு நடத்தும் போராட்டங்கள் நாள் தோறும் பத்திரிக்கையில் வந்து கொண்டுதான் இருக்கிறது. கல்வி கட்டணம் கட்ட இயலாத பெற்றோர்கள் போராடுவதை தவிர வேறுவழியில்லை. ஆட்டோ ஓட்டுநர் 10 ரூபாய் அதிகம் வாங்கினால் கொள்ளை அடிப்பதாக பேசும் நடுத்தர வர்க்கத்தினர், கண்டக்டர் 2 ரூபாய் சில்லறை பாக்கி வைத்து விட்டால் புகார் செய்வேன் என ரூல்ஸ் பேசும் நடுத்தர வர்க்கத்தினர், மளிகை சாமானில் ஒரு சோப்பு விடுபட்டால் பதறுபவர்கள், அரசுக் கட்டணத்தை விட நான்கு மடங்கு அதாவது ரூ 12,500 என்பதை ரூ 40,000 என வசூலிப்பதற்கு எதிராக ஏன் கேள்வி கேட்பதில்லை, போராட வருவதில்லை? வீனஸ் பள்ளியில் செல்வக்குமார் அரசுக்கட்டணம் கட்டினார், சங்கத்திற்காக முன்னின்று போராடுகிறார் என்பதற்காக 1,2 வகுப்பு படிக்கும் அவரது பிள்ளைகளுக்கு பாடப் புத்தகம் தரவில்லை. இப்படிபட்டவர் எப்படி பள்ளி முதல்வராக, தாளாளராக, கல்வி வள்ளலாக இருக்க முடியும். செல்வக்குமார் புத்தகம் கேட்டு பள்ளி முதல்வரோடு வாக்கு வாதம் செய்யும் போது, வாடா போடா, என இருவருக்கும் வார்த்தை தடிக்கிறது. வெளியே போடா என முதல்வர் பேசுகிறார். வேடிக்கை பார்க்கும் பெற்றோர்கள் ”புத்தகம் ஏன் கொடுக்கல, பணம் செலுத்தும் பெற்றோரை எப்படி வெளியே போகச் சொல்லலாம்” என ஒற்றுமையாக அன்றைக்கே கேட்டிருந்தால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவசியம் இருக்காது. குடியிருக்கும் வீட்டு உரிமையாளரை நிர்ப்பந்தப்படுத்தி காலி செய்ய சொல்கிறார் என்றால் சட்டம், நியாயம் என்ன இருக்கிறது. காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் எத்தனை முறை செல்வக்குமாரும், பிற பெற்றோர்களும் சென்றிருப்பார்கள். பள்ளி தாளாளர், முதல்வரிடம் பேசி பார்த்துவிட்டு டி.எஸ்பி. வீனஸிலிருந்து அவர் பிள்ளைக்கு டி.சி. வாங்கி வேறு பள்ளியில் சேர்த்து விட்டார். நமக்கு தீர்வு ஏற்படவில்லை.

பயங்கரவாதம் என்றால் குண்டு வெடித்து இரண்டு பேர் இறப்பது, அதை காவல் துறையும் பத்திரிக்கைகளும் எப்படி வெளிப்படுத்துகின்றன. இரண்டு மாதமாக செல்வக்குமார் தன் பிள்ளைகளுக்கு அரசுக் கட்டணத்தை செலுத்திவிட்டு நாள் தோறும் புத்தகத்திற்காக தனியே அமர வைத்தற்காக, எத்தனை மனுக்கள், கல்வி துறை அதிகாரிகள் இயக்குனர் வரை கொடுக்கப்பட்டது. கலெக்டரிடம் வீனஸ் பள்ளி தொடர்பாக புகார் மனுவை நேரில் சந்தித்து பெற்றோர்கள் கொடுத்தார்கள். இது வரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. பெற்றோர்களுக்கு என்ன தீர்வு? தனியார் பள்ளி முதலாளி மீது நடவடிக்கை எடுக்க முடியாது, கட்டணக்கொள்ளையை தடுக்க முடியாது என்றால் உரிய அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்யட்டும். அரசுக் கட்டணம் செலுத்தி விட்டு இன்று கடைசி வரை சரணடையாமல் செல்வக்குமார் நின்று போராடுகிறார். வீனஸ் பள்ளி பெற்றோர்கள் ஒன்று திரண்டு போராடுவதை தவிர வேறு வழியில்லை. நாங்கள் பேசி முடிக்கிறோம் என காலம் தாழ்த்தி பெற்றோர்களின் போராட்ட வீரியத்தை குறைத்தது காவல் துறை. பள்ளி முதலாளி பெற்றோர்களை வெவ்வேறு வகைகளில் பேசி ஒன்று திரள விடாமல் செய்வதற்கு கல்வி துறை அதிகாரிகள் அமைதி நடவடிக்கை பயன்பட்டது.

நீதிபதி சிங்கார வேலிடம் கடந்த ஆண்டு வீனஸ் பள்ளி மீதும், காமராஜ் பள்ளி மீதும் முழுமையான ஆதாரங்களுடன் வழக்கு போட்டோம். நீதியரசர் கூடுதலாக வசூலித்த கல்வி கட்டணத்தை பெற்றோர்களுக்கு திருப்பி தர உத்திரவிட்டிருக்க வேண்டும். அல்லது நான் போட்ட உத்திரவை மீறியிருக்கிறாய் என பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து இருக்க வேண்டும். எதுவும் செய்யாமல் இருவரும் சமாதானமாக போங்கள் என வழக்கை முடித்து வைத்தார். எப்படி தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அச்சம் வரும். அன்று காமராஜ் பள்ளியில் பிரச்சினை தீரும் வரை இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என பெண்கள் உட்பட நள்ளிரவு 12 மணி வரை காமராஜ் பள்ளி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினோம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம் வேறு வழியில்லாமல் கலெக்டர் தலையிட்டதால் தீர்வு கிடைத்தது.

தனியார்மயக் கல்வி மாணவர்கள் தரமானது என்ற விளம்பரத்தால் விட்டில் பூச்சிகளாய் பெற்றோர்கள் விழுகிறார்கள். ஆங்கில வழி தனியார் பள்ளிகளின் கல்வித்தரம், மாணவர்களின் சமத்துவத்திற்கு எதிரானது. பொதுப்பள்ளி, அருகமைப்பள்ளி என சுதந்திரம் அடைந்த நாள் முதல் கல்வியாளர்கள் பல அறிக்கைகளை கொடுத்து அதை பாராளுமன்றமும் ஏற்றுக்கொண்டு இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை. நோபல் பரிசு பெற்ற பலருக்கு ஆங்கிலம் தெரியாது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட பலர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்.

மாணவர்களின் ஆற்றல்களை வளர்ப்பதற்காக, அறிவை விசாலமாக்குவதற்காக தனியார் பள்ளிகள் கல்வி கற்பிக்கிறதா? இல்லை. தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டி, லாபம் சம்பாதிக்க, மனப்பாடம் செய்து பன்னாட்டு கம்பெனிக்கு தேவைப்படும் உதிரி பாகங்களாக, பணம் சம்பாதிக்கும் எந்திரமாக நமது பிள்ளைகளை மாற்றுகிறார்கள். ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஓராசிரியர், ஈராசிரியர், சில பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்ற புள்ளி விபரங்களை அரசே வெளியிடுகிறது. ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் எப்படி படிப்பார்கள். பெற்றோர்கள் எப்படி பிள்ளைகளை சேர்ப்பார்கள்?. இது அரசுக்கு தெரியாதா? ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை.

சாக்கடை இருந்து நோய் பரப்பினால் தான் தனியார் மருத்துவமனைக்கும், தனியார் மருந்து கம்பெனிக்கும் லாபம். அரசுப்பள்ளி தரமாக நடந்தால் தனியார் பள்ளி எப்படி கொழுத்த லாபம் பெற முடியும்? நகராட்சி சுத்தமான குடிநீரை வழங்கினால் மினரல் வாட்டர் கம்பெனி எப்படி லாபமாக இயங்கும்? இத்தகைய வியாபாரங்களில் ஈடுபடாத அரசியல் வாதிகள் உண்டா? இத்தகைய முதலாளிகளிடம் பணம் வாங்காத அதிகாரிகள், அரசியல் கட்சிகள் உண்டா? பெற்றோர்கள் பாதிக்கப்பட்டால், பொதுமக்கள் பாதிக்கப்ட்டால் நமக்கு ஆதரவாக இவர்கள் எப்படி பேசுவார்கள்?. அனைத்து தனியார் மயக் கொள்கைகளும் சட்டமன்றம் பாராளுமன்றத்தில், அதிகாரிகளின் ஒப்புதலுடன்தான் சட்டப்படி அமல் படுத்தப்படுகிறது. அனைத்துக் கட்சிகளும் இதை ஏற்றுகொண்டுள்ளன.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வீனஸ் பள்ளி பிரச்சினை பேசி முடித்தாகி விட்டது என காவல்துறை அனுமதி அனுமதி மறுக்கிறது. நீதிமன்றத்திலும் அவ்வாறே தகவல் அளிக்கிறார்கள். நாங்கள் போராடி நீதிமன்ற உத்திரவு பெற்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அரசு உத்தரவை மதிக்கவில்லை என்றால் இ.த.ச.188பிரிவு, மாணவர்களை பெற்றோர்களை அச்சுறுத்தி பணம் பறித்தால் இ.த.ச.385 பிரிவு, பெற்றோர்களை மிரட்டினால் இ.த.ச.506 1 பிரிவு இருக்கிறது. கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி மனரீதியாக,உடல் ரீதியாக கொடுக்கப்படும் டார்ச்சர் குற்றம் என கூறப்பட்டுள்ளது. ஏன் வீனஸ் பள்ளி முதலாளி, முதல்வர் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது. அரசுக்கட்டணம் கட்டுவேன் என சொன்னால் குற்றமா?.பெற்றோர்கள் ஒன்றிணைந்து போராடினால், போலீசு கல்வி துறை அதிகாரிகள் என்ன செய்ய முடியும்?

நாங்கள் அரசை எதிரத்து போராடுகிறோம். காவல் துறையை எதிர்த்து போராடுகிறோம். டாடா, பிர்லா, அம்பானியை எதிர்த்து போராடுகிறோம். இந்த தனியார் பள்ளி முதலாளிகளுக்காக பெற்றோர்களே அச்சப்படாதீர்கள். நம்மை ஒன்றும் செய்து விடமுடியாது. தனியார்மயம் என்றாலே முறைகேடு, பித்தலாட்டம், லாபவெறி மட்டுமே உந்து சக்தி. ஒழுக்கக்கேடு எத்தகைய படுபாதக செயலையும் செய்யத் தயங்காதது. பிள்ளைகளுக்கு புத்தகம் தராமல் இழுத்தடிப்பதை பொருத்தி பாருங்கள்.

சிதமபரம் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் நேர்மையானவர், அவர் ஒரு வார்த்தை தொலைபேசியில் கூப்பிட்டு போராட்டம் செய்வோம், அரசு கட்டணத்தை மட்டும் வாங்குங்கள் என சொன்னால் வீனஸ் குமார் கேட்க மாட்டாரா? தேர்தல் செலவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியும் வீனஸ் பள்ளியிடம் பணம் பெற்று உள்ளது. அதனால்தான் எதிர்த்து போராட மார்க்சிஸ்ட் கட்சி தயங்குகிறது என பெற்றோர்கள் சொல்லுகிறார்கள் நான் சொல்லவில்லை. பா.ம.க அன்புமணி ”தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு எதிராக தேவைப்பட்டால் பள்ளி முன்பு இளைஞர் அணி போராடும் என அறிக்கை விடுகிறார்”.சிதம்பரம் வீனஸ் பள்ளிக்கு ஆதரவாக அடியாட்களுடன் பா.ம.க மாவட்ட செயலாளர் அரசு கட்டணம் செலுத்த வந்த பெற்றோர்களுக்கு எதிராக களத்தில் கச்சை கட்டி நின்றார்.

பொது மக்கள் அடிமைத்தனமாக என்ன செய்ய முடியும் என ஒதுங்குவதால் பயன் இல்லை. ஒரு முறை கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடி வெற்றி பெற்று அதை சுவைத்து பாருங்கள். அதன் தாக்கம் விலை வாசி உயர்வுக்கு எதிராக, தண்ணீர் வியாபாரத்துக்கு எதிராக, மின்கட்டண உயர்வுக்கு எதிராக, மருத்துவம் தனியார் மயத்துக்கு எதிராக போராடச் சொல்லும். ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளை நம்பி பயனில்லை. நாம் சங்கமாக திரண்டு போராடுவதை தவிர வேறு வழியில்லை. நாளைக்குள் செல்வக்குமார் பிள்ளைக்கு புத்தகம் தரவில்லை என்றால், திங்கள் முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் பள்ளி முன்பாக செய்வோம். இந்தியாவில் 1,2, கிளாஸ் பிள்ளைக்கு புத்தகம் கேட்டு போராட்டம் என்பது முதல் முறையாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கியவர்கள் கடலூர் கல்விதுறை, காவல்துறை மாவட்ட நிர்வாகமும்.

இந்த நிலை வெட்கப் படக்கூடியதாக இருந்தாலும், தனியர் பள்ளிகளின் ரவுடித்தனம் என்ற எதார்த்த உண்மை இதுதான். அப்படிபட்ட சூழலை அதிகாரிகள் ஏற்படுத்தி தரமாட்டார்கள் என நினைக்கிறோம். தனியார்மயக் கொள்கைதான் அரசின் கொள்கை, அதனால்தான் அதிகாரிகள் அமைதியாக இருக்கிறார்கள், சட்டம் சும்மா இருக்கிறது. நாம் சங்கமாக திரண்டு போராட வேண்டும்.”

போஸ்டர்

செல்வக்குமார் பிள்ளைக்கு மறுநாள் சில புத்தகங்கள் கொடுக்கபட்டதால், போராட்டம் தள்ளி வைக்கபட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த கடைவீதியில் உள்ள வியாபாரிகள், கூட்டத்திற்கு வந்த பெற்றோர்கள் நமது சங்க நிர்வாகிகளை பார்த்து பலர் வணக்கம் வைத்தனர். கல்வி வள்ளலை கிழித்து தொங்க போட்டு விட்டீர்கள் என கருத்தும் சொன்னார்கள்.

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்

ஓடு தலைவா ஓடு !

55

லங்காரங்களால் சவடால் அடிக்கும் பொய்கள், தங்களை உண்மைகளுக்கும் மேலானவை என்று எப்போதும் காட்டிக் கொண்டாலும், அவற்றின் ஆயுள் அற்பமென்பதால், அவை சிதறி விழும் போது மீண்டும் மீண்டும் அவலத்திற்கு தள்ளப்படுவது இயற்கை. இது பஞ்ச் டயலாக்கிற்கு போட்டியாகச் சொல்லப்படும் பஞ்ச் தத்துவமென்றாலும் “காவலனி”ல் முறைத்து, பிறந்த நாளில் தடுமாறி, “தலைவா”வில் தள்ளாடுகிறது விஜயின் சினிமா மேக்கப். “Time to lead” எனும் தலைவா படத்தின் ‘கம்பீர’ முழக்கம் இப்போது “Time to run” என்பதாக சரிந்து விழுந்திருக்கிறது.

டெரர் ஃபேஸ்
“Time to lead” எனும் தலைவா படத்தின் ‘கம்பீர’ முழக்கம் இப்போது “Time to run” என்பதாக சரிந்து விழுந்திருக்கிறது.

சென்ற தேர்தலில் விஜய் அன் கோ தமக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யவில்லை என்பதிலிருந்து ஜெ-வுக்கும் வி-வுக்குமான முரண்பாடு ஆரம்பிக்கிறது. பிறகு தமிழ்நாட்டில் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், அந்தக் காலத்தில் பாக்யராஜ், டிஆர் (இவர் இப்போதும் களத்தில் உள்ளார் என்றாலும் அதன் பரப்பளவு 2க்கு 2 அடி) துவங்கி பிறகு விஜய் வரைக்கும் ஆளாளுக்கு அடுத்த முதல்வர் என்று பிளக்ஸ் வைப்பது ஜெவுக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டவுட்டுக்கு மற்ற உருவங்களெல்லாம் வித்தவுட்டாகத்தான் தெரியும் என்பது பாசிசத்தின் பாலபாடம்.

இதில் ரஜினி அரசியல் ஆட்டத்துக்கு வரவில்லை என்று ஓட, சரத்குமார் காலில் விழ, விஜயகாந்த் போயஸ் தோட்டத்திலிருந்து தனது வாழ்வைத் துவக்கி தற்போது அங்கேயே முடிக்குமளவு விரக்திக்கு தள்ளப்பட்டுள்ளார். மீதமிருப்பவர் விஜய். இதில் இளைய தளபதியே சும்மா இருந்தாலும் அவரை உசுப்பி விட்டு, அவரது படத்தைக் காட்டி அரசியல் ஆசைகளை ரசிகர்களுக்கு வளர்த்து விட அப்பா சந்திரசேகர் முயல்வதால் ஜெவின் கண்கள் கோபத்தில் சிவப்பானது.

கருணாநிதி காலத்தில் தமிழ்த் திரையுலகம் எந்த படமெடுத்தாலும் அதில் அரசியல் கலந்தோ, இல்லை முதலமைச்சரை கிண்டல் செய்வது மட்டுமல்ல, வில்லனாகவே காண்பித்தாலும் அவர் கண்டு கொள்வதில்லை. கருணாநிதியைப் பொறுத்தவரை ஆறுமாதத்திற்கு ஒரு முறை ஏதாவது சால்ஜாப்பில் ஒரு பாராட்டு விழாவை திரையுலகினர் நடத்தினால் அங்கே சென்று முழு நிகழ்வையும், குத்தாட்டங்களையும் உள்ளிட்டு ரசித்து, தன்னைப் பாராட்டும் பரிதாபமான வார்த்தைகளில் மூழ்கி திக்கு முக்காடுவார். அதைத் தவிர வேறு ஆசைகள் அவருக்கில்லை. தமிழ் சினிமாக்காரர்களும் முகவிற்காகவே இந்த ஜால்ரா சங்கீதத்தை அவ்வப்போது நிகழ்த்துவர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு போதை. கருணாநிதிக்கு புகழ் போதை.

ஆனால் அவரது வாரிசுகளின் வாரிசுகள் படத்தயாரிப்பாளர்களாக அவதரித்ததால் அவர்களுக்கு நட்சத்திர நடிகர்கள் கால்ஷீட் கொடுத்தே ஆகவேண்டுமென்று கட்டாயம் ஆயிற்று. அப்படி சில முரண்பாடுகள் உருவானாலும் பெரிய அளவில் யாரும் பகைத்துக் கொள்ளுமளவு சிக்கல்கள் உருவாகவில்லை. ஆனால் விஜயக்கு ஏதோ கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தது போலும்.

கூடவே அவரது படங்களில் சில வரலாற்று விபத்தாக சகல சென்டர்களிலும் ஓட (பல ஓடவில்லை என்பது வேறு விசயம்) அப்பா சந்திரசேகரது மனதில் அடுத்த முதல்வர் எனும் நோய் பெருங்கனவாக உருவெடுத்திருக்கலாம். இடையில் சட்டமன்ற தேர்தல் வந்த போது, உடன் கட்சி ஆரம்பிப்பது சாத்தியமில்லை எனுமளவுக்கு விவரம் இருந்ததால் விஜய் தரப்பு நிதானித்தது. அதிலும் திமுக எதிர்ப்பு மேலோங்கிய நிலையில் அதில் கலந்து கொள்ளும் பொருட்டு போயஸ்தோட்டத்துக்கு தூது விட்டார்கள். ஆனானப்பட்ட புரட்சித் தளபதி விஜயகாந்தே கூட்டணியில் சரணாகதி அடைந்த நிலையில் ஜூனியர் தளபதியெல்லாம் ‘அம்மா’ முன் எம்மாத்திரம்?

பச்ச புள்ள
இதற்கு மேல் இந்தப் பச்சப்பிள்ளை என்ன செய்ய முடியும்?

அதனால் தேர்தலில் நேரடியாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று தோட்டம் உத்திரவிட இவர்கள் கதிகலங்கினார்கள். நோகாமல் அரசியலில் நொங்கெடுக்கலாம் என்ற அவர்களது ஆசை அப்படித்தான் யதார்த்தத்தை கண்டு கதறியது. ஏதோ சமாளித்து அறிக்கை என்பதாய் நிறுத்திக் கொண்டாலும், ‘அம்மா’ இவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டுமென்பதில் உறுதி கொண்டார்.

அதன்படி விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம் போலிசால் நிறுத்தப்பட்டது. அதில் சில நூறு பேருக்கு சில நூறு ரூபாயில் செலவு செய்து நலத்திட்டம் வழங்கும் விழாதானே அன்றி அரசியல் ஏதும் இல்லை என்று விஜய் சத்தியம் செய்தாலும் அம்மன் இரங்குவதாக இல்லை. அப்போதே அரசியலுக்கும் தனக்கும் காத தூரம், கட்சி கிட்சி எதுவும் தனது ஆழ்மனதில் கூட இல்லை என ஜூனியர் தளபதி தலையால் சத்தியம் செய்து ஊடகங்களில் நேர்காணல் கொடுத்தார். இதற்கு மேல் இந்தப் பச்சப்பிள்ளை என்ன செய்ய முடியும்? ஆனால் ஆத்தா, தான் குறித்த கருவறுப்புத் திட்டத்தில் இருந்து பின்வாங்குவதாய் இல்லை.

இந்த சூழ்நிலையில் தலைவா படம் வெளியாக இருந்தது. படத்தின் பெயர், முத்திரை முழக்கம், பஞ்ச் டயலாக், கதை அனைத்திலும் விஜயின் அரசியல் ஆசை குறித்த சித்திரம் நேரடியாகவும், இலைமறையாகவும் வருகிறது என்று உளவுத்துறை போலிசு தோட்டத்தில் கொளுத்திப் போட்டிருக்கும் போலும். உடனே திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வருகிறது. அதுவும் தலைவா படத்தை விலைக்கு வாங்கியிருக்கும் பச்சமுத்துவின் கல்லூரிகளில் பணத்தை பறிகொடுத்த மாணவர்கள் வைத்திருக்கும் சங்கமாம். கேழ்வரகில் நெய் வடியவில்லை, அமுதமே வடிகிறது என்ற இந்த உண்மையை ஊடகங்கள் உண்மை போல செய்திகளாக வெளியிட்டன. விஸ்வரூபம் படத்திற்கு  பகடைக் காய்களாக பாய்கள் பயன்பட்டது போல தலைவாவிற்கு எவரும் சிக்கவில்லை போலும்.

ஏற்கனவே துப்பாக்கியில் இசுலாமியர்களின் கோபத்திற்கு ஆளான விஜய் தரப்பு விசுவரூபம் படத்திற்கு கிடைத்த நெருக்கடியைப் பார்த்து பல நாட்கள் தூக்கமில்லாமல் கழித்திருக்கும். இதனால்தான் என்னவோ இல்லை பிராயச்சித்தமாகவோ தலைவா படத்தை ரம்ஜான் அன்று ரிலீஸ் செய்வதாக ஊடகங்களில் விளம்பரம் கொடுத்திருந்தார்கள். எதிர்ப்பதற்கு பாய்கள் இல்லை என்பதால் வேறு காரணங்கள் கிடைக்காது என்று இவர்கள் தப்புக் கணக்கு போட்டார்கள்.

தலைவா ஷூட்டிங்
வேறு வழியின்றி தலைவா திரைப்படம் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் மட்டும் வெளியானது.

எஸ்.ஆர்.எம் கல்லூரிகளில் சில பல இலட்சங்களை தாரை வார்த்து விட்டு படிக்கும் நடுத்தர வர்க்க மாணவர்கள், சிறுநீர் கழிக்கும் போது கூட பச்சமுத்துவை நினைத்து கோபம் அடையக் கூடியவர்கள் அல்ல. எந்தப் பிரச்சினைக்கும் மூச்சு கூட விடக் கூடாது என எல்கேஜி பள்ளிகளையும் விஞ்சும் பயமும், கட்டுப்பாடும் கொண்ட இந்த கைப்புள்ளைகள் வெடிகுண்டு வைக்க கிளம்புகிறார்கள் என்றால், அதையும் செய்தியாக ஊடகங்கள் வெளியிடுகின்றன என்றால் இங்கே அம்மா பயம் எத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது என்பதறியலாம்.

மேலும் பச்சமுத்து இதற்கு முன் வெளியிட்ட படங்களுக்கெல்லாம் இந்த கைப்புள்ள மாணவர் வெடிகுண்டு கடிதம் வரவில்லை. இதெல்லாம் உளவுத்துறை திட்டத்தின் லாஜிக் மீறல் என்றால் அதையெல்லாம் இங்கே பேசுவதற்கு எவரும் தயராக இல்லை. தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் திரையரங்க முதலாளிகள் படத்தை வெளியிட மாட்டோம் என கைவிரிக்க வேறு வழியின்றி தலைவா திரைப்படம் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் மட்டும் வெளியானது.

ஜூனியர் தளபதியின் கிச்சன் கேபினட் கூடி பேசியதில் கொடநாடு சென்று அம்மாவை உடன் சந்தித்து ஒரு போட்டோ வந்தால் கூட படங்களை வெளியிட முடியும் என்று முடிவு செய்தது. உடன் விஜயும் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் சகிதம் கொடநாடு சென்று அம்மாவிற்கு மனுக் கொடுக்க முயன்றார்கள். ஆனால் அவரது உதவியாளரைக் கூட பல கெஞ்சல்களுக்கு பிறகே பார்க்க முடிந்ததே அன்றி அம்மாவை அல்ல. வெறுங்கையுடன் சென்னை திரும்பினார்கள்.

திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர்கள் இருந்தாலே கேளிக்கை வரியில்லை என்று கருணாநிதி தனக்கு அவ்வப்போது கிடைத்த ஜால்ரா சங்கீதத்திற்காக கொண்டு வந்த சிறப்புச் சலுகை, சினிமா உலக முதலாளிகள் வரியின்றி கொள்ளையடிக்க உதவியது. தலைவா படத்திற்கு இந்த வரிவிலக்கும் கிடையாது என்று கொளுத்திப் போட்டார்கள். கேளிக்கை வரிவிலக்கை முடிவு செய்யும் குழு படத்தை பார்த்து இந்தப் படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க முடியாது என்று சொல்ல என்ன காரணம்?

படத்தின் உரையாடலில் ஆங்கில கலப்பு நிறைய வருகிறது என்பதால் அந்த முடிவாம். அடப்பாவிகளா, இதனால் ஏனைய படங்கள் அக்மார்க் தமிழில் வருகிறது என்றா சொல்கிறீர்கள்? இதுவும் உளவுத்துறையின் லாஜிக் மீறல் என்றாலும் தட்டிக் கேட்பதற்கு யாருமில்லை. இந்த கால இடைவெளியில் வெளி மாநிலங்களில் வெளியான தலைவா திரைப்படம், திருட்டு விசிடிகளாக தமிழகத்தில் படையெடுத்து விட்டனவாம். இதற்கும் ஒரு கோரிக்கையை தயார் செய்திருக்கிறார்கள்.

தற்போது ஜெயலிலதா கொடநாட்டிலிருந்து சென்னைக்கு திரும்பி விட்ட படியால் அம்மாவை உடன் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று தலைவா தரப்பினர் மனுப்போட்டு காத்திருக்கின்றனர்.

ஒரு சினிமாவை வெளியிடுவதற்கு இவ்வளவு தடைகளை ஒரு மாநில அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதைத் தட்டிக் கேட்பதற்கு கூட இங்கே எந்த சினிமாக்காரனுக்கும் வக்கில்லை என்பதே உண்மை. படங்களில் கையை, காலை ஆட்டி வில்லன்களை பந்தாடும் இந்த நாயகர்கள் நிஜவாழ்வில் தொடை நடுங்கி கோழைகளாக இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். ஆனாலும் இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு அடுத்த முதல்வர் ஆசை வராமல் இல்லை. தனது ரசிகர் பட்டாளத்தை வைத்து இந்த ஆசைகளை அவர்களே காசு கொடுத்து முழங்கச் சொல்லி கேட்டு ரசிக்கிறார்கள்.

விஜய்
ஜெயலிதாவின் காலில் விழுந்து கதறிய விஜய் என்ற செய்தியை எதிர்பார்க்கலாமா?

தலைவா படத்திற்கு பிரச்சினைகள் வந்த பிறகு இத்தகைய முழக்கங்கள் எதுவும் போடக்கூடாது என்று விஜய் தரப்பு தனது பட்டாளத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி, அப்படி எழுதப்பட்ட பேனர்களை அகற்றியதாம். அடுத்து இன்று விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஜெயலலிதாவின் சாதனைகளை பட்டியிலிட்டு, அப்பேற்பட்ட அம்மா தலைவா படப்பிரச்சினைகளை தீர்ப்பார் என்று கூறப்பட்டிருக்கிறது. இனி அடுத்தகட்டமாக என்ன செய்வார்கள்? ஜெயலிதாவின் காலில் விழுந்து கதறிய விஜய் என்ற செய்தியை எதிர்பார்க்கலாமா?

திமுகவிற்கு பிரச்சாரம் செய்த காரணத்தால் தனது படவாய்ப்புகளை இழந்த வடிவேலு கூட ஒரு பிரஸ்மீட் வைத்து அம்மா காலில் விழுகிறேன், என்னை வாழவையுங்கள் என்று அழுது அரற்ற வில்லை. அப்படியே அவர் அழுதாலும் அதை ஒரு சறுக்கலாக யாரும் நினைக்கப் போவதில்லை. மக்களை சிரிக்க வைப்பதற்காக தன்னை இழிவுபடுத்திக் கொள்ளும் நகைச்சுவை நடிகனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட ஹீரோவிற்கு இல்லையே!

சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை அநீதியாக வந்தால் அதற்கு நீதி கேட்டு பேசுவது, சண்டை போடுவது எல்லாம் உழைக்கும் மக்களிடம் சகஜமாக காணப்படும் பண்பாடு. ஆனால் பண முதலைகளாகவும், கருப்பு பணத்தில் வயிறு வளர்க்கும் இந்த சினிமா நட்சத்திரங்கள் தமது சொந்தப் பிரச்சினைகளுக்கே கூட அப்படி போராட மாட்டார்கள் என்பது தலைவா பட பிரச்சினையிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

பல கோடி பட்ஜெட் தயாரிப்பில் பல கோடி சம்பளத்தில் பல கோடி விளம்பரத்தில் இவர்கள் ஒரு படத்தின் இலாபத்தை சடுதியில் பார்த்து விடுகிறார்கள். அதனால்தான் இவர்களால் அரசையோ இல்லை ஜெயலலிதாவையோ பகைத்துக் கொள்ள முடியவில்லை என்பது ஒரு பாதிதான். அன்றும் இன்றும் தமிழ் சினிமா என்பது ஆள்பவர்களை அண்டிப்பிழைத்து வாழும் ஒரு ஒட்டுண்ணிக் கூட்டம் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது.

தமிழக மக்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் இவர்கள் பயத்தாலும், அந்தஸ்தாலும் வாயே திறப்பதில்லை. அப்படி மீறி காவிரி, ஈழம் என்று சிலவற்றுக்கு வாய் திறந்தாலும் அது ஆளும் கட்சியின் நலனுக்கு உட்பட்டதாகவே இருக்கும். இதைத்தாண்டி திமுக, அதிமுக கட்சிகளின் மக்கள் விரோத ஆட்சித் திட்டங்கள், பிரச்சினைகளை எல்லாம் இவர்கள் தனிப்பட்ட பேச்சில் கூட கண்டிப்பவர்கள் இல்லை. ஆகவே ஜனநாயக உணர்வோ, இல்லை ஜனநாயக உணர்வுக்கான போராட்டமோ இவர்களிடத்தில் முளை விடும் வாய்ப்பு கூட இல்லை. மற்றவர்களுக்காக, மக்களுக்காக போராட விரும்பாதவர்கள் தங்களுக்காக மட்டும் போராட முடியுமா என்ன?

ஜெயலலிதாவின் பாசிச அணுகுமுறையால் தமிழ் சினிமாவுக்கு ஜனநாயக உணர்வு வந்து விடாது. ஏனெனில் தமிழ் சினிமா நட்சத்திர நடிகர்கள் என்பவர்கள் அதிகாரம் இல்லாத பாசிஸ்டுகள். இவர்களுக்கிடையே நடக்கும் சண்டை ஒரு விதத்தில் நாம் வேடிக்கை பார்த்து ரசிக்க மட்டுமே அருகதை உள்ளது.

பாசிச ஜெயவை எதிர்த்துப் போராடும் பணியை தமிழக மக்கள் தமது சொந்த அனுபவத்திலேயே பெறுவார்கள். அதற்கு தமிழ் சினிமாவின் தயவு தேவையில்லை. அதனால் தலைவாவின் சிக்கலுக்கு நம்மிடம் இரக்கமும் இல்லை.

ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் யாருக்கு கூஜா ?

33

நோய்ப் படுக்கையில் துடிதுடித்துக் கொண்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கு ஒரு புதிய டாக்டர் வந்திருக்கிறார். ஆம், நடப்புக் கணக்கில் பற்றாக்குறை, ரூபாயின் மதிப்பு குறைவு, விவசாயத் துறையில் நலிவு, தொழில் துறையில் தேக்கம், வேலை வாய்ப்புகளில் வீழ்ச்சி இவற்றை எல்லாம் சரி செய்ய மன்மோகன் சிங், ப சிதம்பரம், மான்டேக் சிங் அலுவாலியா போன்ற ‘உலகப் புகழ் பெற்ற பொருளாதார அறிஞர்களின்’ கரங்களை பலப்படுத்த ரகுராம் ராஜன் என்ற பன்னாட்டு பொருளாதார ‘நிபுணர்’ இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன் (படம் : நன்றி தி ஹிந்து)

ரிசர்வ் வங்கியின் 23-வது கவர்னராக செப்டம்பர் மாதம் தேதி பதவி ஏற்கவுள்ள ரகுராம் ராஜன் அவரது தந்தை வெளியுறவுத் துறையில் பணி புரிந்ததால் 7-ம் வகுப்பு வரை வெளிநாடுகளில் பள்ளிக் கல்வி பயின்று அதன் பிறகு டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்தவர். அமெரிக்கா செல்ல அனுமதிச் சீட்டாக பயன்படும் வகையில் டெல்லி ஐஐடியில் எலக்ட்ரிகல் துறை பட்டமும், ஐஐஎம் அகமதாபாத்தில் மேலாண்மை பட்டமும் பெற்று அமெரிக்காவின் எம்ஐடிக்குப் போய் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். ஐஐடி, ஐஐஎம்மில் படிக்கும் மேட்டுக்குடி இந்தியர்களது தேசபக்தி அமெரிக்காவில்தான் பொங்கி வழியும் என்ற உண்மைக்கேற்ப இவரும் அமெரிக்காவிலேயே குடியேறி விட்டார்.

தமிழே தெரியாத இவரை தமிழரென்று கண்டுபிடித்து சில தினசரிகள் மகிழ்கின்றன. இனி, புதுதில்லி சென்று பணம் வென்ற மறத்தமிழனென்று சீமான் கூட்டம் நடத்தாததுதான் பாக்கி.

வங்கிகள் பற்றிய கட்டுரைகள் என்ற ஆய்வுத் தொகுப்புக்கு முனைவர் பட்டம் பெற்ற அவர் சிகாகோ பல்கலைக் கழகத்தின் பூத் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் (பூத் பொருளாதாரக் கல்லூரி) பணி புரிந்து வருகிறார். 2003-ம் ஆண்டு முதல் 2006 டிசம்பர் வரை ஐஎம்எப்-பின் தலைமை பொருளாதார ஆலோசகராகவும் பணி புரிந்திருக்கிறார். 1980-களிலிருந்து உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அவற்றின் பொருளாதாரங்களை அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார நலன்களுக்கு ஏற்றவாறு மாற்றி அடிமைப்படுத்துவதற்கான கொள்கைகளை சுமத்துவதுதான் ஐஎம்எப்பின் பணி. கடன் கொடுக்கும் போதே கண்டிஷன்ஸ் அப்ளை என்று ஏழை நாடுகளது இறையாண்மையை பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதுதான் அதன் முக்கிய நோக்கம். அத்தகைய திருப்பணிக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருந்தவர்தான் இப்போது இந்திய ரூபாயை நிர்வாகிக்க ரிசர்வ் வங்கியின் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இனி ஐஎம்எஃப் கடன் கொடுக்கும் போது இந்தியா கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளை பட்டியலிட வேண்டியதில்லை. அவற்றை வடிவமைத்த நிபுணர் குழுவைச் சேர்ந்தவரே இங்கு ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கும் போது “நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமை சாலி” என்று அமெரிக்கா மெச்சிக் கொள்ளும்.

அமெரிக்காவில் பணி புரிந்து வந்த ரகுராம் ராஜன் ஏற்கனவே இங்கு மன்மோகன் சிங், அலுவாலியா, சிதம்பரம் போன்றவர்கள் இந்தியாவை மலிவாக விற்பனை செய்து செயல்படுத்தி வரும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மேலும் வலு சேர்க்க அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் இந்திய அரசால் அழைக்கப்பட்டாரா, அல்லது பன்னாட்டு நிதி நிறுவனங்கள் அவரை இந்திய அரசின் மீது சுமத்தினார்களா என்பது மன்மோகன் சிங்குக்குத்தான் வெளிச்சம். இந்திய நிதித்துறை சீர்திருத்தங்களுக்கான கமிட்டியின் தலைவராகவும், பிரதமர் மன்மோகன் சிங்கின் கௌரவ பொருளாதார ஆலோசகராவும் பணியாற்றியவர் அதைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

1960-களின் இறுதியில் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பில் (UNCTAD) பணி புரிந்து விட்டு இந்தியாவுக்கு வந்து தனது 50 வயதில் 1982-ல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஆனார் மன்மோகன் சிங். அதற்கு முந்தைய ஆண்டில்தான் இந்தியா ஐஎம்எப்பிடமிருந்து கடன் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மன்மோகன் சிங் போலவே ஐஎம்எஃப்பில் ஆலோசகராக பணி புரிந்த ரகுராம் ராஜனும் தனது 50-வது வயதில் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆக்கப்பட்டுள்ளார்

இந்தியாவின் பொருளாதார நெருக்கடிகள், நிதித்துறை சிக்கல்கள் இவற்றை சமாளிக்க பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து காட்டும் அக்கறையை இது காட்டுகிறது என்று முதலாளித்து அறிஞர்கள் பேசுகிறார்கள். ஆனால் முழு இந்தியாவையும் ஏகாதிபத்தியங்களுக்கு விற்பனை செய்வதில் சுணக்கம் கூடாது என்பதற்காகவே ஐஎம்எஃப்பின் நிபுணர்கள் இங்கே நேரடியாக இறக்குமதி செய்யப்படுகின்றனர். இனி மறுகாலனியாக்க நடவடிக்கைகள் முன்னிலும் வேகம் பிடிக்கும்.

வங்கி உரிமம்
இந்திய பொருளாதாரத்தை உலக முதலீட்டாளர்களுக்கு மேலும் திறந்து விட வசதிகள் செய்து தருவது ரகுராம் ராஜனின் முக்கிய கடமையாக இருக்கும். (படம் : நன்றி sify.com)

1991 முதல் சுமார் 15 ஆண்டுகளுக்கு நடுத்தர வர்க்கத்தின் செல்லப் பிள்ளையாக விளங்கிய அந்த நிதி நிறுவனங்களின் பிரதிநிதியான மன் மோகன் சிங் இன்று அதே வர்க்கத்திடம் காலாவதியாகி இருப்பதால் புதிய தேவதைகள் தேவைப்படுகின்றன. அதன் பொருட்டு இந்த ரகுராம் ராஜன் இறக்கப்பட்டிருக்கிறார். இந்திய பொருளாதாரத்தை உலக முதலீட்டாளர்களுக்கு மேலும் திறந்து விட வசதிகள் செய்து தருவது ரகுராம் ராஜனின் முக்கிய கடமையாக இருக்கும்.

பாரம்பரியமாக எச்சரிக்கையுடன் கடன் கொடுக்கும் தன்மையுடைய வங்கித் துறை தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் உலக அளவில் ஒருங்கிணைக்கப்பட்டது; அப்படி இணைக்கப்பட்ட நிதித் துறையில் தகவல் தொழில் நுட்பத்தைப் மேலும் அதிகமாக பயன்படுத்தி சூதாடுவதற்கான புதுப் புது கருவிகள் உருவாக்கப்பட்டன; வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்கள் சரக்காக சந்தையில் கிடைத்ததால் அவர்களுடன் நேரடி தொடர்பு இல்லாமலேயே கடன் கொடுப்பதற்கான வசதி ஏற்பட்டது; இதனால் வங்கிகள், ஓய்வூதிய நிதியங்கள், முதலீட்டு வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் தொழில் முறை மேலாளர்கள் அதிக அபாயங்கள் அடங்கிய முதலீடுகள் செய்து தமது ஊதியத்தை பெருக்கிக் கொள்ள முயற்சித்தார்கள்; இவை அனைத்தும் அமெரிக்க நிதித் துறையிலும் அதைத் தொடர்ந்து உலகளாவிய நிதிச் சந்தையிலும் நெருக்கடியை தோற்றுவிக்கும் என்பதை 2005-ம் ஆண்டே முன்னறிவித்த புகழுடையவர் ரகுராம் ராஜன் என்று வணிக நாளிதழ்கள் புகழாரம் சூட்டுகின்றன.

ஆனால், தனி நபர்களும் நிறுவனங்களும் புதுப் புது வழிகளில் தமது மூலதனத்தை பெருக்கிக் கொள்ளும் வேட்டையில் ஈடுபடும் போது ஒட்டு மொத்த பொருளாதாரமும் இத்தகைய நெருக்கடிகளுக்குள் தள்ளப்படும் என்பது 300 ஆண்டு கால முதலாளித்துவ பொருளாதாரத்தில் பல முறை முன்னறிவிக்கப்பட்டும், நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான ஒரு நிகழ்வுதான். இத்தகைய நெருக்கடிகளை முன்னறிவிப்பதற்கு “பகலில் வெயிலடிக்கும், இரவில் இருட்டாக இருக்கும்” என்று சொல்வது போன்ற அடிப்படை அறிவே போதுமானதுதான்.

ரகுராம் ராஜன் இத்தகைய நெருக்கடிக்கு காரணமாக முதலளாத்துவ பொருளாதாரத்தின் அடிப்படைகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மாறாக பாதுகாப்பாக தொழில் செய்வது எப்படி என்று நெருக்கடிகளை தடுக்கும் வழிகளை வரையறுக்கிறார். முன் பின் தெரியாதவர்களுக்கு கடன் கொடுக்காமல் இருந்திருந்தால் அமெரிக்க நெருக்கடி வந்திருக்காது என்பதாயும் அவரது கண்டுபிடிப்பை புரிந்து கொள்ளலாம். ஆனால் பெருத்து விட்ட மூலதனம் ஒரு போதும் முடங்கிப் போக வழியில்லை என்று மேலும் மேலும் சூதாட்டம் போல பெருக்க நினைத்ததில்தான் அமெரிக்க நெருக்கடி ஆரம்பத்ததுவே அன்றி பாதுகாப்பு குறித்த பிரச்சினைகளால் அல்ல. இது முதலாளித்துவம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் ஒருசுய முரண்பாடு. இதில் இருந்து முதலாளித்துவ பொருளாதாரம் தப்பவே முடியாது. எனினும் இதை எந்த முதலாளித்துவ பொருளாதார அறிஞரும் ஏற்பதில்லை.

பெரும்பான்மை மக்கள் சார்ந்திருக்கும் விவசாயத் துறையை அழிய விட்டது, தேசியத் தொழில் துறையை முடக்கி தரகு முதலாளித்துவத்தை வளர விட்டது, ஏற்றுமதிக்கான மற்றும் நிதித்துறை சேவைகளின் ஊதிப் பெருக்கப்பட்ட வளர்ச்சி இவற்றால் நலிந்துள்ள இந்தியப் பொருளாதாரத்தை ரகுராம் ராஜன் போன்ற நிதித்துறை நிபுணரை வைத்து ஒழுங்குபடுத்துவதன் மூலம் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மேலும் சுரண்டுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க நினைக்கின்றன. ஆனால் அந்த ஒழுங்கு படுத்தல்கள் என்பது மக்களை மேலும் துன்ப துயரத்தில் தள்ளிவிடுவனவே அன்றி வேறு எதுவுமல்ல.

அடிப்படை துறைகளான விவசாயம், தொழில் உற்பத்தி, உள்நாட்டு சேவைத் துறை இவற்றில் இந்திய மக்கள் சார்ந்த வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கைகள் செயல்படுத்தப்படாதது வரையில், பன்னாட்டு நிதி மூலதனத்தின் தயவில் நம் நாட்டை வைத்திருப்பது வரையில் இந்தியா மேலும் மேலும் மோசமாகும் நெருக்கடிகளை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும். மிகச் சிறுபான்மையினரான தரகு முதலாளி வர்க்கத்தினர் தமது செல்வத்தைப் பெருக்கிக் கொண்டே போக, பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்கள் அடகு வைக்கப்பட்டு அழிக்கப்படுவதை முறியடிக்க உலகமயமாக்கல் கொள்கைகளை தடுத்து நிறுத்துவதுதான் ஒரே வழி.

– பண்பரசு

மேலும் படிக்க

சென்னையின் சிவப்புத் தொழிலாளிகள் !

5

கேரள மாநிலத்தில் தொழிற்சங்க இயக்கங்களின் தாக்கத்தால் ஹோட்டல் தொழிலாளிகள் பணிவாக, கனிவாக நடந்து கொள்வதில்லை என்று ஜெயமோகன் எழுதியிருந்த பதிவைப் பற்றி 4 ஆண்டுகளுக்கு முன்பு வினவில் ஒரு விமர்சனம் வெளியாகியிருந்தது. உழைக்கும் மக்களின் வாழ்க்கையை இளக்காரமாக பார்க்கும் நடுத்தர வர்க்க அறிவு ஜீவி மனோபாவம், அவர்கள் சேவகர்களாக 90 டிகிரி குனிந்து தம் முன் நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆண்டைத்தனம் இவற்றை விமர்சித்து எழுதப்பட்டிருந்த அந்த பதிவை ஒட்டி விரிவான விவாதங்கள் நடைபெற்றன.

இந்த பின்னணியில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பணி புரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பற்றிய சென்ற வாரம் இந்து மெட்ரோ பிளஸில் வெளியாகியிருந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பை கீழே தருகிறோம்.

தொழிலாளர்கள் தமது உடலை உருக்கி வாழ்நாள் முழுவதும் உழைப்பதையும், தமது வேலையில் அவர்களுக்கு இருக்கும் பெருமையையும் சித்தரிக்கும் இந்த கட்டுரை எந்த விதத் திட்டமிடலும் இல்லாமல் அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதையும், அதை எதிர் கொண்டு அவர்கள் நடத்தும் போராட்டத்தையும் எளிமையாக காட்டுகிறது.

“பேட்டி எல்லாம் குடுக்க முடியாது” என்று கடுகடுக்கிறார் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் உள்ள ஒரு வயதான சுமை தூக்கும் தொழிலாளி. இப்போதுதான் ஒரு ரயில் வண்டி வந்திருக்கிறது. இந்த நேரத்தில் அவர் ஒரு நிமிடம் கூட வீணாக்க விரும்பவில்லை. கூட்டம் நெரிக்கும் நடைபாதைக்குள் புகுந்து அவர் விரைகிறார், அவரது கண்கள் வாடிக்கையாளரைத் தேடி துளாவுகின்றன. ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடியுடன் மெலிந்த உடல் வாகுடைய அவர் நொண்டிக் கொண்டே நடக்கிறார்.

கூர்ந்து கவனித்தால் வயதான சுமை தூக்கும் தொழிலாளிகளில் பலர் நொண்டுவது தெரிகிறது. பல ஆண்டுகள் கனத்த சுமைகளை தலையிலும் தோள்களிலும் தூக்கி நடப்பதன் விளைவு அது.

சுமை தூக்கும் தொழிலாளி
படம் : நன்றி தி ஹிந்து.

கசங்கிப் போன சிவப்புச் சட்டையும், கழுத்தைச் சுற்றி ஒரு துண்டும் அணிந்த 58 வயதான தேவராஜ் என்ற தொழிலாளி தகவல் பலகையின் அருகில் ஒரு தமிழ் நாளிதழை படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அடுத்து வரும் ரயில் வண்டியில் அவரது மதிய உணவுக்கான பணம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் அவர் காத்திருக்கிறார்.

ஒரு காலத்தில் ஒற்றை ஆளாக 60 கிலோ வரை எடையுடைய சுமைகளை தேவராஜ் தூக்கியிருக்கிறார். “இப்போது 30 கிலோதான் தூக்க முடிகிறது. வயதாகி விட்டதல்லவா” என்கிறார் அவர். ரயில் வண்டிகளின் சத்தம்; துரு, சிறுநீர், என்று பல வகை மனித உடல்களின் வாசனைகள்; வண்டிகளின் வருகை, புறப்பாடு பற்றிய காதைக் கிழிக்கும் அறிவிப்புகள்; இருப்புப் பாதைகள் மீது உலோகம் உராயும் கிரீச் சத்தம்; அன்பான முகங்களுடன் சில பயணிகள்; அவமதிப்பது போன்ற பாவனையுடன் சில பயணிகள்.. இத்தகைய ரயில் நிலையத்தின் சத்தங்களும் காட்சிகளும் தேவராஜை 40 ஆண்டுகளாக சூழ்ந்திருக்கின்றன.

இங்குதான் அவர் நட்புகளை ஏற்படுத்திக் கொண்டார்; பயணிகளுக்காக சுமை தூக்கி ஈட்டிய வருமானத்தில்தான் குழந்தைகளை வளர்த்தார். ஆனால், தனது பணிக்காலத்தில் இதே நிலையத்தில் அவரைப் போன்ற சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்த மிக மோசமான ஒரு எதிரியை அவர் சந்தித்தார் – அவைதான் சக்கரங்களுடன் கூடிய பைகள். சுமையை எளிதாக தள்ளிச் செல்ல அவை உதவுகின்றன. ஆனால் தேவராஜ் போன்ற சுமை தூக்கும் தொழிலாளிகளைப் பொறுத்த வரை சக்கரம் பொருத்திய பைகள் அவர்கள் சாப்பிட காசில்லாமல் கழித்த பல பொழுதுகளை குறிக்கின்றன. “இந்தப் பைகள் வந்ததிலிருந்து பலர் தமது பைகளை தாமே தூக்கிச் செல்ல விரும்புகிறார்கள்” என்கிறார் அவர். எந்தத் தொழிலாளியை கேட்டாலும் இதை முக்கியமாக குறிப்பிடுகிறார்கள்.

ஒரு ரயில்வே சுமை தொழிலாளிக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாள்தான். சில நாட்களில் ரூ 500 சம்பாதிக்க முடிகிறது. சில நாட்களில் ரூ 100 மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு போக வேண்டியிருக்கிறது. “இன்று போல சில நாட்களில் ஒரு கப் டீ குடிக்கக் கூட போதுமான அளவு சம்பாதிக்க முடியாமல் போய் விடும்” என்கிறார் குமார்.

சில நாட்கள் பரபரப்பு நிறைந்தவையாக இருக்கும். கடைசி நேரத்தில் தமது வண்டியைப் பிடிக்க ஓடும் பயணிகளின் தோள் சுமைகளையும் மனச் சுமைகளையும் சுமை தூக்கும் தொழிலாளிகள்தான் சுமக்கிறார்கள். “அவர்களது பைகளை தூக்கியபடி அவர்களுடன் ஓடுவோம்” என்கிறார் நந்தகுமார். “அவங்க ரயிலைப் பிடித்து விடுவதை உறுதி செய்வது எங்க பொறுப்பு, இல்லைன்னா டிக்கெட் வாங்குவதற்கு அவர்கள் செலவழித்த தொகை, அலுவலகத்தில் எடுத்த விடுமுறை எல்லாம் வீணாகி விடும்…”

மழைக் காலங்களில் நடைபாதைகள் வழுக்க ஆரம்பித்ததும் சுமை தொழிலாளிகள் படும் தொல்லைகள் அதிகமாகின்றன. “ஆனா, அதெல்லாம் வேலையில் ஒரு பகுதிதான்” என்கிறார் எக்மோர் நிலையத்தில் வேலை செய்யும் நடராஜன். “பல வருஷம் இந்த தொழில் செய்த பிறகு எங்க முட்டிகள் தேஞ்சு போகின்றன” என்கிறார் தட்சிணாமூர்த்தி.

இந்திய ரயில்வேயால் நேரடியாக வேலைக்கு அமர்த்தப்படா விட்டாலும், ரயில் நிலையத்தில் தமது சேவைகளை வழங்குவதற்கு உரிமம் பெற்றவர்கள் இவர்கள். ஒரு கட்டத்தில் இனிமேலும் வேலை செய்ய பலம் இல்லை என்ற நிலை ஏற்படும் போது ரயில் நிலையத்தில் வேலை செய்வதற்கு அனுமதி உரிமம் தந்தையிடமிருந்து மகனுக்கு அல்லது மருமகனுக்கு தரப்படுகின்றது. “நான் என்னுடையதை என் அப்பாவிடமிருந்து பெற்றேன். அவர் என் தாத்தாவிடமிருந்து பெற்றார்” என்கிறார் நந்தகுமார். சதீஷ் உரிமத்துக்கு விண்ணப்பித்து, உடல் நிலை பரிசோதனைக்குப் பிறகு பெற்றுக் கொண்டார். எழும்பூரில் வேலை செய்யும் 24 வயதான அவர் தன் வேலையை விரும்பி செய்கிறார். “அடுத்தவங்க சுமையை பங்கு போடுறது மூலம் அவங்களுக்கு உதவி செய்ய முடிகிறது” என்று ஒரு நாளின் கடின உழைப்புக்குப் பிறகு தனது சிவப்புத் துண்டால் விசிறிக் கொண்டே சொல்கிறார் அவர்.

“ஒரு நாள் ஸ்டேசனுக்கு வந்து நாங்க வேலை செய்வதை பாருங்க. தகவல் பலகைகள் இருந்தாலும் சில பயணிகள் வேக வேகமாக வந்து ரயில் வண்டி பற்றிய தகவலை எங்க கிட்ட கேட்பதை பார்க்கலாம்.” என்று புன்னகைக்கிறார் தட்சிணாமூர்த்தி.

மேலதிகாரிகள் சொல்படி ஆடுவது சலித்துப் போனதால் நல்ல சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையை விட்டு விட்டு சுமை தொழிலாளியாக முடிவு செய்திருக்கிறார் தட்சிணாமூர்த்தி. “இப்போது எனக்கு நிம்மதி இருக்கிறது. நான் விரும்பிய நேரங்களில் நான் வேலை செய்ய முடிகிறது. நானே ராஜா, நானே மந்திரி” என்கிறார் அவர்.

தமிழாக்கம்: அப்துல்

நன்றி : தி இந்து  Men In Red

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி !

2

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து செயல்பட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த தடை, சட்டப்படி செல்லாது என்றும், கடந்த மார்ச் 23-ம் தேதி தூத்துக்குடியில் பரவிய நச்சுக்காற்று பற்றி மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இத்துடன் ஆலைக்கு 25 வழிகாட்டுதல்களை வழங்கி அவற்றை ஆலை இரு மாத காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட்

கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி தூத்துக்குடி நகர மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண்ணெரிச்சல் ஏற்படவே நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலரும் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தரவே ஆலை செயல்பட தடை விதிக்கப்பட்டது. மார்ச் 30-ல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலை செயல்பட முறைப்படி தடை விதித்தது. ஜெயலலிதாவுக்கு நல்லக்கண்ணு துவங்கி வைகோ வரை பலரும் அவசர அவசரமாக நன்றி தெரிவித்தனர். அம்மாவைப் பாராட்டுவதில் யாரும் பின்தங்கிவிடக்கூடாது என்ற பயம்தான்!

நச்சு வாயு கசிந்து 10 நாட்களுக்குள் ஏப்ரல் 2-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்திரவிட்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் 2010-ம் ஆண்டு தீர்ப்பை உச்சநீதி மன்றம் ரத்து செய்திருந்தது. அந்த வழக்கில் ஜெயா அரசு 2012-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தவில்லை என்று சான்றளித்திருந்தது.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் மீது ஸ்டெர்லைட் மேல் முறையீடு செய்ததில் பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால உத்திரவாக ஆலை இயங்க அனுமதி அளித்தது. இறுதி விசாரணையின் ஒரு பகுதியாக தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் ஒருவர், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஒருவர், இரண்டு ஐஐடி பேராசிரியர்கள் ஆகியோர்களைக் கொண்ட நால்வர் குழு இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றனர். தூத்துக்குடி நகருக்கு வெளியே பல ஆலைகள் குறிப்பாக ரசாயன ஆலைகள் சில இயங்கி வருகின்றன. நச்சு வாயு அவற்றில் எதிலிருந்தாவது கூட வந்திருக்கலாம் என்பதுதான் ஐஐடி பேராசிரியர்களான நிபுணர்களின் ஐயப்பாடு. (ஐஐடி பேராசிரியரே சொன்ன பிறகு மறுகேள்வி கேட்பார்களா என்ன? – செவப்பா இருப்பனெல்லாம் பொய் சொல்ல மாட்டானா! என்ற கதை தான்).

நிபுணர் குழு அறிக்கை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தடையாணை விதித்த செயலை சட்டவிரோதம் என்றெல்லாம் பேசத் துவங்கியது. போதாத குறைக்கு தூத்துக்குடியின் அரசு மருத்துவர்கள் சிலரே இதுவரை சுற்றியுள்ள ஆலைகளிலிருந்து வெளியான மாசடைந்த காற்றால் யாரும் மூச்சுத்திணறல் மற்றும் இதய நோய்க்காக மருத்துவமனையை நாடியதாக வரலாறே இல்லை என்று சான்றளித்துள்ளனர்

தற்போது வெளியாகியுள்ள பசுமைத் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் ஓராண்டுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை ஆலைப்பகுதியில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்வதற்கு அரசு செயலர்கள் இருவர், நிபுணர்கள் இருவர், வைகோ ஆகியோர் அடங்கிய சிறப்புக்குழு அமைத்து உத்திரவிட்டுள்ளது.

இவர்கள் அப்பகுதியில் ஏன் வாயு கசிந்தது என்றும் ஆலைப்பகுதியில் மக்களுக்கு கண்ணெரிச்சல், மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்து இரு மாதங்களுக்கொரு முறை அறிக்கை தர வேண்டுமாம். அதனடிப்படையில் எதுவும் முடிவு எடுத்து விடப் போவதில்லை, மாறாக வாயு கசிவுகளை தடுக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி 6 மாதங்களுக்கொரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமாம். அதாவது வேதாந்தா குழுமத்திற்கு ஆலோசனை வழங்கி அவர்களை காப்பாற்ற வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உச்ச நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் என்று அரசு அமைப்புகளை மட்டும் நம்பியிருந்தால் இப்படித்தான் நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இது.

தாமிரத் தகடுகள்
உலகச் சந்தையில் விற்பதற்காக தூத்துக்குடியை அழித்து ஸ்டெர்லைட் தயாரிக்கும் தாமிரத் தகடுகள் (மாதிரி புகைப்படம்: நன்றி ராய்ட்டர்ஸ்).

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பைக் குறித்து ஸ்டெர்லைட்டின் தலைமை செயல் அதிகாரி பி.ராம்நாத் கருத்து கூறுகையில், “25 வழிகாட்டு நெறிமுறைகளை தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள். அதில் 7 எல்லா ஆலைகளுக்கும் பொருந்தக் கூடியது. 6 எங்களது ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது சம்பந்தப்பட்டது” எனக் கூறி பெரும்பாலானவற்றை தாங்கள் நிறைவேற்றவே போவதில்லை என்று சொல்லாமல் சொல்லி விட்டார். நாங்கள் மாசடைந்த நீரை கடலில் கலக்கும் வேலையை செய்யாத ஒரே தாமிர உற்பத்தி நிறுவனம் என்றும் கூறியுள்ள அவர் ஆலை மூடப்பட்டிருந்த 85 நாட்களில் ரூபாய் 4,000 கோடி நட்டம் என்றும், தாங்கள் சுற்றுச்சூழலுக்காக மட்டும் 500 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சட்டப்படி தாங்கள் சரியானவர்கள் என்பதோடு பொருளாதார ரீதியிலு காசை இறைத்திருப்பதாக சொல்லி விட்டார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதி மன்றம் போக உள்ளது. ஆனால், அங்கு ஏற்கெனவே ஜெயா அரசு கொடுத்த ஸ்டெர்லைட் பாராட்டு பத்திரம் இருக்கிறதே! அதற்கும் மேல் ஸ்டெர்லைட் இழைத்த தீங்குகளுக்கு எல்லாம் ரூ 100 கோடி அபராதம் விதித்து ‘நாட்டு நலன்’ கருதி அதை தொடர்ந்து இயங்க அனுமதிப்பதாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் இருக்கிறது. அந்த தெனாவெட்டில் தான் வேதாந்தா 25 என்ன நூறே விதிமுறைகள் போட்டாலும் அது என் ம#$க்கு சமம் என்று நிமிர்ந்து நிற்கிறான்.

தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையை நச்சுப்படுத்திக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் , அரசு அமைப்புகளை மட்டும் நம்பியிருந்தால் வைகோ போல வேதாந்தாவின் சுற்றுச்சூழல் ஆலோசகராகத்தான் மாற வேண்டியிருக்கும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போர்க்குணமிக்க போராட்டங்களை முன்னெடுக்காமல் தூத்துக்குடி மக்கள் நிம்மதியாக மூச்சு கூட விட முடியாது என்பதுதான் நிதர்சனம்.

புமாஇமு போராட்டங்கள் உருவாக்கிய போலீஸ் ‘ஹீரோ’!

3

போலீசு மக்களின் நண்பனா? எதிரியா ?

“இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. இந்தப்பகுதியிலே சாலை போடுவதற்காக தற்போது பூசை போடப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல தொடர்ச்சியாக மக்களுக்கு நல்லது செய்து வரும் இந்த அரசு மேலும் பல திட்டங்கள் அறிவிக்க இருக்கிறது. மின்விளக்குகள், குடி தண்ணீர் பிரச்சினை ஆகிய அனைத்தையும் அரசு சரி செய்யும். உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் இந்த அரசு தீர்த்துவைக்கும். இந்த விழாவிலே கலந்து கொண்டதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இப்படி ஒரு விழாவை நடத்துவதற்கு அதிகம் உழைத்தது மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு. அவர் மூலம் உங்கள் ஊருக்கு நிறைய நல்லது செய்ய உள்ளோம். இளைஞர்களை நல்வழிப்படுத்தவும் டியூசன் சென்டர்களை அமைக்கவும் பாய்ஸ் கிளப் அமைக்கவும் அவர் முயன்று வருகிறார். ஆகவே அவருக்கு ஆதரவு நீங்கள் கொடுக்கவேண்டும்.”

இணை ஆணையர்
தொடங்கி வைத்த’ இணை ஆணையர்

– மதுரவாயல், பிள்ளையார் கோயில் பகுதியில் நடந்த சாலை போடுவதற்கான பூசை விழாவில் சென்னை இணை ஆணயர் சண்முகவேல் பேசியதில் இருந்து.

என்ன நடக்கிறது இந்த நாட்டில்?

ஒவ்வொரு சாலையின் சந்திப்புக்களிலும் நின்று கொண்டு, “லைசென்ஸ் இல்லை, ஆர் சி புக் இல்லை, ஏன் நீ மனுசனே இல்லை” என்று துரத்தி துரத்தி பணம் வசூலிப்பது, டீக்கடை, ஹோட்டல்கள் முதல் மீன்கடை, தரைக்கடை என அனைவரிடமும் மிரட்டி பணம் பறிப்பது, விசாரணை என்றபெயரில் சித்திரவதை செய்து அடித்தே கொல்வது போன்ற மக்கள் விரோத / சட்ட விரோத செயல்களையே குலத்தொழில்களாகக் கொண்டிருக்கும் போலீஸ் ஸ்டேசனிலிருந்து ஹீரோக்கள் வெளிவருவதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு.

ஆம் புதியதாய் ஒரு ஹீரோ மதுரவயல் காவல் நிலையத்தில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறார். அவர்தான் ஆனந்தபாபு, இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ். காவலர்களுக்கு ஓசியில் உணவு தர மறுத்ததற்காக மதுரவாயலில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை பொய் வழக்கிட்டு சித்திரவதை செய்ததற்கு புகழ்பெற்ற மதுரவாயல் காவல் நிலையத்தில் இருந்து ஒரு புது சரக்கு ஆனந்தபாபு. ஆம் இவர் பதவியேற்ற பின்னர் மதுரவாயல் பகுதி இளைஞர்களை பொய்வழக்கில் கைது செய்வது, சித்திரவதை செய்வது, ஒரு கொட்டடிக்கொலை…….என்று ஹீரோயிசங்கள் தொடர்ந்தன.

இதையெல்லாம் எதிர்த்துப் போராடக்கூடிய புமாஇமு மீது பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுதல், புமாஇமு தோழர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் பொய்யாக கைது செய்தது, அதற்கு நியாயம் கேட்கப்போனவர்களை போலீசு படை மூலம் வெறி கொண்டு தாக்கி 50 பேர்களை சிறையில் அடைத்தது, மக்கள் பிரச்சினைக்காக சுவரொட்டி ஒட்டியவர்களை பொய்வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது……………….. இன்னமும் கணக்கில் அடங்காத சாதனைகளை செய்தவர்தான் ஆனந்தபாபு.

லைசென்ஸ் ( நான்கு சக்கர வாகன லைசென்சிற்கு காவல் நிலையத்தில் அத்தாட்சி வாங்குதல் ) வேண்டும் என்று காவல் நிலையம் சென்றால் கூட ”உங்க ஏரியாவில் யாருக்குமே லைசென்ஸ் தரமுடியாது, புமாஇமுவில் இல்லைன்னு எழுதிக்கொடுங்க, லைசென்ஸ் தரேன்”, “பிள்ளையார் கோயிலில் இருந்து எவன் வந்தாலும் ரிமாண்டுதான்” என்பது இவரின் புகழ்பெற்ற வார்த்தைகள்.

தனியார்மயத்தின் கோர விளைவால் உழைக்கின்ற மக்களின் வாழ்க்கை  விசிறியடிக்கப்படுகின்றது.  அவர்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகின்றன. இப்பிரச்சினைகளை ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. விளைவு, தங்களின் உரிமைக்காக போராடத் துவங்குகிறார்கள். மக்கள் குடிக்கத் தண்ணீர் இல்லை, கழிவறை இல்லை, குடியிருக்க இடம் இல்லை என்று கால்கடுக்க அலைந்த போது திரும்பிப்  பார்க்காத இந்த அரசு,  அடிப்படை வசதிகளுக்காக போராடும் மக்கள் மீதும் அவர்களுக்கு  தலைமை தாங்கும் புரட்சிகர,  ஜனநாயக சக்திகள் மீதும் அடக்கு முறையை செலுத்துகிறது. அதனால் இனியும் இந்த ஆளும் வர்க்கம் ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளை நம்பத் தயாராக இல்லை. தானே நேரடியாக களத்தில் இறங்கி மக்களுக்கு பொய் வழக்கு, சிறை, சித்திரவதையை பரிசாகத்தருகிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் மதுரவாயலும் எழும்பூர் சந்தோஷ் நகரும்.

துணை மேயர்
துணை மேயரை சூழ்ந்து கேள்வி கேட்கும் மக்கள்

மதுரவாயல் பிள்ளையார் கோயில் பகுதியில், சாலை, குடி நீர், கழிவறை உட்பட எந்த அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்ட நிலையில் புமாஇமு தோழர்களின் தலைமையில் இந்தக்கொடுமைக்கு எதிராக மக்கள் போராடினார்கள். அண்ணன், தங்கை, அப்பன், மகள் என வித்யாசமின்றி இருட்டில் மலம் கழித்துக்கொண்டிருந்த கொடுமைக்கு புலம்புவது தீர்வல்ல, போராடியே எதையும் பெறமுடியும் என்று கூறி மக்கள் போராட்டத்தின் மூலம் கழிவறை பிரச்சினை முதல் அடிப்படைப்பிரச்சினை வரை சாதித்துக்கொண்டு இருப்பதும் புமாஇமு தான்.

அதே போல எழும்பூர் சந்தோஷ் நகரில் பொதுக்கழிவறை இல்லாமல் காலைக்கடனை கழிக்க ரயில்பாதைகளின் ஓரம் சென்று உயிரை இழந்தவர்கள் பலர். பாதிக்கப்பட்ட மக்களை அணி திரட்டி கழிவறையை கட்டிக் கொடுக்க வைத்தது மட்டுமல்ல, அதை பராமரிக்காமல் வைத்து இருந்த அரசுக்கு எதிராக மக்களை மீண்டும் திரட்டியதன் விளைவாக புதிய கழிவறையை கட்டிக் கொடுத்து சாக்கடைகளை தூர்வாரி, குப்பைகளை அகற்றி, தண்ணீர் தொட்டியை அமைக்க வைத்தது மக்களின் போராட்டங்கள்தான்.

மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை போராடியே பெறமுடியும் என்பதை அனுபவத்தில் உணர்ந்ததால்தான் மதுரவாயல் – பிள்ளையர் கோயில் பகுதி மற்றும் சந்தோஷ் நகர் மக்கள் மற்ற ஊர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்கள். அம்மக்களைப் போல அணி திரண்டு போராட வேண்டும் என்பதை அருகில் உள்ள ஊர் மக்களும் உணர்ந்து வருகிறார்கள். இதற்குத்தான் புமாஇமு போராடுகிறது, மக்கள் தங்களுடைய போர்க் குணமிக்க போராட்டங்களின் மூலம் மட்டுமே உரிமைகளைப்பெற முடியும் என்ற கருத்தை தமிழகம் முழுக்க கொண்டு செல்வதும் அதை நிரூபித்துக்காட்டியதும் புமாஇமு. அதனால்தான் புமாஇமு செயல்படும் பகுதிகளில் அடிப்படை பிரச்சினைக்காக சுவரொட்டியை ஒட்டியவுடனே ஓடி வருகிறது அரசு. மக்களுக்கு சேவை செய்ய அல்ல.

மதுரவாயல் – பிள்ளையார் கோயில் பகுதியில் இவ்வருடம் சாலை, குடி நீர், சாக்கடை, சாலை ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளை சீர் செய்ய வலியுறுத்தி போராடியதன் விளைவாக சாலை, சாக்கடை வசதிகள், குப்பைத்தொட்டிகள் பராமரிப்பது ஆகியவற்றை சீர்செய்ய மாநகராட்சி வேறு வழியின்றி ஒத்துக்கொண்டது. இப்படி மக்கள் போராடிப் பெற்ற சாலைக்குத்தான் இணை ஆணையர், கூடுதல் ஆணையர் என தலைமை தாங்கி பூசை செய்தார்கள். போராடுகின்ற மக்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் அரசு ஏன் மக்கள் போராடிப்பெற்ற சாலைக்கு போலீசு கும்பல் பூசை போடுகிறது? மதுரவாயல் சந்தோஷ் நகரைப்போல மற்றப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கைக்காக அணி திரளக் கூடாது என்பதுதான் அதன் நோக்கம்.

மக்கள் போர்க்குணமிக்க போராட்டங்களைத்தொடரக்கூடாது , புமாஇமுவை நாடக்கூடாது என்பதுதான் போலீசு அதிகாரவர்க்கத்தின் எண்ணம். அதனால்தான் புமாஇமு ஒரு சதிகாரகும்பல் என்பது போன்ற பொய்ச்செய்தியை ஊடகங்களின் மூலமாக தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது . எதையுமே போராடாமல் பெறமுடியாது என்பதை அனுபவமாக மக்கள் உணர்ந்துள்ள சூழலில் கிரிமினலிசத்தை திட்டமிட்டு உருவாக்குகின்ற இந்த போலீசு நான் உங்கள் நண்பன் என்றாலும் சரி, டியூசன் சென்டர், பாய்ஸ் கிளப் என்று என்னதான் கூப்பாடு போட்டாலும் மக்கள் அதை நம்பத்தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

“என்னய்யா இது? ரோட்டுக்கு பூசை போடறதுக்கு இவ்வளவு போலீசா” என்று மக்கள் ஓராமாய் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து போலீசு கூட்டம் நடத்திக்கொண்டு இருந்தது. துணை மேயர் பெஞ்சமின், முதல் கவுன்சிலர், வட்டம், சதுரம் வரை அனைவருமே இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர் என அனைவருக்குமே பொன்னாடைகளை போர்த்திக் கொண்டு இருந்தார்கள். மைக்கைப் பிடித்த அனைத்து அரசியல்வாதிகளும் “இப்படி ஒரு மக்கள் நிகழ்ச்சியை நடத்துவதற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபுதான் காரணம், அவருக்கு நன்றி” என்று புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் கிளம்பிய துணை மேயர் பெஞ்சமினை “தண்ணீர் இல்லை, ரேஷன் பொருட்கள் வருவதில்லை” என்று மக்கள் முறையிட்டுக் கொண்டே போனார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் துணை மேயர், வட்டம், சதுரம் என யாராலும் சமாளிக்க முடியாத போது இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு அவர்களை மீட்டுக் கொண்டு போனார். இந்த ஓட்டு சீட்டு அரசியல்வாதிகள் தற்போது அம்பலப்பட்டு போய் விட்டார்கள். நேரடியாக களத்திற்கு அதிகார வர்க்கம் வர முயல்வதன் காரணமாக ஆனந்தபாபுவை களமிறக்கியிருக்கிறது. வறுமைக்கெதிரான மக்களின் போராட்டத்தை சமாளிக்க இனி ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளை நம்பமுடியாது என்பதுதான் அரசின் நிலை. அதனால்தான் ஆனந்த பாபு உருவாக்கப்பட்டு இருக்கிறார் ஹீரோவாக.

இத்தனை பொய்வழக்கு, சிறைக்குப்பின்னும் ஒரே வழியில் மட்டும் மக்களையும் மக்களுக்காக போராடும் புமாஇமுவையும் ஒடுக்க முடியாது என்றுதான் மக்கள் நலப்பணி என்று உள்ளே நுழைகிறது அரசு, அதற்கு ஹீரோவாக இருக்க வைக்கப்பட்டு இருக்கிறார் ஆனந்த பாபு. வறுமைக்கு எதிரானப் போராட்டங்கள் தீவிரமடையும் போது போலீசு, அதிகாரவர்க்கம் என யார் எந்த வேடத்தில் வந்தாலும் அவர்களை ஜீரோவாக்கி காட்டுவார்கள் மக்கள் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் உண்மை.

1.  சந்தோஷ் நகரில் கழிப்பறை, சாக்கடை, குப்பைத் தொட்டிகளின் நிலைமை (முன்பு)

2. சந்தோஷ் நகரில் போராட்டங்களுக்குப் பிறகு நடந்த பராமரிப்பு பணிகள்

[படங்களைப் பெரிதாகப்  பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை.

அந்நிய முதலாளிகளுக்கு ஆடி அதிரடி விற்பனை !

11

மெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து விழுந்திருப்பது மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டப்படும் அமெரிக்க டாலர் வருமானத்தைவிட, இறக்குமதிக்கு ஆகும் டாலர் செலவு அதிகமாவதால் ஏற்படும் பற்றாக்குறை என்று இதனைச் சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்) சமாளிக்க முடியாத அளவிற்கு அதிகமாகியிருப்பதைப் பற்றித்தான் கடந்த ஒரு மாத காலமாக மன்மோகன் – ப.சிதம்பரம் கும்பல் ஒப்பாரி வைத்து வருகிறது. 2008-க்கு முன்பு ரூ.40/- ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.60/-ஐத் தாண்டிச் சரிந்து விழுந்துவிட்டது. 2012-13 நிதியாண்டு நிலவரப்படி நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 9,420 கோடி அமெரிக்க டாலராக (இன்றைய மதிப்பின்படி 5,65,200 கோடி ரூபாய்) அதிகரித்திருக்கிறது.

ப சிதம்பரம்
அந்நிய முதலீடுகளை கவரும் நோக்கத்தோடு அமெரிக்காவில் நடத்தப்பட்ட அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

இந்திய அரசிடம் ஏறத்தாழ 29,000 கோடி அமெரிக்க டாலர்கள் அந்நியச் செலாவணி கையிருப்பாக இருக்கிறதாம். இதனைக் கொண்டு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிக்கலாம் என்றால், அந்நிய முதலாளிகளிடம் வாங்கியிருக்கும் 17,200 கோடி டாலர்கள் பெறுமான குறுகிய கால கடனை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அடைக்க வேண்டிய தவணை முன்னால் வந்து நிற்கிறது. இருப்பதைக் கொண்டு இரண்டையும் அடைத்து விட்டாலோ, இறக்குமதி செய்வதற்குத் தேவையான அமெரிக்க டாலருக்குப் பற்றாக்குறை ஏற்படும்; அமெரிக்க டாலர் கையிருப்பு காலியாகிப் போனால், இந்தியரூபாய்க்குக் கழிப்பறைக் காகிதத்திற்கு இருக்கும் மதிப்புகூடக் கிடைக்காது; பங்குச் சந்தையிலும் தொழில்துறையிலும் அமெரிக்க டாலர்களைக் கொண்டுவந்து கொட்டியுள்ள அந்நிய நிறுவனங்களுக்கு மஞ்சக் கடுதாசியைத் தவிர வேறெதையும் கொடுக்க முடியாது என்கிற நிலைமைதான் ஆட்சியாளர்களைத் திணற வைப்பதாக உள்ளது.

தனியார்மயம்-தாராளமயத்திற்கு மாற்று இல்லை என அடித்துப் பேசி, இந்தியாவை ஏகாதிபத்திய நாடுகளின் வேட்டைக் காடாக மாற்றுவதற்கு வித்திட்டவரே மன்மோகன் சிங்தான்; நாடாளுமன்றத்திற்கே தெரியாமல், களவாணித்தனமாக “காட்” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இந்தியப் பொருளாதாரத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையை ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் தாரை வார்த்துக் கொடுத்தவரும் மன்மோகன் சிங்தான். இவ்வளவும் செய்துவிட்டு, இப்பொழுது இந்த நெருக்கடிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரம் இன்னும் நெருக்கடியிலிருந்து மீளாததால்தான், இந்தியாவை இப்படிபட்டதொரு நெருக்கடி திடீரெனத் தாக்கிவிட்டதைப் போல காட்ட முயலுகிறார்; மிக முக்கியமாக, இந்த நெருக்கடிக்கும் தனியார்மயம்-தாராளமயத்திற்கும் தொடர்பே இல்லாதது போல நடந்து கொள்கிறார், அவர்.

ஜோ பீடன், மன்மோகன்
அமெரிக்க அணு உலைகளை இறக்குமதி செய்வது குறித்து அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் ஜோ பிடேனுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை.

இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கும் மேற்கு ஐரோப்பிய நெருக்கடிக்கும் தொடர்பிருக்கும் அதே சமயம், இவையிரண்டுமே தனியார்மயம்-தாராளமயம் ஏற்படுத்தியிருக்கும் கட்டமைப்பு நெருக்கடியாகும். இன்னும் சொல்லப்போனால், சர்வதேசப் பொருளாதாரம் சௌக்கியமாக இருந்த காலத்திலும் இந்தியப் பொருளாதாரம் இப்படிப்பட்ட நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது என்பதே உண்மை. இந்திய அரசு உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்ப இந்தியப் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கத் தொடங்கிய காலந்தொட்டு, 1980-க்குப் பின் ஒவ்வொரு பத்தாண்டு காலத்திலும் இந்தியா இதேபோன்ற நெருக்கடியைச் சந்தித்து வந்திருக்கிறது.

தனியார்மயம்-தாராளமயத்தின் தொடக்கத்தில் அந்நிய முதலாளிகள் தாமே நேரடியாகத் தொழில் தொடங்குவதற்கும், மேற்குலகிலிருந்து நுகர்பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இத்தாராள அனுமதியால் ஏற்பட்ட ‘வளர்ச்சி’ 1990-களின் இறுதியில் நீர்க்குமிழி போல உடைந்தது. இந்த மந்த நிலையைச் சாக்காகக் காட்டி, கடன் சந்தை, பங்குச் சந்தை, வங்கிகள் உள்ளிட்ட நிதித் துறையில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினால்தான் நாடு முன்னேறும் எனக் கூப்பாடு போட்ட ஆளுங்கும்பல், இத்துறைகளில் அந்நிய நிதி மூலதனம் வெள்ளமெனப் பாய்வதற்கு ஏற்ப பல்வேறு சலுகைகளை வழங்கின; கட்டுப்பாடுகளை நீக்கின. இந்தச் சீர்திருத்தங்கள் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளை விட, இந்தியாவில் செய்யப்படும் முதலீட்டிற்கு அதிக வட்டியும் இலாபமும் கிடைப்பதை உறுதி செய்ததால், பன்னாட்டு நிதி மூலதனம் இந்தியாவையும் குறிவைத்து இறங்கியது. 2008-இல் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரங்கள் மாபெரும் மந்தத்தில் சிக்கிக் கொண்ட பிறகும்கூட, அந்நிய நிதி மூலதனம் இங்கு பாய்வதில் எவ்விதத் தடங்கலும் ஏற்படவில்லை.

தனியார் மயம்

இந்த நிதிச் சீர்திருத்தங்கள், இந்தியப் பொருளாதாரம் 2003-2008 ஆம் ஆண்டுகளில் 8 சதவீத ‘வளர்ச்சி’யை எட்டிப் பிடிக்கக் காரணமாக அமைந்த அதே சமயம், இந்தியாவின் அந்நியக் கடன் மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை வீங்க வைத்தன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2.5% சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி வரம்பு வைத்துள்ள நிலையில், தற்போது இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அந்த வரம்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. மார்ச், 2009-இல் 22,550 கோடி அமெரிக்க டாலராக (13,53,000 கோடிரூபாய்) இருந்த இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், டிசம்பர் 2012-இல் 37,630 கோடி அமெரிக்க டாலராக (22,57,800 கோடிரூபாய்) அதிகரித்திருக்கிறது. இந்தக் கடனோடு, இந்தியா திருப்பித் தர வேண்டிய அந்நிய முதலீடுகளையும் கணக்கில் கொண்டால், இந்தியாவின் மொத்த அந்நியக் கடன் மதிப்பு டிசம்பர் 2012-இல் 72,390 கோடி அமெரிக்க டாலராகும் (43,43,400 கோடிரூபாய்).

வர்த்தகர் ஆர்ப்பாட்டம்
“இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும்” என்று கூறிய அமெரிக்க அதிபர் ஒபாமாவைக் கண்டித்து தமிழ்நாடு வர்த்தகர் சங்கம், கடந்த ஆண்டு ஜூலையில் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் சர்வதேசக் கடன் சந்தையில் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் 2003-ஆம் ஆண்டுக்குப் பின் படிப்படியாகத் தளர்த்தப்பட்டதுதான் இந்தியாவின் அந்நியக் கடன் எகிறிப் போயிருப்பதன் பின்னுள்ள முக்கியமான காரணமாகும். மார்ச் 2014-க்குள் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டிய 17,200 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான அந்நியக் கடனில் 44 சதவீதம் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் பெற்றுள்ள கடன் என்பதிலிருந்தே இந்தச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தியுள்ள அபாயத்தைப் புரிந்து கொள்ளலாம். சொல்லிக் கொள்ளப்பட்ட பொருளாதார வளர்ச்சி 2008-க்குப் பின் காணாமல் போவிட்டது. ஆனால், இந்த வீக்கம் நாட்டைத் திவாலாக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.

தனியார்மயம்-தாராளமயம் மட்டுமே இந்தியாவின் தொழிற் உற்பத்தியைப் பெருக்கி, ஏற்றுமதியை அதிகரித்து, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்கும் – என ஒளிவட்டம் போட்டுக் காட்டியது, ஆளுங்கும்பல். ஆனால், இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி தனியார்மயம்-தாராளமயம் படுதோல்வியடைந்துவிட்டதை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது; இந்தியாவை அந்நிய மூலதனத்தின் அடிமையாக மாற்றியிருப்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

உண்மை இவ்வாறிருக்க, மன்மோகன் சிங் கும்பலோ பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இன்னும் ஆழமாகவும் விரைவாகவும் அமல்படுத்தப்படாமல் தாமதம் ஆவதால்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் புளுகி வருகிறது. தனியார்மயம்-தாராளமயத்தை அதன் கடைகோடி எல்லைவரை அமல்படுத்திட வேண்டும் என்ற தமது நோக்கத்தைத் தடையின்றி ஈடேற்றிக் கொள்ளுவதற்கு இந்த நெருக்கடிகளைச் சாக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது.

இந்தியா விற்பனைக்கு1990-களின் தொடக்கத்தில் இந்தியா இதே போன்றதொரு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நெருக்கடியில் சிக்கிக்கொண்டபொழுது, சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் இந்தியாவின் கடன் பெறும் தகுதியைக் குறைத்தன. இதனால் இந்தியா தனது கையிருப்பிலுள்ள தங்கத்தை அடகு வைத்துக் கடன் பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இப்பொழுது அந்நிய நிதி நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையிலும் கடன் சந்தையிலும் கொட்டியிருந்த தமது மூலதனத்தைச் சுருட்டிக் கொண்டு அமெரிக்கா நோக்கிக் கிளம்பியதையடுத்து, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து விழுந்திருப்பதோடு, அந்நியச் செலாவணிக் கையிருப்பு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. 1990-களில் ஏற்பட்ட நெருக்கடியைக் காட்டி தனியார்மயம்-தாராளமயத்தைத் தொடங்கி வைத்த மன்மோகன் சிங், இப்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் காட்டி அதனை இன்னும் தீவிரப்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தொலைபேசித் துறை, ஆயுதத் தளவாட உற்பத்தி, காப்பீடு, தேயிலைத் தோட்டங்கள், கூரியர் சேவை, கச்சா எண்ணெ சுத்திகரிப்பு, விமானப் போக்குவரத்து, மின்சாரச் சந்தை, சிங்கிள் பிராண்டு சில்லறை வணிகம் உள்ளிட்டு 13 தொழில் மற்றும் சேவைத் துறைகளில் அந்நிய மூலதனம் புதிதாக நுழைய அல்லது ஏற்கெனவே உள்ள தமது மூலதனப் பங்கை அதிகரித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. காப்பீடு துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதை மன்மோகன் சிங் மயிரளவிற்குக்கூட மதிக்கவில்லை. ஆயுதத் தளவாட உற்பத்தியில் 26 சதவீத அந்நிய மூலதனம் மிக எளிதான வழியில் நுழைய அனுமதி அளிக்கப்பட்டிருப்பதற்குப் பரவலான எதிர்ப்புகள் எழுந்த பிறகும்கூட, தனது முடிவை மாற்றிக் கொள்ள காங்கிரசு கும்பல் தயாராக இல்லை. அத்துறையில் 26 சதவீதத்திற்கும் மேலான முதலீடுகளை அனுமதிப்பதைப் பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுதான் முடிவு செய்யும் என்ற அறிவிப்பெல்லாம் வெறும் பம்மாத்துதான்.

காங்கிரசின் இந்த முடிவு அந்நிய மூலதனம் நுழைய முடியாத தொழில் இனி எதுவுமே இந்தியாவில் கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது என்ற பெயரில் நாட்டின் வளங்களும் பொதுச் சொத்துகளும் பன்னாட்டு முதலாளிகளுக்குக் கைமாற்றிவிடப்படுகிறது. குடும்பச் சோத்தை ஒவ்வொன்றாக விற்று தின்று தீர்க்கும் தறுதலைக்கும் மன்மோகன் சிங்கின் இத்தனியார்மய நடவடிக்கைகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

இத்தனியார்மய நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையை அமெரிக்காவிடமும் ஏகாதிபத்திய முதலாளிகளிடமும் ஒப்புவிக்கின்றன. நாட்டின் கேந்திரமான செல்வ வளங்கள், தொழில்களைப் பன்னாட்டு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் விட்ட பிறகு, நாட்டின் சுதந்திரம், இறையாண்மை என்று பேசுவதில் ஏதாவது பொருளுண்டா?

– செல்வம்

***

வரிக்கொள்கையை தீர்மானிப்பது யார்?

பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பதை விட, அந்நியக் கடனும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் அதிகரித்துக் கொண்டே போவதுதான் அபாயகரமானது. ஆனால், இந்திய ஆளுங்கும்பலும் முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களும் பின்னிரண்டைப் பற்றிப் பேசாமல், அவற்றுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்காமல், பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பதைத்தான் ஊதிப் பெருக்கி வருகிறார்கள். பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தா விட்டால், இந்தியாவின் கடன் பெறும் தகுதியைக் குறைத்துவிடுவோம் எனச் சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள் கடந்த ஆண்டு மத்தியில் மிரட்டின. இதைக் காட்டியே, டீசலுக்கும் சமையல் எரிவாயுவுக்கும், உரத்திற்கும் கொடுத்து வந்த மானியத்தையும் வெட்டியும்; சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்தும், சர்வதேசத் தர நிர்ணய நிறுவனங்கள் விரும்பியபடி இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தயாரித்தார், ப.சி.

பெட்ரோல் விலைபாகிஸ்தானால் ஏவிவிடப்படும் முசுலீம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக சண்டமாருதம் செய்யத் தயங்காத இந்திய ஆளுங்கும்பலும் ஓட்டுக்கட்சிகளும் சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள், அந்நிய முதலீட்டாளர்கள் என்ற இந்தச் சந்தை பயங்கரவாதிகள் விடும் மிரட்டல் முன் வெலவெலத்துப் போய் நிற்கிறார்கள். வோடோஃபோன் நிறுவனம் இந்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய 11,000 கோடிரூபாய் பெறுமான மூலதன ஆதாய வரியைச் செலுத்தத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன், வரி ஏய்ப்பைத் தவிர்க்கும் பொதுவிதிமுறைகள் 2012-13 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக அந்நிய முதலீட்டாளர்கள் பஞ்சாயத்துக் கூட்டத்தை நடத்தியவுடனேயே, அந்த விதிமுறைகளைக் கிடப்பில் போடும் நோக்கத்தோடு ஷோமே கமிட்டியை அமைத்தார், மன்மோகன் சிங். அந்த கமிட்டியும் தமது அந்நிய எஜமானர்கள் விரும்பியபடி அவ்விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதை மூன்றாண்டுகளுக்கு ஒத்தி வைக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தது.

இந்தியாவின் வரி விதிப்பு முறையை அந்நிய முதலீட்டாளர்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும்தான் தீர்மானிக்கின்றன என்பதற்கு இன்னும் பல உதாரணங்களைத் தரலாம். குறிப்பாக, தற்பொழுதுள்ள வரி விதிப்புகள் குறித்து கார்ப்பரேட் முதலாளிகளின் கருத்தை அறிந்துகொள்வது என்ற பெயரில் ஷோமேயின் தலைமையில் மற்றொரு கமிட்டியை (Tax Forum) அமைத்துள்ள மைய அரசு, இக்கமிட்டி வாரம் ஒருமுறை கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தும் என அறிவித்திருக்கிறது. மேலும், தகவல்-தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விதிக்கும் வரிகளை மாற்றியமைக்கும் நோக்கத்தோடு ரங்காச்சாரி என்பவர் தலைமையில் மற்றொரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சட்டபூர்வ வரிச்சலுகைகளும் தள்ளுபடிகளும்தான் பட்ஜெட் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது என்பது மறைக்கப்பட்டு, இச்சலுகைகள் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானவை என நயவஞ்சகமான முறையில் நியாயப்படுத்தப்படுகிறது.

________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

டம்மி பீசாகும் நாடாளுமன்றம் – ஒரு போலிக் கம்யூனிஸ்டின் புலம்பல் !

3

 நாடாளுமன்றத்தின் மேலாண்மை தாக்குதலுக்கு உள்ளாகிறது – பி ராஜீவ்

நாடாளுமன்றத்தை புறக்கணிக்கும் அதிகார வர்க்கத்தின் முயற்சிகளும், தேர்தல்களை முடிவு செய்வதில் பண பலத்தின் அதிகரித்து வரும் தாக்கமும் மக்களின் நியாயமான விருப்பங்களை அரித்து விட்டிருக்கின்றன.

நாடாளுமன்றம்
“ஒளிமங்கும் நாடாளுமன்றம்”

நாடாளுமன்றம்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன். அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் நாட்டு மக்களின் இறையாண்மை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் அந்த மேலாண்மையை செலுத்துகிறார்கள். சமீப காலங்களில் நாடாளுமன்றம் செயல்படாமல் இருப்பது பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வெளியாகிறது. அப்படி நடக்கும் போது தவிர்க்க முடியாததுபடி அது செய்தியாகிறது.

15-வது நாடாளுமன்றத்தை இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிகவும் குறைவாக செயல்பட்ட ஒன்றாக கூறலாம். மக்களவை செயலகம் தயாரித்த புள்ளிவிபரங்களின் படி, 15-வது நாடாளுமன்றத்தின் 12-வது அமர்வு வரை 1,157 மணி நேரம் மட்டுமே கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. 14-வது நாடாளுமன்றம் கூடிய 1,736 மணி 55 நிமிடங்களை விட இது மிக மிகக் குறைவானதாகும். முதல் நாடாளுமன்றம் தனது 14 அமர்வுகளில் 3,784 மணி நேரம் கூட்டம் நடத்தியிருந்தது. மாநிலங்கள் அவை என்று அழைக்கப்படும் மேலவையிலும் இதே கதைதான். வரலாற்றில் முதல் முறையாக நிதி நிலை அறிக்கையை விவாதிக்காமலேயே மேலவை ஏற்றுக் கொண்டது.

அடையாள அட்டை மசோதா கிடப்பில் போடப்பட்டது

ஆனால், இது மட்டுமே ஜனநாயகத்தின் செயல்பாட்டை அரித்து விடவில்லை. நாட்டின் மிக உயர்ந்த சட்டம் இயற்றும் அமைப்பின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகார அமைப்புகள் பெரும்பான்மை கொள்கை முடிவுகளை எடுத்துள்ளன. இதற்கான மிகப் பொருத்தமான உதாரணம், ஐக்கிய முன்னேற்ற முன்னணியின் பெருமளவு பீற்றிக் கொள்ளப்படும் ஆதார்தான்.

அதிகார வர்க்கம்
நாடாளுமன்றத்தை புறக்கணிக்கும் அதிகார வர்க்கத்தின் முயற்சிகள் (படம் : நன்றி தி ஹிந்து)

அரசு நலத் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை இருந்தாக வேண்டும் என்று கருதப்படுகிறது. ஆதார் எண் இல்லாமல் ஒரு மாணவர் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்த நலத் திட்ட உதவியையும் பெற முடியாது. உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம் ஆதார் எண்களை அடிப்படையாகக் கொண்டது. வங்கிக் கணக்குகள் அதனுடன் இணைக்கப்பட உள்ளன. ஆனால், ஆதாருக்கான சட்ட ஆதாரம் என்ன?

ஆதார் செயல்முறைப்படுத்தப்படுவதற்கான சட்டமாக அடையாள எண் மசோதா முன் வைக்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற நிலைக் குழு, மசோதாவின் பெரும்பான்மை பகுதிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது அறிக்கையை கொடுத்துள்ளது. அரசாங்கம் அந்த அறிக்கையை கிடப்பில் போட்டு விட்டு, மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதையே மறந்து விட்டது. ஆனால், ஆதார் இந்திய குடிமக்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத நிதர்சனமாக ஏற்கனவே ஆகி விட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் இந்த ரகசியமான அணுகுமுறை மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் பங்களிக்கும் முறையை அறிமுகப்படுத்திய போதும் தெரிய வந்தது. நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் கோடிக் கணக்கான ஊழியர்களிடமிருந்து ஓய்வூதிய நிதியத்துக்கான பங்களிப்பை திரட்டி வருகின்றன. ஆனால், அது தொடர்பான மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இத்தனை ஆண்டுகளும் பல நூறு கோடி ரூபாய் பணத்தை திரட்டுவதற்கான சட்ட அடிப்படை என்ன? முக்கிய கொள்கை முடிவுகளை செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தை அரசு புறக்கணிப்பதற்கான ஒரு சில உதாரணங்கள் மட்டுமே இவை.

ஜனநாயக அமைப்பின் வெவ்வேறு உறுப்புகளின் அதிகாரங்களை அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வரையறுத்து, பிரித்துள்ளது. நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றினால் அதுதான் நாட்டின் சட்டமாக ஆகி விடுகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களும் அதை கடைப்பிடிப்பது கட்டாயமாகிறது. ஆனால், இப்போது இந்த நிபந்தனைக்குட்பட்ட இறையாண்மை மீறப்படுவதே நடைமுறையாகி விட்டிருக்கிறது.

ஒரு மனதான முடிவு மாற்றி அமைக்கப்பட்டது

2012-13ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து பேசும் போது அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி முன் தேதியிட்ட வரிவிதிப்பை அறிமுகம் செய்தார். இந்த வரிவிதிப்புடன் கூடிய நிதி மசோதாவை இரண்டு அவைகளும் ஒருமனதாக நிறைவேற்றின. ஆனால், ப சிதம்பரம் நிதி அமைச்சர் ஆனதும் நிலைமை திடீரென மாறியது. புதிய வரி சீர்திருத்தத்தை மறுஆய்வு செய்ய அவர் ஒரு நபர் குழுவை நியமித்தார். வரி நிபுணர் பார்த்தசாரதி ஷோமே தனது அறிக்கையை சமர்ப்பித்த ஒரு வாரத்துக்குள் முன் தேதியிட்ட வரிவிதிப்பை மூன்று ஆண்டுகளுக்கு தள்ளிப் போடுவதாக அரசாங்கம் முடிவு செய்தது. நாடாளுமன்றத்தின் ஒரு மனதான முடிவை ஒரு நிபுணர் மாற்றி விட முடிகிறது என்பதுதான் நிலைமை.

அதிகாரங்களை கைப்பற்றுதல்

நாடாளுமன்ற குழுக்கள் நாடாளுமன்றத்தின் சிறிய வடிவங்களாக கருதப்படுகின்றன. பொதுவாக, இந்த குழுக்களில் பல அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு பெறுகின்றனர். வளர்ந்த ஜனநாயங்களில் முழு நாடாளுமன்றம் மட்டுமே நாடாளுமன்ற குழுக்களின் முடிவுகளை மாற்ற முடியும். ஆனால், இந்தியாவில் நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவோ, நிராகரிக்கவோ அதிகார வர்க்கத்துக்கு உரிமை உள்ளது. மசோதாவில் ஆரம்பத்தில் இல்லாத ஒரு பிரிவை அரசாங்கம் சேர்த்தால் கூட, அதை மீண்டும் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை.

ஆனால், இதுவரை பின்பற்றப்பட்டு வந்த இந்த அரசியலமைப்பு மரபுக்கு மாறாக, இந்தியக் குடியரசின் வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றின் பரிந்துரைகளை பரிசீலிக்க அரசு ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. நிதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு நேரடி வரி விதிகளின் மீதான தனது அறிக்கையை சமர்ப்பித்ததும், நிதி அமைச்சகம் உடனடியாக இந்த அறிக்கையை ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்தது. இது தொடர்பாக கேள்வி எழுப்பியவுடன் அமைச்சகம் சில விளக்கங்களை கொடுத்தாலும் இதை சரி என்றோ நியாயம் என்றோ கருத முடியுமா? நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றி மக்களின் குரலை ஒடுக்குவதற்கான வழியாக அது இல்லையா?

இவை அனைத்துமே நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகள்தான். மற்ற கொள்கை விவகாரங்களில் இது மேலும் தெளிவாகிறது.

1990-களுக்கு முன்பு இந்தியாவின் சாதாரண மனிதர்கள் தொலைக்காட்சி அல்லது வானொலி பெட்டியின் முன்பு வரி வீதங்கள், பல்வேறு பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றங்கள், ரயில் கட்டணம் போன்றவை குறித்த நிதிநிலை அறிக்கை முன்வைப்புகளை கேட்பதற்கு ஆர்வமாக காத்திருப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் யாரும் வரவு செலவு அறிக்கையைப் பற்றி அலட்டிக் கொள்வதேயில்லை. சமீப காலத்தில் நாடாளுமன்றம் மட்டுமின்றி, அதிகார வர்க்கம் கூட பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயிப்பதில் எந்த பங்கும் வகிக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களின் கையில் அரசு ஒப்படைத்து விட்டிருக்கிறது. சென்ற ரயில்வே வரவு செலவுத் திட்டத்தின்படி ரயில் கட்டணங்கள் ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றினால் தீர்மானிக்கப்பட உள்ளன.

இப்போது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி தொடர்பான அரசியல் அமைப்புச் சட்ட திருத்தத்தை நிறைவேற்ற அரசு தயாராகி வருகிறது. வரைவு மசோதாவின்படி வரி வீதங்களை தீர்மானிப்பதில் நாடாளுமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இருக்காது. மத்திய அரசுக்கும், மாநிர அரசுக்கும் வரி வீதங்களை தீர்மானிப்பதற்கான அதிகாரங்களுடன் ஜிஎஸ்டி குழு என்று அமைக்கப்படும். நாடாளுமன்றமும் சட்ட மன்றங்களுக்கும் இந்த விஷயத்தில் எந்த பங்களிப்பும் இல்லாத நிலையில் நிதிநிலை அறிக்கை ஒரு பொழுதுபோக்கு நடவடிக்கையாக மாறி விடுமா? மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து அவர்களது அரசியல் சட்டபூர்வமான பொறுப்புகள் கொள்ளையடிக்கப்பட்டு விடுமா?

சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடமிருந்து தீவிர எதிர்ப்புகள் கிளம்பிய பிறகு அரசாங்கம், ஜிஎஸ்டி குழுவுக்கு பரிந்துரை வழங்கும் அதிகாரம் மட்டுமே உள்ளது என்று ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. ஆனால், எதிர்கால நிதி அமைச்சர்களின் கைகளை இந்த பரிந்துரைகள் கட்டிப் போட்டு விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் மூலம் நாடாளுமன்றத்தின் நிதி தொடர்பான அதிகாரங்கள் நீர்த்துப் போகச் செய்யப்படும்.

இந்தியாவின் நாடாளுமன்றம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தன்மையை பெரிதும் இழந்திருப்பது இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள இன்னொரு தீவிரமான அபாயம். தேர்தல் கண்காணிப்பு என்ற அமைப்பின் புள்ளிவிபரங்களின்படி 15-வது நாடாளுமன்றத்தின் 306 உறுப்பினர்கள் வரை கோடீஸ்வரர்கள். 14-வது நாடாளுமன்றத்தை விட இது 100%-க்கும் கூடுதலான அதிகரிப்பு ஆகும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் சராசரி சொத்து மதிப்பு ரூ 5.8 கோடி வரை உள்ளது. 77 சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் தினசரி நுகர்வு ரூ 20-க்கும் குறைவாக உள்ள சமூகத்தின் பிரதிநிதிகள் அவர்கள் என்பது மோசடியாக இல்லையா? ரூ 50 லட்சத்துக்கும் ரூ 5 கோடிக்கும் இடையே சொத்து மதிப்பு உடைய வேட்பாளரின் வெற்றி வாய்ப்புகள் 18.5 சதவீதம். ரூ 10 லட்சத்துக்கும் குறைவான சொத்து உடையவர்களின் வாய்ப்பு 2.6 சதவீதம் மட்டுமே. தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் பணபலம்தான் தேர்தல் அமைப்பில் முக்கிய கூறாக உள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

இந்திய ஜனநாயகத்தில் ஓரளவுக்கு முற்போக்கு தன்மைகள் இருக்கின்றன. ஆனால், அரசை நடத்தும் அதே வர்க்கங்கள் ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றன. நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவ தன்மையையும், அதன் சட்டமியற்றும் மேலாண்மையையும் பாதுகாப்பது நமது கடமையாகும். நாடாளுமன்றம் என்ற வாகனத்தில்தான் மக்களின் விருப்பங்களும் தேவைகளும் நிறைவேற்றப்பட முடியும். சட்டப்படியான ஆட்சியையும், வினியோக நியாயத்தையும் அமைப்பதற்கான கருவி அதுதான். அதன் அதிகாரங்களையும் கடமைகளையும் மறுப்பதும், விலக்குவதும், மக்களின் நியாயமான விருப்பங்களை இல்லாமல் செய்வதில்தான் கொண்டு போய் விடும்.

– பி ராஜீவ் (நாடாளுமன்ற உறுப்பினர்)

பி ராஜீவ்
பி ராஜீவ், எம்பி.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி ராஜீவ் 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதாரத்திலும் சட்டத் துறையிலும் பட்டம் பெற்ற அவர் கேரள உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணி புரிந்தவர். SFI ஒருங்கிணைப்பாளர், DYFI மாவட்டச் செயலாளர், CITU மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்த அவர் இப்போது கேரள சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினராக உள்ளார்.

நன்றி : Parliamentary supremacy under attack
பி ராஜீவ்

தமிழாக்கம் : அப்துல்.
___________________

பின்னுரை : நாடாளுமன்றம் எந்த வகை அதிகாரமும் இல்லாத ஒரு அரட்டை மடம், பன்றித் தொழுவம் என்று மார்க்சிய லெனினிய கட்சிகள் சொல்லும் போதெல்லாம் போலிக் கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றத்தின் மேன்மைக்காக பொங்கி எழுவார்கள். நாடாளுமன்றத்திலேயே அவ்வப்போது நடக்கும் கூத்துக்களின் போதும் அவர்கள் “எப்பேற்பட்ட நாடாளுமன்றம் நம்முடையது” என்று ஒழுக்கவானாய் எழுந்து கூச்சலிடுவார்கள். மற்ற ஓட்டுக் கட்சிகள் கூட “இந்த மன்றம் பன்றித் தொழுவம்தானே இதிலென்ன அதிசயம்” என்று ஒத்துக் கொண்டாலும் போலிக் கம்யூனிஸ்டுகள் மறுப்பார்கள்.

தற்போது அவர்களே இந்த அரட்டை மடத்திற்கு தெரியாமல் சட்டம் அமலுக்கு வருவது குறித்து புலம்புகிறார்கள். முக்கியமான மசோதாக்கள், சட்டங்கள், முடிவுகள் அனைத்தும் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்காமல் அமலுக்கு வருகின்றன என்பதுதான் அவர்களது கவலை. உண்மையில் இத்தகைய கொள்கை முடிவுகளுக்கு பஜனை மடமாகத்தான் நாடாளுமன்றம் அதன் தோற்றம் முதல் இருந்து வருகிறது. மேலும் நாடாளுமன்றத்திற்கு சட்டம் இயற்றும் அதிகாரம் மட்டுமே இருக்கிறதே அன்றி அதை அமலாக்கும் அதிகாரம் இல்லை. அந்த வகையில் இந்தியாவில் நடப்பது ஆளும் வர்க்கங்களின் சார்பான அதிகார வர்க்கத்தின் ஆட்சியே அன்றி தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அல்ல. தற்போது அந்த சட்டம் இயற்றும் அதிகாரமும் இல்லை என்பதுதான் போலிகளின் கவலை.

அது மீண்டும் கிடைத்து விட்டால் நாடாளுமன்றம், ஜனநாயகத்தின் சுரங்கம் என்று அவர்கள் மீண்டும் பஜனையைத் துவங்குவார்கள். இது போலி ஜனநாயகம் என்பது நாளுக்கு நாள் நிரூபணம் ஆனாலும், மக்களே ஒத்துக் கொண்டாலும் போலிக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த புலம்பலின் முடிவில் ராஜீவ் அதைத்தான் முன்மொழிகிறார். போலி ஜனநாயகத்திற்கு காரணமான ஆளும் வர்க்கங்களின் மேல் மக்களுக்கு ஒரு மயக்கம் ஏற்படுத்தும் வேலையினைத்தான் போலிக் கம்யூனிஸ்டுகள் செய்கிறார்கள். தற்போது அந்த மயக்கமும் கலைந்து வருகிறது என்பதால் எப்படி முட்டுக் கொடுப்பது என்பது அவர்களது கவலை. பன்றித் தொழுவத்தில் சந்தனத்தை தேடும் இவர்களை எப்படி திருத்துவது?

– வினவு
_____________________

டாஸ்மாக்கை மூடவைத்த வேதாரண்யம் மக்கள் போராட்டம் !

6

வேதாரண்யம் – கீழ் ஆறுமுகக் கட்டளை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற கோரி 13.6.2013 அன்று விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டு டாஸ்மாக் சாராய கடையை அப்புறப்படுத்த கோரி  முற்றுகை-சாலை மறியல்  நடைபெற்றது. அப்போது “இருபது நாட்களில் கடையை அப்புறப்படுத்துவதாக” எழுதிக் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத வேதாரண்யம் வட்டாட்சியரை கண்டித்து “வட்டாட்சியர் அலுவலக” முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் கடை அமைந்துள்ள கீழ் ஆறுமுகக் கட்டளை பகுதி குடிகாரர்களின் கூடாரமாக மாறி மக்கள் குடியிருக்க வக்கற்ற பகுதியாக மாறி விட்டதால், மேற்கண்ட டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தும் வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் “குடியேறுவோம் – முற்றுகையிடுவோம்” என்ற முழக்கத்தின் அடிப்படையில் விவசாயிகள் விடுதலை முன்னணி தலைமையில், புரட்சிகர  இளைஞர் மாணவர் முன்னணி மற்றும் பகுதி பொது மக்கள் சார்பாக 8.8.2013 அன்று போராட்டம் நடத்தப்பட்டது.

இதனை ஒட்டி 200 போஸ்டர்கள் வேதாரண்யம் நகரப் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டன. காலை 10 மணிக்கு. மேலவீதி பெரியார் சிலை அருகில் இருந்து புறப்பட்ட பேரணியில் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் கைகளில் முழக்க தட்டி, செங்கொடிகளுடன், பானை, சட்டி, அடுப்பு, விறகு கட்டு, விளக்குமாறு, பாய், தலையணை என குடியேற தேவையான பொருட்களோடு சென்றர். மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கும் அதிகாரிகளை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த கோரியும் முழக்கங்கள் எழுப்பிய படியே, மக்களின் கவனத்தை ஈர்த்து பேரணி சென்றது. வட்டாட்சியர் அலுவலகத்தை நெருங்கிய போது “என்னா, பெர்மிஷன் வாங்காம போராட்டம் நடத்துறீங்களா? எல்லோரையும் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டிடுவோம்” என்று வாசலை இடை மறித்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காவல் துறையினர் அச்சுறுத்தியதை கண்டு கொஞ்சமும் பயப்படாத, பொருட்படுத்தாத மக்கள் கொளுத்தும் வெயிலில் கைக்குழந்தைகளுடன் வாயிலை மறித்து முற்றுகையிட்டு அமர்ந்து முழக்கம் எழுப்பினர்.

சிறிது நேரம் கழித்து வெளியில் வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பொறுப்பாளர்களை உள்ளே அழைத்த போது உறுதியாக மறுத்த பெண்கள், “ஏற்கனவே எழுதிக் கொடுத்து” ஏமாற்றியதை நினைவு படுத்தி, “வட்டாட்சியரிடம் சொல்லி அவரை வெளியில் வந்து எங்களிடம் பேச சொல்லுங்கள்” என்று கூறினர். நொந்து கொண்டே உள்ளே சென்ற அதிகாரிகள் மேலதிகாரிகளிடம் பேசி விட்டு “இன்று கடையை மூடி நாளை அகற்றி விடுகிறோம் என்று வாய் மொழியாக கூறினர். அதை ஏற்க மறுத்த பெண்கள், “கடையை காலி செய்வதற்கு” குறைவான எதையும் ஏற்க மறுத்தனர்.

காவல் துறையினரிடம் வாயிலை திறக்கச் சொல்லி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, “இங்க எங்கள உள்ளே போக விடாம தடுக்கிற காவல் துறை, அங்க குடிச்சிட்டு துணி இல்லாம நிக்கிறவனையும், பொம்பள புள்ளைங்கள கேலி கிண்டல், பண்றவனையும் தடுக்கிறதுக்கு வர்றது கிடையாது” என்று கூறினர். அதனால் கோபமடைந்த இன்ஸ்பெக்டர், “ஏய், யார்டி அது, எங்கள பத்தி பேசுறதுக்கு உனக்கு ரைட்ஸ் கிடையாது என்றார். பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சூழ்ந்து கொண்டு, “ஏய், யாரப் பார்த்து அவ, இவங்கிற, மரியாதை கெட்டுட்டும். ஒழுங்கு மரியாதையா பேசு” என்று ஒரு பெண் கண்டித்தார். மற்றொரு பெண்ணோ, “லஞ்சம் வாங்கியே திங்கிற இவங்களுக்கு எங்கே இருக்க போவுது மானம், மரியாதை? என்று கேட்டார். அவமானப்பட்ட இன்ஸ்பெக்டர், போராட்டம் முடியும் வரை முகத்தைக் காட்ட வெட்கப்பட்டு திரும்பியபடியே நின்றார்.

மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அடுப்பை பற்றி வைத்து டீ போட தயாராயினர். டிவிஷனல் மேனேஜரிடம் பேசிய வட்டாட்சியர் கைபேசி இணைப்பை பொறுப்பாளரிடம் கொடுத்து டிவிஷனல் மேனேஜரிடம் பேசுமாறு தந்தார். அவர் இன்றே கடையை அப்புறப்படுத்துவதாக உத்தரவாதம் அளித்தார். அதற்கு பெண்கள், “மேல் அதிகாரியை நேரில் வரச் சொல்லுங்க, அது வரைக்கும் நாங்க இந்த வெயில்லயே கெடக்கிறோம்” என்றபடியே மதிய உணவும் அங்கேயே சமைக்க ஆயத்தமாக, போராட்டம் மற்ற அமைப்புகள் நடத்துவது போன்ற சடங்குத் தனமான போராட்டம் இல்லை என்பதை உணர்ந்த வட்டாட்சியர் டிவிஷனல் மேனேஜரை நேரில் வரவழைத்தார். நேரில் வந்து போராட்டத்தின் தன்மையை பார்த்த அவர் வட்டாட்சியரிடம் பேசி விட்டு, போராட்டத்தில் பங்கேற்று இருந்த பெண்கள், இளைஞர்கள், தோழர்களை கலந்து பேசி பின்பு “இன்றே கடையை அப்புறப்படுத்துவதாக” உறுதி அளித்தார். கடையை அப்புறப்படுத்துவதற்கான வேலையை தொடங்கிய பிறகு மக்கள்  போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய மக்கள் டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டு “சரக்குகள்” வெளியேற்றப்படுவதை கண்காணித்து போராட்டம் வெற்றி அடைந்ததை வெடிவெடித்து கொண்டாடினர்.

300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு நடைபெற்ற இப்போரட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணி வேதாரண்யம் வட்டார பொறுப்பாளர் தோழர் தனியரசு தலைமை தாங்கினார். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த மாணவர்களும், இளைஞர்களும், பகுதி வாழ் மக்களும் கலந்து கொண்ட இந்த போராட்டம்  பதவிக்கு ஆசைப்படும் மற்ற கட்சிகளைப் போலன்றி, மக்களுடைய பிரச்சனைகளுக்காக உண்மையாக போராடும் புரட்சிகர அமைப்புகள்தான் போராட்டத்தை  எப்படி நடத்த வேண்டும் என்று மக்களுடன் கற்றுக் கொடுத்து அவர்களுடன் சேர்ந்து போராடுகின்றன என்பதை உணர்த்தியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புஜ செய்தியாளர்,
விவிமு, புமாஇமு
வேதாரண்யம்.

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

1

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2013புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  1. மாருதி நிறுவனத்திற்கு எதிராக தொடர்கிறது தொழிலாளர் போராட்டம் ! போராடும் மாருதி தொழிலாளர்களுக்கு தோள் கொடுப்போம்! ” – புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம்
  2. பீகார்-குழந்தைகள் சாவு : கிரிமினல் மயமான அரசமைப்பே முதல் குற்றவாளி !
  3. செல்லாக்காசாகிய ரூபாய் : மறு அடகு வைக்கப்படும் இந்தியா !
    வரிக் கொள்கையை தீர்மானிப்பது யார்?
  4. மீத்தேன் வாயுவை எடுக்கும் திட்டம் : மண்ணைக் காக்கக் கிளர்ந்தெழுவோம் !!
    – புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்
  5. இளவரசன் மரணம் : ‘சமூக நீதி’ அரசியலின் சாதிவெறி முகம்!
  6. இளவரசன் மரணம் : தமிழகமெங்கும் சாதிவெறிக்கெதிராக…
  7. வருண் காந்தி மீதான வழக்குகள் ரத்து : முலயம் சிங்கின் முகத்திரை கிழிந்தது !
  8. ஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல!
  9. தனியார் பள்ளி முதலாளியைப் பணிய வைத்த பெற்றோர்களின் போராட்டம் !
  10. என்.எல்.சி. பங்கு விற்பனை : ஜெயலலிதாவின் நரித்தனம் !
  11. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் போராட்டம் : வரலாற்றில் இடம் பிடிக்கிறார் வீரமணி !
  12. ஸ்னோடென் விவகாரம் : பொலிவியாவின் சுயமரியாதை! இந்தியாவின் அடிமைத்தனம் !!
  13. சோனி சோரி மீதான பொய் வழக்குகள் : தொடரும் காட்டு வேட்டையின் அநீதி !
  14. பிரேசில் : ஏழைகளின் பேரெழுச்சி! போலி சோசலிசத்தின் படு தோல்வி !!
  15. எகிப்து : கேலிக்கூத்தானது அரபு வசந்தம் !
  16. எதிர் கொள்வோம் !
  17. “தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்! முதலாளித்து பயங்கரவாதத்தை முறியடிப்போம் !! “
    பு.ஜ.தொ.மு.வின் பிரச்சார இயக்கம் – கருத்தரங்கங்கள்
  18. காசநோய் சிகிச்சையை (டாட்ஸ்) தனியார் மயமாக்கும் சதி!

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

பஜாஜ் அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளர் போராட்டம் !

4

காராஷ்டிராவில் உள்ள சக்கன் என்ற இடத்தில் உள்ள பஜாஜ் பூனே இருசக்கர வண்டி தொழிற்சாலை தொழிலாளர்கள் 40 நாட்களுக்கு மேலாக நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒரு வாரத்துக்குள் கை விடா விட்டால் உற்பத்தியை நிரந்தரமாக ஔரங்கபாதிலுள்ள வாலூஜ் தொழிற்சாலைக்கும் உத்தரகாண்டில் உள்ள பந்த் நகர் தொழிற்சாலைக்கும் மாற்றி விடுவோம் விடும் என்று பஜாஜ் மோட்டார் சைக்கிள் பிரிவின் துணைத் தலைவர் கைலாஷ் ஜன்சாரி மிரட்டியிருக்கிறார்.

பஜாஜ் பல்சர்
பஜாஜ் தொழிலாளர்கள் படைக்கும் நவீன பைக்.

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் உள்ளிட்ட இரு சக்கர வண்டிகளை உற்பத்தி செய்யும் சக்கன் தொழிற்சாலையில் 925 நிரந்தர தொழிலாளர்களும், 364 பயிற்சி தொழிலாளர்களும், “கற்றுக் கொண்டே சம்பாதி” என்ற முறையிலான தொழிலாளர்களும் சேர்த்து மொத்தம் 1,486 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். கூடவே 1,500 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றனர்.

1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலையில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆரம்பத்தில் ஒளிமயமான எதிர்காலம் வாக்களிக்கப்பட்டது. ஆனால் அடுத்த வந்த 10 ஆண்டுகளில் பல தொழிலாளர் விரோத கொள்கைகள் அமல்படுத்தப்பட்டன.

  1. ஓவர்டைம் வேலை கட்டாயமாக்கப்பட்டது, ஆனால் அதற்கான ஊதியம் தரப்படவில்லை.
  2. தொழிலாளர்களுக்கான ஷிப்ட் நேரங்களை நிர்வாகம் தமது விருப்பப்படி முடிவு செய்து அதன்படி வேலை செய்யுமாறு தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  3. தொழிலாளர்கள் தமது நிலைமையை பற்றி புகார் சொன்னால் அவர்கள் வசவுகளால் திட்டித் தீர்க்கப்பட்டனர்.
  4. வருடாந்திர ஊதிய உயர்வுகள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே வைக்கப்பட்டிருந்தன.

நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர் கொள்ள முடியாமல் 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க முடிவு செய்தனர். பல தொழிலாளர்கள் யூனியனில் சேருவதற்கு அஞ்சினாலும் நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர் கொள்ள பெரும்பான்மையினர் ஆகுர்தி தொழிற்சாலையின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான விஷ்வ கல்யாண் காம்கார் சங்காடனா (VKKS) யூனியனில் சேர்ந்தனர். இந்த தொழிற்சங்கம் சக்கன் தொழிற்சாலைக்கும் அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்றது.

2007-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் பஜாஜ் நிறுவனத்தின் பந்த் நகர் தொழிற்சாலை திறக்கப்பட்டது. அந்தத் தொழிலாளர்களும் சக்கன் தொழிலாளர்கள் எதிர் கொண்ட அதே மாதிரியான சுரண்டல்களை எதிர் கொண்டார்கள். நிர்வாகத்தின் அடக்கு முறைகளையும், குறைவான வருடாந்திர ஊதிய உயர்வையும் எதிர்த்து 2012-ம் ஆண்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் படி தொழிலாளர்கள் விகேகேஎஸ் தொழிற்சங்கத்தை அணுகி உதவி கோரினார்கள். உத்தரகாண்ட் மாநிலத்தில் யூனியன் ஏற்படுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லாத சூழல் நிலவுவதால் விகேகேஎஸ் அந்தத் தொழிலாளர்களையும் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டது.

பஜாஜ் தொழிலாளர்கள்
தமது உரிமைகளுக்காக போராடும் பஜாஜ் தொழிலாளர்கள்.

ஆனால், மகாராஷ்டிராவில் ஏற்படுத்தப்பட்ட யூனியன் சக்கன் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு மட்டும்தான் பொருந்தும், உத்தரகாண்ட் தொழிலாளர்களை அதில் சேர்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிறுவனம் முரண்டு பிடித்தது. அதாவது, ஒரு மாநிலத்தில் செயல்படும் தொழிற்சாலையின் செயல்பாடுகள் இன்னொரு மாநிலத்தோடு இணைக்கப்படக் கூடாதாம். ஆனால், இப்போது சக்கன் தொழிலாளர் போராட்டத்தை முறியடிப்பதற்கு உற்பத்தியை சத்தீஸ்கருக்கு மாற்றுவதாக இதே பஜாஜ் நிர்வாகம் மிரட்டுகிறது. தொழிலாளர்களுக்கு வந்தால் அது தக்காளி ஜூஸ், நிர்வாகத்துக்கு வந்தால் அது ரத்தம் என்ற வழக்கமான முதலாளித்துவ ஜனநாயக கோட்பாடுதான் அது.

விகேகேஎஸ் யூனியன் நைனிடால் உயர்நீதிமன்றத்தை அணுகி அங்கீகாரம் வழங்கும்படி மாநில தொழிலாளர் துறைக்கு உத்தரவிடக் கோரியது. உயர் நீதிமன்றமும் விகேகேஎஸ் தொழிற்சங்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதற்கிடையே பஜாஜ் நிர்வாகம் ஒரு பொம்மை தொழிற்சங்கத்தை உருவாக்கி தன் விருப்பப்படியான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி தொழிலாளர்களை கட்டாயப்படுத்தியது.

பந்த் நகர் தொழிற்சங்க வழக்கைத் தொடர்ந்து சக்கன் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தை உடைப்பதற்காக தொழிலாளர்கள் மீது அடக்கு முறைகளை நிர்வாகம் அவிழ்த்து விட்டது. நடைமுறை சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நிறைவேற்றவில்லை என்று குற்றங்கள் சாட்டியது. பந்த்நகர் சம்பவத்துக்குப் பிறகு (ஜூன் 2012) 22 தற்காலிக பணி நீக்கங்களும், 8 விசாரணைக்கு முன்பு பணி நீக்கமும், 1 வேலை நீக்கமும் உள்ளிட்டு பல தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர்.

2010-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி, 2012-ம் ஆண்டு தர வேண்டிய ஊதிய உயர்வை வழங்காமல் நிர்வாகம் ஒப்பந்தத்தை மீறியது. அதைத் தொடர்ந்து யூனியன் சம்பள ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய கோரிக்கைகளை முன் வைத்தது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் விவகாரம், ‘கற்றுக் கொண்டே சம்பாதி’ முறையில் அமர்த்தப்படும் தொழிலாளர்கள், நிர்வாகம் ஊதிய ஒப்பந்தத்தை மீறியது ஆகியவை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகின்றன.

ராஜீவ் பஜாஜ்
தொழிலாளர்களை ஒடுக்கி ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டும் பஜாஜ் குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜீவ் பஜாஜ்.

இது தொடர்பாக தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் பஜாஜ் நிறுவனத்தின் விற்பனை ரூ 3,964 கோடியிலிருந்து ரூ 16,974 கோடி (நான்கு மடங்குக்கும் மேல்) யாக உயர்ந்திருக்கிறது. நிகர லாபம் ரூ 249 கோடியிலிருந்து உயர்ந்து ரூ 3,339 கோடியை (13 மடங்குக்கும் மேல்) எட்டியிருக்கிறது. மொத்த மதிப்பு கூட்டுதலில் நிறுவனத்தின் பங்கு 69 சதவீதத்திலிருந்து 88 சதவீதமாக அதிகரித்திருக்கும் அதே நேரம் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தின் பங்கு 31 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்திருக்கிறது.

ஒவ்வொரு பஜாஜ் பல்சர் விற்பனையிலும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் தொகை ரூ 300, பங்குதாரர்களுக்கும் முதலாளிகளுக்கும் கிடைக்கும் தொகை ரூ 16,700, டீலர்களுக்கு கிடைக்கும் தொகை ரூ 10,000.

அதிகரித்து வரும் உற்பத்தி, விற்பனை, லாபம் இவற்றுக்கு இணையாக தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தாமல் மோசடி செய்து வருகிறது பஜாஜ் நிறுவனம். அதனால் ஊதிய உயர்வு, பணிச் சூழலை மேம்படுத்துவது ஆகிய கோரிக்கைகளுடன் ஒவ்வொரு தொழிலாளருக்கும் நிறுவனத்தின் 500 பங்குகள் ரூ 1 என்ற சலுகை விலையில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் தொழிற்சங்கம் முன் வைத்தது. அந்த கோரிக்கை வேடிக்கையானது, முட்டாள்தனமானது என்று ஒதுக்கித் தள்ளினார் பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ்.

‘லாபம் வரும் போது ஊதிய உயர்வு கேட்பார்கள், நஷ்டம் வந்தால் என்ன செய்வார்கள்’ என்று தொழிலாளர்கள் மீது வைக்கப்படும் பழியின் உண்மைத்தன்மையையும் முதலாளிகளின் லாப வெறியையும் இது தெளிவாக அம்பலப்படுத்துகிறது. ஊதிய உயர்வு கொடுக்கவும் மனம் இல்லை,  ஆனால், தொழிலாளர்களுக்கு நிறுவனத்தில் உரிமை கொடுக்க வேண்டும் என்ற கருத்தே முட்டாள்தனமானது இதுதான் முதலாளித்துவத்தின் ஜனநாயகம்.

தொழிலாளர்கள் மீது கீழ்ப்படியாமை என்ற காரணத்தின் அடிப்படையில் ஷோ காஸ் நோட்டிஸ், குற்றப் பத்திரிகை பதிவு செய்வது போன்றவற்றை செய்து வந்திருக்கிறது. தொழிலாளர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகரித்து வந்த அடக்குமுறைகளையும் 22 தொழிலாளர்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டதையும் எதிர்த்து ஜூன் 25-ம் தேதி முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் வேலைக்கு வருவதாக சொல்வது, கற்றுக் கொண்டே சம்பாதி (learn & earn) என்ற முறையின் மூலம் பயிற்சி தொழிலாளர்களை புதிதாக எடுப்பது, பிற தொழிற்சாலைகளிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்து உற்பத்தியில் ஈடுபடுத்துவது போன்ற முறைகளில் தொழிற்சாலையை இயக்கி வருகிறது பஜாஜ்.

இந்தியச் சந்தையில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை மந்தமாகியுள்ள சூழலில் தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளை அதிகரிப்பது, சம்பள உயர்வை தள்ளிப் போடுவது என்று தமது லாபத்தை பாதுகாத்துக் கொண்டே சந்தையின் இழப்புகளை தொழிலாளர்கள் மீது ஏற்றி வைக்க முயற்சிக்கிறார்கள் இந்திய முதலாளிகள். பணி நீக்கம் செய்யப்பட்ட 22 தொழிலாளர்களில் 7 பேரை மட்டும் திரும்ப எடுப்பதாக நிர்வாகம் கூறுகிறது. அவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு மறுபடியும் பணியில் அனுமதிப்பதாக கூறி அவர்களை அவமானப்படுத்துகிறது. மற்ற 15 பேரும் நிறுவனம் நடத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தான் ஒரு தரப்பாக இருக்கும் வழக்கில் தானே நீதிபதியாக இருப்பதாக நியாயத்தை நிலை நாட்ட முயற்சிக்கிறது.

சக்கன் தொழிற்சாலை உற்பத்தியில் 3-ல் 1 பங்கை வலூஜ் தொழிற்சாலைக்கு தற்காலிகமாக மாற்றியிருக்கிறது நிர்வாகம். ஆகஸ்ட் 12-க்குள் தொழிலாளர்கள் சரணடையா விட்டால் உற்பத்தியில் பாதியை நிரந்தரமாக வலூஜுக்கு மாற்றி விடுவதாக ஜன்சாரி கூறியிருக்கிறார். அதன் பிறகு தொழிலாளர்கள் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தில் வேலையை விட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய் விடும் என்று கூறியிருக்கிறார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொழிற்சாலைகளை வைத்துக் கொண்டு அவற்றின் நிர்வாகத்தை ஒருங்கிணைத்து திட்டமிடும் அதே நேரத்தில் பல்வேறு தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் தமக்குள் ஒருங்கிணைந்து செயல்படுவதை தடுத்தும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள் என்று ஒரே தொழிற்சாலை தொழிலாளர்களையும் பிரித்தும் தமது லாப வேட்டையை தொடர்கின்றனர் இந்திய தரகு முதலாளிகள். தொழிலாளர்கள் ஒருங்கிணைந்த தொழிற்சங்கமாக இணைந்து போராடுவதன் மூலமே இவர்களை எதிர் கொள்ள முடியும்.

மேலும் படிக்க