சொற்கள் உணர்த்தும் நேர்மறை பொருளை நீர்த்துப் போகும் வண்ணம் நமது கருத்து கந்தசாமிகள் படுத்தி எடுக்கிறார்கள். விசுவரூபம் குறித்த அத்தகைய விவாதங்கள், கருத்துக்கள், ‘தத்துவங்கள்’, புளகாங்கிதங்கள், புல்லரிப்புகள் அனைத்தும் இந்த ரகத்திலானவை. இவற்றில் எவற்றை விட – எழுத என்று தத்தளிக்கும் வண்ணம் கந்தசாமிக்கள் தினுசு தினுசாக பொங்கித் தீர்த்திருக்கிறார்கள்.
நாளை மறுநாள் திரையிடப்படும் இப்படத்தை அனுமதிக்கக் கூடாது என்று இசுலாமிய அமைப்புகள் அறிவித்திருக்கும் நிலையில் சற்று பின்னே சென்று பார்க்கலாம்.
முதலில் கமலஹாசனை மாபெரும் தியாகி என்று சித்தரிக்கும் அவஸ்தையை பார்ப்போம். கமல் சினிமாவில் சம்பாதித்ததை முழுக்க இந்தப்படத்தில் செலவழித்திருக்கிறார், அந்த அளவு சினிமாவை நேசிக்கிறார், தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு போகத் துடிக்கிறார் என்று கேழ்வரகில் நெய் வடிவதாக சத்தியம் செய்கிறார்கள். விசுவரூபம் தயாரிப்புச் செலவு 90 கோடி என்றால் கமல் இவ்வளவு வருடங்களாக இம்புட்டுதான் சம்பாதித்தார் என்பது நம்பும்படியாக இல்லை. விட்டால் டீக்காசு கூட இல்லாமல் கமல் கஷ்டப்படுகிறார் என்று அழுதாலும் அழுவார்கள்.
தொலையட்டும். சினிமா என்பது கலையோ இல்லை உன்னத விழுமியங்களை வளர்க்கும் சமூக நடைமுறையோ இல்லவே இல்லை. அது அப்பட்டமான வியாபாரம். மாபெரும் மூலதனத்தை கோரி நிற்கும் முதலாளித்துவத் தொழில். சரியாகச் சொல்லப்போனால் கிச்சு கிச்சு மூட்டி உணர்ச்சிகளை சுரண்டி கோடிகளில் வயிறு வளர்க்கும் ஒரு பிரம்மாண்டமான ஜந்து. ஒருவர் சினிமாவில் இருக்கிறார் அல்லது சினிமாவுக்கு செல்ல ஆசைப்படுகிறார் என்றால் அதன் பொருள் அவர் கலைத்தாகம் கொண்ட யோகி என்பதல்ல. சினிமா தரும் அளப்பரிய பணம், புகழ், போதை, சொத்து, அதிகாரம், பிரபலம் இவைதான் ஒரு நபர் சினிமாவில் இருப்பதற்கு அடிப்படையான காரணம்.
பலரும் இத்தகைய ஆழ்மன வேட்கையை நைசாக அமுக்கிவிட்டு தான் சினிமாவில் போய் உலகத்தை திருத்த பாடுபடுவேன் என்று தேய்ந்த ரிக்கார்டு போல விடுவார்கள். கமலே கூட 70களில் அப்படி பேசியவர்தான். மறைந்து போன அனந்துவுடன் பெல்பாட்டம் போட்ட கமல் மயிலாப்பூர் வீதிகளில் உலக சினிமா குறித்து விவாதித்ததெல்லாம் இன்று ஊசிப்போன பழங்கஞ்சி. தற்போது தானே வெட்கப்படுப்படி தேர்ந்த கலை வியாபாரி ஆகியதை கமல் ஒத்துக் கொள்கிறார் – கந்தசாமிகள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.
இப்படத்தை டி.டி.எச்சில் ஒளிப்பரப்புவதால் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என பிரச்சினை வந்த போது கமல் அதிகம் பேசியது என்ன? “இந்த படம் என் சொத்து, நான் விரும்பிய வகையில் வியாபாரம் செய்வேன்” என்றெல்லாம் பேசினாரே ஒழிய இது கலை, தவம், ஆன்மீகம் என்றா பாடினார்? சரி இதையெல்லாம் மீறி கமல் “நாயகனில்” அற்புதமாக நடித்தார், “அவ்வை சண்முகியில்” அட்டகாசமாக மேக்கப் போட்டார், “பஞ்ச தந்திரத்தில்” வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் என்று ரசிக்கிறீர்களா? ரசித்து விட்டு போங்கள். ஆனால் அதற்குமேல் உலகை உய்விக்க வந்த கலைஞானி என்று உருகுவதுதான் சகிக்க முடியாத ஒன்று.
ஒரு நாட்டுப்புறக் கலைஞனைப் போல இலவசமாகவோ இல்லை மலிவான கட்டணத்திலோ சினிமா கலைஞர்கள் தமது திறமைகளை காட்டுவதில்லை. கமலை ரசிப்பதற்க்காக மல்டி பிளக்சில் நீங்கள் செலுத்தும் 120 ரூபாய் கட்டணத்தில் 40 ரூபாய் அவரது பாக்கெட்டிற்கு போகிறது. உங்களை சிரிக்க வைக்க அவர் கட்டணம் வாங்கிக் கொண்டு கிச்சுகிச்சு மூட்டுகிறார். இதனால் இதை வியாபாரம் என்று அழைக்கலாமே ஒழிய கலைச் சேவை என்றால் அது அந்த கலைவாணிக்கே அடுக்காது.
அடுத்து கமல் தமிழ் சினிமாவுக்காக பல தொழில்நுட்பங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் என்று கொல்லுகிறார்கள். “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக” என்று சன் டிவியின் ஆம்பளைக் குரல் கூவும் போது தோன்றும் நகைச்சுவைதான் கமலின் முதல் சாகசங்கள் குறித்தும் வருகிறது. தலைக்கு மேல் ஒலிக்கும் சவுண்ட் சிஸ்டத்தை கொண்டு வந்தார், டிஜிட்டல் கேமராவை இட்டுக்கிணு வந்தார், கிழவன் மேக்கப்பை ஹாலிவுட்டிலிருந்து பெயர்த்து வந்தார், ஆவிட்டைக் (AVID) கொண்டு வந்தார், ஆத்தாவைக் கொண்டு வந்தார் என்பதில் துவங்கி தற்போது டிடிஎச்சில் முதன்முறையாக ஒளிபரப்பப் போகிறார் என்று துள்ளிக் குதிக்கிறார்கள், விசிலடிச்சான் குஞ்சுகள்!
இதெல்லாம் தொழில் நுட்பத்தில் மிகப்பெரிய சாதனையாம்! கமல் போட்ட ரோட்டில்தான் தமிழ் சினிமாவே தடம் புரளாமல் வால்வோ பஸ் போல சொகுசாக பயணிக்கிறதாம். ஒரு புதிய தொழில்நுட்பத்தின் வருகையை எதைக் கொண்டு அளவிடுவது? கமலைப் போன்ற ஞானிகள் படப்படிப்பின் போது பங்களா வசதி கொண்ட கேரவான்களில் மூச்சா விடும் போது, கழிப்பறைக்கு கூட பல நூறு மீட்டர் தூரம் நடந்து செல்லும் கோடான கோடி மக்கள் இங்கே வாழ்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் முதன் முதலாக கேரவானில் மூத்திரம் பெய்தவர் என்பதற்காக, அந்த கழிப்பறைக் கோப்பைக்கு பூஜை செய்வது கேலிக்கூத்தல்லவா?
பெரும்பான்மை மக்களின் துன்பமான வாழ்வை இதுவரை எந்த நவீனத் தொழில் நுட்பமும் குறைத்ததாக வரலாறு இல்லை. அப்படிக் குறைத்தால் நாம் எந்த தொழில் நுட்பத்திற்கும் ஒரு பாராட்டு விழா எடுக்கலாம். பீகாரிலிருந்து குடும்பத்தைத் துறந்து இங்கு மெட்ரோ வேலையில் உயிரை இழக்கும் தொழிலாளியின் வாழ்வை எளிதில் தொடர்பு கொள்ள வாய்ப்பளிக்கும் செல்பேசி என்ன செய்து விடும்? ரோபோட்டிக் எந்திரங்கள் இருப்பதனாலேயே மாருதி தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் அடங்கி விடவில்லையே?
இல்லை தமிழ் சினிமாவில் இவ்வளவு தொழில்நுட்பங்களை கமல் கொண்டு வந்ததால் நாயக்கன் கொட்டாய் தலித் மக்கள் தாக்கப்படாமல் இல்லையே? குறைந்த பட்சம் காதல் இளவரசனது படங்களை பார்த்துக்கூட காதலை தண்டிக்க கூடாது என்று ஆதிக்க சாதிவெறியர்களுக்குத் தோன்றவில்லையே? ஆக வாழ்வையும், பண்பாட்டையும் இம்மியளவு கூட கமல் கடத்தி வரும் தொழில் நுட்பங்கள் பண்படுத்தி விடாத போது அதில் சிலாகிக்க என்ன இருக்கிறது? இல்லை கமல் படங்கள்தான் அந்த நவீன தொழில்நுட்பத்தால் தமிழ் மக்களின் வாழ்வை அச்சு அசலாக காட்டியிருக்கிறதா? பாச மலரில் அழுத தமிழர்களின் கண்கள் மகாநதியில் இன்னும் கொஞ்சம் வீங்கித்தானே போனது?
வாழ்வு குறித்த கூர்மையான தத்துவ நோக்கில்லாமலும், சமூக அக்கறை இல்லாமலும் எவ்வளவுதான் டெக்னாலஜி வந்தாலும் தமிழ் சினிமாவின் அற்பத்தனமான சென்டிமெண்ட் மாறிவிடாது. மேலும் டிடிஎச்சில் ஒளிபரப்ப முயன்றதற்கு காரணம் 150 கோடி வசூலை திரையரங்குகளில் மட்டும் சுருட்ட முடியாது என்ற இலாப நோக்குதான். ஆனால் இன்றைக்கு கமலும், கமல் ரசிகர்களும் இந்த டிடிஎச் நடைமுறைக்கு வந்தால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கிறார்கள்.
சற்று வசதி உள்ள நடுத்தர வர்க்கம்தான் டிடிஎச் வைத்திருக்கிறதே அன்றி தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் கேபிள் மூலம்தான் டிவி பார்க்கிறார்கள். தமிழகத்தில் 35 இலட்சம் டிடிஎச் இணைப்புகள் இருக்கும் என்று கூறுகிறார்கள். இவர்கள் மாதத்தவணையாக கேபிள் டிவி கட்டணத்தை விட சில மடங்கு அதிகம் கட்டித்தான் பார்க்க வேண்டும். இப்படி வசதி படைத்த வாடிக்கையாளர்களுக்கு வசதி குறைந்த பட்ஜெட் படங்களை கொண்டு போய் வியாபாரம் செய்யலாமாம். விசுவரூபத்திற்கு டிடிஎச் கட்டணமாக தலைக்கு ஆயிரம் ரூபாய் வைத்தார்கள். இப்படி ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புதுப்படத்தை எத்தனை தமிழர்கள் பார்க்க முடியும்? விசுவரூபத்திற்கே அப்படி கலெக்சன் கன ஜோராக வரவில்லை என்று கூறுகிறார்கள். இப்படி இருக்க குறைந்த பட்ஜெட் படங்கள் மட்டும் எப்படி வெற்றி பெறும்?
சினிமா என்பது முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தொழில். அது கலை என்பதாக ஏற்கப்பட்டாலும் நிச்சயம் தொழில்தான். சினிமா சந்தையை ஒரு சில முதலாளிகள் மட்டுமே தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று பெயர் வேண்டுமானால் மாறுபடலாம். இவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் சிறிய பட்ஜெட் படங்கள் வாழவோ சாகவோ முடியும். அதைத்தாண்டி வேறு அற்புதங்கள் நிகழ்ந்து விடாது.
என் தொழில், என் சொத்து, என் விருப்பம் என்று ஆரம்பத்தில் அடம்படித்த கமலை அதே டயலாக்கை வைத்தே திரையரங்க உரிமையாளர்கள் அடக்கி விட்டார்கள். ஆனால் நமது கமல் பையன்களோ திரையரங்க உரிமையாளர்களை டெக்னாலஜிக்கு எதிரான வில்லன்களாக சித்தரிக்கிறார்கள். என்ன இருந்தாலும் நம்பியாரைப் பார்த்து வில்லன்களை முடிவு செய்பவர்களாயிற்றே! நம்மைப் பொறுத்த வரை முழு தமிழக சினிமாத்துறையும் தமிழக மக்களுக்கு வில்லன்கள்தான். இதில் கமல் தியாகி, அபிராமி ராமநாதன் பாவி என்ற பாகுபாடெல்லம் நம்மிடம் இல்லை. இந்த புரிதலில் இருந்து பார்த்தால் திரையரங்க உரிமையாளர்கள் கமலை அடக்கியது அவர்களே சொல்லிக் கொள்ளும் பிசினெஸ் விழுமியங்களுக்கு உட்பட்டதுதான்.
கமல் தனது படத்தை தனது விருப்பம் போல டிடிஎச்சில் வெளியிடும் போது திரையரங்க உரிமையாளர்கள் தமது விருப்பம் போல கமல் படங்களை இனி வெளியிடுவதில்லை என்று பேசுவதில் என்ன தவறு? அவர்கள் சொத்தில் தனது படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்று கமல் தார்மீகரீதியாக கூட கோர முடியாது. ஆனால் டிடிஎச்சில் தான் நினைத்த மாபெரும் கல்லா கலெக்சன் இல்லை என்றதும் கமல் வேறு வழியின்றி முதலில் திரையரங்கில்தான் வெளியாகும், ஒரு வாரம் கழித்து டிடிஎச்சில் வெளியாகும் என்று இறங்கி வந்தார். முதலில் அவர் முண்டியதற்கும் வியாபாரம் காரணமாக இருந்தது போலவே அவர் முடங்கியதற்கும் அதுவே காரணம்.
இடையில் நமது இணைய ரசிகர்கள் பலர் கமலின் புது டெக்னாலஜியில் தமது பெயரும் வரலாற்றில் இடம்பிடித்தே ஆகவேண்டும் என்று ஆயிரம் ரூபாயை பல்வேறு டிடிஎச் நிறுவனங்களுக்கு மொய் எழுதி அதை வேறு பெருமையான டிரைலராக வெளியிட்டு அழகு பார்த்தார்கள். கடைசியில் கமலின் புது டெக்னாலஜியில் ஏமாந்தவர்கள் என்ற பட்டமே வரலாற்றில் காத்திருக்கிறது. அதுவும் கட்டிய பணம் கட்டியதுதான் என்று பல நிறுவனங்கள் கம்மென்று முடித்துக் கொண்டன. எந்த ஆசை காட்டி ஆயிரம் ரூபாயை சுருட்டினார்களோ அந்த ஆசை இல்லை என்றான பிறகும் பணம் திரும்ப வராதாம். இதை எதிர்த்து சண்டை போடக்கூட துப்பில்லாத நுகர்வோராகத்தான் நமது இணைய ரசிகர்கள் வீரம் பேசுகின்றனர். ஆக நவீன டெக்னாலஜி பல பயன்படுத்தும் இந்த டெக் சிங்கங்களை இப்படி அடிமாட்டு ரேட்டுக்கு ஏமாற்றலாம் என்றால் அந்த தொழில்நுட்பங்களால் என்ன பயன்?
துப்பாக்கி படத்திற்கு இசுலாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு காட்டியதை வைத்துக்கூட கமல் முன் எச்சரிக்கையாக டிடிஎச்சில் காட்ட நினைத்திருக்கலாம். என்ன இருந்தாலும் அவர் வியாபாரி அல்லவா? விசுவரூபம் டிரைலரில் அமெரிக்கா, அமெரிக்க கொடி, அமெரிக்க இராணுவம், அமெரிக்க ஹெலிகாப்டர்கள், எஃப் பி ஐ எல்லாம் வருகிறது. கூடவே வில்லன்களாக இசுலாமிய அடையாளங்களும் ஏராளமாக வருகிறது. ஹாலிவுட், ஆஸ்கார் என்று போக வேண்டுமென்றால் இசுலாமிய வில்லன்கள்தான் என்ட்ரி பாயிண்ட் என்று கமல் நினைத்திருக்கலாம்.
உன்னைப் போல ஒருவனில் பாசித்தை முன்மொழிந்த கமலஹாசன் உலகளாவிய கதைக்களன் என்ற பெயரில் சல்லிசாக இருக்கும் இசுலாமியத் தீவிரவாதத்தை கையில் எடுத்திருக்கலாம். என்ன இருந்தாலும் வியாபாரி என்பதால் எது தற்காலிக வாழ்க்கையில் வில்லத்தனமாக கட்டியமைக்கப்பட்டிருக்கிறதோ அதை எடுத்தால்தான் பரபரப்பாக இருக்கும் என்பது கமலுக்கு தெரியும். இதற்கு மேல் படத்தைப் பார்க்காமல் எப்படி விமரிசனம் செய்யலாம் என்று சிலர் கேட்கலாம். இல்லை, இங்கே நாம் விமரிசனம் செய்வது கமலின் வியாபார நோக்கத்தை மட்டுமே.
தனது படம் இசுலாமியர்களை தவறாக சித்தரிக்கவில்லை, இசுலாமியர்கள் படத்தை பார்த்தால் பிரியாணி செய்து தந்து ஆதரிப்பார்கள் என்று கமல் பேசிய கையோடு பல்வேறு இசுலாமிய தலைவர்களைகூட்டி படத்தை காட்டியிருக்கிறார். பார்த்தவர்கள் பலர் இப்போது கொலை வெறியோடு இந்த படத்தை எதிர்க்கிறார்கள்.
தற்போது இசுலாமிய அமைப்புகளின் தலைவர்கள் அந்தப் படத்தை வெளியிட வேண்டாம் என்று தடை கோரி போராடி வருகிறார்கள். இசுலாமிய மதவாதிகள் படத்தைப் பார்த்து அதில் குறியீடாக வரும் இசுலாமிய அடையாளங்களை வைத்து மட்டும் இப்படி முடிவு எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் கதையின் அரசியலிலிருந்து அதை எடுத்து முன்வைப்பதை நாம்தான் செய்ய முடியும். அதனால் படம் வந்த பிறகு தொடருவோம்.
ரிசானாவின் படுகொலையை நியாயப்படுத்திய இசுலாமிய மதவாதிகள் அடுத்த கட்டமாக விசுவரூபத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் அடியாளாக செயல்படும் சவுதி அரேபேயாவை உச்சி மோரும் இவர்கள் அதே அமெரிக்காவின் ஆசியோடு வரும் விசுவரூபத்தை எதிர்ப்பதை இறைவன்(PBUH) தான் விசாரிக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக விசுவரூபம் படத்தின் சாட்டிலைட் உரிமை, பாடல் வெளியீட்டு விழா உரிமை இதெல்லாம் ஜெயா டிவியிடம் இருப்பதாக வைத்துக் கொண்டால், கமல் கோட்டை சென்று காத்திருந்து அம்மாவை பார்ப்பார். ஒரு வேளை அந்த உரிமைகள் இல்லை என்றாலும் அம்மா மனது வைத்தால் கமலை ஆதரிக்கலாம். என்ன இருந்தாலும் பாபர் மசூதி இடிப்பிற்காக்க தொண்டர்களை அனுப்பியவர் கமலின் துக்கத்தை புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
பிறகு என்ன, அம்மா போலிசை பார்ப்பார். அம்மாவே களத்திற்கு வந்துவிட்டால் அம்மாவுடன் கூட்டணி வைத்த தவ்ஹீத் ஜமா அத்தும், தமுமுகவும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பம்மி விடுவார்கள். பிறகு இசுலாமிய மக்களின் சுயமரியாதைக்காக மதச்சார்பற்ற முற்போக்கு, ஜனநாயக சக்திகள்தான் கமலை கண்டித்து போராட வேண்டும்.
அதற்கு தேவை இருக்கிறதா என்பதை படம் பார்த்த பிறகு தெரிவிக்கிறோம்.
‘காவிரி நீர் இல்லாமல் தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் குறுவை/சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு கர்நாடக அரசின் பிடிவாதப் போக்கே காரணம்’ என்று உச்சநீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடர உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு உச்ச நீதி மன்ற தீர்ப்புகளையும் காவிரி நடுவர் மன்ற முடிவையும், பிரதமர் தலைமையிலான காவிரி நதி ஆணைய உத்தரவுகளையும் மதிக்காமல் திமிராக நடந்து கொள்கிறது.
2012 செப்டம்பர் 19ம் தேதி காவிரி நதி ஆணையத்தின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங் ‘செப்டம்பர் 21 முதல் தினமும் தமிழ்நாட்டுடனான பிலிகுண்டு எல்லையில் விநாடிக்கு 9000 கன அடி விட வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அதை கர்நாடகா மதிக்கவில்லை.
தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
செப்டம்பர் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசை கண்டித்து நதி நீர் ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்துமாறு கூறியது.10 நாட்கள் மட்டும் விநாடிக்கு 5,000 கன அடி நீர் விட்ட கர்நாடகா அரசு உச்ச நீதி மன்ற உத்தரவையும், பிரதமர் உத்தரவையும் மீறி அக்டோபர் 8ம் தேதி நீர் விடுவதை நிறுத்தியது.
அக்டோபர் 9ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர உத்தரவிட்டார்.
அக்டோபர் 17ம் தேதி தமிழ்நாடு அரசு தண்ணீர் விடும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரும் ஒரு புதிய வழக்கை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்தது.
நவம்பர் 15ம் தேதி காவிரி கண்காணிப்பு குழு நவம்பர் 16க்கும் 30க்கும் இடையே தமிழ்நாட்டுக்கு 4.81 டிஎம்சி தண்ணீர் விடும்படி உத்தரவிட்டது. கர்நாடக அரசு அதை மதிக்கவில்லை
நவம்பர் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் கர்நாடகாவுடன் பேச்சு வார்த்தை நடத்தச் சொல்லி தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தும் மறு பேச்சு பேசாமல் பெங்களூருவுக்குப் போய் கர்நாடக முதல்வர் ஷெட்டாரிடம் பேசினார், ஜெயலலிதா.எதிர்பார்த்தபடியே ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என்று கர்நாடக அரசு கூறி விட்டது.
டிசம்பர் 6ம் தேதி உச்ச நீதிமன்றம் விநாடிக்கு 10,000 கனமீட்டர் நீரை தமிழ்நாட்டுக்கு விடும்படி உத்தரவிட்டதுமூன்று நாட்கள் மட்டும் தண்ணீர் விட்ட கர்நாடக அரசு அதன் பிறகு அணைகளை மூடி விட்டது.
டிசம்பர் மாதம் காவிரி நடுவர் குழுவின் இறுதித் தீர்ப்பை அரசு இதழில் வெளியிடும்படி உத்தரவிட்டது. மத்திய அரசு அதை இன்று வரை மதிக்கவில்லை.
உடனடியாக 12 டி.எம்.சி. தண்ணீரை விடுவிக்குமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை வரும் 28-ம் தேதி நடக்கவுள்ளது. கர்நாடகா அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
உச்ச நீதி மன்ற தீர்ப்புகளையும், காவிரி நதி நீர் ஆணையத்தின் முடிவுகளையும், காவிரி நதி கண்காணிப்பு ஆணையத்தில் பிரதமரின் உத்தரவுகளையும் மதிக்காத கர்நாடக அரசின் மீது, இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்காக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த ஆண்டு மட்டும் டில்லிக்கும், பெங்களூருவுக்கும் ஜெயலலிதாவும் தமிழ்நாடு அரசும் நடந்த நடைகளின் வண்டிச் சத்தமே பல கோடி ரூபாய்களை தாண்டும். கூடவே உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் கட்டணத்தையும் சேர்த்து கர்நாடகாவுடனான லாவணிக்கு தமிழ்நாடு அரசு பல கோடி ரூபாய்களை வீணாக்கியிருக்கிறது. இருப்பினும் அரசியல் சட்ட அமைப்புகளை பகிரங்கமாக மீறும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசுக்கோ உச்ச நீதிமன்றத்துக்கோ வக்கில்லை.
இவ்வளவுக்கும் பிறகு இன்னும் ஒரு சிவில் வழக்கை பதிவு செய்யப் போவதாக சொல்கிறது ஜெயலலிதா தலைமையிலான அரசு. வாடிக் கொண்டிருந்த பயிர்களை காப்பாற்றுவதற்கான உத்தரவுகளை செயல்படுத்த முடியாத பல் இல்லாத புலியான உச்ச நீதிமன்றத்திடம் அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்காக நஷ்ட ஈடு பெற்றுத் தருவதற்கான வழக்கைத் தொடர்கிறார் ஜெயலலிதா. துக்ளக் சோவும், சுப்ரமணிய சாமியும், குருமூர்த்தியும், இந்து பத்திரிகைக்கு லெட்டர்-டு-த-எடிட்டர் எழுதும் அம்பிகளும் யோசிக்கும் அளவிலேயே செயல்படும் ஜெயலலிதாவின் இந்து தேசிய பாசிச புத்தியில் விவசாயிகளின் உண்மையான நலனுக்கான நடவடிக்கைகள் எதுவும் தோன்றி விடப் போவதில்லை என்பது நிதர்சனம்.
சொத்துக் குவிப்பு தொடர்பான சிவில் வழக்கில் வாய்தா மேல் வாய்தா கேட்டு சாட்சியங்களை ஆரம்பத்திலிருந்து விசாரிக்க வேண்டும் என்று காமெடி செய்து வரும் அதே பாசிஸ்டுதான் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு மூலம் தமிழ்நாட்டுக்கு நீதி வாங்கித் தரப் போவதாக போக்கு காட்டுகிறார். ஜெயலலிதாவுக்கும் வழக்கறிஞர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பயணப் படியும், பஞ்சப்படியும், கட்டணமுமாக ஆதாயம் கிடைப்பதற்கு வேண்டுமென்றால் அது வழி செய்யலாமே தவிர வாழ்வாதாரங்களை இழந்து துன்புறும் விவசாயிகளுக்கு எந்த நிவாரணத்தையும் தந்து விடப் போவதில்லை.
உண்மையில் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ள மாநில முதலமைச்சராக இருந்தால் மத்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும்.
கர்நாடக அரசு உச்ச நீதி மன்ற, காவிரி நதி நீர் ஆணைய உத்தரவுகளை முழுமையாக பின்பற்றாதது வரை தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய/மாநில அரசு அமைப்புகளிலிருந்து மத்திய அரசுக்கு வரிப் பணம் அனுப்பப்படாது; தமிழ்நாட்டிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படாது; தமிழ்நாட்டில் மத்திய அரசின் அமைப்புகள் செயல்படுவதற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்காது; என்று அறிவித்து செயல்படுத்துவதற்கான துணிச்சல் ஜெயலலிதாவுக்கு இருக்கிறதா?
ஒருவேளை அப்படிச் செய்தால் இந்திய அரசுக்கு கண்டிப்பாக ஒரு நெருக்கடி வரும். அப்போது அவர்கள் கர்நாடகத்தை வழிக்குக் கொண்டு வரும் வழிகளை யோசிப்பார்கள். இல்லையென்றால் மத்திய அரசு புறக்கணிப்பை இன்னும் வீச்சாகக் கொண்டு செல்லலாம். அப்படி செய்தால் பாசிச ஜெயா தனது அரசைக் கூட இழக்க நேரிடலாம். ஆனால் தமிழகத்தின் போராட்டத்தை இது இன்னும் உயர்ந்த தளத்தில் கொண்டு செல்லும். என்றாலும் பாசிச ஜெயாவுக்கு அத்தகைய துணிச்சலோ, உறுதியோ, மக்கள் பால் நாட்டமோ கிடையவே கிடையாது.
கர்நாடகா அரசியல்வாதிகள் தம் மாநிலத்தின் அநியாய உரிமைகளுக்காக எடுக்கும் துணிச்சலான முடிவுகளுக்கு பதிலடியான முடிவுகளை எடுக்காத கோழைகள்தான் தமிழ்நாட்டு முதலமைச்சரும் அரசும். உச்ச நீதிமன்றத்துக்கும் காவிரி நதி ஆணையத்துக்கும் மனு எழுதுவதாக ஜெயலலிதா நடத்தும் நாடகங்கள், மத்திய அரசையும் நீதிமன்றங்களையும் பொறுத்த வரை அவர் ஒரு காகிதப் புலி மட்டுமே என்பதையே காட்டுகின்றன.
“இவ்வளவு கொடூரம் நடந்தால் தான் நான் திரும்பிப் பார்ப்பேன் என்கிற நம் மனநிலை சரிதானா. டெல்லியில் மட்டும் அல்ல… தமிழ்நாட்டில், நமக்கு மிக அருகே, நம் ஊரில் நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து நாம் கவலைப்பட்டு இருப்போமா?”
மேற்கண்ட அறச்சீற்றத்தை சமீபத்தில் வாசிக்க நேர்ந்த போது உண்மையிலேயே அரண்டு போனேன். ஆனந்த விகடன் 9.1.2013 தேதியிட்ட இதழில் கவின்மலர் எழுதியிருக்கும் ‘அன்பானவர்களுக்கு ஒரு கடிதத்தில்’ தான் இந்த அறச்சீற்றம் காட்டாற்று வெள்ளம் போலக் கரைபுரண்டு ஓடியிருக்கிறது. கலகக்குரல் தளத்தில் இந்தக் கட்டுரை வெளியான போதே இந்த இதழைப் படிப்பதற்காக தேடினேன் – ஆனால், சமீபத்தில் தான் அதற்கு வாய்ப்பு அமைந்தது.
கட்டுரையின் முதல் பக்கத்தை வாசித்து முடித்து விட்டு ஒருவித ‘குற்றவுணர்ச்சியோடு’ அடுத்தப் பக்கத்தைத் திருப்பினால், புருவத்தை நெருக்கிக் கொண்டு, கண்களை இடுக்கிக் கொண்டு, சொக்காயின் காலரை தூக்கிக் கொண்டே ஒரு சிறுவன் நம்மை தர்ம அடி அடிப்பதற்கு புத்தகத்திலிருந்து வெளியேற எத்தனித்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் அதிர்ந்து போய், ‘ஐயையோ நான் எந்த தப்பும் செய்யல்லீங்க’ என்று அலறியவாறே பக்கத்தில் பார்த்தால்… அது அலெக்ஸ் பாண்டியன் விளம்பரம். அந்தக் கோபக்கார குழந்தை கார்த்தி. ‘ஃப்பூ… இதுக்குத்தானா பயந்தோம்.. நல்ல வேளை யாரும் பாக்கலையே’ என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டே அடுத்த பக்கத்தில் தொடர்ந்த அறச்சீற்றத்துக்குள் முங்கினேன்.
“இந்த 21-ம் நூற்றாண்டிலும் பொழுதுபோன பின்னால் பெண்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைப்போம் என்று கூறும் விந்தை மனிதர்களாக இங்கே பலர் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது”
“உலகம் எங்கோ சென்று கொண்டு இருக்கிறது நண்பர்களே! ஆனால் நாம் இந்தப் புள்ளியில் தேங்கி நிற்கிறோம் என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது” – மேற்படி கட்டுரை, பக்கம் 12
எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யமாகத் தான் இருந்தது. விகடன் நிர்வாகம் கவின்மலருக்கு சம்பள பாக்கி ஏதும் வைத்து விட்டதோ? இதே விகடனில் தான் துணி துவைப்பது, கூட்டிப் பெருக்குவது, சமைப்பது போன்ற வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆண்களைக் கேலி பேசி ‘ஜோக்குகள்’ வந்துள்ளன. மட்டுமல்லாது மாமியார் மருமகள் சண்டை, பொரணி பேசும் பெண், வீட்டு வேலைக்கரியை பெண்டாள நினைக்கும் ஆண் என்று ‘பெண்ணை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைப்பதை’ ஆதரிக்கும் கருத்துக்களின் விளைநிலமே விகடனாயிற்றே; அப்படியிருக்கும் போது இவர் எதுக்கு சேம் சைடு கோல் போடுகிறார் என்பது தான் ஆச்சர்யத்துக்குக் காரணம். பாலியல் வன்முறையைக் கற்றுக்கொடுப்பதிலும் பிசினெஸ், பாலியல் வன்முறையைக் கண்டிப்பதிலும் பிசினெஸ். எனில் விகடனின் இத்தகைய இரட்டை வேடத்திற்கு கவின் மலர் தன்னாலான முறையில் உதவி செய்கிறார். இந்த மனிதாபிமானத்தைக் கூடவா அறுத்துப் பார்ப்பது?
“இந்தக் குடும்ப அமைப்பும் சமூகமும் பெண்கள் குறித்து என்ன பார்வையை வளரும் குழந்தையின் மனதில் பதியவைக்கிறது? கள்ளங்கபடம் இன்றிப் பழகும் குழந்தைகளில், பெண் குழந்தை பெரியவளானதும், ஆண்களுடன் பேசத் தடை விதிப்பது, அவளை விளையாட அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்வது போன்ற நடைமுறைகள் இன்றும் தொடரத்தான் செய்கின்றன”
எதிர்பாராத நேரத்தில் சொக்காயைக் கொத்தாகப் பற்றி செவிட்டில் பொளேர்ர்ர்ர்… என்று அறைந்தது போலிருந்தது. ஆனால், அது கவின்மலரிடம் வெளிப்பட்ட ‘சத்தியாவேசத்தின்’ விளைவினால் அல்ல. “பொண்ணுங்கன்னா எப்டி இருக்கனும் தெரியுமா?” என்பதில் ஆரம்பித்து, ‘என்ன உடை அணிய வேண்டும், எந்த செருப்பு போட வேண்டும், கொண்டையில் எத்தனை குண்டூசி குத்திக் கொள்ள வேண்டும், பெண் தன் உடலை எப்படி கவர்ச்சியாக காட்ட வேண்டும், அந்தப் பெண்ணை எப்படி மூர்க்கமாக அடைய வேண்டும்’ என்பது வரைக்கும் பாடம் நடத்தும் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் முதல் அஜித் – விஜய், தனுஷ் – சிம்பு வரை பாடம் நடத்தும் பேட்டிகளையும் அவர்களைப் பற்றிய செய்திகளையும் கிசுகிசுக்களையும் வெளியிட்டு கல்லா கட்டும் விகடனின் பக்கங்களில் இருந்து இப்படியொரு ‘சத்தியாவேச’ ஜூவாலை குப்பென்று பற்றியெறிவதைப் பார்த்ததால் ஏற்பட்ட விளைவு அது. இருக்காதா பின்னே, ரெண்டு சைக்கிள் பிராண்டு ஊதுவர்த்தியை செப்டிக் டேங்கினுள் சொருகி வைத்து விட்டு முகர்ந்து பார்க்கச் சொன்னால் இப்படித்தானே இருந்தாக வேண்டும்?
“ஓர் ஆண் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை வல்லாங்கு செய்து விட முடிகிற ஒரு சமூகத்தில், திருமணத்தில் கூட ஒரு பெண்ணுக்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது. அவளுடைய பாலியல் சுதந்திரத்தைக் கேள்வி கேட்கும் ஆணாதிக்கம் தான் தர்மபுரியில் மூன்று கிராமங்களின் மீது நடந்த தாக்குதலுக்கான அடிப்படைக் காரணம்” – மேற்படி கட்டுரை. பக்கம் 13
என்னாது… காடுவெட்டி குரு விகடன் பத்திரிகையில் பங்குதாரரா? லீனா மணிமேகலை எடுத்த டியூஷன்கள் வீண் போகவில்லை. ஊரே காறித்துப்பிய சாதிவெறியாட்டத்திற்கு இப்படிக்கூடவா வியாக்யானம் எழுத முடியும்? நாயக்கன் கொட்டாய் தாக்குதலை சாதிவெறியில் மூழ்கிய வன்னியப் பெண்கள் முழு மனதாக ஆதரித்து தமது வீட்டு ஆண்களுக்கு சக்தி மாதாக்களாய் இருந்ததெல்லாம் கவின்மலருக்குத் தெரியவில்லை. ஈராக் போருக்கு ஆண்கள் காரணம் என்று லீனா மணிமேகலை எழுதும் போது தருமபுரி தாக்குதலுக்கு ஆண்கள் காரணம் என்று கவின்மலர் ஏன் எழுதக்கூடாது? ஆனால் ஒன்று நிச்சயம், களப்பணி மூலம் சமூக மாற்றத்திற்கு இம்மியளவு கூட செயல்படாத இத்தகைய விளம்பர மோக அறிவாளிகளின் அறிவு குண்டு சட்டியை விட்டு தாண்டவே தாண்டாது. பாவம் கவின்மலர் என்ன செய்வார்!
“வீடுகளிலும் கல்விக்கூடங்களிலும் மட்டும் அல்ல; பொழுதுபோக்கச் செல்லும் திரையரங்குகளில் காட்டப்படும் திரைப்படங்களும், விளம்பரங்களும் பெண்களை நுகர்வுப் பொருளாக சித்தரிக்கின்றன” – மேற்படி கட்டுரை. பக்கம் 13
வாசித்துக் கொண்டிருக்கும் போதே லேசாக வீசிய காற்றில் வாசித்துக் கொண்டிருந்த பக்கம் புரண்டு அடுத்த பக்கத்தில் நின்றது. “நயன்தாரா யாருக்கு? – ஸ்டார் ‘பிரதர்ஸ்’ வார்” என்கிற தலைப்பு கண்களைப் பிடுங்கியது. கவின்மலர் மேலே அடுக்கியிருக்கும் காரணங்களில் ‘பத்திரிகைகளிலும்’ என்பது மட்டும் எப்படியோ மிஸ் ஆகி விட்டிருப்பது தற்செயல் என்றே சத்தியமாக ‘நம்பி’ விட்டேன். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக்கூடாது என்பது எந்தப் பெண்ணியத்தில் வரும் என்று உலக இலக்கியங்களை ஆராய்ந்தும் வருகிறேன்.
கடைசியில் கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார் கவின்மலர்,
“மாற்றங்கள் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். நம் துறையில் இருந்து தொடங்க வேண்டும். நம் வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும்” – மேற்படி கட்டுரை. பக்கம் 13.
இங்கேயும் ‘நாம் வேலைபார்க்கும் பத்திரிகையிலிருந்து தொடங்க வேண்டும்’ என்கிற வரி தற்செயலாக மிஸ் ஆகிவிட்டது என்று சத்தியமாக ‘நம்புகிறேன்’.
***சமூகத்தில் ஆணாதிக்கக் கருத்துக்கள் ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பது உண்மை தான். ஆம்பிள்ளைத் திமிரோடு வளர்க்கப் படும் பொறுக்கிகள் வாய்ப்புக் கிடைக்கும் போது பெண்களின் மேல் பாய்ந்து குதறுகிறார்கள் என்பதும் உண்மை தான். ஆனால், இந்தத் திமிர்த்தனத்திற்கு ஒரு வெகுஜன அங்கீகாரம் வழங்குவது யார்? இதை ரசிக்கத்தக்க குறும்புகளாக கற்றுக் கொடுப்பது யார்? அங்கே தான் வருகிறார்கள் விகடன் மாமாக்கள்.
ஜூ.வி, ஆ.வி, குமுதம், ரிப்போர்ட்டர் என்கிற பலான குப்பைகளின் வரிசையில், இதிலேயே தனிச்சிறப்பான நிபுணத்துவம் மிக்க பத்திரிகையாக ‘டைம்பாஸ்’ என்கிற பத்திரிகை சமீபத்தில் தான் விகடன் குழுமத்திலிருந்து அறிமுகமாகி இருக்கிறது. யாரும் வாசிக்காமல் இருந்து விடக்கூடாது என்கிற அக்கறையில் அதனை ஐந்து ரூபாய் விலையில் மலிவாகவும் கிடைக்கும்படி செய்துள்ளது விகடன் குழுமம். எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பெண்களின் அரை நிர்வாணப் படங்கள், உள்ளூர் சினிமா நடிகையிலிருந்து ஆங்கிலச் சினிமா நடிகைகள் வரை பாலியல் கிசுகிசுக்கள், ‘யாரோடு யார் எங்கே எந்த இடத்தில் எப்போது’ என்கிற வானிலை அறிவிப்புகள் என்று முற்றுமுழுதான மஞ்சள் பத்திரிகையாக வெற்றி நடை போடுகிறது ‘விகடன் டைம்பாஸ்’.
இதிலும் கிசுகிசுக்கள் யாரைப் பற்றிச் சொல்லப்படுகின்றன என்பதை வாசகன் அறிந்து கொள்ளாமல் போய் விடக்கூடாதே என்கிற அக்கறையில் எந்த நடிகருக்கு எந்தப் பட்டப்பெயர் என்கிற அகராதியையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பக்கம் கீழ்த்தரமான பாலியல் ரசனையைக் கடைவிரித்துக் கொண்டே அந்தப் பக்கம் வேதம் ஓதும் திறமை என்பது விகடனின் கண்டுபிடிப்பல்ல. கருவறையில் கடவுள் பக்தி – வெளிப் பிரகாரத்தில் காம பக்தி என்பது தானே பார்ப்பனிய இந்து மதத்தின் பெருமை மிகு ‘பாரம்பரியம்’?
விகடனின் வரலாற்று வளர்ச்சியில் இதெல்லாம் புதிதில்லை. ‘சரசுவாகிய நான்’ தொடரின் மூலம் போலீசு, எம்.எல்.ஏ, மந்திரி என்று சகலரோடும் கள்ளத்தொடர்புகளால் ‘வளர்ந்து’ ஆளான சாராயக்கடை சரசக்காவின் கதை ஒரு அப்பட்டமான பாலியல் தொடர். வாசகர்களின் மிருக உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுக் காசு பார்ப்பதில் இவர்களுக்கு எந்தவகையான கூச்ச நாச்சமும் இருப்பதில்லை. சிவகாசி ஜெயலட்சுமியில் இருந்து பிரேமானந்தா, ஜெயேந்திரன், தேவநாதன், நித்யானந்தா வரைக்கும் நடந்த குற்றங்களை இரண்டாம் பட்சமாக வைத்துக் கொண்டு அவர்கள் அடித்த காமவெறி கண்றாவிகளையே முக்கியத்துவம் கொடுத்து ‘சுவை’பட விவரித்துக் கல்லாக் கட்டியவர்கள்தான் இந்த யோக்கியவான்கள்.
பாலியல் ரீதியிலான குற்றங்களைப் பற்றி எழுதுவதோ அல்லது அதைப் பற்றி மக்களிடையே ஒரு விழிப்புணர்வைத் தூண்டுவதோ அல்லது இப்படியொரு அபாயத்தை சமூகத்தின் பகிரங்கமாக முன்வைத்து விவாதத்துக்குள்ளாக்குவதோ தவறில்லை. ஆனால், இந்தப் பத்திரிகைகள் நடந்த விவகாரத்தில் இருக்கும் விகாரங்களைத் தெரியாதவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கின்றன. கோபம் வரவழைக்க வேண்டிய இடத்தில் காம வெறியைத் தூண்டி விடுகின்றன. டாக்டர் பிரகாஷின் குற்றங்களை அம்பலப்படுத்தும் போர்வையில் அவரது லீலா வினோதங்களை விரிவாக விவரித்து அதுவரைக்கும் தெரியாதவர்களையும் இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ளத் தூண்டியது பத்திரிகைகள் தான். இந்தத் தூண்டலுக்கு வாசகனை மலிவான உணர்ச்சியில் மூழ்க வைத்தால்தான் சர்குலேஷன் எகிறும் என்ற சுரண்டல் கண்ணோட்டம்தான் காரணம்.
பாலியல் உணர்ச்சிகளைப் பொருத்தவரை விலங்குகளும் மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே வேறுபாடு – மனிதர்களுக்கு இருக்கும் சமூக உறவும், அந்த உறவின் பாற்பட்டு அவன் பின்பற்றும் சமூகக் கட்டுப்பாடுகளும்தான். பாலியல் உணர்ச்சிகளுக்கும் அவனது சமூக ரீதியான பொறுப்பு உணர்வுகளுக்கும் இடையேயான முரண்பாடுகளும் அதையொட்டி ஒருவனின் அகநிலையில் ஓயாது நடக்கும் போராட்டங்களையும் எதிர்கொள்ளும் போது ஆனந்த விகடன்களும் குமுதங்களும் எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுகின்றன. அந்த முரண்பாட்டை நல்ல விதமாக ஆற்றுப்படுத்துவதற்குப்பதில் வெறியைக் கிளப்பி விட்டு கல்லா கட்டுகின்றன.
பெண்கள் என்றால் சமைக்க வேண்டும் – ஆண் சமைப்பது கேலிக்குரியது என்பதை மொக்கை ஜோக்குகள் மூலம் சொல்லி விட்டு, நேரடியாக பெண்களுக்கு சமையல் குறிப்புகளை எழுதுகிறார்கள். பெண்கள் என்றால் அழகாய் இருக்க வேண்டும், அழகு படுத்திக் கொள்ள வேண்டும் – அதற்கு அழகுக் குறிப்புகள், பெண்கள் என்றால் பொரணி பேசுவார்கள், குடும்பச் சண்டைகளில் இறங்குவார்கள் – இதற்கு மாமியார் மருமகள் மொக்கைகள். இவ்வாறு ஏற்கனவே பொதுப்புத்தியில் உறைந்து போயிருக்கும் அசிங்கங்களை மேலும் வளர்த்தெடுக்கின்றன. இறுதியில் பெண்களை வீட்டு சிறையில் ஒரு போகப்பொருளாய் அடைத்து வைத்திருப்பதைத்தான் விகடன், குமுதம் அறிவாளிகள் செய்து வருகின்றனர்.
ஆம்பளைப் பொறுக்கித்தனத்தையே ஹீரோத்தனமாக முன்வைக்கும் சினிமாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது, திரையில் பெண்களை தரக்குறைவாக மதிக்கும் ‘நாயகர்களை’ அழைத்து பேட்டி காண்பது என்று ஆணாதிக்க திமிர்த்தனங்களுக்குப் பரிவட்டம் கட்டி அதையே ஒரு பொதுக் கலாச்சாரமாக நிலைநிறுத்தியதில் பத்திரிகைகளின் பங்கு முக்கியமானது. பெண்ணை போகப் பொருளாக்கி விட்டார்களே, விற்பனைப் பண்டமாக்கி விட்டார்களே என்று பத்தாம் பக்கத்தில் கவின்மலர் உயிரைக் கொடுத்து தொண்டைத் தண்ணீர் வற்றக் ‘குமுறிக்’ கொண்டிருக்கிறார் – நடுப்பக்கத்திலோ கல்யாண் ஜுவல்லர்ஸின் விளம்பரம்; கழுத்து நிறைய நகைகளோடு ஒரு பெண் அமர்ந்திருக்க பக்கத்திலேயே, ‘திருமணம் பற்றிய சிந்தனை.. இனி ராஜகம்பீரமாகும்” என்கிற வாசகங்கள். பெண்ணைப் பெற்றால் வரதட்சிணையாக நகை போட்டுக் கட்டிக் கொடுக்க வேண்டுமென்பதை விளம்பரத்தில் சொல்லி விட்டு முதல் பக்கத்தில் நீர்த்துப் போன மொழியில் கவின்மலரின் உபதேசம். அருவெறுப்பூட்டுகிறது இந்த நாடகம்.
ஊருக்கு உபதேசம் சொல்லும் கவின்மலர், அவருடன் இணைந்து பணியாற்றி டைம்பாஸ் என்ற மலிவான ‘மெல்லிய’ போர்னோ பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கும் ரீ.சிவக்குமாரின் (சுகுணா திவாகர்) சட்டையைப் பிடித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் இரண்டு கேள்விகளாவது கேட்கத் தயாரா? இல்லை இவரை ஆசிரியர் பொறுப்பில் விட்டு காசு பார்க்கும் விகடன் நிர்வாகத்தினை கண்டித்து ஒரு மொக்கை கவிதையாவது எழுதத் தயாரா? முடியாது எனில் யாரை ஏமாற்றுகிறீர்கள்?
இப்படிப்பட்ட பத்திரிகைகளைப் படித்து ‘தயாராகும்’ ஒரு இளைஞன் எப்படியிருப்பான்? பொறுக்கியாக இல்லையென்றால்தான் ஆச்சரியம். இவ்வாறாகத் ‘தயாரான’ இளைஞன் ஒருவன் சாலையில் செல்லும் பெண்ணை எப்படிப் பார்ப்பான்? அவன் குற்றவாளியென்றால் அவனது ஆண்மைத் திமிர் கொண்ட ஆளுமையின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்தப் பத்திரிகைகள் குற்றவாளிகள் இல்லையா? பெண்களை போகப் பொருட்களாகவும், நுகர்வுப் பண்டங்களாகவும் கடைவிரிக்கும் ஊடகங்கள் வழியே தனக்கென்று ஒரு ஆணாதிக்க ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் லும்பன்கள் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் போது தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால், அந்தக் குற்றத்தைத் தூண்டிய பத்திரிகைகளோ தண்டனையிலிருந்து தப்புவது மட்டுமின்றி நடந்த குற்றச் சம்பவத்தையே எந்தக் கூச்சநாச்சமும் இன்றிக் காசாக்குகின்றன.
பாலியல் குற்றச்சம்பவங்களில் குற்றமிழைத்தவர்களுக்கு தூக்கு, ஆண்மை நீக்கம், ஆயுள் சிறை என்று அவரவர்க்குத் தோன்றிய தண்டனைகளைப் பட்டியலிடுகின்றனர். ஆனால், இந்தக் குற்றங்களின் காரண கர்த்தாக்களுக்கு யார் எந்த தண்டனையை வழங்குவது?
என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய பொதுக்கூட்டம் மற்றும் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பகுதித் தோழர் கல்யாணக்குமார் தலைமை தாங்கினார்.
பு.ஜ தொ.மு சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் அமைப்பாளர் தோழர் நாகராசன் உரையாற்ற,
அதன்பிறகு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவினரின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மின்வெட்டு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, மருத்துவம், கல்வி, புதிய தண்ணீர்க்கொள்கை, போன்ற பல்வேறு விசயங்களிலும் முதலாளிகளுக்கு அடிவருடித்தனமாக நடந்து கொள்ளும் இந்திய அரசையும் ஆளும் வர்க்கத்தையும் உரைகள் அம்பலப்படுத்தின. கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி புத்துணர்வோடு இருந்தது குறிப்பிடத்தகுந்தது.
21/01/2013 அன்று காளையார்கோவில், தேரடிதெருவில்
திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு!
பன்னாட்டு முதலாளிகளுக்கு மின்சாரம் உள் நாட்டு மக்களுக்கு இருட்டு!
என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திய தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
பகுதித் தோழர் சரவணன் தலைமையேற்க,
பு.ஜ தொ.மு சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் அமைப்பாளர் தோழர் நாகராசன் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டின் பின்னால் உள்ள சதிகளை அம்பலப்படுத்திப் பேசினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் குருசாமி மயில்வாகனன் மருது பாண்டியர்களின் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை நினைவு கூர்ந்து, மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராக மீண்டும் அதேபோல் போராடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
அதன் பிறகு சிறப்புரையாற்றிய புதுக்கோட்டை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலாலளர் வழக்குரைஞர் தோழர் இராமலிங்கம் செயற்கையாகத் திணிக்கப்படும் மின்வெட்டையையும், மின்வாரியத்தைக் கடனாளியக்கிய ஜெயா, கருணாநிதியையும், முதலாளிகளின் லாபவேட்டைக்காக மக்களை நசுக்கும் ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளையும் அம்பலப்படுத்திப் பேசினார்.
கூடியிருந்த மக்கள் கைதட்டி உரைகளை வரவேற்றனர்.
செய்தி : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு
அருந்ததி ராய் ஆங்கிலத்தில் எழுதி பெரும் வரவேற்பு பெற்ற இக்கட்டுரை மூலத்தின் சுவையும், பொருளும் குன்றாமல் மிக அழகாக மொழிபெயர்க்கப்பட்டு திருச்சி மக்கள் கலை இலக்கியக் கழக வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. இதே கட்டுரையை வேறு இரு பதிப்பகங்களும் வெளியிட்டிருந்தாலும் அவற்றை விட இந்த மொழிபெயர்ப்பு தரமானது என்பதை வாசகர்கள் ஒப்பிட்டு அறியலாம்.
நூலிலிருந்து சில பகுதிகள்:
மண்டேலா முதல் ராக்பெல்லர் வரை, அன்னா ஹசாரே முதல் வேதாந்தா வரை… கார்ப்பரேட் நற்செய்தியின் இந்தப் புனிதப் பேராயர்கள் இனி எத்தனை காலம்தான் நமது எதிர்ப்பை எல்லாம் விலை பேசி வீழ்த்துவார்கள்?
இது தங்குமிடமா அல்லது இல்லமா? புதிய இந்தியாவின் கோவிலா அல்லது அதன் பேய்கள் உறையும் கிடங்கா? மர்மத்தையும், அரவமற்ற அச்சுறுத்தலையும் உமிழ்ந்தபடி, மும்பையின் அல்டமாண்ட் சாலையில் ஆன்டிலாவின் வருகை நிகழ்ந்த தருணம் முதல் எதுவும் முன்பு போல் இல்லை. “ இதோ வந்து விட்டோம், இதுதான் அது. நம் புதிய மன்னருக்கு உங்கள் மரியாதையைச் செலுத்துங்கள்” என்றார் என்னை அங்கு அழைத்துச் சென்ற நண்பர்.
ஆன்டிலா, இந்தியாவின் முதற்பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமானது. இருபத்தி ஏழு அடுக்கு மாடிகள், மூன்று ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள், ஒன்பது மின் தூக்கிகள் (லிஃப்டுகள்), தொங்கு தோட்டங்கள், நடன அரங்குகள், சீதோஷண அறைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கார்களை நிறுத்துவதற்கு மட்டும் ஆறு தளங்கள், பராமரிக்க அறுநூறு சிப்பந்திகள் என நீளுகின்ற, இதுகாறும் எவரும் கட்டியிராத ஊதாரிச் செலவினம் கொண்ட இந்தக் குடியிருப்பு பற்றி நான் ஏற்கெனவே படித்திருந்தேன். எனினும், இதோ என் கண்ணெதிரே 27 மாடிகள் உயரத்திற்கு உலோக வலையின் மீது ஒட்டப்பட்டு நெட்டுக்குத்தாக நிமிர்ந்து நிற்கும் புல்வெளியை நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை. அதில் திட்டுத்திட்டாய் புற்கள் உலர்ந்திருந்தன, கச்சிதமான செவ்வகங்களாக சில துண்டுகள் உதிர்ந்தும் இருந்தன. ‘புல்லுக்கும் ஆங்கே பொசியும்’ என்ற கொள்கை வேலை செய்யவில்லை எனப் பளிச்சென்று தெரிகிறது! (முதலாளிகளிடமிருந்து செல்வம் மெல்லக் கசிந்து கீழிறங்கி மக்களுக்கு வந்து சேரும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் வாக்குறுதியை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.)
மேலிருந்து கீழே பொசியவில்லையே தவிர, வெள்ளம் கீழிருந்து மேல் நோக்கிப் பாய்ந்திருக்கிறது. அதனால்தான் நூற்று இருபது கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், நூறே நூறு பணக்காரர்கள் மட்டும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கிற்கு நிகரான சொத்தை வைத்திருக்க முடிகின்றது.
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், நெட்டுக்குத்தான புல்வெளி அமைத்தும், ஆன்டிலாவில் அம்பானி குடும்பத்தினர் ஏன் குடியேறவில்லை என்றுதான் ஊரெங்கும் (நியூயார்க் டைம்ஸ் வரையில்) பேசிக் கொள்கிறார்கள். அல்லது பேசிக் கொண்டார்கள். பேய்கள், துரதிர்ஷ்டம், வாஸ்து, ஃபெங் சுயி என மக்கள் ஏதேதோ கிசுகிசுக்கிறார்கள். ஒருவேளை இது கார்ல் மார்க்ஸின் குற்றமாகவும் இருக்கலாம். (நாசமாய்ப்போன அந்த மனிதனின் சாபம்!) முதலாளித்துவமானது, “மாயவித்தை புரிந்தாற்போல பிரம்மாண்டமான பொருளுற்பத்திச் சாதனங்களையும், பரிவர்த்தனைச் சாதனங்களையும் தோற்றுவித்து விட்டு, பாதாள உலகிலிருந்து தனது மந்திரத்தின் வலிமையால் தருவித்த சக்திகளை அடக்கியாள முடியாமற் போன மந்திரவாதியின் நிலையில் இருப்பதாக” அவர் கூறினாரே.
இந்தியாவில், ஐ.எம்.எஃப்-க்குப் பிந்திய புதிய “சீர்திருத்த வகை” நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த முப்பது கோடி பேர்களும், சந்தை என்ற பெயரால் அழைக்கப்படுபவர்களுமாகிய நாம், பாதாள உலகத்தின் ஆவிகளுடன்தான் அக்கம் பக்கமாக வாழ்ந்து வருகிறோம். பேய்களாய் அலறுகின்ற செத்துப் போன ஆறுகள், வாய் பிளந்து கிடக்கும் வறண்ட கிணறுகள், மழிக்கப்பட்ட மலைகள், அம்மணமாக்கப்பட்ட காடுகள்; கடன்காரர்களால் விரட்டப்பட்டு கயிற்றிலே தஞ்சம் புகுந்த இரண்டரை லட்சம் விவசாயிகளின் ஆவிகள், நமக்கு வழியமைத்துக் கொடுப்பதற்காக ஏழைகளாய், ஏதிலிகளாய் ஆக்கப்பட்டு இருபது ரூபாய்க்கும் குறைந்த தொகையில் ஒரு நாளை நகர்த்தும் எண்பது கோடி நடை பிணங்கள் என பலப்பல கீழுலக ஆவிகளுடன்தான் நாம் அக்கம் பக்கமாய் வாழ்ந்து வருகிறோம்.
0000
மேல் நோக்கிப் பாயும் இந்த வெள்ளம், எல்லாச் செல்வங்களையும் நமது குபேரர்கள் காலூன்றிச் சுழன்றாடும் ஓர் ஊசிமுனையில் குவிக்க, கீழே ஜனநாயகத்தின் நிறுவனங்களான நீதிமன்றங்கள், நாடாளுமன்றம் மட்டுமின்றி ஊடகங்கள் மீதும் பணம் ஆழிப் பேரலையென மோதி ஊடறுத்துச் செல்கிறது; உரிய முறையில் இயங்குவதற்கான அவற்றின் ஆற்றலை முடக்குகிறது. தேர்தலின் திருவிழாச் சூழல் எந்த அளவுக்குக் களைகட்டி காதைக் கிழிக்கிறதோ அந்த அளவுக்கு, இங்கே ஜனநாயகம் இருக்கிறதென்ற நம்பிக்கை நமக்குக் குறைகிறது.
0000
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்காவின் முதல் எதிரியாக இருந்த பாசிஸ்டுகளின் இடத்திற்கு கம்யூனிஸ்டுகள் வந்த பின் பனிப்போரைத் திறம்பட நடத்தப் பொருத்தமான புதிய வகை நிறுவனங்கள் தேவைப்பட்டன. அமெரிக்க இராணுவத்துக்கு ஆயுத ஆராய்ச்சிப் பணிகள் செய்வதற்கான வல்லுநர் குழுவான ‘ரேண்ட்’ ( RAND – ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) அமைப்புக்கு ஃபோர்டு நிதியளித்தது. “சுதந்திர தேசங்களில் ஊடுறுவி சீர்குலைக்க கம்யூனிஸ்டுகள் எடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளை முறியடிக்க” வேண்டி ஃபோர்டு அறக்கட்டளை 1952-ல் ‘குடியரசுக்கான நிதியம்’ ஒன்றை நிறுவியது. பின்னாளில் இந்த நிதியம் ‘ஜனநாயக அமைப்புகள் பற்றிய ஆய்வு மையமாக’ உருமாறியது. மெக்கார்த்தேயிசத்தின் அத்துமீறல்களைத் தவிர்த்து சாதுரியமாகப் பனிப்போரை நடத்துவது இம்மையத்தின் பணியாக இருந்தது. கலைஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோருக்கு நிதியளிப்பது, பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களுக்குக் கொடையளிப்பது, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவது எனக் கோடிக்கணக்கான டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் ஃபோர்டு அறக்கட்டளையின் செயல்பாடுகளை இந்த ஆடியின் வழியாகத்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
0000
சமூக அறிவியல் மற்றும் கலைத் துறைகளுக்கு ஏராளமான நிதி வழங்குவோர் கார்ப்பரேட் அறக்கட்டளைகளே. ‘வளர்ச்சித்திட்ட ஆய்வுகள்’, ‘சமூகக் குழுக்கள் பற்றிய ஆய்வுகள்”, “பண்பாட்டு ஆய்வுகள்’, “நடத்தை அறிவியல்கள்‘ மற்றும் “மனித உரிமைகள்” எனப் பலப்பல துறைகளில் ஆய்வுகளைத் தொடங்கி அதற்குக் கொடை அளிப்பதும், ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை அளிப்பதும் இந்த அறக்கட்டளைகளே. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களின் வருகைக்காகக் கதவை அகலத் திறந்தவுடன், மூன்றாம் உலக மேட்டுக்குடியினரின் பிள்ளைகள் லட்சக்கணக்கில் வெள்ளமென உள்ளே பாய்ந்தார்கள். கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இன்று இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தன் ஒரு பிள்ளையையாவது அமெரிக்காவில் படிக்க வைக்காத மேல்தட்டு, நடுத்தர வர்க்க குடும்பத்தைக் காண்பது அரிது. இவர்கள் மத்தியிலிருந்து நல்ல அறிஞர்கள், கல்வியாளர்கள் மட்டும் வருவதில்லை. பிரதமர்களும், நிதி அமைச்சர்களும், பொருளியலாளர்களும், கார்ப்பரேட் வழக்கறிஞர்களும், வங்கியாளர்களும், அதிகாரிகளும் வருகிறார்கள். இவர்கள் தமது நாட்டின் பொருளாதாரத்தைப் பன்னாட்டுத் தொழிற்கழகங்களுக்குத் திறந்து விடவும் ஆவன செய்கிறார்கள்.
0000
கட்டுமான மறுசீரமைப்பு (Structural Adjustment) நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் திணிக்கத் தொடங்கி, பொதுச் சுகாதாரம், கல்வி, குழந்தை பராமரிப்பு, மனிதவள மேம்பாடு போன்றவற்றுக்கு செய்து வந்த செலவை வெட்டிச் சுருக்குமாறு அரசுகளின் கையை முறுக்கத் தொடங்கியதுமே அரசு சாரா அமைப்புகள் நுழையத் தொடங்கின. அனைத்தும் தனியார்மயம் என்பது அனைத்தும் என்.ஜி.ஓ மயம் என்றும் பொருள் கொள்ளத் தக்கதாக ஆயிற்று.
0000
உலக மூலதனம் பாய்கின்ற பாதைகள் அனைத்திலும் மைய நரம்பு மண்டலத்தின் முடிச்சுக்கள் போல இந்த என்.ஜி.ஓக்கள் அமர்ந்திருக்கிறார்கள். செய்தி அனுப்புவோராக, சேகரிப்போராக, அதிர்வுத் தாங்கிகளாக, இப்பாதையில் ஏற்படும் ஒரு சிறிய துடிப்பைப் பற்றியும் எச்சரிப்போராக, அதே சமயம் தமக்கு இடமளித்த நாடுகளின் அரசுகளுக்கு எரிச்சலூட்டக் கூடாது என்பதில் கவனம் நிறைந்தவர்களாக, என்.ஜி.ஓக்கள் பணி செய்கிறார்கள்.
0000
கார்ப்பரேட் அறக்கட்டளைகளின் பண மூட்டைகளால் ஆயுதபாணியாக்கப்பட்ட இந்த என்.ஜி.ஓ-க்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் சிரமப்பட்டு ஊடுறுவியிருக்கின்றனர். புரட்சியாளர்களாக உருவாகும் ஆற்றல் கொண்டவர்களை சம்பளம் வாங்கும் களப்பணியாளர்களாக மாற்றினர். கலைஞர்கள், அறிவுஜீவிகள், மற்றும் திரைத்துறைக் கலைஞர்களை நிதியால் வருடிக் கொடுத்து, முற்போக்கான கருத்துகள், விவாதங்களில் இருந்து திசை திருப்பினர். அடையாள அரசியல், மனித உரிமைகள் எனும் மொழியில் முன்வைக்கப்படும் பன்மைப் பண்பாட்டுவாதம், பாலின அரசியல், சமூக முன்னேற்றம் போன்ற சொல்லாடல்களுக்குள் அவர்களை அழைத்துச் சென்றனர்.
நீதி என்ற உன்னதக் கருத்தாக்கத்தை மனித உரிமைகள் எனும் தொழிலாக மாற்றியமைத்தது என்பது கருத்தியல் தளத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஒரு கவிழ்ப்பு நடவடிக்கையாகும். இக்கவிழ்ப்பு நடவடிக்கையில் என்.ஜி.ஓ-க்களும், அறக்கட்டளைகளும் மிக முக்கியப் பாத்திரம் ஆற்றியுள்ளனர். மனித உரிமைகள் என்ற குறுகிய பார்வை ஒரு பிரச்சினையின் விரிந்த பரிமாணத்தைப் பார்க்க விடாமல் தடுத்து, அதனைக் குறிப்பிட்ட அட்டூழியம் குறித்த ஆய்வாக மட்டும் மாற்றுவதுடன், மோதலில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையுமே – உதாரணமாக, மாவோயிஸ்டுகளையும் இந்திய அரசையும், அல்லது இஸ்ரேலிய ராணுவத்தையும் ஹமாஸையும் – மனித உரிமையை மீறியவர்களாகக் கண்டனம் செய்ய வாய்ப்பளிக்கிறது.
0000
முதலாளித்துவம் நெருக்கடியில் இருக்கிறது. ‘புல்லுக்கும் ஆங்கே பொசியும்’ என்ற கோட்பாடு தோற்று விட்டது. வெள்ளத்தின் மேல் நோக்கிய பாய்ச்சலும் தள்ளாடுகிறது. சர்வதேச நிதித்துறை நெருக்கடி இந்தியாவை நெருங்குகிறது. இந்தியாவின் வளர்ச்சி வீதம் திடீரெனச் சரிந்து 6.9% ஆகியிருக்கிறது. அந்நிய முதலீடோ வெளியேறுகிறது. மாபெரும் சர்வதேச தொழிற்கழகங்களெல்லாம் எங்கே முதலீடு செய்வதெனத் தெரியாமல், நிதித்துறை நெருக்கடி எப்படித் திரும்பும் என்று ஊகிக்கவும் முடியாமல், முகவாயைக் கையில் வைத்தபடி, பெரும் பணக்குவியல்களின் மீது அமர்ந்திருக்கிறார்கள். சர்வதேச முதலாளித்துவம் என்ற பிரமாண்டத் தேரில் புரையோடியிருப்பது ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு விரிசல்.
முதலாளித்துவத்திற்கு உண்மையிலேயே சவக்குழி தோண்ட இருப்பவர்கள், தாம் உருவாக்கிய மருட்காட்சியில் தாமே மயங்கி, தமது சித்தாந்தத்தையே விசுவாசமாக மாற்றிக்கொண்டு விட்ட முதலாளித்துவத்தின் புனிதப் பேராயர்களாகவே கூட அமையக்கூடும்.
________________________
புத்தகம் கிடைக்கும் இடங்கள்
23.01.2013 வரை
கீழைக்காற்று கடை எண்: 551-552
36வது சென்னை புத்தகக் காட்சி,
ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
தொலைபேசி – 044-2841 2367
புதிய கலாச்சாரம்
16, முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக்நகர்,
சென்னை – 600083
தொலைபேசி – 044 – 2371 8706, 99411 75876
வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் vinavu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வெளியீடு, விலை ரூ. 60.00
நூலின் முன்னுரை
நாய்க்கன் கொட்டாயில் ஒரு கொடிய வன்கொடுமைக் குற்றத்தை அரங்கேற்றியது மட்டுமின்றி, சாதி கடந்த திருமண எதிர்ப்பு, வன்கொடுமைச் சட்ட எதிர்ப்பு என்று ஆதிக்க சாதி வெறியர்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். வன்னிய சாதிப் பெண்களைக் காதலித்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு கொல்லப்படுகின்றனர். இவையனைத்துக்கும் இன்று தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் பா.ம.க தலைவர் ராமதாசு, 90 களின் துவக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமையின் நாயகனாக காட்டப்பட்டவர்.
எண்பதுகளின் இறுதியில் வன்னியர் சங்கத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசியல் அரங்கில் இறக்கியபோதே, அதன் சாதிய பிழைப்புவாத முகத்தை புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியது. இருப்பினும் எம்.ஜி.ஆருக்கு வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் கட்சியும் கொள்கையும் தயார் செய்து கொடுத்தது போலவே, ராமதாசுக்கு புரட்சி வேசம் கட்டி விடுவதற்கு ஏராளமான அறிஞர்களும் பேராசிரியர்களும் வரிசையில் நின்றனர்.
“இழக்கப் போவது சாதிகளை மட்டுமே! அடையப் போவதோ பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சி அதிகாரம்!” “ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே, ஒன்று சேருங்கள்! ஆளும் பாசிச கும்பல்களைத் தூக்கி எறியுங்கள்!” என்ற முழக்கங்களை பா.ம.க. மீது சுமத்தி, ராமதாசுக்கே தோன்றாத கோணங்களில் இருந்தெல்லாம் அவரது ஒவ்வொரு அசைவுக்கும் அறிவாளிகள் பொழிப்புரை போட்டனர். நிறப்பிரிகை கனவான்கள், ப.கல்யாணி, பழமலய், பிரபஞ்சன், பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள் பெ.மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு, சுப.வீ என இவர்களுடைய பட்டியல் மிக நீண்டது. இட ஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதி, சாதி ஒழிப்பு, நாடாளுமன்ற முறை மூலம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றம் ஆகியவை சாத்தியம் என்ற மாயையை உருவாக்குவதில் மாஜி புரட்சியாளர்கள், மற்றும் அறிவுத்துறையினர் முன்னிலை வகித்தனர்.
சாதிய, வர்க்க ஒடுக்குமுறையை நிலைநிறுத்தும் பொருட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, ஊட்டி வளர்க்கப்படும் மேற்படி அரசு அமைப்பு, சமத்துவத்தையோ, ஜனநாயகத்தையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இத்தகைய அரசு அமைப்பை தாக்கித் தகர்க்கும் அரசியல் புரட்சியின்றி சமூகப் புரட்சி சாத்தியமில்லை. பழைய கட்டுமானத்தின் கீழ் ஒடுக்கப்படும் சாதியினர் சமத்துவம், ஜனநாயகத்தைப் பெற முடியாது என்ற புரட்சிகர அரசியலை நிராகரித்து, அடையாள அரசியலையும் அதன்வழி சாதிய பிழைப்புவாத அரசியலையும் இவர்கள் கொண்டாடினர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை ராஜதுரையும் ராமதாசு, திருமாவளவன் உள்ளிட்டவர்களை நிறப்பிரிகை கும்பலும் துதிபாடினர்.
தங்களால் கொண்டாடப்பட்ட இந்த நபர்கள், காங்கிரசு, பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க என்று மாறி மாறி கூட்டணி சேர்ந்து கொண்டபோது இவர்கள் வாய் திறக்கவில்லை. தாங்கள் முன்வைத்த அரசியல் தவறு என்று ஒப்புக்கொள்ளவோ விளக்கம் கூறவோ இல்லை. தாங்கள் முன்வைத்த கருத்துகளை நம்பி, இந்தப் பிழைப்புவாதிகளின் பின்னால் சென்ற எண்ணற்ற இளைஞர்கள் சீரழிந்து போனது பற்றியும் இவர்கள் கவலைப்படவில்லை. கம்யூனிசக் கொள்கை மற்றும் புரட்சிகரக் கட்சியின் மீது இளைஞர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை புரட்சிகர இயக்கங்களில் சேரவொட்டாமல் தடுப்பதுமே இவர்களுடைய நோக்கமாக இருந்து வருகிறது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடனோ அல்லது உதவியில்லாமலோ இவர்கள் இந்த ஆளும்வர்க்கத் தொண்டினை நிறைவேற்றி வருகிறார்கள்.
ஓட்டுக்கட்சித் தலைவர்கள் கூட தமது அரசியல் சந்தர்ப்பவாதங்களுக்கு மக்களிடம் விளக்கமளிக்கிறார்கள். அவற்றின் விளைவாக மதிப்பிழக்கிறார்கள். ஆனால் அடையாள அரசியல் என்ற பெரில் சாதிய பிழைப்புவாதிகளையும், சாதி வெறியர்களையும் உருவாக்கி, வளர்த்து விட்ட இந்த அறிவுத்துறையினர் மட்டும், தாங்கள் தயாரித்த தீவட்டிகள் ஊரையே கொளுத்துவது தெரிந்தும், ஒரு பாசிஸ்டுக்குரிய அலட்சியத்துடன் மவுனம் சாதிக்கிறார்கள். தாங்கள் பிரச்சாரம் செய்த கருத்துகளின் சமூக விளைவுகளுக்குப் பொறுப்பேற்காமல் நழுவுகிறார்கள். பின் நவீனத்துவம், பெரியார், அம்பேத்கர், காந்தி, முகமது நபி என்று காற்றடிக்கும் பக்கமெல்லாம் பறந்து, பசையுள்ள இடங்களில் ஒட்டிக் கொள்கிறார்கள்.
நாடாளுமன்ற அரசியலின் சீரழிவு, சாதிய பிழைப்புவாதிகளை சுயேச்சையாகத் தோற்றுவிப்பதையும், அடையாள அரசியல் அத்தகைய பிழைப்புவாதங்களுக்கு கவுரவமும் அந்தஸ்தும் அளித்து, ஜனநாயகப் புரட்சி அரசியலை சீர்குலைப்பதற்கு பயன்படுவதையும் இந்நூலின் கட்டுரைகளை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள இயலும்.
_____________________________________________________________________________________________________________
சாதி – தீண்டாமை ஒழிப்பு: என்ன செய்யப் போகிறீர்கள்?
விலை ரூ.10 – மகஇக-புமாஇமு-புஜதொமு-விவிமு-பெவிமு, வெளியீடு
1997ல் கொடியங்குளம் ‘கலவரத்தை’ ஒட்டி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்து கோயில் நுழைவு, பொதுக்கிணற்றில் நீர் எடுத்தல், தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை உடைப்பு, அடிமைத் தொழில் செய்ய மறுப்பு, சாதி-தீண்டாமை மறுப்புத் திருமணங்கள் போன்ற வடிவங்களில் எமது அமைப்புகள் சாதி வெறிக்கு எதிரான போராட்டத்தை நடத்தின. ஆதிக்க சாதி வெறி கருத்துக்களை அம்பலப்படுத்தும் இந்த சிறு வெளியீடும் பல்லாயிரக் கணக்கில் கொண்டு செல்லப்பட்டது.
அன்று போக்குவரத்துக் கழகத்துக்கு விடுதலை வீரன் சுந்தரலிங்கத்தின் பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்த சாதிவெறியர்கள், இன்று சாதி கடந்த காதல் திருமணங்களை எதிர்த்து நாயக்கன் கொட்டாய் சாதி வெறித் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். பா.ம.க. தலைவர் ராமதாசு, அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை என்ற சாதிவெறி அமைப்பு உருவாக்கியிருக்கிறார். காதல் திருமணங்களாலும் வன்கொடுமை வழக்குகளாலும் ஆதிக்க சாதியினர் பாதிக்கப்பட்டிருப்பது போல சித்தரிப்பதன் மூலம், சாதி-தீண்டாமை கருத்துக்களை இக்கும்பல் புதுப்பிக்கிறது.
இதன் பொருட்டு இவர்கள் இன்று முன் வைக்கும் வாதங்கள் அனைத்தும், அன்றும் முன்வைக்கப்பட்டவைதான். அவ்வாதங்களை முறியடிக்கும் இவ்வெளியீடு சாதி வெறியை முறியடிக்கும் கையேடாக பயன்படும் என்பதால், அதனை மீண்டும் பதிப்பித்திருக்கிறோம்.
23.01.2013 வரை
கீழைக்காற்று கடை எண்: 551-552
36வது சென்னை புத்தகக் காட்சி,
ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
கீழைக்காற்று, 10, ஔலியா சாகிபு தெரு, எல்லீசு சாலை, சென்னை – 2
தொலைபேசி – 044-2841 2367
புதிய கலாச்சாரம்
16, முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக்நகர்,
சென்னை – 600083
தொலைபேசி – 044 – 2371 8706, 99411 75876
வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் vinavu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
______________________________________________________________________________________________________________
கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கடந்த மாதம் “பா.ம.க.- வின் சாதி வெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்புவாதமும்” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவதூறுகளால் நிரம்பிய அக்கட்டுரையை “பெரியார் தளம்” என்கிற பெரியார் தி.க. இணையதளமும், “கீற்று” என்கிற தளமும் பெருமகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ளன.
வன்னியரசு தனது கட்டுரையில், “‘ புரட்சி’ செய்யப் புறப்பட்ட நக்சல்பாரிகள், அந்தப் பாதையிலிருந்து விலகி, சாதி அரசியல் கட்சிகளிலும், கட்டப்பஞ்சாயத்து நடத்தியும் பிழைக்கப் போய் விட்டார்கள். புரட்சிகரக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக தலித் மக்கள் இந்தத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். நாய்க்கன்கொட்டாய் முகப்பில் இன்று அப்பு, பாலன் சிலைகள் மட்டுமே பாதுகாப்பாக இருக்கின்றன. சிலை வைத்த மக்களோ வீடின்றி வாசலின்றித் தவிக்கின்றனர். பா.ம.க. வன்னியர்கள் மட்டுமல்ல, தி.மு.க., அ.தி.மு.க., ம.க.இ.க., என்று கட்சி பேதம் இன்றி அனைத்து வன்னியர்களும் முதலில் சாதி, அப்புறம்தான் கட்சி என்று ஒன்று சேர்ந்து கொண்டு தாக்கினர்” என்று எழுதியிருந்தார்.
“அறிவு நாணயம் இருந்தால், தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டும் ம.க.இ.க. காரர்கள் யார் யார் என்பதைச் சொல்லட்டும். அல்லது அவரது கட்டுரையைப் பிரசுரித்திருக்கும் கீற்று, பெரியார் தளம் வலைத்தளங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்குமானால், வன்னி அரசுவை விளக்கமளிக்குமாறு கோரட்டும்” என்று வினவு தளத்தில் நம் தோழர்கள் எழுதியிருந்தனர்.
அதற்கு கீற்று தளத்தில் பதில் எழுதிய வன்னியரசு. “இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வன்னியர், ம.க.இ.க. தோழர்” என்று குறிப்பிட்டிருந்தார். “அந்த கிருஷ்ணன் யார் என்பதை நேரில் வந்து காட்டுங்கள் நானும் வருகிறேன்” என்று கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வி.வி.மு. தோழர் ஆம்பள்ளி முனிராஜ் வினவு தளத்தின் மூலம் சவால்விட்டதும் வன்னியரசு வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார்.
தருமபுரி தாக்குதலைப் பற்றி முதலாளித்துவப் பத்திரிகைகளிலிருந்து தாக்குதலுக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் வரை அனைவரும் ஒன்றைக் கூறுகிறார்கள்: “நக்சல்பாரி இயக்கம் இருந்தவரை சாதி ஒடுக்குமுறை இல்லை. இயக்கம் பின்னடைவுக்குள்ளானதால்தான் சாதிவெறியர்கள் தலை தூக்கியிருக்கிறார்கள்” என்கின்றனர்.
நக்சல்பாரி அரசியலால் ஈர்க்கப்பட்ட ஆதிக்கசாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றிணைந்த காரணத்தினால்தான் அங்கே சாதிவெறியர்களை நேருக்குநேர் எதிர் கொள்ள முடிந்தது.
தருமபுரியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் சாதிவெறியர்களை எதிர்த்து அந்தந்த சாதிகளைச் சேர்ந்தவர்களையும், பிற ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த ஜனநாயக சக்திகளையும் முன்நிறுத்தி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலை நாட்டியதும் சாதி ஆதிக்கத்தை அசைத்துப் பார்த்ததும் கம்யூனிஸ்ட் இயக்கமே அன்றி, தலித் அமைப்புகள் அல்ல. இதை தாழ்த்தப்பட்ட மக்களும் நன்கு அறிவார்கள். இந்த உண்மை தான் ம.க.இ.க. வுக்கு எதிராக வன்னியரசைப் புளுக வைத்திருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் வாழப்பொறுக்காத வன்னிய சாதிவெறியர்களின் வன்மம் தான் இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று அனைவரும் கூறுகின்றனர். தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களோ நக்சல்பாரி தோழர்கள் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்காது என்கிறார்கள். ஆனால், வன்னியரசு மட்டும் இதற்கு வேறு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்.
சேரி மக்கள் நக்சல்பாரிகளை ஆதரித்ததற்கான தண்டனையைத்தான் இப்போது அனுபவித்து வருகிறார்களாம். இப்படி வன்னியரசு ஏன் புளுக வேண்டும்? அதற்கு பல காரணங்கள் உண்டு எனினும், ’நக்சல்பாரி கட்சிக்குப் போகாதீர்கள்’ என்பது முதல் காரணம். இரண்டாவது தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்களை ம.க.இ.க. தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது. அவர்களின் நடைமுறையை மட்டுமின்றி, இந்த அரசமைப்புக்குள்ளேயே சீர்திருத்தம் மூலம் சாதியை ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குகின்ற அம்பேத்கரியத்தையும் அரசியல் ரீதியில் விமர்சிக்கிறது. எனவேதான் வன்னியர் சங்கத்தை விட, ம.க.இ.க. மீது வன்னி அரசு கொலைவெறியோடு பாய்கிறார்.
தருமபுரி தாக்குதலைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் படைப்பாளிகள் நடத்திய கூட்டத்தில், இவர்களுடைய முகத்துக்கு நேரே பூணூலை உருவிக்காட்டும் காங்கிரசு பார்ப்பானுக்கு கைதட்டுகிறார்கள். குச்சு கொளுத்தி ராமதாசுடன் நல்லிணக்கம் காண விரும்புகிறார்கள்.
ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் பட்டமளித்தது யார் ? மதுரை விமான நிலையத்திற்கு தேவர் சாதிவெறியனின் பெயரை வைக்கச் சொன்னது யார் ? சேதுராமனுடன் கைகோர்த்துக்கொண்டு போஸ் கொடுத்தது யார் ? மூப்பனார் வீட்டுக்குப் போனது யார்? நாலு சீட்டுக்காக பாசிச பாப்பாத்தியிடம் நின்றது யார் ? கண்ணகி-முருகேசன் கொலையில் கட்டப்பஞ்சாயத்து செய்தது யார்?
ரியல் எஸ்டேட் மாஃபியா மடிப்பாக்கம் வேலாயுதத்தை வேட்பாளராக்கிச் சந்தி சிரித்தவர்கள், ஊரறிந்த கட்டப் பஞ்சாயத்து பேர்வழியும், கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவருமான செல்வப்பெருந்தகையை இணைப் பொதுச்செயலாளராக்கி அழகு பார்த்தவர்கள், கட்டப்பஞ்சாயத்தையே அன்றாட கட்சிப்பணியாக்கி, அதற்காக கூச்சநாச்சமின்றி சாதிவெறியர்களோடு ஒட்டிக்கொண்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் துரோகம் செய்கின்ற பிழைப்புவாதிகள்தான் புரட்சிகர அமைப்புகள் மீது அவதூறு செய்கிறார்கள்.
தனது முதல் கட்டுரையில் புரட்சியாளர்களை அவதூறு செய்யும் வன்னியரசு, இரண்டாவது கட்டுரையில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளைப் பார்த்துப் புல்லரித்துப் போய் “அவங்க ரொம்ப நல்லவங்க; தியாகம் எல்லாம் பண்றாங்கன்னு சர்டிபிகேட் கொடுக்கிறார்!” அய்யாவுக்கு கொடுத்த அம்பேத்கர் சுடர் விருதை மாவோயிஸ்டுகளுக்குக் கொடுக்காமல் இருந்தால் சரி. வன்னி அரசு போன்றவர்களால் அவதூறு செய்யப்படுவதே அதைவிடக் கவுரவமானது.
________________________________________________ – புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
__________________________________________________
கடந்த ஞாயிற்றுக் கிழமை காலையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஜனவரி மாத புதிய கலாச்சாரம் பத்திரிகை விற்பனையை முடித்து விட்டு பேருந்து ஏற நின்று கொண்டிருந்தார்கள்.
அந்த நேரம் அங்கு வந்த தாம்பரம் காவல் நிலைய காவலர் ஒருவர் பத்திரிகையை கேட்டு வாங்கினார். “இங்க என்ன செய்றீங்க, உடனே கெளம்புங்க” என்று புறப்பட்டுப் போகச் சொன்னார். அதற்குள் அங்கு வந்த அருகில் இருந்த 2-3 ரவுடிகள்,
“இவுனுங்கள சும்மா விட மாட்டோம். நான் பா.ம.க. நகரச் செயலாளர், வக்கீல். நான் ஸ்டேஷனுக்கு வந்து கம்ப்ளெயின்ட் எழுதித் தாரேன், இவனுங்கள புடிச்சி உள்ள போடுங்க” என்று எகிற ஆரம்பித்தனர்.
காவலரோ, “ஏம்பா, நீங்க கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கீங்க, நாங்க விசாரிக்கிறோம். இடையில இப்படி ரவுடித்தனம் பண்ணாதீங்க” என்று எச்சரித்தார்.
இதற்குள் ரவுடிகளில் ஒருவன், தொலைபேசியில் “ஆமாஜீ, சுத்தி வளைச்சிட்டோம். 4 பேரு இருக்காங்கஜி, போலீஸ்ல கொண்டு போயிரலாம்ஜி” என்று ஏதோ ஒரு ஜீக்கு தகவல் சொல்ல ஆரம்பித்திருந்தான்.
இதற்குள் போலீஸ் ரோந்து வாகனம் வந்து விட காவலர் தோழர்களை வண்டியில் ஏறச் சொன்னார். “இவனுங்க 100க்கு கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கானுங்க. நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து வந்து ஒரு அறிக்கை கொடுத்துட்டு போயிருங்க”என்றார்கள்.
வெளியில் ரவுடிகளுடன் இன்னும் இரண்டு பேர் சேர்ந்து கொள்ள சாமியாட ஆரம்பித்தார்கள்.
“தேவிடியாப் பசங்க, இவனுங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அய்யாவைப் பத்தி எழுதுவாங்க, கைய, கால உடைச்சாத்தான் சரியாகும்”
“பத்திரிகைல என்ன வேணுண்ணா எழுதிருவியா நீ! ஒனக்கு வன்னியப் பொண்ணுதான் கேக்குதா, நீ சக்கிலியண்ணா, சக்கிலியப் பொண்ணை போய் கல்யாணம் பண்ணுடா”
என்று சாதிவெறியை போதை போல ஏற்றிக் கொண்டு பேசிக் கொண்டே எகிற ஆரம்பித்தனர். காவல் துறை அதிகாரி அவர்களை கடிந்து கொள்வதைப் போல விலக்கி விட ஆரம்பித்தார். “டேய் விடுறா, டேய் விடுறா” என்று உதார் விட்டுக் கொண்டே அழிச்சாட்டியம் பண்ண ஆரம்பித்தனர் ரவுடிகள்.
தோழர்கள், உறுதியாக நின்று கொண்டு, பாமக சாதிவெறியர்களுக்கு உரிய மறுமொழி கொடுத்தனர்.
ரோந்து வண்டியில் ஏறி தாம்பரம் காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்ததும் உதவி ஆய்வாளர்கள் அறைக்குள் தோழர்களை அமரவைத்தார்கள். பாட்டாளி மக்கள் கட்சி குண்டர்கள் இதற்குள் வெளியில் ஒரு கும்பலை சேர்க்க ஆரம்பித்திருந்தார்கள்.
4-5 கார்களில் வந்து இறங்கிய வட்டம், மாவட்டங்களுடன் உதிரிகளாக காலையில் அடித்த டாஸ்மாக் மயக்கம் தெளிந்து எழுந்தது போலத் தெரிந்த 20-30 பேர் சேர்ந்து கொண்டிருந்தனர்.
கும்பலின் துணையோடும் பிற கொடுக்கல் வாங்கல் உறவுகளின் மூலம் ஏற்படுத்திக் கொண்டிருந்த பிணைப்போடு, பாட்டாளி மக்கள் கட்சி வக்கீல் ஒருவர் காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவருடன் உட்கார்ந்து புகார் ஒன்றை எழுதினார். புகாரில், தோழர்கள் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆபாசமாக திட்டியதாகவும் பொய் புளுகுகளை அவிழ்த்து விட்டிருந்தனர்.
இதற்குள் தோழர்கள் மூலமாக தகவல் தெரிந்த மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்பான பெண்கள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் காவல் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஊடகங்களுக்கும் தகவல் சொல்லப்பட்டது.
வெளியில் கூடியிருந்த பாமக ரவுடி கும்பல், “எங்கள் அய்யாவை இழிவு படுத்தியவர்களை கைது செய்” என்று முழக்கம் போட ஆரம்பித்தது. காவல் அதிகாரிகளோ, தோழர்களை வெளியில் விடாமல் என்ன செய்வது என்று திணறிக் கொண்டிருந்தார்கள்.
காவல் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு அவர்கள் மாமியார் வீடு போல உள்ளே வந்து போய்க் கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி குண்டர்கள் சிலர், தோழர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்து, ஏதோ நோட்டம் விடுவதைப் போல ஒவ்வொருவரையும் முறைத்துப் பார்த்துக் கொண்டு போனார்கள்.
ஒருவர்,
“நீங்க என்னிக்காவது நல்லா படிச்சு, வேலைக்குப் போங்கன்னு பத்திரிகைல எழுதியிருக்கீங்களா. அப்படி எழுதியிருந்தா எனக்கு அத்தாட்சி கொடுங்க, காதல் கேக்குதா, காதல், அம்பானி மகளை கல்யாணம் செஞ்சு ஒரே நாள்ள அம்பானி ஆகப் பாக்குறானுங்க”
என்று திட்டி விட்டுப் போனார்.
இதற்குள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் விடுதலைச் செழியன் சொன்ன தகவலின் படி அக்கட்சியின் நகரச் செயலாளர் வந்து தோழர்களிடம் பேசினார். அவருக்கு நன்றி தெரிவித்த தோழர்கள் ‘இந்தப் பிரச்சினையை தாங்களே தீர்த்துக் கொள்வதாக கூறினர். அப்போதுதான் பா.ம.க ரவுடிகளுக்கு ஒரு பாடமாக இருக்கு’மென்று கூறினர். விடுதலைச் சிறுத்தைகள் தோழர்களுக்கு ஆதரவாக வந்ததைப் பார்த்த பா.ம.க ரவுடிகள் உடனே அவர்களிடம் “நாமெல்லாம் ஒரே ஏரியா, ஒரே முகம் பார்த்து பழகுறோம், நீங்கள் ஏன் கலை இலக்கியத்துக்கு (மகஇக) ஆதரவாக போறிங்க” என்று புலம்பினார்கள்.
சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு காவல் நிலையத்துக்கு வந்த ஆய்வாளர் தோழர்களை அழைத்துப் பேசினார். பேசுவதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று சொல்லி தோழர்களின் செல்பேசிகளை வாங்கி வைத்துக் கொண்டார். புதிய கலாச்சாரம் இதழின் பின் அட்டையில் வெளியாகியிருந்த கவிதையைப் படித்துப் பார்த்தார்.
“வன்னியப் பெண்ணும், பறையரும்
வாழ்க்கைத் துணையானால்
காடுவெட்டி குருவுக்கு வேண்டுமானால்
மூலம் தள்ளிப் போகலாம்
ராமதாசு வேண்டுமானால்
நாக்கு வெந்து காயலாம்
நாடு ஒன்று மூழ்கிடாது
சாதி ஒழியும்படி சமத்துவமாய் காதலி!”
என்ற வரிகளைப் படித்துக் காண்பித்து, “இப்படி ஒரு கட்சித் தலைவரைக் குறிப்பிட்டு தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதலாமா” என்று நியாயம் பேசினார்.
“இது தனிப்பட்ட முறை தாக்குதல் இல்லை சார், அவர் பொதுவில் பேசிய அராஜக பேச்சுகளுக்கும், நடத்தைக்கும் பதில் சொல்லும்படியாக எழுதப்பட்ட கவிதை. நாங்க இந்தப் பத்திரிகையில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றுடனும் உடன்படுகிறோம். மக்களிடையே சாதி வெறியைத் தூண்டி விடக் கூடிய பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கும்பல்களைப் பற்றி தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம்” என்று தோழர்கள் பதில் சொன்னார்கள்.
“நீங்க, காவல் துறை அனுமதி இல்லாம எப்படி பத்திரிகை விற்கலாம்” சட்டம் பேச ஆரம்பித்தார்.
“இப்படி புத்தக விற்பனை கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் செய்கிறோம். அப்படி விற்கக் கூடாது என்பதற்கு எந்த சட்ட விதிகளும் இல்லை. விற்பது, பிரச்சாரம் செய்வது அடிப்படை உரிமை என்றும், ஒருவேளை இது போன்ற ரவுடிகள் பிரச்சினை வந்தால் மக்களின் ஆதரவுடன் அதைத் தீர்த்துக் கொள்கிறோம்” என்று தோழர்கள் விளக்கினார்கள்.
“இதுவரை பிரச்சனை வரவில்லை, இப்போ இவங்க பிரச்சனை செய்றாங்க, எதுனா சட்ட ஒழுங்கு குலைவு ஏற்பட்டா, யாரு பதில் சொல்வாங்க” என்று சொல்லும் போதே அவர் உயர் அதிகாரியிடமிருந்து தொலைபேசி வர,
“ஆமா சார், அதுதான் விசாரிச்சிக்கிட்டு இருக்கேன். இவங்க ராமதாஸ், காடுவெட்டி குரு பத்தி கவிதை எழுதியிருக்காங்க” என்றபடி பத்திரிகையை புரட்டிப் பார்த்து விட்டு, ‘பா.ம.க., ராமதாஸ், காடுவெட்டி குரு எல்லாம் காட்டுமிராண்டிங்க! – கள ஆய்வில் வன்னிய மக்கள் கருத்து’ என்று இவங்க சர்வே நடத்தின மாதிரி போட்டிருக்காங்க.”
“அதில ‘வன்னியர் சாதியைச் சேர்ந்த வயதானவர் ஒருவர், நானே வன்னியர்தான் சார். நான் சொல்றேன். இந்த நாயிங்களை நடு ரோட்டு ஓட விட்டு சுட்டுக் கொல்லணும் சார் என்று கோபத்துடன் தன்னுடைய சொந்த சாதி வெறியர்களைச் சாடினார்’னும் எழுதியிருக்காங்க சார். விசாரிச்சிட்டு சொல்றேன் சார்”
என்று தொலைபேசியை வைத்தார்.
‘நீங்க அனுமதி வாங்காம இப்படி பொது இடத்தில பத்திரிகை இஷ்யூ பண்ணக் கூடாது’ என்று திரும்பவும் சொல்லி விட்டு, “எத்தனை பத்திரிகை வித்தீங்க” என்று பத்திரிகை விற்ற பணத்தையும் வாங்கிக் கொண்டார். செல்பேசிகளை திருப்பித் தராமல் வெளியில் போய் காத்திருக்கச் சொன்னார்.
காவல் துறை இப்படி ரவுடிக் கும்பலுடன் ஒத்துழைத்து அவர்கள் ஆட்சியை அனுமதித்துக் கொண்டிருந்த நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வந்தார்கள். மேலும் மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் பெண்களையும் உள்ளிட்டு தாம்பரம் பேருந்து நிலையத்தில் கூடி விட்டார்கள்.
காவல் நிலையத்துக்கு வெளியில் பாட்டாளி மக்கள் கட்சி கும்பல் கோஷம் போட்டுக் கொண்டிருந்தது. தோழர்கள் எண்ணிக்கை வர வர ஷத்திரியர்கள் படை கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கி ஓட ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில் ஐம்பது பேர் என்றால் தோழர்கள் வந்த பிறகு பத்து பேராக சிறுத்துப் போனது. உள்ளே தடுக்கப்பட்டிருந்த தோழர்கள், மதிய உணவுக்கு போக வேண்டும் என்று சொன்னதும், காவலர்களே வெளியிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் உடன் வர அனைவரும் ஆய்வாளர் அறைக்குள் போனார்கள். அங்கு வந்திருந்த காவல் துறை உதவி ஆணையர்
“அவங்க புகார் கொடுத்திருக்காங்க, இவங்க கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதனால மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சொல்லியிருக்காங்க. அதுக்கு சிஎஸ்ஆர் போட்டுக் கொடுத்திருக்கோம். நீங்க ஏன் இப்படி எல்லாம் எழுதி பொது இடத்தில குழப்பம் ஏற்படுத்துறீங்க” என்று தோழர்கள் மீதே குற்றப் பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தார்.
வழக்கறிஞர்களும் தோழர்களும் உறுதியாக அதை மறுத்தனர்.
‘புதிய கலாச்சாரம் பத்திரிகை சமூக பிரச்சனைகளை உறுதியாக நேர்மையாக யாருக்கும் பயப்படாமல் விமரிசித்து முன் வைக்கும் பத்திரிகை. 30 ஆண்டுகளாக இப்படித்தான் வெளியாகிறது. தமிழ் நாடு எங்கும் பொது இடங்களிலும் பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்கிறார்கள். ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம் நடத்துவதற்குத்தான் போலீஸ் அனுமதி தேவை. இது போன்று பத்திரிகை விற்பதற்கு எந்த முன் அனுமதியும் தேவையில்லை’ என்றார்கள்.
உதவி ஆணையரோ, “அப்படின்னா, நீங்க விற்கும் போது அவங்க வந்து அடிக்கத்தான் செய்வாங்க, அப்போ பொறுப்பு எங்களுக்குத்தானே” என்று மடக்கப் பார்த்தார்.
“நீங்க ஒரு அதிகாரியா இருந்துட்டு இப்படிச் சொல்லக் கூடாது. பொது இடத்துல ரவுடித் தனத்தை கட்டுப்படுத்தத்தான் நீங்க இருக்கீங்க. நீங்க பாட்டாளி மக்கள் கட்சி குண்டர்களின் அவதூறு புகாரை வாங்கிக் கொண்டு தோழர்களை காலையிலிருந்து காவல் நிலையத்தில் காத்திருக்க வச்சிருக்கீங்க. அந்த குண்டர்கள் தோழர்களை அசிங்கமாகத் திட்டியதோடு இல்லாமல் கும்பலைச் சேர்த்துக்கிட்டு மிரட்டியிருக்காங்க. அதற்கான புகாரையும் வாங்கிக் கிட்டு அத்தாட்சி கொடுங்க.” என்று வாதாடினார்கள்.
இதற்கிடையில் ஒரு உதவி ஆய்வாளர் வந்து, “ஏன் சார், இதப் பெருசு படுத்துறீங்க! பேசாம ‘இப்படி பிரச்சனை வந்துட்டுது, எங்கள மன்னிச்சுக்குங்க, இனிமே இப்படி நடந்துக்க மாட்டோம்’னு எழுதிக் கொடுத்திட்டு போங்க. நீங்களும் நீளமா ஒரு புகார் எழுதணுமா” என்று ‘நட்பு’டன் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.
“எந்தத் தப்பும் செய்யாத நாங்க ஏன் மன்னிப்புக் கேட்கணும். அராஜகம் செய்த ரவுடிங்க மேலதான் புகார் பதிவாகணும். நாங்க சமூகத்துக்காக நியாயமான கருத்துக்கள பிரச்சாரம் செய்றோம். ரவுடிங்க புகாரை நீங்க வாங்கியிருக்கும் போது நாங்களும் புகார் கொடுக்கிறோம், வாங்கிக்கிட்டு அத்தாட்சி கொடுங்க” என்று சொல்லி தோழர்கள் நடந்த சம்பவங்களை எழுதி புகார் கடிதம் கொடுத்தார்கள்.
பின்னர் போலீசு தோழர்களின் செல்பேசி, மற்றும் பத்திரிகை விற்பனைப் பணம் ஆகியவற்றை முறையாக ஒப்படைத்தது.
இறுதியில் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சுமார் 4.30 மணியளவில் தோழர்கள் வெளியில் வந்தனர். தோழர்கள் வெளியே வந்தால் அடித்து நொறுக்குவதாக சபதம் போட்டு இனோவாவிலும், ஸ்கார்ப்பியோவிலும் வந்து குதித்த ஷத்திரிய குல வீரர்களில் ஒருவனைக் கூட காணவில்லை. கடைசியில் பா.ம.க குண்டர் படை, தோழர்களின் அணிதிரட்டலுக்கு பயந்து சொல்லாமல் கொள்ளாமல் அஞ்சி ஓடிக் கொண்டது.
‘வன்னிய மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை இழந்து, சாதி வெறியையும் கலவரங்களையும் தூண்டி விட்டு கட்சியை நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கும் ஓட்டுப் பொறுக்கி ராமதாசையும், அந்தக் கட்சியை அண்டிப் பிழைக்கும் ரவுடிக் கும்பல்களையும் எதிர்த்து உழைக்கும் மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்’ என்ற உறுதியோடு தோழர்கள் கலைந்தார்கள்.
___________________________ ஓவியம் – நன்மாறன் ___________________________
சென்னைக்கு அருகேயுள்ள பெருங்குடியில் கடந்த மாதம் 10-ஆம் தேதியன்று காலையில் சென்னை மாநகரப் பேருந்தும் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரியும் ஒன்றோடொன்று உரசிக் கொண்டதில், அப்பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்துவந்த நான்கு இளம் மாணவர்களின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டது; மேலும் மூன்று மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர்.
பதின் வயதைச் சேர்ந்த மனோஜ்குமார், விஜயன், பாலமுருகன், சேகர் என்ற இந்த நான்கு மாணவர்களின் சாவும் தமிழக அரசு பொதுப் போக்குவரத்தைத் தொடர்ந்து அலட்சியப்படுத்திவருவதன் விளைவாகத்தான் நடந்திருக்கிறது. வேண்டுமென்றே அலட்சியமாக நடந்துகொண்டு நான்கு உயிர்களைப் பறித்திருக்கும் தமிழக அரசு மீது கொலைக் குற்றம் சுமத்த வேண்டும். ஆனால், அரசு, முதலாளித்துவப் பத்திரிகைகள், போலீசு, நீதிமன்றம் என நம்மை ஆள்வோர் அனைவரும் ஒன்றாகக் கைகோர்த்துக் கொண்டு, இச்சம்பவத்தை ஏதோ எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட விபத்து போலவும், முக்கியமாக மாணவர்களின் சாகசக் கலாச்சாரத்தால் நேர்ந்துவிட்ட மரணமாகவும் சித்திரித்து, இறந்துபோன மாணவர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சென்னை மாணவர்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டனர்.
இந்தச் சம்பவம் நடந்தவுடனேயே, மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்து பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று திரும்பும் ஏழை மாணவர்கள் மீது அக்கறை கொண்டவனைப் போல, பொது போக்குவரத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விசாரணையைத் தானே முன்வந்து தொடங்கியது, உயர் நீதிமன்றம். அவ்விசாரணையின்பொழுது, “இந்த விபத்து நடந்த பழைய மகாபலிபுரம் சாலையில் காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் 95 பேருந்துகளை இயக்குகிறோம். ஆனால், மாணவர்கள் எப்போதுமே கடைசிப் பேருந்தில்தான் பயணிக்கின்றனர். மேலும், அவர்கள் படிக்கட்டில் பயணம் செய்யவே விரும்புகின்றனர்” என வாதிட்டார், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன்.
சாகசத்திற்காக அல்ல, பள்ளி-கல்லூரிக்குப் போவதற்காகப் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய நேரிட்டதால் உயிரைப் பறிகொடுத்த (இடமிருந்து) விஜயன், சேகர், பாலமுருகன், மனோஜ்குமார்
இது அடுக்கமாட்டாத பொய் என்பது தினந்தோறும் சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு மாணவனுக்கும், தொழிலாளிக்கும் தெரியும். ஆனால், ஏ.சி. காரிலேயே பங்களாவிலிருந்து நீதிமன்றத்துக்கும், அங்கிருந்து சீட்டுகிளப்புக்கும் பயணம் செய்யும் நீதிபதிகளுக்குத் தெரியவில்லை. எனினும், அவர்கள் புத்தியிலும் பதியும்படி சென்னை போக்குவரத்து தொடர்பாக சில புள்ளிவிவரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. “சென்னை மாநகரில் தினந்தோறும் 5,000 பேருந்துகளை இயக்குவதற்குத் தமிழக அரசு உரிமம் பெற்றிருந்தாலும், 3,300 பேருந்துகளை மட்டுமே இயக்குவதாகவும், இந்த 3,300-லும் 600 பேருந்துகள் தொழிலாளர் பற்றாக்குறையால் அடிக்கடி நிறுத்தப்படுவதாகவும்” அந்தப் புள்ளிவிவரம் கூறியது. மேலும், காரப்பாக்கம், சிறுசேரி, பெருங்குடி, அஸ்தினாபுரம் பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுவது படுமோசம் என்றும் அம்பலப்படுத்தியது, ஹிந்து நாளிதழ்.
இதுவொருபுறமிருக்க, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குறைவான கட்டணத்தில் ஓடும் சாதாரணப் பேருந்துகள் அதிகமாக இயக்கப்பட்டன. ஆனால், கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக, போக்குவரத்துக் கழகத்தின் நட்டத்தைக் குறைப்பது என்ற பெயரில், அநியாயக் கட்டணமுள்ள டீலக்ஸ் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு, வெள்ளை போர்டு பேருந்துகள் குறைக்கப்பட்டன. இலவச பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்கள் இந்த வெள்ளை போர்டு பேருந்துகளைத் தவிர, டீலக்ஸ் பேருந்துகளில் ஏறக்கூடாது என்ற கெடுபிடியும் உருவாக்கப்பட்டது. இப்படிக் குறைவாகப் பேருந்துகள் இயக்கப்படுவதால், 73 பேர் (48 பேர் அமர்ந்துகொண்டும், 25 பேர் நின்றுகொண்டும்) மட்டுமே பயணம் செய்ய வேண்டிய பேருந்தில் நெரிசல் நேரங்களில் 150 பேர் வரை பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தக் கூட்ட நெரிசல்தான் மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் படிக்கட்டுப் பயணத்தைத் திணிக்கிறது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் பணக்கார, நடுத்தர வர்க்க மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு கார், ஆட்டோ, டூ வீலர், பள்ளிப் பேருந்து எனப் பல வாய்ப்புகள் உள்ளன. ஆனால், வீட்டிலிருந்து தொலைதூரத்திலுள்ள பள்ளிக்கும் கல்லூரிக்கும் போவதற்கு மாநகரப் பேருந்தை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை மாணவனுக்கு உயிரைப் பணயம் வைத்துப் படிக்கட்டில் தொங்க வேண்டியதுதான் விதிக்கப்பட்டிருக்கிறது. நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகளைத் துரத்திக்கொண்டு போய் ஏற வேண்டிய கட்டாயம் அவன் தலைக்கு மேல் தொங்குகிறது.
படிக்கட்டில் பயணம் செய்வது போக்குவரத்து விதிமுறைகளுக்கு எதிரானது; உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடியது என்பது ஒவ்வொரு மாணவனுக்கும் தெரியாதா என்ன? ஆனால், நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த விதிமுறையை மீறாமல், உயிரைப் பணயம் வைக்கும் சாகசத்தில் இறங்காமல் வேறென்ன செய்ய முடியும்?
‘‘நாங்கள்லாம் உள்ளே போக ஆரம்பிச்சோம்னா கேர்ல்ஸ்ங்க, வயசானவங்க இவங்கள்லாம் ஃபுட்போர்டு அடிக்க வேண்டியிருக்கும்ணே. அடிக்கடி பசங்க ஃபுட்போர்டு அடிக்கிற மாதிரி பத்திரிகையில ஃபோட்டா போடுறீங்களே, காலியா இருக்குற பஸ்ல நாங்க ஃபுட்போர்டு அடிக்கற மாதிரி ஒரு போட்டாவை காண்பீங்க” என நக்கீரன் இதழ் நிருபரிடம் ஜெயக்குமார், கார்த்திக் என்ற இரு மாணவர்கள் கேட்டுள்ளனர்.
படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் மாணவர்கள் மீது மட்டுமா சுமத்தப்படுகிறது? சென்னை நகரில் ஓடும் மின்சார ரயில்களில் நெரிசல் நேரங்களில் நடுத்தர வயதினர்கூடத் தொங்கிக்கொண்டு போவதைப் பார்க்க முடியும். நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் படிக்கட்டில் மட்டுமல்ல, கூரை மீது உட்கார்ந்துகொண்டு பயணிகள் செல்வதையும் சர்வசாதாரணமாகப் பார்க்க முடியும். இவர்களையெல்லாம் சாகசம் செய்கிறார்கள் என மனம் போன போக்கில் குற்றஞ்சுமத்த முடியுமா?
அரசு, அருகாமைப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் ஒழிந்துவிடும் – எனக் கல்வியாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். லாரி இடித்து நசுங்கிச் செத்துப் போன இந்த நான்கு மாணவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களது குடும்பங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரத்தினுள் குடியிருந்து வந்தன. நகரத்தை அழகுபடுத்துவது, அடிக்கட்டுமானத்தை மேம்படுத்துவது, குடிசைகளை ஒழிப்பது – எனப் பல்வேறு சால்ஜாப்புகளைச் சொல்லி, அந்த நான்கு மாணவர்களின் குடும்பங்களை மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான அடித்தட்டு மக்களின் குடும்பங்களை நகரத்திற்கு வெளியே துரத்தியடித்தது, அரசு.
இப்படி அரசால் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்துவரும் செம்மஞ்சேரி, பெருங்குடி, கண்ணகி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, போக்குவரத்து – என எந்தவொரு வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் இங்கு வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ள குடும்பங்கள் வேலைக்கும், கல்விக்கும் பல கிலோமீட்டர் பயணம் செய்து நகரத்தின் மையத்திற்கு வந்து போவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
அருகாமைப் பள்ளிகளைத் தொடங்கியிருந்தால், சாதாரணப் பேருந்துகளின் எண்ணிக்கையையும் தரத்தையும் மேம்படுத்தியிருந்தால், சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் படிக்கட்டு பயணத்தையும் அதனால் ஏற்படும் அநியாயச் சாவுகளையும் ஒழித்துவிட முடியும். ஆனால், தனியார்மயம்-தாராளமயம் என்ற பொருளாதாரக் கொள்கை இந்த இரண்டுக்குமே எதிராக இருக்கிறது. தனியார் பள்ளி முதலாளிகளின் இலாபத்திற்காக அரசுப் பள்ளிகள் ஒழிக்கப்படுகின்றன. இந்தியாவிற்குள் நுழைந்துள்ள பன்னாட்டு மோட்டார் கம்பெனிகளின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது கைகழுவப்படுகிறது.
பொதுப் போக்குவரத்தை ஒழித்துக்கட்டி வரும் தனியார்மயம்-தாராளமயம்தான் மனோஜ்குமார், விஜயன், பாலமுருகன், சேகர் என்ற இந்த நான்கு மாணவர்களின் உயிரைக் குடித்திருக்கிறது; இந்தத் தனியார்மயம்-தாராளமயம்தான் மாணவர்களின் இலவசக் கல்வி உரிமையைப் பறித்து வருகிறது. இந்தத் தனியார்மயம்-தாராளமயம்தான் விவசாயத்தை நாசப்படுத்தி, விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவருகிறது; இந்தத் தனியார்மயம்-தாராளமயம்தான் தொழிலாளர்களின் உரிமைகளையும், வேலைவாய்ப்பையும் தட்டிப் பறிக்கிறது; வறுமையையும் ஏழ்மையையும் தீவிரப்படுத்துகிறது. எனவே, இந்த நான்கு மாணவர்களின் மரணத்தை ஏதோ தனித்ததொரு அசம்பாவிதம் போலப் பார்க்க முடியாது; கூடாது என உணர வேண்டும்.
இந்த உண்மைகளையெல்லாம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏறெடுத்துப் பார்க்கவோ, காது கொடுத்துக் கேட்கவோ தயாராக இல்லை. மாறாக, “பேருந்து படிக்கட்டில் இரண்டு முறைக்கு மேல் பயணம் செய்தால், பள்ளி, கல்லூரியை விட்டு மாணவனை நீக்க வேண்டும்” என அதிரடியாகத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். நீதிபதிகள் என்றால் மெத்தப் படித்த அறிவாளிகள் என நம் மீது ஒரு கற்பிதம் திணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்களோ குரூரமும் கோமாளித்தனமும் நிறைந்த பாசிஸ்டுகள் என இந்த உத்தரவின் மூலம் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டுவிட்டனர்.
————————–
கடந்த டிசம்பர்-3 அன்று இரவு, கோத்தகிரியிலிருந்து கொட்டகம்பை என்ற ஊருக்குப் புறப்பட்ட மினி பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கோத்தகிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிப்பதற்கேற்ப போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், குற்றுயிரும் கொலையுயிருமாய் கிடந்தவர்களை அருகிலுள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்த மினி பேருந்துகளை அதிவேகத்தில் இயக்கச் சொல்லி நிர்பந்திக்கும் முதலாளிகளின் இலாபவெறியே, நடைபெற்ற விபத்துக்கும் உயிர்ப்பலிக்கும் காரணம் என்பதை அம்பலப்படுத்தியும், இதுபோன்று அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி வருகின்ற “மினி பேருந்துகள் அனைத்தையும் அரசுடமையாக்கு! கோத்தகிரி அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்து!!” என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் பகுதி உழைக்கும் மக்களிடம் பிரச்சாரம் செய்து, 07.12.2012 அன்று ஒருநாள் பகுதி அளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது, இப்பகுதியில் செயல்பட்டு வரும் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்.
முதலில் முழுநாள் கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்த கோத்தகிரி வட்டார அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைமை, மினி பேருந்து முதலாளிகளின் அழுத்தம் காரணமாக கடையடைப்புக்கு தந்த ஆதரவை பின்னர் விலக்கிக்கொண்டது. வியாபாரிகள் சங்கத் தலைமையை அம்பலப்படுத்தி உடனடியாக பிரசுரம் தயாரித்து அனைத்து வியாபாரிகளிடமும் விநியோகித்து முழுநாள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவைத் திரட்டியது, நீ.அ.தொ.சங்கம்.
வியாபாரிகள் சங்கத் தலைமை கடைகளைத் திறக்குமாறு மிரட்டல் விட்ட போதிலும், அதிகாரவர்க்கமும் போலீசும் நீ.அ.தொ.சங்கம் நக்சலைட் அமைப்பு என்று பீதியூட்டிய போதிலும் வணிகர்கள் முழுநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விபத்தில் பலியானோர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வியாபாரிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
நீ.அ.தொ.சங்கத்தின் நியாயமான கோரிக்கைகள் இப்பகுதிவாழ் உழைக்கும் மக்களின் பேராதரவைப் பெற்ற முழக்கமாக மாறியிருக்கிறது. இவ்விபத்துக் குறித்து இதுவரை வாய்திறக்காத ஓட்டுக்கட்சிகளையும் வேலை செய்ய வைத்திருக்கிறது, இப்போராட்டம். – தகவல்: நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம், கோத்தகிரி.
______________________________________________________ – புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
______________________________________________________
இப்படி ஒரு வேலைக்கு ஆண்டுக்கு ரூ 1.25 கோடி சம்பளம் என்றால் எப்படி இருக்கும்?
காலை 9 மணி அலுவலகத்துக்கு வந்து ரெட்இட் தளத்தை படிக்க வேண்டும். சில பூனை வீடியோக்களை பார்க்க வேண்டும்
காலை 11.30 மணி மதிய உணவு இடைவேளை
மதியம் 1 மணி ஈபே நேரம்
மதியம் 2 மணி பேஸ்புக், லிங்க்ட்-இன்
மாலை 4.30 மணி நாள் இறுதி அறிக்கை நிர்வாகத்துக்கு அனுப்புதல்
மாலை 5 மணி வீட்டுக்கு
இப்படி ஒரு கனவு வேலை எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. ஆனால் சுயமுனைப்பு இருந்தால் அப்படி ஒரு வேலையை உருவாக்கிக் கொள்ளலாம். சில ஆண்டுகளாக இப்படி வேலை செய்து வந்த “பாப்” என்பவரைப் பற்றிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவின் பிரபல தொழில் நுட்ப நிறுவனமான வெரிசான்.
ஆம், 40களின் நடுவிலான வயதுடைய “பாப்”, அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிர்வாக சேவை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவரது ஆண்டு சம்பளம் $250,000 (சுமார் ரூ 1.25 கோடி). சற்றே வேலைப் பளு அதிகம் தான். ஆனால் “பாப்” இதை எளிமையாக கையாண்டார்.
“பாப்” வேலை செய்த நிறுவனம் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு வசதியாக வி.பி.என். எனப்படும் மெய்நிகர் தனியார் இணைப்புச் சேவை (VPN)யை இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தியிருந்தது. நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவு மே 2012ல் அந்த சேவை தொடர்பான கணினி பதிவுகளை ஆய்வு செய்ததில் சீனாவில் இருக்கும் ஷென்யாங்கிலிருந்து இந்த வசதி பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது.
அதற்கு பயன்படுத்தப்பட்டிருந்த கணக்குக்கு உரிமையாளரான “பாப்” அலுவலகத்தில் கணினி திரையை நோக்கி தனது இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் C, C++, பெர்ல், ஜாவா, ரூபி, பி.எச்.பி., பைதான் போன்ற கணினி மொழிகளில் நிபுணர். நிறுவனத்தில் நீண்ட காலம் பணி புரிபவர். யாரையும் தொந்தரவு செய்யாத அமைதியான குடும்பப் பாங்கான மனிதர். அவருக்கு செல்லமாக “பாப்” என்று பெயர் சூட்டியிருக்கிறது வெரிசான்.
‘”பாப்”பின் கணினியில் புகுந்துள்ள ஏதோ ஒரு திருட்டு நிரல் மூலம் யாரோ சீனாவிலிருந்து தங்களது கணினி வலைக்குள் நுழைந்து விட்டார்கள்’ என்று அதிர்ச்சியடைந்த நிறுவனம் இதைப் பற்றி ஆராய்ந்து சரி செய்ய வெரிசான் ஆய்வாளர்களை உதவிக்கு அழைத்தது.
வெரிசானின் ஆய்வில், ‘சீனாவிலிருந்து வி.பி.என் பயன்படுத்தப்படுவது புதிதாக நடக்கவில்லை’ என்று தெரிந்தது. கைவசம் இருந்த 6 மாத கணினி பதிவுகளின் படி குறைந்த பட்சம் 6 மாதங்களுக்கு இது நடந்து வந்திருக்கிறது. “பாப்”பின் கணினியில் ஏதாவது நச்சு நிரல் புகுந்திருக்கிறதா என்று ஆய்வு செய்தது வெரிசான். அதற்காக கணினியில் அழிக்கப்பட்டு ஆனால் இன்னும் மறுபடியும் பயன்படுத்தப்படாத சேமிப்பிலிருந்து அழிக்கப்பட்ட பழைய கோப்புகளை மீட்ட போது ஷென்யாங்கில் இருக்கும் ஒரு சீன நிறுவனத்துக்கு அனுப்பிய நூற்றுக் கணக்கான இன்வாய்ஸ்களை கண்டுபிடித்தது வெரிசான்.
அதாவது, “பாப்” அவருக்குக் கொடுக்கப்படும் வேலையை சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்துவிட்டார்- அந்த வேலையைச் செய்ய வருடத்திற்கு $50,000 (சுமார் ரூ 25 லட்சம்) சீன நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார்.
இதனால் நிறுவனத்துக்கு நடக்க வேண்டிய வேலைகளில் எதுவும் பாதிப்பில்லைதான். கடந்த பல ஆண்டுகளாக அவருக்கு மிகச் சிறந்த மதிப்பீடுகள் கிடைத்திருக்கின்றன. அவரது நிரல்கள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தன; தெளிவாக இருந்தன; நேரத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு காலாண்டிலும் அவர் அந்த அலுவலகத்தின் மிகச் சிறந்த நிரலாளர் என்று பாராட்டப்பட்டிருந்தார்.
வங்கியை கொள்ளையடிக்கும் கொள்ளைகாரனிடம் பிக்பாக்கெட் அடித்த திருடனின் கதைதான் “பாப்”பின் கதை. வரும் சம்பளத்தில் கொஞ்சம் அங்கே கொடுத்து வேலையை முடித்துக் கொடுத்தார். சிறந்த, திறமையான பணியாளர் என்று பெயரும் கிடைத்தது. நியாயமாக பார்த்தால் “பாப்”புக்கு பதவி உயர்வு கொடுத்து அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆக்கி இருக்க வேண்டும். ஆனால், முதலாளித்துவ அறம் இதை குற்றம் என்கிறது. வெரிசானின் இந்த கண்டுபிடிப்புக்குப் பிறகு “பாப்” வேலை நீக்கம் செய்யப்பட்டார்.
பாப் இந்த உத்தியை தானாக கண்டுபிடிக்கவில்லை. உலகமயமாக்கல் காலகட்டத்தில் குறைந்த கூலிக்கு வெளிநாடுகளில் வேலைகளை செய்து வாங்குவதை முதலாளித்துவ நிறுவனங்கள்தான் அவருக்கு கற்றுக்கொடுத்திருந்தன.
இந்த சம்பவத்தைப் பற்றி விசாரணை செய்த வெரிசானின் வேலன்டைன் என்ற அதிகாரி ‘”பாப்” போல இன்னும் பலர் இது போன்று செயல்படுவதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும்’ சொல்லியிருக்கிறார். சீனாவிலிருந்து நேரடியாக அலுவலகத்தில் இணைக்கச் சொல்லாமல் தனது வீட்டுக் கணினி மூலமாக வழி நடத்தியிருந்தால் “பாப்” கூட பிடிபடாமல் தப்பித்திருந்திருக்கலாம்.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஊழியர்களுக்கு சரியான கூலி, 8 மணி நேர வேலை, ஊக்கத் தொகை, வசதியான வேலைச் சூழல் மற்றும் இதர சலுகைகள் கொடுக்க வேண்டும். ஊழியர்கள் ஒன்று சேர்ந்து போராடி விடக் கூடாது என்பதற்காக பல சலுகைகளை கொடுத்து உழைக்கும் வர்க்கத்தை அமைதிப்படுத்தி வைத்திருக்க வேண்டியிருந்தது. கம்யூனிசம் வந்து விடக் கூடாது என்று உழைப்பவர்களுக்கு வசதிகளை கொடுத்து வைத்திருந்தால் போராட்டங்களையும் புரட்சியையும் தவிர்த்து விடலாம். ஆனால் முதலாளித்துவத்தின் புனிதமான லாப வேட்டைக்கு அது மிகப்பெரிய ஆப்பாக இருந்தது.
அதைத் தாண்டுவதற்கு உலகமயமாக்கல் முதலாளிகளுக்கு உருவாக்கிக் கொடுத்த வழி, ‘குறைந்த கூலிக்கு, மோசமான பணிச் சூழலில், அடிமைகளைப் போல், நேரம் காலம் பார்க்காமல் உழைக்க, வளரும் நாடுகளில் இருக்கும் மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி தேவையான வேலைகளை செய்து வாங்கிக் கொள்வது.’ அமெரிக்காவில் ஒரு சேவையை உருவாக்கும் செலவில் பல மடங்கு குறைவாக சீனாவிலோ, இந்தியாவிலோ, ஆப்பிரிக்காவிலோ வேலையை முடித்து வாங்கி விடலாம். கிளம்பினார்கள் முதலாளிகள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேலைகள் குறைந்தன, சீனாவிலும் இந்தியாவிலும் மனிதத்தன்மை குறைந்தது. முதலாளிகளின் உற்பத்தியும் லாபமும் உயர்ந்தது.
பன்னாட்டு நிறுவனங்களின் அவுட்சோர்சிங்கை கிண்டல் செய்து ஆனியன் இணைய தளம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீடியோவை தயாரித்திருந்தது.
அந்தக் கேலி படத்தை நடைமுறையாக மாற்றியதுதான் “பாப்”பின் திறமை. இதையே அந்த நிறுவனம் செய்திருந்தால் அது பொருளாதாரத் திறமை. “பாப்” செய்ததால் துரோகம். அந்த நிறுவனம் இனி வரும் காலத்தில் ருசிகண்ட பூனையாக, தானே இதைத் தான் செய்யப் போகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் தமது பெருமளவு லாப வேட்டைக்காக நடத்தும் சுரண்டலைப் போல “பாப்” சிறு அளவில் சுரண்டி இருக்கிறார். அழுகிப் போயிருக்கும் முதலாளித்துவம் தன் அழுகிய காயங்களை வெளியே காட்டிகொண்டிருகிறது. பாப் அந்த அழுகலின் ஒரு பக்கம் மட்டும்தான்.
‘கம்யூனிச சமூகத்தில் எல்லோரும் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள்’ என்று அவதூறு பேசினர் முதலாளித்துவ நிபுணர்கள். பொதுவுடமை சமூகத்தில் உழைப்பின் மீதான சலிப்பு ஒழிக்கப்பட்டு ஒவ்வொரு தனிமனிதரும் தனது திறமையை ஆகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தி உழைப்பை ரசித்து செய்வதற்கான சமூகச் சூழலும் அந்த சமூக உழைப்பின் விளைவுகள் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பலன் அளிப்பதாகவும் இருக்கும். ஆனால் முதலாளித்துவ சமூகத்திலோ பிறரின் உழைப்பை சுரண்டி சுயநலமாகவும் சோம்பேறியாகவும் வாழ்பவர்கள்தான் செழிக்கிறார்கள்.
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 27
“இன்று இந்துக்கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை, பாரம்பரியம், புனிதநூல்களைத் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் கிண்டல் பண்ணுகிறார்கள். கிறித்தவ பாதிரிகள், முசுலீம் மௌல்விகள் என்றால் பெரிய மகாத்மா போலவும், கோயில் பூசாரிகள் – இந்துத் துறவிகள் கயவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். எனவே வானொலி, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் இந்துக்களை இழிவுபடுத்தும் எந்தக்கருத்தும் வராமல் தடை செய்ய வேண்டும். அதனைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.”
இந்து தர்மம், பண்பாட்டை யாரும் வெளியிலிருந்து மெனக்கெட்டு கிண்டல் பண்ணத் தேவையில்லை; வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், ஸ்ருதிகள், ஸ்தோத்திரங்கள் இவற்றையெல்லாம் இந்து முன்னணியே மலிவு விலையில் அச்சடித்து வெளியிட்டாலே போதும். கடவுளர்கள் உருவான கதை, ஊடல் – கூடல் -ஆபாசங்கள், தேவலோக அழகிகளான ரம்பா – ஊர்வசி – மேனகைகளிடம் கடவுள்களும், முனிவர்களும் மயங்கிய கதைகள், அய்யப்பன் – விநாயகர் பிறந்த கதைகள் இன்ன பிறவற்றையெல்லாம் மக்கள் தெரிந்து கொண்டு ‘ப்பூ இந்து தர்மம் இதுதானா’ என்று ஒதுக்கி விடுவாரகள். அப்படித் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்து மதவெறியர்களும் – உபந்நியாசம் செய்பவர்களும் இந்து தர்மம் – பண்பாடு பற்றி பூடகமாகவும் தமிழ்ச் சிறு பத்திரிகைகளின் புதுக்கவிதை பாணியில் புரியாமலும் பேசி வருகிறார்கள்.
”நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே, சுற்றி வந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ” என்று சித்தர்கள் அன்று கேட்டார்கள். புத்தர், மகாவீரர், சார்வாகர், நியாயவாதிகள், மீமாம்சவாதிகள், பூதவாதிகள் என்று பார்ப்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய அனைவரும் ‘இந்து தர்மத்தை’ புரியும்படி மக்களிடம் விளக்கியதற்காகவே ஒடுக்கப்பட்டார்கள். அவர்களுடைய இலக்கியங்களும் பெருமளவு அழிக்கப்பட்டன.
தற்காலத்தில் அம்பேத்கரும், பெரியாரும் இதைச் செய்ததற்காகவே இந்து மதவெறியர்களால் கேவலமாக ஏசப்படுகிறார்கள். ”எல்லாம் இறைவன் செயல் என்றால் கொலை கொள்ளை எவன் செயல்?” என்ற திராவிடர் கழகப் பிரச்சாரத்திற்கு, ‘எல்லாம் மனிதச் செயல் என்றால் ஈ.வெ.ராவிற்கும் மணியம்மைக்கும் குழந்தையில்லையே ஏன்?’ என்று இந்து முன்னணி தனது வெளியீடு ஒன்றில் பதிலளித்திருக்கிறது. இதுபோக ‘பெரியாரைக் கொளுத்துவோம்’ என இராம.கோபாலன் பகிரங்கமாக அறிவிக்க முடிகிறது என்றால் அதன்பின்னே வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் டன் கணக்கில் உள்ளது.
ஆகவே, ‘இந்து தர்மத்தை’ அம்பலப்படுத்தும் அதாவது இழிவுபடுத்தும் அனைவரும் இன்றுவரை ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே வரலாறு காட்டும் உண்மை. ‘இந்து தர்மத்தை’ விமரிசிப்பதற்கெதிரான தடை ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஏதோ புதிதாக விதிக்க வேண்டும் என இந்து முன்னணி கோருவதன் பொருள் தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான்.
அடுத்து வானொலி – வானொளியில் இந்து மதம் இழிவுபடுத்துப்படுகிறது என்பது உண்மையா? நிச்சயம் கிடையாது.
இந்நாட்டு உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தின் புராணப் புரட்டுக்கள்தான் தொடர்ந்து ஒலி-ஒளி ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இராமானந்த சாகரின் இராமாயணம், சோப்ராவின் மகாபாரதம், சாணக்கியன், ஸ்ரீகிருஷ்ணா, ஜெய் அனுமான், சிவமகாபுராணம் முதலான ஏராளமான புராணக் கதைகள் தூர்தர்சனிலும், தனியார் அலைவரிசைகளிலும், இந்தி மற்றும் தேசிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டும் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. தீபாவளி, ஓணம், ஹோலி, ரக்சாபந்தன், விநாயகர் சதுர்த்தி, இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, வருடப்பிறப்பு போன்ற இந்துப் பண்டிகை நாட்களில் சங்கராச்சாரி அருளுரையுடன் துவங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏனைய மதப் பண்டிகைகளுக்குக் கிடையாது.
மேலும் விநாயகர் ஊர்வலம் பம்பாயிலிருந்தும், கிருஷ்ண ஜெயந்தி மதுராவிலிருந்தும், தியாகய்யர் உற்சவம் திருவையாற்றிலிருந்தும், அமர்நாத் யாத்திரை ஜம்முவிலிருந்தும், ஜெகந்நாதரின் தேரோட்டம் பூரியிலிருந்தும், தசரா ஊர்வலம் மைசூரிலிருந்தும், காளி பூஜை கல்கத்தாவிலிருந்தும், சூரசம்ஹாரம் திருச்செந்தூரிலிருந்தும், ஓணம் ஊர்வலம் திருவனந்தபுரத்திலிருந்தும், மகர விளக்கு ஐயப்பன் கோவிலிலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. குடமுழுக்கு, தேரோட்டம் போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகள் வானொலி மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. இவைகளுக்காகப் பலகோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஒலி – ஒளிபரப்பு நேரங்கள் ஒதுக்கப்படுகின்றன. இத்தகைய சலுகை ஏனைய மதங்களுக்குக் கிடையாது. மேலும் ராமனைக் கசிந்துருகும் கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளானாலும் சரி, மாணவர்களின் தமிழ்ப்பாட நூலின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் இடம் பெறும் திருவாசகமானாலும் சரி பார்ப்பனியத்திற்குத் தரப்படும் முக்கியத்துவத்தில் நூற்றிலொரு பங்கு கூட முசுலீம் – கிறித்தவ மதங்களுக்குக் கிடையாது.
காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி உயிர் துறந்த இந்திய அரசர்களில் முதன்மையானவன் திப்பு. அவன் பிறப்பினால் ஒரு முசுலீம் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். கும்பல் திப்புவைக் கட்டோடு வெறுக்கிறது. ‘திப்பு சுல்தான்’ தொடரை ஒளிபரப்பியதற்காக பல தூர்தர்சன் நிலையங்கள் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டன. அதன்பிறகு தொடருக்கு முன்னால் ”இது உண்மைக் கதையல்ல, கற்பனைச் சம்பவங்கள் நிறைந்தவை” என்ற அறிவிப்போடு பல சமரசங்களுடன்தான் திப்புவின் தொடர் ஒளிபரப்பானது. ”திப்புவின் வரலாறு பொய், இராமாயணம் உண்மை” என்று வரலாற்றையே இந்த மதவெறியர்களால் புரட்டிப் போட முடிகிறது என்றால் இந்த முட்டாள்தனத்தை தாலிபான்களின் ஆட்சியில் கூடக் காண முடியாது.
’47 பிரிவினையின் போது நடந்த இந்து – முசுலீம் கலவரப் பின்னணியை வைத்துத் தயாரிக்கப்பட்ட ‘தமஸ்’ தொடரையும் இந்துமத வெறியர்கள் எதிர்த்தனர். பார்ப்பன இந்து மதம் விதவைகளை எப்படிக் கேடாக நடத்துகிறது என்பதைக் கருவாகக் கொண்ட தீபாமேத்தாவின் ‘வாட்டர்’ படப்பிடிப்பையே ஆர்.எஸ்.எஸ். கும்பல் தடை செய்திருக்கிறது. சரஸ்வதியை உள்ளபடி நிர்வாணமாய் வரைந்தார் என்பதற்காக ஓவியர் எம்.எப். உசைனைத் தாக்கியதும் இவர்கள்தான்.
இந்தியாவின் திரையுலகமும் கூட பார்ப்பனியத்தின் பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொண்ட ஊதுகுழலாகத்தான் இருக்கின்றது.
இந்தித் திரையுலகைக் கட்டுப்படுத்துவது பால்தாக்கரேவின் சிவசேனா கும்பல்தான். ‘ரோஜா’ படத்தில் காசுமீர் முசுலீம் மக்களைக் கேவலப்படுத்திய மணிரத்தினம், ‘பம்பாய்’ படத்திலும் முசுலீம்களைக் கலவரக்காரர்களாக உண்மைக்கும் புறம்பாகச் சித்தரித்ததனாலேயே தாக்கரேயின் பாராட்டையும், அனுமதியையும் பெற்றார். மணிரத்தினத்தின் இத்தகைய படங்கள் தூர்தர்சனின் ஏதோ ஒரு அலைவரிசையால் மாதந்தோறும் இப்போதும் திரையிடப்படுகிறது. பாகிஸ்தான் எதிர்ப்பை வைத்து முசுலீம்களை பயங்கரவாதிகளாக – வில்லன்களாகக் காட்டும் படங்கள் தற்போது ஏராளம் வருகின்றன. முசுலீம்களையும், கம்யூனிஸ்டுகளையும் கேவலப்படுத்தி ஹாலிவுட்டில் 80-களில் வந்த படங்களின் போக்கிற்கு இணையானது இது.
விஜயகாந்த், அர்ஜுன் போன்றோரது ‘தேசபக்தி’ப் படங்களிலும், தெலுங்கின் மசாலாப் படங்களிலும், அவ்வளவு ஏன் கடவுளைக் கேலி செய்து வெளிவந்த வேலுபிரபாகரனின் ‘புரட்சிக்காரன்’ படத்திலும் ‘பின்லேடன்’தான் வில்லன். தாடியும், குர்தாவும், கண்களில் தெறிக்கும் வெறியும் கொண்ட முசுலீம் பயங்கரவாதிகளாய் இவர்கள் காட்டப்படுகிறார்கள். மேலும் முசுலீம் கிறித்தவப் பெயர் கொண்டவர்களே கடத்தல்காரர்களாகவும், சட்ட விரோதத் தொழில் செய்பவர்களாகவும் திரைப்படத்தில் தோன்றுவது இந்தியத் திரை மரபாகவே நிலைபெற்று விட்டது. பார்ப்பனியத்தின் பண்பாட்டை ஆதரிப்பவரே நல்ல முசுலீம் – கிறித்தவராகத் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்றனர்.
திராவிட இயக்கத்தின் தூண்டுதலில் வந்த எம்.ஆர்.இராதாவின் (பார்ப்பனியத்தின் சமூக விரோதத் தன்மையை எதிர்த்து வந்த) படங்களும், நாடகங்களும், கல்லடியும், சொல்லடியும் எதிர்கொண்டே மக்களிடம் சென்றன. இவரைத் தவிர்த்த ஏனைய கலைஞர்கள் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சமரசத்திற்கிணங்க பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டவர்களாகி விட்டனர். தி.மு.க.வின் முன்னாள் கொ.ப.செ.யான ராஜேந்தர் தீவிரமான ஆஞ்சநேய பக்தர், பக்திப் படங்களை மாதம் ஒன்று என எடுத்துத் தள்ளும் இராம நாராயணன் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
தன் மகனுக்கு ‘பிரபாகரன்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தவரும், தனது ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் பாராட்டியதைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவருமான நடிகர் விஜயகாந்த், ஒரு மாதிரி தேசியம் கலந்த தமிழ்ப் பற்றாளனாகக் காட்டிக் கொள்பவர். ‘கள்ளழகர்’ தொடங்கி பின்னர் வெளிவந்த ‘நரசிம்மா’ வரை இராம.கோபாலனுக்குப் போட்டியாகப் பேச ஆரம்பித்திருக்கிறார் விஜயகாந்த். ‘நரசிம்மா’ படத்தில் ”இந்தியாவில் ஒரு முசுலீம், ஜனாதிபதியாக, கிரிக்கெட் காப்டனாக மாறமுடியும், உங்க பாகிஸ்தானில் ஒரு இந்து வரமுடியுமா? இங்கே ஏராளம் மசூதிகள் கட்ட முடியும், உங்க பாகிஸ்தானில், இந்துக் கோவில்கள் கட்ட முடியுமா?” என்று ஒரு காசுமீர் முசுலீம் ‘தீவிரவாதியிடம்’ விஜயகாந்த் வாதிடுகிறார்.
எனவே, தமிழ்த் திரையுலகின் மணிரத்தினம், விசு, பாலசந்தர், ஜீ.வி., சங்கர், கமலஹாசன், பாலகுமாரன், சுஜாதா, வாலி போன்ற பார்ப்பனர்களானாலும், விஜய்காந்த், பாரதிராஜா, எஸ்.தாணு, இளையராஜா, வைரமுத்து போன்ற சூத்திர – பஞ்சமர்களானாலும் சரி, ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து தேசபக்த – பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொண்டவர்கள்தான். பிரபல பின்னணிப் பாடகியான சித்ரா சென்னை ஆர்.எஸ்.எஸ். குரு பூஜையில் வருடந்தோறும் பாட்டுப் பாடுகிறார். கௌதமி, எஸ்.வி.சேகர், விசு, விஜயசாந்தி, சத்ருகன்சின்ஹா, விக்டர் பானர்ஜி என இந்திய அளவில் திரை நட்சத்திரங்கள் பா.ஜ.க.வில் குவிந்து கிடக்கின்றனர். இராமாயணத் தொடரில் இராமன், சீதையாக நடித்த நடிகர்கள் கூட பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
அரசியல் மற்றும் மக்களின் போராட்டங்களைப் பதிவு செய்யும் ‘டாக்குமென்டரி’ பட உலகிலும் இந்து மதவெறியர்களை எதிர்த்து ஏதும் செய்ய இயலாது.
அத்வானியின் ரத யாத்திரையை வைத்து இந்து மதவெறியர்கள் நடத்திய ‘ராமஜென்ம பூமி’க் கலவரங்களைப் பதிவு செய்து ‘கடவுளின் பெயரால்’ என்ற ஆவணப் படத்தின் மூலம் அம்பலப்படுத்தியவர் ஆனந்த் பட்வர்த்தன. அந்தப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடாது என்ற அரசு உத்தரவை முறியடிக்க அவர் 8 ஆண்டுகள் நீதிமன்றத்தில் போராட வேண்டியிருந்தது. அதேபோல ரூப் கன்வர் என்ற இளம் பெண்ணை உடன்கட்டையேற்றிக் கொன்ற பார்ப்பனியத்தின் பயங்கரவாதத்தைப் பதிவு செய்து ஒரு குறும்படமாக்கிய 5 பெண் பத்திரிகையாளர்களுக்கும் அதே நிலைமைதான். போலீசு நடத்திய வெறியாட்டத்திற்குப் பிறகு, கொடியங்குளத்தின் அவலத்தை வீடியோவில் பதிவு செய்து தாழ்த்தப்பட்ட மக்களிடம் திரையிட்டது ‘புதிய தமிழகம்’ கட்சி. அதைக்கூட தடை செய்ய வேண்டும் என்று கூக்குரலிட்டவர் இந்து முன்னணி இராம.கோபாலன்.
இப்படி காட்சி ஊடகத்தில் மட்டுமல்ல, செய்தி ஊடகத்திலும் பார்ப்பனியமே தலைதூக்கித் துரத்துகிறது. இந்தியாவின் அநேக மாத, வார, நாளிதழ்கள் பார்ப்பன – மேல்சாதியினரிடமே இருப்பதால் இந்து மீட்புவாதத்திற்கும், பிற்போக்குத் தனங்களுக்கும் கோட்டையாக அவை விளங்குகின்றன. ஜாதகம், ஜோசியம், நல்ல நேரம், வார – மாத ராசி பலன்கள், சாமியார்களின் அருளுரைகள், கோவில் யாத்திரைகள் எல்லாம் இந்தப் பத்திரிகைகளில் நிரம்பி வழியும். எல்லா மதத்தினரும் வாங்கிப் படிக்கும் குமுதம், விகடன் வகையறாக்கள் தீபாவளிக்கு மூன்று புத்தகங்கள் வெளியிடும். ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்காக மூன்று பக்கங்களைக் கூட அதிகரிக்காது.
உள்நாட்டு – வெளிநாட்டு சினிமா கிசுகிசுக்கள் நிரம்பி வழியும் தினமலரின் வாரமலர் பக்கங்களில் கீழே ராமகிருஷ்ண பரமஹம்சரது பொன்மொழிகள் தவறாமல் இடம் பெறும். ‘பொய்யே உன் பெயர்தான் தினமலரா’ என்பதற்கேற்ப தமிழகம் முழுவதும் ஜெலட்டின் குச்சிகளும், ஐ.எஸ்.ஐ. உளவாளிகளும் நிரம்பி வழிவதாக இப்போதும் கூசாமல் எழுதுகிறது தினமலர். பா.ஜ.க.வின் அரசியலை ஆதரிப்பதற்குத் தனது தலையங்கப் பக்கத்தையே ஒதுக்கியுள்ளது தினமணி. தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து, இந்தியாடுடே போன்ற பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களில் பலர் ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள்தான்.
இந்து மதவெறியர்களுக்கு நேரடிப் புரவலராக இருக்கும் தினமலர், பார்ப்பனியத்தின் இலக்கியப் பத்திரிகையான காலச்சுவட்டிற்கும் புரவலராக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தனது அலுவலகத்திலேயே பெருமையுடன் விற்பனை செய்யும் ஜெயமோகனின் ‘விஷ்ணு புரம்’ நாவலுக்கு பணஉதவி செய்தவர் பொள்ளாச்சி மகாலிங்கம். கோக் – பெப்சி முகவராக இருக்கும் மகாலிங்கத்தின் கல்லூரிகளில்தான் ஆர்.எஸ்.எஸ்.இன் பயிற்சி முகாம்கள் இன்றும் நடக்கின்றன. ”எங்கே பிராமணன், மகாபாரதம், இராமாயணம்” இவற்றை வைத்தே ‘அரசியல்’ பத்திரிகை நடத்தும் ‘சோ’ தனது பா.ஜ.க. விசுவாசத்திற்குப் பரிசாக ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைப் பெற்றார். இவரைப்போலவே இந்து மதவெறியரின் பத்திரிகையாளராக இருந்த அருண் சோரி – இன்று அமைச்சர் பதவியையே பரிசாகப் பெற்றிருக்கிறார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கில – இந்தி நாளேடுகள் பல பாபர் மசூதி இடிப்பிலும், மண்டல் கமிசன் பிரச்சினையிலும், பா.ஜ.க.வின் ஊதுகுழலாய்ச் செயல்பட்டன. முலாயம்சிங் முதலமைச்சராக இருந்தபோது 90-ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற அயோத்தி கரசேவை கலவரத்தில் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதாகப் பொய்ச் செய்தி வெளியிட்ட ஆஜ், தைனிக் ஜாக்ரண், சுதந்திர சேத்னா, சுதந்திர பாரத் எனும் 4 இந்தி இதழ்கள் ‘இந்திய பிரஸ் கவுன்சிலினால்’ கடும் கண்டனம் செய்யப்பட்டன. இக்கண்டனத்தைக் கூட ஏனைய தேசியப் பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்து விட்டன.
சட்டரீதியில் மதச் சார்பின்மை என்று சொல்லிக் கொண்டாலும் செய்தி ஊடக நிறுவனங்களில் இயல்பாக உள்ள ‘இந்து’ ஆதிக்கம் சிறுபான்மை மக்களைத் தனிமைப்படுத்துகிறது. போட்டி மதவாதம் எழுவதற்கு இத்தகைய இந்து செய்தி நிறுவனங்களும் ஒரு காரணமாகின்றது.
மொத்தத்தில் நம் நாட்டின் காட்சி – செய்தி – பொழுதுபோக்கு ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனமயமாக்கப்பட்டு இந்து மத வெறியின் பக்கவாத்தியங்களாகச் செயல்படுபவைதாம். இருப்பினும் பார்ப்பனியத்தின் சென்சார் கண்களில் சிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் ஒன்றிரண்டு கலகக்குரல்களையும் நெரிக்க வேண்டும் என்பதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் விருப்பம். இட்லரின் இந்திய வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்?
காடுவெட்டி குரு - ராமதாஸ் உள்ளிட்டு, கோபாலகிருஷ்ணனின் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சேத்தியாத்தோப்பு - சிறீமுஷ்ணம் பகுதியில் நடந்த போராட்டம் (உள்படம்) கோபாலகிருஷ்ணன்
தருமபுரி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமைத் தாக்குதலைத் தொடுத்த கையோடு, ராமதாசு தலைமையிலான ஆதிக்க சாதிவெறிக் கும்பல் கக்கிவரும் சாதிவெறித் தீ ஆங்காங்கே அப்பாவி தாழ்த்தப்பட்ட மக்களைக் காவு வாங்கி வருகிறது.
கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு, சென்னிநத்தம் கிராமம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கோபாலகிருஷ்ணனும், பரதூர் கிராமம் வன்னிய சாதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி துர்காவும் ஒருவரையொருவர் காதலித்துவந்தனர். கடந்த 12.12.12 அன்று துர்கா அழைத்ததன் பேரில் அவரைச் சந்திக்க சேத்தியாதோப்பு சந்தைக்குச் சென்ற கோபாலகிருஷ்ணன், அதன்பின் வீடு திரும்பவே இல்லை.
சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர், 19-12-12 அன்று பரதூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ள வெள்ளியக்குடி ஓடையில் கழுத்தறுக்கப்பட்டு, நாணல் கொண்டு சகதிக்குள் திணித்து வைக்கப்பட்ட நிலையில் கோபாலகிருஷ்ணனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
“கோபாலகிருஷ்ணனின் கொலைக்குக் காரணமான, ராமதாஸ், காடுவெட்டி குரு மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். கொலைக் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படவேண்டும். அதுவரை கோபாலகிருஷ்ணனின் சடலத்தை வாங்க மாட்டோம்” என்ற கோரிக்கைகளை முன்வைத்து சென்னிநத்தம் கிராம மக்களை அணிதிரட்டியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இப்போராட்டத்திற்கு மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துப் பங்கெடுத்துக் கொண்டன.
காடுவெட்டி குரு – ராமதாஸ் உள்ளிட்டு, கோபாலகிருஷ்ணனின் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி சேத்தியாத்தோப்பு – சிறீமுஷ்ணம் பகுதியில் நடந்த போராட்டம் (உள்படம்) கோபாலகிருஷ்ணன்
இதன்பின், கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்யப் போவதாகப் போக்குக் காட்டிய போலீசு, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யாமல், துர்காவின் 75 வயதான பாட்டி கனகவல்லியைக் கொலைவழக்கில் கைது செய்து ஏய்க்க நினைத்தது. போலீசின் தகிடுதத்தத்தைப் புரிந்துகொண்ட சென்னிநத்தம் கிராம மக்கள், “உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை சடலத்தை அடக்கம் செய்யமாட்டோம்” என மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.
‘‘இப்படுகொலையை இரு குடும்பத்தின் பிரச்சினையாகச் சுருக்கி வழக்கை முடிக்க நினைக்கிறது, போலீசு. வன்னிய ஆதிக்க சாதிவெறி தூண்டிவிடப்பட்டதன் விளைவாக நிகழ்ந்துள்ள படுகொலைதான் கோபாலகிருஷ்ணன் மரணம்” என்பதை அம்மக்களிடையே வலியுறுத்திப் பேசினார், ம.உ.பா.மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், வழக்குரைஞர் ராஜு.
சென்னிநத்தம் கிராம மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக, கொலை செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணனின் தந்தையின் புகார் மனுவை வாக்குமூலமாகப் பதிவு செய்து கொண்டது போலீசு. இதனையடுத்து 21-12-12 அன்று சென்னிநத்தம் கிராமத்தில் கோபாலகிருஷ்ணனின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் சிந்தனைச்செல்வன், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆர்ம்ஸ்ட்ராங், பெண்ணாடம் திருவள்ளுவன், மனித உரிமைக் கட்சி விஸ்வநாதன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் அமைப்பாளர் அரங்க. குணசேகரன் உள்ளிட்டோர் நீதி கேட்டு சென்னிநத்தம் கிராம மக்கள் நடத்திய போராட்டத்தில் இறுதிவரையிலும் உடனிருந்ததோடு, கோபாலகிருஷ்ணனின் இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்றனர்.
கோபாலகிருஷ்ணனின் படுகொலை மட்டுமல்ல; குறிஞ்சிப்பாடி அருகில் பாச்சாரபாளையத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வன்னியப் பெண்ணைப் பார்த்து முடி ஒரிஜனலா, டூப்ளிகேட்டா எனக் கேலி செய்ததாகக் கூறி, 10-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகளை கொளுத்தினர், வன்னிய சாதிவெறியர்கள். பண்ருட்டியில் மாணவி பிரியா என்ற தாழ்த்தப்பட்ட பெண், தனது தோழியின் காதல் திருமணத்திற்கு உதவினார் என்பதனால், அவ்விளம்பெண் ஆதிக்க சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு குளத்தில் சடலமாக வீசியெறியப்பட்டார். உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள குன்னத்தூரைச் சேர்ந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கண்ணன், வன்னியப் பெண் காயத்ரியைக் காதலித்த விவகாரத்தில், போலீசும் வன்னிய சாதிவெறியர்களும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு காதலர்களை மிரட்டிப் பிரித்தனர். “நீ தற்கொலை செய்து கொள்; இல்லையேல் உன் காலனியைக் கொளுத்திவிடுவோம்” என கண்ணன் மிரட்டப்பட்டதால், அவர் 29.12.2012 அன்று தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்.
சாதி – தீண்டாமை வன்கொடுமைகளுக்கெதிராக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இத்தருணத்தில், அதற்கு எதிராகவும் சாதி ஆதிக்கத்தைப் புதுப்பிக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார், குச்சு கொளுத்தி ராமதாசு. அவரது தலைமையில் அணிதிரண்டுள்ள அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை என்ற சாதிவெறி பிடித்த கிரிமினல் கும்பலை மோதி வீழ்த்தாவிட்டால், இருண்ட காலத்திற்குள் தமிழகம் தள்ளப்படும்
– மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்.
________________________________________________________________________________ – புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
________________________________________________________________________________
அமெரிக்காவைச் சேர்ந்த 26 வயது இளைஞரான ஆரன் ஸ்வார்ட்ஸ்நியுயார்க்கில் உள்ள தன் வீட்டு படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். கணினி நிபுணர், இணைய அறிவாளி, இணைய போராளி என்று பன்முகம் கொண்ட ஸ்வார்ட்ஸை, கார்ப்பரேட் அமெரிக்காவின் வெறிபிடித்த கணினி தொடர்பான குற்றங்கள் சட்டம் கொன்றே விட்டது.
ஸ்வார்ட்ஸ், இன்று இணையத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும்; இணையதளங்களில் வெளியாகும் புதிய பதிவுகளை பின் தொடர உதவும்; ஆர்எஸ்எஸ் (RSS) தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர். திறந்தவெளி நூலகம் மற்றும் இன்னும் பிற இணைய சேவை நிறுவனங்களின் பங்குதாரர். இணைய தனிநபர் சுதந்திரம், சுதந்திரமான தகவல் பரிமாற்றம், அறிவுசார் சொத்துடமை எதிர்ப்பு போன்றவற்றிற்காக போராடி வந்தார். இதற்கு ஆதரவான இணைய குழுக்களில் இயங்கி வந்தார். அவர் உருவாக்கிய “முன்னேற்றத்தை கோருவோம்“ (Demand Progress) என்ற அமைப்பு அமெரிக்காவின் இணைய தணிக்கை சட்டங்களான சோப்பா/பிப்பாவுக்கு எதிரான இயக்கத்தை நடத்தி வந்தது.
“அறிவுசார் ஆவணங்கள் சில தனியார் நிறுவனங்களின் லாபவெறிக்கு மட்டும் பயன்படுவது தவறு, அது அனைவருக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்” என்பது அவரது கருத்து.
போராளி ஆரன் ஸ்வார்ட்ஸ்
அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுடன் தொடர்புடைய ஆவணங்கள், பிற ஆய்வாளர்களின் கட்டுரைகள் என்று நூற்றுக்கணக்கான கட்டுரைகள், புத்தகங்கள், ஆவணங்களை படிக்க வேண்டிய தேவை உள்ளது. இவையனைத்தும் ஒருங்கே கிடைக்கும் இடம் தான் ஜே-ஸ்டோர் (JSTOR) எனும் இணையதளம். பெருமளவு பணச் செலவில்தான் இதன் உறுப்பினராகி ஆவணங்களை பயன்படுத்த முடியும். $50,000 (சுமார் ரூ 25 லட்சம்) வரை ஆண்டு சந்தா செலுத்தி பெரிய ஆய்வு பல்கலைக் கழங்கள் ஜே-ஸ்டோரிலிருந்து அறிவியல் ஆவணங்களை பெற்றுக் கொள்கின்றன.
அப்போது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சென்டர் பார் எதிக்ஸ் துறையில் ஆய்வு மாணவராக செயல்பட்டு வந்த ஸ்வார்ட்ஸ் ‘அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய விபரங்கள் உலகில் உள்ள அனைத்து ஆய்வாளர்களுக்கும் பயன் தர வேண்டும், மாறாக அதை காப்புரிமை என்ற பெயரில் ஜே-ஸ்டோர் நிறுவனம் லாபவெறியுடன் பதுக்கி வைக்கிறது’ என்று அதை எதிர்த்து வந்தார்.
‘2010 செப்டம்பரிலிருந்து 2011 ஜனவரி வரை அதே வளாகத்தில் இருக்கும் எம்.ஐ.டி. பலகலைக் கழக கணிணி நெட்வொர்க்கில் தன் மடிக்கணியை இணைத்து எம்.ஐ.டி. நெட்வொர்க் வழியாக ஜே-ஸ்டோரில் இருந்து பல லட்சம் ஆவணங்களை தரவிறக்கினார்’ என்று அவர் மீது மசாச்சுசெட்ஸ் மாவட்ட நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2011 ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட அந்த குற்றப் பத்திரிகை, ஆவணங்களை கோப்புகள் பகிர்ந்து கொள்ளும் இணைய சேவைகள் மூலம் வினியோகிக்கத் திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டியது.
அறிவுசார் ஆவணங்கள் மீதான காப்புரிமையை உறுதிசெய்து, அவற்றை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் மட்டும் லாபமீட்டுவதற்கும், இணையத்தில் ஆவணங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதை தவிர்க்கவும், அதற்காக இணைய வெளி கண்காணிப்பை அதிகப்படுத்தவும் அமெரிக்க அரசு மேலும் மேலும் கடுமையான சட்டங்களை இயற்றியிருக்கிறது. அந்த சட்டங்களையும் அறிவுசார் ஆவணங்களை பகிர்ந்து கொள்வதில் இருக்கும் தடைகளையும் எதிர்த்த அவரது போராட்டமே இறுதியில் ஆரன் ஸ்வார்ட்சின் உயிரை பறித்து விட்டது.
தகவல் தொடர்பு இணைப்பு மோசடி, கணினி மோசடி, பாதுகாக்கப்பட்ட கணினியிலிருந்து சட்ட விரோதமாக தகவல்களை பெற்றது, பாதுகாக்கப்பட்ட ஒரு கணினியை சேதப்படுத்தியது, போன்ற பல பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தன் மீது சாட்டப்பட்ட குற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுத்த ஸ்வார்ட்ஸ் 1 லட்சம் டாலர் பிணைத் தொகை செலுத்தி பிணையில் வெளியில் வந்து வழக்கு நடத்திக் கொண்டிருந்தார். இந்த பிரிவுகளில் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படலாம் என்ற நிலையில் ஸ்வார்ட்ஸ் கடந்த ஜனவரி 10-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்வார்ட்ஸ் செய்த இணைய அதிர்வை அவர் நிஜத்தில் செய்திருந்தால் சில நூறு டாலர் அபராதம் கட்டி விட்டு வெளிவந்திருக்கலாம். உண்மையில் சொல்லப் போனால் ஸ்வார்ட்ஸ் செய்த இந்தச் செயலால் ஜே-ஸ்டோர் நிறுவனத்திற்கு 1 ரூபாய் கூட இழப்பு ஏற்படவில்லை. ஆனால் ஸ்வார்ட்சின் செயல் மற்றவர்களால் தொடரப்பட்டால் காப்புரிமை என்ற கட்டமைப்பே உடைக்கப்பட்டு, அதன் மூலம் கார்ப்பரேட்டுகள் சம்பாதிக்கும் பல ஆயிரம் கோடி டாலர்கள் லாபம் பாதிக்கப்படும்.
கணினி தொடர்பான குற்றங்களுக்கு அமெரிக்காவில் 30 வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனை என்றால், தமிழ்நாட்டில் 1 வருடம் பிணையில் வெளிவர முடியாத குண்டர்கள் சட்டம், ஃபேஸ்புக்கில் லைக் போட்டதற்காக சிறை என்று இணைய உலகம் அதிகாரவர்க்கத்தின் நேரடி அடக்குமுறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறிது காலம் முன்பு வரை பெரிய அளவு கண்டுகொள்ளப்படாமல் இருந்த இணைய மெய்நிகர் உலகம் இன்று மெய் உலகைவிட அதிகமான கண்காணிப்புக்கும் அடக்குமுறைக்கும் அரசாங்கங்களால் உள்ளாக்கப்பட்டுள்ளது. ‘இணையத்தில் குழுக்கள் ஏற்படுத்தி போராடுவதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தி விடலாம்’ என்று செயல்பட்ட ஸ்வார்ட்சும் நடைமுறை உலகின் நிதர்சனங்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.
போலியோ தடுப்பு மருந்தை கன்டுபிடித்த மருத்துவர் ஜான் சால்க் அதை காப்புரிமை செய்ய மறுத்தார். ‘அது அனைத்துலக மக்களுக்கும் பயன்பட வேண்டும் அதை காப்புரிமை செய்து லாபமீட்ட முடியாது’ என்றார், மேலும் ‘நீங்கள் சூரியனை காப்புரிமை செய்ய முடியுமா’ என்றார்? ஆனால் வேம்பு முதல் எலுமிச்சை வரை அனைத்தையும் காப்புரிமை செய்து அவற்றை பயன்படுத்தும் மக்களிடம் பணமீட்டி லாபமடைந்து விட வேண்டும் என்று நினைக்கிறது முதலாளித்துவம்.
மனிதன் அவன் பெற்ற அனுபவங்களை வாய்வழி கடத்தி, பின் ஓலைகள், குகை ஓவியங்கள், காகிதம், புத்தகம் என அறிவை பகிர்ந்து கொண்டு அறிவு திரட்டல்களின் முழுத் தொகுப்பை பயன்படுத்தி மேலும் மேலும் வளர்கிறது மனித சமுகம். ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு அவரால் மட்டும் நடத்தப்பட்ட ஒரு சாதனை அல்ல, அது இது நாள் வரை அந்தத் துறையில் உழைத்த எண்ணற்ற விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதற்கு உதவி செய்த உதவியாளர்கள் என இனம், மொழி மதம், நாடு கடந்த கூட்டு உழைப்பின் விளைவு. மொத்த உழைப்பின் விளைவையும் ஒருவர், ஒரு சில நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடுவதும் அதை வைத்து மற்றவர்களுக்கு அறிவுசார் தகவல்களை மறுப்பதும் இன்றைய முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் வக்கிரம்.
லாபவெறி, சுரண்டல், ஆதிக்கம் என்பதை எல்லாம் தாண்டி அறிவியல் வளர்ச்சியையே அறிவுசார் சொத்துடமை முடக்குகிறது என்பது நிதர்சனம். பணம் படைத்தவர்கள் மட்டுமே அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட முடியும் என்ற நிலையும், அறிவியல் வளர்ச்சியில் பரந்து பட்ட ஆய்வாளர்களின் பங்கெடுப்பு தடுக்கப்படுவதும் அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது.
ஒரு காலத்தில் அறிவியல் திருச்சபைகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது வளர முடியாமல் தவித்ததும், பின்பு பிரெஞ்சு புரட்சியின் விளைவாக அறிவியல் விடுவிக்கப்பட்டதும் வரலாறு. கருத்து ரீதியான தளைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அறிவியல் இன்று முதலாளிகளின் தனிச்சொத்து, பணம் என்ற தடைகளால் முடக்கப்பட்டுள்ளது. இந்த தளைகளை பாட்டாளி வர்க்கம் உடைக்கும் போதுதான் மனித சமூகத்தின் உண்மையான முன்னேற்றமும் வளர்ச்சியும் சாத்தியமாகும்.
அத்தகைய அரசியல் விடுதலை வராத வரை ஸ்வார்ட்ஸ் போன்ற இளைஞர்களை நாம் காப்பாற்ற முடியாதா?
குச்சு கொளுத்தி இராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கும் திருமாவளவன் (கோப்பு படம்)
“தமிழ்க்குடிதாங்கி”, “அம்பேத்கர் சுடர்” என்று விடுதலைச் சிறுத்தைகளால் கொண்டாடப்பட்ட ராமதாசு, தமிழகத்தின் ஆதிக்க சாதிவெறியர்கள் அனைவருக்கும் தலைவராக அவதரித்திருக்கிறார். “அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை” என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதி மறுப்புத் திருமணத்தையும், வன்கொடுமை தடைச் சட்டத்தையும் எதிர்த்து ராமதாசு சண்டமாருதம் செய்கிறார். திருமாவளவனோ, “ராமதாசு என்னைச் சட்டையைப் பிடித்து இழுத்தாலும் நான் சண்டைக்குப் போக மாட்டேன்” என்கிறார்.
ராமதாசும், காடுவெட்டி குருவும் தூண்டி விட்ட சாதிவெறி ஆங்காங்கே தாழ்த்தப்பட்ட மக்களைக் காவு வாங்குகிறது. சேத்தியாதோப்பு பகுதியில், வன்னியர் சாதிப் பெண்ணைக் காதலித்த கோபாலகிருஷ்ணன் என்ற மாணவனைக் கழுத்தை அறுத்தே கொலை செய்து, குட்டைக்குள் வீசியிருக்கிறார்கள் வன்னிய சாதிவெறியர்கள். ஒரு வாரத்திற்குப் பின்னர், அழுகி நாறிய நிலையில் அந்த இளைஞனின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சாதி மறுப்புக் காதலுக்குப் பழிவாங்குவதற்காக, காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற தாழ்த்தப்பட்ட பெண் வன்னிய சாதிவெறியர்களால் கொல்லப்பட்டிருக்கிறாள்.
திருமாவளவன் மட்டும் ராமதாசுடன் சமரசத்தை நாடுகிறார். “இப்போது அமைதி காப்பதுதான் வீரம்” என்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நவம்பர்-24 அன்று திருமா அளித்திருக்கும் பேட்டி, அவர் சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கி முத்தெடுத்தவர் என்று காட்டுகிறது.
தருமபுரி தாக்குதல் ராமதாசுக்குத் தெரியாமல் நடந்திருக்கும் என்றுதான் அவர் முதலில் நினைத்தாராம். இலண்டனிலிருந்து கோ.க. மணியுடனும், டாக்டர் செந்திலுடனும் தொலைபேசியில் பேசியபோது, ‘இந்தத் தாக்குதலில் பா.ம.க.வுக்குச் சம்மந்தமே இல்லை’ என்று அவர்கள் சொன்னார்களாம்; இவரும் நம்பி விட்டாராம். என்ன நடந்தது என்று ஒருமுறை கூட அவர் தன் சொந்தக் கட்சிக்காரர்களிடம் கேட்கவில்லை போலும். நம்புவோம்.
“சாதி மறுப்புத் திருமணம் செய்தால் வெட்டுவேன் என்று மாமல்லபுரத்திலேயே காடுவெட்டி குரு ஏற்கெனவே பேசியிருக்கிறாரே, உங்களுக்குத் தெரியாதா?” என்று பேட்டியாளர் ஜென்ராம் கேட்கிறார். “அது பற்றி கோ.க. மணியிடம் கேட்டேன். குருவை டாக்டரய்யா கண்டித்ததாகச் சொன்னார். நம்பினேன்” என்கிறார்.
கடைசியாக ராமதாசு தனது சொந்த வாயால் ஊடகங்களில் பேசிய பின்னர்தான், ‘இது மேலிருந்தே திட்டமிட்டு நடத்தப்படுகிறது’ என்ற உண்மை திருமாவுக்குப் புரிந்ததாம். அதாவது, விடுதலைச் சிறுத்தைகளை ராமதாசு தாக்குகிறார் என்பதை உலகமே பார்த்து விட்டதால், இனிமேலும் வலிக்காத மாதிரி நடிக்க முடியாது என்பது திருமாவுக்குப் புரிந்து விட்டது!
அதன் பிறகும் அவருக்குக் கோபம் வரவில்லை. திருப்பி அடிப்பதெல்லாம் இருக்கட்டும். “ராமதாசு அம்பேத்கர் சுடர் அல்ல, வன்னிய தீவட்டி” என்று சாடியிருக்கலாம். ராமதாசையும் குருவையும் வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்யக் கோரிப் போராடியிருக்கலாம். செய்யவில்லை. “வன்னியப் பெண்கள் வயிற்றில் தலித் கரு வளர வேண்டும் என்று நான் பேசியதாக பொப்பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு இடத்திலாவது நான் அப்படிப் பேசியதாக நிரூபித்தால், தூக்கில் தொங்கத் தயார்” என்று தருமபுரி ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக தன்னிலை விளக்கம் அளிக்கிறார் திருமா.
ஆனால், தனது கட்சியினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டை ஆவேசமாக மறுக்க அவர் முயலவில்லை. ‘காதல் திருமணங்களைப் பிரித்து காசு பறிப்பதாகச் சொல்கிறீர்களே, அப்படி ஒரேயொரு ஆதாரமாவது காட்ட முடியுமா?’ என்று கேள்வி எழுப்பவில்லை. ‘எங்கள் கட்சிக்காரர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவோ, வன்கொடுமைச் சட்டத்தை வைத்துப் பணம் பறித்ததாகவோ ஒரு ஆதாரம் கொடுங்கள், அரசியலை விட்டே விலகுகிறேன்’ என்று சவால் விடவில்லை.
மாறாக, சமரசத்திற்கு இப்போதும் தயாராக இருப்பதாக அந்தப் பேட்டியின் முடிவில் பிரகடனம் செய்கிறார். “தம்பி, தேர்தல் அரசியல் வேண்டாம்; வா, நாம் இரு சமூக மக்களின் நல்லிணக்கத்துக்காக, உழைக்கும் மக்கள் ஒற்றுமைக்காகப் பாடுபடுவோம் என்று டாக்டரய்யா என்னை அழைத்தால், இந்த நிமிடமே கட்சியை விட்டுவிட்டு வரத் தயார். நாடாளுமன்ற அரசியல் எனக்குத் தேவையில்லை” என்கிறார். ஆனந்த விகடன் பேட்டியில் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது கொடுத்ததை நியாயப்படுத்துகிறார். “எதிர்காலத்தில் தலித்துகளுக்கு ஆதரவாக ராமதாசு நடந்து கொண்டால், மீண்டும் அவருக்கு விருது கொடுப்போம்” என்கிறார்.
சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்காகவும், தமிழர் ஒற்றுமைக்காகவுமே தான் அமைதி காப்பதாகவும், பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும் தனது அணுகுமுறைக்கு விளக்கம் சொல்கிறார் திருமாவளவன். ஆனால், விடுதலைச் சிறுத்தைகளின் டிஜிட்டல் பானர் முழக்கங்களையும், மேடைப் பேச்சுகளையும் பார்த்து, திருமாவைப் போர்க்குணத்தின் உருவமாக எண்ணிக் கொண்டிருந்த இளைஞர்கள் திகைக்கிறார்கள். இப்படியொரு சரணடைவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
ராமதாசிடம் திருமா சரணடைவது ஏன்?
ராமதாசு தலைமையில் அணி திரண்டுள்ள ஆதிக்கசாதி வெறியர்களின் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய கூட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தன்னைத்தானே சித்தரித்துக் கொள்வதைப் போலவோ, அல்லது முற்போக்காளர்கள் எனப்படுவோர் சிலர் நம்பிக் கொண்டிருப்பதைப் போலவோ, தலித் விடுதலைக்கான அமைப்பு அல்ல. மற்றெல்லா ஓட்டுக்கட்சிகளையும் போலவே, அது ஒரு சாதிய பிழைப்புவாதக் கட்சி. வன்னிய மக்களின் பெயரைச் சொல்லி பா.ம.க. என்ற பிழைப்புவாதக் கட்சியை ராமதாசு நடத்துவதைப் போலவே, தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினருடைய பிரதிநிதியாகத் தன்னைக் கூறிக்கொண்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அரசியல் பிழைப்பு நடத்துகிறது.
பா.ம.க.வால் ஏமாற்றப்படும் வன்னிய மக்கள் ஆதிக்க சாதி; சிறுத்தைகளால் ஏமாற்றப்படும் மக்கள் ஒடுக்கப்பட்ட சாதி என்பதுதான் வேறுபாடு. பா.ம.க.வுக்கும் சிறுத்தைகளுக்கும் வேறெந்த வேறுபாடும் இல்லை. 2001 தேர்தலில் தி.மு.க.வும் பா.ம.க.வும் கூட்டணி அமைத்திருந்தபோது, திருமாவளவன் போட்டியிட்ட தொகுதியில் பல ஊர்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்டன; நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்குதலில் காயம்பட்டனர். அப்போது, “இந்தச் சாம்பல் மேட்டின்மீது நின்று சொல்கிறேன். கொளுத்தியவர்களுடன் இனி கூட்டணி கிடையாது” என்று திருமா அறிவித்தார்.
அன்று அப்படிச் சொல்லி விட்டு மறுபடியும் பா.ம.க., தி.மு.க.-வுடன் கூட்டுச் சேர்ந்த சந்தர்ப்பவாதம் பற்றிக் கேட்டால், “அம்பேத்கர் ஆயுதப் போராட்டம் நடத்தச் சொல்லவில்லை. இருக்கின்ற அரசமைப்பில் பங்கேற்று அரசதிகாரத்தைப் பெறுமாறுதான் கூறியிருக்கிறார்” என்று கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறார். ‘தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தலித்துகளை மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காகத்தான் வலியச் சென்று கைகுலுக்க வேண்டியிருப்பதாக’ நியாயப்படுத்துகிறார்.
தனிக்குடியிருப்பு, தனிக்கிணறு, தனிக்குவளை, தனிச்சுடுகாடு என்று தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை ஊரின் மைய நீரோட்டத்தில் சேர்த்துக் கொள்வதாக எந்தக் கட்சியாவது வாக்குறுதி கொடுத்ததா, அல்லது கூட்டணிக்கான முன்நிபந்தனையாக அப்படி ஏதேனும் ஒன்றை திருமா முன்வைத்திருக்கிறாரா? எதுவும் கிடையாது.
சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்போதே, அரசியலில் தலித் பிழைப்புவாதிகளை காங்கிரசு, பா.ஜ.க., உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைவரும் மைய நீரோட்டத்தில் இணைத்துதான் வைத்திருக்கிறார்கள். ‘இப்படிப் பல்வேறு கட்சிகளிலும் தலித் வாக்குகள் சிதறடிக்கப்படுவதனால்தான் தலித்துகள் அரசியலதிகாரம் பெற முடியவில்லை’ என்று கூறித் தொடங்கப்பட்டவைதான் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் கட்சிகள்.
வன்னியர்களிடம் இதே வாதங்களைச் சொல்லித்தான் ராமதாசும் தனிக்கட்சி தொடங்கினார்.
பல்வேறு கட்சிகளிலும் உள்ள வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரித்துத் தனியாக ஒரு சாதிய வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டு, தி.மு.க., அ.தி.மு.க. போன்றோருடன் பேரம் பேசுவதுதான் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எல்லா சாதிக் கட்சிகளின் நோக்கமும். தங்கள் சாதி வாக்காளர்களிடம் எந்த அளவுக்குச் சாதி உணர்வைத் தூண்ட முடிகிறதோ, அந்த அளவுக்கு இவர்கள் தமது சந்தர்ப்பவாதத்தை மறைத்துக் கொள்ள முடியும். தமது சாதி வாக்குகளை உறுதி செய்து கொள்ள முடியும்.
நீயும் நானும் ஒண்ணு, மக்கள் வாயில் மண்ணு!
இருப்பினும், திருமாவுக்கு என்ன காரணத்துக்காகவோ ராமதாசுடன் ஒரு நல்லிணக்கம் அவசரமாகத் தேவைப்படுகிறது. அதற்காகக் கொளுத்தப்பட்ட மக்களுக்கும் கொளுத்திய கிரிமினல்களுக்கும் நல்லிணக்கம் பேசுகிறார். ராமதாசோ, “நான் இருப்பதனால்தான் வட தமிழகம் அமைதியாக இருக்கிறது” என்று வெளிப்படையாகவே மிரட்டுகிறார்.
திருமா – ராமதாசு கூட்டணி, வன்னியர் – தாழ்த்தப்பட்டோரிடையேயான சமூக உறவில் எந்த சமத்துவத்தையும் கொண்டுவந்து விடவில்லை. வசூல் வேட்டை நடத்தவும், போலீசுக்குப் புரோக்கர் வேலை பார்க்கவும், கட்டப் பஞ்சாயத்து செய்யவும், காண்டிராக்ட் எடுக்கவும் மற்றெல்லா ஓட்டுப் பொறுக்கிகளும் பெற்றிருக்கும் ‘ஜனநாயக உரிமை’யை விடுதலை சிறுத்தைக் கட்சியின் ‘தளபதிகளுக்கு’த் தான் பெற்றுத் தந்தது. தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரவில்லை.
தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை தனிக்குடியிருப்பும், தனிச்சுடுகாடும் அப்படியேதான் இருந்தன. அவ்வாறிருக்கும்போதே தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றுவதற்குத்தான் அம்பேத்கர் சிலை திறப்பு, தலித்துக்கு மந்திரி பதவி போன்ற ராமதாசின் தந்திரங்கள். பதிலுக்கு வன்னியர்களை தாஜா செய்வதற்குத்தான் ராமதாசுக்கு திருமா வழங்கிய தமிழ்க் குடிதாங்கி, அம்பேத்கர் சுடர் பட்டங்கள்.
‘குச்சு கொளுத்தி’ என்று தாழ்த்தப்பட்ட மக்களால் வெறுப்புடன் ஏசப்பட்ட ராமதாசுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களையே ஓட்டுப்போட வைத்ததும், இப்போது நத்தம் காலனியைக் கொளுத்திய பின்னரும், தமிழர் ஒற்றுமை என்று கூறிக் கொண்டு ராமதாசுக்கு நல்லிணக்கத் தூது விடுவதும்தான் திருமாவின் சாதனை என்று சொல்ல வேண்டும்.
மறுகாலனியாக்கம் பெற்றெடுத்த புதிய புல்லுருவிகள்!
வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டிய காடு வெட்டி குருவுக்கு பொன்னாடை (கோப்பு படம்)
நத்தம் தாக்குதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் படைப்பாளிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்து கொண்டு பேசினர். நெருப்பு, கொள்ளை, துயரம், கண்ணீர் போன்ற சொற்கள் ஒலிபெருக்கியிலிருந்து தெறித்த வண்ணம் இருந்தன. ஆர்ப்பாட்டத்திற்கு ‘அண்ணன் திருமா’வுடன் வந்திறங்கி இருபுறமும் அணிவகுத்து நின்ற குவாலிஸ், இன்னோவா, சுமோ போன்ற வெள்ளை வண்டிகளில் சாய்ந்தபடி மினிஸ்டர் ஒயிட்டும், கழுத்தில் தங்கத் தாம்புக்கயிறு, கையில் பிரேஸ்லெட்டும் அணிந்த சிறுத்தைகள் பலர் நின்றிருந்தனர். அவர்கள் வாயிலிருந்து ‘லட்சம், கிரவுண்டு, அப்ரூவ்டு, எம்.எல்.ஏ’ போன்ற சொற்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. இந்த வர்க்கத்தினரை அதிகாரத்துக்கு அழைத்துச் செல்வதைத்தான் தலித்துகளை அதிகாரத்துக்கு அழைத்துச் செல்வது என்கிறார் திருமா.
ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை, லேபர் காண்டிராக்ட், உரிமங்கள் பெற்றுத் தருதல், தண்ணீர்வியாபாரம், செக்யூரிட்டி ஏஜென்சி, மெட்ரிக் பள்ளி, சுயநிதிக் கல்லூரி, வாடகைக்கார் தொழில், நிலம் சார்ந்த கட்டப் பஞ்சாயத்துகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கான துணைத் தொழில்கள், கருங்காலி தொழிற்சங்கங்கள் போன்று பொறுக்கித் தின்னவும், கொள்ளையடிக்கவுமான பல வாயப்புகளை மறுகாலனியாக்க கொள்கைகள் திறந்து விட்டிருக்கின்றன. இத்தகைய தொழில்களில் ஈடுபடுபவர்கள்தான் வி.சி. கட்சியின் தூண்கள். இவர்கள்தான் டிஜிடல் பானர் வைப்பவர்கள், தங்கக் காசு கொடுப்பவர்கள், கூட்டத்துக்கு ஆள் திரட்டுபவர்கள், அண்ணன் வந்தால் முன்னும் பின்னும் 50 வண்டிகளில் புழுதி கிளப்பிக் கொண்டு செல்பவர்கள்.
இதே வகையான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பா.ம.க. உள்ளிட்ட பிற கட்சிகளின் உள்ளூர்த் தலைவர்களோடு இவர்கள் தொழில் கூட்டாளிகளாக, நண்பர்களாக, அன்றாடம் போலீசு ஸ்டேசன் முதல் கலெக்டர் ஆபீஸ் வரையில் பல இடங்களில் பழகுபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் வர்க்க நலனும் ஒன்றுதான். தொழில் தேவைக்காக வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்களேயன்றி, வேறு எந்தக் கொள்கையாலும் இவர்கள் பிரிந்து நிற்கவில்லை.
ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ, பொதுப்பணித்துறையிலோ இலஞ்சத் தொகை கீழிருந்து மேல் வரை தீர்மானிக்கப்பட்ட விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சுமுகமாகப் பிரித்துக் கொள்ளப்படுவதைப் போல, தனியார்மய- தாராளமயக் கொள்கைகள் வழங்கியுள்ள வாப்புகளைப் பயன்படுத்தி அடிக்கின்ற கொள்ளையை இவர்கள் தமக்குள் சுமுகமாகப் பிரித்துக் கொள்கிறார்கள். தேர்தல் அரசியல் கூட்டணி மாறுவதால், சில நேரம் இந்த அணியிலும், சில நேரம் அந்த அணியிலும் இருக்க நேர்ந்தாலும், இவர்களுடைய உறவின் சமநிலை அநேகமாகக் கெடுவதில்லை.
சென்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வியைத் தொடர்ந்து, ஜுலை மாதத்திலேயே திராவிடக் கட்சிகள் அல்லாத மூன்றாவது அணி அமைக்கப் போவதாக அறிவித்தார் ராமதாசு. உடனே அதை வழிமொழிந்தார் திருமாவளவன். தன்னை திடீரென்று ராமதாசு கழற்றிவிடுவார் என்பதைத்தான் திருமாவளவன் எதிர்பார்க்கவில்லை போலும். உழைத்துக் கஞ்சி குடிக்கின்ற தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் ராமதாசுடன் சமரசத்தைக் கோரவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் அரசியல் இம்மக்களுடைய நலனுக்கானதும் அல்ல.
சாதிய பிழைப்புவாதத்தைப் புனிதப்படுத்திய அடையாள அரசியல்!
அ மார்க்ஸ்
வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய இந்தச் சாதி அரசியலின் இரண்டாவது சுற்று, 90-களின் தொடக்கத்தில் ஆரவாரமாகத் தமிழகத்தில் தலையெடுத்தது. வன்னியர் வாக்குவங்கியை மையமாக வைத்துப் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கிய ராமதாசு, அம்பேத்கர் – பெரியார் – மார்க்ஸ் ஆகியோரது படங்களை உறுப்பினர் அட்டையில் போட்டுக் கொண்டதன் மூலம் சாதி-தீண்டாமை ஒழிப்பு, தமிழ்த்தேசிய விடுதலை, வர்க்க விடுதலை போன்ற எல்லா சரக்குகளும் கிடைக்கின்ற பல்பொருள் அங்காடியாக பா.ம.க.வைச் சந்தைப்படுத்தினார். அப்பட்டமான சாதிக் கட்சி என்று தெரிந்தபோதும், சமூக மாற்றத்துக்குக் குறுக்குவழி தேடிக் கொண்டிருந்த சில முன்னாள் புரட்சியாளர்களும், பின் நவீனத்துவ அறிவுத்துறையினரும், நரிக்கு சாயம் பூசிப் பரியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின் நவீனத்துவத்தின் நுண் அரசியலானது, சாதி, உட்சாதி, இனக்குழு, பாலினம் போன்ற அடையாளங்களை முதன்மைப்படுத்தி, வர்க்கப் போராட்டம் என்ற கருத்தாக்கத்தையும் கம்யூனிசத்தையும் தூற்றியது.
ஏகாதிபத்தியத்தால் உலகம் முழுவதும் ஸ்பான்சர் செய்யப்பட்டு, தன்னார்வக் குழுக்களால் கடைவிரிக்கப்பட்ட இந்த அடையாள அரசியலை, தலித்தியம், தலித் அரசியல் என்ற பெயர்களில் பின் நவீனத்துவ அறிஞர்கள் இங்கே முழங்கினர்.
பேரா.கல்விமணி
‘கம்யூனிஸ்டு கட்சிகளும், நக்சல்பாரிக் கட்சியும் தலித்துகளை காலாட்படையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அக்கட்சிகளிலிருந்தெல்லாம் தலித்துகள் வெளியேறித் தமக்கென தனிக்கட்சி தொடங்கவேண்டும். தலித்துகளின் உணர்வுகளைத் தலித் அல்லாதவர்கள் ஒருக்காலும் உணர முடியாது. தீண்டாமைக்கு எதிராகத் தலித்துகளைத் தவிர, வேறு யாரும் போராடுவார்கள் என்று நம்ப முடியாது. வர்க்கம் என்ற பேரடையாளத்துக்குள் சாதியை அடக்குவதால் கம்யூனிசம் சாதியை ஒழிக்காது. கம்யூனிஸ்டுகள் அதற்காகப் போராடியதுமில்லை. எனவே, தலித்துகள் சிதறிக் கிடக்காமல் தனியொரு வாக்குவங்கியாகத் திரள வேண்டும். போலி ஜனநாயகம் என்று கூறி இந்தத் தேர்தலை புறக்கணிப்பது தவறு. தேர்தல் அரசியல் மூலம் கைப்பற்றும் அதிகாரத்தின் மூலமும், கல்வி – இட ஒதுக்கீடு முதலான வழிகளில் பொருளாதார முன்னேற்றம் அடைவதன் மூலமாகவும்தான் தலித்துகள் விடுதலை பெற முடியும்’ – இவையெல்லாம் அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள்.
நாய்க்கன் கொட்டாய் பகுதியில் நக்சல்பாரிகளின் செல்வாக்கு இருந்தவரை சாதி அரசியல் தலையெடுக்க முடியவில்லை. அவர்கள் இல்லாத காரணத்தினால்தான் இன்று இத்தாக்குதல் நடந்திருக்கிறது” என இன்றைக்கு நத்தம் காலனி மக்கள் கூறுவதை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும்.
சாதி அமைப்பு என்பது ஒரு ஜனநாயக விரோத நிறுவனம். சாதி ஆதிக்கமும் தீண்டாமையும் தவறு என்று ஆதிக்க சாதி உழைக்கும் மக்களை உணர வைத்து, சாதிக்கு எதிராக அவர்களைப் போராட வைப்பதுதான் ஜனநாயகப் புரட்சியின் கடமை. ஆனால், அடையாள அரசியலோ, ‘மற்றதன் இருப்பை அங்கீகரிப்பது’ என்று கூறிக்கொண்டு எல்லா சாதியினரும் தத்தம் அடையாளத்தைப் பேணிக்கொள்வதை ஒரு ஜனநாயக உரிமையாகக் கௌரவப்படுத்தியது.
ரவிகுமார்
அதே நேரத்தில், ‘சாதி அடையாளத்தைத் துறந்து பணியாற்றும் கம்யூனிஸ்டுகளை நம்பாதே’ என்று தலித் மக்களுக்கு அறிவுறுத்தியது. ‘மாயாவதி, பஸ்வான் உள்ளிட்ட அப்பட்டமான தலித் பிழைப்புவாதிகளைக்கூட யாரும் விமர்சிக்கக் கூடாது. விமர்சிப்பவர்கள் ஆதிக்க சாதிக்காரர்களாகவோ, அவர்களது எடுபிடிகளாகவோதான் இருக்க முடியும். தீண்டாமைக்குரிய தீர்வை ஒரு தலித்தைத் தவிர வேறுயாரும் கூறமுடியாது. தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலித்தைத் தவிர வேறு யாரும் தலைமை தாங்க முடியாது, கூடாது’ என்றெல்லாம் பேசி, மற்ற சாதிகளில் பிறந்த ஜனநாயக சக்திகளை எதிர்நிலைக்குத் தள்ளியது தலித் அரசியல். பெரியாரைத் தலித் விரோதியாகச் சித்தரித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்.
இவ்வாறு, ஒரு மனிதன் கொண்டிருக்கும் கொள்கை, அவனது நடைமுறை ஆகியவற்றைப் புறந்தள்ளி விட்டு, ‘அவனுடைய பிறப்பை முதன்மைப்படுத்தியதன் மூலம்’, அடையாள அரசியல் பார்ப்பனியத்தை அப்படியே வழிமொழிந்தது. உழைக்கும் வர்க்கத்தைச் சாதிரீதியாகக் கூறுபோடுவது, கம்யூனிஸ்டு மற்றும் புரட்சிகர இயக்கங்களின் மீது தலித் இளைஞர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்துவது என்ற ஆளும் வர்க்கத் திட்டத்தை நிறைவேற்றுவதே இதன் நோக்கமாக இருந்தது. ‘நம்ம சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடு’ என்று பச்சையாகக் கேட்கும் ஓட்டுப் பொறுக்கிகளின் சாதி அரசியலையே, பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் பம்மாத்து மொழியில், தன்னார்வக் குழுக்களின் தத்துவ விசார தோரணையில் முன்வைத்தது அடையாள அரசியல். மார்க்சிய – லெனினிய புரட்சிகர அரசியலிலிருந்து வெளியேறிய எஸ்.என்.நாகராசன், எஸ்.வி.இராஜதுரை, ஞானி, நிறப்பிரிகை குழுவினர் முதலானோரெல்லாம் அடையாள அரசியலில்தான் தஞ்சம் புகுந்தனர்.
சாதி சமத்துவம் என்பது சாத்தியமா?
இதன்படி, சாதியைக் கூறிக்கொள்வது நேர்மையான நடவடிக்கையாக போற்றப்பட்டது. “நான் வன்னியன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று அறிவித்தார் கவிஞர் பழமலய் (இன்றைக்கு அவர் ராமதாசின் கூற்றை அப்படியே வழிமொழிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது). பின் நவீனத்துவ அறிஞர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மருத்துவர் ஐயாவோ, ‘காலையில் வன்னியராக இருந்து அக்கினி சட்டி கொடி ஏற்றுவது, மாலையில் தலித் விடுதலைக்காக அம்பேத்கர் சிலை திறப்பது’ என்று பொளந்து கட்டினார்.
வாழும் பெரியார் திருமாவை அன்று பாராட்டிய ராமதாசுக்கு இன்று நன்றி தெரிவிக்கும் விடுதலைச் சிறுத்தைகள்: “அடங்க மறு” என்பவர்கள் அடக்கி வாசிப்பது ஏன்?
அடையாள அரசியல், சாதியை மட்டுமின்றி, உட்சாதி அடையாளங்களையும் போற்றிக் கொண்டாடியது. சாதி அடையாளங்களைப் பேணிக்கொண்டே, சாதி சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதுதான் ஜனநாயகம் என்று வியாக்கியானம் செய்தது. மொத்தத்தில் ‘சுயநலம், சுயசாதி அபிமானம், பிழைப்புவாதம், ஆளும் வர்க்க நிறுவனங்களை நத்திப் பிழைப்பது, கட்சி தாவுவது, பொறுக்கித்தனங்கள்’ போன்ற நடவடிக்கைகள்தான் உண்மையான கலகங்கள் என்றும், ‘புரட்சி, தியாகம், சாதி ஒழிப்பு, வர்க்கப் போராட்டம்’ போன்ற கருத்துகள் தலித் மக்களை ஏமாற்றுவதற்கு, கம்யூனிசப் புரட்சியாளர்கள் கடைவிரிக்கும் ‘பெருங்கதையாடல்கள்’ என்றும் பிரச்சாரம் செய்தது. எனவே, இத்தகைய அமைப்புகளிலிருந்து ‘தப்பித்து’ வெளியே வருமாறு தலித்துகளை அறைகூவியது.
தலித் மக்களை இப்படித் தப்பிக்கச் சொல்லி அறிவுறுத்தியவர்களில் ஒருவர்தான் பின்னாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் எம்.எல்.ஏ. பதவியைக் கைப்பற்றியவரும், சமீபத்தில் தனது மகன் திருமணத்தை மருத்துவர் ஐயா தலைமையில் நடத்தியவரும், இப்பொழுதும் நத்தம் தாக்குதலுக்கு நக்சல்பாரிகளைக் குற்றம் சாட்டி அவதூறு செய்து கொண்டிருப்பவருமான இரவிக்குமார். அவர் ‘தப்பி’ விட்டார், அவருடன் சேர்ந்து இவற்றையெல்லாம் பிரச்சாரம் செய்த நிறப்பிரிகை அறிஞர்களும் ‘தப்பி’ விட்டார்கள். அடையாள அரசியல் வைத்த நெருப்பிலிருந்து நத்தம் மக்கள்தான் தப்ப முடியவில்லை.
சாதி என்ற அடையாளத்தின் சாரமே ஏற்றத்தாழ்வுதான். படிக்கட்டில் எத்தனாவது படி என்பதுதான் சாதி என்ற அடையாளத்தின் சாரம். சமமான படி இருக்க முடியாது. சாதி சமத்துவமும் இருக்க முடியாது. இதனால்தான் பட்டியல் இன மக்களைக் குறிப்பதற்கு ‘தலித்’ என்ற சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்திக் கொண்டாலும், ‘தலித் ஒற்றுமை’ என்பது கானல் நீராகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளர், பறையர், அருந்ததியர் என்ற மூன்று முக்கியப் பிரிவினரைக் கூட ‘தலித்’ என்ற பெயரில் ஒன்றுபடுத்த முயலவில்லை. ‘நாங்கள் தலித் அல்ல, தேவேந்திர குலம்’ என்கிறார்கள் பள்ளர் சமூகத்தினர். அருந்ததியர் சமூகத்துப் பையனைக் காதலித்த பறையர் சமூகத்துப் பெண் சொந்த சாதிக்காரர்களாலேயே கொல்லப்படுகிறாள். திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோர் தங்கள் கட்சியினரின் உட்சாதி மேட்டிமைத்தனத்துக்குத் துணையாகத்தான் நின்று வருகின்றனர். இதனை ஒழிக்க முயன்றால் இவர்களது கட்சியே ஒழிந்துவிடும் என்பதே உண்மை.
புதுச்சேரியில் நடந்த போராளி தலைவனுக்கு பொன் வழங்கும் விழா (கோப்பு படம்)
மொத்தத்தில், சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் பண்பாட்டுரீதியாக மெல்ல மங்குகின்ற சாதி உணர்வை, சாதிய பிழைப்புவாத வாக்கு வங்கி அரசியல் புளி போட்டு விளக்கிப் புதுப்பித்திருக்கிறது. அடையாள அரசியல், சாதி மற்றும் உட்சாதி உணர்வுகளுக்குக் கௌரவமும் அந்தஸ்தும் தேடித்தந்திருக்கிறது. இதன் தொடர்விளைவாக, ஒவ்வொரு சாதியிலும் உட்சாதியிலும் உள்ள படித்த நடுத்தர வர்க்கமும் மேட்டுக்குடி வர்க்கமும் முடிந்தவரை பார்ப்பனப் பண்பாட்டைத் தழுவுவதன் மூலம் தன்னை மேல்சாதியாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. இராசராசன் மள்ளர், நந்தன் அரசன் போன்ற வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. வருங்கால முதல்வர் ஆக விரும்புகின்ற சாதியினர் அனைவரும் தாங்கள் நேற்றைய முதல்வர் பரம்பரை என்று கூறிக்கொள்ளவே விரும்புகிறார்கள். சாதிப்பெருமிதம் கெட்டிப்படுகிறது.
விவசாயம் அழிந்து, மறுகாலனியாக்கத்தால் சிதறடிக்கப்பட்டு, முறுக்கு போடவும் மூட்டை தூக்கவும் தோட்டவேலை செய்யவும் மாநிலம் மாநிலமாக ஓடிக்கொண்டிருக்கும் கள்ளருக்கும், முத்தரையருக்கும், வன்னியருக்கும், பள்ளருக்கும் ஒரு மயக்கத்தைக் கொடுக்கும் போலிப் பெருமித அடையாளமாக இப்போது சாதி புதுப்பிக்கப்படுகிறது. தேவர் ஜெயந்தி, மகாபலிபுரம் விழா போன்றவையெல்லாம் ஆண்டுதோறும் அவர்களுக்கு ஏற்றப்படும் மயக்க ஊசிகள். தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் காரணமாகத் தோன்றியிருக்கும் புதிய தரகு வர்க்கங்கள்தான் இன்று சாதிச் சங்கங்களுக்கும் சாதிக்கட்சிகளுக்கும் புரவலர்கள்.
நத்தம் தாக்குதல் மற்றும் கௌரவக் கொலைகள் என்று அழைக்கப்படும் சாதிவெறிக் கொலைகள் எதைக் காட்டுகின்றன? நகரமயமாக்கம், பெண் கல்வி ஆகியவற்றின் காரணமாக ஒரே இடத்தில் படிக்கின்ற ஆண்களும் பெண்களும் சாதிய எல்லை கடந்து அறிமுகமாகிறார்கள். பழைய சாதிய இறுக்கங்களும் மனத்தடைகளும் தகர்ந்து காதலிக்கிறார்கள். அவர்களுடைய எதார்த்த வாழ்க்கைக்கும் விருப்பத்துக்கும் சாதி பொருத்தமற்றதாக, அவர்களது சுதந்திரத்துக்குத் தடையாக இருக்கிறது. சாதி நிராகரிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இளைஞர்களைக் காதல் மணம் புரிந்துள்ள பிற சாதிகளைச் சேர்ந்த பெண்கள் நக்கீரன் இதழுக்கு அளித்துள்ள பேட்டிகளில், அவர்களிடம் சாதி மறுப்பு ஜனநாயகக் கருத்துகள் இயல்பாக அரும்பியிருப்பதை காணமுடியும்.
ஒருபுறம் சாதியின் அடித்தளம் பலவீனப்பட்டு வந்த போதிலும், சாதி ஆதிக்க விழுமியங்கள் அழிந்து விடவில்லை. சாதி கடந்த திருமணங்களில், தொடக்கத்தில் பெற்றோர்கள் முரண்படுவது, பின்னர் மெல்ல ஏற்றுக் கொள்வது என்பதுதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. திவ்யாவின் தந்தை நாகராஜ் விசயத்திலும் அதுதான் நடந்திருக்கும். அவ்வாறு நடக்க விடாமல் அங்கே சாதிவெறியைத் தூண்டி, இத்தகைய கொடூரமானதொரு தாக்குதலை நடத்தக் காரணமாக இருந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சி எனும் சாதிக்கட்சி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டி, அக்குற்றச்சாட்டுகளுக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் பொறுப்பாக்கி, இதன் அடிப்படையில் ஆதிக்கசாதி சங்கங்கள் அனைத்தையும் திரட்டி நிறுத்தியிருக்கிறார் ராமதாசு. சாதி கடந்த திருமணத்தை எதிர்ப்பது என்று தொடங்கி வன்கொடுமைச் சட்டத்தையே முடக்குவது, சாதி- தீண்டாமையைத் தங்கள் பிறப்புரிமையாக அறிவிப்பது என்ற எல்லைக்குச் செல்கின்றனர் சாதிவெறியர்கள்.
சாதியைப் பாதுகாக்கும் அரசு, தீண்டாமையை ஒழிக்குமா?
சாதியை ஒழித்து சமத்துவத்தைக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளாகச் சிபாரிசு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டால் பதவியும் அதிகாரமும் பெற்ற ஆதிக்க சாதியினரின் சங்கங்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு நிற்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் தீண்டாமைக் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. பதிவு செய்யப்படும் வழக்குகளும் குற்றவாளிகளுக்கு விடுதலை பெற்றுத்தரும் விதத்திலேயே சோடிக்கப்படுவதால் 3 சதவீதம் பேர் கூட தண்டனை பெறுவதில்லை. இன்று வன்கொடுமைச் சட்டத்தை முடக்க இதுவே ஆதாரமாக காட்டப்படுகிறது.
கீழிருந்து மேல் வரை தலித் போலீசு அதிகாரிகள் இருந்தபோதிலும், அவர்களே கயர்லாஞ்சி வழக்கை எப்படி முடக்கினர் என்று அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்டும்டெ. இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது தனிநபர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமேயன்றி, சாதி எனும் சமூகக் கொடுமையை ஒழிக்க உதவாது என்பதுடன், அதுவே சாதிய பிழைப்புவாத, வாக்கு வங்கி அரசியலுக்கும் வழிதிறந்து விடுகிறது என்பதையே அனுபவங்கள் காட்டுகின்றன.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் ஊடாகப் பிறந்ததோ, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியின் மூலம் நிலைநாட்டப்பட்டதோ அல்ல. இது விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கும், பிரித்தாளுவதற்கும், நிறுவனமயப்படுத்துவதற்கும் பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டு மேலிருந்து திணித்த, கறை படிந்த ஜனநாயக அரசு வடிவம்.
“போலீசும் உளவுத்துறையும் சரியாகத் தம் கடமையைச் செய்திருந்தால் நத்தம் தாக்குதலை தடுத்திருக்க முடியும்; வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கத் தமிழக அரசு தவறிவிட்டது” என்ற வகையில் கூறப்படும் விமர்சனங்கள், தெரிந்தோ தெரியாமலோ இந்த அரசு குறித்த பிரமையை உருவாக்குகின்றன. ஆனால், சட்டங்கள் மூலம் சமுதாயத்தை மேலிருந்து ஜனநாயகப்படுத்தும் நோக்கத்தில் இந்த அரசு உருவாக்கப்படவில்லை. சாதி முதலான பிற்போக்கு விழுமியங்களை ஒழித்து இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்தக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.
ஜனநாயகப் புரட்சியின்றி சாதி – தீண்டாமை ஒழிப்பு இல்லை!
சாதி, தீண்டாமை, ஆணாதிக்கம் உள்ளிட்ட ஜனநாயக விரோத விழுமியங்களை மக்கள் மனங்களிலிருந்து அகற்ற வேண்டுமானால், சாதி – மத வேறுபாடுகளை நிராகரிக்கின்ற ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தில் மக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வை தாழ்த்தப்பட்ட மக்களிடம் யாரும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதி ஆதிக்கம் கூடாது என்ற உணர்வுக்கு ஒரு சாதி இந்துவைக் கொண்டு வருவது எப்படி என்பதுதான் கேள்வி.
திவ்யா போன்ற பெண்கள் இத்தகைய உணர்வுக்கு வருவதற்கு காதல் ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால், ஆதிக்க சாதி மக்களை ஒட்டுமொத்தமாக இந்த உணர்வுக்கு கொண்டு வருவது எப்படி என்பதே நம்முன் இருக்கும் கேள்வி. நக்சல்பாரி அமைப்புகள் அப்பகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் சாதி உணர்வு தலையெடுக்கவில்லை என்று கூறப்படுவதன் பொருள், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அனைவரும் தண்டனை குறித்த அச்சத்தினால் ஒடுங்கியிருந்தனர் என்பதல்ல; சாதி பாராட்டுவது கூடாது என்று கருதும் ஜனநாயகப் பண்பும் மனநிலையும் உழைக்கும் மக்களிடம் உருவாக்கப்பட்டிருந்தது என்பதுதான் அதன் பொருள்.
பார்ப்பனிய சாதியப் படிநிலை அமைப்பின் ஆகத்தாழ்ந்த படிகளில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக இருந்தாலும் சரி, ஆதிக்க சாதியாக இருந்தாலும் சரி, சாதியின் பெயரால் நடத்தப்படும் அரசியல் ஒருக்காலும் சாதியை ஒழிக்காது. அது சாதி அமைப்புகளையும், சாதியப் பிழைப்புவாதக் கட்சிகளையும் மேலும் வலுப்படுத்தவே பயன்படும். ஒரு புதிய ஜனநாயகப் புரட்சிக்காக மக்களைத் திரட்டும் போக்கில்தான், சாதி தம் வர்க்க நலனுக்கு எதிரானது என்பதையும், அது ஒரு தீயொழுக்கம் என்பதையும் ஆதிக்க சாதி மக்களுக்கேகூட உணர்த்த முடியும்.
_________________________________________________ – புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
__________________________________________________