அமெரிக்காவைச் சேர்ந்த 26 வயது இளைஞரான ஆரன் ஸ்வார்ட்ஸ்நியுயார்க்கில் உள்ள தன் வீட்டு படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். கணினி நிபுணர், இணைய அறிவாளி, இணைய போராளி என்று பன்முகம் கொண்ட ஸ்வார்ட்ஸை, கார்ப்பரேட் அமெரிக்காவின் வெறிபிடித்த கணினி தொடர்பான குற்றங்கள் சட்டம் கொன்றே விட்டது.
ஸ்வார்ட்ஸ், இன்று இணையத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும்; இணையதளங்களில் வெளியாகும் புதிய பதிவுகளை பின் தொடர உதவும்; ஆர்எஸ்எஸ் (RSS) தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தவர். திறந்தவெளி நூலகம் மற்றும் இன்னும் பிற இணைய சேவை நிறுவனங்களின் பங்குதாரர். இணைய தனிநபர் சுதந்திரம், சுதந்திரமான தகவல் பரிமாற்றம், அறிவுசார் சொத்துடமை எதிர்ப்பு போன்றவற்றிற்காக போராடி வந்தார். இதற்கு ஆதரவான இணைய குழுக்களில் இயங்கி வந்தார். அவர் உருவாக்கிய “முன்னேற்றத்தை கோருவோம்“ (Demand Progress) என்ற அமைப்பு அமெரிக்காவின் இணைய தணிக்கை சட்டங்களான சோப்பா/பிப்பாவுக்கு எதிரான இயக்கத்தை நடத்தி வந்தது.
“அறிவுசார் ஆவணங்கள் சில தனியார் நிறுவனங்களின் லாபவெறிக்கு மட்டும் பயன்படுவது தவறு, அது அனைவருக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்” என்பது அவரது கருத்து.
போராளி ஆரன் ஸ்வார்ட்ஸ்
அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுடன் தொடர்புடைய ஆவணங்கள், பிற ஆய்வாளர்களின் கட்டுரைகள் என்று நூற்றுக்கணக்கான கட்டுரைகள், புத்தகங்கள், ஆவணங்களை படிக்க வேண்டிய தேவை உள்ளது. இவையனைத்தும் ஒருங்கே கிடைக்கும் இடம் தான் ஜே-ஸ்டோர் (JSTOR) எனும் இணையதளம். பெருமளவு பணச் செலவில்தான் இதன் உறுப்பினராகி ஆவணங்களை பயன்படுத்த முடியும். $50,000 (சுமார் ரூ 25 லட்சம்) வரை ஆண்டு சந்தா செலுத்தி பெரிய ஆய்வு பல்கலைக் கழங்கள் ஜே-ஸ்டோரிலிருந்து அறிவியல் ஆவணங்களை பெற்றுக் கொள்கின்றன.
அப்போது ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சென்டர் பார் எதிக்ஸ் துறையில் ஆய்வு மாணவராக செயல்பட்டு வந்த ஸ்வார்ட்ஸ் ‘அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய விபரங்கள் உலகில் உள்ள அனைத்து ஆய்வாளர்களுக்கும் பயன் தர வேண்டும், மாறாக அதை காப்புரிமை என்ற பெயரில் ஜே-ஸ்டோர் நிறுவனம் லாபவெறியுடன் பதுக்கி வைக்கிறது’ என்று அதை எதிர்த்து வந்தார்.
‘2010 செப்டம்பரிலிருந்து 2011 ஜனவரி வரை அதே வளாகத்தில் இருக்கும் எம்.ஐ.டி. பலகலைக் கழக கணிணி நெட்வொர்க்கில் தன் மடிக்கணியை இணைத்து எம்.ஐ.டி. நெட்வொர்க் வழியாக ஜே-ஸ்டோரில் இருந்து பல லட்சம் ஆவணங்களை தரவிறக்கினார்’ என்று அவர் மீது மசாச்சுசெட்ஸ் மாவட்ட நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2011 ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட அந்த குற்றப் பத்திரிகை, ஆவணங்களை கோப்புகள் பகிர்ந்து கொள்ளும் இணைய சேவைகள் மூலம் வினியோகிக்கத் திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டியது.
அறிவுசார் ஆவணங்கள் மீதான காப்புரிமையை உறுதிசெய்து, அவற்றை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் மட்டும் லாபமீட்டுவதற்கும், இணையத்தில் ஆவணங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதை தவிர்க்கவும், அதற்காக இணைய வெளி கண்காணிப்பை அதிகப்படுத்தவும் அமெரிக்க அரசு மேலும் மேலும் கடுமையான சட்டங்களை இயற்றியிருக்கிறது. அந்த சட்டங்களையும் அறிவுசார் ஆவணங்களை பகிர்ந்து கொள்வதில் இருக்கும் தடைகளையும் எதிர்த்த அவரது போராட்டமே இறுதியில் ஆரன் ஸ்வார்ட்சின் உயிரை பறித்து விட்டது.
தகவல் தொடர்பு இணைப்பு மோசடி, கணினி மோசடி, பாதுகாக்கப்பட்ட கணினியிலிருந்து சட்ட விரோதமாக தகவல்களை பெற்றது, பாதுகாக்கப்பட்ட ஒரு கணினியை சேதப்படுத்தியது, போன்ற பல பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தன் மீது சாட்டப்பட்ட குற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுத்த ஸ்வார்ட்ஸ் 1 லட்சம் டாலர் பிணைத் தொகை செலுத்தி பிணையில் வெளியில் வந்து வழக்கு நடத்திக் கொண்டிருந்தார். இந்த பிரிவுகளில் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படலாம் என்ற நிலையில் ஸ்வார்ட்ஸ் கடந்த ஜனவரி 10-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்வார்ட்ஸ் செய்த இணைய அதிர்வை அவர் நிஜத்தில் செய்திருந்தால் சில நூறு டாலர் அபராதம் கட்டி விட்டு வெளிவந்திருக்கலாம். உண்மையில் சொல்லப் போனால் ஸ்வார்ட்ஸ் செய்த இந்தச் செயலால் ஜே-ஸ்டோர் நிறுவனத்திற்கு 1 ரூபாய் கூட இழப்பு ஏற்படவில்லை. ஆனால் ஸ்வார்ட்சின் செயல் மற்றவர்களால் தொடரப்பட்டால் காப்புரிமை என்ற கட்டமைப்பே உடைக்கப்பட்டு, அதன் மூலம் கார்ப்பரேட்டுகள் சம்பாதிக்கும் பல ஆயிரம் கோடி டாலர்கள் லாபம் பாதிக்கப்படும்.
கணினி தொடர்பான குற்றங்களுக்கு அமெரிக்காவில் 30 வருடங்கள் வரை கடுங்காவல் தண்டனை என்றால், தமிழ்நாட்டில் 1 வருடம் பிணையில் வெளிவர முடியாத குண்டர்கள் சட்டம், ஃபேஸ்புக்கில் லைக் போட்டதற்காக சிறை என்று இணைய உலகம் அதிகாரவர்க்கத்தின் நேரடி அடக்குமுறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிறிது காலம் முன்பு வரை பெரிய அளவு கண்டுகொள்ளப்படாமல் இருந்த இணைய மெய்நிகர் உலகம் இன்று மெய் உலகைவிட அதிகமான கண்காணிப்புக்கும் அடக்குமுறைக்கும் அரசாங்கங்களால் உள்ளாக்கப்பட்டுள்ளது. ‘இணையத்தில் குழுக்கள் ஏற்படுத்தி போராடுவதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தி விடலாம்’ என்று செயல்பட்ட ஸ்வார்ட்சும் நடைமுறை உலகின் நிதர்சனங்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.
போலியோ தடுப்பு மருந்தை கன்டுபிடித்த மருத்துவர் ஜான் சால்க் அதை காப்புரிமை செய்ய மறுத்தார். ‘அது அனைத்துலக மக்களுக்கும் பயன்பட வேண்டும் அதை காப்புரிமை செய்து லாபமீட்ட முடியாது’ என்றார், மேலும் ‘நீங்கள் சூரியனை காப்புரிமை செய்ய முடியுமா’ என்றார்? ஆனால் வேம்பு முதல் எலுமிச்சை வரை அனைத்தையும் காப்புரிமை செய்து அவற்றை பயன்படுத்தும் மக்களிடம் பணமீட்டி லாபமடைந்து விட வேண்டும் என்று நினைக்கிறது முதலாளித்துவம்.
மனிதன் அவன் பெற்ற அனுபவங்களை வாய்வழி கடத்தி, பின் ஓலைகள், குகை ஓவியங்கள், காகிதம், புத்தகம் என அறிவை பகிர்ந்து கொண்டு அறிவு திரட்டல்களின் முழுத் தொகுப்பை பயன்படுத்தி மேலும் மேலும் வளர்கிறது மனித சமுகம். ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு அவரால் மட்டும் நடத்தப்பட்ட ஒரு சாதனை அல்ல, அது இது நாள் வரை அந்தத் துறையில் உழைத்த எண்ணற்ற விஞ்ஞானிகள், நிபுணர்கள், அதற்கு உதவி செய்த உதவியாளர்கள் என இனம், மொழி மதம், நாடு கடந்த கூட்டு உழைப்பின் விளைவு. மொத்த உழைப்பின் விளைவையும் ஒருவர், ஒரு சில நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடுவதும் அதை வைத்து மற்றவர்களுக்கு அறிவுசார் தகவல்களை மறுப்பதும் இன்றைய முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் வக்கிரம்.
லாபவெறி, சுரண்டல், ஆதிக்கம் என்பதை எல்லாம் தாண்டி அறிவியல் வளர்ச்சியையே அறிவுசார் சொத்துடமை முடக்குகிறது என்பது நிதர்சனம். பணம் படைத்தவர்கள் மட்டுமே அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட முடியும் என்ற நிலையும், அறிவியல் வளர்ச்சியில் பரந்து பட்ட ஆய்வாளர்களின் பங்கெடுப்பு தடுக்கப்படுவதும் அறிவியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது.
ஒரு காலத்தில் அறிவியல் திருச்சபைகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது வளர முடியாமல் தவித்ததும், பின்பு பிரெஞ்சு புரட்சியின் விளைவாக அறிவியல் விடுவிக்கப்பட்டதும் வரலாறு. கருத்து ரீதியான தளைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அறிவியல் இன்று முதலாளிகளின் தனிச்சொத்து, பணம் என்ற தடைகளால் முடக்கப்பட்டுள்ளது. இந்த தளைகளை பாட்டாளி வர்க்கம் உடைக்கும் போதுதான் மனித சமூகத்தின் உண்மையான முன்னேற்றமும் வளர்ச்சியும் சாத்தியமாகும்.
அத்தகைய அரசியல் விடுதலை வராத வரை ஸ்வார்ட்ஸ் போன்ற இளைஞர்களை நாம் காப்பாற்ற முடியாதா?
குச்சு கொளுத்தி இராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கும் திருமாவளவன் (கோப்பு படம்)
“தமிழ்க்குடிதாங்கி”, “அம்பேத்கர் சுடர்” என்று விடுதலைச் சிறுத்தைகளால் கொண்டாடப்பட்ட ராமதாசு, தமிழகத்தின் ஆதிக்க சாதிவெறியர்கள் அனைவருக்கும் தலைவராக அவதரித்திருக்கிறார். “அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை” என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. சாதி மறுப்புத் திருமணத்தையும், வன்கொடுமை தடைச் சட்டத்தையும் எதிர்த்து ராமதாசு சண்டமாருதம் செய்கிறார். திருமாவளவனோ, “ராமதாசு என்னைச் சட்டையைப் பிடித்து இழுத்தாலும் நான் சண்டைக்குப் போக மாட்டேன்” என்கிறார்.
ராமதாசும், காடுவெட்டி குருவும் தூண்டி விட்ட சாதிவெறி ஆங்காங்கே தாழ்த்தப்பட்ட மக்களைக் காவு வாங்குகிறது. சேத்தியாதோப்பு பகுதியில், வன்னியர் சாதிப் பெண்ணைக் காதலித்த கோபாலகிருஷ்ணன் என்ற மாணவனைக் கழுத்தை அறுத்தே கொலை செய்து, குட்டைக்குள் வீசியிருக்கிறார்கள் வன்னிய சாதிவெறியர்கள். ஒரு வாரத்திற்குப் பின்னர், அழுகி நாறிய நிலையில் அந்த இளைஞனின் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சாதி மறுப்புக் காதலுக்குப் பழிவாங்குவதற்காக, காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற தாழ்த்தப்பட்ட பெண் வன்னிய சாதிவெறியர்களால் கொல்லப்பட்டிருக்கிறாள்.
திருமாவளவன் மட்டும் ராமதாசுடன் சமரசத்தை நாடுகிறார். “இப்போது அமைதி காப்பதுதான் வீரம்” என்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நவம்பர்-24 அன்று திருமா அளித்திருக்கும் பேட்டி, அவர் சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கி முத்தெடுத்தவர் என்று காட்டுகிறது.
தருமபுரி தாக்குதல் ராமதாசுக்குத் தெரியாமல் நடந்திருக்கும் என்றுதான் அவர் முதலில் நினைத்தாராம். இலண்டனிலிருந்து கோ.க. மணியுடனும், டாக்டர் செந்திலுடனும் தொலைபேசியில் பேசியபோது, ‘இந்தத் தாக்குதலில் பா.ம.க.வுக்குச் சம்மந்தமே இல்லை’ என்று அவர்கள் சொன்னார்களாம்; இவரும் நம்பி விட்டாராம். என்ன நடந்தது என்று ஒருமுறை கூட அவர் தன் சொந்தக் கட்சிக்காரர்களிடம் கேட்கவில்லை போலும். நம்புவோம்.
“சாதி மறுப்புத் திருமணம் செய்தால் வெட்டுவேன் என்று மாமல்லபுரத்திலேயே காடுவெட்டி குரு ஏற்கெனவே பேசியிருக்கிறாரே, உங்களுக்குத் தெரியாதா?” என்று பேட்டியாளர் ஜென்ராம் கேட்கிறார். “அது பற்றி கோ.க. மணியிடம் கேட்டேன். குருவை டாக்டரய்யா கண்டித்ததாகச் சொன்னார். நம்பினேன்” என்கிறார்.
கடைசியாக ராமதாசு தனது சொந்த வாயால் ஊடகங்களில் பேசிய பின்னர்தான், ‘இது மேலிருந்தே திட்டமிட்டு நடத்தப்படுகிறது’ என்ற உண்மை திருமாவுக்குப் புரிந்ததாம். அதாவது, விடுதலைச் சிறுத்தைகளை ராமதாசு தாக்குகிறார் என்பதை உலகமே பார்த்து விட்டதால், இனிமேலும் வலிக்காத மாதிரி நடிக்க முடியாது என்பது திருமாவுக்குப் புரிந்து விட்டது!
அதன் பிறகும் அவருக்குக் கோபம் வரவில்லை. திருப்பி அடிப்பதெல்லாம் இருக்கட்டும். “ராமதாசு அம்பேத்கர் சுடர் அல்ல, வன்னிய தீவட்டி” என்று சாடியிருக்கலாம். ராமதாசையும் குருவையும் வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்யக் கோரிப் போராடியிருக்கலாம். செய்யவில்லை. “வன்னியப் பெண்கள் வயிற்றில் தலித் கரு வளர வேண்டும் என்று நான் பேசியதாக பொப்பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு இடத்திலாவது நான் அப்படிப் பேசியதாக நிரூபித்தால், தூக்கில் தொங்கத் தயார்” என்று தருமபுரி ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக தன்னிலை விளக்கம் அளிக்கிறார் திருமா.
ஆனால், தனது கட்சியினர் மீது கூறப்படும் குற்றச்சாட்டை ஆவேசமாக மறுக்க அவர் முயலவில்லை. ‘காதல் திருமணங்களைப் பிரித்து காசு பறிப்பதாகச் சொல்கிறீர்களே, அப்படி ஒரேயொரு ஆதாரமாவது காட்ட முடியுமா?’ என்று கேள்வி எழுப்பவில்லை. ‘எங்கள் கட்சிக்காரர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவோ, வன்கொடுமைச் சட்டத்தை வைத்துப் பணம் பறித்ததாகவோ ஒரு ஆதாரம் கொடுங்கள், அரசியலை விட்டே விலகுகிறேன்’ என்று சவால் விடவில்லை.
மாறாக, சமரசத்திற்கு இப்போதும் தயாராக இருப்பதாக அந்தப் பேட்டியின் முடிவில் பிரகடனம் செய்கிறார். “தம்பி, தேர்தல் அரசியல் வேண்டாம்; வா, நாம் இரு சமூக மக்களின் நல்லிணக்கத்துக்காக, உழைக்கும் மக்கள் ஒற்றுமைக்காகப் பாடுபடுவோம் என்று டாக்டரய்யா என்னை அழைத்தால், இந்த நிமிடமே கட்சியை விட்டுவிட்டு வரத் தயார். நாடாளுமன்ற அரசியல் எனக்குத் தேவையில்லை” என்கிறார். ஆனந்த விகடன் பேட்டியில் ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் விருது கொடுத்ததை நியாயப்படுத்துகிறார். “எதிர்காலத்தில் தலித்துகளுக்கு ஆதரவாக ராமதாசு நடந்து கொண்டால், மீண்டும் அவருக்கு விருது கொடுப்போம்” என்கிறார்.
சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்காகவும், தமிழர் ஒற்றுமைக்காகவுமே தான் அமைதி காப்பதாகவும், பொறுப்புடன் நடந்து கொள்வதாகவும் தனது அணுகுமுறைக்கு விளக்கம் சொல்கிறார் திருமாவளவன். ஆனால், விடுதலைச் சிறுத்தைகளின் டிஜிட்டல் பானர் முழக்கங்களையும், மேடைப் பேச்சுகளையும் பார்த்து, திருமாவைப் போர்க்குணத்தின் உருவமாக எண்ணிக் கொண்டிருந்த இளைஞர்கள் திகைக்கிறார்கள். இப்படியொரு சரணடைவை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
ராமதாசிடம் திருமா சரணடைவது ஏன்?
ராமதாசு தலைமையில் அணி திரண்டுள்ள ஆதிக்கசாதி வெறியர்களின் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை சென்னையில் நடத்திய கூட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தன்னைத்தானே சித்தரித்துக் கொள்வதைப் போலவோ, அல்லது முற்போக்காளர்கள் எனப்படுவோர் சிலர் நம்பிக் கொண்டிருப்பதைப் போலவோ, தலித் விடுதலைக்கான அமைப்பு அல்ல. மற்றெல்லா ஓட்டுக்கட்சிகளையும் போலவே, அது ஒரு சாதிய பிழைப்புவாதக் கட்சி. வன்னிய மக்களின் பெயரைச் சொல்லி பா.ம.க. என்ற பிழைப்புவாதக் கட்சியை ராமதாசு நடத்துவதைப் போலவே, தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினருடைய பிரதிநிதியாகத் தன்னைக் கூறிக்கொண்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அரசியல் பிழைப்பு நடத்துகிறது.
பா.ம.க.வால் ஏமாற்றப்படும் வன்னிய மக்கள் ஆதிக்க சாதி; சிறுத்தைகளால் ஏமாற்றப்படும் மக்கள் ஒடுக்கப்பட்ட சாதி என்பதுதான் வேறுபாடு. பா.ம.க.வுக்கும் சிறுத்தைகளுக்கும் வேறெந்த வேறுபாடும் இல்லை. 2001 தேர்தலில் தி.மு.க.வும் பா.ம.க.வும் கூட்டணி அமைத்திருந்தபோது, திருமாவளவன் போட்டியிட்ட தொகுதியில் பல ஊர்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்டன; நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாக்குதலில் காயம்பட்டனர். அப்போது, “இந்தச் சாம்பல் மேட்டின்மீது நின்று சொல்கிறேன். கொளுத்தியவர்களுடன் இனி கூட்டணி கிடையாது” என்று திருமா அறிவித்தார்.
அன்று அப்படிச் சொல்லி விட்டு மறுபடியும் பா.ம.க., தி.மு.க.-வுடன் கூட்டுச் சேர்ந்த சந்தர்ப்பவாதம் பற்றிக் கேட்டால், “அம்பேத்கர் ஆயுதப் போராட்டம் நடத்தச் சொல்லவில்லை. இருக்கின்ற அரசமைப்பில் பங்கேற்று அரசதிகாரத்தைப் பெறுமாறுதான் கூறியிருக்கிறார்” என்று கொட்டைப்பாக்குக்கு விலை சொல்கிறார். ‘தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தலித்துகளை மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காகத்தான் வலியச் சென்று கைகுலுக்க வேண்டியிருப்பதாக’ நியாயப்படுத்துகிறார்.
தனிக்குடியிருப்பு, தனிக்கிணறு, தனிக்குவளை, தனிச்சுடுகாடு என்று தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களை ஊரின் மைய நீரோட்டத்தில் சேர்த்துக் கொள்வதாக எந்தக் கட்சியாவது வாக்குறுதி கொடுத்ததா, அல்லது கூட்டணிக்கான முன்நிபந்தனையாக அப்படி ஏதேனும் ஒன்றை திருமா முன்வைத்திருக்கிறாரா? எதுவும் கிடையாது.
சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும்போதே, அரசியலில் தலித் பிழைப்புவாதிகளை காங்கிரசு, பா.ஜ.க., உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைவரும் மைய நீரோட்டத்தில் இணைத்துதான் வைத்திருக்கிறார்கள். ‘இப்படிப் பல்வேறு கட்சிகளிலும் தலித் வாக்குகள் சிதறடிக்கப்படுவதனால்தான் தலித்துகள் அரசியலதிகாரம் பெற முடியவில்லை’ என்று கூறித் தொடங்கப்பட்டவைதான் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் கட்சிகள்.
வன்னியர்களிடம் இதே வாதங்களைச் சொல்லித்தான் ராமதாசும் தனிக்கட்சி தொடங்கினார்.
பல்வேறு கட்சிகளிலும் உள்ள வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரித்துத் தனியாக ஒரு சாதிய வாக்கு வங்கியை உருவாக்கிக் கொண்டு, தி.மு.க., அ.தி.மு.க. போன்றோருடன் பேரம் பேசுவதுதான் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எல்லா சாதிக் கட்சிகளின் நோக்கமும். தங்கள் சாதி வாக்காளர்களிடம் எந்த அளவுக்குச் சாதி உணர்வைத் தூண்ட முடிகிறதோ, அந்த அளவுக்கு இவர்கள் தமது சந்தர்ப்பவாதத்தை மறைத்துக் கொள்ள முடியும். தமது சாதி வாக்குகளை உறுதி செய்து கொள்ள முடியும்.
நீயும் நானும் ஒண்ணு, மக்கள் வாயில் மண்ணு!
இருப்பினும், திருமாவுக்கு என்ன காரணத்துக்காகவோ ராமதாசுடன் ஒரு நல்லிணக்கம் அவசரமாகத் தேவைப்படுகிறது. அதற்காகக் கொளுத்தப்பட்ட மக்களுக்கும் கொளுத்திய கிரிமினல்களுக்கும் நல்லிணக்கம் பேசுகிறார். ராமதாசோ, “நான் இருப்பதனால்தான் வட தமிழகம் அமைதியாக இருக்கிறது” என்று வெளிப்படையாகவே மிரட்டுகிறார்.
திருமா – ராமதாசு கூட்டணி, வன்னியர் – தாழ்த்தப்பட்டோரிடையேயான சமூக உறவில் எந்த சமத்துவத்தையும் கொண்டுவந்து விடவில்லை. வசூல் வேட்டை நடத்தவும், போலீசுக்குப் புரோக்கர் வேலை பார்க்கவும், கட்டப் பஞ்சாயத்து செய்யவும், காண்டிராக்ட் எடுக்கவும் மற்றெல்லா ஓட்டுப் பொறுக்கிகளும் பெற்றிருக்கும் ‘ஜனநாயக உரிமை’யை விடுதலை சிறுத்தைக் கட்சியின் ‘தளபதிகளுக்கு’த் தான் பெற்றுத் தந்தது. தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதையும் பெற்றுத் தரவில்லை.
தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை தனிக்குடியிருப்பும், தனிச்சுடுகாடும் அப்படியேதான் இருந்தன. அவ்வாறிருக்கும்போதே தாழ்த்தப்பட்டவர்களை ஏமாற்றுவதற்குத்தான் அம்பேத்கர் சிலை திறப்பு, தலித்துக்கு மந்திரி பதவி போன்ற ராமதாசின் தந்திரங்கள். பதிலுக்கு வன்னியர்களை தாஜா செய்வதற்குத்தான் ராமதாசுக்கு திருமா வழங்கிய தமிழ்க் குடிதாங்கி, அம்பேத்கர் சுடர் பட்டங்கள்.
‘குச்சு கொளுத்தி’ என்று தாழ்த்தப்பட்ட மக்களால் வெறுப்புடன் ஏசப்பட்ட ராமதாசுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களையே ஓட்டுப்போட வைத்ததும், இப்போது நத்தம் காலனியைக் கொளுத்திய பின்னரும், தமிழர் ஒற்றுமை என்று கூறிக் கொண்டு ராமதாசுக்கு நல்லிணக்கத் தூது விடுவதும்தான் திருமாவின் சாதனை என்று சொல்ல வேண்டும்.
மறுகாலனியாக்கம் பெற்றெடுத்த புதிய புல்லுருவிகள்!
வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டிய காடு வெட்டி குருவுக்கு பொன்னாடை (கோப்பு படம்)
நத்தம் தாக்குதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் படைப்பாளிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்து கொண்டு பேசினர். நெருப்பு, கொள்ளை, துயரம், கண்ணீர் போன்ற சொற்கள் ஒலிபெருக்கியிலிருந்து தெறித்த வண்ணம் இருந்தன. ஆர்ப்பாட்டத்திற்கு ‘அண்ணன் திருமா’வுடன் வந்திறங்கி இருபுறமும் அணிவகுத்து நின்ற குவாலிஸ், இன்னோவா, சுமோ போன்ற வெள்ளை வண்டிகளில் சாய்ந்தபடி மினிஸ்டர் ஒயிட்டும், கழுத்தில் தங்கத் தாம்புக்கயிறு, கையில் பிரேஸ்லெட்டும் அணிந்த சிறுத்தைகள் பலர் நின்றிருந்தனர். அவர்கள் வாயிலிருந்து ‘லட்சம், கிரவுண்டு, அப்ரூவ்டு, எம்.எல்.ஏ’ போன்ற சொற்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. இந்த வர்க்கத்தினரை அதிகாரத்துக்கு அழைத்துச் செல்வதைத்தான் தலித்துகளை அதிகாரத்துக்கு அழைத்துச் செல்வது என்கிறார் திருமா.
ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை, லேபர் காண்டிராக்ட், உரிமங்கள் பெற்றுத் தருதல், தண்ணீர்வியாபாரம், செக்யூரிட்டி ஏஜென்சி, மெட்ரிக் பள்ளி, சுயநிதிக் கல்லூரி, வாடகைக்கார் தொழில், நிலம் சார்ந்த கட்டப் பஞ்சாயத்துகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கான துணைத் தொழில்கள், கருங்காலி தொழிற்சங்கங்கள் போன்று பொறுக்கித் தின்னவும், கொள்ளையடிக்கவுமான பல வாயப்புகளை மறுகாலனியாக்க கொள்கைகள் திறந்து விட்டிருக்கின்றன. இத்தகைய தொழில்களில் ஈடுபடுபவர்கள்தான் வி.சி. கட்சியின் தூண்கள். இவர்கள்தான் டிஜிடல் பானர் வைப்பவர்கள், தங்கக் காசு கொடுப்பவர்கள், கூட்டத்துக்கு ஆள் திரட்டுபவர்கள், அண்ணன் வந்தால் முன்னும் பின்னும் 50 வண்டிகளில் புழுதி கிளப்பிக் கொண்டு செல்பவர்கள்.
இதே வகையான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பா.ம.க. உள்ளிட்ட பிற கட்சிகளின் உள்ளூர்த் தலைவர்களோடு இவர்கள் தொழில் கூட்டாளிகளாக, நண்பர்களாக, அன்றாடம் போலீசு ஸ்டேசன் முதல் கலெக்டர் ஆபீஸ் வரையில் பல இடங்களில் பழகுபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் வர்க்க நலனும் ஒன்றுதான். தொழில் தேவைக்காக வெவ்வேறு கட்சிகளில் இருக்கிறார்களேயன்றி, வேறு எந்தக் கொள்கையாலும் இவர்கள் பிரிந்து நிற்கவில்லை.
ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ, பொதுப்பணித்துறையிலோ இலஞ்சத் தொகை கீழிருந்து மேல் வரை தீர்மானிக்கப்பட்ட விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சுமுகமாகப் பிரித்துக் கொள்ளப்படுவதைப் போல, தனியார்மய- தாராளமயக் கொள்கைகள் வழங்கியுள்ள வாப்புகளைப் பயன்படுத்தி அடிக்கின்ற கொள்ளையை இவர்கள் தமக்குள் சுமுகமாகப் பிரித்துக் கொள்கிறார்கள். தேர்தல் அரசியல் கூட்டணி மாறுவதால், சில நேரம் இந்த அணியிலும், சில நேரம் அந்த அணியிலும் இருக்க நேர்ந்தாலும், இவர்களுடைய உறவின் சமநிலை அநேகமாகக் கெடுவதில்லை.
சென்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வியைத் தொடர்ந்து, ஜுலை மாதத்திலேயே திராவிடக் கட்சிகள் அல்லாத மூன்றாவது அணி அமைக்கப் போவதாக அறிவித்தார் ராமதாசு. உடனே அதை வழிமொழிந்தார் திருமாவளவன். தன்னை திடீரென்று ராமதாசு கழற்றிவிடுவார் என்பதைத்தான் திருமாவளவன் எதிர்பார்க்கவில்லை போலும். உழைத்துக் கஞ்சி குடிக்கின்ற தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் ராமதாசுடன் சமரசத்தைக் கோரவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் அரசியல் இம்மக்களுடைய நலனுக்கானதும் அல்ல.
சாதிய பிழைப்புவாதத்தைப் புனிதப்படுத்திய அடையாள அரசியல்!
அ மார்க்ஸ்
வெறுத்து ஒதுக்கப்படவேண்டிய இந்தச் சாதி அரசியலின் இரண்டாவது சுற்று, 90-களின் தொடக்கத்தில் ஆரவாரமாகத் தமிழகத்தில் தலையெடுத்தது. வன்னியர் வாக்குவங்கியை மையமாக வைத்துப் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கிய ராமதாசு, அம்பேத்கர் – பெரியார் – மார்க்ஸ் ஆகியோரது படங்களை உறுப்பினர் அட்டையில் போட்டுக் கொண்டதன் மூலம் சாதி-தீண்டாமை ஒழிப்பு, தமிழ்த்தேசிய விடுதலை, வர்க்க விடுதலை போன்ற எல்லா சரக்குகளும் கிடைக்கின்ற பல்பொருள் அங்காடியாக பா.ம.க.வைச் சந்தைப்படுத்தினார். அப்பட்டமான சாதிக் கட்சி என்று தெரிந்தபோதும், சமூக மாற்றத்துக்குக் குறுக்குவழி தேடிக் கொண்டிருந்த சில முன்னாள் புரட்சியாளர்களும், பின் நவீனத்துவ அறிவுத்துறையினரும், நரிக்கு சாயம் பூசிப் பரியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின் நவீனத்துவத்தின் நுண் அரசியலானது, சாதி, உட்சாதி, இனக்குழு, பாலினம் போன்ற அடையாளங்களை முதன்மைப்படுத்தி, வர்க்கப் போராட்டம் என்ற கருத்தாக்கத்தையும் கம்யூனிசத்தையும் தூற்றியது.
ஏகாதிபத்தியத்தால் உலகம் முழுவதும் ஸ்பான்சர் செய்யப்பட்டு, தன்னார்வக் குழுக்களால் கடைவிரிக்கப்பட்ட இந்த அடையாள அரசியலை, தலித்தியம், தலித் அரசியல் என்ற பெயர்களில் பின் நவீனத்துவ அறிஞர்கள் இங்கே முழங்கினர்.
பேரா.கல்விமணி
‘கம்யூனிஸ்டு கட்சிகளும், நக்சல்பாரிக் கட்சியும் தலித்துகளை காலாட்படையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அக்கட்சிகளிலிருந்தெல்லாம் தலித்துகள் வெளியேறித் தமக்கென தனிக்கட்சி தொடங்கவேண்டும். தலித்துகளின் உணர்வுகளைத் தலித் அல்லாதவர்கள் ஒருக்காலும் உணர முடியாது. தீண்டாமைக்கு எதிராகத் தலித்துகளைத் தவிர, வேறு யாரும் போராடுவார்கள் என்று நம்ப முடியாது. வர்க்கம் என்ற பேரடையாளத்துக்குள் சாதியை அடக்குவதால் கம்யூனிசம் சாதியை ஒழிக்காது. கம்யூனிஸ்டுகள் அதற்காகப் போராடியதுமில்லை. எனவே, தலித்துகள் சிதறிக் கிடக்காமல் தனியொரு வாக்குவங்கியாகத் திரள வேண்டும். போலி ஜனநாயகம் என்று கூறி இந்தத் தேர்தலை புறக்கணிப்பது தவறு. தேர்தல் அரசியல் மூலம் கைப்பற்றும் அதிகாரத்தின் மூலமும், கல்வி – இட ஒதுக்கீடு முதலான வழிகளில் பொருளாதார முன்னேற்றம் அடைவதன் மூலமாகவும்தான் தலித்துகள் விடுதலை பெற முடியும்’ – இவையெல்லாம் அவர்கள் மேற்கொண்ட பிரச்சாரங்கள்.
நாய்க்கன் கொட்டாய் பகுதியில் நக்சல்பாரிகளின் செல்வாக்கு இருந்தவரை சாதி அரசியல் தலையெடுக்க முடியவில்லை. அவர்கள் இல்லாத காரணத்தினால்தான் இன்று இத்தாக்குதல் நடந்திருக்கிறது” என இன்றைக்கு நத்தம் காலனி மக்கள் கூறுவதை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும்.
சாதி அமைப்பு என்பது ஒரு ஜனநாயக விரோத நிறுவனம். சாதி ஆதிக்கமும் தீண்டாமையும் தவறு என்று ஆதிக்க சாதி உழைக்கும் மக்களை உணர வைத்து, சாதிக்கு எதிராக அவர்களைப் போராட வைப்பதுதான் ஜனநாயகப் புரட்சியின் கடமை. ஆனால், அடையாள அரசியலோ, ‘மற்றதன் இருப்பை அங்கீகரிப்பது’ என்று கூறிக்கொண்டு எல்லா சாதியினரும் தத்தம் அடையாளத்தைப் பேணிக்கொள்வதை ஒரு ஜனநாயக உரிமையாகக் கௌரவப்படுத்தியது.
ரவிகுமார்
அதே நேரத்தில், ‘சாதி அடையாளத்தைத் துறந்து பணியாற்றும் கம்யூனிஸ்டுகளை நம்பாதே’ என்று தலித் மக்களுக்கு அறிவுறுத்தியது. ‘மாயாவதி, பஸ்வான் உள்ளிட்ட அப்பட்டமான தலித் பிழைப்புவாதிகளைக்கூட யாரும் விமர்சிக்கக் கூடாது. விமர்சிப்பவர்கள் ஆதிக்க சாதிக்காரர்களாகவோ, அவர்களது எடுபிடிகளாகவோதான் இருக்க முடியும். தீண்டாமைக்குரிய தீர்வை ஒரு தலித்தைத் தவிர வேறுயாரும் கூறமுடியாது. தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலித்தைத் தவிர வேறு யாரும் தலைமை தாங்க முடியாது, கூடாது’ என்றெல்லாம் பேசி, மற்ற சாதிகளில் பிறந்த ஜனநாயக சக்திகளை எதிர்நிலைக்குத் தள்ளியது தலித் அரசியல். பெரியாரைத் தலித் விரோதியாகச் சித்தரித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார்.
இவ்வாறு, ஒரு மனிதன் கொண்டிருக்கும் கொள்கை, அவனது நடைமுறை ஆகியவற்றைப் புறந்தள்ளி விட்டு, ‘அவனுடைய பிறப்பை முதன்மைப்படுத்தியதன் மூலம்’, அடையாள அரசியல் பார்ப்பனியத்தை அப்படியே வழிமொழிந்தது. உழைக்கும் வர்க்கத்தைச் சாதிரீதியாகக் கூறுபோடுவது, கம்யூனிஸ்டு மற்றும் புரட்சிகர இயக்கங்களின் மீது தலித் இளைஞர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்துவது என்ற ஆளும் வர்க்கத் திட்டத்தை நிறைவேற்றுவதே இதன் நோக்கமாக இருந்தது. ‘நம்ம சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடு’ என்று பச்சையாகக் கேட்கும் ஓட்டுப் பொறுக்கிகளின் சாதி அரசியலையே, பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் பம்மாத்து மொழியில், தன்னார்வக் குழுக்களின் தத்துவ விசார தோரணையில் முன்வைத்தது அடையாள அரசியல். மார்க்சிய – லெனினிய புரட்சிகர அரசியலிலிருந்து வெளியேறிய எஸ்.என்.நாகராசன், எஸ்.வி.இராஜதுரை, ஞானி, நிறப்பிரிகை குழுவினர் முதலானோரெல்லாம் அடையாள அரசியலில்தான் தஞ்சம் புகுந்தனர்.
சாதி சமத்துவம் என்பது சாத்தியமா?
இதன்படி, சாதியைக் கூறிக்கொள்வது நேர்மையான நடவடிக்கையாக போற்றப்பட்டது. “நான் வன்னியன் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்று அறிவித்தார் கவிஞர் பழமலய் (இன்றைக்கு அவர் ராமதாசின் கூற்றை அப்படியே வழிமொழிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது). பின் நவீனத்துவ அறிஞர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மருத்துவர் ஐயாவோ, ‘காலையில் வன்னியராக இருந்து அக்கினி சட்டி கொடி ஏற்றுவது, மாலையில் தலித் விடுதலைக்காக அம்பேத்கர் சிலை திறப்பது’ என்று பொளந்து கட்டினார்.
வாழும் பெரியார் திருமாவை அன்று பாராட்டிய ராமதாசுக்கு இன்று நன்றி தெரிவிக்கும் விடுதலைச் சிறுத்தைகள்: “அடங்க மறு” என்பவர்கள் அடக்கி வாசிப்பது ஏன்?
அடையாள அரசியல், சாதியை மட்டுமின்றி, உட்சாதி அடையாளங்களையும் போற்றிக் கொண்டாடியது. சாதி அடையாளங்களைப் பேணிக்கொண்டே, சாதி சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதுதான் ஜனநாயகம் என்று வியாக்கியானம் செய்தது. மொத்தத்தில் ‘சுயநலம், சுயசாதி அபிமானம், பிழைப்புவாதம், ஆளும் வர்க்க நிறுவனங்களை நத்திப் பிழைப்பது, கட்சி தாவுவது, பொறுக்கித்தனங்கள்’ போன்ற நடவடிக்கைகள்தான் உண்மையான கலகங்கள் என்றும், ‘புரட்சி, தியாகம், சாதி ஒழிப்பு, வர்க்கப் போராட்டம்’ போன்ற கருத்துகள் தலித் மக்களை ஏமாற்றுவதற்கு, கம்யூனிசப் புரட்சியாளர்கள் கடைவிரிக்கும் ‘பெருங்கதையாடல்கள்’ என்றும் பிரச்சாரம் செய்தது. எனவே, இத்தகைய அமைப்புகளிலிருந்து ‘தப்பித்து’ வெளியே வருமாறு தலித்துகளை அறைகூவியது.
தலித் மக்களை இப்படித் தப்பிக்கச் சொல்லி அறிவுறுத்தியவர்களில் ஒருவர்தான் பின்னாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் எம்.எல்.ஏ. பதவியைக் கைப்பற்றியவரும், சமீபத்தில் தனது மகன் திருமணத்தை மருத்துவர் ஐயா தலைமையில் நடத்தியவரும், இப்பொழுதும் நத்தம் தாக்குதலுக்கு நக்சல்பாரிகளைக் குற்றம் சாட்டி அவதூறு செய்து கொண்டிருப்பவருமான இரவிக்குமார். அவர் ‘தப்பி’ விட்டார், அவருடன் சேர்ந்து இவற்றையெல்லாம் பிரச்சாரம் செய்த நிறப்பிரிகை அறிஞர்களும் ‘தப்பி’ விட்டார்கள். அடையாள அரசியல் வைத்த நெருப்பிலிருந்து நத்தம் மக்கள்தான் தப்ப முடியவில்லை.
சாதி என்ற அடையாளத்தின் சாரமே ஏற்றத்தாழ்வுதான். படிக்கட்டில் எத்தனாவது படி என்பதுதான் சாதி என்ற அடையாளத்தின் சாரம். சமமான படி இருக்க முடியாது. சாதி சமத்துவமும் இருக்க முடியாது. இதனால்தான் பட்டியல் இன மக்களைக் குறிப்பதற்கு ‘தலித்’ என்ற சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்திக் கொண்டாலும், ‘தலித் ஒற்றுமை’ என்பது கானல் நீராகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளர், பறையர், அருந்ததியர் என்ற மூன்று முக்கியப் பிரிவினரைக் கூட ‘தலித்’ என்ற பெயரில் ஒன்றுபடுத்த முயலவில்லை. ‘நாங்கள் தலித் அல்ல, தேவேந்திர குலம்’ என்கிறார்கள் பள்ளர் சமூகத்தினர். அருந்ததியர் சமூகத்துப் பையனைக் காதலித்த பறையர் சமூகத்துப் பெண் சொந்த சாதிக்காரர்களாலேயே கொல்லப்படுகிறாள். திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றோர் தங்கள் கட்சியினரின் உட்சாதி மேட்டிமைத்தனத்துக்குத் துணையாகத்தான் நின்று வருகின்றனர். இதனை ஒழிக்க முயன்றால் இவர்களது கட்சியே ஒழிந்துவிடும் என்பதே உண்மை.
புதுச்சேரியில் நடந்த போராளி தலைவனுக்கு பொன் வழங்கும் விழா (கோப்பு படம்)
மொத்தத்தில், சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் பண்பாட்டுரீதியாக மெல்ல மங்குகின்ற சாதி உணர்வை, சாதிய பிழைப்புவாத வாக்கு வங்கி அரசியல் புளி போட்டு விளக்கிப் புதுப்பித்திருக்கிறது. அடையாள அரசியல், சாதி மற்றும் உட்சாதி உணர்வுகளுக்குக் கௌரவமும் அந்தஸ்தும் தேடித்தந்திருக்கிறது. இதன் தொடர்விளைவாக, ஒவ்வொரு சாதியிலும் உட்சாதியிலும் உள்ள படித்த நடுத்தர வர்க்கமும் மேட்டுக்குடி வர்க்கமும் முடிந்தவரை பார்ப்பனப் பண்பாட்டைத் தழுவுவதன் மூலம் தன்னை மேல்சாதியாகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. இராசராசன் மள்ளர், நந்தன் அரசன் போன்ற வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன. வருங்கால முதல்வர் ஆக விரும்புகின்ற சாதியினர் அனைவரும் தாங்கள் நேற்றைய முதல்வர் பரம்பரை என்று கூறிக்கொள்ளவே விரும்புகிறார்கள். சாதிப்பெருமிதம் கெட்டிப்படுகிறது.
விவசாயம் அழிந்து, மறுகாலனியாக்கத்தால் சிதறடிக்கப்பட்டு, முறுக்கு போடவும் மூட்டை தூக்கவும் தோட்டவேலை செய்யவும் மாநிலம் மாநிலமாக ஓடிக்கொண்டிருக்கும் கள்ளருக்கும், முத்தரையருக்கும், வன்னியருக்கும், பள்ளருக்கும் ஒரு மயக்கத்தைக் கொடுக்கும் போலிப் பெருமித அடையாளமாக இப்போது சாதி புதுப்பிக்கப்படுகிறது. தேவர் ஜெயந்தி, மகாபலிபுரம் விழா போன்றவையெல்லாம் ஆண்டுதோறும் அவர்களுக்கு ஏற்றப்படும் மயக்க ஊசிகள். தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் காரணமாகத் தோன்றியிருக்கும் புதிய தரகு வர்க்கங்கள்தான் இன்று சாதிச் சங்கங்களுக்கும் சாதிக்கட்சிகளுக்கும் புரவலர்கள்.
நத்தம் தாக்குதல் மற்றும் கௌரவக் கொலைகள் என்று அழைக்கப்படும் சாதிவெறிக் கொலைகள் எதைக் காட்டுகின்றன? நகரமயமாக்கம், பெண் கல்வி ஆகியவற்றின் காரணமாக ஒரே இடத்தில் படிக்கின்ற ஆண்களும் பெண்களும் சாதிய எல்லை கடந்து அறிமுகமாகிறார்கள். பழைய சாதிய இறுக்கங்களும் மனத்தடைகளும் தகர்ந்து காதலிக்கிறார்கள். அவர்களுடைய எதார்த்த வாழ்க்கைக்கும் விருப்பத்துக்கும் சாதி பொருத்தமற்றதாக, அவர்களது சுதந்திரத்துக்குத் தடையாக இருக்கிறது. சாதி நிராகரிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இளைஞர்களைக் காதல் மணம் புரிந்துள்ள பிற சாதிகளைச் சேர்ந்த பெண்கள் நக்கீரன் இதழுக்கு அளித்துள்ள பேட்டிகளில், அவர்களிடம் சாதி மறுப்பு ஜனநாயகக் கருத்துகள் இயல்பாக அரும்பியிருப்பதை காணமுடியும்.
ஒருபுறம் சாதியின் அடித்தளம் பலவீனப்பட்டு வந்த போதிலும், சாதி ஆதிக்க விழுமியங்கள் அழிந்து விடவில்லை. சாதி கடந்த திருமணங்களில், தொடக்கத்தில் பெற்றோர்கள் முரண்படுவது, பின்னர் மெல்ல ஏற்றுக் கொள்வது என்பதுதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. திவ்யாவின் தந்தை நாகராஜ் விசயத்திலும் அதுதான் நடந்திருக்கும். அவ்வாறு நடக்க விடாமல் அங்கே சாதிவெறியைத் தூண்டி, இத்தகைய கொடூரமானதொரு தாக்குதலை நடத்தக் காரணமாக இருந்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சி எனும் சாதிக்கட்சி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டி, அக்குற்றச்சாட்டுகளுக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் பொறுப்பாக்கி, இதன் அடிப்படையில் ஆதிக்கசாதி சங்கங்கள் அனைத்தையும் திரட்டி நிறுத்தியிருக்கிறார் ராமதாசு. சாதி கடந்த திருமணத்தை எதிர்ப்பது என்று தொடங்கி வன்கொடுமைச் சட்டத்தையே முடக்குவது, சாதி- தீண்டாமையைத் தங்கள் பிறப்புரிமையாக அறிவிப்பது என்ற எல்லைக்குச் செல்கின்றனர் சாதிவெறியர்கள்.
சாதியைப் பாதுகாக்கும் அரசு, தீண்டாமையை ஒழிக்குமா?
சாதியை ஒழித்து சமத்துவத்தைக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளாகச் சிபாரிசு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டால் பதவியும் அதிகாரமும் பெற்ற ஆதிக்க சாதியினரின் சங்கங்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு நிற்கிறார்கள். தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் தீண்டாமைக் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. பதிவு செய்யப்படும் வழக்குகளும் குற்றவாளிகளுக்கு விடுதலை பெற்றுத்தரும் விதத்திலேயே சோடிக்கப்படுவதால் 3 சதவீதம் பேர் கூட தண்டனை பெறுவதில்லை. இன்று வன்கொடுமைச் சட்டத்தை முடக்க இதுவே ஆதாரமாக காட்டப்படுகிறது.
கீழிருந்து மேல் வரை தலித் போலீசு அதிகாரிகள் இருந்தபோதிலும், அவர்களே கயர்லாஞ்சி வழக்கை எப்படி முடக்கினர் என்று அம்பலப்படுத்துகிறார் ஆனந்த் தெல்டும்டெ. இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது தனிநபர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமேயன்றி, சாதி எனும் சமூகக் கொடுமையை ஒழிக்க உதவாது என்பதுடன், அதுவே சாதிய பிழைப்புவாத, வாக்கு வங்கி அரசியலுக்கும் வழிதிறந்து விடுகிறது என்பதையே அனுபவங்கள் காட்டுகின்றன.
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் ஊடாகப் பிறந்ததோ, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியின் மூலம் நிலைநாட்டப்பட்டதோ அல்ல. இது விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கும், பிரித்தாளுவதற்கும், நிறுவனமயப்படுத்துவதற்கும் பிரிட்டிஷ் அரசு திட்டமிட்டு மேலிருந்து திணித்த, கறை படிந்த ஜனநாயக அரசு வடிவம்.
“போலீசும் உளவுத்துறையும் சரியாகத் தம் கடமையைச் செய்திருந்தால் நத்தம் தாக்குதலை தடுத்திருக்க முடியும்; வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கத் தமிழக அரசு தவறிவிட்டது” என்ற வகையில் கூறப்படும் விமர்சனங்கள், தெரிந்தோ தெரியாமலோ இந்த அரசு குறித்த பிரமையை உருவாக்குகின்றன. ஆனால், சட்டங்கள் மூலம் சமுதாயத்தை மேலிருந்து ஜனநாயகப்படுத்தும் நோக்கத்தில் இந்த அரசு உருவாக்கப்படவில்லை. சாதி முதலான பிற்போக்கு விழுமியங்களை ஒழித்து இந்திய சமூகத்தை ஜனநாயகப்படுத்தக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.
ஜனநாயகப் புரட்சியின்றி சாதி – தீண்டாமை ஒழிப்பு இல்லை!
சாதி, தீண்டாமை, ஆணாதிக்கம் உள்ளிட்ட ஜனநாயக விரோத விழுமியங்களை மக்கள் மனங்களிலிருந்து அகற்ற வேண்டுமானால், சாதி – மத வேறுபாடுகளை நிராகரிக்கின்ற ஜனநாயகப் புரட்சிக்கான போராட்டத்தில் மக்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும். தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வை தாழ்த்தப்பட்ட மக்களிடம் யாரும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதி ஆதிக்கம் கூடாது என்ற உணர்வுக்கு ஒரு சாதி இந்துவைக் கொண்டு வருவது எப்படி என்பதுதான் கேள்வி.
திவ்யா போன்ற பெண்கள் இத்தகைய உணர்வுக்கு வருவதற்கு காதல் ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால், ஆதிக்க சாதி மக்களை ஒட்டுமொத்தமாக இந்த உணர்வுக்கு கொண்டு வருவது எப்படி என்பதே நம்முன் இருக்கும் கேள்வி. நக்சல்பாரி அமைப்புகள் அப்பகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த காலத்தில் சாதி உணர்வு தலையெடுக்கவில்லை என்று கூறப்படுவதன் பொருள், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த அனைவரும் தண்டனை குறித்த அச்சத்தினால் ஒடுங்கியிருந்தனர் என்பதல்ல; சாதி பாராட்டுவது கூடாது என்று கருதும் ஜனநாயகப் பண்பும் மனநிலையும் உழைக்கும் மக்களிடம் உருவாக்கப்பட்டிருந்தது என்பதுதான் அதன் பொருள்.
பார்ப்பனிய சாதியப் படிநிலை அமைப்பின் ஆகத்தாழ்ந்த படிகளில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளாக இருந்தாலும் சரி, ஆதிக்க சாதியாக இருந்தாலும் சரி, சாதியின் பெயரால் நடத்தப்படும் அரசியல் ஒருக்காலும் சாதியை ஒழிக்காது. அது சாதி அமைப்புகளையும், சாதியப் பிழைப்புவாதக் கட்சிகளையும் மேலும் வலுப்படுத்தவே பயன்படும். ஒரு புதிய ஜனநாயகப் புரட்சிக்காக மக்களைத் திரட்டும் போக்கில்தான், சாதி தம் வர்க்க நலனுக்கு எதிரானது என்பதையும், அது ஒரு தீயொழுக்கம் என்பதையும் ஆதிக்க சாதி மக்களுக்கேகூட உணர்த்த முடியும்.
_________________________________________________ – புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
__________________________________________________
தமிழ் மக்களின் சுயமரியாதையை ஒழித்து அடிமைத்தனத்தைக் கற்றுத் தருவதில் பல பத்திரிகைகள் நம்பர் 1க்குப் போட்டி போடுகின்றன. 20.1.13 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழ், “காத்திருக்கும் அரசியல் புயல்” என்று ரஜினியைக் குறித்து ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. கவர் ஸ்டோரி என்றால் அது ஏதோ மிகப்பெரும் செய்தி அலசல் என்று நினைத்து விடாதீர்கள். இது “சுவாமி வம்பானந்தா” என்ற கிசுகிசு மாமாவின் பக்கத்தில் வருகிறது. ஜூனியர் விகடனின் கழுகுக்குப் போட்டியாக களமிறக்கப்பட்ட இந்த மாமா, சிஷ்யை எனும் பெண்பால் பாத்திரத்தின் மூலம் கவர்ச்சியுடன் வாரம் இரண்டு முறை மேல் மட்ட கிசுகிசுக்களை வாந்தி எடுக்கும் இழிவான ஜன்மம்.
ரஜினி, தனது பிறந்த நாளைக் கொண்டாடிய ரசிகர்களை, புத்தாண்டில் சந்தித்து பேசினாராம். அப்போது இந்த வம்பானந்தா கூட இருந்த ரசிகர்களை சந்தித்து இந்த சேதிகளை தயாரித்து எழுதுகிறார். ரசிகர்களை சந்தித்த ரஜினி முழுக்க அரசியலைப் பேசிக் கொண்டு இருந்தாராம். ரசிகர்களுக்கு தெரிந்த அரசியல் அறிவில் கடுகளவு கூட தெரிந்திராத ரஜினி என்ன பேசியிருப்பார்? குஜராத்தில் நான்காவது முறையாக முதல்வர் பதவியைப் பிடித்த மோடியை உதாரணம் காட்டிய ரஜினி, “மோடி மக்களுக்காக நல்லது பல செய்தாலும் படுத்துக் கொண்டே ஜெயிக்க முடியவில்லை, கஷ்டப்பட்டுத்தான் ஜெயித்திருக்கிறார், இதுதான் இன்றைய அரசியல் சூழ்நிலை” என்றாராம்.
இவர்கள் கிசுகிசுவாகவும், பரபரப்பிற்காகவும் செய்திகளை கேட்டோ இல்லை இட்டுக்கட்டியோ எழுதினாலும் உண்மையை ஒளித்து வைக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று. நரவேட்டை மோடியை சிலாகித்துச் சொல்லுமளவு ரஜினியின் இதயமும் பாசிசத்தின் செல்வாக்கில் இருப்பது ஒருபுறம். இன்னொரு புறம் அத்தகைய மோடி கூட படுத்துக் கொண்டே ஜெயிக்கவில்லை என்பதன் மூலம் ரஜினி என்ன கூற வருகிறார்?
அரசியல் என்பது நோகாமல் நொங்கெடுத்து வயிறார தின்ன வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். அவரது திரைப்படத்தில் பாம்பையோ இல்லை பந்தையோ வைத்து ஊதி ஊதியே வில்லன்களை பந்தாடுவார் இல்லையா? அது போல அரசியலிலும் எந்த கஷ்டங்களும் இன்றி பதவியை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ரஜினி சொல்ல வரும் கருத்து. எனில் இத்தகைய மைனர்களெல்லாம் தற்செயலாக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை கதறக் கதற ‘கற்பழிப்பார்கள்’ என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
அடுத்து ‘ஒரு கட்சியில் ஒருவருக்கு சீட் கொடுத்தால் அவரது எதிரணியினர் போய் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்குவது போன்ற மனநிலையில்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள்’ என்று ரஜினி கவலைப்படுகிறாராம். இப்படிப்பட்ட தொண்டர்களால்தான் கட்சிக்கு கெட்ட பெயர் என்பதால் தொண்டர்கள் கட்டுக்கோப்போடு இருப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறாராம். எல்லா ஓட்டுக்கட்சிகளும் தலைமை முதல் தொண்டர்கள் வரை சுயநலம், பதவி, அதிகாரம், ஊழல், சொத்து என்று செயல்படுவதால் பதவி கிடைக்காத பேர்வழிகள் இப்படித்தான் அதிருப்தியாளர்கள் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.
ஆனால் ரஜினியே ஒரு பிரம்மாண்டமான சுயநலமாக இருப்பதால் இது அவருக்கு புரியவில்லை. ஆனால் எது எப்படியோ தலைமை எப்படி இருந்தாலும் தொண்டர்கள் முழு அடிமைத்தனமாக இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார். இந்த விசயத்தில் இவரை ஆம்பளை ஜெயலலிதா என்றும் அழைக்கலாம். பாசிஸ்டுகளுக்கு ஏது பால பேதம்?
“கடையை ஆரம்பிப்பது விஷயமல்ல, கடையை ஆரம்பித்தால் வெற்றி பெறணும், அதற்கான சூழ்நிலை அமைய வேண்டும், அதுவரைக்கும் காத்திருக்க வேண்டும்” என்று ரஜினி சொன்னாராம். கொள்கையே இல்லாத ஒரு நபர் தனது கவர்ச்சியை மட்டும் மூலதனமாக வைத்து கட்சி ஆரம்பித்தால் இப்படித்தான் யோசிக்க முடியும். இதற்கு சரவணா ஸ்டோர் அண்ணாச்சியே மேல். தனது சொந்த நேர்மையின் மேல் நம்பிக்கை இல்லாத நபர்தான் மற்ற சூழ்நிலைகள் விபத்து போல் தரும் வாய்ப்புகளை பற்றிக் கொண்டு மேலே ஏற கனவு காண முடியும். அரசியல் என்பது அண்ணாமலையில் பால்காரன் கோடிசுரவனாக மாறியது போல ரஜினி புரிந்து வைத்திருக்கிறார். போகட்டும், இந்த அளவாவது ‘யோசிக்கிறாரே’ என்று நமக்குத்தான் ஆச்சரியம்.
“எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் போது தமிழ்நாட்டில் மூன்று கட்சிகள்தான் இருந்தன, அதனால் அவரால் ஜெயிக்க முடிந்தது, இப்போது நிறைய கட்சிகள், ஜாதிக் கட்சிகள்….இதையெல்லாம் தாண்டி அரசியலில் ஜெயிக்கணும்னா அசுர அலை வரணும், அதுவரைக்கும் காத்திருங்கள்” என்று ரஜினி மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டே கூறினாராம்.
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் போது தி.மு.க, காங்கிரசு போக யார் அந்த ரஜினியின் மூன்றாவது கட்சி? ஒரு வேளை போலிக் கம்யூனிஸ்டுகளாக இருக்குமோ? இது மட்டும் அவர்களுக்கு தெரிந்தால் ‘சூப்பர் ஸ்டாரே நம்மையும் ஒரு பொருட்டாக மதித்து மூன்றாவது கட்சி என அங்கீகரித்திருக்கிறாரே, அவரது இதயத்தில் நமக்கும் ஓர் இடமிருக்கிறதே’ என நன்றிப் பெருக்கால் தீக்கதிரில் ரஜினி சிறப்பிதழ் வெளிவருவது உறுதி.
எம்.ஜி.ஆர் மாதிரி குறைவான கட்சிகள் ஓரிரண்டு இருந்தால் தனது வெற்றி சுலபம் என்று ரஜினி கருதுவது நாம் ஏற்கனவே சொன்னது போல சைக்கிள் சுற்றுகிற நேரத்தில் கதாநாயகன் முதலாளியாவதாக கற்றும் தரும் தமிழ் சினிமாவின் அசட்டு உளவியல் பாதிப்பில்தான் ரஜினி இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. சிகரட்டை தூக்கிப் போட்டு தம்மடிப்பதை வைத்து ஆளானவரெல்லாம் அரசியல் குறித்து யோசித்தால் சாக்ரடிசாகவா பேச முடியும்? சாக்கடையாகத்தான் உளற முடியும்.
96-ல் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார் என்று இடையில் குமுதத்தின் வம்பானந்தா வருத்தப்படுகிறார். ஆனாலும் ரஜினியை கைவிடவில்லை. அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்படும் போது உள்ளே வரலாமென அவர் நினைக்கலாம் என்று குமுதம் ரிப்போர்ட்டர் எழுதுகிறது. ரஜினியே பதறியடித்து ஓடினாலும் இந்த ஊடக மாமாக்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறது. இதுதான் ரஜனிக்கும் நாம் உண்மையிலேயே பெரிய ஆள் என்ற மயக்கத்தை தோற்றுவிக்கும். அவ்வகையில் ரஜினி என்ற கோமாளி பலூனை ஊதுபவர்கள் இத்தகைய விபச்சார ஊடகங்கள்தான்.
ரஜினியின் அரசியல் ஆலோசகர்கள் பலரும் சொன்ன அறிவுரைப்படிதான் அவர் ரசிகர்களுடன் போட்டோ எடுப்பதை நிறுத்திக் கொண்டாராம். அப்போதுதான் அவரைப் பற்றிய ஆர்வம் ரசிகர்களுக்கு இருக்குமென்று அந்த ஆலோசகர்கள் சொன்னதாக வம்பானந்தா அடித்து விடுகிறார். இது உண்மை என்றால் ரசிகர்களைப் பற்றி ரஜினி எவ்வளவு கேவலமாக கருதுகிறார் என்று தெரிகிறது. நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் தங்களது தனிமையை, ‘சுதந்திரத்தை’ இழந்து விடுவார்களென ஒரு ஒப்பாரியை எல்லா நடிகர்களும் வைப்பார்கள். அதாவது அந்த நட்சத்திர அந்தஸ்தினால் வரும் பணம் மட்டும் அவர்களுக்கு தேவை. அந்த பணத்தை தரும் ரசிகர்கள் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. ரஜினி ரசிகர்களை சந்திக்காமல் இருப்பதும் இப்படித்தான். ஆனாலும் சிவாஜி, எந்திரன், கோச்சடையான் என்று தனது சினிமாக்கள் பெருவெற்றி பெற்று வசூலில் தனது கழிவுத்தொகை கொட்ட வேண்டுமென்றால் மட்டும் அவர் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பார். மற்ற நேரங்களில் அந்த அரசியல் ஆலோசகர்கள் மேல் பழியைப் போட்டு பதுங்கிவிடுவாராம். ரஜினி ரசிகனே இதைக் கேட்டாவது நீ ‘தற்கொலை’ செய்து கொள்வாயா?
பாசிச ஜெயலலிதாவின் ஊடக பாதந்தாங்கியாக செயல்படும் குமுதம் மாமா, ரஜினியை இப்படி ஊதிப்பெருக்கினால் அம்மா கோவித்துக் கொள்ள மாட்டாரா என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? கவலையே வேண்டாம், அதற்கும் இந்த விபச்சாரத் தரகர்கள் ஒரு பதிலை கச்சிதமாக வைத்திருக்கிறார்கள். அதாவது ‘ரஜினி இப்படி தனி ஆவர்த்தனம் காட்டி, தனிக் கட்சி கண்டால் அது அதிமுகவிற்கு பாதகமில்லையாம். எதிர்க்கட்சிகளின் வாக்குகளைத்தான் ரஜினி பிரிப்பார் என்பதால் புரட்சித் தலைவி குஷியில் இருக்கிறார்’ என்று தில்லானா மோகனாம்பாளின் வைத்தி விஞ்சும் புரோக்கர் விசுவாசத்தில் புல்லரிக்கிறது குமுதம் ரிப்போர்ட்டர்.
ஆக ரஜினிக்கு தேவையான இமேஜ் பில்டப் ஒருபுறம், மறுபுறம் அதனால் புரட்சித் தலைவிக்கு பாதிப்பில்லை என்று சமாதானம் வேறு. ஒரு விபச்சாரத் தரகன் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்பது இதுதானில்லையா?
அண்மையில் நடந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசு அதிகாரிகள் மாநாட்டின் நிறைவில் முதல்வர் ஜெயலலிதா செய்துள்ள அதிரடி அறிவிப்புகள், பாசிச ஆட்சியைச் சட்டபூர்வமாகக் கட்டவிழ்த்துவிடுவதற்கான முன்னறிவிப்பாகவே அமைந்துள்ளன. இம்மாநாட்டில், போலீசாருக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ள ஜெயலலிதா, தற்போதுள்ள குண்டர் சட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவது, இணையக் குற்றங்களை (சைபர் கிரைம்) குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவருவது, மறியல் செய்வதற்கு முப்பது நாட்களுக்கு முன்னதாக அனுமதி வாங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பது – என மூன்று சட்டத் திருத்தங்களை அறிவித்துள்ளார்.
தொடர் குற்றங்களில் ஈடுபடும் தொழில்முறைத் திருடர்கள், ரவுடிகள், போதைப் பொருட்களைக் கடத்துபவர்கள், கள்ளச் சாராயம் காச்சுவோர் போன்றோரைத் தண்டிப்பது; வெளியில் இருந்தால் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால், அத்தகையோரைக் குற்றமிழைப்பதிலிருந்து தடுத்து வைப்பது என்று கூறிக் கொண்டுதான் பிணை ஏதுமின்றி ஓராண்டு காலத்துக்குச் சிறையிலடைக்கும் வகையில் குண்டர் சட்டம் கொண்டுவரப்பட்டது. தொடர்ச்சியாகக் குற்றங்களில் ஈடுபடுவோரைக் குற்றச் செயல்களிலிருந்து தடுப்பதற்கான இச்சட்டத்தை இப்போது, ஒருவர் முதன்முறையாகக் குற்றம் செய்தால்கூட ஏவலாம் என்றும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்போரை இச்சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்கலாம் என்றும் இச்சட்டத்தைத் திருத்தி விரிவாக்கியுள்ளது பாசிச ஜெயா கும்பல்.
ஏற்கெனவே தேசியப் பாதுகாப்புச் சட்டம் எனும் ஆள்தூக்கிச் சட்டத்தின்படி, அரசுக்கு எதிராகப் போராடும் புரட்சிகர -ஜனநாயக சக்திகளும் எதிர்க்கட்சியினரும் நாடெங்கும் ஒடுக்கப்பட்டனர். அக்கொடிய சட்டத்தைக் கொண்டு 1990-களில் பாசிச ஜெயா அரசு ம.க.இ.க. முதலான புரட்சிகர அமைப்புகளையும் ஈழ விடுதலை ஆதரவு அமைப்புகளையும் கொடூரமாக ஒடுக்கியது. அடிப்படை மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட ஜனநாயக விரோதச் சட்டம்தான் இது. இச்சட்டத்தின் நீட்டிப்பாகவே, தொடர் குற்றங்களைத் தடுப்பது என்ற பெயரில் குண்டர் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தன்னளவிலேயே ஜனநாயக விரோதமான இச்சட்டம், பின்னர் திருட்டு விசிடி தயாரிப்போர், விற்போர் மீது ஏவும் வகையில் விரிவாக்கப்பட்டது.
தமிழகத்தில் குண்டர் சட்டத்தைப் போலக் கேடாகப் பயன்படுத்தப்பட்ட சட்டம் வேறு எதுவும் இல்லை. குண்டர் சட்ட வரையறைக்குள் வராதவை என்று 99 சதவீதத்துக்கும் மேலான வழக்குகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுவது தொடர்கிறது. வீரபாண்டி ஆறுமுகம் போன்ற தி.மு.க.தலைவர்களும் முன்னணியாளர்களும் இச்சட்டத்தால் பழிவாங்கப்பட்ட கதையை அனைவரும் அறிவர். எதிர்க்கட்சியினரை முடக்குவதற்கானதாக மட்டுமின்றி, பெயரளவிலான ஜனநாயக உரிமைகளையும் பறித்து மக்களை ஒடுக்கும் நோக்கத்துடன் அச்சட்டத்தின் எல்லைகள் இப்போது மேலும் விரிவுபடுத்தப்படுகின்றன.
பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிடலாம் என்கிற புதிய விதியானது, ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கொடிய விதியாகும். மின்வெட்டுக்கு எதிராகத் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடும் உழைக்கும் மக்களும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராடும் மக்களும், காவிரி- முல்லைப் பெரியாறில் தமிழகத்தின் நியாயவுரிமைக்காகப் போராடும் விவசாயிகளும், இனி பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படலாம். பொது அமைதி என்றால் என்ன என்பதை மாவட்ட ஆட்சியரும், போலீசு அதிகாரிகளும், அரசு வழக்குரைஞர்களும் அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு ஏற்பத் தீர்மானிப்பார்கள். இதன் மூலம் எந்தவிதமான சட்டபூர்வமான போராட்டங்களைக்கூட நடத்த முடியாத நிலைமை ஏற்படும். உழைக்கும் மக்கள் ஒரு கண்டன ஊர்வலம் நடத்தும்போது, அதனால் பொதுப் போக்குவரத்துக்கு சிறிது நேரம் இடையூறு ஏற்பட்டால் கூட, அதனைப் பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டி, முன்னணியாளர்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிட முடியும்.
ஏற்கெனவே உள்ள தகவல்-தொடர்பு தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், இணையக் குற்றத் தடுப்புக்கான 66-ஏ பிரிவின்படி, நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொத்துக்கள் குவிந்தது எப்படி என்று டுவிட்டரில்” விமர்சித்ததற்காக புதுச்சேரியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மும்பையில், பால்தாக்கரேயின் மரண ஊர்வலத்துக்காக மும்பை நகரம் முடக்கப்பட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்ததற்காக இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கருத்துரிமையைப் பறிக்கும் இக்கொடிய சட்டப் பிரிவானது, இப்போது குண்டர் சட்டத்திலும் சேர்க்கப்பட்டு, இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஒருவரைக் கைது செய்து சிறையிலடைக்கும் வகையில் குண்டர் சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இணையக் குற்றங்களைக் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான நோக்கம், அரசுக்கு எதிராகக் கருத்துக்களைச் சொல்பவர்களை மிரட்டி ஒடுக்குவதற்குத்தான். அதாவது, இனி ஜெயலலிதாவை நையாண்டி செய்து யாராவது கேலிச்சித்திரம் வரைந்தால்கூட அவர் மீதும் குண்டர் சட்டம் பாயும். இணையத்தின் மூலம் சுதந்திரமாகக் கருத்துகளை வெளியிட முடியும் என்று கருதிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க அறிவுத்துறையினரது மாயைகளை பாசிச ஜெயாவின் இச்சட்டத்திருத்தம் கீழறுத்துப் போட்டுள்ளது.
இத்தனையும் போதாதென்று, மறியலில் ஈடுபடுபவர்கள் 30 நாட்களுக்கு முன்னதாக போலீசிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என்ற விதியானது, பெயரளவிலான ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் கொடூரத் தாக்குதலாகும். தங்கள் குரலை ஆட்சியாளர்கள் செய்விமடுக்காதபோது, உழைக்கும் மக்கள் வேறுவழியின்றி பயன்படுத்தும் ஒரு ஆயுதம்தான் மறியல் போராட்டம். இது அநீதிக்கு எதிரான மக்களின் போராட்ட வடிவம். ஒரு ஊரில் சாதியக் கொடுமையோ, அல்லது போலீசின் அட்டூழியமோ நடந்தால், அப்போது நாட்டு மக்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்க மறியல் போராட்டம் முக்கியமான போராட்ட முறையாக உள்ளது. இது வன்முறைப் போராட்டம் அல்ல. இருப்பினும், இத்தகைய போராட்டம் நடத்தும் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டுக்கு எதிராக நள்ளிரவில்கூட குடும்பத்துடன் திரண்டு, வேறுவழியில்லாத நிலையில்தான் உழைக்கும் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே போலீசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது கேலிக்கூத்தானது மட்டுமின்றி, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையையே குழிபறிக்கும் செயலாகும். மறியல் போராட்டத்தை முற்றிலும் தடை செய்யவில்லை என்று காட்டிக் கொண்டு, மறியல் போராட்டத்தைத் தண்டிக்கத்தக்க குற்றமாக மாற்றியுள்ளது பாசிச ஜெயா கும்பல்.
தனியார்மய – தாராளமயத் தாக்குதல் தீவிரமாவதைத் தொடர்ந்து நாடெங்கும் மக்களின் போராட்டங்கள் தன்னெழுச்சியாகப் பெருகி வருகின்றன. அதை முந்திக் கொண்டு பாசிச அடக்குமுறைச் சட்டங்களும் பெருகி வருகின்றன. தனியார்மய – தாராளமயத்துக்கு எதிராகப் போராடுபவர்களை எவ்விதத் தடையுமின்றி ஒடுக்குவதற்காகவே தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும், தடா-பொடா சட்டங்களின் மறு அவதாரமான “ஊபா”வும் உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டு மக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில் ஆதார் அடையாள அட்டை கொண்டுவரப்படுகிறது. பெருகிவரும் எதிர்ப்புகளை நசுக்குவதற்கான முன்னேற்பாடாகவே, இப்போது குண்டர் சட்டத்தின் எல்லைகளும் விரிவாக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே சமச்சீர் கல்வி, பேருந்துக் கட்டண உயர்வு, மின்வெட்டு, காவிரியில் பிரச்சினை முதலானவற்றால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள பாசிச ஜெயா கும்பலின் ஆட்சியை போலீசு அடக்குமுறையும் பாசிச சட்டங்களும்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. “ஆட்சிக்கு வந்தவுடன், அம்மா திருந்திவிட்டார், இவர் பழைய ஜெயலலிதா அல்ல” என்று பார்ப்பன கோயபல்சு பத்திரிகைகள் அவருக்கு ஒளிவட்டம் போட்டன. ஆனால் பாசிச ஜெயாவோ, தான் ஒரு பார்ப்பன பாசிஸ்டுதான் என்பதைத் தனது அதிரடி பாசிச சட்டங்களின் மூலம் மீண்டும் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்.
இம்மென்றால் பொய்வழக்கு! ஏனென்றால் குண்டர் சட்டம்!!
பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்துபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என ஜெயா அறிவித்திருப்பது மக்களுக்காகப் போராடுபவர்களைக் குறிவைத்துதான் என்பதை, சென்னை-மதுரவாயல் பகுதி புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியைச் சேர்ந்த திவாகரன், குமரேசன் என்ற இரண்டு தோழர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் கைதாகியிருப்பது நிரூபித்துவிட்டது.
கடந்த ஆகஸ்டு 25-ஆம் தேதி மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக வந்த போலீசு, பகுதி மக்களைப் பீதியூட்டும் அராஜகத்தில் இறங்கியது. அவ்விரண்டு தோழர்களும் போலீசின் அராஜகத்தைத் தட்டிக் கேட்டதற்காக அவர்களைக் கைது செய்து, பொய் வழக்கு போட்டு, சிறையிலடைத்த போலீசு, அதன் பின் அவர்கள் மீது குண்டர் சட்டத்தையும் ஏவிவிட்டது. போலீசின் இந்தக் காட்டு தர்பாரைக் கண்டித்து போலீசு நிலையத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்களின் மீதும், பு.மா.இ.மு தோழர்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய போலீசு, பு.மா.இ.மு. தோழர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டு 64 பேர் மீது பொய்வழக்கு போட்டுச் சிறையில் அடைத்தது.
குண்டர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப் போவதாக கடந்த டிசம்பர் 19 அன்றுதான் அறிவித்தார், ஜெயா. ஆனால், அதற்கும் முன்பாகவே உழைக்கும் மக்களுக்காகப் போராடிவரும் பு.மா.இ.மு. தோழர்கள் மீது அச்சட்டத்தைச் சட்டவிரோதமான முறையில் ஏவியிருக்கிறது, சென்னை போலீசு. அம்மா எள் என்பதற்கு முன்பாகவே எண்ணெயாக நின்ற தமிழக போலீசின் கடமையுணர்ச்சியை என்னவென்பது!
_________________________________________________ – புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
__________________________________________________
இந்திய நாடாளுமன்றம் என்பது வெற்று அரட்டைமடம்; ஜனநாயகத்துக்கான தேசிய முகமூடி; நாட்டையும் மக்களையும் அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு அடகு வைக்கும் துரோகிகள்தான் ஓட்டுக்கட்சிகள் – என்பதை சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கான வாக்கெடுப்பு விவாதம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பதென்பதுதான் ஓட்டுக் கட்சிகளின் முடிவாக இருந்தது. எனினும், இந்த நாடகத்தை எப்படித் திறமையாக நடத்துவது என்பதில்தான் அவர்களிடையே வேறுபாடு நிலவியது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு விவகாரத்தில், எந்த ஓட்டுக்கட்சி எந்த நிலையை எடுக்கும் என்பதும், ஓட்டெடுப்பின் முடிவு எப்படி அமையும் என்பதும் கிட்டத்தட்ட எல்லோரும் அறிந்த விசயம்தான். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் என்ற பெயரில் தலா இரண்டு நாட்களுக்கு ஒரு ஜனநாயகக் கேலிக்கூத்து நடந்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கும் தீர்மானம் மக்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அரசுக்கு எதிராக 218 வாக்குகளும், ஆதரவாக 253 வாக்குகளும் கிடைத்தன. 545 எம்.பி.க்களைக் கொண்ட அவையில் அன்று 471 உறுப்பினர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். முலயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மைய அரசைக் காப்பாற்றவும் தாங்களும் எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளவும் வெளிநடப்பு செய்தன. மாநிலங்களவையில், மைய அரசின் முடிவுக்கு எதிராக 102 வாக்குகளும், ஆதரவாக 123 வாக்குகளும் பதிவாகின. இங்கேயும் சமாஜ்வாதி கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது. பகுஜன் சமாஜ் கட்சியோ ஆட்சியைக் காப்பாற்ற மைய அரசை ஆதரித்து வாக்களித்தது. மக்களவையில் 35 வாக்குகளும், மாநிலங்களவையில்21 வாக்குகளும் கூடுதலாகப் பெற்று இத்தீர்மானம் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு விட்டது.
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், அரசே நிர்வாக ரீதியாக இம்முடிவை எடுத்துச் செயல்படுத்த வேண்டும் என்பதே உலக வங்கியின் – ஏகாதிபத்தியங்களின் கட்டளை. இருப்பினும் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு காட்டி நாடகமாடியதால் இப்படியொரு ஜனநாயக நாடகமாட வேண்டியிருந்தது. இது ஆளும் காங்கிரசு கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் சாதகமாகவே அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன்தான் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்துள்ளோம் என்று நியாயவாதம் பேச கைக்கூலி மன்மோகன் அரசுக்கு வாப்பாகிவிட்டது. இன்று நாடாளுமன்றத்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக நாடகமாடிய கட்சிகள், நாளை ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்றமே இப்படியொரு முடிவை எடுத்துள்ளதால் அதை உடனடியாக மாற்ற முடியாது; நாடாளுமன்றமே மீண்டும் இதை நிராகரித்தால்தான் மாற்ற முடியும் என்று கூறிக் கொண்டு, வேறு வழியின்றி சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டைத் தொடர வேண்டியிருக்கிறது என்று நியாயவாதம் பேசுவதற்கும் வாய்ப்பாகிவிட்டது.
அந்நிய முதலீட்டை நான் ஆதரிக்க மாட்டேன், வியாபாரிகளுக்கு எதிரான நிலையை தி.மு.க. எப்போதும் எடுக்காது என்று உறுதியளித்த கருணாநிதி, மதவாத ஆட்சி வரவிடாமல் தடுக்க காங்கிரசை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பல்டி அடித்தார். கருணாநிதி ஒரு வாரத்தில் பல்டி அடித்தார் என்றால், மாயாவதி இரண்டே நாட்களில் பல்டியடித்தார். மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சியினர், வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்து மன்மோகன் அரசைக் காப்பாற்றினர். ஆனால், மாநிலங்களவையில் அக்கட்சி வெளிநடப்பு செய்யவில்லை. அப்படிச் செய்தால் அரசுக்கு எதிரான வாக்குகள் அதிகமாகி நெருக்கடி ஏற்படும் என்பதால் அங்கு மைய அரசுக்கு ஆதரவாக அவரது கட்சியினர் வாக்களித்துள்ளனர். “சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து, எங்கள் எதிர்ப்பை அவையில் பதிவு செய்தோம்” என இக்கட்சிகள் கூறுவதெல்லாம் மக்களின் தலையில் மிளகா அரைத்த கதைதான்.
இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டுமென்று, தனது 2004 தேர்தல் அறிக்கையில் பகிரங்கமாக அறிவித்து ஆதரித்த கட்சிதான் பா.ஜ.க. இப்போது எதிர்ப்பதாக நாடகமாடும் பா.ஜ.க., வாக்கெடுப்பை நடத்தச் சொன்னதே தவிர, அந்நிய முதலீட்டைத் தடுக்க எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இந்த விவகாரத்தில் தப்பித்து நழுவிக் கொள்ளும் நோக்கத்துடன் தாழ்த்தப்பட்டோர்- பழங்குடியினரின் உயர்பதவிக்கான மசோதாவை அது முதன்மைப்படுத்தியது. நாடாளுமன்றத்தை முடக்கிக் கூச்சலிட்டதைத் தவிர, எந்த எதிர்க்கட்சியும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் சட்டத்தை ரத்து செய்ய துளியும் முயற்சிக்கவில்லை.
கடந்த பத்தாண்டுகளில் ரிலையன்ஸ், மோர், பார்தி முதலான உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் கால்பதிக்கத் தொடங்கின. குறிப்பாக, பார்தியும் வால்மார்ட்டும் கூட்டுச் சேர்ந்து சட்டவிரோதமாக சில்லறை வர்த்தகத்தில் நுழைந்தபோதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடவில்லை.
வால்மார்ட் நிறுவனம் சென்னை – வானகரத்தில் கட்டி வரும் கட்டிடம்
நாடாளுமன்றத்தில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்துக் கூச்சல்களும் வெளிநடப்புகளும் நடந்து கொண்டிருந்தபோதே, தமிழகத்தில் சென்னை-வானகரம் அருகே கிடுகிடுவென கட்டிடங்களை எழுப்பத் தொடங்கிவிட்டது பார்தி வால்மார்ட் நிறுவனம். அண்ணாநகர் -திருமங்கலத்தில் அலுவலகம் அமைத்து, கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ஏறத்தாழ 2,500 சில்லறை வணிகர்களைத் தனது உறுப்பினர்களாக்கியுள்ளது. மற்றவர்களைவிட ஏறத்தாழ 30 சதவீதத்துக்கு விலை குறைவாகத் தருவதாக வணிகர்களிடம் பேரம் பேசி வருகிறது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சவடால் அடித்துக் கொண்டிருக்கும்போதே இத்தனையும் நடந்து கொண்டிருக்கின்றன.
ஒரு கார்ப்பரேட் நிறுவனம், அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிநிகளாகிய எம்.பி.க்களையும் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைக்கும் நடவடிக்கைகள் – லாபியிங்” என்றழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் லாபியிங் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படுகிறது. அமெரிக்காவில், இந்த லாபியிங் நடவடிக்கைகளுக்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு நிறுவனமும் அரசுக்குக் காலாண்டுக்கொருமுறை அறிவிக்க வேண்டும். இதன்படி வால்மார்ட் நிறுவனம், கடந்த நான்காண்டுகளில் உலகெங்கும் 125 கோடி ரூபா செலவிட்டுள்ளதாகவும், இதில் இந்தியச் சந்தையில் நுழைவதற்கு லாபியிங் செய்யப்பட்டதை ஒரு அம்சமாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் லாபியிங் நடவடிக்கைகளுக்கு வால்மார்ட் நிறுவனம் எவ்வளவு செலவிட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அரசுக்குத் தெரிவிக்கும் சட்டபூர்வ லாபியிங் செலவுகளைத் தவிர, இதர பல வழிகளிலும் எல்லா ஏகபோக நிறுவனங்களும் செயல்படும் நிலையில், வால்மார்ட் இந்தியாவில் எவ்வளவு செலவிட்டு எத்தனை எம்.பி.க்களை விலைபேசியுள்ளது என்பது கோடி ரூபாய் கேள்வியாகவே நீடிக்கிறது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவதை எதிர்த்து அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கமும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் இணைந்து திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
தற்போதைய அரசியலமைப்பு முறையானது, தனியார்மய- தாராளமய கார்ப்பரேட் கொள்ளையைத் தீவிரமாக்கி, நாட்டு மக்களை மரணப் படுகுழியில் தள்ளுவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், இந்த அரசியலமைப்புக்குள்ளாகவே தீர்வு கண்டுவிட முடியும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட முடியும் என்று சிறு வணிகர்கள் இன்னமும் நம்புகிறார்கள். ஓட்டுக் கட்சிகள் தொடர்ந்து துரோகமிழைத்த போதிலும், மண்குதிரைகளான அவற்றின் வெற்று வாக்குறுதிகளை நம்பி ஆற்றில் இறங்குகிறார்கள். ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே புதிய போராட்டமுறைகளை மேற்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. இவையனைத்தும் சேர்ந்து இத்தகைய கேலிக்கூத்தை ஓட்டுக்கட்சிகள் திறமையாக நடத்துவதற்கு வாப்பாக அமைந்து விட்டது.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கான மசோதாவை நிறைவேற்றியுள்ள துணிச்சலில், வங்கித்துறையைச் சீர்குலைக்கும் வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா (2012), பங்கு ஆதாயம் மற்றும் கடன்கள் மீட்புச் சட்டங்கள் திருத்த மசோதா( 2012) ஆகியவற்றை மன்மோகன் அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இதன் விளைவாக, இனி அரசுத்துறை வங்கிகளின் குடுமி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் இரும்புப் பிடியில் இருக்கும். உள்நாட்டு தனியார் வங்கிகள் அனைத்தும் பன்னாட்டு ஏகபோக நிதி நிறுவனங்களின் கைகளில் சிக்கிக் கொள்ளும்.
இவை தவிர, தடா, பொடா சட்டங்களின் புதிய அவதாரமான பயங்கரவாத “ஊபா’’ (UAPA) சட்டத்திலும் புதிய திருத்தங்களை அரசு கொண்டுவந்துள்ளது. எந்தவொரு குடிமகனையும் பயங்கரவாதியுடன் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டிக் கைது செய்ய போலீசுக்கு வரம்பற்ற அதிகாரத்தை அளிக்கும் வகையில், “ஊபா” சட்டத்தில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒருபுறம், அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு தாராள அனுமதி; மறுபுறம், நாட்டு மக்கள் மீது ஏவப்படும் பாசிச கருப்புச் சட்டங்கள். அன்றைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கும், இன்றைய நாடாளுமன்ற போலி ஜனநாயக ஆட்சிக்கும் சாராம்சத்தில் வேறுபாடு இல்லாமல் போவிட்டது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மூலமோ, ஓட்டுக்கட்சிகளை நம்பியோ தீவிரமாகிவரும் இத்தகைய பேரழிவுத் தாக்குதல்களை முறியடித்துவிடலாம் என்று சில்லறை வணிகர்களும் உழைக்கும் மக்களும் இனியும் காத்திருக்க முடியாது. கடைந்தெடுத்த துரோகிகளாகிவிட்ட ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, நாடாளுமன்ற – சட்டமன்ற அரசியலுக்கு வெளியே மக்கள்திரள் புரட்சிகர போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம் மட்டும்தான், மூர்க்கமான இத்தகைய மறுகாலனியத் தாக்குதலை முறியடிக்க முடியும்.
________________________________________________________________________________ – புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
________________________________________________________________________________
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: சட்டத்திருத்தம் தீர்வாகுமா?
இந்தியத் தலைநகர் தில்லியில் பாலியல் வல்லுறவுக் குற்றம், அதுவும் குறிப்பாகக் கும்பல் பாலியல் வல்லுறவுக் குற்றம் எப்போதாவது அரிதாக நடக்கும் நிகழ்வு அல்ல. “இந்தியாவின் வல்லுறவுத் தலைநகர்” என்ற வெறுக்கத்தக்க பெயர் பெறும் அளவுக்கு வாடிக்கையாகி விட்டது. ஒரு நாளைக்கு சராசரி இரண்டாவது நடப்பதுதான் என்கிறவாறு அதிகரித்துவிட்டது. காஷ்மீர், கிழக்கு- வட கிழக்கு மாநிலங்கள் போன்ற போராட்டக் களங்களிலும் கிராமப்புற எளிய ஒடுக்கப்படும் மக்கள் மீதும் வல்லுறவுக் குற்றங்கள் ஏராளமாக நடந்தபோதும் பெருந்தன்மையுடன் அமைதி காத்து வந்த தலைநகர்வாழ் குடிமக்களை” கடந்த மாதம் 16-ஆம் நாள் முன்னிரவு நேரம் தில்லியில் நடத்தப்பட்ட கொடூரமான கும்பல் பாலியல் வல்லுறவுத் தாக்குதல் பொங்கி எழச் செய்துவிட்டது.
குறிப்பாக, தில்லி பல்கலைக்கழகங்களின் கல்லூரிகளின் மாணவி-மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், இளந்தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் வெறுப்பு, ஆத்திரம், கோபம் கொப்பளிக்கத் தில்லி அதிகாரபீடங்களின் வாயில்களில் தினமும் குவிந்தார்கள். தடுப்புக் கம்பிகளையும், தடுப்பு அரண் கட்டைகளையும் அடித்து நொறுக்கிக் கொண்டு முன்னேறினார்கள். வல்லுறவுக் குற்றவாளிகளைத் தூக்கிலிடவும், பெண்களுக்குப் பாதுகாப்பும் அதற்குரிய கடும் சட்டங்கள் போடவும் கோரி முழக்கங்கள் எழுதிய அட்டைகளையும், மெழுகுவர்த்திகள் ஏந்தி பிரார்த்தனைகளும் ஆவேச முழக்கங்களும் எழுப்பி அமைதியாகப் போராடினரார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் நேரடியாகத் தம்முன் வந்து தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்க வேண்டுமென்பதுதான் அவர்களது உடனடி வேண்டுகோள்.
பாலியல் வல்லுறவுக் கொடூரத்தை எதிர்த்துப் போராடும் நடுத்தர வர்க்கத்தினர் மீது வெறியோடு பாயும் இந்தியாவின் வல்லுறவுத் தலைநகரப் போலீசு
ஆனால், பெண்களுக்கு எதிரான எல்லாப் பாலியல் குற்றங்களும் இந்த அளவுக்கு வளர்வதற்குக் காரணமாக இருந்த அரசியல்-அதிகாரக் குற்றவாளிகள், தில்லி கும்பல் பாலியல் வல்லுறவு தாக்குதலைக் கண்டித்துக் குரல் கொடுப்பவர்களின் வரிசையில் முன்னணியில் வந்து நின்று கொண்டார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான சட்டத்தைக் கடுமையாக்குவது முதல் வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, வல்லுறவு உணர்வுகளை காயடிக்கும் மருந்து ஊசி போடுவது வரை வல்லுறவுக் குற்றங்கள் மீது கட்சி வேறுபாடின்றிக் கடும் உக்கிரம் காட்டினர். இந்த வகையில் செய்தி ஊடகங்களும் முன்னிலையில் நின்றன. ஆனால், தில்லித் தெருக்களில் போராட்டங்கள் வலுப்பெற, வலுப்பெற இக்கட்சிகளின், ஊடகங்களின் அணுகுமுறை நிறம் மாறத் தொடங்கியது. ஆளும் கட்சிகளும் அதிகார அமைப்புகளும் அடக்குமுறைகளைக் கையிலெடுத்தன. “இளைஞர்கள் – மாணவர்களின் போராட்டங்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன. சமூக விரோத கும்பல்கள் ஊடுருவி விட்டார்கள்” என்று கூறி போலீசு அதிரடிப் படைத் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. போலீசுக் காட்டுமிராண்டித்தனம் என்று தொடக்கத்தில் கண்டித்த ஊடகங்கள், போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் மிகையானவை, நிறைவேற்றகூடியவை அல்ல எனக் காட்ட ஆரம்பித்தன.
கல்லுளிமங்கர்களான சோனியா-மன்மோகன் கும்பல், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், சட்டங்கள் கடுமையாக்கப்படும், பேருந்துகளில் காமிராக்கள் பொருத்தப்படும், போலீசு ரோந்து அதிகரிக்கப்படும் என்று ஒருபுறம் வாக்குறுதி அளித்தது. மறுபுறம், ருசிய அதிபர் வருகைக்கு முன்பு தில்லி தெருக்களைச் சுத்தம் செய்துவிட வேண்டும் என்றும், வல்லுறவு தாக்குதலுக்குப் பலியாகி உயிருக்குப் போராடிவரும் பெண்ணுக்கு எதாவது நிகழ்ந்தால், அதுவும் இந்தியாவில் நிகழ்ந்தால் விபரீத மாகிவிடும் என்றும் சதித்தனமாகத் திட்டமிட்டது. போராட்டங்களை ஒடுக்கவும், அப்பெண்ணுக்கு உயர் சிகிச்சை என்ற பெயரில் சிங்கப்பூர் அனுப்பவும் உத்திரவு போட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். விரைவில் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்படும், விரைவு நீதிமன்றத்தில் விசாரித்துக் கூடிய விரைவில் தண்டிக்கப்படுவர்; போராட்டங்களை முடித்துக் கொண்டு இருப்பிடங்களுக்குத் திரும்புங்கள் என்று அதிகார பீடங்கள் எச்சரித்தன.வல்லுறவுத் தாக்குதலுக்குப் பலியான அப்பெண் சிங்கப்பூரில் இரண்டே நாளில் மரணமடைய, அரசு அவள் உடலை இரவோடு இரவாக கொண்டு வந்து சில நிமிடங்களில் எரியூட்டி விட்டது. இனிச் சட்டம் தனது வழக்கமான வேலையைச் செய்யும்! மக்கள் எல்லாவற்றையும் மறந்துபோவார்கள்!
தனது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதைத் தட்டிக் கேட்ட குற்றத்துக்காக அமிர்தசரஸ் கடைவீதியில் ஆளும் அகாலிதளக் கட்சித்தலைவர்களுள் ஒருவனான ரஞ்ஜித்பால் சிங்-ஆல் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாப் போலீசு உதவி ஆய்வாளர் ரவீந்தர்பால் சிங். இந்த அநீதியை யாரும் தட்டிக் கேட்கவில்லையே என்று கதறியழும் அவரது மகள்.
இதற்கிடையே, பாலியல் வன்முறைக் குற்றங்களுக்குப் பெண்களே காரணமென்றும், குற்றவாளிகளை நியாயப்படுத்தியும், குடியரசுத் தலைவரின் மகன் உட்பட பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களே பேச ஆரம்பித்தனர். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பாலியல் குற்றவாளிகள் கணிசமான பேர் உறுப்பினர்களாக உள்ளபோது, மாநிலப் போலீசுத் தலைமை அதிகாரிகள் முதல் போலீசில் பலரும் பாலியல் குற்றவாளிகளாக உள்ளபோது, இதில் ஒன்றும் வியப்பில்லை. தில்லியே வல்லுறவுத் தலைநகர் என்று பெயர் பெற்றுள்ளது என்றால், நாட்டின் பிற பகுதிகள் வேறு எப்படி இருக்கும்?! காசுமீரிலும், வடகிழக்கு, கிழக்கு-மத்திய இந்தியாவில் பிரிவினைவாதிகளையும் தீவிரவாதிகளையும் ஒடுக்குவது என்ற பெயரில் அரசின் ஆயுதப்படைகளே கும்பல் பாலியல் வன்முறை குற்றங்களைக் கேள்விமுறையின்றி நடத்தி வருகின்றன. தில்லி சம்பவம் நடந்த நாளுக்கு முன்னும் பின்னும் ஒரிசா, தில்லி, தமிழ்நாடு, மும்பை என்று பெருந்திக்குகளிலும் பாலியல் வல்லுறவுக் குற்றச்செய்திகள் குவிகின்றன. ஒன்றரை வயது, பதின்வயது குழந்தைகள், சிறுமிகள், பள்ளி மாணவிகள் பெருமளவு வல்லுறவுக்குப் பலியாகும் அவலங்கள் ஆட்கொல்லி நோயைப் போல பரவுகின்றன.
பெண்களுக்கு எதிரான துன்புறுத்துதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்திரவு போட்ட அடுத்த நாள், பஞ்சாபின் ஒரு நகரில் பட்டப் பகளில் 5 வாலிபர்கள் கடைத்தெருவில் தந்தையுடன் போன இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். தடுக்கப்போன அவளது தந்தை ஆளும் அகாலித் தள உள்ளூர்த் தலைவனால் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொல்லப்பட்டவன் போலீசு துணை இன்ஸ்பெக்டர். இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு போலீசு பட்டாளம். இதே போன்று பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கான வேறொரு இளம் பெண் அகாலி தளத் தொண்டர்களால் அடுத்த வாரம் தாக்கப்பட்டார். மும்பையில் தன் அண்டை வீட்டு இளம் பெண்ணுடன் பேசிக் கொண்டு போனான் ஒரு இளைஞன். அப்பெண்ணைக் கேலி கிண்டல் செய்த கும்பலை எதிர்த்ததற்காக அந்த கும்பலால் குத்திக் கொலை செய்யப்பட்டான் அந்த இளைஞன்.
இவ்வாறான பாலியல் வெறிச் சம்பவங்கள் இந்நாட்டில் அதிகரித்து வருவது ஏன்? ஏற்கனவே, பிற்போக்கு ஆணாதிக்க சமுதாயத்தைக் கொண்ட இந்திய சமூகத்தின் மீது புதிய சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய தாராளவாத அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு விழுமியங்கள் திணிக்கப்பட்டதன் விளைவாக பெண்களும் நுகர்வுவெறிக்கான பண்டமாகக் ஆணாதிக்க பாலியல் வெறியர்களால் கருதப்படுகின்றனர். புதிய சீர்திருத்தவாதமும் தாராளமயமும் பெண்களுக்குப் பாதுகாப்பையும் ஜனநாயகத்தையும் கொண்டு வந்துவிடவில்லை. ஆனால், அவ்வாறான மாயத்தோற்றத்துக்கு பலரும் பலியாகின்றனர். வெறுமனே சட்டத்தைக் கடுமையாக்கி பாலுக்குப் பூனையைக் காவல் வைப்பதுபோல போலீசிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைக்குமா? பாலியல் குற்ற விசாரணை என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் நீதியரசர்களிடமிருந்து நீதி கிடைக்குமா?
_________________________________________________ – புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
__________________________________________________
‘வரி தவிர்ப்பை கட்டுப்படுத்தும் விதிமுறைகளை மூன்று ஆண்டுகளுக்கு தள்ளி போடுவதாக’ நிதி அமைச்சர் ப சிதம்பரம் அறிவித்திருக்கிறார். இந்திய தொழில் துறை இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பம்பாய் பங்குச் சந்தை குறியீட்டு எண் 243 புள்ளிகள் உயர்ந்து இரண்டு ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறது.
இதன் மூலம் மக்களுக்கு புத்தாண்டு பரிசாக ரயில் கட்டண உயர்வை அளித்த மத்திய அரசு அன்னிய முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிகளை ஏய்ப்பதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.
அன்னிய முதலீட்டாளர்களை இந்தியாவை நோக்கி கவர்வதற்காக ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமான பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பு ‘பார்த்தசாரதி ஷோமே தலைமையிலான குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானவற்றை ஏற்றுக் கொண்டு வரி தவிர்ப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளை 2016 வரை தள்ளி போடுவதாக’ நிதி அமைச்சர் கூறினார்.
2012 மார்ச் மாதம் நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து பேசிய அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வரி தவிர்ப்புக்கு எதிரான விதிமுறைகளை கொண்டு வரப் போவதாக அறிவித்தார். உடனேயே பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்த அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய மூலதனத்தை வெளியில் கொண்டு போனார்கள். இந்திய முதலாளிகளும் ஊடகங்களும் ‘இந்த விதிமுறைகள் அன்னிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தகர்ப்பதாக இருக்கின்றன’ என்று முறையிட்டார்கள். ‘வரி விதிப்பு தொடர்பான இந்திய அரசின் கொள்கைகள் முதலீட்டாளர்களை அச்சுறுத்துவதாக’ இந்திய அரசை ஒபாமா எச்சரித்தார்.
இதைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி, ‘இப்பிரச்சினையை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்வதற்கு அவகாசம் வேண்டியிருப்பதால், இதன் அமலாக்கம் ஓர் ஆண்டுக்குத் தள்ளி வைக்கப்படுவதாக’ அறிவித்து விட்டார்
பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பார்சல் செய்து அனுப்பப்பட்ட பிறகு நிதி அமைச்சகத்தின் பொறுப்பை தற்காலிகமாக ஏற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், வரி தவிர்ப்புக்கு எதிரான விதிகளை ஆய்வு செய்வதற்காக வரி விதிப்புத் துறை நிபுணர் பார்த்தசாரதி ஷோமே தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். பொதுவாக பல ஆண்டுகளாக இழுத்தடித்து முடிவை தள்ளிப் போடும் இத்தகைய குழுக்களுக்கு மத்தியில் ஷோமே குழு மிக விரைவில் பரிந்துரைகளை சமர்ப்பித்தது.
GAAR விதிமுறைகளை 3 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும்
பங்குகளை விற்று கிடைக்கும் மூலதன ஆதாயத்துக்கு வரியை ரத்து செய்ய வேண்டும்.
மொரிஷியசில் பதிவு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்களின் வசிப்பிடத்தின் உண்மைத் தன்மையை சோதனை செய்ய இந்த விதிமுறைகளை பயன்படுத்தக் கூடாது
என்றும் இன்னும் பல சலுகைகளையும் பரிந்துரைத்திருந்தது.
‘அந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு GAAR செயல்பாட்டை 2016 வரை தள்ளிப் போடப் போவதாக’ நிதி அமைச்சர் ப சிதம்பரம் இப்போது அறிவித்திருக்கிறார்.
“’வரி ஏய்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வரியில்லா சொர்க்கத் தீவுகளில் தொடங்கப்படும் நிறுவனங்கள் மீதும், வரி ஏய்ப்புக்காகவே செய்யப்படும் பரிவர்த்தனைகள் மீதும் வரி விதிக்கும் அதிகாரத்தை வருமானவரித்துறை ஆணையர்களுக்கு வழங்குவதற்காக’ வரி ஏய்ப்பு எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசு கூறியிருந்தது.
இந்தியா இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஒரு பெயர்ப்பலகை கம்பெனியைத் தொடங்கி, அதன் பெயரில் இந்தியாவில் முதலீடு செய்து விட்டால், தானாகவே வரிச்சலுகை கிடைத்து விடும் என்பதே தற்போதைய நிலை. இதனை மாற்றி, இத்தகைய நிறுவனங்கள் உண்மையிலேயே அந்த நாட்டில் இருக்கின்றனவா, அல்லது அவை வெறும் பெயர்ப்பலகைகளா என்று ஆராயும் அதிகாரத்தை இந்தப் புதிய விதி வருவாய்த்துறை ஆணையருக்குத் தருகிறது.
அது மட்டுமின்றி, பன்னாட்டு நிதி நிறுவனங்களும், இந்தியக் கறுப்புப் பணப் பேர்வழிகளும், தங்களுடைய முகத்தை மறைத்துக் கொண்டு பணத்தை மட்டும் பங்குச்சந்தையில் இறக்கி வரும் வழியான, ‘பார்ட்டிசிபேட்டரி நோட்‘ என்ற முகமூடியணிந்த முதலீடுகள் விசயத்திலும், இந்த விதி “மூக்கை நுழைக்கிறது’’. வருமான வரித்துறை ஆணையர் கோரும் பட்சத்தில், வரி தவிர்ப்புக்கு அப்பாற்பட்ட பிற வணிக நோக்கங்களுக்காகவும்தான், பார்ட்டிசிபேட்டரி நோட் மூலம் முதலீடு செய்கிறோம் என்பதை முதலீட்டாளர்கள் நிரூபிக்கவேண்டும் என்று கூறுகிறது இந்த விதி.
கனடா போன்ற முன்னேறிய பொருளாதார நாடுகளிலும் இத்தகைய விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்தியாவில் வோடபோன் நிறுவனத்தின் மீது வருமான வரித் துறை விதித்த வரியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து வரி ஏய்ப்பு தடுப்பு விதிமுறைகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.
ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சிசன் வாம்போவாவும் இந்தியாவின் மேக்ஸ் குழுமும் 1992-ல் ஹட்சிசன்-மேக்ஸ் நிறுவனத்தை இந்தியாவில் ஆரம்பித்தன. செல்பேசி சேவைகளுக்கான உரிமங்களை பெற்றும் எஸ்ஸார், ஏர்செல் நிறுவனத்தின் ஒரு பகுதி, பி.பி.எல். போன்றவற்றை விலைக்கு வாங்கியும் ஹட்ச்-எஸ்ஸார் என்ற பெயரில் இந்தியாவின் பல பகுதிகளில் செல்பேசி சேவைகளை வழங்கி வந்தது அந்த நிறுவனம்.
நிறுவனத்தில் 67 சதவீதம் பங்குகளை வைத்திருந்த ஹட்சிசன் டெலிகாம் இன்டர்நேஷனல் 2007ம் ஆண்டு தனது பங்குகளை வோடபோன் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு ரூ 52,300 கோடிக்கு விற்றது. இதன் விளைவாக இந்தியாவில் இயங்கி வந்த ஹட்ச் தொலைபேசி சேவை வோடபோன் என்று பெயர் மாற்றப்பட்டது.
இந்திய வருமானவரிச் சட்டத்தின் படி ‘எந்த ஒரு சொத்தையும் விற்கும் போது அந்த விற்பனையால் கிடைக்கும் ஆதாயத்தின் மேல் வரி செலுத்தப்பட வேண்டும்.’ ‘சொத்தின் விற்பனை மதிப்பு வாங்கிய விலையை விட அதிகரிப்பது சொத்தின் உரிமையாளரின் முயற்சிகளை மட்டுமின்றி புறச் சூழல்களையும் சார்ந்திருப்பதால், ஆதாயத்தின் ஒரு பகுதி அரசுக்குச் சேர வேண்டும்’ என்ற அடிப்படையில் மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது.
‘ஹட்சிசன்-வோடபோன் பரிமாற்றத்துக்கான மூலதன ஆதாய வரியாக ரூ 11,000 கோடி கட்ட வேண்டும்’ என்று இந்திய வருமான வரித் துறை வோடபோனுக்கு உத்தரவிட்டது. அதாவது ஹட்சிசன் தனது பங்குகளை வோடபோனுக்கு விற்றதால் ஈட்டிய ஆதாயத்தின் ஒரு பகுதியை இந்திய அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். ஹட்சிசனுக்கு தான் கொடுத்த பணத்திலிருந்து வரியை கழித்துக் கொண்டு அரசாங்கத்துக்கு வோடபோன் நிறுவனம் கட்ட வேண்டும்.
இந்த பரிமாற்றம் கேமேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கிடையே செய்து கொள்ளப்பட்டது. எனவே ‘வாங்கப்பட்ட சொத்துக்கள் இந்தியாவில் இருந்தாலும் பரிமாற்றம் இந்தியாவுக்கு வெளியில் நடைபெற்றதால் வரி கட்டத் தேவையில்லை’ என்று வோடபோன் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தோற்றது. மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம் வோடபோனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதன் மூலம் ரூ 11,200 கோடி ரூபாய் இந்திய அரசிடமிருந்து பிடுங்கப்பட்டு வோடபோன் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
ஹட்சிசன்-வோடபோன் நிறுவனங்கள் இந்திய மக்களிடமிருந்து ஏமாற்றி பறித்துச் சென்ற ரூ 11,200 கோடி ரூபாயைப் போல பல லட்சம் கோடி ரூபாய் வரி தவிர்ப்பு கார்ப்பரேட்டுகளால் செய்யப்படுகின்றன. மக்களின் கோபத்தைப் பற்றி கவலைப்படாமல் ரயில் கட்டண உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் வெட்டு, பெட்ரோல்/டீசல் விலை உயர்வு என்று சுமைகளை ஏற்றிக் கொண்டே போகும் மத்திய அரசு, முதலீட்டாளர்களை கோபப்படுத்தக் கூடாது என்ற அக்கறையில் கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய்களை விட்டுக் கொடுக்கிறது. இந்திய அரசும் ஜனநாயகமும் யாருக்காக செயல்படுகின்றன என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
டிசம்பர் 25, கீழத் தஞ்சையின் கீழ்வெண்மணி கிராமத்தில், 1/2 படி நெல் கூட்டிக்கேட்ட கூலிவிவசாயிகளை, கோபாலகிருஷ்ண நாயுடு எனும் திருச்சூர் பண்ணையாரின் உத்தரவின்படி அடியாட்கள் கூரை வீட்டுக்குள் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்ற நாள். கொல்லப்பட்ட 44 தாழ்த்தப்பட்ட மக்களில் பெண்கள் குழந்தைகளும் அடக்கம்.
கீழ்வெண்மணி தியாகிகளை நினைவு கூர்ந்தும், கடந்த நவம்பர் 7ம் தேதி தரும்புரி நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி, செங்கல்மேடு உள்ளிட்ட தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் காதல் திருமணத்தைக் காரணமாக காட்டி ஆதிக்க சாதி வெறியர்கள் 250க்கும் மேற்பட்ட வீடுகளை கொளுத்தியும் நகை, பணம் வீட்டில் இருக்கும் அனைத்து அத்தியாவசியமான பொருள்களையும், பல தலைமுறை உழைத்து சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் சூறையாடி வெறியாட்டம் போட்டதை கண்டித்தும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பற்றிய சில விபரங்கள்:
திருச்சி
கீழ் வெண்மணி நாளை நினைவு கூறும் அதே சமயம், இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆதிக்க சாதியின் வெறியாட்டத்தை கண்டித்தும் 25.12.12 அன்று காலை 10.30 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில், மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்தின.
திருச்சியில் ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்
பு.மா.இ.மு தோழர்.செழியன் தலைமையேற்று பேசும்போது
இன்று வெண்மணியின் படுகொலையை நினைவு கூறும் அதே சமயம் நாடு முழுவதும் ஆதிக்க சாதி வெறியாட்டம் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. அன்று கீழ்வெண்மணி மக்கள் அனுபவித்த கொடுமை, பண்ணையார்களின் அடக்குமுறை அதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டம் மக்களை தமது உரிமை கேட்டு கிளர்ந்தெழ வைத்தது. 44 பேரை கொளுத்தியவர்களை நக்சல்பாரி தோழர்கள் கணக்கு தீர்த்தனர்.
சாதி சங்கங்களை தடைசெய் எனும் கோரிக்கையுடன் தலைமை உரையை நிறைவுசெய்தார்.
கண்டன உரை யாற்றி தோழர்.பவானி (பெண்கள் விடுதலை முன்னணி) பேசும்போது
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு, பார்ப்பனரின் பார்வையில் அனைவரும் வேசிமக்கள். இதை நாம் ஆமோதிக்கிறோமென்றால், அவரவர் சாதியில் ஆழமாக ஊன்றி நில்லுங்கள். கீழ்வெண்மணியின் கொடுமையை வார்த்தையால் மதிப்பிட முடியாது, சூரியன் உதிக்குமுன் வயலில் இறங்கி, சூரியன் மறைந்தபிறகு கரையேறுவது, அதுவும் குடும்பத்துடன் பண்ணையாருக்கு உழைக்க வேண்டும், குழந்தையை வயக்காட்டில் தொட்டி கட்டிப் போட்டுவிட்டு, குனிந்த இடுப்பு நிமிரமுடியாமல், குழந்தையின் பசியை போக்க முடியாமல் அவதிப்படும் கொடுமை, இதற்கு முடிவு கட்டவும், கூலியை கூட்டிக் கேட்டதுமே அவர்கள் செய்த குற்றம். தீக்கிரையாக்கி 44 உயிர்களை, பச்சிளம் குழந்தையை கூட இரக்கமில்லாமல் கொன்றொழித்தனர்.
அன்றைய சாதிக்கொடுமை என்பது, செருப்பு போட்டு நடக்க கூடாது, இடுப்பில் உள்ள துண்டை அவுத்து கக்கத்துக்குள் வைக்கனும், மாராப்பு போடக்கூடாது, இவையெல்லாம் ஓரளவு மறைந்தாலும் நவீன தீண்டாமை என்பது திண்ணியத்தில் மலத்தை வாயில் திணிப்பது, பரமக்குடி துப்பாக்கிசூடு, இப்போ தர்மபுரி, மக்களை ஒன்று சேரவிடாமல், தாய்க்குலங்களின் மாணிக்கம்(ஜெயலலிதா), கோவில்களில் அன்னதானம் 24 மணிநேர டாஸ்மார்க் கடை திறந்து மானமற்ற நடைப்பிணங்களாக ஆக்கியதை சாடினார்.
சிறப்புரையாற்றிய தோழர் தர்மராஜ் (ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்க சிறப்புத் தலைவர்) பேசும்போது
சாதிக் கலவரங்கள், சாதி தீண்டாமை பற்றி நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது. தர்ம்புரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குருவி போல் சேர்த்த 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாக்கப்பட்டது, ஓட்டை உடைத்து, டைல்ஸ்களை நொறுக்கி, வண்டிகளை தீவைத்து கொளுத்தி வெறியாட்டம் போட்டுள்ளது வன்னியர் சாதி வெறி கும்பல், காட்டுமிராண்டிகளுக்கும் நாகரீகமடைந்த மக்களுக்கான சண்டை, இது உருவாக யார் காரணம் பார்ப்பான் உருவாக்கிய மனுதர்மம். தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், கால்ல பிறந்தவன் சூத்திரன், வேற எங்கயும் இடமில்லாததால், அரிக்குப் பொறந்தவர்கள் பஞ்சமர்கள் போன்ற சாதிகள். இந்த அடிமைகள் உரிமைபற்றி பேசுவதா, கால் கட்டைவிரல் பாத்து பேசுறவன், பண்ணையாரின் கண்ணைப் பார்த்து பேசுவதா? என்பதன் வெளிப்பாடே இந்தக் கலவரங்கள்.
வன்னியர்களின் தலைவன், தமிழ்குடி தாங்கி, டாக்டர் ராமதாசு கலப்பு மணம் செய்ததன் விளைவே இது என நியாப்படுத்துகிறார். இன்று கலப்பு மணம் மனிதர்களை விட உன் கடவுள் முருகனே செய்திருக்கானே, இந்திய ஆட்சியாளர்கள் எத்தனை பேர் கலப்பு மண தம்பதிகள். இந்த நியாயத்தையெல்லாம் பார்க்க தயாராகயில்லை. அவர்களின் பொருளாதார அடித்தளத்தை நசுக்குவதே நோக்கமாக கொண்டு சூரையாடியுள்ள கும்பலை காட்டுமிராண்டிகள் என்பதைவிட வேறென்ன சொல்வது.
தர்மபுரி மண்ணில் நக்சல்பாரி தோழர்கள் அப்பு, பாலன் கால்ப்பட்ட இடமெல்லாம் சாதிப்பேய் ஒழிந்து சமத்துவம் நிலைநாட்டினர். இன்று அதே மண்ணில் நக்சல்பாரிகளை கொன்றொழித்து வேட்டையாடிய ஆளும் வர்க்கம், சாதி வேற்றுமையை வளரவிட்டு, மக்களை மோத விட்டு சுகம் காண்கிறது இதை அங்கு இருந்த போலீசே கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்?. மக்கள் பிளவுபட்டு சாதிக்கட்சிகளில் இணையாமல் வர்க்க சக்திகளாக நக்சல்பாரிகளின் பின்னே அணிசேரவேண்டும். கலப்பு மணங்களை ஊக்குவித்து, சாதிப்பேயை சவக்குழிக்கனுப்ப வேண்டும் என ஆத்திரத்துடன் சாடினார்.
இறுதியில், ம.க.இ.க மாவட்ட செயலாளர். தோழர்.சீனிவாசன் நன்றி உரையாற்றினார். பகுதி மக்கள் திரண்டு நின்று ஆதரவு கொடுத்தனர். நமது கருத்துகளை ஆழமாக கூர்ந்து கவனித்தனர். நூற்றுக் கணக்கான தோழர்கள், பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர்கள் வந்து ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.
– செய்தி: ம.க.இ.க.திருச்சி
_____________________
மதுரை
கீழ் வெண்மணி தியாகிகள் நாள் ஆர்ப்பாட்டம் மாலை 6 மணிக்கு மகஇக மதுரை அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் தலைமையில், மதுரை ஜான்சி ராணி பூங்கா முன்பு நடைபேற்றது. உசிலை வி.வி.மு தோழர் ஆசை மற்றும் உசிலை வி.வி.மு செயலர் தோழர் குருசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மதுரையில் மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தோழர் ராமலிங்கம் தனது தலைமையுரையில்,
உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வு, நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இங்கே சாதிக்கு என்ன வேலை இருக்கிறது. சாதி மக்களை பிளக்கவும், வாழ்வை மேலும் மோசமாக்கவும், மக்களை பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பவுமே பயன்படுகிறது
என அம்பலப்படுத்தி பேசினார்.
தோழர் ஆசை தனது உரையில்,
உசிலை வட்டத்தில் உள்ள பன்னியான் என்ற கிராமத்தில் அரசு நிதியில் கட்டப்பட்ட நாடக மேடைக்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க தேவர் சாதியினர் கோரிவருகின்றனர். ஆனால் அந்த ஊரில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்டவர்களோ, அப்படி தேவர் பெயரை வைத்து விட்டால் பின் எந்த காலத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் அந்த மேடையை பயன்படுத்த முடியாதபடி ஆகிவிடும். மேடை தேவர் சாதியினரின் உடைமை யாகிவிடும் என்பதால் பொதுப் பெயர் (பன்னியான் நாடக மேடை) வைக்கவேண்டும்
என கோரிவருவதையும், ஆதிக்க சாதியினர் ஊர் சொத்தை அபகரிக்க போடும் நாடகங்களையும் அம்பலப்படுத்தி பேசினார்.
தோழர் குருசாமி தனது உரையில்,
நாய்ய தூக்கி மடில வெச்சுக்கிட்டு கொஞ்சரான், முத்தம் கொடுக்கரான்.. ஆனா சக மனுசன் கூட சேந்து டீ குடிக்க முடியாதுங்கரான். இந்த மாதிரி ஆட்கள மனுசன் கணக்குல சேக்குறதா இல்ல நாய் கணக்குல சேக்குறதா. மனுசனா நாயான்னு தெரியாத இந்த மாதிரி ஆட்கள் தான் ‘காதல் நாடகம்’ னு பேசறானுக. எதுடா நாடகம். நீ போடறதுதான் நாடகம்.
என்று ஆதிக்க சாதியினரின் இரட்டை வேடத்தை அம்மபப்படுத்தி பேசினார்.
* தில்லை அம்பல நடராசன்
வைத்த தீயில் நந்தன் செத்தான்
அயோத்தி ராமன் வைத்த தீயில்
வேடன் சம்புகன் செத்து மடிந்தான்
கோபால கிருஷ்ன நாயுடு தீயில்
வெந்து மடிந்தனர் வெண்மணியில்
வன்னிய சாதி வெறியாட்டத்தில்
எல்லாம் இழந்தனர் தருமபுரியில்
இரண்டாயிரம் ஆண்டுகளாக
பார்ப்பண பயங்கர வாதத்தின்
கொடுங்கோன்மை ஆட்டம் போடுது
* நாயும் பன்னியும் மேயும் தெருவில்
மனிதன் நுழையக் கூடாதா
கழுதைக்கு தாலி கட்டும் நாட்டில்
மனிதத் திருமணம் கூடாதா
* காதல் என்பதும் திருமணம் என்பதும்
ஜனநாயக உரிமையடா
ஜனநாயக உரிமை பறிக்கும்
ஆதிக்க சாதி வெறியர்களின்
ஓட்டுரிமை உள்ளிட்ட
ஜனநாயக உரிமைகளை
ரத்து செய்! ரத்து செய்!
* தீண்டாமை குற்றம் புரியும்
ஆதிக்க சாதிகளின்
இடஒதுக்கீட்டை ரத்து செய்!
* ஆதிக்க சாதிக் கட்சிகளை
தடை செய் தடை செய்
* ஆதிக்க சாதிச் சங்கங்களின்
தலைவர்களை கைது செய்
குண்டர் சட்டத்தில் கைது செய்
* திட்டமிட்டு சாதி பார்த்து
சாதி மறுப்பு திருமணங்களை
முன்னின்று நடத்தி வைப்போம்
* சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட
கீழவெண்மணி படுகொலை நாளில்
சபத்ம் ஏற்போம் சபதம் ஏற்போம்!
* வந்து பாரடா ராம்தாசே
வந்து பாரடா, மோதி பாரடா
ஆதிக்க சாதி வெறி நாயே!
என்ற ஆர்ப்பாட்ட முழக்கங்கள், மக்களை கவர்ந்தது.
செய்தி: ம.க.இ.க., மதுரை
__________________________
புதுச்சேரி
வெண்மணி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம் என்ற அடிப்படையில் புதுச்சேரியில் திருப்புவனையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி-பொதுக்கூட்டம்- புரட்சிகர கலை நிகழ்ச்சி விடுதலைச் சிறுத்தைக் கட்சியினரின் அடாவடியால் காவல் துறை அனுமதி திரும்பப் பெறப்பட்டு முடக்கப்பட்டது.
ஆனால் தோழர்கள் பொதுக்கூட்டம் நடத்தாவிட்டாலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்து குடியிருப்பு பகுதியிலிருந்து ஊர்வலமாக திருபுவனை பேருந்து நிறுத்தம் அருகே செஞ்சட்டையுடன் தோழர்கள் கையில் “பா.ம.க வை தடை செய்”, “வன்னியர் சங்கத்தை தடை செய்”, ”காடு வெட்டி குருவை கைது செய்” போன்ற பல முழக்கங்கள் அடங்கிய தட்டிகளுடனும், செங்கொடிகளுடனும், ஆசான்களின் படங்களுடனும் பெண்கள், குழந்தைகள் என சுமார் 400 பேர் அளவுக்கு அணி திரண்டனர்.
காலையில் காவல் நிலையத்தில் இருந்த வி.சி கட்சியைச் சார்ந்தவர்கள் அனைவரும் தொழிற்சாலைகளில் உதவி ஒப்பந்ததாரராக உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ஒரு தொழிற்சங்கத் தலைவர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தொழிலாளர்களுக்கு விரோதமாக சங்கம் நடத்திவரும் ஆதிக்க சாதியைச் சார்ந்த உதயகுமார் என்பவரின் கீழ் ஒப்பந்ததாரர்களாக உள்ளவர்கள். இந்த உதயகுமாருக்கு வி.சி கட்சி மட்டுமின்றி திமுக, காங்கிரசு, என்.ஆர் காங்கிரசு, அதிமுக போன்ற ஓட்டுக் கட்சிகளில் உள்ளவர்களும் நெருக்கம். இப்படிப்பட்ட நபரின் தொழிலாளர் விரோதச் செயலை அம்பலப்படுத்தும் விதமாக நாம் இப்பகுதியில் இயக்கம் எடுப்பதும், நமது சங்கத்தை விரிவாக்கம் செய்வதும் இவரின் வளர்ச்சிக்குத் தடையாயிருப்பதால் சாதிப்பெயரால் நம்மைப் பழிதீர்க்க நினைக்கிறார். இதற்கு துணை போகும் உதவி ஒப்பந்ததாரர்களாக உள்ள வி சி கட்சியினர், பு.ஜ.தொ.மு பொதுக்கூட்டம் போடக்கூடாது என்கின்றனர்.
புதுச்சேரியில் பொதுக்கூட்டம் தடை செய்யப்பட்ட பிறகு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டம்
எதிர்த் திசையில் வி.சி.க வினர் என்று சொல்லிக் கொண்டு காலையில் காவல் நிலையம் வராத வேறு ஒரு நான்கு நபர்கள் வந்தார்கள். அவர்களிடம் சென்று ஆய்வாளர் பேசிய போது அவர்களுக்கு அனுமதி மறுத்தீர்கள், ஏன் நிற்கிறார்கள், கலைந்து போகச் சொல்லுங்கள் என போலீசுக்கு உத்தரவிட்டனர். எதையுமே நடத்தக் கூடாது என்றனர். ’வன்னியர் சங்கத்தைத் தடை செய்’ , ‘வன்னியர் சங்க சொத்துக்களைப் பறித்தெடு’ போன்ற முழக்கங்கள் அடங்கிய தட்டிகளையும், வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் என்கிற பெரிய பதாகைகளையும் பார்த்துக் கொண்டேதான் அவர்கள் ஒரு வார்த்தை கூடப் பேசக் கூடாது என்று போலீசுக்கு உத்தரவிட்டனர். காவல் துறை அதிகாரிகளும் அவர்களுடன் குழைந்து, குழைந்து பேசிக் கொண்டு நம்மிடம் ’இவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத பொறுக்கிகள், அமைப்பாக உள்ள நீங்கள் கலைந்து சென்று விடுங்கள்’ என்று நைச்சியமாகப் பேசினர்.
கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த விடக் கூடாது என்பதில் வி.சி.க வினரை விட போலீசே முனைப்பாக நின்றது. ஒப்பந்தக்காரர்களின் ,அடியாட்களாக இவர்கள் இருவரும் விசுவாசமாக இணைந்து செயல்பட்டுள்ளது பளிச்சென அம்பலமாகி உழைக்கும் மக்கள் காரித் துப்பிச் சென்றனர். வி.சி.க தலைமையைப் பற்றிய நமது விமர்சனம் சரிதான் என்பதை உள்ளூர்த் தலைமை தனது இந்த நடவடிக்கையால் அம்பலப்படுத்திக் கொண்டது.
பிரச்சனை செய்த வி.சி.க வில் உள்ள சிலரே, ‘கூட்டம் நடத்தக் கூடாது என்பது தவறு. நீங்கள் செய்வது சரியல்ல’ என அவர்களிடம் கூறி ஒதுங்கிக் கொண்டனர். மேலும் அவ்வழியே சென்ற வேறு சிலரை அவர்கள் அழைத்த போது ‘ஏழரை சனி கூப்பிடுது. நிற்காதே ஒடு’ என அவர்கள் ஓடினார்கள். கூட்டம் நடத்தக் கூடாது என அடாவடி செய்த சிலர், ’வெண்மணித் தியாகிகள் தினம் என்று தெரிந்திருந்தால், நாமும் போஸ்டர் போட்டிருக்கலாமே’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
நமது துண்டறிக்கையில் எந்த முழக்கம் முதன்மையாக உள்ளது? யாரை எதிர்த்துக் கூட்டம் நடத்தப் படுகிறது? என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் ஒப்பந்ததாரர்களின் கட்டளைக்கு விசுவாசமாக கூட்டத்தை நடத்த விடக் கூடாது என்று அடியாள் வேலை செய்வதிலேயே குறியாக இருந்தது இவர்களின் அரசியலற்ற தற்குறித்தனத்தை பளிச்சென அம்பலப்படுத்தியது.
மேலும் காலையில் காவல் நிலையத்தில் இருந்து வெளி வந்த ஒப்பந்தக்காரர்களான வி.சி.க வினர் பா.ம.க வினரிடம் சென்று ’நோட்டீசில் உங்களையும் திட்டி எழுதியுள்ளார்கள். போய் கூட்டம் நடத்தக் கூடாது என புகார் செய்யுங்கள்’ என்று தூண்டியுள்ளனர். தங்களது தலைவரைத் திட்டியதால் தான் கூட்டம் நடத்த விட மாட்டோம் என்று இவர்கள் சொல்வது உண்மையல்ல என்பதை இந்த செயல் அம்பலப்படுத்தி விட்டது.
கூட்டத்தைக் காண வந்த சிலரும் இவர்களிடம் பேசி ஒன்றும் பயனில்லை என்றும், இவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், நமது தோழர்களிடம் கூறிவிட்டு வெறுப்புடன் சென்றனர். இவர்கள் முன்பு வி.சி.க வில் ஊக்கமாக செயல் பட்டு, தலைமையின் தவறான நடவடிக்கைகளால் அதிருப்தியுற்று விலகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் பார்ப்பனீயத்திற்கு எதிராகப் போராடினார்கள். அவர்களின் படங்களைப் போட்டுக் கொள்ளும், வி.சி.க பார்ப்பனீயம் தோற்றுவித்த சாதியக் கட்டுமானத்திற்குள் நின்று கொண்டு சாதியைத் தகர்க்க முடியாது என்பதை உணர மறுக்கிறது. நவீனமயமாக்கப் பட்ட பொருளுற்பத்தியில் ஈடுபடும் போது சாதிய உணர்வுகள் குறையும். வர்க்க சிந்தனை மேலோங்க வாய்ப்புள்ளது. இந்த வேலையை பு.ஜ.தொ.மு செய்வதால் தான் முதலாளிகள், பு.ஜ.தொ.மு உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளை எதிர்க்கின்றனர். ஏகாதிபத்தியங்களின் நோக்கமும் இதுதான். ஏனெனில் சாதி ரீதியாக பிளவுபடுத்தி எந்த எதிர்ப்புமினறி உழைப்பாளிகளை கொடூரமாகச் சுரண்டுவதற்கு சாதி உணர்வை மங்கவிடாமல் பாதுகாக்க வேண்டிய தேவை இவர்களுக்கு உள்ளது. ஓட்டுக் கட்சிகள் இந்த சேவையை விசுவாசமாக செய்கின்றனர். பா.ம.க இன்று இதில் முன்னிற்கிறது. வி.சி.க வின் நடவடிக்கையும் இதற்குத் துணை நிற்கிறது.
இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்குத் தேவைப்படும் சாதிப் பிளவுகளை உயர்த்திப் பிடிக்கும் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் புறக்கணிப்போம். ஏனெனில்
சொந்த சாதி மக்களைக் காவு கொடுக்கும்
சாதி அரசியல் அழிவைத் தரும்!
உழைப்பாளி மக்களை வர்க்கமாய்த் திரட்டும்
கம்யூனிச எழுச்சியே விடிவைத் தரும்!
செய்தி – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி , புதுச்சேரி.
_________________________
கோவை
மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இரு அமைப்புகள் சேர்ந்து ஆதிக்க சாதி வெறியாட்டத்தை கண்டித்து கோவை செஞசிலுவை சங்கத்தின் முன்பாக மாலை 5.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோவையில் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ம.க.இ.க மாவட்டச் செயலாளர் தோழர் மணிவண்ணன் அவர்கள் தலைமை உரையாற்றினார். சிறப்புரையாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் தோழர் விளவை இராமசாமி அவர்கள் உரையாற்றினார். தர்மபுரியில் நடந்த வன் கொடுமையை கண்டித்தும் , அதனை தூண்டி விட்டவர்களை வன் கொடுமை தடுப்பு சட்டத்தின்கிழ் கைது செய்யவேண்டும் என்றும் பதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
இதில் திரளானபேர் கலந்துகொண்டனர். பு .ஜ .தொ .மு மாவட்ட பொருளார் தோழர் பூவண்ணன் நன்றி உரையாற்றினார்.
செய்தி : ம.க.இ.க., கோவை
_____________________
தருமபுரி
தருமபுரியில் டிசம்பர் 25ம் தேதியை ஒட்டி அனைத்து தாலுகா, நகர, கிராமப் பகுதிகளில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பிரச்சார இயக்கம் நடத்தினர்.
“தமிழகத்தை ஆக்கிரமிக்க வரும் ஆதிக்க சாதிவெறிக் கட்சிகளை விரட்டியடிப்போம்!
சாதிவெறியாட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!”
என்ற முழக்கங்களுடன் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.
_________
கரூர்
டிசம்பர் 7 சம்பவத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கு நிகரான பொருளாதார வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாது திட்டமிட்டே ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சதித்திட்டம் தீட்டி இவற்றினை நடத்தியுள்ளனர். இதற்கு வன்னிய சாதியின் காடுவெட்டி குரு, ராமதாஸ் போன்ற சாதி சங்கத் தலைவர்களும் நியாயப்படுத்தியும் சாதிவெறியைத் தூண்டியும் வருகின்றனர், வளர்க்கின்றனர்.
கரூரில் பு.மா.இ.மு.வும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையமும் நடத்திய ஆர்ப்பாட்டம்
இவற்றினை தெரிந்தே தடுக்க மறுத்த காவல்துறை மற்றும் அரசும் இவற்றுக்கு அங்கீகாரம் வழங்குகின்றன என்பதை கண்டித்தும்
தஞ்சை கீழ் வெண்மணி முதல் தொடர்ந்து மேலவளவு முருகேசன், திண்ணியம் கருப்பையா, விருத்தாச்சலம் முருகேசன், கயர்லாஞ்சியின் போட்டமாங்கே தற்போது தரும்புரி இவ்வாறு தொடரும் இச்செயலைத் தடுக்க மக்களிடம் சாதி வெறியைத் தூண்டி வளர்க்கும் வன்னிய சாதி சங்கம் உள்ளிட்ட அனைத்து – ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும்
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
காடு வெட்டி குருவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும்
கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் பாக்கியராஜ் (செயலாளர்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் தோழர் ஆதி நாராயணன் சிறப்புரையும், தோழர் ராமசாமி கண்டன உரையும் நிகழ்த்தினர். புரட்சிகர இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. புரட்சிகர மாணவர் இளைஞர் முனணி தோழர் பால முருகன் (இணைச் செயலாளர்) நன்றியுரை வழங்கினார்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களும் பிற ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர்.
செய்தி : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கரூர்
_______________
கோத்தகிரி
கோத்தகிரியில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்க தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்
தருமபுரி தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து அரங்கேறுகின்றன சாதிவெறி கொலைகள்! சாதிவெறி கிரிமினல்களை பாதுகாக்காதே!
கலவரத்தை தூண்டிய அனைவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கு!
அனைத்து சாதி சங்கங்களையும் தடை செய்
மக்கள் அனைவரும் சாதிக் கட்சிகள், சங்கங்களை விட்டு வெளியேறுங்கள்
சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்போம்
என்ற முழக்கங்களின் அடிப்படையில் 25-12-2012 அன்று காலை 10 மணிக்கு கோத்தகிரி ஜீப் நிலையத்தில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆனந்த்ராஜ் தலைமை தாங்கினார். ராஜா, பாலன், மோகன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர், விஜயன் நன்றி கூறினார்.
செய்தி : நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்
______________________
வேலூர்
கீழ்வெண்மணி நினைவு நாள்
வேலூரில் மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அன்று தலித் மக்கள் மீது பெருகி வரும் ஆதிக்கச் சாதி வெறித் தாக்குதலை முறியடிப்போம் என்கிற முழக்கத்தினை முன் வைத்து வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், வேலூர் தலைமை அஞ்சலகம் எதிரில் 25.12.2012 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ம.க.இ.க செயலாளர் தோழர் த.இராவணன் தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ம.க.இ.க தோழர் இராஜன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள உட்பட 30 பேர் கலந்து கொண்டனர்.
தருமபுரி தாக்குதலைத் தொடர்ந்து அடுத்து அடுத்து அரங்கேறுகின்ற சாதி வெறிக் கொலைகளை மற்றும் சாதி வெறி கிரிமினல்களை பாதுகாக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் வன்முறையில் ஈடுபட்ட சாதி வெறியர்களை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு இழப்பீடு வழங்கக்கோரியும்
அனைத்து ஆதிக்கச் சாதிசங்கங்களை தடை செய்யக் கோரியும்
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
உழைக்கும் மக்கள் சாதிக்கட்சிகள்-சாதிச்சங்கங்களைவிட்டு வெளியேறி உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணையவும் அறைகூவல்விடுக்கப்பட்து.
காவிரியில் நீரின்றி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் கருகிவிட்டன. நிலங்கள் நீரின்றி வெடித்துக் கிடக்கின்றன. கடன் பட்டு சாகுபடி செய்த விவசாயிகள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். டெல்டா பிராந்தியமானது, இன்னுமொரு விதர்பா பிராந்தியமாக மாறிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டில் ஜூன் 12 அன்று திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை மூன்று மாதங்கள் கழித்து செப்டம்பர் 17 அன்றுதான் திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர். அடுத்த போகமான சம்பாவுக்கும் தண்ணீர் இல்லை. இதனால் நடப்பாண்டில் ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர் குறுவைச் சாகுபடியும், ஏறத்தாழ 15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியும் அழிந்துள்ளன. கடன் வாங்கிப் பயிரிட்ட விவசாயிகள் ஓட்டாண்டிகளாக்கப்பட்டுள்ளனர். சாகுபடி செய்திருந்த பயிர்கள் தண்ணீரில்லாமல் காய்ந்து, கடனாக வாங்கிப் போட்டுள்ள பணம் தம் கண்ணெதிரே கருகிப் போவதைக் கண்டு மனம் வெதும்பி, கடந்த நவம்பர் – டிசம்பர் மாதங்களில் ஒன்பது விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளனர்.
இரு மாநில முதல்வர்கள் 26 முறை பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லாததால்தான் 1990-இல் காவிரி நீர்த்தகராறு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இருப்பினும், மீண்டும் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுமாறு கடந்த நவம்பர் இறுதியில் கூறி காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக் கழித்து நழுவி கொண்டது.
பயிர் கருகிப் போனதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் (கடிகாரச் சுற்றுப்படி) ஆண்டாங்கரை அப்துல் ரஹீம், கூரத்தாங்குடி ராஜாங்கம், திருத்துறைப்பூண்டி கோபால கிருஷ்ணன், கரகத்திக் கோட்டை ரங்கசாமி
“காவிரி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய கர்நாடகத்துக்கு நடுவர் மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பரப்பளவு 8.47லட்சம் ஏக்கர் மட்டும்தான்; ஆனால் கர்நாடகம் அதற்கு எதிராக விளைநிலப்பரப்பை அதிகரித்து 9 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் சாகுபடிக்காக காவிரி நீரைப் பயன்படுத்தி வருகிறது. பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கான குடிநீர் தேவைக்கு 23 டிஎம்சி காவிரி நீர் தேவை என்று கர்நாடகா சோல்வது மிகையானது” – என்று புள்ளிவிவர ஆதாரங்கள் அனைத்தையும் தமிழகம் கொடுத்தும்கூட, கர்நாடகத்தின் அடாவடிகளையும் அண்டப் புளுகைப் பற்றியும் உச்ச நீதிமன்றம் எந்தக் கேள்வியும் எழுப்பவில்லை. காவிரியில் நீரின்றி டெல்டா மாவட்டங்களின் விவசாயமும் விவசாயிகளும் தமிழகத்தின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை முக்கிய பிரச்சினையாக உச்ச நீதிமன்றம் கருதவுமில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காததோடு, காவிரி ஆணையத்திலிருந்தும் வெளியேறி இந்திய இறையாண்மைக்கு எதிராக கர்நாடக முதல்வர் செயல்பட்ட போதிலும், அவர் மீது மைய அரசோ, உச்ச நீதிமன்றமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரிப் பிரச்சினையை மீண்டும் தள்ளிப் போடுவது, பேச்சுவார்த்தை நடத்தச் சொல்வது, வாதா போடுவது என்ற நரித்தனத்தோடுதான் உச்ச நீதிமன்றமும் அணுகுகிறது.
நடப்பு சாகுபடி பருவத்தில் கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை 40 சதவீத அளவுக்குக் குறைந்ததாக கர்நாடகம் கூறியதை ஏற்று, அந்த 40சதவீதத்தைக் கழித்துக் கொண்டு 2012 அக்டோபர் வரை தரவேண்டிய பாக்கி 52.8 டிஎம்சி தண்ணீரைத் தருமாறு தமிழகம் கேட்ட போதிலும், இடைக்காலத் தீர்ப்பின்படி தண்ணீரைக் கொடுக்க மறுத்தது கர்நாடகம். கர்நாடக அணைகளில் அப்போது 80 டிஎம்சி அளவுக்குத் தண்ணீர் இருந்தபோதிலும், காவிரி கண்காணிப்புக்குழுவோ, “கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பு விவரம் எங்களிடம் இல்லை; தமிழகத்தில் சாகுபடி பருவக்காலம் எது என்பது தங்களுக்குத் தெரியாது” என்றெல்லாம் கர்நாடகத்துக்குச் சாதமாக அப்பட்டமாகப் புளுகியது.
டெல்லியில் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதியன்று நடந்த காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில், டிசம்பர் மாத இறுதிக்குள் நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அரசிதழில் வெளியிடுவதென்பது சட்ட ரீதியான ஒரு நடவடிக்கைதானே தவிர, அதை கர்நாடக அரசு செயல்படுத்துமா, செயல்படுத்தாவிட்டால் மைய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பற்றி எந்த முடிவும் இல்லை. மறுபுறம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதால், இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டியுள்ளதால், தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாகக் கூறி மீண்டும் மைய அரசு இழுத்தடிக்க முயற்சிக்கிறது. நதிநீர் பிரச்சனைகளைத் விசாரித்து தீர்வு காண்பதற்கு, ஏற்கெனவே சிறப்பு நீதி மன்றத்துக்கு இணையான தகுதியுடைய தீர்ப்பாயங்கள் உள்ள நிலையில், புதிதாக நிரந்தரத் தீர்ப்பாயம் அமைக்கச் சொல்லி காவிரி விவகாரத்தை மீண்டும் இழுத்தடிக்கத் துடிக்கிறது.
பணியில் இறந்த போலீசார் குடும்பங்களுக்கு உடனடியாக இரண்டிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை நிவாரணமாகத் தரும் ஜெயா அரசு, காவிரியில் நீரின்றி சாகுபடி செய்ய முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்குக் கருணை அடிப்படையில்கூட நிவாரணம் அளிக்கவில்லை. கடந்த டிசம்பர் 21 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய அ.திமு.க. எம்.பி.க்கள் தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் எதுவுமில்லை என்று அயோக்கியத்தனமாகக் கூறியுள்ளனர். காவிரியில் நீரின்றி பயிர்கள் கருகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பார்வையிட்டு நிவாரணம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கின்றனர், டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள். ஆனால் ஜெயலலிதாவோ, குஜராத் தேர்தலில் வெற்றி பெற்ற பயங்கரவாத மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்க ஓடுகிறார்.
தஞ்சை பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் காவிரி மீட்புக்குழுவைச் சேர்ந்த விவசாயிகள்
பிப்ரவரி இறுதிவரை தண்ணீர் தேவையாக உள்ள நிலையில் கடந்த டிசம்பர் 22 அன்று மேட்டூர் அணை மூடப்பட்டதால், பயிர்களை எப்படிக் காப்பாற்றுவதென்று தெரியாமல் விவசாயிகள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கும் வகையில் எவ்வித சிறப்புத் திட்டமும் ஜெயா அரசிடம் இல்லை. தற்போதைய நெருக்கடியான தருணத்தில், பயிர்கள் கருகிப் போனதால் ஏற்பட்டுள்ள நட்டத்துக்கும் இழப்புக்கும் மைய அரசுதான் பொறுப்பு என்று இடித்துரைத்து, மைய அரசிடமிருந்து இழப்பீடும் நிவாரணமும் பெற்றுத்தரவும், மைய அரசை முடுக்கி அதனை நிர்ப்பந்திக்கவும் முன்வராமல் கடிதம் எழுதியதையும், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் வெளிநடப்பு செய்ததையும் காட்டி, தன்னை தமிழினத்துக்காகப் பாடுபடும் போராளியாக ஒளிவட்டம் போட்டுக் கொண்டு மலிவான அரசியல் நாடகத்தை நடத்துகிறார் ஜெயா.
கருணாநிதியோ, தனது கட்சியின் சார்பில் தனிப்பட்ட முறையில் மாண்டவர்களுக்கு நிவாரணம் அளித்து, தனக்கு டெல்டா விவசாயிகளின் மீது அக்கறை உள்ளதாகக் காட்டிக் கொள்கிறார். காவிரி விவகாரத்தில் மைய அரசை மிரட்டவும், கூட்டணியை முறித்துக் கொள்வோம் என்று காங்கிரசை நிர்ப்பந்திக்கவும் வாய்ப்புள்ள போதிலும் அடக்கி வாசிக்கிறார். காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் நியாயவுரிமைக்கான கோரிக்கைகளுக்காகக் கூட, தமிழக அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் அணிதிரண்டு போராடாமல், அடையாள எதிர்ப்பும், பிழைப்புவாத வாய்ச்சவடால் அடித்து சமரசமாகிப் போவதுமே வாடிக்கையாகிவிட்டன.
மறுக்கப்படும் காவிரி! வஞ்சிக்கப்படும் தமிழகம்!!
காவிரி பிரச்சினையை நியாயமான முறையில் தீர்த்து வைக்க மைய அரசு, உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அதிகார அமைப்புகள் மறுத்து வருவதால், அப்பிரச்சினை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக செக்குமாட்டைப் போல ஒரே பாதையில் சுற்றிச்சுற்றி வருகிறது.
கர்நாடகத்தின் அடாவடித்தனம் மற்றும் மைய அரசின் ஓரவஞ்சனையான அணுகுமுறைகளால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி கைவிடப்பட்டது; 14 இலட்சம் ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் கருகிவிட்டன. காவிரி டெல்டாவில் நடந்துள்ள விவசாயிகளின் தற்கொலைகள் நிலைமை எவ்வளவு மோசமடைந்துவிட்டது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
இந்நிலையில், “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உடனே அரசிதழில் வெளியிடு; தீர்ப்பின் படியும், தீர்ப்பின் இடர்ப்பாடுகால பங்கீட்டு முறையின் படியும் தமிழகத்திற்கு உரிய நீரை உடனே திறந்துவிட நடவடிக்கை எடு; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000/- நட்ட ஈடு வழங்கு; விவசாயத்தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15,000/- உதவித்தொகை வழங்கு” என்ற கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை, திருவாரூர், பட்டுக்கோட்டை வட்டாரங்களில் செயல்படும் ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து கடந்த 17.12.2012 அன்று தஞ்சையில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ம.க.இ.க. மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன், பேராசிரியர் அரங்க.சுப்பையா உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
உழைக்கும் மக்கள் அனைவரும் குறிப்பாக விவசாயிகள், தொழிலாளிகள் ஒன்றுபட்டு இந்தப் போலி ஜனநாயக சட்ட வரம்புகளை உடைத்து வெளியே நின்று போராடுவதன் மூலம் மட்டுமே நமது உரிமைகளைப் பெறமுடியும் என்பதையும், இதற்கு மார்க்சிய-லெனினியப் புரட்சிப்பாதையில் அணிதிரள்வது ஒன்றுதான் ஒரே வழி என்பதை உணர்த்தும் வகையிலும் அமைந்திருந்தது ஆர்ப்பாட்டம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஓட்டுக்குத்தான் விவசாயிகள் தேவையாக உள்ளனரே தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயமும் விவசாயிகளும் தேவையில்லை என்பதுதான் ஆளும் கும்பலின் கொள்கையாக உள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் இறால் பண்ணைகளை உருவாக்கி விவசாயத்தை நாசமாக்கிய ஆட்சியாளர்கள், இப்போது மாற்றுப்பயிர்களுக்கு விவசாயிகள் மாற வேண்டும் என்று உபதேசிக்கின்றனர். விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழித்து ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றுவதும், கிழக்குக் கடற்கரைப் பகுதி முழுவதும் கார்ப்பரேட் கொள்ளைக்கான அனல் மின்நிலையங்களையும் அணு மின்நிலையங்களையும் அமைப்பதுதான் ஆட்சியாளர்களின் திட்டமாக உள்ளது.
உலக வங்கி- உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி, தண்ணீரை வர்த்தகப் பொருளாகக் கருதி அதற்கு விலை நிர்ணயிக்க வேண்டுமென்பதுதான் மைய அரசின் கொள்கை. அதை எதிரொலிக்கும் வகையில், நீர் பயன்பாட்டு முறையை வலுப்படுத்த தண்ணீருக்குக் குறைந்த பட்சம் விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் ஷெட்டர் கோருகிறார். தேசிய நீர்க் கொள்கையும் இதைத்தான் வலியுறுத்துகிறது. மொத்தத்தில் காவிரி நீரானது தமிழகத்துக்கும் இல்லை, கர்நாடகத்துக்கும் இல்லை என்று விவசாயத்தை நாசமாக்குவதும், விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டுவதும், தண்ணீரை வியாபாரப் பொருளாக்கி விவசாயமே செய்ய முடியாத நிலையை உருவாக்குவதுமான மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் மூர்க்கமாக திணிக்கப்படுகின்றன.
தீவிரமாகிவரும் இம்மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராகவும், காவிரியில் தமிழகத்தின் நியாயவுரிமையை தொடர்ந்து மறுக்கும் மையஅரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் எதிராகவும் தமிழக மக்கள் போர்க்குணமிக்க போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தமது அதிகாரத்தைப் பயன்படுத்த மறுத்து நழுவிக் கொள்ளும் உச்ச நீதிமன்றமும் மைய அரசும் , தமிழகத்தில் எந்தவொரு அதிகாரத்தையும் செலுத்த விடாமல் தடுத்து, அவற்றின் அதிகார அமைப்புகளும் அலுவலகங்களும் செயல்படா வண்ணம் தொடர் முற்றுகைப் போராட்டங்களை நடத்தி நிர்ப்பந்திக்க வேண்டும். மைய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்க மறுத்தும், மைய அரசுக்கு வரி கொடுக்க மறுத்தும் பெருந்திரளான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும். அத்தகைய விடாப்பிடியான தொடர் போராட்டங்கள்தான் வஞ்சிக்கப்படும் தமிழகத்துக்கு நியாயவுரிமையைப் பெற்றுத்தரும்.
மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக்கிளையின் 9-ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கீழ் கண்ட தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. 23.12.2012 அன்று மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் ம. லயனல் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்
தமிழ்நாடு மிகு மின் உற்பத்தி மாநிலமாக மாறாது!
மின் உற்பத்தியை அரசு கைவிட்டது!
தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மின் உற்பத்தியால் கட்டணம் உயரும்!
வரலாறு காணாத மின்வெட்டு! கோரத்தாண்டவம் ஆடும் டெங்கு!
தலைமையுரை – லயனல் அந்தோணிராஜ்
“தமிழ்நாடு மின்துறையின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதப் போக்குகளை வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றிய காலம் முதற்கொண்டே த.நா.மி.வா.பொறியாளர் சங்கம் அமைத்துப் போராடி வருபவர் பொறியாளர் கோவை.சா.காந்தி. பணி ஓய்வு பெற்ற பின்பும் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகப் பொறுப்பேற்று அதே பணியை மக்கள் மத்தியில் தற்போது செய்து வருகிறார் பொறியாளர் காந்தி. இப்படி பொறுப்புடன் செயல்படுகிறவர்கள் மிகவும் அரிதாக உள்ளனர்.
அதுபோலவே டெங்கு பற்றி பேச வந்திருக்கும் மருத்துவர் மீ.அரிகர மகாதேவன் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லுர்ரியில் மாணவராக இருந்தபோதே அரசின் அலட்சியங்களை எதிர்த்து மாணவர்களைத் திரட்டிப் போராடியவர். இப்போது முதுகலைப் பட்டம் பெற்று தனியே மருத்துவமனை நடத்தி வருகின்ற போதிலும் மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார். டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்து உள்ளது என்று அரசுக்குப் பலமுறை எடுத்துச் சொல்லியும் பாராமுகமாக இருந்த அரசு இறுதிக் கட்டத்தில் ஏற்றுக்கொண்டு சித்தமுறை சிகிச்சையை பரிந்துரை செய்தது. மேலூர் பகுதியில் டெங்கினால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதனால் அப்பகுதியில் இலவச முகாம் நடத்தினார் மருத்துவர் மீ.அரிகரமகாதேவன். இப்போதும் தொடர்ந்து தனது பணியை எவ்வித எதிர்பார்ப்புமின்றி செய்து வருகிறார்.
இவர்களைப் போலவே தமிழ்நாடு பொதுப் பணித்துறையில் 9 தென் மாவட்டங்களின் விவசாயம், நீர் மேலாண்மைப் பிரிவு தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய மூத்த பொறியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.விஜயகுமார் அவர்களும் பணி ஓய்வுக்குப் பின்னும் பொ.ப.துறையின் மூத்த பொறியாளர்களை அமைப்பாக்கியுள்ளார். முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக மக்களைத் திரட்டும் பணியில் அவர் தன்னை அயராது ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இப்படிப்பட்ட சமுகப் பொறுப்புள்ள அதிகாரிகள், மருத்துவர்கள் சிலர் பலராகப் பல்கிப் பெருக வேண்டும். மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற மக்களுக்கான அமைப்புகள் அவர்களோடு எப்போதும் ஒத்துழைக்கும்”
குறுந்தகடு வெளியீடு
அதன் பின்பு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி கிளை நடத்திய கருத்தரங்கில் பொறியாளர் சா.காந்தி ஆற்றிய உரை “திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு ‘பவரை’ அதிகாரத்தைக் கையிலெடுத்தால் தடையின்றி ‘பவர்’ வரும்” என்ற தலைப்பில் ”ஒலிக்குறுந்தகடாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அது மதுரைக் கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. மதுரைக் கிளையின் தலைவர் ஐயா இரா.நல்லகாமன் வெளியிட மருத்துவர் அரிகர மகாதேவன் பெற்றுக் கொண்டார்.
‘கோரத் தாண்டவமாடும் டெங்கு-அலட்சியம் காட்டும் அரசு’ – மருத்துவர் அரிகர மகாதேவன் பேச்சு
டெங்குவின் ஆரம்ப அறிகுறிகளை விளக்கிய அவர் “அலோபதி மருத்துவத்தில் அதற்கு மருந்து இல்லை என்று சொல்கிறார்கள். ஏழை மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனைகளில் வந்து குவிகின்றனர். சரியான கவனிப்பு இல்லை. தனியார் மருத்துவமனைகளில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை கொள்ளையடிக்கின்றனர். ஆரம்பத்தில் கடையநல்லுர்ரில் டெங்குவினால் இறப்பு ஏற்பட்ட போது பாளையங்கோட்டை மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சாவுகள் நிகழ்ந்தன.
டெங்கு பற்றியும் அரசின் அலட்சியம் பற்றியும் சித்த மருத்துவர் அரிகர மகாதேவன்
சித்த மருத்துவத்தில் டெங்கு சுரத்திற்கு சிகிச்சை இருக்கிறது என்று அரசுக்கு 11/6/12ல் அறிக்கை அளித்தோம். கண்டு கொள்ளவில்லை. சென்னை மெடிக்கல் அசோசியேசனில் அறிக்கை தந்தோம். அக்டோபர், நவம்பரில் தீவிரமாகும் என்று எச்சரித்தோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. அலோபதியில் மருந்து இல்லையென்றால் வேறு எதிலுமே மருந்து இல்லை என்று பொருளா? அலோபதி பல லட்சம் கோடிகள் புரளுகிற மிகப் பெரிய வியாபாரம். லாபம் கொழிப்பதில்தான் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். டெங்கு கொசுக்கடி ஏழைகளைத்தான் முழுவதுமாகப் பாதிக்கிறது. அதனால் அரசு அதைப்பற்றி அலட்சியம் காட்டுகிறது.
மேலும் டெங்குவை உருவாக்கும் ஏடியெஸ் வகை கொசு எப்படி உருவானது என்று ஆராய்ந்து பார்த்தால் அது அமெரிக்காவின் உயிரி தொழில் நுட்ப யுத்தத்தின் விளைவு என்பதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டெங்குக்கு ஜிடி நாயுடு மருந்து கண்டுபிடித்தார். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தாலே இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.” என்று பேசினார்
‘மின்வெட்டு பேசப்படாத உண்மைகளும் பின்னணி அரசியலும்’ – பொறியாளர் கோவை சா.காந்தி
மிகத் துல்லியமான புள்ளி விவரங்களுடன் நீண்ட உரையாற்றினார். “மின்வெட்டுக்கான காரணங்கள் குறித்து நான் தருகிற புள்ளி விவரங்கள் அனைத்தும் ஆதார பூர்வமானவை. இதைச் சொன்னது யார் என்று உங்களிடம் யாராவது கேட்டால் பொறியாளர் காந்தி சொன்னது என்று சொல்லுங்கள்” என்று சொல்லி அவர் பேச்சைத் தொடங்கியது அனைவரையும் ஈர்த்தது.
“தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்த பிற இடங்களில் மின்வெட்டு கடுமையாக பாதித்து உள்ளது. சென்னையில் இருப்பவர்களுக்கு மின்வெட்டைப் பற்றி தெரியாது. சென்னையும் பிற மாவட்டங்களும் இந்தியா-பாகிஸ்தான் போல தனித்தனி நாடு போல் உள்ளது. ரிலையன்ஸ் என்று பெயர் ஆனால் அதனை நம்ப முடியாது. சத்யம் (கம்ப்யூட்டர்ஸ்) என்று பெயர் அதில் உண்மை இல்லை. (மின்சார) ஒழுங்குமுறை ஆணையம் என்று பெயர் ஆனால் அதில் ஒழுங்கு கிடையாது. 2013-ல் தமிழ்நாடு மிகுமின் உற்பத்தி மாநிலமாக மாறும் என்று 31.10.12ல் முதல்வர் சட்ட சபையில் அறிவிக்கிறார். ஆனால் அதில் உண்மை இல்லை. நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன் தமிழ்நாடு அப்படி ஆகவே ஆகாது.
தமிழ்நாட்டின் இன்றைய மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட். ஆனால் உற்பத்தியோ 8 ஆயிரம் மெகாவாட் தான் பற்றாக்குறை 4 ஆயிரம் மெகாவாட். அடுத்த ஆண்டில் (2013-ல்) நமது தேவை 13 ஆயிரத்து 100 மெகாவாட். ஆனால் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்குள் எல்லாத் திட்டங் களும் முடிக்கப்பட்டுவிட்டால் 3500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அப்போதும் 2 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை ஏற்படும். இந்தப் பற்றாக் குறை 2011ல் 5600 மெகாவாட்டாக அதிகரிக்கும்.
கூடங்குளம் அணுஉலை திறக்கப்பட்டால் மின் பற்றாக்குறை தீர்ந்து விடும் என்று கூறுவது தவறு. கூடங்குளத்தில் இப்போதைக்கு 1000 மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுதான் தமிழ்நாட்டிலேயே அதிக திறன் கொண்டது. ஆனால் அதில் உற்பத்தி அதிகபட்சம் 270 மெகாவாட்டுக்கு மேல் இருக்காது. கல்பாக்கத்தில் இதுவரை 240 மெகாவாட்டுக்கு மேல் உற்பத்தி இல்லை. இவற்றில் தமிழ்நாட்டின் பங்கு மிகவும் குறைவு. இந்தச் சூழலில் தமிழ்நாடு எவ்வாறு மிகுமின் மாநிலமாக மாறும்?
மனித உரிமை பாதுகாப்பு மையம் கருத்தரங்கில் பொறியாளர் காந்தி
தமிழ்நாட்டில் புனல், அனல், எரிவாயு, காற்றாலைகள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சென்னை எண்ணூர். மேட்டூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் அனல் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்து உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எரிபொருள் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுகிறது. காற்றாலைகள் ஆண்டிற்கு 5 மாதங்கள் மட்டும் தான் இயங்கும்-காற்று பருவமுறைப்படி வீசினால்.
புனல் மின்சாரத்தைப் பொருத்தவரை அணைகளில் நீர் இருந்தால் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. எரிவாயுவின் மூலமாக குத்தாலம், வழுதூர் ஆகிய இடங்களில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. ஆனால் அவற்றிலும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. ஆனால் எரிகாற்று முலமாக மட்டுமே குறைந்த செலவில் தயாரிக்க முடியும். ஒரு யூனிட் உற்பத்திக்கு 68 பைசா தான் செலவு. ஆனால் அரசு அதை ஊக்குவிப்பதில்லை. ஆனால் தனியார் சிலபேர் இதைப் பயன்படுத்தி மிகுந்த லாபம் அடைகின்றனர்.
தமிழ்நாட்டின் மின் தேவையில் 35 விழுக்காடு மட்டுமே இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. 30% மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கிறது. மீதமுள்ள 35% தனியாரிடமிருந்து பெறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு விற்கின்றன. அவர்களிடம் மின்சாரத்தை வாங்காவிட்டால் அதற்குரிய நிலைக் கட்டணத்தைச் செலுத்தியே ஆகவேண்டும். இந்த வகையில் ஆண்டுக்கு ரூ 650/- கோடி நிலைக் கட்டணமாகத் தனியாருக்குச் செலுத்தப்படுகிறது. இப்படித்தான் மின் வாரியத்துக்கு ரூ 65 ஆயிரம் கோடி கடன் ஏற்பட்டது. இப்போதும் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை மின்வாரியம் வாங்கி விநியோகிக்கலாம். ஆனால் கூடுதல் கட்டணம் தரவேண்டும். காற்றாலை முதலாளிகளுக்கு மட்டுமே ரூ 1000 கோடி பாக்கி வைத்துள்ளது அரசு. கொள்ளை லாபமடிக்கும் முதலாளிகள் தமிழக அரசுக்கு கடன் தர மறுக்கின்றனர். ஜெயலலிதா கடன் வாங்கத் தயாராக இல்லை. சென்னைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் மின் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொண்டு ஏனைய தமிழ்நாட்டினை சுடுகாடாக்குவதில் அவருக்கு வருத்தமில்லை. அது மட்டுமல்லாமல் தனியார் முதலாளிகளுக்குச் செயல்படும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுக்கு இரண்டு முறை கட்டணத்தை உயர்த்தியே தீர வேண்டும் என்கிற கொள்கையை வகுத்துள்ளது. எனவே மின்சாரம் கிடைக்கிறதோ இல்லையோ கட்டண உயர்வு கட்டாயம் வரும். இவை தவிர தனியார் முதலாளிகளிடமிருந்து நமது ஆட்சியாளர்கள் வாங்குகின்ற கமிஷனும் மக்கள் தலையில் தான் வந்து விழுகிறது.
தமிழக அரசு ஏற்கனவே 2007-ம் ஆண்டு முதல் திட்டமிட்ட மின் நிலையங்கள் தான் அடுத்த ஆண்டு உற்பத்திக்கு வர இருக்கின்றன. அதில் 600 மெ.வா. மேட்டுர் இரண்டாவது அனல்மின் நிலையம் பி.எச்.இ.எல்க்கு தரப்படாமல் பி.ஜி.ஆர்-என்ற தனியார் நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு அனல் மின் நிலையம் கட்டமைப்பது பற்றிய எந்த முன் அனுபவமும் கிடையாது. ஏற்கனவே மிகுந்த கால தாமதம் ஏற்படுத்தி வரும் அந்த நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கினாலே நிஜம். இவை ஒருபுறமிருக்க தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில் 8 இடங்களில் அடுத்த 3 ஆண்டுகளில் 18 ஆயிரம் மெ.வா. மின்சாரம் தயாரிக்க அனுமதியளிக்கப்பட்டு தனியார் நிறுவனங்கள் பல அதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எஸ்.ஆர்.எம் குழுமம் 1000 மெ.வா. அப்போலோ மருத்துவமனை குழுமம் மரக்காணத்தில் 1000 மெ.வா. சென்ட்ரல் பவர் ஜென் 1600 மெ.வா. இந்து பாரத் 1023 மெ.வா. ஐ.எல்.எப்.எஸ். 3600 மெ.வா. ஆனால் இவர்கள் தயாரிக்கும் மின்சாரத்தில் ஒரு யூனிட் கூட தமிழ்நாட்டுக்குக் கிடைக்காது. ஏனென்றால் புதிய சட்டங்களின் படி தனியார் முதலாளிகள் தயாரிக்கும் மின்சாரத்தை அவர்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். அவர்களைத் தடுக்கவோ, கேள்வி கேட்கவோ மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. நம்முடைய நிலம். நம்முடைய நிலக்கரி, நம்முடைய உழைப்பு ஆனால் அதன் பயன் மட்டும் நமக்கு கிடையாது. இதைக் கேள்வி கேட்க முடியாது. இப்படிப்பட்ட சட்டங்களையெல்லாம் கொண்டு வந்தது வேறு யாருமல்ல நம்முடைய செட்டிநாட்டு சிதம்பரமேதான்.
இப்போது சூரிய ஒளி மின்சாரத்தைப் பற்றி பேசுகிறார்கள். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க அதிகம் முதலீடு தேவைப்படுகிறது. 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 5 ஏக்கர் நிலம் வேண்டும். 1000 மெகாவாட் தயாரிக்க 5000 ஏக்கர் நிலம் வேண்டும். இப்போது சூரிய சக்தி மின்சாரத் தயாரிப்பில் உலக முழுவதும் குத்தகை எடுத்திருப்பவர்கள் வேறு யாருமல்ல ‘நம்முடைய’ வால்மார்ட்டும் மான்சாண்டோவும் தான். எனவே இதிலும் உலக மயமாக்கத்தின் தாக்கம் இருக்கிறது. நம்முடைய மண் முழுவதுமாக அந்நியனுடைய கைக்குப் போகிறது. தண்டகாரண்யா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் மக்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். மக்கள் வாழுமிடங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது உள்நாட்டு ராணுவம் போலீசு அதிரடிப்படைகள் உள்ளன. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவைகளாக நம்மை ஆள்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆட்டுவிக்கிற பொம்மையாக மக்கள் உருவாக்கப்படுகிறார்கள். பன்னாட்டுக் கொள்ளைக்கு ஏற்ப நமது நாடு உருவாக்கப்படுகிறது. எனவே மக்கள் இவற்றுக்கு எதிராகப் போராட முன்வர வேண்டும். ஏழை மக்கள் சாவை நோக்கித் தள்ளப்படுவதைப் பற்றி நம்மை ஆட்சி செய்கிறவர்கள் கவலைப்படவில்லை. எல்லா வேறுபாடுகளையும் மறந்து மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும்”
மதுரைக்கிளையின் துணைச் செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததோடு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities Prevention Act) மூன்றாவது முறையாகத் திருத்தப்பட்டிருப்பதைப் பற்றி விளக்கினார்.
போராட்டங்களும் அடக்கு முறை சட்டங்களும் பற்றி வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
“போராடும் உரிமை நமது அடிப்படை உரிமை. அரசியல் சட்டம் அதை உறுதி செய்துள்ளது. ஆனால் போராடும் உரிமையைப் பறிப்பதுதான் இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம். எது சட்டவிரோதம்? உலக மயமாக்கச் சூழலில் பன்னாட்டு நிறுவனங்கள் வருகையின் பின்னணியில் சட்ட விரோதமாக இருந்தவை அனைத்துமே சட்டப் பூர்வமாக்கப்பட்டு வருகின்றன. புனேயில் தாக்கரேயின் இறப்புக்காக வருந்தமாட்டோம், மும்பையை முடக்கியது வீணானது என்று வலைத்தளம் முகநுர்லில் எழுதிய பெண்களை காவல்துறை கைது செய்து சிறையில் வைத்தது. தமிழ்நாட்டில் சட்டவிரோத என்கவுண்டர்கள் காவல் துறையில் சர்வ சாதாரணமாக நடத்தப்படுகின்றன, ஜெயலலிதா ஒருமுறை தவறு செய்பவர்களைக் கூட குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ள வேண்டும் என்று அதிகாரிகள் மாநாட்டில் பேசுகிறார். இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் நீதிமன்றக்காவல் 15 நாட்களில் இருந்து 30 நாட்கள் என்று நீட்டிக்கப்பட்டுள்ளது. எந்தவித விசாரணையும் இல்லாமல், சட்ட உரிமைகள் எதுவும் மறுக்கப்படுகிற நிலையில் ஒருவரை 6 மாதங்கள் சிறையில் வைக்கலாம் என்று இந்தச் சட்டம் சொல்கிறது.
இவையெல்லாம் போராடும் மக்களை ஒடுக்கும் நோக்குடன் கொண்டு வரப்படும் சட்டங்களாகும். இவற்றை எதிர்த்துப் போராட மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் இயக்கங்களுடன் மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் நன்றி சொல்ல கூட்டம் நிறைவுற்றது.
தில்லி மாணவி மீதான பாலியல் வன்முறை பல்வேறு தரப்பினரையும் ஏதாவது ஒருவகையில் எதிர்வினையாற்றத் தூண்டியுள்ளது. பரவலான ஜனநாயக சக்திகள் பெண்களைக் குதறும் பாலியல் வன்முறைகளையும் அவற்றைக் களைவது பற்றியுமான விவாதங்களை முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளனர். சமீப காலமாக தேசிய ஊடகங்களில் இருந்து உள்ளூர் செய்திப் பத்திரிகைகள் வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருகின்றன.
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைத் தடுக்க அதிக பட்ச தண்டனை வழங்குவதா அல்லது இக்குற்றங்களின் சமூக அடிப்படை என்னவென்பதைப் பார்த்து அவற்றைக் களைவதற்கு முன்னுரிமை வழங்குவதா, பாலியல் விழிப்புணர்ச்சிக் கல்வி வழங்கினால் குற்றங்களைத் தடுக்க முடியுமா என்று பரவலாக விவாதங்கள் நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான். இப்படி நாடெங்கும் மக்களின் விவாதப் பொருளாக மாறி அமளி துமளி ஆகிக் கொண்டிருந்த போது ஓரமாக உட்கார்ந்து ‘மிச்சர் தின்று கொண்டிருந்த’ இந்துத்துவ சங்கப் பரிவாரங்களும் இப்போது வாயைத் திறக்கத் துவங்கியுள்ளன.
அண்டங்காக்காய் வாயைத் திறந்தால் இசையா வழியும்? பல நாட்களாக மலச்சிக்கலால் அடிபட்டவன் அவித்த மொச்சைப் பயிறைத் தின்ற கணக்காக சங்கப் பரிவாரங்களின் கருத்துக்கள் இப்போது மணம் பரப்பிக் கொண்டிருக்கிறது.
மோகன் பகவத்
கடந்த ஜனவரி 4-ம் தேதி அசாமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் “கற்பழிப்புகள் இந்தியாவில் தான் நடக்கும்; பாரதத்தில் கற்பழிப்புகளே நடப்பதில்லை” என்று சொல்லியிருக்கிறார். மேலும், இந்தியாவின் கிராமப்புறங்களிலோ காடுகளிலோ இது போன்ற கற்பழிப்புச் சம்பவங்கள் நடப்பதே இல்லை என்றும், நகரங்களில் மட்டுமே நடப்பதாகவும் பழங்கால பாரதக் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஆர்.எஸ்.எஸ் மாஃபியா ‘பாஸை’ வெளியில் ஊருக்குள் அனுப்பும் போது வாயின் மேல் இறுக்கமாக ‘டயப்பர் பேடு’ கட்டித் தான் அனுப்புவார்கள். ஆனாலும் சில அசந்தர்பங்களில் இப்படி நடந்து விடுவது வாடிக்கை. தொடர்ந்து அவர்களின் அமைப்பு வழக்கப்படி மோகன் பாகவத்தின் ‘வாய்ப்போக்கிற்கு’ பொழிப்புரை எழுத முன் வந்த ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ், “எங்க தலைவருக்கு பெண்கள் மேல் நிறைய மரியாதை உள்ளது, ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கூட வழங்கலாம் என்று சொல்லியிருக்கிறோம்” என்கிற ரீதியில் சமாளித்துக் கொண்டிருந்தார்.
ஆங்கில செய்தித் தொலைக்காட்சி விவாதங்களில் ‘பாரதம் என்று அவர் சொன்னது நிலப்பகுதியை அல்ல; அது கலாச்சாரம் பற்றியதாக்கும்’ என்று பின்நவீனத்துவவாதிகள் பேரரசு படத்தில் குறியீடுகளைக் கண்டுபிடித்துச் சொல்வதைப் போல் பாரதிய ஜனதா உள்ளிட்ட பரிவார அமைப்பினர் பாகவத் கக்கிப் போட்டதில் நல்லரிசியைத் தேடிக் கொண்டிருந்த போது இரண்டாவது முறையாக மோகன் பாகவத்தின் மூஞ்சியில் கட்டியிருந்த டயப்பர் பேடு நெகிழ்ந்து விட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கடந்த 6-ம் தேதியன்று பேசிய மோகன் பாகவத், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருப்பது ஒரு ஒப்பந்தம் என்றும் இந்த ஒப்பந்தம் ஒழுங்காக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். அது என்ன அந்த ஒப்பந்தம்? அதாகப்பட்டது, பெண்கள் கணவனின் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வீட்டை ஒழுங்காக பராமரித்து வர வேண்டுமாம் – அதற்கு பதிலாக ஆண்கள் மனைவியின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமாம். இந்த முறை பொழிப்புரைகளுக்கு வாய்ப்புகள் ஏதும் தராமல் அவரே விளக்கிக் கூறி விட்டார்.
இவைகளெல்லாம் ஏதோ வாய் தவறி வந்து விழுந்த வார்த்தைகள் அல்ல. பெண்களை போகப் பொருட்களாகவும் உடமைகளாகவும் பார்க்கும் பார்ப்பனிய சித்தாந்தம் தசை நரம்பு எலும்பு மூளை என்று உடலின் சகல பாகங்களிலும் ஊரி ஊத்தைக் கொழுப்பெடுத்த ஒருவனின் வாயில் இருந்து தான் இந்த விதமான வார்த்தைகள் வெளிவர முடியும்.
பாரதம் என்பதை மோகன் பாகவத் கிராமப்புறம் எனும் அர்த்தத்தில் சொல்லியிருந்தாலும் சரி பழைய பார்ப்பன கலாச்சாரம் என்கிற பொருளில் சொல்லியிருந்தாலும் சரி, அங்கே பெண்களின் நிலைமை நரகல் தொட்டியின் நாற்றத்தை விட கேடுகெட்ட நிலையில் தான் உள்ளது. ஹரியானாவின் கிராமங்களில் தலித் பெண்களை ஆதிக்க சாதி ஆண்கள் வன்கொடுமை செய்த சம்பவங்களும், காட்டு வேட்டை எனும் பெயரில் தண்டகாரண்யத்தில் ஆதிவாசிப் பெண்களுக்கு எதிராய் நடக்கும் பாலியல் அத்துமீறல்களும், வாச்சாத்தி சம்பவங்களும், அசாமில் ஆயுதப்படையினர் நடத்திய பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் நடந்தது மோகன் பாகவத் சொல்லும் பாரதத்தில் தான். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழைக் கூலி விவசாயிகளின் வீட்டுப் பெண்களிடம் மைனர்தனம் காட்டும் ஆதிக்க சாதி ஆண்டைகளின் சொர்க்கபுரி தான் மோகன் பாகவத் விரும்பிக் கேட்கும் ‘பாரதம்’
பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் விதந்தோதும் பாரதப் பண்பாட்டின் யோக்கியதையும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும் விதமாக இல்லை. திரேதாயுகத்தின் ராமன் சம்சாரத்தை சந்தேகப்பட்டு நெருப்பில் தள்ளினான் என்றால் துவாபர யுகத்தின் கிருஷ்ணனோ கேடுகெட்ட பொம்பளைப் பொறுக்கி. ஊரில் இருக்கும் பெண்களின் ஆடைகளைக் களவாடுவதையே ஃபுல் டைம் ஜாபாக வைத்திருந்தவன் தான் கிருஷ்ணன். வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வரும் வரைக்கும் ராம ராஜ்ஜியத்தின் நீதி நெறிகளுக்குள் முங்கி முக்குளித்துக் கொண்டிருந்தவர்கள் தான் கைம்பெண்களை நெருப்புக்குள் தள்ளி சதி மாதாக்கள் ஆக்கினர்.
இதிகாச காலத்தின் இந்திரன் துவங்கி இண்டெர்நெட் காலத்தின் தேவநாதன் வரை ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘பாரதப் பண்பாட்டின்’ யோக்கியதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பேரொளி வீசிப் பிரகாசிக்கும் பாரதப் பண்பாடெனும் சோமபானத்தை அருந்தி மோன நிலையில் சித்தியடைந்தவர்கள் வேறு யாருமல்ல – அவர்கள் தான் காஞ்சிபுரத்தின் பெரிய வால், சின்ன வால், தேவநாதன், நித்தியானந்தா, பிரேமானந்தா, கல்கி சாமியார், கேரளாவின் கண்டரர், சிதம்பரத்தின் தீட்சிதர் போன்ற மகான்கள், ரிஷிகள் மற்றும் முனிகள்.
அன்னார் முன்வைக்கும் பாரதக் கலாச்சாரத்தின் இன்னொரு பிரதிநிதி அசாராம் பாபு என்கிற சாமியார். “கற்பழித்தவர்கள் மட்டுமல்ல, கற்பழிக்கப்பட்ட பெண்ணும் தான் குற்றவாளி. தன்னைக் கற்பழிக்க வந்தவர்களை ‘அண்ணா’ என்று அழைத்து தன்னை விட்டு விடுமாறு அந்தப் பெண் கெஞ்சியிருந்தால் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது” என்று பேசியிருக்கிறான். தில்லி சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் செய்த குற்றத்திற்கு சற்றும் குறையாத இந்தப் பேச்சுகளுக்காக இந்த ஆளைத் தூக்கி உள்ளே வைக்காமல் அரசியல் கட்சிகள் ‘பேச்சை வாபஸ் வாங்கச்’ சொல்லி கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சாராம்சத்தில் அசாராம் பாபு பேசியதற்கும் மோகன் பாகவத்தின் கருத்துக்களுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. பெண்கள் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும், வெளியில் செய்ய வேண்டிய வேலைகளை ஆண்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் – அப்படியே வெளியே வந்து யாராவது ‘கற்பழிக்க’ வந்தால் காலில் விழுந்து கெஞ்சுங்கள் என்கிறான் இந்தச் சாமியார்.
தேவதாசி முறை, பொட்டுக்கட்டி விடுவது என்று மிட்டா மிராசுகளுக்கும் பண்ணையார்களுக்கும் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கி வைத்து ‘கோயில்தலமனைத்தும் விபச்சாரம் செய்குவோம்’ என்று கூத்தாடிய கலாச்சாரம் தான் ஆர்.எஸ்.எஸ் அமைக்கப் போவதாய்ச் சொல்லும் ராமராச்சியத்தின் கலாச்சாரம். காலச்சக்கரத்தை பின்னோக்கித் திருப்பி மீண்டும் அதே பழைய கலாச்சாரத்துக்கே திரும்பவும் போய் செத்து செத்து விளையாடலாமே என்று கேட்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ஜி பாகவத். பிய்ந்த செருப்புகளைத் தயாராய் வைத்துள்ளீர்களா நண்பர்களே?
இந்தப் பேச்சுக்களும் கருத்துக்களும் வெறும் வாய்க்கொழுப்பு என்று ஒதுக்கித் தள்ளத் தக்கதல்ல. இவர்களின் கையில் நாட்டை ஒப்படைத்தால் என்னவாகும் என்பதன் ஒரு சிறிய முன்னோட்டம் தான் இந்தப் பேச்சுக்கள். தேசத்தை “பாரத மாதாவே” என்று படத்தில் மாட்டி தொட்டுக் கும்பிட்டு விட்டு அதன் வளங்களை கூறு போட்டு விற்க, கக்கத்தில் லெதர் பேக்கோடு அலைந்த பாரம்பரியம் கொண்டவர்கள் இவர்கள் தான். பாரதீய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் தான் காங்கிரசை விட வெறி கொண்ட முறையில் தேசத்தின் வளங்கள் அனைத்தும் – ஆறுகள், மலைகள், நிலங்கள் உள்ளிட்டு – பன்னாட்டு முதலாளிகளுக்கு படையல் வைக்கப்பட்டது.
ஆக, இவர்கள் முன்வைக்கும் கலாச்சாரமும் அரசியலும் பொருளாதாரக் கொள்கைகளும் வேறு வேறல்ல. இந்த நச்சுப் பாம்புகளைக் கண்ட இடத்தில் அழித்து ஒழிப்பது தான் மக்களின் உடனடிக் கடமை.
முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை போன்ற சில அரசு உதவித் திட்டங்கள் பண வடிவிலும், அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், எரிவாயு உருளை, டீசல், உரம் போன்றவைகளுக்கான மானியம் பொருள் வடிவிலும் வழங்கப்படும் தற்போதைய நடைமுறையை மாற்றி, அனைத்து மானியங்களையும், நல உதவித் திட்டங்களையும் பண வடிவில் மட்டுமே மக்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது, மைய அரசு. நேரடிப் பணப்பட்டுவாடா திட்டம் (Direct Cash Transfer) எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், “உங்கள் பணம் உங்கள் கையில்” எனக் கவர்ச்சிகரமான முறையில் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனை முதற்கட்டமாக குறிப்பட்ட 51 மாவட்டங்களில் எதிர்வரும் ஜனவரி 1, 2013 முதல் அறிமுகப்படுத்தவும், 2013-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடெங்கிலும் கொண்டுவரவும் மைய அரசு திட்டமிட்டுள்ளது.
நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவதைப் பார்ப்பது அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிந்தாலும், அதனைக் கையிலெடுத்துக் கொஞ்ச முடியாது. அதனைப் போன்றதுதான் இந்தத் திட்டமும். “உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற இந்தக் கவர்ச்சிகரமான சொல்லடுக்கின் பின்னே, பொது விநியோகத் திட்டத்தை, அதாவது ரேஷன் கடைகளை ஒழித்துக் கட்டும் அபாயம் மறைந்திருக்கிறது.
தனியார்மயம்-தாராளமயத்தை அறிமுகப்படுத்திய காலந்தொட்டே ரேஷன் கடைகளின் மூலம் மக்களுக்குக் கிடைத்துவரும் அரைகுறையான உணவுப் பாதுகாப்பை ஒழித்துக் கட்டுவதை ஆட்சியாளர்கள் ஒரு கொள்கையாகவே கடைப்பிடித்து வருகின்றனர். இக்கொள்கையின்படி ரேஷன் அட்டைகள், வெள்ளை அட்டை, பச்சை அட்டை எனப் பிரிக்கப்பட்டு, அனைவருக்குமான பொதுவிநியோகத் திட்டம் பெரும்பாலான மாநிலங்களில் ஒழித்துக்கட்டப்பட்டது. குறைந்த விலையில் உணவுப் பொருட்களைப் பெற்றுவரும் வறிய மக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற வஞ்சகமான சட்டத்தைக் கொண்டு வந்தது, மன்மோகன்-சோனியா கும்பல். இதற்காகவே, நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு 29/- ரூபாய்க்கு மேலும், கிராமப்புறங்களில் 23/- ரூபாக்கு மேலும் கூலி பெறுவோர் அனைவரும் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்வதாக வரையறுத்தது, திட்ட கமிசன். இந்நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகத்தான் நேரடிப் பணப்பட்டுவாடாத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
எனினும், நேரடி பணப்பட்டுவாடாத் திட்டத்தின் கீழ் தற்போதைக்கு 29 நலத் திட்டங்களை மட்டுமே கொண்டுவரப் போவதாகவும் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை இத்திட்டத்தின் கீழ் உடனடியாகக் கொண்டு வரப் போவதில்லை என்றும் மைய அரசு அறிவித்திருக்கிறது. இது, மக்கள் மத்தியில் இந்தத் திட்டம் எப்படிபட்ட எதிர்வினையைத் தோற்றுவிக்கிறது என ஆழம் பார்க்கும் தந்திரம் தவிர வேறல்ல.
இந்தத் திட்டம் முழுமையாக அமலாகும்பொழுது, ரேஷன் கடைகள் பெயரளவில் இருக்கும். ஆனால், அக்கடைகளின் ஊடாக அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் பொதுமக்களுக்கு விநியோகிப்பது ரத்து செய்யப்பட்டு, அவை தனியார் மளிகைக் கடைகள் போல இயங்கும். இத்திட்டத்தின்படி ரேஷன் அட்டைதாரர்கள் தற்பொழுது மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களைச் சந்தை விலையில் ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் என்னென்ன பொருட்களை வாங்கியிருக்கிறார்கள் என்பது பதிவு செய்யப்பட்டு அரசிற்கு அனுப்பப்படும். அதன் பின், அவர்கள் வாங்கிய அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், பாமாயில் போன்ற பொருட்களுக்கான மானியம், அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும்.
உதாரணத்திற்குச் சொன்னால், ஒருவர் ஒரு கிலோ அரிசியை முப்பது ரூபா என்ற சந்தை விலைக்கு வாங்குவதாகவும், அந்த அரிசியின் மானிய விலை மூன்று ரூபா எனவும் வைத்துக் கொண்டால், பொது மக்கள் மானிய விலையைவிடக் கூடுதலாகச் செலுத்திய தொகையை (ரூ.27/-), அரசு அவர்களுக்குத் திருப்பித் தரும். இந்த மானியத்தைப் பெறுவதற்குப் பொது மக்கள் ஒவ்வொருவரும் ஆதார் அடையாள அட்டையையும், வங்கிக் கணக்கையும் பெற்றிருக்க வேண்டும். எனினும், இந்தப் பணப்பட்டுவாடா பொதுமக்கள் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிய இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே நடந்துவிடாது. குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கொரு முறைதான் மானியம் பொதுமக்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்படும்.
தற்பொழுது ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களையும், 10 லிட்டர் மண்ணெண்ணெயையும் ஓரே தவணையில் வாங்குவதற்கே பணத்தைப் புரட்ட முடியாமல் கூலித் தொழிலாளர்களும் கிராமப்புற மக்களும் தட்டுத் தடுமாறுவதோடு, பல நேரங்களில் பொருட்களை வாங்காமலும் விட்டுவிடுகிறார்கள். இப்படிபட்ட நிலையில் வறியவர்களையும் ஏழைகளையும் சந்தை விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்க வேண்டுமென்ற கட்டாயத்திற்குள் தள்ளுவது, ரேஷன் பொருட்களைப் பெறுவதிலிருந்தே அவர்களை ஒதுக்கி வைத்துவிடும். இத்திட்டம் பரிசோதனை முறையில் நடத்தப்பட்ட டெல்லியிலும், ராஜஸ்தானிலும் கிடைத்த அனுபவங்கள் ஏழைகள் ஒதுக்கப்பட்டதை நிரூபித்திருக்கின்றன.
• • •
இராசஸ்தான் மாநிலம் – ஆல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்காசிம் என்ற பகுதியில் ரேஷன் கடைகளின் மூலம் மண்ணெண்ணெய் வழங்குவது பரிசோதனையின் அடிப்படையில் நேரடிப் பணப்பட்டுவாடா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன்படி, மானிய விலையில் ஒரு லிட்டர் ரூ.15/-க்கு விற்கப்பட வேண்டிய மண்ணெண்ணெய் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சந்தை விலையில் (ஒரு லிட்டர் ரூ.50/-க்கு) விற்கப்பட்டது. இத்திட்டம் அமலுக்கு வந்த மூன்று மாதங்களுக்குள்ளாகவே ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் விற்பனை அதளபாதாளத்துக்குச் சரிந்தது. அப்பகுதியிலுள்ள அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்குச் சந்தை விலையைக் கொடுத்து மண்ணெண்ணெய் வாங்கிக் கொள்வது கட்டுப்படியாகாமல், அவர்கள் மண்ணெண்ணெய் வாங்குவதையே நிறுத்திவிட்டதால்தான் இச்சரிவு ஏற்பட்டது.
அப்பகுதியைச் சேர்ந்த தினக்கூலியான பச்சன் சிங், “கடந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஏப்ரல் முடிய 1,000 ரூபாய்க்கு மண்ணெண்ணெய் வாங்கியிருக்கிறேன். ஆனால், ராஜஸ்தான் கிராமிய வங்கியில் உள்ள எனது கணக்கில் இதுவரை ஒரு பைசாகூட மானியமாக வரவாகவில்லை. இனியும் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெய் வாங்க வழியில்லாததால் விறகு வாங்கத் தொடங்கி விட்டேன்” என்கிறார்.
கோட்காசிம் பகுதியிலுள்ள புர் கிராமத்தைச் சேர்ந்த பத்ரம் என்பவர், “ரேஷன் கார்டு எனது தந்தையின் பெயரிலுள்ளது. வங்கிக் கணக்கோ எனது பெயரில் உள்ளது. அரசு அதிகாரிகள் இதைக் காட்டி எனக்கு மானியம் வழங்க மறுப்பதால், நான் மண்ணெண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டேன்” என்கிறார்.
இப்படிபட்ட காரணங்களால்தான் அப்பகுதியில் மண்ணெண்ணெய் விற்பனை சரிந்து போனது என்பதை முதலாளித்துவப் பத்திரிகைகள் கூட அம்பலப்படுத்திய பிறகும், அரசோ, “போலி ரேஷன் கார்டுகளும் மண்ணெண்ணெய் கடத்தலும் ஒழிந்தததால்தான் இச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தில் 79 சதவீதம் வீணாவது தவிர்க்கப்பட்டிருப்பதாகவும், இதுதான் இத்திட்டத்தின் வெற்றியென்றும்” தம்பட்டம் அடித்து வருகிறது.
‘‘ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கும்போது ஏற்படும் நிர்வாகப் பிரச்சினைகளால்தான் கோட்காசிம் பகுதியைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு மானியம் முறையாகக் கிடைக்காமல் போயிருக்கிறது. வங்கிகளின் முகவர்கள் கிராமப்புற மக்களின் வீட்டு வாசலுக்கே வந்து மானியத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. எனவே, சில்லறை பிரச்சினைகளைக் காட்டி இப்பணப்பட்டுவாடா திட்டத்தை எதிர்க்கக் கூடாது” என வாதிடுகிறார், கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
• • •
குடும்ப அட்டைதாரர்களின் வாசல் கதவைத் தட்டி மானியப் பணத்தைக் கொடுத்தாலும்கூட, இந்தத் திட்டம் அடித்தட்டு மக்களின் நலனுக்கு எதிரானதுதான். ஏனென்றால், இந்தத் திட்டத்தின் மையமான நோக்கமே உணவு, உரம், எரிபொருள் ஆகியவற்றை சந்தை விலையில் வாங்கிக் கொள்ளும் கட்டாயத்திற்கும், மனோ நிலைக்கும் மக்களைத் தள்ளிவிட வேண்டும் என்பதுதான். அரசு உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதையும், அவற்றை மானிய விலையில் ரேஷன் கடைகளின் மூலம் விற்பதையும் சந்தையில் தலையீடு செய்யும் நடவடிக்கை; எனவே, இதனை ஏழை நாடுகள் கைவிட வேண்டும் என்பதை உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிதியாதிக்க நிறுவனங்கள் கொள்கையாகவும் நிபந்தனையாகவும் அறிவித்துள்ளன. உணவுப் பொருள் மானியத்தையும், அரசு கொள்முதலையும் ஒரே அடியில் ஒழித்துக் காட்டினால், அது அரசியல்ரீதியாகத் தற்கொலைக்குச் சமமானதாக இருக்கும் என்பதாலேயே, இவற்றைக் கொல்லைப்புற வழியில் ஒழித்துக்கட்டும் நோக்கில் நேரடி பணப்பட்டுவாடா திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது, மன்மோகன் சிங் கும்பல்.
பணமாக அல்லாமல், உணவு, உரம், எரிபொருள் ஆகியவற்றை மானிய விலையில் பொருளாக வழங்கும்போது மட்டுமே சந்தையில் குறுக்கீடு செய்வதற்கு வாய்ப்புண்டு. ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் உணவுப் பொருளின் விலைக்கும், அவற்றின் சந்தை விலைக்கும் வேறுபாடு கிடையாது என்ற நிலையை உருவாக்கும்பொழுது, அரசு சந்தையில் தலையீடு செய்வது முடிவுக்கு வந்துவிடும்.
பதுக்கல், வர்த்தகச் சூதாட்டம் போன்ற பல கிரிமினல் நடவடிக்கைகளால் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கியும்; உணவுப் பொருட்களின் விலைகளைச் சந்தையில் செயற்கையாக ஊதிப் பெருக்கியும் கொள்ளை இலாபம் சம்பாதித்து வந்த பதுக்கல் வியாபாரிகளையும் வர்த்தகச் சூதாடிகளையும் கட்டுப்படுத்தும் நோக்கில்தான் நாடெங்கும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்பட்டன. அக்கடைகள் இந்த நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்யும் வண்ணம் அரசால் இயக்கப்படாவிட்டாலும், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அரசு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளின் மூலம் விநியோகம் செய்யும் நடைமுறை இருந்து வருவதால்தான், ஏழை மக்களுக்கு அரைகுறை உணவுப் பாதுகாப்பாவது கிடைத்து வருகிறது. நேரடிப் பணப்பட்டுவாடாத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்நிலையைத் திருப்பிப் போட முயலுகிறது, மன்மோகன் சிங் கும்பல்.
இன்னொருபுறமோ, உணவுப் பொருள்களின் விலைகள் சந்தையில் உயருவதற்கு ஏற்றவாறு மானியத்தை உயர்த்திக் கொடுக்கவும் அரசு முன் வராது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பற்றாக்குறையைக் குறைக்க மக்களுக்கு வழங்கப்படும் மானியத்தை வெட்டி வரும் அரசு, சந்தை விலைக்கு ஏற்ப மானியத்தை உயர்த்திக் கொடுக்கும் என நம்புவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் சந்தையின் சூதாட்டத்தில் சிக்கித் தவிக்க வேண்டியது தவிர, வேறு வழி இருக்காது. குறிப்பாக, வறிய நிலையில் வாழும் நகர்ப்புற உதிரித் தொழிலாளர்கள், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை விவசாயிகள், பழங்குடி மக்கள் ஆகியோர் ஒன்று, சந்தை விலையில் உணவுப் பொருட்களை வாங்க வேண்டும், அல்லது பட்டினி கிடக்க பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
‘‘மக்களுக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு ஒரு ரூபா மானியத்திலும் வெறும் 15 பைசாதான் அவர்களைச் சென்று சேர்கிறது. மீதியை இடைத்தரகர்கள் தின்று தீர்த்துவிடுகிறார்கள்” என்று ராஜீவ் காந்தி சொல்லிவிட்டுப் போனதைச் சுட்டிக்காட்டி, இந்த இடைத்தரகர்களை ஒழித்து, மக்களுக்கு ஒதுக்கப்படும் மானியம் முழுமையாக அவர்களைச் சென்று சேர்வதற்காகத்தான் நேரடிப் பணப்பட்டுவாடாத் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாகப் பீற்றி வருகிறது, காங்கிரசு கும்பல். உணவு மானியமாக, உர மானியமாக ஒதுக்கப்படும் இந்தப் பணத்தைக் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்குக் கொண்டு சேர்க்க தனியார் வங்கித் தரகர்கள் (Bank Correspondents) நியமிக்கப்பட்டு வருகின்றனர். சில்லறை வர்த்தகத்தில் உள்ள இடைத்தரகர்களை ஒழிக்க பன்னாட்டு நிறுவனங்கள்; மானியத்தில் புகுந்து விளையாடும் இடைத்தரகர்களை ஒழிக்க வங்கித் தரகர்கள்!
கிராமப்புறங்களைச் சேர்ந்த கந்துவட்டி பேர்வழிகள், உர வியாபாரிகள் போன்ற பழைய நிலப்பிரபுத்துவக் கும்பல்கள்தான் வங்கித் தரகர்களாக அவதாரமெடுத்துள்ளனர். இக்கும்பல் கிராமப்புற ஏழை மக்களை ஏற்கெனவே பல்வேறு வழிகளில் சுரண்டியும் ஏய்த்துப் பிழைத்தும் வரும் நிலையில், மானியத் தொகையை முழுங்கி விடாமல், அதில் கமிசன் அடிக்காமல் பட்டுவாடா செய்வார்களா என்பதே சந்தேகத்திற்குரியதுதான். எனினும், இவர்களின் கைகளில் ஒரு ரூபாயல்ல, இரண்டு ரூபாயல்ல, ஏறத்தாழ 1,50,000 கோடி ரூபாய் மானியப் பணத்தைப் பட்டுவாடா செய்யும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார், மன்மோகன் சிங். ரேஷன் கடைகளில் நடக்கும் உணவுக் கடத்தல் – ஊழலைவிட, மானியத்தைப் பட்டுவாடா செய்யும் பொறுப்பைத் தனியாரிடம் ஒப்படைத்திருக்கும் இத்தாராளமய நடவடிக்கைதான் மிகப் பெரிய ஊழலாகும்.
வங்கிக் கணக்கும் ஆதார் அட்டையும் இருந்தால் ஊழலும் மோசடியும் நடைபெறாது என மன்மோகன் சிங் கும்பல் நம்மை நம்பச் சொல்கிறது. ஆனால், இது வெற்றுப் பிதற்றல் என்பதை நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக, இந்த ஆதார் அட்டை உண்மையான பயனாளிகளை நல உதவித் திட்டங்களிலிருந்து அப்புறப்படுத்துவதற்குத்தான் பயன்பட்டுள்ளது என்பதை வறிய மாநிலமான ஜார்கண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த ஆதார் அட்டைத் திட்டம் இதுநாள் வரை நாடாளுமன்றத்தின் ஒப்பதலையும் பெறவில்லை; நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் இந்த அட்டை வழங்குவதைச் சட்டபூர்வமானதாக ஏற்றுக் கொள்ளவில்லை. மானியத்தை ஒழிப்பதைவிட, ஆதார் அட்டைகள் மூலம் ஏழைகளை ஒழித்துக் கட்டுவது எளிது என்பதனால்தான், குடும்ப அட்டைதாரர்கள் ஆதார் அட்டையைப் பெற்றிருந்தால் மட்டுமே மானிய உதவியைப் பெற முடியும் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறார், மன்மோகன் சிங்.
நேரம் காலம் பாராமல் உழைத்து எவ்வளவுதான் சம்பாதித்தாலும், கிடைக்கும் கூலியைக் கொண்டுப் போதிய அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், வெளிச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து கொண்டே போகும் நிலையில், ரேஷன் கடைகளில்கூட குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வாங்க முடியாது என்ற நிலைமை மக்களின் மீது வலிந்து திணிக்கப்படுகிறது. அரைகுறைப் பட்டினியோடு போராடும் மக்களும், சத்தான உணவு கிடைக்காத கர்ப்பிணிப் பெண்களும், நோஞ்சான் குழந்தைகளும் நிறைந்திருக்கும் நமது நாட்டில், அவர்களுக்கு உரிய உணவுப் பாதுகாப்பை வழங்காமல், ஏதோ கொஞ்சம் பணத்தை வீசியெறிந்து, அவர்களை சந்தைச் சூதாட்டத்தில் சிக்க வைப்பது எத்துணை பயங்கரமானது? குடிப்பழக்கம் பெருகிவரும் வேளையில், குடும்பத் தலைவரின் பெயரில் வங்கியில் போடப்படும் மானியத் தொகை, உணவு வாங்கப் பயன்படுமா, டாஸ்மாக் கடைக்குப் போகுமா? ஏறத்தாழ 70 சதவீத மக்கள் வெறும் 20 ரூபாயை மட்டுமே தினக் கூலியாகப் பெறுகிறார்கள் என்ற நிலையில், மக்களுக்குக் கிடைத்து வந்த அரைகுறை உணவுப் பாதுகாப்பையும் பறிப்பது பட்டினிச் சாவுகள் என்ற பேரழிவைத்தான் ஏற்படுத்தும். இந்த அபாயத்தை உணர்ந்து, “உங்கள் கையில் உங்கள் பணம்” என்ற இந்த நயவஞ்சகத் திட்டத்தைப் பரிசோதனை அடிப்படையில்கூட நடத்தவிடாமல், உழைக்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய தருணமிது.
“எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலினை தலைவராக முன்மொழிவேன்” என்று கருணாநிதி உதிர்த்ததை வைத்து அழகிரியின் வாயில் ஏதாவது பிடுங்கி பரபரப்பு ஏற்ற வேண்டும் என்று பத்திரிகைகள் தொங்கிய நாக்குகளுடன் காத்திருந்தன. போலவே “தி.மு.க ஒன்றும் சங்கர மடம் அல்ல” என்று அழகிரி கூற பத்திரிகைகள் அனைத்தும் கிசுகிசு அரசியல் அக்கப்போரை அவிழ்த்து விட்டுவருவது நீங்கள் அறிந்ததே. இது குறித்து தனியாக எழுதுவோம்.
இங்கே சங்கர மடத்திற்கு ஆதரவாக துண்டு போட்டு கச்சேரி நடத்தும் ஜூனியர் விகடனை மட்டும் பார்ப்போம். அழகிரியின் சங்கர மட டயலாக்கிற்கு பதிலடியாக இன்று வந்த ஜூவியின் முதல் கட்டுரை, “கோட்டா சிஸ்டம் எல்லாம் சங்கர மடத்தில் கிடையாது” என்று தலைப்பில் வந்திருக்கிறது.
இட ஒதுகீட்டை கிண்டல் செய்யும் ஆதிக்க சாதி வெறியர்கள் பயன்படுத்தும் வார்த்தை “கோட்டா”. புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் இருந்து சென்னை ஐஐடி வரை இட ஒதுக்கீட்டில் பயில வந்தால் கோட்டா மாணவர்கள் என்று கிண்டல் செய்வார்கள். இதனாலேயே பல பிற்படுத்தப்ட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலையும் செய்திருக்கிறார்கள். இது அப்பட்டமான பார்ப்பனத் திமிரன்றி வேறல்ல. இதையே ஜூவியும் பூணூல் பாசத்துடன் தலைப்பில் வைத்திருக்கிறது.
“சங்கர மடமா இது?” என்பது கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி ஆகியோர் வாயில் அடிக்கடி உதிரும் வார்த்தைகள். இப்போதும் இது சர்ச்சைக்கு காரணமாக இருக்கிறது. தி.மு.க-வில் அந்த வார்த்தை ஏற்படுத்திய கொந்தளிப்பை விட, சங்கர மடத்து பக்தர்கள் தரப்பிலும் அது பெரும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது”…. என்று ஆரம்பிக்கிறது ஜூவியின் சங்கர மட பஜனை.
திராவிட இயக்கத்தின் கருத்துக்கள் துருப்பிடித்த நிலையிலாவது கருணாநிதியிடம் அவ்வப்போது வெளிப்பட்டால் பார்ப்பன பத்திரிகைகளும், சங்க பரிவாரங்களும் துள்ளிக் குதிக்கும். கருணாநிதியை இந்து விரோதி என்று ஓயாமல் பிரச்சாரம் செய்யும். அப்படியும் ‘இந்துக்களை’ ஒன்றும் மாற்ற முடியவில்லை. சரிபாதிப்பேர் அதிமுகவிற்கு ஓட்டு போடுவது போல மீதி பாதிப் பேர் திமுகவிற்கு போடுகிறார்கள். இருந்தாலும் கருணாதியை இந்து விரோதி என்று சித்தரிப்பதற்காக பார்ப்பன பத்திரிகைகள் எப்போதும் இரத்த வெறி பிடித்து காத்திருக்கின்றன என்பதற்கு ஜூவியின் இந்த கட்டுரை நோக்கமே போதுமானது.
அடுத்து ஒரு விபச்சா விடுதியில் ரெய்டு என்றால் புரோக்கர்கள் மத்தியில் கூட கொந்தளிப்பு ஏற்படாது. இதெல்லாம் அவர்களது அன்றாட வாழ்வில் சகஜம். கிட்டத்தட்ட விபச்சார விடுதிக்கு இணையான மதிப்பை பெற்றிருக்கும் சங்கர மடத்தில் அதன் பக்தர்களிடம் கொந்தளிப்பு என்று சித்தரிப்பதற்கு பொய்யை உரக்க பேசும் கொழுப்பு வேண்டும். சங்கர ராமன் கொலை, அனுராதா ரமணன் மூலம் நிரூபிக்கப்பட்ட ஜெயேந்திரனது காம வக்கிரங்களுக்குப் பிறகு சங்கர மடம், காமாட்டி புராவிற்கு இருக்கும் மரியாதையைக் கூட பெறவில்லை.
சுட்டுப் போட்டாலும் பார்ப்பனத் திமிரை விடாத சில பார்ப்பனர்களும், சங்க பரிவாரங்களில் இருக்கும் சில கருப்பு பார்ப்பனர்களையும் தவிர சங்கர மடத்தை காஞ்சிபுரத்து நாய் கூட எட்டிப் பார்க்காது. ஆனால் ஜூவி தனது இதயத்தில் வைத்து அரற்றுகிறது. என்ன இருந்தாலும் நூல் பாசம் அல்லவா!
காஞ்சி சங்கர மடத்தின் தீவிர பக்தரான வளசை ஜெயராமன் என்ற பீடிகையுடன் ஒரு ஜந்துவை தேடிப்பிடித்து அந்த ஜந்து தத்துப்பித்தென்று உளறியதை வைத்து இரண்டு பக்கத்தில் சங்கர மடத்தின் இமேஜை ஜாக்கி வைத்து தூக்க நினைக்கிறது ஜூவி. இந்த வளசை ஜெயராமன் இந்து முன்னணி ஜந்துவா, ஏதேனும் ஆன்மீக பிசனஸ் மாமாவா நமக்கு தெரியாது. ஆனால் இத்தகைய புரோக்கர்களெல்லாம் ஜூவியின் நிபுணர் கருத்துரை வாத்திய பதவியை ஊதி நிறைவேற்றுகிறார்கள் என்பதிலிருந்து விகடனின் தரத்தை புரிந்து கொள்ளலாம்.
சங்கர மடத் தலைவர் ஜெயேந்திரன் – ஆர்.எஸ்.எஸ் மடத் தலைவர் மோகன் பகவத்
இனி இந்த ஜந்துவோ இல்லை மாமாவோ ஊளையிட்டிருப்பதை கொஞ்சம் பார்ப்போம்.
“சங்கர மடம் என்பது பாரம்பரியம் மிக்கது. காஞ்சி மகா பெரியவர் சந்திசேகரேந்திரர், ஹொய்சால வம்சத்தைசத் சேர்ந்த கன்னடப் பிராமணர், ஜெயேந்திரர், திருவாரூரைச் சேர்ந்த தமிழர். பாலப் பெரியவரான விஜயேந்திரர், தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர். மூவருக்குமே ஒருவருக்கு ஒருவர் எந்த உறவும் கிடையாது.” வளசை ஜந்து இப்படி கூறியிருப்பதில் பார்ப்பன நரித்தந்திரம் எப்படி ஒளிந்திருக்கிறது பாருங்கள்.
சங்கர மடத்தில் ஸ்மர்த்த பார்ப்பன பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர்கள் மட்டுமே சங்கர் சாரியாக வர முடியும். இதைத் தவிர அருந்ததியினரோ, வன்னியரோ, நாடாரோ எவரும் வர முடியாது என்பது மட்டுமல்ல கப்படிக்கும் சங்கர் சாரிகளை தொட்டுப் பார்க்கும் பாக்கியம் கூட கிடையாது. மேலும் இந்தப் பிரிவு பார்ப்பனர்களிலிருந்து யாரை சங்கர் சாரியாக கொண்டு வருவது என்பது பட்டத்தில் இருக்கும் சங்கர் சாரியின் முடிவு. மாறாக சங்கர மட பக்தர்களாக உள்ள பார்ப்பனர்கள் கூட கூடிப்பேசி ஜனநாயக அடிப்படையில் எல்லாம் ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் சங்கர் சாரிகளை தெரிவு செய்ய முடியாது.
தி.மு.கவில் கூட கருணாநிதி முன்மொழியும் ஸ்டாலினை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்துத்தான் தெரிவு செய்ய முடியும். சங்கர மடத்தில் அப்படியெல்லாம் இல்லை. எல்லாம் சீனியர் சாரி முடிவுப்படிதான் நடக்கும். எனவே வாரிசுரிமையை கவுட்டுக்கிடையில் ஒளித்து வைத்துக் கொண்டு ஆடும் சங்கர மடம்தான் ஆகப்பெரிய ஜனநாயக விரோத அமைப்பு. அதிலும் இன்ன பிரிவில் பிறந்த பார்ப்பனர்களைத் தவிர யாரும் வர முடியாது என்று ஒரு விதியை இன்று வரையிலும் அமல்படுத்தி வரும் அநாகரீகமான மடம். இது சங்கர மடத்திற்கு மட்டுமல்ல இன்ன பிற மடங்கள், ஆதீனங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.
“சங்கர மடத்தில் பட்டத்துக்கு வருவது அவ்வளவு எளிதானது அல்ல. இந்தியாவில் உள்ள எல்லா மடங்களிலும் இருந்து சதஸ் நடத்தி, அதில் முதல் மாணவராகத் தேறியவர்தான் ஜெயேந்திர். அதற்கு பிறகுதான் அவருக்குப் பட்டம் சூட்டப்பட்டது. அதே போல இந்தியாவில் உள்ள எல்லாப் பாடசாலைகளிலும் இருந்து மாணவர்கள் கலந்து கொண்ட பரீட்சையில் முதல் மாணவராகத் தேர்ச்சி அடைந்தவர்தான் பாலப் பெரியவர் விஜயேந்திரர்.”- இது வளசை அடுத்து விடும் காமடி கப்சா.
இதுவும் அப்பட்டமான பொய். செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி கும்பகோணம் டவுண் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்த போது அப்போதைய சங்கர் சாரியால் அழைத்து வரப்பட்டு பின்னர்தான் இந்து மத புரட்டு தத்துவங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு பந்தயக் குதிரை போல தயார் செய்தார்கள். ஜெயேந்திரனுக்கு காம சூத்திரா சாத்திரத்தை தவிர வேறு எதுவும் தெரியாது. குமுதம் உரையாடல் ஒன்றில் பெரியார்தாசன் இந்த ஜெயேந்திரனிடம் ஒரு உபநிடதத்தின் பெயரைச் சொல்லி அர்த்தம் கேட்ட போது பேந்தப்பேந்த முழித்தவர்தான் இந்த ஜெயேந்திரன். பாலப் பெரியவா என்று உசிலைமணி போல இருக்கும் விஜயேந்திரனை தமிழ்த் திரைப்படங்களில் வரும் பயில்வான் ரங்கநாதனைப் போல ஒரு குஸ்திக்காரன் என்று வேண்டுமானால் அழைக்கலாமே ஒழிய வெறு ஒரு எழவும் அந்த குண்டுவுக்குத் தெரியாது.
தி.மு.க-வைப் போல கோட்டா சிஸ்டத்தில் எல்லாம் பதவி வழங்கும் வழக்கம் சங்கர மடத்திலும், வேறு எந்த மடத்திலுமே கிடையாது என்று இந்த வளசை ஜெயராமன் அவிழ்த்து விடுவதை விடுங்கள், அதை ஒரு பத்திரிகை இரண்டு பக்கங்களில் வெளியிட வேண்டுமானால் அது பார்ப்பன நரித்தந்திரமே அன்றி வேறல்ல. மதுரை ஆதீனம் தனது வாரிசாக நித்தியை நியமித்த போது ஆதீனங்களின் முடிவில் யாரும் தலையிட முடியாது என்று வக்காலத்து வாங்கியவர்கள் இந்த சங்க பரிவாரங்கள்.
அவ்வளவு ஏன், ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்தியத் தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்? உயிரோடிருக்கும் தலைவர் சாவதற்கு முன் அடுத்த தலைவர் இன்னார் என்று உயில் எழுதி வைத்து விட்டோ இல்லை உயிரோடிருக்கும் போது கைகாட்டி விட்டோதான் செய்வார். மற்றபடி இந்தியாவில் இருக்கும் எந்த ஸ்வயம் சேவக் குஞ்சுகளும் வாக்களித்து தமது தலைவரை தேர்வு செய்ய முடியாது. ஹெட்கேவார் எனும் முதல் தலைவர் கோல்வால்காரை கைகாட்ட, இவர் தேவரசைக் கைகாட்ட, பின்னர் தேவரஸ் ஏவரையோ கைகாட்ட தற்போது இந்த கைகாட்டி தத்துவத்தின்படி மோகன் பகவத் எனும் சம்சாக்கடை சேட்டு போல தோற்றத்திலிருக்கும் ஒருவர் தலைவராக இருக்கிறார். இவர்தான் சமீபத்தில் பெண்கள் முழு அடிமைத்தனத்தில் இருந்தால் யாரும் ரேப் செய்யமாட்டார்கள் என்ற தத்துவத்தை உதிர்த்த மகான்.
பிறப்பின் அடிப்படையில் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இந்து மதத்திலும், இந்து மதத்தின் வருண தருமத்தை மீண்டும் கொண்டு வரத் துடிக்கும் மடங்களிலும், ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களிலும்தான் ஜனநாயகம் என்பது துளிக்கூடக் கிடையாது. இல்லையேல் ஜெயேந்திரன் போன்ற மன்மதக் கொலைகாரர்களெல்லாம் இன்னும் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க முடியுமா என்ன?
பார்ப்பன பத்திரிகையான விகடன் குழுமத்திலும் வாசன் மகன், பாலசுப்ரமணியன், பாலசுப்ரமணியனின் மகன் சீனிவாசன் என்று வாரிசுரிமை அடிப்படையில்தான் பத்திரிகையின் சொத்துரிமை மட்டுமல்ல கருத்து சொல்லும் உரிமையும் செயல்பட்டு வருகிறது. இந்த இலட்சணத்தில் இவர்கள் தி.மு.கவை திட்டுவதற்கு எந்த அருகதையும் இல்லை. இதனால் தி.மு.கவை நாம் ஆதரிப்பதாக பொருள் இல்லை. உண்மையில் எங்களைப் போன்ற அரசியல் இயக்கங்கள்தான் தி.மு.கவின் மக்கள் விரோத, முதலாளி ஆதரவு பாத்திரத்தை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தி வருகின்றன.
ஜூவி தனது கட்டுரையின் முடிவில்,” வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வது என்பது இதுதானா?” என்று முடித்திருக்கிறது.
உண்மைதான். மல்லாக்கப் படுத்துக் கொண்டு துப்புவது ஜூவிதான்.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லிக் கொண்டு அரசியலில் களமிறங்கிய ராமதாசு, இதுவரை தமிழகம் கண்டிராத பச்சோந்தி என்று அம்பலப்பட்டு, சொந்த சாதியினர் மத்தியிலேயே மதிப்பிழந்து போனதால், தனது அடுத்த ஆயுதமாக ஆதிக்க சாதிவெறியைக் கையிலெடுத்திருக்கிறார். 51 சாதிச் சங்கங்களைக் கூட்டி “அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை”யை உருவாக்கியிருக்கிறார். சாதி கடந்த திருமணங்கள் அனைத்தையுமே தடுக்க வேண்டுமென்பதும், வன்கொடுமைச் சட்டத்தை முற்றிலுமாக முடக்க வேண்டும் என்பதும்தான் அவர்களது கோரிக்கை.
வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பதற்கு இனி ஒருவனுக்கும் தைரியம் வரக் கூடாது. பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பெண் குழந்தைகளிடம் சாதியைப் பற்றித் தெளிவாகச் சோல்லுங்கள்” என்று வெறியுடன் பேசியிருக்கிறார் ராமதாசு. “ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த வந்தார்கள். ஒரு லோடு செங்கல் எடுத்துத் தாக்கினோம். வாலைச் சுருட்டிக் கொண்டார்கள்” என்று ரெட்டியார் சங்கமும், “கலப்புத் திருமணம்தான் நம் முதல் எதிரி” என்று மறுமலர்ச்சி முஸ்லிம் லீகும் பேசியிருக்கின்றனர். இந்து மக்கள் கட்சியும் இதில் கலந்து கொண்டு, இந்து என்பவன் எவன் என்று காட்டியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பேசியவற்றுக்காகவே இவர்களை வன்கொடுமைச் சட்டத்தில் உள்ளே வைத்திருக்க வேண்டும். ஆனால் அம்மாவின் அரசை விமரிசித்தாலே அவதூறு சட்டத்தைப் பாய்ச்சும் ஜெ அரசு, இவர்கள் யாரையும் கைது செய்யவோ வழக்குத் தொடரவோ இல்லை. வெளிப்படையான இந்த சாதிவெறிப் பேச்சுகளையும், வன்கொடுமைச் சட்டம் குறித்து ராமதாசு பரப்பும் அபாண்டமான பொய்களையும் ஓட்டுக்கட்சிகள் கண்டிக்கவும் இல்லை. தனிக்குடியிருப்பு, தனிச்சுடுகாடு, தனிக்கிணறு, தனிக்கோயில்கள், தனிக்குவளைகள் ஆகியவை கிராமப்புறங்களில் அமலில் இருப்பதும், தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றப் பிரதிநிதிகளும் தலைவர்களும் அவமதிக்கப்படுவதும் நாடறிந்த உண்மை.
இவற்றுக்கெதிரான போராட்டங்கள் நடக்கும் இடங்களில் கூட அரசு நிர்வாகம் அமைதிப் பேச்சுவார்த்தை என்று நாடகமாடுகிறதே தவிர, வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வதில்லை. திண்ணியம் போன்ற வழக்குகளிலேயே தீண்டாமைக் குற்றத்தின் கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. தற்போது நடைபெற்றுள்ள நத்தம் சாதிவெறியாட்டத்திலும், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. நாடு முழுவதுமே வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அமலாக்கத்தின் யோக்கியதை இதுதான்.
சாதி மறுப்பு காதல் திருமணங்களாலும், வன்கொடுமை வழக்குகளாலும் ஆதிக்க சாதியினர் பாதிக்கப்பட்டிருப்பதாக ராமதாசு சித்தரிப்பது, தனது சாதிவெறி அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கான தந்திரம். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மற்ற பிரிவு மக்களிடம் சாதிவெறியைத் தூண்டுகிறார் ராமதாசு. மறுகாலனியாக்க கொள்கைகளுடைய தாக்குதலின் விளைவாக மக்களின் அன்றாட வாழ்க்கையும், தொழில்களும் வெகு வேகமாக அழிக்கப்பட்டு வரும் சூழலில், அவற்றுக்கெதிராகப் போராடாமல் மக்களைத் திசை திருப்பும் சதியே இது. பெரியாருடைய பணியின் காரணமாக, சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வதே இழிவானது என்ற பொதுக்கலாச்சாரத்தை உருவாக்கியிருக்கும் தமிழகத்தை, மிகவும் கேவலமான நிலைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்ற இந்த அருவெறுக்கத்தக்க ஜந்துக்கள் தலையெடுப்பதற்கு முன்னர் நசுக்கப்பட வேண்டும்.
டிசம்பர் 31-ம் தேதி டெல்லியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, ஐடி துறையில் பணி புரியும் இரண்டு 24 வயது இளைஞர்கள் திட்டமிட்டு தன்னை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் செய்துள்ளாள். அந்த புகாரின் அடிப்படையில் இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த மாணவி டெல்லி பப்ளிக் ஸ்கூலில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறாள். ‘பேஸ்புக்கில் செயல்படா விட்டால் வாழ்க்கையே இல்லை’ என்ற சூழலில் படிக்கும் அந்த மாணவி தன் சக மாணவர்களைப் போல பல பேஸ்புக் நட்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாள்.
அதில் ஒருவர் தான் நவீன் சிங் கேத்வால் என்ற 24 வயதான கணினி என்ஜினியர். செப்டம்பர் 2011-ல் இவர்களது பேஸ்புக் நட்பு ஆரம்பித்திருக்கிறது. நவீன் சிங் தன்னுடைய உறவினரான ஐடி நிறுவனம் ஒன்றின் மனித வளத் துறையில் பணி புரியும் ராஜேஷ் சிங்குக்கும் இப்பெண்ணை அறிமுகம் செய்துள்ளான்.
அடுத்த மூன்று மாதங்களுக்குள் ராஜேஷ் இப்பெண்ணுடன் நெருங்கி விட்டிருக்கிறான். தொலைபேசியில் பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது, பேஸ்புக் அரட்டை, எப்போதாவது வெளியில் சந்திப்பு என்று உறவை வளர்த்திருக்கிறான். நவீனுடன் போட்டிருந்த திட்டத்தின் அடிப்படையில் மார்ச் 2012-ல் அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்திருக்கிறான்.
இதனால் மனமுடைந்த அப்பெண், மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளாள். அந்த நேரத்தில், அவளை தேற்றும் விதமாக அவளுடன் பழக ஆரம்பிக்கிறான் நவீன் சிங். அவளுடன் லோதி கார்டன், லஜ்பத் நகர், கன்னாட் பிளேஸ் போன்ற இடங்களுக்கு தனது பைக்கில் ஊர் சுற்றியிருக்கிறான். ஜூலை மாதம் 24-ம் தேதி அவளை சப்தர்ஜங் என்க்ளேவில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளான்.
அடுத்த சில வாரங்களில் தனது நட்பு உறவாடலை குறைத்துக் கொண்டு செப்டம்பர் 7-ம் தேதி வேலையை விட்டு விட்டு உத்தர்காண்டுக்கு திரும்பிப் போவதாக சொல்லி உறவை துண்டித்திருக்கிறான். இந்த முறை ஆறுதல் சொல்லும் பாத்திரத்தில் ராஜேஷ் இறங்கியிருக்கிறான். அடுத்த நாளே அவனது நண்பனின் அறையில் அவளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கிறான்.
இதைத் தொடர்ந்து நவீனும் ராஜேஷூம் இந்தப் பெண்ணுடைய தொலைபேசி எண்களை பிற நண்பர்களிடம் சுற்றுக்கு விட்டிருக்கின்றனர். அவளுக்கு ஆபாச தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த உளவியல் கொடுமையை தாங்க முடியாமல் லைசால் என்ற சுத்திகரிக்கும் திரவத்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறாள்.
நவீன், ராஜேஷ் இருவரும் இணைந்து, திட்டம் போட்டு, ஒருவரோடு ஒருவர் பேசி வைத்துக் கொண்டு அவளிடம் நட்பு ஏற்படுத்துவதாக சொல்லி உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். இந்த உண்மையை நவீனின் உறவினர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்ட பிறகு அந்தப் பெண் போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறாள்.
மேலோட்டமான நட்பு, நுகர்வு கலாச்சார வாழ்க்கை, விட்டேத்தியான தனிநபர் வாதம் போன்றவற்றில் மூழ்கியிருக்கும் அந்த மாணவியை இக்கயவர்கள் சுலபமாக பிடித்திருக்கின்றனர். அந்த வகையில் இன்றைய சூழலில் பொறுக்கிகள் பலரும் மெனக்கெடமால் தமது வக்கிரத்தை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய வாய்ப்புகளைத் தராமல் வாழ்வை உறுதியாகவும், பயன்தரத்தக்க முறையில் கழிக்கவும் மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்க இளையோர் முயல்வதில்லை. விளைவு இம்மாணவிக்கு நேர்ந்தது போல நடக்கிறது.
‘நண்பர்கள் வட்டத்தை பெருக்குகிறோம், எங்களுடன் எல்.கே.ஜி முதல் கல்லூரியில் படித்த அனைவரையும் இணைக்கிறோம்’ என்று நோக்கத்துடன் பேஸ்புக்கில் சேருபவர்கள் பின்னர் போலியான அடையாளங்களுடன் தமது நோக்கங்களை நிறைவேற்ற முனைகின்றனர். பதின்ம வயதினர் மட்டும் இன்றி, 13 வயதுக்கு குறைவான குழந்தைகள் கூட பெற்றோரின் துணையுடன், பொய்யான வயதைக் குறிப்பிட்டு பேஸ்புக்கில் தங்களை இணைத்துக்கொண்டு வாழ்க்கையில் இதைச்செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயத்தில் வாழ்கின்றனர். எது நல்லது, கேட்டது என்று அறியாத பதின்ம வயதினருக்கு ‘எப்படியாவது 100க்கும் அதிகமான நண்பர்களை தங்கள் வட்டத்தில் சேர்க்க வேண்டும்’ என்ற பிற பள்ளி நண்பர்களிடையே ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக, முன் பின் தெரியாத பலரின், நட்பு விண்ணப்பத்தை ஏற்று அவர்களின் ‘நட்பு’ வட்டத்தை 100-200க்கும் மேலும் பெரிதாக்குகின்றனர். விளைவு, கயவர்களின் ஜாலப் பேச்சுக்கும், பிற தொல்லைகளுக்கும், தவறுகளுக்கும் துணைபோகவோ, ஆட்படவோ நேரிடும் சூழலில் தள்ளப்படுகிறார்கள்.
சிறுவயது முதற்கொண்டே குழந்தைகளை அடிமைப்படுத்தும் கணினி, வீடியோ விளையாட்டுகள், சமூக வலைத்தளங்கள் அவர்களை வெளி உலக எதார்த்தங்களிலிருந்து அன்னியப்படுத்துகின்றன. மனிதர்களிடம் பழகுவது, அவர்கள் உணர்வுகளை பற்றின புரிதல் என்னவென்று அறிந்து கொள்ளும் திறமை குறைந்து போகின்றன. நண்பன் யார் பகைவன் யார் என்று தெரியாத வயதில் இவ்வாறான சூழல் அவர்களை மேலும் பிரச்சனைக்குள் தள்ளும் நிலைதான் வலுக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி பேஸ்புக் தொடர்பான குற்றச்செயல்கள் மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. 40 நிமிடங்களுக்கு ஒரு முறை பேஸ்புக் தொடர்பான குற்றம் ஒன்று போலீசிடம் பதிவாகிறது. சென்ற ஆண்டு மட்டும் 12,300 குற்றங்கள் பதிவாகி உள்ளன. கொலை, பாலியல் வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள், தாக்குதல், கடத்தல், கொலை மிரட்டல், சாட்சியங்களை மிரட்டல், மோசடி போன்ற குற்றங்கள் மீதான விசாரணைகளில் பேஸ்புக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நட்புகளின் எண்ணிக்கையை சமூக அந்தஸ்தாக அளவிடும் மாணவர்களையும் இளைஞர்களையும் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பேஸ்புக் புதிது புதிதான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. பல்வேறு உத்திகளில் தனது வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் முயற்சிகளில் இறங்கியிருக்கும் பேஸ்புக் 13 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளும், பேஸ்புக்கில் சேர வாய்ப்பை ஏற்படுத்தப் போவதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. குழந்தைகள் பெற்றோரின் கடன் அட்டைகளை பயன்படுத்தி தாம் விளையாடும் இணைய விளையாட்டுகளுக்கு கட்டணம் செலுத்த வைப்பதற்கான உத்திகளையும் யோசித்து வருகிறது.
பதின்மவயதினரை போல அவர்கள் பெற்றோர்களும் பேஸ்புக்க்கு அடிமையாகி இருக்கும் போது, தமது சந்தைப்படுத்தும் லாப வேட்டைக்கு பயன்படுத்தும் நோக்கில் வணிக நிறுவனங்கள் அந்த அடிமைத்தனத்தை மேலும் மேலும் உறுதியாக்கும் சூழலில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சட்டங்களும் காவல் துறையும் என்ன பாதுகாப்பு அளிக்க முடியும்? அயோக்கியர்களையும் நண்பர்கள் என்று காண்பிப்பதுதான் முகம் தெரியாத பேஸ்புக்கின் அடிப்படை செயல் முறை. அதிலிருந்து அறுவடை ஆகும் வருமானத்தை வங்கியில் குவித்துக் கொள்ளும் பேஸ்புக் அதன் விளைவாக பலியாகும் குழந்தைகளின் வாழ்க்கைக்கு பொறுப்பேற்கப் போவதில்லை.
இந்த சம்பவத்தில் ராஜேஷ், நவீன், என்று இருவரை மட்டும் காவல் துறை கைது செய்திருக்கிறது. தவறான நபர்களை அறிமுகம் செய்து குற்றங்கள் நிகழும் சூழலை உருவாக்கியுள்ள பேஸ்புக் மற்றும் நகரத்து மேட்டுக்குடி கலாச்சார நிறுவன முதலாளிகளை தண்டிப்பது யார்?