Tuesday, May 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 820

பாரு நிவேதிதா – சுயமோகன் ஒரு லடாய் !

34

சாரு-நிவேதிதா-ஜெயமோகன்

ஆறு தமிழரில் ஒரு தமிழர் வசிக்கும் சென்னை மாநகரத்திலே, பல் விளக்காமல் விழுங்கிய ஒரு குலோப்ஜாமுனின் ஸ்வீட்டான மாலை நேரத்து மயக்கத்திலே, தமிழர் தம் பண்பாட்டுச் சிக்கல்களை நுண்ணிய அளவிலே கண்டுபிடித்து யாருக்கும் தெரியாமல் நைசாக வெளியே விடும் ஒரு கெட்டவாயுவின் நாசுக்குடன் முடிச்சவிழ்க்கும் ஒரு சிற்றிலக்கிய பத்திரிகையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டமொன்று, புவியியல் சிறப்புமிக்க கூவம் நதிக்கரையின் அருகில் அண்ணா சாலையின் மத்தியில் நடைபெற்றது. சிந்தனையில் தோய்ந்து வெளிறிய கண்களுடன், கவலை குடிகொண்ட இதயத்துடன், பிஸியாக இருப்பதை பறைசாற்றும் செல்பேசி ரீங்காரங்களுக்கு மத்தியில் சென்னை மாநகரின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் நவீனத் தமிழ் இலக்கியவாதிகள் விறுசுறுப்புடன் வந்து கொண்டிருந்தனர். கவிஞர் அண்ணாச்சி மட்டும் எல்லோரையும் கெட்ட வார்த்தை சொல்லி வைது கொண்டிருந்தார். அண்ணாச்சியின் அன்புப் பிடியில் சிக்காமல் எல்லோரும் எஸ்ஸாகிக் கொண்டிருக்க, தவறிச்சிக்கிய ஒரு இளைஞனிடம், பாலா படத்தில் தான் பிச்சைக்காரனாக நடித்தது குறித்து ரொம்பவும் துக்கப்பட்டு புலம்பிக் கொண்டிருந்தார். இளைஞன் அண்ணாச்சியின் பார்வையிலிருந்து பாக்கெட்டிலிருந்த 100 ரூபாய் நோட்டை அகற்ற அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

மேற்படி கூட்டத்தின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பா.நி, சு.மோ இருவர் மட்டும்தான் என்பதை ஈண்டு எடுத்துரைக்கத் தேவையில்லை. ஒற்றை கடுக்கனுடன், மால்டோ வடோவா படம் போட்ட வானவில் வண்ண காபி சட்டை, முழங்கால் நீள பெர்முடா, தூக்கிவிடப்பட்ட ரேபான் கண்ணாடி, முக்கியமாக பக்கவாட்டில் சரியும் 50 வயதுத் தொப்பையுடன் வந்த பா.நி வேற்று கிரக ஜீவராசிகளை சந்திப்பது போல, நடந்து வந்தார். காதோரம் ஏறிய நரையுடன், முழுக்கை சட்டை, இன் செய்யப்பட்ட பேண்ட், செருப்பு என 9 – 5 தோற்றத்துடன் சு.மோ, தன்னால் மட்டுமே கண்டுபிடிக்கப்படுவதற்காக காத்திருக்கும்  ஏதோ ஒரு தத்துவப் பிரச்சினையை ஆய்ந்த சலிப்புடன் அதே வேளையில் கூட்டத்தை உற்றுக் கவனித்தவாறு அதாவது தனது ஆதரவாளர்கள் எத்தனை பேர் என்று எண்ணியவாறு ஒரு சதாவதானி போல வந்து கொண்டிருந்தார். கூட்டத்திற்கு முன் இருவரும் ஒரே நேரத்தில் இப்படி எதிரெதிரே சந்திப்போம் என எதிர்பார்க்கவில்லை.

சந்தித்தார்கள், கை குலுக்கினார்கள், உரையாடினார்கள்.

சு.மோ: ஹலோ பாரு எப்டி இருக்கீங்க,, பைபாஸ் சர்ஜரி முடிஞ்சு ஹெல்த் பரவாயில்லையா, உடம்மைப் பார்த்துக்கோங்க, இப்ப பாத்தீங்கன்னா உடம்பே ஆலயம்னு பண்டு சித்தர், இப்போ பல டாக்டர்ஸே ஒத்துக்கிட்ட விசயம்,,,( வயதுக்கேத்த மாதிரி  சட்டை போடாம அரை லூசு மாதிரி.. ஆபரேசன் பண்ணா உன் கொழுப்பையா எடுக்க முடியும்)

பா.நி: ம் ம்…நல்லா இருக்கேன் ( இவ்ளோ யூத்புல்லா இருப்பவனைப் பார்த்து இந்த அம்மாஞ்சிப்பய வேணும்னே கேக்குறானே, எவ்ளோ திமிர் இருக்கும்) பை தி வே கஜிதன் நல்லா மார்க் வாங்கிருக்கான்னு கேள்விப் பட்டேன், நல்லா என்கரேஜ் பண்ணுங்க, எனக்கும் அவனுக்கும் ஜாக்கி சான், ரஜினின்னு ஒத்துப் போற விசயம் பலது இருக்கு ( உன்னோட ரம்பத்துக்கு அந்தப்பையன் எவ்வளவோ மேல், அவன்ட்டயும் டெய்லி விஷ்ணுபுரம் கதையச் சொல்லி சாவடிக்கறத நிறுத்தவா போற?)

சு.மோ: அதாவது பாரு.. இந்த உலகத்துல நாம நினைச்சு எதையும் செய்யறதில்ல, பாறைக்குள்ளேர்ந்து செடி முளைக்கிற மாதிரி அவனே பாத்துக்குவான்னு நினைக்கறேன். அவனைப் பத்தி நான் எழுதின பதிவை “தந்தைமை”ன்னு சொல்லி,  தமிழில்ல இதுதான் பெஸ்ட்டுன்னு கனுஷ்ய பத்திரனே சொல்லிருக்காரு.

பா.நி: (அவனை நொண்டி நாய்னு சொல்லி ஒரு கதை எழுதினவன் நீ. அதுக்கு பழிவாங்கியிருப்பான்) அப்டியா நான் படிக்கலயே.

சு.மோ:ஆமா. அதுக்கு மட்டும் ஐம்பதாயிரம் ஹிட்ஸ், மத்தபடி அவன் இப்ப ரஜினி, ஜாக்கி சானையெல்லாம் விட்டுட்டான், இப்போ ஜென் தத்துவம், சங்க காலக் கவிதைகள், சத்ய சோதனை, அயோமா பவுத்தம்னு மூழ்கிட்டான். ( சிங்கத்துக்கு பிறந்தது பன்னிக் குட்டியாகுமா முட்டாளே) அப்புறம் கூட்டத்துக்கு எப்படி வந்தீங்க, நான் திருவனந்தபுரத்துல இருந்து ஜெட் ஏர்வேஸ்ல வந்தேன், ஏர்போர்ட்டல என்னோட வாசகர், அம்பத்தூர்ல பெரிய பேக்டரியெல்லாம் வச்சுருக்குராரு. அவர்தான் என்னை பிக்கப் பண்ணி இங்க கூட்டி வந்தாரு ( இதெல்லாம் சொன்னா உனக்கு பிரஷர் ஏறுமே, என்ன இருந்தாலும் சென்னையில கூட நான்தான் உன்னைவிட பாப்புலர்)

பா.நி: ( நான்- ஸ்டாப் ஃபிளைட்ல பாரிசு, சிங்கப்பூர், பாங்காக்னு போய்க்கிட்டு இருக்கவன் கிட்ட கட்ட வண்டியில போறதைப் பேசுறான் ஃபூல்) நான் ஸ்டேட்ஸ்ல இருந்து ஒரு அமெரிக்கன் மேட் என்னோட ஸீரோ டிகிரி பற்றி அதோட அமெரிக்க ரிலவென்ஸ் பற்றி டாக்டரேட் பண்றார், அவரை கன்னிமாரா பார்ல பாத்துட்டு அப்புடியே நடந்துவாரேன், ( உன்னோட லெவல் ஆந்திரா பார்டர் தாண்டாது மச்சி, இதக்கேட்ட ஒடனே வயிறு பத்தணுமே)

சு.மோ: இந்த மாதிரி ரிசர்ச் பத்தியெலாம் எனக்கு நல்ல ஒப்பீனியன் இல்ல பாரு, எல்லாம் அகாடமிக் ஃபிரேம்குள்ள இருந்து எல்லாத்தையும் பாப்பாங்க, ஊர்க்குருவியின் சுதந்திரம் கூண்டுக்கிளிக்கு வராதுல்ல ( அமெரிக்காவுல இல்லாத போர்னோ எழுத்தா? உன்னோடது பத்தி ஆராய்ச்சி செய்ய வாரன்னா அவன் எவ்ளோ மேங்கோ மடையனா இருக்கணும்) நானும் அடுத்த மாசம் கனடா போறேன், நயாக்ரா பக்கத்துல் நைவேத்தய கிரின்னு ஒரு ஆசிரமத்துல இளைஞர்களுக்கு கவிதை பத்தி கிளாஸ் எடுக்குறோம், இன்னைக்குக் கூட அதப்பத்தித்தான் பேசலாம்னு இருக்கேன்

பா.நி: எல்லாம் அகாடமிக்ன்னு முத்திரை குத்தக்கூடாது, இந்த அமெரிக்கா காரன் ஒரு பின் நவீனத்துவக் கொண்டாட்டக்காரன், கூவம் குடிசைங்களுக்கு போய் சுண்டக்கஞ்சி அடிக்குற ஆளு, பெரிய பிலாசபிக்காரர், அவருக்கு என்னோட நாவல் – அதான் இப்போ இங்கிலீசுல வந்திருக்கே,  நீங்களும் கேள்விப்பட்டிருக்கணுமே, ஓரே நேரத்துல நியூயார்க், பாரிஸ், சிட்னி, லண்டன்ன்னு எல்லா இடத்துலயும் ரீலீஸ் ஆயிருக்கு, இந்த வருடம் புக்கருக்கு செலக்ட் ஆகும்னு என்னுடைய பாரிஸ் தோழி இப்பதான் மெசேஜ் அனுப்பியிருக்கா.  அந்த அமெரிக்கர் என்னோட நாவல் அமெரிக்கனின் பிராப்ளத்தை ஹார்ட் டு ஹார்ட் பேசுதுன்னு ரொம்ப டீப்பா பீல் பண்ணி ரிசர்ச் பண்றார் ( நான்தான் உலக எழுத்தாளன்னு உலகமே ஒத்துக்கிட்ட விசயம், நீ உள்ளூர்ல குப்பை கொட்டிக்கிட்டிருக்க, கற்பூர வாசனை கழுதைக்கு தெரியுமா)

சு.மோ: அது வந்து பாரு இப்ப பாத்தீங்கன்னா எனக்கு மொழிபெயர்ப்புகள் மேலயே பெரிய நம்பிக்கையில்லை. கசந்தகுமார் கூட விஷ்ணுபுரத்த லாங்குவேஜூல பெரிய கமாண்ட் உள்ளவங்கிட்ட குடுத்து மொழிபெயர்த்தார், எனக்குத்தான் திருப்தி இல்லை, என்னோட மனவெளி, மொழிபெயர்ப்புல மிஸ்ஸாகுதுன்னு பீல் பண்ணி வேணாம்னு சொல்லிட்டேன். இத இங்கிலீசுல போட்டா பல ஆயிரம் விக்கும்னாங்க. நான் ஒத்துக்கல, என்ன இருந்தாலும் கலையில காம்பரமைஸ் பண்ணக்கூடாது இல்லையா( உன்ன மாதிரி கனிமொழி, அந்துமணி, கமலஹாசன்னு ஜால்ரா போட்டு பிழைக்குறவன் நானில்லை) அப்புறம் புக்கர் பத்தியெல்லாம் எனக்கு பெரிய அபிப்ராயமில்லை. அருந்ததிராய் படிச்சுருக்கேன், எல்லாம் குருவி மண்டைங்க எழுத்து, வெளிநாட்டு மனநிலையில் நம்ம பண்பாட்டை கேலி செய்து எழுதப்பட்டதால வெஸ்ட்டர்ன் மார்க்கெட்ல ஹிட் ஆகலாம்,

பா.நி: உங்க கருத்த அடியோட மறுக்குறேன் சுயமோகன். இலக்கியத்துல வெளிநாடு உள்நாடுன்னு பிரிவினை பிரிக்கறது பாசிசம்னு நினைக்கிறேன். ஒரு தென்னமெரிக்கனின் கொண்டாட்ட மனநிலையை என்னோட எழுத்து டச் பண்ணுதுன்னு பார்க்குறேன். ஆக்சுவலா நானெல்லாம் பிரேசிலில் பிறந்து சாக்கர் விளையாடி சம்பா நடனம் ஆடவேண்டிய ஆளு, ஏதோ இங்க பிறந்து சாம்பார், ரசம்னு விதிக்கப்பட்ட பூமியில சகிச்சுக்கிட்டு வாழறேன். என்னப் பொறுத்தவரை கலைக்கு மொழி கிடையாது, அதோடு கவித்துவமான மொழி எல்லா இடத்துலயும் பாஸாக முடியும், ஏன் என்னையே எடுத்துக்கங்களேன், சுட்டுப் போட்டாக்கூட மலையாளம் எனக்கு வராது, நீங்களோ மலையாளத்துல கதா கலேட்சபமே நடத்தக்கூடிய ஸ்கில் உள்ளவரு, இப்போ என்னோட புக்ஸ் எல்லாமே மலையாளத்துல ரீலீஸ் ஆகி மாதத்துல பாதி நாளு கடவுளோட சொந்த தேசத்திலதான் சுத்திக்கிட்டு, புட்டு, பயிறு, பப்படம்னு ஆயிட்டுது வாழ்க்கை, கேரளாவுல 88 இடத்துல எனக்கு கட்அவுட் வைச்சுருக்காங்க, மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்த இடத்துல நான்தான்னு சொல்றாங்க, இதெல்லாம் பெரிய விசயம்னு நானும் எடுத்துக்கல,  நான் சொல்ல வர பாயிண்டு இலக்கியத்துக்கு மொழி ஒரு ஓபனிங்தான். ( மலையாளத்துல நான்தான் சூப்பர் ஸ்டாருன்றது தெரிஞ்சு நீ எத்தனை நாள் தூங்காம இருந்தேன்னு உன்  அறுவைகளை வேறு வழியில்லாமல் படித்து ஃபுரூப் பாக்கும் உன் மனைவியிடம் கேட்டால் உண்மை தெரியும்)

சு.மோ: ( சற்று பதட்டமடைந்து) ஐயோ பாரு கேரளாவோட நிலைமையே வேறு, அங்க மரபு ரீதியான எழுத்துக்களுக்கு மத்தியில ஒரு ரீலீஃப்பாத்தான் உங்களைப் பாக்குறாங்கன்னு கிருஷ்ணன் குட்டி கூட சொல்லிட்டிருந்தார். இதப்பத்தி நானும் நிறைய எழுதியிருக்கேனே, நம்ம தமிழ்ல இருக்குற நவீன எழுத்தெல்லாம் அங்க அதிகமில்லை, ஒரு மாதிரி பாப்புலர் லெவல்லதான் சீரியஸ் லிட்டரேச்சர் இயங்குறதால அதுவே அவங்களுக்கு ஒரு தடை ஆயிடுதில்ல,  மத்தபடி நீங்க மலையாளத்துல என்ட்ரி ஆனது எனக்குக்கூட பரவசமான மனநிலையைத்தான் குடுத்திருக்கு. பாலாவுக்கு வசனம் எழுதிக்கிட்டிருக்கிறப்போ கேரளாவோட ரசனை பற்றி ஒரு பெரிய டிஸ்கஷன் பண்ணினோம். நீங்க சொன்ன உடன இப்போதான் மெமரி ஸ்ட்ரைக் ஆகுது. ( சினிமாவுக்கு நான் வசனம் எழுதுறதப்பத்தி நீ மனம் நொந்து எத்தனை நாள் பார்க் ஷெர்ட்டன்ல சரக்கடிச்சேன்னு அந்துமணிகிட்ட கேட்டதான் தெரியும், அவிடே பிராந்தனக்க சாகித்யக்காரனானு கேட்டோ)

பா.நி ( அதேபோல பதட்டமடைந்து) இல்ல சுயமோகன், சினிமாவில தீவிர இலக்கியவாதிகளுக்கு இடமுண்டான்னு தெரியலை, ஆரம்பத்துல நீங்களும், மெஸ்.கிராமகிருஷ்ணனும் எழுதறதப் பத்தி, போஸ்டர்ஸ்ல உங்க பெயர் பாத்துட்டு கூத்தாடிருக்கிறேன். ஆனா நம்மள ஒரு காண்டம் மாதிரி அவங்க யூஸ் பண்ணிக்கிட்டு த்ரோ பண்ணிடுவாங்க, ஏதோ பணம் கொஞ்சம் கிடைக்கலாம், ஆனா ரியல் சேட்டிஸ்பேக்ஷன் அங்க கிடைக்காதுன்றதுதான் என்னோட ஸ்ட்ராங்கான ஃபீலிங்.

சு.மோ: அலோ .. ஏதோ கேரளாவில சில அரைக்கிராக்குங்க உன்னை சுத்தி வருதுன்னு ரொம்ப ஆடாத, தமிழ் நாட்டுல குழாயில தண்ணிவரலேன்னா கூட கவலைப்படாத ஷோக்குப் பேர்வழி, இலக்கிய *@#$% .. கேரளாவில விவசாயிகளுக்காக கோகோ கோலாவ எதிர்த்து போராட மாதிரி சீன் காட்டுற…

பா.நி: நிறுத்துடா. *@#$% ஏதோ ரெண்டு சினிமாவுல ஐஞ்சு தயிர் சாத கேரக்டருக்காக வாந்தி எடுத்துட்டு காசு பொறுக்கினு வர ஆளு நீ.  என்மேல உனக்கு காண்டு, கொலைவெறிங்குறத ஒத்துக்கடா … என் பிளாக்குக்கு டெய்லி பத்தாயிரம் ஹிட்ஸ் தெரியுமாடா…பெரிசா பேசவந்துட்டான் *@#$%

சு.மோ: ஐயோ உன் ஹிட்ஸ் கதைதான் நெட்டுல நாறுதே. வியூஸ் எல்லாம் ஹிட்ஸ்னு கள்ளக் கணக்கு காட்டிட்டு, அதுக்கு துட்டு கேட்டு கேவலப்பட்டு, அப்புறம் ஒரு நாயும் படிக்க மாட்டான்னு பிச்சை கேக்குற… உன்னை மாதிரி நான் *@#$%  இல்லைடா மானம் கெட்டவனே…

பா.நி: நிறுத்துடா *@#$% .  டெய்லி ஐஞ்சாறு பதிவு போடுற மெஷின், நீயெல்லாம்  வொர்க்ஷாப் வெச்சு பிழக்கவேண்டியவன், கவர்மண்டு காசுல வாழ்ந்துட்டு அதுவும் பணிநேரத்துல தூங்குறேன்னு அதையும் வெக்க மானமில்லாம பிளாக்ல எழுதிட்டு, ஏதோ கீதை, பேதைன்னு ரீல் விட்டுட்டு காலத்த ஓட்டற *@#$%  நான்சென்ஸ். இலக்கியத்தை நம்பி என்னை மாதிரி வி.ஆர்.எஸ் வாங்க தைரியம் இருக்காடா உனக்கு?

சு.மோ: போடா *@#$%

பா.நி: போடா *@#$%

இதற்கு மேல் இவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது காதில் விழவில்லை. கேட்டவர்கள் பின்னூட்டத்தில் அவற்றைப் பதிவு செய்யலாம்.

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா!!

94

imageஈழத் தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ்ப் பதிவுகளை அதிகம் படிக்கும் ஐ.டி. நண்பா, இந்தப் பதிவு உனக்காக எழுதப்படுகிறது. அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி கடல் தாண்டி இந்தியாவையும் பாதித்திருப்பதை உன் அனுபவத்தில் உணர்ந்திருப்பாய். சத்யம், இன்போசிஸ், விப்ரோ, எண்ணற்ற மென்பொருள், பி.பி.ஓ, கால் சென்டர் நிறுவனங்களில் ஆட்குறைப்பு அரங்கேறி வருகிறது.

சம்பள உயர்வு, இன்சென்டிவ்ஸ், அத்தனையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. கசக்கி பிழிபடுவதற்கு தயாராக இல்லாத ஊழியர்கள் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறியப்படுகின்றனர். புதியவர்கள் சில ஆயிரம் குறைவான சம்பளங்களுக்கு வேறெந்த சலுகையுமின்றி சேர்க்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் டாலர் மதிப்பினால் முந்தைய ஒப்பந்தப்படி போடப்பட்ட வரவினால் ஏற்படும் நட்டத்தை ஊழியர் தலையில் கட்டுவதற்கு நிறுவனங்களின் மனிதவளத் துறை மேலாளர்கள் புதிது புதிதாக யோசித்து வருகின்றனர். பணிச்சுமையும், நேரச்சுமையும் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. முன்பு போல அலுவலக நேரத்தில் பதிவுகளை ஹாயாக படிப்பதற்கு உனக்கு இனி நேரமிருக்காது. இந்த பாதிப்பு ஏன் என்று நீ யோசித்ததுண்டா?

அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் போதுமான அளவு வரவில்லை, அதனால் முதலாளிகளுக்கு இலாபம் குறைந்திருக்கிறது என்பதால் இந்த நெருக்கடிகள் என்று நீ பதிலளிக்கக்கூடும். அது உண்மையெனும் பட்சத்தில் அமெரிக்கா நன்றாக இருந்த காலங்களில் உன்னுடைய முதலாளி அந்த இலாபத்தில் ஏன் பங்களிக்கவில்லை என்ற கேள்விக்கு நீ பதிலளிக்க வேண்டும். மாதம் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் சம்பளம் என்பதைத் தாண்டி உன் நிறுவனத்தின் வரவு செலவு குறித்து உனக்கு ஒன்றும் தெரியாது என்பதோடு அது குறித்து நீயும் பெரிய அளவுக்கு கவலைப் பட்டிருக்கமாட்டாய்? அது தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று நீ கேட்கக்கூடும். அது தெரியா விட்டால் உனது நிச்சயமற்ற எதிர்காலத்தின் அபாயம் உனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் அதிர்வுகளை உன்னால் சரி செய்ய முடியாது.

அது கிடக்கட்டும் அமெரிக்கா இருமினால் இந்தியா ஏன் வாந்தி எடுக்கவேண்டும்? அமெரிக்க பொருளாதாரம் பாதிப்படைந்தால் இந்தியாவுக்கு ஏன் நெறி கட்டவேண்டும்? ஏதோ அமெரிக்கா நம்மைப் போன்ற பலரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என உன்னில் சிலர் நினைக்கக் கூடும். இல்லை நண்பா, அமெரிக்காதான் பல ஏழை நாடுகளைச் சுரண்டி வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சுரண்டலில் அமெரிக்காவின் நடுத்தர வர்க்கமும் அவதிப்படுகிறது என்பதையும் நீ புரிந்து கொள்ளவேண்டும். அமெரிக்காவில் ஒரு மணிநேர வேலைக்கு ஒரு தொழிலாளிக்கு கொடுக்கப்பட வேண்டிய பணத்தில் சிறு அளவுதான் இந்தியாவில் அதே வேலைக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் ஒரு அமெரிக்க தொழிலாளிக்கு வரவேண்டிய வேலை பறிபோகிறது என்பதோடு உனக்கு கொடுக்கப்படும் குறைவான சம்பளத்தின் மூலம் உன்னை உருவாக்கிய இந்த நாடும் சுரண்டப்படுகிறது. இப்படி இரு பக்கமும் இலாபம் அடிப்பதால்தான் அமெரிக்கா பணக்காரர்களுக்கான நாடாக இருக்கிறது.

இப்போது அமெரிக்காவில் உள்ள பிரச்சினை என்ன? பல நிறுவனங்கள் திவாலாகியிருக்கின்றன. திவலானதற்குக் காரணம் பொருளாதாரத்தில்  அந்த நிறுவனங்கள் நடத்திய சூதாட்டம்தான். இந்த சூதாட்டம் பொழுது போக்கிற்காக நடந்தது அல்ல, அமெரிக்க மற்றும் உலக மக்களின் வருமானத்தை தூண்டில் போட்டு அள்ளுவதற்கு நடந்த பகல் கொள்ளை. இந்தப் பகல் கொள்ளையினால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய இந்தியாவும் இழக்க வேண்டுமென்றால் அந்த லாஜிக் சரியா? அமெரிக்காவில் சில முதலாளிகள் வருமானம் பார்க்க நாம் பலிகடா ஆகவேண்டுமென்றால் இந்த அடிமை நிலை இந்தியாவிற்கு நல்லதா? அமெரிக்க சிக்கலுக்கு இந்தியா உதவி செய்வது கடமை என்று உனது பிரதமர் மன்மோகன் சிங் ஜால்ரா தட்டுவதைப் பார்த்து உனக்கு கோபம் வந்ததா இல்லை மகிழ்ச்சி அடைந்தாயா?

அமெரிக்காவின் தும்மலால் மும்பைப் பங்கு சந்தைக்கு விக்கல் ஏற்பட்டு 20,000த்தில் இருந்த புள்ளி இப்போது 10,000த்தில் தள்ளாடுகிறது. உடனே நிதியமைச்சர் வங்கிகளின் ரொக்க இருப்பைக் குறைத்து, வட்டி விகிதத்தையும் குறைத்து ரிசர்வ் வங்கி மூலம் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையில் சூதாடுவதற்கு இறக்கி விட்டிருக்கிறார். இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை இந்தியாவில் தொடர்ந்து போட்டு விளையாடுவார்களாம். பத்தாயிரம் புள்ளி இழப்பில் வந்த நட்டம் அனைத்தும் உன்னைப் போன்று கொஞ்சம் ஆசைப்பட்டு பங்குச் சந்தையில் சேமிப்பை முதலீடு செய்த நடுத்தர வர்கக்த்திற்கு ஏற்பட்டது என்றால் நிதியமைச்சரோ வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்து கவலைப்படுகிறார். இந்த இரண்டரை இலட்சம் கோடி ரூபாயும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படப் போவதில்லை. உன்னைப் போன்ற சற்று காசு உள்ளவர்கள் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏமாறாலம் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த  நாடகம் நடத்தப்படுகிறது என்பது உனக்குத் தெரியுமா?

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆரம்பிப்பதற்குப் பணமில்லை என்று எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போது முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டும் இவ்வளவு பெரிய பணம் எங்கிருந்து வந்தது, உனக்குத் தெரியுமா? இதெல்லாம் உனக்கேன் தெரியப் போகிறது? அதிக சம்பளம் கொடுத்து அலுவலகப் பணியில் கசக்கிப் பிழிந்து, ஓய்வு நேரத்தையும் பொழுது போக்கு என்ற பெயரில் எடுத்து கொண்டு கொடுக்கப்பட்ட பணத்தை எப்படிச் செலவழிப்பது என்று அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து உன்னை மொத்தத்தில் ஒரு அரசியல் தற்குறியாக மாற்றிவிட்டார்களே என்ன செய்வது? இதனால் நீ கோபப்படலாம். ஆனாலும் மற்றவர்களைப் போல ஐ.டி.துறையில் விவாகரத்து மலிந்து விட்டது, பாலியல் சீரழிவு அதிகரித்து வருகிறது என்று நான் கவலைப்படவில்லை. மாறாக அரசியல் ரீதியில் நீ சீரழிக்கப்பட்டிருப்பது குறித்துத்தான் வருத்தமடைகிறேன்.

வருடத்திற்கு சில இலட்சம் சம்பளம், வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு சுற்றுலா, ஒரு இந்திய சுற்றுலா, இருமாதத்திற்கு ஒரு தடவை பிக்னிக், மாதந் தோறும் கேளிக்கைப் பூங்காக்கள், வாரந்தோறும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடிகர் நடிகைகளை கூட்டி வந்து சாட்டில் பேசுவது, புதிய படத்திற்கு முதல் காட்சிக்கு அழைத்துச் செல்வது, வெறுமனே ஜாலி மட்டுமல்லாமல் சில நவீன சாமியார்களைக் கூட்டி வந்து தியானம் சொல்லிக் கொடுப்பது, உடலை இளைக்க வைக்க வகுப்புக்கள், அலுவலகத்திலேயே விளையாடுவதற்கு உள்ளரங்குக் களங்கள்,  கார், அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு ஏற்பாடு செய்வது, பல நுகர்வுப் பொருட்களை மாதத் தவணையில் வாங்குவதற்கு அலுவலகத்திற்கே வந்து செய்யப்படும் விற்பனை மேளாக்கள், மாதக் கூப்பன் கொடுத்து பேரங்காடிகளில் பொருள் வாங்குவது, இது போக தாகமெடுத்தால் கோக், பசியெடுத்தால் பிஸா, போரடித்தால் சத்யம் தியேட்டர், இப்படித்தானே நண்பா நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? இந்த வசதிகளை வழங்கிய உலகமயமாக்கம்தான் இதே காலத்தில் சில இலட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்திருக்கிறது. இந்த முரண்பாட்டுக்கு உன்னுடைய பதில் என்ன?

உன்னுடைய ஆடம்பரங்களெல்லாம் நிலையானவை அல்ல நண்பா, அவை எந்நேரமும் உன்னிடமிருந்து பறிக்கப்படலாம். உன் பணிச்சூழல் எப்படி இருக்கிறது என்று பார். வேலைக்கு நேர வரையறை கிடையாது, பதவி ஏற்றத்துக்கும், இறக்கத்துக்கும் எந்த அளவு கோலும் இல்லை, நன்றாக வேலை செய்பவர் நிறுவனத்தை விட்டே துறத்தப்படுவதும், நன்றாக வேலை செய்யாவிட்டாலும் நிறுவனத்தால் தக்கவைக்கப்படுவதற்கும் எந்த தர நிர்ணயமும் இல்லை, ஊழியர் கொள்கையில் பின்பற்றப்படும் இரக்கமற்ற தன்மை, மற்ற தொழிற்சாலைகளில் இருக்கும் எந்த தொழிற்சங்க உரிமையும், பாதுகாப்பும், சலுகைகளும் ஐ.டி.நிறுவனங்களில் செல்லுபடியாகாது என்ற நிலை,  நூற்றுக்கணக்கில் ஆட்குறைப்பு செய்தாலும் மறுமொழியின்றி அதை ஏற்றுக் கொள்ளும் அடிமைத்தனம், எந்த நிறுவனத்திலும் நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிச்சயமற்ற சூழல், இன்னும் எத்தனை அநீதிகளுக்கு மத்தியில் நீ வேலை செய்கிறாய் என்பதை நான் சொல்லி விளக்கத் தேவையில்லை. ஆனால் இவையெதனையும் நீ அடிமைத்தனம் என்று கருதவில்லை. அதுதான் கவலைக்குறியது நண்பா!

உன்னை விட பல மடங்கு குறைவாக சம்பளத்தை வாங்கும் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளி கூட தன்னுடைய  பணிப்பாதுப்புக்காக, சுயமரியாதைக்காக தொழிற்சங்கம் கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். நிர்வாகம் பல தடைகளை அரசின் ஆதரவோடு அமல்படுத்தினாலும் அந்தத் தொழிலாளர்கள் தம்முடைய போராட்டத்தில் உறுதியாக நிற்கின்றனர். இப்போது ஐ.டி துறையில் உனக்கிருக்கும் நிச்சயமற்ற நிலைக்கும், சுயமரியாதை அற்ற சூழலை எதிர்ப்பதற்கும் உனக்கிருக்கும் ஓரே வழி தொழிற் சங்கம் கட்டுவதுதான். உன்னைத் திருத்துவதற்கு மட்டுமல்ல உன்னுடைய முதலாளிகளின் அட்டூழியத்தை தட்டிக் கேட்பதற்கும் அது ஒன்றுதான் வழி. இன்றைய உனது வாழ்க்கை நாளைக்கே கூட இல்லாமல் போய்விடலாம். அமெரிக்காவின் ரத்த ஓட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் உன்னுடைய நிறுவனம் உன்னுடைய நலனுக்காக இயங்குபவை அல்ல. உன்னுடைய நலனும் இந்தியாவின் நலனும் ஒன்றிணையும் ஒரு பொருளாதாரத்தில்தான் உனக்கு மட்டுமல்ல தற்கொலை செய்யும் விவசாயிகளுக்கும் விடிவைத் தரும் வாழ்க்கையை உருவாக்க முடியும். அதற்கு முதல் படியாக உன்னுடைய இடத்தில் தொழிற்சங்கத்தை முதலில் கட்டு. பிறகு பார் அதனுடைய வலிமையை.

ஐ.டி.துறை நண்பா, உனக்கு ரோஷம் வேணுன்டா !

சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!

87

மிகுந்த வேதனையுடன் இப்பதிவை எழுதுகிறோம். “சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதல்” என்ற தலைப்பில் இன்றைய காலைத் தினசரிகள் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. தலித் மாணவர்களுக்கும் தலித் அல்லாத மாணவர்களுக்கும் இடையிலான மோதல் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு தனது செய்தியில் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. தலித் அல்லாத மாணவர்களின் சாதி என்ன என்பது பற்றி மட்டும் வாசகரின் ஊகத்துக்கு விட்டுவிட்டது.

“ஒரு மாணவன் பிணம் போலக் கிடக்க வேறு சில மாணவர்கள் அவனை ஆத்திரம் தீர கட்டையால் அடிக்கும் காட்சியை” சன் செய்தி திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது. காணும் எவரையும் பதைக்கச் செய்கிறது அந்தக் காட்சி. இந்தக் காட்சியின்படி “ஈவிரக்கமில்லாமல் அடிக்கும் அந்த மாணவர்கள்தான் குற்றவாளிகள்” என்ற முடிவுக்கே பார்வையாளர்கள் வரமுடியும். அடிக்கும் மாணவர்கள் எந்தச் சாதி, அடிபடும் மாணவர்கள் என்ன சாதி என்பது பற்றி பத்திரிகைகளோ தொலைக்காட்சியோ எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்நேரம் மாணவர் உலகத்துக்கும் சாதிச்சங்கத் தலைவர்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மாணவர்களின் “சாதி அடையாளம்” பற்றிய தகவல் போய்ச் சேர்ந்திருக்கும். யார் நம்மாளு என்பதைத் தெரிந்து கொண்டபின் மேற்கூறிய புகைப்படங்களும் காட்சிகளும் புது வீரியம் பெற்றுத் தமிழ் நாட்டை எரிக்கத் தொடங்கும். ஏற்கெனவே சென்னை எருக்கஞ்சேரியில் ஒரு அரசுப்பேருந்து எரிக்கப்பட்டுவிட்டது. இப்படங்களினால் வர இருக்கும் நாட்களில் 1998 இல்  தென் மாவட்டங்களில் நடந்தது போன்ற ஒரு சாதிக் கலவரம் தமிழகத்தில் நடைபெறாமல் இருந்தால் அது அதிசயம்.

அந்த அதிசயம் நடக்கவேண்டும் என்பதே எமது விருப்பம்.

இனி சம்பவத்திற்கு வருவோம்.

சமீபத்தில் பசும்பொன் தேவர் ஜெயந்தியைக் கொண்டாடிய, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த தேவர் சாதி மாணவர்கள், அதற்காக வெளியிட்ட சுவரொட்டியில் சட்டக் கல்லூரியின் பெயரில் இருந்த “அம்பேத்கர்” என்ற சொல்லைக் கவனமாகத் தவிர்த்து விட்டு வெறுமனே சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று வெளியிட்டதாகவும், இதனால் தலித் மாணவர்கள் கோபம் கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து சிறு சிறு பூசல்களாக உருவாகிப் புகைந்து கொண்டிருந்த முரண்பாடு நேற்றைய மோதலில் வெடித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த விவரம் பற்றிய முழு உண்மை அல்லது மேலும் பல புதிய தகவல்கள் இனி வெளிவரலாம்.

ஆனால் நடைபெற்றுள்ள இந்த துயரச் சம்பவத்தை விளங்கிக் கொள்ள இப்படிப்பட்ட ஆதாரங்கள் எதுவும் நமக்குத் தேவையில்லை. தேவர் சாதியினர் தலித் மக்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும் தீண்டாமைக் கொடுமையும் தமிழகம் அறிந்ததுதான். அதன் வடிவங்கள் வேறாக இருக்கலாம், சம்பவங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் அதன் சாரம் இதுதான். தென்மாவட்டங்களில் நடைபெறும் பல கலவரங்களுக்கு சிலை உடைப்புகள்தான் துவக்கப் புள்ளிகளாக இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அவை வெறும் கற்சிலைகள் பற்றிய பிரச்சினைகள் அல்ல.

அம்பேத்கரை சட்டமேதை என்று இந்தியா மேலுக்குக் கொண்டாடினாலும், அவருக்கு பாரத் ரத்னா விருது கொடுத்து கவுரவித்திருந்தாலும், அவரது பிறந்த நாளில் சர்வ கட்சித் தலைவர்களும் சிலைக்கு மாலை மரியாதை செய்தாலும், அவை எல்லாம் தேர்தலுக்காக பாரதிய ஜனதா தலைவர்கள் “ரம்ஜான் கஞ்சி” குடிப்பதைப் போன்ற நிகழ்வுகள்தான்.

மராத்வாடாவின் மராத்தா சாதியினரிலிருந்து தமிழகத்தின் தேவர் சாதியினர் வரை எல்லா ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் அம்பேத்காரின் பெயர் வேப்பங்காயாக கசக்கிறது என்பதே உண்மை. எனவே தேவர் ஜெயந்திக்கு போடும் சுவரொட்டியில் “அம்பேத்கர் பெயர் இடம் பெறக்கூடாது” என்று  சாதி கௌரவம் அந்த மாணவர்களைத் தடுத்திருக்கும். இதனை புலனாய்வு செய்தெல்லாம் கண்டுபிடிக்கத் தேவையில்லை. இது உள்ளங்கை நெல்லிக்கனி.

தங்களைத் தீண்டத்தகாதவனாக நடத்தும் ஆதிக்க சாதியினர் தங்கள் தலைவரையும் அவ்வாறே நடத்துவதை தலித் மாணவர்கள் சகித்துக் கொள்ளத் தயாரில்லை. தட்டிக் கேட்டிருக்கிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக இரு பிரிவு மாணவர்களுக்கும் உரசலும், மோதலும் நடந்திருக்கிறது. இந்த உரசல் அடுத்தடுத்து சிறு சிறு சம்பவங்களால் தீப்பிடித்திருக்கலாம். அத்தகைய ஒவ்வொரு சம்பவத்திலும் தேவர் சாதி மாணவர்கள்தான் தவறு செய்திருப்பார்கள், தலித் மாணவர்கள் தவறே செய்திருக்க மாட்டார்கள் என்று நாம் ஊகிக்க வேண்டியதில்ல்லை. தலித் மாணவர்களும் தவறிழைத்திருக்கலாம். ஆனால் இந்த மோதலின் அடிப்படை அத்தகைய சிறு சம்பவங்களிலிருந்து வரவில்லை என்பதே முக்கியம். சொல்லப்போனால், “சுவரொட்டியில் அம்பேத்கர் பெயர் இல்லை” என்ற காரணம் கூட இந்த மோதலுக்கு அடிப்படையாக அமைந்த காரணம் அல்ல. மோதலின் அடிப்படை என்பது தம் அன்றாட வாழ்க்கையில் தலித் மக்களும் தலித் மாணவர்களும் அனுபவிக்கும் சாதிக் கொடுமையில் இருக்கிறது; புதிய தலைமுறை தலித் இளைஞர்கள் அதை எதிர்ப்பதால், ஆதிக்க சாதியினருக்கு வரும் கோபத்தில் இருக்கிறது இந்த மோதலின் அடிப்படை.

புகைப்படங்களின் பிந்தைய பிரேம்களில் கட்டையால் அடிவாங்கும் மாணவன், சற்று நேரத்துக்கு முன் கையில் ஒரு அடி நீளக் கத்தியுடன் பாய்ந்து வருவதையும் பார்க்கிறோம். இந்தக் கத்தி ஒரு தலித் மாணவனைப் பதம் பார்த்திருக்கிறது. விளைவு நாம் தொலைக்காட்சிகளில் கண்ட அந்தக் காட்சி.

சென்னை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களில் விடுதியில் தங்கிப் படிக்கும் பெரும்பாலானோரில் தலித் சமூகத்தைச சேர்ந்தவர்கள். டே ஸ்காலர்ஸ் மாணவர்களில் சாதி இந்துக்கள் அதிகம். மற்ற கல்லூரிப் பட்டங்களை படிப்பதற்கும் வழக்கறிஞர் கல்விப் படிப்புக்கும் வேறுபாடுகள் உண்டு. பொறியியல், மருத்துவம் போன்ற  வசதியான படிப்புகளைப் படிக்க வைக்க வாய்ப்பில்லாத ஏழை நடுத்தர வர்க்கத்தினர்தான் தம் பிள்ளைகளை சட்டக் கல்லூரியில் சேர்க்கிறார்கள். பி.ஏ, பி.எஸ்.ஸி படிப்பதை விட இது பரவாயில்லை என்று வருபவர்களும் அதிகம். நிச்சயமற்ற வருவாய், நிச்சயமற்ற வாழ்க்கை என்பதை மட்டுமே வழங்கும் வழக்குரைஞர் தொழிலை கொஞ்சம் வசதி படைத்தோர் யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. அந்த வகையில் சென்னை கல்லூரியில் மோதிக்கொள்ளும் இரு தரப்பு மாணவர்களும் சாதாரண வர்க்கங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

வசதி இல்லை என்பதால் சாதி உணர்வு குறைந்து விடுவதில்லையே. ஆதிக்க சாதி மாணவர்கள் என்னென்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்று நமக்குத் துல்லியமாகத் தெரியாது. இந்தப் பிரச்சினையில் தேவர் ஜெயந்தி சம்பந்தப்பட்டிருப்பதால் தேவர் சாதி மாணவர்களின் பாத்திரம் முக்கியமானது என்று ஊகிக்க முடிகிறது. தேவர் சாதியினர், சாதிய ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முன்னிலை வகிப்பதால் பிறரைக் காட்டிலும் இவர்களிடம் ஆதிக்க மனோபாவம் தூக்கலாகவே இருப்பதைக் காண்கிறோம்.

தலித் மாணவர்களோ மற்ற படிப்பு படிப்பதற்கு வசதியில்லாதவர்கள். இதையாவது படித்து முன்னுக்கு வரவேண்டுமென ஆர்வம் கொண்டவர்கள். சென்னை விமான நிலையத்திற்கு எதிரே இருக்கும் திரிசூலம் மலையில் கல்லுடைக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் வசிக்கின்றனர். எந்த வசதியுமில்லாமல் படிக்க வரும் பல மாணவர்களை இக்குடும்பங்கள் ஆதரிப்பது வழக்கம். ஏழ்மை விதிக்கப்பட்டிருக்கும் தம் சமூகத்தில் இந்தப் பையன்களாவது படித்து முன்னுக்கு வரட்டுமே என்று அம்மக்கள் இவர்களை ஒரு லட்சியத்துடன் பராமரிப்பதை இன்றும் பார்க்கலாம்.

தென்மாவட்டங்களில் இருக்கும் எல்லாப் பள்ளிகளும், கல்லூரிகளும் சாதி இந்துக்களுக்குச் சொந்தமானவை என்பதால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இங்கே நவீன அடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். “கோட்டா மாணவர்கள், சத்துணவு கோஷ்டி”, என்று பலவிதங்களில் அங்கே தலித் மாணவர்கள் கேலி செய்யப்படுவது வழக்கம். வகுப்பறைக்குள் தலித் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் சுற்றறிக்கை வந்தாலே மேல்சாதி மாணவர்கள் ஏளனப்பார்வையுடன் சிரிப்பது வழக்கம். இப்படி பல்வேறு வகைகளில் தலித் மாணவர்கள் அநீதியாக நடத்தப்படுவதால் மாணவர்கூட்டம் தெளிவாக சாதிய ரீதியாக பிரிந்திருப்பதும் அவர்களுக்குள் பல சர்ச்சைகள், சண்டைகள் வருவதும் வழக்கம். தென் மாவட்டங்களைப் போல வெளிப்படையாக இல்லையென்றாலும், சென்னைக் கல்லூரியிலும் சாதி உணர்வு நீறு பூத்த நெருப்பாகவே இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

90களின் இறுதியில் நடந்த தென்மாவட்டக் கலவரத்தில் வாழ்க்கை இழந்த ஒரு தலித் மாணவனின் கதை இது. பதினெட்டு வயது கூட நிரம்பாத அந்த தலித் மாணவன் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டான். பிறகு குண்டர் சட்டத்தில் சிறைவாசம் தொடர்ந்தது. பாளையங்கோட்டை சிறையில் தேவர் சாதி கைதிகள் அவனைப் பழி வாங்குவதற்குத் திட்டம் தீட்டியிருக்கின்றனர். இதை அறிந்த அந்த மாணவன் முந்திக் கொண்டான். சாப்பிடும் அலுமினியத் தட்டை உடைத்துக் கத்தியாக்கி தேவர் சாதிக் கைதி ஒருவரைக் குத்தி விட்டான். இப்போது அந்த மாணவனின் நிலை என்னவாக இருக்கும்? அவனைப் படிக்க வைக்க விரும்பிய பெற்றோரின் கனவு என்னவாக இருக்கும்?

கொடியன் குளம் கலவரத்தை ஒட்டி பல தலித் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை விட்டு நீக்கம் செய்யப்பட்டார்கள். இதனாலேயே பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி பறிபோனது. இன்றைக்கும் அவர்கள் கலவர வாய்தாவுக்காக நீதிமன்றத்திற்கு அலைந்தவாறு வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். சாதி இந்துக்களுக்குச் சொந்தமான தனியார் கல்லூரிகள் மட்டும்தான் இப்படி அவர்களை நடத்துகின்றன என்பதில்லை. சென்னையில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் அனைத்திற்கும் நீங்கள் சென்று பார்த்தால் இந்த அரசு தலித் மாணவர்களை எப்படி தொழுவத்தில் இருக்கும் மாடுகளைவிட கேவலமாக நடத்தி வருகிறது என்பதைப் பார்க்கலாம். இப்படி சமூக ரீதியிலும், அரசாங்க ரீதியிலும் பல்வேறு தடைகளை தாண்டித்தான் தலித் மாணவர்கள் தலையெடுக்க போராடி வருகிறார்கள்.

இப்போது மீண்டும் சட்டக்கல்லூரிக்குத் திரும்புவோம்.

ஒரு விபரீதத்தை விதைக்கிறோம் என்று தெரிந்தே ஊடகங்கள் சட்டக்கல்லூரிக் காட்சிகளை விலாவரியாகப் பதிவு செய்திருக்கின்றன. “போலீசு கைகட்டி வேடிக்கை பார்த்தது” “கருணாநிதி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று ஏதேனும் ஒன்றை நிரூபிப்பதே தங்கள் நோக்கம் என்று அவர்கள் கூறிக்கொள்ளலாம். சில போலீசார் பணிநீக்கம், மாற்றல், ஒரு சட்டசபை வெளிநடப்பு என்பதற்கு மேல் இவர்கள் யாருக்கும் எதுவும் நடக்கப் போவதில்லை.

ஆனால் தமிழகத்துக்கு என்ன நடக்கப் போகிறது? மீண்டும் பல கொடியன்குளங்கள் துவங்கலாம். தமிழகமெங்கும் அடுத்த சுற்று கலவரத்தை இச்சம்பவம் ஆரம்பித்து வைக்கலாம். மீண்டும் பல தலித் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையினை இழந்து ஆயுள் கைதியாக சிறைக்குள் செல்லலாம். கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் சாதி கௌரவத்தை விட முடியாத ஆதிக்க சாதி மாணவர்களும் தங்கள் வாழ்க்கையினைச் சிறைக்குள் தொலைக்க நேரிடலாம். பிறகு அவர்கள் தாதாக்களாகவோ, சாதிச் சங்கத் தலைவர்களாகவோ பதவி உயர்வு பெற்று தமிழக்தைத் தொடர்ந்து சாதிவெறியின் பிடியில் இருத்தி வைக்கலாம்.

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சாதி ரீதியாக பிரித்து பயிற்றுவித்திருக்கும் பார்ப்பனியத்தின் விளைவாக நடக்கும் இந்தக் கொடுமைகளுக்கு இதுவரை விடிவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு அடுத்து வர இருக்கும் கலவரச் செய்திகளுக்காக அச்சத்துடன் காத்திருக்க வேண்டும். அல்லது இந்த வெறித்தனத்தைத் தடுத்து நிறுத்த களத்தில் இறங்கி நம்மால் இயன்றதனைத்தையும்  செய்ய வேண்டும்.

களத்தில் இறங்கிச் செய்வது என்றால் அதற்கு கையில் தடியை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த சந்தர்ப்பத்தில் தீண்டாமை என்னும் அநீதிக்கு எதிராக உரத்துப் பேசவேண்டும். செயல்படவேண்டும். சாதி எதிர்ப்புப் பதிவுகளால் பதிவுலகம் நிறைய வேண்டும். பதிவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

__________________________________________________

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2011
__________________________________________________

 

1

2

3

 

5

tbltopnews_51757013798

6

7

8

9

10

11

12

13

15

16

17

19

21

20


மனித நாகரிகமும் மண்புழு நாகரிகமும் !

சீரியலுக்கும், சினிமாவிற்கும், சந்தை இலக்கியத்திற்கும் எதிரானவர்களாக தங்களைச் சித்தரித்துக் கொள்ளுகிறார்கள், சிற்றிலக்கியவாதிகள். இவர்கள் இலக்கியத்தில் தேடும் புதுமைக்கும், ஜீன்ஸ் போட்ட சேட்டுப் பெண்கள் ஸ்பென்சர் பிளாசா செருப்புக் கடையில் தேடும் புதுமைக்கும் சாரத்தில் வேறுபாடு இல்லை. இலக்கிய மேட்டிமையின் நுகர்வுப் பசியும், மேட்டுக் குடியின் நுகர்வு வெறியும் தோற்றுவிக்கும் படைப்பு – கழிவு.

கம்யூனிசத்தின் தோல்வியை மிகக் குதூகலமாகக் கொண்டாடும் முதலாளித்துவ எழுத்தாளர்கள் கூட ரசியாவிலும் சீனாவிலும் மக்களுக்கு உணவு, உடை, வீடு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை என்றோ, அதனால்தான் மக்கள் சோசலிசத்தைக் கைகழுவி விட்டார்கள் என்றோ கூறுவதில்லை.

“வெறும் அடிப்படைத் தேவைகளைக் கொண்டு மட்டும் திருப்தியடைவதற்கு மனிதன் என்ன மிருகமா? அமெரிக்கா, ஐரோப்பாவைப் பாருங்கள்…! விதவிதமான உணவு வகைகள், அன்றாடம் மாறும் ரசனைக்கேற்ற உடைகள், புதுப்புது வடிவிலான கட்டிடங்கள், திரைப்படங்கள், கேளிக்கைகள், மதுபானங்கள், குளிர்பானங்கள், விதவிதமான நுகர் பொருட்கள்… என்று வாழ்க்கைத்தரம் பெரிதும் “முன்னேறி’ விட்டது. ரசியா, சீனாவில் இத்தகைய “முன்னேற்றம்’ இல்லை.”

“மனிதனின் விதவிதமான தேவைகளை எல்லாம் நிறைவு செய்கின்ற, அங்கீகரிக்கின்ற அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் பற்றி சீன, ரசிய மக்களுக்கு எதுவும் தெரியாது. அது அவர்களுக்குத் தெரியவரும்போது அங்கே சோசலிசம் தானே வீழ்ந்துவிடும்” என்பதுதான் முதலாளித்துவ எழுத்தாளர்களின் முக்கியமான பிரச்சாரமாக இருந்தது.

இன்று சீனாவிலும் ரசியாவிலும் எங்கு திரும்பினாலும் பெப்சி, கோக், சோனி, மிட்சுபிஷி, ஃபோர்டு, டொயோடா ஆகியவற்றுடன் புதிதாகக் கஞ்சித் தொட்டிகள், நடைபாதை வாசிகள், வேலையில்லாதவர்கள், விலைமாதர்கள், கொள்ளைக்காரர்கள், மஃபியா கும்பல்கள் ஆகியவையும் அமெரிக்காவைப் போன்றே உருவாகிவிட்டன.இந்தத் தற்காலிக வெற்றியின் காரணமாகவே முதலாளித்துவம் நியாயமானதாகிவிட முடியாது; ஒழுக்கமானதாகி விட முடியாது.

“உலக வாணிபம் அநேகமாக முழுமையாக உற்பத்தியின் தேவைகளைச் சுற்றித்தான் நடக்கிறதேயல்லாமல் தனிநபர் நுகர்வுக்குரிய தேவைகளைச் சுற்றியல்ல” என்று “தேவை’கள் உருவாக்கப்படும் ரகசியத்தை உடைத்த மார்க்ஸ், நுகர்பவனுடைய மதிப்பீடு அவனது செல்வத்தையும், தேவையையும் சார்ந்திருக்கிறது என்றார்.

“சல்லாத்துணி வாங்குகிற வைப்பாட்டியும் சரி, (அதே அளவு காசில்) உருளைக்கிழங்கு வாங்குகிற தொழிலாளியும் சரி இருவரும் தத்தம் மதிப்பீட்டைப் பின்பற்றுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களது மதிப்பீடுகளில் உள்ள வேறுபாட்டை அவர்கள் உலகத்தில் வகிக்கும் நிலைகளில் உள்ள வேறுபாடு விளக்குகிறது; இந்த நிலைகளும் சமுதாய அமைப்பின் விளைபொருளே ஆகும்” (மார்க்ஸ் மெய்யறிவின் வறுமை)

“சல்லாத்துணியே முன்னேற்றத்தின் சின்னம்” என்று கருதும் மேற்குலகைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் 1960களின் துவக்கத்தில் மாவோவின் சீனத்திற்கு சென்றார். ஆல்பர்டோ மொராவியா என்ற அந்த எழுத்தாளர் மார்க்சியவாதியோ கம்யூனிச ஆதரவாளரோ அல்ல. “சிவப்பு நூலும் சீனப் பெருஞ்சுவரும்” என்ற அவரது நூலின் முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே மொழிபெயர்த்துத் தருகிறோம்.
சமுதாயப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியைத் தீர்மானிக்கும் பொதுவுடைமைச் சமூகம்; ஒரு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் ஊடாக அத்தகையதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கம்யூனிஸ்டு அரசியல்; தேவைசுதந்திரம் இவற்றுக்கிடையிலான உறவு பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் இவை அவரது முன்னுரையில் இல்லை.

ஆனால், மேற்குலக மேட்டுக் குடியின் வாழ்க்கையும் வசதிகளும்தான் முன்னேற்றத்தின் அளவுகோல் என்று கருதும் மாயையை இந்த முன்னுரை கிழித்தெறிகிறது. நுகர்வியம் (consumerism) எனும் பண்பாட்டின் விகாரமான முகத்தை அச்சுறுத்தும் விதத்தில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுகம் புதிய சமூகத்தின் “தேவை’ குறித்து நிச்சயமாக நம்மைச் சிந்திக்கத் தூண்டும்.

ஒரு உரையாடல் வடிவில் அமைந்துள்ளது இந்த முன்னுரை.
***
“ஆ: அப்போ சீனாவுக்குப் போயிருந்தீர்களோ?

அ: ஆமாம், சீனாவுக்குச் சென்றிருந்தேன்.

ஆ. சீனாவில் உங்களைப் பெரிதும் கவர்ந்த விஷயம் எது?

அ: வறுமை.

ஆ: என்னது, வறுமையா?

அ: ஆமாம், வறுமைதான்.

ஆ: சீனமக்கள் அவ்வளவு ஏழைகளோ?

அ: மேற்கத்திய நாடுகளின் அளவுகோலில் பார்த்தால், ரொம்பவும் ஏழைதான்.

ஆ: அந்த வறுமையைப் பார்த்தபோது உங்களுக்கு என்ன தோன்றியது?

அ: ஒருவித நிம்மதி.

ஆ: நிம்மதியா? அடக்கடவுளே. எனக்குத் தெரிந்தவரை வறுமை, ஏழ்மை என்று சொன்னால் சீரழிவும், விரக்தியும் தான். அதெப்படி உங்களுக்கு மட்டும் நிம்மதியாக இருந்தது?

அ: ஆமாம், நிம்மதியாகத்தான் இருந்தது. நான் அப்படித்தான் உணர்ந்தேன். தனது சொந்த மன உணர்வுகளைக் கூட ஒரு மனிதனால் புரிந்து கொள்ள முடியாதா என்ன? சீனாவில் இருந்த வரை எனக்கு அப்படித்தான் இருந்தது. அதெப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதைப் பற்றி அப்போது நான் யோசிக்கவில்லை. இப்போது வேண்டுமானால் கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்.

ஆ: மேற்கத்திய நாடுகளில் வறுமை நிம்மதி உணர்வைத் தோற்றுவிப்பதில்லை. மாறாக, அடக்கப்படும் உணர்வையும் அதற்கு எதிராகக் கலக உணர்வையும்தான், தோற்றுவிக்கிறது. உதாரணத்திற்கு அமெரிக்க நீக்ரோக்களைப் பாருங்கள். கோபம் வந்தால் அவர்களின் சேரியையே எரித்து விடுவார்கள்.

அ: அய்யா, அமெரிக்காவிலே ஏழைகளும் இருக்கிறார்கள், பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்கக் காரணம், பணக்காரர்கள். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கக் காரணம், ஏழைகள். ஆனால் சீனாவிலோ ஏழைகள் மட்டுமே இருக்கிறார்கள்.

ஆ: ஓ, சீனாவில் எல்லோருமே ஏழைகளா? அப்படி நான் யோசிக்கவில்லை.

அ: ஆமாம், சீனாவில் எல்லோருமே ஏழைகள்தான். அவர்களை ஏழைகள் என்று பெயரிட்டு அழைப்பது பொருத்தமாகவும் இல்லை. வேறு ஏதாவது தான் பெயரிட வேண்டும்.

ஆ: எடுத்துக்காட்டாக, ஏதாவது வார்த்தை சொல்லுங்களேன்.

அ: என்னால் உதாரணமெல்லாம் சொல்ல முடியவில்லை. பணக்காரனோடு ஒப்பிடாமல் ஒரு ஏழையை அவனது சொந்த நிலைமையை வைத்துக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு இதுவரை வார்த்தை எதுவும் உருவாகவில்லை.

ஆ: அப்படியானால் என்னதான் அந்த சீனத்து வறுமை?

அ: அது செல்வமில்லாத வறுமை, சரியாகச் சொன்னால், மனிதனின் இயல்பான நிலை அதுதான்.

ஆ: ஆக உங்களைப் பொறுத்தவரை பணக்காரனாக இருப்பது என்பது மனிதனின் இயல்பான நிலை அல்ல; அசாதாரணமான நிலைமை என்கிறீர்கள்.

அ: அசாதாரணமாக இருப்பதாலேயே அது மனிதத் தன்மை அற்றதாகவும் இருக்கிறது.

ஆ: மனிதத் தன்மையற்ற குணம் என்றால்… என்னதான் அது?

அ: தேவையற்றவைகளுக்கெல்லாம் அவசியத்தன்மையும், செயல்பாடும் கற்பிப்பதுதான் இந்த மனிதத் தன்மையற்ற குணம். புதிதாக ஒன்றை, தேவையில்லாத ஒரு பொருளைக் கண்டுபிடித்து, உருவாக்கி அதன் மூலம் பணக்காரனாகிவிட விரும்பும் ஒரு நபர் இருக்கிறான். “நடக்கும் போதே இசை மீட்டும் செருப்பு” என்று ஒரு பொருளை அவன் புதிதாக உருவாக்குகிறான். இதையே பெரும் அளவில் உற்பத்தி செய்து மக்களிடம் தள்ளிவிட விரும்புகிறான். இதற்கு அவன் என்ன செய்வான் சொல்லுங்கள்!

ஆ: தெரியவில்லை, விளம்பரம் செய்வான்.

அ: அதேதான். விளம்பரம் செய்வான்; கிராக்கியை உருவாக்குவான். அதாவது “இசை மீட்டும் செருப்பு’ என்ற இந்தப் பொருள் விற்பனைக்கு வருவதற்கு முன்னால் இருந்தேயிராத ஒரு கிராக்கியைச் செயற்கையாக உருவாக்குவான். “உனக்குத் தேவையில்லாத பொருளை நான் உனக்கு விற்கிறேன்” என்று எந்த உற்பத்தியாளனுமே சொல்ல மாட்டான். “நான் விற்கிற இந்தப் பொருள் இல்லாமல் நீங்கள் வாழவே முடியாது” என்றுதான் எப்போதுமே சொல்வான்.”தேவையற்ற’ ஒரு பொருள் “தேவையாக’ மாறுகிறதே, இந்த உருமாற்றம்தான் நுகர்பவன் என்பவனை உருவாக்குகிறது.

ஆ: நுகர்பவன் எங்குதான் இல்லை? சீனர்களையே எடுத்துக் கொள்வோமே, அங்கே ஒரு சோடி கால்சட்டை வாங்கும் சீனன் நுகர்பவன் இல்லையா?

அ: இல்லை. அவன் நுகர்பவன் அல்ல. தனக்குத் தேவையான உடையை மட்டுமே அவன் வாங்குகிறான். உடலை மறைக்க ஒரு உடை அணிபவன்தான் மனிதன் என்று ஒரு பொதுக் கருத்து அவனிடம் இருக்கிறதல்லவா, அந்த அளவுக்குத் தேவையான ஒரு உடை. ஆனால் நுகர்பவன் என்பவனோ ஒரு சாக்கடை.

ஆ: என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?

அ: நுகர்வோன் எனப்படுபவன் ஒரு சாக்கடை என்கிறேன். வாயும், குடலும், மலத்துவாரமும் மட்டுமே கொண்ட ஒரு உயிரினம் என்கிறேன். இத்தகைய உயிரினங்கள் வேறொன்றும் செய்வதில்லை; தின்னும், செரிக்கும், கழிக்கும்.

ஆ: அப்படிப் பார்த்தால் கால்சட்டை வாங்கும் சீன நுகர்வோனும் ஒரு சாக்கடைதானே?

அ: இல்லை. ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. பொருளை நுகர்வதனால் மட்டுமே நுகர்வோனை நான் சாக்கடை என்று அழைக்கவில்லை; நுகர்வதுதான் தன்னுடைய பணி என்று சில உயிரினங்களைப் போல் அவனும் கருதுகிறான். அதனால்தான் அவன் சாக்கடை. ஆனால், பாவம் ஒரு சீனன் அப்படியில்லை. தான் அம்மணமாக இருக்கக் கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே அவன் உடை அணிகிறான். சுருக்கமாகச் சொன்னால் நுகர்பவன் என்பவனோ எதை வேண்டுமானாலும் நுகரத் தயாராக இருக்கிறான் – ஒரு மண்புழுவைப் போல. அது தன் குடல் வழியாக எப்படிப்பட்ட மண்ணையும் அனுப்பத் தயாராக இருக்கிறது.

ஆ: சே, நுகர்பவன் புழுவைப் போன்றவன் என்றா சொல்கிறீர்கள்?

அ: சாக்கடைக் குழாய், புழு என்றெல்லாம் நான் சொல்வது உங்களுக்குச் சங்கடமாக இருந்தால், வேறுவிதமாகச் சொல்கிறேன். உற்பத்திக்கும் நுகர்தலுக்கும் இடையே விடுபட்ட ஓர் இணைப்பே நுகர்பவன். அது மனித இணைப்பு – இருந்தாலும் அது வெறும் இணைப்புதான். அதற்கு மேல் ஒன்றுமில்லை. அதேபோல, நுகர்தலுக்கும் உற்பத்திக்கும் உள்ள இணைப்புதான் உற்பத்தியாளன். உற்பத்தியாளனும் நுகர்பவனும் ஒரே மண்புழுவின் முன் பகுதியும், பின்பகுதியுமாக அமைகிறார்கள்.

ஆ: உற்பத்தியாளனும், நுகர்பவனும் தவிர வேறு ஒன்றுமே இல்லையா? ஒரு மருத்துவன், ஒரு கலைஞன், ஒரு தொழிலாளி, ஒரு விவசாயி என்று சொல்ல எதுவுமேயில்லையா அவர்கள் வெறுமனே உற்பத்தியாளனும், நுகர்பவனும் மட்டும்தானா?

அ: “உற்பத்தி’, “நுகர்தல்’ என்ற சொற்கள் எல்லாவிதமான பொருள்களின் உற்பத்தியையும் அவற்றின் விற்பனையையும் சம்பந்தப்படுத்தியதுதான் – அது மிகமிக உன்னதமானதாக, அதி அற்புதமானதாக இருந்தாலும் சரி.

ஆ: அப்படியென்றால் மேற்கத்திய மனிதன், உற்பத்தி செய்வதையும், நுகர்தலையும் தவிர வேறெதையும் சிந்திக்காதவன் என்கிறீர்களோ?

அ: ஆமாம், அப்படித்தான்.

ஆ: அவன் தன்னைப் பற்றிக் கூடச் சிந்திப்பதில்லையோ?

அ: “தான்’ என்று சொல்கிறீர்களே, அப்படி ஒன்று இல்லை. உற்பத்தி செய்யும் அல்லது நுகரும் வேலைகளில் மட்டும் அந்த “தான்’ இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் அடிப்படையில் நுகர்தல் என்பதே நுகர்பவனின் தன்மையைத் தீர்மானிப்பதால், நவீன நாகரிகத்தின் முடிவே நுகர்தல் தான்; அதாவது – கழிவுதான்.

ஆ: அய்யோ, என்ன சொல்கிறீர்கள், கழிவா?

அ: ஆமாம், கழிவுதான். வேறுவிதமாகச் சொல்வதென்றால், செரிமானம் ஆனபிறகு உடலிலிருந்து வெளியேற்றப்படும் மலம். ஒருவன் தன்னால் இயன்ற அளவுக்கு நுகர்கின்றான்; விதவிதமாக நுகர்கின்றான். நுகர்வோர் என அழைக்கப்படுவோரின் வாழ்க்கை லட்சியம் என்ன? நுகர்தல் தான். இந்த லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் அவன் போராடுகிறான்.
ஆனால் இதன் இறுதி விளைவு என்ன? கழிவு. நுகர்பொருள் நாகரீகம் என்பதே கழிவுக் கலாச்சாரம்தான். ஒரு நுகர்வோன் எவ்வளவு கழிவுகளை வெளியேற்றுகிறான் என்பதுதான் அவன் எவ்வளவு பொருட்களை நுகர்ந்தான் என்பதற்கான சிறந்த நிரூபணம்.

ஆ: சரி. அதை ஒரு உருவகம் என்று வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கேட்க நன்றாக இல்லை. கழிவு என்ற சொல்லை அதன் நேரடியான பொருளுக்கு மேல் விரித்து அனைத்துக்கும் பொருத்தமுடியுமா? இந்த உலகில் சாப்பிடுகிற பொருள் தவிர வேறு எத்தனையோ இருக்கிறதே.

அ: எது எதையெல்லாம் ஒருவன் நுகர்கிறானோ, அத்தனைக்கும் இது பொருந்தும். எல்லாவற்றுக்கும் மேலாக, தொழில்துறை உற்பத்திக்கு இது பொதுவில் பொருந்தும்.

ஆ: அது எப்படி?

அ: நவீன நகரங்களில் உற்பத்தியும், நுகர்வும், அதாவது, தொழில்துறை இடுபொருளும் ஆலைக் கழிவும் அருகருகே வைக்கப்படுகின்றன – நவீன வீடுகளில் சமையலறையும் கழிப்பறையும் அருகருகே வைக்கப்படுவது போல. நகரங்களின் மையத்தை விட்டு வெளியே செல்லுங்கள் – பெரிய ஆலைகள்… மிகப் பெரிய கூரைகள்… வரிசையாக உலைகள்… ஓயாது பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த ஆலைகளுக்கு வெகு அருகாமையிலேயே வெட்டவெளியில் அவற்றின் கழிவுகள், இரும்புச் சில்லுகள், துருவல்கள், இழைகள் கொட்டிக் கிடக்கின்றன. நகரம் உற்பத்திப் பொருளை நுகர்ந்துவிட்டது. சீரணித்து விட்டது. மீதத்தைக் கழிவாக வெளியே தள்ளியும் விட்டது.

ஆ: பெரிய நவீன நகரத்தில் வெறும் ஆலை உற்பத்தி மட்டுமா நடக்கிறது? எடுத்துக்காட்டாக – கலாச்சாரம் மற்றும் பல விசயமும் இருக்கிறதே?

அ: நிச்சயமாக, கலாச்சாரம் இருக்கிறது. புத்தகக்கடைகள், செய்திப் பத்திரிக்கை விற்பனை மையங்கள், திரைப்படங்கள், டிவி செட்டுகள், ரேடியோ, புத்தகங்களின் சுருக்கமான பதிப்புகள், படங்கள் நிறைந்த ஏடுகள், பாக்கெட் புத்தகங்கள், கலைக் களஞ்சியங்கள், தொகுப்புகள், மலிவுப் பதிப்புகள், மொழி பெயர்ப்புக்கள்… இருப்பினும் இந்தக் கலாச்சாரமும் ஆலைப் பொருள்களைப் போலத்தான் நுகரப்படுகின்றது. ஏராளமாக உட்கொள்ளப்பட்டு, சீரணிக்கப்பட்டு, வதவதவென்று கழித்தும் தள்ளப்படுகின்றது. எல்லாவற்றையும் அள்ளிக் கொள்கிற கலாச்சார நுகர்வோர் அதிலிருந்து எந்தச் சத்தையும் பெறுவதில்லை. அவற்றை விடாமல் நுகர்ந்தாலும், கலாச்சார ரீதியாகச் சொன்னால் நிரந்தரமாகச் சோகை பிடித்தவர்களாகவே இருக்கிறார்கள்.
கலாச்சார நுகர்வு எதையும் விளைவிப்பதில்லை; கலாச்சாரக் கழிவை மட்டுமே அது உற்பத்தி செய்கிறது; வேறொன்றுமில்லை.

ஆ: சரி, உற்பத்தி செய்வது, நுகர்வது… இந்த இரு நடவடிக்கைகளின் வாயிலாக மட்டுமே ஒரு மனிதன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலுமா?

அ: தொழில்துறை நாகரீகம் என்பதே கழிவுத்தன்மை கொண்டதுதான் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதன் முடிவு கழிவுதான். தனது கழிவை வெளியேற்றும் ஒரு மனிதனின் நடவடிக்கையை நாம் என்னவென்று அழைக்கலாம்? தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாகச் சொல்லலாமா?

ஆ: இல்லை. அப்படிச் சொல்ல முடியாது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அ: சரி. அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். அதாவது மறுபடியும் நுகர்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறான். இங்கே ஆசுவாசம் என்பதே கழிவை வெளியேற்றும் நடவடிக்கைதான். இன்னொருபுறம் அதீதமாக உற்பத்தி செய்கின்ற, அதீதமாக நுகர்கின்ற மனிதனும் இருக்கிறான் – அவனுக்கு அஜீரணம் ஏற்படுகிறது. அதற்கோ நம்மிடம் பேதி மாத்திரை தயாராக இருக்கிறது – வேறு வார்த்தையில் சொன்னால் போர்.

இந்த உற்பத்தி நுகர்வு எனும் சுழலில் அவ்வப்போது ஏற்படுகின்ற மலச்சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு யுத்தம் தவிர்க்க முடியாததாகவும் தடுக்க முடியாததாகவும் ஆகிவிடுகிறது எனத் தோன்றுகிறது. அமைதிக் காலத்து நுகர்வோனின் பணியை யுத்த காலத்தில் சிப்பாய் மாற்றீடு செய்கிறான். சிப்பாயின் நுகர்வோ அதிதீவிரமாக இருக்கிறது. அதிவேகமானதாக, விதவிதமானதாக, பரந்ததாக இருக்கிறது. அமைதிக் காலத்தில் ஒரு ஆண்டில் நுகரப்படுவதைக் காட்டிலும் அதிகமாக யுத்த காலத்தில் ஒரே நாளில் நுகரப்படுகிறது. ஏராளமான பொருட்களையும் செல்வத்தையும் நுகர்ந்த பின்னும் திருப்தியடையாத சிப்பாய் மனித உயிர்களை நுகரத் தொடங்குகிறான். முதலில் எதிரிகளின் உயிரை, பிறகு தன்னுடையதை.”

____________________________________________

புதிய கலாச்சாரம் – ஆகஸ்டு 99
_______________________________________

 


அழகு – சில குறிப்புக்கள் !

21

southern_beauty_preview_issue_coverநிலைக் கண்ணாடி முன் நின்று கொண்டு தனது முக அமைப்பின் ஒழுங்குகள் குறித்து கவலைப்படுவதும், அதை குறைந்த பட்சம் முடி, முகப்பூச்சு மூலம் செப்பனிடுவதற்காக மிகுந்த பிரயத்தனம் செய்வதும் விடலைப் பருவத்தின் தவிர்க்க இயலாத பழக்கம். பிறகு திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கையில் நிலை பெற்ற பிறகு இவை மறந்து போனாலும் தனது அழகின் தரம் பற்றியும் தனக்கு, கிடைக்காத வாழ்க்கைத் துணையின் அழகு பற்றியும் எல்லோருக்கும் ஒரு ஏக்கமும், எதிர்பார்ப்பும் இருக்கும்.

எது அழகு? எதெல்லாம் அழகின்மையோ அவற்றைத் தவிர மற்றெதுவும் அழகுதான். எவையெல்லாம் அழகின்மைகள்? அவற்றை ஊடகங்களும், சினிமா உலகமும், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும் வடிவமைத்து கற்றுத் தருகின்றன. இள வயதில் விழும் வழுக்கை, மாற்ற முடியாத கருப்புநிறம், சீரற்றிருக்கும் பல்வரிசை, உட்கார்ந்து வேலைசெய்பவருக்கு வரும் தொந்தி, பெண் மார்பகத்தின் சிறிய அளவு, குறைய மறுக்கும் பின்னழகு, படியாத முடி, சுருளாத கூந்தல், வளராத கேசம், இள நரை, விரியாத ஆண் மார்பு, சதையற்ற புஜங்கள், கருப்பு வளையத்தால் சூழப்பட்டிருக்கும் இமைகள், வயிற்றுப் பிரச்சினைகளால் வரும் வாய் நாற்றம், கட்டுப்படுத்த முடியாத வியர்வை மணம்,… இவையெல்லாம் வர்த்தக மயமாகும் கல்வி, வேலையின்மை போன்ற இளையோரின் முக்கியமான பிரச்சினைகளை முந்திச் செல்லும் அளவுக்கு செல்வாக்கு செலுத்துகின்றன.

சீர்வரிசையாக அணிவகுக்கும் இந்த அழகின்மைகள் இருந்தால் உங்கள் வாழ்க்கை விரும்பத்தக்கதாக இருக்காது என்பதை ஊடகங்கள் ஓயாமல் பயமுறுத்துகின்றன. தொடர்ந்து ஒதப்படும் அழகின்மையின் அபாயங்கள் மனதின் ஆழத்தில் உறுதியாக பதிந்து விடுகின்றன. தனக்கு கிடைக்காத நட்பு, காதல், திருமணம், தாம்பத்தியம் முதலானவற்றுக்கு தன்னிடம் இருக்கும் அழகின்மையே காரணமென்று ஒரு தாழ்வு மனப்பான்மை அச்சுறுத்தும் வண்ணம் தலை தூக்குகிறது. இந்த தாழ்ந்து போதல் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டிய வாழ்க்கையை சோர்வுடன் இயங்கவைக்கிறது. அழகின்மையின் இலக்கணங்கள் ஆளுமையின் உருவாக்கத்திற்குள் ஊடுறுவதிலும் தவறுவதில்லை. தன்னுடைய உருவத்தின் போதாமையால் இதற்குமேல் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்று சாதிக்க வேண்டிய வயதில் விடலைப்பருவம் சுருக்கிக் கொள்கிறது.

பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் தனித்துவம் இல்லாமல் வாழவேண்டிய ஒரு பெண்ணுக்கு அழகின் வாய்ப்பாடங்கள் அத்துப்படியாகும் அளவுக்கு அது ஒரு தவிர்க்க இயலாத பிரச்சினை. வயதுக்கு வந்தது முதல் வளைகாப்பு வரை அவள் தன்னழகை மிகச்சிறப்பாக  பேணிக் காக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறாள். அவளது வாழ்வின் பெரும்பகுதியை அலங்காரத்திற்கு அர்ப்பணிப்பது நிர்ப்பந்தமாக இருக்கிறது. அழகின் இலக்கணத்தில் ஒன்று குறைந்தால் கூட பலவற்றை இழப்பதற்கு அவள் தயாராக இருக்க வேண்டும். அழகு குறித்த அச்சமே ஒரு பெண்ணின் வாழ்க்கை குறித்த அச்சமாக மாறுகிறது.

குழந்தையாக இருக்கும்போது காது குத்துதல், பெயர் சூட்டும் வைபவம், வயதுக்கு வந்ததும் பூப்பெய்தும் சடங்கு, நிச்சயதார்த்தம், தாலிக்கு பொன்னுருக்கல், வளைகாப்பு , கணவன் இறந்தால் அலங்காரங்களைத் துறக்கும் விதவைச் சடங்கு, என கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெண்ணின் அடிமைத் தனத்தை அறிவிக்கும் விசேசங்கள் எல்லாவற்றிலும் அழகு நிழல் போல பின்தொடர்ந்து மிரட்டுகிறது. ஒரு ஆண் எத்தனை அழுக்காக இருந்தாலும் ஒரு பெண் குளித்து முடித்து பூச்சூடி சுத்தமாக இருக்க வேண்டும். அவள் தாலியும், நெற்றியின் உச்சியில் வைக்கப்படும் பொட்டும் அலங்காரத்திற்கு மட்டுமல்ல அவள் கன்னி கழிந்தவள் என்பதை ஆண்களுக்கு தெரிவிக்கவும் செய்கின்றன. அவளது காலழகை வெளிப்படுத்துவதற்காக என்று போடப்படும் கால் கொலுசு உண்மையில் அவளது நடமாட்டத்தை கண்காணிப்பதற்கென்றே பண்டைய காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. எத்தனை அழகாய் இருந்தாலும் ஊடுறுவும் ஆண்களின் கண்களைத் தடுப்பதற்காகவே அவள் முசுலீமாக இருந்தால் பர்தா அணியவேண்டும். இல்லத்து நிகழ்ச்சிகள் அனைத்திலும் கனக்கும் பட்டை ஜொலிக்கும் வண்ணம் அவள் உடுத்தியே ஆக வேண்டும்.

m7_bottle_adகல்லூரிக் காலங்களில் பெண்களைக் கவரும் அளவுக்கு அழகைக் கைப்பற்றுவது ஆணுக்கு அன்றாடக் கடமையாகிறது. அழகில்லாத ஆண்களை எந்தப் பெண்ணும் ஏறெடுத்து பார்க்கமாட்டாள் என்பதே அந்த இளைஞனை பயமுறுத்தும் யதார்த்தம். அவன் எதிர்காலத்தில் என்னவாக ஆகப்போகிறான் என்பதை திசை திருப்பும் மைல் கற்களும் இந்த அழகுக் கால அத்தியாத்தில் இடம் பெறுகின்றன. புதிய உடை முடி பாணிகளை உடமையாக்கிக் கொள்வதற்கு அவசரப்படும் இந்த இளைஞர்கள் அவை பொருளாதார ரீதியாக கைகூடாமல் போனால் கொலை வெறி கொள்ளுகிறார்கள். தன் அழகுக்கு செலவிட மறுக்கும் பெற்றோரை அவர்கள் ஒருபோதும் மன்னிப்பதில்லை. தந்தை தனயன் முரண்பாட்டில் அழகிற்கும் ஒரு பிராதான பாத்திரம் உண்டு.

அழகிற்காக செலவிடப்படும் தொகை வேண்டுமானால் வேறுபடலாமே ஒழிய அழகு குறித்த கவலைக்கும் ஒதுக்கீட்டிற்கும் வர்க்க் வேறுபாடு இல்லை. ஏற்றுமதி நிறுவனத்தில் ஒரிரு ஆயிரங்களுக்கு வேலை செய்யும் பெண்ணுக்கும், மென்பொருள் துறையில் பல ஆயிரங்களுக்கு வேலை செய்யும் பெண்ணுக்கும் அவர்களது வருமானத்தில் கணிசமான அளவை அழகின் வேலைப்பாடுகளுக்காக ஒதுக்குவது இயல்பானது. நடுத்தர் வர்க்க பெண்கள் அழகு நிலையம் செல்வது இப்போது முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள் நாளொன்றுக்கு ஒரு ஆடை வீதம் பல  ஜோடிகளை அடுக்கிவைப்பது கட்டாயம். ஆடைக்கேற்ற அலங்காரப் பொருட்கள், பை ,செருப்பு, … அவளது கைப்பையை நிரப்பும் முகப்பூச்சு பொருட்கள் … முடிவில்லாமல் நீளும் இந்தப் பட்டியலை அவர்கள் அன்றாடம் பராமரிக்கவேண்டும்.

இத்தகைய செயற்கை அழகு சாதனப் பொருட்களால் உலகின் நுகர்வு பொருள் சந்தை பல டிரில்லியன் வருமானத்தை பெற்றுத் தருகிறது என்றால் இதன் மதிப்பை யாரும் அறியலாம். இதற்காக மந்திரம் போல தினசரி ஓதப்படும் விளம்பரங்களின் மதிப்பும் பல மில்லியன்களைத் தாண்டும். அழகு சாதனப் பொருட்களுக்கு மட்டுமல்ல வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் குடும்பத்தோடு செல்லும் சுற்றுலா வரை எல்லா விளம்பரங்களுக்கும் அழகான மனிதர்கள் குறிப்பாக பெண்கள் பயன்படுகிறார்கள். அழகின்மையைச் சொல்லி அச்சுறுத்தும் விளம்பரங்கள் அழகான மாந்தரை முன்னிறுருத்துவதற்கும் தவறுவதில்லை. உலக அழகி ஐஸ்வர்யா ராய் முதல் உள்ளூர் அழகி திரிஷா வரை பாலிவுட்டின் சல்மான்கான் முதல் கோலிவுட்டின் சூர்யா வரை  எது அழகு என்பதை நொடிதோறும் மாயத்திரையின் பிம்பங்களாக வந்து நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராயை ஆராய்ந்தால் சாமுத்ரிகா இலட்சணத்தை தனியாக படிக்க வேண்டியதில்லை. முகம், கன்னம், கண்கள், காது, உதடு, உடலழகு அனைத்தும் மிகச்சரியான விதத்தில் அச்சில் வார்த்தது போல இருக்கும். உண்மையிலேயே இப்படி அச்சில் வார்க்கப்பட்ட பெண் சிறுமி பொம்மைதான் அமெரிக்காவின் பார்பி டால். குழந்தைகளுக்குக்கூட அழகான பெண்ணின் இலக்கணம் இந்த பார்பி டாலின் மூலமாக பசுமரத்தாணி போல பதிந்து விடுகிறது. குழந்தைகள் விளையாடுவதற்காக இலட்சக்கணக்கான பார்பிக்களை உற்பத்தி செய்யமுடியும். ஆனால் எல்லோரும் ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் போல மாறுவதோ இல்லை அவர்களைப் போல உள்ளவர்களே வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று விரும்புவதோ சாத்தியாமா என்ன?

கானகத்தின் பசும்புல் தரையில் பாய்ந்தோடும் ஒரு வரிக்குதிரையின் வரிவடிவம் மற்றொரு குதிரையைப் போல இருக்காது என்பதுதானே எல்லா உயிர்களுக்கும் பொருந்தும் உண்மை. ஒருவனுக்கு இருக்கும் கைரேகை போல மற்றொருவனுக்கு இருக்காது என்பது உண்மையாகும் பட்சத்தில் மனிதர்கள் எல்லோரும் உடலளில் வேறுபட்டுத்தானே இருப்பார்கள்? வேறுபடுவதுதான் மனிதனின் உயிரியல் சார்ந்த உண்மையான அழகே அன்றி ஒரே மாதிரியான வார்ப்பு அல்ல. ஆனால் அழகின் வியாபாரிகள் இந்த உயிரியல் உண்மையை புனைவுகளின் மூலம் பொய்யாக்கி விளம்பரங்களின் மூலம் சிந்தையில் ஏற்றுகிறார்கள்.

ஏல்லோரையும் ஓரே மாதிரி போல மாற்றும் தொழில் நுட்பத்தை வழங்கும் குளோனிங் எதிர்காலத்தில் நிறைவேறி விடுமென்றாலும் உலக அழகிகளைப் போல குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் மலிவாகிவிடப் போவதில்லை. அப்படியே மலிவாகிப் போனாலும் அது மட்டும் அழகின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமா என்ன? உயிரியல் ஜீன்களால் கருவில் பதிக்கப்படும் ஒரு மனித உயிரின் உடல் வடிவை மட்டும் வைத்தா அந்த மனிதனை மதிக்கிறோம்?

வயிற்றுப் போக்கால் அவதிப்படும் கணவனின் வாய் நாறுகிறது என்பதாலும், இரத்தப் போக்கால் பலமிழக்கும் மனைவியிடம் உடல் மணக்கவில்லை என்றால் அவர்களை வெறுக்க முடியுமா? முடக்கு வாதத்தால் முடங்கிப் போகும் தந்தை காலைக்கடன் முடிப்பதற்கு உதுவுவதில் அறுவறுப்பு கொள்ள முடியுமா? இளநரையும், வழுக்கையும் கொண்டவர் என்பதால் ஒரு நல்ல உள்ளம் கொண்ட இளைஞனின் திருமணம் தள்ளிப் போவது நியாயம்தானா?

farmer_ploughsஒரு மனிதனின் அழகு அவனுடைய தோற்றத்தில் இல்லை. அவனுடைய நடத்தைதான் அவனுடைய அழகின் வெளிப்புலமாக இருக்கிறது. தோற்றத்திற்கும், நடத்தைக்குமான முரண்பாட்டில் நாம் ஒருவரின் அழகை வைத்தா மதிப்பிடுகிறோம்? ஒரு நாவலோ, திரைப்படமோ முதலில் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவது அதன் உள்ளடக்கம்தான். வடிவம் என்ற அலங்காரம் இரண்டாம் பட்சமானதுதான். இலக்கியத்திற்கு பொருந்தும் இந்த நியாயம் வாழ்க்கைக்கும் பொருந்துமல்லவா? ஆனால் நடப்பு உலகம் பெரும்பாலும் அப்படி இயங்குவது இல்லை. கருப்புத் தமிழச்சி என்னதான் அழகாக ஆங்கிலம் பேசினாலும் அவள் ஒரு போதும் விமானப் பணிப்பெண்ணாக வரமுடியாது. ஹீரோக்களின் எதிர்மறைத் தோற்றத்தில் இருப்பவர்களே காமடியன்களாக வர முடியும்.  வேட்டி சட்டையோடு யதாதர்த்தமாக வரும் ஒரு தமிழனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் இடம் கிடையாது. நவீன அழகியல் கோரும் அம்சங்கள் இல்லாத பெண்கள் என்னதான் அழகாக தமிழீசில் பேசினாலும் தொகுப்பாளினியாக பணியாற்ற முடியாது. கிராமத்துத் தோற்றம், நடத்தையுடன் வரும் நாட்டுப்புறத்து மனிதர்களை அதிகார வர்க்கம் அலட்சியமாக நடத்தும்.

இப்படி சமூகம் அழகை வைத்துத்தான் பாகுபாடு காட்டி நடத்துகிறது என்றாலும் சமூக வாழ்க்கையில் இதை தமது ஆளுமையால் வென்றவர்களும் இருக்கிறார்கள். சுயநலமின்றி மற்றவருக்காக கவலைப்படுவதும்,  அதற்காக தமது வாழ்க்கையை செலவிடுவதற்கேற்ப ஒரு மனிதனின் அழகு அவனது தோற்றத்தை மீறி ஒளிர்கிறது. மக்கள் நிபந்தனையில்லாமல் நேசிக்கும் ஒரு மனிதன் மற்றவர்களால் விரும்பப்படக்கூடியவனாகவும் இருப்பான். தான் செய்யும் தொழிலை இன்முகத்துடன், மற்றவர்களுக்கு பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு என்ற மரியாதையுடன் செய்பவனை நாடி மக்கள் கூட்டம் நிச்சயம் மொய்க்கும். இவர்களெல்லாம் தலைவர்களாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை.

மாநகரப் பேருந்தின் அந்த நடத்துநர் எப்போதும் தூய தமழில்தான் பேசுவார். அவரது அலுவல் நிமித்தமாக பயணிகளிடன் பேசுவதையும், நிறுத்தங்களை அறிவிப்பதிலும், மாணவர்களின் சேட்டையை நல்ல தமழில் நாசுக்காக கட்டுப்படுத்துவதும் அவரது பேருந்தில்தான் பயணிக்க வேண்டுமென்று விரும்பி பலரும் செல்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன். பயணம் முழுவதும் அவரது வருணணை கேட்டுக்கொண்டே இருக்கும். கூட்டத்தில் பிதுங்கிச் செல்லும் நகரப்பேருந்தின் நரகமான அனுவத்தைக் கூட ஒரு நடத்துநர் தனது நடத்தையால் இனிமையாக மாற்றுகிறார் என்றால் அவர் அழகனாவரில்லையா?

_42646319_india2_afp4161அரசு மருத்துவராக பணியாற்றும் அவரது வீட்டு கிளினிக்கில் எப்போதும் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். நடுத்தர வர்க்கமும், ஏழைகளும் என எல்லாப்பிரிவினரும் அவரிடம் வருவார்கள். நோயைப் பற்றி தமிழில் விளக்கி, மருந்துகளின் ஆங்கிலப் பெயருக்கு மத்தியில் அதன் பயன்பாட்டை தமிழில் எழுதி, என்ன சந்தேகம் கேட்டாலும் பொறுமையுடன் விளக்கி எத்தனை பேர் வந்தாலும் சலிக்காமல் பணியாற்றுவார். அறுவை சிகிச்சை செய்யவேண்டி வந்தால், பணமில்லாத மக்களை அரசு மருத்துவமனைகளுக்கு வருமாறு கூறுவதோடு மட்டுமின்றி வருபவர்களக்கு உதவவும் செய்வார். பல ஏழைகளுக்கு ஒரு முறை மட்டும் கட்டணம் வாங்கிக் கொண்டோ இல்லை இலவசமாகவோ மருத்துவம் பார்ப்பார். வார இறுதி நாட்களில் மட்டும் தனது சொந்த கிராமத்திற்குச் சென்று இன்றுவரை விடுபடாமல் வைத்தியம் பார்க்கிறார். இல்லாமையினால் அரசு மருத்துவ மனைக்கு வரும் மக்களை தனது தனியார் மருத்துவமனைக்கு வரவழைத்து கொள்ளையடிக்கும் மருத்துவர்கள் மத்தியில் இந்த மருத்துவரின் அழகுகிற்கு ஈடு இணையேது?

பிரபலமான அந்த உளவியல் மருத்துவர்  ஒரு மக்கள் மருத்துவர். இத்தகைய சிறப்பு மருத்துவர்களை சந்திப்பதற்கான நேரத்தை தொலைபேசியில் பதிவு செய்யும் இந்நாளில் அப்படி ஒரு வசதியை பணக்காரர்களுக்கு அளிக்காமல் நேரில் வருபவர்கள் எல்லோரையும் எத்தனை நேரமானாலும் இவர் சந்திப்பார். வசதியில்லாவர்களுக்கு குறைந்த கட்டணோமோ அல்லது இலவசமாகவோ சிகிச்சை அளிக்கும் இவர், பல ஏழைகளுக்கு தனக்கு விற்பனைப் பிரதிநிதி மூலம் வரும் மருந்துகளைக் கொடுப்பதையும் பார்த்திருக்கிறேன். நாளொன்றுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளின் சோகக் கதைகளைக் கேட்டு இன்முகத்துடன் பணியாற்றும் இவரிடம் சிகிச்சை பெறுவதற்கென்றே வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பலர் வருவதைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். இந்தப் பின்புலத்தில், பார்த்தவுடன் உள்ளத்தை அள்ளிக் கொள்ளும் இவரும் அழகானவரில்லையா?

ஏன் நமது பதிவுலகம் அறிந்த புரூனோவையும் எடுத்துக் கொள்வோம். மற்ற மருத்துவர்களெல்லாம் தமது நேரத்தை ரூபாய்களில் அள்ளிக் கொண்டிருக்கும் போது இவர் மட்டும் தனது ஓய்வு நேரத்தை மருத்துவம் பற்றிய அறியாமையைப் போக்குவதற்காக வலைப்பூவில் ஒதுக்குகிறார் என்றால் இவரைப் பார்க்காமலேயே நாம் நேசிக்கவில்லையா? சொல்லப்போனால் இதற்குப் பிறகுதான் அவரை நேரில் சந்திக்க வேண்டுமென ஆர்வம் கூடுவது உண்மையில்லையா?

கேரளாவிலிருந்து வந்திருக்கும் அந்த இளமையான டீ மாஸ்டரும் எனது அழகுப் பட்டியலில் உண்டு. நாளோன்றுக்கு பனிரெண்டு மணிநேரத்திற்கு மேலாக நின்றவாரே நூற்றுக் கணக்கான தேநீர் போடும் அவர் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் என்னைப் போன்ற தேநீர்ப் பிரியர்களைப் பார்த்ததும் தூள் மாற்றி, பாலை ஆற்றிவிட்டு மணத்துடன் எரிச்சல் காட்டாத சிரித்த முகத்துடன் தேநீர் கொடுப்பார். நுரை பொங்கும் பாலுக்குப் போட்டியாக வியர்வை பொங்கும் இந்த மனிதர்கள் குறைவான சம்பளத்திலும் தனது தொழிலை அப்படி ஒரு ஈடுபாட்டுடன் செய்யும் அழகை நீங்களும் பல இடத்தில் கண்டிருப்பீர்கள்தானே?

ரசியப் புரட்சி கண்ட லெனினை வழுக்கையாக பார்ப்பதுதானே அழகு? மரணப் படுக்கையில் இருக்கும் போதும் சோவியத் யூனியனின் விவசாயிகள் பிரச்சினைக்காக கட்டுரை எழுத முனையும் லெனினை நோய் காரணமாக பணியாற்றக் கூடாது என்று மருத்தவர்கள் தடை செய்கின்றனர். அப்போது ஒரு மருத்துவர் கூறுகிறார் ” வேலை செய்வதுதான் தோழர் லெனினை பிழைக்க வைப்பதற்கான மருந்து. அதை தடை செய்தால் அவர் இறந்து விடுவார்”. தனது பள்ளி இறுதி நாட்களில் எழுதிய கட்டுரையொன்றில் தனது எதிர்காலத்தை மனித குலத்திற்கு பணியாற்றும் வேலையில் கழிப்பதுதான் விருப்பமென்கிறார் காரல் மார்க்ஸ். ஏழ்மையின் காரணமாக குழந்தைகளுக்கு தேவையான பாலைச் சுரப்பதற்குக் கூட தனது மார்பகம் மறுக்கும் நிலையிலும் பாரிஸ் கம்யூனின் வெற்றியைத் தங்கள் குடும்பம் கொண்டாடியதை நண்பர் ஒருவருக்கு கடிதத்தின் மூலம் தெரிவிக்கிறார் ஜென்னி மார்க்ஸ். இந்த தம்பதியினரிடம் வெளிப்படும் காதலும் அழகும் நமக்கு பொறாமையை ஏற்படுத்தவில்லையா?

மார்க்சின் மறைவுக்குப் பிறகு சர்வதேச கம்யூனிச இயக்க வேலைகளை தனியாக பார்க்கும் ஏங்கெல்ஸ் தனது முதுமையின் காரணமாக மார்க்சின் மூலதனம் நூலை செப்பனிட்டு வெளியிடும் பணி தள்ளிப் போவது குறித்து வருத்தப்படுகிறார். இதற்காக தனது ஆய்வுப்பணிகளைக் கைவிடுகிறார். இந்த வெண்தாடிக் கிழவனது அழகை தரிசப்பதற்கு உண்மையில் நாம் அருகதை உள்ளவர்கள்தானா? விதிக்கப்பட்டிருக்கும் தூக்குத்தண்டனையால் தான் தனது பலவீனங்களைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பில்லாமல் மரித்துப்போகும் பாக்கியம் பெற்றவன் என்று மரணத்தின் அருகிலும் தன்னைப் பற்றிய விமரிசனத்துடன் எழுதும் 23 வயது பகத்சிங்கின் புகைப்படத்தைப் பார்க்கும் போது நாம் பெறும் உற்சாகத்திற்கு அளவேது? கியூபாவின் வெளியுறவு அமைச்சராக இருந்தாலும் தென்னமெரிக்கா முழுவதும் புரட்சி நடைபெற வேண்டுமென பொலியாவின் காடுகளில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சே குவேராவின் புகைப்படம்  எத்தனை இளைஞர்களுக்கு புரட்சியின் துடிப்பை அள்ளித் தந்தவாறு இருக்கிறது? 90வயதிலும் தமிழனுக்கு சொரணை பற்றிய விழப்புணர்வை எழுப்புவதற்காக மூத்திரப் பையுடன் ஊர் ஊராக அலைந்தாரே பெரியார், அந்தத் தொண்டுக்கிழவனின் அழகிற்கு முன்னால் நாம் எல்லாம் எம்மாத்திரம்?

ஆம். அழகு என்பது நிலைக்கண்ணாடியில் பிரதிபலிப்பதல்ல. மற்றவர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்ளும் மனிதர்கள்தான் இதுவரை மனித சமூகம் கண்ட பேரழகு மனிதர்கள். நீங்கள் அழகுள்ளவரா என்பதை அறிந்து கொள்ள உங்கள் உருவத்தை சமூகக் கண்ணாடியில் பார்ப்பதற்கு முயலுங்கள். நம் அழகைத் தெரிந்து கொள்வதற்கு இதுதான் சிறந்த வழி !

 

ஒபாமா : ஆனந்தக் கண்ணீரின் அரசியல்!

3

dark-skin-light-skin-pic_edited-3

கறுப்பு நங்கையின் கண்ணீர்

மிகமிகத் துயரமான கண்ணீர்

ஒரு கறுப்பு நங்கையின் கண்ணீர்தான்.

ஏனெனில்

அவளை அழவைப்பது சுலபமல்ல.

அவள் மகனை அவளிடமிருந்து

எடுத்துச்செல்.

அவனை போதைப்பழக்கத்துக்கு ஆளாக்கு.

வயலில் அவனை உழைக்க வை.

கொரியாவில் அவனைக் கொன்றுபோடு.

ஒரு பிஎச்.டி பட்டத்துடன்

ஓட்டலில் உணவு பரிமாறச் செய்.

அவள் உதிர்ப்பாள் ஒரு புன்னகை –

தனக்கே உரித்தான

கசப்புப் புன்னகையை

கேடயமாகப் பயன்படும்

தன் கறுப்பு முகமூடியின் ஊடாக

அவள் உதிர்ப்பாள்.

கண்ணீர் பெருகும்

உள்ளுக்குள்

இரத்தச் சிவப்பாக.

அவள் கணவனை

அவளிடமிருந்து பிரித்துவை.

சமையல் அறையிலேயே

சாக வை.

பெரிய கடன் ஒன்றை உண்டாக்கி

ஆயிரம் நாளில் அதை

திருப்பிக் கொடுக்கச் செய்.

அவள் கொடுப்பாள்.

தண்டனை ஒன்று கொடுத்து

ஆயிரம் இரவுகளை கழிக்கவை.

அவள் கழிப்பாள்.

ஆயினும்

வெள்ளையனே,

நீ அவளிடமிருந்து

கண்ணீரை மட்டும் பெறமுடியாது.

ஏனெனில்,

அவள்

துயரங்களின் அரசி.

ரே டூரம், சீட்ஸ்

(அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், கவிதைத் தொகுப்பு. தமிழில் இந்திரன்.)

கென்யாவில் ஒபாமாவின் தந்தைவழிப் பாட்டி கண்ணீர் விட்டார். ஒபாமாவின் வெற்றி உரைக் கூட்டத்தில் அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் ஒபரா வின்பிரே கண் கலங்கினார். கறுப்பினத் தலைவர் ஜெஸ்ஸி ஜாக்சன் கண்ணீர் விட்டார்.

இறுதியில்… அது நடந்து விட்டது.

ரே டூரம் தோற்றுவிட்டார்.

ஒபாமா அவரைத் தோற்கடித்து விட்டார்.

வெள்ளையனால் வரவழைக்க முடியாத

கறுப்பு நங்கையின் கண்ணீரை

வெள்ளையனின் மாளிகை வரவழைத்து விட்டது.

துயரம் வரவழைக்க முடியாத கண்ணீரை

ஆனந்தம் வரவழைத்து விட்டது.

இந்த மகிழ்ச்சியின் பொருளின்மையை எடுத்துக் காட்டும் கேள்விகளை நேற்றைய பதிவில் எழுதியிருந்தோம்.

எனினும் தொலைக்காட்சிகளில் காணும் பிம்பங்கள் நம்மை உலுக்கத்தான் செய்கின்றன. கறுப்பினக் கணவனின் அணைப்பில் கண்கலங்கும் வெள்ளையின மனைவியைப் பார்க்கும்போது, நமது தர்க்க அறிவு மழுங்கிச் செயலிழந்து விடுகிறது. நாமெல்லாம் கனவு காணும் “அந்த நாள்’ வந்தே விட்டதோ, ‘நிறவெறி ஒழிந்து சகோதரத்துவம் மலர்ந்து விட்டதோ’ என்றொரு மயக்கம் நம்மைத் தழுவவத்தான் செய்கிறது.

‘என் தந்தையின் கனவுகள்’ என்ற தன்னுடைய நூலில் ஒபாமா தன் பள்ளிப் பருவத்தை நினைவு கூர்கிறார். “உன் அப்பா நரமாமிசம் சாப்பிடுவாரா?” என்று சீண்டிய சக வெள்ளை மாணவன், “Barack என்ற பெயர் ஒருமாதிரியாக இருக்கிறது, உன்னை  Barry என்று அழைக்கலாமா?” என்று கேட்ட ஆசிரியை.. இப்பேர்ப்பட்ட வெள்ளை அமெரிக்காவா மனம் மாறிவிட்டது?

நம்ப முடியவில்லை. எப்படி?

இரட்டைக் கோபுரம் எனும் அமெரிக்க ஆணவத்தை நொறுக்கிய ‘ஒசாமா’ என்ற சொல்லிலிருந்து ஒரு எழுத்து மட்டுமே வேறுபட்ட ஒரு மனிதனை, கிறித்தவனே ஆயினும் இசுலாமியப் பெயர் தாங்கியவனை, ஒரு கருப்பனை -வெள்ளை அமெரிக்கா தேர்தந்தெடுத்தது எப்படி?

“நம்பமுடியவில்லை”. இந்தச் சொல்லின் துணை கொண்டுதான் வெள்ளை உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் ஒபாமா. ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க செனட்டின் உறுப்பினராகப் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மாநாட்டு மேடையில் ஏறிய ஒபாமா தனது உரையை இப்படித் துவங்கினார்: “இந்த மேடையில் நான் நிற்பது உண்மையில் நம்பமுடியாததாகத் தான் இருக்கிறது”

தற்போது அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட பின் “ஆம். இது அமெரிக்காவில் மட்டும்தான் சாத்தியம்” என்று கூறித் தனது உரையை நிறைவு செய்திருக்கிறார் ஒபாமா.

வெள்ளை உள்ளங்களை அவர் எப்படிக் கொள்ளை கொண்டார்? தனது தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் “வெள்ளை அமெரிக்கா, கறுப்பு அமெரிக்கா என்று இரண்டு அமெரிக்காக்கள் இல்லை; பழமைவாத அமெரிக்கா, தாராளவாத அமெரிக்கா என்று இரண்டு அமெரிக்காக்கள் இல்லை; ஒரே ஒரு ஐக்கிய அமெரிக்கா மட்டும்தான் இருக்கிறது” என்று கூறி வெள்ளை உள்ளங்களை நிறவெறிக் குற்றத்திலிருந்து அவர் விடுதலை செய்தார்.

அதன் பயனாக இப்போது “வெள்ளை அமெரிக்கர்கள் தங்களது நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் பொறுப்பை ஒரு கறுப்பினத்தவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்” (வாஷிங்டன் போஸ்ட் நவம்பர் 4) கறுப்பினத்தவரின் கனவு? அது காத்திருக்கத்தான் வேண்டும்.

“இது அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம்!” – இந்த சொற்றொடர் ஒரே நேரத்தில் வெள்ளையினத்தின் பெருந்தன்மையையும், அமெரிக்க தேசியத்தின் ஆதிக்க உணர்வையும் இதமாகச் சொறிந்து கொடுக்கிறது.

“சுதந்திரத்தைப் பறித்தெடுப்போம்” என்று அடிமைகள் முழங்குவதை ஆண்டைகள் எப்போதுமே விரும்புவதில்லை. வேறு வழியில்லாத நிலையில்கூட சுதந்திரம் என்பது தனது பெருந்தன்மையால் போடப்பட்ட பிச்சையாக அமைவதே அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.

செப்டம்பர் மாத திவால்கள் அமெரிக்காவைப் பாதாளத்தை நோக்கித் தள்ளும் வரை, ஒபாமாவுக்கும் மெக்கெய்னுக்கும் வாக்கு வித்தியாசத்தில் பெருத்த இடைவெளி இருப்பதாக கணிப்புகள் கூறவில்லை.

குடியரசுக் கட்சியின் தனியார்மயக் கொள்கைகளால் திவாலாக்கப்பட்ட அமெரிக்காவின் பொதுப்புத்தியில், முதலாளித்துவ இலாப வெறியின் மூர்க்கத்தனத்தால் இரக்கமின்றி நடுத்தெருவுக்கு துரத்தப்பட்ட அமெரிக்காவின் மனச்சாட்சியில், வேறு வழியின்றி “சகோதரத்துவம்” துளிர்த்துவிட்டது போலும்!

மனிதனின் சிந்தனையை மாற்றுவதில் பொருளாயதக் காரணிகளின் பாத்திரம் குறித்துப் பேசும் கம்யூனிசம், அமெரிக்காவுக்குப் பிடிக்காத சித்தாந்தம். மெக்கார்த்தியின் மொழியில் சொன்னால் அது “அமெரிக்கத் தன்மைக்கு விரோதமானது”.

வெள்ளை முதலாளிகளின் கொள்ளை இலாப வெறியால் செருப்படி பட்டதன் விளைவாகத்தான், வெள்ளை மனங்களில் படிந்திருந்த நிறவெறி லேசாக உதிர்ந்திருக்கிறது என்று நாம் கூறினால் அது வெள்ளை அமெரிக்க மனதுக்கு அவ்வளவு பிடித்தமானதாக இராது.

அதனால்தான் “இது அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம்” என்று ஒபாமா நெஞ்சறிந்து கூறும் பொய் அமெரிக்காவுக்குப் பிடித்திருக்கிறது. தோற்றுப்போன மெக்கெய்னுக்கும் சாரா பாலினுக்கும் கூட இந்த “அமெரிக்கப் பெருமை” பிடிக்கத்தான் செய்கிறது.

ஐயா கனவான்களே, உங்கள் ஓபாமா “வெள்ளை கருப்பு பேதமில்லாத ஒரே அமெரிக்காவை” கண்டுபிடிப்பதற்கு 60 ஆண்டுகள் முன்னதாகவே ‘எங்கள் அண்ணா’ “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கையைக் கண்டுபிடித்து பார்ப்பன உயர் சாதியினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுவிட்டார் என்று நாம் கத்தலாம். ஆனால் அது அமெரிக்காவுக்குக் கேட்குமா?

‘yes we can’ என்ற உங்கள் முழக்கத்தை “உன்னால் முடியும் தம்பி” என்று மொழிபெயர்த்து எம்.எஸ். உதயமூர்த்தி முன்னரே எங்களுக்கு எங்களுக்கு வழங்கிவிட்டார் என்ற வரலாற்று உண்மையைச் சொன்னால் அவர்கள் நம்புவார்களா?

அந்த எம்.எஸ். உதயமூர்த்திதான் அமெரிக்காவின் ஏல் பல்கலக் கழகத்தில் “ஒன்றே குலம்” அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வாங்கிக் கொடுத்தார் என்ற விவரத்தையாவது கேட்டுத் தெரிந்து கொள்வார்களா?

அமெரிக்கப் பெருங்குடி மக்களே, ஜனநாயக நாடகத்துக்கு உங்களைக் காட்டிலும் இந்தியா மிகமிக லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்! இன்று அமெரிக்காவில் மட்டுமே சாத்தியமாகியிருப்பதாக நீங்கள் நம்பிக் கொண்டிருப்பது அன்றே தமிழகத்தில் சாத்தியமாகி, அதன்பிறகு இந்தியா முழுவதிலும் சாத்தியமாகிவிட்டது. கே.ஆர்.நாராயண், மாயாவதி, அப்துல் கலாம்.. இன்னும் எத்தனை இந்திய ஒபாமாக்கள் வேண்டும்?

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் குஜராத் எரிந்தது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாப்ரியும் எரிந்தார்.

தன்னுடைய கணவன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவருடைய மனைவி கூடக் கண் கலங்கியிருக்கக் கூடும் – ஓபரா வின்பிரேயை போல.

இன்று அந்தப் பெண்மணியின் கண்ணீர் வரண்டு விட்டது.

மீண்டும் அவரை அழ வைப்பது சுலபமல்ல. ‘இந்து’ இந்தியாவால் அது முடியாது.

ஒபாமாவின் வெற்றியைக் கண்டு கண் கலங்கும் கறுப்பு நங்கையின் கண்களிலிருந்து மீண்டும் ஒரு முறை கண்ணீரை வரவழைப்பதும் கூட அத்தனை சுலபமாயிராது. ‘வெள்ளை’ அமெரிக்காவால் அது முடியாது.

_________________________________________________

 

ஆரவாரத்தில் ஒபாமா ! அவலத்தில் அமெரிக்க மக்கள் !!

அமெரிக்க நிறுவனங்கள் திவாலாகி புஷ்ஷின் நிர்வாகத்தால் காப்பாற்றப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். மற்றொரு புறம் இந்த நிறுவனங்கள் சூதாடியதால் ஏற்பட்ட சுமையினை அமெரிக்க மக்கள் ஏற்கனவே அனுவித்து வருகிறார்கள். அதாவது இந்த முதலாளிகளின் தாக்குதலால் நிலை குலைந்து வேலையையும், வாழ்க்கையையும் பறிகொடுத்திருக்கிறார்கள். பாரக் ஒபாமா வெள்ளை நிறவெறியை மீறி வெற்றி பெற்றிருப்பதற்கு கடந்த சில மாதங்களாக அமெரிக்க மக்கள் பட்ட துன்பங்களும், துயரங்களுமே காரணம். ஆனால் அதிபரின் மாற்றம் அமெரிக்க மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விடாது. கடந்த ஒரு வருடங்களாக அமெரிக்காவில் நடந்த தற்கொலைகளும், கொலைகளும் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதாரக் கொள்ளையினால் நடந்திருக்கின்றன. நெஞ்சை உருக்கும் இந்தக் கதைகளை தெரிந்த கொண்ட பிறகாவது அமெரிக்க மாயையிலிருந்து இந்திய நடுத்தர வர்க்கம் விடுபடுமா, என்பதே நமது கேள்வி.

“இந்த பூமியிலிருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் சுதந்திரம் எனும் உயரிய பரிசினை கடவுள் அளித்திருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். நமது மக்களின் தொழில் முனைவுத் திறனைத் தூண்டிவிடும் வல்லமையினை சந்தை கொண்டிருக்கிறது என்றும் நம்புகிறோம். ஆகையால் சுதந்திரத்திற்கு தியாகம் தேவைப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.

ஜார்ஜ்  டபிள்யூ. புஷ்.

அமெரிக்க மக்கள் படும் துன்பத்திற்கு அமெரிக்க அதிபர் புஷ் அளித்துள்ள வியாக்கியானம் இது. இதுவரை அமெரிக்கா கண்டிராத கோமாளி அதிபரான புஷ்ஷின் வாயிலிருந்து உதிர்ந்திருக்கும் சுதந்திரம், சந்தை, தியாகம் மூன்றும் அமெரிக்காவின் முரண்படும் சமூக இயக்கத்தினை தெளிவாக விளக்குகின்றன. சந்தையில் சூதாடுவதற்கு முதலாளிகளுக்கு சுதந்திரம்; அந்தச் சூதாட்டச் சுமையினை ஏற்பதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்யவேண்டியது மக்களின் கடமை! சந்தையின் சுதந்திரத்தில் கொள்ளை இலாபம் அள்ள முயன்று திவாலான அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு 35 இலட்சம் கோடி ரூபாயை அள்ளி வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தப் பேரழிவில் சிக்கிய மக்களைக் காப்பாற்றுவதற்கு நிவாரணம் எதுவுமில்லை.

2001இல் உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு மீண்டுமொருமுறை பயங்கரவாதிகளின் தாக்குதல் நிகழலாம் என்றே அமெரிக்க அரசு மக்களை அச்சுறுத்தி வந்தது. அதற்கான புதிய சட்டங்கள், கெடுபிடிகள், சோதனைகள், கைதுகள், விசாரணைகள் எல்லாம் ஜரூராக நடந்து வந்தன. ஆனால் எதிர்பார்த்த தாக்குதல் பயங்கரவாதிகளிடமிருந்து வரவில்லை. நெருக்கடி என்ற பெயரில் தப்பித்துக்கொள்ளும் முதலாளித்துவ பயங்கரவாதத்திடமிருந்தே அந்த சுனாமி தாக்குதல் வந்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த சுனாமியின் அறிகு றிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் தெரிய ஆரம்பித்தன. ஐந்து சதவீதமாக இருந்த வேலையின்மையின் சதவீதம் பின்பு ஆறைத் தொட்டு தற்போது எட்டை நோக்கி அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் மட்டும் 1,59,000 அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். ரியல் எஸ்டேட், கட்டிடம் கட்டுதல் தொடர்பான தொழில்கள், சேவைத் துறை  போன்றவை இந்த வேலையிழப்பில் பங்களித்துள்ளன. பல அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்குறைப்புக்கான ஆண்டிலக்கை அமல்படுத்தி வந்தன.

american-dream-overஇப்படி வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். 28% அமெரிக்க மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதாகப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதன்படி ஏறக்குறைய ஒரு கோடி குடும்பங்கள் வறியவர்களாக வாழ்வைக் கழிக்கின்றனர். பொதுவாக எல்லா அமெரிக்கர்களும் தங்கள் மாத வருமானத்தில் மூன்றிலொரு பங்கினை வீட்டு வாடகைக்கோ அல்லது கடனுக்கு வாங்கிய வீட்டிற்கு மாதத் தவணை கட்டுவதற்கோ செலவழிக்கின்றனர். இது போக நாற்பது சதவீதம் மருத்துவ காப்பீட்டிற்குச் செலவழிக்கின்றனர். அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல் இருந்தால் சிகிச்சையின்றி சாகவேண்டியதுதான்.

அமெரிக்க மக்களின் வருமானம் அத்தனையும் முன்கூட்டியே திட்டமிட்ட இலக்குகளில் முதலாளிகளின் கைக ளுக்கு போய்ச் சேருகிறது. சராசரியாகப் பத்து கடன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு அமெரிக்கனும் தனது நிகழ்கால வருமானத்தை மட்டுமல்ல எதிர்கால வருமானத்தையும் முன்கூட்டியே செலவழிப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். கடனுக்கு மேல் கடன், கடனை வைத்துக் கடன், வீடு, வாகனங்களை வைத்துக் கடன், பத்திரங்களை வைத்துக் கடன், எதிர்காலத்தில் வீட்டின் மதிப்பு உயரும் என்ற மதிப்பீட்டில் பெறப்படும் கடன், மொத்தத்தில் முழு அமெரிக்காவுமே கடனில்தான் உயிர் வாழ்கிறது. ஒரு வயது வந்த அமெரிக்க மாணவன் உயர் கல்வி முடிப்பதற்குக்கூட குறைந்த பட்சம் பத்து இலட்சம் ரூபாய் கடன் தேவைப்படும்.

தற்போதைய திவாலுக்குக் காரணமாகக் கூறப்படும் வீட்டுக் கடன்தான் அமெரிக்க மக்களின் முக்கியமான வாழ்க்கைப் பிரச்சினையாக சமீப ஆண்டுகளில் மாறியிருக்கிறது. சொந்த வீடு வேண்டும் என்ற கனவு தவிர்க்க முடியாத போதையாக ஏற்றப்பட்டு, சராசரி அமெரிக்க நடுத்தர வர்க்கம் இந்த வலையில் சிக்கிக் கொள்கிறது. கடன் கட்ட முடியாமல் போகும் போது வீட்டை, கடன் கொடுத்த அடமான வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். நமது ஊரில் சேட்டிடம் வாகனக்கடன் வாங்கி தவணை கட்டமுடியாத போது வண்டியை சேட்டு எடுத்துக் கொள்வது போலத்தான் இதுவும். இப்படி வீட்டை இழந்தவர்கள் ஐம்பது இலட்சம் பேர் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. 500 வீட்டுக்கொரு வீடு இந்த ஜப்தி நடவடிக்கையில் வருகிறது என்றால் இதன் சமூக பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியும். செங்கலும், மரமும், சிமெண்ட்டும் கொண்ட இந்த அஃறிணைப் பொருளுக்காக பல அமெரிக்கர்கள் தங்களது வாழ்க்கையை முடித்துக்  கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இப்படி வாழ்வின் எல்லாத்துறைகளிலும், நேரங்களிலும் மக்களின் பணத்தை ஒட்டுமொத்தமாய் சுரண்டும் அளவுக்கு முதலாளிகளின் இலாப வெறி தலைவிரித்தாடுகிறது. தற்போதைய திவாலில் கூட மக்கள் அபரிமிதமாய் வட்டி கட்டிய பணம் ஒரு பிரிவு முதலாளிகளின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அதை வைத்துச் சூதாடிய நிறுவனங்களுள் சில தோற்றதால் திவாலாகியிருக்கின்றன. ஆனால், இந்தச் சூதாட்டத்தில் எத்தனை மக்கள் வாழ்விழந்து, வீடிழந்து, திவாலாகியிருக்கின்றனர் என்ற விவரங்களைப் பற்றிப் பேசுவதற்கு மட்டும் யாரும் தயாராயில்லை. மற்ற சமூகங்களில் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகள் அந்த சமூகத்தின் மனநிலையைத் தீர்மானிக்கும் போது அமெரிக்க சமூகத்தில் மட்டும் பணமும், பணம் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே மக்களின் உளவியல் சீர்கேடுகளை வடிவமைக்கின்றன. காதலும், விவாகரத்தும், உறவும், பிரிவும்,  மகிழ்ச்சியும், வேதனையும், கொலைகளும், தற்கொலைகளும் அங்கே பணத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.

b-karthik-rajaram-465586d1e819அமெரிக்க நிறுவனங்கள் திவாலான மறுநாளே அதற்கான முதல் பலி லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்தேறியது. அக்டோபர் 4, அமெரிக்க வாழ் இந்தியரான 45 வயது கார்த்திக் ராஜாராம் தனது மனைவி, மாமியார், மூன்று மகன்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். சோனி நிறுவனத்திலும், பின்னர் சொந்தமாகத் தொழில் தொடங்கியும் அதன் பிறகு பல மாதங்கள் வேலையின்றியும் இருந்த ராஜாராம் தனது சேமிப்பு அனைத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். பல நிறுவனங்கள் திவாலாகி பங்குச் சந்தை தலை குப்புற கவிழ்ந்ததும் ராஜாராமும் நிலை குலைந்து போனார். மரணத்துக்கு முந்தைய அவரது கடிதங்களில் தான் உடைந்து போனதாகவும், உருகும் பொருளாதாரத்தில் தான் ஏராளமான நிதியை இழந்துபோனதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

திவாலாகிய அமெரிக்காவில் மக்களின் இந்தத் தற்கொலைகள் பல தீவிர வெளிப்பாடுகளில் ஒன்றுதானே தவிர, பல மாதங்களாகவே குறிப்பாக வீடு ஜப்தி செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்து கலவரங்கள், கைதுகள்,  கொலைகள், தற்கொலைகள் நடந்திருக்கின்றன. வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து வெளியேற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பல வன்முறையுடன்தான் நடந்திருக்கின்றன. இவற்றில் பல ஊடகங்களில் செய்தியாக வருவதில்லை என்பதிலிருந்து அமெரிக்க சமூகம் பல மாதங்களாகவே இந்த பொருளாதார பயங்கரவாதத்துடன்தான் வாழ்ந்திருக்கிறது என்பதை  அறிய முடியும்.

பிப்ரவரி மாதத்தில் கொலார்டோ பகுதியில் ஒரு வீட்டு உரிமையாளர் தனது வீட்டை காலிசெய்யும் நோட்டீசைக் கண்டு தனது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு  முயன்றார்.  நோட்டீசை ஒட்டச் சென்ற போலீசால் அவர் காப்பாற்றப்பட்டாலும், அவரால் வீட்டைக் காப்பாற்ற முடியவில்லை. மார்ச் மாதம் புளோரிடா மாநிலத்தின் ஒசாலா பகுதியைச் சேர்ந்த ரோலண்ட் கோர் தனது வீட்டை அடமான வங்கிக்கு ஒப்படைக்கும் நிர்ப்பந்தத்தால் மனமுடைந்து மனைவியையும், வீட்டு நாயையும் கொன்று விட்டு வீட்டுக்கும் தீ வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஏப்ரல் மாதத்தில் புளோரிடாவின் மரியன் கவுன்டி பகுதியில் ஒரு வீட்டைக் காலி செய்வதற்கு அறிவிப்புடன் சென்ற ரோபர்ட்டை அந்த வீட்டில் வசித்து வந்த பிராங்க் கொனார்டு துப்பாக்கியைக் காட்டி “எனது சொத்தை விட்டு நீ அகலுவதற்கு இரண்டு விநாடிகள் தருகிறேன், இல்லையென்றால் நீ மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கும்” என்று மிரட்டினார். பின்னர் பிராங்க் போலீசால் கைது செய்யப்பட்டார். ஜூன் மாதம் 3ஆம் தேதி நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் காட்ரீனா தற்காலிக வசிப்பிடத்தில் வசித்து வந்த மின்ஷெவ்வை  வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு அதிரடிப்படை வந்து கண்ணீர் புகைக் குண்டு வீசிப் பல மணிநேர நடவடிக்கைக்குப் பிறகு அவர் துப்பாக்கி வைத்திருந்தார் என்பதற்காக சுட்டுக் கொன்றது. ஏதோ அமெரிக்கப் படை ஈராக்கிலும், ஆப்கானிலும்தான்  மக்களைச் சுட்டுக் கொல்கிறது என்பதல்ல, சொந்தநாட்டு மக்களிடமும் அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதே தேதியில் ஒரேகான் மாநிலத்தின் முல்ட்னோமா கவுன்டி பகுதியில் வசித்து வந்த ஒருவரை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்குச் சென்ற போலீசின் முன் அந்த நபர் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரது துப்பாக்கியை பிடுங்கிய போலீசு பின்னர் அவரைக் கைது செய்தது.

இந்த ஆண்டு முழுவதும் வீட்டைக் காலி செய்யும் இந்தப் பயங்கரவாதமே அமெரிக்க மக்களின் மனச்சிதைவுக்கு காரணமாக இருந்தன என்று பல புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கலிபோர்னியாவில் இந்த மன அழுத்தங்களுக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் அளிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று இத்தகைய பணநெருக்கடிகளால் வரும் அழைப்புகள் 200 சதம் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது. சான்பிரான்சிஸ்கோ நகரின் மருத்துவமனை ஒன்றின் உளவியல் மருத்துவர் கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் பொருளாதார நெருக்கடிகளினால் மனநிம்மதியிழந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 69% அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார். இவற்றிலிருந்து முழு அமெரிக்காவுமே இந்தக் கொதி நிலையில் உழன்று கொண்டிருப்பதை அறிய முடியும். அமெரிக்காவை அச்சுறுத்துவதற்கு பின்லாடன் தேவையில்லை என்பதையும் இந்தச் செய்திகள் ஆணித்தரமாகக் கூறுகின்றன.

foreclosureவீட்டை இழக்கப் போகும் இந்த ஜப்தி நடவடிக்கைகளுக்காக மனச்சிதைவு அடையும் எல்லோரும் மருத்துவமனைக்கு வருவதில்லை. ஸ்கேர்மென்டோ கவுன்டியின் காவல்துறை ஷெரிஃபீன் உதவியாளர் மார்க் ஹெபெக்கர் பத்திரிகை ஒன்றில் பேட்டியளித்தபோது இந்த ஆண்டு  வீடு காலி செய்யும் நடவடிக்கைகளுக்குச் செல்லும் போது இரண்டு உரிமையாளர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இவரது சக அலுவலர் ஒருவரின் அனுபவத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒருவர் தனது உடல் வீட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்ற குறிப்பை எழுதியிருந்தாராம் என்றால் இதன் கொடூரத்தை யாரும் உணர முடியும். ஹாலிவுட் படங்களில் விதவிதமான வேற்றுக் கிரக “ஏலியன்ஸ்”கள் அமெரிக்கர்களை அச்சுறுத்துவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், எந்தத் திரைப்படமும் மக்களை உண்மையில் வதைக்கும் இந்த முதலாளித்துவ ஏலியன்ஸைப் பற்றி பேசுவதில்லை.

ஜூலை மாதம் புளோரிடாவின் மிடில்பர்க் பகுதியில் ஜார்ஜ் என்பவரின் வீட்டிற்கு ஜப்தி அறிவிப்பை ஒட்டச் சென்றது போலீசு. இதைக் கண்டவுடன் வீட்டின் தலைவர் ஜார்ஜூம் அவரது மனைவி போனி மேக்னமும் கதவை அடைத்துக் கொண்டு நோட்டீசை வாங்க மறுத்தார்கள். எப்படியாவது வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த  ஜார்ஜ் தனது கையில் துப்பாக்கியிருப்பதாக மிரட்டினார். உண்மையில் அவரது கையில் ஆயுதமில்லை என்பதை அறிந்த போலீசு தங்களை மிரட்டியதாக அவரைக் கைது செய்தது.  அந்த தம்பதியினரின் மகள் ராபின் சொல்கிறார், “இது எங்கள் வீடு, இது மட்டும்தான் எங்கள் வீடு, எனது தந்தை இராணுவத்தில் பணியாற்றியவர், தற்போது உடல்நலமில்லாதவர், அவரைப் போய் உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றுவேன் என்று சொன்னால் அது நியாயமா?”

சந்தைக்கு இலாபம் மட்டும்தான் நியாயம், மற்றெதுவும் அநியாயம்தான். ஈராக்கிலும், ஆப்கானிலும் போரில் ஈடுபட்டுத் திரும்பும் அமெரிக்க வீரர்கள் இரண்டு விதமான மனச்சிதைவை அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒன்று போரினால் வரும் விரக்தியும் இரண்டாவது பொருளாதாரப் பிரச்சினையால் வரும் நிம்மதியின்மையும் காரணமாம். குறைந்த பட்ச அமெரிக்க வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான சம்பளம் கூட இல்லாமல்  பல அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்கள் கடனில் சிக்கி வீடுகளை இழந்து நிர்க்கதியாக வாழ்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது ஆக்கிரமிப்புக்கு உதவும் இராணுவ வீரர்களைக்கூட அமெரிக்கா கைவிடுகிறது என்றால், மற்ற மக்களின் கதி என்ன என்பதைக் கேள்வியின்றி புரிந்து கொள்ளலாம்.

புளோரிடாவின் பெனெல்லா பார்க்கில் வாழும் 44 வயது டல்லாஸ் கார்ட்டர் மனைவியைப் பிரிந்து குழந்தைகளோடு  வாழும் ஒரு ஊனமுற்றவராவார். பார்த்துக் கொண்டிருந்த வேலையை இழந்து, கடனில் மூழ்கி இறுதியில் தனது வீட்டையும் பறிகொடுக்கும் நிலையில் போலீசுக்கு தொலைபேசி மூலம் பேசிய கார்ட்டர் தான் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். உடன் விரைந்த போலீசு அவரைச் சரணடையுமாறு கேட்டது.  பூட்டிய வீட்டில் துப்பாக்கியுடன் இருந்த கார்ட்டர் அதை மறுத்ததால் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். நமது ஊரில் போராடும் மக்களை போலீசு சுட்டுக் கொல்கிறது. இதுவே  அமெரிக்காவில்  தனித்தனி வீடுகளில் நடக்கிறது.  கடனை அடைக்க முடியாத அமெரிக்க மக்கள் இப்படித்தான் தமது உயிரைக் கொடுத்து விடுதலை அடைகின்றனர். அமெரிக்க வாழ்க்கையில் ஒரு தனிமனிதனது விடுதலை இப்படித்தான் இருக்க முடியும் போல.

foreclosuresஜூலை 23ஆம் தேதி மாசூசெட்ஸ் மாநிலத்தின் டான்டன் பகுதியைச் சேர்ந்த காரலீன் என்ற பெண்மணியின் வீடு ஜப்தி செய்யப்பட்டு ஏலமிட இருக்கிறது. அதற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்னர் அந்த அடமான நிறுவனத்திற்கு பேக்ஸ் அனுப்பிய காரலீன் அதில் தனது வீடு ஜப்தி செய்யப்படும் முன்பு தான் இறந்து விடுவேனென குறிப்பிடுகிறார். தனது மறைவுக்கு பிறகு தனது கணவன் மற்றும் மகனுடன் அந்த நிறுவனம் இணக்கமான உறவு வைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடுகிறார் காரலீன்.  காரணம் அவர் மறைவுக்குப் பின் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டுப் பணத்தை வைத்து தனது கணவன் வீட்டை மீட்கலாம் என்றும் அந்தக் கடிதத்தில் நெஞ்சை உருக்கும் வண்ணம் எழுதும் காரலீன் சொன்னபடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அந்தப் பெண்மணியின் கணவரான ஜான் “எங்களது நிதி விவகாரத்தை எனது மனைவிதான் கவனித்து வந்தாள், வீடு ஜப்தி செய்யப்படப்போவது கூட எனக்குத் தெரியாது, அதற்கான எந்த அடையாளத்தையும் அவள் காட்டிக் கொண்டதில்லை” என்று  கதறி அழுகிறார். இரக்கமற்ற முதலாளித்து சமூகத்தின் முன் ஒரு பேதைப் பெண் வேறு எப்படிப் போராடியிருக்கமுடியும்? வீட்டிற்கு விலையாக தனது உயிரைக் கொடுத்த காரலீன் அமெரிக்காவின் விதிவிலக்கல்ல, இப்படித்தான் பலர் தங்களது கடனுக்கு வழி தேடுகிறார்கள்.

மிக்சிகனின் பே சிட்டியில் வாழும் 56 வயது டேவிட்டும் அவரது மனைவி ஷெரானும் வீட்டை இழந்து தாங்கள் திவாலானவர்கள் என்பதற்காக மனு செய்திருக்கிறார்கள். அந்த மனுவில் அவர்கள் முறைப்படிச் செய்யவேண்டிய நடைமுறைகளை செய்யவில்லை என்பதால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இதனால் மனமுடைந்த டேவிட் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதி விட்டு தனது மனைவியை சமையல் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, வீட்டிற்கு தீவைத்து எரித்த பிறகு  மனைவியின் அருகில் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்கிறார். தங்களைத் திவாலானவர்கள் என்று அறிவித்துக் கொண்டதால் அமெரிக்க நிறுவனங்கள் அடைந்த ஆதாயங்களுக்கு மத்தியில் தன்னை திவாலானவன் என்று அறிவிக்க முடியாத அமெரிக்க குடிமகனின் கோரமான முடிவு இது.

மின்னசோட்டாவின் ரோஸ்விலி பகுதியில் வாழும் சில்வியா சிஃபர்மேன் எனும் பெண்மணி இரண்டு சீனப்பெண் குழந்தைகளை தத்து எடுத்துவளர்க்கிறார். அவர்களுக்கு இப்போது வயது 11. தனது மகள்களின் வளர்ச்சியில் பூரிப்படையும் அந்தத் தாய் அதை இணையத்தில் அவரது வலைப்பூவில் பதிவு செய்கிறார். ஆனால் அமெரிக்காவில் எல்லோரையும் தாக்கிய அந்தச் சுனாமியில் தனது வேலையை இழந்து கடனில் மூழ்கிய சில்வியா தான் பாசமாக வளர்த்த இருமகள்களையும் வேறுவழியின்றி கத்தியால் குத்துகிறார். ஒருமகள் ஆபத்திலிருந்து தப்பித்துவிட மற்றொரு மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்க சித்த பிரமையடைந்த சில்வியா போலீசு காவலில் இருக்கிறார். இனிமேல் தனது மகள்கள் வாழ்வதற்குத் தேவையான எவற்றையும் அளிக்கமுடியாது என்று பரிதவித்த ஒரு தாயின் கதையிது.

லாஸ் ஏஞ்செல்சில் கார்த்திக் ராஜாராம் தனது குடும்பத்தையும் தன்னையும் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு ஒருநாள் முன்னால் அடி போல்க் எனும் 90 வயது மூதாட்டி ஜப்தி செய்யப்பட்ட தனது வீட்டிலிருந்து தன்னை தூக்கி எறிவதை எப்படி நிறுத்துவது என்று யோசித்தார். அவருக்கு இருந்த ஒரே வழி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதுதான். ஆனாலும் முதுமை காரணமாக சரியாக சுடமுடியாததால் காயமடைந்த அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் ஊடகங்களால் பேசப்பட்டதால் இந்த வீட்டை அடமானத்திற்கு எடுத்திருந்த பென்னி மா நிறுவனம் ‘பெரிய மனதுடன்’ அந்த வீட்டை அந்த மூதாட்டிக்கே திரும்ப ஒப்படைத்து விட்டது. பலவருடங்களாக வாழ்ந்த வீட்டை விட்டு ஒரு 90 வயது மூதாட்டி தூக்கி எறியப்பட இருக்கிறாள் என்றால் அமெரிக்க சமூகத்தின் இரக்கத்தை என்னவென்று அழைப்பது?

friends_black_white_1090160_lவேலையின்மையும், கடனும், வீட்டை இழப்பதும் அமெரிக்க சமூகத்தைக் கரையான் போல அரித்து வருகின்றன. மற்ற துன்பங்களையெல்லாம் வேறு வழியின்றி சகித்துக் கொள்ளும் அமெரிக்க மக்கள் வீட்டை விட்டுத் துரத்தப்படுவதை மட்டும் பாரதூரமாக நிவாரணமற்ற வலியாக உணருகிறார்கள். இந்தக் கதைகள் அமெரிக்க வாழ்க்கையின் குறுக்குவெட்டுச் சித்திரம் மட்டுமே. மேலும் அமெரிக்க ஊடகங்களால்கூட பேசப்படாத கதைகளும் கூட. ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு அப்புறப்படுத்தும் இந்த அநீதியை எதிர்த்துக் கொலைகளும் தற்கொலைகளும் சடங்காய் நடந்து வருகின்றன. பல இடங்களில் மக்கள் சிறு அமைப்புகளாக அணிதிரண்டு இந்த ஜப்தி நடவடிக்கையை தடுக்க நினைத்தாலும் அவை வெற்றிபெறவில்லை. முதலாளிகளின் உரிமையை நிலை நாட்ட வரும் போலீசு அவர்களைக் கைது செய்து சொத்துடைமையின் அதிகாரத்தை நிலை நாட்டுகிறது.

உலகமயமாக்கத்தால் விவசாயம் சீர்குலைந்து வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் இந்திய விவசாயிகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்கிறார்கள். வாங்கிய கடனைக் கட்ட முடியவில்லை என்ற மான உணர்ச்சியுடன் வாழும் இந்த விவசாயிகளின் பண்பு அமெரிக்க ஏழைகளுக்கும் இருக்கிறது. அங்கே துப்பாக்கிகள் மலிவாகக் கிடைப்பதால் பூச்சி மருந்துக்கு தேவையில்லை. அப்படித்தான் பலரது வாழ்வை வெடிமருந்துகள் தீர்த்து வைக்கின்றன. வீட்டின் மேல் பெற்ற கடனை அடைத்தும், அடைக்கமுடியாத போது வீட்டை விட்டு வெளியேறி அல்லது தனது உயிரைக் கொடுத்தாவது ஆயுள் காப்பீடு மூலம் வாங்கிய கடனை கட்ட நினைக்கும் இந்த மக்களின் நாட்டில்தான் முதலாளிகளின் சூதாட்ட நட்டத்திற்கு அமெரிக்க அரசு அள்ளிக் கொடுக்கிறது. நெஞ்சை உருக்கும் இந்தக் கதைகளை கேள்விப் படும்போது அமெரிக்கா சொர்க்கபுரி அல்ல என்பது எல்லோருக்கும் புரியவரும். ஏழை நாடுகளை சுரண்டிக்கொழுக்கும் அமெரிக்க முதலாளிகள் சொந்த நாட்டு மக்களையும் விட்டு வைப்பதில்லை என்பதிலிருந்து உலகமயக் கொள்கை என்பது மூன்றாம் உலக நாடுகளை மட்டுமல்ல அமெரிக்காவையும் அரித்துத் தின்னும் விஷ ஜந்து என்பதை ஏற்றுக் கொள்வதில் இன்னும் சந்தேகம் இருக்கிறதா?

_____________________________________________

ுதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

_____________________________________________

வாழ்த்துக்கள் கிடக்கட்டும் ஒபாமா ! இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல் !!

17

cariobama2அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா பெரும் வாக்கு வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெள்ளை இனவெறியை மீறி அவர் வெற்றி பெற முடியுமா என்ற ஐயம் பலருக்கும் இருந்தது. ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டன் ஆதரவாளர்களும், அதிபர் தேர்லின் போது ஜான் மெக்கைனின் ஆதரவாளர்களும் வெள்ளை  நிறவெறியை வெளிப்படையாக பேசிவந்தனர். தற்போதைய வாக்கு விகிதத்தில் கூட வயதான வெள்ளையர்கள் மெக்கைனுக்கும், இளவயது வெள்ளையர்கள் கணிசமாக ஒபாமாவுக்கும் வாக்களித்தாகச் செய்திகள் கூறுகின்றன. பெரும்பான்மையான கருப்பின மக்களும், ஹிஸ்பானிய மக்களும் ஒபாமவை ஆதரித்திருப்பதில் வியப்பில்லை. இப்படி அமெரிக்க சமூகத்தில் வலுவாகக் கருக்கொண்டிருக்கும் நிறவெறியை மீறி ஒபாமா வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியத்திற்குரிய ஒன்றுதான். எனினும் இந்த வெற்றி அமெரிக்க அரசின் செயல்பாட்டை எந்த அளவு மாற்றும் வல்லமை கொண்டிருக்கும் என்பது நமது கேள்வி. ஒபாமாவின் பிரச்சார பீரங்கிகள் மாற்றம்தான் நம்முடைய தேவை, நம்மால் முடியும் என்பதையே தேர்தலின் முழக்கமாக முன்வைத்தார்கள். கீழ்க்கண்ட கேள்விப் பட்டியிலிலிருந்து அந்த மாற்றம் குறித்த பெரிய கேள்வியையும் அதற்கான பதிலையும் புரிந்து கொள்ளலாம்.

  1. அமெரிக்க நகரங்கள், குடியிருப்புகள், உணவு விடுதிகள், காவல் துறை, வேலைவாய்ப்பு, நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் முதலான ஒட்டு மொத்த அமெரிக்காவில் வேர் கொண்டிருக்கும் வெள்ளை நிறவெறி இனிமேல் இல்லாமல் போய்விடுமா?
  2. அமெரிக்காவில் கருப்பின மக்களுக்காகத் தரப்படும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை இனிமேல் பொருளாதார அளவு கோலின்படி செய்யலாம் என்று ஒபாமா பேசியிருப்பதற்கும் இந்தியாவில் இட ஒதுக்கீட்டை அதேபோல மாற்றியமைக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பேசிவருவதற்கும் என்ன வேறுபாடு?
  3. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் அமெரிக்கர்களில் பெரும்பான்மையினரும், அமெரிக்கச் சிறைகளில் மெஜாரிட்டியாகவும் இருக்கும் அமெரிக்க – ஆப்ரிக்க மக்களின் யதார்த்தம் இனிமேல் மாறிவிடுமா?
  4. திவாலான அமெரிக்க நிறுவனங்களால் வாழ்விழந்து, வீடிழந்து, தற்கொலை செய்து கொள்ளும் சில அமெரிக்கர்களை இந்த வெற்றி எந்த வகையில் எதிர் கொண்டு ஆறுதல் சொல்லும்?
  5. வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் தமது வருமானத்தில் பெரும்பகுதியை வீட்டிற்கும், காப்பீட்டிற்கும் ஒதுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை ஒபாமாவின் வருகை மாற்றி அமைத்து விடுமா?
  6. திவாலாகி வரும் அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை, மக்களின் வரிப்பணத்தால் காப்பாற்றும் புஷ்ஷின் நடவடிக்கைகள் இனிமேல் நிறுத்தப்படுமா?
  7. ஆண்டுதோறும் பல நிறுவனங்களில் இலட்சக்கணக்கில் வேலையிழந்து தவிக்கும் அமெரிக்க மக்களுக்கு அளவிடற்கரிய வேலை வாய்ப்புக்களை ஒபாமா அரசு உருவாக்குமா?
  8. அமெரிக்காவின் சமூக வன்முறைகளுக்குக் காரணமான தடையற்ற துப்பாக்கிகளின் சுதந்திரம் ஒபாமாவால் தடை செய்யப்படுமா?
  9. மேல்நிலைக் கல்வி கற்கவேண்டுமென்றால் ஒரு அமெரிக்க மாணவன் பத்து இலட்ச ரூபாயைக் கடன் வாங்கித்தான் செய்ய முடியும் என்ற நிலைமை இனிமேல் மாறுமா?
  10. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளில் உலக அளவில் முன்னணியில்  இருக்கும் அமெரிக்காவில் இனி பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா?
  11. கிளிண்டனில் தொடங்கி புஷ்வரை ஈராக்கையும், ஆப்கானையும் ஆக்கிரமித்து நடத்தப்படும்  போரைஒபாமா நிறுத்துவாரா? அமெரிக்கப் படைகள் திருப்பி அழைக்கப்படுமா?
  12. இசுரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் நயவஞ்சகத்துடன் பின்பற்றப்படும் அமெரிக்காவின் மத்திய கிழக்கின் கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுமா?
  13. வளைகுடாவின் எண்ணெய் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரபு நாடுகளை அவை சர்வாதிகார நாடுகளாக இருந்தாலும் தனது செல்வாக்கில் வைத்திருக்கும் அமெரிக்காவின் தூர கிழக்குக் கொள்கைகள் இனிமேல் அரபு நாட்டு மக்களின் நலனுக்காக மாற்றப்படுமா?
  14. அணுஆயுதம் தயாரிக்க முயற்சி செய்வதாகக்கூறி ஈரானை மிரட்டி வரும் அமெரிக்காவின் அணுகுமுறை இனிமேல் ஜனநாயகப்பூர்வமாக அவதாரம் கொள்ளுமா?
  15. பால்கன் நாடுகளில் செர்பியாவை மிரட்டுவதற்காக மற்ற சிறிய நாடுகளை ஆதரிக்கும் கொள்கைகள் இனிமேல் எப்படி பார்க்கப்படும்?
  16. ஆப்பிரிக்க நாடுகளில் கனிமவளங்களைத் தொடர்ந்து கொள்ளையடிப்பதற்காக பின்தங்கிய இனக்குழுக்களின் உள்நாட்டுப்போரை மறைமுகமாக ஆதரிக்கும் அமெரிக்க அரசின் ஆப்பிரிக்க சூதாட்டம் இனிமேல் நிறுத்தப்படுமா?
  17. பொருளாதாரத் தடைகளால் கியுபாவையும், வட கொரியாவையும் தொடர்ந்து மிரட்டி வரும் அமெரிக்காவின் ரவுடி அணுகுமுறைக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
  18. இந்தியா, பாக்கிஸ்தானை தொடர்ந்து ஒரு ஆயுதப் போட்டியில் வைத்திருப்பதற்காக இரண்டு நாடுகளையும் கூட்டாளிகளாக நடத்தும் அமெரிக்காவின் இரட்டை வேடம் கலைக்கப்படுமா?
  19. அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை தனது செல்வாக்கில் சிறைபிடிக்கும் புஷ் அரசாங்கத்தின் இந்தியக் கொள்கை ரத்து செய்யப்படுமா?
  20. விடுதலைப் புலிகளைத் தடை செய்ததோடு ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமை போராட்டத்திற்கு எதிராகவும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகவும் செயல்படும் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் வருமா?
  21. தென் அமெரிக்க நாடுகளில் வாழைப்பழக் குடியரசுகளை உருவாக்குவதற்காக தனது கைக்கூலிகளின் அரசுகளை ஏற்படுத்த எல்லா சதிகளிலும் ஈடுபடும் அமெரிக்க அரசின் தென்னமெரிக்க கொள்கையில் ஏதேனும் மாற்றம் வருமா?
  22. உலக அளவில் அமெரிக்க நலனுக்காக சாம, தான, பேத, தண்ட என எல்லா முறைகளிலும் செயல்பட்டு வரும் சி.ஐ.ஏ உளவு அமைப்பு ஒபாமாவின் காலத்திலாவது சைவப் புலியாக மாறுமா?
  23. ஆயுத ரீதியில் வல்லரசாகவும், பொருளாதார ரீதியில் தற்போது வலுவடைந்து வரும் ரசியாவுக்கு எதிராக முன்னாள் சோவியத் குடியரசு நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சதுரங்கக் காய்களை நகற்றி வரும் அமெரிக்காவின் நாட்டம் இனிமேல் தலைகீழாக மாறுமா?
  24. உலகமெங்கும் இருக்கும் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள், கப்பற்படைகள் எல்லாம் தங்கள் முகாம்களைக் காலி செய்துவிட்டு அமெரிக்கா திரும்பி விடுமா?
  25. அமெரிக்கா முதலாளிகளின் நலனுக்காகவும்  ஏழை நாடுகளைச் சுரண்டுவதற்காகவும் டாலரை உலகச் செலவாணியாக பயன்படுத்துமாறு நிர்ப்பந்தித்து, அதன் மதிப்பை தேவைக்கேற்றபடி கூட்டியோ குறைத்தோ பொருளாதார அடியாளாக செயல்படும் அமெரிக்க அரசின் அணுகுமுறை இனிமேல் உலகமக்களின் நலனுக்காக மாற்றியமைக்கப்படுமா?

முற்றுப்பெறாத கேள்விகள் இன்னும் தொடர்கின்றன. ஆனால் பதிலென்னவோ ஒன்றுதான். அது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பும், அரசியலும், பொருளாதாரமும் எந்தவித மாற்றமுமில்லாமல் தொடரப்போகிறது என்பதே!

_____________________________________________

 

ஈழம்: கருணாநிதியின் கோழைத்தனம் !

ஈழம்: ஜெயாவின் “புலி” பூச்சாண்டி! கருணாநிதியின் கோழைத்தனம்!

rajapaksar_228x3371“கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்த் தாக்குதலைச் சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூரப் போரை நடத்தி வருகிறது, பாசிச சிங்கள அரசு. பல்குழல் பீரங்கிகளையும் அதி நவீனத் துப்பாக்கிகளையும் கொண்டும் விமானத் தாக்குதல் மூலமாகவும் கிளிநொச்சி பகுதியில் குண்டுமழை பொழிந்தும், கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் களமிறங்கியிருக்கிறது.

குண்டு வீச்சுத் தாக்குதலால் பிணமாகிக் கிடக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள், இரத்தக் கறையுடன் வீதியில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், குவியல் குவியலாகப் பிணங்கள், படுகாயமடைந்து சிகிச்சை பெற வசதியின்றித் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள், வீடிழந்துபடுகாயமடைந்து சொந்த மண்ணிலே அகதிகளாகிக் காடுகளில் ஒளிந்து வாழும் அவலத்தில் தமிழ் மக்கள், உணவோ மருத்துவமோ கிடைக்காமல் பட்டினியாலும் நோயினாலும் பரிதவிக்கும் தாய்மார்கள், குழந்தைகள்  என ஈழத்தமிழர்கள் மாளாத் துயரில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்த அநீதியான போருக்கு எவ்வித சர்வதேசத் தடையுமில்லை என்று கொக்கரிக்கிறார், இலங்கை அதிபர் ராஜபக்ஷே. இலங்கை, சிங்கள நாடு என்பதை ஏற்றுக் கொண்டுதான் சிறுபான்மையினரான தமிழர்கள் வாழ வேண்டும் என்று வெளிப்படையாக பாசிச இனவெறியைக் கக்குகிறார், இராணுவத் தளபதி பொன்சேகா. தமிழ்த் தலைவர்களில் துரோகிகளையும் பிழைப்புவாதிகளையும் அடையாளம் கண்டு அவர்களுக்குப் பதவிகள் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதோடு, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி சிங்கள அரசின் கைக்கூலியாகச் செயல்படும் கர்னல் கருணாவை எம்.பி.யாக நியமனம் செய்திருக்கிறது, ராஜபக்ஷே அரசு.

சிங்கள அரசின் இந்தத் திமிருக்கும் இனவெறிக்கும் மிக முக்கியமான காரணம், இந்திய அரசு அதற்கு உறுதுணையாக நிற்கிறது என்பதுதான். புலிகள் தொடுத்த எதிர்த்தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள் காயப்பட்டிருப்பது அம்பலமாகி, இந்தியா நேரடியாக சிங்கள இராணுவத்துடன் இணைந்து போரில் ஈடுபட்டுள்ள உண்மை உலகுக்குத் தெரிந்தது. மொத்தம் 265 இந்திய இராணுவ அதிகாரிகள் போர்க்களத்தில் இருப்பதாக இலங்கைப் பத்திரிகைகளே செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை இராணுவத்திற்கு நவீன ராடார்களையும் போர்த்தளவாடங்களையும் கொடுத்து உதவியது மட்டுமின்றி, அவற்றை இயக்குவதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களையும் இந்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இதுதவிர, இலங்கை அரசுக்குக் கடனுதவியாக ரூ. 400 கோடியைக் கொடுத்துள்ளது.

இவை குறித்த குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட பின்னரும், வாயே திறக்காமல் மவுனம் சாதித்தது மன்மோகன் சிங் அரசு. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இப்பிரச்சினையை எழுப்பிய பிறகும் கருணாநிதி, இது குறித்து வாய் திறக்கவில்லை. பஜாரி அரசியல் நடத்தும் பாசிச ஜெயலலிதா, மன்மோகன் சிங்கையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்ட பிறகுதான் வேறுவழியின்றி கருணாநிதி வாய் திறந்தார்.

20040618002903301மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், ஈழத் தமிழர் துயரம் பற்றி அவர் பரிவுடன் கேட்டதாகவும் கூறிய கருணாநிதி, ஈழத் தமிழர் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்பக் கோரினார். இலங்கைத் தூதரை அழைத்துப் பேசவேண்டும், அரசியல் தீர்வு காண வலியுறுத்த வேண்டும் எனப் பொதுக் கூட்டம் நடத்திக் கோரிக்கை வைத்தார். மைய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி செய்வதை கருணாநிதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகச் சாடி, அவர் ஏன் பதவி விலகவில்லை என்று பாசிச ஜெயா அம்பலப்படுத்தியதும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஈழத் தமிழர் மீதான போர்த் தாக்குதலை மைய அரசு தடுத்து நிறுத்த முயற்சிக்காவிடில் தமிழக எம்.பி.க்கள் பதவி விலகுவார்கள் என்று மிரட்டல் நாடகமாடினார். அதேநேரத்தில் போர் தொடரும் என்று வெளிப்படையாக இலங்கை அரசு அறிவித்தபிறகும், மைய அரசை நிர்பந்திக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மைய அரசுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாத வகையில் மனித சங்கிலி போராட்டம் நடத்திய கருணாநிதி, மைய அரசைக் கவிழ்க்கும் நோக்கமில்லை; மைய அரசை அவசரப்பட்டு யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பதவிக்காகவும் சொத்துசுகங்களுக்காகவும் இதைவிடக் கேவலமான முதுகெலும்பற்ற புழுவாய் யாரும் நடந்து கொள்ள முடியாது என்பதை கருணாநிதியின் பேச்சும் செயலும் நிரூபித்தன.

இதற்கிடையே ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இராமேசுவரத்தில் பேரணிபொதுக்கூட்டம் நடத்திய திரைப்படத் துறையினர், புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக காங்கிரசு கழிசடை எம்.எல்.ஏ. ஞானசேகரன் உசுப்பி விட்டார். உடனே பாசிச ஜெயா, “பொடா சட்டம் இல்லாததால்தான் இப்படி புலி ஆதரவு  பிரிவினைவாதம் பேசுகிறார்கள். நான் ஆட்சியிலிருந்தால் இத்தேசத் துரோகிகளைக் கைது செய்திருப்பேன்” என்று பெருங்கூச்சல் போட, அதற்கு பக்கமேளம் வாசித்துக் கொண்டு துக்ளக் “சோ”, சுப்ரமணிய சாமி, பா.ஜ.க., காங்கிரசு, இந்து நாளேடு எனப் பார்ப்பனபாசிச கும்பல் பிரிவினைவாதப் பீதியூட்டி பேயாட்டம் போடத் தொடங்கின. புலிகளை ஆதரித்து தனித் தமிழ்நாடு கோரிப் பேசிய ம.தி.மு.க. தலைவர் வைகோவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரசு கழிசடைகள் ஊளையிட்டன. ஈழ விடுதலையை ஆதரிப்பதையும், சிங்கள இனவெறி அரசை எதிர்ப்பதையும்கூடத் தேசவிரோதச் செயலாகச் சித்தரித்து, பிரிவினைவாத  பயங்கரவாத பீதியூட்டி, 90களில் நடந்தது போல, மீண்டும் ஜெயா தலைமையிலான பாசிச ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் பார்ப்பனபாசிசக் கும்பல்கள் ஓரணியில் திரண்டு புலி பூச்சாண்டி காட்டி பீதியூட்டி வருகின்றன.

அவ்வளவுதான்! தொடை நடுங்கிய கருணாநிதி உடனடியாக வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்து சிறையிலடைத்தார். திரைப்பட இயக்குனர்களான அமீர், சீமான் ஆகியோரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று பாசிச ஜெயா கூச்சலிட்டதும், அவர்களையும் கைது செய்து சிறையிலடைத்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் ஆலோசகரும் சகோதரருமான பாசில் ராஜபக்ஷே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசிய பிறகு, இலங்கைக்கு இந்தியா 800 டன் நிவாரணப் பொருட்களை அனுப்புவது; ஈழத்தமிழர் பாதுகாப்புக்கு உத்தரவாதம்; அமைதியான முறையில் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது; மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் அரசியல் சட்டத்தை இலங்கை அரசு செயல்படுத்த வலியுறுத்தல் ஆகியவற்றைக் கொண்ட கூட்டறிக்கை இலங்கைஇந்திய அரசுகளின் சார்பில் வெளியிடப்பட்டு, பிரணாப் முகர்ஜியும் கருணாநிதியைச் சந்தித்தார். “மத்திய அரசை வேதனைக்குள்ளாக்கும் சிக்கலை உருவாக்க மாட்டோம்; அனைத்துக் கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்வோம்” என்று கூறி தமிழக எம்.பி.க்கள் பதவி விலக மாட்டார்கள் என்பதைச் சூசகமாக அறிவித்து விட்டார், கருணாநிதி. ராமன் பாலம் விவகாரத்தில் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு பின்வாங்கியதைப் போல, இப்போதும் பார்ப்பனபாசிசக்  கும்பலுக்கு அஞ்சிப் பம்மிப் பதுங்கிவிட்டார்.

இந்தக் கூட்டறிக்கை எவ்வளவு மோசடியானது என்பதற்கு கிளிநொச்சியில இன்னமும் இலங்கை அரசு நடத்திவரும் போர்த்தாக்குதலே சாட்சியம் கூறப் போதுமானது. “பயங்கரவாதப் புலிகளுக்கு எதிராக இராணுவத் தீர்வு; ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு” என்பதே தமது அரசின் கொள்கை என்கிறார் அதிபர் ராஜபக்ஷே. இலங்கையில் போர்நிறுத்தம் செய்வது பற்றி இந்த அறிக்கையில் எதுவுமே இல்லை.

இவ்வளவுக்குப் பின்னரும் ஈழ ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் இந்திய அரசின் தயவில் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகின்றனர். “சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்து இந்தியாவுக்கு எதிரான தளமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. இதனால் இந்தியாவுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. சிங்களனை நம்புவதைவிட ஈழத் தமிழனை நம்புவதுதான் இந்திய நலனுக்கு ஏற்றது. எனவே ஈழ விடுதலையை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்கிறார் பழ.நெடுமாறன். இந்த வாதம் சரியானதென்றால், நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இந்தியா செய்த சதிகளும் நியாயமாகி விடும். ஏனென்றால், நேபாள பிற்போக்கு மன்னராட்சியை ஆதரிக்காவிட்டால், அவர் சீனா பக்கம் சாய்ந்து இந்தியாவுக்கு ஆபத்தாகி விடும் என்று கூறித்தான் நேபாள மன்னராட்சியை இந்திய அரசு முட்டுக் கொடுத்து ஆதரித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை துப்பாக்கி முனையில் ஒடுக்கிவரும் இந்திய அரசு, ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் என்று நம்பி ஏமாற முடியுமா?

2909-karuநெடுமாறன் கதைப்பதைப் போலின்றி, இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கமும் நலனும் வேறானதாக இருக்கிறது. தென்கிழக்காசிய நாடுகளின் “ஏசியான்” (ASEAN) ஐரோப்பிய நாடுகளின் “ஐரோப்பிய ஒன்றியம்” (EU) போலவே, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை (SAARC) பொருளாதார ஒன்றியமாக உருவாக்கவே இந்திய ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. இந்தியத் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் வெளிநாடுகளில் மூலதனமிட்டுள்ள வகையில், அவர்களுக்கு இலங்கை முக்கிய பொருளாதாரமாக உள்ளது. ஆயுத விற்பனை உள்ளிட்டு பொருளாதார  வர்த்தக உறவிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. தேயிலை எஸ்டேட்டுகள், கட்டுமானத் துறை, இலகுரக மோட்டார் வாகனங்கள் முதலானவற்றில் ஏற்கெனவே காலூன்றியுள்ள இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள், தற்போது தொலைதொடர்புத் துறையிலும் இலங்கையில் மூலதனமிட்டுள்ளனர். இந்தியப் பெருங்கடலில் இராணுவப் போர்த் தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலை, கொழும்பு ஆகிய துறைமுகங்களும் கடல்வழித் தடங்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தெற்காசியக் கூட்டமைப்பில் பாகிஸ்தானை எதிர்கொள்ள, அதற்கடுத்த பெரிய நாடான இலங்கையுடனான நட்புறவு இந்தியாவுக்கு அவசியமாக உள்ளது. இந்திய ‘அமைதிப்படை’ இலங்கையை ஆக்கிரமித்த போது பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் இந்தியஇலங்கை உறவுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதே தவிர, மற்றபடி நீண்ட காலமாக இலங்கை ஆளும் வர்க்கங்கள் இந்தியாவுடன் நட்புறவையும் அதன் வட்டார மேலாதிக்கத்தையும் ஆதரித்தே வந்துள்ளன.

இன்றைய உலகமயச் சூழலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளதைப் போல, இந்தியாஇலங்கை இடையே உள்ள வரி, கடவுச் சீட்டு கட்டுப்பாடுகளை அகற்றி நெருங்கி வர இந்தியஇலங்கை அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஒப்பந்தம்கூடக் கொள்கையளவில் ஏற்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற “சார்க்’ மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தெற்காசிய நாடுகளிடையே ஒரே நாணயமுறையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இலங்கை அரசின் பக்கம் இந்தியா நிற்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், ஈழ விடுதலையை ஆதரிப்பதற்கு ஒரு காரணமும் இல்லை. இலங்கை மீது மேலாதிக்கம் செலுத்தவும் மிரட்டிப் பணிய வைப்பதற்கும் பகடைக் காயாகப் பயன்படுத்துவதற்கு வேண்டுமானால், ஈழப் பிரச்சினையை இந்திய அரசு ஆதரிக்கலாம். இதை நம்பி இந்திய அரசிடம் ஆதரவு கோருவதும் பெறுவதும் அப்பட்டமான துரோகமாகும்.

தற்போது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதலில் சிங்கள இராணுவம் வெற்றி பெற்றால், தமிழர்கள் இலங்கையின் இரண்டாந்தரக் குடிமக்கள் என்பது சிங்கள இனவெறியர்களால் உறுதி செய்யப்படும. தெற்காசியப் பிராந்தியத்தில் எல்லா விடுதலைப் போராட்டங்களையும் நசுக்கி அழிப்பது என்ற இந்திய அரசின் நோக்கமும் நிறைவேறும். தமிழினத்தின் நியாய உரிமைக்கு வாய்திறக்கக் கூட முடியாதபடி பிரிவினைவாத  பயங்கரவாதப் பீதியூட்டிக் கருப்புச் சட்டங்களும், ஒடுக்குமுறையும் ஏவப்படும். எனவே, சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் போராடுவது மட்டுமின்றி, இந்தியாவின் மேலாதிக்கத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும். ஈழத் தமிழருக்கு சிங்கள அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான் எதிரி என்பதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவே இல்லை.

________________________________________

ுதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

__________________________________

 

ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

ஈழப் பிரச்சினைக்காக தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளும், சினிமா உலகினரும் போராடிக்கொண்டிருப்பதைப் போல தோற்றம் கொண்டிருக்கும் சூழ்நிலையைத்தான் ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. ஆனால் உண்மையிலேயே ஈழத்தின் துயரத்தையும், அதற்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தையும் மக்களிடையே கொண்டு செல்லும் வேலையினைத் தமிழகத்தில் செயல்படும் புரட்சிகர அமைப்புக்கள்தான் செய்துவருகின்றன.

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புக்களும் கடந்த ஒருமாதமாகத் தமிழகமெங்கும் நடத்திவரும் பிரச்சார இயக்கத்தின் செய்திகளை இங்கே புகைப்படத்துடன் வெளியிடுகிறோம். இந்தியாவின் மேலாதிக்கத்தை முறியடிக்காமல் ஈழத்தின் துயரத்தை துடைக்க முடியாது என்பதோடு சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக ஈழத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்போம் என்ற முழக்கத்துடன் இந்தப் பிரச்சார இயக்கம் வீச்சாகக் கொண்டு செல்லப்பட்டது.

இன்னொரு நாட்டில் மத்திய அரசு இதற்கு மேல் தலையிட முடியாது என்று கைவிரித்து விட்ட கருணாநிதி தற்போது கையேந்தி வசூலித்து வரும் வேளையில் ஈழத்திற்கு நிவாரணத்தை விட போர் நிறுத்தமும், அரசியல் ரீதியான ஆதரவுமே தேவை என்பதையும் இந்தப் பிரச்சார இயக்கம் மக்களிடையே வலியுறுத்தும் வண்ணம் மேற்கொள்ளப்பட்டது. ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படும் இம்முயற்சிகளை நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இங்கே அந்தச் செய்திகளை வெளியிடுகிறோம்.

ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிப்போம்!
ஈழத்தமிழர் படுகொலைக்குத் துனைபோகும்
இந்திய அரசை முறியடிப்போம்!!

நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் நடத்திவரும் தமிழகம் தழுவிய போராட்டங்கள்.

சிங்கள இனவெறி பாசிச அரசு நடத்திவரும் ஈழத் தமிழிட படுகொலையைக் கண்டித்தும்; இந்த இன அழிப்புப் போருக்குகத் துணை நிற்கும் இந்திய அரசின் சதிகளையும், மேலாதிக்க நோக்கங்களையும் அம்பலப்படுத்தியும் தமிழகமெங்கும்

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

விவசாயிகள் விடுதலை முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

“ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்”, “கொலைவெறி பிடித்த மன்மோகன் சிங்கே, உன் டாடாவும், அம்பானியும் கொள்ளையடிக்க எங்கள் ஈழத் தமிழர் சாக வேண்டுமா?”  விண்ணதி ரும் முழக்கங்களை எழுப்பி, செங்கொடிகளையும், கண்டன முழக்கத் தட்டிகளையும் ஏந்தியபடி கடந்த 8.10.08 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை அண்ணாசாலையை மறித்து, நந்தனம் இராணுவம் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டுக் கைதாயினர், ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள்.

ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இறுதித் தாக்குதலுக்குரிய மூர்க்கத்துடன் இனப்படுகொலையை நடத்திவரும் சிங்கள இனவெறி அரசுக்கு, இந்திய அரசு கூட்டாளியாகவே செயல்படுகிறது என்பதை நாடே அறிந்த போதும்;

கசாப்புக்காரனிடமே காருண்யம் கோரும் கதையாக, கொலைகாரன் மன்மோகனிடமே, இங்குள்ள ஓட்டுக் கட்சிகள் ‘கோரிக்கை’ வைத்துக் கொண்டிருந்த சூழலில், மக்களின் போராட்டங்கள் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமென்பதை அறிவிக்கும் வகையில் அமைந்தது சென்னை நந்தனம் இராணுவம் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம்.

சென்னையில் மட்டுமின்றி, ம.க.இ.க, பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள்  கடந்த 8.10.08 அன்று தமிழகம் தழுவிய அளவில் திருச்சி பாலக்கரையிலும்; கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாகவும்; தஞ்சை இரயிலடி எதிரிலும்; ஓசூர் ராம்நகர், அண்ணாசாலை அருகிலும்; தருமபுரி ராஜகோபால் பூங்கா முன்பாகவும்; கடலூரில் உழவர் சந்தை அருகிலும் திரளான மக்கள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

போலீசின் அனுமதி மறுப்பு மற்றும் மழை காரணமாகத் தடைபட்ட பகுதிகளில் பேருந்து, ரயில் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்கின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த 17.10.08 அன்று துறையூர்  பேருந்து நிலையம் எதிரிலும், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும்; குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் தெருமுனைக் கூட்டத்தையும் நடத்தின.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கடந்த 20.10.08 அன்று “ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்! பார்ப்பன இந்து மதவெறியைத் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பார்ப்பன பாசிஸ்டுகளின் சதியை முறியடிப்போம்” என் கிற முழக்கத்தின் கீழ்  மாபெரும் பொதுக்கூட்டம்  கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இனப்படுகொலையின் சூத்திரதாரியான இந்திய அரசின் குரல் வளையைப் பிடிக்கும் விதமாக  தோழர் துரை. சண்முகம் அவர்களும், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட இப்பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராய் உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டிய அவசியத்தை விளக்கும் வகையில் பேரா.பெரியார்தாசன் அவர்களும் இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.

பெருந்திரளான மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளது ஊக்கமான ஆதரவைக் கொண்டு தமிழகமெங்கும் இவ்வமைப்புகளின் பிரச்சார இயக்கங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

pic13

pic21

pic3

pic4

pic51

pic6

pic7

பிரச்சார இயக்கத்தின் முழக்கங்கள்:

கொலைகாரன் மன்மோகன் சிங்கே,
உன் டாடாவும், அம்பானியும்
இலங்கையில் கொள்ளை லாபம் அடிக்க
எங்கள் ஈழத்தமிழர்கள் சாக வேண்டுமா?

இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசிய
மேலாதிக்கத்திற்காக,
டாடா-அம்பானி போன்ற தரகு முதலாளிகள்
இலங்கையில் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக,
சிங்கள இனவெறி இராணுவத்திற்கு
ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து ஏவிவிடும்
கொலைகார மன்மோகன் சிங் அரசை
எதிர்த்துப் போராடுவோம்!

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக்
குரல் கொடுப்போம்!

________________________________________________________

ுதிய ஜனநாயகம் – நவம்பர் 2008, (அனுமதியுடன்)

__________________________________________________

 

ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !

50

தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் ….பண்டிகை நாட்களையெல்லாம் திரைப்பட நடிகர்களின் வாழ்த்துச் செய்தி, நேர்காணல்கள், படங்களால் நிரப்பியது போய் இப்போது ஈழப் போராட்டம் கூட சினிமாக்காரர்களை வைத்துத்தான் நடத்தவேண்டுமென்றால் என்னவென்று சொல்ல?

80களில் பல்லாயிரக்கணக்கில் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்களது விடுதலைப் போராட்ட உணர்வை எடுத்துச் சென்றார்களோ இல்லையோ தமிழ் சினிமாவையும் கூட மறக்காமல் கொண்டு சென்றனர். அதன் விளைவாக 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களுக்கு உலகச் சந்தை தோன்றியது.  தமிழ் சினிமா வசூல், தமிழகத்தில் ஏ,பி.சி என்று பிரிக்கப்படுவது போல சர்வதேச அளவிலும் வினியோகம் செய்து விற்கப்பட்டது. வரவு அதிகமாகியதால் செலவும் பல கோடிகளில் செய்யலாம் என்ற நிலைமையும் உருவானது. சிவாஜி போன்ற குப்பைத் திரைப்படங்கள் இந்த சூழ்நிலையை நன்கு அறுவடை செய்து கொண்டன. இப்படி தமிழ் சினிமாவின் கலெக்ஷன் கல்லா பிரம்மாண்டமாகக் கட்டுவதற்கு ஈழத் தமிழர்களும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டனர்.

தமிழ்நாட்டின் மக்களெல்லாம் ஈழத்தமிழர்களை அவர்களது போராட்டங்களை வைத்து தெரிந்து வைத்திருக்கும் போது சினிமா நடிகர்கள் மட்டும் தங்கள் படங்கள் வெளிநாடுகளில் ஓடுவதற்கு இலங்கை எனப்படும் நாட்டில் வாழக்கூடிய தமிழர்கள் எனப்படும் சில ஜீவன்கள் காரணமாக இருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்பதை வைத்து கொஞ்சம் தோராயமாகவும் அறிந்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் வர்த்தகம்தான் தமிழ் சினிமாவின் சமூக உணர்வைத் தீர்மானிக்கிறது என்பதை குசேலன் பிரச்சினையில், பெங்களூருவில் படம் ஓடவேண்டும் என்பதற்காக ஒகேனக்கல் பிரச்சினையில் தான் பேசியவற்றுக்கு ரஜினி மன்னிப்பு கேட்டதை வைத்து அறிந்து கொள்ளலாம். அதே மாதிரிதான் தங்கள் படங்களுக்கு கொட்டிக்கொடுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்காக ஒரு ஆறு மணிநேரம், காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை குளிரூட்டப்பட்ட, கழிப்பிட வசதியெல்லாம் கொண்ட கேரோவான் வண்டிகளெல்லாம் இல்லாமல் நடிகர் சங்கக் கட்டிடத்தின் முகப்பில் பந்தல் போட்டு உண்ணாமல் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். இந்த ஆறுமணிநேர உண்ணாநோன்புத் தியாகம்தான் இனிவரும் ஒருவாரம் ஊடகங்களில் அடிபடப்போகிறது என்பதால் அதற்கு முன் அந்தத் தியாகத்தைப் பற்றி நாமும் நினைவு  கூரவேண்டுமென்பதால் இந்தப்பதிவு.

இந்த ஆறு மணிநேர உண்ணா நோன்புத் தியாகமும் கூட இயல்பாக முடிவெடுக்கப்பட்டு வரவில்லை. ராமேஸ்வரத்தில் பாரதிராஜாவின் தலைமையில் இயக்குநர்கள் நடத்திய பேரணியில் தாங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதை சரி செய்வதற்காக, வேறு வழியில்லாமல் ஒரு நிர்ப்பந்தத்திற்காக நடத்தப்பட்டதுதான் இந்தப் போராட்டம். ஒரு பத்திரிகையில் பாரதிராஜா சொன்னது போல இழவு வீட்டிற்கு செல்வதென்றால் பிணம் இருக்கும் இடத்திற்குத்தான் செல்லவேண்டுமே ஒழிய பிணம் என்னுடைய இடத்திற்கு வரவேண்டும் என ஒருவர் கோரமுடியாது.  ராமேஸ்வரம் சென்றால் தங்களுக்குரிய ஆடம்பர வசதிகள் கிடைக்காது என்பதால் நடிகர்கள் அதை புறக்கணித்தார்கள். அதனால் ராமேஸ்வரத்துக்கு தார்மீக ஆதரவு அளித்து விட்டு தங்கள் கணக்கிற்காக நடிகர் சங்கத்தில் கூடி போராட்டம் என்று அறிவித்தார்கள்.

நாயகன் நாயகியை தூக்கி ஒரு ரவுண்டு அடிப்பதற்காக ராஜஸ்தானுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும், ஆல்ப்ஸ் மலைக்கும் செல்லும் ஜன்மங்கள் ஈழப் பிரச்சினைக்காக ராமேஸ்வரம் செல்லமாட்டோம் என்று புறக்கணித்ததை என்னவென்று சொல்ல? இவர்களெல்லாம் போராடவில்லை என்று யார் அழுதார்கள்?

நடிகர் சங்க கட்டிடம் இருக்கும் ஹபிபுல்லா சாலை ஆறுமணிநேர உண்ணாவிரதத்துக்காக அமர்க்களப்பட்டது. நட்சத்திரத் தெய்வங்களை ரசிகர்கள் தரிசிப்பதற்காக தெரு முழுக்க சவுக்கு கம்பால் கட்டி க்யூ அமைக்கப்பட்டது. ஆறு மணிநேரமும் திருப்பதி கோவிலுக்கு நிற்பதைப் போல ரசிக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தல, தளபதி, சூப்பர் ஸ்டார், என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். யாரும் ஈழம் என்று மறந்தும்கூட உச்சரிக்கவில்லை. நேரில் வரமுடியாத பக்தர்களுக்காக சன் தொலைக்காட்சி தனது செய்தி அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பி சேவையாற்றியது. உலகத்திலேயே ஒரு நாள் முழுக்க சினிமாவை வைத்து நீயூஸ் சேனல் நடத்திய பெருமை சன்னுக்கு மட்டும்தான் சேரும்.

இந்த ஆறு மணிநேர உண்ணாவிரத அறப்போராட்டம் எவ்வளவு பிரச்சினைகள், இழப்புகள், தியாகங்களோடு நடக்கிறது என்பதை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி தனது உரையில் தெரிவித்தார். இதற்காக பல படபிடிப்புக்கள் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டதாம். நடிகை திரிஷாவிற்கு பெங்களூருவில் ஒரு முக்கியமான ஷூட்டிங்க இருந்ததால் வர இயலாது என்றாராம். பிறகு ராதாரவி வற்புறுத்தியதன் பேரில் அதை ரத்து செய்து விட்டு வந்திருக்கிறார். நயன்தாராவும் கூட அப்படித்தான் வந்திருக்கிறாராம். இந்த தாரகைகளும் ஃபுல் மேக்கப்போடு கண்ணாடிகளைத் தூக்கிவிட்டவாறு இடையில் கரைந்து விட்ட அரிதாரத்தை  ஈடுகட்ட முடியவில்லையே, உண்மை முகம் அம்பலமாகிவிடுமோ என்ற சோகத்தோடு குந்தியிருந்தார்கள்.

சேர்ந்தாற் போல நாலு வார்த்தை தமிழலில் பேசத் தெரியாமல் அதற்கும் டப்பிங் வைத்திருக்கும் த்ரிஷா போன்ற அக்மார்க் தமிழ் நடிகைகளெல்லாம் ஈழத்திற்காக ஒரு கிழமையை தியாகம் செய்திருக்கிறார்கள் என்பது ஈழத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவாகப் போகிறது என்றால் ஈழமே நீ செய்த பாவம்தான் என்ன?

பேசிய பல நடிகர்களுக்கு பிரச்சினை என்னவென்றே தெரியவல்லை. ஒன்பது சென்டிமெண்ட் கதைகளை மட்டும் மாற்றி மாற்றி பன்றிக்குட்டிகளைப் போன்ற படங்களாய் எடுத்தும், அதற்கு ஒன்பது பெருக்கல் இரண்டு உணர்ச்சிகளை மட்டும் காட்டத் தெரிந்த நடிகர்களின் உலகம் எவ்வளவு சிறியது என்பது அவர்கள் பேச்சில் தெறித்தது. சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஈழத்துப் பிரச்சினைக்காக ஏதோ ஒரு வெட்டி வாரியத்தின் பதவியை ராஜினாமா செய்தாராம். அதை வெளிநாட்டுப் படப்பிடிப்புகளுக்குச் சென்ற போது பல ஈழத் தமிழர்கள் பாராட்டினார்களாம். அதன் பிறகுதான் சிம்பு தன் தந்தையிடம் இலங்கையில் என்ன பிரச்சினை என்று கேட்டாராம். அப்பாவும் முப்பது ஆண்டு வரலாற்றை மூன்று நிமிடத்தில் விளக்க ஈழப் பிரச்சினை என்றால் என்ன என்று சிம்புவுக்கு தெரிந்ததாம்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மையை சிம்பு பேசிய போது அனைவரும் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை சன் டி.வியின் ஆன்லைன் எடிட்டர், நயன்தாரா அந்தப் பேச்சை எப்படிக் கவனித்துக்கொண்டிருந்தார் என்பதைக் காட்டியதன் மூலம் புரியவைத்தார். ஈழம் மறைந்து அந்த ஜோடியின் காதல், ஊடல், நெட்டில் வளைய வந்த காட்சிகள் எல்லாமும் பார்ப்பவர்களின் மனதில் ஓடிக்கொண்டிருந்திருக்கும் என்பதை சன் டி.வியின் புண்ணியத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. கிசுகிசுவில் மட்டுமே செய்தியாக அடிபடுவதற்குத் தகுதி கொண்ட இந்த புண்ணியவான்கள் ஈழத்திற்காக குரல் கொடுக்கிறார்கள் என்றால் எந்த மடையானவது  நம்புவானா என்பதுதான் அந்த எடிட்டர் அப்படிக் காட்டியதற்குக் காரணம். இதை அவர் அறிந்தே செய்யாவிட்டாலும் உண்மை அதுதானே? ஒகேனக்கல் பிரச்சினையில் சிம்புவின் அருகில் நயன்தாரா அமர்ந்திருந்தார் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சேதியை எல்லா நிருபர்களும் தங்கள் பத்திரிகைகளில் பதிவு செய்ததை ஈண்டு நினைவு படுத்திக்கொள்வது ஈழத்திற்கு நல்லது.

ஆவேசமாகப் பேசிய ராதாரவி இலங்கைப் பிரச்சினைக்காக கிரியேட்டிவாக ஒரு யோசனையை முன்வைத்து அது அமல்படுத்தப்பட்டால் ஈழப் பிரச்சினை தீர்ந்து விடும் என்றார். அது ஈழத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்று அழைத்தால் இந்திய அரசு கூடுதல் முக்கியத்துவத்துடன் அதைக் கவனிக்குமாம். இலங்கையில் இருக்கும் எல்லாத் தமிழர்களும் இந்தியாவிலிருந்து பஞ்சம் பிழைக்கச் சென்றவர்கள் என்பது ராதாரவியின் அன்டர்ஸ்டேன்டிங். இந்த முட்டாள் தனத்தை அடுத்துப் பேசிய விடுதலை சிறுத்தைகளின் திருமாவளவன் மலையகத்தில் இருப்பவர்கள்தான் இந்தியத் தமிழர்கள் மற்றவர்கள் அங்கேயே தோன்றிய மண்ணின் மைந்தர்கள் என்று நாசூக்காகப் புரிய வைத்தார்.

நடிகர் சங்கத்தின் செயலாளரின் அறிவே இந்த இலட்சணத்தில் இருக்கும் போது நாம் மும்தாஜ்ஜின் புரிதல் எப்படியிருக்கும் என்பதை எடிட்டிங் இல்லாமலே புரிந்து கொள்ள முடியுமே? போகட்டும், சினிமாக்காரர்களின் போராட்டத்தில் சிறுத்தைகளுக்கு என்ன வேலை என்ற கேள்வி நமக்கு எழுந்தது. எல்லாம் ஈழத்துக்காக வரும் எந்த ஆதரவையும் விட்டுவிடக் கூடாது என்ற நல்லெண்ணம்தான்.  இப்படி எல்லோரையும் முடிந்த அளவு பயன்படுத்துவது நல்லது என்று விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் பிரபாகரனே நினைக்கக் கூடும். எதிரி, நண்பன் குறித்த பாகுபாட்டிற்கு இடமில்லாமல் போராட்டம் தேங்கியிருக்கும் போது  இத்தகைய பயன்படுத்தும் சிந்தனை யாருக்கும் இயல்கபாகத் தோன்றத்தானே செய்யும்?  இந்திய அரசு தங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்பதோ, சினிமாக்காரர்களின் ஆதரவு தங்களுக்கு தேவை என்று நினைப்பதோ வேறுவேறல்ல.

நடிகர் ஷாம் பேசும்போது வெளிநாடுகளுக்கு செல்லும் போது தங்களை ஈழத்தமிழர்கள்தான் பார்த்துக் கொள்வார்கள் என்று குறிப்பிட்டார். இது உண்øமையெனும் பட்சத்தில் இதற்காக நாம் ஈழத்தமிழர்களை  மன்னிக்கத் தயாராக இல்லை. ஏற்கனவே தமிழகத்தில் சினிமாவின் ஆட்சியில் எக்கச்சக்கமான பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு, பாசிசமும், கோமாளித்தனமும் கலந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளை சகித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு இதை விட ஈழத்தமிழ் மக்கள் இடையூறு செய்ய முடியாது. ஈழத்தமிழர்கள் சினிமாவுக்காக இறைக்கும் ஒவ்வொரு காசும், ஒவ்வொரு விநாடியும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆப்பு வைக்கப் பயன்படுகிறது என்பதை தயவு செய்து புரிந்து கொண்டு அவர்கள் சினிமா மோகத்தைக் கைவிடும் வேலையைப் பார்ப்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல ஈழத்துக்கும் நல்லது.

மலையாளத்திலும், தமிழிலும் ஒரு சேர வண்டியோட்டும் ஜெயராம் என்ற நடிகர் பேசும் போது தான் ஒரு இந்தியன் என்ற தகுதியில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஜெய் ஹிந்த் என்று முடித்தார். ஏற்கனவே இந்தியத் தகுதி ஈழத்தின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக ஆயுதங்களையும்,  பயிற்சியையும் இலங்கை ராணுவத்திற்கு கொடுத்திருக்கும் போது  இந்தியன் என்ற உணர்வுள்ள இந்தியர்கள் ஈழத்திற்கு ஆதரவு தெரிவித்தால் அதை விட ஆபத்து என்ன இருக்கிறது?

கமலஹாசன் பேசும்போது தமிழன் என்ற குறுகிய உலகிலிருந்து இந்தப் பிரச்சினையைப் பார்க்கவில்லை என்றார். பிரச்சினை என்னவென்றால் கமல் அவர்கள் என்ன அடிப்படையில் இருந்து இதைப் பார்க்கிறார் என்பதல்ல, ஈழத் தமிழ் மக்கள் என்ன பிரச்சினையில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதுதான். என்னவிருந்தாலும் அவர் உலக நாயகனாயிற்றே. யுனிவர்சல் ஹீரோ உள்ளூர் உணர்வில் இருக்கமாட்டார் என்பதற்காக ஈழத்தமிழர்களை ஒடுக்கும் சிங்களப் பேரினவாத அரசு இனவெறியை விட்டுவிடப்போகிறதா என்ன? தன்மீது தமிழ்க் கறை படிந்து விடக்கூடாது என்பதற்காக கமல் அவ்வளவு ஜாக்கிரதையாகப் பேசுகிறாராம். இவர் அளவுக்கு ஞானமில்லாவிட்டாலும் சராசரித் தமிழன் இலங்கைப் பிரச்சினையை எந்த சிக்கலுமில்லாமல்தான் புரிந்து வைத்திருக்கிறான்.

சூப்பர் ஸ்டார் பேசும்போது கொஞ்சம் ஆன்மீகம் கலந்து அடித்தார். அதாவது ஒரு நாட்டில் பாமர மக்கள் குருதி சிந்தும்போது அந்த நாடு விளங்கவே விளங்காது என்று சாபம் கொடுத்தார் ரஜினி. இப்படி சாபம் கொடுத்தே ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தை தீர்த்து விடலாம் என்றால் ஈராக் மக்களுக்கு இந்த எளிய ஞானம் ஏன் தெரியாமல் போனதென்று தெரியவில்லை.  அடுத்து சிங்கள அரசை சினிமா பாணியில் -சாடிய ரஜினி, முப்பது ஆண்டுகளாக போரில் வெல்லமுடியவில்லை என்றால்,  சரியான ஒரு ஆம்பிளையாக இருந்தால் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே என்று ஏதோ ஒரு குழாயடிச் சண்டைக்கு பஞ்சாயத்து செய்வது போல பேசினார். இந்தக் குழாயடித் தத்துவத்தையே இலங்கைப் பிரச்சினைக்கான மாபெரும் தீர்வாக அடுத்தநாள் தினசரிகள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டது நல்ல வேடிக்கை. ஒகேனக்கல் கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ பேசி பின்னர் பிரச்சினை ஆனதால் இங்கு ஜாக்கிரதையாக பேசினார் என்றாலும் எதிர்காலத்தில் ஷங்கர் படம் கொழும்புவில் ஷூட்டிங் செய்ய நேரிட்டு அதற்கு இலங்கை அரசின் அனுமதி வேண்டும் பட்சத்தில் இந்தப் பேச்சுக்கும் மன்னிப்பு கேட்பாரா என்பது தெரியவில்லை.

இலங்கையில் நடக்கும் பிரச்சினைக்கெல்லாம் நாம் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்று தானும், அஜித்தும் பேசியதாக சில பத்திரிகைகளில் வந்த வதந்தி தன்னைச் சங்கடப்படுத்தியதாக பேசிய அர்ஜூன் 23 ஆண்டுகளாக தமிழ் உப்பைச் சாப்பிட்டுக் கொண்டிப்பவன் எப்படி அப்படி பேசுவேன் என்று புலம்பினார். அஜித் பேசும் போது இவையெதுவும் வதந்தி இல்லை என்பதுபோல சினிமா இன்டஸ்ட்ரியை, சினிமா இன்டஸ்ட்ரியாக இருக்க விடுங்கள் என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக் கொண்டார்.  இதன் பொருள் சினிமா உலகிற்கு எதற்கு அரசியல் எல்லாம் என்பதுதான். இந்த அளவுக்கு வெளிப்படையாக இருப்பதால் அஜித்தைப் பற்றி நாம் விமரிசிக்க ஏதுமில்லை.

ஜெயம் ரவி பேசும்போது ஏதோ சினிமா உலகால்தான் ஈழத்து தமிழர்கள் தங்கள் பிரச்சினைகளை மறந்து சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள் என்றார். இதை புலம்பெயர்ந்த ஈழத்து தமிழர்கள்கூட ஒத்துக்கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறோம். அதே சமயம் அமெரிக்க இராணுவத்துக்கு எதிராக போராடும் ஈராக்கின் மக்கள் பொழுது போக்கிற்காக ஹாலிவுட் படங்களைப் பார்த்து மகிழ்வதில்லை என்ற உண்øமையையும், வன்னிக் காடுகளில் அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் இது பொருந்தும் என்பதையும் புலம் பெயர்ந்தவர்கள் பரிசீலிக்கவேண்டும்.

ராமேஸ்வரத்தில் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றியதற்காக அமீரும், சீமானும் கைது செய்யப்பட்டதை சிலர் குறிப்பிட்டாலும் பலர் குறிப்பிடவில்லை என்பதோடு என்ன பேசவேண்டும் என்பதில் உஷாராக இருந்தனர். மேலும் இந்திய- இலங்கை நாடுகளின் இறையாண்மைக்கெதிராகவோ, மத்திய மாநில அரசுகளுக்கெதிராகவோ எதுவும் பேசக்கூடாது, ஏன் அதிபர் ராஜபக்க்ஷேவைப் பற்றிக் கூட பேசக்கூடாது என்று நடிகர் சங்கம் தடையுத்தரவு போட்டிருந்ததை மன்சூர் அலிகான் போட்டுடைத்தார். இவற்றைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்றால் ஈழத்தின் போராட்டத்தில் என்ன எஞ்சியிருக்கும்? பல நடிகைகள் சன்னின் செய்தியாளர்களிடம் தனியாக பேசும் போது ஏதோ இலங்கையில் உள்ள மக்கள் உணவு, உடை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காகவும் அதற்காக உதவி செய்யும் பொருட்டே இந்தப் போராட்டம் நடக்கிறது என்றார்கள். அதாவது ஈழத்தின் தமிழ்மக்கள் பூகம்பம், சுனாமியால் பாதிக்கப்பட்டு தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக ஏதோ பிச்சை போல யாசகம் கேட்கிறார்கள் என்ற புரிதலில்தான் பல நடிகர்கள் பேசினார்கள். இதை விட ஈழப் போராட்டத்தை கொச்சைப் படுத்த முடியுமா என்ன?

திரைப்படங்களில் சாகசம் செய்யும் இந்த ஹீரோக்கள் நிஜத்தில் எவ்வளவு கோழைகளாக இருந்தால் இப்படி ஒரு தடை உத்தரவு போட்டு அமல்படுத்தியிருப்பார்கள்? பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கே அவ்வளவு அச்சம் இருந்தால் இவர்கள் அல்லல் படும் அந்த மக்களுக்காக என்ன கிழிக்க முடியும்? இல்லை அப்படிக் கிழித்துத்தான் ஆகவேண்டும் என்று யார் அழுதார்கள்?  திரைப்படத்தில் மட்டுமல்ல நாங்கள் நிஜத்திலும் ஹீரோக்கள்தான், தேவைப்பட்டால் எங்கள் உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டோம் என்று பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கோமாளி கார்த்திக் பேசும்போது அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.

தனது படங்களுக்கு பாலுணர்வைத் தூண்டும் ஆபாசத் தலைப்புக்களை வைத்து ரசிகர்களைத் தந்திரமாக இழுக்கும் எஸ. ஜே. சூர்யா பேசும்போது தான் ஒரு ஈழத்தமிழரின் குடும்பத்தை தத்து எடுத்து வளர்ப்பதாக முழங்கியவர் அதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்படி ஏற்பாடு செய்து கொடுத்தாலும் இவரது படத்தை அந்தக் குடும்பம் குடும்பத்தோடு பார்க்கமுடியாது என்பது ஒருபுறமிருக்க தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் ஈழத்து மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்,  அங்கு சென்று ஒரு குடும்பத்தை எடுத்துக்கொள்ளவேண்டியதுதானே அதற்கு எதற்கு மத்திய அரசு? உண்மையில் இங்கு ஈழத்து மக்கள் அகதிகளாக வாழ்வது கூட இந்த படைப்பாளிக்கு தெரியவில்லை.

ஈழத்து மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென தந்தி கொடுத்தால் மட்டுமே தனது ரசிகர்களாக இருக்கமுடியுமென இளைய தளபதி விஜய் பேசும்போது கேட்டுக்கொண்டார். இதே தந்தியை கருணாநிதி கொடுக்கச் சொல்லியதும் அப்படி அனுப்பப்பட்ட தந்திகள் டெல்லியின் குப்பைக்கூடைக்குள் சென்றுவிட்டதும் இந்தப் பச்சைப்பிள்ளைக்கு தெரியாது போலும்! மற்றவர்களை விட வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்திருப்பவர் தான் படிக்கும் தினத்தந்தியில் சினிமா செய்திகளை மட்டும் படிப்பார் போலும். இல்லையேல் கருணாநிதி தன்னை முந்திக்கொண்டது குறித்து தெரிந்திருக்கும். தெரிந்திருந்தால் தந்திக்குப்பதில் ஃபேக்ஸ் அல்லது மின்னஞ்சல்  அனுப்புமாறு கோரியிருக்கலாம். பெரும்பான்மையினரிடம் இந்த வசதிகள் இல்லையென்பது கூட இந்த நடிகர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?

நடிகர் சங்க மேடையில் அரசியல் பேசமுடியாது என்று சலித்துக்கொண்ட கேப்டன் விஜயகாந்த் தனியாக செய்தியாளர்களிடம் பேசும் போது மக்கள் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காகவே தி.மு.க அரசு ராமேஸ்வரம் போராட்டம், மனிதச் சங்கிலி, ராஜினாமா மிரட்டல், நடிகர்களை வைத்து உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடுவதாக எகிறியவர், இலங்கைப் பிரச்சினைக்காக இவர்களிடம் தீர்வு இல்லை என்று ஏதோ அந்தத் தீர்வு இவரது சட்டைப் பையில் பத்திரமாக இருப்பதுபோல சீறினார். நடிகர்களின் உண்ணாவிரதம் ஒரு ஸ்டண்ட் என்று தெரிந்திருக்கும் போது இவர் மட்டும் என்ன வெங்காயத்துக்கு அங்கே வந்து வீரவசனம் பேசிவிட்டு செல்லவேண்டும்?

திருமண விருந்தில் ஒலிபெருக்கியின் மூலம் மொய் எழுதியவர்களின் பெயரையும், தொகையையும் அறிவிப்பது போல யார் யார் எவ்வளவு மொய் அழுதார்கள் என்பதை இந்த அரிய உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில் அறிவித்தார்கள். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஒரிரு இலட்சங்களில் தங்களது மனிதாபிமானத்தைக் காட்டினார்கள். மொத்த கணக்கும் 45 இலட்சத்தோடு முடிந்து போனது. ஒரு லோ பட்ஜட் படம்கூட ஐந்து கோடி ரூபாயைத் தயாரிப்புச் செலவாகக் கோரும் தமிழ் திரையுலகில், ஒரு குத்துப்பாட்டுக்கு மட்டும் ஒரு கோடியை அள்ளிவீசும் வள்ளல்கள் இருக்கும் தொழிலில் ஈழத்துக்காக ஒரு கோடியைக்கூட தேற்ற முடியவில்லை என்றால் இவர்களது யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம். முக்கியமாக இந்தத் தருமப்பணத்துக்காகவா ஈழத்து மக்கள் அங்கே துயரத்தில் உழன்றுகொண்டிருக்கிறார்கள்? அவர்கள் கோருவது அரசியல் ரீதியான ஆதரவை, குறைந்த பட்சம் இலங்கை ராணுவத்திற்கு உதவும் இந்திய அரசு அதை நிறுத்த வேண்டும் என்பதைத்தான். அதைப் பற்றி பேசுவதற்கு அஞ்சும் வீரர்கள் வீசி இறைத்த பணத்தின் மூலம் தங்களது பங்களிப்பை மாபெரும் சாதனையாகக் காட்டிக்கொண்டார்கள்.

இதை நேரடியாக ஒளிபரப்பிய சன் தொலைக்காட்சி நடிகர்கள் அல்லாத சினிமா தொழிற்சங்கத்தினர் பேசும் போதும், அல்லது பிரபலமாகாத நடிகர்கள் பேசும் போதும் கொஞ்சும்கூட சுரணையின்றி விளம்பரங்களைப் போட்டு கல்லாக் கட்டியது. காலையில் காமரா முகப்பில் அமர்ந்திருந்த நடிகர்களுக்கு ஆளுக்கொரு தினகரன் பேப்பரை கொடுத்து புரட்டுவதைக் காண்பித்த சன், மாலையில் அவர்களது படத்தை வண்ணத்தில் போட்டு தமிழ் முரசில் பதிப்பித்து அதையும் கொடுத்து புரட்டுவதைக் காண்பித்தது. ஈழத்தின் தயவில் மலிவான இந்த விளம்பரத்தை மேற்கொள்வதற்கு அவர்கள் வெட்கம் ஏதும் கொள்ளவில்லை.

நடிகர் வினுச்சக்கரவர்த்தி பேசும் போது நடிகர்கள் ஐந்து ரூபாய் கொடுத்தால் அவனது ரசிகர்கள் ஐந்து கோடி கொடுப்பார்கள் என்றார். உண்மைதான். அப்படித்தான் தமிழ்நாட்டின் பண்பாட்டுத்தரம் இருக்கிறது. ஆனால் காட்சிக்கொரு வண்ண ஆடைகளை மாற்றியும், படத்துக்குப் படம் வித்தியாசமாய் குத்துப்பாட்டு ஆடியும்,  புழுதி பறக்கும் வகையில் சண்டைக்காட்சிகளில் தூள் பரப்பியும் சமூக சேவை செய்யும் இந்த ஜிகினாக்காரர்களை வைத்துத்தான் தமிழக மக்கள் ஈழத்திற்காக உதவவேண்டுமென்றால் அதற்குப் பதில் ஈழத்து தமிழர்கள் சிங்கள அரசிடம் அடிமையாகவே இருந்துவிட்டுப் போகலாம்!

_________________________________

 

திரை விமரிசனம்: தாசியின் அவலத்தைத் திரிக்கும் “தனம்”!

10

தீபாவளிக்கு வந்த ஏகனும், சேவலும் ஓடிக்கொண்டிருக்கும் போது தனத்திற்கு விமரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். நான்குபாட்டு அதிலும் இரண்டு குத்துப்பாட்டு, சில சண்டைக் காட்சிகள், வெளிநாட்டு சீன்கள், இடையில் கலர் கலராக ஆடைகளை மாட்டும் நாயக நாயகிகள் இன்னபிற ஐட்டங்களைக் கொண்ட அந்தப்படங்களுக்கு விமரிசனம் எழுதும் தேவை எதுவுமில்லை. அப்படி எழுதினாலும் கும்மியும், ஜல்லியுமாய்த்தான் இரைக்க வேண்டும் என்பதால் சமூகக் கருத்துக்களை -அது சரியோ, தவறோ- பிரதிபலிக்கும் படமென்பதால் தனத்திற்கு விமரிசனம் எழுதுகிறோம்.

பலரும் இந்தப் படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் கதைச் சுருக்கம்.

தாசித் தாய்க்குப் பிறந்து தாயைக் காப்பாற்றுவதற்காக விபச்சாரத்திற்கு அறிமுகமாகும் தனம் ஐதராபாத்தில் இருக்கும் காந்தி நகர் பகுதியில் முழுநேர விபச்சாரியாக காலம் கழிக்கிறாள். 500 ரூபாய் கட்டணத்தை செலுத்தி விட்டு அவளை அனுபவிக்கும் வாடிக்கையாளர்களில் எல்லா வகையினரும் இருக்கிறார்கள். கும்பகோணத்தில் ஆச்சார அனுஷ்டானங்களைப் பின்பற்றும் ஒருபார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த அனந்தராமன் படிப்பிற்காக ஐதராபாத் நகருக்கு வருகின்றான். மற்றவரின் துன்பத்திற்கு கணக்கு வழக்கில்லாமல் உதவும் தனத்தின் மீது அனுதாபம் பிறந்து காதலாக மாறுகிறது அனந்துவுக்கு.

நோட்டைக் கொடுத்துவிட்டு தன்னை நுகருவதோடு உறவு முடிந்தென போய்விடு என்று வாதாடும் தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க வைக்கிறான் அனந்து. இறுதியில் அவனது பெற்றோர் அவள் இன்ன தொழில் செய்கிறாள் என்பதைத் தெரிந்து ஏற்றுக்கொண்டால் திருமணத்திற்குத் தயார் என்கிறாள் தனம். ஆனால் இதை முதலில் அதிர்ச்சியுடன் மறுக்கும் அவன் குடும்பம் பின்னர் ஜோசியரின் வாக்கைக் கேட்டு தாசி வந்தால் எல்லாத் துன்பங்களும் போய்விடும் என்று தனத்தை மருமகளாக ஏற்றுக் கொள்கிறது.

அந்த ஜோசியக்காரன் தனத்தை அனுபவிக்க வேண்டுமென்பதற்காகவே இந்த நாடகத்தை நடத்துகின்றான். தனமோ அவனை காறி உமிழ்கிறாள். இதற்கு பழிவாங்கும் முகமாக அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தையைக் கொன்றால்தான் குடும்பத்திற்கு நல்லது என்று அனந்துவின் அப்பாவை அச்சுறுத்துகிறான். பல தயக்கங்களுக்குப் பிறகு அனந்துவின் குடும்பம் ஒரு மருத்துவச்சியை அழைத்துக் கள்ளிப்பால் கொடுத்து அந்தக் குழந்தையைக் கொல்கிறது. இதை அறிந்த தனம் தன் குழந்தையை தாயே தன் வயிற்றில் பிறந்தது போல நேசித்தவள் கோபம் கொண்டு மொத்தக் குடும்பத்திற்கும் சாப்பாட்டில் விசம் கொடுத்துக் கொல்கிறாள்.

இதை மறுவிசாரணை செய்ய வரும் போலீசு அதிகாரி தனத்தின் நல்மனதைத் தெரிந்துகொண்டு புலனாய்வை முடித்துக்கொள்கிறார். தனம் மீண்டும் காந்தி நகரில் தொழிலைத் தொடர்கிறாள்.

விபச்சாரத்தில் காலத்தைத் தள்ளி வரும் ஒரு தாசியின் வாழ்க்கையில், காதல், குடும்பம், கணவன், குழந்தை என்று நல்லவிசயங்கள் ஏற்பட்டு மூடநம்பிக்கையாலும் அவளைத் துய்க்கத் துடிக்கும் ஆண்களாலும் ஏமாற்றப்பட்டு மீண்டும் தொழிலுக்கு திரும்புகிறாள் என்பதே இயக்குநர் சொல்ல விரும்பிய கதை!

ஒரு விபச்சாரியின் வாழ்க்கையில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்பதை சினிமாவுக்காக வேண்டுமானால் யோசிக்கலாம். உண்மையில் அப்படி நடக்கக் கூடிய சாத்தியமில்லை என்பதோடு ஒரு விபச்சாரியின் அவலமான வாழ்க்கையை பார்க்க மறுப்பதும் இந்த சினிமாக் கற்பனையில் இருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் தனத்தின் நல்ல பண்புகளைப் பற்றி காந்தி நகரில் இருக்கும் அடித்தட்டு தொழிலாளிகள் ஆல் இந்தியா ரேடியோ போல வாசிக்கிறார்கள். நாயகி என்பதால் இந்த ஒளிவட்டம் இயக்குநருக்கு தேவைப்படுகிறது என்பதைத் தவிர ஒரு விபச்சாரி அப்படி ஒரு பகுதிக்கு தலைவியாக விளங்க முடியுமா?

நூறுக்கும், இருநூறுக்கும் தனது உடலை விற்கும் தெருவோர தாசி ஒருத்தி போலீஸ், தரகன், ரவுடி, விபச்சாரிதானே என்று எந்த அக்கறையோ, நாகரிகமோ இன்றி மிருக்கங்களைப்போல வரும் வாடிக்கையாளர்கள்…. இவர்களை மல்லுக்கட்டுவதற்கே தனது நேரத்தையும், சக்தியையும், வருமானத்தையும் செலவிடும் போது தானம் தருமம் செய்வதற்கெல்லாம் வழியேது? ஊரைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் கவலைப் படுவதற்கு முகாந்திரமேது? யதார்த்தத்தில் ஒரு விபச்சாரி விபச்சாரத்தில் உழலும் ஒரு பரிதாபமான ஜீவனாகத்தான் இருக்க முடியுமே தவிர நல்ல பண்புகளைக் கொண்ட சமூக சேவகியாகவெல்லாம் வாழ முடியாது.

இயக்குநரின் இந்தச் சித்தரிப்பே தாசிகளை அனுபவிக்கத் துடிக்கும் ஆண்களின் குற்ற உணர்ச்சியைத் தட்டிக் கேட்பதற்குப் பதில் அதை ஒரு ரசனையாக உணர்த்துகிறது. ஒரு விபச்சாரியின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி உணர்த்த் விரும்பினால் அதை சாந்தினி பார் போன்று எடுத்திருக்கலாம். அந்தப் படத்தில் விபச்சாரம் இனிமையான ஒரு தொழில்ல என்பதோடு துயரத்தில் குவிந்திருக்கும் அந்தப் பெண்ணின் வலி நிறைந்த வாழ்வை கனத்த மனதுடன் உணர்கிறோம்.

ஆனால் தனம் ஒரு தமிழ் சினிமாவின் நாயக நாயகி லாஜிக் படி எடுக்கப்பட்டிருப்பதால் இங்கே நாம் ஒரு அடிமட்டத்து விபச்சாரியை சந்திக்கவில்லை, ஒரு கதாநாயகியைத்தான் காண்கிறோம். மேலும் எல்லாத் தொழலைப் போன்று விபச்சாரமும் ஒரு தொழில் என்று எந்த உறுத்தலுமில்லாமல்  சகஜமாக காட்ட முனைந்திருப்பது ஒரு சராசரி ஆணின் மனதில் ஆசையைத் தூண்டுவதற்குத்தான் உதவுமே ஒழிய அவனுக்கு உடலை எந்திரம் போல விற்கும் ஒரு பரிதாபத்திற்குரிய பெண்ணின் வேதனையை புரியவைக்காது.

படத்தில் தனத்தின் வாடிக்கையாளராக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட அவளது நல்ல மனதுக்காக அவளது நியாயமான கொலைகளை மூடிமறைக்கிறாராம். யதார்த்தத்தில் தெருவோர விபச்சாரிகளை போலீஸ் துரத்துவதும், மாமூல் வாங்குவதும், தேவைப்படும் போது இலவசமாக அனுபவிப்பதும், கைது செய்து வழக்குப் போடுவதும்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். படத்தில் இந்த யதார்த்தத்தை இயக்குநர் மீறியிருப்பது நாயகியின் நல்ல உள்ளத்தைக் காட்டுவதற்குத்தான். துயரமே வாழ்க்கையாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விபச்சாரியின் உலகில் இத்தகைய நல்லது கெட்டதுகளுக்கெல்லாம் எங்கே இடமிருக்கிறது?

தாம்பத்திய உறவில் ஏமாற்றங்களையும், மகிழ்ச்சியையும் இழந்திருக்கும் ஆண்களுக்கு தனம் ஒரு வடிகாலாக இருக்கிறாள் என்பதுதான் இயக்குநர் சொல்லவரும் சேதி. ஆணாதிக்கம் தன்னை நியாயப்படுத்த முடியாத இடங்களில் இப்படித்தான் பேசும். இங்கே அதே தாம்பத்திய உறவில் அதே ஏமாற்றங்களையும், மகிழ்ச்சியையும் இழந்திருக்கும் பெண்களுக்கு என்ன பதில்? அதற்குப் பதில் சொல்ல முனைந்திருந்தால் அது தனத்தின் கதையாக இருக்காது.

ஒரு தாசியை ஒரு ஆச்சாரப் பார்ப்பன இளைஞன் திருமணம் புரிவதும், ஜோசியக்காரனுக்காக அதை பெற்றோர் ஏற்பதும், பின் குழந்தையைக் கொல்வதும் பார்பனர்களை அம்பலப்படுத்துவதாக சிலர் மகிழ்ச்சியடைகின்றனர்.ஆனால் நமக்கு அப்படித் தோன்றவில்லை. ஜெயந்திரன் என்ற காஞ்சி சங்கராச்சாரியின் வண்டவாளங்கள் கிரைம் தில்லராக எல்லாப் பத்திரிகைகளிலும் அம்பலமேறினாலும் அவாள்கள் மட்டும் அதை ஏற்காமல் இன்னமும் அவரை மரியாதை செய்கிறார்கள். இத்தகைய உடும்புப்பிடி பார்ப்பனர்களைக் கொண்ட சமூகத்தில் காலத்திற்கேற்ற முறையில் தன்னை தகவமைக்கும் சாதியை இந்தப் படம் மிகவும் வறட்டுத்தனமாக சித்தரிக்கின்றது.

இயக்குநர் சொல்வது போல ஒரு ஜோசியக்காரனுக்காகவெல்லாம் ஒரு தெருவோர விபச்சாரியை மருமகளாக ஒரு பார்ப்பனக் குடும்பம் ஏற்றுக் கொள்வது நம்பும்படியாகவும் இல்லை; அது உண்மையும் இல்லை. ஒரு வேளை அவள் கோடிசுவரியாக இருந்திருந்தால் சாத்திரத்திற்கு புதிய விளக்கத்தை சொல்லிவிட்டு ஏற்றுக் கொண்டிருக்கலாம். பார்ப்பனர்களின் விழுமியங்களை பொருள் என்ற செல்வத்தின் மகிமைதான் மாற்றுகிறதே ஒழிய வெறுமனே சாத்திரங்கள் அல்ல. அதனால்தான் சில ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் சங்கரமடத்தை பார்பனர்கள் இன்றும் ஆதரிக்கிறார்கள். ஒரு வேளை அந்த மடம் அன்றாடங்காய்ச்சியாக இருந்திருந்தால் எந்தப் பார்ப்பான் அதை மதிப்பான்?

மற்றவர்களைக் காட்டிலும் பார்ப்பனர்கள் பிற்போக்கானவர்கள் என்பதன் பொருள் அவர்கள் மூடநம்பிக்கைகளைக் கறாராக பின்பற்றுகிறார்கள் என்பதல்ல. அந்தப் பிற்போக்கின் சாரம் அவர்கள் மற்ற சாதிகளைக் காட்டிலும் தங்களை உயர்வாகக் கருதிக்கொள்கிறார்கள் என்பதுதான். அதுவும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், நைச்சியமாகவும், தந்திரமாகவும் இன்னும் பல விதங்களில் வடிவெடுக்கிறது. ஆனால் படம் பார்ப்பனர்களை ஏதோ அசட்டுத்தனமாக சில மூடநம்பிக்கைகளைப் பின்பற்றும் முட்டாள்களாகச் சித்தரிக்கிறது. இது பார்ப்பனர்களின் சமூக இருப்பைக் குறைத்து மதிப்பிடுகிறது என்பதுதான் நமது விமரிசனம்.

அதுவும் பார்ப்பனியத்தில் ஊறிப்போன கும்பகோணத்துப் பார்ப்பனர்களை இத்தகைய அசடுகளாகக் காட்டியிருப்பதில் சிறிதும் நியாயமில்லை. படத்தில் வேலை வெட்டியில்லாத அக்ரஹாரத்துப் பார்ப்பனர்கள் தனம் வந்த்திலிருந்து அவளை சைட் அடிப்பதையே தொழிலாக செய்கிறார்கள். வாழ்ந்து கெட்ட பல அக்கிரகாரங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்றாலும் இன்று பார்ப்பனர்கள் கிராமங்களைக் காலி செய்துவிட்டு மாநகரம், டெல்லி, அமெரிக்கா என்று பறந்து விட்டார்களே! வயோதிகப் பார்ப்பனர்கள் முதியோர் இல்லங்களில் முடங்கிக் கிடக்க பையனோ, பெண்ணோ அமெரிக்காவில் செட்டிலாகியிருப்பதுதானே இன்றைய யதார்த்தம்?

ஒரு விபச்சாரியைச் சித்திரிப்பதிலும், ஒரு பார்ப்பனக் குடும்பத்தை படம் பிடிப்பதிலும் இயக்குநர் சராசரி சினிமா லாஜிக் படிதான் கதையை அமைத்திருக்கிறார். அதனால் தனம் திரைப்படம் விபச்சாரியையும் காட்டவில்லை, பார்ப்பனர்களையும் அம்பலப்படுத்தவில்லை. மேலோட்டமான நீதி, அநீதிகளுக்கிடையில் பயணிக்கும் இத்திரைப்படம் முற்போக்குச் சாயலில் இருக்கிறதேயன்றி வாழ்க்கையை உரசிப்பார்க்கும் நெருப்பின் பொறி படத்தில் இல்லை. ஒரு மாறுபட்ட களத்தில் சென்டிமெண்ட்டை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் தனம் மற்றத் திரைப்படங்களை விட்டு விலகி தனி ஆவர்த்தனம் ஏதும்  செய்யவில்லை. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பார்க்கும் கலையில் தமிழ் சினிமா என்றைக்கும் வெற்றிபெற்றதில்லை என்பதை தனமும் நீருபிக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

_

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

41

வருடந்தோறும் காந்தி ஜெயந்தியும், நேரு ஜெயந்தியும் டெல்லி அரசியலில் தொழில் செய்யும் அரசியல்வாதிகள் கடைபிடிக்க வேண்டிய கர்மங்களாகும். அதே போல தமிழக அரசியலில் அண்ணா, பெரியார், காமராஜர் நினைவு நாட்களில் சமாதிகளுக்கு செல்லும் தலைவர்கள் எல்லோரும் சமீப ஆண்டுகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சமாதிக்கும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மற்ற ஜெயந்திகளுக்கும் தேவர் ஜெயந்திக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு.

தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் தங்கள் அரசியல் பிழைப்புக்காக கொள்கை அடையாளத்துக்காக சம்பந்தப்பட்ட தலைவர்களை சடங்கு போல நினைவுகூர்வதற்குத் தேவை இருக்கிறது. இதனால் அவர்களுக்கு ஓட்டு எதுவும் கூடுதலாக விழப்போவதில்லை என்றாலும் வரலாற்றில் சாதனை எதுவும் செய்யாத தங்களது பங்கை மறைப்பதற்கும், குறிப்பிட்ட தலைவர்களை வைத்து சாதனை செய்ததாகக் காட்டுவதற்கும் சிலைகளுக்கு மாலை, மரியாதை செய்யும் பூஜை, புனஸ்காரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் தேவர் ஜெயந்தி மட்டும் தென்மாவட்டங்களில் தேவர் சாதி மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கு பயன்படுகிறது.

அம்பேத்கார் ஜெயந்தியும் தலித் மக்களின் வாக்குகளைக் குறிவைத்துத்தான் கொண்டாடப்படுகிறது என்றாலும் தேவர் ஜெயந்திக்குள்ள முக்கியத்துவம் இதற்குக் கிடையாது. அம்பேத்கார் சிலைக்கு மதுசூதனனோ, செங்கோட்டையனோ மாலை அணிவிக்கச் செல்லும் போது தேவர் சமாதிக்கு மட்டும் ஜெயலலிதா படை சூழ செல்வது வழக்கம். இன்று கூட விமானத்தில் ஏறும்போது சறுக்கி விழுந்து காலில் அடிபட்டாலும் அதைவிட தேவர் சாதி ஓட்டு முக்கியம் என்று கருதி பசும்பொன்னுக்குச் சென்றிருக்கிறார் ஜெயலலிதா. ஆணவ அரசி ஜெயலலிதாவுக்கே இந்த கதியென்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

எல்லாக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் தேவர் சமாதிக்கு வந்தார்களா இல்லையா என்ற கண்காணிக்கப் படுவதால் ஒருவர் விடாமல் வருடந்தோறும் உள்ளேன் ஐயா என்று பசும்பொன்னில் ஆஜர் வைக்கிறார்கள்.

தேவர், தேவர் சாதியின் அடையாளமென்றால் தேவர் சாதியின் அடையாளம் எது? தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அந்த அடையாளங்கள். பசும்போன் தேவரை நினைவு கூர்வதின் குறியீடுகள் இதைத் தவிர வேறில்லை. தேவர் சாதி மக்களின் கம்பீரமான வரலாற்றை முத்துராமலிங்கம் பொதிந்து வைத்திருப்பதாக அம்மக்கள் கருதுகிறார்கள். தென் மாவட்ட அரசியலில் தேவர் சாதிப் பெருமிதத்தை அங்கீகரிக்காமல் எந்தக் கட்சியும் பிழைப்பை ஓட்டமுடியாது என்பதால் உள்ளூர் வட்டம் முதல் மாவட்டம் வரை சாதி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆதிக்கம் செய்யும் தேவர் சாதிப் பிரமுகர்கள் அரசியல் கட்சிகளின் தளபதிகளாக ஆட்சி நடத்துவது மறுக்க முடியாத யதார்த்தமாகும்.

பசும்பொன் தேவரின் காலத்திலேயே நடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக தேவர் சாதி மக்கள் நடத்திய முதுகளத்தூர் கலவரமும், இம்மானுவேல் படுகொலையும் அவரது ஆதிக்கசாதி அடையாளத்தைப் பறைசாற்ற போதும். மற்றபடி அவர் நேத்தாஜியின் தளபதியாக சுதந்திரத்திற்குப் பாடுபட்டார் என்பதன் யோக்கியதையை வரலாற்றில் தேடவேண்டியதில்லை. நேத்தாஜியின் கட்சியான பார்வர்டு பிளாக் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் இடது சாரிக் கட்சியாக இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் தேவர் சாதிக் கட்சியாக இயங்கிவரும் கூத்தைப் பார்த்தாலே போதுமானது. பசும்பொன் தேவர் தலைவராக அலங்கரித்த கட்சி என்பதால் மட்டும் பார்வர்டு பிளாக் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் கார்த்திக் போன்ற சினிமா கோமாளிகளெல்லாம் அரசியல் தலைவராக பத்திரிகைகளின் அட்டையில் சற்று காலம் வலம் வந்த கொடுமையும் நடந்தது.

மற்ற மாநிலங்களில் இடதுசாரி அரசியல் பேசும் பார்வர்டு பிளாக்கின் தலைவர் பிஸ்வாஸ் தமிழகத்தில் மட்டும் சாதி அரசியலில் அதுவும் கார்த்திக்கோடு சேர்ந்து ஈடுபடவேண்டிய நிர்பந்தம். தேர்தல் தோறும் திராவிடக் கட்சிகள் கொடுக்கும் ஓரிரு தொகுதிகளுக்காக இந்த தேசியக் கட்சி தேவர் சாதியின் அடையாளத்தை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் இயங்கி வருகிறது. இது போக தேவரின் இந்துமதச்சாயலை வைத்து இந்துமதவெறி அமைப்புக்களும் அவரை மாபெரும் தலைவராகச் சித்தரிக்கின்றன.

90களில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தென்மாவட்டக் கலவரங்கள் முதுகளத்தூர் கலவரம் போல ஒருதரப்பாக மட்டும் நடக்கவில்லை. வரலாற்றில் முதல்முறையாக தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியின் திமிரை எதிர்த்துப் போராடினார்கள். இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்பு இனிமேலும் தலித் மக்கள் காலம் காலமாக அடிபடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிவித்தது. அடி வாங்கியதால்தான் ஆதிக்க சாதியின் கலவரம் ஒரு கட்டத்தில் பின்வாங்கி சமாதனம் என்று இறங்கி வந்தது. கொடியங்குளம் போன்ற பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நிற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தென்மாவட்டங்களில் ஆங்காங்கே தலையெடுத்தன் விளைவே இந்த மாற்றம்.

இப்படி முதல் முறையாக அடிவாங்கியதால் தேவர் சாதியின் கவுரவத்திற்கு வந்த சோதனைதான் தற்போது தேவர் ஜெயந்தியில் தன்னை மீட்டெடுப்பதற்கு முயல்கிறது. கொடியன்குளம் கலவரத்திற்குப் பிறகுதான் தேவர் சமாதிக்கு தனி மவுசு கூடி தலைவர்கள் வருவதும் தேவர் ஜெயந்திக்கு வரும் தேவர் சாதித் தொண்டர்கள் வருடந்தோறும் வரும் வழியில் பலவீனமாக இருக்கும் தலித் மக்களைத் தாக்குவதும் வழக்கமானது. இன்றும் தேவர் ஜெயந்தி என்றால் இந்த அடிதடிகளை நினைத்து பசும்பொன் ஊரைச்சுற்றி இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் திகிலுடன்தான் எதிர்கொள்கிறார்கள்.

இதுபோக மேலவளவு படுகொலையோடு தலித் பஞ்சாயத்து தலைவர்கள் ஆங்காங்கே கொல்லப்படுவதும், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் தலித் மக்கள் தேர்தலில் போட்டி போட முடியாத சில ஆண்டு வரலாறும் சாதி ஆதிக்கத்தின் இருப்பை இன்றும் உறுதி செய்கிறது. தேவர் ஜெயந்தி நடைபெறும் இக்காலத்தில்தான் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் தாலுகாவில் கரிவலம்வந்தநல்லூருக்கு அருகில் இருக்கும் பந்தப்புளி கிராம தலித் மக்கள் வழிபாட்டு உரிமைக்காகப் போராடுகிறார்கள்.

ஊரிலிருக்கும் கன்னநல்லூர் மாரியம்மன் கோவிலில் தலித் மக்களுக்கு வழிபடும் உரிமை இல்லை. ஆதிக்க சாதியின் குறிப்பாக தேவர் சாதியின் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து இக்கிராம தலித் மக்கள் பத்தாண்டுகளாக போராடி வருகிறார்கள். பசும்பொன்னுக்கு வரும் எந்த தலைவரும் கட்சியும் இம்மக்களின் பிரச்சினைக்கு முகம் காட்டியதில்லை. அந்த மக்கள் சொந்த முயற்சியில் சங்கரன் கோவில் துணை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு கோவிலில் வழிபடும் உரிமையை தீர்ப்பாகப் பெற்றார்கள்.

நீதிமன்றம் அனுமதித்தால் மட்டும் இந்தப் பிரச்சினை முடிந்து விடுமா என்ன? எந்தச் சட்டம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று மேல்சாதியினர் அதை மறுத்தார்கள். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய அதிகார வர்க்கமோ பல தேதிகளைக் குறித்து தள்ளிப் போட்டு வந்தது. இறுதியில் செப்டம்பர் 23ஆம் தேதி நுழையலாம் என்று அதிகாரவர்க்கமும், மேல்சாதியினர் மற்றும் தலித் மக்கள அடங்கிய சமாதானக் கமிட்டியும் முடிவு செய்தது.

அன்று தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைய முயன்ற போது கோவில் பூசாரி கோவிலைப் பூட்டிவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறி விட்டார். அன்றும் தலித் மக்களுக்கு மாரியம்மன் அருள்பாலிக்கவில்லை. இதன் பிறகு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி அரசு நிர்வாகம் கோவிலைப் பூட்டி சீல் வைத்தது. அப்போதும் கூட தீண்டாமைக் கொடுமை அகற்றப்பட்டு சட்டமும், ஒழுங்கும் நிலைநாட்டப்படவில்லை. மாறாக கோவிலை பூட்டினாலும் பூட்டுவோமே ஒழிய தலித் மக்களை நுழைய விட மாட்டோமென திமிர் பேசும் சாதி ஆதிக்கம்தான் அரசு நிர்வாகத்தைத் தாண்டி ஆட்சி செய்கிறது.

கேவலம் ஒரு மாரியம்மனைக்கூட கும்பிடுவதற்கு பத்தாண்டு போராடி, நீதிமன்ற உத்தரவு பெற்றும் கூட ஒன்றும் நடக்கவில்லையே என சலித்துப்போன மக்களை இரவு நேரங்களில் ஆதிக்க சாதி வெறியர்கள் கும்பலாக வந்து தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்பதோடு, வழிபடும் உரிமை இன்னமும் கிடைக்கவில்லை என்பதாலும் தலித் மக்களின் எழுபது குடும்பங்களும் கால்நடைகளோடு அருகாமை மலைக்கு சென்று விட்டது. அங்கு வந்த அதிகாரிகளிடம் தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து என்றைக்கு எங்களுக்கு வழிபடும் உரிமை கிடைக்கிறதோ அன்று கிராமத்திற்கு வருகிறோம் என்று அறிவித்து விட்டு போராட்டத்தைத் தொடர்கிறார்கள் தலித் மக்கள்.

உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் பிரச்சினையில் தங்களது நோக்கம் நிறைவேறவில்லை என்பதற்காக மேல்சாதி மக்கள் மலைப்பகுதிக்கு சென்று தங்கியதும் சுற்று வட்டாரத்து மேல்சாதியினரிடமிருந்து பொருளாதார உதவி வந்தோடு, எல்லா அரசியக் கட்சிகளும், அதிகாரிகளும் அந்த மக்களிடம் வந்து ஊருக்குத் திரும்புமாறு மன்றாடினார்கள். இதே போராட்ட வடிவத்தை மேற்கொண்டிருக்கும் தலித் மக்களுக்கு இத்தகைய வரவேற்பு நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. இந்தப் பதிவு எழுதும் இந்நேரம் வரையிலும் இந்தப் பிரச்சினை இன்னும் முடியவில்லை.

இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றும் வண்ணம் சந்திராயன் விண்கோள் நிலவுக்கு செல்வதாகப் பீற்றித் திரியும் பாரதாமாதா பக்தர்கள், தலித் சாதியில் பிறந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு அம்மன் கோவிலுக்குள் நுழைய முடியாத இந்தக் கொடுமைக்கு என்ன பதில் சொல்வார்கள்? இந்தியாவின் அளவு கோல் சந்திராயனிலா, பந்தப்புளியிலா?

 

அமெரிக்க திவாலும் சில இந்தியத் தற்கொலைகளும் !

4

திவாலான நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு அமெரிக்க அரசு 35 இலட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்து மீட்டிருப்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்த நிறுவனங்கள் நடத்திய சூதாட்டத்தில் வேலை, வருமானம், சேமிப்பு, வாழ்க்கை அத்தனையும் இழந்த மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் அமெரிக்க அரசு வழங்கவில்லை. இந்தப் பொருளாதாரச் சுனாமியில் சிக்குண்ட மக்களில் பலர் தற்கொலையின் மூலம் ‘விடுதலையை’த் தேடிக்கொள்கிறார்கள்.

அக்டோபர் நான்காம் தேதி லாஸ் ஏஞ்செல்சில் வாழ்ந்து வந்த கார்த்திக் ராஜாராம் பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் தனது சேமிப்பு முழுமையும் இழந்து, மனமொடிந்து மனைவி, மாமியார், மூன்று மகன்களைச் சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.   அமெரிக்காவெங்கும் கடந்த சில மாதங்களில் இத்தகைய தற்கொலைகள் நிறைய நடந்திருக்கின்றன. பங்குச் சந்தையில் குறியீட்டு எண் ஏறினால் அதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் ஊடகங்கள் எவையும் முதலாளிகள் நடத்தியிருக்கும் இந்தக் கொலைகள் குறித்து புலனாய்வு செய்வதில்லை.

அமெரிக்காவின் சன்னிதியில் திவாலான மக்கள், தங்களைப் பலியிட்டுக்கொள்ளும் இந்தப் பலிதான நிகழ்ச்சி அமெரிக்காவோடு மட்டும் முடிந்து விடாமல் கடல் கடந்து இந்தியாவையும் தொட்டிருக்கிறது. இந்த ஆண்டு மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் 21,000 புள்ளிகளைத் தொட்டவுடன் முதலாளித்துவ வெறிகொண்ட இந்தியா டுடே முதலான பத்திரிகைகளெல்லாம் அதை மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடின. குமுதம், விகடன் தொடங்கி எல்லாக் குப்பைகளும் எம்.பி.ஏ படித்த, படிக்காத மேதைகளை வைத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து பாடம் நடத்தின.

பங்குகளின் விலை ஏறினாலும், இறங்கினாலும் இருவரில் ஒருவர் நட்டமடைய மற்றொருவர் இலாபமடைகிறார் என்ற ஆரம்ப வகுப்பு அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடுத்தர வர்க்கம் இந்தச் சூதாட்டத்தில் இறக்கிவிடப்பட்டது. எல்லோரும் இலாபமடைய வேண்டுமானால், அந்த இலாபத்தை அளித்து நட்டமடைவதற்கு ஆட்கள் வேண்டாமா? ஆனால் இலாபமடையமுடியும் என்று நம்பவைப்பதற்கு முதலாளிகளும், அன்னிய நிதி நிறுவனங்களும் பெரும் முதலீட்டை வைத்து சூதாடின. ஏறிய பங்குகளின் விலையைப் பார்த்து வியப்புடன் பலரும் பங்குகளை வாங்கிப் போட்டனர். எல்லாம் சில மாதங்கள்தான்.

சூதாடிகளின் தலைமையகமான அமெரிக்காவிலேயே இந்தப் பங்குச் சந்தைப் பலூன் வெடித்த பிறகு இந்தியாவில் மட்டும் வெடிக்காமல் இருக்குமா? இன்று வெடித்தது மட்டுமல்லாமல் புள்ளி தள்ளாடி ஏழாயிரத்தில் வந்து நிற்கிறது. இடைப்பட்ட பதினாலாயிரத்தில் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று எந்தப் பத்திரிகையும் சர்வே நடத்தப் போவதில்லை. தப்பித் தவறி வந்த இரண்டு செய்திகளை இங்கே பதிவு செய்கிறோம். இந்த இரண்டினூடாக மற்றவர்களின் கதியைப் புரிந்து கொள்ளலாம்.

தூத்துக்குடியைச் சேர்ந்த முப்பது வயது அருள்ராஜ் பதினெட்டு மாதங்களுக்கு முன்புதான் ரேவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். சென்னையில் தனக்கொரு வாழ்வைத் தேடிக்கொண்டவர் முதலில்  கணினி மென்பொருள் துறையில் தொழில் செய்து அதில் நட்டமடைகிறார். அதிலிருந்து மீள பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு நண்பர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். உடனே வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்கிறார். வங்கி நடைமுறைகளால் கடன் கிடைப்பது தாமதமாவதைப் பொறுக்க முடியாமல் கந்து வட்டி நபர்களிடம் பணம் பெறுகிறார். பெற்ற பணத்தை அவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது குறியீட்டு எண் 14,000த்தில் இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு அந்த எண் 10,000த்தைத் தொட்டபோது அருள்ராஜ் பலத்த நட்டமடைகிறார். கந்து வட்டிக்காரர்கள் அவரைப் பணம் கொடுக்குமாறு நெருக்குகின்றனர். வேறு வழியில்லாமல் 22.10.08 அன்று  சென்னை எழும்பூரில் ஒரு விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து  வாழ்வை முடித்துக் கொள்கிறார். மரணக்குறிப்பில் தான் பங்குச் சந்தையில் மீளவே முடியாத அளவுக்கு இழந்திருப்பதனால் இந்த விபரீதமான முடிவுக்கு வந்ததாக எழுதியிருக்கிறார்.

இதற்கு அடுத்த நாள் மும்பை இரானிவாடிப் பகுதியைச் சேர்ந்த 34 வயது பாரக் டானா, தனது எட்டு மாதக் கர்ப்பிணி மனைவி நேஹாவைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். கர்ப்பிணி மனைவியையே கொல்லுமளவு விரக்தியும், வெறுப்பும் அடைந்திருப்பதாலோ என்னமோ அவர் மரணக் குறிப்பு எதையும் எழுதவில்லை. போலீசாரின் விசாரணையில் அவரது உறவினர்களும், நண்பர்களும் அவர் பங்குச் சந்தையில் பெரும் பணத்தை இழந்ததைத் தெரிவிக்கின்றனர்.

அருள்ராஜ் இறந்த அதே செவ்வாய்க் கிழமையன்று மும்பையில் 26 வயது ஜெயந்த சஹாவும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார். காரணம் பங்குச் சந்தை இழப்புதான் என்றாலும் அது வெளிப்பட்ட விதம் யாரும் எதிர்பார்க்க முடியாத ஒன்று. அமெரிக்க நோயால் தாக்கப்பட்ட மும்பை பங்குச் சந்தையில் இந்த இளைஞரும் இழந்திருக்கிறார். அதை ஈடுகட்ட அன்று தனது டீமாட் கணக்கிலிருந்து 700 பங்குகளை வாங்குவதற்கு ஆன்லைனில் உத்தரவு கொடுக்கிறார். பதட்டத்தில் 700 என்பதை 7000 என்று ஒரு சைபரை அதிகம் போட்டு விடுகிறார். இதனால் பதினெட்டு இலட்ச ரூபாயை முதலீடு செய்ய வேண்டி வருகிறது. தனது தவறை அவர் பின்னர் உணர்ந்தாலும் காலம் கடந்து விட்ட படியால் வேறுவழியின்றி அறையைப் பூட்டிக் கொண்டு தூக்கு மாட்டிக் கொள்கிறார். வணிகவியலில் முதுகலை பட்டம் படித்திருக்கும் ஜெயந்த சஹாவுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்து வாழ்வதுதான் தொழில்.

வங்கக் கடற்கரையிலிருக்கும் தூத்துக்குடியிலும், அரபிக் கடலோரமிருக்கும் மும்பையிலும் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு நான்கு உயிர்கள் பலியாயிருக்கின்றன. அட்லாண்டிக் கடல் தாண்டி வந்து தாக்கியிருக்கும் இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்தால் இன்னும் எத்தனை பேர் பலியாவார்கள்?

காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !

“”கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும். எங்கள் கருணா… நிதியாகும்” இது நாகூர் ஹனீபாவின் திமுக “கொள்கை’ப் பாடல். போர் நிறுத்தம் ஆயுத உதவி நிறுத்தம் என்று தொடங்கி பத்தே நாளில் அரிசி பருப்பு வசூலில இறங்கிவிட்டார் அண்ணன் கலைஞர். இதுதான் கழகத்தின் கொள்கை.

ஈழமக்களின் கோரிக்கை சோறா, சுயநிர்ணயமா? சுயநிர்ணய உரிமையை இந்தியா எந்த காலத்தில் ஆதரித்திருக்கிறது? காஷ்மீரில் 5 இலட்சத்திற்க்கும் மேற்பட்ட ராணுவத் துருப்புக்களைக் குவித்து ஒரு தேசிய இனத்தை  ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தின் போராட்டத்தை மட்டும் பாலூற்றி வளர்க்குமா என்ன? அதற்கான ஆதாரத்தை இலங்கையில் தேடவேண்டாம். இந்தியாவில் ஈழத்து அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டு வதைக்கப்படுவதை பார்த்தாலே போதுமானது.

2000ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்த சமயத்தில் காஷ்மீரில் 35 சீக்கியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 35 சீக்கியர்களைக் கொன்ற காஷ்மீர் தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து அவர்களில் 5 பேரைக் கொன்றுவிட்டதாக ராணுவம் பீற்றிக்கொண்டது. அந்த 5 பேரும் அப்பாவி மக்கள் என்ற உண்மை அப்போதே அம்பலமானது.

அதே நாட்களில் இராமேசுவரத்தில் இருந்த ஈழ அகதிகள் முகாம் எனும் சிறையில் இருந்து விடுதலையடைவதற்காக ஒரு குடும்பம் மொத்தமாக தற்கொலை செய்து கொண்டது. இந்தியக் கருணையின் முகத்தை இது அம்பமாக்கியது.

இந்தியாவின் தலையில் இருக்கும் காஷ்மீருக்கும், காலில் இருக்கும் ஈழத்திற்கும் துயரமும், ஒடுக்குமுறையும் ஒன்றுதான். துப்பாக்கியும் நிவாரணமும் கூட தோற்றத்தில்தான் வேறானவை. நோக்கத்தில் அவை ஒன்றுதான். மே 2000 இல் வெளியான இந்த உரைவீச்சை காலப்பொருத்தம் கருதி, இந்தியாவின் கருணை முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கம் கருதி இங்கே பதிவு செய்கிறோம்.

பிணங்கள் பேசுகின்றன!

கிளிண்டனின் விஜயத்திற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

யமுனைக் கரையிலிருந்த பன்றிகளும்
ஜதராபாத் நகரப் பிச்சைக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள்
நகரத்தின் தூய்மையைக் கிளிண்டனுக்குக் குறிப்பாலுணர்த்த.

நொய்லா கிராமத்துப் பெண்களுக்கு
அதிரடிக் கணினிப் பயிற்சியளிக்கப்பட்டது,
இந்தியாவின் குக்கிராமமும் இணையத்துடன்
பிணைக்கப்பட்டிருப்பதைக் கிளிண்டனுக்கு நிரூபிக்க.

காஷ்மீரில் 35 சீக்கியர்கள் மார்ச் 20-ஆம் தேதி
சுட்டுத்தள்ளப்பட்டார்கள் – காஷ்மீர் பிரச்சினையைக்
கிளிண்டனுக்குப் புரிய வைக்க.

நாடகம் முடிந்தவுடனே ஒப்பனை கலைந்தது;
பன்றிகள் மீண்டும் யமுனைக் கரைக்கு வந்தன;
பிச்சைக்காரர்கள் வீதிக்கு வந்தனர்.

35 சீக்கியர்கள் மட்டும் உயிர்த்தெழவில்லை.

ஏனென்றால் இது நாடகமில்லை.

நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை ஈடேற்ற
அப்பாவிகளைக் கொல்ல முடியுமா? முடியும்.

அமைதிப்படையின்
அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே
கொல்லப்பட்ட தமிழர்கள்.
இலங்கை அரசின் மீது – தன் ஆளுமையை நிலைநாட்ட
இந்திய உளவுப்படையால் கொலைசெய்யப்பட்ட சிங்கள மக்கள்.

காஷ்மீர் இந்துக்களைக் கொல்வதற்காகவே இந்திய
உளவுத்துறையால் வளர்க்கப்பட்ட போலிப் போராளிக் குழுக்கள்…

அப்பாவிகளைக் கொல்ல முடியும்.

சீக்கியர் கொலை நாடகமில்லையென நிரூபிக்க
மீண்டுமொரு நாடகம் நடத்தியது இந்திய ராணுவம்.

“மார்ச்-24, 25 தேதிகளில் காஷ்மீர்-பிரக்போரா கிராமத்தில்
இடைவிடாமல் நடந்த துப்பாக்கிச் சண்டையில்
சீக்கியரைக் கொன்ற பாக். தீவிரவாதிகளில் 5 பேர்
கொல்லப்பட்டார்கள்.
மற்றவர்களைத் தேடுகிறோம்” என்றது இராணுவம்.

“மார்ச்-21 முதல் ‘காணாமல் போன’ 17 பேரைத் தேடுகிறோம்”
என்றார்கள் அந்தக் கிராமத்து மக்கள்.

“5 பிணங்களையாவது காட்டு” என்றனர் மக்கள்.
“அவர்களைப் புதைத்துப் புல் முளைத்து விட்டது”
என்றது இராணுவம்.

போராட்டம் முளைத்தது.
“5 பிணங்களையும் தோண்டி எடு” என 2000 பேர் திரண்டனர்.

பிணங்களால் பேசமுடியாது என்பது
ஓர் அறிவியல் உண்மை எனினும்

உயிருள்ள மனிதனின் கதறலுக்கு இரங்காத இதயம்
சில நேரங்களில் ‘ஆவிகளின்’ அலறலுக்கு அஞ்சுவது
ஓர் அறவியல் உண்மை.

இராணுவமும் அஞ்சியது. அச்சம் வேறு – இரக்கம் வேறு.

கோழைத்தனம் இரக்கமற்றிருக்கும் போதுதான்
சுறுசுறுப்பாக நடந்து கொள்கிறது.

மீண்டும் துப்பாக்கிச் சூடு. 9 பேர் புதைக்கப்பட்டனர்;
5 பிணங்களும் உயிர்த்தெழுந்தன.

முகம் சிதைந்து உடல் சிதைந்து
மக்கிய தோலும் மக்காத எலும்புமாக
5 மூட்டைகள் அள்ளித்தரப்பட்டன.

65 வயதுக் கிழவர் ஜூமா கான்;
இரண்டு ஆட்டு வியாபாரிகள்;
இரண்டு உள்ளூர்த் தொழிலாளிகள்.

அங்கங்களால் அல்ல; ஆடைகளால்
அடையாளம் கண்டார்கள் உறவினர்கள்.

இவர் அவர்களாயிருக்கக் கூடாதே
என்று அரசும் பதறியது, உறவினர்களும் பதறினர்.
இருவேறு பதற்றங்கள்.

பிணங்களின் அடையாளத்தை உறுதி செய்ய
மரபணுச் சோதனை நடக்கிறது.

தேசத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?
மதத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?
தீவிரவாதத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?
துயரத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போட முடியாது.

காஷ்மீருக்கும் இராமேசுவரத்திற்கும் முடிச்சுப்
போடப்பட்டுள்ளது.

“ஆ, சேது ஹிமாசலம்”- அது பிரம்ம முடிச்சு.

இந்துவின் இகலோக உல்லாசத்திற்குக் காஷ்மீர்.
பரலோக உல்லாசத்திற்கு இராமேசுவரம்.

காஷ்மீரில் இராணுவ முகாம்.
இராமேசுவரத்தில் அகதி முகாம்.

வடக்கே ஆக்கிரமிப்பு; தெற்கே அடைக்கலம்.
வடக்கே ரௌத்திரம்; தெற்கே காருண்யம்.
காஷ்மீரில் கொலை; மண்டபத்தில் தற்கொலை.

“ஏப்ரல் 7-ஆம் தேதி இரவு மண்டபம் ஈழ அகதிகள்
முகாமையொட்டிய தமிழ்நாடு தங்கும் விடுதியில்
ஒரு ஆணும் இரு பெண்களும் ஆறு மாதக் குழந்தையும்
உள்ளிட்ட ஈழத்தமிழ்க் குடும்பமொன்று
நஞ்சு குடித்துத் தற்கொலை செய்து கொண்டது.”

“சில நாட்களுக்கு முன் இதே விடுதியில்
நான்கு அகதிகள் தீக்குளித்து இறந்தனர்.”

-இங்கும் பிணங்கள் பேசின.

“எங்கள் உடல்களை எரியூட்ட 3000 ரூபாய் வைத்துள்ளோம்.
நகைகளை முகாமிலுள்ள அகதிகளிடம் கொடுத்து விடுங்கள்.
நாங்கள் அகதிகள். இந்தியா வந்து
கஷ்டப்பட்டதால் தற்கொலை செய்து கொள்கிறோம்.”

பிணங்களை அடையாளம் காண இங்கே
மரபணுச் சோதனை தேவையில்லை.

அவர்களுடைய அடையாளம் தெரிகிறது.

அவர்கள் மரணத்திற்குப் பின்னும்
மானத்தை இழக்க விரும்பாதவர்கள்.

பணம் வைக்கவில்லையென்றால்
தங்கள் பிணத்தைக் கவுரவமாக எரியூட்டமாட்டார்களோ
என்று நம்மைச் சந்தேகிப்பவர்கள்.

உயில் எழுதி வைக்காவிட்டால் நகைகளைக் களவாடக்கூடும் என்று
நம்மை மதிப்பிட்டிருப்பவர்கள்.

எம் சாவுக்கு நீங்களே காரணம் என்று
குற்றம் சாட்டத் தயங்கித் தம் நிலையையே
காரணம் சொல்லுமளவு நாகரீகமானவர்கள்.

நீங்கள்? –
“அகதிகள் தற்கொலை” என்ற செய்தியின் மீது
உங்கள் இரக்கம் நிறைந்த கண்கள் நின்று கலங்கினவா?
முலைக்காம்பில் நஞ்சுதடவிப் பிள்ளைக்குப் பாலூட்டிய

அந்தத் தாயின் பாசத்தை அறிவீர்களா?

ஆறுமாதப் பிள்ளையின் எதிர்கால நலனை முன்னிட்டு
அவனைக் கொலை செய்த தந்தையின் அக்கறையை அறிவீர்களா?

அதிதி (விருந்தினன்) கிளிண்டன் ஐந்து நாட்கள் தங்கிய செலவு
அகதிகளுக்கு ஆயுள் முழுதும் சோறுபோடக் காணும் என்ற
அக்கிரமத்தை அறிவீர்களா?

அகதி முகாமில் பிறந்து அகதி முகாமில் வளர்ந்து
முகாமின் மதிற்சுவரைத் தாண்ட அனுமதிக்கப்படாத
ஈழத்தமிழ் இளைஞனை அகதி என்பீர்களா கைதி என்பீர்களா?

அகதியின் மகன் அகதியாகலாம்; கைதியாக முடியுமா?

ஈழப்போராட்டத்தைக் கருவிலேயே சிதைத்தது இந்திய அரசு;
அந்தக் கருச்சிதைவின் ரத்தம்தான் – அகதிகள் – அறிவீர்களா?

துப்பாக்கியின் நிழலில் வாழ்ந்திருக்கிறீர்களா?

உங்களை ‘ஏய்’ என்று அழைத்து
கிட்ட வந்தவுடன் எட்டி உதைக்கும் சிப்பாய்;

உங்கள் மனைவின் மார்பை
உங்கள் கண்முன்னே சோதனையிடும் சிப்பாய்;

நீங்கள் உரிமை கேட்பதனால்தான்
தனது வாழ்க்கை முச்சந்தியில் நிற்பதாக நம்பும் சிப்பாய்;

இந்தியத் துப்பாக்கியின் நிழல் ஈழத்தில் பதிந்திருக்கிறது.
காஷ்மீரில் படிந்திருக்கிறது.

உங்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

மரங்களைப் போலத் துப்பாக்கியும் நிழல் தரும்.
அதன் கீழே கூனிக் குறுகி ஒடுங்க வேண்டும்.

குறுகமறுத்தால் சுடும். அதே துப்பாக்கிதான்…
கார்கில் போரின் போது தேசபக்தியுடன் நீங்கள்
ஆயுதபூசை நடத்தினீர்களே அதே துப்பாக்கிதான்.
இந்திய இறையாண்மையின் காவல் தெய்வங்களாகச்
செங்கோட்டையால் வழிபடப்படும் அதே துப்பாக்கிதான்.

தேசத்தின் வெளிப்புறம் திரும்பிய
துப்பாக்கி முனைகளைக் காட்டிலும்
உட்புறம் திரும்பிய முனைகளே அதிகமென்பதை அறிவீர்களா?

இந்தியத் துப்பாக்கியின் தோட்டாவை
நெஞ்சிலேந்தியவர்களெல்லாம் அந்நியர்களென்றால்
அந்த அந்நியர்களில் பெரும்பான்மையோர்
இந்தியர்கள் என்பதை அறிவீர்களா?

கடந்த பத்தாண்டுகளில் காஷ்மீரில்
இந்திய இராணுவம் அழித்த உங்கள் வரிப்பணம்
ஒரு இலட்சம் கோடி;
அழித்த உயிர்கள் 20,000.

ஈழத்துக்குப் போன இந்திய அமைதிப்படை
கொன்ற கணக்கும் இல்லை; தின்ற கணக்கும் இல்லை.
ஒரு இலட்சம் கோடி ரூபாய்!-
ஒரு துண்டு நிலமும்
25,000 பணமும் தந்திருந்தால்
4 கோடி விவசாயக் குடும்பங்கள்
20 கோடி இந்தியர்கள்
இரண்டு வேளை சோறு தின்றிருப்பார்கள்.

ஒரு உயிரைக் கொல்ல 5 கோடி ரூபாய்!

சியாச்சின் பனிப்பாறைக்காக 15 ஆண்டுகளாக
பாகிஸ்தானுடன் போர். ஒரு நாளைக்குப் பத்து கோடி.
வயிற்றுக்குப் போரிடப்போன சிப்பாய்கள்
மூச்சுக்காற்று உறைந்து விரைத்துச் சாகிறார்கள்-
இரு தரப்பிலும்தான்.

எதை நிரூபிக்க இந்தக் கொலைகள்?
“மன்னும் இமயமலை எங்கள் மலையே”-
உந்தன் மலையா?
உன் காலடி நிலம் உனக்குச் சொந்தமா?

காஷ்மீரின் பனிமலையை, பழத்தோட்டங்களை
வாங்கப் போவது யார், நீங்களா?
டால் ஏரியில் படகு விட்டுப் பனிச்சறுக்கு விளையாடி
மாலை நேரத்தில் மதுவருந்தி மயங்கப் போவது யார் – நீங்களா?

ஓபராய், தாஜ், ஹாலிடே இன் நட்சத்திர-விபச்சார விடுதிகளின்
உரிமையாளர் யார்-தாங்களா?

ஜுமா கானின் கல்லறை மேல்
வசந்தமாளிகை எழுப்பப் போவது யார்-நீங்களா?

நீங்களே ஆகட்டும், உங்கள் எசமானர்களே ஆகட்டும்.
காஷ்மீர் ஜுமா கானின் தாயா, உங்களது கூத்தியாளா?
இமயத்தின் கம்பீரத்தையும்
கள்ளமின்மையையும் அமைதியையும்
கவிதை போலச் சொல்லும்
காஷ்மீர்ப் பெண்களின் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.
அவளது இதயத்தைக் குத்தீட்டியால் கிழித்துவிட்டு
உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுவீர்களா?

பெண்ணைக் கைப்பற்றலாம், மண்ணையும் கைப்பற்றலாம்.
தோண்டுமிடமெல்லாம் ஜுமா கான்களின் குரல் ஒலிக்கும் –
சம்மதமா?

பேசுங்கள்-காஷ்மீரின் பிணம் பேசுகிறது.
இராமேசுவரத்தின் பிணம் பேசுகிறது.
பேசுங்கள் – இந்தியர்களே!

புதிய கலாச்சாரம் – மே, 2000

இந்த கட்டுரையை ஒத்த பல அரிய உரைவீச்சுக்கள் ”போராடும் தருணங்கள்” எனும் கட்டுரைத் தொகுப்பில் (புதிய கலாச்சாரம் வெளியீடு) உள்ளது.

கிடைக்குமிடம்:

புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
e-mail: pukatn@gmail.com, vinavu@gmail.com