நாள் : 31.01.2021

பத்திரிக்கை செய்தி

“நான் ஏன் கருவறைக்குள் நுழைய வேண்டும்?” என தமிழக பாஜக தலைவர் கேட்பது போல் பார்ப்பன அடிமை மனோபாவம் தமிழகத்தில் இல்லை!

அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத 203 மாணவர்கள் தமிழகம் முழுவதும் கோயில்களின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு கருவறை தீண்டாமை தமிழகத்தில் முழுமையாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை!

சனவரி 28, 29 அன்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத 207 மாணவர்கள் அர்ச்சகராக நியமிக்கப்பட பாரதிய சனதா கட்சி போராடுமா?

கந்த சஷ்டி கவசத்தினை கருறையில் பாட, தமிழ் வழிபாட்டிற்காக போராடுமா?

என அக்கட்சியின் தமிழக தலைவர் முருகன் அவர்களிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

படிக்க :
♦ அர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது?
♦ அர்ச்சகர் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார் ?

அதற்கு பதிலளித்த திரு.முருகன்,

பேராசியர் வேலையை நீ செய்ய முடியுமா? நான் ஏன் கருவறைக்குள் போக வேண்டும்? கடவுள்களை ஆகம விதிகளின்படி வழிபட பாரதிய ஜனதா கட்சி ஆதரவளிக்கும்.

அனைத்து சாதி அர்ச்சகராகும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது எனக் சொல்லிவிட்டு மேலும் கேள்விகள் கேட்கவிடாமல் தனியாக விவாதத்திற்கு வாருங்கள் என செய்தியாளரின் வாயடைத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு இணைப்பில் காண்க :

@ 2.27 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை.

2006-ம் ஆண்டு அன்றைய தி.மு.க ஆட்சியின் போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்து கோயில்களில் அர்ச்சகராக்குவதற்கான அரசாணை கொண்டுவரப்பட்டு தமிழ்நாட்டில் 6 சிறப்பு பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. அவற்றில் பயிற்சி முடித்த மாணவர்கள் நாங்கள் அர்ச்சகராகும் தகுதி திறமையோடு இருக்கிறோம். 2006-ம் ஆண்டு மதுரையைச் சேர்ந்த ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் இந்த அரசாணையை எதிர்த்து, மற்ற சாதிகளை சேர்ந்தவர்கள் கடவுளை தொட்டு பூஜை செய்தால் தீட்டாகிவிடும் என பொதுமக்கள் சொல்கிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் நேரடியாக தொடர்ந்த வழக்கில் அரசாணைக்கு இடைக்கால தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கில் எமது அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பிலும் அரசாணையை ஆதரித்து வாதாடினோம். இதன் இறுதி தீர்ப்பு டிசம்பர் 16, 2015 அன்று உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

இத்தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத எங்களை போன்ற மாணவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட தடையில்லை; ஏனெனில் எந்த கோயில் ஆகமத்திலும் பார்ப்பன சாதியினர்தான் அர்ச்சகராக இருக்க முடியும் என இல்லை என சட்ட வல்லுநர்கள், தமிழ் ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர். “அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான வகையில் சாதி, பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடு அர்ச்சகர் நியமனத்தில் காட்டப்படுவதை ஏற்க இயலாது; குறிப்பிட்ட கோயில்களின் ஆகமங்களுக்கு ஏற்ப அர்ச்சகர் நியமிக்கப்படலாம்; அனைத்து கோயில்களின் அர்ச்சகர் நியமனங்களுக்கும் பொதுவான ஒர் அரசாணை என்பது தான் ஏற்புடையதல்ல” இவையே உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாரம் என்கிறார்கள்.

தீர்ப்பு கொடுத்து 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. தீர்ப்பிற்கு பின் அத்திபூத்தது போல் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர் மாரிச்சாமி மட்டும் மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோவில் அர்ச்சகராக 2018-ம் ஆண்டில் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இன்னமும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்கிறார் திரு.முருகன். அரசியலமைப்பு சட்டம் நெறிமுறை, கருவறை தீண்டாமை ஒழிப்பு இவை ஏதும் திரு.முருகன் உள்ளிட்ட பாஜக, சங்க பரிவாரங்களுக்கு அவசியமில்லை போலும். ‘ஆகமம்’ எனும் பெயரில் சாதிய சனாதனத்தினை அடைகாக்கும் கூடுகளாக கருவறைகள் நீடிக்கவே இவர்கள் விரும்புகின்றனர்.

தாங்கள் எந்த ‘இந்துக்களின்’ நலனுக்காக உள்ளோம் என்பதினையும் இதன்மூலம் தெளிவுபடுத்திவிட்டனர். “நான் ஏன் கருவறைக்குள் நுழைய வேண்டும்“ என்பதில் நிலவும் பார்ப்பன அடிமை மனோபாவம் இன்றைய தமிழகத்தின் பெருவாரியான ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்த மக்களிடம் இல்லை. அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்கள் தமிழகம் முழுவதும் கோயில்களின் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு கருவறை தீண்டாமை தமிழகத்தில் முழுமையாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என அதற்கான போராட்டத்தினை நம்பிக்கையுடன் தொடருவோம். அதற்கு தடையாக வரும் எவற்றையும் கடந்திடுவோம்.

இவண்,
வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க