மானாமதுரை ஆகாஷ் லாக்கப் படுகொலை: குற்றவாளி போலீசு அதிகாரிகளைக் கொலை வழக்கில் கைது செய்!

சாதிய வன்மத்துடன் செயல்பட்ட திருப்புவனம் போலீசு ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் படுகொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்வதுடன் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.

12.03.2026

மானாமதுரை ஆகாஷ் லாக்கப் படுகொலை!

குற்றவாளி போலீசு அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்!

மானாமதுரை மக்கள் போராட்டம் வெல்லட்டும்!

பத்திரிகைச் செய்தி

டந்த 08.03.2026 அன்று ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞர் மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டார போலீசால் அடித்து கால் உடைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் திருப்புவனம் போலீசு ஆய்வாளர் திலீபன் ஆகியோர் தலைமையிலான போலீசு படைப்பிரிவினர் ஆகாஷை படுகொலை செய்துள்ளனர்.

இது வரை இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யாததற்கு மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக வன்மையான கண்டனங்கள்.

“இளைஞர்களுக்கு இடையிலான மோதலுக்காக ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரைக் கைது செய்துள்ளோம். தப்பி ஓடும் போது பாலத்திலிருந்து ஆகாஷ் கீழே விழுந்ததில் கால் உடைந்தது. அதன் பிறகு மூச்சுத்தினறி இறந்து விட்டார்” என்று போலீசு சொல்கிறது. ஆனால் போலீசிடம் பிடிபட்ட ஆகாஷை அதே வழக்கில் பிடிபட்டதாகச் சொல்லப்படும் மற்ற நண்பர்கள் பார்க்கும் போது அவரது கால்கள் உடைபடவில்லை. ஆகாஷை போலீசு நிலையத்தில் சந்தித்த அவரது அம்மாவிடம் “எங்கள் அகமுடையார் சாதிக்காரனை அடிப்பாயா; உனக்கு அவ்வளவு திமிரா” எனச் சொல்லி காலில் இரும்புக்கம்பியை வைத்து அடித்து ஆகாஷின் காலை உடைத்ததாக அவர் பதிவு செய்துள்ளார்.

மேலும் ஆகாஷ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது கொடுத்த வாக்குமூலம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் போலீசுகாரர்கள் காலுக்கு இடையில் கல்லை வைத்து ஈரச் சாக்கை சுற்றி இரும்பு கம்பியால் அடித்தனர் என்றும், பாலத்தில் இருந்து கீழே விழுந்ததால் கால் உடைந்தது என்று பொய் சொல்லச் சொல்லியும் தாக்கியுள்ளனர் என்பதைப் பதிவு செய்துள்ளார்.

“ஆகாஷை சட்டப்படி விசாரித்து நீதிமன்றத்தில் நிறுத்தாமல் கால்களை உடைத்து படுகொலை செய்துள்ளது போலீசு. எங்களுக்கு நீதி வேண்டும்” என ஆகாஷின் அம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உடற்கூராய்வு அறிக்கையிலும் போலீசு தாக்கியது அம்பலமாகியுள்ளது.

திருப்புவனம் அஜித்குமார் லாக்கப் படுகொலையில் போலீசு சிறப்புப்படை குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டது போல், ஆகாஷும் போலீசு சிறப்புப்படை குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் மானாமதுரை அருகில் இடைக்காட்டூரில் அகமுடையார் சாதி வெறியர்கள் ஆயுதங்களுடன் தேவேந்திர குல மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்களையும் இதே போலீசுதான் கைது செய்துள்ளது. அவர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை.

ஆதலால் சாதிய வன்மத்துடன் செயல்பட்ட திருப்புவனம் போலீசு ஆய்வாளர் திலீபன், மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் படுகொலையில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்வதுடன் வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து ஐந்தாவது நாளாகப் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது.

ஆனால் இந்தப் போராட்டத்திற்கு எதிராக ஆதிக்கச் சாதி வெறி பிடித்த கும்பல் மானாமதுரை வளநாடு பகுதியிலும் மானாமதுரை நகரத்திலும் சில போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதை அனைத்து ஜனநாயக சக்திகளும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஜனநாயகமற்ற இந்த ஆதிக்கச் சாதிக் கும்பலை தமிழ்நாடு அரசு ஒடுக்க வேண்டும்.

சாதி வெறியைத் தூண்டும் ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களை, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி-யை தடை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க