Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 408

தள்ளு வண்டி காவியம் | துரை. சண்முகம்

3

ள்ளுவண்டி
தள்ளும் பெண்ணின்
பித்த வெடிப்பு
கால்பட்டு
கிழக்கு சிவக்கிறது.

விசை கொண்டு
தள்ளு வண்டியை
நகர்த்தும் வேகத்தில்
சூரியன் நகர்கிறது.

வண்டியை
ஏற்றத்தில்
உந்தித் தள்ளி,

இறக்கத்தில்
இழுத்துப் பிடித்து,

பள்ளிப் பிள்ளைகள்
சைக்கிள்கள்
பைக்குகளின் சீண்டல்கள்
படாமல்… விலகி
பக்குவமாய்
கட்டுக்குள் நிறுத்தும்
பெண்ணின்
தொண்டைக்குழி தசையில்
வியர்வை உருளும்.

தள்ளுவண்டி
நிறுத்துமிடத்தை
குனிந்து நிமிர்ந்து கூட்ட
சில
பார்வை குப்பைகள்
படுத்தும்.

உடலையே
சமைத்துப்போடுவது போல் களமாட வேண்டும்

பார்சல் பேப்பர்
பார்சல் கவர்
குடம்
தண்ணீர் கேன்.. என
வந்து சேரும்
இருசக்கர வாகனத்தில்
அவள்
கணவனைத் தவிர
அனைத்தும்
வசதியாய் அமர்ந்திருக்கும்.

எரிக்கும் சிகரெட்டெ
எரிபொருள்.
சேர்ந்து இருமும்
சைக்கிளின் மேல் மாமனார்.
அந்த
தள்ளுவண்டி வியாபாரத்தை
தாங்கிப் பிடிக்கும்
துருபிடித்த சக்கரத்தில்
அவர்
விலா எலும்பும் அடக்கம்.

கை கழுவி
உறக்கம் தொலைத்த
விழிகளால் தீ மூட்டி
ஓங்கி… தோசைக்கல்லில்
உயிர் தண்ணீர் தெளிக்க
அங்கே
ஒட்டு மொத்த குடும்பத்தின்
ஆவி
பறக்கும்.

வாழ்வின்
சுமை கொள்ளா
வாகனமாய்
தள்ளு வண்டி
காட்சி தரும்.

பள்ளிக்குப் போனாளோ…
பத்திரமாய் வருவாளோ..
பிள்ளையை நினைக்கையில்
மணக்கும் இட்டிலியோடு
அவள் மனதும் வேகும்.
அடுத்த ஈடு ஊத்துவதில்
தோசையை புரட்டுவதில்
சட்டினி.. சாம்பார் – என
குரல்கள் நெருக்குவதில்
நினைவுகள் தொலையும்
தன் பசி மறக்கும்.

குடும்பமே பணியாற்றும் தள்ளு வண்டிக் கடை

குறிப்பிட்ட நேரத்திற்குள்
மொத்த உடலின் சத்தும்
பிழியப்படும்.
தசைகளின்
அசைவுகளில்
ஆட்டம் கண்டு
தள்ளுவண்டி
உயிர் உறையும்.

உடலையே
சமைத்துப்போடுவது போல்
களமாட வேண்டும்.

பசியின் வேகத்திற்கு
பரிமாற வேண்டும்
மனித எந்திரமாய்
உருமாற வேண்டும்.

நாலு இட்லி.. ரெண்டுவடை
பொங்கல் ஒண்ணு…
பூரி ஒண்ணு
ரெண்டு கல்தோசை
ஒரு வடகறி….
வித விதமாய் வரும்
கட்டளைக்கு
காது முளைக்க வேண்டும்
விடுபடாமல்
வேகமாய் பார்சல் கட்ட
விரல்களின் நகக் கண்
விழிக்க வேண்டும்.

கழன்டு விடும்
மணிக் கட்டு.
கூட்டத்தின் கோபத்திற்கு
வாட்டம் காட்டாமல்
குவிந்து விரியும்
நெற்றிப் பொட்டு.

நிலைகுத்தி
நின்ற இடத்தில்
உடல் வளைந்து
பொருள் எடுக்க
வலி பிடுங்கும்
தொடை நரம்பு.

கைவிடப்பட்ட
முதியவர்கள்
பசித்ததை
சொல்லத் தெரியாமல்
பார்த்து நிற்கும்
மனநோயாளிகள்
இவர்க்கும்
சுரக்கும்
தள்ளுவண்டிக் கடையின்
பாசப் பரிமாற்றம்.
பாக்கி வைக்கும்
பழக்கமில்லா முகங்களுக்கும்
தள்ளுவண்டி
இடம் கொடுக்கும்.

முதுமையில் வளைந்த
தந்தையின் கை நரம்புகள்
சட்னி, சாம்பார்
பொட்டலம் கட்ட தடுமாறும்.

பார்த்து.. பார்த்து.. என
பார்வையில்
முடிச்சு போட்ட படியே
பையன்,

பல விதமாய்
உண்டவர் கணக்கை
ஒன்று விடாமல்
ஒரு விதமாய்
கூட்டிச் சொல்லும் அழகு
வலியின் பிரசவம்.

படிக்க :
♦ மதுரவாயில் போலீசு மாமூல் வெறிக்கு தண்டனை !
முறுக்கு போலீசு – மிரட்டும் போலீசு – விபச்சாரப் போலீசு

குறைய குறைய
வெங்காயம் நறுக்கி
வேக வேகமாய்
வடையைத் தட்டி
இடையிடையே
இட்லியை ஊற்றி
சூடான சிற்றுண்டிக்குள்

உழைப்பின் சூட்டில்
ரத்தம் கொதிக்கும்
உடல் வலி கலந்து
வடகறி மணக்கும்.

எடுத்து வைக்கும்
எண்ணமின்றி
உனக்கும் எனக்கும்
கொடுத்த பிறகு
மிச்சம் மீதிகள்
அவர்
இரைப்பை நினைக்கும்.

ஐயாவுக்கு.. அண்ணனுக்கு
என
மாமூல் கேட்க
கடுப்பில்.. அடுப்பில்
எண்ணைய் குமுறும் !
உழைப்பின் துடிப்பை
உறியும் முகம் பார்த்து
காகம் துப்பும்
தெரு நாய் திட்டும் !

பத்து பாத்திரம்
கழுவி முடிக்கையில்
பெத்த பிள்ளையின்
முகம் அது தெரியும்
பிள்ளை சாப்பிட்டதோ
என்ற கவலையில்
பெத்த வயிறு விரியும்.

தள்ளி தள்ளிப் பார்த்தாலும்
வாழ்வின் ஏக்கம் நகரவில்லை
இன்னும்
எதைத் தள்ளிப் பார்த்தால்
வாழ்க்கை கிடைக்கும்
தெரியவில்லை?

துரை. சண்முகம்  

கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் !

ஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான். மக்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம் தொடர்கிறது.

இன்னும் சகஜநிலைக்கு திரும்பாத பகுதிதான் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள வெள்ளப்பள்ளம். இப்பகுதியில் இன்னமும் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த கடல்நீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. மேலும் சேதமான மீனவர்களின் படகுகளுக்கு அரசு உரிய இழப்பீடுகளை வழங்கவில்லை.

கடல் நீர் வெளியேற்றப்படாத குடியிறுப்புப் பகுதி

புயலில் வீழ்ந்த மரங்கள், மற்றும் கூரைகள் அகற்றப்படவில்லை. இந்த நிலைமையை சீர் செய்ய எந்த அதிகாரிகளும் முயற்சி செய்யாத நிலையில், அப்பகுதி மக்களும் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளும் தான் நிலமையை சீர் செய்ய தொடர்ந்து களப்பணியாற்றி வருகின்றனர். இச்சூழலில்தான் நுண்கடன் நிறுவனங்களின் கோரத்தாண்டவம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

வாழ்வை இழந்து ஏதிலிகளாக நிற்கும் மக்களின் கழுத்தை இறுக்குகிறது நுண்கடன் நிறுவனங்கள். சாதாரண நாட்களில் “மடிவற்றிய நிலையில் பால் கறக்கும் இக்கயவர்கள் தற்போது மடியறுக்கவும் தயங்க மாட்டோம்” என்பது போல் செயல்படுகின்றனர். வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்பவர்களை இது போன்ற ஒட்டுண்ணி கும்பல் நிர்பந்திப்பதன் மூலம் சாவை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

சீரமைக்கப்படாத படகுகள்

ஆம். கஜாவின் கோரத்தாண்டவத்திற்கு பின்னர் அப்பகுதிகளில் இருந்து வெளியாகும் தற்கொலை செய்திகள் பலவும் அம்மக்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இந்த நிலையில் அப்பகுதி மக்கள், மக்கள் அதிகாரம் தோழர்களை அணுகியுள்ளனர்.

அதன் பிறகு மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் பின்னரும் நுண்கடன் கும்பல் அடங்கவில்லை. எனவே கடந்த 24-12-2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் ஆயக்காரன்புலம் பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் அங்கு வந்த வட்டாட்சியர் இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு நீங்கள் உங்கள் கடன்களைச் செலுத்துங்கள் என கூறியுள்ளார். அதனடிப்படையில் மக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளனர்.

இந்த தகவலானது ஆயக்காரன்புலம் பகுதி முழுக்க மக்கள் அதிகாரம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரமாக கொண்டு செல்லப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
வேதாரண்யம், தொடர்புக்கு : 90944 98693.

மனிதன் ஒரே ஒருமுறைதானே சாக முடியும் ?

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 44 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
”அவர்கள் பயந்து போயிருக்கிறார்கள்” என்று நினைத்துக் கொண்டாள் தாய்.

அவள் மிகுந்த கவனத்தோடு இருந்தாள். அந்த முகப்பு வாசலில் அவள் நின்ற இடத்திலிருந்தே மிகயீல் இவானவிச்சின் கரிய வதங்கிப்போன முகத்தைப் பார்க்க முடியும். அவனது கண்களிலிருந்து பிரகாசத்தையும் அவள் காண முடியும். என்றாலும் அவனும் அவளைப் பார்க்கவேண்டும் என்று விரும்பியதால், அவள் தன் முன் கால்விரல்களை ஊன்றிக் கழுத்தை நீட்டிப் பார்த்தாள்.

மக்கள் முகஞ் சுழித்து அவநம்பிக்கையோடு அவனைப் பார்த்தார்கள். மெளனமாயிருந்தார்கள். கூட்டத்துக்குப் பின்னால் மட்டும் அமுங்கிப்போன குரலில் ஏதோ கசமுசப்பு எழுந்தது.

“விவசாயிகளே!’’ என்று சிரமப்பட்டு உரக்கப் பேசினான் ரீபின் . “அந்தப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை நம்புங்கள். இதற்காக நான் உயிரையும்கூட இழக்க நேரிடலாம்; அவர்கள் என்னை அடித்தார்கள், சித்திரவதை செய்தார்கள். அவற்றை நான் எங்கிருந்து பெற்றேன் என்பதை என் வாயிலிருந்து கக்க வைக்க முயன்றார்கள். மீண்டும் அடிப்பார்கள். ஆனால், நான் அதையும் தாங்கிக் கொள்ளத் தயார். ஏனெனில் அந்தப் பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ளவை உண்மை – அந்த உண்மைதான் நமக்கு நம்முடைய அன்றாட உணவைவிட – அதி முக்கியமானதாக, அருமையானதாக இருக்க வேண்டும். அதுதான் சங்கதி!’’

“அவன் இதையெல்லாம் ஏன் சொல்லுகிறான்” என்று முகப்பு வாசலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த முஜீக்குகளில் ஒருவன் கேட்டான்.

“எதைச் சொன்னால் என்ன? இப்போது எல்லாம் ஒன்றுதான்” என்று அந்த நீலக் கண்ணன் சொன்னான். “மனிதன் ஒரே ஒருமுறைதானே சாக முடியும்.”

அந்த ஜனங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசாது அங்கேயே நின்று தங்களது புருவங்களுக்குக் கீழாக உம்மென்று பார்த்தார்கள். கண்ணுக்குப் புலனாகாத ஏதோ ஒரு பார உணர்ச்சி அவர்களைக் கீழ்நோக்கி அழுத்திக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

அந்தப் போலீஸ் ஸார்ஜெண்ட அந்தக் கட்டிடத்துக்குள்ளிருந்து தட்டு தடுமாறிக்கொண்டே முகப்பு வாசலுக்கு வந்து சேர்ந்தான்.

“யாரங்கே பேசுகிறது” என்று அவன் குடிகாரனைப் போலக் கத்தினான்.

திடீரென்று அவன் விடுவிடென்று படிகளை விட்டிறங்கி ரீபினிடம் போய் அவனுடைய தலைமயிரைப் பற்றிப் பிடித்து தலையை முன்னும் பின்னும் இழுத்துக் குலுக்கிவிட்டான்.

“டேய்! நீதானா பேசினாய்? நாய்க்குப் பிறந்த பயலே’’ என்று அவன் கூச்சலிட்டான்.

ஜனக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முணுமுணுப்பு அலைபாய்ந்து பரவியது. நிராதரவான வேதனையுணர்ச்சியோடு தாய் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டாள். மீண்டும் ரீபினின் குரல் ஓங்கி ஓலித்தது.

”பாருங்கள், நல்லவர்களே!…..”

”சத்தம் போடாதே!” அந்த ஜார்ஜெண்ட் அவன் காதோடு ஓங்கியறைந்தான். ரீபின் தடுமாறிச் சாய்ந்து, கீழே விழாமல் சுதாரித்து நின்றான்.

“ஒரு மனிதனின் கைகள் இரண்டையும் கட்டிப்போட்டுவிட்டு, இவர்கள் இஷ்டப்படியெல்லாம் அவனை வதைக்கிறார்கள்.”

படிக்க:
சுதேசி வேடத்தில் பழங்குடிகளின் மூலிகை அறிவை திருடி விற்கும் பாபா ராம்தேவ்
கோதாவரி டெல்டாவின் கடைமடை கிராமம் ! பலுசுதிப்பா மீனவர்களின் சோகம் ! நேரடி ரிப்போர்ட்

”போலீஸ்! இவனைக் கொண்டு போங்கள். ஏ, ஜனங்களே, சீக்கிரம் கலைந்து போங்கள்!” வாயிலே கறித்துண்டைக் கவ்விக் கொண்டு தாவுகின்ற நாய் மாதிரி அந்த ஸார்ஜெண்ட் ரீபினுக்கு முன்னால் பாய்ந்து சென்று அவனது முகத்திலும், நெஞ்சிலும், வயிற்றிலும் தன் முஷ்டியால் ஓங்கி ஓங்கிக் குத்தினான்.

“அடிப்பதை நிறுத்து” என்று யாரோ கூட்டத்தினரிடையேயிருந்து கத்தினார்கள்.

”நீ ஏன் அவனை அடிக்கிறாய்?” என்று மற்றொரு குரல் அதை ஆமோதித்து ஒலித்தது.

“நாம் போய்விடுவோம்” என்று அந்த நீலக்கண் முஜீக் தலையை அசைத்துக்கொண்டே தன் தோழனிடம் சொன்னான். பிறகு அவர்கள் இருவரும் அந்தச் சாவடியை நோக்கி மெதுவாக நடந்தார்கள். அவர்கள் போகும்போது தாய் அவர்களை அன்பு நிறைந்த கண்களோடு பார்த்தாள். அந்தப் போலீஸ் ஸார்ஜெண்ட் மீண்டும் சாவடியின் முகப்பை நோக்கி ஓடி வருவதைக் கண்டதும் தாய்க்கு நிம்மதி நிறைந்த பெருமூச்சு வெளிப்பட்டது. அங்கு வந்து நின்று வெறிபிடித்த குரலில் அவன் கத்தினான்.

“கொண்டு வாருங்கள் அவனை! நான் பார்த்துக் கொள்கிறேன்……”

“அப்படிச் செய்யாதே” என்று கூட்டத்திலிருந்து ஒரு பதைத்த குரல் எழுந்தது. அந்தக் குரல் அந்த நீலக்கண் முஜீக்கின் குரல்தான் என்பதைத் தாய் உணர்ந்து கொண்டாள். ”பயல்களா, அவர்களை விடாதீர்கள். அவனை உள்ளே கொண்டு போனால் அவர்கள் உதைத்தே கொன்றுவிடுவார்கள். அப்புறம் அந்தக் கொலையை நாம்தான் செய்தோமென்று நம்மீது பழியும் காட்டிவிடுவார்கள். விடாதீர்கள் அவர்களை!”

“விவசாயிகளே!” என்று கத்தினான் ரீபின். “உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை நீங்கள் இன்னும் காணவில்லையா? உங்களை எப்படிக் கொள்ளையடிக்கிறார்கள், எப்படி ஏமாற்றுகிறார்கள். எப்படி உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறார்கள் என்று உங்களுக்குப் புரியவில்லையா? எல்லாம் உங்கள் சக்தியால்தான் இயங்குகின்றன. நீங்கள்தான் இந்தப் பூலோகத்திலேயே சிறந்த மகோன்னத சக்தியாக விளங்குகிறீர்கள். ஆனால் உங்களுக்கு என்ன உரிமைகள் இருக்கின்றன? பட்டினி கிடந்து சாவதற்குத்தான் உங்களுக்கு உரிமை இருக்கிறது!”

திடீரென்று அந்த முஜீக்குகள் ஒருவருக்கொருவர் குறுக்கிட்டுச் சத்தம் போட ஆரம்பித்தார்கள்.

“அவன் உண்மையைத்தான் சொல்கிறான்!”

”போலீஸ் தலைவனைக் கூப்பிடு. எங்கே அவன்”

”போலீஸ் ஸார்ஜெண்ட் அவனைத் தேடிப் போயிருக்கிறாள்.”

“யார், அந்தக் குடிகாரனா?”

“அதிகாரிகளைக் கூப்பிட்டு வருவது நம் வேலையல்ல.’’

அந்தக் கூச்சல் அதிகரித்துக்கொண்டிருந்தது.

“முன்னாலே போய்ப் பேசு, உன்னை அடிக்கும்படி நாங்கள் விட்டுக்கொண்டிருக்க மாட்டோம்”

“அவன் கைகளை அவிழ்த்துவிடு!”

”நீ அகப்படாமல் பார்த்துக்கொள்!”

”இந்தக் கயிறு என் கைகளை உறுத்துகிறது” என்று அமைதியாகச் சொன்னான் ரீபின். என்றாலும் அவனது குரல் மற்றவர்களின் குரல்களுக்கு மேலாக மேலோங்கித் தெளிவோடு ஒலித்தது. ”நான் ஓடிப்போக மாட்டேன். முஜீக்குகளே நான் இந்த உண்மையிலிருந்து ஒளிந்து மறைய முடியாது. அது என் இதயத்திலேயே வாழ்கிறது.”

சில மனிதர்கள் மட்டும் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று ஒருபுறமாக ஒதுங்கி நின்று ஏதேதோ சொல்லிக்கொண்டும் தலையையாட்டிக் கொண்டும் இருந்தார்கள். கந்தலும் கிழிசலுமாய் உடையணிந்த எத்தனை எத்தனையோ மக்கள் உணர்ச்சி வெறியோடு ஓடோடியும் வந்து குழும ஆரம்பித்தார்கள். அவர்கள் ரீபினைச் சுற்றி கொதிக்கும் கறுத்த நுரை போன்று சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு காட்டுக்கோழி மாதிரி நிமிர்ந்து நின்று தன் கைகளைத் தலைக்கு மேல் ஆட்டிக்கொண்டு சத்தமிட்டான் ரீபின்.

“நல்லவர்களே! உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரது கைக் கட்டுகளை அவிழ்த்து விடாவிட்டால், பின் யார்தான் நமக்காக அந்தக் காரியத்தைச் செய்வார்கள்?”

அவன் தன் தாடியைத் தடவிக் கொடுத்துக்கொண்டு ரத்தம் தோய்ந்த தனது ஒரு கரத்தை உயர்த்திக் காட்டினான்.

“இதோ என் ரத்தம் – சத்தியத்தைக் காப்பதற்காகச் சிந்திய ரத்தம்!”

“நல்லவர்களே! உங்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி. நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரது கைக் கட்டுகளை அவிழ்த்து விடாவிட்டால், பின் யார்தான் நமக்காக அந்தக் காரியத்தைச் செய்வார்கள்?”

தாயும் படியிறங்கி அந்த முகப்புக்குச் சென்றாள். ஆனால் கூட்டத்தின் மத்தியில் நின்ற ரீபினை அவளால் பார்க்க முடியவில்லை. எனவே மீண்டும் அவள் படிகளின் மீது ஏறி நின்றுகொண்டாள். ஏதோ ஒரு மங்கிய ஆனந்தம் அவளது இதயத்தில் படபடத்தது.

”விவசாயி மக்களே அந்தப் பத்திரிகைகளை எப்போதும் எதிர்நோக்கிக் காத்திருங்கள், அவற்றைப் படியுங்கள்.

கோயில் குருக்களும், அதிகாரிகளும் உண்மையைச் சொல்லும் எங்களை மாபாவிகள் என்றும், கலகக்காரர்கள் என்றும் உங்களிடம் சொல்வார்கள். அதை நம்பாதீர்கள். உண்மை இந்த உலகத்தில் எங்கும் ரகசியமாகவே உலவுகிறது. மக்களது இதயத்திலே குடிபுகுவதற்காகத் திரிந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகளுக்கே சத்தியம் நெருப்பைப் போன்றது. உயிர் பறிக்கும் உடைவாளைப் போன்றது. அவர்கள் சத்தியத்தை ஏற்க முடியாது. ஏற்றால் சத்தியம் அவர்களை வெட்டித் தள்ளிவிடும்; சுட்டுப் பொசுக்கிவிடும்! உங்களுக்கோ சத்திய தேவதை உண்மையான நல்ல தோழியாக விளங்குவாள். அவர்களுக்கோ அவள் பரம விரோதியாக விளங்குவாள். எனவேதான் அவள் இந்தப் பூமியில் ரகசியமாக உலவித் திரிகிறாள்!”

மீண்டும் அந்த ஜனக்கூட்டத்திலிருந்து கூச்சல்கள் கிளம்பின.

“கேளுங்கள், விசுவாசிகளே!”

“ஆ. சகோதரா! அவர்கள் இதற்காக உன்னைத் தண்டிப்பார்களே!’’

“உன்னைக் காட்டிக் கொடுத்தது யார்?”

“தேவாலய மத குரு!” என்று ஒரு போலீஸ்காரன் பதில் சொன்னான்.

இரண்டு முஜீக்குகள் வெஞ்சினத்தோடு கருவினார்கள்.

“அங்கே பாருங்கடா, பயல்களா!” என்று யாரோ எச்சரிப்பது, காதில் விழுந்தது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! திருவண்ணாமலை PRPC ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட் குற்றவாளிக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பச்சைக் கொடி !
நாடகமாடும் எடப்பாடி- மோடி அரசுகள் !

நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக கடந்த 1996-ம் ஆண்டு முதல் தூத்துக்குடி மக்கள் போராடி வருகின்றனர். தூத்துக்குடி மக்களுக்கு சுத்தமான காற்று, நீர், நோயற்ற வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டுமானால் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 22.05.2018 அன்று 14 அப்பாவிகளைப் படுகொலை செய்தது எடப்பாடி அரசு. இந்தப் படுகொலையை மூடி மறைப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக உப்பு சப்பற்ற அரசாணை ஒன்றை வெளியிட்டு ஆலையை மூடியது எடப்பாடி அரசு.


இந்த அரசாணை வலுவற்றது. எனவே ஜல்லிக்கட்டுக்கு செய்தததைப் போல ஸ்டெர்லைட்டுக்கும் அரசு கொள்கை முடிவு எடுத்து ஆலையை மூட வேண்டும் என பலரும் எச்சரித்த போது, உலக நீதிமன்றம் சென்றாலும் தமிழக அரசாணை செல்லும் என பிதற்றியது எடப்பாடி அரசு. ஆனால் தற்போது ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வெளிவந்த நாளிலிருந்து தூத்துக்குடி மக்கள் மீது கட்டற்ற அடக்குமுறையை ஏவி வருகிறது எடப்பாடி அரசு.

படிக்க:
♦ தூத்துக்குடி என்ன காஷ்மீரா ? மாவட்ட கலெக்டர் , எஸ்.பி.-யை பணி மாறுதல் செய் !
♦ தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம் | வாஞ்சிநாதன் உரை

ஸ்டெர்லைட் போராட்டம் என்பது தூத்துக்குடி மக்கள் போராட்டம் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவைப் பெற்ற போராட்டம். மீண்டும் ஸ்டெர்லைட்டைத் திறப்பது என்பது தமிழக மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டுள்ள சவால். தமிழக மக்களை அவமதிப்பது. உயிர்துறந்த 14 போராளிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவது. எனவே இழப்புகள், அடக்குமுறைகளுக்கு அஞ்சாத தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு தமிழக மக்கள் துணை நிற்க வேண்டும். ஒட்டு மொத்த தமிழகமும் எழுந்து நிற்காவிட்டால், தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து சொல்லொனாத் துயரங்களுக்கு ஆட்படுவர்.

  • ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம்!
  • நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை தமிழகத்தை விட்டே விரட்டியடிப்போம்!

தமிழக அரசே!

  • ஜல்லிக்கட்டுக்கு செய்ததைப் போல, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூடுவதற்கு உடனடியாக சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி கொள்கை முடிவு எடு! சிறப்பு சட்டம் இயற்று!

மேற்கண்ட முழக்கங்களை முன்வைத்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சார்ப்பில் 29.12.2018 அன்று மாலை திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதலில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தரத்தயங்கிய காவல்துறை, வழக்கறிஞர்களின் தொடர் முயற்சியால் இறுதியில் அனுமதி அளித்தது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை அமைப்பாளர் வழக்கறிஞர் சு.கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எழுச்சியோடு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.சீனி.கார்த்திகேயன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பாசறை பாபு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் கு.ஜோதி, நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் தோழர் ம.பி.கந்தன், நாம் தமிழர் கட்சியின் தோழர்.ஜெயச்சந்திரன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாகி வழக்கறிஞர் பொன்.சேகர் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர்.ஞானவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வழச்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்று போராடும் தூத்துக்குடி மக்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருவண்ணாமலை

மதுரையில் மங்கி வரும் ஆட்டோ இலக்கியம் !

வினவில் ‘ஆட்டோ இலக்கியம்’ பற்றிய வாசகர் புகைப்படஙகளை கோரும் அறிவிப்பு வந்த போதே, மனதில் பல மலரும் நினைவுகள் வந்து போயின.

எங்கள் மதுரையை பொறுத்தவரை நக்கலுக்கும், தமிழுக்கும் பஞ்சமே இருந்ததில்லை.

“பிரசவத்துக்கு இலவசம்” என சென்னை போன்ற நகரஙகளில் எழுதி வந்த காலங்களிலேயே, “கையை நம்பு! கண்ணை நம்பாதே!” (உழைப்பை நம்பு, பெண்கள் பின்னால் சுற்றாதே என கூறுகிறாராம்) என்பது முதல், “சிரித்தால் சிரிப்போம்! முறைத்தால் அடிப்போம்!!” போன்ற டெரர் பீஸ்கள் வரை பலதரப்பட்ட வாகனங்களில், பலதரப்பட்ட வாசகங்கள் அப்போது இருந்தன.

இன்னும், “மாமனாரிடம் காசு வாங்க, உனக்கு கையும் காலும் எதற்கு?” போன்ற வரதட்சணை எதிர்ப்பு வாசகங்கள், “ஆப்பரேசன் செய்யும் போது A,B,AB,O+, – ரத்தம் கேப்பியா? இல்ல ஓன் சாதி ரத்தம் கேப்பியா?” போன்ற சாதி வெறி எதிர்ப்பு வாசகங்கள் என பலவும் இருந்தன.

ஒருமுறை லாரி ஒன்றின் மின்கலப் பெட்டியில், “என்னை தவிக்க விட்டால், உங்களை தள்ள விடுவேன்” என்ற வித்தியாசமான வாசகத்தையும் அப்போது பார்த்த நினைவு உள்ளது.

படிக்க:
போராடு நல்லதே நடக்கும் – ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள் | பாகம் 1
♦ மதுரை டாஸ்மாக் கடைகளை மூடிய பெண்கள் போராட்டம் !

ஒரு காரின் பின்னே, “என்ன எழுதுறதுன்னு தெரியல” என ஒருவர் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தார்.

வித்தியாசமானதொரு வாகன வாசகத்தை பார்த்தது, 1997 நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில், அது நெல்லை-தூத்துக்குடி வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்து. நெல்லை கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்தின் அந்தப் பேருந்து முழுவதும் தூசி அப்பிக் கிடந்தது. அந்தப் பேருந்தின் பின் புற கண்ணாடியில், “நாசகர ஸ்டெர்லைட் ஆலையை தகற்போம்! நாடு மீண்டும் அடிமையாவதை தடுப்போம்!!” என அந்த தூசுகளிடையே விரல்களால் யாரோ எழுதி இருந்தார்கள்.

அதெல்லாம், மொபைல்போன்கள் எல்லாம் இல்லாததொரு காலம்…

chennai-auto-rickshaw-advertising-agencies-slider
மாதிரிப்படம்

ஆண்டிராய்டு மொபைல் வந்த பிறகு என்னை ஈர்த்தது ஒரு ஆட்டோ வாசகம்.
அது ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் போராடி வந்த காலம், நான் தமுக்கம் சென்று கொண்டு இருக்கிறேன். என் முன்னே செல்லும் ஆட்டோவின் பின்புறம் ஒரு வெள்ளை சார்ட் பேப்பரில் ஸ்கெட்ச் பேனாவால் பெரிதாக எழுதப்பட்டு இருந்தது. “தமுக்கம் செல்லும் தாய்மார்க்ளுக்கு இலவசம்” . அதை ஏனோ, அன்று போட்டோ பிடிக்க தோன்றவில்லை. இப்போது வருந்துகிறேன்.

சரி, இப்போது என்ன பிரச்சினை? ஆட்டோ இலக்கியத்திற்காக படமெடுக்கலாம் என மொபலை தூக்கிக் கொண்டு இப்போது கிளம்பினால், ஆட்டோக்களின் பின்புறமெங்கும், பெருவணிக நிறுவனங்களின் விளம்பரங்கள்!

வருத்தங்களுடன்
இரணியன்.

மோடியை விட்டுக் கொடுக்காமல் வெண்பா பாடுவதில் நம்பர் 1 தமிழ் நடிகர் யார் ?

ண்டு இறுதியை நெருங்கி விட்டோம். சிறந்த நடிகர்கள், சிறந்த மனிதர்கள், சிறந்த முன்னோடிகள், சிறந்த ஆளுமைகள் என ஊடகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு விருதுகள் வழங்கி வருகின்றன. மக்களுக்கு விருது வழங்கும் ஊடகங்களுக்கு விருது கொடுக்கும் முகமாக பாஜகவிற்கு நம்பர் ஒன் இடத்தில் சொம்படிக்கும் செய்தி சானல், மற்றும் நாளிதழ்களின் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தோம்.

இன்று கமலாலயத்திற்கு பிடில் வாசிக்கும் தமிழ் நடிகர்களை எடுத்துக் கொள்வோம். இன்னும் பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் என்று விருது பட்டியல் தொடர்கிறது. இத்தலைப்புகளுக்குரிய ஆளுமைகளை நண்பர்கள் பரிந்துரைக்கலாம்.

இன்றைய கணிப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட நடிகர்கள் ரஜினி, கமல், விசால், சூர்யா மற்றும் நீங்கள் புதிதாக சேர்க்க விரும்பும் ஒரு நடிகர்.

புத்தாண்டின் துவக்கத்தில் கருத்துக் கணிப்பில் வெல்லும் ஆளுமைகளுக்கு அட்டகாசமாக விருதுகள் வழங்கப்படும். காத்திருங்கள்!

மோடியை விட்டுக் கொடுக்காமல் வெண்பா பாடுவதில் நம்பர் 1 தமிழ் நடிகர் யார்?

♦ ரஜினி
♦ கமல்
♦ விஷால்
♦ சூர்யா

(பதில்களில் இருவரைத் தெரிவு செய்யலாம்)

 

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூபில் வாக்களிக்க :

https://www.youtube.com/user/vinavu/community

 

மார்க்சியம் ஒரு மனிதரின் பெயரில் இருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பணியாகும்

மார்க்ஸ் பிறந்தார் – 24
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

மார்க்சியத்தின் உருவாக்கத்தில் மார்க்சும் ஏங்கெல்சும் ஆற்றிய வரலாற்றுப் பணிகளை கூர்மையோடும் உணர்ச்சிகரமாகவும் எடுத்து வைக்கிறது இப்பகுதி. இரு மகத்தான மனிதர்களும் ஒருவருக்கொருவர் இணைந்தும், ஆதரவளித்தும், பகிர்ந்தும் எப்படி மார்க்சிய தத்துவத்தை வளர்த்தெடுத்தார்கள் என்பதை அறிய உதவுகிறார் நூலாசிரியர். ஏங்கெல்சின் பல்துறைத் திறமைகள், பல மொழிகளை அறிந்திருந்தது, தனது நண்பருக்காக சலீப்பூட்டும் வர்த்தகப் பணிகளை ஏற்றது, புரட்சியின் எதிர்காலத்தை மேதாவிலாசத்துடன் கணித்தது அனைத்தையும் சுருக்கமாக அறியத் தருகிறார் நூலாசிரியர். இறுதியில் இரண்டு மாபெரும் மனிதர்களின் வரலாற்றுப் பயணத்தை வியப்போடும், தோழமையோடும் அறிந்து கொண்ட உற்சாகத்தை பெறுகிறோம்.
– வினவு

10. மேதையின் அருகில் மற்றொரு மேதை – 1

நான் மார்க்சையும் எங்கெல்சையும் இன்னும் “நேசிக்கிறேன்”, அவர்களைத் திட்டுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. இல்லை, அவர்கள் உண்மையான மனிதர்கள்! நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையை நாம் விட்டுவிடக் கூடாது. வி. இ. லெனின்(1)

1880-களின் தொடக்கத்தில் மேற்கு ஐரோப்பா பாரிஸ் கம்யூன்வாதிகள் ஏற்படுத்திய புரட்சிகரமான கொந்தளிப்புக்களின் தாக்கத்தில் இன்னும் குமுறிக் கொண்டிருந்தது. ருஷ்யப் பேரரசு மிதவாதத்துடன் சல்லாபித்த பிறகு அதன் வாழ்க்கையிலேயே மிகக் கடுமையான, பிற்போக்குவாதப் பத்தாண்டுகளில் ஒன்றில் நுழைந்து விட்டது.

அங்கே “கலகம் செய்பவர்களையும்” “மிதவாதிகளையும்” களையெடுக்க வேண்டும், பண்ணையடிமை முறையை மறுபடியும் ஏற்படுத்த வேண்டும் என்ற பேச்சுக்கள் ஆரம்பமாயின; ருஷ்யாவின் முற்போக்கான அறிவுப் பகுதியினருடைய இதயங்களில் நம்பிக்கை முறிவும் ஆதரவற்ற நிலைமையும் குடியேறின.

புரட்சிகர இயக்கத்தின் மையம் ருஷ்யாவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது, புரட்சிகர இயக்கத்தில் புதிய எழுச்சி மற்றும் சோஷலிஸச் சீரமைப்புக்குரிய எல்லா நம்பிக்கைகளுமே இனி ருஷ்யாவுடன்தான் இணைக்கப்பட்டிருக்கின்றன என்று இந்தக் காலகட்டத்தில் சில ஐரோப்பிய அறிஞர்கள் கூறினார்கள். அவர்களில் பிரெடெரிக் எங்கெல்சும் ஒருவர். எங்கெல்ஸ் ருஷ்யப் புரட்சிக்காரரும் சோஷலிஸ்டுமான ஹேர்மன் லபாதினை 1883 மார்ச்சில் லண்டனில் சந்தித்த பொழுது பின்வருமாறு கூறினார்:

“பீட்டர்ஸ்பர்கில் அண்மை எதிர்காலத்தில் என்ன செய்யப்படும் என்பதைப் பொறுத்தே இப்பொழுது எல்லாம் இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள சிந்திக்கின்ற, தொலைநோக்குடைய, நுண்ணறிவுடைய மனிதர்கள் அனைவருடைய கண்களும் அதையே உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றன.”

பின்னர் அவர் இன்னும் அதிகத் திட்டவட்டமாகக் கூறினார்:

“ருஷ்யாதான் இந்த நூற்றாண்டின் பிரான்ஸ். ஒரு புதிய சோஷலிசப் புனரமைப்புக்கான புரட்சிகர முன்முயற்சி நியாயமாகவும் சட்ட ரீதியாகவும் ருஷ்யாவுக்கு உரியது.”(2)

ருஷ்யாவின் கடைசி ஜாரான இரண்டாவது நிக்கலாயைப் பற்றியும் அவருடைய ஆட்சியின் முடிவைப் பற்றியும் எங்கெல்சின் வர்ணனை மதிநுட்பம் நிறைந்தது:

“அவர் அறிவிலும் உடலிலும் பலவீனமான அரை முட்டாள். ஒருவருக்கொருவர் எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றவர்களிடம் வெறும் விளையாட்டு பொம்மையாக மட்டுமே இருக்கின்ற ஒரு நபருடைய தீர்மானமில்லாத ஆட்சிக்கு இதுதான் காரணம்: ருஷ்யாவின் எதேச்சாதிகார அமைப்பை வேரோடு ஒழித்துக் கட்டுவதற்கு இது அவசியமானதே.”(3)

படிக்க :
மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ? 
மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

எங்கெல்சின் இந்த முன்னறிவிப்பு சிறப்பானது என்றபோதிலும் அதில் எங்கெல்சின் அசாதாரணமான அறிவுக் கூர்மையைத் தவிர வேறு தெய்விகமான ஆரூடம் ஏதுமில்லை.

எங்கெல்சின் மதிநுட்பம் அவருடைய நண்பர்களைக் கூட அடிக்கடி ஆச்சரியப்படச் செய்வதுண்டு. 1848-ம் வருடப் புரட்சியின் போது மார்க்ஸ் வெளியிட்ட Neue Rheinische Zeitung, ஹங்கேரியில் நடைபெற்று வந்த புரட்சிகர யுத்தத்தைப் பற்றி சில சமயங்களில் கட்டுரைகளை வெளியிட்டது. அக்கட்டுரைகள் வளமான விவர ஞானத்தையும் இராணுவ நடவடிக்கைகளின் வளர்ச்சியைப் பற்றித் துல்லியமான முன்னறிவிப்பையும் கொண்டிருந்தபடியால் அவற்றை ஹங்கேரிய இராணுவத் தலைவர்களில் ஒருவர்தான் எழுதியிருக்க முடியும் என்று நம்பப்பட்டது. ஆனால் ஹங்கேரிக்கு ஒரு முறை கூடப் போகாத ஒரு இளைஞர் ஜெர்மனியில் இருந்து கொண்டு இக்கட்டுரைகளை எழுதினார். அந்த இளைஞருடைய பெயர் பிரெடெரிக் எங்கெல்ஸ்.

1870-ம் வருடத்தில் பிரெஞ்சு-பிரஷ்ய யுத்தத்தின் போது எங்கெல்ஸ் எழுதிய கட்டுரைகள் இராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தன; ஏனென்றால் அவர் ஸெடான் சண்டையையும் பிரெஞ்சு இராணுவத்தின் தோல்வியையும் முன்னரே அறிவித்திருந்தார். அன்று முதல் மார்க்ஸ் குடும்பத்தினர் அவருக்கு “ஜெனரல்” என்ற பட்டப்பெயரைக் கொடுத்தார்கள்.

எங்கெல்சின் கம்பீரமான இராணுவத் தோற்றமும் இதற்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். முதிர்ந்த வயதிலும் எங்கெல்சின் மிடுக்கான தோற்றம் அவருடைய நண்பர்களை பிரமிக்க வைத்தது. பிரெடெரிக் லெஸ்னர் அவரைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்: “எங்கெல்ஸ்…. ஒல்லியாக, உயரமாக இருந்தார், அவர் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கினார், அவர் பேச்சு சுருக்கமாகவும் உறுதியாகவும் இருக்கும், அவர் படைவீரரைப் போல விறைப்பாக நடப்பார்.”(4)

இராணுவப் போர்த்திற நுட்பங்களைப் பற்றி எங்கெல்சின் ஆராய்ச்சிகள் ஆழமானவை என்றாலும் அவை அவருடைய பல அக்கறைகளில் ஒன்றாக மட்டுமே இருந்தன. அவருடைய வளமான ஆளுமை அத்தகைய பல அக்கறைகளை வெற்றிகரமாக நிறைவேற்றக் கூடிய தகுதியைக் கொண்டிருந்தது.

மார்க்ஸ் குடும்பத்தாருடன் எங்கெல்ஸ்

எங்கெல்சின் பல்வகையான அக்கறைகளும் பரந்த அறிவும் திறமைகளும் அவருடைய தனியான குணாம்சங்களாகும். 19-ம் நூற்றாண்டு பண்பாட்டின் எல்லாத் துறைகளிலும் தலைசிறந்த மேதைகளை உருவாக்கியது. ஆனால் இந்தப் பின்னணியில் கூட எங்கெல்சின் கலைக்களஞ்சிய அறிவு (மார்க்சைப் போல) ஒப்புவமை இல்லாததாகும். இந்த அம்சத்தில் அவரை அரிஸ்டாட்டில், லியனார்டோ டாவீன்சி, கேதே, ஹெகல் ஆகியோருடன் ஒப்பிட முடியும். எங்கெல்ஸ் தத்துவஞானியாக, அரசியல் பொருளியலாளராக, வரலாற்றாசிரியராக, மொழியியலாளராக, இலக்கிய விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக, அரசியல் கட்டுரையாளராக இருந்தாரென்றல் இதைப் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் ஸ்தூலமான சமூகவியல் ஆராய்ச்சியை நிறுவியவர் என்று எங்கெல்சைக் குறிப்பிட முடியும்.

அவர் எழுதிய இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூல் அதற்குச் சிறந்த உதாரணமாகும். அவர் பெளதிகம், இயந்திரவியல், இரசாயனம், உயிரியல், கணிதம், வானியல் மற்றும் சில தொழில்நுட்பத் துறைகளில் ஆழமான புலமையைக் கொண்டிருந்தார். அதன் பலனாகத்தான் இயற்கையின் இயக்க இயல் என்ற தலைப்பில் அவர் எழுதிய நூலில் இயற்கை விஞ்ஞானங்களின் மொத்த வளர்ச்சியையுமே தத்துவஞான ரீதியில் பொதுமைப்படுத்துவதற்கு அவரால் முடிந்தது. அவர் பல மொழிகளில் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார்; அவற்றின் கிளை மொழிகளைக் கூட அவர் நன்றாகப் பேசக் கூடியவர்.

“எங்கெல்ஸ் இருபது மொழிகளில் திக்குகிறார்” என்று ஒரு சோஷலிஸ்ட் வேடிக்கையாகக் கூறியதுண்டு (உணர்ச்சி வசப்படுகின்ற பொழுது எங்கெல்ஸ் சிறிதளவு திக்குவதுண்டு). அதே சமயத்தில் அவர் தந்தக் கோபுரத்தில் உட்கார்ந்திருக்கும் படிப்பாளி அல்ல, புத்தகப் புழுவும் அல்ல. அவர் விளையாட்டுக்கள் குதிரையேற்றம், வேட்டையாடுதல் ஆகியவற்றில் பங்கெடுப்பார்; அவர் கடை உதவியாளராக, வர்த்தகராக, வர்த்தகப் பயணியாக, தொழிலதிபராக, நிதியதிபராகவும் இருக்க வேண்டுமென்பது விதியின் முடிவு. அவர் அறிவின் எல்லாத் துறைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்-பிரசவ மருத்துவமும் அதில் அடங்கியிருந்தது.

இளமைப் பருவத்தில் எங்கெல்ஸ் கவிதைகளை எழுதுவதில் ஆர்வத்தோடு முயற்சி செய்தார், எதிர்காலத்தில் இலக்கியம் அல்லது கலைத் துறையில் சேவை புரிய வேண்டும் என்றும் தீவிரமாக நினைத்தார். அவர் கணிசமான கவிதை நூல்களை எழுதினார். இவை அக்காலத்திய பத்திரிகைகளில் வெளிவந்தன. அவற்றின் நகைச்சுவையையும் அங்கதத் திறமையையும் விமரிசகர்கள் பாராட்டினார்கள்.

1840-களின் தொடக்கத்தில் எங்கெல்ஸ் ஒரு ரெஜிமெண்டில் இராணுவ சேவை செய்தார். பிறகு பாடேன் எழுச்சியில் பங்கெடுத்தார். மூன்று சண்டைகளில் போராடினார். போர்க்களத்தில் அவரைப் பார்த்தவர்கள் அனைவரும் அவருடைய வீரத்தையும் நிதானத்தையும் நெடுங்காலம் வரை நினைவில் வைத்திருந்தார்கள்.

1830-களின் முடிவுக்குள்ளாகவே பிரெடெரிக் எங்கெல்ஸ் தன்னுடைய எதிர்கால நண்பருடைய சிறப்புமிக்க திறமை, வெல்ல முடியாத ஆற்றல், அஞ்சா நெஞ்சம் ஆகியவற்றைப் பற்றி ஏராளமாகக் கேள்விப்பட்டிருந்தார். அவர்களுடைய முதல் சந்திப்பு 1842 நவம்பரில் கொலோனில் நடைபெற்றது. எங்கெல்ஸ் இங்கிலாந்துக்குப் போகும் வழியில் கொலோனில் Rhenische Zeitung அலுவலகத்துக்கு வந்தார். அப்பொழுது மார்க்ஸ் அப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அச்சந்திப்பு அவர்களுக்கிடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தவில்லை. காரணங்கள் சாதாரணமானவையே. ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர்கள் பாரிசில் மீண்டும் சந்தித்த பொழுது தாங்களிருவரும் சமூக வளர்ச்சியைப் பற்றி அடிப்படையில் ஒரே மாதிரியான கருத்துக்களுக்கு வெவ்வேறு பாதைகளின் மூலமாக வந்திருப்பதைக் கண்டனர்; அது அவர்களுக்கு அதிகமான மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஒரு முறை சந்தித்துவிட்ட பிறகு இருவருடைய பாதைகளும் மார்க்ஸ் மரணமடையும் வரை இணைந்தே சென்றன. மார்க்சியம் ஒரு மனிதருடைய பெயரைத் தாங்கியிருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்ஸ் ஒரு முறை எங்கெல்சைத் தன்னுடைய “alter ego” (“இரண்டாவது நான்”) என்று அறிமுகம் செய்தார்.

மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையிலிருந்த நட்பு மனிதர்களுக்கிடையில் நட்பைப் பற்றி தொன்மைக் காலத்தில் கூறப்பட்ட மிகவும் உணர்ச்சிகரமான கதைகளைக் காட்டிலும் கூட உயர்வானது என்று லெனின் ஒரு சமயத்தில் கூறினார்.

மார்க்சும் எங்கெல்சும் அறிவிலும் குணாம்சத்திலும் ஒத்த தன்மையுடையவர்கள் அல்ல; ஆனால் அதனால்தான் அவர்கள் ஒருவருக்கொருவர் மிகச் சிறப்பாகப் பொருந்தி உதவி செய்ய முடிந்தது.

நான் எப்பொழுதும் மார்க்சுக்குப் “பக்க வாத்தியமாகவே” இருந்தேன் என்று எங்கெல்ஸ் கூறிய சொற்களை எல்லோரும் வழக்கமாக மேற்கோள் காட்டுகிறார்கள். அது உண்மை தான். ஆனால் மார்க்ஸ் ஒரு சமயத்தில் தன் நண்பருக்குப் பின்வருமாறு எழுதினார்: “முதலாவதாக எல்லாமே எனக்குத் தாமதமாகத்தான் தெரிகிறது, இரண்டாவதாக, நான் எப்பொழுதும் உங்களுடைய காலடிகளைப் பின்தொடர்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.”(5) மார்க்ஸ் எழுதியிருக்கும் சாட்சியத்தை நாம் மறக்கக் கூடாது.

எங்கெல்ஸ் அசாதாரணமான திறமைகளைக் கொண்டவரே என்றாலும் அறிவின் படைப்புச் சக்தியில், மென்மேலும் புதியனவற்றைத் தேடுகின்ற ஆராய்ச்சி சிந்தனையின் தகுதி மற்றும் ஆழத்தில், மேலான இயக்கவியல் ரீதியான நடையழகில், பொதுமைப்படுத்தல்களின் மணிச் சுருக்கச் செறிவில் அவரை மார்க்சுடன் ஒப்பிட முடியாது என்பது உண்மையே. ஆனால் சில விஷயங்களில் எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் தகுதி மிக்கவராக இருந்தார். புதியனவற்றைத் தன்வயப்படுத்திக் கொண்டு திருத்தியமைப்பது அவருக்குச் சுலபம், ஒரே பொருளைப் பற்றிய ஆராய்ச்சியில் நெடுங்காலம் மூழ்கிப் போய்விட மாட்டார், விஞ்ஞானம் மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய மிகப் பல்வேறான துறைகளின் விவரங்களை அவர் மிகச் சுதந்திரமான முறையில் ஒருங்கிணைக்கக் கூடியவர்.

குறைவான ஆயுதங்களை வைத்திருந்த போர் வீரராகிய எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் அதிகமான வேகத்தோடு சென்றார், சூழ்ச்சி முறைத் திறத்தில் அதிகச் சுதந்திரமாக இயங்கினார், எதிரியின் கோட்டைகளை முன்னேறித் தாக்கினர் என்று எங்கெல்சைப் பற்றிச் சிறந்த ஆராய்ச்சிகளைச் செய்திருக்கும் சோவியத் அறிஞர் எம். செரெப்ரியக்கோவ் கூறியிருப்பது பொருத்தமானதே. விஞ்ஞான கம்யூனிச மூலவர்களின் ஆன்மிக வளர்ச்சியின் தொடக்கக் கட்டங்களில் கூட இது தெளிவாகத் தெரிந்தது.

படிக்க :
மூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி ?
இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம் ! சிறப்புக் கட்டுரை

எங்கெல்ஸ் மார்க்சைக் காட்டிலும் இரண்டு வயது இளையவர் என்றாலும் அவரைக் காட்டிலும் முன்பே பத்திரிகைகளில் – முதலில் கவிதையும் பிறகு கட்டுரைகளும் – எழுதத் தொடங்கினார். அன்றைக்கிருந்த சமூக அமைப்பை எதிர்ப்பதிலும் அவர் முந்தினார், மார்க்சுக்கு முன்பே அவர் புரட்சிகர ஜனநாயகவாதியாகவும் குடியரசுவாதியாகவும் மாறினார். அவர்களிருவரில் அவர்தான் முதலில் கற்பனாவாத சோஷலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் – அதன் அன்றைய வடிவத்தில் – மாறினார்; அரசியல் பொருளாதாரத்தை முதலில் விமர்சனம் செய்ததும் அவரே. அவருடைய முதல் “அடிச்சுவடுகளைப்” பின்தொடர்ந்தே மார்க்ஸ் இயற்கை விஞ்ஞானத்தின் சாதனைகளில் அக்கறை எடுத்துக் கொண்டார்.

ஆனால் எங்கெல்ஸ் மேதாவிலாசம் நிறைந்த உருவரைகளை எழுதிய அதே துறையில் மார்க்ஸ் சகாப்தத்தைப் படைக்கின்ற நூல்களை எழுதினார். ஒவ்வொருவரும் தனித்துவம் நிறைந்த நடை, திறமைகள் மற்றும் தமக்கே உரிய விஞ்ஞான விருப்பார்வங்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒருவர் மீதொருவர் கொண்டிருந்த ஈடுபாட்டை அதிகப்படுத்துவதற்கு இது உதவியது. எங்கெல்ஸ் ஒரு கலைக்களஞ்சியத்தைப் போன்றவர் என்று மார்க்ஸ் கருதினார். பகல் அல்லது இரவில் எந்த நேரத்திலும் வேலை செய்யக் கூடிய அவருடைய திறமையை, அவருடைய வேகமான எழுத்தை, அவர் “அரக்கத்தனமான” அறிவுக் கூர்மையைக் கொண்டிருந்ததை மார்க்ஸ் வியந்து போற்றினார்.

அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி அவர்களுடைய ஆராய்ச்சிகளை இன்னும் நுணுக்கமாக விவாதிப்பது அவசியம். அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனத்துக்கு உருவரைகள் என்ற தலைப்பில் எங்கெல்ஸ் எழுதிய கட்டுரை 1844-இல் Deutsch-Französische Jahrbücherஇல் வெளியாயிற்று. அதன் ஆசிரியருக்கு அப்பொழுது இருபத்துநான்கு வயதே ஆகியிருந்தது. ஆனால் அக்கட்டுரை நவீன சமூகத்தின் வாழ்க்கையைப் பற்றி அடிப்படையான கேள்விகளை மிகத் துணிவாகவும் ஆணித்தரமாகவும் எழுப்பியபடியால், அதுவரை யாரும் சந்தேகிக்கத் துணியாத மூலச்சிறப்பான அரசியல் பொருளாதாரத்தின் வறட்டுக் கோட்பாடுகளை முழுமையாக விமர்சித்தபடியால் எங்கெல்ஸ் அந்தத் துறையில் அறிஞர் என்று உடனடியாக அங்கீகரிக்கப்பட்டார்.

அந்தக் கட்டுரை அடிப்படையில் புதுமையான பல கருத்துக்களைக் கொண்டிருந்தது, மார்க்ஸ் பிற்காலத்தில் மூலதனத்தில் இவற்றை வளர்த்துக் கூறினார். அதுதான் விஞ்ஞான சோஷலிசத்தின் முதல் பொருளாதாரக் கட்டுரை என்பது உண்மை. மார்க்ஸ் மூலதனத்தில் இக்கட்டுரையை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.

இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு இங்கிலாந்தில் தொழிலாளிவர்க்கத்தின் நிலைமை என்ற நூலை எங்கெல்ஸ் வெளியிட்டார். அந்தப் புத்தகம் ஏராளமான மெய்விவரங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது, பாட்டாளி வர்க்கம் துன்பப்பட்டு நலிகின்ற வர்க்கம் மட்டுமல்ல, சமூகத்தில் புரட்சிகரமான பாத்திரத்தைக் கொண்டிருக்கின்ற வர்க்கம் என்ற முடிவுக்கு எங்கெல்ஸ் வருவதற்கு அவை ஆதாரமாக இருந்தன.

இப்புத்தகம் எவ்வளவு புதுமையான முறையில், உணர்ச்சி வேகத்தோடு எழுதப்பட்டிருந்தது என்று மார்க்ஸ் பிற்காலத்தில் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார். அதன் துணிவான முன்னறிவை, கல்வி ரீதியான அல்லது விஞ்ஞான ரீதியான சந்தேகங்கள் இல்லாதிருத்தலை மார்க்ஸ் போற்றினார். லெனினும் இப்புத்தகத்தை மிகவும் உயர்வாகக் கருதினார். தொழிலாளி வர்க்கத்தின் துன்ப நிலையைப் பற்றி இவ்வளவு ஆணித்தரமான, உண்மையான சித்திரம் 1845-க்கு முன்னரோ அல்லது பின்னரோ எழுதப்படவில்லை என்பது அவருடைய கருத்தாகும்.

இவ்வளவு சிறப்பான அரங்கேற்றத்துக்குப் பிறகு அவருடைய அடுத்த பெரிய நூல் 1878-இல் வெளியாயிற்று. இந்த இரண்டு புத்தகங்களுக்கும் இடைவெளி முப்பத்துமூன்று வருடங்கள். ஆனால் இந்த நீண்ட காலத்தின் போது அவர் முற்றிலும் எழுதாமலிருந்து விடவில்லை. எங்கெல்ஸ் பத்திரிகைகளிலும் பிரசுரங்களிலும் எண்ணற்ற கட்டுரைகளை எழுதினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரால் பெரிய அளவில் ஒரு நூலை எழுத முடியவில்லை. இது அவருடைய வாழ்க்கையில் மிகவும் வருத்தமளிக்கின்ற அம்சங்களில் ஒன்றாகும்.

மார்க்சும் எங்கெல்சும் ஜெர்மனியின் புரட்சிகரமான சம்பவங்களில் மிகச் சுறுசுறுப்பான, நேரடியான பாத்திரத்தை வகித்த பிறகு 1849-இல் ஜெர்மனியிலிருந்து வெளியேறி இங்கிலாந்துக்கு வந்தனர். மார்க்ஸ் குடும்பம் இங்கிலாந்தில் வாழ்க்கை நடத்துவதற்கு எந்த வழியும் இல்லாமலிருந்தபடியால் எங்கெல்ஸ் அவர்களுக்கு உதவி செய்ய விரும்பினார். எனவே மாஞ்செஸ்டரில் அவருடைய தகப்பனார் பங்கு தாரராக இருந்த நெசவாலையில் எழுத்தராக வேலை செய்தார். இந்த “வர்த்தக அடிமைத் தனத்துக்கு” அவர் இருபது வருடங்களே தியாகம் செய்தார்!

இந்தக் காலம் முழுவதும் மார்க்சும் எங்கெல்சும் உற்சாகமான கடிதத் தொடர்பு வைத்திருந்தார்கள். எங்கெல்ஸ் மிகவும் வசதியான நிலைமையில் இருந்ததாகச் சொல்ல முடியாது, ஆனால் அநேகமாக ஒவ்வொரு கடிதத்திலும் மார்க்சுக்கு ஏதாவதொரு சிறு தொகைக்கு செக் வைத்திருப்பதாக அவர் எழுதுவதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட தியாகத்தைச் செய்வதும் அதை ஏற்றுக் கொள்வதும் மிகவும் மேன்மையான மனிதர்களால் தான் முடியும் என்று ஃப்ரான்ஸ் மேரிங் எழுதியிருப்பது முற்றிலும் சரியே. அது வெறும் பொருளாயத உதவியைப் பற்றிய பிரச்சினை அல்ல.

New-York Daily Tribune stairs என்ற பத்திரிக்கை மார்க்சைக் கட்டுரைகள் எழுதும்படி கேட்டுக் கொண்ட பொழுது அவர் எழுதிய கட்டுரைகளை எங்கெல்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஏனென்றால் அவருடைய நண்பர் ஆங்கிலத்தில் இன்னும் போதிய சொல்வளம் பெற்றிருக்கவில்லை.

மார்க்ஸ் மூலதனம் நூலை எழுதிக் கொண்டிருந்த பொழுது தோன்றிய கடினமான எல்லாப் பிரச்சினைகளையும் எங்கெல்சுடன் விவாதித்தார். மேலும் எங்கெல்சினுடைய கருத்து மார்க்சுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. மார்க்ஸ் தன்னுடைய லண்டன் வாழ்க்கைக் காலகட்டத்தில் எங்கெல்சைக் கலந்து கொள்ளாமல் ஒரு நடவடிக்கை கூடச் செய்யவில்லை, ஒரு புத்தகம் கூட வெளியிடவில்லை.

அவர்கள் புனிதக் குடும்பம், ஜெர்மன் சித்தாந்தம் ஆகிய நூல்களைக் கூட்டாக எழுதினார்கள். அந்தப் படைப்பாற்றல் கொண்ட ஒத்துழைப்பில் தொடங்கிய நட்பு அவர்களுடைய புரட்சிகர நடவடிக்கையினால் பலமடைந்து காலப் போக்கில் மேலும் வலுப்பெற்றது. அவர்களுடைய ஆன்மிக உறவு மிகவும் பலமாக இருந்தபடியால் ஒருவரின்றி அடுத்தவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

குறிப்புகள்:

(1)V. I. Lenin, Collected Works, vol. 35, p. 281.
(2) Reminiscences of Marx and Engels, p. 205.
(3) Marx, Engels, Werke, Bd, 39, Berlin, 1968, S.313.
(4) Reminiscences of Marx and Engels, p. 174.
(5) Marx, Engels, Werke, Bd. 30, S. 418.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய 23 பாகங்களை படிக்க:

மார்க்ஸ் பிறந்தார் வரலாற்றுத் தொடர்

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம் !

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல, அரசுப்பள்ளிகளின் வாழ்வுக்குமான போராட்டம்!
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தோள்கொடுப்போம் !

டைநிலை ஆசிரியர்களின் உண்ணாநிலை போராட்டம் கடந்த 5 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் பலர், 40,000/- ரூபாய் அல்லது 50,000 சம்பாதிக்கிற ஆசிரியர்கள் ஏன் போராடணும்? கொழுப்பெடுத்து உண்ணா விரதம் இருக்காங்க-என்று நினைக்கிறார்கள். அதனாலேயே இந்த போராட்டத்தையும் அவர்கள் கண்டு கொள்வதில்லை.

உண்மை நிலை என்ன ?

2009-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே இந்த அளவிற்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதற்குப்பின் சேர்ந்த ஆசிரியர்கள் அடிப்படை ஊதியமாக வெறும் ரூபாய் 5,200 மட்டுமே பெறுகின்றனர். 10 ஆண்டுகளாக வேலை செய்யும் ஆசிரியர்களே இப்போதுதான் 23,000 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். அதற்கும் குறைவான வருடங்கள் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், இதைவிடக் குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். இவர்களின் ஊதியம் மத்திய அரசு துப்புரவு தொழிலாளிகளின் ஊதியத்துக்கு இணையானது மட்டுமே.

ஏன் இந்த நிலை ?

ஒரே வேலை செய்யும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரே சம்பளம் தராமல், 2009-க்கு முன், 2009-க்குப் பின் என பிரிப்பதற்கு என்ன காரணம்?

2009-இல் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியை 10-ஆம் வகுப்பு என கெசட்டில் வெளியிட்டு அவர்களுக்கு அடிப்படை சம்பளம் 8,370-லிருந்து, 5,200 ஆக குறைக்கப்பட்டதுதான் பிரச்சினைக்கு காரணம்.

ஆனால், இந்த ஆசிரியர்களின் தகுதியோ, MA/MSC, B.Ed/ M.Ed வரை படித்துள்ளனர். மிகுந்த சிரமப்பட்டு TET தேர்வுகளையும் எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வூதியமும் கிடையாது. தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைக்கு இணையாகத் தான் இவர்களும் உள்ளனர்.

பெரும்பாலான ஆசிரியர்கள், சொந்த மாவட்டத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள மாவட்டங்களில்தான் வேலை பார்க்கின்றனர். செலவுகளை குறைக்க, குடும்பத்தினரை சொந்த ஊரில் விட்டுவிட்டு, வேலை பார்க்கும் இடத்தில் வீடெடுத்து தங்கி, சமைத்து சாப்பிட்டு வேலைக்கு சென்று வருகின்றனர்.

ஊருக்கு சென்றால், 2,000 ரூபாய் வரை செலவாகும் என்பதால், மாதம் ஒரு முறை அல்லது 2 – 3 மாதங்களுக்கொரு முறைதான் வீட்டிற்கு செல்கின்றனர்.
சில ஆசிரியர்கள் வேலை செய்யும் ஊருக்கு போக்குவரத்து வசதி அதிகம் இல்லாதிருப்பதால், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இதற்கு பெட்ரோல் செலவே மாதம் 3,000 ரூபாய் வரை ஆகிறது.

Teachers Protest DMS Campus (20)
போராட்ட கோரிக்கைகலைத் திரித்து தினகரன் நாளிதழில் வந்த செய்தி.

“பள்ளியில் கடன் வாங்கியதற்காக மாதம் 4,000 ரூபாய் வரை பிடித்தம் செய்துவிட்டு 17,000 ரூபாய்தான் கையில் வாங்குகிறோம். ஏறுகிற விலைவாசியில் இதைக் கொண்டு எப்படி வாழ்வது? குடும்ப செலவுகள், மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடியாமல் கந்துவட்டிக்கும்கூட கடன் வாங்குகின்றனர்.” என்று உண்மை நிலவரத்தை எடுத்துரைக்கிறார்கள் ஆசிரியர்கள்.

இவர்கள் கேட்பது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் அல்ல;
ஊதிய உயர்வும் அல்ல; நிலுவைத் தொகையும் அல்ல “சக ஊழியருக்கு இணையான, சம வேலைக்கு சம ஊதிய உரிமை மட்டுமே!!” ஆனால், இதைக் கூட பத்திரிக்கைகள் சரியாக மக்களிடம் கொண்டு செல்லவில்லை.

போராட்ட சூழல்

அடிப்படை வசதிகள் ஏதுமற்ற, குப்பைகளும், சாம்பலும் நிறைந்த இடம்தான் போராடும் இடம். அதை இவர்களே சுத்தம் செய்து அமர்ந்திருக்கின்றனர். பூரான், தேள், நட்டுவாக்கிளிகளால் கடிபட்டுக் கொண்டு, பாம்புகளின் நடமாட்டத்தினூடே, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போராடுகின்றனர்.

4 நாட்களாக உணவு, தண்ணீர் ஏதும் அருந்தாமல் நடந்த போராட்டத்தில், வயிற்று வலி, வயிற்றுக்கு பின்புறம் ஏற்படும் வலி தாளமுடியாமல் நேற்றிலிருந்து (27.12.2018) தண்ணீர் மட்டும் குடித்து வருகின்றனர். 5 நிமிடங்களுக்கு ஒருவர் மயக்கமடைந்து விழுகிறார். மயக்கமடைபவர்களின் அருகில் இருப்பவர்கள் கைதட்டி மருத்துவ உதவியைக் கேட்கின்றனர். 108-லிருந்து வந்துள்ள மருத்துவ பயிற்சியாளர்கள் முதலுதவி செய்து, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். மகிழ்ச்சியின் குறியீடான “கைதட்டல்” இங்கே மயக்கத்தின் குறியீடாக மாறியிருக்கிறது.

கர்ப்பிணிப்பெண்கள், கைக்குழந்தைகள், குழந்தைகளுடன் பெண் ஆசிரியர்களும், பால் பேதமின்றி கொட்டும் பனியிலும், அடிக்கும் வெயிலிலும் திறந்த வெளியில் பாதி மயக்க நிலையில் கிடக்கின்றனர். பகல் வேளையில் ஊடகங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வருகையால் உற்சாகமூட்டப்படும் இவர்கள், இரவில் மனவேதனையுடன் கண்ணீர் சிந்துகின்றனர்.

சிறுநீரகத் தொற்றாலும், பசி மயக்கம், மன உளைச்சலும் உள்ள ஆசிரியர்கள் சொல்வது, “நாங்கள் சொகுசு வாழ்க்கைக்கான சம்பளத்தைக் கேட்கவில்லை; வாழ்வதற்குத் தேவையான அடிப்படையான சம்பளத்தைத் தான் கேட்கிறோம்.” இவ்வளவு சிரமப்படுவது வறுமையிலிருந்து மீள்வதற்கு என்பதைத்தான் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பணிச் சூழல்

மூலைக்கு மூலை பள்ளிகளைத் திறந்து, தனியாரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் கல்வித் துறையில், தனியார் மோகம் மக்களிடம் கவிழ்ந்திருக்கும் சமூக சூழலில் அரசுப் பள்ளிக்கு வருவது யார்?

சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய சூழல் உள்ள மாணவர்கள்தாம். டாஸ்மாக்கால் குடிநோயாளியாகிப்போன தந்தை அல்லது தாய் மட்டுமே வளர்க்கும் குழந்தைகள், குடும்பச் சூழல் சிதைவுற்று தாத்தா- பாட்டியிடம் வளரும் குழந்தைகள், பெற்றோர் கண்காணித்து வளர்க்கும் குடும்ப சூழல் இல்லாத மாணவர்களுக்குதாம் இவர்கள் அறிவூட்டுகின்றனர்.

400-க்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு 100% தேர்ச்சி பெறும் மாணவர்கள் மத்தியில், அரசுப் பள்ளிகளிலும் தேர்ச்சி விகித்ததை அதிகரிக்க செய்வது இந்த ஆசிரியர்களின் முயற்சியும், உழைப்பும்தான்.

பசியுடன் வரும் குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவது, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்களைக் கூட சில ஆசிரியர்கள் தம் சொந்த செலவில் வாங்கித் தருகின்றனர். அரசுப்பள்ளிகளை ஒழித்துக் கட்டி, தனியாருக்கு தாரைவார்க்கத் துடிக்கும் இந்த அரசு, பள்ளிகளுக்கு போதுமான நிதி ஒதுக்காமல் மூன்றில் ஒரு பங்கு அளவுதான் நிதி தருகிறது.

பள்ளி தலைமை ஆசிரியர்கள், தனிநபர்கள், தொண்டு நிறுவனங்களிடம் நன்கொடை வாங்கிதான் பள்ளியின் இதர நிர்வாக செலவுகளை நடத்துகின்றனர். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இல்லையென்றால், அரசுப்பள்ளிகளே இல்லை என்பதுதான் உண்மை.

இவர்களால்தான் இப்பள்ளிகள் இயங்குகின்றன. ஆசிரியர்களின் முயற்சி இல்லையென்றால் எல்லா அரசுப் பள்ளிகளும் எப்போதோ பூட்டப்பட்டிருக்கும்.
அந்த வகையில், இப்போராட்டம் இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல, அரசுப்பள்ளிகளின் வாழ்வுக்குமான போராட்டம்!

ஆசிரியர்கள் கூறுவது என்ன ?

ஆறு ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர் செந்தில்ராஜன் (பல்லடம்) கூறுவதாவது; “ஒரு டீச்சரா நா டிப்டாப்பா போகனும்… இந்த சம்பளத்துல நாங்க சொங்கி மாதிரி போய் உக்கார வேண்டியிருக்கு. பசங்க எப்டி எங்கள மதிப்பாங்க? நாங்களும் இதே போஸ்டிங்குக்கு எக்ஸாம் எழுதி தான வர்றோம். நெறைய பேரு நாங்க வெளியூருல தங்கி வேல செய்யுறோம். இதனால எங்களுக்கு ரெண்டு வீட்டுக்கு வாடக செலவு வருது.

எங்க உடம்ப வருத்திக்கிட்டு தான் நாங்க இந்த போராட்டத்த பண்றோம். கொழந்தைங்க எங்களோட பசியில இருக்காங்க. அவங்களுக்கு மறச்சு மறச்சு சோறு ஊட்டவேண்டிதாயிருக்கு. இதை வச்சிகூட மீடியா எங்க போராட்டத்த கொச்சப்படுத்தீருமோ என்னமோன்னு பயமா இருக்கு. இந்த போராட்டத்துல எங்க உடல்வலி மரத்துப்போயிருச்சு, ஆனா எங்களுக்கு வேற வழியில்ல.

நான் இந்த கல்வி சிஸ்டத்தையே மாத்தணும்னு தா.. இந்த டீச்சர் வேலைக்கு வந்தேன். இதுக்கு முன்னாடி நா.. டையிங் கம்பனில மாசம் 35,000 சம்பளத்துல இருந்தேன். அத விட்டுட்டு இப்டி வந்து உக்காந்துருக்கேன். எங்க போரட்டத்துல ஒருத்தர் செத்தாதான் பெரிய பிரச்சனையா மாரும்னா அதுக்கு நாங்க தயார். அடுத்த தலைமுறையாவது நல்லபடியா வாழனும்.”

மற்றொரு ஆசிரியை, “ பத்து வருஷமா இந்த பிரச்சன இருக்கு, இப்போ நாங்க அத போய் கேட்டா, என்ன பிரச்சனனு திரும்ப எங்ககிட்டையே கேட்டா எவ்ளோ கடுப்பா இருக்கும்? ‘என்னா கையபுடிச்சி இழுத்தயா’-ன்ற கதையா இருக்கு. இவங்க குடுக்குற சம்பளத்துல எங்களையே பாத்துக்க முடில, நாங்களே சத்துணவு சாப்பாடுதான் சாப்புடுறோம். இத நாங்க கேவலமா சொல்லல எங்க நெலம அவ்ளோ மோசமா இருக்கு. எங்க போராட்டத்துக்கு யார் வந்தாலும் சந்தோசம். வராட்டி நாங்களே தான் நடத்தனும். வலி எங்களுக்கு தானே.. ” என்றார்.

இன்னொருவரோ, “எங்கள் சொந்தக்காரங்க எல்லாம் நாங்க ஏதோ நெறய சம்பாதிக்கிற மாதிரி நினைக்கிறாங்க. அவங்ககிட்ட அவசரத்துக்கு கடன் கேட்டாக் கூட நம்பமாட்றாங்க. உண்மைய சொல்லணும்னா, உடம்பு சரியில்லன பக்கத்துல இருக்க ஜி.எச்-சுக்குத்தான் போறோம். இதை வெளியில சொன்னா யாரும் நம்பமாட்றாங்க. நீங்களாவது இதை வெளியில சொல்லுங்க” என்றார்.

போராட்டத்தை பார்வையிட வருகின்ற பிரபலங்களை மட்டும் காட்டும் ஊடகங்கள்.

எங்களோட சேர்ந்து வேலை பார்க்கும் ஆசிரியர்களே எங்களை ஒண்ணா நினைக்காம, 2009-க்குப் பின் வந்தவங்கனு நெனைக்கிறது கஷ்டமாக இருக்கு. ஆசிரியர்கள் அனைவரும் இதில் ஒன்றுபட்டு நின்றால் எளிதில் தீர்வு கிடைக்கும் என்கின்றனர் போராடும் ஆசிரியர்கள்

அரசுக்கு, “நாங்கள் செத்தாதான் கோரிக்கை நிறைவேறும்னா எத்தனை பேர் சாகணும்னு சொல்லுங்க. எங்க உயிரக் கொடுக்கவும் தயாரா இருக்கோம். எங்களுக்கு பின்னாடி வர்றவங்களாவது நல்லா வாழணும்” என்கின்றனர்.

ஆசிரியர்களின் அப்பாவித்தனமான கோரிக்கையைக் கேட்டு அரசு கள்ளச் சிரிப்பு சிரிக்கலாம். ஸ்டெர்லைட்டில் 14 பேரைக் கொன்ற இந்த இரக்கமற்ற அரசு கொக்கரித்தும் சிரிக்கலாம். ஆனால், நாம் மவுனம் காக்கலாமா?

சமூகத்திற்கான சேவையைப் போல், ஏழை மாணவர்களை வடிவமைக்கும் சிற்பிகள், அனிதாக்களை உருவாக்கும் ஆசிரியர்கள் செத்துக் கொண்டிருப்பதை கண்முன் கண்டுகொண்டு கைகட்டி நிற்கலாமா?

பள்ளி, கல்லூரி மாணவர்களே, முன்னாள் மாணவர்களே, அரசுப் பள்ளி ஆசிரியர்களே, பெற்றோர்களே, சமூக அக்கறையுள்ள இளைஞர்களே, போராடும் ஆசிரியர்களுடன் இணைந்து போராடுவோம். அலட்சியம் காட்டும் அரசின் செவிப்பறையைக் கிழிப்போம்.

ஓட்டுக்குப் பணம் வாங்குவதால் தமிழகம் முழுவதும் தேர்தலைப் புறக்கணிக்கலாமா ? கேள்வி பதில்

கேள்வி : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனில் தமிழகம் முழுதும்  ஆர்.கே நகர் தானே, அப்போ தேர்தல் புறக்கணிப்பு ஒன்று தானே வழி ?

– ஆர் ராதாகிருஷ்ணன்

ன்புள்ள ராதாகிருஷ்ணன்,

காசு வாங்கி ஓட்டுப்போடும் மக்களை திட்டுவதில் கமலஹாசன் போன்றோர் கூட ’தைரியமாக’ திட்டுகிறார்கள். முன்னதை விட பின்னதுதான் பிரச்சினை.

ஒரு தோராயமான மதிப்பீட்டின் படி 2 இலட்சம் வாக்காளர்களைக் கொண்ட தமிழக சட்டமன்ற தொகுதி ஒன்றில் 65 முதல் 70% வாக்குகள் பதிவாகின்றன. அதில் வெற்றி பெறும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் முப்பது முதல் நாற்பது சதவீத வாக்குகளைப் பெறுகிறார். இதன்படி தொகுதி மக்களில் 56,000 பேர் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த 56,000 பேர்களில் அதீத ஏழைகள், உதிரிப்பாட்டாளிகள் பத்து சதவீதம் என்றால் சுமார் 5,600-ம் பேர் இருப்பார்கள். என்றால் இவர்களுக்கு மட்டும்தான் அந்த வேட்பாளர் பணம் கொடுக்க வேண்டும். 5,600 பேர்களுக்கு ரூ 500 கொடுத்தாலே மொத்தம் 28 இலட்ச ரூபாய் வருகிறது. சரி 10,000 பேர்களுக்கு கொடுப்பது என்றால் 50 இலட்சம் வருகிறது. 234 தொகுதிகள் என்றால் 117 கோடி ரூபாய் வருகிறது. அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் போன்று பில்லியனர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இந்த சராசரி கூடலாம்.

எல்லா தொகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை. அது சாத்தியமும் இல்லை. நலிந்த பிரிவினரில் நமக்கு யார் ஓட்டுப் போடுவார்கள் என்பதை உறுதி செய்தே பணம் கொடுக்கிறார்கள். இரண்டு இலட்சம் மக்கள் தொகையில் 5000 பேர்கள் பணம் வாங்குவதால் முழு மக்களும் வாங்குகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில ஊர்கள், பகுதிகளில் ஊர்க் கமிட்டி மூலம் மொத்தமாகவும் பணம் வாங்குகிறார்கள். அல்லது கோவில் கொடை, திருப்பணி என்றும் வாங்குகிறார்கள். எனவே பணம் வாங்கும் போக்கு அதிகரித்திருப்பது உண்மைதான்.

பணம் வாங்குவது மூலமாக சமீப ஆண்டுகளில் மக்களின் நேர்மை வீழ்ச்சியடைந்திருப்பதையும் காட்டுகிறது. இந்த வீழ்ச்சி எந்த அளவுக்கு சரிந்திருக்கிறது என்றால் இரு கட்சிகளிடம் காசு வாங்குவது, எல்லா கட்சிகளிலும் காசு வாங்கி காசுக்கேற்ற மாதிரி குடும்பத்தின் வாக்குகளை பங்கு வைப்பது, அதிக வாக்காளர்கள் இருந்தால் அந்தக் குடும்பத்திற்கு பத்தாயிரம், ஐயாயிரம் ரூபாய் பெறுவது என்று இந்த ஏற்பாடுகளுக்கு முடிவே இல்லை.

படிக்க:
♦ ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து : அதே ஆம்பூர் பிரியாணி அதே தேர்தல் ஆணையம் !
♦ அரசியல் கட்டமைப்பில் அதிகரித்து வரும் அராஜகம் : மக்கள் அதிகாரமே மாற்று !

பணம் வாங்கினாலும், வாங்கா விட்டாலும் மக்களுக்கு இந்த தேர்தல் அரசியல் மூலம் தம் வாழ்வில் வசந்தம் மலர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதில்லை. மேற்கண்ட நேர்மையின்மைக்கு இதுவும் ஒரு காரணம். எவனோ எவளோ ஜெயிக்கட்டும், அவனால் அவளால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்றாலும் சில நூறு ரூபாய் பணம் வருவதை ஏன் இழக்க வேண்டும் என்று மக்கள் ‘பொதுநலம் கலந்த காரியவாதமாக’ எண்ணுகிறார்கள். தமது அரசியல் அமைப்புக்கள் சரியில்லை எனக் கருதும் மக்கள் அதை மாற்றுவதற்கு தாமும் போராட வேண்டும் எனக் கருதுவதில்லை. யாராவது ஒரு தேவதூதன், சூப்பர் ஸ்டார் வந்து அபயமளிப்பாரா என எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய எதிர்பார்ப்பில்தான் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் துணிந்து கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

இந்த அனாமதேயங்களும் சரி இந்த அரசியல் அமைப்புகளை ஜனநாயகம் என்று கருதுவோரும் சரி, வாக்களிப்பதை ஜனநாயகக் கடமையாகவும், காசு வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமெனவும் கூறுகிறார்கள். நம்மைப் பொறுத்த வரை மக்களுக்கு இடமில்லாத இந்த ஜனநாயக அமைப்பை மாற்றுவது குறித்து மக்கள் யோசிக்க வேண்டும், போரட வேண்டும் என்கிறோம். காசு வாங்குவது மட்டுமே பிரச்சினை அல்ல.

vote politics
நம்மைப் பொறுத்த வரை மக்களுக்கு இடமில்லாத இந்த ஜனநாயக அமைப்பை மாற்றுவது குறித்து மக்கள் யோசிக்க வேண்டும், போரட வேண்டும் என்கிறோம்.

அரசியல் உலகை சாக்கடை என பொதுப்புத்தியில் ஒரு அரசியலற்ற கருத்தியலை உருவாக்கும் ஊடகங்களே, மற்றொரு புறம் வாக்களிப்பதில் நேர்மையை வேண்டும் என கூறிகின்றன. அரசியலில் மக்கள் இறங்குவது என்பத தேர்தல் அரசியலோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல. நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள், ஊடகங்கள் அனைத்தும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மல்லுக் கட்டும் போது அதை எதிர்த்து நிற்க வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கருதுகிறார்கள் அல்லவா அவர்கள் யாரும் ஸ்டெர்லைட்டின் பிரச்சினையை தேர்தலோடு தொடர்புடையதாக கருதுவதில்லை. மேலும் தேர்தல் அரசியல் கட்சிகள் இந்த விடயத்தில் கையாலாகதவர்கள், கைவிட்டவர்கள் என்பதை அவர்களுடைய அனுபவமே கற்றுத் தந்திருக்கிறது. கூடவே அரசின் நீதிமன்றம், அதிகாவர்க்கம் போன்ற அமைப்புக்களும்தான்.

ஊடகங்கள் உருவாக்கும் அரசியலற்ற கருத்துருவாக்கத்திற்கு லஞ்சம் பற்றிய சித்தரிப்பு மற்றொரு சான்று. அன்றாட அரசு அலுவலகங்களில் பணம் கொடுக்க வேண்டிய அவஸ்தையை மாபெரும் ஊழலாக சித்தரித்து விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்புடைய மாபெரும் ஊழலை ஏதோ புரியாத புள்ளிவிவரமாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்திற்கு முறைகேடாக  காரியங்களை சாதித்து தொழில் நடத்தும் நாட்டில் அரசு அலுவலகங்களில் ஒரு சாதி சான்றிதழ் வாங்குவது பணம் கொடுக்காமலா கிடைக்கும்? காவல் நிலையங்களில் அடித்துக் கொல்லும் போலீசை தண்டிக்க முடியாத நாட்டில் போலீசால் நாட்டு மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? அல்லது ஒரு ரவுடியை எதிர்த்து எப்படி மக்கள் சண்டையிட முடியும்? நாட்டில் அதிகாரங்களை குவித்து வைத்திருக்கும் மேல் மட்டங்கள் அத்தனையும் முறைகேடு செய்வதோடு அதை மறைப்பதை சட்டப்படி செய்யும் போது கீழ்மட்ட நிர்வாக செயல்பாட்டில் என்ன தரம் வந்து விடும்? மேல அடிக்காமல் கீழே என்ன மாற்றம் வந்து விடும்? ஆனால் ஊடகங்கள் அனைத்தும் கீழே அடித்தால் நாடே உருப்பட்டுவிடும் என்று உளறுகிறார்கள்.

தேர்தல் புறக்கணிப்பு என்பது காசு வாங்குவதோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல, அது நமது உரிமைகளை பெறுவதற்காக மாற்று அரசியலை யோசிப்பதோடும் தொடர்புடையது.

ஆகவே தமிழகம் முழுவதும் தூத்துக்குடி மக்கள் போல ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் போல மக்கள் தமது கோரிக்கைகளை உரிமைகளை புரிந்து கொள்ளத் துவங்கினால், பிறகு ஆர்.கே.நகர் மட்டுமல்ல, தேர்தல் மூலமாக மட்டுமே மாற்றம் வரும் என்ற அறியாமைகளும் அலகத் துவங்கும்.

இறுதியில் மக்கள் தமது அதிகாரத்தை தாமே கையிலெடுத்தால்தான் சமூகத்தில் பரந்து பட்ட ஜனநாயகம் அமலுக்கு வரும். இதை மக்கள் புரிந்து கொள்வதற்கு காலம் எடுக்கும். அந்த காலத்தை துரிதப்படுத்துவது எப்படி என்பதே நம் முன் உள்ள பிரச்சினை!
♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

பாஜக-வின் கொள்கை பரப்பும் நம்பர் 1 நடுநிலை தமிழ் நாளிதழ் எது ? கருத்துக் கணிப்பு

பாஜக-வின் கட்சிப் பத்திரிகையாக செயல்படுவதில் நம்பர் 1 தமிழ் நாளிதழ் எது? கருத்துக் கணிப்பு

ஆண்டு இறுதியை நெருங்கி விட்டோம். சிறந்த மனிதர்கள், சிறந்த முன்னோடிகள், சிறந்த ஆளுமைகள் என ஊடகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு விருதுகள் வழங்கி வருகின்றன. மக்களுக்கு விருது வழங்கும் ஊடகங்களுக்கு விருது கொடுத்தால் என்ன? அதன்படி நேற்று பாஜகவிற்கு நம்பர் ஒன் இடத்தில் சொம்படிக்கும் செய்தி சானல் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தோம். இன்று நாளிதழ்களைப் பார்ப்போம். புத்தாண்டில் கருத்துக் கணிப்பு முடிவு அடிப்படையில் விருதுகளை வழங்க இருக்கிறோம்.

இன்றைய கணிப்பிற்காக நாம் தெரிவு செய்த நாளிதழ்கள் தினத்தந்தி, தினமலர், தினமணி, தி இந்து (இந்து தமிழ் திசை).

அன்றாடம் கூகுள் செய்திப் பக்கம் சென்று அதில் தமிழ் பிரிவில் பார்த்தால் பாஜக மற்றும் மோடி அரசின் குற்றச் செய்திகள் ஒன்று கூட இருக்காது. மாநில அளவில் உள்ள சமூக ரீதியிலான குற்றச் செய்திகள், எடப்பாடி அரசின் சில்லறைச் செய்திகள், முக்கிய பிரச்சினைகள் குறித்த நீதிமன்ற சால்ஜாப்புகள் இவைதான் இப்பத்திரிகைகளின்  தலைப்புச் செய்திகளாக இருக்கும். தலையங்க பக்கத்திலும் இதுவே நிலைமை.

கடந்த நான்கு நாட்கள் தலையங்க  செய்திகளை மட்டும் பாருங்கள்:

தினத்தந்தி: கம்யூட்டர் தகவல்கள் கண்காணிப்பு (இதில் மோடி அரசு குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை), இயற்கை சீற்றத்தில் இந்தோனேசியா – இலங்கை (பிரச்சினையே இல்லை), சிமெண்டுக்கு வரியை குறைக்க வேண்டும் ( இதில் ஜி.எஸ்.டி வரி குறைப்பிற்காக பாஜகவிற்கு பாராட்டு, பின்பு சிமெண்டு வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை), அரசு மருத்துவமனையிலேயே இந்த கொடுமையா ( பிரச்சினையே இல்லை), இலவச பஸ் பாஸ் இன்னும் வழங்கவில்லை (பிரச்சினையே இல்லை)

தினமலர்: மீண்டும் மீண்டும் பழைய பல்லவி ஏன்? (இதில் ஐந்து மாநில தேர்தல் முடிவகளுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் திட்டம் மறைமுகமாக பழைய பல்லவியாக விமர்சிக்கப்படுகிறது. இந்த பழைய பல்லவிக்கு எதிராக பாஜக புது திட்டங்கள் என்ன முன்வைக்கும்? என்ற ஆவலைக் கேட்கிறது), ஏதோ நடக்கிறது…(இலங்கை பாராளுமன்ற குழப்பம், பிரச்சினையே இல்லை), தனிநபர் உரிமைகள் பாதிப்பு ஏற்படுமா? (இதில் மத்திய அரசின் கணினி கண்காணிப்பு குறித்து எழுதியிருக்கிறார்கள். பயங்கரவாதிகளை கண்காணிக்க வேண்டிய அவசியத்தை விலியுறுத்தி விட்டு, மக்களுக்கு பாதிப்பு இருக்குமா, என விவாதம் நடத்தி சில திருத்தங்களை கொண்டு வரலாமாம்), நல்ல துவக்கம் வரட்டும் (இதில் தமிழகத்தில் தொழில் முதலீட்டிற்கு நல்ல அறிகுறைகள் தென்படுதாம்)

தி இந்து (இந்து தமிழ் திசை):

பருவநிலை ஒப்பந்தம்: நம்பிக்கையளிக்கும் கடோவிஸ் மாநாடு! (பிரச்சினையே இல்லை), வெண்மணியிலிருந்து என்ன கற்க வேண்டும்? (பிரச்சினையே இல்லை),  மணிப்பூர் பத்திரிகையாளர் கைது: ஜனநாயக விழுமியங்களுக்கு ஆபத்து! (இதில் மணிப்பூர் அரசு தவறாக பயன்படுத்தியிருப்பதாக சொல்லிவிட்டு, மாநில அரசுகள் இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று ஒரே போடாக போட்டு விட்டார்கள். மணிப்பூர் பத்திரிகையாளர் மோடி, பாஜகவை எதிர்த்து எழுதியதற்காக கைது என்பதால் அம்பை ஏவியவர் குறித்து எதுவுமில்லை), சிரியாவலிருந்து வெளியேறும் துருப்புகள்: டிரம்பின் பிடிவாதம் ஆபத்தானது! (பிரச்சினையே இல்லை)

தினமணி:

உறைகிறோம்..உருகுகிறோம்…! (வட இந்திய மாநிலங்களில் பனிப்பொழிவாம், பிரச்சினையே இல்லை), பாலமல்ல பாதுகாப்பு அரண்! (அஸ்ஸாம் பாலத்தை திறந்து வைத்த மோடிக்கு பாராட்டு), தடையரே கல்லாதவர்!( கல்வி குறித்து ஒரு சர்வே, அப்துல் கலாம் டைப் அட்வைசுகள், பிரச்சினையே இல்லை) கண் கெட்ட பின்னால் (இதில் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து தாமதமான முடிவு என்கிறார்கள். பாஜகவை மெல்லியதாக விமரிசித்து விட்டு காங்கிரசின் செயல்பாடும் மெச்சும்படியாக இல்லை என்கிறார்கள்.)

நான்கு நாட்கள் தலையங்கத்திலேயே இந்தனை வில்லங்கம் என்றால் நான்கு வருடத்தில் எப்படியெல்லாம் மானே தேனே போட்டு எழுதியிருப்பார்கள். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த மான் தேன் இன்னும் அமில அருவியாக கொட்டும்.

இன்றைய கேள்வி:

பாஜக-வின் கொள்கை பரப்பும் நம்பர் 1 நடுநிலை தமிழ் நாளிதழ் எது?

தினத்தந்தி
தினமலர்
தமிழ் இந்து திசை
தினமணி

(தெரிவு செய்யக் குழப்பமா? விடுங்கள், இரண்டு பதில்களை தெரிவு செய்யுங்கள்)

 

யூ-டியூபில் வக்களிக்க :

https://www.youtube.com/user/vinavu/community

கோதாவரி டெல்டாவின் கடைமடை கிராமம் ! பலுசுதிப்பா மீனவர்களின் சோகம் ! நேரடி ரிப்போர்ட்

காக்கிநாடாவின் பலுசுதிப்பா – பிரம்மசமேத்யம் கிராமம். பெரும்பாலும் மீனவர்கள் வாழும் பகுதி. புயலுக்கு முந்தைய நாள் வீசிய காற்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 22 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. வீட்டில் இருந்த எந்தப் பொருட்களும் மிஞ்சவில்லை.

தீப்பிடித்து எரிந்த குடிசையை அணைக்க பகுதி இளைஞர்கள் முயற்சி செய்தனர். ஆனால் சுழண்டு அடித்த காற்றில் தீ எங்கும் பரவியது. எரிந்து கொண்டிருந்த எல்லா வீட்டிலும் கேஸ் இருந்தது. எந்நேரமும் வெடித்து விடும் அபாயம் இருந்ததால் வீடு செல்வதை தவிர்த்துவிட்டு திரும்ப வந்து விட்டதாக கூறுகிறார்கள். அத்துடன் காலை வீசிய புயலும்-மழையும் அவர்களை உலுக்கி எடுத்து விட்டது.

இப்படி அடுத்தடுத்து இரட்டை தக்குதலுக்குள்ளான இந்த ஊர்தான் காக்கிநாடாவின் கடைக்கோடி கிராமம். கோதாவரி ஆற்றின் கடைமடைப் பகுதியும்கூட. கடற்பகுதியில் இருந்து வெறும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சரியாக சொன்னால் புயல் கரையை கடந்த முக்கியப் பகுதியாகும்.

இங்கு மொத்தம் 2,000 குடும்பங்கள் உள்ளன. அனைவரும் மீனவர்கள். அதில் 30 குடும்பங்கள் தலித் சாதியினையும் இருபது குடும்பங்கள் பிற்படுத்தபட்ட சாதியினைச் சார்ந்தவர்கள். மீனவர்களில் பாதிக்கும் மேல் மீன்பிடி தொழிலில் இல்லை. மீன் கடைகள், இதர தொழில்கள் செய்து பிழைத்து வருகிறார்கள்.

கடைமடை கால்வாயில் மீன் பிடித்தல்தான் இவர்களுக்கு வாழ்வளிக்கிறது

இக்கிராமத்தின் நடுவே செல்லும் கோதாவரி ஆற்றின் கிளைக்கால்வாயில்தான் ஃபைபர் மற்றும் கைத்துடுப்பு படகைக் கொண்டு பெரும்பாலனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

மேற்கே கால்வாயும், வட-தெற்கில் “மடாக் காடும்” உள்ளது. இம்மக்களுக்கு மீன்களை அள்ளிக் கொடுத்து வாழவைக்கும் இக்கால்வாயில், வெள்ளம் வந்தால் ஊருக்குள் சென்று அழிவையும் ஏற்படுத்தும்.

இந்த “மடாக் காடு” ஒவ்வொரு முறையும் வரும் பெரும் புயலின் பாதிப்பிலிருந்து மீனவ மக்களை காப்பாற்றுவதில் கணிசமான  பங்கும் வகிக்கிறது. இதுதான் இயற்கை இந்த கிராமத்திற்கு வழங்கியிருக்கும் விசித்திரமான சிறப்பு.

பலுசுதிப்பா ஊருக்குள் செல்ல ஒரே சாலைதான். அதுவும் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அதில் பயணம் செய்யும் எவரும் கடும் முதுகு வலியை சுமக்க நேரிடும். சாலைகளில் போதிய மின்விளக்குகள் இல்லாத பாதுகாப்பற்ற ஒரு பகுதியாக இருக்கிறது. இதன் பின்னணியில் இருந்து பார்த்தாலே புயல் பாதிப்பில் அரசின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது தெரிந்து விடும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சொல்கிறார்கள், “நாங்க சம்பாதிச்ச பணத்தை வங்கியில சேர்த்து வைப்பதோ, வேற செலவு செய்வதோ இல்லை. வரக்கூடிய பணத்தை வீட்டிலேயே வைத்துக் கொள்வோம்.  இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் பணம், நகை அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன. குறிப்பாக எரிந்த ஐந்து வீடுகளில் மட்டும் பணம், நகை என ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் மூன்று முதல் ஐந்து லட்சம் வரை மொத்தமும் பறிகொடுத்து விட்டோம்.

இனி எதையும் உபயோகிக்க முடியாத நிலையில் அனைத்து தீக்கிரையாகிவிட்ட்ன

இந்த இருபத்தி இரண்டு வீட்டில் இருந்து எந்த பொருளையும் எடுக்க முடியவில்லை. வெளியில் இருந்த பொருட்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு ஓடினோம். அவ்வளவுதான்.  உடுத்த துணி கூட இல்லாமல் பத்து நட்களாக கட்டிய துணியோடும், உறவினர்களிடம் இருந்தும் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

படிக்க:
புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்
கஜா புயல் : எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்

இங்கே ஓரளவிற்கு படித்தவர்கள் உண்டு. உயர்நிலைக் கல்வி மற்றும் கல்லூரி படிக்க ஆமலாபுரம் மற்றும் கட்ரேனிகோனா ஆகிய ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.  இந்த மாணவர்களின் கல்விச் சான்றிதழ் முதற்கொண்டு அனைத்தும் எரிந்து நாசமாகி விட்டது” என்கிறார்கள்.

கூடியிருந்தவர்களில் புயல் மற்றும் தீ விபத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட ஒருவரான சங்காயினி தர்மராவ் கூறும்போது. “எனக்கு 48 வயசு ஆகிறது. நான் படிக்கவில்லை. மனைவி பார்வதி. இரண்டு மகன், இரண்டு பொண்ணு. என் மூத்தப் பொண்ணு டிகிரி படிக்கிறார். இன்னொரு பொண்ணு மற்றும் பசங்க பள்ளியில் படிக்கிறாங்க.… இவங்களுடையை படிப்பு சம்மந்தப்பட்ட எதுவும் இல்லை.

சங்காயினி தர்மராவ்

வீட்டில் இருந்த ரேசன் கார்டு, ஆதார் கார்டெல்லாம் போயிடுச்சி. இதுபோக வீட்ல வச்சிருந்த நகை, பணம் எல்லாம் சேர்த்து 3 லட்சம் மொத்தமும் போய் விட்டது. நகை இருந்தாலாவது அடமானம் வைத்து தேவையை சமாளித்து விடலாம்.  இப்ப என்ன செய்யிறதுன்னு தெரியல.

கைத்துடுப்பு போட்டு ஆற்றிலும், எப்போதாவது கடலுக்குள், அதுவும் குறைந்த ஆழத்திற்கு மட்டும் சென்று பிடித்து வந்த மீன்களை எல்லாம் உள்ளூரிலேயே விற்று விடுவேன்.  ஒருநாளைக்கு 1,000 ரூபாய் கிடைக்கும். என்னிடம் இருந்து வாங்கி சென்று நகரம் மற்றும் சிறு நகரங்களில் விற்பனை செய்வார்கள்.  இந்த சம்பவம் நடந்த பிறகு இன்று வரை நான் உட்பட யாரும் கடலுக்கு செல்லவில்லை. எல்லோரும் பாதிப்படைந்திருக்கிறார்கள்” என்று கலங்குகிறார்.

“அரசாங்கத்துல இருந்து யாராவது வந்து பார்த்தாங்களா..?”

“ம்…………. பிரபுத்துவத்துல (அரசாங்கத்தில்) இருந்து எம்.எல்.ஏ முதல் எல்லோரும் வந்து பார்த்துட்டு நிவாரணம் தருவதாக சொன்னார்கள். ஆனால் இதுவரை அதுக்கான அறிவிப்பு வந்த மாதிரி தெரியவில்லை” ஆனா, பள்ளிக்கூடத்துல புயல் பாதிப்பு நிவாரணப் பொருட்களை வச்சிருக்காங்க.

“சரி….தமிழ்நாட்ல ஒக்கிப் புயல், கஜா புயல் பாதிப்பு பத்தி தெரியுமா?”.

“ம்..ஹும்… செய்தி எதுவும் பாக்குறதில்ல. வயசான நாங்க பொழுதுபோக்கு மாதிரி தான் பார்ப்போம். வெளியூர்ல இருக்க மற்ற மீனவர்களுடன் எந்த தொடர்பும் இல்ல. ஏன்னா நாங்க ஆழ்கடலுக்கு போயிட்டு மீன் பிடிக்கிறதில்லை” என்கிறார் கவலையுடன்.

இறைந்து கிடக்கும் அரிசி

ஊரில் இருந்து சற்று தொலைவில் ஒதுக்குப்புறமாக இருந்த பள்ளிக்கு சென்று பார்த்தபோது, கன்னாபின்னாவென்று அரசி எங்கும் கொட்டிக்கிடந்தது. அந்த அரிசியும் மக்கள் சாப்பிடக்கூடிய அளவிற்கு இல்லை. இன்னொரு பக்கம் உருளைக்கிழங்கு அழுகிப்போயி இருந்தது. முறையான விநியோகம் இல்லை. பொருட்களும் போதுமானதாகவும் இல்லை, தரமாகவும் இல்லை.  அதனைப் பெறுவதற்கே மக்களுக்குள் ஒரு பெரும் போட்டி நிலவிக்கொண்டிருந்தது.

விளம்பரத்திற்கு எந்தக் குறைச்சலும் இல்லை

புயல் நிவாரணமாக, அரிசி 50 கிலோ, சர்க்கரை அரை கிலோ, ஆயில் 1 லிட்டர், வெங்காயம் ஒரு கிலோ, உருளை ஒரு கிலோ, பருப்பு ஒரு கிலோ என்றார்கள்.  அதேபோல் பொங்கல் மற்றும் கிறுஸ்துமஸ்-க்காக சமையல் எண்ணெய் அரை லிட்டர், வெல்லம் அரை கிலோ, கோதுமை ஒரு கிலோ, நெய் 100 கிராம், சிறுபருப்பு ஒரு கிலோ, உளுந்து ஒரு கிலோ என்று வழங்குவதற்கும் கொண்டு வந்திருக்கிறார்கள்.  அப்படி வழங்கும் பையில் மட்டும் சந்திரபாபுவின் படம் பெரிதாக சிரித்த முகத்துடன் பளிச்சென்று இருந்தது.

இதுதான் புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பதற்காக எடுக்கப்பட்ட அதிகபட்ச நடவடிக்கை. மொத்தத்தில் இவர்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பது பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்தின் காவிரி டெல்டாவில் ஊருக்கே சோறு போட்ட விவசாயிகளையும், பல்வேறு புயல் மழை பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றிய மீனவர்களையும் எடப்பாடி அரசு எப்படி அலட்சியப்படுத்தியதோ, அதேமாதிரிதான் ஆந்திராவின் கோதாவரி டெல்டாவிலும் நடக்கிறது…! ஆந்திராவில் புயல் பாதிப்பு அதிகமில்லை என்பதால் இந்த அலட்சியம் பெரிய செய்தியாகவில்லை, அவ்வளவுதான்! எளிய மக்களை எந்த அரசும் கண் கொண்டு பார்ப்பதில்லை!

படம், செய்தி: வினவு செய்தியாளர்கள்,
ஆந்திரா, காக்கிநாடாவில் இருந்து..

அலெக்சாந்தர் படையெடுத்தார் – அரிஸ்டாட்டில் ஆய்வு செய்தார் | பொருளாதாரம் கற்போம் 5

1

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 5

வரலாற்றில் மனித சமூகத்தின் அறிவியலான சமூகவியலை நிறுவிய அறிஞர்களில் ஒருவர் அரிஸ்டாட்டில் என நூலின் ஆசிரியர் கூறுகிறார். நாடுகளை படையெடுத்து வென்று வந்த அலக்சாந்தரின் அவையில் இந்த அறிஞர் சமகால வாழ்வின் சமூகவியல் துறைகள் குறித்து ஆய்வு செய்கிறார். அந்த ஆய்வில் பருண்மையான விவரங்களை முன்வைத்து ஈடுபடுகிறார். அவர் காலத்திற்கு பிந்தைய தத்துவ உலகம் அரிஸ்டாட்டிலை மையமாகக் கொண்டே வாதிட்டு வந்தது. படியுங்கள். கட்டுரையின் இறுதியில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முயலுங்கள்!
-வினவு

முதல் தொடக்கம் : அரிஸ்டாட்டில்
அ.அனிக்கின்

கி. மு. 336-ம் வருடத்தில் மசிடோனியாவின் அரசர் ஃபிலீப் அவர் மகள் திருமணத்தின்போது வஞ்சகமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையை யார் தூண்டினார்கள் என்பது கடைசிவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

பாரசீகத்தை ஆட்சி செய்தவர்களே இந்தக் கொலையைத் தூண்டினார்கள் என்று சொல்வதுண்டு; அது உண்மையென்றால் அவர்கள் தங்களுக்கே இதைக் காட்டிலும் பெரிய தீமையைச் செய்திருக்க முடியாது. ஏனென்றால் ஃபிலீப்பின் இருபது வயது நிரம்பிய மகன் அலெக்ஸாந்தர் அரியணையில் அமர்ந்தார்; அவர் சில வருடங்களுக்குள்ளாகவே வலிமையான பாரசீகப் பேரரசை வெற்றி கொண்டார்.

Political-Economy-Aristotle-and-alexander
அரிஸ்டாட்டிலின் சீடராக அலெக்சாண்டர்

அலெக்ஸாந்தர் ஸ்டகீரா என்ற நகரத்தைச் சேர்ந்த அரிஸ்டாட்டில் என்ற தத்துவஞானியின் மாணவர். அலெக்ஸாந்தர் மசிடோனியாவின் சக்கரவர்த்தியான பொழுது அரிஸ்டாட்டிலுக்கு வயது நாற்பத்தெட்டு; அவருடைய புகழ் கிரேக்க உலகம் முழுவதிலும் விரிவாகப் பரவியிருந்தது. இதற்குச் சிறிது காலத்துக்குப் பிறகு அரிஸ்டாட்டில் மசிடோனியாவை விட்டு ஏத்தென்ஸ் நகரத்துக்குச் சென்றார். அதற்குக் காரணமென்னவென்று நமக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அலெக்ஸாந்தரோடு கருத்து வேறுபாடு அதற்குக் காரணம் அல்ல.

அவர்களிருவருக்கும் நல்ல உறவுகள் இருந்தன. அந்தத் திறமைமிக்க இளைஞர் பிற்காலத்தில் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுகிற, நிலையில்லாது நடந்து கொள்கின்ற கொடுங்கோலனாக மாறிய பிறகுதான் அவர்களுக்கிடையே உறவுகள் சீர்கேடடைந்தன. பண்டைக்கால உலகத்தின் கலாச்சார மையமாக ஏத்தென்ஸ் நகரம் இருந்த காரணத்தால் அரிஸ்டாட்டில் அந்த நகரத்தின்பால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். அங்குதான் அவருடைய ஆசிரியரான பிளேட்டோ வாழ்ந்து மடிந்தார்; அரிஸ்டாட்டிலும் தன்னுடைய இளமைப் பருவத்தை அங்கேதான் கழித்தார்.

காரணம் எதுவாக இருந்தபோதிலும், கி.மு. 335 அல்லது 334-ம் வருடத்தில் அரிஸ்டாட்டில் தன்னுடைய மனைவி, மகள், சுவீகார மகன் ஆகியோரோடு ஏத்தென்சுக்குப் போனார். அடுத்த பத்து அல்லது பன்னிரண்டு வருடங்களில் கிரேக்கர்களுக்குத் தெரிந்த எல்லா நாடுகளையும் அலெக்ஸாந்தர் பிடித்துக் கொண்டிருந்த காலத்தில், அரிஸ்டாட்டில் ஒரு மகத்தான விஞ்ஞான  மாளிகையை நிர்மாணித்தார்; தன்னுடைய வாழ்க்கைப் பணி முழுவதையும் குறிப்பிடத்தக்க வேகத்தோடு பொதுமைப்படுத்தி முழுமையாக்கினார். எனினும் அவர் தமது வாழ்க்கையின் கடைசிக் காலத்தை நண்பர்கள், மாணவர்கள் மத்தியில் அமைதியாகக் கழிக்க முடியாது போய்விட்டது.

பழைய ஏதென்ஸ் (ஏத்தென்ஸ்) நகரத்தின் எச்சங்கள்.

கி. மு. 323-ம் வருடத்தில் அலெக்ஸாந்தர் இறந்தார்; அப்பொழுது அவருக்கு முப்பத்து மூன்று வயது கூட முடியவில்லை. ஏத்தென்ஸ் நகரவாசிகள் மசிடோனிய ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்தார்கள்; அரிஸ்டாட்டிலை ஊரை விட்டுத் துரத்தினார்கள். இதற்கு ஒரு வருடத்துக்குப் பிறகு அவர் ஈபோயா என்ற தீவிலிருக்கும் சால்சிஸ் என்ற இடத்தில் மரணமடைந்தார்.

அரிஸ்டாட்டில் விஞ்ஞான வரலாற்றில் மிகச் சிறந்த அறிஞர்களில் ஒருவர். அன்றைக்கிருந்த அறிவின் எல்லாத் துறைகளையும் பற்றி அவர் புத்தகங்கள் எழுதியிருந்தார். அதிலும் மனித சமூகத்தின் விஞ்ஞானமாகிய சமூகவியலை நிறுவியவர்களில் அவரும் ஒருவர்; அந்த சமூகவியலின் சுற்றுவட்டத்துக்குள் அவர் பொருளாதாரப் பிரச்சினைகளையும் ஆராய்ந்தார். அவருடைய சமூகவியல் எழுத்துக்கள் ஏத்தென்சில் அவருடைய கடைசி வருடங்களில் எழுதப் பட்டவை. அவை – முதலாவதாகவும் முதன்மையாகவும் – நிக்கமாகஸிய அறவியல் (அவருக்குப் பின்னால் வந்தவர்கள் நிக்கமாகஸ் என்ற அவருடைய மகன் பெயரை இந்தப் புத்தகத்துக்குக் கொடுத்தார்கள்) என்ற புத்தகமும் அரசின் அமைப்பு பற்றிய ஆராய்ச்சி விரிவுரையான அரசியல் என்ற புத்தகமுமாகும்.

இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் ஆகிய இரண்டிலும் அரிஸ்டாட்டில் “புதிய ரகத்தைச்” சேர்ந்த விஞ்ஞானியாக இருந்தார். அவர் தம்முடைய கொள்கைகளையும் முடிவுகளையும் சூக்குமமான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கவில்லை; எப்பொழுதுமே விவரங்களை கவனமாக ஆராய்ச்சி செய்த பிறகே அவற்றை உருவாக்கினார். ஏராளமான விலங்கியல் மாதிரிகளைச் சேகரித்து அதை அடிப்படையாகக் கொண்டுதான் அவர் விலங்கின வரலாற்றை எழுதினார். அதுபோலவே அரசியல் என்ற நூலுக்காக அவரும் அவருடைய மாணவர்களும் 158 கிரேக்க மற்றும் நாகரிகமற்ற அரசுகளுடைய அமைப்புச் சட்டங்களைச் சேகரித்து அவற்றை ஆராய்ந்தனர். பெரும்பாலும் அவை போலிஸ் (polis) என்ற நகர அரசின் வகையைச் சேர்ந்திருந்தன.

கடந்த பல நூற்றாண்டுகளாக அரிஸ்டாட்டில் என்றதும் மாணவர்களும் சீடர்களும் சூழ்ந்திருக்கின்ற அறிவு நிரம்பிய ஆசான் நம்முடைய நினைவுக்கு வருவார். அவர் ஏத்தென்சில் கழித்த கடைசி வருடங்களின்போது தமது ஐம்பதுக்களில் உற்சாகமும் துடிப்பும் கொண்டவராக இருந்தார் என்று அறிகிறோம். லைசியம் என்ற ஏத்தென்ஸ் நகரத் தோட்டத்தில் பெரிபகோஸ் என்ற பாதையில் மாணவர்கள், நண்பர்களோடு பேசியபடியே நடந்து செல்வதை அவர் விரும்பியதாகத் தெரிகிறது. அவருடைய தத்துவமரபுக்கு வரலாற்றில் பெரிபடேடிக்ஸ் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

படிக்க:
பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !
♦ ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

அவருடைய அறவியலும் அரசியலும் உடனே பதிவு செய்யப்பட்ட உரையாடல்களின் அல்லது உரத்த சிந்தனைகளின் வடிவத்தில் இருக்கின்றன. ஒரு கருத்தை விளக்க முற்படும்பொழுது அரிஸ்டாட்டில் அதை வெவ்வேறு கோணங்களில் அணுகி திரும்பத் திரும்ப அந்தக் கருத்தை ஆராய்கிறார், தன்னைச் சூழ்ந்திருப்பவர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறுகிறார்.

அரிஸ்டாட்டில் தன் காலத்தின் குழந்தையாகவே இருந்தார். அவர் அடிமையைப் பேசுகின்ற கருவி என்றுதான் கருதினார்; அடிமை முறை இயற்கையானது, தர்க்க ரீதியானது என்று முடிவு செய்தார். இதைத் தவிர இன்னொரு வகையிலும் அவர் பழமைவாதியாகவே இருந்தார். தம் காலத்திய கிரீஸ் நாட்டில் வர்த்தகமும் பண உறவுகளும் வளர்ச்சியடைவதை அவர் விரும்பவில்லை. சிறு அளவில் இருக்கும் விவசாயப் பொருளாதாரமே (அங்கே எல்லா வேலைகளையும் அடிமைகள் செய்வார்கள் என்பதும் இயற்கையே) அவருடைய இலட்சியம். இந்தப் பொருளாதாரம் அநேகமாகத் தன்னுடைய எல்லா அடிப்படைத் தேவைகளையும் தானே பூர்த்தி செய்து கொள்ளும்; அப்படிச் செய்ய முடியாத சிலவற்றை பக்கத்திலிருப்பவர்களோடு “நியாயமான பரிவர்த்தனையில்” பெற்றுக் கொள்ள முடியும்.

அரிஸ்டாட்டிலின் தத்துவமரபுக்கு வரலாற்றில் பெரிபடேடிக்ஸ் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

பொருளியலாளர் என்ற முறையில் அரிஸ்டாட்டிலின் சிறப்பு, அரசியல் பொருளாதாரத்தினுடைய சில இனங்களை முதன் முதலாக நிறுவியதிலும் அவற்றினிடையே உள்ள இடைத் தொடர்பை எடுத்துக் காட்டியதிலும் அடங்கியிருக்கிறது.

சிதறிக் கிடக்கின்ற பல்வேறு துணுக்குகளிருந்து அரிஸ்டாட்டிலின் “பொருளாதார அமைப்பை” நாம் உருவாக்க முடியும். அதை ஆடம்ஸ்மித் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தின் முதல் ஐந்து அத்தியாயங்களோடும் மார்க்ஸ் எழுதிய மூலதனத்தின் முதல் புத்தகத்தின் முதல் பகுதியோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் வியப்படைகின்ற அளவுக்கு சிந்தனையோட்டம் தொடர்ச்சியாக இருப்பதைக் காண முடியும். அது முந்தியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேலே வளர்ச்சியடைந்து புதிய கட்டத்தை அடைவதைக் காணலாம். விலைகள் உருவாவதையும் அவை மாற்றமடைவதையும் பற்றிய விதியைக் (அதாவது மதிப்பின் விதியைக்) கண்டுபிடிக்க வேண்டும்மென்ற உந்துதல் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தில், அரிஸ்டாட்டில் முதல் மார்க்ஸ் வரையிலும் காணப்படுகிறதென்று லெனின் எழுதினார்.

அரிஸ்டாட்டில் ஒரு பண்டத்தின் இரண்டு அம்சங்களை – அதன் பயன் மதிப்பையும் பரிவர்த்தனை மதிப்பையும் – நிறுவியதோடு பரிவர்த்தனைப் போக்கையும் ஆராய்ந்தார். பரிவர்த்தனையின் அல்லது பரிவர்த்தனை மதிப்புக்களின் அல்லது, கடைசியில், அவற்றின் பணவியல் வெளியீடான விலைகளின் இணை உறவுகளை நிர்ணயிப்பது எது என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.

இது அரசியல் பொருளாதாரம் தொடர்ந்து அக்கறை எடுத்துக் கொண்ட பிரச்சினையாக மாறியது. அவருக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரியவில்லை; அல்லது பதிலை அடைவதற்கு முன்பே அவர் தன்னுடைய ஆராய்ச்சியை நிறுத்திவிடுகிறார், தன் விருப்பத்துக்கு விரோதமாகவே அதைவிட்டுப் போய்விடுகிறார் என்று சொல்லலாம். எனினும் பணத்தின் தோற்றம், அதன் செயல்களைப் பற்றி அவர் புத்திசாலித்தனமான சில கருத்துக்களைச் சொல்கிறார்; பணம் மூலதனமாக – புதிய பணத்தை உற்பத்தி செய்கின்ற பணமாக – மாற்றமடைகிறது என்ற கருத்தை அவருக்கே உரிய பிரத்தியேகமான வழியில் எடுத்துச் சொல்லுகிறார்.

இந்த மாபெரும் கிரேக்க அறிஞர் கடந்து வந்த விஞ்ஞான ஆராய்ச்சிப் பாதை இது; ஆனால் இதில் தெளிவின்மையும் கூறியது கூறலும், எடுத்துக் கொண்ட பொருளைவிட்டு விலகிப்போவதும் அதிகமே.

அரிஸ்டாட்டிலின் விஞ்ஞானப் பாரம்பரியம் எப்பொழுதுமே மாறுபட்ட அபிப்பிராயங்களுக்கு இடமளித்திருக்கிறது. தத்துவம், இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூகம் பற்றிய அவருடைய கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகக் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டிய கோட்பாடாக, மீற முடியாத மதச்சட்டமாக மாற்றப்பட்டது.

கிறிஸ்தவ திருச்சபை, போலியான விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் பிற்போக்காளர்கள் புதியனவற்றுக்கும் முற்போக்கானவற்றுக்கும் எதிரான போராட்டத்தில் அதைப் பயன்படுத்தினார்கள். மறுபக்கத்தில் விஞ்ஞானத்தைப் புரட்சிமயமாக்கிய மறுமலர்ச்சிக் காலத்து மக்கள் அரிஸ்டாட்டிலின் கருத்துக்களை வறட்டுத்தனமான கோட்பாடுகளிலிருந்து விடுவித்துக் கொண்டு பயன்படுத்தினார்கள். அரிஸ்டாட்டிலுக்கான போராட்டம் இன்று வரை தொடர்ந்து நடைபெறுகிறது. அது மற்றவைகளோடு சேர்ந்து அவருடைய பொருளாதாரக் கொள்கை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கிறது.

அந்த மாபெரும் கிரேக்கரின் பொருளாதாரக் கருத்துக்களைப் பற்றி மதிப்பிடுகின்ற இரண்டு மேற்கோள்கள் கீழே தரப்பட்டிருக்கின்றன. அவற்றை கவனமாகப் படியுங்கள். முதலாவது மேற்கோள் ஒரு மார்க்சிஸ்டும் சோவியத் பொருளாதார நிபுணருமான எஃப். பொலியான்ஸ்கி எழுதியது. இரண்டாவது மேற்கோள் அமெரிக்கப் பேராசிரியர் ஜே. பெல் என்பவர் எழுதிய பொருளாதாரச் சிந்தனை பற்றிய முதலாளித்துவ வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

பொலியான்ஸ்கி :

“அரிஸ்டாட்டில் மதிப்பைப் பற்றி அகவயமான கருத்துக் கொண்டவரல்ல; அதைப் பற்றி புறவயமான பொருள் விளக்கம் தருவதில் நாட்டம் கொண்டவர் எனலாம். இது எப்படி இருந்தபோதிலும் உற்பத்திச் செலவுகளை ஈடு செய்ய வேண்டிய சமூகத் தேவையை அவர் தெளிவாகப் பார்த்தார் என்றே தோன்றுகிறது. உற்பத்திச் செலவின் கலவையை அவர் ஆராயவில்லை; இந்தப் பிரச்சினையில் அவருக்கு அக்கறை இல்லை என்பது உண்மையே. எனினும் அந்தக் கலவையில் ஒருவேளை உழைப்புக்கு ஒரு முக்கியமான இடம் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.” (1)

பெல் :

”அரிஸ்டாட்டில் மதிப்பைத் தன்வயமானதாக ஆக்கினார்; அதைப் பண்டத்தின் உபயோகத்தைப் பொறுத்திருக்குமாறு செய்தார். பரிவர்த்தனை மனிதனின் தேவைகளைச் சார்ந்திருக்கிறது… ஒரு பரிவர்த்தனை நியாயமானதாக இருந்தால் அது தேவைகளின் சமத்துவத்தை ஆதாரமாகக் கொண்டது. உழைப்பின் செலவை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை.”(2)

இந்த இரண்டு மதிப்பீடுகளும் ஒன்றுக்கொன்று எதிரெதிரான வகையில் மாறுபட்டிருப்பதை சுலபமாகப் பார்க்க முடியும். இரண்டு மேற்கோள்களும் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படை இனமான மதிப்பைப் பற்றி பேசுகின்றன. இதை நாம் அடிக்கடி சந்திக்கப் போகிறோம்.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : அரிஸ்டாட்டில் பகுதியின் தொடர்ச்சி

அடிக்குறிப்பு:
(1) பொருளாதாரச் சிந்தனை வரலாறு, முதல் பகுதி, மாஸ்கோ , 1961, பக்கம் 58 (ருஷ்ய மொழி).
(2) J. Bell, A History of Economic Thought, N.-Y., 1953, p. 41.

கேள்விகள்:

  1. அலெக்சாந்தர் – ஒரு சிறு குறிப்பு வரைக. அதில் அவர் வென்றெடுத்த நாடுகள், இந்திய வருகை ஆகியவற்றையும் குறிப்பிடுக.
  2. பண்டைக்கால உலகின் கலாச்சார மையமாக ஏத்தென்ஸ் நகரம் குறிப்பிடப்படுவது ஏன்?
  3. நிக்கமாகஸிய அறிவியல் புத்தகம் – சிறு குறிப்பு வரைக.
  4. அரிஸ்டாட்டில் செய்த ஆய்வுகளில் உள்ள அணுகுமுறைகள், சிறப்பு அம்சங்கள் எவை?
  5. பெரிபடேடிக்ஸ் தத்துவ மரபு – சிறு குறிப்பு தருக.
  6. அடிமை முறை பற்றி அரிஸ்டாட்டிலின் கருத்து என்ன?
  7. அரிஸ்டாட்டிலை தோழர் லெனின் பாராட்டுவது ஏன்?
  8. அரிஸ்டாட்டில் கருத்துக்களை கிறித்தவ திருச்சபை பிற்போக்கிற்காக பயன்படுத்தியதற்கு சான்று தருக! அதே போன்று அரிஸ்டாட்டில் கருத்துக்களை மறுமலர்ச்சி கால மக்கள் முற்போக்காய் பயன்படுத்தியமைக்கு சான்று தருக!

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

வாஜ்பாய் கால உளவுத்துறை தலைவர் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவரோடு புத்தகம் எழுதலாமா ?

பின்வருமாறு ஒரு செய்தி சங்கிகளில் வாட்ஸப் குழுக்களில் உலா வருகிறது.

“This photo was taken yesterday in Delhi. Now what is special about it?
It has been taken at a 5-star hotel in Delhi, where former Prime Minister Manmohan Singh & former Vice-President Hamid Ansari are releasing a book authored by Pakistan’ ISI’s former Chief Assad Durrani! The same ISI that is hardcore enemy of India and masterminds all attacks on and in India. The same ISI which engineered attack on our Parliament and attacks in Mumbai. Present Indian Government did not give visa to Asad Durrani to attend his book launch. So these patriotic people joined him in video conferencing for releasing the book! Sometimes we wonder if they ever had any feelings for this nation which gave them high positions and put them on pedestal. What a shame to us by these shameless renegades!”

Book Release - Spy Chronivles RAW ISI and the illusion of peaceஇதன் சுருக்கமான அர்த்தம்: “ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மன்மோகன் சிங்கும் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியும் ஒரு புத்தகத்தை வெளியிடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது. அந்தப் புத்தகத்தை எழுதியது பாகிஸ்தானின் அயலக உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் அஸ்ஸாத் துரானி. அதாவது இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எதிரியான ஐஎஸ்ஐ. இந்திய அரசு இந்த விழாவில் கலந்துகொள்ள அவருக்கு விசா அளிக்கவில்லை. அதனால், இந்த தேசபக்தர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரோடு கலந்துகொண்டு இந்த விழாவில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இவ்வளவு உயரிய இடத்தைக் கொடுத்த இந்த தேசத்தின் மீது ஏதாவது பற்று இருக்கிறதா என்பதே சந்தேகம்தான்”.

படிக்க:
♦ வாஜ்பாய் ( 1924 – 2018 ) : நரி பரியான கதை !
♦ பாக் தளபதியை அரவணைத்தால் என்ன தவறு ? சித்துவை ஆதரிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள்

இவர்கள் குறிப்பிடும் இந்தப் புத்தகத்தின் பெயர் The Spy Chronicles: RAW, ISI and the illusions of Peace. ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் அஸ்ஸாத் துரானி, இந்திய அயலக உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத், மூத்த பத்திரிகையாளர் ஆதித்ய சின்ஹா ஆகிய மூவர் இடையிலான உரையாடல்தான் இந்தப் புத்தகம். பின் லேடன் சிறைப்பிடிக்கப்பட்டபோது என்ன நடந்தது, காஷ்மீரில் பதற்றத்தைத் தக்கவைக்க பாகிஸ்தான் என்னவெல்லாம் செய்கிறது போன்ற தகவல்களை இந்தப் புத்தகத்தில் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

Spy Chronivles RAW ISI and the illusion of peaceஇந்தப் புத்தகத்தை எழுதியதற்காக, அவரை பாகிஸ்தான் அரசு விசாரணைக்கு உட்படுத்தியதோடு, நாட்டை விட்டு வெளியேறவும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த புத்தக வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. விழா நடந்தது இந்த ஆண்டு மே மாதம். சங்கிகள் இப்போதுதான் விழித்துக்கொண்டு வாட்ஸப்பில் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். சங்கிகளுக்கு புத்தகம் என்றாலே சற்று அலர்ஜிதானே..

ஆனால், இந்த ஃபார்வர்ட் செய்தியில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ஐஎஸ்ஐ தலைவருடன் இணைந்து புத்தகத்திற்காக உரையாடிய ராவின் முன்னாள் தலைவர் ஏஎஸ் அதுலாத்தின் பெயரே கிடையாது.

இந்த அதுலாத் எப்போது ‘ரா’வின் தலைவராக இருந்தார்? 1999லிருந்து 2000 வரை. அதாவது கார்கில் யுத்தம் நடந்த காலகட்டத்தில் ராவின் தலைவராக இருந்தவர். அப்போது பிரதமர் பா.ஜ.கவைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாயி. 2000ல் ரா தலைவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, வாஜ்பாயின் ஆட்சிக் காலம் முடியும்வரை, 2004 வரை காஷ்மீர் விவகாரங்களுக்கான ஆலோசகராக இருந்தவர்.

ஆக, வாஜ்பாயி அரசில் பாதுகாப்பு அமைப்பில் முக்கியப் பிரமுகராக இருந்தவர், ஐஎஸ்ஐ-யின் முன்னாள் தலைவரோடு சேர்ந்து ஏன் புத்தகம் எழுதினார்? பா.ஜ.கவுக்கு இதில் என்ன தொடர்பு? இந்தக் கேள்வியைத்தான் அவர்களைப் பார்த்து நாம் கேட்க வேண்டும்.

நன்றி: Muralidharan Kasi Viswanathan

தமிழ் அவமானம் அல்ல – அடையாளம் | ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள்

ஆட்டோ இலக்கியம் என்ற தலைப்பில் வினவு வாசகர்கள் அனுப்பி வைத்திருக்கும் இருசக்கர வாகன இலக்கியத் தொகுப்பு !

தமிழ் – பின்னிப் பிணைந்திருக்கிறது
சென்னை, படம்: தமிழன்பன்

வாழ்க வளமுடன் மக்கள் !
இடம் : திருச்சி. படம் : செழியன்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
இடம் : திருச்சி. படம் : செழியன்

அடக்கமாகும் வரை அடக்கமாய் இரு !
அவமானங்களால் மட்டுமே வாழ்க்கையில் அதிக தெளிவு கிடைக்கிறது…! சிலரை புரிந்து கொள்ளவும் முடிகிறது …
இடம் : தஞ்சை மற்றும் திருச்சி. படம் :தமிழினி மற்றும் செழியன்

வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும் ! வலிகள் இருந்தால் வாழ்க்கை இனிக்கும் !
விடியும் என்று விண்ணை நம்பு ! முடியும் என்று உன்னை நம்பு!
இடம் : தஞ்சை. படம் : தமிழினி

தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து தீமைகளை செய்யாதீர்கள்!
தமிழ் என்பது அவமானம் அல்ல! அது என் அடையாளம்!
இடம் : தஞ்சை. படம் : தமிழினி

திமிரு பிடித்தவன் தமிழன் இல்லை. அந்த திமிருக்கே பிடித்தவன் தமிழன்
நண்பர்கள் துணை
இடம் : தஞ்சை. படம் : தமிழினி

விவசாயம் காப்போம்
இது பெரியாரின் தமிழ்நாடு! (எழுதப்படாத கவிதை)
இடம் : தஞ்சை. படம் : தமிழினி

யாகவராயினும் நாகாக்க
பல மொழிகள் கற்று வையுங்கள் எப்போதும் தாய்மொழியில் பற்று வையுங்கள்
இடம் : தஞ்சை. படம் : தமிழினி

அடுத்த வாரத் தலைப்பு:
வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : உங்கள் விருப்பம் !

பணக்காரனுக்குச் சொர்க்கம் கூடப் பற்றாக்குறைதான்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 44

மாக்சிம் கார்க்கி
ருணோதயப்பொழுதில், இலையுதிர்காலத்து மாரியால் அரித்துச் செல்லப்பட்ட பாதை வழியாகச் செல்லும் தபால் வண்டியில் தாய் ஆடியசைந்து சென்றுகொண்டிருந்தாள். ஈரம் படிந்த காற்று வீசியது. எங்கும் சேறு தெறித்துச் சிதறியது. வண்டிக்காரன் தனது பெட்டியடியிலிருந்து லேசாக முதுகைத் திருப்பி வளைத்துத் தாயைப் பார்த்து மூக்கில் பேசத்தொடங்கினான்:

“நான் என் சகோதரனிடம் சொன்னேன். தம்பி, நாம் பாகம் பிரித்துக் கொள்ளுவோம் என்றேன். ஆமாம். நாங்கள் பாகம் பிரிக்கப் போகிறோம்…”

திடீரென்று இடது பக்கத்துக் குதிரையைச் சாட்டையால் சுண்டியடித்துவிட்டு, அவன் கோபத்தோடு கூச்சலிட்டான்:

“இடக்கா பண்ணுகிறாய்? மாய்மாலப் பிறவியே!”

இலையுதிர் காலத்தின் கொழுத்த காக்கைகள் அறுவடையான வயல் வெளிக்குள் ஆர்வத்தோடு இறங்கின; அச்சமயம் எங்கு பார்த்தாலும் குளிர்காற்று ஊளையிட்டு வீசிற்று. காற்றின் தாக்குதலைச் சமாளிப்பதற்காக அந்தக் காக்கைகள் தம்மைச் சுதாரித்துக்கொண்டன. அந்தக் காற்றோ அவற்றின் இறக்கைகளை உலைத்து விரித்துப் பிரித்தது. எனவே அந்தப் பறவைகள் தமது இறக்கைகளையடித்துக் கொண்டு வேறொரு இடத்துக்கு மெதுவாய்ப் பறந்து சென்றன.

“ஆனால் என் தம்பியோ என் உயிரை எடுக்கிறான். என் சொத்து முழுவதையும் உறிஞ்சிப் பிடுங்கிவிட்டான். ஆகக்கூடி, இப்போது நான் அடையக்கூடிய சொத்துப் பத்துக்கள் எதுவுமே இல்லை…’’ என்று பேசிக்கொண்டே போனான் வண்டிக்காரன்.

அவனது பேச்சைக் கனவில் கேட்பது போலக் கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். அவளது நினைவு மண்டலத்தில், கடந்த சில வருஷ காலமாக நடந்தேறிய சம்பவங்கள் வழிந்தோடின; அந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் தானும் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொள்வதையும் அவள் கண்டாள். இதற்கு முன்பெல்லாம் வாழ்க்கை எங்கோ வெகுதொலைவில், யாருக்கும் காரண காரியம் தெரியாத எதற்காகவோ நிர்ணயிக்கப் பெறுவதாக இருந்தது. இப்போதோ வாழ்க்கையின் பெரும்பாகம் அவளது கண்முன்னாலேயே அவளது சம்பந்தத்துடனேயே உருவாக்கப்பட்டு வருவதை அவள் உணர்ந்தாள். இந்த எண்ணம் அவளது உள்ளத்தில் பல்வேறுவிதமான உணர்ச்சிக் கலவைகளை எழுப்பின. தன்னம்பிக்கையின்மை, தன்மீதே ஒரு திருப்தி. முடியாமை, அமைதியான சோகம்……

சுற்றுச் சூழ்நிலை கண்பார்வையை விட்டு லேசாக மாறிச் சுழன்று மறைந்து கொண்டிருந்தது. வானமண்டலத்தில் சாம்பல் நிறமான மேகக் கூட்டங்கள் ஒன்றையொன்று விரட்டிக்கொண்டு அடர்ந்து சென்றன. ரோட்டுக்கு இருமருங்கிலும் நிற்கும் நனைந்த மரங்கள் தங்களது மொட்டைக் கிளைகளை அசைத்துக்கொண்டிருந்தன. வயல்வெளிகளில் காலச் சிரமத்தில் கரைந்தோடும் சிறு சிறு மண் குன்றுகள் எழும்பியிருந்தன.

வண்டிக்காரனின் மூங்கைக்குரல். மணிகளின் கிண்கிணியோசை, ஊதைக் காற்றின் பரபரப்பு, அதன் ஊளைச் சத்தம் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து படபடக்கும் ஒரு நாத வெள்ளமாக, அந்த வயல்வெளிகளுக்கு மேலாக ஒரே சீராய் வழிந்தோடிக்கொண்டிருந்தது.

“பணக்காரனுக்குச் சொர்க்கம் கூடப் பற்றாக்குறைதான்” என்று தன்னிருப்பிடத்திலிருந்து ஆடிக்கொண்டே சொன்னான் வண்டிக்காரன். ”எனவே அவன் என் உயிரைப் பிழிந்து எடுக்கிறான். அதிகாரிகள் அனைவரும் அவனுக்குச் சினேகிதம்…”

ஊர் வந்து சேர்ந்ததும் அவன் குதிரைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டுத் தாயிடம் கெஞ்சும் குரலில் சொன்னான்:

“நீ எனக்குக் குடிக்கிறதுக்கு ஓர் அஞ்சு கோபெக் கொடேன்.”

அவள் காசைக் கொடுத்ததும் அவன் அதைத் தன் உள்ளங்ககையில் வைத்து நகத்தால் கீறிக்கொண்டு, அதே குரலில் பேசினான்:

”மூன்று காசுக்கு ஓட்கா, இரண்டு காசுக்கு ரொட்டி!”

மத்தியான வேளையில், தாய் நிகோல்ஸ்கி என்னும் அந்தச் சிறிய நகரத்துக்கு அலுத்துச் சலித்துக் களைப்போடு வந்துசேர்ந்தாள். அவள் கடைக்குச் சென்று ஒரு கோப்பைத் தேநீர் அருந்தப் போனாள். போன இடத்தில் ஜன்னலருகே உட்கார்ந்தாள். தனது கனத்த டிரங்குப் பெட்டியை ஒரு பெஞ்சுக்கடியில் தள்ளிவைத்துவிட்டு ஜன்னலின் வழியாகப் பார்த்தாள். ஜன்னலுக்கு அப்பால் நடந்து பழுத்துக் கருகிப்போன ஒரு சிறு சதுரப் புல்வெளியும் அதில் முன்புறம் கூரை இறங்கிய ஒரு சாம்பல் நிறக் கட்டிடமும் தெரிந்தன. அந்தக் கட்டிடம்தான் அந்தக் கிராமச் சாவடி. வழுக்கைத் தலையும் தாடியும் கொண்ட ஒரு முஜீக் தனது சட்டைக்கு மேல் கோட்டு எதுவும் அணியாமல் அந்தக் கட்டிடத்து முகப்பில் உட்கார்ந்து புகை பிடித்துக்கொண்டிருந்தான். அந்தப் புல்வெளிச் சதுக்கத்தில் ஒரு பன்றி மேய்ந்துகொண்டிருந்தது. தனது காதுகளைப் படபடவென்று குலுக்கியாட்டிவிட்டு அது தன் மூஞ்சியைத் தரையில் மோதி, தலையை அசைத்தாட்டியது.

”உண்மை விசுவாசிகளே! விவசாயிகளான நமது வாழ்க்கையின் உண்மையையெல்லாம் எடுத்துக்காட்டும் பிரசுரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி, அந்தப் புத்தகங்களுக்காகத்தான் நான் கைதானேன். அந்தப் புத்தகங்களை மக்களிடம் விநியோகித்தவர்களில் நானும் ஒருவன்.”

மேகக் கூட்டங்கள் ஒன்றின்மேல் ஒன்றாய் அடுக்கடுக்காய்ச் சேர்ந்து கறுத்த பெருந்திரளாகக் கூடி, பெருகின. எங்கும் அமைதியும், அசமந்தமும் ஆயாசமும் நிறைந்து, வாழ்க்கையே எதற்காகவோ காத்துக் கிடப்பதுபோலத் தோன்றியது.

திடீரென ஒரு குதிரைப் போலீஸ் ஸார்ஜெண்ட் அந்தப் புல்வெளி வழியாக கிராமச் சாவடியின் முகப்புக்கு வேகமாகக் குதிரையை ஒட்டிக்கொண்டு வந்து நின்றான். அவன் சாட்டையைக் காற்றில் வீசிச் சுழற்றியவாறே அந்த முஜீக்கை நோக்கிச் சத்தமிட்டான். அவனது கூச்சல் ஜன்னலில் மோதித் துடித்தது. எனினும் வார்த்தைகளைக் கேட்க முடியவில்லை. அந்த முஜீக் துள்ளியெழுந்து எங்கோ தூரத்தில் கையைச் சுட்டிக் காட்டினான். ஸார்ஜெண்ட் குதிரையைவிட்டுத் தாவிக் குதித்து, கடிவாள லகானை அந்த முஜீக்கின் கையில் ஒப்படைத்துவிட்டு, படிகளை நோக்கித் தடுமாறிச் சென்று அங்கிருந்த கம்பியைப் பற்றிப் பிடித்தவாறு, மிகுந்த சிரமத்துடன் மேலேறி உள்ளே சென்று மறைந்தான்.

மீண்டும் எங்கும் அமைதி நிலவியது. குதிரை தன் குளம்பால் தரையை இருமுறை உதைத்துக் கிளறியது. அறைக்குள் ஒரு யுவதி வந்தாள். அவள் தனது மஞ்சள் நிறமான கேசத்தைச் சிறு பின்னலாகப் போட்டிருந்தாள். அவளது உருண்ட முகத்தில் இங்கிதம் நிறைந்த கண்கள் பளிச்சிட்டன. உணவுப் பொருள்களைக் கொண்ட தட்டை எடுத்துச் செல்லும்போது, உதட்டைக் கடித்துத் தலையை ஆட்டினாள்.

“வணக்கம். கண்ணே!” என்றாள் தாய்.

”வணக்கம்!” அவள் அந்தத் திண்பண்டங்களையும், தேநீர்ச் சாமான்களையும் மேஜை மீது வைத்துவிட்டு, திடீரென்று பரபரக்கும் குரலில் சொன்னாள்:

“அவர்கள் இப்போதுதான் ஒரு கொள்ளைக்காரனைப் பிடித்தார்கள். அவனை இங்குக் கொண்டு வருகிறார்கள்.”

”யார் அந்தக் கொள்ளையன்?”

”எனக்குத் தெரியாது…”

”அவன் என்ன பண்ணினான்?”

“அதுவும் தெரியாது” என்றாள் அந்த யுவதி : “அவனைப் பிடித்துவிட்டார்கள் என்பதை மட்டும் நான் கேள்விப்பட்டேன். இந்தக் கிராமச் சாவடிக் காவலாளி போலீஸ் தலைவனை அழைக்கப் போயிருக்கிறான்.”

தாய் ஜன்னல் வழியாகப் பார்த்தாள். அந்தச் சதுக்கத்தில் முஜீக்குகள் குழுமிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் அமைதியாகவும் மெதுவாகவும் வந்தார்கள். சிலர் அவசர அவசரமாகத் தங்களது கம்பளிக் கோட்டின் பொத்தான்களை அரைகுறையாக மாட்டிக்கொண்டே ஓடி வந்தார்கள். அந்தச் சாவடி முகப்பில் கூடி நின்று இடதுபுறத்தில் எங்கோ ஒரு திசையை ஏறிட்டு நோக்கினார்கள்.

அந்தப் பெண்ணும் ஜன்னல் வழியாகப் பார்த்தாள். பிறகு கதவை பலமான சத்தத்துடன் மூடிவிட்டு அங்கிருந்து வெளியே ஓடிச் சென்றாள். அச்சத்தம் கேட்டு தாய் நடுங்கினாள். தனது டிரங்குப் பெட்டியை பெஞ்சுக்கடியில் இன்னும் உள்ளே தள்ளிவைத்தாள். பிறகு அவள் தலைமீது ஒரு துண்டை எடுத்துப் போட்டுக்கொண்டு ஓடிச் செல்ல வேண்டும் என்ற காரண காரியம் தெரியாத ஆவலை உள்ளடக்கிக்கொண்டு வாசல் பக்கமாக விரைந்து வந்தாள்.

அவள் அந்தக் கட்டிட முகப்புக்கு வந்தவுடன், அவளது கண்களும் மார்பும் குளிர்ந்து விறைத்துப் போயிருந்தன. அவளுக்கு மூச்சுவிடவே திணறியது. கால்கள் கல்லைப் போல் உயிரிழந்து நின்றன. அந்தச் சதுக்கத்தின் வழியாக ரீபின் வந்தான். அவனது கைகள் கட்டப்பட்டிருந்தன. அவனுக்கு இருபுறத்திலும் தங்கள் கைகளிலுள்ள தடிகளால் தரையில் தட்டிக் கொண்டு இரண்டு போலீஸ்காரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஜனக் கூட்டம் அமைதியோடு வாய் பேசாமல் அந்தக் கட்டிட முகப்பிலேயே காத்து நின்றது.

திக்பிரமை அடித்துத் திகைத்து நின்ற தாயால் தன் கண்களை அந்தக் காட்சியிலிருந்து அகற்றவே முடியவில்லை. ரீபின் ஏதோ சொல்லிக்கொண்டு வந்தான். அவனது குரலை அவள் கேட்டாள். என்றாலும் சூனிய இருள் படர்ந்த அவளது இதயத்தில் அந்த வார்த்தைகள் எந்த எதிரொலியையும் எழுப்பவில்லை.

அவள் ஆழ்ந்த பெருமூச்செடுத்துத் தன்னை சுதாரித்துக் கொண்டாள். நீலக் கண்களும் அகன்ற அழகிய தாடியும் கொண்ட ஒரு முஜீக் முகப்பு வாசலில் நின்றவாறே அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு நின்றான். அவள் இருமினாள். பயத்தால் பலமிழந்த கைகளால் தொண்டையைத் தடவிக் கொடுத்துக்கொண்டாள்.

“என்ன நடந்தது?” என்று அவனிடம் சிரமப்பட்டுக் கேட்டாள்.

“நீங்களே பாருங்கள்” என்று பதிலளித்துவிட்டு அவன் மறுபுறம் திரும்பிக்கொண்டான். மற்றொரு முஜீக் அங்கு வந்து அவளருகே நின்றான்.

ரீபினை அழைத்துக்கொண்டு வந்த போலீஸ்காரர்கள் ஜனக்கூட்டத்தின் முன் நின்றார்கள். ஜனங்கள் ஆரவாரமே இல்லாமல் நின்றாலும்கூட, வரவர ஜனக்கூட்டம் பெருகிக்கொண்டிருந்தது. திடீரென்று ரீபின் குரல் அவர்களது தலைக்கு மேலாக எழுந்து ஒளித்தது.

படிக்க:
ஒலி வடிவில் கேள்வி பதில் – சொல்லுங்கண்ணே உரையாடல் | டவுண்லோடு
புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்

”உண்மை விசுவாசிகளே! விவசாயிகளான நமது வாழ்க்கையின் உண்மையையெல்லாம் எடுத்துக்காட்டும் பிரசுரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி, அந்தப் புத்தகங்களுக்காகத்தான் நான் கைதானேன். அந்தப் புத்தகங்களை மக்களிடம் விநியோகித்தவர்களில் நானும் ஒருவன்.”

ஜனக்கூட்டம் ரீபினை நெருங்கிச் சுற்றிச் சூழ்ந்தது. அவனது குரல் அமைதியும் நிதானமும் பெற்று விளங்கியது. அதைக் கண்டு தாய் தைரியம் அடைந்தாள்.

“கேட்டீர்களா?” என்று இரண்டாவதாக வந்த முஜீக், அந்த நீலக் கண் முஜீக்கை லேசாக இடித்துக்கொண்டே சொன்னான். அவன் பதிலே கூறாமல் தன் தலையை மட்டும் உயர்த்தி தாயை மீண்டும் ஒருமுறை பார்த்தான். இரண்டாவது வந்தவனும் அவளைப் பார்த்தான். இரண்டாமவன் முதல் முஜீக்கைக் காட்டிலும் வயதில் சிறியவன்; புள்ளி விழுந்த ஒடுங்கிய முகமும், சுருட்டையான கரிய தாடியும் கொண்டவன். பிறகு அவர்கள் இருவரும் சாவடி முகப்பிலிருந்து ஒருபுறமாக ஒதுங்கினார்கள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்