Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 620

துடைப்பத்தோடு போபாலுக்குப் போங்களேன் மோடி !

0

தூய்மை இந்தியா: துடைப்பத்தோடு போபாலுக்குப் போங்களேன் மோடி!

தர பிரதமர்களைவிடத் தன்னை வித்தியாசமானவராகக் காட்டிக் கொள்ளும் கோமாளித்தனத்தோடு “தூய்மை இந்தியா” எனும் விளம்பர வித்தையை ஆரவாரத்துடன் நடத்துகிறார் மோடி. அழுக்கும் அசுத்தமும் தாழ்த்தப்பட்டோரின் சேரிப் பகுதியில்தான் இருக்கிறது என்று வக்கிரமாகக் காட்டும் வகையில், காந்தி பிறந்தநாளன்று டெல்லியிலுள்ள தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதியினர் நிறைந்துள்ள சேரிப்பகுதிக்கு வந்து தெருக்கூட்டுவதைப் போல புகைப்படம் எடுத்துக் கொண்டு, பாரத் சுவட்ச் அபியான் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கிவைத்த அவர், இதனை 2019-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்கிறார். இதற்காக சச்சின் டெண்டுல்கர், அம்பானி, சல்மான்கான், கமல்ஹாசன் மற்றும் நடிகைகள், பிரமுகர்கள் என ஒன்பது பேரைத் தெரிவு செய்து தூய்மை இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மோடி தூய்மை இந்தியா
ஒரு நாடகம் நடக்குது நாட்டிலே…

மல்டி லெவல் மார்க்கெட்டிங் போல இவர்கள் மேலும் 9 பேருக்கு அழைப்பு விடுக்க, அப்படியே அது பல மடங்காகப் பெருகி நாடெங்கும் விரிவடையுமாம். இத்திட்டம் அறிவிக்கப்பட்டதும், திடீரென அரசு அலுவலக வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, ஊடகங்களின் ஒளிவட்டத்தில் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, காங்கிரசின் சசிதரூர், பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றும் ஆம் ஆத்மி பிரமுகர்கள் – என எல்லோரும் கையிலே துடப்பத்தை ஏந்திக் கொண்டு தெருக்கூட்டும் விளம்பர நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

சாமானிய மக்கள் தெருக்களில் கொட்டும் குப்பைகளைவிட, நாட்டின் தூய்மையையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கிவருவது உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்  நிறுவனங்கள்தான். மறுசுழற்சி செய்ய இந்தியாவில் செலவு குறைவு என்பதால், ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து குப்பைகளும் நச்சுக் கழிவுகளும் பெருமளவில் இங்கே கொட்டப்பட்டு வருகின்றன. டெல்லியில் மட்டும் ஏறத்தாழ 30,000 டன் அளவுக்கும், நாடு முழுவதும் 13 லட்சம் டன் அளவுக்கும்  உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களால் உருவான மின்னணுக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.

காடுகளையும் ஆறுகளையும் மலைகளையும் அழித்தும், ஆற்றுநீரையும் நிலத்தடி நீரையும் வரைமுறையின்றி உறிஞ்சியும், நச்சுக் கழிவுகளைக் கொட்டி சுற்றுச்சூழலை நாசமாக்கியும் வரும் கார்ப்பரேட் நிறுவனங்களால் இந்தியாவின் 13 நகரங்கள் மிக மோசமாக மாசடைந்துள்ளன. 150 ஆறுகளில் 76 ஆறுகள் கழிவுநீர் கால்வாய்களாக மாறிவிட்டன. விஷவாயுக் கொலைகார யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கழிவுகளால் போபால் நகரமே வாழத் தகுதியற்றதாகி விட்டது. தொழிற்சாலைக் கழிவுகளால் நாசமாக்கப்பட்டுள்ள குஜராத்தின் வாபி நகரம் மட்டுமின்றி, கப்பல் உடைக்கும் தொழில் நடக்கும் குஜராத்தின் அலாங் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான டன்கள் அளவுக்கு நச்சுக் கழிவுகள் குவிந்து ஆண்டுக்குச் சராசரியாக 60 பேர் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்கெல்லாம் தூய்மைப்படுத்த முன்வராத கார்ப்பரேட் அடியாளான மோடி, தெருக் குப்பைகளை அகற்றுவதையே தூய்மை என்று பித்தலாட்டம் செய்கிறார்.

இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விதிகள்தான் என்று சாடிவரும் மோடி, கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களுக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே காடுகளை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை மாற்றியமைக்கவும், காடுகளைத் தமது வாழ்வாதரமாகக் கொண்டுள்ள பழங்குடி மக்களது கிராமச் சபைகளின் கருத்து கேட்டு ஆலைகள் தொடங்கப்பட வேண்டுமென்ற விதியை ரத்து செய்யவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை முடமாக்கியும் பெயரளவில் நீடித்துவரும் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு சட்டங்களின் முதுகெலும்பை முறிக்கக் கிளம்பியிருக்கிறார். இந்த அயோக்கியத்தனங்களை மூடிமறைக்கவே தூய்மை இந்தியா போன்ற அற்பத்தனமான கூத்துக்கள் அரங்கேற்றப்படுகின்றன.

– பாலன்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

உங்க பத்திரிகை மேல கேசு போடுவேன் !

6

‘ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா… அரசின் வேலை’ என்ற முழக்கத்தை முன்வைத்து பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் சென்னை அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 16.11.14 அன்று பிரச்சாரம் செய்த போது அனுபவங்கள்.

சுமார் 2000 பேர் வசிக்கும்  இந்த பகுதியில் வசிக்கும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பெரும்பாலும் அன்றாடம் கூலி வேலைகளுக்கு செல்லுபவர்கள். ஆண்கள் அத்தனை பேரும் வேலைகளை காரணம் காட்டி குடிப்பவர்கள்தான். இதில் இளைஞர்களும் அடங்குவார்கள்.

tasmac-pevimu-campaign-12

பிரச்சாரத்தின் போது 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி “ஏம்மா இந்த சாராயக் கடைய அம்மா இல்ல, அப்பா – விஜயகாந்து – மோடி யாரு வந்தாலும் தடுக்க முடியாது, இது அம்மா கட்சிகாரங்க அதிகமா இருக்கிற ஏரியா, நீங்க எல்லாம் பொம்பளங்களா இருக்கிறீங்க… சீக்கிரம் கௌம்புங்க” என்று நம்மீது அக்கறையுள்ளதை போல் பேசினார்.

தோழர்கள் அவரிடம் “ஏம்மா நாங்களும் எல்லா கட்சிகாரவுங்களையும் பார்த்துட்டுதான் வந்திருக்கிறோம்” என்று கூறியவுடன்

“ஏம்மா நானும் அம்மா கட்சிதான். என்கிட்டேயே நீங்க அம்மாவை மோசமா படம் போட்ட பேப்பரை குடுங்கிறீங்க” என்று கோபப்பட்டார்.

தோழர்களும் தொடர்ந்து “அம்மா நீங்க கிராமத்திலிருந்து வந்தவங்க மாதிரி தெரியுது. உங்க வயசுக்கு உங்க தாத்தா, அப்பா எல்லாம் எப்படி பயந்து பயந்து குடிச்சாங்க. ஆனா இப்போ சாராயக்கடையை அரசாங்கமே நடத்துற தைரியத்துல உங்கமகன் எப்படி குடிக்கிறாரு, இத இப்படியே விட்டுட்டா உங்க பேரப்புள்ளைங்க குடிச்சிட்டு ரோட்டுல விழுந்து கிடக்கிறத உங்களால பார்க்க முடியுமா?

அதுமட்டுமில்லாம குடிவெறியோட கூடவே செக்ஸ்பட வீடியோவை பார்த்துட்டுவர பயலுங்க அக்கா, தங்கச்சி, குழந்தைன்னு பார்க்காம பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துறத நீங்க பார்த்துகிட்டுசந்தோசபடுவீங்களா? தடுக்கத்தானே பார்ப்பீங்க, ஆனா தமிழகத்திற்கே ‘அம்மா’வாக இருக்கும் அவங்க ஏன் நம்முடைய பிள்ளை அழிவதைப்பத்தி கவலைப்படாமல் குடிகாரனாகவும்-காமுகனாகவும் மாறுவதை தடுக்க முடிந்தாலும் முதலாளிகளின் லாபத்திற்காக நம்வீட்டு பிள்ளைகளை பலி கொடுக்கிறார்கள்?”என்று கேட்டவுடன்

“அதெல்லாம் சரிதாம்மா ஆனாலும்….” என்று பதில் கூற முடியாமல் தடுமாறியவரிடம் பிரசுரத்தை கொடுத்து, “இதில் இப்போது உள்ள நிலைமைக்கு மாறாக ஏதும் எழுதி இருந்தால் உங்களை மறுபடியும் சந்திக்க வரும்போது கூறுங்கள்” என்று என்றவுடன் பிரசுரத்தை வாங்கி கொண்டு சிரித்த முகத்துடன் விடை கொடுத்தார்.

அதன்பிறகு பிரச்சாரத்தை தொடர்ந்த சிறிது நேரத்தில் அதிமுக கட்சி வேட்டி கட்டிய ஒருவர் நம்மை நோக்கி வந்து “ஏம்மா நான் ஒன்னு கேட்ட கோவிச்சுக்காம பதில் சொல்வீங்களா?” என்ற பீடிகையோடு பேச தொடங்கினார்.

“ஏம்மா என் வீட்டுல நீங்க கொடுத்த ஒரு பத்திரிக்கையிலே ‘பாப்பாத்தி ஜெயா’ என்று போட்டு இருக்கிறீங்க. இது நீங்க போட்ட பத்திரிக்கைதானே, எப்படி நீங்க சாதி பெயரை போடலாம்” என்று கோபமாக பேசத் தொடங்கினார்.

“ஐயா பாப்பாத்தி என்று நாங்களா போடவில்லை அவங்க சட்டசபையிலே சொன்னதைதான் நாங்க பத்திரிக்கையிலே போட்டோம்” என்று கூறினோம்.

அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே “உங்க வீட்டுல எல்லாம் குடிக்க மாட்டாங்களா, பெரிசா பிரச்சாரம் செய்ய வந்துட்டீங்க. முதல்ல உங்க புருசன்கள, புள்ளைகள பாருங்க அப்புறமா இங்க வாங்க” என்று அடுத்த கேள்விக்கு தாவினார்.

தோழர்களும் “நாங்க மட்டும் இல்ல.எங்கபுருசங்க, புள்ளைக எல்லாம் இந்த குடிகெடுக்கிற அரசுக்கு எதிரா சென்னையில பல பகுதியில் பிரச்சாரத்தில இருக்காங்க, அவங்க யாரும் குடிக்க மாட்டாங்க” என்ற பதிலுக்கு பேச முடியாமல்

“எங்க அம்மாவை பாப்பாத்தின்னு போட்ட உங்க பத்திரிகை மேல கேசு போடப் போறேன்” என்று சாராய வாடை முகத்தில் தெறிக்க பெரும் கூச்சலிட்டவாறு சென்று விட்டார்.

பகுதி மக்கள் பிரச்சாரத்தின் போது நம்மிடையே அவர்களுடைய குடும்பத்தில் குடியால் ஏற்படும் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டார்கள்.

பொதுவாக மாமியார் மருமகள் என்றால் பிரச்சனைதான் என்று கருத்து இருக்கும் நிலைமையில், தன்னுடைய பிள்ளை தினமும் வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்காக வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் விற்றுவிட்டான் என்பதையும் காலையில் தண்ணீர் பிடித்து வைத்திருந்த பிளாஸ்டிக் குடங்களை உடைத்து கடையில் விற்றுவிட்டு குடிக்க சென்றுவிட்டான். மருமகளும் இரண்டு மாத கைக்குழந்தையும் பசியும் பட்டினியுமாக இருப்பதை பார்க்க முடியாமல் தன்னுடைய தள்ளாத வயதிலும் வேலைக்கு செல்வதையும், அதில் வரும் வருமானத்தையும் பிடுங்கிக் கொள்வதும் குழந்தை பாலுக்காக ஏங்கி அழுவதையும் சகித்துக் கொள்ள முடியாததையும் கூறி, “நீங்க இந்த சாராய கடையை ஒழிக்க எடுக்கும் போராட்டத்திற்கு எங்கு கூப்பிட்டாலும் வருவேன்” என்று கூறியது குடிகெடுக்கும் குடியை ஒழிக்க பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களுக்கு இன்னும் முனைப்போடு செயல்பட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது.

அன்றாடம் குடியினால் ஏற்படும் பிரச்சினைகள்

  • குடித்துவிட்டு சின்ன வயதிலேயே இறந்து போகும் கணவன்கள், அனாதைகளாக கைவிடப்படும் மனைவிகள் – குழந்தைகளின் அவலம்
  • அரசு திட்டமிட்டே பரப்பும் சீரழிவு கலாச்சாரம், அரசு என்பது முதலாளிகளுக்கானது, மக்களுக்கானது அல்ல, அரசு ஒரு போதும் உழைக்கும் மக்களை பற்றி சிந்திக்காது என்பதை காட்டுகிறது.
  • சிந்திக்காத அரசை அடித்து நொறுக்க மக்களாகிய நாம்தான் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

ஆகியவற்றை பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டி தோழர்கள் விளக்கி பேசியது பகுதி பெண்களின் மத்தியில் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றது. அமைப்பாக சேருவதற்கு பலர் ஆர்வம் காட்டினார்கள்.

நமது பிரசுரத்தில் உள்ள ஓவியத்தை வீடு வீடாக ஸ்டிக்கர் போட்டு ஒட்டி, “ஓட்டுக் கட்சிகள் ஓட்டு கேட்டு வரும்போது அதை காண்பித்து பேச வேண்டும்” என்றார்கள்.

போராட்டம் தொடரும்…

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை கிளை

தமிழினத்தின் புதிய விடிவெள்ளி சல்மான் கான்

13

ஹாய் வினவு,

முதல்லயே சொல்லிடறேன். உங்க மேல நான் செம்ம கடுப்புல இருக்கேன். எதனாலேன்னு அப்பால சொல்றேன்.

நான் வாசு. வாசுதேவன் மாரிமுத்து. திருவண்ணாமலை சொந்த ஊரு. அருணாச்சலேஸ்வரர் கோயில், ரமணாஸ்ரமம் எல்லாம் உங்களுக்கு தெரியும்ல? புண்ணிய பூமி சார்…நான் BE (E&C) முடிச்சிட்டு இப்ப அக்சென்சர்ல வொர்க் பன்றேன். கொஞ்ச நாள் முன்னே ஆபீஸ்ல ஒரு கொலீக் சொல்லித் தான் உங்க வெப்சைட் பத்தி தெரியும்.

arpita-salman
சென்ற வாரம் ஹைதராபாதில் நடந்த அர்பிதா கான் திருமணம்.

எனக்கு சல்மான் கான் பிடிக்கும்; தமிழ்லேன்னா எனக்கு எல்லாமே நம்ப தல தான். டபாங் பார்த்தீங்களா? செம்ம மாஸ்ல? உங்க ரசனைக்கு நீங்க எங்கே பார்த்திருக்கப் போறீங்க. என்னோட பிரச்சினை அதில்லே. நீங்க அடிக்கடி தேவையில்லாம சல்லு பாய் பத்தியும் தல பத்தியும் கலாய்ச்சி எழுதினு இருக்கீங்க. எங்காளோட பெருமையை நீங்க இன்னும் சரியா புரிஞ்சிக்கலை. இப்ப புரிஞ்சிப்பீங்க.

23ம் தேதி இங்கிலிஷ் ஹிந்து பத்திரிகைல ஐந்து மீனவர் விடுதலை பத்தி நம்ம சல்லு பாய் சர்கிள்ள ரொம்ப பேமஸ்! மேட்டர் இதான், சல்மான் கானும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் நண்பர்கள். 22-ம் தேதி சல்லு பாயோட சிஸ்டர் அர்பிதாவுக்கு கல்யாணம். இந்தக் கல்யாணத்துக்கு அவரோட ஃபிரண்ட் நமல் ராஜபக்சேவுக்கும் அவோரோட அப்பா மகிந்த ராஜபக்சேவுக்கும் பத்திரிகை வச்சாரு சல்லு பாய்.

சல்லு பாய் இப்ப ரொம்ப பிசியா இருந்ததாலே கல்யாணப் பத்திரிகையை மீடியா ஃபிரண்ட் ரஜத் சர்மா கிட்டே கொடுத்து விட்டார். மகிந்த ராஜபக்சேவை சந்திச்ச ரஜத் சர்மா, சல்லுபாய் கேட்டுகிட்டதால தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்கள் விடுதலை பற்றி கேட்டிருக்கார். மகனோட பிரெண்டே ஆசைப் பட்டு கேட்டதும் மகிந்தா மீனவர்களை விடுதலை செய்ய ஒரு காரணமா இருக்கலாம்னு சொல்லாம சொல்லுது ஹிந்து பத்திரிகைல வந்த செய்தி.

மீனவர்கள் விடுதலைக்காக இந்திய அரசு எல்லா சாத்தியமான வழிமுறைகளையும் முயற்சி செய்து பார்த்தாங்களாம். அதில் சல்மானுக்கும் நமலுக்கும் இருந்த நட்பை பயன்படுத்தியதும் ஒன்னுண்ணு ஹிந்துகாரனே சொல்லிட்டான்.

மீனவர்களை விடுவித்த சல்மான் கானின் நமல் ராஜபக்சேவுடனான நட்பு
மீனவர்களை விடுவித்த சல்மான் கானின் நமல் ராஜபக்சேவுடனான நட்பு

தமிழ்நாட்டுல தமிழர்களுக்கு தமிழின தலைவர் கருணாநிதிலேர்ந்து ரகவாரியா போராளிகள் இருக்காங்க. இங்க இருக்கிற எல்லா குட்டிச் சுவர்லேயும் மீசை முறுக்கிட்டு திரியற திருமாவளவன் இருக்காரு; விரைவீக்க டாக்டரே பொறாமை படும் அளவுக்கு எல்லா இருட்டுச் சந்து போஸ்டர்லயும் பல்லைக் காட்டுற மருத்துவர் மற்றும் சின்ன மருத்துவர் இருக்காரு; இது தவிற 16” பைசெப்ட் பாய் சீமான், பழ நெடுமாறன், வைகோ, டிராபிக் ராமசாமி, பி.குமார் (அகில இந்திய காதலர் கட்சி), அர்ஜுன் சம்பத், ஜி.கே வாசன் (லேட்டரல் எண்ட்ரி) இப்படி பலர் இருக்காங்க. இவங்க எல்லாருக்கும் மேல அகிலம் போற்றும் மக்கள் முதல்வர் அம்மா இருக்காங்க.

ஆனா இத்தனை பேரும் என்ன செய்யறாங்க?

தாத்தா சி.எம்மா இருந்தப்ப டெல்லிக்கு லெட்டர் எழுதினாரு.. தாத்தா ரெஸ்ட்டுக்கு போயி மம்மி வந்த பின்னும் தாத்தா காட்டிய அதே லட்சிய வழியில் அதே லெட்டரு தான். இப்ப மம்மிய பெங்களூர் கோர்ட்டு மக்கள் முதல்வர் ஆக்கினப்புறம் ஒருத்தர் சி.எம்மா வந்திருக்காரு. பாஷா படத்துல ஆட்டோ மாணிக்கத்த ஆனந்தராஜ் உருட்டு கட்டைல போட்டு சாத்து சாத்துன்னு சாத்தும் போது ரஜினி லூசு மாதிரி சிரிப்பார்ல, அந்த ரியாக்சனயும் குணா கமல் ரியாக்சனையும் மிக்ஸ் பண்ணா மாதிரி இருக்கிற குங்குமப் பொட்டு மிச்சர் மாமா ஓ.பி.எஸ் கூட கலைஞர் காட்டிய அதே கொள்கையின் படி டெல்லிக்கு லெட்டர் தான் போடறாரு.

இவங்க எழுதற லெட்டரை சென்னை செக்கரட்ரியேட் போஸ்ட் பாக்ஸ்லேர்ந்து எடுக்கற கேப்ல பத்து மீனவர்களையும், சென்னைலேர்ந்து டெல்லிக்கு அந்த லெட்டர் போற கேப்ல பதினைஞ்சி மீன்வர்களையும், மோடி அந்த லெட்டர்ல பஜ்ஜிய அழுத்தி எண்ணைய வடிச்சிட்டு கசக்கி குப்பைத் தொட்டிக்குள்ளே வீசற கேப்ல மேலும் இருபது மீனவர்களையும் கைது செய்யறான் ராஜபக்சே.

இந்தியா தான் இந்த உலகத்திலேயே நாலாவது பலமான நாடுன்னு சொல்றானுக.. ஆனா, சுள்ளான் சிலோன்காரன் போட்டு கொமட்டுலயே குத்தறான். ஏண்டா போலீசு மிலிட்டரின்னு ஒவ்வொத்தனையும் கறி சோறு போட்டு செனப் பன்னி மாதிரி வளத்து வச்சிருக்கீங்களேடா, இதெல்லாம் அடி வாங்கற பாடியாடான்னு கேட்கலாம்னு தான் பார்த்தேன். BUT, அதெல்லாம் பாலிடிக்ஸ் பாஸ். நமக்கு பாலிடிக்ஸ்னாலே அவ்வளவா ஆகாது.

ரஜத் சர்மா
ரஜத் சர்மா

ஆனா இன்னைக்கு என் தலைவன் சல்மான் கானுக்காக நான் பேசியே ஆகனும் பாஸ். நீங்க பாருங்க இந்தியாவோட ஆர்மி, நேவி, விமானப்படை, உளவுப் படை, போலீஸ் படை அப்புறம் அவன் வச்சிருக்கிற தொந்திப் படைன்னு எவன்னாலயும் சிலோன்காரனை இத்தனை வருசமா டச் பண்ண முடியலை. மோடி இன்னாமோ பெரிய WWF Undertaker மாதிரி வஸ்தாதுன்னு சொன்னானுங்க.. அவரு வந்த பின்னேயும் மீனவர்கள் நிலைமை மாறவே இல்லை.

ஆனா இந்த அஞ்சி பேர் விசயத்துல பாருங்க இவரு போன் போட்ட உடனே அவரு வீட்டுக்கு அனுப்பி வச்சாராம். தமிழ்நாட்டுல பி.ஜே.பிக்கு பூத் கமிட்டி ஏஜெண்ட் போடக் கூட ஆளில்லாம காத்தாடிட்டு இருக்கு. இந்த மாதிரி எதுனா சீன் போட்டா தானே அடுத்த எலக்சென்ல வார்டு கவுன்சிலராவது ஜெயிக்க முடியும். ஏன்னா உத்திரபிரதேச இடைத்தேர்தலுக்காக ஊரையே கொளுத்தி விட்டவனுங்க தானே.

அதுக்கு தகுந்தா மாதிரி பி.ஜே.பியோட தமிழ்நாட்டு தலைவி தூள் சொர்ணாக்கா வேற எல்லா டி.விலயும் போயி “மீனவர்கள் விடுதலையை தயவு செய்து யாரும் அரசியல் ஆக்க வேணாம்.. ஆனா விடுதலைக்கு நாங்க தான் காரணம்”னு பீத்திகிட்டே இருக்காங்க. சரிங்கக்கா ரெண்டு நாள் முன்னாடி மோடியை பார்த்து பயந்து தூக்குலேர்ந்து அஞ்சி மீனவர்களை விடுவித்த ராஜபக்சே நேத்து பதினாலு மீனவர்களை கைது பண்ணிருக்காப்லயே? உங்காளுக்கு நெஜமாலுமே நெஞ்சில மஞ்சா சோறு இருந்தா “இனிமே தமிழ்நாட்டு மீனவர்கள் ஒருத்தரைக் கூட நாங்க கைது செய்ய மாட்டோம்னு” ராஜபக்சேவை சொல்ல வைங்க பார்க்கலாம்.

வினவு சார்.. பி.ஜே.பி பயங்கரமா காமெடி பன்றாங்கன்னா நம்ம அ.தி.மு.க காமெடியா பயங்கரமா நடந்துக்கறாங்க. பி.ஜே.பி காரன் என்னடான்னா சிலோன்ல இருந்து ரிலீஸ் ஆன மீனவர்களை வீட்டுக்கு அனுப்பாம, அவங்க வீட்டுக்காரங்க கிட்ட கூட சொல்லாம, அவங்கெல்லாம் திருச்சி விமான நிலையத்துல எப்படா பார்ப்போம்னு தவிச்சிகிட்டு இருந்த நேரத்துல டெல்லிக்கு கூப்டு மோடியோட நிப்பாட்டி போட்டோ சூட் வைக்கிறான்.

டெல்லிலேர்ந்து நேரா வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு பாத்தா கூடவே செக்கூரிட்டியா ஒரு ஆபீசரையும் அனுப்பி வைக்கிறான். ஏன்னா, தமிழ்நாட்டுக்கு வரும் மீனவர்கள் அம்மாவோட நின்னு ஒரு போட்டோ எடுத்து அதை மோடி போட்டோ வர்றதுக்கு முன்னே ரிலீஸ் பண்ணிடப் போறாங்களோன்னு ஒரு முன்னெச்சரிக்கை. ம்ம்ம்ம் பாம்பின் கால் பாம்பறியும்; ஒரு விளம்பரப்பிரியனுக்குத் தானே இன்னொரு விளம்பரப்பிரியையின் மனம் புரியும்.

தமிழினத்தின் விடிவெள்ளி சல்மான் கான்
தமிழினத்தின் விடிவெள்ளி சல்மான் கான்

இந்த நிலைமைல நம்ம தினத்தந்தி ரங்கராஜ் பாண்டேவோட நிலைமைய யோசிச்சா தான் மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு பாஸ். அவரோட ரெண்டு கண்ணும் ஒன்னை ஒன்னு எதிர்க்கும் தர்மசங்கடமான நிலைமை. மோடியை ஆழ்மனசிலேர்ந்து திருப்தியா ஆதரிச்சு பேசலாம்னு பாத்தா மக்கள் முதல்வர் காண்டாகி பெரிய அண்ணாச்சி மேல கஞ்சா கேசு விழுந்தாலும் விழும் – தொழில் நடக்கனுமா இல்லையா. வழக்கம் போல வாலைச் சுருட்டிகிட்டு மக்கள் முதல்வரை வெளிப்படையா ஆதரிக்கலாம்னாலும் பிரச்சினை.

இப்படி இவங்க எல்லாரும் மீனவர்களை மறந்துட்டு விளம்பரத்துக்காக அடிச்சிட்டு சாவும் போது எல்லாத்தையும் சுபமா நடத்தி வைச்சிட்டு எங்க சல்லு பாய் ஜென் துறவி மாதிரி சைலண்டா இருக்காரு.

ஈழப் போர் நடந்தப்ப சீமானும் வைகோவும் (பாஸ் விரல் வலிக்குது, இந்த லிஸ்ட்ல ஏற்கனவே நான் சொன்ன உதிரிப் போராளிகளையும் சேர்த்து புரிஞ்சிக்கங்க) அம்மா கால்லே விழுந்தாங்க, பி.ஜே.பி கால்லயும் விழுந்தாங்க. அட அவ்வளவு ஏங்க பாரபட்சம் பார்க்காம ஒபாமா கால்லயும் ஹிலாரி கால்லயும் கூட விழுந்தாங்க. ங்கொய்யால யாரு கிட்டே…..? ராஜராஜ சோழன் பரம்பரை பாஸ்; கால்ல விழுறதுன்னு முடிவு பண்ணிட்டா எவன் கால்னு பார்க்க மாட்டாய்ங்கே. மீசைய முறுக்கி விட்டுகினு குப்புன்னு விழுந்துடுவாய்ங்கே. வீரம் முக்கியமில்லையா பாஸ்.

அந்த தமிழ் வீரத்தை சல்லு பாய் கிட்டே காட்டி அவர் கால்ல விழுந்திருக்கலாம். ஈசியா மேட்டரை முடிச்சிக் குடுத்திருப்பார். சோட்டா பீம் மோடியாலயே முடியாததை அசால்டா முடிக்கிறவர் தான் சல்லு பாய். அவரு தமிழர் இல்லைன்னு இவங்க யாரும் யோசிக்கத் தேவையில்லை. தமிழ் போராளிகளின் ஒரே பிரச்சினை வடுக வந்தேறிகள் தானே? வேணும்னா இவங்க வழக்கமா வடுக வந்தேறிகளைக் கண்டு பிடிப்பதற்காக செய்யும் யூரின் டெஸ்ட் செய்து பார்க்கட்டுமே. அவர் வடுக வந்தேறி இல்லைன்னு டீடெய்லா ரிசல்ட் வரும். அதுக்கு நான் கேரண்டி.

தமிழ் போராளிகள் மேல கூட எனக்கு கோபம் இல்லை பாஸ் – நாளைக்கே சல்லு பாய் சீமானுக்கு கால்ஷீட் கொடுத்தா ”அந்த ராஜராஜ சோழனோட மறுஜென்மமே சல்மான் கான்” தான் அப்படின்னு நேக்கா பேலன்ஸ் பண்ணிடுவார். சீமான் இந்த மாதிரி எழுதற திருக்குறளுக்கெல்லாம் உரை எழுதறக்காகவே நிறைய அப்ரசண்டி பாய்ஸ் இருக்காங்க. சோ நோ பிராப்ளம்.

எனக்கு உங்க மேல தான் பயங்கர காண்டா இருக்கு. தமிழர்களுக்கு இருக்கும் ஒரே எதிர்கால நம்பிக்கை சல்லு பாயை நீங்க எத்தனை கேவலமா எழுதியிருக்கீங்க? சுவச் பாரத் பதிவுல கூட ’பொறுக்கி சல்மான் கான்’ அப்படின்னு எழுதியிருக்கீங்க. சல்லு பாய் லைட்டா மப்புல வண்டி ஓட்டும் போது குறுக்கே வந்து விழுந்து செத்தவங்களுக்காக எங்க தலைவனை எத்தனை கேவலமா திட்டிப் பேசினீங்க. போதைல இருக்கிறவன் குழந்தை மாதிரி பாஸ்.

அன்னைக்கெல்லாம் மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருந்துச்சி பாஸ். நீங்க செய்த தவறுக்கு பரிகாரமா இந்த பதிவை வெளியிடனும். செய்வீங்களா பாஸ்?

இப்படிக்கு,

வாசு

குறிப்பு : ஒருவேளை என்னோட லெட்டரை வெளியிட்டா தயவு செஞ்சு “தமிழினத்தின் புதிய விடிவெள்ளி சல்மான் கான்” அப்படின்னு பேர் வைங்க தலைவா.

  • தமிழரசன்

பில்கேட்ஸ் பவுண்டேஷன் : அதிர்ச்சியூட்டும் உண்மைகள் !

3

கேட்ஸ் பவுண்டேஷன்: மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!

(சென்ற இதழின் தொடர்ச்சி)

ழை நாட்டு மக்களைச் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்திப் புதிய மருந்துகளை அவர்கள் மீது சோதிப்பதையும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தடைசெயப்பட்ட மருந்துகளை, மந்திர சக்திகள் கொண்ட அருமருந்தாகக் காட்டி அவற்றை ஏழை நாடுகளின் தலையில் கட்டுவதையும் நோக்கமாகக் கொண்ட பில் கேட்ஸ் அறக்கட்டளை, இந்தியாவில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் தமது அறக்கட்டளையின் செயல்பாடுகளைப் பற்றிக் கூறும் போது, “தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியாவைப் போன்று சிறந்த இடம் வேறில்லை” எனக் குறிப்பிடுகிறார், பில் கேட்ஸ். இதன் பொருள், பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் புதிய தயாரிப்புகளை எவ்விதமான மருத்துவ அறம் மற்றும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படாமலும் மிகவும் மலிவான செலவிலும் மக்கள் மீது சோதித்துப் பார்ப்பதற்கு எளிமையானதொரு சோதனைக்கூடமாக இந்தியா விளங்குகிறது என்பதுதான்.

போலியோ ஒழிப்புத் திட்டம்
இந்திய அரசால் மிகப்பெரும் அளவில் செயல்படுத்தப்படும் போலியோ ஒழிப்புத் திட்டத்திற்கு கேட்ஸ் பவுண்டேஷனும் ரோட்டரி இண்டர்நேஷனலும்தான் “ஸ்பான்சர்கள்”

இந்தியாவில் பில் கேட்ஸ் அறக்கட்டளையின் செயல்பாடு எய்ட்ஸ் நோய் தடுப்பு, தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகள், தாய்-சேய் நலத் திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு, புதிய தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சிகள் – எனப் பல தளங்களில் விரிந்து செல்கிறது. உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் ஏறத்தாழ அம்மாநில அரசுகளின் அனைத்து சுகாதாரத் திட்டங்களிலும் பில் கேட்ஸ் அறக்கட்டளை மூக்கை நுழைத்துச் செயல்பட்டு வருகிறது.

அருணாச்சலப்பிரதேசம், ஜார்கண்ட், இராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கேட்ஸ் அறக்கட்டளை முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் போலியோ, காசநோய், காலரா, ரொட்டாவைரஸ், நிமோனியா ஆகிய நோய்களுக்கான தடுப்பூசித் திட்டங்களை இந்திய அரசு கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்துதான் நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

ரொட்டாவைரஸ் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான சோதனைக் கூடத்தை வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சி.எம்.சி) ஏற்படுத்தியுள்ள கேட்ஸ் அறக்கட்டளை, ரொட்டாவைரஸ் தடுப்பூசி தொடர்பான மருந்துகளை மேலும் வளர்த்தெடுக்கவும், அம்மருந்துகளை 10,000 பச்சிளங் குழந்தைகளுக்குக் கொடுத்து பரிசோதிக்கும் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்தவும் பாரத் பயோடெக் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறது. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் தடுப்பூசிகளை இந்திய அரசின் குழந்தைகள் நலத்திட்டத்துடன் இணைப்பதன் மூலம் அம்மருந்துகளுக்கான சந்தையை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது, கேட்ஸ் அறக்கட்டளை.

இப்படிப்பட்ட வணிக நோக்கங்களைத் தாண்டி கேட்ஸ் அறக்கட்டளைக்கு வேறெந்த ‘நல்ல’ நோக்கமும் கிடையாது என்பதற்கு இன்னொரு உதாரணமாக உத்திரப் பிரதேச மாநிலத்தில் அதனின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் தாய்-சேய் நலத் திட்டத்தைக் குறிப்பிடலாம். கேட்ஸ் அறக்கட்டளை இந்தத் திட்டத்திற்கு 7.5 கோடி அமெரிக்க டாலர்களை நிதியாக அளித்து, “கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஏழைத் தாய்மார்களுக்கும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்” எனக் கூறியது.  ஆனால், நடந்ததோ வேறு. சுகாதார விழிப்புணர்வு என்ற பெயரில் கிராமப்புற ஏழைகளை மருத்துவ காப்பீடு சந்தாதாரர்களாக மாற்றும் வேலைதான் தீவிரப்படுத்தப்பட்டது.

கடந்த 2010-11-ம் ஆண்டில் மட்டும் மருத்துவ மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு இந்திய அரசு ஒதுக்கிய நிதி 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இந்த நிதியோடு ஒப்பிட்டால் பில் கேட்ஸ் அறக்கட்டளை கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சுகாதராத் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியின் அளவு – 6,000 கோடி ரூபாய் என்ற சுண்டைக்காய்தான். ஆனாலும், கேட்ஸ் அறக்கட்டளை இந்திய அரசின் சுகாதாரத் திட்டங்களை, அவை செயல்படுத்தப்படும் விதத்தைத் தீர்மானிக்கும் செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட்டு அவற்றை தங்களது நலனுக்கு ஏற்றாற்போல மாற்றுவது என்ற தனது ஆதிக்க நோக்கத்தை இந்தியாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

பீகார் மஹிலா ஸமக்யா
பீகார் மாநில அரசின் பீகார் மஹிலா ஸமக்யா என்ற அமைப்பின் கீழ் செயல்படும் பல்வேறு மகளிர் அமைப்புகள் இணைந்து பீகாரின் முசாஃபர்புர் மாவட்டத்தில் பெண்கள் சமத்துவம் குறித்து நடத்திய மாநாடு. “பெண்கள் சமத்துவம்” என்ற இந்திய அரசின் திட்டத்திற்கு யு.எஸ்.எய்ட்-ம் கேட்ஸ் அறக்கட்டளையும் புரவலர்களாக உள்ளன. (கோப்புப் படம்)

உமி கொண்டுவந்தவன் அவல் தின்பது எப்படி சாத்தியமானதென்றால், இது கேட்ஸ் அறக்கட்டளை இந்தியாவிற்கு எவ்வளவு நிதி தருகிறது என்பதோடு சம்பந்தப்பட்டதாக இல்லை.  மாறாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, அரசின் மருத்துவ-சுகாதாரத் திட்டங்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்கு ஏற்ப நைச்சியமான முறைகளில் மாற்றியமைக்க வேண்டும்.  அத்திட்டங்களை உருவாக்குவதையும், செயல்படுத்துவதையும் மட்டுமல்ல, அதற்கான நிதியைச் செலவழிக்கும் உரிமையையும் கேட்ஸ் அறக்கட்டளை போன்ற கார்ப்பரேட் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற ஏகாதிபத்திய ஆதிக்கம்தான் இதன் பின்னுள்ள காரணம்.  அதனைச் செயல்படுத்தும் கைக்கூலிகளாக இந்திய ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களும் இருந்து வருகின்றனர்.  அரசு நிறுவனங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் கேட்ஸ் அறக்கட்டளையின் வேலைக்காரனாக மாற்றும் வேலையைச் செய்து வருகின்றனர்.

புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காக பி.டி.பி. என்றழைக்கப்படும் “பொதுத் துறை-தனியார் கூட்டு” திட்டத்தை கேட்ஸ் அறக்கட்டளை முன்னிறுத்துகிறது. இதன் மூலம் ஏழை நாடுகளின் அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மாணவர்களைப் பன்னாட்டு ஏகபோக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைத்து புதிய மருந்துகள், தடுப்பூசிகள், பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தயாரிக்கும் தமது நோக்கத்தை மிகவும் மலிவான செலவில் நிறைவேற்றி வருகிறது.

இந்த பி.டி.பி. திட்டத்தின்படி புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதுடன் கேட்ஸ் அறக்கட்டளை நின்றுவிடுவதில்லை, அவற்றை மக்கள் மீது சோதனை செய்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் வாங்குவதுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மருந்துகளுக்கான சந்தையை உருவாக்கிக் கொடுக்கும் தரகனாகவும் கேட்ஸ் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

gates-1இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் அதன் கீழ் இயங்கும் உயிரி தொழில்நுட்பத் தொழிற்துறை ஆராய்ச்சி மற்றும் உதவி மையம் ஆகியவற்றுடன் இணைந்து பில் கேட்ஸ் அறக்கட்டளை உருவாக்கியுள்ள ‘கிராண்ட் சேலஞ்சஸ் இந்தியா‘ என்கிற அமைப்பு பி.டி.பி. திட்டத்திற்கு எடுப்பான உதாரணம். 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம், பில் கேட்ஸ் அறக்கட்டளையும், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறையும், தலா 150 கோடி முதலீடு செய்து தொற்றுநோய்களுக்கான புதிய தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதுடன் பழையவற்றை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபடும் நிறுவனம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக அறிவிக்கிறது.

இவை போன்ற திட்டங்களுக்காக  கேட்ஸ் அறக்கட்டளையுடன் இந்திய அரசு கைகோர்த்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.  ஆனாலும், நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஏகாதிபத்திய ஆதிக்கம் காரணமாகவே இந்தக் கூட்டுறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராண்ட் சேலஞ்சஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் பில் கேட்ஸ் அறக்கட்டளையைச் சேர்த்துக் கொண்டதன் மூலம், இனிவரும் காலங்களில் எந்தெந்த தடுப்பூசி மருந்துகள் தொடர்பாக ஆராய்சசி செய்ய வேண்டும், உற்பத்தி செய்ய வேண்டும், மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் உரிமையும் அதனிடம் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று பில் கேட்ஸ் அறக்கட்டளையும், இந்திய அரசும் இணைந்து உருவாக்கியுள்ள “இந்திய பொது சுகாதார அறக்கட்டளை”, பொது சுகாதாரம் குறித்து ஆய்வு செய்வதற்கான கல்வி நிறுவனங்களை நாடு முழுவதும் தொடங்கவிருக்கிறது. இந்த அறக்கட்டளைக்கு 90 கோடி ரூபாய் நிதியளித்துவிட்டு இந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தையும் தனது நோக்கத்திற்குப் பயன்படுத்தும் வாய்ப்பை இதன் மூலம் பில் கேட்ஸ் அறக்கட்டளை பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புக்களை சந்தித்தப் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் தடுப்பூசிகளை வேறு பெயர்களில் இந்தியா போன்ற ஏழை நாடுகளின் தலையில் கட்டும் கேட்ஸ் அறக்கட்டளையின் சதிச்செயல் ஏற்கெனவே அம்பலமான பிறகும் கூட இந்திய அரசு அதனுடனான தொடர்பைப் பேணுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு கேட்ஸ் அறக்கட்டளையும், “பாத்” என்ற அரசுசாரா நிறுவனமும் இணைந்து, குஜராத்திலும், ஆந்திராவிலும் நடத்திய தடுப்பூசி முகாம்களில், ஹெச்.பி.வீ. என்ற  கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசியை 23,000 பழங்குடியினச் சிறுமிகளுக்குச் செலுத்தின. இந்த தடுப்பூசி நோயைத் தடுப்பதற்குப் பதிலாக பாரதூரமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியது. அத்தடுப்பூசியின் காரணமாக ஏழு பழங்குடியினச் சிறுமிகள் அநியாயமாக உயிரிழந்ததோடு, 1,200-க்கும் அதிகமான சிறுமிகள் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்க மக்களால் புறக்கணிக்கப்பட்ட கர்டாசில் என்ற மருந்தைத்தான், அதில் சில மாற்றங்களைச் செய்து, புதுப் பெயரையும் சூட்டி இந்தியச் சிறுமிகளுக்குச் செலுத்திய அயோக்கியத்தனம் பின்னர் விசாரணையில் அம்பலமானது.

தடுப்பு மருந்து அறிமுகம் - பாரத் பயோடெக்
கேட்ஸ் அறக்கட்டளையைத் தனது கூட்டாளியாகக் கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு நோய்க்கான புதிய, மலிவான தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி (கோப்புப் படம்)

இம்மரணங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கேட்ஸ் அறக்கட்டளையின் தொங்குதசையான பாத் நிறுவனம், பழங்குடியினச் சிறுமிகளை வலுக்கட்டாயமாக இம்முகாம்களுக்கு இழுத்து வந்ததும், இம்மருந்தின் விளைவுகள் குறித்துப் பல பொய்களைப் பிரச்சாரம் செய்ததும் மட்டுமின்றி, தடுப்பூசி போட்டுக் கொண்ட பல சிறுமிகளின் பெற்றோர்களின் கையெழுத்தை பாத் நிறுவன அதிகாரிகளே மோசடியாக போட்டிருப்பதும் நிரூபணமானது.

இம்மரணங்கள் குறித்து விசாரித்த நாடாளுமன்ற  நிலைக்குழு, தனது அறிக்கையில், “மருத்துவ முகாம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இவை, அங்கீகாரமற்ற தடுப்பூசிகளை மனிதர்கள் மேல் சோதித்துப் பார்ப்பதற்காக நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனை நடவடிக்கைகளாகும்” என்பதை உறுதி செய்து, “இது சட்டவிரோதமான முறையில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலாகும்” எனச் சுட்டிக் காட்டியது. “ஒருவேளை இந்த அறக்கட்டளையின் பரிந்துரையின் பேரில் இந்திய அரசின் தடுப்பூசித் திட்டத்தில் கர்டாசில் தடுப்பூசியைச் சேர்த்திருந்தால், அது அந்த மருந்தை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனத்திற்கு மிகப் பெரும் இலாபத்தை, ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே செல்லும் அதிரடி இலாபத்தை, அள்ளித் தந்திருக்கும்” என்பதை அம்பலப்படுத்திய நாடாளுமன்ற நிலைக்குழு, “பொதுச் சேவை என்கிற பெயரில் தனியார் நிறுவனங்களின் வணிக நோக்கங்களுக்குச் சாதகமாக இயங்கிவரும் இந்த அறக்கட்டளை மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் பரிந்துரைத்தது.

ஆனால், இதுவரை கேட்ஸ் அறக்கட்டளை மீதோ, பாத் நிறுவனம் மீதோ எந்த கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கேட்ஸ் அறக்கட்டளையும் புதிய மருந்துகளைப் பரிசோதிக்கும் தனது கிரிமினல் நடவடிக்கைகளைக் கைவிட்டுவிடவில்லை. கேட்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் இயங்கும் “குடும்ப சுகாதார அகிலம்” என்ற நிறுவனம், 2011-13-ம் ஆண்டுகளில் இந்தியாவில் 12,818 மருந்துப் பரிசோதனைகளைப் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் சார்பாக நடத்தியிருக்கிறது. இது  போல கேட்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் இயங்கும் ஏர்ராஸ் என்ற நிறுவனம் 2011-ம் ஆண்டில் பெங்களூரு நகரில் காச நோய்த் தடுப்பூசிக்கான மருந்துப் பரிசோதனைகளை நடத்தியது.

சமூகம் சார்ந்த ஆரம்ப சுகாதாரத் திட்டங்கள் மட்டுமே ஏழை நாட்டு மக்களுக்கு பலன் தரும் என்று 1978-ல் நடைபெற்ற ஆரம்ப சுகாதாரத்துக்கான அல்மா அட்டா மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது. “தங்களது உடல் நலத்திற்கான சுகாதாரத் திட்டங்களை வகுக்கவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும், மக்கள் அனைவருக்கும் உரிமையும், கடமையும் உண்டு” என்ற கொள்கையின் அடிப்படையில் மாவோவின் மக்கள் சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘வெறுங்கால் மருத்துவர்கள்’ (Barefoot Doctors) என்ற திட்டம், பொது சுகாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை நாடுகள் அதிலிருந்து விடுபட மேற்குலக ஏகாதிபத்தியத்தின் தயவை நம்பியிருக்க வேண்டியதில்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது. அல்மா அட்டா மாநாடு சீன அனுபவத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து ஏழை நாடுகளும் சமூகம் சார்ந்த சுகாதார நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரியது.

கேட்ஸ் அறக்கட்டளையோ அல்மா அட்டா தீர்மானத்திற்கு நேர்எதிராக, புதிய புதிய தடுப்பூசிகளை உருவாக்கி, அவற்றைச் சந்தையில் கொட்டுவதன் மூலம் மட்டுமே நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என வாதிடுவதோடு, அதனை முனைப்பாகச் செயல்படுத்தியும் வருகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எபோலா – என உலகமயம் உருவாக்கித் தள்ளும் ஒவ்வொரு புதுப்புது தொற்று நோய்களையும் தனது திட்டங்களைச் செயல்படுத்துவதற்குக் கிடைத்த நல்வாயப்பாகவே ஏகாதிபத்தியங்கள் கருதுகின்றன. மேற்குலகின் அமைதியைச் சீர்குலைப்பதில் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு அடுத்தபடியாக இத்தொற்று நோய்கள் இருப்பதாக நியாயம் கற்பித்து, அதனை ஒழிப்பது என்ற பெயரில் ஏழை நாடுகள் மீது தமது ஆதிக்கத்தை மேலும்மேலும் தீவிரப்படுத்த முனைகின்றன. இந்த ஆதிக்கத்தைத் தொடுக்கும் கருவிகளாக கேட்ஸ் அறக்கட்டளை போன்ற தர்மகர்த்தாக்களும் அரசுசாரா நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

gates-maramma
கேட்ஸ் அறக்கட்டளை நடத்திய கருப்பை புற்றுநோய் தடுப்பு முகாமில் ஊசி போட்டுக் கொண்ட ஏழாவது வாரத்திலேயே இறந்து போன சாயம்மாவின் புகைப்படத்தோடு, அவரது தாயார் மாரம்மா. (கோப்புப் படம்)

உலகிலேயே பொது மருத்துவமும், ஆரம்ப சுகாதாரமும் மிகத் தீவிரமாக தனியார்மயப்படுத்தப்பட்டுள்ள நாடு அமெரிக்காதான். அந்நாட்டில் ஆயிரம் டாலர் இல்லாமல் ஒரு பல்லைக்கூடப் பிடுங்கிவிட முடியாது. அந்தளவிற்கு அந்நாட்டில் மருத்துவச் செலவு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு இல்லாதவர்கள் சிகிச்சை பெறுவது குதிரைக் கொம்புக்கு ஒப்பானது. செப்டம்பர் 2001-ல் நடந்த இரட்டை கோபுரத் தாக்குதலையடுத்து, அந்த இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொற்று நோய்க்கு ஆளாக நேர்ந்தது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அமெரிக்க அரசு மறுத்துவிட்ட நிலையில், 9/11 என்ற ஆவணப்படத்தை இயக்கிய மைக்கெல் மூர் என்ற இயக்குநர், அத்தொழிலாளர்களை கியூபாவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சைப் பெற வைத்தார். காத்ரினா புயல் தாக்கி தெருவிற்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பின ஏழை மக்களுக்கு கியூபாவிலிருந்து சென்ற மருத்துவர் குழுக்கள்தான் முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தன.

இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட நாட்டைச் சேர்ந்த பில் கேட்ஸ் கணினித் துறையைச் சேர்ந்த ஏகபோக முதலாளி மட்டுமல்ல; பிக் பார்மா என்று அழைக்கப்படும் ஏகபோக மருந்து கம்பெனிகளிலும் பங்குதாரராக இருந்து வருகிறார். அவரது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்க உளவுத் துறைக்காகச் செயல்பட்டு வருவதும் அம்பலமான உண்மை. தனியார்மயத்தை ஆராதிக்கும் நாட்டைச் சேர்ந்த ஏகபோக முதலாளி, அமெரிக்க அரசின் உளவாளி ஏழை நாட்டு மக்களுக்கு உதவ வந்திருக்கும் தர்மகர்த்தாவாக முன்னிறுத்தப்படுவது அயோக்கியத்தனமானது. ஒவ்வொரு வார்த்தையின் பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கிறது எனும்பொழுது, ஒரு தேசங்கடந்த தொழிற்கழகத்தின் முதலாளி நடத்தும் கேட்ஸ் அறக்கட்டளையின் செயல்பாடுகளின் பின்னே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனும் ஆதிக்கமும் மறைந்திருக்காதா?

(முற்றும்)
– கதிர்
இக்கட்டுரை, மும்பையிலிருந்து வெளிவரும் “இந்தியப் பொருளாதாரத்தின் கூறுகள்” என்ற ஆங்கில காலாண்டு இதழில் (எண்.57) வெளியான “கேட்ஸ் அறக்கட்டளையின் உண்மை நிகழ்ச்சி நிரல்” மற்றும் “இந்தியாவில் கேட்ஸ் அறக்கட்டளை: அரிச்சுவடி” என்ற இரு கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

மரத்தில் மறைந்தது மா மத யானை

1

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 4

மரத்தில் மறைந்தது மா மத யானை

அம்பேத்கர் மதத்தைப் பற்றி
அம்பேத்கர், “சாராம்சத்தில் மதத்தன்மை மட்டும் கொண்ட சில சடங்குகள்… ஆகியவற்றுடன் மதம் குறித்த நமது வரையறுப்பை நாம் நிறுத்திக் கொள்ள முயல வேண்டும்” என்று கூறினார்.

மதச்சார்பின்மை வரையறுக்கப்படாதது இருக்கட்டும். மதம் என்றால் என்னவென்று வரையறுப்பது மத உரிமையைத் தீர்மானிப்பதற்கு அவசியமாக இருந்தது. ஏனென்றால் ஆணாதிக்கத்திலிருந்து தொடங்கி சாதி ஆதிக்கம், நிலவுடைமை ஆதிக்கம் வரையிலான அனைத்து வகை ஆதிக்கங்களுமே மத ஒழுக்கமாகவும் மத சம்பிரதாயமாகவும் மதச்சட்டமாவும் பின்னர் அதுவே அரசின் சட்டமாகவும் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன. இந்த ஆதிக்க உணர்வுகளையும் மத உணர்வுகள் என்று தான் மதவாதிகள் கூறி வருகின்றனர். இதனடிப்படையில்தான் மதத் தனிநபர் சட்டங்களையும் நியாயப்படுத்தி வருகின்றனர்.

நவீன “இந்தியக் குடியரசு” அமையும் சந்தர்ப்பத்தில் இதற்கு முடிவு கட்ட விரும்பிய அம்பேத்கர், “சாராம்சத்தில் மதத்தன்மை மட்டும் கொண்ட சில சடங்குகள்… ஆகியவற்றுடன் மதம் குறித்த நமது வரையறுப்பை நாம் நிறுத்திக் கொள்ள முயல வேண்டும்” என்று கூறினார்.

“மதத்தின் சாரம் (தீன்) என்பதைப் பொறுத்தவரை வழிபாடு மற்றும் நம்பிக்கை தொடர்பான சடங்குகள்தான் (இபாதத், இதிகுவாதத்) மாற்றக் கூடாதவை; மற்றவை (அதாவது ஷரியத் சட்டம் போன்றவை) மாறலாம்” என்ற நிலையை மவுலானா அபுல் கலாம் ஆசாத் மேற்கொண்டார்.

இந்து என்பது வெறும் மதமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை (சநாதன தருமம்) என்று கூறும் பார்ப்பன மதவாதிகளும், இசுலாம் என்பது மதமல்ல அது ஒரு மார்க்கம் (வாழ்க்கை நெறி) என்று கூறும் இசுலாமியப் பழமைவாதிகளும் இணைந்து நின்று அம்பேத்கரின் கருத்தை எதிர்த்தனர்.

பெரியாரைப் போன்று அம்பேத்கர் நாத்திகர் அல்ல. மனிதனின் ஆனமீகத் தேவையை நிறைவு செய்ய மதம் அவசியம் என்ற கருத்து கொண்டவர் என்பதையும் இங்கே நினைவிற்கொள்ள வேண்டும். ஆன்மீக உரிமையைக் காட்டிலும் ஆதிக்க உரிமையில் அதிக நாட்டம் கொண்ட மதவாதிகள்தான் இறுதியில் வெற்றி பெற்றனர். மதம் மற்றும் மத உரிமையை இன்னதென்று வரையறுக்காமல் அந்தப் பொறுப்பை பாராளுமன்றம் மற்றும் நீதித்துறையின் தோள்களுக்குத் தள்ளிவிட்டது அரசியல் நிர்ணய சபை.

அன்று தொடங்கி இன்று வரை பாராளுமன்றம் அந்தப் பணியை மேற்கொள்ளவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக எது மத உரிமை, எது மத நம்பிக்கை என்பதை ஆய்ந்து தீர்ப்பு சொல்லும் வேலையை உச்சநீதி மன்றம்தான் செய்து வருகிறது.

சுதந்திரமா, சமத்துவமா?

அரசியல் சட்டத்தின் 25 மற்றும் 26- வது பிரிவுகள் வழங்குகின்ற மதச் சுதந்திரத்தின் அடிப்படையில் தான் அனைத்து மதங்களின் தனிநபர் சட்டங்களுமே அதிகாரம் பெறுகின்றன. அதாவது குறிப்பிட்ட மதத்தில் ஒரு இந்தியக் குடிமகன் பிறந்தான் என்ற காரணத்தைக் கொண்டு, பிறப்பு முதல் இறப்பு வரையிலான அவனது சிவில் வாழ்க்கையில் தலையிட்டு அதிகாரம் செய்யும் உரிமையை இந்தச் சட்டப் பிரிவுகள்தான் மதத்திற்கு அளிக்கின்றன.

இந்திய உச்சநீதி மன்றம்
நீதிமன்றமே புரோகிதனாக

அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு சட்டத்தின் முன் அனைத்து குடிமக்களும் சமம் என்று கூறுகிறது; 15-வது பிரிவோ மதம், இனம், பால் வேறுபாடுகளுக்காக குடிமக்கள் யாரிடமும் அரசு வேற்றுமை பாராட்டக்கூடாது என்று கூறுகிறது.

குடிமகன் என்ற முறையில் ஒரு தனிநபரின் சமத்துவ உரிமையும், அந்தத் தனிநபரின் மேல் ஆதிக்கம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உள்ள சுதந்திரமும் மோதிக் கொள்ளும் போது – அதாவது ஷாபானுவின் மீது ஷரியத் ஆதிக்கம் செய்யும் போது, இந்துப் பெண்ணுக்குச் சொத்துரிமை மறுக்கப்படும் போது, சட்டப்பிரிவு 24-ற்கும் 14-ற்கும் இடையில் முரண்பாடு ஏற்படும் போது, அதாவது சுதந்திரமும், சமத்துவமும் மோதிக்கொள்ளும் போது நீதிமன்றம் என்ன செய்யும்?

நீதிமன்றமே புரோகிதனாக

இந்த இடத்தில்தான் ‘ மதம் ‘ என்பதற்கு உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

“மதத்தை கடைப்பிடிக்கவும், பிரச்சாரம் செய்யவும் சுதந்திரம்” அளிக்கும் சட்டப்பிரிவு 25- ல் கண்டுள்ள மதம் என்ற சொல்லின் பொருளை விளக்கிய உச்சநீதி மன்றம், “வெறும் நம்பிக்கை மட்டும்தான் மதம் என்று கூறிவிட முடியாதெ”ன்றும் ஒரு மதத்தின் உயிராதாரமான விசயம் எது என்பதை “அந்தக் குறிப்பிட்ட மதத்தின் கோட்பாடுகளைக் கொண்டுதான் தீர்மானிக்க முடியும்” என்றும் கூறியது.

“எந்த ஒரு பிரிவினரும் தங்களது மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் உரிமையை” வழங்குகின்ற சட்டப்பிரிவு 26(பி) –ல் கண்டுள்ள “மதம் சம்பந்தப்பட்ட விவகாரம்” என்ற சொற்கோர்வையை உச்சநீதி மன்றம் கீழ்க்கண்டவாறு வியாக்கியானம் செய்தது.

“அதேபோல கோயிலில் யார் யார் நுழைந்து வழிபாடு நடத்தலாம், அவர்கள் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதும் மத சம்பந்தப்பட்ட விவகாரம் தான்.”

அனைத்து அதிகாரமும் மத குருமாருக்கே

குறிப்பிட்ட மதத்தில் நம்பிக்கையுள்ள ஒரு இந்தியக் குடிமகன், மேற்படி விதிமுறைகளைக் கடைப்பிடிக்க மறுத்தால் அவனை ” மதத்தின் அடிப்படையில் சமூகப் புறக்கணிப்பு செய்யும் உரிமையும் மதகுருமார்களுக்கு உண்டெ”ன்றும் அது ‘தனது சிவில் உரிமையைப் பாதிப்பதாக‘ ஒரு குடிமகன் முறையிட முடியாதென்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறாக, மதம் என்பதற்கு உச்சநீதி மன்றம் கூறியுள்ள விளக்கங்கள் அனைத்துமே ஒரு குடிமகனின் சமூக வாழ்க்கை மீது மதம் செலுத்தும் அதிகாரத்திற்கு சட்ட அங்கீகாரம் தருபவை; மதத்தைத் தனிநபரின் நம்பிக்கை என வரையறுக்கும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கு எதிரானவை. எனவே குடிமகனின் சமத்துவ உரிமைக்கும் மதத்தின் சுதந்திரத்திற்குமான மோதலில் உச்சநீதி மன்றம் மதத்தைத்தான் ஆதரித்து வருகிறது.

மதத்தின் ஒழுக்கமும் அரசின் ஒழுக்கமும்

சங்கராச்சாரி, சத்யமூர்த்தி
தேவதாசி முறை, உடன்கட்டையேறுதல் (சதி), பலதார மணம் ஆகிய கொள்கைகளனைத்தும் இந்து மதத்தின் பிரிக்கவொண்ணாத கோட்பாடுகளாக இருந்தவைதான். என்பதை சங்கராச்சாரி முதல் சத்தியமூர்த்தி வரை பலரும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இருப்பினும், பொது ஒழுங்கு, நலவாழ்வு மற்றும் ஒழுக்க நெறி ஆகியவற்றின் அடிப்படையில் மதச் சுதந்திரத்தை முறைப்படுத்தும் உரிமை அரசுக்கு இருப்பதாக சட்டப்பிரிவு -25(1) கூறுகிறது.

நல்லொழுக்கத்தின் மொத்தக் குத்தகைதாரரான மதத்திடமிருந்து ஒழுக்கத்தை நிலைநாட்டும் உரிமையை அரசு கைப்பற்றிக் கொள்ளும் இந்தச் சட்டப்பிரிவு மேற்கத்திய ஜனநாயக, மற்றும் மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் ஒரு முக்கியமான அம்சமாகும்.

இந்துக் கோயில்களின் கருவறையில் பார்ப்பனரல்லாதார் நுழைவதற்கு நிலவும் தடை, கிறித்தவப் பெண்கள் மண விலக்குப் பெறுவதில் உள்ள ஆகப் பிற்போக்கான தடைகள், இசுலாமிய ஆண்களின் நான்கு தார மண உரிமை போன்ற ஒழுக்ககேடான மத சம்பிரதாயங்களை, அரசு தன்னுடைய கையில் வைத்திருக்கும் ஒழுக்க நெறியை நிலைநாட்டுவதற்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒழித்திருக்கலாமே! ஏன் செய்யவில்லை? ஏனென்றால், ‘சர்வ தர்ம சம பாவ‘ என்ற மண்ணுக்கேற்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் ஒளியில்தான் ஒழுக்க நெறி குறித்த தனது வரையறைகளை அரசு ஏற்படுத்திக் கொள்கிறது. அதாவது மதத்தின் ஒழுக்க நெறியே அரசின் ஒழுக்க நெறி!

இமாலயப் பொய்

தேவதாசி முறை, உடன்கட்டையேறுதல் (சதி), பலதார மணம் ஆகிய கொள்கைகளனைத்தும் இந்து மதத்தின் பிரிக்கவொண்ணாத கோட்பாடுகளாக இருந்தவைதான். இதை சங்கராச்சாரி முதல் சத்தியமூர்த்தி வரை பலரும் தெளிவுபடுத்தியுள்ளனர். எனினும், மேற்கூறிய மதச் சம்பிரதாயங்களைத் தடை செய்ய வேண்டிய சமூக நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்காகவே சட்டப்பிரிவு 25(1) தனக்களித்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்து மதத்தின் ‘தீய ஒழுக்கங்களை’ அரசு ஒழிக்கவில்லை. மாறாக ” இந்தப் பழக்கங்கள் இந்து மதத்தின் சாராம்சமான கோட்பாடுகள் அல்ல” என்று ஒரு இமாலயப் பொய்யைச் சொல்லி அதனடிப்படையில் தடை செய்தது.

இவ்வாறு புளுகியதன் நோக்கம் இந்து மதத்தின் கவுரவத்திற்குக் களங்கம் வந்துவிடக்கூடாதே என்ற அச்சம் மட்டுமல்ல; மதத்திற்கு ஒழுக்க நெறியைக் கற்பிக்கும் பணியைச் செய்வதன் மூலம், மதச் சுதந்திரத்தில் தலையிடும் ஒரு ‘தவறான’ முன் மாதிரியை உருவாக்கி இந்திய மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் அடிப்படையைத் தகர்க்க அரசு (அதாவது நீதிமன்றம் உள்ளிட்ட அரசு ) விரும்பவில்லை என்பதுதான்.

பார்ப்பனச் சூது!

பாஜக
மதவிவகாரங்களில் அரசுத் தலையீட்டை எதிர்க்கும் பாரதீய ஜனதா கும்பல், அரசின் இந்த அதிகாரத்தையும் பறிக்க வேண்டுமென ஏன் கோரவில்லை என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது.

வேறொரு கோணத்திலிருந்து இதைப் பரிசீலிப்போம். இந்துக் கோயில்களின் உள்ளே நுழைந்து வழிபாடு நடத்த தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி இல்லை என்ற விதியும், பார்ப்பனரல்லாதார் கருவறைக்குள் நுழைய முடியாது என்ற விதியும் ஆகமவிதிகளில் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

சமூக நிர்ப்பந்தங்கள் காரணமாகவும், அரசியல் நோக்கத்திற்காகவும் தாழ்த்தப்பட்டோர் ஆலய நுழைவை ஏற்க நினைத்த சனாதனிகள் (அரசு) முதலில் சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனக் குருமார்களிடம் இதற்கு ஒப்புதல் பெற்றுக் கொண்டனர். இது மதவாதிகளுடனான சமூக ரீதியான சமரசம்.

அடுத்து, சட்டரீதியாக இதை அமல்படுத்தும் போது தேவதாசி ஒழிப்புக்குக் கூறியதைப் போல “ஆகம விதிகள் என்பவை இந்து மதத்தின் சாராம்சமான கோட்பாடுகள் அல்ல” என்று வியாக்கியானம் செய்து நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யப் போனால் கோயில்களின் மீதான அதிகாரத்தையே பார்ப்பனர்கள் இழக்க நேரும்.

எனவேதான் மதச் சுதந்திரத்தை வழங்கும் சட்டப்பிரிவு 25- இல் உட்பிரிவு (2) சேர்க்கப்பட்டது. ” தாழ்த்தப்பட்டோரைக் கோயிலுக்குள் அனுமதிப்பது மதச்சுதந்திரத்தைப் பாதிப்பதாகாது” என உட்பிரிவு கூறுகிறது. மேல் பார்வைக்குத் தாழ்த்தப் பட்டோரின் உரிமையைப் பாதுகாப்பதற்கான சரத்து போலத்தோற்றமளிக்கும் இந்த உட்பிரிவின் உண்மையான நோக்கம் ஆகம விதிகளைப் பாதுகாப்பதுதான்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக 1970 இல் தி.மு.க அரசு இயற்றிய சட்டம், மதச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்றும், “ஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை” என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறிய போது தான் இந்தச் சூட்சுமம் அம்பலத்திற்கு வந்தது.

இந்து மதச் சம்பிரதாயங்களில் அரசு  தலையீடு செய்து பல விசயங்களைத் திருத்தியமைத்துள்ளதென்றும், பிறர் (முசுலீம்கள்) தான் இதை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும் பாரதீய ஜனதா முதல் நீதிபதி குல்தீப் சிங் வரை பலரும் பிரச்சாரம் செய்கின்றனரே, அந்த ‘அரசுத் தலையீட்டின்‘ சட்ட ரீதியான லட்சணம் இதுதான்.

மதம் மற்றும் மத உரிமை குறித்து இதுவரை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்புகளின் சாரம் வருமாறு.

“மதம் மற்றும் மத உரிமை பற்றி எல்லா மதங்களுக்கும் பொதுவான எந்த ஒரு வரையறையும் அரசு ஏற்படுத்தவே முடியாது. எனவே எல்லா மதத்தினரின் உரிமைகளும் சம்மானதோ,ஒரு சீரானதோ அல்ல. (அதாவது கத்தி வைத்துக் கொள்ளும் சீக்கியனின் மத உரிமை தனக்கும் வேண்டுமென ஒரு முசுலீம் கோர முடியாது )”

“ஒரு குடிமகனின் மதச்சார்பற்ற உரிமையைக் காட்டிலும் மதத்தின் உரிமையே மேலானது.”

பாரதீய ஜனதாவின் பொருள் பொதிந்த மவுனம்

ஆயினும், “பொது ஒழுங்கு, நல வாழ்வு, ஒழுக்கநெறி” ஆகியவற்றின பெயரால் மதச் சுதந்திரத்தில் தலையிட்டுக் கட்டுப் படுத்துவதற்கு அரசிற்கும் நீதிமன்றத்திற்கும் சட்டப்பிரிவு 25,26 –ல் உரிமை இருக்கத்தான் செய்கிறது.

மதவிவகாரங்களில் அரசுத் தலையீட்டை எதிர்க்கும் பாரதீய ஜனதா கும்பல், அரசின் இந்த அதிகாரத்தையும் பறிக்க வேண்டுமென ஏன் கோரவில்லை என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது.

இவ்வாறு செய்வது இசுலாமிய, கிறித்தவ மதங்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கான வாய்ப்பை அரசிடமிருந்து பறித்து விடும் என்பது ஒரு காரணம். மேலும்,அரசின் செல்வாக்கிலிருந்து மதத்தை விடுவிப்பதல்ல அக்கட்சியின் நோக்கம்; மதத்தின் சித்தாந்தச் செல்வாக்கின் கீழ் அரசைக் கொண்டு வர முயலும் ஒரு பாசிசக் கட்சியே அது. எனவே அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இந்தச் சட்டப்பிரிவுகள் தனக்குத் தடையாக இல்லாத வரையில் இவற்றை எதிர்க்க வேண்டிய அவசியம் பாரதீய ஜனதாவிற்கு இல்லை.

செங்கல் ஊர்வலம் நடத்துவதற்கும், ரதயாத்திரை நடத்துவதற்கும், கடப்பாறையுடன் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் கலவரம் நடத்துவதற்கும், மகாஆரத்தி என்ற பெயரில் வழிபாட்டுக் கூட்டம் நடத்தி வன்முறையைத் தூண்டுவதற்கும், பாரதீய ஜனதா இந்து முன்னணிக் கும்பலுக்கு மதச்சுதந்திரத்தை அளிப்பவை சட்டப்பிரிவு 25-ம், 26-ம் தான்.

‘பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி, நலவாழ்வு’ ஆகிய காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை அரசோ, நீதி மன்றமோ தடுத்ததில்லை எனும்போது அரசின் இந்த ‘காகித அதிகாரம்’ குறித்த பாரதீய ஜனதா கவலை கொள்ள அவசியமில்லை.

அரசு அவ்வாறு தலையிட முயன்ற சந்தர்ப்பங்களில், எடுத்துக் காட்டாக, ‘பாபர் மசூதியா – இராம ஜன்ம பூமியா’ என்ற கேள்வியை உச்சநீதி மன்றத்தின் முடிவுக்கு ராவ் அரசு அனுப்பிய போது “மத நம்பிக்கை குறித்த விசயங்களில் எந்த நீதிமன்றமும் தீர்ப்பு வழங்க இயலாது” என்று அறிவித்ததன் மூலம் சட்டப்பிரிவு 25,26 –இன்படி உச்சநீதி மன்றத்திற்குரிய அதிகார வரம்பை பாரதீய ஜனதா நினைவுபடுத்தியது.

இறுதியாக கடந்த ஜுலை மாதம் வெளியான உச்சநீதி மன்றத் தீர்ப்பொன்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

நீதிமன்றத்தின் ஒப்புதல் வாக்குமூலம்

“முசுலீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க எனக்கு வாக்களியுங்கள்” என்ற சுவரொட்டி வெளியிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றதால், “தாஸ் ராவ் தேஷ்முக் என்ற சிவசேனா எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது” என்ற பம்பாய் உயர்நீதி மன்றம் தீர்ப்புக் கூறியிருந்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்துக்கு மேல் முறையீடு செய்தார் தேஷ்முக். மதத்தின் பேரால் ஓட்டுக் கேட்டதற்காக அல்ல, முசுலீம் எதிர்ப்பைத் தூண்டியதற்காக தேஷ்முக்கின் தேர்தல் செல்லாது என உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது. நீதிபதிகள் ஜி.என்.ரே, பைசானுதீன் ஆகியோர் கீழ்க்கண்ட கருத்துக்களையும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

“இத்தகைய கட்சிகள் தேர்தலிலும், பாராளுமன்றத்திலும் பங்கேற்பதை சட்டம் அங்கீகரிக்கின்ற வரையில் இந்தச் சூழ்நிலையை (அதாவது மதத்துவேசம் தூண்டப்படுவதை) தவிர்க்க இயலாது.”

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து பாரதீய ஜனதாவின் மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதை உறுதி செய்தத் தீர்ப்பை வழங்கிய உச்சநீதி மன்ற பெஞ்சின் பெரும்பான்மை நீதிபதிகள் நமது அரசியல் சட்டத்தின்படி, ” மதமும் அரசியலும் கலக்கக் கூடாது” என்று குறிப்பிட்டனர்.

தற்போதைய தீர்ப்போ, அரசியல் நோக்கத்திற்கு மதத்தைப் பயன்படுத்துவதை நிலவுகின்ற அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

மதத்தை அரசியல் நடவடிக்கையாகவும், அரசியலை மதச் சடங்காகவும் ஒரே நேரத்தில் நடத்திவதற்கு வாய்ப்பளிக்கும் இந்த ‘மதச்சார்பற்ற’ அரசியல் சட்டத்தை பாரதீய ஜனதா ஏன் எதிர்க்கப்போகிறது?

அனைத்து மதங்களுக்கும் சம உரிமை தருவதாக ஏட்டளவில் கூறுகின்ற இம்மதச்சார்பின்மை, பார்ப்பன –இந்து ஆதிக்கத்தைத்தான் தனது நடைமுறையாகவும் கொண்டுள்ளது. இந்தப் போலி மதச்சார்பின்மையின் கீழ், சிவில் சட்டத்தை மட்டும் உண்மையிலேயே மதச்சார்பற்ற சட்டமாக மாற்ற வேண்டும் என்கிறது பாரதீய ஜனதா.

ஆனால் நிலவுகின்ற மதச்சார்பின்மை சட்டரீதியிலேயே போலியானது என்று எந்தக் கட்சி கூறுகிறது? காங்கிரசு, வலது-இடது கம்யூனிஸ்டு கட்சிகள், திராவிட இயக்கங்கள் மற்றும் முசுலீம் லீக் வரை அனைத்துக் கட்சிகளுமே இந்த மதச்சார்பின்மையைப் போற்றிக் கொண்டாடுகின்றன.

இந்த மதச்சார்பின்மையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகள் ‘மதச்சார்பற்ற சிவில் சட்டம்’ வேண்டுமென்று பாரதீய ஜனதா கோருவதை மட்டும் எப்படி எதிர்க்க முடியும்? அல்லது தங்களது எதிர்ப்பை அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அவர்கள் எங்ஙனம் நியாயப்படுத்த இயலும்?

அதனால்தான் தடுமாறுகிறார்கள். மழுப்புகிறார்கள். ‘அஞ்சாதீர்கள்’ என்று முசுலீம் பழமைவாதிகளுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். மொத்ததில் தங்களது நடவடிக்கைகள் மூலம் ‘இந்த நாட்டில் முழு நிறைவான மதச்சார்பின்மையை அமல்படுத்தத் தடையாயிருப்பவர்கள் முசுலீம்கள்தான்’ என்ற தவறான கருத்தை மறைமுகமாகத் தோற்றுவித்து வருகிறார்கள். இத்தகைய கருத்து பெரும்பான்மையின் மத்தியில் உருவாக்கப்படுவதைத்தான் இந்து மதவெறியர்களும் விரும்புகிறார்கள்.

பாரதீய ஜனதாவின் அதே தந்திரம்! எதிர்க்கட்சிகளின் அதே தடுமாற்றம்!

போலி மதச்சார்பின்மை கட்சிகள்
காங்கிரசு, வலது-இடது கம்யூனிஸ்டு கட்சிகள், திராவிட இயக்கங்கள் மற்றும் முசுலீம் லீக் வரை அனைத்துக் கட்சிகளுமே இந்த மதச்சார்பின்மையைப் போற்றிக் கொண்டாடுகின்றன.

இதற்கிடையில் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பொதுசிவில் சட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக பாரதீய ஜனதா அறிவித்துள்ளது. ” ஒரு சீரான உரிமையியல் சட்டத்தைக் கொண்டுவர அரசு முயல வேண்டும் ” என்ற “அரசியல் சட்டத்தின் 44-வது பிரிவின் வாசகத்தில் உள்ள அரசு என்ற சொல்லுக்கு ‘மாநில அரசு’ என்ற பொருள் கூறுவதன் மூலம் இதைச் செய்ய முடியும்” என்று கூறுகிறார் சட்டவல்லுனர் ராஜீவ் தவான்.

அதற்குப்பின் கவர்னர் அதில் கையெழுத்திட மறுக்கலாம். ஜனாதிபதி ஒப்புதல் தராமல் நிறுத்தலாம் அல்லது உச்சநீதி மன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கலாம். ஆனால் எதைச் செய்தாலும் அது இடைக்கால ஏற்பாடாக மட்டுமே இருக்கும்.

அரசியல் சட்டம் தனக்களித்த உரிமையைப் பயன்படுத்தித்தான் இந்து மதவெறியர்கள் பாபர் மசூதியை இடித்தனர். பாபர் மசூதி தரைமட்டமாக்கப்படும் வரை ‘அது மசூதிதான் – கோயிலல்ல’ என்று பேசிவந்த எதிர்க்கட்சிகள் இப்போது மசூதியா –கோயிலா? என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு சொல்வதற்காகக் காத்திருக்கிறார்கள். கரசேவைக்கெதிரான மக்கள் திரள் நடவடிக்கையில் ஈடுபட எந்தக் கட்சிக்கும் துணிவு இல்லை. பாபர் மசூதி விவகாரத்தில் எப்படிக் காய்களை நகர்த்தியதோ அதே முறையைத்தான் இந்த விசயத்திலும் பாரதீய ஜனதா பின்பற்றுகிறது.

பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்தித்தான் அதற்குக் குழி தோண்டினான் இட்லர். இந்த ‘ஜனநாயகத்தையும்’ ‘மதச்சார்பின்மையையும்’ பயன்படுத்தித்தான் இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு பாரதீய ஜனதாவும் முயற்சிக்கிறது . ஒரே சட்டத்தின் மூலம் ஒரே நாட்டையும் மக்களையும் செதுக்கி உருவாக்க நினைக்கிறது.

இந்தப் போலி ஜனநாயகம் பாசிசமாக உருமாறுவதும், போலி மதச்சார்பின்மை இந்து ராஷ்டிரத்தை நோக்கி நகர்வதும் ஒன்றும் அதிசயமல்ல; போலி மதச்சார்பின்மைக்குப் பல் முளைத்திருக்கிறது – அதுதான் இந்து ராஷ்டிரம். அதன் குழந்தைப் பருவத்தை எண்ணி ஏங்குவது கையறுநிலை; அதை மீண்டும் கொண்டு வரமுடியுமென நம்பிக்கை வைப்பது முட்டாள்தனம்.

அரசியல், கல்வி மற்றும் சமூக வாழ்வின் பல்வேறு துறைகளில் மனிதனின் மீது ஆதிக்கம் செய்வதற்கு மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான அதிகாரத்தையும் உரிமையையும் ரத்து செய்ய வேண்டும். தனிநபரின் நம்பிக்கை என்ற அளவில் மட்டுமே மதச் சுதந்திரம் அங்கீகரிக்கப்படவேண்டும். இத்தகைய உண்மையான மதச்சார்பின்மைக் கொள்கையை நிலைநாட்டவும், அதன் பிரிக்கவொண்ணாத அங்கமான ‘மதச்சார்பற்ற உரிமையியல் சட்டத்தை’ நிறைவேற்றச் செய்யவும் வேண்டும். புரட்சியாளர்களும், ஜனநாயகவாதிகளும், முற்போக்காளர்களும் முன்வைத்துப் போராட வேண்டிய கோரிக்கை இதுதான்.

ஆனால் முசுலீம் பழமைவாதிகள், சீர்திருத்தவாதிகள், திராவிட இயக்கங்கள், புதிய இடது சாரி ‘அறிஞர்கள்’ போன்ற பலரும் இதை ஏற்பதில்லை.

(தொடரும்)
முந்தைய பகுதிகள்

  1. பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்
  2. பொது சிவில் சட்டத்தை பார்ப்பனிய இந்து மதம் எதிர்க்கிறது
  3. ‘ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி’ – இந்திய அரசின் மதச்சார்பின்மை

வேதாரண்யம் – வி.வி.மு போராட்டம் – அதிமுக ரவுடிகள் தாக்குதல்

0

நாகை மாவட்டம் – வேதாரண்யம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆளும் கட்சிக்கு எதிராகவோ தன்னை எதிர்த்தோ யாரும் எதையும் செய்யக்கூடாது என்று அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் வேதாரண்யம் அதிமுக எம்.எல்.ஏ என்.வி. காமராஜ். ஆளும் கட்சியும் போலீசும் கள்ளக்கூட்டு வைத்துக்கொண்டு இவ்வாறு செய்வது தமிழகம் முழுவதற்குமே பொருந்தும் என்பது வேறு விசயம்.

கடந்த சில வாரங்களாக, “காவிரியின் குறுக்கே அணைக்கட்ட கூடாது”, “தமிழக மீனவர்கள் 5 பேர் தூக்கை ரத்து செய்வது”, “பால்விலை – மின்கட்டண உயர்வை ரத்து செய்வது” ஆகிய கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, ஏட்டு முதல் எஸ்.பி வரை செருப்பு தேய நாம் நடந்தாலும் ஒவ்வொரு மனுவையும் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பி வந்தது வேதை நகர போலீசு.

காரணம் கேட்டால், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்து விடுமாம்.

  • காவிரியின் குறுக்கே அணை கட்ட கூடாதென்றால் கர்நாடக அரசு வந்து கலகம் செய்து விடுமா?
  • தமிழக மீனவர்கள் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய போராடினால், ராஜபக்சே வந்து சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து விடுவாரா?

இல்லை. பிறகு என்ன பிரச்சனை?

“பால்விலை-மின்கட்டண உயர்வு பற்றி பேசினால் மக்கள் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி ‘அவதூறாக’ பேசி விடும் வாய்ப்பு இருப்பதாலும், இதனால் உணர்ச்சி வசப்படும் எம்.எல்.ஏ வின் தொ(கு)ண்டர்கள் தகராறு செய்தால் கலவரம் ஏற்பட்டு விடும்” என்று நீட்டி முழக்கினார் டி.எஸ்.பி சார்லஸ்.

ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து தரப்பட்ட கடிதமோ 30(2) காவல்சட்டம் அமலில் இருப்பதாக கூறி பல்லிளித்தது.

இனி மனு கொடுத்தும் பலனில்லை என்பதால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்து விவசாயிகள் விடுதலை முன்னணி – புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக சுவரொட்டி- துண்டு பிரசுரம் மூலம் பிரச்சாரம் செய்து, “நவம்பர் 17 அன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்து”வதாக பகிரங்கமாக அறிவித்து விட்டோம்.

‘சட்டத்தை நாமே கையில் எடுத்துக் கொண்டதாக ‘ பதறிய போலீஸ் எஸ்.ஐ 17-ம் தேதி காலையிலேயே போன் செய்து சமரசம் பேசினார். இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று அறிவித்து சுமார் 150 தோழர்கள் வேதாரண்யத்தில் ஒன்று திரண்டனர்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் பேசிய எஸ்.ஐ, “மேல் இடத்திலேயே கூறி விட்டார்கள், உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்து நடத்திக் கொள்ளுங்கள்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

வேதாரண்யம்-மேலவீதி பெரியார் சிலையில் இருந்து செங்கொடிகளுடன் முழக்கமிட்டு கொண்டே சென்ற பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தை வந்து அடைந்தவுடன் ஆர்ப்பாட்டமாக மாறியது. வேதாரண்யம் வட்டார வி.வி.மு ஒருங்கிணைப்பாளர் தோழர் தனியரசு தலைமை தாங்க, தோழர் கிருஷ்ணமூர்த்தி, பட்டுக்கோட்டை வி.வி.மு வட்டார செயலர் தோழர் மாரிமுத்து, பு.மா.இ.மு திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட தலைவர் காவிரிநாடன் பேசுகையில், “விலைவாசி உயர்வால் சாமான்ய மக்கள் படும் அவஸ்தையையும், தங்களின் நியாயமான உரிமைகளுக்காக கூட போராட முடியாதபடி மக்கள் எப்படி அடக்கி  ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் எனக்கு முன்னால் பேசியவர்கள் பேசி சென்றிருக்கிறார்கள். மக்களின் கோரிக்கைகளுக்காக போராடும் வி.வி.மு வை செயல்பட விடாமல் முடக்குவதன் மூலம் மக்கள் போராட்டங்களை அடக்கிவிடலாம் என கருதி எம்.எல்.ஏ வின் ஆட்கள் செய்து வரும் அராஜகங்களை தோலுரிக்க வேண்டும். மக்கள் பிரச்சனைக்காக போராடியதற்காக வி.வி.மு தோழர் தனியரசுவின் கடையை அடித்து நொறுக்கியும், பொருட்களை சூறையாடியும், அடுத்தடுத்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் வி.வி.மு வின் அரசியல் செயல்பாடுகளை முடக்க எம்.எல்.ஏ கண்ட கனவு பொய் ஆகி போனது. இதோ மீண்டும் மக்கள் பிரச்சனைக்காக களத்திலே நாங்கள் வந்திருக்கிறோம். தாதுமணல் வைகுண்டராஜனை அவனது கோட்டைக்குள்ளேயே சென்று அவன் சிண்டைப் பிடித்து உலுக்கியவர்கள் நாங்கள், பேச்சில் அல்ல களத்திலே நிற்கும் வீரர்கள்” என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

மக்கள் கலை இலக்கியக் கழக மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் பேசுகையில், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என ஜெயாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்ட போது, ‘காவிரிய வச்சுக்கோ… அம்மாவை குடு..’ என போஸ்டர் அடித்து ஒட்டிய அதிமுக வினரை விமர்சித்து பேசினார். “ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவிக்காக தமிழகத்தின் உரிமையை அடகு வைக்கத் துணியும் இந்த அடிமைகளை எம்.எல்.ஏ-எம்.பி க்களாக தேர்ந்தெடுத்து இருக்கும் மக்களே, அடுத்தடுத்து அறிவிக்கப்படும் விலைவாசி-மின்கட்டண உயர்வு அறிவிப்புகள் உங்களுக்கு வழங்கப்படும் பரிசுகள்” என்று மக்களையும் விமர்சித்து பேசினார்.

“யாரையும் தாக்கி பேச வேண்டாம், மனம் புண்படும் படி பேச வேண்டாம்” என அறிவுரை வழங்கிய போலீசின் யோக்கியதையையும் கண்டித்து பேசினார்.

vedaranyam-demo-1“ஆவின் பாலை திருடி, பாதிக்குபாதி தண்ணீரை கலந்து விற்ற அதிமுக வைத்தியை தாக்கிப்பேசாமல் வேறு எப்படி பேசுவது? விலை உயர்வுக்கு காரணத்தை வேறு எப்படி விளக்குவது?”

“அதிமுக எம்.எல்.ஏ க்கள் என்ன உழைப்பால் உயர்ந்த உத்தமர்களா? என்.வி காமராஜ் சில ஆண்டுகளுக்கு முன்னால் சாதாரண உப்பளத் தொழிலாளி. இன்று கோடிகளுக்கு அதிபதி. மூட்டை தூக்கி சம்பாதித்த சொத்தா இவ்வளவு? பல்லாயிரம் பேருக்கு, ஆடம்பரமான முறையில் சமையல் செய்து தன் வீட்டு திருமண நிகழ்ச்சியை நடத்த எங்கிருந்து வந்தது பணம்?” என்று அடுத்தடுத்து கேள்விகளால் துளைத்தெடுத்தார்….

“அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நீங்கள் பேசிக் கொண்டிருப்பதால் உடனடியாக முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய ஜனநாயகமே இடிந்து விடும்” என்று காவல்துறையினர் பதறி ஆர்ப்பாட்ட மைக்கை அடாவடியாக ஆப் செய்ய… தோழர்கள் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட தள்ளுமுள்ளு ஆனது.

இவ்வாறு கருத்துரிமையின் லட்சணத்தை அம்பலப்படுத்திய தோழரின் பேச்சு முடிய, தோழர் வெங்கடேசன் நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

vedaranyam-demo-3‘அம்மா’ வைப் பேசியதை விட தங்களின் அண்ணன் காமராஜைப் பற்றி பேசி விட்டதால் இனி ஊருக்குள் தங்களை எவன் மதிப்பான்? என்று ஆத்திரத்தில் குதித்தனர் எம்.எல்.ஏ வின் கைக்கூலிகள். ஆர்ப்பாட்டம் முடிந்து வேனில் திரும்பிச்சென்ற தோழர்கள் மீது மருதூர் இரட்டைக்கடைவீதியருகே காமராஜன் அண்ணன் மகன் அசோக், பாபு மற்றும் சில காலிகள் குவாட்டர் பாட்டில்களை வீசியும், கல்லெறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர்.

தோழர்கள் திரும்பிச் சென்ற வேனை அதிமுக காலிகள் பின் தொடர்ந்து வருவது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தும் கூட அவர்கள் பாதுகாப்பு தரவில்லை. பாட்டில் வீச்சில் வேனில் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த தோழர் காந்தி காயமடைய, இன்னொருவரின் கையில் கல் பட்டு தெறித்து காயமானது. உடனே அருகில் இருந்த வாய்மேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கக்கோரி தோழர்களும், வழக்கறிஞர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போதைக்கு நிலைமையை சமாளிப்பதற்காக மனு ரசீது மட்டும் வழங்கி தோழர்களை அனுப்பி விட்டு, ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக 8 தோழர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீசு.

இந்த ஆர்ப்பாட்டத்திலேயே கலந்து கொள்ளாத மதுரை மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தளவுக்கு அம்மா போலீசு அதிமுக காலிகளுக்கு அரணாக நிற்கிறது.

மீண்டுமொரு பெரிய தாக்குதலுக்கு எம்.எல்.ஏ வின் ஆட்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. பேச்சுரிமை, கருத்துரிமை, சட்டத்தின் ஆட்சி என்று இதற்கு மேலும் யாரேனும் நம்பிக்கை வைத்திருந்தால் அவர்கள் கூறட்டும் இனி இந்த சட்ட வரம்புகளுக்குள் நின்று போராட முடியுமா? அல்லது மக்களே அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டுமா என்று……..

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி
வேதாரண்யம்.

மேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு!

2

பாசிஸ்டுகள் அடிமுட்டாள்களாகவும், அண்டப்புளுகர்களாகவும் கோமாளிகளாகவும்தான் இருப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துக்காட்டி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அந்நிய முதலீடுகள் பெருகினால், நாட்டில் தொழில் வளர்ச்சியும் வேலைவாப்பும் பெருகி இந்தியா வல்லரசாகிவிடும் என்ற அண்டப்புளுகையே, மீண்டும் “மேக் இன் இந்தியா” என்ற பெயரில் பாலிஷ் போட்டு அவர் கடைவிரிக்கிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தனியார்மய – உலகமயக் கொள்கையை காங்கிரசு கூட்டணியும் பா.ஜ.க. கூட்டணியும் தீவிரமாகச் செயல்படுத்தி தோல்வியடைந்துள்ள நிலையில், அடிமுட்டாள்தனமாக மீண்டும் அதே பாதையை மூர்க்கமாகச் செயல்படுத்த கிளம்பிவிட்டார் மோடி.

மேக் இன் இந்தியா
தோற்றுப்போன திட்டத்தையே மேக்இன் இந்தியாவாக பெயர் மாற்றம் செய்து செப்டம்பர் 25 அன்று ஆரவாரமாக அறிமுகப்படுத்தும் மோடி.

கடந்த ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி, “மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்துடன் “உலகின் பொருள் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு. இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மூலதனங்களுக்கு எந்தப் பாதகமும் வராது. எனவே, இந்தியாவில் முதலீடு செயுங்கள்” என்று போணியாகாத சரக்கை மலிவு விலைக்குத் தருவதாகக் கூவிக்கூவி விற்கும் வியாபாரியைப் போல பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களை வலிந்து அழைக்கிறார். உலகச் சந்தைக்காக அந்நிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி, உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் மோடி முன்வைக்கும் மேக் இன் இந்தியா திட்டம். இதற்காக சுங்க வரி, கலால் வரி, ஏற்றுமதி வரிகள் அந்நிய முதலீட்டாளர்களின் நலன்களுக்கேற்ப மாற்றியமைக்கப்படும் என்று இதனை விளக்கும் வகையில் தனியொரு இணைய தளத்தையே மோடி அரசு தொடங்கியுள்ளதோடு, சர்வதேச முதலீட்டாளர்களின் உச்சி மாநாட்டையும் நடத்தியுள்ளது.

அந்நிய நேரடி முதலீடு (FDI – ஃபாரின் டைரக்ட் இன்வெஸ்ட்மெண்ட்) என்பதற்கு “முதலில் இந்தியாவை வளர்ப்போம்” (ஃபர்ஸ்ட் டெவலப் இந்தியா) என்று விளக்கமளிக்கிறார் மோடி. “மேக் இன் இந்தியா திட்டத்தால் பொருள் உற்பத்தித் துறை வளர்ந்து பல இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும், தொழில்நுட்ப ரீதியாக இந்தியா வளர்ச்சியடையும்” என்று ஆரூடம் கூறுகிறார். 2022-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீத பங்களிப்பை பொருள் உற்பத்தித்துறை அளிக்க வேண்டும் என்ற இலக்கையும் அவர் தீர்மானித்துள்ளார். தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடித்த கதையாக, இந்தக் கோமாளித்தனத்தையே ஏதோ மோடி கையில் மந்திரக்கோல் உள்ளதைப் போலவும், அந்நிய முதலீடுகள் பெருகுவதற்கான சூழல் கனிந்து விட்டதாகவும் முதலாளித்துவ ஊடகங்கள் விளம்பரப்படுத்தி பிரமிப்பூட்டுகின்றன.

make-in-india-1பொருளுற்பத்தித் துறையும் கார்ப்பரேட் நிறுவனங்களும் வளர்ந்தால், நாட்டில் வேலைவாய்ப்பு பெருகி இந்தியப் பொருளாதாரமும் வளர்ச்சியைச் சாதிக்கும் என்று கதையளக்கும் மோடியின் இந்தக் கவர்ச்சித் திட்டம், காங்கிரசு அரசின் கொள்கைதானே தவிர, இதில் புதுமையோ, மோடியின் தனித்திறமையோ எதுவும் கிடையாது. ஏற்கெனவே 2004-ல் காங்கிரசு தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தபோதே, பொருள் உற்பத்தித்துறைக்கான தேசிய திட்டம் வகுக்கப்பட்டு, “திறன் மேம்பாட்டு ஆணையம்” அமைக்கப்பட்டது. ஆனாலும் எதிர்பார்த்த விளைவை அதன் மூலம் சாதிக்க முடியவில்லை. இருப்பினும், தோற்றுப்போன அத்திட்டத்தையே மேக் இன் இந்தியாவாக பெயர் மாற்றம் செய்து கவர்ச்சிகரமான புதுமைத் திட்டமாக மாய்மாலம் செய்யும் மோடி கும்பல், ஏதோ காங்கிரசு அரசு செய்யத் தவறி விட்டதைப் போலவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தததும் அதனைச் செயல்படுத்துவதைப் போலவும் சவடால் அடிக்கிறது.

அந்நிய முதலீடுகள் இந்தியாவில் பெருகினால் நாடு முன்னேறி வல்லரசாகிவிடும் என்று கூறி தனியார்மய – தாராளமயக் கொள்கைள் புகுத்தப்பட்ட கடந்த 25 ஆண்டுகளில் நடந்ததென்ன? 1990-களில் புதிய தாராளவாதக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அந்நிய முதலாளிகளும் இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகவே அரசுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டே முடக்கப்பட்டன. பி.எஸ்.என்.எல். நட்டத்தில் தள்ளப்பட்டதை இந்நடவடிக்கைகள் நிரூபித்துக் காட்டின. தனியார்மயத்தின் இரண்டாவது கட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களையும் லாபத்தையும் கொண்டிருந்த அரசுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்கும் படலம் தொடங்கியது. 2100 கோடி ரூபாய் மதிப்புடைய அரசுத்துறை நிறுவனமான மாடர்ன் புட்ஸ், வெறும் 104 கோடிக்கு யுனிலீவர் நிறுவனத்துக்குத் தாரைவார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆற்றுநீர், இரும்பு, நிலக்கரி, எரிவாயு உள்ளிட்டு இயற்கை மூலவளங்களைச் சூறையாடுவதற்காக அந்நிய முதலீட்டாளர்களுக்குக் கதவுகள் அகலத் திறந்து விடப்பட்டன. 2000-வது ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் அந்நிய முதலீட்டைக் காட்டி ஆகா, வளர்ச்சி என்றனர். பின்னர் அதுவும் சரிந்து விழுந்ததோடு, அவுட் சோர்சிங் பெருகும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது.

தனியார்மய  – தாராளமயத்தின் தொடக்கத்தில் அந்நிய முதலாளிகள் தாமே நேரடியாகத் தொழில் தொடங்குவதற்கும் மேலை நாடுகளிலிருந்து நுகர்பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும் 1990-களின் இறுதியில் இந்த வளர்ச்சி நீர்க்குமிழி போல உடைந்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. பிறகு இந்த மந்த நிலையைக் காட்டி நிதித்துறையில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினால்தான் நாடு முன்னேறும் என்று கூப்பாடு போட்டு, கடன் சந்தை, வங்கிகள், பங்குச் சந்தை முதலானவற்றில் அந்நிய முதலீட்டுக்குத் தாராள அனுமதியளிக்கப்பட்டது. இதனால் அந்நியக் கடன் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை வீங்கியது. அந்நிய நிறுவனங்கள் பங்குச் சந்தையிலும் கடன் சந்தையிலும் போட்டிருந்த தமது மூலதனத்தை சுருட்டுக் கொண்டு ஓடியதும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து விழுந்தது.

டோங்கிரியா கோண்டு பழங்குடியினர்
பாக்சைட் சுரங்கத் திட்டத்திற்காக ஒரிசாவின் நியாம்கிரி மலையை ஆக்கிரமிக்க முயன்ற வேதாந்தா நிறுவனத்தையும் அதற்குத் துணை நிற்கும இந்திய ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் போராடும் டோங்கிரியா கோண்ட் பழங்குடியினர் (கோப்புப் படம்)

அந்நிய முதலீடுகளால் பங்குச் சந்தையில் விலைக்குறியீட்டு எண் ஏறி இறங்குவதைக் காட்டி ‘வளர்ச்சி’, ‘முன்னேற்றம்’ என்று ஆரவாரம் செயய்ப்பட்டதேயன்றி, நாட்டின் தொழிலும் விவசாயமும் வேலைவாய்ப்பும் குறிப்பிடும்படியான எந்த வளர்ச்சியையும் சாதிக்கவில்லை.  அடிக்கட்டுமான வளர்ச்சி என்ற பெயரில் நகர்ப்புறங்களில் உருவாக்கப்பட்டுள்ள மேம்பாலங்களும், அதிவிரைவுச் சாலைகளும், அதிநவீன விமான நிலையங்களும் கிராமப்புற விவசாயிகளின் குடிசைகளையும் அவர்களின் வாழ்வாதாரங்களையும் பறித்துள்ளதேயன்றி, அவர்களது வறுமையை விரட்டியடிக்கவில்லை. ஊழலுக்கும் பகற்கொள்ளைக்கும், சுற்றுச்சூழல் நாசமாக்கப்பட்டதற்கும் சான்றாக நிற்கும் இந்த ‘வளர்ச்சி’ வேலைவாயப்புகளை நிரந்தரமாக்கவில்லை. பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு,  இலட்சக்கணக்கான விவசாயிகள் நாடோடிகளாக நகர்ப்புறங்களுக்கு விசிறியடிக்கப்பட்டனர். உத்திரவாதமற்ற வேலையும், அற்பக் கூலியும், விலைவாசி உயர்வும் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகின.

கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து மந்தத்திலும் நெருக்கடியிலும் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரங்கள் சிக்கிக் கொண்டிருப்பதால் ஏகாதிபத்திய நாடுகள் இந்தியாவில் வந்து முதலீடு செய்வதற்கான அடிப்படையும் மிகக் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமானால், அந்நிய நிறுவனங்கள் பொருள் உற்பத்தித் துறையில் முதலீடுசெய்ய வேண்டுமானால், தடையில்லாத மின்சாரம் வேண்டும். ஆனால், மின்தட்டுப்பாடு நாட்டின் தீராத பிரச்சினையாக உள்ளது. மின்சாரம் மட்டுமின்றி, சாலைகள், துறைமுகங்கள் முதலான போக்குவரத்து வசதிகள், தொலைத் தொடர்பு முதலான அடிக்கட்டுமானத் துறையில் இந்தியா இன்னமும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.

மேக் இன் இந்தியா
அந்நிய முதலீட்டின் மகிமை : நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதை எதிர்த்து வேலை இழந்த அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

கடந்த 2013-ம் ஆண்டில் இந்தியாவின் பொருள் உற்பத்தித்துறையானது மொத்தப் பொருளாதாரத்தில் வெறும் 13 சதவீத அளவுக்கே பங்களித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமான நிலைமை என்று உலக வங்கியே மதிப்பிட்டுள்ளது. ஆனால், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொருள் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 34 சதவீதமாக உள்ளது. மேலும், பொருள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் 189 நாடுகளில் 134-வது இடத்தில்தான் இந்தியா உள்ளது என்கிறது உலகவங்கி. இருப்பினும், இந்தியாவை 50-வது இடத்துக்கு உயர்த்தி சீனாவை முந்தப் போவதாக சவடால் அடிக்கிறார் மோடி. இதற்காக, இதர ஏழை நாடுகளைவிட மலிவான கூலியில் உற்பத்தி செய்து தருவதற்கான உத்திரவாதம் அளிப்பதன் மூலம் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சிக்கிறார். இந்த நோக்கத்தோடு தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) முடித்தவர்களைக் கவரும் வகையில், பாரதீய ஜனதா கட்சியின் தாய்க்கட்சியான ஜனசங்கத்தின் அமைப்பாளரான தீனதயாள் உபாத்தியாயா என்பவரது பெயரில், “ஷிரமேவ ஜெயதே கார்யக்ரம்”(உழைப்பே வெல்லும்) எனும் திட்டத்தை அண்மையில் மோடி தொடங்கியுள்ளார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கும் மூலதன அழுத்தம் கொண்ட பெருந்தொழில் நிறுவனங்களில் தானியங்கி எந்திரங்களே பெரும்பாலான வேலைகளை நேர்த்தியாகவும் விரைவாகவும் செய்து விடுவதால், அங்கு தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாப்பு  அருகிவிட்டது. தானியங்கி எந்திரங்களின் வேகத்துக்கு ஏற்ப வேலை செய்யும் வகையிலான தொழில் தேர்ச்சி பெறாத அல்லது தொழில் பழகுநர்களாக உள்ள தொழிலாளர்கள்தான் இத்தகைய நிறுவனங்களுக்குத் தேவைப்படுகின்றனர். எனவேதான், இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய மோடி, “தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.) முடித்தவர்களை நாம் மதிப்பதில்லை. அவர்களது மரியாதையும் கண்ணியமும் காக்கப்பட்டால்தான் சமுதாயம் முன்னேற்றமடையும்; தொழிலாளர்கள் கடின உழைப்பைக் கொண்ட தேசத்தைக் கட்டியமைக்கும் யோகிகள்” என ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக, நிரந்தரத் தொழிலாளர்கள் செயய வேண்டிய வேலைகளைத் தொழில் பழகுநர்களை வைத்து வேலைவாங்குவதையே கவர்ச்சிகரமான திட்டமாக முன்வைத்துள்ளார். இத்தகைய தொழில் பழகுநர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூடத் தராமல், பராமரிப்பு நிதி (ஸ்டைபண்ட்) மட்டும் கொடுத்து, இளம் தொழிலாளர்களை எவ்வித உரிமையுமின்றி ஒட்டச் சுரண்டுவதற்கான ஏற்பாட்டைத்தான் மோடி செய்துள்ளார்.

ஏற்கெனவே தொழில்பழகுநர்களாக ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் சேர்பவர்கள், பயிற்சிக் காலம் முடிந்த பின்னரும் முறையான நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்றப்படுவதில்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், கேசுவல் தொழிலாளர்களாகவும்  மணிக்கூலி, தினக்கூலி, பீஸ்ரேட் தொழிலாளர்களாகவும் உழலும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை நிரந்தரமாக்கி, குறைந்த கூலிக்கு வேலை செய்யும் கொத்தடிமைகளாகத் தொழிலாளர்களை மாற்றுவதே மோடியின் நோக்கமாக உள்ளது. மோடி அரசால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள மசோதாவானது, தொழில் தகராறு சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், தொழிலாளர் காப்பீடு சட்டம் உள்ளிட்ட முக்கியமான 14 தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது.

make-in-india-2ஏற்கெனவே தொழிலாளர் சட்டங்களை மதிக்காத முதலாளிகள், இனி எவ்விதத் தயக்கமும் இன்றி தொழிலாளர்கள் மீது சுரண்டலையும் அடக்குமுறையையும் தீவிரப்படுத்துவார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. மேலும், தொழில் நிறுவனங்களில் ஆய்வு என்ற பெயரில் இன்ஸ்பெக்டர்கள் தொந்திரவு கொடுப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளிப்படையான ஆயவு மேற்கொள்ளும் திட்டம் கொண்டுவரப்பட்டு, இதற்காக  “ஸ்ரம் சுவிதா” என்ற இணையத்தளம் உருவாக்கப்படுமாம். இன்ஸ்பெக்டர்கள் 72 மணி நேரத்துக்குள் தங்கள் அறிக்கையை அதில் தாக்கல் செய வேண்டுமாம். அப்படி அவர்கள் ஆவு செய்து அளிக்கும் அறிக்கையின்படி முதலாளிகள் தங்கள் நிறுவனங்களிலுள்ள குறைகளைத் தாங்களே சரிசெய்து கொள்ள வேண்டுமாம். முதலாளிகளின் வரைமுறையற்ற கொள்ளைக்கு வழிசெய்து கொடுப்பதுதான் மோடியின் இந்த ஒற்றைச் சாளர நிர்வாகமுறை. குறைவான அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்ற மோடியின் முழக்கத்தின் பொருள், முதலாளிகளை மேற்பார்வையிடுவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அரசு கொண்டிருக்கும் அதிகாரங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்டுவதுதான்.

மொத்தத்தில், தொழிலாளர் உரிமைகளைப் பறித்து, வளர்ச்சி என்ற பெயரில் உழைக்கும் மக்களை அவர்களது வாழ்வாதாரத்துக்கான நிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றி, சுற்றுச்சூழலை நாசமாக்குவதற்கு தாராள அனுமதியளித்து அந்நிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதுதான் மோடியின் நயவஞ்சகத் திட்டம். தரகுப் பெரு முதலாளிகளும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் தடையின்றிக் கொள்ளையடிக்க வாய்ப்புகளை பட்ஜெட்டின் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ள மோடி அரசு, அதுவும் போதாதென்று தொலைத்தொடர்பு, ரயில்வே துறையின் உள்கட்டமைப்பு,  இராணுவத் துறை மற்றும் காப்பீடு துறைகளில் அந்நிய முதலீட்டுக்கு தாராள அனுமதி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை என்று மூர்க்கத்தனத்துடன் நாட்டை விற்கக் கிளம்பிவிட்டது. இவற்றின் மூலம் அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தலாமேயன்றி, அந்நிய முதலீடு பெருகும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் ஏறத்தாழ 45 சதவீதத்தை சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள்தான் நிறைவு செகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஏறத்தாழ 40 சதவீத அளவுக்குப் பங்களிப்பதும், ஏறத்தாழ 10 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பளிப்பதும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள்தாம். இச்சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென்ற விதியை ஒழித்துக்கட்டி, இத்தகைய நிறுவனங்களுக்கு எவ்வித சலுகையுமின்றி நசிவடையச்செய்துவிட்டு, மேக் இன் இந்தியா என்று முழங்குகிறார் மோடி. மேக் இன் இந்தியா பற்றி அவர் ஆரவாரம் செய்து கொண்டிருக்கும்போதே, சென்னை-சிறீபெரும்புதூர் சிறப்புப்பொருளாதார மண்டலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நோக்கியா நிறுவனம் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக உலகின் பல ஏழை நாடுகளும், குறிப்பாக ஆசியப் புலிகள் என்று சித்தரிக்கப்பட்ட மலேசியா, தைவான் போன்ற நாடுகளும் இத்தகைய ஏற்றுமதி அடிப்படையிலான உற்பத்தியில் ஈடுபட்ட போதிலும், அந்நாடுகளால் எந்த முன்னேற்றத்தையும் சாதிக்க முடியவில்லை.

இந்தியாவில் ராஜீவ் ஆட்சிக் காலத்தில் இத்தகைய பொருளாதாரத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அவரது ஆட்சியிலும், அதற்குப் பின்னர் வந்த ஆட்சிகளிலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டுள்ள போதிலும் பெருந்தோல்வியிலும் பேரழிவிலும்தான் முடிந்துள்ளது. மேலும், அந்நிய முதலீடுகளும் ஏகாதிபத்திய உலகமயமாக்கமும் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியைத்தான் சாதித்துள்ளன என்பதை முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே ஒப்புக் கொள்கின்றனர். உலகமயமாக்கத்தின் கீழ் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி குறைந்துள்ளதை சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு(ஐ.எல்.ஓ.)வெளியிட்டுள்ள புள்ளிவிவரமே உறுதிப்படுத்துகிறது.

ஆனால் அடிமுட்டாள் மோடியோ, இப்பேரழிவுப் பாதையைத்தான் வளர்ச்சிக்கான, நாட்டின் முன்னேற்றத்துக்கான பாதை என்கிறார். முதலில் நாட்டின் வளர்ச்சி, அப்புறம் தொழிலாளர் நலனைப் பார்ப்போம் என்கிறார். இங்கே நாடு என்றால் அவரது அகராதியில் கார்ப்பரேட் முதலாளிகள். எது நாடு, இது யாருக்கான வளர்ச்சி என்ற கேள்வி எழுப்பி,வர்க்க உணர்வுள்ள தொழிலாளி வர்க்கம் மோடி கும்பலின் சதிகளை அம்பலப்படுத்தி போராட்டங்களை நடத்துவதன் மூலமே இப்பேரழிவையும் தாக்குதலையும் தடுத்து நிறுத்த முடியும்.

– மனோகரன்
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

மேக்கேதாட்டு அணை குடிநீருக்கா, முதலாளிகளுக்கா ?

1

வம்பர் 11-ம் தேதியன்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் (M.B.Patil) கரும்பு விவசாயத்தை விரிவுபடுத்துவதற்காகவும், பெங்களூரு மக்களின் குடிநீர் மற்றும் மின்சாரத் தேவைக்காகவும் மேக்கேதாட்டு (ஆடு தாண்டும் காவேரி) என்ற இடத்திலும், மைசூரின் சுற்றுவட்டாரப் பகுதியிலும் அணைகள் கட்ட இருப்பதாக அறிவித்தார். கர்நாடக வனப்பகுதியில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் மேக்கேதாட்டு என்ற பகுதியில் 48 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட சமநிலை நீர்த்தேக்கமாகவும், இது கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு சமமான பெரிய அணையாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கினை தர மறுத்து வருகின்ற கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு, தஞ்சை டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் சதித்திட்டம்!

கர்நாடக அரசு இது போன்று மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டப்போவதாக அறிவிப்பது முதல் முறை அல்ல. 1967ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அவ்வப்போது அணை கட்டப்போவதாக அறிவித்து வந்துள்ளது. முக்கியமாக, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து மனு செய்து வந்துள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், இத்திட்டத்திற்கு காவிரி தீர்ப்பாயம் அனுமதியளிக்கவில்லை என்பது உண்மையின் ஒரு பகுதிதான். அடர்ந்த காட்டில் 2500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பை இந்த திட்டம் மூழ்கடிக்கும், வனவிலங்குகளை பாதிக்கும் போன்ற பல காரணங்களால் வனத்துறையும் சுற்றுச்சூழல் துறையும் அனுமதியளிக்கவில்லை. இது ஒட்டுமொத்த கர்நாடக மக்களுக்கும் எதிரான திட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உண்மையை மறைத்துவிட்டு, தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதால்தான் அணை கட்டமுடியவில்லை என்று கன்னட மக்களிடம் பிரச்சாரம் செய்து கன்னட இனவெறியைத் தூண்டிவிடுகிறது, கர்நாடக அரசு.

பெங்களூரு நகரத்தின் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் என்ன?

  • பெங்களூருக்கு நாள்தோறும் காவிரியில் இருந்து எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வரும் 140 கோடி லிட்டர் நீரில் 52 சதவீதம் நீரை வீணடிப்பதாக இந்திய அரசும் மத்திய குடிநீர் கமிசனும் தொடர்ந்து கர்நாட அரசை எச்சரித்து வருகின்றன. இதற்கு காரணம் குடிநீர் வினியோகம் பன்னாட்டுக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான்.
  • குடிநீர் தட்டுப்பாடு யாருக்கு? கூலி ஏழைத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், வியாபாரிகள், ஆசிரியர்கள் போன்ற கீழ்த்தட்டு மக்களுக்குத்தான் குடிநீர் தட்டுப்பாடு. மால்கள், ஸ்டார் ஓட்டல்கள், பன்னாட்டுக் கம்பெனிகள், உல்லாச சுற்றுலா விடுதிகள், ஐ.டி. கம்பெனிகளுக்குத் தான் முன்னுரிமை கொடுத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சமச்சீர் குடிநீர் வினியோகம் செய்தாலே பெங்களூரு மக்களுக்கு முழுமையான குடிநீர் வழங்க முடியும்.
  • பெங்களூரு மாநகர எல்லைக்குள் சிறிதும் பெரிதுமாக 2789 ஏரிகள் உள்ளன. இவற்றிற்கு நீர்வரும் வழிகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 99% ஏரிகள் சாக்கடைகளாகவும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கழிவுகள் கொட்டும் இடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
  • கர்நாடகாவின் தேம்ஸ் நதி என்றழைக்கப்படும் ஆர்க்காவதி ஆறும் பெங்களூரு நகர ஏரிகளின் நீரையும் சுத்திகரித்து வினியோகிக்கும் திட்டத்தை சீரியமுறையில் செயல்படுத்தவில்லை. இதற்கான நிதி ஒதுக்கீடும் மிகக் குறைவு.
  • கேளிக்கைப் பூங்காக்கள், செயற்கை கடல், கோல்ப் மைதானங்கள், இரவு நேர கிளப்புகள், நட்சத்திர விடுதிகள், குதிரைப் பந்தய மைதானங்களுக்கு பல லட்சம் லிட்டர் நீர் தினந்தோறும் வாரி இறைக்கப்படுகிறது.

மொத்தத்தில், கார்ப்பரேட் முதலாளிகள், மேட்டுக்குடி மக்களுக்கான மேற்கண்ட நடவடிக்கைகளை அரசு நிறுத்தாமல், காவிரியில் இருந்து நீரைக் கொண்டுவருவதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை என்று கர்நாடகத்தில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முக்கியமாக, குடிநீரை அதிக அளவில் கொண்டுவருவதால், அதே அளவுக்கு கழிவு நீரும் வெளியேறும். இதனை மேலாண்மை செய்வது மேலும் சிரமமான விசயமாக இருக்கும் என்று பலர் தெரிவிக்கின்றனர். இத்தனையையும் மீறிதான் பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக காவிரி நீரைக் கொண்டுவர இருப்பதாக கர்நாடக அரசு பொய் பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறது.

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்]

மின்தடை உழைக்கும் மக்களுக்கு! உல்லாச வாழ்க்கை மேட்டுக்குடி மக்களுக்கு!

மேலும், பெங்களூரு நகரத்தின் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கர்நாடக அரசு கூறுகிறது. மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவது யார்?

  • கார்ப்பரேட் கம்பெனிகள், உல்லாச விடுதிகள், மால்கள், ஸ்டார் ஓட்டல்கள் இவை ஒருநாளுக்குப் பயன்படுத்தும் மின்சாரத்தை கொண்டு ஒட்டுமொத்த கர்நாடக மக்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்க முடியும். ஆகையால், மின்பற்றாக்குறை என்பது ஒரு மோசடி பிரச்சாரம்.
  • தற்போது கர்நாடக அரசு அமைக்க இருக்கும் மின்நிலையங்கள் கூட கார்ப்பரேட் ஆலைகள்தான் செய்ய இருக்கின்றன. மின்சாரத்தை முழுமையாக தனியார்மயமாக்குவதே கர்நாடக அரசின் குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.

கரும்பு விவசாயத்தை விரிவுபடுத்துவது யாருக்காக?

எம்.பி.பாட்டீல் கரும்பு விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் உதவும் என்று கூறியுள்ளார். சுமார் 4.5 லட்சம் ஹெக்டேர் கரும்பு விவசாயம் விரிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இத்திட்டத்தினால் கரும்பு விவசாயிகள் நன்மை பெறப்போவதில்லை. ஏற்கனவே, கரும்பு விவசாயிகள் தற்கொலையில் கர்நாடக மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், கரும்பு விவசாயத்திற்கு போதுமான நீர் இல்லை என்பதல்ல. மாறாக, கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பதே முக்கியமான காரணம்.

அடுத்து, கரும்பு விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் உரிய வகையில் வழங்கப்படவில்லை. சர்க்கரை ஆலை முதலாளிகள் கர்நாடக விவசாயிகளை கசக்கிப் பிழிவதும், அதற்கு எதிராக விவசாயிகள் நடத்தியப் போராட்டங்களும் நாடறியும். மேலும், கரும்பு விவசாயத்தில் மூலம் சர்க்கரை ஆலை முதலாளிகள் மட்டுமல்ல, கரும்பிலிருந்து மின்சாரம், எரிசாராயம் தயாரிக்க இருப்பதாகவும் கர்நாடக அரசு கூறியுள்ளது. இதன் மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்து வருகிறது.

பெங்களூரு மாஸ்டர் பிளான் 2031

பெங்களூரு மாஸ்டர் பிளான் 2031 என்ற பெயரில் நெதர்லாந்து கம்பெனி மூலம் பெங்களூரு நகர விரிவாக்கத் திட்டத்தை கர்நாடக அரசு போட்டு வருகிறது. இத்திட்டம் முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனிலிருந்து போடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆர்க்காவதி நதி முதல் மேக்கேதாட்டு வரை சுற்றுலா தளங்களையும் கேளிக்கை விடுதிகளை அமைப்பது, பெங்களூரு நகரத்தில் உள்ள உழைக்கும் மக்களையும் நடுத்தர மக்களையும் நகரத்தை விட்டு வெளியேற்றுவது என்பதைத்தான் திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த பெங்களூரு மாஸ்டர் பிளான் திட்டத்திற்கு கன்னட மக்கள் மத்தியிலேயே எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இந்த வளர்ச்சிக்குத்தான் காவிரி நீரைக் கொண்டுவர கர்நாடக அரசு துடிக்கிறதே ஒழிய, உழைக்கும் ஏழை மக்களுக்கு நீரைக் கொண்டுவருவதற்காக அல்ல!

தொடரும் கர்நாடக அரசின் சதித்திட்டம்:

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை உரிய வகையில் வழங்க கர்நாடக அரசு  ஒவ்வொரு ஆண்டும் மறுத்து வருகிறது. இந்நிலையில், உபரிநீரைத்தான் தேக்கி பெங்களூருவுக்கு கொடுக்க இருக்கிறோம் என்பதும் சுத்தப் பொய்! ஏற்கனவே, தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்கும் நீர் என்பது, மழைக்காலங்களில் அணைகள் நிரம்பி வழிந்தோடும் நீரைத்தான். இந்த நீரையும் நிரந்தரமாக தடுப்பதற்காகத்தான் தற்போது, மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டும் பணியை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீரை தரக்கூடாது என்பதில் கர்நாடகா ஏன் இவ்வளவு உறுதியாக உள்ளது? தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்புத் திட்டத்தை அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது, கிரேட் ஈஸ்டர்ன் என்ற பன்னாட்டுக் கம்பெனி. இதற்கு மத்திய, மாநில அரசுகள் பக்கத் துணையாக இருந்து வருகின்றன. இந்த கிரேட் ஈஸ்டர்ன் கம்பெனிக்கு எதிராக காவிரி டெல்டா விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்கள் போராடுவதற்கு காரணமாக இருக்கும் கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும் ஒழித்தால்தான் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தங்குதடையின்றி அமுல்படுத்த முடியும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் திட்டத்தின் ஒரு பகுதிதான் கர்நாடக வனப்பகுதியில் காவிரியின் குறுக்கே அணைகட்டும் திட்டமும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த திட்டத்தை மறைக்கும் வகையில், குடிநீர் தட்டுப்பாடுதான் பிரச்சனை என்று பெங்களூரு மக்களிடம் கூறி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தியுள்ளது கர்நாடக அரசு. இதன் மூலம் காவிரியில் புதிதாக அணை கட்டி நீரை எடுப்பதுதான் தீர்வு என்ற ஒரு கருத்தை சதித்தனமாக திணித்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த சதித்திட்டத்தை பெங்களூரு மக்கள் புரிந்து கொண்டு, சமச்சீர் குடிநீர் வினியோகத்திற்காகப் போராட வேண்டும்.

உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார மன்றங்களைக் கட்டி எழுப்புவோம்!

மேலும், கார்ப்பரேட் முதலாளிகளின் மீத்தேன் எடுக்கும் திட்டம், அணை கட்டும் திட்டம் எல்லாம் கிராமப்புற விவசாயிகளை கூலி அடிமைகளாக பெங்களூர், சென்னை, ஒசூர் போன்ற நகரங்களை நோக்கி வீசியெறிவதாக உள்ளன. நகரத்தில் அவர்கள் அமைக்கும் நவீன தொழிற்சாலைகளுக்கு கொத்தடிமைகளாக குறைந்த கூலிக்கு இவர்களை சுரண்டுவதற்கான திட்டமாக உள்ளன. இதற்கேற்ப தொழிலாளர் சட்டங்களையும் ஒழித்துக்கட்டி மொத்த மக்களையும் நவீன கொத்தடிமைகளாக்குகின்றனர்.

மொத்தத்தில், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவது என்பது கார்ப்பரேட் முதலாளிகளின் பல்நோக்குத் திட்டமாக உள்ளது. இது கர்நாடக மற்றும் தமிழக மக்களின் வாழ்வை சூறையாடுவதாக உள்ளது என்பதை நாம் உணரவேண்டும். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள மோடி அரசு இதுபோன்ற மக்கள் விரோத, சுற்றுச்சூழல் விரோத திட்டங்களைத்தான் வளர்ச்சித் திட்டங்கள் என்று கூறிவருகிறார். இதற்காக சட்டரீதியாக உள்ள தடைகளை எல்லாம் நீக்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்கிறார். இத்திட்டங்களை எதிர்ப்பவர்களை கடுமையாக ஒடுக்கி வருகிறார். நீதிமன்றங்களும் இதுபோன்ற திட்டங்களுக்கு எவ்விதத் தடையும் விதிப்பதில்லை.

ஆக, இந்த அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாளாக மாறி பகிரங்கமாக நம்மை ஒடுக்க வருகிறது. இந்த சட்டமும் நீதியும் இனியும் மக்களைக் காக்கும் என நினைப்பது முட்டாள்தனம். இதற்கு ஒரிசாவின் போஸ்கோ, தமிழகத்தில் கூடங்குளம் என பல உதாரணங்கள் நம் கண் முன்னே உள்ளன. இந்தத் திட்டங்களை தடுப்பதற்கு ஒரு வழிதான் உள்ளது. இந்த அரசின் திட்டங்களுக்கு எதிராக போராடுவது ஒன்றே வழி.

  • கார்ப்பரேட் கம்பெனிகளை நமது மண்ணைவிட்டு விரட்டியடிக்கும் வகையில் வீறுகொண்டு போராட வேண்டும்.
  • ஒவ்வொரு ஊரிலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கத்தை தூக்கியெறிய வேண்டும்.
  • அவர்களது கைக்கூலிகளான ரியல் எஸ்டேட் முதலாளிகள், புரோக்கர்கள், அரசு அதிகாரிகளை விரட்டியடிக்க வேண்டும்.
  • உள்ளூர் மக்கள் அதிகாரம் செலுத்தும் வகையில் உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார மன்றங்களைக் கட்டியமைக்க உழைக்கும் வர்க்கங்கள், மக்கள் ஓரணியில் திரண்டு போராடுவோம்!
  • மக்கள் எழுச்சியின் மூலம் இதனை சாதிப்போம்!

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணைகட்டும் திட்டம்:
தஞ்சை டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும்
கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கான சதித்திட்டம்
!

  • கர்நாடக வனப்பகுதியில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டமும் தஞ்சை டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டமும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காவே!
  • காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியை முறியடிப்போம்! தஞ்சை டெல்டாவில் மீத்தேன் எடுப்புத் திட்ட்த்தை தடுத்து நிறுத்துவோம்!
  • உண்மையான ஜனநாயத்திற்கான மாற்று அதிகார மன்றங்களைக் கட்டி எழுப்புவோம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 25-11-2014 மாலை 5 மணி
நகராட்சி அலுவலகம் முன்பு
, ஒசூர்.

ஒசூர் ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி-கிருஷ்ணகிரி-சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு: 97880 11784 – 97513 78495 – 99433 12467

ரஜினி அரசியல் – லிங்கா வர்த்தகம் – காமடி வீடியோ

2

லிங்கா பாடல் விழாவில் அமீர், சேரன், வைரமுத்து மற்றும் பலர் ரஜினியை அரசியலுக்கு அழைத்தது உண்மையா?

இந்த நாடகம் புதிதல்ல…

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே! ரஜினி படம் வரும் பின்னே,
பிரமோஷனுக்காகரஜினி அரசியல் அக்கப்போர் வரும் முன்னே!

இதோ உண்மை…………………

ரிலீசுக்கு முன்னேயே லிங்கா வசூலித்த தொகை 200 கோடி!
படத்தை வாங்க ஈரோஸ் நிறுவனம் செலுத்திய தொகை 120 கோடி!
தெலுங்கு, தமிழ் சேட்டிலைட் ரைட்ஸ் 55-முதல் 60 கோடி!
தமிழ் தியேட்டர் ரைட்ஸ் 60-65 கோடி! தெலுங்கு தியேட்டர் ரைட்ஸ் 30-35 கோடி!
தமிழ் ஓவர்சீஸ் ரைட்ஸ் 30 கோடி! இன்னும் கேரள, கர்நாடக ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ்…..

இத்தனை கோடி குவியும் போது அரசியலில் ரஜினி என்று அளப்பது
லிங்கா விளம்பரத்திற்கா?

தமிழனின் துயர் துடைக்கவா?

Supper Star Rajini in

சில்லறைக்கு சினிமா அக்கப்போருக்கு அரசியல் – வீடியோ!

துருக்கி அரசை அச்சுறுத்தும் இணைய போராளிகள்

2

டந்த சில மாதங்களாகவே கட்டணம் செலுத்த முடியாமல் பல ஆயிரங்களாக உயர்ந்து விட்ட மின்கட்டண பாக்கித் தொகை ஒரு பக்கம் அச்சுறுத்த, எப்போது வேண்டுமானாலும் மின்சாரத் துறை உங்கள் இணைப்பை துண்டித்து விடும் அபாயத்தின் மீது நீங்கள் அமர்ந்திருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். கையில் சல்லிக் காசு இல்லை. இந்த நிலையில் மின்சாரத் துறை இணையதளத்தில் உங்களது நிலுவைத் தொகை பூஜ்ஜியம் என்று காட்டினால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்?

ரெட்ஹேக்உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்கள் பகுதியில் உங்களைப் போலவே மின்சார கட்டணத்தை கட்ட வாய்ப்பில்லாத ஆயிரக்கணக்கானோருக்கும் இதே போன்ற குருட்டு அதிர்ஷ்டம் அடித்தால்?

மேலே விவரித்ததைக் கேட்க இன்பமான கற்பனை போல் இருக்கிறதல்லவா. ஆனால், இந்த இன்பம் சமீபத்தில் துருக்கி மக்களுக்கு வாய்த்திருக்கிறது.

துருக்கியைச் சேர்ந்த இணைய ஹேக்கிங் குழு ரெட் ஹேக் (REDHACK). அரசின் கண்களில் மண்ணைத் தூவி இரகசியமாக செயல்படும் இவர்கள் தம்மை கருத்துரிமைக்கு ஆதரவாகவும், இணைய தணிக்கைக்கு எதிராகவும் செயல்படும் மார்க்சிய லெனினிய ஹேக்கர் குழுவாகவும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். சமீபத்தில் இந்தக் குழுவினர் துருக்கி மின்வாரியத் துறையின் இணையதளத்தை தாக்கி அதன் மத்திய கணினியில் இருந்து கட்டண பாக்கி வைத்திருப்போர் பற்றிய விவரங்களையும் அழித்துள்ளனர்.

இவ்வாறு நீக்கப்பட்ட மின்சார கட்டண நிலுவைத் தொகையின் உத்தேச மதிப்பு 1.5 ட்ரில்லியன் லிரா (65,000 கோடி அமெரிக்க டாலர்) என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கட்டண பாக்கி விவரங்கள் அழிக்கப்படாத பிற மக்கள் பலனடையும் வண்ணம் மின்வாரிய மத்திய கணினியின் (Server) கடவுச் சொல்லையும் வெளியிட்டுள்ளனர் ரெட் ஹேக் குழுவினர். துருக்கி அரசு அதிகாரிகள் “விவரங்கள் போச்சு ஆனா போகலை” என்று அனத்திக் கொண்டிருக்க, மக்கள் எதிர்பாராத இன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பு (65,000 கோடி அமெரிக்க டாலர் = சுமார் ரூ 40 லட்சம் கோடி) குறித்து குழப்பம் நிலவுகிறது. மதிப்பு 15 லட்சம் துருக்கி லிரா மட்டுமே என்றும், தரவுகள் அனைத்துக்கும் பேக்-அப் இருப்பதால் இழப்பு எதுவும் இல்லை என்றும் துருக்கி அரசு  கூறியிருக்கிறது. ஆனால், ரெட் ஹேக் குழுவினரின் இந்த நடவடிக்கை ஒரு பெரிய பிரச்சார வெற்றியாக கருதப்படுகிறது.

தாக்குதல் குறித்து துருக்கி அரசின் அறிக்கை
தாக்குதல் குறித்து துருக்கி அரசின் அறிக்கை

1997-ம் ஆண்டு துவங்கப்பட்ட ரெட் ஹேக் இணைய ஹேக்கர் குழுமம் 2005-ம் ஆண்டிலிருந்து தீவிரமாக இயங்கி வருகிறது. இக்குழுமத்தில் 12 பேர்கள் வரை இருப்பதாகவும் அவர்களைத் தீவீரவாத செயல்களுக்காக தேடி வருவதாகவும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ரெட் ஹேக் குழுவினரால் எந்த நேரத்தில் எந்த மாதிரியெல்லாம் அவமானம் ஏற்படுமோ என்ற பீதியில் திணறிக் கொண்டிருக்கிறது அந்நாட்டு அரசாங்கம். ரெட் ஹேக் குழுவினரோ அரசின் குண்டாந்தடிகள் தம்மைத் தேடியலைவதைப் பற்றி கொஞ்சமும் கவலையின்றி யானையின் காதில் புகுந்த செவ்வெறும்பைப் போல் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

2005-ம் ஆண்டு இஸ்தான்புல் போக்குவரத்துக் காவல் துறையின் இணையதளத்தை தாக்கிய ரெட் ஹேக் குழுமம், ஆயிரக்கணக்கானோரின் அபராத நிலுவைத் தொகை குறித்த விபரங்களை அழித்துள்ளனர். அன்று துவங்கிய ரெட் ஹேக் குழுவினரின் சாகசப் பயணத்தில் துருக்கியின் பல்வேறு அரசு துறைகளின் இணையப் பக்கங்களும் பாசிச அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுடைய இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு பிப்ரவரி மாதம் துருக்கி தொலை தொடர்புத் துறையின் இணையதளத்தைத் தாக்கியழித்த ரெட் ஹேக், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட ஆளும் வர்க்கத்தினரின் தனிப்பட்ட தகவல்களை அம்பலப்படுத்தியது. இது போல் எண்ணற்ற இணைய தாக்குதல்களை செய்துள்ள ரெட் ஹேக், அரசின் பல்வேறு துறைகளின் இரகசிய ஆவணங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அவற்றில் நடந்த ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளது.

வெறும் 12 நபர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்ட ’சிவப்பின்’ குடைச்சலைப் பொறுத்துக் கொள்ள முடியாத துருக்கி அரசு 2012-ம் ஆண்டு ரெட் ஹேக் குழுமத்தை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. துருக்கி அரச வழக்கறிஞர் ரெட் ஹேக் குழுமத்தின் செயல்பாடுகளை துருக்கியின் குற்றவியல் சட்ட நடைமுறைப்படி விசாரித்து தீர்ப்பளிப்பதென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் தலா 24 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆனால், மிளகாய்ப் பொடியைக் காவிச் சுழன்றடிக்கும் சூறைக்காற்றைக் கைது செய்யும் கலையை உலகத்து அதிகார வர்க்கம் இன்னமும் கற்றுக் கொள்ளவில்லை. துருக்கி அரசு அந்தப் பண்ணிரண்டு ’மாயாவிகளைத்’ தேடி பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் போதே ரெட் ஹேக் அரசின் கண்களில் கடப்பாறையை சொருகிக் கொண்டிருக்கிறது. ரெட் ஹேக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இது வரை 25 தனிநபர்களைக் கைது செய்துள்ள துருக்கி காவல் துறை அவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் பலரும் குற்றம் நிரூபிக்கப்படாமல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் எங்கெல்லாம் வர்க்க ஒடுக்குமுறை இருக்கிறதோ அங்கெல்லாம் அதை எதிர்த்த வர்க்கப் போராட்டம் முடிவுறாமல் நடந்து கொண்டே இருக்கும் என்ற எதார்த்த உண்மையை மார்க்சியம் உரைக்கிறது. கம்யூனிஸ்டுகள் இந்தச் சமூக சூழல் பெற்றெடுத்த எதிர்காலத்தின் குழந்தைகள், எனவே தான் கம்யூனிஸ்டுகள் பின்னடைவுகளைச் சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். புரட்சியாளர்கள் மீண்டெழுவதை முதலாளித்துவ கொடுங்கோன்மை மீண்டும் மீண்டும் உறுதி செய்யும் அதே நேரம் அவர்களின் தாக்குதல் இலக்கையும் இனங்காட்டுகிறார்கள்.

விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் சிறுஉடைமையாளர்கள் உள்ளிட்ட பரந்துபட்ட மக்களை முதலாளித்துவ அதிகாரத் திமிர் எந்தெந்த முனையில் எந்தெந்த கோணத்தில் எந்தெந்த தளத்தில் தாக்குகிறதோ அதே களங்களில் மக்கள் எதிர்தாக்குதல் தொடுக்கிறார்கள். நவீன தொழில்நுட்பங்களும், இணைய வலைப் பின்னல்கள் உள்ளிட்ட நவீன தகவல் தொடர்பு சாதனங்களும் மக்களை ஒடுக்கும் ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறது அதிகார வர்க்கம். மக்களோ எதிரிகளின் ஆயுதத்தைப் பறித்து அதைக் கொண்டே எதிர்தாக்குதல் தொடுக்கிறார்கள்.

ரெட் ஹேக் குழுமத்தின் செயல்பாடுகள் வெகுஜனப் பங்கேற்பில்லாத ‘ராபின் ஹூட்’ வகைப்பட்ட தனிநபர் சாகசங்கள் என்றாலும், அரசும் அரசின் அடக்குமுறை நிறுவனங்களும் வீழ்த்தப்படவே முடியாதது என்ற மாயைத் தகர்க்கின்றன. எதிரே நிற்பது ஊளைச்சதைப் பிண்டமென்பதையும், வீழக் காத்திருக்கும் கோலியாத்து தான் என்பதையும் மக்கள் உணரத் துவங்கும் போது இந்தப் பன்னிருவரின் செயலை கோடிக்கணக்கான மக்களும் கையிலெடுப்பார்கள். அப்போது முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கு எதிரான தாக்குதல் மெய்நிகர் உலகத்தில் அல்ல, மெய் உலகில் நிகழும்.

– தமிழரசன்

மேலும் படிக்க

ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா…அரசின் வேலை?

3

ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா…அரசின் வேலை?

jaya-tasmac

பிரச்சார இயக்கம்

ன்பார்ந்த உழைக்கும் பெண்களே,

டாஸ்மாக் புண்ணியத்தில் தமிழ்நாடே தள்ளாடுகிறது. ஆண்களோ குடல்வெந்து சாகிறார்கள். பெண்களோ குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளைக் காப்பாற்றவும் வழியில்லாமல் தினம், தினம் நொந்து சாகிறார்கள். இன்னொரு பக்கம் 3 வயது குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறாள் – பொள்ளாச்சியில் கத்தி முனையில் மிரட்டி 12 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டாள். கரூரில் வேலைக்கு சென்று திரும்பிய 17 வயது இளம் பெண்ணை குதறிக் கொல்கிறார்கள். தமிழகமே சீரழிந்து கொண்டிருக்கிறது.

tasmac-pevimu-campaign-12இன்றைய நிலை என்ன?

10,15 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊருக்கு வெளியே முள்ளுத்தோப்பில் பதுங்கிப் பதுங்கி சாராயம் விற்றார்கள். குடிப்பவர்களும் யாராவது பார்த்து விடுவார்களோ என பயந்துகொண்டே தலையில் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டே போய்க் குடித்தார்கள். ஆனால் இன்றோ 12, 15 வயதிலேயே குடிக்கிறார்கள். பட்டப் பகலில் பஸ் ஸ்டாண்டில் நின்று பெருமையாக மடக் மடக்கெனக் குடிக்கிறார்கள். இதெல்லாம் தப்பில்லையா என்றால், “நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைக்கிறோம், வலி தெரியாம இருக்கக் குடிக்கிறோம்” என குடிமகன்கள் நியாயம் பேசுகிறார்கள். 12,15 வயது பள்ளிகூடப் பையனெல்லாம் குவாட்டரை ராவாக அடிக்கிறானே, அவனுமா கஷ்டப்பட்டு உழைக்கிறான்?

tasmac-pevimu-campaign-09ஏன் இந்த அவலம்?

“விக்கிற அரசாங்கமே வெக்கமில்லாம ஊருக்குள்ள விக்குது. காசு குடுத்து குடிக்கிற நாங்க ஏன் வெக்கப்படணும்?” என்பதே குடிமகன் கேள்வி. என்றைக்கு அரசு டாஸ்மாக் மூலம் சரக்கை விற்க ஆரம்பித்ததோ அன்றையில் இருந்தே மறைந்து மறைந்து குடிப்பதெல்லாம் மறைந்து விட்டது. ட்ரீட் என்ற பெயரில் குடிப்பதையே ஒரு ஃபேஷனாக்கி விட்டனர்.

tasmac-pevimu-campaign-11குடிப்பதால் என்ன பிரச்சனை?

ஒரு பக்கத்தில் குடித்துக் குடித்துக் குடல்வெந்து அரசு மருத்துவமனையில் கிடந்தே செத்துப்போகும் கணவன்மார்கள்- 2,3 குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கும் தாய்மார்கள், இன்னொரு பக்கத்தில், குடிபோதையில் தனது மகளிடமே தவறாக நடக்க முயன்ற தகப்பனை அடித்துக்கொன்ற தாய், குடிவெறியில் 13 வயது சிறுமி புனிதாவைப் பலாத்காரம் செய்து கொன்ற காமுகன்.”குடிச்சா பொண்டாட்டிக்கும் ,பொண்ணுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது?” எனக் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் இதற்கு குடிபோதை மட்டுமா காரணம்? இல்லை, குடிபோதையோடு மோசமான காமவெறியும்தான்.

tasmac-pevimu-campaign-01

குடிக்கு டாஸ்மாக் போல, காமவெறியைத் தூண்டுவதற்கு ஆபாச இணைய தளங்களும், மெமரி கார்டுகளும் கெடுத்துக் குட்டிச் சுவராக்குகின்றன. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலோர் குடிப்பது மட்டுமின்றி, ஆபாசசெக்ஸ் படங்களையும் பார்ப்பவர்கள்தான். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற ஆய்வுக்காக சென்ற நமது தோழர்களிடம், 15 வயது சிறுவன் சொன்ன தகவல் இது “நான் ஒரே நாள்ல 250 பிட்டு படம் டவுன்லோடு பண்ணியிருக்கேன். யாராலயும் முடியாது” என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறான். இப்படி சிறிய வயதில் நாள் முழுக்க ஆபாசப் படத்தைப் பார்ப்பவனுக்கு அனுபவிக்க வேண்டும் என்ற வெறிதான் வரும். இதைத்தான் எதிர்க்க முடியாத பிஞ்சு குழந்தைகளிடம் தீர்த்துக் கொள்கிறார்கள். இப்போது சொல்லுங்கள், டாஸ்மாக்கின் போதைவெறியும், செக்ஸ் படத்தின் காமவெறியும் தலைக்கேறியவனுக்கு தாய்க்கும்- தாரத்திற்கும் – மகளுக்கும் வித்தியாசம் தெரியுமா?

இதற்கு யார் காரணம்?

சாராயக் கடைகளைத் திறந்து வைத்து சரக்கை விற்று மக்களின் பணத்தைப் பறித்து கொண்டதோடு உடலையும் மனதையும் நாசமாக்கியது அரசுதானே. மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டிய பொங்கல், தீபாவளிப் பண்டிகைக் காலங்களில் கூட 200 கோடி, 300 கோடி என “டார்கெட்” வைத்துக் கொள்ளையடிப்பது அரசுதானே?

tasmac-pevimu-campaign-03இதே அரசுதானே செக்ஸ் பட இணைய தளங்களையும் அனுமதிக்கிறது. அரசு எப்படி எல்லாவற்றையும் தடுக்க முடியும்? என்று கேட்கலாம். ஆனால் 2014 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இணையதளம் மூலமாக யாரும் இலவசமாகப் பார்த்து விடாமல் தடுக்க, 20 இணைய தளங்களை செயல்படவிடாமல் தடுத்தது அரசு. டி.வி நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக இதை செய்ய முடியுமென்றால், மக்களின் நன்மைக்காக செக்ஸ் பட இணைய தளங்களை தடுக்க முடியாதா?

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பாடம் நடத்த அரசுப் பள்ளிகளில் வாத்தியார் இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. அவசரத்துக்குப் போகக் கக்கூஸ் கூட இல்லை. இதெல்லாம் கொடுக்காத அரசு எதற்காக இலவச லேப்டாப் கொடுக்கிறது? வாத்தியாரே இல்லாமல் பையன் அதை எப்படி கற்றுக் கொள்வான்? வேண்டுமானால், 5 ரூபாய்க்கு இண்டர்நெட் கார்டு வாங்கி லேப்டாப்பில் போட்டு எதைப் பார்க்கக் கூடாதோ அதைப் பார்க்கத் தொடங்கிக் கடைசியில் காஞ்சிபுரம் மாணவன் போல சீரழிவில் ‘சாதனையாளனாக’ மாறிவிடுகிறான். இப்படி மக்களை, மாணவர்களைக் கெடுத்து சீரழித்து, அதிலும் பணம் பார்க்கும் அயோக்கிய பேர்வழிகளான முதலாளிகள்தானே; இவர்களுக்கு அடியாள் வேலை செய்யும் அரசுதானே காரணம். உண்மை இப்படி இருக்கும் போது அரசு எப்படி மக்களுக்காக இருக்க முடியும்?

tasmac-pevimu-campaign-08இதன் விளைவு என்ன?

சாராய போதையும், ஆபாச படங்களும் மனிதனை இயல்பு நிலையில் வைத்திருப்பதில்லை. எந்த நேரமும் சீரழிந்த சிந்தனையைத் தூண்டிவிடுகின்றன. தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன. எந்த அநியாயத்தையும் கண்டும் கோபம் கொள்ளாத மழுங்கிய நிலைக்குத் தள்ளுகின்றன. படிக்கும் படிப்பு முதல் குடிக்கும் தண்ணீர் வரை காசாகி விட்டதைக் கண்டோ, உரிமைகள் பறிக்கப் படுவதைக் கண்டோ, வெளிநாட்டுக் கம்பெனிகள் நம் நாட்டைக் கொள்ளையடிப்பது கண்டோ கோபமோ, ஆவேசமோ கொள்ளாமல் தடுக்கின்றன. இதைத்தான் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளும், நமது ஆட்சியாளர்களும் விரும்புகிறார்கள்.

tasmac-pevimu-campaign-07

இதை நாம் சகித்துக் கொள்ள முடியுமா? சூடு, சொரணை இல்லாத சதைப் பிண்டங்களாக நமது பிள்ளைகளும், சகோதரர்களும் மாறுவதை அனுமதிக்க முடியுமா? இளம் வயதிலேயே பாலியல் குற்றவாளியாக நமது மகன் மாறுவதை அனுமதிக்க முடியுமா? 3 வயது, 4 வயது குழந்தைகளுடன் நமது சகோதரிகள் தாலியறுப்பதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? முடியாது என்றால் என்ன செய்வது?

தீர்வு தான் என்ன?

அரசாங்கம் என்ன செய்யும்? குடிப்பவர்கள், ஆபாசப் படம் பார்ப்பவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு என்று வசனம் பேசுவது நியாயமா? சிகரெட் கம்பெனிகளை அனுமதித்துவிட்டு புகைபிடிப்பதைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்? இந்தியக் குற்றவியல் சட்டமே என்ன சொல்கிறது? தப்பு செய்யத் தூண்டுபவன்தான் முதல் குற்றவாளி, அப்படி என்றால் அந்த சட்டம் அரசுக்குப் பொருந்தாதா? விற்பவனை உதைத்தால் குடிப்பவன் அடங்குவான் என்று அயோக்கியத் தனத்தைத் தோலுரிப்பதோடு, மக்களுக்கு உதவாத இந்த அரசை அப்புறப்படுத்துவோம். இதற்கு மக்களுக்கான அதிகார கமிட்டிகளைக் கட்டியமைப்போம். மக்களைக் கொல்லும் சாராயத்தையும், மக்களைச் சிதைக்கும் ஆபாசச் சீரழிவுகளையும் ஒழித்துக்கட்டுவோம்.

tasmac-pevimu-campaign-14

உழைக்கும் பெண்களே!

  • குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடவேண்டும்.
    லட்சக்கணக்கான மக்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்.
    எதிர்கால சந்ததிகள் குடிவெறிக்கு பலியாவதை தடுக்க வேண்டும்.
  • வீதிக்கு வீதி குடிநீர் குழாய்கள் இல்லை!
    குடிகெடுக்கும் சாராயக் கடைகளுக்கோ பஞ்சம் இல்லை!
    அறிவைப் புகட்டும் கல்வி தனியார்மயம்!
    புத்தியைக் கெடுக்கும் சாராயம் அரசுமயம்!
  • ஆட்சியைப் பிடிப்பதில் ‘ஜெ’வும் ‘கருணா’வும் பங்காளிகள்!
    ஊத்திக்கொடுத்து உருவிக்கொள்ளும் நம் உழைப்புப் பணத்தை சாராயக் கம்பெனி முதலாளிகளுக்கும் இலவசங்களுக்கும் படையல் வைப்பதில் கூட்டாளிகள்!
  • குடிகெடுக்கும் மக்கள் விரோத பாசிச ‘ஜெ’ அரசை முறியடிப்போம்!
    தமிழகம் முழுவதும் சாராயக் கடைகளை இழுத்து மூட போராடுவோம்!

tasmac-pevimu-campaign-04

பெண்கள் விடுதலை முன்னணி
41, பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல்,
சென்னை-95

notice-1 notice-6
notice-2 notice-3
notice-4 notice-5

தொடர்பு எண் : 98416584457

புதிய ஜனநாயகம் படியுங்கள் புதிய கலாச்சாரம்

பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!

3

குற்றவாளி ஜெயாவிற்கு விரைவு பிணை : பணமும் பார்ப்பனியமும் பத்தும் செய்யும்!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப் பெற்ற ஜெயா-சசி கும்பலுக்குக் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் பிணை அளித்திருப்பதைப் போன்ற சித்திரத்தை ஊடகங்கள் உருவாக்கியுள்ளன. “டிசம்பர் 18-க்குள் மேல்முறையீட்டு வழக்கிற்கான ஆவணங்களை கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துவிட வேண்டும்; மேல்முறையீட்டு வழக்கைத் தாமதம் செயக்கூடாது; நீதிமன்றங்களை விமர்சிக்கக்கூடாது” என உச்சநீதி மன்ற அமர்வு விசாரணையின்போக்கில் குறிப்பிட்டவற்றையெல்லாம் – நீதிமன்றத் தீர்ப்பில் இவை குறித்து ஒருவார்த்தைகூட கிடையாது – கடும் நிபந்தனைகளாகச் சித்தரிப்பதன் வாயிலாக ஊடகங்கள் உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பிற்கு ஒரு ஒளிவட்டம் போடுகின்றன.

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து.
பார்ப்பன ஜெயாவிற்கு கட்டப் பஞ்சாயத்து முறையில் சிறப்பு சலுகைகளோடு பிணை வழங்கிய உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து.

வெளித்தோற்றத்திற்கு நிபந்தனைகளைப் போலத் தெரியும் இவையெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக ஜெயாவிற்கு காட்டப்பட்டுள்ள சலுகைகள். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிலேயே மிகவும் சலுகை பெற்ற கிரிமினல் குற்றவாளிகள் ஜெயா-சசி கும்பல்தான் என்பதை உச்சநீதி மன்றம் அக்கும்பலுக்கு அளித்திருக்கும் பிணை உத்தரவு மீண்டும் எடுத்துக்காட்டியிருக்கிறது.

மாட்டுத் தீவன வழக்கில் தண்டிக்கப் பெற்று, சிறைக்கு அனுப்பப்பட்ட லாலுவிற்கு இரண்டரை மாதங்கள் கழித்துதான் உச்சநீதி மன்றம் பிணை வழங்கியது. ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டிக்கப் பெற்ற சௌதாலாவிற்கும் இரண்டு மாதங்கள் கழித்துதான், அவரது உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பிணை வழங்கியது, டெல்லி உயர்நீதி மன்றம். 2ஜி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கனிமொழிக்கும், ஆ.ராசாவிற்கும் ஏறத்தாழ ஓராண்டுக்குப் பிறகுதான் பிணை வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால் சிறைக்குச் சென்ற 21 நாட்களிலிலேயே ஜெயா-சசி கும்பலுக்குப் பிணையும் வழங்கி தண்டனையையும் நிறுத்தி வைத்து வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு அசாதாரணமானதுதான்.

நெறிமுறைகளை மீறிய விசாரணை

வழக்குரைஞர்கள் தமது உறவினர்கள் நீதிபதிகளாகப் பணியாற்றும் நீதிமன்றங்களில் வாதாடக் கூடாது என இந்திய பார் கவுன்சில் நடத்தை நெறிமுறையை வகுத்து வைத்திருக்கிறது. இந்திய உயர்நீதி மன்ற நீதிபதிகளின் உறவினர்கள் யாரும் அந்த நீதிபதிகள் பணிபுரியும் உயர்நீதி மன்றங்களில் வழக்குரைஞராகப் பணிபுரியக்கூடாது என்று உச்சநீதி மன்றமும் அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், உச்சநீதி மன்ற மூத்த வழக்குரைஞரான பாலி நாரிமன், தனது மகன் ரோஹிண்டன் நாரிமன் உச்சநீதி மன்ற நீதிபதியாகப் பணியாற்றிவரும் நிலையில், இந்த நடத்தை நெறிமுறைகளுக்கு முரணாக, இப்பிணை வழக்கில் ஜெயாவின் சார்பாக வாதாடியிருக்கிறார். உச்சநீதி மன்றமும் பார் கவுன்சிலின் நடத்தை நெறிமுறைகளையும், தனது அறிவுறுத்தல்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு பாலி நாரிமன் ஜெயாவின் சார்பாக வாதாடும் முறைகேட்டை அனுமதித்திருக்கிறது. சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி இந்நடத்தை நெறிமுறைகளைக் குறிப்பிட்டு ஜெயாவின் பிணை மனு சார்பாக பாலி நாரிமன் ஆஜராவதை அனுமதிக்கக் கூடாதென உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி தத்துவிற்கு எழுதியிருந்த கடிதமும் கண்டு கொள்ளப்படாமல் ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளது. இம்முறைகேடு தொடர்பாக பாலி நாரிமன் மீது இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கூறியிருக்கிறார், சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி சந்துரு.

ஜெயாவுக்குப் பிணைஇம்முறைகேடு ஒருபுறமிருக்க, வழக்குரைஞர்கள் எந்தவொரு வழக்கிலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வாதியின் சார்பாகவும் பிரதிவாதியின் சார்பாகவும் ஆஜராகக் கூடாது என்ற நெறிமுறையும் இப்பிணை வழக்கு விசாரணையில் மீறப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் இதற்கு முன்பாக தமிழக அரசின் சார்பாகவும், அன்பழகனின் சார்பாகவும் வாதாடியிருக்கும் பாலி நாரிமன், பார் கவுன்சிலின் இந்த நெறிமுறையையும் மதிக்காமல், தற்பொழுது ஜெயாவின் சார்பாக வாதாடியிருக்கிறார். இப்படி சொல்லிக் கொள்ளப்படும் நீதிமன்ற அறம், மரபுகள், நெறிமுறைகள் ஆகியவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டுத்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு மன்றம் ஜெயாவின் பிணை மனு விசாரணையை நடத்தி முடித்திருக்கிறது.

உச்சநீதி மன்றத்தின் கட்டப் பஞ்சாயத்து

கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் ஜெயாவின் பிணை வழக்கில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, “பத்தாண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழக்குரைஞரின் தரப்பைக் கேட்காமலேயே பிணை வழங்குவதற்கு கிரிமினல் சட்டத்தில் இடமிருப்பதாக” வாதிட்டார். உச்சநீதி மன்றத்தில் ஜெயாவிற்காக ஆஜரான பாலி நாரிமனின் வாதமும் இதே அடிப்படையைத்தான் கொண்டிருந்தது. “வரையறுக்கப்பட்ட காலத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குப் பிணை தரவில்லையென்றால், அது அவர்களுடைய மேல்முறையீட்டு உரிமையையே மறுப்பதாகும். இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை” என வாதிட்டார், பாலி நாரிமன்.

கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா இந்த வாதங்களை தனது தீர்ப்பில் சட்டப்படி ஆணித்தரமாக மறுத்திருக்கிறார். “தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனையை நிறுத்தி வைத்து, பிணை வழங்குவதை அவர்களின் முற்றுரிமையாகக் கருத முடியாது; வழக்கு விசாரணை நடந்த காலத்தில் பிணையில் இருந்த குற்றவாளிகள் சட்டப்படி நடந்து கொண்டார்கள் என்பதனாலேயே, தண்டனை வழங்கப்பட்ட பிறகு அவர்களுக்குப் பிணை வழங்க வேண்டிய அவசியம் கிடையாது. இரண்டு நிலைகளும் வெவ்வேறானாவை.”

பாலி நாரிமன்
இந்திய பார் கவுன்சிலின் நடத்தை நெறிமுறைகளுக்குப் புறம்பாக, ஜெயாவின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன்.

“தண்டிக்கப்பட்ட குற்றவாளி கணிசமான காலம் சிறையில் இருந்துவிட்டார். அவரது மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வருவதற்குக் காலதாமதமாகும் என்ற நிலையில் பிணை வழங்க முடியும். அதாவது, ஒருவேளை மேல்முறையீட்டில் அவர் விடுவிக்கப்படும் பட்சத்தில் அநியாயமாக முழு தண்டனையும் அனுபவித்ததாகிவிடும் என்ற அடிப்படையில் பிணை தரப்படுகிறது. அப்படிபட்ட நிலை இந்தக் குற்றவாளிகளுக்கு (ஜெயா-சசி கும்பல்) இல்லை. மேலும், ஊழல் வழக்குகளைப் பொருத்தவரை தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மேல்முறையீட்டில் விடுவிக்கப்படும் வரை அவர்களைக் குற்றமிழைத்தவராகத்தான் பார்க்க வேண்டும் என உச்சநீதி மன்றத் தீர்ப்பு கூறுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளை மனித உரிமை மீறலாகவும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குவதாகவும் பார்க்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்பு கூறுகிறது” என்றவாறு பல்வேறு சட்ட நுணுக்கங்களையும், உச்ச நீதிமன்ற, கர்நாடக உயர்நீதி மன்ற, சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்புகளையும் முன்வைத்துதான் ஜெயா-சசி கும்பலுக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் இடைநீக்கம் செய்ய முடியாது, பிணையும் வழங்க முடியாது எனத் தீர்ப்பளித்தார், அந்நீதிபதி.

ஜெயா-சசி கும்பலின் பிணை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, அக்குற்றவாளிகளுக்கு எதிராக உத்தரவிட்ட கர்நாடகா உயர்நீதி மன்றத் தீர்ப்புக்குத் தக்க பதில் அளித்து தனது தீர்ப்பை அளித்திருக்க வேண்டும். அதுதான் நீதியானதும் நேர்மையானதும் ஆகும். ஆனால், உச்ச நீதிமன்ற அமர்வோ கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகராவின் வாதங்கள் எதற்கும் பதில் அளிக்காமல், என்ன காரணத்திற்காக ஜெயா-சசி கும்பலுக்குப் பிணை வழங்குகிறோம் என்பதைக்கூடக் குறிப்பிடாமல், தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இரண்டு பக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும் உச்சநீதி மன்றத் தீர்ப்பின் முதல் பக்கத்தில் எந்தெந்த குற்றவாளிகளுக்கு எந்தெந்த வழக்குரைஞர்கள் ஆஜரானார்கள் என்ற விவரமும், இரண்டாவது பக்கத்தில் ஒவ்வொரு குற்றவாளிக்கும் இரண்டு ஜாமீன்தாரர்களின் உத்தரவாதத்தைப் பெற்றுக் கொண்டு பிணை வழங்க வேண்டும் என்ற உத்தரவு மட்டுமே உள்ளது. அதாவது, உச்சநீதி மன்றம் அளித்திருப்பது தீர்ப்பல்ல; அது கட்டப் பஞ்சாயத்து. மரத்தடிக்குப் பதிலாக உச்சநீதி மன்றக் கட்டிடம், சொம்புக்குப் பதிலாக சுத்தியல் என்பதுதான் வேறுபாடு.

jaya-bail-2“வரையறுக்கப்பட்ட காலத்திற்கான தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குப் பிணை தரவில்லையென்றால், அது அவர்களுடைய மேல்முறையீட்டு உரிமையையே மறுப்பதாகும். இதுதான் குற்றவியல் சட்ட நடைமுறை” என வாதிடுகிறார்களே, இந்தச் சட்டபூர்வ உரிமை எத்துணை ஏழைக் கைதிகளுக்கு, அநியாயமாகத் தண்டிக்கப்பட்ட அப்பாவிகளுக்குக் கிடைத்திருக்கிறது என விரல்விட்டுச் சொல்ல முடியுமா?

நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா
சட்டம் மற்றும் சமூக நியாயங்களின் அடிப்படையில் ஜெயாவிற்குப் பிணை வழங்க மறுத்த கர்நாடகா உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா

போலீசின் கையாளாகச் செயல்பட்டுவரும் கீழமை நீதிமன்றங்களால் தண்டிக்கப்பெற்ற பல நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம்கள், தம் மீது சுமத்தப்பட்ட பொய்வழக்குகள் உச்சநீதி மன்றத்தால் தள்ளுபடி செயப்படும் காலம் வரை, பிணையில்கூட வெளியே வரமுடியாமல் ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் எனச் சிறையில் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டதற்கும், அதனால் அவர்களின் குடும்பங்கள் சின்னாபின்னமாகிப் போனதற்கும் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

அம்முசுலீம்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தீவிரவாதம் தொடர்புடையவை எனத் ‘தேசபக்தர்கள்’ எதிர்வாதம் புரியலாம். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை, வளர்ச்சியைச் சீரழிக்கும் அபாயகரமான குற்றமென்று ஊழலை வரையறுத்துவிட்டு, அக்குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப் பெற்ற குற்றவாளிகளை, குறிப்பாக ஜெயா போன்ற செல்வாக்குமிக்கவர்களைச் சலுகை பெற்றவர்களாக நடத்துவது எந்தவிதத்தில் நியாயமானதாகவும் நீதியானதாகவும் இருக்க முடியும்?

உச்சநீதி மன்றத்தின் பார்ப்பன பாசம்

“தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது; அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்” என்பதையெல்லாம் குறிப்பிட்டு, சுப்பிரமணிய சுவாமி ஜெயாவிற்குப் பிணை வழங்கப்படுவதை எதிர்த்தபொழுது, “அவரது (ஜெயாவின்) கட்சிக்காரர்கள் கட்டுப்பாடின்றி நடந்து கொள்வதற்கு, அவர் என்ன செய முடியும்? அவர்தான் இந்த வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?” என ஜெயாவின் வக்கீலாக மாறி வாதிட்டார், தலைமை நீதிபதி தத்து. இன்னொருபுறம் ஜெயாவின் வழக்குரைஞர் பாலி நாரிமனிடம், “உங்களது கட்சிக்காரரை போராட்டங்களை நிறுத்தச் சொல்லியும் நீதிமன்றங்களை விமர்சிக்கக் கூடாது என அறிவுறுத்தியும் அறிக்கைவிடச் சொல்லுங்கள்” என்ற வேண்டுகோளையும் வைத்தார்கள் ‘மானங்கெட்ட’ நீதிபதிகள்.

jaya-bail-3கடந்த தி.மு.க. ஆட்சியில் சேது சமுத்திர திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழக அரசின் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு எதிராக பார்ப்பன-பாசிசக் கும்பல் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கை, விடுமுறை நாளில் வீட்டில் உட்கார்ந்தபடியே விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதிகள், “தி.மு.க. அரசைக் கலைக்க உத்தரவிடவும் தயங்க மாட்டோம்” என வெளிப்படையாகவே மிரட்டினார்கள். ‘சூத்திரன்’ தலைமையிலான அரசை மிரட்டிய உச்சநீதி மன்றம், வன்முறையை நிறுத்துமாறு பாப்பாத்தி ஜெயாவிடம் – அப்பார்ப்பனத்தி ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்ற கூச்சம்கூட இல்லாமல் கெஞ்சுகிறது, வேண்டுகோள் வைக்கிறது.

டிராபிக் ராமசாமி
“இந்திய பார் கவுன்சிலின் நடத்தை நெறிமுறைகளின்படி பாலி நாரிமனை ஜெயாவின் சார்பாக வாதாட அனுமதிக்கக் கூடாது” எனத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதிய டிராபிக் ராமசாமி

“இந்த வழக்கு 18 ஆண்டுகள் எப்படியெல்லாம் இழுத்தடிக்கப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும். அதேபோல் கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீடும் இழுத்தடிக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?” எனத் தலைமை நீதிபதி தத்து கேட்ட கேள்விக்கு, “இதற்கு முன்பு இருந்த நிலை வேறு. இனி அப்படி வழக்கில் தாமதம் ஏற்படாது என்பதற்கு நான் பிரமாணப் பத்திரம் தாக்கல் செகிறேன். நீதிமன்றம் என்ன நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்கத் தயார்” எனப் பதில் அளித்தார், ஜெயாவின் வழக்குரைஞர் பாலி நாரிமன்.

ஜெயாவிற்கு எதிராக தலைமை நீதிபதி நெற்றிக் கண்ணையே திறந்துவிட்டது போல இந்தக் கேள்விக்குப் பொழிப்புரை எழுதுகின்றன ஊடகங்கள். ஆனால், இந்தத் தீர்ப்பின் நரித்தனமே இந்தக் கேள்வியில்தான் அடங்கியிருக்கிறது. தண்டிக்கப்பட்ட குற்றவாளி பிணை கோரி தாக்கல் செய்த வழக்கில் மேல்முறையீட்டு வழக்கை எப்பொழுது முடிப்பீர்கள் என்று கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஜெயா, தனது நலனில் இருந்துதான் சொத்துக் குவிப்பு வழக்கை கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இழுத்தடித்து வந்தார். இப்பொழுது தண்டிக்கப்பட்ட நிலையில் மேல்முறையீட்டு வழக்கை விரைந்து முடிப்பது, அதில் தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற எல்லாவிதமான வழிகளிலும் முயலுவதுதான் தனது நலனுக்கு ஏற்றது என்பது அவருக்கு நன்கு தெரியும். அதனால்தான் இனி அப்படி வழக்கில் தாமதம் ஏற்படாது என்ற உறுதியை அவரது வழக்குரைஞர் அளித்தார். ஜெயாவின் இந்த அவசரத் தேவையை விரைந்து முடித்துக் கொடுக்கும் புரோக்கராகத்தான் நீதிபதி தத்து மேலே கண்ட கேள்வியை எழுப்பியிருக்கிறாரே தவிர, அதில் கண்டிப்போ, கண்டனமோ எதுவும் கிடையாது.

கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஆறு வார கால அவகாசம் கேட்ட ஜெயாவிற்கு எட்டு வார கால அவகாசம் அளித்தும், அம்மேல்முறையீட்டு மனுவை மூன்றே மாத காலத்தில் விசாரித்து முடிக்குமாறு கர்நாடகா உயர்நீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்வோம் என்றும் தமது தீர்ப்பில் தன்னிச்சையாக சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து. விசாரணை நீதிமன்றங்கள் ஊழல் வழக்குகளை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் என்றுதான் காலக்கெடு நிர்ணயிக்கப்படிருக்கிறதேயொழிய, அவ்வழக்குகளின் மேல்முறையீட்டிற்கு எவ்விதக் காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த நிலையில் ஜெயா-சசி கும்பலின் மேல்முறையீட்டு வழக்கை மூன்று மாதங்களில் முடித்துத் தருவதற்கு உச்சநீதி மன்றம் புரோக்கரைப் போல முன்வந்திருப்பது ஜெயாவிற்காகப் புகுத்தப்பட்ட சிறப்புச் சலுகையாகும். ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு தற்போது பிணையில் உள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலுவிற்கோ, அரியானா முன்னாள் முதல்வர் சௌதாலாவிற்கோ காட்டப்படாத சலுகைகள் ஜெயாவிற்கு அளிக்கப்படுகிறதென்றால், இந்தத் தீர்ப்பு அவாள் பிரம்மஸ்ரீக்கள் என்ற அடிப்படையிலோ அல்லது ஜெயாவின் கனமான கவனிப்பு காரணமாகவோதான் வழங்கப்பட்டுள்ளதாகக் கருத முடியும்.

உச்சநீதி மன்றம்: ஜெயாவின் தலையாட்டி பொம்மை!

நீதிபதி பி.எஸ்.சௌஹான்.
சொத்துக் குவிப்பு வழக்கின் பல்வேறு கட்டங்களில் ஜெயலலிதாவுக்குச் சாதகமாகத் தீர்ப்புகளை அளித்த முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி பி.எஸ்.சௌஹான்.

ஜெயா – சசி கும்பலுக்குச் சட்டத்திற்கு மேலான சலுகைகள் அளிக்கப்பட்டிருப்பதை மூடிமறைத்து, ஏதோ நிபந்தனைகள் நிறைந்த, கடுமையான தீர்ப்பை அளித்திருப்பதைப்போலக் காட்டிக் கொள்வதற்காகவே, “டிசம்பர் 18-க்குள் மேல்முறையீட்டுக்கான ஆவணங்களைத் தாக்கல் செய்துவிட வேண்டும்; வழக்கை இழுத்தடிப்பதற்கு எந்தவிதமான முயற்சியும் செயக்கூடாது; மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்வதற்கு ஒருநாள் தாமதமானால்கூட நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என தத்து தலைமையிலான அமர்வு மன்றம் தமது தீர்ப்பில் உதார் விட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உதார்கள் ஒருபுறம் சுயமுரண்பாடு கொண்டதென்றால், இன்னொருபுறம் நகைப்புக்குரியதாகும்.

ஜெயா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பெங்களூருக்கு மாற்றியபொழுது, அவ்வழக்கைத் தினந்தோறும் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், தனது உத்தரவை தானே மதித்து நடந்துகொள்ளவில்லை. குறிப்பாக, சொத்துக்குவிப்பு வழக்கையும் இலண்டன் ஹோட்டல் தொடர்பான வழக்கையும் பிரிக்கக்கூடாதென கோரி ஜெயா கும்பல் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பை விசாரணை முடிந்த கையோடு வழங்காமல், நான்கு ஆண்டுகள் கிடப்பில் போட்டு வைத்து வழக்கு விசாரணையை முடக்கி வைத்தது உச்சநீதி மன்றம்.

jaya-bail-4உச்சநீதி மன்ற நீதிபதிகளாக இருந்த பி.எஸ்.சௌஹான், பாப்டே ஆகிய இருவரும் இவ்வழக்கில் ஜெயா கும்பலின் விசுவாசிகளாகவே நடந்துகொண்டதற்கு அவர்கள் அளித்த தீர்ப்புகளே சான்றுகளாக உள்ளன. “பவானி சிங்தான் அரசு வழக்குரைஞராகத் தொடர வேண்டும்; நீதிபதி பாலகிருஷ்ணா, அவரது பணி ஓவுக்குப் பிறகும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகத் தொடரும் வண்ணம் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்” என ஜெயா கும்பல் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில், ஜெயா-சசி கும்பல் எதைக் கோரினார்களோ அதையே இவ்விரு நீதிபதிகளும் தீர்ப்பாக அளித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்த சமயத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு வந்துவிடக் கூடாதென சதித் திட்டம் தீட்டிய ஜெயா-சசி கும்பல், அதற்காக அரசு வழக்குரைஞர் பவானி சிங்கைத் தூண்டிவிட்டு, அவரது உடல் நிலையைக் காரணமாக முன்வைத்து வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும் மனுவொன்றை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய வைத்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சௌஹான், செல்லமேஸ்வர் அமர்வு ஜெயாவிற்குச் சாதகமாகத் தேர்தல் முடியும் வரை – ஏப்ரல் 28 வரை வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து தீர்ப்பளித்தது. இப்பொழுது தத்து தலைமையிலான அமர்வு மன்றம் அளித்திருக்கும் தீர்ப்போ, நீதிபதி சௌஹான் ஓவு பெற்று சென்றுவிட்ட குறையைத் தீர்த்து வைப்பது போல அமைந்துவிட்டது.

வருமான வரி மோசடி வழக்கிலிருந்து தம்மை விடுவிக்கக் கோரி ஜெயா-சசி கும்பல் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுவைத்திருந்த உச்சநீதி மன்றம், கடந்த மார்ச் மாதத்தில் திடீரென முழித்துக்கொண்டு அம்மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, இந்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அதற்கு அடுத்த மாதமே நாடாளுமன்றத் தேர்தலைக் காரணமாக முன்வைத்து இந்த வழக்கு விசாரணையை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி ஜெயா மனு தாக்கல் செய்தார். உச்சநீதி மன்றமும் ஜெயா கும்பல் தேர்தல்கள் முடிந்து பதவி பேரங்களை நடத்துவதற்கு வசதியாக மேலும் மூன்று மாத கால அவகாசம் அளிப்பதாக உத்தரவிட்டது.

ஆனாலும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கு விசாரணை கடந்த ஏழு மாதங்களில் ஒரு அங்குலம்கூட நகரவில்லை. அந்நீதிமன்ற நீதிபதி தெட்சிணாமூர்த்தி, ஜெயாவும் சசியும் நேரில் ஆஜராகுமாறு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்ட மறுநிமிடமே அந்நீதிமன்றத்திலிருந்து அதிரடியாக மாற்றப்பட்டார். எனினும், மாற்றப்பட்ட அன்று மாலையே மீண்டும் அதே நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு பதவியேற்றவுடனேயே, வருமான வரித் துறையிடம் சமரச மனுவொன்றை அளித்தது, ஜெயா-சசி கும்பல். இந்தச் சமரச மனுவைக் காரணமாகக் காட்டியே வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணையைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் சதித்தனங்களை நடத்தி வருகிறது, அக்கும்பல்.

ஜெயா 1991-96-ம் ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்தபொழுது, 1992-ம் ஆண்டில் தனக்கு வெளிநாட்டில் இருந்து 2 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர் பரிசாக வந்ததாகக் கணக்கு காட்டினார். இது முறைகேடாக வந்த பணம் எனக் குற்றஞ்சாட்டி சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 2011-ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்து, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து சி.பி.ஐ. உச்சநீதி மன்றத்தில் கடந்த 2012 பிப்ரவரியில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை கடந்த 2014 மார்ச்சில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஜெயா உள்ளிட்ட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு இதுநாள்வரை பதில் அளிக்காமல் வழக்கையே முடக்கி வைத்திருக்கிறார், ஜெயா.

– திப்பு
_______________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2014
_______________________________

காசில்லாக் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறையா ?

1

ருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 குழந்தைகளும் சேலம் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 7 குழந்தைகளும் என்ற 18 குழந்தைகள் கடந்த 5 நாட்களில் இறந்துள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து குழந்தைகள் சாவது குறித்து எவ்வித அக்கறையுமில்லாமல் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் வக்கிரமான முறையில் பதில் அளித்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் 18-11-2014 அன்று நேரில்  ஆய்வு மேற்கொண்டனர். அரசு திட்டமிட்டு அரசு மருத்துவமனைகளை புறக்கணித்து தனியார் மருத்துவக் கொள்ளையர்கள் கொள்ளை லாபம் ஈட்ட வழி வகுக்கிறது என்ற அளவில் தனியார்மயமே இந்த படுகொலைகளுக்கு காரணம் என முடிவு செய்து பிரசுரம் அச்சிட்டு மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். மேலும் சுவரொட்டி அச்சிட்டு பெண்ணாகரம், தருமபுரி சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டினர்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களிலும், குழந்தைகள் தினம் கொண்டாடினர். ஆனால், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 நாட்களில் 16 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துள்ளன.

இதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியாமல் கல்லூரி தலைவர், மருத்துவக் கல்வி இயக்குனர் போன்றோர் சிறிதும் மனிதாபிமானமின்றி பல்வேறு பொய்யான காரணங்களை வக்கிரமான முறையில் கூறி வருகின்றனர். ஏதுமறியாத பச்சிளங்குழந்தைகள் மற்றும் பெற்றோர் மீதே பழிபோடுகின்றனர்.

எடை குறைவு என்பது பச்சையான பொய்.  போதிய எடையுள்ள குழந்தைகளும் இறந்துள்ளனர். 900 கிராம் எடையிருந்த குழந்தைகளைக் கூட இதற்கு முன்னர் காப்பாற்றியுள்ளனர். மற்றும் சீசன் டெத், சத்துக்குறைபாடு, மூச்சுத் திணறல் என்ற ஏராளமான பொய்யைச் சொல்லி சமாளித்து விடலாம் என்ற கருத்துடனே இருக்கின்றனர்.

இவையாவும் கடைந்தெடுத்த பொய்யே! கிராமப்புற சுகாதார மையங்கள் செவிலியர்களை வைத்து கண்காணிக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருகிறது. 30 குழந்தைகளுக்கு இரண்டே செவிலியர்களை அமர்த்தியுள்ளது இந்த அரசு.

இவ்வாறு இருக்கும் போது மருத்துவர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ள இவ்வாறு பொய்யை வாய்கூசாமல் பேசி வருகின்றனர். வழக்கமான மரணத்தையே ஊதிப் பெரிதாக்கி வருகின்றனர் என்றும் 100 குழந்தை பிறந்தால் 10 பேர் இறக்கத்தான் செய்வார்கள் என்றும் மருத்துவமனை ஊழியர்கள் சாதாரணமாக பேசுவதை, எத்தனை பெரிய மனித படுகொலையை மிக சாதாரண முறையில் பேசுவதை எப்படி ஏற்பது. தனது கையாலாகத்தனத்தை எளிதாக மறைக்க அரசு இதையே கூறி தப்பித்துக் கொள்கிறது.

“அடப்பாவி, நான் அப்போவே சொன்னேன், கெவுருமெண்டு ஆஸ்பத்திரி வேண்டாமுன்னு. நீ கேட்டியா, இப்ப என் குழந்தையே கொன்னுட்டாங்களே” முதல் குழந்தையை இழந்த தாய் ஒருத்தி கதறிக் கதறி கணவனை பார்த்து அழுத அழுகுரலில்தான் இதன் உண்மை அடங்கியிருக்கிறது.

தருமபுரியில் குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு வருகை நாளும் அதிகரித்து வந்தது. குறிப்பாக, வசதியற்ற ஏழை எளிய மக்களுக்கு ஒரே நம்பிக்கை மிகுந்த குழந்தை பெற்றெடுக்கும் இடமாக இருந்த ஆஸ்பத்திரி மீது நம்பிக்கை இழக்க வைத்து தனியார் மருத்துவமனையை நோக்கி நெட்டித் தள்ள வைத்துள்ளனர் இந்த கொலைகார பாவிகள். இதுதான் தனியார்மயத்தை ஆதரிக்க செய்யும் சதியான வழி. எனவே, தனியார்மயத்தை ஆதரிப்பவர்களும், அமுல்படுத்தும் அரசும்தான் கொலைக்குற்றவாளிகள்.

இறந்து போன குழந்தைக்கான நீதியை யார் வழங்குவது? இறந்த குழந்தையை போஸ்ட்மார்ட்டம் செய்து விடுவார்கள் என்று பச்சைக் குழந்தையை அப்படியே எடுத்துச் சென்று புதைப்பதையே விரும்பும் பெற்றோர்கள், ஆஸ்பத்திரியில் செய்யும் மிரட்டல் வேலைகளை நம்பி அப்படியே எடுத்து சென்று விடுகின்றனர்.

கொத்துக் கொத்தாக குழந்தை இறப்பு என்பதை இந்த அரசு இன்னும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றி எந்த உயர் அதிகாரியோ, நம்மிடம் ஓட்டுவாங்கிச் சென்ற அரசியல் தலைவர்களோ யாரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. என்ன, ஏது என்று விசாரித்துக் கூடப் பார்க்கவில்லை. அடுத்த முறை ஓட்டு வாங்கத் துடிக்கும் சில அரசியல் தலைவர்களைத் தவிர யாரும் இதனை கவனிக்கவில்லை.

நமது மாவட்டத்தினை முதல் மாவட்டமாக ஆக்கத் துடிக்கும் அரசியல் தலைவர்கள் கூட குழந்தை என்ன பின்னணி என்று ஆராய்ந்து கொண்டிருப்பார்கள் போல. ஏனெனில் எல்லா ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் தனியாரை ஆதரிக்கும் தீவிர ஆதரவாளர்களே! தனியார்மயத்தை ஆதரித்து தீவிரமாக அமுல்படுத்தி வருகின்றனர். இதனை யாரும் தட்டிக் கேட்டு விடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

இதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியா போன்ற ஏழை நாடுகளில் பரிசோதிக்க மத்திய, மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளன பன்னாட்டு மருந்து கம்பெனிகள். இதற்கு இந்தியா சிறந்த இடமாக இருக்கிறது என்ற பில்கேட்ஸ் அறக்கட்டளை நடத்தும் அமெரிக்க முதலாளி பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்.

இதனால், நமது நாட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சாவதும், ஆயிரக்கணக்கானவர்களுக்கு பக்க விளைவுகளால் பாதிக்கப்படு நடைபிணமாக்கப்படுவதும் வாடிக்கையாளியுள்ளது. எனவே, தற்போது நமது மாவட்டத்தில் நடந்துள்ள குழந்தைகள் கொத்தான மரணம் என்பது இயற்கையான காரணம் அல்ல, படுகொலைதான்.

இன்று நம்மை அழுத்திக் கொண்டிருக்கும் இந்த நாசகார கொள்கையான தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தி நமது சந்ததியரையும், நமது வாழ்வையும், வளங்களையும் ஒழித்து முன்னேற்றம் காணத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களையும், தரகு முதலாளிகளையும் அவர்களை தாங்கிப் பிடிக்கும் இந்த அரசையும் தூக்கியெறியாமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்வில்லை என்பது தொடர்ந்து நிரூபணமாகி வருகிறது. எனவே, மக்களை நேசிக்கும் புரட்சிக அமைப்புகளின் பின்னால் அணிதிரண்டு போராட வாருங்கள்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அராஜக போக்கை கண்டிக்கும் வகையில் அந்த மருத்துவமனை முன்பு   19-11-2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்தனர் தோழர்கள்.  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடத்திக் கொள்ள கூறியது நிர்வாகம்.

தோழர்கள் தடையை மீறி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் தொடர் படுகொலைகள் பற்றியும் தோழர்களின் கைது குறித்தும் அடுத்த கட்ட பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

ஆசைஆசையாய் பெற்ற குழந்தை
கண்ணெதிரே கதறி
கொத்துக் கொத்தாய் மடிவது
என்று அரசு மொத்தமாய் கொல்வதற்கா
பத்துமாதம் காத்திருந்தோம்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையா
இல்லை கொன்று புதைக்கும் சுடுகாடா?

வெட்கக் கேடு நேருவின் பிறந்த நாளாம்,
குழந்தைகள் தினம் கொண்டாடுவது வெட்கக் கேடு
குழந்தை மரணம் நிகழும் இந்த நாட்டில்
குழந்தைகள் தின கொண்டாட்டம் வெட்கக் கேடு.

காசில்லா ஏழை மக்கள்
பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு
கருவறைதான் கல்லறையா? – இல்லை
கருவறை விட்டு வெளியே வந்தால்
மருத்துவமனைதான் கல்லறையா?

வல்லரசு கனவெல்லாம்
பல்லிளிக்குது, பல்லிளிக்குது
தூய்மை இந்தியா திட்டமெல்லாம்
துர்நாற்றம் வீசுது

தனியார் மருத்துவக் கொள்ளைக்காக
பிள்ளைக்கறி தின்னும் அரசுகளை
கீழே தள்ளிப் புதைக்காமல்
வாழ்க்கையில்லை

அவமானம் அவமானம்
பத்து மாதம் சுமந்து பெற்ற
பச்சிளம் குழந்தைக்கு பாடை கட்டும்
கொலைகார அரசுகளை
சகித்துக் கொள்வது அவமானம்

துடைப்பம் தூக்கி போஸ் கொடுக்கும்
சவுண்டு ஸ்பீக்கர் மோடியே
16 குழந்தைகள் மரணத்திற்கு
யாரை துடைப்பத்தால் அடிப்பது?

இது தர்ம ஆசுப்பத்திரியா – இல்லை
எமதர்மனின் பாசக்கயிறா
தரம்கெட்ட அரசுகளே
குழந்தைகளை கொல்வதற்கா
அரசு மருத்துவமனை

நட்ட ஈடு வழங்கு, நட்ட ஈடு வழங்கு
பிறந்த குழந்தைகள் இறந்ததற்கு
பொறுப்பேற்று நட்ட ஈடு வழங்கு

முறியடிப்போம்! முறியடிப்போம்.
தனியார் மருத்துவக் கொள்ளைக்கு
வழிவகுக்கும் சதித் திட்டத்தை
முறியடிப்போம், முறியடிப்போம்.

  • தனியார் மருத்துவமனைக்கு சேவை செய்யவே தருமபுரி மருத்துவமனையில் குழந்தைகள் 16 பேர் படுகொலை. நீதி விசாரணை நடத்திடு!
  • கொத்துக் கொத்தாய் குழந்தைகள் இறப்புக்கு பொய்யான, சப்பையான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றாதே!
  • பன்னாட்டு மருந்து கம்பெனிகளையும், தனியார்மயத்தை ஊக்குவிக்கும் மக்கள் விரோத அரசினையும் தூக்கி எறிவோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தருமபுரி மாவட்டம்