Friday, October 31, 2025
முகப்பு பதிவு பக்கம் 823

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான மாநாடும் ஈழ ஆதரவாளர்களுக்கு சில கேள்விகளும் !

41

vote-012பழ.நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பின் 7 வது ஆண்டு நிறைவு விழாவும் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் மாநாடும் இரண்டு நாள் நிகழ்ச்சியாக டிசம்பர் 26, 27 தேதிகளில் தஞ்சையில் நடைபெற்றது. நடராசன் (சசிகலா), வைகோ, ம.தி.மு.க, ராமதாசு, பா.ம.க, மகேந்திரன், வ.கம்யூ, திண்டிவனம் இராமமூர்த்தி, தேசியவாத காங்கிரசு கட்சி, அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி, பெ.மணியரசன், த.தே.பொ.க, வைத்திலிங்கம், இந்து தமிழர் இயக்கம், நகைமுகன் தனித்தமிழர் சேனை, இராசேந்திர சோழன், சூரியதீபன், பசுபதிபாண்டியன், வீர.சந்தானம், மறவன்புலவு சச்சிதானந்தன், காசி.ஆனந்தன், முதலானோர் முக்கியப் பங்கேற்பாளர்கள். இவர்களன்றி டத்தோ சாமிவேல் உள்ளிட்ட வெளிநாட்டுத் தமிழறிஞர்களும் உள்நாட்டுத் தமிழறிஞர்களுமாகச் சேர்த்து சுமார் 80 பேச்சாளர்கள் இரண்டு நாள் நிகழ்சசிகளிலும் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு மிகக் கொடிய இனப்படுகொலையையும், புலிகள் இயக்கம் சந்தித்திருக்கும் பாரிய பின்னடைவையும் தொடர்ந்து நடைபெறும் பெரியதொரு நிகழ்ச்சி என்பதனால், தமிழகத்தில் உள்ள புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியிலும் ஈழத்தமிழர்கள் மற்றும் புலம் பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் நிலவும் பலவிதமான கேள்விகள் மற்றும் குழப்பங்களுக்கு இம்மாநாட்டில் விடை கிடைக்கக் கூடும் என்ற ஒரு இலேசான எதிர்பார்ப்பு எங்களுக்கும் இருக்கத்தான் செய்தது.

தமிழகத்தைப் பொருத்தவரை, சமீபத்திய மாவீரர் தினத்தன்று பிரபாகரனின் குரலையோ அறிக்கையையோ எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் பலர்.  பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ, கேள்விகள் பல இருக்கின்றன. இனி ஆயுதப் போராட்டமா, அரசியல் போராட்டமா, அதிபர் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் என்ன  செய்யவேண்டும்? தேர்தலைப் புறக்கணிப்பதா, அல்லது வாக்களிப்பதாயின் யாருக்கு வாக்களிப்பது? புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதி யார்?..என்பன போன்ற கேள்விகளுக்கு புலி ஆதரவாளர்களே ஆளுக்கொரு விதமாகப் பதில் சொல்லி வரும் சூழ்நிலையே நிலவுகிறது. இந்நிலையில் இத்தகைய கேள்விகளுக்கு இந்த மாநாட்டில் பதிலை எதிர்பார்ப்பது குற்றமோ துரோகமோ ஆகாது என்பதால் இந்த எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தோம்.

மேடையில் உருவிய வாளுடன் நின்று கொண்டிருந்தார் மாமன்னன் இராசேந்திர சோழன். மொத்த இலங்கையையும் வென்று ஆட்சி செய்த அந்தத் தமிழ் மன்னனுக்கு அருகில் துப்பாக்கியுடன் பிரபாகரன். பக்கத்தில் உலகத்தமிழர் பேரமைப்பின் சின்னம். அதன் பக்கத்தில் கையில் குழந்தையுடன் கதறும் தாய் – இதுதான் மேடையின் பின்புலமாய் அமைந்திருந்த சித்திரம். இது உலகத்தமிழர் ஒற்றுமையின் குறியீடா, அல்லது  இந்திய மேலாதிக்கத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமா? உருவிய வாளுடன் நிற்கும் இராசேந்திர சோழனின் வாரிசு கருணாநிதியா அல்லது பிரபாகரனா? இவை நமக்குத் தோன்றிய கேள்விகள். தமிழ் உணர்வாளர்கள் எனப்படுவோருக்குத் தோன்றக் கூடாத கேள்விகள்.

25 ஆம் தேதி காலை முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்ற தலைப்பிலான அமர்வு. தலைமை வகித்த முனைவர் த.ஜெயராமன் “4000 புலிகள் ஆயுதங்களுடன் தயாராக இருக்கிறார்கள். ஆதனால்தான் இலங்கை அரசு இராணுவத்துக்கு ஆள் எடுக்கிறது. எனவே இது தோல்வியே அல்ல’’ என்றார். அந்த அமர்வில் பேசிய அனைவரும் இதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.

அடுத்து மாநாட்டு மலரை வெளியிட்டுப் பேசினார் நடராசன் (சசிகலா). “நெடுமாறனும் நானும் ஒன்றாக இருப்பதை தமிழர்கள் விரும்பவில்லை என்று குமுதம் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. விசாரித்தபோது அது போலீசின் ஏற்பாடு என்று தெரிந்தது. தமிழ் ஈழத்துக்காகத்தான் நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா?’’ என்று கூட்டத்தைப் பார்த்து கேள்வி எழுப்பினார். விரும்புகிறோம் விரும்புகிறோம் என்று பதிலளித்தது கூட்டம்.

அன்று நெடுமாறனை பொடாவில் உள்ளே வைத்தபோதும் அம்மாவுடன் ஒன்றாக இருந்தாரே நடராசன் அதுவும் தமிழ் ஈழத்துக்காகத்தானோ என்று யாரும் கேட்கவில்லை. “தமிழகத்தைப் பெறுவதற்காக’’ அம்மாவுடன் ஒன்றாக இருக்கிறார் சசிகலா. “தமிழீழத்தைப் பெறுவதற்காக’’ அய்யாவுடன் ஒன்றாக இருக்கிறார் நடராசன் என்று அவர்களுக்குப் புரிந்திருக்கக் கூடும்.

ஈழம் – நிமிரும் காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற அடுத்த அமர்வில் பேசத்தொடங்கிய திமுக முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன், “பிரபாகரன் அவர்களே’’ என்று விளித்து பேசத் தொடங்கினார். இங்கே நான் பேசுவது அவருக்கு கேட்கும் என்று அவர் கூறியவுடன் கைதட்டல் கூரையைப் பிளந்தது. அடுத்துப் பேசிய பேராசிரியர் அய்யாசாமி, “இது பின்னடைவே அல்ல. புலிகள் திட்டமிட்டுப் பின்வாங்கியிருக்கிறார்கள். தமிழ் ஈழப்போராட்டத்தின் வேர் உலகம் முழுவதும் பரவிவிட்டது’’ என்று கூறி, இன்றைய நிலைமையை மாபெரும் முன்னேற்றமாகச் சித்தரித்தார்.

தற்போது ஏற்பட்டிருப்பது பின்னடைவுதான் என்று நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார் அடுத்துப் பேச வந்த இராசேந்திர சோழன். “ஏற்கெனவே ஈழம் மலரும் என்றோம். இன்று நிமிரும் காலம் என்று தலைப்பிட்டிருக்கிறோம். வீழ்ந்ததனால்தான் நிமிர வேண்டியிருக்கிறது. இதிலிருந்தே பின்னடைவு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். கடந்து வந்த பாதையை சுயவிமரிசனமாகப் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்’’ என்றார். எதை சுய விமரிசனமாகப் பார்க்கவேண்டும் என்ற விவரத்துக்குள் போகாமல் கவனமாகத் தவிர்த்துக் கொண்டார்.

அடுத்து நடைபெற்ற பொது அரங்கிற்கு பா.ம.க தலைவர் ராமதாசு, இந்திய கம்யூனிஸ்டு தலைவர் மகேந்திரன் ஆகிய இருவருமே  வரவில்லை. இரண்டு பேருக்கும் உடல்நிலை சரியில்லையாம். என்ன நோய் என்பது ஒருவேளை பிற்காலத்தில் நமக்குத் தெரியவரலாம். ஆனால், தேர்தலுக்கு முன் ஐயாவுடன் இருந்த தியாகு, சீமான், பெரியார் தி.க போன்றோரையும் இங்கே காணமுடியவில்லை. அதற்கான விளக்கமும் சொல்லப்படவில்லை.

பொது அரங்கின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன்.

முதலில் பேசிய வடிவேல் இராவணன், பாமக, கருணாநிதியை தாக்கிப் பேசவே நிலை கொள்ளாமல் தவித்த சச்சிதானந்தன், “”எங்களுக்கு எல்லோரும் வேண்டும். ஈழத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் பேசுங்கள். உங்கள் உள்ளூர் பிரச்சினையை வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார். அடுத்துப் பேசவந்த மணியரசன், இதனைக் கணக்கில் கொண்டார் போலும். “இந்தியாவிலும் தமிழகம் அடிமையாகத்தான் இருக்கிறது, எனவே ஈழத்துக்காக மட்டுமின்றி தமிழகத்தின் விடுதலைக்காகவும் போராடவேண்டும். எது முன்னால், எது பின்னால் என்று சொல்ல முடியாது’’ என்றார். பேச வந்த அத்தனை பேரும் பிரபாகரன் புகழ் பாடுவதையும், பிரபாகரன் என்ற சொல்லைக் கேட்டவுடனே அரங்கம் ஆர்ப்பரிப்பதையும் மணியரசனாலேயே சீரணிக்க முடியவில்லை போலும்! “பிரபாகரன் புகழுக்குரியவர்தான் எனினும் புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும் என்பதில்லை’’ என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுச் சென்றார்.

யாரையும் புண்படுத்தாமல் பேசிய மணியரசனை வெகுவாகப் பாராட்டினார் சச்சிதானந்தன். தனித்தமிழ்நாடு கேட்பதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. அவர் கவலை எல்லாம் கருணாநிதியைத் திட்டுவது பற்றியதுதான். அடுத்துப் பேச வந்த ஆவடி மனோகரன் மறுபடியும் கருணாநிதியை சாடத்தொடங்கவே, சச்சிதானந்தன் குறுக்கிட்டார். அப்படித்தான் பேசுவேன் என்றார் ஆவடி மனோகர். அவர் பேசி முடித்தவுடன் “ஈழத்துக்காக எம்.ஜி.ஆர் 5 கோடி கொடுத்தார், ராஜீவ் 50 இலட்சம் கொடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து யார் என்ன கொடுத்தீர்கள். நாங்கள் எங்கள் சொந்தக் காலில் நின்றுதான் போராடினோம். உணர்ச்சி வசப்படுவதெல்லாம் காரியத்துக்கு ஆகாது’’ என்று புத்திமதி கூறினார் மறவன் புலவு.

“நம்பக்கூடாத இந்தியாவை நம்பி நீங்கள் கெட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்வது? என்னைப் பொருத்தவரை எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் தமிழர்கள் சீனாவை ஆதரிக்க வேண்டும்’’ என்று இன்னொரு காமெடி பிட்டை வீசினார் அடுத்துப் பேசிய நகைமுகன். இவர் உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டிருந்தவர், சந்தேகத்துக்குரிய நபர் என்பது தமிழகம் முழுதும் உலவிய ஒரு செய்தி.

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைத்த கட்சியும், தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் தேவாரம் பாடுவதற்கு எதிராக தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் கட்சியுமான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அடுத்த பேச்சாளர்.

“இலங்கைப் பிரச்சினை என்பது தமிழரின் இனப்பிரச்சினையோ, மொழிப்பிரச்சினையோ அல்ல. அது காஷ்மீர் முதல் இலங்கை வரை உள்ள 110 கோடி இந்துக்களுக்கு எதிராக ஒரு கோடி பவுத்தர்கள் தொடுக்கும் போர். அதேபோல சைவம் வேறு தமிழ் வேறு அல்ல. களப்பிரர் காலத்தில் தமிழகத்தை ஆக்கிரமித்த சமண, பவுத்தங்களை வீழ்த்தி சைவத்தை மீட்டார்கள் சமயக் குரவர்கள். இந்தப் பிரச்சினையை இப்படி சரியான கோணத்தில் புரிந்து கொண்டிருப்பதனால்தான், எங்கள் தலைவர்கள் பால் தாக்கரேயும், முத்தாலிக்கும் (கர்நாடக இந்து சேனா) புலிகளை ஆதரிக்கிறார்கள்’’ என்றார். நாத்திகர்களை ஏளனம் செய்து அர்ஜூன் சம்பத் பேசிய போது மட்டும் கீழேயிருந்து சிறிய தொரு சலசலப்பு வந்தது. அதை அர்ஜூன் சம்பத் சட்டை செய்யக்கூட இல்லை. மற்றப்படி அவரது பேச்சை மேடையிலிருந்த யாரும் ஆட்சேபித்தோ மறுத்தோ பேசவில்லை.

அப்புறம் ஓவியர் வீர சந்தானம். “பிரபாகரன் இருக்கிறார் என்று நெடுமாறன் சொன்னார். எனக்கு 99% நம்பிக்கை வந்தது. அப்புறம் மலேசியா போயிருந்த போது அங்கேயும் இருக்கிறார் என்றார்கள். 100% நம்பிக்கை வந்துவிட்டது’’ என்றார். “அம்மா தேர்தல் நேரத்தில் ஈழத்துக்காக குரல் கொடுத்தவுடன் ரொம்ப சந்தோசப்பட்டேன். அப்புறம் ஏனோ அதை கைவிட்டு விட்டார்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் சேர்ந்து ஈழத்துக்காக நின்றால் நாம் அனைவரும் அவர்கள் பின்னால் நிற்போம்’’ என்றார். “இப்போதைக்கு நெடுமாறன் சொல்கிற இடத்தில் நிற்கணும்’’ என்பதுதான் அவர் உலகத்தமிழர்களுக்குக் கூறிய அறிவுரை.

26 ஆம் தேதி காலை முதல் அமர்வு – முள்வேலிக்குள் நெறிபடும் மனித உரிமைகள் . பேசியவர்கள் வதை முகாமின் கொடுமைகளை விவரித்தனர். இன்றைய சூழ்நிலையில் இந்தியாவைச் சூழ்ந்து வரும் சீன அபாயத்தை விளக்கினார் பேரா. சுப்பிரமணியன். இலங்கையில் மட்டுமல்ல, நேபாளத்திலும் மாவோயிஸ்டுகள் மூலம் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக தென்தமிழகத்தின் கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து என்றும் எச்சரித்தார். இந்த உண்மைகளை மத்திய அரசு உணரவில்லை என்றும் அதனை அவர்களுக்கு உரைப்பது போல நாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அடுத்துப் பேசவந்தவர் மார்க்சிய லெனினியப் பார்வையில் இந்திய தேசியத்தையும் தமிழ்த்தேசியத்தையும் அணுகும் எழுத்தாளர் சூரியதீபன்.  இந்தியக் கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் தமிழ் உணர்வாளர்களின் மேற்படி தந்திரம், ஒரு காலாவதியாகிப்போன காமெடி என்பதையோ, சீன அபாயம் என்பதே அமெரிக்க இந்தியக் கூட்டணி தனது தெற்காசிய மேலாதிக்கத்தை நியாயப் படுத்துவதற்காக உருவாக்கியிருக்கும் புதிய கொள்கைப்பாடல் என்பதையோ சூரியதீபன் சுட்டிக்காட்டவில்லை. “மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளையெல்லாம் அனுமதிக்காத ராஜபக்சே இந்திய எம்.பிக்களை அனுமதிக்க காரணம், இவர்கள் இலங்கை அரசின் கூட்டாளிகள் என்பதுதான்’’ என்று ஊரறிந்த ஒரு உண்மையை உலகத்தமிழர்களுக்காக  இன்னொருமுறை கண்டுபிடித்து வெளியிட்டார். இலங்கை சென்றிருந்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு, எட்டு கோடி உலகத் தமிழர்களின் தலைவர் கலைஞர்தான் என்று அங்கே பேசியதைச் சாடி, உலகத்தமிழர்களின் தலைவன் பிரபாகரனே என்று பிரகடனம் செய்தார். பிறகு கருணாநிதி நடத்தவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ளவரும் சிவத்தம்பியையும், ஆள்பவர்களை அண்டிப்பிழைக்கும் தமிழறிஞர்களையும் சாடினார்.

அடுத்துப் பேசிய ஈழப்பத்திரிகையாளர் அய்யநாதன், தான் ஆண்டுக்கு 6 இலட்சம் ரூபாய் சம்பாதிக்கும் பத்திரிகையாளன் என்பதை போகிற போக்கில் சொல்லிவிட்டு, புலிகள் சரணடையக் காரணம் அவர்கள் போரிடும் ஆற்றலை இழந்தது அல்ல, மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துக்காகத்தான் என்று “தெளிவு’’படுத்தினார். எனினும் இன்று தலைவர் இல்லாததால் நாம் நிர்க்கதியாக நிற்கிறோம். “போராட்டத்தை தொடர்வதற்கு ஆயுதம் ஏந்தவேண்டுமென்று அவசியமில்லை. இனி, நெடுமாறன் வழிகாட்டுதலில் செயல்படுவதுதான் உலகத்தமிழர்களின் கடமை’’ என்றார். எம்.ஜி.ஆர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இன்று நிலைமையே வேறு என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

அடுத்துப் பேசவந்த அருட்தந்தை பாலு, “இனி மனித வரலாற்றை கி.மு, கி.பி என்று குறிப்பிடக்கூடாது. தமிழனுக்கு முன், தமிழனுக்குப் பின் என்றுதான் குறிப்பிட வேண்டும்’’ என்றார். கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவன் தமிழன் என்பதால் தமிழனுக்கு முன் என்ன வரலாறு இருந்திருக்கும் என்று நமக்குப் புரியவில்லை. தமிழனுக்குப் பின் என்று வேறு அவர் கூறிவிட்டதால், உலகத்தமிழினம் முழுவதும் ஒழித்துக் கட்டப்படும் நாளை எண்ணி அச்சம் மேலிட்டது.

“தமிழனுக்கு மட்டுமல்ல, எல்லா இனத்துக்கும் தலைவன் பிரபாகரன்தான். ஈழம் ஏற்கெனவே பிறந்து விட்டது. சற்று நோய்வாய்ப்பட்டுள்ளது. அவ்வளவுதான்’’ என்று அடுத்த அதிர்ச்சிப் பிரகடனத்தையும் வெளியிட்டார். பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றவேண்டும் என்றார். கடைசியாக சோனியாவைப் பழிவாங்கியே தீருவேன் என்று சூளுரைத்துவிட்டு, விவிலியத்தில் ஏரோதுக்கு நேர்ந்த கதிதான் சோனியாவுக்கு நேரும் என்று சாபமிட்டார்.

முள்வேலிக்குள் நெறிபடும் மனித உரிமைகள் என்ற இந்த அமர்வுக்கு பிரபல தன்னார்வத் தொண்டு நிறுவனத் தலைவர் ஹென்றி திபேன் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரைக் காணோம்.

தோள் கொடுப்போம், துணை நிற்போம் என்ற தலைப்பிலான அடுத்த அமர்வில் மும்பை, கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து 8 தமிழறிஞர்கள் பேசினர். புதிதாக ஒன்றும் விசயம் இல்லை. வெளிநாட்டு தமிழறிஞர்கள் பங்கு பெறும் அடுத்த அமர்வுக்கு டத்தோ சாமிவேல் வரவில்லை. மலேசியத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஒருவர் பேசினார்.

பிறகு உலகப் பெருந்தமிழர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் நெடுமாறன். உலகப்பெருந்தமிழர் என்ற விருதினைப் பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் நல்லகண்ணு, இந்திய அரசின் மீது மிகவும் மென்மையாகத் தனது விமரினத்தைத் தெரிவித்தார். பேராசிரியர் விருத்தாசலம், சங்க இலக்கியங்களிலிருந்து தமிழரின் மேன்மையை நினைவுபடுத்திப் பேசினார். விருது வழங்கி விழாப்பேருரையாற்றினார் நெடுமாறன். அவரது பேச்சு முழுவதும் சச்சிதானந்தனுக்கு பதிலாகவே அமைந்திருந்தது. 1983 முதல் ஈழத்தமிழர் போராட்டத்துக்காக தமிழகத்திலிருந்து செய்யப்பட்ட உதவிகளைப்பட்டியலிட்டார். எம்.ஜி.ஆர் செய்த உதவிகளை விவரித்தார். பாரதிய ஜனதா மதவாதக் கட்சியாக இருந்தபோதும், ஈழப்பிரச்சினையில் ஆதரவாக இருந்ததாகக் கூறினார். இறுதியாக ஈழப்போராட்டத்தை பிரபாகரன் தொடர்ந்து நடத்துவார். இப்போதே நடத்திக் கொண்டுதான் இருக்கிறார் என்று கூறி முடித்தார்.

மாலை பொது அரங்கிற்கு தலைமை தாங்கிய காசி ஆனந்தன், “பிரபாகரன் இருக்கிறார் என்று நெடுமாறன் கூறுகிறார். இல்லேன்னா சொல்வாரா? அதனால் தலைவர் இருக்கிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்’’ என்றார். “இன்று சந்தித்திருப்பது பின்னடைவு என்று கூறுவதே தவறு. விடுதலைப் போராட்டத்துக்குத் தோல்வியே கிடையாது, ஈழம் ஒன்றுதான் தீர்வு’’ என்றார்.

அடுத்துப் பேசியவர் இந்து தமிழர் இயக்கத்தின் தலைவர் வைத்தியலிங்கம். தஞ்சையைச் சேர்ந்த வழக்குரைஞரான இவர் ஏற்கெனவே இருந்த இடம் பாரதிய ஜனதா கட்சி. “எல்லா அனைத்திந்தியக் கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும், எல்லோரு வீட்டிலும் பிரபாகரன் படத்தை மாட்டுவதுடன், ஒரு உண்டியல் வைத்து காசு சேர்த்து அதனை நெடுமாறனிடம் கொடுக்கவேண்டும்’’ என்றார் வைத்தியலிங்கம்.

கடைசியாகப் பேசிய வைகோ, இறுதிப் போரின் கொடுமைகளை விவரித்தார். “போரில் படுகாயமுற்று இரண்டு கால்களையும் இழந்த சோழமன்னன் விஜயாலயச் சோழன், என்னைத் தூக்கிக் கொண்டு போய் போர்க்களத்தில் விடுங்கள் என்று கூறிய மண் இது. எனவே தலைவர் பிரபாகரன் இருக்கிறார். வழிநடத்துவார்’’ என்றார். பிறகு வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வரலாறு, அதற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் வாக்கெடுப்புகள் பற்றிக் கூறி தமிழகத்திலும் வாக்கெடுப்பு நடக்கும் என்றார். எதற்கு வாக்கெடுப்பு, தனி ஈழத்துக்கா, தனித் தமிழ்நாட்டுக்கா என்று கூறாமல் நைசாக அவர் நழுவிய போதிலும் கூட்டம் ஆரவாரித்தது. பிறகு 33 ஆண்டுகளுக்கு முன் ஈழத்துக்கு ஆதரவாக அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கதையை விலாவரியாக சொன்னார். ஈழத்தமிழர்க்கு நடந்த கொடுமைகளை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு சென்று ஆதரவு திரட்டவேண்டும் என்றும், பிரபாகரன் புதிய எழுச்சியுடன் வருவார் என்றும் பிரகடனம் செய்தார்.

தனி ஈழம்தான் தீர்வு, வட்டுக்கோட்டை தீர்மானம்தான் இறுதி. அதுதான் இலக்கு என்பதே இந்த மாநாட்டின் தீர்மானம்.


மாநாடு நடைபெற்ற இடம் நடராசனுக்கு (சசிகலா) சொந்தமான தஞ்சை தமிழரசி திருமண மண்டபம். கூட்டம் சுமார் 2000 பேர். மண்டபம் கொடுத்தது மட்டுமின்றி வந்திருந்தவர்களுக்கு சாப்பாடும் அங்கே போடப்பட்டது. வெளிநாட்டில் இருந்தபடியே விழாவிற்கான ஏற்பாடுகளை செய்த நடராசனுக்கு வெகுவாக நன்றி தெரிவித்தார் நெடுமாறன். பிரபாகரன் படங்கள், பனியன்கள் ஆகியவற்றுடன் தமிழ் தேசிய சீருடையும் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. சந்தன நிற சட்டை, அரக்கு நிற பார்டருடன் சரிகை போட்ட நீண்ட மேல்துண்டு – துண்டை பழைய தமிழ்ப்பட ஜமீன்தார் பாணியிலும், சுப்பிரமணியசாமி பாணியிலும் பலர் அணிந்திருந்தார்கள். பெண்களுக்கான தமிழ்த் தேசியச் சீருடை என்று எதையும் காணோம்.

கூட்டத்துக்கு வந்திருந்தவர்களில் பெரும்பான்மையினர் 80 களில் ஈழப்போராட்டம் துவங்கியபோது இளைஞர்களாக இருந்து தற்போது நடுத்தர வயதைத் தாண்டியவர்கள், முதியவர்கள். சுமார் 30 சதவீதம் பேர் இளைஞர்கள்.

பேச்சாளர்கள் அனைவரும் சிங்கள இராணுவத்தின் கொடுமைகள், இந்திய அரசின் சதி, கருணாநிதியின் துரோகம் ஆகியவற்றையும் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டையும் தாக்கிப் பேசினர். பிரபாகரன் என்ற சொல்லைக் கேட்டவுடன் மகிழ்ச்சிக் கூச்சல், அவர் உயிருடன் இருக்கிறார் என்று கூறியவுடன் ஆர்ப்பரிப்பு, கருணாநிதியைத் திட்டினால் கைதட்டல்.

இந்த மூன்றும்தான் கூட்டத்தைக் கவரும் பாயிண்டுகள் என்று பேச்சாளர்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. எனவே இதே விசயங்களை ஒருவரை ஒருவர் விஞ்சும் விதத்தில் பில்டப் கொடுத்துப் பேசத்தொடங்கினார்கள் பேச்சாளர்கள். இதன் விளைவாக அடுத்தடுத்தப் பேச வந்த பேச்சாளர்கள் முந்தைய பேச்சாளர்களின் ரிக்கார்டை முறியடிக்க முடியாமல் மூச்சு வாங்கினார்கள்.

“தலைவர் இருக்கிறார், இது பின்னடைவே அல்ல, தலைவரின் தந்திரம்,  4000 புலிகள் தயாராக இருக்கிறார்கள், முன்னிலும் வேகமாகத் தாக்குதல் தொடுப்பார்கள்.. ” என்று பலவிதமாகப் பேசி, பார்வையாளர்களின்

நரம்புகளை முறுக்கேற்றி, இதற்கு மேல் முறுக்கினால் அறுந்துவிடும் என்ற நிலையில் கடைசி பேச்சாளராக வழக்கம்போல வைகோ இறக்கப்பட்டார். வைகோவைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பல்சார் பைக்கைப் போல ஸ்டார்ட் செய்து சில நொடிகளில் டாப் கியருக்குப் போய்விடுகிறார். அப்புறம் அவ்ளோதான்.

வைகோ பேச்சைக் கேட்கும்போது தஞ்சை ரெட்டிப் பாளையம் தப்பாட்டக்குழுதான் நினைவுக்கு வருகிறது. அந்தக் குழுவிரின் முறுக்கேறிய அடியும் ஆட்டமும், தூங்குகிறவனைக் கூட கிளப்பி முறுக்கேற்றி விண்ணென்று நிறுத்திவிடும். அந்தத் தாளம் எந்தக் கருத்தையும் கூறுவதில்லை. வைகோ வின் பேச்சைப் போலவே அதுவும் வெறும் ஓசைதான். என்றாலும் இன்னதென்று தெரியாத ஒரு முறுக்கேறிய நிலையை மட்டும் அந்தத் தாளமும் ஆட்டமும் கேட்பவர்களின் உடலில் உருவாக்கிவிடும். ஆட்டம் முடிந்த பின் ஆடியவர்கள் மட்டுமல்ல, கேட்டவர்களும் அறுந்து போன ஸ்பிரிங் கம்பியைப் போல துவண்டு விடுவார்கள்.

வைகோவின் பேச்சும் அப்படித்தான். அவரை எப்போதுமே கடைசிப் பேச்சாளராகப் போடுவதன் நோக்கம், பார்வையாளர்களின் முறுக்கை மேலும் ஏற்றுவதா, அல்லது ஏறிய முறுக்கை இறக்குவதா என்ற புதிருக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

கடைசியாக வைகோ தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தந்திருக்கும் வேலைத்திட்டம் இதுதான்.  இறுதிப்போர் துயரத்தின் புகைப்படங்களை வீடுவீடாகத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். வாக்கு கேட்கவேண்டும். இதே காரியத்தைத்தான் மே மாதம் செய்து, முடிவும் தெரிந்து விட்டது. மக்கள் கிடக்கட்டும், போட்டோக்களை போயஸ் தோட்டத்துக்கு எடுத்துச்சென்று காட்டி அம்மாவைப் பேசச்சொல்வாரா வைகோ? அதற்குப் பதில் இல்லை. அத்வானியை வைத்து அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினாரே, இன்று அத்வானி ஏன் பேசமறுக்கிறார்? அதற்கும் பதில் இல்லை. கூடியிருந்த கூட்டத்திடம் இப்படிப்பட்ட கேள்விகளும் இல்லை.

மாநாட்டில் இன்னொரு விசயம் பளிச்சென்று தெரிந்தது. “எல்லாப்பயலும் திருடனுங்க. ஐயா நெடுமாறன்தான் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்’’ என்று பலர் பேசினார்கள். எளிமையானவர், நேர்மையானவர் என்று ஹமாம் சோப்பு விளம்பரம் போல நெடுமாறன் உயர்த்தப் பட்டார். வீரம், தியாகம் என்பனவற்றை முன்னிறுத்தி புலிகளை உயர்த்திப் பிடித்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. எளிமையான, நேர்மையான தலைவரான நெடுமாறனின் கொள்கை முடிவுகள் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியவுடனே ஈழ ஆதரவு அவதாரம் எடுத்தவர் சசிகலாவின் கணவர் நடராசன். இந்த அரசியல் தரகனை தமிழ்நாட்டு சுப்பிரமணியசாமி என்றும் கூறலாம். ஜெயலலிதாவால் தூர நிறுத்தப்பட்டாலும், அம்மாவின் வெற்றிக்காக அயராது உழைத்து அதன் மூலம் அதிகாரத் தாழ்வாரங்களில் தனது செல்வாக்கைப் பேணிக்கொள்ளும் இந்த நபரை ஒரு பெருநோயாளியைப் போல அரசியல் உலகமே ஒதுக்கி வைத்திருக்கிறது. ஈழத்தமிழரின் விடுதலை இப்படிப்பட்ட ஒரு நபரால் ஸ்பான்சர் செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியையும் யாரும் எழுப்பவில்லை.

இத்துத்துவக் கொள்கைகளை அமல்படுத்துவதில் பார்ப்பனக் கும்பலைக் காட்டிலும் தீவிரமான சூத்திர ஆழ்வார் நான்தான் என்று நிரூபிப்பதற்காகவே கட்சி தொடங்கியிருப்பவர் அர்ஜுன் சம்பத். ஈழப்பிரச்சினை தமிழர் பிரச்சினையே அல்ல, இந்துப் பிரச்சினை என்று பேசிவரும் இப்பேர்ப்பட்ட ஒரு நபரை அழைத்து வந்து மேடையேற்றுகிறார் நெடுமாறன் என்றால் அது அறியாமை அல்ல. இத்தகைய நபரை மேடையேற்றுவதன் மூலம் முஸ்லிம் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் வெறுப்பு கொள்வார்கள் என்பதும் நெடுமாறன் அறியாதது அல்ல. நெடுமாறனின் தமிழ்ப் போர்வை போர்த்திய ஆர்.எஸ்.எஸ் கொள்கை அப்பட்டமாக அரங்கேறுவதைத்தான் இது காட்டியது.

யோசித்துப் பாருங்கள்! ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தை ஆதரிக்கிறோம். ஆனால் புலிகளை விமரிசிக்கிறோம் என்று கூறும் யாராவது இந்த மேடையில் ஏறியிருக்க முடியுமா? ஆனால் ஈழப்பிரச்சினை இனப்பிரச்சினையே அல்ல இந்து பிரச்சினை என்று பேசும் அர்ஜுன் சம்பத் ஏற முடிகிறது. இந்த அருவெறுக்கத்தக்க நபருடன் மேடையைப் பகிர்ந்து கொள்வதில் மணியரசனுக்கோ, இராசேந்திர சோழனுக்கோ, சூரியதீபனுக்கோ எவ்விதப் பிரச்சினையும் இல்லை போலும்! இப்பேர்ப்பட்ட ஐயாவின் கையினால் விருது வாங்குவதில் தோழர் நல்லகண்ணுவுக்கும் எவ்விதக் கூச்சமும் இல்லை. மாநாட்டில் பேசிய சிலர், மூன்றாவது அணியொன்றை ஐயா நெடுமாறன் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். எதற்கு மூன்றாவது அணி?  ஐயா பாரதிய ஜனதா, ஜெயலலிதாவுடனான இரண்டாவது அணியின் தூணாக நின்று கொண்டிருப்பது இன்னும் அவர்களுக்குப் புரியவில்லை போலும்!

இறுதியாக, இம்மாநாட்டை ஒட்டி, தமிழகத்தில் உள்ள புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களிடமும், புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடமும் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம்.

30 ஆண்டு காலப் போராட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பாரிய பின்னடைவு, கொடூரமானதொரு இனப்படுகொலையை நடத்தி முடித்து விட்டு குற்றவாளிகள் கடுகளவும் அச்சமின்றி நடமாடும் சூழல், தமிழக மக்கள் மத்தியில் வடிந்து விட்ட ஈழப்பிரச்சினை குறித்த அக்கறை, இலங்கையில் இந்திய மேலாதிக்கத்தின் புதிய காய்நகர்த்தல்கள், கடந்த தேர்தலுக்கு முன் ஈழத்துக்காகக் குரல் கொடுத்த தமிழகத்துக் கட்சிகள் இப்போது சாதித்து வரும் மர்மமான மவுனம்… என பேசுவதற்கும் பரிசீலிப்பதற்கும் பல விடயங்கள் உள்ளன. இவையெதுவும் இந்த மாநாட்டில் பேசப்படவே இல்லை என்பதைக் கவனித்தீர்களா?

இது தோல்வியே அல்ல என்று பேசுகிறார்கள் சிலர், தோல்விதான் என்று அரைமனதுடன் ஒப்புக் கொள்கிறார்கள் சிலர். இது குறித்த மாநாட்டின் முடிவு என்ன? ஐரோப்பா முழுவதும் நாள் கணக்கில் தெருவில் நின்று கதறியபோதும் முள்ளிவாய்க்கால் படுகொலையை நிறுத்த முடியவில்லையே, இலங்கையின் மீது ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற முடியவில்லையே, அவலமான இந்த உண்மை நிலையைக் கூட அங்கீகரிக்காமல் சவடால் அடிப்பவர்களை ஈழ மக்களின் நண்பர்கள் என்றா கருதுகிறீர்கள்?

பிரபாகரன் இருக்கிறார் என்று உறுதிபடப் பிரகடனம் செய்கிறார்கள் பலர். இதே தஞ்சையில் இதற்கு முன் நடைபெற்ற கூட்டமொன்றில் கீழ்க்கண்டவாறு பேசினார் நெடுமாறன். “பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொல்கிறீர்களே, என்ன ஆதாரம் என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள். என் ஆழ்மனது சொல்கிறது. அவர் இருக்கிறார். இதுதான் என்னுடைய பதில்’’ என்றார் நெடுமாறன். “ஐயா சொல்வதால் நானும் நம்புகிறேன்’’ என்கிறார் காசி ஆனந்தன்.

பிரபாகரன் இருக்கிறார் என்பதே உண்மையாக இருக்கட்டும். இந்த உண்மையை மட்டுமே திரும்பத் திரும்ப அடித்துப் பேசி, அதற்குக் கைதட்டி ஆர்ப்பரித்து மகிழ்ந்து கொள்வதன் பொருள் என்ன? அதன் மூலம் சம்மந்தப் பட்டவர்கள் பெறுகின்ற நம்பிக்கை எந்த விதத்தில் அவர்களுடைய செயலுக்கு வழிகாட்டப் போகிறது?

தந்தையை இழந்து நிர்க்கதியாய் விடப்பட்ட குடும்பத்தில், அதுவரை உலகம் அறியாத பெண்ணாக வீட்டுக்குள் அடைபட்டிருந்த மனைவியோ அல்லது பருவம் வராத சிறுவனோ கூட, எதார்த்தத்தைத் துணிவுடன் எதிர்கொண்டு, குடும்ப பாரத்தைச் சுமப்பதையும் கரைசேர்ப்பதையும் அன்றாட வாழ்க்கையில் நாம் காணத்தான் செய்கிறோம். இருக்கிறார், வருவார் என்பதை மட்டுமே நற்செய்திகளாக வழங்கியிருக்கிறது இந்த மாநாடு. இதனை ஜெபக்கூட்டம் என்று அழைப்பதா அல்லது மாநாடு என்று அழைப்பதா?

புலிகள் நூற்றுக்கு நூற்றுப்பத்து வீதம் சரியானவர்களாகவே இருக்கட்டும், இன்று புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிகள் யார், இன்றைய சூழலில் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விகளுக்கு முரண்பட்ட பதில்கள் வருகின்றனவே, இதற்கு எப்படித் தீர்வு காண்பது? எது சரியான தீர்வு என்பதை எப்படிக் கண்டடைவது?

இந்த மாநாட்டு மேடையில் இந்தியாதான் குற்றவாளி என்கிறார்கள் பலர்; இந்திய அரசுக்குப்புரியவைத்து வென்றெடுக்க வேண்டும் என்று சிலர்.  தனித்தமிழ்நாடுதான் தீர்வு என்கிறார்கள் சிலர்; காங்கிரசையும் திமுகவையும் முறியடிப்பதுதான் தீர்வு என்று சிலர். பின்னடைவுதான் என்று சிலர், பின்னடைவு என்று சொல்வதே குற்றம் என்று சிலர். பிரபாகரன் இருக்கிறார் என்று பலர், இல்லை என்று சிலர். இது இந்து பவுத்த பிரச்சினை என்று சிலர், ஆரியர் தமிழர் பிரச்சினை என்று சிலர். எல்லாம் முடிந்தபின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அமல் படுத்துவோம் என்பது மாநாடு போட்ட தீர்மானம். ஐயா சொல்படி நடப்போம் என்பது மாநாடு போடாத தீர்மானம்.

எதைப்பற்றியும் பரிசீலிக்காமல் முரண்பட்ட கருத்துகளை விவாதத்துக்கும் உட்படுத்தாமல், ஐயா சொல்படி நடப்போம் என்று முடிவு எடுக்கும் மாநாட்டுக்கும், அம்மா சொல்படி நடப்போம் என்று முடிவு எடுக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கும் என்ன வேறுபாடு?

சேர்ந்திருப்பதா பிரிந்து போவதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஈழத்தமிழ் மக்களுடையதுதான் என்பதில் ஐயமில்லை. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று இவர்கள் தஞ்சையிலிருந்து பிரகடனம் செய்கிறார்கள். ஐரோப்பாவெங்கும் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் வாக்களித்திருக்கிறார் என்கிறார் வைகோ. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றி வட்டுக்கோட்டையில் (இலங்கை மண்ணில்) வாழும் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்? கேட்கத் தேவையில்லையா? வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பின்னர் பிறந்த தமிழர்களிடம் அது பற்றிக் கேட்கத் தேவையில்லையா? அன்று முதல் இன்று வரை நடைபெற்ற போராட்டத்தின் சரி பிழைகளை ஆராயத் தேவையில்லையா? புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு, பிரபாகரன்தான் ஒரே தலைவர் என்று நீங்கள் நம்பிக்கையுடன் முழங்கிய காலம் ஒன்று இருந்தது. தஞ்சை மாநாட்டில் கூடியிருந்தோரிடம் அத்தகைய நம்பிக்கையைக் காணமுடியவில்லை. மாறாக தம் நம்பிக்கையை மறு உறுதி செய்து கொள்வதற்காகவும், தலையெடுக்கும் சந்தேகங்களைத் தம் சொந்த மனதில் ஆழப்புதைத்து மூடுவதற்காகவும், ஒத்த உணர்வுள்ளவர்கள் ஏற்பாடு செய்து கொண்ட சந்திப்பாகவே இது இருந்தது. தோற்றத்தில் வீரம் காட்டினாலும், இது பரிதாபத்துக்குரிய ஒரு அவலம்.

உளனோ அன்றி இலனோ என்று தனது ஐயத்தைப் பாடலில் பதிவு செய்ய மாணிக்க வாசகருக்கு இருந்த தைரியம் கூட அங்கே யாருக்கும் இல்லை. “ஐயர் சொல்வதனால் கடவுள் இருக்கிறார்’’ என்று நம்பி வளர்ந்த சமூகம், “”ஐயா சொல்வதனால் பிரபாகரன் இருக்கிறார்’’ என்று நம்புகிறது. பெரியார் பிறந்த மண்ணுக்கு இது ஒரு பேரவலம்தான்.

ஆனால் கடவுள் இருக்கிறார் என்று நம்பும் தீவிர பக்தனும் கூட தனது அடுத்த வேளைச் சோற்றுக்கு கடவுள் வழி சொல்வார் என்று காத்திருப்பதில்லை. தன் சொந்த முயற்சியையும் உழைப்பையுமே அவன் நம்புகிறான். இறை நம்பிக்கையை இழந்து விடவில்லையென்றாலும்,  தன் சொந்தத் தவறுகளைப் பரிசீலிக்கவும் செய்கிறான். அதன் ஊடாக, தன் சொந்த எதிர்காலத்தைத் தானே உருவாக்கிக் கொள்ளும் ஆற்றலையும் பெறுகிறான். பின்னொரு நாளில், அவன் இறை நம்பிக்கையைத் துறந்து விட்டான் என்ற உண்மையை நாம் அவனுக்கு நினைவூட்ட வேண்டியதாகி விடுகிறது. “அப்படியா, மறந்து விட்டேன்’’ என்பது அவனது பதிலாக இருக்கிறது.

நாம் பிரபாகரனை மறக்கச் சொல்லவில்லை. இந்தப் போராட்டத்தின் சரி பிழைகளை நினைக்கச் சொல்கிறோம். அவ்வளவே.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தளபதிகள் தவறு செய்வதில்லை!

54

தளபதிகள் தவறு செய்வதில்லை!

vote-012அவர்கள் தவறுகளே செய்வதில்லை, அது
அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை.
அவர்கள் செய்கிற எதிலும்
சரியான அனைத்தும் அவர்களுடையதாகவும்
தவறான அனைத்தும் மற்றவர்களுடையதாகவும்
உரிமைப் படுத்தப் படுகின்றன.
அதைவிடவும், மற்றவர்கள் செய்கிறவற்றிலும்
சரியானவற்றின் வழிகாட்டலுக்கான உரிமையும்
அவர்களையே சாருகிறது.

தவறானவற்றைப் பகிர பலருங் காத்திருக்கின்றனர்.
எனவே, அவர்கட்கு
எல்லோரையுந் திருத்திக் கொண்டிருக்க முடிகிறது.
என்ற போதும்,
அதே தவறுகள், நாள் தவறாமல்
திரும்ப திரும்ப நிகழ்கின்றன.
ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு தவறும்
அவர்கட்கன்றி மற்றவர்கட்கே உரித்தாகுகின்றன.
அவர்கள் தவறுகளே செய்வதில்லை, ஏனெனில்
அவர்கள் தளபதிகள்.

தளபதிகள் தவறுகள் செய்ய அனுமதிக்கப் படுவதில்லை.
ஒரு தளபதி ஒரு தவறு மட்டுமே செய்ததாகத்
தெரியவரும்போது
எல்லாத் தவறுகளும் அதே தளபதிக்கு உரித்தாகும்
என்பதால், எவருமறியத்
தளபதிகள் தவறு செய்வதில்லை. தவறுகளை ஏற்பதுமில்லை.
நம் தமிழ் இணையத்- தள-பதிகளுந்தான்.

–   சி.சிவசேகரம்.

vote-012

“இனியொரு” தோழர் சபா.நாவலனுடன் ஒரு நேர்காணல்!

35

vote-012“இனியொரு” தளத்தை நடத்தும் குழுவைச் சேர்ந்த தோழர் சபா.நாவலன் ஈழத்தை சேர்ந்தவர், தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார். ஜூலை, 2009 சமயத்தில் சென்னை வந்திருந்த போது அவரிடம் இந்த நேர்காணல் எடுக்கப்பட்டது. வினவிற்காக இந்த நேர்காணலை எடுத்தவர் தோழர் இராவணன். தனது சென்னைப் பயணத்தின் நினைவுகளினூடாக தனது நேர்காணலைத் துவங்கினார் தோழர் சபா. நாவலன்.

”நான் சென்னைக்கு பலமுறை வந்திருக்கிறேன். எண்பதுகளில் அரசியல் காரணங்களுக்காக எல்லா விடுதலை இயக்கங்களும் தமிழகத்தை தங்கு தளமாக பயன்படுத்திய காலத்தில் டெலோவில் இயங்கிய நானும் அரசியல் நடவடிக்கைகளுக்காக சென்னைக்கு வந்திருக்கிறேன். நான் எண்பதுகளில் பார்த்த சென்னைக்கும் இன்றைக்கு பார்க்கும் சென்னைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கிறது. இந்தியாவின் நிலபுரபுத்துவ தன்மைகள் குறைந்து மூலதனங்கள் நகரங்களை நோக்கி குவிக்கப்பட்டதன் அடையாளமாக சென்னை உருமாறியிருக்கிறது. சென்னையில் இன்றைய உருமாற்றத்தை வளர்ச்சியாக காண முடியுமா? என்று தெரியவில்லை. ஏனென்றால் ஐய்ரோப்பாவின் மூலதனக் குவியலும் முதலாளித்துவத்தின் உருவாக்கத்தோடும் இதை ஒப்பிட முடியாது. உலகமயமாக்கலின் ஒரு விளைவை இங்கு காண முடிகிறது. மேல் மத்திய தரவர்க்கம்  செல்வாக்குச் செலுத்தும் சென்னையில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. சென்னையில் அழகிற்காக இங்கிருக்கும் பூர்வகுடி உழைக்கும் மக்களை அன்றாடம் அள்ளி எடுத்து வெளியில் வீசிக் கொண்டிருப்பதும் தெரிகிறது. இந்த  முரண்களூடாக இடது சாரிகள் தேசிய மூலதனத்தைப் அன்னிய மூலதனத்திற்கு எதிராக நிறுத்தும் செயற்பாட்டையும்  முன்னெடுக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

வினவுநாவலன் என்பதன் அடையாளம் என்ன?

நாவலன்: 7 ஆம் வகுப்புவரை நான் மலையகத்தில் படித்துக்கொண்டிருந்தேன், ஆறாம் வகுப்பில் எனது வகுப்பாசிரியராக இருந்தவர் திரு.பி.ஏ.காதர் அவர்கள். அவர் சண்முகதாசனின் மாவோயிசக் கட்சியின் ஆதரவு உறுப்பினராக இருந்தார். அவர்தான் எங்களுக்கு மார்க்சியம் சொல்லித்தந்தார். ஏழாவது வகுப்பின் இறுதியில் எங்கள் வகுப்பில் யாருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்திருக்கவில்லை. அப்போது காதரின் வழிநடத்தலில் “நாளை நமதே” என்ற கையெழுத்துச் சஞ்சிகையை நடாத்தினோம். இப்போது காதரும்  பிரித்தானியாவில் தான் வாழ்கிறார். 7ம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் போது எனது பிறந்த நாள் பரிசை வாங்குவதற்காக அப்பா 10 ரூபா பணம் கொடுத்தார். அதை வைத்து நான் மாவோவின் படத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றதும் என்னை மலையகத்திலிருந்து  யாழ்ப்பாணத்திற்கு இடம்மாற்றிவிட்டார்கள்.  அப்போது எனது உறவினர்கள் வீட்டிலும், கல்லூரி விடுதியிலும் தங்கிக் கல்வி கற்றேன்.

யாழ்பாணத்தில் 8 வது வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது விடுதலை இயக்கங்களின் தலை மறைவுச் செயற்பாடுகள் ஆரம்ப நிலையில் இருந்தன. பின்னாளில் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து கொலைசெய்யப்பட்ட அற்புதராசா (ரமேஷ்) என்னுடைய பள்ளி நண்பன். அவருடைய பெற்றோர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள். இவர் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் நான் காதரிடம் கற்ற சோசலிசம் குறித்துப் பேச அவர்கள் தமிழீழம் குறித்துப் பேசுவார்கள்.

இவர்களூடாக மேலும் என்னைப் போல சில சிறுவர்களதும் உயர்தர வகுப்பு இளைஞர்களதும் தொடர்பு கிடைக்கவே நாங்கள் பள்ளிக்கூட மதிலேறிக் குதித்து கூட்டம் நடத்துவோம், விவாதிப்போம். சில நாட்களில் எனது சோசலிசமும் அவர்களது தமிழீழமும் இணைந்து சோசலிசத் தமிழீழம் என்ற முடிபில் இனிமேல் போராடுவதாகத் தீர்மானித்தோம்.

இதை நானும் இன்னும் சிலரும் சேர்ந்து போய் ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தில் ஆசிரியரிடம் தெரிவித்தோம்.அப்போது ஈழ நாடு பேப்பரின் சோசலிசத் தமிழீழத்திற்காக சிறுவர்கள் கூட்டம் போட்டுள்ளனர். என்று முதல் பக்கத்திலேயே செய்தி வெளியாகியிருந்தது.

அது எங்கள் பள்ளியில் பிரச்சனையாகி எங்கள் பிரின்சிபால் என்னை ரத்தம் வருகிறபடி அடித்து விட்டார். எண்பதுகளில் போலீஸ், இராணுவ அடக்குமுறைகளை மீறி விடுதலை இயக்கங்களில் இணைவதென்பது ஒரு சமூக அங்கீகாராமாக இருந்தது.

ஈழப் போராட்டத்தைத் பாய்ச்சல் நிலையான வளர்ச்சிக்கு இட்டுச் சென்றது இந்திய உளவு நிறுவனமான “ரா”. திட்டமிட்டுப் போராட்டத்தை அழிப்பதற்கான அத்திவாரததை இந்திய அரசுதான் மேற்கொண்டது.

இந்தியாவிடம் பயிர்ச்சிக்குச் செல்வது பற்றிய ஒரு விதமான மயக்கமான எண்ணங்கள் எல்லா இளைஞர்களுக்குமே இருந்தது.

அந்த வேளையில் மனோ மாஸ்டர் என்பவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவர் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு பிரபாகரனும் இன்னும் சிலரும் குட்டிமணி மற்றும் தங்கத்துரை தலைமையிலான குழுவில் இணைந்து கொண்ட காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தைத் தலைமை தாங்கியவர் மனோமாஸ்டர். தமிழ் புதிய புலிகள் என்று இருந்த பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று மாற்றியவரும் இவர்தான். மார்க்சிய சிந்தனைகளில் தேடல் ஆர்வம் கொண்ட மனோ மாஸ்டர், பின்னதாக கம்யூனிச இயக்கத்தின் தலைமையிலேயே தேசிய விடுதலைப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற கோட்பட்டின் அடிப்படையில் புலிகள் இயக்கத்தைக் கலைத்துவிட்டு, வேறு சிலரோடும் சேர்ந்து தத்துவார்த்த ஆய்வுகளில் ஈடுபட்டதோடு மக்களோடு மக்களாகக் கிராமங்களில் வாழ்ந்தார். 1983 வரை இவ்வாறான சிந்தனையைக் கொண்டிருந்த மனோமாஸ்டரை 83 ஜூலைக் கலவரங்களின் பின்னர் நான் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

அந்த வேளையில் அவர் ரெலோ இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளராக இணைந்திருந்தார்.இந்திய அரசு வழங்கிய இராணுவப் பயிற்சிகாக ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் திரட்ட்ப் பட்டுக்கொண்டிருந்தனர்.

எனது மார்க்சிய ஈடுபாடு குறித்து அறிந்துகொண்ட மனோ மாஸ்டர், புதிய கருத்து ஒன்றை என்னிடம் சொன்னார். இந்தியா பயிற்சிவழங்கும் இளைஞர்கள் இலங்கைக்கு வந்து தமக்குள் மோதிக்கொள்ளப் போகிறார்கள். மக்கள் நலனுக்கு எதிராகச் செயற்படப்போகிறார்கள். இந்தியா தமிழீழத்தை எந்தக் காரணம் கொண்டும் பெற்றுக்கொடுக்கப் போவதில்லை. இறுதியில் போராட்டமும் பெரும் தொகைப் போராளிகளும் மக்களும் அழிவதிலேயே இந்த புதிய நகர்வுகள் முடிவடையப் போகின்றன என்றார். இந்த நிலையில் நாம் இவ்வியக்கங்களைச் சுற்றி பலமான மக்கள் திரளமைப்புக்களை கட்டியமைப்பதன்  ஊடாக அழிவுகளை மட்டுப்ப்படுத்த முடியும் என்ற கருத்தை முன்வைத்தார். இவ்வாறான ஒரு கருத்தியல் தளத்தில் இந்தியாவிற்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க முடியும் என்றும், இந்த வகையில் ரெலோ இயக்கத்தின் பலவீனமான தலைமையின் கவனத்திற்கு உட்படாமல் அவ்வியக்கத்தின் பலத்துடனேயே மக்கள் வேலைகளை முன்னெடுக்கலாம் என்றும் கூறினார்.

84 ஆரம்பத்தில் மனோமாஸ்டரின் அடுத்த கட்ட வேலைத்திட்டமாக ரெலோ இயக்கத்தின் மத்திய குழுவை  முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை திரட்ட அமைப்பதாகத் திட்டமிட்டார். அதற்கான உட்கட்சிப் போராட்டம் இந்தியாவில் ஆரம்பித்திருந்தது. இதனை ஆரம்பத்திலிருந்தே ரேலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் மறுத்திருந்தார். மத்திய குழு அமைத்து ரெலோ இயக்கத்தை ஜனநாயக மயப்படுத்துவதை இந்தியா விரும்பவில்லை என்பதே அவர் முன்வைத்த காரணமாகும். 84 இல் ரெலோ இயக்கத்தை கருணாநிதி ஊடாகவும் புலிகளை எம்.ஜீ.ஆர் ஊடாகவும் இந்திய உளவுப்படை கையாண்டது. மத்திய குழு அமைப்பதை கருணாநிதியும் நிராகரித்து விட்டதாக சிறீ சபாரத்தினம் கூறியிருந்தார். ஆனால் உட்கட்சிப் போராட்டம் தொடர்ந்தது. அவ்வேளையில் சுதன், ரமேஷ் என்ற இரு முக்கிய தலைவர்கள் சிறீ சபாரத்தினத்தால் கைது செய்யப்பட்டு சிறைவக்கப்பட, மனோமாஸ்டர் இந்தியாவிற்க்ச் செல்ல அவரைத் தொடர்ந்து நானும் இன்னும் 8 முக்கிய தள உறுப்பினர்களும் இந்தியா சென்றோம். அப்போது எனக்கு 19 வயது கூட நிரம்பவில்லை.

84 இல் கைது செய்யப்பட்ட சுதன் ரமேசை விடுதலை செய்யக் கோரி மரீனா பீச்சில் காந்தி சிலைக்குக் கீழ் காலவரையறையின்றி  உண்ணாவிரத்மிருந்தோம்.

இதே வேளை நாமெல்லாம் இயக்கத்திலிருந்து பிரிந்து இலங்கை சென்ற வேளை மனோமாஸ்டரைப் புலிகள் இயக்கம் சுட்டுக் கொலைசெய்துவிட்டது. ஆளுமை மிக்க தலைவராகவும் சமூக உணர்வுள்ள புரட்சிக்காரனாகவும், பிரபாகரன் நன்கு அறிந்த அவர் நண்பனாககவும் இருந்ததால் இக்கொலை நிகழ்ந்திருக்க வேண்டும். ஈழப் போராட்டத்தில் மார்க்சிய சிந்தனைகளைப் பிரயோகித்த மிகச்சிலருள் ஒருவரான மனோமாஸ்டரின் இழப்பு மிகப் பெரிய பின்னடைவு.

வினவுஇடது சாரி அமைப்புகளின் தலைமை பின்பற்றும் மத்தியக் குழு மாதிரியான அமைப்புக்கு இந்தியா ஏன் சம்மதிக்கவில்லை?

நாவலன் – ஒரு தேசீய இனவிடுதலை இயக்கத்தில் பல் வேறு சக்திகள் இருக்கின்றன. ஒவ்வொரு வர்க்கத்தட்டும் அவரவர் நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ளத் தலைப்படும். இந்தியாவுக்கோ தங்களின் சொல்படிக் கேட்டு நடக்கும் அடியாட் படைகளே ஈழத்தில் போராளிகளாக தோற்றம் பெற வேண்டும்.மற்றபடி அடிமட்டத்திலிருந்து அமைப்புக் கட்டி இடதுசாரி அமைப்புகளுக்கே உள்ள தத்துவார்த்தத் தளத்தில் எந்த அமைப்பும் உருவாகி விடக் கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருந்தது. இலங்கையில் பின்காலனியப் பகுதியின் நடைபெற்ற பல போராட்டங்கள் தீர்க்கமான சோசலிசப் புரட்சியை நோக்கிய வளர்ச்சியைக் கொண்டிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் புரட்சிகரக் கட்சிக்கான அமைப்புமுறைகளையும் வேலைத் திட்டங்களையும் ஆரம்பத்திலிருந்தே கொண்டிருந்தன.

வினவுஎல்லா போராளி அமைப்புகளுமே இப்படித்தான் இந்தியாவை நம்பி இருந்ததா? ஈழ விடுதலை என்னும் அரசியல் கேரிக்கையில் எந்த போராளிக் குழுக்களுக்குமே புரிதல் இல்லையா? அப்புறம் சீறி சபாரத்தினம் அவருடைய கொள்கை என்ன? அவர் எப்படி எல்லோருக்கும் தலைவர் ஆனார்?

நாவலன் – அவருக்கு அரசியல் ரீதியாகவோ கோட்பாட்டு ரீதியாகவோ எதுவிதமான அறிவோ படிப்பினைகளோ இல்லாமல் இருந்தது. இந்தியா எல்லாமே இந்தியா இந்தியா எங்களுக்கு எல்லாவற்றையும் பெற்றுக் கொடுக்கும் என்னும் எண்ணத்துடனேதான் அவர் இருந்தார்.   மற்றபடி  ஆயுதப் போராட்டத்தின் துவக்கத்திற்கு வல்வெட்டித்துறை ஒரு மிக முக்கியமான பங்கு வகித்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் வல்வெட்டித் துறைக்கும் ஒரு “தொப்புள்கொடி” உறவு இருந்தது. கூட்டணியின் பிரதான பண வழங்கல் வல்வெட்டித் துறையின் கடத்தல் தொழிலூடாகவே திரட்டப்பட்டது. இது தான் பிரபாகரனின் சொந்த இடமும் கூட.

இவர்களுக்கு இந்தியாவின் தென் பகுதி கடலோர நகரங்களோடு பெரும் கடத்தல் வணிகத் தொடர்பு இருந்தது. அந்தவகையில் பண மூலதனம் வட பகுதியில் முதன் முதலாக உருவான இடமும் வல்வெட்டித்துறைதான். ஒரு கட்டத்தில் சிங்களக் கட்சிகளின் தேர்தல் செலவுக்கும் தமிழ் தலைவர்களின் தேர்தல் செலவுகளுக்கும் நிதி ஆதாரமாக இருந்ததும் இந்தக் கடத்தல் காரர்கள்தான். வரலாற்று ரீதியாக இந்தக் கடத்தல்காரர்கள் போராளி இயக்கங்கள் மீது செலுத்திய செல்வாக்கும் எமது போராட்டம் சீரழிய ஒரு காரணமாக அமைந்தது.

எழுபதுகளில் ஜெகன், குட்டிமணி, தங்கதுறை போன்றவர்கள் கடத்தல் தொழிலில் செல்வாக்குச் செலுத்தியவர்கள். கடத்தல் தொழில் வரும் பெருமளவான நிதியை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு நிதியாக இவர்கள் வழங்கி வந்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியோ இதற்குப் பதிலாக சட்டரீதியான பாதுகாப்பையும் அதிகார பீடங்களோடு தங்களுக்கு இருந்த உறவைப் பயன்படுத்தியும் இவர்களுக்கு உதவி வந்தார்கள். இது ஒரு பரஸ்பர பரிவர்த்தனை மாதிரி அந்தக் காலத்தில் நடந்து வந்தது.

அப்படி குட்டிமணி, தங்கதுறை குழுவின் கள்ளக் கடத்தலில் இணைந்த 16 வயது சிறுவன்தான் பிரபாகரன். சிங்களர்களுக்கு எதிரான பிரபாகரனின் எதிர்ப்பரசியலின் துவக்கம் என்பது இதுதான். அவர் குறி பார்த்துச் சுடுவதில் திறமை பெற்றவர்.தமிழரசுக் கட்சி தங்களின் அரசியல் எதிரிகளைக் கொல்வதற்கும் இவர்க்ளை பயன்படுத்திக் கொண்டார்கள். யாழ்பாண மேயர் துரையப்பா கொல்லப்பட்டது கூட  தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் படுகொலைதான்.

அப்போது எழுபதுகளில் சிறிமாவோ பண்டாரநாயகே பதவிக்கு வந்த போது அந்நிய உற்பத்திகள் தடை செய்யப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் என். எம்.பெரேரா.

அதே சமையம் யாழ்பாண உள்ளூர் உற்பத்தி அளவு அதிகரிக்கவும் செய்கிறது. அரிசி உற்பத்தில் யாழ்பாணம் பெரும் பாய்ச்சலைச் சந்தித்த காலமாகவும் அது இருந்தது. பல யாழ்பாண விவசாயிகளே வட பகுதிகளாக முத்தையன் கட்டு, வட்டக்கச்சி போன்ற பகுதிகளுக்குச் சென்று விவசாயத் தொழில் செய்த காலங்கள் கூட உண்டு. ஒரு பக்கம் உள்நாட்டு உறபத்தியின் அதிகரிப்பு, இன்னொரு பக்கம் கடத்தல் காரர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை. அதே காலக் கட்டத்தில்தான் இலங்கை அரசு தரப்படுத்தல் என்னும் சட்டத்தையும் கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் அது இன ரீதியான படு பிற்போக்கு அம்சங்களோடு அறிமுகமானாலும் பிற்பாடு அது பிரதேசவாரியான தரப்படுத்தலாக மாற்றப்பட்ட போது அதில் முற்போக்குக் கூறுகள் இருந்தது. அதாவது பின் தங்கிய பகுதி மாணவர்கள் ஓரளவுக்கு வளர்ச்சி பெறும் வாய்ப்புகள் இருந்தது. இங்கே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கிறதல்லவா? அது மாதிரி ஒரு முற்போக்கு ஏற்பாடு. ஆனால் இந்த பிரதேசவாரியான தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்பாண வெள்ளாளர்கள்தான். அவர்கள் கூட வெவ்வேறு பெயர்களின் முகவரிகளில் கிழக்கு மாகாணத்திற்கும் வன்னிக்கும் வந்து தேர்வு எழுதி விட்டுச் செல்லும் சூழல் கூட இருந்தது. பிரித்தானிய காலனியாதிக்க மனோபாவத்தைக் கொண்ட யாழ்பாணத்தவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதும் அவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக தமீழக் கோரிக்கையை முன் வைக்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்தில்தான் தமிழீழ கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. தமிழீழக் கோரிக்கை முன் வைக்கப்பட்ட போது அதை தடித்தனமாக ஒடுக்கிய போலீஸ் ஒரு பக்கம் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக திரண்ட கடத்தல்காரர்கள் ஒரு பக்கம் என மாணவர்கள், கடத்தல்காரர்கள் என இரு சக்திகளும் இணைகிறார்கள். ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி,  உமா மகேஸ்வரன், குட்டி மணி, தங்கதுறை, பிரபாகரன் எல்லோரும் இணைந்தே ஈழப் போராட்டத்தை துவக்குகிறார்கள். இந்த இணைதலின் வரலாற்றுப் பின்னணி என்பது இதுதான்.

வினவுகடத்தல்காரர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி, இன்னொரு பக்கம் இலங்கை அரசாங்கம் என இவர்களுக்கிடையிலான முரண்பாடே தமீழீழப் போராட்டத்தின் துவக்கமாக இருந்தது என்கிறீர்கள்? அப்படி என்றால் இலங்கையில் சிங்களர்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான இன முரண் இல்லை என்கிறீர்களா?

நாவலன் – அப்படிச் சொல்லவில்லை. சிங்கள் பௌத்த மேலாதிக்கவாதம் என்பது தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களுக்கு எதிரானதாகவும் சிங்கள இனவாதம் இலங்கையில் இருந்தது, இன்றும் இருக்கிறது.

ஆக தமிழ்ப் பேசும் மக்களிற்கு எதிரான சோவனிச வடிவிலான பெருந்தேசிய அடக்குமுறை என்பதே இனப்பிரச்சனையின் ஊற்றுக்கண்.  பண்டாரநாயகா காலத்தில் 58 வது ஆண்டில் இருந்தே அது வெளிப்படையான கலவரங்களாக உருவாகி விட்டது. இலங்கையில் இருந்து பிரித்தானியா வெளியேறிய போது இலங்கைத் தீவினுள் இன முரண்பாட்டை உருவாக்கி விட்டுத்தான் வெளியேறியது. அனகாரிக தர்மபால என்கிற சிங்கள பெருந்தேசியவாதி இப்போதும் சிங்களர்களின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்படுகிறார். ” தமிழ் மக்களை கடலுக்குள் தள்ளி கொல்ல வேண்டும் ” என்று சொன்னவர் தர்மபால.இலங்கைப் பாடப்புத்தகங்களில் தேசத்தின் கதாநாயகனாகவும், இலங்கை தேச நிர்மாணத்தின் சிற்பியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.

மகாவம்சம் என்னும் சிங்களர்களின் புனித நூல் பாலி மொழியில் மட்டுமே இருந்தது சிங்களத்தில் இல்லை. பிரித்தானிய கவர்னருடைய நிதி உதவியிலும் அவர்களில் திட்டத்திலும்தான் மகாவம்சம் சிங்கள மொழிக்கு மாற்றப்படுகிறது. பாலி மொழியில் இருந்து சிங்கள மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட மகாவம்சத்தை மூன்று லட்சம் பிரதிகளாக எடுத்து கிராமங்கள் வரை பரவியிருந்த எல்லா விகாரைகளுக்கும் கொடுத்தார்கள். மகாவம்சத்தில் எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுக்குமான போர் என்பதை தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான போர் என்று பொயான புனைவுகளை ஏற்படுத்தினார்கள். இனவாதத்தை தத்துவார்த்தத் தளத்தில் நிறுவனமயப்படுத்தியவர்தான் தர்ம்பாலா. பின்னர் சிறுபான்மை மக்களுக்கு எதிரான முதல் தாக்குதல் இன முரணைத் தூண்டும் விஷயத்தை முன் வைக்கிறார் அவரது சகோதரர் 1915 ல் முதல் சிறுபான்மையினருக்கு (தமிழ் முஸ்லீம்களுக்கு) எதிரான தாக்குதல் டி.எஸ். சேனநாயகா காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது சிறுபான்மை வணிகர்களுக்கு எதிரானத் தாக்குதல்.

பிரித்தானிய ஆதிக்கத்திற்கு முன்னைய காலத்திலேயே தேரவாத தமிழ் நாட்டு ஆதிக்கத்திற்கு எதிராகத் தேரவாத பௌத்தத்தைப் பாதுகாப்பது என்ற செயற்பாட்டுத் தளத்தில் இந்தியாவிற்கு எதிரான உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் வளர ஆரம்பித்துவிட்டது. இதைத்தான் கேம்பிரிட்ஜ்  பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹொப்ஸ்பவும் போன்ற ஆய்வாளர்கள் தேரவாத பௌத்தம் இயல்பிலேயே தேசியவாதக் கூறுகளைக் கொண்டுள்ளதாக இலங்கையை உதாரணம் காட்டுகிறார்கள். இதை தேசிய வாதம் குறித்த மார்க்சிய தியரிக்கு எதிராகக் கூட அவர்கள் பிரயோகித்து விவாதிக்கிறார்கள். இது அடிப்படையில் தவறான கருத்து என்றாலும், இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில்  இந்தியாவிற்கு எதிரான ஒருங்கமைப்பு ஒன்று காணப்பட்டதை பலரும் குறித்துக் காட்டுகிறார்கள். இது ஒரு தேசிய இணைவையும் கொண்டிருந்தது. ஆக, இந்திய மன்னர்களுக்கு எதிரான பௌத்தர்களின் போராட்டங்கள் தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டங்களாகக் புனையப்படது. இதனையே சோவனிச இனவாதத்தை விதைப்பதற்கான மகாவம்ச ஆதாரங்களாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

வினவுஅப்ப்போது ஒன்று பட்ட இந்தியா என்பதே இல்லையே…. சிறு சிறு நிலப் பகுதிகளை ஆண்ட குறு நில மன்னவர்கள் அவர்களை கட்டுப்படுத்திய பெரு நில மன்னர்கள் என்ற ஆட்சிமுறைதான் இங்கே இருந்தது.

நாவலன் – ஆமாம் இலங்கைக்கு வெளியே இருந்த சமாஸ்தானங்கள். அல்லது சேர, சோழ, பாண்டிய, பராக்கிரமாபாகு போன்ற இன்றைய தென்னிந்தியாவின் அன்றைய சமஸ்தானங்களின் செல்வாக்கு இலங்கையின் மீது அதிகமாக படிந்திருந்தது. இவர்கள் படையெடுத்துப் போய் வெற்றி கொண்ட வரலாறுகளும் கிடைக்கிறது. ஆனால் இவர்கள் வெற்றி கொண்ட இடங்களில் இவர்கள் இருந்து ஆட்சி செய்ததில்லை அங்கே தனக்கான பினாமி ஒருவரை நியமித்து வருகிறார்கள். இத்தகைய போக்குகள் தென்னிந்திய மன்னர்களுக்கு எதிராக மனோபாவத்தை சிங்களர்களிடமும் பௌத்த பிக்குகளிடமும் உருவாக்கியது. தென்னிந்திய மன்னர்கள் மீதான அச்சம் இலங்கையில் அல்லது சிங்கள ஆட்சி பீடத்தில் வித்தியாசமான சமூக அமைப்பை உருவாக்கியது. சிங்கள மன்னனான துட்டகைமுனுவுக்கு எல்லாளன் மீதிருந்த கோபம் கூட தென்னக மன்னர்களுக்கு எதிரான கோபம்தான். துட்டகைமுனு, எல்லாளன் யுத்தம் கூட தமிழர் சிங்களர் போராக உணரப்பட்டதும் இதனால்தான். இலங்கையில் பௌத்தத்தின் துவக்கம் கூட இந்தியாவுக்கு எதிரான உணர்வலைகளில் இருந்து உருவானதுதான். அந்த அடிப்படையில்தான் பௌத்த எதிர்ப்புணர்வும் முக்கோண சமூக அமைப்பாக உருவாக்கியது. முக்கோணம் என்றால் மூன்று மூலைகள்…. ஒரு மூலையில் மன்னர்கள், இன்னொரு மூலையில் பௌத்த பிக்குகள், இன்னொரு மூலையில் மக்கள். மன்னனுக்கு படைகள் தேவைப்பட்டால் பௌத்த பிக்குகளிடம் கேட்பார்கள் பிக்குகள் மக்களிடம் கேட்பார்கள்.மக்கள் மன்னனுக்கு சேவை செய்வார்கள்.  16 அம் நூற்றாண்டில் நொக்ஸ் என்ற பிரித்தானிய மாலுமி இலங்கைக்குச் செல்கிறார். அப்படிச் செல்லும் போது கண்டிய  தமிழ் மன்னன் ராஜசிங்கன் என்பவனால் அவர் சிறைப்படுத்தப்பட்டார்., அவர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அவர் சிறையில் இருக்கும் போது சிங்களம் படிக்கிறார்.பின்னர் அவர் வெளியில் வந்து பயணம் செய்யும் போது மீண்டும் அனுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது அங்கே எவருக்கும் சிங்களம் தெரியாது. எல்லோரும் தமிழ் மட்டுமே பேசுகிறார்கள். அவரை விகாரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்புறம் பொலநருவ செல்கிறார். ஆக தமிழர் சிங்கள முரண் என்பது அப்போது மக்களிடம் இல்லை.

தமிழர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கிறார்கள். அனுராதபுரம் இப்போது தூய சிங்களப் பகுதி. இங்குள்ள தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றமடைந்திருக்கிறார்கள். ஆக, மொழி என்பது ஒரு பிரச்சனையாகவே இருந்ததில்லை.

அதி அதிகார பீடங்களிடம் இருந்திருக்கிறது. தமிழ் மக்கள் மீதான இன முரண் என்பது தென்னிந்திய தமிழ் மன்னர்களுக்கு எதிரான முரணாகத்தான் துவக்கத்தில் இருந்திருக்கிறது. அது தமிழ் மக்களுக்கு எதிரான் இன முரணாக பின் காலனீயச் சூழலில் தான் உருமாற்றம் அடைகிறது. இன்னொரு பக்கத்தில் பார்த்தால் மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் இருந்துதான் பௌத்தம் இலங்கைக்குச் சென்றது. தமிழ் நாட்டில் பௌத்தம் கோலோச்சிய காலத்தில் இலங்கையில் இரண்டு விகாரைகள் இருந்தது. ஒரு விகாரையில் தமிழில் பௌத்த வழிபாடும் இன்னொரு விகாரையில் பாலி மொழியிலும் நடக்கிறது. எங்குமே சிங்கள மொழி இல்லை. இங்கே பௌத்தத்தை புத்தரை கிருஷ்ணரின் அவதாரமாக வைணவம் கட்டமைத்த அதே நேரம் இந்திய எதிர்ப்புணர்வு அங்கே எழுகிறது. அந்த விகாரைகள் கிராமங்கள் முழுக்க பிரித் நூல் ஓதுவதாக இருந்தால் பாலி மொழியில் ஓதுவார்கள். சைவ மதத்தின் கூறுகள் பௌத்தத்திலும் இருந்தது. ஆனால் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு எதிராகத்தான் தேரவாத பௌத்த மரபு உருவாகிறது.

வினவுஇன்றும் கூட இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் இந்தியாவுடன் தங்களை இணைத்துப் பார்க்கிறார்கள். தமிழ் மக்களை தங்களை இந்தியாவோடு இணைத்துப் பார்க்கிறார்களா? அதாவது இந்திய அபிமானம் என்பது இலங்கைத் தமிழ் மக்களிடம் இருக்கிறதா?

நாவலன் – யாழ்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை எப்படி இழிவான பார்வையோடு பார்த்தார்கள் என்பது தெரியும்தானே? இந்தியாவில் உள்ள தமிழகத் தமிழர்களைக் கூட அவர்கள் வடக்கத்தியான் என்றுதான் அழைப்பார்கள். உண்மையில் ஈழத் தமிழர்கள் இந்தியாவோடு தங்களை அபிமானாபடுத்திப் பார்த்ததாக நான் நினைக்கவில்லை.  ஆனால் இந்தியா குறித்த கற்பனை தமிழ் தேசிய வாதிகளால் உருவாக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் இந்தியத் தொடர்புகளும் , வல்வெட்டித்துறை ஊடான தொடர்பாடல்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்திய முற்போக்குப் போராட்ட இயக்கங்களுடனோ போராட்ட  இயக்கங்களுடனோ தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவைக் கோபப்படுத்தக் கூடாது என்பதில் புலிகள் உட்பட்ட போராளிக் குழுக்கள் அவதானமாக இருந்தார்கள்.

வினவுவிடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட முப்பதாண்டுகால ஆயுதப் போராட்டம் ஏன் தோற்றுப் போனது?

நாவலன் – தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முப்பதாண்டுகளுக்குப் பிறகு இப்போது தோல்வியடைந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் நடத்த வேண்டிய போராட்டத்தை நாங்கள் தீர்மானிக்க வேண்டிய போராட்டத்தை இந்தியா எப்போது தீர்மானிக்கத் துவங்கியதோ எங்கள் குழுக்களுக்கு எப்போது இந்தியா ஆயுதம் கொடுக்கத் துவங்கியதோ அப்போதே நாங்கள் தோற்றுப் போனோம். விடுதலைப்புலிகள் எதிர்ப்பியக்கம் என்பது மாறி அரசாங்கத்தின். பிராந்திய அதிகார வர்க்கங்களின் கையாட்களாகவும் அடியாட்களாகவும் மாறிப் போகும் சூழல் உருவானது. இத்தகைய போக்குகளினூடேதான் முப்பதாண்டுகாலம் நீண்டு சென்றிருக்கிறது எமது ஆயுத போராட்ட வரலாறு.  இப்போது வன்னிப் போரின் முடிவை தமிழ் மக்களின் அல்லது எதிர்ப்பியங்களின் தோல்வியாக நான் பார்க்கவில்லை. ஒடுக்கப்படும் ஆசிய மக்களின் தோல்வியாக நான் பார்க்கிறேன். உலக மயமாக்கத்தில் மூலமாக எழும் ஆதிக்கத்தை நிலை நிறுத்துக் கொள்வதற்கான ஒரு பரிசோதனைக் கூடமாக இலங்கையை ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதுதான் என் கருத்து, இந்த எகாதிபத்தியங்களின் விளையாட்டில் பங்கெடுத்தும் இழுபட்டும் கடந்து வந்த முப்பதாண்டுகால வரலாறுதான் புலிகள் கதை.

வினவுஉலக முதலாளித்துவத்திற்கு உதவக் கூடிய மூலதனங்கள் எதுவும் இலங்கையில் இல்லையே? மத்திய கிழக்கிலோ ஆப்ரிக்கா, செர்பியா, போஸ்னியா போன்ற நாடுகளில் இருக்கும் வளங்கள் போன்று இலங்கையில் இல்லாத போது. உலக முதலாளியம் ஏன் இலங்கையை சூறையாட வேண்டும் என நினைக்கிறீர்கள்?

நாவலன் – கிரீஸ்சில் ஒரு இனப்படுகொலை நடந்தது. இதே மாதிரியாக மக்களையும் போராளிகளையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்து உணவைத் தடுத்து கூட்டாக படுகொலை செய்தார்கள்.இந்தோனேஷியாவில் நடந்ததை விட கொடூரமான இனப்படுகொலை அப்போது யுத்தப் பகுதிக்குள் சிக்கியிருக்கும் குழந்தைகளை மட்டும் விடச் சொல்லி கேட்டார்கள். ஆயிரக்கணக்கான சிறுவர்கள் வெளியில் வந்தார்கள். அப்படி வந்தக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுத்தார்கள். அப்படி தத்தெடுத்த எலனி என்றொரு சிறுமி வளர்ந்த பிறகு நூல் ஒன்றை எழுதினார். அது பின்னர் சினிமாவாகக் கூட வந்தது . கிரீஸ்சில் பெட்ரோல் கிடையாது. ஏகாதிபத்தியங்களுக்கு நேரடியாக எந்த நலனும் அங்கு இல்லை. ஆனால் இன ரீதியாகவோ, வர்க்க ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ ஒடுக்கப்படுகிற மக்கள் எதிர்ப்பியங்களை நடத்தும் போது முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள் என்பதுதான் க்ரீஸ் படுகொலைகள் நமக்கு சொல்லும் செய்தி.

அது போன்ற முயற்ச்சிதான் வன்னியில் நடந்தது. வன்னிக் கொலைகள் அதற்கு மேற்குலகின் மௌனமான சம்மதங்கள் என இந்தியாவின் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இப்போது வன்னிப் போரின் உத்தியைத்தான் இந்தியா லால்கரில் தொடங்கி அதை வடகிழக்கு மாநிலங்களுக்கும் விரிவு படுத்துகிறது. அங்கே மட்டும் பெட்ரோல் இருக்கிறதா? என்ன? ஒரு பக்கம் பன்னாட்டு நிறுவனங்களுடன் வடகிழக்கு தொடர்பாக இந்தியா செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். இன்னொரு பக்கம் உலக முதலாளிகளுக்கிடையில் இருக்கும் உள் முரண்பாடுகள் இருக்கின்றன. உலக முதலாளிகளின் ஆதிக்கம் இருந்தாலும் கூட உள் முரண்பாடுகள் என்பதை தேசீய முதலாளியமாக கொள்ள முடியாது என்றாலும் கூட அந்த உள் முரண்பாட்டிற்கு பிராந்திய தன்மை இருக்கிறது . அதை இலங்கைப் போரில் காண முடிகிறது. இலங்கை தீவிரமாக மேற்குலகிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறது. ஐநாவை துச்சமென மதிக்கிறது இலங்கை. ஐநாவின் சட்ட வல்லுநர் ஒருவரிடம் சமீபத்தில் பேசிய போது அவர் சொன்னார். இன்றைக்கு இருக்கிற உலக பொருளாதார சூழலில் இந்தியாவையும், சீனாவையும் எதிர்த்து மேற்குலகம் இலங்கையில் எதையுமே செய்ய முடியாது என்றார். முரண் இந்தியாவுக்கும் சீனாவுக்கிமிடையிலானதாக இருந்தால் மேற்குலகம் ஒரு நிலை எடுத்திருக்கும். இங்கே இந்தியாவும் சீனாவும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கிறது. இந்தியாவின் சார்ந்திருத்தல் என்பது சுயாதீனமானது. பனிப்போர் காலத்தில் இந்தியா ரஷ்யாவைச் சார்ந்திருக்கும். ரஷ்யா ஏதேனும் அழுத்தம் கொடுத்தால் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் அந்த சார்பு நிலையில் சுயாதீனம் இருக்கிறது.சுயநலம் சார்ந்த இந்த சுயாதீனம் இப்போது சீனா சார்ந்தும் அமெரிக்கா சார்ந்தும் இந்தியா இருக்கிறது. ஆசியப் பொருளாதாரம் என்பது முற்போக்கானதா? பிற்போக்கானதா? என்பதற்கு அப்பால் ஆசியாவின் பொருளாதார உருவாக்கத்தின் பரிசோதனைக் கூடம்தான் இலங்கை.  இந்த பிராந்திய பொருளாதார உருவாக்கத்திற்கு இலங்கையில் பலியானவ்ர்கள்தான் வன்னி மக்களும் புலிகளும். இத்தகைய இனப்படுகொலை இன்னொரு பத்தாண்டுகளுக்கு ஆசியாவில் தொடர வாய்ப்புண்டு.

வினவுநீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஈழத் தமிழ் மக்களை ஆசியப் பொருளாதாரத்தின் சூழ் நிலைக் கைதிகள் என்கிறீர்கள். இது சிங்கள இனவாதத்தையும் அவர்கள் நடத்திய இனப்படுகொலையின் கோரத்தையும் திசை திருப்புவதாக அமைந்து விடாதா?

நாவலன்:  நான் சிங்கள அரசு பயங்கரவாதிகளின் இனகொலைகளையோ, அவர்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்களையும் போராளிகளையும் கொன்றொழித்ததையும் இல்லை என்று மறுக்கவில்லை. மாறாக சரத்பொன்சேகா என்றாலும் ராஜபட்சே சகோதரர்கள் என்றாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் ஆசியாவில் உருவாகிக் கொண்டிருக்கும் பொருளாதார உருவாக்கமும் ஏகாதிபத்தியங்களின் பயங்கவராத கதையாடலையும் சிங்கள பேரினவாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்று சொல்ல வருகிறேன். இலங்கையைப் பொறுத்த வரை இனவாதம் நிறுவனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் இலங்கையின் சிங்கள பௌத்த மேன்மையை கட்டி வைத்திருக்கிறது. இந்தியாவில் இறையாண்மை என்னும் போலித் தேசீயவாதம் கட்டமைக்கப்படுகிறதோ அது போலதான் இதுவும். இதை எல்லாம் விட சிங்கள இனவாதத்திற்கு எதிராக சாத்வீக போராட்டங்கள் சாத்தியப்படாது. இனவாதத்திலிருந்து சிறுபான்மை மக்களின் விடுதலை என்பது வன்முறை போரட்டமாகவே இருக்க முடியும். ஆனால் அதிகார பீடங்களோடு இணைந்து செய்ல்படும் புலிகள் மாதிரியான வலதுசாரிக் குழுக்களால் முன்னெடுக்கப்படும் தேசியவாதப் போராட்டங்களால் இனவாதத்தை எப்போதுமே வெற்றிக் கொள்ள முடியாது. இலங்கையில் இனவாதம் வெற்றி கொள்ளப்பட்டால் மட்டுமே சிங்கள பௌத்த இனத்திற்குள் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை உணரும் சூழல் உருவாகும்.

வினவுஇப்போது சிங்கள உழைக்கும் மக்களுக்கும் சிங்கள முதலாளிகளுக்குமிடையிலான முரண்பாடு இப்போது இல்லை என்று சொல்கிறீர்களா? அல்லது பலவீனமாக இருக்கிறது என்கிறீர்களா? அல்லது இவர்கள் இரண்டு பேரையுமே சிங்கள இனவாதம் இணைகிறது என்று சொல்கிறீர்களா?

நாவலன் – முப்பதுகளில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியை உலகம் கிரேட் டிப்பிரஷன் என்று பதிவு செய்கிறது. அந்த கிரேட் டிப்பிரஷனின் பாதிப்பு இலங்கையில் தேயிலைத் ஏற்றுமதியில் கடும் வீழ்ச்சியைக் கொண்டு வந்தது. சிங்களத் தொழிலாளிகள் வேலை இழக்கிறார்கள். ஆனால் ஐக்கிய தேசீயக் கட்சி இந்த வேலை இழப்பிற்கு காரணமாக அப்போது சுட்டிக் காட்டியது மலையாளிகளை கிட்டத்தட்ட முப்பதாயிரம் மலையாளிகளை இலங்கையை விட்டுத் துரத்தினார்கள். இலங்கையில் தொழிற்சங்கம் கட்டும் முயற்ச்சி துவங்கியதும் அந்தக் காலக்கட்டத்தில்தான் அன்றைக்கு ஏகாதிபத்தியங்களின் நலனை சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பாக கட்டமைத்தார்கள். ஆக, சிங்கள  மக்கள் மத்தியிலிருக்கும் வர்க்க முரணைத் தணிக்கும் கருவியாகவே சோவனிசம் பயன்படுகிறது. ஆனால் இன்று உலக முதலாளித்துவம் என்பது முழுக்க முழுக்க அமெரிக்க நலன் சார்ந்தது மட்டுமல்ல. ஜி 20 மாநாட்டில் ஆசியப் பொருளாதாரத்தின் உருவாக்கத்தை சொல்லி நிற்கிறது.மக்களின் இடப்பெயர்வு பிற்போக்கான ஒன்றாக நடக்கிறது. உலக முதலாளித்துவத்தின் முரண்பாடு என்பது ரஷ்ய, சீனா நலன் சார்ந்ததாகவும் இருக்கிறது. அது அமெரிக்காவிற்கு எதிரானதாகவும் இருக்கிறது. உருவாகிவரும் இந்த புதிய பொருளாதார கட்டமைப்பு எங்கே தங்களின் சுரண்டல் நலனை பாதித்து விடுமோ என்று அமெரிக்காவும் இந்த நாடுகளை கையாளத் துவங்குகிறது. அதனால்தான் புவி வெப்பமடைதல் தொடர்பாக அமெரிக்கா எழுப்பும் கேள்விகள் நெருக்கடிகள் எல்லாமே இந்த நாடுகளின் வளர்ச்சியைக் குறைவைத்துதான் செய்யப்படுகிறது.

வினவுதமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் புலிகளின் போராட்டங்கள், தியாகங்களுக்கு உணர்வு பூர்வமான ஆதரவு இருக்கு. முப்பதாண்டுகாலமாக தனி ஈழக் கோரிக்கையில் உறுதியாக இருந்தார்கள் என்கிற அளவில் தனிப்பெரும் அமைப்பாக அவர்கள் இங்கே செல்வாக்குச் செலுத்துகிறார்கள். கடைசியாக நடந்த தீக்குளிப்புகள் கூட உதாசீனம் செய்ய முடியாத ஆதரவு நிலையில் வெளிப்படுதான். முத்துக்குமாரின் மரண சாசனம் முற்போக்குக் கூறுகளைக் கொண்டது. இந்த ஆதரவை அவர்கள் எப்படி பயப்படுத்திக் கொண்டார்கள்?

நாவலன் – இதில் இரண்டு விதமான பிரச்சனை இருக்கிறது. அவர்கள் அதிகாரவர்க்கங்கங்களோடு மட்டுமே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். தமிழகத்தில் நெடுமாறன். வைகோ போன்றவர்களிடம் நெருங்கினார்கள். இன்னொரு பக்கம் சரவ்தேச அதிகார வர்க்கங்களின் வலைப்பின்னலை தங்களின் ஆயுத பரிவர்த்தனைக்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் போர் நிறுத்தம் கோரி உணர்வு பூர்வமாகவும் உண்மையாகவும் போராடிய தமிழக மக்களின் உணர்வு என்பது இங்குள்ள சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளுக்கு எதிராக இருந்தது. முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்திலும் இது வெளிப்பட்டது. அது போல வழக்கறிஞர்கள், மாணவர் போராட்டங்களிலும் இது வெளிப்பட்டது. ஆனால் புலிகள் இந்த மக்கள் எந்த சந்தர்ப்பவாத தலைமைகளிடம் அதிருப்தியுற்றிருந்தார்களோ அவர்களுடனே தொடர்பு வைத்திருந்தார்கள். இந்தியாவிடம் கடைசி வரை கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். தமிழக மக்களின் எழுச்சியை புலிகள் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. அவர்கள் அதிகார வர்க்கங்களை நம்பினார்களே தவிற தமிழக மக்களின் எழுச்சியை நம்பவில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் புலிகளின் அதிகாரவார்க்கத்துடனான சமரசம் அவர்களை அழித்துக்கொள்வதிலேயே முடிந்திருக்கிறது. அதற்கு நல்ல உதாரணம் ஒன்றை நான் சொல்ல முடியும். பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் குண்டு வீசிய போது ஐந்து நாட்கள் இரண்டு லட்சம் மக்கள் பிரித்தானிய மக்கள் தெருவுக்கு வந்து பாலஸ்தீனியர்களுக்காக போராடினார்கள். ஆனால் இலங்கை இனப்படுகொலை தொடர்பாக எந்தப் போராட்டங்களிலும் பிரித்தானியா மக்களோ ஏனைய மக்கள் விடுதலை ஆதரவுக் குழுக்களோ துளி அளவு கூட கலந்து கொள்ள வில்லை. அதற்கு காரணம் என்னவென்றால் புலிகளோடு நெருக்கமாக இருந்தவர்கள்  அதிகாரவர்க்கமும் அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுமே அவர்களோடுதான் இவர்கள் நெருக்கம் பேணினார்களே தவிற அங்குள்ள முற்போக்கு சக்திகளையும் ஏனைய எதிர்ப்பியங்கங்களையும் புலிகள் கண்டு கொள்ளவில்லை. இவர்களோடு நட்பாக இருந்த மேற்குலக நாடாளுமன்ற உறுப்பினர்களோ தங்களின் கட்சி நலன்களுக்காக, தங்களின் அரசு நலனுக்காக, தங்களின் தேச நலனுக்காகத்தான் இப் போராட்டங்களுக்கு வந்து போஸ் கொடுத்தார்களே தவிற அவர்களுக்கு மக்கள் நலன்களோ, மனிதாபிமான நலன்களோ கூட அவர்களுக்கு இல்லை. இதுவரை ஈழப் போருக்கு எதிராக உணர்வு பூர்வமாகவும் உண்மையாகவும் இருந்தவர்கள் தமிழக மக்களே. ஆனால் அம்மக்களின் எதிர்ப்புணர்வை புலிகள் அல்லது புலி ஆதரவாளர்கள் நீர்த்துப் போகச் செய்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

வினவுஇனப்படுகொலையே ஈழத்தில் நடக்கவில்லை என்று ஜெர்மன் சுசீந்திரன் புதுவிசை இதழில் சொல்லியிருக்கிறார். இன்னொரு சாரார் இனப்படுகொலை பற்றி பேசாமல் புலிகள் செய்த தவறுகளைப் பற்றி மட்டுமே மீண்டும் மீண்டும் பேசுகிறார்களே?

நாவலன் – புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பல்வேறு சக்திகள் இருக்கிறார்கள். போருக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் தனது பட்ஜெட்டில் மூன்று லட்சம் டாலர்களை புலிகளுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கைக்காக செலவிடுகிறது. ராஜதந்திரம் என்பது புலிகளுக்கு நிலவும் ஆதரவைக் குலைப்பதும் அவர்களின் சர்வதேச வலையமைப்பைச் சிதைப்பதும்தான் இலங்கை அரசின் நோக்கம். இன்று இலங்கை அரசின் பண உதவி  கிடைக்கிறது. மற்றபடி சுசீந்திரன் ஒரு தன்னார்வக் குழு  நிதி உதவிகளைப் பெறும் போது சில கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி கிடைக்கும் அந்தக் கட்டுப்பாடு என்பது இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்வதாகக் கூட இருக்கலாம். இன்னுமொரு பகுதியினர் புலிகள் மீதான விமர்சங்களை மட்டுமே முன் வைப்பதன் மூலமும் எதிர்ப்பியங்களின் நோக்கங்களை சிதைப்பதன் மூலமும் இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் சூழல் வெளிப்படையாகவே தெரிகிறது. இலங்கை அரசாங்கத்திற்கு 83 &ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு எதிராக நெடுங்குருதி என்றொரு நிகழ்வை பிரான்சில் நடத்தினார்கள்.

இலங்கை அரசு விழாவாகவே அது நடந்தது. மேற்கில் உள்ள தலித் அமைப்புகளும் கூட இப்போது இலங்கை அரசோடு சேர்ந்தியங்குகின்றது. அவர்கள் இப்போது இலங்கை அரசிற்கு எதிராக பேசுவதில்லை. போர் முடிந்ததும் இவர்கள் இலங்கையில் கட்சியாகப் பதிவு செய்துகொண்டனர். ஆனால் இவர்களின் கருத்துக்களுக்கு மக்களிடம் எவ்விதமான மதிப்பும் கிடையாது. இவர்கள் எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற பாணியில் இலங்கை அரசோடு இணைகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் முதலாவது எதிரி யார்? இரண்டாவது எதிரி யார்? என்பதை எல்லாம் நிராகரிக்கிறேன். காரணம் இது ஒரு தத்துவார்த்த பிரச்சனை அல்லாமலும் இலங்கையின் இனப் பிரச்சனைக்கு காரணம் புலிகள் அல்ல. சிங்கள பௌத்த ஆளும் வர்க்கமே இந்த இனவாதத்தின் காரணகர்த்தாக்க்கள். 1958 ஆம் ஆண்டுகளில் தொடங்கி காலம் தோறும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. புலிகளின் ஆயுதப் போராட்டம் சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால் ஐம்பதாம் ஆண்டு இருந்த தேவையை விட, எழுபதுகளில், எண்பதுகளில், தொண்ணூறுகளில் இருந்த தேவையை விட இன்று மிக அதிகமான அரசியல் தேவைகள் தமிழ் மக்களுக்கு இப்போது உருவாகியிருக்கிறது. இன அழிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு மிகத் தீவீரமான போராட்டத்திற்கான தேவை ஒன்று உருவாகியிருக்கிறது.    மனிதர்கள் கொசுக்களைப் போல கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உலகமே வேடிக்கை பார்க்க மக்கள் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொலைகளின் ஈடுபட்டவர்கள் மட்டுமல்ல அவர்களை பாதுகாக்க எத்தனிக்கிற எவருமே போர்க்குற்றவாளிகள்தான்.

வினவு – 2004 – ஆம் ஆண்டு தென்கிழக்கு கடலோரங்களைத் தாக்கி மாபெரும் மக்கள் பேரழிவையும் இயர்க்கை அனர்த்தனத்தையும் தோற்று வித்த சுனாமிக்குப் பின் புற்றீசல் போல தன்னார்வக்குழுக்கள் இந்த நாடுகளுக்குள் படையெடுத்தார்கள். இப்போது துயரமான முறையில் வன்னிப் போர் முடிவுக்கு வந்த பின்னால் தன்னார்வக்குழுக்களுக்கு இது பெரும் கொண்டாட்டமாக மாறியிருக்கிறது? இல்லையா? ஒவ்வொரு பேரழிவுமே தன்னார்வக்குழுக்களுக்கு கொண்டாட்டம்தான் இல்லையா?

நாவலன்– தன்னார்வ நிறுவனங்கள் என்பதன் பிரதான நோக்கமே, அவர்களது வார்த்தைகளில் சொல்வதானால் ” சமூகக் கோபத்தைத் ”  தணிப்பது என்பதே. இதற்காகக் குடிமைச் சமூகங்கம், அடையாள அரசியல் போன்ற கருத்துக்களை முன்வைக்கின்றனர். மனித உரிமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தலித்தியம் போன்ற சுலோகங்களில் வர்க்க அரசியலை நீக்கிவிட்டு வெறும் சமூகப் பிரச்சனையாக முன்வைக்கின்றனர். இவற்றை நோக்கி ஒருபுறத்தில் அடிமட்ட மக்களையும் இன்னொரு புறத்தில் சமூக உணர்வுள்ள படித்த மத்தியதர வர்க்கத்தையும் இதன் பணியாளர்களாக உள்வாங்கிக் கொள்கின்றனர்.  இலங்கையில் 80 களில் இறுதியில் மனித உரிமை குறித்துப் பேச பல தன்னார்வ நிறுவனங்கள் முன்வந்தன. இருப்பினும் ஜே.வீ.பி போராட்டத்தில் ஒரு லட்சம் இளைஞர்கள் தெருத் தெருவாகக்  கொலைசெய்யப்பட்ட போது யாரும் அங்கில்லை. சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு கொலையைக் கூட பதிவுசெய்யவில்லை. ஜே.வி.பி இடது சாரிக் கோசங்களுடன் நடத்திய போராட்டம் தெற்காசியாவில் புரட்சியாக மாறக்கூடும் என்ற தன்னார்வ நிறுவனங்களை இயக்கும் வல்லரசு நாடுகளதும்  அவற்றின் துணை அமைப்புக்களதும் பயவுணர்வுக்குக் காரணம்.

புலிகளின் பிற்பகுதி  தன்னார்வ நிறுவனங்களின் பொற்காலம். அவர்கள் அரசியல் பேசுகிறார்கள். மனித உரிமை பேசுகிறார்கள். கூட்டங்களையும் கருத்தரங்கங்களையும் ஒழுங்கமைக்கிறார்கள். மனித் உரிமை மீறல் என்று கூக்குரல் போடுகின்ற எதாவது ஒரு தன்னார்வ  நிறுவனம் நடந்ததும் நடப்பதும் இனப்படுகொலை என அங்கீகரிக்கிறதா?  மார்கா என்ற கொழும்பு தன்னார்வ ஆய்வு நிறுவனம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சேரன், ஜெயதேவெ உயாங்கொட, குமாரி ஜெயவர்தன, நுஹ்மான்  போன்றோரின் பல நூல்களை வெளியிட்டிருக்கிறது. தேசிய இனப்பிரச்சனை குறித்த நூல்களும் வெளிவந்தன. ஆனால் இனப்படுகொலை நிகழும் போது இவர்கள் மூச்சுக்கூட விடவில்லை. இது மட்டுமல இலங்கை தன்னார்வ நிறுவனங்களின் மைக்ரோ எக்கானமி புரெஜக்டுகளின் பிரதான மையங்களில் ஒன்று. மக்களை இவர்களின் பிச்சைக்காரர்களாக மாற்றுவதே இவர்களின் பணி. பிலிப்பைன்ன்ஸ் போராட்டமே இவர்கள் சீரழிக்கப்பட்டது. பங்களாதேஷ் இன்று இவர்களாலேயே பிரஞ்சைஸ்ட் நாடு என அழிக்கப்படுகிறது. பங்களாதேஷில் உற்பத்தி அழிக்கப்பட்டு, பல்தேசியக் கம்பனிகள் தேசத்தைச் சின்னாபின்னமாக்கிவிட்டன.

வினவு – ”ஈழம் செத்து விட்டதுஎன்கிறார் இந்து ராம். ”ஈழம் சாத்தியமில்லைஎன்கிறார் ஷோபா சக்தி. பேராசிரியர் .மார்க்ஸ் போன்றவர்கள் எதிர்ப்பியங்களோ மக்கள் இயக்கங்களோ சாத்தியமில்லை என்பதை ஈழம் காட்டுகிறது என்கிறார். உங்கள் கருத்து என்ன?

நாவலன்- கோரிக்கைகள் தொடர்பாக பார்த்தால். அக்கோரிக்கைகள் ஐம்பதாம் ஆண்டு தொடங்கி வைக்கப்படுகிறது. பண்டா செல்வா ஒப்பந்தம் என்பதே தமிழ் மக்களுக்கான சம உரிமை கோரும் ஒப்பந்தம்தான் எழுதப்பட்ட நாளிலேயே அது கிழித்தெறியப்பட்டது. ஓரளவுக்கு ஜனநாயகத்தைப் பேணிய அரசாங்கங்கள் இருந்த காலத்திலேயே தமிழர்களுக்கு இதுதான் நடந்தது. ஆனால் இன்று இருப்பவர்களோ இனப்படுகொலை செய்த மோசமான போர்க் குற்றவாளிகள். கிரிமினல்கள், இந்த கிரிமினல்களுக்கு எதிராக அன்றைக்கு போராட்டங்களுக்கு ஆதரவளித்த கோரிக்கைகளை முன்வைத்துப் சமாதான வழியில் ஆயுதப் போராட்டம் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். சிங்களர்களின் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறை, தமிழ மக்களுக்கு எதிரான இனவாதம். என்கிற அளவில் இனவாதத்தை வீழ்த்த ஆயுதப் போராட்டமே தீர்வு. ஆனால் இது சரியான திசைகளின் முன்னெடுக்கப்பட்டாக வேண்டும். இன முரண் கூர்மையடைந்து ஆயுதப் போராட்டம் வேர் விட்ட காலத்தில் சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு இருந்தது. தமிழ் மக்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, ஆனால் புலிகளின் தற்கொலைத் தாக்குதல், விகாரைகளில் பௌத்த அப்பாவிகளைக் கொன்று குவித்தமைதான் தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டம் என்ற எண்ணம் தோன்ற காரண்மாகிவிட்டது. சரியான திசை வழிகளின் எமது ஆயுத போராட்டம் பயணித்திருக்கும் என்றால் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களே எங்களோடு இணைந்து போராடியிருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் தனி ஈழம் என்கிற கோரிக்கை கூட அதனூடாக காலாவதியாகும் சூழல் ஏற்பட்டிருக்கும். இன்று இரு தரப்பிடமுமே அந்தச் சூழல் இல்லை. இன அடக்குமுறை பிரிந்து போகும் சுய நிர்ண போராட்டம் எனபது அவசியமானது. ஆனால் தந்திராபாய ரீதியில் தனி ஈழப் போராட்டம் வெற்றியளிகுமா? என்று தெரியவில்லை. எப்போது இலங்கை மக்கள் ஏகாதிபத்தியங்களிடம் இருந்தும் பிராந்திய விஸ்த்ரிப்பு நோக்கங்கள் கொண்ட அரசுகளிடம் இருந்தும் விடுதலை பெறுகிறார்களோ அதுவே உண்மையான விடுதலையின் பாதையாக அமையும். தவிர இன்று எதிர்ப்பரசியல் சாத்தியமில்லை என்ற கருத்துக்களும், ஆயுதப் போராட்டங்கள் பலமான எதிரியின் முன்னால் அழிவிற்கே வழிவகுக்கும் என்பதும், மார்க்சியத்திற்கு எதிராக இன்று மேற்கு வழியாகப் பரப்பப்படும் கருத்துக்கள்.

வினவு – குறுகிய நிலப்பகுதிக்குள் மக்களையும் போராளிகளையும் குவித்து வைத்து சிங்களப் பேரினவாத இராணுவம் கொன்று குவித்த போது புலத்து மக்களும் தமிழக மக்களும் கூட போருக்கு எதிராகப் போராடினார்கள். ஆனால் இந்தப் போருக்கு எதிராக ஏன் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் போராட வில்லை?

வட கிழக்கில்  இயல்பாகவே உருவாகக் கூடிய  எல்லா மக்கள்திரள் அமைப்புக்களும் தமிழ் தேசிய இயக்கங்களால்  சிதைக்கப்பட்டிருந்தன. மக்கள்  போராட்டங்களின்  ஆதார சக்தியே க்கள் திரள் அமைப்புக்கள் தான். மாணவர் அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், ஆசிரியர் சங்கங்கள், கலாச்சார அமைப்புக்கள், கலை அமைப்புக்கள் என்று எல்லாமே 80 களில் ஒவ்வொரு தேசியவிடுதலை அமைப்புக்களின் வால்கள் போல மாற்றப்பட்டிருந்தன. பின்னதாக புலிகளின்  கட்டுப்பாட்டுக்குள் அவை உட்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. 90 களின் பின்னர் புலிகளைச் சாரத அமைப்புக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. சில தந்திரோபாய நடைமுறைகளூடாக புதிய ஜனநாயக் கட்சி புத்தூர், நிச்சாமம், கன்பொல்லை, சங்கானை  போன்ற இடங்களில் தமது வறிய கூலிவிவசாய அமைப்புக்களைப் பேணிவந்த சூழல் காணப்பட்டாலும், 90 களின் பின்னர் இவர்களும் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்தும் கிழக்கிலிருந்தும் வெளியேற்றப்பட்ட பின்னர், இந்தச் சூழல் இலங்கை அரசின் பேரினவாத ஒடுக்குமுறைக்கு மிகவும் துணைபோனது.

இலங்கை அரசும் அதன் துணைக்குழுக்களும் கிராமங்களில் உருவாகும் சிறிய சங்கங்களைக் கூட புலிகள் என முத்திரையிட்டு அழித்தனர். கிழக்கில் பிள்ளையான் மற்றும் கருணா தலைமையிலும் வடக்கில் டக்ளஸ் குழு தலைமையிலும் தான் வெகுஜன அமைப்புக்கள் உருவாகும் சூழல் காணப்பட்டது. ஆக, வட  கிழக்கு என்பது புலிகளுக்கும் அரசிற்கும் உரித்தான திறந்வெளிச் சிறைச்சாலைகளாகவே காணப்பட்டன. இரண்டிற்கு மேற்பட்டோர் ஒரு இடத்தில் கூடி சமூக விடயங்களைப் பற்றிப் பேசக் கூட முடியாத நிலையே காணப்பட்டது. இன்றும் சோவனிச இலங்கை அரசாங்கம் அப்படி ஒரு அடக்குமுறைக்குள் தான் மக்களை வைத்திருக்கிறது. இன்று அரசின் துணைக்குழுக்களின் அடக்குமுறை அபிவிருத்தி என்ற பெயரில் நியாயம் கற்பிக்கப்படுகிறது.

வினவு- வடக்கு கிழக்கு மக்கள் போராடாமல் போனதற்கு இராணுவக் கண்காணிப்புதான் காரணம் என்கிறீர்கள். இது போன்ற ஒரு சூழலே காஷ்மீரிலும் இருக்கிறது. வீதிக்கு வீதி இராணுவத்தைக் குவித்திருக்கிறது இந்தியா. ஆனாலும் இந்த எதிர்ப்புகளையும் மீறி காஷ்மீர் மக்கள் போராடுகிறார்கள். அது போல மத்திய கிழக்கிலும் ஏகாதிபத்திய இராணுவங்களுக்கு எதிராக மக்கள் அஞ்சாமல் போராடும் போது ஈழத்தில் மட்டும் அது சாத்தியமில்லாமல் போனதற்கு தமிழ் மக்களின் அரசியல் வீழ்ச்சி காரணம் என்று சொல்லலாமா?

80 களில் இந்திய அரசு ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இராணுவ அரசியல் பயிற்சிகளை வழங்கிய போதே அனைத்து மக்கள் திரள் அமைப்புக்களும் சிதைக்ப்பட ஆரம்பித்துவிட்டன. கிராமியத் தொழிலாளர் சங்கம், ஈழ மாணவர் பொது மன்றம், ஈழப் பெண்கள் முன்னணி போன்றவை பெரிய அளவில் அமைப்பாக்கப் பட்ட மக்கள் திரள்களைக் கொண்ட அமைப்பாகும். 83 மூன்றாம் ஆண்டு இந்திய இராணுவப் பயிற்சிக்கான வாய்ப்பைப் பெற்றுகொள்வதற்காக இந்திய அரசு ஈழ அமைப்புக்களின் பலத்தை நிரூபிக்குமாறு கோரியது. இதனால் ஈ.பி.ஆர்.எல் என்ற இயக்கம் மேற்குறித்த அனைத்து அமைப்புக்களையும் தனது அங்கங்களாகப் பிரகடனம் செய்து வடகிழக்கு எங்கும் சுவரொட்டிகளை ஒட்டியது. துண்டுப்பிரசுரங்களூடாகவும், வெளியீடுகளூடாகவும் பிரச்சாரம் மேற்கொண்டது. இதனால், இந்த அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இலங்கை இராணுவத்தாலும் பொலீசாராலும் தேடித் தேடி அழிக்கப்பட்டனர். அவையெல்லாம் சட்டவிரோத அமைப்புக்களாக மாற்றமடைந்தன. இந்திய உளவு  அமைப்புக்களின் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கைகளாகவே இது கருதப்படுகிறது.

திடீரென சுனாமிபோல் உள்ளீடு செய்த இந்தியத் தலையீட்டிலிருந்து சுதாகரித்துக் கொள்ள நீண்ட நாட்கள் சென்றன.  85 களின் பின்னர் கிராமிய உழைப்பாளர் சங்கம், மாதர் மறுமலர்ச்சிப் பேரணி, தேசிய மாணவர் மன்றம் போன்ற அமைப்புக்கள் வளர்ச்சிபெற்றன. 1986 இல்  தேசிய மாணவர் மன்றம் 10 ஆயிரம் மாணவர்கள் கலந்து  கொண்ட பாதுகாப்பு வலையத்திற்கு எதிரான ஊர்வலம் ஒன்றை நடத்தியது. இதே வேளை புதிய ஜனநாயகக் கட்சி   வடபகுதிக் கூலிவிவசாயிகள் மத்தியில் வெகுஜன வேலைகளை முன்னெடுத்தது. 80 களின் இறுதியில்   இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் வடக்கும் கிழக்கும் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுள் வரப்பட்டது. இந்த நிலையில் புலிகள் சாரா அனைத்து அமைப்புக்களும் தடைசெய்யப்பட்டன அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டது.தமிழ்ப் பேசும் மக்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை  முதலில் அங்கீகரித்த அகில இலங்கை ஆசிரியர் சங்கம் கூட வட கிழக்கிலிருத்து அப்புறப் படுத்தப்பட்டுவிட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பிலிருந்து, மினிபஸ் உரிமையாளர் சங்கம் ஈறாக, கிராமிய சன சமூக நிலையங்கள் வரை புலிகளின் நேரடியான கட்டுப்பாட்டுள் மட்டுமே  இயங்கின.  இந்தச் சூழலைப்  புரிந்துகொண்ட  சர்வதேசத் தன்னார்வ நிறுவனங்கள் சில  புலிகளோடு இணந்து தமது நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இன்று தமிழ்ப் பிரதேசங்கள் வடக்கு மற்றும் கிழக்கு என்ற இரண்டு திறந்வெளிச் சிறைகளாக மாற்றம் பெற்றுள்ளன. இரண்டு பகுதிகளிலுமே சாதாரண சாமானியனின் கொல்லைப்புறம் வரைக்கும் இரணுவமும் துணைக்குழுக்களும் சென்று வருகின்றன. வன்னி முகாம்கள் வெளிப்படையாக அங்க்கீகரிக்கப்பட்ட சிறைச்சாலை. இரண்டு போர்க்குற்றவாளிகளில் ஒருவரை, ஒரு பெரிய மக்கள் கூட்டத்தைத் துடிக்கத் துடிக்கக் கொன்றுபோட்டவர்களில் ஒருவரை தமது தலைவராகப் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குச் சிங்கள அரச பாசிசம் வளர்ந்துள்ளது. வடகிழக்குத் தவிர்ந்த ஏனைய இலங்கையின் பகுதிகளுக்குள் தமிழ் பேசும் மக்கள் ஒருவகையான பயத்துடனேயே வாழ்கிறார்கள். ஆக, இது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது வேறுபட்ட சூழல்.

வினவு :  புலியெதிர்ப்பு அரசியல் குறித்து?

இலங்கை அரசின் பேனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகவும், இலங்கை அரசின் இனவழிப்பிற்கு எதிராகவும் போராடுவதற்கான உரிமையைக் கோரி புலிகளுக்கு எதிராகப் போராடியவர்களும்  போராடி மடிந்தவர்களும் முதலாம் வகையினர். மறுபுறத்தில் புலி எதிர்ப்பு என்பது அரச ஆதரவு என்ற நிலையை எடுத்துக்கொண்டவர்கள் இரண்டாவது வகையினர். புலிகளிற்கு எதிரான போராடும் உரிமையைக் கோரியவர்களுள் பலர் இன்றைய சூழலில் எதிர்ப்பியக்கங்களை ஆரம்ப்பிப்பதற்கான முன்நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

வினவு: புலம் பெயர்ந்து வாழும்ஈழத் தமிழர்களின் வாழ்க்கைச் சூழல் என்ன? ஈழப் போராட்டத்தில் புலம் பெயர் மக்களின் நிலை என்ன?

இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்குப் புலம்பெயரும் புலம்பெயர்ந்த பெரும்பாலனவர்கள் தமது மத்தியதர வர்க்க வாழ்னிலையை உறுதிப்படுத்திக்கொள்ள பெரும் போராட்டம் நடத்துகிறார்கள். சிலவேளைகளில் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி வாழ்வை நிலைப்படுத்திக்கொள்ள முற்பட்டாலும் பெரும்பாலும் 16 மணி நேரம் வரை வேலை செய்யவேண்டிய நிலை காணப்படுகிறது. இதனால் 40 வயதிற்கு உள்ளாகவே முதுமை அடையும் பரிதாபகரமான நிலையே காணப்படுகிறது. தவிர, ஐரோப்பிய நாடுகளுக்கு வருபவர்கள் இங்குள்ள கலாச்சாரத்துடன் இசைவடைய முடியாத மன அழுத்தங்களுடனேயே வாழ்கிறார்கள். இங்கும் இலங்கையின் சாதி அமைப்பு முறையை அப்படியே பேணுகின்ற ஒரு தொடர்பு நிலையே காணப்படுகிறது. தமிழ் சமூகத்தைத் தவிர ஏனைய சமூகங்களுடன் எந்தத் தொடர்பும் அவர்களுக்கு இருப்பதில்லை. அவர்களின் சந்ததியினர் ஐரோப்பியர்களுடன் இணைந்துகொள்ள முற்படுகின்ற வேளையில் ஒருவகையான கலாச்சாரப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தக் கலாச்சாரப் போராட்டத்தில் வெற்றிகொள்வதற்கான ஆயுதமாக புலிகளின் புலம்பெயர் அமைப்புக்கள் அமைகின்றன.

பெற்றோரே தமது பிள்ளைகளை புலிகளின் அமைப்புகளில் இணைந்து செயற்படுவதை ஊக்குவிக்கிறார்கள். இதனால் தமிழர்கள் தமிழர்களோடு இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.

வன்னிப் படுகொலைகளின் போது புலம் பெயர் நாடுகளில் நிகழ்வுற்ற புலியெதிர்ப்புப் போராட்டங்களில் தமிழ் இளைஞர் அமைப்பு (TYO) என்ற புலி ஆதரவு இலைஞர் அணியின் பங்களிப்பே பிரதானமானதாக அமைந்தது. நடந்த ஊர்வலங்களில் ஐரோப்பாவில் பிறந்த இளைஞர்களே அதிக அளவில் பங்காற்றினர்.

தவிர, புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் இலங்கை அரசின் இன்ப்படுகொலையிலிருந்தும் இன அடக்கு முறையில்லிருந்தும் தப்பிவந்தவர்கள். இவர்களின் இலங்கை அரசிற்கு எதிரான உணர்வுகளின் வடிகாலாக அமைந்தது புலிகள் மட்டுமே. இன்று புலிகளற்ற சூழலில் இவர்களின் தலைமைக்கான தேடல் புதிய சூழல். இச்சூழலை இலங்கை அரசும் இந்திய அர்சும் தமக்குச் சாதகமானதாக மாற்ற முற்படுகின்றன என்பது அபாயகரமானது. புலம் பெயர் நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளெல்லாம் அதிகாரவர்க்கம் சார்பானதாகவே அமைந்துள்ளன. சில சிறிய குழுக்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிகள் என்று போராட்டங்களை நடத்துகின்ற போதும் அவர்களுடன் எந்தத் தொடர்பும் அற்ற நிலையிலேயே புலிசார் அமைப்புக்கள் காணப்படுகின்றன.

தமிழர்கள் புலிகளின் அமைப்புக்களூடாக நம்பியிருந்த எல்லா அதிகார வர்க்கம் சார்ந்த அமைப்புக்களாலும் கைவிடப்பட்டதை அவர்கள் உணரும் இன்றைய சூழலைப் புலம் பெயர் முற்போக்கு சக்திகள் பயம்படுத்திக் கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

வெண்மணிச் சரிதம்

31

வெண்மணிச் சரிதம்

vote-012அரவம் திரியவும் அஞ்சிடும் முன்பனி
கறவை மாடும் கண்திறவாத அதிகாலை
சேவல் கூவும் முன்னே
பண்ணையின் கொம்பூதும்.
மடையின் கைநீரள்ளி முகம் கழுவி
வயலுக்கு ஓடவேண்டும் கூலிவிவசாயி.

இரண்டாவது கொம்பொலிக்கு
நெஞ்சுக் கலயம் உடையும் வண்ணம்
கஞ்சிக் கலயத்துடன் ஓடவேண்டும் பெண்கள்

கழனிக்குள் இறங்கியவுடனேயே
“ஓ” வெனும் ஓசையெழுப்பி
உழைக்கத் தொடங்கியதை
நிலவுடமையாளனின் உலை மனதில்
பதிய வேண்டும் உழைக்கும் மக்கள்.

நாற்றங்கால் சேற்றுத் தண்ணீரில்
உச்சிக்கு வந்த கதிரவன் தட்டுப்படும்போதே
சோற்றுக் கலயத்தை தொட அனுமதியுண்டு.
வெறும் வயிற்றில் துடித்து விழும்
வியர்வையின் சூடு பட்டு
வயல் நண்டு துடித்தோடும்.

களைத்த விரல்களுக்கு
பழஞ்சோறு இதமாகும்.
ஓரிரு பருக்கைகளுக்கு
உதடுகள் தடுமாறும்
பட்டமிளகாயும், உப்பும்
பரிதாபப்பட்டு நீராகாரத்தில் விழுந்த சூரியனும்
தொட்டுக்கை.

சூரியனிருக்கும் வரைச் செய்யும்
“கொத்து வேலை” எப்போதாவது,
அரிக்கேன் விளக்கொளியில்
கண்ணெரியும் வேலை எப்பொழுதும்.

நீளும் வேலையின் முடிவில்
நிலவு காய்த்து விடும்…
அல்லி மலர்ந்து
குளம் ஆவியிழந்துவிடும்..

வேலை முடிந்ததும் நேரே
குடிசைக்கு போகவியலாது
பண்ணையார் வீட்டில் பல
’வெட்டிவேலை’ கூப்பிடும்
வரப்பு காயாமல் வைத்தவன் பிள்ளை
தாய்ப்பாலுக்கு ஏங்கி
உதடுகள் காய்ந்து வெடித்திடும்.

படியாள் வீட்டு அடுப்புச் சாம்பலும்
பண்ணை வயலுக்கே சொந்தம்!
கூலி விவசாயி குடிசையிற் படர்ந்த சுரைக்காயும்
பண்ணையார் அடுப்படிக்கே சொந்தம்!
இதைவிடக் கொடுமை,
பண்ணையடிமைகள் முதலிரவும்
பண்ணையார் படுக்கைக்கே சொந்தம்!

இமைகளை நிமிர்த்தி.. எதிர்த்துப் பார்த்தால்
”சவுக்கடியும்”, ”சாணிப்பாலும்” தண்டனை
இதுதான் அன்றைய நிலப்பிரபுத்துவ தஞ்சை.

———-

தஞ்சைத் தரணியெங்கும் தனிப்பெரும் கோயில்கள்…
திருத்தலப் பெருமை பேசும் தடித்தடி சாமிகள்…
எல்லையில்லா சக்தி கொண்டதாய் சொல்லப்படும்,
எந்தவொரு தெய்வமும்
பண்ணையாதிக்க பாதகத்திற்கெதிராய்
புல் ஒன்றையும் புடுங்கக் காணோம்!

விவசாயத் தொழிலாளர்
விளைவித்த உபரியில்
கோயிலும், கூத்தியாளுமாய்
சாமியும் கும்மாளமடித்தது
நிலப்பண்ணைகளோடு.

மண்டையோட்டில் பசியாறும் மகேசனுக்கே
இரவு, பகல் பாராது படியளந்தனர்
அண்டைவெட்டும் விவசாயத் தொழிலாளர்.
இந்த லட்சணத்தில்,
உலகுக்கே படியளக்கிறானாம் ஈசன்!

உண்மையில்.. அவனது உமையம்மையின்
உண்டை கட்டிக்கும்
உழைத்துக் கொட்டுபவன் கூலி விவசாயி.

கட்டிய மனைவிக்கு
சோறுபோட வக்கில்லாதவனுக்கு
கட்டிய கோயில்கள் எத்தனை… எத்தனை…

பொறிதட்டிப் போய் உழைப்பாளர் பிடுங்கிவிட்டால்
எனும் பயத்தில் கட்டிய கதைகள் எத்தனை… எத்தனை…

சிவன் சொத்து குல நாசமாம்- பல
குலங்களை அழித்தே சிவனுக்கு சொத்து!
எனும் உண்மையை விவசாய நிலம் பேசும்!

எல்லோர்க்கும் ஈசனல்ல… இவன்
பொல்லாத பண்ணைகட்கு காவல் நின்று
ஏழை விவசாயிகள் மேல்
ஏவப்பட்ட அல்சேசன்.

கடவுளின் பெயரால்,
இனாம்தார், பிரம்மதேயம் எனும் பெயரில்
ஏக்கர் கணக்கில் நிலங்களை வளைத்து
”கலம் கலமாய்”
கூலி விவசாயி குலங்களை  அறுத்து
பண்ணையடிமைகள் உழைப்பை
வெண்ணையாய் நக்கின
பார்ப்பன நகங்களும், சூத்திர மடங்களும்

வெள்ளம், புயலால்
விளைச்சல் குறைந்தால்,
கூலிவிவசாயி அளக்கும்
வாரம், குத்தகை அளவு குறைந்தால்
கூலியின்றி அவர் வயிற்றிலடித்த மடங்கள்.
கோபுரத்தினின்று அவர் விழுந்து செத்த
சைவக் கொலைகள்!

இசைவான நெல்லளக்காத குற்றத்திற்காக
கசையடிகள் கொடுத்திட்ட காட்சிகளை
காட்டிநிற்கும் சோழமண்டல சிற்பங்கள்!

தஞ்சை வடபகுதி;
தருமபுரம், திருப்பனந்தாள்,
அகோபில சங்கரமடம்,

தஞ்சை தென்பகுதி;
மதுக்கூர், பாப்பன்காடு
சிக்கவலம் ஜமீன்தார்கள்

தஞ்சை நடுப்பகுதி;
வடபாதி மங்கலம், நெடும்பலம்
கோட்டூர், வலிவலம், குன்னியூர்
பூண்டி, உக்கடை, கபிஸ்தலம்

எங்கும் பண்ணையாதிக்கத்தின் கொடும் பலம்.

கபிஸ்தலமும் குன்னியூரும்
காங்கிரசுப் பண்ணைகள்.

வடபாதியும், நெடும்பலமும்
நீதிக்கட்சி பண்ணைகள்.

ஏழை கூலிவிவசாயிகள் சுயமரியாதைக்காக
எந்தத் ’திராவிடமும்’ பேரியக்கம் கண்டாரில்லை,
தாழ்த்தப்பட்ட விவசாய வர்க்கத்திற்காக
’தலித் தம்பிரான்களும்’ ஓரியக்கம் விண்டதில்லை.
எதிர்த்துக் கேட்பாரில்லை…

’பார்ப்பன, சூத்திரப்’ பண்ணையம்
என ஏங்கிக் கிடந்த கழனியெங்கும்
செங்கொடி இயக்கம் துளிர்த்தது!
சேற்றினில் நடுங்கிய கைகளில் ஒரு..
சிவப்புத் திமிர் முளைத்தது,

”அடித்தால் திருப்பி அடி!
ஏண்டி என்றால்.. ஏண்டா எனக் கேள்!
சாதி சொன்னால் மோதி நட!
உழுபவர்க்கே நிலம் சொந்தம்
உழைப்பவர்க்கே அதிகாரம்!”
எனக் கம்யூனிச இயக்கம்
கற்றுக் கொடுத்தது, களத்தில் விளைந்தது.

சுகந்தை என்றும், அமிஞ்சி என்றும்
பள்ளு என்றும், பறை என்றும்
பழிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கத்தை
அதே ஊரில் தோழர் என்று நிமிர வைத்தது.

அகந்தை கொண்ட ஆதிக்க சாதியுணர்வை
அடியறுத்து
விவசாய சங்கமாய் ஒன்றிணைத்தது.

தென்பரை சேர்ந்தது
விதைநெல்லாய் கம்யூனிசம்
தஞ்சைக் கழனியெங்கும்
நடவு செய்தார் சீனிவாசராவ்.

விடுமோ பண்ணைகள்,
அவர் தலைக்கு விலை வைத்தனர்.

அவரோ.. தலைமறைவான போதும்
ஊருக்கு பல தலைகளை உருவாக்கிக் கொண்டே போனார்!

நெற்பயிற் காத்தது
அவர் ரகசிய பயணம்
வரப்பின் நெருஞ்சியும் இளகிடும்
அவர் ராத்திரி கால்தடம்
நீளும் வர்க்கப் போராட்டத்திற்கு
நிலவும் ஒத்துழைத்து
அவரை ஆற்றுப்படுத்திய
அமாவாசைக் கூட்டங்கள்.

களப்பால் குப்பு, தனுஷ்கோடி,
மணலூர் மணியம்மை.. இன்னும்
பெயர்கள் பலவாய் காய்த்தன செந்நெல்.
சங்கையே நெறித்த போதும்
விவசாய சங்கமே உயிரென
காவிரிப்படுகை கனன்று முழங்கின.

வேறுவழியின்றி…
கூலியுயர்வு, கொத்தடிமைத் தடை,
வாடா, போடி, சவுக்கடி, சாணிப்பால் நிறுத்தம்
என பண்ணைகள் கொஞ்சம் பதுங்கின.

சோழநாடு சோறுடைத்து
என்பதென்ன சிறப்பு!
ஆங்கே… கம்யூனிசம்
நிலப்பண்ணைகள் அதிகாரமுடைத்தது
உழைக்கும் வர்க்கத்தின் உயிர்ப்பு!

நேற்று வரை…
தன் நிழல் திரும்பிப் பார்க்கவே
தயங்கி நடந்த சேரிகள்…
பண்ணையை நிமிர்ந்து கேள்வி கேட்பதும்
பணிதல் மறந்து
சுயமரியாதையாய் வாழ்ந்து பார்ப்பதும்…
கூலி உயர்வை விட,
கொதிப்பேறியது ஆண்டைகளுக்கு.

தாழ்த்தப்பட்டவர்
என்பதற்காய் மட்டுமல்ல,
அரைலிட்டர் கூலி
அதிகம் கேட்டாரென்பதற்காய் அல்ல
தம்மை எதிர்க்கும் அரசியல் சக்தியாய் ஆனது கண்டு,
சாதியால் தகர்க்க முடியாத
செங்கொடி அமைப்பாய்..
உழைக்கும் மக்கள் எழுந்தது கண்டு
கலக்கமடைந்தனர் நிலப்பிரபுக்கள்.

வேரோடிய கம்யூனிசத்தின்
போராட்ட அழகோடு
பூத்துக் கிடந்தது வெண்மணி
தீராத  வன்மத்துடன்
அதைத் தீக்கிரையாக்க
தருணம் பார்த்தன பண்ணைகள்.
தோதாக அதன் கால்களுக்கு
செருப்பாய் கிடந்தன
தேசிய, திராவிடக் கட்சிகள்..

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து எட்டு
திசம்பர் இருபத்தைந்தாம் நாள் இரவு
அய்யோ!
ஆம்பல் பூத்த எங்கள் கீழவெண்மணி
சாம்பல் பூத்தது.
இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு
எனும் பண்ணைமிருகம் ஊரில் நுழைந்தது.

முதலில்.. அவன் கண்ணை உறுத்திய
செங்கொடியை வெட்டிச் சாய்த்தான்,
அவன் வர்க்கமடக்கிய
விவசாய சங்கத்தை திட்டித் தீர்த்தான்

”ஊரையே கொளுத்துங்கடா.. வெட்டிச்சாயுங்கடா”…
தீ நாக்கை திசைகளில் சுழட்டினான்.

அவன் வெறிப்பார்வைதனைப் பார்த்து
தெருநாய்கள் குரைப்பற்று ஓடியது.
கூடுகள் அடைந்த பறவைகளோ
குஞ்சுகள் கதற, திசை தேடியது
வேலியோரத்து திசம்பூர் பூ
வெந்து பிணமாய் நாறியது.
அய்யய்யோ… ஏனையில் கிடந்த பிள்ளையின் குரல்
எரிந்து, கருகி அடங்கியது.

தப்பியோட இராமய்யன் குடிசையில்
தஞ்சமடைந்த நாற்பத்தி நான்கு பேரை
வெளியே தாழிட்டு குடிசையோடு கொளுத்தினான்
கோபால கிருஷ்ண நாயுடு.

நெருப்புக்கும் இரக்கம் வந்து
நின்று விடுமோ எனப் பயந்து
மேலும், மேலும் எண்ணையை ஊற்றி
எரிதழல் மூட்டினான்.

எரியும் நெருப்பையும் தாண்டித்
தன் பிள்ளையாவது பிழைக்கட்டும் என
ஒரு தாய் வெளியில் தூக்கி எறிந்தாள் குழந்தையை.
இதயமிழந்த இரிஞ்சூர் கும்பலோ
தப்பியக் குழந்தையை துண்டாய் வெட்டி
எரியும் குடிசையில்  எறிந்து மகிழ்ந்தது.

வர்க்கப் போருக்கு
இனி வாரிசே இல்லையென
திமிரில் சிரித்தான் இரிஞ்சூர் நாயுடு

திரும்பச் சிரித்தது உயர்நீதி!
காரோட்டும் கவுரமான கைகள்
இப்படியொரு காரியத்தை செய்யாதென
விடுதலை செய்து
கொடூரன் கோபால கிருஷ்ண நாயுடுவுக்கு
ஆரத்தி எடுத்தது நீதிமன்றம்.

கூலி உயர்வு கேட்டான் அத்தான்
குண்டடி பட்டுச் செத்தான்… என
வசனம் பேசிய தி.மு.க. அரசும்
வழக்கை அத்தோடு புதைத்தான்.
இந்த அநியாயத்தை

எந்தத் தெய்வமும் கேட்கவில்லை….
கடைசியில்..
இருஞ்சூர் நாயுடு விதிவலியை
நக்சல்பாரியே முடித்தான்.

நெருப்பினில் வேகாத
வெண்மணிக் கனவை…
புதைத்திட வியலாத வர்க்கத்தீயை
வளர்ப்பவர்க்கு மட்டுமே
வெண்மணி சொந்தம்

வெண்மணிச் சமர்க்களத்தில்
போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு
ஏன் அமர்க்களம்?

போராடி உயிர்நீத்த விவசாயிகளுக்கு
வெண்மணி பக்கம் வீரவணக்கம்.
போராடும் விவசாயிகளுக்கு
நந்திகிராமில் துப்பாக்கிச் சூடு.

மிட்டா,மிராசை எதிர்த்தவர்களுக்கு
வெண்மணியில் மலர் வளையம்
டாட்டா கம்பெனியை எதிர்ப்பவர்களுக்கு
மேற்கு வங்கத்தில் சமாதி.

போயசு பண்ணைக்கு
புளுக்கை வேலை செய்யும் இடதும்,வலதும்
இருஞ்சூர் பண்ணையை எதிர்த்துப் போராடிய
தியாகிகள் பெருமையைத் தீண்டுவதா?
போலிக் கம்யூனிஸ்டுகளின் பாழும் முகத்தில்
காறித் துப்புது செங்கொடி!

இறந்தவர் சாதியை
சொந்தம் கொண்டாடும் பல இயக்கங்கள்
ஆனால் …இறந்தவர் லட்சியம்
சொந்தம் கொண்டாட நக்சல்பாரிகள்!

வெண்மணித் தீ அடங்கவில்லை இன்னும்
ஊரையே கொளுத்துகிறது உலகமயம்…
ஊரைவிட்டுத் துரத்துகிறது விவசாயம்..
தப்பித்து தஞ்சமடையும் குடிசைகளை
எரிக்கிறது நகரமயம்…
கைத்தொழில் ஒடித்து, சிறுகடை பிடுங்கி
கொத்தடிமையாக்கும் தனியார் மயம்…
நகரங்கள் தேடி.. நாடுகள் ஓடி
இனியும் தப்பிப்பிழைக்க வழியின்றி
விவசாயிகளை எரிக்கிறது தாராளமயம்..

இருஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு
இன்னும் சாகவில்லை..
இருங்காட்டுக் கோட்டையில்
ஹூண்டாயாய் சிரிக்கிறான்..

ஆயிரம் வேலிகள் வளைத்து
டாட்டாவாய் நெறிக்கிறான்..

இனாம்தார் அம்பானியாய்
எல்லா பக்கமும் அறுக்கிறான்..

கோக், பெப்சியாய்
நம் குளம், ஆறுகள் குடிக்கிறான்..

குடிசையில் படர்ந்த பூசணி அல்ல..
அதன் விதையும் எனக்குச் சொந்தமென
மான்சாண்டோவாக பறிக்குறான்..

இனி தப்பிக்க வழியில்லை..
என்ன செய்யப் போகிறீர்கள்?

கேட்கிறார்கள் வெண்மணித் தியாகிகள்

வர்க்கப் போராட்டத்தின் வாரிசுகளே
பதில் சொல்லுங்கள்!

–  துரை.சண்முகம்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். இன் பித்தலாட்டம்!

Puja_December-09-1 துரோகம்! பதவி சுகத்துக்காக நடந்துள்ள அப்பட்டமான துரோகம்! தமிழகத்தின் ஐந்து தென் மாவட்ட  மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை நீரில், தமிழகத்தின் நியாயவுரிமையைக் காவு கொடுத்து விட்டார், “தமிழினத் தலைவர்’கருணாநிதி.

முல்லைப் பெரியாறு அணையில் மெல்லிய அதிர்வு ஏற்பட்டதைப் பூதாகரமாக்கிப் பீதியூட்டி, 1979 முதல் கடந்த 30 ஆண்டுகளாக பெரியாறு நீரில், தமிழகத்தின் நியாயவுரிமையை கேரளம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக இரு மாநில அரசுகளும் தொடுத்த வழக்குகள் 1998- இல் எடுத்துக் கொள்ளப்பட்டு, எட்டாண்டு இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதி மன்றம் கடந்த 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது.

அத்தீர்ப்பை ஏற்க மறுத்து, முடக்கும் வகையில் 15.3.2006 அன்று கேரள அரசு புதிய சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்தது. இதை எதிர்த்து மார்ச் 2006- இல் உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்தது. அதன் பிறகு, உச்சநீதி மன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யவேண்டுமென்று கேரள அரசு மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகளின் விசாரணை முடிவுக்கு வரும் நிலையில், இந்த வழக்குகளை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்ற,  உச்சநீதி மன்றம் கடந்த நவம்பர் 10-ஆம் தேதியன்று உத்தரவிட்டுள்ளது.

கேரள அரசின் சட்டத் திருத்தம் செல்லுமா என்ற வழக்கில், ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கையும் சேர்த்து, பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கும் உரிமைக்கு உச்சநீதி மன்றம் வேட்டு வைத்துவிட்டது. முப்பதாண்டு காலப் போராட்டத்தை, உச்சநீதி மன்ற உத்தரவு இப்போது மறுபடியும் ஆரம்ப நிலைக்கே கொண்டு வந்துவிட்டது. முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரள அரசு, மத்தியிலுள்ள காங்கிரசு அரசு, உச்சநீதி மன்றம் ஆகிய மூன்றும் ஓரணியில் நின்று தமிழகத்தின் நியாயவுரிமைக்கு அநீதியிழைத்து வருகின்றன. இத்தனைக்கும் பிறகும் அமைதி காக்கிறார், கருணாநிதி.

வழக்குகள் விசாரணையில் உள்ளபோதே, முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக ஆய்வு செய்ய, கேரள அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து மதுரையில் நவம்பர் முதல் நாளன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார் கருணாநிதி. உடனே, மைய தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவின் அலுவலகங்களில் “மையப் புலனாய்வுத் துறை சோதனை’என்ற நாடகத்தை காங்கிரசு எஜமானர்கள் ஏவி விட்டனர். அரண்டு போன கருணாநிதி, முல்லைப் பெரியாறு தொடர்பான மதுரை கூட்டத்தையே ரத்து செய்துவிட்டார். இதன் மூலம், தனது சரணாகதி சமிக்ஞையை டெல்லி எஜமானர்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

கேரள அரசு புதிதாகச் சட்டம் போட்டதை எதிர்த்தும், மைய அரசின் வஞ்சகத்தை எதிர்த்தும் எதுவும் செய்யாத கருணாநிதி, பிரச்சினையை இப்போது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைக் கண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இப்போது மீண்டும் இழுத்தடிப்புக்கான உத்தரவு வந்ததும், “உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படும் கேரள முதல்வர் அளவுக்கு எனக்குத் தைரியம் இல்லை”என்று அறிக்கை வெளியிடுகிறார்.

நவம்பர் 10- ஆம் நாளன்று உச்சநீதி மன்றத்தில் இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாக, தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் பராசரணிடம் “”இந்த உத்தரவை ஏற்றுக் கொள்கிறீர்களா?” என்று நீதிபதிகள் கேட்டபோது, அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். பின்னர், மதியம் மீண்டும் நீதிமன்றம் கூடியபோது, உத்தரவை ஏற்பதாக அறிவித்திருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? அவர் தன்னிச்சையாக இப்படி முடிவை மாற்றிக் கொள்ள முடியுமா? அல்லது, கருணாநிதியின் ஒப்புதல் இல்லாமல் இப்படி நடந்திருக்கத்தான் முடியுமா? இப்போது ஒப்பாரி வைத்து அறிக்கை வெளியிடும் கருணாநிதி, அன்று இந்த உத்தரவை நாங்கள் ஏற்கவில்லை என்று அறிவிக்க வேண்டியதுதானே! அதைவிட்டு இப்போது கண்ணீர் அறிக்கை வெளியிடுவது யாரை ஏமாற்ற?

இந்தத் துரோகம் கருணாநிதியோடு முடிந்துவிடவில்லை. 1980- இல் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக போலீசிடம் இருந்த முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புப் பொறுப்பை கேரளப் போலீசுக்குத் தாரை வார்த்தார். 1980 -லிருந்தே முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள் – பொறியாளர்களைத் தாக்கியும், கைது செய்தும், வாகனங்களைப் பறிமுதல் செய்தும் வழக்கு போட்டும் கேரள அரசு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தது. இருப்பினும் எம்.ஜி.ஆரும் அதன் பிறகு ஜெயலலிதா, கருணாநிதியும் இவற்றுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குறைந்தபட்சம் கேரள அரசுக்குக் கண்டனம்கூடத் தெரிவிக்காமல், தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோகமிழைத்தே வந்துள்ளனர். பெரியாறு அணையைப் பராமரித்து இயக்குவது, படகு விடுவது, அணைக்கான பாதைகளைப் பயன்படுத்துவது –எனப் பல உரிமைகளை கேரளத்துக்குத் தாரை வார்த்திருக்கின்றனர். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றத்தில் கேரள அரசின் வழக்குரைஞர் 31 முறை வாய்தா கேட்டு இழுத்தடித்த போதிலும், தமிழக ஆட்சியாளர்கள் அதை எதிர்த்து வாயே திறக்கவில்லை.

இப்போது கருணாநிதியின் துரோகம் அம்பலமானதும், ஏதோ அவரால்தான் தமிழகத்தின் உரிமை பறிபோய் விட்டது போலக் கூப்பாடு போடுகிறார் ஜெயலலிதா. கேரள தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்ட தொகுதிகளில் “முல்லைப் பெரியாறில் நீரைத் தேக்கவிட மாட்டோம்!” என்று வாக்குறுதி அளித்து ஓட்டுப் பொறுக்கிவிட்டு, இப்போது தமிழகத்தின் உரிமைக்காகப் போராடுவதாகப் பாசாங்கு செய்கிறார். முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கலாம் என்று உச்சநீதி மன்றம் 27.2.2006 -இல் தீர்ப்பளித்தபோது ஆட்சியிலிருந்தவர் ஜெயலலிதாதான். “அப்போது கோடைகாலமாக இருந்ததால் தீர்ப்பை செயல்படுத்த முடியவில்லை”என்று இப்போது தனது துரோகத்துக்குப் புதுவிளக்கம் அளித்துக் கொண்டிருக்கிறார்.

“பதவி பேரத்தில் பாழான தமிழக உரிமைகள்” என்று கருணாநிதியை மட்டும் குறிவைத்து தாக்கி, தினமணியில் கட்டுரை எழுதுகிறார், பழ.நெடுமாறன். “தி.மு.க. அரசு தேவையில்லாமல் மைய அரசிடம் பிரச்சினையை எழுப்புகிறது. அண்டை மாநிலங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தோற்றுவிப்பதை தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்த வேண்டும்” என்று கருணாநிதியைக் குறிவைத்துத் தாக்குகிறார், வலது கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளரான பரதன். “கருணாநிதியின் துரோகத்தால் தமிழகம் பாலைவனமாக மாறும்” என்று ஜெயலலிதாவின் பின்னே நின்று கொண்டு சீறுகிறார், வைகோ.

கருணாநிதி மட்டுமல்ல; அவருக்கு முன்பிருந்தே, எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆட்சிகளில் கேரள அரசுக்கும் மைய அரசுக்கும் துணைநின்று தமிழகத்தின் நியாயவுரிமை பறிகொடுக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை இவர்கள் திட்டமிட்டே மறைக்கின்றனர். பெரியாறு அணை பற்றி செய்திகள் அடிபடும்போது, பரபரப்பாக அறிக்கை வெளியிடுவதும், அடையாள எதிர்ப்புப் போராட்டம் நடத்துவதும், அதன் பிறகு வாய்மூடிக் கிடப்பதுமாக வைகோ வகையறாக்கள் சூரத்தனம் காட்டுகின்றன.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதியின் துரோகம் ஒரு பங்கு என்றால் ஒன்பது பங்கு துரோகத்தை புரட்சி பேசும் சி.பி.எம். கட்சி செய்து கொண்டிருக்கிறது. “உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!” என்று சர்வதேசியம் பேசி சவடால் அடிக்கும் இக்கட்சி, ஓட்டுக்காக முதலாளித்துவ இனவெறியைத் தூண்டிவிட்டு குளிர்காய்ந்து கொண்டிருக்கிறது. கேரள மக்களுக்காக, தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்து அனுப்பும் உணவு தானியங்கள்-காய்கறிகள் முதலானவற்றுக்குத் தேவையான நீரின் அளவு 511 டி.எம்.சி.யாகும். அந்த அளவுக்கான நீரையாவது தமிழகத்துக்குத் தரவேண்டும் என்ற நியாய உணர்வு கூட அக்கட்சியிடம் இல்லை. நிபுணர்கள் ஆய்வு செய்து அணை வலுவாக உள்ளது என்று அறிவித்துள்ள போதிலும், பெரியாறு அணையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதாக திரித்துச் சொல்லி பயபீதியூட்டியும், குறுகிய தேசிய இனவெறியைக் கிளப்பிவிட்டும், புதிய அணை கட்டும் திட்டத்தைச் செயல்படுத்தி இடுக்கி அணைக்கு நீரைக் கொண்டு செல்ல கேரள “இடதுசாரி’அரசு விழைகிறது. இதன்மூலம் அணையைத் தனது பொறுப்பில் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் ஐந்து தென்மாவட்டங்களைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது.

இவ்வளவுக்குப் பின்னரும், இரு மாநில அரசுகளும் இணக்கமாகப் பேசித் தீர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மையத் தலைமை உபதேசம் செய்து, தமிழகத்தின் நியாயவுரிமையை மறுக்கிறது. “”முல்லைப் பெரியாறு பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேட தமிழக அரசியல்வாதிகள் கீழ்த்தரமாக முயற்சிக்கிறார்கள்” என்று  சாமியாடுகிறார் கேரள போலி கம்யூனிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். தமிழகத்தின் நியாயவுரிமையைக் கோருவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாம்! கேரள “இடதுசாரி’அரசின் அடாவடித்தனத்தை எதிர்க்க முன்வராத சி.பி.எம்.கட்சி,  தமிழகத்தில் விவசாயிகளின் உரிமைக்காக விவசாய சங்கம் கட்டவும், போராடவும் ஏதாவது அருகதை இருக்கிறதா? தமிழகத்தின் நியாயவுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து சி.பி.எம்.கட்சியின் தமிழ் மாநிலக்குழு எந்தப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. கேரள “இடதுசாரி’அரசின் அடாவடித்தனத்தை எதிர்த்து கட்சியின் மத்தியக் கமிட்டியில் வாதிட்டதுமில்லை. இத்துரோகக் கூட்டத்தை அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்தாமல், பெரியாறு நீரில் தமிழகத்தின் நியாயவுரிமையைச் சாதிக்க முடியுமா? ஆனால், கருணாநிதி, ஜெயலலிதா மட்டுமல்ல; எல்லா ஓட்டுக் கட்சிகளும் தேர்தல் கூட்டணிக்காக சி.பி.எம். துரோகக் கூட்டத்தை எதிர்த்து வாயே திறப்பதில்லை. கருணாநிதியின் துரோகத்தைச் சாடும் பழ.நெடுமாறன் வகையறாக்கள், ஜெயலலிதாவையோ சி.பி.எம். துரோகத்தையோ சாடுவதுமில்லை.

நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த ஒரு மாநில அரசு மறுக்கும் போது, மைய அரசு அம்மாநில அரசு மீது இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இதை மைய அரசு செய்யாத போது, மைய அரசின் எல்லா அதிகாரங்களையும் ஏற்க மறுப்பதற்கு தமிழகத்துக்கு எல்லாவித நியாயமும் உரிமையும் உண்டு. இந்த நியாயத்தையும் உரிமையையும் உறுதி செய்வதுதான் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையாகும். இதுவொன்றுதான், இரு வேறு தேசிய இனங்களைக் கொண்ட அண்டை மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான சரியான வழியுமாகும்.

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது, நிரந்தர நீண்டகாலத் தீர்வாக அமையும் ஒரு ஆயுதம். அதேசமயம், தற்போதைய உடனடிப் பணியாக கேரள மாநிலத்துக்கு எதிரான பொருளாதார முற்றுகை, பரம்பிகுளம் — ஆழியாறு – மண்ணாறு போன்ற ஆறுகள் வழியே கேரளத்துக்குச் செல்லும் தண்ணீரை மறுப்பது, சபரிமலை மற்றும் கேரளத்துக்குச் செல்லும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தை மறிப்பது போன்ற நடவடிக்கைகளை தமிழக மக்கள் மேற்கொள்ள வேண்டும். கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல தமிழகத்திலிருந்து கேரளம் அடையும் பொருளாதார உதவியும் முக்கியம் என்பதை அம்மாநில மக்களுக்கு உணர்த்தியே தீர வேண்டும். இது இனவெறியூட்டும் செயல் அல்ல. மாறாக, தமிழகத்தின் நியாயவுரிமையை மறுக்கும் இனவெறி அடாவடித்தனத்துக்குப் பாடம் புகட்டும் செயல்தான்.

நாற்காலி சுகத்திற்காக “தேசிய ஒருமைப்பாடு’ நீரோட்டத்தில் சங்கமித்துவிட்ட தமிழக ஓட்டுக்கட்சி துரோகிகளும், அவற்றின் பின்னே வால்பிடித்துச் செல்லும் தமிழினப் பிழைப்புவாத அமைப்புகளும் இத்தகைய போராட்டங்களை முன்னெடுக்காது. இத்துரோகக் கும்பலைப் புறக்கணித்துவிட்டு, தமிழகத்தின் நியாயவுரிமையை மீட்க, புரட்சிகர-ஜனநாயக சக்திகளின் தலைமையில் அணிதிரண்டு போராட தமிழக மக்கள் முன்வர வேண்டும்.

______________________________________________

புதிய ஜனநாயகம், டிசம்பர்’ 2009
______________________________________________

தோழர் ஸ்டாலின் 130- வது பிறந்தநாள் சிறப்பு கவிதைகள்.

22

தோழர் ஸ்டாலினைப் பற்றி பேசுகிறேன்!

vote-012ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
ஒரு ரூபா புழுத்த அரிசிக்கு
ஏங்கி இரைஞ்சும் வாழ்வை வியந்தோதும்
பார்ப்பன பனித்திரையை விலக்கி,

ஓங்கி முதலாளித்துவத்தின் முகத்தில் அறைந்து
உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவி,
கம்யூனிச பேரடியால் உண்மையில் உலகளந்த
தோழர் ஸ்டாலினின் ஆளுமை கண்டு
சிலிர்க்கிறது மார்கழி!

கடும் புயலாலும் கடல் சீற்றத்தாலும்
உலுக்கும் பூகம்பத்தாலும், பொசுக்கும் தீக்கிரையாலும்
எந்தச் சக்தியாலும்…
பெயர்க்க முடியாதது முதலாளித்துவம்
என்றிருந்த ஏகாதிபத்திய இறுமாப்பை,

கடும் உழைப்பால், பாட்டாளிவர்க்க அமைப்பால்
மார்க்சியத் துடிப்பால், லெனினிய நடப்பால்
தன்னிரக்கம் பாராத வாழ்வால்… தகர்த்தெறிந்த
ஸ்டாலின் இயக்கம் கண்டு
வியந்துபோய் இமைக்க  மறந்த
அண்டத்தின் விழிகளாய்…
அந்த சூரியனும், சந்திரனும்!

பற்களை இழந்த உள்நாட்டு நரிகள்…
சொற்களை இழந்த சுரண்டல் எழுத்தாளர்கள்…
இறக்கைகள் முறிந்த ஏகாதிபத்திய வல்லூறுகள்…
ஒப்பனை கலைந்த முதலாளித்துவப் பொய்கள்…
ரசிய புது செருப்பால் அடிவாங்கிய ஆரிய இட்லர்…
இத்தனை பகையும் சுற்றித்திரிந்தும்…
ஏகாதிபத்தியம் திராவகம் தெளித்தும்
கற்களை பிளந்தெழும் பசுந்தளிர்போல-எதிரியின்
கண்ணைப் பறிக்க அரும்பியது சோசலிசம்.

ஸ்டாலின் தலைமையில்
பாட்டாளிவர்க்க ரசியாவின் வளர்ச்சியைப் பார்த்து
ஆச்சரியத்தில் இயற்கை உயர்த்திய புருவங்களாய்
அழகிய மலைத்தொடர்கள்!

எதையும் தாங்கும் நெஞ்சழுத்தம்…
அலட்டிக்கொள்ளாத ஆழம்…
அலை, அலையாய் புரட்சிகர பிடிவாதம்…
ஏறி அடிக்கையில் எதிரியை மிச்சம் வைக்காத போர்க்குணம்…
தனக்கென துரும்பளவும் வாழாத தூய்மை…
நான் கடலைப்பற்றி பேசவில்லை…
தோழர் ஸ்டாலினைப் பற்றி பேசுகிறேன்!

பேசிக்கொண்டே போக
“ஸ்டாலின்” என்பது வெறும் பேச்சல்லவே…
முதலாளித்துவ சுரண்டலுக்கெதிரான வீச்சு!
அந்த… வீச்சோடு கொண்டாடுவோம்
ஸ்டாலின் பிறந்தநாளை.

தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடலாம்?

தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை
எப்படிக் கொண்டாடலாம்?
யோசனையோடு நடந்து போனேன்,

இனிப்பு வாங்கி
இயன்றவரை கொடுக்கலாமா…

எஸ்.எம்.எஸ். அனுப்பி
நண்பர்களிடம் பகிரலாமா…

புத்தாடை உடுத்தி
சேர்ந்துண்டு மகிழலாமா…

ஒரு இசை…
ஒரு கவிதை…
ஒரு நிகழ்ச்சி…

ஏதாவது ஒன்று என்ற எனது நினைவுகளைக் கலைத்தது
கூவக்கரையோரம் பிய்த்தெறியப்பட்ட
குடிசைப் பகுதியிலிருந்து ஒரு குரல்;

“டேய் உழைக்காத உங்களுக்கு இவ்ளோன்னா,
எங்களுக்கு எவ்ளோ இருக்கும்.
அடிச்சா புடுங்குறீங்க… இப்படியே போயிடாது
உங்களுக்கு இருக்குடா ஒருநாள் வேட்டு!”

அடக்கும் லத்திக்கம்பை விலக்கித் தெறித்தது
அந்தப் பெண்ணின் குரல்

இப்போது கற்பனை குறுகுறுத்தது.
ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பது
அந்தப் பெண்ணின் எதிர்ப்பார்ப்பில்
மண்டையில் உரைத்தது.

தோழர் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்?

தோழர் ஸ்டாலினை எனக்குப் பிடிக்கும்
என்பது சரிதான்,
ஆனால் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்?

படிக்கும் மாணவப் பருவத்தில்
மதம்பிடிக்கும் கருத்துக்களை
நீங்கள் வெறுப்பவரா…

துடிக்கும் இளமையின் காதலை
நீங்கள்
போராடும் தொழிலாளி வர்க்கத்திடம் போய் சேர்ப்பவரா…

கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி
தன்னலம், தன்குடும்பம் என நெருக்கும்
தாய், தந்தை கண்ணீரையும் உடைக்கும்
சமூகபாசம் படைக்கும் நபரா நீங்கள்…

சாதியெனும் பரம்பரை அழுக்கை
முதலில்
தன்முதுகில் சுரண்டி எறிய
சம்மதிப்பவரா நீங்கள்…

பாட்டாளிவர்க்க விடுதலை லட்சியத்திற்காக
கூடவே வந்த பலர் பாதிவழி போனாலும்…
“ஊர்வம்பு நமக்கெதுக்கு, நம் வழியைப் பார்ப்போம்” என
சொல்லிப்பார்த்து உறவுகள் தள்ளிப்போனாலும்…
எதிர்ப்பின் ஏளனம், துரோகத்தின் கவர்ச்சி
உரிய வர்க்கமே இன்னும் உணராமல்… தனியாய் ஆனாலும்
உலகத்தின் மரியாதையே
தன் கையிலெடுப்பதாய் நினைத்து…
உழைக்கும் மக்களின் உயரிய வாழ்வுக்காய்
கம்யூனிச இதயமாய் துடித்து…
ஓயாமல் போராடும் மனிதரா நீங்கள்…

உங்களைத்தான்
அட! உங்களைத்தான்
தோழர் ஸ்டாலினுக்குப் பிடிக்கும்!

-துரை.சண்முகம்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !

தோழர் ஸ்டாலின்
உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம்

டிச 21, தோழர் ஸ்டாலினின் 130 வது பிறந்த நாள்.

தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம்.

ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் எ
ன்று கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையிலே குறிப்பிட்டாரே மார்க்ஸ்,
உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை,
அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் – ஸ்டாலின்.

ஏகாதிபத்திய மிருகங்களும், முதலாளித்துவக் கிருமிகளும் ஊடுருவ முடியாத
கம்யூனிசத்தின் இரும்புக் கோட்டை
முதலாளித்துவ அறிவு ஜீவிகளுக்கு அரக்கன்,
உலகப் பாட்டாளி வர்க்கத்துக்குக் ‘காவல்தெய்வம்’
………………..
எதிரிகளிடம் வெறுப்பையும் மக்களிடம் பெருமிதத்தையும்
ஒரே நேரத்தில் தோற்றுவித்த ஒரு பெயர் உண்டென்றால்
அந்தப் பெயர் – ஸ்டாலின்.
………………..
பாட்டாளி வர்க்கத் தலைவர்களிலேயே அதிகம் தூற்றப்படுபவர் அவர்தான்.
அவரை வெல்ல முயற்சி செய்தார்கள்,
முடியாததால் கொல்ல முயற்சி செய்தார்கள்.

பேனைப் பெருமாளாக்கி அவரைத் தூற்றினார்கள்.

பொய்களை ஆதாரமாகக் கொண்டே அவருக்கு எதிராக
ஆயிரக்கணக்கான நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்கள்.

பிறகு அந்த நூல்களின் எண்ணிக்கையை ஆதாரமாகக் கொண்டே
அந்தப் பொய்களையெல்லாம் உண்மை என்று சாதித்தார்கள்.

அவர் மறைந்து ஆண்டுகள் பல கடந்த போதிலும்,
எதிரிகளின் வெறி இன்னும் அடங்கவில்லை.
………………..
வரலாற்றில் கொடிய மக்கள் விரோதிகளுக்கும்
வில்லன்களுக்கும் கூட சலுகை வழங்கி

அவர்களுடைய தவறுகளை அனுதாபத்துடன் பரிசீலிக்கும்
அறிவுஜீவிகளின் மூளைகள்,

ஸ்டாலின் என்ற சொல்லைக் கேட்டவுடன் மட்டும்
முறுக்கிக் கொண்டு வெறுப்பைக் கக்குகின்றன.

நரமாமிசம் தின்னும் காட்டுமிராண்டியைப் போல அவரைச் சித்தரிக்கின்றன.
………………..
மார்க்சியம் லெனினியம் மா சே துங் சிந்தனை அனைத்தையும் மெச்சுவதாகக் கூறிக்கொண்டே
கட்சிக்குள் வர மறுக்கும் அறிவாளிகள்,
தங்களை நசுக்கிப் பிழியும் எந்திரமாகக் கட்சியைக் கருதுபவர்கள்,
கட்டுப்பாடுக்கு அஞ்சுபவர்கள்,
ஜனநாயகம் என்ற பெயரில்
சாதாரண தொழிலாளிகளின் உத்தரவுக்கெல்லாம் நாம் கட்டுப்படவேண்டியிருக்குமே என்று அஞ்சுபவர்கள் –

இவர்கள் யாருக்கும் ஸ்டாலினைப் பிடிப்பதில்லை.
………………..
கம்யூனிஸ்டு முன்முயற்சி
கம்யூனிஸ்டு வேலைத்திறன்
கம்யூனிஸ்டு கட்டுப்பாடு
கம்யூனிஸ்டு ஒழுக்கம்
கம்யூனிஸ்டு தியாகம்
என்ற சொற்களுக்கான இலக்கணத்தையெல்லாம்
அவருடைய தலைமையின் கீழ்தான்
இலட்சக்கணக்கான ரசிய போல்ஷ்விக்குகள் உருவாக்கிக் காட்டினார்கள்.
………………..
அவருடைய தலைமையின் கீழ் சோசலிசத்தை
கட்டியெழுப்புவதற்காகக் குனிந்த ரசியா,
நிமிர்ந்தபோது இட்லரின் குண்டுகளை நெஞ்சில் வாங்கிக்கொண்டது.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் இரண்டு நூற்றாண்டுகள்
நடந்து எட்டிய முன்னேற்றத்தை,
இருபதே ஆண்டுகளில் பறந்து எட்டியது.

200 இலட்சம் ரசிய மக்களை இட்லரின் போர்வெறிக்குப் பலி கொடுத்து
உலக மக்களையே பாசிசத்திலிருந்து காப்பாற்றியது.
………………..
மனிதகுலத்தின் ஒப்புயர்வற்ற இந்த வரலாற்றுப் பெருமைகள் அனைத்துக்கும்
உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் ஒரு கம்யூனிஸ்டும்
இன்று நெஞ்சு நிமிர்த்தி உரிமை கொண்டாட முடிகிறதென்றால்,
அந்த கவுரவத்தை நமக்கு வழங்கியவர் தோழர் ஸ்டாலின்.
………………..
வரலாற்றில் மனித குலம் கண்டிராத உழைப்பு,
ஞானியர்களின் சிந்தனைக்கும் எட்டியிருக்க முடியாத அறம்,
கவிஞர்கள் கற்பனையாலும் தீண்ட முடியாத தியாகம்
இவையனைத்தையும் நம் கண்முன்னே நிதர்சனமாக்கியது சோசலிச ரசியா.

அந்த சோசலிச ரசியாவின் புதல்வனும் தந்தையும் – தோழர் ஸ்டாலின்.
அதனால்தான் அவர் கம்யூனிசத்தின் குறியீடு.
அதனால்தான் அவர் ஏகாதிபத்தியத்தின் குறியிலக்கு.
………………..
கம்யூனிசத்தை அது பிறந்த மண்ணிலேயே புதைத்து விட்டதாக களி வெறி கொண்டு பிதற்றிய முதலாளித்துவம்,
இதோ மரணப் படுக்கையில் கிடக்கிறது.
அதன் மலமும் மூத்திரமும் பரப்பும் வீச்சத்தால்
மனித சமூகமே மூச்சுத் திணறுகிறது.

இருப்பினும் சாக மறுக்கும் முதலாளித்துவம், நம்மைக் கொல்கிறது.

பட்டினிச்சாவுகள்
தற்கொலைகள்
கொலைகள்
பயங்கரவாதத் தாக்குதல்கள்
ஆக்கிரமிப்புகள்
நரவேட்டைகள்
அனைத்தும் ஒரே காரணம் – முதலாளித்துவம்.

மரணப்படுக்கையில் கிடக்கும் முதலாளித்துவம்,
தன்னுடைய மரணத்தைத் தள்ளிப்போடுவதற்காகவே
மனிதகுலத்தை நசிவுக்கும் அழிவுக்கும் தள்ளும் முதலாளித்துவம்!
………………..
முதலாளித்துவம் வென்று விட்டதாகவும்,
கம்யூனிசத்தைக் கொன்றுவிட்டதாகவும்

செய்யப்பட்ட பிரகடனங்கள் பொய் என்று
நாம் நடைமுறையில் நிரூபிக்கும் வரை,

அதாவது முதலாளித்துவத்தை அதற்குரிய சவக்குழிக்குள் இறக்கி
உப்பை அள்ளிப் போடும் வரை,

கம்யூனிசம் செத்துவிட்டதாக
அதன் வாயிலிருந்து ஒரு முனகலாவது கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.
………………..
கம்யூனிசம் வெல்லும்வரை முதலாளித்துவம் கொல்லும்.
முதலாளித்துவ லாபவெறியின் கோரதாண்டவத்தை,
பாசிசம் உலகமக்கள் மீது தொடுத்த ஆக்கிரமிப்புப் போரை,
கம்யூனிசத்தின் வெற்றியின் மூலம்தான் முறியடித்தார் தோழர் ஸ்டாலின்.

பாசிசம் தோற்றதனால் கம்யூனிசம் பிழைத்துவிடவில்லை.
மாறாக, கம்யூனிசம் வென்றதனால்தான் பாசிசம் தோற்றது.
அந்தக் கம்யூனிச வெற்றியின் சின்னம் தோழர் ஸ்டாலின்.
………………..
முதலாளித்துவத்தைக் கொன்று புதைத்த மண்ணில்,
தோழர் ஸ்டாலினின் புகழை ஒரு மலர்ச்செடியாய் நாம் நடுவோம்.
அதற்கு முன், அவர் நினைவு தரும் உத்வேகத்தால்
முதலாளித்துவத்தைக் கொன்று புதைப்போம்!

-மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

“தோழர் ஸ்டாலின் – வெல்ல முடியாத சகாப்தம்”

இங்கே கடல், நிலம், மலை….மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படும் !!

20

கடல் மலை விற்பனைக்கு
vote-012விவசாய நிலங்களோ, குடியிருப்பு நிலங்களோ மக்களிடம் இருப்பதை இன்றைய அரசுகள் விரும்புவதில்லை. காரணம் பன்னாட்டு ஏக போக நிறுவனங்களுக்கு அடிமைச் சேவகம் செய்கிற இந்த வியாபாரிகள், கூலிக் காசுக்காக மக்களை நிலங்களில் இருந்து பிரித்து வீசுகிறார்கள். இன்றைய இந்தியாவின் மக்கள் விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை, நோய்க்கு தரமான மருத்துவமின்மை, ஆரம்பக்கல்வி மறுக்கப்படுதல், வேலையிழத்தல் என ஏராளமான அடிப்படைப் பிரச்சனைகளைச் சந்தித்தாலும் இன்றைய தினத்தில் காலம் காலமாக வாழ்ந்த நிலங்களை அவர்கள் பறி கொடுத்து விட்டு எங்கோ அரசு கொடுக்கும் தரிசு நிலங்களில் குடிசை போட்டு வாழும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

சமீபத்தில் மழைக்காலம் தொடரும் என்ற எண்ணத்தில் சென்னை நகரம் முழுக்க ஆயிரக்கணக்கான குடிசைப் பகுதி மக்களை கூவக்கரையோரங்களில் இருந்து இரவோடு இரவாக அப்புறப்படுத்தி செம்மஞ்சேரிக்கு அனுப்பியிருக்கிறது அரசு. அந்த இரவில் சாலையோரத்தில் அமர்ந்திர்ந்த ஒரு குடிசை வாசியிடம் பேசிய போது அவர் சொன்னார் “ சார் நாங்க மொதல்ல கே.கே. நகர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பக்கம் குடியிருந்தோம். அங்கே எங்க குடிசை எல்லாம் திடீரென ஒரு நாள் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அரசாங்க அதிகாரிங்க எங்களை அங்கே மீண்டும் குடியேற அனுமதிக்கவில்லை. நாங்க அங்கிருந்து இங்கே வந்து குடியேறினோம். (பச்சையப்பன் கல்லூரிக்கு பின்பக்கம் உள்ள கூவக் கரையோரம்) “ என்று சொன்னார். கே.கே. நகரில் இருந்து இந்த ஏழைகள் இடம்பெயர்ந்து கிட்டத்தட்ட நான்காண்டுகாலம் ஆகிவிட்ட நிலையில், இவர்கள் குடியிருந்த கே.கே.நகர் பகுதியில் பிரமாண்ட அடுக்குமாடி தனியார் குடியிருப்புகள் புதிதாக முளைத்திருக்கின்றன.

சென்னை ஆயிரம்விளக்கில் இருக்கிறது அப்பல்லோ மருத்துவமனை; கோடீஸ்வர நோயாளிகள் சிகிட்சை பெற்றுக் கொள்ளும் உயர் தர மருத்துவமனை. சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ சமீபகாலத்தில் சந்திக்கும் பெரிய பிரச்சனை டிராபிக் நெருக்கடி அகலமில்லாத சாலை, முண்டியடிக்கும் வாகனங்கள் என அப்பல்லோ திணறிப் போக அவர்களின் கண்ணுக்குத் தெரிந்தது அப்பல்லோவின் அழகை தொல்லைப்படுத்தும் விதமாக ஓடிக் கொண்டிருக்கும் கூவமும் அதை அண்டி வாழும் ஏழைகளும்தான். ஒரே நாளில் மாநகராட்சி அதிகாரிகள் வந்தார்கள் அவர்களை அப்புறப்ப்டுத்தினார்கள். இப்போது அந்தக் கூவத்தின் மேல் பகுதியை மட்டும் நீளமாக மூடி அதை பார்க்கிங் பகுதியாக விஸ்தரித்திருக்கிறார்கள். என்பதோடு இடது பக்க குடிசைப்பகுதியை ஒரு குட்டி பூங்காவாக மாற்றி அதையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். இப்போது அந்த இடம் ஏழைகள் நுழைய முடியாத எழில் மிகு சென்னையாக இருக்கிறது.

அரசு புறம்போக்கு நிலங்கள் என்பது ஒரு காலத்தில் ஏழை மக்களின் நிலங்களாக இருந்தன. அவர்கள் தங்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப ஒரு குடிசையைப் போட்டு அங்கு வாழ்வார்கள். ஆனால் இப்போது அரசு புறம்போக்கு நிலம் என்பது தனியார் முதலாளிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள். அரசியல்வாதிகள், ரௌடிகள், ஆகியோரின் சொத்துக்களாக மாறிவிட்டது. கடந்த பத்தாண்டுகளில் சென்னையை பங்கு போட்டு கபளீகரம் செய்து விட்ட இந்த திருடர்கள் இப்போது சென்னைக்கு வெளியே உள்ள நிலங்களை குறிவைக்கிறார்கள். சமீபத்தில் உத்திரமேரூர் சென்ற போது வயல் வெளிகளை எல்லாம் பிளாட் போட்டு விற்க அறிவிப்பு செய்திருக்கிறார்கள். எல்லாமே முப்போகம் விளைந்த விவசாய நிலங்கள்.

இன்னொரு ஐந்து ஆண்டுகள் கழித்து உத்திரமேரூர் செல்லும் போது அதுவும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக மாறியிருக்கும். ஆனால் தொழிற்சாலை வருவதால் அப்பகுதி மக்களுக்கு பயன் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால் உங்களைப் போன்ற முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் தனியார்துறை தொழில் வளர்ச்சி  என்பது உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சி மட்டுமே வளரும் வல்லமை கொண்டது. முதலில் அவனுடைய நிலங்களை அவனிடம் இருந்து பிடுங்குவது பின்னர் அந்த விவசாயியையும் அவரது குடும்பத்தையும் குறைந்த கூலிக்கு தன் கம்பெனியிலேயே வேலைக்கும் வைத்துக் கொள்வது. காலம் காலமாக நீடித்து வரும் இந்த சுரண்ட்ல் வடிவத்திற்கு இன்றைய ஆட்சியாளர்கள் வைத்திருக்கும் பெயர் தொழில் வளர்ச்சி அல்லது வேலைவாய்ப்பு. தஞ்சையில் ரசாயான ஆலை அமைக்கும் டி,ஆர். பாலுவும் இதையேதான் சொல்கிறார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பெயரால் அரசே நிலங்களை சூறையாடும் கொடுமை.

இன்றைய தேதியில் நாற்பதாயிரம் படையினரைக் கொண்ட போர் நடவடிக்கையை மாவோயிஸ்ட் போராளிகள் மீது தண்டகாரன்யா மாநிலங்களில் ஏவியிருக்கிறது இந்திய அரசு. ”ஆபரேஷன் கிரீன்கன்ட்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்போர் பயங்கராவாதிகளுக்கு எதிரானப் போர் என்று பிரகடனப்படுத்துகிற இந்திய அரசு, ஒரு பக்கம் மாவொயிஸ்ட் மக்கள் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களை அழித்தொழித்து விட்டு தண்டகாரன்யா மக்களிடம் இருந்து நிலங்களை பிடுங்கி தனியார் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு தாரைவார்க்கத் துடிக்கிறது.இப்பகுதியில் ரப்பர், தேயிலை, உள்ளிட்ட ஏராளமான இயற்க்கை வளங்கள் தொடர்பாக 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பன்னாட்டு முதலாளிகளுடன் போட்டிருக்கிறது இந்திய அரசு. இந்த ஒப்பந்தங்களுக்கு விரோதமாக மக்களிடம் நிலம் இருப்பதை இந்திய அரசு விரும்பவில்லை. நந்திகிராமில் சி,பி. எம்மின் அடவாடித்தனமான முதலாளிகளுக்காக விவாசியிகளைக் கொன்றதும் அதற்காகத்தான். அதனுடைய தொடர்ச்சிதான் லால்கரில் தொடங்கி வடகிழக்கு எங்கும் பரவி வருகிறது.

நாட்டில் எல்லையோர மாநிலங்களாக இப்பழங்குடி மக்கள் நீண்டகாலமாக தங்களின் பல்வேறு சிவில் உரிமைகளுக்காகவும், பொருளாதார, உழைப்பு உரிமைக்காகவும் போராடிவருகிறார்கள். துவக்கத்தில் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தமிழகம். கேரளம், கர்நாடகம் போன்ற பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய நக்சல்பாரிகள் இப்போது ஒன்றிணைந்த மாவோயிஸ்டுகளாக வடக்கு-மத்திய-கிழக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் பூர்வீக நிலங்களை தங்களிடமே ஒப்படைக்கக் கோரும் அம்மக்களின் நியாங்களை காது கொடுத்துக் கூடக் கேட்க தயாரில்லாத மத்திய அரசு, அவர்களை சோற்றால் அடித்து வீழ்த்த நினைக்கிறது. ஆனால் நிலம் உள்ளிட்ட அவர்களின் ஏனைய கோரிக்கைகள் எதையும் அரசு செவிமடுக்கத் தயாரில்லை. காரணம் நிலம் மக்களிடம் இருப்பதை அரசு விரும்பவில்லை. இது வடகிழக்குக்கிற்கு மட்டுமான பிரச்சனையில்லை.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவது தொடர்பாக எழுப்பப்படும் கோரிக்கைகளின் போது கச்சத்தீவு மீட்பும் ஒரு கோரிக்கையாக இங்கே வைக்கப்படுகிறது. ஆனால் கச்சத்தீவு மீட்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எஸ். எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தில் அறிவித்துவிட்டார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கடல், கடற்கரை, அதை அண்டிய பிரதேசங்கள் தொடர்பாக பன்னாட்டு நிறுவனங்களுடன் எண்ணிலடங்கா ஒப்பந்தங்களை செய்துள்ளது இந்திய அரசு. நிலம் எப்படி தனியார் முதலாளிகளுக்கோ அது போல கடலும் தனியார் முதலாளிக்குத்தான்.

வன்னியுத்தத்தின் முடிவையும், தமிழக மீனவர் பிரச்சனையையும் இன்று சரியாகப் புரிந்து கொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆரமபத்தில் எங்கள் கடலில் வெறும் கட்டுமர மீன்பிடிப்பு மட்டுமே இருந்தது. பின்னர் விசைப்படகு வந்தது. அப்போது கட்டுமர மீன்பிடிப்பை விசைப்படகுகள் அழித்தது சிறிய கண்ணிகளைக் கொண்ட வலைகளைப் போட்டு மீன்பிடித்ததால் கட்டுமர மீன்பிடுத் தொழிலாளர்கள் அடியோடு பாதிக்கப்பட்டார்கள். தமிழகம் முழுக்க கடற்கரை எங்கும் இது மோதலாக வெடித்தது. ஆங்காங்கு கொலைகளும் குண்டு வீச்சுகளும் கூட அப்போது நடந்தது. கட்டுமர மீன்பித் தொழிலில் பாரம்பரீய மீனவர்கள் பெரும்பாலானவர்களாக இருந்தனர். விசைப்படகு வந்த போது பெரும் பண்ணைகள் லட்சக்கணக்கில் செலவு செய்து விசைப்படகு வைத்து பெரும் பொருள் ஈட்டினர்.

ஆனால் இந்த விசைப்படகு உரிமையாளர்கள் தங்கள் சொந்த சகோதரனின் தொழிலை நாம் பாதிப்படையச் செய்து அவன் வீட்டு உலையில் மண்ணள்ளிப் போடுகிறோம் என்ற அக்கரையற்று அவர்களுக்கென்று வகுப்பப்பட்ட விதிமுறைகளையும் மீறி கட்டும்ர எல்லைக்குள்ளேயே மீன் பிடித்து அவன் பிழைப்பைக் கெடுத்தனர். கடைசியில் நாற்பது நாள் மீன்பிடிக்கக் கூடாது என்று மீன் குஞ்சுகள் பெருக்கக் காலத்தில் தடை எல்லாம் கொண்டு வந்து இன்று அது நடைமுறையில் இருந்து வந்தாலும் விசைப்படகுகளில் அசுர வளர்ச்சியும் தொழில் சார் அறம் கடந்த மீன் பிடித்தலும் கட்டுமர மீனவர்களின் வாழ்வைச் சிதைத்தது என்பது உண்மை.

அன்றைக்கு கட்டுமர மீனவர்களுக்காக பேசவோ அவனுடைய வாழ்க்கைப் பாடுகள் குறித்துப் பேசவே எவருமே இல்லாமல் போயினர். பெரும் பண்ணைகள் கடலோர கிராமங்களைக் கட்டுப்படுத்தி தங்களின் கைகளுக்குள் வைத்துக் கொண்டனர். ஆனால் இன்று  கடந்த இருபது ஆண்டுகளாக கட்டுமர மீனவனின் வாழ்வில் வீசிய சூறாவளி விசைப்படகு மீனவனின் வாழ்விலும் வீசுகிறது. எளியவன் என்பதால் இவர்கள் கட்டுமர மீனவர்களை வதைத்து முன்னேறினார்கள். ஆனால் இப்போதோ இந்த விசைப்படகு மீனவர்களின் முன்னால் நிற்பது பன்னாட்டு பகாசுர மீன் பிடிக் கப்பல்கள். தங்களின் வீட்டு முற்றம் வரை வந்து மீன்பிடித்துச் செல்கிறார்கள். என்ன? என்று கேட்கு யாரும் இல்லை. கட்டுமரங்கள் கரையொதுக்கி வைக்கப்பட்டது போல கொஞ்சம் கொஞ்சமாக விசைப்படகுகளும் கரையேற்றப்படுகின்றன? ஏன்?

தொடரும்….

வெண்மணி

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி

சீமான் உள்ளிட்ட முற்போக்கு நரிகளின் தேவர் சாதிவெறி

vote-012தமிழ்த் தேசியம், தமிழீழம், பெரியார் கொள்கை பற்றி எல்லாம் மேடைதோறும் முழங்குபவர்களும் சரி, தமிழகத்தில் “முற்போக்கு சக்திகள்’எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் இந்த உண்மைகள், அண்மைக்காலத்தில் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.

மேடை தோறும் ஈழம், பிரபாகரன், தமிழ்த் தேசியம் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசியும், தன்னைப் பெரியாரின் பேரன் என்று முழங்கியும் வந்த திரைப்பட இயக்குநர் சீமான்,  பிரபாகரன் படம் பொறித்த சட்டையணிந்து வந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தன் சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார்.  சீமானின் தேவர் சாதிப் பற்றை பெரியார் தி.க. ஆதரவு இணையதளம் மட்டும் விமர்சித்துள்ளது. இதுவரை “தம்பி’சீமானை சீராட்டிவந்த மற்ற ஈழ ஆதரவு சக்திகளோ, இப்போது அவரைக்  கண்டுகொள்ளாது கைகழுவி விட்டுவிட்டன. இவர், ஏற்கெனவே தனது “தம்பி’ திரைப்படத்தில் தேவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தபோதே விமர்சிக்கப்பட்டார். அதனைத் தவறென ஒத்துக் கொண்ட சீமான்,  இப்போது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதை, “இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டதை”க் குறிப்பிட்டு நியாயப்படுத்தியுள்ளார்.  அதாவது, சாதி ஒடுக்குமுறையாளருக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் ஒரே மரியாதை. இதுதான், இந்தப் “பெரியாரின் பேரனது’சாதி ஒழிப்பு சமத்துவம்!

இதே பித்தலாட்டத்தைத்தான் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சியும் செய்திருக்கிறது. சி.பி.எம்-மின் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உத்தப்புரத்தில் போராடுகிறது. அதே கட்சியின் பொதுச் செயலர் என்.வரதராசன், அறுவை சிகிச்சை முடித்து கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறே, சாதி ஒடுக்குமுறையின் சின்னமான தேவர் சிலைக்கு ஓடோடிப் போய் மாலை போட்டு மரியாதை செய்தார்.

சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி, சாதிவெறியாட்டம் ஆடிய சட்டக் கல்லூரியின் ஆதிக்க சாதி மாணவர்கள், தாழ்த்தப்பட்டோரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், “ஒரு மாணவனைப் போய் இந்த அடி அடித்தார்களே’ என்று சுயசாதிவெறியோடு  ஒரு வருடமாக பேசியும் எழுதியும் வந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தா.பாண்டியன், தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிங்கத்தை பசும்பொன்னுக்கே அனுப்பிவைத்து தேவருக்கு மரியாதை செய்தார். முதலாளிகளின் சீட்டாட்டக் கிளப்பான “லயன்ஸ் கிளப்”பில் முத்துராமலிங்கம் என்ற சொந்த சாதிக்காரர் இருப்பதால், அந்த கிளப்பின் விழாவை தா.பாண்டியன் வாழ்த்தும் விளம்பரம் “ஜனசக்தி”யில் வெளிவந்துள்ளது. தேவர் சாதிவெறித் தலைவர்களான முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் போன்றோருக்கு அவ்வப்போது சிறப்புக் கட்டுரைகளை வெளியிடும் ஜனசக்தியில் பணிபுரியும் ஜீவபாரதியோ, டஜன் கணக்கில் தேவர் பெருமை பேசும் நூல்களையும் வெளியிடுபவர். ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியனோ, முக்குலத்தோர் சாதிகளில் ஒன்றான அகமுடையார் சங்க கல்வி அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்டு “அதில் என்ன தவறு?”என நியாயப்படுத்துபவர்.

“முதுகுளத்தூர் சாதிக் கலவரத்தை நிறுத்தவேண்டுமானால், முத்துராமலிங்கத்தைப் பிடித்துச் சிறைக்குள் தள்ள வேண்டும்”எனக் கோரியவர் பெரியார். அவர் ஆரம்பித்த தி.க.வின் “விடுதலை’”பத்திரிக்கையோ, வழக்கம்போல இந்த ஆண்டும் “தேவர் ஜெயந்தி’விழாவிற்கு விளம்பரம் வாங்கிப் பிரசுரித்துக் கொண்டது. சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடும் வீரமணி கும்பலின் பித்தலாட்டம், தேவர் ஜெயந்தியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. திராவிடர் கழகத்தின் தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவராக இருக்கும் தே.எடிசன் ராஜா, நாடார் சங்கத்திலும் செயல்படுகிறார். மும்பையில் நாடார் சங்கம் நடத்தும் காமராசர் நினைவுப் பள்ளி விழாவில் எடிசன் ராஜாவுக்கு “நாடார்”வால் முளைத்து, “எடிசன் ராஜா நாடார்’ஆக மாறினார். பாரம்பரியமான திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தி.க.வின் தகவல் தொடர்பு செயலாளருமான வழக்கறிஞர் அருள்மொழியின் தாயார் சரசுவதி சென்ற ஆண்டு மறைந்தபோது, “இந்து” நாளேட்டில் தந்திருந்த அஞ்சலி விளம்பரத்திலும் தனது “உடையார்”சாதி அடையாளத்தைத் தெளிவாகவே காட்டியிருந்தார்.

தேவர் சாதியைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்கள், தங்கள் சாதி விழாக்களில் அண்மைக்காலமாகக் கலந்துகொண்டு சாதி வளர்க்கின்றனர். இவர்களில் செந்தில், மனோரமா, விவேக் வரிசையில் இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்துவிட்டார். நகைச்சுவை நடிகர் கருணாஸ், தேவரைப் புகழ்ந்து “முக்குலத்தின் முகவரி”எனும் பாடல்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இதில் முகவரியை எழுதுவதற்கு வைரமுத்து “திருப்பாச்சி அறுவாளை’’த் தூக்கிக் கொண்டு குதித்திருக்கிறார்.

“ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்”என்ற கொள்கை முழக்கத்தைக் கொண்டிருக்கும் வே.ஆனைமுத்துவின் மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியோ, “வன்னியர்களே ஒன்றுசேருங்கள்”என்று சொல்லவில்லையே தவிர, வன்னியகுல சத்திரிய “சமூகநீதி’யைத் தாண்டி வரவே இல்லை.

“அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள’ச் சொல்லி சி.பி.எம். கட்சிக்கு “பாடம் நடத்தும்”தலித் முரசில், “இந்து ஆதிதிராவிட மணமகனுக்கு அதே உள்பிரிவில் மணமகள் தேவை”என விளம்பரம் வருகிறது. சாதி காக்கும் இச்செயல் ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“சாதியை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டும்”என கருணாநிதி பேசுகிறார். ஆனால், அவரின் மகள் கனிமொழியோ, திருப்பூர்-மல்லம்பாளையம் நாடார் சங்கக் கல்வி நிறுவன விழாவிற்கு நாடார் சாதி தி.மு.க. அரசியல்வாதிகளான சற்குணபாண்டியன், கீதாஜீவன், பூங்கோதை போன்றவர்களுடன் கலந்து கொண்டு “நாடார்களாக ஒன்றுபடுகிறார்’.

பெரியாரின் கொள்கைகளைத் தங்கள் கொள்கையாகக் கருதுவோரும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கக் களம் கண்டிருப்பவர்களும், சாதி ஒழிப்பிற்குப் பிறகுதான் சோசலிசம் எனத் தலித்தியம் பேசுபவர்களும், தாங்கள் கொண்டிருக்கும் இலட்சியத்திற்குக் கூட விசுவாசமாக இல்லாமல் சாதி உணர்வாளர்களாகவோ, வெறியர்களாகவோதான் இருக்கிறார்கள். தங்களின் தோலைக் கீறி சாதி இரத்தம் ஓடுவதை அவர்களாகவே ஒவ்வோர் நிகழ்விலும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியும் விடுகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை சாதி எனும் நுகத்தடி அழுத்திக் கொண்டிருக்கிறது. மனிதநீதிக்கு எதிரான சாதி ஆதிக்கவெறியை அழிப்பதற்கு, மாபெரும் சமூகப் புரட்சியே தேவைப்படுகிறது. அப்புரட்சி, சாதி வெறியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, முற்போக்கு வேடம் போடும் இத்தகைய களைகளுக்கும் எதிரானதுதான். இத்தகைய சுயசாதி மோகம் கொண்டோர்களையும், சாதியத்தைப் பாதுகாத்துவரும்  ஓட்டுப் பொறுக்கிகளையும் களைந்தெறியாமல் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் முன்னேறிச் செல்லவே முடியாது.

-புதிய ஜனநாயகம், டிசம்பர்’ 2009

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.க.வின் கருணையா? நரித்தனமா?

தமிழக-அரசின்-மருத்துவக்-காப்பீடு-திட்டம்-மு.க.வின்-கருணையா-நரித்தனமா

vote-012ஐந்தாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ள கருணாநிதியின் ‘பொற்கால’ ஆட்சியின் சாதனையாக “உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” எனும் புதியதொரு திட்டத்தை தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. “நுரையீரல் புற்றுநோயாளிக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை” என்றும் “சென்னை தனியார் மருத்துவமனையில் 15 வயது சிறுமிக்கு மூளைக்கட்டி இலவசமாக அகற்றப்பட்டது” என்றும் தினசரிகளில் செய்திகள் வந்து குவிகின்றன.

தமிழக அரசின் 26 நல வாரியங்களின் உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்றும், இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குக் குறைவாக உள்ள மக்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்றும் இத்திட்டம் கூறுகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் ஸ்மார்ட் கார்டு (கிரெடிட் கார்டைப் போன்ற) ஒன்று வழங்கப்படுமாம். மாநிலமெங்கும் அரசு ஊழியர்கள் முகாம்களை நடத்தியும், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தியும், நல வாரியங்கள் எவற்றிலும் உறுப்பினராக இல்லாத பயனாளிகளை அடையாளம் கண்டு இத்திட்டத்தில் சேர்ப்பார்களாம்.

“ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்சு” என்ற பன்னாட்டு காப்பீடு நிறுவனத்திடம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பட்டியலிட்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டு காலத்திற்கு இரண்டு லட்சம் ரூபா வரைக்கும் சிகிச்சை தரப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரிடமும் மாதாமாதம் ரூ.50-ஐ வசூலித்து காப்பீட்டு நிறுவனத்துக்கு இத்தொகையை அரசு வழங்கும். இதன் மூலம் காப்பீட்டு நிறுவனத்துக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் நிரந்தர வருவாயை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. சிகிச்சை பெற வரும் மக்களிடம் ஒட்டக் கறந்துவிடும் தனியார் மருத்துவமனைகள் திடீரெனக் கருணை பொங்க ‘இலவசமாக’ சிகிச்சை சேவதன் பின்னணி இதுதான்.

இத்திட்டத்தின்படி ஏழைக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும்  அரசே ஆண்டொன்றுக்கு ரூ.500 வீதம் காப்பீடு தொகையாக ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தி வரும். சென்ற ஜூலை மாதம் சென்னையில் நடந்த இதற்கான தொடக்கவிழாவில் இவ்வாண்டின் முதல் காலாண்டு பிரீமியமாக ரூ.130 கோடியை ஸ்டார் ஹெல்த்  நிறுவன அதிகாரிகளிடம் கருணாநிதி வழங்கினார்.

உலகின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், தமிழ்நாட்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறார்கள். தலைசிறந்த மருத்துவர்களாக இருக்கும் அரசு மருத்துவர்களைக் கொண்டு மக்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைகளிடம் அதனை ஒப்படைத்தது ஏன் என்ற கேள்விக்கு, “முதலமைச்சரின் மருத்துவ நிதி உதவி பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏழைகளுக்கும் தரமான சிகிச்சை கிடைக்கவேண்டும். எனவேதான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது” என்று அரசு காரணம் ல்கிறது.

ஆண்டுதோறும் இத்திட்டத்திற்கு அரசு வழங்கப்போகும் தவணைத் தொகை மட்டும் ரூ.517 கோடிகளாகும். அதே நேரத்தில், மதுரை அரசு மருத்துவமனையை அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான கழகம் (எம்ஸ்) தரத்திற்கு உயர்த்தப் போவதாக அறிவித்து அரசு ஒதுக்கியுள்ள தொகையோ ரூ. 150 கோடிகள்தான். இதன்படி பார்த்தால், காப்பீடுக்குத் தனியாரிடம் ஒவ்வோராண்டும் போய்ச்சேரும் பணத்தைக் கொண்டு மூன்றுக்கும் மேற்பட்ட நவீன உயர்தர மருத்துவமனைகளைக் கட்டி விடமுடியும்.

அரசு மருத்துவர்களோ, “சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் இருக்கும் 30 அறுவைசிகிச்சை மையங்களில் 25 மையங்கள் தினமும் காலை 8 முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்குகின்றன. 24 மணி நேரமும் இயங்குபவையோ அவற்றில் வெறும் ஐந்துதான். இவற்றை முறைப்படுத்தி 24 மணிநேரமும் இயங்குபவையாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை” என்று புலம்புகின்றனர். ஏற்கெனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் சீரமைத்தாலே தரமான சிகிச்சையினை அரசே தரமுடியும் என்றும் மருத்துவர்கள் ல்கின்றனர்.

ஆனால் இதனைச் சேயாத அரசோ, கருணாநிதியின் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இதயநோக்கான பலூன் வால்வு சீரமைப்பிலும் இதய வால்வு சீரமைப்பிலும் நிபுணத்துவம் மிக்க சென்னை ரயில்வே மருத்துவமனையை தனியாருக்குத் தாரைவார்த்துத் தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக, ரயில்வே மருத்துவமனையையும் தனியாரையும் சேர்த்து மருத்துவக்கல்லூரி தொடங்க முடிவு செய்துள்ளது.

மருத்துவ சேவையை தனியார்மயப்படுத்தினால் ஏற்படும் பேரவலத்துக்கு அமெரிக்கா சரியான முன்னுதாரணமாகும். அங்கு மருத்துவம் முழுக்க தனியார் காப்பீடு நிறுவனங்களின் பிடிக்குள் இருப்பதால், காப்பீடுத் தவணை செலுத்த முடியாத ஏழைகளுக்கு மருத்துவ சேவையே முற்றிலும் மறுக்கப்படுகின்றது. காப்பீடு நிறுவனங்களின் கொள்ளையால் அங்கு 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்தியாவும் அதே பாதையில் உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ் “அனைவருக்கும் ஆரோக்கியம்” எனும் சுகாதாரக் கொள்கையை 2002-ஆம் ஆண்டு அறிவித்து, அதன்படி மருத்துவ நலத்திட்டங்களில் அரசின் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. தனியாரின் காப்பீடுத் திட்டத்திற்குள் பொது மருத்துவத்தைத் தள்ளிவிட உத்தரவு போட்டிருப்பது, உலகவங்கி. அதற்கு தனது பெயரைச் சூட்டியிருப்பதுதான், கருணாநிதியின் மூளை.

தொடக்கவிழாவில் பேசிய கருணாநிதி, கோபாலபுரத்தில் இருக்கும் அவரின் வீடு, அவரின் மரணத்திற்குப் பின்னர் இலவச மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டங்கள் எதிர்ப்பே இன்றி நடைமுறைப்படுத்தப்படுமானால், அவருக்குப் பின், சென்னையில் கருணாநிதி வீடு ஒன்றில் மட்டும்தான் இலவச மருத்துவம் கிடைக்கும்.

இப்போதைக்கு கருணாநிதியின் காப்பீடுத் திட்டம், ஏழைகளிடமிருந்து கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. ஆனால் அரசின் நேரடி மருத்துவ சேவைகள் படிப்படியாக ஒழிக்கப்பட்ட பின்னர், அனைத்துத் தரப்பினரையும் தனது வியாபார வலைக்குள் காப்பீடு நிறுவனம் வீழ்த்தத் தொடங்கும். அதன் பிறகு மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள் மட்டுமே நோக்குச் சிகிச்சை பெற முடியும் ஆபத்தான நிலை உருவாகும்.

சேமநல அரசினை இலாபகரமாக இயங்கும் அரசாக மாற்றுதல் எனும் போக்கைத் தாராளமயமும் தனியார்மயமும் துரிதமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்த அயோக்கியத்தனம் மக்களிடம் அப்பட்டமாகத் தெரிந்துவிடாதிருக்க அதற்குச் சில பூச்சுவேலைகளும் கவர்ச்சியான பெயர்களும் தேவைப்படுகின்றன. ஓட்டுப்பொறுக்கும் அரசியலுக்கு இந்தக் கவர்ச்சியும் தேவையாக இருக்கின்றது. இப்போதைய எதிர்க்கட்சி அடுத்தமுறை ஆளும்கட்சியாகும்போது, இதே திட்டத்தை மாற்றமின்றி செயல்படுத்தும் என்பதால் எந்த எதிர்க்கட்சியுமே இத்திட்டத்தை தீவிரமாக எதிர்ப்பதில்லை.

இத்திட்டத்திற்கு தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ள “ஸ்டார் ஹெல்த்” நிறுவனம்தான் “ஆரோக்கியஸ்ரீ ” எனும் பெயரில் ஆந்திர அரசோடு கைகோர்த்துக் கொண்டு, வாரங்கல் மாவட்டத்தில் சில பினாமி மருத்துவமனைகளை உருவாக்கி, அறுவை சிகிச்சையே தேவைப்படாத பெண்களுக்கும்கூடக் கருப்பைகளை அகற்றிப் பல கோடிகளைச் சுருட்டியிருக்கின்றது.

கருணாநிதியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 4 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் வரை மட்டுமே செலவிடப்படும். ஆனால், இன்றைக்கு இதய அறுவை சிகிச்சை மட்டும் ஒன்றரை இலட்சத்தில் இருந்து இரண்டு இலட்சம் வரை செலவு பிடிக்கக் கூடியதாக உள்ளது. இத்திட்டம் பட்டியலிட்டிருக்கும் 150 தனியார் மருத்துவமனைகளில் சென்னையில் மட்டும் 63 உள்ளன. காச்சல், இருமல் என்று போனாலே எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வைத்து குறைந்தது ரூ 5 ஆயிரத்தைக் கறந்து விடக்கூடிய லைஃப் லைன் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், அப்பல்லோவை விட அதிகமாகப் பணம் பறிக்கும் பில்ரோத் மருத்துவமனையும் கொலைகார – கொள்ளைக்கார மருத்துவமனைகளாகப் புகழ் பெற்றுள்ள ஓசூரின் அகர்வால், அசோகா, விஜய் முதலானவையும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஓவுபெற்ற அரசு ஊழியர் ஒருவரின் புற்றுநோ சிகிச்சைக்கென அடையாறு புற்றுநோ மருத்துவமனை அண்மையில் ரூ.2 லட்சத்து இருபதாயிரத்தைக் கோரியிருந்தது. ஆனால் காப்பீடுத் திட்டம் அவருக்கு அனுமதித்ததோ ஒரு லட்சத்து இருபதாயிரம்தான். அவர் முழுப் பணத்தையும் மருத்துவமனையில் முதலிலேயே கட்டிவிடுமாறும், இத்தொகையை அவருக்கு ஆறு தவணைகளில் பிரித்துத் தருவதாகவும் காப்பீடு நிறுவனம் கூறியது. இதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப் போவதாக அவர் எச்சரித்த பிறகுதான், அந்நிறுவனம் இறங்கி வந்து காப்பீடு தொகையை ஒரே தவணையில் தரச் சம்மதித்திருக்கிறது. விவரம் தெரிந்தவர்களையே மொட்டையடிக்கப் பார்க்கும் காப்பீடு திட்டம், சாமானியர்களை என்ன பாடுபடுத்துமோ! ஆரம்பமே இப்படி அமர்க்களமாக இருப்பதிலிருந்தே, இத்திட்டம் மக்களைக் காக்குமா, அல்லது காப்பீடு நிறுவனங்களைக் காக்குமா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

-புதிய ஜனநாயகம், செப்டம்பர்’2009

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

நூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்!

தெலுங்கானா

பெண் என்றால் ? வம்பு பேசுவாள், வாயாடுவாள், ஜாடை பேசுவாள், இல்லையென்றால் மாமியார், மருமகள், நாத்தனார், கணவன் என அணி பிரித்துக் கொண்டு தங்களுக்குள்ளாகவே ஒரு தர்மயுத்தத்தை நடத்திப் போராடுவாள்’. இன்னும் புத்திசாலிப் பெண்ணோ மத்தியான மகளிர் மட்டும் தொடரில் வந்து எம்பிராய்டு பின்னிக் காட்டுவாள். எப்படி வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று விபரம் சொல்வாள்.அனைத்துக்கும் மேலே கள்ள உறவுக்கு பொறி பறக்க வசனம் பேசி புரட்சியே?’ செய்வாள்.. இப்படித்தான் தொலைக்காட்சிகளும், சினிமாக்களும் பெண்களை தமது வர்த்தக வட்டத்துக்குள் சுழல விட்டுக் காட்டுகின்றன.

ஆனால் தெலுங்கானாவின் உழைக்கும் வர்க்கத்துப் பெண்களோ எமது பேரழகும் ஆளுமையும் சமூக உணர்வில் வெளிப்படுகின்றதுஎன்று இரத்தசாட்சியாக நம்முன் வந்து உரக்கப் பேசுகிறார்கள். அவ்வாறு நடைமுறையில் வாழ்ந்த தெலுங்கானா பகுதி பெண்களின் வகை மாதிரியாக ஏழு பெண்களின் வாழ்க்கைக் கதையை நம்முன் நடத்திக் காட்டி, நமது வாழ்வின் அற்பக்கண்ணோட்டங்களைத் தகர்த்து எறிகின்றது ஒரு புத்தகம். அந்தப் புத்தகத்தின் பெயர் தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்”.

அளப்பரிய வீரமும், தியாகமும் ததும்பி நிற்கும் தெலுங்கானாவில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் மக்கள் அணிதிரண்டனர். நிலப்பிரபுக்களின் கேட்பாரற்ற கொடிய சுரண்டல், போலீசு இராணுவத்தின் அடக்குமுறைகள் படுகொலைகள் இவைகளைக் கண்டு பயப்படாமல், பணியாமல் நிலத்துக்காகவும், தங்கள் விடுதலைக்காகவும், அதிகாரத்திற்காகவும் ஆர்த்தெழுந்தது தெலுங்கானா. திருப்பித் தாக்கி திமிறி எழுந்த தெலுங்கானாவின் பெண்களில் ஒருவர்தான் இந்த நூலில் முதலில் நமக்கு அறிமுகமாகும் பண்டி ராஜக்கா. போராளிகளுக்கு சோளக்கதிரை சுமந்து சென்றபோது வழியிலேயே போலீசும், இராணுவமும் நிலப்பிரபுவின் ஆட்களோடு சேர்ந்துகொண்டு அவளைப் பிடித்து சித்திரவதை செய்கின்றார்கள். உதைத்தால் போராட்ட விபரங்களையும் கட்சி இரகசியங்களையும் காட்டிக்கொடுத்து விடுவாள் என்பது அவர்களது கணக்கு.

மேலும் பெண்தானே ! இரகசியம் காக்க மாட்டாள். கற்பழிப்பு வரை சென்றால் பயந்து விசயத்தை வெளியிடுவாள் என்று அந்தக் கயவர்கள் கடைசி எல்லை வரைக்கும் போனாலும் அவள் உடம்பிலிருந்து இரத்தத்தைத்தான் கறக்க முடிந்ததே ஒழிய, மக்கள் விடுதலைக்காகப் போராடும் கட்சியின் திட்டங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பெற முடியவில்லை.

ஆணாதிக்கத் திமிரோடு அந்த அயோக்கியர்கள் அந்தப் பெண்ணின் மேல் உடல்வதையில் மட்டுமல்ல, சொல்வதையிலும் இறங்கினார்கள். நிலப்பிரபுத்துவத்தின் எந்த அடக்குமுறைக்கும் பணியவில்லை பண்டி ராஜக்கா. பொதுவாழ்க்கைக்கு வந்து கட்சி, அரசியல் என்று செயல்படப் போனால் ஒரு பெண்ணின் ஒழுக்கத்துக்கே கேடு வந்து சேரும் என்று எக்கச்சக்கமாக யோசிக்கின்ற நடுத்தரவர்க்க மனநிலையாளர்கள் மத்தியில் பெண்டல பாடு என்ற சாதாரண கிராமத்துப் பெண்ணான ராஜக்கா எதிரிகளின் வதைமுகாமில் நேருக்குநேர் வாதம் செய்யும் துணிச்சலை நீங்களே பாருங்கள்.

என்னடி தேவடியா ? இனியாவது சொல்றியா ?” என்று போலீசு இன்ஸ்பெக்டர் அதட்டினான்.

என்ன சொல்லச் சொல்றீங்க ?” என்று கேட்டாள் அவள்.

உன்னோட ஆம்படயான்கள் சங்கதிதான்என்று தாஸ் என்கிற ஜமீன்தார் எகத்தாளமாகக் கூறினான்.

“.. .. அவ சும்மாவே சொல்லுவாளா சார் ? போட்டு நொறுக்குங்க ! பாருங்களேன் எவ்வளவு சதை போட்டிருக்கா ? இவளுக்குப் போராட்டக் குழுவில் பத்துப்பேர் ஆம்படையான்களாம் !என்று கூறி, ஜமீன்தார் தூண்டி விட்டான். (நூல்: பக்.7)

நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கினால் ஓவென்று அழுது தங்கள் வழிக்கு வந்து விடுவாள் என்ற அவர்களின் சம்பிரதாயமான கலாச்சாரத்தின் முகத்தில் காறித்துப்பும்படி முன்னை விடத் தீவிரமாகப் பேசினாள்.

ஒழுக்கமே இல்லாத நீ என்னை அவதூறு பேசறியா ? நீ பிழைக்கிற பிழைப்பு ஒழுக்கங்கெட்ட பிழைப்பு ! திங்கறதெல்லாம் இரத்தச்சோறு ! உன்னையும் உன் குடும்பத்தையும் யாருக்குத்தான் தெரியாது ? அப்படிப்பட்ட நீ, என்னைப்பத்தி அவதூறு பேசறியா ?” (நூல்: பக்.8).

ஒரு பெண் தனது குடும்ப நலனுக்காக வாழ்வதையும், கணவனது விருப்பப்படி இருப்பதே குடும்ப லட்சணம் என்று அவன் விருப்பப்படி தாசி வீட்டுக்குத் தூக்கிச் சென்றதை இலக்கியமாகப் புராணமாகப் பேசும் இந்த நாட்டில் தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போதும் தனது சமூகத்தின் மக்களுக்காக அனைத்து இன்னல்களையும் எதிர்கொண்டு சமூக உணர்வுடன் ஒரு பெண்ணால் போராட முடியும் என்பதை நடைமுறை சாத்தியமாக்கிக் காட்டுகிறாள் ராஜக்கா.அது மட்டுமல்ல.

பாவிகளா ! உங்களிடம் உள்ள மிருகத்தனத்தை எல்லாம் காட்டிடுங்க ! ஆனா நான் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் துரோகம் மட்டும் செய்வேன்னு நினைக்காதீங்க ! போராட்டக் குழுக்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். நான் கட்சியிலே கத்துக் கொண்டது துரோகத்தை அல்ல. கொடுமைகளையும் அநியாயங்களையும் உயிரையும் பொருட்படுத்தாம எதிர்க்கிறதைத்தான் நான் கட்சியிலே கற்றுக் கொண்டேன்..

படிப்பும், தோழமையும், சமத்துவமும் கத்துக்கிட்டேன். உங்களையும் உங்களது கொடுமைகளையும் ஒருநாள் போராளிகள் கோதாவரி நதியிலே மூழ்கடிக்கத்தான் போறாங்க.. நான் உங்களுக்கு அடிபணிய மாட்டேன். கம்யூனிஸ்ட் கட்சிக்குத் துரோகம் செய்ய மாட்டேன்.என்று ஆவேசமாகக் கூறினாள் அவள். (நூல்: பக்.9)

இப்போதென்ன புரட்சியா வந்துவிட்டது ? வரும்போது நானும் மாறிக் கொள்கிறேன். அதுவரைக்கும் ஊரோடு ஒத்துப்போவதுதான் புத்திசாலித்தனம் என்று அநீதிக்கெதிராக சமரசமாக வாழ்வதையே சாமர்த்தியமாக வெளிப்படுத்துபவர்களின் மனப்போக்கை பண்டி ராஜக்காவின் இலட்சிய உறுதி இடித்துறைக்கிறது. கணவனுக்கு மனைவி துரோகம், மனைவிக்கு கணவன் துரோகம், குடும்பத்திற்கு மகன் துரோகம் என்பதே வாழும் கலையாக வளர்ந்து வரும் இந்த சமூகத்தில் கட்சிக்குத் துரோகம் செய்வதையே ஆகக் கேவலமாகக் கருதும் ராஜக்காவின் சமூக உணர்வு புதிய கலாச்சார விழுமியங்களையும் நம்முன் படைத்துக் காட்டுகிறது.

மகிழ்ச்சியான குடும்பம், அன்பான கணவன், ஆசையோடு பார்க்கின்ற அம்மா, அப்பா, தங்கையை விட்டுவிட்டு கட்சிக்காக போலீசிடம் சிக்கி.. அவமானப்பட்டு.. இது உனக்குத் தேவையா ?” என்று எவ்வளவோ நைச்சியமாகப் பேசியும், ராஜக்காளிடம் சராசரிப் பெண் உணர்வை விடக் கட்சியின் இலட்சிய உணர்வே மேலோங்கி இருப்பதை நேருக்கு நேர் பார்த்து வெறுத்துப் போன போலீசும், இராணுவமும் அவளைப் பன்னிரெண்டு நாட்கள் வதைமுகாமிலே வைத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியும், இரவு முழுக்க ஏரித்தண்ணீரில் நிர்வாணமாக நிற்க வைத்தும் துன்புறுத்தினார்கள். ராஜக்காவின் போர்க்குணமோ எதிரிகளின் அதிகாரத்தை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியதே ஒழிய மக்களுக்காகப் போராடும் அவளது நெஞ்சுறுதி இறுதி வரை தோற்கவே இல்லை.

எல்லா சித்திரவதைகளையும் கடந்து அவள் ஊருக்கு வரும்போது போலி கம்யூனிஸ்டுகளோ போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து ஆளும்வர்க்கத்தோடு சமரசமாகி தேர்தலில் பங்கெடுக்கப் போகின்றனர். கொள்கைக்குத் துரோகமிழைத்தவர்களைப் பார்த்து மனம் கசந்து போய் விடுகிறாள் ராஜக்கா. எதிரிகளிடம் அவள் பட்ட சித்திரவதையை விலாவாரியாக விவரித்த நூலாசிரியர் போராட்டத்தின் துரோகிகளால் அவள்பட்ட மனத்துயரை விவரிப்பதற்கு மனமின்றி ராஜக்காவின் வருத்தத்தை ஒரு சுமாரான தொனியில் பதிவு செய்துவிட்டு, போலிக் கம்யூனிஸ்டுகளுக்கே உரிய சரிக்கட்டும்நுணுக்கத்தோடு எந்த பரிசீலனையும் இன்றி கதையை முடிக்கிறார்.

ராஜக்காவின் வாழ்க்கைக் கதையில் இந்த இடத்தின் மூலம் போலிக் கம்யூனிஸ்டுகளையும் அவள் அம்பலப்படுத்தி விடுகின்றாள். இப்படி ராஜக்கா என்ற ஒரு பெண் மட்டுமல்ல, ரங்காபுரம் என்ற கிராமத்தில் வாழ்ந்த வெர்ரம்மா என்ற பெண்ணின் வழியாக அந்த வீட்டில் உள்ள வயதான மூதாட்டி உட்பட எப்படி மெல்ல மெல்ல போராட்டக் குழுவுக்கு ஆதரவாக தங்களது வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையெல்லாம் எதார்த்தமாக அறிய முடிகின்றது. வீட்டுக்கு போலீசு வந்தாலே, குடும்ப கவுரவம் போச்சு ! நமக்கு இந்த புரட்சி அரசியல்லாம் வீண் வம்பு என்ற மதிப்பீட்டின் படி வாழச் சொல்லும் ராகவம்மா பாட்டியிடம், சீதாராமையா பேசும் வார்த்தைகள் பாட்டியை ஒத்த கருத்துடைய அனைவருக்கும் பதிலாக அமைகிறது. மக்கள், விவசாய சங்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் அமைத்து கொடுமைகளை எதிர்த்துகிட்டு இருக்காங்க ! நாமும் அவங்களுக்கு துணையா நிற்போம். அவங்களோடேயே இன்ப துன்பங்களை அனுபவிப்போம். இதுதான் நம்ம குடும்பத்துக்கும் வம்சத்துக்கும் மதிப்பு தரும் ! ஊரோட ஒட்டித்தான் நாம் போகணும்என்று கூறினான் சீதாராமய்யா. (நூல்: பக்.34)

போராட்டக் குழுக்களுக்கு உதவி செய்வதிலும், கம்யூனிச லட்சியங்களை குடும்பப் பண்பாகக் கருதி செயல்படுவதிலும் தன்னிகரற்று விளங்கிய பெண்களில் நடிகட்டா கிராமத்தின் சலவைத் தொழிலாளியான லச்சம்மாவும் ஒருவர். லச்சம்மா போராட்டக்குழு தோழர்களுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து போலீசு பட்டாளம் அவளை ஊருக்கு மத்தியில் நிர்வாணப்படுத்தி, தலைகீழே மரத்தில் தொங்கவிட்டு அடிக்கிறது. போராட்டக்குழுத் தோழர்கள் எங்கிருக்கிறார்கள்.. காட்டிக்கொடுஎன்று எவ்வளவோ கேவலமாக வைதும், அடித்தும் லச்சம்மாவோ மானத்தினும் பெரிதாக மக்களுக்காகப் போராடும் கட்சித் தோழர்களைப் பற்றி ஒரு வார்த்தையும் கூற மறுக்கிறாள். படிக்காத அந்த சலவைத் தொழிலாளி பட்ட சித்திரவதைகளை அறிந்து பார்க்க வரும் போராட்டக் குழுவைச் சேர்ந்த ராமுலம்மாவின் ஆறுதலுக்கு லச்சம்மாவின் பதிலைப் பாருங்கள். அதென்னம்மா ! அப்படிச் சொல்றே ! எனக்கு அவமானம் நேர்ந்தா, உங்களை ஏசுவானேன் ? என் ஒருத்திக்கு மட்டுமா, அவமானங்களும் கஷ்டங்களும் ? இந்த பாழாய்ப் போன அரசாங்கத்தாலே எல்லோருக்கும்தான் கஷ்டங்களும், அவமானங்களும் ? ..” (நூல்: பக்.75)

தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்,.. புரட்சியும் போராட்டமும்என்று புத்திசாலித்தனமாகப் பேசும் படித்த வர்க்கத்தின் சுயநலத்தை இந்த இடத்தில் வெளுத்து வாங்கும் சலவைக்காரியாக உயர்ந்து நிற்கிறாள் லச்சம்மா. இதேபோல நரசம்பேட்டையை சேர்ந்த மல்லிகாம்பா, வாரங்கல் மத்திய சிறையில் அடக்குமுறைக்கு எதிராக உயிர்நீத்த ராம் பாயம்மா, சூர்யாபேட்டையைச் சேர்ந்த சிவம்மா, ஜனகாம் வட்டாரத்தைச் சேர்ந்த அகிலம்மா, .. இப்படி ஒவ்வொரு பெண்களும் வெவ்வேறு வகையில் தெலுங்கானா மக்கள் போராட்டத்தோடு தங்கள் வாழ்க்கையை இணைத்துக் கொண்டதை நமக்கு அறிமுகப்படுத்துகிறது என்ற வகையில் இந்நூலாசிரியரின் உழைப்பு வரவேற்கத் தகுந்ததாக உள்ளது. அதேவேளையில் தெலுங்கானாப் போராட்டத்தில் பங்கேற்ற தீரமிகு பெண்களின் போராட்ட மரபை, சீரழிந்து போன போலிக் கம்யூனிஸ்டுகள் தங்களுடையது எனப் பீற்றிக் கொள்வதற்கு எந்த நியாமும் இல்லை. ஏன் இப்படி எங்கள் கம்யூனிச லட்சியத்தை சீரழித்தீர்கள் ?” என்று தெலுங்கானாப் போரின் பெண்களின் வாரிசுகளாய் நாம் கேள்வி கேட்பதற்கான நியாயத்தை இந்நூல் வழங்குகிறது.

அறிந்தோ, அறியாமலோ இதற்கு உதவி செய்வதற்காக இந்நூலாசிரியரை நாம் பாராட்டலாம். தேர்தல் பாதைக்கு இழுத்துப் போய் தெலுங்கானாவின் இறுதி லட்சியத்தை மூழ்கடித்து விட்டோம் என்ற கனவில் மிதக்கும் போலிக் கம்யூனிஸ்டுகளின் கண்களை உறுத்தும்படி மேற்கு வங்கத்தின் நந்திகிராமிலும், லால்கரிலும் தெலுங்கானாப் போரின் தீரமிகு பெண்கள் மீண்டும் எழுந்து நிற்கிறார்கள்.இப்படி எல்லா இன்னல்களையும் எதிர்த்துப் போராடும் மனவலிமை ஒரு பெண்ணுக்கு எங்கிருந்து வந்தது என்று நீங்கள் கேட்டால், பண்டி ரமாக்காவும், லச்சம்மாவும், ராம் பாயம்மாவும் எங்களது வலிமை சமூக உணர்வில், கம்யூனிச சித்தாந்தத்தில் இருக்கிறது என்கிறார்கள் அழுத்தமாக. இது சாத்தியமா ? என்பவர்கள் அவர்களுடனேயே விவாதிக்க இந்தப் புத்தகத்திற்குள் செல்லுங்கள்.

  • நூலின் பெயர்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்
  • ஆசிரியரின் பெயர்: எம்.ஏ. பழனியப்பன்
  • விலை: ரூ. 50.00
  • வெளியீடு: அறிவுப் பதிப்பகம், சென்னை-14.
  • கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

______________________________________________________

-புதிய கலாச்சாரம், ஆகஸ்ட்டு’2009
______________________________________________________

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 டவுன்லோட்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. “முதலாளித்துவம் மக்களைக் கொல்லும், மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்!” – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளூரை
  2. விவசாயிகள் – மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கருப்புச் சட்டங்கள்
  3. முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம். – இன் பித்தலாட்டம்!
  4. முனைவர் பாலகோபால்: மனித உரிமைகளுக்காகப் போராடிய மாவீரன்!
  5. கர்நாடக அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள், ரெட்டி சகோதரர்களின் கிரிமினல் ஜாதகம்
  6. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நாட்டை வளைத்திருக்கும் ஒட்டுண்ணிகள்!
  7. தேவர் ஜெயந்தியும் ‘முற்போக்கு’ நரிகளும்
  8. மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’!
  9. இந்தியாவின் சீன எதிர்ப்புக் கூச்சல்கள்: தேச பக்தியா? பிராந்திய மேலாதிக்கமா?, சீனாவின் திபெத்தில் நடந்த இந்திய-அமெரிக்கக் கூட்டுச் சதிகள்
  10. தில்லை கோயிலை மீண்டும் கைப்பற்றாமல் தடுக்க… அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க…உச்சநீதிமன்றத்தில் வழக்கு! நிதி தாரீர்!!
  11. “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ். – இன் அவதூறுக்கு நீதின்றமே பக்கமேளம்!
  12. ஏழைக்கு ஒரு நீதி; பணக்காரனுக்கு ஒரு நீதி. – இதுதான் சட்டத்தின் ஆட்சி!
  13. பொறுக்கி அரசியல்
  14. “வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீள் குடியமர்த்து! சிங்களக் குடியேற்றங்களை அகற்று! ராஜபக்சே அரசைப் போர்க்குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடு!” – தமிழகமெங்கும் 16.12.09 அன்று புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம், நவம்பர்’ 2009 இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

ஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்… ஆரம்பம்!!

103

ஈழம்: இந்திய அமைதிப்படையின் அட்டூழியம்... ஆரம்பம்!!

ஈழத்தின் நினைவுகள் – பாகம் -8

vote-012காந்தி தேசத்தின் காவலர்கள்  ஈழத்தமிழர்களை சிங்கள பேரினவாதத்தின் வன்கொடுமைகளிலிருந்து காப்பாற்ற கருணைக்கொலை செய்திருந்தால் கூட நன்மைக்கே என்று நாங்கள் சந்தோசமாய் செத்திருப்போம். காலங்காலமாய் எங்களை  நம்பவைத்து  முதுகில் குத்தியே பழக்கப்பட்ட இந்தியா, ஈழத்தமிழனுக்கென்றே ஓர் கொம்பு சீவியது. அதுதான் இந்திய அமைதிப்படை. இந்தியாவில் காந்தியை பின்பற்றுபவர்களும் சரி, இலங்கையில் புத்தரின் பெயரால் ஆட்சி செய்பவர்களும் சரி இருசாராருமே எங்களின் இரத்தத்திலும், கண்ணீரிலும்தான் அதிக சந்தோசம் காண்பார்கள் போலும்.

ஏற்கனவே இலங்கை ராணுவத்தின் வன்கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த எங்களை, இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்து ஈழத்தில் அப்பாவித் தமிழர்களான எங்கள் மீது போர்தொடுத்த கொடுமையை நாங்கள் சொல்லியழுதாலும் தீராது. இந்திய அமைதிப்படையை ஆங்கிலத்தில் Indian Peace Keeping Force-IPKF என்று கொண்டாலும், ஈழத்தமிழர்கள் சொல்வழக்கில் அது Indian People Killing Force என்றே சொல்லப்படுகிறது. அதாவது, ஈழத்தமிழர்களை கொல்வதற்கென்றே உருவாக்கப்பட்ட படை என்றுதான் சொல்வார்கள்.

எங்களுக்கு ஏற்கனவே தெரிந்த சிங்களராணுவமும், புதிதாக அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்திய ராணுவமும் சரி ஒரே மாதிரித்தான் தெரிந்தார்கள். இந்திய அமைதிப்படை என்னும் போது, அது ஏனோ எங்களுக்கு அதிகமாகவே வலிக்கத்தான் செய்கிறது. ஒருவேளை அது தமிழ்நாடும், ஆறரை கோடி தமிழர்களும் இருந்தும் எங்களுக்கு இந்த அவலங்கள் நிகழ்ந்ததே என்ற ஈழத்தமிழர்களின் ஆதங்கமாக இருக்கலாம்.

ஏற்கனவே ஆண்டாண்டு காலமாய் ராணுவ அடக்குமுறையினாலும், ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற ராணுவ நடவடிக்கையாலும் சோர்ந்து போயிருந்த எங்களுக்கு இந்திய ராணுவத்தின் வருகை ஓர் தற்காலிக விடுதலையை தரும் என்றுதான் நம்பியிருந்தோம். வடமராட்சியிலிருந்து தென்மராட்சிக்கு போகும் போது இருந்த வலி திரும்பி வரும்போது ஏனோ அதிகமாகத் தெரியவில்லை. ஆனாலும், இதுவும் ராணுவம் என்கிற பயத்தை மட்டும் எங்களின் மனங்களிலிருந்து முற்றுமுழுதாக அகற்ற முடியவில்லை.

வழி நெடுக இந்திய ராணுவமும் எங்களை கொடுமைப்படுத்துமா என்றெல்லாம் கேள்விகேட்டே என் சித்தப்பாவின் உயிரை நான் எடுத்துவிட்டேன். அதற்கு அவர் அப்போது சொன்ன பதில்தான் அந்த வயதில் என்னை வாய்பிளந்து கேட்கவைத்தது. இந்தியா ராணுவத்தை அனுப்பியது ஈழத்தமிழர்கள் பாலுள்ள அக்கறையால் அல்ல. அது அவர்களின் தேசிய நலன் சார்ந்தது என்றார். எனக்கு அது அப்போது புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. மாணவப்பருவத்தில் படிப்பு, நட்பின் அரட்டைகள், இனிமையான எதிர்காலக் கனவுகள் இப்படித்தானே அநேகமானவர்களுக்கு வாழப்பிடிக்கும். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? போர் பூமியில் மாணவப்பருவத்தின் அத்தனை சந்தோசங்களையும் இழந்த எனக்கு அது ஏனோ ஓர் வடுவாக என்மனதில் இன்றுவரை பதிந்துதான் விட்டது.

சரி, இனிமேலாவது நாங்கள் பயமில்லாமல் பள்ளிக்கூடம் போகலாம், எங்கள் சொந்தமண்ணில் எங்களுக்கு பிடித்த இடங்களில் அடையாள அட்டை இல்லாமலே சுதந்திரமாய் நடமாடலாம், குண்டுச்சத்தங்கள் இல்லாமல் தூங்கலாம், குறிப்பாக பதுங்குகுழி வாழ்க்கையிலிருந்து விடுதலை, அடிக்கடி தலையை நிமிர்த்தி வானத்தைப் பார்த்து எப்போது தலை மீது குண்டுவிழும் என்று பயப்படத்தேவையில்லை, உலகில் பெரும்பான்மையான மக்களைப்போல் நாங்களும் ஓர் இயல்பு வாழ்க்கை வாழலாம் என்று, காந்திதேசத்தின் மகாத்மா எப்படி எதிர்கால இந்தியாவை கனவு கண்டாரோ அப்படியொரு வாழ்க்கையை நாங்கள் சொற்ப காலமெனும் ஈழத்தில் வாழப்போகிறோம் என்ற சந்தோசக் கற்பனையுடன்தான் வடமராட்சிக்கு திரும்பினேன். என் அத்தனை சந்தோசமும் அமைதிப்படை என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடங்கியிருந்தது.

அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் ஊர் திரும்ப ஆரம்பித்திருந்தார்கள். வழிநெடுக பார்த்தவர்களிடமெல்லாம் இந்தியராணுவம் நல்லவிதமாக நடந்துகொள்கிறார்களா என்றெல்லாம் விசாரித்தபடியே ஊர்வந்து சேர்ந்தோம். எல்லோரும் சொன்னது, “ஓம், ஓம் (ஆம்) ஒரு பிரச்சனையும் இல்லை. அவங்கள் நல்லவிதமாகத்தான் ஆக்களை நடத்துறாங்கள். நீங்கள் பயப்படாமல் போங்கோ” என்பதுதான். சிங்கள பேரினவாதத்தின் ராணுவ கைக்கூலிகளிடம்  மிதிபட்ட எங்களை யாராவது மனிதர்களாக மதித்தால் நிச்சயமாக கண்கலங்கி விடுவோம். ஆரம்பத்தில் இந்தியராணுவம் அப்படித்தான் எங்களை கண்கலங்க வைத்தார்கள். எங்களையும் மனிதர்களாக மதியுங்கள் என்பதுதானே எங்கள் அறுபது வருட கோரிக்கை.

எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு ஈழத்தில் அகாலமரணமான எங்களின் உறவுகளுக்காய் எந்த ராணுவ இடையூறுமின்றி, தலையில் குண்டு விழும் என்ற பயமின்றி  வாய்விட்டு அழமுடிந்தது இந்த நாட்களில்தான். இதற்காக இந்திய ராணுவத்திற்கு நாங்கள் நன்றி சொல்லியே தீரவேண்டும். ஆனால், பிற்காலத்தில் எங்களின் கண்ணீரின் காரணகர்த்தாக்களாகவும் இவர்களே இருந்தார்கள்  என்பது சோகத்திலும் சோகமான விடயம். ஊருக்கு வந்து எங்கள் வீட்டைப் பார்த்தபோது எங்களின் உரிமைகளைப் போலவே உடமைகளும் சிதைக்கப்பட்டும், சிதறடிக்கப்பட்டும் கிடந்தன.  ஊருக்கு வந்து சேர்ந்ததும் சிலகாலம் செத்தவீடு, துக்கவிசாரிப்புகள், உடைமைகளின் இழப்புகள், உடைந்த எங்களின் வீடுகளை சரிப்பண்ணி ஏதோ வீடு என்ற ஓர் கட்டிடத்தை உருவாக்குவது இப்படித்தான் நகர்ந்தது.

அது தவிர முகாமிலிருந்து முன்னேறிய சிங்கள ராணுவத்தால் ஆங்காங்கே புதைக்கப்பட்ட Land Mine என்று சொல்லப்படும் கண்ணிவெடிகளால் காலை இழந்த ஆடு, மாடு, மனிதர்கள் பற்றிய சோகம் ஒருபுறமும், தெருவில் இறங்கி நடந்தால் காலை இழந்துவிடுவோமோ என்ற பயமும் இருக்கத்தான் செய்தது. பேச்சுவழக்கில் கண்ணிவெடி, “மிதிவெடி” என்றே அழைக்கப்படுகிறது.  அப்படி கண்ணிவெடியில் மிதித்தால் என்ன செய்யவேண்டும் என்றும் பொதுவாகவே ஈழத்தமிழர்கள் அறிந்துதான் இருந்தார்கள். இந்த மிதிவெடிகளைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

போர் நடக்கும் இடங்களில் இவை பெரும்பாலும் விதைக்கப்படுகின்றன. இதனால் பலர் கால்களை இழந்து அங்கவீனர்கள் ஆகிறார்கள். ஒரு காலத்தில் இதைப் பற்றி விளம்பரப் படுத்த ஓர் உலகப்பிரபலம் வேண்டுமென்று யார் நினைத்தார்களோ, மறைந்த இங்கிலாந்தின் இளவரசி டயானாவை வைத்து பெருமளவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அவரால் கண்ணிவெடியின் அவலத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்ட ஜெனீவாவில் ஐ. நா. சபையின் முன் மூன்றரை கால் நாற்காலி ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. ஈழத்திலும் இந்த கண்ணிவெடியால் பலர் கால்களை இழந்திருக்கிறார்கள்.

சரி, எதற்கு இப்போது இதைப்பற்றி பேசுகிறேன் என்றால் இன்று வன்னியில் மக்களை மீள்குடியேற்றம் செய்ய முடியாது என்று சிங்கள அரசு சொல்லும் நொண்டிக் காரணங்களில் ஒன்று இந்த மிதிவெடிகள்தான். ஐ. நாவும் தங்களிடம் அதை அகற்றும் பணிக்கு தர பணம் இல்லை என்கிறது. சிங்கள அரசும் யாரும் பணம் தரமாட்டார்களாம் என்று மூக்கால் அழுகிறது. அட, இவர்கள் சொல்லுமளவிற்கு அப்படியேதும் மிதிவெடிகள் இருந்தால்தானே யாராவது அதை அகற்ற முடியும். இப்படித்தான், வன்னியில் இல்லாத கண்ணிவெடியை இந்தியாவின் ஏறக்குறைய இரண்டாயிரம் ராணுவம் இன்றுவரை அகற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லப்படுகிறது.

எப்படியோ, இந்திய ராணுவம் புலிகளை அழிக்கவேண்டும் என்று வந்த நோக்கத்தின் முதல் கட்டவேலையை சுபமே தொடங்கினார்கள்.  இந்தியராணுவம் தெருவில் போவோர், வருவோரையெல்லாம் மறித்து ஜூஸ் கொடுத்தார்கள் எங்கள் ஊரில். “நீங்கள் ஒப்பரேஷன் லிபரேஷனால் நிறையக் கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள். உங்களுக்கு உதவத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஒன்றுக்கும் பயப்படாதீர்கள். என்ன உதவி வேண்டுமானாலும் எங்களின் முகாமில் வந்து தெரிவியுங்கள்” என்றெல்லாம் ஆரம்பத்தில் தேனொழுகப் பேசினார்கள். சிங்கள ராணுவம் இதையெல்லாம் சொல்லியிருந்தால் நாங்கள் நம்பியிருக்க மாட்டோம். இந்திய ராணுவம் சொன்ன போது அதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை.

அப்படி முகாமில் சென்று இவர்களோடு பேசியவர்களிடம் அவர்களின் அவலவாழ்வைப் பற்றி கேட்டதை விட புலிகளைப் பற்றித்தான் அதிகமாக இந்திய ராணுவம் கேட்டதாகச் சொன்னார்கள். வல்வெட்டித்துறையை சுற்றியிருந்த ஊர்களான பொலிகண்டி, உடுப்பிட்டி என்ற ஊர்களிலும் இந்திய ராணுவ முகாம்கள் இருந்தன. இவையிரண்டும் முற்றுமுழுதாக இந்தியராணுவம் மட்டுமே இருந்த முகாம்கள். அமைதிப்படைக்கு இந்த சிறிய ஊர்களில் இத்தனை  ராணுவமுகாம்கள் தேவையா என்ற கேள்விக்கெல்லாம் பதில் இந்திய மேலாதிக்க அரசியலைப் புரிந்தவர்களுக்கு கண்டிப்பாக புரியும்.

பொலிகண்டி முகாம் பொதுமக்களின் வீடுகளை மட்டுமே முகாமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டு உரிமையாளர்கள் சிலர் போய் நியாயம் கேட்டபோது இந்தியராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்டார்கள். உடுப்பிட்டி இராணுவமுகாம் பெண்கள் பாடசாலை ஒன்றை இராணுவமுகாமாக மாற்றி விட்டு, ஒருபக்கம் தாங்கள் இருக்கிறோம் என்றும் மற்றபக்கம் பாடசாலையை நடத்தும் படியும் சொன்னார்கள். அப்படித்தான் சிலகாலம் நடந்தது. ஆனால், அங்கு கல்வி கற்க வந்த மாணவிகளிடம் இவர்கள் தகாத முறையில் நடக்க முற்பட்டதாகவும், மாணவிகளை கிண்டல் செய்வதாகவும் நிறையவே கேள்விப்பட்டேன். பெற்றோர் பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவே பயந்தார்கள். பின்னாட்களில் அது முழுவதுமாக இந்திய ராணுவமுகாமாகவே மாற்றப்பட்டுவிட்டது.

வல்வெட்டித்துறை இராணுவ முகாமில் சிங்கள ராணுவமும், இந்திய ராணுவமும் சேர்ந்தே இருந்தார்கள். அதனால்தான் இருவருமே எங்களின் அன்பைப் பெறுவதில் போட்டி போட்டார்கள்.  ஒரு கட்டத்தில் எங்கள் மீது யார் அதிகம் அன்பாய் இருக்கிறார்கள் என்பதில் சிங்கள ராணுவத்திற்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையே போட்டியே வந்து காமெடி கலாட்டாக்களும் இடம்பெற்றது. இந்திய ராணுவம் ஜூஸ் கொடுத்தால், சிங்கள ராணுவம் ஜூசோடு ஏதாவது சாப்பாடும் கொடுத்தார்கள். முதன்முதலாக நாங்களும், சிங்கள சமூகமும் சகோதர உறவுகள் என்றார்கள். இந்திய ராணுவம் மூன்றாம் மனிதர்கள் என்றார்கள். இந்திய ராணுவத்தோடு பேசாதீர்கள், உங்களை எப்போதுமே நாங்கள்தான் காப்பாற்றுவோம் (அதன் பொருள் உங்களை நாங்கள் மட்டும்தான் அழிக்கலாம் என்பதுதான்)  என்றெல்லாம் அன்புக்கட்டளை போட்டார்கள்.

நாங்கள் தான் பலியாடுகள் ஆயிற்றே. எந்தப்பக்கம் தலையை ஆட்டினாலும் தலையை வெட்டுவார்கள். அதனால் தமிழ் சினிமா வடிவேல் கதாபாத்திரங்கள்  மாதிரி “ஆஹா” என்று முழித்து, பொதுவாக சிரித்து, பொதுவாக தலையை ஆட்டி பரிதாபத்திற்குரிய பிறவிகளாய் ஆனோம்.  ஆனால், இன்று சிங்கள சமூகமும் இந்தியாவும் சகோதர உறவுகள் போலவும், ஈழத்தமிழர்கள் மூன்றாம் தர பிரஜைகளாகவும் புறக்கணிக்கப்பட்டு விட்டோம். அதனை அப்படியே இவர்கள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எங்களை எங்கள் வழியில் விட்டுவிடுங்கள் என்பதுதான் என் கோரிக்கை.

அமைதிப்படை என்றால் போர் புரியும் இருதரப்பையும் போர் செய்யாமல் கண்காணிப்பதுதானே வேலை. இப்படித்தான் நாங்கள் ஆரம்பத்தில் நம்பினோம். இவர்கள் அமைதிப்படைக்குரிய ஐ. நா மற்றும் சர்வதேச விதிமுறைகளை மதித்து ஈழத்தில் அமைதியை நிலைநாட்டுவார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால், இந்திய அமைதிப்படை என்ன செய்தது? போரை தடுக்க வந்தவர்களே எங்கள் மீது போர் தொடுத்தார்கள். தற்பாதுகாப்புக்கு மட்டுமே ஆயுதம் தரிக்கவேண்டியவர்கள் அத்தனை போராயுதங்களையும் எங்கள் மீது ஏவிவிடத் தவறவில்லை. யாழ்ப்பாணத்தில் விமானம் மூலம் குண்டு கூடப் போட்டார்கள். அடிக்கடி ரோந்து போகிறோம் பேர்வழி என்று வீதி வீதியாய் ஊவலம் போய் எங்கள் வயிற்றில் பீதியை கிளப்பினார்கள்.

தங்கள் பாதுகாப்புக்காக எங்களை கைதிகள் போல் பிடித்து வைத்தார்கள். ஒரு தடவையல்ல பலதடவை இப்படி நான் கைதியாக்கப்பட்டேன். கேட்பார் கேள்வியின்றி வீடு புகுந்து நேரம் காலமில்லாமல் வீட்டிலிருந்த என்னையும் என் தாயாரையும் அதேபோல் வீதியில் போனவர்களையும் இழுத்து வந்து ஓர் இடத்தில் கூட்டமாக இருத்தி வைப்பார்கள். பெரும்பாலும் ஆண்களைத்தான் கைது செய்தார்கள். எங்கள் வீட்டில் ஆண்கள் இல்லாததால் என் தாயார், தங்கை, நான் கைதிகளானோம்.

பெரும்பாலும் அன்றாடம் வேலைக்குப் போகிறவர்கள், பால் மற்றும் மரக்கறி விற்பவர்கள், வயதானவர்கள் இப்படித்தான் இவர்களிடம் மாட்டுவார்கள். இந்த வழியால் புலி போனதா என்று கேட்பார்கள். வீட்டிற்குள் இருக்கும் எனக்கு வீதியில் போனது புலியா  அல்லது பிசாசா என்று எப்படித்தெரியும்? இப்படித்தான் பதில் சொல்ல நினைப்பேன். ஆனால், என்னை பிறகு அடித்து விடுவார்கள் என்ற பயத்தினால் அடக்க ஒடுக்கமாக பதில் சொன்னேன். இளைஞர்கள் என்றால் அடித்துத்தான் கேள்வி கேட்டார்கள்.

இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கானால் இரத்தம் கொதிக்கும். யாருடைய மண்ணில் வந்து யார் யாரை அதிகாரம் செய்வது? இப்படி அன்று  மணிக்கணக்கில் வீதியில் ஓரத்தில் உட்கார்த்தி வைக்கப்பட்டிருக்கிறேன். என்னை சோதனை போடுகிறோம் என்று வரம்பு மீறிவிடுவார்களா என்று பயந்துகொண்டே ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்தேன். இந்திய ராணுவம் என்னிடம் வரம்பு மீறி நடந்த சம்பவங்களும் அடிக்கடி என் நினைவுகளில் வந்து வலியை கொடுக்காமல் இல்லை. ஆனாலும், என்னுடன் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே என்ற தைரியம் வரும். இவர்கள் அங்கெ இங்கே பராக்கு பார்க்கும் நேரம், ஏன் எங்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சன்னக்குரலில் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்வோம். சத்தமாய் ஏதாவது பேசினால் என்ன பேசினீர்கள் என்று ஒரே போடாய் போட்டுவிடுவார்கள்.

பசி, தாகம், இயற்கை உபாதை என்று எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு இந்தியராணுவ படை எங்களை போ என்று சொல்லும் வரை காத்திருக்க வேண்டும். சொந்த மண்ணிலேயே இன்னோர் நாட்டு ராணுவத்திடம் அடிமையாய் போன  அவலம் மனதில் எரிச்சலையும் கோபத்தையும்தான் கிளப்பியது. ஆனால் என்ன செய்ய முடியும். கைதிகளாய், கையாலாகாதவராய் அமைதியாய் இருந்தோம். மனம் வலித்தது. ஆனாலும், கண்ணீர் விடக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன்.

இந்தியராணுவம் சம்பந்தமான என் அனுபவத்தில் ஓர் சிறிய ஆறுதலான சம்பவமும் இருக்கத்தான் செய்தது. இந்திய அமைதிப்படையில் (?) தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஒருவர் இருந்தார். என்ன இது தமிழ் பெண்களையும் வீதியில் கைதிகள் போல் உட்கார்த்தி வைத்திருக்கிறார்களே என்ற ஓர் ஆதங்கம் அல்லது இந்தியராணுவத்தின் பெயர் கெடப்போகிறதே என்ற கவலை எதுவோ ஒன்று அவரை எங்களுக்கு தன்னாலான உதவியை செய்யவேண்டும் என்று தூண்டியிருக்கலாம். ஒருநாள் வழக்கம் போல் வீதியில் மற்றவர்களுடன் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தேன். நாங்கள் மட்டுமே பெண்கள். இவர் தமிழர் என்று தெரிந்ததும் நான் இவரிடம் கெஞ்சுவது போல் கேட்டேன். எங்களை தயவு செய்து விட்டுவிடுங்கள் என்று.

இந்த தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர் தலை மீது சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் போல் (சீக்கியரோ?) தலைப்பாகை கட்டிய, சீருடையில் ஏதோ பட்டைகள் உள்ள ஓர் அதிகாரியிடம் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தி அல்லது பஞ்சாபி மொழியில் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தார். இவர் பதுங்கிப் பதுங்கிப் பேசுவதும், அவர் கண்கள் சிவக்க, உரத்த குரலில் கடித்துக் குதறுவது போல் பதில் சொல்வதும் எனக்கு ஏனோ ஓர் தர்மசங்கடத்தை இவருக்கு உண்டாகி விட்டோமோ என்று தோன்றியது. அந்த அதிகாரியின் பேச்சும், அவர் நின்ற தோரணையும் அவ்வளவு பயத்தைக் கொடுத்தது எனக்கு. ஒருவாறாக திரும்பி வந்தவர் சொன்னார் “சரிம்மா, என்னோட வாங்க  உங்களை உங்க வீட்ல விடுறேன்” என்றார். நான் ஏதோ பெரிய மேதாவி போல் முந்திக்கொண்டு “உங்களுக்கு எதுக்கு சிரமம். நாங்களே போய்க்கறோம்” என்றேன்.

அவர் திரும்பி என்னை பார்த்து சிரித்துவிட்டு சொன்னார், “நீங்கள் தனியே போவதை இவர்கள் பார்த்தால் மறுபடியும் பிடித்து உட்கார்த்தி வைப்பார்கள் அதனால் தான் சொல்கிறேன் என்னோடு வாருங்கள் என்று”. அவர் சொல்வது சரியென்று தோன்றவே அவரோடு நடந்தோம். ஒரு இரண்டு நிமிட நடை என் வீட்டிற்கு. அப்படி தான் ஓர் நாள் என் மனதில் தோன்றியதை இவரிடம் கேட்டேன். “நீங்கள் எப்படி இந்த ராணுவத்தில்….” என்று. ஏனென்றால் என் கண்களுக்கு அவர் மிக நல்லவராகவே தோன்றினார். அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால், திரும்பி என்னை ஒருகணம் பார்த்துவிட்டு மறுபடியும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். ஐயோ அந்த முகத்தில் தெரிந்த வலியை விவரிக்க எனக்கு வார்த்தைகள் தெரியவில்லை.

அந்த முகத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வலியைப் பார்த்தேன், உணர்ந்தேன். உண்மையில் ஈழத்தில் அமைதிதான் காக்கப்போகிறோம், ஈழத்தமிழர்களுக்கு உதவப்போகிறோம் என்று நம்பி வந்திருப்பார் போலும். ஆனால் நடந்தது தலைகீழாய் இருக்க, அந்த வலி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. பேச்சை திசை திருப்ப “உங்க பேர் என்ன”? என்றேன். நான் இப்படித்தான் சிலசமயம் மனதில் படுவதை படக்கென்று யாரிடமாவது கேட்டுவிடும் பழக்கம் உள்ளவள். அவர் பெயர் சொல்லவில்லை. சரி எந்த ஊர் என்றாவது சொல்லுங்கள் என்றேன். தான் மானாமதுரையை சேர்ந்தவர் என்றார். ஒரு சில சமயங்களில் என் தங்கையையும் கைதியாக்கிய சந்தர்ப்பங்களில் இவர் தான் அவள் சிறுமி என்பதால் என் வீட்டிற்கு முன்னாலுள்ள சிறிய தாயார் வீட்டிற்கு போகச்சொல்லுவார். நானும் போகலாமா என்றால், உங்களை போக விடமாட்டார்கள் என்றார். சரி, எவ்வளவு தான் அவர் எனக்கு உதவ முடியும் என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த சகோதரர்தான் சில விடயங்களை கற்றுத்தந்தார். ராணுவம் வருவது தெரிந்தால் வீட்டிற்குள் இருக்காதீர்கள். தெருவில் வந்து நில்லுங்கள். வீட்டின் கதவுகளை மூடி வைத்தால் சந்தேகப்படுவார்கள் அதனால் திறந்தே வைத்திருங்கள், ராணுவம் ரோந்து வரும் போது முடியுமான வரைக்கும் அதிகாரியின் அருகிலேயே நில்லுங்கள் அப்படி என்றால் அவர்கள் உங்களுடன் தகாத முறையில் நடக்க பயப்படுவார்கள் என்று. ஆனால், அவருக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அவரை சிறிது காலத்திற்கு பின் நான் ரோந்து வந்த ராணுவத்துடன் பார்க்கவில்லை. இந்தியராணுவம் பற்றிய நினைவு வரும்போதெல்லாம் இவரின் நினைவும் மறக்காமல் வரும் எனக்கு. நன்றிகள் சகோதரரே.

அன்று முதல் இன்றுவரை எல்லா அரசியல் மற்றும் ராணுவ விமர்சகர்களின் விமர்சனம் அல்லது ஒப்பீடு “ஈழம் இந்தியாவின் வியட்நாம்” என்பதுதான். அவர்கள் இந்தியா அல்லது இந்திய அமைதிப்படை (என்னைப்பொறுத்தவரை அது இந்திய ராணுவம்) ஈழத்தில் ஏன் தோற்றது என்று அதற்குரிய காரணத்தை அடுக்குகிறார்கள். இந்தியா தன் முழுப்பலத்தையும் அதாவது படை மற்றும் ஆயுத பலத்தை பிரயோகிக்கவில்லை என்று இவர்கள் சொல்லும் போது எனக்கு உண்மையிலேயே எரிச்சல்தான் வருகிறது. ஐயா, அறிவாளிகளே இந்திய ராணுவம் வந்தது “அமைதிப்படை” என்ற பெயரில். பிறகேன் நீங்கள் உங்கள் பலத்தை எங்கள் மீது மொத்தமாக பிரயோகிக்க முடியவில்லை என்று மூக்கால் அழுகிறீர்கள்? நீங்கள் கொஞ்சமாக பிரயோகித்த பலத்துக்கே நாங்கள் ஏறக்குறைய மூவாயிரம் அப்பாவிகளை இழந்து விட்டோம். இதில் முழுவதுமாக நீங்கள் படைப்பலத்தை காட்டினால் நாங்கள் என்னாகியிருப்போம்?

இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றால் அதன் “மை லாய்” (Mai Lai)  கிராமங்களை பற்றியும் பேசுங்களேன். இந்தியாவின் வியட்நாமில் எங்கள் ஊர்கள் மை லாய் கிராமங்களாய் பலிகொள்ளப்பட்டதை, அப்பாவிகளின் உயிர்கள் காவு வாங்கப்பட்டதை இவர்கள் பேசமாட்டார்கள். வினவு எனக்கு கொடுத்த இந்த அருமையான சந்தர்ப்பத்தில் நானாவது அதன் வலிகளை நினைவு கூரலாம் என்று நினைக்கிறேன்.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

ஈழம் – டி. அருள் எழிலனின் “பேரினவாதத்தின் ராஜா” நூல் வெளியீட்டு விழா!

7

perinavathathin-raja-arul-ezhilan

கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி. வினோஜ்குமார், மீனா கந்தசாமி, பீர் முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதி தம்பி, ராஜுமூருகன், டி. அருள் எழிலன்.

நிகழ்வு: 06- 12 2009 ஞாயிறு, நேரம் மாலை 6.00 மணி,

இடம்: புக்பாயிண்ட் (ஸ்பென்சர் எதிரில்)  அண்ணாசாலை, சென்னை.

நிகழ்வும், ஏற்பாடும்: புலம் பதிப்பகம்.

எரிந்து கொண்டிருக்கும் இம்மக்களை விட்டு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் நீதி பேசுகிறார்கள். பாசிசத்தின் காலடியில் அறம் செத்துக் கிடக்கிறது. பெரும்பான்மைவாதத்தின் சர்வாதிகார முகங்கள் ஜனநாயக முகமூடிகளை அணிகிறார்கள் இப்போது. நாடுகள் எரிந்து கொண்டிருக்கிறது. தேசிய வெறியால் ஈழ மக்களைச் சுட்டதும் இந்த நெருப்புதான். விஸ்தரிப்பு நோக்குடன் எவனெல்லாம் மக்களை நிலங்களிலிருந்து பிடுங்கி வீசுகிறானோ அவனெல்லாம் பேரினவாதிதான். ஆமாம் அதுதான் இப்போது ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

121

பிடி கத்திரிக்காய்இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூரில் பி.டி கத்திரிக்காய்க்கு எதிரான உழவர் உழைப்பாளர் கட்சியின் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. அபாயகரமான சாயக்கழிவுகளுடன் அசால்ட்டாக வாழ்க்கை நடத்தும் எங்கள் கவனத்தை கத்திரிக்காயா திருப்பும் ?? கொடி புதுசாயிருக்கே என ஒருசிலர் கவனித்ததுதான் மிச்சம். ஆனால் சந்திராயன் மயில்சாமி அண்ணாதுரையை வாழ்த்துரை வழங்கச்செய்து பி.டி கத்திரிக்காய்க்கு மாபெரும் விளம்பரம் ஒன்றை செய்திருக்கிறது விவசாயப் பல்கலைக்கழகமும் அவர்களின் சமீபத்தைய குலசாமியான மான்சாண்டோவும். இதுவரை அப்துல் கலாமை உதாரணபுருஷனாக கொண்டிருந்து கொஞ்சம் சலித்துப்போயிருந்த மக்களின் புதிய கண்டுபிடிப்புதான் மயில்சாமி அண்ணாதுரை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நான்கு பி.டி கத்திரிக்காய்களை கோவை வேளான் பல்கலைக்கழகம் அறிமுகம்  செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார் ம.சா.அ.து. இதுவரை உள்ளூரில் விளைந்த கத்திரிக்காயால் சுற்றுப்புறத்திற்கு என்ன கேடு வந்துவிட்டது என்பது சத்தியமாக எனக்குப் புரியவில்லை. அதையும் ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரை வைத்து சொல்லச் சொல்வதன் காரணம் என்ன ?? ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தத்திற்கு மார்கெட்டிங் செய்ய அப்துல் கலாமை அனுப்பினார்கள், இப்போது அண்ணாதுரையின் முறை.பி.டி கத்திரிக்காயின் நல்லதா கெட்டதா என விவாதிக்கும் முன் அதன் தேவையைப்பற்றி தெரிந்துகொள்வது முக்கியம். பெரிய அளவில் தட்டுப்பாடு வராத, பயிரிடப்படுவதிலும் ஒரு பெரிய முக்கியத்துவம் இல்லாத கத்திரிக்கு ( தங்கள் நிலத்தின் ஒரு பாகத்தில் மட்டுமே பெரும்பாலான விவசாயிகள் கத்திரியை பயிரிடுகிறார்கள் ) மரபணு மாற்றம் செய்வது என்பது ஒரு முன்னோட்டமே. அடுத்து வரப்போகும் மற்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கான தடைகளை இப்போதே கத்திரியை அனுப்பி ஆழம் பார்க்கிறார்கள். நமது கேனத்தனத்தினைப் பொறுத்து பி.டி நெல் உள்ளிட்ட மற்ற பயிர்கள் இன்னும் சுலபமாக உள்ளே நுழையும்.

இந்தியாவில்  மரபணு மாற்றம் செய்யப்பட்டு முதலில் பயன்பாட்டுக்கு வர இருப்பது கத்திரிக்காய்தான். பி.டி கத்திரிக்காய் உடலுக்கு ஏற்படுத்தும் கேடுகளைப்பற்றி ஆராயாமல் ஏதோ வீடு கட்டும் ஒப்புதலை வழங்குவதுபோல அதன் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது மத்திய மரபணுப் பொறியியல் ஒப்புதல் குழு ( genetic engineering approval committe ). கத்திரி மீதான ஆய்வு முடிவுகள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அதன் பிறகு மக்களின் கருத்து கேட்கப்பட்ட பிறகே மத்திய அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் பல்வேறு விளைவுகள் பற்றி ஆய்வு செய்ய  இந்தியாவில் வசதி இல்லை என்றும் உடனடியாக ஒரு ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசை கோரியிருக்கிறார் புஷ்பா பார்கவா ( இவர் உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட GEAC யின் பார்வையாளர் ). மத்திய அரசும் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறது. அப்படியானால் ஜெயராம் ரமேஷ் மக்களுக்குத் தரப்போவது எந்த ஆய்வறிக்கை என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

உண்மையில் GEAC ஆய்வு என சொல்வது பி.டி கத்திரிக்காயை உருவாக்கிய மான்சாண்டோ செய்த ஆய்வைத்தான். அந்த ஆய்வு பத்து எலிகளைக் கொண்டு மூன்று மாதங்கள் மட்டும் நடைபெற்றது. இதில் நீண்டகால பாதிப்புகள் குறித்து எந்த தகவலை பெறமுடியும் ? முதலில் எலிகள் மீதும் பிறகு குரங்குகள் மீதும் ஆய்வுகள் செய்யப்படுவது வழக்கம். இப்போது இந்தியர்கள் கிடைத்துவிட்டதால் குரங்குகள் மீதான ஆய்வு தவிர்க்கப்பட்டு விட்டதுபோலும். விதைகளை மீண்டும் பயன்படுத்த முடியாமை, மகரந்த சேர்க்கை மூலம் மற்ற பயிர்களும் மலடாகும் போன்ற பிரச்சனைகள் பற்றி ஆய்வு செய்யும் சாத்தியம் இந்தியாவில் கண்ணுக்கெட்டியவரை கிடையாது. ரசாயன பூச்சிக்கொல்லிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அவற்றின் ஆபத்துக்கள் பற்றி பெரிய தெளிவு மக்களிடம் கிடையாது அல்லது அவர்களுக்கு விளக்கம் தரப்படவில்லை. தாய்ப்பால் முதல் அண்டார்டிகா வரை பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு அறியப்பட்டபிறகும் அந்த விவரம் பெரும்பாலான பாமர மக்களுக்கு தெரியவில்லை. இதேகதைதான் பல ஆலைக்கழிவுகளின் விசயத்தில் இப்போதும் நடக்கிறது. இந்த லட்சணத்தில் மக்களிடம் கருத்து கேட்டு பி.டி கத்திரிக்காயை அனுமதிக்கப்போவதாக சொல்வது வேறு பயமுறுத்துகிறது.

இதன் இன்னொரு முகம் பொருளாதாரம் சார்ந்தது. விவசாயிகளை சகல வழிகளிலும் நிறுவனங்களை சார்ந்திருக்கச் செய்வது. ஏற்கனவே உரம் பூச்சி மருந்து என பல இடுபொருட்களுக்கு விவசாயிகள் அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள். விதைகளும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டால் தீர்ந்தது பிரச்சினை. எல்லா விவசாயியும் ஒப்பந்தப் பணியாளரைப்போல மாண்சான்டோவுக்கு வேலைசெய்ய வேண்டியதுதான். பி.டி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை 1750, அப்போது சாதாரண பருத்தி விதை முன்னூறு ரூபாய்கூட கிடையாது. அப்படி வாங்கியவர்களும் பெரிய மகசூல் எடுத்ததாக மான்சாண்டோவாலும்கூட நிரூபிக்க முடியவில்லை அவர்களின் உள்ளூர் எடுபிடிகளான வேளான் பல்கலை(ளை)க்கழகங்களாலும் நிரூபிக்க முடியவில்லை. பி.டி பருத்தியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்போது கத்திரிக்காய் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ தெரியாது. இது போதாதென்று இன்னும் ஐம்பத்தாறு பி.டி பயிர்கள் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றன.

விதை யார் கொடுத்தால் என்ன, கத்திரிக்காய் வழக்கம்போல கிடைக்கும்தானே என கேட்கவும் ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க என்னிடமும் ஒரு கேள்வி உண்டு, உங்கள் பிள்ளை எங்கிருந்து வந்தால் என்ன ? அது உங்களுடையதாக இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது ?

விதைக்கான உரிமை பறிபோகும் வேளையில் விளைபொருளின் மீதான உரிமையையும் பறிக்க ஒரு சட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கரும்புக்கான நியாய ஆதரவு விலை அவசரச்சட்டம் என்பதுதான் அது. அதாவது இப்போது அமுலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சுமார் முன்னூறு ரூபாய் குறைவான விலையை ஒரு டன்னுக்கு “அவசரமாக” நிர்ணயம் செய்யும் சட்டம்தான் இப்போது பிரச்சினையாகியிருக்கிறது. ஒரு விளைபொருளின் விலையை குறைப்பதற்கு அவசர சட்டம் கொண்டு வர முயலும் ஒரே சாதனை அரசு இந்தியாவில்தான் இருக்கமுடியும். இத்தனைக்கும் கடந்த ஓராண்டில் மட்டும் சர்க்கரையின் சந்தை விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.ஒப்புக்குக்கூட எந்தவிதமான காரணமும் சொல்லாமல் விவசாயிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பதற்கு ஒப்பான ஒரு திட்டத்தை சட்டமாக கொண்டு வர முயற்சி செய்திருக்கிறது  காங்கிரஸ்.

ஏற்கனவே எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி திட்டமிட்டு குறைக்கப்பட்டு இறக்குமதி நிரந்தரமாகிவிட்டது. அடுத்து கரும்பு இறக்குமதி துவங்கியாயிற்று ( கரும்பு உற்பத்திப் பரப்பு 48% குறைந்துவிட்டதாக ( அல்லது குறைக்கப்பட்டுவிட்டதாக) மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அடுத்து அரிசி இறக்குமதிக்கு சாக்குப்பையை வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் பிரணாப் முகர்ஜி. மேற்கூறிய எல்லா பொருட்களும் சமீப காலமாக கடுமையான விலையேற்றத்தை சந்தித்திருக்கின்றன. விவசாயிக்கும் விவசாயத்திற்கும் எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மறுநாள் பாதிக்கப்போவது சாதாரண நுகர்வோரான இந்தியக் குடிமகனைத்தான். மன்மோகனும், மாண்டெக் சிங்கும் இந்தியாவை பணம் படைத்தோருக்கு மட்டுமான ஒரு தேசமாக மாற்றும் வரை ஓயப்போவதில்லை. அதுவரை நம்மை திசைதிருப்ப இருக்கவே இருக்கிறது பாகிஸ்தான் தீவிரவாதம். அதுசரி செத்தாலும் உள்ளூர்காரனால் சாவதுதானே தேசபக்தி.

கரும்பு விலை சட்டத்தின் மூலம் நமக்கு இன்னொரு முக்கியமான பாடம் கிடைத்திருக்கிறது. டில்லியை ஒருநாள் முற்றுகையிட்டாலே ஒரு அராஜகமான சட்டத்தை நிறுத்த முடியும் என்பதுதான் அது.

-நன்றி வில்லவன்

படிக்க