Thursday, May 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 9

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 நவம்பர், 1988 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 24 | 1988 நவம்பர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தொழிற்சங்க துரோகத்தன்மை அம்பலப்பட்டுப் போனது!
  • வாசகர் கடிதம்
  • அரசு – நாட்டிலேயே மிகப்பெரிய ஏகபோக சுரண்டல் நிறுவனம்
  • பிஞ்சுப் பெண்குழந்தைகளின் நெஞ்சை நெறித்து…
  • மதவெறிக் கலவரங்கள்: காங்கிரசின் கடைசி ஆயுதம்!
  • கூலி ஏழைகளைக் கொன்ற போலீசு ரௌடிகள்
  • பர்மா: புரட்சியைக் கண்டஞ்சும் பேடிகளாக ரஷிய ஏகாதிபத்தியவாதிகள்
  • நாடாளுமன்ற தேர்தல் – தயாரிப்புகள்: ஆரம்பத்திலேயே அழுகுணி ஆட்டம்
  • தொழிற்சங்க புரோக்கர்களின் துரோகத்தனம்
  • உதயமூர்த்தி: இறக்குமான காங்கிரசு கைக்கூலி
  • பீரங்கித் திருடனுக்கு போலீசு விசுவாசம்!
  • போக்குவரத்து சாலையா? மரண வழிப்பாதையா?
  • சாதிக் கலவரத்திற்கு எதிராக…
  • மோப்பம் பிடித்த மூக்குடைபட்டது
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நாக்பூர் கலவரம்: ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யாமல் இந்தியாவிற்கு அமைதியில்லை

காராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தில் முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் சிலையை அகற்ற வேண்டும் என்று முழக்கத்தை முன்வைத்து விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் போன்ற ஆர்.எஸ்.எஸ்-இன் குண்டர் படைகள் திட்டமிட்ட கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி பகுதியில் அமைந்துள்ள ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் நீண்ட நாட்களாக வெறுப்பு பிரச்சாரம் செய்து வந்தது. அதற்காக “ஒளரங்கசீப் ஒரு கொடுங்கோலன்”, “சத்ரபதி சம்பாஜியை படுகொலை செய்தவன்” என்றெல்லாம் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மதவெறுப்பு பிரச்சாரத்தை பரப்பி வந்தது.

அதனை தீவிரப்படுத்தும் விதமாக, சத்ரபதி சம்பாஜி கதாப்பாத்திரத்தில் விக்கி ஹெளசல் நடித்த “சாவா” என்கிற இந்தி படத்தை காவி கும்பல் திட்டமிட்டே வெளியிட்டது. அப்படத்தில் ஒளரங்கசீப்பை மிகவும் கொடூரமானவராக சித்தரித்திருந்தது. இது காவி கும்பலின் பிரச்சாரத்திற்கு துணைபோனது.

நடந்துமுடிந்த சட்டமன்றத் கூட்டத்தொடரில் பேசிய சமாஜ்வாதி எம்.எல்.ஏ. அபு ஆஷ்மி, “17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முகலாயப் பேரரசரை கொடூரமான சகிப்புத்தன்மையற்ற ஆட்சியாளராக நான் பார்க்கவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் ஒளரங்கசீப் மீது தவறான பிம்பம் உருவாக்கப்படுகிறது” என்று சாவா படம் குறித்த தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.

அதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட காவி கும்பல், அபு ஆஷ்மி இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாகக் கூறி அவர் மீது பல வழக்குகளை பதிவு செய்தது. மார்ச் 26-ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடரிலிருந்து அபு ஆஷ்மியை இடைநீக்கம் செய்தது. இதன் பின்னர் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்கிற தீவிரமான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

இந்நிலையில், நேற்று (மார்ச் 17) காலை விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துமதவெறி காவி குண்டர் படைகள், “சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஒளரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது போல கரசேவகர்கள் மூலம் கல்லறையை வேரோடு பிடுங்கி எரிவோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளது. காவி கும்பலுக்கு சாதகமாக மகாராஷ்டிரா பா.ஜ.க. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், “எல்லோரும் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள். அதற்கான சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வெறுப்பை கக்கினார்.

அதற்கு மேலாக, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “நாங்கள் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். உண்மையான தேசபக்தன் ஔரங்கசீப்பை போற்ற மாட்டான். யாரும் ஔரங்கசீப்பை ஆதரிக்க மாட்டார்கள். மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை (ஔரங்கசீப்பின் கல்லறை) நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்” என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறி, இனவெறியை தூண்டிவிட்டார். மாநிலத்திலுள்ள அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவளித்தன.


படிக்க: உ.பி.: ஹோலி பண்டிகையில் இஸ்லாமியரை அடித்துக்கொன்ற காவி கும்பல்


மேலும், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்புகள் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக்கோரி மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே, கோலாப்பூர், நாசிக், மாலேகான், நாக்பூர், அஹல்யாநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் என்ற பெயரில் கலவர முயற்சிகளை மேற்கொண்டது.

குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் மாவட்டத்தின் மஹால் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. பின்னர் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த காவி கும்பல் மதவெறி முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஒளரங்கசீப்பின் உருவப் பொம்மையையும் இஸ்லாமிய மக்களின் புனித நூலான குரானையும் எரித்தது. பின்னர் 11 மணிக்கு சிட்னிஸ் பூங்கா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகங்களுக்கு தீ வைத்து வாகனங்களை தீக்கிரையாக்கியது. வீடுகளின் மேல் கல் வீசி தாக்குதல் நடத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டது. இதில் 30 பேர் காயடைமந்துள்ளனர். 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு 7.30 மணி மணிக்கு சிட்னிஸ் பூங்கா அருகே காவி கும்பல் வன்முறையை தீவிரப்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து இரவு 10:40 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமை அலுவலகத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஹன்சபுரி பகுதியில் வன்முறையை தொடங்கியது காவி கும்பல். அப்பகுதியில் உள்ள வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீ வைத்து எரித்து வெறியாட்டம் போட்டுள்ளது. வீடுகள் மற்றும் மருத்துவமனை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் நாக்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து ஹன்சபுரி மக்கள் கூறுகையில், “ஒரு குழு இங்கு வந்தது. அவர்களின் முகங்கள் துணிகளால் மறைக்கப்பட்டிருந்தன. அவர்கள் கைகளில் கூர்மையான ஆயுதங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் பாட்டில்களை வைத்திருந்தனர். அவர்கள் கலவரத்தை தொடங்கினர். கடைகளை சேதப்படுத்தினர். கற்களை வீசினர். வாகனங்களிலும் தீ வைத்தனர்” என்று தெரிவித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். கும்பலானது இந்தாண்டு தனது நூற்றாண்டை கொண்டாட உள்ளது. கலவரங்களின் மூலம் இந்தியாவில் காலூன்றிய ஆர்.எஸ்.எஸ். கும்பல் தனது நூற்றாண்டையும் கலவரங்களின் மூலமே ‘கொண்டாட’ எத்தனிக்கிறது. மகாராஷ்டிரா மட்டுமின்றி, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் இராமநவமி, ஹோலி என இந்து பண்டிகைகளின் மூலம் கலவர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தியும், திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலமும் மதக்கலவரத்தை தூண்ட காவி கும்பல் எத்தனிக்கிறது. இவையெல்லாம், ஆர்.எஸ்.எஸ். கும்பலை இம்மண்ணிலிருந்து பிடுங்கி எறிந்தால் மட்டுமே இந்திய மக்களால் இந்நாட்டில் அமைதியை அனுபவிக்க முடியும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்: தீர்வின் திசை எது?

ந்தாண்டு தொடக்கத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பேசுபொருளானது. கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இச்சம்பவத்திற்கு பிறகு, தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக, பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்த மாணவி, அதே பள்ளியைச் சார்ந்த மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட அதிர்ச்சிகர தகவலும் வெளியானது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சி குப்பூரில் அரசு மாதிரி பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அப்பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவந்த சிவக்குமார் என்பவன் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

கோவை மாவட்டம், மருதமலை அருகே ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள ஒன்றிய அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றிவரும் ராஜன் என்பவன் வகுப்பு நேரத்தில் ஓவியப் பயிற்சி அளிக்கும்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளான். இதுகுறித்து மாணவிகள் பள்ளியின் முதல்வரிடம் புகார் அளித்ததன் பேரில் ஓவிய ஆசிரியர் ராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.

13-க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய பாலியல் பொறுக்கி சிவராமன்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே செயல்பட்டுவரும் தனியார் சி.பி.எஸ்.சி. பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அப்பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இது சம்பந்தமாக விசாரிக்க பள்ளிக்குச் சென்ற மாணவியின் பெற்றோரிடம் பள்ளியின் தாளாளர் சுதா, “எனது கணவர் இன்னும் இரண்டு நாட்களில் வெளிநாடு சென்றுவிடுவார். இந்தப் பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை, உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு பாலியல் தொல்லை கொடுத்த வசந்தகுமார் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்து அலுவலகத்தை அடித்து உடைத்தனர்.

மேற்குறிப்பிட்டவை அனைத்தும் கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த, ஊடக வெளிச்சம் பெற்ற சில சம்பவங்கள் மட்டுமே. இவையில்லாமல் பள்ளியில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது; பள்ளிக்கு சென்றுவரும் மாணவிகளை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்தது; ஆபாசப் படங்களுக்கு அடிமையான சிறுவர்கள் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது என பல்வேறு சம்பவங்கள் இந்த ஒரு மாத காலத்திற்குள் நடந்துள்ளன.

குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துவரும் சூழலில், குழந்தைகளின் பாதுகாப்பு மையமாக விளங்க வேண்டிய பள்ளிகளிலேயே இத்தகைய பாலியல் கொடூரங்கள் அரங்கேறி வருவது மிகவும் அபாயகரமான போக்காக உள்ளது.

வெற்று அறிவிப்புகளன்றி வேறொன்றுமில்லை

பள்ளிகளில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கிறது என்கிறார். இதிலிருந்தே குழந்தைகள் பாதுகாப்பு மீது தி.மு.க. அரசு கொண்டுள்ள அக்கறையின் லட்சணத்தை புரிந்துகொள்ள முடியும். எந்த பிரச்சினை எழுந்தாலும் அதை மூடிமறைப்பதற்கும், முட்டுக்கொடுப்பதற்கும் தி.மு.க. அரசு எடுக்கும் முயற்சிகளில் கால்வாசி கூட அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எடுப்பதில்லை. பள்ளிகளில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறைப் பிரச்சினையிலும் இதேநிலைதான் தொடர்கிறது.

சான்றாக, கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஒன்று கடந்த பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில், கல்வி நிறுவனங்களில் புதியதாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை (தற்காலிக மற்றும் நிரந்தர) பணி நியமனம் செய்யும் முன் போலீஸ்துறை சரிப்பார்ப்பு சான்று (Police verification certificate) பெறுவது கட்டாயமாக்கப்படும்; போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் உயர்கல்வி சான்றிதழ்கள் தகுந்த விதிமுறைகளைப் பின்பற்றி இரத்து செய்யப்படும்; குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு கல்வி வழங்கப்படும் என பல அறிவிப்புகள் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டன.

தி.மு.க. அரசு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பதுபோல ஊடகங்கள் இந்த அறிவிப்புகளை ஊதிப் பெருக்குகின்றன. ஆனால், ஏற்கெனவே 2012-இல் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தையும் இரத்து செய்வது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட அரசாணை (அரசாணை நிலை எண். 121) நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இதில் எதுவும் நடைமுறைக்கு செல்லவில்லை என்பதே எதார்த்தம். இந்த அரசாணையின்கீழ், எத்தனை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரங்களே தங்களிடம் இல்லை என்கிறார் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன். தற்போதுள்ள அரசாவது, 2012 அரசாணையை முறையாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை குழந்தைகள் நல ஆர்வலர்கள் பலர் முன்வைத்து வருகின்றனர்.

எனவே, தற்போது தி.மு.க. அரசு வெளியிட்டுள்ள இந்தப் புதிய அறிவிப்புகள் மக்கள் மத்தியில் எழும் கொந்தளிப்பைத் தணிப்பதற்காக வெளியிடப்பட்டுள்ள வெற்று அறிவிப்புகள் மட்டுமே என்பது தெளிவாகிறது.

அதேபோல, கடந்த பத்து ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியலைக் கல்வித்துறைச் சேகரித்துள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இப்பட்டியலில், தொடக்கக் கல்வித்துறையில் 80 பேர், பள்ளிக்கல்வித்துறையில் 175 பேர் என 255 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மீது பணிநீக்கம், கல்வித்தகுதி இரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவையும் எந்தளவிற்கு நடைமுறைக்கு செல்லும் என்பது கேள்விக்குறிதான்.

ஏனெனில், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 16 சதவிகிதம் பேர்தான் தண்டனை பெறுகிறார்கள். தமிழ்நாட்டில் 2012 – ஜூன் 2022 காலகட்டத்தில் மட்டும் 20,829 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதில் 60 சதவிகிதத்திற்கும் மேலான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

அதிலும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களை அதிகபட்சம் பணியிட மாற்றம் செய்வது; பணியிடை நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்படுகிறது. சான்றாக, கிருஷ்ணகிரியில் நடந்த சம்பவத்தை எடுத்துகொள்வோம். இச்சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் நேரில் சென்று விசாரித்தபோது, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாலியல் குற்றவாளியான சின்னசாமி (57), குடிபோதைக்கு அடிமையானவன் என்றும் பள்ளிக்கு குடிபோதையில் வந்து வகுப்புகள் எடுப்பான் என்றும் மக்கள் தெரிவித்தனர். மற்றொரு குற்றவாளியான ஆறுமுகம் (48), ஏற்கெனவே பணிபுரிந்துவந்த பள்ளியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அதன் பின்னர் மத்தூர் நடுநிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளான்.
ஒரு ஆசிரியரால் சர்வசாதாரணமாக குடித்துவிட்டு பள்ளிக்கு வர முடிகிறது; ஏற்கெனவே பாலியல் குற்றமிழைத்திருந்தாலும் மீண்டும் வேறு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய முடிகிறது. இதிலிருந்தே, குழந்தைகளின் பாதுகாப்பில் அரசு நிர்வாகம் எந்தளவிற்கு அலட்சியமாக நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

பள்ளிகளில் நிறுவனமயமாகும் பாலியல் வன்முறைகள்

பள்ளிகளில் பாலியல் வன்முறை அதிகரிப்பது குறித்து பேசியுள்ள பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “ஒவ்வொரு ஆண்டும், சுமார் ரூ.40,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கப்படும் பள்ளிக் கல்வித்துறையில், அரசுப் பள்ளிகளில் மட்டுமே இதுபோன்ற பாலியல் குற்றங்களும், மாணவ, மாணவியர் எதிர்கொள்ளும் இதர பிரச்சினைகளும் அதிகளவில் நடைபெறுகின்றன” என்று கூறுகிறார். இதன்மூலம், நைச்சியமாக அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் அதிகமாக பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடக்கிறது என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார் அண்ணாமலை.

ஆனால், அரசு மற்றும் தனியார் பள்ளி இரண்டிலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறதென்றாலும், அரசு பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில்தான் நிறுவனமயமான முறையில் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. பத்ம சேசாத்ரி (ராஜகோபாலன்), சின்மயா (மிதுன் சக்ரவர்த்தி), சுஷில் ஹரி பள்ளி (சிவசங்கர் பாபா), கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீசைதன்யா தனியார் பள்ளி என நிறுவனமயமான முறையில் தனியார் பள்ளிகளில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஏராளம். இந்த எல்லா வழக்குகளிலும் பள்ளி நிர்வாகமும் போலீசு, நீதிமன்றம் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளது.

சுஷில் ஹரி பள்ளி, சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி போன்ற தனியார் பள்ளிகளை நடத்தும் முதலாளிகளின் பணபலம், அரசியல் பலம், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட சங்கப்பரிவார கும்பலுடனான உறவு காரணமாக இந்தக் கும்பலால் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சுரண்டலை எந்தவித தடையுமின்றி நடத்த முடிகிறது. அதிகார வர்க்கமும் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு இக்குற்றங்களுக்கு உறுதுணையாக இருந்து சேவை செய்கிறது.

சான்றாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் என்ற இடத்தில் உள்ள கிங்ஸ்லி கார்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் போலி ஆவணங்கள் மூலம் என்.சி.சி. பயிற்சியாளராக பணியாற்றிவந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிவராமன் என்பவன் 13-க்கும் மேற்பட்ட மாணவிகளைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கிய கொடூரச் சம்பவம் அரங்கேறியது. இதற்கு அந்தப் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், பள்ளி தாளாளர் சாம்சன் வெஸ்லி, ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 11 பேர் துணையாக இருந்ததாக கைது செய்யப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மட்டுமல்லாமல், வேறு பல மாவட்டங்களில் பல பள்ளி-கல்லூரிகளில் போலியான ஆவணங்கள் தயாரித்து தன்னை என்.சி.சி. பயிற்சியாளராக காட்டி பணியாற்றியதும் பல முகாம்களை நடத்தியதும் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த என்.சி.சி. முகாம்களுக்கு இராணுவம், அதிவிரைவுப்படை, போலீஸ் துறைகளில் ஏற்கெனவே பணிபுரிந்தவர்களைக் கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டு இயங்கி வந்ததும் அம்பலமானது. ஆகமொத்தத்தில், பள்ளி நிர்வாகம்-கட்சி பின்னணி-அதிகாரவர்க்க கூட்டு என மிகப்பெரிய வலைப்பின்னலுடன் மிகவும் நிறுவனமயமான முறையில் அரங்கேறிவந்த இந்தப் பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்பலமாகி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுபோன்று நிறுவனமயமான முறையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படும் மாணவிகளுக்கு நீதி கிடைப்பது என்பது இயலாத ஒன்று. இக்குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கைதுசெய்ய வைப்பதற்கே மிகப்பெரியளவில் போராட வேண்டியுள்ளது என்பதே எதார்த்த நிலை.

போராட்டங்களே இக்கொடுமைகளுக்கு முடிவுகட்டும்!

பள்ளிகளில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு குழந்தைகள் நல ஆர்வலர்களால் பெரும்பான்மையாக முன்வைக்கப்படும் தீர்வு என்பது தமிழ்நாட்டில் “குழந்தைகள் பாதுகாப்பு கொள்கையை” உருவாக்க வேண்டும் என்பதே. குழந்தைகளுக்கு பள்ளிகளில் நடக்கக்கூடிய அனைத்து வன்முறைகள் மீதும் கவனம் செலுத்தும் வகையில் இக்கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் என்கிறார்கள் ஆர்வலர்கள். குழந்தைகள் பாதுகாப்பிற்கு தனிக்கொள்கை உருவாக்குவது, பாலியல் விழிப்புணர்வு கல்வி அளிப்பது, உளவியல் ஆலோசனை மையம் போன்றவையெல்லாம் அவசியமானதுதான். ஆனால், அவை மட்டும் போதாது.

பள்ளி, கல்லூரிகளில், அரசுப் பதவிகளில் வேலை செய்பவர்கள் பாலின சமத்துவம் தொடர்பான புரிதல் கொண்டவர்களாக, சமூக அக்கறை கொண்டவர்களாக இருப்பது அவர்களது தகுதிக்கான முதன்மை நிபந்தனையாக்கப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவர்கள் இளைஞர்களின் சங்கங்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய சங்கங்கள் நிறுவப்பட வேண்டும். அவை முழுச் சுதந்திரத்துடனும் ஜனநாயகத்துடனும் செயல்பட வேண்டும். இச்சங்கங்களின் மூலம் மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு பள்ளிகளில் சுதந்திரமான ஜனநாயகவெளியை உருவாக்கும்போதுதான் மாணவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை அச்சமின்றி வெளிப்படுத்த முடியும்.
பெரும்பாலான தனியார் பள்ளிகள் பெற்றோர்கள் பள்ளிக்குள் நுழைவதற்கு கூட அனுமதிப்பதில்லை. இவ்வாறு இல்லாமல் பள்ளிகள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்க வேண்டும்.
அதேசமயம், நிறுவனமயமான முறையில் அரங்கேறும் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு கூடுதலான கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும், கண்டுகொள்ளாமல் விடும், தனியார் பள்ளிகளை சீல் வைத்து, அரசு தன் பொறுப்பில் எடுத்து நடத்த வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் பள்ளிகளில் இத்தகைய பாலியல் குற்றங்கள் அதிகளவு நடைபெறுகின்றன. எனவே அத்தகைய பள்ளிகளைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு முக்கிய காரணிகளாக இருக்கும் ஆபாசப் படங்களைத் தடை செய்வது; கஞ்சா, சாராயம் போன்ற போதைப்பொருள்களை ஒழித்துக் கட்டுவது; பெண்களைப் போதைப்பொருளாக சித்தரிக்கும் விளம்பரங்கள், பத்திரிகைகள் முதலியவற்றை தடை செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயக சக்திகள், ஆசிரியர்கள் மாணவர்கள் என அனைவரும் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை கட்டியமைப்பதன் மூலமே இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் திசையை நோக்கி முன்னேற முடியும்.


மதி

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மேற்குவங்கத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட திட்டமிடும் பா.ஜ.க.

ருகின்ற ஏப்ரல் மாதத்தில் மேற்குவங்க மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இராமநவமி ஊர்வலங்களை நடத்தப்போவதாக அம்மாநில பா.ஜ.க. தலைவர் பேசியிருப்பது மேற்குவங்கத்தில் மதக்கலவரத்தை தூண்ட ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் ஆயத்தமாகி வருவதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

கடந்த மார்ச் 14-ஆம் தேதி அன்று புர்பா மெதினி பூர் மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான நந்திகிராமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்தத் தலைவர் சுவேந்து அதிகாரி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “இராமரை பிரார்த்தனை செய்ய எங்களுக்கு அனுமதி தேவையில்லை. இராமநவமி ஊர்வலங்களை நடத்துபவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் அரசு நிர்வாகத்திடம் அனுமதிபெற தேவையில்லை. நாங்கள் அமைதியான பேரணிகளை நடத்துவோம். மற்றவர்களும் (இஸ்லாமியர்கள்) அமைதியாக இருப்பதை உறுதி செய்வது நிர்வாகத்தின் பொறுப்பு” என்று மதவெறியூட்டி கலவரத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்து மதவெறியை தூண்டும் விதமாக இந்த ஆண்டு இறுதிக்குள் தனது தொகுதியில் உள்ள சோனாச்சுராவில் ஒரு இராமர் கோவில் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

பா.ஜ.க. தலைவரின் மதவெறி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் “சுவேந்து அதிகாரி போன்ற பா.ஜ.க. தலைவர்களின் சொல்லாட்சிகளால் மாநில மக்கள் மயங்க மாட்டார்கள். இராமகிருஷ்ணா, விவேகானந்தர், ஸ்ரீசைதன்யர் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் பூமியில் மக்கள் தேசபக்தி அறிக்கைகளால் பாதிக்கப்பட முடியாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வழியில் பண்டிகைகளைக் கொண்டாட உரிமை உண்டு. இராமநவமி பேரணிகளை நடத்த விரும்புவோர் அவ்வாறு செய்வார்கள். அவர்களுக்கு சுவேந்து அதிகாரியின் தூண்டுதல்கள் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் இந்துக்களின் சார்பாக பேசுவதற்கு பா.ஜ.க. தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சி.பி.ஐ(எம்) தலைவர் சுஜன் சக்ரவர்த்தி, “இராம நவமி மேற்குவங்கத்தில் ஒரு வெகுஜன இந்து பண்டிகையாக ஒருபோதும் இருந்ததில்லை. அதை ஒரு அரசியல் நிகழ்வாக மாற்றியது பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள்தான். ஒரு விழாவில் பங்கேற்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். மாநிலத்தில் இந்து மதத்தின் பாதுகாவலர் சுவேந்து அதிகாரி அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று வட மாநிலங்களில் இந்துக்களின் இராம நவமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் இப்பண்டிகை பரவலாக கொண்டாடப்படுகிறது. மேற்குவங்க மக்கள் காளியை முக்கியத் தெய்வமாக வணங்குவதால் அம்மக்கள் இராமநவமி பண்டிகையை பெரியளவில் கொண்டாடுவதில்லை. ஆனால், எதிர்வரும் 2026 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து, அம்மாநிலத்தில் இராமநவமி ஊர்வலங்களை நடத்தி மாநிலம் முழுவதும் மதக்கலவரங்களை நடத்தவும் அதன்மூலம் இந்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.


படிக்க: கர்நாடகா: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கலவரமாக மாற்றிய காவிக் கும்பல்


முக்கியமாக, மேற்குவங்கத்தில் கடந்த ஆண்டு சிறிய அளவில் நடைபெற்ற இராமநவமி ஊர்வலத்தில் பெரும்பாலான இடங்களில் பா.ஜ.க. கும்பல் மதக்கலவரங்களை நடத்தியது. இந்தாண்டு பெரியளவில் இந்துமுனைவாக்கம் செய்வதற்காக தனியாக கலவரத் திட்டம் போட்டுகொண்டு பா.ஜ.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. சுவேந்து அதிகாரி பேசுகையில், “கடந்த ஆண்டு சுமார் 50,000 இந்துக்கள் ஊர்வலங்களில் பங்கேற்றனர். இந்த ஆண்டு நாடு முழுவதும் 2,000 பேரணிகளில் குறைந்தது ஒரு கோடி இந்துக்கள் வீதிகளில் இறங்குவார்கள்” என பேசியிருப்பது இதனை நிரூபிக்கிறது. மேலும், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து ஒரு கோடி ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. குண்டர்களை மேற்குவங்கத்தில் இறக்கி இக்கலவரத்தை செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய மக்கள் மீதான கலவரங்களை திட்டமிட்டு நடத்தி வருகிறது. விநாயகர் சதுர்த்தி, இராம நவமி, ஹோலி போன்ற இந்து பண்டிகை நாட்களில் மசூதிகள் மீது தாக்குதல் நடத்துவது, இஸ்லாமிய மக்களை படுகொலை செய்வது என கடந்த பத்து ஆண்டுகளாக பா.ஜ.க. கலவர ஆட்சி நடத்தி வருகிறது. இக்கலவரங்களின் மூலமே ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கிறது. கடந்தாண்டு ஒடிசா மாநிலத்தில் பா.ஜ.க. முதன்முறையாக ஆட்சியை பிடித்ததும் மதக்கலவரங்களின் மூலமே ஆகும். தற்போது உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்காக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஹோலி பண்டிகை அன்று மசூதிகள், இஸ்லாமிய மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருவதும் எதிர்வரும் 2027 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை குறிவைத்தே ஆகும்.

ஆனால், பா.ஜ.க-வையும் அதன் பாசிச ஆட்சியையும் எதிர்ப்பதாக சொல்லும் எதிர்க்கட்சிகள் அதற்கெதிராக மாற்று சித்தாந்தத்தை முன்வைத்து அரசியல் செய்து மக்களை அணித்திரட்டுவதற்கு மாறாக, பா.ஜ.க-வின் இந்துத்துவத்தையே மிதவாதமாக பின்பற்றுகின்றன. இது மதக்கலவரங்களின் மூலமும் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களின் மூலமும் பா.ஜ.க. தனக்கான அடித்தளத்தை உருவாக்கி கொள்வதற்கும் ஆட்சியை பிடிப்பதற்கும் அம்மாநிலங்களை விளைநிலமாக மாற்றுகிறது.

எனவே, மேற்குவங்கத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிப்பதை தடுக்க வேண்டுமெனில், அம்மாநில மம்தா பானர்ஜி அரசு மிதவாத இந்துத்துவதை கைவிட்டுவிட்டு பாசிச பா.ஜ.க. அரசிற்கு எதிரான மாற்று சித்தாந்தத்தை முன்வைத்து மக்களை அணித்திரட்ட வேண்டும். மதவெறி கலவரத்திற்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க. தலைவர் சுவேந்து அதிகாரியை உடனே கைது செய்து மதக்கலவர முயற்சிகளை முறியடிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தியை போல இராமநவமியும் பிற மாநிலங்களில் திணிக்கப்படுவதை தடுத்து அம்மாநில மக்களின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உயர்த்தி பிடிக்க வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



உ.பி.: ஹோலி பண்டிகையில் இஸ்லாமியரை அடித்துக்கொன்ற காவி கும்பல்

மார்ச் 14 அன்று இந்துக்களின் ஹோலி பண்டிகை வடஇந்திய மாநிலங்களில் கொண்டாடப்பட்டது. வெள்ளிக்கிழமையான அன்றைய தினத்தில் இஸ்லாமிய மக்களின் ரம்ஜான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை நாளும் வந்தது. அன்றைய தினத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது, இஸ்லாமியர்களை படுகொலை செய்வது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, இஸ்லமியர்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது, மசூதிகள் மீது தாக்குதல் நடத்துவது வடமாநிலங்கள் முழுவதும் மதவெறியாட்டம் போட்டது ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல்.

இந்நிலையில்தான், உத்திரப்பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் ஹோலி பண்டிகை முடிந்த மறுநாளான மார்ச் 15 அன்று ஹோலி வண்ணப்பொடி பூசிக்கொள்ள மறுத்ததற்காக இஸ்லாமியர் ஒருவரை காவி கும்பல் அடித்து கொன்ற சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் சதாரில் உள்ள காசிம் நகர் ரப்பன்னா மசூதி அருகே வசித்துவந்த 48 வயதான முகமது ஷெரிப் சவுதி அரேபியாவில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், ஹோலி பண்டிகை முடிந்த மறுநாள் சனிக்கிழமை (மார்ச் 15) அன்று அருகிலுள்ள மசூதிக்கு தொழுகைக்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் மொஹல்லா காஷிஃப் அலி சராய் சுங்கி பவர் ஹவுஸ் என்கிற இடத்தில் ஹோலி கொண்டாடி கொண்டிருந்த கும்பல் அவர் மீது வலுக்கட்டாயமாக ஹோலி வண்ணப்பொடிகளை வீசியுள்ளது.


படிக்க: ஹோலி பண்டிகை: காவி கும்பலின் அடுத்த ஆயுதம்!


இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்த பின்பும் மதவெறிப்பிடித்த அக்கும்பல் மீண்டும் அவர் மீது வண்ணப்பொடிகளை வீசியதால் கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது. சிறுது நேரத்தில் மதவெறி போதை தலைக்கேறிய அக்கும்பல் அவரை கொடூரமாக தாக்கியுள்ளது. மிருகத்தனமான தாக்குதல்களால் மயக்கடைந்து கீழே சரிந்து விழுந்த முகமது ஷெரிப்பை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகிலிருந்த மேடையில் அமரவைத்து குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளனர். ஆனால், சில நிமிடங்களில் கீழே சரிந்து விழுந்த முகமது ஷெரிப் அநியாயமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் படுகொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டங்களை ஒடுக்குவதற்காக யோகி தலைமையிலான பா.ஜ.க. அரசு பல்வேறு போலீஸ் நிலயங்களிலிருந்து போலீசையும், விரைவு அதிரடி படையினரையும் இறக்கியது. போராடிய மக்களை சமாதானப்படுத்த முயன்ற போலீசு அதிகாரி சோனம் சிங், புகார்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றது என்று தெரிவித்தார்.

ஆனால், அதே உன்னவ் போலீசு ஒரு சமூக ஊடகப் பதிவில் முகமது ஷெரிப்பின் படுகொலையை ‘இயற்கை மரணம்’ என்று பொய்யாக பதிவிட்டுள்ளது. “கோட்வாலி சதார் போலீசு ஷெரிப்பின் உடலை மீட்டு வீடியோ பதிவுடன் கூடிய பிரேத பரிசோதனையை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மாரடைப்புதான் மரணத்திற்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உடலில் எந்தக் காயக்குறிகளும் இல்லை. மற்ற அனைத்து அம்சங்களையும் போலீசு முழுமையாக விசாரித்து வருகின்றனர்” என்று உன்னவ் போலீசு தெரிவித்துள்ளது. ஆனால் ஷெரிப் மாரடைப்பால்தான் உயிரிழந்தார் என்பதற்கான அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையினையும் உன்னவ் போலீசு வெளியிடவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

பாசிச கும்பல் ஆட்சி செய்யக்கூடிய ராஜஸ்தான், அசாம், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஹோலி பண்டிகையையொட்டி அதிகளவிலான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. காவி கும்பலானது இராம நவமி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை நாட்களில் மசூதிகள் மற்றும் இஸ்லாமிய மக்கள் மீது திட்டமிட்ட கொடூர தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

குறிப்பாக, உத்திரப்பிரதேசத்தில் யோகி தலைமையிலான பா.ஜ.க. அரசு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் ஆதாயத்திற்காக இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மதவெறி பிரச்சாரத்தில் ஈடுபடுவது, அம்மக்களை படுகொலை செய்வது, மதக்கலவரங்களை தூண்ட முயற்சிப்பது என தன்னுடைய தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் மூலம் இந்து மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெறுவதற்கு எத்தனிக்கிறது. இக்கும்பலுக்கு எதிராக பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் அணித்திரட்ட வேண்டியது நம் முன்னே உள்ள கடமையாக உள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஒன்றிய அரசுக்கு எதிராக அணி திரண்ட தென் மாநிலங்கள்!? | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அநுரவின் கவர்ச்சிகர முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் மறுகாலனியாக்கத்தின் கோரமுகம்

றுகாலனியாக்கக் கொள்கைகளால் வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட இலங்கை மக்கள் மே 2022-இல் கிளர்ந்தெழுந்தனர். அப்போதைய ஆட்சியாளர்களான ராஜபக்சே கும்பலை நாட்டை விட்டே விரட்டி, அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றினர். இத்தகையதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சிக்குத் தலைமைத் தாங்க சரியான அரசியல் தலைமையும், மாற்று அரசியல் – சமூக – பொருளாதாரத் திட்டமும் இலங்கையில் இல்லை. இதன் காரணமாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையீடு செய்து, குறுக்குவழியில் ரணில் விக்கிரமசிங்கே என்னும் தனது அடிவருடியை  அதிபராக நியமித்துப் போராட்டத்தை நசுக்கியது. ரணிலின் இரண்டாண்டு ஆட்சியில் இலங்கை மென்மேலும் ஐ.எம்.எஃப். கடன் வலைக்குள் சிக்க வைக்கப்பட்டது; மிச்சமிருந்த மானியங்களும் மக்கள்நலத் திட்டங்களும் பலியிடப்பட்டன; வருமான வரி உயர்த்தப்பட்டது; விலைவாசி உயர்வோ தாங்க முடியாத அளவுக்கு ஏறிக் கொண்டே சென்றது. “இந்தச் சவாலான கொள்கை நடவடிக்கைகளை இலங்கை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருப்பது பாராட்டத்தக்கது” என்று ஐ.எம்.எஃப். பாராட்டுமளவுக்குக் கொடூர ஆட்சி நடத்தினார் ரணில்.

இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், ‘இடதுசாரிகள்’ என்று சொல்லிக் கொள்ளும் “தேசிய மக்கள் சக்தி” (NPP) என்னும் கூட்டணியின் தலைவர் அநுர குமார திசநாயக்க வெற்றி பெற்றார். அதன்பின் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும், மொத்தமுள்ள 225 இடங்களில் 159 இடங்களை வென்றது என்.பி.பி. கூட்டணி. “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற பெயரில் அதிபர் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை என்.பி.பி. வெளியிட்டிருந்தது.  அதில், இலங்கைக்குத் தேவை ஆட்சியாளர்களின் மாற்றமல்ல, பிரம்மாண்டமான – ஒட்டுமொத்த சமூகநிலை மாற்றம், மறுமலர்ச்சி என்று ஆரவாரமாக அறிவித்துக் கொண்டது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனையெல்லாம் நிறைவேற்றுவோம் என்று ஏராளமான வாக்குறுதிகளைப் பட்டியலிட்டது. ஆனால், இலங்கை சந்தித்துவரும் அரசியல் – பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான உண்மையான காரணங்களைப் பற்றி வாய் திறக்கவில்லை. மாறாக, முந்தைய ஆட்சியாளர்கள் – சில குடும்பங்களின் –  ஊழல் நிறைந்த ஆட்சிதான் பிரச்சினைகளுக்குக் காரணம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

அதிபரின் நிறைவேற்று அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை நிலைநாட்டுவோம் என்றும், அதிபர் – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள், ஓய்வூதியங்களை ரத்து செய்ய விரும்புவதாகவும் அறிவித்தது. இதன் மூலம் அரசின் செலவுகள் குறைக்கப்படும் எனவும், மக்களுக்கான ஆட்சியாக தங்களது ஆட்சி இருக்குமெனவும் கூறுகிறது. இதனையெல்லாம் பார்க்கும்போது, மிகப்பெரும் அதிரடி மாற்றங்களைச் செய்யத் துடிக்கும் உண்மையான இடதுசாரி அரசு போன்ற தோற்றம் தென்படுகிறதல்லவா? ஆனால், நாட்டைக் கொள்ளையிட்டு, மக்களின் வாழ்வை நசுக்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியங்கள் பற்றி இந்த ‘இடதுசாரிகள்’ ஓரிடத்தில் கூட பேசுவதில்லை.

மாறாக, இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குவதற்கு ஊற்றுக்கண்ணாக அமைந்த – முந்தைய ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைகளையே கவர்ச்சிகரமான முகமூடி அணிந்து அமல்படுத்திக் கொண்டிருக்கிறது அநுர தலைமையிலான இலங்கை அரசு.

அந்நியச் செலாவணி பெருக்கமும், ஐ.எம்.எஃப். உடன் பேச்சுவார்த்தையும்:

“தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா தொழிலை முன்னேற்றுவதன் ஊடாக அந்நிய செலாவணி இருப்பை வளர்த்தெடுப்பது; தேசிய முன்னுரிமைகள் மற்றும் நீண்டகால வளர்ச்சி நோக்கங்களுடன் ஒத்துவரக்கூடிய உத்தேச மற்றும் தற்போது இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடுகளை (FDI) துரிதப்படுத்துவது; ஏற்றுமதி பன்வகைமைப்படுத்தல் மூலமாக வெளிநாட்டுச் சந்தைகளின் பங்கினை அதிகரிப்பதற்காக, நிலவுகின்ற வர்த்தக உடன்படிக்கைகளை மீள்பரிசீலனை செய்வதற்கான உடன்படிக்கைகளை செய்துகொள்வது” ஆகியவற்றை தேர்தல் அறிக்கையில் என்.பி.பி. முன்மொழிந்திருக்கிறது. அதாவது, தற்சார்பு வேளாண்மை, சிறு-குறு-நடுத்தரத் தொழில் வளர்ச்சி பற்றி கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கும் அதே சமயத்தில், நாட்டை வலிமைமிக்கதாக மாற்றவும் அந்நிய செலாவணியைப் பெருக்கவும் – இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியதற்கு முக்கிய காரணமாக அமைந்த – ஏற்றுமதி பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்கிறது.

சீனாவுடன் ஒப்பந்தம் போட்டு, பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை நிறுவச் செய்து, பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்து பணம் ஈட்டுவது; துறைமுகங்களைப் பிற நாடுகளுக்கு குத்தகைக்கு விடுவது; ஏற்றுமதிக்கான கடல்சார் உற்பத்தியைப் பெருக்குவது; தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்தி டாலர்களை ஈட்டுவது; அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் டாலர்களை ஈட்டுவது என்பதெல்லாம் மறுகாலனியாக்கத்தின் அங்கமாகவே இருந்து வருகின்றன. எனவே, மறுகாலனியாக்கத்தை நடைமுறைப்படுத்துவதில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகளில் இருந்து, என்.பி.பி. எந்த வகையிலும் வேறுபடவில்லை என்பதையே அதன் வாக்குறுதிகள் காட்டுகின்றன.

இவை எல்லாவற்றையும் விட, வறிய மற்றும் நிர்கதி நிலைக்கு உள்ளாகியுள்ள மக்களை அந்த நிலைமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றின் உள்ளடக்கத்தையும் அது அமலாக்கப்பட வேண்டிய விதத்தையும் பற்றியும் சர்வதேச நாணய நிதியத்துடன் மீள் பேச்சுவார்த்தை நடத்த போவதாக தனது தேர்தல் அறிக்கையில் என்.பி.பி கூறியிருக்கிறது.

ஈவிரக்கமற்ற ஏகாதிபத்திய கொள்ளைக்காரக் கும்பலிடம், துன்ப துயரத்தில் உழன்றுவரும் மக்கள் நலன் காக்கும் வகையிலான ஒரு செயல்திட்டத்தை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்த முடியுமா? அமெரிக்க ஏகாதிபத்தியம் இதை ஏற்றுக்கொண்டு, ஐ.எம்.எஃப்-பின் கடுமையைக் குறைத்துக்கொள்ள ஆணையிட்டு விடுமா? கேப்பையில் நெய் வடிந்தால், நாடு வளமாகும் வாழ்க்கை அழகாகுமென என மக்களை நம்பச் சொல்கிறார்கள்.

மோ(டி-அ)தானியின் மேலாதிக்கத்திற்கு அடிபணிதல்:

என்.பி.பி. முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை ‘நடைமுறைப்படுத்தும்’ வகையில் அடுத்தடுத்த நடவடிக்கைகளை அநுர குமார திசநாயக்க மேற்கொண்டு வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதலில் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களைப் போட்டார்.

இந்தியாவில் உள்ளதைப் போன்று இலங்கை மக்களுக்கும் ஆதாரைப் போன்ற அடையாள அட்டை வழங்கும் திட்டம் ரணில் ஆட்சியிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கான நிதியில் பாதியை வழங்குவதாக ஏற்றுக்கொண்டு, முதல் தவணையாக 45 கோடி ரூபாயை இந்தியா ஏற்கெனவே இலங்கையிடம் அளித்தது. இலங்கையில் இப்போதுள்ள அடையாள அட்டையில் பெயர், முகவரி, வயது போன்ற விவரங்கள்தான் உள்ளன. கைரேகை, கண்விழிப்படலம் போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும் ஆதார் அட்டை அநுர ஆட்சியில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால், இலங்கை மக்களின் தரவுகள் அனைத்தும் இந்திய நிறுவனத்தின் பிடியில் சென்றுவிடுமென எதிர்கட்சிகள் விமர்சித்தன.

ஆனால், புதிய அரசாங்கத்தின் அமைச்சரோ, “பொறிமுறை அமைக்கப்பட்டவுடன், தரவுகளுக்கான அணுகல் இலங்கைக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் ஏற்கெனவே இந்தியக் கூட்டாளர்களிடம் தெரிவித்துள்ளது” எனக் கூறி, இத்திட்டத்தை நியாயப்படுத்தி இருக்கிறார். சில நூறு ரூபாய் செலவில் பல இலட்சம் இந்திய மக்களின் ஆதார் தரவுகளைப் பெற முடிகிறது எனில், இலங்கை மக்களின் நிலை என்னவாக இருக்கும்?

இந்தியாவிலிருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கு திருகோணமலை வரை குழாய் அமைக்கும் திட்டமும், இந்தியாவையையும் இலங்கையையும் தரைவழியில் இணைக்கும் திட்டமும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பை இந்திய மின்சாரத் தொகுப்பு வலையத்துடன் (Grid)  இணைத்து விடுவது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும், நிலக்கரி மூலம் அனல் மின்சாரம் தயாரிக்க, இந்திய அனல்மின் கழகத்துடன் போடப்பட்ட பழைய ஒப்பந்தத்தை சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் ஒப்பந்தமாக மாற்றியுள்ளனர். இதன் மூலம் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்குமென இலங்கை மக்களை நம்ப வைக்க முயல்கிறார் இலங்கை அதிபர்.

இந்தியாவின் மின்சார உற்பத்தி, விநியோகத்தில் அதானியின் ஆதிக்கம் பெருகி வரும் நிலையில், ஏற்கெனவே பூடானும், வங்கதேசமும், நேபாளமும் இந்திய மின்சாரத் தொகுப்பு வலையத்துடன் இணைக்கப்பட்டு விட்டன. இதற்கு அர்த்தம், இந்தியாவின் இன்னொரு மாநிலம் போல அதானியின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டாக வேண்டும் என்பதுதான். இதில் இலங்கையையும் இணைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அநுர.

ரணில் ஆட்சியில், மன்னார் – பூனேரி பகுதிகளில் 442 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான காற்றாலை மின்சார உற்பத்திக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இது, முறைகேடான ஒப்பந்தம் என அப்போதே இலங்கையிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதிலுள்ள சூழலியல் பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இத்தகைய ஊழல் திட்டங்களை ரத்து செய்வோம் என தேர்தல் பிரச்சாரத்தில் அநுர அறிவித்திருந்தார்.

இந்தச் சூழலில்தான், இலஞ்ச முறைகேடு வழக்கில் அதானி மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க முனைந்தது. இதையடுத்து கென்யாவில் அதானி விமான நிலைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது; வங்கதேசமும் மின்சார விநியோக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக அறிவித்தது. இதேபோல, விலை அதிகமாக இருப்பதால் அதானி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக அநுர அறிவித்தார். இந்திய மின் தொகுப்பு வலையத்தில் இலங்கையை இணைக்க கடந்த டிசம்பர் மாதத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதால் திட்டத்தில் இருந்து விலகுவதாக அதானி நிறுவனமே அறிவித்துவிட்டது. இது அநுரவின் வெற்றியல்ல, அதானியின் வெற்றி. அதானியுடன் நேரடியாக ஒப்பந்தம் போட்டதால்தான் விலை அதிகமாகி விட்டதென்றும், இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் குறைவாக இருக்குமென்றும் இலங்கை மக்களை அநுர ஏமாற்ற நினைக்கிறார் என்பதே உண்மை.

இவை மட்டுமின்றி டிஜிட்டல் மயமாக்கம், டிஜிட்டல் பணச் சேவைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளார் இலங்கை அதிபர். இவையெல்லாம் இந்தியாவில் அதானி நிறுவனம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும், கால்பதித்து வரும் துறைகளே ஆகும். அந்த வகையில் இலங்கையின் மீது இந்தியாவின் – அதானியின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் மோடியின் அனைத்து முயற்சிகளுக்கும், அடிபணிந்து ஒப்புதல் கொடுத்திருக்கிறார் இலங்கையின் ‘தற்சார்பு’ நாயகர் அநுர.

இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ‘இடதுசாரி’ என்று முதலில் கருதப்பட்ட அநுர, இந்தியாவுக்கு வந்தபோது பேசிய கருத்துகள், போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களால் புல்லரித்துப் போயினர் இந்திய ஆளும் வர்க்கமும் அதிகாரிகளும். இந்தியாவின் மேலாதிக்கத்திற்கான சாகர் திட்டத்துக்கு இலங்கை முழுமையாக ஒப்புக்கொண்டு விட்டது; இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை இனி எதிர்கொண்டு விடலாம்; சில பத்தாயிரம் கோடிகளை அள்ளிக்கொடுத்து இலங்கையை வளைத்து விடலாம் என்று கணக்கு போட்டனர். ஆனால், தெற்காசியப் பகுதியில் அதிகரித்துவரும் சீன மேலாதிக்க நடவடிக்கைகள், இந்தியாவின் கணக்கு அவ்வளவு எளிதாகக் கைக்கூடாது என்பதையே காட்டுகின்றன.

சீனாவின் பட்டுப்பாதை – இலங்கையின் சுருக்குக்கயிறு:

“இலங்கை நிலம், இந்தியப் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட அனுமதிக்க மாட்டோம்” என்று இந்தியாவுக்கு வந்தபோது, மோடியிடம் வாக்குறுதிக் கொடுத்தார் அநுர. அடுத்த மாதமே, சீனாவிற்குப் பயணம் செய்து சீனாவையும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியையும் வானளாவப் புகழ்ந்து பல ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டார்.

நவீன சமூக ஏகாதிபத்தியமாக மாறியுள்ள சீனா, பட்டுப்பாதை அல்லது பெல்ட் அண்ட் ரோடு எனப்படும் தனது உலக மேலாதிக்கத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இணைந்துக் கொண்டு முழுமையாக ஒத்துழைப்பதாக அநுர ஒப்பந்தம் போட்டிருக்கிறார். இது குறித்து, “கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவை இரு தரப்பினருக்கும் இடையிலான பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்பின் முக்கிய திட்டங்களாகும். “இந்த இரண்டு திட்டங்களும் சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கைக்கு நீண்டகால பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும். அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சுற்றி தொழில்துறை பூங்காக்கள் உருவாக்கப்படும். மேலும் கொழும்பு துறைமுக நகரம் அதிக முதலீட்டை ஈர்க்கும். இது இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் மேம்படுத்தும்” என திசநாயக்க கூறினார் என்று செய்தி வெளியிட்டுள்ளது ஒரு சீன ஊடகம்.

இதே கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை, 700 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் அதானி நிறுவனம் கட்டி முடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக, இந்தியா – சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான மேலாதிக்கப் போட்டியினை ‘திறம்பட’ பயன்படுத்திக் கொண்டு, இலங்கையின் ‘நலனைக் காக்க’ நினைக்கிறார் அநுர. ஆனால், இவர் முந்தைய ஆட்சியாளர்களைப் போல ஊழல் – இலஞ்சம் செய்யாத, ‘தூய’ ஆட்சி தரும் ‘இடதுசாரி’ என்பதுதான் ஒரே வித்தியாசம்.

மறுகாலனியாதிக்கத்தை மண்டியிட்டு ஏற்கும் ‘இடதுசாரி’:

சீன ஊடகத்திற்குப் பேட்டி கொடுத்த அநுர, “சீன அரசாங்கம் மக்களை மையமாகக் கொண்டதாகவும், பொதுத் தேவைகளில் கவனம் செலுத்துவதாகவும் இருப்பதை நான் கவனித்தேன். அதேபோல், இலங்கையின் புதிய அரசாங்கமும் அதன் மக்களுக்குச் சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் உள்ளது” என்றும், “சீனாவின் வறுமை ஒழிப்பு அனுபவம் ஒரு உலகளாவிய மாதிரியாகும், மேலும் ஐக்கிய நாடுகள் சபையால் பாராட்டப்பட்டது. சீனாவின் அனுபவத்திலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது,” என்றும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

மேலும், சீனா ஒரு கடன் பொறியை உருவாக்கி இலங்கை துறைமுகங்களை இராணுவமயமாக்குகிறது என்ற மேற்கத்திய ஊடகங்களின் கருத்து தவறானது என்றும், “உலகளாவிய தென் நாடுகளுக்கு வளர்ச்சி தேவை, அதை வெளிப்புற முதலீடு மற்றும் கடன்கள் இல்லாமல் அடைய முடியாது. அத்தகைய உதவியை நாம் கடன் பொறியாக பார்க்க முடியாது” என்றும் அநுர கூறியிருக்கிறார். அதாவது, சீனா உலகிலுள்ள ஏழை நாடுகளை எல்லாம் காப்பாற்றவே கடன் கொடுக்கிறது, முதலீடு செய்கிறது என்ற சீன ஏகாதிபத்தியவாதிகளின் வார்த்தைகளை வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறார் இலங்கையின் ‘இடதுசாரி’ அதிபர்.

வடக்கே இந்தியா, தெற்கே சீனா:

இலங்கையினுள் சீனக் காலனியைப் போல் அமைக்கப்பட்டுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 3.7 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரணில் காலத்தில் இருந்தே இது குறித்து விவாதிக்கப்பட்டாலும், அநுரவின் சீனப் பயணத்தில்தான் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், “ஒரு நாளைக்கு 2,00,000 பீப்பாய்கள் சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலை, முதன்மையாக ஏற்றுமதிச் சந்தைகளுக்குச் சேவை செய்யும். இது நாட்டின் அந்நிய செலாவணி வருவாயை அதிகரிக்கும்” என்று இலங்கை அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். அதாவது, பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் உருவாகும் வளர்ச்சி குறித்து, இந்தியாவிலுள்ள அரசியல்வாதிகள் அரைத்துக் கொண்டிருக்கும் அதே மாவைத்தான் என்.பி.பி. அமைச்சரும் இலங்கையில் அரைத்துக் கொண்டிருக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், அம்பாந்தோட்டை துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கொழும்பு துறைமுகம் ஆகியவற்றில் சீனாவின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவது இலங்கையின் தென் மாகாணங்கள் சீனாவின் ஆதிக்கத்திற்கு உட்படுவதைக் காட்டுகிறது. திரிகோணமலை துறைமுகத்திற்கு எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம், இந்தியா – இலங்கை தரைவழி இணைப்புத் திட்டம் போன்ற ஒப்பந்தங்கள், கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்படுவதைக் காட்டுகின்றன. மறுபக்கத்தில், அங்கேயே ஒரு ஐ.எம்.எஃப். அலுவலகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு, அரசின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணித்து, நாட்டையே அரித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஒட்டுமொத்தத்தில் இலங்கை வேகமாக மறுகாலனியாகிக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து – மறுகாலனியாக்கம் குறித்து – பழைய அரசாங்கங்கள் கைக்கொண்ட அதே கொள்கைகளையே, அநுரவின் அரசும் முன்னெடுக்கிறது. நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கும், மக்கள் நலன்சார் மாற்றுப் பொருளாதார திட்டம் எதுவும் என்.பி.பி. கூட்டணியிடம் இல்லை என்பது அம்பலமாகி வருகிறது. அவர்கள் முன்வைத்த தேர்தல் அறிக்கை, ‘வாக்குறுதிகள்’ நிரம்பிய வார்த்தை ஜாலமே ஆகும். நாடு எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கான உண்மைக் காரணம் என்ன, மக்கள் நலன்சார் மாற்று என்ன என்ற வகையில் அணுகாமல், நாங்கள் வந்தால் பொற்காலம்தான் என மக்களை ஏய்ப்பதே இதன் சாராம்சம் எனலாம். இந்திய – சீன மேலாதிக்க நலனுக்கான திட்டங்களையே, ஐ.எம்.எஃப். திணிக்கும் மறுகாலனியாக்கத்தையே நாட்டின் வளர்ச்சியாக சித்தரித்து நாடு அடிமையாவதை மறைக்கிறார்கள். இலங்கையின் புதிய அரசு, ஒட்டுமொத்த நாட்டையும் மறுகாலனியாக்கம் என்னும் புதைகுழிக்குள் இழுத்துச் செல்கிறது என்பதை ஜனநாயக சக்திகள் – மக்கள் உணர வேண்டிய தருணம் இது. இந்த உண்மையை உழைக்கும் மக்களிடம் கொண்டு சென்று அம்பலப்படுத்துவதும், பொருத்தமான அரசியல் – பொருளாதார மாற்றுத் திட்டத்தை முன்வைத்து மக்கள் எழுச்சிக்குத் தயார் செய்வதும் இலங்கை புரட்சிகர சக்திகளின் உடனடிக் கடமையாக உள்ளது.


ஆதி

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 அக்டோபர், 1988 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 23 | 1988 அக்டோபர் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஈழத் தோழர்கள்: வடக்கில் போலித்தனம்! கிழக்கில் ரத்தக்களறி!
  • அமைப்புச் செய்தி: சதிவழக்கை விளக்கி…
  • போஸ்டரை கிழிக்கும் போலீசு படைகள்
  • ஈழத் துரோகக் கும்பல் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அன்றும் – இன்றும்
  • பிதார்: சீக்கியர்கள் படுகொலை சிவசேனை அக்கிரமம்!
  • மூப்பனாரின் தேர்தல் ‘சாணக்கியம்’ சாதிக்கலவரங்கள் அரங்கேற்றம்!
  • திவால் நிலையை நோக்கி…
  • விமர்சனமும் விளக்கமும்
  • துயரத்தின் பிடியில் வங்கதேசம்!
  • இடஒதுக்கீடு சலுகை: சமஉரிமையைக் கொடுக்குமா?
  • போலிக் கம்யூனிஸ்டுகளின் போலீஸ் ராஜ்ஜியம்
  • இந்திரா கொலைவழக்கு: நீதிக்கு விலங்கு! நிரபராதிக்கு தண்டனை
  • கோர்ப்பச்சேவின் அரண்மனைப் புரட்சி!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



முருகனைப் பற்றிய  பார்ப்பனப் புரட்டு: களவாடும் பார்ப்பனக் கும்பலை விரட்டு!

ந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாக, முருகனுக்குச் சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை இஸ்லாமியர்கள் அபகரிக்க நினைப்பதாக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல் தீவிர வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மதுரையில் கலவரத்தை நடத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆனால், உண்மையில் தமிழர் பண்பாட்டின் மீது பார்ப்பனக் கும்பல்தான் பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்த முயன்று வந்துள்ளது; தமிழர் அடையாளம் கொண்ட முருகன் வழிபாடு ஆகப் பெருமளவில் அழிக்கப்பட்டு, பார்ப்பன ஆதிக்கம்தான் நிலைநாட்டப்பட்டுள்ளது.

தமிழ்க் கடவுளும், வேடர்குலத் தலைவனுமான முருகனை இந்தப் பார்ப்பனக் கும்பல் அபகரித்துக் கொண்டது பற்றி தமிழ்நாட்டின் மக்களுக்கு எடுத்துரைப்பது நமது கடமையாகும். இது பார்ப்பன பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் அங்கமாகும்.

நாட்டார் தெய்வ வழிபாடும்
பார்ப்பன வழிபாட்டு முறையும்

ஆரியப் பார்ப்பனியத்திற்கு சொந்தமாக கடவுள்கள் இல்லை. அது, இந்தியத் துணைக் கண்டத்தில் பரவியிருந்த நாகரிக மக்களின் கடவுள்களைத் தன்வயப்படுத்திக் கொண்டதன் மூலமே பார்ப்பனிய மேலாதிக்கத்தைச் செலுத்தி வந்துள்ளது என்பதுதான் வரலாறு. அதில் ஒன்றுதான் முருகனை, சுப்பிரமணியனாக்கிய கதை!

பார்ப்பனியமானது பல்வேறு காலகட்டங்களில் நாட்டார் தெய்வ வழிபாட்டின் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வந்துள்ளது. சைவ, வைணவ சமயங்கள் பார்ப்பனியத்தின் தாக்குதலுக்கு ஆட்பட்டு தமது மரபை முற்றிலும் கரைத்துக் கொண்டுவிட்டன. அவை பார்ப்பனியத்தின் வாகனங்களாகிவிட்டன. ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் நாட்டார் தெய்வ வழிபாடுகளை இந்தக் கும்பலால் முற்றிலுமாகத் தன்வயப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

பழனியாண்டவர் கோவிலருகே உள்ள சுனையை ஒட்டிய பாறையில் உள்ள சிற்பங்கள்.

இதனால், பார்ப்பனர்களின் கடவுள் வழிபாட்டு முறைக்கும் நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைக்கும் நேர்மாறான பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.

பார்ப்பனியத்தினால் சுவீகரிக்கப்பட்ட கடவுள்கள், மனிதன் இறந்த பின் சொர்க்கத்தை அடைவதற்காகவும், அடுத்த பிறவியில் சுகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வணங்கப்படும் கடவுள்களாக மாற்றப்பட்டன.

இந்தக் கடவுள்களை வணங்கும் மக்களால் இவற்றைப் பூசிக்க முடியாது. பிறப்பின் அடிப்படையிலேயே உயர்வு-தாழ்வு கற்பிக்கும் கடவுள்களாக இவை உள்ளன. இந்தக் கடவுள்களுக்குப் பூசை செய்யும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியது. இதன்மூலம் அவர்கள் பிற மக்களிடமிருந்து மேலானவர்களாகக் கருதப்படுகின்றனர். இந்தக் கடவுள்கள் அனைத்தும் பார்ப்பன சாதிய வர்ணாசிரம முறையைப் போதிக்கின்றன. மேலும், இந்தக் கடவுள்களின் கதைகளோ, மக்களுக்கு தொண்டு செய்பவையாக இல்லாமல், இவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் கதைகளாகவே அமைந்துள்ளன. பாலியல் வக்கிரங்களே இவற்றின் லீலைகளாக அமைந்துள்ளன.

மக்களிடமிருந்து தனித்து, ஏழை எளிய மக்களும் சூத்திரர்கள் என்று சொல்லப்பட்ட மக்களும் தீண்டாத வகையில், புனிதம் என்று போதிக்கப்பட்ட “கருவறை”களில் இவை வைக்கப்பட்டுள்ளன.

மாறாக, நாட்டார் தெய்வங்களோ மக்களுடன் மக்களாக வாழ்ந்து, இறந்த தமது முன்னோர்களைக் குறிக்கின்றன அல்லது அந்தந்த மக்களின் பண்பாட்டைக் கதைக்களமாகக் கொண்டுள்ளன.

இந்தத் தெய்வங்கள் மக்கள் வாழும் காலத்தில் அவர்களைக் காக்கும் பொருட்டு வணங்கப்படும் தெய்வங்களாகும். பெரும்பாலும் காவல் தெய்வங்களாகவே இவை விளங்குகின்றன. நாட்டார் தெய்வ வழிபாட்டு முறையும் மிகவும் எளிமையானது, ஜனநாயகமானது. பிறப்பின் அடிப்படையில் யாரும் பூசாரிகளாக வேண்டிய அவசியமில்லை. பூசாரிகள் என்பதாலேயே மக்களிடமிருந்து எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் அல்லர். தவறு செய்யும் பூசாரிகள் பூசை செய்வதில் இருந்து விலக்கப்படுவர். கோயில் பூசாரிகளுக்கென்று தனிப்பட்ட அதிகாரங்களோ, மக்களிடமிருந்து மேலான அங்கீகாரமோ இல்லை. பூசை என்பது அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு மட்டுமே. பூசை முடிந்தவுடன் அனைவரும் சமம்.

குறிப்பாக, பார்ப்பனக் கடவுள்களை மக்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் பார்ப்பனர்கள் வணங்குவதைப் போல அன்றி, நாட்டார் தெய்வங்களை அந்தந்த மக்களின் மொழிகளிலேயே வணங்குகின்றனர். அவரவருக்குப் பிடித்தமான உணவுகளையே அத்தெய்வங்களுக்குப் படைத்து மகிழ்கின்றனர்.

இவ்வாறு பல வகைகளில் பார்ப்பனக் கடவுள்களும் நாட்டார் தெய்வங்களும் நேரெதிரான பண்பாடு, பழக்க வழக்கங்கள், மரபுகள், வழிபாட்டு முறைகளைக் கொண்டுள்ளன.

தமிழ்க்கடவுளான தாயும் மகனும்

பூர்வகுடித் தமிழ் மக்களால் வணங்கப்பட்ட தெய்வங்கள், கொற்றவை, பழையோள் உள்ளிட்ட பல தாய் தெய்வங்களும், முருகு, செவ்வேள், நடுவேள் போன்ற பல மகன் தெய்வங்களும் ஆகும்.

குறிஞ்சி நில மக்கள் விவசாயம் கண்டுபிடிக்கும் முன்பே வேலனை தங்களது தெய்வமாக வழிபட்டிருக்கின்றனர். இது தாய் வழிச் சமூகத்திலிருந்து தோன்றிய வழிபாடாகும். இன்றும் கூட, தமிழ்நாட்டில் காணப்படும் அம்மன் கோயில்களில் ஆண் துணையின்றி தனித்து நிற்கும் பெண் தெய்வங்களே உள்ளன. இந்தியாவின் பிற பகுதிகளில் ஆண் தெய்வங்களிலிருந்து தனித்து நின்று, போர்க்கோலம் எடுத்த பெண் தெய்வங்களை வழிபடும் வழக்கைக் காண முடியாது.

இந்தத் தாயும் மகனுமாகிய தெய்வங்கள் சீற்றமுடையவர்களாகவும், கோபம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். இந்தத் தெய்வங்களுக்கு, தாங்கள் வேட்டையாடும் மிருகத்தின் மாமிசத்தைப் படையலிடுவது பூர்வகுடி மக்களின் வழக்கமாக இருந்துள்ளது.

கி.பி. 2-3 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் சமண மதம் தழைத்தோங்கி வளர்ந்தது. சமணத்தின் அடிநாதமான “புலால் உண்ணாமை” கோட்பாட்டினால், மிருகபலி கேட்கும் – மாமிசம் படைக்கப்படும் இந்தத் தெய்வங்கள் மக்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

சைவ, வைணவ பக்தி இயக்கங்கள்:
முருகன் வழிபாட்டில் மாற்றம்

கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சமண, பௌத்த மதங்களுக்கு எதிராகத் தோன்றிய சைவ, வைணவ பக்தி இயக்கங்கள் முருகன் வழிபாட்டைத் தன்வயமாக்க முற்பட்டன. தாய்வழித் தெய்வமான முருகன், தந்தை வழித் தெய்வமாக மாற்றப்பட்டார். இதற்காக பல்வேறு புராணக் கதைகள் புனையப்பட்டன.

இருப்பினும், கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரை, வைதீக பார்ப்பன மதத்தால் தமிழ்க்கடவுள் முருகன் விலக்கப்பட்டார். பார்ப்பனியம் உச்சத்தில் இருந்த இராஜராஜன் காலத்திலும், முருகனுக்கு வைதீக அங்கீகாரம் கிடைக்கவில்லை.

அருணகிரிநாதரால் மீட்டெடுக்கப்பட்ட முருகன் வழிபாடு

14-ஆம் நூற்றாண்டில், மாலிக் காபூர் படையெடுப்புக்குப் பின்னர், சமூக வாழ்வின் நிம்மதியையும் நம்பிக்கையையும் இழந்த, வறுமையில் இருந்த தமிழ்ச் சமூகத்திற்கு புத்துயிரூட்ட, இளமையும் வீரமும் பொருந்திய முருகன் மீண்டும் அருணகிரிநாதரால் முன்னிலைக்குக் கொண்டு வரப்பட்டார்.

அரிட்ட நேமிபடாரர் என்னும் சமணத் துறவி, சல்லேகனை(உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தல்) மேற்கொண்ட தகவலை உறுதிப்படுத்தும் ஆயிரமாண்டுகளுக்கும் மேற்பட்ட நிசிதகை கல்வெட்டு.

விசயநகர அரசின் ஆட்சியில் அதிகாரம் தெலுங்கு மொழி பேசுவோரின் கைகளில் இருந்தபோது, தமிழ்மொழியைக் காக்கும் தெய்வமாக முருகனை முன்னிறுத்தினார் அருணகிரிநாதர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களிலும் குன்றுகளிலும் முருகனுக்கான வழிபாட்டுத் தலங்களை உருவாக்கினார். ஆனால், விசயநகர ஆட்சிக் காலத்தில், சைவ, வைணவ சமயங்கள் தங்களது தனித்தன்மையை இழந்து, பார்ப்பனிய மரபுகளுக்கு அடிமையாகிவிட்டன. அருணகிரிநாதர் மீட்டெடுத்த முருகனும் அதற்கு விதிவிலக்கல்ல.

முருகனைக் கைப்பற்றிய பார்ப்பனர்கள்

18-ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள், எல்லா முருகன் கோயில்களிலும் பூசை செய்யும் உரிமை, பண்டாரம் எனும் சாதியினரின் கையிலிருந்து பார்ப்பனர்களிடம் சென்றது.

தமிழ் கடவுளான முருகனுக்கு வேத மந்திரங்கள் முழங்கத் தொடங்கின; மயில் வாகனம் முன்னிலை பெற்று, ஆட்டுக்கிடா வாகனம் பின்னுக்குத் தள்ளப்பட்டது; முருகன், சுப்பிரமணியன் – கார்த்திகேயன் ஆனான்; குறமகள் வள்ளியோடு, இந்திரன் மகள் தெய்வானையும் (தேவசேனா) முருகனின் மனைவியாக்கப்பட்டாள்.

இவ்வாறு முருகன் தமிழ் மக்களிடமிருந்து பார்ப்பனர்களால் அபகரிக்கப்பட்டான். இந்தத் திருடர்கள்தான், திருப்பரங்குன்றத்தை இஸ்லாமியர்கள் அபகரிக்க நினைப்பதாக அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்: பன்முகப் பண்பாடு

முருகன் வழிபாட்டில் அறுபடை வீடுகளில் முதன்மையானதாக திருப்பரங்குன்றமே விளங்குகிறது. அதேபோல, சமணர் வரலாற்றில் குறிப்பிடப்படும் எண்பெருங்குன்றங்களிலும் திருப்பரங்குன்றமே முதன்மையாக உள்ளது. இங்கு சமணத் துறவிகள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், கல்வெட்டுகள் தமிழி எழுத்துகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல குன்றுகளில், வெவ்வேறு சமய வழிபாட்டுத் தலங்கள் இருப்பது போலவே திருப்பரங்குன்றத்திலும் நிறைந்துள்ளன. சைவம், வைணவம், நாட்டார் மரபுகளும், இஸ்லாம், கிறித்துவம் போன்ற சமயங்களின் கோயில்களும் கலந்து பண்பாட்டுத் தலைநகராக திருப்பரங்குன்றம் விளங்குகிறது.

மலையடிவாரத்திலும் மலைப்பகுதியிலும் முருகன் கோயில், சத்தியகிரி ஈஸ்வரர் (பரங்கிரிநாதர்) கோயில், ஆவுடைநாயகியம்மன் கோயில், உமையாண்டார் கோயில், சமண குகை தளம், மகாவீரர், பார்சுவநாதர் சிற்பங்கள், பழனியாண்டவர் கோயில், தீபத்தூண், காசி விசுவநாதர் கோயில், ஆறுமுக நயினார் கோயில், சொக்கநாதர் கோயில், பால்சுனை கண்ட சிவன் கோயில், தவ்வை கோயில், பத்திரகாளியம்மன் கோயில், பேச்சியம்மன் கோயில், இருளப்ப சாமி கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில், சப்த கன்னிமார் கோயில், மலையடி கருப்பு, நாகம்மாள் கோயில், வெயிலுக்கு உகந்த அம்மன், சத்தியகிரி முத்தையா கோயில், சிக்கந்தர் தர்கா ஆகிய பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

திருப்பரங்குன்றம் மலையின் தென் பகுதியில் மலையைக் குடைந்து சமணர் குகை கோவில் அமைக்கப்பட்டுள்ளது. சிற்பங்களும், பழமையான கல்வெட்டுகளும் இங்கு உள்ளன.

இவை ஆன்மீக வழிபாட்டுத் தலங்கள் என்பதையும் தாண்டி, தொல்குடி மக்களின் வாழ்வியலின் ஓர் அங்கமாக இருந்திருப்பதை அங்குள்ள கொற்றவை, சேட்டை தெய்வங்களின் கோயில்கள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகள் மூலம் உணர முடிகிறது.

திருப்பரங்குன்றத்தில் சமணம்

சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமண சமயத்தின் அறநெறிகளை பரப்பும் சமணத் துறவிகள் திருப்பரங்குன்றம் மலையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். சமண சமயம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் செல்வாக்கு பெற்றிருந்தது.

இதற்குச் சான்றாக, திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தின் எதிரே உள்ள மலைக்குன்றின் மேலே காணப்படும் இயற்கைக் குகைத்தளத்தில் கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐந்து தமிழிக் கல்வெட்டுகளும் 20-க்கும் மேற்பட்ட சமணர் கற்படுக்கைகளும் காணப்படுகின்றன.

பழனியாண்டவர் கோயிலின் பின்புறம் உள்ள பாறையில், கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, தரணேந்திரன் (இயக்கன்), பத்மாவதி (இயக்கி) உள்ளிட்ட இயக்கர், மாந்தர் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இவற்றை செதுக்கியவரின் பெயர், அனந்த வீர்யன் என வட்டெழுத்துக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

காசி விசுவநாதர் கோயிலின் எதிரே உள்ள பாறையில், பார்சுவநாதர் மற்றும் கோமதீஸ்வரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அரிட்ட நேமிபடாரர் என்னும் சமணத் துறவி, சல்லேகனை (உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தல்) மேற்கொண்ட தகவலை உறுதிப்படுத்தும் ஆயிரமாண்டுகளுக்கும் மேற்பட்ட நிசிதிகை கல்வெட்டு, சிக்கந்தர் தர்காவின் பின்புறத்திலுள்ள பாறையில் காணப்படுகிறது.

திருப்பரங்குன்றம்: பெயர் தொடர்பான தரவுகள்

திருப்பரங்குன்றம் மலையின் பெயரை “சிக்கந்தர் மலை” என மாற்ற முயற்சிப்பதாக இந்து முன்னணியினர் பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். இதுவரை இஸ்லாமியர்கள் இப்படியான கோரிக்கையை விடுத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

திருப்பரங்குன்றம் மலைக்கு பரங்குன்றம், தண்பரங்குன்றம், தென்பரங்குன்றம், திருப்பரங்கிரி, முருகன் மலை, சத்தியகிரி, கந்தமலை, கந்தமாதனம், பரமசினம், சிக்கந்தர் மலை ஆகிய பல பெயர்கள் உள்ளன.

தமிழின் தொன்மையான சங்க இலக்கியங்கள், திருப்பரங்குன்றத்தை “தண்பரங்குன்றம்” அல்லது “பரங்குன்றம்” என்றே குறிப்பிடுகின்றன. எனினும், இன்று இது “திருப்பரங்குன்றம்” என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது.

முருகன் – மாமிசம் விரும்பும்
குறிஞ்சி நிலத்துக் கடவுள்

மலைக்காட்டில் கிழங்கு, தேன் எடுத்து, வேட்டையாடி வாழும் குறிஞ்சி நிலத்தினரின் கடவுள் முருகன் என தொல்காப்பியம் வரையறுக்கிறது. எனவே, குறிஞ்சி நிலத்துக் கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவு என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

முருகனோடு தொடர்புடைய விழாக்களில் ஒன்றாக, “வேலன் வெறியாட்டு” குறிப்பிடத்தக்கது.

முருகு (அணங்கு) ஆட்கொண்ட பெண்களுக்காகவே, “வேலன் வெறியாட்டு” நிகழ்த்தப்பட்டதாக சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வில், முருகனின் பூசாரியாக “வேலன்” என்பவன் செயற்படுவான். தலைவியின் தாய், வேலனை அழைத்து வெறியாட்டை நிகழ்த்த ஏற்பாடு செய்வாள். வேலன், தினை அரிசி, மலர்களுடன் களம் அமைத்து, ஆட்டுப் பலி கொடுப்பான். பலிகொடுத்த ஆட்டின் குருதியுடன் தினை அரிசியை கலந்து வீடுகளை சுற்றிலும் தூவுவான். இதனை “வெறியாட்டு” என காமக் கண்ணியார் கூறுகிறார் (அகநானூறு 22).

இது மட்டுமின்றி நற்றிணை, ஐங்குறுநூறு, மதுரைக் காஞ்சி உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும் இந்த வெறியாட்டு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து…”  என பழமுதிர்ச் சோலையில் முருகனை வழிபடும்போது, சிறிய தினை அரிசியை மலர்களுடன் கலந்து, ஆட்டுப் பலி கொடுத்ததை திருமுருகாற்றுப்படை விவரிக்கிறது. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “கல்லாடம்” எனும் நூலிலும், வேலன் வெறியாட்டுச் சடங்குகள் விரிவாக கூறப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றத்தில் ஆடு, சேவல் பலி – பண்டைய வழக்கம்

முருகனுக்கு “ஆடு, சேவல் நேர்த்திக்கடன் கொடுக்கும் வழக்கம்” தொன்மை வாய்ந்தது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நேர்த்திக் கடனாக ஆடு, சேவலை விட்டுவிட்டு வருவது இன்றும் நடைபெற்று வருவது இதற்குத் தக்க சான்றாகும். கோயில் நிர்வாகம் இதற்குச் சான்றாக இரசீது வழங்குகிறது.

மலையடிவாரத்தில் உள்ள மலையடிக் கருப்பு கோயில், நாகம்மாள் கோயில், வெயிலுக்கு உகந்த அம்மன் கோயில் போன்ற இடங்களில் ஆடு, சேவல் பலி கொடுக்கும் வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் ஆடு, சேவல் பலி கொடுக்கும் வழக்கம் புதியதல்ல. இது காலம் காலமாக அனைத்து சமூகத்தினராலும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பரம்பரைச் சடங்காக இருக்கிறது.

தமிழரின் பழமையான தெய்வமான முருகன் வழிபாடானது, குறிஞ்சி நிலத்தின் காவலராகத் தொடங்கி, காலப்போக்கில் பக்தி இயக்கங்களின் வழியே திசைமாற்றப்பட்டது. பார்ப்பனியத்தின் தலையீடுகள், முருகனுக்கான தமிழர் வழிபாட்டை மாற்றி, முருகனை வேத மரபுகளின் கீழ் அமையச் செய்தன.

சங்க இலக்கியங்களால் உறுதிப்படுத்தப்படும் இறைச்சி உணவு பழக்கம், பலியிடுதல் – நேர்த்திக்கடன் ஆகியவை தமிழர் வாழ்வியல்-வழிபாட்டு அடையாளங்களாகும். திருப்பரங்குன்றம் போன்ற தலங்கள் சைவம், சமணம், இஸ்லாம் உள்ளிட்ட பன்முகப் பண்பாட்டின் அடையாளமாக, தமிழரின் பாரம்பரியமாக விளங்குகின்றன.

இந்தப் பாரம்பரியங்களை மறுக்கும் மதவெறி அரசியல் – கலவர முயற்சிகள், தமிழர் பண்பாட்டுத் தனித்தன்மையைப் பாதிக்கும் அபாயமாகும். இத்தகைய பார்ப்பன மதவெறி பாசிச சக்திகளிடம் இருந்து முருகனை மீட்பது என்பது, தமிழர் தனித்தன்மையை, மத நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சியே.

(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள பல்வேறு விவரங்கள், வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவம் எழுதிய “வரலாற்று நோக்கில் முருக வழிபாடு” மற்றும் மதுரையைச் சேர்ந்த பண்பாட்டுச் சூழலியலாளர் தமிழ்தாசன் எழுதிய “திருப்பரங்குன்றம், சத்யகிரி மலையா, சிக்கந்தர் மலையா” ஆகிய கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டவை.)


நீலன்

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழ்)

(மார்ச் 2025 புதிய ஜனநாயகம் இதழில் வெளியான இக்கட்டுரையில் முருகன் நாட்டார் தெய்வமென தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை திருத்தியுள்ளோம்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 அக்டோபர், 1988 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 22 | 1988 அக்டோபர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அவதூறு மசோதா வாபஸ்: பதுங்குகிறது பாசிச கும்பல், பாய்வதற்கு!
  • வாசகர் கடிதம்
  • போலீசைத் திருத்த முடியுமா?
  • பெங்களூரில் ஒரு அமைதிப்படை
  • நீதிதேவன் ‘மயக்கம்!’
  • ஈழத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் பம்மாத்து!
  • ஒளியத் தெரியாதவன் சுரைக் குடுக்கைக்குள் நுழைந்தானாம்!
  • நாய் குரைத்தது! லாரி பின்வாங்கியது!
  • வள்ளியூர் வாகைக்குளம் புள்ளம்பாடி
  • ஸ்விஸ் வங்கியில் தங்கம் – சியோலில் தகரம்
  • அமைப்புச் செய்தி: குடமுருட்டி குண்டு போலீசின் சதி தோற்றது
  • காலரா: கொள்ளை நோயல்ல- அரசின் கொலைக் குற்றம்
  • அனைவருக்கும் வேலையா? வாரிசுகளுக்கே வேலையா?
  • திக்கெட்டும் ராணுவ சர்வாதிகாரம் தீர்வாகாது நாடாளுமன்ற ஜனநாயகம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 செப்டம்பர், 1988 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 03, இதழ் 21 | 1988 செப்டம்பர் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வன்னியர் பிரச்சினைக்குத் தீர்வு: இட ஒதுக்கீடா? விவசாயப் புரட்சியா?
  • காவிரி நீர்: தமிழக உரிமைக்காக தொடரும் போராட்டம்
  • அவதூறு தடைச் சட்ட மசோதா: கருத்து சுதந்திரத்துக்கு கல்லறை!
  • மக்களின் ‘காவலர்’களா? மனித மிருகங்கள்
  • உரிமை கேட்டால் உதை
  • நாகாலாந்து-மிஜோரம் ஜனாதிபதி ஆட்சி: காங்கிரசு கவர்னர்களின் கயவாளித்தனம்
  • தொண்டு நிறுவனங்களா? கொத்தடிமைக் கூடாரங்களா?
  • ஈழம்: விடுதலைக்கு எதிராக புலிகளின் பாசிச போக்குகள்
  • ராஜீவ்-ரே-ரி-பைரோ: பாசிச கும்பலின் ரகசிய கொலைபடை
  • ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்: விவசாயிகளுக்கா? வர்த்தக சூதாடிகளுக்கா?
  • கோயாபல்சின் மறு அவதார்மாக கேடயம்-மன ஓசை கும்பல்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு வெற்றி | தோழர் ரவி

திருப்பரங்குன்றம்: மத நல்லிணக்க மாநாடு வெற்றி | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



பாட்டாளி வர்க்க ஆசான் காரல் மார்க்ஸ் | 142-ஆவது நினைவு நாள்

ன்று (மார்ச் 14, 2025) பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் காரல் மார்க்ஸ் அவர்களின் 142-ஆவது நினைவு நாள். விஞ்ஞான சோசலிசத்தை தோழர் எங்கெல்ஸ் அவர்களுடன் இணைந்து நிலைநிறுத்திய மார்க்சின் வாழ்வை நினைவுகூரும் வகையில் ”ஹென்ரி வோல்கவ்” எழுதிய ”மார்க்ஸ் பிறந்தார்” என்ற நூலின் இறுதிப் பகுதியை வெளியிடுகிறோம்.

***

மார்க்ஸ் பிறந்தார்
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும்
உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

முடிவுரை

வருடைய பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும்! – பிரெடெரிக் எங்கெல்ஸ் (1)

ஜென்னி மார்க்ஸ் மரணமடைந்து ஒரு வருடத்துக்குப் பிறகு, 1883 மார்ச் 14-ம் தேதியன்று கார்ல் மார்க்ஸ் இறந்த பொழுது “மனிதகுலத்தில் ஒரு தலை குறைந்துவிட்டது, அது நம் காலத்திலேயே மாபெரும் தலை” (2) என்று எங்கெல்ஸ் எழுதினார்.

மார்க்சின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருடைய இலட்சியம், அவருடைய கருத்துக்கள் மனிதகுலத்துக்குப் பெரு நிதியாகும். அதன் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திக் கூற இயலாது.

லண்டனில் உள்ள காரல் மார்க்சின் நினைவிடம்.

மனிதகுலக் கலாச்சாரத்தின் மொத்த வரலாற்றிலுமே மார்க்சியத்துடன் எந்த அளவிலாவது ஒப்பிடக் கூடிய ஒரு நிகழ்வு ஏற்பட்டதில்லை. அது வரையிலும் தத்துவஞானிகள் உருவாக்கிய தத்துவங்கள் ஒரு சிறு குழுவின் உடைமையாக மட்டுமே இருந்தன. அத்தத்துவங்கள் யதார்த்தத்தின் தனித்தனியான அம்சங்களை விளக்கின, அல்லது உலகத்தைக் கருத்தியலாக எடுத்துக்காட்டின.

அவர்கள் தமது உறுதியான நம்பிக்கைகளுக்கு ஏற்ப இதுவரையிலும் உலகத்திலிருந்த எல்லாவற்றையும் விளக்க முற்பட்டார்கள். தாங்கள் கூறுவதே முடிந்த முடிவு, மற்றவர்கள் இவற்றை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். இத்தத்துவ ஞானிகளின் ஊகங்கள் எத்தகைய சாயலைக் கொண்டிருந்தாலும் வரலாற்று உணர்வின்மையும் வறட்டுக் கோட்பாட்டுவாத அணுகுமுறையும் அவை அனைத்துக்கும் பொதுவான குறைபாடுகளாகும்.

இச்சிந்தனையாளர்களின் தத்துவங்கள் யதார்த்தத்தின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இயக்கவியல் விதிகளுக்கு ஏற்ப வாழ்க்கை தடுக்க முடியாதபடி முன்னேறிக் கொண்டிருந்த பொழுது உலகத்தை வெல்லப் போகின்றன என்று எதிர்பார்த்த கோட்பாடுகள், தோன்றிய உடனே காலாவதியாகிவிட்டன.

“தத்துவம் என் நண்பரே நரை கண்டது, வாழ்க்கை எனும் கற்பகத்தரு பசுமையானது!” (கேதே ஃபாவுஸ்டு)

இது கேதேயின் மணிமொழி. யதார்த்தத்தின் மெய்விவரங்களை, யதார்த்தத்தின் தற்காலிக நிகழ்வின் ஏதாவதொரு அம்சத்தைப் பிரதிபலிக்காமல் யதார்த்தத்தின் மெய்யான வளர்ச்சியை, அதன் நிரந்தரமான, தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் பிரதிபலிக்கின்ற தத்துவம் தோன்றிய பொழுது இந்த மணிமொழி தன்னுடைய உறுதியான தன்மையை இழந்தது.


படிக்க: மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !


கண்களை மூடியிருந்த துணிகள் அகற்றப்பட்டன, வறட்டுக் கோட்பாட்டுச் சிந்தனையின் தப்பெண்ணங்கள் கைவிடப்பட்டன. முதன்முறையாக உலகம், விசும்பிலும் காலத்திலும் அதன் நிரந்தரமான வளர்ச்சியின் பல்தொகுதி மற்றும் முரண்பாடுகள் அனைத்துடனும் துல்லியமாக அப்படியே பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது. இத்தத்துவத்தின்படி இயற்கையின் வளர்ச்சியின் ஆக உயர்ந்த கட்டமாக மனித சமூகம் தோன்றுகிறது, திட்டவட்டமான, அறியப்படக் கூடிய இயற்கை – வரலாற்று விதிகளின் அடிப்படையில் அது முன்னேற்றமடைகிறது.

யதார்த்தத்தை அறிகின்ற முறையியலின் நோக்கிலிருந்து மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாக வரையறுப்பதென்றால் அதன் முரணில்லாத வறட்டுச் சூத்திரவாத எதிர்ப்பையும் முரணில்லாத வரலாற்றுணர்வையுமே குறிப்பிட வேண்டும்.

மார்க்சியத்தின் இந்தச் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் மார்க்சும் எங்கெல்சும் இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றைப் பற்றித் தங்களுடைய கருத்துக்களின் அமைப்பை முழுமையாக விளக்குகின்ற நூல்களை, “மார்க்சியத்தைப் பற்றிய வினாவிடை” நூல்களை எழுதவில்லையே என்று வியப்படைகிறார்கள். அவர்களில் சிலர் இத்தகைய “வினாவிடை நூல்களை” எழுதுவதற்கு முயற்சியும் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியின் பலன் கொச்சையான மார்க்சியமே.

ஏனென்றால் மார்க்சியம் என்பது எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்கெனவே தயாரித்த பதில்களைத் தருகின்ற தத்துவமல்ல, பிரபஞ்சத்தைப் பற்றிய தத்துவ ரீதியான மாதிரிப்படிவமல்ல, “கட்டாயமான” வரலாற்றுத் திட்டமல்ல. நிரந்தரமான வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் உட்படுகின்ற ஒன்றை அறிகின்ற முறையே மார்க்சியம். அது சமூக உறவுகளைப் புரட்சிகரமாகத் திருத்தியமைக்கும் செயல்திட்டம், அத்தகைய சீரமைப்புப் போராட்டத்துக்கு அது ஆயுதம்.

மார்க்சுக்கு முன்பே கூட மனிதனுடைய அறிவு பல இயற்கை நிகழ்வுகளையும் விதிகளையும் விஞ்ஞானரீதியாக விளக்கியிருக்கிறது; ஆனால் சமூக உறவுகளின் துறையில் கடந்தகாலச் சிந்தனையாளர்கள் இருட்டில் அலைந்து கொண்டிருந்தார்கள். எல்லாச் சமூக நிகழ்வுகளையும் முற்றும் விளக்கிக் கூற முடியும் என்ற பொய்யான கோரிக்கைகளை மார்க்சியம் நிராகரித்தது. ஆனால் அவற்றை ஆராய்வதற்கு நம்பகமான, சரியான வழியைக் காட்டியது.

ஆகவே சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சி முதன்முறையாக முற்றிலும் விஞ்ஞான அடிப்படையில் அமைக்கப்பட்டது. மனிதகுலத்தின் வரலாற்றில் புரட்சிகரமான கொந்தளிப்புக்கள் ஏராளமாக இருந்திருக்கின்றன; ஆனால் மார்க்சுக்கு முன்பு உண்மையிலேயே புரட்சிகரமான உலகக் கண்ணோட்டம் என்பது கிடையாது. இப்பொழுது பெருந்திரளான மக்களின் புரட்சிகரமான இயக்கமும் புரட்சிகரமான சிந்தனையும் ஒன்றாகச் சேர்ந்தன. மார்க்சியம் வரலாற்றின் “உந்துவிசையாக” மாறி, அதனை வேகப்படுத்தியது.

மார்க்சியக் கருத்துக்கள் பரவிய வேகத்தைப் பற்றி வியப்படையாதிருக்க இயலாது. கம்யூனிஸ்டு அறிக்கை வெளியிடப்பட்ட காலத்தில் ‘கம்யூனிஸ்டு சங்கத்தில்’ சில டஜன் உறுப்பினர்கள் இருந்தார்கள். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் முதல் வெகுஜன, போர்க்குணமிக்க அமைப்பாகிய சர்வதேசத் தொழிலாளர் சங்கம் 1864-ல் நிறுவப்பட்டது. கம்யூனிசம் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச இயக்கமாக மாறத் தொடங்கியது. 1871-ல் பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நடத்திய புரட்சிகரமான போராட்டத்தின் மூலம் கம்யூனிசக் கருத்துக்களை அமுலாக்குகின்ற முதல் வீரமிக்க முயற்சியைச் செய்தது. அது ஏற்படுத்திய பாரிஸ் கம்யூன் மூன்று மாத காலம் நீடித்தது.

முதலாவது அகிலத்தின் குழந்தையான பாரிஸ் கம்யூனின் அனுபவத்தைப் பொதுமைப்படுத்திய மார்க்ஸ் அதை ஒரு புதிய ரகத்தைச் சேர்ந்த அரசாக, பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாக, உழைப்பின் பொருளாதார விடுதலை தொடங்கக் கூடிய ஒரே அரசியல் வடிவமாகக் கண்டார். உண்மையான ஜனநாயகத்தை ஏற்படுத்துவது பாட்டாளி வர்க்க அரசின் கடமை என்று மார்க்ஸ் வலியுறுத்தினார். கம்யூன் அதிகாரவர்க்க உணர்ச்சியை வேரோடு அகற்றுவதை, எல்லா அரசு ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளையும் பெருந்திரளான மக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதை, கம்யூன் தன்னுடைய நடவடிக்கைகளுக்குப் பெருந்திரளான உழைக்கும் மக்களை ஆதாரமாகக் கொள்வதை மார்க்ஸ் வரவேற்றார்.

மார்க்சும் எங்கெல்சும் தங்களுடைய வாழ்க்கையின் இறுதியில் உலகப் புரட்சிகர இயக்கத்தின் கேந்திரமாக மாறிக் கொண்டிருந்த ருஷ்யாவை நோக்கி மென்மேலும் அதிகமான கவனத்தைச் செலுத்தினார்கள் என்பதை முன்னர் குறிப்பிட்டோம். மார்க்சின் மூலதனம் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட நாடு ருஷ்யா. பாட்டாளி வர்க்கம் வெற்றியடைந்த முதல் நாடும் ருஷ்யாவே.

ஐரோப்பிய வரலாற்றில் புதிய திருப்புமுனை ருஷ்யாவில் நடைபெறுகின்ற சம்பவங்களுடன் இணைந்திருக்கும் என்று மார்க்ஸ் ஸோர்கேக்கு எழுதினார். “ருஷ்யாவிலுள்ள நிலைமைகளைப் பற்றி அதிகாரபூர்வமல்லாத மற்றும் அதிகாரபூர்வமான ஆவணங்களை (இவை வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கக் கூடியவை, பீட்டர்ஸ்பர்கிலிருக்கும் நண்பர்கள் மூலம் இவை எனக்குக் கிடைத்தன) நான் ஆராய்ந்திருப்பதன் அடிப்படையில் ருஷ்யா ஒரு மாபெரும் கொந்தளிப்பின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது, அதற்குரிய எல்லாக் கூறுகளும் தயாரிக்கப்பட்டுவிட்டன எனக் குறிப்பிடுவேன்”(3) என்று மார்க்ஸ் எழுதினார்.

ருஷ்ய சமூகத்தின் அதிகாரபூர்வமான பகுதிகள் அனைத்தும் பொருளாதார மற்றும் அறிவுரீதியாக முற்றிலும் நசிவு நிலையில் இருக்கின்றன என்று எழுதிய மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: “இதுகாறும் எதிர்ப்புரட்சியின் உடைக்கப்படாத அரணாகவும் சேமப்படையாகவும் இருந்து வந்திருக்கும் கிழக்கில் இம்முறை புரட்சி தொடங்குகிறது.”(4)

ருஷ்யப் புரட்சியைப் பார்க்கின்றவரை தான் உயிரோடிருக்க இயலும் என்று மார்க்ஸ் நம்பினார். பாட்டாளி வர்க்க வெற்றிகள் ஏற்படப் போகின்ற தருணத்தையும் அவை எவ்வளவு அண்மையில் இருக்கின்றன என்பதைப் பற்றியும் மதிப்பிடுங்கால் மார்க்சும் எங்கெல்சும் சற்றுத் தவறு செய்திருக்கலாம். ஆனால் இத்தவறுகள் புரட்சியைத் “துரிதப்படுத்த வேண்டும்” என்ற எண்ணத்தினால் ஏற்படவில்லை. அத்தகைய பிளான்கிவாத அணுகுமுறை அவர்களுக்கு முற்றிலும் அந்நியமாகும். “இத்தகைய தவறுகள், புரட்சிகரச் சிந்தனை மேதைகள் செய்த தவறுகள்…. அதிகாரபூர்வமான மிதவாதத்தின் அலுத்துப்போன அறிவைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக மேன்மையானவை, மகத்தானவை, வரலாற்று ரீதியில் அதிகமான பயனுள்ளவை, உண்மையானவை”(5) என்று லெனின் முற்றிலும் சரியாக மதிப்பிட்டார்.

விளதிமிர் இலியிச் லெனின் (உலியானவ்) சிறுவயது புகைப்படம்.

மார்க்ஸ் மரணமடைந்த வருடத்தில் நெடுந்தொலைவுக்கு அப்பால், ஸிம்பீர்ஸ்க் என்ற ருஷ்ய நகரத்தில் விளாதிமிர் உலியானவ் என்ற பதின்மூன்று வயதுப் பள்ளி மாணவன் ஏற்கெனவே புரட்சிகர ஜனநாயக நூல்களைப் படிக்கத் தொடங்கியிருந்தான். அவன் பதினைந்தாம் வயதில் மார்க்சின் மூலதனத்தைப் படித்து முடித்தான். அவன் சீக்கிரத்தில் ருஷ்யாவில் மார்க்சியத்தை எழுச்சியுடன் பரப்புவோனாகவும் புரட்சிகரத் தொழிலாளர் கட்சியின் அமைப்பாளனாகவும் மாறினான்.

மார்க்சியக் கருத்துக்களைப் படைப்புத் தன்மையுடன் வளர்ப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஒரு புதிய சகாப்தம், அதே சமயத்தில் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலையிலும் கம்யூனிஸ்டு அறிக்கையில் எடுத்துக் கூறப்பட்ட புதிய உலகத்தை நிர்மாணிப்பதிலும் புதிய சகாப்தம் விளதிமிர் இலியிச் லெனின் (உலியானவ்) பெயருடன் இணைந்திருக்கிறது.

19-ம் நூற்றாண்டு விஞ்ஞானக் கம்யூனிசத்தின் தத்துவம் பிறந்த நூற்றாண்டு என்றால் 20-ம் நூற்றாண்டு ஒரு புதிய சமூகத்தின், “பரிபூரணமான மனிதாபிமானம் என்ற கம்யூனிச சமூகத்தை” நிர்மாணித்துக் கொண்டிருக்கும் நாடுகளின் குடும்பம் பிறந்த நூற்றாண்டாகும்.

நமது யுகத்தில் சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல. சோவியத் யூனியனைச் சுற்றித் திரண்டிருக்கின்ற பல நாடுகளில் சோஷலிசம் யதார்த்தமாகிவிட்டது. அங்கே ஒரு புதிய சமூகம் உருவாக்கப்பட்டது. அந்தச் சமூகத்தில் சுரண்டலும் சமூக ஏற்றத்தாழ்வும் மனிதனுடைய தகுதியைக் குறைக்கின்ற எல்லா வடிவங்களும் ஒழிக்கப்பட்டுவிட்டன. அங்கே நெருக்கடிகள் இல்லாத பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது, உழைக்கும் மக்களின் பொருளாயத சுபிட்சம் தொடர்ச்சியாக முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது, அதனைத் தொடர்ந்து அவர்களுடைய கலாச்சார நிலையும் ஆன்மிக வளமும் அதிகரிக்கின்றன. அங்கே விஞ்ஞான, மார்க்சிய-லெனினிய உலகக் கண்ணோட்டத்தை வழிகாட்டியாகக் கொண்ட உழைக்கும் மக்கள் சமூக நிகழ்வுப் போக்குகள் அனைத்தையும் தாமே இயக்குகிறார்கள். தனிமனிதனுடைய சர்வாம்ச, வரம்பற்ற வளர்ச்சியே, “முன்பே முடிவு செய்யப்பட்ட மட்டங்களுக்குச் சம்பந்தமில்லாமல் அனைத்து மனித சக்திகளின்”(6) வளர்ச்சியே அந்தச் சமூகத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

சோஷலிச நாடுகளின் வளர்ச்சி, பலத்தின் முன்னேற்றம், அவை பின்பற்றுகின்ற சமாதானம் மற்றும் பதட்டத்தணிவுக் கொள்கைகளின் ஆக்கபூர்வமான விளைவு மனிதகுலத்தின் சமூக முன்னேற்றத்தின், உலகப் புரட்சிகர நிகழ்வுப் போக்கின் முக்கியமான போக்காக இருக்கின்றன. ஏகாதிபத்தியம், ஏகபோகங்கள், காலனியாதிக்க எச்சமிச்சங்கள் ஆகியவற்றை எதிர்த்து சமாதானம், தேசிய சுதந்திரம் மற்றும் சோஷலிசத்துக்காக நடைபெறும் போராட்டத்தில் எல்லா நாடுகளிலும் உழைக்கும் மக்கள் மென்மேலும் அதிகமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்போராட்டத்தில் அவர்களுடைய பாதையில் ஒளி பாய்ச்சுவது மார்க்சிய-லெனினியத் தத்துவமே. முதலாளிவர்க்க சித்தாந்திகள் மார்க்சியத்தை “மறுப்பதற்கும்” “அழிப்பதற்கும்” தங்கள் முழுச் சக்தியையும் தொடர்ந்து செலவிடுகிறார்கள். அவர்கள் மார்க்சியத்துக்குப் பதிலாக இன்றைய அற்பவாதிகள் விரும்புகின்ற வேறு தத்துவங்களை நிறுவுவதற்கு முயற்சி செய்கிறார்கள்; விஞ்ஞான சோஷலிசத்துக்குப் பதிலாக மார்க்சும் எங்கெல்சும் தம் காலத்தில் கூர்மையாகக் கிண்டல் செய்த “மிதவாத சோஷலிசத்தை” நிறுவப் பாடுபடுகிறார்கள்.

இம்முயற்சிகள் அனைத்தும் வீணாகி வருவதை நாம் பார்க்க முடியும். மார்க்ஸ் சுட்டிக்காட்டிய திசையில் வரலாறு தடுக்க முடியாதபடி முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகக் கம்யூனிஸ்டு இயக்கம் மென்மேலும் வலிமையடைந்து கொண்டிருக்கிறது.

நம் காலத்தில் சமூக மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் அதிகமான வேகத்தோடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாபெரும் முக்கியத்துவத்தைக் கொண்ட புதிய அரசியல் சம்பவங்களும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் நடைபெறுவதைப் பற்றிப் படிக்கிறோம். சமூக முன்னேற்றத்துடன் இணைந்து மார்க்சியத் தத்துவமும் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அது புதிய உண்மைகளைப் பொதுமைப்படுத்தி உலகத்துக்குப் புதிய வானங்களைக் காட்டுகிறது. தத்துவஞானமும் சமூக ஆராய்ச்சியும் தங்களுடைய சாதனைகளைப் பற்றித் திருப்தி கொண்டு வெகுஜன எளிமையை நோக்கமாகக் கொண்டால் அவை வறட்டுச் சூத்திரவாத, கோட்பாட்டுவாதப் படுகுழியில் விழுந்து விடும்.


படிக்க: என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !


மார்க்சிய-லெனினியம் வாழ்க்கையை விட்டு விலகுவதில்லை, குறுங்குழுவாதக் கோட்பாட்டின் வரையரைக்குள் தன்னை அடைத்துக் கொள்வதில்லை. மனிதகுலத்தின் மொத்தக் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் பொதுமைப்படுத்தி விமர்சன ரீதியில் புத்தாக்கம் செய்வதை அடிப்படையாக கொண்ட மார்க்சியம் மனிதகுல மேதைகளின் மகத்தான சாதனைகளைத் தன்வயமாக்கிக் கொண்டு மேலும் வளர்ச்சி அடைகிறது.

மார்க்சின் துணிவு மிக்க, படைப்பாற்றலுடைய, புதியனவற்றைத் தேடுகின்ற சிந்தனை இன்றைய உலகத்தில் வாழ்கிறது, தொடர்ந்து போராடுகிறது. அது விஞ்ஞானி, தத்துவஞானி, அரசியல்வாதி ஆகியோரது பணியில் பங்கெடுக்கிறது. வாழ்க்கையிலும் சமூகப் போராட்டத்திலும் ஒவ்வொரு நபரும் தனக்குரிய இடத்தைப் பெறுவதற்கு அது உதவி செய்கிறது. அது சமூகத்திலிருந்து எல்லாவிதமான கசடுகளையும் அகற்றுவதற்கு, மனித குலத்தினருக்கு துன்பங்களையும் யுத்தங்களையும் வறுமையையும் பசியையும் அநீதியையும் ஒழிப்பதற்கு உதவி செய்கிறது.

இந்த பூமியில் மனிதனுடைய மாபெரும் தகுதிகளுக்கேற்ற சிறப்பான வாழ்க்கையை அமைப்பதற்கு அது உதவி செய்கிறது.

குறிப்புகள்:

(1) Karl Marx and friedrick Engles, SelectedWorks in 3 volumes, Vol. 3, Moscow,1976, p. 163.
(2) Marx, Engles, Selected correspondence, p. 340.
(3) Marx, Engles, Selected correspondence, p. 289
(4) Ibid.
(5) V. I. Lenin, Collected Works, Vol.12, p. 378.
(6) Karl Marx, Grundrisse der Kritik der Politischen Okonomie, Dietz Verlag, Berlin, 1953, s. 387.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டின் அயோத்தியல்ல, பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் தொடர்ச்சி!

ந்தியா முழுவதும் கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடிக்க முயலும் ஆர்.எஸ்.எஸ் –  பா.ஜ.க. கும்பலுக்கு, நீண்ட காலமாகவே சிம்மசொப்பனமாக இருந்து வருகிறது, தமிழ்நாடு.

இருப்பினும், சாதி மற்றும் மத மோதல்களை உருவாக்குவதற்கான முயற்சியை அக்கும்பல் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரியில் இந்து – கிறித்தவர் இடையிலும், கோவையில் இந்து – இஸ்லாமியர் இடையிலும்,  நெல்லையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஆதிக்கச் சாதியினருக்கும் இடையிலும் முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தி, இஸ்லாமியர், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல்களை நடத்திய இக்கும்பல், தற்போது திருப்பரங்குன்றத்தைக் குறிவைத்து தனது சதி வேலைகளை அரங்கேற்றி வருகிறது.

“இந்துக்கள் மனதைப் புண்படுத்திவிட்டனர்”, “முருகன் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற இஸ்லாமியர்கள் முயற்சிக்கின்றனர்”, “நாங்களும் வெள்ளிக்கிழமை பன்றி வெட்டுவோம்”, “தர்காவுக்குச் சொந்தமான கொடிமரத்தில் தீபம் ஏற்ற வேண்டும்”, “தர்காவை மலையிலிருந்து அகற்ற வேண்டும்”, “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்” என்றெல்லாம் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த அண்ணாமலை, எல்.முருகன், எச்.ராஜா, இந்து முன்னணியைச் சேர்ந்த காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்ட சங்கிகள் கடந்த இருமாத காலமாக தொடர்ந்து மதவெறியைக் கக்கி வந்தனர்.

ஆனால், திருப்பரங்குன்றம் பகுதி மக்களின் மதநல்லிணக்கப் பாரம்பரியமும், பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டங்களும் இக்கும்பலது கனவைத் தகர்த்தெறிந்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உரிமை தொடர்பான வெவ்வேறு பிரச்சினைகள் ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்திருந்தாலும் கடந்த முப்பது ஆண்டுகளாக, இந்த மதவெறிக் கும்பல்தான், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இதனைக் கையாண்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் சில தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற வெறியில், அதிகார வர்க்கத்தில் ஊடுருவியிருக்கும் சங்கிகளைப் பயன்படுத்தி, தற்போது தனது கலவரத் திட்டத்தை விரைவுபடுத்துகிறது. அதன் ஓர் அங்கமாகத்தான் கடந்த இரண்டு மாத காலமாக, மதுரையில் மதவெறியூட்டும் நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகிறது.

மலை யாருக்கு சொந்தம்?

திருப்பரங்குன்றம் மலையில் சொத்துரிமை தொடர்பான பிரச்சினை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே எழுப்பப்பட்டது. 1920-ஆம் ஆண்டு இரயில்வே பாதைகள் அமைக்கவும் குவாரிகள் அமைக்கவும் திருப்பரங்குன்றம் மலையைக் கையகப்படுத்தும் முயற்சிகளை பிரிட்டிஷ் அரசின் வருவாய்த்துறை மேற்கொண்டது. இதற்கு எதிராக, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேவஸ்தானம் கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் தர்கா நிர்வாகமும் மனுதாரராக இணைக்கப்பட்டது.

கீழமை நீதிமன்றத்தின் முதன்மை கூடுதல் நீதிபதியாக இருந்த பி.ஜி. இராம ஐயர் 300-க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, 21 சாட்சிகளை விசாரித்தார். 25-08-1923 அன்று அவர் வழங்கிய தீர்ப்பில், நெல்லித்தோப்பு, அதில் உள்ள புதிய மண்டபம், நெல்லித்தோப்பிலிருந்து பள்ளிவாசல் வரை உள்ள படிக்கட்டுகள், பள்ளிவாசல் மற்றும் கொடிமரக் கம்பம் ஆகியவை இஸ்லாமியர்களின் சொத்தாகும் எனவும், மலையின் பிற பகுதிகள் மற்றும் கிரிவலப் பாதை, முருகன் கோயில் தேவஸ்தான நிர்வாகத்திற்குச் சொந்தமானவை எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அது வருவாய்த்துறைக்குச் சாதகமாக முடிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து, அன்றைய உச்சநீதிமன்றமான இலண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலில் (Privy Council) 25-08-1923 அன்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், பி.வி. இராம ஐயர் வழங்கிய தீர்ப்பினை உறுதிப்படுத்தி, 12-05-1930 அன்று உத்தரவு வழங்கப்பட்டது.

அதன் பின்னர், தர்காவில் வழிபாடு நடத்தவும், உணவு சமைப்பதற்கும் தேவையான நீரை சிவன் கோயில் (காசி விசுவநாதர் கோயில்) சுனையில் இருந்து எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். கோடைக்காலங்களில் நீரின் அளவு குறைவதால், இருதரப்பினருக்கும் இடையே சிறு மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இதனால், தர்கா நிர்வாகம், தர்காவிற்குச் சொந்தமான இடத்திலேயே சுனை கட்டும் பணியை மேற்கொண்டது.

இதை எதிர்த்து, சுனை கட்டுமிடம் கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது என அறிவிக்கக் கோரி, கோயில் நிர்வாகம் சார்பாக 1975-ஆம் ஆண்டு மதுரை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கே. சுப்பிரமணியன், முந்தைய 1920-ஆம் ஆண்டு பி.ஜி. ராம ஐயர் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், வழக்கில் குறிப்பிடப்பட்ட இடம் தர்காவிற்கே சொந்தமானது எனவும், சுனை கட்ட தடை போட முடியாது எனவும் 22-11-1978 அன்று தீர்ப்பளித்தார்.

மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் தர்காவிற்குச் சொந்தமான இடங்களைக் கோயிலுக்கு சொந்தமானவை என அறிவிக்க முயன்றது. ஆனால், அனைத்துத் தீர்ப்புகளும் தர்கா நிர்வாகத்திற்கு ஆதரவாகவே வந்துள்ளன.

ஆனால், 1931-ஆம் ஆண்டு லண்டன் பிரிவி கவுன்சிலின் தீர்ப்பில் முழு மலையும் முருகனுக்குச் சொந்தமானது என்று கூறப்பட்டதாக எச்.ராஜா உள்ளிட்ட சங்கிகள் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் தமிழ்நாட்டின் அயோத்தியா?

இந்தியாவின் தொல்லியல் அடையாளங்களில் ஒன்றாக இருந்த பாபர் மசூதி, 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இராமன் அங்கு பிறந்தார், அவ்விடத்தில் இராமன் கோயில் இருந்தது என்ற பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டமைத்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல், கரசேவை நடத்தி மசூதியை இடித்தது.

இதையே முன்மாதிரியாக வைத்து, நாடு முழுவதும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான பிரச்சாரங்களைத் தொடங்கின. திருப்பரங்குன்றம் மலையும் இப்போது அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவேதான், “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்” என்று எச்.ராஜா திமிர்த்தனமாகப் பேசித் திரிகிறார்.


திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்வதற்காக வெளியூர்களிலிருந்து ஆட்களை திரட்டிவந்து பா.ஜ.க. நடத்திய போராட்டம்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு மேலே, 50 அடி உயரத்தில் 300 ஆண்டுகள் பழமையான தீபமேற்றும் பீடம் உள்ளது. தமிழ்நாடு முழுவதுமிருந்து வரும் பக்தர்கள் அங்கு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். ஆனால், “தர்காவிற்குச் சொந்தமான கொடிமரம் அமைந்துள்ள பகுதியில்தான் தீபம் ஏற்ற வேண்டும், அது இந்துக்களின் நம்பிக்கை” என்று கூறி, ஆர்.எஸ்.எஸ்-இன் வானரப்படைகளில் ஒன்றான “இந்து பகத் சன சபை”யின் தலைவர் வி.தியாகராஜன் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 1994-இல் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜெ. கனகராஜ், 1930-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பே இறுதியானது என்றும், எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் இந்தப் பகுதியின் பாதுகாப்பை போலீசுத்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் 24-11-1994 அன்று உத்தரவிட்டார்.

இதையெல்லாம் மதிக்காத பாசிச கும்பலோ, கொடிமரம் அமைந்துள்ள பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை அப்பகுதி மக்களிடையே விதைக்க முயற்சித்து வருகிறது.

அண்மையில் கூட, செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், “1931-ஆம் ஆண்டு தீர்ப்பின்படி, தர்கா அமைந்துள்ள 33 சென்ட் இடம் மட்டுமே தர்காவிற்குச் சொந்தமானது. கோயிலுக்குச் சொந்தமான இடத்திலுள்ள (தர்கா) கொடிமரத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். கடந்த 30 ஆண்டு காலமாக இந்துக்களின் உரிமை பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு, நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகையைத் தடைசெய்யக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில், உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. தொழுகைச் செய்வதைத் தடுக்க முடியாது எனவும் அந்த வழக்கில் எவ்வித இடைக்காலத் தடை உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும் 27-06-2023 அன்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

இவ்வாறாக, 1920 முதல் 2023-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் சிக்கந்தர் தர்கா, பள்ளிவாசல், கொடிக்கம்பம் அமைந்துள்ள மலையுச்சி, நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானது என்பது சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களையும் தீர்ப்புகளையும் மதிக்காமல், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. கும்பல் இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறான பரப்புரையைத் திட்டமிட்டே  செய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாகத்தான், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளே இதுவரை பலியிடப்படாதது போலவும், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாகவும், முருகன் மலையை சிக்கந்தர் மலையாக்க முயற்சிகள் நடப்பதாகவும் கதையளந்து, கலவரம் நடத்த முயற்சிக்கிறது இந்து முன்னணி கும்பல்.

இந்துக்களும் கிடா வெட்டும் சிக்கந்தர் தர்கா:

கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய அரிட்டாபட்டியைச் சேர்ந்த  மக்கள், டங்ஸ்டன் திட்டம் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்த, கிடா வெட்டுவதற்காக சிக்கந்தர் தர்காவிற்குச் சென்றனர். அப்போது அங்கு கிடா வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, திருப்பரங்குன்றம் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவ்வாறு சென்ற மக்கள் இஸ்லாமியர்கள் அல்ல, இந்துக்கள்தான்.

எனவே, திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா அமைந்திருப்பது பற்றியோ, அங்கு ஆடு, கோழி பலியிடுவது பற்றியோ அப்பகுதி இந்து மக்கள் யாரும் புகார் அளித்ததில்லை. இந்து மக்களும் இணைந்தே அங்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர் என்பது யாவரும் அறிந்த விசயம்.

ஆனால், இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பலானது அயோத்தியில் கலவரம் செய்து பாபர் மசூதியை இடித்ததைப் போல, திருப்பரங்குன்றத்திலும் அரங்கேற்ற வேண்டுமென 30 ஆண்டு காலமாக வெறிகொண்டு அலைகிறது. ஆனால், இந்து – இஸ்லாமிய மக்களின் மதநல்லிணக்கத்தை அக்கும்பலால் உடைக்க இயலவில்லை. இத்தகைய ஒற்றுமைதான் இந்துத்துவப் பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்காக இருக்கிறது. அதைத் தகர்ப்பதன் ஊடாகவே தமிழ்நாட்டில் வேருன்ற முடியும் என்பதை உணர்ந்து,  வாய்ப்புகளுக்காக அலைந்து கொண்டிருக்கிறது.

முருகனுக்கு எதிரி, இஸ்லாமியர்களா? இந்து முன்னணியா?

தொல்குடித் தமிழ் மக்களின் கடவுளான முருகனை, சுப்பிரமணியன் என பெயரை மாற்றி சைவக் கடவுளாகவும் வேதக் கடவுளாகவும் மாற்றியது பார்ப்பனக் கும்பல். இப்படி கடவுளைத் திருடியவர்கள்தான், “திருப்பரங்குன்றம் என்ன கசாப்புக் கடையா?” என்று இப்போது கேள்வியெழுப்புகின்றனர்.

குறிஞ்சி நிலத் தலைவனான முருகனை, வேட்டைக் கடவுளாகவே மக்கள் வழிபட்டு வந்தனர். அதனால், முருகன் கோயில் மட்டுமல்ல, கருப்பசாமி, பதினெட்டாம்படி கருப்பு, பாண்டி முனி, அம்மன் கோயில்கள் உள்ளிட்ட நாட்டார் தெய்வங்களுக்கும் ஆடு, கோழி பலியிடுவதுதான் நமது தமிழ் மரபு – வழிபாட்டு முறை. இந்து முன்னணியும் பா.ஜ.க-வும் கூறும் சைவ வழிபாட்டு முறை ஒருபோதும் தமிழர்களின் வழிபாட்டு முறையாக இருந்ததில்லை.

இந்தப் பண்பாட்டுப் பின்புலத்தில்தான் முருகனும் சிக்கந்தரும் இணக்கமாகவே இருந்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் அனைவரும் தாயும் பிள்ளையுமாகவே பழகி வருகின்றனர். எனவே, திருப்பரங்குன்றத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியது கலவரம் நடத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள இந்து முன்னணி-பா.ஜ.க. பாசிச கும்பல்களைத்தான், சிக்கந்தர் தர்காவை அல்ல.

ஆண்டிமலை அகர்வாலுக்கு; திருப்பரங்குன்றம் மார்வாடிகளுக்கா?

மதுரையிலுள்ள அரிட்டாப்பட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைக் கடந்த ஆண்டு அறிவித்தது மோடி அரசு. அந்தத் திட்டம் அமையவிருக்கும் பகுதியானது பல்வேறு மலைகளையும், நாட்டார் வழிபாட்டுத் தலங்களையும், பல்லுயிர்ப் பாதுகாப்பு மண்டலத்தையும், தமிழர் பண்பாட்டின் அடையாளங்களையும் உள்ளடக்கியது. அவை அனைத்தையும் அழித்து, வடநாட்டு அகர்வாலுக்குத்  தாரைவார்க்க முயன்றதும், வளர்ச்சித் திட்டம் என்று ஆதரித்ததும் இதே ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜ.க. கும்பல்தான்.

அங்குள்ள மலைகளில் ஆண்டிமலை எனும் முருகன் மலையும் ஒன்று. இப்போது திருப்பரங்குன்றம் முருகனைக் ‘காப்பாற்றத்’ துடிக்கும் எச்.ராசா, எல்.முருகன், அண்ணாமலை, காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்ட யாரும், ஆண்டிமலையிலுள்ள முருகனைக் காப்பாற்ற வரவில்லை. அப்பகுதி மக்களின் போராட்டமே முருகனையும், கருப்பனையும், அம்மன் கோயில்களையும் பாதுகாத்தது. அகர்வாலுக்காக, அரிட்டாப்பட்டி முருகனையும் கருப்பனையும் அழிக்கத் துணிந்த இந்தக் கும்பல்தான், இப்போது சிக்கந்தர் தர்காவில்  ஆடு, கோழி வெட்டுவதால் முருகனின் புனிதம் கெடுகிறது என கதையளக்கிறது.

இதேபோல், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் பெரும்பாலானவை மார்வாடி – சேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுள்ளன. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள புதுமண்டபத்தில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு செயல்பட்டுவந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் முழுமையாக தீயில் கருகி சேதமடைந்தன. அந்த மண்டபம் புனரமைக்கப்பட்ட பிறகு, 200 ஆண்டுகளாக அங்கு கடைகளை நடத்திவந்த உள்ளூர் வணிகர்கள், சேட்டு-மார்வாடிகளால் வேறு இடத்திற்கு விரட்டப்பட்டனர். கோவை, திருவண்ணாமலை, திருப்பூர் போன்ற தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிலைதான்.

திருப்பரங்குன்றம் கோயிலைப் பார்ப்பனமயமாக்கி முருகனை அபகரித்ததுபோல், மலையைச் சுற்றியுள்ள கடைகள், வணிக வளாகங்களை அங்குள்ள அதிகாரிகளின் துணையுடன் மார்வாடி – சேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் முயற்சியில் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல் தற்போது ஈடுபட்டுள்ளது என்பதே உண்மை.

அது மட்டுமின்றி, சிக்கந்தர் தர்காவில் ஆடு வெட்டக்கூடாது என இப்போது சொல்லும் இந்து முன்னணி கும்பல், திருப்பரங்குன்ற மலை சமணர் மலை, ஆகையால், மார்வாடிகள் மனம் நோகக் கூடாது என்பதற்காக, மலைக்குக் கீழே இருக்கும் கருப்பு கோயிலிலும், அம்மன் கோயிலிலும் ஆடு வெட்டக்கூடாது என்று தடுக்கும். பின்னர், திருப்பரங்குன்றத்தில் இறைச்சியே சாப்பிடக்கூடாது என்றும் விரிவுப்படுத்தும்.

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பாசிச கும்பலை விரட்டியடிப்போம்!

இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க., இந்து முன்னணி கும்பலுக்கு எதிராக பேசுபவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. சிலர், “மக்களிடம் பிரச்சினை இல்லை. அறநிலையத்துறைதான் பிரச்சினையாக இருக்கிறது. எனவே, அறநிலையத்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டும்” என்கின்றனர்.

இன்னும் சிலர், “இந்த விவகாரத்தில் இந்து முன்னணியின் பிளவுவாத அரசியலுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. எனவே, பெரும்பான்மை இந்து மக்களுடன் இஸ்லாமியர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். எத்தனையோ தர்கா இருக்கும்போது இந்த இடத்தில் ஆடு வெட்டவில்லை என்றால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது” என்கின்றனர்.

இந்த பிரச்சினை இந்துக்கள்-இஸ்லாமியர்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல. மக்கள் விரோத இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலுக்கும், பெரும்பான்மை மக்களுக்கும் இடையிலான பிரச்சினை என்பதை முதலில் உணர வேண்டும். இந்தக் கும்பல் குறிவைத்திருப்பது இஸ்லாமியர்களை அல்ல. மதுரையின் மத நல்லிணக்கத்தைப் பேணிவரும் பெரும்பான்மை இந்து மக்களையும், அவர்களின் பாரம்பரிய வழிபாட்டு உரிமையையும், பண்பாட்டையும்தான். இவற்றை அழித்து பார்ப்பனியமயமாக்குவதும், மக்களைப் பிளவுபடுத்துவதுமே அவர்களின் நோக்கம். பகுத்தறிவு, மத நல்லிணக்கம், முற்போக்கு, ஜனநாயகம் என பன்முகத்தன்மை கொண்ட தமிழ்நாட்டில், பார்ப்பனியக் கலாச்சாரத்தைத் திணிக்கும் நீண்டகாலத் திட்டத்தின் ஒருபகுதியே இது.

மேலும், அம்பானி, அதானி, அகர்வால் போன்ற முதலாளிகளுக்கு ஒட்டுமொத்த நாட்டையும் படையல் போட்டுக்கொடுப்பதும், இதற்கு எதிராக மக்களை ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்துவதும்தான் இவர்களது நோக்கத்தின் விளைவு. இந்த செயல்திட்டத்தைத்தான் காலங்காலமாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் நாடெங்கும் செயல்படுத்தி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், இக்கும்பல் நடத்திய இத்தகைய பிளவுவாத கலவரங்களுக்கு மணிப்பூரும் ஒடிசாவும் ஜார்க்கண்டும் இரத்த சாட்சியங்களாக இருக்கின்றன.

எப்படியேனும் சாதி-மதவெறிக் கலவரங்களைத் தூண்டி தமிழ்நாட்டில் தளம் அமைக்க முயன்றுவரும், பார்ப்பன பாசிச கும்பலின் அடுத்தகட்ட நகர்வுதான் திருப்பரங்குன்றம். தாமதிக்காமல் திருப்பியடிக்க வேண்டிய தருணம் இது.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல் கிளப்பும் மதவெறி – சாதிவெறிக்கு எதிராக, தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபையும், மதவெறி எதிர்ப்பு மரபையும் முன்னிறுத்துவோம். பார்ப்பனக் கும்பலால் களவாடப்பட்ட முருகனை மீட்போம். அவர்கள் இலக்கு வைத்துள்ள கருப்பன், அய்யனார், அம்மன் உள்ளிட்ட நாட்டார் தெய்வங்களைக் காப்போம். ஆடு, கோழிகளைப் பலியிடும் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவோம்! பார்ப்பன பாசிஸ்டுகளின் கல்லறை தமிழ்நாடு என்பதை நிலைநாட்டுவோம்!


பாரி

(புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும்

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆடு பலியிடுவதை எதிர்த்து இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பல், மதுரை போலீசு மேற்கொண்டுவரும் கலவர முயற்சிகளைத் தொடர்ந்து அக்கும்பலின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதத்தில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றன.

★ இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கவும் மதுரையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், “மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு” சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி 3-ஆம் தேதியன்று, அக்கூட்டமைப்பு சார்பாக, ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் செஞ்சட்டையுடன் எமது தோழர்கள் திரளாக கலந்துகொண்டு உரையாற்றியது ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்தது.

சென்னை: தமிழ்நாட்டில் கலவரம் செய்ய முயலும் பா.ஜ.க. சங்கி எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு போலீஸ் தலைமை இயக்குநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

★ குறிப்பாக, பிப்ரவரி 4-ஆம் தேதி இந்துமதவெறிக் கும்பலின் பொய்ப் பிரச்சாரங்களை அம்பலப்படுத்தும் விதமாக, மதுரையில் இயங்கிவரும் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் அமைப்புகளின் சார்பாக, திருப்பரங்குன்றம் மக்களிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்ட காணொளி மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. திருப்பரங்குன்றத்தில் மக்கள் மத ஒற்றுமையுடன் பழகிவரும் உண்மையைப் போட்டுடைத்தது. பல, சமூக ஊடகங்கள், இந்தக் காணொளியைத் தமது சொந்தக் காணொளியாக எடுத்துப் பரப்பின. இவை பத்து லட்சக்கணக்கான மக்களிடம் சென்று சேர்ந்தது.  புரட்சிகர அமைப்புகளின் இந்த முன்முயற்சிமிக்க நடவடிக்கையானது, இந்துமதவெறிக் கும்பலின் பிரச்சாரத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. பிப்ரவரி 4-ஆம் தேதி எச்.ராஜா கிளப்பிய மதவெறிக் கூச்சலை இந்தப் பரப்புரை மட்டுப்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

இத்துடன், இந்தப் பிரச்சினையை விளக்கி, மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு தமக்கேயுரிய மதுரை வட்டார வழக்கில் வெளியிட்ட காணொளி பல்லாயிரக்கணக்கான மக்களிடம் வீச்சாகப் பரவியது. தோழரின் உரையானது, மக்களின் இறைச்சி உண்ணும் உணவுப் பழக்கத்தைத் தடுக்க மார்வாடி-சேட்டுகளின் ஆதரவில் இந்து முன்னணி கும்பல் களமிறங்கியிருப்பதைக் கூர்மையாக அம்பலப்படுத்தியது.

★ சிக்கந்தர் தர்காவில் ஆடு பலியிடுவதைத் தடுத்து அந்த இடத்தை, ‘தாவா’க்குரிய இடமாக மாற்றிடும் சதி என்பது நீண்ட நாட்களாக திட்டமிட்டு நடந்த சதியாகும். அரசு அதிகாரத்தில் ஊடுருவியுள்ள அதிகாரிகள், மார்வாடி-சேட்டுகள், இந்துமுன்னணி-பா.ஜ.க. கும்பல் திட்டமிட்டு மேற்கொண்ட நடவடிக்கையாகும்.

இசுலாமிய மக்கள் தர்காவில் ஆடு பலியிட்டு வணங்கும் மரபைத் தடுத்து நிறுத்தி, பிரச்சினையைத் தொடங்கி வைத்தது, திருப்பரங்குன்றம் போலீசு ஆய்வாளர் மதுரை வீரன்; அதனை உறுதிப்படுத்தி, இந்து முன்னணி கும்பலுக்கு தீனிப்போட்டது, திருமங்கலம் கோட்டாட்சியர் கண்ணன். இந்தப் பிரச்சினையில் மதக்கலவரத்தைத் தூண்டும் விதத்தில், 144 தடை உத்தரவையும் மீறி இந்து முன்னணி-பா.ஜ.க. மதவெறி கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஒப்புதல் கொடுத்தது, தமிழ்நாடு அரசின் தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர்தான்.

அரசு அதிகார வர்க்கத்தில் ஊடுருவியுள்ள இந்த அதிகாரிகளை அம்பலப்படுத்தும் விதமாக, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்” என்று மதவெறிப் பிடித்துக் கொக்கரித்த எச்.ராஜாவைக் கைது செய்யக் கோரியும் மதுரையில் இயங்கிவரும் ம.க.இ.க., பு.மா.இ.மு., மக்கள் அதிகாரம் அமைப்புகள் தலைமையில், ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து, மதுரை போலீஸ் ஆணையரிடமும், சென்னையில் மக்கள் அதிகாரம் தலைமையில், சென்னை போலீஸ் தலைமை இயக்குநரிடமும் பிப்ரவரி 10-ஆம் தேதி மனு கொடுக்கப்பட்டது. இத்துடன், மதக்கலவரத்தைத் தூண்டும் விதத்தில் இந்து முன்னணியால் இணையத்தில் வெளியிடப்பட்ட பாடலை நீக்கக் கோரியும் முறையிடப்பட்டது.

மக்கள் அதிகாரத்தின் இந்த நடவடிக்கையானது ஜனநாயக சக்திகள் பலரும் பிரச்சினையின் பரிமாணத்தை உணர்த்துவதாக இருந்தது.

மக்கள் அதிகாரத்தின் இந்த நடவடிக்கையின் மூலமாகத்தான் ஜனநாயக சக்திகள் பலருக்கும் பிரச்சினையின் பரிமாணம் தெரியவந்தது.

★ எனினும், இந்து முன்னணி-பா.ஜ.க. கும்பலின் மதவெறிப் பிரச்சாரம் ஓயவில்லை. மேலும், மக்கள் அதிகாரத்தின் இம்முயற்சியின் விளைவாக, இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த மதவெறிப் பாடல் உடனடியாக நீக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் இன்னொரு மதவெறிப் பாடல் வெளியிடப்பட்டது.  பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் மதவெறியைத் தூண்டும் வகையில் பேசினார்.

உடனடியாக, இராமசீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மற்றொரு மதவெறிப் பாடலையும் இணையத்தில் இருந்து நீக்கக்கோரியும் பிப்ரவரி 17, 18 தேதிகளில், மதுரையிலும் சென்னையிலும் ஜனநாயக சக்திகளைத் திரட்டி மதுரை மாவட்ட ஆட்சியர், போலீஸ் தலைமை இயக்குநரிடம் மக்கள் அதிகாரம் தோழர்களின் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

★ மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் செய்த, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்களைப் போலீசு தடுத்ததைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பாக உடனடியாகக் காணொளி வெளியிடப்பட்டது.  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில், பூசாரி ஒருவர் ஆடு பலியிட்டு வணங்கியதைச் சேட்டு ஒருவன் திருட்டுத்தனமாக வீடியோ பதிவு செய்து, சமூக ஊடகங்களில் மதவெறிப் பிரச்சாரம் செய்தான். இவனது நடவடிக்கையை உடனடியாக அம்பலப்படுத்தியும், இந்த சேட்டைக் கைது செய்யக் கோரியும் மக்கள் அதிகாரம் சார்பாக காணொளி வெளியிடப்பட்டது.

★ மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை ஒட்டி மதுரை அண்ணாநகர் பகுதியில் பிரச்சாரம் செய்த ம.க.இ.க., மக்கள் அதிகாரம் தோழர்களைத் தடுக்க முயற்சித்தது, மதுரை போலீசு. போலீசின் இந்த நடவடிக்கையைத் தோழர்கள் உறுதியாக எதிர்த்துப் போராடினர். இதன்விளைவாக, அப்பகுதியில் சூழ்ந்திருந்த மக்களும் தோழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினர். இதனால், செய்வதறியாமல் திகைத்த போலீசு பின்வாங்கிச் சென்றது. சரியான அரசியலை முன்வைத்து, உறுதியான தெளிவான போராட்டத்தை மேற்கொள்ளும் போது மக்கள் ஆதரவை வென்றெடுக்க முடியும் என்று தோழர்களின் இந்தப் போராட்ட அனுபவம் உணர்த்தியது. போலீசுடன் தோழர்கள் மேற்கொண்ட போராட்ட காணொளி சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கில் பரவியது மட்டுமின்றி, மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது.

தமிழ்நாடு மக்களை இழிவுபடுத்திய பா.ஜ.க. ராமசீனிவாசனை கைது செய்யக்கோரியும், மதவெறியைக் கிள்ப்பும் இந்து முன்னணி பாடலை தடை செய்யக் கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மக்கள் அதிகாரம் தோழர்கள் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மனு அளித்தனர்.

புரட்சிகர அமைப்புகளின் அடுத்தடுத்த இந்த நடவடிக்கைகளின் விளைவாக, இணையத்தில் இருந்த மற்றொரு மதவெறிப் பாடலும் நீக்கப்பட்டது மட்டுமின்றி, இந்து முன்னணி கும்பலின் இணையவெளி மதவெறிப் பிரச்சாரம் அடங்கியது.

★ “அரிட்டாப்பட்டியையும் ஜல்லிக்கட்டையும் மீட்டோம்! முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்!”, “இந்து முன்னணி-பி.ஜே.பி. கும்பலை விரட்டியடிப்போம்!” ஆகிய முழக்கங்களின் கீழ் மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்தப் பிரச்சாரம் தொடங்கியது முதல், “முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்!” ஆகிய முழக்கங்கள் ஜனநாயக சக்திகளிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. இதுதான் இந்து முன்னணி கும்பலுக்கு சரியான பதிலடி என்று பாராட்டினர். இந்த முழக்கத்தைத் தமது சொந்த முழக்கமாகக் கருதி தோழர்களிடமிருந்து பிரசுரங்களை வாங்கி விநியோகம் செய்தனர். பலரும் தாமாக முன்வந்து நிதி உதவிகளைச் செய்தனர்.

மதுரை: இந்து முன்னணியின் மதவெறிப் பாடலை தடை செய்ய வலியுறுத்தியும் எச்.ராஜாவை கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தியும் மதுரை போலீஸ் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

அதேவேளையில், தமிழ்நாடு போலீசோ மதுரை, விருதாச்சலம், கோவை ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்தது. மதுரையில் தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் போர்க்குணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தோழர்களுடன் ஜனநாயக சக்திகள் பலரும் கலந்துகொண்டனர்.  இந்த மூன்று பகுதிகளிலும் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தோழர்கள் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்த ஜனநாயக சக்திகள் பலரும் தோழர்களுக்கு வாழ்த்துகளையும் போராட்டத்திற்கு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.

சென்னை, திருவாரூர் ஆகிய பகுதிகளில் போலீசு அனுமதி அளித்த வகையில், ஜனநாயக சக்திகள் பெருவாரியானோரின் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்கள் எழுச்சிகரமாக நடந்தன.

★ ஜனநாயக சக்திகளைத் திரட்டி புரட்சிகர அமைப்புகள் மேற்கொள்ளும் இந்தப் போராட்டங்கள் முதல் சுற்றுப் போராட்டங்களே. கலவரங்களை நடத்தி மதுரையை ஆக்கிரமிப்பது, அதன் மூலமாக, தமிழ்நாட்டை கைப்பற்றுவது, இந்த மதவெறிக் கும்பலின் நோக்கமாகும். அதற்கான துருப்புச் சீட்டுதான் திருப்பரங்குன்றமாகும்.

இந்த மதவெறிக் கும்பலை விரட்டியடிப்பது பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் கடமையாகும். இதற்கு, மக்கள் அதிகாரம் தலைமையில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டங்கள் ஒரு தொடக்கமாகும்.

திருப்பரங்குன்றத்தில் இருந்து இந்து முன்னணி – பா.ஜ.க. கும்பல் விரட்டியடிக்கப்படும் வரை இந்தப் போராட்டங்கள் ஓயாது!

தகவல்:

மக்கள் அதிகாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
மதுரை.


(புதிய ஜனநாயகம் – மார்ச் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram