மே நாளில் சூளுரைப்போம்!
மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானாபொருளாதார நெருக்கடி!
தோற்றது முதலாளித்துவம்! மாற்று சோசலிசமே!

 அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

கொரானா வைரஸ் தாக்குதலால் இன்று உலகமே உறைந்து கிடக்கிறது. 184 -க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை வைரஸ் தொற்றியுள்ளது. இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டிவிட்டது. பொருளாதர நெருக்கடி கொள்ளைநோய் கொரானாவைவிட பல மடங்கு அச்சுறுத்திக் கொண்டுள்ளது.

நாட்டின் மருத்துவத்துறையில் சுமார் 80% தனியார்மயம். அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. விரிவான பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கான மையங்கள் இல்லை. மருத்துவப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள், வசதிகள் இல்லை.

ஊரடங்கில் உள்ள மகக்ளுக்கு உரிய நிவாரணமும் வழங்கவில்லை. இந்திய உணவுக்கிடங்கில் 8 கோடி டன் உணவுப் பொருட்கள் நிரம்பி வழிந்த போதும், மத்திய மாநில அரசுகளோ 20 கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், பருப்பு, 1000 ரூபாய் நிவாரணம் என உழைக்கும் மக்களை பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகின்றன. பெருவாரியான உழைக்கும் மக்கள் நோய் அச்சத்தாலும், உணவின்றியும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடைப்பிணமாக வாழ்கிறார்கள்.

கொரானாவை கட்டுப்படுத்துவதை விட ஊரடங்கை பயன்படுத்தி மக்கள் உரிமையை மறுப்பதிலும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதிலும்தான் தீவிரம் காட்டி வருகிறது மோடி அரசு. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை உரிமையை பறித்து 12 மணி நேரமாகவும், 44 தொழிலாளர்நல சட்டங்களை வெட்டிச்சுருக்கி நான்கு தொகுப்புகளாக மாற்றவும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

வேலையின்மையும், ஏற்றத்தாழ்வும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 70 சதவீத (95 கோடி) மக்களின் சொத்து மதிப்பைவிட நான்கு மடங்கு அதிகமாக ஒரு சதவீத பணக்காரர்களிடம் சொத்து குவிந்துள்ளது என்கிறது சமீபத்தில் வெளிவந்த ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. வேலையற்றவர்கள், வாங்கும் சக்தியற்றவர்கள்  ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் அம்பானி – அதானிகளின் எண்ணம். இப்போது கொள்ளை நோய் கொரானாவும் இவர்களுக்கு துணை சேர்ந்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி – பட்டினிச்சாவையும் கொரானா கணக்கில் எழுதி விடுவார்கள். தோற்று, திவாலாகிப் போனதுடன் மக்களுக்கு எதிரானதாகவே மாறிப் போயுள்ள இந்த அரசுக் கட்டமைப்பில் மக்களின் எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்பது கொரானாவிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நம் நாடு மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே கொரானாவை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்டங்கண்டு போயுள்ளன. அமெரிக்காவில் கொரானா மரணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது. இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி போன்ற முதலாளித்துவ நாடுகளில் நடக்கும் மரணங்களை கண்டு அந்நாட்டு அரசுகளெல்லாம் அலறுகின்றன. “எங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் இருக்கிறோம்’’ என்று இத்தாலி பிரதமர் வெளிப்படையாக சொல்லி கண்ணீர் விட்டு அழுது கொண்டே பேட்டி அளிக்கிறார். காரணம், இத்தாலியில் மருத்துவத்துறையில் 85 சதவீதம் தனியார் கையில் உள்ளது. அங்கு மட்டுமல்ல, பிரிட்டன்,  ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இதுதான் நிலை.

அரசாங்கம் எல்லா விசயங்களிலும் தலையிடக்கூடாது; சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வியை பளிச்சென்று காட்டியுள்ளது கொரானா. பொதுசுகாதாரம், மருத்துவம், பொதுக்கல்வி, பொது விநியோகம் போன்றவைகளை எல்லாம் மக்களுக்கு கொடுப்பது அரசுகளின் வேலை இல்லை. அதை தனியார்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவால் முதலாளித்துவ நாடுகளில் மக்கள் சேவைகள் அனைத்தும் தனியார் கையில் உள்ளது. இதனால் தான் தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியாமல் முதலாளித்துவ அரசுகள் தோல்வியடைந்துள்ளன.

கொரானா வைரஸ் தாக்குதல் குறித்து உலக சுகாதார நிறுவனமும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த போதும் பல முதலாளித்துவ நாடுகள் அதை அலட்சியம் செய்தன. ஊரடங்கை அறிவித்த பின்பும் பொருளாதார நெருக்கடியைக் காட்டி பெரிய பெரிய வணிக நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், மதுபான கடைகள், பல தொழிற்சாலைகளை இயங்க அனுமதித்தன. இதன் விளைவாக வைரஸ் தொற்று வேகம் அதிகரித்தது.

ஆனால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ கட்டமைப்பு அந்நாட்டு அரசுகளிடம் இல்லை. வெண்டிடேட்டர், மாஸ்க், பாதுகாப்பு உடைகள் போன்ற அடிப்படையான மருத்துவ உபகரணங்கள் கூட இல்லை. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் சாகிறார்கள். அவர்களை புதைக்கக்கூட இடுகாட்டில் இடமில்லை. இத்தாலியின் வீதிகள் எங்கும் பிணங்கள்,  யாரும் எடுத்து அடக்கம் செய்யவும் முன் வருவதில்லை.

படிக்க:
மே – 1 தொழிலாளர் தினத்தில் இணையவழி பொதுக்கூட்டம் !
♦ “ஆதார் முதல் ஆரோக்கிய சேது வரை” – மக்களை கண்காணிக்கும் அரசு !

முதலாளித்துவ நாடுகளில் மருத்துவச் செலவு அதிகம் என்பதால் கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு மருத்துவம் பார்ப்பதில்லை. குறிப்பாக, 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டாம் என இத்தாலியும், பிரான்சும் கைவிடுகின்றன. அமெரிக்காவில் ஏழை கருப்பின மக்கள் தான் அதிகம் சாகிறார்கள் என்பதில் இருந்தே ஏழைகளில் நிலையை புரிந்து கொள்ளலாம்.

உலக  முதலாளித்துவ கட்டமைப்பில் எந்த ஒரு தயாரிப்புகளும் கண்டுபிடிப்புகளும் சந்தையின் தேவையைப் பொறுத்தே முக்கியத்துவம் பெறுகின்றன. புதிய தாராளவாதக் கொள்கை நமது அனைத்து தேவைகளையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து விட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நோய் தடுப்பு மருந்து தயாரிப்பதை விட அதிக லாபம் கொண்ட அழகு சாதன பொருட்களை தயாரிப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றன. பெரிய வல்லரசு என பீற்றிக் கொண்ட நாடுகளுக்கு சொந்த நாட்டு மக்களை தொற்றுநோயில் இருந்து காக்க வழியுமில்லை; சோறு போடவும் வக்கில்லை. முதலாளித்துவத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்து கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கி அழுகி நாறிக்கொண்டுள்ளதை கொரானா வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

உலகளவில் சீனா போன்ற முன்னாள் சோசலிச நாடும் மற்றும் கியூபா போன்ற மக்கள் நல அரசுகளும் மட்டுமே கொரானாவை கட்டுப்படுத்துவதில் முன்நிற்கின்றன. இதற்கு காரணம் அந்நாட்டு புரட்சிகளின் போது ஏற்படுத்தப்பட்டிருந்த சோசலிச கட்டமைப்பு. உலகையே  ஆண்ட பிரிட்டன் தனது நாட்டு மக்கள் 600 பேரை காக்கும்படி கியூபாவிடம் கைகூப்பி  உதவி கோரியது. கியூபாவும், தென்கொரியாவும் மருத்துவர்களை பிறநாட்டு மக்களைக் காப்பற்ற அனுப்பிக் கொண்டுள்ளன. கொரானா நோயை கண்டறிந்தவுடன் 10 நாட்களில் 1200 படுக்கை வசதி கொண்ட இரண்டு மருத்துவமனையை கட்டி முடித்து கொரானாவைக் கட்டுப்படுத்தியது சீனா.

இன்னொரு பக்கம், தனிவுடைமை எனும் முதலாளித்துவக் கொள்கையை சொர்க்கம் என பீற்றி வந்த  ஸ்பெயினும், அயர்லாந்தும் இப்போது தனியார் மருத்துவமனைகளை அரசுடைமையாக்கியுள்ளன. 1990 களின் தொடக்கத்தில் புதிய தாராளவாத உலகத்தை முன்னறிவித்த மார்க்கரெட் தாட்சரின் பிரிட்டனில் தனிமையில் வாடும் 15 லட்சம் முதியவர்களைப் பராமரிக்க 5 லட்சம் இளைஞர்கள் தன்னார்வலர்களாக முன் வந்திருக்கிறார்கள். தேசிய மருத்துவ சேவையில் தொண்டர்களாகப் பணியாற்ற 7.5 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்திருக்கின்றனர். மக்களின் தேவைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் பொருட்டு 4300 வட்டார உதவிக்குழுக்களை அந்நாட்டு மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் தோல்விக்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?

தொற்றுநோய் அபாயங்களில் இருந்தும், பொருளாதார நெருக்கடியில் இருந்தும் மனிதகுலத்தைக் காக்க முதலாளித்துவ சந்தைக்கான உற்பத்தி, அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பதை சமூகத்தின் தேவைக்கானதான மாற்றியமைக்க வேண்டும். அதற்கு தோற்றுப்போன முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, சோசலிசத்தை படைக்க வேண்டும். நம் நாட்டில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சியை  நடத்தி முடிக்க மே நாளில் சூளுரைப்போம்!

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு.