மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்தமிழ்நாடு
(PEOPLE’S RIGHT PROTECTION CENTRE – TAMILNADU)

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்தமிழ்நாடு
(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)

150-E, K.K.NAGAR,MADURAI-20                                          98653 48163, 90474 00485


அர்ச்சக மாணவர்  பணிநியமனம்  –   பத்திரிக்கை செய்தி

மிழகத்தில் அரசு சார்பில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற “அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் 206 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கோவில்களில் பணிநியமனத்தை எதிர்பார்த்து பல்வேறு கட்ட சட்ட மற்றும் களப் போராட்டங்கள் நடத்திவந்த சூழலில், தற்போது தமிழக அளவில் இரண்டாவது நபராக மதுரை அர்ச்சக பாட சாலை மாணவர் தியாகராஜனுக்கு மதுரை நாகமலை புதுக்கோட்டை பிள்ளையார் கோவிலில் அர்ச்சகர் பணி வழங்கப்பட்டுள்ளது. உரிய கல்வி, முறையான நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் தியாகராஜன் பணிநியமனம் பெற்றுள்ளார்.

ஆனால், இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது.

archagar
அர்ச்சகர் பயிற்சி முடித்திருந்தும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி நியமனம் பெற இயலாது உள்ள மாணவர்கள்.

பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்த பின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். இவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும்.ஆனால், சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்டு கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணிநியமனம் கூடாது  என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்ற தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை.

படிக்க:
தெருவில் சூத்திர அர்ச்சகர்கள் : தமிழக அரசின் ” பிராமணாள் ஒன்லி ” பாடசாலை !
அழிகிறது என்.எல்.சி. ! அனுமதிக்காதே போராடு !!

அதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரை அர்ச்சக பாடசாலை மாணவர் திரு. மாரிச்சாமி என்பவருக்கு மதுரை புதூர் அய்யப்பன் கோவிலில் பணி வழங்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தியாகராஜன் என்ற மதுரை பாடசாலை மாணவருக்கு மதுரை நாகமலை பிள்ளையார் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அர்ச்சகர் பணி வழங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது.

இந்துமதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை. கருவறையில் உள்ள  சாதி – தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்று தமிழக அரசு சொன்னது. ஆனால் தமிழக அரசு தயங்கித் தயங்கி,  ஒவ்வொரு சாதிக்கும் தனிசுடுகாடு அமைத்துக் கொடுப்பது போல, தனியாக உள்ள சிறு கோவில்களில்  பிராமணர் அல்லாத மற்ற சாதி மாணவர்களை பணி நியமனம் செய்கிறது. இதுவும் மொத்தமாக செய்யப்படுவதில்லை. நியமனம் செய்யப்படும் இந்த மாணவர்களுக்கு  ஓய்வு பெறும் வரையில் பணி உயர்வு கிடையாது. பணி மாறுதல் கிடையாது.

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான் – எனவே அது குற்றம் என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும்  கருவறை தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. இப்பிரச்சனையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும்.

பல்லாண்டுகளாக அனைவரும் போராடிப் பெற்ற அர்ச்சகர் பணி நியமன செய்தியைக்கூட  மாணவர்கள் வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். இந்த நிலைமாற வேண்டும். எனவே, தமிழக அரசு இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கிய கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த   200-க்கும் மேலான மாணவர்களுக்கு,  இந்துசமய அறநிலையத்துறை  பணிநியமனம் வழங்க வேண்டும்.

பணிநியமன நிகழ்வு  இந்துசமய அறைநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் விழாவாக  நடைபெற வேண்டும். எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ – வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள்  அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி, தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.

எனவே, தமிழக அரசிடம் !

  • எஞ்சிய 203 மாணவர்களுக்கும் உடனே பணி வழங்கு!
  • மூடப்பட்ட சைவ வைணவ அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மீண்டும்
    திறந்து நடத்து!
  • பெண்களையும் அர்ச்சகராக்கு!

என்று கோருகிறோம்.

இப்படிக்கு :

வழக்கறிஞர்.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு.

வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க