உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தின் கடந்த கால உணவுப் பற்றாக்குறைக்கு முஸ்லிம் மக்கள்தான் காரணம் என்று பேசிய கருத்துக்களுக்கு சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
கடந்த செப்டம்பர் 12 அன்று, உத்திரப்பிரதேசம் மாநிலம் குஷிநகரில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல்நாட்டு விழாவில் ஆதித்யநாத் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அங்கு பேசுகையில், “இன்று நீங்கள் ரேஷன் பெறுகிறீர்கள். 2017-க்கு முன் இந்த ரேஷன் உங்களுக்கு கிடைத்ததா? ஏனெனில், அப்போது ‘அப்பா ஜான்’ என்று பேசுபவர்கள் (தங்கள் தந்தையை “அப்பா ஜான்” என்று பொதுவாக அழைக்கும் முசுலீம்களை இங்கு குறிப்பிடுகிறார்) ரேஷன் பொருட்கள் அனைத்தையும் தின்று தீர்த்துவிட்டார்கள். அப்போது, குஷிநகருக்கு வழங்கப்பட்ட ரேஷன் நேபாளம், வங்கதேசத்திற்கு கடத்தப்பட்டது. இன்று யாராவது ஏழைகளுக்கான ரேஷனை திருட முயன்றால் சிறையில் அடைக்கப்படுவார்கள்” என்று தனது முஸ்லிம் வெறுப்பு விஷத்தை கக்கியுள்ளார்.
படிக்க :
♦ ஆக்சிஜன் கேட்டால் தேசிய பாதுகாப்பு சட்டமாம் – இந்துராஷ்டிர இளவல் ஆதித்யநாத் எச்சரிக்கை !
♦ மோடி – ஆதித்யநாத் பற்றி பேசிய 293 பேர் மீது தேச துரோக வழக்கு !
யோகி ஆதித்யநாத்தின் இந்த பேச்சு, 2022 தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் உள்ள நிலைமையை மதப்பிரிவினைக் கொண்டதாகவும், கலவரச் சூழல் மிக்கதாகவும் மாற்றும் முயற்சியை புலப்படுத்துகிறது.
இவர் சொல்வது போல இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டுகளும், ரேஷன் பொருட்களும் மதத்தின் அடிப்படையில் வினியோகிக்கப்படுவதில்லை. தற்போதைய உணவு பாதுகாப்பு சட்ட இணையதளத்தின்படி, உத்திரப்பிரதேசத்தில் 14.86 கோடி பயனாளிகளை உள்ளடக்கிய 3.59 கோடி ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. (இது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 19.98 கோடி மக்கள் தொகையில்)
இந்த புள்ளிவிவரத்துடன் தற்போது யோகி சொல்வதை ஒப்பிட்டால் பயனாளிகளின் எண்ணிக்கை பல கோடி உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், யோகி ஆதித்யநாத் முதல்வராவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, நவம்பர் 15, 2016 அன்று, 14.01 கோடி மக்கள் ரேசன் கடைகளால் பயன்பெற்றிருக்கிறார்கள். இதை தற்போதைய கணக்கீட்டில் ஒப்பிட்டு பார்த்தால், பயனாளிகளின் எண்ணிக்கை 85 லட்சம் மட்டுமே உயர்ந்துள்ளது.
இது குறித்துக் கருத்துக் கூறிய ஸ்ரிஷ்டி எனும் பெண் பத்திரிகையாளர், “கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா மாவட்டத்தில் 5 வயது சோனியா குமாரி இறந்துவிட்டார். சோனியா இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளார். அவர்களும் இந்துக்கள் என்று சுட்டிக் காட்டுவது இங்கு பொருத்தமானது” என்று யோகி ஆட்சியிலும் ரேஷன் பொருள் பற்றாக்குறை இந்துக்களைக் கொல்கிறது எனும் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார்.
முஸ்லிம் மக்களை இழிவுப்படுத்தும் வகையிலும், முசுலீம்களுக்கு எதிராக இந்துக்களை திசைதிருப்பும் வகையிலும் பேசிய, யோகி ஆதித்யநாத்தின் உரைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. தேசிய மாநாடு கட்சியின் துணைத்தலைவர் உமர் அப்துல்லா, “எந்தவொரு தேர்தலிலும் அப்பட்டமான வகுப்புவாதம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு எந்த திட்டமும் இல்லை. இந்துக்களுக்கான அனைத்து உணவுகளையும் முஸ்லிம்கள் சாப்பிட்டதாகக் கூறி, தேர்தலை நாடும் முதலவர்” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
“ஒரு வார்த்தையால் இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் முதல்வர் தனது நாட்டை இழிவுபடுத்தி, சக குடிமக்களை கொச்சைப்படுத்தி, அவரது மதவெறியை உறுதிப்படுத்தியுள்ளார்” என்கிறார் பத்திரிகையாளர் சமர் ஹாலார்ங்கர்..
#WATCH | Under PM Modi leadership, there is no place for appeasement politics….Before 2017 was everyone able to get ration?….Earlier only those who used to say 'Abba Jaan' were digesting the ration: Uttar Pradesh Chief Minister Yogi Adityanath in Kushinagar pic.twitter.com/CPr6IMbwry
— ANI UP (@ANINewsUP) September 12, 2021