அஷ்பகுல்லாகான் : புரட்சிகர அறிவுஜீவி, காக்கோரி தியாகி, கவிஞர் என
பன்முகத்தன்மை கொண்ட ஒரு போராளி !!
ஷ்பகுல்லாகான் பிறந்த நாளில் (அக்டோபர் 22) பலரும் அவரை நினைவுகூர்கின்றனர். இந்திய விடுதலைகாகப் போராடிய முசுலீம் தியாகியாக மட்டுமே அவரை சிலர் குறிப்பிடுகின்றனர். அஷ்பகுல்லாகான் புரட்சிகர இயக்கத்தின் சிறந்த கொள்கைப் பற்றாளராக, புரட்சிகர இயக்கத்தின் வடிவத்தை மாற்றியதில் பங்களிப்பு கொண்டவராக திகழ்ந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் அஷ்பகுல்லாகானின் தியாகத்தை பற்றி விவரிக்கும் பலரும் அவர் முசுலீம் மதத்தவர் என்பதை தவறாமல் குறிப்பிடுகின்றனர். ராம்பிரசாத் பிஸ்மில்லின் பெயருடனும், காக்கோரி கொள்ளை வழக்குடனுமே வரலாறு முழுக்க எப்போதும் அவரது பெயர் உச்சரிக்கப்படுகின்றது. காலனிய எதிர்ப்பு மற்றும் புரட்சிகர இயக்கத்தின் முக்கியமான நபரான அஷ்பகுல்லாகானின் மதச்சார்பற்ற மற்றும் மதநல்லிணக்கத்திற்கான அவரின் கருத்துக்கள் எப்போதையும்விட இன்றைய மதவாத நச்சுச்சூழலில் தேவைப்படுகின்றன.
அஷ்பகுல்லாகானின் அரசியல், சிந்தாந்தப் பயணம் மற்றும் சமூகத்திற்கான போராட்டம் கற்பனையின் அடிப்படையிலானதல்ல. இந்த நாட்டிற்காக தன்னை ஏன் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதில் சித்தாந்த தெளிவுள்ளவராக அவர் இருந்ததார். அவரின் கடிதங்கள், டைரி குறிப்புகள், கவிதைகள் வழியே அவரின் புரட்சிகர அரசியலை அறிய முடிகின்றது.
படிக்க :
பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?
புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?
சுருக்கமான வாழ்க்கை வரலாறு
1900-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 22-ம் தேதி இன்றைய உத்தரபிரதேசம் ஷாஜான்பூர் மாவட்டத்தில் உள்ள வசதிமிக்க ஒரு நிலப்பிரபுவின் குடும்பத்தில் சாபிகுல்லாகான், மஹருன்னிசா ஆகியோருக்கு மகனாக அஷ்பகுல்லாகான் பிறந்தார். ஜெண்டாலால் தீக்ஷித்-தால் தலைமைதாங்கி நடத்தப்பட்ட மெயின்பூரி ‘சதி’ (1918) சம்பவமே அஷ்பகுல்லாகான் புரட்சிர இயக்கத்தினுள் நுழைவதற்கான உந்துதல் என்றால் அதுமிகையல்ல. அச்சம்பவத்தின் போது அவர் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.
வங்காளத்தைச்சேர்ந்த கனையலால் தத், குதிராம் போஸ் ஆகிய தியாகிகளின் வரலாற்றை அஷ்பகுல்லாகான் அறிந்திருந்தார். அவர் படித்துக்கொண்டிருந்த பள்ளியில் திடீரென பிரிட்டிஷ் போலீசு ரெய்டு நடத்தியது. மெயின்பூரி சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சக மாணவரான ராஜாராம் பாரதீயா கைது செய்யப்பட்டார். அப்போது முதலே உத்தர பிரதேசத்தில் உள்ள புரட்சியாளர்களுடனான தொடர்பை எதிர்ப்பார்த்த வண்ணம் இருந்தார். அவரின் நண்பரான பனார்சிலாலிடம் (பின்னாளில் காக்கோரி சதி வழக்கில் அப்ரூவர் ஆனவர்) மெயின்பூரி சதி வழக்கில் தலைமறைவான ராம்பிரசாத் பிஸ்மில்லை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டார்.
1920-ல் பிரிட்டிஷ் அரசரின் பொது மன்னிப்பினால் மெயின்புரி வழக்கின் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் பிஸ்மில் தண்டனையில் இருந்து தப்பினார். ஷாஜன்பூருக்கு திரும்பிய அவருடன் நட்பை உருவாக்கிக்கொண்ட அஷ்பகுல்லாகான் , பிஸ்மில் இறக்கும்வரை அவருடனேயே பயணித்தார்.
அடுத்த ஏழு ஆண்டுகள் அவர்கள் இணைபிரியா போராளிகளானார்கள். அவர்கள் இருவரும் சுவராஜ் கட்சியில் இணைந்து ஒத்துழையாமை இயக்கத்திலும் இந்துஸ்தான் ரிபப்ளிகன் ஆர்மி (HRA) அமைப்பில் இணைந்து காலனித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதுடன் புகழ்பெற்ற காக்கோரி ரயில் கொள்ளையிலும் (1925ம் ஆண்டு) பங்கேற்றனர்.
காக்கோரி கொள்ளையில் ஈடுபட்ட பின்னர் அவ்வழக்கில் சிறைபடுத்தப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக நேபாளத்திற்கு சென்றார். அங்கிருந்து கான்பூர் சென்றார். டோல்கன்ச்சில்(தற்போதைய ஜார்கண்ட்- புலமாவ் மாவட்டம்) இருந்து கிளம்புவதற்கு முன்னர் விடுதலைப் போராட்ட வீரரும் புகழ்பெற்ற பத்திரிகை ஆசிரியருமான கணேஷ் சங்கர் வித்யார்தியை சந்தித்தார். பின்னர் வேறொரு பெயரில் ஆறு மாதங்கள் தலைமறைவாக கிளார்க் வேலை செய்தார். மீண்டும் நேபாளம் செல்வதற்காக டெல்லி வழியே தொடர்ச்சியான, சிறிதும் ஓய்வற்ற வகையிலான பயணங்களை மேற்கொண்டார். வெளிநாட்டுக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அஷ்பகுல்லாகானுடன் அறையில் தங்கி இருந்த நண்பன் ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.
அஷ்பகுல்லாகான் புரட்சியாளர் மட்டுமல்ல, ஹஸ்ரத், வர்சி ஆகிய பெயர்களில் கவிதைகள் எழுதி வந்தார். ஒரு பள்ளியை துவங்க வேண்டும் என்ற பெரும் ஆசையுடன் இருந்தார். காக்கோரி சதி வழக்கில் தலைவர்களான அஷ்பகுல்லாகான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோசன் சிங் ஆகியோர் 1927-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி காலனிய அரசால் வெவ்வேறு சிறைகளில் தூக்கிலிடப்பட்டனர்.அவ்வழக்கின் நான்காவது புரட்சியாளரான ராஜேந்திர நாத் லகிரி இரு நாட்கள் கழித்து தூக்கிலிடப்பட்டார்.
புரட்சிகர சிந்தாந்தம்
மெய்ன்புரி சதி வழக்கில் தன்னுடன் படித்த சக மாணவனைக் கைது செய்ததில் இருந்து அஷ்பகுல்லாகானின் காலனிய எதிர்ப்பு இயக்கத்தின் தொடர்பு துவங்கியது. எட்டாம் வகுப்பு பாடத்தில் இடம்பெற்றிருந்த வால்டர் ஸ்காட்-ன் “Love of Country”
என்ற பாடல் புரட்சிகர அரசியல் மீது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
எட்ருஸ்கன் ராணுவத்துக்கு எதிராகப் போரிட்ட ராணுவத் தளபதியான பப்லியஸ் ஹொராசியஸ் காக்ல்-ன் கதை அஷ்பகுல்லாகானிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தாமஸ் பாபிங்டன் மெக்காலேயின் பாடலை பலமுறை தன்னுடைய எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்.
அஷ்பகுல்லாகான், ராம்பிரசாத் பிஸ்மில், ரோஷன் சிங்
மெய்ன்புரி சதி வழக்கின் போது அஷ்பகுல்லாகான் “இப்பாடல் என்னுடைய நாட்டுப்பற்றுக்கு அடித்தளமிட்டது” என்று பதிவு செய்தார். “உலகிற் சிறந்த தேச பக்தர்கள் (Patriots of the World)” என்ற புத்தகத்தை அவரின் பள்ளி ஆசிரியர் பரிசளித்தார். அதை படித்த பின்னர்”நாட்டுக்காக போராடி உயிர் துறப்போர் ஒரு போதும் மரிப்பதில்லை” என்ற முடிவுக்கு வந்ததாக பதிவு செய்கிறார்.
இளம் புரட்சியாளர்களை காலனிய அரசு அராஜகவாதிகள் என்று அவதூறு செய்ததற்கு எதிராக “அந்த இளைஞர்கள் சுதந்திர தேசத்தில் பிறந்திருந்தால் புதியதொரு தேசத்தை நிர்மாணம் செய்பவர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருந்திருப்பர்” என்கிறார்.
தன்னுடைய முதல் அரசியல் கடிதத்தை,1921-க்கும் 1922-க்கும் இடைப்பட்ட காலத்தில் நண்பனான பனாசிர் லாலுக்கு எழுதினார். அதில் புரட்சிகரப் பாதையை தான் மேற்கொள்ளப் போவதென்ற முடிவைத் தெரிவிக்கிறார். இந்தியப் புரட்சியாளர்களுக்கு உத்வேகமூட்டிய போல்ஷ்விக்மயமான புரட்சியை தலைமை தாங்கி நடத்திய தோழர் லெனினுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற ஆவலை கீழ்கண்டவாறு பனாசிர்லாலுக்கு தெரிவிக்கிறார்.
”உன்னுடைய கடிதத்தின் மூலம் லெனினைப் பற்றி கொண்டேன். அவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.”
அவரின் நிதி நிலைமைகள், தனிப்பட்ட சுதந்திரம், சொந்த வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய நீண்ட விவாதத்திற்குப் பின்னர் நாட்டின் விடுதலைக்காகப் போராட வேண்டிய அவசியத்தை தெரிவிக்கிறார். அவ்விவாதத்தின் இறுதியில் ஆணித்தரமாக தன்னுடைய கருத்தை பின்வருமாறு கூறுகிறார். “ இந்தியாவின் விடுதலையானது விவசாயிகளை அணிதிரட்டுவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.”
இந்த முடிவுக்கு அவர் வந்தடைந்ததில் ஆவாத் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் எழுச்சி (1920-1922) முக்கிய பங்கு வகித்தது. தங்களைச் சுரண்டிய தாலுக்தார்கள், நிலப்பிரபுக்கள், பிரிட்டிஷ் அரசு ஆகியோருக்கு எதிரான போராட்டமே ஆவாத் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்களின் எழுச்சி ஆகும். விவசாயம் செய்து அதன் மூலம் கிடைக்கும் நிதியில் இருந்து விவசாயிகளை அணிதிரட்ட வேண்டும் என்ற யோசனையையும் வைத்திருந்தார்.
“நாட்டின் விடுதலை என்பது, ஏழைகளின் மகிழ்ச்சிக்கானதாகவும் அவர்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். நான் ஆண்டவனை வேண்டுவது ஒன்றுதான், என்னுடைய இறப்புக்குப் பின்னர் கூலி விவசாயிகளும் தொழிலாளர்களும் நிலப்பிரபுக்களுக்கு நிகரான அந்தஸ்தை பெற வேண்டும் என்பதே.”
தான் தூக்கிலிடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், தான் எதற்காக? எப்படிப்பட்ட விடுதலைக்காகப் போராடுகிறேன் என்பதை விளக்கும் வகையில் நாட்டுப்புற விவசாயிகளுக்கு தன்னுடைய இறுதி கடிதத்தை எழுதினார்.
அக்கடிதத்தில், அஷ்பகுல்லாகான் இரு வகையிலான சமத்துவத்தின் தேவையை கூறுகிறார். பொருளாதார மற்றும் சமூக பண்பாட்டுத் தளத்திலும் சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அதே கடிதத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவிக்கிறார்.
“நான் உங்களுடன் உடன்படுகின்றேன். ஏதும் உதவியற்ற தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்காக மட்டுமே என்னுடைய இதயம் அழுது கொண்டிருக்கின்றது. நான் அவர்களுடன் தங்கி இருந்தபோது அவர்களின் பரிதாபகரமான நிலையை கண்டு பல முறை கண்ணீர் விட்டுள்ளேன். எங்களுடைய இந்த நகரத்தை பிரகாசிக்க வைத்தவர்கள் அவர்கள்தான். எங்களின் தொழிற்சாலைகள் அவர்களால்தான் இயங்குகின்றன.
இவ்வுலகின் ஒவ்வொரு வேலையும் அவர்களால்தான் நடைபெறுகின்றது. அனைத்தையும் அவர்களே உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதுவும் சொந்தமில்லை. எவ்வித சிறுபங்கும் இல்லை. அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு வெள்ளை அரசாங்கமும் தரகர்களுமே முழுப்பொறுப்பு என்பதிலும் உங்களின் அரசியல் இலக்குகளுடனும் உங்களுடன் நான் உடன்படுகின்றேன். கிராமங்களுக்குச் செல்லுங்கள், ஆலைகளுக்குச் செல்லுங்கள், அம்மக்களோடு வாழுங்கள், அவர்களின் வாழ்நிலையை கண்டுணருங்கள், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.”
மேற்கண்ட கூற்றுகள் எல்லாம் வெறும் வெற்றுச் சொல்லாடல்கள் அல்ல; பொருளாதார நிலைமைகள் பற்றிய ஆழமான விவாதத்தில் இருந்து நாட்டின் விடுதலை பற்றி அவர் வந்தடைந்த முடிவுகளே. “தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி அவர்களின் ரத்தத்தை குடிப்பதன் மூலம் முதலாளிகளும் விவசாயிகளை சுரண்டியதன் மூலம் நிலப்பிரபுக்களும் தங்கள் செல்வ வளத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.” என்று எழுதுகிறார்.
சிறையில் அவர் தன்னுடையை மிகச்சிறியதொரு சுயசரிதையை எழுதினார். அதில் “இந்திய அரசாங்கம் மட்டுமல்ல , உலகில் உள்ள பல அரசுகளும் சட்டவிரோதமானவையே.
அ. அவை ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில்லை.
ஆ. அவை நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளின் உரிமைகளையே பிரதிபலிக்கின்றன.
இ. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சரி உரிமையை அளிப்பதில்லை.
ஈ. ஏற்கனவே உள்ள அநீதியான வேறுபாடுகளை பராமரிக்கவே சட்டங்கள் உள்ளன.”
மேலும் அவர் கூறுகையில்,
” இந்தியா வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெறுமானால், இந்நாட்டின் மக்கள் அரசைக் கைப்பற்ற வேண்டும். நாட்டின் விடுதலைக்குப் பின்னரும் ஏழை , பணக்காரன் மற்றும் விவசாயி , நிலப்பிரபு என்ற சமமற்ற இந்த அநீதி தொடருமானால் , சம உரிமை கிடைக்கும் வரை சுதந்திரம் வேண்டாம் என்று ஆண்டவனை நான் வேண்டுவேன் என்பதை நான் உறுதியாகச்சொல்கிறேன். இதனால் என்னை நீங்கள் கம்யூனிஸ்ட் என்று அழைத்தீர்கள் என்றால் அதற்கு நான் கவலைப்படப் போவதில்லை. அவர் யாரையும் அசமத்துவமாகப் படைக்கவில்லை என்பதில் நான் உறுதியாக கடவுளை நம்புகிறேன்.”
அஷ்பகுல்லாகான் மதம் தொடர்பாக சில கொள்கைகளை வைத்திருந்தார்.
1. மதத்தின் அடிப்படையில் விமர்சிப்பது என்பது அடையாள அரசியலாகும்.
2. வகுப்புவாதம் மீதான கடும் விமர்சனம்
3. மதம் என்பது தனி நபர் சார்ந்தது.
“இந்திய ஆசிரியர்கள் எப்போதுமே இந்து மற்றும் முசுலீம்களுக்கிடையிலான வேறுபாட்டை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.இது அடிப்படையில் பொருளற்றது. இவர்கள்தான் தேசத்தின் எதிரிகளாவர். பிற மதத்தினர் பற்றிய பொதுவான கருத்துக்கள் தவறானவை.”
பிஸ்மில் கூட தனது சுயசரிதையில் ஆரம்பத்தில் அஷ்பகுல்லாகான் முசுலீம் என்பதால் HRA-வில் சேர்வதில் உள்நோக்கம் இருக்கும் என அவர் மீது சந்தேகம் கொண்டதை தெரிவித்துள்ளார்.
படிக்க :
குதிராம் போஸ் : காலனியாதிக்கத்துக்கு எதிரான இளம் வீரன் !!
பிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி !
வகுப்புவாதம் தொடர்பாக பிஸ்மில் மற்றும் அஷ்பகுல்லாகான் ஆகியோரிடையில் பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இருவரும் சுவராஜ் கட்சியில் இருந்தபோது வகுப்புவாதங்களுக்கு எதிரான பிரச்சாரங்களிலும் பேரணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ய சமாஜத்தினர் இந்துமத சுத்திகரிப்பு பிரச்சாரம் செய்வது, அதற்கு பதிலாக இசுலாமியர்கள் தப்லீக் பிரச்சாரம் செய்வதையும் அவர் விமர்சிக்கிறார்.
ஒரு மதம் இன்னொரு மதத்திலிருந்து வேறுபடுத்திக்காட்ட தன்னை உயர்வாகக் காட்டுவதே வகுப்புவாதத்திற்கு கொண்டு செல்லும் என்றும் தெரிவிக்கிறார். மேலும் தங்கள் மத வேறுபாடுகளைக் கடந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதை தனது இறுதி வேண்டுகோளாக மக்களுக்கு தெரிவித்தார்.
அஷ்பகுல்லாகான் தொடர்ச்சியாக மதவாதத்திற்கு எதிராக தன்னுடைய கருத்துக்களை கூறிவந்தது என்பது அக்காலத்திய புரட்சிகர இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் புரட்சிகர இயக்கம் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் இருந்தவராவர். அவரும் ஏனைய காக்கோரி தியாகிகள் தூக்கிலிடப்பட்ட பின்னர் பகத்சிங், ஆசாத் ஆகியோர் HINDUSTAN REPUBLICAN ARMY என்பதை HINDUSTAN SOCIALIST REPUBLICAN ARMY என்று பெயர் மாற்றம் செய்தனர். இது இலட்சியவாத சோசலிசத்தில் இருந்து வரலாற்றுப் பொருள் முதல்வாதத்திற்கும், ஆத்திக மதச்சார்பின்மையிலிருந்து கறாரான நாத்திகத்தை நோக்கி புரட்சிகர இயக்கம் சென்றுள்ளதை அறிய முடிகிறது.
அவரை முசுலீம் என்று குறிப்பிடுவது புரட்சிகர இயக்கத்திற்கு சரியான வடிவம் கொடுக்க முயன்ற அஷ்பகுல்லாகானின் பங்களிப்பினையும் முயற்சிகளையும் குறைப்பதாகவே அமையும்.
(The wire-ல் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான கட்டுரை)

கட்டுரையாளர்கள் : ஹர்ஷ்வர்தன், பிரபல் சரண் அகர்வால்
தமிழாக்கம் : மருது
, மக்கள் அதிகாரம்
நன்றி : The wire