‘பகவத் கீதை மத நூல் கிடையாது’ – கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் !
பள்ளிகளுக்கு பைபிளை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்பதன் மூலம் கிறித்துவ நிறுவனங்கள் மதமாற்றம் குற்றச்சாட்டுக்கு மீண்டும் இலக்காகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிய தடை, இந்து திருவிழாக்களின்போது முஸ்லீம்கள் கடை வைக்க தடை, ஹலால் ஜிகாத் என நாள்தோறும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது கர்நாடகாவின் ஆர்.எஸ்.எஸ் – சங்கப் பரிவாரக் கும்பல்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது பெங்களூர் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு பைபிள் படிப்பதை கட்டாயமாக்கியுள்ளதென புது புரளியை கிளப்பியுள்ளது காவிக்கும்பல். பெங்களூரிலுள்ள இந்து ஜன ஜாக்ருதி என்ற இந்துவெறி அமைப்பு கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, புகார் அளித்துள்ளது.
000
குஜராத் மாநிலத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பகவத் கீதை கட்டாயமாக்கியது போல, கர்நாடக பள்ளி பாடத்திட்டத்திலும் பகவத் கீதையைக் கொண்டுவருவது குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாக, கடந்த மார்ச் மாதத்தில் கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறியது நினைவில் இருக்கலாம். இப்படி பேசியவர், தற்போது பள்ளிகளில் மத நூல்களைப் படிக்க கட்டாயப்படுத்துவது கல்விச் சட்டம் மீறல் என கொக்கரித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், பைபிள், குரான் போன்ற மத நூல்களை பகவத் கீதையுடன் ஒப்பிட முடியாது என நியாயம் வேறு கற்பிக்கிறார்.
“பைபிளும் குரானும் மத நூல்கள். பகவத் கீதையை பிற மத புத்தகங்களுடன் ஒப்பிட முடியாது. மதத்தை நம்புபவர்கள்தான் அந்தந்த நூல்களைப் படிக்க வேண்டும் என்று புத்தகம் சொல்கிறது. ஆனால் பகவத் கீதை மதத்தைப் பற்றி பேசவில்லை, வாழ்க்கைக்கு தேவையான மதிப்புகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது” என்கிறார் நாகேஷ்.
இவர் பேசிய இரண்டு நாட்களுக்கு முன்புதான், கிறித்துவ பள்ளியில் பைபிளை கட்டாயமாட்டியதாக குற்றம்சாட்டப்பட்டதற்கு, “இப்படி பள்ளி நடத்துவது கர்நாடகா கல்விச் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது. பள்ளிகளில் மத விஷயங்களைக் கற்பிக்க முடியாது” “மதத்தின் அடிப்படையில் பாஜக சமூகத்தை உடைக்கிறது என்று பலர் புகார் கூறுகிறார்கள். இவை அனைத்தும் இப்போது எங்கே போனது? பொது அறிவுஜீவிகள் கூட அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பகவத் கீதை அல்லது திப்பு சுல்தான் என்று வரும்போது மட்டுமே பேசுகிறார்கள். ஏன் இப்போது பைபிளைப் பற்றி யாரும் பேசுவதில்லை?” என கேள்வியெழுப்பியுள்ளார் நாகேஷ்.
கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ்
மேலும், பள்ளிக்கு எதிராக பேசிய அமைச்சர், “குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது, பைபிள் படிக்க சம்மதம் உள்ளதா என கேட்கிறது பள்ளி நிர்வாகம். ஒப்புக் கொள்ளாவிட்டால், பள்ளியில் சேர அனுமதி மறுக்கப்படுகிறது. அனைத்து கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களையும் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளேன். இங்குள்ள போலி மதச்சார்பின்மைவாதிகள், பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்ப்பதை எதிர்த்து குரல் எழுப்பினர். ஆனால், இப்போது இதைப் பற்றி யாரும் வாய் திறக்கவில்லை, ஏன் பகவத் கீதையை எதிர்த்தவர்கள் இப்போது பள்ளிகளை பைபிள் கட்டாயமாக்குவதை ஏன் எதிர்க்கவில்லை.?” என்றார்.
கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளி மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாதிரியார் பீட்டர் மச்சாடியோ, “பள்ளிகளுக்கு பைபிளை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்பதன் மூலம் கிறித்துவ நிறுவனங்கள் மதமாற்றம் குற்றச்சாட்டுக்கு மீண்டும் இலக்காகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை” என்றார்.
கிருத்துவ பள்ளியில் பைபிள் கட்டாயம் என்ற கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், கிருத்துவ வெறுப்பு பிரச்சாரத்தை கிளப்ப முயற்சிக்கிறார் கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ். இந்த சங் பரிவார கும்பலின் வெறுப்பு பிரச்சாரங்களை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்; இல்லையேல் இவர்களால் சிறுபான்மை முஸ்லீம், கிருத்துவ மக்கள் ஒடுக்கப்படுவது தீவிரமடையும் என்பது உறுதி.