கர்நாடக தலைநகர் பெங்களூருவில் அதிக ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்கு 67,000க்கும் அதிகமான ஐடி நிறுவனங்கள் உள்ள நிலையில், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பலர் பெங்களூரில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் ஐடி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளதாக ஜூலை 20 அன்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறு வனங்கள் சட்டம் 1961-ஐ (Karnataka Shops and Commercial Establishment Act, 1961) திருத்துவது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த சட்டத் திருத்தத்தின்மூலம், ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரம் (12 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல் பணி) என நிர்ணயம் செய்ய கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. கர்நாடகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்கள் 10 மணி நேரம் (கூடுதல் நேரத்தையும் உள்ளடக்கி) என்ற வகையில் வேலை நேரத்தை அனுமதிக்கின்றன. இதுவே மிகக் கடுமையானது.
ஆனால், ஐடி துறையின் புதிய முன்மொழிவில், “ஐடி, ஐடிஇஸ், பிபிஒ (IT/ITeS/BPO) ஆகிய துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய வேண்டும் அல்லது வேலை செய்ய அனுமதிக்கப்படலாம்; அல்லது மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக 125 மணி நேரத்துக்கு மேல் வேலை நேரம் இருக்க வேண்டும்” என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு செய்ய முயன்றதைப் போல், “12 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை செய்ய அனுமதிக்கப்படும்” என்று சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், அது இன்னும் அபாயகரமானதாக அமையும். 14 மணி நேரத்தை விட அதிகமான வேலை நேரத்தை நிர்ணயித்து, நிறுவனங்கள் தொழிலாளர்களைச் சுரண்டும் அபாயத்திற்கு இது வழிவகுக்கும்.
படிக்க: தொழிற்சாலைகள் சட்ட திருத்தம் 2023: கார்ப்பரேட் சேவையில் பா.ஜ.க.வின் வழியில் தி.மு.க!
கர்நாடக அரசின் மாநில தொழிலாளர் நலத்துறை இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது. விரைவில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும், அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேலை நேரத்தை நீட்டிக்கச் சட்டத்தைத் திருத்துவது குறித்த கர்நாடக அரசின் முடிவுக்கு, ஐ.டி ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஐடி நிறுவனங்களின் கூடுதல் வேலை நேர முன்மொழிவுக்கு கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கமான கேஐடியு (KITU) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கேஐடியு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேலை நேரம் தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி 3 ஷிப்ட்களாக உள்ளது. ஆனால் புதிய முன் மொழிவு 2 ஷிப்ட் என்ற அடிப்படையில் நிறுவனங்களை செயல்பட அனுமதிக்கும். இதனால், மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளது. ஐடி துறையில் 45 சதவிகித ஊழியர்கள் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சனைகளையும், 55 சதவிகித ஊழியர்கள் உடல் ஆரோக்கிய பாதிப்புகளையும் எதிர் கொள்கின்றனர். இதற்கிடையே வேலை நேரத்தை மேலும் அதிகரித்தால் இந்த நிலைமை மேலும் மோசமாகும். ஊழியர்களை மனிதர்களாகப் பார்க்காமல் அரசு வெறும் இயந்திரங்களாகப் பார்க்கிறது. தொழிலாளர்களை மனிதர்களாகக் கருத கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையே இந்தச் சட்டத்திருத்தம் காட்டுகிறது. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கும் இயந்திரமாக மட்டுமே ஐடி ஊழியர்களை அரசு கருதுகிறது” என்று தனது கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.
கார்ப்பரேட் சேவைக்கான கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும். வீரியமான போராட்டங்களின் மூலமாக மட்டுமே தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதுவொன்றே அரசைப் பணிய வைக்கும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube