காலம்காலமாகச் சமூகத்தில் கலை மக்களிடையே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. திரைப்படம், பாடல்கள், நாடகங்கள் போன்ற வடிவங்கள் மக்கள் மனதில் ஆழமான பாதிப்பை உண்டாக்குகின்றன. அந்த வகையில், சமீபத்தில் ஓடிடி தளம் ஒன்றில், “சிரையா” (Chiraiya) எனும் தொடர் வெளியாகி சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியது.
இத்தொடர் இந்தியச் சமூகத்தில் பெண்களின் இழிநிலையை, குறிப்பாகத் திருமணமான பெண்களின் எதார்த்த நிலையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. குறிப்பாக, திருமண உறவில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகளை (Marital Rape) பற்றி இத்தொடர் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது.
இத்தொடரின் கதைக்களம் படித்த நடுத்தர வர்க்கக் கூட்டுக்குடும்பத்தின் பின்னணியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கனவுகளோடு இக்குடும்பத்திற்குள் மருமகளாக அடியெடுத்து வைக்கிறாள் கதையின் நாயகி பூஜா. பால் புதுமையினர் (LGBTQ+) உரிமைக்காகப் போராடும், முற்போக்குச் சிந்தனைகளையும் பேசும் ஒரு நவீனப் பெண்ணாக பூஜா இருக்கிறார்.
ஆனால், திருமணமான அன்றே கணவனால் உடலுறவிற்கு வற்புறுத்தப்படுகிறாள். இதை அவள் எதிர்த்துக் கேள்வி எழுப்பும்போது, “நான் உன் கணவன், உன் உடலின் மீது எனக்கு எல்லா உரிமையும் உண்டு” என்று ஆணாதிக்கத் திமிருடன் பதில் கூறுகிறான் அவளது கணவன். பெரும்பான்மையான இந்தியப் பெண்கள் ‘முதல் இரவு’ என்ற பெயரில் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைக்கு பூஜாவும் இரையாக்கப்படுகிறாள்.
தனக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியைச் சகித்துக்கொள்ள முடியாமல் பூஜா, தன் பெற்றோரைச் சந்தித்துத் தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறி அழுகிறாள். ஆனால், “உன் கணவனுக்குத்தான் அந்த உரிமை எல்லாம் உள்ளது; உன்னைக் கட்டிக்கொடுத்து விட்டோம், அதோடு எங்கள் கடமை முடிந்தது” என்று கூறி அவளது பெற்றோர் பொறுப்பற்றுக் கைகழுவுகின்றனர்.
வேறு வழியின்றி இக்கொடுமை குறித்துத் தன் புகுந்த வீட்டிலிருக்கும் மூத்த மருமகள் கமலேஷிடம் தெரிவிக்கிறாள் பூஜா. ஆனால், அதைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைவதற்குப் பதிலாக, கமலேஷ் பூஜாவை ஓங்கி அறைகிறாள். கணவன்-மனைவிக்குள் அறைக்குள் நடப்பதை வெளியில் சொல்வது ஒரு கேவலமான செயல் என்று கூறி, பாதிக்கப்பட்ட பூஜாவின் மீதே குடும்பக் கௌரவத்தைக் கெடுப்பவள் என்ற முத்திரையைக் குத்துகிறாள்.
பெற்றோர், புகுந்த வீடு என எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் நிறுத்தப்படுகிறாள் பூஜா. பலமுறை அவள் மறுப்பு தெரிவித்தும், அவளது விருப்பமின்றி உடலுறவில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுகிறாள்; தொடர்ச்சியாக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறாள். இந்த நரகத்திலிருந்து தப்பிக்க என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் பூஜா, ஒருகட்டத்தில் கணவனின் அத்துமீறலைத் தவிர்க்க தனக்கு “மாதவிடாய்” என்று பொய் கூறுகிறாள். ஆனால், அந்த மிருகத்தனமான கணவனோ, அவளது சொல்லை நம்பாமல் அதை நிரூபித்துக் காட்டச் சொல்லி வற்புறுத்துகிறான்.
அந்த நெஞ்சை உலுக்கும் கணத்தில், வேறு வழியே இல்லாத பூஜா, தன் பிறப்புறுப்பைத் தானே பிளேடால் காயப்படுத்திக்கொண்டு தனக்கு மாதவிடாய் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறாள். பார்ப்போரின் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இக்காட்சி, இந்தியக் குடும்பக் கட்டமைப்புக்குள் பெண்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரத்தின் உச்சக்கட்ட சாட்சியாக நெஞ்சில் தைக்கிறது.
இதனைத் தொடர்ந்து, இப்பிரச்சனையின் ஆழத்தை உணர்ந்துகொள்ளும் மூத்த மருமகள் கமலேஷ், தன் பிற்போக்குச் சிந்தனைகளை உடைத்து பூஜாவிற்கு உறுதுணையாக நிற்க முடிவு செய்கிறார். முதலில் குடும்பத் தலைவரான மாமனாரிடம் இதுகுறித்து முறையிடுகிறார். ஆனால், அதுவரை ‘அன்பான மாமனாராக’ இருந்தவர், சட்டென்று தன் குடும்பத்தின் ஆதிக்க அதிகாரத்தைக் கையில் எடுக்கிறார்.
படிக்க: உ.பி: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான தலித் சிறுமி தற்கொலை!
தன்னை ஒரு பெரும் இலக்கியவாதியாகவும், மேடைகளில் முற்போக்கான கருத்துகளைப் பேசுபவராகவும் காட்டிக்கொண்ட மாமனாரின் உண்மையான கொடூர முகம் அப்போதுதான் வெளிப்படுகிறது. கமலேஷை மிரட்டுவது, அவளைக் குடும்பத்தை விட்டுப் பிரிப்பதாக அச்சுறுத்துவது, பூஜாவின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களைக் கொண்டு பூஜாவிற்கு உளவியல் ரீதியான அழுத்தங்களைத் தருவது என அனைத்துச் சூழ்ச்சிகளையும் அவரே முன்னின்று நடத்துகிறார்.
இதற்கிடையில், பூஜாவும் கமலேஷும் நீதியைத் தேடிப் பயணிக்கின்றனர். நேர்மையாகப் போராடி தங்களுக்கான நீதியைப் பெற வேண்டும் என்று அவர்கள் அலைந்தபோதும், சட்டம் அவர்களிடம் கைவிரிக்கிறது. இந்தியச் சட்ட அமைப்பில் திருமண உறவிற்குள்ளான பாலியல் வன்கொடுமைகள் குற்றமென்றே அங்கீகரிக்கப்படவில்லை என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டமும் பாசிச மோடி அரசு கொண்டுவந்த பி.என்.எஸ். சட்டமும் கணவன் தன் மனைவியைக் கட்டாய உடலுறவிற்கு வற்புறுத்துவதை ஏற்றுக்கொள்கிறது. அதாவது, திருமண பந்தத்திற்குள் நடக்கும் இத்தகைய பாலியல் அத்துமீறல்களை இச்சட்டம் சட்டப்பூர்வமாகச் சரி என்று கூறி, பெண்ணை ஒடுக்கும் முழு அதிகாரத்தையும் கணவனிடமே ஒப்படைக்கிறது.
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் திருமண உறவில் நடைபெறும் பாலியல் வன்முறை தொடர்பாக நடந்த வழக்கில், பாசிச மோடி அரசு “மேலைநாடுகளைப் போல திருமண வன்புணர்வை இந்தியாவில் குற்றமாக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அது திருமண உறவுகளைச் சிதைத்துவிடும். கணவன்மார்கள் மீது தவறான வழக்குகள் பதியப்பட வாய்ப்புள்ளது” என்று வாதாடியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், பெண்கள் மீது இந்த ஆணாதிக்கக் கட்டமைப்பு தொடுக்கும் வன்முறையைச் சட்டத்தின் பெயரால் அரசு பாதுகாக்கிறது.
மேலும், மனுஸ்மிருதியின் அடிப்படையில் ஓர் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பல்லாண்டுகளாக முயன்று வரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல், திருமணம் புனிதமானது என்ற போர்வையில் இந்த ஒடுக்குமுறையைத் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கிறது. “திருமண உறவில் கணவனுக்கு அடிபணிவதே மனைவியின் பிரதான கடமை” போன்ற பிற்போக்குத்தனமான கருத்துகளை மக்களிடையே பிரச்சாரம் செய்து, அதைச் சட்டப்பூர்வமாக நிலைநிறுத்துவதற்கே பாசிச கும்பல் வேலை செய்து வருகிறது.
இப்படிச் சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கும் ஒரு தீவிரமான பிரச்சினைக்கு, முற்போக்காகப் பேசும் இத்தொடர் கூறும் தீர்வு என்னவாக இருக்கிறது?
“தவறான பாதையில் செல்லும் ஓர் ஆணைக் குடும்பத்தால் மட்டுமே திருத்த முடியும்” என்று கூறி, சமூகம் முழுவதும் நிரம்பி வழியும் இப்பிரச்சனையை ஒரு தனிநபர் சார்ந்த பிரச்சனையாக மட்டுமே இத்தொடர் கையாண்டு முடிகிறது. ஒரு பிரச்சனையை எதார்த்த நிலையில் இத்தனைத் தெளிவாக விளக்கிய ஒரு தொடரால், ஏன் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு முற்போக்கான தீர்வை முன்வைக்க முடியவில்லை?
ஏனெனில், ஒட்டுமொத்த இந்தியச் சமூகமும் ஜனநாயகமற்று உள்ளது. இந்த ஜனநாயகமற்ற சமூக அமைப்பை இதே நிலையில் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பல்வேறு வடிவங்களை பார்ப்பனியம் உருவாக்கி வைத்துள்ளது. இவை, பெண்களை ஒருபோதும் சுதந்திரமான தனிநபராக அடையாளப்படுத்துவதில்லை. அவர்கள் வாழ்வின் எல்லாக் கட்டத்திலும் ஏதோ ஓர் ஆணைச் சார்ந்துதான் வாழ வேண்டும் என்றே சமூகத்தால் கட்டமைக்கப்படுகிறது.
பெண்ணை ஒரு போகப் பொருளாகப் பார்ப்பதும், அவளுக்கென்று தனி உரிமைகள் இல்லை எனக் கருதுவதும், அவள் தன் கணவனுக்கு அடிபணிந்தே கிடக்க வேண்டும் என்ற பிற்போக்கான, மடத்தனமான மனுஸ்மிருதி சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே திருமணம் மற்றும் குடும்ப உறவுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.
கம்யூனிச ஆசான் ஏங்கல்ஸ், “திருமணம் என்பது ஓர் ஆணின் அதிகாரத்தையும் சொத்துகளையும் வரம்பின்றி ஆள்வதற்கான உரிமைகளை வழங்குவதற்காக, அவனால் உருவாக்கப்பட்ட ஒரு வர்க்கக் கட்டமைப்பு” என்று கூறுகிறார். இந்தியாவில் திருமணம் என்பது ஒரு பெண்ணின் உடல், மனம் என அவளது மொத்த உரிமைகளையும் கணவனின் கையில் ஒப்படைத்து, அடிப்படை உரிமைகளற்ற ஓர் அடிமையாக மனைவியை மாற்றுவதாக உள்ளது.
இப்பிரச்சினையின் பின்னணியில் பல்லாயிரம் ஆண்டுகாலமாக வளர்ந்து, சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கும் ஒரு வரலாற்று – சித்தாந்தப் பின்னணி உள்ளது. திருமணத்திற்குள்ளான பாலியல் வன்கொடுமை என்பது பூஜா என்ற தனிநபர் மட்டும் சந்திக்கும் பிரச்சினை அல்ல; இந்தியச் சமூகத்தில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் அன்றாடம் சந்திக்கும், நாம் சாதாரணமாகக் கடந்து போகும் ஒரு வன்முறை. ஒரு பெண்ணின் உடல் மீதான அதிகாரத்தையும் அவளின் உரிமையையும் இச்சமூகம் வரலாற்றுப் போக்கில் திட்டமிட்டுப் பறித்துள்ளது. பார்ப்பனிய ஊடுருவலைத் தொடர்ந்து, மனுஸ்மிருதி அடிப்படையிலான ஒரு சமூகத்தைக் கட்டியமைக்கப் பிற்போக்குச் சக்திகள் தொடர்ந்து போராடி வருகின்றன. பெண் தன் வாழ்வின் எல்லாக் கட்டத்திலும் ஓர் ஆணை (தன் தந்தையையோ, கணவனையோ, அல்லது மகனையோ) சார்ந்துதான் இருக்க வேண்டும்; கல்வியோ, வேலையோ அந்தப் பெண்ணைத் தனித்து இயங்க வைக்கக் கூடாது; ஆணுக்கு அடிபணிந்து சேவை செய்வதுதான் அவளது வாழ்வின் தலையாய கடமை என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
இத்தகைய இருண்ட நிலையிலிருந்து, இன்று பெண்கள் அடிப்படை கல்வியைப் பெறுவதற்கும், பெற்ற கல்வியைக் கொண்டு வேலை செய்வதற்கும் பல போராட்டங்களைக் கடந்துதான் வீட்டிலிருந்து ஒவ்வொரு படியாக வெளியே வந்துள்ளனர். அப்படி வெளியில் வரும் பெண்கள் அன்றாடம் வீட்டிலும், வெளி இடங்களிலும் பல அநீதிகளைச் சந்திக்கின்றனர். பெண்கள் அன்றாடம் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகளைப் பற்றிப் பேசுவதற்கே இங்குச் சில நூறு ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்தச் சூழலில்தான் சிரையா தொடர், பெண் தன் குடும்பத்திற்குள் சந்திக்கும் வன்முறையை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
ஆனால், இந்த முதலாளித்துவ சமூக அமைப்பிற்குள் உருவாக்கப்படும் ஒரு தொடரின் அல்லது ஒரு திரைப்படத்தின் வரம்பு மிகவும் குறுகலானது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் பிடியில் பார்ப்பனியப் பிற்போக்குக் கலாச்சாரம் சமூகத்தில் தீவிரமாகத் திணிக்கப்பட்டு வரும் இவ்வேளையில், சமூகப் பிரச்சினைகளைத் தெளிவாக விளக்கினாலும், அதற்கான தீர்வை இதே பிற்போக்கான சமூகக் கட்டமைப்புக்குள்ளேயே தேடும் முரண்பாடுதான் நீடிக்கிறது.
இப்படி ஜனநாயகமற்ற, சுரண்டல் வடிவமாகவே இருக்கும் இச்சமூகக் கட்டமைப்பிற்குள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடுவது முற்றிலும் அர்த்தமற்றது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக, பிற்போக்கான பார்ப்பனியக் கலாச்சாரத்திற்கும் அதன் சித்தாந்தத்திற்கும் மாற்றாக ஒரு முற்போக்குச் சித்தாந்தம் குறித்த பரந்து விரிந்த விவாதங்கள் எழ வேண்டும். நமது வரலாறு நெடுகிலும் பார்ப்பனிய எதிர்ப்பு மற்றும் சமத்துவக் கூறுகள் இருந்து வந்துள்ளன. எனவே, ஜனநாயகத்தை நேசிக்கும், சமத்துவத்தை விரும்பும் ஒவ்வொருவரும் ஒரு மாற்றுப் பண்பாட்டைப் படைக்கும் பணியில் ஈடுபடும் போதுதான், இது போன்ற பாலியல் ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு நிரந்தரமான தீர்வைக் கண்டறிய முடியும்.
![]()
மாயவள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











