கார்ப்பரேட் பெருமுதலாளி கௌதம் அதானி மற்றும் அவருடைய மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த கிரிமினல் வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியம் (SEC) தொடர்ந்த மோசடி வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, கௌதம் அதானியும் சாகர் அதானியும் இணைந்து 18 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவும், அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் (சுமார் 96,000 கோடி ரூபாய்) முதலீடு செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதுமட்டுமன்றி, அமெரிக்காவில் 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும், ஈரானிய எரிவாயு கப்பல் போக்குவரத்து தொடர்பான மற்றொரு சர்ச்சைக்குரிய விசாரணைக்காக அமெரிக்காவின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு (OFAC) அதானி குழுமம் கூடுதலாக 275 மில்லியன் டாலர் செலுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்புடன் இந்தியப் பிரதமர் மோடி நடத்திய இடைத்தரகுப் பேச்சுவார்த்தைகளும், டிரம்பின் சொந்த வழக்கறிஞரான ராபர்ட் ஜே. கியூஃப்ரா என்பவரை அதானி குழுமம் தன்னுடைய நிறுவனத்தில் பணியமர்த்திக் கொண்டதும்தான் இந்த உடன்பாடு கைக்கூடுவதற்குக் முதன்மைக் காரணங்களாக அமைந்துள்ளன.
சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாக அதானி குழுமம் மீது அமெரிக்கா சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டு நீதித்துறை கைவிட்டு, அதானிக்கு ‘களங்கமற்றவர்’ சான்றிதழ் வழங்கிய செய்தியை “நியூயார்க் டைம்ஸ்” ( New York times) மற்றும் ”கார்டியன்” (Guardian) நாளிதழ்கள் தான் முதலில் வெளியிட்டன. இந்தச் செய்தி வெளியாகி 24 மணி நேரம் கழித்தே, இந்திய நாளிதழ்கள் இதனைச் செய்தியாக வெளியிடவாவது துணிந்தன.
அதானி மீதான குற்றச்சாட்டுகள்
சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை முறைகேடாகப் பெறுவதற்காக, அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்குப் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக 2024-ஆம் ஆண்டில் அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியம் (SEC) அதிகாரப்பூர்வமாகக் குற்றம் சாட்டியது. மேலும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் லஞ்ச ஒழிப்புச் சட்டங்களை முறையாகப் பின்பற்றி வருவதாகப் பச்சைப்பொய் கூறி, அமெரிக்க முதலீட்டாளர்கள் உட்பட இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் ஏமாற்றி, மொத்தம் 750 மில்லியன் டாலர் முதலீட்டுப் பணத்தைச் சட்டவிரோதமாகத் திரட்டியதாகவும் அந்த வழக்கில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதன் விளைவாக, நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட புரூக்ளின் நீதிமன்றம் கௌதம் அதானி மற்றும் அவருடைய வணிகக் கூட்டாளிகள் மீது கடுமையான மோசடி வழக்குகளைப் பதிவு செய்து, அவருக்கு எதிராகக் கைது ஆணையையும் பிறப்பித்தது. ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா, காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு இந்திய மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றுவதற்காக, 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாக ஐந்து குற்றச்சாட்டுகள் அதானி குழுமத்தின் மீது சுமத்தப்பட்டன.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) நடத்திய தேடுதல் வேட்டையின் மூலம், அமெரிக்காவில் உள்ள கௌதம் அதானியின் வணிக நிறுவனங்களுக்குச் சொந்தமான மின்னணு சாதனங்களும், கார்ப்பரேட் குற்றங்களை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்திய அரசு அதிகாரிகளுக்குப் பல நூறு மில்லியன் டாலர்களை லஞ்சமாகக் வாரி இறைத்ததையும், இந்த மெகா லஞ்ச விவகாரத்தை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து மறைத்து ஏமாற்றியதையும் இக்குற்றப்பத்திரிகை அம்பலப்படுத்தியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க நீதித்துறையும், அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியமும் (SEC) இந்த மெகா ஊழல் வழக்கில் தீவிரமாகச் செயல்பட்ட போதிலும், இந்தியாவை ஆளும் மோடி அரசின் அதீதப் பாதுகாப்பு வளையம் காரணமாக, கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்குச் சட்டப்படியான அழைப்பாணைகளை (Summons) அனுப்ப எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன.
வரி ஏய்ப்பு செய்ய ஏதுவான நாடுகளைப் (Tax havens) பயன்படுத்துவதும், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் (Shell companies) தொடங்கிப் பண மோசடி செய்வதும் அதானி குழுமத்தின் வழக்கமான கார்ப்பரேட் தந்திரங்களாகும். இதன் மூலம் தங்களின் பங்குச் சந்தை மதிப்பைச் செயற்கையாக உயர்த்திக் காட்டுவர்; இதனை நம்பி லட்சக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழந்து முற்றிலும் நடுத்தெருவிற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியம் அதானி குழுமத்தின் மீது இத்தனை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துபோதிலும், அதற்குரிய போதிய ஆவணங்களும், சான்றுகளும் பொதுவெளியில் இருந்தபோதிலும், இந்தியாவின் முதன்மைப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பு (SEBI) அல்லது இந்திய நீதிமன்றங்களோ அதானி மீது எந்தவொரு சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்காமல் அதிகார வர்க்கத்தின் விசுவாசத்தைக் காட்டின.
இதற்கிடையில், ஜெய்ப்பூர் வணிக நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் குப்தா, ராஜஸ்தான் மாநில மின்சார நிறுவனத்திடமிருந்து 1,400 கோடி ரூபாய்க்கும் மேல் தவறான முறையில் வசூலித்துக் கொள்ளையடித்ததற்காக, அதானி குழுமத்தின் கீழ் இயங்கும் “பார்சா கெண்டே கோலியரீஸ் லிமிடெட்” நிறுவனத்திற்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மறுபுறம், அதானி குழுமத்தின் இத்தகைய அடுக்கடுக்கான ஊழல்களையும் முறைகேடுகளையும் துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்ததற்காகப் பல நேர்மையான செய்தியாளர்கள் அதிகார வர்க்கத்தால் மிகக் கொடூரமாகப் பழிவாங்கப்பட்டனர்.
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்தியச் சூரிய ஆற்றல் கழகத்தின் (SECI) அதிகாரப்பூர்வ இடைத்தரகு வேலைகள் மூலம், பல்வேறு மாநில மின் பகிர்மான நிறுவனங்களுக்கும், அதானி சூரிய ஒளி மின் நிறுவனங்களுக்கும் இடையே போடப்பட்ட பல கேள்விக்குரிய மின் கொள்முதல் ஒப்பந்தங்களால், திறந்த சந்தை விலையை விட அதானி நிறுவனத்தின் மின்சார விலை மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார்ப்பரேட் பகற்கொள்ளையின் நேரடி விளைவாக, அந்தந்த மாநில நுகர்வோர்கள் ஏற்கனவே தங்களின் மின் வாரியங்களுக்குப் பெருந்தொகையை மின் கட்டணமாகச் செலுத்தி அவதிப்பட்டு வருகின்றனர்.
பங்குச் சந்தையில் லட்சக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் தங்களின் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்து தவித்துக்கொண்டிருந்தபோது, இந்தியாவின் ‘செபி’ (SEBI) அமைப்பும், மத்திய நிதி அமைச்சகமும் வாயடைத்துக் கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. நாடாளுமன்றத்தில் மோடி அரசு ஒப்புக்கொண்டபடி, 2021-ஆம் ஆண்டிலிருந்தே அதானி குழுமத்தை செபி அமைப்பு விசாரித்து வருவதாகக் கூறினாலும், கார்ப்பரேட்டுகளைக் காப்பதே நோக்கமாகக் கொண்ட அவர்களின் இந்த நாடக விசாரணையில் இதுவரை உருப்படியாக எந்தவொரு உண்மையும் வெளிவரவில்லை.
அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் கும்பலுக்கான நேரடி ஆதரவு
புதிய தாராளமயப் பொருளாதாரத்தின் (Neoliberal Economy) மிக முக்கியமான பேராபத்து என்னவென்றால், கட்டுப்பாடற்ற தனியார்மயமாக்கலும், நாட்டின் முதன்மையான பொதுத்துறைச் சொத்துக்களை ஒரு சில கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் கைகளில் தாரை வார்ப்பதும்தான். துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், மின்சார விநியோகம் மற்றும் பசுமை மின் உற்பத்தி என நாட்டின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத் துறைகளும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப்படுவதால், சந்தையில் அவர்களின் அசைக்க முடியாத ஏகபோக ஆதிக்கம் (Monopoly) உருவாகிறது.
கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி பல்வேறு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோதெல்லாம், கௌதம் அதானியும் நிழல் போல உடன் சென்றார். அங்கு கையெழுத்தான பல ஒப்பந்தங்கள் கென்யா, வங்கதேசம் முதல் ஆஸ்திரேலியா வரை அதானி குழுமம் தனது பன்னாட்டுத் தொழிலை தங்குதடையின்றி விரிவுபடுத்திக் கொள்ளவே பெருமளவில் உதவின.
பிரதமர் மோடி மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, அதானியின் சொத்து மதிப்பு கற்பனைக்கு எட்டாத வகையில் பல மடங்கு எகிறியது. 2026 ஜனவரி நிலவரப்படி, இந்தியாவின் புதிய சூரிய ஒளி மற்றும் காற்று மின்சார உற்பத்தியில் 14 சதவிகதமும், நாட்டின் ஒட்டுமொத்தக் கடல்சார் சரக்கு போக்குவரத்தில் (Ports and Logistics) 25 சதவிதமும் அதானி குழுமத்தின் ஏகபோகக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அனல் மின் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ள அதானி, இன்று இந்தியப் பொருளாதாரத்தின் முதன்மைச் சொத்துக்களில் ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 25 சதவிகிதத்தைத் தன் கைவசம் வைத்துள்ளார். இது தேசத்தின் பொருளாதாரம் ஒரு சில தனிநபர்களின் கைகளில் முடங்கிக் கிடக்கும் பேராபத்தான கார்ப்பரேட் பாசிசச் சூழலை அப்பட்டமாக உணர்த்துகிறது.
அதானியின் கார்ப்பரேட் நலன்களை வளர்த்தெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனது பிப்ரவரி மாத வாஷிங்டன் பயணத்தின் போது அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஒரு தற்காலிகத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த அடிமைத்தனமான வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் கோடிக்கணக்கான ஏழைச் சிறு விவசாயிகள், உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு தொழில்துறையினரின் வாழ்வாதார நலன்களை மோடி முற்றிலும் அடகு வைத்துள்ளார். நாட்டின் இறையாண்மை மிக்க உணவுப் பாதுகாப்பு, ரஷ்யா மற்றும் ஈரானுடனான இந்தியாவின் பாரம்பரிய எரிசக்தி எண்ணெய் இறக்குமதி மற்றும் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை ஆகிய அனைத்தும் இந்த ஒற்றைக் கார்ப்பரேட் லாபத்திற்காக வெட்கமின்றிச் சமரசம் செய்யப்பட்டுள்ளன.
தன் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும், பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் தனக்கிருந்த பாத்திரத்தையும் அடியோடு கைவிட்டுவிட்டு, ஈரான் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடாவடித்தனமான போரில் அமெரிக்க-இஸ்ரேல் இராணுவ முகாமோடு மோடி அரசு இணைந்துள்ளது. அதானி என்ற ஒரேயொரு கார்ப்பரேட் முதலாளியின் கார்ப்பரேட் சாம்ராஜ்ஜியத்தை தூக்கி நிறுத்த, மோடி இன்று அப்பட்டமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்து, ஒட்டுமொத்த தேச நலன்களையும் பகிரங்கமாகப் பேரம் பேசியுள்ளது.
பல பெண்களின் வாழ்வை சூறையாடிய எப்ஸ்டீனாக இருந்தாலும் சரி, நாட்டின் சொத்துக்களைச் சூறையாடும் அதானியாக இருந்தாலும் சரி, முதலாளித்துவக் கட்டமைப்பு என்பது எப்போதுமே உழைக்கும் மக்களைக் கைவிட்டு, தனது பெரு முதலீட்டாளர்களையும் ஆளும் வர்க்க நலன்களையும் மட்டுமே முன்னிறுத்திக் காப்பாற்றும் என்பதற்கு இதுவே சான்றாகும்.
10 பில்லியன் டாலர்களைச் செலுத்துவது யார்?
கௌதம் அதானி இந்தியாவின் பெரும் பணக்காரராக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டாலும், அவருடைய அசுரத்தனமான சொத்து மதிப்பு முழுவதும் இந்தியாவின் உழைக்கும் மக்களின் உழைப்பையும், நாட்டின் இயற்கை வளங்களையும் அப்பட்டமாகச் சுரண்டிக் குவிக்கப்பட்டதுதான். அவருடைய வணிகச் செயல்பாடுகள் யாவும் உள்நாட்டில் உண்மையான உற்பத்தியைப் பெருக்குவதாகவோ அல்லது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவோ இல்லாமல், முழுக்க முழுக்க நிதிச் சந்தைச் சூதாட்டங்களை (Financial speculation) மட்டுமே சார்ந்ததாக உள்ளன. இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை வங்கிகளும், எல்.ஐ.சி (LIC) போன்ற எளிய மக்களின் அரசு சார்ந்த நிதி நிறுவனங்களும், அதானி குழுமம் நாட்டின் பல்வேறு பொதுச் சொத்துக்களை வளைத்துப் போடுவதற்காக இலட்சக்கணக்கான கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கடனாகத் தொடர்ந்து வாரி வழங்கி வருகின்றன.
இத்தகைய பெரும் கார்ப்பரேட் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாமல், ‘வாராக்கடன்’ என்ற பெயரில் தள்ளுபடி செய்யப்படும் போது, அதன் இறுதிப் பேராபத்தையும் இழப்பையும் சந்திக்கப் போவது கோடிக்கணக்கான இந்தியப் பொதுமக்களின் வாழ்நாள் சேமிப்புப் பணம் தான். இந்திய மக்களின் வியர்வைத் துளிகளாலான பொதுப்பணம், இவ்வாறு அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு முதலீடு என்ற பெயரில் கடத்தப்படுவதால், ஏற்கனவே பற்றாக்குறையாக உள்ள நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு (Foreign exchange reserves) மேலும் சரிந்து, சர்வதேசச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் மோசமாகப் பலவீனமடையும்
அதாவது, அதானி குழுமம் அமெரிக்காவில் செய்ய ஒப்புக்கொண்டுள்ள 10 பில்லியன் டாலர் முதலீடு என்பது, பெயரளவில் அவர்களுடையதாக இருந்தாலும், உண்மையில் அது இந்தியப் பொதுமக்களின் சேமிப்பையும், நாட்டின் பொருளாதார இறையாண்மையையும் உறிஞ்சி அங்கே கொண்டு சேர்க்கப்படும் மக்கள் பணமே ஆகும்.
இந்திய அரசு செய்ய வேண்டியது என்ன?
உள்நாட்டிலும். சர்வதேச அளவிலும் நெருக்கடியான சூழல் நிலவும் இந்நேரத்தில், ஒன்றிய அரசு கார்ப்பரேட் விசுவாசத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, உடனடியாகப் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:
சுதந்திரமான கூட்டு நாடாளுமன்றக் குழு மற்றும் செபி விசாரணை: அதானி குழுமத்தின் அடுக்கடுக்கான பன்னாட்டு நிதி முறைகேடுகள் மற்றும் லஞ்ச ஊழல்கள் குறித்து உடனடியாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் முறையான நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். கார்ப்பரேட் அழுத்தங்களுக்குப் பணிந்து, அதானி குழுமத்திற்கு அரணாகச் செயல்பட்டு வரும் “செபி” (SEBI) அமைப்பு, எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் விசாரணையைத் துரிதப்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
குற்றப்பத்திரிகையும் உச்ச நீதிமன்றக் கண்காணிப்பு விசாரணையும்:
சர்வதேச அளவில் நாட்டின் நற்பெயரைக் கெடுத்த இந்த மெகா ஊழலில், லஞ்சம் கொடுத்த கார்ப்பரேட் அதிகார வர்க்கம் மற்றும் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினர் மீதும் உடனடியாகக் கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதோடு, ஒட்டுமொத்தப் புலனாய்வும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில், எந்தவொரு அரசுத் துறையின் கட்டுப்பாடும் இல்லாத ஒரு சுதந்திரமான உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட வேண்டும்.
கார்ப்பரேட் பிடியிலிருந்து விடுபட்ட சுதந்திர வெளியுறவுக் கொள்கை
அதானி குழுமத்தின் கார்ப்பரேட் லாபங்களையும், அவர்களின் பன்னாட்டுத் தொழில் பேரரசையும் பாதுகாக்கும் தார்மீகமற்ற கடமையிலிருந்து மோடி அரசாங்கம் தன்னை முற்றிலும் விடுவித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக ஏகாதிபத்திய நாடுகளிடம் சரணடையாமல், நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்தியா சுதந்திரமான வர்த்தக மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை எவ்விதப் பேரமுமின்றித் தனித்து வகுத்து முன்னெடுக்க வேண்டும்.
டாக்டர் சோம மர்லா
(மேனாள் முதன்மை அறிவியலாளர் மற்றும்
மரபணுவியல் துறைத் தலைவர்,
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR),
புது தில்லி).
மூலக் கட்டுரை: கவுண்ட்டர் கரண்ட்ஸ்
![]()
மொழிபெயர்ப்பு: அகதா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads












