Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 255

இந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் ! எங்களுக்கில்ல..

சென்னை – சைதை மார்க்கெட் வியாபாரிகளிடம் ஒரு நேரடி ரிப்போர்ட் –  பாகம் 1

கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு, வேலையிழப்பு என பல இன்னல்களோடு இந்த தீபாவளியை சந்தித்திருக்கின்றனர் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர். ஊரடங்கால் வேலையிழப்பு மட்டுமல்லாமல், சிறு தொழில்கள், ஆட்டோ சவாரி ஆகியவற்றில் ஏற்பட்ட நலிவு ஆகியவை இந்த தீபாவளியை கலையிழந்த தீபாவளியாக்கியிருக்கிறது.

சென்னை சைதாப்பேட்டை, கலைஞர் கருணாநிதி பொன் விழா வளைவிற்குள் உள்ள மார்க்கெட் பகுதி சிறுவியாபாரிகள், தங்களின் தீபாவளி வியாபார அனுபவத்தை நம்மிடம் பகிர்கிறார்கள்

வெங்கடேசன், வயது 58 – காய்கறி வியாபாரி

கொரானாவால் 70% வியாபாரம் கெடையாது. ஜனங்க அங்கங்க காய்கறி வாங்கிக்கிறாங்க யாரும் மார்க்கெட்டுக்கு வர்றது கிடையாது. போன தீபாவளிக்கு 15,000 – 20,000 ரூபாய்க்கு வியாபாரம் பண்ணேன். இந்தவாட்டி 2,000 – 3,000-க்கு தான் வியாபாரமாச்சு. சரக்கும் அதிகமா எடுக்குறது கெடையாது. விக்கவிக்க ஒரு மூட்டை ரெண்டு மூட்டைன்னு எடுக்குறதுதான். முன்னலாம் 5 மூட்டை 6 மூட்டைன்னு எடுத்துட்டு வருவேன். இப்போ ஒரு மூட்டை விக்கிறதுக்கே ஒரு வாரம் ஆயிடுது.  இந்த மார்க்கெட்டுல ஞாயித்துக்கிழமைன்னா நிக்க முடியாத அளவுக்கு ஜனங்க வரும். அப்போ ஒரு நாளைக்கு மூவாயிரம் நாலாயிரத்துக்கு சரக்கு விக்கும். இப்போ எப்படி இருக்குன்னு பாருங்க.

கடையில ஒரு ஆள வேலைக்கு வைச்சோம்னா 500 ரூவா சம்பளம் கொடுக்கனும். வியாபாரம் நல்லா போச்சுனாதான வருமானம் வரும், அதுல இருந்து கடையாளுக்கு சம்பளம் கொடுக்க முடியும். வியாபாரம் இல்லன்னா என்ன பண்ண முடியும்?

0o0o0

சுரேஷ், வயது 45 – தெருவோர துணிக்கடை வைத்திருப்பவர்

இந்த தீபாவளி ரொம்ப மோசம்மா. கொழந்தைகளுக்கு ஒரு நல்லதையும் வாங்கி கொடுக்கல. 20-25 வருஷமா இந்த வியாபாரம் பண்ணிட்டுவர்றோம். இந்த கொரானா வந்து எங்க பொழப்ப கெடுத்திருச்சி. வீட்டுல இருந்த நக நட்டு வித்துதான் வயித்த கழுவிகிட்டு இருந்தோம். லாக்டவுன் முடிஞ்சி இப்போ மழக்காலம் வந்திருச்சு. வாரத்துக்கு ஒருநாளு தான் கடைய போடமுடியுது. முன்னல்லாம் தீபாவளிக்கு 20,000 ரூவாக்கு சரக்கு வாங்கிப்போடுவோம்; 10,000-க்கு விக்கும். இப்போ ரெண்டாயிரம் மூவாயிரம் கெடைக்கிறதே கஷ்டமாயிருக்கு.

0o0o0

சாரதி, வயது 53 – காய்கறி வியாபாரி

வண்டி ஒன்னு கருப்பு பிளக்ஸ் போட்டு மூடியிருக்கு பாரு.. அது என்னோட கடதான். மூடி ஒன்றரை மாசமாகுது. பொழப்பில்லாம உட்காந்துட்டு இருக்கேன். கொரானா வந்ததுலருந்து எந்தப் பண்டிகையும் இல்ல. (அடகுக் கடையையும், நகைக் கடையையும் சுட்டிக்காட்டி) இவனுங்களுக்குதான் கொண்டாட்டமே! ரெண்டு மூணு வருஷம் பொறுத்துக்கூட இந்த பொருள (நகை) விக்கலாம். ஆனா தக்காளிய இன்னிக்கு வாங்கி மறுநாளு விக்கமுடியுமா? இதான் நிலம.

போன மாசமே சிறுகுறு தொழிலாளிகளுக்கு பணத்த போடுறன்னு சொன்னாங்க. இதுவரைக்கு எந்த பேங்குல கொடுத்துருக்காங்க? தெருவோர வியாபாரிகளுக்கு கவர்மெண்டு கைக்குடுத்தாதான் ஓரளவுக்கு நடுத்தர மக்கள் சமாளிக்க முடியும். சிறு வியாபாரிகளுக்கு லோன் குடுக்குறன்னு சொல்றானுங்க பேங்குல போயி கேட்டா அப்படியொரு ஸ்கீமே இல்லன்றா. பணம் இருக்குறவனுக்கு கோடிக்கணக்குல கடன குடுக்குறான். அவன் பணத்த கட்டாம ஓடிடுறான். கடன் வாங்குற பெரிய பணக்காரனுங்கதான் ஏமாத்துறான்; நடுத்தர மக்கள் யாரும் ஏமாத்தமாட்டான். ஏமாத்துறவன எங்க புடிக்கிறாங்க. நடுத்தர மக்களா இருந்தா அதிகாரிகளுக்கு கொஞ்சம் பயப்புடுவாங்க.

கொரோனா காலத்துல குடுத்த கடன கேட்கக்கூடாதுன்னு அரசாங்கம் சொல்லுச்சி. ஆனா இங்க இன்னம்மா நடக்குது? வட்டியோட சேர்த்து மொத்தமா கொள்ளையடிக்கிறாங்க. வயித்தெரிச்சலா இருக்கு.

0o0o0

பூபால், வயது 45 – பழக்கடை வியாபாரி

போனவாட்டி தீபாவளில நல்லா வியாபாரம் ஆச்சு, இந்தவாட்டி கம்மிதான். முன்னாடிலாம் ஞாயித்துக்கிழமைல நல்ல வியாபாரமாகும். இப்போ சுத்தமா இல்ல. பண்டிகை டைம்லலா இந்த இடத்துல நிக்கவே முடியாது. இப்போ பாருங்க வெறிச்சோடி கெடக்கு. ரோட்டுல கடை வச்சிருக்குறவங்களுக்கு எல்லாம் நிவாரணம் கிடைக்கல. பெரிய கடை வச்சிருக்குறவங்களுக்குதான் நிவாரணம்லாம்.

0o0o0

ஸ்ரீதர், வயது 52 – துணிக்கடை முதலாளி

கொரோனாவால வியாபாரம் இல்ல. எங்களோட வியாபாரம்லா மிடில் கிளாஸ் – லோ கிளாஸ் மக்கள நம்பித்தான் இருக்குது. மக்களுக்கு வருமானம் இருந்தாதான துணிய எடுக்க வருவாங்க. அவங்கவங்க சாப்பாடுக்கே வழியில்ல இதுல துணியெடுக்குறதா முக்கியம்? ஜி.எஸ்.டி-ல பாதி வியாபாரம் போச்சு. கொரோனா வந்து முழுசா போச்சு. பஜாருக்கு வர ஜனங்க, வந்து பாத்துட்டு துணிய வாங்க கடைக்குள்ள வரமாட்றாங்க. ரெகுலர் கஸ்டமர் இருக்குறதுனால தான் இங்க உக்காந்துட்டு இருக்கோம். இல்லன்னா எங்களுக்கு இங்க வேலையே கிடையாது.

***


வினவு புகைப்பட செய்தியாளர்கள்

 

INI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா ?

1

எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவக் கல்வி மேற்படிப்புக்கான நீட் -பி.ஜி. தேர்வில் இருந்து மத்திய அரசின் கீழ் இயங்கும் 11 கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளித்து, அவற்றுக்கு மட்டும் தனியாக INI – CET (Institute of National Importance – Combined Entrance Test ) எனும் சிறப்பு நுழைவுத்தேர்வை அறிவித்துள்ளது மத்திய அரசு.

கடந்த நவம்பர் 16 அன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் 11 மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு ”தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்” என்ற அடிப்படையில் தனியான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

டெல்லி, போபால், புவனேஷ்வர், ஜோத்பூர், நாக்பூர், பாட்னா, ரிஷிகேஷ், ராய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள், பாண்டிச்சேரி ஜிப்மர், சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.எர். மருத்துவக் கல்லூரி, பெங்களூரு நிம்ஹான்ஸ் ஆகிய மருத்துவக் கல்லூரிகள் தான் இந்த “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்”

படிக்க :
♦ நீட் படுகொலைகள் : இழப்பீடு தற்கொலையை ஊக்குவிக்குமாம் !
♦ கொரோனா நோயாளிகளை தற்போது குணப்படுத்தும் மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதியவர்களா ?

இந்தக் கல்லூரிகளுக்கான சேர்க்கைக்கு போட்டியிடும் மாணவர்கள் கடந்த ஆண்டு வரை நடைமுறையில் இருந்த நீட்-பி.ஜி தேர்வுகளை இனி எழுத வேண்டியதில்லை. இந்த “தனிச்சிறப்புக்” கல்லூரிகளுக்கு என ஏற்பாடு செய்யப்படும் இந்த பொதுவான நுழைவுத்தேர்வை எழுதி அதில் தேறினால்தான் இக்கல்லூரிகளில் சேர அனுமதிக்கப்படுவர்.

இந்தப் புதிய நுழைவுத் தேர்வுமுறை மாணவர்களுக்கு பெரும் சுமையாகும். இதற்கு முன்னால், நீட் – பி.ஜி தேர்வு மட்டும் எழுதினால் போதும். இதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இந்தக் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு கல்லூரியில் சேர முடியும். ஆனால் தற்போது இந்த 11 கல்லூரிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் “இனி-செட்” தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டிய சூழலில், ஒருவேளை இக்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்காத பட்சத்தில் பிற மருத்துவக் கல்லூரிகளில் சேர, நீட் – பிஜியும் எழுதவேண்டும். இது மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு பெரும் மன சுமையாக அமையும்.

மருத்துவக் கல்வியில் தமிழகம் பின்பற்றி வந்த இட ஒதுக்கீடுகளை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் சாதித்த மத்திய அரசு, தற்போது இந்த  “தனிச்சிறப்பான கல்லூரிகளில்” எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்களுக்கு ”இனி-செட்” நுழைவுத் தேர்வில் உள் ஒதுக்கீடு வழங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய தேர்வுமுறை குறித்துப் பேசியுள்ள சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத், மத்திய அரசு கூறும்  “தேசிய முக்கியத்துவம்  வாய்ந்த” கல்லூரிகளின் தர நிர்ணயம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மருத்துவக் கொள்கை-2017-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்தியா முழுவதும் மொத்தம் 11 கல்லூரிகள்தான் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அத்தகைய கல்லூரிகளில் பெரும்பாலானவை மாநில அரசுகளின் கீழ் வரும் மருத்துவக் கல்லூரிகள்தான். அப்படியிருக்கையில் எந்த அடிப்படையைக் கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது? எந்த அடிப்படையில் மாநில அரசின் கீழ் உள்ள சிறந்த கல்லூரிகளுக்கு அந்த  அந்தஸ்த்து வழங்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் மருத்துவர் இரவீந்திரநாத் .

தரமான தேர்வுமுறை என்று முட்டுக்கொடுக்கப்பட்ட நீட் தேர்வுமுறையிலிருந்து  “தனிச்சிறப்புத் தகுதி கொண்ட கல்வி நிறுவனங்களுக்கு”  விலக்கு அளிக்க முடியும்போது, நீட் தேர்விலிருந்து தமிழகம் உள்ளிட்ட குறிப்பான மாநில அரசுகள் கேட்ட நீட் தேர்வு விலக்கை வழங்க முடியாதா ?

இவர்கள் குறிப்பிடும் “தனிச்சிறப்பான” மருத்துவமனைகளும், மருத்துவக் கல்லூரிகளும் செய்திருக்கும் சாதனைகளை விட மருத்துவத்துறை ஆய்விலும், சிறப்பான மருத்துவம் வழங்குவதிலும்  சாதனை படைத்த தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய இச்சமயத்தில், எடப்பாடியோ “இனி செட்” தேர்வில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்குமாறு மோடியிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார்.

நீட் தேர்வு முறைக்கு “தரமானது”, “தனிச்சிறப்பானது” என இதுவரை முட்டுக் கொடுத்த கூட்டம் இப்போது  பதிலளிக்கப் போவதில்லை.  நீட் தேர்வு மாநில உரிமைகளையும், போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டையும் பறிப்பதற்கானதுதான் என்பது அந்தக் கூட்டத்திற்கு நன்றாகவே தெரியும்.

நயவஞ்சகமாக நம் கல்வி உரிமைகளை பறிக்கும் மத்திய மோடி மற்றும் தமிழக அடிமை எடப்பாடி அரசுகளுக்கு எதிராக ”நீட்டையும் புதிய கல்விக் கொள்கையையும் ஒழித்துக்கட்டு” எனும் குரல் வீதிகளில் ஒலிக்கும் போதுதான் இக்கும்பலின் கொட்டம் அடங்கும் !


சரண்
செய்தி ஆதாரம் :
தினகரன்

கொரோனா காலத்தில் “அள்ளிக் கொடுத்த” பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்வு !

நாடு தழுவிய கொரோனா ஊரடங்கின், முதல் நான்கு மாத காலத்தில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தையும் தாண்டி இந்திய கோடிசுவரர்கள் சொத்து மதிப்பு மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது.

UBS மற்றும் PWC வெளியிட்டுள்ள 2020-ன் Billionaires Insights அறிக்கையின் படி, ஏப்ரல் முதல் ஜூலை வரை இந்திய கோடிசுவரர்களின் நிகர சொத்து மதிப்பு 35% அதிகரித்து 423 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது.

2009 முதல் ஜூலை 31, 2020 வரை  இந்திய கோடிசுவரர்களின் நிகர சொத்து மதிப்பு  90% அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்கா, சீனா , ஜெர்மனி , ரஷ்யா மற்றும் பிரான்ஸை தொடர்ந்து உலகளவில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. இந்திய கோடிசுவரர்களின் சொத்து மதிப்பு ரஷ்யாவின் கோடிசுவரர்களை விட வேகமாக அதிகரித்துள்ளதாக UBS – PwC அறிக்கை கூறுகிறது. அவ்வறிக்கையின் படி 2009-ல் இருந்து இன்றுவரை ரசிய கோடிசுவரர்களின் சொத்து மதிப்பு  80% அதிகரித்துள்ளது.

படிக்க :
♦ பணக்காரர்கள் எப்படி உலகப் பணக்காரர்கள் ஆனார்கள் ?
♦ பிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?

Forbes வெளியிட்ட 2020-ன் India Rich List படி, இந்தியாவின் பெரும்பணக்காரரான முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த ஒருவருடத்தில்  73 % உயர்ந்து,  கிட்டத்தட்ட 89 பில்லியன் (₹6.52 லட்சம் கோடி) டாலர்களை எட்டியுள்ளது. இது இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள கெளதம் அதானியை ($25.2 பில்லியன்) விட மூன்று மடங்கு அதிகம். இதனால் தொடர்ந்து 13-வது வருடமாக, முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும்பணக்காரராக இருக்கிறார். இவர்களை தொடர்ந்து  HCL நிறுவனர் ஷிவ் நாடார், தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் Serum Institute of India நிறுவனர் சைரஸ் பூனாவாலா, Biocon நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் ஷா ஆகியோரும் அந்த பட்டியலில் உள்ளனர்.

Bloomberg Billionaires Index-ன் படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானிதான் உலகளவில் 10 பெரும் பணக்காரர்களின் பட்டியலிலுள்ள ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த ஒரே நபர்.

இந்தியா மோசமான பொருளாதார மந்த நிலையை நோக்கி செல்லும் வேளையில்,  முரண்பாடாக “ஒரு சில பில்லியனர்களின் சொத்து மதிப்பு மட்டுமே சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் குறைந்துள்ளது” என்று Forbes தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, மக்கள் தொகையில் 1% இருக்கும்  இந்திய பெரும் பணக்காரர்கள் நாட்டின் மொத்த சொத்து மதிப்பில் 42.5% வைத்திருக்கின்றனர். ஆனால் அடிமட்டத்திலுள்ள 50% மக்களிடம் வெறும் 2.8 % சொத்துக்கள் தான் உள்ளது என Oxfam report-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் தொகையில் 10 % இருக்கும் பெரும்பணக்காரர்களிடம், நாட்டின் மொத்த செல்வத்தில் 74.3 % இருக்கும் நிலையில், 90% மக்களிடம் 25.7% மட்டுமே உள்ளது.

“அம்பானியின் நிறுவனங்கள் (குறிப்பாக ஜியோ) வளர்ந்துள்ளதால், அம்பானியின் தனிப்பட்ட சொத்துகளும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது” என்று JNU பல்கலைகழகத்தின் Centre of Economic Studies and Planning – ன் தலைவர் ஜெயதி கோஷ் கூறியுள்ளார்.

₹1000 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் வைத்துள்ள செல்வந்தர்களின்  பட்டியலை ஆகஸ்டு 31, 2020 அன்று The Hurun India வெளியிட்டது. அம்பானி, இந்துஜா சகோதரர்கள்(SP இந்துஜா மற்றும் அவரின் மூன்று சகோதரர்கள்) – இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ₹ 1.43 லட்சம் கோடி, HCL ஷிவ் நாடார் (₹ 1.41 லட்சம் கோடி), ஆகியோர் பெயர்களும் 824 பெரும்பணக்கார இந்தியர்களின் பட்டியலில் உள்ளது.

2019-ல் $140 பில்லியன் (₹10.29 லட்சம் கோடி ) ஆக இருந்த இந்த 828 நபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 2020-ல் $821 பில்லியன் ( ₹ 60.59 லட்சம் கோடி ) உயர்ந்துள்ளது. இதில் பெரும்பங்கு, ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலையேற்றத்தால்  உருவானது.

கோவிட்-19 நிவாரணங்களுக்காக இந்தியாவின் 9 பில்லியனர்கள் 541 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது உலகளவில் வழங்கப்பட்ட நன்கொடைகளில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியானது என்று  “BloombergQuint” கூறுகிறது.

முகேஷ் அம்பானியின் RIL நிறுவனம் ₹500 கோடியை PM CARES-க்கும், தலா ₹ 5 கோடியை மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தின் CM FUNDS-க்கும் வழங்கியுள்ளது. இதனை தவிர்த்து,  RIL, மும்பையிலுள்ள Seven Hills மருத்துவமனையின் கொரோனா  பிரிவுக்கு நூறு படுக்கைகள் வழங்கியுள்ளது.

படிக்க :
♦ முதலாளித்துவத்தின் அழிவுப்பாதையை வெளிக்கொணர்ந்த கொரோனா – நோம் சாம்ஸ்கி
♦ கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

Forbes வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி, கோவிட்- 19 நிவாரணமாக $132 மில்லியன் வழங்கியுள்ளார். இதன் மூலம் ஜாக் டோர்சே மற்றும் பில் கேட்ஸ்க்கு அடுத்து மூன்றாவது பெரிய நன்கொடையாளராக ஆகியுள்ளார்.

உலகளவில் பில்லியனர்கள் $7.2 பில்லியன் டாலரை கொரோனா வைரஸ் நிவாரணமாக வழங்கியுள்ளனர். சுவிஸ் வங்கியின் UBS வெளியிட்ட அறிக்கை படி , உலகளவில் மொத்த பில்லியனர்களின் சொத்து மதிப்பு 2017-ன் இறுதியில் $8.9 டிரில்லியனாக இருந்தது ஜூலை 2020-ல் $10.2 டிரில்லியனாக அதிகரித்துள்ளது. 2017-ல் 2,158 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை தற்போது 2,189 என அதிகரித்துள்ளது.

USB-ன் Global family office department- ன் தலைவர் ஜோசப் ஸ்டாட்லர் “கோவிட் -19 நெருக்கடி சூழலிலும்  கோடிசுவரர்கள் மிகவும் நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள். அதாவது இந்த நெருக்கடி சூழலில்  இருந்து வெறுமனெ மீண்டு எழுவது மட்டுமின்றி பங்கு சந்தையில் ஏற்பட்ட உயர்வால் அவர்கள் மேலெழுந்தும் இருக்கிறார்கள்.

UBS அறிக்கையின் படி “பெரும்பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்களாவது முதலாளித்துவம் எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படவில்லை என்பதற்கான அறிகுறி” என்று High Pay Centre- ன் executive director – ஆன Luke Hilyard , Guardian பத்திரிகையில் கூறியுள்ளார்.

0o0o0


தமிழாக்கம் : தேவா  
நன்றி :
The Wire

குறிப்பு :
பெரும்பணக்காரர்கள் கொரோனாவில் ஏழைகளுக்கு அள்ளிக்கொடுக்கும் தாராளபிரபுக்களாக நம் முன்னே வலம் வருகிறார்கள். அவர்கள் அள்ளி வீசும் பணம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் நமக்குக் காட்டுகின்றன. யாரிடமிருந்து எடுத்து யாருக்குக் கொடுக்கப்படுகிறது என்பதிலிருந்துதான் இது யாருக்கான அரசு என்பதைப் புரிந்து கொள்ள முடியும் !

ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

1

பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 5 (இறுதி)

பாகம் 4 : விஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள்

1848-1849-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இயக்கத்துக்குப் பிறகு நாடு கடத்தப்பட்ட காலத்தில் மார்க்சும் எங்கெல்சும் விஞ்ஞானத்தைப் பயில்வதோடு நின்றுவிடவில்லை. 1864-ல் மார்க்ஸ் ”சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். அதைப் பத்தாண்டுக் காலத்துக்கு அவர் தலைமை வகித்து நடத்தினார். அதன் விவகாரங்களில் எங்கெல்சும் தீவிரமாகப் பங்கு கொண்டார். மார்க்சின் கருத்துப்படி அந்தச் சர்வதேச சங்கம் எல்லா நாட்டுப் பாட்டாளிகளையும் ஒன்றுபடுத்தியது; தொழிலாளர் இயக்கத்தை வளர்த்ததில் அது ஆற்றிய பணி பிரம்மாண்டமான முக்கியத்துவம் கொண்டது. 1870-80-ம் ஆண்டுகளில் அந்தச் சங்கம் மூடப்பட்ட பின்னரும் கூட மார்க்சும் எங்கெல்சும் ஆற்றிய, ஒற்றுமை ஏற்படுத்தும் பணி முடிந்துவிடவில்லை . மாறாக, தொழிலாளர் இயக்கத்தின் அறிவுத்துறைத் தலைவர்கள் என்ற வகையிலே அவர்களின் முக்கியத்துவம், இயக்கம் இடையறாது எந்த அளவுக்கு வளர்ந்ததோ அந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ந்தது.

மார்க்ஸ் மறைந்த பிறகு எங்கெல்ஸ் தனியே நின்று ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் ஆலோசகராகவும் தலைவராகவும் விளங்கினார். ஜெர்மன் அரசாங்கத்தின் அடக்குமுறை இருந்தபோதிலும் வேகமாக இடையறாது மேன்மேலும் வலுவடைந்த ஜெர்மன் சோசலிஸ்டுகளும், அதே போல் தமது முதல் நடவடிக்கைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து எடைபோட்டுத் தீரவேண்டியிருந்த ஸ்பெயின், ருமேனியா, ரசியா போன்ற பிற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் அவரது ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் நாடினர். வயது முதிர்ந்த எங்கெல்சின் வளமான அறிவு அனுபவக் களஞ்சியத்தை அவர்கள் எல்லோரும் பயன்படுத்தினர்.

படிக்க :
♦ மொங்கோலியா : எழுத்தறிவித்தவன் கம்யூனிஸ்ட் ஆவான் !
♦ பாட்டாளி வர்க்கமும் பாட்டாளி வர்க்கக் கட்சியும் ! | ஜே. வி. ஸ்டாலின்

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருக்கும் ரசிய மொழி தெரியும்; ரசிய நூல்களைப் படித்தார்கள். இருவருமே ரசிய விசயத்தில் உற்சாகத்துடன் அக்கறை காட்டி வந்தார்கள், ரசியப் புரட்சி இயக்கத்தை அனுதாபத்துடன் கவனித்து வந்தார்கள், ரசியப் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். சோசலிஸ்டுகளாக ஆவதற்குமுன் அவ்விருவரும் ஜனநாயகவாதிகளாக இருந்தவர்கள். எனவே, அரசியல் கொடுங்கோன்மையின்மீது பகைமை கொள்ளும் ஜனநாயக உணர்ச்சி அவ்விருவரிடமும் மிகவும் பலமாக இருந்தது. இந்த நேரடியான அரசியல் உணர்ச்சியும் அரசியல் கொடுங்கோன்மைக்கும் பொருளாதார ஒடுக்குமுறைக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றிய ஆழ்ந்த தத்துவரீதியான அறிவும், அதோடு வாழ்க்கையில் அவர்கள் பெற்றிருந்த வளமிக்க அனுபவமும் சேர்ந்து மார்க்சையும் எங்கெல்சையும் குறிப்பாக அரசியல் வழியில் அசாதாரண நுண்ணுணர்வுடன் செயல்படுவோராக்கின. அதனால்தான், மிகப் பலம்வாய்ந்த ஜாரிஸ்ட் அரசாங்கத்தை எதிர்த்து விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசில ரசியப் புரட்சியாளர்கள் நடத்திய வீரமிக்க போராட்டம் இவ்விரு முதிர்ந்த அனுபவம் வாய்ந்த புரட்சியாளர்களின் இதயத்திலே அனுதாபமிக்க எதிரொலியைக் கிளப்பியது.

மறுபுறத்தில், கானல் நீர் போன்ற பொருளாதார அனுகூலங்களை உத்தேசித்து, ரசிய சோசலிஸ்டுகளின் மிக உடனடியான, முக்கியமான இலட்சியமாகிய அரசியல் சுதந்திரம் போராடிப் பெறுவது எனும் இலட்சியத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் போக்கு அவர்களுக்குச் சந்தேகங்களை உண்டாக்கியது இயல்புதான்; அது சமுதாயப் புரட்சி என்ற மகத்தான இலட்சியத்துக்கு நேரடியாகத் துரோகம் புரிவதாகும் என்றுகூட அவர்கள் கருதினார்கள்.

எங்கெல்ஸ்

’பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை பாட்டாளி வர்க்கத்தின் பணியாகவே இருக்க வேண்டும்’ என்று மார்க்சும் எங்கெல்சும் இடையறாது போதித்து வந்தார்கள். மேலும் பாட்டாளி வர்க்கம் தனது பொருளாதார விடுதலைக்குப் போராட வேண்டுமென்றால் தனக்கென்று சில அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தவிரவும், ரசியாவில் ஏற்படும் அரசியல் புரட்சி மேற்கு ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்துக்கும் பிரம்மாண்டமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மார்க்கம் எங்கெல்சும் தெளிவாகக் கண்டார்கள்.

யதேச்சாதிகார ரசியா ஐரோப்பியப் பிற்போக்குக்கெல்லாம் எப்போதும் ஓர் அரணாக இருந்து வந்தது. 1870-ல் நடந்த போர் ஜெர்மனிக்கும் பிரான்சுக்குமிடையே நீண்ட காலத்துக்குப் பிணக்கு ஏற்படுத்திவிட்டது. அந்தப் போரின் விளைவாக ரசியா ஒரு மிக அனுகூலமான சர்வதேச நிலையை வகித்து வந்தது. அதனால் பிற்போக்கான சக்தி என்ற வகையில் யதேச்சாதிகார ரசியாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கவே செய்தது. சுதந்திரமான ரசியாதான், போலிஷ் மக்களையும், ஃபின்னிஷ் மக்களையும், ஜெர்மானியர்களையும், ஆர்மீனியர்களையும், பிற சிறிய இனத்தவர்களையும் ஒடுக்க வேண்டிய தேவையில்லாத ரசியாதான், அல்லது பிரான்சையும் ஜெர்மனியையும் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொள்ளும்படி எப்பொழுதும் தூண்டிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லாத ரசியாதான், நவீன ஐரோப்பா தன்னை போர்ச் சுமைகளிலிருந்து விடுவித்துக் கொள்வதைச் சாத்தியமாக்கும், ஐரோப்பாவிலுள்ள எல்லாப் பிற்போக்கு அம்சங்களையும் பலவீனப்படுத்தும், ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் சக்தியை அதிகரிக்கச் செய்யும். எனவே தான், மேற்கத்திய தொழிலாளர் இயக்கத்தின் வெற்றிக்காக ரசியாவில் அரசியல் சுதந்திரம் நிலைநாட்டப்படுவதை எங்கெல்ஸ் ஆர்வத்துடன் விரும்பினார். அவரது மறைவால் ரசியப் புரட்சியாளர்கள் தமது மிகச் சிறந்த நண்பரை இழந்துவிட்டனர்.

பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் போராட்ட வீரரும் ஆசானும் ஆகிய பிரெடெரிக் எங்கெல்சின் நினைவு என்றென்றும் பசுமையாய் நிலைத்திடுக !

(முற்றும்)

வி.ஐ.லெனின்
(1895 இலையுதிர் காலத்தில் எழுதப் பெற்றது. 1896-ல் “ரபோத்னிக்” (உழைப்பாளி) என்ற திரட்டு, எண் 1-2-ல் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது)

கோட்பாட்டில் ஊன்றி நிற்போம் ! கோட்பாடற்றவற்றை விட்டுக்கொடுப்போம் !

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 9

பாகம் – 8

கோட்பாடு என்றால் என்ன ?

தத்துவத்தின் கோணத்திலிருந்து மட்டுமே அதை அணுகுவதென்றால், விசயங்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பொது விதியே, கோட்பாடு என பொருள்படும். குறிப்பிட்ட விசயங்களை குறிப்பிட்ட வளர்ச்சி விதிகள் நிர்ணயிக்கின்றன. ஒரே மாதிரியான விசயங்கள் ஒட்டு மொத்தத்தில் ஒரே விதமான வளர்ச்சி விதிகளால்தான் நிர்ணயிக்கப்படுகின்றன;

கோட்பாடு என்னும் விசயத்தை நாங்கள் எப்படி பொருள்படுத்துகிறோம் என்றால், விசயங்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பொதுவான விதிகளின் அடிப்படையில் பிரச்சினைகளை அணுகவும் ஆராயவும் நாம் கையாளும் முறையென்று அணுகுகிறோம். பிரச்சினைகளின் பரிசீலனை, ஆராய்ச்சி ஆகியவற்றை நிர்ணயிக்கும் பொது விதி தவறாக இருக்குமேயானால், நமது நிலை, கண்ணோட்டம், முறை முதலியன தவறாக இருக்குமேயானால், பிரச்சினையை பரிசீலிப்பதிலும், ஆராய்வதிலும் பிழை நிச்சயம் ஏற்படத்தான் செய்யும். சில பிரச்சினைகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் விதிகளை நாம் தவறாகப் புரிந்து கொண்டோமேயானால், பின் அந்தப் பிரச்சினையை ஆராய்வதற்கு நாம் கையாளும் முறையும் நிச்சயம் தவறாகத்தானிருக்கும். அதனால் நாம் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினையை லேசாக மதிப்பிடக்கூடாது. கோட்பாட்டில் பிழை ஏற்படுமானால், பின் தனிப்பட்ட தவறுகள் மட்டுமின்றி, முறைப்படி, தீராத தன்மை கொண்ட, தொடர்ச்சியாகப் பல நடைமுறை பிரச்சினைகளை பாதிக்கும் தவறுகள் நேரும்.

கோட்பாடு சம்பந்தப்படாத நிகழ்கால கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் என்ன? முற்றிலும் நடைமுறை தன்மைபடைத்த பிரச்சினைகள் என்ன?

இந்த பிரச்சினைகள் பெரும்பாலும் தனிப்பட்ட பிரச்சினைகளாக, தினசரி அலுவல் அன்றாட வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகும். உதாரணமாக, மக்களைத் திரட்டுவது, அமைப்பு ரீதியாக ஒன்றுபடுத்துவது என்பது கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை; இதில் நமக்குள் யாருக்கும் வேறுபாடில்லை; மக்களைத் திரட்டுவது, அமைப்பு ரீதியாகச் ஒன்றுபடுத்துவது என்னும் பணியில் விசேச கவனம் செலுத்தப்பட வேண்டும். பொதுமக்கள் அமைப்புகள் அதற்கு தலைமை கொடுக்க வேண்டும். இத்தகைய பணியில் இராணுவமும் உதவிபுரிய வேண்டும்; தனது பங்கை செலுத்த வேண்டும்; இவை எல்லாம் கோட்பாடு சம்பந்தமான பிரச்சினைகள்; இதில் நமக்குள் யாருக்கும் அபிப்பிராய பேதமில்லை; அதாவது கோட்பாடு சம்பந்தமாக நமக்குள் மாறுபாடான அபிப்பிராயபேதமில்லை.

ஆனால் சில தோழர்கள் மக்கள் போக்குவரத்து படையும், இராணுவத்தின் மக்கள் போக்குவரத்து இலாகாவும் தற்காலிகமாக கலைக்கப்பட வேண்டுமென்றும், அவர்கள் பொதுமக்கள் அமைப்புகளில் வேலை செய்வதற்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் அபிப்பிராயங் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில தோழர்கள் மக்கள் போக்குவரத்து கோஷ்டி கலைக்கப்படக் கூடாது என்று கருத்துக் கொண்டிருக்கிறார்கள்; சில தோழர்கள் ஒரு பொதுமக்கள் அமைப்பு நான்கு இலாக்காக்களாகப் பிரிக்கப்பட வேண்டுமென்று யோசனை கூறுகிறார்கள்; மற்றவர்கள் அதை ஐந்தாகப் பிரிக்க வேண்டுமென்கிறார்கள். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் முற்றிலும் நடைமுறைத் தன்மை படைத்த பிரச்சினைகளேயாகும். அவை ஒன்றும் கோட்பாடு சம்பந்தமான பிரச்சினையன்று.

இன்னுமொரு உதாரணம்: இன்று எதிரியின் பின்னணியில், நமது எதிர்ப்பு யுத்தத்தின் போர்த்தந்திரக் கோட்பாடு, பிரிந்த கொரில்லா யுத்த போர்த்தந்திரமாகும். இந்த விசயத்தில் நமக்குள் அபிப்பிராய வேறுபாடு இல்லையென்றால், அதன் பொருள் போர்த்தந்திரம் பற்றிய கோட்பாட்டில் நமக்குள் அபிப்பிராய பேதமில்லை என்பதேயாகும். ஒரு குறிப்பிட்ட தளபதி, நிலைமையின் நிர்ப்பந்தத்தினால் உந்தப்பட்டு, அல்லது சாதகமான விசேஷ வாய்ப்புகள் காரணமாக அணிவகுத்த யுத்தபோர் நடத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம்; அது வெற்றி அடையலாம் அல்லது தோல்வியிலும் முடியலாம். இது தனிப்பட்ட நடைமுறை பிரச்சினை; இதற்கும் கோட்பாடு பிரச்சினைக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லை; இம்மாதிரி நடத்தப்படும் போர்கள் ஓரிரண்டு தவறாகவே இருந்தபோதிலும்; இத்தவறுகள் அப்பொழுதும் தனிப்பட்ட தவறுகளேயாகும்;

தளபதி, எதிரியின் அணிகளுக்குப் பின்னால் அணி வகுத்த யுத்தம் நடத்த வேண்டுமென்பதை ஒரு கோட்பாடாகக் கொள்ளாத வரையில் அது தனிப்பட்ட தவறுதானாகும். ஒருவேளை குறிப்பான ஒரு நிலையின் காரணமாக, நன்றாக போராடவும் கூடும். அதனால் இம்மாதிரியான தனிப்பட்ட, முற்றிலும் நடைமுறைத் தன்மை கொண்ட பிரச்சினைகளில் நாம், நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அடம்பிடித்துக் கொண்டும் ஒரு முடிவில்லாத முறையில் வாதித்துக் கொண்டும் இருக்கக் கூடாது.

மற்றொரு உதாரணம் : நமது ராணுவம், இன்றுள்ள தயாரிப்புடன் விரோதியின் பலமான ஸ்தானங்களையும், பிரதான நகரங்களையும் கோட்பாட்டின்படியே தாக்கக்கூடாது. இந்த கோட்பாடு பற்றி நமக்கு மாறுபட்ட அபிப்பிராயங்கள் இல்லையென்றால் விசேஷ நிலைமையை உத்தேசித்து அல்லது விசேஷ அவசியத்தினால் ஒரு முன்னேறிய தாக்குதல் தொடுத்தாலும், எதிரியின் ஒரு ஸ்தானத்தையோ அல்லது நகரத்தையோ கைப்பற்றினாலும், அது கோட்பாடு சம்பந்தப்படாத தனிப்பட்ட நடைமுறை பிரச்சினையேயாகும்.

ஆயினும் இந்த பலமான ஸ்தானத்தை, அந்த நகரத்தை பிடித்து விட்டோம், ஆதலின் விரோதியின் எல்லா பலம் பொருந்திய ஸ்தானங்களையும், நகரங்களையும் உடனே தாக்கத் தொடங்குவோம் என்றால், இங்கு கோட்பாட்டு பிரச்சினை எழுகிறது. உள்நாட்டு யுத்தகால கட்டத்தில் பெரிய நகரங்களின் மீது தாக்குதல்கள் தொடுக்க வேண்டுமென்று நமது தோழர்கள் சிலர் வாதித்தார்கள்; சில பெரிய நகரங்களை தாக்கும்படி செஞ்சேனையை கட்டளையிட்டார்கள்; இத்தகைய நடைமுறைப் பிரச்சினைகள் கோட்பாடு சம்பந்தப்பட்டதாகும்; ஏனெனில் பெரிய நகரங்களை செஞ்சேனை தாக்க வேண்டு மென்னும் கோட்பாட்டில் உள்ள பிடிப்பினால் உந்தப்பட்டுத்தான் பெரிய நகரங்களைத் தாக்கியுள்ளனர். கோட்பாடு சம்பந்தப்பட்ட இத்தகைய நடைமுறைப் பிரச்சினையில், கோட்பாடு சம்பந்தமாக நாம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. கோட்பாட்டில் இன்னும் பெரிய நகரங்கள் மீது முன்னேறி தாக்குதல்கள் தொடுக்க கூடாது என்றுதான் நிற்க வேண்டும்.

ஸ்தூலமான நடைமுறைப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் பல்வேறு பரிகாரங்கள் இருக்கும். ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் போவதற்கு பெரும்பாலும் யதார்த்தத்தில் சாத்தியமான பல்வேறு பாதைகளிருக்கும். இந்தப் பரிகாரங்களும், பாதைகளும், அந்த சமயத்தில் நம்மை எதிர்நோக்கும் நிலைமைக்குத் தக்கவாறு ஒவ்வொன்றும் அதனதன் சாதகபாதக அம்சங்களைக் கொண்டிருக்கும். சில வழிகளும், பாதைகளும் நமக்கு மிகவும் சாதகமாக இருக்கக் கூடும்; ஆனால் அதே சமயத்தில் அபாயம் நிறைந்ததாயிருக்கும். அதனால் பாதுகாப்பை உத்தேசித்து அதைக் காட்டிலும் குறைந்த அளவுக்கே சாதகமாகவுள்ள வழியையோ, அல்லது பாதையையோ நாம் பின்பற்றுவது உசிதமாக இருக்கும்.

அதனால் இத்தகைய ஸ்தூலமான, முற்றிலும் நடைமுறைத் தன்மை கொண்ட பிரச்சினைகளில், மாறுபட்ட அபிப்பிராயங்கள் எழுந்தால், அவ்வபிப்பிராயங்கள் கோட்பாடு சம்பந்தப்பட்டவையல்லாத வரையில், சமரசம் செய்து கொள்வதற்கும், விட்டுக் கொடுப்பதற்கும், மற்றவர்களுடைய அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்வதற்கும் நம்மாலியன்றளவுக்கு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். “சமரசம் செய்து கொள்வதில் உன் ஆற்றலைக் காட்டு ” அப்பொழுது பிரச்சினைகள் சுமுகமாக முடியும்; பிரச்சினைகள் உடனுக்குடன் தீரும். நாம் எப்பொழுதுமே நமது அபிப்பிராயத்தையே வலியுறுத்திக் கொண்டிருக்கக் கூடாது; மற்றவர்களையே விட்டுக் கொடுக்கும்படியும். இணங்கும் படியும் நமது அபிப்பிராயப்படியே காரியங்களைச் செய்யும்படியும் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் பிரச்சினைகள் தீருவதை காலதாமதப்படுத்தியவர்களாவோம்; வேலையின் முன்னேற்றத்தை தடை செய்தவர்களாவோம்; சச்சரவுகளை வலுக்கச் செய்வோம்; கட்சிக்குள் வீண் வம்பளக்கும் போக்கை பலப்படுத்தியவர்களாவோம்; தோழர்களுக்குள் ஒற்றுமைக்கு இடைஞ்சல் செய்தவர்களாவோம். அதனால்தான் முற்றிலும் நடைமுறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மாறுபட்ட அபிப்பிராயங் கொண்ட கட்சி அங்கத்தினர்களுடன் சாத்தியமான எல்லா வகையிலும் சமரசம் செய்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது, கோட்பாடு சம்பந்தமில்லாத நிகழ்கால கொள்கை சம்பந்தப்பட்ட கொள்கைப் பிரச்சினைகள் என்ன என்பதும், முற்றிலும் நடைமுறை சம்பந்தமான பிரச்சினைகள் என்ன என்பதும் நமக்குத் தெரியும்; அவை போராட்டத்தின் குறிக்கோள், அக்குறிக்கோளை எய்துவதற்கு உகந்த போராட்ட வடிவம், போர்த்தந்திரம், செயல்தந்திரம், நமது பொதுவான நிலை, குறிப்பான பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட நிலை முதலியவற்றுடன் சம்பந்தப்படாதவை. மேலே கூறியுள்ள உதாரணங்கள் இவ்வகைப்பட்ட பிரச்சினைகளாகும்.

இனி இதுவரை சொன்னதைத் தொகுத்துக் கூறுவோம். கட்சி, தொழிலாளி வர்க்கம் ஆகியவற்றிற்கான போராட்ட நலனை மனதிற்கொண்டே சகல பிரச்சினைகளிலும் ஈடுபட வேண்டுமென்பது நமக்கு வழிகாட்டும் பொதுக் கோட்பாடு. இந்தப் பொதுக் கோட்பாட்டிற்கு எல்லாம் உட்படுத்த வேண்டும். இந்தப் பொதுக் கோட்பாட்டிற்கு முரணான எந்தக் கண்ணோட்டமும், அபிப்பிராயமும், செயலும் எதிர்க்கப்பட வேண்டும். பல்வேறு கோட்பாடுகளும், பெரிய கோட்பாடுகள் எனவும், சிறிய கோட்பாடுகள் எனவும் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. பகுதி முழுமைக்குட்பட்டது;

உடனடி அவசியம், நீண்டகால அவசியத்திற்கு உட்பட்டது சிறிய கோட்பாடுகள், பெரிய கோட்பாடுகளுக்கு உட்பட்டவை என்பதே விதி. கோட்பாடு சம்பந்தமான விசயங்களில் எழும் வேற்றுமை விசயத்தில் ஒத்துப் போவது, சமரசம் செய்து கொள்வது என்பதற்கு இடமேயில்லை; ஒருமைப்பாடு ஏற்படுவதற்கு அப்பிரச்சினைகளை பரிபூரணமாக விவாதிக்க வேண்டும். ஆயினும் கோட்பாடு சம்பந்தப்படாத எல்லா பிரச்சினைகளிலும் விடாப்பிடியாக விட்டுக் கொடுக்காமலும் ஒத்துப் போகாமலும் இருக்கக் கூடாது; ரொம்பவும் வன்மையாகப் போராடவும் வாதிக்கவும் கூடாது; இல்லாவிடில் நமது வேலை தடைபடும். ஐக்கியம் சீர்குலையும்.

உட்கட்சிப் போராட்டத்தில் தன்னுடைய அரசியல் கொள்கை “சரியானதாக” இருக்கும் வரையில், சில அமைப்பு தவறுகளை அவர் செய்தால் அதனால் ஒன்றுமில்லை. அல்லது அது இரண்டாந்தர முக்கியத்துவம் கொண்டது தான் என்று ஒரு தோழர் சொல்வதை நான் ஒருமுறை கேள்விப்பட்டேன். அதனால் உட்கட்சிப் போராட்டத்தில் அமைப்புக் கட்டுப்பாட்டிற்கு ஒவ்வாத பல்வேறு வழிகளிலும் தனது எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்கு அனுமதியுண்டு என்று அவர் அபிப்பிராயப்படுகிறார். இத்தகைய வாதமும், கண்ணோட்டமும் தவறானது என்று சொல்லத் தேவையில்லை. ஏனெனில் சரியான அரசியல் கொள்கையும், சரியான அமைப்புக் கொள்கையும் ஒன்றுக்கொன்று முரணானது என்று அவர் கருதுகிறார். கட்சிக்குள் ஒழுங்கையும் அமைப்பையும் சீர்குலைப்பது, கோட்பாடு விசயத்தில் பெருந்தவறு இழைப்பதாகும் என்று அவருக்குத் தெரியவில்லை. விசேஷமாக இன்று அது பெருந்தவறாகும். கட்சிக்குள் உள்ள ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துவதென்பது எதிரிக்குச் செய்யும் சிறந்த சேவையாகும்; கட்சியின், தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு மிகப்பெருந் தீங்கிழைப்பதாகும்; கோட்பாடு சம்பந்தப்பட்ட வேறு எத்தவறைக் காட்டிலும் கடுமையான தவறு செய்ததாகும்.

கோட்பாடு சம்பந்தப்பட்ட இந்த விசயத்திலும் சரி வேறு பல பிரச்சினைகளிலும் சரி, குறிப்பிட்ட காலத்தில் பல்வேறு கோட்பாடு பிரச்சினைகள் கட்சியின் நலனை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்கிற அடிப்படையில் ஒப்பிட்டும், பாகுபாடு படுத்தியும் பார்ப்பதற்கும் தோழர்கள் கூடுமான வரையில் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். பெரிய கோட்பாட்டிற்கு சிறிய கோட்பாடு உட்பட வேண்டும், முழுமைக்கு பகுதி உட்பட வேண்டும். என்னும் விதிப்படி எந்த கோட்பாடுகள் சம்பந்தமாக அடம் பிடிக்கக் கூடாது; தற்காலிகமாக விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், எந்தக் கோட்பாடு பிரச்சினைகளில் உறுதிகாட்ட வேண்டுமென்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும் நாம் முடிவு செய்வோம்.

உட்கட்சி ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும் நிலை நிறுத்துவதற்காக, இந்த அளவுக்கு முக்கியத்துவமோ அல்லது அவசரமோ இல்லாத கோட்பாட்டுப் பிரச்சினைகள் சம்பந்தமாக மாறுபட்ட அபிப்பிராயங் கொண்ட, கட்சியில் உள்ள மற்றவர்களுடன் சில சமயங்களில் தற்காலிகமான  சமரசம் செய்து கொள்ள வேண்டியிருக்கும். அம்மாதிரியான கோட்பாட்டுப் பிரச்சினைகளை தற்காலிகமாக நாம் கிளப்பக்கூடாது. அதன் மீது ஓயாமல் விவாதம் நடத்திக் கொண்டிருக்கக் கூடாது. அதற்குப்பதிலாக அந்தச் சமயத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரச்சினைகளை நாம் வலியுறுத்த வேண்டும். இது கோட்பாட்டில் சமரசம் செய்து கொண்டதாகாது; நடுவாந்திரப் பாதையாகாது; யதார்த்த செயலில் செய்து கொண்ட சமரசமாகும். மெஜாரிட்டி முடிவுக்கு பணிவதேயாகும்.

மேலே கூறியுள்ளவை கட்சிக்குள் உள்ள கோட்பாடற்ற போராட்ட பிரச்சினைகளாகும். உட்கட்சி கோட்பாடற்ற போராட்டமும், யாந்திரீகமான, மிதமிஞ்சிய போராட்டமும் எதிலிருந்து வருகிறது? அதன் தோற்றுவாய்கள் என்ன? பின்வருவனவற்றிலிருந்து அவை உதிக்கின்றன:

முதலாவதாக, கட்சிக்குள் நமது தோழர்களின் தத்துவப் பயிற்சி பொதுவாக மிகக்குறைவாக இருக்கிறது; பலவிதங்களில் அவர்களது அனுபவம் போதுமானதாக இல்லை. நீண்ட காலத்திற்கு பூரா கட்சியின் மத்தியமும், தலைமையும் யதார்த்தத்தில் உருப்பெற வேயில்லை; இன்று வரை பல்வேறு ஸ்தலங்களில் வெகு சில தலைமைகளும், மத்தியங்களும்தான் உருப்பெற்று இருக்கின்றன.

இரண்டாவதாக, கட்சிக்குள் நிறைய குட்டி பூர்ஷ்வா நபர்கள் இருக்கிறார்கள். குட்டி பூர்ஷ்வாவின் வெறி, ஆவேசம், விவசாய குட்டி பூர்ஷ்வாவின் பழிதீர்க்கும் மனோபாவம் முதலியன உட்கட்சிப் போராட்டத்தை பாதித்துக் கொண்டேதானிருக்கின்றன.

மூன்றாவதாக, கட்சிக்குள் நிலவும் ஜனநாயக வாழ்வு அசாதரணமாயிருக்கிறது. பிரச்சினைகளை ஒருவரோடு ஒருவர் யதார்த்த நோக்குடன் விவாதிக்கும் முறை இன்னும் நிலைநாட்டப்படவில்லை; முரட்டுத்தனமாகவும், தன்மனப் பார்வையுடனும் பிரச்சினைகளை ஆராயும், முடிவுகட்டும் முறை பெருமளவுக்கு இன்னும் இருந்து வருகிறது.

நான்காவதாக, சந்தர்ப்பவாதிகள் கட்சிக்குள் ஊடுருவி விட்டார்கள்; நம் தோழர்களில் ஒரு பகுதியினர் உள்ளத்தில் ஒரு சந்தர்ப்பவாத மனோபாவப் போக்கு இருந்து வருகிறது; தாங்கள் எவ்வளவு நல்ல முறையில் “போல்ஷ்விக் ஆகியுள்ளார்” என்பதைக் காட்டுவதற்காக, வலதுசாரியைக் காட்டிலும் “இடதுசாரி” மேலானது என்று எண்ணிக்கொண்டு அவர்கள் பெரும்பாலும் வேண்டுமென்றே “இடதுசாரி”யாக இருப்பதற்கு முயலுகின்றனர். தங்கள் சொந்த கௌரவத்தை உயர்த்தும் பொருட்டுமற்றவர்களைத் தாக்குகிறார்கள்.

ஐந்தாவது ட்ராட்ஸ்கிய துரோகிகளும் எதிர்புரட்சிக்காரர்களும் கட்சிக்குள் ரகசியமாக நுழைந்து விட்டார்கள்; உட்கட்சிப் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டு கட்சியை சீர்குலைக்கப் பார்க்கின்றனர். பெரும்பாலும் இந்த ட்ராட்ஸ்கிய துரோகிகள், கட்சிக்கொடியின் மறைவில் சில தோழர்களை வேண்டுமென்றே தாக்குகின்றனர். அதன் பிறகு ஒரு ட்ராட்ஸ்கிய துரோகி தாக்கப்பட்ட தோழரைத் தொடர்பு கொள்வதற்கும், தங்கள் கோஷ்டியில் ஒரு ஒற்றனாக அவரை இழுப்பதற்கும், அனுப்பப்படுவான்.

உட்கட்சிப் போராட்டத்தில் காணப்படும் திரிபுகளின் தோற்றுவாய்கள் இத்தகையவை.

ஆரம்பத்திலிருந்தே நமது கட்சியில் தீவிர சுய விமர்சனமும் , உட்கட்சிப் போராட்டமும் இருந்து வந்திருக்கிறது இது முற்றிலும் அவசியமானது; ரொம்ப நல்லதும் கூட. நமது உட்கட்சிப் போராட்டத்தில் ரொம்ப விசயங்கள் சரியாகவும் பொருத்தமாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதனால் நமது கட்சி, உட்கட்சிப் போராட்டத்தில் பலதும் சாதித்திருக்கிறது; கட்சியின் தத்துவப் பயிற்சி நிலையையும் ஓரளவுக்கு உயர்த்தியிருக்கிறோம். இந்த சுயவிமர்சனங்களும், உட்கட்சிப் போராட்டங்களும்தான் நமது கட்சியை முன்னேற்றப் பாதையில் உந்திச் செல்லும் சக்தியாக விளங்குகின்றன என்பதை மறுக்க முடியாது. கட்சிக்கு அவை இன்றியமையாதவை.

ஆயினும் நமது கட்சியின் நீண்ட சரித்திரப் பூர்வமான வளர்ச்சியில் கடந்தகால உட்கட்சிப் போராட்டம் முறையாக நடத்தப்படவில்லை என்பதையும் மறுக்க முடியாது. அதன் விளைவாக உட்கட்சிப் போராட்டம் பெருஞ்சேதம் உண்டாக்கிற்று. அதனால் இன்று நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், கடந்த கால தவறிலிருந்து நாம் பலன் பெற வேண்டும்; வீணாக நாம் பெரும்நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த கால உட்கட்சிப் போராட்டத்தின் சரித்திரப் பூர்வமான படிப்பினைகளை கற்றறிவதன் மூலம் கட்சியின் மகத்தான முன்னேற்றத்தை நாடவேண்டும்.

உட்கட்சிப் போராட்டத்தில் கூடுதலான சாதனைகளைப் பெறுவதற்கும், குறைந்த நஷ்டத்தில் கட்சியின் அதிகபட்ச முன்னேற்றத்தை சாதிப்பதற்கும் நிற்பதே நிகழ்காலத்திலும் எதிர் காலத்திற்கும் உட்கட்சிப் போராட்டக் கொள்கையாகும். சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் சரித்திரப் பூர்வமான உட்கட்சிப் போராட்டப் படிப்பினைகளை கற்றறிவதன் மூலம் நாம் அதை வகுத்து வைக்கவேண்டும். இதற்கு கடந்தகால உட்கட்சிப் போராட்டத்தில் காணும் பல்வேறு திரிபுகளையும் தவறுகளையும் அறவே சரிப்படுத்தியாக வேண்டும்; உட்கட்சிப் போராட்டத்தை முறையாகவும் பலன் தரும் முறையிலும் நடத்தவேண்டும்.

(தொடரும்)

சூரப்பாவை இடைநீக்கம் செய்வாரா தமிழக ஆளுநர் ?

ண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு வலுவடைந்து, அவர் மீது விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்ட பின்னரும் கூட அவரை  அதே பதவியில் நீடிக்கச் செய்து அழகுபார்க்கிறது தமிழக அரசு.  எதிர்க்கட்சிகளின் கண்டனம் மற்றும் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவிவரும் #TNgovtDismiss_Surappa டிரெண்டிங்கும் இணைந்து தாக்கம் செலுத்திய பின்னர்தான், விதிமுறைப்படி சூரப்பா இடைநீக்கம் செய்யப்படுவார் என அறிவித்திருக்கிறார் உயர்கல்வி அமைச்சர் அன்பழகன்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2018-ம் ஆண்டு சூரப்பா நியமிக்கப்பட்டது முதல், இன்றுவரையில்  மோடி அரசின் கல்வி கார்ப்பரேட்மய காவிமய அஜெண்டாவுக்கு ஏற்ற வகையில் செவ்வனே செயல்பட்டுவந்தார்.

திறமையான பல்வேறு தமிழக பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இருக்கையில் கர்நாடகாவில் இருந்து ஏன் சூரப்பாவைக் கொண்டுவர வேண்டும் என எதிர்கட்சிகளும் கல்வியாளர்களும் அச்சமயத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு அவரது “திறமையையும்”, “நேர்மையையும்” பாராட்டித் துதிபாடி கவர்னர் மாளிகையே அறிக்கை வெளியிட்டது. அந்த அளவிற்கு மத்திய அரசிற்கு நெருக்கமானவர் சூரப்பா .

அந்த ”நேர்மையான”, ”திறமையான” சூரப்பா தான் ரூ. 280 கோடி அளவிலான லஞ்ச, ஊழலில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

அண்ணா பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கான உபகரணங்கள் வாங்குவதில் சுமார் 200 கோடி ஊழல் செய்திருப்பதாக, கடந்த பிப்ரவரி மாதமே வந்த புகாரைக் கடந்த 9 மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டு, தற்போது திடீரென விசாரணைக் கமிசன் அமைத்துள்ளது எடப்பாடி அரசு.

மேலும், அண்ணா பல்கலைக்கு தற்காலிக ஆசிரியர் பணிக்கான பேராசிரியர் நியமனத்தில், ஒரு பணி நியமனத்துக்கு ரூ. 13 இலட்சம் முதல் ரூ.15 இலட்சம் வரை நிர்ணயித்து, மொத்தமாக ரூ. 80 கோடி வரை லஞ்சப் பணம் கைமாறியிருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்த இலஞ்சப் புகாரில் அண்ணா பல்கலையின் துணைவேந்தர் சூரப்பா மற்றும் துணை இயக்குனர் சக்திநாதன் ஆகிய இருவரும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீது தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், சூரப்பா தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, தனது மகளை அண்ணா  பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக நியமனம் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கவிருப்பதாகத் தெரிவித்தது எடப்பாடி அரசு.

லஞ்ச ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு உள்ளாகும் நபர் அதிகாரத்தில் நீடித்தால், விசாரணை நேர்மையாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே.    ஆனாலும் சூரப்பாவையோ, சக்தி நாதனையோ அதே பதவியில் அமர்த்தி அழகுபார்த்துக் கொண்டிருந்தது எடப்பாடி அரசு.

படிக்க :
♦ பொறியியல் படிப்பில் கீதை : துளி விஷம் !
♦ அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா ? மாநில உரிமை பறிப்பா ? | EBook Download

இதனைக் கண்டித்து திமுக, சிபிஐ, விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கண்டன அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சூரப்பாவை பதவி நீக்கம் செய் ( #TNgovtDismiss_Surappa ) என வலைஞர்கள் ட்ரெண்டிங் செய்யத் துவங்கிவிட்டனர்.

புறச்சூழலில் இப்படி ஒரு நெருக்கடி வரத் துவங்கியதும்தான் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சூரப்பா மீதான நடவடிக்கை குறித்து வாய் திறந்துள்ளார். “விதிகளுக்கு உட்பட்டு அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார் அன்பழகன். அதாவது ஆளுநர் இடைநீக்க உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தால்தான் இடைநீக்கம் செய்ய முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அன்பழகன்.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மிகவும் திமிரோடு பதிலளித்துள்ளார் சூரப்பா. தன் மீதான ஊழல் புகார் குறித்துப் பதிலளிக்கையில், இவ்வளவு பெரிய தொகைக்கு அவர்கள் எங்கிருந்து வந்தடைந்தனர் என்பது தெரியவில்லை என்றும், தமிழக அரசின் விசாரணை குறித்துக் கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது மகளுக்கு அண்ணா பல்கலையில் கவுரவ விரிவுரையாளர் பணி வழங்கியது தொடர்பான குற்றச்சாட்டு குறித்துப் பேசுகையில், தனது மகளின் சேவை அண்ணா பல்கலைக்குத் தேவை என்பதால்தான் பதவியில் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “ பணி நியமனங்களுக்கு பணம் வாங்கியிருந்தால் ஆதாரத்தை காட்டட்டும்” என்றும், ”என் மீதான புகார்கள் எனக்கே ஆச்சரியம் தருகின்றன. எனது பதவிக்காலத்தில் நேர்மையை கடைபிடித்துள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார் சூரப்பா.

சூரப்பா ஒருவேளை நேர்மையாளராக இருந்திருக்கலாம், ஆனால் யாருக்கு நேர்மையாக இருந்தார் என்பதுதான் கேள்வி ?

பஞ்சாப் ஐ.ஐ.டியில் இயக்குனராகப் பணியாற்றிய காலத்தில் சூரப்பா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஐ.ஐ.டி-க்கான புதிய கட்டிடங்கள் கட்ட ஒதுக்கப்பட்ட ரூ. 750 கோடியை முதல் ஐந்தாண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு, கடைசி ஆண்டில் செய்ததன் காரணமாக அந்தக் கட்டுமானச் செலவு ரூ.1958 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதற்கு அன்றைய இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சூரப்பாவின் நியமனத்தின் போதே தெரிவித்துள்ளார்.

மேலும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் கண்டுபிடிப்பை தமது கண்டுபிடிப்பாகக் காட்டியது உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகள் சூரப்பா மீது இருந்ததை  ராமதாஸ் சுட்டிக் காட்டியிருந்தார்.

ரூ. 750 கோடி செலவில் முடிக்க வேண்டியதை 1958 கோடிக்கு உயர்த்தியதன் பின்னணியில் என்ன நேர்மை இருந்திருக்க முடியும் ? ஒருவேளை சூரப்பா இப்போது கேட்பது போல அப்போதும் “ஆதாரம் இருந்தால் காட்டமுடியுமா?” என்று கேட்டு தனது நேர்மையை “காப்பாற்றியிருக்கலாம்” !

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அண்ணா பல்கலை ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வரின் தனிப் பிரிவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சூரப்பா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறது.

கொரோனாவை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகளை ரத்து செய்துள்ள சூழலில், தேர்வுக் கட்டணமாக ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ய உத்தரவிட்டிருக்கிறார் சூரப்பா. ஆய்வே நடத்தாமல் 8000 ஆய்வு மாணவர்களிடமிருந்து செமஸ்டர்கட்டணம் வசூலித்ததாகவும் சூரப்பாவைக் குற்றம்சாட்டியிருக்கிறது ஆசிரியர் கூட்டமைப்பு.

படிக்க :
♦ அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் !
♦ அண்ணா பல்கலையின் மோசடிப் பட்டம் : ஆளுநர் அலுவலக முற்றுகை !

அதே போல, உயர் சிறப்புத் தகுதி கொண்ட கல்வி நிறுவனமாக, அண்ணா பல்கலையை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ள விவகாரத்தில்,  தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார் சூரப்பா. அக்கடித்தில், மாநில அரசினுடைய நிதிப் பங்கீடு இல்லாமலேயே தம்மால் ஐந்தாண்டுகளில் ரூ.1500 கோடி திரட்ட முடியும் என்றும், அண்ணா பல்கலைக்கு உயர் சிறப்புத் தகுதி வழங்கும்படியும் எழுதியுள்ளார்.

ஒரு மாநில அரசால் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் செயல்பட்டுவரும் ஒரு பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்தின், தலையெழுத்தை எங்கிருந்தோ கொண்டுவரப்பட்டு நியமிக்கப்பட்ட ஒரு துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவு செய்கிறார் என்றால், அதற்குக் கண்டிப்பாக பின்னணியில் ஒரு சித்தாந்தமும், நோக்கமும் இருக்க வேண்டும்.

மாநில அரசின் நிதியில்லாமல், அண்ணா பல்கலையின் நிதியை தாமாகத் திரட்டுவது என்றால், சூரப்பாவால் நோட்டு அச்சடித்தா விட முடியும் ? மாணவர்களிடமிருந்து கல்விக்கட்டணமாகத்தான் கறக்க முடியும். கல்விக் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம், அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர் சிறப்புக் கல்விநிறுவனத்தில் இனி சாதாரண ஏழை, நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களை சேரவிடாமல் தடுப்பதுதான் இதன் பின்னணியில் இருக்கின்ற காரணம்.

மத்தியில் ஆளும் மோடி – சங்க பரிவாரக் கும்பல் தமது தனியார்மயமாக்க – பார்ப்பனிய செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சரியான நபர்களைக் கண்டறிந்து, கல்வி, கலாச்சாரம், வரலாறு, அறிவியல் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்தும் பொறுப்புகளில் அவர்களை நியமித்து வருகிறது. ஒட்டுமொத்த நாட்டின் வளங்களையும், சந்தையையும், கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுப்பதற்காகவும், பார்ப்பனிய சனாதனத்தை கல்வியில் உள்நுழைக்கவும் சிறப்பாக செயல்படக் கூடிய “செயல்வீரர்களை” தட்டிக் கொடுத்து ஊக்கமளித்து தனது நோக்கத்தை நிறைவேற்றுவதை நோக்கி முன் செல்லுகிறது பாஜக அரசு.

சங்கபரிவாரத்தின் அத்தகைய ஒரு செயல்வீரர்தான் ‘சூரப்பா’. பொறியியல் கல்லூரி பாடத்திட்டத்தில் பகவத் கீதையைக் கொண்டுவந்ததிலேயே நம் அனைவருக்கும் அது தெரியவந்துவிட்டது. இந்நிலையில், அந்த செயல்வீரரை இடைநீக்கம் செய்ய தமிழக அரசு கேட்டதுமே, பாஜகவின் கைத்தடியாகச் செயல்படும் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதியளித்துவிடுவாரா ?

“சூரப்பாவை பதவி நீக்கு” #TNgovtDismiss_Surappa என சமூகவலைத்தளங்களில் செய்யப்படும் டிரெண்டிங், தமிழக அரசை வேண்டுமானால் அசைக்கலாம், சூரப்பாவை நீக்கு என வீதியில் இறங்கி டிரெண்டிங் செய்யும்போது மட்டுமே சங்க பரிவார “புரோகித்துகளை” அசைத்துப் பார்க்க முடியும்.

கர்ணன்

நெல்லை முத்தூட் ஃபைனான்ஸ் மோசடி ! பணிய வைத்த போராட்டம் !

நெல்லை மாவட்டம் விளாகம் பகுதியைச் சேர்ந்த விவசாயி செம்புக் குட்டி. தனது மனைவியின் பெயரில் டவுன் தெற்கு ரத வீதியில் உள்ள முத்தூட் ஃபைனான்ஸ் கிளையில், நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருந்தார். அதற்குரிய அசலையும் வட்டியையும் எந்த ஒரு தாமதமில்லாமல் முறையாக கட்டியும் வந்தார்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கடந்த ஜனவரி 20-ம் தேதி அவரது மனைவி காலமாகிவிட்டார். உடனே இந்தத் தகவலை தனது மூத்த மகன் வேல்முருகன் மூலம் பைனான்ஸ் அலுவலகத்திற்கு நேரில் வந்தும் தகவல் தெரிவித்திருந்தார். அப்போதே ”கடனுக்கான அசலையும், வட்டியையும் செலுத்தி விடுகிறேன். அதன்பின்பு வாரிசு சான்றிதழ் போன்ற ஆவணங்களை கொடுத்துவிட்டு, நகைகளை பெற்றுக் கொள்கிறேன்” என்றும் வேல்முருகன் கூறியுள்ளார். அந்தச் சமயத்திலேயே கடனுக்கான அசல் தொகையில் ரூபாய் ஒரு லட்சம் செலுத்திவிட்டும் வந்துள்ளார் வேல்முருகன்.

அதன் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு அசலும் வட்டியும் செலுத்தி வந்துள்ளார். பின் கொரோனா ஊரடங்குக் காலத்தில் ஆன்லைன் மூலமாக அசல் வட்டியை செலுத்த முயற்சித்தபோது, சேவை முடக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கு முடிந்த பின்பும் இதே நிலை தொடர்ந்ததால், நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்த முத்தூட் பைனான்ஸ் கிளையை அணுகி அசலையும் வட்டியையும் செலுத்த முயற்சித்துள்ளார். அங்கும் “System” அனுமதிக்கவில்லை. காரணம் கேட்டபோது customer death என்று lock செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இது குறித்து முன்கூட்டியே எந்த தகவலையும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தெரிவிக்கவில்லை.

படிக்க :
♦ கடன் நெருக்கடி தரும் நிறுவனங்களுக்கு எதிராக களமிறங்கிய திருச்சி மக்கள் !
♦ பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !

பின் மறுநாள் வேல்முருகன் அவர்கள் டவுன் முத்தூட் மேனேஜர் ஞானசேகரனை சந்தித்து விபரம் கூறியுள்ளார். அதற்கு மேனேஜர் ஞானசேகரன் ஹெட் ஆபீஸில் பேசி குறைகளை நிவர்த்தி செய்வதாக கூறி உள்ளார்.

”நகை கடனுக்கான தொகையை செலுத்த நாங்கள் தயாராகத்தான் உள்ளோம். உங்கள் பக்கம்தான் பிழை. எனவே லாக்டவுன் முடிகிற வரை வட்டி தொகையை கழிக்க வேண்டும்” என்று வேல்முருகன் கூறியுள்ளார். அதற்கும் மேனேஜர் ஞானசேகரன் ஹெட் ஆபீஸில் பேசித்தான் முடிவு செய்யமுடியும் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து தொடர்பு கொண்டு பேச முயற்சித்தும் பலமுறை ஃபோன் எடுக்காமல் மேனேஜர் அலட்சியப்படுத்தி உள்ளார். பின்னர் வேல்முருகன் நேரில் சந்தித்து பேசியபோது, மேனேஜர் ஞானசேகரன் “நீங்கள் Legal document சமர்ப்பிக்கும் வரை அசலை செலுத்த முடியாது. ஆனால் வட்டி மட்டும் ஏறிக்கொண்டே இருக்கும் என்று ஈவிரக்கமின்றி பேசியுள்ளார். இதுதானே இவர்கள் ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் ஏமாற்றும் உத்தி.

பாதிக்கப்பட்ட தரப்பு அதே லாக்டவுன் சமயத்தில் கட்டிய அசல் தொகை ஒரு லட்சத்தை வாங்கிக் கொள்வதற்கு எந்த ரூல்சும் தடையாக இல்லை. அதையும் கணக்கில் ஏற்றாமல் ஏமாற்றி, பழைய தொகையின் அடிப்படையிலேயே வட்டியைப் போட்டு வந்துள்ளார்கள். எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

வலது : நெல்லை டவுனில் உள்ள முத்துட் ஃபைனாஸ் அலுவலகம்
இடது : அலுவலகத்தின் முன் அமைப்புகள் போராட்டம்

வேல்முருகன் அவர்களின் பெரியம்மா (வயதானவர்) முத்தூட் பைனான்சுக்கு சென்று மேனேஜரிடம் வாரிசு சான்றிதழ் தாமதமாவது குறித்து பேசியபோது, மேனேஜர் எகத்தாளமாக “எல்லோருக்கும் வாரிசு சான்றிதழ் கிடைக்கிறது உங்களுக்கு மட்டும் கிடைக்கலையா” என்று இறந்த துயரத்தை கூட பொருட்படுத்தாமல் இழிவுபடுத்தியுள்ளார்.

தொடர்ந்து முத்தூட் பைனான்ஸ் மேலதிகாரிகளிடம் பேசியும் எந்த பயனும் இல்லை. போனை எடுக்காமல் அலட்சியப்படுத்தி உள்ளனர். வட்டி மட்டும் ஏறிக்கொண்டே வந்துள்ளது. உண்மையான கணக்கின்படி வெறும் 23 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே வட்டி கட்ட வேண்டிய நிலையில் ரூபாய் 95 ஆயிரம் வரை தாண்டியுள்ளதாகப் பேரிடியை இறக்கி உள்ளனர்.

ஆறு மாதமாக அலைந்த அந்த குடும்பம் மன உளைச்சலுக்கு ஆளானது. இந்நிலையில்தான் வேல்முருகன் அவர்கள் நமது அமைப்புகளை நாடினார். உடனடியாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தை அம்பலப்படுத்தியும், மேனேஜர் ஞானசேகரனை கைது செய்யக்கோரியும் நெல்லை நகர்ப்புற பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டினோம். 12.11.2020 அன்று முத்தூட் பைனான்ஸை முற்றுகையிடுவது எனவும் (மக்கள் அதிகாரம், தமிழர் உரிமை மீட்புக் களம், திராவிடத் தமிழர் கட்சி, பூர்விக தமிழர் கட்சி) ஆகிய அமைப்புகள் அறிவித்தோம்.

பதறியடித்து 11.11.2020 அன்று இரவு வேல்முருகன் அவர்களுக்கு போன் செய்து “நேரில் வாருங்கள் கணக்கை சரி பார்த்து முடித்து விடலாம்” என்று மழுப்பி உள்ளார். அதற்கு வேல்முருகன் ஒத்துக் கொள்ளவில்லை. இப்போது எங்கிருந்து மேனேஜருக்கு ஞானம் பிறந்தது ?

அடுத்த நாள் நாம் முற்றுகை இடுவதற்கு முன்பே பிரச்சனையின் தீவிரத்தை புரிந்துகொண்ட போலீசு, முத்தூட் மேனேஜரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றது. அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் முழுக்க முழுக்க முத்தூட் பைனான்ஸின் பித்தலாட்டம் என்ன என்பது அம்பலமானது. குடும்பத்தினரும் அமைப்புகளும் கொடுத்த நெருக்கடியால் மேல் அதிகாரிகள் மேலும் மூன்று பேர் வரவழைக்கப்பட்டனர். தவறை மறைக்க முடியாமல் மழுப்பலாக பதிலளித்தனர். கார்ப்பரேட் Law படிதான், ரிசர்வ் பேங்க் விதிமுறைகளின்படிதான் செயல்படுவதாக உண்மையையும் உடைத்தனர்.

படிக்க :
♦ கந்து வட்டி கொடுமைக்கு தமிழகமே பலி!
♦ மக்களை மதிக்காத வங்கி அதிகாரி : ஒரு அரசு வங்கி அனுபவப் பகிர்வு !

உண்மையில் இந்த கிரிமினல் கும்பலை பாதுகாக்கும் வகையிலேயே ரிசர்வ் பேங்க் விதிமுறைகளை வகுத்துள்ளது. வசமாக அகப்பட்டுக் கொண்ட நிலையில் இரண்டு நாட்களில் கணக்கை சரி பார்த்து நகைகளை ஒப்படைப்பதாக கூறியுள்ளனர். ஆறு மாதமாக அலைந்து திரிந்துக் கேட்டபோது வராத புத்தி, போராட்டத்தில் இறங்கிய பின்புதான் வருகிறது என்பதை உழைக்கும் மக்களும் பாதிக்கப்படுகின்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இது போன்ற நிறுவனங்களால் ஏமாற்றப்படுவது தெரிந்தும் எத்தனையோ பேர் சகித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதுதான் உண்மை. நாம் நமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொண்டு வீதியில் இறங்காமல், தட்டிக் கேட்காமல் எந்தத் தீர்வும் இல்லை.

மக்களின் உழைப்பில் உருவான செல்வங்களையெல்லாம் தனியாருக்கு அரசு தாரைவார்ப்பது போல், நிதித்துறையையும் ஒப்படைத்ததன் கொடூரமான விளைவுகள்தான் இது. முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ் போன்ற எண்ணற்ற ஒட்டுண்ணி, அட்டைகள் எல்லாம் இதனால் உருவானவையே. இன்று கோடானு கோடி ஏழை நடுத்தர மக்களின் வறுமையைப் பயன்படுத்திக்கொண்டு இரத்தத்தை உறிஞ்சி கொழுத்துக் கொண்டிருக்கின்றன. தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது, அதிகார வர்க்கத்தின் துணையோடு தப்பித்துக்கொள்ள முடியும் என்ற திமிர்தான் இதற்கெல்லாம் காரணம்.

மக்களின் வாழ்க்கையை அழிக்கும் தனியார்மயக் கொள்கைகளை, புதிய தாராளவாதக் கொள்கையை, இந்த கார்ப்பரேட் கும்பலைப் பாதுகாக்கும் அரசை எதிர்த்துப் போராடாமல் நமது துயரங்களுக்கு முடிவில்லை.

போராட்டக் களத்தில்…
மக்கள் அதிகாரம்
தமிழர் உரிமை மீட்புக் களம்
திராவிடத் தமிழர் கட்சி
பூர்வீகத் தமிழர் கட்சி


தகவல் :
மக்கள் அதிகாரம் – நெல்லை
தொடர்புக்கு :- 9385353605

தன்னை முன்னிறுத்திப் போராடுவது கோட்பாடற்ற போராட்டமே !

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 8

பாகம் – 7

IV. கட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டம்

தோழர்களே! இப்பொழுது உட்கட்சிப் போராட்டத்தில் மற்றொரு திரிபை  – கட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டத்தை – விவாதிக்கப் போகிறேன். இத்தகைய போக்கு குறிப்பாகவும் மோசமான அளவிலும் சீனக் கட்சியில் நிலவுகிறது. அந்நிய நாட்டுக் கட்சிகளில் “வீண் வம்பளக்கும் போக்கு”  இருந்து வந்த போதிலும், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருப்பது போன்று அங்குள்ள நிலைமை அவ்வளவு மோசமாக இருப்பதாக நான் எண்ணவில்லை. ஆதலால் இத்தகைய போக்கு பற்றி நமது தோழர்கள் பரிபூரணமாக உணரும்படியாகச் செய்ய வேண்டும்; அதை சமாளிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் கட்சியின் ஐக்கியத்திற்கும் வேலைக்கும் பெரும் இடைஞ்சல் ஏற்படும்.

கட்சிக்குள் கோட்பாடற்ற தகராறுகள், போராட்டங்கள் எவை?

கீழ்க்காணும் தகராறுகளும், போராட்டங்களும் கோட்பாடற்றவை என்ற கருத்தைக் கொண்டிருக்கிறேன். அதாவது அவை  நமது கட்சி, தொழிலாளி வர்க்கம் ஆகியவற்றின் புரட்சிகரமான நலன்களை பிரதி நிதித்துவப்படுத்தும் பொதுவானநிலை கோட்பாடு முதலியவற்றிலிருந்து மாறுபடுவதாகும்.

முதலாவதாக, சில தோழர்கள் கட்சி நிலையிலிருந்தோ அல்லது கட்சி முழுமையின் நலனை அடிப்படையாகக் கொண்டோ பிரச்சினைகளைக் கிளப்புவதோ, மற்ற தோழர்களை எதிர்த்தல் அல்லது போராட்டங்களை நடத்துவதோ இல்லை; தனது தனிப்பட்ட நலனையோ அல்லது கோஷ்டியின் நலனையோ கண்ணோட்டத்தில் கொண்டே பிரச்சினைகளை கிளப்பவும், மற்ற தோழர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தவும் செய்கின்றனர். அதாவது உட்கட்சி போராட்டம் நடத்துவதில் அவர்கள் நிலை சரியானதில்லை. அதனால், பிரச்சினைப் பற்றி அவர்கள் கண்ணோட்டம், கொள்கை, வழிகளை, அவை தங்களுக்கும் ஒருசில நபர்களுக்கும் உபயோககரமாக இருக்கும் வரையில் ஆதரிப்பார்கள். அதற்காக வாதாடவும் செய்வார்கள். குறிப்பிட்ட நடவடிக்கைகள் தங்களுக்கோ அல்லது அந்த ஒருசில நபருக்கோ அனுகூலமாகவில்லை என்றால், அவற்றை எதிர்ப்பார்கள்; நிராகரித்து விடுவார்கள். அத்தகைய நடவடிக்கைகள் கட்சிக்கு, அல்லது புரட்சிக்கு பயன் தரத்தக்கவையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அப்படியில்லையென்றால் அத்தகைய நடவடிக்கைகளை இரண்டாந்தர முக்கியத்துவங் கொண்டவையாக ஒருபுறம் தள்ளிவிடுகின்றனர். ஆகவே இவர்கள் எதிர்ப்பதும் சரி, ஆதரிப்பதும் சரி, முற்றிலும் கோட்பாடற்றவையே; கட்சி, புரட்சி முதலியவற்றின் கோட்பாடுகளிலிருந்து விலகியதேயாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் கோட்பாடு கட்சியின், புரட்சியின் கோட்பாடு அல்ல; அவர்கள் சொந்த நலனுக்கான கோட்பாடுகள். ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த நலனையே தனது கோட்பாடாகக் கொண்டு விட்டால், பின் அவரது நலனும் கோட்பாடும் மற்றவர்களுடைய நலன் கோட்பாடு முதலியவற்றுடன் நிச்சயம் மோதத்தான் செய்யும்; ஒருவரோடு ஒருவர் சண்டையிடத்தான் செய்வார்கள்.

உதாரணமாக, நீங்கள் உங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் பணியாட்கள், குதிரைகள், உணவு, துணி, வைத்திய வசதி, பதவி உயர்வு முதலியவை சம்பந்தமாக சண்டையிட்டுக் கொண்டீர்கள் அல்லது போராடினீர்கள். இத்தகைய விசயங்கள் தனிப்பட்ட, கோட்பாடற்ற விசயப் பகுதியில் சேரும். பணியாட்கள், உணவு, துணி, வைத்திய வசதி முதலியனவற்றை கட்சி பயனடையும் வகையில் விநியோகிப்பதற்கு பொது விதிகள் பற்றி, தோழர்கள் ஆலோசனை கூறுவதில்லை; கட்சி அல்லது பள்ளிக்கூடம் இந்த கோட்பாடுகளை அமல் நடத்த வேண்டும் என்று கேட்பதில்லை; ஆனால் அவர்களது கேள்விகள் பின்வருமாறு அமைகின்றன:-  “எனக்கு அவர்கள் ஏன் ஒரு பணியாள் அல்லது குதிரை கொடுக்கக்கூடாது? எனக்கு ஏன் அவர்கள் வைத்திய வசதி கொடுக்கக்கூடாது? என்னை ஏன் அவர்கள் உயர்த்தக்கூடாது? எனக்கு ஏன் அவர்கள் உணவும், உடையும் கொடுக்கக்கூடாது?” எல்லாம் “என்னை”ச் சுற்றித்தான் எழுகிறது; “நான்” என்ற நிலையிலிருந்துதான் எல்லாம் தோன்றுகின்றன; இந்த ரீதியில் தகராறுகள் கிளப்பப்பட்டு கட்சிக்குள் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதனால் தனிப்பட்ட முறையில் திருப்தியடைந்திருந்தால், மற்றபடி விசயங்கள் முறையற்ற முறையில் அமைந்திருந்தாலும் அதைப் பற்றி அவர்கள் சிறிதேனும் கவலைப்பட்டுக் கொள்வதில்லை. இது ஒரு வகையான கோட்பாடற்ற போராட்டமாகும்.

மற்றொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம், சில தோழர்கள் ஊதாரித்தனத்தை எதிர்க்கின்றனர். சில தோழர்கள் கட்சியின் நலனை அடிப்படையாகக் கொண்டு, கட்சி நிலையில் நின்று ஊதாரித்தனத்தை எதிர்க்கின்றனர். அவர்கள் எளிய வாழ்க்கைக் கோட்பாட்டையும் ஊதாரித்தனத்திற்கு உள்ள பல திருஷ்டாந்தங்களையும் எடுத்துக்காட்டி, விமர்சித்து, அதை அவர்கள் எதிர்க்கிறார்கள்; சிக்கனத்திற்கு சில யோசனைகள் சமர்ப்பித்து அதை அமல் நடத்தும்படி கட்சியைக் கேட்கின்றனர். இது சரியானது.

ஆனால் இன்னும் சில தோழர்கள் கட்சியின் நலனை அடிப்படையாகக் கொண்டு, கட்சியின் நிலையில் நின்று ஊதாரித்தனத்தை எதிர்ப்பதில்லை. இவர்கள் கிளப்பும் கேள்விகள் பின் வருமாறு:

“சிலர் எவ்வளவு பணம் விரயம் செய்திருக்கின்றனர்; சிலருக்கு இவ்வளவு நல்ல உணவு கிடைத்துள்ளது ; சிலருக்கு இவ்வளவு நல்ல உடை இருக்கிறது; சிலருக்கு…  அப்படியானால் அது மாதிரி நான் ஏன் சாப்பிடக்கூடாது? அம்மாதிரி பணம் செலவிடக்கூடாது? அம்மாதிரி உடை அணிந்து கொள்ளக்கூடாது? பழம் பெருச்சாளியாவதற்கு போதிய வருடங்கள் எனக்கு ஆகவில்லை என்பதினாலா? அல்லது நான் கட்சிக்கு ஒரு சேவையும் செய்யவில்லை என்பதினாலா?” ஆதலால் அவர் ஊதாரித்தன எதிர்ப்பு என்ற கோஷத்திற்காக நின்று போராடுகிறார். மற்றவர்களைப் போல் பணத்தை வீண் விரயம் செய்வதற்கு தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதுதான் இதற்கு காரணம். இதுவும் ஒருவகையான கோட்பாடற்ற போராட்டமாகும்.

இன்னுமொரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்களேன்! கிழக்கு ஏன்வேயில் அரசாங்க சிப்பந்திகளுக்கு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டது.* ஆகவே சில தோழர்கள் சம்பளம் கிடைக்கும் என்ற எண்ணத்தைக் கொண்டு அரசாங்க அமைப்புகளில் வேலை செய்வதற்கு அனுப்பப்படும்படியாக கேட்டுக் கொண்டார்கள்; அவர்கள் போவதற்கு அனுமதிக்கப்படாத பொழுது, அரசாங்க சிப்பந்திகள் சம்பளம் பெறுவதை எதிர்க்கும் கோஷத்தின் பேரில் அவர்கள் போராட்டம் துவக்கினார்கள். மேலும் அரசாங்க சிப்பந்திகளின் வாழ்க்கை அலவன்ஸ்களை நிர்ணயிப்பது எங்ஙனம் என்பதற்கு கோட்பாடு சம்பந்தமான யோசனைகள் கொடுக்கவோ, அவற்றை விவாதிக்கவோ இல்லை. இதுவும் ஒருவகை கோட்பாடற்ற போராட்டமாகும்.

இரண்டாவதாக, சில தோழர்கள் கட்சிக்குள் தகராறுகளை கிளப்பிவிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்; ஆனால் அது கட்சி விவகாரங்களை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதில்லை. அதற்கு மாறாக அவற்றை இன்னும் படுமோசமாக்குவதற்குதான் செய்கின்றனர்; அல்லது அந்தரங்க நோக்கத்துடன் செய்கின்றனர். அத்தகைய நோக்கம் தவறானதாகும். இதுவும் கோட்பாடற்ற போராட்டமாகும். உதாரணமாக முக்கியமானவர் என்று எண்ணப்பட வேண்டுமென்பதற்கு, சொந்த அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, கௌரவத்தை விட்டுக் கொடுக்காமலிருப்பதற்கு, ஏன்? மற்றவர்களை பழி தீர்த்துக் கொள்வதற்குகூட, சில தோழர்கள் நிலைமை, அப்பொழுதுள்ள சுற்றுச்சார்பு முதலியவைகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் கட்சிக்குள் மற்ற தோழர்களை எதிர்த்து அவர்கள் வேலைகளையும், திட்டங்களையும் கட்சிக்குள் ஒழுங்கு, ஒற்றுமை முதலியவற்றையும் சீர்குலைத்துக் கொண்டு, தகராறுகளை கிளப்பி விட்டு, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவும் இதே கோட்பாடற்ற பகுதியைத்தான் சேரும்.

மூன்றாவதாக, சில தோழர்கள் ஏதாவது ஒன்றை அமல் நடத்த வேண்டுமென்றோ அல்லது கைவிட வேண்டுமென்றோ கட்சியைக் கேட்டுக் கொண்டு, கோட்பாடுகள் அடிப்படையில் பிரச்சினைகளை கிளப்புவதில்லை; ஆனால் தனிப்பட்ட இதய சலனங்கள், விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினைகளை எழுப்புகிறார்கள், போராட்டங்களை நடத்துகிறார்கள். அவர்கள் ஆட்களை ஏசுகிறார்கள்; அவர்கள் மீது வெறி கொள்கிறார்கள்; ஏனெனில் அவர்கள் ஒரு விநாடி மனதிருப்தியடையவும், மன வருத்தத்தையும், குரோதத்தையும் கொட்டிக்கொள்ளவும் விரும்புகின்றனர். இதுவும் ஒரு வகையான கோட்பாடற்ற போராட்டமாகும். இன்னும் சில தோழர்கள் உண்டு; இவர்களுக்கு தங்களுக்குள்ள குறைவான அனுபவத்தினாலும், குறைவான தத்துவ பயிற்சியினாலும் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரச்சினைகளை கிளப்பவும், விவாதிக்கவும் முடியாமற் போகிறது. இவர்கள் பொதுக் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு பதிலாக தனித்து நிற்கும் துண்டு துக்காணியான, அறவே நடைமுறை சம்பந்தமற்ற பிரச்சினைகளிலும் கோட்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும், கோட்பாடு சம்பந்தமில்லாத நிகழ்காலக் கொள்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் மற்ற தோழர்களுடன் ஒருக்காலமும் தீராத தகராறுகளில் ஈடுபடுகின்றனர். ஆதலால் இதுவும் ஒருவகை கோட்பாடற்ற போராட்டமாகும். அதை பிடிவாதம் பிடிக்கக்கூடாது.

உதாரணமாக, சில போராட்டங்கள், சில காரியங்கள் சில போராட்ட வடிவங்கள், சில அமைப்பு முறைகள் முதலியன பற்றி சில தோழர்கள் மாறுபாடான அபிப்பிராயங்கள் கொண்டுள்ளனர். இவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால் என்று நிலைநாட்டுகின்றனர். பொதுவான போர்த்தந்திர, செயல்தந்திர கோட்பாடுகளையும், பொதுவான நடைமுறைக் கொள்கையையும் போராட்டம், ஸ்தாபனம் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய பொதுவான கருத்துக்களையும் கொஞ்சம் கூட சம்பந்தப்படுத்திக் கொள்ளாமலே முடிவில்லாமல் வாதாடுவார்கள். அவர்களுடைய பிரச்சினைகள் தவறான முறையில் கிளப்பப்பட்டிருக்கிறது. ஆதலின் வழக்கமாகவே சரியான முடிவுக்கு வருவது சாத்தியமில்லை. இல்லையெனில் மாறுபட்ட அபிப்பிராயங்களுள் ஏதாவது ஒன்றாவது சரியாக இருக்க வேண்டும். பிரயோஜனமில்லாத வீண்பேச்சுத்தான் பெரும்பாலும் ஏற்படும் பலன்.

நான்காவதாக, உட்கட்சிப் போராட்டம் வகுத்தளிக்கப்பட்டுள்ள அமைப்பு முறைகளை அனுஷ்டிக்காமல், நியாய, அநியாய வழி எதுவானாலும் பரவாயில்லை என்று நடத்தப்படுகிறது. இதன் திருஷ்டாந்தங்கள் ஆவன :- கட்சிக்குள் கோட்பாடில்லா முறைகளில் தோழர்களை தன் பக்கத்திற்கு இழுத்துக் கொள்வது அல்லது எதிர்த்துத் தாக்குவது; தொல்லைகளைக் தூண்டிவிடுவது அதன் மூலம் தோழர்களுக்குள் பிளவுகள்  உண்டாக்குவது; மற்ற தோழர்களுக்கு எதிராக சதி செய்து அவர்களுக்கு வலை விரித்து வைப்பது; ஒருவர் முன்னிலையில் ஒன்றும் சொல்லாமல் போன பிறகு அவர்களுக்கு பின்னாலிருந்து பேசுவது; கட்சியை பொறுப்பின்றி விமர்சனம் செய்வது; வம்பளப்பது; வதந்திகளைப் பரப்புவதில் ஈடுபடுவது; பொய் சொல்வது; பிற தோழர்களை அவதூறு செய்வது முதலியன.

மேலே கூறப்பட்டுள்ள போராட்டங்கள் கோட்பாடில்லாத போராட்டங்கள். இதுவன்றி கோட்பாடான போராட்டத்தில் சில கோட்பாடற்ற போராட்ட அம்சங்களைக் கலக்கவும், கோட்பாடான போராட்டக் கொடியின் கீழ் கோட்பாடற்ற போராட்டங்களை நடத்தவும் செய்கின்ற சில தோழர்கள் உண்டு. இன்னும் சிலருக்கு, குறிப்பிட்ட ஒரு நபருக்கும், மற்றவருக்குமிடையேயுள்ள தகராறு பற்றி இருவருக்குமிடையேயுள்ள அசாதாரண உறவு நிலையில்தான் விசேச அக்கறையே ஒழிய அச்சச்சரவின் சாராம்சம் என்ன என்பதில் அக்கறை கிடையாது.

படிக்க :
♦ உட்கட்சிப் போராட்டத்தின் 3 முக்கியத் திரிபுகள் || லியூ ஷோசி
♦ தனிநபர் மீதான தாக்குதல், உட்கட்சிப் போராட்டமாகாது || லியூ ஷோசி

கட்சிக்குள் நிகழும் இத்தகைய கோட்பாடில்லாத போராட்டங்கள் அனைத்தும் நல்லதன்று; கட்சிக்கு தீங்கிழைக்கக் கூடியவை.

தோழர்கள் கேட்கக்கூடும்; கோட்பாடு என்றால் என்ன என்று? கோட்பாடு சம்பந்தப்படாத, முற்றிலும் நடைமுறைத் தன்மை படைத்த பிரச்சினைகள் என்பவை எவை? நிகழ்கால கொள்கை சம்பந்தமான பிரச்சினை என்பது எது? எந்தப் பிரச்சினை சம்பந்தமாகவும் நான் ஏன் கொள்கையையே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொள்ளக் கூடாது? என்னுடன் மாறுபாடாக கருத்துக் கொண்டவர்களுடன் சாத்தியமான சகல வழிகளிலும் நான் ஏன் சமரசமாகப் போக வேண்டும்?

தோழர்களே! உண்மையிலேயே தெளிவுபடுத்தப்பட வேண்டிய விசயங்கள் இவை.

———-

* ஜப்பானிய எதிர்ப்பு யுத்தகாலத்தில் விடுதலைப் பிரதேசங்களிலிருந்து அரசாங்க சிப்பந்திகளுக்கு சகல அன்றாட தேவைகளும் கொடுக்கப்பட்டு வந்தன. சொந்த சில்லறை செலவுக்குக் கொடுக்கும் பணம்போக அவர்களுக்கு சம்பளம் என்று  ஒன்றும் கிடையாது.

– ஆசிரியர் குறிப்பு

நவம்பர் 26 : நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும் || மக்கள் அதிகாரம்

PP Letter head

13.11.2020

பத்திரிகைச் செய்தி

ங்கம் சேரக்கூடாது, தொழிற்சாலைக்கு எதிராகப் போராடக்கூடாது, சம்பள உயர்வு கேட்கக் கூடாது, போனஸ் கிடையாது, நிரந்த வேலைக்கு உத்திரவாதம் கிடையாது, ஓய்வூதியம் தர முடியாது, ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு, தொழிற்சங்க அங்கீகாரத்தைச் சிதைப்பது, குறைந்தபட்ச ஊதியத்திற்கு குந்தகம் விளைவிப்பது என பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்கி கார்ப்பரேட்டுகளுக்கு உதவும் வகையில்தான் இந்த தொழிலாளர் நல சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி, கொத்தடிமை முறையிலான சட்டங்களை இயற்றி வருகிறது பாஜக அரசு. ஏட்டளவிலாவது இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களில், 15 சட்டங்களை ரத்து செய்து விட்டு, மீதமுள்ள 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி, தொழிலாளர் உரிமை, நலன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் பறிக்கத் திட்டமிட்டுள்ளது.

முதலாளித்துவ சுரண்டலுக்காக தனியார்மயம் தாராளமயத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன. தொழிலாளர் நல சட்டங்களும் வேளாண் சட்டங்களும் கல்விக் கொள்கைகளும் மாற்றியமைக்கப்படுகின்றன. அரிசி, நெல், கோதுமை, காய்கறி முதல் பெட்ரோல் வரை அனைத்து பொருட்களின் விலையும் ஏறிக்கொண்டே இருக்கிறது. எனவே தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளுக்கு எதிரான இந்தப் போராட்டம் வெல்லட்டும்.

அகில இந்திய தொழிற் சங்கங்களின் இந்தப் போராட்டத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது. மேலும் இந்தப் போராட்டங்களில் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.

தோழமையுடன்


வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர் – மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு மற்றும் புதுவை
9962366321

சங்கிகள் அட்டகாசம் தாங்கலயே வேலவா | மக்கள் அதிகாரம் பாடல் !

வேல் யாத்திரை எனும் பெயரில் ஒரு கலவர யாத்திரையைக் கையில் எடுத்துக் கொண்டு எப்படியாவது இந்துமதவெறியைத் தூண்டி தமிழகத்தை மற்றுமொரு குஜராத்தாக மாற்றும் திட்டத்தோடு வலம் வருகிறது சங்கப் பரிவாரக் கும்பல்.

ஒருபுறத்தில் உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளையெல்லாம் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி சட்டதிருத்தங்கள் மூலம் ரத்து செய்து கொண்டிருக்கும் பாஜக – சங்க பரிவாரக் கும்பல், மற்றொரு புறத்தில் கலவரம், ஆட்கடத்தல்,  பாலியல் வன்முறை, கொலை உள்ளிட்ட மக்கள் விரோதச் செயல்களிலும் ஈடுபட்டுவருகிறது.

‘தமிழ்க் கடவுள்’ முருகனைக் காப்போம் என்ற பெயரில், தமிழர்களின் கடவுள் நம்பிக்கையை தனது இந்துத்துவக் கொள்கைக்கு ஏற்ப வளைக்க எத்தனித்துத் தான் இந்த வேல் யாத்திரையை தொடங்கியிருக்கிறது தமிழக பாஜக.

இதனை மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலம் தோழர்கள் இயற்றிப் பாடியிருக்கும் இந்தப் பாடல் அம்பலப்படுத்துகிறது !

பாருங்கள் ! பகிருங்கள் !

விஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள் || தோழர் லெனின்

0

பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 4

பாகம் 3 : ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ்

முதன் முதலாக பிரான்சில் தோன்றி, பின்னர் மற்ற மேலைய ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவிய 1848-ம் ஆண்டுப் புரட்சி மார்க்சையும் எங்கெல்சையும் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி வரச் செய்தது. இங்கே, ரைனிஷ் பிரஷ்யாவில், கொலோன் நகரிலிருந்து வெளிவந்த ஜனநாயகத் தன்மையுள்ள Die Neue Rheinische Zeitung என்ற பத்திரிகையை அவர்கள் தங்கள் பொறுப்பில் எடுத்து நடத்தினார்கள். ரைனிஷ் பிரஷ்யாவில் எல்லாப் புரட்சிகர ஜனநாயக வேட்கைகளின் இதயமாக, ஆன்மாவாக இவ்விரு நண்பர்களும் விளங்கினர்.

மக்களின், சுதந்திரத்தின் நலன்களைப் பாதுகாத்து அவர்கள் பிற்போக்குச் சக்திகளைக் கடைசிவரை எதிர்த்துப் போராடினர்; பிற்போக்குச் சக்திகளின் கை மேலோங்கியது என்பது நாமறிந்த சங்கதிதான். Die Neue Rheinische Zeitung தடை செய்யப்பட்டது. நாடு கடத்தப்பட்ட காலத்தில் தமது பிரஷ்யக் குடியுரிமையை இழந்துவிட்டிருந்த மார்க்ஸ் பிரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆயுதந்தாங்கிய மக்கள் எழுச்சியில் எங்கெல்ஸ் பங்கு கொண்டார், சுதந்திரத்துக்காக மூன்று முனைகளில் போர் புரிந்தார். கலகக்காரர்கள் தோல்வியுற்ற பிறகு சுவிட்சர்லாந்து வழியே லண்டனுக்கு வந்து சேர்ந்தார்.

மார்க்சும் அங்கேயே குடியமைத்துக் கொண்டார். எங்கெல்ஸ் மீண்டும் ஒரு குமாஸ்தா ஆகிவிட்டார். கொஞ்ச காலம் கழித்து, தாம் 1840-1850-ம் ஆண்டுகளில் வேலை பார்த்த அதே மான்செஸ்டர் வர்த்தக நிலையத்திலேயே பங்குதாரராக ஆனார். 1870 வரை அவர் மான்செஸ்டரிலேயே வாழ்ந்து வர, மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்து வந்தார்.

படிக்க :
♦ அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்
♦ கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

இருந்தபோதிலும் அவ்விருவரும் பரஸ்பரம் உற்சாகம் பொங்கும் அறிவுத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை அது தடுக்கவில்லை அநேகமாக தினந்தோறும் ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கடிதப் போக்குவரத்து மூலம் இவ்விரு நண்பர்களும் தங்கள் கருத்துக்களையும் கண்டுபிடிப்புகளையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டார்கள், விஞ்ஞான சோசலிசத்தை வகுத்துக் கொடுப்பதில் இணைந்து பணிபுரிவதைத் தொடர்ந்தார்கள். 1870-ம் ஆண்டில் எங்கெல்ஸ் லண்டனுக்கு வந்து அங்கேயே தங்கிவிட்டார்.

கடும் உழைப்பு நிறைந்த அவர்களுடைய பொதுவான அறிவுத்துறை வாழ்க்கை 1883-ம் ஆண்டு வரை நீடித்தது. 1883-ம் ஆண்டில் மார்க்ஸ் காலமானார். மார்க்ஸ் பங்குக்கு இந்தப் பொதுவான அறிவுத்துறை வாழ்க்கையின் பலன் மூலதனம் என்ற நூலாகும்; நமது சகாப்தத்திலேயே அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய நூல்கள் யாவற்றிலும் தலைசிறந்த நூல் இதுதான்.

எங்கெல்சைப் பொறுத்தமட்டில் அதன் பலன் பல பெரிய, சிறிய நூல்கள் எழுதியதுதான். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சிக்கல் நிறைந்த தோற்றங்களைப் பற்றிய பகுப்பாராய்ச்சியிலே மார்க்ஸ் ஈடுபட்டார். எங்கெல்ஸ் எளிய நடையில் எழுதிய நூல்களில், அடிக்கடி எதிர்வாதங்களைச் சந்திக்கிழுத்துத் தாக்கும் நூல்களில் வரலாறு பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தையும் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்தையும் செயல்படுத்திய வழியிலே, மிகப் பொதுவான விஞ்ஞானப் பிரச்சினைகளையும், பல வகைப்பட்ட சென்றகால, நிகழ்கால நிகழ்ச்சிகளையும் விளக்கினார்.

எங்கெல்சின் இந்நூல்களில் பின்வருவனவற்றைக் குறிப்பிடுவோம்: டூரிங்குக்கு மறுப்பாக எழுதிய வாதவடிவம் கொண்ட நூல் (இந்நூலில் தத்துவஞானம், இயற்கை விஞ்ஞானம். சமுதாய விஞ்ஞானங்கள் ஆகிய துறைகள் சம்பந்தப்பட்ட மாபெரும் பிரச்சினைகள் ஆராயப் பட்டுள்ளன); குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூல் (இது ரசிய மொழியில் பெயர்க்கப்பட்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்பின் மூன்றாம் பதிப்பு 1895-ல் வெளிவந்தது); லுட்விக் ஃபாயர்பாஹ் என்ற நூல் (இதன் ரசிய மொழிபெயர்ப்பு கி.பிளெஹானவ் குறிப்புகளுடன் ஜெனிவாவில் 1892-ல் வெளிவந்தது); ரசிய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஒரு கட்டுரை (ஜெனீவாவில் வெளிவந்த Der Sozial-demokrat) ”சமூக ஜனநாயகவாதி” என்ற பத்திரிகையின் 1, 2 இதழ்களில் ரசிய மொழியில் பெயர்க்கப்பட்டது); குடியிருப்புப் பிரச்சினையைப் பற்றிய சில குறிப்பிடத்தக்க கட்டுரைகள்; கடைசியாக, ரசியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி எழுதப்பட்ட இரண்டு சிறிய, ஆனால் மதிப்பு மிகுந்த கட்டுரைகள் (ரசியாவைப் பற்றி பிரெடெரிக் எங்கெல்ஸ் என்ற நூல், ரசிய மொழியில் வேரா ஸசூலிச் பெயர்த்தது, ஜெனீவா, 1894).

மூலதனத்தைப் பற்றிய தமது விரிவான வேலையை முடிக்குமுன்னர் மார்க்ஸ் காலமானார். இருந்தாலும், நகல் குறிப்புகள் வடிவத்தில் அது ஏற்கெனவே எழுதி முடிக்கப்பட்டிருந்தது. தமது நண்பர் மறைந்த பிறகு மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளைத் தயாரித்து வெளியிடும் சிரமமிக்க வேலையை எங்கெல்ஸ் மேற்கொண்டார். அதன் இரண்டாம் தொகுதியை 1885-ம் ஆண்டிலும், மூன்றாம் தொகுதியை 1894-ம் ஆண்டிலும் அவர் வெளியிட்டார் (அவரது மரணம் நான்காம் தொகுதியைத் தயாரிப்பதைத் தடுத்துவிட்டது). இவ்விரு தொகுதிகள் விசயத்தில் எங்கெல்ஸ் அபாரமாக உழைக்க வேண்டியிருந்தது. மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளை வெளியிட்டதன் மூலம் எங்கெல்ஸ் தமது நண்பராகிய மேதைக்கு மாண்புமிக்க நினைவுச் சின்னம் நிறுவினார்; அந்த நினைவுச் சின்னத்தில் தம்மையறியாமலேயே தமது பெயரையும் அழியாத வகையில் பொறித்துவிட்டார் என்று ஆஸ்திரிய சமூக – ஜனநாயகவாதி ஆட்லெர் குறிப்பிட்டது மிகவும் சரி.

உண்மையிலே மூலதனத்தின் இவ்விரு தொகுதிகளும் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருடைய பணியேயாகும். மனதையுருக்கும் நட்பைக் குறித்துப் பல உதாரணங்கள் காட்டும் பழங்கதைகள் உண்டு. ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கம் தனது விஞ்ஞானத்தைப் படைத்தவர்கள் இரண்டு அறிஞர்கள், இரண்டு போராட்ட வீரர்கள், அவர்களிடையே நிலவிய உறவு முன்னோர்கள் மனித நட்பு பற்றி எழுதியுள்ள நெஞ்சையள்ளும் கதைகளையெல்லாம் மிஞ்சக் கூடியதாயிருந்தது என்று சொல்லிக் கொள்ளலாம். எங்கெல்ஸ் எப்பொழுதுமே – மொத்தத்தில், நியாயமாகத்தான் – மார்க்சுக்கு முதன்மை கொடுத்தார். பழைய நண்பர் ஒருவருக்கு எழுதுகையில் ‘மார்க்ஸ் வாழ்ந்திருந்த காலத்தில் நான் அவருக்குப் பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தவன்தான்” என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.

மார்க்ஸ் உயிரோடிருக்கும்போது அவர்மீது எங்கெல்ஸ் வைத்திருந்த பாசத்துக்கும், மறைந்த மார்க்சின் நினைவு பற்றி அவர் வைத்திருந்த புனித மதிப்புக்கும் எல்லையே கிடையாது. இந்தக் கடின சித்தமுள்ள போராட்ட வீரருக்கு, கட்டுப்பாடு மிகுந்த சிந்தனையாளருக்குள், ஆழ்ந்த அன்பு செலுத்தும் இதயம் இருந்தது.

(தொடரும்)

கட்சியை மிரட்டும் ‘தோழர்கள்’ ! || லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 7

பாகம் – 6

இயந்திரகதியான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்தின் வடிவங்கள் :

நான்காவதாக, கட்சிக்குள் உள்ள போராட்ட முறைகளும், கட்சிக்கு வெளியே உள்ள போராட்ட முறைகளும் கலக்கப்படுகின்றன. சில தோழர்கள் உட்கட்சிப் போராட்ட முறைகளை இயக்க மறுப்பியல் ரீதியான கட்சியல்லாத பொதுமக்கள் அமைப்புகளில் கையாளுகின்றனர்; கட்சியில் சேராத ஊழியர்கள் பொதுமக்களுடன் போராட்டம் நடத்தும் பொழுது உட்கட்சி போராட்ட முறைகளை உபயோகப்படுத்துகின்றனர். இதற்கு நேர்மாறாக சில தோழர்கள் கட்சிக்கு வெளியில் உபயோகப்படுத்தும் போராட்ட முறைகளை விரோதியிடத்திலும் அந்நிய நபர்களிடத்திலும் உபயோகப்படுத்தும் போராட்ட முறைகளை கட்சிக்குள் இருக்கும் தோழர்கள் சம்பந்தமாக போராட்டம் நிகழ்த்தும்போது உபயோகிக்கின்றனர்.

விரோதியையும் அந்நிய நபர்களையும் எதிர்ப்பதற்கு கைக்கொள்ளும் நடவடிக்கைகளை கட்சிக்குள் இருக்கும் தோழர்களை நடத்துவதில் உபயோகப்படுத்துகின்றனர். எல்லாவித ஆத்திரமூட்டல், பகை, சதி அனைத்தையும் அனுஷ்டிக்கின்றனர். கண்காணித்தல், கைது செய்தல், விசாரணை நடத்துவது, சிறைப்படுத்துவது முதலான சகலவித நிர்வாக நடவடிக்கைகளையும் உட்கட்சிப் போராட்டத்தில் அவர்கள் பிரயோகிக்கின்றனர். உதாரணமாக, துரோகிகளை வேட்டையாடுவதென்னும் “இடதுசாரி”த் தவறை இழைத்த தோழர்கள் அத்தவறு செய்வதற்குக் காரணம், கட்சிக்குள் நடக்கும் போராட்டத்திற்கும் கட்சிக்கு வெளியே நடக்கும் போராட்டத்திற்கும் இடையில் தெளிவான வரையறுப்பு வைத்துக் கொள்ளாததுதான். கட்சிக்குள் நிகழ்த்தும் சித்தாந்தப் போராட்டத்தையும் துரோகிகளை வேட்டையாடும் இயக்கத்தையும் போட்டுக் குழப்புகின்றனர். பெரும்பாலும் இவர்கள் கட்சிக்குள் பதுங்கிக் கொண்டிருக்கும் ஒற்றர்களாக இருக்கின்றனர். ஆனால் ஒளிந்து கொண்டிருக்கும் இந்த ஒற்றர்களை எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்கு விசயங்களை ஆதாரமாகக் கொண்டு நிற்க வேண்டும்; அவர்களை தோலுரித்துக் காட்டி, கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; தவறு செய்த கட்சி அங்கத்தினர்கள் கற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நடத்தும் போராட்டத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது; இவையிரண்டுக்கும் இடையில் தெளிவான வரையறுப்பு செய்யப்பட வேண்டும். கட்சிக்குள் நடத்தும் போராட்டமும், கட்சிக்கு வெளியே நடத்தும் போராட்டமும், ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டவைதான், ஆனாலும் அவற்றின் போராட்ட முறையும் வடிவமும் வேறுபட்டதாகத்தானிருக்க வேண்டும்.

இன்னும் சில தோழர்கள் இருக்கின்றனர் (உண்மையில் இவர்களை இதற்கு மேலும் தோழர்கள் என்று அழைக்க முடியாது). இவர்கள் உட்கட்சிப் போராட்டம் நடத்துவதற்கும், கட்சியை பயமுறுத்துவதற்கும், கட்சிக்கு வெளியிலுள்ள சக்திகளை உபயோகப்படுத்தவும், பகிரங்கமாகவே அச்சக்திகளைச் சார்ந்து நிற்கவும் செய்கின்றனர். உதாரணமாக, அவர்களுடைய அரைகுறை சாதனைகளையும், துருப்புக்களையும், துப்பாக்கிகளையும், பொதுமக்கள் மத்தியில் கொண்டுள்ள செல்வாக்கையும் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த சில பகுதிகளுடன் தங்களுக்குள்ள உறவையும் வைத்துக் கொண்டு சிலர் கட்சியையும், மேல் கமிட்டிகளையும் எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர்.

மேல் கமிட்டிகளையும், கட்சியையும் தங்கள் கோரிக்கைகளையும் அபிப்பிராயங்களையும் ஒப்புக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கின்றனர்; கட்சியின்பால் சுயேச்சை மனோபாவம் காட்டுகின்றனர்; கட்சியிலிருந்து விடுபட்டுள்ள தங்கள் சுயேச்சை நிலையை பிரகடனப்படுத்துகின்றனர்; அல்லது கட்சிக்கு வெளியிலுள்ள பத்திரிக்கைகள் சஞ்சிகைகள் பல்வேறு மகாநாடுகள், முதலியனவற்றை பூர்ஷ்வாவுக்கும் விரோதிக்கும் சொந்தமானவற்றைக்கூட, மேல் கமிட்டியின் மீதும் சில தோழர்கள், ஊழியர்கள் மீதும் போராட்டம் நடத்துவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். இது தவறு என்று சொல்லத் தேவையில்லை; இன்னொரு கோஷ்டி நபர்கள் கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்களை பலவந்தப்படுத்தி அடக்கி ஒடுக்கி ஆதிக்கஞ் செலுத்தவும், கட்சிக்கு வெளியிலுள்ள நபர்களை பயமுறுத்தி, தண்டவரி வசூலிப்பதும் எவ்வளவு கடுமையான தவறோ அதேபோல் இதுவும் கடுமையான தவறாகும். இந்தப் பேர்வழிகள் கட்சிக்கு எதிராக கட்சிக்கு சம்பந்தப்படாத கண்ணோட்டத்துடன் போராடுகின்றனர். ஆதலின் அவர்கள் பெயரளவில் கம்யூனிஸ்டுகளாக இருந்து வந்தபோதிலும், கட்சிக் கண்ணோட்டத்தில் அறவே வேறுபட்டு போய்விட்டனர்; கட்சியின் விரோதிகள் ஆகிவிட்டனர்.

ஐந்தாவதாக, நமது கட்சியில் பல பிரச்சினைகள் கூட்டங்களில் அல்லது கூட்டங்கள் மூலம் முடிவாகின்றன. இது நல்லது. ஆனால் பல அமைப்புகளில், தயாரிப்பின்றி, முன் பரிசீலனையோ ஆராய்ச்சியோ ஏதுமின்றி பல கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு பலவேறுபாடான அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. கூட்டத்தில் அடிக்கடி சச்சரவுகளும் நிகழுகின்றன. எல்லாக் கூட்டங்களிலும், ஒவ்வொரு முறையும் முன்னணிப் பங்கு வகிப்பவர்களினாலேயே முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதினால், அத்தகைய கூட்டங்களில் செய்யப்படும் முடிவுகள் கட்சியை கட்டுப்படுத்தும் தீர்மானங்களுக்கு சமமாவதினால், பெரும்பாலும் பல தவறுகள் நேர்கின்றன. சில கூட்டங்களில் வாக்குவாதம் இறுதியாக போதனாசிரியர், கட்சி கிளையின் காரியதரிசி அல்லது வேறு ஏதாவது பொறுப்புள்ள, தோழரின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனித்திருக்கிறேன்; ஆனால் பொறுப்பு வாய்ந்த தோழருக்கே அவ்விசயத்தில் ஒன்றுமே நிச்சயமில்லை; அந்த பிரச்சினை பற்றி அவரே முற்றிலும் குழம்பிப் போயிருப்பார். அந்த பிரச்சினையின் அவசர அவசியமான காரணத்தினால் எப்படியும் அவர் ஒரு முடிவு எடுத்தாக வேண்டியிருக்கிறது! இல்லையெனில் இனி மேற்கொண்டு அவர் பொறுப்பு வகிக்கும் தோழராக இருக்க முடியாது. இந்த பொறுப்புள்ள தோழர் ஒரு முடிவு எடுக்க வேண்டியிருந்தது; சில விசயங்களில் மிகவும் தத்தளிக்க வேண்டியிருந்தது. உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டிற்று. அவர் அவசரத்தில் முடிவு எடுத்தார்; அவர் முடிவு கட்டுப்படுத்தும் தீர்மானத்திற்கு சமானம்.

இந்த முடிவுப்படி விசயங்கள் தீர்மானிக்கப்பட்டன; ஆனால் பல தவறுகள் நிச்சயம் நேரும் என்று சொல்லத் தேவையில்லை. சில தோழர்கள் ஒரு பிரச்சினையைப் பற்றி முடிவு எடுப்பதற்கு தெரியவில்லையென்றால், தங்களுக்குத் தெரியாது என்றும், பிரச்சினையைப் பற்றி ஆலோசிப்பதற்கும், கற்றுக்கொள்வதற்கும், அல்லது பிரச்சினையை மேல் கமிட்டியின் ஆலோசனைக்கு அனுப்புவதற்கும் அவகாசம் வேண்டும் என்றும் சொல்லத் தயாராயில்லை. ஆயினும் வறட்டு கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கும்; தங்கள் பதவிகளைக் காத்துக் கொள்ளவும், ஏற்கனவே  தங்களுக்கே எல்லாம் தெரிந்தது போல இவர்கள் பாசாங்கு செய்கின்றனர். போகிற போக்கில் ஒரு முடிவு செய்கிறார்கள்; பெரும்பாலும் அது தவறாக இருக்கிறது; இம்மாதிரி விசயங்களும் திருத்தப்பட வேண்டும்.

சகல பிரச்சினைகளையும் அணுகும் பொழுது எல்லா தோழருக்கும், கீழ்க்கண்ட மனோபாவம் இருத்தல் வேண்டும். ‘உனக்கு ஒருவிசயம் தெரிந்தால், எனக்குத் தெரியும் என்று சொல்; உனக்குத் தெரியவில்லையென்றால் தெரியாது என்று சொல்; “அதைவிட்டு ” உண்மையிலேயே தெரியாத விசயத்தை தெரிந்ததாகச் சொல்லிக் கொள்ளுதல் கூடாது. கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை இஷ்டப்படி தீர்க்க முடியாது. எல்லா கூட்டங்களும் முடிவுகளுக்கு வரவேண்டும். ஆனால் முடிவு  செய்ய முடியாத விசயங்கள் அல்லது இன்னும் சந்தேகமாயிருக்கும் பிரச்சினைகள், அல்லது இனியும் தெளிவுபடுத்தப்படாத விசயங்கள் பற்றி அலட்சியமாக முடிவு எடுக்கப்படக் கூடாது. ஒருவருக்கு நன்றாகத் தெரிந்த விசயங்களைப் பற்றியே முடிவு எடுக்கப்படவேண்டும். ஒருவருக்குத் தெரியாத விசயத்தை மேலும் ஆலோசிப்பதற்கு என்று தள்ளி வைத்துக் கொள்ளலாம்; அல்லது மேல் கமிட்டியின் ஆலோசனைக்கு அனுப்பப்படலாம். ஒரு கூட்டத்தில் உருவாகும் முடிவு, அவசியம் அந்தக் கூட்டத்திற்கு ஆஜரான மிகவும் பொறுப்பு வாய்ந்த தோழரால்தான் செய்யப்பட வேண்டுமென்று இல்லை; அறிக்கை வாசிப்பவர், விவாதத்திற்கு பின்னர் முடிவுகளை வகுக்கலாம்; இந்தத் தோழர் செய்யும் முடிவு கட்டுப்படுத்தும் தீர்மானத்திற்கு சமானமாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை; கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு இந்தத் தோழர் வந்த முடிவுக்கு மாறாக இருக்க முடியும்; இதுதான் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்)யிலும் காணப்படும் வேலை முறை.

மேலே குறிப்பிட்டவை , இயக்க மறுப்பியல் வகைப்பட்ட, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்தின் முக்கியமான சிலபிரதிபலிப்புகளாகும்.

மேலே நான் கூறியுள்ளவை சில, படு மோசமான பிரதிபலிப்புகளில் ஒரு சில உதாரணங்களே. அதனால் கடந்தகால உட்கட்சிப் போராட்டமும், நிகழ்கால உட்கட்சிப் போராட்டமும் எங்கும் இதே மாதிரியிருக்கிறது என்று அர்த்தமில்லை. ஆனால் அத்தகைய உட்கட்சி போராட்ட வடிவங்கள் எதார்த்தத்தில் இருந்து வருகின்றன; சில காலகட்டங்களில் கட்சியில் மேலோங்கி பிரதான உட்கட்சி போராட்ட வடிவமாகவும் ஆயிற்று.

இந்த தவறான, பொருத்தமற்ற உட்கட்சி போராட்ட வடிவங்கள் கட்சிக்குள் எத்தகைய விளைவுகளை உண்டாக்கியுள்ளன? அவை கீழ்க்காணும் மோசமான விளைவுகளை உண்டாக்கியுள்ளன.

முதலாவதாக, அவை கட்சிக்குள் “குடும்பத் தலைவன் தோரணை” ஆதிக்கத்திற்கு ஊக்கமளிக்கிறது. இத்தகைய உட்கட்சிப் போராட்டங்களினால், தனிப்பட்ட தலைவர்களும், தலைமை கமிட்டிகளும், கட்சி அங்கத்தினர்கள் பேசுவதற்கும், விமர்சனம் செய்வதற்கும்கூட அஞ்சும்படியான அளவிற்கு அவர்களை அடக்கி வருகின்றனர். இவ்வாறு கட்சிக்குள் ஒரு தனிநபர் அல்லது ஒரு சில நபர்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளும் தோரணையை வளர்க்கிறது.

இரண்டாவதாக, இதற்கு நேர்மாறாக, கட்சிக்குள் அதீத ஜனநாயகவாதப்போக்கும், தாராளவாதமும் வளர்வதற்கு, உதவியுள்ளன. சாதாரண காலத்தில் பல கட்சி அங்கத்தினர்கள் மனம் விட்டு பேசவோ, அல்லது விமர்சிக்கவோ மாட்டார்கள்; மேலெழுந்தவாரியாக கட்சியில் சமாதானமும், ஐக்கியமும் நிலவும். ஆனால் முரண்பாடுகளை மறைக்கமுடியாத நிலைமை வரும்பொழுது நிலைமை நெருக்கடியாகும் பொழுது, குற்றங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது இவர்கள் கடுமையான விமர்சனம் செய்யவும் போராடவும் இறங்கி விடுவார்கள்; இது கட்சிக்குள் பகை, பிளவு அமைப்பு சீர்குலைவு முதலியவற்றிற்குக் கொண்டு விடுகிறது; இவற்றை குணப்படுத்துவதென்பது துர்பலம்; கட்சிக்குள் இது “குடும்பத் தலைவன் தோரணையின்” மறுபக்கமாகும்.

மூன்றாவதாக, ஜனநாயக மத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி வாழ்க்கையை முறைப்படி அமைப்பதை அவை தடுத்து விட்டன. இதன் விளைவாக கட்சிக்குள் ஜனநாயக வாழ்க்கை ஒழுங்கற்றும், அசாதாரணமாகவும், அறவே இல்லாமலும் இருந்து வருகிறது.

படிக்க :
♦ அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !
♦ கம்யூனிஸ்ட் கட்சியில் தவறை மறைப்பது நோயை மறைப்பதற்குச் சமம் ! | லியூ ஷோசி

நான்காவதாக, அவை கட்சி அங்கத்தினர்களின் ஊக்கம், முன்கை எடுக்கும் குணம், ஆக்கல் சக்தி வளர்வதைத் தடுத்து, கட்சியின்பாலும், அவர்கள் வேலையின்பாலும் காட்டும் பொறுப்புணர்ச்சியைக் குறைத்துள்ளது ; இதனால் சில தோழர்கள் உற்சாகத்துடன் பொறுப்புகளை மேற்கொள்ளவோ, அல்லது சுதந்திரமான கரங்களுடன் வேலை செய்யவோ, சிருஷ்டிக்கவோ துணிவதில்லை. இது தோழர்கள் நிலைமைகளையும், பிரச்சினைகளையும் கவனமாக ஆலோசிக்கவோ, ஆராயவோ கவலைப்பட்டுக் கொள்ளாத நிலைமையில் கொண்டுவிட்டிருக்கிறது; தங்கள் வேலையை சிரத்தையின்றி அலட்சியமாக செய்து வரும், மற்றவர்கள் கூறும் வார்த்தைகளை வெறுமனே எதிரொலிக்கும் வேலை முறையை வளர்ப்பதில் கொண்டு விட்டிருக்கிறது.

ஐந்தாவதாக, அவை கட்சிக்குள் குறுங்குழுவாதத்தையும் கோட்பாடற்ற கோஷ்டிச் சண்டைகளையும் வளர்ப்பதற்கு உதவியுள்ளது . கட்சிக்குள் விமர்சனத்தையும், போராட்டத்தையும் கண்டு அஞ்சும் மனப்பாங்கை உண்டாக்கியுள்ளது; சில தோழர்களிடத்தில் “தானுண்டு தன்வேலையுண்டு” என்ற வைதீக மனப்போக்கையும் “எந்த அளவுக்கு குறைந்த வேலையோ அந்த அளவுக்கு விசேஷம்”  என்ற மனப்பான்மையையும் வளர்க்கிறது.

ஆறாவதாக, அவை ட்ராட்ஸ்கீய ஒற்றர்களுக்கும், எதிர்புரட்சிக்காரர்களுக்கும் கட்சியை சீர்குலைப்பதற்கு அரிய வாய்ப்பை அளித்திருக்கிறது; நமது கட்சியைத் தாக்குவதற்கு எதிர்ப்புரட்சிக்கு அதிக சாக்குகளைக் கொடுத்திருக்கிறது. ட்ராட்ஸ்கீய ஒற்றர்கள் கட்சியை சீர் குலைப்பது, தாக்குண்டு கட்சி மீது அதிருப்திப்பட்ட நபர்களை தன்பக்கம் இழுத்துக் கொள்வது முதலான நடவடிக்கைகளை நடத்திக்கொண்டு செல்வதற்கு கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகளையும், முறை நழுவிய எந்தவிதமான உட்கட்சிப் போராட்டத்தையும் குறிப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை, பிரச்சாரம் செய்வதற்கும் ஆத்திரமூட்டுதலுக்கும், கட்சிக்கு வெளியிலுள்ள அனுதாபிகளையும் கட்சிக்குள் உள்ள உறுதியற்ற நபர்களையும், பகை வளர்க்கும் கொள்கையை நிறைவேற்றுமாறும், கட்சிக்குள் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் சீர்குலைக்குமாறும் கவர்வதற்கும் பயன்படுத்திக்கொள்கிறது.

இந்த மேலே கூறியுள்ள தீய விளைவுகள் கட்சிக்குள் நேர்ந்துள்ளன; சில இன்னும் அகற்றப்படவில்லை.

இத்தகைய இயந்திரரீதியான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்ட வடிவங்கள் நீண்ட காலத்திற்கு கட்சி வாழ்க்கையில் அசாதாரண நிலையை சிருஷ்டித்துள்ளது. கட்சிக்குப் பெருஞ் சேதமும் விளைவித்துள்ளது. நமது கட்சியின் தலைமை தாங்கும் மேல் கமிட்டிகளில் இது திருத்தப்பட்டிருந்த போதிலும், கட்சி முழுவதையும் எடுத்துக் கொண்டால் இன்று அது பிரதான போராட்ட வடிவமாக இல்லாதிருந்த போதிலும், நடுத்தர, கீழ்த்தர மட்டங்களிலுள்ள சில அமைப்புகளிலும், சில தனிப்பட்ட அமைப்புகளிலும் இந்த போராட்ட வடிவங்கள் இன்னமும் திருத்தப்படவில்லை. பல்வேறு அளவில் பரந்து இருந்து வருகிறது. இதன் விளைவாக இந்த அமைப்புகளில் வாழ்க்கை அசாதாரணமாக இருக்கிறது. அதனால் இந்த திரிபு விசயத்தில் கவனம் செலுத்தும்படி அறைகூவ வேண்டும். அப்பொழுதுதான் நமது அமைப்பிலிருந்து இவற்றை அறவே அகற்றலாம்; நமது தோழர்கள் திரும்பவும் அதே தவறுகளை செய்யாதிருப்பார்கள்; சரியாகவும், ஒரே நிதானமாகவும் கட்சிக்குள் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி, கட்சியை முன்னுக்குக் கொண்டு செல்லுவார்கள்.

(தொடரும்)

வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு, இந்த சர்ச்சைக்குரிய சட்டங்களை திரும்பப் பெறும்படி வைத்த கோரிக்கையில் உறுதியாக நிற்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அரசு கொள்முதல் உறுதிசெய்யப்படாத பயிர்களை திறந்தவெளி சந்தையில் குறைந்த விலைக்கு விற்பதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் என்பது, உறுதியான வருமானம் கொடுக்காத பயிர்களைப் பொறுத்தவரையில், நிலைமையை இன்னும் மோசமாக்குவதாகவே இருக்குமென விவசாயிகள் அஞ்சுகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில், நெல்லும் கோதுமையும் 100% அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மக்காச்சோளம் போன்ற பயிர்களின் விசயத்தில் இந்த நிலையில்லை. வருடா வருடம் அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கிறது. ஆனால், அரசு தரப்பிலிருந்து போதுமான அளவு கொள்முதல் செய்யப்படுவதில்லை. இதன்விளைவாக, சந்தை சக்திகளே விலைகளை தீர்மானிப்பதாக இருக்கிறது. பெரும்பாலும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவானதாகவே சந்தை விலை இருக்கிறது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விலை இன்னும் குறைந்துவிடும்.

கடந்த ஜீலை மாதத்தில் வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம், மக்காச்சோளம் ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 1,850 என நிர்ணயித்தது. ஆனால், அக்டோபர் மாதத்தில் உள்ளூர் மண்டிகளில் மக்காச்சோளம் ஒரு குவிண்டால் ரூ.800-க்கு மட்டுமே விற்கப்பட்டது. இதற்கு ஈரப்பதம் அதிகமாக இருப்பதுதான் காரணமென வர்த்தகர்கள் கூறுகிறார்கள். அதற்கடுத்த வாரங்களில் விலை சிறிது முன்னேற்றமடைந்தாலும் குறைந்தபட்ச ஆதாரவிலையான ரூ.1,850-க்கு அருகில் கூட வரவில்லை.

படிக்க :
♦ பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

பஞ்பாப் மாநில, வேளாண் துறை இயக்குனர், ராஜேஷ் வசிஷ்ட் கூறுகையில், “பிகார், ஆந்திரா, கிழக்கு உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்து மக்காச்சோளம் பஞ்சாப் மாநிலத்திற்குள் கொண்டுவரப்படுவதால், பஞ்சாப் மாநில மண்டிகளில் விலை குறைந்திருக்கிறது. சென்ற ஆண்டு, வெள்ளம் காரணமாக பிற மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் அதிகம் வராததால், நல்ல விலை கிடைத்தது”.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கோழி, கால்நடைப் பண்ணைகளுக்கு தேவையான தீவனங்களின் கிராக்கி குறைந்ததால், அதற்கு பரவலாக பயன்படுத்தப்பட்ட மக்காச்சோளத்தின் விலையும் சரிந்தது. இப்போது கோழி, கால்நடைப் பண்ணைத் தீவனங்களுக்கான கிராக்கி அதிகரிப்பதால், இனிவரும் காலத்தில் விலையில் முன்னேற்றம் ஏற்படலாம்.

18 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம் விதைத்த விவசாயிகள், தங்கள் சாகுபடியை, விலை குறைந்த நேரங்களில் சேமித்து வைத்து, விலை உயரும்போது விற்கிறார்கள். ஆனால், அனைத்து விவசாயிகளுக்கும் இப்படி சேமித்து வைத்து விற்கும் அளவுக்கு வசதியில்லை. நிதிநிலை நெருக்கடி மற்றும் பெரிதாகி வரும் கடன் தொல்லைகள் காரணமாக, பெரும்பாலான விவசாயிகளின் உடனடியான அக்கறையெல்லாம் தாங்கள் சாகுபடி செய்த பயிரை விற்று, வரும் பணத்தை பெற்றுக்கொண்டு அடுத்த விளைச்சலுக்கு தயாராவதுதான்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள், ”விவசாயிகள் தங்கள் விளைச்சலை சேமித்து வைத்து, வேறு மண்டிகளுக்கு எடுத்துச்சென்று விற்று நல்ல வருமானம் பெறலாம்” என்கிறார்கள். ஆனால், விவசாயிகளுக்கு அதற்குத் தேவையான எந்த வசதிகளும் இல்லை.

நாடெங்கும் நடக்கும் விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு ஒரு குவிண்டால் பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.5,725 என நிர்ணயித்திருக்கிறது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம், உள்ளூர் மண்டிகளில் விவசாயிகள் பருத்தியை ஒரு குவிண்டாலுக்கு ரூபாய்.4,000-க்கு தான் விற்றிருக்கிறார்கள். பதிந்தா என்னும் இடத்தில் உள்ள இந்திய பருத்திக் கழகத்தின் வெளியே விவசாய சங்கங்கள் போராட்டங்கள் நடத்திய பிறகே விலை உயர்த்தப்பட்டது.  10 ஆண்டுகளுக்கு முன்பு, இதே பதிந்தா பகுதியில் பருத்தி ஒரு குவிண்டால் ரூ.8,000-க்கும் மேலாக விற்கப்பட்டது என விவசாயி ஒருவர் சொல்கிறார்.

“மற்ற தொழில்களில் எல்லாம் வருமானம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஆனால், விவசாயத்தில் மட்டும் மிகுந்த உறுதியற்றநிலை இருக்கிறது. எங்கள் இடுபொருட்களுக்கான செலவுகள் உயர்ந்துவிட்டது. பருத்தி பிடுங்கும் வேலையாட்களுக்கான செலவும் இப்போது அதிகமாக உள்ளது. ஆனால், வருமானம் எங்கே? குறைந்தபட்ச ஆதார விலையும் போதுமானதாக இல்லை” என விவசாயிகள் புலம்புகிறார்கள்.

பாஸ்மதி அரிசி சாகுபடி செய்யும் விவசாயிகளின் நிலையும் இதுதான். இது குறித்து தரன்தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரஜித் எனும் விவசாயி தி வயர் இணையதளத்திடம் பேசுகையில், “1509 ரக பாஸ்மதி அரிசி சென்ற ஆண்டு ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,300 – ரூ.2,500 வரை விற்றது. ஆனால், இப்போது ரு.1,600-க்கும் குறைவாகத்தான் சந்தை விலை இருக்கிறது. அதேபோல், 1121 ரக பாஸ்மதி அரிசிக்கு சென்ற வருடம் ரூ.3,200 – 3,300 வரை விலை இருந்தது. ஆனால், இப்போது 2,500 – 2,700 ரூபாய்க்குள் தான் விலை இருக்கிறது.” என்று கூறினார். மேலும் தனியார் முகவர்களின் கூட்டமைப்பு, தந்திரமாக உத்தர பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் இருந்து பாஸ்மதியை வாங்கி, உள்ளூர் மண்டிகளில் விலைகளை குறைப்பதாகவும் கூறுகிறார் இந்திரஜித்.

ஊரக மற்றும் தொழிற்துறை மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் முனைவர் R.S.குமன் கூறுகையில், “மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் 23 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கிறது. ஆனால் நெல், கோதுமை, சில அளவிலான பருத்தியை தவிர மற்ற பயிர்களுக்கு உறுதி செய்யப்பட்ட அரசு கொள்முதல் கிடையாது. இது விவசாயிகளை சந்தை சக்திகளின் பிடியில் விட்டுவிடுகிறது”.

“சந்தை என்பது கொடையாளன் அல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சந்தை லாபத்திற்காக மட்டுமே இயங்குகிறது. அதற்கு விவசாயிகளின் வருமானத்தின் மீதெல்லாம் அக்கறையில்லை. பொருளாதாரத்தின் அடிப்படை விதியாக தேவையும், வழங்கலும்தான் (Demand and Supply) இருக்கின்றன. அவைதான் சந்தை விலையை தீர்மானிக்கிறது. பல நேரங்களில் இது செயற்கையாக உருவாக்கப்படுகிறது. உதாரணமாக, வெங்காய விலை ரூ.80-ஐ தொட்டுவிட்டது. இதற்குக் காரணம், தேவை உயர்ந்தது அல்ல. வெங்காயத்தை பதுக்கி வைப்பதன் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட வழங்கல் நெருக்கடியும்தான் காரணம்.

படிக்க :
♦ முருக பக்தர்களே ! வேல் யாத்திரை அழைக்கிறது! வீதியிலிறங்கி கேள்வி எழுப்புவோம் !!
♦ ஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு !

குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டாலும், அரசாங்கம் நெல், கோதுமை தவிர்த்த மற்ற பயிர்களுக்கு நல்ல வருமானத்தை உறுதி செய்யவில்லை என்றால் திறந்தவெளி சந்தையின் கொள்கைகளால் வழிநடத்தப்படும் இந்த சூழலில் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை எப்படி அரசாங்கத்தால் உறுதிசெய்ய முடியும்?

இதைத்தான் இந்த புதிய வேளாண் சட்டங்கள், வேளாண் உற்பத்தி சந்தை குழுவையும், குறைந்தபட்ச ஆதார விலையையும் பலவீனப்படுத்துவதன் மூலம் செய்கிறது. தனது உணவு தானிய இருப்பை குறைத்துக்கொள்ளுமாறு உலக வர்த்தகக் கழகம் இந்தியா மீது அழுத்தம் கொடுத்து வருகிறது. இது நடந்தால், நெல், கோதுமையில் அரசு கொள்முதல் என்பது மிகப்பெரிய அளவில் சரிந்துவிடும்” என்கிறார்.

BKU – Ekta Ugrahan என்னும் அமைப்பின் செயலாளர் சுக்தேவ் கோக்ரி, கூறுகையில், “விவசாயம் தனியார்களின் கைகளுக்கு செல்லும் போதெல்லாம், விவசாயிகள் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படுகிறார்கள். ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், விவசாயிகளிடம் பெரிய அளவில் நிலம் கையிருப்பில் இருந்தும், தங்கள் விளைச்சலுக்கு கட்டுபடியாகாத வருமானத்தால், தங்களையே நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். அந்நிய நாடுகளில் 2% மக்கள்தான் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள். ஆனால், இங்கே இந்தியாவில் 60% மக்கள் விவசாயத்தை நம்பிதான் இருக்கிறார்கள். இந்தியாவில் சிறிய அளவிலான நிலத்தை வைத்திருக்கும் விவசாயிகளால் எப்படி வாழ முடியும்?” என கேட்கிறார்.

“சந்தை சக்திகளின் கருணையில் விவசாயம் விடப்படும் போது, விவசாயிகளின் நலன்கள் பெரிதும் சமரசப்படுத்தப்படுகிறது” என்று கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோ கூறுகிறார்.

வேளாண் வல்லுநர், தேவேந்திர் சர்மா, “சுதந்திர சந்தை என்பது உலகில் எங்குமே வேலை செய்யவில்லை. இங்கே மட்டும் எப்படி அது வேலை செய்யும்? சுதந்திர வர்த்தகத்தின் பொருளாதாரம் முழுவதும், ஏழை மக்களை சுரண்டுவதோடுதான் பிணைக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்.

”அரசாங்கம் வேண்டுமென்றே விவசாயத்துறையை நிதிநிலை ரீதியாக நிலையற்றதாக்குவதே, இந்த பொருளாதார சீர்த்திருத்தங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கத்தான். இது பின்னர், விவசாயத்தில் ஈடுபடும் மக்களை குறைத்து, அவர்களை நகரங்களில் இருக்கும் தொழிற்கூடங்களிலும், சேவைத்துறையிலும் பணியாற்றும் மலிவு விலை தொழிலாளர்களாக மாற்றுகிறது”.

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

இந்த கொள்கைகளின் விளைவு கொரோனா பெருந்தொற்று காலத்தில் அப்பட்டமாக அம்பலப்பட்டுவிட்டது. ஊரடங்கின் இரண்டாவது நாளே, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கிராமங்களுக்கு புலம்பெயர்ந்தார்கள். இது இந்த பொருளாதார வடிவமைப்பு ஏழைகளுக்கு பயனற்றதாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் மாநிலத்தில் மக்காச்சோளம் பயிரிடும் நிலப்பரப்பின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசாங்கமும் விவசாயிகளை மக்காச்சோளம் விளைவிக்கச் சொல்லி வருகிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலையில் அதை கொள்முதல் செய்வதையோ, தனியார் முகவர்களின் கொள்முதலை ஒழுங்கமைப்பதையோ செய்யாமல் ஏமாற்றுகிறது. குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படும் என்ற உறுதியில்லாமல், ஏன் விவசாயிகள் நெல்லுக்கு பதிலாக மக்காச்சோளத்தை விளைவிக்கவேண்டும்?

மூத்த பத்திரிக்கையாளர், கமீர் சிங் கூறுகையில், “பொது விநியோக அமைப்பின் கீழ் அரசாங்கம் பருப்புவகைகளை விநியோகம் செய்கிறது. அதை ஏன் அந்த மாநில விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக்கூடாது?” என வினவுகிறார்.

இந்த ஒட்டுமொத்த சித்திரமும் நமக்கு காட்டுவது என்னவென்றால், குறைந்தபட்ச ஆதார விலையே சந்தை பொருளாதாரத்தை மையாக கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டாலும், அரசு கொள்முதலும், ஒழுக்குமுறை விற்பனைக்கூடங்களும் இல்லாத பட்சத்தில், விவசாயிகள் சந்தை சக்திகளின் பிடியில்தான் விடப்படுகிறார்கள். சந்தை சக்திகளிடம் பேரம் பேசும் திறன் விவசாயிகளிடம் இல்லை. சாகுபடி செய்ததை சேமித்து வைக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதியுமில்லை. சேமித்து வைத்து விற்பனை செய்யும்வரை விவசாயிகளை கடன் தொல்லை விட்டுவைப்பதில்லை. சந்தை சக்திகளின் ஆதிக்கத்தால், கார்ப்ரேட் தரகர்களின் கை எப்போதும் ஓங்கியே இருக்கிறது. அவர்கள் தயவில்தான் விவசாயிகள் வாழவேண்டிய நிலையிருக்கிறது. பாஜக அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த புதிய வேளாண் சட்டங்கள் இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்யும் என்பதற்கு பஞ்சாப் மாநிலத்தின் விவசாயம் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது. அதனால்தான் அவர்கள் இந்த சட்டங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சீனிச்சாமி
செய்தி ஆதாரம் : The Wire

நவம்பர் புரட்சிநாள் விழா : சோசலிசமே மாற்று || உரைகள்

சென்னை – திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் பட்டாபிராமில் நவம்பர் 7 அன்று மாலை 6 மணியளவில் நவம்பர் புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது !!

பு.ஜ.தொ.மு திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொருளாளர் தோழர் மு.சரவணன் வரவேற்புரையாற்றினார்.

திருவள்ளூர் (மேற்கு) மாவட்டத்தின் தலைவர் தோழர் ம.சரவணன் கூட்டத்துக்கு தலைமையேற்று உரையாற்றினார். தனது உரையில், “நாம் ஏன் நவம்பர் 7 ரசிய சோசலிசப் புரட்சி நாளை நினைவுகூர வேண்டும்?” என்பதை விளக்கிப்பேசினார்.

உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வந்த நாள், வரலாற்றில் முதல் முறையாக யாரும் பார்த்திராத வகையில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அரசாங்கம் உருவானது. அதேபோல் நாமும் நமது நாட்டில் புரட்சி நடத்த அணிதிரள வேண்டியது மிகவும் அவசியம். ஏழை, உழைக்கும் மக்களுக்கான அரசாங்கத்தை கட்டியமைக்க அனைவரும் இணைந்துப் போராடுவோம் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்“ என அறைகூவல் விடுத்தார்.

இறுதியாக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் துணைத் தலைவர் தோழர் ச.மகேஷ்குமார் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

பாருங்கள் ! பகிருங்கள்!!

தனிநபர் மீதான தாக்குதல், உட்கட்சிப் போராட்டமாகாது || லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 6

பாகம் – 5

இயந்திரகதியான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்தின் வடிவங்கள் என்ன? அவை பின்வருமாறு:

முதலாவதாக, ஸ்தல கட்சி அமைப்புகளிலும் இராணுவத்திலுள்ள கட்சி அமைப்புகளிலும் “போராட்டக் கூட்டங்கள்” என்று சொல்லப்படும் கூட்டங்கள் ஒழுங்காக நடந்தேறுகின்றன. அரசாங்க அமைப்புகள், பொதுஜன அமைப்புகள் போன்ற கட்சி சார்பற்ற அமைப்புகளிலும் “போராட்டக் கூட்டங்கள்” ஒழுங்காக நடத்தப்படுகின்றன. முன்கூட்டியே அந்த போராட்டக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. செய்த வேலையை சீர்தூக்கிப் பார்க்கும் பிரதான நோக்கத்துடன் அவை நடத்தப்படுவதில்லை. சில தனிப்பட்ட நபர்களைத் தாக்கும் நோக்கத்துடன் அவை நடத்தப்படுகின்றன.

“விவாதத்திற்குரிய விசயத்தை”க் குறித்து போராட்டத்தை நிகழ்த்துவதற்கு பதிலாக, போராட்டம் “ஆளுக்கு விரோதமாக”த் திருப்பப்படுகிறது; வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இந்த போராட்டம் பிரதானமாக சில தவறான சித்தாந்தத்தையோ, கோட்பாட்டையோ எதிர்த்து நடத்தப்படவில்லை. குறிப்பிட்ட தனி நபரை எதிர்த்து நடத்தப்படுகிறது.. “ஒரு சாங்கை எதிர்த்தோ அல்லது லீயை எதிர்த்தோ நடத்தப்படும் போராட்டம்” என்று சொல்லப்படும் போராட்டம் தவறு செய்த குறிப்பிட்ட ஒரு தோழரைத் தாக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.

சாராம்சத்தில் “போராட்டக் கூட்டம்” ஒரு குறிப்பிட்ட தோழருக்கு எதிரான விசாரணைக் கூட்டம். இது பிரச்சினைகளை சித்தாந்த பூர்வமாக தீர்க்கும் இலட்சியத்தை பிரதானமாகக் கொண்டிருக்கவில்லை; சில பிரச்சினைகளை அமைப்புபூர்வமாகத் தீர்ப்பதை இலட்சியமாகக் கொண்டிருக்கிறது; தொந்தரவு கொடுப்பவர்களை, மாறுபட்ட அபிப்பிராயங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர்களை (அம்மாதிரியான அபிப்பிராயங்கள் அவசியம் தவறாகத்தானிருக்க வேண்டுமென்றில்லை) விரட்டி ஒடுக்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. மேலும், ஒவ்வொரு “போராட்டக் கூட்டத்திலும்”, தவறாமல் எந்தத் தனிநபர்கள் மீது போராட்டம் நடத்தப்பட்டதோ அவர்களில் பெருவாரியானவர் பற்றி அமைப்பு ரீதியான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இத்தகைய போராட்ட முறைகள் தவறானவை என்று சொல்லாமலே விளங்கும். அது ஏன் சரியானதில்லை?

முதலாவதாக, “போராட்டக் கூட்டம்” என்ற பதமே தவறானது. அதற்கு அர்த்தமேயில்லை ; “போராட்டக் கூட்டங்கள்” என்று சொல்லப்படுபவை இருப்பதினால், “போராட்டமில்லாத கூட்டங்களும்” இருக்கின்றனவா? சில கூட்டங்கள் குறிப்பாக போராட்டம் நடத்துவதற்காக இருக்கின்றனவென்றும் போராட்டம் நடத்தப்படாத வேறு கூட்டங்கள் இருக்கின்றன என்றும் நாம் கருதுவோமானால் அது சித்தாந்த ரீதியாக பெருங்குழப்பத்தை விளைவிக்கும். பல தோழர்கள் போராட்டத்தின் பரிபூரண தன்மையையும், அனைத்தையும் அணைத்து நிற்கும் குணத்தையும் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் இது இங்கு நிரூபிக்கிறது. இயக்க மறுப்பியல் முறையில் கல்வியையும், போராட்டத்தையும் பிரித்துப் பார்க்கின்றனர்.

உட்கட்சிப் போராட்டத்தின் நோக்கம் கட்சியையும் பிழைகள் செய்த தோழர்களையும் போதிப்பதாகும். ஆதலின் கட்சிப் போராட்டம் என்பதுவே கட்சிக்குள் ஒருவிதமான இன்றியமையாத போதனையாகும்; கட்சிக்குள் கல்வி என்பதும் ஒரு உட்கட்சிப் போராட்டமாகும். மற்றதுடன் ஒப்பிடுங்கால், மிக நிதானமான போராட்டமாகும். அதனால் கல்வியும் போராட்டமும் தனித் தனியாக பார்க்கக் கூடியவையன்று; போராட்டம் என்பது ஒருவிதக் கல்வி; கல்வி என்பது ஒருவிதப் போராட்டம்; அவ்விரண்டையும் இயக்க மறுப்பியல் ரீதியாக பிரிப்பது என்பது தவறு.

மேலும் அத்தகைய “போராட்டக் கூட்டங்கள்” கட்சிக்குள் உள்ள குறுங்குழுவாதத்தின் மிக வெளிப்படையான பிரதிபலிப்பாகும். ஊழியர்களையும், தோழர்களையும் தாக்கும் தவறான கொள்கையின் பிரதிபலிப்புமாகும். தவறு செய்த தோழர்களுக்கு உதவி செய்து, போதித்து, பாதுகாப்பதற்கு பதிலாக, எந்த தோழர்களைக் குறித்து போராட்டம் நடத்தப்படுகிறதோ அந்த தோழர்களைத் தாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பிரதானமாக தனிநபரை எதிர்த்துப் போராடும் நோக்கங் கொண்டது. அதே சமயத்தில் சித்தாந்தத் துறையிலுள்ள முரண்பாடுகளும், வேற்றுமைகளும் அலட்சியப்படுத்தப்படுகின்றன.

ஆகவே இத்தகைய “போராட்டக் கூட்டங்கள்” கட்சிக்குள் சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும், அமைப்பு ரீதியிலும், நடைமுறையிலும் ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கு பெரும்பாலும் தவறுகின்றன. அதற்கு நேர்மாறாக, சித்தாந்தம், அரசியல், அமைப்பு சம்பந்தமான விசயங்களிலும், நடைமுறையிலும் உள்ள வேறுபாடுகளை பெரும்பாலும் அதிகரிக்கின்றது; கட்சிக்குள் வேற்றுமையையும் கோட்பாடற்ற தகராறுகளையும் அதிகப் படுத்துகிறது; இத்தகைய “போராட்டக் கூட்டங்களை” கட்சியல்லாத மற்ற அமைப்புகளில் நடத்துவது என்பது இதிலும் தவறானது.

இரண்டாவதாக, இயக்கமறுப்பியல் வகைப்பட்ட, மிதமிஞ்சிய உட்கட்சி போராட்டம் கீழ்க்கண்ட வழிகளிலும் பிரதிபலிக்கின்றது. உட்கட்சிப் போராட்டம் எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது மேலானது என்று சில தோழர்கள் அபிப்பிராயங் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு பிரச்சினை எவ்வளவு கடுமையாகக் கிளப்பப்படுகிறதோ அவ்வளவுக்கு அது சிறப்பானது, எவ்வளவுக்கு அதிகமாக குற்றங்குறை கூறுகிறார்களோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; எவ்வளவு தடபுடலான பதங்களை உபயோகிக்கிறார்களோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; விமர்சனம் எவ்வளவு ஏசுகிறார்களோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; எவ்வளவுக்கு கடுமையாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அது சிறப்பானது; எவ்வளவுக்கு முகம் தொங்கவிட்டுக் கொள்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது; எவ்வளவுக்கு பற்களை கடகடவென்று நெரிக்கின்றோமோ அவ்வளவுக்கு சிறந்தது. இந்தமாதிரி நடந்து கொண்டால், “புரட்சிக்காரர்கள் எவ்வளவு புரட்சிகரமாக இருக்கவேண்டுமோ அவ்வளவுக்கு புரட்சிகரமாக இருப்பதாக” தங்களைப்பற்றி கருதிக் கொள்கின்றனர். உட்கட்சிப் பற்றியோ, நிதானம் பற்றியோ கவலைப்படுவதில்லை; பொருத்தமான எல்லையுடன் நிற்பதில்லை. எந்தவிதமான கட்டுப்பாடுமில்லாமல் போராட்டத்தை நடத்துகின்றனர். இது முற்றிலும் தவறானது என்பது வெள்ளிடைமலை.

மூன்றாவதாக, உட்கட்சிப் போராட்டம் சாராம்சத்தில் சித்தாந்தப் போராட்டம் என்பதை இன்னும் சில தோழர்கள் புரிந்து கொள்வதில்லை. சித்தாந்த ஐக்கியத்தை சாதிப்பதின் மூலம்தான் கட்சிக்குள் ஐக்கியத்தை நிலை நாட்டவும், அரசியல் ரீதியிலும், அமைப்பு ரீதியிலும், நடைமுறையிலும் பலப்படுத்தவும் முடியும் என்றும், பிரச்சினைகளை அமைப்பு, நடைமுறை சம்பந்தமான கோணத்திலிருந்து தீர்ப்பதற்கு முன்பு, சித்தாந்தம், கோட்பாடு ஆகிய கோணங்களிலிருந்து தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

ஆயினும் ஒற்றுமையை உருவாக்குவதும், பிரச்சினைகளை சித்தாந்த ரீதியிலும் கோட்பாடுகளின் அடிப்படையிலும் தீர்ப்பதும், மற்றவர்களின் சித்தாந்தத்தை சீர்திருத்துவதும், நெடுநாளாக மற்றவர்கள் கொண்டுள்ள கோட்பாடுகள், கண்ணோட்டம் தவறான அபிப்ராயங்கள் முதலியவற்றை திருத்துவதும் சுலபமான காரியமல்ல. சும்மா சில வார்த்தைகளில் இதைச் செய்துவிட முடியாது; வெறும் “போராட்டக் கூட்டத்தின்” மூலமும் செய்துவிட முடியாது. தான்தோன்றித் தனமான வழிகளினாலோ அல்லது கட்டாய நடவடிக்கைகளினாலோ மட்டும் அதை சாதித்துவிட முடியாது; பொறுமை மிக்க போதனைகளின் மூலமும், கல்வியின் வாயிலாகவும், பல்வேறு விதமான சிக்கல் நிறைந்த போராட்டங்கள் மூலமாகவும், புரட்சியில் நீண்டகால கல்வி, போராட்டம், செயல்முறை மூலமாகவும்தான் இது கைகூடும், உட்கட்சிப் போராட்டத்தின் இந்த சாராம்சத்தை இந்த ஒளியில் சில தோழர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆனால் அதற்கு பதிலாக உட்கட்சிப் போராட்டத்தை சிறுமைப்படுத்தவும், யாந்திரீகப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் செய்கின்றனர்.

உட்கட்சிப் போராட்டம் என்றால் இது அமைப்பு அல்லது அமைப்பு சம்பந்தப்பட்ட விசயத்திலுள்ள ஒரு முரண்பாடாகக் கருதுகின்றனர்; அல்லது அதை சண்டையிடுவதாக, ஏசுவதாக, சச்சரவிடுவதாக அல்லது குஸ்திபோடுவதாக எண்ணுகின்றனர். உண்மையான ஒற்றுமைக்காக அவர்கள் முயலுவதில்லை. பிரச்சினைகளை கோட்பாடுகள் சித்தாந்தத்தின் அடிப்படையில் தீர்ப்பதில்லை. கட்சிக்குள் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமான வேறுபாடுகளை அவ்வளவு எளிய இயந்திரகதியான, கொச்சையான வழிகளில் தீர்க்க முடியும் என்று அவர்கள் எண்ணுகின்றனர். இது முற்றிலும் தவறானது என்று சொல்லத் தேவையில்லை.

இந்தத் தோழர்கள் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தப்பட்ட வேறுபாடுகளை கட்சிக்குள் நிவர்த்திப்பதின் மூலமாகவும் சில தவறான போக்குகளையும் வளர்ச்சிகளையும் திருத்துவதின் மூலமும் கட்சிக்குள் ஒற்றுமையை உருவாக்குவதோ அல்லது பாதுகாப்பதோ இல்லை. அதற்கு நேர்மாறாக கட்சிக்குள் வெறும் அமைப்பு வழிகளில் மட்டும், அல்லது தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள், தாக்குதல் கொள்கை, கட்சி அங்கத்தினர்கள் சம்பந்தப்பட்ட மட்டில் தண்டனை முறை முதலியன மூலம் ஒற்றுமையை உருவாக்கவும், பாதுகாக்கவும் முயலுகின்றனர். இதன் விளைவாக பல்வேறு தவறான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டங்கள் எழுகின்றன. ஆதலால் கோட்பாடு, சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தோழர்களை ஜாக்கிரதையாகவும் கருணையுடனும் போதிப்பதற்குப்பதிலாக, தோழர்களை சாதாரண அமைப்பு வழிகளை கைக்கொள்வதின் மூலம், எதிரான முறைகள், நிர்வாக நடவடிக்கைகள் முதலியவற்றைக் கடைப்பிடிப்பதின் மூலம் தோழர்களை ஒடுக்கவும், மிரட்டவும் செய்கின்றனர்.

இவர்கள் தோழர்களைப்  பற்றி தாறுமாறான அமைப்பு முடிவுகளுக்கு வருகின்றனர். அமைப்பு ரீதியான தண்டனைகளையும் தோழர்களுக்கு வழங்குகின்றனர். மேலும் சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம் என்னும் பூர்ஷ்வா கண்ணோட்டத்தை வைத்துக் கொண்டு கட்சிக்குள் தோழர்களை நிர்தாட்சண்யமாக தண்டிக்கின்றனர்; அதாவது குற்றம் செய்தவர்கள் எத்தகைய கட்சி அங்கத்தினர்கள், இவர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டோ அல்லது திருத்திக் கொண்டோ இருக்கிறார்களா என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கட்சி அமைப்பு விதிகளில் வரையறுத்துள்ள மிகக் கடுமையான தண்டனையை வழங்குகின்றனர். இந்த வழியில் கட்சிக்குள் தண்டனைமுறை நுழைக்கப்படுகிறது. வேலையை துவக்குவதற்கும், முன்கொண்டு செல்வதற்கும் போராட்டங்கள் நடத்தும் வழியை அவர்கள் அடிக்கடி கையாளுகின்றனர். “போராட்ட இலக்குகளை” (கட்சிக்குள் உள்ள தோழர்களை) வேண்டுமென்றே தேடுகின்றனர். அவர்களை சந்தர்ப்பவாதத்தின் பிரதிநிதிகள் என்று எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றனர். இந்த ஒரு தோழரையோ அல்லது அந்த ஒரு சில தோழர்களையோ “நாயை பயமுறுத்துவதற்காக வான்கோழியைக் கொன்ற கதை” என்று வழங்கும் சீனப்பழமொழியைப் போன்று மற்ற கட்சி ஊழியர்கள் கடுமையாகப் பாடுபடவும், பணியை பூர்த்தி செய்யும் பொருட்டும் அவர்கள் தியாகம் செய்கின்றனர்; அல்லது தாக்குகின்றனர், போராட்ட இலக்குகளின் குறைபாடுகள் குற்றங்கள் பற்றி அவர்கள் வேண்டுமென்றே தகவல் சேகரித்து, இயக்க மறுப்பியல் வகையிலும், துண்டு துக்காணியாகவும், அவ்வளவு பொருட்படுத்தக் கூடாத வார்த்தைகளையும் செயல்களையும் குறித்துக் கொள்கின்றனர்.

அத்தகைய குறைபாடுகளையும் தவறுகளையும், பொருட்படுத்தத்தகாத அவரது மொழிகளையும், செயல்களையும் தனிமையில் பார்த்து, இவையனைத்தும் அத்தோழரின் முழுத்தன்மையையும் பிரதி நிதித்துவப் படுத்துவதாகக் கருதுகின்றனர். இந்தத் தோழரின் தனிப்பட்ட குறைகளையும், குற்றங்களையும் பெரிதுபடுத்தி, கட்சித் தோழர்களிடையில் இத்தோழரைப் பற்றி மிகவும் மோசமான அபிப்ராயத்தை உண்டாக்கி, இந்தத் தோழரை எதிர்த்துப் போராடுவதில் சந்தர்ப்பவாதமுறையில் வெறுப்பு ஊட்டுகிறார்கள். பிறகு யார் வேண்டுமானாலும் “செத்த புலியை அடிக்கலாம்”. சில தோழர்கள் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்னும் மனோபாவம் வளரத் தொடங்குகிறது. இந்தத் தோழரின் சகல குறைகளையும், பிழைகளையும் அவர்கள் அம்பலப்படுத்துகின்றனர்; இந்தக் குறைகளையும், குற்றங்களையும் தன்னிஷ்டப்படி கோட்பாடு மட்டத்திற்கு உயர்த்துகின்றனர்.

அவர்கள் சில கட்டுக்கதைகளையுங்கூட புனைந்து விடுகின்றனர்; தன் மன சந்தேகத்தையும், முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகளையும் ஆதாரமாகக் கொண்டு அத்தோழர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். அவர் மூளை குழம்பும் வரை விட மாட்டார்கள். இவ்வளவும் செய்துவிட்டு, தாக்கப்பட்ட தோழர் தன் நிலையை எடுத்து வாதிப்பதற்கு அனுமதிப்பதென்றால் அப்பொழுதும் கூட மனம் வருவதில்லை. அவர் வாதிட்டால் தனது குற்றங்களை வேண்டு மென்றே நியாயப் படுத்துவதாகவோ அல்லது பல நிபந்தனைகளுடன் ஒப்புக்கொள்வதாகவோ அவர் மீது குற்றஞ்சாட்டுவார்கள். பிறகு அவர் மீது மேலும் பாணம் எய்துவர். தாக்கப்படும் தோழர் பணிந்து நடக்கும் நிபந்தனையின் பேரில் தனது சொந்த அபிப்ராயத்தை வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. மேல்கமிட்டிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்வதற்கும் அனுமதிப்பதில்லை. அங்கேயே அவர் தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

தாக்கப்படும் தோழர் தனது தவறுகளை பூராவும் ஒப்புக் கொண்டுவிட்டால், சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமான பிரச்சினை தீர்க்கப்பட்டதா என்பதைப் பற்றி கவலைப்பட்டுக் கொள்வதில்லை. ஆகவேதான் கட்சிக்குள் போராட்டத்தில் சில தோழர்கள் அவர்கள் செய்த குற்றங்களைக் காட்டிலும் அதிக குற்றங்களை ஒப்புக்கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. தாக்குதலைத் தவிர்ப்பதற்காக எல்லா குற்றச்சாட்டுகளையுமே  ஒப்புக்கொண்டுவிடுவது மேல் என்று அவர்கள் எண்ணினர். எல்லாப்  பிழைகளையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டபோதிலும், இன்னும் அவர்களுக்கு அது என்னதான் சமாசாரம் என்றே தெரியாது. இத்தகைய போராட்ட முறைகள் உண்மைக்காக நிமிர்ந்து நிற்கும் கம்யூனிஸ்டு உறுதியை  வளர்க்காது என்று இங்கு நிரூபணமாகிறது.

(தொடரும்)