Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 256

ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

0

பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 3

பாகம் 2 : தத்துவஞானத்தை ஹெகலிடமிருந்து துவங்கிய எங்கெல்ஸ்

ங்கெல்சுக்கு முன்பே மிகப் பலர் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களை வர்ணித்து, அதற்கு உதவி புரிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லியுள்ளனர். பாட்டாளி வர்க்கம் துன்ப துயரங்களை அனுபவிக்கும் வர்க்கம் மட்டுமல்ல, உண்மையிலே பாட்டாளி வர்க்கத்தின் வெட்கக் கேடான பொருளாதார நிலைமை தடுக்க முடியாத வகையில் அதை முன்தள்ளிச் செல்கிறது, தனது இறுதி விடுதலைக்காகப் போராடும்படி நிர்ப்பந்திக்கிறது என்று எங்கெல்ஸ்தான் முதன்முதலாகச் சொன்னவர். மேலும், போராடும் பாட்டாளி வர்க்கம் தன் கையையே தனக்குதவியாகக் கொள்ளும். தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயக்கம் தங்களது விமோசனம் சோசலிசத்தில் மட்டுமே உள்ளது என்று தொழிலாளர்கள் அறியும் நிலைக்குத் தவிர்க்க முடியாதபடி கொண்டுபோய்விடும்.

மறுபக்கத்தில், தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தின் இலட்சியமாக ஆகும் போதுதான் சோசலிசம் ஒரு சக்தியாக ஆகும். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றிய எங்கெல்ஸ் நூலிலுள்ள பிரதான கருத்துக்கள் இவைதான். சிந்தனையுள்ள, போராடிக் கொண்டிருக்கிற பாட்டாளிகள் எல்லோரும் இந்தக் கருத்துக்களை இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் அவை முழுக்க முழுக்கப் புதியனவாயிருந்தன. சிந்தனையைக் கவரும் நடையில் எழுதப்பட்ட இந்நூலில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்

பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களைப் பற்றிய முற்றிலும் உண்மையான, அதிர்ச்சி உண்டாக்கத்தக்க சித்திரங்கள் இந்நூலிலே நிறைந்துள்ளன. இந்த நூல் முதலாளித்துவ அமைப்பின் மீதும் முதலாளி வர்க்கத்தின் மீதும் மிகப் பயங்கரமான குற்றச்சாட்டாக விளங்கியது. மக்களின் மனத்தில் அது பசுமரத்தாணிபோல் பதிந்தது. எங்கெல்சின் நூல் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமையைப் பற்றிய மிகச் சிறந்த சித்திரத்தை வழங்குகிறது என்று இதிலிருந்து எங்கும் மேற்கோள் காட்டத் தொடங்கினார்கள். உண்மையிலே பார்த்தால், 1845-ம் ஆண்டுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, தொழிலாளி வர்க்கத்தின் துன்பதுயரங்களைப் பற்றி இவ்வளவு வியக்கத்தக்க உண்மையான சித்திரம் வெளிவந்தது கிடையாது.

இங்கிலாந்துக்கு வந்த பிறகுதான் எங்கெல்ஸ் சோசலிஸ்டு ஆனார். அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தின் தலைவர்களுடன் மான்செஸ்டரில் எங்கெல்ஸ் தொடர்பு கொண்டார்; பிரிட்டிஷ் சோசலிசப் பத்திரிகைகளில் எழுதத் துவங்கினார். 1844-ம் ஆண்டில், ஜெர்மனிக்குத் திரும்பிவரும் வழியில், பாரிஸ் நகரில் அவர் மார்க்சைச் சந்தித்துப் பழகினார். மார்க்சுடன் ஏற்கெனவே அவர் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தவர்தான். பாரிசில் பிரெஞ்சு சோசலிஸ்டுகளின், பிரெஞ்சு வாழ்க்கையின் செல்வாக்கின்கீழ் மார்க்சும் சோசலிஸ்டு ஆகிவிட்டார்.

இங்கே அவ்விரு நண்பர்களும் சேர்ந்து புனிதக் குடும்பம் அல்லது விமர்சன வகைப்பட்ட விமர்சனத்தின் விமர்சனம் என்று தலைப்பிட்ட ஒரு நூலை எழுதினார்கள். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூல் வெளியாவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே இது வெளிவந்தது. இதன் பெரும் பகுதியை மார்க்ஸ்தாம் எழுதினார். இந்நூலில் புரட்சிகரமான பொருள்முதல்வாத சோசலிசத்தின் அடிப்படைகள் – அதன் முதன்மையான கருத்துக்களை மேலே விளக்கிச் சொல்லியிருக்கிறோம் – சொற்பமான அடங்கியுள்ளன. ”புனிதக் குடும்பம்” என்பது தத்துவஞானிகளான பௌவர் சகோதரர்களையும், அவர்களைப் பின்பற்றியோரையும் குறிக்கும் கேலிப் பெயராகும்.

எல்லா வகையான யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட, கட்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு விமர்சனத்தை இந்தக் கனவான்கள் பிரச்சாரம் செய்தார்கள். எல்லாவிதமான நடைமுறை நடவடிக்கைகளையும் அது நிராகரித்தது; நம்மைச் சூழ்ந்துள்ள உலகையும், அதில் நடந்துவரும் நிகழ்ச்சிகளையும் பற்றி அந்த விமர்சனம் வெறுமே ”விமர்சன” கண்கொண்டு பார்ப்பதோடு நின்று விட்டது. இந்தக் கனவான்கள் – பௌவர் சகோதரர்கள் – பாட்டாளி வர்க்கம் விமர்சனப் பார்வையற்ற கும்பல் என்று இழிவுபடுத்தினார்கள். சுத்த அபத்தமான, தீங்கு விளைவிக்கக் கூடிய இந்தப் போக்கை மார்க்சும் எங்கெல்சும் தீவிரமாக எதிர்த்தார்கள்.

ஆளும் வர்க்கங்களாலும் அரசாலும் மிதித்து நசுக்கப்பட்டு வரும் தொழிலாளி என்ற அசல் மனிதப் பிறவியின் சார்பாக வீண் சிந்தனை அல்ல, மேம்பட்ட சமுதாய அமைப்பு முறைக்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் கோரினார்கள். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அக்கறை கொண்டுள்ள சக்தியாக, இந்தப் போராட்டத்தை நடத்துவதற்குத் திறன் பெற்றுள்ள சக்தியாக, பாட்டாளி வர்க்கத்தை அவர்கள் கருதினார்கள் என்பதில் ஐயமில்லை. புனிதக் குடும்பம் வெளிவருவதற்கு முன்பே, மார்க்சும் ரூகேயும் நடத்திய Deutsch-Franzosische Jahrbicher என்ற பத்திரிகையில் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனவுரைக்கு ஒரு நகல் என்ற தொடரை எங்கெல்ஸ் வெளியிட்டார்.

அக்கட்டுரைகளில் தனிச்சொத்தின் ஆதிக்கத்தால் ஏற்பட்டுத் தீரும் விளைவுகள் என்ற முறையில், நவீன காலப் பொருளாதார அமைப்பு முறையின் முதன்மையான தோற்றங்களை சோசலிச நோக்குநிலையிலிருந்து பரிசீலித்தார். அரசியல் பொருளாதாரத்தைப் பயில்வதென்று மார்க்ஸ் முடிவு செய்ததற்கு அவர் எங்கெல்சுடன் தொடர்பு கொண்டிருந்தது ஒரு காரணம் என்பதில் சந்தேகமேயில்லை. அரசியல் பொருளாதாரம் என்ற விஞ்ஞானத் துறையில் மார்க்ஸ் அசல் புரட்சியையே உண்டாக்கிவிட்டார்.

1845-லிருந்து 1847 வரை எங்கெல்ஸ் பிரஸ்ஸெல்சிலும் பாரிசிலும் வாழ்ந்தார். விஞ்ஞானப் பயிற்சியோடு கூடவே பிரஸ்ஸெல்ஸ், பாரிஸ் நகரங்களிலுள்ள ஜெர்மன் தொழிலாளர்களிடையே நடைமுறை நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இங்கே இரகசியமாயிருந்த ஜெர்மன் கம்யூனிஸ்டுகளின் லீக்” என்ற நிறுவனத்துடன் மார்க்சும் எங்கெல்சும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் வரையறுத்து விவரித்துள்ள சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும்படி அந்த லீக் அவர்களைப் பணித்தது. இவ்வழியேதான் மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை என்ற புகழ்பெற்ற நூல் 1848-ல் வெளிவந்தது. இந்தச் சிறு பிரசுரம் மிகப்பெரிய நூல் தொகுதிகளுக்குச் சமமானது. அதன் உணர்ச்சி நாகரிக உலகில் ஒழுங்கமைப்பு பெற்று அணிதிரண்டு போராடி வரும் பாட்டாளி வர்க்கம் முழுவதையும் இன்றைக்கும்கூட ஊக்குவித்து இயக்கிச் செல்கிறது.

(தொடரும்)

நவம்பர் 26 : தொழிற்சங்கங்களின் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !

கொரோனா தொற்றைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வருகிறது பாஜக. நாம் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தும் நம் கண் முன்னே பறிக்கப்படுகிறது. அந்த வரிசையில் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் செய்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும் பறித்து வருகிறது பாஜக.

பாஜக அரசு கொண்டு வரும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்களும் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இத்தகைய தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் வருகின்ற 26.11.2020 அன்று மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாளிகளின் லாபவெறிக்கு தீனி போட்டு பன்னாட்டு மூலதனத்தை ஈர்ப்பதையே நோக்கமாக் கொண்டு தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி, கொத்தடிமை முறையிலான சட்டங்களை இயற்றிவருகிறது பாஜக அரசு. ஏட்டளவிலாவது இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களில், 15 சட்டங்களை ரத்து செய்து விட்டு, மீதமுள்ள 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி, தொழிலாளர் உரிமை, நலன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் பறிக்கத் திட்டமிட்டுள்ளது.

படிக்க :
♦ தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா : ஒரு பார்வை | பா. விஜயகுமார்

♦ ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !

சங்கம் சேரக்கூடாது, தொழிற்சாலைக்கு எதிராகப் போராடக்கூடாது, சம்பள உயர்வுக் கேட்கக் கூடாது, போனஸ் கிடையாது, நிரந்த வேலைக்கு உத்திரவாதம் கிடையாது, ஓய்வூதியம் தர முடியாது, ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு, தொழிற்சங்க அங்கீகாரத்தைச் சிதைப்பது, குறைந்தபட்ச ஊதியத்திற்கு குந்தகம் விளைவிப்பது என பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக தொழிற்சாலைகள் அரசின் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இதனை கார்ப்பரேட்டுகள் சட்டரீதியாகவே செய்வதற்கு உகந்த வகையில்தான் சட்ட திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மோடி அரசு.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து அரசுத் துறைகளையும் தனியாருக்கு தாரைவார்ப்பது, தொழிலாளர் நலச்சட்டத்தை திருத்துவது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை அமல்படுத்துவது, கல்வி, மருத்துவம், போக்குவரத்து தனியார்மயம், இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல் ஆகியவை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தனியார்மயம் தாராளமயத்தின் விளைவாகத்தான் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு, ஏழைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்காமல் போவது ஆகியவை நடைபெறுகின்றன.

எனவே நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும், நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்களின் தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்க முடியாது. தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படும் நம் ஒவ்வொருவருடைய பிரச்சினையும்தான்.

இந்த போராட்டத்தில் அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு), புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (புஜதொமு), தொமுச, இந்தியத் தொழிற்சங்கக் கவுன்சில் (ஏஐசிசிடியு), ஐஎன்டியுசி, இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தேசிய சம்மேளனம், போக்குவரத்து மஸ்தூர் யூனியன் (டிஎம்யு-டிஎஸ்), தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், பெஸ்ட் தொழிலாளர் யூனியன், தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் பங்கேற்கின்றன. மேலும், திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்தப் பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

மக்கள் விரோத சட்டங்களை இயற்றி அமல்படுத்தும் பாசிச பாஜக அரசுக்கு எதிராக அனைவரும் களத்தில் இறங்குவோம்.


சந்துரு
நன்றி :
தீக்கதிர் (09-11-2020)

மூத்த செயல்பாட்டாளர்கள் மீது வலதுசாரிகள் குறிவைப்பது ஏன் ?

4

டந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் எல்கர் பரிஷத் வழக்கில் கைதான, 81 வயது செயல்பாட்டாளரும் கவிஞருமான வரவர ராவ், சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் வயோதிகம் காரணமாக சுயமாக முடிவுகள் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் வைரஸ் தொற்று சிகிச்சைக்கு முழுமையான சிகிச்சை அளிக்காமல் மீண்டும் அவரை சிறைக்கு அனுப்பியது மனித உரிமை மீறல் எனவும் அவருடைய குடும்பம் நீதிமன்றம் சென்றது. பல முறை அவருடைய பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், குறைந்தபட்ச கரிசனத்தோடுகூட சிகிச்சை கோரும் மனுவை நீதிமன்றம் அணுகவில்லை. வழக்கு விசாரணைக்கு வருவதே இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது.

இதே வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் பழங்குடியின செயல்பாட்டாளர் 83 வயதான ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாக பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன்னால் ஒரு கோப்பை நீரைக்கூட நடுக்கம் இல்லாமல் பிடித்து, குடிக்க முடியாது எனக் கூறி, நீரை உறிஞ்சி குடிக்க ஸ்டிரா பயன்படுத்த அனுமதிக்குமாறு நீதிமன்றம் சென்றார். கொடூர குற்றங்கள் புரிந்தோருக்கும் மனித உரிமை உள்ளதாகக்கூறும் ஜனநாயகத்தின் கீழ் இயங்கும் நீதிமன்றம், குற்றச்சாட்டின் கைதான பழங்குடிகளுக்காக உழைத்த, சமூகத்தில் மதிப்பிற்குரிய ஒரு மனிதருக்கு ஸ்டிரா வழங்கும் வழக்கைக்கூட விசாரிக்க முனையவில்லை. 20 நாட்களுக்கு அந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வயோதிக செயல்பாட்டாளர்களைக் கண்டு இந்த பாசிச அரசு ஏன் அச்சம் கொள்கிறது? இதன் மூலம் அரசு உணர்த்தவிரும்பும் செய்தி என்ன என்பதைக் கூறுகிறது ஜே என் யூ பல்கலைககழக பேராசிரியர் அஜய் குடவர்த்தி எழுதிய இந்தக் கட்டுரை.

======

படிக்க :
♦ சமூக செயற்பாட்டாளர்கள் கைது : ஆர்.எஸ்.எஸ்-ன் சதிப் பின்னணி என்ன ?
♦ செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !

காத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவர் ஒரு பலவீனமான மனிதராகவும்  ஏமாற்றமடைந்தவராகவும் இருந்தார்; மேலும் தேசிய அரசியலில் இருந்து விலகியிருந்தார்.  78 வயதில்,  தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையைப் பற்றி அயராது பேசியவருக்கு வன்முறை மூலமாக மரணம் நிகழ்ந்தது பரிதாபத்திற்குரியது.  ஆனால் இப்போது அது மட்டுமே நிகழவில்லை என்பது தெரிகிறது; ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்குப் பிறகு, அதை எதிரொலிக்கும் தொடர் நிகழ்வுகளை இப்போது நாம் காண்கிறோம்.

இது கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் மற்றும் கல்புர்கி ஆகியோரின் கொலைகளுடன் தொடங்கியது – அவர்கள் அனைவருமே தங்களுடைய 70 வயதுகளில் இருந்தனர். சமீபத்தில் 80 வயதுகளில் உள்ள வரவர ராவ் மற்றும் இப்போது ஸ்டான் சுவாமி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள வலதுசாரிகளின் அமைதியான ஆனால் தெளிவான வயதுவாதம், அவர்கள் வாழ்க்கையையும் நிஹிலிசத்தையும் (அறமற்ற தன்மையையும்) பாதிக்கப்படக்கூடியவர்களாக கருதத்தக்கவர்களின்  மீதான வெறுப்பையும் எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கான முக்கிய தடயங்களை வைத்திருக்கிறது. 80 -89 வயது வரையானவர்களின் மீதான தொடர்ச்சியான கொலைகள் மற்றும் கைதுகள் விளக்குவது என்ன, அவர்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

வேட்டையாடும் அரசு

மூத்த, வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட செயல்பாட்டாளர்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப்படுகிறார்கள், அது என்ன தோற்றத்தை உருவாக்குகிறது என்பதற்கு கலவையான காரணிகள் இருப்பதாகத் தெரிகிறது. இது இரக்கமற்ற தன்மையையும் பொறுப்பற்ற தன்மையையும் உடனடியாக  வெளிக்காட்டுகிறது. ஒரு காலத்தில் சக்திவாய்ந்த மேடைப் பேச்சாளராக அறியப்பட்ட வரவர ராவ் சரியான சொற்களைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்; யானையைப் போன்ற நினைவுத்திறன் கொண்டவர், தனது சொந்த குடும்பத்தை அடையாளம் காணமுடியாமல் இருக்கிறார்.

மன அழுத்தத்தால் தூண்டப்படும் அனைத்து அறிகுறிகளும் வயோதிகத்துடன் வருகின்றன. ஆனால் அவருக்கு தொடர்ச்சியாக பிணை வழங்காமல் மறுப்பதும் அவரை மீண்டும் சிறையிலேயே வைத்திருப்பதற்கான சூழ்ச்சிகளும் “கதையை” முடிப்பதற்கான போர் என்பதைப் புரிந்து கொள்வதற்கான செய்தியாகும்.

இது ஒரு வேட்டையாடும் கலாச்சாரத்தை குறிக்கிறது, அங்கு ஒருவர் வெற்றியாளராகவோ அல்லது முறியடிக்கப்பட்டவராகவோ இருக்கலாம். மூத்தவர்களைக் குறிவைப்பது என்பது வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் காப்பாற்றப்படாவிட்டால் மீதமுள்ளவர்கள் தப்பிக்க முடியாது என்ற இறுதித் தீர்ப்பு நாள் (பேரழிவு நாள் – Doomsday) குறித்த உணர்வைக் கொடுப்பதாகும்.

‘உற்பத்தியில் ஈடுபடாத உடல்களுக்கு’ இடமும் பொறுமையும் கிட்டத்தட்ட இல்லாத வலுவான தேசம் என்கிற கருத்தாக்கத்தையும் இது எதிரொலிப்பதாகத் தெரிகிறது. யூதர்களை மட்டுமல்லாது, மாற்றுத்திறனாளிகளாக இருந்த வெள்ளையின ஜெர்மன் குழந்தைகளையும் குறிவைத்து விசவாயு அறைகளில் அடைத்த நாசி ஆட்சியின் நினைவுகளை இது மீண்டும் கொண்டு வருகிறது. இது சந்தை மற்றும் தேசத்தின் ஒரு வகையான ‘திறன்வாதத்தைக்’ குறிக்கிறது. ஒருவர் ‘பயன்பாட்டில்’ இல்லாவிட்டால், உற்பத்தி செய்யாவிட்டால், அவர்களை தூக்கியெறிவது அறமற்ற செயலல்ல என்பதை சொல்கிறது.

முன்னேற்றத்தை நோக்கும் இளம் மற்றும்  திறன் கொண்ட தேசத்திற்கு எதிராக இது நிற்பதாக தோற்ற அளவில் தெரிகிறது. இயல்பாகவே மூத்த மற்றும் வயதானவர்கள் உயர்த்திப் பிடிக்கும் மதிப்புகள் மற்றும் சித்தாந்தங்கள் காலாவதியானவை மற்றும் பொருத்தமற்றவை என்பதையும் சித்திரமாக இது குறிக்கிறது. சுருங்கி வரும் உடல்கள், மறைந்துபோகும் யோசனைகள் மற்றும் தலைகீழான மதிப்பு அமைப்பு குறித்த குறியிடப்பட்ட செய்தியை தெரிவிப்பதற்கான வார்ப்புருக்களாக மாறியுள்ளன.

ஸ்டான் சுவாமியின் சமீபத்திய வீடியோ உடல் பிரச்சினைகளைப் பற்றி புகார் அளித்தாலும், பழங்குடியினருக்காக போராடுவதில் அவர் நின்ற மதிப்பீடுகளுக்கு உறுதியுடன் இருப்பதும், பயமற்ற அர்ப்பணிப்பின் செய்தியை அனுப்பக்கூடும். ஆனால் அவர்களுக்கு ஓய்வு தேவை என்பதையும் பேரப்பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடவும் நிகழ்ந்தவற்றை அசை போடவும் தவிர்க்க முடியாததற்கு காத்திருக்கவும் வேண்டிய நேரத்தில் அவர்கள் தங்களை நீட்டிக்கிறார்கள் என்பதையும் இது குறிக்கலாம்.

இந்து தத்துவத்தில், இது உலக நோக்கங்களை கைவிடுவதைக் குறிக்கும் வனப்பிரஸ்தா மற்றும் சன்யாசாவை நோக்கிச் செல்லும் வயதைக் குறிக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடி குகையில் தியானிப்பதையும், தேர்தல் முடிவுகளுக்கு இடையில் தனிமையில் நடந்து செல்வதையும், மாநில அல்லது மத்திய அரசாங்கங்களில் நிர்வாக பதவிகளை வகிக்க 75 வயது அதிகபட்ச வயது என அறிவிப்பதோடு தொடர்புடையதாகும். அவர் வயதான தலைவர்களை புதிதாகத் உருவாக்கப்பட்ட மார்கதர்ஷக் மண்டலுக்கு (வழிகாட்டும் குழு) மாற்றினார்.

இந்து வாழ்க்கை முறையின் கலாச்சார குறியீடுகளின்படி, மூத்தவர்களை வெளியேற்றுதல் சமூகத்தில் குறைந்த எதிர்ப்பையும் போராட்டத்தையும் சந்திக்கும் என வலதுசாரிகள் நம்புகிறார்கள். இது அதிக பயம் மற்றும் குறைந்த எதிர்ப்பிற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் உண்மையிலேயே எஞ்சியுள்ளன, சமூகம் மன்னிக்கும், மேலும் மிகைப்படுத்தல்களை இன்னும் எளிதாக மறந்துவிடக்கூடும் என்ற கணக்கீட்டுப் பட்டகத்தின் மூலம் இது காணப்படுகிறது.

அரசியல் அறமற்ற தன்மை

இளைஞர்களின் கைதுகள் சமுதாயத்தை தூண்டும் ஒரு எதிர்ப்பைக் கொண்டுவருகின்றன. மூத்தவர்களை சிறையில் அடைப்பது, வாழ்க்கையின் பொருளையும் நோக்கத்தையும் நம்மைப் சிந்தித்துப் பார்க்கச் செய்கிறது. நாம் அதை குறைவாகவே செயலுடன் தொடர்புபடுத்துகிறோம்.

இது அறமற்ற உணர்வைக் கொண்டுவருகிறது; மரணத்தின் தவிர்க்க முடியாத தன்மை மற்றும் துன்பத்தின் பயனற்ற தன்மையை நமக்கு நினைவூட்டுகிறது. “முக்தி பவன்” திரைப்படத்தில் நமக்கு நினைவூட்டுவது போல மற்ற உலக சந்தோசங்களுக்கான நேரத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது. உண்மையில், மத தத்துவத்தின் பெரும்பகுதிகளில், மரணம் என்பது மோட்சம், இது வெற்று உடலுக்கான ஒரு வகையான விடுதலையாகும், மேலும் இது வருத்தப்பட வேண்டிய ஒன்றல்ல, மிகக் குறைவான எதிர்ப்புக்குரியது.

படிக்க :
♦ பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் படுகொலை !
♦ கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா !

பாதிக்கப்படக் கூடியதன்மையின் ஆழமான உணர்வோடு கூடிய தனிமையின் உணர்வையும் வயோதிகம் நமக்கு நினைவூட்டுகிறது. ஒருவரின் பாதுகாப்பு, கவனிப்பு மற்றும் கூட்டு நலனின் மகிழ்ச்சி குறித்து திட்டமிட நமக்கு நினைவூட்டுகிறது. மேலும், வீரமான செயல்பாட்டுக்கான விலை, உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல வயதான உடலுக்கான அடிப்படைத் தேவைகளையும் இழக்கக்கூடும் என்பதை திட்டமிடுவதன் அவசியத்தை இது நமக்கு நினைவூட்டுகிறது.

இது உள்ளார்ந்த பாதுகாப்பின்மையை உருவாக்கும் உளவியலில் ஆழமான வேர்களைக் கொண்டிருக்கக் கூடும்; மறைந்திருக்கும் மற்றும் இருள்கொண்ட நமது தன்மை குடிகொண்டிருக்கும் தளங்களை வலதுசாரிகள் கவனத்தோடு குறிவைக்கிறார்கள்.

இனவாத கலவரத்தின் போது விஷம் கலந்த பால் விற்கப்படுவதாக வதந்திகள் எவ்வாறு பரவுகின்றன என்பதை உளவியல் பகுப்பாளர் சுதிர் கக்கர் குறிப்பிடுகிறார். பால் ஒரு ஆதிகால தாய்வழி பாதுகாப்பின் அடையாளத்தைக் குறிக்கிறது. இது மறைந்திருக்கும் அச்சங்கள் மற்றும் பாதுகாப்பின்மை மற்றும் வன்முறைக்கான ஆதிகால உள்ளுணர்வைத் தூண்டும். மூத்தோர்களையும் வயதானவர்களையும் கொல்வதன் மூலமும் கைது செய்வதன் மூலமும்,  தனது சொந்த சமுதாயத்தின் மீது ஒரு உளவியல் போரை வலதுசாரிகள் இலக்காக கொண்டிருக்கிறார்கள்.

ஷாகின் பாகில் கூடிய தாதிக்களை அடையாளப்படுத்தும் பில்கிஸ் பானோ புதிய நம்பிக்கையாக பார்க்கப்படுவதற்கும் ஈர்க்கப்படுவதற்கும் இது ஒரு சக்திவாய்ந்த முரணாக உள்ளது. அவருடைய வயது, மகிழ்ச்சி அன்பு மற்றும் குறும்பு ஆகியவற்றைத் தூண்டுகிறது. இது மதம் மற்றும் இடத்தின் சமூக எல்லைகளை மீறுகிறது. டைம் பத்திரிகை 2020-ம் ஆண்டின் 100 ‘மிகவும் செல்வாக்கு மிக்க’ நபர்களின் பட்டியலில் அவரும் உள்ளார்.

வாழ்க்கை இயங்கியல் வழியாக நகர்கிறது, தற்போதைய ஆட்சி வயதின் அடிப்பகுதியைப் பார்க்கும்போது, ஷாகின் பாகின் மூத்தோர்கள் மார்க் ட்வைன் ஒருமுறை பிரபலமாக கூறியதை நமக்கு நினைவூட்டுகிறார்கள்: ‘வயது என்பது ஒரு விசயத்தை குறித்த மனதின் பிரச்சினையே. நீங்கள் கவலைப்படாவிட்டால், அது ஒரு பொருட்டல்ல. ‘ வயது வாழ்க்கையின் இலகுவான பக்கத்தைக் கொண்டு வருகிறது, மேலும் வாழ்க்கையை சந்தேகத்துடன் எடுத்துக் கொள்வதையும், ஒருவரின் உடனடி நலனிற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக நிற்பதையும் நினைவூட்டுகிறது. இரட்சிப்பு மற்றும் சுதந்திரத்தின் இந்த வயதான வீரர்களின் வாழ்க்கையை கொண்டாடுவதோடு, தற்போதைய இழிந்த காட்சிகளை கூட்டு எதிர்ப்பு தலைகீழாகப் புரட்டிப் போட வேண்டும்.

அஜய் குடவர்த்தி

தமிழாக்கம் : கலைமதி
நன்றி: The Wire

 

பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !

“விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டின் எந்தமூலையில் இருக்கும் வர்த்தகரிடமும் விற்கலாம்; விவசாயிகளின் பேரம் பேசும் சக்தி அதிகரிக்கும்” என்று சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் குறித்து பாஜக உள்ளிட்ட கார்ப்பரேட் ஆதரவு தரப்பு கூறி வருகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கான இலாபம் அதிகரிக்கும் என்றும் கூறி வருகிறது. இது அப்பட்டமான பொய் என்பதை பீகார் விவசாயிகளின் நிலைமை நிருபிக்கிறது.

குறைந்தபட்ச ஆதாரவிலை, வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC), அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் இதெல்லாம் இல்லாமல் போனால் விவசாயிகளின் நிலைமை என்னவாகும் என்பதை பீகாரிலிருந்து  பாஞ்சாபிற்கு நெல் கடத்தப்படும் சம்பவங்கள் அம்பலப்படுத்துகின்றன.

சமீபத்தில் பிகார், உத்திர பிரதேசம், ஆகிய மாநிலங்களில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு நெல் கடத்தப்படும் மோசடி நடப்பதாக பஞ்சாப் போலீசு கூறுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறையின் முதன்மைச் செயலாளர், K.A.P.சின்கா இது குறித்துக் கூறுகையில், இதுவரை 69 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், மோசடி (Section 420), குற்றவியல் சதி (Section 120-B) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

படிக்க :
♦ வெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி !
♦ உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் !

இதுபற்றி குறிப்பிடும் போலீசு ஆய்வாளர் குர்மீத் சிங் “ இந்த மோசடி பஞ்சாப், பிகார், உத்திர பிரதேச மாநிலங்களில் உள்ள வர்த்தகர்கள், தரகர்கள், மில் முதலாளிகளின் தலையீடு இல்லாமல் நடந்திருக்க முடியாது” என்கிறார். பஞ்சாப் மாநில, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை இயக்குனர், மித்ரா கூறுகையில்,இதுவரை 128 லாரிகளும், 11 டிராலிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது”, என்கிறார்.

“பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளின் ஓட்டுநர்கள் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தின் படி,  பஞ்சாப் மண்டிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்ட நெல் மூட்டைகள், பிகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரூ. 800-க்கும் குறைவான விலையில் வாங்கப்பட்டது. அதை பஞ்சாபில் குறைந்தபட்ச ஆதார விலையான 1,868 ரூபாய்க்கு விற்று லாபம் ஈட்டுகிறார்கள். பஞ்சாப் மாநில அரசின் முறையான  கொள்முதல் அமைப்பை தங்களுக்கு சாதகமாக அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்கிறார் மித்ரா.

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளில் சுமார் 2,500 டன் நெல் இருந்ததாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன் விலை தேராயமாக ரூ. 5 கோடி வரை இருக்கும். ஆனால், இந்த முறைகேடான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் நடந்திருக்கிறது என்பது பஞ்சாப் மாநிலத்தின் மொத்த சாகுபடியையும், மொத்த கொள்முதலையும் கணக்கில் கொண்டு பார்த்தால் தெரிந்துவிடும்.

பிடிபட்ட கடத்தல் லாரிகள்

பஞ்சாப் வேளாண் துறையின் தரவுகளின் படி, 2019-2020-ம் ஆண்டுக்கான, மதிப்பிடப்பட்ட நெல் சாகுபடி 150 லட்சம் டன். ஆனால், இந்திய உணவுக் கழகத்தின் பொது மேலாளர் சுமீத் பன்சல், “மொத்த நெல் கொள்முதலின் அளவு 162 லட்சம் டன்” என்கிறார். அதாவது, கிட்டத்தட்ட 12 லட்சம் டன் நெல் வேறு எங்கோ இருந்து கொண்டுவரப்பட்டிருக்கிறது.

சமீபத்தில், பாட்டியாலாவில் ஒரு மேலாளருக்கும், வர்த்தகர்க்கும் இடையில் நடந்த வாட்சப் (whatsapp) உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், “வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிய நெல்லை, பஞ்சாப் மாநில மண்டிகளில் குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 1,868-க்கு விற்க அனுமதித்தால் தனக்கு எவ்வளவு லஞ்சம் கிடைக்கும்?” என்று பேரம் பேசியது அம்பலமானது. அந்த மேலாளர் இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு குவிண்டாலுக்கு ரூ. 200 – 300 வரை லாபம் நிர்ணயித்து, தரகர்கள் நெல்லை குறைந்த விலைக்கு பிகாரில் வாங்குகிறார்கள். போக்குவரத்துக்கு ரூ.200 வரை செலவு போக மீதி லாபத்தை பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் இடைத்தரகர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் முறையான மண்டி அமைப்பு இருக்கிறது. பிகார் போன்ற மாநிலங்களில் கொள்முதல் முறையாக நடைபெறுவதில்லை. அப்படி நடக்கும் கொள்முதலுக்கான பணமும் உடனடியாக விவசாயிகளுக்கு வந்து சேர்வதில்லை.

“மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்த பட்ச ஆதார விலைக்கு நெல்லை யார் வாங்குவார்கள்? எங்கள் விளைச்சலை எங்கே கொண்டு செல்வது? நெல் அறுவடை செய்யப்பட்டு தயாராக இருக்கும் போது யாரும் கண்டுகொள்வதில்லை. விவசாயிகள் எங்கே போவார்கள்? இந்த உதவியற்றநிலை தங்கள் விளைச்சலை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க விவசாயிகளை நிர்பந்திக்கிறது”, என்று பிகார் மாநில சிறு விவசாயிகள் சங்கத்தலைவர், B.N.சிங் தெரிவிக்கிறார்.

ராஷ்டிரிய கிசான் சபாவின் தலைவர், ரமஷிஷ் ராய் இது குறித்துக் கூறுகையில், “14 ஆண்டுகளுக்கு முன்பு 2006-ல் பிகார் அரசு, விவசாயிகளை தாராளமயப்படுத்துவதாக சொல்லி வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவை (Agriculture Produce Market Committee(APMC)) ஒழித்தது. ஆனால், இது விவசாயிகளை இடைத்தரகர்களின் பிடியில் விட்டுவிட்டது. இந்த இடைத்தரகர்கள்தான் விவசாயிகளுக்கு வரவேண்டிய கொஞ்ச நஞ்ச லாபத்தையும் பறித்துக் கொள்கிறார்கள்” என்கிறார்.

வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC), என்பது விவசாயிகளின் விளைச்சலை மலிவான விலைக்கு விற்க நிர்பந்திக்கும் இடைத்தரகர்கள், முதலாளிகளிடம் இருந்து விவசாயிகளை பாதுக்காக்க கொண்டுவரப்பட்டது. அரசு கொள்முதல் செய்யாத போதும், APMC குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் விளைபொருட்களை விற்பதற்கான களமாக இருக்கிறது.

படிக்க :
♦ எனது படிப்பு குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறது ! தற்கொலைதான் ஒரே போக்கிடம் !
♦ செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !

வேளாண் உற்பத்தி சந்தைக் குழு (APMC), ஒழிக்கப்படும் போது, இடைத்தரகர்களை நம்பி இருக்கவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலையை இடைத்தரகர்கள் மதிப்பதில்லை. லாபம் ஒன்றே நோக்கமாக இருக்கும் அவர்களுக்கு விவசாயிகளின் வாழ்க்கைநிலை பற்றிய அக்கறை சிறிதும் இருப்பதில்லை.

அரசு கொள்முதலும் இல்லை, வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவும் இல்லை, என்றான போது, விளைபொருட்களுக்கான விலை உத்தரவாதம் ஒன்றுமில்லை. இது விவசாயிகளை கையறுநிலைக்கு இட்டுச்செல்கிறது. அவர்களை விவசாயத்தில் இருந்தே வெளியேறும்படி செய்கிறது. அப்படி, விவசாயத்தை விட்டு வெளியேறியவர்கள் தான் இன்று பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

விவசாய வல்லுநர் தேவேந்திர சர்மா கூறுகையில், “பிகார் மாநிலத்தில் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவை, ஒழிக்காமல் இருந்திருந்தால் பிகார் இந்தியாவின் மலிவு விலை தொழிலாளர்களின் கூடாரமாக மாறாமல் இருந்திருக்கும்” என்கிறார். சுதந்திரச் சந்தை என்பது விவசாயிகளுக்கு நியாயமான விலையை கொடுக்காது என்பதற்கு பிகார் ஒரு சிறந்த உதாரணம்.

கார்ப்பரேட்டுகளைப் பொறுத்தவரையில் இது ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் விவகாரம். விளைபொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்குவது, விவசாயிகளை விவசாயத்தில் இருந்து விரட்டுவது, குறைந்த கூலிக்குத் தேவையான ரிசர்வ் பட்டாளங்களை உருவாக்குவது என மூலதனத்தின் ஆட்சிக்கு சாதகமான நிலைமைகளையே இந்த வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்புச் சட்டம் உருவாக்கவிருக்கிறது.

வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவை ஒழித்தால் நிறைய தனியார் மூலதனம் கிடைக்கும். தனியார் நிறுவனங்கள், பெரிய மண்டிகளை கட்டுவார்கள், விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று போலியான, சாத்தியமற்ற ஆருடங்களைச் சொல்லி ஏய்த்து வருகிறது கார்ப்பரேட் ஆதரவுக் கும்பல். ஆனால், அது சந்தையை ஒரு சிலரின் ஏகபோகமாக மாற்றி விவசாயிகளை சுரண்டுவதற்குதான் இட்டுச்செல்லும் என்பதை பிகார் விவசாயிகளின் நிலைமை சுட்டிக் காட்டுகிறது.

இப்படி கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் விவசாயிகளை சந்தை சக்திகள் ஒட்டச் சுரண்டுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதை சட்டப்பூர்வமாக்கும் வேலையையும், சிறு சிறு தரகர்களை ஒழித்துவிட்டு கார்ப்பரேட் தரகர்களைக் கொண்டு வரும் வேலையையும் தான் வேளாண் சட்டத்திருத்தங்களின் மூலம் பாஜக செய்யத் துடிக்கிறது.

இன்றைய பிகார் விவசாயிகள் அடிமாட்டுக் கூலிக்குப் பணி செய்யும் நாடோடிகளாக மாற்றப்பட்டிருப்பதே அதற்குச் சான்று !


சீனிச்சாமி
செய்தி ஆதாரம் :
The Wire

கம்யூனிஸ்ட் கட்சியில் தவறை மறைப்பது நோயை மறைப்பதற்குச் சமம் ! | லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 5

பாகம் – 4

III. இயக்க மறுப்பியல் வகைப்பட்ட, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்தின் பிரதிபலிப்புகள்

தோழர்களே!

இன்று உட்கட்சிப் போராட்டத்தில் காணப்படும் மூன்று திரிபுகளில் முதல் திரிபான தாராளவாதம் என்னும் திரிபை நான் விவாதிக்கப் போவதில்லை. இன்று கட்சிக்குள் தாராளவாதத் திரிபு அவ்வளவு பிரமாதமாகவில்லை என்றோ, அல்லது தாராளவாதத்தை எதிர்த்துச் சண்டையிடுவது முக்கியமானதல்ல என்றோ நான் நினைக்கவில்லை. தாராளவாதப் போக்கைப் பற்றியும் ஸ்தூலமான பிரச்சினைகளில் அதன் பிரதிபலிப்பை பற்றியும் நமது தோழர்கள் நன்கு தெளிந்திருக்கிறார்கள் என்று நான் எண்ணவில்லை என்றபோதிலும் – ஏன் பல தோழர்கள் இன்னும் முழுவதும் தெளிவுபடவில்லை என்று எண்ணியபோதிலும் நான் இன்று அந்த விசயத்தைப்பற்றி பேசப்போவதில்லை.

எனக்கு சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது பிறிதொரு சமயம் பேசுகிறேன். இங்கு, தாராளவாதப் போக்கு கட்சிக்குள் சமீப காலத்தில் கொஞ்சம் வளர்ந்திருக்கிறது என்றும், சில இடங்களில் உட்கட்சிப் போராட்டத்தில் அது பிரதான போக்காக ஆகியிருக்கிறதென்றும், கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டம் போதிய அளவுக்கு வளர்க்கப்படவில்லை என்று மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தக் காரணத்தினால் பல தவறான போக்குகளும் விரும்பத்தகாத வளர்ச்சிகளும் காலாகாலத்தில் திறம்பட திருத்தப்படவில்லை. கட்சிக் கட்டுப்பாடு மெள்ள மெள்ள தளரத் தொடங்கி விட்டது. இது வெகு மோசம்.

இது ஏனெனில், நமது கட்சி சமீபத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அறிவாளிகளையும், புதிய கட்சி அங்கத்தினர்களையும் கட்சிக்குள் எடுத்துக் கொண்டிருக்கிறது; இவர்கள் பூர்ஷ்வா தாராளவாதத்தில் ஊறிப் போனவர்கள்; சித்தாந்த ரீதியிலும், அரசியல், அமைப்பு ரீதியிலும் தொழிலாளி வர்க்கத்தின் உருக்குப் போன்ற கட்டுப்பாட்டில் புடம் போடப்பட்டவர்கள் அல்ல. இவர்கள் அதற்கிடையில் சென்ற காலத்தில் “இடதுசாரி” தவறுகள் செய்தவர்கள். மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்திற்கு நின்றவர்கள்.

இப்பொழுது நேரெதிர் முகமாகத் திரும்பி, வலதுசாரி தாராளவாதத்தை செய்திருக்கிறார்கள். நீண்டகால ஐக்கிய முன்னணி சூழ்நிலையில், கட்சிக்குள் பூர்ஷ்வா வர்க்கம் தனது செல்வாக்கை பிரயோகிப்பதற்கு சந்தர்ப்பம் அதிகரித்திருக்கிறது. கட்சிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் எதிர்ப்புரட்சிக்காரர்கள், கட்சியில் தாராளவாதத்தை வளர்ப்பதற்கு எல்லா முறைகளையும் கையாண்டுள்ளார்கள். கட்சி உணர்வை உறுதிப்படுத்தும் வேலைக்கு நாம் நிகழ்த்தும் போராட்டத்தில் இந்த போக்கு பலமாக எதிர்க்கப்பட வேண்டும்.

உதாரணமாக, சில தோழர்கள் திருப்பிக் குற்றஞ் சாட்டப்படுவர் என்பதற்காக பயந்து கொண்டு மற்ற தோழர்களின் குறைகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுகிறார்கள். ஒருவருடைய தவறை ஒருவர் மறைத்து வைக்கும் பொருட்டு தங்கள் நெருங்கிய நண்பர்களின் குற்றங்களை சுட்டிக் காட்ட மாட்டார்கள்; ஒருவரைப் பற்றி நேருக்கு நேர் பேச மாட்டார்கள்; ஆனால் அவருக்குத் தெரியாமல் பிறரிடம் பொறுப்பில்லாத முறையில் பலதும் பேசுவார்கள். பொறுப்பற்ற முறையில் விமர்சிப்பது, முணுமுணுப்பது, வம்பளப்பது முதலான போக்குகள் கட்சிக்குள் நிறைய இருந்து வருகிறது.

மேலும் சமீப காலத்தில் கட்சிக்குள் இன்னுமொரு மிக மோசமான போக்கு தலை தூக்கியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கோஷ்டியைச் சேர்ந்த நபர்கள், தங்கள் குறைபாடுகளையும், குற்றங்களையும் கட்சிக்கோ அல்லது அவர்களுக்கு மேலுள்ளவர்களிடத்திலோ மற்றவர்கள் புகார் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு விரோதமாக மற்றவர்கள் குற்றச்சாட்டுகள் கொண்டுவந்துவிடுவார்களோ என்று குலை நடுங்கிக்கொண்டிருக்கின்றனர். ஒருபுறத்தில் அவர்களுக்கே தெரிந்திருக்கும் அதே தவறுகளை அவர்களால் செய்யாமலிருக்க முடியவில்லை ; மறுபுறத்தில் அவர்கள் குற்றங்குறைகளைப் பற்றி கட்சிக்கு, அவர்களுக்கு மேலுள்ளவர்களுக்கு மற்ற தோழர்கள் தெரிவிப்பதையோ, கூட்டங்களில் விமர்சனம் செய்வதையோ தடுக்க முயற்சி செய்கின்றனர். அவர்கள் சில தவறான, முறையற்ற காரியங்களைச் செய்திருக்கிறார்கள். பிழைகள் செய்திருக்கிறார்கள்; குற்றங்குறைகளைத் திருத்திக் கொள்ளும் பொருட்டு அவற்றை வெளிப்படுத்துவதற்கு இஷ்டமில்லை! தங்கள் வியாதியை மறைத்துக் கொள்ளுகிறார்கள்; தங்கள் வியாதியை குணப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்; தங்கள் தவறுகளை வெளிப்படுத்துவதின் மூலம்தான் அத்தகைய குற்றங்களைத் திருத்த முடியும் என்ற உண்மையை அவர்கள் உணரவில்லை . அவர்கள் தங்கள் குற்றங்களை பூலோகத்திலுள்ள பொக்கிஷங்களைக் காட்டிலும் அதிக மதிப்புள்ளது போல, மேல் பூச்சுப்பூசி, மூடிமறைக்கப் பார்க்கின்றனர்.

இக்காரணத்தினால் தங்கள் குற்றங்களை மற்றவர்கள் சரியாகப் பார்க்காமல் தடை செய்வது மட்டுமல்ல, அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடவும் முயலுகின்றனர். கட்சிக்கோ அல்லது அவர்களுக்கு மேலுள்ளவர்களுக்கோ தங்கள் தவறுகளைப் பற்றி புகார் செய்யவிடாமல் தடை போடுகின்றனர்; முற்றிலும் முறையான அமைப்பு வழிகள் மூலம் கட்சிக்குள் விமர்சனம் செய்யவும், எடுத்துப் பேசவும் மற்றவர்களுக்குள்ள உரிமையை இவ்வாறு இழக்கச் செய்கின்றனர். “மேலுள்ளவர்களுக்கு நீ புகார் செய்வாயாகில் பின் நீ கவலைப்பட வேண்டி வரும்; சரியான உதை கொடுப்பேன். ஜாக்கிரதை! ஏ! அடி தாங்கி” என்று மற்ற தோழர்களை பயமுறுத்துகிறார்கள். மேலுள்ளவர்களுக்கு இவர்களது குற்றங்களைப் பற்றி புகார் செய்து பேசிய தோழர்களை ஒரேயடியாக வெறுக்கின்றனர். அதை எண்ணி மனம் நோகின்றனர். பழிக்கு பழி வாங்க வேண்டுமென்று சிந்திக்கின்றனர். இவையெல்லாம் கட்சி அங்கத்தினரின் உணர்வை அறவே இழந்து நிற்கும் நிலையின் தீய அறிகுறிகளாகும். கட்சிக்குள் தாங்கள் தீய காரியங்களை செய்யும் பொருட்டு கட்சியின் தலைமைக் கமிட்டிகளுக்கும் சாமானிய கட்சி அங்கத்தினர்களுக்கும் உள்ள இணைப்பைத் துண்டிக்க முயலுகின்றனர். கட்சியிலிருந்து இந்தப்போக்கு கண்டிப்பாக விலக்கப்பட வேண்டும்.

படிக்க :
♦ மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !
♦ வர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம்

மற்ற கட்சி அங்கத்தினர்கள் தவறுகள் செய்தாலும் அல்லது கட்சிக்கு பாதகமான காரியம் ஏதும் செய்தாலும் சரி, கட்சி அங்கத்தினர் அதை காண நேர்ந்தால் கட்சிக்கும் அவர்களுக்கு மேலுள்ளவர்களுக்கும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய அறிக்கை கொடுக்காமலிருப்பது தவறு; அறிக்கை கொடுப்பது முற்றிலும் சரியானது.

கட்சிக்கோ அல்லது மேலுள்ளவர்களுக்கோ மற்றவர்கள் அறிக்கை கொடுப்பதை தடுப்பது என்பது சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் விரோதமானது; கட்சியில் என்றுமே அனுமதிக்கப்படமாட்டாது. இத்தகைய அறிக்கைகள் கிடைத்தால், மேல் கமிட்டிகள், என்ன நடந்தது என்பதை நுட்பமாகத் துருவி ஆராய்ந்து, வழக்கை வெகு கவனமாக விசாரிக்க வேண்டும்; சம்பவத்தைப் பற்றிய ஒருதலைப்பட்சமான தகவலை வைத்துக் கொண்டு அவசரப்பட்டு தீர்ப்பு செய்யாமலிருக்க வேண்டும்.

இன்று கட்சிக்குள் சித்தாந்த ரீதியான போராட்டம் முறையாகத் துவக்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே முடிவு செய்துள்ளோம். அதனால் நாம் தாராளவாதத்தை எதிர்க்க வேண்டும். குறிப்பாக பெரும் தாராளவாதத் தவறுகள் இழைக்கப்பட்ட சில கட்சி உறுப்புகளில், அத்தகைய தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தாராளவாதத்திற்கு எதிராக நாம் ஸ்தூலமான போராட்டம் நடத்த வேண்டும்.

பல வருஷங்களுக்கு முன்பு தாராளவாதத்தைக் கண்டித்து தோழர் மாசேதுங் ஒரு கட்டுரை எழுதினார்; அதில் கட்சிக்குள் காணப்படும் பதினேழுவிதமான தாராளவாதப் பிழைகளை விவரித்துள்ளார். இன்றைக்கும் அவரது கட்டுரை பொருந்தும்; அதை நீங்கள் வெகு கவனமாக படிக்க வேண்டும். அந்தக் கட்டுரையின்படி தாராளவாதத்தை எதிர்த்துப் போராடவும், திருத்திக் கொள்ளவும் முயல வேண்டும். அதே சமயத்தில் கட்சி கட்டுவது பற்றிய வகுப்பிலும் தாராளவாதம் பற்றி பூரண விவாதம் நடத்தப்படும். அதனால்தான் இன்று அந்த விசயத்தை நான் எடுத்துக் கொள்ளவில்லை; நான் பேசப்போவது இரண்டாவது, மூன்றாவது திரிபுகளாகும்; ஏனெனில் இந்த இரண்டு திரிபுகளையும் கட்சிக்குள் யாருமே இதுவரை முறைப்படுத்தி விவாதித்ததில்லை.

(தொடரும்)

நவம்பர் 7 : வேல் யாத்திரை முதல் வேளாண் மசோதா வரை || புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் !

சென்னை – திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு, பட்டாபிராமில் நவம்பர் 7 அன்று மாலை 6 மணியளவில் நவம்பர் புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

தோழர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என சுமார் 250-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் தோழர்கள் பங்கு கொண்டு பாஜகவின் வேல் யாத்திரை முதல் வேளாண் மசோதா வரை அனைத்தையும் அம்பலப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

பாருங்கள் ! பகிருங்கள் !!

செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !

பீமா கொரேகான் வழக்கில் மாவோஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக கூறி சிறையிலடைக்கப்பட்டிருக்கும் பழங்குடி மனித உரிமை செயற்பாட்டாளரும் 83 வயது முதியவருமான பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு பிணை தர ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றம் மறுத்திருந்த நிலையில், அவரது உடல்நிலை கருதி அவருக்கு தண்ணீர் குடிப்பதற்கான உறிஞ்சியை வழங்குவதற்குக் கூட  அனுமதியளிக்காமல் இழுத்தடிக்கிறது என்.ஐ.ஏ.

83 வயதாகும் ஸ்டான் பாதிரி கடந்த 40 ஆண்டுகளாக ஜார்கண்ட் காடுகளில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தார். பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக அக்டோபர் 8-ம் தேதி அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டு தற்போது சிறை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அக்டோபர் 22-ம் தேதி அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு பிணை கோரிய வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் கிட்டத்தட்ட கேட்கும் திறனை இழந்து விட்டிருக்கிறார். சிறையிலும் பலமுறை கீழே விழுந்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை சிகிச்சை மேற்கொண்டிருப்பதால் அடிவயிற்றுப்பகுதியில் இதனால் அவருக்கு வலி ஏற்பட்டிருக்கிறது.

அதை தொடர்ந்து, நடுக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால் தன்னால் தண்ணீரை கூட கையால் பிடித்து குடிக்க முடியவில்லை என்றும், உறிந்து குடிப்பதற்கு உறிஞ்சி (Straw) மற்றும் சிப்பர் வேண்டும் என்று கேட்டு ஸ்டான் சுவாமி விண்ணபித்திருந்தார். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், இது குறித்து முடிவெடுக்க 20 நாள் காலக்கெடு கேட்டுள்ளது.

படிக்க :
♦ இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் !
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !

ஒரு உறிஞ்சி (Straw) வழங்குவது குறித்து முடிவெடுக்க 20 நாட்கள் கேட்பது குறித்து துளியும் யோசிக்காமல், 83 வயது முதியவரின் உயிர்வாழ்வதற்கான உரிமையைக் கூட உறுதிபடுத்துவதைப் பற்றி யோசிக்காமல், அதற்கு அனுமதியளித்துள்ளது நீதிமன்றம்.

இது குறித்துக் கூறியுள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி, “கொரொனா நோய் தொற்றுப்பரவலை முன்னிட்டு விசாரணைக் கைதிகளை விடுவிக்கலாம் என்று சட்டப்படி மாநில அளவில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரை, ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் ஸ்டான் பாதிரிக்கு பொருந்தாது” என்றும் கூறியிருக்கிறார். “சிறையில் அளிக்கப்படும் சிகிச்சை சரியில்லை என்று அவரது விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை மாறாக, அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுவதற்கான விண்ணப்பத்தையே கொடுத்திருக்கிறார் ” என்று நீதிமன்றம் வியாக்கியானமும் அளித்திருக்கிறது.

“விண்ணப்பதாரர் வயதானவர் என்ற காரணத்தால் சிறை மருத்துவமனையில் தனியறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் சிகிச்சை கிடைக்காத அளவிற்கு அப்படி என்ன நோயினால் விண்ணப்பதாரர் பாதிக்கப்படுகிறார் என்பதை கற்பனையாக கூட விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை” என்று எகத்தாளமாகவும் நீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது.

பாதிரியார் ஸ்டான் சுவாமி

உடல் ரீதியான கடுமையான பிரச்சினைகளோடு வாழ்ந்துவரும் பேராசிரியர் சாய்பாபா, வரவரராவ் உள்ளிட்டவர்களுக்கும் முறையான சிகிச்சையையும் அடிப்படை வசதிகளையும் மறுத்துள்ளது நீதிமன்றம்.  சமூகச் செயற்பாட்டாளர்களை, மனித உரிமைப் போராளிகளை ஆதாரமற்ற வழக்குகளில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணைக் கைதிகளாகவே அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளி சித்திரவதை செய்வதையேசெயற்பாட்டாளர்களை முடக்குவதற்கான உத்தியாகவும், பிற சமூகச் செயற்பாட்டாளர்களை இதனைக் காட்டி மிரட்டும் உத்தியாகவும் செய்து வருகிறது.

பாசிசம் என்பது வெறும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கீழ் உள்ள இந்துத்துவக் கும்பலிடம் மட்டுமல்ல, அது அரசின் அத்தனை உறுப்புகளிலும் பரவி நீக்கமற நிறைந்திருப்பதையே என்.ஐ.ஏ-வின் 20 நாள் கோரிக்கையும், அதை அனுமதித்த நீதிமன்றத்தின் நடவடிக்கையும் காட்டுகிறது.

நம் அடிப்படை உரிமைகளுக்காக போராடும் சமூகச் செயற்பாட்டாளர்களை, தீவிரவாதிகளாகச் சித்தரித்து சட்டவிரோதமாகச் சித்திரவதை செய்யும் இந்தக் கும்பலின் அடுத்த தாக்குதலிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள என்ன செய்யப் போகிறோம் ?


ஆறுமுகம்
நன்றி : The Wire

உட்கட்சிப் போராட்டத்தின் 3 முக்கியத் திரிபுகள் || லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 4

பாகம் – 3

மது உட்கட்சிப் போராட்டம், கோட்பாடு பற்றிய போராட்டம்; இந்தக் கோட்பாட்டுக்கு அல்லது அந்த கோட்பாட்டுக்கு நிகழ்த்தும் போராட்டம்; இந்த போராட்டத்தின் அல்லது அந்த போராட்டத்தின் இலட்சியத்தை வரையறுத்துக் கூறும் போராட்டம். இலட்சியத்திற்கு இட்டுச் செல்ல இந்த அல்லது அந்த போராட்ட வடிவத்தை தேர்ந்தெடுப்பதற்கான போராட்டம் என்று நமது தோழர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அவ்வப்போதைய கொள்கை விசயத்தில், பூரணமாக நடைமுறைத் தன்மை கொண்ட பிரச்சினைகளில் கட்சிக்குள் இருக்கும், நம்முடன் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களுடன் நாம் ஒப்பந்தத்திற்கு வரமுடியும்; வரவும் வேண்டும் என்று இந்தத் தோழர்கள் புரிந்து கொள்ளவில்லை. கோட்பாடு சம்பந்தப்பட்ட  – பிரச்சினைகளில், நமது போராட்டங்களின் இலட்சியத்தை வரையறுத்துக் கூறும் பிரச்சினைகளில், அத்தகைய இலட்சியத்தை அடைவதற்கு முடிவு கட்ட வேண்டிய போராட்ட வடிவ விசயத்தில், கட்சிக்குள் தங்களுடன் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களை எதிர்த்து வளைந்து கொடுக்காமல் போராட வேண்டும் என்றும், ஆனால் வழக்கிலிருந்து வருகின்ற கொள்கைப் பிரச்சினைகளிலும், பூரணமாக செயல்முறைத் தன்மை படைத்த பிரச்சினைகளிலும், அவை பொறுத்தமட்டில் கோட்பாடு சம்பந்தப்பட்ட மாறுபாடு எழாதமட்டிலும் கட்சிக்குள் அவ்விசயங்களில் தங்களுடன் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களுடன் விட்டுக் கொடுக்காமல் போராடுவதற்கு பதிலாக அவர்களுடன் ஒத்துப் போக வேண்டும் என்றும் அவர்களுக்கு தெரியவில்லை; புரியவுமில்லை.

லெனின், ஸ்டாலின் கட்சியில் குறிப்பாக இதுதான் பரம்பரையான வேலைமுறை; ஆயினும் நமது தோழர்கள் பலர் இதை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. ஒத்துப் போகவேண்டிய பிரச்சினைகளில் விடாப்பிடியாகப் போராட்டம் நடத்துகின்றனர்; இதன் விளைவாக அவர்கள் சண்டை போடாத பிரச்சினையே கிடையாது; அவர்கள் சண்டை போடாத நேரம் கிடையாது; அவர்கள் சண்டை போடாத ஆள் கிடையாது. அவர்களுடன் மாறுபட்டவர்கள் அனைவரையும் எதிர்த்துப் போராடினார்கள்; எல்லோரையும் ஒரேவிதமாக எதிர்த்தார்கள்; எதிலும் விட்டுக் கொடுப்பதில்லை; எப்பேர்ப்பட்ட நிலைமையானாலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்; எவ்வித மாறுபாடானாலும் அதை விரோதமானதாகவே பாவித்தார்கள்; எதிர்ப்பதுதான் எல்லாம் என்று நம்பினார்கள்; அவர்களுடைய வரையறையற்ற தன்மை இதில்தான் அடங்கியிருக்கிறது.

கோட்பாடு என்றால் என்ன? எந்த பிரச்சினைகள் கோட்பாடு சம்பந்தப்பட்டவை? கட்சியின் போர்த்தந்திர, செயல்தந்திரக் கொள்கைகள் என்ன என்பதை பல தோழர்கள் புரிந்து கொள்ளவில்லை. கோட்பாடு, போர்த்தந்திரத் திட்டம், செயல்தந்திரக் கொள்கை சம்பந்தப்பட்ட மாறுபாடுகளை உள்வாங்கிக் கொண்டு எப்படி போராட்டத்தை நடத்துவது என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை; தத்துவத்தில் அவர்களுடைய பயிற்சி மிகவும் குறைவாக இருந்தது; அரசியல் அனுபவமும் குறைவே. பெரிய அளவு முக்கியத்துவம் கொண்ட பிரச்சினைகளை அவர்களால் இன்னும் உள்வாங்கிக் கொண்டு, அந்த பிரச்சினைகள் மீது போராட்டம் நடத்த முடியவில்லை.

ஆயினும் உட்கட்சிப் போராட்டம் இருந்தாக வேண்டும். முக்கியமான பிரச்சினைகள் பற்றி போராட்டம், வாக்குவாதம் நடத்தாமலிருப்பதும் சம்பந்தப்பட்ட கோட்பாட்டின் அடிப்படையிலும்; கண்ணோட்டத்திலும் பிரச்சினைகளை கிளப்பாமலிருப்பதும் தவறு என்ற விசயத்தை மட்டும், ஒரே வறட்டுத்தனமாக மனப்பாடம் செய்து கொண்டு அதோடு அவர்கள் போராட விரும்பினார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட சம்பவங்கள், தனிப்பட்ட பிரச்சினைகள் மட்டுமே அவர்கள் கண்ணில் படுவதினாலும், மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களுடன் கட்சிக்குள் அர்த்தமற்ற, கோட்பாடற்ற போராட்டங்கள், வாக்கு வாதங்கள் நடத்துவதினாலும் தோழர்கள் மத்தியில் வேற்றுமை, பரஸ்பரப் பூசல், அமைப்பு பிளவுகள் முதலியன ஏற்பட நேருகிறது. இத்தகைய தீய போக்குகள் நமது உட்கட்சிப் போராட்டத்தில் இருந்தன.

மேலே குறிப்பிட்டது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சிப் போராட்டத்தில் உள்ள ஒருவகை திரிபு; சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் காணும் படு மோசமான திரிபு; (இத்தகைய திரிபு மற்ற நாட்டுக் கட்சிகளில் காணப்பட்ட போதிலும்) வரம்பின்றி, அளவுக்கு மிஞ்சி அதிதீவிரமாக நடத்தப்படும், மற்றொரு கோடிக்கு இழுத்தும் செல்லும் – அதாவது உட்கட்சிப் போராட்டத்திலும், கட்சி அமைப்பு விசயத்திலும் “இடதுசாரி” சந்தர்ப்பவாதத்திற்கு இட்டுச் செல்லும் – உட்கட்சிப் போராட்டமாக அமையும் (அது கட்சிக்குள் ஜனநாயகத்தை மறுக்கிறது. கோட்பாடு சம்பந்தமான விசயங்களில் ஒற்றுமையின் அடிப்படையில் உட்கட்சி சமாதானத்தை நிராகரிக்கிறது, தொழிற்சங்கங்களின், மற்ற பொதுமக்கள் அமைப்புகளின் ஓரளவு சுயேச்சையையும் மறுக்கிறது; கட்சி அங்கத்தினர்களின் தனிப்பட்ட குண சிறப்பு, முன்கை எடுக்கும் குணம், ஆக்கல் திறமை முதலியன மறுக்கப்படுகிறது.) இந்தத் திரிபு சீனக் கட்சியின் விசேஷ சுற்றுச் சார்பினாலும் நிலைமையினாலும் எழுந்துள்ளது.

பல சீனத்தோழர்கள் தோழர் லெனின், அக்டோபர் புரட்சிக்குப் பின் தோன்றிய “இடதுசாரி” சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து நிகழ்த்திய கோட்பாடுள்ள போராட்டத்தை கவனிக்கவில்லை என்ற விசயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து ரஷ்யக் கட்சியில் “இடதுசாரி ” கம்யூனிஸ்டு கோஷ்டி தோன்றிற்று. இந்த கோஷ்டி பிரெஸ்ட் – லிட்டோவ்ஸ்க் சமாதான உடன்படிக்கையை, எதிர்த்தது; பின்னர் தொழிற்சங்க விசயத்திலும் தகராறு இருந்தது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு “இடதுசாரி” தோற்றத்துடன் ஆட்ஸேவிஸ்டுகள் கோஷ்டி ஒன்று போல்ஷ்விக் கட்சிக்குள் இருந்து வந்தது. ஆனால் இந்த கோஷ்டி விரைவில் தோற்கடிக்கப்பட்டது; பிரெஸ்ட் – லிட்டோவ்ஸ்க் சமாதான உடன்படிக்கை ஏற்பட்ட சமயத்தில் “இடதுசாரி” கம்யூனிசத்தினால் சிருஷ்டிக்கப்பட்ட நிலைமையைப் போன்று அன்று நிலைமை அவ்வளவு மோசமாகப் போய்விடவில்லை; ஆனால் “இடதுசாரி” கம்யூனிசத்தையும் லெனின் கொஞ்ச காலத்தில் தோற்கடிக்கத்தான் செய்தார்.

ஆனால் “இடதுசாரி” கம்யூனிசம் மீண்டும் மேலைய ஐரோப்பிய நாடுகளில் தலைதூக்கிற்று. “சமரசமில்லை ” என்ற கோஷத்தைக் கிளப்பிற்று; பார்லிமெண்டுகளில் பங்கு எடுத்துக் கொள்வதை எதிர்த்தது; எல்லாவிதமான சட்டப்பூர்வமான போராட்டங்களையும் எதிர்த்தது; சமூக ஜனநாயகக் கட்சிகளின் “இடதுசாரி” பகுதிகளுடன் அவசியமான ஒப்பந்தங்கள் செய்து கொள்வதை எதிர்த்தது; இந்த சூழ்நிலையில்தான், 1920ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் இத்தகைய போக்குகளைத் திருத்துவதற்கு “இடதுசாரி கம்யூனிசம்; இளம்பிள்ளைக் கோளாறு“ என்ற புத்தகத்தை லெனின் எழுதினார்.

அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதில் இதற்கு முன்னர் நம்பிக்கை இல்லாதவர்கள் கண்முன் உண்மையான யதார்த்தம் நின்றது. இந்த விசயம் வலதுசாரி சந்தர்ப்பவாதத்திற்கு மரண அடி கொடுத்தது.

இந்த சூழ்நிலையில்தான் “இடதுசாரி” சந்தர்ப்பவாதம் பிறந்தது; இதன் வாதமென்னவெனில் புரட்சி சுற்றி வளைத்த பாதைகள் வழியே போக வேண்டியதில்லை; வெற்றி நினைத்த மாத்திரத்தில் கைகூடும் என்பதேயாகும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இத்தகைய கருத்துக்கள் நிலவின; சில கால கட்டங்களில் கட்சியில் மேலோங்கி நின்ற கருத்துக்களாகவும் விளங்கி வந்துள்ளன. அத்தகைய தவறுகள் செய்பவர்கள், “இடதுசாரி கம்யூனிசம்; இளம் பிள்ளைக் கோளாறு” எனும் லெனின் எழுதிய முக்கிய நூலை அறவே அலட்சியம் செய்தார்கள். அரசியல் ரீதியில் வளைந்து நெளிந்து போவதையும் காத்திருப்பதையும் எதிர்க்கிறார்கள். முன்னணியிலுள்ள ஒரு சிறுபான்மையினர், பரந்த பொதுமக்கள் இன்னும் இவர்கள் அடைந்த நிலைமையை எட்டிப் பிடிக்கவில்லை என்ற விஷயத்தை பொருட்படுத்தாமல் வீரச் செயல் வாதமுறையில் முன்னேறித் தாக்கும் தாக்குதலை தொடுக்கலாம் என்று அவர்கள் ஒரே சாதனையாக சாதித்தார்கள், இதை மற்றவர்கள் எதிர்த்ததால் அவர்களை “வலதுசாரி சந்தர்ப்பவாதத்தில் ” மூழ்கிக் கிடப்பதாக குற்றஞ்சாட்டினார்கள்.

அமைப்பு விசயங்களில் எழும் வலதுசாரி, “இடதுசாரி” திரிபுகள், அரசியல் பிரச்சினைகளிலுள்ள வலதுசாரி, “இடதுசாரி” திரிபுகளிலிருந்து தோன்றுகிறது; சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சில கால கட்டங்களில் வலதுசாரி, “இடதுசாரி” அரசியல் தவறுகள் செய்திருப்பதினால், அமைப்பு விசயத்திலும் கட்சி அதே தவறுகளைச் செய்திருக்கிறது. குறிப்பாக உள்நாட்டு யுத்த காலகட்டத்தில், நமது “இடதுசாரி வீரச்செயல்”வாதத் தவறுகளுக்குக் காரணமாயிருந்த அம்சம் அமைப்பு விசயத்தில் மிதமிஞ்சிய ஆவேசத்துடன் நிகழ்ந்த உட்கட்சிப் போராட்டமேயாகும்.

ஆதலின் சீனக் கம்யூனிஸ்ட் உட்கட்சி போராட்ட விசயத்தில் மூன்று விதமான திரிபுகள் உள்ளன. இந்த முறையில் அவர்களை தொகுப்பது தவறில்லையென்றும் சொல்லலாம். முதலாவது, கட்சிக்குள் தாராளவாதம் சமரசவாதமும்; இரண்டாவது இயந்திரகதியான மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டமும், அமைப்பு விசயத்திலும் உட்கட்சிப் போராட்டம் பற்றியும் “இடதுசாரி” சந்தர்ப்பவாதம்; மூன்றாவது, கட்சிக்குள் கோட்பாடற்ற தகராறுகளும் போராட்டங்களும்.

இந்த மூன்று திரிபுகளுக்கு இடையே உள்ளடக்கத்தில் ரொம்ப வித்தியாசம் ஒன்றுமில்லை; ஏனெனில் கட்சிக்குள் கோட்பாடற்ற தகராறுகள், போராட்டங்கள், மிதமிஞ்சிய போராட்டங்கள், தாராளவாதம் எதுவுமே மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் முறையாகாது. இவையெல்லாம் மார்க்சிய லெனினியத்திற்கு எதிர்ப்பை பிரதிபலிப்பனவேயாகும். அவற்றின் வெளித் தோற்றத்தை வைத்துத்தான் மேலே கூறிய மூன்றுவிதமாக அவை பிரிக்கப்படுகின்றன.

கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய விசேசச் சூழ்நிலையில்தான் உருவாக்கப்பட்டது; அதன் உட்கட்சிப் போராட்டத்தில் எழுந்துள்ள திரிபுகளும் இத்தகைய விசேச சூழ்நிலையில்தான் எழுந்துள்ளன.

(தொடரும்)

இணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் || CCCE

கொரானா ஊரடங்கை பயன்படுத்தி பல்வேறு ‘கல்விச் சீர்திருத்தங்களை’ மோடி அரசு செய்து வருகிறது. அதில் மிக முக்கியமானது இணையவழிக் கல்வித் திட்டமாகும். தேசியக் கல்விக் கொள்கையை ஒட்டி மே மாதம் பேசிய பிரதமர் மோடி இணையவழிக் கல்வி, இந்த கல்விக் கொள்கையின் மையமாக இருக்கும் என்றும் இணையவழிக் கல்வி, கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு இந்தியாவின் கல்வியை உலகத் தரத்திற்கு மேம்படுத்தும் என்றும் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஏழு மாதங்களாகவே UGC, MHRD, NCERT மற்றும் AICTE போன்ற உயர் அமைப்புகளிலிருந்து வரும் சுற்றறிக்கைகள் பள்ளி மற்றும் உயர் கல்வியில் இணையவழிக் கல்வி முறையை முன்தள்ளுவதையே நோக்கமாக கொண்டுள்ளன. இணையவழிக் கல்வி முறைதான் மாற்றுக் கல்விமுறை என்று ஆளும்வர்க்க பிரதிநிதிகளும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் எதார்த்தமோ இவர்கள் கூற்றுக்கு மாறாக உள்ளது.

படிக்க :
♦ புதிய தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்ன ? | பேராசிரியர் அனில் சத்கோபால் | CCCE
♦ கல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE

பீகார், சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய கிராமப்புற மாணவர்களில் 80% மாணவர்களுக்கு, ஊரடங்கு காலத்தில், கல்வி கிடைக்கவில்லை எனக் கூறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடக்காததாலும் அவர்களின் குடும்ப வறுமை காரணமாகவும் கணிசமான அளவு மாணவர்கள் வேலைக்கு செல்வதாக ‘தி வயர்’ பத்திரிகை கூறுகிறது.

ஒரிசா மாநில பள்ளிக் கல்வி அமைச்சரோ, அம்மாநிலத்திலுள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 33.33% மாணவர்கள் மட்டுமே இணையவழியில் கல்வி பெறுவதாகவும் மீதமுள்ள 66.67% மாணவர்கள் ஊரடங்கு காலகட்டத்தில் கல்வி கிடைக்கவே இல்லை என்றும் கூறுகிறார். உயர்கல்வியின் நிலையோ இன்னும் கேலிக்கூத்தானது. அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழி கல்விக்கான எவ்வித கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இவற்றில் மாணவர்களின் வருகைப் பதிவே 40% க்கும் குறைவுதான். தனியார் கல்லூரிகளின் நிலையை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம்.

இவையெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாக தெரியவருகின்ற செய்திகள். இணையவழிக் கல்விமுறை பயன்படுத்தி கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்களை கல்வியிலிருந்தே விலக்கி வைத்துள்ளது மோடி அரசு. கணிணிகளும் இணையவசதிகளும் இந்தியக் குடும்பங்களில் பரவலாக இல்லை என்பது அரசுக்குத் தெரியும். தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2017-18 அறிக்கையின் படி 5-24 வயதிற்குட்பட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்களில் 8% குடும்பங்களில் மட்டுமே கணிணியும் இணையவசதியும் உள்ளது.

கடந்த எட்டு மாதகால அனுபவமோ மோடியின் கூற்றைப் பொய் என நிருபித்துள்ளது. இணையவழிக் கல்வி கிராமப்புற-ஏழை மாணவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றி இருக்கிறதே ஒழிய அது கல்வியின் தரத்தை உயர்த்தவில்லை. ஆனால் ஆளும் வர்க்கமோ இணையவழிக் கல்வியை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

உதாரணமாக இணையவழியில் பட்டப்படிப்புகளை வழங்குவதற்கான அனுமதியை சில கல்லூரிகளுக்கு UGC சமீபத்தில் வழங்கியுள்ளது. இதற்குப் பின்னால் தனியார் கல்வி முதலாளிகள், இணையதள நிறுவனங்கள், கல்வி தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிதி மூலதனங்களின் நலன்களே ஒழிந்துள்ளன.

இணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் என்ற தலைப்பில் மேனாள் மதுரைக் கல்லூரி முதல்வர் பேரா.இரா. முரளி அவர்கள் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் முகநூல் பக்கத்தில் 10.11.2020 அன்று மாலை 6.30 மணிக்கு நேரலையில் சிறப்புரையாற்றுகிறார்.

Zoom Meeting ID : 857 3356 3148
Passcode : 921647
Facebook ID : Cordination Commitee for Common Education- Tamil Nadu

பங்கேற்கத் தவறாதீர்கள் !

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் – தமிழ்நாடு
9444380211, 9600582228, 9443852788

முதலாளித்துவ சுரண்டலுக்குத் தீர்வு சோசலிசமே | தோழர் ஆ.கா. சிவா உரை

திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு, பட்டாபிராமில் நவம்பர் 7 அன்று மாலை 6 மணியளவில் ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் திரளான தோழர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என சுமார் 250-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காண்ட்ராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா சிறப்புரையாற்றினார்.

தனது உரையில், முதலாளித்துவம் கொல்லும்; கம்யூனிசமே வெல்லும் என்கிற முழக்கத்தை தற்போதைய பேரழிவுகளோடு பொருத்தி விவரித்தார்.
முதலாளித்துவம் சொர்க்கமல்ல; அது ஒரு நரகம் என்பதை கொரோனா பெருந்தொற்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருப்பதையும், முதலாளித்துவ பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்ட சோசலிசம்தான் ஒரே மாற்று – ஒரே தீர்வு என்பதையும் எடுத்துரைத்த தோழர் சிவா, சோசலிச இலட்சியத்தை நோக்கி நமது பாதையை வகுக்க அறைகூவல் விடுத்தார்!!

பாருங்கள் ! பகிருங்கள் !!

நிருபர் மோசஸ் படுகொலை : கஞ்சா வியாபாரிக்கு துணை போன போலீசு மீது நடவடிக்கை எடு || மக்கள் அதிகாரம்

PP Letter head09.11.2020

கஞ்சா வியாபாரிகளால் தமிழன் தொலைக்காட்சி
நிருபர் மோசஸ் படுகொலை!

துணை போன போலீசு மீது நடவடிக்கை எடு!
மக்கள் அதிகாரம் கண்டனம்!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியில் நடைபெறும் கஞ்சா வியாபாரம் குறித்து செய்தி வெளியிட்ட தமிழன் தொலைக்காட்சியின் நிருபர் மோசஸ் கஞ்சா வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கஞ்சா பற்றிய செய்தி வெளியிட்ட பின்னர் பல கஞ்சா வியாபாரிகளும் ரவுடிகளும் நிருபர் மோசஸ்க்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். இதுபற்றி போலீசில் புகார் அளித்த போதும் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்திருக்கிறது. இதன் விளைவாக நேற்று அவர் கொல்லப்பட்டிருக்கிறார். நிருபர் மோசஸ் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்காததன்மூலம் கொலையாளிகளுக்கு போலீசு துணை போயிருக்கிறது.

படுகொலை செய்யப்பட்ட மோசஸ்

உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

மோசஸ் அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும்.

மக்கள் நலன் கொண்டு தன்னலம் பாராமல் செய்திகளை அச்சமின்றி வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் ரவுடிகளாலும் போலீசாலும் தொடர்ச்சியாக பல இடங்களில் தாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக அனைத்து கட்சிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்துப் போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் மக்கள் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும்.


தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு : 9962366321

கடலூர் செல்வமுருகன் படுகொலை : கொலைகார போலீசை கைது செய் || மக்கள் அதிகாரம்

PP Letter headபத்திரிகை செய்தி

07-11-2020

கடலூர் மாவட்டம் செல்வமுருகன் படுகொலை!
கொலைகார போலீசை கொலை வழக்கில் கைது செய் !
மாஜிஸ்திரேட்டை பணி நீக்கம் செய் !

கடலூர் மாவட்டம் காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் திருட்டு வழக்கு ஒன்றிற்காக நெய்வேலி போலீசால் அழைத்துச் செல்லப்பட்டு லாட்ஜ் உட்பட பல இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு கொடும் சித்திரவதைகள் செய்யப்பட்டு இருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் இறந்திருக்கிறார்.

போலீசால் கொலைசெய்யப்பட்ட செல்வமுருகன்

கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கக் கூடிய செல்வ முருகன் 10 பவுன் நகையை திருடினார் என்று கூறி, உடனே 10 பவுன் நகையை கொடுத்து விடு உன் கணவனை விட்டுவிடுகிறோம் என்று செல்வமுருகனின் மனைவியை மிரட்டியிருக்கிறது போலீசு.

உச்சநீதிமன்றம் ஒரு நபரை கைது செய்வதற்கு 11 கட்டளைகளும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால் எங்கேயும் அந்த கட்டளைகள் பின்பற்றப்படுவதில்லை. ஏழு ஆண்டுகளுக்குள் தண்டனை இருக்கக்கூடிய குற்ற வழக்குகளில் ரிமாண்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும் பெரும்பாலான மேஜிஸ்ட்ரேட்டுகள் அதை பின்பற்றுவதில்லை .

காவல் நிலைய கொட்டடி படுகொலைகளில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கையில், ஒருபுறம் காவல்துறை உங்கள் நண்பன் என்பது யாரை ஏமாற்றுவதற்காக?

படிக்க :
♦ சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !

♦ கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !

சாத்தான்குளம் இரட்டை படுகொலைகளுக்கு எதிராக தமிழகமே கொதித்து எழுந்தது. ஆனாலும் இன்றுவரை போலீஸின் கொட்டடி படுகொலைகள் நின்றபாடில்லை என்பதைத்தான் செல்வமுருகனின் சித்திரவதைப் படுகொலை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

ஒரு காவல் நிலையத்தில் சித்திரவதை – படுகொலை நடைபெறுகிறது என்றால் அந்தக் காவல் நிலையத்தில் பணி புரிந்த அனைத்து காவலர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய போலீஸ்காரர்கள் உடனே கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்து படுகொலை செய்த ஒரு போலீசை கைது செய்வதற்கே மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய மோசமான ஒரு சூழலில் தான் நாம் இருக்கிறோம் .

செல்வமுருகன் படுகொலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு ஒப்புக் கொள்வதற்கு நான்கு நாட்கள் போராட வேண்டியதாகிறது.

பன்னாட்டு ஸ்டெர்லைட் கம்பெனிக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கொன்ற போலீசு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

செல்வமுருகனை கொலை செய்த போலீஸ்காரர்கள் அனைவரும் உடனடியாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

குற்றுயிரும் குலையுயிருமாக வந்த செல்வமுருகனை பரிசோதிக்காமல் சிறைக்கு அனுப்பிய நீதித்துறை நடுவர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.

போலீஸின் அராஜகங்களுக்கு முடிவு கட்டாமல் மக்கள் ஒருபோதும் உயிர் வாழவே முடியாது! அதற்கான போராட்டங்களை முன்னைவிட இன்னும் தீவிரமாக நடத்த வேண்டும் என்பதுதான் இந்த காவல் கொட்டடி படுகொலையும் நமக்கு உணர்த்துகின்ற உண்மை.

தோழமையுடன்
தோழர் மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு : 9962366321

வேல் யாத்திரை – அனுமதியும் கைதும் : பாஜகவும் அதிமுகவும் ஒன்னு || மக்கள் அதிகாரம்

PP Letter head

பத்திரிக்கைச் செய்தி

06.11.2020

நேற்றையதினம் உயர்நீதிமன்றத்தில் பாஜக நடத்தக்கூடிய வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று கூறிய தமிழக அரசு இன்று திருத்தணி வரை செல்ல அனுமதி அளித்துவிட்டு பின்னர் கைது செய்வதாக நாடகமாடி இருக்கிறது.

மக்கள் தங்களுடைய பிரச்சனைக்கு கூடக்கூடாது, அமைதியான முறையில் போராட கூடாது ,கொரானா ஏற்படும் என்றெல்லாம் மக்களை ஏமாற்றி அடக்குமுறை செலுத்துகிறது எடப்பாடி அரசு.

தமிழர்களுக்கும் தமிழ் இனத்திற்கும் தீங்கு விளைவிப்பதை ஒரே நோக்கமாக கொண்டு செயல்படும் பாரதிய ஜனதா கட்சி தற்போது நடத்தியிருக்கும் வேல் யாத்திரை என்பது, சாதி மதக் கலவரங்களைத் தூண்டுவதற்காக நடத்தப்படும் ஒன்றாகும்.

படிக்க :
♦ டானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் !
♦ டானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் ?

இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் அமைப்புக்களும் தொடர்ச்சியாக கண்டனக் குரல் கொடுத்து வந்தனர். இந்த எதிர்ப்புக்களில் இருந்து ஆர்எஸ்எஸ் – பிஜேபியை காப்பாற்றும் பொருட்டு வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு இன்று திருத்தணி வரை செல்ல அனுமதி அளித்திருக்கிறது.

தமிழக அரசும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் ஆர்எஸ்எஸ் – பிஜேபியை காப்பாற்றுவதையே ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. மனுநீதியை நடைமுறைப்படுத்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்திருக்கிறது அரசு என்பதுதான் இதன் பொருள் .

மக்களிடையே சாதி, மத வெறியைத் தூண்டி வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்ட பிஜேபி நிர்வாகிகளை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் தமிழகம் சாதி, மத வெறியர்களின் வன்முறைக் களமாக மாறுவதை தடுக்கவும் முடியாது. அதற்கு எதிரான மக்களின், கட்சிகளின் போராட்டங்களையும் தடுக்கவும் முடியாது.


தோழமையுடன்
மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் : மக்கள் அதிகாரம் பங்கேற்பு

த்திய மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து நேற்று (05-11-2020) சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

நாடாளுமன்றத்தில், 3 விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றியதைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் கடுமையான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலைஇல் அனைத்திந்தைய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் கீழ் நாடுமுழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் ஒன்று கூடி நவமர்ப் 5-ம் தேதி நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் விவசாய சங்கங்கள் தமிழகமெங்கும் நடத்திய சாலை மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். சென்னை, கோவை, காஞ்சிபுரம், தருமபுரி, விருதாச்சலம், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய மண்டலங்களில் உள்ள தோழர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

சென்னை :

பாண்டிச்சேரி :

காஞ்சிபுரம் :

தருமபுரி :

கோவை :

விருதாச்சலம் :

கடலூர்:

தகவல் :
மக்கள் அதிகாரம்

தத்துவஞானத்தை ஹெகலிடமிருந்து துவங்கிய எங்கெல்ஸ் || தோழர் லெனின்

0

பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 2

பாகம் – 1

ங்கெல்ஸ் பிரஷ்ய முடியரசில் ரைன் மாகாணத்தைச் சேர்ந்த பார்மென் என்ற ஊரில் 1820-ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தகப்பனார் ஓர் ஆலைச் சொந்தக்காரர். உயர்நிலைப் பள்ளியில் தமது கல்வியை முடிக்காமலே குடும்ப நிலைமைகளின் நிர்ப்பந்தம் காரணமாக 1838-ல் எங்கெல்ஸ் பிரெமனில் ஒரு வர்த்தக நிலையத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். வர்த்தக விவகாரங்கள் விஞ்ஞான – அரசியல் கல்வியைப் பயில்வதினின்று எங்கெல்சைத் தடுத்து விடவில்லை. உயர்நிலைப் பள்ளியில் இருந்த காலத்திலேயே யதேச்சதிகாரத்தையும் அரசாங்க அதிகாரிகளின் தான்தோன்றித்தனத்தையும் எங்கெல்ஸ் வெறுக்கலானார்.

தத்துவஞானப் பயிற்சி அவரை மேலும் முன்னுக்குக் கொண்டு சென்றது. அந்தக் காலத்தில் ஜெர்மன் தத்துவஞானத்தில் ஹெகலின் போதனை ஆதிக்கம் வகித்தது. எங்கெல்ஸ் ஹெகலைப் பின்பற்றிச் சென்றார். பிரஷ்ய அரசின் சேவகத்தில் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஹெகல் யதேச்சாதிகாரத்தனமான பிரஷ்ய அரசை நடப்பில் மெச்சிக் கொண்டாடி வந்தபோதிலும் ஹெகலின் போதனை புரட்சிகரமானது. மனித அறிவின் மீதும் மனித உரிமைகள் மீதும் ஹெகல் நம்பிக்கை கொண்டிருந்தார். உலகம் இடையறாத மாறுதலுக்கும் வளர்ச்சிக்கும் உட்பட்டது என்பது ஹெகல் தத்துவஞானத்தின் அடிப்படையான ஆய்வுரையாகும்.

இந்தப் பெர்லின் தத்துவஞானியின் சீடர்களிலே, நடப்பு நிலைமையை ஏற்க மறுத்தவர்கள் இருந்தார்கள். நடப்பு நிலைமையை எதிர்த்துப் போராட வேண்டும், நடப்பிலிருந்த அநீதியையும் மேலோங்கியிருந்த தீமையையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்பதும் முடிவின்றி நிரந்தரமாய் வளர்ந்து செல்வதென்ற அனைத்துலகத்துக்கும் பொதுவான விதியிலே வேர்கொண்டுள்ளது என்ற கருத்தை ஹெகலின் மேற்கூறிய நம்பிக்கையும் ஹெகலின் தத்துவஞானத்தின் மேற்கூறிய அடிப்படை ஆய்வுரையும் இச்சீடர்களின் மனத்திலே உருவாகச் செய்தன.

படிக்க :
♦ எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்
♦ மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !

எல்லாமே வளர்ச்சியுறுகின்றன என்றால், சில நிறுவனங்கள் மறைந்து அவையிருந்த இடத்தில் வேறு நிறுவனங்கள் அமைகின்றன என்றால், பிரஷ்ய மன்னனின் யதேச்சாதிகாரமோ, ரசிய ஜார் மன்னனின் யதேச்சாதிகாரமோ, மிகப் பெரும்பான்மையோராய் உள்ளவர்களைச் சுரண்டி அற்பசொற்பமான ஒரு சிறுபான்மைக் கூட்டத்தார் செல்வர்களாவதோ, மக்களின்மீது முதலாளி வர்க்கம் ஆதிக்கம் வகிப்பதோ ஏன் நிரந்தரமாக நீடிக்க வேண்டும்? ஹெகலுடைய தத்துவஞானம் ஆன்மாவின் வளர்ச்சியைப் பற்றி, கருத்துக்களின் வளர்ச்சியைப் பற்றிப் பேசிற்று. இந்தத் தத்துவஞானம் கருத்து முதல்வாத ரீதியானது.

ஆன்மாவின் வளர்ச்சியிலிருந்து அது இயற்கையின் வளர்ச்சியையும், மனிதனின் வளர்ச்சியையும், மனித, சமுதாய உறவுகளின் வளர்ச்சியையும் அனுமானித்தது. மார்க்சும் எங்கெல்சும் வளர்ச்சியின் நிரந்தரமான இயக்கப் போக்கு பற்றிய ஹெகலின் கருத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு* முன் சிந்தனைப்படி அமைந்த கருத்துமுதல்வாதக் கருத்தை நிராகரித்து ஒதுக்கி விட்டார்கள். வாழ்வின் உண்மைகளை ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனதின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு மாறாக மனதைப் பற்றிய விளக்கமே இயற்கையிலிருந்துதான், பருப்பொருளிலிருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்.

ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போலல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனித குலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையிலிருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அடிப்படையாகப் பொருளாயதக் காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமுதாயத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர்.

ஹெகல்

மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதிலே மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமுதாய வாழ்வின் எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாய உறவுகளைப் படைக்கிறது. ஆனால், உற்பத்திச் சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்ப சொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம்.

நவீன காலத்திய சமுதாய அமைப்பு முறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது; சோசலிஸ்டுகள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே இலட்சியத்தை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது. சோசலிஸ்டுகள் செய்ய வேண்டியிருப்பதெல்லாம் – சமுதாயச் சக்திகளில் எது நவீன சமுதாயத்தில் தான் வகிக்கும் நிலையின் காரணமாக, சோசலிசத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அந்தச் சக்திக்கு அதன் நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்று வழிப்பட்ட கடமையைப் பற்றிய உணர்வையும் ஊட்டுவதேயாகும். இந்தச் சக்திதான் பாட்டாளி வர்க்கம்.

அதை இங்கிலாந்தில், பிரிட்டிஷ் இயந்திரத் தொழிலுக்குக் கேந்திரமாயிருந்த மான்செஸ்டரில், எங்கெல்ஸ் அறியலானார். மான்செஸ்டரில் அவர் 1842-ம் ஆண்டில் குடியேறி, தமது தகப்பனார் பங்குதாரராகச் சேர்ந்திருந்த வர்த்தக நிலையத்தில் வேலையில் அமர்ந்தார். அங்கே சும்மா அலுவலகத்தில் எங்கெல்ஸ் உட்கார்ந்துவிடவில்லை. தொழிலாளர்கள் அடைந்து கிடந்த ஆபாசமான சேரிகளில் சுற்றி அலைந்தார். அவர்களின் வறுமையையும் துன்பதுயரங்களையும் கண்கூடாகக் கண்டார். ஆனால் சுயமாகக் கண்டறிவதோடு அவர் நின்றுவிடவில்லை. பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றி ஏற்கெனவே வெளியாகியிருந்த விசயங்களையெல்லாம் அவர் படித்தார்; கைக்கு அகப்பட்ட அதிகாரப் பூர்வமான எல்லா ஆவணங்களையும் அவர் கவனமாகப் பரிசீலித்துப் படித்தார். இப்படிப் பார்த்தவற்றின், படித்தறிந்தவற்றின் பலனாக விளைந்ததுதான் 1845-ம் ஆண்டில் வெளியான இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூல் ஆகும். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்னும் நூலின் ஆசிரியர் என்ற முறையில் எங்கெல்ஸ் ஆற்றிய முக்கியமான பணியைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம்.

(தொடரும்)

*– தங்களுடைய அறிவு வளர்ந்து விரிவடைவதிலே மகத்தான ஜெர்மன் தத்துவ ஞானிகளுக்கு – ஹெகலுகு – தாங்கள் மிகவும் கடன்பட்டிருப்பதாக மார்க்சும் எங்கெல்சும் அடிக்கடி குறிப்பிட்டுள்ளனர். “ஜெர்மன் தத்துவஞானம் இல்லாமல் விஞ்ஞானரீதியான சோசலிசம் தோன்றியேயிருக்காது” என்கிறார் எங்கெல்ஸ்.

நூல் : பிரெடரிக் எங்கெல்ஸ்
ஆசிரியர் : வி.இ.லெனின்
வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ. 15
தொடர்பு : 73 9593 7703