Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 257

எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்

1

மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞானத்திற்கு தோழர்கள் மார்க்சும் எங்கெல்சும் மாபெரும் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.  தோழர் எங்கெல்ஸ் பிறந்து 200-வது ஆண்டில்  இன்று, முதலாளித்துவத்தின் அனைத்து சுரண்டல்களும், இழிவுகளும் மக்களிடையே வெகுவாக அம்பலமாகியிருக்கின்றன. ஆனாலும் இதற்கு மாற்று வேறு இல்லை என்ற எண்ணமே மக்களிடம் மேலோங்கி இருக்கிறது. அத்தைகயதொரு கருத்தை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வதில் மிகவும் மும்முரமாக வேலை பார்க்கின்றது முதலாளித்துவம்.

இந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்காகவே பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை உருவாக்கி அவர்களுக்கும் படியளந்து வருகிறது. இத்தகைய என்.ஜி.ஓ.க்கள், மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களை ஆதரித்து அவற்றை ஆளும் அரசாங்கங்களுக்கு எதிராகத் திசை மாற்றி விடும் வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிக்கின்றன. மக்களின் கோபம், முதலாளித்துவ சமூக அமைப்பின் மீது திரும்பாமல் பார்த்துக் கொள்கின்றன. பல்வேறு சீர்திருத்தங்களைக் கோருகின்றன. அவற்றில் சில பல வெற்றிகளை காணச் செய்து அவர்களை அதற்குள் திருப்தியுறச் செய்து விடுகின்றன.

நாம் இன்று எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் அதன் ஆணிவேரைத் தேடிச் சென்று  அதனைக் களைய வேண்டுமெனில், நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் மீதான சமூக அறிவியல் பார்வையைப் பெற வேண்டியதும், அந்த அறிவியல் பார்வையிலிருந்து, இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரமான முற்றுப் புள்ளி வைப்பதற்கான பணியில், முழுமையான சமூக மாற்றத்திற்கான பணியில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. அதனை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே செய்ய முடியும். ரசியாவில் அத்தகையதொரு கட்சியைக் கட்டி அங்கு ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டிய தோழர் லெனின், எங்கெல்சின் பணிகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எங்கெல்ஸ் இறந்த 1895-ம் ஆண்டில் எழுதினார். அதனை இங்கே ஒரு தொடராக வாசகர்களுக்குத் தருகிறோம். தொடர்ந்து படியுங்கள் !

தோழமையுடன்
வினவு

0*0*0

பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 1

எத்தகைய அறிவுச்சுடர் விளக்கவிந்தது;
எத்தகைய அன்பு மலர் நெஞ்சு நின்றது !

1895-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று பிரெடெரிக் எங்கெல்ஸ் லண்டன் மாநகரில் காலமானார். (1883-ம் ஆண்டில் மறைந்த) அவருடைய நண்பர் கார்ல் மார்க்சுக்கு அடுத்தபடி நாகரிக உலகெங்கும் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் தலைசிறந்த அறிஞராகவும் ஆசானாகவும் விளங்கியவர் எங்கெல்ஸ் ஆவார். கார்ல் மார்க்சையும் பிரெடெரிக் எங்கெல்சையும் விதி ஒன்று சேர்த்து வைத்த காலத்திலிருந்து அவ்விரு நண்பர்களும் தமது வாழ்வை இருவருக்கும் பொதுவான இலட்சியத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டனர். ஆகவே, பாட்டாளி வர்க்கத்திற்கு பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய பணியைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தற்காலத்தியத் தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியில் மார்க்சின் போதனையும் பணியும் வகிக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்
♦ மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !

தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன்முதலாக எடுத்துக் காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக் காட்டினார்கள். சோசலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல; நவீன சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் அது என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன்முதலாக விளக்கினர்.

இதுவரை ஏட்டிலேறியுள்ள வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுதான், ஒன்றன் பின்னொன்றாய்த் தொடர்ந்து சில சமுதாய வர்க்கங்கள் மற்ற வர்க்கங்களின் மீது வெற்றிகொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதின் வரலாறுதான். வர்க்கப் போராட்டத்துக்கும், வர்க்கத்திற்குரிய ஆதிக்கத்துக்கும் அடிப்படைகளாயுள்ள தனிச்சொத்தும், அராஜகமான சமுதாய உற்பத்தியும் மறைந்தொழிகிற வரையில் இது நீடித்தே தீரும். இந்த அடிப்படைகளை அழித்துவிட வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்தின் நலன்கள் கோருகின்றன. எனவே, ஓர் அணியில் திரண்ட தொழிலாளிகளின் உணர்வுபூர்வமான வர்க்கப் போராட்டம் இவ்வடிப்படைகளுக்கு எதிராகச் செலுத்தப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டமேயாகும்.

இவை மார்க்ஸ், எங்கெல்சின் கருத்துக்களாகும். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் பாட்டாளிகள் அனைவரும் இந்தக் கருத்துக்களை ஏற்றுத் தமதாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், 1840-50-ம் ஆண்டுகளில், இவ்விரு நண்பர்களும் அந்தக் காலத்திய சோசலிஸ்டு இலக்கியத்திலும் சமுதாய இயக்கங்களிலும் பங்கு கொண்ட பொழுது இப்படிப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் புதியனவாயிருந்தன. அந்தக் காலத்தில் திறனுள்ளவர்களாயும் திறனற்றவர்களாயும், நேர்மையுள்ளவர்களாயும் நேர்மையற்றவர்களாயும் இருந்த பல பேர் அரசியல் விடுதலைப் போராட்டத்தில், ஜார் மன்னர்களின், போலீசின், பாதிரிமார்களின் யதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தில் முழுக்க ஈடுபட்டிருந்தபோதிலும் முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் இடையேயுள்ள பகைமையைப் பார்க்கத் தவறினார்கள்.

சுதந்திரமான சமுதாயச் சக்தியாகத் தொழிலாளர்கள் செயல்புரிவதென்ற கருத்துக்கு அவர்கள் இடங்கொடுக்க மறுத்தார்கள். மற்றொரு பக்கத்தில் கனவு காண்போர் பலர் இருந்தார்கள்; அவர்களில் சிலர் மேதைகள்கூட; நவீன சமுதாய அமைப்பு முறை அநியாயமானது என்று ஆட்சியாளர்களுக்கும் ஆட்சி செலுத்தும் வர்க்கங்களுக்கும் புரிய வைப்பது ஒன்றுதான் வேலை, அதைச் செய்துவிட்டால் பிறகு இந்த மண்ணுலகில் அமைதியையும் பொதுவான நல்வாழ்வையும் நிறுவுவது சுலபம் என்று அவர்கள் எண்ணினார்கள். போராட்டமில்லாமலே சோசலிசம் வரும் என்று அவர்கள் கனவு கண்டார்கள். கடைசியாக ஒன்று. அந்தக் காலத்தைச் சேர்ந்த அநேகமாக எல்லா சோசலிஸ்டுகளும், பொதுவாகத் தொழிலாளி வர்க்கத்தின் நண்பர்களும், பாட்டாளி வர்க்கம் ஒரு சீழ்வடியும் புண் என்று கருதினர்; இயந்திரத் தொழிலின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்தப் புண்ணும் வளர்ந்து கொண்டே போவதை அவர்கள் பீதியுடன் கவனித்தார்கள்.

ஆகவே, இயந்திரத் தொழிலின் வளர்ச்சியையும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியையும் எப்படித் தடுத்து நிறுத்துவது, “வரலாற்றின் சக்கரத்தை” எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதிலேயே அவர்கள் அனைவரின் கவனமும் சென்றது. பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியைப் பற்றிப் பொதுவாக நிலவிய பயபீதிகளுக்கு ஆளாவதற்குப் பதிலாக மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கத்தின் இடைவிடாத வளர்ச்சியின்மீதே தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் வைத்தார்கள்.

பாட்டாளிகளின் எண்ணிக்கை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு புரட்சிகரமான வர்க்கம் என்ற வகையிலே அவர்களின் வலிமை அதிகமாகும், அவ்வளவுக்கவ்வளவு சோசலிசம் நெருங்குவது சாத்தியமாகும். தொழிலாளி வர்க்கத்துக்கு மார்க்சும் எங்கெல்சும் ஆற்றிய பணியைப் பற்றி ஒருசில சொற்களிலே பின்வருமாறு சொல்லிவிடலாம் : தொழிலாளி வர்க்கம் தன்னைத் தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலைநாட்டினார்கள்.

ஆகவேதான் எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும். நமது எல்லா வெளியீடு களையும் போலவே இந்தச் சஞ்சிகையின் நோக்கமும் ரசியத் தொழி லாளர்களிடையே வர்க்க உணர்வைத் தூண்டுவதேயாகும். அதனால் தான் இச்சஞ்சிகையில் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான இரு ஆசான்களில் ஒருவராகிய பிரெடெரிக் எங்கெல்சின் வாழ்க்கையையும் பணியையும் நாம் சித்திரித்துக் காட்ட வேண்டும்.

(தொடரும்)

நூல் : பிரெடரிக் எங்கெல்ஸ்
ஆசிரியர் : வி.இ.லெனின்
வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ. 15
தொடர்பு : 73 9593 7703

 

பக்கவாதம் எப்படி ஏற்படுகிறது ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதை ஸ்ட்ரோக் என்று அழைக்கிறோம்
இதயத்தில் இருந்து மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பழுது மற்றும் மூளைக்குள் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் பழுது ஆகியவற்றால் ரத்த ஓட்டத்தில் சுணக்கம் ஏற்படுகின்றது.

எப்படி இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையை “ஹார்ட் அட்டாக்” (இதய ரத்த ஓட்ட முடக்கம்) என்று அழைக்கிறோமோ அதைப்போல இந்த ஸ்ட்ரோக்கை “ப்ரைன் அட்டாக்” ( மூளை ரத்த ஓட்ட முடக்கம்) என்று அழைக்கலாம்.
“மூளை” என்பது நமது தலைமைச்செயலகம் என்பதை அனைவரும் அறிவோம். நமது இச்சை செயல்கள் அனைத்திற்கும் பிறப்பிடம் மூளைதான்.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
♦ பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !

நமது எண்ணங்கள் செயல்பாடுகள் அனைத்திற்கும் மூல காரணம் மூளை.
மூளைக்குத்தான் நமது ரத்த ஓட்டத்தின் பெரும்பங்கு செல்கிறது. இப்படிப்பட்ட மூளையையும் முடக்கும் விதமாக ரத்த ஓட்ட சுணக்கம் இரண்டு வகைகளில் நடக்கும்.

முதல் வகை : ரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பு (ISCHAEMIC STROKE)
இதுதான் அரிதி பெரும்பான்மை பேருக்கு ஏற்படும்.
இரண்டாவது வகை : ரத்தக்குழாய்களில் ஏற்படும் கசிவு (HAEMORRHAGIC STROKE) மேற்சொன்ன இரண்டில் இதுதான் அதிக ஆபத்தானது.

இந்த அடைப்பு மூளைக்குள் உள்ள ரத்த குழாய்களில் மெல்ல மெல்ல அடைப்பு ஏற்படுவதால் இருக்கலாம். இதை THROMBOTIC STROKE என்று அழைக்கிறோம்
அல்லது வேறெங்கோ ரத்தக்கட்டி ஏற்பட்டு அது உடைந்து மூளைக்கான ரத்த நாளங்களுக்குள் வந்து அடைப்பு ஏற்படுத்துவது இதை EMBOLIC STROKE என்று அழைக்கிறோம்.

மூளையில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது என்பதற்கான அறிகுறிகள் யாது????
இதை சுருக்கமாக BE FAST என்று கூறுவோம்.

Balance
நடையில் தள்ளாட்டம்
சரியாக நேர்க்கோட்டில் நடக்க இயலாமல் போவது.
Eye sight
திடீரென ஒரு அல்லது இரு கண்ணிலும் பார்வை பறிபோவது அல்லது பார்வைக்குறைபாடு ஏற்படுவது
Facial palsy
ஒரு பக்க முகம் தொங்கிப்போவது.
வாய் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்வது
Arm down
ஒரு பக்க கை அல்லது ஒரு பக்க கை மற்றும் கால் இயங்காமல் தொங்கி விடுவது.
Speech
நன்றாகப்பேசிக்கொண்டிருந்தவர்
பேச்சு குளறுவது அல்லது பேச இயலாமல் போவது
Time
இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் உடனே குறித்த நேரத்தில் மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவமனையை அடைய வேண்டும்.

எவ்வளவு நேரத்தில் மூளை சிறப்பு மருத்துவமனையை அடைய வேண்டும்???
ஒருவருக்கு மூளை ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதும் அந்த குறிப்பிட்ட இடத்தைச்சுற்றி உள்ள அளவில் குறைவான மூளையின் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு அங்கிருக்கும் செல்கள் முற்றிலும் இறந்து விடும். இதை CORE AREA என்று கூறுகிறோம்.

இது ஐந்தே நிமிடங்களில் நிகழ்ந்து விடும். ஆனால் அடைப்பு ஏற்பட்ட அந்த மையப்பகுதியைச்சுற்றி இருக்கும் பெரும்பான்மை பகுதிகளுக்கு இன்னும் ரத்த ஓட்டம் முழுமையாக தடைபட்டிருக்காது. மிகக்குறைவான ரத்த ஓட்டத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அந்த பகுதியின் மூளை செல்கள் காத்திருக்கும். அந்த பெரும்பகுதியை ISCHAEMIC PENUMBRA என்று அழைக்கிறோம். இந்த காத்திருப்பு காலம் தான் GOLDEN PERIOD FOR STROKE என்று அழைக்கப்படுகின்றது.
இது வெறும் மூன்று மணிநேரம் மட்டுமே.

எனவே ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிமிடத்தில் இருந்து 180 நிமிடங்களுக்குள் எவ்வளவு சீக்கிரம் அடைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மூளை சிறப்பு மருத்துவமனையை அடைந்தால் அவருக்கு ரத்தக்கட்டியை கரைக்கும் மருந்து கொடுக்கப்பட்டு மீண்டும் மூளையின் பெரும்பகுதிக்கு ரத்த ஓட்டம் பாய்ச்சப்பட்டு காப்பாற்றப்படும்.

ஆனால் போதிய விழிப்புணர்வு இன்றி முக்கியமான இந்த மூன்று மணிநேரங்களை
வீட்டிலேயோ அல்லது பயணத்தில் கழித்து விட்டு தாமதமாக கொண்டு செல்லும் போது ரத்தக்கட்டி நன்றாக உறைந்து கரைக்கும் தன்மை இல்லாமல் போய் விடுகிறது.
அதற்குப்பிறகும் ரத்தக்கட்டியை கரைக்கும் ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை முயன்று பார்க்கப்பட்டாலும் முதல் மூன்று மணிநேரங்களுக்குள் செல்பவர்களுக்கு கிட்டத்தட்ட முழுமையாக வாதம் சரியாகும் விந்தையைக் காண முடியும்.

60 வயதைத் தாண்டிய ஆண்களுக்கு பெண்களை விட அதிக ரிஸ்க் உண்டு.
தெற்காசியாவைச் சேர்ந்த நமக்கு ஸ்ட்ரோக் ரிஸ்க் அதிகம்.

உயர் ரத்த அழுத்தம், போதிய உறக்கமின்மை, புகை பழக்கம், உடல் பருமன், உடல் உழைப்பின்மை போன்றவை இதற்கான வேறு சில சரிசெய்யக்கூடிய காரணங்கள் ஆகும். தற்போது பல இளைஞர்களுக்கும் பக்கவாதம் வருவதை காண முடிகின்றது
மன அமைதியுடன் ரத்த அழுத்தத்தை முறையான சிகிச்சை மூலம் பேணி
புகை பழக்கத்தை விட்டொழித்து உடல் பருமன் குறைத்து உடலை வளைத்து உழைப்பு செய்து வாழ்ந்தால் இந்த பக்கவாதம் வருவதை தடுக்க இயலும்.

பக்க வாதம் வந்தவர்களுக்கு முறையான பேச்சு பயிற்சி, இயன்முறை மருத்துவம்,
சுய வேலைகளுக்கான பயிற்சி போன்றவற்றை சரியான நேரத்தில் கொடுத்தால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.

பக்கவாதம் வந்த முதியோர்களை கவனிக்கும் போது தண்ணீர் மெத்தையில் வைத்து பராமரிக்க வேண்டும் அல்லது அவர்களை இருபக்கவாட்டிலும் திரும்பி திரும்பி அரை மணிநேரத்திற்கு ஒருமுறை படுக்கச்செய்ய வேண்டும். முதுகில் அழுத்தம் தராத துணிகளை போடவேண்டும். அவர்களால் அசைய முடியாமல் போவதால் முதுகுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு பெரிய புண்கள் ஏற்பட்டு சீழ் பிடித்து பெரும் பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உண்டு.

பக்க வாதம் குறித்த விழிப்புணர்வையும் GOLDEN HOUR மூன்று மணிநேரம் குறித்த விழிப்புணர்வையும் நாமும் பெற்று பிறர்க்கும் எடுத்துக்கூறுங்கள். நன்றி !!

முகநூலில் : Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்,
சிவகங்கை

மோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான் !

தேர்தல் நெருங்க நெருங்க மோடி தமிழ் இலக்கிய மழையாக பொழிகிறார் !!
தமிழர்களின் கோவணத்தை உருவிவிட்டு, தமிழ் கவிதைகள் வாசிக்கிறார் !!
ஜாக்கி வைத்து தூக்கினாலும், தாமரை ஹைகோர்ட்டில் கூட மலராது !

கருத்துப்படம் : வேலன்

நிலக்கரி சுரங்கங்களை குறிவைக்கும் அதானி நிறுவனம் !

0

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்டுவதற்காக வணிக ரீதியான உற்பத்திக்காக நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதாக இந்திய அரசு அறிவித்த நிலையில், அதிக எண்ணிக்கையிலான  சுரங்கங்களை ஏலத்தில் கோரியுள்ளது அதானி நிறுவனம்.

கடந்த மே மாதம், பெருந்தொற்று பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சுயசார்பு இந்தியா திட்டம் என்ற பெயரில் பெருநிறுவனங்களை கொழுக்க வைக்கும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பணியிழந்து, வருமானம் இழந்து லட்சக்கணக்கில் ஊர் திரும்பிய இடம்பெயர் தொழிலாளர்களுக்கு கைவிரித்துவிட்டு,  நிலக்கரி சுரங்கத்துறையில் வருவாய் பங்கீட்டில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும், நிலக்கரிச் சுரங்கங்களை யார் வேண்டுமானாலும் ஏலம் எடுத்து பொதுச் சந்தையில் விற்பனை செய்யலாம்; இதை வைத்து பொருளாதாரத்தை நிமிரச் செய்வோம் என நிர்மலா அறிவித்தார். வெளிப்படையான முறையில் 500 சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்படும் எனவும் அலுமினிய உற்பத்தித் துறையில் போட்டியை ஊக்குவிக்க பாக்சைட் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் சேர்த்து ஏலம் விடப்படும் எனவும் அறிவித்தார்.

சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் ஏலம் எடுக்க இருக்கும் நிறுவனங்களை ‘ஊக்குவித்தார்’ நிர்மலா சீத்தாராமன்.

படிக்க :
♦ இந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் !
♦ ஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது !

ஜூன் மாதம் தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காக  41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான நடைமுறைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவின் நிலக்கரி துறையை தனியாருக்கு அளிப்பது இந்தியா தற்சார்பை நோக்கி முன்னேறும் திசையை நோக்கிய முன்னெடுப்பு என பெருமிதப்பட்டார்.

அடுத்த 5-7 ஆண்டுகளில் இது சுமார் ரூ.33,000 கோடி முதலீட்டை வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்தக் கொரோனா காலக்கட்டத்தை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்தியா இதிலிருந்து மீண்டு சுயசார்பு அடையும் என்று பிரதமர் மோடி பேசினார். தனியார்மயம் மூலம் நிலக்கரி ஏற்றுமதியில் இந்தியா 4வது பெரிய நாடாகும் எனவும் மோடி பேசினார்.

இந்த நிலையில், இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான சுரங்க ஏலம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஏலத்தில் எதிர்ப்பார்க்கப்பட்டதைப் போலவே, குஜராத்தைச் சேர்ந்த உள்கட்டமைப்பு நிறுவனமான அதானி நிறுவனம், 19 சுரங்கங்களில் 12 சுரங்கங்களுக்கான ஏலத்தில் பங்கெடுத்துள்ளது.  ஆதித்யா பிர்லா குழுமமும் ஜெ எம் எஸ் மைனிங் என்ற நிறுவனமும் தலா ஐந்து ஏலங்களிலும் நவீன் ஜிந்தால் குழுமம் நான்கு ஏலங்களிலும் பங்கெடுத்துள்ளன.

இந்த ஏலங்கள் மூலம், இந்தியா ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு வணிக ரீதியாக நிலக்கரிச் சுரங்கத்தை தனியார் துறைக்குத் திறக்கிறது. இந்த துறை 1970-களில் தேசியமயமாக்கப்பட்டது. 1990-களில் கொள்கை மாற்றம் காரணமாக எஃகு, சிமெண்ட் மற்றும் தெர்மல் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழில்துறை பிரிவுகளில் பயன்படுத்த நிலக்கரியை சுரங்கங்களில் இருந்து எடுக்க அனுமதித்தது. ஆனால் நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்பட்டன எனக்கூறி சுரங்க ஒதுக்கீடுகள் 2014-ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன.

2015-ம் ஆண்டில், இந்தியா நிலக்கரி சுரங்கங்களுக்கான போட்டி ஏலங்களை அறிமுகப்படுத்தியது; ஆனால் இறுதி பயன்பாட்டு கட்டுப்பாடுகள் அப்படியே இருந்தன: வெற்றியாளர்கள் தங்கள் தொழில்துறை பிரிவுகளில் மட்டுமே நிலக்கரியைப் பயன்படுத்த முடியும். இந்த ஆண்டு, இந்த கட்டுப்பாடுகளை நீக்கி வணிக ரீதியில் நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்க அரசாங்கம் சட்டத்தை திருத்தியது – அதாவது, ஏலம் வென்றவர்கள் இப்போது எந்தவொரு தடையும் இன்றி உள்நாட்டிலும் உலக அளவிலும் நிலக்கரியை சுரங்கத்திலிருந்து எடுத்து விற்கவும் முடியும்.

ஒளிவுமறைவான ஏல முறைகள்

முதலில், நிலக்கரி அமைச்சகம் 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட திட்டமிட்டிருந்தது, ஆனால் அந்த பட்டியல் பின்னர் 38 ஆக குறைக்கப்பட்டது. தொழில்நுட்ப ஏலங்கள் (இதில் நிறுவனங்கள் தகுதிகளை பூர்த்தி செய்வதற்கான விவரங்களை அளிக்க வேண்டும் ) செப்டம்பர் 29 அன்று மூடப்பட்டது. ஆனால் அடுத்த நாளே, அமைச்சகம் 23 சுரங்கங்களுக்கான ஏலங்களை மட்டுமே பெற்றதாக அறிவித்தது.

பதினைந்து சுரங்கங்கள் ஒரு தொழில்நுட்ப ஏலத்தைக்கூட பெறவில்லை. நான்கு சுரங்கங்கள் தலா ஒரு முயற்சியைப் பெற்றன. இதன் காரணமாக 19 சுரங்கங்கள் ஏல செயல்பாட்டில் இருந்து வெளியேறின. ஒளிவுமறைவான ஏல முறைகள் குறித்து 38 சுரங்கங்களை தனது மாநிலத்தில் வைத்துள்ள ஜார்க்கண்ட் அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கவலை தெரிவித்திருந்தது. பெருந்தொற்று காலத்தில் ஏலம் வைத்திருப்பது பங்கேற்பை குறைத்து ஏல விலையையும் குறைக்கும் என அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனத்தில் எரிசக்தி நிதி ஆய்வுகள் இயக்குனர் டிம் பக்லி, ஏலங்களில் உலகளாவிய நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கிறார். நிலக்கரி மீதான பெருநிறுவன மற்றும் நிதி ஆர்வம் குறைந்து வருவதையும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக வீழ்ச்சிகள் குறித்த அதிகரித்து வரும் கவலைகள் காரணமாகவும் சர்வதேச நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறியிருந்தார். அவர் சுட்டிக்காட்டியதைப் போலவே, ஒரேஒ ரு வெளிநாட்டு நிறுவனம்கூட இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை.

அவர் கணித்தபடி, ஒரு வெளிநாட்டு நிறுவனம் கூட ஏலம் எடுக்கவில்லை.

உள்நாட்டு நிறுவனங்கள் கூட சுரங்கங்களுக்காக வரிசையில் நிற்க வாய்ப்பில்லை என்பதை பலர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பொருளாதாரம் சுருங்கிய இந்த நேரத்தில், நிலக்கரி தேவை வீழ்ச்சியடைந்துள்ளதை அவர் குறிப்பிட்டார். மேலும் சில நிறுவனங்களிடம் மட்டுமே முதலீடு செய்ய மூலதனம் உள்ளது எனவும் கூறுகின்றனர்.

பங்கேற்பின் மோசமான தரம்

வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதன் மூலம் வெளிநாட்டு முதலீடு மற்றும் உலகளாவிய நிபுணத்துவத்தை கொண்டு வரலாம் எனவும்  இது இந்திய சுரங்கத் துறையை மாற்றும் எனவும் நிலக்கரி அமைச்சர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறியிருந்தார்.  ஆனால் ஏலத்தில் பங்கேற்கும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு சுரங்க அனுபவமே இல்லை. ஏலதாரர்களின் பட்டியலில் பல பங்கு வர்த்தக நிறுவனங்கள், ஒரு கட்டுமான நிறுவனம், ஒரு மருந்து உற்பத்தியாளர், ஒரு குளிரூட்டல் எரிவாயு நிரப்பு நிறுவனம்கூட பங்கெடுத்துள்ளது.

அதானி குழுமம் ஏன் ஏலத்தில் ஆர்வம் கொள்கிறது?

ஆகஸ்ட் மாதத்தில், அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி நிலக்கரி சுரங்க ஏலத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறிய நிலையில், இந்தக் குழுமம் 12 ஏலங்களை கோரியுள்ளது.

ஆயினும், இந்த குழுமம் 12 சுரங்கங்களுக்கான ஏலங்களை வழங்கியது: குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஏழு ஏலங்கள், துணை நிறுவனமான ஸ்ட்ராடடெக் மினரல் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் மூன்று ஏலங்கள், துணை நிறுவனங்களான அதானி பவர் ரிசோர்சஸ் லிமிடெட் மற்றும் செண்டிபாடா கோலியரீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை தலா ஒரு ஏலத்தை கோரியுள்ளன..

அதானி நிறுவனம் ஏற்கெனவே நிலக்கரி சுரங்கத்தில் கணிசமான அனுபவத்தைக் கொண்டுள்ளது. இது தற்போது மூன்று இந்திய மாநிலங்களில் ஒன்பது நிலக்கரி சுரங்கங்களை சுரங்க உருவாக்குனராகவும், செயல்படுத்துனராகவும் உள்ளது, அதாவது சுரங்க உரிமங்களை வைத்திருக்கும் அரசு நிறுவனங்கள் உண்மையான சுரங்க நடவடிக்கைகளை அதானிக்கு துணை ஒப்பந்தம் செய்துள்ளன.

தனியார் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய வெப்ப மின் உற்பத்தியாளராகவும் இது உள்ளது. தற்போதுள்ள நான்கு வெப்ப மின் திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் மூன்று திட்டங்கள் உள்ளன. தற்போது, ​​அதானி பவர் தனது நிலக்கரி தேவைகளை அரசாங்கத்தால் நடத்தப்படும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து உள்நாட்டு கொள்முதல் மற்றும் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது.

ஏலங்களை வெல்வது அதானி குழுமத்திற்கு நிலக்கரி இருப்புக்களை நேரடியாக எடுத்து, தனது வெப்ப மின் நிலையங்களில் பயன்படுத்தலாம். நிலக்கரி சுரங்கங்கள் அதானியின் எரிபொருள் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் சொத்துக்களின் பட்டியலிலும் சேர்க்கும். இது உள்நாட்டு வங்கிகளிடமிருந்து அதிக மூலதனத்தை திரட்ட உதவும்.

படிக்க :
♦ பட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா !
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

சமீபத்திய ஆண்டுகளில் வருமான இழப்பை சந்தித்துள்ள பிற உள்கட்டமைப்பு நிறுவனங்களைப் போலல்லாமல், அதானி குழுமம் பாரிய விரிவாக்கத்தைக் கண்டது. பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த ஆறு ஆண்டுகளில் அதானி குழுமம், தனது வணிகங்களை விரிவுபடுத்தி, பன்முகப்படுத்தியதால், மின் உற்பத்தி, எரிவாயு விநியோகம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், வேளாண் பொருட்கள் என இந்திய பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில்  ஆதிக்கம் செலுத்தும் நிலையை அடைந்துள்ளது.

அதானி நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளில் குழுமம் வளர்ச்சியை ஆதரிக்க போதுமான பணத்தை உருவாக்கவில்லை என்றாலும்கூட அரசியல் அதிகாரத்திற்கு அருகாமையில் இருப்பது, மூலதனத்திற்கான அணுகல் மற்றும் உள்கட்டமைப்பில் போட்டி நிறுவனங்களின் வாய்ப்புகளை குறைத்தல் போன்ற பிறவழிகளின் மூலம் ஆதிக்கத்தை நீட்டித்துக்கொண்டிருக்கிறது.

இந்த பின்னனியில்தான் நிலக்கரி சுரங்க ஏலங்களில் அதானி குழுமத்தின் ஆக்கிரோஷமாக பங்கேற்பு இருக்கிறது. ஒரு பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் மலிவான விலையில் கனிம சொத்துக்களை மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முந்திக்கொள்ள அதானி குழுமம் நினைக்கிறது. ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் அது மிக எளிதாகவே கைக்கூடும். நவம்பர் 11-ம் தேதி ஏல முடிவுகள் வெளியாக உள்ளன.

ஏலம் எடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களே ஆர்வம் காட்டாத நிலையில், இதனால் கிடைக்கக்கூடும் என மோடி அரசு சொல்லிக்கொண்ட பொருளாதார பயன்கள் வெற்று அறிவிப்புகளாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறைந்த விலைக்கு வளங்கள் விற்கப்படுவது சுரங்கங்கள் உள்ள மாநிலங்களை பாதிக்கும் எனவும் ஆனால் மோடி அரசு அதன் பெருநிறுவன கூட்டாளிகளுக்கு அனைத்தையும் எழுதி கொடுத்துவிட்டு எனக்கென்ன என அமர்ந்திருக்கும் எனவும் விமர்சிக்கின்றனர்.

நன்றி : ஸ்க்ரால்
கட்டுரையாளர் : சுப்ரியா சர்மா
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : அனிதா

உட்கட்சி போராட்டத்தில் ரசிய மற்றும் சீன நிலைமைகள் !

ரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த கட்சிகள் ஸ்தாபனம் சம்பந்தமாகக் கொண்டிருந்த வலதுசாரி சந்தர்ப்பவாதத்தையும், தொழிலாளி வர்க்க அரசியல் கட்சிகள் அவசியமில்லையெனும் எக்னாமிஸ்டுகள், சிண்டிகலிஸ்டுகளின் தத்துவத்தையும் எதிர்த்து நிகழ்த்திய போராட்டத்தில்தான் கட்சி கட்டுவது பற்றி லெனினுடைய போல்ஷ்விக் கொள்கை வகுக்கப்பட்டது. ஆதலால் கட்சி கட்டுவது பற்றி லெனின் வகுத்துள்ள கொள்கை, ஸ்தாபனம் பற்றி வலதுசாரி சந்தர்ப்பவாத கருத்துக்களையும், லிபரலிசத்தையும், கன்சிலியேஷனிசத்தையும், தொழிலாளி வர்க்க கட்சியை சாதாரண தொழிலாளர் ஸ்தாபனமாக சிறுமைப்படுத்துவதையும், கட்சிக்குள் கோட்பாடற்ற சமாதானம் நிலவுவதையும் கட்சிக்குள் கோஷ்டிகள் அமைக்கும் போக்கையும், கோஷ்டி நடவடிக்கைகளையும், இத்யாதி இத்யாதி போக்குகளையும், கண்டிக்கும் விமர்சனங்கள் அடங்கிய விவாதமாக அமைந்திருக்கிறது.

ஸ்தாபனப் பிரச்சனையில் உள்ள வலதுசாரி சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து நிகழ்த்திய போராட்டத்தில், கட்சி என்பது எல்லாவற்றிற்கும் முன்னணியானது, தலைசிறந்த ஸ்தாபன அமைப்பு கொண்டது என்றும் தொழிலாளி வர்க்கத்தின், மிக மிக உணர்வு மிக்க தீரமான முற்போக்கான நபர்களைக் கொண்ட மிகக் கட்டுப்பாடான படையாக அமைந்தது என்றும் தொழிலாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த ஸ்தாபன ரூபம் என்றும் லெனின் திட்டவட்டமாக வரையறுத்துள்ளார். தொழிலாளி வர்க்கத்திற்கு கட்சி அல்லாமல் தொழிற்சங்கங்கள், கூட்டுறவு சொசைட்டிகள், கலா நிலையங்கள், கல்வி ஸ்தாபனங்கள், அல்லது அரசாங்கம், இராணுவம் முதுலிய ஸ்தாபனங்களைக் கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் இந்த தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களுக்குள் கட்சிதான் எல்லாவற்றிற்கும் உயர்ந்த ரூபம் மற்ற ஸ்தாபனங்கள் அரசியல் ரீதியில் வழிகாட்டிச் செல்லும் திறமை படைத்தது.

படிக்க :
♦ தொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் !
♦ கட்சியிலிருக்கும் வலதுசாரி ‘பிக்பாக்கெட்’டுகளிடம் எச்சரிக்கை தேவை !

இவ்வாறாக லெனின் கட்சிக்கும் இதர தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களுக்கும் இடையே திட்டவட்டமான வரையறுப்பு செய்தார். மேலும், கட்சி ஸ்தாபன கோட்பாடு ஜனநாயக மத்தியத்துவமாக இருக்க வேண்டுமென்றும், கட்சிக்கு ஐக்கியப்பட்ட உருக்கு போன்ற கட்டுப்பாடு அவசியம் என்றும் வகுத்து வைத்தார். கட்சி ஸ்தாபனம் சம்பந்தமான இந்த கோட்பாடுகளை ஸ்தாபனம் பற்றி இரண்டாவது அகிலத்தைச் சேர்ந்த கட்சிகள் கொண்டிருந்த வலதுசாரி சந்தர்ப்பவாதக் கொள்கையை எதிர்த்து நிகழ்த்திய போராட்டத்தில் லெனின் வகுத்தார். கட்சியை கட்டுவதற்கு லெனின் வகுத்த கொள்கையின் பிரதான உள்ளடக்கம் இந்த கோட்பாடுகளே.

ஸ்தாபனம் சம்பந்தமாக இடதுசாரி’ சந்தர்ப்பவாதத்தைக் காட்டிலும், பிரதானமாக வலதுசாரியை எதிர்த்து நிகழ்த்திய போராட்டத்தில்தான் லெனின் கட்சியைக் கட்டினார். அக்டோபர் புரட்சிக்கு முன்பு நிலவிய தீர்மானமான நிலைமை இதுவே. அந்த சமயத்தில் ஸ்தாபனம் சம்பந்தமான இடதுசாரி’ சந்தர்ப்பவாதம் ஒன்று இன்னும் உருவெடுக்கவில்லை அல்லது முறைப்படுத்தப்பட்ட பூர்த்தியான சந்தர்ப்பவாதமாக வளர்ந்துவிடவில்லை. அதனால்தான் கட்சியை கட்டுவது பற்றி லெனின் வகுத்த கொள்கை வலதுசாரி சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து, அதாவது கண்டிப்பான ஸ்தாபனத்தையும் கட்டுப்பாட்டையும் கைவிடுவது, கட்சிக்குள் கோட்பாடற்ற சமாதானம், உட்கட்சிப் போராட்டத்தை மறுப்பது, சுயவிமர்சனத்திற்கு அஞ்சுவது, கட்சிக்குள் தலைதூக்கும் லிபரலிசம், கன்சிலியேஷனிசம், தொழிற்சங்கங்களின் சுதந்திரம் பற்றி தத்துவம் முதலியவைகளை கண்டனம் செய்யும் தர்க்கத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. லெனின் கட்சியைக் கட்டிய காலத்தில் நிலவிய யதார்த்த நிலைமையிலிருந்து எழுந்தது இந்தத் தர்க்கம்.

ஆனால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்ட யதார்த்த நிலைமையை நாம் கவனிப்போமானால், அக்டோபர் புரட்சிக்கு முன்பு லெனின் எதிர்ப்பட்ட நிலைமையிலிருந்து இந்த நிலைமை முற்றிலும் மாறுபட்டிருந்தது என்பது நமக்குத் தெரியவரும்.

முதலாவதாக சீனக்கம்யூனிஸ்ட் கட்சி, அக்டோபர் புரட்சிக்குப் பிறகு அதாவது ரஷ்ய போல்ஷ்விக்குகள் வெற்றி கண்டு, நமக்கு ஜீவனுள்ள உதாரணத்தை உருவாக்கி வைத்தபிறகு கட்டப்பட்டது. அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே நமது கட்சி லெனின் கோட்பாடுகளின் அடிப்படையிலும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டும் கட்டப்பட்டது.

இரண்டாவதாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிதமான நாளிலிருந்து இன்றுவரை ஐரோப்பிய சமூக ஜனநாயக் கட்சிகளின் இரண்டாவது அகிலத்தினால், சித்தாந்த ரீதியாகவும் சரி, ஸ்தாபன ரீதியாகவும் சரி, தனது செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டதில்லை.

மூன்றாவதாக ஐரோப்பாவைப் போன்று சீனாவில் தொழிலாளி வர்க்கம் சமாதானமான சட்டசபை போராட்டங்களில் பங்கெடுத்து கொள்வதற்கு அனுமதிக்கப்படும் ‘சமாதானமான முதலாளித்துவ வளர்ச்சிக்கால கட்டத்தை கண்டதேயில்லை. அன்றியும் ஐரோப்பாவிலிருப்பது போன்று சீனாவில் தொழிலாளர்களுக்குள் சலுகை பெற்ற பகுதியொன்றும் உருவாகவில்லை.

நன்காவதாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர்கள் எண்ணிக்கை சில சோம்பேறிகளை* உள்ளிட்டு பெரும்பகுதி குட்டி பூர்ஷ்வா நபர்களையும் விவசாயிகளையும் கொண்டிருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ‘இடதுசாரி’ வலதுசாரி சந்தர்ப்பவாதத்திற்கு சமூக அடிப்படை இதில்தான் அடங்கியிருக்கிறது.

நிலைமையின் இந்நான்கு அம்சங்களின் விளைவாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதில் ஆரம்பத்திலிருந்தே நாம் லெனின் கோட்பாடுகளையும் லெனின் காட்டிய வழியையும் தன்மனப்போக்கில் பின்பற்றி வந்திருக்கிறோம். நமது கட்சி அங்கத்தினர்களில் பெரும்பாலானோர் போல்ஷ்விக் கட்சியின் ஸ்தாபன கோட்பாடுகளை மனப்பாடமாக ஒப்பிக்க முடியும். மேலும் சமூக ஜனநாயகவாதத்தின் பரம்பரையும் சம்பிரதாய முறைகளும் நமது கட்சியில் இருந்ததில்லை. ஆதலின் நமக்கு பல நேரான பாதைகளில் நடக்க முடிந்திருக்கிறது. கட்சி தோன்றிய காலத்திலிருந்தே நாம் சுய விமர்சனம், சித்தாந்தப் போராட்டம் முதலியனவற்றை நடத்தி வந்திருக்கின்றோம்.

ஜனநாயக மத்தியத்துவ முறையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பான ஸ்தாபனம், கட்டுப்பாடு முதலியவற்றை நிலைநாட்டியிருக்கிறோம். கட்சிக்குள் கோஷ்டிகள் அமைவதை நாம் அனுமதித்ததில்லை. லிபரலிஸம், எக்னாமிஸம், தொழிற்சங்கங்களின் சுதந்திரம் முதலியனவற்றை நாம் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறோம். ஆகவே ஸ்தாபனம் பற்றி முறைப்படுத்தப்பட்ட வலதுசாரி தத்துவம் கட்சிக்குள் என்றுமே பகிரங்கமாக பிரச்சாரம் செய்யப்பட்டதில்லை. சுயவிமர்சனம், உள்கட்சிப்போராட்டம், கண்டிப்பான ஸ்தாபனம், கட்டுப்பாடு, தொழிலாளி வர்க்கக்கட்சி ஆகியவை தேவையில்லையென்றும். தொழிற்சங்கங்கள் பூரண சுதந்திரம் கொண்டதாக இருக்க வேண்டுமென்ற கருத்துக்கள் கட்சிக்குள் பகிரங்கமாக வளர்வதற்கு சந்தர்ப்பமே இருந்ததில்லை.

படிக்க :
♦ 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா ?
♦ டானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் !

இன்னும் கூட நமது கட்சியில் சித்தாந்தரீதியான போராட்டம் போதிய அளவிற்கில்லை. ஆயினும் இது கட்சிக்குள் உள்கட்சிப் போராட்டத்திற்கு எதிர்ப்பாக, முறையான தத்துவம் இருந்து வந்ததினால் அல்ல; அதற்குக் காரணம் தத்துவப் பயிற்சிக் குறைவினால் கோட்பாடுள்ள பிரச்சனைகளில் வேறுபாடுகளை காண்பதற்கு இயலாதவர்களாயிருக்கிறோம். அல்லது தனிப்பட்ட பொறுப்புள்ள தோழர்கள் சுயவிமர்சனத்தை ஒடுக்குவதற்கு விசேஷ முறைகளைக் கையாண்டனர்.

நமது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிதம் செய்த காலத்திலிருந்த விசேச நிலைமையும், சுற்றுச்சார்பும் கட்சியின் வளர்ச்சியை இரண்டு விதத்தில் பாதித்தது. ஒன்று சாதகமானது, லெனினிஸ்டு முறைப்படி அமைந்த ஒரு கட்சியை ஆரம்பத்திலிருந்தே கட்டுவதற்கு உதவிற்று; புத்திப் பூர்வமாக நாம் லெனின் வகுத்து வைத்துவிட்டுப் போன கோட்பாடுகளிலிருந்து இம்மியளவும் பிறழாது நடந்து கொண்டோம் ஆரம்பத்திலிருந்தே நமது கட்சி கண்டிப்பான சுயவிமர்சனமும், உட்கட்சிப் போராட்டமும் நடத்தி வந்திருக்கிறது. நமது கட்சியின் துரிதமான முன்னேற்றத்திற்கு இது காரணமாயிருந்தது; கட்சியை முன்னோக்கிச் செல்ல முடுக்கிவிடும் இயல் சக்தியாகவும் பயன்பட்டது.

ஆனால் கட்சி மற்றொரு விதத்தில் எப்படி பாதிக்கப்பட்டது என்றால், அடிக்கடி நமது தோழர்கள் மற்றொரு கோடிக்குச் செல்லவும் தூண்டிற்று- மற்றொரு விதமான தவறு- அதாவது உட்கட்சிப் போராட்டத்தை மிதமிஞ்சிய அளவிற்கு கொண்டு செல்லும் தவறு. எந்தவிதமான வரம்புமின்றி அதி தீவிரமாக போராடுகின்ற தவறு செய்வதில் கொண்டுவிட்டது; இது மற்றொரு திரிபில் கொண்டு சேர்த்தது. அதாவது இடதுசாரி’ திரிபில்.

லெனினுடைய கோட்பாடுகளைப் பற்றி பல தோழர்களுக்கு யாந்திரீகமான தவறான போதகம் இருந்து வந்தது; அக்கோட்பாடுகளை வெறும் வறட்டு தத்துவ மாக்கிவிட்டார்கள்; சிறந்த முறையில் மத்தியப்படுத்தப்பட்ட கட்சி ஸ்தாபனம் உள்கட்சி ஜனநாயகத்தை மறுப்பதாகவும், உள் கட்சி போராட்டத்தின் அவசியத்தினால் கட்சிக்குள் சமாதானம் நிலவ முடியாது என்றும். தொழிலாளி வர்க்க பொதுஜன ஸ்தாபனங்களில் கட்சியின் அரசியல் தலைமை தொழிலாளிவர்க்கத்தின் மிக உயர்ந்த ரூபத்திலுள்ள வர்க்க ஸ்தாபனம் – தொழிற்சங்கங்கள் இன்னும் இதர உழைப்பாளிகள், பாட்டாளிகள் ஸ்தாபனங்கள் ஆகியவைகளின் சுதந்திரத்தை மறுக்கிறது என்றும் ஒன்றுபட்ட உருக்கு போன்ற கட்டுப்பாடு என்பது கட்சி அங்கத்தினர்களின் தனிப்பட்ட குணச்சிறப்பு, முன்கை எடுக்கும் தன்மை, ஆக்கத் திறன் முதலியவற்றை அடியோடு அடித்து விடுகிறது என்றும் கருதுகின்றனர்.

லெனினுடைய கோட்பாடுகளை பல தோழர்கள் ஜீவனில்லாதவைகளாக உருப் போட்டனர். உட்கட்சிப்போராட்டம் அவசியம்தான் என்றும் லிபரலிசம் கன்சிலியேஷனிசம் பிரயோஜனமில்லை என்றும் கருதி வந்தபோதிலும், அவர்கள் இந்த கோட்பாடுகளை யாந்திரீகமாகவும், வறட்டு தத்துவரீதியிலும் கையாண்டார்கள். காலம், சூழ்நிலை சம்பந்தப்பட்ட பிரச்சனை இவையொன்றையும் பொருட்படுத்தாமலே உள்கட்சிப் போராட்டம் விட்டுக்கொடுக்காமல் நடத்தப்பட வேண்டுமென்றும் அந்தப் போராட்டம் எவ்வளவுக்கு எவ்வளவு உக்கிரமாக நடைபெறுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு மேலானது என்றும் இத்தோழர்கள் எண்ணினார்கள். உட்கட்சிப் போராட்டம், விமர்சனம் இவற்றின் ரூபம் எவ்வளவு கடுமையாகவும் வன்மையாகவும் இருக்கிறதோ அவ்வளவுக்கு அது சிறப்பானது என்று அவர்கள் எண்ணினார்கள். கட்சித் தோழர்களுக்குள் வாக்குவாதம் எவ்வளவுக்கு வலுக்கிறதோ அவ்வளவுக்கு அது உயாவானது என்று அவர்களுக்குத் தோன்றிற்று. இவ்வாறு இருக்காவிடில், லிபரலிச, கன்சிலியேஷனிஸத் தவறுகள் இழைக்கப்படுவதாக அவர்கள் எண்ணினார்கள்.

தங்களிடத்தில் லிபரலிஸ, கன்சிலியேஷனிஸத் தவறுகள் இல்லை என்றும், தாங்கள் நாற்றுக்கு நூறு போல்ஷிவிக்குகள் என்றும் நிரூபிப்பதற்காக கட்சிக்குள் அவர்கள் கோட்பாடற்ற போராட்டங்களை, இடம், காலம் ஒன்றும் பாராமல் நடத்திக் கொண்டிருந்தனர். இவ்வாறு உள் கட்சிப் போராட்டத்தில் எந்தவிதமான கொள்கையும் இல்லாத ரௌடிகளாக, கோட்பாடிற்கு மதிப்புக் கொடுக்காத போராட்ட நிபுணர்களாக’ சண்டை போடுவதே பழக்கமாகிப் போன கலகத்தில் கைதேர்ந்த பேர்வழிகளாக’ இவர்கள் ஆனார்கள். இவர்கள் போராட்டத்திற்கு வேண்டி போராட்டம் நடத்தினர். தொழிலாளி வர்க்க அணியில் இது அவமானகரமானது. இது அவர்கள் நூற்றுக்கு நூறு போல்ஷிவிக்குகள்’ என்பதை நிரூபிக்கவில்லை என்று சொல்லத் தேவையில்லை. அதற்கு நேர்மாறாக அவர்கள் போல்ஷ்விசத்தை இழிவுபடுத்தியுள்ளனர் என்றும், போல்ஷிவிக்குகளின் பெயரையும் தோற்றத்தையும் கட்சிக்குள் சந்தர்ப்பவாதத்தை அனுஷ்டிக்க பயன்படுத்திக் கொண்டனர் என்பதையே அது நிரூபிக்கிறது.

* (பிற்போக்கு அரசாங்கம் அல்லது நிலச்சுவான்தார், தரகு முதலாளி வர்க்கங்களின் ஆதிக்கத்தினாலும், சுரண்டலினாலும் வேலையோ, வாழ்க்கை நடத்துவதற்கு பிரதானமாக ஒழுங்கீனமான வழிகளைக் கடைபிடிக்கும் தொழிலாளி, விவசாயி அல்லது பொதுமக்கள் இங்கு சோம்பேறி என்று குறிப்பிடப்படுகின்றனர்)

(தொடரும்)

மக்களை ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் ! மோதி வீழ்த்துவோம் !

PP Letter head

 

 

 

நெருங்கி வரும் கார்ப்பரேட் – காவி பாசிசம் !  அணி திரள்வோம் !! மோதி வீழ்த்துவோம் !!

அன்பார்ந்த மக்களே !

கொரோனா பீதியூட்டி அனைவரும் வீட்டிலேயே இருங்கள், கையைக்கழுவுங்கள், வாயை மூடுங்கள் , கையைத்தட்டுங்கள், விளக்கை ஏற்றுங்கள் என்று நம்மையெல்லாம் திசைத்திருப்பியது மோடி அரசு. இதன்மூலம் வேலையிழந்து தொழில்கள் அழிந்து நடுத்தெருவுக்கு வந்த குடும்பங்கள் எத்தனை எத்தனை? பல நூறு மைல்கள் நடந்தே சென்ற பல லட்சம் தொழிலாளர்கள், பச்சிளம் குழந்தைகளை தோளில் சுமந்து சென்ற தாய்மார்கள், இரயிலில் அடிபட்டு செத்துப்போன தொழிலாளர்கள் – குழந்தைகள் என நினைத்துப்பார்க்க முடியாத துயரங்கள்!

இந்த பெருந்தொற்றுச் சூழலை கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யவும், தனது இந்துராட்டிர கனவை நிறைவேற்றவும் கிடைத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு விவசாய சட்டத்திருத்தம் , தொழிலாளர் சட்டத் திருத்தம், சுற்றுச்சூழல் சட்டத் திருத்தம், குற்றவியல் சட்டத் திருத்தம் என இன்னும் பல கேடுகளை கடந்த 7 மாதங்களாக சத்தமில்லாமல் செய்து முடித்திருக்கிறது பாசிச மோடி அரசு.

படிக்க :
♦ 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா ?
♦ ஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. !

மறுகாலனியாக்க கொள்கைகளால் ஏற்கெனவே அழிந்து வரும் விவசாயத்தை ஒரேயடியாக குழு தோண்டி புதைத்துவிடவே விவசாய சட்டத்திருத்தம். ஏற்கனவே தொழிற்துறையை சூறையாடி அழித்த கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயத்தையும் அழிப்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம். தனது நிலத்தில் என்ன பயிர் செய்ய வேண்டுமென்பதை விவசாயி முடிவு செய்ய முடியாது. கார்ப்பரேட் முதலாளிதான் முடிவு செய்வான். இச்சட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட உணவுப்பொருட்களை மொத்தமாக வாங்கிப் பதுக்கிவைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை உயர்த்த முடியும்.

உயிர்வாழ தேவையான நெல், கோதுமைக்கு ஆதார விலையை இனி அரசு தீர்மானிக்காது, கொள்முதலும் செய்யாது. இதனால் வேறு வழியின்றி அடிமாட்டுவிலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளிடம் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் நமது விவசாயம் கார்ப்பரேட் முதலாளிகளின் பிடிக்குள் செல்லும்.

தொழிலாளர் சட்டத்திருத்தம் என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் 44 தொழிலாளர் சட்டங்களையும் 4 சட்டத்தொகுப்புகளாக மாற்றி அச்சட்டங்களை செல்லாக்காசாக்குவதே மோடி அரசின் திட்டம்.தொழிற்சாலை சார்ந்த தொழிலாளிகள் அமைப்புசாரா மற்றும் புலம் பெயர் தொழிலாளிகளின் வாழ்வாதார உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட உச்சக்கட்ட தாக்குதலாகும் இது. தொழிற்சங்கம் அமைப்பது, கூட்டுபேர உரிமையை நிலைநாட்டுவது பணிக்காலத்திலும் பணி ஓய்வுக்குப் பின்னும் எவ்வித பாதுகாப்பும் இல்லாத பலியாடுகளாக்கப்பட்டுள்ளது தொழிலாளிவர்க்கம்.

புதிய சட்டத்தொகுப்பின்படி காண்ட்ராக்டர், வேலையளிப்பவர் என்ற வரையறைக்குள் வந்துவிட்டதால் இனி காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு ஏற்படும் எவ்வித பாதிப்பிற்கும் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி பொறுப்பேற்க வேண்டியதில்லை.காண்ட்ராக்ட் தொழிலாளியை நேரடியாக உற்பத்தியில் ஈடுபடுத்துவது முன்பு சட்டவிரோதம் . இந்த சட்ட விரோதத்தையே சட்டமாக்கிவிட்டது மோடி அரசு. வரும் காலத்தில் நிரந்தரத்தொழிலாளி என்ற வகையினமே இருக்காது என்றால் நிரந்தர வருமானமும் வாழ்க்கையும் இனி கனவுதான்.

கார்ப்பரேட் முதலாளிகள் இயற்கை வளங்களை வரைமுறையின்றி சூறையாடுவதற்கு தடையாக இருந்த சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இனி தேவையில்லை என திருத்தம் செய்துள்ளது மோடி அரசு. இதனால் காடுகளில் வாழும் பழங்குடி மக்களும் விவசாயிகளும் தங்கள் சொந்த மண்ணைவிட்டு விரட்டப்படுவதுடன் நாம் உயிர் வாழ்வதற்கான இயற்கை சூழலே அழிக்கப்படவுள்ளது.

சமையல் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை நாள்தோறும் உயர்கிறது. பெட்ரோல் விலை கடந்த 4 மாதங்களில் 10ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மின்சாரம் தனியார்மயத்தால் மின்கட்டணம் உயரப்போகிறது. இரயில்வே தனியார்மயம் மூலம் ரயில் கட்டணமும் உயரப்போகிறது.

ஏழை மாணவர்கள், பெண்கள், தலித்துகளின் கல்விகற்கும் உரிமையை பறிக்கும் வருணாசிரம வகையிலான, அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்கு கல்வியை திணிப்பது, கல்வியில் புகுந்து கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க வகைசெய்கிறது புதிய கல்விக்கொள்கை.

2014 மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் முசுலீம்கள், தலித்துகள் மீதான கும்பல் படுகொலைகள் சாதாரண நிகழ்வாகிவிட்டன. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பசுக்குண்டர்களும் போலீசும் இணைந்து முசுலீம்களையும் தலித்துகளையும் ஊபா கொடுஞ்சட்டத்தில் தள்ளுகிறார்கள்.

காசுமீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பாராளுமன்ற முடிவை அங்கீகரித்தது, பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்கு கோயில் கட்ட அனுமதி அளித்தது, பாபர் மசூதி இடிப்புக்குற்றவளிகளை விடுதலை செய்தது, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை உடனே அமுல்படுத்த மறுப்பது, முன்னேறிய சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை உடனே வழங்கியது என ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கங்களை நிறைவேற்றும் இந்து ராட்டிரத்தின் அங்கமாகிப்போய்விட்டது நீதித்துறை.

நேற்று கல்புர்கி, பன்சாரே,தபோல்கர் கவுரி லங்கேஷ் ஆகியோரை ஒரு புறம் காவி பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்கின்றனர்.. ஸ்டேன்ஸ்சாமி, சாய்பாபா, ஆனந்த்தெல்தும்டே, வரவரராவ், பெண் வழக்குரைஞர் சுதா பரத்வாஜ் போன்ற சமூக செயல்பாட்டாளர்களை கருப்புச்சட்டங்களில் கைது செய்கிறது மோடி அரசு.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டன. குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆதிக்க சாதி வெறியர்களும் – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் ஊர்வலம் போவதும் பாதிக்கப்பட்டோரை மிரட்டுவது போன்ற செயல்கள் எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டன. தலித்துக்களையும், இசுலாமியர்களையும் அடித்துக்கொல்வது குற்றமில்லை; இசுலாமியர்கள், தலித்துகளின் சொத்துக்களை கொள்ளையடிப்பது,பெண்களை வல்லுறவு கொள்வது போன்றவை குற்றமே இல்லை. அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது ஆகியவற்றை சட்டமாக்குவதன் மூலம் இந்துராட்டிரத்தை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத்தான் குற்றவியல் திருத்தச்சட்டம்.

இந்து ராட்டிரம் எப்படி இருக்கும் என்பதை சமீபத்தில் ஹத்ராசில் ஏழை தலித் மாணவி மனிஷா தாக்கூர் சாதி வெறியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்புகள் முறிக்கப்பட்டதும் அப்பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமல் கொன்று பிணத்தை பெற்றோர்களிடம் கூட தராமல் எரித்தும் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்கச்சென்ற ராகுல்காந்தியை பிடித்து கீழே தள்ளியதும் அடித்தும் சர்வாதிகாரமாக செயல்பட்ட போலீசின் நடவடிக்கைகளே இதற்கு சாட்சி.

படிக்க :
♦ மனு தர்மத்தை தடை செய் : விசிக ஆர்ப்பாட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு
♦ விழித்தெழ வேண்டிய நேரமிது !

மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன. ஜி.எஸ்.டியால் பொருளாதாரம் அழிக்கப்பட்டு மாநில அரசுகள் உலக வங்கியிடம் நேரடியாக பிச்சையெடுக்க தள்ளப்படுகின்றன. கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதையாக நீட் என்ற பெயரில் மாநிலஅரசால் உருவாக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளை கைப்பற்றிய மோடி அரசு தமிழக அரசை ஒதுக்கி வைக்கிறது. எழுவர் விடுதலை, கிராமப்புற மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு, நீட் தேர்வு ரத்து செய்தல் போன்றவற்றுக்காக தமிழக அரசு சட்ட மன்றத்தில் கொண்டு தீர்மானங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படுகின்றன. இப்படி மாநில அரசுகளுக்கான உரிமைகள் அனைத்தையும் பறித்து ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டு வருகின்றது மோடி அரசு. கார்ப்பரேட் – காவி திட்டங்களை எதிர்ப்பவர்கள், ஜனநாயக சக்திகள் மீது வழக்கு போடுகின்றது. இவற்றையெல்லாம் சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்துகிறோம் என்று கருதி நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ள முடியாது.

நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். பாசிஸ்டுகளோ செயலில் இருக்கிறார்கள் . நாமும் கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிராக செயலில் இறங்கும் போதுதான் அவர்களை வீழ்த்த முடியும்.

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் செய்வோர் , வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் என அனைத்துப்பிரிவு மக்களின் எழுச்சியை உருவாக்குவோம். அந்த எழுச்சிதான் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்தும்.

தோழமையுடன்,

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
ppchennaimu@gmail.com
FB: makkalathikaramtn

நவம்பர் 5 : நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம் || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

PP Letter headபத்திரிகைச் செய்தி

31.10.2020

நவம்பர் 5-ம் தேதி வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற உள்ள நாடு தழுவிய போராட்டத்தை ஆதரிப்போம் !!

மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டத்திருத்தம் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பிடுங்கி கர்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கிறது. உணவுப்பொருட்கள் பதுக்குவதை சட்டப்பூர்வமாக்குகிறது. நெல், கோதுமை உள்ளிட்ட முக்கியமான உணவுப் பொருட்களை இனி அரசு கொள்முதல் செய்யாது. குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யாது .எனவே ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை இனி எதிர்பார்க்கவும் முடியாது.

இதற்கெதிராக நவம்பர் 5-ம் தேதி நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் இணைந்து நடத்தவுள்ள போராட்டத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்துகொண்டு ஆதரிக்க வேண்டுமென்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் !

தோழமையுடன்
வெற்றிவேல் செழியன் ,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம் ,
தமிழ்நாடு – புதுவை
9962366321

நாட்டுக்கே சோறு கொடுத்த உழவன் | மக்கள் அதிகாரம் பாடல் !

ருக்கே சோறு போட்ட உழவர்களை, அடுத்த வேளை சோற்றுக்கு இனி கார்ப்பரேட்டுகளிடம் கையேந்தச் செய்யும் வேளாண் மசோதாக்களை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் – தருமபுரி மண்டலத் தோழர்கள் தயாரித்து வெளியிட்டிருக்கும் பாடல் !

பாருங்கள் ! பகிருங்கள் !

 

பாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி ! உச்சா போனா AIIMS பதவி || கருத்துப்படம்

பாஜகவின் பம்பர் பரிசு :

கத்திய எடுத்தவனுக்கு கட்சிப் பதவி !
பெண்களை அவமானப்படுத்தி சிறுநீர் கழித்தவனுக்கு AIIMS பதவி !!

அதுதான் பாஜக !

கருத்துப்படம் :

படம் : வேலன்

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 2

பாகம் – 1

ம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபிதம் செய்த காலத்தின் விசேச சூழ்நிலைமையும், அதன் உட்கட்சிப் போராட்டத்தில் எழுந்துள்ள திரிபுகளும் !

 தோழர்களே! உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு மார்க்சும் ஏங்கெல்சும் என்ன செய்தார்கள்?

மார்க்சும் ஏங்கெல்சும் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒன்று சேர்ந்த பூரணத்துவம் பெற்ற சித்தாந்த தத்துவார்த்த கருத்து முறையை அளித்தார்கள். அதுமட்டுமல்ல; தொழிலாளி வர்க்கத்திற்கு தனி ஸ்தாபனத்தையும் கட்டினார்கள். தொழிலாளி வர்க்கத்தின் வெகுஜனப் போராட்டங்களையும் வழிநடத்திச் சென்றார்கள். அவர்கள் முதலாவது இண்டர்நேஷனலை தோற்றுவித்தார்கள். பின்னர் இரண்டாவது இண்டர்நேஷனலையும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலுள்ள சோஷியல் டெமாக்ரடிக் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் அமைத்தார்கள்.

தொழிலாளர் வர்க்கம் தன்னைத்தானே எப்படி ஸ்தாபனரீதியாக ஒன்று திரட்டிக் கொள்வது என்பதையும், போராட்டங்களை நடத்துவது எப்படி என்பதையும் அவர்களுக்கு காண்பித்து கற்றுக்கொடுத்தார்கள்.

இரண்டாவது இண்டர்நேஷனல் இருந்த காலகட்டத்தில் (முதலாவது உலக யுத்தத்திற்கு முந்தைய காலகட்டத்தில்) பல்வேறு நாடுகளிலுமிருந்து சோஷியல் டெமாக்ரடிக் கட்சிகள் பரந்த அளவில் தொழிலாளர்கள் மத்தியில் ஸ்தாபன ரீதியான வேலை செய்து வந்தன. தொழிலாளி வர்க்கத்தையும் ஸ்தாபன ரீதியாகத் திரட்டும் இயக்கத்தை பெருமளவிற்கு விரிவுபடுத்தின. ஸ்தாபனத்துறையில் பிரம்மாண்டமான வெற்றிகளும் அடைந்தன. இது முதலாளித்துவம் “சமாதான முறையில்வளர்ந்த காலகட்டமானதினால் தொழிலாளி வர்க்கத்தின் ஸ்தாபனங்கள் இந்த சமாதான காலகட்டத்தில் கட்டப்பட்டதினால், கட்சிக்கும், தொழிற்சங்கங்களுக்குமிடையிலான வித்தியாசம் இன்னும் அவ்வளவுக்குத் தெளிவாகவில்லை.

 படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !

அதுவும் குறிப்பாக மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் மரணத்திற்குப் பிறகு, காவுத்ஸ்கி அண்டு கம்பெனியின் தலைமையில் இரண்டாவது இண்டர்நேஷனல் கட்சிக்குள் உள்ள சந்தர்ப்பவாதத்திற்கு விட்டுக் கொடுக்கும் அனுமதிக்க முடியாத கொள்கையைக் கையாண்டது; அதன் விளைவாக இரண்டாவது இண்டர் நேஷனலின் பல பகுதிகளை சந்தர்ப்பவாதம் அரித்துத் தின்றுவிட்டது. ஏகாதிபத்திய சகாப்தம், அதாவது தொழிலாளி வர்க்கப் புரட்சி சகாப்தம் வரும்பொழுது இந்தக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் புதிய காலகட்டத்தில் தொழிலாளி வர்க்கம் பொறுப்பேற்க கடமைப்பட்டுள்ள புரட்சிப் பணிகளை மேற்கொள்ள சக்தியின்மையை வெளிப்படுத்திற்று; இதன் விளைவாக முதல் உலக யுத்த காலத்தில் அவை படுசூன்யமடைவதையும், சீரழிவதையும் தவிர வேறு வழியில்லை.

லெனின் சகாப்தம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் சகாப்தத்திலிருந்து வேறுபட்டது. அது காதிபத்திய சகாப்தம்; மரணத் தறுவாயிலுள்ள முதலாளித்துவ சகாப்தம், அது தொழிலாளி வர்க்கப் புரட்சி சகாப்தம், இந்த காலகட்டத்திற்கு, சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும், செயல்முறையில் பலம்பெற்றதும் ஒன்றுபட்டதும், தொழிலாளி வர்க்கம் பொதுஜனங்களுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டதுமான கட்சியை வலிமையான, போர்க்குணமிக்க கட்சியை தொழிலாளி வர்க்கம் கட்டுவது வெகு அவசியம். அத்தகைய கட்சியை நம்பித்தான் மிகமிக கடுமையான புரட்சிப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்துவது என்பது சாத்தியமாகும்.

ஆதலால் மார்க்ஸ், ஏங்கெல்சின் தத்துவங்களை எல்லா அம்சங்களிலும் திரிபுகளிலிருந்து மீட்டு முன்கொண்டு செல்வதுடன், லெனின் குறிப்பாக தொழிலாளி வர்க்கப் புரட்சி கட்சிகளை நிர்மாணிப்பது பற்றி பூரணத்துவம் பெற்ற தத்துவத்தையும் சிருஷ்டித்தார். கட்சியைக் கட்டுவது சம்பந்தப்பட்ட தத்துவ முறை அதன் பிரதான அம்சங்களில் லெனினால் சிருஷ்டிக்கப்பட்டது. கட்சியை கட்டுவது பற்றிய இந்த தத்துவத்தையும், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிப் போராட்டத்தின் யுத்த தந்திரம், போர் தந்திரத்தையும், ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது.

தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிக் கட்சியை லெனின் ஸ்தாபித்த காலகட்டத்தில் நிலவிய நிலைமை என்ன?

அந்த சமயத்தில், ஒருபுறம் ஏகாதிபத்திய யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்தது; பூர்ஷ்வா வர்க்கத்தை ஆட்சியிலிருந்து கவிழ்த்து, அரசாட்சியைக் கைப்பற்றி, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் அவசரமான பணி தொழிலாளி வர்க்கத்தை எதிர்நோக்கிற்று. மறுபுறத்தில் இரண்டாவது இண்டர்நேஷனலைச் சேர்ந்த விரிவான ஸ்தாபன அமைப்பு கொண்டுள்ள சோஷியல் டெமாக்ரடிக் கட்சிகள், பூர்ஷ்வா வர்க்கத்தை ஆட்சியிலிருந்து கவிழ்த்து, தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை ஸ்தாபிதம் செய்யும் அவசியத்தை இன்னும் உணர்ந்தபாடாக இல்லை. புரட்சிகரமாக முன்னேறித் தாக்கும் தாக்குதலுக்கு தொழிலாளி வர்க்கத்தை தயார் செய்வதற்கு விருப்பமோ அல்லது துணிச்சலோ கிடையாது. ஆதலால் இரண்டாவது இண்டர்நேஷனலின் கட்சிகள் வெகு தொள தொளப்பான ஸ்தாபன அமைப்பு கொண்டிருந்தன. கட்சிக்குள் கோஷ்டிகள் மலிந்து போயிருந்தன; எந்தவிதமான கடுமையான போராட்டங்களையும் நடத்த முடியவில்லை. இதன் விளைவாக, அந்தக் காலத்தில் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சித் தேவைகளை அறவே பூர்த்தி செய்யத் தவறினர்.

இரண்டாவது இண்டர்நேசனலில் சந்தர்ப்பாவதத்தை எதிர்த்துப் போராடி மார்க்சியத்தை மீட்டெடுத்த தோழர் லெனின் !

அந்த சமயத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து சோஷியல் டெமாக்ரடிக் கட்சிகள் தத்துவரீதியிலும் சரி, அரசியல் ரீதியிலும் சரி வலதுசாரி சீர்திருத்தவாதச் சகதியில் சிக்குண்டது மட்டுமல்ல; (உதாரணமாக முதலாளி, தொழிலாளிக்குமிடையே ஒத்துழைப்பு என்றும், முதலாளித்துவத்திலிருந்து சமாதான முறையில் சோசலிசத்திற்கு முன்னேறுவது, புரட்சியின்றி சட்டசபை போராட்டங்கள் மூலமே தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்றும், ஆதலால் தொழிலாளி வர்க்கப் புரட்சி யுத்த தந்திரம், போர்த்தந்திரம் தயாரிக்க வேண்டிய அவசியமில்லையென்றும் உள்ள அவர்கள் தத்துவம்) அவர்கள் கட்சி ஸ்தாபன விஷயத்திலும், அறவே வலதுசாரி சந்தர்ப்பவாதிகளும், ஆவர்.

இரண்டாவது இண்டர்நேஷனைச் சேர்ந்த கட்சிகளும் ரஷ்யாவிலிருந்த மென்ஷ்விக்குகளும் கட்சி ஸ்தாபன விஷயத்தில் லிபரலிஸத்தை ஆதரித்தார்கள். தொழிலாளி வர்க்கக் கட்சியை சாதாரண தொழிலாளர் ஸ்தாபனமாக சிறுமைப்படுத்துவதை ஆதரித்தனர். இறுகப் பிணைக்கப்பட்ட ஸ்தாபனமோ, அல்லது கட்சியில் கண்டிப்பான கட்டுப்பாடோ அவசியமில்லை என்று அபிப்பிராயங் கொண்டிருந்தனர். கட்சிக்குள் கோட்பாடற்ற சமாதானத்தை அவர்கள் ஆதரித்தார்கள். கட்சிக்குள் வேறுபட்ட சித்தாந்த ஸ்தாபன கோஷங்களை அனுமதித்தார்கள். இரண்டாவது இண்டர்நேஷனலை சேர்ந்த கட்சிகளுக்கு கட்சியின் ஐக்கியம், கட்சிக் கட்டுப்பாடு, சுயவிமர்சனம், உள்கட்சிப் போராட்டம் முதலியன புரியாத விஷயங்கள்; அவர்களுக்கு இவையெல்லாம் முற்றிலும் அனாவசியமானவை.

படிக்க :
♦ ஜம்மு – காஷ்மீர் : ஜனநாயக அமைப்புகளை மிரட்டிப் பார்க்கும் என்.ஐ.ஏ. !
♦ ஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது !

இரண்டாவது இண்டர்நேஷனலைச் சேர்ந்த கட்சிகள் ஸ்தாபனம் சம்பந்தமாகக் கொண்டிருந்த வலதுசாரி சந்தர்ப்பவாதத்தின் ஒரு சில பிரதான ஸ்தூலமான பிரதிபலிப்புகள், இங்ஙனம் இருந்தன.

அந்த சமயத்தில் ரஷ்யாவில் எக்கனாமிஸ்டுகளும், ஐரோப்பாவில் (உதாரணமாக பிரான்சில்) சிண்டிகலிஸ்டுகளும் இருந்தார்கள். தொழிலாளி வர்க்கத்திற்கு கட்சி ஸ்தாபனம் தேவையில்லை என்று வாதாடினார்கள். தொழிலாளர் வர்க்கக் கட்சிகளைக் கட்டுவதற்கு மறுத்தனர். அல்லது தொழிலாளி வர்க்கக் கட்சிகளைத் தொழிற்சங்கங்களுக்கு கீழ்ப்படுத்தினர். இவர்கள் தொழிற்சங்கங்களின் சுதந்திரத்திற்கு போராடினார்கள். தொழிற்சங்கங்களில் கட்சியின் தலைமையை மறுத்தார்கள்.

அந்த சமயத்தில் ஒருபுறத்தில் தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கு செய்ய வேண்டிய போர்க்குணமிக்க கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பரந்த பொதுஜனங்களுக்கு தலைமை கொடுக்கவும் பலமாக போராடும் கட்சி அவசியமாயிருந்தது என்பதை அப்புரட்சிக் கடமைகளே வலியுறுத்தின. மறுபுறத்தில் இண்டாவது இண்டர்நேஷனலைச் சேர்ந்த கட்சிகள் இலட்சக்கணக்கான கட்சி அங்கத்தினர்களையும் தொழிற்சங்க அங்கத்தினர்களையும் கொண்டிருந்தும் முற்றிலும் சக்தியற்றதாயும், போராட இயலாதனவாயுமிருந்தன. மேலும் அவர்களது பிற்பட்ட தொளதொளப்பான ஸ்தாபன நிலையை நியாயப்படுத்துவதற்கு ஸ்தாபனம் பற்றி பலவிதமான சந்தர்ப்பவாத அபிப்பிராயங்களும் இருந்து வந்தன. லெனின் போல்ஷ்விக் கட்சியைக் கட்டப் புகுந்தபொழுது நிலவிய முக்கியமான யதார்த்தமான நிலைமை இது.

மேலே குறிப்பிட்டுள்ள நிலைமையில் தொழிலாளி வர்க்க புரட்சியை தலைமை தாங்கி நடத்தும் சக்திவாய்ந்த கட்சியை சித்தாந்தப் பூர்வமாகவும், அரசியல் பூர்வமாகவும், ஸ்தாபன பூர்வமாகவும் பரிபூரணமாக ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கு, லெனின் இரண்டாவது இண்டர்நேஷனலைச் சேர்ந்த கட்சிகளின் சித்தாந்த அரசியல் சந்தர்ப்பவாதத்தை, குறிப்பாக கட்சி ஸ்தாபனம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவர்களுக்குள்ள சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து சகல சக்திகளையும் ஒன்றுதிரட்ட வேண்டியிருந்தது. ஸ்தாபன விஷயத்தில்தான் – கட்சியில் சேருவதற்கு விதிக்கும் நிபந்தனைகள் பற்றித்தான் – முதன்முதலாக லெனினுடைய போல்ஷ்விக் கட்சிக்கும், மென்ஷவிக்குகளுக்கும் வேறுபாடு தோன்றலாயிற்று.

(தொடரும்)

வர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம் || லியூ ஷோசி

ட்கட்சிப் போராட்டம் குறித்த லியூஷோசி-யின் இந்நூல் கட்சிக்குள் எழும் முரண்பட்ட கருத்துக்கள், மாற்று வர்க்கச் சித்தாந்தங்களை கட்சித் தலைமை மற்றும் அணிகள் கையாளுவது குறித்து விரிவாகப் பேசுகிறது. இந்த நூலாசிரியர் லியூ ஷோசி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டியின் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்தவர். பின்னாட்களில் வலது சந்தர்ப்பவாதத்தில் வீழ்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.

0-0-0

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 1

தோழர்களே!

அங்கத்தினர்களின் கட்சி உணர்வை உறுதிப்படுத்தும் வேலையை, பலப்படுத்தும் பிரச்சினையை நாம் சமீபகாலத்தில் கட்சியில் கிளப்பியிருக்கிறோம். இந்த விஷயத்தைப் பற்றி மத்திய கமிட்டியும் ஒரு முடிவு எடுத்திருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அது கூடிய சீக்கிரம் நமக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். நமது அங்கத்தினர்களின் கட்சி உணர்வை உறுதிப்படுத்தும் வேலையை பலப்படுத்தும் பொருட்டு கட்சிக்குள் கட்சி உணர்வுக்கு முரணாகவுள்ள பல்வேறு விரும்பத்தகாத போக்குகளை எதிர்த்து கட்சிக்குள் ஸ்தூலமான சித்தாந்தப் போராட்டத்தை துவக்கப் போகிறோம். கட்சிக்குள் இந்த சித்தாந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு சரியான வழியென்ன? எது தவறான வழியாகும்? குறிப்பாக இந்தக் கேள்வியைத்தான் நான் விவாதிக்க விரும்புகிறேன்.

நமது கட்சி தொழிலாளி வர்க்க கட்சி, பரந்த பொதுஜனங்களின் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தும் கட்சி, தனக்கு கடமையாக அமைந்துள்ள சரித்திரப்பூர்வமான பணிகளை கட்சி நிறைவேற்ற வேண்டுமானால் பல்வேறு காலகட்டங்களில் புரட்சிக்கு எதிராக வரும் விரோதிகளை எதிர்த்துப் போராட வேண்டும். பல்வேறு புரட்சிகரமான ஜனப்பகுதிகள், வர்க்கங்களுடன் ஐக்கியப்பட வேண்டும்.

கட்சி தோன்றிய காலத்திலிருந்து கடுமையான போராட்டத்தை தவிர வேறு எந்தச் சுற்றுச்சார்பிலும் ஒரு விநாடியும் வாழ்ந்ததில்லை. கட்சியும், தொழிலாளி வர்க்கமும், தொழிலாளி வர்க்கத்தை சாராத மற்ற பல்வேறு வர்க்கங்களினால் சுற்றி வளைக்கப்பட்ட நிலைமையில் சதா வாழ்ந்து வருகிறது. அதாவது பெரும் பூர்ஷ்வா, குட்டி பூர்ஷ்வா, விவசாயி, பிரபுத்துவ சக்திகளின் மிச்சசொச்சங்கள் கூட இவ்வர்க்கங்கள் தொழிலாளி வர்க்கத்தை எதிர்த்து போராடும் பொழுது அல்லது அதனுடன் ஒத்துழைக்கும் பொழுது, கட்சிக்குள்ளும், தொழிலாளி வர்க்கத்திற்குள்ளும் உள்ள ஸ்திரத் தன்மையற்ற நபர்களை கட்சியின் இருதயத்திற்குள் ஊடுருவிப் பாய்வதற்கு உபயோகப்படுத்துகின்றன. சதா கட்சியையும் தொழிலாளி வர்க்கத்தையும் சித்தாந்த ரீதியாகவும், வாழ்க்கைப் பழக்க வழக்கங்களிலும் தத்துவத்திலும், காரியாம்சத்திலும் பாதித்துக் கொண்டேயிருக்கின்றன. இதுதான் கட்சிக்குள் காணப்படும் எல்லாவிதமான தவறான, விரும்பத்தகாத போக்குகளின் தோற்றுவாய். கட்சிக்குள் பலவித சந்தர்ப்பவாதத்திற்கும் இதுதான் சமூக அடிப்படை, உட்கட்சிப் போராட்டத்திற்கு தோற்றுவாயும் இதுவே.

கட்சிக்கு வெளியே நிகழும் வர்க்கப் போராட்டங்களின் பிரதி பிம்பமே உட்கட்சிப் போராட்டம்.

படிக்க :
♦ தொழிலாளர் இயக்கங்களை சீர்குலைக்கும் சாதியவாதமும் தேசியவெறியும் !
♦ அறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்

கட்சி உருவெடுத்த தினத்திலிருந்தே கட்சிக்கு வெளியிலுள்ள விரோதிகளை எதிர்த்து மட்டுமல்ல. கட்சிக்குள் இருக்கும் பலவித விரோத, தொழிலாளி வர்க்க சார்பற்ற போக்குகளை எதிர்த்தும் போராடி வந்திருக்கிறது. இந்த இரண்டுவித போராட்டங்களும் வேறானவை. ஆனால் இரண்டும் அவசியம். இரண்டிற்கும் பொதுவான வர்க்க உள்ளடக்கமிருக்கிறது. நமது கட்சி இரண்டாவது விதப்போராட்டத்தை நடத்தவில்லையென்றால், விரும்பத்தகாத போக்குகளை எதிர்த்து கட்சிக்குள் சதாசர்வ காலம் போராடவில்லையென்றால், கட்சியை ஒவ்வொரு தினுசான, தொழிலாளி வர்க்க சார்பற்ற சித்தாந்தம், இடதுசாரி, வலதுசாரி சந்தர்ப்பவாதங்கள் முதலியவற்றிலிருந்து சதா சுத்தப்படுத்திக் கொண்டிருக்காவிடில், பின், அத்தகைய தொழிலாளி வர்க்க சார்பற்ற சித்தாந்தமும், அத்தகைய இடதுசாரி வலதுசாரி சந்தர்ப்பவாதமும் கட்சியில் மேலோங்கி, கட்சியை பாதிக்கவும், கட்சியின் மீது ஆதிக்கம் செலுத்தவும் கூடும். இது கட்சியை ஆபத்துக்கு உட்படுத்தும். அதன் சீரழிவிற்கு வழி செய்யும். அத்தகைய தொழிலாளி வர்க்கசார்பற்ற சித்தாந்தமும் இடதுசாரி, வலதுசாரி சந்தர்ப்பவாதமும் நமது கட்சியை அல்லது அதன் சில பகுதிகளின் தன்மையைக் கூட தொழிலாளி வர்க்க சார்பற்ற ஸ்தாபனமாக மாற்றவும் கூடும். உதாரணமாக இந்த முறையில்தான் ஐரோப்பாவிலுள்ள சோஷலிக் டெமாக்ரடிக் கட்சிகள் பூர்ஷ்வா சித்தாந்தத்தினால் சீர்கேடடைந்து, பூர்ஷ்வா தினுசான அரசியல் கட்சிகளாக மாற்றப்பட்டு பூர்ஷ்வா வர்க்கத்தின் பிரதான சமூகத்தூண்களாக ஆயிற்று.

ஆதலால் அத்தகைய உட்கட்சிப் போராட்டம் முற்றிலும் அவசியம்; தவிர்க்க முடியாதது. உள்கட்சிப் போராட்டத்தை தவிர்ப்பதற்கு முயலுகின்ற எவ்வித எண்ணமானாலும் சரி அல்லது தன் குற்றத்தை பிறர் விமர்சிக்காமலிருக்கட்டும் என்பதற்காக மற்றவர்களின் குற்றங்களை விமர்சிக்காமல் ஒதுங்குவதானாலும் சரி, முற்றிலும் தவறானது.

உள்கட்சிப் போராட்டம் பிரதானமாக சித்தாந்தப் போராட்டமாகும். அதன் உள்ளடக்கம் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களிலிருந்து எழுகின்ற திரிபுகளும், முரண்பாடுகளுமாகும். சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமான விஷயங்களில் நமது தோழர்களிடையே எழுகின்ற திரிபுகளும், முரண்பாடுகளும் கட்சிக்குள் அரசியல் பிளவுகளில் கொண்டு செல்லலாம்; சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தவிர்க்க முடியாத ஸ்தாபன பிளவுகளிலும் கொண்டு செல்லலாம். ஆனால் குணாம்சத்திலும் உள்ளடக்கத்திலும் அத்தகைய திரிபுகளும் முரண்பாடுகளும் அடிப்படையில் சித்தாந்தப் போராட்டங்கள்.

இதிலிருந்து ஏற்படுவதென்னவென்றால், சித்தாந்தம், கோட்பாடு முதலிய விஷயங்களில் திரிபு சம்பந்தப்படாத உள்கட்சி போராட்டமும், கட்சி அங்கத்தினர்களுக்கிடையே கோட்பாடு சம்பந்தமான விஷயங்களில் வேறுபாட்டை அடிப்படையாகக் கொள்ளாத தகராறுகளும், கோட்பாடில்லாத போராட்ட ரகத்தைச் சேர்ந்ததாகும்; உள்ளடக்கம் இல்லாத போராட்டமாகும். கட்சிக்குள் கோட்பாடோ அல்லது உள்ளடக்கமோ இல்லாத இம்மாதிரியான போராட்டம் அறவே தேவையில்லை. அது கட்சிக்குத் தீமை பயக்கவல்லது; கட்சிக்கு உதவிகரமானதன்று அத்தகைய போராட்டங்களை கட்சி அங்கத்தினர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கட்சியின் சுயேட்சைத் தன்மையையும் பரிசுத்த தன்மையையும் பாதுகாப்பதற்கு தொழிலாளி வர்க்கத்தின் மிக உன்னதமான நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழிகளில் கட்சியின் நடவடிக்கை எப்பொழுதுமே திருப்பப்படுகின்றன என்பதை உத்தரவாதம் செய்வதற்கும், கட்சியின் அடிப்படையான தொழிலாளி வர்க்க குணாம்சத்தை பாதுகாப்பதற்கும் உட்கட்சிப் போராட்டம் முற்றிலும் இன்றியமையாதது. இந்த இலட்சியத்தை மனதிற்கொண்டு, உட்கட்சிப் போராட்டம் இரு பக்கங்களிலிருந்து அல்லது இரண்டு முனைகளில் நடத்தப்பட வேண்டும். ஏனெனில் இது எதிரியின் தத்துவரீதியான பாதிப்பு இரு திசைகளிலிருந்து வருகின்றது. கட்சி வலது பக்கத்திலிருந்தும் இடது பக்கத்திலிருந்துமாக இரு பக்கங்களிலிருந்தும் தாக்கப்படுகிறது. இது கட்சியில் வலது அல்லது இடதுசாரி சந்தர்ப்பவாதமாக பிரதிபலிக்கிறது.

ஆதலால் நமது உள்கட்சிப் போராட்டம் ஏககாலத்திலேயே வலதுசாரி சந்தர்ப்ப வாதத்தையும் இடதுசாரி சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து திருப்பிவிடப்பட வேண்டும்; இந்த இரண்டு அம்சங்களை எதிர்த்து திருப்பினால்தான் நமது கட்சி அதன் திட்டவட்டமான தொழிலாளி வர்க்க குணத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதை நாம் செய்யத் தவறினால், நாம் ஒருதலைப்பட்சமான போராட்டத்தை மட்டும் நடத்திக் கொண்டிருப்போமேயானால், அல்லது நமது உஷார் உணர்வு தளர்த்தப்படுமேயானால், இரு பக்கத்தையும் எதிர்த்து நாம் நடத்தும் போராட்டம் தளருமேயானால் அப்பொழுது விரோதி தாக்கக்கூடும் என்பது மட்டுமல்ல, நாம் புறக்கணித்த பக்கத்திலிருந்து நிச்சயமாகத் தாக்குவான். அம்மாதிரி நிலைமையில் கட்சியின் பரிசுத்தத் தன்மையையும், சுயேட்சை தன்மையையும் பாதுகாப்பதும் கட்சியை ஒன்றுபடுத்துவதும் அசாத்தியமாகிவிடும். ஆதலால் இரு முனைகளில் ஓய்வு ஒழிச்சலின்றி நிகழ்த்தப்படும் உள்கட்சிப் போராட்டத்தின் மூலம்தான் நமது கட்சி பலம் பெற்று வளர்கிறது.

தோழர் ஸ்டாலின் கூறினார்:

‘இங்குள்ள விஷயம், இந்த கோட்பாடு அல்லது அந்தக்கோட்பாடு, இந்தப் போராட்டத்திற்கு அல்லது அந்தப் போராட்டத்திற்கு குறிக்கோளை வரையறுப்பது இலட்சியத்தை அடைவதற்கு இந்தப் போராட்ட முறையை அல்லது அந்தப் போராட்ட முறையை முடிவு கட்டுவது முதலானவற்றிற்கு நிகழ்த்தும் போராட்டத்தின் மூலம்தான் முரண்பாடுகளை தீர்க்க முடியும். நம்மிடம் தற்கால கொள்கை விஷயத்திலோ அல்லது பரிபூரணமாக நடைமுறை சம்பந்தமான விஷயத்திலோ கட்சிக்குள் மாறுபாடு கொண்டவர்களிடத்தில் ஒத்துப்போவது சாத்தியமானது அவசியமானதுங்கூட. கோட்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நடுவாந்தரம் பாதை இருக்கவும் முடியாது, இல்லவும் இல்லை. கட்சியின் வேலை ஒன்று இந்த கோட்பாடுகள் அல்லது அந்த கோட்பாடுகளில் ஏதாவதொன்றை அடிப்படையாகத்தான் கொண்டிருக்க வேண்டும். கோட்பாடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் ‘நடுவாந்தர’ கொள்கை என்பது ஒருவருடைய மூளையை குழப்பும் கொள்கை; கட்சியை சித்தாந்த ரீதியில் சீரழிக்கும் கொள்கை; அத்தகைய நடுவாந்தரக் கொள்கையை பின்பற்றுவது நமது கொள்கையல்ல; தினசரி க்ஷிணித்து, சீரழிந்து வரும் கட்சியின் கொள்கை அது; அத்தகைய கொள்கை, கட்சியை உள்ளடக்கமில்லாத வெறும் அதிகார வர்க்க ஆயுதமாகவும், தொழிலாளி மக்களிடமிருந்து தனிமைப்பட்டு நின்று ஒன்றுமே செய்ய இயலாத வெறும் பொம்மையாகவும் மாற்றும். அத்தகைய பாதை நமது பாதையாக இருக்க முடியாது.

மேலும் அவர் கூறினார்:

‘கட்சிக்குள்’ இருக்கும் முரண்பாடுகளை போக்குவதின் அடிப்படையில்தான் நமது கட்சி பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது உட்கட்சிப் போராட்டத்தின் முக்கியமான குணாம்சத்தை விளக்குகிறது.

இது உட்கட்சிப் போராட்டத்தின் முக்கியமான குணாம்சத்தைப் பற்றியும், ஏன் கட்சியில் லிபரலிசமும், கன்ஸிலியேசனிஸமும் உபயோகமற்றது என்பது பற்றியும் லெனின், ஸ்டாலின் நூல்களில் ஏற்கெனவே நிரம்ப வெளிவந்திருக்கிறது. தோழர்களே நீங்கள் இவற்றை வாசித்துக் கொள்ளலாம்; இந்த விஷயத்தைப் பற்றி இங்கு நான் அதிகம் சொல்லப்போவதில்லை.

நான் இப்போது பேச விரும்பும் பிரச்சினை உட்கட்சி போராட்டத்தை எப்படி நடத்துவது என்பது பற்றியேயாகும். நமக்கு இது இன்னும் புதிய பிரச்சினை. இன்று இந்த பிரச்சினையை எல்லோரும் கற்று வருகின்றனர். இது பரிபூரண முக்கியத்துவம் கொண்டதுதான். ஆனால் இந்தச் சமயம் இப்பிரச்சினைப் பற்றி சகல அம்சங்களையும் தழுவிய முறையில் பேச உத்தேசிக்கவில்லை. நான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திர பூர்வமான அனுபவத்தை பற்றி என்னுடைய தனிப்பட்ட முறையில் குறித்துள்ள விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட எனது அபிப்பிராயங்களை வெறுமனே சமர்ப்பிக்கிறேன். இந்த அபிப்பிராயங்கள் சரியானவைதானா என்பதைப் பற்றி விவாதிக்கும்படி எல்லா தோழர்களையும் அழைக்கிறேன்.

(தொடரும்)

 

அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தனித் தேர்ச்சி || தோழர் சென் யுன்

ஊழியர்கள் தமக்குத் தாமே கண்டிப்பாக இருந்தாக வேண்டும் || பாகம் – 2

(அக்டோபர் 7, 1942)

பாகம் – 1

2. விவசாயப் புரட்சியில் பங்கேற்ற மூத்த ஊழியர்கள் பற்றி

மூத்த ஊழியர்கள் நமது கட்சியினதும் படையினதும் முதுகெலும்பாவர்; ஏனெனில், அவர்கள் கடினமான போராட்டத்தில் பல்லாண்டுகளாகத் தாக்குப்பிடித்து நீடித்து நின்றுள்ளனர். இருந்தபோதிலும், பின்வரும் விசயங்களுக்கு அவர்கள் தவறாது கவனம் செலுத்த வேண்டும்.

1. மூத்த ஊழியர்கள் தமது நீண்டகால அனுபவத்தை வைத்து காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கக் கூடாது. உங்களுடைய நீண்டகால சேவையைக் காட்டி தம்பட்டமடித்துக் கொள்வது அர்த்தமற்றது. கட்சி ஊழியர்களுக்கு மூன்று தகுதிகள் இருந்தாக வேண்டும் என்பதை மூத்த ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் நேர்மை, திறனாற்றல், அனுபவ மேம்பாடு ஆகியவையே இந்த மூன்று தகுதிகள். அவர்கள் தமது நீண்டகாலச் சேவையை மட்டும் வலியுறுத்தாமல் திறனாற்றலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அரசியல் நேர்மையை திறனாற்றலிலிருந்து பிரித்து விடக்கூடாது. புரட்சிகரக் கடமைகளை நிறைவு செய்ய உங்களால் முடியாவிட்டால், உங்கள் அரசியல் நேர்மை குறைபாடுடையதே. நீண்டகாலச் சேவை எனும் பெருமிதமானது, உங்களுடைய முன்னேற்றத்துக்குத் தடையாவதை நீங்கள் அனுமதிக்காமல் இருந்தால், ஒரு மூத்த புரட்சியாளராக இருப்பது பெருமைக்குரியதே.

2. மூத்த ஊழியர்கள் தமது கல்வி மட்டத்தைத் தவறாமல் உயர்த்திக் கொள்ள வேண்டும். முன்னேற்றத்துக்கான திறவுகோல் இதுவே. எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வது, சில விடயங்களைக் கற்க அடித்தளத்தை வழங்கும். கற்காமலிருப்பது அழிவேற்படுத்திவிடும். புரட்சி யின் தேவைகளை ஈடுகட்டத் தவறுவது என்ற பொருளிலேயே நான் இதைக் கூறுகிறேன். புரட்சி யாருக்காகவும் காத்திருப்பதில்லை . கற்றுக் கொள்வதற்கு நாம் முயற்சிக்காவிட்டால், புரட்சிக்கு மேலும் கூடுதலாக நாம் எப்படி வேலை செய்ய முடியும்?

கல்வியில் பிறரை எட்டிப் பிடிக்கத் தம்மால் இயலாமல் போய்விடும் என்று சில தோழர்கள் கவலைப்படுகின்றனர். பின்னால் வந்தவர்கள் ஏற்கெனவே இருந்தவர்களை விஞ்சிவிடக் கூடும் என்பதற்காக அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. கற்றலில் தாம் வெற்றி பெறமுடியும் என்றும், பல்வேறு துறைகளில் ஆற்றல் உள்ளவர்களாக தாம் மாற முடியும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். கற்பதில் அவர்கள் தீர்மானகரமாக உள்ளவரையில் அவர்களுக்கு உதவ கட்சி தயாராக உள்ளது. கற்பது என்பது ஏதோ ஒரேயடியாக ஒரே நாளில் சாதிக்கக் கூடிய ஒரு செயலல்ல. நீண்டகால கடின முயற்சி அதற்குத் தேவை. பள்ளியில் கற்பதைவிட உங்கள் சொந்த முயற்சியில் கற்பதே, கற்பதற்கு ஆக மிகச் சிறந்த வழியாகும்.

3. புதிய ஊழியர்களுடன் ஐக்கியமாவதற்கான முன்முயற்சியை மூத்த ஊழியர்கள் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். தலைமைப் பொறுப்புகளில் உள்ள பழம்பெரும் புரட்சியாளர்களாக இருப்பதால், இந்த விடயத்தில் இவர்கள்தான் தலையாய பொறுப்பேற்க வேண்டும். இதை மூத்த ஊழியர்களுக்கு நாம் தவறாமல் விளக்க வேண்டும். இதில், அறிவாளிப் பிரிவினரான புதிய ஊழியர்களுக்கும் பொறுப்புள்ளது என்பது உண்மைதான். ஆனால், மூத்த ஊழியர்கள் அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்; அவர்களுடைய குறைகளைச் சுட்டிக்காட்டுவதுடன் மூத்த ஊழியர்கள் நின்றுவிடக் கூடாது; ஆனால், அதற்கும் மேலே சென்று புதிய ஊழியர்களுக்கு உதவ வேண்டும்; தம்முடன் தோளோடு தோளாக நிற்கும் தோழர்களாகவும், எதிர்கால வாரிசுகளாகவும் அவர்களை மூத்த ஊழியர்கள் பார்க்க வேண்டும். இதுவொருபுறமிருக்க, புதிய ஊழியர்கள் தமக்கென சிறந்த தகுதிகளைக் கொண்டுள்ளனர்; எனவே, மூத்த ஊழியர்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் அவர்களுடைய உதவியைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். புதிய ஊழியர்களும் மூத்த ஊழியர்களும் ஒன்றுபட்டு வேலை செய்கிறார்கள் என்றால், அது மூத்த ஊழியர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காட்டுவதாகவே இருக்கும்.

3. தனித் தேர்ச்சிமிக்க ஊழியர்கள் பற்றி

தனித் தேர்ச்சிமிக்க சில ஊழியர்களே நம்மிடம் இருந்தபோதிலும், கட்சிக்கும் படைக்கும் அவர்கள் இன்றியமையாதவர்களாக இருக்கின்றனர். எல்லா புரட்சியாளர்களையும் போலவே தனித்தேர்ச்சிமிக்க புரட்சியாளர்களும் மிகக் கடுமையான சூழ்நிலைகளின் கீழ் வாழ்ந்து – வேலை செய்து எண்ணற்ற இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். அவர்களுடைய அர்ப்பணிப்பு உணர்வை மையக்குழு பாராட்டுகிறது.

அ. அரசியலுக்கு எதிராக நிறுத்தப்படும் தேர்ச்சி

தனித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசியலைப் பற்றி எதுவு தெரியாது என்று அனுமானிக்காதீர்கள். வடஷான்க்ஸி தளப்பகுதிக்கு அவர்கள் ஏன் வந்தார்கள் என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இன்னமும் அவர்களுக்கு அரசியல் ரீதியிலான உதவி தேவைப்படுகிறது. புரட்சிகர இலட்சியத்திற்காக அவர்கள் தொழில்நுட்ப வேலைகளைச் செய்கின்றனர்; நாம் அவர்களுடைய தொழில்நுட்பத் தேர்ச்சியைத் தவறாமல் மதிக்க வேண்டும். தனித்தேர்ச்சி ஏதுமற்றவர், தம்மை நிபுணத்துவம் வாய்ந்தவராகக் காட்டிக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. நிபுணத்துவம் பெற அவர் முயற்சிக்கலாம்; அவ்வாறு முயற்சிப்பாரானால் அவரும் ஒரு நிபுணராக முடியும் என்பதே உண்மை .

ஆ. தனித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு அவசியம்

தொழில்நுட்ப வேலைகளில் ஈடுபடுபவர்கள் மத்தியிலான ஒத்துழைப்பை நாம் ஊக்குவிக்க வேண்டும். புரட்சியின் நன்மைக்காக கல்வி தொடர்பான பிரச்சினைகளை அவர்கள் தமக்குள் சுதந்திரமாக விவாதிக்க வேண்டும்; நடைமுறை வேலையில் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்க வேண்டும். இப்போதுள்ள நிலை என்னவென்றால், அரசியல் ரீதியில் அவர்கள் தமக்குள் நன்றாக ஒத்துழைக்கின்றனர்; ஆனால், தொழில்நுட்ப வேலைகளில் அவ்வளவாக ஒத்துழைப்பதில்லை. பல்வேறு துறைகளுக்கு இடையிலும் தனிநபர்களுக்கு இடையிலும் பிரச்சினைகள் இருக்கின்றன. போயும் போயும், அவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதைத் தடுப்பது எது? இதற்கு அடிப்படைக் காரணம் அவர்களுடைய சித்தாந்தம் தானேயொழிய அவர்களுடைய பழக்கவழக்கங்கள் அல்ல.

சிலர் புரட்சிகர அணிவரிசையில் சேர்ந்துள்ள போதிலும், பழைய கருத்துக்களையும் நடைமுறைகளையும் இன்னமும் பிடித்துத் தொங்கிக் கொண்டுள்ளனர். பழைய சமூகம் தனிநபர்வாத அடிப்படையிலானது; ஆனால், நம்முடையது கூட்டுத்துவ அடிப்படையிலானது. கூட்டுத்துவம் தனித்துவத்தைவிட வல்லமை மிக்கது. இது கேள்விக்கிடமற்றது. இந்த உலகில் சாதிக்கப்பட்ட ஒவ்வொன்றும் அடிப்படையில் கூட்டு முயற்சியின் விளைவே. நம் அனைவரினுடைய கூட்டு முயற்சிகளிலிருந்தே புரட்சியின் வெற்றிகள் ஈட்டப்படும். உண்மையில், விஞ்ஞானப் புதுமைகளிலும் கண்டுபிடிப்புகளிலும் தன் முயற்சியின் அரிய மதிப்பை இது மறுப்பதாகாது. ஆனால், நமது முன்னோர்களின் சாதனைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளாவிட்டால், புதிய கண்டுபிடிப்புகள் எதும் இருக்க முடியாது. யாராவது தமக்குள் அழைக்க மறுத்து வெறுமனே தமது சொந்த குறுகிய நலன்களை முன்தள்ளுவார்களானால் அரிய படைப்புகள் எதும் வெளிவராது. நம்மிடம் பழைய தனிநபர்வாத சிந்தனை இன்னமும் நீடிக்கிறது. தவறாமல் அது சரிசெய்யப்பட வேண்டும்.

நமது சொந்த திறனாற்றல்களின்பால் ஒரு விஞ்ஞானபூர்வமானப் போக்கை நாம் கைக்கொண்டாக வேண்டும். தவறவே தவறாதவர்களாக நம்மையே நாம் கருதக் கூடாது. ஆலோசனைக்காக பிற மருத்துவர்களை அழைப்பதை சில மருத்துவர்கள் விரும்புவதே இல்லை. நோயைக் குணப்படுத்துவதில் தாம் தவறும்பட்சத்தில், வேறு எவரும் நோயைக் குணப்படுத்தக் கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர். சிலர், மற்றவர்களுடைய பலவீனங்களைப் பற்றிப் பேசுவதில் நாட்டம் கொள்கின்றனர். ஆனால், தமது சொந்த பல வீனங்களைப் பற்றி வேறு எவரும் பேசினால், அவர்கள் சீற்றமடைகின்றனர். இவர்கள், தம்மைத் தவறற்றவர்களாகக் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். இதன் காரணம் என்னவென்றால், அவர்கள் தமது புகழிலும் அந்தஸ்திலும் மெய்மறந்து உள்ளனர். ஆனால், பிறரிடமிருந்து அறிவுரை பெறுவதால், ஒருவர் தமது மதிப்பை இழந்து விடுவாரா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

உலகில் எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் ஒன்றும் எளிமையானதாக இருப்பதில்லை. அவற்றில் சிலவற்றை நாம் புரிந்து கொள்ளத் தவறுவதும் அல்லது சிலவற்றைத் தவறாகப் புரிந்து கொள்வதும் தவிர்க்க முடியாததுதான். தவறுகள் இழைக்காமலிருக்க நாம் முயற்சிக்க வேண்டும் என்பதும் உண்மைதான். எனவே, மருத்துவர்களாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எவராக இருந்தாலும் சரி – குறிப்பாக தலைவர்கள், தாம் புரிந்து கொள்ள முடியாத விடயங்கள் அல்லது தெளிவாகத் தெரியாத விடயங்கள் பற்றி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இருப்பார்களேயானால், அவர்கள் தமது மதிப்பை இழந்துவிட மாட்டார்கள். அப்படி இல்லாமல் போனால்தான், அவர்கள் தமது மதிப்பை நிச்சய மாக இழந்துவிடுவர். விவகாரங்களைக் கையாளுகையில், தலைவர் மாவோ எப்போதுமே மிகுந்த கவனத்துடன் இருக்கிறார். ஒருவர் தவறிழைத்து, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வாரானால், அவர் தமது மதிப்பை இழப்பதில்லை . இதற்கு மாறாக, தவறினைப் பரிசீலித்து, அதிலிருந்து பாடங்களைக் கற்பதற்கு மறுப்பாரானால், அவர் தமது மதிப்பை இழந்தே தீருவார். இன்னும் சொல்லப்போனால், அடிக்கடி பாரதூரமான அளவிலான இழப்புக்கு ஆளாவார்.

சுருக்கமாகச் சொன்னால், நேர்மையானவர்கள் தமது மதிப்பை இழப்பதில்லை. தாம் மதிப்பை இழந்து விடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, நேர்மையின்றி ஒருவர் நடப்பாரேயானால், அவர் இழப்பது உறுதி. பிறரிடமிருந்து அறிவுரை கேட்பதால், ஒருவருடைய கௌரவம் குறைந்து விடுவதில்லை. அவருடைய வேலையை நன்றாகச் செய்வதன் மூலமே அவர் புகழை அடைகிறார். ஏதோ எல்லாம் தெரிந்தவராகக் காட்டிக் கொண்டு மேதாவியாக நடிப்பதால், அவர் புகழை அடைய முடியாது. இதனால் அவருக்கு எந்தப் பலனும் கிடைக்காது. தவறுகளைச் செய்யாமலிருக்க முயற்சிப்பது மட்டுமே ஒருவர் புகழடைவற்கான ஒரே வழி. ஒருபோதும் மற்றவர்களை இழப்புக்குள்ளாக்கி ஒருவர் புகழடைய முடியாது.

இ. ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.

இப்போது நமக்கு எண்ணற்ற இடையூறுகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தளப்பிரதேசத்தில் நம்முடைய அறிவியல் சாதனங்கள் மேம்பட்டவையாக இல்லை. இதை வெற்றி கொள்வதற்கான வழியைக் காண்பது நமது புரட்சிகரத் தனித் தேர்ச்சியாளர்களுக்குக் கடினமாகவே உள்ளது. ஆனால், புரட்சியானது அவர்களுக்கு மகத்தான வாய்ப்பை அளிக்கும். புரட்சி வெற்றி பெறுகையில், சிறந்த அறிவியல் சாதனங்கள் தாராளமாகக் கிடைக்கும். அதன் பின்னர், தமது தொழில்நுட்ப அறிவைக் கொண்டு அவர்கள் புதியவற்றை உருவாக்குவர், புதிய கண்டுபிடிப்புகளை அவர்கள் சாதிப்பர். இப்போதைக்கு அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், இடையூறுகளைக் கடந்து அவர்கள் அனுபவத்தைப் பெற வேண்டும். அதற்காக நிறைய நூல்களைப் படிக்கவும், கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடவும் வேண்டும்.

எதிர்காலத்தில் புதிய மணிமணியான தேர்ச்சியாளர்கள் உருவாகும் போது, தாமும் தமது வேலைகளும் இனி மதிக்கப்படமாட்டா என்று அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. புரட்சி நிச்சயம் விரைந்து முன்னேறும். அது அவர்களுக்கு மடைதிறந்த வெள்ளம் போன்று ஏராளமான வாய்ப்புகளை அளிக்கும். அவர்களுடைய திறமைகளைப் பயன்படுத்தவும் அவற்றை மேலும் முன்னேற்றவும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைத்த மாத்திரத்தில், பழைய நண்பர்களை பொதுவுடைமைக் கட்சி மறந்துவிடுமா என்ன? அப்படியில்ல பழையவர்களும் புதியவர்களும் என்ற இரு வகையினருமே கட்சிக்குத் தேவைப்படுவர். தனது இலட்சியத்தை அடைவதற்காக, கட்சியானது மக்களை மேலும் மேலும் அணிதிரட்டுவதால், பிரட்சியின் எதிர்காலம் மேலும் மேலும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கும்.

படிக்க :
♦ இந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் !
♦ அறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்

ஊழியர்களைப் பயனுள்ள முறையில் பயன்படுத்துவது. கொள்கைகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை நிச்சயப்படுத்திக் கொள்வது ஆகியவற்றில் தலைமைப் பதவிகளில் உள்ள தோழர்களுக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது. ஊழியர்களைச் சரியாகப் பயன்படுத்துவது முதல் முக்கியத்துவம் வாய்ந்ததது. நாடகம் நன்கு உருவமைக்கப்பட்டால்தான் சிறந்த காட்சிகள் அரங்கேறும். சிறந்த தலைமையை உத்திரவாதப்படுத்துவதற்கு, தலைமை ஊழியர்கள் பின்வரும் ஆலோசனைகளை மனதில் கொள்ள வேண்டும்.

1. உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு நீங்கள் கடுமையாகப் படிக்க வேண்டும். நீங்கள் ஏன் படிக்க வேண்டும்? கோட்பாட்டில் தேர்ச்சி பெறுவதற்காகவும் சரியான சிந்தனை முறையை அடைவதற்காகவும் நீங்கள் படிக்க வேண்டும். இது தொடர்பாக, தலைமைப் பொறுப்புகளில் உள்ள தோழர்கள், குறிப்பாக இராணுவத் துறைகளில் உள்ள தோழர்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். வறட்டு வாதத்தில் விழுந்து விடுவோம் என்று அஞ்சி, நூல்களைப் படிக்க அவர்கள் தயக்கம் காட்டக் கூடாது. வறட்டுவாதத்தைத்தான் நாம் எதிர்க்கிறோமே ஒழிய, புத்தகங்களைப் படிப்பதை அல்ல. இப்போது நம்மிடமுள்ள குறைபாடு என்னவென்றால், மார்க்சிய – லெனினியத்தில் நமக்குப் போதுமான அளவு தேர்ச்சி இல்லை என்பதுதான். வறட்டுவாதம், சுய அனுபவவாதம் ஆகிய இரண்டையும் நாம் தவிர்ப்பதற்கு, மார்க்சிய – லெனினியத்தை சளைக்காமல் படிப்பது நமக்கு அவசியம். பொது அறிவும் நமக்குத் தேவைப்படுகிறது என்பது உண்மையே. பொது அறிவு இல்லாமல், மார்க்சிய – லெனினியத்தைப் புரிந்து கொள்வது நமக்கு மிகக் கடினமாக இருக்கும். அதைத் தன்வயமாக்குவதையும் செறிப்பதையும் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நமது தோழர்களில் சிலர், பிறருடைய தவறான கருத்துகளால் மூழ்கடிக்கப்பட்டு, வறட்டுவாத வலையில் சிக்கி விடுகின்றனர். இதற்குக் குறிப்பான காரணம் என்னவென்றால், அவர்களுடைய கோட்பாட்டு அறிவு வரம்புக்குட்பட்டதாகவும், பொதுக் கல்வி மட்டம் குறைவாகவும் இருப்பதுதான். படிப்பதை மேற்கொள்கையில், கற்றுக் கொள்வதில் உள்ள உங்களின் திறனாற்றல் மீதான நம்பிக்கை அவசியமானது. உங்களுடைய அறிவின் போதாமை குறித்து உங்களின் வேதனைமிக்க ஒப்புணர்வு, அறிவை அடைய விடாப்பிடியாக ஊன்றி நிற்பதற்கான உங்களின் தீர்மானகரமான முடிவு ஆகியவையே படிப்பதில் உங்களுடைய முயற்சி இடையறாது நீடிப்பதற்கான திறவுகோல், தேவையான அளவுக்குக் கோட்பாட்டை நீங்கள் கற்றுக் கொள்ளும்போது, சரியான சிந்தனை முறையை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் நீங்கள் கட்சிக்கும் புரட்சிக்கும் பெரும் தொண்டாற்றுபவராக முடியும்.

2. ஒட்டுமொத்த நிலைமையை மனதில் கொண்டு, பொதுநலனை எப்போதும் கவனத்தில் கொள்ளுங்கள். உங்களுடை பொறுப்பில் உள்ள வேலையை மட்டும் நீங்கள் பார்ப்பீர்களேயானால், மொத்த நிலைமைக்கு ஊறுவிளைவிக்கும்படியாக, உங்களுடைய சொந்தத் துறையின் நலன்களை மட்டும் முன்வைக்கக் கூடியவர்களாக மாறிவிடுவீர்கள்.

3. பொருத்தமான பாராட்டுதல்களையும் அவசியமான ஒழுங்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள். தவறு செய்த ஊழியர்களை விமர்சிப்பதைப் பற்றி தலைமை ஊழியர்களில் சிலர் கவலைப்படுவதே இல்லை. இதன் மூலம், எதிர்காலத்தில் மேலும் சிறந்த வேலைகளைச் செய்யக் கற்றுக் கொள்வதிலிருந்து அவர்களைத் தடுத்து விடுகின்றனர். ஊழியர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வது என்பதன் முதன்மையான பொருள், அவர்கள் அரசியல் ரீதியில் முன்னேறுமாறு கவனித்துக் கொள்வதாகும். ஓர் ஊழியரின் தவறுகளை மிகைப்படுத்துவது சரியல்ல. ஆனால், ஓர் ஊழியரை விமர்சிக்காமல், எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடுவதும் சரியல்ல. பாரதூரமான தவறுகளை இழைத்துள்ள ஓர் ஊழியர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படாவிட்டால், அனுபவத்திலிருந்து எந்த படிப்பினையையும் அவர் பெறமாட்டார். பிற தோழர்களும் எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். நன்றாகச் செயல்பட்டுள்ள ஒருவர் பாராட்டப்படாமல் போனால், பெருமளவு முன்னேற்றம் அடைய அவருக்கு ஊக்கம் ஏதும் இராது. மேலும், இதிலிருந்து எவரும் எதையும் கற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, அவரவர்க்குரிய பாராட்டுகளும் ஒழுங்கு நடவடிக்கைகளும் வழங்கப்படுவதில் நாம் நம்பிக்கை வைக்கிறோம்.

உ. இராணுவ ஊழியர்களின் கவனத்துக்கு

புரட்சி அணிகளில் உள்ள பிற தோழர்கள் அல்லது மக்களுடனான தமது உறவுகளில், இராணுவ ஊழியர்கள் வெளிப்படையாக ஒளிவுமறைவின்றியும் இருக்க வேண்டும். அவர்கள் ஒருபோதும் கடுமையாகவும் ஆணவத்துடனும் நடந்து கொள்ளக்கூடாது. அவர்கள் எப்போதாவது கடுமையாகவும் ஆணவத்துடனும் நடந்து முடியும் என்பது சாத்தியமா? உண்மையில் இதற்குச் சாத்தியம் உள்ளது. ஏனெனில், அவர்களுடைய கைகளில் துப்பாக்கிகள் உள்ளன. இத்துடன், தமது தொண்டின் சாதனை பற்றி அவர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். இது, இராணுவத்தின் விரும்பத்தகாத பண்புக் கூறுகளில் ஒன்றாகும். இராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவில் தவறு ஏதாவது நடந்தால், இரு தரப்பினரும், அடுத்த தரப்பைவிட தமது தரப்பையே கூடுதல் விமர்சனப்பூர்வமாகப் பரிசீலிக்க வேண்டும். நமது கட்சியின் வடமேற்கு பிரிவினுடைய தலைமைக் குழு, இந்த முறையில்தான் உறவுகளை மிகச் சரியாகக் கையாள்கிறது. இதுவே மிகச் சிறந்த ஒன்றாகும். இன்னும் சொல்வதானால், பிற தரப்பைப் பற்றிய விமர்சனமே இல்லாமல், தமது தரப்பைப் பற்றிய சுயவிமர்சனம் மட்டுமே மேற்கொள்ளப்படுவது மேலும் சிறப்பாக இருக்கும். இராணும் முக்கியமானதுதான். ஆனால், உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் மக்களின் ஆதரவு இல்லாமல் போனால், இராணுவத்துக்கு செல்வாக்கு ஏதும் இராது. இந்த ஆதரவு இல்லாவிட் டால், இராணுவம் ஒரேயொரு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாது.

(முற்றும்)

நூல் : ஊழியர்கள் தலைவர்கள்
ஆசிரியர் : சென் யுன்
பக்கம் : 48
விலை : ரூ. 40
கிடைக்குமிடம் : கீழைக்காற்று
தொடர்புக்கு : 7395937703

விழித்தெழ வேண்டிய நேரமிது !

சுதந்திரம் ஒவ்வொரு இந்தியனின் உரிமையென அவர்கள் உறுதியளித்தனர்
ஆயினும் அவர்களின் முறையற்ற ஆட்சிக்கெதிராக நான் குரலெழுப்பினால்
இரவில் என் வீட்டுக் கதவை தட்டுகிறது போலீசு !
“என் அன்பு நண்பா, நீ பாடலாம், ஆனால் எங்கள் புகழ்பாடும் துதியை மட்டும்!”

ஒன்றன்பின் ஒன்றாக திட்டத்தை அமல்படுத்துவதாக அவர்கள் வாக்களித்தனர்
தேர்தலும் நெருங்குகிறது பணமழையோ கொட்டுகிறது
ஆனால் நமது கோப்புகளோ… முடங்கியுள்ளன ஒரு அலுவலக மூலையில் !
“என் அன்பு நண்பா, நாங்கள் முயற்சிக்கிறோம்! ஆனால் இந்த அமைப்பே சிக்கலிலுள்ளது !”

நமக்கு வேலைகளையும் நல்ல ஊதியங்களையும் வழங்குவதாக உறுதியளித்தனர்
ஆனால் இந்த சிக்கலான அமைப்பில் ஊக்கத்தொகைகள் வெட்டப்பட்டன
இருப்பது ஒருசில முதலீட்டாளர்களும் ஒருசில நிறுவனங்களும் !
“என் அன்பு நண்பா, வாக்குறுதியளித்து நிறைவேற்றிய ஒரு ஆட்சியையாவது எனக்குக் காட்டு பார்க்கலாம்”

சிறந்த உள்கட்டமைப்பை அமைத்துத் தருவதாக உறுதியளித்தனர்
ஆனால் வழக்கம்போல பரிதாபகரமான நிலையிலேயே அது இருக்கிறது.
குண்டு குழி சாலைகள், வாரக்கணக்கில் குடிநீரில்லை !
“என் அன்பு நண்பா, காத்திருப்பவர்களுக்கே நல்லவை நடக்கும்”

படிக்க :
♦ அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை
♦ எனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்

சட்டம் ஒழுங்கை பேணுவதாக உறுதியளித்தனர்
மோசமானவற்றை நாட்டை விட்டே விரட்டுவோம் என்றனர்
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களை மட்டும் பாதுகாக்கிறது போலீசு
“என் அன்பு நண்பா, குறைந்தப்பட்சம் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களே, அதற்கு நன்றியோடு இருங்கள்”

கருப்புப் பணத்தையும், தப்பியோடியவர்களையும் வெளிநாட்டிலிருந்து
திரும்பக் கொண்டுவருவதாக வாக்களித்தனர்
ஆனால் இதுவும் ஒரு மோசடிதான்.. அனைத்து பிற வாக்குறுதிகளையும் போலவே !
“என் அன்பு நண்பா, விஷயங்கள் அனைத்தும் பார்ப்பது போல எளிதானதல்ல”

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கையில் இவை குறையும்
என்ற நம்பிக்கையில் மக்களின் நினைவுகள் மங்குகையில்
தலைவர்களின் வாக்குறுதிகள் உள்ளே கொதிக்கும் ஆத்திரத்தை
தணிப்பதில் போதைப்பொருளாய்ப் பணியாற்றுகின்றன.

ஆனால் இனியும் நாம் அடிபணிந்து துன்புறக் கூடாது.
நாடும் அதன் குடிமக்களும் இதைவிடச் சிறந்ததை பெறத் தகுதியானோரே..
இப்போது நாம் எழுந்து சினத்துடன் போராடுவோம்
நமது முன்னோர்களின் கனவினை நாம் நனவாக்குவோம்.

பல்லாண்டுகளுக்கு முன், ஒரு முழு தலைமுறையும்
நம் நாட்டின் நலனுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர்
என் அன்பு தோழர்களே, இப்போது இது நம் கையில் உள்ளது, மீண்டும்
விடுதலைக்காக இந்தியா விழித்தெழ வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஆங்கில மூலம் : ஷுக்ர் உஸ்கோகர்
தமிழில் : ஷர்மி
நன்றி : தி வயர் லைவ்

இந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் !

கடந்த ஜூன் மாதத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட மோதலின் பின்னணி குறித்து கடந்த ஜூலை மாத புதிய ஜனநாயகம் இதழில் எழுதப்பட்ட தலையங்கக் கட்டுரை இது. முன்னாள் பொறுப்பாசிரியரால் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட கட்டுரைகளில் இதுவும் ஒன்று !

0-0-0

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15 தேதியன்று இந்திய துருப்புக்களுக்கிடையே நடந்த கைகலப்பு, உயிர்ப் பலிகளை அடுத்து நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இந்திய எல்லைக்குள் யாரையும் நுழையவிடவில்லை, இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவில்லை” என விளக்கமளித்தார், பிரதமர் மோடி. இதனைத் தொடர்ந்து காங்கிரசு, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை என்றால், கைகலப்பும் மோதலும் ஏற்பட்டதேன்? 20 இந்தியச் சிப்பாய்கள் கொல்லப்பட்டதேன்?” என்ற கேள்விகளை எழுப்பின.

இக்கேள்விகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக விளக்கம் அளித்தது என்றால், சங்கிகளோ, பிரதமரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கேள்வி கேட்பவர்களைத் தேசத்தை இழிவுபடுத்துபவர்களாக முத்திரை குத்தினர்.

மோடி அரசோ இன்னும் ஒருபடி மேலே போய், இக்கேள்விகளை எழுப்பிய காங்கிரசை சீனாவிடம் காசு வாங்கும் கைக்கூலியாக வசைபாடியதோடு, காந்தி குடும்பத்தாரால் நடத்தப்படும் மூன்று அறக்கட்டளைகள் சீனா உள்ளிட்ட அந்நிய நாடுகளிலிருந்து நிதி பெற்றதில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சுமத்தி, அவற்றை விசாரிப்பதற்கு கமிட்டியொன்றை அமைத்திருக்கிறது.

மோடி அரசு உண்மைகளை மூடிமறைக்க என்னதான் முயன்றாலும், இந்தியா இடையேயான முறுகல் நிலையைத் தணிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை எடுத்துக்காட்டி வருகின்றன.

படிக்க :
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் : இந்திய சீனப் போர் – வரலாற்றுரீதியில் ஒரு பார்வை !
சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யியுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் செல்லும் உண்மைக் கட்டுப்பாட்டு கோட்டுப் (Line of Actual Control) பகுதியிலிருந்து இருநாட்டுப் படைகளும் பின்வாங்கிக் கொள்ளும் ஒப்பந்தம் முடிவாகியிருக்கிறது.

இந்த ஒப்பந்தப்படி, இந்தியப் படைகள் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திருக்கும் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 1.8 கி.மீ. தொலைவிற்குப் பின்வாங்கியிருப்பதோடு, அந்தப் பகுதியை இராணுவச் சிப்பாய்கள் ரோந்து வராத பஃவர் ஜோன் ஆகவும் அறிவித்திருக்கிறது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதி முழுவதுமே தனக்குச் சொந்தமானது என சீனா உரிமை பாராட்டத் தொடங்கியிருக்கும் நிலையில், இவ்விரு முடிவுகளை இந்திய அரசும் இராணுவமும் எடுத்திருப்பதுதான் இங்கு கவனங்கொள்ளத்தக்கது.

லடாக்கிற்குத் திடீர் விஜயம் செய்து, இந்திய இராணுவச் சிப்பாய்களைச் சந்தித்து, அவர்கள் மத்தியில் சீனாவின் விரிவாக்கத்துக்கு எதிராக மோடி எச்சரிக்கை விடுத்த பத்து நாட்களுக்குள் இந்தியா கல்வான் பகுதியிலிருந்து பின்வாங்கியிருக்கிறது எனில், சீன ஆக்கிரமிப்பு என ஆர்.எஸ்.எஸ். கிளப்பிவிட்டு வரும் பூச்சாண்டியின் பொருள்தான் என்ன?

லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கிற்குச் சற்று கிழக்கே தொடங்கி மேற்கே நேபாள எல்லையையொட்டியுள்ள பாங்காங் டெஸ்ஸோ ஏரி வரையிலும் இந்திய  சீன இடையேயான எல்லை தெளிவாக வரையறுக்கப்படாத நிலையில், அப்பகுதியெங்கும் உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control  LAC) என்ற கற்பனைக் கோடுதான் இரண்டு நாடுகளையும் பிரிக்கிறது. எனினும், பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே ஜம்மு பகுதியில் எல்லையாக வரித்துக் கொள்ளப்பட்ட எல்லைக் கட்டுப்பாடு கோடு (Line of Control  LOC) போல, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையேயான உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு தெளிவாக வரையறுக்கப்பட்டு, இரு நாடுகளும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக அமையவில்லை.

இந்த உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடும் கடந்த அறுபது ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டே வந்திருக்கிறது. 1959, 1960, 1962 ஆகிய ஆண்டுகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடும், 1993 ஆண்டில் இந்தியா எல்லை அமைதி ஒப்பந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடும் ஒன்றல்ல. மேலும், 1993 ஆண்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மைக் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் 23 இடங்கள் சர்ச்சைக்குரியவையாக உள்ளன. அப்பகுதிகளை இரு நாடுகளுமே தத்தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளாகக் கூறி வருகின்றன.

இப்படி எல்லை தெளிவாக வரையறுக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சீனாவை ஆக்கிரமிப்பாளனாக இந்திய அரசும் பா.ஜ.க. உள்ளிட்ட தேசியக் கட்சிகளும் குற்றஞ்சுமத்துவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. எனினும், சர்ச்சைக்குரிய கோக்ரா, கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், பாங்காங் டெஸ்ஸோ ஏரி ஆகிய இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாகத் தனது படை எண்ணிக்கையை சீனா அதிகப்படுத்தியதற்கு அந்நாட்டை மட்டுமே குற்றஞ்சுமத்திவிட முடியாது. சீனாவின் இந்த தன்னிச்சையான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பின்னே இந்தியாவின் “ஆக்கிரமிப்பு” நோக்கங்களுக்கும் இடமுண்டு.

லடாக்கிலுள்ள லே நகரிலிருந்து 255 கி.மீ. தொலைவிலுள்ள தௌலத் பேக் ஓல்டி பகுதி வரையிலும் இந்தியத் துருப்புக்களை விரைந்து அனுப்பும் நோக்கில் அமைக்கப்பட்டு வரும் சாலை ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது. 2014 மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, இந்தச் சாலையை விரைந்து முடிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு இணையாகச் செல்லும் இந்தச் சாலை, இந்தியப் பகுதிக்குள் அமைகிறதென இந்திய அரசால் நியாயப்படுத்தப்பட்டாலும், எல்லைத் தகராறு இருந்துவரும் நிலையில் இந்தச் சாலை அமைக்கப்படுவதை சீனா எதிர்த்தே வந்திருக்கிறது.

இந்தச் சாலை தொடர்பான முரண்பாடுகளுக்கு அப்பால், ஜம்மு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு உரிமையையும் அதனின் மாநிலத் தகுதியையையும் ரத்து செய்து, அதனை இரண்டாக உடைத்து, லடாக் நிர்வாகத்தை டெல்லியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்கு எடுத்துச் சென்றதையும் சீனா சந்தேகக் கண்ணோடு அணுகி எதிர்த்து வருகிறது.

ஜம்மு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமையை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நான் ஜம்மு எனக் குறிப்பிடும்போதெல்லாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரையும், சீனா வசமுள்ள அக்சாய் சின் பகுதியையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன் என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என உரையாற்றி, ஆர்.எஸ்.எஸ். அகண்ட பாரதக் கனவை உறுதிப்படுத்தினார்.

ஜம்மு சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பிறகு செப்டெம்பர் மாதத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்றில்லாவிட்டாலும், ஒருநாள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா எடுத்துக் கொள்ளும்” எனக் குறிப்பிட்டார்.

இந்த உரைகள் எல்லாம் பாகிஸ்தானிற்கு எதிராக மட்டுமல்ல, சீனாவையும் சீண்டும் நோக்கிலும் கூறப்பட்டவை தான்.

இவற்றுக்கு அப்பால், மோடியின் கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் புதிய நெருக்கமும், அமெரிக்காவின் சீன எதிர்ப்பு ஜோதியில் மோடி கலந்துவிட்டதும் உலகமே அறிந்த உண்மையாகும். இந்தோ பகுதியில் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா என்ற நான்கு நாடுகளின் கூட்டணியை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறது. மேலும், இந்தியாவின் கடற்படை மற்றும் விமானத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளுவதற்கு ஏற்ப தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் இந்தியா, அமெரிக்கா இடையே கையெழுத்தாகியிருக்கிறது.

கரோனா தொற்றுப் பரவலுக்கு சீனாதான் காரணமென்று குற்றஞ்சுமத்திவரும் அமெரிக்கா, அதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தென் சீனக் கடல் பகுதியில் அணு ஆயுதங்களைச் செலுத்தக்கூடிய எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களையும் மூன்று விமானந்தாங்கி கப்பல்களையும் அனுப்பிவைத்து, சீனாவை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.

படிக்க :
♦ அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு
♦ பாகிஸ்தான் என்றால் பொங்கும் தேசபக்தி சீனாவிடம் பம்முவது ஏன் ?

கரோனா தொற்றைப் பரவலைப் பயன்படுத்திக் கொண்டு சீனாவை அரசியல் மற்றும் பொருளாதாரரீதியாகத் தனிமைப்படுத்திப் பலவீனப்படுத்துவது, அதனை அச்சுறுத்திப் பணியவைப்பது என்ற இரு நோக்கங்களின் அடிப்படையில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் காய்களை நகர்த்தி வருவதற்கு மோடி அரசும் துணை நிற்கிறது.

சீனா, உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தனது படை எண்ணிக்கையை அதிகரித்து வருவதை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். சீனாவை உலகின் புதிய எதிரியாகச் சித்தரிக்க முயலும் அமெரிக்காவின் வல்லாதிக்க நோக்கத்திற்கு அடியாள் வேலை பார்க்கும் நப்பாசையும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் சீன எதிர்ப்பு தேசிய வெறியில் மறைந்திருக்கிறது.

எனினும், ஆர்.எஸ்.எஸ். இந்த சீன எதிர்ப்பு தேசிய வெறி, வெறுங்குடம்தான் அதிகம் சத்தம் போடும் என்ற கதையாகவே நடைமுறையில் உள்ளது. ஏனென்றால், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் பொருளாதார வல்லமை மோடி அரசுக்கு இல்லை. சீனாவைப் போல இந்தியாவை உலகின் ஏற்றுமதி மையமாக மாற்றக்கூடிய உற்பத்திக் கட்டமைப்புகளை உருவாக்க மோடி அரசும் தயாராக இல்லை; இந்தியத் தரகு முதலாளிகளும் தயாராக இல்லை.

இன்னொருபுறத்திலோ, சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை இராணுவரீதியாகத் தீர்த்துக் கொள்ளும் நிலைமையிலும் மோடி அரசு இல்லை. வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தான் எல்லையில் ஐந்து இலட்சத்திற்கும் மேலான துருப்புக்களைக் குவித்து முண்டா தட்டினார். பின்னர் அமெரிக்க நிர்பந்தத்தால், ஒரு ரவையைக்கூடச் சுடாமல் படைகளைப் பின்வாங்கிக் கொண்டார். அப்படிப்பட்ட நாடகத்தன்மை கொண்ட முஸ்தீபுகளைக் காட்டும் நிலையில்கூட இன்று மோடி அரசு இல்லை.

இந்த நிலையில், பாம்பும் சாகக்கூடாது தடியும் நோகக்கூடாது என்ற கதையாக, டிக்டாக் உள்ளிட்ட சீனா நாட்டைச் சேர்ந்த 59 செயலிகளைத் தேசப் பாதுகாப்பைக் காட்டித் தடை செய்திருக்கிறது, மோடி அரசு. மேலும், அவலை நினைத்து உரலை இடித்த கதையாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் துறைமுகத்திலிருந்து வெளிச் செல்லுவதைத் தாமதப்படுத்தும் குசும்புத்தனத்திலும் ஈடுபட்டு வருகிறது.

இந்தச் சில்லுண்டி நடவடிக்கைகளை இந்தியத் தரகு முதலாளித்துவ வர்க்கம்கூட ஆதரிக்க மறுக்கிறது. அதனைவிட முக்கியமாக, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் செல்லும் உண்மைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 1.8 கி.மீ. தூரம் இந்திய இராணுவம் பின்வாங்க ஒப்புக்கொண்டிருப்பதை சீனாவிற்குக் கிடைத்த வெற்றியாகவே முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்ளிட்ட பலரும் கருதுகின்றனர்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களோ சீனாவிற்கு எதிராக மோடி அரசு ஒரு மாபெரும் வர்த்தகப் போரைத் தொடங்கிவிட்டது போலவும், சீனாவை வெற்றிகரமாகப் பின்வாங்கச் செய்துவிட்டது போலவும் சவுண்டுவிட்டு, மோடி அரசின் சரணாகதியை, அதனின் பல்முனைத் தோல்விகளை மூடிமறைத்துவிட முயலுகின்றன.

புதிய ஜனநாயகம்

அறிவுத்துறை ஊழியர்களைக் கையாளுவது குறித்து… || தோழர் சென் யுன்

தோழர் சென் யுன், சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களில் ஒருவர். சீனப் பொதுவுடைமைக் கட்சியின் மையக் குழுவின் சார்பில் கட்சியின் அமைப்பு விவகாரத் துறை இயக்குனராக 1937-லிருந்து ஏழாண்டு காலம் செயல்பட்டார். தோழர்களை போல்ஷ்விக் முறையில் பயிற்றுவிப்பதிலும், புடம் போட்டு வளர்ப்பதிலும் அனைத்து நடைமுறை சார்ந்த பிரச்சினைகளையும் எதிர்கொண்டு எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் அமைப்புத் துறையில் ஊழியர்களை தலைவர்களாக உயர்த்துவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுத்து வழிகாட்டினார்.

அவரது அனுபவங்களை உட்கிரகித்து பொதுவுடைமைக் கட்சியை புரட்சிப் பணிக்கு ஏற்ப புடம்போட்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தருணம் இது.

  • வினவு

0-0-0

ஊழியர்கள் தமக்குத் தாமே கண்டிப்பாக இருந்தாக வேண்டும் || பாகம் – 1

(அக்டோபர் 7, 1942)

யேனானில் இராணுவ ஊழியர்களின் கூட்டத்தில் ஆற்றிய உரையின் மறுகட்டமைப்பு. இது மட்டுமின்றி, தோழர் சென் யுன் எழுதிய எண்ணற்ற பிற கையெழுத்துப் படிகளை வைத்து, சென் யுன்-னின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைத் தொகுத்த நூலாசிரியர் குழுவினர் இந்த விசயாதாரத்தைக் கூட்டிணைவாக்கியுள்ளனர்.

ம்மைப் பொருத்தவரை கட்சியானது தனது ஊழியர் கொள்கையைப் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டுமென்று ஊழியர்கள் இப்போது கட்சியை வலியுறுத்துகின்றனர். ஆனால், கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, தாம் இருக்க வேண்டுமென்ற தமது கடமையைப் பற்றி அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.

உண்மை என்னவென்றால், கட்சியின் இந்த எதிர்பார்ப்புகள் பற்றி ஊழியர்கள் அக்கறை கொள்ள வேண்டும்; அவை தம்மிடம் இருக்க வேண்டுமென்று அவர்கள் தமக்குத் தாமே கண்டிப்பாகக் கோரவேண்டும். ஆனால், இப்போது யேனானில் உள்ள சில ஊழியர்கள், கட்சியின் ஊழியர் கொள்கை பற்றி பேசும்போதெல்லாம் கட்சி தங்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும், தம்மை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும், தம்மைப் பேணி வளர்க்க வேண்டுமென்று நினைக்கின்றனர். அவர்கள் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய நான்கு எதிர்பார்ப்புகள் (கட்சிக்கு விசுவாசமாக இருத்தல், மக்களுடன் நெருங்கிய பிணைப்புகளைக் கொண்டிருத்தல், சுயேட்சையாக வேலை செய்யும் ஆற்றல் கொண்டிருத்தல் மற்றும் கட்சிக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ளுதல்) பற்றி அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. அவற்றை இரண்டாந்தர முக்கியத்துவம் உடையவையாக அவர்கள் கருதுகின்றனர்; அல்லது அவற்றை அடியோடு அவர்கள் மறந்து விடுகின்றனர். இது தவறானது என்பது சொல்லாமலே விளங்கும்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட்கள் என்றாலே தவறிழைக்காத முனிவர்களா? | தோழர் மாவோ
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !

1938-ம் ஆண்டில், ஜப்பானிய எதிர்ப்பு இராணுவ மற்றும் அரசியல் கல்லூரி, இன்னும் பிற கட்சி நிறுவனங்களின் மாணவர்களுடன் விவாதித்த போது, கட்சியின் ஊழியர் கொள்கை பற்றி மட்டும் தான் நான் பேசினேன்; ஊழியர்கள் தமது அறவொழுக்கத் தரங்களை உயர்த்திக் கொள்வதன் அவசியத்தைப் பற்றி நான் பேசாமலேயே இருந்துவிட்டேன். எனது அப்போதைய விவாதம் பிரச்சினையின் ஒரு பக்கத்தைப் பற்றியதாக இருந்தது. இப்பொழுது பிரச்சினையின் இன்னொரு பக்கத்தைப் பற்றிப் பார்ப்போம்.

  1. அறிவுத்துறை பின்னணியுடைய புதிய ஊழியர்கள்

கூர்மையான அறிவும் வேலைக்கான உற்சாகமும்தான் இந்தப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்களின் பலமாகும். கட்டுப்பாட்டின் மீதான வெறுப்பு இவர்களுடைய தனிப்பண்பாகும்; இது குட்டி முதலாளிகளின் தனிச்சிறப்பான குணாதிசயம் ஆகும். இந்தப் பலவீனத்தை வெற்றி கொள்ள அவர்கள் தயாராக உள்ளனர்; கட்சி அமைப்பு அளிக்கக்கூடிய கல்வியின் உதவியோடு, அவர்களால் அந்தப் பலவீனத்தைக் கடக்க முடியும்.

இந்தப் பின்னணி கொண்ட புதிய ஊழியர்கள் பலர், தமக்கு ஒதுக்கப்பட்ட வேலையை, தமக்குப் பொருத்தமானதாகக் கருதுவதில்லை. தொழில்நுட்பம், பொருளாதார வேலைகள், இன்னும் பிற துறைகளில் அமர்த்தப்பட்டுள்ள இவர்கள், தமது வேலையில் மன நிறைவு இல்லாதவர்களாக உள்ளனர். கட்சி அவர்களுக்குத் தவறான வேலைகளைக் கொடுத்துவிட்டதா? அல்லது அவர்களுடைய சிந்தனையில் ஏதாவது கோளாறா? நான் பார்த்தவரையில் அவர்களுடைய சிந்தனையில்தான் பிரச்சினை உள்ளதென்று நினைக்கிறேன்.

அ. ஒரு புரட்சியாளர் என்பதைப் பற்றிய அவர்களுடைய கருத்தாக்கம், யதார்த்தமாகத் தேவைப்படும் புரட்சியாளருடன் பொருந்தி வரவில்லை

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இயக்கங்களில் தாம் பெற்ற அனுபவத்திலிருந்து புரட்சியாளர் பற்றிய அவர்களது கருத்தாக்கம் பின்வருமாறு உள்ளது. ஒரு அரசியல்வாதிதான் புரட்சியாளர்; கூட்டங்களில் தங்குதடையின்றி மடைதிறந்த வெள்ளம் போலப் பேசுபவர் புரட்சியாளர்; ஆர்ப்பாட்டங்கள், கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்தான், புரட்சிக்காக கிளர்ச்சி வேலைகளில் பங்கேற்பவர்தான் புரட்சியாளர்; – இப்படித்தான் அவர்கள் கருதுகின்றனர்.

இப்போதைய யதார்த்த நிலையில், நமக்குத் தேவைப்படும் பரட்சியாளர் வேறுமாதிரியானவர். இராணுவ மற்றும் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி என்பதை அறிந்தவர்தான் இப்போது நமக்குத் தேவை; உணவு மற்றும் உடை பற்றிய நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி என்பதை அறிந்தவர்தான் இப்போது நமக்குத் தேவை. ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்வதும், பேரணிகளில் பங்கேற்பதும், கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும், புரட்சிக்கான கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அவசியமான நடவடிக்கைகள்தான். இருந்தபோதிலும், அவை எந்த விதத்திலும் போதுமானவை அல்ல. வேறு சொற்களில் கூறுவதானால், அவை முதன்மையான நடவடிக்கைகளே அல்ல; ஏனென்றால், புரட்சியினுடைய அடிப்படையான பிரச்சினைகளை இவற்றால் தீர்க்க முடியாது.

கட்சி, அரசாங்கம், படை, மக்கள்திரள் அமைப்புகள் என்றவாறான வேலைகளில் தேர்ச்சியுடையவர்களே நமக்கு உண்மையிலேயே தேவைப்படுகிறார்கள். இந்த வேலைகள் பல துறைகளுக்கானவையாகப் பிரிக்கப்படுகின்றன; இவை அனைத்துமே ஏனோ தானோவென்று ஒதுக்கப்பட முடியாதவை. எடுத்துக்காட்டாக, உணவு மற்றும் உடைக்கு ஏற்பாடு செய்வது பெரு முக்கியத்துவம் வாய்ந்தது; அது நிறைவேற்ற கடினமானதொரு கடமையாக உள்ளது. ஒரு புரட்சியாளர் தங்குதடையின்றி, மடைதிறந்த வெள்ளம் போல பேசுபவராக இருப்பது மட்டும் போதாது; தொழில், விவசாயம், இராணுவ விவகாரங்கள், கலாச்சாரம், கல்வி, வணிகம் என்று எந்தத் துறையை அல்லது எந்தப் பிரிவை எடுத்துக் கொண்டாலும், அதில் துறை சார்ந்த தேர்ச்சிமிக்க நிபுணத்துவம் உள்ளவராக அவர் விளங்க வேண்டும். புரட்சியாளர்கள் இந்தச் செயற்களங்கள் அனைத்திலும் ஆற்றல் உள்ளர்களாக இருக்க வேண்டும்; அவ்வாறு இல்லாமல் போனால், புரட்சியில் அவர்கள் தோல்வி அடைவர்; அவர்களின் இருப்பே ஆபத்துக்குள்ளாகிவிடும்.

கற்பனைக் கருத்தாக்கமான புரட்சியாளர், நடைமுறையில் யதார்த்தமாகத் தேவைப்படும் புரட்சியாளருடன் பொருந்தக்கூடியவராக இல்லை. விடுதலைப் பிரதேசங்களுக்கும் விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கும், பழைய கருத்தாக்கங்களுக்கும் புதிய யதார்த்தங்களும் இடையிலான வேறுபாடுகளே இதற்குக் காரணம்.

ஆ. தொழில்நுட்ப, பொருளாதார, நிர்வாக வேலைகளைக் காட்டிலும் அரசியல் வேலையையே அறிவாளிப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் தெரிவு செய்கின்றனர்.

எல்லா தொழில்நுட்ப, பொருளாதார, நிர்வாக வேலைகளும் தமக்கே உரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. எல்லா அரசியல் வேலைகளும் தொழில்நுட்ப, பொருளாதார, நிர்வாக வேலைகளுடன் பின்னிப் பிணைந்தவையாக உள்ளன. இராணுவ நிர்வாக அமைப்பை எடுத்துக்கொண்டால், அதில் அரசியல் பிரிவு மட்டும் இல்லாமல் அதில் படையதிகாரிகள் பிரிவும் படைவீரர்களை அணிவகுத்து வழிநடத்தும் பிரிவும் இதுபோலவே இருக்கின்றன. பொதுமக்களிடையேயான வேலையிலும் இதே நிலைமைதான் இருக்கிறது. இது கட்சியின் வடமேற்கு பிரிவினுடைய தலைமைக் குழுவிலும், ஷான்க்ஸி – காங்சு – நிங்ஸியா எல்லைப் பிரதேச அரசாங்கத்திலும் பல்வேறு பணித்துறைகள் உள்ளன. வேறெந்த பணிகளுடனும் தொடர்பற்ற முழுமையான அரசியல் வேலை என்று எதுவுமே இல்லை.

ஊழியர்கள் தமது வேலைகளை மாற்றிக் கொள்ள முடியுமா? எடுத்துக்காட்டாக, கலை-இலக்கியப் பிரிவில் வேலை செய்ய எண்ணற்ற ஊழியர்கள் விரும்புகின்றனர்; ஆனால், இந்தத் துறைக்கு இவ்வளவு பேர் தேவைப்பட மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். கலை-இலக்கிய வேலை பயனுள்ளதுதான்; ஆனால், அது மட்டும் போதாது. விரும்பும் ஒவ்வொருவரையும் அதில் ஈடுபடுத்தவும் முடியாது. இது மட்டுமின்றி, புரட்சிகர கலை-இலக்கிய வேலையில் ஈடுபட்டுள்ளவர்களும் கூட, தொழில்நுட்ப, பொருளாதார, நிர்வாக வேலைகளைப் புரிந்து கொண்டாக வேண்டும். எழுத்தாளர்களும் நாட்டுப்புறங்களுக்குச் சென்றாக வேண்டும். ஏனென்றால், இத்தகைய அனுபவம் இல்லாமல், ஆற்றலுள்ள எழுத்தாளர்களாக முடியும் என்று அவர்கள் நம்பிக்கைக் கொள்ள முடியாது.

நிர்வாக வேலைகளில் மூழ்கிவிடும் அபாயமிருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். இப்போது நிர்வாக வேலைகள் அவசியமாயிருப்பதையும், நிர்வாக வேலையும் புரட்சிகரமான வேலைதான் என்பதையும், மார்க்சிய – லெனினிய வழிகாட்டலின்கீழ் மேற்கொள்ளப்பட்டால், இது செக்குமாட்டுத்தனத்துக்கு இட்டுச் செல்லாது என்பதையும் இவர்கள் புரிந்து கொள்வது இல்லை.

அடிமட்டத்திலான நடைமுறை வேலையின் வாயிலாக, கட்சியின் புதிய உறுப்பினர்களும் ஊழியர்களும் புடம் போடப்பட வேண்டும். மையக் குழுவினுடைய அமைப்பு விவகாரத் துறையினால், நாற்றுக்கணக்கான அறிவாளிப் பிரிவினரான ஊழியர்கள், மக்களிடையில் நடைமுறை வேலை செய்வதற்காக ஷான்க்ஸி-கான்சு-நிங்ஸியா பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டது இற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. அங்கு கடினமான வேலையை மேற்கொண்ட அவர்கள், சித்தாந்தரீதியில் பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளனர். எல்லைப் பிரதேசத்தில் வேலை செய்யும் அவர்கள், இன்னல்கள் – இடர்ப்பாடுகளுக்குத் தாக்குப் பிடிப்பதில், மூத்த ஊழியர்களுக்கு சளையாதவர்களாக உள்ளனர்; மூத்த ஊழியர்களுடன் இணைந்து அவர்கள் சிறப்பாக வேலை செய்கின்றனர்; பரந்துபட்ட மக்களுடன் நெருக்கமான பிணைப்புகளைக் கொண்டிருக்கும் அவர்கள், மக்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளனர். எனவே, புதிய ஊழியர்கள் புடமிடப்படுவது கீழ்மட்டங்களிலான நடைமுறை வேலையிலிருந்துதான் தொடங்கப் பட வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக உணர்கிறோம்.

இ. திறமையானவர்களுக்கு மிகச் சாதாரணமான வேலைகளே தரப்படுகின்றன என்று சில அறிவாளிப் பிரிவினரான ஊழியர்கள் புகார் செய்கின்றனர்.

முதலில் ”திறமையானவர்களை”ப் பற்றி பரிசீலிப்போம். பொருளாதாரரீதியிலும் கல்விரீதியிலும் சீனா பின்தங்கியுள்ளது. இந்தக் காரணத்தால், அறிவாளிப் பிரிவினர் பெரும் பயனளிப்பவர்களாக உள்ளனர். எனவே, நடுத்தரப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நமக்கு மதிப்பு மிக்க செல்வங்களாவர். ஆனால், ஒப்பீட்டு ரீதியில் அவர்கள் சாதாரண மக்களை விட திறமையானவர்களாக இருக்கிறார்களே ஒழிய, புரட்சியாளர்கள் என்ற முறையில் அவர்கள் திறமை மிக்கவர்களாக இருப்பதில்லை. புரட்சிகர அணிகளில் சேர்ந்து வேலை செய்வதற்கு, நடுத்தரப் பள்ளி அல்லது கல்லூரி கல்வி கற்றவர்களாக இருப்பது போதுமானதாக இருக்காதா? சிலருக்கு இது பொருந்தலாம்; ஆனால், பிறருக்கு, இன்னும் பெரும்பாலானோரைப் பொருத்தவரை இது போதுமானதல்ல. ஏனெனில், புரட்சிகர வேலைக்குத் தேவைப்படுவது புத்தக அறிவு மட்டுமல்ல; மாறாக, இதற்குச் சமுதாயம் பற்றிய அறிவும் புரட்சிகர நடைமுறை வேலையினால் ஈட்டப்பட்ட அனுபவமும் தேவைப்படுகிறது.

ஆய்வுப் பணியாளர்கள் சிலர், இந்த உண்மையை இப்போது புரிந்து கொண்டுள்ளனர்; இந்த உண்மையை தாம் ஏற்கெனவே அறிந்து கொள்ளாததற்காக அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். விவசாயப் புரட்சிக் காலத்தின்போது புரட்சியில் சேர்ந்த மூத்த ஊழியர்களை விட அறிவாளிப் பிரிவினரான புதிய ஊழியர்கள் சாதகமான நிலையைப் பெற்றுள்ளனர் என்பது உண்மைதான்; ஆனால், அறிவாளிப் பிரிவினரான புதிய ஊழியர்கள் மேலதிகமான புத்தக அறிவைப் பெற்றுள்ள போதிலும், அவர்கள் பெற்றுள்ள நடைமுறை அனுபவம் குறைவானதே.

அறிவுத்துறை பின்னணி கொண்ட புதிய ஊழியர்கள், விவசாயப் பின்னணி கொண்ட மூத்த ஊழியர்களை கொஞ்சம் மட்டமானவர்களாகப் பார்க்கின்றனர்; தம்மைப்போல கற்றவர்களாக இல்லாமல், கல்வியறிவற்றவர்களாகவும் குறுகிய மனப்பாங்கு உடையவர்களாகவும் இருப்பதாக அவர்களைப் பார்க்கின்றனர். ”விவசாயப் பின்னணி கொண்ட ஊழியர்கள் சுயநலத்தின் காரணமாக, நிலம் பெறுவதற்காக புரட்சியில் சேர்ந்தனர்; ஆனால், நாங்களோ இயல்பாகவே புரட்சி செய்தற்காகவே வந்தவர்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த போலி தற்பெருமைப் போக்கு முற்றிலும் தவறானதென்பதே உண்மையாகும். விவசாயப் பின்னணியிலிருந்து வந்த மூத்த ஊழியர்களைக் காட்டிலும் மேலாக இவர்கள் கல்வி கற்றிருந்த போதிலும், இவர்களைக் காட்டிலும் மூத்த ஊழியர்கள் மேலதிகமான புரட்சிகர நடைமுறை அனுபவத்தைக் கொண்டுள்ளனர். மூத்த ஊழியர்கள்பால் ஆணவத்துடன் இருப்பதைக் காட்டிலும், அவர்களிடமிருந்து அறிவாளிப் பிரிவிலிருந்து வந்த ஊழியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு : நரியைப் பரியாக்கிய காவித் திருவிளையாடல் !
♦ டானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் !

”பரந்த மனப்பாங்கு” மற்றும் ”குறுகிய மனப்பாங்கு” என்பவற்றைப் பொருத்தவரையில், முற்றிலும் வேறானதொரு கருத்து என்னிடம் உள்ளது. விவசாயிகள் சிறு விடயங்களில் குறுகிய மனப்பாங்கு உடையவர்களாகவும், ஆனால் பெரிய பிரச்சினைகளில் பரந்த மனப்பாங்கு உடையவர்களாகவும் உள்ளனர் என்றே நான் நினைக்கிறேன். புரட்சிக்கான வாழ்வா – சாவா என்ற போராட்டத்தில், விடாப் பிடியாக நிற்க வேண்டிய தருணங்களில் அறிவாளிப் பிரிவினரிலிருந்து வந்தவர்களைக் காட்டிலும், விவசாயப் பிரிவினரைச் சேர்ந்த தோழர்கள் எப்போதும் மேலதிக நெஞ்சுரம் உள்ளவர்களாகவும் தமது இன்னுயிரை இழக்கத் தயாரானவர்களாகவும் உள்ளனர்.

அறிவாளிகளில் யாருமே நல்லவர்கள் இல்லை என்று நான் கூறவில்லை; தொழிலாளர்களுடனும் விவசாயிகளுடனும் இரண்டறக் கலவாத அறிவாளிகள் சிறு விடயங்களில் பரந்த மனப்பாங்கு உடையவர்களாகவும் பெரிய பிரச்சினைகளில் குறுகிய மனப்பாங்கு உடையவர்களாகவுமே உள்ளனர் என்பதையே நான் கூறுகிறேன். பழைமைவாதப் பிடிப்பும் தனியுடைமை உணர்வும் கொண்டிருப்பதுதான் விவசாயத் தோழர்களின் பலவீனமாகும். அவர்களுடைய பலம் பற்றுறுதிமிக்க புரட்சிகர உணர்வாற்றல்தான்; இந்தப் பற்றுறுதி ஆக மிகமுக்கியமான விடயமாகும். நமது விவசாயத் தோழர்கள் பற்றிய சரியான புரிதல் நமக்கு இருக்க வேண்டும்; நாணயத்தின் இரு பக்கங்களையும் நாம் நோக்க வேண்டும். அறிவாளிப் பிரிவினர் தொழிலாளர் – விவசாயிகளுடன் ஒன்றிவிட வேண்டும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். புரட்சியானது பரந்துபட்ட தொழிலாளர் – விவசாயிகளையே முதன்மையாகச் சார்ந்திருக்கிறது என்பது தற்செயலான ஒரு விசயமல்ல; ஏனெனில், அவர்கள் வலுவான புரட்சிகர உணர்வாற்றல் மிக்கவர்களாக இருப்பவர்கள் என்பதுதான்.

சர்வசாதாரண கடமைகள் தரப்படுவது பற்றி இப்போது கவனிப்போம். ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி சரியான மதிப்பீட்டைக் கொண்டிருக்க வேண்டும்; சிறுசிறு வேலைகளைச் செய்வது பற்றி கவலைப்படக் கூடாது. ஏனெனில், மகத்தான சாதனைகள் சிறுசிறு வேலைகளிலிருந்துதான் தொடங்குகின்றன.

ஈ. தங்களுக்கு எதிர்காலம் இல்லையென்று அறிவாளிப் பிரிவினரான சில ஊழியர்கள் புகார் கூறுகின்றனர்.

பொதுவுடைமையாளர்கள் தமது லட்சியத்தின்பால் அர்ப்பணிப்பு உணர்வும் மீமிகு பேரார்வமும் கொண்டவர்கள்; ஒளிமிக்க எதிர்காலத்தின் மீது அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, புரட்சியின் எதிர்காலத்துடன் தமது சொந்தத் தலைவிதியை அவர்கள் பிணைக்கின்றனர். மொத்தத்தில், புரட்சிக்கு எதிர்காலமில்லாவிட்டால், அவர்களுக்கும் எதிர்காலம் இருக்க முடியாது. பரந்துபட்ட மக்கள் இல்லாமல் வீரர்கள் மட்டும் எப்படியிருக்க முடியும்? முடியாது. பலரும், தாம் உயர்நிலையில் இருக்க வேண்டும் என்றும் அனைவரின் கவனமும் தம் மீது நிலைக்க வேண்டும் என்றும் ஆரவாரிக்கின்றனர். ஏனென்றால், தமது பெயர்கள் வரலாற்று ஏடுகளில் இடம்பெற வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், இத்தகையவர்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றனர்; பல்லாயிரக்கணக்கானவர்களின் பெயர்களை வரலாற்று ஏடுகளில் பதிய முடியுமா? ஊழியர்களின் பேரவாவினை நான் ஊக்கமிழக்கச் செய்கிறேனா? அப்படியெல்லாம் இல்லை. எந்தவொரு தொழிலும் தனக்கே உரிய தனிச்சிறப்பானவர்களை – முன்னுதாரணமானவர்களைக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்டவர்களுள் ஒருவராவதற்கான ஒரே வழி, ஒருவர் தமது வேலையை நேசிப்பதிலும் அதில் சிறந்தவராவதும்தான்.

(தொடரும்)

நூல் : ஊழியர்கள் தலைவர்கள்
ஆசிரியர் : சென் யுன்
பக்கம் : 48
விலை : ரூ. 40
கிடைக்குமிடம் : கீழைக்காற்று
தொடர்புக்கு : 7395937703