Friday, June 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 600

மாணவர்களுடன் ஒரு பயணம்

5

ரவு பதினொருமணி. மதுரை இரயில் நிலையம். எல்லா ரயில்களும் வந்து போன பரப்பரப்பு அடங்க ஆரம்பித்திருந்தது. அந்த அமைதியை கலைத்து, ஒலிப்பெருக்கியில் அறிவிப்பு வர, ஆங்காங்கே இருட்டில் அமர்ந்திருந்த மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக முதல் நடைமேடையில் ஒன்றுகூட ஆரம்பித்தார்கள்.

unreserved-compartmentபண்டிகைநாள் என்பதால் பேருந்துக்காக  செய்த எல்லா முயற்சிகளும் வீணாய் போக, வீட்டுக்கு போய்விடலாம் என நினைத்தேன். முதலாளியின் கடுகடு முகம் நினைவுக்கு வந்து சென்னைக்கு செல்லும் கடைசி வண்டியான அனந்தபுரியை பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில், வேர்க்க விறுவிறுக்க நடைமேடையை வந்தடைந்தேன்.

சில விநாடிகளுக்குள் அந்த நீண்ட ரயில் அமைதியை கலைத்து, பெரிய சத்தத்தோடு வந்து நின்றது. முன்பதிவு செய்யப்படாத (Unreserved) காம்பார்ட்மெண்டிற்கு சென்று பார்த்தால், திக்கென்றிருந்தது. வாசல்வரை நின்று கொண்டிருந்தார்கள். இது கடைசிப் பெட்டி. முன்னால் இருக்கும் இதேபோல இன்னொரு பெட்டிக்கு போகலாம் தான். ஆனால், அதற்கு நேரம் இல்லை. ஒருவேளை இதைவிட அதிகமாய் கூட்டம் இருக்ககூடிய அபாயமும் உண்டு. ரிஸ்க் வேண்டாம் என ஏறிக்கொண்டேன். 200 பேர்வரை அந்த காம்பார்ட்மெண்டில் நிச்சயம் இருந்தார்கள். புதிதாய் ஏறியவர்கள் உட்கார இடம் தேடினார்கள். உள்ளே ஒரே கூச்சலும் குழப்பமாய் இருந்தது.

அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கி உள்ளே நோட்டம் பார்த்த பொழுது, உள்ளே சிலர் படுத்து நன்றாக தூங்கி கொண்டு வந்தனர். 4 பேர் உட்கார வேண்டிய இடத்தில் இருவர் கால் நீட்டி உட்கார்ந்திருந்தனர். என்ன செய்யலாம்? ஒன்றும் செய்ய முடியாது. வாயிலோரம் நின்றுகொண்டு கையில் இருந்த நாவலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

திண்டுக்கல்லை அடையும் பொழுது, நடுநிசியாகிவிட்டது. அங்கும் சிலர் ஏறினர். அதில், நான்கு கல்லூரி மாணவர்களும் இருந்தார்கள். ஏறும்பொழுது, கலகலவென பேசிக்கொண்டே ஏறினார்கள். அந்த காம்பார்ட்மெண்டின் நிலை புரிய அவர்களுக்கு  பத்து நிமிடங்கள் கூட ஆகவில்லை. அவர்களுக்குள் பேசிக்கொண்டு, விறுவிறுவென மக்களை விலக்கி, காம்பார்ட்மெண்டிற்குள் உள்ளே நுழைந்து, ஒரு மாணவன் கட்டளைகள் தர, மற்றவர்கள் அமுல்படுத்த என பரபரவென செயல்பட்டார்கள்.

இடத்தை ஆக்கிரமித்துவிட்டு குறட்டையுடன் தூங்கிக்கொண்டிருந்தவர்களை எழுப்பி, அன்பாய் கேட்டுக் கொண்டு உட்கார வைத்தனர். சத்தம் போட்டவர்களை பதிலுக்கு சத்தம் போட்டு அடக்கினார்கள். நின்று கொண்டிருந்த பெரும்பான்மை மக்களின் ஆதரவு இருந்ததால், மாணவர்கள் சொல்வதை கேட்பதை தவிர வேறு வழியில்லை.

இடம் ஒதுக்கி தந்ததில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் முன்னுரிமை தந்தார்கள். அரை மணி நேரம் ஒழுங்குபடுத்தியதில் சிரமப்பட்டு நின்றுக்கொண்டிருந்த  சகலருக்கும் உட்கார இடம் கிடைத்துவிட்டது.  இடம் பறிபோனவர்கள் புலம்பியதோடு அந்த மாணவர்களை திட்டியும் தீர்த்தார்கள். இடம் கிடைத்தவர்களோ மாணவர்களின் செயல்பாடுகளை வியந்து பேச ஆரம்பித்தார்கள். மாணவர்கள் தங்களுக்கு வாசலோரம் கிடைத்த கொஞ்சூண்டு இடத்தில் அமர்ந்து காலாட்டிக்கொண்டே ஜாலியாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

அவர்களோடு சேர்ந்து மக்களை ஒழுங்குப்படுத்தியதில் எனக்கும் கூட ஒரு இடம் கிடைத்தது.  அங்கு உட்கார மனசில்லாமல் நானும் அந்த மாணவர்களோடு வாசலை ஒட்டி அமர்ந்துகொண்டேன்.

இடையில் ஒரு நிறுத்தத்தில் தொழிலாளி பீடி பிடித்தார் என பாக்கெட்டில் இருப்பதை பிடுங்க ரயில்வே போலீசு முயற்சி செய்ய, பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் பைசா தராமல், பேசியே தொழிலாளியை மீட்டு வந்தார்கள்.

அடுத்து ஒரு மணி நேரத்தில், வந்த நிறுத்தத்தில் மக்கள் சிலர் ஏற வந்த பொழுது, “இவ்வளவு பேருக்கு இடம் இல்லை. வண்டி நீளம் என்பதால், நடப்பதற்கு சிரமப்படும் வயதானவர்கள் மட்டும் ஏறிக்கொள்ளுங்கள். இந்த ஸ்டேசனில் நிறைய நேரம் வண்டி நிற்கும். ஆகையால், மற்றவர்கள் முன்பெட்டிக்கு சென்றுவிடுங்கள்” என அறிவுறுத்தினார்கள். அவர்களின் பேச்சை மறுக்காமல், நிலைமையை புரிந்து கொண்டு, மீதிபேர் முன்பெட்டிக்கு நகர்ந்தார்கள். ஏறிய சிலருக்கும், பொறுப்பாய் இடம் தேடி, அவர்களையும் அமர வைத்தார்கள்.

தன்னுள்ளே நடக்கும் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்து, புன்னகைத்தபடி அந்த ரயில் இருட்டைக் கிழித்துக் கொண்டு வேகமாக போய்க்கொண்டிருந்தது.

இதற்கிடையில், சமீபத்தில் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த வயதான அம்மா நடக்கும் வழியில் அமர்ந்திருந்ததால், போகிற, வருகிறவர்களின் செருப்பு கால் மிதிபட்டு வலியால் அழுததைப்  பார்த்த மாணவர்கள், அந்தம்மாவை பாதையை விட்டு விலகி அமர வைக்க முயற்சி செய்தார்கள். ம்ஹூம். இடம் இல்லை. எல்லோருக்கும் கேட்கிற மாதிரி, ‘இனி இந்த இடத்தை கடக்கிறவர்கள் யாரும் செருப்பணிந்து செல்லக்கூடாது’ என சத்தமாக அறிவித்தார்கள்.

அங்கேயே இருபது நிமிடங்கள் வரை இருந்து, மக்கள் அமுல்படுத்துகிறார்களா என உறுதிப்படுத்தினார்கள். அருகில் இருந்தவர்களை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு,  திரும்பவும் தங்கள் இடத்திற்கு வந்து, விட்டதிலிருந்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.

சென்னைக்கான தூரம் குறைந்ததால், பயணிகள் ஏறுவது நின்று போனது. சிலர் இறங்கிக் கொண்டும் இருந்தார்கள்.  அருகில் இருந்து அவர்கள் பேசியதை கவனித்ததில் கொடைக்கானல், மொபைல் போன், சினிமா, அரசியல், பெற்றோர்கள் பற்றி விடிய விடிய சளைக்காமல் பேசிக்கொண்டே வந்தார்கள்.

‘பிறவித் தலைவர்கள்’ அவர்கள் என் மனதைக் கவர்ந்து கொண்டார்கள். பேச்சுக் கொடுத்ததில், எல்லோரும் இரண்டாமாண்டு கல்லூரி படித்துக் கொண்டிருப்பதாக சொன்னார்கள்.  ’எப்படி இந்த யோசனை?’ என கேட்டதற்கு, ”எல்லோரும் நம்ம சனங்க. இதுதான் சரின்னு எடுத்துச் சொன்னா கேட்டுக்க போறாங்க!” என்றனர்.

மாணவர்கள் என்றால் பொது மக்களுக்கு இடையூறு செய்வார்கள், பெண்களை கேலி செய்வார்கள், பொறுக்கிகள், குடும்ப நிலையை உணராதவர்கள் என்பதெல்லாம் பொதுப்புத்தியில் உறைந்து போன விசயங்கள்.

அந்த உறைந்து போன கருத்துக்கு இந்த அனுபவம் ஒரு அழகிய கவிதை அடி.

–    குருத்து

சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி தத்து விசாரிக்கக் கூடாது – PRPC

9

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு
எண்.50, ஆர்மேனியன் தெரு, கத்தோலிக் சென்டர் எதிரில், சென்னை – 600 001.
கை பேசி:  98428 12062,   94432 60164
——————————————————————————————————-
பத்திரிகைச் செய்தி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல் தத்து
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல் தத்து

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் பிணைக்காலம் முடிவடைவதை ஒட்டி, அவர்களது மனு ஏப்ரல் 17-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தத்து அவர்களிடம் விசாரணைக்கு வருகின்றது.

ஏற்கெனவே திரு தத்து பிறப்பித்துள்ள பிணை உத்தரவு, சட்டத்துக்கும், மரபுகளுக்கும் முரணாகவும், ஒரு தலைபட்சமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. மேற்கூறிய உத்தரவு தொடர்பாக அவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் உள்ளது. எனவே, இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து அவர் விலகிக் கொள்ள வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர்களின் ஆதரவுடன் குடியரசுத் தலைவரிடம் புகார் மனுவொன்றை அளிக்கவிருக்கிறோம்.

ஊழல், அதிகார முறைகேடுகள் ஆகியவற்றுக்காக, அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் குற்றம் சாட்டப்படுவதைப் போலவே, உயர்நீதிமன்ற நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் குற்றம் சாட்டப்படுகிறார்கள். எனினும், “நீதிமன்ற அவமதிப்பு” என்ற அதிகாரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டும், “மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் இருந்தாலன்றி தங்களைப் பதவி இறக்கம் செய்ய முடியாது” என்ற அரசியல் சட்டப் பாதுகாப்பைப் பயன்படுத்திக் கொண்டும் பல நீதிபதிகள் கேள்விக்கிடமற்ற முறையில் ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நீதிபதி தத்து அவர்கள் வழங்கியிருக்கும் மேற்படி பிணை உத்தரவு கீழ்க்கண்ட காரணங்களினால் முறைகேடானதென்றும் சந்தேகத்திற்கிடமான நோக்கங்கள் கொண்டது என்றும் குற்றம் சாட்டுகிறோம்.

திரு தத்து, அரசியல் சட்டப்பிரிவு 136 வழங்கும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ஜெயலலிதா மற்றும் நால்வரின் பிணை மனுவை, முன்னுரிமை கொடுத்து விசாரித்திருக்கிறார். இது வெளிப்படையான முறை மீறலும் அதிகாரத்தை கேடாகப் பயன்படுத்துவதும் ஆகும்.

இந்த வழக்கில் எதிர் தரப்பான கர்நாடக அரசையும், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையையும் விசாரிக்காமலேயே, ஒரு தலைபட்சமாகவும் அவசரம் அவசரமாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக, பிணை மனுத் தாக்கல் செய்யப்பட்டால் பிணை வழங்குவதோடு அம்மனு மீதான விசாரணை முடிந்துவிடும். ஆனால், இவ்வழக்கில் தலைமை நீதிபதி தத்து, பிணை வழங்கிய பிறகும், பிணை மனு விசாரணையை நீட்டித்து, அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார். இது குற்றவாளிக்குச் சாதகமானது.

ஜெயலலிதா மற்றும் நான்கு குற்றவாளிகளுக்குப் பிணை மறுப்பதற்கான காரணங்களை கர்நாடக உயர்நீதி மன்றம் தனது 40 பக்க உத்தரவில் தெளிவுபடக் கூறியிருக்கிறது. ஊழல் குற்றவாளிகள் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில், பிணை வழங்கும்போது, அதற்கான காரணங்களைத் தெளிவாகக் கூற வேண்டுமென ஏற்கெனவே உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. இதற்கு மாறாக, கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதற்கான காரணம் எதையுமே கூறாமல், நான்கே வரிகளில் பிணை உத்தரவை வழங்கியுள்ளார் திரு. தத்து.

குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் கள்ளத்தனமாக கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறது ஜெயலலிதா அரசு என்று கூறித்தான் 2003-ல் வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம். தனக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்களால்தான் வழக்கிலிருந்து விலகியதாக, அரசு வழக்குரைஞர் ஆசார்யா வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறார். நீதிமன்றத்தை ஜெயலலிதா கடுகளவும் மதித்ததில்லை என்பதுதான் 18 ஆண்டு காலம் நடந்த இந்த வழக்கு கூறும் உண்மை. இங்ஙனம் நீதிமன்றத்தையே கேலிப்பொருளாக்கிய, நீதிமன்றத்தின் கருணைக்கு எந்த விதத்திலும் தகுதியற்ற குற்றவாளிகளுக்கு சலுகை காட்டியிருக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து.

உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும் மற்ற மூவரும் கோரியது பிணை மட்டுமே. ஆனால், அவர்களது மேல் முறையீட்டு மனுவை விரைந்து முடிக்க வேண்டும் என்ற உத்தரவை திரு தத்து பிறப்பித்திருக்கிறார். நூற்றுக் கணக்கான வழக்குகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, ஜெயலலிதாவுக்கு திரு தத்து வழங்கியிருக்கும் இந்த சிறப்பு சலுகை முறைகேடானது என்றும் இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்

இவை மட்டுமின்றி, திரு டிராபிக் ராமசாமி அவர்கள், “இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னரே, திரு பாலி நாரிமனின் மகன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பதால், அவர் ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராவது பார் கவுன்சில் விதித்துள்ள நெறிகளுக்கு எதிரானது” என்று புகார் கொடுத்துள்ளார். மேலும், இதே பாலி நாரிமன் ஜெயல லிதாவுக்கு எதிராக அன்பழகனுக்காக ஆஜராகியுமிருக்கிறார். “இவ்வழக்கு தொடர்பாக உங்கள் மீது ஊழல் புகார் இருப்பதால் நீங்கள் இதனை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும்” என்றும், திரு தத்துவிடம் மனுக் கொடுத்துள்ளார். இவற்றுக்கு பதிலேதும் கூறாமலேயே, மேற்படி பிணை மனுவை திரு தத்து தொடர்ந்து கையாள்வது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை என்றும் விசாரிக்கத்தக்கது என்றும் கருதுகிறோம்.

இவை நாங்கள் மட்டும் கூறும் கருத்துகள் அல்ல. உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு ஆகியோர் மட்டுமின்றி, லைவ் லா.இன் போன்ற சட்டத்துறை சார்ந்த பத்திரிகைகளும் மேற்கண்ட தீர்ப்பை விமரிசித்திருக்கின்றன. கடந்த 3 மாதங்களில் நாங்கள் சந்தித்துப் பேசிய உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள் பலரும் உச்ச நீதிமன்றத்தின் இந்த சீரழிந்த நிலை குறித்து கவலையும் கண்டனமும் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றம் சாட்டி மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தொடுத்திருக்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்திலேயே ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ளது.  “அமித் ஷாவை கொலைக்குற்ற வழக்கிலிருந்து விடுவித்ததற்குப் பரிசுதான் நீதிபதி சதாசிவத்துக்கு தரப்பட்டிருக்கும் கேரள ஆளுநர் பதவி” என்று ராமச்சந்திர குஹா குற்றம் சாட்டியிருக்கிறார். “கனிமவளக் கொள்ளையர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்திருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் சகாயம் குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து தெரிவித்திருக்கிறார். முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் முதல் நீதிபதி கங்குலி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வரையில் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுகள் எவையும் விசாரிக்கப்படுவதில்லை.

ஒரு ஊழல் குற்றவாளி தொடர்பான வழக்கிலேயே இப்படியொரு முறைகேடான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது, குடி மக்களாகிய நம் அனைவருக்கும் விடப்பட்டிருக்கும் அபாய எச்சரிக்கை. நீதித்துறை சுதந்திரம் என்பதை ஊழல் செய்வதற்கான சுதந்திரமாகப் பயன்படுத்தி வரும் நீதிபதிகள், மற்றெல்லாக் குற்றவாளிகளை விடவும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று கருதுகிறோம்.

நேர்மையான வழக்குரைஞர்கள் பலரும் தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்துகின்ற, ஆனால் பகிரங்கமாகச் சொல்லத் தயங்குகின்ற உண்மையை, நாங்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கிறோம். தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 1000 வழக்குரைஞர்கள் கையொப்பமிட்டு, குடியரசுத்தலைவருக்கு அளிக்கின்ற இந்த மனுவின் மூலம் நீதிமன்ற அவமதிப்பு என்பன போன்ற பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சாமல், மக்கள் மன்றத்தின் முன் இப்பிரச்சினையைக் கொண்டு வருகிறோம். டில்லி வழக்குரைஞர்களின் துணையுடன் உச்சநீதிமன்றம் முழுவதும் இப்பிரச்சினையைக் கொண்டு செல்லவிருக்கிறோம்.

ஊழலில் ஊறியவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், எந்தக் காலத்திலும் தங்களுக்கு எதிராக வாக்களிக்கப்போவதில்லை என்ற காரணத்தினால், உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எப்படி வேண்டுமானாலும் தீர்ப்பளிக்கலாம் என்ற ஆணவத்துடன், குடி மக்களை அச்சுறுத்துகிறார்கள். இதனை நாம் அனுமதிப்பது நாட்டுநலனுக்கே தீங்கானது. இத்தகைய தீர்ப்புகளையும் அவற்றை வழங்கிய நீதிபதிகளையும் மக்கள் மன்றத்தில் வைத்து நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். இவ்வாறு போராடுவது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. நீதி என்ற பெயரில், அநீதிகள் அடுத்தடுத்து, கேள்விக்கிடமற்ற முறையில் அரங்கேறுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.

இவண்,

எஸ். ராஜு,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

தாலி தேவையா ? பெண்கள் சொல்லட்டும்

17

“பெண்களுக்கு தாலி தேவையா, தேவை இல்லையா” என்கிற விவாத நிகழ்ச்சியை நடத்த இருந்ததற்காக, பெயர்ப் பலகை இந்து அமைப்பு ஒன்றால் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் கடந்த மார்ச் மாதத்தில் தாக்கப்பட்டது. இது ஏதோ சில அனாமதேய அற்பங்களின் பிரச்சினை அல்ல. ஏனெனில், “இந்த விவாதத்தை நடத்தக் கூடாது” என்று ஆர்.எஸ்.எஸ் வானர கூட்டமே அதிகாரப்பூர்வமான எதிர்ப்பையும், வன்முறையையும் அரங்கேற்றியது.

அதே போன்று பெரியார் இயக்கங்கள் தாலி அகற்றும் நிகழ்ச்சியை அறிவித்து நடத்துவதையும் இவர்கள் தடை செய்ய முயற்சிக்கிறார்கள். மோடி ஆட்சி வந்ததிலிருந்து இத்தகைய பார்ப்பன இந்துமதவெறி திட்டங்கள் ஒவ்வொன்றாக அமல்படுத்தப்பட்டே வருகின்றன.

சமஸ்கிருதத் திணிப்பு, சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல், தேவாலயங்கள் மீதான தாக்குதல், மாட்டிறைச்சிக்குத் தடை போன்று நாத்திகத்தையும், பார்ப்பன சடங்குகளின்றி நடத்தப்படும் சுயமரியாதை திருமணத்தையும் தடை செய்ய இவர்கள் கண்டிப்பாக முயல்வார்கள்.

வட இந்திய ஆர்.எஸ்.எஸ் போன்றே, ‘இந்துத்துவத்தை’ தமிழ் பண்பாடாக பேசும் பல்வேறு தமிழினவாதக் குழுக்கள் கூட தாலியை தமிழர் பண்பாடு என்று பார்ப்பனியத்திற்கு பல்லக்கு தூக்குகின்றன. பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமான தாலியை காப்பதாக இவர்கள் கூறுவது உண்மையில் பார்ப்பனியத்தின் அடிமைகளாக பெண்கள் தொடர வேண்டும் என்பதைத்தான்.

இந்நிலையில்,  “பெண்களுக்கு தாலி தேவையா தேவை இல்லையா?” என்பது பற்றி, பல்வேறு தரப்பட்ட பெண்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அறிய களத்தில் இறங்கினோம். இனி அவர்கள் பேசியது அப்படியே உங்களுக்கு.

ஆர்த்திக் பிரியா, திருவான்மியூர் ரயில் நிலையம்:

aarthik-priyaஇப்ப சமூகம் எவ்வளவோ வளர்ந்து முன்னேறியிருக்கு. போற எல்லா இடத்துக்கும் தாலி அவசியம் இல்ல. கோவிலுக்கு போனா அல்லது டிரெடிஷனாலன விசயங்களுக்கு போகும் போது மட்டும் போட்டுக்கலாம். மற்ற நேரத்துல கழட்டி வச்சிக்கலாம் அது அவங்கவங்க விருப்பம், வசதியை பொருத்தது.

தாலியால ஏதாவது பயன் இருக்கா, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கான்னு கேட்டா இல்லைன்னுதான் சொல்லுவேன். தாலி போட்டிருக்கும் பெண்களை பொறுக்கிகள் விட்டிருவாங்களா என்ன?

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது குண்டு வீசியது ரொம்ப தப்பு. ஒரு புரோக்ராம் நடத்தினதுக்காகவே குண்டு வீசுவாங்கன்னா இது என்ன நாடு? இங்க ஜனநாயகம் இல்லையா. அரசாங்கம் இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் எப்படி விட்டு வச்சிருக்கு?

தந்தை பெரியார் சொன்னது கரெக்ட். லேடிஸ்க்கு தாலி ஒரு அடிமைச்சின்னம் தான். தாலி மாதிரி ஆண்களுக்கு என்ன இருக்கு, எதுவும் இல்லை. ஆம்பளங்க என்ன வேணா செய்றாங்க. அதை யாரும் கேக்குறது இல்லை. தாலி இன்னைக்கு தேவை இல்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையான அன்போடு இருந்தாலே போதும்.

தாலி கட்டாதவங்க ஒழுக்கம் கெட்டவங்கன்னா அப்ப தாலி கட்னவங்க எல்லாம் ஒழுக்கமானவங்களா? பெண்களைப் பத்தி இப்படி பேசுறதை கண்டிக்கணும். தாலிகட்டிக்கிட்ட எல்லோருமே பர்ஃபெக்டா இல்லையே பாதி பேர் தான் சரியா இருக்காங்க. மீதி பேர் தப்பா இருக்கதுக்கு யார் காரணம் ? அதுக்கு இவங்க என்ன பதில் சொல்லுவாங்க?

subbammalசுப்பம்மாள், துப்புரவு பணியாளர், திருவான்மியூர் ரயில் நிலையம்:

நான் என்னத்த சொல்லுறது. தாலி தேவைதான். ஆனா அது இல்லாமையும் பல பெண்கள் வாழ்றாங்க. தாலி போட்டுக்கிட்டு தப்பு பண்றவங்களும் இருக்காங்க. தாலி இல்லாம ஒழுக்கமா இருக்கவங்களும் இருக்காங்க.

பெரியவங்க சொல்லியிருக்காங்க. தாலி போட்டுக்கிட்டா ஒரு மரியாதை இருக்கு. மஞ்சள் குங்குமத்தோடு போனா மங்களகரமா பாக்குறாங்க மரியாதை குடுக்குறாங்க. இப்ப நானெல்லாம் போனா முண்டச்சி வந்துட்டான்னு அபச குணமா பாக்குறாங்க.

பொம்பளைங்க ஆம்பளைகளுக்கு அடங்கி ஒடுங்கித்தான் வாழணும். ஆம்பள நாலு எடம் போய்ட்டு வந்தாலும் வெளியில தெரியாது. பெண்கள் தப்பு பண்ணுனா அது குடும்பத்தையே பாதிக்கும். நம்ம பேரன் புள்ளைக வரைக்கும் பாதிக்கும். அதனால பெண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாத்தான் இருக்கனும்.

ரஷ்னா, டி.சி.எஸ்-சில் பணிபுரிகிறார்:

தாலி தேவைதான். ஆனா, அது எதுக்கு பயன்படுதுன்னு நான் இதுவரைக்கும் யோசிச்சதே இல்ல

ரஷ்னாவின் அருகிலிருந்த ஒரு ஆண் நண்பர்: இதை எல்லாம் யோசிச்சு என்ன பண்ணப்போறோம் பாஸ். தாலி நம்மோட கலாச்சாரம். நம்முடைய ஆழமான நம்பிக்கையிலிருந்து வர்றது. ஆண்களுக்கு அந்த மாதிரி அடையாளம் ஏன் இல்லனு கேட்டா….எப்படி ?

ஐ.டி துறையில் பணிபுரியும் விஜயசாந்தி:

தாலி போட விருப்பம்னா போட்டுக்கலாம். வேண்டாம்னா வேண்டாம். அது அவங்கவங்க சாய்ஸ்.

தாலி போட்டிருந்தா திருமணம் ஆனவங்கன்னு அமைதியா போயிடுவாங்க. அதுல ஒரு பாதுகாப்பு இருக்கு. இல்லேன்னா வேற மாதிரி பிகேவ் பண்ணுவாங்க. என்னளவுல நான் அதை போட்டுக்குவேன். அது பிடிக்கும்ங்கிற அளவுல மட்டுந்தான். ஆனா கட்டாயம் கிடையாது. மற்றவங்க போடுறதும் போடாததும் அவங்க விருப்பம். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.

rani-tharamaniகரும்புச்சாறு கடை நடத்தும் ராணி:

தாலி பெண்களுக்கு தேவை. அதப் போட்டுக்கிட்டா தான் நாமளும் மத்தவங்கிட்ட பேசுறதுக்கு அஞ்சுவோம். மத்தவங்களும் நம்மட்ட பேசுறதுக்கு அஞ்சுவாங்க.

ஆண்களுக்கு அவங்க மனச்சாட்சி தான் அடையாளம். அவங்க பொம்பளைங்க கைய புடிச்சு இழுப்பாங்க, பதிலுக்கு நாங்க ஆண்கள் கைய புடிச்சு இழுக்க முடியுமா ? பெண்களுக்கு தாலிதான் வேலி.

ஜெயின் கல்லூரி மாணவிகள் மீனாட்சி, பிரியா:

meenakshi-priyaதாலி பெண்களுக்கு உயிருக்கும் மேலானது. தாலி பற்றி சொல்ல இதைத் தவிர வேறு வார்த்தையே இல்லை. கணவன் தான் எல்லாமே அப்படிங்கிறதுக்கான அடையாளம் தான் தாலி. தாலி கட்டியிருந்தா ஒரு சபைக்கு போனாக்கூட கவுரவமாகத்தான் பார்ப்பாங்க. பொண்னுனாலே தாலி இருக்கனும்.

எனக்கு ஒரு வேல கெடச்சு தாலி போடக்கூடாதுன்னு சொன்னா அந்த வேலைக்கே போகமாட்டேன்.

 

விநோதினி, கே.சி.பி. கல்லூரி:

தாலி தேவைன்னு அந்தக்காலத்துல சொல்லியிருக்கலாம். இப்ப அதெல்லாம் அவசியம் இல்ல. தாலி போட்டவங்களப் பார்த்து மட்டும் ஆம்பளைங்க மரியாதையா ஒதுங்கி போறங்களா என்ன? தாலி இருந்தா பாதுகாப்புன்னு நினைக்கிறதெல்லாம் சும்மா.

SAMSUNGமேடவாக்கத்தை சேர்ந்த பவித்ரா:

பெண்களுக்கு திருமணம் என்பது சந்தோசமான விசயம். அதற்கான அடையாளம்தான் தாலி. அதே மாதிரி தாலி போட்டுக்கிறதும் போட்டுக்காததும் அவங்கவங்க தனிப்பட்ட விசயம். அதை போட்டுத்தான் ஆகனும்னு சொல்லறதுக்கு யாருக்கும் ரைட்ஸ் கிடையாது. நான் ஒழுக்கமானவங்கிறதை தாலி கட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை! நான் என்ன பண்ணனும் பண்ணக்கூடாதுன்னு சொல்லறதுக்கு இவங்க யாரு?

பூஞ்சோலை:

தாலி முக்கியம்தான். மனைவி என்பதற்கு தாலிதான் ஆதாரம், ஆனா பெண்கள் மாதிரி ஆண்களும் கல்யாணம் ஆனவர்கள் என்ற அடையாளத்துடன் திரியறத விருப்புறது இல்லை. தாலியை மஞ்சள் கயிற்றில் போட்டால் யாரும் மதிக்கிறதும் இல்ல. திருடர்கள் அறுக்கிறதும் இல்லை, தங்கச் சங்கிலிக்குத்தான் மவுசு.

SAMSUNGரம்யா, அபர்ணா, விசுவல் கம்யூனிகேசன் மாணவிகள்:

பெண்களுக்கு ஒரு வாட்டி பேர் கெட்டுப்போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு! பசங்களுக்கு அப்படி கிடையாது. அத கண்டுக்காம போய்டுவாங்க. ஆனா நமக்கு, நம்ம அடையாளமே போய்டும். அதனால தாலி ரொம்ப முக்கியம். அப்பத்தான் கணவன், குடும்பம்னு பாசமா இருக்கிறோம்னு ஏத்துக்குவாங்க.

வீணா, கல்லூரி மாணவி:

கார்ப்பரேட் கம்பெனிகளில் வேலை பார்க்கிறவங்க தாலியை கழட்டி வச்சிட்டு போறாங்க. அது அவங்க வேலைக்கு தேவையா இருக்கு, ஸ்டைலுக்காக அப்படி பண்றாங்க. அதை தப்புன்னு சொல்ல முடியாது. ஆனா என்னை பொருத்தவரை தாலிங்கிறது நம்ம கல்ச்சர், அதை ஃபாலோ பண்ணனும். பண்ணலேன்னா அத தப்புன்னும் சொல்ல முடியாது.

தாலிக்கும் கேரக்டருக்கும் சம்பந்தம் இல்ல. போடாதவங்க எல்லாம் மோசமான பெண்கள்னு சொல்றது ரொம்ப ரொம்ப தப்பு. இப்ப ஒரு ஏழைக்குடும்பம் இருக்காங்க அவங்க தாலி அணியிறதில்லங்கிறதுனால ஒழுக்கங் கெட்டவங்களா?

vaisenthiவைஜெயந்தி, ஐ.டி துறை:

கணவனோட பாதுகாப்புக்குத்தான் தாலின்னு எங்க அம்மா சொல்லுவாங்க. எனக்கு அதைப்பத்தி ஒண்ணும் தெரியாது. தாலி போடுறதே அடிமைத்தனங்கிறதை நான் ஏற்கல. கணவன் எப்படி நடந்துக்குறாரோ அதப் பொருத்துத்தான் அடிமைத்தனமா இல்லையான்னு சொல்ல முடியும். தாலிய வச்சு சொல்ல முடியாதுங்கிறது என்னோட ஒபீனியன்.

தாலி அணியலாமா கூடாதான்னு பேசவே கூடாதுன்னு சொல்றது டூமச். தாலி திருமணம் ஆனதுக்கான அடையாளம் தான். ஆனால் பெண்ணுக்கு அதுதான் வாழ்க்கை, அது தான் எல்லாம்னு சொல்லமுடியாது. என்னைப் பொருத்தவரை நாம எவ்வளவு சந்தோசமா இருக்கோங்கிறது தான் முக்கியம் தாலி முக்கியமில்லை. தாலியால பெண்களுக்கு ஏதாவது பாதுகாப்புன்னெல்லாம் சொல்ல முடியாது. தாலியையே அறுத்துட்டு ஒடுறாங்க.

லதா, ஜோதி, பத்மா துப்புரவு பணியாளர்கள்:

jothi-padma-lathaதாலிதாம்பா பொம்பளைங்களுக்கு பாதுகாப்பு. தாலியும், மெட்டியும் போட்டுக்கிட்டு ரோட்ல போகும் போது நாலு பேரு பாத்தா கூட இது கலியாணம் ஆன பொண்ணு இதுக்கிட்ட வச்சிக்கினா பிரச்சினைன்னு நினைப்பாங்க. அப்படி இல்லைன்னா “ஏ இது ஏதோ ஃபிகர்டா, கிண்டல் பன்னலாண்டா, வாரலான்டா”ன்னு செய்வாங்கோ. அதனால தாலிங்கிறது மெயின் பெண்களுக்கு.

அதுனால தாலி இருந்தா பாதுகாப்புன்னும் சொல்லல.. ஏன் நாங்களே பாதிக்கப்பட்டிருக்கோம். நாங்க வேலை செய்யிற இடத்திலயே பல பிரச்சினை வருது.

பொம்பளைக்கு தாலின்னா ஆம்பளைக்கு என்னன்னு பெரியார் சொன்னது சரியா இருந்தாலும் தாலி நம்ம கலாச்சாரத்துலயே இருக்கதுனால பழகிப் போச்சு.

தாலிகட்டிக்கினு எத்தனை பேரு ஒழுக்கங்கெட்டு போய் திரியிறாங்க. பொம்பளை ஒழுக்கங்கெட்டு போறாதுக்கு காரணமே ஆம்பளைங்க தான் எந்த பொம்பளையும் அவளா தப்பான வழிக்கு போறதில்ல.

SAMSUNGஉமா, ஐ.டி ஊழியர்:

தாலி போட்டுக்கறது அடிமைத்தனம்னு சொல்ல முடியாது. அது, அவங்க அவங்க விருப்பம். தாலிப்போட்டுக்கறது சமூகத்துல பாதுக்காப்புனும் சொல்ல முடியாது. தாலிய அறுக்கறது இப்ப சர்வசாதாரணமா நடக்குது. தாலி கண்டிப்பா போடணும்னு சொல்றதுக்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. தாலி போடாதவங்க எல்லாம் தப்பானவங்க கிடையாது. அது தனிப்பட்ட விருப்பம். பெண்களுக்கு பூ, பொட்டு, மெட்டி மாதிரிதான் தாலி! தேவையின்னா போட்டுக்கலாம் தேவையில்லனு நினைச்சா ரீமூவ் பண்ணிகலாம். அது அவங்க மனசு சம்மந்தப்பட்டது. தாலி போடலைன்னா எந்த தப்பும் கிடையாது.

மரகதம், சோழிங்கநல்லூர் சந்திப்பு அருகே பூ விற்பவர்:

தாலி இல்லாம எப்படிப்பா இருக்க முடியும், தாலி முக்கியம். ஆனா இப்ப ஐ.டில வேலை செய்ற பல பொண்ணுங்க தாலி போடுறது இல்ல, அதுக்கு நாம என்ன பண்ண முடியும் அது அவங்க விருப்பம். இதைப் பத்தி பேசுனதுக்காகவே குண்டு வீசுனதெல்லாம் ரொம்ப தப்பு. தாலின்னா அடிமைத்தனம்னும் சொல்ல முடியாது அப்படி இல்லைன்னும் சொல்ல முடியாது. இதனால பாதுகாப்பெல்லாம் ஒன்னும் கிடையாது. தாலி கட்டாதவங்க எல்லாம் ஒழுங்கங்கெட்டவங்கன்னா எத்தனை பேரை அப்படி சொல்றது ? எங்க சாதில தாலியே கிடையாது. நாங்க ஒக்கலிய கவுண்டர். கல்யாணத்துல மாலை மட்டும் தான் மாத்திக்குவோம். அதுக்கப்புறம் ஒரு கருப்பு மணி மாலை போட்டுக்குவோம். எல்லோரையும் ஒட்டுமொத்தமா இப்படி பேசினா எப்படி ?

__________________________________________

இந்த நேரடி சந்திப்பில் நடுத்தர வர்க்க பெண்கள், மாணவிகள், அடித்தட்டு பெண்கள் கருத்து தெரிவித்ததை இப்படி தொகுக்கலாம்.

தாலியால் விசேசமான பாதுகாப்பு இல்லை என்று பெரும்பாலான பெண்கள் தெரிவித்தனர். பாதிக்கு மேற்பட்ட பெண்கள் தாலி அணிவது அவரவர் விருப்பம் சார்ந்தது, கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்று பதிவு செய்திருக்கின்றனர். தாலி புனிதமா, பண்பாடா, மரபா போன்ற கேள்விகளைப் பொறுத்தவரை பாதிக்கும் மேற்பட்டோர் குழப்பமாகவே பேசினர். அல்லது வேறு வழியின்றி அதை ஏற்றுக் கொண்டு தனது அடிமைத்தனத்தை நியாயமென்று கருதும் ஒரு அப்பாவித்தனமென்றும் அதைக் கூறலாம். அதை புரிந்து கொண்டு நிராகரித்தவர்களும் கணிசமாகவே இருந்தனர்.

தன்னை முண்டச்சி என்று அழைப்பார்கள் என்று தெரிவித்த ஒரு பெண் தொழிலாளி கூட தாலியை ஆதரிக்கிறார் என்றால் அது மேற்கண்ட வகையிலேயே இருக்கிறது.

நாங்கள் சந்தித்து பேசிய பெண்கள் அனைவரும் ‘இந்துப்’ பெண்கள்தான். தாலி புனிதம், தாலிதான் ஒழுக்கம் போன்ற இந்துமதவெறியர்கள் மற்றும் தமிழினவாதிகளின் கருத்துக்களுக்கு எதிரான கருத்தையும் சுதந்திரத்தையும் உரிமையையும் அநேக பெண்கள் வெளிப்படுத்தினர். அல்லது எமது ஒழுக்கத்தை தாலி கொண்டு அளவிடுவதை ஏற்கமாட்டோம் என்பதே அவர்களது கருத்து.

இப்படி சமூகமே குறிப்பாக பெண்களே தாலியின் புனிதத்தை தூக்கி எறியும் மனப்போக்கை அடிப்படையாக கொண்டிருக்கும் போது அதை ஒரு விவாத நிகழ்வாக காட்டுவதற்கு கூட புதிய தலைமுறை டி.விக்கு தைரியம் இல்லை. அதுதான் இந்துமதவெறியர்களின் பலம்.

தாலி என்பது நிலவுடைமை சமூகத்தின் பெண்களது அடிமைத்தனத்தை நிலைநாட்டுகின்ற அடையாளம். அதற்கான கருத்தோட்டத்தை கதைகளாக, நீதிகளாக, சட்டமாக பார்ப்பனியம் நிலைநிறுத்தியது. நிலவுடைமை சமூகம் மாற ஆரம்பித்து முதலாளித்துவ சமூக மாற்றம் இங்கே அறிமுகமானாலும் அது அடிப்படையை மாற்றியமைக்கும் புரட்சியாக நடக்கவில்லை. அதன் விளைவே நகரங்களில் அக்சய திரிதியை என்ற பெயரில் தாலியும், பெண்ணடிமைத்தனமும் புதிய முறையில் நிலைநாட்டப்படுகின்றன.

பண்டைய சீனாவில் பெண்கள் மீதான கொடிய ஆணாதிக்க ஒடுக்குமுறைகள் நிலவி வந்தன. பெண்களுடைய கால்கள் நீளமாக வளரக்கூடாது என்பதற்காக இரும்பால் செய்யப்பட்ட சப்பாத்துக்களை அணிவிப்பது வழக்கத்தில் இருந்தது. இது போன்ற நிலவுடைமை ஆணாதிக்க பிற்போக்குத்தனங்களையும் இன்னபிறவற்றையும் சீனாவில் நடந்த மக்கள் ஜனநாயகப்புரட்சி ஒழித்துக் கட்டியது. இன்றைக்கு சீனாவிலோ, இல்லை ரசியாவிலோ கம்யூனிசம் பின்னடைவு கண்டிருந்தாலும் உரிமை என்ற அளவில் சமூகம் பின்னோக்கி போகவில்லை; முடியாது.

இன்று சீனாவில் பெண்ணுரிமையும், திருமண – விவாகரத்து உரிமையும், பொருளாதார உரிமையும் இந்தியாவை விட பல்வேறு வகைகளில் மேம்பட்டு இருக்கின்றன.

பார்ப்பனியத்தின் பிடியில் இருந்த தமிழ்ச் சமூகத்தில் சென்ற நூற்றாண்டிலேயே பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். அவரது மண்ணில் தாலி இன்னும் நீடிக்கக் கூடாது என்பதை கருத்துப் பிரச்சாரமாகவும், தாலி அகற்றும் நிகழ்வுகளாகவும் நடத்த வேண்டிய கடமை இடதுசாரி, முற்போக்கு, பெரியார் இயக்கங்களுக்கு இருக்கின்றது.

ஆனால் அந்தக் கடமையை சட்டப்படியே இல்லாமல் ஆக்க இந்துமதவெறியர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். அதை அமல்படுத்தவும் செய்கின்றனர்.

அதை முறியடிக்க வேண்டியது நமத கடமை! அதில் நாம் மட்டும் தனியாக இல்லை. நமது சமூகத்தில் தாலியை வேறு வழியின்றி சுமந்து கொண்டிருக்கும் பெண்களும் நமக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.

–    வினவு செய்தியாளர்கள்.

மக்களிடம் அடிபணிந்த அதிகார வர்க்கம் – பென்னாகரம் சாதனை

0

க்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் வட்டாட்சியர் அலுவலகத்திலும், பி.டி.ஒ வட்டார வளர்ச்சி அலுவலங்களிலும் நடைபெறும் லஞ்ச ஊழலை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விடுதலை முன்னணி.

கடந்த 28-03-2014 அன்று நடந்த மக்கள் பேரவை கூட்டத்தின் தீர்மானங்களை சுவரொட்டியாக ஒட்டியது வி.வி.மு.

மக்கள் பேரவை கூட்டத்தின் தீர்மானங்கள்

1) லஞ்ச ஊழல் குறித்து மக்களிடம் கருத்து கேட்ட வி.வி.மு தோழர்கள் 7 பேர் மீது பொய் வழக்கு போட்ட போலீசை வன்மையாக கண்டிக்கின்றோம்.
2) வட்டாட்சியர் மற்றும் (பி.டி.ஒ) வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதை உடனே நிறுத்திக் கொள்ளவேண்டும்.
3) லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை அரசு அலுவலகங்களில் நுழைய தடைவிதிப்போம்.
4) லஞ்ச ஊழல்களை தடுத்து நிறுத்துவது பற்றி கிராமங்களில் தொடர்ச்சியாக மக்கள் பேரவை கூட்டங்கள் நடத்துவோம்.
5) லஞ்ச ஊழலில் ஈடுபட்டு, கண்டுபிடிக்கப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை பொதுச் சொத்தாக்க நிர்ப்பந்திப்போம்.
6) லஞ்சம் கேட்டு அலைக்கழிக்கும் அதிகாரிகள் குறித்து எங்களிடம் தெரிவித்தால் அந்த அதிகாரிகளை கண்டித்து உரிய முறையில் கோரிக்கையை நிறைவேற்றுவோம்.

தாசில்தாரை கண்டித்து ஒட்டிய சுவரொட்டி
தாசில்தாரை கண்டித்து ஒட்டிய சுவரொட்டி

இந்தத் தீர்மான சுவரொட்டியை பார்த்தவுடனே, பென்னாகரம் தாசில்தார் தனக்குக் கீழ் வேலைசெய்யும் அதிகாரிகளை ஏவி சுவரொட்டியை கிழிக்கும்படி உத்தரவு போட்டுள்ளார்.  கீழ்நிலையில் இருக்கும் ஊழியர்கள் தயக்கம் காட்டியுள்ளனர். தாசில்தார், “சொன்னால் செய்ய மாட்டீங்களா” என்று கடிந்துகொண்ட பிறகு கிராம தலையாரியை (உத்தாரி) அனுப்பி பென்னாகரம் நகரத்தில் உள்ள சுவரொட்டிகளை எல்லாம் கிழித்துக் கொண்டு வந்தனர். இதனை எதிர்பார்த்த தோழர்கள் சுவரொட்டியை கிழிக்கும் போதே கையும்களவுமாக பிடித்தனர்.

போஸ்டரை கிழித்த தலையாரி முனியப்பன்
போஸ்டரை கிழித்த தலையாரி முனியப்பன்

பதறிப் போன தலையாரி, “நான் முடியாது என்றுதான் சொன்னேன். ஆனா, தாசில்தார் என்னை மிரட்டி, கிராமத்தில் இருந்தவனை அழைத்து, போய் கிழித்துவிட்டு வா என்று அனுப்பினார். இனி இதுபோல் செய்ய மாட்டேன்” என்று பயந்து, மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுவிட்டார்.

கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள்
கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள்

இதனையெடுத்து, பென்னாகரம் தாசில்தார் கனகராஜ் தொலைபேசியில் வி.வி.மு செயலாளர் கோபிநாத் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். “நான் என்ன செய்தேன். என்மீது போஸ்டர் போட்டு இருக்கீங்க. எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றார்.

தனி தாசில்தார் அதியாமன் அவர்களிடம் மனு
தனி தாசில்தார் அதியாமன் அவர்களிடம் மனு

“இல்ல சார், எங்களுக்குத் தான் வருத்தமாக இருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை எல்லாம் அடிப்படை ஜனநாயக உரிமை என்று சொல்லுகிறது சட்டம். ஆனால், நீங்களே தீர்மானங்கள் சுவரொட்டியை கிழிப்பது குறித்து உங்கள் மீது வருத்தமாக இருக்கிறது” என்றார் தோழர்.

“மேலிடத்தில் இருந்து பிரசர், அதுனாலதான் கிழிச்சோம்” என்றார் தாசில்தார்.

“இது இந்திய சட்டசாசனத்திற்கு எதிரானது. நீங்க இப்படி செய்யலாமா?” என்று நமது தோழர் கேட்க.

“இப்ப வந்து வட்டாட்சியர் ஆபிசை பாருங்க. லஞ்சம் எல்லாம் எதுவும் நடக்கறது இல்ல. நீங்க போராட்டம் செய்த பிறகு புரோக்கர்கள் யாரும் இல்லை” என்றார்.

“புரோக்கர் இல்லாமல், லஞ்சம் வாங்காமல் மக்கள் பிரச்சனை தீர்த்து கொடுத்தால் வரவேற்கிறோம் சார்” என்று தோழர் கூறினார்.

இதனையெடுத்து, பாதித்த மக்களுக்கு வி.வி.மு சார்பாக பிரச்சனையை தீர்த்துக் கொடுப்பது என்ற மக்கள் பேரவை தீர்மானத்தின்படி லஞ்சம் கொடுக்க முடியாமல் முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்ட 12 பேரை அழைத்துக்கொண்டு பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனிதாசில்தார் அதியமான் அவர்களிடத்தில் மனு கொடுத்தோம். மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய தனி தாசில்தார்
நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய தனி தாசில்தார்

அடுத்து ஆர்.ஐ-ஐ சந்தித்தோம். “இந்த மனுமீது உங்கள் முன்னிலையிலேயே விசாரணை நடத்துகிறேன்” என்று கூறி உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்தார். மனுவின் மீது விசாரனை நடத்தப்பட்டது.

“இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். திடீரென நிறுத்துவது சில குளறுபடியால் நடந்துவிட்டது. இவர்களுக்கு மறு ஆணை வழங்க ஏற்பாடு செய்வதாக” விசாரனையின் அடிப்படையில் ஆர்.ஐ உறுதியளித்தார்.

இது எமது போராட்டத்திற்கு கிடைத்த தற்காலிக வெற்றி. இது ஏதோ இந்த வட்டாரத்தில் இருக்கிற பிரச்சனை மட்டுமல்ல. நாடுமுழுவதும் இதே நிலைதான்.

“கல்வித்துறையில் நடக்கிறது. வட்டாட்சியர் அலுவலகத்தைவிட பல லட்சம் லஞ்சம் பணிமாற்றத்திற்காக வாங்கப்படுகிறது. நான் ஆதாரம் தருகிறேன்” என்று நம்மிடம் தொடர்பு கொண்டார் ஒருவர். மின்சார வாரியத்திலும் லஞ்சம் கேட்பதாக மற்றொருவர் நம்மிடம் புகார் தெரிவித்தார்.

ஆனால், இப்படி அனைத்துத் துறைகளிலும், அனைத்து மட்டங்களிலும் புரையோடி கிடக்கும் லஞ்ச ஊழலை ஒழிக்க இத்தகைய தீர்வுகள் தற்காலிகமானவையே.  இப்போது நிலவும் போலி ஜனநாயக  ஆட்சி அதிகார கட்டமைப்பில் லஞ்ச ஊழல் பிரச்சனையை தீர்க்க முடியாது.  புழுத்துநாறிக் கொண்டிருக்கும் இந்தக் கட்டமைப்பை தகர்க்காமல் லஞ்ச ஊழலை முடிவுக்கு கொண்டுவர முடியாது. நம்மை ஆளத்தகுதி இழந்த இந்தக் கட்டமைப்பை தகர்ப்பதற்கான சமரை தொடருவோம்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பென்னாகரம்

போலீசை முறியடித்து கொள்ளிடத்தை காப்பாற்றிய மக்கள் போர்

5

ஆற்று மணல் கொள்ளை: கொள்ளையர்களை விரட்டியடித்த திருச்சி, இலால்குடி-அன்பில் சுற்றுவட்டார கிராம மக்களின் வீரம் செறிந்த போராட்டம் !

மிழக மக்களின் ஆரோக்கியத்தையும், மன நலத்தையும் வேகமாக கொல்லும் டாஸ்மாக்குக்கு அடுத்து தமிழகத்தை வேரும் விழுதுமாக சூறையாடி வரும் பிரச்சனை ஆற்று மணல் கொள்ளை.

“காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்” என்று அழைக்கப்பட்ட கொள்ளிடம் ஆறு தமிழகத்தின் மையத்தில் இருந்து வட தமிழகத்திற்கு நீர் பாயும் ஒரு முக்கிய வலைப்பின்னலாகவும் இருந்தது. காவிரியில் வெள்ளம் வரும் போது அதை வீணாக்காமல் வீராணம் ஏரி வரை கொண்டும் செல்லும் வல்லமையை அளித்தது கொள்ளிடம்தான்.

அப்படி டெல்டாவின் ரத்த நாளமாய் விளங்கும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் உயிரைப் பறிக்கும் மணல் கொள்ளையால் கொள்ளிடம் ஆறு முழுவதும் தனது மணலை இழந்து, வெறும் களிமண் தரையாகி விட்டது.

இதில் விதிவிலக்கு அன்பில்-மங்கம்மாள்புரமும், கூகூரும்தான். காரணம், தஞ்சை, நாகை மாவட்டங்களின் விவசாயத்திற்கு ஆதாரமாய் விளங்கும் கல்லணை கம்பீரமாய் வீற்றிருப்பது இந்த ஊர்களில் படிந்துள்ள 100 அடி ஆழம் கொண்ட மணலாலான அடித்தளத்தின் மீதுதான். இந்த அடித்தளத்தை சுரண்டினால் கல்லைணையே கவிழும்! ஆனால், ஆற்றின் மணல் அனைத்தையும் சூறையாடிய மணல் கொள்ளையர்களின் கண்களை இந்த மணலும் உறுத்துகிறது. விளைவு, கல்லணையையே அழிக்கத் துடிக்கின்றனர் இந்த மாபாவிகள்.

அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மணல் கொள்ளை
அதிகாரிகளின் ஒத்துழைப்போடு மணல் கொள்ளை

தாசில்தார் ஞானவேலு, SDO பாலசுப்பிரமணி, DSP விஜயகுமரன், inspector செல்வராசன் போன்ற அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடராசபுரம் அருகிலுள்ள படுகை கிராமத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தூரத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவில், குவாரி அமைக்க குடிசை போட்டார்கள் மணல் கொள்ளையர்கள்; விழித்துக் கொண்டார்கள் சுற்று வட்டார கிராம மக்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊருக்கு கிழக்கே உள்ள குவாரிகளில் மணல் அள்ளிக் கொண்டு, ஒரு நாளைக்கு சுமார் 1500 முதல் 2500 லாரிகள் வரை இந்த ஊர் வழியே வந்து போனதால் சாலைகளே குண்டும் குழியுமாக ஆனது; மணல் கொள்ளையர்களின் லாப வெறிக்கு 21 பேர் பலியாகினர்; புழுதியை கிளப்பிக்கொண்டு ஓடிய மணல் லாரிகள், மக்கள் சோற்றில் மண்ணை இறைத்தன; சாலையின் இருபக்க வீடுகளின் கூரைகளிலும் புழுதி படிந்தது; இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.

இந்நிலை கண்டு சினந்து வெடித்த மக்கள் ஒன்று திரண்டனர். “மணல் லாரிகள் இன்றோடு எங்கள் ஊர் வழியாக வரக்கூடாது” எனத் தடுத்து நிறுத்தினர். இப்போது அந்த கெட்ட அனுபவம் மீண்டும் வரக்கூடாது என்று விழித்துக் கொண்டனர். முக்கியமாக பெண்கள் முன்னணியில் நின்றனர்.

சி.பி.ஐ மாவட்ட செயலாளர் இந்திரஜித் தலைமை
CPI மாவட்ட செயலாளர் இந்திரஜித் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

பேச்சுவார்த்தை நாடகம்

கொள்ளிடம் ஆற்றின் நடுவே சட்டவிரோதமாக போடப்பட்ட கொட்டகையைப் பிரிக்க வேண்டுமென 20-03-2015 அன்று மனுகொடுத்தனர். தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தையும் நடந்தது. அதிகாரிகள் கீற்றுக் கொட்டகையை தங்கள் ஊழியர்களை (லஸ்கர்) வைத்து அப்புறப்படுத்துவதாக ஏற்றுக்கொண்டனர். அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதை எழுத்துபூர்வமாக எழுதி வாங்கினார்கள் ஊர் மக்கள்.

எழுதிக் கொடுத்த அதிகாரிகள் அதை நடைமுறைப்படுத்தவில்லை. மாறாக, கூரைக்கொட்டகையின் மேற்பகுதியில் தகரக் கூரையும் போட்டு மேலும் உறுதிமிக்கதாக மாற்றிய மணற்கொள்ளையர்களை அனுமதித்தனர். தண்ணீர் தேவைக்கு ஒரு ஆழ்துளைக் கிணறும் அடி பம்ப்பும் போட்டு விட்டனர்.

ஆற்றுமணல் கொள்ளை
அதிகாரிகள் எழுதிக் கொடுத்ததை அதிகாரிகளே மதிக்கவில்லை.

அதிகாரிகள் எழுதிக் கொடுத்ததை அதிகாரிகளே மதிக்கவில்லை என்பதோடு, மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டதைக் கண்டு அன்பில், மங்கம்மாள்புரம் , கூகூர், ஆனந்திமேடு, சாத்தமங்கலம், வழுதியூர், நடராசபுரம், மேட்டாங்காடு, கோவிந்தபுரம், கொன்னக்குடி ஆகிய கிராம மக்கள் வெகுண்டெழுந்தனர். முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். கிராமம் கிராமமாக சென்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்கள் கொள்ளிடம் ஆற்று நல பாதுகாப்பு சங்கத்தின் முன்னணியாளர்கள்.

முற்றுகைப் போராட்டத்திற்கு தலைமையேற்க இந்திய கம்யூனிஸ்டு கட்சியை அழைத்தனர். விருத்தாச்சலம் – கார்மாங்குடி வெள்ளாற்றில் செயல்பட்ட மணல் குவாரியை, இழுத்து மூடிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தினரையும் அழைத்திருந்தனர்.

மார்ச் 31-ம் தேதி காலை 9 மணிக்கு நெடுஞ்சாலையில் மக்கள் கொத்துக் கொத்தாக ஆயிரக் கணக்கில் குவிந்தனர்.

ஆற்றுமணல் கொள்ளை
நெடுஞ்சாலையில் மக்கள் குவிந்தனர்.

காலை 11 மணிக்கு போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்குடன் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது அதிகார வர்க்கம். இதில் டி.எஸ்.பி, தாசில்தார், ஆர்.டி.ஓ, பி.டபிள்யூ.டி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மக்கள் தரப்பிலிருந்து சி.பி.ஐ மாவட்டச் செயலாளர் இந்திரஜித் கலந்து கொண்டார். பேச்சுவார்த்தையை நீட்டித்துக்கொண்டே சென்றால், விவசாயிகள் சோர்வுக்குள்ளாகி கலைந்து விடுவார்கள் என்று மனப்பால் குடித்தது அதிகாரிகள் கூட்டம்.

anbil-river-sand-prpc-dist-treasurer-com-anand
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத் தோழர் ஆனந்த், மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் ஜீவா இருவரும் மக்களிடையே உரையாற்றினார்கள்

“கொட்டகையை அகற்றுங்கள், மணல் எடுக்க அனுமதித்ததை ரத்து செய்யுங்கள்” என்று பல மணி நேரம் பேசியும் அதிகாரிகள் ஏற்கவில்லை. மாறாக “கொட்டகை இருப்பதனால் எந்த பிரச்சனையும் இல்லை, மக்களின் விருப்பத்தை மீறி மண்ணெடுக்க மாட்டோம்” என்று கூறிவிட்டு, “அப்படி எடுத்தாலும் 3 அடி மட்டுமே அள்ளுவார்கள்” என்று வாங்கிய காசுக்கு மேலாகவே பேசினார் ஆற்று பாதுகாப்புக் கோட்டத்தின் எஸ்.டி.ஓ (SDO) பாலசுப்பிரமணி. காலை 11.30 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மதியம் 1.30 மணிவரை தொடர்ந்தும் பலனளிக்க வில்லை. சட்ட விரோத கொட்டகையை அகற்ற மேலதிகாரிகளிடம் கேட்டு சொல்கிறோம் என நேரத்தைக் கடத்தினர், அதிகாரிகள். மக்களின் கோபம் கொப்பளித்தது.

anbil-river-sand-protest-photos-05ஆற்றங்கரையிலுள்ள ஆலமரத்தடியில் ஒன்று திரண்ட விவசாயிகள் மத்தியில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர் ஆனந்த் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் ஜீவா ஆகியோர் உரையாற்றினர்; விருத்தாச்சலம் கார்மாங்குடி ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராக நடந்த போராட்ட அனுபவத்தையும் விளக்கினர். மணல் கொள்ளையர்கள், அதிகாரிகளின் கள்ளக்கூட்டை அம்பலப்படுத்தி பேசினர். தோழர்களின் உணர்ச்சி பூர்வமான பேச்சும், விண்ணைப்பிளந்த முழக்கமும் சிதறிக்கிடந்த மக்களை ஒன்று திரட்டியது.

anbil-river-sand-protest-photos-07சட்டத்துக்குப் புறம்பான கொட்டகையை அகற்றக்கூட இந்த அதிகாரிகள் மறுத்ததுடன் மேலதிகாரிகளிடம் கேட்டுத்தான் முடிவை சொல்வோம் என்றும் காலம் கடத்திய பித்தலாட்டத்தையும் கண்ணுற்ற மக்கள் “அவனுங்க கிட்ட என்ன பேச்சு வார்த்தை? தாசில்தார் கைப்பட எழுதிக் கொடுத்ததை அவன் அமுல்படுத்த மாட்டான்னா நாம அமுல்படுத்துவோம். எவன் வந்தாலும் வரட்டும் பாத்துக்கலாம்” என்றும் “அதிகாரிகள் என்ன நமக்கு டைம் கொடுப்பது? நாம் அவர்களுக்கு டைம் கொடுப்போம்” என மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டனர்.

அரை மணி நேரம் டைம் தர்ரோம் அதற்குள் நீயே வந்து இடித்துவிடு; இல்லையென்றால் நாங்கள் இடித்துவிடுவோம்” என எச்சரிக்கை செய்தனர். அந்த அரை மணி நேரம் கடந்தும் அதிகாரிகள் இறங்கி வரவில்லை. மணல் கொள்ளையர்களுக்கு வக்காலத்து வாங்கி வளைத்து வளைத்துப் பேசினர். பொறுமையிழந்த மக்கள், அதிரடிப் படை போலீசின் தடுப்பரண்களை மீறி கடப்பாறை, கம்புகளுடன் ஆற்றுக்குள் இறங்கினர். கொட்டகைக்குள் பதுங்கியிருந்த அடியாட்களை விரட்டியடித்தனர். போலீசோ, சட்டவிரோத கொட்டகையை தன் வசப்படுத்தி பாதுகாக்க முயன்றது.

anbil-river-sand-protest-photos-06போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க போலீசின் கட்டுக்குள் இருந்த கொட்டகையை மக்கள் தன் வசப்படுத்தினர். நாலாபக்கமும் சுற்றி வளைத்து கீற்றுக் கொட்டகையை பிரித்து எறிந்தனர்.

அடித்து நொறுக்கப்பட்டது கீற்றுக் கொட்டகை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

போர் பம்ப் மற்றும் சின்டெக்ஸ் தண்ணீர் டேங்க்கையும் அடித்து நொறுக்கி தரை மட்டமாக்கினர். போலீசும் அதிகார வர்க்கமும் நமக்கானதல்ல என்பதை உணர்ந்த கிராம மக்களின் போர்க்குணத்தின் முன் மண்டியிட்டது கொள்ளையனின் சதிகளும் அதிகாரிகளின் ஆணவமும்! மக்கள் சக்தியின் மகத்துவத்தை ருசித்த மக்களின் உற்சாகத்தைக் காண கண் கோடி வேண்டும்.

ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு போராட்டம்
மக்களின் போர்க்குணத்தின் முன் மண்டியிட்டது கொள்ளையனின் சதிகளும் அதிகாரிகளின் ஆணவமும்!

தற்போது சட்ட விரோத கொட்டகையை அகற்றி விட்டோம்; மணல் கொள்ளையனின் அடியாட்களும், போலீசும் ,அதிகாரிகளும் தற்காலிகமாக பின்வாங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் மீண்டும் வருவார்கள். சட்டமும் நீதிமன்றமும் அவர்களின் கையிலுள்ளது.

திருச்சி, தஞ்சை டெல்டா பகுதியில் விவசாயம் நடக்கவேண்டுமென்றால் கல்லணை நிலைத்து நிற்க வேண்டும். கல்லணை நிலைத்து நிற்க வேண்டுமென்றால், கூகூர், அன்பில் – மங்கம்மாள்புரத்தின் ஆற்றுப் பகுதியில் ஒரு பிடி மணலைக்கூட எடுக்க அனுமதிக்கக் கூடாது. மக்களுக்கு அதிகாரம் வழங்கும் கமிட்டிகளை கிராமம்தோறும் கட்டியமைப்பது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு.

ஆற்றுமணல் கொள்ளை
கூகூர், அன்பில் – மங்கம்மாள்புரத்தின் ஆற்றுப் பகுதியில் ஒரு பிடி மணலைக்கூட எடுக்க அனுமதிக்கக் கூடாது.

செய்தித் துளிகள் : மக்கள் கருத்து

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களைப் பார்த்து, “வெள்ள சட்டை கருப்பு பேண்டு போட்ட தம்பிங்க மட்டும் இல்லன்னா சோர்ந்து போயிருப்போம்!” என்றார் ஒரு வயதான மூதாட்டி.

”உங்கள யாருன்னே தெரியாது எங்களுக்கு வந்து உதவுனீங்க, நீங்க நல்லா இருக்கணும் தம்பி” என்றும்  “உங்களின் தொடர்பால் எங்களுக்கு இன்னொரு கை கிடைத்தது மாதிரி தெம்பு வந்தது” என்றும் வாழ்த்தினார்கள்.

சிறிது நேரம் இருந்து விட்டு சென்று விடலாமென்று வந்த தம்மை, “சொந்த வேலையைக் கூட கவனிக்கத் தோன்றாத அளவுக்கு இந்தப் போராட்டம் வசப்படுத்தி விட்டது” என்றார் ஒரு தோழர். அந்த அளவுக்கு போராட்டத்தின் போக்கும் மக்களின் உற்சாகமும் இருந்தது.

செய்தி:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
திருச்சி.

மாணவர்களை சிலுவையிலேற்றும் தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி

3

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் திமிரை முறியடித்த மாணவர்கள் போராட்டம்!

டந்த மார்ச் மாதம்  09.03.2015  திங்கள் கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளத்தில் உள்ள ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரியில் CSE முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ரூத்ஷைனி தற்கொலைக்கு  முயன்று கல்லூரியின்  3-வது மாடியிலிருந்து குதித்துள்ளார். தற்போது  மாணவி ரூத்ஷைனி மிகவும் மோசமான நிலையில்  தூத்துக்குடி லட்சுமி  பாலிகிளினிக்கில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி

இந்த சம்பவம் நடந்த தினத்தன்று கல்லூரியில் நடந்த அகமதிப்பீட்டுத் தேர்வில் அந்த மாணவி காப்பியடித்தாக ஆசிரியர்கள் திட்டியுள்ளனர். அதனால்தான் மாணவி தற்கொலைக்கு முயன்றதாக நிர்வாகம் பொய் சொல்லி வருகிறது. ஆனால் மாணவி ரூத்ஷைனியை தனியாக ஒரு அறையில் வைத்து மற்ற மாணவர்களுடன் தொடர்புபடுத்தி ஆபாசமாக திட்டியுள்ளனர் ஆசிரியர்கள்.

தன் பெற்றோருக்கு ஃபோன் செய்து தருவதாகவும் நீங்கள் அவர்களிடம் பேசுங்கள் என மாணவி கூறியுள்ளார். அதற்கு, “நீ பெற்றோருக்கு தான் ஃபோன் பண்றியா இல்லை வேற எவனுக்காகவது ஃபோன் பண்றியா? யாருக்குத் தெரியும்” எனத் திட்டியுள்ளனர். இதில் மனமுடைந்துதான் மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தான் உண்மை.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
மாணவி ரூத்ஷைனியை தனியாக ஒரு அறையில் வைத்து மற்ற மாணவர்களுடன் தொடர்புபடுத்தி ஆபாசமாக திட்டியுள்ளனர் ஆசிரியர்கள்.

ஆனால், செமஸ்டர் தேர்விலேயே கல்லூரி நிர்வாகம் பிட்டு பேப்பர் கொடுத்து மாணவர்களை எழுத வைத்து தான் தன் அந்தஸ்தையும், அட்மிஷனையும் காப்பாற்றி வருகிறது. இந்நிலையில், “காப்பியடித்ததை கண்டித்ததால்தான் அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்” என திமிருடன் பேசி வருகிறது, கல்லூரி நிர்வாகம்.

தன்னை யோக்கியவனாக காட்டிக் கொள்ளும் இந்த நிர்வாகம்தான் மாணவி கீழே குதித்தவுடன்  அவளை காப்பாற்றும் நோக்கில் தூக்கச் சென்ற சக மாணவர்கள் 4 பேரின் மீது ரூ 1000 அபராதம் விதித்துள்ளது. மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட மாணவியை பார்க்க வேண்டும் என நிர்வாகத்திடம் கெஞ்சிய மாணவர்களை தேர்வு எழுதிவிட்டு செல்லுமாறு அச்சுறுத்தி தடுத்துள்ளது.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்ளும் நிர்வாகத்தின் திமிரை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகின்றனர்.

நிர்வாகம் “உங்களால் எங்களை என்ன செய்ய முடியும்? நாங்கள் இது போனறு பல சம்பவங்களை பார்த்து விட்டோம். அதையே மறைத்து விட்டோம். இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப சாதாரணம்” என வெளிப்படையாகவே திமிருடன் கூறியது.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக சுவரொட்டி

கல்லூரி நிர்வாகத்தின் மேலும் சில ‘சிறப்பம்சங்கள்’ :

1. 8 நிமிட இடைவெளியில் 1000  மாணவர்கள் சிறுநீர் கழித்து விட வேண்டும். தாமதமானால் அபராதம்.
2. மாணவர்களை பொம்பள பொறுக்கியெனவும், மாணவிகளை ஆம்பள பொறுக்கியெனவும்  ஆபாசமான வார்த்தைகளில் திட்டுவது.
3. அதிகக் கட்டணம் வாங்கிக் கொண்டு குறைவான கட்டண ரசீது கொடுப்பது.
4. மாணவர்களை மிரட்டி வாக்குமூலம் வாங்கிக் கொண்டு அதை வைத்தே மிரட்டுவது.
5. மாணவர்கள் மத்தியிலேயே உளவாளிகளை உருவாக்கி சகமாணவர்களை உளவு பாக்க சொல்லி மிரட்டுதல் என இன்னும் நீளும் அந்த பட்டியல்.

கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்ளும் நிர்வாகத்தின் திமிரை எதிர்த்து மாணவர்கள் போராடி வருகின்றனர். வகுப்பு புறக்கணிப்பு, சாலை மறியல், கலெக்டரிடம் மனு கொடுப்பது எனவும், பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் மற்றும் கல்லூரி மாணவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுவது எனவும் தொடர்ந்தது மாணவர்களின் போராட்டம். பிறகு மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நிர்வாகம்.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
“பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் மாணவிக்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும்.”

“பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் மாணவிக்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும்” எனவும் “மாணவியை தற்கொலைக்கு தூண்டிய நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்” எனவும் பேச்சுவார்த்தையில் மாணவ பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட நிர்வாகமும், காவல்துறையும் 3 நாட்கள் கெடு கேட்டனர் . அதனை அங்கீகரித்து மாணவர்கள் தங்களின் அன்றைய போராட்டத்தை முடித்துள்ளனர்.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
அனைத்துக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தை ஆதரித்து கலந்து கொண்டனர்

பிறகு தான் தெரியவந்தது. அந்த 3 நாள் கெடு என்பது மாணவர்களையும், பெற்றோர்களையும் தனக்கேயுரிய பாணியில் மிரட்டி பணிய வைப்பதற்காக இவர்கள் நடத்திய நாடகம். பிறகு தான் இந்த பிரச்சனையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலையிட்டது!

போராடும் மாணவர்களை குழுவாக திரட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரச்சனையை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் விதமாக “உயிர்பலி வாங்கத்துடிக்கும் ஹோலி கிராஸ் பொறியியல் கல்லூரி” என்ற தலைப்பில் போஸ்டர் போட்டு பரவலாக மக்கள் கூடும் இடங்களிலும், பிற கல்லூரிகளிலும் ஒட்டப்பட்டது.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
இந்த பிரச்சனையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலையிட்டது.

திமிர் பிடித்த ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் அடாவடித்தனத்தை முறியடிப்போம்”  என்ற தலைப்பில் 5000 பிரசுரம் போட்டு அனைத்து கல்லூரிகளிலும் விநியோகிக்கப்பட்டது.

பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என இணைய தளங்களில்  பிரசுரம், போஸ்டர் என பிரச்சாரம் பல்லாயிரம் மக்களைச் சென்று அடைந்தது. அதனைக் கண்டு நடுநடுங்கி போன நிர்வாகம் மறுப்பு செய்திகளை இணைய தளங்களில் பரப்பத் தொடங்கியது. பொய்களையும் அவிழத்து விட்டது. ஆனால்  அவை அனைத்தையும முறியடித்தனர் மாணவர்கள்.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
பிரச்சாரம் பல்லாயிரம் மக்களைச் சென்று அடைந்தது.

அதற்குள்ளாகவே ஏனைய பொறியியல் கல்லூரிகள், அரசு கலைக்கல்லூரிகள் என அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தை ஆதரித்து கலந்து கொண்டனர். அதற்கு பிறகு அனைத்து கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்ட கமிட்டி உருவாக்கப்பட்டது.

அடுத்த கட்ட போராட்டமாக  அனைத்து கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக முழக்கமிட்ட படியே சென்று மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
கலெக்டரோ, “இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. இதுக்காகவெல்லாம் இப்படி போராடலாமா” என தட்டிக் கழித்தார்.

ஆனால் கலெக்டரோ, “இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. இதுக்காகவெல்லாம் இப்படி போராடலாமா” என தட்டிக் கழித்தார். நம்மை அந்த இடத்தைவிட்டு காலி பண்ண வேண்டும் என்பதற்காகவே, “நான் நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்” என வாய்வழி உத்தரவு கொடுத்தார். அதனை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கலைந்தோம். கிட்டத்தட்ட ஒரு வாரத்தை கடந்த நிலையில் அன்று வரை கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ஒருவர் கூட பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்கக் கூட வரவில்லை.

நிர்வாகமும், காவல் துறையும் கூட்டு சேர்ந்து கொண்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் மிரட்டும் வேலைகளைத்தான் மும்முரமாக செய்து கொணடிருந்தனர்.

ஆனால், இதையெதையும் கண்டு அஞ்சாத மாணவர்கள் அடுத்தகட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகினர். கடைசியாக, “சாகும் வரை உண்ணாவிரதம்” என்ற போராட்டத்தில் குதித்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத்தை தொடங்கினர்.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
போராட்டம் முதல்கட்ட வெற்றியை அடைந்தது.

அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர் கலெக்டர், தாசில்தார், எஸ்.பி மற்றும் கல்லூரி நிர்வாகம். பிறகு மாணவர்கள், பெற்றோர்கள், தாசில்தார், கல்லூரி நிர்வாகம் என அனைவரின் முன்பும் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. மாணவியின் மருத்துவச் செலவு முழுவதையும் நிர்வாகமே ஏற்றுக் கொண்டது. அதனடிப்படையில் 3,12,000 ரூபாய் பெற்றோருக்கு வழங்கியது கல்லூரி. நிர்வாகத்தின் மீதும் குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும் தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு காவல் துறை சார்பாக உறுதியளிக்கப்பட்டது! போராட்டம் முதல்கட்ட வெற்றியை அடைந்தது.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆனால் முழுவதுமாக அம்பலப்பட்டு அம்மணமாக நின்ற கல்லூரி நிர்வாகம் சும்மாவிடுமா என்ன? தனது அடுத்தகட்ட சதியை தொடங்கிவிட்டது! போராட்டத்தில் முன்னணியில் நின்ற மாணவர்களை பழிவாங்கத் தொடங்கிவிட்டது.

‘வருகை பதிவு இல்லை’, ‘கல்விக்கட்டணம் பாக்கியுள்ளது’, ‘போராட்டத்தால் கல்லூரியின் சொத்திற்கு சேதம் ஏற்பட்டுவிட்டது’, ‘கெட்டுவிட்டது’ என பல காரணங்களை முன் வைத்து மாணவர்களை பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறது.

அதற்கும் மேலாக கல்லூரியை வாழ்த்தி மாணவர்களின் பெற்றோர்கள் போஸ்டர் ஒட்ட வேண்டும் என மிரட்டி வருகிறது. அதனையும் தாண்டி நிர்வாகமே மாணவர்களின் சார்பாக ஒரு போஸ்டரை போட்டு ஒட்டியுள்ளது.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி
நிர்வாகமே மாணவர்களின் சார்பாக ஒரு போஸ்டரை போட்டு ஒட்டியுள்ளது.

இந்த சதித்தனத்தையெல்லாம் எதிர்த்து உறுதியுடன் போராடி வருகின்றனர் மாணவர்கள்.

இந்தப் போராட்டத்தின் மேலும் சில சிறப்பம்சங்கள்

1. துவக்கத்தில் தன்னெழுச்சியாக போராடிய மாணவர்கள் பிறகு ஒரு அமைப்பாக மாற்றிக் கொண்டனர். அதனை அனைத்து கல்லூரி அமைப்பாக மாற்றிக் கொண்டனர். வேலைகளை திட்டமிட்டு  பிரித்துக் கொண்டு நடைமுறைப்படுத்தினர். இதன் மூலம் தான் வெற்றி பெற்றுள்ளோம் என்பதையும் உணர்ந்துள்ளனர்.

2. பாதிக்கப்பட்ட மாணவியின் மருத்துவச் செலவு (கிட்டதட்ட 3.5 லட்சம் ரூபாய்) முழுவதையும் முதலில், மாணவர்கள் தான் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

3. ஒவ்வொரு கட்டத்திலும் நிர்வாகத்தின் எதிர் நடவடிக்கைகளையும், சதித்தனங்களையும் திட்டமிட்டு முறியடித்துள்ளனர்; முறியடித்து வருகின்றனர்.

4. பொறியியல் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு ஒரு முன்மாதிரியாகவும், போராடும் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளனர்.

5. தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் மக்கள் மேடைக்கு முன் வைத்துள்ளனர். வாய்ப்புள்ள அனைத்து வகையான பிரசுரம், போஸ்டர், இணையதளம், பேருந்து பிரச்சாரம், கல்லூரி வாயில் பிரச்சாரம் என அனைத்தையும் பயன்படுத்தியுள்ளனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தூத்துக்குடி.

பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்

28

லையும் மலையும் சார்ந்த இடமும் எதுவென்று கேட்டால் குறிஞ்சி என்று சொல்வோம். பாலும் பால் சார்ந்த இடமும் எதுவென்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பார்ப்பனியம் என்று சொல்கிறது தேசிய மாதிரி ஆய்வு கழகம் (National Sample Survey Organization). இதுபற்றிய செய்தி, இந்து ஆங்கில நாளேட்டில் 19-03-2015 அன்று “உண்ணும் உணவை சாதியும் தீர்மானிக்கிறது” எனும் தலைப்பில் வெளிவந்திருக்கிறது.

பார்ப்பன ஆதிக்கமும் பால் பொருள் நுகர்வும்
பால் பொருட்களுக்கான நுகர்வு பார்ப்பன ஆதிக்க சாதிகளிடையேதான் மிகுந்து காணப்படுகிறது.

மிகச்சமீபத்தில் NSSO, இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகக் குழுக்கள் செலவிடும் தனிநபர் செலவினங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. நாடெங்கிலும் உள்ள சீர் மரபினர் (ST), பட்டியல் வகுப்பினர் (SC), பிற்படுத்தப்பட்ட சாதிகள் (OBC) மற்றும் உயர்சாதிகளிடையே (FC) நடத்தப்பட்ட ஆய்வில் கல்வி, வேலைவாய்ப்பு, உணவுக்காக செலவிடும் தொகை என பல்வேறு வாழ்நிலைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதில் தனிநபர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு உணவிற்காக செலவிடும் தொகை அவர் சார்ந்திருக்கிற சாதியைப் பொறுத்து பாரதூரமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது ஆய்வு.

குறிப்பாக பாலும் பால் சார்ந்த பொருட்களுக்காகவும் ஒவ்வொரு சாதிகளும் செலவிடும் தொகையைக் கணக்கிடுற பொழுது, மாதம் ஒன்றுக்கு தனிநபர் செலவினமாக, கிராமப் புறங்களில் சீர் மரபினர் 61 ரூபாயும், பட்டியல் வகுப்பினர் 89 ரூபாயும், பிற்படுத்தப்பட்ட சாதிகள் 119 ரூபாயும் உயர் சாதிகள் 156 ரூபாயும் செலவிடுகின்றனர். இதே நகர்ப்புறமாக இருக்கிற பொழுது, சீர் மரபினர் 122 ரூபாயும், பட்டியல் வகுப்பினர் 140 ரூபாயும், பிற்படுத்தப்பட்ட சாதிகள் 154 ரூபாயும் உயர் சாதிகள் 154 ரூபாயும் செலவிடுகின்றனர்.

கும்பகோணம் டிகிரி காப்பி
“கும்பகோணம் டிகிரி காப்பியின் ரகசியம் தெரியுமா?” என்று பஞ்சாமி ஐயரின் சிறப்பு குறித்து மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு மகாமத்யமே பாடி இருக்கிறது

சுருக்கமாகப் பார்க்கிற பொழுது கிராமப்புறங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர் சாதிகள் மட்டுமே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்காக ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்டவர்களின் செலவிடும் தொகையைச் செலவிடுகின்றனர். நகர்ப்புறங்களில் வாழ்வியல் சூழ்நிலைகள் கிராமங்களை விட வேறாக இருப்பினும் பால் பொருட்களுக்கான நுகர்வு பார்ப்பன ஆதிக்க சாதிகளிடையேதான் மிகுந்து காணப்படுகிறது.

வெண்ணெய் திருடித்தின்ற யாதவ குலத்து கிருஷ்ணனின் பெயரில் இயங்கும் ஸ்ரீ கிருஷ்ணா இனிப்பகம் ஹை கிளாஸ் பார்ப்பனர்களுக்காக பிரேத்யகமாக நேந்துவிடப்பட்ட ஒன்று. இதுதவிர “கும்பகோணம் டிகிரி காப்பியின் ரகசியம் தெரியுமா?” என்று பஞ்சாமி ஐயரின் சிறப்பு குறித்து மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு மகாமத்யமே பாடி இருக்கிறது. ஏழை ஆதிக்க சாதிகள் என்றாலும் அம்மையப்ப முதலியார்-கோதாவரி குடும்பம், காபி பொடி டப்பாவைச் சுரண்டுவதைக் காட்டுவதன் மூலமாக 80-களில் வெளிவந்த படங்கள் பார்ப்பனிய பண்பாட்டைக் கச்சிதமாக நிறுவி வந்திருக்கின்றன. மற்றபடி பலகாரம் சாப்பிட்டு நரசுஸ் காபி குடிக்கிற பேஷ் பேஷ் சாதிகளைத்தவிர மற்றவர்களுக்கு நீச்சத்தண்ணிதான் நீராகாரம்!

ஆக தாழ்த்தப்பட்டவர்கள் என்று வருகிற பொழுது பால் மற்றும் பால் சார் பொருட்கள் ஆதிக்க சின்னமாகத்தான் இருக்கிறது.

ambedkar-annihilation-of-casteசான்றாக அம்பேத்கர் “சாதியை ஒழிப்பது எப்படி?” எனும் நூலில் தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமை என்று கீழ்கண்ட சம்பவத்தை முன்வைப்பார்;

“ஜெய்ப்பூர் சமஸ்தானத்தில் சக்வாராவில் மிக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. தீர்த்த யாத்திரை சென்று வந்த தீண்ட்த்தகாதவர் ஒருவர் தன்போன்ற இதர தீண்டத்தகாதவர்களுக்காக ஒரு மதக் கடமையாக சிறப்பான விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். விருந்திலே பறிமாறப்பட்ட பலவித உணவுகளில் நெய்யும் ஒன்று. என்ன நடந்தது தெரியுமா?

தீண்டத்தகாதோர் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது நூற்றுக்கணக்கான இந்துக்கள் தடிகளோடு அந்த இடத்துக்கு விரைந்தனர். உணவைக் கொட்டிக்  கவிழ்த்தனர். சாப்பிடுவதை விட்டுவிட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியவர்களை நையப்புடைத்தனர். ஆதரவற்ற தீண்டத்தகாதவர்கள் மீது இதுபோன்ற கொலைபாதகச் செயல் நடந்தது ஏன்? அதற்குக் கூறப்பட்ட காரணம் என்னவென்றால் விருந்தளித்தவர் விருந்திலே நெய் சேர்க்கும் அளவுக்கு ‘திமிர்’ பிடித்தவராக இருந்தாராம்! விருந்தாளிகளும் துணிந்து நெய் சாப்பிடும் அளவுக்கு விவரங் கெட்டவர்களாக இருந்திருக்கிறார்கள்!

தேசிய மாதிரி ஆய்வு நிறுவன தரவுகள் - பால் நுகர்வை சாதி தீர்மானிக்கிறது
தேசிய மாதிரி ஆய்வு நிறுவன தரவுகள் – பால் நுகர்வை சாதி தீர்மானிக்கிறது

நெய் பணக்காரர் பயன்படுத்தும் ஆடம்பரப் பொருள் என்றால் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அது ஒருவரின் சமூக அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் பொருள் என்று யாராவது நினைப்பார்களா? சக்வாரா இந்துக்கள் அப்படித்தான் நினைத்தார்கள். அதாவது தீண்டத்தகாதவர்கள் அவர்களின் உணவில் நெய்விட்டுக் கொண்டதின் மூலம் தம்மை அவமதித்து விட்டதாகவே சாதி இந்துக்கள் நினைத்துக் கொண்டார்கள். அதற்காகவே தீண்டத்தகாதவரை இப்படி பழி வாங்கினார்கள். நெய் என்பது இந்துக்களின் கவுரவப் பிரச்சனை. எனவே தீண்டத்தகாதவர்கள் நெய் வாங்கும் அளவுக்கு வசதி படைத்திருந்தாலும் கூட அதைப் பயன்படுத்தக் கூடாது. நெய் அவர்களுக்கு உரியது அல்ல. இந்த நினைப்புதான் இந்துக்களை தீண்டத்தகாதவர்களுக்கு எதிராக நிறுத்தியது. இது 1936 ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்தது.”

அம்பேத்கர் சுட்டிக்காட்டும் காலனிய காலத்து கொடூரத்திற்கும், 2015-ல் NSSO காட்டும் தரவுகளுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? இதைத்தான் காலந்தோறும் பார்ப்பனீயம் என்று சுட்டிக்காட்டுகிறோம். உணவு சாதியின் குறியீடாக நிற்பதற்கு இவை இரண்டு மட்டும் சான்றுகள் அல்ல. பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பன இந்துமதம் முன்னிறுத்தும் தெய்வங்களும் இப்படித்தான்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமன், பார்ப்பனியத்தின் ஐகான் என்பதை இஸ்கான் குழுவினர் பரப்பிவருவதை அறிவோம். இதுதவிர பாற்கடலை கடைந்து எடுக்கும் அமுதத்திற்காக முப்பத்து முக்கோடி அய்யர்களின் சார்பில், விஷ்ணு அரக்கர்களின் உழைப்பை அபகரிக்கும் பொருட்டு மோகினி அவதாரமே எடுத்திருக்கிறார். இதற்கு மணிகண்டனே சாட்சி!

நிலவுடமைச் சமூகத்தில் பார்ப்பனீயத்தின் பால் மீதான ஆதிக்கத்தை இராச இராசன் பெருமையோடு எழுதி வைத்தவிட்டுப்போன கல்வெட்டுகளிலிருந்து அறியலாம். பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயம் கொடுக்கிற இராசஇராசன் ஹிரண்ய கர்ப்ப தானமும் கொடுத்திருக்கிறான். ஆனால் உழைக்கிற மக்களோ சாவா மூவாப் பேராடுகள் எனும் பெயரில் கோயில் விளக்கேற்றுவதற்கு உழக்களவு நெய் தரும் பொருட்டு கோயிலிலேயே காலத்திற்கும் அடிமையாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தான் ‘வெட்டிக்குடிகள்’ என்று வரலாற்றில் அறியப்படுகிறார்கள்.

வேதகால அறிவியல் - மோசடி
“வேத காலத்தில் விமானத் தொழில் நுட்பம்” என்று இந்திய அறிவியல் பேரவையில் இந்துத்துவ காலிகள் வெட்கமின்றி அறிக்கை ஒன்றை வாசித்தனர்.

பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனியத்தின் ஆதிக்கம் பால் என்று வருகிற பொழுது எப்படியெல்லாம் இருக்கிறது என்பதற்கு நாம் ஒரு பட்டியலே போடலாம். ஆனால் இப்பதிவின் நோக்கம் அதுமட்டுமன்று. இன்றைய மறுகாலனியாதிக்க சூழ்நிலையில் பார்ப்பனிய பண்பாட்டு ஆதிக்கம் எப்படி முன்னகர்த்தி எடுத்துச் செல்லப்படுகின்றது, அது எப்படி ஏகாதிபத்தியத்திற்கு உவப்பாக இருக்கிறது என்பதை பால் மற்றும் பால் சார் பொருட்களைக் கொண்டே இப்பதிவில் விளக்குவதும் நமது நோக்கம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக “வேத காலத்தில் விமானத் தொழில் நுட்பம்” என்று இந்திய அறிவியல் பேரவையில் இந்துத்துவ காலிகள் வெட்கமின்றி அறிக்கை ஒன்றை வாசித்தனர். ஒட்டுமொத்த உலகமும் எள்ளி நகையாடிய நிகழ்வு அது! வேத காலத்திலேயே 60-க்கு 60 அடியில் விமானங்கள் இருந்ததாகவும் அவற்றில் சில 200 அடிக்கு பெரியதாகவும், 40 சிறு எஞ்சின்களைக் கொண்டதாகவும் இருந்தது என தனது பங்களிப்பை நல்கினர். அதில் நாம் அதிகம் கவனிக்காத விசயம் என்னவென்றால் மகரிசி பரத்வாஜ், விமானிகளுக்கான டயட்டையும் சொல்லியிருந்தாராம்! அது என்ன டயட் தெரியுமா? பசும் பால், எருமைப் பால், ஆட்டுப்பால். இதுபோக விமானிகளின் உடை முழுக்கவும் வெஜிடேரியன் என்றும், அது நீர் வாழ் தாவரங்களால் உருவாக்கப்பட்டது என்றும் முன்மொழிந்திருந்தனர். ‘அவிங்கயெல்லாம் விஜிடேரியன்மா’ என்று வடிவேல் சொல்வதைத்தான் அழுத்தமாக முன்வைத்திருந்தனர். இந்த பால் மேட்டர் அல்லது பார்ப்பனியம் எங்க வரைக்கும் ஊடுருவி நிற்கிறது என்று பார்த்தீர்களா?

தர்ப்பை
தன்மானத்த தொலைச்சுபுட்டு தர்ப்பைய பத்தி சொன்னா எவனாவது கேட்பானா?

இரண்டாவது சம்பவம் இன்னும் சுவாரசியமானது. இது நடந்தும் ஒரு மாதம் தான் ஆகிறது. சாஸ்த்ரா பல்கலைக் கழகம் தர்ப்பையின் மகத்துவம் குறித்து நானோ தொழில்நுட்பம் அடிப்படையில் ஒர் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கின்றனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருள் தயிர்! தர்ப்பை என்பது ஒரு புல் வகை. இதை வேதகாலத்தில் புனிதப் பொருளாக பயன்படுத்தியதற்கு காரணம் இதன் நானோ மகத்துவம் தான் காரணம் என்கிறது ஆய்வு.

திவசத்தின் போது ஐயர்கள் தங்கள் விரல்களில் மோதிரம் போன்று மாட்டிக்கொள்வார்கள். ஏனெனில் தீய சக்திகள் ஏதும் அண்டாதாம்! முக்கியமாக அரக்கர்கள் யாரும் பாற்கடல் அமுதத்திற்கு சண்டையிட்டைதைப் போன்று பூசையின் பலன்களையெல்லாம் திரட்ட முடியாதாம்! அனைத்து பலன்களும் திவசம் கொடுப்பவருக்கே போய்ச்சேருமாம்!

முன்னோர்களை விரட்டிவிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுக்கிற இந்தக் கூத்து நம்ம மக்களுக்கும் புரியாது. ஏன்னா திவசம் கொடுக்குறவன் பூணுல் போட்டுத்தான் திவசம் கொடுக்கணும்! முதல்ல ஒரு சூத்திரனுக்கு தன்னோட பெத்தவங்களுக்கு திதி கொடுக்கிற உரிமையே இல்லன்றதுனாலதான் பூணுலே போடறதாக சொல்றாங்க! இதுல தன்மானத்த தொலைச்சுபுட்டு தர்ப்பைய பத்தி சொன்னா எவனாவது கேட்பானா? ஆனா இங்க மேட்டரு வேற.

பால் அபிஷேகம்
இந்தியாவில் நானோ தொழில்நுட்பம் தர்ப்பை, தயிர் என்கிற அளவிற்கு இருக்க காரணம் என்ன?

இப்பேர்பட்ட தர்ப்பையின் சிறப்பை சாஸ்த்ரா பல்கலைக் கழக பண்டிதர்கள் எலக்ட்ரான் நுண்ணோக்கி வைத்தெல்லாம் பார்த்தாலும் கூட அவர்களுக்கு முதன்மையாக உதவியது தயிர் தான். சூரிய கிரகணத்தின் போது உணவைப் பாதுகாக்கும் முக்கிய கதிர்வீச்சு தடைபடுதாம். இதனால் உணவுப் பொருள் பல்லுயிர் பெருக்கத்தால் சீக்கிரம் கெட்டுப்போய்விடுகிறதாம்! இதைத் தீர்ப்பதற்கு அஞ்சாறு தர்ப்பையக் கிள்ளி தயிர்ல போட்டா தயிர் லேட்டா புளிக்குமாம். ஏன்னா, தர்ப்பையோட நானோ பண்புகள் காரணமாக பல பாக்டீரியாக்கள் தர்ப்பையால கவரப்படுதாம்! இதுதான் மேட்டரு! இவ்வளவு காத்திரமான ஆய்விற்கு நானோ, பயோடெக்னாலஜியெல்லாம் உள்ள வந்தாலும் ஆய்விற்கு என்ன பயன்படுத்தினார்கள்? சாட்சாத் தயிர்தான்! இந்த ஆய்விற்கு நிதி வழங்கியது சாஸ்த்ரா பல்கலைக்கழகமுன்னு செய்தி போட்டது மவுண்ட் ரோடு மகா விஷ்ணு.

இந்தியாவில் நானோ தொழில்நுட்பம் தர்ப்பை, தயிர் என்கிற அளவிற்கு இருக்க காரணம் என்ன? இங்க அந்த வசதிகள் எல்லாம் அவாகிட்டதான் இருக்கு! அவாளுக்கு சுட்டுப்போட்டாலும் சயின்ஸ் வராது! கட்டுரையோட ஆரம்பத்துல உயர் சாதிகள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களுக்கு அதிகம் செலவிடுறதா மட்டும் தான் பார்த்தோம். ஆனா அவாளோட சிந்தனையே கோமியம், தயிர், நெய், பாலைத்தாண்டி இல்லைன்றது தான் இங்கு நிருபணமாகுது. ஆனா இருக்குற ஐ.ஐ.டி, அறிவியல் நிறுவனங்களில் எல்லாம் இவா தான் இருக்கா! அதுவும் எப்படி இருக்கான்னா? ஆளும் வர்க்கத்தோட தொங்கு சதையா இருக்கா!

கல்வி மறுக்கப்படும் ஆதி திராவிடர் மாணவர்கள்
கல்வி மறுக்கப்படும் ஆதி திராவிடர் மாணவர்கள்

இதுல தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டது பால் தயிர் மட்டுமல்ல. கல்வியும் தான். சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் இப்படி புல்லரிக்கும் புல்லாய்வு நடைபெறுகிற பொழுது தமிழ் நாட்டில் உள்ள ஆதிதிராவிட மாணவர்கள், பள்ளிக்கூடம் சரியில்லைன்றதுனாலே படிப்பை பாதியிலே நிப்பாட்டுகிறார்களாம்! 2014-2015 ஆதிதிராவிட நலத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் படி தமிழ் நாட்டில் மொத்தம் 798 ஆதி திராவிட ஆரம்ப பள்ளிகளில் மொத்தம் 62,110 மாணவர்கள் பயில்கின்றனராம். ஆனால் 81 உயர்நிலைப்பள்ளிகளில் 19,465 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனராம்.

மொத்தத்தில் மூன்றில் ஒருபங்கு மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்துவதற்கு முதன்மையான காரணம் பள்ளிகளின் மிகவும் மோசமான பராமரிப்பு தான் என்கிறது சமீபத்திய ஆய்வு. மத்திய அரசு இவர்களின் நலன்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகையான 14,757 இலட்சத்தில் இது வரை மாநில அரசுகள் 8,838 இலட்சங்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கின்றனவாம். 2005-2006இல் 1,54,040 ஆக இருந்த பயனாளிகள், 06-02-2014 கணக்கின் படி 19,525 ஆக சுருக்கப்பட்டிருக்கின்றனர் என்றால் இந்த அரசு யாருக்கானதுன்னு தெளிவா தெரியும்!

இனிமேலாவது நம்ம நாட்டுல அறிவியல் வளர்ச்சி! இட ஒதுக்கீட்ல தலித்துகள் பங்கு கேட்குறாங்க! தனிநபர் வருவாய் உயர்ந்திருக்குன்னு சொல்லாதீர்கள்! இதைவிட வெட்கக்கேடான விசயம் எதுவும் இருக்க முடியாது!

ஆக ஒரு விசயம் மிகத் தெளிவு. உண்மையில் நாம் அனைவரும் பாலுக்காக செலவழிக்கிற தொகையை அதிகரிக்க வேண்டும்! அப்போதுதான் பார்ப்பனியத்திற்கும் மறுகாலனியாதிக்கத்திற்கும் பாடை கட்டி பால் ஊற்றி இறுதி சடங்கு செய்ய முடியும்.

 – இளங்கோ

குறிப்புகள் எடுக்கப் பயன்பட்ட ஆதாரங்கள்

  1. Caste determines spending on food, choice of work: NSSO
  2. Here Dalits denied basic education
  3. ‘Darbha’ grass, a natural preservative
  4. ‘Rishi has given guidelines to make planes‘
  5. கும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா?
  6. சாதியை ஒழிப்பது எப்படி? – அம்பேத்கர்
  7. தமிழர்கள் இந்துக்களா?- தந்தை பெரியார்
  8. வரலாறும் வக்கிரங்களும் –ரொமீலா தாப்பர்

ஊழல் நீதிபதிகள் என்றால் நீதிபதி சந்துருவுக்கு பயம் பயம்

0

justice-for-sale

“நீலச் சாயம் வெளுத்துப் போச்சு! ராசா வேஷம் கலைஞ்சு போச்சு!”

ன்பார்ந்த வழக்குரைஞர்களே!

வழக்கறிஞர் போராட்டம்
“நீலச் சாயம் வெளுத்துப் போச்சு! ராசா வேஷம் கலைஞ்சு போச்சு!”

உரிமைகளுக்காக போராடும் வழக்குரைஞர்கள் என்ன ரவுடிகளா? முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள் இந்து பத்திரிகையில் வெளிவந்த இரு கட்டுரைகளில் அப்படித்தான் சித்தரிக்கிறார்.

பிப்ரவரி18-ம் தேதியன்று “யாருடன் போராடுகிறார்கள் வழக்கறிஞர்கள்?” என்ற தலைப்பிலும், மார்ச் 16-ம் தேதியன்று “போராடும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு” என்ற தலைப்பிலும் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் அத்தகைய சித்திரத்தைத்தான் தருகின்றன. போராடும் வழக்குரைஞர்களை இழிவுபடுத்தி மற்றவர்கள் எழுதுவதற்கும் முன்னாள் வழக்குரைஞரும், நீதிபதியுமான ஒருவர் எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு என்பதனால்தான் நமது இந்த எதிர்வினை.

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

கடந்த ஆண்டு “கொலிஜி”ய முறையில் தெரிவு செய்யப்பட்ட நீதிபதிகளின் முறைகேடான பட்டியலை எதிர்த்து வழக்குரைஞர்கள் போராடினார்கள். இது குற்றமா? ஆமாம் சந்துருவின் கருத்துப்படி இது  குற்றமே. இதற்காக போடப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் “நீதிபதிகளின் நியமனத்தில் அவரது சமூகம், சட்டப்பின்னணியைத் தவிர அறிவாற்றல், குணம், நேர்மை, பொறுமை, உணர்ச்சி” என இன்னும் பலவற்றை பரிசீலிக்க வேண்டும் என தூக்கத்தில் இருந்து எழுந்தவனைப் போலக் கூறியது. உச்ச நீதிமன்றத்தின் நேர்மை கண்டு நமக்கோ புல்லரித்து போனது!

நீதிபதிகளின் நியமன விசயத்தில் “கொலீஜி”ய முறையில் நடந்தது என்ன? பொதுவாக சட்டத்தையும் நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதிக்கும் ரவுடிக் கூட்டமாக போலீசுதான் நடந்து கொள்ளும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் போலீசுக்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள் நீதிபதிகள். சட்டம் தெரியாதவன், வழக்குரைஞர்  தொழிலை ஒப்புக்கு செய்தவன், நீதிபதிக்கு கூஜா தூக்குபவன், உனக்கு வேண்டியன், எனக்கு வேண்டியவன் என ரகசிய பேரம் நடத்தி தான் நீதிபதிகள் நியமனப் பட்டியல் தயாரித்து அனுப்பப்பட்டது. இதை மானமுள்ள, ஜனநாயக உரிமைக்காகப் போராடக் கூடிய வழக்குரைஞர்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா? முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளான சதாசிவத்தையும், கே.ஜி.பாலகிருஷ்ணனையும் காக்காய் பிடித்து நீதிபதியானவர்களெல்லாம் நெஞ்சு நிமிர்த்தி உலா வருவதை கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டுமா? இதனை எதிர்த்துப் போராடுவது ரவுடித்தனமா?

கனவான் நீதிபதி சந்துரு அவர்களே!

போலீஸ் அடக்குமுறையை கண்டித்து
போலீஸ் அடக்குமுறையை கண்டித்து

போராடும் வழக்குரைஞர்களின் சிந்தனைக்கு” என்று வழக்குரைஞர்களுக்கு ஆலோசனை சொல்லும் நீங்கள், சக நீதிபதிகளுக்கு என்றைக்காவது ஆலோசனைகளை அள்ளி விட்டிருக்கிறீர்களா? அல்லது நீதிபதிகள் அனைவரும் எத்தகைய அறிவுரையும் தேவைப்படாத யோக்கிய சிகாமணிகளாக இருக்கிறார்கள் என்று கருதுகிறீர்களா?

மார்ச் 25 அன்று தமிழ் இந்துவில் இராமசந்திர குஹா “அறம் பிறழ்கிறார்களா உச்ச நீதிமன்ற நீதிபதிகள்” என்ற கட்டுரையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை துவைத்து தொங்கவிட்டிருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சதாசிவம் ஒரு கொலை வழக்கில் அமித்ஷாவை விடுதலை செய்து இருக்கிறார். இதற்கு லஞ்சமாக இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக இவருக்கு ஆளுநர் பதவி. இது போதாதென்று அடுத்த பதவிக்கு துண்டு போடுமுகமாக, பா.ஜ.க வின் தேசிய செயலராகி விட்ட பார்ப்பன பயங்கரவாதி அமித்ஷாவின் மகன் திருமணத்தில் மூக்குப்பிடிக்க உண்டு களித்துள்ளார்.

பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி 2012-ல் எதிர்கட்சித் தலைவராக  இருந்த பொழுது “நீதிபதிகளில் இரண்டு வகையினர் உண்டு. ஒரு பிரிவினர் சட்டங்களை நன்றாக தெரிந்து வைத்திருப்பவர்கள். இன்னொரு பிரிவினர் சட்ட அமைச்சரை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்” என கிண்டலடித்தார். நீதிபதிகளுக்கும் ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளுக்கும் உள்ள ரகசியக் கூட்டு மாநிலத்திலும், மத்தியிலும் சந்தி சிரிக்கிறதே, இதனை எதிர்த்து  ஏன் நீங்கள் பேச மறுக்கிறீர்கள்?

நீதித்துறையில் ஊழல் எந்த அளவிற்கு புரையோடி போயிருக்கிறது என்பதற்கு சாட்சியாக 50 ஆண்டுகளாக வழக்குரைஞராக இருக்கும் சாந்திபூஷண் 2010-ல், “உச்சநீதி மன்றத்தின் கடந்த 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் செய்தவர்கள்” என அறிக்கையாக தாக்கல் செய்தார். அதை அரசு இன்றுவரை வெளியிடவே இல்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் நீதிபதிகள் கூச்சமே இல்லாமல் சேவை செய்கிறார்களே, இவற்றுக்கு எதிராக நீங்கள் பேச மறுக்கிறீர்களே, ஏன்?

நீதிபதி நியமன முறையை கண்டித்து
நீதிபதி நியமன முறையை கண்டித்து

“நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம், வழக்குரைஞர்களாகிய நீங்கள் கண்டுகொள்ள கூடாது , தலையிடவும் உரிமை இல்லை” என்கிறீர்கள். தலையிட்டால் வழக்குரைஞர்கள் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுகிறீர்கள்.

பிப்ரவரி 19-ல் வழக்குரைஞர்கள் மற்றும் நீதிபதிகள் மீதான காவல்துறையின் வெறித்தனமான தாக்குதலை “வழக்குரைஞர்-காவல்துறை மோதல்“ என எழுதி இரண்டையும் சமன்படுத்துகிறீர்கள். கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசை குற்றத்தில் இருந்து விடுவிக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட வழக்குரைஞர்களை குற்றவாளியாக்குகிறீர்கள். போலீசின் லத்திக் கம்பு நீதிபதிகளின் மண்டையையே உடைத்த போதிலும், போலீசுக்கு நோகாமல் வருடிக் கொடுக்கிறீர்கள்.

வருடத்தில் 30 நாட்கள் வரை வழக்குரைஞர்கள் போராடுவதால் வழக்காடிகளான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என வருத்தம் தெரிவிக்கிறீர்களே, பல நீதிபதிகள் வழக்கை வாய்தா, வாய்தா என ஜவ்வாய் இழுப்பதையோ ஒரு வழியாய் வழக்கை நடத்தினாலும், தீர்ப்பு எழுதும் திறனற்றவர்களாக இருப்பதையோ இப்படியே வழக்காடிகளை அலையவிடும் நீதிபதிகளையோ என்றைக்காவது கண்டித்திருக்கிறீர்களா? ஒரு வழக்கை பட்டியலில் கொண்டு வர ஒரு வழக்குரைஞர் படும்பாடு உங்களுக்குத் தெரியாதா?

வழக்காடிகள் பாதிக்கப்படுவது யாரால்? குஜராத் குற்றவாளிகள் முதல் ஹசிம்புரா படுகொலை குற்றவாளிகள் வரையிலான அனைவரும் விடுவிக்கப்படுவதற்கு காரணம் வழக்குரைஞர்களின் பொறுப்பின்மையா அல்லது நீதித்துறையின் சீர்குலைவா? நீதித்துறையின் தோல்விக்கு இன்னும் எத்தனை எடுத்துக் காட்டுகள் வேண்டும்?

பிப்ரவரி 19,  போலீஸ் தாக்குதலை கண்டித்து வழக்கறிஞர் போராட்டம்
பிப்ரவரி 19, போலீஸ் தாக்குதலை கண்டித்து வழக்கறிஞர் போராட்டம்

கிரானைட் கொள்ளை விவகாரத்தில் ரெவினியூ, போலீசு அதிகாரிகளை மட்டுமல்ல, கிரானைட் கொள்ளையர்களுக்கு சாதகமாக நீதிமன்றமே அவ்வப்போது தீர்ப்பளித்திருக்கிறது என்றும், இவற்றையெல்லாம் சகாயம் பரிசீலிக்க வேண்டுமென்று கட்டுரை எழுதினீர்கள். எவையெல்லாம் முறைகேடான தீர்ப்புகள், யார் யாரெல்லாம் சந்தேகத்திற்கிடமான நீதிபதிகள் என்று நீங்கள் அறிந்த விவரங்களை, உங்களது நம்பிக்கைக்கு உரிய தகவல்களை பகிரங்கமாக அல்லவா நீங்கள் வெளியிட்டிருக்க வேண்டும்? இத்தகைய நபர்களை ரோட்டுக்கு இழுப்பது முறைகேடு என்று கருதுகிறீர்களா? அல்லது இத்தகைய ஒரு கொள்ளைக்கு துணைபோன நீதிபதிகளைத் தண்டிக்க நீங்கள் வைத்திருக்கும் வழிமுறைதான் என்ன?

ஜெயலலிதா ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நாரிமன் ஆஜரானது முறைகேடு என்று கூறினீர்கள். அது ஒன்று மட்டுமா! அதில் நடந்த அனைத்துமே முறைகேடுதான். ஜெயலலிதா வழக்கில் தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து வழங்கியுள்ள பிணையில் தொடங்கி, வழக்கை விரைந்து முடிக்குமாறு பிறப்பித்துள்ள உத்திரவு வரை அனைத்துமே அப்பட்டமான முறைகேடுகள்தான். இவற்றுக்கு எதிராக ஒரு முன்னாள் நீதிபதி என்ற முறையில் நீங்கள் செய்தது என்ன?

“சட்டப்படி வேண்டுமென்றால் நீதிமன்றத்திற்கு வா! நியாயப்படி வேண்டுமென்றால் ரோட்டுக்கு போ!” என்று சொன்னது நீங்கள்தானே! முறைகேடான நீதிபதிகள் பட்டியலை எதிர்த்து தெருவில் இறங்கி வழக்குரைஞர்கள் போராடும் பொழுது மட்டும் ஏன் கோபம் கொள்கிறீர்கள்.

தொழிலாளர்கள் போராட்டத்தினால், போக்குவரத்து தடைபட்டுப் போய், ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் போக முடியாமல் ஒரு நோயாளி பரிதவிப்பதைக் காட்டுவதன் மூலம், எல்லாவிதமான போராட்டங்களையும் கொச்சைப்படுத்துவது என்பது நாலாந்தர தமிழ் சினிமா இயக்குநர் சங்கர் கடைப்பிடிக்கும் உத்தி. நீங்கள் சொல்லும் கருத்துக்கும் சங்கர் சொல்லும் கருத்துக்கும் என்ன வேறுபாடு என்பதை நீங்கள்தான் விளக்கவேண்டும்.

வழக்குரைஞர் மில்ட்டன்,
செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

தொடர்புக்கு : 9094666320

தொடர்புடைய சுட்டிகள் :

கொடைக்கானல் : பழங்குடி மக்கள் போராட்டத்தை ஆதரிப்போம் !

0

வனநிலம் மீதான உரிமைச்சட்டம் 2006-ம் பழங்குடியினர்களின் வாழ்வாதாரமும்!

  • கொள்ளையர்களின் முதல்வர் ஜெயா மற்றும் கார்ப்பரேட்டுகளின் பிரதமர் மோடியின் வஞ்சக சதியை முறியடிப்போம் !
  • கொடைக்கானல் வனவிலங்கு சரணாலய திட்டத்தை இழுத்து மூடுவோம்!
  • மலைப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம்!

என்ற அடிப்படையில் 30-03-2015 அன்று வன உரிமையை மீட்டெடுக்கும் பழங்குடியினர் கூட்டமைப்பு சார்பாக கொடைக்கானலில் பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

kodaikanal-demo-07தமிழகத்தின் நிலப்பரப்பு 1.30 லட்சம் சதுர கிலோமீட்டர், இதில் 22.877 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு வன நிலமாகும், இவ்வனங்களைச் சார்ந்து ஏழரை லட்சம் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். வன உரிமைச்சட்டத்தின்படி பழங்குடியினர் கிராமங்களின் கிராம சபை ஒப்புதல் இல்லாமல் வனப்பகுதியில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

kodaikanal-posters-1வனம் என்றாலே மரம், செடி, கொடிகள், மங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான். வனவிலங்குகள் மீது அரசுக்கு வந்துள்ள திடீர் அக்கறைக்கு காரணமென்ன? சில சமூக விரோதிகளால் விலங்குகள் பாதிக்கப்பட்டதாக கூறி அரசு இந்த சரணாலய திட்டத்தைக் கொண்டு வருகிறது. ஆனால் இதுவரை அவ்வாறு கொல்லப்பட்ட விலங்குகள் பற்றிய விபரம் எதையும் அரசு வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட விலங்குகள் அம்மாவிடம் முறையிட்டதா? என்ற விவரமும் தெரியவில்லை.

kodaikanal-posters-2தமிழகத்தில் பழங்குடியினர்களின் ஒப்புதல் இல்லாமலேயே சத்தியமங்கலம், கொடைக்கானல், மேகமலை ஆகிய மூன்று பகுதிகளை வன உயிரின காப்பமாக (சரணாலயம்) மத்திய அரசு அறிவித்துள்ளது.

kodaikanal-posters-3வனஉயிர் பாதுகாப்புச்சட்டம் 1972 பிரிவு 26ஏ1(பி)-ன்படி தமிழக அரசு கொடைக்கானல் பகுதியில் வனஉயிர் இன சரணாலயம் அமைக்க அதிவேகமாக செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது, ஆகவே சரணாலயம் அமைக்கப்படுகையில் இது தமிழகத்தின் பனிரெண்டாவது வன உயிர் சரணாலயமாக கருதப்படும்.

kodaikanal-notice-5இந்த வன உயிர் சரணாலயத்தின் திட்ட வரைமுறையானது முன்பு 1994-ம் ஆண்டே ஒப்புதல் பெறப்பட்டு தற்பொழுது கடந்த 2013 செப்டம்பர் 20-ம் தேதி இத்திட்டத்தினை செயல்படுத்த அரசாணை வெளிவந்துள்ளது, இத்திட்டத்தின் மூலம் பல ஆயிரம் ஏக்கர் வனஉயிர் சரணாலயத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது உறுதியான மற்றும் மிகப்பெரிய திட்டம் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏழு பகுதி அல்லது எல்லைகளாக இத்திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. அவை

1. கொடைக்கானல்

2. பெரும்பள்ளம்

3. தேவதானப்பட்டி

4. பூம்பாறை

5. பேரீச்சம்

6. வந்தரேவு

7. பழனியிலிருந்து ஒரு பகுதி.

6 இலட்சம் மக்களின் வாழ்வாதாரமாகவும், சுற்றுலா தளமாகவும், காபி, மிளகு, ஏலக்காய், ஆரஞ்சு, பலா, கேரட், பீட்ருட், செவ்வாழை, தேன், உள்ளிட்ட ஏராளமான உணவுப்பொருட்களை வழங்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்குகிற இந்த மலையில் வனவிலங்கு சரணாலயம் அமைத்தால் இவை அனைத்தும் பாதிக்கப்படும்

வன உரிமையை மீட்டெடுக்கும் பழங்குடியினர் கூட்டமைப்பு சார்பில் கொடைக்கானல் பகுதியைச் சுற்றியுள்ள மங்களம்கொம்பு, பெருமாள்மலை, கொட்டக்கொம்பு, பண்ணைக்காடு, கள்ளக்கிணறு, நல்லுர்காடு, கடையமலை, சேம்படியூத்து, கடுகுதடிபுதுர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர், ஆதிவாசிகள், ஆதிதிராவிடர் என சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பேரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்தப் பேரணிக்கு பழங்குடியினர் கூட்டமைப்பைச் சேர்ந்த ராஜேஸ்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார், பழங்குடியினர் கூட்டமைப்பு தலைவர் முருகேசன் தலைமையில் கலையரங்கம் பகுதியில் இருந்து பேரணி துவங்கியது. இந்த பேரணியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும், சுற்றுப்புற சூழல் அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம், மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், வழக்கறிஞர்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர். ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் பறையோசை பேரணியை கடைசிவரை உற்சாசகத்துடன் நடத்திச் சென்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இரண்டு மணிநேரம் நடந்த பேரணி இறுதியில் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நின்று, கோரங்கொம்பு பழங்குடியினர் கூட்டமைப்பைச் சேர்ந்த வி.சின்னாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்திய ஊட்டி வழக்கறிஞர் கே.விஜயன் தனது உரையில்..

kodaikanal-demo-02அச்சமில்லை அச்சமில்லை என்று வீதியில் இறங்கி பேராடினால் மட்டுமே இந்த வன சரணாலய திட்டத்தை விரட்ட முடியும். நீங்கள்தான் உண்மையான போராளி. பலியன் இன பெண்தான் நாம் வணங்கும் மீனாட்சி. அவள்தான் இந்த வனத்தைக் காப்பவள். நீங்கள் அவளின் வாரிசுகள். உங்களுக்குத்தான் இந்த வனம் சொந்தம்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை கிளையின் துணைச்செயலாளருமான வாஞ்சிநாதன் தனது உரையில்…

kodaikanal-demo-03இந்த பேரணியும் ஆர்ப்பாட்டமும் மனநிறைவான போராட்டம். இது பூர்வீக மக்களின் போராட்டம், நாடு முழுவதும் மக்கள் போராடுகிறார்கள். நாம் அமைதியாக போராடுகிறோம். நம்முடைய போராட்டத்தின் வடிவத்தை மாற்ற வேண்டும். வனத்தையும் விலங்குகளையும் பாதுகாக்கின்ற மலைவாழ்மக்களை இந்த வனத்தை விட்டு வெளியேற்றத் துடிக்கிறது அரசு. உண்மையில் வெளியேற்றப் பட வேண்டியவர்கள் பாரஸ்டர், போலீஸ். இவர்களால்தான் வனத்திற்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைகிறது.

வனம், மலை எங்கள் உயிர். எங்கள் தாய்போல அதை நாங்கள் காப்போம். இந்த வனவிலங்கு சரணாலயம் அமைப்பது மூலம் இனி ஒவ்வொரு விசயத்திற்கும் பாரஸ்டர்களை கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டால் எப்படி உயிர் வாழ்வது?

நகரத்தில் வாழ்பவனுக்கு இதுபற்றி தெரியாது. அவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கோர்ட்டை முழுமையாக நம்பாத போராட்டம் ஜெயிக்கும். இதுபோன்ற போராட்டங்களுக்காக நாங்கள் இலவசமாக வழக்கு நடத்துவோம்,

உங்களுக்கு ஆதரவாக மதுரை உயர்நீதிமன்றத்தில் போராட்டம் நடக்கும். கொடைக்கானலை போர்க்களமாக மாற்றும் போது அரசு அலுவலகங்கள் இயங்காது. கொடைக்கானலில் குடியேறுவோம். கோடைவிழா எப்படி நடக்கும் என்று பார்ப்போம்.

உன் சட்டத்தை (அரசே) நீயே மதிக்கமால் இருக்கும் போது நாங்கள் என்ன மயித்துக்கு மதிக்க வேண்டும். இந்த மலைவாழ் மக்களுக்கு 60 வருடமாக பட்டா வழங்கவில்லை. 60 வருடமாக மின்சாரம் இல்லை, எனவே அனைவரும் கொடைக்கானல் நகர்பகுதியில் குடியேறுவோம். இந்த போராட்டத்தை இன்றோடு நிறுத்திவிடக்கூடாது. வீட்டுக்கு ஒருவர், குடும்பத்துக்கு ஒருவர் என ஒதுக்கி தொடர்ந்து போராடவேண்டும் நாங்களும் எங்கள் தோழமை அமைப்புகளும் உறுதுணையாக இருப்போம் என்று கூறி உரையை முடித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

திருவள்ளூர் மாவட்டம் தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் குணசேகரன் தனது உரையில்…

உடல் ஊனமுற்றோர் தொடர் முழக்கப் போராட்டங்களை தொடர்ந்து சென்னையில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கண் தெரியாதவர்கள் சென்னையில் போராடுகிறார். நாம் ஏன் பயப்படவேண்டும். கொடி பிடித்து ரோட்டுக்கு வராத போராட்டம் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.

ஆதிவாசிகளின் நாடுதழுவிய போராட்டத்தின் மூலம் வன உரிமை சட்டம் 2006-ஐ பெற்றுள்ளோம். விலங்குகள் எங்கள் கடவுள், எங்கள் சொந்தம். சட்டம் பட்டா தர சொல்கிறது, யார் அதை மதிக்கின்றனர்? வறண்ட பூமியாக மாறிவருகிறது இந்த வனம். உங்களுக்காக போராட ஒரு கூட்டம் உள்ளது. உங்கள் ஆயுதங்கள் கூர்மையானது தொடர்ந்து வீதியில் இற்ங்கி போராடுங்கள் என்று கூறினார்.

மச்சூர் ரவிச்சந்திரன் தனது உரையில்..

மனித உயிர் சரணாலயம் வேண்டுமா? வன விலங்கு சரணாலயம் வேண்டுமா? மோடியும் லேடியும் போட்ட சட்டம் வன உயிர் பாதுகாப்பு சரணாலயம் இந்த சட்டம் பெரும் முதலாளிகளுக்காக போடப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் முதலில் நம்மை வெளியேற்றிவிட்டு பின்பு டாட்டா, அம்பானி, அதானி போன்ற முதலாளிகள் கொள்ளையடிக்க வனத்தை பிரித்து கொடுக்க காத்திருக்கின்ற மத்திய அரச்சையும் மாநில அரசையும் வீதியில் இறங்கி விரட்டி அடிப்போம் என்று கூறினார்.

குமாராசாமி தலைமை ஆசிரியர் ஓய்வு மச்சூர்

அன்று 1956-ல் 863 ஏக்கர் நிலங்களை பிரித்து ஒவ்வொருவருக்கும் 1 முதல் 1-1/2, 2 ஏக்கர் என அரசு கொடுத்து மக்களை வாழவைப்போம் இந்த வனத்தைக் காப்போம் என்று பிரித்துக் கொடுத்தது. இன்று வனவிலங்கு சரணாலயம் அமைத்து அதே மக்களையும் வனத்தையும் அழிக்க திட்டமிட்டுள்ளது அரசு. ஆதி வாசி என்றால் ஆதியில் பிறந்தவன் என்று அர்த்தம்.

இன்று எத்தனையோ திராவிட கட்சிகள் வந்தாலும் ஆதிதிராவிடர்களின் வாழ்நிலை மட்டும் மாறவேஇல்லை. வனவிலங்கு சரணாலயத்தை எங்கு அமைக்கப் போகீறீர்கள் என்று மேல்மலை மக்கள் கேட்டால் கீழ்மலையில் அமைக்கப்போகிறோம் என்றும், கீழ்மலை மக்கள் கேட்டால் மேல்மலையில் அமைக்கப்போகிறோம் என்றும் பொய்கூறி வருகிறது அரசு. எந்தப்பகுதியில் அமைக்கப்பட உள்ளது என்று வெளிப்படையாக கூறுவதற்குகூட இந்த அரசுக்கு துணிவில்லை. கொட்ட கொட்ட குனிபவனும் முட்டாள், கொட்டுபவனும் முட்டாள் என்று தனது ஆர்ப்பாட்ட உரையை முடித்தார்.

கொடைக்கானலைச் சேர்ந்த ஜெஸிஸ்தா பி.யூ.சி.எல் தனது உரையில்….

kodaikanal-demo-08படைச்சவனுக்கே இல்லாத பாகற்காய் பந்தல் கட்டி தொங்குதாம். உருவாக்கியவர்கள் நாங்கள், விவசாயத்தை நாங்கள் முடிவு செய்யவேண்டும். இது ஆதிவாசிகளின் உரிமை. இங்கு வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டால் அது ஆதிவாசிகளை மட்டும் பாதிக்காது. 6 மணிக்கு மேல் விலங்குகள் வெளியில் வந்து விடும். அதனால் வியாபாரிகளும் அதிக அளவில் பாதக்கப்படுவார்கள். 6 மணிக்குமேல் போக்குவரத்து நிறுத்தப்படும். சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்படுவார்கள். பாராஸ்டர்களை உள்ளே விட்டதால் இன்று நாம் வெளியேற்றப்படுகிறோம். நியாயத்தை தேடி நாம் செல்கிறோம். ஓட்டுபோட்ட மக்களுக்கு நீங்கள் போடும் சட்டம் வனவிலங்கு சரணாலய திட்டம்.

உசிலை வட்டார வி.வி.மு செயலாளர் குருசாமி தனது உரையில்..

வன விலங்கு சரணாலய திட்டம் ஒரு ஃபிராடு திட்டம்.

வனம், விலங்கு மற்றும் மக்கள் மூன்றும் இயற்கையின் வரப்பிரசாதம். பகுத்தறிவு உள்ள மனிதன் வனத்தை தேவைக்கு பயன்படுத்தினான். இந்த திட்டம் பொண்டாட்டியை விற்று தண்டட்டி வாங்கின கதை.

நகர் பகுதியில் செயின் பாலீஸ் போடுகிறேன் என்று வீடு வீடாக வந்து பாலீஸ் போடுபவன் பொது மக்களின் செயினை வாங்கி பாஸீஸ் போட்டு கொடுப்பான். அதன் பின் அந்த செயின் எடை கணிசமான அளவு குறைந்திருக்கும். பட்டப்பகலில் திருடுபவன் செயின் பாலீஸ் போடுவபன். அவன் எப்படியோ அப்படிதான் வனவிலங்கு சரணாலய திட்டத்தை கொண்டுவருபவன் செயல் அவர்கள் முழு திருடர்கள்.

லீலாவதி தனது உரையில்…

பன்னாட்டு கம்பெனிகளின் முதலாளிகளுக்கு சேவை செய்யக் கூடிய இழி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை நீடித்தால் பெண்கள் கற்பு சூறையாடப்படும். பெண்கள் ஒரு கட்டு விறகு விற்றால்தான் வாழ்க்கை. வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டால் அவர்கள் வனத்தில் விறகு எடுக்க முடியாது. அவர்களின் வாழ்நிலை மிகவும் பாதிக்கப்படும். கொட்ட கொட்ட குனியக் கூடாது. திறந்த வீட்டில் நாய் நுழைந்த மாதிரி வருகிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் . கிராம சபை கட்டவேண்டும். தலைமை அமைக்க வேண்டும்.

நேற்று சில கயவர்கள் லீலாவதி-முருகேசனை, ‘போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க அதனால் பேரணி நடக்காது யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள்’ என்று சில கிராமங்களில் கூறியுள்ளார்கள்.

நான் அவர்களை கேட்கிறேன், நீங்க ஆம்பளையா இருந்தா நேரடியாக வந்து பேசுங்கள். நாங்கள் இங்கதான் இருக்கிறோம். நாங்கள் மொத்தம் 76 கிராமங்களில் வாழ்ந்து வருகிறோம். எங்களை மொத்தமாக கைது செய்து சிறையில் அடைத்து எங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். நாங்கள் தயாராக உள்ளோம். போராடமாட்டோம். ஆனால் எங்கள் தாயை (வனத்தை) நாசப்படுத்தினால் விடமாட்டோம். விரட்டி அடிப்போம். 2006 சட்டப்படி எங்களுக்கு பட்டா வழங்குங்கள் என்று கூறினார்.

தலைமை உரையில் பேசிய சின்னாண்டி இதுவரை 2006, 2008, 2013 வழிகாட்டு நெறிமுறைகள் முறைப்படி கோட்டநில கமிட்டி தலைமையில் கோட்டாட்சியர் வனஉரிமை தொடர்பாக 470 மனு கொடுத்துள்ளோம். பதில் வேண்டும். ஊராட்சிமன்ற தலைவர்கள் பேரில் வனத்துறை மூலம் சட்டரீதியாக வனவிலங்கு சரணாலயத் திட்டத்தை நிறுத்தி விட்டோம் என்ற அறிக்கை வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நோட்டீசில் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ம.க.இ.க மையக்கலைக்குழுவின் பாடலும் பறையும் மலைவாழ் மக்களிடையே பேராட்ட உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

kodaikanal-demo-01தொகுப்பாக..

மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானல் பகுதியில் நினைத்தாலே சில்லென வீசும் காற்றும் வானை முட்டும் மரங்களும் பெரும் பள்ளத்தாக்குகளும் கொண்டைஊசி வளைவுகளும் நம்மைத் தொட்டுச்செல்லும் வெண்பனி மேகங்களும் கண்ணைக்கவரும் இயற்கைக் காட்சிகளும் நம் கண்முன்னே விரியும். கொடைக்கானலில் வனவிலங்கு சரணாலயம் அமைத்து பல பன்னாட்டு கம்பெனிகளுக்கு வனங்களை பிரித்து கொடுத்து கனிம வளங்ளை கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளது மத்திய மாநில அரசுகள்.

வனங்கள் மற்றும் வன விலங்குகளுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தவர்கள் இருப்பவர்கள் பழங்குடியினர்கள், இவர்களை அரசு வனங்களில் இருந்து அந்நியப்படுத்தி மொட்டைப் பாறைகளில் தொகுப்பு வீடுகள் என்ற பெயரில் குடியமர்த்திய பின்னே, வனங்களும் வன விலங்குகளும் சமூக விரோதிகளால் அழிக்கப்பட உள்ளது. அரசு பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமே வனங்களும் வன விலங்குகளும் பாதுகாக்கப்படும்.

செய்தி:
பு.ஜ செய்தியாளர்
உசிலம்பட்டி

அவுட்லுக் ஆசிரியர் வினோத் மேத்தா – அருந்ததி ராய் அஞ்சலி

7

அவுட்லுக் இதழ் துவங்கிய காலம் முதல் அதன் ஆசிரியாக நீண்டகாலம் செயல்பட்ட வினோத் மேத்தா மார்ச் 8-ம் தேதி காலமானார். அவுட்லுக் ஒரு கார்ப்பரேட் ஊடகம் என்றாலும் இந்தியா டுடே போன்ற அக்மார்க் கார்ப்பரேட் ஊடகங்களின் அறமற்ற பார்வையிலிருந்து சற்றே வேறுபட்டது. சரியாகச் சொன்னால் இந்த வேறுபாட்டின் அடிப்படை வினோத் மேத்தா என்பதே சரி.பரபரப்பான செய்திகள், நுகர்வுக் கலாச்சாரம், மசாலா சினிமா என்று அநேக விசயங்களில் அவுட்லுக்கும் மற்றுமொரு வணிக ஊடகம்தான். ஆனால் பல்வேறு தருணங்களில் அவ்விதழ் அரசியல் பிரச்சினைகளில் அதிகார மட்டங்களை கேள்வி கேட்டும், ஆளும் வர்க்கத்தின் அலை வரிசையிலிருந்து ஓரளவு விலகி நின்றும் பல கட்டுரைகளை வெளியிட்டிருக்கின்றது.

இந்துமதவெறிக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் மையநீரோட்ட ஊடகங்களில் அவுட்லுக் முதன்மையானது. இன்று மோடியின் ஆட்சியிலும் கூட அத்தகைய பெருமையை அவுட்லுக் தக்கவைத்து வருகிறது. இதனால் இன்றும் அவ்விதழை இந்துமதவெறியர் மட்டுமல்ல அதன் வாசகர்களில் பலர் கூட எதிர்க்கின்றனர். வசைமாரி பொழிகின்றனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் இந்துமதவெறி எதிர்ப்பு சக்திகளுக்கு பெரும் ஊக்கசக்தியாக திகழும் அருந்ததி ராயின் கட்டுரைகள் பல அவுட்லுக்கில் வெளியாயின. இவற்றை வெளியிடும் தைரியம் வேறு எந்த ஆசிரியருக்கு இருக்கிறது என்றால் பதில் இல்லை. ஒருக்கால் இந்தக்கட்டுரையில் அருந்ததி ராய் கூறியிருப்பதைப் பார்க்கும் போது இன்றைய அவரது இடத்தை உருவாக்கிய பாதையில் அவுட்லுக்கின் பங்களிப்பும் இருக்கிறது.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட போது, அதற்கு எதிரான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரையை அவுட்லுக் வெளியிட்டது. மாவோயிஸ்ட் தோழர் ஆசாத் பேச்சுவார்த்தைக்கு என்று அழைக்கப்பட்டு பின்னர் நயவஞ்சகமாக கொன்றழிக்கப்ப்பட்ட போது, அந்த போலி மோதல் கொலையை அம்பலப்படுத்தி அவுட்லுக் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது.

மிக சமீபத்தில் கூட பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா சம்பந்தப்பட்ட போலி மோதல் கொலைகள் பற்றிய விரிவான கட்டுரை அவுட்லுக்கில் இடம்பெற்றது. அந்தக் கட்டுரை பா.ஜ.க.வின் தலைவர் அமித்ஷா எப்பேர்பட்ட கிரிமினல் என்பதை ஒளிவுமறைவின்றி அம்பலப்படுத்தியது.

வினோத் மேத்தா முதலாளித்துவ ஜனநாயகத்தையே அதிக பட்ச சாத்தியமாக சரி என்பதாக ஏற்றுக் கொண்டவர். எனினும் சொல்லிக் கொள்ளப்பட்ட இந்த ஜனநாயகம் சந்தி சிரிக்கும் போது அவற்றை கேள்வி கேட்க அவர் தயங்கியதில்லை. இத்தகைய குறைந்தபட்ச நேர்மை கூட இன்றைய ஊடக ஜாம்பவான்கள் பலரிடம் இல்லை.  இந்த அளவாவது அவரிடம் ஒரு சமூகப்பார்வை இருந்தது.

அவுட்லுக் இதழை தொடங்கிய போது தனது பத்திரிக்கையின் அரசியல் மைய இடதுசாரி (left of centre) நிலை என்று அறிவித்தார். ஆனால் அப்படி ஒதுங்க ஒரு இடம் இல்லை என்பது பிற்பாடு அருந்ததி ராய்-க்கு அவர் அளித்த ஊடக முக்கியத்துவம் உணர்த்தியது. தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் அவரது பார்வைக்கு எதிர்திசையிலான டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கருத்து சொல்லி வந்தார். அர்னாபின் குறுக்கீடுகளுக்கு நடுவே இருமிக் கொண்டும், மூச்சிரைத்துக் கொண்டும் அவர் தெரிவித்த கருத்துக்கள் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தன. தற்செயலாக அவரது மறைவின் போது அதே அர்னாப்பை திரைகிழித்து அவுட்லுக்கில் ஒரு அட்டைப்படக் கட்டுரையே வெளிவந்தது.

அருந்ததி ராய் தனக்கும் வினோத் மேத்தாவுக்கும் இடையே இருந்த அரசியல் உறவையும், அழகிய நட்பையும் குறித்து எழுதிய நினைவஞ்சலியின் தமிழாக்கம் இது. அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டு இந்துத்துவம் மேலும் மேலும் தனது இருப்பை உறுதி செய்து வருகின்ற நேரத்தில் அதன் பேராபத்தை மக்களுக்கு இடைவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டிருந்த ஒரு சிறந்த ஊடகவியலாளரின் மரணம் குறித்த அருந்ததி ராயின் இந்த அஞ்சலிக் குறிப்பை படிக்கும் போது நமது இதயம் மேலும் கனக்கிறது.

– வினவு

Shuffled Off Somewhere, Have You?

எங்கே மறைந்து போனீர்கள், வினோத்? – அருந்ததி ராய்

நீரா ராடியா தொலைபேசி உரையாடல் பதிவுகளை அவுட்லுக்கில் வெளியிட்டு ஒரு நல்ல பத்திரிகை ஆசிரியர் செய்ய வேண்டியதை செய்தார், வினோத் மேத்தா. அதன் மூலம், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், ஊடக புரோக்கர்கள் மற்றும் அவர்களது கார்ப்பரேட் புரவலர்களுக்கு இடையேயான கூட்டுப்புணர்ச்சியின் இழிந்த டைரிக்குறிப்புகளை அம்பலப்படுத்தினார். அவ்வாறு, நாட்டை ஆளும் குற்றக் கும்பல் தங்கள் நலனுக்காக உருவாக்கி வைத்திருந்த மேட்டுக்குடி மன்றத்தின் விதிகளை மீறினார். அந்த நாடகம் முடிவுக்கு வந்து திரை விழுந்த போது, அதில் பங்கேற்ற பாத்திரங்களின் மேல் நோக்கிய உத்வேகத்தில் அது ஒரு சிறு அசௌகரியமான தேக்கமாக மட்டும் முடிந்தது என்பதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால், அதற்காக வினோத் மேத்தா எதிர்கொண்ட பின்விளைவுகள் தீவிரமானவை. அவரது வாழ்வை வேகமாக முடித்து வைக்க அவையும் ஒரு பங்காற்றியிருந்தன என்பதில் எனக்கு ஐயமில்லை.

வினோத் மேத்தா
சுதந்திரமான பத்திரிகை ஆசிரியர் என்ற கருத்தாக்கத்தின் மறைவு.

எப்படியோ அவர் சென்று விட்டார். அவரோடு தடுமாற்றமில்லாத, ஊகிக்க முடியாத, விசித்திரமான பத்திரிகை ஆசிரியரின் சகாப்தமும் போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவரைப் போன்ற விசித்திரமான நபர்கள் யாரும் இனிமேல் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அப்படிப்பட்டவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகள் சுருங்கிப் போன ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம்.

அவரது மறைவை ஒட்டி பெருமளவில் வெளியான இரங்கல் செய்திகள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்தன. அவர்களில் அவருடன் தொழில்ரீதியாக எதிர்துருவங்களாக இருந்தவர்களும் உண்டு. அவை அவரது மறைவுக்காக மட்டுமின்றி, அவரைப் போன்ற சுதந்திரமான பத்திரிகை ஆசிரியர் என்ற கருத்தாக்கத்தின் மறைவுக்கானதாகவும் இருந்தன.

ஒரு வகையில் வினோத் மேத்தா மாதிரியான கலகவாதிக்கு இடம் கொடுத்ததன் மூலம் அவுட்லுக் இதழின் உரிமையாளர்கள் தமக்குத் தாமே சிறப்பு சேர்த்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களது அலுவலகங்கள் பலமுறை தாக்கப்பட்ட போதும், பழிவாங்கும் வகையிலான சோதனைகளுக்குள்ளாக்கப்பட்ட போதும் அவர்கள் வினோத் மேத்தாவை விட்டுக் கொடுக்கவில்லை. வினோத்துக்கு இரங்கல் தெரிவிக்கின்ற நம்மைப் போன்றவர்களைப் பொறுத்தவரை, சுதந்திரமான பத்திரிகை ஆசிரியர்கள் எதிர்காலத்தில் தோன்றுவார்கள் என்ற நம்பிக்கையை விட்டு விட முடியவில்லை.

நான் வினோத்தின் இழப்பை மிகவும் அதிகமாக உணர்வேன். ஒரு எழுத்தாளராக எனது வாழ்க்கையில் மிகமுக்கிய பங்கை ஆற்றியவர் அவர்.

அருந்ததி ராய்
என்னுடைய படைப்புகளுக்கும் வினோத் மேத்தாவுக்கும் என்ன தொடர்பு? மிக அதிகமான தொடர்பு இருக்கிறது என்பதே உண்மை.

எங்களுக்கு எல்லா விஷயங்களிலும் ஒத்த கருத்து இருந்ததில்லைதான்;  பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. காங்கிரஸ் குறித்து, காஷ்மீர் குறித்து (அது இல்லாமலா!), சாதிய அரசியல் குறித்து, வினோதமானதும் சமீபத்தில் மீள எழுதப்பட்டதுமான அவரது “மீனா குமாரியின் வாழ்க்கை வரலாறு” புத்தகம் என்று வேறுபடும் புள்ளிகள் நிறைய இருந்தன. ஆனால், இப்போதைய கருத்து வேறுபாடு நிரந்தரமானது; தீர்க்கமுடியாதது. அவர் போயிருக்கக் கூடாது என்கிறேன் நான்; இன்னும் கொஞ்ச காலம் அவர் நம்மோடு இருந்திருக்கலாம். ஆனால், அவர் நான் கருதுவதை ஏற்றுக் கொள்ளாமல் போயே விட்டிருக்கிறார். இது அபத்தமானது; அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

1997-ல் என்னுடைய ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ வெளியான பிறகு, மேற்கத்திய ஊடகங்களுக்கு கிழக்கு உலகைப் பற்றி விளக்கிச் சொல்லும் முகவராக மாறிவிடும் அபாயத்தில் நான் இருந்தேன். அத்தகைய பங்களிப்பு செய்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லை. நான் என்ன எழுதினாலும், எந்த வகையான விவாதங்களுக்குள் சிக்கிக் கொள்வதாக இருந்தாலும், எந்த களேபரத்தில் ஈடுபட விரும்பினாலும் அதை இங்கே செய்ய விரும்பினேன். எந்த ஒரு தேசியப் பெருமிதத்துக்கான காரணத்தாலோ, இது என்னுடைய நாடு என்ற உணர்வாலோ இல்லை; நான் வாழும் இடம் இது என்ற எளிமையான காரணத்தால் மட்டுமே. வினோத் மேத்தா என்னுடைய இந்த முயற்சியின் கூட்டாளி ஆனார். 1998-க்கு பிறகு நான் எழுதிய அனைத்தும் முதலில் அவுட்லுக்கில் தான் வெளியாகின.

வினோத் மேத்தா
நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய போதும், நீண்டகாலமாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை. தொலைபேசியில் மட்டுமே அதிகம் உரையாடி வந்தோம்.

எங்கள் உறவின் மிகத் தொடக்கத்திலே, இதற்கு மாறாக பல கருத்துகள் சொல்லப்பட்டாலும் (அப்படி நிறைய உள்ளன), நாங்கள் யாரும் மற்றவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று புரிந்து கொண்டிருந்தோம். எந்த உறவிலும் இது அபூர்வமான, அழகான ஒன்று என்று கருதுகிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய போதும், நீண்டகாலமாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவேயில்லை. தொலைபேசியில் மட்டுமே அதிகம் உரையாடி வந்தோம். நான் அவர் வீட்டுக்கு சென்றதே இல்லை. என்னை பார்க்க ஒரே ஒருமுறை மட்டும் சமீபத்தில் வந்தார்.

என்னைப் பார்க்க வந்தார் என்று சொல்வதைக் காட்டிலும் என் வீட்டை பார்வையிட வந்தார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். நான் எப்படி வாழ்கிறேன் என்று தனது மனதில் உருவாக்கிக் கொண்ட சித்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வந்தது போன்று இருந்தது, அவரது வருகை. அலட்டிக் கொள்ளாமல் தனது முதுமையின் தடுமாற்றத்துடன் வந்தவர் ஒரு முறை சுற்றி பார்த்து விட்டு மறைந்து விட்டார். விருந்தினர் பாத்திரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை; விருந்து உபச்சாரம் செய்யும் பாத்திரம் எனக்கும் பொருந்தவில்லை; நாங்கள் எந்த வகையிலும் அதற்கு பொருத்தமற்றவர்கள். எங்கள் இருவரிடையேயான சமூக உறவாடல் இந்த அளவுக்குத்தான் இருந்தது.

இருப்பினும், இந்த வினோதமான, உரையாடலற்ற, குறைந்தபட்சமான உறவுமுறையிலிருந்துதான் ஐந்து பகுதிகளாக வெளியிடப்படும் அளவிலான கட்டுரைகளும், நேர்முகங்களும் படைக்கப்பட்டன. அவை இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல்வேறு மொழிகளில் செய்தித் தாள்களிலும், செய்தி இதழ்களிலும் வெளியிடப்பட்டன. இவற்றின் படைப்புக்கும் வினோத் மேத்தாவுக்கும் என்ன தொடர்பு? மிக அதிகமான தொடர்பு இருக்கிறது என்பதே உண்மை. கட்டுரைகளை நான்தான் எழுதினேன். ஆனால், “நான் என்ன எழுதினாலும், அதை வரையறுக்கப்பட்ட ஒரு இதழியல் வடிவத்துக்குள் மட்டுறுத்தாமல் வினோத் மேத்தா வெளியிடுவார்” என்ற நம்பிக்கைதான் எழுதுவதற்கான சுதந்திரத்தையும், வேகத்தையும் எனக்குக் கொடுத்தது. இது எளிதில் கிடைத்து விடுவது அல்ல. இப்போதும், எப்போதும் ஒரு வெகுஜன வாசகப்பரப்பை குறிவைக்கும் பெரிய வணிக இதழ், அவுட்லுக். அதன் பலம் அதுதான். இருப்பினும், என்னுடைய, மரபை மீறுகின்ற, மிக நீண்ட, எல்லோராலும் ஏற்றுக்கொள்ள இயலாத, பெரும்பாலும் புயலைக் கிளப்பும் கட்டுரைகளை பிரசுரிக்கும் தன்னம்பிக்கையும், நெகிழ்வுத் தன்மையும் வினோதிடம் இருந்தன.

இதற்கான விதிகள் ஆரம்பத்திலேயே வகுக்கப்பட்டு விட்டன. 1998-ல் நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கு எதிர்வினையாக நான் எழுதி அனுப்பிய ‘சிந்தனையின் முடிவு’ கட்டுரையில் “‘யார் இந்த நாசமாப் போன பிரதமர், அணுகுண்டுக்கான பொத்தானில் கை வைக்கும் உரிமையைப் பெற'” என்ற வரியைப் படித்து விட்டு, “இப்படி உண்மையிலேயே சொல்ல விரும்புகிறீர்களா? அல்லது அதை ‘யார் இந்தப் பிரதமர்?’ என்று மாற்றிக் கொள்ளவா?” என்று கேட்டார். “அப்படி மாற்றுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை” என்றேன், நான். எனவே ‘யார் இந்த நாசமாப் போன பிரதமர்?’ என்ற வாக்கியம் அப்படியே வெளிவந்தது.

இப்போது, உதவி கேட்க வேண்டியது என்னுடைய முறை. அந்தக் கட்டுரை வெளியாவதை ஒட்டி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பாதையில் நடப்பதைப் போல உணர்ந்த நான், “இந்தக் கட்டுரை வெளியாகும் இதழின் அட்டையில் என்னுடய புகைப்படத்தை போடுவதை தவிர்க்க இயலுமா?” என்று வினோதிடம் கேட்டேன். “என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்” என்றார்  அவர். அவரது மொழியில் அதற்குப் பொருள், “அதுக்கு வேறு இடம் பார்த்துக்கோ”. இதழ் வெளியானபோது, அதன் அட்டையில் என் புகைப்படமும், அதன் மேல் கட்டுரையின் மிக விவகாரமான வரி கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது : “நான் பிரிந்து செல்கிறேன்”. அதன் பிறகு எல்லா வகையான கலாட்டாக்களும் அவிழ்த்து விடப்பட்டன.

இவைதான் எங்கள் உறவினுடைய எழுதாத சட்டங்கள். என்னுடைய கட்டுரை எதிலும் எனது சம்மதம் பெறாமல் சிறு மாற்றத்தைக் கூட வினோத் செய்ய மாட்டார். அதே போன்று, என்னுடையது அட்டைப்படக் கட்டுரையாக வருவதாக இருந்தாலும், அதன் உள்ளடக்கம் மற்றும் அட்டை வடிவமைப்பு பற்றி கருத்து சொல்வதை நான் தவிர்க்க வேண்டும். பதினைந்து வருடங்களுக்கு இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அத்வானி வினோத் மேத்தாவிற்கு இறுதி மரியாதை
மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வினோதின் உயிரற்ற உடலின் நீளத்துக்கு, ஒரு புறம் எல்.கே அத்வானி, மறுபுறம் நான் நின்றிருந்தோம் (படம் : நன்றி அவுட்லுக்)

அவரது இறுதிச் சடங்கின் போது, ஒரு கட்டத்தில் நிகழ்ந்த ஆச்சரியமான, சோகமான சூழலை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வினோதின் உயிரற்ற உடலின் நீளத்துக்கு, ஒரு புறம் எல்.கே அத்வானி, மறுபுறம் நான் நின்றிருந்தோம். அத்வானி ஒரு மலர் வளையத்தை அவர் காலடியில் வைத்துக் கொண்டிருந்தார். நான் வினோத்துக்கு என் மனதிலிருந்து பிரியாவிடை கொடுக்கும் (அல்லது கொடுக்க மறுக்கும்) முயற்சியில் போராடிக் கொண்டிருந்தேன். வினோத் எனக்கு எச்சரிக்கை விடுத்த ஒரே சந்தர்ப்பம் அப்போது என நினைவில் ஓடியது. அது 2006-ம் வருடம். “டிசம்பர் 13, 2001 அன்று நிகழ்ந்த பாராளுமன்றத் தாக்குதலில் ஆற்றிய பாத்திரத்துக்காக தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குரு இன்னும் சில நாட்களில் தூக்கிலடப்படலாம்” என்று பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்தன.

அந்த வழக்கு தொடர்பான நிகழ்வுகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்து, தொடர்பான சட்ட ஆவணங்கள் அனைத்தையும் படித்திருந்த எனக்கு அது கடும் அதிர்ச்சியளித்தது. அப்சல் குருவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆதாரங்களில் பெரும்பாலானவை மிகவும் பலவீனமானவை அல்லது புனையப்பட்டவை என்பதை அறிந்திருந்தேன். (அந்தத் தாக்குதல் போலி அடையாளத்துடன் நடத்தப்பட்டது என்று கூறுவதற்கு ஏராளமான காரணங்கள் இருந்தன.) அப்சல் தூக்கிலிடப்படுவது சில சங்கடமான கேள்விகளுக்கு ஒருபோதும் விடை கிடைக்காமல் செய்து விடும். எந்த நேரடியான ஆதாரமும் இல்லா விட்டாலும் ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக’ அப்சலுக்கு மரண தண்டனை விதிப்பதாக கூறி உச்சநீதிமன்றம் அதிர்ச்சியளித்தது.

அதே நேரத்தில், பா.ஜ.க தாக்குதல் நடந்த 2001-ல் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியின் தலைமையில் “தேஷ் அபி ஷர்மிந்தா ஹை, அப்சல் அபி பீ ஜிந்தா ஹை” (தேசத்துக்கு அவமானம், அப்சல் இன்னும் உயிரோடு இருப்பது) என்ற முழக்கத்தோடு ஒரு உரத்த பிரச்சாரத்தை நடத்தியது. “எனக்கு அவ்வளவு தெரிந்திருந்தும், அவற்றை எல்லாம் இப்போது வெளிப்படுத்தவில்லை என்றால் என்னை என்னாலேயே மன்னிக்க முடியாது” என்று தோன்றியது. வினோத்தை அழைத்து அது குறித்து நான் எழுதப் போவதாக கூறினேன். முதல் முறையாக, ஒரே தடவையும்  அவர், ”அருந்ததி வேண்டாம். நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்கள் நம் மீதே பாய்வார்கள். உனக்கு தீங்கு விளைவிப்பார்கள்” என்று சொன்னார்.

“இது தொடர்பாக அமைதியாக இருக்கலாகாது” என்று அவரை ஏற்க வைக்க எனக்கு நீண்ட நேரம் ஆகவில்லை. “அவரது வாழ்க்கை இல்லாமல் போக வேண்டும்” என்ற தலைப்பில் நெடிய கட்டுரை ஒன்றை எழுதினேன். கட்டுரையின் தலைப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்தே உருவப்பட்டது. அவுட்லுக் அட்டைப்படம், “அப்சலை தூக்கிலிடாதே என்று கொட்டை எழுத்துக்களில் முழங்கியது. உண்மையில் பா.ஜ.க. அல்ல காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு தான் கோழைத்தனமாக, சட்டத்துக்கு புறம்பாக, அருவருப்பான முறையில் அப்சலை சில ஆண்டுகளுக்குப் பிறகு 2013-ல் தூக்கிலிட்டது.

அந்த இதழ் வெளிவந்த பிறகு மடை திறந்தாற் போன்ற வசைமழையில் அவுட்லுக் பல வாரங்கள் குளித்தது. ஆனால், இது எங்கள் ஒப்பந்த விதிகளின் இன்னொரு பகுதி. நான் எழுதியதை வினோத் வெளியிடுவார். பின்னர், அதற்கு எதிர்வினையாக கெட்ட வார்த்தைகளில் திட்டும் வாசகர் கடிதங்களால் பல வாரங்கள் இதழை நிறைப்பார். (வினோத்தின் உதவியாளராக 25 வருடங்கள் பணியாற்றிய சாஷி, 2008 மும்பை தாக்குதல்களுக்கு பிறகு அதைப் பற்றி நான் எதுவும் எழுதுவதற்கு முன்பே அவுட்லுக் இதழுக்கு வரத் துவங்கியிருந்த கோப எதிர்வினைகளை காட்டினார்). நானறிந்த வரையில் வேறெந்த பத்திரிகையும், தனது ஆசிரியரையும், விருந்தினர்களையும் நிந்திக்கும் கடிதங்களை அவ்வளவு மகிழ்ச்சியுடன் வெளியிடுவதில்லை. வினோத் அந்த கடிதங்களிலிருந்து முடிவற்ற கேளிக்கையை பெற்றுக் கொண்டிருந்தார். சில சமயம், தனக்கு பிடித்தமான கடிதங்களை எடுத்துக் கொண்டு என்னை தொலைபேசியில் அழைத்து வாய்விட்டு சிரித்துக் கொண்டிருப்பார். அப்சல் குரு தொடர்பான கடிதங்களில் அவருக்குப் பிடித்த கடிதம் இது தான். “அப்சல் குருவை விட்டுவிடுங்கள்; அருந்ததியை தூக்கிலிடுங்கள்”. சந்தேகத்திற்கிடமின்றி, அதை வெளியிடவும் செய்தார்.

ஆனால், இப்போது, எதிர்பாராத விதமாக, அத்வானியும், நானும் அவரது இறுதிச் சடங்கில் ஒன்றாக கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம். நான் ஆடிப் போயிருந்தேன். அத்வானியின் தரப்பில் பெருந்தன்மையையும், ஆனால் என் தரப்பில் அது சுத்தமாக இல்லாமலும் இருந்திருக்கலாம். எனக்கு தெரியவில்லை. இத்தகைய சூழலைப் பற்றி வினோத் என்ன நினைத்திருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.

அவுட்லுக் இதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து வினோத் ஓய்வு பெறுவதற்கு முன்பாக, கடைசியாக அவுட்லுக் வெளியிட்ட எனது கட்டுரை “தோழர்களுடன் ஒரு நடைப்பயணம்”. பஸ்தரின் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் கொரில்லாக்களுடன் பல நாட்கள் நான் கழித்தது பற்றிய எனது அனுபவங்களை அதில் பதிவு செய்திருந்தேன். சமீபத்தில் மரணித்த பி.ஜி. வர்கீஸ் கூட அதற்கு எதிர்வினையாற்றி இருந்தார். வினோத் ஒரு அசாதாரண செயலாக பி.ஜி. வர்கீஸின் எதிர்வினைக்கு மாவோயிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் ஆசாத் என்றழைக்கப்படும் செருகுரி ராஜ்குமாரின் மறுமொழியை வெளியிட்டார். அப்படி செய்தது வினோதின் மிகவும் குறிப்பிடத்தகுந்த பணியாக இருந்தது. எவ்வளவு நிதானமாகவும், தர்க்கரீதியாகவும் ஆசாத் எழுதியிருந்தார் என்று வினோத் என்னிடம் மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். அந்த கட்டுரை வெளியாகும் போது ஆசாத் உயிருடன் இருக்கவில்லை. நாக்பூரில் சாதாரண உடையில் வந்த போலீஸ்காரர்களால் கடத்தப்பட்டு ஆந்திரா-சத்தீஸ்கர் எல்லையில், தண்டகாரண்யா காட்டுப் பகுதியில் வைத்து எந்த விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

அவர் நோய் வாய்ப்படுவதற்கு முன்பாக கடைசியாக ஒருமுறை என்னை தொலைபேசியில் அழைத்தார். “கவனியுங்கள் அருந்ததி; நான் உங்களிடம் இதுவரை எதையும் கேட்டதில்லை; இப்போது கேட்கிறேன். சரியாக சொல்வதென்றால், நான் இதனை கோரிக்கையாக வைக்கவில்லை; செய்யும்படி கூறுகிறேன். என்னுடைய புதிய நூல் “கட்டவிழ்க்கப்பட்ட – பத்திரிகை ஆசிரியர்”-ஐ நீங்கள்தான் வெளியிட வேண்டும். இது போன்ற வேலைகளை செய்ய நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் இதைச் செய்தே ஆக வேண்டும்’ என்றார். நான் சிரித்து விட்டு ஒத்துக் கொண்டேன்.

சில நாட்கள் கழித்து மீண்டும் அழைத்தார். ”ஆங்! நான் சொல்ல மறந்து விட்டேன். நம்முடன் மேடையில் இருக்கப் போகும் மற்றொரு விருந்தாளி அர்னாப் கோஸ்வாமி” என்று குறும்புடன் கூறினார். அர்னாபிடமும் இது தொடர்பான முழு விபரங்களையும் வினோத் சொல்லியிருக்க மாட்டர் என்று நினைக்கிறேன். அந்த கிழட்டு நரி எங்கள் இருவரையும் எதிரெதிராக விளையாடியிருக்கிறது.

நாங்கள் மூவரும் ஒரே மேடையில். அதை நினைத்துப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கிறது. இருந்த போதிலும், வினோத் மேத்தாவுக்காக நான் அதை செய்திருப்பேன்; மகிழ்ச்சியாகவே. ஆனால் அவரோ எங்கோ மறைந்து போய் விட்டார். அவர் போயிருக்கக் கூடாது. அவருடன் நான் பேச வேண்டியிருக்கிறது.

– அருந்ததி ராய்
தமிழில்: சம்புகன்

 

நிதியும் நீதியும் – புரோக்கர் பொன்னுசாமி உரை

1

மதுரை உயர்நீதிமன்ற கடைகளின் புரோக்கர் பொன்னுச்சாமியும்-டவுட் தனபாலும்

கடை எண்: ———-

பதிவாளர் பக்கிரிசாமி:
மனித உரிமை அமைப்புகளின் முன் ஜாமின்மனுக்கள் தள்ளுபடி! இந்தியாவில் மனித உரிமை மீறல் அதிகமாக இருப்பதாகக் காட்டுகின்றனர்-உயர்நீதிமன்றம் கடுமை!

தாது மணல் கொள்ளை - வைகுண்டராஜன்
வைகுண்டராஜன், வைகுண்டராஜன் – னு, ஒருத்தரு பெரிய கொள்ளைக்காரன்னு ஊரே சொல்லுது!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, அய்யா ரொம்பக் கடுமையா இருப்பாரு! ஏமாத்துறவங்க, தப்பு செய்யிறவங்க கண்ணுல விரல விட்டு ஆட்டிருவாரு ஆட்டி! யாரும் தப்பமுடியாது!

டவுட் தனபாலு:
ஆமாண்ணே, உண்மதான்! நானும் டெய்லி பேப்பர்ல பாக்குறேனுல்ல!அப்புறம் ஒரு சந்தேகம்ணே! இந்த வைகுண்டராஜன், வைகுண்டராஜன் – னு, ஒருத்தரு பெரிய கொள்ளைக்காரன்னு ஊரே சொல்லுது! ஆனா அய்யா அவருக்கு, ஜாமீன் குடுத்ததாச் சொல்றாங்க! ஒருவேளை இவரு வேற வைகுண்டராஜனோ?

புரோக்கர் பொன்னுச்சாமி:
ஆமாம் தம்பி! அவரு இவரா இருக்கலாம்! இவரா இல்லாமலும் இருக்கலாம்! அவரும், இவரும் வேறயா இருக்கலாம்-வேறயா இல்லாமலும் இருக்கலாம்!

டவுட் தனபாலு:
அட ஏண்ணே காலையிலே சரக்கடிச்ச மாதிரிப் பேசுற! அவரு, இவரா இருக்க மாட்டருண்ணே! இந்த வைகுண்டம் ஏதாவது சுதந்திரப் போராட்டத் தியாகியா இருப்பாரு! ஏன்னா! தூத்துக்குடி துறைமுகம், கப்பல்-ன்னு வருதில்ல! வ.உ.சி.க்கு தூரத்துச் சொந்தமா இருப்பாரு!

புரோக்கர் பொன்னுச்சாமி:
இருப்பாரு! இருப்பாரு! அப்புறம் தம்பி இந்த 420-ல்ல பாத்தீங்கண்ணா, ஒரு லட்சம் ஏமாத்துனாக்கூட காசு கட்டாம ஒரு பயல விடமாட்டாரு! ஒரு காட்டுக் காட்டித்தான் விடுவாரு! அய்யா மதுரைக்கு வந்தப்பெறகு அம்புட்டு 420-யும் இலங்கைக்கு ஓடிட்டாங்கண்ணா பாத்துக்க எங்க அய்யா தெறமைய!

டவுட் தனபாலு:
அப்பிடியாண்ணே! ஆனா இந்த சிறீரங்கம் தேர்தல் பி.ஜே.பி கேண்டிடேட்டு ஆக்ஸ்போர்டு சுப்பிரமணி 1 கோடியே 13 லட்சம் ஏமாத்திருக்காரே! 2 பிரீவியஸ் கேசும் இருக்கு! அவருக்கு டெபாசிட் இல்லாம விட்டுட்டாரேண்ணே! எப்பிடிண்ணே!

மதுரை உயர்நீதிமன்றக் கிளை
இந்த சிறீரங்கம் தேர்தல் பி.ஜே.பி கேண்டிடேட்டு ஆக்ஸ்போர்டு சுப்பிரமணி 1 கோடியே 13 லட்சம் ஏமாத்திருக்காரே! 2 பிரீவியஸ் கேசும் இருக்கு! அவருக்கு டெபாசிட் இல்லாம விட்டுட்டாரேண்ணே! எப்பிடிண்ணே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி,ஆக்ஸ்போர்டு அடிச்ச காசு 1,13,20,000/-. இங்கதான் இருக்கு கதையில டுவிஸ்டு! அடிச்ச காச நல்லாக் கூட்டிப்பாரு! கூட்டுத்தொகை 7 வருதா? 7-அய்யாவுக்கு ராசியான நம்பரு! அதான் விட்டுட்டாரு! அந்த ஆக்ஸ்போர்டு 1 ரூபா சேத்து அடிச்சிருந்தான்! கத கந்தல்தான்!

டவுட் தனபாலு:
காலையிலேயே கண்ணக் கட்டுதேண்ணே! நம்ப முடியலையே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
உனக்கு எல்லாம் விளக்கமாச் சொல்லணுமா? மரமண்ட! மனுதர்மம் தெரியுமோ நோக்கு! அதுல சூத்திரன் கொலை பண்ணுனா மரண தண்டணை-அதே சமயம் பிராமணன் கொலை பண்ணுனா மொட்ட அடிச்சாப் போதும்!

டவுட் தனபாலு:
அப்ப அந்த அமெரிக்கக் கப்பலு கேசு! கொச்சியில வரும்போது ஆயுதம் இல்லையாம்- தூத்துக்குடிக்கு வரும்போது ஆயுதம் இருந்துச்சாம். அந்தக் கேசும் முடிஞ்ச்சுருச்சுல்லண்ணே! அவங்களும் – அவங்களாண்ணே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி! அவங்கெல்லாம் செவப்பா இருக்காங்கல்ல! அதனால தப்புப் பண்ணியிருக்க மாட்டாங்க!

டவுட் தனபாலு:
குவாட்டர் அடிக்காமலேயே தல சுத்துதேண்ணே!

கடை எண்: ————

பதிவாளர் பக்கிரிசாமி:
இந்தக் கடை ஓனர் ரொம்ப டெரர் ஆன ஆளு! கண்ண உருட்டி, மெரட்டுனாருன்னா ஜூனியர்ஸ் எல்லாம் தாங்க மாட்டீங்க! பாத்து நடந்துக்கங்க எல்லாம்!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, அய்யாவுக்கு இந்த ஆடல்-பாடல்-ஆபாசம் எல்லாம் கொஞ்சமும் பிடிக்காது! கலாச்சாரத்தக் காக்க கம்பா நிப்பாரு!

மேட்டுக்குடி ஆபாசம்
இந்த ஜட்ஜுங்க போற 5 ஸ்டார் ஓட்டல்- கிளப்-ஏன் கிரிக்கெட்டுல கூட பொண்ணுங்க அரைகுரையா ஆடுறாங்களே! அது எல்லாம் ஆபாசம் இல்லையாண்ணே!

டவுட் தனபாலு:
ஆமாண்ணே, உண்மதான்! ஓரே ஒரு சந்தேகம்ணே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
என்னா?

டவுட் தனபாலு:
இந்த டி.வி.- சினிமாவுல அவுத்துப் போட்டுட்டு ஆடுறாங்களே! அப்புறம் இந்த ஜட்ஜுங்க போற 5 ஸ்டார் ஓட்டல்- கிளப்-ஏன் கிரிக்கெட்டுல கூட பொண்ணுங்க அரைகுரையா ஆடுறாங்களே! அது எல்லாம் ஆபாசம் இல்லையாண்ணே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி அது மேன்மக்கள் ஆட்டம்! கிராமத்துக்காரன் – போறவன் – வர்றவனுக்கெல்லாம் ஆபாச ஆட்டம் தேவையா என்ன?

டவுட் தனபாலு:
அடப்போண்ணே! இந்த 2—ஆம் நம்பர் கடையில ஆடலும்-பாடலும் ஆர்டரு அள்ளி விடுறாங்க! டெய்லி 20-30 டிஸ்போசலாம்! அங்க கூட்டம் கும்முது!

புரோக்கர் பொன்னுச்சாமி:
அப்பிடியா தம்பி! இது தெரியாமப் போச்சே! நம்ம கடைக்கு 200-300 டிஸ்போசல் ஆகிருக்குமே! வட போச்சே!

டவுட் தனபாலு:
அப்புறண்ணே! ஒரு மேட்டர முடிக்கணும்! முன்னப் பின்ன இருந்தா பாத்துக்கலாம்!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, விளையாடாத! இது மத்த கட மாதிரி சாதாரணக் கடயில்ல! 22,000 கோடி அடிச்ச நோக்கியா, பல லட்சம் கோடி அடிச்ச வி.வி எல்லாம் நம்ம கடை கஸ்டமர்ஸ்தான்!

டவுட் தனபாலு:
அந்த அளவுக்கு இல்லண்ணே! பாத்துச் சொல்லுங்க!

புரோக்கர் பொன்னுச்சாமி:
என்ன தம்பி ரொம்ப வீக்கா இருக்கியே! நம்ம கடை ஓனரோட சீனியரு வந்தாக்கூட பிளைட்-போக்குவரத்து-பீசுன்னு 2-3 ஆகுமேப்பா!

டவுட் தனபாலு:
அந்த அளவுக்கு இல்லண்ணே! கொஞ்சம் பாத்துச் சொல்லுங்க!

புரோக்கர் பொன்னுச்சாமி:
சரி தம்பி உன் லெவலுக்கு மதுரையிலே ஆள் இருக்கு! எப்பிடிக் கொறச்சாலும் 1-11/2 ஆகுமேப்பா!

டவுட் தனபாலு:
அண்ணே! நான் உங்க தம்பிண்ணே! ரெண்டு நாள்தான் இருக்கு! பாத்துச் சொல்லுங்கண்ணே! ஒரு 1-க்குள்ள முடிங்க!

புரோக்கர் பொன்னுச்சாமி:
என்ன தம்பி, உலகம் புரியாத ஆளா இருக்கியே! ஏ/சி எல்லாம் போட்டு கடை நடத்துறோம்! சும்மாவா! நம்ம கடையோட தத்துவமே – காசு, பணம், துட்டு,மணி-மணி————– காசு,பணம், துட்டு, மணி-மணி——————-

கடை எண்: —————–

பதிவாளர் பக்கிரிசாமி:
இந்தா பாருங்க கஸ்டமர்ஸ்! இந்தக் கடையில எல்லாருக்கும் பொருள் கிடைக்குமுன்னு லிஸ்ட் இருக்கும்! ஆனா, பொருள வாங்குறது உங்க சாமர்த்தியம்! இதுக்கு மேல நாசூக்கா என்னால சொல்ல முடியாது!

கிரானைட் கொள்ளை
மேலூர்ப் பக்கம் கஸ்டப்பட்டு கடப்பாரைய வச்சு கல்லத் தோண்டிருக்காங்க சில பேரு! அதுக்குப் போயி கேசு போடுறாங்க! விடுவமா ஸ்டே குடுத்தமா? இல்லையா?

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, ஒரு நாளைக்கு 637 கேசு! 1-ல்ல 2-லிஸ்ட்! அது மட்டுமில்ல 10.30-க்கு நீங்க மென்சன் பண்ணலாம்! 12.00 மணிக்கு முக்கியமானவங்க லிஸ்ட்! அதுலக் கொஞ்சம் தொந்தரவு பண்ணாதீங்க! அப்புறம் 2.15 –க்கும் உங்களுக்கு வாய்ப்பிருக்கு! எத்தனை சான்ஸ்! எல்லாருக்கும் நீதி! எப்புடி!

டவுட் தனபாலு:
அதெல்லாம் சரிண்ணே! டெய்லி காலைல ஆசையாத்தான் கடைக்கு வர்றோம். காலைலருந்து இப்பக் கெடைக்கும், அப்பக் கெடைக்குமுண்ணு காத்திருந்தாலும் கடை மூடுறவரைக்கும் நமக்கு ஒண்ணும் போணியாகல. ஆனா சில பேரு கேப்புல கெடா வெட்டுறாங்க! என்ன செய்யிறது?

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி கண்ணு குருடா உனக்கு? டெய்லி ஏவாரம் கூவிக் கூவி நடக்கு! நேத்துக்கூட இந்த மேலூர்ப் பக்கம் கஸ்டப்பட்டு கடப்பாரைய வச்சு கல்லத் தோண்டிருக்காங்க சில பேரு! அதுக்குப் போயி கேசு போடுறாங்க! விடுவமா ஸ்டே குடுத்தமா? இல்லையா?

டவுட் தனபாலு:
அது சரிண்ணே! இந்த கல்லத் தோண்டுனதத்தான் கிரானைட் திருட்டுங்கிறாங்களா? இதத்தான் சென்னைல உட்காந்து CJ – வேற சகாயத்த விசாரிக்கச் சொல்றாரா? அவருவேற உருண்டு-பெறண்டு ஏதோ பண்ணிட்டுக் கெடக்காரு!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, நம்ம எல்லாத்தையும் சட்டப்படி செய்யிறோம்! அவ்வளவுதான்!

டவுட் தனபாலு:
அதெல்லாம் சரிண்ணே! திருட்டுக் கேச போலீசு விசாரிக்கவே கூடாதுண்ணு சொல்லிட்டீங்க! ஆனா, நிறைய ஜூனியர் வக்கீலுங்க போட்ட F.I.R. QUASH -எல்லாம் USUAL ORDER-ன்னு டிஸ்மிஸ் பண்ணுறீங்களே! நியாயமாண்ணே?

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, அதெல்லாம் மேட்டரப் பொறுத்து! வர்ற ஆளப் பொறுத்து! இது CONSTITUTIONAL COURT-தம்பி விளையாடாத!

கோயில் உண்டியல்
ஓரத்துல உண்டியல் இருக்கு! அதுல காணிக்கை போட்டா, உடனே பிரசாதம் கிடைக்கும்! நோ ஆர்க்யூமென்ட்! ஒன்லீ ஆர்டர்!

டவுட் தனபாலு:
என்னமோ போங்கண்ணே! உங்க கடையில கொள்ளைக்காரன்- முகம் தெரிஞ்சவனுக்குத்தான் போணி ஆகுது! எங்கள மாதிரி ஆளுங்க என்ன செய்யிறது?

புரோக்கர் பொன்னுச்சாமி:
என்ன தம்பி 2000 வருசத்துக்கு முன்னாடியே நம்ம முப்பாட்டன் எழுதிட்டாரு! “ பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை”ன்னு!

கடை எண்: ———

பதிவாளர் பக்கிரிசாமி:
இந்தா பாருங்க கஸ்டமர்ஸ்! மத்த கடைக மாதிரி மறைஞ்சு, மறைஞ்சு ஏவாரம் பண்ற கடை இல்ல இது! ஓரத்துல உண்டியல் இருக்கு! அதுல காணிக்கை போட்டா, உடனே பிரசாதம் கிடைக்கும்! நோ ஆர்க்யூமென்ட்! ஒன்லீ ஆர்டர்! மதியம் வரைக்கும்தான் ஏவாரம்! பாத்துக்கங்க!

புரோக்கர் பொன்னுச்சாமி:
தம்பி, இப்பிடி வெளிப்படையா ஏவாரம் நடக்குற கடை இந்தியாவிலே நம்ம கடதான்! இதுக்கே எங்களுக்கு ஒரு விருது குடுக்கணும்! அடுத்து பிரணாப் முகர்ஜியத்தான் ஸ்டெரய்ட்டாப் பாக்கணும்!

மதுரை உயர்நீதிமன்றம்
காலைல இருந்து மதியம் வரைக்கும் உழைக்குறோம்! சம்பாதிக்கிறோம்! இதுல மறைக்கிறதுக்கு என்னா இருக்கு?

டவுட் தனபாலு:
இருந்தாலும் கொஞ்சம் அரசல்-புரசலாப் பண்ணலாமுல்லண்ணே! அப்பத்தான் ஏவாராம் ரொம்பநாள் ஓடும்! மத்த கடக்காரங்க எல்லாம் சங்கடப்படுறாங்கண்ணே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
அடிங்…………….! எவன் கூவுறது! எங்க ஓனருக்கு எல்லாம் தெரியும்! நம்மளப் போல பல கடையிலயும் 2—ஆம் நம்பர் பிஸினஸ்தான் நடக்குது! என்னா கொஞ்சம் பந்தா பண்ணி- பாசாங்கு பண்ணி- சமாளிச்சு ஏவாரம் பண்ணுறாங்க! நம்ம ஓனரு ஸ்ட்ரெயிட் பார்வேர்டு! வெள்ளந்தியான ஆளு! எதையும் மறைக்கத் தெரியாது அவருக்கு!

டவுட் தனபாலு:
இருந்தாலுமுண்ணே!

புரோக்கர் பொன்னுச்சாமி:
என்ன நொறுந்தாலும்! காலைல இருந்து மதியம் வரைக்கும் உழைக்குறோம்! சம்பாதிக்கிறோம்! இதுல மறைக்கிறதுக்கு என்னா இருக்கு? ஏய் ஓடிரு! இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு! உண்டியல் பாதிகூட நெறையல! என்னதான் இருந்தாலும் மெட்ராசு அளவுக்கு மதுர இல்ல! அடுத்தாவது இந்த மைன்ஸ்-மினரல்ஸ்-ன்னு ஏதாவது வாங்கணும். அப்பத்தான் கட்டும்!

குறிப்பு: கடை எண்களை சரியாக எழுதுவோருக்கு சிறந்த ஊகிப்பாளர் விருது கிடைக்கும்.

தொகுப்பு:

வழக்கறிஞர்கள்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
150-இ, ஏரிக்கரை சாலை,
கே.கே.நகர், மதுரை-20.
98653 48163.

சைதாப்பேட்டை சாய் இன்ஸ்டியூட் சாயம் வெளுக்கப்பட்டது

3

சென்னை-  சைதாப்பேட்டையில் சாய் இன்ஸ்டிட்யூட் என்ற பெயரில் போர்ஜரி கல்வி நிறுவனம் – தோலுரித்தது பு.மா.இ.மு-வின் போராட்டம்!

போர்ஜரி சாய் இன்ஸ்டிட்யூட்
போர்ஜரி சாய் இன்ஸ்டிட்யூட்

ன்றைய சூழலில் பெரும்பான்மை மாணவர்களுக்கு அரசுக் கல்வி மறுக்கப்படுகிறது. இதனாலேயே ஏழைகளும் நடுத்தர வர்க்கமும் தமது வாரிசுகளின் கல்விக்காக தனியார் கல்வி நிறுவனங்களிடம் சொத்துபத்துகளை விற்று கடனாளியாகி வருகிறார்கள்.

இதை வைத்து பல லட்சம் செலவு செய்து பொறியியல் மருத்துவம் படிக்க முடியாத நடுத்தர, ஏழை மாணவர்களிடம் குறுகிய காலத்தில் வேலை என்ற ஆசையைக் காட்டி பல சிறிய போர்ஜரி ( 420 ) கல்வி நிறுவனங்கள் பெருகி மோசடி செய்து வருகின்றன. இந்த வகை 420 கல்வி நிறுவனங்களை  புரிந்துகொள்ள ஒரு உதாரணம்தான் சைதாப்பேட்டையில் இயங்கி வரும் சாய் இண்டர்நேஷ்னல் இன்ஸ்ட்யூட் ஆப் கேட்டரிங் அண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட்.

சாய் இன்ஸ்டிட்யூட்
பெரிய கல்வி நிறுவனம் போன்ற மாயை

பெயரில் இன்டர்நேஷனல் இருந்தாலும் அது உண்மையில் ஒரு பாழடைந்த மடமே. கூடவே இன்ஸ்ட்யூட், ஹோட்டல், மேனேஜ்மெண்ட் என்று பெரிய கல்வி நிறுவனம் போல காட்டிக் கொண்டாலும் நேரில் பார்க்கும்போது பெட்டிக்கடை போலவே இருக்கிறது.

420 சாய் இன்ஸ்ட்யூட் பற்றி ஓர் அறிமுகம்

2004-ம் ஆண்டு குறைந்த மாணவர்களை வைத்துத் தொடங்கியதுதான் இந்த சாய் இன்ஸ்டிடியூட்.  இந்த நிறுவனத்தின் முதலாளி வினோத் தன்னை சி.இ.ஓ என்று பந்தாவாக கூப்பிடும் படி ஆணை போட்டிருந்தாலும் இவர் ஏதோ ஒரு டூபாக்கூர் ஒரு வருட டிப்ளமோவை ‘முடித்து’ விட்டு இந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் ஒரு கட்டிடத்தின் மாடியில் பெட்டிக் கடை அளவு இடத்தில் 4 தடுப்புகள் வைத்து அதை 4 வகுப்பறைகளாக்கி, 350-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏமாற்றி வருகிறார் இந்த இன்டர்நேஷனல் சி.இ.ஓ.

சாய் இன்ஸ்டிட்யூட் ஃபோர்ஜரி
தி.நகரில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் வைத்து மாணவர்களை சேர்ப்பது;

மாணவர் சேர்க்கை இங்கு கிடையாது. இந்த பெட்டிக்கடையைப் பார்த்தால் எந்த மாணவர் வந்து சேருவார். எல்லா தனியார் கல்வி நிறுவன ஃபிராடுகளைப் போல தி.நகரில் உள்ள ‘கார்ப்பரேட்’ அலுவலகத்தில் வைத்து மாணவர்களை சேர்த்து விட்டு பிறகு  பெட்டிக் கடையில் தள்ளிவிடுவார்கள்.

மாணவர் சேர்க்கையின் போது சி.இ.ஓ மனைவி பேசும்போது பார்க்க வேண்டுமே! ஒரு மாணவர் அதை விவரித்தார்:

“ஹாஸ்டல் வசதி, இந்தி வகுப்பு, பிரெஞ்சு வகுப்பு, ஆங்கில வகுப்புகள் என எல்லா வசதியும் இருக்கிறதுன்னு அந்தம்மா சொன்னாங்க சார், ஆனா அதெல்லாம் இங்க இருக்கானு கேக்காம ஏமாந்துட்டேன் சார்’’ என்றார்.

சாய் இன்ஸ்டிட்யூட் - ஃபோர்ஜரி
பி.எஸ்.சி-யை தொலைதூரக்கல்வியின் மூலம் நடத்திக் கொண்டு, மாணவர்களிடம் இது பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்குகிறது என்று பொய்யாகக் கூறியிருக்கின்றனர்.

அந்த இன்ஸ்டியூட்டில் பட்டய இரண்டாண்டு படிப்பை (டிப்ளமோ கோர்ஸ்) 2007- ல் தொடங்கியிருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து 2013-ல் பி.எஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ்சையும் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பி.எஸ்.சி-யை தொலைதூரக்கல்வியின் மூலம் நடத்திக் கொண்டு, மாணவர்களிடம் இது பாரதியார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்குகிறது என்று பொய்யாகக் கூறி ஆண்டுக்கு 1 லட்சம் வரை பயிற்சிக்கட்டணம் வாங்கி மாணவர் பலரை ஏமாற்றியிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல், +2 பெயிலான மாணவர்களுக்கும்  பி.எஸ்.சி ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டில் சேர்த்திருக்கிறார். இப்படி எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமலேயே சட்டத்துக்கு புறம்பாக ஏமாற்றுவது தெரிந்து ஒரு மாணவர் தனது  டி.சி.யை திருப்பிக் கேட்க அதற்கு 22,500 முதல் 45,000 கட்டணம் கட்டித்தான் வாங்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

டிப்ளமோ கோர்ஸுக்கு ரூ 20,000 (செமஸ்டருக்கு), பி.எஸ்.சி-க்கு (செமஸ்டருக்கு) ரூ 22,500 பெறுவது, யூனிபார்முக்கு ரூ 3,000 என  தன் விருப்பம் போல் வாங்கியிருக்கிறார் இந்த இன்டர்நேஷனல் 420 சி.இ.ஓ.

இதை தாங்கிக் கொள்ள முடியாத மாணவர்கள், வகுப்புக்கு வராமலும், விரக்தியுடனும் அலைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிக்கு வந்த புகாரால் வினோத் எனும் குள்ளநரியின் சாயம் வெளுத்தது.

சாய் இன்ஸ்டிட்யூட் - ஃபோர்ஜரி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிக்கு வந்த புகாரால் வினோத் எனும் குள்ளநரியின் சாயம் வெளுத்தது.

முதலில் பாதிக்கப்பட்ட மாணவனின் பிரச்சனையை தீர்க்கக் கோரி பு.மா.இ.மு-ல் இருந்து முறையாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. இதற்கு பதில் வரவில்லை.

பிறகு அந்த மாணவன் நிர்வாகத்திடம் சென்று கேட்டபோது, “பு.மா.இ.மு-டம் அனைத்தையும் பேசிவிட்டோம், அவர்கள் சரியாக நடத்துவதாக எங்களை பாராட்டிவிட்டார்கள், அதனால் நீ நாங்கள் கேட்கும் பணத்தை கட்டிவிட்டுதான் சான்றிதழ்பெற முடியும்” என்று 420-க்கே உரிய முறையில் பேசி இருக்கிறார் வினோத்.

இதன் தொடர்ச்சியாக பு.மா.இ.மு.வின் சென்னைக்கிளை தோழர்கள் அந்த இன்ஸ்டிடியூட்டுக்கு நேரில் சென்றனர். இந்த ஃபிராடு வினோத்தை பார்க்க அங்கே பல்வேறு தடைகளை பந்தாவாக போட்டிருந்தார்கள். தோழர்கள் அதை தூக்கிவிட்டு கல்வி முதலாளியை சந்தித்திருக்கிறார்கள்.

சாய் இன்ஸ்டிட்யூட் - ஃபோர்ஜரி
பல மாணவர்கள் அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களும் பு.மா.இ.மு.வுடன் இணைந்து போராட தயாரானார்கள்

தோழர்கள் “படிப்பை தொடர விருப்பம் இல்லாத லோகநாதனுக்கு டி.சியை கொடுக்காமல், எங்களைப் பற்றியும் தவறாக பேசியது ஏன்? அவரது சான்றிதழை முடக்கி வைக்க உங்களுக்கென்ன அதிகாரம் இருக்கிறது” என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர், “இதுதான் எங்கள் நிறுவனத்தின் ரூல்ஸ். அதன்படிதான் நாங்கள் நடக்கிறோம். பணம் கட்டிவிட்டு டி.சியை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று திமிராக பேசியதுடன் மட்டுமல்லாமல் சென்ற தோழர்களிடம் “பு.மா.இ.மு என்ன அமைப்பு, உங்களுக்கு ஐ.டி கார்டு இருக்கா’’ என்றெல்லாம் ‘ரூல்ஸ்’ பேசியிருக்கிறார்.

சாய் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்
சாய் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்டின் மோசடித்தனத்தையும் நிறுவன முதலாளியின் சட்டவிரோத போக்கையும் அம்பலப்படுத்தும் விதமாக சுவரொட்டி.

“உம்மை போராட்டக் களத்தில் சந்திக்கிறோம்’’ என்று தோழர்கள் வெளியேறினர். அதன் பின்பு பாதிக்கப்பட்ட பல மாணவர்களும் பு.மா.இ.மு.வுடன் இணைந்து போராட தயாரானார்கள்.

முதலில்,  சாய் கேட்டரிங் இன்ஸ்டிடியூட்டின் மோசடித்தனத்தையும் நிறுவன முதலாளியின் சட்டவிரோத போக்கையும் அம்பலப்படுத்தும்  சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டது.

அந்த போஸ்டர் மாணவர்களின் கண்களில் பட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று எண்ணி அதை எல்லாவற்றையும் கிழித்திருக்கிறார்கள். அவர்களின் கைக்கு எட்டாத போஸ்டர்களை அப்படியே விட்டுவிட்டு இருக்கிறார்கள். அதை கண்டுவிட்ட சில மாணவர்கள் போட்டோ பிடித்து வாட்ஸ் அப், பேஸ்புக் என்று அனைத்திலும் பரப்பியிருக்கிறார்கள்.

மாணவர்கள் சந்தோஷத்துடன் தோழர்களுக்கு நன்றி கூறியதுடன் இல்லாமல் “அண்ணே இவன சும்மா விடக்கூடாதுண்ணே, எங்க பணத்த பிடுங்கினது மட்டுமில்லாம எங்க டி.சி. யையும் தரமாட்ரான்னே.. அவன் டி.சி.யை கொடுத்துட்டான்னா நாங்க வேற எங்கயாவது கவர்மெண்ட் கல்லூரியிலாவது போய் சேருவோம். நாங்க உங்க கூட கடைசி வரைக்கும் போராடுவோம்’’ என்று  உற்சாகத்துடன் கூறினர்.

 போஸ்டர் கிழிப்பு
போஸ்டர் கிழிப்பு

சாய் நிர்வாகம் அங்கு ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்தாலும் தோழர்கள் அசராமல் திரும்ப திரும்ப ஒட்டினார்கள். பு.மா.இ.முவுக்கு போன் செய்து பண வலைகளில் விழ வைக்கும் முயற்சிகளில் அவர்கள் மானங்கெட்டு தோற்றுப்போனது தனிக்கதை.

பு.மா.இ.முவின் உறுதியான போராட்டத்தைப் பார்த்து ஒரு லோகநாதன் மட்டுமல்ல, இந்த சுவரொட்டியால் அனைத்து மாணவர்களும் போர்க்கொடி தூக்கி விடுவார்களோ என்று எண்ணியிருப்பார்கள் போல.

உடனே லோகநாதனுக்கு போன் செய்து, “தம்பி நீங்க உடனே வந்து டி.சி. யை வாங்கிக்கோ” என்று கூறியிருக்கிறார் வினோத். அவரும் எந்த வித கட்டணமும் கட்டாமல் வாங்கி விட்டார். அவரை தொடர்ந்து 4 மாணவர்களுக்கு மேல் அதேபோல் பணம் எதுவும் கட்டாமல் டி.சி யை வாங்கியிருக்கிறார்கள்.

லோகநாதன் என்ற ஒரு மாணவனிடம் தொடங்கிய இப்பிரச்சினை அனைத்து மாணவர்களிடமும் ஒரு பாரிய விழிப்புணர்வை கற்றுத் தந்திருக்கிறது.

sai-rsyf-meeting-5இது வெறும் சாய் இன்ஸ்டிட்யூட்டோடு முடிந்து போகும் பிரச்சினையல்ல. நாடு முழுவதும் இது போன்று ஆயிரக்கணக்கில் பெட்டிக் கடைகளை திறந்து வைத்து 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் பணம் பறிக்கும் தனியார் கல்விக் கொள்ளையர்களை ஒழிக்காதவரை ஓயாது இந்த போராட்டம்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளஞர் முன்னணி,
தமிழ்நாடு