Friday, June 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 601

கிரிக்கெட் தோல்வி : டிக்கி கிழிந்தால் எங்கு முறையிடலாம் ?

15

லகை ஆளும் “கடவுள்கள்” ஆசீர்வாதத்தோடு ஆட்சியை அமைத்த மோடி பின்னால் நாட்டின் வளர்ச்சி தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை 40 சதம் அதிகமாகிவிட்டது. அது கூட பரவாயில்லை, பவர்ஸ்டாரின் ஆட்சியில் பன்றிக் காய்ச்சல் வைரஸ் கூட வலுவடைந்து விட்டதாம்.

கிரிக்கெட் உலகக்கோப்பை
மோடி பின்னால் நாட்டின் வளர்ச்சி தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்திய அணியும் உலகக் கோப்பையை கைப்பற்றியிருக்க வேண்டும்.

இப்படி எல்லாமே வளர்ந்து வரும் வேளையில் நியாயமாக இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை கைப்பற்றியிருக்க வேண்டும். ஆனால் களமிறங்கிய நேரம் சரியில்லையா அல்லது குடித்த கோமியத்தில் தரமில்லையா, தெரியவில்லை; இந்திய வீரர்களுக்கு வந்திருக்க வேண்டிய சில பல கோடிகளை பசு மாமிசம் சாப்பிடும் மிலேச்சர்கள் தட்டிப்பறித்து விட்டார்கள்.

அதே நேரம் ஐ.சி.சி.யை ஆட்சி செய்யும் புனிதப்பசுவின் நாடும், கங்கா தீர்த்தத்தை அன்றாடம் பருகும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனாரும்தான் சர்வதேச கிரிக்கெட் கஜானாவை கையில் வைத்திருப்பவர்கள் என்பதால் காசு குறித்த கவலை வேண்டாம். காசு வந்தாலும் கௌரவம் என்ற ஒரு வஸ்து உண்டல்லவா? அதுதான் பிரச்சினையே.

ஜட்டி கிழிந்தால் தைத்து உடுத்திக்கலாம், டிக்கி கிழிந்தால் எங்கு முறையிடலாம் என அன்றே ஒரு மகா கவிஞன் பாடிவைத்தான். அத்தகைய துயர நிலைக்கு இந்திய தேஷ்பக்தன் 26/03/2015 அன்று ஆளாகி விட்டான்.

என் சீனிவாசன் - கிரிக்கெட் உலகக் கோப்பை
ஐ.சி.சி.யை ஆட்சி செய்யும் புனிதப்பசுவின் நாடும், கங்கா தீர்த்தத்தை அன்றாடம் பருகும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனாரும்தான் சர்வதேச கிரிக்கெட் கஜானாவை கையில் வைத்திருப்பவர்கள்

தேசத்துக்கு போராடினால் தேசதுரோகம் என்கிறது அரசு. அரசாங்கம் சொல்வதையெல்லாம் ஒத்துக் கொள்வதுதான் தேசதுரோகம் என்கிறார்கள் போராடுபவர்கள். இந்தக் குழப்பத்தை போக்கவந்த அருமருந்துதான் நம் முன்னாள் எஜமானர்களால் அறிமுகம் செய்யப்பட்டு இன்னாள் எஜமானர்களால் ஊட்டி வளர்க்கப்படும் கிரிக்கெட்.

அத்தகைய சிறப்பு கொண்ட கிரிக்கெட் மூலம் தேசபக்தி ஒரு காட்டாற்று வெள்ளத்தைப் போலவும், கடுமையான பேதியைப் போலவும் இறுதிப் போட்டிவரை புடுங்கிக் கொண்டு ஓடியிருக்க வேண்டும். ஆனால் மிலேச்சர்களின் சதியால் மூன்று நாள் முன்பே இந்த தேசபக்தி பொசுக்கென்று மறைந்து போகும்படி ஆகிவிட்டது.

உலகக் கோப்பை துவங்கும் முன்பு ஆஸ்திரேலிய – நியூசிலாந்து தொடரில் தொடர்ந்து அடிவாங்கிய காரணத்தாலும் சொத்தை அணியை தேர்வு செய்துவிட்டார்கள் எனும் விமர்சனங்களாலும் இந்தியர்களுக்கு தேசபக்தி கொஞ்சம் அடைத்துக் கொண்ட மாதிரிதான் இருந்தது. அதில் குச்சியை விட்டு குத்தி கிளியர் செய்வதற்காக எண்ணற்ற முயற்சிகள் செய்யப்பட்டன. “ஹே சேம்பியன் ஸ்டே சேம்பியன்” என பூஸ்ட் கம்பெனி பத்து நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரம் போட்டது. மேக்கப் மாமா எல்லா அணிகளுக்கும் வாழ்த்து சொன்னார். அப்போதும் பெரிய அளவில் தேச பக்தி பொங்கவில்லை.

கிங் ஃபிஷர் நாட்டுப்பற்று
நாட்டுப்பற்று, கிங்பிஷர் பீர் போல பொங்கிப் பிரவாகம் எடுக்க ஆரம்பித்தது.

லீக் ஆட்டங்களில் வெற்றி தொடர ஆரம்பித்து அதில் பாகிஸ்தானை வென்றபிறகே எல்லா அடைப்புகளும் உடைபட்டு, வெட்கத்துடன் மறைந்திருந்த நாட்டுப்பற்று, கிங்பிஷர் பீர் போல பொங்கிப் பிரவாகம் எடுக்க ஆரம்பித்தது. இப்போது விட்டால் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தேசபக்தியை காட்டும் வாய்ப்பு வராது என்பதை தாமதமாக அறிந்த இந்தியர்கள் வீறுகொண்டு எழுந்தார்கள்.

மோக்கா மோக்கா என அடுத்த அணிகளை கிண்டல் செய்யும் வீடியோக்கள் வெளியாகி பக்கத்து நாடுகளை கடுப்பாக்கின. ‘எல்லா பச்சை சட்டைகளையும் இந்தியா வென்றுவிட்டது, ஆஸ்திரேலிய மஞ்சள் சட்டையிலும் பச்சை எழுத்துக்கள் உள்ளது. ஆகவே அதையும் துவம்சம் செய்வார்கள் நம் வீரர்கள்’ என உசுப்பேற்றல்கள் நாடெங்கும் கேட்டன. சென்னை அண்ணாநகரில் ஒரு சீன தேசத்து வாஸ்து மீன் போட்டிகளை முன்கூட்டியே கணித்து யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தத்ரூபமாக சொல்லியதாம். அதிலும் இந்தியா வெல்வதை அதிசயத்தக்கவிதத்தில் தெரிவித்ததாம்.

தேஷ்பக்தி ஒருவாறாக ஃபார்ம் ஆகிய நேரத்தில்தான் அந்த காலிறுதி ஆட்டம் வந்தது. வங்கதேசத்துடனான அந்த ஆட்டத்திற்கே சென்னை வீதிகள் வெறிச்சோடின. விளம்பரதாரர்களுக்கு எந்த பலனும் தராத வங்கதேசம் அப்போட்டியில் ஜெயிப்பதற்கு உண்டான எந்த நியாயமும் இல்லை, அதற்கான வலுவும் அவர்களுக்கு இல்லை என்பதும் உண்மை. ஆகவே அந்தப் போட்டியிலும் சைவர்கள் அதிகம் நிறைந்த இந்திய அணி வென்றது.

ஆஸ்திரேலியா பச்சை
‘எல்லா பச்சை சட்டைகளையும் இந்தியா வென்றுவிட்டது, ஆஸ்திரேலிய மஞ்சள் சட்டையிலும் பச்சை எழுத்துக்கள் உள்ளது. ஆகவே அதையும் துவம்சம் செய்வார்கள் நம் வீரர்கள்’

செமி ஃபைனலுக்கான தேஷ் பக்தி தயாரிப்புகள் மீண்டும் துவங்கின. சிட்னி அரங்கில் 70 சதம் நுழைவுச் சீட்டுக்களை இந்தியர்கள் வாங்கிவிட்டார்கள் எனும் செய்தி வந்தது. உடனே ஆஸ்திரேலிய அணி கேப்டன் பதறிப்போய் மண்ணின் மைந்தர்களே மைதானத்துக்கு வாருங்கள் என அறைகூவல் விட்டார். ஆனால் தேசபக்தியற்ற ஆஸி. மக்கள் அதை பொருட்படுத்தவில்லை. ‘மைதானத்தில் இருக்கும் கூட்டத்தின் இந்திய ஆதரவு ஆஸ்திரேலியாவுக்கு உளவியல் ரீதியிலான அச்சுறுத்தலை கொடுக்கும்’ என இந்திய ஊடகங்கள் துள்ளிக் குதித்தன.

‘சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது, எனவே அதனை மாற்ற வேண்டும் என மைக்கேல் கிளார்க் (ஆஸி. கேப்டன்) கேட்டுக் கொண்டதாகவும் அதனை பிட்ச் பராமரிப்பாளர் மறுத்ததாகவும்’ ஒரு செய்தி பரவியது. ஆஹா இதுபோதும் இந்தியா ஜெயிக்க என மீண்டும் ஒரு பெக் ஊடகங்களால் ஊற்றப்பட்டது.

இந்தியா அரையிறுதியில் தோற்கலாம் என்பதற்கு 50% வாய்ப்பிருக்கிறது எனும் சிந்தனையே கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டு தேசபக்தர்கள் எல்லோரும் அந்த நாளை எதிர்கொண்டார்கள். இதையெல்லாம் சாதாரண ரசிகன் நம்பினால் பிரச்சினையில்லை..

விராட் கோலி
“ஆஸ்திரேலியாவை ஜெயிக்காவிட்டால் இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு அர்த்தமேயில்லை” என விராட் கோலி முழங்கினார்.

இந்திய அணி வீரர்களும் நம்பித்தொலைத்தால் என்னவாகும்?. அதுதான் சிட்னியில் நடந்தது. “ஆஸ்திரேலியாவை ஜெயிக்காவிட்டால் இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு அர்த்தமேயில்லை” என விராட் கோலி முழங்கினார். அதை அனுஷ்கா சர்மா நம்பினால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. இரசிக தேசபக்தர்களும் இந்திய வெற்றியை பெப்சி விளம்பரம் போல நினைத்துக் கொண்டு எழுச்சி பெற்று நெஞ்சு நிமிர்த்தி வேலைக்கு லீவு போட்டால் அதற்கு கோலி எப்படி பொறுப்பாவார்?

லூஸ் மோஷனை கொடுத்த இறைவன்தான் மனிதர்களுக்கு கான்ஸ்டிபேஷனையும் கொடுத்தான் எனும் உபநிஷத்தில் உள்ள தத்துவத்தை மறந்தவர்கள் அதற்கான பலனை ஒருநாள் அனுபவிப்பார்கள் என ஆதிசங்கரர் ராசலீலாவில் சொல்லிவிட்டார் (ஆதாரமெல்லம் கேட்கக்கூடாது, அதில் அப்படித்தான் எழுதியிருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை). கோட்டு வாங்கும் அவசரத்தில் அதை மறந்ததால்தான் டெல்லி தேர்தலில் மோடியை அந்த ஆண்டவன் முரட்டுக்குத்தாக குத்தினான். மோடிக்கே இந்த கதி என்றால் தோனிக்கு இன்னும் மோசமாகத்தானே நடக்கும்! நடந்தது. எது நடந்ததோ அது ஏடாகூடமாகவே நடந்தது. இந்தியாவின் மீது பணம் கட்டிய சூதாட்டக்காரர்களால்கூட காப்பாற்ற முடியாத நிலைமைக்கு இந்தியா சென்றுவிட்டது.

தேசபக்திக்கு சாம்பிராணி ஆராதனை
படிப்பறிவற்ற பக்தர்களே இப்படி சினம் கொண்டு வீதிக்கு வரும்போது தேசபக்திக்கு நாள்தோறும் சாம்பிராணி போட்டு தீபாராதனை காட்டும் தலைமை குரு அர்னாப் கோஸ்வாமி சும்மாயிருப்பாரா?

டாஸ்மாக்கில் வண்டியை நிறுத்துகையில் கடை சாத்தப்பட்டால், சொம்பை நீட்டுகையில் பசுமாடு உச்சா போவதை நிறுத்திவிட்டால் உண்டாகும் வலியை இந்தியனாய் பிறந்த எல்லோரும் உணர்வார்கள். அவ்வாறே 29 மார்ச் வரை வேலிடிட்டி உள்ள தேசபக்திக்கு 26 மார்ச் அன்றே வேலைக்கு போகாமல் இருந்த இந்தியன் பொங்கியெழுவானா, மாட்டானா? அறச்சீற்றம் தேசமெங்கும் பொங்கிற்று. விராட்கோலியின் படங்கள் நாடெங்கும் கொளுத்தப்பட்டன, வடக்கே டி.வி பெட்டிகள் உடைக்கப்பட்டன.

படையெடுப்பில் பெண்களை வன்புணர்ச்சி செய்வதும் வாய்த்தகராறில் சம்மந்தமில்லாமல் அடுத்தவன் வீட்டு பெண்களை அசிங்கமாய் பேசுவது எனும் நெடிய இந்துஞானமரபு பண்பாட்டின் நீட்சி இங்கும் வெளிப்பட்டது. விராட் கோலியின் காதலி அனுஷ்காவே இந்த தோல்விக்கு காரணம் என சொல்லி அவரது உருவப்படங்களும் எரிக்கப்பட்டன.

படிப்பறிவற்ற பக்தர்களே இப்படி சினம் கொண்டு வீதிக்கு வரும்போது தேசபக்திக்கு நாள்தோறும் சாம்பிராணி போட்டு தீபாராதனை காட்டும் தலைமை குரு அர்னாப் கோஸ்வாமி சும்மாயிருப்பாரா? ஷேம் இன் சிட்னி என ஹேஷ்டேக் போட்டு இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான ட்விட்டர் போரை துவங்கினார். இந்திய அணியின் தோல்வி பற்றி விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கும் அளவுக்கு விவாதங்கள் நடத்தி டைம்ஸ் நவ் தன் நாட்டுப் பற்றை கதறக் கதற நிரூபித்தது.

தேசபக்திக்கு சாம்பிராணி ஆராதனை
இந்திய அணி தோற்றதை அடுத்து ராஞ்சியில் தோனி வீட்டுக்கு காவல்.

இதை வைத்து கோஸ்வாமி அய்யர் இந்தியா பேரில் பெட் கட்டி ஏமாந்திருப்பாரோ என சந்தேகிக்க வேண்டாம். இறுதிப் போட்டியில் வென்றால் ஏராளமான அன்னிய செலாவணி கிடைக்கும். டாலர்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதே உண்மையான தேசசேவை எனும் திருத்தம் இருபதாண்டுகளுக்கு முன்பே மனுதர்மத்தில் கொண்டுவரப்பட்டு விட்டது.

இந்தியா தோற்கும் என்று சொல்லி பந்தயம் கட்டும் வில்லனை ரட்சகன் படத்தில் நாகார்ஜுன் விரட்டி விரட்டி அடிப்பார். இந்தியா ஜெயிச்சா ஒவ்வொரு இந்தியனும் ஜெயிக்கிறான் என அவனுக்கு அறிவுரையும் சொல்வார். அப்படிப்பட்ட ரட்சகன் நாகர்ஜுன்கள் இன்று தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவை.

தேசமே கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் மட்டும் சிலர் கொண்டாடிக் கொண்டிருப்பதை காண சகிக்கவில்லை. இவர்கள் ஏன் எதையுமே பாசிடிவாக பார்க்க மறுக்கிறார்கள்?

எழவுக்கு போன மோடி மூன்று ஜோடி ஆடைகளை மாற்றுகிறார் என புலம்புவதைவிட ஆடை மாற்றும் பெருங்கடமைக்கு மத்தியிலும் எழவுக்கும் போயிருக்கிறார் என்பதுதானே நேர்மறையான சிந்தனை.. இதை என்றைக்கு இவர்கள் கற்றுக் கொள்ளப்போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. கட்டெறும்பு டைப் பாடலோடு கூடிய எத்தனை ஜெய்ஹிந்த் படம் வந்தாலும் இவர்களுக்கு தேசப்பக்தியை ஊட்ட முடியாது போலிருக்கிறது.

கேட்டால் கிரிக்கெட் மட்டும் என்ன ஒஸ்த்தியா என வாதம் செய்கிறார்கள்..

கிரிக்கெட் வணிகம்
தொழில் செய்யாத இந்திய கிரிக்கெட் வீரனை விரல் விட்டு எண்ணிவிடலாம் தெரியுமோ??

ஆமாம் ஒஸ்திதான். மற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் வெறுமனே விளையாடினால் போதும். கிரிக்கெட் அப்படியா? இந்திய அணியில் விளையாடுபவன் நிதி நிர்வாகத்தைக் கற்க வேண்டும், காரணம் ட்வல்த் மேனுக்கே அங்கு மாதம் 15 லட்சம் சம்பளம் வருகிறது. நடிப்பு பயிற்சி எடுக்கவேண்டும், முக அழகை பராமரிக்க வேண்டும்… விளம்பரங்களில் அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தானே இந்தியர்கள் குளிர்பானம் முதல் காப்பீடு வரை வாங்கவேண்டிய எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். முன்பெல்லாம் மைதானத்தில் கதியாக இருந்த வீரர்களெல்லாம் இன்று விளம்பர ஸ்டூடியோக்களில் கதியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தொழிலை நடத்த முடியாது.

எந்தத் தொழில் துவங்குவது என மூளையை கசக்கி யோசித்த ஒரேயொரு தடகள வீரரையாவது காட்ட முடியுமா உங்களால்! ஆனால் கிரிக்கெட் வீரர்கள் இந்திய பொருளாதாரத்துக்கு சேவை செய்ய வேண்டிய பெருங்கடமையையும் அல்லவா தோளில் சுமக்கிறார்கள். தொழில் செய்யாத இந்திய கிரிக்கெட் வீரனை விரல் விட்டு எண்ணிவிடலாம் தெரியுமோ??

அதுமட்டுமா, இந்தியாவின் செல்வாக்குள்ள கடவுள்கள் எல்லோரும் சைவ உணவுக்காரர்கள். அதைப்போலவே இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படுவோர் பெரும்பாலும் ஷைவாளே. இந்தியாவின் நீதித்துறையும், தேசிய ஊடகங்களும் ‘உயர்’ஜாதிக்காரர்களால் கட்டுப்படுத்தப்படுபவை, அதனால் அவை புனிதமானவையாக போற்றப்படுகின்றன. அதேபோல கிரிக்கெட்டும் ‘உயர்’சாதிக்காரர்களால் நிறைந்திருக்கிறது. அதனால் அவர்கள் பெரிய மரியாதைக்கு உரியவர்களாகிறார்கள். அதில் உங்களுக்கு என்ன காண்டு?

மோடி கிரிக்கெட் ஆட்டம்
கிரிக்கெட் பார்ப்பதில் இந்தியர்களே மெஜாரிட்டி என்பதால், மற்ற நாடுகள் தாங்கள் ஒரு மைனாரிட்டி என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேச விரோதிகளைப் பற்றி பேசி நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஆகவே கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்க என்ன செய்யலாம் என நாட்டுப்பற்றோடு யோசிக்கலாம்.

1.   கிராமங்களில் கிரிக்கெட் போட்டி நடத்தும் சங்கங்கள் உள்ளூர் அணியை நேரடியாக இறுதிப் போட்டிக்கு அனுப்பும். அந்த பாணியை பின்பற்றினால் இந்தியா ஃபைனலுக்கு போவதை யாராலும் தடுக்க முடியாது. 100 கோடி ரசிகர்களோடு ஐ.சி.சி.-க்கு படியளக்கும் இந்தியாவுக்கு இந்த கோரிக்கை வைக்க எல்லா உரிமையும் உண்டு..

2.   அணியில் குறைந்தபட்சம் 7 பேராவது அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்க வேண்டும் என விதி வைக்கலாம். உலகம் முழுக்க பசுவதை தடை கொண்டுவரலாம். உலகிலேயே பெரிய கட்சியான பா.ஜ.க இந்தியாவை ஆளும்போது இதெல்லாம் ஒரு மேட்டரேயில்லை.

3.   கிரிக்கெட் ஒளிபரப்பு விஜய் டிவி அளவுக்கு இறங்கி வந்துவிட்ட பிறகும் வைல்ட் கார்டு ரவுண்டு, பார்வையாளர்கள் ஓட்டுபோட்டு அணியை வெற்றிபெற வைப்பது போன்ற மாற்றங்கள் உலகக்கோப்பையில் அறிமுகமாகாமல் இருப்பது பண்பாட்டு மற்றும் டி.ஆர்.பி ரேட்டிங் விரோதம்.

4.   ஐ.பி.எல்லில் ஆட வரும் வெளிநாட்டு வீரர்களை கட்டாய கர்வாப்சி செய்துவிடலாம். அதன்பிறகு அவர்கள் இந்தியாவுக்கு எதிராக ஆட மாட்டார்கள்.

5.   கிரிக்கெட் பார்ப்பதில் இந்தியர்களே மெஜாரிட்டி என்பதால், மற்ற நாடுகள் தாங்கள் ஒரு மைனாரிட்டி என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். ஆகவே அவர்கள் ஒழுங்கு மரியாதையாக இந்தியாவின் உணர்வுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இவ்விசயத்தில் கருத்தொற்றுமையை உருவாக்க அமித்ஷா தலைமையில் ஒரு ஆணையத்தை உருவாக்கலாம்.

6.   இந்தியா தவிர மற்ற நாடுகள் தங்கள் அணி பயிற்சியாளர்களாக இந்திய அணி முன்னாள் வீரர்களையே நியமிக்க வேண்டும். அதுக்கு அப்புறம் எவனாச்சும் கோப்பையை எடுப்பான்னு நினைக்கிறீங்க?!

போலோ பாரத் மாதாகீ, ஜெய்யீ!!

–    வில்லவன்

காஞ்சிபுரம் லார்ட் ஐயப்பா கல்லூரி – புரட்டியெடுத்த போராட்டம்

7

காஞ்சிபுரம் லார்டு ஐயப்பா பொறியியல் கல்லூரி

கல்விக்கொள்ளையில் ஒரு புதிய பரிமாணம் – முறியடிக்கும் போராட்டத்தில் பு.மா.இ.மு

சென்னை – தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் பாதையில் வாலாஜாபாத்திற்கு முன்பாக உள்ள பகுதி ஊத்துக்காடு. ஊத்துக்காட்டிலிருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் வழியில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கல்லூரி தான் லார்டு ஐயப்பா இன்ஜினியரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் என்ற தனியார் பொறியியல் கல்லூரி.

லார்டு அய்யப்பா கல்லூரி
கல்விக் கொள்ளையன் கேசவன் யாதவிற்கு லார்டு வெங்கடேஸ்வரா, லார்டு ஐயப்பா இன்ஜினியரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் என்று இரண்டு கல்லூரிகள் உள்ளன.

அரசின் கல்வி ஊக்கத்தொகை பெறும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்கள் இங்கு ஐந்து பிரிவுகளில் பொறியியல் படிப்பை படித்து வருகின்றனர். மொத்தமாக 300 பேர் வரை இங்கு படிக்கின்றனர்.

பெயர் தான் கல்லூரியே தவிர அதற்கான அறிகுறி எதுவும் இல்லாத சுடுகாடு அது. உண்மைதான், அந்தப் பகுதி ஒரு பொட்டல்காடு. 5 கிலோ மீட்டர் சுற்றுவட்டார அளவிற்கு எந்த கிராமமும் கிடையாது. ஒரு சுடுகாடு மட்டும் உண்டு.

கல்விக் கொள்ளையன் கேசவன் யாதவிற்கு லார்டு வெங்கடேஸ்வரா, லார்டு ஐயப்பா இன்ஜினியரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் என்று இரண்டு கல்லூரிகள் உள்ளன. ஆனால் செயல்பாட்டில் இருப்பது லார்டு வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் மட்டும்தான்.

லார்டு அய்யப்பா கல்லூரி
பெயர் தான் கல்லூரியே தவிர அதற்கான அறிகுறி எதுவும் இல்லாத சுடுகாடு அது.

லார்டு ஐயப்பா இன்ஜினியரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் ல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் யாரும் சேரவில்லை. லார்டு வெங்கடேஸ்வரா கல்லூரியில் சேர்ந்தவர்களில் சில மாணவர்களை லார்டு ஐயப்பா கல்லூரியில் மாற்றல் செய்யப்பட்டனர். மிக முக்கியமாக தாழ்த்தப்பட்ட / பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டத்தின் ( அரசாணை எண் – 92 ) வழியாக சேர்ந்த மாணவர்கள் தான் அதிகம். மொத்தமுள்ள சுமார் 300 மாணவர்களில் 180 பேர் இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏஜெண்டுகள் மூலம் பிடித்து கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள்.

அந்த ஏஜெண்டுகள் யார் தெரியுமா? இதே தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள், இருப்பவர்கள்தான். அதில் மிகவும் முக்கியமானவர் இரா. கிருத்துதாசு காந்தி, ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். பதவியில் இருந்த போது அரசின் அடியாளாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கியவர், இப்போது பதவியில் இல்லையென்றாலும் ஏகாதிபத்திய கைக்கூலி நிறுவனமான “துடி இயக்கம்” எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் காப்பாளராக இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை காட்டிக்கொடுத்து வருபவர்.

லார்டு அய்யப்பா கல்லூரி
லஞ்சத்தொகைக்காக விழிப்புணர்வு ஊட்டுவது என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை பிடித்துக் கொண்டு வந்து கல்விக்கொள்ளையனிடம் அடகு வைத்திருக்கிறான்.

இந்த துரோகிதான் தனக்கு கிடைக்கும் லஞ்சத்தொகைக்காக நெல்லை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது என்ற பெயரில் அப்பாவி மாணவர்களை பிடித்துக் கொண்டு வந்து இந்த கல்விக்கொள்ளையனிடம் அடகு வைத்திருக்கிறார்.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்படி சேரும் மாணவருக்கான கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே கொடுத்துவிடும் என்றாலும் கல்லூரியில் சேரும் போது முன்தொகையாக 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கட்ட வேண்டும். அப்புறம் விடுதிக் கட்டணம், வீட்டில் இருந்து வருபவர்களுக்கு பேருந்து கட்டணம், செயல்படாத கல்லூரி என்றாலும் அவ்வப்போது நிர்வாகம் சொல்லும் கட்டணங்கள் என மாணவர்களிடம் கறந்து விடுவார்கள்.

லார்டு அய்யப்பா கல்லூரி
விடுதிக் கட்டணம், வீட்டில் இருந்து வருபவர்களுக்கு பேருந்து கட்டணம், செயல்படாத கல்லூரி என்றாலும் அவ்வப்போது நிர்வாகம் சொல்லும் கட்டணங்கள் என மாணவர்களிடம் கறந்து விடுவார்கள்.

இதில் மிகவும் கொடூரமானது என்னவென்றால், மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மாநில அரசு வழங்கும் ஊக்கத்தொகையான 14,000 ரூபாயை நிர்வாகம் மாணவர்களுக்கு தருவதில்லை. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி ரவுடிகளை வைத்து மிரட்டி அந்தப் பணத்தையும் பறித்துக் கொள்கிறார்கள். தட்டிக் கேட்டால் கொலை செய்து அருகில் உள்ள சுடுகாட்டில் புதைத்து விடுவோம் என்று மிரட்டுகிறார்களாம்.

கல்லூரியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. விடுதி பாழடைந்த நிலையில் சீரழிந்து கிடக்கிறது. உணவு, குடிநீர் வசதிகளைப் பொறுத்தவரை, எந்தவிதமான சுகாதாரமும் இல்லை.விடுதிக்கு காவலர்கள், வார்டன்கள் என யாரும் இல்லை.

லார்டு அய்யப்பா கல்லூரி
தட்டிக் கேட்டால் கொலை செய்து அருகில் உள்ள சுடுகாட்டில் புதைத்து விடுவோம் என்று மிரட்டுகிறார்களாம்.

முக்கியமாக, இக்கல்லூரிக்கென்று நிரந்தரமான பிரின்ஸ்பால், துறை தலைவர்கள் (HOD) கிடையாது. மொத்தமாகவே 5 விரிவுரையாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆய்வகம், ஆய்வு உபகரணங்கள் கிடையாது. இதனால் மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமல் போன காரணத்தால், எல்லா மாணவர்களுக்கும் அரியர் உள்ளது. இன்னும் சரியாக சொல்லப்போனால் கடந்த 6 மாதங்களாக கல்லூரி நடைபெறவே இல்லை. மாணவர்கள் வீட்டில் இருப்பதுபோல் எப்பொழுதும் லுங்கியுடன் ஆங்காங்கே உட்கார்ந்து படித்துத்தான் தேர்வுக்கு தயாராகிறார்கள். மொத்தமாக இது கல்லூரியே கிடையாது என்பதை அங்கு செல்கின்ற யார் வேண்டுமானாலும் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

இந்தப் பிரச்சனைகளுக்காக மாணவர்கள் பலமுறை மறியல் செய்வது, அண்ணா பல்கலைக்கழகத்தில் மனு கொடுப்பது, கோட்டாட்சியரிடம் மனு கொடுப்பது என்று பலமுறை போராடியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை .

ஒவ்வொரு முறையும் எந்த அடிப்படை வசதிகளை கேட்கிறார்களோ அந்த வசதி அறவே ஒழிக்கப்படும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு ஒரு முறை “கல்லூரியில் ஆசிரியர் பற்றாக்குறை, ஆய்வக வசதி போதவில்லை, விடுதியில் உணவு வசதி சரியில்லை” என்று போராடி இருக்கின்றனர். போராட்டத்திற்கு பின்பு ஆசிரியர்கள் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டுள்ளது; ஆய்வகம் இழுத்து மூடப்பட்டுள்ளது; விடுதியில் வெறும் புளி சாதம், லெமன் சாதம் என்ற அளவுக்கு மேலும் மோசமாக்கப்பட்டுள்ளது.

லார்டு அய்யப்பா கல்லூரி
கல்லூரியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை. விடுதி பாழடைந்த நிலையில் சீரழிந்து கிடக்கிறது.

இது பற்றி மாணவர்கள் கல்லூரி நிர்வாகியிடம் கேட்டபோது “அப்படித்தான் செய்வேன் உங்களால என்ன மயி…….. புடுங்க முடியும். ரொம்ப பேசுனா அடிச்சு கொன்னுபோடுவேன்” என்று ஒரு மாணவனை அடிக்கச் சென்றுள்ளார். மிரண்டுபோன மாணவர்கள் அடங்கிப் போவது, அல்லது மூட்டை முடிச்சுகளுடன் வீட்டுக்குப் போவது என்ற இரண்டு முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம்.

அப்போதுதான் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் செயல்பாட்டை நண்பர்கள் மூலமாக கேள்விப்பட்டு நம்மைத் தொடர்புகொண்டு போனிலேயே குமுறினார்கள். நேரில் சென்று அவர்களைப் பார்த்தபோது செங்கல் சூளையில் கொத்தடிமையாக மாட்டிக்கொண்டவர்களின் நிலைதான் நினைவுக்கு வந்தது. நேரில் கண்ட காட்சிகள்  யாரையும் கண்கலங்க வைத்துவிடும். இருப்பினும் அம்மாணவர்கள் போராட்ட உணர்வினை மட்டும் கைவிடவில்லை.

லார்டு அய்யப்பா கல்லூரி
மாணவர்களின் நிலை செங்கல் சூளையில் கொத்தடிமையாக மாட்டிக்கொண்டவர்களின் நிலையைவிட மோசமாகவே இருந்தது.

அரசு உதவித் திட்டம் என்ற பெயரில் கல்லூரியில் சேர்த்துவிட்ட தாழ்த்தப்பட்ட பிரிவு முன்னாள், இன்னாள், உயர் அதிகாரிகள், கல்லூரி நிர்வாகத்தின் அடியாளாக அவ்வப்போது வந்து மிரட்டிச் செல்லும் புரட்சிபாரதம் எனும் தலித் அமைப்பின் யோக்கியதைகள், அண்ணாபல்கலைக்கழக உயர் அதிகாரிகள், வட்டாட்சியர், கோட்டாட்சியர், போலீசு ஆகிய அதிகாரவர்க்கத்தின் பித்தலாட்டம், கிரிமினல்தனங்கள், அதிகார பலம், பண பலம், சாதிஆதிக்கம் ஆகியவற்றைக் கொண்டு கல்விக்கொள்ளையை நடத்தி வரும் கல்லூரி நிர்வாகம் எனப் பலபேரின் சுயரூபங்களை சொந்த முறையில் உணர்ந்து இருந்தார்கள். ஆனால் போராடி, களைத்துப்போய் இருந்தார்கள்.

அரசியல்படுத்தப்பட்ட மாணவர்கள்

இந்நிலையில் பு.மா.இ.மு தோழர்கள் தனியார்மயக் கல்விக்கொள்கையின் அரசியலை அவர்களிடம் எடுத்துரைத்தார்கள், மாணவர்களுக்கு அரசியல் தேவை புரிந்தது, அமைப்பானார்கள். தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக புரட்சிகர அமைப்பாக போராடும் துணிவைப் பெற்றார்கள்.

செயல்படாத அந்த லார்டு ஐயப்பா கல்லூரிக்கு இவ்வாண்டுக்கான அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கும் சடங்குக்காக 19-03-2015 அன்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வரும் தகவலை மாணவர்கள் அறிந்துகொண்டார்கள்; “இம்முறையும் ஏமாறக்கூடாது, இதற்கு முடிவு கட்டிவிட வேண்டும்” என்று முடிவு செய்தனர்.

லார்டு அய்யப்பா கல்லூரி

அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் வழங்கும் சடங்குக்காக அதிகாரிகள் ஆய்வு செய்ய வரும் தகவலை மாணவர்கள் அறிந்துகொண்டார்கள்; “இம்முறையும் ஏமாறக்கூடாது, இதற்கு முடிவு கட்டிவிட வேண்டும்” என்று முடிவு செய்தனர்.

கல்லூரியை போராட்டக்களமாக்கிய மாணவர்கள்

19-03-2015 அன்று காலை 10 மணிக்கு அதிகாரிகள் வருவதாக தகவல். நாம் அதற்கு முன்பே 9 மணிக்கே கல்லூரிக்கு அருகில் சென்றுவிட்டோம். அங்கிருந்து நடப்பவைகளை கவனிக்கத் தொடங்கினோம்.

அந்த சுடுகாட்டில் அதிசய காட்சிகள் அரங்கேற தொடங்கியிருந்தன.

  • இதுவரை 5 விரிவுரையாளர்கள் மட்டுமே இருந்த கல்லூரிக்கு அன்று 30 க்கும் மேற்பட்ட ‘விரிவுரையாளர்கள்’ இறக்குமதி செய்யப்பட்டு அடையாள அட்டை மாட்டிவிடப்பட்டு ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். பார்ப்பவர்கள் யாரும் அவர்களை சினிமா துணை நடிகர்கள் என்று அடையாளம் கண்டிடலாம்.
  • இதுவரை கணிப்பொறிகளையே பார்த்திராத கம்ப்யூட்டர் லேபில், 10 க்கும் மேற்பட்ட கணிப்பொறிகள் வாடகைக்கு வந்திறங்கியிருந்தன.
  • மாணவர்கள் அனைவரும் அடையாள அட்டை சகிதமாக கல்லூரிக்கு அனைவரும் வரவேண்டும் என விடுதிக்கு உத்தரவும் பறந்தது. அன்று மட்டும் விடுதியில் சமையல் கொஞ்சம் சுமாராக செய்யப்பட்டிருந்ததாம்.

காலை 10 மணிக்கு அதிகாரிகள் மூன்று காரில் கல்லூரி நிர்வாகத்தினருடன் வந்திறங்கினர். மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் ஆஜராகி இருந்திருந்தாலும் கல்விக்கொள்ளையன் கேசவனால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. மாணவர்கள் அனைவரும் லுங்கி, கால்சட்டையுடன் வந்திருந்தததுதான் அதற்குக் காரணம்.

அதிகாரிகள் கல்லூரிக்குள் ஆய்வுப் பணியை மேற்கொள்ளத் தொடங்கினர். ஆய்வுப் பணியை மேற்கொள்வதை போல நடித்தனர் என்றும் கூறலாம்.

லார்டு அய்யப்பா பொறியியல் கல்லூரி
“நாங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம். உங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏற்பாடு செய்கிறோம்” என்று பழைய பல்லவியையே பாடிய அதிகாரிகள்.

சரியாக 1.30 மணி நேரத்திற்குப் பின்பு அதிகாரிகள் ‘ஆய்வை’ முடித்துவிட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் 150 பேர் வெளியில் நின்று கொண்டிருக்க, மாணவர்களிடம் எதுவும் விசாரிக்காமல், அதைக் கண்டுகொள்ளாதது போல் நேராக அலுவலகத்திற்கு சென்று கல்லூரி சேர்மனிடம் ‘பேச வேண்டியதை பேசி விட்டு’ ’வாங்க வேண்டியதை வாங்கும் வழிமுறையை சொல்லிவிட்டு’ வெளியே வந்தனர்.

அதிகார வர்க்கத்திற்கே உரிய திமிரோடு, எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அதிகாரிகள் புறப்படத் தயாரானார்கள். ‘இப்போதுதானே வேலையே தொடங்குகிறது இவர்கள் எங்கு கிளம்பிவிட்டார்கள்’ என்ற உணர்வோடு வெளியே வந்த அதிகாரிகளை குறுக்கிட்டு மாணவர்கள் கேள்வியெழுப்பத் தொடங்கினர்.

விடுதியையும் பார்க்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளோ “நாங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம். உங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏற்பாடு செய்கிறோம்” என்று பழைய பஞ்சாங்கத்தை பாடத் தொடங்கினர்.

லார்டு அய்யப்பா கல்லூரி
“நாங்க எல்லாவற்றையும் பார்த்து விட்டோம்… கரெக்டாதான் செஞ்சிருக்கோம்’’ – என்று கூறினர் அதிகாரிகள்.

மாணவர்கள் விடுவதாயில்லை. “அப்படியென்றால், நீங்கள் ஆய்வு செய்த அந்த பேப்பரை காட்டுங்க சார் நாங்க கொஞ்சம் ஆய்வு செய்கிறோம்’’ என்று கேட்டவுடன் அதிகாரிகளுக்கு முகம் சுள்ளென்று ஆனது.

“அதெல்லாம் காட்ட முடியாது. எங்க மேல நம்பிக்கை இல்லையா, நாங்க எல்லாவற்றையும் பார்த்து விட்டோம்… கரெக்டாதான் செஞ்சிருக்கோம்’’ என்று தங்கள் புத்தியைக் காட்டத் துவங்கினர்.

“இதுக்கு முன்னாடியும் இப்படித்தான் எழுதிக்கிட்டு போனீங்க, ஒண்ணும் நடக்கல, இப்ப மட்டும் என்ன நடக்கப் போகுது… எங்களுக்கு ஒரு முடிவு செஞ்சுட்டு போங்க சார்” மாணவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியது.

அதிகாரிகளுக்கோ வியர்க்கத் தொடங்கியது. “எங்களால எந்த முடிவும் செய்ய முடியாது. அதிகாரம் இல்லை’’ என்று கூறினார்கள்.

“அப்படியென்றால் அதிகாரம் உள்ள அதிகாரிகள் வரும்வரை இங்கேயே இருங்கள்” என்று கூறி மாணவர்கள் அதிகாரிகளை சிறை பிடித்தார்கள்.

மாணவர்கள் உறுதியாக நிற்பது கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர் அதிகாரிகள். மாணவர்களும் பு.மா.இ.மு தோழர்களும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினர் அதிகாரிகள்.

மாண்வர்களை மீறி வெளியில் செல்லமுடியாது என்பதை உணர்ந்தவர்கள், அவர்களாகவே அலுவலக அறைக்குள் அடைபட்டுக்கொண்டார்கள். கல்லூரி சேர்மன் திருடன் பஞ்சாயத்து பேசுவது போல மாணவர்களிடம் சமரசம் பேசினார்.

“சேர்மனோடு பேசத் தயாரில்லை, அதிகாரிகளை வரச்சொல்” என்று கூறி அவரோடு பேசுவதை புறக்கணித்தோம். இரண்டு மணிநேரம் சிறைவாசம் தொடர்ந்தது, அதிகாரம் உள்ள அதிகாரிகள் யாரும் வரவில்லை. வழக்கம்போல போலீசு தான் படையோடு வந்தது. வந்தவுடன் வாலாஜா இன்ஸ்பெக்டர் நடிப்பைத் தொடங்கினார்.

சேர்மனைப் பார்த்து “காலேஜை ஒழுங்கா நடத்துனா இந்தப் பிரச்சினை வருமா, முடியலைன்னா இழுத்து மூடிவிட்டுப் போக வேண்டியதுதானே’’ என்று கூறி தன்னை நல்லவனாக காட்டிக் கொண்டார்.

நாம் பிரச்சினையை எடுத்துக் கூற ஆரம்பித்தவுடனே “நீங்கள் யார்? மாணவர் அமைப்பெல்லாம் உள்ளே வரக்கூடாது, வெளியே போங்க’’ என்றது போலீசு.

“நாங்கள் மாணவர்களின் பிரதிநிதிகள். மாணவர்கள் சொன்னால் செல்கிறோம்’’ என்றதும், மாணவர்கள் ஒரே குரலில் “அவர்கள் எங்களுக்காகத்தான் வந்திருக்காங்க, அவர்கள் இங்குதான் இருப்பார்கள்’’ என்று கூறி போலீசின் வாயை அடைத்தனர்.

“உங்கள் லைஃபை கெடுத்துக்காதீங்க’’ என்று கூறி மிரட்டும் பாணியில் பேசத் தொடங்கி தன் வேலையை போலீசு காட்டியதும் மாணவர்களோ “ஏற்கனவே வாழ்க்கை போய்விட்டது, இனி போவதற்கு ஒன்றும் இல்லை’’ என்று பதிலளித்தவுடன் அடங்கியது போலீசு.

போலீசும், நிர்வாகமும் ஒரு கட்டத்தில் நம்மோடு பேசுவது போல் பேசிக் கொண்டே அதிகாரிகளை திருட்டுத் தனமாக, வேறு வழியில் தனித்தனியாக அழைத்துச் சென்றனர். இதை அறிந்த மாணவர்கள் அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராவோம் என அறிவித்தனர்.

அன்று இரவே தகவல் பலகையில், “கல்லூரியில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதால் கல்லூரியை காலவரையின்றி மூடு”வதாக கல்லூரி முதல்வர் கையொப்பமிட்ட ஒரு பேப்பர் ஒட்டப்பட்டிருந்தது.

இரவு வாலாஜாபாத் போலீசு இரண்டு பேர் வந்து “ஒழுங்கா, நைட்டோட நைட்டா காலி பண்ணிட்டு போயிடுங்க, இல்லன்னா வலுக்கட்டாயமா வெளியேற்றுவோம்” என்று கூறி மிரட்டியது.

மாணவர்கள் “காலி செய்ய முடியாது” என்று மறுத்தனர்.

அடுத்தநாள் உணவையும் நிறுத்தி விட்டனர். மாணவர்கள் முழுநாளும் உணவில்லாமல் தவிக்க விடப்பட்டனர். தொடர்ச்சியாக, சேர்மனோ மாணவர்கள் மீது குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்.

“அதிகாரிகளை முற்றுகையிட்டது தவறு, மன்னிப்புக் கடிதம் கொடுத்தால்தான், இனி ஆய்வுக்கு வருவார்கள், இல்லாவிட்டால் தேர்வு எழுத முடியாது…” என்று கூறி மிரட்டப் பார்த்தார்.

மாணவர்கள், “மன்னிப்புக் கடிதம் கொடுக்க முடியாது” என்று உறுதியாகக் கூறிவிட்டு அடுத்த போராட்டத்திற்கு தயாரானார்கள்.

கலெக்டர் அலுவலகத்தை விடுதியாக்கிய மாணவர்கள்

மாணவர்கள் கொஞ்சம் பேர் விடுதியை காலி செய்துவிட்டு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை விடுதியாக பயன்படுத்துவது என திட்டமிட்டு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் தலைமையில் இரவு 7.30 மணி அளவில், லார்டு ஐயப்பா கல்லூரி நிர்வாகத்தையும், அரசு அதிகாரவர்க்கத்தின் சதித்தனத்தையும் அம்பலப்படுத்தி முழக்கங்கள் எழுப்பி கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று அமர்ந்தனர்.

போலீசு தலைதெறிக்க ஓடி வந்தது “உடனே இடத்தை காலி செய்யாவிட்டால் எப்.ஐ.ஆர் போடுவோம்” என்று பூச்சாண்டி காட்டியது.

“என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், எங்கள் பிரச்சனைக்கு முடிவு தெரியும் வரை இங்கிருந்து போக மாட்டோம்’’ என்று உறுதியாக நின்றவுடன் ” கலெக்டரிடம் பேசுகிறேன்” என்று போலீசு பதுங்கியது.

சிறிது நேரத்தில் தாசில்தார் வந்தார். சமரசம் பேசினார். அடுத்த சில நிமிடங்களில் கோட்டாட்சியர் ஓடி வந்தார். பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

“உடனடியாக கல்லூரியையும், விடுதியையும் திறக்க வேண்டும், அடுத்த நாள் (20-03-15) முதல் உணவு ஏற்பாடு செய்து தரவேண்டும்” என்று கோரினோம். “மற்றவற்றை உங்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை. அதை நாங்கள் கல்லூரியில் பேசிக்கொள்கிறோம்” என்றோம்.

நமது கருத்தைக்கேட்ட கோட்டாட்சியர் கல்லூரி நிர்வாகத்தை உடனடியாக வரவழைத்து,  “கல்லூரியையும், விடுதியையும் உடனே திறக்க வேண்டும்” என உத்தரவு போட்டார். “அடுத்த நாள் கல்லூரிக்கு வந்து பிரச்சனையை தீர்ப்பதாக” சொன்னார்.

பிரச்சனையை தீர்ப்பார் என்பதில் நம்பிக்கை இல்லை என்றாலும் காலவரையற்ற விடுமுறை ரத்து செய்யப்பட்டதால் போராட்டத்தை தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டதை நினைத்து கல்லூரி விடுதிக்கு மாணவர்கள் கிளம்பினர். அடுத்த நாள் கோட்டாட்சியர் தலைமையில் கல்லூரியில் பேச்சுவார்த்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

கல்லூரியில் கோட்டாட்சியர்

காலை 10 மணிக்கு வருவதாகச் சொன்ன கோட்டாட்சியர் வரவில்லை. மாணவர்கள் தொடர் நிர்ப்பந்தத்தால் மதியம் 1 மணியளவில் வந்தார். நேராக கல்லூரி சேர்மனை சந்திக்க சென்றதன் மூலம் தனது சுயரூபத்தை வெளிப்படுத்திக் கொண்டார், கோட்டாட்சியர்.

பின்பு, மாணவர்கள் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். அவர்களோடு பு.மா.இ.மு தோழர்கள் இருவரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் அடிப்படையான பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், நிர்வாகம் மாணவர்களின் மீது கூறிய சில்லரை விசயங்களை முன்வைத்து மாணவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார் கோட்டாட்சியர்.

நேற்றைய போராட்டத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தையில் மாணவர் அமைப்பையும் கலந்து கொள்ளச் சொன்ன கோட்டாட்சியர், இன்றோ சதித்தனமாக நடந்து கொண்டார். தோழர்கள் இருப்பது மாணவர்களுக்கு தைரியமூட்டுகிறது என்பதை உணர்ந்து அமைப்புத் தோழர்கள் இருவரையும் அராஜகமாக வெளியேற்றி, தான் தனியார் கல்லூரி முதலாளிகளின் பக்கம்தான் என்பதை நிரூபித்துக் கொண்டார்.

“இன்று முதல் அடிப்படை வசதிகளுக்கான வேலையை தொடங்க வேண்டும். கல்லூரியை முறையாக நடத்த வேண்டும், விடுதியை முறையாக பராமரிக்க வேண்டும்” என்று மாணவர்கள் உத்தரவு போட வேறு வழியில்லாத இந்தக் கூட்டுக்களவாணிகள், ” இதையெல்லாம் செய்கிறோம். ஆனால் அதற்கு ஒரு காலஅவகாசம் தேவைப்படும்” என்ற பாட்டை பாடிக்கொண்டே இருந்தனர்.

மாணவர்களோ, “கல்லூரியை முறையாக நடத்தவில்லையென்றான் இதை மூடும் இறுதிச் சடங்கை நாங்கள் செய்யவேண்டி வரும்” என்று எச்சரித்து விட்டு வெளியேறிவிட்டனர்.

மாணவர்கள் ஒரு புரட்சிகர அமைப்பின் பின்னால் உறுதியாக நின்று போராடுவதை கண்ட கல்லூரி நிர்வாகம் பழையபடி மாணவர்களை அடக்கமுடியாது என்பதை உணர்ந்து ஆய்வுக்காக கொண்டு வந்து இறக்குமதி செய்யப்பட்டவைகளை நிரந்தரமாக்கி கல்லூரியை நடத்தத் தொடங்கியுள்ளது.

பு.மா.இ.மு தலைமையிலான மாணவர்களின் உறுதியான போராட்டம்தான் இதை சாதித்துள்ளது என்றாலும், கல்வி உதவித்தொகை திட்டம் என்ற பெயரில் உழைக்கும் மக்களின் பிள்ளைகளை தனியாரிடம் தள்ளிவிட்டு கல்விக்கொள்ளையர்களை கொழுக்க வைக்கும் இந்த அரசின் உண்மை முகம் தற்போதுதான் இக்கல்லூரி மாணவர்களுக்கு புரியவந்துள்ளது.

அரசுப் பணத்தை (உழைக்கும் மக்கள் பணத்தை) லார்டு ஐயப்பா போன்ற தனியாரிடம் கொடுத்து ஏன் கொழுக்க வைக்க வேண்டும்? இந்தக் கல்லூரிகளையே அரசு கையகப்படுத்தி மாணவர்களுக்கு தரமான கல்வியைக் கொடுக்கலாமே என்ற கேள்வியை அக்கல்லூரி மாணவர்கள் எழுப்புகிறார்கள்.

அததகையதொரு போராட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியுடன் இணைந்து தயாராகிக் கொண்டிருக்கின்றனர் லார்டு ஐயப்பா இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள்.

  • இதுபோல் பல தனியார் பொறியியல் கல்லூரி! கல்விக்கொள்ளையர்களிடம் சிக்கியுள்ள லட்சக்கணக்கான மாணவர்களே
  • அவர்களின் பெற்றோர்களே!
  • இதையெல்லாம அன்றாடம் பர்த்துக்கொண்டிருக்கும் பேராசிரியர்களே!
  • உழைக்கும் மக்களே!

பொறுத்தது போதும், போராட வாருங்கள் !

உங்களுக்கு சேவை செய்ய பு.மா.இ.மு காத்திருக்கிறது.
தொடர்புகொள்ளுங்கள் – 9445112675.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
காஞ்சிபுரம்
.

உறிஞ்சிக் கொழுக்கும் ஆர்.டி.ஓ – வேலூரில் ஆட்டோ சங்க ஆர்ப்பாட்டம்

1

வேலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள “ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம்” சார்பாக “ஆட்டோ தொழிலாளர் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம்! தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம்!” என்கிற தலைப்பின் கீழ் 30-03-2015 அன்று காலை 11 மணி அளவில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் ஆல்வின் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வேலூர் ஆட்டோ ஓட்டுனர் ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுலவகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தோழர் ஆல்வின் தனது தலைமை உரையில்

தோழர் ஆல்வின்
தோழர் ஆல்வின் தலைமையுரை
  • லைட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் பேட்ஜ் வழங்க வேண்டும்.

  • வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • ஆட்டோக்கள் நிரம்பி வழியும் வேலூர் மாநகரத்தில் புதிய பெர்மிட் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

  • அநியாய வட்டி வசூல் செய்யும் நிதி நிறுவனங்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

உள்ளிட்ட கோரிக்கைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.

தோழர் சரவணன் உரை
தோழர் சரவணன் உரை

“வட்டார போக்குவரத்து அலுவலகப் பணிகளை அரசு அலுவலர்கள் செய்யாமல் தரகர்கள் மூலமாக செய்யப்படுவதால் ஆட்டோ தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது” என்பதை அம்பலப்படுத்தி தோழர் சரவணன் பேசினார்.

புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் டெக்னீசியன்கள் சங்கப் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் சிறப்புரையாற்றினார்.

சிறப்புரையாற்றிய தோழர் வெற்றிவேல் செழியன்
சிறப்புரையாற்றிய தோழர் வெற்றிவேல் செழியன்

அவர் தனது உரையில்…

“ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நியாயமான உரிமைகளைப் பெற்றுத் தராமல் அரசு அதிகாரிகளுடன் சமரசமாக நடந்து கொள்ளுமாறு வேலூர் மாவட்டத்தில் செயல்படும் பிற சங்கங்கள் தொழிலாளர்களை ஏமாற்றி வந்ததன் விளைவாக பெருவாரியான தொழிலாளர்கள் தற்போது ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தில் இணைந்துள்ளனர்.

பொருளாதார கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாமல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வலியுறுத்தி வரும் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே இவர்கள் இச்சங்கத்தில் இணைந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் காவல் துறை ஆகிய அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் ஆட்டோ தொழிலாளர்களை சுரண்டுவதோடு பல்வேறு வகைகளில் அலைக்கழிக்கவும் வைக்கின்றனர்.

இத்தகைய அரசு நிறுவனங்களுக்கு எதிராக வர்க்க ஒற்றுமையோடு ஓரணியில் திரளும் போது மட்டுமே ஆட்டோ தொழிலாளர்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெறமுடியும்!”

என்பதை தெளிவுபடுத்திப் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஆட்டோ தொழிலாளர்களை அணி திரட்டுவது என்ற வகையில் பிரச்சாரம் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. மாவட்டம் முழுவதிலிமிருந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாவட்டம் முழுவதிலிருந்தும் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தோழர் வெற்றிவேல் செழியன் அவர்களின் உரையும் இந்த ஆர்ப்பாட்டமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொண்ட ஆட்டோ தொழிலாளர்களை எழுச்சியுறச் செய்தது. தங்கள் பகுதிகளிலும் இத்தகையதோர் சங்கத்தை கட்டியமைத்து இது போன்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலரும் ஆர்வம் காட்டினர்.

 வேலூர் நகரை நிறைத்த ஆட்டோ ஓட்டுநர் சங்க சுவரொட்டிகள்
வேலூர் நகரை நிறைத்த ஆட்டோ ஓட்டுநர் சங்க சுவரொட்டிகள்

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:

ஆட்டோ ஓட்டுனர் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ ஓட்டுனர் ஆர்ப்பாட்டம்ஆட்டோ ஓட்டும் தொழிலாளியிடம்
வட்டி போட்டு கொள்ளையடிக்கும்
ஆட்டோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!

தலைவிரித்தாடுது! தலைவிரித்தாடுது!
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்
தரகும் லஞ்சமும்
தலைவிரித்தாடுது! தலைவிரித்தாடுது!

உழைத்து பிழைக்கிறான் ஆட்டோ தொழிலாளி!
அத – உறிஞ்சி கொழுக்கிறான் ஆர்.டி.ஓ அதிகாரி!

தொழிலாளி பணத்தில் வயிறு வளர்க்கும்
காப்பீட்டு நிறுவன அதிகாரிகளே!
பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு
இழுத்தடிக்காமல் அலைக்கழிக்காமல்
காப்பீட்டு பணத்தை உடனே வழங்கு!

நேர்மையாக உழைத்து வாழும்
மக்களுக்காக சேவை செய்யும்
ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களை
குற்றவாளிகளாக சித்தரிக்கும்
காவல் துறையை கண்டிக்கின்றோம்!

இல்லை இல்லை! இல்லவே இல்லை!
ஆட்டோ தொழிலாளி இல்லை என்றால்
மக்களுக்கான போக்குவரத்து
இல்லை இல்லை! இல்லவே இல்லை!

போக்குவரத்து இல்லாத
சாலைகள் எதுவும் இல்லாத
அனைத்து கிராம மக்களுக்கும்
போக்குவரத்தே ஆட்டோதான்!

நேரம் காலம் இல்லாமல்
நல்லது கெட்டது எல்லாத்துக்கும்
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன்
ஆட்டோ ஓட்டும் தொழிலாளியே!

மத்திய மாநில அரசுகளே!
மானியம் வழங்கு! மானியம் வழங்கு!
ஆட்டோக்களின் எரிபொருளுக்கு
மானியம் வழங்கு! மானியம் வழங்கு!

ஆட்டோ தொழிலாளியின் உழைப்பை உறிஞ்சி
கொழுத்துத் திரியும் அதிகாரிகளுக்கு
பாடம் புகட்டுவோம்! பாடம் புகட்டுவோம்!
சங்கமாக ஒன்று சேர்ந்து
பாடம் புகட்டுவோம்! பாடம் புகட்டுவோம்!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
உழைக்கும் மக்களின் வாழ்வைப் பறிக்கும்
தனியார் மயம் தாராள மயம்
உலக மயம் என்கின்ற
மறுகாலனியாக்க கொள்கையை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

தகவல்:

ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம்
வேலூர் மாநகர் மாவட்டம்
இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

ஐ.டி ஊழியர் பணி பாதுகாப்பு – அடுத்த கட்ட போராட்டத்தில் பு.ஜ.தொ.மு

2

ஐ.டி ஊழியர்களின் பணி பாதுகாப்புக்கான பு.ஜ.தொ.மு.-வின் போராட்டம் தொடர்கிறது.

ஐ.டி ஊழியர் சங்கம்
கோப்புப் படம்

.டி துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை செய்கின்றனர். வீடு போய் வரும் நேரத்தையும் சேர்த்தால் தூங்கும் நேரத்தையும் தியாகம் செய்து நிறுவனத்துக்காக உழைக்கின்றனர். இதனால், மன அழுத்தம் உள்ளிட்ட மனநல பிரச்சனைகளையும், சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற உடல்நல பிரச்சனைகளையும், குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாததால் சமூக பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்படி உழைத்தாலும், அவர்களுக்கு பணியிடத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதிய உயர்வோ, உரிய மரியாதையோ கிடைப்பதில்லை. மேலாளர் மற்றும், மனிதவளத்துறை அலுவலர்களின் விருப்பத்தின் பேரிலும், அலுவலக அரசியல் அடிப்படையிலும் அவர்களது பணி வாழ்க்கை பந்தாடப்படுகிறது. அவர்கள் நினைத்தால் எந்த நேரத்திலும் வேலையை விட்டு தூக்கி எறியப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். 30 வயதிலேயே வேலை இழந்து, ‘ஓய்வு பெற்று’ கிராமத்திற்கு போகும் திட்டங்களை வகுக்க வேண்டியிருக்கிறது.

ஐ.டி ஊழியர் சங்கம்
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவின் கூட்டத்தில் கூடியிருக்கும் ஊழியர்கள் (கோப்புப் படம்)

இவ்வூழியர்களின் உழைப்பால் மேற்கத்திய நிறுவனங்களுக்கு சேவை வழங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டு வருமானம் ஈட்டும் இந்நிறுவனங்கள், இந்தியாவில் ஊழியர்கள் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் உள்ள எந்த சட்டங்களையும் மதிப்பதில்லை. அவை தமக்கு செல்லுபடியாகாது என்று தாமே அறிவித்துக் கொண்டு, உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழிற்சங்கம் மூலமான கூட்டு பேரம் பேசும் உரிமையையும், ஊழியர்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் வாய்ப்பையும் மறுத்து வருகின்றன.

இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டி.சி.எஸ். நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 25 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்து பல ஊழியர்களுக்கு பணி நீக்க உத்தரவை அனுப்பத் தொடங்கியது. கொத்துக்கொத்தாக வீதிக்கு எறியப்பட்ட இந்த ஊழியர்களுக்கு ஆதரவாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி களமிறங்கி பிரச்சாரம் செய்ததோடு, இந்தியாவிலேயே முதன்முறையாக ஐ.டி. துறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கமான “பு.ஜ.தொ.மு- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு” எனும் சங்கத்தை உருவாக்கியது. நூற்றுக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் சங்கத்தில் தம்மை இணைத்து வருகின்றனர்.

ஐ.டி துறை ஊழியர்கள்
உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழிற்சங்கம் மூலமான கூட்டு பேரம் பேசும் உரிமையையும், ஊழியர்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் வாய்ப்பையும் ஐ.டி நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.
  • டி.சி.எஸ். ஊழியர்கள் பணி நீக்கப் பிரச்சினையில் அரசு தலையிட்டு, சட்டவிரோத வேலை நீக்கத்தை தடுத்திடுமாறும்,
  • டி.சி.எஸ் ஊழியர்கள் தொழிலாளர் நலச்சட்டங்கள் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பெறுவதை உறுதி செய்யுமாறும்,
  • 25 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது “தொழில் தகராறு சட்டம் 1947″ அட்டவணை V- ன்படி தொழிலாளர் விரோதப் போக்கு என அறிவிக்குமாறும்,
  • ஐ.டி. ஊழியர்களை அச்சுறுத்தும் நாஸ்காம் கருப்புப் பட்டியலைத் தடை செய்யுமாறும், டிசிஎஸ் நிர்வாகத்தால் பாதிப்படைந்த ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கிடுமாறும்

“புஜதொமு- ஐ.டி. ஊழியர்கள் பிரிவு” சார்பில் கடந்த ஜனவரி 21 அன்று தமிழக அரசிடம் மனு கொடுக்கப்பட்டது. அம்மனு மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஐ.டி ஊழியர் தொழிற்சங்கம்
“ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழில் தகராறு சட்டம் பொருந்துமா இல்லையா என்பதை அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” (கோப்புப் படம்)

தொழிலாளர்களது நலன்களைக் காப்பதற்காக போடப்பட்ட சட்டங்களும், அவற்றை நடைமுறைப்படுத்த தொழிலாளர் துறையும் இருந்தபோதிலும் அவர்களைப் பணி செய்ய வைப்பதற்குக் கூட நாம் நீதிமன்றம் சென்று உத்தரவு வாங்க வேண்டிய நிலைதான் உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அரசுக்கு கொடுக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை கோரி சங்கத்தின் சார்பில் பொது நலவழக்கைத் தொடுத்திருந்தோம். இவ்வழக்கின் மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் பிப்ரவரி 23-ம் நாளன்று, “ஐ.டி. நிறுவனங்களுக்கு தொழில் தகராறு சட்டம் பொருந்துமா இல்லையா என்பதை அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தது.

சென்னை உயர் நீதிமன்றம் அமைந்திருக்கும் வளாகத்துக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கும் இடைப்பட்ட தூரம் 1.4 கி.மீ மட்டும்தான் என்றாலும் மாதம் ஒன்று கடந்த பின்னரும் நீதிமன்றத் தீர்ப்பு அரசு நிர்வாகத்தை சென்றடைந்து அதை அசைத்து விடவில்லை. “தீர்ப்பை அமல்படுத்துக” என்று நாம்தான் நேரில் போய் அதிகார வர்க்கத்தை கோர வேண்டும் என்ற நிலையில்தான் மக்களின் முதல்வர் ஆசிபெற்ற அரசு இயங்குகிறது.

கடந்த 23-03-2015 அன்று பு.ஜ.தொ.மு பொதுச்செயலாளர் தோழர் சுப.தங்கராசுவும், பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர்கள் பிரிவு அமைப்பாளர் தோழர் கற்பகவிநாயகமும் நீதிமன்ற உத்தரவின் நகலோடு நமது கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் மனுவாக எழுதிச் சென்று தொழிலாளர் & வேலைவாய்ப்புத்துறை செயலாளரிடம் முறையிட்டனர்.

தோழர் கற்பக விநாயகம்
பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அமைப்பாளர் தோழர் கற்பக விநாயகம்.

கோரிக்கைகள்:

(i) தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணிபுரியும் தொழிலாளர்களின் பணிப்பயன்கள் / பணிநிலைமைகள் அனைத்தும் தொழிலாளர் நலச்சட்டங்களின் ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.

(ii) தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை random முறையில் தேர்வு செய்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளினால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

(iii) TCS நிறுவனத்தின் பணிபுரியும் தொழிலாளர்களை random முறையில் தேர்வு செய்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளினால் அவர்களின் பணிப்பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

(iv) தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணி நிலைமைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் எமது தொழிற்சங்க பிரநிதிகள் உள்ளிட்ட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவே மேற்படி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

(v) கடந்த 5 ஆண்டுகளில் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் குறைகளைத் தீர்க்கும் விதமாக Public Hearing நடத்தப்பட வேண்டும்.

(vi) மேற்படி எமது சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக எங்களது தொழிற்சங்க பிரநிதிகளை நேரில் அழைத்து பேச வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளைப் பெற்றுக்கொண்ட அரசு செயலாளர், இருபது நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

ஐ.டி ஊழியர் பிரிவு
நமது கோரிக்கைகளை வென்றெடுக்க, அரசுத் துறைகள் தமது பணியை செய்யும்படி உறுதி செய்ய, நாம் அமைப்பு ரீதியாக வலுவாக வேண்டும். (கோப்புப் படம்)

ஐ.டி.துறை ஊழியர்களே!

  • நமது கோரிக்கைகளை வென்றெடுக்க, அரசுத் துறைகள் தமது பணியை செய்யும்படி உறுதி செய்ய, நாம் அமைப்பு ரீதியாக வலுவாக வேண்டும்; கூட்டாக நமது கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும்.
  • ஐ.டி ஊழியர்கள் அனைவரும் தொழிற் சங்கத்தில் இணைந்து தமது சட்ட ரீதியான அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சு. கற்பகவிநாயகம்,
அமைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு

தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com
பேஸ்புக் : https://www.facebook.com/NDLFITEmployeesWing

NDLF fights on for IT employees’ job security

IT employees are required to work for more than 12 hours daily. After adding time spent in commute to work, they work for their companies, sacrificing even their sleep and rest. Due to this, their body and mind face stress leading to health problems like diabetes, blood pressure, mental stress, etc. With not sufficient time to spend with family, they face family and social problems too.

ndlf-it-wing-poster-en
(File Image)

Even after all these toil and sacrifices, they don’t get due recognition or pay hike. They are totally at the mercy of managers, HR personnel and office politics. They live in constant fear of getting fired any time and having to be prepared for ‘retirement’ at ripe young age of 30s itself.

It is with employees hard work that these IT companies earn billions. But they don’t respect laws of the land protecting safety and well-being of their employees. They declare themselves to be exempt from these laws and deny the universally recognized rights of employees to form union and conduct collective bargaining.

Balan Haridas
Leading labour lawyer Balan Haridas addressing gathering of IT employees (File photo)

Under these circumstance, last December TCS announced that it would lay-off 25,000 employees. It started informing thousands of employees that they would be retrenched soon, and started issuing retrenchment letters to some of them. New Democratic Labour Front (NDLF) intervened in support of these voiceless IT employees facing mass-scale lay-offs and campaigned for the need to form an IT union. NDLF formed the first IT sector union in India. Thus the NDLF IT employees’ Wing came into being. Hundreds of IT employees have already made themselves a part of the union.

On behalf of NDLF-IT Employees Wing, a petition was submitted to the Govt of Tamilnadu on 21st January 2015, requesting intervention in the lay-off of 25 thousand employees. We requested the government to stop this illegal practice, ensure that employees of TCS get all the rights under labour welfare laws, declare the layoff of 25 thousand employees as unfair labour practice according to the ‘Industrial Disputes act 1947’ schedule V, ban NASSCOM black-list used for blackmailing IT employees and to provide interim relief to the employees laid-off by TCS. Goverment has not taken any action on that petition.

ndlf-it-wing-meeting-03
Poster at NDLF – IT Employees Wing meeting venue (File Photo)

We have labour laws enacted to safeguard the interests of the workers and labour department is supposed to enforce these laws. But we are in a sorry state of needing to go to courts even to make this department do its duty.

NDLF-IT Employees Wing filed a Public Interest Litigation in Madras High Court to order the government to take action on the petition. On 23rd February, Madras High Court passed an order that “competent authorities have to decide whether the IT industry would be covered under the Industrial Disputes (ID) Act or not. If the authority concludes that the industry employees do not come under the Act, the question whether they require to be covered under the legislation should be decided only by the government”

Though only 1.5 km separates Madras High Court and Secretariat of the TN Govt and even after more than a month since the court’s order, the Government has not taken any action. The Governmet under the control of ‘Peoples’ CM’ acts in such a way that we had to go in person and remind the authorities about the order.

Madras High Court order
“competent authorities have to decide whether the IT industry would be covered under the Industrial Disputes (ID) Act or not. If the authority concludes that the industry employees do not come under the Act, the question whether they require to be covered under the legislation should be decided only by the government” – Madras High court

On 23rd March 2015, Mr. Suba Thangarasu, the General Secretary of NDLF and Mr. Karpaga Vinayagam, the organizer of the NDLF IT Employees Wing met the secretary of Labour and Employment department, handed over a copy of the court’s order along with a list of the following demands.

  1. Benefits of service/working conditions of all employees working in IT companies must be brought under the governance of Labour Welfare legislations. Hence, we request the State Government to issue suitable G.O to enable to bring IT industry under Industrial Disputes Act,1947.

  2. IT companies should be randomly inspected by Labour Welfare officers to analyse working conditions of IT employees.

  3. Inspection should be carried out among employees of TCS on a random basis, regarding status of their job security.

  4. A panel consisting of legal experts, labour welfare department officials and representatives from our Union should be constituted for carrying-out the above inspections and further course of actions.

  5. A public hearing should be arranged to address the grievances of all IT employees retrenched during the past 5 years.

  6. Representatives our Union should be consulted in person regarding the demands mentioned above

Indian IT industry
Indian IT industry

The Goverment Secretary has promised us action in 20 days.

Let’s us remind ourselves once again.

  • In order to realize our demands, to make the authorities do their duties, we need to be strengthen the union  and act collectively.
  • We call upon all IT Employees to join the Union.

S.Karpagavinayagam,
Organizer,
New Democratic Labour Front – IT Employees Wing

Mobile : 90031 98576
email : combatlayoff@gmail.com
FB : https://www.facebook.com/NDLFITEmployeesWing

அம்மா கரடிகள் – டாஸ்மாக் குரங்குகள் – மாண்புமிகு கழுதைகள்

11

வனங்களின் குடலுருவ வட்டமிடும் மூலதன வல்லூறுகள்

காடுகள் பேசும்.. மலைகள் எதிரொலிக்கும்
தமிழகமே
வனவிலங்கு
சரணாலயமாகத்தான்
இருக்கிறது.
தனியாக எதற்கு
கொடைக்கானலில் ஒன்று?

கொடைக்கானல் மலை
தமிழகமே வனவிலங்கு சரணாலயமாகத்தான் இருக்கிறது.

வார்டுக்கு வார்டு
திரியும்
‘அம்மா’ கரடிகள்
இலக்கு வைத்து கடிக்கும்
டாஸ்மாக் குரங்குகள்.
அம்மா அடித்துப் போட்டதை
இழுத்துப் போகும்
‘மாண்புமிகு’ கழுதைப் புலிகள்.
மணல் லாரியில்
ஆற்றைக் கொல்லும்
‘ரத்தத்தின் ரத்தமான’ நரிகள்
முதலமைச்சர் நாற்காலியில்
மூட்டை’ பூச்சி.
அத்தனைக்கும் காவலிருக்கும்
அய்.ஏ.எஸ். மலைப்பாம்புகள்.
கால் வைக்கும் இடமெல்லாம்
காக்கி அட்டைகள்.

ஆட்கொல்லி விலங்குகளே
ஆளும் நாட்டில்
கரடி மட்டும் என்ன
கட்டிப் பிடித்து முத்தமா தரும்?

கொடைக்கானல்
மொத்தத்தில் இது மக்கள் வாழ்வாதாரம் பறிக்கும் கார்ப்பரேட் யுத்தம்!

மனிதனை
காப்பாற்றுவதாகச் சொல்லி
விலங்குகளைச் சுடுவது,
விலங்குகளை
காப்பாற்றுவதாகச் சொல்லி
மனிதர்களைச் சுடுவது,
மொத்தத்தில் இது
மக்கள் வாழ்வாதாரம் பறிக்கும்
கார்ப்பரேட் யுத்தம்!

நாட்டைக் காப்பாற்றவே
வக்கில்லாதவர்கள்
காட்டைக் காப்பற்றப்
போகிறார்களாம்,

ஆறு காப்பாற்றி வைத்திருந்த
மணலை
அள்ளித் தீர்த்தவன் எவன்?
மணல் காப்பாற்றி வைத்த
தண்ணீரை
உறிஞ்சிக் கொன்றவன் எவன்?

கொடைக்கானல்
மழை மேகங்களில் தாகம் தணிந்த மரங்களை மலைகளில் வெட்டி விற்றது யார்?

எட்டிப்பிடித்து
இலை நாவுகளால்
மழை மேகங்களில்
தாகம் தணிந்த மரங்களை
மலைகளில்
வெட்டி விற்றது யார்?

சந்தனப்பூக்களின் வாசமும்
தேக்கு மரங்களின் சுவாசமும்
மூலிகைச் செடிகளின் நேசமும்
நிறைந்து இறங்கிய அருவிகள்
கோக்,பெப்ஸியின் அமிலமும்
குடித்த சாராய பாட்டிலும் தீண்டி
விழுந்து துடிப்பது யாரால்?

தேன் கூடு கட்டி
பலாச் சுளை பிளந்து
வாசம் பரவிய கானகத்தே
வந்திறங்கிய
ஈரக்காற்று இருந்த இடத்தில்,
ரிசார்ட்டுகளை கட்டி
பாறை முகம் பிளந்து
நாசம் செய்தது யார்?

கொடைக்கானல்
நோட்டுவாசிகளால் கானகம் அழித்து விட்டு

நோட்டு வாசிகளால்
கானகம் அழித்துவிட்டு
கடைசியில்
காட்டு வாசிகள் மேல்
பழியைப் போட்டு
காடு மலை விட்டு துரத்துவது
கார்ப்பரேட்டு
நிலப்பறிப்புக்கே!

வழியில் கிடக்கும்
கொடியையும்
எடுத்து படரவிட்ட
கைகள்
எங்கள் கைகள்….

நெளியும்
பாம்புகள் கண்களும்
எங்களை எதிரியாகப்பார்த்ததில்லை…
அது தன் வழிப்போக
தாண்டிப் போகும்
சகவாசிகள் !
ஆதிவாசிகள்!

மரத்தின் கனிகளை
பறவைகளோடு
பங்குபோட்டுக் கொள்ளுமளவுக்கு
நாகரீகமானவர்கள்
வனவாசிகள்,
பச்சை மரத்தின்
ரத்தத்தை அறுக்குமளவுக்கு
மரத்துப்போகவில்லை
காட்டு வாசிகள்

காட்டுப் பூச்சிகளின்
உணர்ச்சி ஒலிகளை
ஒருபோதும் தடைசெய்ததில்லை
எங்கள் அதிகாரம்,
யானைகளை
பிச்சை எடுக்க வைக்க
எங்களுக்கு தெரியாது!

காடுகள் மலைகளை
கெள்ளி எடுத்து காசாக்கும்
கார்ப்பரேட்டுகளை விட்டுவிட்டு
சுள்ளிபொறுக்குபவர்களால்
சுற்றுச் சூழல் கெடும் எனில்
காடு சிரிக்கும்
மலைகள் சரியும்!
ஒரு
ஓணான் கூட
ஒத்துக் கொள்ளாது
மோடி
உயிரினச் சூழலைக் காப்பாற்றும்
திட்டமுள்ளவர் என்பதை!

மலைகளைத் தூக்க
காத்திருக்கின்றன
மோடியின் அனுமார்கள்
வனங்களின் குடலுருவ
வட்டமிடுகின்றன
மூலதன வல்லூறுகள்.

வனங்களின் வேர்கள்
எங்களிடம்
எங்களின் உறுதி
மலைகளிடம்
காடில்லையேல் நாங்கள் இல்லை
நாங்கள் இல்லையேல் காடு இல்லை

நன்றாக உணர்ந்த
கொடைக்கானலின் பிள்ளைகள்
கொண்டை ஊசி வளைவுகளை
போராட்டங்களிலும் காட்டுவார்கள்

– துரை.சண்முகம்

மார்ச் 28 வேலை நிறுத்தம் – திருச்சியை திகைக்க வைத்த ரயில் மறியல்

0

திருச்சி

மிழக விவசாயத்தை ஒழித்துக்கட்டி விவசாயிகளை நாட்டை விட்டே விரட்டி அடித்து தற்குறியாக்கி முதலாளிகளின் கொள்ளைக்கு வழிவகுக்கும் கர்நாடக அரசின் மேக்கே தாட்டு, ராசிமணல் அணைத்திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும் 28-03-2015 அன்று மாநிலம் முழுக்க முழு கடையடைப்பு நடத்தப்பட்டது.

ரயில் மறியல் போராட்டம்
கர்நாடக அரசின் மேக்கே தாட்டு, ராசிமணல் அணைத் திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்

இந்தக் கடையடைப்பு போராட்டத்தை ஆதரித்தும், மத்திய மாநில அரசுகளின் சதித்திட்டத்தை எதிர்த்தும் திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் திருச்சி மாநகரம் முழுவதும் இரயில் மறியல் போராட்டம் என்பதை அறிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

வி.வி.மு ரயில் மறியல் போராட்டம்
எந்த வழியில் வந்தாலும் கைதாகிவிடும் சூழல் உள்ளது என்பதை அறிந்து தோழர்கள் தனித் தனியாக ரயில் நிலையத்தினுள் நுழைந்தன.

போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே அரசின் அடியாள் படையான காவல் துறை இரயில் நிலையம் சுற்றி உள்ள இடங்களில் நிற்கும் அனைத்து பொதுமக்களையும் சோதனைக்கு உட்படுத்துவது, மாணவர்கள் நான்கு பேரை காரணமே இல்லாமல் சந்தேகம் என்ற அடிப்படையில் கைது செய்வது என்று காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது. பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த 4 பெண் தோழர்கள் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். தாங்கள் கைது செய்யப்படப் போகிறோம் என்று அறிந்த உடனே கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து தீவிரமாக முழக்கமிட்டு தோழர்கள் கைது ஆனார்கள்.

திருச்சி ரயில் மறியல் போராட்டம்
கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்த்து போராட்டம்

ரயில் நிலையத்திற்கு எந்த வழியில் வந்தாலும் கைதாகிவிடும் சூழல் உள்ளது என்பதை அறிந்து தோழர்கள் தனித் தனியாக ரயில் நிலையத்தினுள் நுழைந்தனர். ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து தீவிரமான முழக்கமிட்டனர். காவல் துறையினருக்கு தெரியாமல் உள்ளே நுழைந்து மறியல் செய்ததால் அவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வந்தனர். ஆனால் தோழர்களின் உறுதியான போராட்டத்தால் தள்ளுமுள்ளு நேர்ந்தது. உடனடியாக அப்புறப்படுத்த முடியாமல் காவல் துறையினர் திணறினர். ஆவேசமாக கைது செய்ய வந்த காவலர்களிடம், “நீங்களும் காவேரி தண்ணீரைத் தானே குடிக்கிறீங்க, காவிரி தண்ணீரில் விளையும் அரிசியைத்தானே தீன்றீங்க அல்லது வேறு எதையாவது தின்றீங்களா” என்று தோழர்கள் எழுப்பிய கேள்வி காவலர்களையும் சற்றே திகைக்க வைத்தது.

மற்ற அமைப்புகளின் போராட்டத்தை தடுப்பது போன்று எளிமையாக கைது செய்துவிட முயன்றது காவல்துறை. ஆனால் ஒவ்வொரு தோழரையும் கைது செய்ய 10-க்கும் மேற்ப்பட்ட போலீசார் சேர்ந்து படாதபாடு பட்டனர்.

திருச்சி ரயில் மறியல் போராட்டம்
“நீங்களும் காவேரி தண்ணீரைத் தானே குடிக்கிறீங்க? காவிரி தண்ணீரில் விளையும் அரிசியைத்தானே தீன்றீங்க அல்லது வேறு எதையாவது தின்றீங்களா?” என்று கேட்டனர் தோழர்கள்.

தோழர்களின் போர்க்குணத்தின் முன் நிற்க முடியாமல் நிலைக்குலைந்து ஆத்திரமடைந்த போலீசு தோழர்களை குண்டுக் கட்டாக தூக்கி வீசினர். இதைப்பார்த்த பொதுமக்கள் சிலர் கூட “அதான் கைது பண்ணிட்டீங்க அப்புறம் ஏன் அவர்களை இப்படி இழுக்கிறீங்க” என்று கேள்வி எழுப்பினர்.

திருச்சி ரயில் மறியல் போராட்டம்
போலீசுடன் தள்ளுமுள்ளு

தோழர்களின் முழக்கம் மத்திய மாநில அரசின் சதி திட்டத்தை கண்டித்தும் கர்நாடக அரசின் அயோக்கியத் தனத்தை கண்டித்தும் ஆவேசமாக இருந்தது. 45 நிமிட போராட்டதிற்குப் பின் (பெண்கள் உட்பட) தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி ரயில் மறியல் போராட்டம்
கைது செய்யப்பட்ட தோழர்கள்

இந்தப் போராட்டம் இறுதியானது அல்ல காவேரியின் நடுவே அணைகட்டும் திட்டத்தை முழுமையாக முறியடிக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற வகையில் தொடர்ச்சியாக நாம் செய்த போராட்டத்தின் தொடர்ச்சி என்ற வகையிலும் தமிழகத்திலே ஒரு தாக்கத்தை உண்டு பண்ணும் வகையிலும் திருச்சி நகரம் ஒரு பரபரப்பை சந்தித்தித்தது.

ரயில் மறியல் போராட்டம் பற்றிய, மற்றும் பிற பத்திரிகை செய்திகள்

மேலும் போராட்ட புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.

பட்டுக்கோட்டை

ட்டுக்கோட்டை பகுதியில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் அதிராம்பட்டினத்தில் விண் அதிரும் முழக்கங்களோடு ஊர்வலமாக கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் சென்று, பேருந்து நிலையம் சென்று அரசு பேருந்தை மறியல் செய்து தோழர்கள் கைதானார்கள்.

பட்டுக்கோட்டை பேருந்து மறியல்
பட்டுக்கோட்டையில் பேருந்து மறியல் போராட்டம்

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருவாரூர்

 

கொடைக்கானல் சரணாலய திட்டத்தை இழுத்து மூடுவோம்!

7
  • கொள்ளையர்களின் முதல்வர் ஜெயா மற்றும் கார்ப்பரேட்டுகளின் பிரதமர் மோடியின் வஞ்சக சதியை முறியடிப்போம்!
  • கொடைக்கானல் வனவிலங்கு சரணாலய திட்டத்தை இழுத்து மூடுவோம்!
  • மலைப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம்!

லைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலை நினைத்தாலே, சில்லென வீசும் காற்றும், வானை முட்டும் மரங்களும், பெரும் பள்ளத்தாக்குகளும், கொண்டைஊசி வளைவுகளும், நம்மைத் தொட்டுச் செல்லும் வெண்பனி மேகங்களும், கண்ணைக்கவரும் இயற்கைக் காட்சிகளும் நம் கண்முன்னே விரியும். சுற்றுலாப் பயணிகள் மற்றும் விலங்குகளின் நலனுக்காக என்று சொல்லி அன்றைய தமிழக முதல்வரும் இன்றைய ‘மக்களின் முதல்வருமான’ ஜெயா 2013-ல் தமிழகத்தின் 12-வது வனவிலங்கு சரணாலயமாக கொடைக்கானலை அறிவித்தார்.

கொடைக்கானல்
சில்லென வீசும் காற்றும், வானை முட்டும் மரங்களும், பெரும் பள்ளத்தாக்குகளும், கொண்டைஊசி வளைவுகளும், நம்மைத் தொட்டுச் செல்லும் வெண்பனி மேகங்களும், கண்ணைக்கவரும் இயற்கைக் காட்சிகளும்.

வனவிலங்குகள் மீது அரசுக்கு வந்துள்ள திடீர் அக்கறைக்குக் காரணமென்ன? சில சமூக விரோதிகளால் விலங்குகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி அரசு இந்த சரணாலய திட்டத்தைக் கொண்டு வருகிறது. ஆனால், இதுவரை அவ்வாறு கொல்லப்பட்ட விலங்குகள் பற்றிய விவரம் எதையும் அரசு வெளியிடவில்லை. பாதிக்கப்பட்ட விலங்குகள் ஏதும் அம்மாவிடம் முறையிட்டதா என்ற விவரமும் தெரியவில்லை.

ஒரு புறம் கொடைக்கானலில் விலங்குகளைப் பாதுகாப்பதாக நாடகமாடுகிறது. மறுபுறம், நீலகிரியில் சிறுத்தை மற்றும் கரடிகளை வனத்துறை சுட்டுக்கொல்லுகிறது. முதுமலை சரணாலயம் வறட்சி காரணமாக அவ்வப்போது மூடப்படுகிறது. பல்வேறு ஊர்களில் விலங்குகள் காடுகளைவிட்டு ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. விலங்குகளுக்கு காலம்காலமாக இயற்கையாக இருந்து வந்த நீர்நிலைகள், வழித்தடங்கள் போன்றவை எஸ்டேட் முதலாளிகளின் நலனுக்காக அரசால் அழிக்கப்படுகின்றன. எனவேதான் விலங்குகள் தங்கள் இயற்கையான வாழ்விடத்தை விட்டு வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதிக்கு வருகின்றன. விலங்கு-மனித மோதல்கள் அதிகரிக்கின்றன.

கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்
விலங்குகளுக்கு காலம்காலமாக இயற்கையாக இருந்து வந்த நீர்நிலைகள், வழித்தடங்கள் போன்றவை எஸ்டேட் முதலாளிகளின் நலனுக்காக அரசால் அழிக்கப்படுகின்றன

இந்த வனவிலங்கு சரணாலயம், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களின் , கொடைக்கானல், பழனி மற்றும் பெரியகுளம் தாலுக்கா பகுதிகளை உள்ளடக்கி அமையவுள்ளது. இதற்காக சுமார் 608.95 ச.கி.மீ (60895 ஹெக்டேர்) நிலப்பரப்பை கைப்பற்ற அரசு திட்டமிட்டிருக்கிறது. இதில் மக்களின் வாழ்விடம் மற்றும் விவசாய நிலங்களும் அடக்கம்.

கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் சுமார் 6 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு சிலர் மட்டுமே நிலவுடைமையாளர்கள். பெரும்பாலானோர் கூலி விவசாயிகளாவர். கூலி வேலை செய்தும், காட்டுக்கிழங்கு, மிளகு, கல்பாசி, பட்டை, கிராம்பு, தேன் போன்ற வனப்பொருட்களை சேகரித்து விற்று கிடைக்கிற குறைந்த வருமானத்தில்தான் பலரும் வாழ்கின்றனர்.

கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்
கூலி வேலை செய்தும், காட்டுக்கிழங்கு, மிளகு, கல்பாசி, பட்டை, கிராம்பு, தேன் போன்ற வனப்பொருட்களை சேகரித்து விற்று கிடைக்கிற குறைந்த வருமானத்தில்தான் பலரும் வாழ்கின்றனர்.

வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்போவதாக 20-09-2013-ல் வெளியிடப்பட்ட அரசாணை, ஏற்கெனவே அமுலில் இருக்கும் 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் மூலம் மக்களுக்கு கிடைத்த கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறித்து விட்டது.

கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்
கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் சுமார் 6 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த கேரள ஆதிவாசி மக்களின் முத்தங்கா போராட்டத்தின் தாக்கத்தால் உருவானதுதான் 2006-வன உரிமைச் சட்டம். இந்த சட்டத்தின் படி ஆதிவாசி மக்களின் வீடுகள் மற்றும் காடுகளுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும். ஆனால், தமிழ் நாட்டில் இது வரை ஒரே ஒரு நிலப்பட்டா கூட வழங்கப்படவில்லை. இந்த நிலையில், புதிதாக 2013-ல் அறிவிக்கப்பட்ட வனவிலங்குகள் சரணாலய திட்டமோ வனத்திலிருந்து இம்மக்களையே அப்புறப்படுத்த முனைகிறது. அதனால்தான் இந்த சட்டத்தை அமுல்படுத்த அரசும் அதிகார வர்க்கமும் அவ்வளவு முனைப்பு காட்டுகின்றனர். இப்படி மக்களை விரட்டி விட்டு இவர்கள் யாருக்கு சேவை செய்யப்போகிறார்கள்? அதை அரசு வெளிப்படையாக அறிவிப்பதில்லை. “வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக”, “சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக” என்றெல்லாம் கூறித்தான் மக்களை விரட்டப்போகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்வதுதான் இந்த சட்டத்தின் உண்மையான நோக்கம்.

கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்
2006-வன உரிமைச் சட்டத்தின் படி ஆதிவாசி மக்களின் வீடுகள் மற்றும் காடுகளுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும்.

சந்தேகமிருந்தால் வட இந்திய வனப்பகுதிகளை சற்றே உற்று நோக்குங்கள். மத்தியபிரதேசம், சத்திஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பீகார் வனப்பகுதிகள் முழுவதிலும் குவிந்து கிடக்கும் கனிச் செல்வங்களை டாடா, அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற முதலாளிகள் கொள்ளையடிக்க பெரும் தடையாக இருப்பது ஆதிவாசி மக்கள்தான். ஆட்சியாளர்கள் அந்த வனத்தையும் வனத்தின் அருவிகளையும், மலைகளையும் மலைக்குள் மறைந்திருக்கும் பாக்சைட் உள்ளிட்ட ஏராளமான தாதுக்களையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பட்டா போட்டுக்கொடுத்துவிட்ட போதும், அதைக் கொள்ளையடிக்க முடியாதபடி காத்து நிற்பது காலம் காலமாக அங்கு வசித்து வரும் ‘நாகரீகமறியா’ ஆதிவாசி மக்கள்தான். எனவேதான் மலைகள், காடுகளிலிருந்து மலைவாழ் மக்களை அகற்றுவதை தமிழ்நாட்டில் முதல் இலக்காக வைத்து செயல்படுகிறது இந்த அரசு.

வனம் என்றாலே மரம், செடி, கொடிகள், மரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதுதான். உலகறிந்த இந்த விசயம் ஆட்சியாளர்களுக்கு புரியாததல்ல. ஆனால், மரம் தனி, காடு தனி, விலங்கு தனி, மனிதன் தனி எனப் பிரித்து வைத்து மக்களை ஏய்க்கின்றனர். மனிதனை விரட்டிய பின் எதிர்க்க ஆளின்றி வனத்தை மேயலாம் என்ற கார்ப்பரேட்டுகளின் நோக்கத்திற்கேற்பவே ஆட்சியாளர்களும் வனத்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கமும் இந்த நாலாந்தர வேலையை செய்கிறது.

கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்
காட்டெருமையால் தாக்கப்பட்டவர்

6 இலட்சம் மக்களின் வாழ்வாதாரமாகவும் சுற்றுலாத்தலமாகவும் காபி, மிளகு, ஏலக்காய், ஆரஞ்சு, பலா, கேரட், பீட்ரூட், செவ்வாழை, தேன் உள்ளிட்ட ஏராளமான உணவுப்பொருட்களை வழங்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்குகிறது இந்த மலை. வனவிலங்கு சரணாலயம் வந்தால் இவை அனைத்தும் பாதிக்கப்படும். காலம் காலமாக பயிரிடப்படும் உணவுப்பொருட்களைப் பயிரிடாதே என்றும் உரம், பூச்சி மருந்து பயன்படுத்தக் கூடாது என்றும் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற எதையும் மனிதர்கள் வளர்க்கக் கூடாது என்றும் நிர்ப்பந்தித்து மனிதர்களை விரட்டுகிறது வனத்துறை. வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக மக்களை அழிக்க முனையும் அரசின் அக்கறையை என்னவென்பது?

ஆனால், ஆதிகாலம்தொட்டு மக்களும் வனவிலங்குகளும் அதே காடுகளில்தான் அக்கம் பக்கமாக – ஒத்திசைந்து வசித்து வந்துள்ளனர். மக்கள் யாரும் பணத்திற்காக விலங்குகளை வேட்டையாடியதுமில்லை, தந்தத்திற்காக சுட்டுக்கொன்றதுமில்லை. தேவைக்கு அதிகமாக ஒரு மரத்தைக்கூட வெட்டியதில்லை. வெளியிலிருந்து வனத்துறை மற்றும் அரசியல் புள்ளிகளின் உதவியுடன் வந்த கொள்ளையர்கள்தான் காட்டை அழித்தனர்; வன விலங்குகளை வேட்டையாடினர். இன்றோ இந்த வனத்துக்கே அந்நியமான சில விலங்குகளை வெளியிலிருந்து கொண்டு வந்து விடுவதாக மக்கள் கூறுகின்றனர். (உ-ம்: தடியன் குடிசையில் மலைப்பாம்பு 75, காட்டுப்பன்றி ஒரு லோடு, சிறுத்தைப்புலி-25 மற்றும் காட்டு மாடுகள் என இறக்கி விட்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் யானைகள் இறக்கி விடப்பட்டுள்ளன.) இப்படி இந்த மலைக்கே அந்நியமான விலங்குகளால்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இனியும் அதிக பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்குமென்றும் கூறுகின்றனர்.

கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்
யானையால் தாக்கப்பட்டு முகஅறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.

அரசின் இந்த அயோக்கியத் தனத்தை எதிர்த்து விவசாயிகள், தொழிலாளிகள், வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆதிவாசி மக்களின் சார்பாக 30-03-2015 அன்று கொடைக்கானலில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள எமது அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மலைவாழ் மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்! வாரீர்!!!..

பேரணி-ஆர்ப்பாட்டம்

நாள் 30.03.2015 இடம் கொடைக்கானல்

தலைமை :
M. முருகேசன், தலைவர், பழனிமலை பழங்குடியினர் பளியன்-புலையன் கூட்டமைப்பு.

சிறப்புரை:
குணசேகரன், பொதுச்செயலர், தமிழக ஆதிவாசிகள் அமைப்பின் கூட்டமைப்பு, திருவள்ளுர் மாவட்டம்
CK.ஜானு, தலைவர், ஆதிவாசி கோத்ரா மகாசபை, கேரளா
வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாவட்ட துணைச்செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
தோழர் மோகன், மாவட்ட செயலர், விவசாயிகள் விடுதலை முன்னணி, தேனி மாவட்டம்

மற்றும் பிற பழங்குடி சங்கங்களின் முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் பேசுகின்றனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி இடம் பெறும்.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
தமிழ்நாடு.

போபால் – இராணிப்பேட்டை : முதலாளித்துவ கொலைகள் !

15

போபால் முதல் இராணிப்பேட்டை வரை – முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதாயக் கொலைகள்!

சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் நெடுஞ்சாலையில், பாலாறும் பொன்னை ஆறும் பாந்து நீரூட்டும் கிராமங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது இராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை. அங்கு, தை மாத அதிகாலைகளில் நமது உடலைத் தழுவி நுரையீரலை நிறைக்கும் குளிர் காற்றில் சாவின் வாடை விடாப்பிடியாக வீசுகிறது. அந்த வாடை கொல்லப்பட்ட 10 தொழிலாளர்களின் கொலைக்கு மட்டுமின்றி, அந்தப் பகுதியே சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதன் சாட்சியமாக உள்ளது.

இரசாயன கழிவு
பல்வேறு நச்சு இராசயனப் பொருட்கள் நிரம்பியுள்ள கழிவில் நடப்பதற்கே திணறும் மீட்புக் குழுவினர்.

ஜனவரி 30 நள்ளிரவில் இராணிப்பேட்டை ஆர்.கே. லெதர்ஸ் ஆலையை ஒட்டிக் கட்டப்பட்டிருந்த சிப்காட் பொதுச் சுத்திகரிப்பு நிலையத்தின் தொட்டி உடைந்து, ஆயிரம் டன்னுக்கும் அதிகமான சகதி சுனாமியாக சாடி வெளியானது. ஒரு ஆள் உயரத்துக்கு பாய்ந்து வந்த அந்தச் சகதி ஆர்.கே. லெதர்ஸ் ஆலையினுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரவு பாதுகாவலரை மூழ்கடித்து, தூங்கிக் கொண்டிருந்த வட மாநிலத் தொழிலாளர்களில் 9 பேரை பலி வாங்கியது. என்ன நடந்தது என்று அறிந்து கொள்ளும் முன்னரே, சகதியின் அழுத்தத்தால் மூச்சுத் திணறி, இரசாயனத்தின் அரிப்பால் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

தோலின் கழிவுகள், அதிலிருந்து ஊறி வெளியாகும் குரோமிய உப்புகள், உலோக ஹைட்ராக்சைடுகள், கரிமக் கழிவுகள், சாயப் பொருட்களின் கசடுகள் போன்றவற்றால் நிரம்பியிருந்தது, அந்தச் சகதி. ஓட முனைந்திருந்தாலும் முடியாதபடி ஹைட்ரஜன் சல்ஃபைடு என்ற விஷவாயு அவர்களது மூச்சை நிறுத்தியிருக்கும். போபால் முதல் ராணிப்பேட்டை வரை எல்லா இடங்களிலும் மனித உயிர்களைக் காவு கொள்வது, ரசாயனக் கழிவு என்பதை விட, முதலாளிகளின் இலாபவெறி என்று கூறுவதே பொருத்தமானது.

வடமாநிலத் தொழிலாளர்களின் சடலங்கள்
தோல் ஆலை முதலாளிகளின் ஆதாயத்திற்காகக் கொல்லப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களின் சடலங்கள்

எந்த குரோமியம் உப்பாலும் பதப்படுத்த முடியாத ஒரு தோல் உண்டென்றால், அது இந்த முதலாளி வர்க்கத்தின் தோல்தான். இந்தப் படுகொலை நடந்த அன்று மாலையே, சென்னை வர்த்தக மையத்தின் குளுகுளு அரங்குகளில் பன்னாட்டு தோல் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. தமது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் தோல் ஆலை முதலாளிகள் வர்த்தக பேரங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். அநியாயமாக 10 உயிர்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சியோ, வருத்தமோ கடுகளவும் அவர்களிடம் தென்படவில்லை.

பத்து தொழிலாளர்கள் மரணம் குறித்து தமிழக அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது போலக் காட்டும் பொருட்டு, வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கும் பொறுப்பிலிருந்த 3 இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர்; இந்த சாவுகளுக்கு நேரடிப் பொறுப்பேற்க வேண்டிய இலஞ்சப் பேகளான மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளில் 3 பேர் மட்டும் கணக்கு காட்டுவதற்காகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். ஃபாக்டரி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மற்ற அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. யாரும் குற்ற வழக்கில் கைது செய்யப்படவில்லை.

இந்த மரணத்துக்கு நேரடி பொறுப்பேற்க வேண்டிய ஆர்.கே. லெதர்ஸ் நிறுவன முதலாளி கைது செய்யப்படவில்லை; அவர் மீது வழக்குகூடப் பதிவு செய்யப்படவில்லை. சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்பட்ட 86 ஆலைகளுக்கு மின்னிணைப்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது. பத்து உயிர்கள் மடிந்து, பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியான பிறகும், இது குறித்து அரசும், முதலாளிகளும் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறார்களென்றால், உயிரோடு இருக்கும் தொழிலாளர்களை இவர்கள் எப்படி நடத்துவார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்க்கை

இராணிப்பேட்டையில் ரூ 1,500 – மாத வாடகையில் ஒரு அறையைப் பிடித்து அதில் 4 பேரைத் தங்க வைக்க முடியும். ஒருவருக்கு ஒரு நாளைக்கான செலவு ரூ 15-க்கும் குறைவுதான்.
கொல்லப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருந்த ஆர்.கே. லெதர்ஸ் முதலாளி இந்தப் பணத்தைக் கூட செலவு செய்யத் தயாரில்லை. அதனால்தான் அந்த தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள்ளாகவே தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். 10 – அடிக்கு 10 – அடியை விடக் குறைவான அளவில் அங்கே 4 அறைகள், அதில் ஒன்றில் “EB அறை” என்று எழுதப்பட்டு மின் கருவி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறைகளுக்குள்தான் கொல்லப்பட்ட 10 பேரும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அறை வாடகை கொடுக்கத் தயாராக இல்லாத முதலாளிகள், அவர்கள் வேலை செகிறார்களா என்று கண்காணிப்பதற்கு மட்டும் பெரும் செலவில் ஆலை முழுவதும் காமெராக்களை ஆங்காங்கே பொருத்தியிருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் அறையிலிருந்து சில அடிகளில் இருக்கிறது ஆலை. உள்ளே இரசாயன பதப்படுத்தலுக்கான உருளைகளை இயக்கும் வேலை, அவர்களுடையது. வேலை நேரத்துக்குப் பிறகு அங்கேயே தூங்க வேண்டியிருப்பதால், அம்மோனியா, ஃபார்மிக் அமிலம், சாயங்கள், உப்புகள் மற்றும் பதப்படுத்தப்படும் தோலின் நாற்றம் 24 மணி நேரமும் அவர்களைச் சூழ்ந்திருக்கிறது.

2 உருளைகளை இயக்கும் ஒரு நாள் வேலைக்கு மாதச் சம்பளம் ரூ 5,000. கூடுதலாக ஒரு உருளை, கூடுதலாக 4 மணி நேரம் என 16 மணி நேரம் உழைத்து மாதம் ரூ. 10,000 வரை அவர்கள் சம்பாதிக்கிறார்கள். அதில் ரூ. 9,000-ஐ மேற்கு வங்கத்தில் காத்திருக்கும் குடும்பத்தினருக்கு அனுப்பி விட்டு எஞ்சிய தொகையில் அரிசி வாங்கி, கோதுமை மாவு வாங்கி, பருப்பு வாங்கி சமைத்துச் சாப்பிட்டுக் கொள்கிறார்கள்.

இரசாயனக் கழிவுகளால் நீரும், நிலமும், உடலும், வாழ்வும் அரிக்கப்பட்ட உள்ளூர் தொழிலாளர்கள், ஆலைகளில் உருளைகளை இயக்கும் வேலையைச் செய்ய மறுக்கவேதான், வடஇந்தியத் தொழிலாளர்களை வரவழைத்து அவர்களுக்கு ‘வேலை வாய்ப்பை’ வழங்கியிருக்கிறார்கள் ராணிப்பேட்டை முதலாளிகள். மனிதர்கள் அழிந்தாலும், மண் அவிந்தாலும் அவர்களுக்கு வேண்டியது லாபம். மேலும் லாபம்!

சங்கம், 8 மணி நேர வேலை, வார விடுமுறை, சேம நலம், மருத்துவ வசதி, பாதுகாப்புக் கருவிகள் போன்ற எதுவும் கிடையாது. இருந்தும் எந்த விதத் தொல்லையும் இல்லாமல் முதலாளிகளைப் பாதுகாத்து வருகிறது தொழிலாளர் நலத்துறை.

இலாபம் முதலாளிக்கு, கழிவு அரசாங்கத்துக்கு!

தோல் ஆலைக் கழிவு நீர்
பாலாற்றில் கொட்டப்படும் தோல் ஆலைக் கழிவு நீர். (கோப்புப் படம்)

இராணிப்பேட்டையில் தோல் பதனிடும் ஆலைகளின் இரசாயனம் கலந்த கழிவு நீர் நிலத்தையும், நீரையும் கேட்பாரின்றி நஞ்சாக்கி வந்தன. இவற்றுக்கெதிரான பல போராட்டங்களுக்குப் பிறகு, 1990-களில் சிப்காட்டில் உள்ள 80-க்கும் மேற்பட்ட ஆலைகள் உமிழும் கழிவுகளைச் சுத்தம் செய்ய ரூ 2.6 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

தோலைப் பதப்படுத்தி விற்று இலாபம் பார்ப்பவர்கள் முதலாளிகள். ‘மாசு படுத்துபவர்தான் காசு கொடுக்க வேண்டும்‘ என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பெல்லாம் இருக்கிறது. ஆனால், வேலூர் முதல் திருப்பூர் வரை எந்த இடத்திலும் முதலாளிகள் கழிவுநீரைச் சுத்திகரிப்பதில்லை. அப்படியே ஆற்றில் விடுகிறார்கள். சுத்திகரிக்க காசில்லை என்கிறார்கள். உடனே அரசு பணம் தருகிறது. ராணிப்பேட்டை சுத்திகரிப்பு நிலையத்துக்கான செலவில் 50% அரசு மானியம், 25% வங்கிக் கடன்; 25% மட்டுமே தோல் ஆலை முதலாளிகளின் காசு.

இப்படி மக்கள் வரிப்பணத்தில் சுத்திகரிப்பு நிலையத்தைக் கட்டியது மட்டுமின்றி, அதனை இயக்கும் பொறுப்பை, மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கும் இந்தத் தனியார் முதலாளிகளின் கூட்டமைப்பான ராணிப்பேட்டை சிட்கோ கழிவு நீர் சுத்திகரிப்பு நிறுவனத்திடமே ஒப்படைத்திருக்கிறது அரசு. அயோக்கியத்தனம் இதோடு முடியவில்லை.

ஒவ்வொரு ஆலை முதலாளியும் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தான் ஆனுப்பும் கழிவு நீரின் அளவுக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும். 1000 கிலோ தோலை பதப்படுத்திய கழிவுநீரை அனுப்புவதற்கு உரிமத்தை வாங்கி வைத்திருக்கும் ஒரு ஆலை முதலாளி, 5000 கிலோ தோலை பதப்படுத்தி 5 மடங்கு கழிவு நீரை அனுப்புவார்.

சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்வாகத்தைக் கவனிக்கும் இயக்குநர்களான முதலாளிகளோ, கழிவு நீர் அளவை மானிகளைச் செயலற்றதாக்கி வைத்து, எல்லாம் சரியாக நடப்பதாகப் பொய்க்கணக்கு காட்டுவார்கள். இதை நேரில் வந்து கண்காணிக்க வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளோ தங்களுக்கு வரவேண்டிய லஞ்சப்பணத்தைத் தவிர வேறு எதையும் கண்டுகொள்வதில்லை.

அன்று நடந்த படுகொலையின் பின்புலம்

பளபளக்கும் தோல்கள்
தமிழகத்தின் நீரையும், நிலத்தையும் நஞ்சாக்கி தொழிலாளர்களைச் செல்லரித்து உற்பத்தி செய்யப்படும் பதனப்படுத்தப்பட்ட தோல்கள் பயன்படுவது யாருக்கு?

பத்து உயிர்களைக் காவு வாங்கிய அந்த தொட்டி உடைந்தது ஏன்? சுத்திகரிப்பு நிலையத்தில் ஆலைகளிலிருந்து வந்து சேரும் கழிவுநீரை 20 மணி நேரம் வரை சேமித்து ஒருபடித்தானதாக மாற்றும் தொட்டியானது சமன் செயும் தொட்டி (equalization tank) என்று அழைக்கப்படுகிறது. அந்தத் தொட்டியில் எந்திரங்களால் இயக்கப்படும் கலக்கிகள் மூலம் கழிவுகள் கீழே படிந்து விடாமல் தடுப்பதும், சல்ஃபைடுகள் ஆக்சிஜன் ஏற்றம் செய்வதும் நடக்க வேண்டும்.

சிப்காட் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை விதிப்படி கையாளாமல், சமப்படுத்தல் தொட்டியிலிருந்து எடுத்த இரசாயன சகதியை தேக்கி வைப்பதற்கு, முறையான அனுமதிகள் இன்றி சட்டவிரோதமாக ஒரு தொட்டியைக் கட்டியிருக்கின்றனர் அதை நிர்வகித்த முதலாளிகள்.

அந்தத் தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த இரசாயனக் கழிவு சகதியின் அழுத்தம் தாங்காமல்தான் பக்கச் சுவர் உடைந்து பல நூறு டன் அளவிலான இரசாயனக் கழிவு சுனாமியாக வெளியேறி தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் உயிரைப் பறித்திருக்கிறது.

தோல் கழிவுகளை தேக்கி வைக்கும் அல்லது சுத்திகரிக்கும் பகுதிகளில் உருவாகும் ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு, தேய்த்து வைத்த பித்தளைக் குடத்தை சில மணி நேரத்தில் பச்சையாக்கி விடும்; புதிதாக வாங்கி மாட்டும் வெள்ளிக் கொலுசை ஓரிரு நாட்களில் கருப்பாக்கிவிடும்; சிப்காட் பகுதி மண்ணில் இருக்கும் குரோமியத்தின் அளவு, தொழிற்சாலைக் கழிவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 மடங்குக்கும் அதிகமாக உள்ளது. அப்படியானால் இது, இந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்களின் உடலில் எத்தனை வகையான நோகளை தோற்றுவிக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம்.

இரசாயனக் கழிவுகள் தோற்றுவிக்கும் இந்த அழிவுகளைப் பற்றியெல்லாம் நம்மைக் காட்டிலும் தோல் ஆலை முதலாளிகளுக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தேதான் இந்த நச்சுக் கழிவுகளை அவர்கள் சுத்திகரிக்காமல் வெளியேற்றுகிறார்கள். சுத்திகரிப்பதற்கு ஆகும் செலவைத் தவிர்த்தால் கூடுதல் இலாபம் என்ற ஒரு காரணத்தை தவிர இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை.

போபால் முதல் இராணிப்பேட்டை வரையில் எங்கே இது போன்ற மரணங்கள் நேர்ந்தாலும், அவற்றை முதலில் “விபத்து” என்று சொல்லி மடையடைக்கப் பார்க்கிறார்கள். இராணிப்பேட்டையில் நடந்துள்ள முறைகேட்டைப் போல மறைக்க முடியாத குற்றமாக இருக்கும் பட்சத்தில், குற்றமுறு அலட்சியம் என்ற குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செகிறார்கள். குடந்தை பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் கொல்லப்பட்ட நிகழ்வைப் போன்ற சாவுகளாக இருந்தால், கொலைக்குற்றமாகாத மரணம் விளைவிக்கும் குற்றம் என்று போலீசு வழக்கு பதிவு செகிறது.

ஆனால் உண்மை என்ன? கிரிமினல் சட்ட மொழியில் சொல்வதென்றால் இவை அனைத்தும் ஆதாயத்துக்காக செயப்படும் கொலைகள்.

வேலூர் மாவட்டத் தோல் ஆலைகள் – வரலாறு

20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் காலனிய ஆட்சியாளர்களின் தேவைக்காக கன்றுக்குட்டி தோலை சுண்ணாம்பிலும், மரச் சாறுகளிலும் பதப்படுத்தி அனுப்பும் வியாபாரத்தை வட ஆற்காடு மாவட்டத்தின் இசுலாமிய வியாபாரிகள் செய்து வந்தனர். அதில் வெளியான மக்கும் தன்மையுடைய விலங்கு மற்றும் தாவரக் கழிவுகளை இயற்கை செரித்துக் கொண்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இலாப வீதத்தை பல மடங்கு பெருக்க குரோமியம் உப்புகள், இரசாயன உப்புகள் மற்றும் பிற வேதிப் பொருட்களைப் பயன்படுத்தித் துரிதமாகத் தோல் பதனிட்டு, உலகளாவிய அளவில் சந்தைப்படுத்தும் வணிகம் வளர ஆரம்பித்தது. ஐரோப்பிய நாடுகளில் நீரையும், நிலத்தையும் பாழாக்கும் இரசாயன கழிவுகளுக்கு எதிர்ப்பு வலுக்கவே, இந்தத் தொழில் இந்தியா போன்ற நாடுகளின் தலையில் கட்டப்பட்டது.

“இந்தியாவிலிருந்து பச்சைத் தோல் மற்றும் அரை பதப்படுத்தப்பட்ட தோல்களின் ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும். முழுமையாக செம்மைப்படுத்தப்பட்ட நிலையில்தான் தோலை ஏற்றுமதி செய்ய வேண்டும். அப்போதுதான் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும், நாட்டுக்குத் தேவையான அன்னிய செலாவணி கிடைக்கும்” என்று இந்திய அரசு 1972-ம் ஆண்டு முடிவு செய்தது.

அதை ஒட்டி 1970-களில் ராணிப்பேட்டையில் இப்போதைய சிப்காட் வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. குரோமிய உப்பு கொண்டு தோல்களை செம்மைப்படுத்தும் ஆலைகளும் செயல்பட ஆரம்பித்தன. பேரழிவு தொடங்கியது.

என்ன ஆதாயம்? யாருக்கு ஆதாயம்?

யாருடைய ஆதாயத்துக்காக? தோல் தொழிற்சாலை முதலாளிகளின் ஆதாயத்துக்காக! லஞ்சப் பேய்களான அதிகாரிகள், ஓட்டுப் பொறுக்கிகளின் ஆதாயத்துக்காக! இவர்கள் மட்டுமல்ல; இவர்களைவிட முக்கியமாக, இந்த தோல் பொருள் விற்பனையில் கொள்ளை இலாபமீட்டும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதாயத்துக்காக!

ஆம். மண்ணையும், நீரையும் நஞ்சாக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழித்து, தொழிலாளர்களை கொத்தடிமைகளாகச் சுரண்டி நடத்தப்படும் இந்தத் தோல் துறையின் உற்பத்தி நம் நாட்டுக்கானது அல்ல. மேற்கத்திய மேட்டுக்குடியினர் பயன்படுத்தும் செருப்புகளையும், மேல் அங்கிகளையும், அலங்காரப் பொருட்களையும் தயாரிப்பதற்காகத்தான் தோல் ஏற்றுமதி நடக்கிறது. இதன் மூலம் கிளார்க்ஸ், ஹூகோ பாஸ், ஹஷ் பப்பீஸ், மார்க்ஸ் – ஸ்பென்சர், ரீபோக், டாமி ஹில்ஃபிகர், கோச், கெஸ் உள்ளிட்ட பன்னாட்டு வணிக முத்திரை நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. அவர்களுக்குப் பதப்படுத்தப்பட்ட தோலை ஏற்றுமதி செய்யும் உள்நாட்டு முதலாளிகளும் லாபமடைகின்றனர்.

“தோல் துறையின் மூலம் நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணி கிடைக்கிறது” என்றும், “ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது” என்றும், இலாப வேட்டைக்கான இந்த நடவடிக்கைகளை புனிதப்படுத்தி எந்திரங்கள், இரசாயனங்கள் இறக்குமதி செய்து கொள்ள வரிச்சலுகை, வருமான வரிச்சலுகை, தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மானியங்கள் என்று மக்களின் வரிப்பணத்தால் முதலாளிகளைக் குளிப்பாட்டுகிறது, அரசு.

தோல் தொழிற்சாலைகள் அளிக்கும் வேலைவாய்ப்பு என்பது, கழிவு நீரால் பாலாற்றையும் குடிநீரையும் பாசன நீரையும் விளைநிலத்தையும் காற்றையும் நஞ்சாக்கி, விவசாயத்தை அழித்து, இலட்சக்கணக்கான விவசாயிளை வேலையற்றவர்களாக்கிவிட்டு, சில ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் வேலை வாய்ப்பு. அதுவும், இரசாயனக் கழிவுகளால் அரித்துத் தின்னப்படுவதற்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு. ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி என்பது முதலாளிகள் ஈட்டும் கொள்ளை இலாபம்.

பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகளின் இலாப வேட்டைக்கு நமது மண்ணையும் மக்களையும் இப்படி இரையாக்குவதைத் தீவிரப்படுத்துவதற்குத்தான் “மேக் இன் இந்தியா” என்று கூவுகிறார் மோடி. இராணிப்பேட்டை போல இன்னும் எத்தனை சாவுகளை இந்தியா உருவாக்க வேண்டும்?

– அப்துல்
______________________________
புதிய ஜனநாயகம், மார்ச் 2015
______________________________

குற்றவாளிக் கூண்டில் அதியமான் + பத்ரி சேஷாத்ரி

79

2006 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், வங்கதேசத்தின் சிறுகடன்கள் வழங்கும் கிராமீன் வங்கியின் நிறுவனருமான முகமது யூனுசை வரி ஏய்ப்பு செய்ததாக  குற்றம் சாட்டி வரிபாக்கியை கட்டச் சொல்லியிருக்கிறது, வங்கதேசத்தின் தேசிய வருவாய் வாரியம்.

முகமது யூனுஸ்
வரிஏய்ப்பு, ஏழ்மை ஒழிப்புக்கான பணத்தை குடும்பத்துக்கு கொடுத்தல், சட்டவிதி மீறல்கள் – முகமது யூனுஸ்

முன்னதாக, 2010-ம் ஆண்டில் கிராமீன் வங்கியில் நுண்கடனுக்காக திரட்டப்பட்ட பணத்தை வேறு லாபநோக்கத்திலான தனியார் நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

மேலும் 2011-ல் அவரை கிராமீன் வங்கியின் நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து விலக்க உத்தரவிட்ட வங்கதேசத்தின் மத்திய வங்கி, அவரது நியமனம்  முறையான ஒப்புதலை பெறவில்லை என்றும், 1999 முதல் சட்ட விரோதமாக பதவியில் இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தது. தான், பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக யூனூஸ் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆகவே, அவர் பதவி விலகினார்.

ஏற்கனவே, யூனுஸ் கிராமீன் வங்கியைத் தனது சொந்த சொத்தாகப் பயன்படுத்துகிறார் என்றும், ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி பணம் கறக்கிறார் என்றும் வங்கதேசத்தில் பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.

நார்வே, சுவீடன், ஜெர்மனி போன்ற நாடுகளிடமிருந்து கிராமீன் வங்கி நிவாரணப் பணிக்காக பெற்ற சுமார் 10 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 600 கோடி) பணத்தை கிராமீன் நிறுவனத்தின் துணை நிறுவனமான கிராமீன் கல்யாண் என்ற தனியார் நிறுவனத்திற்கு கைமாற்றியதாக நார்வே அரசுத் தொலைக்காட்சி 2010-ம் ஆண்டில் ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்பியது.

கிராமீன் கல்யாண் என்பது சிறுகடன்கள் வழங்கும் நிறுவனம் அல்ல. இது பணத்தை கைமாற்றி செலவழிப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட தனியார் நிறுவனம்.

“ஆஸ்லோவிலிருந்து செயல்படும் நார்வீஜிய உதவி நிறுவனமான நோராட் பராமரிக்கும் ஆவண காப்பகத்திலிருந்து இது தொடர்பான ஆவணங்களை நான் பெற்றேன்” என்கிறார் டென்மார்க்கைச் சேர்ந்த அந்த ஆவணப்படத் தயாரிப்பாளர் டாம் ஹைன்மன்.

நார்வே அதிகாரிகள் இது குறித்த தமது குற்றச்சாட்டுகளை கிராமீன் வங்கிக்கு தெரிவித்ததும், 10 கோடியில் ஒரு பகுதியாக 3 கோடி டாலர்களை கிராமீன் வங்கி திரும்பப் பெற்றுக்கொண்டதாகவும் அந்த ஆவணப் படம் தெரிவிக்கிறது. ”நுண்கடனில் சிக்கியவர்கள் (“Caught in Microdebt”) என்பது தான் அந்த ஆவணப்படத்தின் தலைப்பு.

“வங்கதேசம், இந்தியா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து நுண்கடன்கள் ஏழைகளுக்கு எப்படி பலனளித்தன என்று ஆய்வு செய்தேன். அதன்படி நுண்கடன்களின் மூலம் ஏழைகள் மேலும் மேலும் கடனுக்குள் தள்ளப்படுவதை கண்டறிந்தேன்” என்று பி.பி.சி.க்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருந்தார் ஹைன்மன். இந்த ஆவணப்படத்துக்கு பதில் சொல்லும் சப்பைக் கட்டுகளையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டிருக்கின்றன.

ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி பணம் கறக்கும் நுண்கடன்
ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சி பணம் கறக்கும் நுண்கடன்

பணம் கைமாற்றப்பட்டிருப்பது பற்றி அதிருப்தி தெரிவித்து, ஏழ்மை நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட பணம் வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் தெரிவித்திருந்தார்.

யூனுஸ் தலைமை தாங்கும் கிராமீன் குழுமம் கிட்டத்தட்ட 30 நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவற்றில் லாப நோக்கத்தில் இயக்கப்படும் நிறுவனங்களும், லாபநோக்கமற்ற நிறுவனங்களும் உள்ளன. லாப நோக்கமற்ற நிறுவனங்களின் பெயரில் நிதிதிரட்டி லாபமீட்டும் நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியங்களை கிராமீன் குழுமம் ஏற்படுத்தி வைத்திருந்தது. இவ்வாறு, 30 நிறுவனங்களை வைத்து அம்பானி, டாடா போல சட்டத்தின் கண்ணைக் கட்டும் வலைப்பின்னலை உருவாக்கியிருந்ததன் நோக்கம் வேறு என்னவாக இருக்கும்?

அதே நேரம் யூனுஸ் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்ததாக தான் கருதவில்லை என்று ஆவணபட இயக்குனர் ஹைன்மெனும், நார்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்மும் கூறியிருந்தனர்.

ஏழை நாடுகளையும், மக்களையும் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களை வைத்து அரசியல் ரீதியாக காயடிக்கும் வேலையினை ஏகாதிபத்தியங்கள் செய்து வருகின்றன. இப்போது அவர்களே தாங்கமுடியாத அளவுக்கு ஊழல் இருப்பதால்தான் ஏகாதிபத்திய பங்காளிகளான நார்வே போன்றோர் மெல்லிய தொனியில் யூனூசை கண்டிக்கின்றனர். கத்தரிக்காய் அழுகினால் குப்பைக்குத்தான் போக முடியும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் முகமது யூனூஸ் தனது பெயரிலான அறக்கட்டளைகளுக்கு 77 கோடி டாக்கா பணத்தை பரிசாக  கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது வங்கதேசத்தின் வருவாய் வாரியம் . இதற்கு 14 கோடி டாக்கா (வங்கதேச பணம் 1 டாக்கா = 0.80 இந்திய ரூபாய்)  வரி செலுத்த வேண்டும். ஆனால் வரி செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பதாக கூறி யூனுசுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

வறுமை ஒழிப்பு
வறுமையை ஒழிக்க ஏகாதிபத்திய தீர்வுகள்.

யூனுஸ் பல நாடுகளில் நிகழ்த்திய உரைகளுக்காக கிடைத்த பெரும் பணம்,  அவருடைய புத்தகங்கள் விற்றதற்கான தொகை ஆகியவற்றின் மூலம் 2011-14 ஆண்டுகளில் அவருக்கு டாக்கா  பணம் 77 கோடி வருமானம் வந்திருக்கிறது. அதாவது, வங்கதேசம் மற்றும் பிற ஏழை நாடுகளின் வறுமையை விற்று சம்பாதித்த பணம் அது.

அதில் 72 கோடி டாக்கா பணத்தை ஆராய்ச்சி, சமூக ஆய்வுகளுக்கு பணம் கொடுக்கும் முகமது யூனுஸ் அறக்கட்டளைக்கும், 5 கோடி டாக்காவை யூனுஸ் குடும்பத்தினரின் நலனுக்கான யூனுஸ் குடும்ப அறக்கட்டளைக்கும் கொடுத்துள்ளார். இந்தப் பரிசுகளுக்கான வரித் தொகையாக 15 கோடி டாக்கா கட்ட வேண்டும் என்று வருவாய் வாரியம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், வங்கதேச சட்டத்தின்படி அறக்கட்டளைகளுக்கு நன்கொடை கொடுத்தால் வரி கட்டத் தேவையில்லை என்று சப்பைக்கட்டு கட்டி வருகிறார், யூனுஸ்.

வரி ஏய்ப்பு இருக்கட்டும், ஏழைகளின் வாழ்வை துயர் துடைக்க வந்த யூனூஸ் சொந்த குடும்பத்தினருக்கு எப்படி 5 கோடி ரூபாயை பரிசாக வழங்கினார்? புத்தக விற்பனை, உரைகள் என்ற பெயரில் பணம் வந்தாலும் அதில் 5 கோடியை (இந்திய ரூபாய் சுமார் ரூ 4 கோடி) ஸ்வாகா செய்வதை என்னவென்று அழைப்பது? மேலும், ஏழை நாட்டின் ஏழை மக்களுக்கு நுண்கடன் கொடுப்பதாக நிதி திரட்டும் இவர், வரி இல்லா அறக்கட்டளைகளை ஏற்படுத்தி வரி செலுத்த மறுப்பதை என்னவென்று சொல்வது? கிராமீன் குழுமத்தின் எந்த நிறுவனத்துக்கு பணம் வருகிறது, எங்கு போகிறது, எப்படி செலவாகிறது இன்ன பிற பினாமி வேலைகள் எதற்காக?

ஏழ்மையை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் வங்கி துவங்கி பாவப்பட்ட வங்கதேச ஏழை மக்களின் உழைப்பை உறிஞ்சி, நிவாரணப்பணிகளுக்கு என்று பெற்ற பணத்தை கையாடல் செய்த வட்டிக்கடைக்காரன்தான் முகமது யூனூஸ். குறுங்கடன்கள் என்கிற பெயரில் 30 லிருந்து 40 சதவீதம் வரை வட்டி வசூலிக்கும் கிராமீன் வங்கி, கடனைக் கட்ட இயலாத ஏழை மக்களை அடியாட்களை வைத்து மிரட்டும். அப்படியும் கடனை கட்டாதவர்களின் உடைமைகளை பறித்தெடுக்கும். இந்த வங்கிக்கு பயந்து கடனை கட்ட முடியாத பலர் சொந்த ஊரைவிட்டே ஓடியிருக்கின்றனர்.

இந்த சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரரான யூனூசுக்கு தான் 2006-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரைத்தான் ஏழ்மையிலிருந்து ஏழைகளை கடைத்தேற்றிய மீட்பர் என்றும், தேவதூதர் என்றும் பலர் விதந்தோதுகின்றனர்.

யூனூசின் வங்கி மட்டுமல்ல பல பன்னாட்டு வங்கிகளும் தற்போது மூன்றாம் உலக நாடுகளில் உள்ள ஏழை மக்கள் மீது அக்கறை கொண்டு ஏழமையை ஒழிக்க குறுங்கடன்களை வழங்க இறங்கியிருக்கின்றன. உலகளவில் உள்ள நிதிமூலதன கொள்ளையர்கள் ஏழை நாடுகளில் புகுந்து இவ்வாறு கடனளிப்பதன் காரணம் கிராமங்களின் சந்தையையும், பொருளாதாரத்தையும் சுருட்ட வேண்டியே. கூடவே அந்த கொள்ளைக்கு ஏழ்மையை ஒழிப்பதாக கூறிக்கொண்டு விளம்பரமும் செய்யலாம்.

ஏழ்மையை ஒழிப்பதாக கூறும் இத்தகைய குறுங்கடன்கள் ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாக்கி கொள்ளையடிக்கவே செய்கின்றன. இலட்சக்கணக்கான ஏழைகளின் இரத்ததை உறிஞ்சி தான் யூனூஸ் தனது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் பரிசுகளை வழங்கியுள்ளார்.

2011-ம் ஆண்டிலேயே யூனுசை அம்பலப்படுத்தி வெளியான வினவு கட்டுரையில், முதலாளித்துவத்தின் பிரச்சாரகர் திருவாளர் அதியமான் (உண்மையில் முதலாளித்துவம் என்றால் என்னவென்றே அறியாதவர்) இப்படிக் குறிப்பிட்டிருந்தார்:

“முகமது யுனஸ் செயற்க்கறிய செயல் செய்யும் கர்ம வீரர். சுயநலமில்லாமல், ஏழைகளுக்குகாக முப்பது வருடங்களாக உழைப்பவர். சுயநலம் இருந்திருந்தால் அவர் படித்த படிப்பிற்கு, நியூ யார்க் நகர் வால் ஸ்ட்ரீட்டில் பல மில்லியன் டாலர் சம்பளம் தரும் நல்ல வேலையில் ஆரம்பத்திலேயே அமர்ந்து, இன்னேரம் பெரும் கோடிஸ்வரராகியிருக்க முடியும். ஆனால் அவர் அதைச் செய்யாமல், தம் நாட்டு மக்களுக்குகாக தொண்டாற்றுகிறார். அதை புரிந்து கொண்டு பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இப்படி எழுதுவது மடமை மற்றும் சிறுபிள்ளை தனம்.”

அதியமானுக்கு மேலாக கிழக்கு பதிப்பக பத்ரி யூனுசுக்கு வாய் வலிக்க பாராட்டு பத்திரம் வாசிக்கிறார். யூனூஸ் வறுமையை ஒழித்துவிட்டார்  என்று புகழ்ந்தும் எழுதியிருக்கிறார்.

“ஏழைமையை முற்றிலும் ஒழிக்க குறுங்கடன் போதாது என்றாலும்கூட பெரும்பாலான உலக ஏழைகளின் நிலையை ஓரளவுக்கு உயர்த்தும் எனலாம். அந்த வகையில் குறுங்கடன் முன்னோடியான முகமது யூனுஸுக்கும் அவரது நிறுவனமான கிராமீன் வங்கிக்கும் நோபல் பரிசு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது.”

வணக்கம் நேயர்களே,

நான் ரெண்டு புத்தகங்களைப் பத்தி இப்ப பேசப்போறேன். ரெண்டுமே ஒரே ஆளைப் பத்தினதுதான். அவரு பேரு முகமது யூனுஸ். பங்களாதேச நாட்டைச் சேர்ந்தவரு.

இவர் என்ன செஞ்சாரு? என் இவரைப் பத்தி நாம தெரிஞ்சுக்கணும்? கடந்த 2,000-2,500 வருடங்கள்ள, மிக அதிகமான எண்ணிக்கைல மனுஷங்களோட வாழ்க்கையை மாத்தின ஆட்கள்னு பாத்தீங்கன்னா ரெண்டு மூணு பேரைச் சொல்லலாம் – யேசு, புத்தர், காந்தின்னு. எனக்குத் தோணுது.

இதுல யேசு, புத்தர் ரெண்டு பேரும் spiritual – அதாவது ஆன்மிகத் துறைல சாதிச்சாங்க. காந்தி அரசியல் துறைல – நம்ம நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தாரு. முகமது யூனுஸ் பொருளாதாரத் துறைல நிறைய சாதிச்சிருக்காரு. அந்த வரிசைல முகமது யூனுஸ் பேரைச் சேக்கலாம்னு எனக்குத் தோணுது. முகமது யூனுஸ் பொருளாதாரத் துறைல நிறைய சாதிச்சிருக்காரு.”

புத்தர், ஏசு, காந்தி வரிசையில் யூனுசை சேர்த்திருக்கிறார் என்றால் பத்ரியின் உள்ளக்கிடக்கையை நீங்கள் புரிந்து கொள்வது அவசியம்.

அதியமானுக்கு முதலாளித்துவம் என்றால் என்னவென்றே தெரியாது; பத்ரிக்கு முதலாளித்துவம் என்றால் என்னவென்று நன்கு தெரியும். அதனால் அதனை நியாயப்படுத்தி சென்டிமெண்டாக வாதங்களை எப்போதும்  சலிக்காமல் முன்வைப்பார். அதியமான் வாழ் நிலையில் ஒரு பாட்டாளி என்பதால் முதலாளித்துவத்தை கனவாக வைத்து இன்பம் காண்கிறார்;  அதிலும் இந்த முட்டாள்தனமான கனவை ஓயாமல் மொக்கை விக்கிபீடியா அல்லது சுவாமிநாதன்களின் லிங்குகளால் போட்டு நம்மை வதைக்கிறார்.

பத்ரி வாழ்நிலையில் ஒரு முதலாளி என்பதால் முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் கனவின் மாயைகளை மக்கள் உணர்ந்து கொண்டால் தனது வாழ்நிலை கேள்விக்குள்ளாக்கப்படுமென்பதை நன்கு உணர்ந்தவர். அதனாலேயே ஒரு கிரிமினல் வழக்கறிஞர் போல புத்திசாலித்தனமாக முதலாளிகளின் கருத்துக்களுக்காக வாதிடுவார். அதியமான் ஒரு முட்டாள் என்பதை அநேகர் ஏன் பத்ரி உட்பட ஒத்துக்கொண்டாலும், முதலாளித்துவ நாயகர்களை ஆதரித்து வாதாடும் பத்ரியை ஒரு ‘கிரிமினல் லாயர்” என்பதை அதியமான் உட்பட யாரும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

இன்று யூனூசை வங்கதேச அரசு, அதிமயான் போற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகள், பத்ரி மதிக்கும் சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் தலையில் குட்டி அம்பலப்படுத்துகின்றன. யூனுஸ் நோபல் பரிசு வாங்கும் போதே பல்வேறு பத்திரிகையாளர்கள் இதனை மேற்குல ஊடகங்களில் கோடிட்டும் ஆழமாகவும் பேசியிருக்கின்றனர். அதை வைத்தும், பொதுவில் என்.ஜி.ஓக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஏகாதிபத்தியங்களின் கருணை பேசும் சுரண்டல் திட்டங்கள், முதலாளித்துவ பொருளாதாரத்தின் இயங்கு முறை மற்றும் அதன் முரண்பாடுகள், இவை அனைத்தும் கலந்த ஒரு அறிவியல் பார்வையோடு வினவில் விரிவாக ஒரு கட்டுரை வந்தபோது யூனுசுக்கு ஆதரவாக பேசியவர்களை இப்போது நினைத்துப் பாருங்கள்.

குறுங்கடனை ஆதரித்து பத்ரி அவர்கள் ஒரு வலைப்பூவையே ஆரம்பித்துவிட்டார்.

அதியமான், பத்ரி மட்டுமல்ல, பொதுவில் 5000 ரூபாய்க்கு ஸ்டார் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு ஐந்து ரூபாயை பிச்சை போடுவதை மாபெரும் கருணை பாய்ச்சலாக கருதிக் கொள்ளும் கனவான்கள் கூட இந்த குறுங்கடன்களை பாராட்டி, விரைவில் குறுங்கடனை வாங்குவோரின் வீட்டில் தங்க பிஸ்கட்டு நிரம்பி வழியும் என்று நம்பினார்கள்.

ஆனால் இவ்வாறு குறுங்கடன்கள் வழங்குவதன் மூலமோ, என்.ஜி.ஓக்கள் பாணியிலோ ஏழ்மையை ஒழிக்க முடியாது. பெரும்பான்மை மக்களின் வறுமைக்கும், இழிநிலைக்கும் காரணம் இந்த சமூக அமைப்பு தான். அதாவது சுரண்டப்பட்டதால் ஏழைகள், சுரண்டியதால் பணக்காரர்கள். இதுதான் இன்றைய சமூக அமைப்பின் அடிப்படை.

இதை மாற்றியமைக்காத வரை ஏழ்மையை மட்டுமல்ல, ஏழைகளை மூலதனமாக்கி உயிர்பிழைக்கும் யூனூஸ், யூனூசுக்கு புரவலராக ஏகாதிபத்தியங்கள், ஏகாதிபத்தியங்களின் எடுபிடிகளான என்.ஜி.ஓக்களையும் ஒழிக்க முடியாது.

மேலும் படிக்க:

டி.டி.கே : ஆணுறையில் இலாபம் – தொழிலாளியிடம் நட்டமா ?

0

டி.டி.கே பி.டி.எல் (TTK – PDL) நிறுவன தொழிலாளர்கள் போராட்டம்

டி.டி.கே
டி.டி.கே

50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் டி.டிகே பி.டி.எல் நிறுவனம் தனது பன்னாட்டு கூட்டு நிறுவனமான RB (ரென்கிட் பென்கிசர்) உடன் லாபம் சுவீகரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையின் விளைவாக சென்னை பல்லாவரத்தில் உள்ள அதன் தொழிற்சாலையை சட்டவிரோதமாக இழுத்து மூடி, தொழிலாளர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

டிடிகே நிறுவனம் 1952-ல் காண்டம் இறக்குமதி செய்து விற்கும் நிறுவனமாக துவங்கப்பட்டு, 1963-ல் எல்.ஆர்.சி (LRC) என்ற லண்டன் ரப்பர் கம்பெனி கூட்டுடன் காண்டம் உற்பத்தி செய்து விற்கும் நிறுவனமாக மாறியது. 1976-ல் ஏற்றுமதி நிறுவனமாக வளர்ந்தது. இதற்காக அதிக திறன் கொண்ட தொழிற்சாலைகளை ஆரம்பித்தது. அதை முதலில் சென்னையில் உருவாக்கி வளர்த்து பிறகு விருதுநகரிலும் நிறுவியது.

இந்தக் காலகட்டங்களில் உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் உழைப்பால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டது. காண்டம் உற்பத்தியில் தேர்ந்த அனுபவம் பெற்ற முன்னணி தொழிலாளர்களுடன் 1990-களுக்குப் பிறகு வந்த தொழிலாளர்களும் இணைந்து புதிதாக உருவாக்கப்பட்ட மினி ஆட்டோமேடிக் பிளாண்டில் (சிறு தானியங்கி ஆலை – மேப் – map) தேர்ச்சி பெற்று, தொடர்ந்து உன்னத நிலையை எட்டியதன் விளைவாக இங்கு பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் விருதுநகரிலும் தொழிற்சாலைகளை உருவாக்கி உற்பத்தி துவங்கப்பட்டது. மேலும் தொடர்ந்து 1992-ல் தர நிர்ணய விருதும், 1994-ல் சர்வதேச அளவிலான டெண்டர் வணிகத்திலும் 1998-ல் ஒரு பில்லியன் அளவைத் தாண்டும் அளவிற்கும் டி.டி.கே நிறுவனம் வளர்ந்தது.

மேலும் 1999-ல் சேதாரம் இல்லாத உற்பத்தி இலக்கை எட்டும் ஜப்பானிய உற்பத்தி முறையான முழுமையான உற்பத்தித் திறனும் பராமரிப்பும் (Total Productivity and Maintenance) என்ற முறையில் 2001-ல் ஈ.எம்.எஸ் (EMS)-ஐ அடைந்தது. 2003-ல் புதுச்சேரியில் மிடி ஆலையை உருவாக்கியது. எக்சலன்ஸ் அவார்ட் (Excellence award) II பிரிவும், 2004-ல் டி.பி.எம் II பிரிவு விருதும், 2005-ல் டி.பி.எம் I பிரிவு விருதும் வாங்கியது. 2006-ல் ஐ.எஸ்.ஓ 14001-2004 வாங்கப்பட்டது. 2009-ல் டி.பி.எம் சிறப்பு விருது வாங்கியது. 2011-ல் உலகத் தரம் (World Class) விருதுக்கு முயன்றது.

இதுவரை நடந்தவைகளில் தொழிலாளர்களின் சீரிய உழைப்பையும் ஈடுபாட்டையும் நிர்வாகம் மறுக்க முடியாது. இந்த முன்னேற்றத்திற்காக கட்டாய மிகை நேர உழைப்பு கொடுக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டனர். பல வருடங்களாக வேலை முடித்து வீடு திரும்ப முடியாமல் பாடுபட்டனர்.

1990-லிருந்து 2011 வரை மேற்கொண்ட புதிய முத்திரை உற்பத்தி அனைத்திலும் வளர்ந்ததற்கு தொழிலாளர்களின் அயராத உழைப்புதான் காரணம்.

நிறுவனத்தின் காண்டம் உற்பத்திக்குத் தேவையான ஆலைகளை உருவாக்குவது, வளர்ப்பது, பரிசோதனை செய்வதற்கான மின்னணு எந்திரங்களை உருவாக்குவது, ஃபாய்லிங் மெசின்களை (Foiling machines) உருவாக்குவது என இந்த உற்பத்திக்குத் தேவையான தொழில் நுட்ப இயந்திரங்கள் அனைத்தும் தொழிலாளர்களின் உழைப்பால் உருவாக்கி வளர்க்கப்பட்டது. நிறுவன வளர்ச்சியின் ஒவ்வொரு ஆரம்பமும் முதலில் சென்னையில் துவங்கப்பட்டு முன்னேற்றம் கண்ட பிறகு விருதுநகர், புதுச்சேரிக்கு உற்பத்தி செய்ய கொண்டு சென்ற வரலாற்றையும் நிர்வாகம் நன்கு அறியும்.

1990-க்குப் பிறகு நிர்வாகம் செய்த வளர்ச்சிக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்றுதான் செய்தது, இந்தக் கடனை அடைத்து தொடர்ந்து கம்பெனி நல்ல நிலையில் லாபத்தில் இயங்கிக் கொண்டு இருந்தது.

இந்நிலையில் டி.டி.கே குழுமத்துக்கும் ரென்கிட் பென்கிசர் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு கம்பெனி போர்டுக்கு போனது. டி.டி.கே குழுமம் தனது நிலைப்பாட்டில் விட்டுக்கொடுக்காமல் முரண்டு பிடித்ததால் வழக்கு உயர் நீதிமன்றத்திற்குப் போனது. அங்கும் ஆர்.பி.யின் கோரிக்கையை டி.டி.கே குழுமம் ஏற்காததால் நிறுவனத்தை யாராவது ஒருவர் எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் வழி காட்டியது. அதன்படி ஆர்.பி – டி.டிகே.வுக்கு இடையேயான முரண்பாடு முடிவுக்கு வந்ததின் அடிப்படையில் டி.டி.கே. குழுமம் நிறுவனத்தை 2014 பிப்ரவரியில் எடுத்தது.

ஆர்.பி டி.டி.கே பிரச்சினை வரும் வரை ஒவ்வொரு மாதமும் 50 மணி நேரம் முதல் 150 மணி நேரம் வரை ஓவர் டைம் செய்துள்ளனர், தொழிலாளர்கள். இதுவரை தொழிலாளர்கள் தங்கள் சர்வீசுக்கு இணையான நாட்கள் ஓவர் டைம் செய்துள்ளனர். இப்படி இரட்டிப்பு சர்வீசோடு கடுமையாக உழைத்த தொழிலாளர்களை இந்த கம்பெனியை நம்பி வாழ்க்கையை நடத்தி வந்தவர்களை நடுத் தெருவில் நிறுத்துவதற்கு ஒப்பான ஒரு நிலைமையை நிர்வாகம் அறிவித்துள்ளது.

1990-க்குப் பிறகு வந்த ஒவ்வொருவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் குக்கிராமங்களிலிருந்து பள்ளிக் கல்வியை முடித்த கையோடு வந்து 15-லிருந்து 20 வருடம் சர்வீஸ் செய்து நிரந்தரமாகி உள்ளனர். மேலும் 15-லிருந்து 20 வருடங்கள் சர்வீஸ் செய்ய வேண்டியவர்களாகவும் இருக்கின்றனர். இந்த வேலையை நம்பி எல்லோரும் குடும்பமாகவே சென்னையில் அக்கம், பக்கம் வந்து தங்கியுள்ளனர். குடும்பம், வீடு, வாசல், பிள்ளை என உருவாகிக் கொண்டிருக்கிற நேரம் இது. இந்த நிலையில் நிர்வாகம் தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்றுவது என்பது அவர்களது வாழ்க்கையைப் பறித்து இரண்டும் கெட்டானாக தெருவில் நிற்க வைத்துவிடும்.

 [நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

ஆர்.பி – (ரென்கிட் பென்கீசர் – Renkitt Bengiser), டி.டி.கே குழுமம் இரண்டு முதலாளிகளுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டபொழுது நிறுவன முதலாளி டி.டி. ரகுநாதன்  அனைவரையும் பொறுமை காக்கும்படியும், கைவிட மாட்டோம் எனவும் வாக்குறுதி கொடுத்துச் சென்றார். இன்று நிர்வாகம் நடத்துவதில் இயலாமை உள்ளதாக புதிதாக உருவாக்கப்பட்ட விருதுநகர் மற்றும் புதுச்சேரிகளில் உற்பத்தியினைத் தொடர்ந்து செய்து கொண்டு சர்வதேச அளவில் டி.டி.கே குழுமம் வளர அடிப்படையாக இருந்த பல்லாவரம் தொழிற்சாலையின் தொழிலாளர்களை எந்த வேலையும் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

தொழிற் சங்கத்தின் துணை விதி 19(சி)-ன் படி 22.12.2013இல் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழு மூலம் ச. நாச்சியப்பன் தலைவராகவும், ர. ரெங்கநாதன் துணைத் தலைவராகவும், இல. பழனி பொதுச் செயலாளராகவும், பா. கல்யாணசுந்தரம், ந. ஸ்ரீதர் இணைச் செயலாளர்களாகவும், ப. நெடுமாறன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் பழைய நிர்வாகிகளாக இருந்த பு. ஸ்ரீதர் தலைவராகவும், திருமதி. லட்சுமிபாய் துணைத் தலைவராகவும், வே. புருஷோத்தமன் பொதுச் செயலாளராகவும், சக்திவேல், சுரேஷ் இணைச் செயலாளர்களாகவும், ஏ. வெங்கடேசன் பொருளாளராகவும் செயல்பட்டு வந்தனர். இவர்கள் முறையாக சங்கத்தின் பொறுப்பையும் ஆவணத்தையும் ஒப்படைக்காமல் மறுத்து வந்தனர்.

இவர்கள் 2012 செப்டம்பரில் நடந்த தேர்தல் மூலம் சங்கத்தின் பொறுப்புக்கு வந்தார்கள். 2013 ஆகஸ்டுடன் இவர்களது பதவிக் காலம் முடிவு பெற்றது. இவர்கள் மூலம் தொழிலாளர்களின் எந்தப் பிரச்சினைக்கும் முறையான செயற்குழு, பொதுக் குழு போட்டு விவாதித்து நடைமுறைப் படுத்தவும் இல்லை. தீர்க்கப்படவும் இல்லை.

ஒரு பக்கம் கூட்டு நிறுவனங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு தொழிலாளர்களுக்கு நிர்வாகம் நெருக்கடியைக் கொடுத்தது.  தொழிற்சங்க நிர்வாகிகளுடன் முறையாக பேசாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து, இவர்களால் ஏற்பட்ட முரண்பாட்டை பயன்படுத்தி இவர்களுடன் தனியாக பேச்சு வார்த்தை நடத்தி, ஆலையை மூடப் போவதாக அறிவித்து, தொழிலாளர்களை வி.ஆர்.எஸ் (V.R.S)-ல் போகும்படி செய்தது. தொழிற் தகராறுகள் சட்டம் 1947-ல் அட்டவணை V -ல் கூறப்பட்ட அனைத்து வகை தொழிலாளர் விரோதப் போக்குகளையும் நிர்வாகம் பிரயோகித்து வந்தது.

சங்கத்தின் துணை விதிப்படி தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுடன் பேசாமல் காலாவதியான சங்க நிர்வாகிகளுடன் பேசுவதன் மூலம் தொழிலாளர்களை அச்சுறுத்தி, பணிய வைத்து வி.ஆர்.எஸ் (VRS – Voluntary Retirement Scheme – விருப்ப ஓய்வுத் திட்டம்) என்ற பெயரில் சி.ஆர்.எஸ் (CRS – Compulsory Retirement Scheme – கட்டாய ஓய்வுத் திட்டம்) கொடுத்து அனுப்பியுள்ளது. இது சம்பந்தமாக நிர்வாகம் சங்கத்து நிர்வாகிகளுடன் சட்டப் படியான எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.

தொழிலாளர்களை சி.ஆர்.எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்புவதற்கு பழைய நிர்வாகிகளை சட்ட விரோதமான வழிமுறைகளை நிர்வாகம் பயன்படுத்தியுள்ளது. இவ்வாறு நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவதன் மூலம் தாங்கள் பலன் அடையும் நோக்கத்திலேயே இவர்கள் செயல்பட்டனர்.

தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் தொலைபேசி மூலம் பல நாட்கள் ஒரு தொழில் முறை தரகரைப் போல,

‘கம்பெனி ஓடாது என நிர்வாகம் அறிவித்துவிட்டது. நமது நிறுவனத்தின் கார்ப்பரேட் வைஸ் பிரசிடெண்ட் அறிவித்து விட்டார்கள், கிடைப்பதை இப்போதே வாங்கிவிட்டால் தப்புவீர்கள், இல்லையென்றால் ஒன்றுமில்லாமல் போக வேண்டியதுதான், 01-02-2015 முதல் கம்பெனிக்குப் பூட்டு போட்டு விடுவார்கள். இதை உங்கள் நன்மைக்காக சொல்கிறோம், வி.ஆர்.எஸ் வாங்கி விடுங்கள்’ என ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரின் மனைவிக்கும் போன் மூலம் பேசியதோடு வீடுகளுக்கு நேரில் சென்று அச்சுறுத்தியும் உள்ளனர். முதலில் 33 பேரையும், 30-01-2015 பிற்பகல் 5 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள் 91 தொழிலாளர்களையும் வி.ஆர்.எஸ் மூலம் வெளியேற்றிவிட்டனர்.

மேலும் 30-01-2015 வி.ஆர்.எஸ்-ல் சென்ற 91 நபர்களிடம் எதுவும் எழுதப்படாத நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து மட்டும் வாங்கி சங்கத்தை கலைக்க இவர்கள் முயற்சி செய்தனர். இதை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். பொதுக்குழு போட்டது போன்ற பொய்யான ஆவணத்தைத் தயாரித்து சங்கத்தின் நிதியைக் களவாட முயற்சி செய்தனர். இவர்கள் தொடர்ந்து தொழிலாளர்களைக் குழப்பிக் கொண்டு இருந்தனர்.

இப்பொழுது நிறுவனத்தில் 62 தொழிலாளர்கள் உள்ளனர். நிர்வாகம் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து உளவியல் ரீதியான டார்ச்சர்களைக் கொடுத்தது. எந்த வேலையும் கொடுக்காமல் உட்கார வைத்தது.

2014 அக்டோபர், நவம்பர் மாத சம்பளத்தை நிறுத்தியது, கேண்டீனை மூடியது, மேற்கண்டவைகளுக்கு நிர்வாகம் எந்தவிதமான சட்டப்பூர்வமான அனுமதியும் பெறவில்லை. தொழிலாளர்களுக்கு முன் அறிவிப்பும் செய்யவில்லை. சங்கத்தின் புகாரின் அடிப்படையில் தொழிற்சாலை ஆய்வாளர், தொழிலாளர் துறை இணை ஆணையர் சமரசம் (2) ஆகியோரின் உத்தரவின் பேரில் சரி செய்யப்பட்டு சுமூக நிலைக்கு நிர்வாகம் வந்தது.

அடுத்த கட்டமாக நிர்வாக ரீதியிலான பணியாளர்களைத் தனது பிற கிளையான விருது நகர், புதுச்சேரிக்கு தற்காலிகமாக போகுமாறு கட்டாய இடமாற்றத்தினை செய்து அனுப்பியது. நிறுவனத்தின் ஒவ்வொரு அறையையும் பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளது. இப்போது கழிவறைக்குக் கூட பூட்டு போட்டு பூட்டியுள்ளது நிர்வாகம்.

 [நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

கேன்டீனில் வழங்கப்படும் உணவு பேருந்து நிலையத்தில் நடத்தப்படும் சுகாதாரமற்ற ஒரு ரோட்டோரக் கடையிலிருந்து வாங்கி வழங்கப்படுகிறது. இந்த உணவு போதிய அளவும் இல்லை. இவர்கள் கொடுக்கும் டீ, டிபன், உணவு போன்றவைகளை உட்கொள்ளுவதால் தொழிலாளர்களுக்கு செரிமான குறைவு, தொண்டை எரிச்சல், ஒவ்வாமை போன்ற உடல் ரீதியான தொந்தரவுகளைக் கொடுக்கிறது. டீயில் சாக்ரீன் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு தொழிலாளர்கள் குடிக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்குகிறது. இதனால் இவர்கள் கொண்டு வரும் உணவுகள் தொழிலாளர்களால் தவிர்க்க முடியாத போது மட்டுமே உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. தினமும் பாதி வீணாகப் போகிறது. இதன் மீது நிர்வாகத்திடமிருந்து ஒரு நியாயத்தைக் கோரிப் பெற இயலாத நிலையில் குமுறிக் கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்கள் வெறுப்போடு வெளியேறுவதற்கு இதுவும் ஒரு பிரதான காரணமாக இருந்தது.

பல்லாவரம் தொழிற்சாலையில் ஆர்டர் இல்லை, ஆலையை மூடப் போகிறேன் என இந்தக் கம்பெனிக்கு சம்மந்தமில்லாத தனது வேறு கம்பெனியின் எம்.டி.யாக உள்ள திரு கல்யாணராமன் மூலம் தொழிலாளர்களுக்கு மிரட்டல் விட்ட நிர்வாகம், விருதுநகர், புதுச்சேரி தொழிலாளர்களைக் கூட்டி அழைத்து தனக்கு ஆர்டர் வரவுகள் அதிகரித்துக் கொண்டுள்ளது. “தொழிலாளர்கள் ஒத்துழைக்கவில்லையானால் நாங்கள் அந்த ஆர்டர்களை வாங்கி நடத்த முடியாமல் போய்விடும், எனவே, தொழிலாளர்கள் தங்கள் உற்பத்தி இலக்கை உயர்த்தி பொறுப்புடன் வேலை செய்ய வேண்டும்” எனக் கோரியுள்ளது.

தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சு வார்த்தையைத் துவங்கி இடைக்கால ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என அறிவித்த நிர்வாகம் தனது முடிவை மாற்றியதற்கான சட்டப்படியான ஆதாரங்கள் எதையும் காட்டவோ கொடுக்கவோ இல்லை, 180 பேருக்கு மேல் தொழிலாளர்கள் உள்ள ஆலையை 15 லிருந்து 20 ஆண்டுக்குள் பணித் தொடர்ச்சி உள்ளவர்களைத் தொழிலாளர் துறை அரசு செயலரிடம் அனுமதி பெற்று மட்டுமே இந்த முடிவை எடுக்கமுடியும். இதனைத் தொழிலாளர்களுக்கும் காட்டவேண்டும் என சட்டம் கூறுகிறது. இவை எதையும் நிர்வாகம் கடைபிடிப்பதாக இன்று வரைக்கும் தெரியவில்லை, வி.ஆர்.எஸ்-க்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் கடைப்பிடிக்கவில்லை.

தனது மூன்று ஆலைகளிலும் ஆட்குறைப்பு செய்யப் போவதாக அறிவித்த நிர்வாகம் பல்லாவரம் கிளையில் மட்டும் இதனை முனைப்புடன் செயல்படுத்துவதற்கான காரணம் கூறப்படவில்லை.

தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஆன சமசர பேச்சுவார்த்தை ஒன்று நிலுவையில் இருக்கும்போது நிர்வாகம் மூடப் போவதாக அறிவித்தது.

1947 தொழிற் தகராறு சட்டப்படி இதுபோன்ற நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள முடியாது.  எனவே, சுமுகமான முறையில் சம்பள உயர்வு பேச்சு வார்த்தையை முடித்து நிறுவனத்தை நடத்த ஆவன செய்ய வேண்டும்.

1990 முதல் நிர்வாகம் சிறந்த நிர்வாகிகளைக் கொண்டு சர்வதேச அளவில் இத்தனை அவார்டுகளைப் பெறும் அளவிற்கு வளர்ந்தது, அதே போன்று மீண்டும் தகுதி வாய்ந்த நிர்வாகிகளை உருவாக்கி இந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.

குறிப்பு : டி.டி.கே. குழும நிறுவனம் என்பது டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்பவரின் குடும்ப நிறுவனம் ஆகும். இவர் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராகவும் மற்றும் இந்திய சாசன வரைவுக் குழுவின் முக்கிய அங்கத்தினர்களில் ஒருவராகவும் இருந்து செயல்பட்டவர். இவர் குடும்பம் 28 வகையான தொழில்களை இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் நடத்தி வருகிறது.

தகவல்

இல. பழனி,
பொதுச் செயலாளர்,
டி.டி.கே. பிடிஎல் தொழிலாளர் சங்கம்.
(முன்னர் – டிடிகே எல்.ஐ.ஜி. லிட்., தொழிலாளர் சங்கம்)

நீதிபதி சந்துருவுக்கு சில கேள்விகள்

50

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லும் நீதிபதி சந்துரு!

ன்பார்ந்த வழக்கறிஞர்களே!

நீதிபதி சந்துரு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு தொடர்பான வழக்கறிஞர் போராட்டம் குறித்து நீதிபதி சந்துரு ஏராளமான புள்ளி விவரங்களை அள்ளி வீசிக் கட்டுரைகள் எழுதியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு தொடர்பான வழக்கறிஞர் போராட்டம் குறித்து நீதிபதி சந்துரு கடந்த 16-03-2015 தேதிய ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களில் ஏராளமான புள்ளி விவரங்களை அள்ளி வீசிக் கட்டுரைகள் எழுதியிருந்தார். கடந்த ஆண்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பான பிரச்சனைக்கு இதைவிடத் தீவிரமாக நடந்த போராட்டத்தை மூத்த வழக்கறிஞர் காந்தியும் அவர் சார்ந்த மெட்ராஸ் பார் அசோசியனும் பயன்படுத்திக் கொண்டபோது சந்துருவின் கட்டுரை வரவில்லை என்பது முக்கியமானது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை வேண்டுமென்பதும், நீதிபதிகள் நியமனங்களில் சமூக நீதி காக்கப்பட வேண்டுமென்பதும்தான் வழக்கறிஞர்கள் போராட்டத்தின் நோக்கம். நீதிபதிகள் நியமனத்தில் இரகசியத்தன்மை காக்கப்படுவதே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணம்.

இப்போதைய தேர்விலும் தலைமை நீதிபதி, வழக்கறிஞர் சங்கங்களிடமிருந்து ஒரு பட்டியல் வாங்கினார், அது என்னானது ?

”நீதிபதி பால்வசந்தகுமார் இருக்கும்வரை பட்டியலில் கையெழுத்திட மறுத்தாராமே காரணம் என்ன? தலைமை நீதிபதி- ஆர்.எஸ்.எஸ், குருமூர்த்தி – ஆர்.எஸ்.எஸ், நீதித்துறை பிரிவைச் சேர்ந்த பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் ஆகியோர்தான் இப்பட்டியலை தயாரித்தார்களாமே – உண்மையா?”

இவையெல்லாம் வழக்கறிஞர்களிடம் உலாவரும் தகவல்கள். தற்போதைய வழக்கறிஞர்களின் பார்கவுன்சிலுக்கு எதிரான போராட்டம் கூட நீதிபதிகள் நியமனம் தொடர்பான போராட்டத்தை திசைதிருப்பும் சதுரங்கத்தின் ஓர் அங்கமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. பார்ப்பனீயத்தின் ஈராயிரமாண்டு வரலாற்றைப் படித்தவர்கள் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

அடுத்து, வழக்கறிஞர்கள் எழுப்பும் மிக முக்கிய பிரச்சனை, ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் இசுலாமிய நீதிபதிகள் ஒருவர்கூட இல்லை என்ற நிலையில், தற்போதைய உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்விலும் ஒரு சிறுபான்மையினர் (முஸ்லீம் & கிறிஸ்தவர்), ஒரு பெண் வழக்கறிஞர் கூட தேர்வு செய்யப்படவில்லை என்பது போன்ற மிக முக்கியமான இக்கேள்விகளை நீதிபதி சந்துரு தவிர்ப்பது தாமாக ஏற்படுத்திக் கொண்ட மறதி நோயின் காரணமாகவா?

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் போராட்டத்திற்குத் தொடர்பில்லாத கீழமை நீதிமன்ற புள்ளிவிபரங்களைக் காட்டி நீதிபதிகள் நியமனத்தைப் பொறுத்து சமூகநீதி தமிழகத்தில் பூத்துக் குலுங்குவதாகச் சொல்லியுள்ளார் சந்துரு. இப்படிப் புள்ளிவிபரங்கள் காட்டினால் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் அருந்ததியர் சமூகத்தினர்தான் 100% துப்புரவுப் பணியில் உள்ளனர். இப்பணிகளில் முற்பட்ட சமூகத்தினரின் பங்கேற்பு குறைந்து விட்டது சமூகநீதி செழித்துள்ளது எனச் சொல்லலாமா?

உண்மையில் கீழமை நீதிமன்றப் பணிகளுக்கு பார்ப்பனர் உள்ளிட்ட முற்பட்ட சமூகத்தினர் வரத் தயாராக இல்லை. மாறாக சங்கரமடம் போல வேண்டியவர்கள், செல்வாக்குள்ளவர்கள், லாபியிங் என்று சொல்லப்படும் தரகு வேலை பார்ப்பவர்கள் வருவதற்கு உகந்த, அதிகாரம் வாய்ந்த பதவியாய் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு வரத்துடிக்கிறார்கள். கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு வருவதற்காவது ஒரு அளவுகோல் இருக்கிறது (தேர்வு + நேர்காணல்), ஆனால் அவர்களை எல்லாம் அடிமைகளாக நடத்துகிற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுமுறைக்கு என்ன அளவு கோல் என்பதை நீதிபதி சந்துருவால் உலகுக்குச் சொல்ல முடியுமா? இன்று பதவியில் உள்ள நீதிபதிகளில் பலர் மூத்த நீதிபதிகளைப் பார்த்து லாபியிங் செய்து வந்தவர்கள்தானே?

நீதிபதி சந்துரு அவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த பொழுது நடந்த, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில், அனைத்து நீதிபதிகளடங்கிய கூட்டத்தில், மேற்படி தேர்வு முறையின் வெளிப்படைத் தன்மை குறித்து இவர் பேசியதுண்டா? வழக்கறிஞர்கள் போராட்டத்தை ஒரு சில சங்க நிர்வாகிகள் பயன்படுத்திக் கொள்வது உண்மைதான் என்றாலும், நீதிபதிகள் தேர்வு முறை குறித்தும், அதுதான் பிரச்சனையின் மூலம் என்பதையும், எழுதாமல் வேண்டுமென்றே தவிர்க்கிறார் சந்துரு.

இது தவிர முற்பட்ட சமூகத்தினர் என்ற போர்வையில் தலைமை நீதிபதி கவுல் உள்ளிட்ட ஆறுபேரும் பார்ப்பன சமூகத்தினராகவே சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளனர். வேறு மாநிலத்தவர் இருவர் எனக் கொண்டாலும், பஞ்சாப் உயர்நீதிமன்றத்திலிருக்கும் நீதிபதி கண்ணனைச் சேர்த்தால் அய்ந்து பேர் பார்ப்பனர்கள். இவர்கள் அனைவரும் வழக்கறிஞர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். சந்துருவின் புள்ளிவிபரப்படி தேர்வு வைத்தால் ஒருவர் மட்டுமே மாவட்ட நீதிபதிகளிலிருந்து தேர்வாகிறார். ஆனால் தேர்வு இல்லாத நிலையில் 6 பேர்.

இதுதவிர, இந்தியாவில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் முற்பட்ட வகுப்பினர் 800 பேர் உள்ளனரே. இதில் பிற்பட்டோர்-தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கை வெறும் 50-க்கும் குறைவுதானே. இந்தப் புள்ளி விபரங்கள் உயர்நீதிமன்றத்தில் சமூகநீதி அடிப்படையிலான தேர்வு தேவை என்பதை உணர்த்தவில்லையா? இதற்கும் மேலாக இட ஒதுக்கீடு ஏதோ சலுகை போலச் சித்தரிக்கிறார் சந்துரு. மெத்தப் படித்த மேதாவியான சந்துருவுக்கு இடஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை எனத் தெரியாதா?

கீழமை நீதிமன்றங்களிலிருந்து, உயர்நீதிமன்றத்திற்குத் தேர்வாகி வரும் மாவட்ட நீதிபதிகள் அனைவரும் பணிமூப்பின் அடிப்படையில் வருபவர்கள் என்ற உண்மையை மறைக்கும் சந்துரு, இவர்களையும் கொலீஜியம் தேர்வு செய்ததுபோல் காட்டுகிறார். பிற்படுத்தப்பட்டோர்-தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவதற்காக இத்தவறைத் தெரிந்தே செய்கிறார் சந்துரு.

அடுத்து மொத்த நீதிபதிகள் காலியிடங்களுக்கும் தேர்வுப் பட்டியல் அனுப்பாமல் பிரித்து அனுப்புவது ஏன்? மொத்தமாக அனுப்பினால் ஒரே சமூகத்திற்கு அதிகப் பணியிடங்கள் ஒதுக்குவது வெளிப்படையாகத் தெரியுமென்பதால், இரண்டு கட்டமாக அனுப்புகிறார்கள் என்பது வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டு. இதற்கும் சந்துரு பதில் அளிக்கவில்லை.

சென்ற ஆண்டு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் “வெளிப்படையான தேர்வு; அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிரநிதித்துவம்” என்று தற்போதைய நீதிபதிகள் தேர்வு நடக்கவில்லை. வழக்கமாக அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பினை முன்னுதாரணமாகக் காட்டும் நீதிபதி சந்துரு இதனை மறந்தது-தற்செயலானதா?

இறுதியாக, வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்பாக அடிக்கடி வாளைச் சுழற்றும் சந்துரு நீதித்துறை ஊழல் குறித்து ஆழ்ந்த மவுனத்தில் இருப்பது ஏன்? இதுவரை நடந்த நீதிபதிகள் தேர்வு, பணம், சாதி, செல்வாக்கு, அரசியல் தலையீடு இல்லாமல் நடந்ததா? இக்கேள்விகளுக்கான பதிலை சந்துருவின் மனச்சாட்சிக்கே விட்டு விடுகிறோம்.

வழக்கறிஞர்கள்,
உயர்நீதிமன்றம், மதுரை.
98653 48163, 94434 21368.

பென்னாகரத்தில் லஞ்சத்திற்கு தடை ! வி.வி.மு – பு.மா.இ.மு அறிவிப்பு

1

அரசு அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சம் – ஊழலை தடுப்பதைப் பற்றி ஆலோசிக்க மக்கள் பேரவைக் கூட்டம்.

நாடு முழுவதும் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் -( பி.டி.ஓ) போன்ற அரசு அலுவலகங்களில் மக்கள் தேவைகள் (சான்றிதழ், அரசு உதவி, சலுகைகள்) லஞ்சம் கொடுக்கப்படாமல் நிறைவேறுவதில்லை. இங்கே அதிகாரிகள் லஞ்சம் பெறுவதற்கென்றே புரோக்கர்களை வைத்து ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதை விட கொடுமை என்னவெனில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுடன் இவர்கள் கள்ளத் தொடர்பும் வைத்துள்ளனர்.

இதனால் லஞ்சம் வாங்குவது குறித்து புகார் கொடுத்தால் உடனே லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு எச்சரிக்கையுடன் நடக்கின்றனர். அடுத்த நாள் மீண்டும் அதே லஞ்ச வேலையில் ஈடுபடுகின்றனர். இப்படி பல அதிகாரிகள் லஞ்சம் பெறுவதில் முனைவர் பட்டம் பெறுமளவிற்கு நிபுணத்துவம் கொண்டவர்களாக உள்ளனர்.

பி.டி.ஓ அலுவலகம் என்றால் கமிசன் கொடுத்தால் மட்டுமே வேலை நிறைவேறும். உதாரணமாக, திருமண உதவித் தொகை என்றால் 5000 ரூபாய். தொகுப்பு வீடு என்றால் 20,000 ரூபாய் கமிசன் வெட்ட வேண்டும். “என்ன இவ்வளவு ரூபாய் தரணுமா?” என்று ஒரு கேள்வி கேட்டாலே போதும், “சரிப்பா, நீ எங்கியோ போய் பாத்துக்க” என்று மக்களை விரட்டுகிறார்கள் தெண்ட சோறு அதிகாரிகள்.

மக்கள் பேரவைக் கூட்டம்
“என்ன இவ்வளவு ரூபாய் தரணுமா?” என்று ஒரு கேள்வி கேட்டாலே போதும், “இதாப்பா, நீ எங்கியோ போய் பாத்துக்க” என்று மக்களை விரட்டுகிறார்கள் தெண்ட சோறு அதிகாரிகள்.

மறுபக்கத்தில் விவசாயம் அழிந்து வருவதால் நகரங்களை நோக்கி நாடோடிகளாக கூலி வேலைக்கு செல்கின்றனர் விவசாயிகள். இது போக, சிறிதளவு நிலமும், கணுக்கால் அளவு தண்ணீரையும் விட்டு செல்ல முடியாத விவசாயிகள், மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் பூந்தோட்ட இணைப்புகள் பெற முயற்சித்தால் அந்த அதிகாரிகள் கேட்கும் லஞ்சத்தை கேட்டாலே இதயத் துடிப்பே நின்று விடும். இணைப்புக்காக உயர் அதிகாரிகளுக்கு 20,000 ரூபாய் லஞ்சமும், இடம் தேர்வுக்கு 500 ரூபாயும், மின் இணைப்பு கொடுக்கும் போது 50000 ரூபாய் என முப்பதாயிரம் வரை லஞ்சமாக கொள்ளையடிப்பதாக குமுறுகின்றனர் விவசாயிகள்.

இவ்வாறு எல்லா தரப்பு மக்களையும் லஞ்சம்-ஊழல் என்று அட்டையைப் போல உறிஞ்சுவதற்கு எதிராக, லஞ்சம் கொடுப்பதை நிறுத்துவதைப் பற்றி ஆலோசிக்க, மக்கள் பேரவை கூட்டம் ஒன்றை கிராம மக்களை திரட்டி நடத்துவது என்று முடிவு செய்தோம்.

மக்கள் பேரவைக் கூட்டம்
“லஞ்சம் -ஊழலை தடுப்பதற்கு யாரிடம் அனுமதி வாங்குவது. “

அதன்படி தெருமுனைக் கூட்டம், பிரச்சாரம், வீடு வீடாக மக்களை சந்திப்பது, ஜனநாயகவாதிகளை சந்தித்து கூட்டத்துக்கு அழைப்பது, சுவரெழுத்து இயக்கம், சுவரொட்டி பிரச்சாரம் என 20 நாட்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம். இறுதியாக பென்னாகரத்தில் இந்திராநகர் ஆஞ்சநேயர் கோயில் அருகில் கூட்டம் நடைபெற்றது.

இந்த மக்களை பேரவை கூட்டம் தொடர்பாக சுவரெழுத்துகளும், விளம்பரங்களும் மக்கள் கூடும் இடத்தில் விளம்பர தட்டிகளும் வைத்திருந்தோம். இரவோடு இரவாக போலீசே களத்தில் இறங்கி சுவர் விளம்பரத்திற்கு வெள்ளை அடித்தனர். சுவரொட்டிகளை கிழித்தனர். பேனரை பிய்த்து எறிந்தனர்.

மக்கள் பேரவைக் கூட்டம்
“இனி இதுபோல் (லஞ்ச ஊழல்) நடக்காது”

தொலைபேசியில் தொடர்புகொண்டு,  “அனுமதி இல்லாமல் எப்படி நடத்துறீங்க” என்று சட்ட வாதத்தை ஒன்றொன்றாக கழட்டி விட்டனர்.

“லஞ்சம் -ஊழலை தடுப்பதற்கு யாரிடம் அனுமதி வாங்குவது. அப்படி சட்டம் எதுவும் சொல்லவில்லையே?” என்று கேட்டால் பதில் இல்லை.

“இல்ல, நீங்க அனுமதி வாங்கிதான் செய்ய வேண்டும். 32 சட்டப் பிரிவு அமுலில் இருக்கிறது” என்று பேசியது போலீசு.

“அதுவெல்லாம் எங்களுக்கு தெரியாது. இதுபோன்ற கூட்டங்களுக்கு அனுமதி பெற வேண்டிய தேவையில்லை” என்று வாக்குவாதம் செய்த பிறகு

“பேனரை எடுங்கள், இதற்கு அனுமதி வேண்டும்” என்றது.

“சரி, எடுத்துக் கொள்கிறோம்” என்று சொல்லியும், 10 நிமிடத்திற்குள்ளாக பேனரை கிழித்தது போலீசு.

இப்படி பீதியூட்டும் வேலையை போலீசு நிறுத்தவில்லை.

மறுநாள் கூட்டம் நடப்பதற்கு முன்பாகவே அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டே இருந்தது போலீசு. எந்த வழியிலும் பொதுமக்கள் வரக்கூடாது என்று வழியெங்கும் முச்சந்திகளில் வாகனங்களை நிறுத்தி வைத்தது. தோழர்கள் ஓரிடத்தில் கூடி, பிரசுரம் கொடுத்து மக்களையும்  அழைத்துக் கொண்டு சென்றவுடன், உளவுத்துறை உட்பட 40 போலீசை வழியெங்கும் நிறுத்தினர்.

மக்கள் பேரவைக் கூட்டம்
இன்ஸ்பெக்டர் தனியாக வந்து, “நான் எல்லாம் லஞ்சம் வாங்குவதில்லை, தயவு செய்து கூட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்” என்று தோழர்களிடத்தில் பேசினார்.

இதனை பொருட்படுத்தாமல்  பொதுமக்களை சேர்த்துக் கொண்டு கோயில் முன்பு அமர்ந்து கூட்டத்தைத் தொடங்கினோம்.

எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி, வீ.ஏ.ஓ, தாசில்தார் என்று பெரிய பட்டாளமே வந்திருந்தது. “இனி இதுபோல் (லஞ்ச ஊழல்) நடக்காது” என்று யாரும் பேசவில்லை. மாறாக, முகத்தில் ஈ ஆடாமல் கூட்டத்தை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தனர்.

இன்ஸ்பெக்டர் தனியாக வந்து, “நான் எல்லாம் லஞ்சம் வாங்குவதில்லை, தயவு செய்து கூட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள்” என்று தோழர்களிடத்தில் பேசினார்.

டி.எஸ்.பி.யோ நமது வழக்கறிஞர்களிடத்தில், “நான் எப்போதும் லஞ்சம் வாங்குவதில்லை சார்” என்று தனது பங்கிற்கு தனியாக கூறியிருக்கிறார். இவ்வாறு பேசக் கொண்டிருக்கும் போதே தோழர்கள் ராமலிங்கம், மாது கூட்டத்துக்கு தலைமையேற்று நடத்தினர்.

இதைத் தொடர்ந்து வி.வி.மு. வட்டக்குழு தோழர் மாயாண்டி பேசினார். “சுவரொட்டியை உரசிக் கிழிக்கும் போலீசு, லஞ்சம் வாங்கும் தாசில்தாரையும், பி.டி.ஓ-வையும் கிழிப்பார்களா. இனி எந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கினாலும், தெரு முச்சந்தியில் நிறுத்தி புளிய விறால்களால் பரிசு வழங்கப்படும்” என்றார்.

மக்கள் பேரவைக் கூட்டம்
“சுவரொட்டியை உரசிக் கிழிக்கும் போலீசு, லஞ்சம் வாங்கும் தாசில்தாரையும், பி.டி.ஓ-வையும் கிழிப்பார்களா”

அடுத்து பேசிய தோழர் கோபிநாத், வட்டார செயலர், வி.வி.மு, “தாலுகா அலுவலகம் தொடங்கி மின்சார வாரியம் வரை மக்களிடத்தில் லஞ்சம் வாங்குகின்றனர். கொடுக்க மறுத்தால், இழுத்தடித்து லஞ்சம் கொடுக்கும் வரை மனு மீது நடவடிக்கை எடுப்பதில்லை. தினந்தோறும் அரசு அலுவலகங்களில் வாசல்முன் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். லஞ்சத்தை தடுக்க மக்கள் அதிகாரத்தை தங்கள் சொந்தக் கையில் எடுக்க வேண்டும்” என்று அறைகூவி அழைத்தார்.

இதன்பிறகு குடும்ப அட்டைக்கு லஞ்சம் கேட்டு அலைக்கழிக்கப்பட்ட நபர் ஒருவர் மனு கொடுத்தார். முதியோர் உதவித் தொகை நிறுத்தி விட்டதாக ஆதரவற்ற முதியோர்கள் 4 பேர் நம்மிடத்தில் மனு கொடுத்தனர்.

லஞ்சத்தை எதிர்த்து விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் போராடி மக்களை திரட்டினால் நமது அதிகாரம் என்னாவது என்று யோசித்த நிர்வாகம் தோழர்கள் மீது வழக்கு போட்டிருக்கிறது.

மக்கள் பேரவைக் கூட்டம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சனைகளை தீர்க்க வேலைகளை தொடங்கியுள்ளது, வி.வி.மு

எனினும் அடுத்த கட்டமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சனைகளை தீர்க்க வேலைகளை தொடங்கியுள்ளது, வி.வி.மு. இந்த சமர் தொடரும்.

லஞ்சத்தை எதிர்த்ததற்காக வி.வி.மு தோழர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது குறித்த பத்திரிகை செய்தி

pennagaram-people-council-case

விவசாயிகள் விடுதலை முன்னணி,
பென்னாகரம் வட்டம்
9943312467

நியுட்ரினோ திட்டத்தை விரட்டுவோம் ! தேவாரம் பொதுக்கூட்டம்

0

தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்திலுள்ள அம்பரப்பர் மலையில் அமைய இருக்கும் இந்திய நியுட்ரினோ திட்டத்துக்கு எதிராக ,”பொட்டிபுரத்தை போர்க்களம் ஆக்குவோம்! நியுட்ரினோ ஆய்வுத் திட்டத்தை விரட்டியடிப்போம்!” என்ற முழக்கத்துடன் கடந்த இருபது நாள்களாக விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது. 20 கிராமங்களில் சுவரொழுத்து பிரச்சாரம் செய்யப்பட்டதுடன், வீடுவீடாக பிரசுரம் கொடுத்தும் ஆதரவு திரட்டப்பட்டது.

நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டம்
ம.க.இ .க. மைய கலைக்குழுவினரின் இருநாள் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது

மேலும் மக்கள் கலை இலக்கியக் கழக மைய கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளோடு இருநாள் தெருமுனைப் பிரச்சாரம் கிராமங்களில் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 23-ம் தேதி மாவீரன் பகத்சிங் நினைவு நாளில், தேவாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது

pottipuram-anti-neutrino-meeting-04

நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டம்
மார்ச் 23-ம் தேதி மாவீரன் பகத்சிங் நினைவு நாளில், தேவாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம்.

கூட்ட நாளன்று பகுதியெங்கும் ஆட்டோ பிரச்சாரம் செய்யப்பட்டது. தொடர்ச்சியான பிரச்சாரத்தினால், பாதிப்பிக்குள்ளாகும் கிராம மக்கள் திரளாக கூட்டத்தில் வந்து கலந்து கொண்டனர். சுவரெழுத்துகளை அழித்து, கிராம மக்களை மிரட்டிய போலீசாரை வன்மையாக கண்டித்ததோடு, மக்களுக்கு பயன்படாத நியுட்ரினோ ஆய்வை அம்பலப்படுத்திடுத்தி தோழர் மோகன், விவிமு பேசினார்.

pottipuram-anti-neutrino-meeting-03சிறப்புரை ஆற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராசு, “நியுட்ரினோ திட்டம் மட்டுமல்ல, .கூடங்குளம் அணுமின் திட்டம், மீத்தேன் எரிவாயுத் திட்டம் போன்ற மக்கள் விரோதத் திட்டங்களை தனித்தனியே போராடி ஒழிக்க முடியாது. இவை எல்லாமே ஏகாதிபத்திய, பன்னாட்டுக் கம்பெனிகளின் லாப நோக்கத்திற்காக திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. எனவே நாட்டுப் பற்று, விடுதலை உணர்வுடன் இதை எதிர்த்துப் போராடவேண்டும்.மேலும், அரசு உறுப்புகள் அனைத்தும் நம் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வக்கற்று, அழுகி நாறி விட்டன. இதனை தூக்கி எறியாவிட்டால் உழைக்கும் மக்களுக்கு விடுதலை பெறமுடியாது!” என எழுச்சியுடன் விளக்கிப் பேசினார்.

நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர் ராஜூ உரை

பயபீதியுடன், தன்னம்பிக்கையற்று இருந்த பொட்டிப்புரம் பகுதி மக்கள் கூட்டத்தினால் மன உறுதிகண்டு தோழர்களுக்கு சால்வை போர்த்தி பாராட்டினார்கள்.

pottipuram-anti-neutrino-meeting-05வைகோ-சீமான் வகையாறாக்களின் வெற்றுப் பேச்சுக்கள் எல்லாம் புரட்சிகர அமைப்பின் பிராச்சாரத்தின் முன் கரைந்துபோய்விட்டது என்பதை நிருபிப்பதாக இருந்தது, பொதுக்கூட்டம். கூட்டத்தின் இறுதியில் கூட்டியக்கமாக செயல்பட மக்களுக்கு அறைகூவல் விடப்பட்டது. சுமார் 1000 பேர் கலந்துகொண்ட கூட்டம் ம.க.இ.க. மைய கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன்  நிறைவுற்றது.

ம.க.இ.க மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி மாவட்டம்

66 ஏ போனால் என்ன அவர்களுக்கு ஆயிரம் பிரிவுகள் உண்டு

5

மூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களின் அடிப்படையில் காவல் துறைக்கு கைது செய்ய அதிகாரமளிக்கும்  தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ-வை ரத்து செய்து உச்சநீதிமன்றம் 24.3.2015 அன்று தீர்ப்பளித்துள்ளது. 2000-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இச்சட்டப் பிரிவில் சில திருத்தங்கள் 2009-ம் ஆண்டில் சேர்க்கப்பட்டன.

66A - ஐ.டி சட்டம்
பிறரை புண்படுத்தினார், பகை உணர்வை தூண்டினார் என்று யாரையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம்.

இதன்படி பிறரை புண்படுத்தினார், பகை உணர்வை தூண்டினார் என்று யாரையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம். அப்படி அடைத்தும் இருக்கிறார்கள்.

2012 செப்டம்பரில் இந்திய பாராளுமன்றத்தை கழிப்பிடமாகவும், தேசியச் சின்னமான சாரநாத் சிங்கங்களை ஓநாய்களாகவும் வரைந்த கார்டூனிஸ்ட் திரிவேதி கைது செய்யப்பட்டார். இதற்காக மும்பை போலீசு அவர் மீது தேச துரோக வழக்கு 124 ஏ (அவதூறு), தகவல் தொழில்நுட்ப சட்டம் 66 ஏ பிரிவு, 1971-ம் ஆண்டு தேசிய சின்ன அவமதிப்பு தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது.

2012 நவம்பரில், சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணமடைந்த போது, ‘இதற்காக ஒரு பந்த் தேவையா’ என முகநூலில் எழுதியதற்காகவும், அதனை ‘லைக்’ செய்ததற்காகவும் மும்பையை சேர்ந்த ஷாகின் தாதா மற்றும் ரேணு என்ற இரு இளம் பெண்களின் மீது 66A பிரிவின் படி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள். மேலும் ஷாகினின் உறவினருக்கு சொந்தமான மருத்துவமனை ஒன்றும் சிவசேனா கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது.

மோடி பதவியேற்கும் வைபவத்திற்கு முன்னதாகவே கோவா மாநிலத்தில் ஒருவர் மீதும், பெங்களூருவில் ஒருவர் மீதும் தகவல் தொழில் நுட்ப சட்டம் 66A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். காரணம் அவர்கள் மோடியை எதிர்த்தார்கள் என்பது மட்டுமே.

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டத்தின் போது பிரதமர் அலுவலகத்தை விமரிசித்தார்கள் என்று வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். பா.ஜ.க, காங்கிரசு அரசுகள் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலும் இந்த பிரிவின் படி கைது செய்திருக்கிறார்கள்.

66A ஐ.டி சட்டம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டார் என பல்கலை பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா, ப.சிதம்பரத்தின் வாரிசு கார்த்தி சிதம்பரத்தின் சொத்து குறித்து கருத்து வெளியிட்ட ரவி ஸ்ரீனிவாசன் என்று இந்த பட்டியல் நீள்கிறது.

“அப்போது இரண்டு மாதத்திற்குள் நான்கு பேர் கைது செய்யப்பட்டார்கள். புதுச்சேரியிலிருந்து ஒரு தொழிலதிபர், ஒரு கார்ட்டூனிஸ்ட் மகாராஷ்டிராவில் இரு மாணவிகள்,….. அதில் ஒருவர் ஃபேஸ்புக்கில் லைக் செய்திருந்தார்…. நான் அதிர்ச்சியடைந்தேன். இணையத்தில் கருத்து தெரிவித்தார்கள் என்பதற்காகவே இப்படி கைது செய்கிறார்கள் என்பதாலேயே உடன் வழக்கு போட முயற்சி செய்தேன்.” என்கிறார் ஷ்ரேயா ஷிங்கால்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் இம்மாணவி 2012-ல் இப்பிரிவை ரத்து செய்யுமாறு பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். இது போல பலரும் தாக்கல் செய்திருந்தனர். இவற்றை விசாரித்த் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரோஹின்டன் ஃபாலி நரிமன் அடங்கிய அமர்வு மேற்கண்ட பிரிவு 66 ஏ-வை ரத்து செய்து தற்போது தீர்ப்பளித்திருக்கிறது.

அசீம் திரிவேதி
அசீம் திரிவேதி

இந்த வழக்கை விசாரித்து வந்த காலத்தில் 2013-ல் “போலிஸ் உயரதிகாரிகள் டி.ஜி.பி, ஐ.ஜி போன்றோரின் உத்தரவு இன்றி 66 ஏ பிரிவின் கீழ் யாரையும் கைது செய்யக்கூடாது” என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாகவே இப்போது தீர்ப்பு வந்துள்ளது.

“அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19(1) ஏ பிரிவு வழங்கியுள்ள கருத்துரிமை சுதந்திரத்தை தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 66 ஏ பிரிவு பறிக்கிறது; அதை அனுமதிக்க முடியாது” என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதே நேரம் மோடி அரசு கோவித்துக் கொள்ளக் கூடாது என்று, “ இப்போதைய அரசு இந்த பிரிவை பயன்படுத்தாமல் இருந்தாலும், அடுத்து வரும் அரசு பயன்படுத்தவே செய்யும். எனவே சர்ச்சைக்குரிய பிரிவு ரத்து செய்ப்படுகிறது” என்றும் கூறியிருக்கிறது.

உண்மையில் காங்கிரசு அரசு இச்சட்டப்பிரிவை கொண்டு வந்தாலும், அதை எதிர்த்து நடந்த வழக்கில் கடந்த இரு ஆண்டுகளாக பா.ஜ.க அரசு சட்டத்தை ஆதரித்தே பேசி வந்தது. அதன் பொருட்டுத்தான் அந்த சட்டத்தை கேடாக பயன்படுத்த மாட்டோம் என்ற வாக்குறுதி. இவர்கள் எந்த சட்டத்தை கேடாக பயன்படுத்தவில்லை. இல்லை எந்த சட்டம்தான் இவர்கள் கேடாக பயன்படுத்துவதற்கு வசதி இல்லாமல் இருக்கிறது?

66A ஐ.டி சட்டம்
மகாராஷ்டிராவில் பேஸ்புக் கமென்டுக்காக கைது செய்யப்பட்ட பெண்கள்.

ஊடகங்கள் அனைத்தும் கருத்துரிமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று கொண்டாடி வரும் நிலையில் காங் மற்றும் பா.ஜ.க கட்சிகள் இஞ்சி தின்ற குரங்காய் திணறுகின்றன. மட்டுமல்ல இதர சமூகநீதிக் கட்சிகளும் இந்த தீர்ப்பினை விரும்பவில்லை.

“இந்த 66 ஏ பிரிவு சரியாக வரையறுக்கப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். உச்சநீதிமன்ற உத்திரவை வரவேற்கிறேன்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். இந்த ஒழுக்கவாத முழக்கத்தை அன்றே சொல்ல என்ன தடை? மட்டுமல்ல இந்த சட்டப்பிரிவை வைத்தே இவரது வாரிசு கார்த்தி சிதம்பரம், புகார் அளித்து புதுச்சேரியில் ஒருவரை உள்ளே தள்ளினார். அப்போதே கூப்பிட்டு மவனே இது சரியில்லை என்று மனுநீதி சோழன் போல அடித்திருக்கலாம் அல்லவா?

66A ஐ.டி சட்டம்
இந்த தீர்ப்பை புரிந்து கொள்வதற்கு ஒட்டு மொத்தமாக போராடும் மக்களை இந்த நாட்டின் அரசு எப்படி நடத்துகிறது என்பதோடு சேர்த்து பார்க்க வேண்டும்.

“இந்த விவகாரத்தில் முந்தைய மன்மோகன் சிங் அரசுக்கும், எங்கள் அரசுக்கும் ஒரே மாதிரியான கருத்து இல்லை. கருத்து சுதந்திரத்தை அடக்கும் காங்கிரசு அரசின் செயலில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்று முழுப்பூசணிக்காயை காற்றில் மறைக்கிறார் பா.ஜ.க –வின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத். சொல்லப் போனால் பா.ஜ.க கோஷ்டிகளை அம்பலப்படுத்தியதாலேயே நாடெங்கும் பலர் இச்சட்டப்படி கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில் மோடியின் இமேஜுக்கு பங்கம் வரக்கூடாது என்று அந்த கைது நடவடிக்கையை காங்கிரசு அரசே செய்தது.

எனவே, இந்த தீர்ப்பை புரிந்து கொள்வதற்கு ஒட்டு மொத்தமாக  போராடும் மக்களை இந்த நாட்டின் அரசு எப்படி நடத்துகிறது என்பதோடு சேர்த்து பார்க்க வேண்டும்.

ஏனெனில் பிரிவு 66 ஏ போனாலும் அதே கைது மற்றும் தண்டனையை தரவல்ல ஏனைய பிரிவுகள் இன்னும் அப்படியே உள்ளன. ஏற்கனவே உள்ள ஐ.பி.சி பிரிவுகள் 500, 505, 506, 507, 509, 124 ஏ, 295 ஏ போன்றவற்றின் மூலம் இணையத்தில் கருத்து தெரிவிக்கும் எவரையும் பிணையில்லாமல் சில பல ஆண்டுகள் சிறையில் அடைக்க முடியும்.

இதை இப்போதைய தீர்ப்பிலும் உச்சநீதிமன்றம் வேறு வார்த்தைகளில் தெரிவித்திருக்கிறது.

தகவல் தொழில்நுட்ப பிரிவு 69பி-ன்படி மத உணர்வுகளை தூண்டுதல், நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், வெளிநாட்டு உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் இணைய தளங்களை முடக்கும் மத்திய அரசின் அதிகாரத்தை அனுமதிப்பதாக நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.

66A ஐ.டி சட்டம்
ஒரு சட்டப்பிரிவு போனால் என்ன வேறு இருக்கின்றன அல்லது பழைய பிரிவுகள் இருக்கின்றன.

ஒரு சட்டப்பிரிவு போனால் என்ன வேறு இருக்கின்றன அல்லது பழைய பிரிவுகள் இருக்கின்றன என்று மோடிகளும், சோனியாக்களும், அம்பானிகளும் ஆறுதல் அடைவர். இது கருத்துரிமை போருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் வெற்றி என்று நாம் கொண்டாட முடியுமா?

இந்த தீர்ப்பை மாபெரும் ஜனநாயகப் போராக, வெற்றியாக கொண்டாடும் தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளேடுகள் தமிழகத்தில் ஜெயலலிதாவைப் பற்றி ஏதும் மயிலிறகு விமரிசனங்களைக் கூட எழுதாது. அப்படி எழுதினால், பேசினால் உடன் அரசு வழக்கறிஞர்கள் மின்னலாய் வழக்கு போட்டு குடைச்சல் குடுப்பார்கள். அப்படித்தான் கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த், வெள்ளை எம்.ஜி.ஆர் கட்சி தலைவியால் தமிழகம் முழுக்க அனைத்து நீதிமன்றங்களுக்கும் அமாவாசை, பௌர்ணமி அன்று வாய்தா யாத்திரை சென்று வருகிறார். இது தி.மு.க உட்பட வேறு கட்சிகளுக்கும், நக்கீரன் – ஜூ.வி போன்ற ஊடகங்களுக்கும் பொருந்தும்.

மேலும் குண்டர்கள் சட்டத்திலேயே இணையக் குற்றங்களை சேர்க்கும் விசயத்தை ஜெயா அரசு செய்திருக்கிறது.

பா.ஜ.க.வின் இளைய பங்காளியான ஜெயா அரசே இப்படி என்றால் பா.ஜ.க, மோடி அரசு குறித்து தனியாக விளக்க வேண்டியதில்லை. கடந்த காலத்தில் அருந்ததிராய் ஒரு நாள் நீதிமன்றத்தில் சிறை வைக்கப்பட்டதும், பினாயக் சென் இரு ஆண்டுகள் சிறையில் முடக்கப்பட்டதும் என கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைகளின் பட்டியல் மீக நீண்டது.

தமிழகத்தில் தமிழுரிமை அமைப்புகள் மற்றும் நக்சல்பாரி அமைப்புகளும் இப்படி பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்திருக்கின்றன. இன்றைக்கும் ம.க.இக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பிரசுரங்கள், சுவரெழுத்துக்கள், வெளியீடுகள், கூட்டங்கள் அனைத்தும் பல்வேறு தருணங்களில், பல்வேறு இடங்களில் மறுக்கப்பட்டே வந்திருக்கின்றன. ஒபாமாவை கண்டிக்க தமிழகத்தில் அனுமதி இல்லை, கலாமை கிண்டல் செய்தார்கள் என்று ஒரு வழக்கு, கைது, கோக் நிறுவனத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தார்கள் என்று பல தோழர்களுக்கு சிறை, சங்கராச்சாரிக்கு கருப்பு கொடி காண்பித்த ‘குற்ற’த்திற்கு மூன்று மாதம் சிறை, என்று இதற்கு ஏராளமான சான்றுகளை பட்டியிலிட முடியும்.

எனவே இத்தீர்ப்பினால் ஏதும் பயனில்லையா? அப்படி இல்லை. இந்த தீர்ப்பும் கூட பொதுவில் நாடு முழுவும் எழுந்த பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்புகள், பொது நல வழக்குகள் காரணமாகவே வந்திருக்கிறது.

இறுதியில் கருத்துரிமைக்கான பாதுகாப்பு சட்டங்களில் இல்லை, மக்கள் போராட்டங்களிலேயே மலருகிறது என்பதை புரிந்து கொண்டோமானால் நாம் கொண்டாட்டத்தை முடித்து விட்டு போராட்டக் களத்திற்கு உடன் செல்வோம்.