Monday, June 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 615

தஞ்சையில் கோம்பை அன்வரின் “யாதும்” திரையிடல்

1

கோம்பை S. அன்வரின்

yaadhum-2

kombai-anwarபெரிதும் தவறாக எழுதப்பட்டு, புரிந்து கொள்ளப்பட்டு, உண்மைகளை மூடி மறைத்து வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்யப்படும் முஸ்லீம் வரலாற்றை ஆய்வு செய்யும் அன்வர் குறிப்பாகத் தென்னிந்திய முஸ்லீம் வரலாற்றை ஆய்வு செய்து வருகிறார்.

சென்னையிலிருந்து வெளி வந்த அசைட் (ASIDE) என்ற ஆங்கிலப் பத்திரிகையின் புகைப்படக் கலைஞராகவும், சுதந்திரப் பத்திரிகையாளராகவும் (FREE LANCER) தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கியவர், கோம்பை அன்வர். தற்போது வரலாற்றைப் பதிவு செய்வதை தனது முக்கியப் பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

கி.பி 1600 முதல் 2000 வரையிலான சென்னை நகரின் வரலாற்றைத் தொகுக்கும் திட்டமான “MADRAS GAZETTEER” திட்டத்தில் ஒரு பங்கேற்பாளர்.

தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டைக் கொண்டாடும் நோக்கில் இந்திய அரசின் தொல்லியல் துறைக்காக எடுக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் பற்றிய குறும்படங்களை எடுத்தவர்.
திராவிடக் கருத்தியலோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஜனநாயகவாதி.

கோம்பை S. அன்வரின்…
yaadhumஆவணப்படம் திரையிடல்

தமிழக முஸ்லீம்களின் வேர்களையும், அடையாளத்தையும் தக்க சான்றுகளுடன் பதிவு செய்து, தமிழகத்தில் இஸ்லாம் குறித்தும், தமிழக இஸ்லாமியர்கள் குறித்தும் ஆர்.எஸ்.எஸ், இந்து மதவெறிக் கும்பல் பரப்பிவரும் மோசடிக் கருத்துகளை அம்பலப்படுத்தும் ஒரு வரலாற்று ஆவணம்.

அறிமுகக் கூட்டம்

27.12.2014 சனிக்கிழமை மாலை சரியாக 6.15
யூனியன் கிளப் மாடி,
பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சை

அறிமுக உரை
தோழர். காளியப்பன்
மாநில இணைப் பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

சிறப்புரை
கோம்பை S. அன்வர்,  சென்னை
பத்திரிகையாளர், வரலாற்றாய்வாளர், ஆவணப்பட இயக்குநர்

அனைவரும் வருக!

ரூ 350/- விலையுள்ள இந்த ஆவணப்பட சி.டி ரூ 200-க்கு அரங்கில் கிடைக்கும்.

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சை
தொடர்புக்கு : 94431 88285, 94431 57641

சென்னை டாஸ்மாக் முற்றுகை – பிரச்சாரப் படங்கள்

5

குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள கடை வீதிகளில் 24/12/2014 நடைபெற இருக்கும் நாகல்கேணி டாஸ்மாக் கடை முன்பு பெண்கள் விடுதலை முன்னணி நடத்தும் முற்றுகை போராட்டத்திற்கு அணிதிரட்ட பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் நடைபெற்றது!

டாஸ்மாக் முற்றுகை பிரச்சாரம்
பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம்

ஒரு தோழர் ஜெயலலிதாவை போல உடை அணிந்தும், ஜெ. முகமூடி அணிந்தும், மூன்று சாராய பாட்டில்களை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டும் பிரச்சாரம் செய்ததில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

ஜெ முகமூடி அணிந்து பிரச்சாரம்
ஜெ முகமூடி அணிந்து பிரச்சாரம்

ஒரு பூக்காரம்மாவிடம்  முதலில் பிரசுரம் கொடுத்ததும், ஏதோ தருகிறார்கள் என வாங்கி வைத்துக்கொண்டார். அவரிடம் இப்போராட்டம் குறித்து விளக்கியதும், ”டாஸ்மாக்கால சீரழிஞ்சுகிட்டு இருக்கிற குடும்பம்மா எங்க குடும்பம். எனக்கு இரண்டு பசங்கம்மா! இரண்டு பேருமே குடிக்கிறாங்க! பாக்கு போடுறாங்க! இரண்டாவது பையனுக்கு இப்பத்தான் குழந்தை பிறந்து, மூன்று மாதங்களாகிறது.  தினமும் குடிச்சு குடிச்சு, புத்தி குழம்பி போச்சு! பக்கத்திலே இருக்கிற கேசவர்த்தினி ஆஸ்பத்திரில சேர்த்து பார்த்தோம். இப்பத்தான் கொஞ்சம் தேறிவர்றான். இந்த போராட்டத்துக்கு நான் கண்டிப்பா வர்றேன்மா!” என்றார்.

பெ.வி.மு பிரச்சாரம்
“இந்த போராட்டத்துக்கு நான் கண்டிப்பா வர்றேன்மா!”

மருந்து கடைக்காரர் ஒருவர் ”உடல் பஞ்சு மாதிரி! ரெம்ப சென்சிடிவ்வானது. குடிப்பதினால் உடல்ல இருக்கிற எல்லா உறுப்புகளுமே மிகவும் டேமேஜாயிரும்! கல்லீரல் ரெம்ப பாதிப்படையும். அதனால், ஏகப்பட்ட தொந்தரவு வரும்! படிக்கிற பசங்ககூட குடிக்கிறாங்க!   உங்க போராட்டம் சரியான போராட்டம். நான் நிச்சயமா கலந்துக்கிறேன்!” என்றார்.

பெ.வி.மு டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரம்
“படிக்கிற பசங்ககூட குடிக்கிறாங்க! உங்க போராட்டம் சரியான போராட்டம். “

இப்படி பொது மக்கள் இந்த போராட்டத்தின் தேவையை அவர்களே உணர்ந்து நிதி அளித்து, கலந்து கொள்கிறோம் என ஆதரவும் தெரிவித்தனர். ஜெயலலிதா வேடம் அணிந்து பிரச்சாரம் செய்த பொழுது மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

pevimu-tasmac-siege-campaign-2

 

pvm tasmak (5)

pvm tasmak (4)

pvm tasmak (2)

பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

மூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி ?

8

கம்யூனிச அகிலத்தின் 150-ஆவது ஆண்டு நிறைவு : மூலதனத்தின் சர்வதேசியத்திற்கு முறிவு மருந்து பாட்டாளி வர்க்க சர்வதேசியமே!

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்!” – மார்க்சும் எங்கெல்சும் 1848-ல் பிரகடனப்படுத்திய இந்த முழக்கத்தை அன்று ஒருசில குரல்கள்தான் எதிரொலித்தன. ஆனால் 1864 செப்டம்பர் 28-ம் நாளன்று பெருவாரியான மேற்கு ஐரோப்பிய நாடுகளது பாட்டாளிகள்  கைகோர்த்து நின்று இந்த முழக்கத்தை எதிரொலித்தார்கள். ஆம்! அன்றுதான் முதல் கம்யூனிச அகிலம் என்றறியப்படும் அனைத்துலகத் தொழிலாளர் சங்கம் நிறுவப்பட்டது. இம்முதலாவது அகிலம் தொடங்கி இன்று 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

ஐரோப்பாவில் முதலாளிகளது கொடிய சுரண்டலும் அடக்குமுறையும் நிலவிய காலம் அது. தொழிலாளர்களின் போராட்டங்களை உள்ளூர் கருங்காலிகளைக் கொண்டு ஒடுக்கிய முதலாளிகள், பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வருவோரைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொண்டு தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களை உடைக்கவும் செய்தனர். இதற்கெதிராக பிரான்சு மற்றும் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் தங்களது இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து வர்க்க அடிப்படையில் ஒற்றுமையைக் கட்டிக் கொண்டு போராடினர். இதன் தொடர்ச்சியாக, அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்க ஐரோப்பிய நாடுகளது தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதிகளுக்கும், முற்போக்கு – சோசலிச சிந்தனையாளர்களுக்கும் அழைப்பு விடுத்தனர்.

அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தின் தொடக்கவிழா கூட்டம்.
1864 செப்டம்பர் 28-ம் நாளன்று, இலண்டன் – செயின்ட் மார்ட்டின் அரங்கத்தில் நடந்த அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தின் தொடக்கவிழா கூட்டம்.

உலக நிகழ்வுகளையும் பாட்டாளி வர்க்கப் போராட்டங்களையும் உன்னிப்பாகக் கவனித்து வந்த கார்ல் மார்க்ஸ், பிரிட்டனிலுள்ள முற்போக்காளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அதனாலேயே அவர் இலண்டன் – செயிண்ட் மார்ட்டின் அரங்கத்தில் நடந்த அனைத்துலகத் தொழிலாளர் சங்கத் தொடக்கக் கூட்டத்துக்கு ஜெர்மன் தொழிலாளர் வர்க்கத்தின் பிரதிநிதியாக அழைக்கப்பட்டார். அக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு, எல்லோரையும் விட கூடுதலான தகுதியுடையவராக கார்ல் மார்க்சைத் தெரிவு செய்து, அகிலத்தின் அடிப்படையான திட்டத்தையும், அதன் கொள்கை மற்றும் அமைப்பு விதிகளையும் வகுத்துக் கொடுக்குமாறு பணித்தது.

முதல் அகிலத்தில் கற்பனாவாத சோசலிஸ்டுகள், சார்ட்டிஸ்டுகள், இத்தாலிய தேசியவாதிகளான மாஜினிகள், குட்டி முதலாளிய புருதோனியவாதிகள், அராஜகவாத பக்கூனியவாதிகள், பிளாங்கியவாதிகள் – என பல்வேறு தரப்பினரும் இருந்தபோதிலும், மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு எதிராகத் தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் ஐக்கியப்பட்டு நின்றனர். “தொழிலாளர் வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதே முதற்கடமை” என்று போதித்த கார்ல் மார்க்ஸ், அரசியல் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் குறித்தும், அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை விடுதலை செய்ய வேண்டிய கடமை குறித்தும் உணர்த்தினார். முதலாவது அகிலத்தை உருவாக்கிக் கட்டியமைப்பதிலும், ஏறத்தாழ 80 லட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டிருந்த அதனை போர்க்குணமிக்க தொழிலாளி வர்க்க அமைப்பாக வளர்த்தெடுப்பதிலும் மார்க்ஸ் மிக முக்கிய பங்காற்றினார்.

முதல் கம்யூனிச அகிலம்
முதல் கம்யூனிச அகிலம் என்றறியப்படும் அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சியை அறிவிக்கும் துண்டுப் பிரசுரம்.

வேலை நிறுத்த உரிமை, எட்டுமணி நேர வேலை, பிற தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு தருதல் என்பதோடு அகிலம் தன்னை வரம்பிட்டுக் கொள்ளவில்லை.

  • பாரிஸ் நகர பித்தளைத் தொழிலாளர்களின் போராட்டம், ஜெனிவா கட்டிடத் தொழிலாளர் போராட்டம், பெல்ஜிய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் போராட்டம் ஆகியவற்றை ஆதரித்துப் போராடியதோடு, ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளி வர்க்கத்தின் வேலைநிறுத்தங்களை உடைக்க முயற்சிக்கும் முதலாளிகளுக்கு எதிராக லண்டன் மற்றும் எடின்பர்க் நகரங்களில் தொழிலாளர்களை அணிதிரட்டிப் போராடியதிலும் அகிலம் முக்கிய பங்கு வகித்தது.
  • உழைக்கும் வர்க்கப் பெண்களின் உரிமைகளுக்காகவும், விடுதலைக்காகவும் குரலெழுப்பியது.
  • அயர்லாந்து விடுதலைப் போராளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டபோது, அரசியல் கைதிகளைத் தூக்கிலிடுவதை எதிர்த்து அவர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடியது.
  • போலந்தின் விடுதலையையும், இத்தாலியின் ஐக்கியத்தையும் ஆதரித்ததோடு, அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிக்க லிங்கன் தலைமையில் நடந்த போருக்கு ஆதரவாக தொழிலாளர்களைத் திரட்டி வேலை நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தியது.

தொழிலாளர்கள் தங்களது அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற மார்க்சின் கருத்து 1871-ல் பாரிஸ் கம்யூனில் முதன்முதலாக செயல்வடிவம் பெற்றது.

உலகில் முதன்முதலாக தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க இப்புரட்சியில், பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகக் கண்டறியப்பட்ட அரசியல் வடிவமே கம்யூன் என்று அகிலத்தின் கூட்டமொன்றில் மார்க்ஸ் உரையாற்றினார். அந்த உரையின் விரிவாக்கம்தான் பின்னர் “பிரான்சில் உள்நாட்டுப் போர்” எனும் நூலாக வெளிவந்தது. ஏற்கெனவே உள்ள அரசு எந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக் கொண்டு தனது சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவே முடியாது என்ற மிக முக்கியமான உண்மையை பாரிஸ் கம்யூன் எடுத்துக் காட்டியுள்ளதாக மார்க்ஸ் உணர்த்தினார்.

1872 -ல் ஹேக் நகரில் நடந்த மாநாட்டின்போது, அராஜகவாதிகளுக்கும் மார்க்சியவாதிகளுக்குமிடையிலான சித்தாந்தப் போராட்டத்தில் முதலாவது அகிலம் பிளவுபட்டது. இருப்பினும்,

“மார்க்சின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக முதலாவது அகிலம் அமைந்துள்ளது … இந்த அகிலம் ஒன்பது ஆண்டுகளே நீடித்தது என்றாலும், எல்லா நாடுகளது பாட்டாளிகளிடம் அது உருவாக்கிய உயிர்த்துடிப்புள்ள ஐக்கியமானது இன்றும் நீடித்து நிலவி வருகிறது என்பதோடு, முன்னெப்போதையும் விட வலிமையாக இருக்கிறது. ஒரே படையாக, ஒரே கொடியின் கீழ் திரண்டு நிற்கிறது…”

என்று மார்க்சின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் உணர்ச்சி பொங்க உரையாற்றிய எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.

முதலாவது அகிலம் பிளவுபட்டு செயலிழந்த பின்னர்,  1889-ல் பாரிஸ் நகரில் எங்கெல்சும், சோசலிசத் தலைவர்களான ஆகஸ்ட் பெல், வில்லியம் லீப்னெக்ட் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற 18 நாடுகளின் சோசலிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் நடத்திய கூட்டமே இரண்டாவது அகிலத்தின் தொடக்கமாக அமைந்தது.

  • மே முதல்நாளை அனைத்துலகத் தொழிலாளர் தினமாக அறிவித்தது,
  • மார்ச் 8-ம் நாளை அனைத்துலகப் பெண்கள் தினமாக அறிவித்தது,
  • 8 மணி நேர வேலை நேரத்திற்கான கோரிக்கை முதலானவற்றுடன்

அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கப் பணியை, தோழர் எங்கெல்சை கௌரவத் தலைவராகக் கொண்டிருந்த இரண்டாவது அகிலம் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றது.

எங்கெல்சின் மறைவுக்குப் பின்னர் 1914-ல் முதல் உலகப் போர் தொடங்கியபோது, “தந்தையர் நாட்டைக் காப்போம்” என்று தத்தமது நாடுகளது அரசுகளின் தேசியவெறி, ஆக்கிரமிப்புப் போர் நடவடிக்கைகளை ஆதரித்து சந்தர்ப்பவாத சகதியில் இரண்டாவது அகிலம் மூழ்கியபோது, ஏகாதிபத்தியப் போர்களுக்குத் தொழிலாளி வர்க்கத்தைப் பலியிடுவதை எதிர்த்து பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை தோழர் லெனின் உயர்த்திப் பிடித்தார். முதலாளித்துவ தேசியவாதமா, பாட்டாளி வர்க்க சர்வதேசியமா என்று இந்த அகிலம் பிளவுபட்டதால், 1916-ல் இரண்டாம் அகிலம் கலைக்கப்பட்டது. காவுஸ்த்கி, பெர்ன்ஸ்டைன் முதலான சந்தர்ப்பவாதிகளுக்கும் குறுகிய தேசியவெறியர்களுக்கும் எதிராகப் போராடிய லெனின், உலகை மறுபங்கீடு செய்வதற்கான  ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு விடுதலைக்கான யுத்தமாக மாற்ற வேண்டுமென உணர்த்தினார். ஏகாதிபத்திய யுத்தத்தில், தமது தந்தையர் நாட்டை ஆதரிக்காத எவரும் தேசத் துரோகிகள் என்று பிரச்சாரம் நடந்து வந்த நிலையில், அதற்கெதிராக எதிர்நீச்சல் போட்டு பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கடமையை உணர்த்தி லெனின் முன்வைத்த பாதையின் வெற்றியை ரஷ்ய சோசலிசப் புரட்சி பறைசாற்றியது.

கம்யூனிச அகிலம்
1919-லிருந்து 1943 வரை கம்யூனிச அகிலத்தின் சார்பில் பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் வெளியிடப்பட்ட “கம்யூனிச அகிலம்” எனும் அரசியல் கோட்பாட்டு இதழ்.

பின்னர், 1919-ம் ஆண்டில் தோழர் லெனின் தலைமையில் மூன்றாவது கம்யூனிச அகிலம் மாஸ்கோவில் நிறுவப்பட்டது.

  • அனைத்துலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான போர்த்தந்திரத்தை வகுத்துக் கொடுத்து, ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்துக்கும் காலனி, அரைக்காலனி மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களது விடுதலைக்கும் வழிகாட்டியது.
  • லெனின் மறைவுக்குப் பின்னர் தோழர் ஸ்டாலின் தலைமையில் இயங்கிய மூன்றாவது அகிலம், பல்வேறு நாடுகளிலும் கம்யூனிஸ்டு கட்சிகளைத் தொடங்கவும் வளரவும் உதவியதோடு, ஐரோப்பாவில் இட்லரின் பாசிச ஆக்கிரமிப்புக்கு எதிராக நாடுகளின் சுதந்திரத்தையும் மக்களின் விடுதலையையும் இலட்சியமாகக் கொண்டு செயல்படவும், பாசிசத்துக்கு எதிராக ஐக்கிய முன்னணியைக் கட்டியமைத்துப் போராடவும் அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு வழிகாட்டியது.
  • அனைத்துலக பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொதுத் திட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டின் தனிச்சிறப்பான நிலைமைகளையும், அந்நாட்டின் அரசியல்-சமூக வளர்ச்சியின் நிலைமையையும் வர்க்க முரண்பாடுகளையும் கணக்கில் கொண்டு வழிகாட்டுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவும், சோவியத் ரஷ்யா மீதான பாசிச இட்லரின் ஆக்கிரமிப்புப் போரைத் தொடர்ந்து போர்ச்சூழல் காரணமாக வழிகாட்டுவதிலும் முடிவெடுப்பதிலும் உள்ள இடர்ப்பாடுகள் காரணமாகவும், அனைத்துலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான பொதுவழியை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த நாடுகளின் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் பருண்மையான நிலைமைகளுக்கேற்ப இதனைச் செயல்படுத்த வேண்டுமென்ற வழிகாட்டுதலுடன் 1943 மே 15-ம் நாளன்று இந்த அகிலம் கலைக்கப்பட்டது.

அகிலம் கலைக்கப்பட்ட போதிலும், கம்யூனிச ரஷ்யாவிலும் சீனாவிலும் முதலாளித்துவப் பாதையாளர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும், முதலாளித்துவ தேசியவெறிக்கும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களுக்கும் எதிரான அனைத்துலகப் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசிய உணர்வும் ஒற்றுமையும் இன்றும் நீடித்து வருகின்றன. கம்யூனிஸ்டுகள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்கிற முதலாளித்துவ அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் இந்தியா மட்டுமின்றி எல்லா நாடுகளிலும் இன்னமும் தொடர்கின்றன. ஆனால், 150 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய அவதூறுகளை மறுதலித்து, கம்யூனிஸ்டுகளுக்கு தேசிய எல்லைகள் தடையாக இருப்பதில்லை என்பதை உணர்த்தி, “மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்!” என்ற முழக்கத்துடன் அனைத்து நாடுகளிலுமுள்ள தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் சர்வதேச உணர்வுடன் ஓரணியில் திரண்டு நின்றார்கள்.

இன்றைய ஏகாதிபத்திய உலகமயமாக்கக் கொள்கைகளின் விளைவாக, மூலதனம், உற்பத்தி, சந்தை, உழைப்புப் பிரிவினை ஆகியன உலகமயமாகி வருவதன் விளைவாக, வெவ்வேறு தேசிய இனங்கள் – நாடுகளின் உழைக்கும் மக்கள் பிழைப்புக்காகத்தான் என்றாலும், பெருமளவில் இடம்பெயர்வதும் உழைப்புச் சந்தையில் ஒன்றுகுவிக்கப்படுவதும் நடக்கிறது. இது பாட்டாளி வர்க்க சர்வதேச ஒற்றுமையைத் துரிதப்படுத்துகிறது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு மாற்றாகவும் எதிராகவும் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கம்தான் ஒரே தீர்வாக முடியும். பாட்டாளி வர்க்க சர்வதேசியம்தான் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கத்துக்குப் பொருத்தமான அரசியலாகவும், பாட்டாளி வர்க்க ஐக்கியம்தான் அதற்கான அமைப்பாகவும் இருக்க முடியும்.

இன்று, உலக வர்த்தகக் கழகம், ஜி-7, ஜி-20, சார்க், ஏசியான் என்று பலதரப்பட்ட சர்வதேசக் கூட்டணிகளைக் கொண்டுள்ள ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்கும் மறுகாலனியாதிக்கத்துக்கும் எதிராக அனைத்துலகத் தொழிலாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான வாப்புகள் மேலும் விரிவடைந்துள்ளன. ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்க சுரண்டல்-ஒடுக்குமுறைக்கான ஆயுதமாக இந்தியா போன்ற துணை வல்லரசுகளும் பிராந்திய வளையங்களும் பயன்படுத்தப்படும் சூழலில், ஒரே பொருளாதார, தொழில் – வர்த்தக வளையத்தில் உள்ள எந்த நாட்டிலும் தேசிய இன விடுதலையோ, பாட்டாளி வர்க்கப் புரட்சியோ வெற்றிபெறவும் நிலைத்து நிற்கவும், மற்ற பிற நாடுகளது பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கங்களின் ஆதரவும் ஒருங்கிணைப்பும் இன்று தேவையாக உள்ளது.

ஏகாதிபத்திய மூலதனத்துக்கும், குறிப்பாக பன்னாட்டுத் தொழிற்கழகங்களுக்கும் எதிரான போராட்டங்களில் தேசிய எல்லைகளையும், தேசிய இன, மொழி, பிராந்திய அடையாளங்களையும் கடந்த பாட்டாளி வர்க்க அமைப்புகளும் இயக்கங்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது.

“உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!”

– குமார்.
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

கொம்பன் பட பாம்படம் பாட்டிகளின் சினிமா கசப்புகள்

27

காலையில் சென்னையில் பேருந்தில் ஏறும்பொழுதே நடத்துனரிடம் “எப்பொழுது மதுரை போய் சேரும்?” கேட்டேன். 8 மணிக்குள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்தேன்.  “இரவு 7.30 மணிக்கு போய்விடும்” என்றார். 8 மணிக்குள் சென்றாலே போதும் என நினைத்துக்கொண்டேன்.

கொம்பன்
“பருத்திவீரன்ல நடிச்ச கார்த்தியோட புதுப்படம்”

பேருந்து கிளம்பும் நேரத்தில் வயதான பாட்டிகள் சுமார் 20 பேர் பேருந்தில் திமு திமு என ஏறினார்கள்.  அவர்களின் சலசலப்பான பேச்சு பேருந்து முழுவதும் பரவியது.  பகல் நேரத்தில் எல்லா இருக்கைகளும் நிரம்பியதில் நடத்துனருக்கும், ஓட்டுனருக்கும் அத்தனை ஆனந்தம்.

எல்லா பாட்டிகளிடமும் ஒரு ஒற்றுமையை கவனிக்க முடிந்தது. எல்லோரும் காதுவளர்த்து தண்டட்டி போட்டிருந்தார்கள். பக்கத்தில் அமர்ந்த பாட்டியிடம் பேச்சுக் கொடுத்ததில், “பருத்திவீரன்ல நடிச்ச கார்த்தியோட புதுப்படத்துல நடிச்சு, ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்ததாக” சொன்னார்.

“சென்னையை சுத்திப்பார்த்தீங்களா?” என்றதற்கு,

“நாங்க வந்து ஒரு வாரமாச்சு! வந்ததற்கும், போவதற்கும்  இரண்டு நாள் ஆயிருச்சு! நாலுநாள் தான் படமெடுத்தாங்க! ஒரு நாள் கடற்கரைக்கு கூட்டிப்போனாங்க!” என்றார்.

எம்.ஜி.ஆர் சமாதியை எப்படியாவது சுற்றி காண்பித்துவிடுகிறார்கள். எம்.ஜி.ஆர் விட்டாலும் சினிமாக்காரர்கள் மீண்டும் மீண்டும் அவரை நினைவுபடுத்துவதில் கவனமாக இருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்.

மதிய நேரம். ஒரு பைபாஸில் இருந்த மோட்டலில் வண்டி நின்றது. போய் சாப்பிட்டதில் எல்லா மோட்டல்களை போலவே சாப்பாடு ரெம்ப சுமாராக இருந்தது.

கொம்பன்
சினிமா கம்பெனிகாரங்க சாப்பாட்டுக்கு கொடுத்ததே 50 ரூபாய் தான்!

எல்லா பாட்டிகளும் உள்ளே நுழைந்தவர்கள் சிறிது நேரத்திலேயே சாப்பிடாமலேயே எல்லோரும் பேருந்தில் ஏறிவிட்டார்கள்.  என்னவென்று விசாரித்தால், “கொஞ்சூண்டு சோறு வைக்கிறாங்க! அதுக்குப் போய் 70 ரூபாய் சொல்றாங்க! அநியாயம். சினிமா கம்பெனிகாரங்க சாப்பாட்டுக்கு கொடுத்ததே  50 ரூபாய் தான்!” என்று அங்கலாய்த்து சொன்னார்.

வண்டி கிளம்பிய அரைமணி நேரத்தில் பாட்டிகளிடம் சலசலப்பு.

“எப்பா காலையிலேயே நாங்க சரியா சாப்பிடலை! வேறொரு சாப்பாட்டுக் கடையப் பாத்து நிப்பாட்டுப்பா! பசி உயிர் போகுது. யாராவது மயக்கமாயிட்டா ரெம்ப தொல்லையாயிரும்!” என செல்லமாய் மிரட்டினார்கள்.

‘அய்யய்யோ இன்னொரு அரைமணி நேரமா!’ என்று மற்ற பயணிகள் எல்லாம் பதட்டமானார்கள்.

அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய இரண்டு பாட்டிகளிடம் “இங்க எல்லா இடத்திலும் 70 ரூபாய் தான் சாப்பாடு” என ஓட்டுநர் சொல்லிப்பார்த்தார். மயக்கம் போட்டு விட்டால், மருத்துவமனைக்கு யார் அலைவது என யோசித்து, கெஞ்சியும் பார்த்தார்.

அந்த பாட்டிகளோ அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.  ஓட்டுநருக்கு தர்மசங்கடமாகிவிட்டது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை.  புதிதாக திறந்திருந்த ஒரு மோட்டலில் நிறுத்தி, அதன் முதலாளியிடம் தன் நிலைமையைச் சொல்லி, (கெஞ்சி) 70 ரூபாய் சாப்பாட்டை 50 ரூபாய்க்கு பேசி முடித்தார்.

எல்லா பாட்டிகளும் இறங்கி போய் சாப்பிட்டார்கள். ”இவங்க தர்ற இத்துணூண்டு சாப்பாடு எவ்வளவு நேரத்துக்குப்பா தாங்கும்! 50 ரூபாயாம். அநியாயம!, கொள்ளையடிக்கிறாங்கப்பா” என்று புலம்பிக்கொண்டே வண்டியில் திரும்ப ஏறினார்கள்.

கொம்பன்
“நாலு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க! கடசியில பார்த்தா தலைக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்காங்க!”

ஓட்டுனருக்கு காதில் புகை வந்தது!

“சாப்பிட்டதற்கு பின்னாடி உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? காரசாரமாய் பேசிக்கிட்டு இருந்தீங்க!” எனக் கேட்டேன்.

“அது ஒண்ணுமில்லப்பா! நாங்க ஊர விட்டு கிளம்பி ஒருவாரம் ஆச்சு! நாலு நாள் ஷூட்டிங் எடுத்தாங்க! கடசியில பார்த்தா தலைக்கு 1000 ரூபாய் கொடுத்திருக்காங்க! எங்களை கூட்டிட்டு வந்த எங்க ஆளுங்க ஏதும் கூடுதலா வாங்கி நமக்கு கொடுக்காம விட்டுட்டாங்களோன்னு சண்டைபோட்டோம். அங்கேயே சொல்லியிருந்தா கம்பெனிகாரங்ககிட்ட கேட்டிருப்போம்! ஏமாத்திட்டாங்கப்பா!” என்றார் வருத்தத்துடன்!

அடப்பாவிகளா!  மதுரையிலிருந்து வயதானவர்கள் 20 பேரை அழைத்து வந்து, ஒருவாரம் ஆகியிருக்கிறது. எவ்வளவு அலைச்சல். ரூ 1000 மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

கார்த்தி நடிக்கும் கொம்பன் படம் ஒன்றும் பட்ஜெட் படமில்லை. சிங்கம், சிறுத்தை, மெட்ராஸ் என பல வெற்றிப்படங்களில் காசு பார்த்த ஸ்டுடியோ ஞானவேல்ராஜா தான் தயாரிக்கிறார். இப்போதைக்கு கார்த்திக்கு சம்பளம் 6 கோடிக்கு மேல் என்கிறார்கள். இதில் தெலுங்கு டப்பிங்குக்கு சில கோடிகள் தனி! 6 மாதத்தில் படத்தை எடுத்து முடித்து விடுவார்கள்.  குறைந்தபட்சம் 6 கோடி சம்பளம் என வைத்துக்கொண்டால் கூட ஒரு நாள் கார்த்தியோட சம்பளம் 3.5 லட்சம்.

சமீபத்தில் ஒரு திரைவிழாவில் நடிகர் சந்தானத்தின் ஒருநாள் சம்பளம் ரூ 15 லட்சம் என ஆர்யா வெளிப்படையாக தெரிவித்தார். நம்ம வயதான பாட்டிகளுக்கு ஒரு நாள் ஊதியம் 250 ரூ.  மதிய சாப்பாட்டுக்கு ரூ 50 மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

கொம்பன்
70 ரூபாய் சாப்பாட்டிற்கே வயிறு எரிந்த பாட்டிகளுக்கு தெரியாது, கார்த்தி மாதிரி நடிகர்கள் எத்தனை கோடிகள் கல்லா கட்டுகிறார்கள் என்று!

70 ரூபாய் சாப்பாட்டிற்கே வயிறு எரிந்த பாட்டிகளுக்கு தெரியாது, கார்த்தி மாதிரி நடிகர்கள் எத்தனை கோடிகள் கல்லா கட்டுகிறார்கள் என்று!

ஒருவழியாக பேருந்து 8 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. தாமதமான நேரத்தையெல்லாம் ஓட்டுநர் கொஞ்சம் விரைவாக ஓட்டி, ஈடுசெய்திருந்தார்.

பேருந்திலிருந்து பாட்டிகள் எல்லோரும் தளர்வாக இறங்கினார்கள். மெல்ல மெல்ல அந்த இருட்டில் மறைந்துபோனார்கள். மாறியிருக்கும் ஏற்றத்தாழ்வான உலகம் அவர்களுக்கு தெரியாது.

அதனாலென்ன? எல்லா புள்ளிவிவரங்களையும் விரல்நுனியில் வைத்துக்கொண்டு நாம் மட்டும் என்ன செய்துவிட்டோம்?

– குருத்து

காவிரி டெல்டாவை அழிக்க வரும் மேக்கே தாட்டு அணை

1

மக்கள் கலை இலக்கியக் கழகம் – தமிழ்நாடு (People’s Art and Literary Association)
விவசாயிகள் விடுதலை முன்னணி – தமிழ்நாடு (Peasants Liberation Front)

காளியப்பன் – மாநில இணைப் பொதுச்செயலாளர், ம.க.இ.க
மாரிமுத்து – மாவட்ட அமைப்பாளர், வி.வி.மு

1, அண்ணா நகர், சிவாஜி நகர் வழி, தஞ்சாவூர் – 1
செல் : 9443188285

பத்திரிகை செய்தி

மிழக அரசு தொடுத்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கு எதிராக கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் இரு அணைகளைக் கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளிக்காவிட்டாலும், அணை கட்டப்படும் என கர்நாடக அமைச்சர்கள் அறிவிக்கின்றனர். அணை கட்ட சட்டவிரோதமாக உலகளாவிய ஒப்பந்தம் கோரும் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பின்படி மாதா மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை விட மறுக்கிறது. தற்போது திட்டமிடப்படும் அணை தமிழகத்திற்கு நீர் வரும் அளவை கணக்கிடும் இடமான பிலிகுண்டுலுவிற்கு சற்று தொலைவில்தான் கட்டப்பட இருக்கிறது. இவ்வணை கட்டப்பட்டால், டெல்டா விவசாயம் அழிவை நோக்கித் தள்ளப்படும். டெல்டா மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும்.

தஞ்சை ரயில் மறியல்
மேக்கே தாட்டு அணையை எதிர்த்து ம.க.இ.க, வி.வி.மு தஞ்சையில் நடத்திய ரயில் மறியல் (கோப்புப் படம்)

ஆனால், பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்குத்தான் அணை கட்டப் போவதாக சூழ்ச்சியான முறையில் வாதிடுகிறது, கர்நாடக அரசு. மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் எடுப்பதை யாரும் நிராகரிக்க முடியாது. நிராகரிக்கவும் கூடாது. ஆனால், கர்நாடக அரசின் நோக்கம் அதுவல்ல.

அணை கட்டும் திட்ட விவரங்கள் மின்சாரம் தயாரிப்பதற்கான அணை என்பதையே நிரூபிக்கின்றன. இந்தியாவிலேயே குடிநீரை வீணாக்கும் இரண்டாவது நகரமான பெங்களூருவில் 52 சதவீத குடிநீர் வீணாக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் பெங்களூருவில் இருந்த ஏரிகள் பாதியாகச் சுருங்கி உல்லாச, ஆடம்பர விடுதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடிநீர் வணிகத்தில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், ஆடம்பர நீர் விளையாட்டு பூங்காக்கள் ஆகியோர் கொள்ளை லாபம் ஈட்டவே இந்த அணை நீர் பயன்படும். கடும் குடிநீர் வரியால் அவதிப்படும் பெங்களூரு மக்கள் மீது மேலும் சுமையேற்றப்படும். இது மட்டுமின்றி சுற்றுச்சூழல் கேடு, மனித விலங்கு மோதல், அதனால் ஏற்படும் இழப்பு இவற்றை சாதாரண மக்களே சுமக்க வேண்டி வரும். எனவே, இந்த அணைத்திட்டம் தமிழக மக்களுக்கு மட்டுமின்றி கர்நாடக மக்களுக்கு எதிரானது.

அரசில், அதிகாரப் போட்டியில் மோதிக் கொள்ளும் மத்திய பா.ஜ.க அரசும், மாநில காங்கிரஸ் அரசும் தமிழக நலனுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுவதில் ஒரே அணியில் கைகோர்த்து நிற்கின்றனர். அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் மத்திய அரசையே சாரும். எனவே மோடி அரசு உடனே தலையிட்டு கர்நாடக அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

மேலும்,

  • டெல்டா மாவட்டத்திற்கு அபாயமாக விளங்கும் மீத்தேன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • காவிரி மேலாண்மை வாரியத்தை காலம் தாழ்த்தாமல் உடனே அமைக்க வேண்டும்.
  • மரபணு மாற்றுப் பயிர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கள சோதனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
  • புதிய பயிர்க் காப்பாட்டுத் திட்டத்திற்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவதோடு, பிரிமீயத் தொகையை மத்திய மாநில அரசுகளே செலுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 20 முதல் டெல்டா கிராமங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படும். ஜனவரி 3-ம் தேதி தஞ்சை மத்திய உற்பத்தி மற்றும் இறக்குமதி வரி ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். இதில் அனைத்து விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், ஜனநாயகவாதிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

மாரிமுத்து,
தஞ்சை மாவட்ட அமைப்பாளர்,
விவசாயிகள் விடுதலை முன்னணி
காளியப்பன்,
மாநில இணைப்பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்

பச்சையப்பன் கல்லூரி காக்க பேராசிரியர் – மாணவர் போராட்டம்

0

பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து!
பேராசிரியர்கள், மாணவர்கள் ஒன்று கலந்து நடத்திய பேரணி

  • பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து!
  • திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், கடலூர் சி.என்.கே கல்லூரி பேராசிரியருமான சாந்தி அவர்களை பணியிடம் மாற்றியதை ரத்து செய்!
  • பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகளின் ஊழலை விசாரணைக்குட்படுத்தி உடனடியாக பதவி நீக்கம் செய்!

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட 6 கல்லூரிகளின் பேராசிரியர்கள் கடந்த ஒருமாத காலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. அதோடு மட்டுமல்லாமல், பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகிகளோடு தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனும் சேர்ந்து போராடுகின்ற பேராசிரியர்களை மிரட்டுவது, போராட்டத்தை நசுக்க எத்தனிப்பது என செயல்பட்டு வருகின்றனர்.

பச்சையப்பா கல்லூரி போராட்டம்
மாணவர்களை ஆயிரக்கணக்கில் அணிதிரட்டி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியது பு.மா.இ.மு.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அமைப்பாக செயல்பட்டுவரும் எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, பேராசியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களை திரட்டுவதற்கு பச்சையப்பன் அறக்கட்டளையின் ஊழலை அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டியது. அடுத்து மாணவர்களை அணிதிரட்டிச் சென்று பச்சையப்பன் கல்லூரி வாயிலில் நடந்த பேராசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது. அத்துடன் பேராசியர்கள் – மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.

அதோடு, பேராசிரியர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக, பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி ஆகியவற்றில் கடந்த 16 -ம் தேதி மாணவர்களை ஆயிரக்கணக்கில் அணிதிரட்டி பச்சையப்பன் கல்லூரிக் கிளை செயலர் செல்வா தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தையும் நடத்தியது பு.மா.இ.மு.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
ஒழியட்டும் பச்சையப்பன் அறக்கட்டளையின் ஊழல்! ஓங்கட்டும் பேராசிரியர்,மாணவர் ஒற்றுமை!

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழ்க பேராசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 20-ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் இருந்து மாலை 4 மணி அளவில் புறப்பட்ட பேரணியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் த. கணேசன் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற பேரணியில் பு.மா.இமு வைச் சார்ந்த மாணவர்கள் தொடர்ந்து எழுப்பிய கம்பீரமான முழக்கம் போராடுகின்ற பேராசியர்களுக்கு புது உத்வேகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
பு.மா.இமு வைச் சார்ந்த மாணவர்கள் தொடர்ந்து எழுப்பிய கம்பீரமான முழக்கம் போராடுகின்ற பேராசியர்களுக்கு புது உத்வேகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

பேரணியின் இறுதியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன்,

“ஊழல்மயமாகிப் போன பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும், முடியாவிட்டால் மாணவர்கள் – பேராசிரியர்கள் ஏற்று நடத்த வழிவிட வேண்டும். லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியை கொடுத்து உன்னதமான சேவை செய்த இந்த அறக்கட்டளையை இன்று அதன் ஊழல் நிர்வாகிகள் அழிக்கத் துடிக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் – பேராசிரியர்கள் – பெற்றோர்கள் ஒன்றுபட்டு போராடினால் இதை தடுத்து நிறுத்த முடியும். அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்த பேராசியர்களோடு பு.மா.இ.மு என்றும் துணை நிற்கும்”

என்று போராடும் பேராசியர்களுக்கு நம்பிக்கையூட்டி உரையாற்றினார்.

பச்சையப்பன் அறக்கட்டளையைச் சார்ந்த பேராசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதராவாக பு.மா.இ.மு வெளியிட்ட பிரசுரம்

ஒழியட்டும் பச்சையப்பன் அறக்கட்டளையின் ஊழல்!
ஓங்கட்டும் பேராசிரியர்,மாணவர் ஒற்றுமை!

ஊழல்மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து அல்லது
மாணவர்கள் – பேராசிரியர்களை நடத்தவிடு!

அன்பார்ந்த மாணவர்களே, உழைக்கும் மக்களே,

லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்விக் கண்ணை திறந்து வைத்த பெருமைக்குரியதுதான் பச்சையப்பன் அறக்கட்டளைக்குட்பட்ட கல்லூரிகள் என்பது மிகையல்ல, நாம் அனைவரும் கண்கூடாக அறிந்த உண்மை. அப்படிப்பட்ட பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை இன்று அந்த நிர்வாகிகளால், உயர்கல்வித்துறை அமைச்சரால், ஊழல்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவு நூற்றுக்கணக்கான பேராசியர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கும், ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் அபாயம் உருவாகி இருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்துவது நம் அனைவரின் கடமை.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
மாணவர்களை அணிதிரட்டிச் சென்று பச்சையப்பன் கல்லூரி வாயிலில் நடந்த பேராசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தது, பு.மா.இ.மு.

ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது, பச்சையப்பன் அறக்கட்டளைக்கு. 1800-களில் தொடங்குகிறது இதன் கல்விப் பணி. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவிலேயே ஆங்கிலேயரின் நிதி உதவி இல்லாமல் தொடங்கப்பட்ட முதல் கல்வி நிலையம் என்ற பெருமை இதன் பச்சையப்பன் கல்லூரிக்கு உண்டு. அந்தக் காலத்தில் ஆங்கிலேயர்களே கல்வி நிலையங்களைத் தொடங்கி நடத்தி வந்த நிலையில், 1842-ம் ஆண்டு இந்து மாணவர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் பச்சையப்பன் கல்லூரி. 1947-க்குப் பின் அனைத்து மத, இன மாணவர்களும் படிக்கும் கல்விக்கூடமாக செயல்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பள்ளிகளும், கல்லூரிகளும் பல தலைவர்களையும், கல்வியாளர்களையும், கணித மேதைகளையும், அரசின் உயர் அதிகாரிகளையும் உருவாக்கி இந்நாட்டிற்கு கொடுத்தவை. அதுமட்டுமல்ல, 1965 களில் அன்றைக்கு மத்தியில் ஆண்ட காங்கிரசு அரசு தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முயன்றபோது சுமரியாதையோடும், தாய்மொழிப்பற்றோடும் அதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், பேராசியர்களும்தான் என்பதை வரலாறு இன்றைக்கும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
இந்தியைத் திணிக்க முயன்றபோது சுமரியாதையோடும், தாய்மொழிப்பற்றோடும் அதை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டதில் முக்கிய பங்கு வகித்தவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், பேராசியர்களும்.

இத்தகைய பாரம்பரியத்திற்கு சொந்தமான பச்சையப்பன் அறக்கட்டளை சமீப ஆண்டுகளாக தி.மு.க – அ.தி.மு.க ஆகிய ஓட்டுக்கட்சியினரின் பிடிக்குள் சிக்குண்டு கிடக்கிறது. கல்வியாளர்களைக் கொண்டு கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்பட வேண்டிய இந்த அறக்கட்டளையின் சொத்து இன்று ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்படுகிறது. பல புகழ்பெற்ற தலைவர்களை உருவாக்கிய பள்ளி, கல்லூரிகள் இன்று பாழடைந்த பங்களாக்களை போல் உள்ளன. இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளோ கல்விப் பணியை செய்வதற்கு பதில் பிற அனைத்து சட்ட விரோத வேலைகளையும் செய்கிறார்கள்.

ஆம். பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு – லஞ்சம்; கல்விக்கூடத்தை பராமரித்து இயக்குவதற்கு பதில் தனிப்பட்ட நலனுக்காக சொத்துக்களை விற்கிறார்கள்; கல்வியின் தரத்தை உயர்த்தி சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கு பதில் தனியாரைப்போல் அதிக கட்டணத்திற்கான வகுப்புகள் ( self finanance ) உருவாக்கியும், கல்லூரி மைதானத்தை தனியாருக்கு வாடகைக்கு விட்டும் அறக்கட்டளை நிர்வாகிகள் தங்கள் சொத்துக் கணக்கைத்தான் உயர்த்துகிறார்கள்.

“அறக்கட்டளையின் வரவு – செலவு கணக்கை நிறுவனர் பிறந்தநாள் அன்று கல்லூரி வாயிலில் வைத்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும். அதே நாளில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்” என்ற அறக்கட்டளையின் விதியை இதன் நிர்வாகிகள் மயி…..க்கு சமமாகக் கூட மதிப்பதில்லை என்று வேதனைப்படுகிறார்கள் பேராசிரியர்கள்.

பச்சையப்பன் அறக்கட்டளையை கல்வியாளர்கள் நிர்வகித்தால்தானே கல்வி வளர்ச்சிக்காகவும், பேராசிரியர்கள், மாணவர்கள் நலனுக்காகவும் சிந்தித்து செயல்பட முடியும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் நிர்வகித்தால் வேறு எப்படி இருக்கும்? மாஃபியா கும்பலிடம் மாட்டிக் கொண்டிருகின்ற பச்சையப்பன் அறக்கட்டளையை மீட்காமல் கல்விப் பணியை, பேராசியர்கள் – மாணவர்கள் நலனை உத்திரவாதம் செய்ய முடியாது, என்பதற்கு இன்று நடக்கும் சம்பவங்களே உதாரணங்களாக உள்ளன.

பு.மா.இ.மு பச்சையப்பா கல்லூரி போராட்டம்
பச்சையப்பன் அறக்கட்டளையை கல்வியாளர்கள் நிர்வகித்தால்தானே கல்வி வளர்ச்சிக்காகவும், பேராசிரியர்கள், மாணவர்கள் நலனுக்காகவும் சிந்தித்து செயல்பட முடியும்.

இந்த அறக்கட்டளையில் நடக்கும் ஊழல், நிர்வாகச் சீர்கேடுகள், ஆசிரியர்கள் – மாணவர்களை பழிவாங்கும் போக்குகள் ஆகியவற்றை அவ்வப்போது கண்டிக்கும் பேராசிரியர் பெருந்தகைகளை தொடந்து பழிவாங்கி வருகிறது நிர்வாகம். குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சரின் துணையோடு பேராசிரியர் சங்க பொறுப்பாளர்களுக்கு மெமோ கொடுத்தும், இடம் மாற்றம் செய்தும் பழிவாங்குகிறார்கள், தற்போதைய தலைவராக உள்ள ஜெயச்சந்திரன் என்பவரும், செயலாளராக உள்ள இராஜகோபாலன் என்பவரும் இந்த வகையில்தான் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், கடலூர் சி.கே.என் கல்லூரி பேராசிரியருமான சாந்தி என்பவரை பணியிட மாற்றம் செய்து பழிவாங்கியுள்ளனர். இதைக் கண்டித்து போராடும் கல்லூரி முதல்வரையும், பேராசிரியைகளையும் இழிவாகவும் நடத்துகிறார்கள்.

ஆக, தற்போதைய அறக்கட்டளை நிர்வாகிகளின் நோக்கமெல்லாம் யார் எக்கேடுகெட்டாலும் தங்களுக்கு கவலை இல்லை. பச்சையப்பன் அறக்கட்டளை சொத்துக்களை சூறையாட வேண்டும் என்பதுதான். இதற்குத் தடையாக இருப்பதால் பேராசிரியர்களையும், சங்க பொறுப்பாளர்களையும் பழிவாங்குகிறார்கள். இந்த அநீதியை தடுத்து நிறுத்த வேண்டிய உயர்கல்வித்துறை அமைச்சரோ கூட்டுக்கொள்ளையராக உள்ளார். உண்மை அறிந்த பேராசிரியர்கள் களத்தில் இறங்கி போராடுகிறார்கள்.

மாணவர்களே, பெற்றோர்களான உழைக்கும் மக்களே நாம் என்ன செய்யப்போகிறோம். நிச்சயம் வேடிக்கைப் பார்க்க முடியாது. நம்மை விலங்கினத்திடமிருந்து பிரித்து மனிதனாக்கும் கல்வி எனும் உன்னதமான சேவையாற்றி வரும் பச்சையப்பன் அறக்கட்டளையை இந்தக் கொள்ளைக் கூட்டத்திடமிருந்து மீட்டெடுக்க வேண்டும். அதற்கு

  • பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்க வேண்டுமென தொடர்ந்து போராடி வரும் பேராசிரியர் பெருந்தகைகளோடு களத்தில் துணை நிற்போம்.
  • பேராசிரியர் – மாணவர் – பெற்றோர் ஒற்றுமையை கட்டியமைப்போம்.
  • இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்பதற்கேற்ப வெற்றிபெறுவோம்!

ஊழல்மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்தக் கோரும் பேராசியர்களின் போராட்டம் வெல்லட்டும்!

pachiappa-protest-poster

தகவல்
புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணி
சென்னை.

டைம்பாஸ் வண்ணத்திரை சினிக்கூத்து எரிப்பு – வீடியோ

0

தகவல் & வீடியோ படப்பிடிப்பு :

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

அது என்னா சார் எச்சி பாரத்து ?

6

முந்தைய நாள் பெய்த மழையால் அரும்பாக்கம் சகதிக் காடாகியிருந்தது. எலும்பும் தோலுமாய்த் தெரிந்த சிவலை நிற கோமாதா நடு சாலையில் வாலை உயர்த்தியவாறே நின்றாள். மெல்ல நடுமுதுகை கீழ் அழுத்தி வாலை விடைத்தவாறே மேலுயர்த்தி… “சொத்” என்று கருப்பு நிறத்தில் போட்டாள் சாணியை. மனிதச் சரக்கை விட நாற்றம்; நேற்று தின்ற லிங்கா போஸ்டராக இருக்க வேண்டும்.

அரும்பாக்கம்
“இன்னாத்த கீய்ச்சாங்க.. தோ ரோடு எப்டி இருக்குன்னு பாத்தீங்கள்லே?”

“யேய்.. பாடு சனியனே.. மூதேவி.. ______.. நாளிக்கு வாடி உன்னை பிரியாணி போடறேன்…….” கருஞ்சாணி சகதிக் கூழில் விழுந்து மொத்தமாக தனது கால்சட்டையில் தெறித்த ஆத்திரத்தில் கோமாதாவின் தாயை ஒருவர் சந்தேகித்துக் கொண்டிருந்தார். நல்ல வேளையாக ஹெச். ராஜா அந்த இடத்தில் இல்லை.

வினவு தளத்தின் செய்தியாளர் குழுவாக அரும்பாக்கத்தில் இருந்தோம். மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றி மக்களின் கருத்தை அறிந்து வருவதும், சமீப காலமாக மோடி முன்னெடுத்து வரும் ஹிந்துத்துவ செயல்திட்டங்களை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதும் திட்டம். பல வீடுகளில் குடும்பத்தினர், பொது இடங்களில் குழுமியிருந்த மக்கள், அனைத்து பிரிவினர் என்று பார்த்தோம். அதில் சில உரையாடல்கள்……….

முதலில் பேருந்துக்காக காத்து நின்ற சுகுமார் என்பரை அணுகினோம் –

“மத்திய அரசு கேஸ் மானியத்தை வங்கிக் கணக்கில் போடுவோம்னு சொல்லுதே அது பற்றி…?”

”எனுக்கு அப்பயே தெரியும் சார், இவன் பிராடுன்னு.. ஆனா எல்லாரும் சொன்னாங்களேன்னு தாமரைக்கி ஓட்டு போட்டேன். அது இன்னா சார் மானியம்னா பிச்சையா சார்? வர்தா வர்லையான்னு தேவ்டு காக்னுமா? மன்சன் வேற வேலைக்கு போவத் தாவலை?”

“அது மட்டும் இல்லைங்க, வெளி நாட்ல லட்சக்கணக்கான கோடி ரூபா கருப்பு பணம் பதுக்கி வச்சிருக்காங்கன்னும், நான் ஆட்சிக்கு வந்தா அதை மீட்டு வந்து தலைக்கு இவ்ளோன்னு பிரிச்சி எல்லாரோட வங்கி கணக்குலேயும் போடுவேன்னு சொன்னாங்களே. வங்கி கணக்கு இருந்தா அதுக்கும் பிரயோஜனப் படும் இல்லையா?”

“பணமா போடுவான்? நல்ல கொழச்சி நாமத்த வேணா போடுவான் சார்”

“சுவச்ச பாரத் மாதிரி வித்யாசமான திட்டங்கள்…” இடைமறித்தார்.

”அது இன்னா சார் எச்சி பாரத்து?”

அரும்பாக்கம்
”எனுக்கு அப்பயே தெரியும் சார், இவன் பிராடுன்னு.. ஆனா எல்லாரும் சொன்னாங்களேன்னு தாமரைக்கி ஓட்டு போட்டேன்.”

”எச்சி இல்லை, சுவச்ச – அதாவது தூய்மை இந்தியா. சினிமா ஸ்டாருங்க கூட கைல விளக்குமாத்தோட நின்னு போட்டோ எடுத்து…. நீங்க பேப்பர்ல பார்க்கலை? கோடிக்கணக்குல செலவு செஞ்சி விளம்பரம் கூட செய்யறாங்களே சார்”

”இன்னாத்த கீய்ச்சாங்க.. தோ ரோடு எப்டி இருக்குன்னு பாத்தீங்கள்லே? எவனுமே சரியில்ல சார். நான் எம்.ஜி.ஆர் ரசிகன். இத்தினி வருசமா ரெட்டெலைக்குப் போட்டவன் இந்த தபா மாத்தி தாமரைக்கி போட்டேன். இனிமே ஓட்டே போடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் சார்”

”சரி சார் இப்ப பா.ஜ.க கட்சி அமைச்சர்கள் கூட்டங்கள்லே என்ன சொல்றாங்கன்னா.. இந்தியாவோட அத்தனை பிரச்சினைகளுக்கும் முசுலீம்கள் தான் காரணம், ராமனை தேசிய நாகனா ஏத்துக்காதவங்க விபச்சார விடுதில பிறந்தவங்க, பகவத் கீதை தான் தேசிய நூல், தாஜ்மகால் ஒரு சிவன் கோயில் அதனால அதை இடிச்சிட்டு திரும்ப கோயில் கட்டுவோம் – இப்படில்லாம் பேசறாங்க. அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

”கீய்ச்சாங்க. அந்தக் காலத்துலயே சாஜகான் கோடி கோடியா செலவு பண்ணி தாஜ் மகாலை கட்டிருக்கான் சார். இப்ப அதுமாதிரி ஒன்ன யார்னால கட்ட முடியும்? அதெல்லாம் சும்மா சார். அதாவது…. சில பேரு கடவுள் இருக்குன்றான். சில பேரு இல்லேன்றான்.. நான் இன்னா சொல்றேன், ஏதோ ஒரு சக்தி இருக்கு. அவ்ளோ தான். முசுலீம்னா இன்னா சார்? அவுனுக்கு அல்லா சாமி, எனுக்கு முருகன் சாமி. அவ்ளோ தான் சார். நான் கூட பாருங்க கிருஷ்ணனை வித்து தான் பொழக்கிறேன். சாமியா சார் முக்கியம்? மன்சன் தான் சார் முக்கியம். இவுனுங்கோ இப்டி பேசும் போது எல்லாரும் கேட்னு சொம்மாவா இருந்தானுங்க? செருப்பாலயே போட்ருக்க வோணாம்? அயிஞ்சி போய்டுவான்க சார்”

வெள்ளி இழையில் ராதா கிருஷ்ணன் படம் பதித்து கண்ணாடியால் மூடப்பட்ட நினைவுப் பரிசு ஒன்றைக் காட்டினார். சுமார் தனியார் நகைக்கடை ஒன்றில் இருந்து இது போன்ற நினைவுப்பரிசுகளை வாங்கி அலைந்து திரிந்து விற்பவர். பேச்சினூடாக அவர் செல்ல வேண்டிய பேருந்து வரவும் அவசரமாக கிளம்பினார். நாங்கள் அருகே இருந்த மாநகராட்சிக் கழிவறையை நெருங்கினோம்; அதன் சுற்றுப்புறத்தை பெருக்கிக் கொண்டிருந்தார் ஒருவர்.

துப்புரவுத் தொழிலாளி
”எவன் வந்தான்.. நானே தான் பெருக்கினு இருக்கேன்”

”என்னண்ணே தூய்மை இந்தியா திட்டத்தில் இருந்து யாரும் இந்தப் பக்கம் கழிவறை சுத்தம் செய்ய வந்தாங்களா?”

”எவன் வந்தான்.. நானே தான் பெருக்கினு இருக்கேன்”

”ஆமாண்ணே.. இந்த மோடி கட்சிக்காரங்க முசுலீம்கள் இந்தியாவுக்கு வந்ததுனால தான் தீண்டாமையே வந்திச்சின்னு சொல்றாங்களே.. இங்க வர்ற பாய்ங்க உங்களோட எப்படிப் பழகுறாங்க?”

”நீங்க வேற சார், நம்ம ஆளுங்க கக்கூசுக்கு போயிட்டு என்னிய திரும்பிக் கூட பார்க்காம அப்டியே போயிடுவாங்க. இலவசம் தானே… எவன் சுத்தம் செஞ்சிருந்தா என்னான்னு நினைச்சிருப்பாங்க. அது அவங்க தப்பில்லே. நானும் கைநீட்டி கேட்க மாட்டேன், தந்தா சரின்னு வாங்கிக்குவேன். ஆனா, பாய்ங்க மட்டும் வந்தாங்கன்னா தவறாம ரெண்டு ரூபா கொடுத்துட்டு தான் போவாங்க.”

அவர் பெயர் ஈஸ்வரன். ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர். இரண்டு கால்களும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி. நாற்பது வயதிருக்கலாம். இன்னமும் திருமணமாகவில்லை. இலவசக் கழிவறை என்பதால் பராமரிப்பு இல்லாமல் நாறிக் கொண்டிருந்த இந்தக் கழிவறையை கடந்தாண்டிலிருந்து இவரே பொறுப்புடன் பராமரித்து வருகிறார். ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறைக்கு இடையே ஆறுக்கு நான்கடியாக ஒரு சின்ன இடுக்கு உள்ளது. அதில் சாக்கை விரித்து அங்கேயே படுக்கை. கழிவறையை மிகத் தூய்மையாக பராமரித்து வருகிறார்.

அரசு பற்றி அரும்பாக்கம்கழிவறையைப் பயன்படுத்த கட்டணமில்லை என்றாலும், ஈஸ்வரனின் நிலையைப் பார்த்து பரிதாபத்தோடு சிலர் மட்டும் ஒன்றோ இரண்டோ ரூபாய்கள் கொடுத்துச் செல்கிறார்கள். அதில் அநேகர் “பாய்மாருங்க” என்றார். சராசரியாக ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வரை சில்லறை சேர்கிறது. இதில் மிச்சம் பிடித்து மாதம் ஆயிரம் ரூபாயை வீட்டுக்கு அனுப்புகிறார். பெரியளவில் அரசியல் தெரியவில்லை.

நாங்கள் ஈசுவரனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது மாநகராட்சி துப்புறவுத் தொழிலாளி தனது டிரை சைக்கிளுடன் வந்து சேர்ந்தார். வயதானவர். நீல நிற சட்டையும் அரைக்கால் சட்டையும் அணிந்திருந்தார். முகத்தில் நக்கீரன் பத்திரிகைத் தாளை விட கொஞ்சம் தடித்த முகவுறை அணிந்திருந்தார். காலில் பிய்ந்து போன பிளாஸ்டிக் செருப்பு.

“என்னா பேட்டி எடுக்க வந்தீங்களா?”

” ஆமாண்ணே, மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற திட்டங்கள் பற்றி நேரடி ரிப்போர்ட் எடுக்க வந்தோம். இப்ப மோடி அரசு கோடிக்கணக்குல செலவு பண்ணி தூய்மை இந்தியான்னு ஒரு திட்டம் கொண்டாந்தாங்க இல்லையா, அதைப் பத்தி தான் ஈஸ்வரண்ணன் கிட்டே கேட்டுகிட்டு இருந்தோம்”

மாநகராட்சி துப்புரவு பணியாளர்
“ஒயுங்கா எங்களுக்கு சம்பளத்த குடுத்தா நாங்களே செய்வோமே? தோ கைல மாட்ற ஒறைல ஒன்னு கியிஞ்சி போயி ரெண்டு மாசமாகுது. இருக்கற இந்த ஒன்னை வச்சித் தான் கலீஜை வாரிக் கொட்டினு இருக்கோம்.”

“ஆமாமா.. கமலகாசன் போட்டோ கூட வந்திச்சி.. அதுக்கு கோடிக்கணக்குலயா செலவு பண்றாங்க?”

“ஆமாங்க”

”இன்னாத்துக்கு அத்தினி செலவு செய்யனும்? ஒயுங்கா எங்களுக்கு சம்பளத்த குடுத்தா நாங்களே செய்வோமே? தோ கைல மாட்ற ஒறைல ஒன்னு கியிஞ்சி போயி ரெண்டு மாசமாகுது. இருக்கற இந்த ஒன்னை வச்சித் தான் கலீஜை வாரிக் கொட்டினு இருக்கோம். இதெல்லாம் எங்களுக்கு செஞ்சி தந்தா நாங்களே பாத்துக்குவோமில்லே. பத்திரிகைல எழுது சார்.. எதுனா நடக்குதா பாக்கலாம்”

வீரய்யாவுடன் பேசி விட்டு அருகில் இருந்த தெருவில் நுழைந்தோம். நிறைய சிறுகடைகளும் மக்கள் நடமாட்டமும் மிகுந்த அந்தப் பகுதியின் சாலை ஏராளமான பொத்தல்களோடு மழை நீரும் சகதியுமாய்க் காட்சி தந்தது. செருப்புக் கடை ஒன்றின் முன் நின்று கொண்டிருந்த இசுலாமிய பெரியவரை அணுகினோம். அவர் ஷாகுல் ஹமீது. அறுபது வயது. பதினேழு ஆண்டுகள் சவுதியில் வேலை பார்த்து விட்டு ஐந்தாண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பியிருக்கிறார். இந்துத்துவ அரசியல் குறித்து பேச்சை ஆரம்பித்தோம்.

அரும்பாக்கம் பாய்
“எங்க தம்பி இந்து முசுலீம் பிரச்சினை இருந்தது? எல்லாம் அண்ணன் தம்பியாத்தேன் பழகிக்கிட்டிருந்தோம்.”

”அந்தக் காலத்துல எங்க தம்பி இந்து முசுலீம் பிரச்சினை இருந்தது? எல்லாம் அண்ணன் தம்பியாத்தேன் பழகிக்கிட்டிருந்தோம். எல்லாம் அரசியல் தம்பி. ஓட்டு வாங்கி ஜெயிக்க செய்யிற சூழ்ச்சி. இப்ப செயிச்சி என்னா செய்யிறாரு? நம்ம காசுல உலகமெல்லாம் சுத்திக்கிருக்காரு… அதானே?”

”அவர் இந்துத்துவா மட்டும் பேசலையே… கருப்புப் பணத்தை கொண்டாந்துருவோம்னு கூட சொன்னாரில்லையா?”

”எங்க கொண்டாந்தாய்ங்க? சும்மா சவுண்டு மட்டும் தான் விட்டாய்ங்க? இப்ப அவுக ஆட்சி தானே? அதிகாரம் அவுக கையில தானே இருக்கு.. எல்லம் பொட்டி தான் தம்பி. அவுகளுக்கு ரெண்டு பொட்டி வந்து சேர்ந்திருக்கும்.. அதான் இப்ப பேச்சு மூச்சையே காணல. சரிதானே தம்பி நான் சொல்றது?”

செருப்புக் கடை வியாபாரம் போதாமல் பக்கத்திலேயே ஒரு சின்ன மேசையைப் போட்டு அதன் மேல் கறிகாய்கள் கூறு கட்டி வைத்திருந்தார். பொட்டலம் பத்து ரூபாய். இடையிடையே கடந்து செல்லும் பெண்களில் சிலர் அந்தப் பொட்டலங்களைப் புரட்டிப் பார்த்துச் சென்றனர்.

“யாவாரம் முன்னெ மாதிரி இல்ல பாத்துக்கிடுங்க. இந்த மாதிரி எதுனா செய்தா தான் ஓட்ட முடியுது. நான் சவுதில சம்பாதிச்ச காசெல்லாம் பிள்ளைங்க கல்யாணத்துல போட்டு முடிச்சிட்டேன். இன்ஷா அல்லாஹ் அவங்க எந்த குறையும் இல்லாம இருக்காங்க. ஏதே வயசான காலத்துல நாம சாப்பிடக் கொள்ள சம்பாதிச்சா போதுமின்னு தான் பார்க்கிறேன்” எங்கோ பாங்கு ஒலிக்கும் சப்தம் கேட்க, அந்த திசை நோக்கித் திரும்பியவர்  நம்மிடம் திரும்பினார்.

”பாய்.. மோடி வந்த பின்னால வர்ற திட்டமெல்லாம் வித்தியாசமா இருக்குன்னு சொல்றாங்களே. இப்ப பாருங்க கேஸ் மானியத்தை பேங்க் அக்கவுண்ட்ல போடப் போறோமின்னு சொல்றாங்க…”

”என்னத்த வித்தியாசம்.. காலைல வீட்ல சம்சாரம் கூட வஞ்சிகிட்டு கெடந்தா. ஒரு மாசம் தருவான் ரெண்டு மாசம் தருவான்.. அதுக்கு மேல வருமின்னு என்னா கேரண்டி தம்பி? நமக்குத் தெரிஞ்ச ஆளு இந்தியன் பேங்குல மேனேஜரா இருக்காரு. அவரு என்னா சொல்றாருன்னா.. கவுருமெண்டு நாலு மாசம் காசு தருவான் அப்புறம் லேட்டா தருவான்.. அப்புறம் நிப்பாட்டுவான். மக்கள் எங்களைத் தானே வந்து மொய்க்கப் போறாய்ங்கன்றாரு.. காசு வரல்லேன்னு எவனாவது கல்லை விட்டு கண்ணாடிய ஒடைச்சிட்டா என்னா செய்யறதுன்னு பொலம்புறாரு… இதெல்லாம் தேவையில்லாத வேலை தம்பி. எதுக்கு இப்படி சுத்தி வளைக்கனும், எப்பயும் மாதிரி 450 ரூபாவுக்கே சிலிண்டரை கொடுத்துட்டுப் போக வேண்டியது தானே? முட்டாத்தனமான அய்டியாவா இருக்கே தம்பி. சரிதானே?”

பாயிடம் பேசிக் கொண்டிருந்த போது தலையில் ஸ்பீக்கர் கட்டிய ஆட்டோ ஒன்று தெருவில் நுழைந்தது. ஸ்பீக்கரில் இருந்து கண்டிப்பான குரல் ஒன்று நிதானமாக வழிந்து கொண்டிருந்தது. இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்களை ‘டிபிடிஎல்’ என்கிற மானிய ஒழிப்புத் திட்டத்தின் கீழ் உடனடியாக வரக் கோரிய ஸ்பீக்கர் குரல், அதற்க்கான இறுதிக் கெடுவாக ஜனவரி ஒன்றாம் தேதியை குறிப்பிட்டது. நாங்கள் ஆட்டோவில் இண்டேன் அதிகாரியைத் தேடினோம், ஓட்டுனர் மட்டுமே இருந்தார்.

”அண்ணே, மானியத் தொகையை வங்கிக் கணக்குல போடப் போறதா சொல்றாங்களே.. வங்கி கணக்கு இல்லாதவங்க என்னா செய்யனும்? வங்கிக் கணக்கு ஆரம்பிக்க குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்கனுமே, மாசக் கடைசில மக்கள் என்னா செய்வாங்க?” ஆட்டோ ஓட்டுனர் ராஜூவிடம் வினவினோம்.

இண்டேன் அறிவிப்பு
“ஏதோ துட்டு வருதேன்னு நானும் ஒத்துகிட்டு வந்தேன். இங்க பாத்தா ஜனங்க ஆளாளுக்கு பிலுபிலுனு பிடிச்சிக்கிறாங்க. “

”அய்யோ சார்… காலைலேர்ந்து இதே தொண தொணப்பு சார். இண்டேன் கம்பேனி அதிகாரிகள் கூப்பிட்டு ’இந்தா மாதிரி ஸ்பீக்கர் கட்டிக்கினு இந்தா மாதிரி ஏரியாவுக்கு இன்ன நேரத்துக்கு ரவுண்ட் அடிச்சிட்டி வா’ அப்டினு சொன்னாங்க. வேற எந்த விவரமும் சொல்லலை. ஏதோ துட்டு வருதேன்னு நானும் ஒத்துகிட்டு வந்தேன். இங்க பாத்தா ஜனங்க ஆளாளுக்கு பிலுபிலுனு பிடிச்சிக்கிறாங்க. எனுக்கு பேங்குன்னா இன்னா தெரியும்… ரூல்சுன்னா இன்னா தெரியும் சொல்லுங்க சார்” ராஜூ சலித்துக் கொண்டார்.

”மக்கள் என்ன சார் செய்வாங்க. ஆமா, அதிகாரிகள் அடிப்படையான விவரங்கள் கூடவா சொல்லி விடலை?”

”அவனுக்கு இன்னா சார் ஜனங்க பத்தியா கவலை? ஜனவரிக்குள்ளே திட்டத்தை மாத்தனும்னு பாக்கறானே கண்டி எவன் செத்தா என்ன வாழ்ந்தா என்னா”

”நீங்க இந்த திட்டத்தில சேர்ந்தாச்சா?”

“இன்னும் இல்ல சார். எங்க ஏரியாவுல எல்லாரும் என்ன செய்யிறாங்கன்னு பார்த்துட்டு அப்பால சேர்லாம்னு இருக்கேன்”

“நாலஞ்சி மாசம் காசு கொடுத்துட்டு அப்புறம் அதை குறைச்சாலோ நிறுத்தினாலோ என்னா செய்வீங்க? சந்தை விலைக்கு வாங்க பழக்கப்படுத்திட்டு பின்னாடி காலை வாரி விட்டாங்கன்னா?”

“என்னா செய்ய முடியும் எல்லாம் அவன் கால்லே போய் விழ வேண்டியது தான்” இரண்டு கைகளையும் மேலே உயர்த்திக் காட்டினார்.

நாங்கள் ராஜூவைப் புகைப்படம் எடுத்து விட்டு ஆட்டோ அறிவிப்பை வீடியோவாகவும் பதிந்து கொண்டோம். நாங்கள் புகைப்படம் எடுப்பதையும், ராஜூவிடம் பேசியதையும் கண்ட பகுதிப் பெண்கள் எங்களை அதிகாரிகள் என்று கணித்து சூழ்ந்து கொண்டனர்.

அரசு பற்றி அரும்பாக்கம்”சார்.. வூட்டுக்காரர் வெளியூர்ல கீறாரு.. எப்டி அக்கவுண்டு தொறக்கணும்னு எனுக்குத் தெரியாதே சார்”

“இப்டி திடீர்னு வந்து ஒண்ணந்தேதிக்குள்ற மாத்துன்னா எப்டி சார் மாத்துறது? கைலேர்ந்து தொள்ளாயிரம் ரூபா போட்டா எப்ப சார் மிச்ச காச கொடுப்பீங்க?”

”சார் எனுக்கு பேங்குல போய் பாரம் பில் பண்ணவே தெரியாதே சார்”

“ஜனங்க பாடு ஒங்களுக்கு எங்க தெரியப் போவுது.. எல்லாம் வாரிக்கினு போய்டும் சார்”

”நீயே வூட்டுக்கு வந்து பாரு… எம்புருசங்காரன் மொண்டி சார்.. ஏன் சார் எங்கள அலைய வுடுறீங்க? நல்லா இருப்பீங்களா சார் நீங்க?”

ஆத்திரக் குரல்களிடம் நாங்கள் அதிகாரிகள் இல்லையென்பதையும், வினவு தளம் பற்றியும் விளக்கினோம். குரல்களின் தன்மை இப்போது மாறியது.

”சார் பத்திரிகைல இந்த அநியாயத்த எழுது சார். பால் வெலைய ஏத்தி இப்பல்லாம் நாங்க பாலே வாங்கறதில்ல சார். மண்டவெல்ல காப்பி தான். இப்ப கேசு வெலையும் ஏத்தினா இன்னாசார் பண்ண முடியும்? எப்டி சார் குடித்தனம் பண்ண முடியும்?”

அரசு பற்றி அரும்பாக்கம்

”இப்பயே ரெண்டு வேளை ஒலை போட்ட செலவுன்னு ஒரு வேளைக்கு ஒலை வச்சி நைட்டு வரைக்கும் அத்தையே துண்றோம்.. இனி சிலிண்டரு வெலையும் ஏத்தினா இன்னா சார் பண்ண முடியும்?”

அவர்களிடம் விடை பெற்று கிளம்பினோம். அவர்கள் தங்களுக்குள் ஆத்திரத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தனர்.

மோடியின் செயல்பாடுகள் மட்டுமின்றி மொத்தமாக அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியுற்றிருந்தனர். அடித்தட்டு மக்கள் மட்டுமின்றி நடுத்தர மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தினரிடமும் இந்தக் கோபம் வெளிப்பட்டது. சிலர் மோடி என்றதுமே வசைபாடத் துவங்கினர்.

“கோட்சேவை பாராட்டிப் பேசினவன் நாக்கை அறுக்க வேணாம்? அதெப்படி சார் செத்தவனும் நல்லவன் அவனைக் கொன்னவனும் நல்லவனா இருக்க முடியும்? பார்லிமெண்டுக்கு போயிருக்கிற நம்மா என்னா மயித்தைப் புடிங்கிட்டு வாறாங்க” என்றார் சவரி முத்து. அறுபது வயதான இவர் பேப்பர் மில் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

முசுலீம் மக்களை தனிமைப்படுத்தி இந்து ஓட்டு வங்கியை வளர்க்கும் பாரதிய ஜனதாவின் திட்டத்தை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்..

“எல்லாம் ஓட்டு வாங்கத் தான் பாஸ். ஆடுங்க முட்டிக்கிட்டு செத்தா ஓநாய்க்குத் தானே லாபம்? அவங்கவுங்க அவங்கவுங்க சாமிய கும்பிட்டு போறதிலே இவனுக்கு என்ன வலிக்குது? அவனும் நம்மளை மாதிரித் தானே பாஸ் கஷ்டப்படுறான்? மோடி வந்தா எதாவது டெவலப்மெண்ட் வரும்னு நினைச்சேன். டாக்ஸ் கம்மி பண்ணுவாப்லனு சொன்னாங்க. இப்ப பாத்தா தேவையில்லாத வம்பு இழுத்துகிட்டு இருக்காரு. இதெல்லாம் சரியில்ல பாஸ். சீக்கிரம் ஒழிஞ்சி போறதுக்கு வழி இது” ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் முப்பது வயது இளைஞர் செல்வகுமாரின் அங்கலாய்ப்பு இது.

அரும்பாக்கம் மத நல்லிணக்கம்
தாஜ்மகாலை சிவன் கோயில் என்றும் பாரதிய ஜனதா சொல்வதைக் கேட்டு பலரும் எள்ளி நகையாடினர்.

தாஜ்மகாலை சிவன் கோயில் என்றும் பாரதிய ஜனதா சொல்வதைக் கேட்டு பலரும் எள்ளி நகையாடினர். கருப்புப் பண விவகாரத்தில் பாரதிய ஜனதாவின் பல்டிகளைப் பார்த்து நடுத்தர வர்க்கம் ஏமாந்து போனது நன்றாகவே புலப்பட்டது. தாங்கள் நம்பவைத்துக் கழுத்தறுக்கப்பட்டதாக அவர்கள் உணர்வதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

என்றாலும், மக்களின் ஆத்திரமெல்லாம் ஓட்டுக் கட்சிப் போலி ஜனநாயகத்திற்கு மாற்று ஒன்றைத் தேடும் இல்லாமல் இலக்கில்லாத கோபமாகவே இருக்கிறது. சிலர் அரசியல் பற்றிப் பேச ஆரம்பித்ததும் சலிப்போடு ஒதுங்கிச் செல்ல முற்பட்டனர். விடாது நெருக்கிக் கேட்டால் அவர்கள் மோடியைப் புதிய ரட்சகராக எதிர்பார்த்து ஏமாந்தவர்களாக இருந்தனர். எப்படியிருந்தாலும், மக்களின் ஏமாற்றமும் அந்த ஏமாற்றம் விளைவித்த ஆத்திரமும் சரியான வழியில் நடத்திச் செல்லப்படுவதற்காக காத்திருக்கிறது.

– வினவு செய்தியாளர் குழு.

கார்ப்பரேட் கம்பெனி இலாபமே மின்வாரியத்தின் நட்டம்!

2

பால் விலை உயர்வை அடுத்து எந்நேரத்திலும் மின் கட்டண உயர்வு தமிழக மக்களின் தலையில் இறங்கக் காத்திருக்கிறது. கொஞ்ச நஞ்சமல்ல, ஏறத்தாழ 6,805 கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை அறிவித்திருக்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இது குறித்துத் தமிழகத்தின் மூன்றே மூன்று நகரங்களில் மட்டும் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற நாடகத்தையும் நடத்தி முடித்துவிட்டது.  தமிழகத்திலுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்தக் கட்டண உயர்வின் பெரும்பகுதியைத் தமிழக மக்களும், சிறு உற்பத்தியாளர்களும்தான் சுமக்க வேண்டியிருக்கும். அதுவும் சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாடகை வீட்டில் வசித்துவரும் குடும்பங்கள் மீது விழப்போகும் மின் கட்டண சுமை அச்சமூட்டக்கூடியதாகவே இருக்கும்.

07-electricity-charges-meetingசென்னை, நெல்லை, ஈரோடு ஆகிய மூன்று நகரங்களில் ஆணையம் நடத்திய கருத்துக் கேட்பு கூட்டங்களில், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத்  தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் இக்கட்டண உயர்வின் பின்னே உள்ள தனியார்மய பகற்கொள்ளையை அம்பலப்படுத்தியது, அதற்குப் பொதுமக்கள் பெருத்த ஆதரவைத் தந்தது மற்றும் இக்கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஆகியவை காரணமாக இக்கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ 6,854 கோடி ரூபாயாக இருக்குமென்றும், அதனை ஈடு செய்யவே இந்த கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக ஆணையம் விளக்கமளித்திருக்கிறது. ஜெயா முதல்வராகப் பதவியேற்றவுடனேயே மின்சாரத் துறையை முந்தைய தி.மு.க. அரசு நட்டத்தில் தள்ளவிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, அதனை ஈடு செய்ய 37 சதவீதக் கட்டண உயர்வைச் சுமத்தினார். அதன் பிறகும் நட்டம் குறையவில்லையென்றால், அதற்கு என்ன காரணம், யார் பொறுப்பு என்ற கேள்விகளுக்கு ஆணையமும் விளக்கம் அளிக்கவில்லை; ஜெயாவின் பினாமி அரசும் பதில் தரவில்லை.

தமிழக மின்சார வாரியம் இதற்கு முன்பு நட்டமும் அடைந்திருக்கிறது, இலாபமும் சம்பாதித்திருக்கிறது. அப்பொழுது ஏற்பட்ட நட்டத்திற்கு மின் கடத்தலில் ஏற்படும் இழப்பு, மின் திருட்டு, அதிகாரிகளின் ஊழல் உள்ளிட்டுப் பல காரணங்கள் இருந்தன. அந்தக் காரணங்கள் இப்பொழுதும் நீடித்தாலும், மின் வாரியம் தற்பொழுது சந்தித்துவரும் நட்டம் அதன் தன்மையிலேயே வேறானது. காட் ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து மின்சார உற்பத்தியில் தனியார் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அதிகவிலை கொடுத்து வாங்குவதற்கு ஏற்பச் சட்டமியற்றப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் தடையற்ற மின்சாரம் வழங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டு என்ற இந்த நச்சுச்சுழல்தான் தமிழக மின்வாரியத்தை 2001-02-ம் நிதியாண்டிலிருந்து தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வரும் கட்டமைப்பு நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. அதனால்தான் எத்துணை முறை கட்டண உயர்வை அறிவித்தாலும், இந்த நட்டம் தொடர்கதையாகிவிட்டது.

தனியார் மின்உற்பத்தியாளர்கள், அவர்கள் போட்டுள்ள மூலதனத்தை நான்கே ஆண்டுகளில் எடுத்துவிடும்படி அவர்களிடமிருந்து பெறப்படும் மின்சாரத்திற்குக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். இதற்கு அப்பால், அவர்களுக்குத் திறன் கட்டணம் என்ற பெயரில் ஆண்டுதோறும் தனியாக மொய் எழுத வேண்டும் என மின்சாரச் சட்டம் வரையறுக்கிறது. இப்படிபட்ட தனியாருக்குச் சாதகமான, மக்களுக்கு அநீதியான சட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்ட மின்வாரியங்கள் இலாபத்தில் இயங்குவதற்கான சாத்தியமுண்டா? மேலும், இச்சட்டம் மின்சாரத்தை மானிய விலையில் வழங்கக்கூடாது என்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மின் உற்பத்திச் செலவுக்கேற்ப அதன் கட்டணத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்குகிறது. இதன் பொருள், மின் வாரியம் நட்டத்தில் இயங்கினாலும், இலாபத்தில் நடந்தாலும் ஆண்டுதோறும் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்பதுதான்.

தமிழக மின்வாரியம் தமிழகத்திலுள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக பத்து ரூபாய் கொடுத்து வாங்குகிறது. இது தவிர்த்து, தனது சொந்த மின்நிலையங்கள், மைய அரசுக்குச் சொந்தமான மின்நிலையங்களிடமிருந்தும் மின்சாரத்தைப் பெறுகிறது. இவை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு யூனிட் மின்சாரத்தின் உற்பத்திச் செலவு ரூ.6.14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் இயங்கி வரும் 29 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ஐந்து ரூபாய்க்கு விற்கிறது, மின் வாரியம்.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தோ, தேசியத் தொகுப்பிலிருந்தோ பெற்றுக்கொள்ள கம்பித் தடங்களைப் பெற்றிருக்கும்பொழுது, தமிழக மின்வாரியம் இவர்களுக்குப் பத்து ரூபாய் மின்சாரத்தை ஐந்து ரூபாய் மானிய விலையில் வழங்க வேண்டிய அவசியமோ, அதனால் ஏற்படும் நட்டத்தைச் சுமக்க வேண்டிய தேவையோ கிடையாது. ஆனாலும், தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்ற போர்வையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக மின் வாரியத்தை நட்டத்தில் தள்ளிவிடுகிறார்கள், ஆட்சியாளர்கள்.  மின் வாரியத்தின் நட்டம் மின் கட்டண உயர்வாகத் தமிழக மக்களின் மீது சுமத்தப்படுகிறது.

ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவோம் எனச் சவடால் அடித்த ஜெயாவின் இந்த மூன்றரை ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் மின் பற்றாக்குறை தீர்ந்த பாடில்லை. அதேசமயம் இந்த மின்பற்றாக்குறையைக் காட்டி வெளிமாநிலங்களிலுள்ள வணிக மின் உற்பத்திக் கழகங்களிடமிருந்து 3,800 மெகாவாட் மின்சாரத்தை வாங்கும் நீண்ட கால ஒப்பந்தங்களை கடந்த ஆகஸ்டு மாதம் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கும் ஒப்பந்தங்களின் காலத்தையும் நீட்டித்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் ஏற்ப, தமிழகத்தில் கட்டப்படும் அரசுத் துறை மின் உற்பத்தித் திட்டங்கள் ஆமை வேகத்தில் நகர்த்தப்படுகின்றன. தமிழக மின்வாரியம் தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வருவதற்கும், மின் கட்டண உயர்வு வாடிக்கையாகிவிட்டதற்கும் பின்னால் உள்ள உண்மைகள் இவைதான்.

– சுடர்
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !

5

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !டாஸ்மாக் புண்ணியத்தில் தமிழ்நாடே தள்ளாடுகிறது. ஆண்களோ குடல்வெந்து சாகிறார்கள். பெண்களோ குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளைக் காப்பாற்றவும் வழியில்லாமல் தினம், தினம் நொந்து சாகிறார்கள். இன்னொரு பக்கம் 3 வயதுக் குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறாள். பொள்ளாச்சியில் கத்தி முனையில் மிரட்டி 12 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டாள். கரூரில் வேலைக்குச் சென்று திரும்பிய 17 வயது இளம் பெண்ணை குதறிக் கொல்கிறார்கள். தமிழகமே – அரசு சாராயத்தாலும், பாலியல் வல்லுறவாலும் சீரழிந்து கொண்டிருக்கிறது

இன்றைய நிலை என்ன?

10, 15 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஊருக்கு வெளியே முள்ளுத் தோப்பில் பதுங்கி பதுங்கி சாராயம் விற்றார்கள். குடிப்பவர்களும் யாராவது பார்த்து விடுவார்களோ என பயந்து கொண்டே தலையில் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டே போய்க் குடித்தார்கள். ஆனால், இன்றோ 12, 13 வயதிலேயே குடிக்கிராக்ள், பட்டப் பகலில் பஸ் ஸ்டாண்டில் நின்று பெருமையாக மடக் மடக்கெனக் குடிக்கிறார்கள். இதெல்லாம் தப்பில்லையா என்றால், “நாள் முழுக்க கஷ்டப்பட்டு உழைக்கிறோம், வலி தெரியாம இருக்கக் குடிக்கிறோம்” என்ற குடிமகன்கள், நியாயம் பேசுகிறார்கள். 12,15 வயது பள்ளிக் கூடப் பையனெல்லாம் குவார்ட்டரை ராவாக அடிக்கிறானே, அவனுமாக கஷ்டப்பட்டு உழைக்கிறான்?

ஏன் இந்த அவலம்?

“விக்கிற அரசாங்கமே வெக்கமில்லாம ஊருக்குள்ள விக்குது, காசு குடுத்து குடிக்கிற நாங்க ஏன் வெக்கப்படணும் என்பதே குடிமகன் கேள்வி. என்றைக்கு அரசு டாஸ்மாக் மூலம் சரக்கை விற்க ஆரம்பித்ததோ அன்றையில் இருந்தே மறைந்து மறைந்து குடிப்பதெல்லாம் மறைந்து விட்டது. ட்ரீட் என்ற பெயரில் குடிப்பதையே ஒரு ஃபேஷனாக்கி விட்டனர்.

குடிப்பதால் என்ன பிரச்சனை?

ஒரு பக்கத்தில் குடித்துக் குடித்துக் குடல்வெந்து அரசு மருத்துவமனையில் கிடந்தே செத்துப் போகும் கணவன்மார்கள். 2, 3 குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கும் தாய்மார்கள். இன்னொரு பக்கத்தில், குடிபோதையில் தனது மகளிடமே தவறாக நடக்க முயன்ற தகப்பனை அடித்துக் கொன்ற தாய், குடிவெறியில் 13 வயது சிறுமி புனிதாவை பலத்காரம் செய்து கொன்ற காமுகன்.

“குடிச்சா பொண்டாட்டிக்கும், பொண்ணுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாது” எனக் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் இதற்கு குடிபோதை மட்டுமா காரணம்? இல்லை, குடிபோதையோடு மோசமான காமவெறியும்தான், குடிக்கு டாஸ்மாக் போல, காமவெறியைத் தூண்டுவதற்கு ஆபாச இணைய தளங்களும், மெமரி கார்டுகளும் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகின்றன. பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலோர் குடிப்பது மட்டுமின்றி, ஆபாச செக்ஸ் படங்களையும் பார்ப்பவர்கள்தான்.

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமப்புற ஆய்வுக்காக சென்ற நமது தோழர்களிடம், 15 வயது சிறுவன் சொன்ன தகவல் இது “நான் ஒரே நாள்ல 250 பிட்டு படம் டவுன்லோடு பண்ணியிருக்கேன், யாராலயும் முடியாது” என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறான். இப்படி சிறிய வயதில், நாள் முழுக்க ஆபாசப் படத்தைப் பார்ப்பவன் மனநிலை என்னவாக இருக்கும்? படத்தில் பார்ப்பதை அனுபவிக்க வேண்டும் என்ற வெறிதான் வரும். இதைதான் எதிர்க்க முடியாம பிஞ்சுக் குழந்தைகளிடம் தீர்த்துக் கொள்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள், டாஸ்மாக்கின் போதைவெறியும், செக்ஸ் படத்தின் காமவெறியும் தலைக்கேறியவனுக்கு தாய்க்கும் – தாரத்திற்கும் – மகளுக்கும் வித்தியாசம் தெரியுமா?

இதற்கு யார் காரணம்?

சாராயக் கடைகளைத் திறந்து வைத்து சரக்கை விற்று மக்களின் பணத்தைப் பறித்துக் கொண்டதோடு உடலையும் மனதையும் நாசமாக்கியது அரசுதானே. மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டிய பொங்கல், தீபாவளிப் பண்டிகைக் காலங்களில் கூட 200 கோடி, 300 கோடி என “டார்கெட்” வைத்துக் கொள்ளையடிப்பது அரசுதானே? இதே அரசுதானே செக்ஸ் பட இணைய தளங்களையும் அனுமதிக்கிறது.

அரசு எப்படி எல்லாவற்றையும் தடுக்க முடியும் என்று கேட்கலாம். ஆனால், 2014 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இணையதளம் மூலமாக யாரும் இலவசமாகப் பார்த்து விடாமல் தடுக்க, 20 இணைய தளங்களை செயல்பட விடாமல் தடுத்தது அரசு. டி.வி நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக இதைச் செய்ய முடியுமென்றால், மக்களின் நன்மைக்காக செக்ஸ் பட இணைய தளங்களை தடுக்க முடியாதா?

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு பாடம் நடத்த அரசுப் பள்ளிகளில் வாத்தியார் இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை, அவசரத்துக்குப் போக கக்கூஸ் கூட இல்லை. இதெல்லாம் கொடுக்காத அரசு எதற்காக இலவச லேப்டாப் கொடுக்கிறது? வாத்தியாரே இல்லாமல் பையன் அதை எப்படிக் கற்றுக் கொள்வான்? வேண்டுமானால், 5 ரூபாய்க்கு இண்டர்நெட் கார்டு வாங்கி லேப்டாப்பில் போட்டு எதைப் பார்க்கக் கூடாதோ அதைப் பார்க்கத் தொடங்கி கடைசியில் காஞ்சிபுரம் மாணவன் போல சீரழிவில் ‘சாதனையாளனாக’ மாறி விடுகிறான்.

இப்படி மக்களை, மாணவர்களைக் கெடுத்து சீரழித்து, அதிலும் பணம் பார்க்கும் அயோக்கிய பேர்வழிகளான முதலாளிகள்தானே; இவர்களுக்கு அடியாள் வேலை செய்யும் அரசுதானே காரணம். உண்மை இப்படி இருக்கும் போது அரசு எப்படி மக்களுக்காக இருக்க முடியும்?

இதன் விளைவு என்ன?

சாராய போதையும், ஆபாசப் படங்களும் மனிதனை இயல்பு நிலையில் வைத்திருப்பதில்லை. எந்த நேரமும் சீரழிந்த சிந்தனையைத் தூண்டி விடுகின்றன. தவறுகளைச் செய்யத் தூண்டுகின்றன. எந்த அநியாயத்தையும் கண்டும் கோபம் கொள்ளாத மழுங்கிய நிலைக்குத் தள்ளுகின்றன. படிக்கும் படிப்பு முதல் குடிக்கும் தண்ணீர் வரை காசாகி விட்டதைக் கண்டோ, உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டோ, வெளிநாட்டுக் கம்பெனிகள் நம் நாட்டைக் கொள்ளையடிப்பது கண்டோ, கோபமோ, ஆவேசமோ கொள்ளாமல் தடுக்கின்றன. இதைத்தான் கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளும், நமது ஆட்சியாளர்களும் விரும்புகிறார்கள்.

இதை நாம் சகித்துக் கொள்ள முடியுமா? சூடு, சொரணை இல்லாத சதைப் பிண்டங்களாக நமது பிள்ளைகளும், சகோரதர்களும் மாறுவதை அனுமதிக்க முடியுமா? இளம்வயதிலேயே பாலியல் குற்றவாளியாக நமது மகன் மாறுவதை அனுமதிக்க முடியுமா? 3 வயது, 4 வயது குழந்தைகளுடன் நமது சகோதரிகள் தாலியறுப்பதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? முடியாது என்றால் என்ன செய்வது?

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !தீர்வுதான் என்ன?

அரசாங்கம் என்ன செய்யும்? குடிப்பவர்கள், ஆபாசப் படம் பார்ப்பவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு என்று வசனம் பேசுவது நியாயமா? சிகரெட் கம்பெனிகளை அனுமதித்து விட்டு புகைபிடிப்பவனைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்? இந்தியக் குற்றவியல் சட்டமே என்ன சொல்கிறது? தப்பு செய்யத் தூண்டுபவன்தான் முதல் குற்றவாளி. அப்படி என்றால் அந்த சட்டம் அரசுக்குப் பொருந்தாதா? விற்பவனை உதைத்தால் குடிப்பவன் அடங்குவான் என்று கூறுவது போல முதல் குற்றவாளியான அரசின் அயோக்கியத் தனத்தைத் தோலுரிப்பதோடு, மக்களுக்கு உதவாத இந்த அரசை அப்புறப்படுத்துவோம். இதற்கு மக்களுக்கான அதிகார கமிட்டிகளைக் கட்டியமைப்போம். மக்களைக் கொல்லும் சாராயத்தையும், மக்களைச் சிதைக்கும் ஆபாசச் சீரழிவுகளையும் ஒழித்துக் கட்டுவோம்.

ஊத்திக் கொடுப்பதும் சீரழிப்பதுமா அரசின் வேலை?

நாகல்கேணி டாஸ்மாக் கடை முற்றுகை

24-12-2014 – காலை 11 மணி
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை

உழைக்கும் பெண்களே!

வீதிக்கு வீதி குடிநீர் குழாய்கள் இல்லை,
குடி கெடுக்கும் சாராயக் கடைகளுக்கோ பஞ்சம் இல்லை!
அறிவைப் புகட்டும் கல்வி தனியார்மயம்!
புத்தியைக் கெடுக்கும் சாராயம் அரசுமயம்!

ஆட்சியைப் பிடிப்பதில் ஜெ.வும் ‘கருணா’வும் பங்காளிகள்!
ஊத்திக் கொடுத்து உருவிக் கொள்ளும் நம் உழைப்பு பணத்தை
சாராயப் பேக்டரி முதலாளிகளுக்கும் இலவசங்களுக்கும் படையல் வைப்பதில் கூட்டாளிகள்!

குடிகெடுக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்! டாஸ்மாக் பிடியில் இருந்து மக்களை விடுவிப்போம்!

தாலிக்கு தங்கம் தரும் தமிழக அரசே,
மக்கள் தாலியறுக்க காரணமான
டாஸ்மாக் சாராயக் கடைகளை இழுத்து மூடு

சாராய போதையும் ஆபாச சீரழிவு படங்களும்
சிந்தனையை சீரழிக்கும் வக்கிரங்களே!

குடிகெடுக்கும் சாராயக் கடைகளை இழுத்து மூடுவோம்!
மக்களின் சிந்தனையைச் சீரழிக்கும் ஆபாச வக்கிரங்களை ஒழித்துக் கட்டுவோம்.

பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !

பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை
தொடர்பு எண் : 98416 58457

ஊழியர்களை பலி கொடுக்கும் டி.சி.எஸ்சின் தர மேம்பாடு

35

கவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கல்சன்டன்சி சர்வீஸ் (டி.சி.எஸ்) ஆட்குறைப்பை ஆரம்பித்திருக்கிறது. ஆட்குறைப்பு என்று அறிவிக்காமல் மறுசீரமைப்பு என்ற பெயரில் இதனை செய்துவருகிறது. இதன் மூலம் சுமார் 25,000 பணியாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஆன்சைட் ஊழியர்கள் என்று அழைக்கப்படும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்களும் இதில் அடக்கம்.

டி.சி.எஸ் ஆட்குறைப்பு
வரும் காலங்களில் மற்ற ஊழியர்கள் தலையிலும் கைவைக்கப்படலாம்.

மாதம் சில லட்சங்களை சம்பளமாக பெறக்கூடிய மேல்மட்ட ஊழியர்கள் முதலில் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆலோசகர் (கன்சல்டன்ட்), இணை ஆலோசகர் (associate consultant), துணைத் தலைவர் (vice prisident) பதவியில் இருப்பவர்கள் இதனால் உடனடியாக பாதிக்கப்படுவார்கள். வரும் காலங்களில் மற்ற ஊழியர்கள் தலையிலும் கைவைக்கப்படலாம்.

நீக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டதாகவும் அதை பல்வேறு கட்டமாக பிப்ரவரி மாதம் வரை அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதனால் தினமும் காலை அச்சத்துடனேயே மின்னஞ்சலை திறக்கிறார்கள், மேல்மட்ட ஊழியர்கள்.

கீழ்மட்ட ஊழியர்களிடையே பீதியும் நிச்சயமற்ற தன்மையும் பலமடங்கு அதிகரித்துள்ளது. பலர் வங்கித் தேர்வுக்கான தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரூ.64,991 கோடி மதிப்பிலான டி.சி.எஸ் 3.13 லட்சம் மேற்பட்ட ஊழியர்களைக்கொண்டுள்ளது. செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் மட்டும் ரூ 5,244 கோடி லாபமாக ஈட்டியுள்ளது. இது கடந்த காலாண்டைவிட ரூ 324 கோடி குறைவாக இருப்பினும் சென்ற ஆண்டின் இதே காலாண்டைவிட ரூ 611 கோடி அதிகம். ஆயினும், மேலும் மேலும் லாபத்தை பெருக்கும்  நோக்கத்திற்காக பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றிவருகிறது, டி.சி.எஸ்.

அப்ரைசல் எனப்படும் பணித்திறன் கணக்கீட்டின் அடிப்படையில் தான் ஊழியர்கள் நீக்கப்படுகிறார்கள் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. இந்த பணித்திறன் கணக்கீடே ஒரு ஏமாற்று வேலை என்பது தான் உண்மை.

டி.சி.எஸ் ஆட்குறைப்பு
படம் : நன்றி http://profit.ndtv.com

ஒரு மேலாளரின் கீழ் வேலை செய்பவர்கள் அனைவமே சிறப்பாக வேலை செய்தால் கூட அவர்களை தரம் பிரித்து புள்ளிகள் அளிக்கப்படுகின்றன. இத்தனை ஊழியர்களை திறன் குறைந்தவர்கள் என்று கூறி குறைந்த புள்ளிகள் அளிக்கப்படவேண்டும் என்பது விதி. ஆக தினமும் ஒன்பது மணிநேரம் வேலை செய்து, கொடுக்கப்பட்ட வேலையை முடித்தாலும் கூட ஒருவர் குறைந்த புள்ளிகளைத்தான் பெறமுடியும். யாராவது ஒரு சிலர் மட்டும்தான் அதிக புள்ளிகள் பெறமுடியும். ஆக அப்ரைசல் என்பதே மோசடி என்பது தான் உண்மை. அந்த மோசடி அப்ரைசலின் அடிப்படையில் தான் தற்போது பணிநீக்கம் செய்கிறார்களாம்.

இது குறித்து அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரிடம் பேசியபோது

“ஒவ்வொரு துறைவாரியாகவும், புராஜெக்ட் வாரியாகவும் இத்தனை இத்தனை ஊழியர்களை நீக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதன்படி எச்.ஆர் நீக்கப்பட வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரித்திருக்கிறார்கள். இப்படி எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டு அதற்கு ஆட்களை தேடுகிறார்கள். திறமையான ஊழியர்களும்தான் நீக்கப்படுகிறார்கள். தற்போது ஒவ்வொருக்காக மெயில் வருகிறது. அவர்கள் மூன்று மாதச் சம்பளத்துடன் உடனடியாக வெளியே அனுப்பபடுகிறார்கள்.”

வேலைபறிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள டி.சி.எஸ் செய்தி தொடர்பாளர், “எங்களைப் போன்ற திறனை முன்னிறுத்தும் நிறுவனங்களில் தரமேம்பாடு என்பது தொடர்ந்து நடக்கும் ஒன்றுதான். அச்சமயங்களில் ஊழியர் எண்ணிக்கை குறைவதும் சகஜமானதுதான். கருத்து கூறும் அளவுக்கு இது ஒரு சிறப்பான விசயம் இல்லை.” என்று திமிராக தெரிவித்துள்ளார். அதாவது, தர மேம்பாடு என்பது ஊழியர்களை கழித்துக் கட்டுவது, அதிக செலவு பிடிக்கும் ஊழியரை நீக்கி விட்டு குறைந்த  ஊதியத்தில் ஆள் அமர்த்திக் கொள்வதுதான்.

அதன்படி சுமார் 55,000 பேரை புதிதாக வேலைக்கு எடுக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார், செய்தித் தொடர்பாளர். ஆட்குறைப்பினால் ஏற்படும் பற்றாக்குறையை போக்க குறைந்த ஊதியத்தில் புதிய பணியாளர்களை எடுக்கப்போகிறார்கள். காரணம், வெளியேற்றப்படுவர்களின் ஊதியத்தை விட எடுக்கப்படுவர்களின் ஊதியம் பல மடங்கு குறைவல்லவா!

இது எதிர்பார்த்த ஒன்றுதான்.

டி.சி.எஸ் ஆட்குறைப்பு
“இது ஒன்-டூ-ஒன் டிஸ்கசன் அல்ல. பேசுவதற்கு எதுவுமில்லை” என்று கூறி வேலைநீக்கத்துக்கான காரணத்தைக் கூட தெரிவிப்பதில்லை.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் திறக்கப்பட்டிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் பயின்றவர்கள் பல லட்சம் பேர் உழைப்புச் சந்தையில் குவிந்திருக்கிறார்கள். எவ்வளவு குறைந்த சம்பளத்திற்கும் வேலை செய்ய தயார் என்பது அவர்களது நிலைமை. வாங்கிய கல்விக்கடனை எப்படியாவது அடைக்க வேண்டும் என்று திக்குத் தெரியாமல் தவிக்கிறார்கள் இந்த மாணவர்கள். வேலைக்கு எடுக்கப்படவிருக்கும் இவர்களும், ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் கல்விக்கடனை அடைத்து, வீட்டுக்கடன் வாங்கும் நிலைக்குவரும்போது நீக்கப்பட்டு விடுவார்கள்.

இந்த ஆட்குறைப்பு டி.சி.எஸ் உடன் முடியவில்லை. விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் ஏற்கனவே இதைச் செய்ய ஆரம்பித்துவிட்டன.

“நீங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் விரும்பினால் உடனடியாக இப்போதே வேலையை விட்டு நின்றுவிடலாம். இல்லை மூன்று மாதம்வரை பணிபுரியலாம்.” என்று எச்.ஆர் சமபந்தப்பட ஊழியர்களிடம் தெரிவிப்பார். ஊழியர்கள் மறுபேச்சு பேசாமல் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏதேனும் கூற முற்பட்டால், “இது ஒன்-டூ-ஒன் டிஸ்கசன் அல்ல. பேசுவதற்கு எதுவுமில்லை” என்று கூறி வேலைநீக்கத்துக்கான காரணத்தைக் கூட தெரிவிப்பதில்லை.

மூன்று மாத நோட்டீஸ் கூட வேலை நீக்கம் தொடர்பான அலுவலக நடைமுறைகளை செய்ய மட்டுமே. ஐ.டி கார்டுகள் பிடுங்கப்பட்டுவிடும். இனி வாயிற்காப்பாளர் உள்ளே அனுமதிக்கமாட்டார். மன உழைச்சலும் விரக்தியுமாக பலர் வீட்டிற்குத் திரும்புகின்றனர். தங்களுக்கு என்றைக்கும் அழைப்புவருமோ என்று பலர் விரக்தி, மன உளைச்சலுடன் காத்திருக்கிறார்கள்.

வேலை இழந்தவர்கள் பணித்திறன் இல்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இதனால் இனி வேலைதேடும் நிறுவனங்களின் நேர்முகத்தேர்வில் ‘தன்னுடைய தவறு’ குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

டி.சி.எஸ் ஆட்குறைப்பு
டி.சி.எஸ். வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியருக்கு தருவதாக வாட்ஸ்-அப்-இல் சுற்றுக்கு விடப்பட்டுள்ள கடிதத்தின் நகல்.

வேறு எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பவர்கள் தங்கள் கவனத்தை சனிப்பெயர்ச்சியின் பக்கம் திருப்பியிருக்கிறார்கள். மோடிவந்தால் வளர்ச்சி வந்துவிடும் விவாதித்தவர்கள் இப்போது தங்களை சனி பிடிக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாட்டையே மறுகாலனியாக்கத்தின் ஏஜென்டான மோடி என்ற சனி பிடித்து ஆட்டும் போது ஐ.டி வர்க்கம் மட்டும் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்.

வேலை இழந்ததைவிட கொடுமையானது, அதை எதிர்த்து கேட்க நாதியில்லாமல் அடங்கியிருப்பதுதான். நீக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எதிர்த்து பேசுவதற்கு பல கேள்விகள் நிச்சயமாக இருந்திருக்கும். இந்த வேலையை நம்பி வாங்கிய வீட்டுக் கடன்கள், கிரெடிட் கார்டு பில்கள், திருமணங்கள் என பல விசயங்கள் கண்முன்னால் வந்து மறைந்திருக்கும். ஆனால் எதுவும் செய்யும் நிலையில் அவர்கள் இல்லை என்பது தான் உண்மை.

எழுத்துக்கூட்டி படிக்கக்கூட தெரியாத தொழிலாளர்கள் தங்கள் மீதான நிறுவனத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுகிறார்கள். குறைந்தபட்சம் தங்கள் சுயமரியாதையை காத்துக்கொள்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் சங்கமாக அணிதிரண்டிருப்பதுதான். தொழிலாளர்களில் ஒரு அங்கம் தான் நாம் என்பதை ஐ.டி ஊழியர்கள் உணரவேண்டிய தருணம் இது.

அநீதியான இந்த ஆட்குறைப்பு ஐ.டி. துறை ஊழியர்கள் சங்கமாக அணிதிரள்வதுதான் தேவையை முன்னிலும் அதிகப்படுத்தியிருக்கிறது. இன்று மேல்மட்ட ஊழியருக்கான குறி நாளை அனைவர் மீது திருப்பப்படும் என்பது உறுதி. இப்பொழுது போராடாவிட்டால் எப்பொழுதும் போராட முடியாது. கிடைத்திருக்கும் இந்த அவகாசத்தில் சங்கமாக அணிதிரள்வீர்.

டி.சி.எஸ் ஆட்குறைப்பு மற்றும் பொதுவாக ஐ.டி துறையில் பணி பாதுகாப்பின்மையை நாம் சட்ட பூர்வமாகவும் அமைப்பு ரீதியாகவும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

இது தொடர்பாக மேல் விபரம் அறிய விரும்பும் ஐ.டி. துறை நண்பர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல் : combatlayoff@gmail.com
முகநூல் பக்கம் : https://www.facebook.com/VinavuCombatsLayoff

தொலைபேசி : 9003198576

பு.ஜ.தொ.முவை தொடர்பு கொள்ள
தோழர் விஜயகுமார், மாநில பொருளாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, 94441 06479

மேலும் படிக்க

ஆபாச பத்திரிகைகளைத் தீயிலிடு – மாணவிகள் போர்க்கோலம் !

7

“ஆபாசப் பத்திரிகைகளை எரிக்கும் போராட்டம்” என்று அறிவித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னை முழுக்க சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்  சென்னை மதுரவாயல் முதல் பிராட்வே வரை புமாஇமுவின் செம்படை உழைக்கும் மக்களைச் சந்தித்து பாலியல் வக்கிரத்தை ஒழித்துக்கட்ட வேண்டியதன் அவசியத்தை எடுத்து உரைத்தது. உழைக்கும் மக்கள் தங்கள் வர்க்கப்பாசத்தோடு  ஆதரவளித்தனர். “மாணவர்கள் என்றாலே சரியாகத்தான் இருப்பார்கள்” என்றும் “மாணவர்கள் -இளைஞர் சமூகத்தை மாற்றப் பிறந்தவர்கள் தாம்” என்றும் வாழ்த்துக்கூறினர்.

பிரச்சாரப் பயணம் முடிந்ததும் போராட்டத்திற்கான வேலைகள் தொடங்கின, நகரம் முழுக்க, “ஆபாசப் பத்திரிகைகளை எரித்தே தீர வேண்டும், வேறு மாற்றே இல்லை” என்பதை அறிவிக்கும் விதமாக 3000-க்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

ஆணாதிக்கத்தின் முகத்தை  கிழிக்கும் வகையில் திரும்பிய பக்கமெல்லாம் புமாஇமுவின் போராட்ட சுவரொட்டிகளுக்கு இடம் கொடுத்து மேலும் பெருமை தேடிக்கொண்டது சென்னை.

சுவரொட்டிகளைக் கண்ட மக்கள் கும்பல் கும்பலாக வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தங்களுக்குள் விவாதிப்பதும், பலர் அலுவலக எண்ணுக்கு தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிப்பதும், தாங்களும் கண்டிப்பாகக் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.

உழைக்கும் மக்கள் இச்சுவரொட்டிகளை கண்டவுடன் வாழ்த்து தெரிவித்தனர் என்றால் ஆளும் வர்க்கத்தின் எடுபிடியான போலீசு என்ன செய்திருக்கும்?

17-ம் தேதி காலைமுதல் பு.மா.இ.மு.வின் சென்னை மாநகரச் செயலர் தோழர் கார்த்திக்கேயனின் வீட்டுக்கு வந்து “எங்கே போராட்டம் நடத்தப் போகிறீர்கள்?” என்று குடைச்சல் கொடுத்துப் பார்த்தது, பாச்சா பலிக்காமல் போனது. தொடர்ந்து அலுவலக எண்ணுக்கு போன் செய்து, “என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று பதைபதைப்போடு இருந்தது.

நாம் எதிர்பார்த்த நாளும் போலீசு எதிர்பார்த்த நாளுமான 18-ம் தேதி விடிந்தது . அன்றும் காலை முதல் அலுவலக எண்ணுக்கு போலீசு அழைத்துக்கொண்டே இருந்தது.

“சார் எப்போ வருவீங்க, சாப்பாடு ரெடி பண்ணணும், பர்மிசன் கொடுத்துடுறோம், பப்ளிக்குக்கு டிஸ்டர்ப் இல்லாம பண்ணுங்க” என்று பல பல மொழிகளில் பேசின.

நாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்த இடத்தில் காலை 8 மணி முதல் நூற்றுக்கணக்கான போலீசு குவிக்கப்பட்டு இருந்தது.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்
நாம் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்த இடத்தில் காலை 8 மணி முதல் நூற்றுக்கணக்கான போலீசு குவிக்கப்பட்டு இருந்தது.

நம்மைக் கண்ட உளவுப் பிரிவு போலீசு நாம் செல்லும் இடமெல்லாம் வால் போல திரிந்தது. டீ குடிக்கச் சென்றாலும் கால் வலிக்கிறதென்று ஒரு இடத்தில் உட்கார்ந்தாலும் கூட கூடவே வந்தது. சரி அதிகாரிகளை சந்திப்போம் என்று சென்றோம்.

நாம் எந்த நோக்கத்திற்காக போராட்டம் செய்யப் போகிறோம் என்பதைக் கேட்ட D1 போலீசு இன்ஸ்பெக்டர்,

“அப்படியா, டைம் பாஸ்ன்னு ஒரு  பத்திரிக்கை வருதா எனக்கு தெரியவே தெரியாதே”

“ஏன் சார் உங்க பசங்க எல்லாம் இந்தப் பிரச்சினையில பாதிக்கறது இல்லையா?”

“ச்சே என்ன செய்யறது” என்று தன் முகத்தில் நவரசங்களையும் காட்ட ஆரம்பித்தார்,  இன்னொரு போலீசு.

மணி சரியாக 12.30.

புமாஇமுவின் கல்லூரி மாணவிகளும் இளம் பெண்களும் தோழமை அமைப்பான பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களும் “பாலியல் வக்கிரத்தை துடைத்தெறிவோம்” என்ற எச்சரிக்கை செய்யும் வாசகங்களோடு தலையில் தொப்பி, கையில் பேட்ஜ், சிவப்பு சீருடை சகிதமாக சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் உள்ள பிரதான சாலையில் கம்பீரமாக முழக்கமிட்டபடி வர, போராட்டத்தின் தலைவரான  புமாஇமுவின் தோழர் கனிமொழி கையில் தீயோடு வந்தார்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்
“பாலியல் வக்கிரத்தை துடைத்தெறிவோம்” என்ற எச்சரிக்கை செய்யும் வாசகங்களோடு தலையில் தொப்பி, கையில் பேட்ஜ், சிவப்பு சீருடை சகிதமாக முழக்கமிட்டபடி வர, போராட்டத்தின் தலைவரோ கையில் தீயோடு வந்தார்.

தீயிட்டுக் கொளுத்துவோம் ! தீயிட்டுக் கொளுத்துவோம் !
பாலியல் வக்கிரத்தை தூண்டுகின்ற
ஆபாசப் பத்திரிக்கைகளை
தீயிட்டுக் கொளுத்துவோம் !தீயிட்டுக் கொளுத்துவோம் !

அனுமதியோம்!அனுமதியோம்!
மாணவர்கள் -இளைஞர்கள்
டைம்பாஸ்- சினிக்கூத்து
வண்ணத்திரை, குமுதம்
ஆபாசக் குப்பைகளை
கடைவிரிக்க அனுமதியோம்!

பள்ளிக்கூட மாணவனுக்கும்
ஊத்திக் கொடுத்து சீரழிக்கும்
மாமா பயல் கவர்மெண்டே
நீ நடத்துவது அரசாங்கமா?
விபச்சார விடுதியா?

தடை செய்!தடை செய்!
ஆபாச பத்திரிக்கைகளான
டைம்பாஸ் சினிக்கூத்து
குமுதம் வகையறாக்களை
உடனடியாக தடை செய்!

பாலியல் வக்கிரத்தை பரப்பும்
இண்டர் நெட் மெமரி கார்டு
ஃபேஸ் புக் வாட்ஸ் அப்
தொலைக்காட்சி ஆபாசங்களை
உடனே தடை செய்!

எச்சரிக்கை ! எச்சரிக்கை!
எச்சரிக்கை செய்கின்றோம்
கோடி கோடியாய் லாபம் பார்க்க
மாமா வேலை செய்கின்ற
பத்திரிக்கை முதலாளிகளே
ஆபாசக் குப்பைகளை
தமிழகத்தில் கடைவிரித்தால்
தீயிட்டு கொளுத்துவோம் !

முறியடிப்போம் ! முறியடிப்போம் !
மாணவர்கள் -இளைஞர்கள் மீது
குறிவைத்து ஏவப்படும்
கலாச்சாரச் சீரழிவை
முறியடிப்போம் ! முறியடிப்போம் !

என விண்ணதிர முழக்கங்களை எழுப்பியவாறு உயர் நீதிமன்றம்  ஆவின் வாயிலுக்கு எதிரே உள்ள சாலையில்  ஊர்வலமாக வந்தனர்.

ஆபாசப் பத்திரிகைகள் எரிப்பு
பெண்களை கேவலப்படுத்துவதையே தொழிலாகக்கொண்ட மஞ்சள் பத்திரிகைகளான டைம்பாஸ், சினிக்கூத்து, குமுதம், வண்ணத்திரை ஆகிய பத்திரிகைகளை கையில் இருந்த சுயமரியாதை நெருப்பில் சுட்டுப்பொசுக்கினர்.

பெண்களை கேவலப்படுத்துவதையே தொழிலாகக்கொண்ட மஞ்சள் பத்திரிகைகளான டைம்பாஸ், சினிக்கூத்து, குமுதம், வண்ணத்திரை ஆகிய பத்திரிகைகளை கையில் இருந்த  சுயமரியாதை நெருப்பில் சுட்டுப்பொசுக்கினர். அருகில் ஒரு கடையில் விற்றுக்கொண்டிருந்த ஆபாசப் பத்திரிகைகளை பறித்துக் கொண்டு வந்த புமாஇமுவின் கல்லூரி மாணவிகள்  அவற்றை நெருப்பிலிட்டனர்.  தீப்பந்தம் கையை சுட அதை கீழே வைக்க முனைந்த தோழரின் கையிலிருந்த அந்த தீப் பந்தத்தை 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் இளந்தோழருமான செந்தாரகை  தன் கையில் ஏந்தினார்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்பு போராட்டம்
தீப் பந்தத்தை 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் இளந்தோழருமான செந்தாரகை தன் கையில் ஏந்தினார்.

சாலையை மறித்த தோழர்கள் தொடந்து முழக்கமிட்டபடி அகல மறுத்தனர். மீடியா வந்தவுடன் வழக்கம் போல கிளம்பிவிடுவார்கள் என்று நினைத்த போலீசு  என்ன செய்வதென முழித்தது.

“ஆபாசப் பத்திரிக்கைகளை தடை செய்ய வேண்டும் ! செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் வந்து வாக்குறுதி கொடுக்காமல் நகர மாட்டோம்” என்றனர்.

அதெல்லாம் முடியாது என கான்ஸ்டபிள் முதல் ஏசி வரை மிரட்டும் தொனியில் பேச, அமைச்சர் வராமல் ஒரு அங்குலம் கூட நகர முடியாது என பெண் தோழர்கள் உறுதிபடக் கூறினர். முக்கால் மணி நேரத்துக்கும் மேலாக அந்தச் சாலை ஸ்தம்பித்துப் போனது. இதுவரைக்கும் எத்தனையோ சாலை மறியலைக் கண்ட அந்தச் சாலை இம்மறியலில் நிச்சயம் பெருமிதம் கொண்டு இருக்கும்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்பு போராட்டம்.
கான்ஸ்டபிள் முதல் ஏசி வரை மிரட்டும் தொனியில் பேச, அமைச்சர் வராமல் ஒரு அங்குலம் கூட நகர முடியாது என பெண் தோழர்கள் உறுதிபடக் கூறினர்.

போராட்டத்தை சிதைக்க பலவாறு போலீசு முயன்றது. அதன் ஒரு பகுதியாக ஆண் போலீசு  பெண் தோழர்களை கையாள முயல, பெண் தோழர்களும் அருகில் இருந்த வழக்கறிஞர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க ஒதுங்கி நின்றது. அடுத்து பெண் போலீசு தோழர்களை காட்டுமிராண்டித்தனமாக இழுக்க முயல, “நீங்கள் ஒரு பொம்பளையா இருந்துகிட்டு ஏன் இப்படி பண்ணறீங்க? உங்க பிரச்சினையத்தான பேசறோம்?  ஏன் நீங்க எல்லாம் பாலியல் வக்கிரத்தால பாதிக்கப்படுறதே இல்லையா என்ன ?” என்று சிவப்பு உடை அணிந்த தோழர்கள் கேட்க, சிலையாய் நின்றார்கள் பெண் காவலர்கள். அவர்கள் வேறு எப்படி இருக்க முடியும் காக்கி உடை தரித்தபோது.

போராட்டம் அடுத்த கட்ட வடிவத்தை நோக்கி நகர்ந்தது,  போலீசு தன் முகத்தை காட்ட தொடங்கியது. பெண் தோழர்களுக்கு பாதுகாப்பாக நின்ற ஆண் தோழர்களை  நேரடியாகவே வந்து தாக்கினார் டிசி. செந்தில்குமார். இதைப்பார்த்த வழக்கறிஞர்களும் தோழர்களும்  டிசியிடமிருந்து ஆண் தோழர்களை மீட்டனர்.

உடனே  டிசி “உங்களால தானய்யா எப்பவுமே பிரச்சினை” என்று ஏகத்துக்கும் எகிற, வழக்கறிஞர்களின் கடுமையான எதிர்ப்புக்கிடையில் பின்வாங்கினார் டிசி.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்
பாலியல் வக்கிரத்திற்கு முடிவுகட்டுவதற்கு வைக்கப்பட்ட முதல் கொள்ளி இதுதான்.

‘டிசிக்கு ஒரு அவமானம் என்றவுடன் அதைத் துடைக்க மற்ற காவலர்கள்’ ஓடோடி வந்து பெண் தோழர்களை தூக்க முயற்சிக்க இம்மி அளவும் அவர்களை நகர்த்த முடியவில்லை. வலுக்கட்டயமாக தோழர்களை ஏற்ற முயற்சிக்க,  அதற்கு தோழர்கள் மறுக்க , வேறுவழியே இன்றி அமைச்சரைச் சந்திக்க  சில  பெண் தோழர்களை மட்டும் பிரதிநிதிகளாக அனுப்புவதாகக்கூறி அனைத்து தோழர்களையும் கைது செய்தது போலீசு.

சுற்றி இருந்த மக்கள் இந்த போராட்டத்தை இறுதிவரை கண்டதுடன் நமது பிரசுரங்களை படித்துக்கொண்டும் விவாதித்துக்கொண்டும் இருந்தனர். பாலியல் வக்கிரத்திற்கு முடிவுகட்டுவதற்கு  வைக்கப்பட்ட முதல் கொள்ளி இதுதான்.

கைது செய்யப்பட்ட  நூற்றுக்கும் மேற்பட்ட  பெண் தோழர்கள் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்கள் அடைத்து வைக்கப்பட்ட இடத்திற்கு புமாஇமுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் சென்றார்.

rsyf-burn-yellow-magazines-20அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறிய போலீசு, அமைச்சரின் அலுவலகத்திற்கு தோழர் கணேசன் உட்பட 5 பெண் தோழர்களை அழைத்துச் சென்றது. அமைச்சர் அங்கு இல்லை என்று பதில் கூறியது.

“அத்துறைச் செயலரை சந்திக்க வேண்டும்” என்று தோழர்கள் கேட்ட போது

“அவர் மீட்டிங்கில் உள்ளார். சி.எம் தனிப் பிரிவுல மனு கொடுக்குறீங்களா?” என்றது போலீசு.

“அதற்காக நாங்க இங்க வரல, அடுத்து தலைமைச் செயலர், அல்லது உள்துறை செயலர் ஆகியோர்கள பார்த்து பேசுவதாக இருந்தா ஏற்பாடு செய்யுங்க அல்லது நாங்கள் செல்கிறோம்” என்று தோழர்கள் மனுகொடுக்கும் சம்பிரதாயச் செயலை செய்யமாட்டோம் என உறுதியாக நிற்க, அவர்களுக்குள்ளேயே ஏதோ பேசியவர்கள், பின்னர் யாரிடமோ பேசிவிட்டு,

“நீங்க சொல்றவங்கள இப்ப பார்க்க முடியாது” என்றனர்.

மீண்டும், “மனு வேண்டுமானால் கொடுங்க” என்றனர், போலீசுகாரர்கள்.

தோழர்கள், “வண்டிய எடுங்க போகலாம்” என்று மண்டபத்திற்கு வந்து போலீசு அமைச்சர்களின் கபட நாடகத்தை தோலுரித்து பேசினர்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்
தோழர்கள் மனுகொடுக்கும் சம்பிரதாயச் செயலை செய்யமாட்டோம் என உறுதியாக நின்றனர்.

இவ்வியக்க பிரச்சாரத்திற்காக கடந்த 15-ம் தேதி நடைபயணமாக தோழர்கள் வந்து கொண்டு இருக்கும் போது ஒருவர்

“பெரியார் காலத்துலதான் இப்படி மக்கள் கிட்ட நடந்து போய் பிரச்சாரம் பண்ணாங்க, இந்த காலத்துலயும் மக்கள சந்தித்து பிரச்சாரம் செய்ய ஒரு நடைபயணம் என்றால் அது ஒரு கம்யூனிஸ்டாலதான் முடியும்” என்றார்.

அந்த மக்கள் பணியை இன்றும் புமாஇமு களத்தில் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

இது முடிவல்ல…… கலாச்சார சீரழிவுக்கு எதிரான புமாஇமுவின் போராட்டப் பயணம் தொடரும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை.

மணல் குவாரி முற்றுகை : பணிந்தது அதிகார வர்க்கம்

13

வெள்ளாறு எங்கள் ஆறு! மணல் கொள்ளையனே வெளியேறு!

கொட்டும் மழையிலும் நடந்த பல கட்ட பேச்சு வார்த்தையில், “அதிகாரிகள் மக்கள் கோரியுள்ள அனைத்து ஆவணங்களையும் தர வேண்டும், 20-12-14 அன்று மக்கள் முன்பாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அது வரை குவாரியை தற்காலிகமாக மூட வேண்டும்” என முடிவு செய்யப்பட்டு முற்றுகை போராட்டம் இரண்டாம் நாள் (16-12-2014) மாலை 3-00 மணியளவில் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

வெள்ளாறு எங்கள் ஆறு
“அதிகாரிகள் மக்கள் கோரியுள்ள அனைத்து ஆவணங்களையும் தர வேண்டும், 20-12-14 அன்று மக்கள் முன்பாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அது வரை குவாரியை தற்காலிகமாக மூட வேண்டும்”

வருவாய்த்துறையும், பொதுப்பணித்துறையும் தர வேண்டிய ஆவணங்கள்

  1. 2-12-14 அன்று நடந்த முற்றுகைப் போரட்டத்தின் விளைவாக மணல் குவாரியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக மூடியதற்கான உத்தரவு நகல்
  2. மேற்படி உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை ஆகியோர் அடங்கிய விசாரணை க்குழுவின் அறிக்கை.
  3. மீண்டும் மணல் குவாரி இயங்கும் என மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு நகல்.
  4. மாநில சுற்றுச் சூழல் ஆணையம் கார்மாங்குடி மணல் குவாரிக்கு வழங்கிய தடையில்லாச் சான்றிதழின் அடிப்படையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கிய உத்தரவு நகல்.
  5. மேற்கண்ட உத்தரவுகளின் அடிப்படையில் குவாரி துவங்கிய நாள் முதல் இன்று வரை எடுக்கப்பட்ட மணலின் அளவு, லாரி லோடுகளின் எண்ணிக்கை, அரசுக் கருவூலத்தில் செலுத்தப்பட்ட மொத்தத் தொகை விபரம் – மாத வாரியாக.
  6. கார்மாங்குடி ஊராட்சியில் மேற்படி மணல் குவாரியில் அள்ளப்பட்ட மணலின் மூலம் வந்த மொத்த வருமானம் – மாத வாரியாக
  7. கார்மாங்குடி மணல் சேமிப்புக் கிடங்கில் (யார்டில்) இருந்து குவாரிதொடஙகியதிலிருந்து இன்று வரை சென்ற மணலின் விபரம் மற்றும் வழங்கப்பட்ட பெர்மிட்டுகள் விபரம் – நாள் வாரியாக.
  8. குவாரியில் பயன்படுத்தபட்ட ஜே.சி.பி.எந்திரங்களுக்கு பி.டபிள்யூ.டி அல்லது அரசு மூலம் வழங்கப்பட்ட மொத்தத் தொகை, எந்த ஒப்பந்ததாரர்களுகக்கு வழங்கப்பட்டது – நாள் வாரியாக.
  9. கார்மாங்குடி ஊராட்சியில் மணல் குவாரி ஒப்புதலுக்காக இயற்றப்பட்ட தீர்மான நகல்
  10. கருவேப்பிலங்குறிச்சி தேவங்குடி சாலை அமைப்பு மற்றும் பராமரிப்பு திட்ட மதிப்பீடு என்ன? கால நிர்ணயம் எனன்?
  11. மாவட்டம் மற்றும் வட்ட அளவில் அரசாணை எண் 135-ன் படி அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் அறிக்கை – மாத வாரியாக.
  12. கார்மாங்குடி வெள்ளாற்று மணல் குவாரி சர்வே எண் 398/1-ல் குவாரி தொடங்குவதற்கு முன் இருந்த
    அ) மணலின் அளவு விபரம்
    ஆ) குவாரி தொடங்கிய பிறகு எடுத்த மொத்த மணலின் அளவு
    இ) இன்னும் எடுக்கப்பட வேண்டிய மணலின் அளவு என்ன?
வெள்ளாறு எங்கள் ஆறு
தற்போது நடைபெறும் குவாரி சட்டத்துக்கு புறம்பானது என ஏற்கப்பட்டால் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்.

மேற்கண்ட விபரங்களைத் தந்து அதனடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெற்று தற்போது நடைபெறும் குவாரி சட்டத்துக்கு புறம்பானது என ஏற்கப்பட்டால் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை மக்கள் மத்தியில் விளக்கி மக்கள் ஒப்புதலை பெற்றபோது மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜு பேசியவற்றிலிருந்து

மணல் குவாரி நிரந்தரமாக மூடப்படும் வரை நாம் இங்கிருந்து போக மாட்டோம் என அறிவித்து போராடிக் கொணடிருக்கிறோம். நேற்று மாலை 4 மணிக்கு வந்து பேசிய அதிகாரிகள், இன்று காலை 8-00 மணிக்கே வந்து விட்டனர். கடலூர் மாவட்ட போலீசாருடன், விழுப்புரம் மாவட்டத்திலிருந்தும் பல வாகனங்களில் போலீசார் வந்துள்ளனர். ஆற்றுக்கு வரும் மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். பெண் போலீசார் வீடு வீடாகச் சென்று போராட்டத்திற்கு போகாதீர்கள் என தடுத்து பிரச்சாரம் செய்கின்றனர். அனைத்து கிராமங்களிலும் போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுளள்னர். கடும் மழை விட்டு விட்டு பொழிகிறது.

காவல் துறை, “எங்களுக்கு வேறு வழியில்லை நீங்கள் எதாவது ஒரு முடிவு எடுத்துதான் ஆக வேண்டும்” என முழு பலத்தோடு வந்து நிற்கிறார்கள்.

  • நேற்று நாம் கேட்ட ஆவணங்களை, “பொதுப்பணித்துறையில் சென்று வாங்கிக் கொள்ளுங்கள்” எனக் கூறியவர்கள் இன்று “நாங்களே தருகிறோம்” என்கிறார்கள்.
  • நேற்று “குவாரியை மூடமுடியாது” எனச் சொன்ன கோட்டாட்சியர், “இன்று தற்காலிகமாக மூடுகிறேன்” எனக் கூறுகிறார்.
  • முன்பு நம்மை கலக்காமல் குவாரியை திறந்தார்கள். இன்று, “உங்களோடு பேசிவிட்டுதான் மீண்டும் திறப்போம்” என்கிறார்கள்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களோடு சேர்ந்து விவாதித்து முடிவு எடுக்க விரும்புகிறோம். அது அவசியமான தேவை. எந்த போராட்டத்திலும் மக்களின் முழு ஒத்துழைப்பும்,  எடுக்கும் முடிவைப் பற்றி மக்கள் சிந்திப்பதும் அவசியமானது.

மக்கள் தரப்பிலிருந்து ”தற்காலிகமாக மூடுவது ஏமாற்று, அமைதி பேச்சு வார்த்தை என்பது மக்களை குழப்பவும் போராடுபவர்களை ஏமாற்றவும் அதிகாரிகள் செய்யும் நடவடிக்கை, அதனால் எந்த பயனும் ஏற்படாது. மக்கள் வெயிலிலும், மழையிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் ஏன் வரக்கூடாது? மக்கள் கலைந்து சென்று விட்டால் மீண்டும் எப்படி அணி சேர்ப்பது? எனவே குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று பலர் பேசினர். தற்போது நடத்தப்படும் போராட்டம் வரலாற்று போராடடம் எனக் குறிப்பிட்டார்கள்.

வெள்ளாறு எங்கள் ஆறு
உங்களில் எத்தனை பேர் ஓடாமல் கைதாவதற்கு தயார்” எனக் கேட்டோம். பெரும் பகுதி மக்கள், “நாங்கள் தயார் தயார்” என உற்சாக முழக்கமிட்டனர்.

“நாம் அவர்கள் சொல்லும் சமரசத்தை ஏற்காவிட்டால் அனைவரும் கைது செய்யப்படுவோம், உங்களில் எத்தனை பேர் ஓடாமல் கைதாவதற்கு தயார்” எனக் கேட்டோம். பெரும் பகுதி மக்கள், “நாங்கள் தயார் தயார்” என உற்சாக முழக்கமிட்டனர்.

காவல் துறை கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்து, மாலை விட்டுவிடுவார்கள். நாம் மீண்டும் மக்களை திரட்டித்தானே ஆக வேண்டும். மக்கள் கலைந்து விடுவார்கள் என்பதுதான் அரசின், மணல் கொள்ளையனின் எதிர்பார்ப்பு. திரும்பி வரமுடியாது என்றால் ஏன் அவர்கள் மணல் குவாரியை மூட வேண்டும்.

பேச்சு வார்த்தைக்கு நான்கு நாட்கள் இருக்கிறது. அதற்குள் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்துக்கு அனைத்து கிராமங்களிலும் கிளைகளை அமைப்போம், அனைவரையும் உறுப்பினராக சேர்ப்போம். நமது இயகக்ததின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம். இன்று ஆயிரமாக முற்றுகையிட்டதை பல ஆயிரமாக பெருக்குவோம். பேச்சு வார்த்தையில் பெரும் திரளாக கலந்து கொள்வோம். அது வரை இயங்கிக் கொண்டிருந்த குவாரியை மூடிவிட்டுத் தானே செல்கிறோம்.

மணல் கொள்ளையை நிரந்தரமாகத் தடுத்து இந்த குவாரியை மூடும் வரை நாம் போராட்டத்தை விடப்போவதில்லை. பேச்சுவார்த்தையில் வெற்றி பெறுவோம் என நம்பி நாம் போராட்டத்தை விலக்கவில்லை. மீண்டும் மக்களைத் திரட்ட வேண்டும், திரட்ட முடியும், திரளுவார்கள் என்ற நம்பிக்கையில் நாம் இந்த முடிவை எடுக்கிறோம்.

வெள்ளாறு எங்கள் ஆறு
திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகளிடமே நாம் இதை எல்லாம் பேசப் போகிறோம். வேறு வழியில்லை. குவாரி மீண்டும் இயங்கினால் அடுத்த கணம் ஆயிரக்கணக்கில் நாம் ஆற்றில் இறங்க வேண்டும்.

பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஆற்று மணல் கொள்ளையை நிறுத்த வேண்டும் என்பது சில ஆயிரம் பேரின் சில நாள் போராட்டத்தால் முடியும் என்பது இயலாத காரியம். மணல் குவாரியை மூட 20 கிராம மக்கள் ஒன்றிணைந்து இரவு முழுவதும் இங்கு தங்கி போராடியது, எதற்கும் வராத மக்கள் இன்று திரண்டிருக்கிறார்கள் என்றால் நம்மை மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள், இவர்கள் சோரம் போக மாட்டார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.  நம் ஆற்றை, நீர் ஆதாரத்தை நாம் காக்காவிட்டால் யார் காப்பார்கள் என்ற உணர்வை நமது தொடர்ந்த பிரச்சாரம் ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுப்பணித்துறை 1,91,000 cu.m (1.9 லட்சம் கன மீட்டர் – சுமார் 68000 யுனிட் மணல் அதாவது11300 லாரிகள்) மணல் மட்டும்தான் எடுக்க வேண்டும் என உத்தரவு பெற்றுள்ளார்கள்.  நாள் ஒன்றுக்கு 300 லாரிகள் என மதிப்பிட்டால் 37 நாட்களில் அவர்கள் எடுக்க வேண்டிய மொத்த மணலையும் எடுத்து விட்டார்கள். மேலும் அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி வந்து விட்டார்கள் என்பதையும் நாம் ஜி.பி.எஸ்.வைத்து நிரூபிக்க முடியும். 10 மாதங்கள் கணக்கில் வராமல் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான மணலை கொள்ளையடித்துள்ளார்கள். அதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். கொள்ளையில் பங்கு வாங்கியுள்ளனர். அதற்குத்தான் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக் கேட்கிறோம்.

திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகளிடமே நாம் இதை எல்லாம் பேசப் போகிறோம். வேறு வழியில்லை. குவாரி மீண்டும் இயங்கினால் அடுத்த கணம் ஆயிரக்கணக்கில் நாம் ஆற்றில் இறங்க வேண்டும்.

வெள்ளாறு எங்கள் ஆறு
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தோழர்கள் இரண்டு நாட்கள், ஆற்றின் இரு கரையிலும் புரட்சிகர பாடல்கள் மூலமாக பிரச்சாரம் செய்தனர்

இன்றைய போராட்டத்தில் உங்களை இங்கு அழைத்து வர மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தோழர்கள் இரண்டு நாட்கள், ஆற்றின் இரு கரையிலும் புரட்சிகர பாடல்கள் மூலமாக பிரச்சாரம் செய்தனர்.

மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது இன்னும் பல வழக்கறிஞர்கள் பல மாவட்டங்களிலிருந்து இங்கு வந்து உங்களிடையே தங்கி நீங்கள் கொடுத்த உணவை பெற்று பிரச்சாரம் செய்தனர்.

விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் விருத்தாசலம் நகரம் முழுவதும் வீடு வீடாகப் போய், “இது கிராம மக்கள் போராட்டம் மட்டுமல்ல, அனைத்து மக்களின் போராட்டம்” என பிரச்சாரம் செய்தனர்.

மருங்கூர் பஞ்சமூர்த்தியும், மேலப்பாளையூர் சசிக்குமாரும், சீ.கீரனூர் ராஜ வன்னியனும், கார்மாங்குடி கோபால கிருஷ்ணன், அறிவரசன், பன்னீர் செல்வம், இளையராஜா, சிவப்பிரகாசம், நேமம் சுப்பிரமணியன், கருவேப்பிலங்குறிச்சி இளங்கோ என அனைவரும் உங்களை பல நாட்கள் வலியுறுத்தி ஒவ்வொரு முறையும் அழைத்து வருவது சிரமமான காரியம்.

நமது வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தை அனைத்து கிராமங்களிலும் கிளையாக உருவாக்கி, அறிவிப்பு கொடுத்தால் அனைவரும் வர வேண்டும். மணல் அள்ள இயந்திரம் ஆற்றில் இறங்கினால் உடனே மறிக்க ஏதுவாக அமைப்பு பலம் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும். கனிம வளக் கொள்ளைக்கு எதிரான இந்த போராட்டம் நீண்ட காலம் தொடர்ந்து நடத்த வேண்டிய போராட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெள்ளாறு எங்கள் ஆறு
கனிம வளக் கொள்ளைக்கு எதிரான இந்த போராட்டம் நீண்ட காலம் தொடர்ந்து நடத்த வேண்டிய போராட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கார்மாங்குடி கிராம போராட்டத்தை இன்று தமிழகம் தழுவி அறியப்பட்ட போராட்டமாக மாற்றியிருக்கிறோம். பிற பகுதி மக்கள் தாமாக வந்து இங்கு கலந்து கொண்டுள்ளார்கள். பல இளைஞர்கள், பெண்கள் தங்கள் பெயரை செல் நம்பரோடு கொடுத்து சென்றுள்ளனர். மக்கள் பெருமளவில் வரத் தயாராக இருப்பதாக முன்னணியாக வேலை செய்தவர்கள் இங்கு சொல்கிறார்கள். இதுதான் நமது முன்னேற்றம், வெற்றி.

மத்திய மாநில அரசுகளின் தனியார்மய கொள்கையின் கீழ் மணலை மட்டும் தனியார் கொள்ளையடிக்கவில்லை. இயற்கை எரிவாயு, தாதுமணல், கிரானைட், பாக்சைட் (அலுமினியத் தாது), இரும்புத் தாது, நிலக்கரி வயல் என இயற்கை மனித குலத்திற்கு வழங்கிய அனைத்துக் கொடைகளையும் லாப வெறிக்காக சூறையாடுகிறார்கள்.

மேலும் விலைவாசி உயர்வு, கல்வி, மருத்துவம், சுகாதாரம், ரயில்வே, சாலை, போக்குவரத்து, மின்சாரம் என அனைத்தையும் தனியார் கொள்ளையடிக்க அனுமதித்திருக்கிறார்கள். பாராளுமன்றம், சட்டமன்றம் இதை ஏற்று கொண்டிருக்கின்றன. அதில் பங்கு பெறும் கட்சிகள், பங்கு பெறவிரும்பும் கட்சிகள் ஆதரிக்கின்றன். அதிகாரிகள் அனைவரும் இதை சிறப்பாக செய்து முடிக்கவே உள்ளார்கள்.

இந்த நிலையில்தான் நாம் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக மணல் குவாரியை மூடு என போராடுகிறோம்.

நாம் மட்டும் போராடி இந்தப் போரில் வெல்ல முடியாது. நமது உறுதியான போராட்டம் பிற பகுதி மக்களையும் போராடச் சொல்லும். பிற வர்க்கப் பிரிவினரை இதற்கு ஆதரவாக போராடச் சொல்ல முடியம்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்த கரையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மீனவ கிராம மக்கள் போராடுகிறார்கள். பல மாதங்கள் பல ஆயிரம் பேர் போராட்ட திடலில் வரிசையில் நின்று கஞ்சி குடித்து போராடியுள்ளனர். பல நாட்கள் தொழில் முடக்கம் செய்துள்ளனர். வருமானம் இழந்துள்ளார்கள். அது, உலக அளவில் அணு உலை தேவையில்லை என்ற கருத்து பிற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அது போல் ஆற்று மணல் கொள்ளைக்குஎதிராக பல ஊர்களில் மக்கள் போராடி வருகிறார்கள். அனைத்து போராட்டங்களுக்கும் நமது போராட்டத்தை முன்மாதிரியாக, நம்பிக்கையளிக்கும் போராட்டமாக மாற்றிக் காட்டுவோம்.

என உரையை நிறைவு செய்தார்.

வெள்ளாறு எங்கள் ஆறு
மைய கலைக்குழு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த புமா இமு, விவிமு தோழர்களின் உற்சாகமான பாடல்கள் மக்களுக்கு உணர்வூட்டிக் கொண்டிருந்தன.

அதிகாரிகளுடன் பேசுவது, போராட்டக் கமிட்டி விவாதிப்பது, ராஜு பேசுவது என நேரம் நீண்டு கொண்டே செல்கையில் மழை கனமாகப் பெய்யத் தொடங்கியது. மக்கள், உடனடியாக, கீழே அமரப் போட்டிருந்த நெகிழி பாயை (சீட்) உயர்த்திப் பிடித்து, தற்காலிகமான டோம் அரைக்கோள வடிவிலான விவாத அரங்கமாக மாற்றினர். ஒரு துளி மழை நீர் கூட உள்ளே சிந்தாமல், அனைத்து மக்களும் உற்சாகமாக உரையை கேட்டனர். பாடல்களை ரசித்தனர். மக்கள் அரசியல் உணர்வு பூர்வமாக திரண்டு விட்டால் எதையும் நினைத்த மாத்திரத்தில் மாற்றியமைக்க முடியும் என்பதற்கு இது சிறந்த சான்று.

அதே போல சமையல் செய்யுமிடத்திலும் சிலர் பெரிய நெகிலி பாயை (சீட்) உயர்த்திப் பிடித்தனர். மழை பெய்யும் உணர்வின்றி சமையலும் விவாதங்களும் நடந்தன. நமது குடையில் காவல்துறையினரும் வந்து மழைக்கு ஒதுங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடையிடையே மைய கலைக்குழு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த புமா இமு, விவிமு தோழர்களின் உற்சாகமான பாடல்கள் மக்களுக்கு உணர்வூட்டிக் கொண்டிருந்தன.

17-dinamani

போலீசின், தாசில்தார் போன்ற உயர் நிர்வாக அதிகாரிகளின் மமதையும், திமிரும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது என்ற உண்மை மக்கள் மனதில் ஆழப் பதியுமளவு தரவுகள் தோழர்களால் தரப்பட்டுக் கொண்டே இருந்தன.

உப்பு விலை ஏறிப் போச்சண்ணே“, “கரும்புத் தோட்டத்திலே” என்ற பல பாடல்களுக்கு மக்கள் கைதட்டியதோடு, தன்னெழுச்சியாக வாயசைத்துப் பாடுவதையும் காண முடிந்தது.

இறுதியாக, மக்கள் அனைவரின் ஒப்புதலுடன் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு, ஆவணங்களைப் பற்றிப் பரிசீலிப்பதும், 20-ம் தேதி மக்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்துவதும் என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. மணல் குவாரி மூடப்படும் வரை உறுதியாகப் போராடுவது என்ற மன உறுதியுடன் மக்கள் உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர்.

மதியம் தயாரிக்கப்பட்ட உணவை உண்டு மக்கள் புறப்படும் சமயம் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. மழையில் நனைந்து கொண்டே மக்களும் தோழர்களும் வழக்கறிஞர்களும் புறப்பட்டுச் சென்றனர். மணல் குவாரி நிரந்தரமாக மூடப்படும் என்ற நம்பிக்கை அப்பகுதி விவசாயிகளிடம் உறுதியாக உள்ளது.

vellaru-siege-141214-25

  • கடுமையான உச்சி வெயிலிலும், கடுமையான இரவு பனிக் குளிரிலும், கொட்டும் மழையிலும் கலையாத மக்களின் உறுதியான போராட்டம்தான், “கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் தருகிறோம். உங்களோடு பேசி சுமுக உடன்பாடு எட்டப்பட்ட பின்பே மணல் குவாரியை இயக்குகிறோம்” என மந்திரிச்ச கோழி போல மைக்கு முன்பாக, உணர்ச்சியற்ற மனிதனாய் வருவாய் கோட்டாட்சியரைப் பேச வைத்தது.
  • முதல் நாள் இரவு வரை நடந்த பேச்சு வார்த்தையில், “மணல் அள்ளுவதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். மணல் குவாரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அவர்களிடம் தான் நீங்கள் வாங்க வேண்டும். மணல் குவாரியை மூட முடியாது” என எந்திரமாக பணயக் கைதி போல பேசிய வருவாய்க் கோட்டாட்சியரின் குரல் மறுநாள் மாறியதற்குக் காரணம், வெள்ளாற்று கரையோர கிராம மக்களின் போராட்டம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்ததுதான்.
  • என்ன செய்ய முடியும் என ஏங்கிய மக்களின் ஆதங்கத்திற்கு உரிய செயலாக இந்த முற்றுகைப் போராட்டம் அமைந்தது. இரவு சமையலில் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டதும், ஒரே தட்டில் இருவர் சாப்பிட்டதும், சாப்பிட்ட பேப்பர் தட்டைக் கழுவி மீண்டும் சாப்பிட்டதும் சாதி பாராமல், வயது வித்தியாசம் பாராமல், ஆண்-பெண் பாராமல் மணல் கொள்ளையை முறியடிக்க வேண்டும் என உத்வேகம் போற்றுதலுக்குரியதாக, கற்றுக் கொள்ளுவதற்குரியதாக கண் கொள்ளாக் காட்சியாக விளங்கியது.
  • உள்ளூரில் வீடிருந்தும், பல ஏக்கர் நிலமிருந்தும் போராட்டத்திற்கு உண்மையாக வெட்ட வெளியில் ஆற்று மணலிலே பாகுபாடில்லாமல் படுத்துறங்கிய காட்சி எத்தகைய அநீதியையும் எதிர்த்து வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
  • ஒவ்வொரு பேச்சு வார்த்தையின் போதும் காவல் துறையின் அதிகாரத்தையும், வருவாய் கோட்டாட்சியர் மூலம் மணல் கொள்ளையர்களின் சதித் தனத்தையும் முறியடிக்கும் வகையில் அறிவு பூர்வமான வாதங்களை நமது வழக்கறிஞர்கள் அடுக்கிய போது, அதிகார வர்க்கம் அதை எதிர் கொள்ள முடியாமல் புறமுதுகிட்டு ஓடியதை மக்கள் ஆரவாரம் செய்தது அதிகார வர்க்கத்தின் மீது மக்களுக்குள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியது.

போராட்டம் ஆரம்பித்த பல மணி நேரம் ஆன பிறகும் அதிகாரிகள் யாரும் பேச வராத போது கோபமுற்ற முன்னணியாளர்கள் அரசின் கவனத்தை ஈர்க்க உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி மிரட்டலாம், பாதையை வெட்டி இடையூறு ஏற்படுத்தலாம் எனக் கூறிய போது, நாங்கள்

vellaru-siege-141214-04

“உறுதியான, நீடித்த மக்கள் போராட்டம் தான் அரசைப் பணிய வைக்கும், பரபரப்பான செயல்பாடுகளில் அதிகார வர்க்கம் என்றைக்கும் பணியாது, நம்மில் யார் இறந்தாலும் அவர்கள் வருத்தப்படமாட்டார்கள். ஆகவே இன்னும் அதிக மக்களைத் திரட்டுவோம், அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யுங்கள், நீர் வழங்குங்கள், வெயிலுக்குப் பந்தல் அமையுங்கள், இரவு வெளிச்சத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், மக்களைப் பாதுகாக்க, பராமரிக்க உரிய நடவடிக்கை எடுங்கள். ஒரு நாள் போராட்டத்திலேயே அரசு உங்களுடன் பேசும் என எதிர்பார்க்காதீர்கள், அரசு பேசும் வரை நாம் போராடுவோம்” என்பதை விளக்கிச் சொன்னதும், மந்திரக் கோலுக்குக் கட்டுப்பட்ட மனிதர்களாக அனைவரும் செயலில் இறங்கினர்.

  • ஒருவர் வீட்டிலிருந்து, டிஷ் எடுத்து வந்து, இரவுச் செய்திகளை ஒளி-ஒலி பரப்பியதும், இரவு முழுவதும் செய்திகளையும், நகைச்சுவை காட்சிகளையும் தூங்காமல் பார்த்து ரசித்ததுடன் தூங்கிய மக்களை பாதுகாத்ததும் மறக்க முடியாத நினைவுகள்.
  • முதல் நாள் உச்சி வெயிலில் குடிநீர் தடைபட்டு நா வறண்ட போது அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் விளைந்த கரும்புகளை உடைத்து பலருக்கு உணவாகக் கொடுத்ததும், அதில் சிலவற்றை பெண் காவலர்களுக்கு கொடுத்ததும், பலமைல் தூரம் ஆற்றில் பயணித்து அனைவருக்கும் தேநீர் விற்ற அந்தத் தொழிலாளியும், கார் போகவே சிரமப்படும் ஆற்றுப் பாதையில் சைக்கிளைத் தள்ளி அந்த உச்சி வெயிலில் ஒரு தொழிலாளி ஐஸ் விற்றதும் மறக்க முடியாத நிகழ்வுகள்.
  • 70 வயதைக் கடந்த ஒரு முதிய பெண்மணி சிவத் தொண்டில் ஈடுபாடுடையவர், பல ஏக்கருக்கு சொந்தக்காரர், போராட்டத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னணியில் நின்றதுடன், போராடியவர்களில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் வீட்டிற்கழைத்து குளிக்க வைத்து, உணவு கொடுத்து, காபி, பிஸ்கட், தின்பண்டங்கள் என சளைக்காமல் கொடுத்தார். “ஆற்று மணல் கொள்ளைக்கு எதிரான எல்லா போராட்டங்களுக்கும் நான் வருவேன், ஜெயிலுக்கும் வருவேன், வெள்ளாற்றைக் காக்க இரவு முழுவதும் ஆற்றில் படுத்துப் போராடும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறியது உண்மையான அன்பின், போராட்ட உணர்வின் வெளிப்பாடாக அமைந்தது.

vellaru-siege-141214-02

இந்தப் போராட்டம் வெள்ளாற்று பகுதி கிராம மக்களிடையே மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • நாமா இரண்டு நாட்கள் கடும் வெயில், குளிர், கொட்டும் மழை என போராடினோம்!
  • நூற்றுக்கணக்கான போலீசார் அணிவகுதது எதிரே நிற்க நாமா போராடினோம்!
  • நாமா அது என்று வியக்கும் வண்ணம் உலகம் முழுவதும் பார்க்கும்படி கார்மாங்குடி மணல் குவாரி போராட்டம் தொலைக்காட்சியில் வந்தது !
  • அனைத்துப் பத்திரிகைகளிலும் அரைப்பக்க செய்தி புகைப்படத்துடன் வெளியாகின. மணல் பள்ளத்தாக்கில் மக்கள் வெள்ளமாக நாமா அது!

என போராட்ட வரலாற்று கண்ணாடிகளில் தம்மைப் பார்க்க மக்கள் கற்றுக் கொண்டார்கள். கற்றுக் கொடுத்திருக்கிறோம்

அந்த பிம்பங்கள் அதிகரிக்கும் போது அதிகார வர்க்கத்திற்கு போராடும் மக்கள் உத்தரவு போடுவார்கள். அந்த நாளை நோக்கி நாங்கள் மட்டுமல்ல அனைவரும் பயணிப்பார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம்
மனித உரிமை பாது காப்பு மையம்
கடலூர் மாவட்டம்
தொடர்பு 9360061121

முந்தைய பதிவுகள்

_____________________

விழிப்போடு மீண்டும் போராட ….

கழுத்தும் மார்பும் அறுபட்டு
வல்லுறவுக்கு ஆளாகிக் கிடக்கிறது
வெள்ளாறு….

மணற் கொள்ளையரின்
லாபவெறி நகங்கள் கிழித்து
மணற்சதை தாண்டி
களிமண்வரை ரத்தம் கசிகிறது

நெல்லுக்கும் கரும்புக்கும்
எங்கள் தொண்டைக்கும்
உயிர்நீரை ஊட்டும்
நதியின் மார்புகள்
கிழிக்கப்பட்டுக் கிடக்கின்றன

ஆற்றோடும் மணலோடும்
எமக்கிருந்த உறவறுந்து
கரையில் நிற்கிறோம்

ஆழப்படுத்தி ஆழப்படுத்தி
பெருமூச்சை மட்டுமே இறைக்கின்றன
எங்கள் இறவை எந்திரங்கள்

இரவிலும் பகலிலும்
மணலை அள்ளிச்செல்லும் டாரஸ்ஸுகள்
எங்கள் நெஞ்சில்தான்
தினமும் ஏறிப்போகின்றன

ஆற்றைச் சுரண்டி
ஏற்றிச் செல்லும் லாரிகள்
வாழ்வையும் எங்கள் வழியையுங்கூட
சிதைத்துவிட்டன.

நாய்கள்கூட நடக்காத
பவழங்குடி ரோட்டில்
நாங்கள் தினமும் சென்று ஒடிகிறோம்

இன்று முடிவாய்…

காக்கியும் வெள்ளையுமாய்
மணற்கொள்ளையரின் அறனாய் அந்த
மதிற்சுவரோடு மோதுவதென்று
ஆற்றுக்குள் இறங்கிய பாதைகளை
அடைத்து நின்றன காக்கி வேலிகள்

மலையின் நிலச்சரிவாய்
மணல் குவாரிக்குள் இறங்கின
எங்கள் கிராமங்கள் !

மணலை விரிப்பாக்கி
இரவை போர்வையாக்கி
ஆற்றை வீடாக்கி தொடர்ந்தது போராட்டம்

குவாரிகள் மூடப்பட்ட
இரண்டு நாளாய்
உறங்குகிறோம்…

விழிப்போடு மீண்டும் போராட…

– கோவன்

பார்ப்பனர் நிலை – ஒரு பூர்வாசிரம பார்ப்பனனின் கடிதம்

112
மாதிரிப் படம்
மாதிரிப் படம்

வினவு தோழர்களுக்கு வணக்கம்,

ஜெயமோகனின் ஒடுக்கப்படுகிறார்களா பார்ப்பனர்கள் (பிராமணர்கள்) எனும் கட்டுரையை படிக்க நேர்ந்ததின் விளைவே இம்மடல். இருப்பினும் இதற்கு மூலமான பத்ரியின் கட்டுரைக்கு குருஜீயே விளக்கமளித்த பின் சிஷ்யரின் வார்த்தையை படித்து துன்புறவேண்டுமா என நினைத்து படிக்கவில்லை.

ஜெயமோகனின் அகஒளி தரிசனத்திற்க்கும் சமூக எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளி பாரியது. பல்வேறு விசயங்களில் அபத்தமாக எதையாவது உளறி கொட்டி விட்டு தனது மொழிநடையின் மூலம் அதை பூசிச்செல்வது அவரது தந்திரம். பிறகு அழுத்தி கேட்டால் நான் ஆய்வாளன் இல்லை, அது எனது பணியும் கிடையாது என ஒரே போடாக போட்டுவிடுவார்.

இந்த விசயத்தை பொறுத்தவரை பூர்வாசிரமத்தில் பார்ப்பனனாக இருந்த எனக்கு இதைப்பற்றி பேச அதிகம் தகுதி உள்ளதாகவே நினைக்கிறேன். பிறப்பில் எனது பங்கு எதுவும் இல்லாவிட்டாலும், பின்பு நான் கொண்டிருந்த தவறான நம்பிக்கைகளுக்காக இப்போதும் குற்ற உணர்ச்சி கொள்கிறேன். குற்ற உணர்ச்சியை சகித்து கொண்டு ஜெயமோகனுக்காக என் ரிஷிமூலத்தை கொஞ்சம் கிளறி அளிக்கலாம் என நினைக்கிறேன்.

என் வார்த்தைகள் எதுவும் அசீரீரியாய் உள்ளிருந்து ஒலித்தவை அல்ல. என் வாழ்வில் எனக்கே எனக்கேயுமாகவும், என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஏற்பட்ட அனுபவங்கள்.

பார்ப்பனர்களும் சமூக அவமதிப்பும் எனும் இரண்டாவது தலைப்புக்கு முதலில் செல்லலாம் என நினைக்கிறேன். ஆயிரம்தான் உதாரணங்கள் காட்டினாலும், சொந்த அனுபவத்தின் வாயிலாக உண்மையை அடைவது போல ஆகுமா? ஆர்.எஸ்.எஸ் -ன் உண்மை முகத்தை ஹிந்து ஆன்மீக கண்காட்சி வழியாக அறிந்தாரே ஓர் இளைஞர், அதுபோல என் சொந்த வாழ்க்கையின் வழியாகவே ஜெயமோகனின் அபத்தங்களை பார்க்கலாம் என நினைக்கிறேன். முதலில் நம்பகதன்மைக்காக என்னுடைய சாதியை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

நான் ­­­­­_________ எனும் ஊரில் மாத்வா எனப்படும் கன்னட பார்ப்பன வகுப்பில் பிறந்தவன். சுமார் இரண்டு லட்சம் பேர் கொண்ட ஊரில் மூன்றே குடும்பங்களை கொண்ட ஆகச்சிறுபான்மையிலும் சிறுபான்மை பார்ப்பன சாதி எங்களுடையது.

ஒரு காலத்தில் பல கிராமங்களை சொத்தாக கொண்ட உத்ராதி மடமும், பல நூறு பார்ப்பன குடும்பங்களையும் கொண்ட ஊரில் மற்றவர் அனைவரும் உயர்ந்த வேலை, வெளிநாட்டு வாழ்க்கை என அமர்ந்துவிட கடைசியாக மிஞ்சியது எங்கள் மூவர் குடும்பங்களும் உத்ராதி மடமும் மட்டுமே.

எங்களை தவிர விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் அய்யர், அய்யங்கார் குடும்பங்களும் இங்குள்ளது. என்னதான் பார்ப்பனர்களாய் இருந்தாலும் எங்கள் சாதிகளுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. வருடந்தோறும் நடக்கும் மடத்தின் ஆராதனை விழாக்களின் போது எங்கள் சாதியினர் உணவின் போது முன்வரிசையில் அமர அய்யர், அய்யங்கார்களுக்கு பின் வரிசையில் இடம் கிடைக்கும். இதனாலேயே அந்த சாதியினரில் பலர் மடத்தின் விழாவின் போது வருவதில்லை. நாங்களும் அவர்களின் மடத்தின் விழாக்களுக்கு செல்வதில்லை.

இந்த உணவருந்தும் நிகழ்ச்சியும் பார்ப்பனர்களுக்கானது மட்டுமே, இதில் மற்ற சாதியினர் கலந்து கொள்ள முடியாது. அது மட்டுமின்றி பார்ப்பனர்கள் உணவருந்தும்பொழுது மற்றவர்கள் பார்த்தால் தீட்டாகிவிடுமென்று கதவுகளெல்லாம் அடைக்கப்பட்டுவிடும். இது இன்றும் நடைமுறையில் தொடர்கிறது. இதை கண்டு _________யில் யாரும் பொங்கி எழுவதில்லை, என்ன இது பார்ப்பனர்களுக்கு மட்டும் தனி பந்தியா என்று…

guiltinessஉணவு அருந்தி முடித்தபின் கர்நாடகாவில் உள்ளது போல் எச்சில் இலையில் உருளும் நிகழ்ச்சியும் நடைபெறும், என்ன வித்தியாசமென்றால் இங்கே உணவருந்துவதும் பார்ப்பனர்கள் உருளுவதும் பார்ப்பனர்கள். உருண்டு முடித்த பின் எச்சில் இலைகள் எடுக்கப்பட்டு தனியாக புதைக்கபட்டுவிடும். காரணம் பார்ப்பனர் உருண்ட இலைகள் புனிதமானவையல்லவா, அவை பிற இலைகளுடன் கலந்து அசுத்தமாகலாமா?

இதே போன்று திருவரங்கத்தில் உள்ள இராகவேந்தர் மடத்திலும் ஆராதனை சமயத்தில் வெளியே சூத்திரர்க்கு ஒரு பந்தியும், பிராமணர்களுக்கு ஒரு பந்தியும் நடக்கும். இதன் தலைமை மடமான மந்த்ராலயத்தில் பிராமணர்களுக்கான பந்தியில் உணவருந்த சென்று அவமான பட்ட கதையை அரவிந்த் மாளகத்தி தனது கவர்மெண்ட் பிராமணன் நூலில் எழுதியிருப்பார். இதையெல்லாம் கண்டு யாரும் கொதித்து கொந்தளித்து தமிழகத்தில் மாத்வர்கள் எனப்படும் சாதியே இருக்க கூடாதென்று அழித்தொழிப்பு நடவடிக்கையில் இறங்கி விட்டார்களா? இல்லையே! எப்போதும் போல் அவர்கள் தீண்டாமையை கடைபிடித்துதான் வருகிறார்கள். இத்தனைக்கும் இது மற்ற பார்ப்பன சாதிகளை போல அதிகார வர்க்கத்தில் அதிகம் பங்கெடுக்காத பார்ப்பன சாதி.

பார்ப்பனன் என்ற ஒற்றை காரணத்துக்காக எந்த அவமதிப்பையும், ஒதுக்கலையும் நானும் என் குடும்பமும் பெற்றதில்லை. இன்றும் கூட சாமி என்றே எனது தந்தை ஊர்மக்கள் அனைவராலும் அழைக்கப்படுகிறார். இத்தனைக்கும் என் தந்தை ஆரம்ப நாட்களில் பலகார கடையும் அது நொடித்த பின் பெரும்பாலான நாட்களில் சிறுகடைகளிலும் பணி புரிந்தவர். பார்ப்பன சிறுவன் என்பதற்க்காக தனிமைபடுத்த பட்டதோ, கிண்டல் செய்யப்பட்டதோ, ஒதுக்கப்பட்டதோ இல்லை.

மாறாக நரசிம்மன் எனும் இன்னொரு பார்ப்பன சிறுவனின் வீட்டிற்க்கு சென்ற பொழுதுதான் தனி அலுமினிய குவளையில் நீர் கொடுக்கப்பட்டு அவமானப்படுத்த பட்டேன். ஆச்சாரமான அவர்கள் வீட்டில் யார் வந்தாலும் தனிக்குவளை!

மற்ற சிறுவர்களிடமிருந்து பார்ப்பனன் என்ற காரணத்தால் ‘ஒதுக்கப்பட்ட’ சுவையான சம்பவமும் ஒன்று உண்டு. நான்காவது படிக்கும் பொழுது ‘கெட்ட’ வார்த்தை பேசும் குழுவொன்று இருந்தது. அந்த குழுவில் இடம்பெற்று கெட்டவார்த்தைகள் பேச வேண்டுமென்பது என் அவா!

ஆனால்,

“நீயெல்லாம் அய்யருடா, நீ கெட்ட வார்த்தை பேசக்கூடாதுடா” என்று ஒதுக்கப்பட்டேன்.

“ஏண்டா அய்யருக்கு மட்டும் ரெண்டு ________ இருக்கு” என கூறி வலுக்கட்டாயமாக பல கெட்டவார்த்தைகள் பேசி அந்த குழுவுடன் சேர்ந்தது தனிக்கதை. இன்றும் என் பள்ளிக்கால நண்பர்களின் மத்தியில் சிரிப்புடன் நினைவுக்கூறப்படும் கதை இது. அந்த வயதில் பார்ப்பனர்கள் மட்டும் ஏன் தனிப்பட்ட முறையில் நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு புரியவில்லை.

எனது தம்பியின் வாழ்வில் இது போன்று வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது. சம்பவம் என்னமோ வேடிக்கையானதாக இருந்தாலும் அதன் முடிவு அத்தனை வேடிக்கையாக இருக்கவில்லை. இது அவன் ஒன்றோ அல்லது இரண்டோ படிக்கும் பொழுது நடந்தது. அவனுடைய சக வகுப்பு தோழன் ஒருவன் வலுக்கட்டாயமாக மீன் குழம்பை எனது தம்பிக்கு ஊட்டிவிட முயன்று, உதடெல்லாம் மீன் குழம்பாகி வீட்டில் வந்து தம்பி அழத்தொடங்க என் அம்மா பள்ளிக்கு சென்று புகார் அளித்தார்.

பின்னர்தான் நடந்தது கொடுமை. ஊட்டி விட்ட பையனை வெளுத்து வாங்கிய வாத்தியார், பின்னர் அந்த சிறுவனை என் தம்பியின் காலிலும் விழச்செய்தார். சிறு பிள்ளையின் விளையாட்டுத்தனமான சேட்டைகளுக்கு இந்த தண்டனைகள் எந்த விதத்தில் சரி?

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

பார்ப்பனர்களின் ஆச்சாரத்திற்கு ஆபத்து வரும்போது ஏற்படுத்தியவர்களுக்குத்தான் கடும் தண்டனை. பள்ளிகளில் தலித் மாணவர்களை கழிப்பறை கழுவச் சொல்வதிலிருந்து, குப்பையை திண்ண சொல்வது வரை பல்வேறு கொடுமைகள் அரங்கேறும் காலத்தில்,அரிதினும் அரிதாகவாவது ஊளைச்சாம்பார் சத்தம் உண்மையில் கேட்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.

பள்ளி கல்லூரி காலங்கள் தொடங்கி யாரும் என்னை அசைவம் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தியதில்லை. வளைகுடா நாட்டில் நான் பணிபுரிந்த பொழுது அங்குள்ள அராபியர்களுடன் அவர்கள் வீட்டில் சேர்ந்து உணவருந்தும்போது கூட அவர்கள் என்னை அசைவம் சாப்பிடுமாறு கட்டாயபடுத்தியதில்லை.

நிலப்பிரச்சனை பார்ப்பனர்களுக்கு மட்டுமானதா? எளியவர்களின் சாதாரண நிலங்கள் எங்கும் பிடுங்கப்படுகின்றன. நில அபகரிப்பு புகார் கொடுக்க வரிசையில் நின்றவர் எத்தனை பேர்?

வன்னிய பெண்களை கூலிங்கிளாசும், ஜீன்சும் போட்டு மயக்குறாங்க என்று இராமதாசு சொன்னது போல, தமிழகத்தின் அத்தனை பொறுக்கிகளும் பார்ப்பன பெண்களாக பார்த்து வம்பு செய்கிறார்கள் என்று ஜெயமோகன் சொல்கிறார். சாலையில் தனியாக நடந்து செல்லும் அத்தனை சாதி,மத பெண்களும் ஆணாதிக்க பொறுக்கிகளிடம் அனுபவிக்கும் துன்பத்தை பார்ப்பன பெண்களுக்கு மட்டும் மடை மாற்றி விட இலக்கிய குருஜீ ஒருவராலேயே முடியும்.

பெண்கள் மீதான் ஆண்களின் இத்தகைய வக்கிரங்கள் நிகழும் இடங்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. அலுவலகம், பேருந்து நிலையம், முகநூல் தொடங்கி ஏன் இலக்கிய உலகம் (சாரு நிவேதிதாவை மனதில் கொள்க) வரை இது தொடர்கிறது. இதையெல்லாம் தனிப்பட்ட சாதியின் பிரச்சனையாக மாற்ற தனித்திறமை வேண்டும்.

லவ் ஜிகாத் புகழ் ஆர்.எஸ்.எஸ்-இடம் ஆரம்ப கல்வி பயின்றவராகையால் ஜெயமோகனக்கு இது எளிதாகவே வருகிறது. சாதி என்பது என் அளவில் அரசியல்வாதிகளுக்கும், பெருந்தொழிலதிபர்களுக்கும் தங்களின் அதிகாரத்தையும், சொத்துக்களையும் பெருக்கி பாதுகாத்து கொள்ள ஒரு வழி அல்லது கருவி. இதில் மயங்கி பலியாகும் அடித்தட்டு வர்க்கத்திற்க்கு எந்த ஒரு பலனும் இதில் இல்லை.

இராமதாசோ, வைகுண்டராஜனோ அல்லது டிவிஎஸ் முதலாளியோ அனைவருக்கும் சாதி என்பது ஒரு கேடயம்தான். சென்னை பாடியில் உள்ள டிவிஎஸ்ல் பணி புரிந்ததின் அடிப்படையிலேயெ சொல்கிறேன், பார்ப்பன தொழிலாளர்களுக்கும் பார்ப்பனராய் இருப்பதால் பயன் ஒன்றும் இல்லை.

பார்ப்பனர்கள் வெளியேறுகிறார்களா?

ஆமாம், அவங்க ஊரை காலி பண்ணி போய் ரொம்ப காலமாச்சு. பொழைக்க தெரியாத வழியில்லாத சில பேருதான் ஊர்ல இருக்காங்க. பீகார்ல இருந்தும் உ.பியில இருந்தும் ஏதோ பொழைக்க முடியமா தமிழ்நாட்டுக்கு வந்த மாதிரியில்ல சொல்றாரு அவரு. போனவன் எல்லாம் அமெரிக்கா, ஜெர்மன், ஜப்பான்னு நல்லாதானே இருக்கான், ஏதோ அஞ்சுக்கும் பத்துக்கும் கல்லு உடைக்குற மாதிரியில்ல இருக்கு ஜெயமோகன் சொல்றது. நான் கூட வளைகுடாவுலயும் இப்போ வேறு ஒரு வெளிநாட்டிலும் இருக்கேன்.

இதுக்கும் காரணம் திராவிடச்சதியா? இன்றைய உலகமயமாக்கல் இப்படித்தான் தொழிலாளர்களோட வாழ்வை சூறையாடுது, இதுல பார்ப்பனர்கள் படுற பாடு ரொம்பவும் குறைவுதான். எனக்கு தெரிஞ்சு எங்க ஊர்ல இருந்து மற்ற சாதி மக்கள் நிறைய பேரு கேரளாவுக்கும் குஜராத்துக்கும் போறாங்க கூலி வேலைக்கு. சுகந்திரமடையுறதுக்கு முன்னாடி தென் ஆப்ரிக்காவுக்கும், மொரிஷியசுக்கும் கூட தமிழன் அடிமையா போனான். ஒருத்தன் பொழைக்கவே வழியில்லாம போறான், இன்னொருத்தன் தன் வசதி வாய்ப்புகளை பெருக்கிக்க போறான். இவங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் ஒன்னுனு சொன்னா எதால சிரிக்கனு தெரியலை.

பண்பாட்டு அடையாளம்

எங்கள் குடும்பத்திற்க்கு அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்க ஆரம்பித்ததே இது போன்ற சிறப்பு பூசைகள் செய்யும் பொழுதுதான். என் அம்மாவின் பூசையினால் மாமி ரொம்ப பக்தியானவுங்க என்று எங்கள் தெரு முழுவதும் பெயர் வேறு. அந்த மரியாதையும் பெயரும் மொத்தமும் சரிந்தது, நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பொழுதுதான்.

தமிழகம் தன்னுடைய பெரியாரிய அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறதோ என அச்சமடையவேண்டிய காலம் இது. பிரதோசம் என்றால் என்னவென்ற தெரியாத காலம் ஒன்று இருந்தது, இன்றோ எல்லா சிவன் கோவில்களிலும் கூட்டம் அலை மோதுகிறது. அட்சய திரிதியை தொடங்கி பல்வேறு பார்ப்பன பண்பாட்டு புரட்டுகள் மக்களின் பர்சை சூறையாடி கொண்டிருக்கிற காலகட்டத்தில் எங்கே ஐயா பார்ப்பனியம் தன் பண்பாட்டு அடையாளத்தை இழந்தது?

குமுதம், விகடன் தொடங்கி தினமலர்,தினத்தந்தி வரை ஆன்மிக இதழ் போட்டு பக்தியை காசாக்கும் காலமிது. பார்ப்பனிய பண்பாட்டையே அனைவரின் பண்பாடாய் நிறுத்தும் இவ்விதழ்களின் காலத்தில் ஸ்ரீராம நவமியை பார்த்து சிரிப்பது யார்? ஒருவேளை அவரது நாத்திக நண்பர் கமலஹாசனாய் இருக்குமோ!

பார்ப்பனர்களும் அதிகாரமும்

selfசட்ட சபையிலேயே தான் ஒரு பார்ப்பனத்தி என அறிவித்து கொண்ட தமிழகம் கண்ட ஒரே இந்து முதல்வரென சங்க பரிவாரங்களால் போற்றப்படும் ஜெயாவின் காலத்திலா இப்படி ஒரு அசட்டுத்தனமான ஆதங்கம்? தமிழ்நாட்டுக்கு ஒரு மாமி டெல்லிக்கு சுப்பரமணிய சாமி. மத்தியிலும் மாநிலத்திலும் பார்ப்பனியத்தின் ஆட்சிதானே பிறகென்ன மீண்டும் அதிகாரமில்லை என்ற ஒப்பாரி!

அருந்ததிராயின் சமீபத்திய கட்டுரையான இந்தியாவின் இழிவு கட்டுரையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு குஷ்வந்சிங் எழுதியதை மேற்கோள் காட்டியிருப்பார். நண்பர்களையும் தோழர்களையும் மீண்டுமொருமுறை நிதானமாக இக்கட்டுரையை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன். மேலும் நீதித்துறையிலும் ஊடகங்களிலும் பார்ப்பனர்களின் செல்வாக்கு எப்படி மேலோங்கி இருக்கிறது என்று விளக்கியிருப்பார். அதிகாரத்திலும் உயர்பொறுப்பிலும் பார்ப்பனர்கள் அமர்ந்திருக்கும் உண்மை இவ்வாறிருக்க அதிகாரத்திலிருந்து மெல்ல மெல்ல துரத்தப்படுகிறோம் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

வினவை தொடர்ச்சியாக படித்து வரும் வாசகன் என்ற முறையிலே கடைசியாக சொல்வது இதுதான், பார்ப்பனர்களை மட்டுமல்ல தேவர் வன்னியர் உள்ளிட்ட இடை நிலை சாதிகளைகளை எதிர்த்தும் அவர்களின் வெறியாட்டத்தின் போது பகிரங்கமாக சாதியின் பெயரை சொல்லி கண்டித்தும் போராடுவது புரட்சிகர அமைப்புகள்தான்.முத்துராமலிங்கம் மீதான விமரிசனம் தொடங்கி தர்மபுரி இளவரசன் முதல் உசிலம்பட்டி விமலாதேவி வரை பல கட்டுரைகள் வினவில் உள்ளன.

திருவையாறு போராட்டங்களை குறித்து கீழைக்காற்று நூலான இசை,போதை, பொழுதுபோக்கு- நூலில் விரிவான கட்டுரைகள் உள்ளன. அறிவு நாணயமிருந்தால் ஜெயமோகன் அதற்க்கு முதலில் பதில் சொல்லட்டும். தமிழை நீச மொழியாக்கி மேடை ஏறவிடாத திருவையாறும், கன்னட ஒக்கலிக்கர் மாநாடும் ஒன்றா?

கலைஞருக்கும்,செயலலிதாவுக்கும்,ராகுல்காந்திக்கும் கருப்பு கொடி காட்டி அடியும் உதையும் பெற்று சிறையும் சென்றவர்கள் எம் தோழர்கள். மொழி,இன வெறியை எதிர்த்து வர்க்க அடிப்படையில் வட மாநில தொழிலாளர்களை ஆதரிப்பதும் எம் தோழர்கள். இவை அனைத்திற்க்கும் ஆதாரம் வினவிலேயே உள்ளது, படித்து பார்த்து பின்னர் வழக்கம் போலதன் அகஒளி தரிசனத்தின் வாயிலாக இந்தியாவை தகர்க்க சீன சதி என ஜெயமோகன் தாரளமாய் அவதூறு எழுப்பலாம்.

தோழமையுடன்

_______________

(பெயர், ஊர் அடையாளங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன – வினவு)

தற்குறிகள் நேர்மையற்றவர்களாக மாறியது ஏன் ?

4

சொத்துக் குவிப்பு வழக்கு : தண்டனை ஜெயலலிதாவுக்கா? தமிழ்ச் சமுதாயத்துக்கா?

துரையில் நடைபெற்ற மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரைக் கிளையின் 11-வது ஆண்டு விழாவில் “சொத்துக் குவிப்பு வழக்கு : தண்டனை ஜெயலலிதாவுக்கா? தமிழ்ச் சமுதாயத்துக்கா?” என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன்  ஆற்றிய உரை.

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததும் என்ன நடந்தது என நாடே பார்த்தது. ஒரு கிரிமினலைத் தண்டித்தால், தண்டிக்கப்பட்ட கிரிமினலுக்காக தமிழ்ச் ‘சமூகமே’ அழுதது ஏன்?

இந்திய சமூகத்தில் சிவில் உரிமைகள்

அம்பேத்கர்
“நாம் அரசியலில் ஜனநாயகமும், சமூகத்தில் ஜனநாயக மறுப்பும் கொண்டிருக்கிறோம்”

இந்தியாவில் சிவில் உரிமை பற்றிய கோரிக்கை அவசர நிலைக்குப் பிறகு எழுந்தது; அரசு மனித உரிமைகளை மீறும் போது அதைக் காப்பதற்காகத் தோன்றியது.

அம்பேத்கர் “நாம் அரசியலில் ஜனநாயகமும், சமூகத்தில் ஜனநாயக மறுப்பும் கொண்டிருக்கிறோம்” என்று நமது இந்திய சமூதாயத்தின் முரண்பட்ட நிலையைச் சொன்னார். நமது ஜனநாயகம் வெள்ளைக்காரன் கொடுத்த ஜனநாயகம்; சுதந்திரத்திற்காக, ஜனநாயகத்திற்காக நமது மக்கள் போராடியதால் நம்முடைய ஜனநாயகம் வரவில்லை; ஆங்கிலேய ஆட்சியாளர்கள் காங்கிரசுகாரர்கள் முதல் ஜஸ்டிஸ் கட்சியினர் வரை பதவிகளை உருவாக்கிக் கொடுத்து உருவானது.

நமது சமூகம் சாதி ஆதிக்கமும், நிலவுடமை ஆதிக்கமும் கொண்டது. சாதி அமைப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது. நமது நாட்டில் தீண்டாமைச் சட்டங்கள் இருந்தாலும், அரசு தீண்டாமையைப் பாதுகாக்கும் அரசாக இருக்கிறது. அதனால்தான் நாம் ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டியதிருக்கிறது. ஒரே நேரத்தில் அரசுக்கு எதிராகவும், சமூக அமைப்புக்கு எதிராகவும் போராட வேண்டியதிருக்கிறது.

அழுகி நாறி விட்ட அரசமைப்பு

இன்று அதிகார வர்க்கம், நீதித் துறை உள்ளிட்ட அரசமைப்பு மதிப்பிழந்து கடைத்தேற்ற முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது. இன்றைய அரசமைப்பு அதற்கு ஆள்வதற்கு தகுதி இருப்பதால் நிலவவில்லை; மக்கள் அதை நொறுக்காததால் தொடர்கிறது. எல்லாத் துறைகளும் அழுகி நாறிவிட்டன; காலாவதி ஆகிவிட்டன.

நீதித்துறை லஞ்ச ஊழல் நிறைந்து அழுகி நாறிவிட்டது. பிரசாந் பூசணின் தந்தை சாந்திபூஷண் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் 8 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்கத் தயாராக இருந்தாலும் உச்ச நீதிமன்றம் வழக்குப்போட மறுக்கிறது.

இந்த அரசமைப்பு முடை நாற்றம் அடிப்பதன் அடையாளம் தான் ஜெயா மீது அது காட்டும் விசுவாசம்.

ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக வாதாடிய ஆச்சாரியா நூல் எழுதியிருக்கிறார். அதில் தன்னை மிரட்டினார்கள் எனப் பச்சையாக எழுதியிருக்கிறார். மிரட்டல், பொய் வழக்கு என அடுத்தடுத்து மிரட்டியதாகச் சொல்கிறார். ஆனால் எவரும் அதைப்பற்றிக் கேள்வி எழுப்பவில்லை.

சுப்ரதா ராய்
சகாரா முதலாளி சுப்ரதாராய் இருபத்தையாயிரம் கோடி திருடிவிட்டு திகார் ஜெயிலில் இருக்கிறார்.

வருமானவரி வழக்கில் ஜெயாவிற்காக நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் நடைபெறுகிறது. இவற்றைத் தட்டிக் கேட்காமல் இருப்பதால் நாம் அனுபவிக்கும் தண்டனை ஏராளம். ஜெயா என்ற கிரிமினல் படத்தை அரசு அலுவலகங்கள் அனைத்திலும் மாட்டி வைத்திருக்கிறார்கள். அதை எடுக்க முடியவில்லை. அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது நீதிமன்றம். ஏன் உத்திரவிடவில்லை?

ஜெயா அடைக்கப்பட்ட பரப்பன அக்கிரகாரா சிறையில் அவருக்கு குளுகுளு வசதி செய்து கொடுக்கப்பட்டது எப்படி?

சகாரா முதலாளி சுப்ரதாராய் இருபத்தையாயிரம் கோடி திருடிவிட்டு திகார் ஜெயிலில் இருக்கிறார். மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பிக்கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. “சொத்துக்களை விற்றுக்கட்ட வேண்டும்” என்றார் ராய். அதற்காக திகார் சிறைக்கு உள்ளேயே தனி அறை கட்டி இணைய வசதியுடன் அலுவலகம் வைக்க அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம்.

கர்நாடகத்தில் ரெட்டி பிரதர்ஸ் ஜெயிலில் அப்படித்தான் இருந்தார்கள். இன்னும் கொஞ்ச நாளில் ஜெயிலில் நட்சத்திர விடுதிபோல் சொகுசு அறைகள் வந்தாலும் வரும். அதற்கான வாய்ப்பு இருக்கிறது.

டான்சி நிலம் முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றம் என்ன சொன்னது? அரசு நன்னடத்தை விதி மீறல் தான்; குற்றமில்லை என்றது.

சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்கா 2 ஜி குற்றவாளிகளைச் சந்தித்துள்ளார் என்று அவரை பொறுப்பை விட்டு விலகச் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘மக்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது. ஆகையால் விலகிக் கொள்’ என்று தேவநாதனை விலகிக் கொள்ளச் சொன்னது போல, சங்கராச்சாரியை விலகிக்கொள்ளச் சொன்னது போல சின்காவையும் சொல்லியிருக்கிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவுக்கு உடந்தையாக நீதித்துறை

உச்ச நீதிமன்றம்17 ஆண்டுகளாக நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் 170 முறை வாய்தா வாங்கியிருக்கிறது ஜெயலலிதா கும்பல். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தான் ஜெயாவைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

  • கர்நாடக உயர்நீதி மன்றம் ஜெயா கும்பலை கடுமையாக எச்சரித்து பிணை வழங்க மறுத்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் 2 மாதத்திற்குள் மேல்முறையீடு செய்துவிடுவதாக நாரிமன் சொல்ல 3 மாதத்திற்குள் செய்யுங்கள் என்று சலுகை காட்டி ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
  • கர்நாடக உயர் நீதிமன்றம் ஊழல், மனித உரிமை மீறல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை வழிகாட்டியாகக் கொண்டு தான் பிணை மறுத்தது. ஆனால் இதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் சர்வசாதாரணமாக பிணை வழங்குகிறார் தலைமை நீதிபதி தத்து. அப்பீல் பண்ணச் சொல்லி வழக்கை முடித்துக் கொள்ள ஏற்பாடு செய்து தருகிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
  • ஜெயாவுக்கு ஆதரவாக ஜாமீன் கோரி வழக்கு நடத்திய நாரிமன் தி.மு.க அரசு சார்பாக ஜெயாவுக்கு எதிராக வழக்கு நடத்தியவர். இது வழக்கறிஞர்களின் வழிகாட்டு நெறிமுறை மரபுகளுக்கு முரணானது.
  • டிராபிக் ராமசாமி, நாரிமன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். காரணம் நாரிமன் மகன் ரோகிண்டன் நாரிமன் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். நெருக்கமான உறவினர்கள் நீதிபதியாக இருக்கும் இடத்தில் வழக்கு நடத்தக் கூடாது என்று மரபு உள்ளது. பாலி நாரிமன் அங்கே வழக்கு நடத்தியது தவறு என நீதிபதி சந்துரு சொல்கிறார்.

தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை

ஜெயா கைது, காஞ்நிபுரம் காட்சிகள் (2)
தமிழன் எனச் சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது.

ஜெயா தண்டிக்கப்பட்டது குறித்து எல்லா ஊடகங்களும், ‘ஏதோ தப்பு நடந்துவிட்டது. கூடா நட்பினால் வந்த கேடு’ என்பது போல சித்தரித்து இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று ஆலோசனைகளும் வழங்கினார்கள். காரணம் எல்லா ஊடகங்களும் முதலாளிகள் வசம் இருக்கின்றன.

கொள்ளை அடித்து தண்டிக்கப்பட்ட ஜெயாவிற்காகப் பால்குடம், மொட்டை அடித்தல், யாகம், ஹோமம் என பரிகாரம் செய்கிறார்கள். என்ன இது மழுங்கத்தனம். தமிழன் எனச் சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருக்கிறது. தமிழகத்திற்கு இந்த இழிநிலை ஏன் ஏற்பட்டது? அதை குஜராத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

குஜராத் காந்தி பிறந்த ஊர், வணிகம் செய்பவர்கள் அதிகம். நல்ல உணவு உண்பது, ஷேர் மார்க்கெட் இது தான் அவர்களது அன்றாட வாழ்க்கை நடைமுறை. 2002-ல் நடந்த கலவரத்தில் முசுலீம்களைக் கொலை செய்ததும், கொள்ளையில் ஈடுபட்டதும் பக்கத்து வீட்டு இந்துக்கள் தான். நெருக்கமாக பழகியவர்களே அவர்களை அழித்தார்கள் என்பதை முசுலீம்களே சொல்லியிருக்கிறார்கள். காரணம் தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மதவெறிப் போதைக்கு மக்களைத் தயார்ப் படுத்தி இருக்கிறது. அதனால் தான் மோடி மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றார். குஜராத் படுகொலை பற்றி பல ஆதாரங்கள் வெளி வந்தாலும் மோடி மீண்டும் வென்றார்.

அதேதான் தமிழகமும்.  கடந்த காலத்தில் தி.மு.க எம்.ஜி.ஆரை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டது. எம்.ஜி.ஆர் பாமரர்களை வாக்கு வங்கியாக மாற்றினார். 80-களின் இறுதியில் தான் ஜெயா அரசியலுக்கு வந்தார். பல்வேறு நாடகங்களை நடத்தினார். ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் அவரது இறப்பை வைத்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்தார்.

மறுகாலனியாக்கத்தில் ஊழல்படுத்தப்படும் மக்கள்

எல்லாக் கட்சிகளும் உருமாற்றம் அடைந்துவிட்டன. தனியார்மயம் தாராளமயக் கொள்கைக்கான ஆதரவு எந்தக் கட்சியில் இல்லை? கட்சிகளுக்கு இடையில் எதை வைத்து வேறுபடுத்திக் காட்டுவது. சாதி, மற்றும் பணம் கொடுப்பதன் மூலம் தான் அதைக் காட்ட முடியும்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பு.ஜ.தொ.மு தான் பல்வேறு உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் 1 சீட் தான் கிடைத்தது.

ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் மக்களைக் கவர முடியாது. மக்களை எந்த வகையிலாவது ஊழல்படுத்தினால் மட்டும் தான் இந்த ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சங்கம் தேசிய பஞ்சாலை கழக ஆலை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டபோது ஒரு இடம்தான் கிடைத்துள்ளது. பு.ஜ.தொ.மு தான் பல்வேறு உரிமைகளை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் 1 சீட் தான் கிடைத்தது. காரணம் ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் வீட்டுக்குப் போய் அரிசி மூடை, 500 ரூபாய் பணம் தந்துள்ளார்கள்.

பழைய காலனியாதிக்கத்தின் போது மக்கள் முட்டாளாக, தற்குறியாக இருந்தார்கள். ஆனால் மறுகாலனியாக்கச் சூழலில் மக்களை ஊழல்படுத்தி நேர்மையற்றவர்களாக மாற்றிவிட்டார்கள்.

பழைய காலனியாதிக்கத்தில் கொலை செய்வது, தூக்கிலிடுவது, ஆயுதங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்வது என்றால், மறு காலனியாக்கத்தில் நமது ஒப்புதலோடு பகல் கொள்ளை நடக்கிறது. இதை பல சினிமாக்களிலும் காணலாம். மங்காத்தா, சூதுகவ்வும், சதுரங்க வேட்டை போன்ற படங்கள் சமூகத்தின் மனோபாவத்தை எடுத்துக் காட்டுகின்றன.

கத்தி படத்தில் விஜய் கோக்குக்கு எதிராக நடித்தது பற்றி ட்விட்டரில், “கோக் விளம்பரப் படத்திலும் நடிக்கிறீர்கள், எதிர்க்கிற படத்திலும் நடிக்கிறீர்களே?” என்று கேள்வி கேட்டபோது “இதை அரசியல் கட்சிக்காரங்களிடம் கேட்பீர்களா?” என்று கேட்கிறார் விஜய்.

கூட்டுத்துவமும் தனிநபர் வாதமும்

தோழர் மருதையன்
தோழர் மருதையன் உரை

இந்நிலைக்கு மிக முக்கிய காரணம் நுகர் பொருள் மோகம். இது கூட்டுத்துவத்திற்கு எதிரான தனிநபர் வாதம். அனைவருக்கும் கல்வி, மருத்துவம், போக்குவரத்து என்று கேட்பதற்குப் பதில் எனக்கு என்ன என்று கேட்கத் தூண்டுகிறது. நுகர்வு மோகத்தைத் தூண்டக் காரணம் முதலாளிகளின் சந்தை மற்றும் லாபம் தான். “எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து அடைய முடியாது. தனி நபர் என்றால் அடைந்து விடமுடியும்” என்கிறார்கள்.

விவசாயம் அழிந்து பெரும் கூட்டம் உதிரிகளாக மாற்றப்பட்டுள்ளார்கள். நகர்மயமாக்கத்தால் வேரற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இவர்களை எளிதில் விலைக்கு வாங்க முடியும்.

குற்றங்கள் பெருகி வருவதைப் பார்க்கிறோம். இக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மாணவர்கள், முன்னாள் தகவல்துறை ஊழியர்கள் எனப் பலதரப்பினரும் இருக்கிறார்கள். எல்லைக் கோடுகள் அழிந்து வருகின்றன.

வியட்நாமை அமெரிக்கா ஆக்கிரமித்து இருக்கும் போது அமெரிக்க சிப்பாய்களுக்கு ஊழியம் செய்யும் ஒரு கூட்டம் உருவாயிற்று. அமெரிக்க ஆக்கிரமிப்பை உலகமே எதிர்த்துப் போராடிய போது அமெரிக்க சிப்பாய்களை அண்டிப் பிழைத்தவர்கள், “அமெரிக்காவே போகாதே” என்றார்கள். அவர்களை விலைமாதர்களின் பிள்ளைகள் என்றார்கள் அந்த நாட்டுப் போராளி மக்கள்.

நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல சொந்த எதிர் காலத்தைப் பற்றிக் கூட கலலைப்படாத கூட்டத்தை உருவாக்கி வருகிறார்கள். டாடா கஞ்சா கடத்தி சீனாவை போதைக்கு அடிமையாக்கியதைப் போல டாஸ்மாக் மூலம் தமிழக மக்களை அடிமையாக்கி வருகிறார்கள். கலாச்சாரச் சீரழிவின் மூலம் மக்களை விலங்குகளாக ஆக்குவது தான் இவர்களது நோக்கம். ஜெயா தண்டிக்கப்பட்ட போது தனக்குக் கிடைக்க வேண்டிய இலவசப் பொருட்கள் கிடைக்குமா? கிடைக்காதா? என்று கேட்டனர் பலர்.

மனித உரிமைகளை மட்டுமல்ல மனிதத்தை நாம் மீட்க வேண்டியதிருக்கிறது. அதற்காக வினையாற்ற வேண்டும். ஜெயா தனது விடுதலைக்கு அப்பீல் செய்கிறார். நான்  இந்த உரையின் மூலமாக மனிதத்தை மீட்க உங்களிடம் அப்பீல் செய்கிறேன்.”

தொகுப்பு

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை