Saturday, June 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 727

தர்மபுரி : அறிவாளிகளின் போங்காட்டம்!

21

வில்லன்தரும்புரி தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் அடிக்கடி பலவிதமான கூட்டங்கள் பலவிதமான இயக்க சேர்க்கைகளுடன் நடக்கின்றன. உண்மையில் இந்தக் கூட்டங்களில் குறிப்பாக வன்னிய சாதிவெறி, பா.ம.க, ராமதாசை மறந்தும் கூட குறிப்பிடுவதில்லை. எதற்கு பிரச்சினை என்று பாதுகாப்பாக பேசுவது ஒருபுறமிருந்தாலும் “எங்காத்துக்காரரும் கச்சேரி செய்கிறார்” என்பதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையும் இவர்களிடத்தில் இருக்கிறது. பொறுப்பு இருக்க வேண்டிய இடத்தில் ஆசை இருந்தால் அது இப்படித்தான் அபஸ்வரமாக வெளிப்படுமோ?

முதல் கூட்டம் கடற்கரையில் நடந்தது. “சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்” என்கிற பெயரில் ஒரு அமைப்பு தர்மபுரி மற்றும் தமிழகத்தின் இன்னும் பிற இடங்களில் நடந்தேறும் வன்முறைகளையும், மனித உணர்வின் உன்னதமான காதலுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் அபாயத்தையும் போக்க “வன்மத்தின் சிறையில் மானுடம்” என்கிற பெயரில் ஒரு ஓவியக்கண்காட்சியை நடத்தியது. இந்தக் ‘கவித்துவமான’ தலைப்பே பிரச்சினைக்குரியது. நாயக்கன் கொட்டயாயில் பாதிப்படைந்த தலித் மக்களுக்கும், பாதிப்பை ஏற்படுத்திய வன்னிய சாதிவெறியர்களுக்கும் இந்த மொழியும் பொருளும் புரியப் போவதில்லை. உழைக்கும் மக்களிடம் சாதிவெறி குறித்து எதார்த்தமாக எப்படி பேசுவது என்பது கூட நமது அறிஞர் பெருமக்களுக்குத் தெரியவில்லை.

அங்கே பல்வேறு ஓவியர்கள் வரைந்து வைத்திருந்த ஓவியங்கள் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே சென்ற போது பல ஓவியங்களில் தருமபுரி என்கிற வார்த்தை இருந்ததை காண முடிந்தது.  ஒரு ஓவியத்தில் பூந்தொட்டி ஒன்றை வரைந்து அதில் தருமபுரி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று எழுதப்பட்டிருந்தது. இன்னொரு ஓவியத்தில் சிவப்பு கலரில் ஒரு பெரிய இதயம். அடுத்து பச்சை கலரில் ஒரு பெரிய புதிய வகை விலங்கு.  வீடுகள் கைகள், கால்களை கொண்ட ஒரு ஓவிய்ம் என்று பல ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. எந்த ஓவியத்திலும் உயிர் இல்லை. நவீன ஓவியங்கள் யதார்த்தமாகவோ அரூபமாகவோ இருக்கட்டும். பொருள் என்ற விதத்தில் உயிர் இல்லாத போது வடிவங்கள் என்ன உணர்த்திவிடும்?

அதே போல இராமதாஸ், காடுவெட்டி குரு போன்ற சாதிவெறியர்களின் முகத்தையும் வன்னிய சாதிவெறி, ஆதிக்க சாதிவெறி என்கிற வார்த்தைகளையும் எந்த ஓவியத்திலும் காண முடியவில்லை. வன்மத்தின் சிறையில் மானுடம் என்கிற தலைப்பிற்கேற்ப ஓவியங்களும் மேலோட்டமான அரசியலற்ற மனிதாபிமானத்தை பேசுபவவையாகவே இருந்தன.

ஓவியர் விஸ்வம் பேசும் போது ஓவியங்களை பற்றி எதுவும் பேசவில்லை, ராமதாசை பற்றியும் பேசவில்லை, வன்னிய சாதிவெறியை பற்றியும் பேசவில்லை என்ன தான் பேசினார்,  அண்ணன் திருமாவை பற்றி பேசினார் அது போதாதா ? அம்பேத்கருக்கு பிறகு நான் கண்ட மாபெரும் அறிஞன் என்றால் அது திருமா தான் என்றார். அம்பேத்கரை இதை விட யாராவது இழிவுபடுத்த முடியுமா தெரியவில்லை. கோபாலபுரத்திற்கும், போயஸ் தோட்டத்திற்கும் மாறி மாறி காவடி தூக்கும் திருமா இடையிடையே தைலாபுரத்திற்கும் செல்வதை நிறுத்தவில்லை. இந்த இலட்சணத்தில் இவர் அறிஞராம், அம்பேத்கராம்!

அடுத்ததாக பேசிய எழுத்தாளர் வ.கீதாவாவது அரசியல் உள்ளடக்கமற்ற அந்த ஓவியங்களை பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவரோ அங்கு வைக்கப்பட்டிருந்த ஓவியங்களில் ஒன்றைக் கூட பெண் ஓவியர்கள் யாரும் வரையாதது தனக்கு பெரிய மனக்குறையாக இருக்கிறது என்றார். எனக்கு பிடில் வாசித்த நீரோ மன்னன்தான் நினைவுக்கு வந்தான். வன்னிய சாதி வெறி குறிப்பாக கண்டிக்கப்படாத போங்காட்டத்தில் பெண்கள் இல்லையே என்றால் வ.கீதா உண்மையான பெண் போராளிகளை தன் வாழ்நாளில் கண்டதில்லை போலும்!

அடுத்தகூட்டம்அதே சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் சென்னை வள்ளுவர் கூட்டத்தில் நடத்திய உண்ணாநிலை அறப்போராட்டம். தாமதமாக சென்று சிலர் பேசியதைப் பார்த்த பிறகுதான் கூட்டத்தை முழுமையாக கவனிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன். அத்தனையும் அக்மார்க் காமடிக் காட்சிகள்.

அப்போது கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திக்கொண்டிருந்த யாக்கன் என்பவர் பேசிக்கொண்டிருந்தார். கூட்டத்திற்கு தி.மு.க வினரை அழைத்திருந்தோம்.  இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்கிறோம் என்று செய்தி அனுப்பியிருக்கிறார்கள் என்று கூறினார்.கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உள்ள தி.மு.க விலிருந்து தலைமைதான் வரவில்லை மாவட்டம், மாநகரம், ஏன் ஒரு வட்டம் கூடவா கிடைக்கவில்லை? உண்மையான அக்கறையிருந்தால் கலந்து கொண்டிருப்பார்கள். தி.மு.கவிற்கோ, அ.தி.மு.கவிற்கு உண்மையான அக்கறை இருக்குமா என்று கூட தெரியாத அளவுக்கு நமது அறிஞர்கள் சந்தர்ப்பவாதத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

அடுத்ததாக தமிழக காங்கிரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் அமெரிக்கை நாராயணன் பேசுவார் என்றார் அறிவிப்பாளர்.  என்னடா பேரு இது பேரே வித்தியாசமா இருக்கே என்று எண்ணிக்கொண்டு அமெரிக்கை நாராயணனனையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

எங்கள் தலைவர், எங்கள் தலைவர் என்று அவரை நாங்கள் மட்டும் உரிமையாக்கிக்கொள்ள விரும்பவில்லை அவர் இந்த நாட்டுக்கே தலைவர், உலகத்துக்கே தலைவர். அவர் தான் மகாத்மா. அவர் தான் சாதியை ஒழிக்க உண்மையாக பாடுபட்டார் என்றார். ஆமாம் அவர் கோவணத்தை கூட அம்பேத்கர் அவிழ்த்துவிட்டாரே என்று எண்ணிக்கொண்டேன். இது கூடப் பரவாயில்லை. சாதிப்பிரிவினையை அன்றிலிருந்து எதிர்த்த ஒரே கட்சி காங்கிரசுதான் என்று ஒரே போடாகப் போட்டார். அந்த அதிர்ச்சியில் மேடையில் இருந்த தலித் தலைவர்களும் ஏனைய அறிஞர் பெருமக்களும் வெட்கத்தில் சிவந்ததை தரிசிக்க முடிந்தது.

இந்த அமெரிக்கை நாராயணனுக்கு இரண்டாவது சீமான் என்றே பட்டமளிக்கலாம். அந்தளவுக்கு தாம் தூம் என்று குதித்துக்கொண்டிருந்தார். அடி வயிற்றிலிருந்து பெருங்குரல் எடுத்தவர் பொதுவாக தருமபுரி தாக்குதலை கண்டித்தார். நானும் மேல்சாதிக்காரன் தான் ஆனா சாதி பார்க்கிறேனா என்றவர் திடீரென்று சட்டைக்குள்ளிருந்த பூணூலை கூட்டத்தின் முன்னால் உருவிக் காட்டினார். அவர் அப்படி செய்தது அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகிப்போனது. அனைவரும் முகத்தை சுழித்தனர்.  திருமாவளவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பூணூலில் சிக்கிய தலித்தியம் என்று இந்தக் கூட்டத்திற்கு தலைப்பு வைத்திருக்கலாமோ?

நான் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன் ஆனால் கிரீமி லேயரையும் ஆதரிக்கிறேன் நீங்களும் ஆதரிக்கணும். உங்கள் மத்தியிலிருந்து இடஒதுக்கீட்டை பயன்படுத்தி படித்து மேல வந்தவங்களுக்கு அதுக்கப்புறமும் எதுக்கு இடஒதுக்கீடு. வளர்ந்து மேல போய்ட்டா அப்புறம் எதுக்கு அது.  அதனால அதை நீங்களே எதிர்க்கணும் என்றார் நாராயணன்.

இருப்பினும் நாராயணன் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன் என்று பேசியதும் அண்ணன் திருமா முதலில் தனது கைகளை உயர்த்தி தட்டினார். அண்ணனே தட்டிவிட்டதால் அவரைத் தொடர்ந்து இளைஞர்களும் நாராயணனுக்கு கைகளை தட்டினர். நமக்கோ அழுகையே வந்தது.

நீங்கள் எல்லாம் நன்றாக படித்து உயர் பதவிகளுக்கு, பெரிய பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் அப்போது தான் எல்லோரும் உங்களை மதிப்பார்கள் என்றார். அதன் பிறகு நமக்கு தமிழ்தேசியம் எல்லாம் வேண்டாம். இந்தியாவிற்குள்ளேயே இருப்பது தான் நமக்கும் நல்லது இந்தியாவிற்கும் நல்லது என்று அவர்கள் பேசும் தமிழ்தேசியத்தை அதே மேடையில் மறுத்து பேசிவிட்டு   தமிழா தமிழா நாளை நம் நாளை, தமிழா தமிழா நாடும் நம் நாடே என்று ரஹ்மான் பாட்டை பாடிவிட்டு நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த் என்று முடித்தார்.

நான் பார்ப்பான் என்று மேடையில் பூணூலை உருவியது முதல் அம்பேத்கர் எச்சரிக்கையாக இருக்கச்சொன்ன காந்தியை உயர்த்திப் பிடித்து, கிரிமிலேயர் மூலம் இடஒதுக்கீட்டை எதிர்த்து,  இந்திய தேசியத்தை ஆதரித்து, தமிழ்தேசியத்தை எதிர்த்து கடைசியில் ரஹ்மான் பாட்டை பாடியது வரை காங்கிரசுகாரன் தனது கருத்தை, அரசியலை எந்த எதிர்ப்புமின்றி இவர்களுடைய மேடையிலேயே பிரச்சாரம் செய்து விட்டு போய்விட்டான். விட்டால் இவர்களை ராமதாசையும் கூப்பிட்டிருக்கலாம் என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. ஒருவேளை உண்மையில் கூப்பிட்டிருப்பார்களோ தெரியவில்லை.

அடுத்ததாக கருப்பு சட்டை, கருப்பு பேண்ட், கருப்பு ஷீ என்று இராணுவ வீரர்களை போல உடை அணிந்து வந்திருந்த சினிமா டைரக்டர் களஞ்சியம் பேசினார். இவரும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறார் என்பது அன்றைக்கு தான் தெரியும். அந்த அமைபின் பெயர் “தமிழர் நலம்”. தமிழ் தேசியத்தை உய்விக்க வந்த இது எத்தனை ஆயிரமாவது இயக்கம் என்று தெரியவில்லை. போகிற போக்கைப் பார்த்தால் தமிழ் தேசியம் ஒரு மில்லியன் தலைவர்களை தொட்டுவிடுவது நிச்சயம்.

சாதி என்றால் என்ன என்று துவங்கியவர், வெண்மணியில் எரித்துக் கொல்லப்பட்ட நம் தமிழ் சொந்தங்களின் சாவுக்கு காரணமாவனவர்களை சில ஆண்டுகளிலேயே தமிழகத்திலுள்ள நம் தமிழ் சொந்தங்கள் கொன்றார்கள் என்று நக்சல்பாரி புரட்சியாளர்களையும் தமிழ் சொந்தங்களோடு சேர்த்துக்கொண்டார். மொத்தம் ஐந்து நிமிடம் இருபது நொடிகள் பேசிய களஞ்சியத்தின் உரையில் பதினேழு முறை தமிழ்ச் சொந்தங்களே, தமிழ் சொந்தங்களே என்கிற வார்த்தை வருகிறது.

அவர் கூறும் அந்த தமிழ் சொந்தங்களில் உள்ள வன்னிய தமிழ் சொந்தங்கள் தலித் தமிழ் சொந்தங்கள் மீது காட்டிய சாதிவெறித்தனத்தை கடுமையாக, சாதிவெறியர்கள் என்று குறிப்பிட்டு கண்டிக்காமல் பொதுவாக கூறிவிட்டுச் சென்றார். ஒரு வேளை வன்னிய தமிழ் சொந்தங்களின் மனது பாதிக்கப்படக்கூடாது என்று பரந்த தளத்தில் யோசித்திருக்கலாம் அல்லவா!

சரணடைதல்அடுத்தகூட்டம்சேவ் தமிழ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த லயோலா கல்லூரியில் நடைபெற்ற கூட்டம். இந்த கூட்டமும் தருமபுரி தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிரான கூட்டம் தான்.  இந்த கூட்டத்தில் இரண்டு பேர் பேசியதை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று கருதுகிறேன்.

முதலில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணிபுரியும் அரங்க.மல்லிகாவின் உரை.

தலித் தலைவர்கள் யாரும் சரியில்லை என்றவர் அதன் பிறகு ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். இந்த மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள ? அடித்தால் உங்களுக்கு திருப்பி அடிக்கத்தெரியாதா, அடிக்க முடியவில்லையா ? இவர்கள் படங்களை கூட பார்ப்பதில்லையா ? ஏன் அடியை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள், ஊமைகளாக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். விட்டால் அனைவரும் ஜாக்கிசானிடம் பயிற்சி எடுத்துக் கொண்டு பறந்து பறந்து சண்டையிட வேண்டும் என்று கோருவார் போலும். பெரும்பான்மை ஆதிக்க சாதிவெறி சிறுபான்மை தலித் மக்களிடம் நடத்தும் வன்முறையின் அடிப்படை கூடத் தெரியாமல் ஏதோ அவர்களெல்லாம் கோழைகள் போலவும், இவரைப் போன்று நகரத்தில் பாதுகாப்பாக வளைய வருகிறவர்களெல்லாம் வீரர்கள் போலவும் கருதுவதைத்தான் சகிக்க முடியவில்லை.

பிறகு, சமூக தலைவர்கள் எல்லோரும் முதலில் ஒன்றாக கூடி உட்கார்ந்து பேசுங்கள். முடிந்தால் அந்த கூட்டத்திற்கு இராமதாசையும் அழையுங்கள் என்றார் ! அடிபட்டவனுக்கான பஞ்சாயத்தில் அடித்தவனையே நீதிபதியாக்கும் இந்த போராளிதான் தலித் மக்களை கோழைகள் என்கிறார். இது போன்ற பிரச்சினைகள் எல்லாம் இனிமேல் நடக்காமல் இருக்க வேண்டுமானால் சட்டத்தை திருத்த வேண்டும், இருக்கின்ற சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்றார்.  சாதிப் பிரச்சினையே சட்டபிரச்சினையில் தான் இருக்கிறது என்பதை போல பேசினார். சட்டத்தை திருத்தினால் சாதியை ஒழித்துவிடலாம் என்கிற கருத்து அம்பேத்கர் காலத்திலேயே தோல்வியடைந்துவிட்டதை அவர் அறியவில்லை என்பதல்ல. அறிஞர்களிடம் தீர்வு கேட்டால் அது அவர்களது வீட்டறையின் யதார்த்தத்தோடு கூட பொருந்தி வராது. சமரசமே சரணாகதி என்றான பிறகு இறுதியில் சட்டத்தின் முன் மண்டியிடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இவ்வளவிற்கும் தலித் மக்களுக்கான பல்வேறு சட்டங்களெல்லாம் ஆதிக்க சாதிகளைப் பாதுகாக்கும் இந்த அமைப்பின் முன்னால் சுருண்டு படுத்துக் கிடக்கின்றன. அவற்றையே கிளப்ப முடியவில்லை எனும் போது புதிய சட்டங்கள் என்ன கிழித்து விடும்?

அடுத்ததாக பேசிய வ.கீதா,” என்னை ஒரு மேடையில் பேசும் பெண்ணியவாதியாவே மாற்றிவிட்டார்கள் அதனால் அந்த வகையிலேயே பேசுகிறேன். எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியவில்லை என்று சாதி ஒடுக்குமுறை பற்றி பேசத் துவங்கியவர் உற்பத்தி உறவுகள், குடும்பம், பெண்கள் மீதான வன்முறை என்று பெண்களை பற்றியே பேசிக்கொண்டிருந்தவர் ஒரு இடத்தில் நிறுத்தி நிறைய சிதறல் சிதறலாக பேசிவிட்டேன். தொகுப்பாக சொல்லனும்னா பெரியார் தான் பெண்களை பற்றி நிறைய பேசியுள்ளார்” என்றார்.

திருமாவளவன் மீது எனக்கு நிறைய விமர்சனம் உண்டு மதிப்பும் உண்டு. பெண்கள் என்று வரும் போது அவர் கூட அச்சம், மடம், நாணம், பயிர்ப்புன்னு பேசுறாரு என்ன பேச்சு இது ?  ஆதிக்கம் என்றாலே அது ஆணாதிக்கம் தான் இன்றைக்குள்ள முதலமைச்சர் செய்வது கூட ஆணாதிக்கம் தான் என்றார். கல்லூரி மாணவிகளை தொந்தரவு செய்வது தலித் மாணவர்கள் மட்டுமல்ல எல்லா பசங்களும் தான் செய்றாங்க என்றார்.

அதன் பிறகும் பெண்கள் பிரச்சினை பெண்கள் பிரச்சினை என்று தான் பேசிக்கொண்டிருந்தாரே தவிர தர்மபுரியில் நிகழ்ந்த சாதி ஒடுக்குமுறை, அதற்கான காரணம், எதிர்காலத்தில் அதை எப்படி எதிர்கொளவது, அதை முற்றாக ஒழித்துக்கட்ட என்ன வழிமுறை, தீர்வு என்பதை பற்றி பேசவில்லை. இறுதியில் என்னை இப்படி மேடையில் ஏத்தி புலம்ப விட்டுட்டீங்களே என்கிற பொருள்படும்படி சலித்துக்கொண்டார். உண்மையான வாழ்க்கையை நேருக்கு நேர் சந்தித்து களப்பணியாற்றாத அறிஞர் பெருமக்களின் மனவழித்தடங்கள் எல்லாம் இப்படித்தான் போகாத ஊருக்கு வழிகாட்டுகின்றன. இதையே இவர்கள் பொது மேடையில் எல்லோருக்கும் தீர்வாகப் பேசுவது எவ்வளவு பெரிய வன்முறை!

‘கண்டன கூட்டங்கள்’ என்கிற பெயரில் நடப்பவை எல்லாம் இப்படி தான் காமடிக் கூட்டங்களாக இருக்கின்றன. பொதுவாக யாரையும் குறிப்பிடாமல் சாதிவெறி என்பதும் அதையும் குத்திக்கிழிக்கும் படி பேசாமல் புண்படாமல் தொட்டுச்செல்வது என்று தான் இருக்கின்றன. பாதுகாப்பான சென்னையில் கூட்டம் நடத்தும் போதே வன்னிய சாதிவெறி என்று உரத்து பேசமுடியாதவர்கள் விழுப்புரம், கடலூர், சேலம் போன்ற தமிழகத்தின் பிற மாவட்டங்களில் எல்லாம் கூட்டம் நடத்தினால் எப்படி எல்லாம் பேசுவார்களோ என்று எண்ணிக்கொண்டே அரங்கை விட்டு வெளியே வந்தேன்.

_____________________________________________________

வினவு செய்தியாளர்
______________________________________________________

இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 25

‘‘கல் – மண்ணால் கட்டப்படும் ஒரு கோவிலுக்காக இந்து போராடவில்லை.  அவனுடைய நாகரிகத்தினை, இந்துத் தன்மையினை, தேசிய உணர்வினைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் போராடுகின்றான். ஆனால் முசுலீம்கள் வந்தேறியும் – ஆக்கிரமிப்பாளனும் – கோவிலை இடித்தவனுமான பாபரைப் போற்றுகிறார்கள்; பாரதத்தின் அவதார – தேசிய புருஷனான ஸ்ரீராமரை ஏற்க மறுக்கிறார்கள்.”

– பா.ஜ.க. அரசில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, விஜயபாரதம் எனும் ஆர்.எஸ்.எஸ் இதழில்.

இராமன் தேசிய நாயகனா தேசிய வில்லனாதங்கள் தொழிலை வளர்ப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தும் மூலதனம் இராமன்.  ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மனதை மயக்கும் தேர்ந்த விளம்பர உத்தியைப் போன்று இராமனை முன்வைத்து வரலாறு, பொற்காலம், தேசியம், பெருமிதம், சுதேசி, விதேசி, வந்தேறி என இவர்கள் உருவாக்கிய மோசடிகள் பல. இந்த மோசடிகளே அவர்கள் உருவாக்க விரும்பும் ‘இந்து உணர்வுக்கு’ அச்சாரம்.  பாபரும், பாப்ரி மசூதியும், முசுலீம்களும் ஆக்கிரமிப்பாளர்கள் – தேசத்துரோகிகள் என்று சதி வலை விரித்து அதன் மேலே இராமன், அயோத்தி, இந்து உணர்வு, தேசிய நாயகன் – நாட்டுப்பற்று என்றொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இந்து மதவெறியர்களைப் பொறுத்தவரை இந்தியக் குடியுரிமை பெற்று வாழும் ஒருவர் இராமனை ஏற்பதும், வழிபடுவதும் ஒரு நிபந்தனை.  மறுப்பவர்கள் தேசத் துரோகிகள்.  பெரும்பான்மை மக்களிடம் அவர்களே அறியாமல் ‘இந்து உணர்வும் – முசுலீம் வெறுப்பும்’ விஷம் போல ஊடுருவுவதற்கு ‘இராமனின்’ மோசடிச் சித்தரிப்பு ஒரு முக்கியமான காரணம் ஏன்பதை நாம் உணர வேண்டும். அப்படி உணரும்போது இந்த மோசடி அவதாரத்தை வெட்டி வீழ்த்தி வேரறுக்கும் கடமையையும் நாம் ஏற்க வேண்டும்.

70 எம்.எம். திரையில் தேசிய நாயகனாகக் காட்டப்படும் இராமனையும் இந்துப் பொற்காலத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் பண்டைய – இடைக்கால – நவீனகால இந்தியாவின் வரலாற்றை – மார்க்சிய அறிவியல் கண்ணோட்டத்துடன் தெரிந்து கொள்வது அவசியம்.  ஆரியர்களின் படையெடுப்பு – நிறவெறி – வர்ண – சாதிவெறி, புராணங்கள் – காப்பியங்கள் – வேத உபநிடதங்கள் சொல்லும் இந்து மதம், தொல்குடி மக்களையும், பண்பாட்டையும் பார்ப்பனியம் கவ்விய வரலாறு, பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த மதங்கள் – மகான்கள், சமஸ்கிருதமயமாக்கம், மொகலாயர் வருகை, இந்து – முசுலீம் மன்னர்களிடையிலான உறவு, போர், இராச்சியங்களின் தோற்றத்திற்கும் மறைவுக்குமான வரலாற்றுக் காரணங்கள், வெள்ளையர் ஆக்கிரமிப்பு – 1947 பிரிவினை…. என சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்று வரை உள்ள வரலாற்றைக் கற்றுணர வேண்டும்.

இங்கே ‘அவதார’ இராமன் ஒரு தேசிய நாயகனுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்கிறானா, ‘ஆக்கிரமிப்பாளன்’ பாபர் ஒரு கொடுங்கோலனாக ஆட்சி நடத்தினாரா என்பதை மட்டும் பரிசீலிப்போம்.

வந்தேறியவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வாதிட்டால் இந்தியாவின் முதல் வந்தேறிகள் ஆரியர்கள்தான்.  திராவிடர்களையும், நாகர்களையும், இதர பூர்வகுடி மக்களையும் வந்தேறிகளான ஆரியர்கள் வேட்டையாடியதை விவரிக்கும் தொல்கதையே இராமாயணத்தின் மூலக் கதையாகும்.  ஆரிய ஆக்கிரமிப்பின் பெருமிதத்தை விவரிக்கும் ஆந்த மூலத் தொல்கதை இன்று இல்லை.  பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்து ‘புராண – இதிகாச’ காலத்தில் அந்தத் தொல்கதை ஒரு காப்பியத்துக்குரிய அம்சங்களுடன் வால்மீகி இராமாயணமாக உருப்பெற்றது.  அதுவும் வரலாறு நெடுக இடைச்செருகல்களோடும் திருத்தங்களோடும் மாறிக் கொண்டே வந்தது.  கடைசியாக தூர்தர்சனில் காட்டப்பட்ட இராமானந்தசாகரின் இராமாயணத்திற்கும், வால்மீகியின் கதைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.

அமெரிக்கா ஆதிக்கம் செய்யும் இன்றைய உலகில் ஹாலிவுட் படங்கள் கூட தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு உசிலம்பட்டி போன்ற சிறு நகரங்களில் வெளியிடப்படுகின்றன.  அதைப் போல ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்த இந்தியத் துணைக் கண்டத்தில் இராமாயணமும் எல்லா வட்டார மொழிகளிலும் இயற்றப்பட்டது.  இப்படி ஆரியர்களின் இதிகாசங்களும், புராணங்களும் வேத – உபநிடதக் கருத்துக்களும் இந்திய மொழிகளிலும் ஆடல் – பாடல் கலைகளிலும் ஊடுருவியதன் காரணம் ஏன்ன? கல்வியும், அறிவும் மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியத்தின் வருண – சாதி ‘ஒழுக்கத்தை’க் கற்றுத் தருவதற்கும், வாழ்வதற்கும், கண்காணிப்பதற்கும், மீறினால் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிப்பதற்கும் அவை பயன்பட்டன.  இப்படித் தெற்காசியாவின் பல மொழிகளில் விதவிதமாக இயற்றப்பட்ட ஏல்லா இராமாயணங்களையும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தாலும் இராமனின் ஆரியப் பண்பு மட்டும் பெரிதாக மாறவில்லை.

தனது இராசகுரு வசிட்டரின் உத்தரவுக்கேற்ப சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்றான் இராமன்.  காரணம், பார்ப்பனப் புரோகிதர்களின் உதவியின்றி நேரடியாக இறைவனை அறிய சூத்திரன் சம்பூகன் தவம் செய்தான் என்பதே.  தமது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த விசுவாமித்திரரை எதிர்த்து பழங்குடியினர் போராடுகின்றனர்.  இராமனோ அசுரப் பழங்குடியினரைக் கொன்று விசுவாமித்திரரைக் காப்பாற்றுகிறான்; போர்க்கலையில் வல்லவனான வாலியை மறைந்து நின்று கொல்கிறான்; மனைவி சீதையின் மேல் சந்தேகம் கொண்டு அவளை உயிரோடு கொளுத்திக் கொல்கிறான்.  இப்படி இந்திய மருமகள்கள் ஸ்டவ் வெடித்துச் சாகடிக்கப்படும் கொடூரத்தைத் தொடங்கியவன் இராமன்தான்.  மொத்தத்தில் இந்தியத் தொல்குடி மக்களையும், இராவணன் போன்ற அவர்களது தலைவர்களையும் வேட்டையாடிய ஆரிய இக்கிரமிப்பின் சின்னம்தான் இராமன்.

இன்றைக்கும் தென்னிந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியா, வடகிழக்கு இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களிடம் இராம வழிபாடு கிடையாது.  எனவே நிறவெறி, வருண வெறி, சாதிவெறி, இனவெறி, ஆணாதிக்க வெறி என பார்ப்பனியத்தின் பண்புகளைக் கொண்டு உருவெடுத்த இராமனை இந்நாட்டு மக்கள் ஏவரும் தேசிய நாயகனாக ஏற்க முடியாது.  மாறாக தேசிய வில்லனாகக் கருதி வெறுக்கத்தான் முடியும்.

ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார்.  இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது.  பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு.  பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள்.  ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது.  பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை.  ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.

அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :

‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”

“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”

“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”

இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்;  இராமன் மற்றும் அவனுடைய வாரிசுகளின் யோக்கியதை என்ன என்பது தெரியவரும்.  பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல;  மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை.  ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.  பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!

என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.  பாபருக்குப் பின்வந்த அக்பர் மதங்களை ஒன்றுபடுத்த முயற்சி செய்தார்.  தன் கால மதங்களில் தனக்குத் தெரிந்த நல்ல அம்சங்களை இணைத்து அவர் உருவாக்கிய ‘தீன் இலாஹி’ ஏனும் புதிய மதம் தோல்வியுற்றாலும் அக்காலத்தில் அது ஒரு முற்போக்கான முயற்சியாகும்.  பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பு இருப்பினும், சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை அக்பர் தடை செய்தார்.  இதை அவரது வரலாறு கூறும் ‘அயினி அக்பர்’ நூல் தெரிவிக்கின்றது.  பொதுவாகப் பரிசீலிக்கும் போது எல்லா மன்னர்களையும் போல முகலாய மன்னர்களும் சுகபோகிகளாக, சுரண்டல் பேர்வழிகளாக இருந்திருக்கிறார்கள்.  ஆயினும் ஆட்சியிலும், சமூக நோக்கிலும் இராமனைக் காட்டிலும் முன்னுதாரணமானவர்களாகவே அவர்கள் இருந்தனர்.

மனிதகுல வரலாற்றில் ‘தேசிய நாயகர்கள்’ ஏன்று போற்றப்படும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.  தத்தமது கால மாற்றத்தையும் மக்கள் போராட்டங்களையும் புரிந்து கொண்டு பங்கெடுத்தும் முன்னெடுத்தும் சென்றிருக்கிறார்கள்.  வரலாற்றில் இத்தகைய தனித்தலைவர்களின் பங்கு முதன்மையானது இல்லையென்றாலும், முக்கியமானதுதான்.

தமது அடிமைத்தனத்தையே உணராத ரோமாபுரி அடிமைகளை அணி திரட்டிப் போராடச் செய்த ஸ்பார்ட்டகஸ், அடிமைகளின் ஏக்கத்தைப் போக்கப் பாடுபட்ட ஏசு கிறிஸ்து, அரேபிய நாடோடி இன மக்களை நெறிப்படுத்திய முகமது நபி, பார்ப்பனியத்தின் கொடூரச் சடங்குகளை ஒழிக்கவும், ஒரு சகோதரத்துவச் சமூகத்தைத் தோற்றுவிக்கவும் கனவு கண்ட புத்தர், இத்தாலியை ஒன்றுபடுத்துவதற்காகப் போராடிய கரிபால்டி, இங்கிலாந்து தொழிலாளர் இயக்கத்தின் தந்தையெனப் போற்றப்படும் இராபர்ட் ஓவன், முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை வழங்கிய பிரெஞ்சுப் புரட்சித் தலைவர்கள், அமெரிக்க விடுதலைக்குக்குத் தலைமை தாங்கிய ஜார்ஜ் வாஷிங்டன், நிறவெறியை ஏதிர்த்து அமெரிக்க உள்நாட்டுப் போர் கண்ட ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சாகும் வரை எதிர்த்துப் போராடிய சே குவேரா, மதவாதிகளின் பிடியிலிருந்து துருக்கியை விடுவித்த கமால்பாஷா, வெள்ளை நிறவெறியை எதிர்த்து தன் இளமையைச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா, காலனிய எதிர்ப்பில் இந்திய இளைஞர்களிடம் புது இரத்தம் பாய்ச்சிய பகத்சிங், கீழத்தஞ்சையின் கூலி விவசாயிகளைப் போராட அணிதிரட்டிய சீனிவாசராவ் மற்றும் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களையெல்லாம் அந்தந்த நாட்டு, மத, இன மக்கள் கொண்டாடுகிறார்கள்.

மனிதகுலம் எதிர்காலத்தில் பொதுவுடைமைச் சமூகமாக மாறுவதற்கு வழிகண்ட மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரை அன்போடு மார்க்சியப் பேராசான்கள் என்று கம்யூனிஸ்டுகள் கொண்டாடுகின்றனர்.  இப்படி வரலாறு நெடுகிலும் இன, தேசிய, மத, ஜனநாயக, புரட்சிகரத் தலைவர்களை மனிதகுலம் உருவாக்கியிருக்கிறது.

இனால் இந்துமத வெறியர்கள் கட்டளையிட்டு தேசிய நாயகனாய்ப் போற்றச் சொல்லும் இராமனிடம் என்ன இருக்கிறது? முதலில் இராமாயணம் ஒரு வரலாற்று உண்மையல்ல.  ஒரு வேளை இராமனின் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அவன் செய்த ஆபூர்வச் செயல்கள் என்ன? தந்தையின் வாக்கைக் காப்பாற்ற, சித்தியின் பேச்சைக் கேட்டு காட்டுக்குப் போனான்; திரும்பி வரும் வரை தம்பியை ஆளச் செய்தான்; தொலைந்து போன மனைவியை மீட்க மாபெரும் போரை நடத்தினான்; மீண்டும் அயோத்தியை ஆண்டான்.  இருப்பினும் பல்வேறு இராமாயணங்கள், இராம பக்தர்கள், உபன்யாசகர்கள், ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆகிய அனைவருமே புகழ்ந்துரைக்கும் இராமனின் மாபெரும் பெருமை என்னவென்றால், அவன் ஏகபத்தினி விரதன் என்பதுதான்.  போகட்டும், அதையும் உண்மையென்றே ஏற்போம்.  ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?

ஆகையினால் இராமனைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்படும் தேசிய – அவதாரக் கதைகளை எதிர்த்து முறியடிப்பது என்பது பார்ப்பன இந்து மதத்தின் சமூக அமைப்பை எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராட்டமே அன்றி வெறும் நாத்திகப் பிரச்சாரமல்ல.  இராமன் நாயகனல்ல; தேசிய வில்லன்!

– தொடரும்

__________இதுவரை____________

விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்!

33

விழுப்புரம் ஆர்ப்பாட்டம் 1தர்மபுரி நத்தம் காலனி, அண்ணாநகர்,  கொண்டாம்பட்டி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடந்த ஆதிக்கசாதிவெறி தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

3-12-12 திங்கள் மாலை 4-30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் அருகே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக பா.ம.க.வன்னிய சாதி வெறியாட்டத்தை கண்டித்தும் ஆதிக்க சாதி வெறி வன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரியும் அதன் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதே நாளில் காலையில் சென்னையில் வி.சி.க,சி.பி.ஐ,சி.பி.எம். நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் வன்னிய சாதி வெறியர்களை பெயர் குறிப்பிட்டு தோலுரிக்காத போது, வன்னியசாதிவெறி சங்கத்தையும், ஆதிக்க சாதிவெறி சங்கங்களையும் தடைசெய்யக் கோரியும் அவர்களின் சொத்துக்களை பறித்தெடுக்க கோரியும் விழுப்புரத்தில் நடந்த புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் உழைக்கும் மக்களிடையே நம்பிக்கையையும், வர்க்க ஒற்றுமையையும் நிலைநாட்டியது.

விழுப்புரம்,கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பெருமளவு வன்னியர்கள் குவிந்துள்ளனர்.முன்னதாக இப்பகுதியில் விரிவாக பிரச்சாரம் செய்யப்பட்டு பெருமளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.மூன்று நாட்கள் வன்னிய மக்களிடையே செய்த பிரச்சாரம நிதி வசூலில் ரூபாய் 26,000-00 எட்டியது.

ஆர்ப்பாட்டத்திற்கு சற்று முன்பாக தொடர்பு கொண்ட ஒரு பா.ம.க. காரர் நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்து விட்டு, “இதொ வரண்டா நீங்கள் எப்படி ஆர்ப்பாட்டத்தை நடத்துறீங்கனு பாத்துறன்” என சவாலாக பேசி தொலைபேசி தொடர்பை துண்டித்து கொண்டார். ஆனால் சவால் விட்டவரின் சுவடி கூட ஆர்ப்பாட்டத்தின் போது காணோம். 600 பேர் வரை செஞ்சட்டைகளுடன் திரண்டு செங்கொடி, முழக்க தட்டிகள், ஆசான்களின் படங்கள், பேனர்களுடன் தோழர்கள் எழுப்பிய முழக்கங்கள் மக்களை ஈர்த்து 700 பேர் வரையிலும் கூடி நின்றனர்.

விழுப்புரம் ஆர்ப்பாட்டம் 2ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தடைசெய்யக்கோரியும் சொத்துக்களை பறிதெடுக்க கோரியும் எழுந்த முழக்கங்களை ஆதரித்து நின்ற கூட்டத்தினை கண்டு அஞ்சிய பாமக – வன்னிய சாதிவெறியர்கள் குடிக்க செலவழித்து கல்லெறிய தயாரித்து அனுப்பிய கூட்டம், 3 மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்தின் பொது செய்வதறியாது திகைத்து நின்றது. கடைசி வரை கூடி நின்ற மக்கள் கூட்டம், பேச்சாளர்கள் எழுச்சியுடன் பேசும்போது ஆங்காங்கெ கர ஒலி எழுப்பி ஆதரித்தனர்.

தலைமை தாங்கிய பு.மா.இ.மு. தோழர் மோகன் சுருக்கமாக தர்மபுரி, தாக்குதலை விளக்கி சனநாயக உணர்வு உள்ளவர்கள் வன்னிய சாதிவெறி சங்கத்தை தடைசெய்ய வேண்டும். பா.ம.க. போன்ற சாதி வெறி கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் என பேசினார். அடுத்து பேசிய திருவண்ணைநல்லுர் வி.வி.மு. அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் ஓட்டுப்பொறுக்கி கட்சிகள் அனைத்தும் சாதி வெறியை ஊட்டி வளர்ப்பதை விளக்கி அம்பலப்படுத்தினார். மேலும் பிழைப்புவாத தலித் தலைவர்களையும் அம்பலப்படுத்தி நக்சல்பாரியே மாற்று என்று விளக்கி பேசினார். தர்மபுரியில் பாதிக்கப்பட்ட மக்களே நக்சல்பாரிகள் இருந்தவரை ஆதிக்க சாதிவெறி இல்லாதிருந்ததையும் அவர்கள் இல்லாததால் வன்னிய சாதிவெறியர்களின் கொலை வெறியாட்டம் கட்டற்று நடந்துள்ளதையும் சுட்டிக்காட்டியதை எடுத்துக் கூறினார்.

அடுத்து பேசிய புமா.இ.மு. விழுப்புரம் மாவட்ட செயலாளர் தோழர்.செல்வகுமார் பெரியார் படத்தை வைத்துக்கொண்டு அவரது சாதி ஒழிப்புக்கெதிராக சத்திரிய குல வன்னியர் என ஆண்ட பெருமை பேசும் ராமதாசின் பித்தலாட்டங்களை திரை கிழித்தார். இட ஒதுக்கீடு பெருமை பேசும் ராமதாசு தனியார்மயத்தை ஆதரித்து கார்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுர கொள்ளைக்கு துணை போவதை அம்பலப்படுத்தினார்.சிப்மர் மருத்துவமனையில் இலவச சேவை பெற்று வந்த உழைப்பாளி வன்னியர்கள் மத்திய அமைச்சராய் இருந்த அன்புமணி ராமதாசின் தனியார் மயக்கொள்கையால் இன்று அந்த சேவையை இழந்து தவிக்கும் கோரத்தை உருக்கமாக எடுத்துரைத்தார்.

நாடே மீண்டும் காலனி ஆவதை எதிர்த்து போராடுவதற்க்கு பதில் உழைப்பாளிகளின் சொத்துக்களை சூறையாடும் வன்னிய சாதிவெறியின் கயமைத்தனத்தை தோலுறித்தார். சாதி வெறியாட்டம் மூலம் மக்களை பிளவுப்படுத்தி வர்க்க ஒற்றுமையை சீர்குலைத்து ஆளும் வர்க்கத்திற்கு ராமதாசு சேவை செய்வதை அம்பலப்படுத்திய தோழர், ஆண்ட பரம்பரை என பெருமை பேசும் ராமதாசு ரேசன் கார்டு வேண்டாம்,  பிச்சைக்காசு இலவசப்பொருள் வேண்டாம், தனியார்மயத்தில் காணாமல்போகும் இடஒதுக்கீடு வேண்டாம் என வன்னியர்களுக்கு உத்திரவிட தயாரா என சவால் விட்டார். உழைப்பாளி வன்னியர்கள் ராமதாசைப் புறப்பணிப்பதுதான் உண்மை என்பதைக்கூறி வர்க்க ஒற்றுமைக்கும் மறு காலனியத்தை எதிர்ப்பதற்கும் அறை கூவினார்.

இறுதியில் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தரும்புரியில் உண்மையை கண்டறியச் சென்ற போது பார்த்த சூழலை விளக்கியதை கேட்ட கூடியிருந்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சந்தடிமிக்க ரயிலடி நிசப்தமானது.

500 பேர் கூட்டத்தை கட்டுப்படுத்த 20 போலிசே போதும். 1500 வன்னிய சாதிவெறியர்களின் வன்முறைக்கு 70 போலிசு பாதுகாப்பு கொடுத்த கொடுரத்தை அம்பலப்படுத்தினார். அந்த போலீசை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். தரும்புரி பகுதியை தொடர்ந்து கண்காணித்து உளவு பார்த்து வரும் கியூ பிரிவு போலிசு வன்னிய சாதிவெறியர்கள் 300 லிட்டர் பெட்ரொல் வாங்கியதையும் ரேசனில் 4 பெரல் மண்ணெண்னையை எடுத்துக் கொண்டதையும் ஏன் தடுக்கவில்லை? வன்னிய சாதிவெறியர்களின் திட்டமிட்ட செயலுக்கு ஆதரவாக இருந்து சூறையாட அனுமதிகத்த கோரத்தினை அம்பலப்படுத்தினார்.

விழுப்புரம் ஆர்ப்பாட்டம் 3வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை திருத்த வேண்டும் என்கிற ராமதாசின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் வண்ணம் தமிழகம் முழுவதும் மேலவளவு முருகேசன் கொலை முதல் நடந்த அனைத்து வன்கொடுமைகளிலும் இச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படாததை அம்பலப்படுத்தி வன்கொடுமை தடுப்புச்சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

திருமாவளவன் உட்பட தலித்திய தலைவர்களின் சமரச வாத்த்தை அம்பலப்படுத்தி கேள்வி எழுப்பினார். புரட்சிகர அமைப்புகளின் கீழ் வர்க்க ரீதியாக அணிதிரளுவதெ சாதி, மத, இனவெறிக்கு மாற்று என விளக்கினார். மீண்டும் கண்டன முழக்கங்கள் எழுப்பிய தோழர்கள் சர்வதேசிய கீத்த்துடன் ஆர்ப்பாட்டத்தை முடித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரச்சாரத்தின்போது வன்னியர்கள் பெருமளவு நம்மை ஆதரித்தனர். திருவெண்ணை நல்லுர் ஒன்றிய வி.வி.மு. தோழர்கள் வன்னியர்கள் மிகுதியாக வாழும் ஒரு கிராமத்திற்கு பிரச்சாரம் செய்ய சென்ற போது பா.ம.க. இளைஞர் ஒருவர் தடுத்தார். தோழர்கள் அதை மறுத்துப் பேசியபோது ஒரு உழைப்பாளி வன்னியர் பெண் வந்து அவன் ஒரு தறுதலை பொறம்போக்கு நீங்க எல்லா வீட்டுக்கும் போய் பிரச்சாரம் பண்ணுங்க என்று கூறி அந்த பா.ம.க. காரனை விரட்டி அடித்தார். புதுவையில் தொழிலாளர்கள் பிரச்சாரம் செய்யும்போது ஒருவுர் நமது தோழரை பார்த்து என்ன நீயுமா? நமது சாதி சங்கத்தையே தடைசெய்ய சொல்லிறீயா? என கேள்வி எழுப்பினார். நான் இப்போ தொழிலாளி. நான் மட்டும் இல்ல எனது மனைவி பையனும்கூட இந்த பிரச்சாரத்தில் உள்ளோம். என பதிலளிக்க அவரது உறவினர் வாயடத்து நின்றார். பின்னர் இந்த தாக்குதலை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறி நன்கொடையும் தந்தார்.

புதுவை பாமக நிர்வாகி ஒருவர் பொதுவாக வன்னிய சங்கத்தை தடைசெய்யக்கூறுவதை கேள்வி எழுப்பி புதுவை வன்னியர் சங்கம் தர்மபுரி தாக்குதலை ஆதரிக்கவில்லை என கைப்பேசியில் தொடர்புகொண்டு தன்னிலை விளக்கம் அளித்தார்.

பிரச்சாரம் செய்த எந்த பகுதியிலும் எதிர்ப்பு ஏதும் இல்லை. மாறாக வரவேற்பும் ஆதரவும்தான் வன்னியர் சங்கத்தை தடைசெய்யக்கோரிய இந்த ஆர்ப்பாட்ட இயக்கத்திற்கு கிடைத்த்து. வன்னியர்கள் மிகுந்த இப்பகுதியில் நடந்த எழுச்சிமிக்க இந்த ஆர்ப்பாட்டம் வர்க்க ஒற்றுமைக்கு குரல்கொடுத்து புதிய சனநாயக புரட்சிக்கு அணி திரள அறை கூவியது.

________________________________________________________________

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்
_________________________________________________________

2ஜி ஏலம் : காங்கிரசு – கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் களவாணித்தனம் !

2

ஸ்பெக்ட்ரம்-ஊழல்-1

ச்ச நீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவால் ஜனவரி, 2008-இல் ஒதுக்கீடு செயப்பட்ட 122 அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்ததோடு, அந்த உரிமங்களை ஏலமுறையில் மீண்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மைய அரசிற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ரத்து செயப்பட்ட அந்த உரிமங்களின் ஒரு பகுதியை மீண்டும் ஒதுக்கீடு செய்வதற்கு நடத்தப்பட்ட ஏலம் ‘எதிர்பார்த்த’ பலன்களை அளிக்காமல் தோல்வியில் முடிந்துவிட்டதாகக் கூறி, அதனைக் கொண்டாடியும் வருகிறது, காங்கிரசு.

நாடெங்கிலுமுள்ள 22 தொலைபேசி வட்டங்களுக்கும் நடந்த இந்த ஏலத்தில், அதிக வருவாயை ஈட்டித் தரத்தக்க டெல்லி, மும்ப, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய வட்டங்களை ஏலத்தில் எடுக்க எந்தவொரு நிறுவனமும் முன்வரவில்லை. மீதமுள்ள 18 வட்டங்களிலும் பெருத்த போட்டியின்றி, மொத்தமே 20 உரிமங்கள்தான் விற்பனையாகியிருக்கின்றன. இந்த 18 வட்டங்களிலும், கைபேசி சேவை வளர்ச்சி குறைவாக உள்ள ஒரு சில வட்டங்களைத் தவிர, பெரும்பாலான வட்டங்களில் அரசு நிர்ணயித்த அடிப்படை விலையைவிடக் குறைவாகவே ஏல விற்பனை நடந்திருக்கிறது. சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருந்த அலைக்கற்றைகளில் ஒரு சதவீதம்கூட ஏலத்தில் விற்பனையாகவில்லை. ஏலத்தில் கலந்துகொண்ட எந்தவொரு நிறுவனமும் அகில இந்திய உரிமம் கேட்கவில்லை. குறிப்பாக, இந்த ஏலத்தின் மூலம் அதிகபட்சம் 40,000 கோடி ரூபாய் அளவிற்கு அரசிற்கு வருமானம் கிடைக்குமென மைய அரசு கூறிவந்தது. ஆனால், அலைக்கற்றைகள் மிகக் குறைவாக 9,407 கோடி ரூபாய்க்குத்தான் ஏலத்தில் விற்பனையாகியுள்ளன.

முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா அலைக்கற்றைகளை முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற முறையில், மிகக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்ததால் அரசிற்கு 1,76,000 கோடி ரூபாய் அளவிற்கு உத்தேச வருமான இழப்பு ஏற்பட்டதாகத் தலைமைத் தணிக்கைத் துறை குற்றஞ் சுமத்தியிருந்தது. தற்பொழுது நடந்துள்ள ஏலம் அரசிற்கு அதிக வருமானம் ஈட்டித் தரத் தவறிவிட்டதைக் காட்டி, தலைமைத் தணிக்கைத் துறையின் குற்றச்சாட்டு பொய்யாகிவிட்டது என வாதாடி வருகிறது, காங்கிரசு. நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஏலத்தின் மூலம் ஏன் எடுக்க முடியாமல் போனது என்பதற்கு விளக்கமளிப்பதைவிட, திருவாளர் தலைமைத் தணிக்கை அதிகாரியே, 1.76 இலட்சம் கோடி ரூபாய் எங்கே?”, தலைமைத் தணிக்கைத் துறை தனது கணக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றெல்லாம் கூறி, மைய அமைச்சர்கள் மணீஷ் திவாரி, ப.சிதம்பரம், கபில் சிபல் ஆகியோர் தலைமைத் தணிக்கைத் துறையைக் கிண்டல் செய்து வருகிறார்கள். மேலும், இந்த ஏல விற்பனை, தலைமைத் தணிக்கைத் துறை குற்றஞ்சுமத்தியபடி அலைக்கற்றை ஒதுக்கீடு விற்பனையிலோ, நிலக்கரி ஒதுக்கீடிலோ எந்தவிதமான முறைகேடும் நடக்கவில்லையெனக் காட்டுவதாகவும்” அடித்துப் பேசி வருகின்றனர்.

‘‘2008-ஆம் ஆண்டில் இந்தியாவில் 23 கோடி பேரிடம்தான் கைபேசி இருந்தது; 80 கோடி பேருக்கு கைபேசி சேவை அளிக்க வேண்டிய அளவிற்கு சந்தை வாப்புகள் இருந்தன. 2012-லோ ஏறத்தாழ 90 கோடி பேர் கைபேசி சேவை வட்டத்திற்குள் வந்துவிட்டனர். அதாவது, சந்தை ஏறக்குறைய நிரம்பிவிட்டது. இதுமட்டுமின்றி, கைபேசி நிறுவனங்களுக்கு உபயோகிப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் வருவாயும் குறைந்துவிட்டது. இந்தச் சந்தை நிலவரத்தைப் புரிந்து கொள்ளாமல் அரசு அடிப்படை விலையை அதிகமாக நிர்ணயித்துவிட்டதால்தான் ஏலம் தோல்வியடைந்துவிட்டதாக”ப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்தக் காரணத்தை முதலாளித்துவப் பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும்கூடச் சுட்டிக் காட்டினாலும், ஏலத்தின் தோல்வியைக் காட்டி, 2ஜி ஒதுக்கீடு குறித்த தலைமைத் தணிக்கைத் துறையின் கணக்கீடு தவறு என காங்கிரசு பிரச்சாரம் செய்துவருவதை இவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். 2008-இல் சந்தை சூடாக இருந்தபொழுது அலைக்கற்றைக்குக் குறைந்த விலையை நிர்ணயம் செய்ததன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது; இப்பொழுது சந்தை நிரம்பிவழியும் நிலையில் அடிப்படை விலையை அதிகமாக நிர்ணயம் செய்ததன் மூலம் ஏலத்தின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது” என எதிர்க்கட்சிகள் காங்கிரசின் மீது குற்றஞ்சுமத்துகின்றன.

இந்தியாவில் 90 கோடி பேரிடம் செல்போன் இருப்பதாக ஒருபுறம் கூறிவிட்டு, மறுபுறம் இவ்வளவு பெரிய சந்தைக்கு சேவை அளித்து வரும் செல்போன் கம்பெனிகளின் வியாபாரம் சரிந்து வருகிறது; வருமானமும் இலாபமும் படுத்துவிட்டது எனக் கூறுவது அபத்தமாகத் தெரிகிறது. ஒரு வாதத்திற்கு செல்போன் கம்பெனிகளின் வியாபாரம் படுத்துப் போவிட்டது என இவர்கள் கூறுவதை உண்மையென்று வைத்துக் கொள்வோம். பொருளாதாரப் புலிகளாகக் கருதப்படும் மன்மோகன் சிங்கும், அலுவாலியாவும், ப.சிதம்பரமும் அந்த நிலையைப் புரிந்து கொள்ளாமலா, அடிப்படை விலையைக் கூடுதலாக நிர்ணயம் செய்திருப்பார்கள்?  அலைக்கற்றை உள்ளிட்ட இயற்கை வளங்களை அடிமாட்டு விலையில் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் படையல் போட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் மன்மோகன் சிங் கும்பல், அரசிற்கு அதிக வருமானம் தேடித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் அடிப்படை விலையை அதிகமாக நிர்ணயம் செய்திருக்க முடியாது. அப்படியொரு நல்ல நோக்கம் மன்மோகன் சிங்கிற்கு இருந்திருந்தால், 2008-ஆம் ஆண்டிலேயே அலைக்கற்றைகளை அதிக விலைக்கு ஒதுக்கீடு செய்து அரசின் கஜானாவை நிரப்பியிருக்கலாம்.

''நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில்தான், சி.ஏ.ஜி. 2ஜி ஒதுக்கீட்டில் 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை தயாரித்தது'' எனக் குற்றஞ் சுமத்தியுள்ள சி.ஏ.ஜி.யின் முன்னாள் இயக்குநர் ஆர்.பி.சிங்.
”நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில்தான், சி.ஏ.ஜி. 2ஜி ஒதுக்கீட்டில் 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை தயாரித்தது” எனக் குற்றஞ் சுமத்தியுள்ள சி.ஏ.ஜி.யின் முன்னாள் இயக்குநர் ஆர்.பி.சிங்.

உண்மை என்னவென்றால், பொருளாதார நிபுணர்கள் கூறுவதற்கு மாறாக, மன்மோகன் சிங் கும்பல் அடிப்படை விலையை ஓரளவு குறைத்துதான் நிர்ணயித்தது. அலைக்கற்றைகளை அகில இந்திய அளவில் உரிமம் பெறுவதற்கு அடிப்படை விலை 18,000 கோடி ரூபா என நிர்ணயம் செய்தது, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம். அதனை, 14,000 கோடி ரூபாயாகக் குறைத்தது, மன்மோகன் சிங் அரசு. ஆனாலும், இதனை இன்னும் பாதியாக, 7,000 கோடி ரூபாயாகக் குறைக்க வேண்டும் என சவுண்டு கொடுத்தன செல்போன் கம்பெனிகள். ஆனாலும், காங்கிரசு தன்னை நியாயவானாகக் காட்டிக்கொள்வதற்காகவே, செல்போன் கம்பெனிகள் கோரியபடி அடிப்படை விலையைக் குறைக்காமல் ஏலத்தை நடத்தியது. அடிப்படை விலை குறைக்கப்படாததைக் காட்டி டாடா, ரிலையன்ஸ் உள்ளிட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏலத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன.

அலைக்கற்றைகளை ஏலத்தில் விட்டிருந்தால் அதிக வருமானம் ஈட்டியிருக்க முடியும்” எனக் கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம்; முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றை களை ஒதுக்கி யதால் அரசுக்கு 1.76 இலட்சம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது” எனக் கூறிவரும் தலைமைத் தணிக்கைத் துறை ஆகிய வற்றின் முகங்களில் கரியைப் பூசவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் காங்கிரசு இந்த ஏலத்தைத் திட்டமிட்டு நடத்தியது.

செல்போன்  நிறுவனங்களுக்கோ இந்த ஏலம் போணியாகாமல் முடிவது வேறொரு காரணத்திற்காக அவசியமாக இருந்தது. பாரதி ஏர்டெல் உள்ளிட்ட பழைய செல்போன் நிறுவனங்களுக்கு 20 ஆண்டு களுக்கு முன்பு ஒதுக்கப் பட்ட அலைக்கற்றைகளின் உரிமம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. தற்பொழுது நடந்துள்ள இந்த ஏலத்தின் விற்பனையைப் பொருத்தே, அடுத்த ஆண்டு முடிவடையும் அலைக்கற்றைகளின் உரிமத்தைப் புதுப்பிக்கும் அடிப்படைத் தொகை நிர்ணயிக்கப்படும் எனத் தொலைத்தொடர்புத் துறை அறிவித்திருந்ததால்” இந்த ஏலம் மண்ணைக் கவ்வுவதை அந்நிறுவனங்களும் விரும்பின. இப்படியாக அதிக வருமானம் ஈட்டிவிடாதபடி இந்த ஏலத்தை நடத்தி முடிப்பதில் காங்கிரசும் செல்போன் நிறுவனங்களும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டுள்ளனர்.

2008-இல் சந்தை சூடாக இருந்ததால், கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து அலைக்கற்றைகளை வாங்க போட்டி போட்டிருப்பார்கள் எனப் பொருளாதார நிபுணர்களும் எதிர்க்கட்சிகளும் கூறிவருவதும்கூட, ஒருவிதமான அனுமானம், கற்பிதம்தான். ஏனென்றால், கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்பொழுதுமே தமது நலனுக்கு ஏற்ற வகையில் சந்தையை வளைக்கவும், நிமிர்த்தவும், கூட்டணி கட்டிக்கொண்டு விலையை வீழ்த்தவும் தயங்கியதே கிடையாது.

இது மட்டுமின்றி, 2008-இல் அலைக்கற்றைகளுக்கு அதிக விலை நிர்ணயித்து விற்பனை செய்திருந்தால் அரசிற்கு 1.76 இலட்சம் கோடி ரூபா வருமானம் கிடைத்திருக்கும் என்பதுகூடச் சர்ச்சைக்குரியதுதான். தலைமைத் தணிக்கைத் துறை அரசுக்கு ஏற்பட்டுள்ள உத்தேச வருமான இழப்பு 1.76 கோடி ரூபா என்கிறது. ஆ.ராசா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடுத்துள்ள மையப் புலனாவுத் துறை, தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள உத்தேச வருமான இழப்பு 30,984.55 கோடி ரூபாதான். பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சரான அருண் ஷோரிகூட வருமான இழப்பு 30,000 கோடி ரூபாதான் இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.

இந்த மதிப்பீடுகள் ஒருபுறமிருக்க, தலைமைத் தணிக்கைத் துறையில் தபால் மற்றும் தொலைத்தொடர்புத் துறைத் தணிக்கை பிரிவுக்கான முன்னாள் இயக்குநர் ஆர்.பி. சிங், 2ஜி அலைக்கற்றை பற்றிய வரைவு அறிக்கை மே,2010-இல் தயாரானபொழுது உத்தேச வருமான இழப்பு 2,645 கோடி ரூபா என்றுதான் கணக்கிடப்பட்டது; பின்னர் பொது கணக்குக் குழு ஆலோசனைப்படி உத்தேச இழப்பு 1.76 இலட்சம் கோடி ரூபாயாக மாற்றப்பட்டது” என்று இப்பொழுது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். இவற்றுள் யார் சொல்வதை நம்புவது?

ஊழலைப் பிரம்மாண்டமானதாகக் காட்டுவதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில்தான் பா.ஜ.க., ஜெயா, சு.சாமி, முதலாளித்துவப் பத்திரிகைகள் 1.76 இலட்சம் கோடி ரூபா என்ற கணக்கீட்டைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். தலைமைத் தணிக்கைத் துறை அலைக்கற்றை ஒதுக்கீடில் அரசிற்கு 1.76 இலட்சம் கோடி ரூபா அளவிற்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றுதான் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது. ஆனால், எதிர்த்தரப்போ ஏதோ 1.76 இலட்சம் கோடி ரூபா அளவிற்கு இந்த ஒதுக்கீடில் ஊழல் நடந்து, அப்பணம் முழுவதையும் ராசாவும், தி.மு.க.வும் பங்கு போட்டுக் கொண்டதைப் போலப் புளுகி வருகிறார்கள்.

அலைக்கற்றை ஒதுக்கீடில் அரசிற்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் வருமான இழப்பு பற்றி பல்வேறு மாறுபட்ட மதிப்பீடுகள் இருக்கும் அதேசமயம், அவை அனைத்தும் உத்தேசமானதுதான். அவற்றை உண்மையாகவே ஏற்பட்டுள்ள வருமான இழப்பாகக் கருதி விடவும் முடியாது. ஆ.ராசா ஒதுக்கீடு செய்த அலைக்கற்றைகளை ரத்து செய்து தீர்ப்பு அளித்துள்ள முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எஸ். கபாடியாகூட, இலாபம் என்பது கருதுகோள்தான்” என விளக்கமளிக்கிறார். அதேசமயம், 2ஜி ஊழல் போலன்றி, உண்மையாகவே அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள, 2ஜி ஊழலைவிடப் பலமடங்கு பிரம்மாண்டமான ஊழல்கள் பற்றி – உ.பி.யில் நடந்த 2 இலட்சம் கோடி ரூபா பெறுமான ரேஷன் அரிசி கடத்தல் ஊழல், அரசிற்குப் பல இலட்சம் கோடி ரூபா வருமான இழப்பை, நட்டத்தை ஏற்படுத்தி வரும் கிருஷ்ணா-கோதாவரி எண்ணெ வயல் ஊழல் பற்றி எதிர்த்தரப்பு வாயே திறக்க மறுக்கிறது.

மற்ற ஊழல்களைவிட 2ஜி ஊழல் விவகாரம் இந்தளவிற்குப் பரபரப்பாகப் பேசப்படுவதற்கு அரசியல் உள்நோக்கங்களும், கோஷ்டி சண்டைகளும்தான் காரணமேயொழிய, ஊழலை அறவே ஒழித்துவிட வேண்டும் என்ற அறம் சார்ந்த அடிப்படை எதுவும் கிடையாது. 2 ஜி ஒதுக்கீடில் நடந்துள்ள முறைகேடுகளைத் தலைமை தணிக்கைத் துறை அம்பலப்படுத்துவதற்கு முன்பாகவே, மாறன் – கருணாநிதி குடும்பத்துக்கு இடையே நடந்த சண்டை காரணமாக, மாறன் சகோதரர்கள் அம்முறைகேடுகளைக் கசியவிட்டனர். கருணாநிதி-மாறன் குடும்பங்களுக்கு இடையே சமரசம் ஏற்பட்ட பின்னர், இந்த விவகாரம் அப்படியே அமுக்கப்பட்டது. இதன் பின்னர் அலைக்கற்றை ஒதுக்கீடில் ஆதாயமடைந்த முதலாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, நீரா ராடியே டேப் அம்பலப்படுத்தப்பட்டது. அதிலும் தரகு முதலாளிகளான டாடா, அனில் அம்பானி; பத்திரிகையாளர்களான வீர் சங்வி, பர்கா தத் என சம்பந்தப்பட்ட பலர் விலக்கப்பட்டு, ராசா, கனிமொழி மட்டும் பத்திரிகைகளாலும் எதிர்க்கட்சிகளாலும் குறிவைக்கப்பட்டனர்.

2ஜி ஏலம் 'ஊத்திக் கொண்டதை'க் காடித் தலைமைத் தணிக்கைத் துறைக்குச் சவால் விட்டு விரும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தொலைத் தொடர்ப்புத்துறை அமைச்சர் கபில் சிபல்
2ஜி ஏலம் ‘ஊத்திக் கொண்டதை’க் காடித் தலைமைத் தணிக்கைத் துறைக்குச் சவால் விட்டு விரும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் தொலைத் தொடர்ப்புத்துறை அமைச்சர் கபில் சிபல்

‘‘ஆ.ராசா கைபேசி சேவை சந்தையில் உப்புமா கம்பெனிகளுக்கு இடங்கொடுத்து ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கிவிட்டதாகவும், அதனால்தான் பல நிறுவனங்கள் இத்துறையில் புதிதாக மூலதனமிடத் தயங்குவதாகவும்” முதலாளிகள் குற்றஞ்சுமத்துகிறார்கள். ஒரு சில நிறுவனங்களின் பிடியில் இருந்த கைபேசி சேவையை உடைத்து, கைபேசி கட்டணத்தைக் குறைக்க வழி ஏற்படுத்தியதைப் பொறுக்காமல்தான் தன் மீது பழம் பெருச்சாளிகள் பாவதாக’’ப் பதிலடி கொடுக்கிறார், ஆ.ராசா.

இது மட்டுமின்றி, தனக்கு முன்பு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்களாயிருந்த தயாநிதி மாறன், அருண் ஷோரி ஆகியோரும் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்தான் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்திருக்கும்பொழுது, தான் மட்டும் எப்படிக் குற்றவாளியாக முடியும்? எனக் கேள்வி எழுப்பி வருகிறார்.

ஆ.ராசா 2008-இல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்த அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அதற்கு முன்னர் இதே அடிப்படையில் ஒதுக்கீடு செயப்பட்ட உரிமங்களை ஏன் ரத்து செய்யவில்லை என்ற கேள்விக்கு, அந்த ஒதுக்கீடுகள் குறித்து யாரும் வழக்குத் தொடுக்கவில்லை என்று கூறித் தப்பித்துக் கொள்கிறது.

பா.ஜ.க. ஆட்சியில் செல்போன் கம்பெனிகளுக்குச் சாதகமாகக் கொண்டுவரப்பட்ட புதிய தொலைத்தொடர்புக் கொள்கையின் விளைவாக அரசிற்கு 50,000 கோடி ரூபாய் வரை வருமானம் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றஞ்சுமத்தி, பா.ஜ.க.வைச் சந்திக்கு இழுத்தது, காங்கிரசு. பா.ஜ.க.வோ, தனது ஆட்சியின்பொழுது இருந்த சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப, தான் செல்போன் கம்பெனிகளுக்குச் சலுகை அளித்ததாகவும், இதில் முறைகேடு எதுவுமில்லை என்று வாதிடுகிறது.

அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், ஒதுக்கீடு பெற்ற மறுநிமிடமே தமது பங்குகளைச் சந்தையில் விற்றுக் கொள்ளலாம் என்ற சட்டத் திருத்தம் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது. டாடா டெலி சர்வீசஸ், ஸ்வான், யுனிடெக் ஆகிய நிறுவனங்கள் ஆ.ராசா ஒதுக்கிய அலைக்கற்றைகளைப் பெற்ற கையோடு, தமது பங்குகளைச் சந்தையில் விற்று 22,000 கோடி ரூபா அளவிற்கு இலாபமடைந்ததற்கு பா.ஜ.க. கொண்டு வந்த இந்தச் சட்டத் திருத்தம்தான் உதவியிருக்கிறது.

ஆ.ராசா அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகளோ, ஊழலோ நடைபெறவில்லை என்பதல்ல நமது வாதம். மாறாக, 2ஜி ஊழல் விவகாரம், ஓட்டுக்கட்சிகள் உள்ளிட்டு இன்றுள்ள அரசியல்-பொருளாதார-நிர்வாகக் கட்டமைப்பே ஊழலும் மோசடிகளும் முறைகேடுகளும் நிறைந்தது; கார்ப்பரேட் பகற்கொள்ளைக்குச் சாதகமானது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருப்பதைத்தான் முதன்மையாக கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கோருகிறோம்.

ஆனால், தனியார்மயம்-தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையைவிட, அதிகாரத் தாழ்வாரங்களில் நடந்துவரும் ஊழலும் அதிகாரமுறைகேடுகளும்தான் நாட்டைப் பிடித்திருக்கும் அபாயம் என்பதாக நடுத்தர வர்க்கம் நம்பிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும் பல இலட்சம் கோடி ரூபா பெறுமான வரிச்சலுகைகளும், கார்ப்பரேட் நிறுவனங்களோடு போட்டுக் கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இன்ன பிற சலுகைகளும் 2ஜி ஊழலைவிட மிகப்பெரிய ஊழல்-பகற்கொள்ளை என்பதை நடுத்தர வர்க்கம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. உச்ச நீதிமன்றம், தலைமை தணிக்கைத் துறை உள்ளிட்ட அரசியல் சாசன அமைப்புகளும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் காட்டப்படும் இச்சலுகைகளை நாட்டை உய்விக்க வந்த கொள்கைகளாகத்தான் கருதுகின்றன.

2ஜி விவகாரத்தை எடுத்துக் கொண்டால், விலைமதிப்பற்ற இயற்கை வளமான அலைக்கற்றைகளைத் தனியார் முதலாளிகளுக்குப் படையல் போட்டுக் கொடுக்கும் கொள்கையை, நாட்டின் நலனுக்கு எதிரானதாக உச்ச நீதிமன்றம் கருதவில்லை. அதனை எப்படிப் படையல் போட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்பதில்தான் ஆளுங் காங்கிரசுக் கட்சி, எதிர்க்கட்சிகள், உச்ச நீதிமன்றம் ஆகியவை பிரிந்துநின்று மோதிக் கொள்கிறார்கள். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழலுக்கும் தனியார்மயத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது; அவ்வூழல் என்பது ராசாவும் சில அதிகாரிகளும் முதலாளிகளும் கூட்டாகச் சேர்ந்து நடத்திவிட்ட சதியாக, நெறியற்ற செ யலாகக் காட்டிவிடத்தான்” உச்ச நீதிமன்றம் முயலுகிறது. இப்படிபட்ட முறைகேடுகளும், சந்தையில் திடீர்திடீரென ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அராஜகம், நிச்சயமற்றதன்மை ஆகியவை இல்லாமலும் தனியார்மயத்தை நடைமுறைப்படுத்திவிட முடியும்; அதன் மூலம் நாட்டின் வளர்ச்சியைச் சாதித்துவிட முடியும் என்ற நம்பிக்கையைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த முயலுகிறது. அப்படியே அதில் ஊழல் நடந்தாலும், ஊழல் பேர்வழிகளை இந்த அரசியல் அமைப்பின் மூலம் தண்டித்துவிட முடியும் என்ற நம்பிக்கையைப் பொது மக்கள் மத்தியில் மீண்டும் விதைக்கும் நோக்கிலும்தான் 2ஜி ஊழல் விவகாரத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கையாண்டு வருகிறார்கள்.

____________________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
__________________________________________________

திருட்டு டாடாவின் பீலிங்ஸ் ஆப் இன்டியா…..

12

tata-cartoon

 

செய்தி: ஊழல்களால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்படுகிறது – தொழிலதிபர் ரத்தன் டாடா.

_______________________

ஓவியம் – நரேன்.

__________________________

சிறுமி ஸ்ருதி படுகொலை: விரிவான ஆய்வறிக்கை!

2

சிறுமி ஸ்ருதியின் படுகொலை!

சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டையின் பின்னணி என்ன?

உண்மை அறியும் குழுவின் அறிக்கையும், பரிந்துரைகளும்!

25.07.2012 அன்று மாலை சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் உள்ள சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். முடிச்சூரில் அச்சிறுமி இறங்குவதற்கு முந்தைய நிறுத்தத்தில், அமர்ந்திருந்த இருக்கையின் முன்பகுதில் கால் வைக்கும் இடத்தில் இருந்த ஓட்டையின் காரணமாக சாலையில் விழுந்தாள்.

அவள் பயணித்த பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தாள். இதை நேரில் கண்டும், பேருந்திலுள்ள குழந்தைகளின் கூக்குரலைக் கேட்டும் பேருந்தை நிறுத்திய மக்கள் அதன் ஓட்டுநர் மற்றும் நடத்தனரைத் தாக்கினர். ஆத்திரம் கொண்ட மக்கள் பேருந்தைத் தீ வைத்துக் கொளுத்தினர்.

சிறுமி ஸ்ருதி
சிறுமி ஸ்ருதி

சிறுமி ஸ்ருதியின் மரணம் தமிழகம் முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் பள்ளியை மூடவேண்டுமென்று ஆங்காங்கே போராட்டம், வட்டார போக்குவரத்து அலுவலக முற்றுகை,  தாம்பரம் வியாபாரிகள் சங்கத்தின் கடையடைப்பு, பெருந்திரளான  மக்கள் கூடி பேரணியாகச் சென்று சிறுமி ஸ்ருதிக்கு இறுதி மரியாதை செலுத்தியது என மக்களின் உணர்வை இச்சம்பவம் தட்டி எழுப்பியுள்ளது. பணத்தை வைத்து மட்டுமல்ல, உயிரையும் பணயம் வைத்து தான் குழந்தைகள் கல்வி பெற முடியும் என்பதற்கு தக்க சான்று தான் ஸ்ருதியின் மரணம்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர்நீதி மன்ற தலைமை  நீதிபதி தாமாகவே முன்வந்து, இதனை வழக்காக முன்னெடுத்து, விசாரணையைத் தொடங்கி, உரிய அதிகாரிகள் அனைவரையும் ஆஜராக உத்திரவிட்டதோடு, இச்சிறுமியின் மரணத்தை கொலைவழக்காக ஏன் விசாரிக்கக் கூடாது என்றும், இதுபோல விபத்துகள் நடக்காமல் இருக்க விதிமுறைகளை வகுக்கவும் அரசுக்கு  உத்திரவிட்டுள்ளார்.

சிறுமியின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் பழுதடைந்த பேருந்தை இதற்கு ஒதுக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்திரவிட்டுள்ளார்.

அரசின் அறிவிப்புகள், நீதிமன்ற நடவடிக்கை எல்லாம் மக்களை அமைதிப்படுத்துனாலும், சேலையூர்  சீயோன் மெட்ரிக் பள்ளி பேருந்தில் விழுந்த ஒட்டை தனியார் பள்ளிக் கல்வியில், குழந்தைகளின் பாதுகாப்பில் விழுந்த ஓட்டையாகக் கருதி, அந்த ஓட்டையின் பின்னணியையும், அதற்கான தீர்வையும் ஆய்வு செய்ய மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

உண்மை அறியும் குழுவின் உறுப்பினர்கள்:

  1. சு. ஜிம்ராஜ் மில்ட்டன், வழக்குரைஞர்,செயலாளர்,,  சென்னைக்  கிளை, ம.உ.பா. மையம்.
  2. பேரா. பா . சிவக்குமார், முன்னாள் முதல்வர், அரசு கலைக்  கல்லுரி, குடியாத்தம்
  3. பேரா. மு. திருமாவளவன், அம்பேத்கர் அரசு கலைக் கல்லுரி
  4. வே. மதிமாறன், எழுத்தாளர்
  5. சோ. முத்துக்குமரன், வழக்குரைஞர்,ம.உ.பா. மையம், சென்னை கிளை
  6. சு. செந்தமிழ்ச் செல்வன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம்
  7. ஜெ. செல்வராசு, வழக்குரைஞர், ம.உ.பா. மையம், சென்னைக் கிளை

இக்குழுவினர் சிறுமி ஸ்ருதி மரணம் குறித்து, 01.08.2012 – 03.08.2012  ஆகிய 3 நாட்கள் நேரில் சென்று விசாரித்த விவரங்களையும், அதனை ஒட்டிய சில கேள்விகளும், பரிந்துரைகளும் அறிக்கையாகத் தரப்படுகிறது.

முடிச்சூர் வரதராஜபுரம்

இந்த சம்பவம் குறித்து கடந்த 01.08.2012 அன்று முடிச்சூர் வரதராஜபுரம்பரத்வாஜ் நகரில் உள்ள சிறுமி ஸ்ருதியின் வீட்டிற்குச் சென்றோம். ஸ்ருதியின் அம்மாபிரியாவிடம் பேசிய போது:

“எனது மகள் எல்.கே.ஜி முதல் சேலையூர்  சீயோன் மெட்ரிக் பள்ளியில்  படித்து வந்தாள். அவளின் பிறந்த தினம் 17.03.2012. எங்களின் முதல் குழந்தை பிரணாப் தற்போது வேறொரு தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

எங்க பாப்பா இறந்த பிறகு என் வீட்டிற்கு வந்த மாணவர்கள் ஏற்கெனவே அப்பேருந்தில் ஓட்டை இருந்ததாகவும், பல முறை மாணவர்களின் ஸ்கூல் பேக், லஞ்ச் பாக்ஸ்,  செருப்பு போன்றவை ஓட்டையின் வழியாக சாலையில் விழுந்ததாகவும் கூறினார்கள். பேருந்தில் ஓட்டையிருந்தது பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவுதான். இனி இதுபோல் எந்தக் குழந்தைக்கும் நடக்கக் கூடாது.’’

‘’இந்த சம்பவம் நடந்து இவ்வளவு நாளான பிறகும் கூட  பள்ளியின் ஆசிரியர்கள், நிர்வாகிகள் உள்பட யாரும் வரவில்லை. தொலைபேசியில் கூட வருத்தமோ, ஆறுதலோ சொல்லவில்லை. 31.07.2012 அன்று மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலை கொடுத்தார்.

சீயோன் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் ஏதோ ஒப்புக்கு  நடைபெறும். அக்கூட்டத்தில் கலந்து கொள்ள மட்டுமே அனுமதி உண்டு.  எந்தவிதமான  ஆலோசனையோ, கருத்துக்களோ சொல்ல பெற்றோர்களுக்கு அனுமதி இல்லை.  என் மகளுக்கு வருடத்திற்கு புத்தகத்திற்கான கட்டணம் ரூ. 2,000/-;  கல்விக்கட்டணம் ரூ. 10,000/-; பேருந்துக் கட்டணம் ரூ. 8,000/-‘’ என்றார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ருதியின் அண்டை வீட்டில் வசிக்கும் திருமதி லீலாவதியிடம் கேட்ட போது,

‘’இந்தச் சம்பவம் குறித்து பத்திரிகை, தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும்போது சுருட்டை முடிகொண்ட ஒருவர் சீயோன் பள்ளியின் பெயரைக் குறிப்பிடாமல் பேட்டி கொடு என்று என்னை மிரட்டினார். மேலும் அந்த நபர் பொதுஜனம் போல் எங்களுடன் இருந்து கொண்டே  பள்ளிக்கு ஆதரவாக சில பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தார். மாணவியைப் பற்றிய சில தவறான தகவல்களையும் கூறினார். மறுநாள் டீ ஷர்ட் போட்டுக்கொண்டு வந்த அவர், இரண்டு லட்சம் பணம் தருகிறோம். எந்தப் பிரச்சினையும் செய்ய வேண்டாம். மேற்கொண்டு எந்தப் பேட்டியோ, அறிக்கையோ கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் நாங்கள் மறுத்து விட்டோம்.’’

‘’கடந்த ஞாயிறன்று  சர்ச்சுக்கு வந்த பெற்றோர்களையும், நிர்வாகத்திற்கு நெருக்கமாக உள்ளவர்களையும் இணைத்து பெயரளவில் ஆர்ப்பாட்டம், பள்ளி முற்றுகை போன்ற நாடகங்களை  அரங்கேற்றி, மக்களை திசைதிரும்ப வைத்து மீண்டும் உடனடியாக பள்ளியைத் திறந்து  விட்டனர். கல்வி என்ற பெயரில் கோடிக் கோடியாய் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகளை இழுத்து மூட வேண்டும்.  கொஞ்சமும் குழந்தைகள் மீது அக்கறை இல்லாத சீயோன் பள்ளியை உடனடியாக மூட வேண்டும். அப்போதுதான் மற்ற தனியார் பள்ளிகள் பயந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

மூன்று பேருந்துகளில் வரக்கூடிய மாணவர்களை ஒன்று அல்லது இரண்டு பேருந்துகளில் கொண்டு வருவார்கள்.  மேலும் எங்கள் பகுதியில் சாலைகள் நன்றாக இருந்தாலும் கடந்த ஆறு வருடமாக எந்தப் பள்ளிப் பேருந்தும் வருவதில்லை. ஆனால் பேருந்துக் கட்டணம் மாத்திரம் ரூ. 8000 வாங்கி இருக்கிறார்கள்.

எங்கள் பகுதியிலுள்ள நடேசன் பள்ளியில் மொத்தம் இருபது கழிப்பறைகள் இருந்தாலும் பதினைந்தை பூட்டி வைத்து விடுவார்கள். எட்டாயிரம் மாணவர்களுக்கு  வெறும் ஐந்து கழிப்பறைகள்  மட்டுமே உள்ளன. மற்ற  பதினைந்தை  ஏதேனும் பள்ளி ஆண்டு விழா, பள்ளியை ஆய்வு செய்ய அதிகாரிகள் வரும்போது மட்டுமே திறப்பார்கள்.  இதே போல் சீயோன் பள்ளியிலும் போதுமான கழிப்பறை வசதி இல்லை. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்காளாவதுடன் பல்வேறு விதமான தொற்று நோய்கள் மற்றும் தோல் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.  மேலும் மாணவிகள் பயன்படுத்திய நாப்கினைப் போடுவதற்கு கழிப்பறைகளில் குப்பைத்தொட்டி கூட இருப்பதில்லை. கழிப்பறையில் சுகாதாரக் கேடு மிகுதியாக இருக்கிறது’’ என்றார்

இதைப் போன்ற  பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதில்லை. பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகளைக் கண்டு கொள்வதும் இல்லை. ஏனெனில் அதிகாரிகளின் குழந்தைகளும் இப்பள்ளியில் தான் படிக்கிறார்கள். அவர்களுக்கு சிறப்பான பராமரிப்பும், கவனிப்பும் இருப்பதால் பள்ளியின் ஒட்டுமொத்த தவறுகளையும் அதிகாரிகள் கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள்.

இங்கே இறந்த குழந்தைக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதற்கு அப்பள்ளி ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது யாரேனும் ஸ்ருதியின் வீட்டிற்குச் சென்றால் வேலையை விட்டு நீக்கி விடுவோம் என்று பள்ளி நிர்வாகம் மிரட்டியதாகச் சொன்னார்கள்.

மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் இல்லையென்றால், அவர்களை வகுப்பறையில் அவமானப்படுத்துவது, திட்டுவது, பல்வேறு விதமான நெருக்கடிகளைத் தருவது  என்பது போல பள்ளி  நிர்வாகத்தின் நடவடிக்கைகள் இருக்கும் என்று திருமதி லீலாவதி கூறினார்.

முடிச்சூர்  பிரதானசாலை

தீயிட்டு எரியூட்டப்பட்டிருந்த அப்பேருந்தின் பதிவு எண் TN 23 S 9952 ஆகும். அதில் கணுவாய், டிவிஎஸ் நகர், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, பூ மார்க்கெட், மரக்கடை, டவுன்ஹால், ரயில் நிலையம் என்று கோவை நகரத்தில் உள்ள இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏற்கெனவே தனியாருக்கு சொந்தமான டவுன் பஸ்ஸாக கோவை மாநகரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

மக்களின் பயன்பாட்டுக்கு லாயக்கில்லை என்ற போதிலும் சிறுசிறு மாற்றங்களைச் செய்து, வண்ணம் பூசி விட்டு அந்தப் பேருந்தைப் பள்ளியின் வாகனமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

முடிச்சூர் ஊராட்சி மன்றஅலுவலகம்

இந்த சம்பவம் குறித்து முடிச்சூர் ஊராட்சி மன்றத்  தலைவர் தாமோதரன் அவர்களிடம்  கேட்ட போது:

‘’நடந்ததைக் கேள்விப்பட்டு  நானும், பஞ்சாயத்து செயலாளர்வாசுதேவனும் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றோம். பேருந்தைப் பார்வையிட்டபோது மாணவி ஸ்ருதி விழுந்த ஓட்டை  ஒரு சதுர அடிக்கும் பெரியதாக இருந்தது. பிறகு உடனடியாக பத்திரிகைகளுக்குத் தகவல் தந்து அந்த ஓட்டையினை ஃபோட்டோ எடுத்தோம்.

இதற்கிடையே இந்தச்  சம்பவம் அருகில் இருந்தோருக்கு தெரிய வரவே, அங்கே  மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. சிறிது நேரத்தில் பேருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. யார் தீ வைத்தார்கள்? என்று தெரியாது. ஆனால்  நிர்வாகம் பஸ்ஸிலிருந்த ஓட்டை சாட்சியாகக் கூடாது என்பதற்காக பேருந்தைக் கொளுத்தி இருக்கலாம் என ஊரில் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.  இந்த சம்பவம் போல் இனிமேல் எங்கும் நடக்கக் கூடாது. மிகவும் கொடுமையான விஷயமாகும்.’’ என்றார்.

முடிச்சூர் பஞ்சாயத்து செயலாளர் வாசுதேவன்:

‘’குழந்தையின் இறந்த உடலைப் பார்த்த போது, மிகவும் கோரமாக இருந்தது.  போஸ்ட் மார்டம் செய்த மருத்துவர்   கண்ணீர்  விட்டுக்கொண்டே  செய்ததாகக் கூறினார். சம்பவ இடத்தில் அந்த டிரைவரைப் பிடித்து மக்கள் அடிக்கும்போது ”அய்யா! பலமுறை அந்த ஒட்டையைச் சரி செய்யச் சொல்லியும் நிர்வாகம் கேக்கலிங்கஎன அழுதான். அவன் என்ன செய்வான். நிர்வாகம் தான் இந்த விபத்துக்கு பொறுப்பு.’’

‘’இந்த சம்பவம் போல் இனி நடக்காமல் இருக்க அனைத்துத் தனியார் பள்ளிகளும் பழைய பேருந்துகளை உடனடியாக மாற்ற வேண்டும். அரசும் இதில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். இந்த வழக்கை உயர்நீதி மன்றம் தானாக முன்வந்து விசாரிக்கவில்லையேன்றால் இவ்வளவு பெரிய முக்கியத்துவம் இதற்கு கொடுக்கப்பட்டிருக்காது’’ என்று கூறினார்.

தாம்பரம்

தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரை சந்திக்கச் சென்றோம். அவரின் நேர்முக உதவியாளர் கூறியதாவது  “அவர் பணியின் நிமித்தமாக வெளியில் இருக்கிறார். சிறிது நேரம் காத்திருங்கள்” என்று கூறினார். நாங்களும் இரண்டு மணி நேரம் காத்து இருந்தோம்.  அவர் திரும்பி வரவில்லை.

வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் தொடர்பு எண்ணைக் கேட்டு வாங்கி, தொடர்பு கொண்டபோது, தன்னை இப்போது பார்க்க முடியாது, நாளை தொலைபேசியில் உறுதிசெய்து விட்டு நேரில் வாருங்கள் என்றார். அடுத்த நாள் (2.8.12) தொடர்புகொண்ட போது 3.8.12 அன்று காலை தொலைபேசியில் உறுதிப்படுத்தி விட்டு வருமாறு கூறினார். மறுநாள் காலையில் அழைத்தபோது மாலை 5 மணிக்கு வருமாறு கூறியவர் பின்னர் பல முறை அழைத்தும் தொடர்பில் வரவேயில்லை. அலட்சியமும், மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சியும் அரசு அதிகாரிகளிடம் இல்லாதது தெளிவாகப் புலப்பட்டது.

சேலையூர் சீயோன்  மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி

பள்ளியின் தற்போதைய முதல்வர் டாக்டர்.சாந்தி அவர்களைச் சந்தித்தோம். “இந்த சம்பவம் குறித்து எந்த விதமான கருத்து சொல்லவும் எனக்கு அதிகாரம் இல்லை. என்னால் எந்தப் பதிலும் சொல்ல முடியாது” என்றார்.  பள்ளியின் நிர்வாகத் தரப்பினரைச் சந்திக்க வேண்டுமென நாம் கோரியதற்கு, ‘இப்போது யாரையும் பார்க்க முடியாது’ என மறுத்து விட்டார். அதன்பிறகு பள்ளியின் முன்பகுதியில் நாங்கள் நின்று கொண்டிருந்தபோது பெற்றோர்கள் என்ற பெயரில் நிர்வாகத்திற்கு ஆதரவாகச் சிலரை அவர்களே அனுப்பி எங்களுடன் பேச வைத்தார்கள்.

அப்போது பெற்றோர் – ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவரென்று கூறிக்கொண்ட டாக்டர்.செந்தில்குமார்  கூறியதாவது,

“பள்ளியின் தாளாளருக்கும் இந்தச் சம்பவத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. ஏனெனில்  சம்பவம் நடந்த பேருந்தின் உரிமையாளர் யோகேஷ். மேலும் வாகன ஆய்வாளர் சான்றிதழ் அளிக்கும்போது பேருந்தை   ஒழுங்காகப் பார்த்து பரிசோதனை செய்திருந்தால் இந்த விபத்தைத் தடுத்திருக்கலாம். ஆகவே இச்சம்பவத்திற்கு முழுப்பொறுப்பும் இவர்கள் மட்டும் தான்.  ஆனால் சம்பந்தமே இல்லாமல் பள்ளியின் தாளாளரை கைது செய்தது மிகப்பெரிய அநீதி.’’

‘’பல பள்ளிகளில் இந்த விபத்து போல் ஏராளமான  குழந்தைகள் அவ்வப்போது இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எந்தப் பள்ளியின் தாளாளரும் கைது செய்யப்படவில்லை. இங்கே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலரும், பள்ளியின் வளர்ச்சியைப் பிடிக்காத சிலரும் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டி எங்கள் பள்ளியின் தாளாளரைக்  கைது செய்ய வைத்திருத்திருக்கிறார்கள். ஏதோஉயிரிழப்புஏற்பட்டுவிட்டது. அதற்காகநஷ்டஈடுதரவும் தயாராகஇருக்கிறோம். அதைப் பெற்றுக்கொண்டுஅமைதியாகச்செல்லாமல்,வீணாகப்பள்ளியின்நல்லபெயரைக் கெடுத்துக் கொண்டுஇருக்கிறார்கள்.  பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் வேண்டுமென்றே எங்களது பேட்டியைத் திருத்தியும், எங்களுக்கு எதிராகவும்   தவறாகச் செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுகிறார்கள்“

பெற்றோர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்ட வெள்ளையம்மாள், தேவி ஆகியோர்,

“சீயோன் பள்ளியின் தாளாளர் குழந்தைகள் மீது மிகவும் பிரியமாகவும், அன்பாகவும் இருப்பார். குழந்தைகளுக்கு சோறூட்டி விடுவதிலிருந்து நலம் விசாரிப்பது வரை அனைத்தையும் செய்வார்” என்றும் கூறினார்கள்.

பெற்றோர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களிடமிருந்து குழந்தை மரணத்திற்கு இரங்கலாக ஒரு வார்த்தை கூட வரவில்லை. மாறாக அவர்கள் பள்ளி நிர்வாகத்தினரைப் போன்றே பேசினார்கள்.

அவர்களிடம், “உங்களை போன்ற ஒரு பெற்றோரின் குழந்தை தான் பாதுகாப்பற்ற பள்ளி வண்டியில் சிக்கி இறந்திருக்கிறது. பெற்றோர் – ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் அதற்கு நீங்கள் என்ன பதில் நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கும் “எங்கள் பள்ளியின் தாளாளர் நல்லவர். அவர்தான் செய்ய வேண்டும். அவரைத்தான் ஜெயிலில் வைத்து விட்டீர்களே” என்ற பதில்தான் கிடைத்தது.

பள்ளியின் மாணவிகளான மதர்தெரசா மற்றும் ஏழாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ   ஆகியோர் கூறியதாவது,

“எங்கள் பள்ளியின் நிர்வாகம் நன்றாக நடப்பதால் தான் பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். மேலும் விளையாட்டிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் பலரும் பல்வேறு தங்கப் பதக்கங்களை வென்று இருக்கிறார்கள். எங்கள் சார் (தாளாளர் – விஜயன்)  தேசிய நல்லாசிரியர் விருது வாங்கியவர். அவரைப் போய்  கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள். கல்வி நன்றாக இருப்பதால் தான் பலரும் எங்கள் பள்ளியில் போட்டி போட்டுக்கொண்டு தங்களது பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். எங்கள் சார் திறமையான நிர்வாகி, நல்லவரும் கூட.  வண்டியில் இருக்கிற கிளீனர், டிரைவர் இவர்கள் தான் வண்டியில் இருந்த ஓட்டையைச் சரி செய்திருக்க வேண்டும்” என்று கூறினார்கள். அந்த மாணவிகளிடம் இரு கேள்விகளை முன் வைத்தோம். ‘’ஒன்று, எட்டாயிரம் பேர்  படிக்கும் பள்ளியில்ல் ஒரு மாணவர் அல்லது மாணவி  கல்விக் கட்டணம் செலுத்தா விட்டாலும் பள்ளித் தாளாளரின் கவனத்திற்கு அது சென்று சேரும் போது, பேருந்தில் ஓட்டை இருந்த செய்தி மட்டும் ஏன் சென்று சேரவில்லை? இரண்டு, உங்களுடைய பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையின் மரணத்திற்கு  பள்ளியின் ஆசிரியர்களோ, நிர்வாகத்தினரோ நேரில் சென்று ஏன் ஆறுதல் கூட சொல்லவில்லை?’’ இந்த இரண்டு கேள்விகளுக்கும் அம்மாணவிகளிடமிருந்து மௌனம் தான் விடையாகக் கிடைத்தது.

பெயர் குறிப்பிடத் தயங்கும் பெற்றோர்

தன் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேச ஆரம்பித்த பெற்றோர்கள் தரப்பிலுள்ள ஒருவரிடம் பேசியபோது,

‘’இது போன்ற விபத்துக்கு பள்ளியின் இலாப வெறியும், வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் லஞ்ச, ஊழலும் தான் காரணம். எனது மூன்று குழந்தைகள் சீயோன் மெட்ரிக் பள்ளியில் தான் படிக்கிறார்கள். பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 50% அதிகமாகவே பணம் வசூலிக்கின்றனர். முன்பெல்லாம் 3 தவணைகளாக கல்விக் கட்டணம் செலுத்த அனுமதி அளித்தனர். தற்போது ஒரே தவணையில் கட்டியாக வேண்டும். அதிகக் கட்டண வசூலை இயக்குனரோ, மெட்ரிக் பள்ளி ஆய்வாளரோ கண்டு கொள்வதே இல்லை. பள்ளி நிர்வாகம் எந்த கமிட்டியின் உத்தரவையோ, நீதிமன்றத் தீர்ப்பையோ மதித்து நடப்பதில்லை. அரசு தனது பள்ளிகளை ஒழுங்காக நடத்தினால் நாம் எதற்கு இப்படி இங்கே வந்து கஷ்டப்பட வேண்டும்?!’’ என ஆதங்கப்பட்டார்.

பெயர் சொல்ல விரும்பாத இன்னொருவர்,

‘’பி.எஸ்.சி., பி.எட் படித்த ஆசிரியருக்கு ரூ. 6000-மும், எம்.எஸ்.சி., பி.எட் படித்தவருக்கு ரூ 12,000-மும் தான் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் 1 – 3 வகுப்புகளுக்கு நோட்டுப் புத்தகம் தவிர கட்டணமாக மட்டும் ரூ. 8000-மும், 4,5 வகுப்புகளுக்கு ரூ. 10,000–மும், 6 – 8 வகுப்புகளுக்கு ரூ. 15,000–மும், 9,10 வகுப்புகளுக்கு ரூ. 20,000–மும், 11,12 வகுப்புகளுக்கு ரூ. 25,000–மும் வசூலிக்கிறார்கள். இது அரசு கடைசியாக நிர்ணயித்ததை விட அதிகம் என்றாலும் தட்டி்க் கேட்க ஒரு பெற்றொர் கூட முன் வர மட்டார்கள்.’’

பள்ளியின் முன்னாள்  ஊழியர்கள் சிலர்

ஜோஷ்வா:-

நான் சீயோன் பள்ளி ஆரம்பித்தது முதல் (12.07.1996)  சுமார் 12 ஆண்டுகள் தாளாளருக்கு (விஜயன்) டிரைவராகப் பணியாற்றினேன். அப்போது பள்ளியின் நிர்வாகம் நன்றாக இருந்தது; நன்றாக குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார்; அவர் கடின உழைப்பாளி; நல்ல திறமைசாலி; ஒவ்வொரு மாணவரின் வீட்டிற்கும் நேரில் சென்று, எப்படி படிக்கிறார் என்று  விசாரிப்பார்.

ஆனால் தற்போது பள்ளியின் நிர்வாகம் மிகவும் மோசமாக உள்ளது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக நிர்வாகம் தாளாளரின் தம்பிகள், மச்சான் ஆகியோரிடம் சென்றபோது தரம் குறைந்து விட்டது. இலாபம் மட்டுமே முக்கிய நோக்கமாக மாறி விட்டது.

அதோடு  தாளாளரும் தற்போது மிகவும்  மாறி விட்டார். பள்ளியில் நடக்கும் ஏதேனும் குறைகளைச் சுட்டிக்காட்டினால், ‘எனக்கு கமிஷனர், அரசியல் தலைவர்கள்  என பல முக்கிய வி.ஐ.பி.க்கள்  தெரியும்’  என்று சொல்லி மிரட்ட துவங்கி விட்டார். ஆசிரியர்கள் மற்றும்  பணியாளர்கள்,  நிர்வாகம் செய்யும் தவறுகளைக்  கேட்டால் உடனடியாக எந்த விசாரணையும் இல்லாமல் கேட்டவர்களை டிஸ்மிஸ் செய்து விடுவார். அத்துடன் பல்வேறு விதமாக  மிரட்டுவார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  பழைய பேருந்திற்கு செலவு செய்ய முடியவில்லை, ஒப்பந்தத்தில் பேருந்தை விடப் போகிறேன் என நீதிமன்றத்தில் பொய்யைக் கூறி விட்டு, 30 டிரைவர்களை  வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்து விட்டார். ஆனால் ஒப்பந்தத்தை தன் தம்பியிடமே ஒப்படைத்து, எங்களை மட்டுமில்லாது சட்டத்தையும் ஏமாற்றத் துவங்கினார். தற்போது விபத்து நடந்த பேருந்து கூட அவருடைய தந்தை பெயரில் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திரு.விஜயன் அவர்கள் விபத்து நடந்தவுடன் தொலைக்காட்சியில், ‘எங்களுடைய  பள்ளி நிர்வாகத்திற்கும், பேருந்து ஒப்பந்தக்காரருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்றார். ஆனால் உண்மையில் அந்தப் பேருந்து பள்ளி நிர்வாகத்தின் பேரில்தான் உள்ளது. மேலும் அந்த ஒப்பந்தக்காரர் அவருடைய சொந்த சகோதரர் தான்.  இப்பள்ளியில் இருக்கும் பெரும்பாலான பேருந்துகள் பழைய மற்றும் தரமில்லாதவையே.  மேலும் குறைந்த சம்பளத்திற்காக ஹெவி லைசென்ஸ் இல்லாதவர்களும், குறைந்தபட்சம் பத்து வருடங்கள் டிரைவிங்கில் அனுபவம் இல்லாதவர்களும் ஓட்டுநர் பணியில் இங்கு பணி புரிகிறார்கள்.

சிவப்பிரகாசம் :

எனது மகன் ஹரிஷ்,  சீயோன் பள்ளியில்தான் படிக்கிறான். அவன் இரண்டாம் வகுப்பு படித்தபோது என் மீது உள்ள விரோதம் காரணமாக  ரிசல்டை  நிறுத்தி   வைத்து  விட்டார்கள். பிறகு நீதிமன்றம் சென்று, வழக்காடி ரிசல்டைப் பெற்றேன் .  சீயோன் பள்ளியில் கல்வித்தரம் நன்றாக இருந்தாலும், அவர்கள் செய்யும் தவறுகளைக் கேட்கும்போது  இது போன்ற பழிவாங்கும் போக்கினைக் கடைபிடிப்பார்கள்.

சீயோன் மெட்ரிக் பள்ளிக்கு ஒரு நாளில் 38 பேருந்துகளில் தலா 2 அல்லது 3 முறை குழந்தைகளை ஏற்றி வருகிறார்கள். மறைமலை நகர் – 22 கி.மீ., படப்பை – 20 கி.மீ., பள்ளிக்கரணை – 15 கி.மீ., பல்லாவரம் – 13 கி.மீ., கிண்டி – 20 கி.மீ என அதிக தூரம் பயணம் செய்து தினந்தோறும் குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர். நீண்ட தூரத்திலிருந்து வரும் குழந்தைகளை சுமார் 6.30 மணிக்கு அவர்களது வீட்டருகே ஏற்றிக்கொண்டு பள்ளியில் 7.20 மணிக்கே கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். இரண்டாவது முறை சுமார் 7.40 மணிக்கு வீட்டருகே ஏற்றிக்கொள்கிறார்கள். இப்படி குறுகிய கால இடைவெளியில் ஓடும் பேருந்துகள் காலையில் மாத்திரம் 3 முறை குழந்தைகளை ஏற்றி வருகிறார்கள். அதுபோல 60 – 70 பேர் பயணிக்க வேண்டிய பேருந்தில் 100 முதல் 110 பேரை ஏற்றிச் செல்வதும் இங்கே வாடிக்கையானது தான்.

அசோக்குமார் :

எனது மகள் திலோத்தமா முதல் வகுப்பு படித்த போது, பள்ளியின் தாளாளர் என் மீது உள்ள விரோதம் காரணமாக  ரிசல்டை நிறுத்தி வைத்து  விட்டார். பிறகு நீதிமன்றம் சென்று வழக்காடி ரிசல்டைப் பெற்றேன். இப்பள்ளியின்  அருகே உள்ள  ஆல்வின் மெமோரியல் மேல்நிலைப் பள்ளி கூட இதே விஜயனுக்குச் சொந்தமானது தான். அந்தப் பள்ளியில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அந்த பெட்ரோல் பங்கிலிருந்துதான் அவருக்குச் சொந்தமான நான்கு பள்ளிகளின் அனைத்துப்  பேருந்துகளுக்கும் பெட்ரோல் நிரப்பப்படுகிறது. மேலும்  பங்கின் அருகே  வாட்டர் டேங்க், மாணவர்களின்  சைக்கிள் ஸ்டாண்ட் போன்றவை உள்ளன. விபத்து ஏற்பட்டால் இங்கிருந்து மாணவ, மாணவிகள் யாரும் தப்பிக்க வாய்ப்பில்லாத சூழல் உள்ளது.

சென்னை எழும்பூர் பள்ளி கல்வி இயக்ககம்

மெட்ரிக் பள்ளியின் இயக்குநர்செந்தமிழ்செல்வி அவர்களை சந்திக்க காத்திருந்தோம். எங்களுக்கு பின்னால் வந்த பலரை  உடனடியாக பார்த்த அவர், இரண்டு மணி நேரத்திற்கும் பிறகு

மெட்ரிக் பள்ளியின் துணை இயக்குனர்கார்மேகம் அவர்களைச் சந்திக்குமாறு ஊழியர் ஒருவரிடம் சொல்லி அனுப்பினார்.

மெட்ரிக் பள்ளியின் துணை இயக்குனர்கார்மேகத்தைச் சந்தித்தோம். அலட்சியம் தொணிக்க பேச ஆரம்பித்தார்.

மெட்ரிக் பள்ளியின் கல்விமுறையில் உள்ள குறைபாடுகள் குறித்து பேச ஆரம்பித்தோம்,

“நல்ல கருத்து. இதை என்னிடம் ஏன் சொல்கிறீர்கள்? பார்லிமெண்டில் போய் பேசுங்கள். வெளியில் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்.” என்றார்.

‘’பள்ளிக்கான பேருந்து ஓட்டை என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? நான் மெக்கானிக்கோ, எஞ்சினியரோ இல்லை. குழந்தையின் மரணத்திற்கு கல்வித்துறை பொறுப்பில்லை. ஆசிரியர்கள் கல்வியை எப்படி சொல்லித் தருகிறார்கள்? மாணவர்களின் கற்றல் திறன் எப்படி உள்ளது? கல்வியை எப்படி மேம்படுத்தலாம்? என்றெல்லாம் நாங்கள் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம். அதை விட்டுவிட்டு மற்ற பணிகளில் நாங்கள் கவனம் செலுத்த முடியாது; அதனால் சீயோன் பள்ளிக் குழந்தையின் இறப்பிற்கு நானோ, கல்வித் துறையோ  பொறுப்பில்லை.’’

பள்ளியின் சுகாதாரம் சரியில்லை என்றால் மருத்துவ சான்றிதழ் வழங்கிய அதிகாரி பொறுப்பு; பள்ளிப் பேருந்து சரியில்லை என்றால் போக்குவரத்து ஆய்வாளர் பொறுப்பு; பள்ளிக் கட்டிடம் சரியில்லை என்றால் அதற்கு அனுமதியளித்த பொறியாளரே பொறுப்பு; எங்களுக்கு நீதிமன்றத்திலிருந்து எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை. ஏனெனில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை’’ என அலட்சியமாக, தனக்கு பொறுப்பில்லாதது போல பேசினார்.

‘’சரி! சீயோன் பள்ளியின் கல்வித்தரம் எவ்வாறு உள்ளது?’’ எனக் கேட்டபோது “சீயோன் பள்ளியின் கல்வித்தரம் குறித்து எங்களுக்கு எந்தவிதமான புகார் கடிதமும் வரவில்லை. அவ்வாறு வந்தால் ஒழுங்கு  நடவடிக்கை எடுப்போம்” என சட்ட மொழியில் கூறினார். ‘’இவ்வளவு பிரச்சினை ஏற்பட்ட பிறகு அந்தப் பள்ளியில் உங்கள் அதிகாரிகள் ஏதாவது ஆய்வு செய்தார்களா?’’ என்று கேட்டதற்கு ‘’இல்லை’’ என்றார்.

“தனியார் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக ஒரு புதிய சட்டம் வர இருக்கிறது. அதன் பிறகு கல்வித் துறையில் நிறைய முன்னேற்றம் ஏற்படும். ஆகவே உங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள் தங்களின் கருத்துக்களைக் கூறினால்,  அதைப் பரிசீலனை செய்து அந்தச் சட்டத்தில் சேர்த்து விடலாம்” என்றார்.

குழு வந்தடைந்த முடிவுகள்

மேற்படி விசாரணை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உண்மை அறியும் குழு வந்தடைந்த முடிவுகள்.

1. நேரிலோ அல்லது தொலைபேசி வழியாகவோ கூட பள்ளி நிர்வாகம் சிறுமி ஸ்ருதியின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறவில்லை. பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவான பெற்றோர்கள் என யாருமே சிறுமி ஸ்ருதியின் பெற்றோர்களைச் சந்தித்து தங்களுடைய வருத்தத்தைத் தெரிவிக்கக் கூட இல்லை. ஒட்டுமொத்த ஆசிரியர்களும்,  பெரும்பாலான பெற்றோர்களும் மனிதத் தன்மையற்று இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது. மாறாக ஆறுதல் சொன்னால் வேலை போய்விடும் என்ற நிர்வாகத்தின் மிரட்டல் அல்லது அந்தப் பகுதிக்குப் போனால்    முடிச்சூர் மக்கள் தங்களைத் தாக்கி விடுவார்கள்  என்று நிர்வாகம் கிளப்பிய வதந்திதான் காரணம்.

2.    100 சதவீதம் தேர்ச்சி விகிதம் காட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாகவே தனியார் பள்ளிகள் நடத்துகின்றன. சீயோன் பள்ளி அதில் முதன்மையான பள்ளியாக இருந்திருக்கிறது. குறைவாக மார்க் எடுக்கும் மாணவர்களை பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்துவது, அவர்கள் வாழ்வதற்கே லாயக்கற்றவர்கள் போல் நடத்துவது என்று உளவியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். சீயோன் பள்ளியின் டார்ச்சருக்கு உள்ளான பல மாணவர்கள் மனநல மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் தற்கொலை முயற்சிக்கும் தள்ளப்பட்டுள்ளனர். மாணவியின் உயிர் குடித்த பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டையை விட மிகுந்த ஆபத்தானது, இப்படி 100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை துன்புறுத்துவதாகும். இது மாணவர்களின் கல்வி, எதிர் காலத்தை விட  பள்ளியின் வியாபாரத்தைத் தான் வளர்க்க உதவுகிறது.

3. அரசாங்கம் காலாவதியான பேருந்தை ஏலம் விடுகையில் அதனை வாங்கி, பள்ளிக் குழந்தைகளை ஏற்றிவர அதனைப் பயன்படுத்தியது மனிதத்தன்மையற்ற, மானுட விரோதச் செயலாகும்.

‘’அந்தப் பேருந்து  எங்கள் பள்ளியினுடையது அல்ல!’’ என்று முதலில் பேட்டியளித்த சீயோன் பள்ளியின் உரிமையாளர் விஜயன், பின்னர் இதற்கு ஒப்பந்த்தாரர் தான் பொறுப்பு என்று  மாற்றி மாற்றிப் பேசியுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால்,  அவரே சில ஆண்டுகளுக்கு முன் ‘’என்னுடைய  பள்ளிப் பேருந்துகள் எல்லாமே பழுதாகி விட்டது. அதனால் நான் பள்ளியின் போக்குவரத்தை வெளி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப் போவதால் பேருந்துகளை விற்றுவிடப் போவதாக நீதிமன்றத்தில் கடிதம் கொடுத்து விட்டு, தன்னிடம் வேலை பார்த்த அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் பாதுகாப்பற்ற அந்தப் பழைய பேருந்தையே  புதிய அனுபவமில்லாத தொழிலாளர்களை வைத்தும், பராமரிப்பை ஒழுங்காகச் செய்யாமலும் இயக்கியுள்ளார். இந்த இலாப வெறி தான் குழந்தை ஸ்ருதியின் மரணத்திற்கு உடனடிக் காரணமாகும். அதனால் தான் அந்த ஓட்டுநர் பேருந்தில் இருந்த ஓட்டையை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தும் அது அடைக்கப்படவில்லை.

மெட்ரிக்  பள்ளியின்  இயக்ககம் இதற்கு  எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  புகார் தந்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என அவர்கள் சொல்வது, சாவு விழுந்தால் தான் பிரச்சினையாகப் பார்ப்போம் என்பதற்குச் சமம். புகார் தந்தால் தன் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் பெற்றோர்கள் புகார்தர முன்வர மாட்டார்கள்.  பள்ளியில் திடீர்  சோதனை நடத்துவது.   மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிப் பார்த்து, சோதித்தறிந்து அதன் மீது நடடிவடிக்கை எடுப்பது என்பது, மெட்ரிக்  பள்ளி  இயக்ககத்தின் கடமைதானே!  அதை ஏன் அவர்கள் செய்யவில்லை?. குறிப்பிட்ட இந்த பேருந்தில் உள்ள ஓட்டை ஓட்டுநரால், நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும், ஒட்டையை அடைக்காமல் விட்டது ஏன்? பெற்றோர்களிடம் ஏற்பட்ட தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் அவர்களை அதே வகுப்பில் நிறுத்தி வைத்தது நிர்வாகம். நீதி மன்றம் தலையிட்டு தேர்வு முடிவைப் பெற்றுத்தந்த பிறகும் மெட்ரிக் பள்ளியின் இயக்ககம் சீயோன் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

4. பெரும்பாலான பெற்றோர்களும், தனியார் பள்ளி நிர்வாகமும் பிஞ்சுக் குழந்தைகளை சொல்லவொண்ணாத் துயரத்தில் ஆழ்த்துகிறார்கள். ஒரு குழந்தை 1 ஆம் வகுப்பிற்கு காலை 5.30 க்கு எழுந்து 6.30 க்கு பேருந்தில் ஏறி, 20 கி.மீ பயணம் செய்து, 7.30 க்கு பள்ளிக்கு வந்து, 1.30 மணி நேரம் காத்திருந்து, 9.00 மணிக்கு படிக்க தொடங்குவதற்குள் தனது அத்துனை சக்திகளையும் இழந்த பிறகு எப்படிக் கற்க முடியும்? ஆகவே இந்தக் கல்வி முறை குழைந்தைகளுடைய நலன் மற்றும் அறிவு வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராகவே உள்ளது.

பரிந்துரைகள்

இவ்வளவு பிரச்சினைக்குரிய சீயோன் மெட்ரிக் பள்ளியை மூடுவது அங்கு படிக்கும் 14,000 குழந்தைகளின் கல்வியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே அதற்கு ஒரே தீர்வு  பள்ளியை அரசுடமையாக்கவதுதான்.

தமிழகம் முழுக்க 10 வயதுக்குள் உள்ள குழந்தைகளை  வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பாமல்,  1 கி.மீ. எல்லைக்குள் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அதாவது அருகாமைப் பள்ளி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகளுடைய தரமும் ஓரே அளவுள்ளதாக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உத்திரவாதப்படுத்த வேண்டும்.

குழந்தைகளின் உடல் நலம், மன நலம் பாதிக்காத அளவில் கல்வியை சொல்லித் தர வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். குறிப்பாக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது மட்டுமல்லாமல், அவை விதிகளை மீறும்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக, அந்தப் பள்ளிகள் செய்கிற தவறுகளை, குழந்தைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மூடி மறைக்கிற அரசு அதிகாரிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அதற்கான சட்டபூர்வ அமைப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர் முறையை விடக் கொடுமையாக இருக்கின்ற தனியார் பள்ளிகளின் கல்விமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திடவும், கல்வியில் தனியார்மயத்தை ஒழித்திடவும்  பொது மக்களும், பெற்றோர்களும் தங்களுடைய காரியவாதத்தைக் கைவிட்டு, அரசை நிர்ப்பந்திக்கும் போராட்டங்களுக்கு அணியமாவது அவசியம்.

_______________________________________________________

– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

__________________________________________________

தருமபுரி வன்கொடுமை : புதிய ஜனநாயகத்தின் விரிவான கட்டுரை!

24

தருமபுரி வன்கொடுமைத் தாக்குதல்:

ஆதிக்க சாதி ஓட்டு வங்கி அரசியலின் விளைவே!

யிரை மட்டும்மிச்சம் வைத்து விட்டு, வாழ்க்கையை உருத்தெரியாமல் அழிப்பது என்பதற்கு நடைமுறை எடுத்துக்காட்டுதான், நவம்பர் 7-ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டத்தின் 3 கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்னிய சாதிவெறியர்கள் நடத்தியிருக்கும் வன்கொடுமைத் தாக்குதல்.

தருமபுரியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது நாயக்கன் கொட்டாய். நக்சல்பாரி இயக்கத்தின் அரசியல் செல்வாக்கு காரணமாக, சாதிவெறி தலையெடுக்காமல் தடுக்கப்பட்டிருந்த மாவட்டம் தருமபுரி. தோழர் பாலன் தலைமையில் தனிக்குவளை முறை போராடி ஒழிக்கப்பட்ட இடம் நாயக்கன் கொட்டாய். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அடிமைத் தொழில்கள் ஒழிக்கப்பட்டிருப்பது அந்த வட்டாரம். நக்சல்பாரி இயக்கத்தின் முன்னணித் தியாகிகளான தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோரது நினைவுச் சின்னம் நிறுவப்பட்டிருக்கும் இடமும், தமிழகத்தில் நக்சல்பாரி அமைப்புகள் செல்வாக்குப் பெற்றிருந்த ஊருமான நாயக்கன் கொட்டாய்தான் இன்று ஆதிக்க சாதிவெறியின் அடையாளமாகியிருக்கிறது. நக்சல்பாரி இயக்கம் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, சாதி அமைப்புகள் எனும் நச்சுப் பாம்புகள் திட்டமிட்டுத் தூண்டி வளர்க்கப்பட்டதன் விளைவே, நவம்பர்-7 அன்று நடந்திருக்கும் சாதிவெறித்தாக்குதல்.

நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்னும் தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கும், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணுக்கும் இடையிலான காதல் திருமணம்தான் இந்தத் தாக்குதலுக்கான முகாந்திரமாகப் பயன்பட்டிருக்கிறது. போலீசு வேலைக்குத் தெரிவு செயப்பட்டிருக்கும் இளவரசனும், செவிலியர் பட்டத்துக்குப் படித்து வரும் திவ்யாவும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும் என்றும், இரு சமூகங்களையும் சேர்ந்த சில இளைஞர்களின் ஒத்துழைப்புடன்தான் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் அவர்களது திருமணம் நடந்ததாகவும் நத்தம் காலனி மக்கள் கூறுகின்றனர்.

அக்டோபர் 14-ஆம் தேதி பதிவுத் திருமணம் செது கொண்டு, டி.ஐ.ஜி. சஞ்சீவ் குமார் மற்றும் எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் இளவரசனும் திவ்யாவும் பாதுகாப்பு கோரியிருக்கின்றனர். மணமகனின் பெற்றோர் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். பெண் வீட்டார் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. பெண்ணின் தந்தை நாகராஜ், இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். சாதி உணர்வின் காரணமாக, இந்த திருமணத்தை தனக்கு நேர்ந்த தனிப்பட்ட அவமானமாக நாகராஜ் கருதியபோதிலும், அதற்கு மேல் வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடும் நோக்கம் அவருக்கு இல்லை. அன்றாடம் நத்தம் காலனி வழியாகத்தான் அவர் வேலைக்குச் செல்வார் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுடன் நட்பாகப் பழகக் கூடியவர் என்றும் நாகராஜைப் பற்றி நத்தம் காலனி மக்கள் கூறுகின்றனர். இந்த திருமணத்தைச் சாக்கிட்டு தாக்குதலை நடத்த வேண்டும் என்பதில் தீவிரம் காட்டியவர்கள் வன்னிய சாதியைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளும், சாதிவெறியர்களும்தான்.

வன்னிய சாதி வெறியர்கள்தான் அவரை மானங்கெட்டவன் என்றும், போறான் பாரு பறயன் சம்மந்தி என்றும் ஏசியிருக்கின்றனர். உன்னால் சாதிக்கே கேவலம் என்றும், தலைகுனிவு என்றும் தூற்றியிருக்கின்றனர். நாகராஜின் தனிப்பட்ட கவுரவப் பிரச்சினை என்ற வரம்பிற்குள் நின்றிருந்தால், இது தாக்குதலாக வெடித்திருக்காது. காலப்போக்கில் பெண் வீட்டார் சகஜ உறவுக்கும் வந்திருக்கக் கூடும்.

அப்படி ஒரு விபரீதம் நடந்துவிடக்கூடாதே என்பதுதான் சாதிவெறியர்களின் கவலையாக இருந்திருக்கிறது. அதனால்தான் திருமணம் முறைப்படி நடந்துவிட்டது என்று தெரிந்த பின்னரும், அடுத்த மூன்று நாட்களில் பையனின் தந்தையை உள்ளூர் போலீசு நிலையத்துக்கு வரவழைத்துப் பெண்ணின் பாதுகாப்புக்கு நான்தான் பொறுப்பு என்று அவரிடம் எழுதி வாங்கியிருக்கிறார்கள். பஞ்சாயத்துக் கூட்டத்தைக் கூட்டி பெண்ணைக் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு நத்தம் காலனி மக்களை மிரட்டத் தொடங்கியிருக்கிறார்கள் சாதிவெறியர்கள்.

பா.ம.க. தருமபுரி ஒன்றிய பொருளாளர் மதியழகன், கொண்டாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பொன்னுசாமி ஆகியவர்கள் இந்தப் பஞ்சாயத்தில் முன்நின்றதாகவும், கண்பார்டி முருகன் பஞ்சாயத்துக்குத் தலைமை தாங்கியதாகவும் சோல்கிறார் நத்தம் காலனியின் ஊர்த் தலைவர்.

தர்மபுரி-வன்னிய-சாதிவெறி

“பஞ்சாயத்தில் 500, 600 பேர் இருப்பார்கள். ஒரே வார்த்தைதான் – பொண்ணைக் கொண்டாந்து வுடு என்பார்கள். சட்டப்படித் திருமணம் செய்தவங்களாச்சேன்னு சொன்னா, சட்டம் கிடக்கட்டும், பொண்ண கொண்டாந்து விடுங்கன்னுதான் பேசுவாங்க. நாங்க பதில் பேசினா பறப்பசங்களுக்குத் திமிரான்னு கூட்டத்திலேருந்து திட்டுவாங்க. உன் பொண்டாட்டிய தூக்கிட்டுப் போனா ஒத்துக்குவியான்னு கேப்பாங்க. பையனோட அப்பா பொண்ணை ஒப்படைச்சிடலாம்னுதான் நெனச்சாரு. ஆனால், அந்தப் பொண்ணுக்குப் பொறுப்புன்னு கையெழுத்து போட்டிருக்கார். பொண்ண ஒப்படைச்சி, அப்புறம் அதுக்கு ஏதாவது ஆனா, தான்தான் பொறுப்புங்கிறதால மறுத்துட்டாரு. இருந்தாலும் ஊர் சார்புல கேட்டதால ஏத்துகிட்டாரு” – என்று நடந்ததை விளக்கினார் நத்தம் ஊர்த் தலைவர்.

நவம்பர் 5-ஆம் தேதியன்று பஞ்சாயத்தில் நத்தம் மக்களை மிரட்டி எச்சரிக்கை விட்டிருக்கிறார்கள். நவம்பர் 7-ஆம் தேதி காலை திவ்யா வீட்டார் சார்பில் அவருடைய அம்மா, பெரியம்மா, சித்தப்பா உள்ளிட்ட உறவினர்களும், நத்தம் ஊர் சார்பில் 10 பேரும் தொப்பூர் என்ற ஊருக்குச் சென்று திவ்யாவையும், இளவரசனையும் சந்தித்திருக்கின்றனர். திவ்யாவின் அம்மா தேன்மொழி, திவ்யாவின் காலைப் பிடித்து வீட்டிற்கு வா என அழுது கூப்பிட்டும், திவ்யா வர மறுத்திருக்கிறார். திவ்யாவின் உறவினர்கள் அவளைத் தனியாக அழைத்துச் சென்றும் பேசிப் பார்த்திருக்கின்றனர். வீட்டிற்குக் கூட்டிச் சென்று என்னைக் கொல்லத்தானப் போறீங்க, அதற்கு இங்கேயே என்னைய கொல்லுங்க” என்று அவர் கூறியிருக்கிறார்.

உன் பொண்ணு வரமாட்டேங்குறா, நீ இருக்குறதுக்கு தூக்கு போட்டு சாகலாம்” என்று உறவினர்கள் நாகராஜிடம் சொன்னதாகவும், அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர். அவருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறுகிறார்கள் நத்தம் காலனி மக்கள். நாகராஜின் மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள், அது தற்கொலையாக இருக்க முடியாது என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன.

நாகராஜின் உடலை அன்று மாலை 4 மணிக்கு நத்தம் காலனிக்குள் கொண்டு வந்து, பையன் வீட்டு வாசலில் வைத்து, அந்தப் பையன் வீட்டை முதலில் உடைத்திருக்கிறது நூறு பேர் கொண்ட கும்பல். பிறகு உடலை தருமபுரி – திருப்பத்தூர் சாலைக்கு கொண்டு சென்று, அங்கே வைத்து மறியல் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். பைக், வேன், டெம்போ, மினி லாரியில் சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திரண்டுள்ளனர். ஒரு கும்பல் சடலத்தின் அருகில் இருக்க, இன்னொரு கும்பல் மரங்களை அறுத்துப் போட்டுச் சாலைகளை மறித்தது. மீதமுள்ளவர்கள் 400, 500 பேர் கொண்ட மூன்று குழுக்களாகப் பிரிந்து நத்தம் காலனி, கொண்டாம்பட்டி, அண்ணாநகர் ஆகிய கிராமங்களுக்குள் வெறிக்கூச்சலுடன் புகுந்திருக்கின்றனர்.

கடப்பாரை, சம்மட்டி, கோடாரி, பெட்ரோல் கேன், பெட்ரோல் பாம் பாட்டில்களுடன் வெறிக்கூச்சலிட்டுப் புகுந்துள்ளனர். ஒவ்வொரு வீடாகச் சென்று, கதவினை உடைத்து உள்ளே புகுந்து பீரோக்களை உடைத்து நகைகளையும் பணத்தினையும் கொள்ளையடித்துள்ளனர். துணிமணிகள், புத்தகங்கள், குடும்ப அட்டைகள், சான்றிதழ்கள், நிலப்பத்திரங்கள், மெத்தை, சோபா போன்றவற்றைக் கிழித்தெறிந்து மொத்தமாக எரித்துள்ளனர். கேஸ் சிலிண்டர்களைக் கழற்றி தாங்கள் கொண்டுவந்த வாகனங்களில் ஏற்றியுள்ளனர். தாங்கள் கொண்டுவந்திருந்த பெட்ரோலை பெயின்ட் அடிக்கும் ஸ்பேரேயரில் நிரப்பி வீடு முழுவதும் பீச்சி அடித்துள்ளனர். பிறகு வெளியிலிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசித் தீக்கிரையாக்கியுள்ளனர்.

ஓட்டு வீடுகளின் மேலே ஏறி, பெரிய கல்லால் அவற்றினை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். மின்சார மற்றும் தண்ணீர் பைப் லைன்களையும், மீட்டர் பெட்டிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். வெளியே நின்றிருந்த சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற இரு சக்கர வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். உடைக்க முடியாத பீரோக்களையும், ஆடுகளையும் தங்களது வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். நத்தம் காலனி கொடகாரி அம்மன் கோயிலுக்குச் சோந்தமான 5 கிலோ தங்கம் மற்றும் 22 கிலோ வெள்ளி போன்ற விலை உயர்ந்த நகைகளை, அவை பாதுகாக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைத்துக் கொள்ளையடித்திருக்கின்றனர். மூன்று ஊர்களிலுமாக மொத்தம் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சைக்கிள்கள், சில நான்கு சக்கர வாகனங்கள் உருத்தெரியாமல் எரித்துச் சிதைக்கப்பட்டிருக்கின்றன.

நாயக்கன் கொட்டாய், சோனயம்பட்டி, புளியம்பட்டி, சவுலுப்பட்டி, சீராம்பட்டி, ஒன்னியம்பட்டி, குடூர், ஆண்டிப்பட்டி, கதிர்நாயக்கன் நள்ளி, கொல்லுப்பட்டி, மொரப்பூர், கெங்குசெட்டிப்பட்டி, குண்டல்பட்டி – எனப் பல ஊர்களிலிருந்து சாதி வெறியர்கள் திரட்டப்பட்டிருக்கின்றனர். காரிமங்கலம் பெட்ரோல் பங்கிலிருந்து பெட்ரோலும், ஒன்னியம்பட்டி, கோணம்பட்டி ரேஷன் கடைகளிலிருந்து மண்ணெண்ணையும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராஜா, மெடிகல் சிவா, கவுன்சிலர் பச்சையப்பன், லாரி மாது (செங்கல்மேடு), கொண்டம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பொன்னுசாமி, பா.ம.க. ஒன்றியச் செயலர் மதியழகன் போன்றோர் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியிருக்கின்றனர்.

தாக்குதல் தொடங்கிய நேரம் மாலை 4 மணியாதலால் ஊரில் ஆண்கள் இல்லை. பெண்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு கரும்புக்காட்டுக்கு உயிர் தப்பி ஓடி, இரவு முழுவதும் அங்கே ஒளிந்திருக்கின்றனர். தீயும் புகையும் சூழ்ந்து மூச்சடைத்துப் போன குழந்தைகளை, மற்ற குழந்தைகளின் சிறுநீரைக் குடிக்க வைத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள் பெண்கள்.

நடக்கவிருக்கும் தாக்குதல் பற்றி போலீசுக்கு ஏற்கெனவே தெரியும். நாயக்கன் கொட்டாய் பகுதியில் நிரந்தரமாகக் குடியிருக்கும் நக்சல் பிரிவு மற்றும் க்யூ பிரிவு போலீசார், கிருஷ்ணாபுரம் இன்ஸ்பெக்டர் போன்றோரிடம் நத்தம் காலனியிலிருந்து புகார் செய்து தாக்குதலைத் தடுக்குமாறு மன்றாடியிருக்கின்றனர். போலீசார் கண்டுகொள்ளவில்லை. சுமார் 100 போலீசாரும், தீயணைப்பு வண்டிகளும் தாக்குதலை வேடிக்கைதான் பார்த்திருக்கின்றனர். மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் பரமக்குடியிலிருந்து வந்து சேர்ந்த பின்னர்தான் கைது நடவடிக்கைகளே தொடங்கியுள்ளன. சுமார் 2000 பேருக்கு மேல் வன்முறையில் ஈடுபட்டிருந்தும், பத்து சதவீதம் பேர்கூட இதுவரை கைது செயப்படவில்லை.

அழிவு வேலையைக்கூட நுணுக்கமாகவும் வக்கிரமாகவும் நிதானமாகவும் செய்து முடித்திருக்கிறார்கள் சாதி வெறியர்கள். தரைக்கு டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடுகளில் அவை தூள் தூளாக நொறுக்கப்பட்டிருக்கின்றன. மாடி வீட்டின் மொட்டை மாடி உட்பட அனைத்தும் சேதமாக்கப்பட்டு, சுவர்களும் கூரையும் பிளக்கப்பட்டிருக்கின்றன. பெட்டிக்கடை, சவுண்டு சர்வீஸ், மரச்சாமான் வியாபாரம், பாத்திர வியாபாரம் போன்ற தொழில் செய்வோரின் ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றன. 4 நாட்களில் நடக்கவிருக்கும் மகளின் திருமணத்திற்கு வாங்கி வைத்த நகைகள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன.

இந்த தாக்குதல் திடீரென்று நடத்தப்பட்டதல்ல. மிகவும் நிதானமாக சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வன்னிய சாதியினரைத் திரட்டி, ஆயுதங்கள் – எரிபொருள் ஆகியவற்றைக் கையாளும் முறை பற்றி சொல்லிக் கொடுத்து, திருட்டில் கைதேர்ந்தவர்களை வைத்துக் கொள்ளையடிக்கவும் ஏற்பாடு செய்து, உயிர்ச்சேதத்தை மட்டும் தவிர்த்து இந்த வெறியாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. குஜராத்தில் இந்துவெறியர்கள் நடத்திய வன்முறையைப் போன்றே இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் காடுவெட்டி குரு அப்பகுதிக்கு வந்து சென்றதாகவும் கூறுகின்றனர். இது மேலிருந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இது ஒரு காதல் திருமணம் தோற்றுவித்த கோபத்தில் வெடித்த வன்முறை அல்ல. நீண்டகாலமாக கனன்று கொண்டிருந்த சாதிவெறி. இப்பகுதியில் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் கோவையிலும், திருப்பூரிலும், பெங்களூரிலும் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் ஓரளவு வசதிகளோடு வாழ்ந்துள்ளனர். தங்களிடம் கைகட்டி நிற்காமல், சுயமாக அவர்கள் அடைந்திருந்த வாழ்க்கைத் தரம்தான் சாதிவெறியர்களின் ஆத்திரத்தில் எண்ணெ வார்த்திருக்கிறது. தங்களுடைய வீட்டில் சாப்பிட்டவர்கள்தான் வீட்டின்மீது பெட்ரோல் குண்டுகளை எரிந்த தாகவும், காலையில் தன்னிடமிருந்து பைக்கை வாங்கி ஓட்டியவன், மாலையில் அதனை எரித்திருப்பதாகவும் கூறுகின்றனர் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுடைய வாழ்க்கைத் தரம் சற்று மேம்பட்டிருப்பதைப் பார்க்கச் சகிக்காமலும், வயிறெரிந்து கொண்டிருந்த ஆதிக்க சாதிவெறி, தாக்குதல் நடத்துவதற்கு ஒரு தருணத்திற்காக காத்திருந்ததையே இந்த வெறியாட்டம் காட்டுகிறது. கடுமையாக உழைத்துச் சேர்த்த பணத்தில் அம்மக்கள் தங்கள் தலைமுறையிலேயே முதன்முறையாக எட்டியிருந்த பல வசதிகளை, ஒவ்வொன்றாகத் தேடிக் கண்டுபிடித்து அழித்திருக்கின்றனர். ஓலைக்குடிசை, அலுமினியப் பாத்திரம் என்ற வாழ்நிலைக்கு மீண்டும் அம்மக்களைத் துரத்தவேண்டும் என்ற வன்மத்தை மனதிற்கொண்டுதான் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

கொண்டம்பட்டியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞரும் வன்னிய சாதிப் பெண்ணும் திருமணம் செய்திருக்கின்றனர். அப்போது தேர்தல் நேரம் என்பதால், ஓட்டுகள் போய்விடும் என்று கருதி ஏதும் செய்யவில்லை. அன்று வருத்தத்தில் இருந்த பெண் வீட்டார் இப்போது சகஜமாகி, மருமகனுடன் சுமுக உறவு வைத்திருக்கின்றனர். இது சாதிவெறியர்களின் வெறியை அதிகப்படுத்தியிருக்கிறது. கொண்டம்பட்டிமீது தாக்குதல் நடத்துவதற்கு இது முக்கியமான காரணம்.

அண்ணா நகரில் அருந்ததியர் காலனிக்கு நிலம் ஒதுக்கீடு செய்தபோது, காலனி வந்தால் தங்கள் நிலத்துக்கு சுற்றித்தான் செல்லவேண்டும் என்பதால், அதனைக் கட்டக்கூடாது என்று வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். எதிர்ப்பை மீறி இடம் ஒதுக்கப்பட்டு காலனி வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து, தற்போது தாக்குதல் தொடுத்திருக்கின்றனர் சாதிவெறியர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட ஆதிக்க சாதிவெறியர்கள் ஆத்திரம் கொள்வதற்கு அவரவர்க்கு உரிய காரணங்கள் இருந்திருக்கின்றன. குறிப்பான காரணம் ஏதும் இல்லையென்றாலும், தங்களைச் சார்ந்திராமல், சொந்தக்காலில் அம்மக்கள் நிற்பதும், கவுரவமான வாழ்க்கை வாழ்வதுமே சாதிவெறியர்கள் ஆத்திரம் கொள்ளப் போதுமான காரணமாக இருந்திருக்கிறது. இளவரசன் – திவ்யா காதல் திருமணம் என்பது இத்தாக்குதலுக்கான ஒரு முகாந்திரம் மட்டுமே.

இந்தச் சாதிவெறியர்கள் பெரும் நிலவுடைமையாளர்கள் இல்லையென்றபோதிலும், இவர்கள் ஒரு புதியவகை ஆதிக்க சக்திகள். இட ஒதுக்கீட்டுக்காகப் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்றும்; சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு சத்திரிய சாதியினர் என்றும் தம்மை அழைத்துக் கொள்ளும் வன்னியர், தேவர், கவுண்டர் போன்ற சாதிகளில் தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் புதிய ஆதிக்க சக்திகளை உருவாக்கியிருக்கின்றன. சுயநிதிக் கல்லூரி, ரியல் எஸ்டேட், பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜென்சிகள், செக்யூரிட்டி ஏஜென்சிகள், கந்துவட்டி பைனான்சு, பிற ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் போன்றவற்றில் ஈடுபட்டுக் கொழுத்திருக்கும் இந்தச் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகள்தான், சாதிக்கட்சிகளின் தூண்கள். தத்தம் சாதிகளில் தமக்குத் தேவைப்படுகின்ற சமூக அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டு, அரசியல் அதிகாரத்தில் பங்கு பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் இவர்கள்தான், தற்போதைய சாதிவெறி நடவடிக்கைகளின் பின்புலத்தில் இருப்பவர்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தனது வன்னிய சாதிச் சங்க முகத்தை மறைத்துக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி என்று பொய்முகம் காட்டி, வன்னிய, தாழ்த்தப்பட்ட, இசுலாமியக் கூட்டணி கனவு கண்ட ராமதாசின் பிழைப்புவாதம் இன்று அம்பலப்பட்டு விட்டது. இனி எந்தக் கொள்கையையும் சொல்லித் தனது சொந்த சாதியினர் மத்தியிலேயே தான் செல்வாக்கு பெற முடியாது என்ற நிலையில்தான், வெளிப்படையாகவும் கிரிமினல்தனமாகவும் ராமதாசு சாதிவெறியைத் தூண்டுகிறார்.

வன்னியப் பெண்களை மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட அல்லாத எல்லா சமூகத்துப் பெண்களையும் தலித் இளைஞர்கள் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றிப் பணம் பறிப்பதாக ஒரு கட்டுக்கதையைப் பரப்பி, ஆதிக்க சாதியினர் அனைவரையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகத் திருப்பி, அவர்கள் அனைவரின் பிரதிநிதியாகத் தன்னை முன்நிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக சாதிக் கட்சிகளின் கூட்டணி என்று ராமதாசு முன்வைப்பது முக்குலத்தோர், கவுண்டர் உள்ளிட்ட எல்லா ஆதிக்க சாதியினருக்கும் உவப்பானதொரு முழக்கம். அதனால்தான் நாயக்கன் கொட்டாயில் இத்தகையதொரு கொடூரமான வன்கொடுமைத் தாக்குதலை நடத்திவிட்டு, நாகராஜை தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடு என்று திமிர்த்தனமாக பா.ம.க. பேசுகிறது.

மருத்துவர் ஐயாவுக்கு முற்போக்கு முகச்சாயம் பூசியவர்களும், தமிழ்க்குடிதாங்கி பட்டம் கொடுத்தவர்களும், தாழ்த்தப்பட்டோர்-பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை பேசியவர்களும், சாதிகளுக்கிடையிலான ஒற்றுமை பேசியவர்களும் இப்போது பம்முகிறார்கள். பார்ப்பனரல்லாத இடைநிலைச் சாதிகளின் ஆதிக்க சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை இழைப்பதென்பது புதிதல்ல. சாதிவெறி இலைமறை காயாக இல்லாமல் வெளிப்படையாக வருகிறது என்பதுதான் இப்போது புதியது.

சாதி, உட்சாதி அடையாளங்களை அங்கீகரிக்க வேண்டுமென்றும், கம்யூனிஸ்டுகள் அவற்றை அங்கீகரிக்க மறுப்பதாகவும் கூறி கம்யூனிச எதிர்ப்பு அரசியலை முன்நின்று நடத்தியவர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். அடையாள அரசியல் என்பது சாதி அடையாளங்களை உறுதிப்படுத்தவும், சாதி – உட்சாதிப் பிளவுகளை அதிகப்படுத்தவும்தான் பயன்பட்டிருக்கிறது. அது அவ்வாறு மட்டுமே பயன்பட முடியும். சாதி என்ற நிறுவனமே ஜனநாயகத்துக்கு எதிரானது. சாதியின் அடிப்படையில் திரட்டப்படும் மக்களை வைத்து சாதி ஒழிப்பையோ, ஜனநாயகத்தையோ ஒருக்காலும் கொண்டுவர முடியாது. எந்த முற்போக்கான கோரிக்கையையும் சாதிக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோர் மத்தியிலான சாதிகள் – உட்சாதிகளுக்கும் இது பொருந்தும்.

நக்சலைட்டு அரசியலின் செல்வாக்கு இருந்தவரை சாதி ஆதிக்கம் இல்லை என்பது, நத்தம் காலனி உள்ளிட்ட ஊர்களின் மக்கள் மட்டுமின்றி, முதலாளித்துவ ஊடகங்களும் இன்று ஒப்புக்கொள்ளும் உண்மை. இது வெற்றுப் பெருமை அல்ல, வர்க்க அரசியலின் வலிமை. புரட்சிகர அரசியலை நசுக்கி விட்டு, அந்த இடத்தில் சாதிய அரசியலையும், ஓட்டுச்சீட்டு பிழைப்புவாதத்தையும் மாற்றாக நுழைத்ததன் விளைவுதான் சாதிவெறியின் செல்வாக்கு.

வன்னிய சாதிவெறியர்கள் மற்றும் ஆதிக்க சாதிவெறியர்களுக்குத் தண்டனையும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிவாரணமும், நீதியும் கிடைக்கப் போராடுகின்ற அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் தலையெடுத்து வரும் சாதிய அரசியலை நேருக்குநேர் மோதி முறியடிப்பதும் அவசரக் கடமையாக இருக்கிறது.

தகவல் உதவி : விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

___________________________________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
___________________________________________________________

சாதிவெறிக்கு சில சாட்டையடி கேள்விகள்!

57

ஆதிக்க சாதி பெருமை பேசும் உழைப்பாளி மக்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்…

  • ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பேருந்து முதலாளி தனது சாதி மக்களுக்கு சலுகைக் கட்டணம் பயணத்தை அனுமதிப்பாரா ?
  • ஆதிக்க சாதியை சேர்ந்த மற்றும் முதலாளிகளின் வீட்டுப் பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ அதே சாதியில் உள்ள கூலி விவசாயியை, ஏழையை, தொழிலாளியை திருமணம் செய்து கொடுப்பாரா ? அல்லது தெரியாமல் காதலித்துவிட்டால் தான் சேர்த்துவைப்பாரா ?
  • ஆதிக்க சாதியை சேர்ந்த பண்ணையார் தனது சாதியை சேர்ந்த கூலி விவசாயிக்கு அதிக கூலி கொடுப்பாரா ? கொடுக்கிறாரா ?
  • தொழிற்சாலையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த முதலாளி, நிர்வாக அதிகாரி போன்றோர் தனது சாதிக்கார தொழிலாளி என்பாதால் சலுகைக் காட்டுவாரா ? அதிக சம்பளம் கொடுப்பாரா ? சங்கம் கட்ட அனுமதிப்பாரா ?
  • ஆதிக்க சாதியைச் சேர்ந்த் பள்ளி, கல்லூரி முதலாளிகள் அதே சாதியில் உள்ள மாணவனுக்கு இலவசமாக கல்வி வழங்குவாரா ? குறைந்தபட்சம் அய்யோ பாவம் என்று அதிக கட்டணம் வசூலிக்காமல் கல்வி கொடுப்பாரா ?
  • ஆதிக்க சாதிக்காரர் வைத்திருக்கும் மளிகை கடையில் எங்க சாதிக்காரனுக்கு மட்டும் தான் பொருள் விற்பனை என அறிவிக்கத் தயாரா ? அதையும் சலுகை விலையில் வழங்கத் தயாரா ?
  • ஆதிக்க சாதியில் பிறந்து வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணம் ஆகாமல் நொந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான உழைப்பாளி பெண்களுக்கு வரதட்சணை இல்லாமல் வாழ்க்கை தரவேண்டும் என்று அதே சாதி இளைஞர்களை வலியுறுத்த ஆதிக்க சாதிச்சங்கங்கள் தயாரா ?
  • நான் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் எங்கள் சாதிக்காரன் தயாரித்தால் மட்டுமே பயன்படுத்துவேன் என்று ஆதிக்க சாதி வெறியர்கள் கூறத் தயாரா ?
  • ஆதிக்க சாதி பெருமை பேசி திரியும் ஒருவர் பேருந்தில் ஏறும்போது தாழ்த்தப்பட்டவர் வண்டி ஓட்டுகிறார் என்றால் ஏறாமல் விட்டுவிடுவாரா ? அதிகாரி தாழ்த்தப்பட்டவர் என்றால் கூழைகும்பிடு போடாமல் இருப்பாரா ?
  • ஆதிக்க சாதிக்காரர் உபயோகிக்கும் ரூபாய் நோட்டை இதற்கு முன் தாழ்த்தபட்ட ஒருவர் கையில் இருந்து வாங்கி இருந்தால் இவர் அதை கீழே போட்டுவிடுவாரா?
  • தொழிலாளியாக ஆலைக்குள் நுழையும்போது, பேருந்தில் ஏறும்போது சாதி குறுக்கே வருகிறதா ? அங்கே சாதி பெருமையை பேச முடியாதது ஏன் ?
  • ஆதிக்க சாதிக்காரர்கள் தனது சாதிக்கு மனு இட்ட கட்டளைகளை, பழக்க வழக்கங்களை அப்படியே கடைபிடிக்க முடியுமா ? முடியவில்லை என்றால் காரணம் என்ன ?
  • ஆதிக்க சாதிக்காரர்கள் என்றால் காவிரித் தண்ணீர் உடனடியாகவோ, மின்சாரம் தடையில்லாமலோ கிடைத்து விடுகிறதா?
  • அன்றாடம் ஆயிரம் வேலைகளில் வர்க்கமாக ஒன்றுபட்டு நிற்கின்ற உழைப்பாளிகளை சாதியாக பிளப்பதால் ஆதாயமடைவது முதலாளிகள்தான் என்பது தெரியவில்லையா ? ஆதிக்க சாதியில் பிறந்து அரும்பாடுபடும் தொழிலாளி தனது உரிமையை கேட்க சங்கம் கட்டுவதை தடுக்கும் முதலாளிகளின் வீடுகளை ஆட்களை திரட்டி இடிப்பதற்கு ரோஷம் வராததன் மர்ம்ம் என்ன ?
  • சாதி வெறியை தூண்டிவிட்டு துப்பாக்கி சூடு, சிறைவாசம், வழக்குகளுக்கு ஆளாகிய உங்களின் நிலையும் , இதனால் ஆதாயம் அடைந்து சொத்து சேர்த்துள்ள தலைவர்களின் யோக்கியதையும் தெரியுமா ?

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் அமலாக்கப்படும் நாட்டை காலனியாக்கும் கொள்கைகாளால் அன்றாடம் பல்வேறு பாதிப்புகளை, கொடுமைகளை அனுபவிக்கும் உழைக்கும் மக்களை பிளக்கும் சாதி பெருமை நம் வாழ்வை பாதுகாக்காது. மாறாக உழைப்பாளிகளை பிளவுபடுத்தி, முதலாளிகள், பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிப்பதையும், சுரண்டி கொழுப்பதையும், உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து முறியடிப்போம் ! உழைப்பாளிகள் அனைவரும் சம்ம் என்ற ஜனநாயக உணர்வுகொள்வோம் ! புதிய ஜனநாயக புரட்சியை நடத்தி அனைத்து ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெறுவோம்!

இவண்

விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தமிழ்நாடு-புதுச்சேரி

பால் தாக்கரே : ஒரு பாசிஸ்ட்டின் கிரிமினல் வரலாறு !

19

 

சிவசேனா கட்சியின் தலைவரான பால்தாக்கரே கடந்த நவம்பர் 17 அன்று இயற்கையாக மரணமடைந்துவிட்டார் என்பதற்காக நாம் வருந்தத்தான் வேண்டும். ஒரு இனவெறி-இந்துவெறி பாசிச பயங்கரவாத கிரிமினல் மாஃபியா கும்பலின் தலைவன் தண்டிக்கப்பட்டு, பலமுறை தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்படாமல், இயற்கையாக மரணமடைந்திருப்பது வருத்தமானதுதான்.

செத்தவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும், அவனைத் தெவமாக்குவதென்பது இந்துத்துவ மரபு. அந்த வழியில் முதலாளித்துவ ஊடகங்களும் ஓட்டுக்கட்சிகளும் தாக்கரேவுக்காக ஒப்பாரி வைத்து, அவரது சிவசேனா கும்பலின் பாசிச பயங்கரவாத வெறியாட்டங்களைச் சூடு சோரணையின்றி மூடிமறைத்தன. ஆனால், இப்பயங்கரவாத கும்பலின் இரத்தவெறி பிடித்த வரலாறை நாட்டு மக்கள் ஒருக்காலும் மறக்கவே முடியாது.

1960-களில் இந்தியாவில் நிலவிய அரசியல் – பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஆளும் காங்கிரசு கட்சியின் மீது மக்களிடம் அதிருப்தி பெருகிய நேரத்தில், மண்ணின் மைந்தர்கள் என்ற கொள்கையுடன், மும்பையில் மார்மிக் எனும் மராத்திய வார இதழை நடத்திய பால்தாக்கரே, குஜராத்தியர்கள், பீகாரிகள் மற்றும் தென்னிந்தியர்களால் மராத்திய மக்களின் வாழ்வும் வளமும் பறிக்கப்படுவதாக இனவெறியூட்டும் பிரச்சாரத்தை நடத்தி, 1966-இல் சிவசேனா கட்சியைத் தொடங்கினார். மராத்திய மன்னன் சிவாஜியின் படையாக அறிவித்துக் கொண்ட இக்கட்சி, ‘வந்தேறி’களான குஜராத்தியர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் மீதும் அவர்களது கடைகள், உணவகங்கள் மீதும் தாக்குதலை நடத்தியது. பிப்ரவரி 1969-இல் மும்பையில் குடியேறிய  கர்நாடகத்தவர் மீது கொடிய தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்ட தாக்கரேவின் குண்டர்கள் 59 பேரைக் கொன்று 274 பேரைப் படுகாயப்படுத்தினர்.

மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பை நகரில் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களைக் கண்டு அரசும் பெருமுதலாளிகளும் கதிகலங்கிய காலம் அது. 1967 செப்டம்பர் 10 அன்று மார்மிக் இதழில் கம்யூனிஸ்டுகளை ஒழிப்பதுதான் தனது லட்சியம் என்று தாக்கரே வெளிப்படையாக அறிவித்தார். மூன்று மாதங்கள் கழித்து, 1967 டிசம்பரில், சிவசேனா குண்டர்கள் பரேல் பகுதியில் தால்வி கட்டிடத்தில் இருந்த இருந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கித்  தீயிட்டுக் கொளுத்தினர். இடது, வலது கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த முன்னணியாளர்களும் தொழிற்சங்க செயல்வீரர்களும் சிவசேனா குண்டர்களால் தாக்கப்பட்டனர்.

தொழிலாளர்களின் போராட்டம் நடக்குமிடத்துக்கு போலீசு வாகனங்களோடு கூடவே சிவசேனா குண்டர்கள் இருசக்கர வாகனங்களில் வந்திறங்கிப் போராட்டக்காரர்கள் மீது பாந்து தாக்குதல் தொடுப்பார்கள்.  படுகாயமடைந்த தொழிலாளர்கள் போலீசால் கைது செயப்பட்டு சிறையிடப்படுவார்கள். இப்பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் பாரதீய காம்கார் சேனா என்ற சிவசேனாவின் தொழிற்சங்கம் ஆலைகளில் மட்டுமின்றி வங்கி, அரசுத்துறை மற்றும் சேவைத் துறை நிறுவனங்களில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான போட்டி சங்கமாக வளரத் தொடங்கியது. இதனாலேயே தரகுப் பெருமுதலாளியான ராகுல் பஜாஜ், தனது ஆலையின் பிரச்சினைகளை தாக்கரே தீர்த்து வைத்தார்” என்று பெருமையுடன் கூறினார்.

பால்-தாக்கரே

1970-களில் தாக்கரேவின் இந்துவெறியானது பிவாண்டி, ஜலகோன், மகத் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலாகப் பரவியது. இந்திய நாட்டில் இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் புற்று நோயைப் போன்றவர்கள்; அவர்களை அழிக்கும் வரை நமது போராட்டம் ஓயாது” என்று வெறியூட்டிய தாக்கரே, முஸ்லிம்களுக்கு எதிராக தற்கொலைப் படையைத் திரட்டுவோம் என்று வெளிப்படையாக அறிவித்தார்.

காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதைத் தடுக்க,  தாழ்த்தப்பட்டோர் மீது திட்டமிட்ட பயங்கரவாத வெறியாட்டங்களை சிவசேனா குண்டர்கள் கட்டவிழ்த்து விட்டனர். ஜனவரி 1974-இல் தலித் சிறுத்தைகள் கட்சித் தலைவர் பாகவத் ஜாதவ் தாக்கரே கும்பலால் படுகொலை செயப்பட்டார். 1984-இல் விதர்பா பிராந்தியத்தில் தாழ்த்தப்பட்ட விவசாயிகள் மீது சிவசேனாவின் தொடர் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டு, அவர்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு பயிர்கள் நாசமாக்கப்பட்டன.

மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்டுவதை எதிர்த்து 1990-களில் சிவசேனா குண்டர்கள் இப்பிராந்தியத்தில் பயங்கரவாத வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். இருப்பினும், சிவசேனா குண்டர்கள் நடத்திய வன்கொடுமை வெறியாட்டங்கள் தொடர்பான 1,100 வழக்குகளை  1990-களின் இறுதியில் சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி தள்ளுபடி செய்தது. அதன் பின்னர், ஜூலை11,1997-இல் ராமாபா அம்பேத்கர் நகரில் சிவசேனா குண்டர்கள் நடத்திய தாக்குதல் நடத்திய பின், போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்டு, 30 பேர் படுகாயமடைந்தனர். ஆனாலும் சிவசேனா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளஞ்சோடிகளைத் தாக்கிய சிவசேனா, தன்னை கலாச்சாரப் போலீசாக நியமித்துக் கொண்டு ஆட்டம் போட்டது. தேசபக்த சவடால் அடித்துக் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் எழுத்தாளர்களுக்கு எதிர்ப்பு காட்டுவது என்ற பெயரில் மிரட்டலையும் அச்சுறுத்தலையும் ஏவியது. பாலிவுட் திரைப்படங்கள் தாக்கரே தயவுக்குப் பின்னரே வெளிவர முடிந்தது. சச்சின் தெண்டுல்கர், சானியா மிர்சா முதலான விளையாட்டு வீரர்களும், அமிதாப்பச்சன், ஷாருக்கான் முதலான சினிமா நடிகர்களும் அச்சுறுத்தலுக்குள்ளாயினர். சிவசேனாவை விமர்சித்த எழுத்தாளர்கள் – ஓவியர்கள் மீது தாக்கரே குண்டர்கள் தாக்குதலை நடத்தினர்.

மண்ணின் மைந்தர்கள் என்ற கொள்கையுடன் மராத்தியர்களுக்காகப் பாடுபடுவதாகக் காட்டிக் கொண்ட சிவசேனா, மும்பை நகராட்சியைக் கைப்பற்றிய பின்னர், அரசு ஒப்பந்தங்களை மராத்தியர்களுக்குத் தராமல் பிற மாநிலப் பெரு முதலாளிகளுக்குத்தான் கொடுத்தது.  மும்பையில் ஜவுளி ஆலைகள் நெருக்கடியில் சிக்கியிருந்த காலத்தில், வேலைநிறுத்தம் செய்ததால் அதைச் சாக்கிட்டு ஆலை மூடல்கள் நடந்தன. அப்போது ஏறத்தாழ 2 லட்சத்து 75,000 தொழிலாளர்கள் வேலையிழந்தனர். அவர்களில் 90 சதவீதத்தினர் மராத்தியர்கள்தான். ஆனாலும் சிவசேனா அவர்களுக்காக எதுவும் செயவில்லை. ஜனவரி 1982 -இல் மும்பையில் நடந்த மாபெரும் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை எதிர்த்து தொழிற்சங்க முன்னணியாளர்கள் மீது சிவசேனா குண்டர்கள் தாக்குதலை நடத்தினர். தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்த பின்னர்,  மூடப்பட்ட பஞ்சாலைகள் சிவசேனாவின் ஆதரவுடன் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாறிப் போயின.

ஜூலை 1996-இல் மும்பையின் மாதுங்கா பகுதியில் ஒரு வீட்டைக் காலி செய்ய மறுத்த ரமேஷ் கினி என்பவர் சிவசேனா குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். அந்த வீட்டின் உரிமையாளரான லட்சுமிகாந்த் ஷா, தாக்கரேயின் தம்பி மகனும் தற்போதைய நவநிர்மாண் சமிதியின் தலைவருமான ராஜ்தாக்கரேவின் நெருங்கிய கூட்டாளியாவார். தனது கணவரின் கொலைக்குக் காரணம் ராஜ்தாக்கரேதான் என்று தைரியமாக குற்றம் சாட்டி அவரது மனைவி ஷீலா நீதிக்காகப் போராடினார். அப்போது சிவசேனா ஆட்சியிலிருந்ததால் புலன் விசாரணையை மாநில அரசு முடக்கியது. பின்னர் மகாராஷ்டிர உயர் நீதிமன்றம் மையப் புலனாவுத்துறை மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆனாலும், மும்பை போலீசு ஒத்துழைக்க மறுத்து தடயங்களை அழித்தது. சிலி நாட்டில் ராணுவ சர்வாதிகாரி பினோசெட் உருவாக்கிய குண்டர் படையைப் போலவே சிவசேனா குண்டர்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாகக் கொட்டமடித்தனர்.

அமெரிக்காவின் என்ரான் மின் நிறுவனத்திக்கு எதிராகச் சவடால் அடித்து, ஆட்சிக்கு வந்த பின்னர் ஒப்பந்தத்தை ரத்து செய்து சூரத்தனம் காட்டிய தாக்கரே,  பின்னர் அதே என்ரான் நிறுவனத்தின் கொள்ளைக்கு கதவை அகலத் திறந்துவிட்டார். மராத்தியர்களின் வாழ்வும் வளமும் பிற மாநிலத்திலிருந்து குடியேறியவர்களால்தான் பாதிக்கப்படுகிறது என்று இனவெறியூட்டி தாக்குதலை நடத்திய தாக்கரே, அமெரிக்காவின் என்ரானால் மகாராஷ்டிரா சூறையாடப்பட்டதைப் பற்றி கவலைப்படவில்லை. இதுதான் தாக்கரே முன்வைத்த மண்ணின் மைந்தர்கள் எனும் இனவெறி பாசிச அரசியலின் யோக்கியதை.

காங்கிரசின் ஆதரவு இல்லாமல் சிவசேனா இந்த அளவுக்கு வளர்ந்திருக்கவே முடியாது. வசந்தராவ் நாயக், வசந்த்தாதா பட்டீல் ஆகிய காங்கிரசு முதல்வர்கள் சிவசேனாவின் வெறியாட்டங்களுக்குத் துணைநின்றனர். சிவசேனாவை ஒரு கருவியாகக் கொண்டு மும்பையில் தொழிற்சங்க இயக்கம் வலுவடைவதைத் தடுத்தனர். பிவாண்டி கலவரம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி மதன் கமிசன் சிவசேனாவையும் இதர காவிக் கும்பல்களையும் குற்றம் சாட்டிய போதிலும், காங்கிரசு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக 1992-93இல் அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர், மும்பையில்  இந்துவெறியர்களும் சிவசேனா குண்டர்களும் முஸ்லிம்கள் மீது நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கும் நரவேட்டைக்கும் மூளையாகச் செயல்பட்டவர்தான் பால்தாக்கரே என்று சிறீகிருஷ்ணா கமிசன் குற்றம் சாட்டிய போதிலும், மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதலை நான்தான் தொடங்கி வைத்தேன். நான் அறிவித்த பிறகுதான் தாக்குதல் நின்றது” என்று பகிரங்க வாக்குமூலமாக சாம்னா இதழின் தலையங்கத்தில் தாக்கரே எழுதியிருந்த போதிலும், இந்திய அரசு இப்பயங்கரவாதியைத் தண்டிக்காமல் அதிகாரபூர்வ பயங்கரவாதியாக வைத்துப் பாதுகாத்தது. தாக்கரே மீதான இதர வழக்குகளும் அவரது சாம்னா நாளேட்டின் இனவெறிப் பிரச்சாரத்துக்கு எதிரான வழக்குகளும் இன்னமும் நடத்தப்படவேயில்லை. பிரதீபா பட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் அரசுத் தலைவர்களான விவகாரங்களில் சிவசேனாவுடனான காங்கிரசின் கள்ளக்கூட்டு  அப்பட்டமாக வெளிப்பட்டது.

போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவு இல்லாமல் பாசிசம் ஒருக்காலும் அதிகாரத்துக்கு வருவதில்லை. போலி கம்யூனிஸ்டுகளும் போலி சோசலிஸ்டுகளும் சமரச – சந்தர்ப்பவாதப் போக்கைப் பின்பற்றாமல் இருந்திருந்தால், பாசிச சிவசேனா கும்பல் இந்த அளவுக்கு வளர்ந்து வெறியாட்டம் போட்டிருக்கவே முடியாது. பால்தாக்கரேவின் உடல் எரியூட்டப்பட்ட அதே சிவாஜி பூங்கா பகுதியில் 1970-இல் பால்தாக்கரேவையும் அவனது கூலிப்படையினரையும் மும்பை வீதிகளில் வெட்டிப் புதைப்போம்!” என்று சூளுரைத்து 25,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.  மத்திய மும்பை தொகுதியின் வலது கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வும் தொழிற்சங்கவாதியுமான  கிருஷ்ண தேசா, ஜூன் 6, 1970 அன்று சிவசேனா குண்டர்களால் கொல்லப்பட்ட பின்னர் நடந்த அவரது இறுதி ஊர்வலம்தான் அது. சிவசேனாவுக்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம் எதிர்த்தாக்குதலுக்குத் தயாராக இருந்தபோதிலும்,  அன்றைய போலிகம்யூனிசத் தலைமை அமைதி காத்தது. சிவசேனாவை அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல், அனைத்தையும் சட்டவாத ரீதியில் தீர்த்துக் கொள்ள முயற்சித்தது. உழைக்கும் மக்களிடம் இந்தியப் போலி ஜனநாயகத்தின் மீது மாயைகளை வளர்த்தது.

தேசாயின் துணைவியாரான சரோஜினி தேசா அதேதொகுதியில் வலது கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டபோது, இடைத்தேர்தலில் அவரைத் தோற்கடித்து, முதன் முறையாக கம்யூனிஸ்டு கோட்டையைத் தகர்த்து முன்னிலும் தீவிரமாக சிவசேனா கும்பல் தொழிற்சங்க இயக்கத்தினரைத் தாக்கத் தொடங்கியது. இவ்வளவுக்கும் பின்னரும், பாசிச இந்திரா ஆதரவு போலிகம்யூனிஸ்டு தலைவரான டாங்கே, ஒருமுறை தாக்கரேயுடன் சேர்ந்து மேடையேறி கைகுலுக்கினார். சோசலிஸ்டு வேடம் போட்ட ஜார்ஜ் பெர்ணான்டஸ் தாக்கரே கும்பலின் குடும்ப நண்பராகிப் போனார்.

2001 மார்ச் மாதத்தில் பா.ஜ.க. கூட்டணி அரசின் பட்ஜெட்டை எதிர்த்தும், அரசுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதை எதிர்த்தும், தொழிலாளர் சட்டங்களைத் தனியார் முதலாளிகளுக்குச் சாதகமாகத் திருத்தம் செவதை எதிர்த்தும் இடது, வலது கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் இணைந்து வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்தன.  அரசியல் ஆதாயத்துக்காக சிவசேனாவும் இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்ததும், அதனைப் போலி கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் வரவேற்று, தங்களது பொதுக்கூட்டங்களில் பாசிச சிவசேனா குண்டர்படைத் தளபதிகளை மேடையேற்றிக் கூடிக்குலாவின.

போலி கம்யூனிஸ்டுகள், போலி சோசலிஸ்டுகளின் சந்தர்ப்பவாதமும் காங்கிரசின் ஆதரவும் மட்டுமல்ல; எல்லாவற்றுக்கும் மேலாக அதிகாரவர்க்கம், போலீசு, நீதித்துறை அடங்கிய அரசு எந்திரமே இந்துவெறி போதை தலைக்கேறி பாசிச பயங்கரவாத சிவசேனா கும்பலை ஆதரித்து நின்றது. இதனாலேயே இட்லரின் வாரிசாக சிவசேனா இத்தனை காலமும் கொட்டமடிக்க முடிந்துள்ளது. இதுதான் பீற்றிக் கொள்ளப்படும் இந்திய போலி ஜனநாயக அரசியலமைப்பு முறையின் மகிமை. தாக்கரே, மோடி, அத்வானி, இந்திரா, ராஜீவ், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா – என இத்தகைய பாசிஸ்டுகளும் இன்னும் பல புதிய பாசிஸ்டுகளும் உருவாவதற்கு அடிப்படையாக இருப்பது இந்தியாவின் போலி ஜனநாயக அரசியலமைப்பு முறைதான்.

எந்த அரசுப் பதவியிலும் இல்லாத, இந்துவெறி – இனவெறி பாசிச பயங்கரவாதியான பால்தாக்கரேவின் உடலுக்குத் தேசியக் கொடியைப் போர்த்தி அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக  வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு, தேசிய ஒருமைப்பாட்டை உபதேசிக்கும் இந்திய அரசு தேசியக் கொடியைப் போர்த்தி மரியாதை செதது ஏன் என்பது புரியாத புதிரல்ல. ஏனென்றால் இந்திய அரசானது இந்துத்துவ மேலாதிக்க, பாசிச சர்வாதிகார அரசு.

தாக்கரேவின் பாசிச அரசியல் வாரிசாக அவரது மகன் உத்தவ் தாக்கரேவும், அவரது தம்பி மகன் ராஜ்தாக்கரேவும் உள்ளனர் என்றாலும், நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் இயக்கங்களிலும் அவரது மண்ணின் மைந்தர்கள் கொள்கையை ஆதரித்து அரசியல் நடத்தும் இனவெறியர்கள் இருக்கவே செகிறார்கள். வர்க்க அரசியலை மறுத்து, உழைக்கும் மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து திசைதிருப்பி ஆளும் வர்க்கத்துக்கு வெவ்வேறு அளவுகளில் சேவை செயும் இயக்கங்களும் கட்சிகளும் இன்னமும் நீங்காத அபாயமாக நீடிக்கவே செகின்றன.

மண்ணின் மைந்தர் கொள்கையை வேரூன்றச் செய்து மகாராஷ்டிராவில் அசைக்க முடியாத பாரம்பரியத்தை  நிலைநாட்டியவர், மக்களின் செல்வாக்குமிக்க தலைவர் பால்தாக்கரே என்று இந்துவறி-இனவெறியர்களும் ஓட்டுப் பொறுக்கி பிழைப்புவாதிகளும் அவரைப் புகழ்ந்து அஞ்சலி செலுத்தி வருந்துகிறார்கள். நாமும் வருந்தத்தான் வேண்டும் – ஒரு பாசிச பயங்கரவாத மாஃபியா கும்பலின்  தலைவன் தண்டிக்கப்படாமல் இயற்கையாக மரணமடைந்ததற்காக.

______________________________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
_____________________________________________________________

சென்னை மெட்ரோ ரயிலின் வியர்வை மணம் !

10

ன்றிலிருந்து 5 ஆண்டுகள் என எதிர்காலத்துக்குள் பயணிப்போம்.

அதற்குள் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து
==வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்ட்ரல், அண்ணா சாலை வழியாக கிண்டி கத்திப்பாரா வரை
==சென்ட்ரலிலிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, அண்ணா நகர், திருமங்கலம் வழியாக கோயம்பேடு வரை
==கோயம்பேட்டிலிருந்து வட பழனி, அசோக் நகர், கலைமகள் நகர் வழியாக கத்திப்பாரா வரை
==கத்திப்பாராவிலிருந்து  விமான நிலையம் வரை
என மெட்ரோ ரயில் ஓட ஆரம்பித்து விட்டிருக்கும்.

இந்த வழித்தடங்களில் தரைக்குக் கீழே 20 ரயில் நிலையங்களும் உயர்த்தப்பட்ட பாதையில் 14 ரயில் நிலையங்களும் செயல்படும். சுமார் 8 ரூபாய் முதல் 23 ரூபாய் வரை தூரத்துக்கு ஏற்ப  டிக்கெட் எடுத்துக் கொண்டால் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட, நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கிகள், மின்னணுத் தகவல் பலகை என்று பளபளத்துக் கொண்டிருக்கும் தரையடி ரயில் நிலையங்களுக்குள் நுழையலாம். ஸ்மார்ட் கார்டு எனப்படும் மின்னணு அட்டைகளை வாங்கி பையில் வைத்திருந்தாலே தானியங்கி கதவு திறந்து உங்களுக்கு வழி விடும்.

ரயில் நிலையத்துக்குள் போன 3 நிமிடங்களுக்குள் ரயில் வந்து விடும். தானியக்கமாக இயங்கும்  ரயில் வந்து நின்றதும், கதவுகள் தானாகவே திறக்கும். துருப்பிடிக்காத ஸ்டீலில் செய்யப்பட்ட, குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிக்குள் நுழைந்தால் கதவுகள் தானாகவே மூடிக்  கொள்ளும். அடுத்த நிலையம் பற்றிய விபரங்கள் மின்னணுப் பலகையில் காட்டப்படுவதோடு, ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கவும் செய்வார்கள். இப்போதைய பயண நேரத்தை விட 50% முதல் 75% வரை குறைவான நேரத்தில் போக வேண்டிய இடத்துக்குப் போய் சேர்ந்து விடலாம்.

இதுதான் எதிர்கால சாத்தியம்.

காரில் அல்லது இரு சக்கர வாகனத்தில் அல்லது பேருந்தில் போக்குவரத்து நெருக்கடிகளோடு இந்த இடங்களைக் கடக்கும் சென்னைவாசிகளுக்கு மேலே சொன்ன எதிர்காலக் கனவு தான் ஆறுதல்.

இந்த மெட்ரோ ரயில் பணிகளைப் பார்த்தவாறு சாலையில் போகும் போது மஞ்சள் பூக்கள் சில எழுப்பப்பட்ட தடுப்புகளுக்குள் நகர்வது தெரிகிறது. பந்து வந்து தலையில் அடித்தால் காத்துக் கொள்ள கவசம் போட்டுக் கொள்ளும் கிரிக்கெட் வீரர்கள் போல இல்லாமல், மேலே இருந்து கற்கள்  அல்லது கருவிகள் தலையில் விழுந்து விடக் கூடாது என்பதற்காக கவசம் அணிந்து கொண்ட மெட்ரோ ரயில் தொழிலாளர்களின் நகர்வுகள் தான் அப்படித் தெரிகின்றன. வெயிலாய் இருந்தாலும், மழையாய் இருந்தாலும், காற்று அடித்தாலும் இந்தப் பூக்கள் அசரமால் உழைத்துக் கொண்டே இருக்கின்றன.

இந்தத் தொழிலாளர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? நம்முடைய எதிர்காலக் கனவுகளை படைத்துக் கொண்டிருக்கும் இவர்களது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்? மெட்ரோ ரயில் வேலைகள் நடக்கும் பணியிடங்களுக்கு அருகிலும், ஒரு பகுதித் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் திருவேற்காடு தொழிலாளர்கள் குடியிருப்பிலும் தொழிலாளர்களைச் சந்தித்து தகவல் திரட்டினோம்.

வர்களின் அனுபவங்களைக் கேட்கும் பொழுதே தெரிந்தது, அவை அனுபவங்கள் அல்ல, ஆவணங்கள். அவர்களது உழைப்பின் பதிவுகள் வரலாற்றின் பக்கங்களில் ஆவணப்படுத்தப்படுவதில்லை. பாலங்களாய், சாலைகளாய், விண்ணை முட்டும் கட்டிடங்களாய்  ஆவணப்படுத்தப் படுகின்றன. ஆனால், அந்தப் படைப்புகளின் மீது உருவாக்கும் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான காப்புரிமையும் இல்லை, ராயல்டியும் கொடுக்கப்படுவதில்லை. உரையாடல்களில் கிடைத்த தகவல்களையும், நேரில் பார்த்த விபரங்களையும் தொகுத்து தருகிறோம். தொழிலாளர்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.

இந்தத் தொழிலாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

மெட்ரோ தொழிலாளிகள் 2இவர்கள் பெரும்பாலும் பீகார், உத்திரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலிருந்து வருகிறார்கள். வடபழனி சிக்னலுக்கு அருகில் மெட்ரோ ரயில் வேலை நடக்கும் இடத்தில் நின்றிருந்த மூன்று தொழிலாளர்கள் பீகாரின் ஜமுய் மாவட்டத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்களை  ஜமுய் மூவர் என்று வைத்துக் கொள்வோம். கோயம்பேட்டில் சந்தித்த சுமார் 40 வயதான தொழிலாளர் பீகாரின் பாட்னாவுக்கு அருகில் இருக்கும் கிராமத்திலிருந்து வருகிறார். இவரை ராதே ஷ்யாம் என்று அழைக்கலாம். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அருகில் சந்தித்து பேசிய செக்யூரிட்டி ஊழியர் அசாமிலிருந்து வருகிறாராம். இவரது பெயர் கோகோய். சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வெளியில் வேலை நடந்து கொண்டிருந்த இடத்தில் மூர் மார்கெட் திசையிலிருந்து கையில் சாப்பாட்டு கேரியரோடு நடந்து வந்து கொண்டிருந்தவர் பஞ்சாபை சேர்ந்தவர். ஜமன்லால் சிங் என்று இவரைக் கூப்பிடலாம்.

ஈக்காட்டுத் தாங்கலில் சந்தித்த செக்யூரிட்டி ஊழியர் ஜார்கண்டைச் சேர்ந்தவர்.  நான்கு மாதம் ஊருக்குப் போய் விட்டு இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறார். ஆஷிஷ் குமார் என்று இவரை குறிப்பிடுவோம். காசி தியேட்டர் பாலத்தின் கீழ் சந்தித்த சிறுவன் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னான். முன்னா என்று வைத்துக் கொள்வோம். அண்ணா நகர் ரவுண்டானாவில் சாலையைத் தூய்மை செய்து கொண்டிருந்த மெட்ரோ பணியாளர் பீகாரின் பகல்பூரைச் சேர்ந்தவர். இவரது பெயரை ராம்லால் என்று வைத்துக் கொள்வோம். அதே இடத்தில் சிறிது தொலைவில் நடந்து வந்து கொண்டிருந்த வயதான தொழிலாளருக்கு சொந்த ஊர் ஒரிசாவின் கஞ்சன் மாவட்டம். இவரை நாராயண் என்று அழைப்போம் அண்ணா நகர் புளூ ஸ்டார் அருகில் சந்தித்த சிவில் சூப்பர்வைசர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். இவரை பசந்த் என்று வைத்துக் கொள்வோம்

திருவேற்காட்டில் தங்குமிடத்துக்கு வெளியில் கடையில் சந்தித்த நான்கு தொழிலாளர்கள் பீகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை சிவான் சிராமிக் என்று அழைப்போம். இவர்கள் அனைவரும் வல்லரசாக உருவாகி வரும் இந்திய நாட்டில் வசிக்கும் குடிமக்கள் தான்  என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவர்கள் ஏன் தமது சொந்த ஊரை விட்டு வெகு தூரம் வந்து வேலை செய்கிறார்கள்? எப்படி வந்து சேருகிறார்கள்?

மெட்ரோ ரயில் பணிகள் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சார்பாக பல்வேறு நிறுவனங்களுக்கு (எல்&டி, ஆப்கான்ஸ், சிசிசிஎல் முதலியன) ஒப்பந்தப் பணியாக அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்களிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு காண்டிராக்டர்கள் இந்தத் தொழிலாளர்களை அழைத்து வருகிறார்கள்.

ஜமூய் மூவரிடம் ‘பீகாரிலிருந்து இங்கே எப்படி வந்து சேர்ந்தீங்க? ஏன் வந்தீங்க?’ என்று கேட்டதற்கு  ‘என்ன செய்ய சகோதரா! எங்க வயிறு நிரம்புகிறதோ அங்க போக வேண்டியிருக்கு’  என்றார்கள்.  அவர்களில் வயதான ஒரு தொழிலாளருக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனவாம். ஊரில் நிலம் இருக்கிறதாம். விவசாயம் செய்கிறார்களாம். இவர் மாதா மாதம் காசு சேர்த்து 3,000 ரூபாய் அல்லது 4,000 ரூபாய் ஊருக்கு அனுப்புவாராம். எப்போதாவது வயல் வேலை அல்லது குடும்பத்தில் தேவை ஏற்பட்டால் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போவார்களாம்.

ராதே ஷ்யாமுக்கு ஊரில் விவசாயம், நிலம் இருக்கிறது. அண்ணன் குடும்பத்தினர் அதைக் கவனித்துக் கொள்கின்றனர். இவர் இப்படி வெவ்வேறு இடங்களுக்குப் போய் கூலி வேலை செய்து பணம் அனுப்புவாராம். மாதம் 4,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ஊருக்கு அனுப்புவாராம்.

செக்யூரிட்டி ஊழியர் கோகோயிடம் ‘அசாமில் இது போல வேலைகள் இல்லையா?’ என்று கேட்டால், ‘அசாமில் இது போன்ற வளர்ச்சி வருவதற்கு இன்னும் 30 ஆண்டுகள் வரை ஆகலாம்’  என்கிறார். ‘இங்கு நன்றாக இருக்கிறது. எங்க ஊரில் இருப்பது போல சாதிரீதியாக கொடுமைப்படுத்துவது இல்லை.  ஒழுங்காக நடத்துகிறார்கள். அனைவரும் சுதந்திரமாய் இருக்கிறோம்’ என்றார். ஜமன்லால் அவரது டேக்காதார் (மேஸ்திரி) எங்கு வேலை இருக்கிறது என்று அழைத்து போகிறாரோ அங்கே போவாராம்.

செக்யூரிட்டி ஆக இருக்கும் ஆஷிஷ் குமாருக்கு ஜார்கண்டில் மளிகைக் கடை இருக்கிறதாம். மனைவியும், குழந்தைகளும் அங்கு இருக்கிறார்களாம்.  ‘இந்தக் காலத்தில் ஒருவர் வேலை  செய்து குடும்பம் நடத்த முடியாது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அந்தச் செலவு இருக்கிறது. அதனால் தான் நான் வெளியில் வந்து சம்பாதித்து பணம் அனுப்புகிறேன்’ என்றார். முதலில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஓரியண்டல் தொழிற்சாலையின் கட்டுமானம் நடக்கும்போது வேலைக்குப் போனாராம். வீட்டுக்கு மிக அருகில் வேலை. அந்த புராஜக்ட் முடிந்ததும் வேலை இல்லாமல் போய் விட்டது.

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் செக்யூரிட்டி வேலைக்கு 4500 ரூபாய் தான் மாதச் சம்பளம். அதனால் வெளியில் வேலை தேடினாராம். தெரிந்த ஒருவர் மூலம் முதலில் ஐபிஎம் இல் (ராமாபுரம் டிஎல்எப்) டாப் செக்யூரிட்டி நிறுவனத்தின் மூலம் வேலைக்குப் போனாராம். சென்னைக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டனவாம்.

பீகாரிலிருந்து கிராமத் தலைவர் சேர்த்து விட இந்த வேலைக்கு வந்தாராம் ராம்லால். நாராயண் என்ற தொழிலாளரும் மேஸ்திரியை நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறார். ஊரில் விவசாய வேலைக்கு ரூ. 100-120 வரை தினக்கூலியாகக் கிடைக்குமாம். இங்கு ஒரு நாள் வேலைக்கு ரூ. 220 வரை கூலி கிடைக்கிறது. செலவுகள் எல்லாம் போக மாதா மாதம் ரூ.

2000 – ரூ. 3000 வீட்டுக்கு அனுப்ப முடிகிறது. அதற்குத்தான் இந்தக் கஷ்டம் என்று  பெருமூச்சு விட்டார்.

சிவில் சூப்பர்வைசர் பசந்த் டெல்லி மெட்ரோ ரயில் கட்டுமான வேலைகளிலும் பங்கு பெற்றாராம்.  நிறுவனத்தின் புராஜக்டுகள் நடக்கும் இடங்களுக்குப் போகிறார். திருவேற்காட்டில் பேசிய சிவான் சிராமிக் நண்பர்கள் வீட்டுச் சூழலை கருத்தில் கொண்டு வெளியில் போனால் தான் பிழைக்க முடியும் என்று இது போன்று வந்து விட்டார்கள். ஒருவர் மெட்ரிக் பாஸ், இன்னொருவர் 8 வது வரை படித்தார், இன்னொருவர் 6 வதோடு படிப்பை நிறுத்திக் கொண்டார். எங்கு வேலை கிடைக்கிறதோ அங்கே போவார்களாம். ‘ஊரில் வேலை செய்தால் கிடைக்கும் கூலி அன்றே செலவாகி விடும். இங்கு 200 ரூபாய் கூலியில் 100 ரூபாய்  செலவானாலும், 100 ரூபாய் சேமித்து விடலாம். அதுதான் இப்படி வந்து விட்டோம்.’

சிறு விவசாயிகளையும், சிறு வணிகர்களையும் உதிரிப் பாட்டாளிகளாக தூக்கி எறிந்திருக்கிறது தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம்.

இவர்களது வேலை நேரம், கூலி, பணியிடச் சூழல் எப்படி இருக்கிறது?

ஜமுய் மூவர் அணி:

மெட்ரோ தொழிலாளிகள் 1‘தினமும் 12 மணி நேரம் வேலை. சுமார் 200 ரூபாய் நாள் சம்பளம்’ என்று சொன்னார்கள். காலையில் 8 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை பார்க்க வேண்டும். நடுவில் 1 மணி நேரம் உணவு இடைவேளை. திருவேற்காட்டிலிருந்து வந்து  போவதற்கு கம்பெனி வண்டி இருக்கிறதாம். காலையில் 6 மணிக்கு அங்கிருந்து கிளம்புமாம்.  இரவு வேலை முடித்து வண்டியில் ஏறிப்  போய்ச் சேரும் போது 10 மணி ஆகி விடுமாம். காலையில் 4 மணிக்கு எழுந்து சோறும் பருப்பும் சமைத்து எடுத்துக் கொண்டு வருகிறார்களாம். ‘இரவு 11 மணிக்கு தூங்கி  விட்டு, காலையில் 4 மணிக்கு எழுந்திருப்போம்’ என்றார்கள்.

அதாவது தினமும் காலையில் 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். 4 மணி நேரம் வேலைக்குப் போய் வரும் பயணம். 12 மணி நேர வேலை. வேலைக்குப் போவதும் வேலை செய்வதுமாக 16 மணி நேரம் போய் விடுகிறது. இதற்கு ஒரு நாள் சம்பளம் சுமார் 200 ரூபாய். கூடுதல் ஒரு ஷிப்டு வேலை பார்த்தால் கூடுதல் பணம்; அதற்கும் துணிகிறார்கள்.

‘ஊரை விட்டு வேலை செய்ய வந்திருக்கிறோம். வாரத்துக்கு 7 நாளும் வேலை செய்தால் தானே சம்பாதிக்க முடியும். அதனால் வார விடுமுறை எல்லாம் எடுப்பதில்லை.’ தேவை இருந்தால், வாய்ப்பு கிடைத்தால் இரவும் வேலை செய்கிறார்கள். விடுமுறை தேவை என்றால் சம்பளம் இல்லாத விடுமுறை மட்டும் தான். வேலை செய்தால் சம்பளம். இல்லை என்றால் சம்பளம் இல்லை அவ்வளவு தான்.

ராதேஷ்யாம் என்ற மூத்த தொழிலாளர் 8 மணி நேர வேலைக்கு 240 ரூபாய் சம்பளம் என்று சொன்னார். ஓவர் டைம் செய்தால் அதிகம் கிடைக்குமாம். அருகிலேயே தங்க இடம் கொடுத்திருக்கிறார்கள். செக்யூரிட்டி ஊழியர் கோகோய்க்கு சேத்துப்பட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்திருக்கிறார்களாம். வாடகை இல்லாத தங்குமிடம். அவர்களே சமைத்துக்  கொள்கிறார்கள். 12 மணி நேரம் வேலைக்கு மாதச் சம்பளம் ரூ. 7,000. இரண்டு ஷிப்டுகளாக பொருட்களைக் காவல் காக்கிறார்கள்.

பஞ்சாபி தொழிலாளர் ஜமன்லால் ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலைக்கு 146 ரூபாய் சம்பளம் என்று சொன்னார். கூடுதல் 4 மணி நேரம் வேலை செய்தால் 220 ரூபாய் கிடைத்து விடுகிறது. வாரத்துக்கு 7 நாளும் வேலை செய்கிறார். விடுமுறை கிடையாது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்குப் போவாராம்.

சென்ட்ரலுக்கு அருகில் தடுப்புத் தகரத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்துக்  கொண்டிருந்த இரண்டு சிறு வயதினரில் ஒரு பையன் ‘இங்கு நான் ஹெல்ப்பராக இருந்தாலும், இரவில் வெல்டர் வேலைக்குப் போகிறேன்’ என்று அந்நியன் பட ஹீரோ போல பேசினான். அப்போது அருகில் வந்த இன்னொரு இளைஞர் ‘அது எப்படி முடியும். பகலிலும் வேலை பார்த்து,  இரவிலும் வேலை பார்த்து ஒரு மனிதனால் முடிகிற காரியமா’ என்று வாதம் புரிந்தார்.

அவர் சூப்பர்வைசராம்; சூப்பர்வைசருக்கு ரூ. 8,000 முதல் 10,000 வரை சம்பளம் கொடுக்கிறார்களாம். அவருக்கும் 12 மணி நேர வேலை, வாரத்துக்கு 7 நாட்களும் வேலை தான். தேவைப்பட்டால் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்வாராம். அதற்கு சம்பள வெட்டு கிடையாது. மேலாளர் பார்த்து இது போல விடுப்புக்  கொடுக்கிறார்.

செக்யூரிட்டி ஊழியர் ஆஷிஷ் குமாரின் மாதச் சம்பளம் 6,500 ரூபாய். தங்குவதற்கான இடத்தை எதுவும் கட்டணம் இல்லாமல் கொடுத்திருக்கிறார்களாம். ‘நடுவில் உள்ளவனுங்க கொஞ்சம் சுருட்டிக் கொள்கிறாங்க.  நமக்கு இப்படி இழுத்துப் பறிக்கும் அளவுக்குத்தான் கிடைக்கிறது’ என்றார். 4,5 பேர் சேர்ந்து சமைத்துக் கொள்கிறார்களாம்.

முன்னா என்ற பையனுக்கு மணிக்கு 17 ரூபாய் வீதத்தில் சம்பளம் கொடுக்கிறார்களாம். நாராயண் என்ற தொழிலாளர் மிகவும் விரக்தியாகப் பேசினார். ‘கொஞ்சம் இள வயசுப் பசங்க சமாளிச்சுக்கிறாங்க. என்னை மாதிரி வயசாயிட்டா முடியலை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை. அதுக்கு 200 ரூபாய் தராங்க. வேலைக்குக் கூப்பிடும் போது ஞாயிற்றுக் கிழமை அரை நாள் வேலை செய்துட்டு சம்பளத்தை வாங்கிக் கொள்ளலாம்னு மேஸ்திரி சொன்னார். ஆனா இங்க 8 மணியிலேருந்து 4 மணி வரை வேலை செய்து விட்டு நிறுத்தினா 8 மணி நேர சம்பளம்தான் கொடுக்கிறாங்க. முழு சம்பளம் தருவதில்லை’.

நிறுவனம் நேரடியாக வேலைக்கு அமர்த்தியிருக்கும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 12,000 கிடைப்பதாகச் சொன்னார். ‘ஆனா  நமக்கு இவ்வளவுதான் கிடைக்குது’. கொஞ்சம் படித்த, மேற்பார்வை பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளமும், தங்கும் இட வசதியும் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

சிவான் சிராமிக், ‘வெல்டர் போன்ற திறன் படைத்த தொழிலாளர்களுக்கு தினசரி தலா ரூ. 300 சம்பளம் கிடைக்கிறது. உடல் உழைப்பாளர்களுக்கு ரூ. 225 கிடைக்கிறது’ என்றனர். இவர்கள் இரவு ஷிப்டுக்குப் போகிறவர்கள்.

இந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தரையடிப் பாதை உருவாக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 300 கோடி செலவு, உயர்த்தப்பட்ட பாதை உருவாக்க ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 100 கோடி செலவாகும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். அந்தப் பிரம்மாண்டத்துடன் இந்த தொழிலாளர்களுக்கு  கொடுக்கப்படும் கூலிகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

பணியை எப்படித் திட்டமிட்டு நடத்துகிறார்கள்?

வடபழனியில் பணியிடத்துக்கு அருகிலேயே ஒரு வளாகத்தில் செக்யூரிட்டி அறையுடன் சேமிப்புக் கிடங்கும் இருந்தது. இங்குதான் வேலைக்கான கருவிகள், மற்ற பொருட்கள், வேலை செய்பவர்களுக்கான குடிநீர், கழிவறை போன்றவற்றை அமைத்திருக்கிறார்கள். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள்ளும், வேலை நடக்கும் பகுதியிலும் அருகிலேயே பொருட்கள் வைக்கும் வளாகத்தில் சிறு அலுவலகம், பாதுகாப்பாளர் கூடம் என்று அமைத்திருந்தார்கள்.

சென்ட்ரல் அருகிலான வேலைக்கு பூங்கா நகர் ஸ்டேஷனுக்கு போகும் தெரு முனையில் பொருட்கள் வைத்திருக்கும் வளாகம் இருக்கிறது. உள்ளே செக்யூரிட்டி, போலீஸ் இருந்தார்கள். குடி தண்ணீர், கழிவறை, பொருட்கள் வைக்கும் இடம் என்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த வளாகம்.

எல்லா இடங்களிலும் வேலை வாங்குவதற்கு துல்லியமாக திட்டமிட்டு, ஏற்பாடுகள் செய்து  செயல்படுத்தியிருக்கிறார்கள். பொருட்கள் வீணாவதைக் கவனமாகத் தவிர்த்து, வேலையில் தடங்கல்  ஏற்படாமல் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்துகிறார்கள். பொருட்களை விட மதிப்பு வாய்ந்த மனிதர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி மட்டும் கவலைப்படுவதில்லை.

தொழிலாளர்கள் எங்கு தங்கியிருக்கிறார்கள்? எப்படி வாழ்க்கை நடத்துகிறார்கள்?

சென்னை மெட்ரோ தொழிலாளிகள் 3

ஜமுய் மூவர் அணி தங்கியிருப்பது திருவேற்காட்டில். கம்பெனியே தங்குவதற்கு ஷீட் கூரையுடனான கொட்டகை போட்டுக் கொடுத்திருக்கிறதாம். 10 x 10 அறையில் சுமார் 20 பேர் படுத்திருப்பார்களாம். தங்கும் அறைக்கும், தண்ணீருக்கும் கம்பெனி காசு  வாங்குவதில்லையாம். சாப்பாட்டுச் செலவை இவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். கூட்டாகச் சேர்ந்து சமைத்துக் கொள்கிறார்களாம். மதிய உணவைக் கையில் கொண்டு வந்து விடுகிறார்களாம்.

மாதக் கணக்கில் சென்னையில் தங்கி வேலை செய்யும் இந்தத் தொழிலாளர்களுக்கு சாதாரண  மக்களுக்குக் கிடைக்கும் நியாய விலை உணவுப் பொருட்கள், அரசு மானியங்கள், சலுகைகள் கூட கிடைப்பதில்லை. தமிழ்நாட்டு தொழிலாளர் ஒருவருக்கு 200 ரூபாய் தினசரி சம்பளம் கிடைத்தால், இலவச அரிசி 20 கிலோ வாங்கிக் கொள்ளலாம்; மானிய விலையில் எரி பொருளும், பருப்பு வகைகளும் வாங்கிக் கொள்ளலாம். இவர்களுக்கு அந்த ஆதரவும் கிடையாது. இவர்கள் அரிசியை வெளிக் கடையில்தான் வாங்குகிறார்களாம். கிலோ 25 ரூபாய், 30 ரூபாய் ஆகிறதாம்.

இவர்கள் யாரிடமும் செல்போன் எல்லாம் இல்லை. ஊருக்குப் பேச வேண்டுமானால் STD பூத்திலே சென்று பேசுவார்களாம். ஜமன்லால் சிங் தங்குமிடமும், தண்ணீரும் கட்டணமில்லாமல் கம்பெனி கொடுக்கிறது என்று சொன்னார். உணவுக்கு கம்பெனி கொடுப்பதை சாப்பிடுகிறார்.  அதற்கு மாதம் 700 ரூபாய்  பிடித்துக் கொள்வார்களாம். 300 பேருக்கு ஒன்றாகச் சேர்த்து சமைக்கிறார்கள். தண்டையார் பேட்டையில் தங்கியிருக்கிறார்களாம்.

ஆஷிஷ் குமார் பணியிடத்துக்கு அருகிலேயே நான்கைந்து பேருடன் அறை எடுத்துத் தங்கியிருக்கிறார். உணவை அவர்களே தயார் செய்து கொள்கிறார்கள். திருவேற்காட்டில் இருக்கும் முகாம் மிகப் பிரம்மாண்டமாக நூற்றுக்கணக்கானோர்  தங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 15 அடிக்கு 15 அடி அறைகள் ஷீட்டுகளால்  உருவாக்கப்பட்டிருந்தன. வளாகம் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் ஆள்  நடமாட்டம் குறைவான பகுதியில் இது அமைக்கப்பட்டுள்ளது. இரவில் வேலை பார்த்து விட்டு, பகலில் ஓய்வெடுக்க வரும் தொழிலாளர்களுக்கு வெயில் அடிக்கும் போது இந்த அறைகள் எப்படி ஓய்வு எடுக்க உதவும் என்று தோன்றியது. தொழிலாளர்களை தங்குமிடத்திலிருந்து பணியிடத்துக்கு அழைத்து செல்ல நிறுவனத்திலிருந்து பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து விட்டால் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள்?

ஜமுய் மூவரணியினர் 4 மாதங்களுக்கு முன்பு வந்தார்களாம். வேலை நடப்பது வரை இங்கு இருப்பார்களாம். வேலை முடிந்ததும், அடுத்து வேலை கிடைக்கும் இடத்துக்கு, வேறு நகரத்துக்கு, வேறு மாநிலத்துக்கு நகர வேண்டியதுதான். தாங்கள் உருவாக்கிய மெட்ரோ ரயில் எப்படி ஓடுகிறது என்று பார்க்கும் வாய்ப்புக் கூட இவர்களுக்கு இருக்காது.

கோகோய் ‘நிரந்தர வேலை என்று எந்த கம்பெனியிலும் கிடையாது’ என்கிறார். ‘இங்கு வேலை நடக்கும் வரை வைத்திருப்பார்கள். அடுத்த வேலை இருந்தால் அழைத்துச் செல்வார்கள். இல்லாவிட்டால் நம்ம கெட்ட நேரம் அவ்வளவு தான்.’

ஆஷிஷ் குமார் ‘2012க்குப் பிறகு மெட்ரோ புராஜக்டில் வேலை இருக்காது. வேறு வேலை தேட வேண்டும்’ என்றார்.  ‘என்ன வேலை நேரம், என்ன சம்பளம் என்று எந்த நிச்சயமும் கிடையாது.’ ‘நீங்க மனது வைத்து வேறு இடத்தில் வேலை ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்’ என்று ஒரு விண்ணப்பத்தையும் எங்களிடம் வைத்தார்.  சிவான் சிராமிக் இங்கு வேலை முடிந்ததும் அடுத்து வேலை கிடைக்கும் இடங்களுக்கு போக வேண்டியதுதான். அவர்கள் ஊரிலேயே வேலை செய்வதற்கு வாய்ப்புகள் மிக மிகவும் குறைவு என்றார்கள்.

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் இவர்களை எப்படி நடத்துகின்றன?

ஜமுய் மூவரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது மூன்று பேரில் ஒருவர் ‘வேலையைப் பாருங்க’ என்று மற்றவர்களை உஷார்ப் படுத்தினார். திரும்பிப் பார்த்தால், பின் பக்கத்திலிருந்து நீல நிறச் சீருடையுடன் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் மேலாளர், தமிழில் பேசினார். ‘நீங்க யாரு, உள்ளே ஏன் வந்தீங்க?’ என்று கேட்டவர். ‘இப்படி அனுமதி இல்லாமல், பாதுகாப்பு உடை அணியாமல் உள்ளே வரக் கூடாது. அலுவலகத்தில் போய் அனுமதி வாங்கிக் கொண்டு வாங்க’ என்று அனுப்பினார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் இருந்த செக்யூரிட்டி தமிழ்நாட்டுக்காரர். அவரிடம் பேசினோம். “நம் ஊர் ஆளுக நேரக் கணக்கு பார்த்து வேலை செய்வாங்க சார். வட நாட்டவங்களைத்தான் நாய் மாதிரி வேலை வாங்க முடியும். ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு அப்புறம் தொடர்ந்து வேலை செய்வாங்க. கூலியும் கம்மியா கொடுத்தா போதும். அதனால தான் இங்க முழுக்க வடநாட்டுக் காரனுங்களை வேலைக்கு வச்சிருக்காங்க” என்றார். “தமிழ் ஆளுங்களே இல்லையா?” என்று கேட்டால் “இருக்காங்க சார். அதிகாரி, பொறியாளர், ஃபீல்டு ஆபிசர் இந்த பதவியிலெல்லாம் இவங்கதான் சார் இருப்பாங்க” என்றார்.

“எல்லாம் ரூல்ஸ் படிதான் நடக்குது. சட்டப்படி குறைந்தபட்சக் கூலி கொடுக்கிறாங்க. தங்குவதற்கு இடம் இலவசமா கொடுக்கிறாங்க. ஆர் ஓ தண்ணீர் தர்றாங்க. சாப்பாட்டுக்கு மெஸ் கூட இருக்கிறது” என்கிறார்கள் மேலாளர்கள்.  மெஸ்சில் சாப்பிட வேண்டுமானால் மாதா மாதம் ரூ. 700 முதல் ரூ. 1200 வரை  பணம் கொடுக்க வேண்டியிருக்கும். அதை மிச்சப்படுத்த தாங்களே சமைத்துச் சாப்பிட்டுக் கொள்வதாகச் சொல்கிறார்கள், தொழிலாளர்கள்.

இந்தத் தொழிலாளர்கள் தமது வேலையையும், வாழ்க்கையையும் எப்படிப் பார்க்கிறார்கள்?

கோகோய்:

‘8 மணி நேர ஷிப்டு எப்படி சாத்தியமாகும். நான் 8 மணி நேரம் வேலை பார்த்து விட்டுப் போய் விட இரண்டாவது ஷிப்டில் வருபவர் 8 மணி நேரம் காவல் இருப்பார். மீதி 8 மணி நேரம் என்ன ஆகும். யாராவது வந்து பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு போய்  விடுவார்கள். அதனால் தான் நாங்கள் 12 மணி நேரம் வேலை செய்கிறோம்’ என்று விளக்குகிறார். 3 ஷிப்டுகளாக பிரித்து இன்னொருவரை வேலைக்கு வைத்துக் கொள்ளலாமே என்று யோசிக்கக் கூட அவருக்குத் தோன்றவில்லை.

‘தமிழ்நாட்டு மக்கள் நல்லவர்கள் தான். சாப்பாடு எல்லாம் பிடித்திருக்கிறது’ என்கிறார். ‘நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தான் மற்றவர்களும் நம்மை நடத்துவார்கள்’ என்று தத்துவம் சொல்கிறார்.

ஆஷிஷ் குமார்:

’12 மணி நேர டுயூட்டிக்கு மாதம் 9,300 ரூபாய் கொடுத்தார்கள். அது நன்றாக இருந்தது. ஆனால் வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைத்து, சம்பளம் 5,300 ரூபாய் என்று சொல்லி விட்டார்கள். அதனால் அதை விட்டு விட்டு வந்தேன். இங்கு 12 மணி நேர வேலைக்கு 6,500 ரூபாய்  கிடைக்கிறது.’

சிவான் சிராமிக்:

‘நாட்டில் 70 கோடி உழைச்சுப் பிழைக்கிறவங்க இருக்காங்க. அவங்க எல்லாத்துக்கும் அரசாங்கம் என்ன செய்ய முடியும்? நாமதான் இப்படி அலைஞ்சு திரிந்து வாழ்க்கைப் பாட்டை பார்த்துக் கொள்ளணும். ஆனா ஒண்ண.  நாங்க இப்படி கஷ்டப்படுகிறோம். எங்க குழந்தைங்க இது போல வேலைக்கு வந்து விடக் கூடாது என்றுதான் உழைக்கிறோம்’

நிலப்பிரபுத்துவ கொடுமைகள் இல்லாத அரைகுறை போலி ஜனநாயகத்தைக் கூட பெரிதாக எண்ணும்  நிலைமையில் தான் இந்தத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.  ‘எத்தனை மணி நேரமானாலும் வேலை வாங்குங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் கிடைத்தால் போதும்.’ என்பது தான் இவர்களின் அதிகபட்சக் கோரிக்கையாக இருக்கிறது. அப்போது தான் தம்மையும், குடும்பத்தையும்  காப்பாற்றிக் கொள்ள  முடிகிறது. இப்படி அதிக வேலையால் உடல்நிலை சீர்குலைந்து சில ஆண்டுகளில் உயிரிழந்து  விட்டால், அத்தோடு இந்த துயரம் மிகுந்த வாழ்க்கைக்கு விடை கொடுத்து விடலாம் என்று நினைக்கிறார்களோ  என்னவோ!.

பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி, குறைந்தபட்சக் கூலி, அளவுக்கதிகமான வேலை நேரம் என்று சுரண்டுவது ஏதோ தனியார் பெரு நிறுவனம் என்று நாம் நினைத்து விடக் கூடாது. உள்ளூர் மற்றும் பன்னாட்டு அரசு நிறுவனங்களின் நேரடி நிழலில் தான் இப்படிப்பட்ட சுரண்டல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

மெட்ரோ 2சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டு முயற்சியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இந்தத் திட்டத்துக்கு செலவாகப் போவதாக மதிப்பிடப்பட்டுள்ள 14,600 கோடி ரூபாயில் 41% மத்திய-மாநில அரசுகள் கூட்டாக பங்களிக்க, மீதி ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடமிருந்து கடனாகப் பெறப்படுகிறது (Japan International Cooporation Agency – JICA). இந்த நிறுவனம் கட்டுமானத்தில் ஆலோசனை வழங்குபவராகவும், கட்டுமானப் பொருட்கள், கருவிகளை வழங்குபவராகவும் செயல்படுகிறது.

2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமான சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்களாக மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் செயலர், தமிழ்நாடு அரசுச் செயலாளர், தமிழ்நாடு அரசின் தொழில்துறை, நிதித்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் அலுவலர்களும் இருக்கிறார்கள். இதன் நிர்வாகக் குழுவில் அரசு அதிகாரிகள் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

அரசு சட்டங்கள், நீதி மன்றங்கள், தொழிற்சங்கங்கள், பத்திரிகைகள் எதுவும் தமது நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் அடிமாட்டு விலைக்கு விற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு உதவியாக வரவில்லை.

தமது உரிமைகளைப் பற்றிய அடிப்படை விபரங்களைக் கூட தெரிந்து கொள்ளாமல் முதலாளிகளுக்காகத் தாமாகவே ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் இந்த தொழிலாளர்கள். ஒரு சிலர் உயிரும் இழந்திருக்கிறார்கள். இரத்தமும், வியர்வையும் சிந்தி இந்த ஏழைத் தொழிலாளிகள் உருவாக்கியிருக்கும் மெட்ரோவில்தான் நாம் பயணிக்க இருக்கிறோம். நாம் பயணிக்கும் போது இவர்கள் வேறு ஊரில், வேறு பணிகளில் தொடர்வார்கள்.

__________________________

– வினவு செய்தியாளர்கள்.

__________________________

சட்டிஸ்கர் பழங்குடியினர் படுகொலை: உண்மைக்குக் குழிவெட்டும் அரசு !

0

ட்டிஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்திலுள்ள சர்கேகுடா கிராமத்தின் பழங்குடி மக்களை, கடந்த ஜூன் 28 அன்று இரவில் சுற்றிவளைத்த மத்திய ரிசர்வ் போலீசு படை நாலாபுறமிருந்தும் கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கியது.   காலில் குண்டடிபட்டு உயிர் பிழைக்கத் தப்பி ஓடியவர்களைக்கூட  அங்கே கிடைத்த கோடாரிகளைக் கொண்டு கொத்திக் கொன்றது. இரத்தம் பெருகிக் கிடந்த தெருவைச் சுத்தம் செய்துவிட்டு, இரண்டு பிணங்களுக்கு மாவோயிஸ்டுகளைப் போலச் சீருடை மாட்டிவிட்டு, “மாவோயிஸ்டு பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்” எனப் பச்சையாகப் புளுகியது.

உடனே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடந்த மிகப்பெரிய மோதல் நடவடிக்கை இது” என்று அறிவித்தார். ஆனால், நடந்தது மோதல் அல்ல; படுகொலைதான் என்று செய்திகள் வெளியாகத் தொடங்கியதும், மத்திய ரிசர்வ் போலீசு படையின் இயக்குநரான ‘வீரப்பன் புகழ்’ விஜயகுமார், பயங்கரவாதிகளைக் கொல்லும் முன்  அவர்கள் யார் என்றெல்லாம் கண்டுபிடித்துக் கொண்டிருக்க முடியாது. அது எங்கள் வேலை அல்ல” என்று திமிராக அறிவித்தார். பின்னர் செய்தி ஊடகங்களில், பள்ளி செல்லும் சிறுவர்களும் பெண்களும் உள்ளிட்டுக் கொல்லப்பட்டோர் அனைவருமே அப்பாவிப் பழங்குடியினர்” என்ற உண்மை வெளியானதும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தாக்குதலில் சில அப்பாவிகள் சிக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம். அதற்காக வருந்துகிறோம்” என்று பசப்பினார்.

சட்டிஸ்கர் மாநில எதிர்க்கட்சிகள் இப்படுகொலை குறித்து நீதிவிசாரணை கோரியதும், “இச்சம்பவத்தை அரசியலாக்குகிறார்கள்” எனச் சீறினார் சட்டிஸ்கரின் பா.ஜ.க. முதல்வர் ராமன்சிங். ப.சிதம்பரமும், “எந்தவிசாரணையும் தேவையில்லை. கொல்லப்பட்டோரில் இருவர் மாவோயிஸ்ட் தலைவர்கள் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன” என்று சாதித்தார். ஆனால், கொல்லப்பட்ட அந்த இரண்டு ‘தலைவர்களில்’ ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர், இன்னொருவரோ ‘டோலக்’ இசைக்கருவி வாசிக்கும் கலைஞர் என்ற உண்மை அம்பலமாகி ப.சிதம்பரத்தின் முகத்தில் கரிபூசியது. பழங்குடியினரின் வாக்கு வங்கியை மனதில்கொண்டும்,   இப்படுகொலையைக் கண்டிக்காவிட்டால் மக்களிடம் தனிமைப்பட வேண்டியிருக்கும் என்பதாலும், உண்மை கண்டறியும் குழுவை அமைத்த மாநில காங்கிரசுக் கட்சி, ப.சிதம்பரம் பொறுப்பின்றிப் பேசுவதாகக் கண்டித்தது.

தற்கொலைச் சாவுகளுக்குகூடப் பிரேதப் பரிசோதனை கட்டாயம் என்பது சட்ட நடைமுறை. ஆனால், சர்கேகுடாவில் பச்சைப் படுகொலை நடந்துள்ள போதிலும் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவேயில்லை. பிஜாப்பூர் போலீசு தலைமைக் கண்காணிப்பாளரோ, போலீசு நிலையத்திலேயே பரிசோதனை நடத்தப்பட்டுவிட்டதாக நம்பச் சொல்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ்  நாளேட்டின் நிருபர் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களும்,  பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் போடப்படும் தையல் ஏதும் பிணங்களின் உடலில் காணப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டு, போலீசின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளனர்.

PJN_AUG-2012.pmdஇப்படி அரசு பயங்கரவாதிகள் உருவாக்கிய கதைகளின் சாயம் வெளுக்கத் தொடங்கியதும், அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை வேறு வழியின்றி ஒப்புக்கொண்ட முதல்வர் ராமன்சிங், இச்சம்பவத்தை விசாரிக்கத் துணை வட்டாட்சியர் தலைமையில் விசாரணைக்குழுவை நியமித்தார். கொலைக்கும்பலின் தலைவன் விஜயகுமாரும் தன் பங்குக்கு துறைசார்ந்த உள்விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். அப்பாவிகள் கொல்லப்பட்டதற்காக ‘மிகவும் வருந்துகிறேன்’ என்று ப.சிதம்பரமும் முதலைக் கண்ணீர் வடித்தார்.

படுகொலைகள் நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. ஆனால், உள்ளூர் வட்டாட்சியர் தலைமையிலான விசாரணைக்குழுவின் அறிக்கையைக்கூட  அரசு  இன்னமும் வெளியிடவில்லை. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பழங்குடியினர் என்பதால் படுகொலையில் ஈடுபட்ட போலீசுப்படை மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்து துறைசார் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கொல்லப்பட்டோரின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணமும் இழப்பீடும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னமும் இவை எதுவும் செய்யப்படவேயில்லை.

சர்கேகுடாவை எட்டிக்கூடப் பார்க்காத தேசிய மனித உரிமை கமிசன், கொலைகார மத்திய ரிசர்வ் போலீசுப் படையின் இயக்குநரிடமே அறிக்கையைக் கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளது. விஜயகுமாரோ, ரிசர்வ் போலீசு படையில் துறைசார்ந்த உள்விசாரணையைக்கூட நடத்த முன்வராமல் ஓய்வு பெற்றுவிட்டார். மாநில காங்கிரசு அமைத்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை முழுமையாக வெளியிடப்பட்டால், மாவோயிஸ்டுகளுக்கு எதிராகப் போராடும் படையினரின் ஊக்கத்தை அது குறைத்துவிடும் எனக்  கட்சி மேலிடம் கூறியுள்ளதைக் காரணம் காட்டி, அறிக்கையை காங்கிரசு கட்சி முடக்கி வைத்துள்ளது. மாநில அரசு இப்படுகொலையை விசாரிக்க அகர்வால் என்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் கமிசனை  நியமித்தது. ஆனால், அந்நீதிபதி தனது பணிகளைத் தொடங்க முறையான அலுவலகம் கூட இல்லாமல் மூன்று மாதங்களாக  இழுத்தடிக்கப்பட்டு, கடந்த  அக்டோபரில்தான் அலுவலக அறை ஏற்பாடு செயப்பட்டுள்ளது.

மிகவும் வறிய நிலையில் வாழ்க்கை நடத்தும்  பழங்குடியினரின் உயிர்களைப் புழு-பூச்சிகளைவிட அற்பமாகக் கருதும் திமிர்த்தனமும், இவர்களைக் கொன்றால் யார் கேள்வி கேட்கமுடியும் என்ற ஆணவமும்  இத்தகைய அரசு பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ளன. எவர் மீதும் பயங்கரவாத, தீவிரவாத முத்திரையைக் குத்திவிட்டால் போதும், அவர்களைச் சித்திரவதை செய்து கொன்றாலும் சட்டவிரோதமானதில்லை எனும் அணுகுமுறையைத்தான் சட்டிஸ்கரில் அரசு பயங்கரவாதிகள் பின்பற்றி வருகின்றனர். இது, மனித உரிமைக்கும் ஜனநாயகத்துக்கும் நாகரிகத்துக்கும் விடப்பட்டுள்ள சவால் அன்றி, வேறில்லை.

__________________________________________________

புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
__________________________________________________

மரணப் படுக்கையில் ஒரு அருவி!

5

ரடுமுரடான பெரும் பாறைகளைக் கொண்டு கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் மலைத் தொடர். அதன் மேல் உறுதியாகக் கால் பதித்து, எம்பி உச்சியிலே விரிந்து கிடக்கும் பிரகாசமான நீல வானத்தை எட்டிப் பிடிக்க ஆவல் கொண்டு நீளும் ஆயிரமாயிரம் பசுந்தளிர்க் கரங்களாய்  நெடிதுயர்ந்து நிற்கும் கானகம். இதில் இடையீடு செய்ய விரும்பாது அக்கணமே தானுருகித் தரையிறங்கும் கார் மேகம்.  அந்த வானமிழ்தம் போய்ச் சேர தன் வலப்புறத்தில் வழி விலகிய பாறை.  அந்த முகத்துவாரத்தில் இருந்து பொங்கும் பூம்புனலாய்ப் புறப்படும் ஓர் அருவி.  அதன் பால் வெண்ணிற அருவி எண்ணூறு அடிகள் செங்குத்தாய் மின்னிப் பிரகாசிக்கும் வண்ண ஜாலங்களுடன் அமுதக் கலசமாம் பாறைக் கலயத்தில் பொழிகிறது.  சமவெளி நோக்கிய அதன் பயணத்தில் அது முதல் தங்கல். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கட்புலனாக்கவென்று தன் அகன்ற மார்பினை விரித்து நிற்கும் கருப்பும் சிவப்புமான பாறைப் பிணைப்புகள்.  காண்போர் நெஞ்சம் இனம்புரியாப் பேரின்பமும், பெரு மருட்சியும் எதிர்மோத விம்மி வெடிக்கும்.  கிட்டவொண்ணாப் பெரும்பேரு பெற்ற உவகையில் உணர்ச்சிக் குவியலால் மண்டை கனக்கும், புத்திளமை மீண்டது போல் மெய் சிலிர்க்கும், உடல் முறுக்கும்.  நிதானத்துக்கு வர சற்று நேரம் பிடிக்கும்.

ஒடிசா மாநிலத்தினுள் அடக்கப்பட்ட சுந்தர்கர் பகுதியில் அமைந்துள்ள இந்த கண்ட தாரா  இந்தியாவின் நெடிதுயர்ந்த அருவிகளுள் ஒன்று.  தண்மையான தன் பார்வை பட்ட இடமெல்லாம் பல பத்தாயிரம் ஜீவராசிகளின் உயிர் நாடியாய் காலங்காலமாய் ஒயாது ஒழியாது ஒடிக் கொண்டிருக்கிறது இந்த கண்டதாரா.  அதன் அருமை உணர்ந்த அத்துனை திணைகளும் அதனை நெஞ்சார நேசித்துப் போற்றுகின்றன.  “எல்லா உயிர்களின் இயக்கத்துக்கும் கண்டதாராவே காரணகர்த்தா” என்கிறார் அம்மலையடிவாரத்தில் அமைந்துள்ள பந்த்பர்னா கிராமத்தில் வசிக்கும் ஒரு முண்டா.  ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து இங்கு வந்து குடியேறியவர் ஆயினும், கண்டதாரா மலையும் அதன் அருவியும் பற்றிய இப்பகுதி வாழ் கிருத்தவர்கள் உள்ளிட்ட அனைத்து பூர்வகுடி மக்களின் புனித நோக்கைத் தானும் பகிர்ந்து கொள்கிறார், இந்த முண்டா.

தொன்றுதொட்டு இப்புனித பூமியின் பாதுகாவலர்களாய்த் திகழ்பவர்கள் பாரி புய்யா (Pauri Bhuiya) எனும் பழங்குடிகளே என்பது பெருவழக்கு.  இவர்கள் இடம்பெயரும் வேளாண் முறையைக் கடைபிடிக்கும் ஆதிவாசிகள்.  இம்மலையின் சிகரங்களைப் போர்த்தி இருக்கும் அடர்ந்த சால மரக் காடுகளில் பாரம்பரியமாக வாழ்ந்து வருபவர்கள்.

இந்த பாரி புய்யாக்களும், அந்தமான் தீவுக் கூட்டத்தின் ஜாரவாக்களும் 24,000 ஆண்டுகளுக்கு முன் ஒரே மூதாதையரின் வழிவந்தவர்கள் என்கிறது இவர்களின் இன மரபு பற்றிய ஆய்வு (Genetic research).  மனிதனாகப் பரிணமித்து இப்புவிப் பரப்பெங்கும் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தன சில இனக்குழுக்கள். அந்த இனங்களுள் ஒன்றின் நேர் வாரிசாக, இந்தியப் பூர்வ குடிகளில் எஞ்சியிருக்கும் மக்கள் தான் இந்த பாரி புய்யாக்கள்.  மொழி வழியில் இந்தப் பிராந்தியத்தின் பிற ஆதிவாசிகளில் இருந்து இவர்கள் தனித்துவம் பெற்று விளங்குகிறார்கள்.  இவர்கள் தனிச்சிறப்பான ஒரு வகை ஒரிய மொழியைப் பேசுகிறார்கள்; இதுவே தொன்மையான ஒரிய மொழி என்றும் இவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள்.

இவர்களது வாழ்விடம் வற்றாத வளம் கொழிக்கும் பூமியானது எப்படி என்று இந்த பாரி புய்யாக்களின் பாரம்பரியக் கதைகள் விவரிக்கின்றன.  இவர்களது இனத்தின் சுந்தர்கர் பிரிவினர் முன்னொரு காலத்தில் ஒரு குண்டோதரியைத் தேவதையாகக் கொண்டிருந்தனராம்.  அவள் மரம், மட்டை, மண் என ஒன்றும் பாக்கியில்லாமல் கண்டதை எல்லாம் தின்று தீர்த்து விடுவாளாம்.  வெறுத்துப் போன இந்தப் பாரி புய்யாக்கள் ஒரு நாள் அவளை ஒரு குன்றின் மேல் உட்கார வைத்து விட்டனர்.  அன்றே அந்தக் குன்றையும் அவள் தின்று தீர்த்து விட்டாள்.  அது ஒரு பெரிய குகை போலாகி அப்பால் இருந்து நீர் பெருக்கெடுத்துக் கொட்ட ஆரம்பித்தது. அதுதான் இந்த கண்டதாரா (பாறைப் பிளவு அருவி).  இப்படித்தான் அவர்கள் என்றும் வற்றாத நீராதாரத்தைப் பெற்றனர் என்கிறது இந்தக் கதை.

கண்டதாரா அருவி
கண்டதாரா அருவி

அடுத்தபடியாக, கண்டதாரா மலைத்தொடரின் கிழக்கு அல்லது கியோஞ்கர் பகுதியில் வசிக்கும் தமது உறவினர்களைக் காண சுந்தர்கரில் இருந்து ஒரு தம்பதியினர் சென்றிருந்தனராம்.  அவர்களை வரவேற்று விருந்தோம்ப அங்கே யாரையும் காணோம்.  அவர்கள் எங்கோ வெளியில் சென்றிருந்தனர் போலும்.  ஆனால் அவர்களது வீட்டு வாசலில் ஒரு பெரும் தானியக் குவியல் கேட்பாரற்றுக் கிடந்தது.  என்ன ஆச்சரியம், ஒரு காக்கை குருவி கூட அந்தத் தானிய மணிகளைக் கொத்திச் செல்லவில்லை. இந்தப் பிரதேசத்துக்கு பெருவளம் சேர்த்த தேவதையான கண்டகுமாரி சின்னஞ்சிறு அழகிய நங்கையாக, அந்தத் தானியக் குவியலுக்குள் இருப்பதை இத்தம்பதிகள் கண்டு கொண்டனர்.  உடனே இது தான் சமயம் என்று கண்டகுமாரியைக் களவாடி சுந்தர்கர் கொண்டுவந்து விட்டனர்.  அன்று முதல் அந்த தேவதையோடு அவள் அருளும், செல்வச் செழிப்பு அனைத்தும் சுந்தர்கர் வாசிகளுடையதாகி விட்டது என்பது மற்றொரு கதை.

இது பழம் தரும் மரம், அது நிழல் தரும் மரம் என்ற வேறுபாடெல்லாம் பாரி புய்யாக்களுக்குக் கிடையாது.  அது எதுவாயினும் அதன் உயிர்த்துடிப்புள்ள கரங்கள் எதனையும் அவர்கள் வெட்டுவதில்லை.  ஆகவே மலைகளின் உச்சி  பசுமையால் குளிர்ந்து நிற்கிறது.  தொன்மைக்குப் பங்கம் நேராத அந்த பழம்பெரும் காடுகள் யானைகள், தேன் கரடிகள், சிறுத்தைகள், காட்டெருதுகள், மாபெரும் மலைப் பாம்புகள், மயில்கள், புலிகள் என ஏராளமான உயிரினங்களின் தாயகமாய்த் திகழ்கிறது.  உயிர்ச் சூழலின் செழுமையை எடுத்துக்காட்டும் மூலாதாரக் கூறாக விளங்கும் உயிரினமாகிய கால்களற்ற பல்லி வகைகளும் தம் வாழ்விடமாக இந்த காடுகளையே கொண்டிருக்கின்றன.  அடர்ந்த இந்தக் காடுகள் பருவ மழை முழுவதையும் உள்வாங்கிக் கொண்டு, என்றும் வற்றாத ஊற்றாக அதனைக் கண்டதாராவுக்கு வழங்குகின்றன. இப்படி பன்னெடுங்காலமாய் இந்தச் சூழல் தழைத்தோங்கி வருகிறது எனினும்,  இந்தப் பாரி புய்யாக்களது இடம்பெயரும் வேளாண் முறையால் காடுகள் நாசமாவதாகப் புனைந்து 90 களில் சுமார் எண்பது பாரி புய்யா குடும்பங்கள் ”பாரி புய்யா வளர்ச்சி முகாமை”யால் (PBDA) மலையுச்சியில் இருந்து அதன் அடிவாரத்துக்குப் புலம்பெயர்க்கப் பட்டனர்.

”இங்கே எங்களுக்கு என்ன இருக்கிறது?  கழிப்பிடம் அளவுக்கு ஒரு சிறு வீடு.  தலைக்கு ஐந்து ஏக்கர் நிலம் தருவதாகச் சொன்னார்கள்.  கொடுத்ததோ சற்றேறக் குறைய ஒரு ஏக்கர் மட்டுமே.  காலில் ஒரு வெட்டுக்காயம் பட்டு விட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.  காட்டில் இருந்தால் ஒரு பச்சிலையைப் பிடுங்கி வைத்துக் கட்டி, குணப்படுத்திக் கொள்வோம்.  இங்கோ கொளுத்தும் வெய்யிலில் மைல் கணக்காய் நடந்து டாக்டரிடம் போக வேண்டியிருக்கிறது.  அவரோ இன்று போய் நாளை வா என்கிறார்..“  என்றவாறு புலம்பித் தீர்க்கிறார், மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் கலிய தெகூரி.  விரக்தியும், கையறு நிலையும் பளிச்சென்று தெரிகிறது.  கீழே கொண்டுவரப்பட்ட குடும்பங்களில் குறைந்தது 15 குடும்பங்கள் மீண்டும் மலையேறி விட்டனர்.  “அங்கே பசுமை போர்த்திய குளுமையும், பழங்களும், தண்ணீரும், விறகும், கிழங்கு வகைகளும் எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும்” என்று மனக் கண்ணால் அந்த சொர்க்கத்தைக் கண்டு கூறுகிறார் அவர்.

பாவம், இன்னும் எத்தனை நாட்களுக்கு நிலைக்குமோ இந்த இன்பமெல்லாம்.  கண்டதாராவுக்கு எழிலூட்டும் அந்த செம்பழுப்புப் பாறைகளும், கரும்படிகப் பாறைகளும் தன்னில் இரும்பை அல்லவா கொண்டிருக்கின்றன.  கண்டதாரா அருவியின் வழித்தடமெங்கும் சுத்தமான இரும்பின் பெரும் புதையல் பளிச்சிடுகிறது.  கண்டதாரா மலைத் தொடரைக் கண்டுகொண்ட சுரங்கக் கம்பெனிகள் அதனை தங்களுக்கு அடித்த ”ஜாக்பாட்” டாகவே (சூதாட்டத்தில் பெரும் பிடியைத் தன் கையில் வைத்திருப்பவன் வழித்து அள்ளும் பொதுப் பணம்)  கூவிக் குதியாட்டம் போடுகிறார்கள்.  இந்த வேளையில் போட்டியிடும் பலப்பல நிறுவனங்களில் எதன் கையில் துருப்புச் சீட்டு இருக்கிறது என்று தடவிக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். கண்டதாராவின் இரண்டாயிரத்து ஐநூறு ஹெக்டேர் பரப்பளவிற்கு நடுக் கண்டம் உனக்குத்தான் என்று தென்கொரிய போஹங்க் ஸ்டீல் கம்பெனிக்கு (POSCO) உறுதியளித்திருக்கிறது ஒடிசா அரசு.  இப்படியாக சுந்தர்கர் முழுவதையும் விழுங்கி ஏப்பம் விட வந்திருக்கும் ஒடிசா மாநில அரசின் குண்டோதரியாக இருக்கிறது போஸ்கோ.

போஸ்கோ உள்ளே நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை அப்பிராந்தியத்தின் ஆதிவாசி மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.  அதன் முன் உதாரணத்தை அவர்கள் ஏற்கெனவே கண்டு விட்டார்கள். ஆனால், மலையடிவாரத்தில் செல்லும் பதைகளில் இருந்து பார்த்தால் நம்மால் ஒரு வித்தியாசத்தையும் கண்டுகொள்ள முடியாது.  மலைத்தொடரின் உள்ளே சற்று சென்று பார்த்தாலோ இதயம் வெடித்து விடும்படியான கொடூரக் காட்சி ஒன்று அங்கே காத்திருக்கிறது.  உயிரோடு தோலுரிக்கப்பட்டுத் துடிதுடிக்கும் ஒரு ஜீவனாக, தனது தோலும் உரோமமுமாக இருந்த மேல் மண்ணையும் மரங்களையும் இழந்து குருதி கொப்பளிக்க நிற்கும் குர்மிதார் மலை அங்கமெல்லாம் துண்டாடப்பட்ட முண்டமாய், மாபெரும் பிரமிடாய் நிற்பதை நீங்கள் காணலாம்.  அதன் மேல் சுற்றி சுற்றிச் செல்லும் பாதையின் வழியே இரும்புத்தாது என்ற மாமிச மலையைச் சுமந்தபடி ஊர்ந்து செல்லுகின்றன டிரக்குகள்.

டைனமைட் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதால் உள்ளடங்கிய பாறைகள் எல்லாம் பொடிப் பொடியாகி, இரத்தம் பீறிடுவது போல் செம்புழுதிப் படலம் மேலெழும்ப, சுரங்கம் ஒரு போர்க்களம் போலக் காட்சியளிக்கிறது. பல நூறு மீட்டர் சுற்று வட்டாரத்துக்கு அதன் செம்புழுதிப் படலம் காடெங்கும் பரவி மூச்சு முட்டி, திக்குமுக்காட வைக்கிறது.   இந்த செவ்வாய்க் கிரகக் காட்சிக்குப் பின்னால் பாதி மழிக்கப்பட்ட மற்றொரு மலை கண்ணில் படுகிறது.  மிச்சமுள்ள மரங்களும் மழிக்கப்பட்டு சுரங்கப் பணி என்னும் கசாப்பு வேலைக்குத் தயாரிக்கப்பட்டு வருகிறது.  சற்று தொலைவில் கண்ணில் தெரியும் கண்டதாராவின் அலைபாயும் அந்தப் பசுமையான விளிம்புகள்  கண்டதாரா ரிசர்வ் காடுகளில் இப்போதைக்கு என்ன மிச்சமிருக்கிறது எனபதை அறிவித்த வண்ணம் இருக்கின்றன.

133 ஹெக்டேர் பரப்பளவில் குர்மிதார் சுரங்கப் பணியை கலிங்கா கமர்ஷியல் கார்ப்பரேஷன் லிட். (KCCL) மேற்கொண்டிருக்கிறது.  தனது உற்பத்தி இலக்கை, அதாவது வெட்டி ஏற்றி விடும் இலக்கை, பல நூறு சதவீதம் விஞ்சி விட்டதாக அது தனது வலைத் தளத்தில் பீற்றிக் கொள்கிறது.  இரும்புத் தாதுவை சீனாவுக்கும், மாங்கனீசு தாதுவை ஏதோ பெயர் குறிப்பிடாத கொரிய கம்பெனிக்கும் ஏற்றுமதி செய்வதாக அது அறிவிக்கிறது.  இலக்குவனை உயிர்ப்பிக்க மூலிகை எடுப்பதற்காக அனுமன் தனது தோளில் சஞ்சீவி மலை என்னும் இமயக் குன்று ஒன்றைச் சுமந்து சென்றதாக புராணக் கதை சொல்லுகிறது.  ஆனால் கே.சி.சி நிறுவனத்தை நடத்தும் புவனேசுவரின் சமல் குடும்பம் அந்த அனுமனை விட சக்தி வாய்ந்தது.  அது மொத்த மலையையே சீனாவுக்கும், அதற்கு அப்பாலும் அனுப்பிக் கொண்டிருக்கிறது.

தங்களது தேவியின் இருப்பிடமாக இருந்தது தான் அந்த குர்மிதார் மலை என்கிறார்கள் பாரி புய்யாக்கள்.  அடர்ந்த கானகமாய், யானைகள், கரடிகள் போன்ற எண்ணற்ற வனவிலங்குகள் வாழும் இடமாய், தேமதுரக் கனியான காக்ரிக் கனிகள் கொடிகளில் அசைந்தாடும் செழுமை மிக்க மலையாய், இயற்கை எழில் கொஞ்சும் தேவியின் உறைவிடமாய் இருந்தது தான் அந்தக் குர்மிதார் மலை.  அது வெடி வைத்துத் தகர்க்கப்படுவதாலும், தமது  வாழ்விடம் குலைந்து போனதாலும் யானைகள் சமவெளிகளில் தலைகாட்டத் தொடங்கி இருக்கின்றன.  மலையடிவாரக் கிராமமான புல்ஜாரில் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு புலி நுழைந்திருக்கிறது. மலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட இருபது பாரி புய்யா குடும்பங்கள் மீண்டும் தங்களது காடுகளுக்குச் சென்று குடில் அமைத்துத் தங்கி விட்டனர்.  அவர்களது குடிசைகளையும், உணவு தானிய சேமிப்பையும் வனத் துறையினர் தேடிப் பிடித்து தீ வைத்துக் கொளுத்தி, நாசமாக்கினர். இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்தேறியது.

கலிங்கா கமர்சியல் கார்ப்பரேஷன் காடுகளை அழித்ததாலும், மலை உச்சியில் நீரோடைகளின் பாதையைத் திருப்பி விட்டதாலும் கண்டதாரா அருவி பெருமளவு வற்றி விட்டது.  அதன் நீர் பிரம்மணி ஆற்றை வழக்கம் போல் வந்தடைவதில்லை.  பந்த்பர்னாவில் வாழும் மக்கள் பாசனத்துக்கும், மீன் பிடிக்கவும், தமது அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்த கால்வாய் கடந்த இரண்டு கோடைக் காலங்களாக பாளம் பாளமாய் வெடித்துக் கிடக்கிறது.  இந்தப் பிராந்தியமெங்கும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாய்க் கீழிறங்கி விட்டதால் அனைத்து ஆழ்குழாய்க் கிணறுகளும் செயலிழந்து விட்டன.  புல்ஜார் மற்றும் பிற சுற்று வட்டாரக் கிராமங்களில் நீரோடைகள் சுரங்கக் கழிவுகளால் இரத்தச் சிவப்பாகி இருக்கின்றன.  இதன் விளைவாக மீன்கள் சாகின்றன; விளைநிலங்கள் எல்லாம் பாழாகின்றன.  மழை பெய்யும் வேளைகளில் சுரங்கப் பணியால் காயம்பட்ட மலைகளின் இரத்தக் கசிவுகளாக செந்நீர் ஓடைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கண்டதாராவில் குருதி கொட்டுகிறது.  அப்போது அது கண்டதாராவாக அல்லாமல் இரத்ததாராவாகக் காட்சியளிக்கிறது.  இவை எல்லாம் ஒப்பீட்டளவில் ஒரு அச்சுறுத்தல் என்றே சொல்லலாம்.  எனினும் இந்த 133 ஹெக்டேர் பரப்பில் நடக்கும் சுரங்கப் பணியே இப்படியொரு பேரழிவைக் கொண்டு வருகிறது என்றால்,  போஸ்கோவின் 2500 ஹெக்டேர் குத்தகை பூமியில் சுரங்கப் பணி தொடங்கினால் விளைவு என்னவாகும் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சு நடுங்குகிறது.

கண்டதாரா அருவி முற்றாக அழியும்.  பல பத்தாயிரம் உயிரினங்கள் தண்ணீருக்குத் தவித்து விக்கிச் சாகும்.  அந்த அழிவின் தொடக்கம் இவ்வாறு தான் இருக்கும்.  ”இந்தச் சுரங்கக் கம்பெனிகள் பயங்கரமான பூதங்கள்.  இவை எங்களது மண்ணை, மரங்களை, மலையைத் தின்று தண்ணீரையும் ஒட்டுமொத்தமாய் உறிஞ்சித் தீர்த்து விடும்” என்கிறார் புல்ஜாரில் வாழும் ஒரு பாரி புய்யாப் பெண்மணி. “எங்களுக்கு இந்த தண்ணீரைக் கங்களதேவி கொடுத்தாள்.  இந்தப் பூதங்களோ அதையும் குடித்து ஒழித்து விடும்.  இவற்றை நாங்கள் துரத்தியடிக்கா விட்டால் இங்கு எதுவுமே மிச்சமிருக்காது” என்கின்றனர் அந்த ஆதிவாசிகள்.  கண்டதாரா மலைத்தொடர் எங்கும் ஆதிவாசி மக்கள் சுரங்கக் கம்பெனிகளுக்கு எதிராகப் போராடத் தயாராகி வருகின்றனர்.  அவர்கள் போராடுவது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல, மனித இனத்தின் மாட்சிமை பொருந்திய மரபுச் செல்வங்கள் அனைத்தின் பாதுகாவலர்களாகவும் களத்தில் இறங்கத் தயாராகி வருகிறார்கள்.

நாம்?

_______________________________________________

– மது ஸ்ரீமுகர்ஜி, அவுட்லுக், ஜூன் 11, 2012

மொழியாக்கம்: செல்வன், புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
_____________________________________________________

பாட்ஷா பாபாவான கதை!

29

இணைப்பு:

ரஜினி-விகடன்அவதரித்த திருநாளன்றே பாபா சமாதியானார். வழக்கமாகப் படம் வெளியாகிக் கல்லா கட்டியவுடனே ஆன்மீகப் போதைக்கு ஆட்பட்டு இமயத்துக்குப் புறப்பட்டுவிடும் ரஜினி இந்த முறை கிளம்பக் காணோம். படத்தின் தோல்வி, போதையை இறக்கி விட்டது போலும்! அவதாரமாக முடியாவிட்டாலும் சூப்பர் ஸ்டார் தகுதியையாவது தக்கவைத்துக் கொள்ள அடுத்த திரைக்கதைக்கு மசாலா அரைக்கத் தொடங்கயிருப்பார்.

” பாபா படுதோல்வி ” என்று நிச்சயமானவுடன், ரஜினி புகழ் பாடுவதையே தம் குலத்தொழிலாகக் கொண்டிருந்த பத்திரிகைகளும் ரஜினிக்கு சில ஆலோசனைகள் கூறுமளவு தைரியம் பெற்று விட்டனர். செத்த பாம்புதான் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு கோடம்பாக்கத்திலிருந்தும் கூட சில சூரப்புலிகள் களமிறங்கியிருக்கிறார்கள். ‘ படத்தில் கட்டமைக்கப்படும் புனைவுகள், குறியீடுகள், சொல்லாடல்கள்’ இந்துத்வ அரசியலை முன் நிறுத்துவதாகக் கூறி, பாபா படத்தைக் கட்டுடைப்பதன் மூலம் ரஜினியின் அரசியலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சில அறிஞர் பெருமக்கள் இறங்கி விட்டனர்.

தன்னை அவதார புருசனாகவும் தனது ரசிகர்களைப் பக்தகோடிகளாகவும், தன்னை ஒரு மீட்பனாகவும் தமிழக மக்களைக் கடைத்தேற்றம் பெறக் காத்திருக்கும் மந்தையாகவும் சித்தரிக்கும் துணிச்சல் ரஜினி என்ற காரியக் கிறுக்கனுக்குத் தீடிரென்று வந்து விடவில்லை. ராமதாஸ்  இதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்ததாகவும் தான் துணிந்து அதைச் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

பூனைக்கு மணி கட்ட அஞ்சிச் சும்மாயிருந்திருந்தால் பரவாயில்லை. பூனையைப் புலியாகச் சித்தரித்தனர். பிறகு “புலி வருது… புலி வருது” என்று எல்லா ஓட்டுக்கட்சிகளும் பத்திரிகைகளும் பெரிதாக ஊதிவிட்டனர். பிறகு தாங்கள் ஊதிப் பெதிதாக்கிய பலூனைக் கண்டு தாமே மிரண்டனர்; வணங்கினர். அந்தப் பலூனின் மீது ஒரு சிறிய குண்டூசியை வைத்துப் பார்க்கும்  தைரியம் மட்டும் யாருக்கும் வரவில்லை – மக்கள் கலை இலக்கியக் கழகத்தைத் தவிர.

இதைப் பெருமைக்கு கூறவில்லை. தமிழகத்தின் அருவெறுக்கத்தக்க நிலையை எண்ணி வெட்கி வேதனைப் பட்டுக் கூறுகிறோம். 1995 இல் ஜெயலலிதா ஆட்சியின் மீது மக்களின் வெறுப்பு உச்சத்தில் இருந்தபோதுதான் பாட்ஷா அரசியல் பேசத் தொடங்கினார். “கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம் டாங்கு டக்கரடொய் ” என்ற பாடிக் கொண்டிருந்த நடிகர்களை வீடு தேடிச் சென்று இழுத்து வந்தனர் சோவும், மூப்பனாரும், அ.தி.மு.க விலிருந்து உதிர்ந்த ரோமங்களும். காரணம் ” ஆன்மீகமும் தேசியமும் இணைந்த பாரதீதய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு உகந்த அரசியல் கண்ணோட்டத்தை ரஜினி கொணடிருந்தார் ” என்பதுதான்  – அப்போதே கூறினோம். ” கழிசடை அரசியல் நாயகன் ரஜினி “என்று சிறு வெளியீடு போட்டு 50,000 பிரதிகளைத் தமிழகமெங்கும் பேருந்துகள், கடைவீதிகள், குடியிருப்புக்களில் விற்றோம்; பொதுக்கூட்டங்களில் பேசினோம்.

ஜெ. எதிர்ப்பு அலையின் குறியீடாகவே ரஜினியை முன்நிறுத்தி கருணாநிதி முதல் தகவல் ஊடகங்கள் வரை அனைவரும் பிரச்சாரம் செய்த அந்தக் காலத்தில் ம.க.இ.க வைத்தவிர வேறு யாரும் இதைப் பேசவில்லை; ஜெயலலிதாவுக்கு மாற்றாக இன்னொரு ஆம்பிளை ஜெயலலிதாவை முன் நிறுத்தும் பார்ப்பனக் கும்பலின் சூழ்ச்சி பற்றி யாரும் முணுமுணுக்கக் கூட இல்லை. ரஜினி ரசிகர்கள் என்ற அந்த ‘ மாபெரும் ‘ ஓட்டு வங்கியை அப்படியே களவாண்டு விடலாமென எல்லா ஓட்டுக் கட்சிகளும் வாயில் எச்சிலொழுகப் பின்தொடர்ந்தனர்; வழிபட்டனர்; வால் பிடித்தனர். ரஜினியைப் பற்றி எதிர்கருத்து வைத்திருந்தவர்கள் கூட அந்த நேரத்தில் அதைப் பேசத் தயங்கினர்; அஞ்சினர்; ராஜதந்திரமாக மவுனம் சாதித்தனர்.

பாட்ஷா ஏழாண்டுகளுக்குப் பின் பாபா ஆகிவிட்டார். இடையில் வந்த தி.மு.க. ஆட்சி ஒவ்வொரு படத்திலும் கள்ள மாக்கெட்டில் டிக்கெட் விற்று 100 கோடி ரூபாய் சம்பாதிக்க ரஜினிக்குப் பாதுகாப்பு வழங்கியது. இப்போது ரஜினியிடம் பூச்செண்டு வாங்கிய ஜெயலலிதா கள்ள மார்க்கெட் உரிமையைச் சட்டபூர்வமாக்கி விட்டார். கொள்ளைக்காரன் பாட்ஷா அவதாரபுருசன் பாபாவாகி விட்டார். இவர்கள் யாரும் பாபாவைத் தோற்கடிக்கவில்லை. ரஜினி தன் சொந்த முயற்சியில்தான் தோல்வியைச் சாதித்திருக்கிறார். “வாழ்க்கையே ஒரு சினிமாதான் ” என்ற தத்துவத்தைத் தன் சொந்த வாழ்க்கை மூலம் ரசிகர்களுக்குப் போதனை செய்ய முயன்று தோற்றிருக்கிறார்.

விடலைத்தனதமான சேட்டைகள், பொறுக்கித்தனங்கள், சினிமா வாய்ப்பு, புகழ், பார்பனக் குடும்பத்துடன் மண உறவு, பல கோடி ரூபாய் கருப்புப் பணம், துதிபாடிகளின் கூட்டம் இவையனைத்தும் தாமே உருவாக்கும் போதை மற்றும் அவர் தனியாக ஏற்றிக் கொண்ட போதை… என்பன போன்ற பலவிதமான ரசாயனப் பொருட்களின் அங்ககச் சேர்க்கையில்தான் பாபா அவதரித்திருக்கிறார்.  புளித்த ஏப்பக்காரனின் ஆன்மீகம் பசி ஏப்பக்காரர்களின் ஆன்மீகத்தோடு சேரவில்லை. பாபாவை அவதாரமாகவும், பிராண்டாகவும், அரசியல் தலைவராகவும், பொறுக்கியாகவும் ஒரே நேரத்தில் சித்தரித்து எல்லா முகங்களும் தருகின்ற வருமானத்தைப் பிழிந்து எடுத்து விடக் கனவு கண்ட லதா ரஜினியின் பேராசையும் பாபாவின் தற்கொலைக்குக் காரணமாகியிருக்கிறது.

மைனர்  கெட்டால் மாமா; மாமா கெட்டால் …? பாட்ஷா கெட்டால் பாபா; பாபா கெட்டால் …? என்ன வர இருக்கிறது என்று தெரியவில்லை. எதற்கும் ஒரு பிய்ந்த செருப்பைக் கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த படத்திற்குக் கட்டியம் சொல்ல வரும் பத்திரிகைக்காரர்களை அடிக்க உதவும்.

________________________________________________________________________

புதிய கலாச்சாரம் செப்டம்பர், 2002
________________________________________________________________________

ரஜினி ரசிகர்கள்: விடலைகளா? விபரீதங்களா?

40

இணைப்பு:

ரஜினி-ரசிகர்கள்

விடலைப் பருவத்துக்கேயுரிய அறிவு வளர்ச்சியும் உதிரித்தனமும் கொண்ட உழைக்கும் வர்க்கத்து இளைஞர்கள்தான் ரஜினி ரசிகர்களில் ( எல்லா ரசிகர்களும்தான் ) முக்கியமானவர்கள். குழப்பமான, உதிரித்தனமான மனோபாவத்தில் வளரும் இவர்கள் ரஜினியைத் தலைவா என்றும் தெய்வமே என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த விடலைத்தனம் இத்தோடு முடிந்து விடுவதில்லை. பிழைப்புவாத அரசியலின் சமூக அடித்தளமாக இவர்கள் மாறுகிறார்கள். எம்.ஜி.ஆர் கட்சி இதற்கொரு முன்னோடி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற பாசிச சக்திகள் அதிகாரத்துக்கு வரும்போது இதே கூட்டம் அவர்களது குண்டர் படையாக மாறுகிறது. இந்தக் கொக்குகளின் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடித்து விடலாம் என்பதுதான் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிகளின் கனவு.

ராஜ்குமாருக்குக் குரல் கொடுத்த ரஜினி, காவிரிக்குக் குரல் கொடுக்காதது ஏன் என்று கேட்டபோது “தேவையில்லை சார், அவர் ஒரு பிசினஸ்மேன் “என்று திமிராகப் பதில் சொன்னார் ஒரு ரசிகர் மன்றத் தலைவர். “நீங்கள் முசுலீமாக இருக்கிறீர்கள்; ரஜினியோ ஆர்.எஸ்.எஸ் சாமியார்தான் குரு என்கிறாரே” என்று கேட்டதற்கு ” எங்களுக்குத் தலைவர் அவரு. அவருக்கு யார் குரு என்று எங்களுக்குக் கவலையில்லை”என்று தெனாவெட்டாகப் பதில் சொன்னாராம் திருச்சி நகரத் தலைவர் ஷாகுல் ஹமீது.

அரசியல், சமூகப் பிரச்சினைகளில் ரஜினியின் நிலை பற்றிச் சொன்னால் ” அவர் அரசியல்வாதி கிடையாது; நடிகர்” என்கிறார்கள் ரசிகர்கள். அப்புறம் ” தலைவா, தமிழகத்தைக் காப்பாற்று என்று எழுதுகிறீர்களே “என்று கேட்டால், ” அவர் அரசிலுக்கு வந்தால் நாட்டைக் காப்பாற்றுவர்” என்று திருப்பிப் பேசுகின்றனர். ஓட்டுப் பொறுக்கிகளை விஞ்சுகிறது ரசிகர்களின் சந்தர்ப்பவாதமும் திமிரும். “தலைவா, காங்கிரசில் சேர்; தனிக்கட்சியாவது தொடங்கு” என்று 1995 இல் ரஜினிக்கு வேண்டுகோள் விட்டவர்கள் இந்த ரசிகர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. குறிப்பாக, பிராந்திக் கடை, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களை நடத்தும் ரசிகர் மன்றத் தலைவர்கள், வட்டம் மாவட்டத்துக்குரிய அனைத்துத் தகுதிகளுடனும் தலைவராக இருக்கின்றனர். பெயர்ப்பலகை மாற வேண்டியதுதான் பாக்கி.

இந்தக் கும்பல் மேலிருந்து கீழ் நோக்கி எப்படிக் கிரிமினல்மயமாக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பாபா டிக்கெட் விற்பனை. பாபா படத்தை விநியோகஸ்தர்கள் மூலமாக விற்காமல் நேரடியாகத் திரையரங்குகளுக்கு விற்றிருக்கிறார் ரஜினி. பத்திரிகைகளின் கணிப்புப்படி மொத்த வருமானம் 70 கோடி. பன்மடங்கு தொகை கொடுத்து படத்தை வாங்கிய தியேட்டர் அதிபர்கள் ஒவ்வொரு காட்சியையும் ஏலம் விட்டுள்ளனர். ரசிகர் மன்றத்தின் நகரத் தலைவர்களுக்கு முதல் காட்சி. திருச்சியில் ஷாகுல் ஹமீதுக்கு 4 காட்சி; கலீலுக்கு 2 காட்சி. இதை ரசிகர்களிடமே பிளாக்கில் விற்று சில லட்சங்களை இவர்கள் சுருட்டிக் கொள்வார்கள்.

மற்ற காட்சிகளனைத்தும் பகிரங்க ஏலம். ரசிகர்கள், ரசிகரல்லாதவர்கள் எனப் பலரும் ஏலம் எடுத்துள்ளனர். 1000 இருக்கைகள் கொண்ட அரங்கில் ரூ. 50 ( சராசரி ) வீதம் ஒரு காட்சியின் உண்øமையான விலை 50,000. கேளிக்கை வரி இதற்கு மட்டும்தான். ஒரு காட்சி ஒரு லட்சம் முதல் ஒன்றேகால் லட்சம் வரை ஏலம் விடப்பட்டிருக்கிறது. ஒரு டிக்கெட் 100, 125க்கு வாங்கி 200, 250க்கு விற்று விடலாமென்றும் ஓரே நாளில் 50, 60 ஆயிரங்களைப் பார்த்துவிடலாம் என்றும் கனவு கண்டவர்கள் ஏலமெடுத்திருக்கிறார்கள். வீடு , நகையை அடமானம் வைத்து, மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கியும் பலர் முதலீடு செய்திருக்கின்றனர்.

படம் தோல்வியடைந்ததால் இப்படி நூற்றுக்கணக்கான பேர் தமிழகமெங்கும் திவாலாகியிருக்கின்றனர். மனைவிக்குத் தெரியாமல் நகையை வைத்து ஒரே நாளில் சம்பாதித்து மனைவியிடம் காட்டி அவளை ஆச்சரியத்திலாழ்த்த விரும்பியவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருப்பதாகச் சொன்னார் ஒரு திரையரங்க அதிபர்.

திருச்சி நகரில் ஒரே நாளில் இத்தகைய ‘ முதலீட்டாளர்கள் ‘ பத்துப் பேரைச் சந்தித்தோம். எல்லொரும் 40,000 முதல் 75,000 வரை இழந்தவர்கள். தீடீர்க் காசு பார்க்க விரும்பிய இந்தக் கூட்டம் ஏமாந்து விட்டது குறித்து நாம் வருந்தத் தேவையில்லை. ஆனால் ரஜினி அடித்த கொள்ளையில் எத்தனைத் தாலிகள் அறுந்திருக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்று.

இந்த அர்சத் மேத்தாவின் பெயர் பாபா!

________________________________________________________________________

புதிய கலாச்சாரம் செப்டம்பர், 2002
________________________________________________________________________

அரியானா : நாட்டின் அவமானச் சின்னம் !

3

ரியானா மாநிலத்தில் கடந்த இரு மாதங்களில் நடந்துள்ள 19 பாலியல் வன்புணர்ச்சி தாக்குதல்களில் 15 தாக்குதல்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மீது நடத்தப்பட்டவை எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த 15 வழக்குகளில் பெரும்பாலானவை ஆதிக்க சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட கும்பல் பாலியல் வன்புணர்ச்சித் தாக்குதல்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  இவ்வழக்குகளில் ஒன்றிரண்டில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செயப்பட்டு, குற்றமிழைத்த ஆதிக்க சாதிவெறியர்கள் கைது செயப்பட்டுள்ளனர்.  இதுவும்கூடத் தாழ்த்தப்பட்ட மக்களும் அமைப்புகளும் போராடிய பிறகுதான் நடந்திருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை, ஆதிக்க சாதிக் கொழுப்பும் ஆணாதிக்க திமிரும் வக்கிரமும் கொண்ட ஜாட் சாதி பஞ்சாயத்துகள், அப்பஞ்சாயத்துகளுக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் ஓட்டுக்கட்சிகள்-அரசு இயந்திரம் – இதுதான் அரியானாவின் உண்மை முகம் என்பது ஏற்கெனவே பலமுறை அம்பலமாகியிருக்கிறது.  இப்பொழுதும்கூட, அம்மாநிலத்தை ஆண்டு வரும் காங்கிரசு கட்சியும், போலீசும், ஜாட் பஞ்சாயத்துகளும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக நடந்துள்ள இந்த வன்புணர்ச்சித் தாக்குதல்களை உப்புசப்பில்லாத விவகாரமாக ஆக்கி, கைகழுவிவிடத் தொடர்ந்து முயன்று வருகின்றன.

ஜாட் சாதியைச் சேர்ந்த கும்பலால் 15 தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ள நிலையில், காங்கிரசுக் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஜிந்த் மாவட்டத்தில் சச்சா கேரா என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி, தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் அளிக்கச் சென்றார்.  ஒரு சில நிமிடங்களே நடந்த இந்த ஆறுதல் நாடகத்தின் மூலம் எல்லா சாதிகளிலும் பெண்களுக்கு எதிரான போக்கிரி கும்பல் இருப்பதாகக் காட்டியதோடு, “கற்பழிப்புக் குற்றம் நாடு முழுவதும் நடப்பதுதான்” எனக் கூறி, அரியானா அரசிற்கு வக்காலத்து வாங்கினார்.

அக்கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவரான தரம்வீர் கோயட், “இக்கற்பழிப்பு சம்பவங்களில் 90 சதவீதம் பெண்ணின் சம்மதத்தோடு நடந்தவைதான்” எனக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட பெண்களை நடத்தை கெட்டவர்களாகக் குற்றஞ்சுமத்துகிறார்.  வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபட்ட சாதி வெறியர்களுள் பலர் திருமணமானவர்கள் என்ற உண்மையை மறைத்துவிட்டு, இளைஞர்களுக்கு 16 வயதிலேயே திருமணம் செய்துவிட்டால், அவர்கள் அலைவதைத் தடுக்க முடியும்” எனக் கூறி, குழந்தைத் திருமண முறைக்கு வக்காலத்து வாங்குகிறது, உள்ளூர் காப் (சாதி) பஞ்சாயத்து.  இந்தக் காட்டுமிராண்டித்தனமான யோசனையை அரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா வழிமொழிந்து, பின்பு ஜகா வாங்கிக் கொண்டார்.

அரியானா

முதலாளித்துவ அறிவுஜீவிகளோ, “அரியானா மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு எண்ணூத்தி சொச்சம் பெண்கள் இருப்பதுதான் இப்பிரச்சினைக்குக் காரணம்” எனக் காரணம் கற்பிக்கிறார்கள். அரியானா மாநிலத்தில் பெண்களின் எண்ணிக்கை சரிந்துகொண்டே போவதற்கு ஆணாதிக்கம் நிறைந்த பிற்போக்கு குடும்பங்கள் பெண் சிசுக்களைச் சட்டவிரோதமான முறையில் கருவிலேயே அழித்துவிடுவதுதான் காரணம் என்பதும்; ஆண்கள் எண்ணிக்கைக்குச் சமமாகப் பெண்கள் இருக்கும் இடங்களிலும் பாலியல் வன்புணர்ச்சி நடைபெற்று வரும் உண்மையும் இவர்களை உறுத்தவில்லை போலும்.

அரியானாவை ஆண்டு வரும் காங்கிரசு அரசோ இன்னும் ஒருபடி மேலே போய், தனது ஆட்சியின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் அரசியல் சதி இது” என்ற புளுகுணி பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.  அரியானா  போலீசு துறை இயக்குநர் ரஞ்ஜிவ் சிங் தலால், “கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் கற்பழிப்புக் குற்றங்களின் எண்ணிக்கையில் 80 குறைந்துள்ளதாக’’ப் புள்ளிவிவரத்தைத் தூக்கிப்போடுகிறார்.  ஹிஸார் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆதிக்க சாதியினரால் கற்பழிக்கப்படுவது குறைவுதான்” என வாதிடுகிறார்.  கோஹானா நகரின் துணைக் கண்காணிப்பாளர், “பெண்கள் மேற்கத்திய பாணி உடைகளை அணிவதால்தான் கும்பல் கற்பழிப்புக் குற்றங்கள் அதிகரிப்பதாக’’க் கண்டுபிடித்துச் சோல்கிறார்.  இவற்றின் மூலம் அம்மாநில அரசு, “இது சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையே தவிர, இதில் சாதிக்கு இடமில்லை” எனச் சாதிக்க முயலுகிறது.

அரியானா-1ஆனால், தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட ஒவ்வொரு வழக்கிலும் காப் பஞ்சாயத்து தலையீடு செய்து, குற்றவாளிகளைக் காப்பாற்றியிருக்கிறது; காப்பாற்ற முயலுகிறது என்பதற்கு நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன.  ஹிஸார் மாவட்டம்-டாப்ரா கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான தாழ்த்தப்பட்ட இளம் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜாட் சாதியைச் சேர்ந்த சுனிலை போலீசு கைது செய்துவிடாமல் காப்பாற்றி வருகிறது, அக்கிராம காப் பஞ்சாயத்து.  குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்காக சுனிலைப் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன் போலீசு நிறுத்தியபோது, அப்பெண் காப் பஞ்சாயத்தின் கட்டாயத்தால் அவனை அடையாளம் காட்டவில்லை.  இப்பாலியல் வன்புணர்ச்சி வழக்கு தொடர்பாக காப் பஞ்சாயத்து நடத்திய கூட்டத்தில் வெளியாட்களையும் பத்திரிகையாளர்களையும் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டதாகவும், அப்பொழுது அக்கூட்டத்தில் அம்மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

டாப்ரா வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்குரைஞரான ரஜத் கல்ஸான், “போலீசு, நீதித்துறை என அரசு இயந்திரம் முழுவதிலும் ஜாட் சாதியினர் நிறைந்துள்ளனர்.  அதிகார வர்க்கமும் காப் பஞ்சாயத்தும் பல்வேறு வழிகளில் நெருக்கமாக உள்ளது.  இந்த நெருக்கம் காரணமாக, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான பலாத்கார வழக்குகளில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை காப் பஞ்சாயத்துதான் தீர்மானிக்கின்றன.  போலீசு அதற்குத் தலையாட்டுகிறது” எனக் குற்றஞ் சுமத்துகிறார்.

‘‘ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளிகள் போலீசால் கைது செய்யப்படும்பொழுது, காப் பஞ்சாயத்துத் தலைவர்கள் தலையிட்டு, நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கைத் தீர்த்துக் கொள்வதாகக் கூறி, குற்றவாளியை விடுவித்துவிடுகிறார்கள்.  இதையும் மீறி வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றால், பஞ்சாயத்தின் மிரட்டலால் பாதிக்கப்பட்ட பெண்ணே பிறழ் சாட்சியாக மாறிவிடுகிறார்” என்கிறார் ஜிந்த் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்.

அம்மாநிலத்தில் நீதிமன்ற விசாரணைக்குச் செல்லும் வன்புணர்ச்சி வழக்குகளில் வெறும் 13 சதவீத வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  இப்புள்ளிவிவரமும் போலீசு கண்காணிப்பாளரின் கூற்றும் வழக்குரைஞர் ரஜத் கல்சான் முன்வைக்கும் குற்றச்சாட்டை உறுதி செகின்றன.

கடந்த செப்.9 அன்று டாப்ரா கிராமத்தில் நடந்த பாலியல் வன்புணர்ச்சி வழக்கில், குற்றவாளிகள் அச்சம்பவத்தைத் தாமே கைபேசியில் படமெடுத்ததோடு, அதனைப் பலருக்கும் அனுப்பி வைத்தனர்.  பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கிருஷ்ணகுமார் இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.  குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், கிருஷ்ணகுமாரின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் எனக் கோரித் தாழ்த்தப்பட்ட மக்கள் போராடிய பிறகுதான்,  இவ்வழக்கில் போலீசு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.  அதிலும்கூட, பாதிக்கப்பட்ட பெண் தந்த வாக்குமூலத்தைத் திரித்து எழுதி, சில தாழ்த்தப்பட்ட இளைஞர்களையும் வழக்கில் சேர்க்க முனைந்து அம்பலப்பட்டுப் போனது.

சோனியா அரியானாவிற்கு வந்து ஆறுதல் நாடகம் நடத்திச் சென்ற மறுநாளே, கைதால் என்ற கிராமத்தைச் சேர்ந்த திருமணமான தாழ்த்தப்பட்ட இளம் பெண் இரண்டு ஆதிக்க சாதிவெறியர்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார்.  குற்றவாளிகள் இருவரும் அப்பெண்ணிற்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்பதையும்; குற்றம் நடப்பதற்கு முன் அப்பெண் அவர்களோடு கைபேசியில் பேசியிருக்கிறார் என்பதையும் வைத்துக் கொண்டு, இவ்வழக்கில் குற்றவாளிகளைத் தப்பவைக்கும் முகமாக அப்பெண்ணின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கி வருகிறது போலீசு.  இப்படிப் பல்வேறு வழக்குகளில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்ட போலீசார் மீது கிரிமனல் சட்டப்படியோ, வன்கொடுமை தடுப்புச் சட்டப்படியோ எந்தவொரு வழக்கும் தொடரப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘‘தனது பண்ணையாளின் மனைவியோடும் மகளோடும் வல்லுறவு கொள்ளாத எந்தவொரு ஜாட்டும், தன்னை ஜாட் என்று அழைத்துக் கொள்ளத் தகுதியில்லாதவன்” என்று காப் பஞ்சாயத்துத் தலைவர்கள் பெருமையாக கூறிக் கொண்டு திரிவதை அரியானாவின் ஒவ்வொரு கிராமப்புறத்திலும் இன்றும் காண முடியும்.  இன்று இவர்கள் பண்ணையார்களாக, நிலப்பிரபுக்களாக மட்டும் இல்லை.  தனியார்மயத்தைப் பயன்படுத்திக் கொண்டு புதுப் பணக்காரக் கும்பலாகவும் உருவெடுத்துள்ளனர்.  இவர்கள்தான் அரியானாவில் முதலீடு செயும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை வாங்கிக் கொடுக்கும் ரியல் எஸ்டேட் தரகர்களாக, அந்நிறுவனங்களுக்குக் கூலி ஆட்களை சப்ளை செயும் காண்டிராக்டர்களாக மாறி பெரும் பணத்தில் புரள்கின்றனர்.

இந்த நிலப்பிரபுத்துவ பிற்போக்குக் கும்பலிடம் பணப்புழக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அவர்களின் சாதிக் கொழுப்பும் வக்கிரமும் அதிகரித்து வருகிறது.  அரியானாவில் 2004-ஆம் ஆண்டில் பதிவான பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களின் எண்ணிக்கை (386), 2011-இல் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதை (733) இந்தப் பின்னணியில் வைத்துதான் பார்க்க வேண்டும்.

ஆதிக்க சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்ட பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்தும் வழக்குகளில், அந்த வக்கிரத்தை அக்கும்பல் கைபேசியில் பதிவு செய்து கொள்வதோடு, அக்காட்சிகளைப் பலருக்கும் அனுப்பிவைக்கும் போக்கும் தற்பொழுது அதிகரித்து வருகிறது.  அவர்கள் தங்களின் செய்கையை வெட்கப்படத்தக்கதாகவோ, குற்றமாகவோ பார்ப்பதில்லை.  தங்களின் ஆண்மையையும் ஆதிக்க சாதித் திமிரையும் நிலைநாட்டும் செயலாகவே கருதுகின்றனர்.  இவை தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இவ்வன்புணர்ச்சி தாக்குதல்கள் காமத்தின் பாற்பட்டதல்ல; ஆதிக்க சாதித் திமிரோடு தொடர்புடையது என்பதைத்தான் நிரூபித்துக் காட்டுகின்றன.

பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல, சாதியை மறுத்துத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரைப் படுகொலை செய்யும் குற்றச் செயலுக்குக் கௌரவக் கொலைகள் என நாமகரணம் சூட்டி, அப்படுகொலைகளைச் செய்யும் ஆதிக்க சாதிவெறி பிடித்த கொலைகாரர்களையும் காப் பஞ்சாயத்துகள்தான் ஆதரித்துக் காப்பாற்றி வருகின்றன.  இப்படிபட்ட சட்டவிரோத, சமூக விரோத, பிற்போக்கான காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்வதை ஓட்டுக்கட்சிகளே முன்னின்று தடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை, வன்புணர்ச்சி வழக்குகளில் நீதி கிடைத்துவிடும் என யாரேனும் நம்ப முடியுமா?  எட்டு மாதங்களுக்கு முன்பு நர்வானா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் மீது ஜாட் சாதிவெறிக் கும்பல் பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்திய வழக்கில், அக்குற்றவாளிகளின் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசு மறுத்துவிட்டதால், குற்றவாளிகளுள் சிலரைத் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கொன்றொழித்தனர்.  நீதி பெறுவதற்கு இதைக் காட்டிலும் காரிய சாத்தியமான வழி வேறெதுவும் இருக்கிறதா?

__________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012

__________________________________________________